Tuesday, 18 August 2026

கவிஞர் கண்ணதாசன்

 
தமிழகச் சூழலில் கவிஞர் கண்ணதாசனின் ஆளுமை என்பது அரிதான ஒன்று. இருப்பினும் அவருடைய காலகட்டத்தில் தமிழகம் கணிசமான மேதைகளையும் அறிஞர்களையும் உருவாக்கியிருக்கிறது என்பதைக் காண முடியும். காந்திய யுகத்தின் உருவாக்கங்கள் அந்த நிரையில் பெரும்பான்மையினராக இருப்பதையும் நாம் அந்த விஷயத்துடன் சேர்த்து யோசிக்க வேண்டும். 

கவிஞர் கண்ணதாசன் மரபான தமிழ்க்கல்வி பயின்றவர் என்பது அவரது ஆளுமையின் முக்கியமான அம்சம் என்றும் அவரது ஆளுமைக்கு அடிப்படையாக அமைந்தது என்றும் நான் கருதுகிறேன். தமிழில் மரபுக்கவிதை இயற்றும் திறன் கண்ணதாசனுக்கு இருந்தது. 

கவிஞர், பத்திரிக்கையாளர், திரைப்படப் பாடலாசிரியர், திரைப்பட வசனகர்த்தா, நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், அரசியல்வாதி, மேடைப்பேச்சாளர், நூலாசிரியர், எழுத்தாளர் என பல வகைகளில் கவிஞர் கண்ணதாசன் தீவிரமாக செயல்பட்டிருக்கிறார். ஒருவர் தன் வாழ்வில் இத்தனை விஷயங்களில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் என்பதே மிகப் பெரியது என்பது எனது அபிப்ராயம். 

பல விஷயங்களில் கண்ணதாசன் ஈடுபட்டிருந்தாலும் தமிழக மக்கள் அவரைக் ‘’கவிஞர் கண்ணதாசன்’’ என்றே நினைவில் ஏந்துகிறார்கள். கண்ணதாசனின் வரிகளை தங்கள் சொந்த வரிகளாக எண்ணும் தமிழக மக்கள் இன்றும் இருக்கிறார்கள். மரபினைக் கற்றவர் என்பதால் 2500 ஆண்டு தமிழ் இலக்கியமும் நம் மரபின் புராண இதிகாசங்களும் அவர் பாடல்களில் இரண்டறக் கலந்திருந்தது. கண்ணதாசனும் தமிழகமும் பிரித்துப் பார்க்க முடியாமல் இருப்பதற்கு அதுவே காரணம். 

1927ம் ஆண்டு பிறந்த அவர் 1981ம் ஆண்டு வரை 54 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். அவர் நினைவுகளும் புகழும் வரிகளும் இன்றும் தமிழக மக்களுடன் வாழ்கிறது. 
 
கவிஞர் கண்ணதாசனின் நூற்றாண்டைத் தமிழகம் இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கிறது.