Wednesday, 15 June 2022

கதை சொல்லச் சொன்னால்

எங்கள் தெருவில் ஒரு மூன்று வயது சிறுவன் இருக்கிறான். அவனுடைய பெற்றோர்கள் அவன் வீட்டில் ரொம்ப படுத்தினால் இங்கே எங்கள் வீட்டில் கொண்டு வந்து விட்டு விடுவார்கள். இங்கே வளர்ந்து நிறைந்திருக்கும் பூச்செடியின் இலைகளை கத்தரிக்கோலால் துண்டு துண்டாக வெட்டுவது அவனது விருப்பச் செயல்களில் ஒன்று. அதனை செய்து கொண்டிருப்பான். அது அலுத்த பின் ‘’டார்ச் லைட்’’ வேண்டும் என்பான். அதில் கொஞ்ச நேரம் விளையாடி விட்டு ‘’கதை சொல் . கதை சொல்’’ என என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள்வான். நான் பெரும்பாலும் சிறுவர்களின் கதையைக் கூறுவேன். துருவன் கதை. பீமன் கதை. அர்ஜூனன் கதை. இதிகாச மாந்தர்களின் கதையை குழந்தைகள் மிக விரும்பிக் கேட்கின்றன என்பது எனது நேரடி அனுபவம். 

’’கதை சொல்லு. கதை சொல்லு.’’

நான் எந்த கதை சொல்வது என்று யோசித்தேன். ஒருமுறை சொன்ன கதையை திரும்ப கூறமாட்டேன். ஒவ்வொரு முறையும் ஒரு புதிய கதையை சொல்லவே நான் முயற்சி செய்வேன். முதல் கதையில் உள்ள கதாபாத்திரங்கள் இரண்டாம் கதையில் வரலாம் ; உதாரணமாக முதல் நாள் பீமன் கதை சொல்லியிருந்தால் அடுத்த நாள் அர்ஜூன் கதை சொல்லும் போது பீமன் துணைக் கதாபாத்திரமாக வருவான். 

ஒரு பீடிகையுடன் துவக்கினேன். 

‘’உனக்கு மனுஷ தலை மனுஷ உடம்பு இருக்கறவங்கள தெரியும். மனுஷ உடம்பு வேற பிராணிகளோட தலை உள்ளவங்களை உனக்குத் தெரியுமா?’’

அவன் யோசித்துப் பார்த்தான். சட்டென அவன் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை என்பதால் மௌனமாக இருந்தான். 

‘’நல்லா யோசிச்சுப் பாரு. அப்படி இருக்கற ஒருத்தர் உனக்கு பிடிச்ச சாமி’’

‘’யாரு ? எந்த அம்மாச்சி?’’

‘’பிரகலாதன் கும்பிடுவானே’’

‘’நரசிம்மர்’’

தான் பதில் சொல்லி விட்டதால் சிறு வெட்கம். 

‘’கரெக்ட். குட்டி உனக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கே. எப்படிடா செல்லம் சின்ன வயசுலயே இவ்வளவு ஜீனியஸா இருக்க’’

பாராட்டியதும் மேலும் வெட்கம். 

‘’நரசிம்மர் எப்படி இருப்பாரு சொல்லு.’’

‘’சிங்கத்தலை’’

’’வெரிகுட், உடம்பு ?’’

‘’மனுஷ உடம்பு’’

‘’உனக்கு அந்த மாதிரி இருக்கற அம்மாச்சி எத்தனை பேரைத் தெரியும்?’’

அவன் யோசித்தான். அவனுக்கு விபரம் புலப்படவில்லை. 

‘’நரசிம்மர் மாதிரி அம்மாச்சி யார் யாருன்னு நான் சொல்றன். குதிரைத்தலையும் மனுஷ உடம்பும் இருந்தா அது ஹயக்ரீவர். பறவையோட தலையும் மனுஷ உடம்பும் இருந்தா அது கருடன். பன்றியோட தலையும் மனுஷ உடம்பும் இருந்தா வராகர். ‘’

அவன் மனதுக்குள் கற்பனை செய்து பார்த்தான். 

’’ஹயக்ரீவர் எப்படி இருப்பாரு?’’

‘’குதிரைத் தலையோட’’

’’பறவைத் தலையோட இருக்கறது யாரு?’’

அவனுக்கு மறந்து விட்டது. 

‘’உன்ன கதை சொல்ல சொன்னா ஏன் என்னென்னமோ சொல்ற?’’ என்றான். 

அவன் சினத்தை ஆற்றி அவனுக்கு அனுமன் குழந்தையாய் இருந்த போது சூரியனை சிவப்புப் பழம் என எண்ணி உண்ணப் பாய்ந்ததையும் சூரியன் பிரம்மனிடம் ஓடிச் சென்று தப்பியதையும் கதையாகச் சொன்னேன். 

 

Monday, 13 June 2022

திங்கள் வலித்த கால்

களம் புகல் ஓம்புமின் தெவ்விர் போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே

-புறநானூறு

திணை : தும்பை \  துறை : தானை மறம்
அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் பாடியது 

{ போர்க்களத்துக்கு விரைந்து செல்லும் வீரர்களே ! கொஞ்சம் சிந்தியுங்கள். எங்கள் படையில் ஒரு மாவீரன் இருக்கிறான். ஒரு நாளைக்கு எட்டு தேர்களை அனாயாசமாக நிர்மாணிக்கும் தச்சன், ஒரு மாத காலம் முயன்று மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு ஒரு தேர்ச்சக்கரத்தை உண்டாக்கினால் அது எத்தனை வலிமையும் ஆற்றலும் வேகமும் கொண்டிருக்குமோ அத்தகைய திறன் படைத்த மாவீரன் எங்கள் பக்கம் இருக்கிறான்.}

***

நேற்று ஒரு நண்பருக்கு ஃபோன் செய்தேன். அவர் உள்ளூர்க்காரர். வெளியூரில் ஒரு வீடு கட்டிக் கொண்டு இருக்கிறார். அவர் ஃபோனை எடுத்ததும் ‘’நாம கடைசியா மார்ச் 12ம் தேதி பேசினோம். இன்னையோட சரியா 3 மாசம் ஆகுது’’ என்றார். அவர் தன் கையிலிருக்கும் பணத்தை எதில் முதலீடு செய்வது என்று கேட்டிருந்தார். நான் அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கில் முதலீடு செய்ய சொல்லியிருந்தேன். கொஞ்சம் கூட வந்து உதவுமாறு கேட்டிருந்தார். ‘’அமௌண்ட் டெபாசிட் செய்யணும்னு சொன்னீங்க’’ என்றேன். ‘’டெபாசிட் செஞ்சு மூணு மாசம் ஆகுது’’ . ‘’எதுல செஞ்சீங்க?’’ . ‘’நீங்க சொன்ன மாதிரி போஸ்ட் ஆஃபிஸ்ல தான்’’. ‘’அப்படியா! ரொம்ப சந்தோஷம். ‘’ ‘’உங்களுக்கு சந்தோஷம். ஆனா நீங்க கூட வரலன்னு எனக்கு வருத்தம்’’. நண்பர் சற்று சாந்தமாகட்டும் என்று பொதுவாக சில விசாரணைகளை செய்து விட்டு ஃபோனை வைத்து விட்டேன். அவர் சொன்ன பிறகு தான் யோசித்துப் பார்த்தேன். அந்த நண்பருடன் பேசி மூன்று மாதம் ஆகி விட்டது என. பின்னர் அந்த நண்பருக்கு ஃபோன் செய்து , ‘’ஐ யாம் சாரி ! ஒரு விவசாயிக்காக அவரோட ஃபீல்டுல கொஞ்சம் ஒர்க் பண்ணி கொடுத்தேன். அந்த ஒர்க்ல முழுமையா இன்வால்வ் ஆயிட்டதால நாட்கள் போனதே தெரியலை. நீங்க சொல்லி தான் மூணு மாசம்  ஆச்சுன்னு தெரியுது. ‘’ நண்பரும் விவசாயி. எனவே அது என்ன ஒர்க் என்று கேட்டார். நான் அவருக்கு விளக்கினேன். 

எனது நண்பர் ஒருவர் கட்டுமானப் பொறியாளர். அவரது அலுவலகத்தில் தான் நாளின் பெரும்பொழுது இருப்பேன். அவரது ஊழியர் ஃபோன் செய்தார். ‘’சார் ! என்ன சார் ஆஃபிஸ் பக்கமே வர மாட்டேங்கறீங்க. நீங்க இங்க வந்து இருபது நாள் ஆகுது. சார் விசாரிக்க சொன்னாரு. ஏதும் வருத்தமா சார் ?’’ ‘’நோ நோ . அதெல்லாம் இல்லை. நான் உங்க ஆஃபிஸ் வந்து இருபது நாளா ஆகுது?’’ ‘’ஆமாம் சார் . அதனால தான் ஃபோன் செஞ்சேன். ‘’ ‘’சரி இன்னைக்கு சாயந்திரம் வர்ரேன்.’’ 

இன்னும் பல உள்ளூர் வெளியூர் நண்பர்கள் உரிமையுடன் கோபித்துக் கொண்டார்கள். நான் சாதாரண ஜி.எஸ்.எம் அலைபேசி மட்டுமே வைத்திருக்கிறேன் என்பதால் நண்பர்கள் பலருக்கு என் மேல் அதிருப்தி. உண்மையில் நான் மானசீகமாக தொலைபேசியின் மனநிலையில் இருப்பவன். தொலைபேசி எளியது ; வசதியானது ; சுதந்திரமானது என்பது எனது எண்ணம் அபிப்ராயம் அனுபவம் என அனைத்தும். அதனை சொன்னால் என்னை ’’பலியிட்டு’’ விடுவார்கள் என்பதால் சொல்லாமல் இருக்கிறேன். 

3 ஏக்கர் நிலம் உடைய விவசாயி என்னிடம் ‘’உங்களுக்கு முழு சுதந்திரம் தருகிறேன். நீங்கள் என்ன செய்ய வேண்டும் , எப்படி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதனை முழுமையாக எனது வயலில் செய்யுங்கள். நீங்கள் சொல்வதில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே கேட்டு செய்கிறேன்’’ என உறுதி கொடுத்தார். அதனால் அவரது பணியை முழு கவனத்துடன் செய்ய வேண்டியதாயிற்று. இது ஒரு மாதிரி வயல் என்பதால் கடந்த மூன்று மாதமாக முழு மூச்சாக இதில் ஈடுபட்டிருந்தேன். 

அந்த பணி 90 % நிறைவு பெற்றுள்ளது. இந்த வாரம் மீதிப் பணிகளும் முடியும். இந்த நிலையில் வழக்கமான நிலைக்குத் திரும்பும் போது ஆளாளுக்கு ‘’டின்’’ கட்டுகிறார்கள். 

புறநானூற்றில் வரும் ஔவையின் பாடல் தான் நினைவுக்கு வந்தது. ‘’ ஒரு நாளைக்கு எட்டு தேர்களை அனாயாசமாக செய்யும் தச்சன் ஒரு மாதம் முழுக்க முயன்று ஒரு தேர்ச்சக்கரத்தை உருவாக்கினால் அது எத்தனை வலிமையும் வேகமும் கொண்டிருக்குமோ அத்தனை வலிமையும் வேகமும் கொண்டவன் அதியமான் நெடுமான் அஞ்சி. ‘’ என்கிறார் ஔவை. திங்கள் வலித்த கால் என்கிறார். திங்கள் என்றால் மாதம். கால் என்றால் சக்கரம். 

3 ஏக்கர் பணியும் அவ்வாறானது தான் என நான் நினைத்துக் கொண்டேன். 

நீரில் எழுத்தாகும்

சமீபத்தில் எழுதிய சிறுகதை , ‘’நீரில் எழுத்தாகும்’’ , சொல்வனம் இதழில் பிரசுரமாகியுள்ளது. அதன் இணைப்பு 

Wednesday, 8 June 2022

ஊற்று

இன்று காலையிலிருந்து ஏகப்பட்ட பணிகள். மனம் முழுவதும் லௌகிக விஷயங்களே நிரம்பியிருந்தது. ஒன்றை அடுத்து இன்னொன்று என வேலைகள். பல விதமான பணிகளில் ஈடுபடுவதால் தகவல்களும் குறிப்புகளும் வந்து குவிந்து கொண்டு இருக்கும். சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல நடக்க வேண்டும். இத்தனை பணிகளுக்கு இடையிலும் இன்று ஒரு சிறுகதையை எழுதினேன். என்னுடைய பாணியிலிருந்து சற்றே மாறுபட்ட ஒரு சிறுகதை. எழுதத் தொடங்கினால் தொடர்ச்சியாக எழுதுவது எனது எழுத்துமுறை. அவ்வாறே எழுதி முடித்தேன். படைப்பூக்கம் என்பது ஒரு ஊற்று என மீண்டும் ஒருமுறை உணர்ந்தேன்.  

Tuesday, 7 June 2022

இமய நடை

எனக்கு இங்கே ஒரு நண்பர் இருக்கிறார். நாங்கள் இருவரும் மெல்ல நடக்கும் வழக்கம் கொண்டவர்கள். சிற்றடிகளாக எடுத்து வைத்து நடப்பவர்கள். நடையில் வேகம் கூட்டாமல் சீராக செல்லும் பழக்கம் கொண்டவர்கள். எப்போதாவது மாலை வேலைகளில் ஐந்து ஆறு கிலோ மீட்டர் தூரம் நடைப்பயிற்சிக்கு செல்வோம். அது ‘’வாக்கிங்’’ நோக்கத்துக்காக அல்ல ; ‘’டாக்கிங்’’ நோக்கத்துக்காக. அதிலும் அவர் அதிகம் பேச மாட்டார். நான் தான் பேசத் துவங்குவேன். இருவரும் நாற்பது ஐம்பது அடிகள் நடக்கத் தொடங்கியதும் நான் சட்டென்று ‘’தமிழ்நாட்டுல ஒரு விஷயம் கவனிச்சிருக்கீங்களா ! இங்க மாநில அரசாங்கம் மது விக்குது. தெருவுக்குத் தெரு விக்குது. ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் டார்கெட் கூட்டிக்கிட்டே போறாங்க. அப்படி செய்யறது குடிகாரங்களை மேலும் குடிகாரங்க ஆக்கறத தவிர வேற ஒன்னும் இல்ல. ஆனா மருத்துவம் மற்றும் சுகாதாரத்துல தமிழ்நாடு ரொம்ப ஃபார்வர்டுன்னு பெருமையா கிளைம் பண்றாங்க.’’ என்று ஆரம்பித்து மகாபாரத காலத்தில் மது எவ்விதம் சமூகத்தில் இருந்தது - நம் சமூகம் எவ்வாறு மதுவை பஞ்ச மா பாதகம் என வரையறுத்தது - சமணமும் பௌத்தமும் எவ்வாறு மதுவை சமரசம் இல்லாமல் எதிர்த்தன- திருக்குறளில் கள் உண்ணாமை - தமிழ்ச் சமூகங்களில் மது மீது இருந்த கட்டுப்பாடு என்ன - பிரிட்டிஷ் அரசு எப்படி சாராயக் கடையை வருவாய் மூலமாகக் கண்டது - வட மாநிலங்களில் புகையிலை - புகைப் பிடித்தல் அதிகம் ; இங்கே சாராயம் அருந்துபவர்கள் அதிகம் - தமிழ்நாட்டில் மதுவிலக்கை நீக்கியவர்கள் என இந்திய வரலாற்றை ஒரு சுற்று சுற்றி வருவேன். ஒரு எண்ணம் உருவானதும் அடுத்தடுத்து எண்ணங்கள் உருவாகி எல்லாவற்றையும் சொல்லி முடித்தால் 7 கி.மீ வாக்கிங் முடித்து வீட்டுக்கு வந்திருப்போம். வீட்டு வாசலில் நின்று மேலும் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு பிரிந்து செல்வோம். வழக்கமாக நடைப்பயிற்சி செய்பவர்கள் வேகவேகமாக எங்களைத் தாண்டி நடந்து செல்வார்கள். நாங்கள் மெதுவாக நடப்போம். 

நண்பர் கைலாஷ் மானசரோவர் சென்று கயிலைநாதனை தரிசித்து வந்தார். அப்போது அவரது குழு மலையடிவாரம் சென்றதும் மலைப்பகுதிகளில் எப்படி நடக்க வேண்டும் என்று பயிற்சி தரப்பட்டிருக்கிறது. நண்பர் தரிசனம் முடிந்து ஊர் திரும்பியதும் நாங்கள் வழக்கம் போல வாக்கிங் போனோம். 

’’பிரபு ! ஹில் ஏரியால கொடுக்கற டிரெயினிங் மெல்லமா ஷார்ட் ஸ்டெப்ஸ்ல எப்படி நடக்கறதுன்னு தான். எங்க குரூப்ல நாப்பது பேரு. நான் மட்டும் தான் அந்த டிரெயினிங்ல ஜாலியா இருந்தேன். ஏன்னா நாம எப்படி நடப்பமோ அதுதான் ஹில்லுல நுரையீரலுக்கு கன்சிஸ்ட்டா ஆக்சிஜன் கிடைக்க ஈசியான வழி. ‘’ 

‘’அண்ணன் ! நாம் ரெண்டு பேரும் சேர்ந்து இமயமலைல டிரெக்கிங் போகணும் அண்ணன். பிளான் பண்ணுங்க’’ என்றேன்.   

Monday, 6 June 2022

காணி நிலம்

பாரதியார் பராசக்தியிடம் காணி நிலம் வேண்டும் என்று கேட்டார். அந்த காணி நிலத்தில் என்னென்ன இருக்க வேண்டும் என்று அவருக்கு பல விருப்பங்கள் இருந்தன.  எனக்கும் காணி நிலம் குறித்து சில விருப்பங்கள் இருக்கின்றன! காணி நிலம் என்பது 1.3 ஏக்கரைக் குறிக்கும். ஒரு ஏக்கரை விட சற்று கூடுதல். இதனை ஓர் நுண் அலகாகக் கொள்ள முடியும். இந்தியா 2.5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயியை குறு விவசாயி என்கிறது. காணி நிலம் வைத்திருப்பவர் அத்தகைய அளவீட்டின் படி குறு விவசாயியே. 

நுண் அலகு என்னும் கருதுகோள் அறிவியலில் முக்கியமானது. அளவிடப் பெரியவற்றை ஒரு நுண் அலகாக அல்லது சிறு சிறு நுண் அலகுகளாகப் பிரித்துக் கொண்டு அதனை முழுமையாக அறிவதன் மூலம் நுண் அலகைப் போல் பல்லாயிரம் பல லட்சம் மடங்கு பெரிதாக இருப்பவை குறித்த அறிதலை அடைய முடியும். ஆங்கிலத்தில் இதனை ‘’Micro'' and ''Macro'' என்பார்கள். இவ்வாறான முறை உயிரியல், மருத்துவம், பொருளாதாரம், சமூகவியல், கலை, தொழில்நுட்பம் என பல துறைகளில் உள்ளது. ஐரோப்பாவில் ‘’Small is beautiful'' என்று ஒரு பார்வை உண்டு.  நாம் விவசாயத்தில் அதனை யோசித்துப் பார்ப்போம். 

தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. அவற்றில் ஏதேனும் ஒரு காணி நிலத்தை - அதாவது 1.3 ஏக்கரை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வோம். இப்போது நமது பரிசோதனைக்கு 1.3 ஏக்கர் நிலம் உள்ளது. எனினும் நாம் இந்த நிலத்தில் செய்ய உள்ள ஆய்வு அல்லது முயற்சி விவசாயம் மட்டும் தொடர்பானது இல்லை. அதனுடன் பொருளியலும் இணைந்துள்ளது. எனவே அதனை விவசாய முயற்சியாகவும் எடுத்துக் கொள்ளலாம். பொருளியல் முயற்சியாகவும் எடுத்துக் கொள்ளலாம். 

அந்த ஒரு காணி நிலம் விவசாயிக்கு உச்சபட்ச வருமானம் தரக்கூடிய சாத்தியம் கொண்டதாக இருக்க வேண்டும். அதன் வரப்புகள் ஒரு வயல் வரப்பு எத்தனை அடி நீளம் கொண்டதாக இருந்தால் உபயோகமாக இருக்குமோ அத்தனை அடி நீளம் கொண்டிருக்க வேண்டும். அந்த வயலில் நெல் பயிரிடுகிறோம் என்றால் அந்த மண்ணில் இருக்க வேண்டிய நுண் ஊட்டங்களுக்கு எத்தன்மையான உரங்கள் அளிக்கப்பட்டன என்பது அதன் அளவு மற்றும் செலவுடன் குறித்துக் கொள்ளப்பட வேண்டும். இயற்கை விவசாயம் எனில் அதில் இடப்பட்ட மண்புழு உரம் , ஜீவாமிர்தம் ஆகியவற்றின் அளவையும் பொருள் மதிப்பையும் குறித்துக் கொள்ள வேண்டும். இந்த காணி நிலத்துக்கு எவ்வள்வு விதை நெல் தேவைப்பட்டது. ஒற்றை நாற்று முறை எனில் எத்தனை நாற்றுகள் நடப்பட்டன என அனைத்தும் எண்ணிக்கைக்குள் வர வேண்டும். குருவிகள் அமர ஏற்பாடு எத்தனை சதுர அடிக்கு இத்தனை எனத் தேவையோ அதுவும் அமையப் பெற வேண்டும். இரவுப் பறவைகள் அமர ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். 

நெல் வயலின் வரப்பில் பயிரின் வளர்ச்சியைத் தடுக்காத நிழல் கட்டாத உயரமாக வளரும் தேக்கு மரங்கள் வைக்கப்பட வேண்டும். அவை முறையாக கவாத்து செய்யப்பட வேண்டும். ஒரு மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் இடையில் இருக்கும் வரப்பின் மேற்பரப்பில் பச்சைப்பயறு , காராமணி போன்ற பருப்பு வகைகள் விதைக்கப்பட வேண்டும். அந்த நிலத்தில் செய்யப்படும் ஒரு ரூபாய் செலவு கூட ஆவணப்படுத்தப் பட வேண்டும். சித்திரை மாதத்திலிருந்து பங்குனி மாதம் வரை உள்ள 12 மாதங்களில் ஓர் ஆண்டில் நெல் மூலம் கிடைத்த வருவாய் என்ன உளுந்து மூலம் கிடைத்த வருவாய் என்ன வரப்பில் பயிரிடப்படும் பருப்பு மூலம் கிடைக்கும் வருவாய் என்ன என்பது ஆவணப்படுத்தப் பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் வயலில் உள்ள மண்ணில் எவ்வாறு நுண்ணுயிரிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பதும் குறிக்கப்பட வேண்டும். அந்த வயலில் விவசாயம் மூலம் வருவாய் கிடைக்க சாத்தியம் உள்ள அத்தனை வழிமுறைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த ஒரு காணி நிலத்தில் விவசாயம் மூலம் லாபம் என்ன கிடைக்கிறது என்பது வரவு செலவுடன் அட்டவணைப்படுத்தப்பட வேண்டும். 
 

Sunday, 5 June 2022

ஒரு சிறுவனும் ஒரு சலூனும்

சிறுவனாக இருந்த போது அப்பா சலூனுக்கு அழைத்துச் செல்வார். பின் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்த பின் அப்பா அழைத்துச் செல்லும் சலூனுக்கு சைக்கிளில் தனியாக செல்ல ஆரம்பித்தேன். எத்தனையோ சலூன்கள் இருக்கின்றன ; ஏன் அப்பா செல்லும் சலூனுக்கே நாமும் செல்ல வேண்டும் என பலமுறை யோசித்திருக்கிறேன். நாமாக புதிதாக ஒரு சலூனுக்குச் சென்றால் அப்பாவுக்கு தெரியுமா என பல சாத்தியக்கூறுகளை பரிசீலித்துப் பார்த்து  ஒருமுறை நானாக ஒரு புதிய சலூனுக்கு சென்று விட்டேன். அப்பா செல்லும் சலூன் கடைக்காரர் பல வருடங்களாகத் தெரிந்தவர். இப்போது சென்றிருக்கும் கடை புதிது. ஒரு புதிய இடத்தில் உணரும் அசௌகர்யத்தால் என்ன பாணியில் முடி வெட்ட வேண்டும் என்று சொல்வதில் சிறு தயக்கம் ஏற்பட்டு சொல்லாமல் இருந்து விட்டேன். அந்த சலூன் இளைஞர்கள் அதிகம் குழுமுவது. அவர் ஒரு விதமாக முடி வெட்டி விட்டார். வீட்டுக்கு வந்தேன். வீட்டில் அனைவருமே என்னைப் பார்த்ததும் கேட்ட கேள்வி : முடி வெட்டினாயா இல்லையா? வெட்டிக் கொண்டேன் என்று பதில் சொன்னேன். தலைமுடி குறைக்கவேயில்லையே என்றார்கள். வழக்கம் போல் தான் வெட்டிக் கொண்டேன் என்றேன். மீதி பணம் கொடுத்தேன். புது சலூனில் வழக்கமாக ஆகும் தொகையை விட ரூ. 20 கூடுதல். மீதி பணம் ஏன் குறைகிறது என்று கேட்டார்கள். நான் மௌனமாக இருந்தேன்.இதில் ஆச்சர்யம் என்ன என்றால் இத்தனை கேள்விகளையும் அம்மாவே கேட்டு விட்டார்கள். அம்மாவுக்கு இது தெரிந்தால் அப்பாவுக்கு நிச்சயம் தெரிந்து விடும். என்ன செய்வதென்று தெரியவில்லை. குளித்து விட்டு வந்தேன். அன்று மாலை அப்பாவைப் பார்த்த போது அப்பா என்னிடம் ,’’ஏன் இன்னும் முடி வெட்டிக் கொள்ளாமல் இருக்கிறாய்? ‘’ என்று கேட்டார்கள். நான் மௌனமாக இருந்து விட்டேன். ஓரிரு நாள் கழித்து அம்மா அப்பாவிடம் நடந்ததைச் சொல்லியிருக்கிறார்கள். அப்பா என்னிடம் , ‘’வழக்கமாக செல்லும் சலூனை ஏன் மாற்ற வேண்டும் என்று நினைத்தாய்?’’ என்று கேட்டார்கள்.  எல்லா சிறுவர்களையும் போல ஒரு ஆர்வத்திலும் துடிப்பிலும் தான் புதிதாக ஒன்றைச் செய்து பார்த்தேன்.என்றாலும் அதைச் சொல்ல தயக்கம். என்ன சொல்லலாம் என்று யோசித்தேன். நான் புதிதாக ஒன்றை முயன்று பார்க்க ஒரு காரணமும் இருந்தது. நான் வழக்கமாக செல்லும் சலூனில் நடுத்தர வயது உள்ளவர்களும் முதியவர்களும் தான் அதிகம் வருவார்கள். நான் காத்திருந்தால் சிறுவன் தானே என்று கடைக்காரரிடம் சொல்லி  வரிசையை அனுசரிக்காமல் அவர்கள் முன்னால் முடி வெட்டிக் கொண்டு சென்று விடுவார்கள். அதன் பின்னர் தான் எனது முறை வரும். இவ்வாறு சில முறை நிகழ்ந்து விட்டது. நான் அதனை காரணமாகக் கூறி ‘’First come ; First serve'' என்பது தானே முறை . என்னை எல்லாரும் சிறுவன் என்பதால் வரிசை முறையை அனுசரிக்காமல் எனக்கு பின்னால் வந்தவர்கள் என்னைக் காக்க வைத்து விட்டு முன்னால் போகிறார்கள். நானும் கஸ்டமர் தான் . நானும் பணம் கொடுக்கிறேன். என்று அப்பாவிடம் கூறினேன். அப்பா பின்னர் பொறுமையாக இவ்வாறு நடந்ததை ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கேட்டார். அது என்னை மேலும் சிறுவனாகக் காட்டும் என்பதால் சொல்லவில்லை. ஆனால் அந்த பதிலைக் கூறாமல் அமைதியாக இருந்தேன். ’’அவர் நல்ல மனிதர் . உனக்கு இப்படி ஒரு புகார் இருந்தால் என்னிடம் கூறியிருக்க வேண்டும். இல்லையென்றால் அவரிடமே கூட கூறியிருக்கலாம். அவருக்கு உன் முறையை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்திருக்காது. நீ பள்ளி விடுமுறை நாட்களில் தான் சலூனுக்குச் செல்கிறாய். 30 , 40 நிமிடம் தாமதமானால் கூட உனக்கு பாதிப்பு இல்லை என்பதால் அவ்வாறு செய்திருப்பார். அதற்காக புதிய சலூன் மாற்ற வேண்டியது இல்லை. இப்போது பார். முடி வெட்டுவதற்கு முன்னால் இருந்ததைப் போல முடி வெட்டிய பின்னும் இருக்கிறது. இந்த மாதிரி முடி வெட்டிக் கொண்டால் இப்போது மாதம் ஒரு முறை சலூனுக்கு செல்கிறாய் ; இனி வாரம் ஒரு முறை செல்வாய் ‘’ என்று அப்பா சொன்னார்.  15 நாள் கழித்து மீண்டும் பழைய சலூனுக்கே சென்றேன். சலூன்காரர் முடி வெட்டத் துவங்கினார். சிறிது நேரத்தில் , ‘’தம்பி ! நாலு நாள் முன்னாடி அப்பா முடி வெட்ட கடைக்கு வந்திருந்தார்கள்.’’ என்று சொல்லி விட்டு வேறு ஏதும் சொல்லாமல் சிரித்தார். நானும் சிரித்தேன். கொஞ்ச நேரம் கழித்து , ‘’மற்றவர்கள் கூட பரவாயில்லை ; தாடி வைத்துக் கொண்டு ஒரு மளிகைக் கடைக்காரர் எப்போதும் கடை திறக்க வேண்டும் ; கடை திறக்க வேண்டும் என்று சொல்லி முன்னால் வந்த என்னைப் பின் தள்ளி விடுகிறார்’’ என்றேன். ‘’அவர் காலைல 7 மணிக்கு கடை திறக்கணும். நான் கடை திறக்கவே 6.30 ஆகிடும். அவர் ஷேவ் செய்து கொண்டு வீட்டுக்குப் போய் குளித்து விட்டு தனது மளிகைக் கடைக்கு வர வேண்டும்.’’  என்று கடைக்காரர் சொன்னார். ‘’முதல் நாள் சாயந்திரமே வந்து ஷேவ் செஞ்சுக்க வேண்டியது தானே?’’ என்று நான் கேட்டேன். ‘’அவர் காலைல 7 மணிக்கு கடை திறந்தால் நைட் 9 மணிக்கு தான் கடையை சாத்துவார். எல்லா நேரமும் கடை தான். காலை டிஃபன் , மதியம் சாப்பாடு எல்லாம் ஹோட்டலில் இருந்து வாங்கி வரச் சொல்லி கடையிலேயே சாப்பிடுவார். இரவு உணவு மட்டும் தான் வீட்டில் ‘’ என்றார் கடைக்காரர். 

இந்த நிகழ்வுக்குப் பின் மேலும் சில ஆண்டுகள் அந்த சலூனுக்கே சென்று வந்தேன். அதன் பின்னர் தான் வேறு சலூனுக்கு மாறினேன். 

பல ஆண்டுகள் கழித்து ‘’சலூன் நூலகங்கள்’’ முன்னெடுப்புக்காக பழைய சலூன்காரரை சந்தித்தேன். ஆண்டுகள் பல ஆகியிருந்ததால் என் முகம் அவருக்கு நினைவில் இல்லை. எல்லா சலூன்களிலும் என்னை அறிமுகப்படுத்திக் கொள்வது போலவே அவரிடமும் ’’சிவில் இன்ஜினியர்’’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டு விஷயத்தை எடுத்துச் சொல்லி புத்தகங்களை வழங்கினேன். புறப்படும் நேரத்தில் ‘’என்னை நினைவிருக்கிறதா ?’’ என்று கேட்டேன். அவர் நினைவுபடுத்த முயன்றார். அப்பா பெயரைச் சொன்னேன். அவருக்கு நினைவு வந்து விட்டது. அப்பா இப்போதும் அவருடைய சலூனில் தான் முடி வெட்டிக் கொள்கிறார். ’’சைக்கிள்ல சின்ன பையனா வருவீங்க தம்பி ‘’ என்றார். அவருக்கு நான் ‘’சலூன் நூலகங்கள்’’ விஷயத்தை முன்னெடுப்பது குறித்து மிகுந்த சந்தோஷம். விடை பெற்றுக் கொண்டோம். 

மாரத்தான் ஓட்டத்துக்கான அடிப்படை பயிற்சிகளில் ஒன்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நடந்து செல்வது. கால்களில் இரத்த ஓட்டம் சீராக இருக்க அது உதவும். இன்று காலை ஷேவ் செய்து கொள்ள சலூனுக்கு நடந்து சென்றேன். பழைய கடைக்காரருக்குப் பின் ஒரு சலூனுக்கு வாடிக்கையாகச் செல்வேன். அவர் கடைக்கு பத்து ஆண்டுகள் சென்றிருப்பேன். அவர் சிங்கப்பூர் சென்று விட்டார். அதன் பின்னர் ஒரு சலூனுக்கு சென்றேன். அது ஒரு ஏழு ஆண்டுகள் இருக்கும். இப்போது செல்லும் சலூன் எட்டு ஆண்டுகள். இன்று நடந்து செல்லும் போது சிறுவனாயிருந்த போது செல்லும் சலூனின் வழியாக நடந்து கொண்டிருந்தேன். அவர் கடை சிறிய கடை. வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை. அவர் கடைக்கு சென்றேன். ஷேவிங். நேர்த்தியாக பணியை மேற்கொண்டார். ‘’ உங்களுக்கு வேலை செஞ்சு 25 வருஷம் இருக்குமா?’’ என்றார். யோசித்துப் பார்த்து விட்டு இருக்கும் என்றேன். 

அவர் கடையில் ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக வழங்கிய நூல்கள் இருந்தன. வாடிக்கையாளர்கள் புத்தகங்களை எடுத்து வாசிக்கிறார்களா என்று கேட்டேன். பலர் ஆர்வமாக வாசிக்கிறார்கள் என்று சொன்னார். அதைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. மாவட்டத்தில் உள்ள எல்லா சலூன்களுக்கும் மேலும் சில நூல்களை வழங்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என்றேன். 

பின்குறிப்பு :

அடிக்கடி என்னை வரிசையில் பின் தள்ளி விட்டு முன்னால் சென்று ஷேவ் செய்து கொள்ளும் மளிகைக் கடைக்காரருக்கு பல ஆண்டுகள் கழித்து அவருடைய இல்லத்தை நான் தான் ஒப்பந்த அடிப்படையில் நிர்மாணித்துக் கொடுத்தேன். கட்டுமானத்தில் அவருக்கு மிகவும் திருப்தி. நிறைவுத் தொகையை வழங்க வீட்டுக்கு வந்திருந்தார். அவருடைய இல்ல கட்டுமானப் பணி துவங்கியதிலிருந்து அவரிடம் கூறாதிருந்த சலூனில் நடந்த நிகழ்ச்சியை அவருக்கு நினைவு படுத்தினேன்.   அவர் ஆச்சர்யப்பட்டார். 

Saturday, 4 June 2022

ஒரு மாதிரி வயல்

கடந்த மூன்று மாத காலமாக கணிசமான பொழுதினை ஒரு குறிப்பிட்ட செயலுக்காக வழங்கி வருகிறேன். அது குறித்தே எப்போதும் யோசனை. இன்னும் என்னென்ன வகையில் துல்லியமாக்கலாம் என அவதானித்துக் கொண்டிருந்தேன். ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் ஒரு கிராமத்தை அடிப்படை அலகாகக் கொண்டவை. ஒரு முழு கிராமத்துக்கு என்ற அளவிலேயே ‘’காவிரி போற்றுதும்’’ திட்டமிடல்கள் இருந்தன - இருக்கின்றன. எனினும் இந்த செயலாக்கம் முதற் பார்வையில் ஒரு விவசாயி தொடர்பானது. ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் அது எல்லா விவசாயிகளுக்குமானது. எனவே இதனை ஒரு மாதிரி வடிவமாக ஆக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உருவானது. எனவே இதற்கு முழுமையான நேரமும் கவனமும் கொடுத்தேன். 

‘’காவிரி போற்றுதும்’’ ஒரு கிராமம் என்பதை ஒரு தேசம் என்பதாகவே எண்ணுகிறது. மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுக்காக தூது செல்லும் போது ஒரு கிராமத்தை மட்டுமாவது பாண்டவர்களுக்குக் கொடுங்கள் என்று இறைஞ்சுகிறார். தேசத்துக்குரிய அத்தனை மாண்புகளும் கிராமத்துக்கும் உண்டு. 

விவசாயிகள் பெரும் பொருளியல் சக்தியாக மாற வேண்டும் என்பது ‘’காவிரி போற்றுதும்’’ விருப்பங்களில் ஒன்று. விவசாயிகளின் வாழ்வில் பொருளியல் செழிப்பைக் கொண்டு வருவதே ‘’காவிரி போற்றுதும்’’ லட்சியம். தலைமுறை தலைமுறைகளாக மண்ணில் உழைத்து வியர்வை சிந்தி தேசத்துக்கே உணவளித்த பாரம்பர்யம் கொண்ட விவசாயிகள் தன்னிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகவே ‘’காவிரி போற்றுதும்’’ தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது. ‘’செய்க பொருளை’’ என்பது திருவள்ளுவரின் கட்டளை. நம் நாட்டில் விவசாயிகள் செழிப்பாக இருந்த காலகட்டங்களில் உலகின் GDPல் 50% நமது பங்களிப்பாக இருந்திருக்கிறது. 

’’காவிரி போற்றுதும்’’ பணிகளை முன்னெடுத்த போது காவிரி வடிநிலப் பகுதி விவசாயிகளிடம் தேக்கு மரங்கள் பயிரிடுமாறு கேட்டுக் கொள்வேன். முழு நிலப்பரப்பில் இல்லாவிட்டாலும் வயலின் வரப்புகளிலாவது பயிரிடுமாறும் அது வயல் அளிக்கும் வருமானத்தினும் மிகுதியான வருமானத்தை அளிக்கும் என்றும் அவர்களிடம் கூறுவேன். பல விவசாயிகள் இதனை மேற்கொண்டனர். இருப்பினும் எனக்கு ஒரு ஆவல் இருந்தது. விவசாயிகளை நேரடியாக அழைத்துச் சென்று எல்லா விதத்திலும் பரிந்துரைக்கப்பட்ட முறைகளில் ஒரு வயலில் முழுமையாக தேக்கு பயிரிடப்படுமானால் அது விவசாயிகள் நேரடியாக பார்த்து அறிய ஏதுவாக இருக்கும் என்பதால் அவ்வாறான ஒன்றை அமைக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தேன். 

என்னுடைய தொடர் பணிகளைப் பார்த்த ஒரு விவசாயி - அவர் ஐ.டி கம்பெனியில்  பணிபுரிபவர் - பரிந்துரைக்கப்பட்ட விதங்களில் தனது 3 ஏக்கர் வயலிலும் முழுமையாக தேக்கு பயிரிட விரும்புவதை என்னிடம் தெரிவித்து அதன் செயலாக்கத்தை முன்னின்று நடத்துமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். 

மூன்று மாதமாக அந்த பணியை முன்னெடுத்தேன். ஊரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அவரது வயல் உள்ளது. தினமும் பல மணி நேரங்கள் அங்கே இருப்பேன். வேலை சரியாக நடக்கிறதா என்று பார்ப்பேன். தொய்வுகள் ஏதேனும் இருப்பின் அவற்றை சரிசெய்வேன். கொஞ்சம் கொஞ்சமாக நிறைவை நோக்கி நகர்த்திச் செல்வதற்கு தேவையானதைச் செய்தேன். 

1. என்னுடைய கட்டுமானப் பொறியியல் அறிவின் துணை கொண்டு 3 ஏக்கர் முழுமையான பரப்புக்கும் 2 அடி உயரம் கொண்ட மேட்டுப்பாத்தி அமைக்கப்பட்டது. பொதுவாக ஒரு அடி உயரத்தில் மேட்டுப்பாத்தி அமைப்பார்கள். ஆனால் இரண்டு அடி உயரம் தேவை என்பதில் நான் உறுதியாக இருந்தேன். 

2. மேட்டுப்பாத்தியில் ஒரு மரக்கன்று நடப்பட 2 அடி நீளம் 2 அடி அகலம் 2 அடி ஆழம் கொண்ட குழிகள் ஏற்படுத்தப்பட்டன. அந்த 8 கன அடி கொள்ளளவு கொண்ட குழிகளில் மக்கிய சாண எருவும் கரித்தூளும் கலந்து இடப்பட்டன. 

3. ஒரு மரத்துக்கும் அதன் அருகில் உள்ள  இன்னொரு மரத்துக்கும் இடையே 12 அடி இடைவெளி வயலின் முழுப் பரப்புக்கும் பேணப்பட்டது. 

எளிமையாய்த் தோன்றும் இந்த விஷயங்களை செயலாக்குவது என்பது எளிய ஒன்றாக இருக்கவில்லை. இருப்பினும் முழுமையான உழைப்பை அளித்து அச்செயலுக்கு எங்களை முழுமையாக அர்ப்பணித்து அதனை செய்து முடித்தோம். 

இனி இந்த செயலுக்குப் பிறகு , ‘’காவிரி போற்றுதும்’’ விவசாயிகளுக்கு என்ன செய்ய முடியும் என்றால்,

1. ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் குறு விவசாயியிலிருந்து 15 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் பெரு விவசாயி வரை எவரையும் நேரடியாக இந்த வயலுக்கு அழைத்து வந்து நிகழ்ந்துள்ளதைக் காட்ட முடியும். விவசாயிகள் எப்போதுமே பிரத்யட்சமாக காணக் கூடியதை எளிதில் புரிந்து கொண்டு தங்கள் வயலில் செயல்படுத்துவார்கள். தேக்கங்கன்றுகள் வளர்ச்சியைக் காணும் போது அதன் எதிர்கால வளர்ச்சியையும் அவர்களால் அனுமானிக்க முடியும். சில வருடங்களில் இது ஒரு அனுபவ ஞானமாகியிருக்கும். 

இந்திய தத்துவ மரபு பிரத்யட்சம், அனுமானம், சுருதி என அறிதல் முறைகள் மூன்று என வகுக்கிறது. 

2. வயல் வரப்பில் தேக்கு வளர்ப்பதில் நடைமுறை சிக்கல்கள் கொண்ட விவசாயிகள் பத்திலிருந்து பதினைந்து தேக்கு மரங்களை ஒரு மேட்டுப்பாத்தி அமைத்து நட்டு விட்டு மற்ற பரப்பில் வழக்கம் போல் அவர் செய்வதை செய்து கொண்டிருக்கலாம். ஒரு மேட்டுப்பாத்தி அமைக்க சில நூறுகள் மட்டுமே செலவாகும் என்பதால் பலரும் இதனை முயன்று பார்ப்பர். சிறு அளவில் நல்ல பலன் இருந்தால் அதனை விரிவாக்குவார்கள். 

3. இந்த வயல் அவர்களுடைய எல்லா ஐயங்களையும் நீக்கும். 

இப்போதே பல நண்பர்களையும் விவசாயிகளையும் இந்த மாதிரி வயலுக்கு அழைத்து வந்து காட்டியிருக்கிறேன். அவர்கள் நிகழ்ந்துள்ளவற்றைக் கண்டு ஊக்கம் பெற்றுள்ளார்கள். 

மூன்று ஏக்கரில் 800 தேக்கு மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. உழைப்பை நம்பும் உழைப்பை அளிக்கும் அந்த விவசாயி பூமாதேவியின் ஆசியுடன் ஆகாசவாணியின் ஆசியுடன் தனது உழைப்புக்கேற்ற பலனாக 15 ஆண்டுகளில் பத்து கோடி ரூபாய் பெறுவார். 

நாம் உழைப்பை நம்புகிறோம். நாம் தெய்வத்தை நம்புகிறோம். 

ஒவ்வொரு விவசாயிக்கும் இந்த வாய்ப்பும் இந்த சாத்தியமும் அமைய வேண்டும் என்பதே ‘’காவிரி போற்றுதும்’’ விருப்பம். 



 

Wednesday, 1 June 2022

ஓர் அதிகாரி

பல சூழ்நிலைகளில் - பல வருடங்களில் - பல விதமான வெள்ள நிவாரணப் பணிகளில் பங்கெடுத்திருக்கிறேன். அவ்வாறான ஒரு சூழ்நிலையில் இணைந்து பணியாற்றிய ஒரு ஆட்சிப் பணி அதிகாரி நேற்று ஊருக்கு வந்திருந்தார். எனக்கு ஃபோன் செய்தார். பல வருடங்களுக்குப் பிறகு என்னுடைய ஞாபகம் அவருக்கு இருந்தது மகிழ்ச்சி அளித்தது. அவரைச் சென்று சந்தித்தேன். அவருடன் அவருடைய துணை அதிகாரியும் உடனிருந்தார். துணை அதிகாரி எனக்கு இப்போது தான் அறிமுகமாகிறார். அவரிடம் அதிகாரி எவ்வாறு வெள்ள நிவாரணப் பணிகளில் பம்பரம் என சுழன்று பணியாற்றுவார் என்பதை நினைவு கூர்ந்தேன். காலை 7 மணிக்கு அலுவலகத்தில் இருப்பார். வெள்ளம் பாதித்த பல கிராமங்களுக்கு செல்வார். மக்களைச் சந்திப்பார். ஏற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளன என்பதை துல்லியமாக ஆய்வு செய்வார். ஓர் அதிகாரி ஒரு விஷயத்தில் அக்கறை காட்டுகிறார் என்றாலே அவருக்குக் கீழ் உள்ள அரசு நிர்வாகத்தின் கீழ் அடுக்கு வரை அனைத்து வேலைகளும் சரியாக இருக்கும்.  வெள்ள நிவாரணப் பணிகளின் போது அவருடைய பணி எல்லையில் அனைத்தும் மிகச் சரியாக இருந்தன. நான் பொதுவாக எந்த விஷயத்தையும் கறாராகவே மதிப்பிடுபவன். எனது மதிப்பீட்டிலியே அனைத்தும் சரியாக இருந்தன. காலை 7 மணிக்குத் துவங்கும் அவரது பணிகள் இரவு 11 மணி வரை நீடிக்கும். ஊழியர்களுக்கு குறிப்புகளை அளித்தல் - நிலையை துல்லியமாக மேலிடத்துக்கு தெரிவித்தல் - விடுபடல்கள் ஏதும் இன்றி அனைத்தும் நடக்கிறதா என ஆய்வு செய்தல் என எல்லா வேலைகளையும் பிழையின்றி மேற்கொள்வார். ஐ. ஏ. எஸ் தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பார். அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்து கொடுப்பார். 

மாநில அரசின் அலுவலகங்களுக்கு எப்போதோ செல்பவர்கள் ஆனாலும் அடிக்கடி செல்பவர்கள் ஆனாலும் அவர்கள் அங்கே அடையும் அனுபவம் என்பது மிகவும் எதிர்மறையான ஒன்றாகவே இருக்கும். அரசு இயந்திரம் மிக மோசமான நிலையில் உள்ளது என்பதே உண்மை. மக்கள் அடிக்கடி செல்ல நேர்கிற போக்குவரத்து அலுவலகம், நகராட்சி அலுவலகம், பத்திரப் பதிவு அலுவலகம்  ஆகிய்வை ஆனாலும் மிகக் குறைவாக பொது மக்கள் செல்லும் அலுவலகங்கள் ஆனாலும் ஒரே நிலைமை தான். பொதுமக்களை உரிய விதத்தில் அணுகுவதும் பதிலளிப்பதும் தங்கள் பொறுப்பு அல்ல என எண்ணும் - மக்கள் ஏன் அலுவலகங்களுக்கு வருகிறார்கள் என அலுத்துக் கொள்ளும் மனநிலையே பல வருடங்களாக தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு இருக்கிறது. ‘’சேற்றில் முளைத்த செந்தாமரை’’ என நண்பரைப் போல சிலர் இருக்கிறார்கள் என்பதும் அவர்களைப் போன்றவர்களே நிர்வாக மாற்றங்களை தொடர்ந்து நிகழ்த்துகிறார்கள் என்பதுமே மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயங்கள். 

நேற்று காலையிலிருந்து மாலை வரை அவருடன் பயணித்தேன். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து சொன்னேன். ஆர்வமுடன் கேட்டுக் கொண்டார். ஊருக்கு அருகில் 3 ஏக்கர் பரப்பில் நண்பர் வயலில் முழுமையாக தேக்கு நட ஏற்பாடு செய்வதை அவரிடம் தெரிவித்து அதனை நீங்கள் வந்து பார்க்க வேண்டும் என்று எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். வாகனத்தில் செல்லும் போது அங்கே நிகழும் விஷயங்கள் குறித்து முழுமையாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார். வயலில் நிகழ்பவற்றை பார்த்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

நேற்றைய நாளின் பெரும்பாலான பொழுது அவருடன் செலவிட்டது மகிழ்ச்சியையும் நிறைவையும் தந்தது. 

சரித்திரம் (நகைச்சுவைக் கட்டுரை)

கல்லூரியில் கடைசி செமஸ்டரில் எங்களுக்கு ஒரு புராஜெக்ட் உண்டு. நான்காம் ஆண்டு துவங்கியதுமே இரண்டு இரண்டு மாணவர்களாக மொத்த வகுப்பின் எண்ணிக்கையைப் பிரித்து அந்த குழுவுக்கு ஒரு பேராசிரியரை வழிகாட்டியாக நியமித்து விடுவார்கள். வருகைப்பதிவின் அகர வரிசை அடிப்படையில் மாணவர் குழு உருவாக்கப்படும். ஒரு பெரிய கட்டிடம் ஒன்றினை டிசைன் செய்ய வேண்டும். நான்கு வருடமாக கற்ற அனைத்து விஷயங்களையும் ஒருங்கிணைத்துத் தொகுத்துக் கொண்டால் புராஜெக்ட்டை நல்ல முறையில் நிறைவு செய்யலாம். அதனை வழிநடத்தவே வழிகாட்டி. 

என்னுடைய புராஜெக்ட் மெட் ஒரு பேராசிரியரிடம் டியூஷன் படித்துக் கொண்டிருந்தான். அப்போது பிரபலமாக இருந்த ஆட்டோகேட் என்ற சாஃப்ட்வேரில் அவன் திறன் பெற விரும்பினான். அந்த பேராசிரியருக்கும் எங்கள் வழிகாட்டியாக இருந்த பேராசிரியருக்கும் கல்லூரி தொடர்பான பல விஷயங்களில் முரண்கள். அது எங்கள் புராஜெக்ட்டில் பிரதிபலிக்கத் தொடங்கியது.  ஒரு கட்டத்தில் எங்கள் வழிகாட்டி எனது புராஜெக்ட் மெட்டிடம் ‘’நீ எப்படி புராஜெக்ட்டை நிறைவு செய்கிறாய் என்று பார்க்கிறேன்’’ என்று மிரட்டத் தொடங்கினார். எனக்கு அவர்கள் மோதலில் நேரடித் தொடர்பு இல்லை எனினும் நான் என் புராஜெக்ட் மெட் பாதிக்கப்படும் இடத்தில் இருந்ததால் தார்மீக ரீதியாக அவனுடன் துணை நின்றேன். அவ்வப்போது நடக்கும் விஷயங்களை என்னிடம் சொல்லி வருத்தப்படுவான். இதே நிலையில் ஒரு செமஸ்டர் அதாவது ஆறு மாதங்கள் முடிவடையும் நிலை வந்து விட்டது. ஒரு நாள் என்னிடம் ‘’வழிகாட்டி’’ மிகவும் வருத்துவதாக வருத்தப்பட்டான். துறைத் தலைவரிடம் சென்று கூறுவோம் என்றான். இன்னும் ஆறு மாதத்தில் கல்லூரி நிறைவடைய இருக்கும் நிலையில் ஒரு சிக்கலுக்குள் நுழைவது உசிதமா என்பது எங்கள் கவலையாக இருந்தது. இருப்பினும் துறைத் தலைவரிடம் சென்று தெரிவித்தோம். அவர் நல்ல மனிதர். நியாயமானவர். ஆனால் நாங்கள் எதிர்பாராத விஷயம் ஒன்றைச் சொன்னார். வாய்மொழியாக புகார் அளித்தால் இந்த விஷயத்தை விசாரிக்க முடியாது ; வேண்டுமானால் எழுத்துப் பூர்வமாக புகார் அளியுங்கள் என்றார். நாங்கள் வந்து விட்டோம். அவர் தெரிவித்த அன்று மாலை வகுப்புகள் முடிந்ததும் துறைத் தலைவர் அறைக்கு அருகில் இருந்த காலி வகுப்பறை ஒன்றில் அமர்ந்து விஷயத்தை தெரிவித்து ஒரு கடிதம் எழுதினோம். புராஜெக்ட் மெட்டின் கையெழுத்து கோழிக் கிறுக்கலாக இருக்கும். எனவே கடிதத்தை நான் எழுதினேன். ஆனால் அது பலவிதத்திலும் ரிஸ்க். இருந்தும் எனது கையெழுத்தில் எழுதினேன். ’’ஃபிரம்’’ பகுதியில் எங்கள் இருவரின் பெயர்களும் வகுப்பும். ‘’டூ’’ பகுதியில் துறைத்தலைவர். ‘’சப்ஜெக்ட்’’ பகுதியில் புராஜெக்ட் நிறைவு செய்வதில் உருவாக்கப்படும் இடையூறுகள் என குறிப்பிட்டோம். விஷயத்தை விளக்கி எழுதி துறைத் தலைவரிடம் வழங்கி விட்டோம். அப்போதும் அவரிடம் ‘’ நீங்கள் கூறுவதால் தான் இவ்வாறு செய்கிறோம். எங்களுக்கு இதில் விருப்பமில்லை’’ என்று கூறினோம். எங்கள் முன்னால் பச்சை மை பேனாவில் ஆங்கிலத்தில் ‘’ஃபார்வர்டர்ட்’’ என எழுதி தனது சுருக்கக் கையெழுத்தை இட்டார். நாங்கள் விடைபெற்றுக் கொண்டோம். 

மறுநாள் காலை எங்கள் முதல் பிரிவேளை வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது எங்கள் வழிகாட்டி வகுப்புக்கு வந்தார். அந்த நேரத்தில் அவர் அங்கு வருவது ஏன் என்று வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த விரிவுரையாளருக்குப் புரியவில்லை. ஏனெனில் அவர் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பாடம் எடுப்பவர் இல்லை. மூன்றாம் ஆண்டில் தான் அவரது பாடம். என்ன விஷயம் என்று வகுப்புக்கு வெளியே சென்று கேட்டார். அவர்கள் சிறிது நேரம் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது எங்கள் இரண்டு பேருக்கு மட்டும் தெரியும். எங்கள் வகுப்பின் மற்ற மாணவர்களுக்குத் தெரியாது. வழிகாட்டியும் விரிவுரையாளரும் வகுப்புக்குள் வந்தனர். வழிகாட்டி தன்னைப் பற்றி நாங்கள் இருவரும் அளித்த புகாரைப் பற்றி சுருக்கமாகச் சொல்லி விட்டு நாங்கள் துறைத் தலைவருக்கு அளித்து ரிமார்க்ஸ்ஸுக்காக வழிகாட்டிக்கு ஃபார்வர்ட் செய்த கடிதத்தின் நகலை எல்லா மாணவர்களிடமும் ஒவ்வொரு காப்பி வழங்கினார். எங்கள் கைக்கும் ஒரு நகல் வந்தது. புராஜெக்ட் மெட் பதட்டத்துடன் இருந்தான். நான் மிகவும் சாவகாசமாக இருந்தேன். அதனை நான்காக மடித்து எனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டேன். எங்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த விரிவுரையாளர் ‘’ ஒரு மாணவனுக்காக ஒரு பேராசிரியர் மேல் நடவடிக்கை எடுத்தது என்பது கல்லூரி சரித்திரத்திலேயே கிடையாது’’ என்றார். பின்னர் வழிகாட்டி இதனை துறையின் எல்லா பேராசிரியர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் வழங்க வேண்டும் . அதற்காக செல்கிறேன் என்றார். 

நான் அமைதியாக மெட்டிடம் சொன்னேன். ‘’இனிமேல் அவரை யாராலும் காப்பாற்ற முடியாது’’

‘’எப்படி சொல்கிறாய்?’’ என்று கேட்டான் மெட்.

‘’அவருடைய இயல்பு என்ன என்பதை அவரே வெளிக்காட்டி விட்டார். அதனை நாம் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.’’ என்றேன். 

துறைத்தலைவர் அறைக்குச் சென்று நேற்று நாங்கள் அளித்த புகாரின் நகல் எங்கள் கைகளுக்கே வந்ததை எடுத்துக் கொண்டு காட்டி விட்டு கொடுத்து விட்டு வந்தோம். துறைத்தலைவர் அதிர்ச்சி அடைந்து விட்டார். 

இந்த விஷயம் தொடர்பாக ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. துறைத் தலைவர் அதன் தலைவர். மூத்த பேராசிரியர் அதன் இன்னொரு உறுப்பினர். விசாரணை குறித்த தகவல் புலத்தலைவருக்கும் பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் தெரிவிக்கப்பட்டது. 

முதலில் வழிகாட்டியை அழைத்து அவருடைய தரப்பை கேட்டார்கள். பின்னர் அவரை அனுப்பி விட்டு எங்களை அழைத்து எங்கள் தரப்பைக் கேட்டார்கள். புராஜெக்ட் மெட் பதட்டமாக இருந்தான். நான் தான் பேசினேன். 

‘’நாங்கள் எழுத்து பூர்வமாக புகார் அளிக்க எவ்வளவு தயங்கினோம் என்பது  துறைத் தலைவருக்குத் தெரியும். அவர் சொன்னதால் தான் அதனைச் செய்தோம். அவரிடம் ஒப்படைக்கப்பட்ட கடிதம் எங்களுடையது தான் என்றாலும் ஒப்படைக்கப்பட்ட பின் அது துறையினுடையதும் கூட. அஃபிஷியல் ரெகார்ட். அதில் துறைத் தலைவரின் சுருக்கக் கையொப்பமும் முத்திரையும் உள்ளது. இந்த செய்கை மூலம் துறைத் தலைவர் அலுவலக மாண்பை வழிகாட்டி சிதைத்துள்ளார்’’ என்று கூறினேன். 

‘’அவரிடம் பேசுகிறோம். உங்கள் புராஜெக்ட் நல்ல விதமாக நிறைவு செய்யப்படுவதை நாங்கள் உறுதி செய்கிறோம்’’ என்றார்கள். நாங்கள் அதனை ஏற்கவில்லை. 

கொஞ்ச நேரம் அறைக்கு வெளியே காத்திருக்கச் சொன்னார்கள். காத்திருந்தோம். சில நிமிடங்களில் ஒரு மணி ஒலித்தது. உள்ளே சென்றோம். 

‘’இந்த நிமிடத்திலிருந்து உங்கள் புராஜெக்ட்டுக்கு வழிகாட்டப் போவது துறைத் தலைவர் . இனி உங்கள் வழிகாட்டி துறைத்தலைவர்’’ என்று ஆங்கிலத்தில் கூறினார். 

நான் துறைத்தலைவருக்கு நன்றி கூறினேன். மெட்டிற்கு பதட்டத்தில் என்ன ஏது என்று புரியவில்லை. நான் அவனிடம் சுருக்கமாக விஷயத்தைச் சொன்னேன். அவனும் நன்றி கூறினான். 

பலநாள் சிக்கல் தீர்ந்ததின் மகிழ்ச்சியில் கேண்டீனுக்கு சென்று தேனீர் அருந்தினோம். பதினைந்து நிமிடம் கழித்து மீண்டும் துறை அலுவலகத்துக்கு செல்லலாம் என்று சொன்னேன். மெட் ‘’ஏன்’’ என்றான். வழிகாட்டி மாற்றப்பட்டதை நோட்டிஸ் போர்டில் அறிவிப்பாக வெளியிட்டிருப்பார்கள் : அதனைச் சென்று பார்ப்போம் என்றேன். என் யூகம் சரியாக இருந்தது. 

மறுநாள் காலை  ‘’ ஒரு மாணவனுக்காக ஒரு பேராசிரியர் மேல் நடவடிக்கை எடுத்தது என்பது கல்லூரி சரித்திரத்திலேயே கிடையாது ‘’ என்று கூறியவரின் வகுப்பு அன்றும் முதல் பிரிவேளையாக இருந்தது. அப்போது அந்த வகுப்பில் இருந்த அனைவருக்கும் சரித்திரம் மாறியிருப்பது தெரிந்திருந்தது.