Monday, 17 August 2026

கணக்கெடுப்பு எண்

இன்று வீட்டுக்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளும் ஆசிரியை வந்திருந்தார். நான் கடந்த 15 நாட்களாகவே சென்சஸ் எடுக்க வீட்டுக்கு வருவார்கள் என அனைவரிடமும் கூறியிருந்தேன்.  இன்று காலை வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் இருந்த நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது வீட்டிலிருந்து ஃபோன் வந்தது. உடன் வீட்டுக்குச் சென்றேன். கையில் திறன்பேசியுடன் ஆசிரியை காத்திருந்தார். அவரிடம் என்னுடைய பாக்கெட் நோட்டில் குறித்து வைத்திருந்த சுய கணக்கெடுப்பு எண்ணைக் கூறினேன். அவர் தன் திறன்பேசியில் பதிவிட்டார். உடன் சென்சஸ் இணையதளத்தில் நான் பதிந்திருந்த விபரங்கள் அவர் கணக்குக்கு சென்று விட்டது. அவருக்கு மிக்க மகிழ்ச்சி. தமிழகத்தில் பத்து லட்சம் பேர் சுய கணக்கெடுப்பு விபரம் பதிவு செய்திருப்பதாகக் கூறினார். சுய கணக்கெடுப்பு பதிவு செய்திருந்தால் தங்கள் பணி மிகவும் எளிதானதாக இருக்கும் என்று சொன்னார். ஃபிப்ரவரியில் மேற்கொள்ள உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புக்கும் சுய கணக்கெடுப்பு உண்டு என்று கூறினார். அவர் கூறிய தகவல் எனக்குப் புதிது. இந்த முறை மக்கள்தொகை கணக்கெடுப்பில் 40 கேள்விகள் கேட்கப்பட உள்ளன. வீட்டின் கணக்கெடுப்பு எண்ணை சுவரில் எழுதி விட்டு அடுத்த வீட்டில் கணக்கெடுப்பு மேற்கொள்ள புறப்பட்டார்.