Sunday, 12 November 2023

தீபாவளி தரிசனம்

இன்று சிதம்பரத்தை சுற்றியுள்ள ஐந்து தலங்களில் சுவாமி தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. 

எனது நண்பர் ஒருவர் புதுச்சேரியிலிருந்து புதுச்சேரி - கன்னியாகுமரி விரைவு ரயிலில் சிதம்பரம் வந்து விடுவதாகக் கூறினார். நானும் அவரும் சிதம்பரத்தில் சந்திப்பதாகத் திட்டம். நான் இரு சக்கர வாகனத்தில் கிளம்பினேன். சிதம்பரம் ரயில் நிலையத்தில் அவர் ரயில் வருவதற்கு சில நிமிடம் முன்னதாக சென்று சேர்ந்தேன். 

ஷேத்ராடனம் செய்யும் ஒரு மலையாளக் குடும்பம் அங்கே இருந்தது. மூத்த குடிமக்களான ஒரு தம்பதி அந்த மலையாளக் குடும்பத்தின் கைக்குழந்தையிடம் மலையாளத்தில் உரையாடிக் கொண்டிருந்தார்கள். சுற்றியிருந்த அனைவருமே அவர்கள் மலையாளி என்றே நினைத்தோம். அவர்கள் இருவரும் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இருவரின் பூர்வீகமும் திருவெண்காடு. துலா மாதத்தில் காவிரியில் ஸ்நானம் செய்ய சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்கள். ஐப்பசி மாதம் முடிய இருக்கும் நிலையில் இன்னும் காவிரி நீர் கடைசி ரெகுலேட்டரை வந்தடையவில்லை. எனவே திருச்சி அம்மா மண்டபத்துக்கு காவிரி ஸ்நானத்துக்காகச் செல்கிறார்கள். நண்பர் ரயிலில் வந்திறங்க மூத்த தம்பதி வண்டியில் ஏற ரயில் புறப்பட்டது. நாங்கள் இரு சக்கர வாகனத்தில் கிளம்பினோம். 

முதலில் சென்றது திருமயிலாடி என்ற தலம். முருகன் யோகத் திருக்கோலத்தில் வடக்கு நோக்கி நின்றிருக்கும் தலம். சிறு ஆலயம். எனினும் மிகவும் தொன்மையானது. ஒரு காலத்தில் கௌமார மரபைச் சேர்ந்த பலருக்கு அந்த ஆலயம் ஒரு மையமாக அமைந்திருக்கும் என்று தோன்றியது. சப்தமாதர் சன்னிதி அங்கே இருந்தது. ஆலயத்தில் ஒரு பெரிய வன்னிமரம் இருந்தது. வில்வ மரம் அங்கே ஸ்தல விருட்சம். ஆலயத்தில் இருந்த பணியாளரிடம் ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக ஆலயத்துக்கும் ஊருக்கும் மரக்கன்றுகள் வழங்க தயாராக இருப்பதாகத் தெரிவித்தேன். அவர் மிகவும் மகிழ்ந்தார். தனது அலைபேசி எண்ணை அளித்தார். கந்த சஷ்டி வரை ஆலயத்தில் பல விதமான பூஜைகள் இருக்கும் ; எனவே சஷ்டிக்குப் பின் இது குறித்து பேசுவோம் என்றார். மிக ஆர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் அவர் இருந்தது நம்பிக்கை அளித்தது. 

அங்கிருந்து சிதம்பரம் அருகில் உள்ள சிவபுரி என்னும் தலத்துக்குச் சென்றோம். சிற்றாலயம். அதே ஊரில் திருநெல்வாயில் என்ற ஆலயம் இருந்தது. அங்கே பைரவ வழிபாடு விசேஷமானது. இரண்டு ஆலயங்களிலும் சேவித்தோம். பின்னர் அருகில் இருக்கும் திருவேட்களம் என்னும் சிவ ஆலயத்துக்குச் சென்றோம். அங்கிருந்து தில்லை காளியம்மன் ஆலயம். நேரம் மாலை 6 ஆகியிருந்தது. 

நண்பரை சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் ஏற்றி விட்டு விட்டு நான் ஊர் திரும்பினேன்.  

காவிரி போற்றுதும் - புதிய செயல்முறைகள்

’’காவிரி போற்றுதும்’’ அமைப்பு தொடங்கப்பட்டவுடனேயே தனது செயல்களைத் தொடங்கியது. ‘’காவிரி போற்றுதும்’’ முன்னெடுத்த முதல் செயலின் மூலமே நாம் ஒரு கிராமத்தின் மக்களின் முழுமையான ஏற்பையும் அன்பையும் பெற்றோம். நாம் ஒரு கிராமத்தை பல்லாயிரம் ஆண்டுகளாக திகழ்ந்து வரும் பண்பாட்டின் பகுதியாகக் காண்கிறோம். சிறு மேகக் கூட்டம் கூட சில பொழுதுகள் சூரியனை மறைக்க இயலும் விதமாக கிராமங்களின் செயல்பாடுகளில் ஏற்பட்டிருக்கும் சிறு தொய்வுகள் மக்கள் ஒற்றுமையாலும் மக்களின் கூட்டுச்செயல்பாடாலும் நீங்கி செழுமை பெறும் என்பதை நாம் அனுபவபூர்வமாக உணர்கிறோம். கிராமத்தின் எல்லா குடும்பங்களும் எல்லா மனிதர்களும் பொருளீட்ட வேண்டும் என விரும்புகின்றனர். பொருட்செல்வம் மனித வாழ்வை பெருமளவு முன்னகர்த்தக் கூடியது. பொருட்செல்வம் மனித வாழ்வுக்கு மகிழ்ச்சியைத் தர வல்லது. பொருட்செல்வம் மனிதனின் பல அக மற்றும் புறத்தடைகளை நீக்க வல்லது. ‘’காவிரி போற்றுதும்’’ தனது பணியின் அடித்தளம் என ‘’கிராம மக்களின் பொருளியல் நிலையை உயர்த்துவது’’ என்பதையே கொள்கிறது. இந்த அடிப்படையைக் கொண்டே தனது செயல்கள் அனைத்தையும் முன்னெடுக்கிறது.  

கிராமத்தில் பெருநிலக் கிழார்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள். சிறு விவசாயிகளும் பெரு விவசாயிகளும் பலர் இருக்கிறார்கள். விவசாயத் தொழிலாளர்களும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் எவருமே தங்களால் விவசாயத்தில் ஈட்டக்கூடிய முழுமையான வருமானத்தை ஈட்டிவிடவில்லை. ஒரு விவசாயத் தொழிலாளியால் மாதம் ரூ. 10,000 வருமானம் ஈட்ட முடிகிறது எனில் அவரால் ஏதேனும் எளிய வழிகள் மூலம் அதனை மாதம் ரூ.20,000 ஆக்குவார் எனில் அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் அது பேருதவியாக இருக்கும். அவர் தனது வருமானத்தை கிராமத்து விவசாய வேலை மூலமே உருவாக்கிக் கொள்வார் எனில் அது அவருக்கு இன்னும் உதவிகரமாக இருக்கும். வருமானத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்னும் ஆவலுடன் 100 பேர் இருப்பார்கள் எனில் ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் அவர்களில் 10 பேரை மட்டுமே சென்றடையும் என்றாலும் அது நலன் பயப்பதே. நாம் 10 பேரின் சிக்கலைத் தீர்க்கும் போது மீதி 90 பேருக்கும் ஒரு வழிவகை செய்ய ஒரு வழியினை உருவாக்கியிருக்கிறோம் என்றே கொள்ள வேண்டும். 

கிராம மக்கள் ‘’காவிரி போற்றுதும்’’ மீது பெரும் பிரியம் கொண்டிருக்கிறார்கள். அன்பு செலுத்துகிறார்கள். மதிப்பு வைத்திருக்கிறார்கள். இது உன்னதமான விஷயம். ஒரு செயல்பாட்டாளனாக அதனைப் புரிந்து கொள்கிறேன் எனினும் இதனினும் முக்கியமானது ‘’காவிரி போற்றுதும்’’ நோக்கங்கள் முழுமையாக நிறைவேறி விவசாயக் குடும்பங்கள் பொருளியல் பயன் அடைவதே ஆகும். அந்த நோக்கத்தை மட்டும் ‘’காவிரி போற்றுதும்’’ தன் சிந்தையில் கொண்டிருக்கிறது. 

‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளுக்காக ஒரு மாதத்தில் ஐந்து நாட்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட நாட்களை கிராமத்தில் அளிக்க இருக்கிறேன். அதற்கான காலம் உருவாகி விட்டது என்பதை உணர்கிறேன். 

ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு செயல் என வரும் ஆண்டு 12 செயல்பாடுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளேன். 

1. கணக்கெடுப்பு : கிராமத்தில் 500 குடும்பங்கள் இருக்கும். எல்லா குடும்பத்தினரையும் மேலும் ஒரு குடும்பத்தில் உள்ள எல்லா நபர்களையும் நேரில் விடுபடல் இன்றி சந்திப்பது என்பது எளிதல்ல. சிலர் வெளியூர் சென்றிருப்பார்கள். சிலர் பணி நிமித்தம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு வெளியூர் அல்லது வெளிநாடு சென்றிருப்பார்கள். கல்லூரிப் படிப்புக்காக கல்லூரி விடுதிகளில் தங்கியிருப்பார்கள். உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றிருப்பார்கள். மேலும் பல பல காரணங்கள். அனைவருடனும் ஒரு அறிமுகம் இருப்பது செயல்பாடுகளுக்கு நலம் பயப்பது என்ற விதத்தில் ஒரு முழுமையான கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன். 

2. தைப்பட்டம் : தைப்பட்டத்தின் போது கிராமத்தில் உள்ள எல்லா குடும்பங்களுக்கும் பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கன்காய், பரங்கிக்காய் ஆகிய காய்கறி விதைகளை வழங்குதல். 

3. கிராமத்து விவசாயிகளுக்கு தென்னை மரம் ஏறும் பயிற்சி அளித்தல்

4. கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கால்பந்து, பேட்மிட்டன், ரிங் பால், வாலிபால் ஆகிய விளையாட்டு உபகரணங்களை வழங்குவது. 

5. கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு நம் நாட்டின் மாநிலங்களின் பெயரையும் அவற்றின் தலைநகரங்களையும் எழுதுதல், தேசிய கீதத்தை எழுதுதல், தேசியப் பாடலான ‘’வந்தே மாதரம்’’ பாடலை எழுதுதல், நமது தேசிய சின்னங்களை எழுதுதல் என அவற்றில் போட்டி வைத்து பங்கு பெறும் அனைவருக்கும் நூல்களைப் பரிசளித்தல்.

6, கிராமத்துக் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் ’’சமையல் கலை’’ முகாம்கள் நடத்துதல் . ( இந்த பயிற்சி மிகவும் முக்கியமானது என்பது என் எண்ணம். பலர் பணி நிமித்தம் வெளியூர் செல்லும் போது சமையல் தெரியாது என்பதால் ஹோட்டல்களையே நம்பி இருக்க நேரிடுகிறது. ஹோட்டல் உணவு ஒத்துக் கொள்ளவில்லை எனில் வெளியூரில் பணி புரிய இயலாமல் போகிறது. சுயமாக சமைக்கத் தெரிந்த ஒருவன் எந்த சூழ்நிலையையும் எளிதில் எதிர்கொள்கிறான்) 

7. கிராமத்துக் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் எலெக்ட்ரிகல், பிளம்பிங், டூ வீலர் மெக்கானிசம் ஆகியவற்றின் அடிப்படை விஷயங்களைப் போதித்தல். இது அவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்தும்

8. ஆடிப்பட்டத்தில் பூசணிக்காய், சுரைக்காய், பரங்கிக்காய், பீர்க்கன்காய் விதைகளை வழங்குதல்

9. கிராமத்தின் எல்லா குடும்பங்களும் பங்கேற்கும் விதத்தில் ஒரு மரம் நடு விழாவை நடத்துதல்

10. கிராமத்தின் பொது இடங்களில் வேம்பு, புங்கன், வில்வம், ஆல், அரசு, இலுப்பை ஆகிய மரங்களை நடுதல்

11. மேலும் இரு தென்னை மரம் ஏறும் பயிற்சி நடத்துதல்  

12. கிராமத்தில் ஒரு ‘’உடல் நலன் முகாம் ‘’ நடத்துதல்

’’காவிரி போற்றுதும்’’ தம்மால் இயன்ற செயல்களை செய்து வந்தது. தற்போது அதன் செயல் வேகத்தை பல மடங்கு உயர்த்த முனைந்துள்ளது. கிராம மக்களின் பேரன்பும் நண்பர்களின் பெரும் ஆதரவுமே இதுவரை நாம் செய்த விஷயங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது. நாம் திட்டமிடும் பணிகளும் அவ்வாறே நிகழும் என எண்ணுகிறோம். 

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.    

Friday, 10 November 2023

ஜீவன்

இன்று காலை 10 மணிக்கு பணியிடத்துக்கு சென்றிருந்தேன். கான்கிரீட்டில் நீர் நிறுத்த நேற்று மாலையே ‘’பாத்தி கலவை’’ அமைக்கப்பட்டிருந்தது. இன்று அதிகாலை நல்ல மழை எனவே கான்கிரீட்டின் மேல் நீர் தேங்கி நின்றது வசதியாகிப் போனது ; தனியாக தண்ணீர் நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை. 

வீட்டிலிருந்து எனக்கு  அலைபேசி அழைப்பு வந்தது. எனது நண்பர் ஒருவர் மூத்த குடிமகன். பணி ஓய்வு பெற்று பத்து ஆண்டு ஆகிறது. அவரது மனைவி நெஞ்சுவலி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி என்னிடம் தெரிவிக்கப்பட்டது. உடன் மருத்துவமனைக்கு விரைந்தேன். நண்பரைச் சந்தித்தேன். அரசு மருத்துவமனையில் படிவங்கள் சிலவற்றை நிரப்பிக் கொண்டிருந்தார். ஆதார் அட்டையின் நகலையும் ரேஷன் கார்டு நகலையும் அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தனர். நான் சென்று நண்பரின் மனைவியைப் பார்த்தேன். அவர் மயக்க நிலையில் இருந்தார். அவர் வீட்டில் பணி புரியும் பெண்மணி அவருடன் இருந்தார். எனது நண்பர் ஒருவர் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணி புரிகிறார். அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டேன். விபரம் சொன்னேன். அவர் உடன் மருத்துவமனையின் எமர்ஜென்சி பிரிவுக்கு பொறுப்பான மருத்துவரைத் தொடர்பு கொண்டு நோயாளியின் உடல்நிலை குறித்து விசாரித்திருக்கிறார். நோயாளிக்கு ஏற்பட்டிருப்பது ‘’மாசிவ் ஹார்ட் அட்டாக்’’ . இதய அடைப்பை நீக்கும் மருந்து தரப்பட்டுள்ளது. எவ்வளவு விரைவில் தஞ்சாவூர் செல்ல இயலுமோ அவ்வளவு விரைவில் செல்வது நல்லது. இது நண்பரான மருத்துவர் என்னிடம் சொன்ன செய்தி. நான் விபரத்தைப் புரிந்து கொண்டு நண்பரிடம் நாம் ஒரு ஆம்புலன்ஸில் புறப்படுவோம் என்று சொன்னேன். நண்பர் சென்னை செல்லலாம் என விரும்பினார். நான் அவ்வாறே செய்வோம் என்று சொன்னேன். ஒரு இ.சி.ஜி எடுத்தார்கள். அது நார்மலாக இருந்தது. எனவே சென்னை செல்ல இயலும் என புரிந்து கொண்டேன். ஆம்புலன்ஸில் புறப்பட்டோம். இந்த இ.சி.ஜி சென்னையில் உள்ள மருத்துவர் ஒருவருக்கு ஒளிப்படமாக அனுப்பப்பட்டது. அவர் அதனைப் பார்த்து விட்டு சென்னை வரை வர வேண்டாம் ; புதுச்சேரியில் ஒரு மருத்துவமனையின் பெயரைச் சொல்லி அங்கே அட்மிட் ஆகச் சொன்னார். பயணத்தின் வழி புதுச்சேரி என்பதால் எங்கள் திட்டத்தை சென்னை என்பதற்கு பதில் புதுச்சேரி என அமைத்துக் கொண்டோம். 

ஆம்புலன்ஸ் டிரைவர் மிகத் திறமையாக வாகனத்தை இயக்கி எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் கொண்டு சேர்த்தார். நாலைந்து மருத்துவர்களைக் கொண்ட குழு ஒன்று மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க காத்திருந்தது. சென்னை மருத்துவர் ஃபோன் மூலம் சொல்லியிருக்கிறார் என்பதால் முன்னேற்பாடுடன் இருந்தனர். மருத்துவமனையை அடைந்ததும் ஐ.சி.யு வில் அட்மிட் செய்தனர். 

நண்பரின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். ஆம்புலன்ஸ் ஊருக்குப் புறப்பட்டது. அதில் நான் ஊர் திரும்பினேன். காலை 10 மணியிலிருந்து அலைச்சல். மாலை 6 மணிக்கு வீடு திரும்பினேன். 

நெருக்கடியான தருணம் ஒன்றில் நண்பருடன் உடனிருந்தது நிறைவை அளித்தது. நண்பரின் மனைவியின் உடல்நிலை மேம்பட்டது மகிழ்ச்சியைத் தந்தது. 

Thursday, 9 November 2023

முதல் தளம் - ரூஃப் கான்கிரீட் ( நகைச்சுவைக் கட்டுரை)

ஊரின் கடைத்தெரு ஒன்றில் வணிக வளாகம் ஒன்றை நிர்மாணிக்கும் பணி இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அதன் முதல் தளத்தின் கான்கிரீட் போடும் பணி இன்று நடைபெற்றது.  

மறுநாள் கான்கிரீட் என்றால் முதல் நாளிலிருந்தே உடலிலும் மனதிலும் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது. காலை 6.30க்கு பணியிடத்துக்குச் சென்றேன். நான் அங்கு சென்று சரியாக இரண்டு நிமிடம் கழித்து மூன்று பணியாளர்கள் அங்கே வந்து சேர்ந்தனர். அதன் பின்னர் இரண்டு பேர். நான் பணியிடத்துக்கு பைக்கில் வந்த போது எலெக்ட்ரீஷியன் ஃபோன் செய்தார். அவர் வீட்டிலிருந்து கிளம்பி விட்டதாக. அவரும் உதவியாளருடன் வந்து சேர்ந்தார். கம்பி பணியாளர்களின் பணி இரண்டு மணி நேரத்துக்கு மீதம் இருந்தது. அந்த பணியில் அவர்கள் மூழ்கினார்கள். எலெக்ட்ரீஷியன் மின்சார வயர் செல்வதற்கான பி.வி.சி குழாய்களை அமைக்கத் தொடங்கினார்.

பெரும்பணி என்பதால் இன்று தந்தை பணியிடத்தில் முழுமையாக இருப்பார்கள். எனவே வணிக வளாகத்தின் வாசலில் இருக்கும் சிறு குப்பைகளை ஒரு சிமெண்ட் சாக்கில் முழுமையாக சேகரித்தேன். பணியிடம் தூய்மையாக இருந்தது. பணியிடம் தூய்மையாக இருப்பது என்பது அங்கே பணி செய்யும் பணியாளர் உள்ளத்தில் புத்துணர்வை உருவாக்கக் கூடியது. அவ்வாறு தூய்மையாக இருக்கும் பணியிடத்தில் அவர்களின் பணித்திறன் மேம்பட்டு வெளிப்படுவதைக் கண்கூடாக காண முடியும். இந்த பணியிடம் நூற்றுக்கணக்கானோர் நடந்து செல்லும் கடைவீதி. எனவே ஒப்பீட்டளவில் குப்பைகள் கூடுதலாக இருக்கும்.  சிறு பிளாஸ்டிக் கவர்கள், பாலித்தீன் பைகள், பயன்படுத்தி வீசப்பட்ட சாஷேக்கள் ஆகியவை கீழே கிடக்கும். 15 நிமிடம் மெனக்கெட்டால் எல்லா குப்பைகளையும் ஒரு சிமெண்ட் சாக்கில் சேகரித்து விட முடியும். 

தந்தை பணியிடத்துக்கு வரும் போது பணியிடம் தூய்மையாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கிறது என்னும் முதலெண்ணம் அவர்களுக்கு உருவாகும். அது அன்றைய நாள் முழுதுக்கும் லகுவான சகஜமான சூழ்நிலையை உருவாக்கும். பல வருடம் அவர்களுடன் இருந்து பணி புரிந்தவன் என்ற முறையில் எனக்கு இது நன்றாகத் தெரியும். 

பணியிடத்தில் தேவையானது எதுவோ அதற்கே அங்கே இடமளிக்கப்பட வேண்டும். தேவையில்லாத ஒன்றனுக்கு அங்கே இடமளிக்கப்படக் கூடாது. கட்டுமானத் துறையில் ‘’இடம்’’ என்பது மிக முக்கியமானது. ஒரு இடத்தை குறிப்பிட்ட விதமாக நிர்மாணிப்பதே கட்டுமானப் பணி. 

செவ்வாயன்று சென்னை சென்று விட்டதால் ஒரு முழு நாள் ஊரில் இல்லை. என்னுடைய இருப்பு தேவைப்படவில்லை எனினும் பெரும்பணியான கான்கிரீட் நிகழ இருக்கையில் அதற்கு இரு தினங்கள் முன்பு ஊரில் இல்லாமல் இருந்தது அசௌகர்யமாக உணர வைத்தது. எனினும் முதல் நாள் அதிகாலையில் ஊர் வந்து சேர்ந்து முதல் தினப் பணியில் ‘’ஐக்கியம்’’ ஆகி விட்டேன். 

பணி தொடங்க 11 மணி ஆகும் என யூகித்தேன். காலை வானம் மேகமூட்டமாக இருந்தது. மழைக்காலத்தில் கான்கிரீட் போடும் போது பெருமழை வந்தால் என்ன செய்வது என்னும் தவிப்பு இருக்கும். இருபது பேர் வேலை செய்யும் இடத்தில் மழையால் வேலையை அரைமணி நேரமோ ஒரு மணி நேரமோ நிறுத்த வேண்டி வந்தால் அனைவரும் உளச்சோர்வு அடைவர். அத்தனை பேரும் ஒரே நேரத்தில் சோர்வுற்றால் அதன் தீவிரமும் அடர்த்தியும் பன்மடங்கு கூடி விடும். எனவே மழைக்காலத்தில் கான்கிரீட் என்றால் வானம் பார்த்துக் கொண்டே இருப்போம். 

இருபதடி உயரம் முப்பதடி உயரத்தில் தும்பிகள் பறந்து கொண்டிருந்தன. அவ்வாறு தும்பிகள் பறந்தால் மழை வர வாய்ப்புண்டு. எனவே இலேசான கலக்கம் இருந்தது. 

முன்னரெல்லாம் காலை 8 மணி , காலை 8.15 , காலை 8.30 மணிக்கு கான்கிரீட் பணியைத் தொடங்குவோம். காலை 8.30 மணிக்கு ஆரம்பிப்பதை தாமதமாக ஆரம்பிப்பதாக எண்ணுவோம். இப்போது காலை 10 , காலை 11 ஆகி விடுகிறது. பணியாளர்கள் அனைவரையும் காலை உணவு அருந்த ஹோட்டலுக்கு அனுப்பி விட்டு நான் வீட்டுக்கு வந்து குளித்து உணவருந்தி உடன் கிளம்பினேன். சில சிறு சிறு பணிகள் பணியிடத்தில் இருந்தன. அவற்றைச் செய்தேன். கான்கிரீட் தொடங்க காலை 11.15 ஆகி விட்டது. நிறைவடைய மாலை 4 மணி ஆனது. 

ஆகாசவாணியின் கருணை பெருமழை ஏதும் இல்லை. மதியம் ஒரு மணிக்கு மேல் வெயில் எழவும் செய்தது. 

எல்லாருக்குமான பேமெண்ட்டை அளித்து விட்டு புறப்பட்டேன். 

ஞாயிற்றுக்கிழமை தீபாவளி. தீபாவளி மனநிலை தீபாவளி முடிந்து இரண்டு நாட்களுக்கு பணியாளர்களுக்கு நீடிக்கும். எனவே மீண்டும் பணி தொடங்க புதன் ஆகிவிடும். நீண்ட விடுமுறை என்பதால் அனைவரும் சற்று ஆர்வத்துடன் கலைந்தனர். 

பணியிடம் அமைதியும் தனிமையும் கொண்டது.  

சட்ட விரோத மரம் வெட்டுதல் - பள்ளி வளாகம் - மேலதிக விபரம் அளித்து மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்

{சில நாட்களுக்கு முன்பு ஒரு அரசுப்பள்ளி வளாகம் ஒன்றில் இருந்த உயிர்மரம் வெட்டப்பட்டடது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கும், வருவாய் கோட்டாட்சியருக்கும், வட்டாட்சியருக்கும் , மாவட்ட கல்வி அதிகாரிக்கும் புகார் அனுப்பியிருந்தேன். மேலும் மத்திய அரசின் ‘’சி.பி.கி.ரா.ம்.ஸ்’’ இணையதளத்திலும் புகாரைப் பதிவு செய்திருந்தேன். ‘’சி.பி.கி.ரா.ம்.ஸ்’’ புகாருக்கு பதில் அளித்து மாவட்ட கல்வி அதிகாரி மாவட்ட ஆட்சியருக்கு ஒரு பதிலை அனுப்பியிருந்தார். அதன் நகல் எனக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த பதில் குறித்து சில விஷயங்களைத் தெரிவித்து மாவட்ட ஆட்சியருக்கு ஆங்கிலத்தில் நான் அனுப்பிய கடிதத்தின் மொழிபெயர்ப்பை கீழே அளித்துள்ளேன்}

அனுப்புநர்

&&&&&

பெறுநர்

மாவட்ட ஆட்சித் தலைவர் 
மயிலாடுதுறை

 ஐயா,

14.10.2023 அன்று மயிலாடுதுறை மாவட்டம் , &&&&& வட்டம், &&&&& கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின்  வளாகத்தில் இருந்த 10 ஆண்டு அகவை கொண்ட மரம் கட்டிங் மெஷின், இரும்பு ஆயுதங்கள் மற்றும் டிராக்டர் பயன்படுத்தி வெட்டப்பட்டது. அந்த மரத்தை வெட்டுவதில் ஏழு பேர் ஈடுபட்டிருந்தனர். அப்பள்ளியைக் கடந்து செல்கையில் அந்த அதிர்ச்சிகரமான காட்சியைக் கண்டதும் &&&&& வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்று மேற்படி கிராமத்தில் பள்ளி வளாகத்தில் இருக்கும் மரம் வெட்டப்படுவதைத் தெரிவித்து அதனைத் தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டேன். வருவாய் கோட்டாட்சியர் அலுவலக ஊழியர் ஒருவர் &&&&& வருவாய் ஆய்வாளரை அலைபேசியில் அழைத்து நிகழும் சம்பவத்தை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். நிகழ்ந்த சம்பவத்தை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டியது குடிமகனாக எனது கடமை என்பதால் மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோருக்கு ஒரு மனுவை அனுப்பினேன். மத்திய அரசாங்கத்தின் ‘’சி.பி.கி.ரா.ம்.ஸ்’’ தளத்திலும் புகாரைப் பதிவு செய்தேன். மாவட்ட ஆட்சியர் சீர்காழி வருவாய் கோட்டாட்சியருக்கு மேற்படி புகாரை அனுப்பி மரம் வெட்டப்பட்ட பள்ளியை நேரடியாக கள ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படியும் பள்ளி வளாகத்தில் இருந்த மரம் வெட்டப்பட வருவாய் கோட்டாட்சியர் அனுமதி பெறப்பட்டதா என்பதற்கும் அறிக்கை அளிக்கும்படியும் தெரிவித்து கடிதம் அனுப்பினார். அதன் நகல் வட்டாட்சியருக்கு அனுப்பப்பட்டது. எனக்கும் அனுப்பப்பட்டது. 

09.11.2023 அன்று மயிலாடுதுறை மாவட்ட கல்வி அதிகாரி, ‘’சி.பி.கி.ராம்.ஸ்’’ புகாருக்கான பதிலாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய பதிலின் நகல் எனக்கும் அனுப்பப்பட்டுள்ளது. 

மாவட்ட கல்வி அதிகாரி மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள பதிலில் இருக்கும் சட்டத்துக்குப் புறம்பான விஷயங்களை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். 

*****

மாவட்ட கல்வி அதிகாரியின் கூற்று 1 : &&&&& பள்ளி வளாகத்தில் இருக்கும் மரம் பள்ளி மேலாண்மைக் குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் வெட்டப்பட்டுள்ளது. 

மாவட்ட கல்வி அதிகாரியின் கூற்று 1ல் இருக்கும் சட்டத்துக்கு புறம்பான அம்சம் : பொது இடங்களில் இருக்கும் மரங்கள் மாநில அரசின் வருவாய்த்துறையின் கீழ் வருபவை. பொது இடத்தில் இருக்கும் எந்த உயிர் மரமும் ஏதேனும் ஒரு காரணத்தால்  வெட்டப்பட வேண்டும் என்றாலும் வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பம் செய்து வருவாய் கோட்டாட்சியர் அந்த விண்ணப்பத்தை ஆராய்ந்து நேரடியாக களஆய்வு செய்து அனுமதி அளிக்கும்பட்சத்தில் அந்த ம்ரம் வெட்டப்படலாம். அவ்வாறு அனுமதி அளிக்கையிலும் வருவாய் கோட்டாட்சியர் அந்த மரத்தின் பொருள் மதிப்பை அரசாங்கத்துக்குக் கட்டணமாக செலுத்தக் கூறுவார். அந்த தொகை அரசாங்கக் கணக்கில் செலுத்தப்பட்ட பின்பே எந்த உயிர் மரத்தையும் வெட்ட அனுமதி அளிப்பார். இதுவே சட்டபூர்வமான நடைமுறை. 

இத்தனை நெறிமுறைகள் இந்த விஷயத்தில் உருவாக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் ஓர் உயிர் மரம் எவ்வகையிலாவது வெட்டப்படாமல் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே என்பதை சாமானிய உணர்வின் மூலமே கூட எவராலும் உணர முடியும். சாமானியப் புரிதல் கொண்ட எவருக்கும் புலப்படக்கூடிய விஷய்மே ஆகும் இது. 

மாவட்டக் கல்வி அதிகாரியின் கூற்று (2) : மாவட்டக் கல்வி அதிகாரி மரம் வெட்டப்படவில்லை ; மரத்தின் கிளைகளே வெட்டப்பட்டுள்ளன எனக் கூறியிருக்கிறார். 

மாவட்டக் கல்வி அதிகாரியின் கூற்று (2)ல் இருக்கும் சட்டத்துக்குப் புறம்பான விஷயம் : மேற்படி பள்ளி வளாகத்தில் இருந்த மரத்தின் எல்லா கிளைகளும் வெட்டப்பட்டு விட்டன. அந்த மரம் எத்தனை பெரிதாக இருந்திருக்கும் என்பதையும் எத்தனை உயரம் கொண்டதாக இருந்திருக்கும் என்பதையும் வெட்டப்பட்ட மரத்தின் சுற்றளவைக் கொண்டே கணக்கிட முடியும். மாநில அரசின் வருவாய்த்துறையிடமும் வனத்துறையிடமும் வெட்டப்பட்ட மரத்தின் சுற்றளவைக் கொண்டு அதன் உயரத்தையும் வெட்டப்பட்ட மரத்தின் கன அளவையும் கணக்கிடுவதற்கான வழிமுறைகள் உள்ளன. 

மாவட்ட கல்வி அதிகாரியின் கூற்று (3) : பள்ளி மேலாண்மைக் குழுவில் தீர்மானம் இயற்றப்பட்டு வெட்டப்பட்டுள்ளதால் இந்த விஷயம் கள்ளத்தனமாக மரம் வெட்டுதல் என்னும் குற்றத்தில் வராது. 

மாவட்ட கல்வி அதிகாரியின் கூற்று (3)ல் உள்ள சட்டத்துக்குப் புறம்பான விஷயம் : வருவாய் கோட்டாட்சியரிடம் அனுமதி கோரப்படாமல் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு இன்றி கிராமத்தில் உள்ள பள்ளி வளாகம் ஒன்றின் மரம் வெட்டப்பட்டிருப்பது நூறு சதவீதம் கள்ளத்தனமாக மரம் வெட்டுதலின் கீழ் வரக் கூடியதே. 

மாவட்ட கல்வி அதிகாரியின் கூற்றுப்படி கள்ளத்தனமாக மரம் வெட்டப்படவில்லை எனில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்த பள்ளி வளாகத்துக்கான பொறுப்பான அதிகாரி என்ற வகையில் அந்த மரத்தை வெட்ட அவர் அமர்த்திய மரம் வெட்டும் நபர்கள் எவர் எவர் என்ற விபரத்தையும் அவர்களுக்கான ஊதியம் எவ்வளவு வழங்கப்பட்டது என்பதையும் அந்த தொகை பள்ளி கணக்கில் இருந்து எவ்விதம் அளிக்கப்பட்டது என்பதற்கான ரசீதுகளையும் அளிக்க வேண்டும். வெட்டப்பட்ட மரம் விற்பனை செய்யப்பட்டிருப்பின் எவ்வளவு தொகைக்கு விற்பனை நிகழ்ந்தது என்பதையும் அவர் தெரிவிக்க வேண்டும். 

*****

விஷயங்களைத் தொகுத்துப் பார்க்கும் போது நாம் சில விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியும். 

(1) . &&&&& கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி மரம் வருவாய் கோட்டாட்சியர் அனுமதி இன்றி வெட்டப்பட்டுள்ளது. வெட்டப்பட்ட மரம் விறகாக டிராக்டர் டிப்பரில் எடுத்து செல்லப்பட்டு செங்கல் காலவாய்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

(2) ஓர் உயிர் மரத்தை வெட்டுதல் சட்டத்தின் படி ஒரு குற்றவியல் நடவடிக்கை ஆகும். மேலும் அந்த மரத்தின் பொருள் மதிப்பைக் கருத்தில் கொண்டால் முறைகேடு மற்றும் அரசாங்க சொத்தை அழித்தல் ஆகிய குற்றங்களும் இதனுடன் இணையும். 

(3) மாவட்ட கல்வி அதிகாரியின் சட்டத்துக்குப் புறம்பான கூற்றுகள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்பது தெளிவாகிறது.

*****
இந்த கடிதத்தின் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறேன். 

(1) 14.10.2023 அன்று &&&&& பள்ளி வளாகத்தில் வெட்டப்பட்ட மரத்தின் பொருள் மதிப்பை வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளைக் கொண்டு நிர்ணயம் செய்ய வேண்டும். 

(2) மரத்தின் பொருள் மதிப்பு அரசாங்கக் கணக்கில் செலுத்தப்படுவதோடு உச்சபட்சமான அபராதமும் விதிக்கப்பட வேண்டும். 

(3) பள்ளி வளாகத்துக்குப் பொறுப்பான அரசு அலுவலர் என்ற முறையில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வெட்டப்பட்ட மரத்தின் பொருள் மதிப்பையும் அபராதத்தையும் அவரது ஊதியக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்ய உத்தரவிட வேண்டும். 

வெட்டப்பட்ட மரத்தின் சுற்றளவைக் கருத்தில் கொள்ளும் போது வெட்டப்பட்ட மரத்தின் பொருள் மதிப்பு ரூ. 35,000 லிருந்து ரூ. 45,000 வரை இருக்கக்கூடும் என யூகிக்க முடிகிறது. 

பள்ளி மேலாண்மைக் குழுவே பள்ளி வளாகத்தில் இருக்கும் மரத்தை வெட்ட முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டது என மாவட்ட கல்வி அதிகாரி கூறுவதை மாவட்ட ஆட்சியர்  ஏற்பாரெனில் இதனை ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு மாவட்டத்தில் உள்ள எல்லா அரசுப் பள்ளிகளிலும் உள்ள மரங்கள் அங்கிருக்கும் தலைமை ஆசிரியர்களால் பொருளியல் தேவைக்காக சட்ட விரோதமாக வெட்டப்படும் அபாயம் உள்ளது. 

&&&&& பள்ளி தலைமை ஆசிரியர் மேல் எடுக்கப்படும் நடவடிக்கை பள்ளி வளாகங்களில் உள்ள உயிர் மரங்களை வெட்ட நினைப்போருக்கு கடுமையான எச்சரிக்கையாக இருக்கும் விதத்தில் அமைய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விண்ணப்பித்துக் கொள்கிறேன். 

தங்கள் உண்மையுள்ள,
&&&&&

இடம் : மயிலாடுதுறை
நாள்  : 09.11.2023

 

Wednesday, 8 November 2023

ஸ்ரீ ரமண விஜயம் - சுவாமி சுத்தானந்த பாரதியார்

பாரதம் ஞானபூமி. மானுட வெள்ளத்தில் அபூர்வத் துமிகளாக எழுந்து ஞானவானில் சூரியன்களாக ஒளிவிடும் ஞானிகள் உலகம் முழுமைக்குமான ஞானத்தை அளித்த தேசம். எதை அறிவதன் மூலம் யாவும் அறியப்படுகிறதோ அதனை முற்றறிந்த ஞானிகள் தங்கள் எல்லையில்லாப் பெருங்கருணையின் விளைவாக சாமானிய மனிதர்களை நோக்கிப் பேசினார்கள் ; வழிகாட்டினார்கள். ஞானிகள் அறிந்தது பெருமலைகள் என அகன்றும் பரந்தும் உயர்ந்தும் இருப்பது எனில் சாமானியர்களின் புரிதல்கள் மீச்சிறு மண் துகளென சிறியவை. எனினும் ஞானிகள் சாமானியர்களிடம் அவர்களின் சாமானிய விசனங்களை நோக்கி பேசினார்கள். மண்ணைப் பற்றியிருக்கும் மனிதரிடம் எல்லையில்லா வெளி குறித்து பேசினார்கள். எல்லையின்மையுடன் இயைந்து இருப்பதற்கான மார்க்கங்களைக் காட்டினார்கள்.  

நூறு கோடி மனிதர்கள் உளர் எனில் அவர்களில் ஒருவரே முழுமையை உணர்ந்த ஞானியாகிறார். அவ்வாறெனில் நூறு கோடி மனிதர்களுக்கு ஞானம் கிட்டாது என்பது அதன் அர்த்தமா என யோசிப்போமெனில் ஒரு ஞானிக்கு சாத்தியமானது நூறு கோடி மனிதர்களுக்கும் சாத்தியம் என்பதே அதன் உள்ளுறை என்பதை உணர முடியும். 

கங்கை பிரவாகம் எடுத்து ஓடுகிறது. பனிமலைகளில் தொட்டால் உடலை உறைய வைக்கும் பனிநீராய் பெருகி தம் வேகத்தால் பாறைகளை உருட்டி பல கிளை நதிகளை இணைத்துக் கொண்டு நூறு நூறு காதங்களுக்குப் பயணிக்கிறது. கங்கையில் அந்தி வணக்கம் செய்பவர்கள் உண்டு. மூழ்கி எழுபவர்கள் உண்டு. கங்கை நீரைக் கொண்டு நிலம் திருத்தி விவசாயம் செய்பவர்கள் உண்டு. படகின் மூலம் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு செல்பவர்கள் உண்டு. கங்கை பிரவாகிக்கிறது ; பிரவாகிப்பது அதன் தன்னியல்பு. பிரவாகித்துப் பெருகுவது மூலம் பல்வேறு சாத்தியங்களை உருவாக்கித் தருவது அதன் விளைவு. ஞானிகளும் அவ்விதமானவர்களே. ஞானிகளின் கருணையும் அன்புமே சமூகத்தின் நியதிகளாக அறங்களாக மேன்மைகளாக விளங்குகிறது. சூரியனின் நுண் வடிவே தீபம். சிறிய தீபம் வீடொன்றின் இருள் நீக்குகிறது. வீட்டுக்கு உரியவன் வீட்டுக்குள் நுண் சூர்யன் ஒன்றைப் பதிட்டை செய்கிறான். தீபம் ஏற்றுதலை நுண் சூரியப் பதிட்டை என உணர்ந்து கொண்டு செய்பவனும் உண்டு. அதை அவ்வாறு உணராமல் செய்பவனும் உண்டு. தீபம் இருவருக்கும் ஒரே ஒளியையே அளிக்கும்.   ஞானிகளின் ஞானமும் அவ்வாறானதே. 

நம் தேசம் மானுடனாய்ப் பிறந்த அனைவருமே நிறைநிலை எய்த வேண்டும் என்னும் இலட்சிய நிலை நோக்கி மானுடத்தை இட்டுச் செல்வதை தனது இயங்குமுறையாகக் கொண்டது. உலகம் என்பது மானுடர் நிறைநிலை எய்துவதற்கான செயற்களம் என வகுத்தளித்துள்ளது. நாம் கால் வைத்து நடக்கும் நம் மண் ஞானம் தேடிப் பயணித்த ஞானிகளின் காலடிச் சுவடுகளால் ஆனது. 

சாமானிய மானுடர்களின் அகம் சமூக அடையாளங்களுடன் தன்னைப் பிணைத்துக் கொள்கிறது. இன்ன குடும்பத்தைச் சேர்ந்தவன், இன்ன மொழி பேசுபவன், இன்ன பிரதேசத்தைச் சேர்ந்தவன், இன்ன உத்யோகம் பார்ப்பவன் என இவ்விதமான அடையாளங்களுக்கே தங்கள் முழு வாழ்வையும் அளித்து விட நேர்கிறது. சாமானியர்கள் இந்த அடையாளங்களின் சிறையில் இருக்கிறோம். சிறையில் இருக்கிறோம் என்பதையே அறியாத நிலையில் இருக்கிறோம். இந்த அடையாளங்களை நீக்கிக் கொள்கையில் விடுதலை என்பது சாத்தியமாகிறது. 

ஆசிரியனின் வாழ்வை மாணவன் எழுதுவது என்பது நம் நாட்டின் மரபு. மாணவனின் ஞானப் பாதையில் அது முக்கியமான சேருமிடங்களில் ஒன்றாக அமைகிறது. 

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி ஞானசூரியன். அவருடைய அருளின் கருணையின் சிறு துளி கூட எந்த எளிய உயிருக்கும் வீடுபேறு நல்கக் கூடியது. அத்தகைய கருணா மூர்த்தியின் சரிதத்தை அவரது மாணவரான சுவாமி சுத்தானந்த பாரதியார் ‘’ஸ்ரீ ரமண விஜயம்’’ என்ற பெயரில் நூலாக எழுதியுள்ளார். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி தனது ஆசானின் புகழை வாழ்வை சிறப்பை எழுதியிருக்கிறார் சுவாமி சுத்தானந்த பாரதியார். 

ஞான ஆசிரியரின் வாழ்வைக் கேட்பவர்கள் அதில் சிறு கல்லாக புல்லாக பொருளாக எளிய எறும்பாகக் கூட அந்த மாகதையின் உள்ளே தங்களை உணர வாய்ப்பு உண்டு என்கிறது நமது மரபு. வாசிக்கும் எவரையும் அவ்விதம் உணர வைக்கும் நூல் சுவாமி சுத்தானந்த பாரதியாரின் ‘’ஸ்ரீ ரமண விஜயம்’’. 

ஸ்ரீ ரமண விஜயம் , ஆசிரியர் : சுவாமி சுத்தானந்த பாரதியார் பதிப்பகம் ; ஸ்ரீரமணாஸ்ரமம் , திருவண்ணாமலை 

Monday, 6 November 2023

சென்னைப் பயணம் ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளருக்கு ஒரு நண்பர். அவர் இரவுலாவி ( நாக்டிரனல்). அதாவது அவர் முழு இரவும் தூங்காமல் விழித்திருப்பார். காலை 6.30க்கு உறங்கத் தொடங்குவார். மதியம் 1 மணி அளவில் விழிப்பார். மதியம் எழுந்ததும் உணவு அருந்துவார். காலை நேரம் தூங்கி விடுவதால் காலை உணவு இல்லை. நேரடியாக மதிய உணவு. பின்னர் 2 மணி அளவில் மீண்டும் உறக்கம். மாலை 5 மணிக்கு எழுவார். ஸ்னானம் முடித்து தயாராவார். முழு இரவும் விழித்திருப்பார்.நண்பர் சங்கீதப் பிரியர். எனவே இரவு முழுதும் இசை கேட்கும் வழக்கம் உண்டு. பல வருடமாக இவ்விதமாகவே பழகி விட்டார். பகலில் இயங்க மாட்டார் என்றில்லை ; பகலிலும் இயங்குவார் ; அது ஒரு விதிவிலக்கு மட்டுமே. அவர் உறங்கும் நேரம் அவ்வப்போது சற்று மாறுபடும். காலை 6.30 என்பது சமயத்தில் காலை 5.30 என இருக்கும் அல்லது காலை 4.30 என இருக்கும். அதிகாலை 4 மணிக்கு முன்னால் அவர் எப்போதும் உறங்கியது இல்லை. 

அமைப்பாளருக்கு இரவு 9 மணி ஆனாலே தூக்கம் கண்ணைச் சொக்கும். இருப்பினும் அமைப்பாளரும் இரவுலாவியும் நண்பர்கள்.  

இரவுலாவிக்கு ஒரு பூர்வீக நிலம் இருக்கிறது. நூறு வருடம் இரவுலாவியின் குடும்பத்துக்கு சொந்தமாக உள்ள இடம். அந்த இடத்தின் ஆவணங்கள் 100 ஆண்டுகள் தொன்மையானவை என்பதால் அந்த இடத்தின் மூல பத்திரம் தேவைப்படுகிறது. உள்ளூர் பதிவு அலுவலகத்தில் 75 ஆண்டுகள் ஆவணம் மட்டுமே உள்ளது. அதற்கு முன் உள்ள ஆவணங்களை எவ்விதம் பெறுவது என இரவுலாவி முயன்று வருகிறார். அமைப்பாளரின் நண்பர் ஒருவர் இவ்விஷயத்தில் உதவக் கூடும் என அவரிடம் இரவுலாவியை அழைத்துச் செல்கிறார் அமைப்பாளர். 

இரவுலாவி அமைப்பாளரிடம் கேட்டார். ‘’பிரபு ! தீபாவளி முடிஞ்சதும் சென்னை போவோமா?’’

அமைப்பாளர் திடுக்கிட்டு ‘’தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு. அதுக்குல்ல எந்த ராஜா எந்த பட்டணமோ. நாம உடனே கிளம்புவோம்’’

‘’மோட் ஆஃப் டிரான்ஸ்போர்ட் என்ன?’’ இரவுலாவி கேட்டார். 

‘’காலைல விழுப்புரம் பேசஞ்சர் இருக்கு. காலை 6 மணி டைம். 9.10க்கு விழுப்புரம் போயிடும். 9.30க்கு விழுப்புரத்தை பல்லவன் பிடிச்சோம்னா 12.10க்கு சென்னை எக்மோர்’’ அமைப்பாளர் திட்டத்தைச் சொன்னார். 

‘’திருச்செந்தூர் சென்னை காலைல 5 மணிக்கு இருக்கே’’

‘’அதுல ரிசர்வேஷன் பண்ணனும். அன் - ரி ல போக முடியாது; ஒரே கூட்டமா இருக்கும்’’ 

‘’அன் - ரி யா ? அப்படின்னா என்ன?’’

‘’அன் ரிசர்வேஷனோட ஷாட் ஃபார்ம்’’

‘’சரி ! அப்ப பல்லவனை பிடிச்சுடுவோம்’’

‘’நம்ம டிஸ்கஷன் ஒரு மணி நேரத்துல முடிஞ்சிடும். அதுக்கப்புறம் லஞ்ச் முடிக்கறோம். நான் இன்னொரு ஃபிரண்டை மீட் பண்ணனும். அதுக்கு ஒரு மணி நேரம் ஆகும்’’

இரவுலாவி ‘’நானும் என்னோட ஃபிரண்டு ஒருத்தரை மீட் பண்ணனும்’’

’’சாயந்திரம் கோயம்பேடு வரோம். ஃபர்ஸ்ட் பஸ்ஸை பிடிச்சு ஊர் வந்து சேர்ரோம்’’

சென்னை வரை பயணித்த அலுப்பு இந்த திட்டமிடுதலிலேயே அமைப்பாளருக்கும் இரவுலாவிக்கும் ஏற்பட்டு விட்டது. 

அமைப்பாளர் காலை 4 மணிக்கு அலாரம் வைத்து விட்டு அலைபேசியை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டு உறங்கத் தயாரானார். 

இரவுலாவி இன்றைய இரவும் தூக்கம் வராது ; நாளை பகலிலும் தூக்கம் வராது ; நாளை இரவும் தூக்கம் வராது. தூக்கமே இல்லாமல் எப்படி 36 மணி நேரம் இருப்பது என யோசித்து இசை கேட்கத் துவங்கினார்.  

Saturday, 4 November 2023

பள்ளி வளாகம் - சட்ட விரோத மரம் வெட்டுதல் - மாவட்ட ஆட்சியர் அலுவலக பதில்

இருபது தினங்களுக்கு முன்னால் கிராமத்து அரசுப் பள்ளி ஒன்றின் வளாகத்தில் இருந்த பத்து ஆண்டு அகவை கொண்ட உயிர்மரம் ஒன்று வெட்டப்பட்டது. அது குறித்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்று தெரிவித்து மரம் வெட்டுதலை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டேன். நடந்த விஷயத்தை ஒரு புகாராக எழுதி மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பினேன். அந்த மனுவை கீழே அளித்துள்ளேன். 

புகார் மனுவுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து இன்று ஒரு பதில் வந்துள்ளது. 

***
அதாவது, மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியருக்கு எனது புகார் குறித்து தெரிவித்து எனது மனுவின் நகலை இணைத்து அனுப்பியுள்ளார். வருவாய் கோட்டாட்சியரை மரம் வெட்டப்பட்ட பள்ளிக்கு நேராகச் சென்று கள ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அந்த மரத்தை வெட்ட வருவாய் கோட்டாட்சியரின் அனுமதி பெறப்பட்டதா என்ற விபரத்தையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 

வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகல் மனுதாரராகிய எனக்கும், சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. நகல் என்பதில் இலக்கமிட்டு வட்டாட்சியர் எனக் குறிப்பிடப்பட்டு அடைப்புக்குறிக்குள் ‘’நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை அனுப்பிடும் பொருட்டு’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

என்ன நிகழ்கிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.

***
இன்று பணி நிமித்தம் ஒரு கிராமத்துக்குச் செல்ல நேர்ந்தது. அந்த கிராமத்தில் இருந்த அரசுப்பள்ளியொன்றின் வளாகத்தில் இருந்த உயிர் மரத்தை இரும்பு ஆயுதங்கள் , இரும்புக் கருவிகள், கட்டிங் மெஷின், டிராக்டர் இவற்றைப் பயன்படுத்தி வெட்டிக் கொண்டிருந்தார்கள். அதனைக் காண நேர்ந்தது. அவர்கள் மரம் வெட்டத் துவங்கி இரண்டு மணி நேரம் ஆகியிருக்கலாம் என அங்கிருந்த சூழல் காட்டியது. அந்த பகுதியின் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அங்கிருந்து பத்து நிமிட பயண தூரத்தில் இருந்ததால் உடன் அங்கு சென்று பள்ளி வளாகத்தில் நடக்கும் விஷயத்தைக் கூறி மரம் வெட்டுதலை தடுத்து நிறுத்துமாறு கூறினேன். 

வீட்டுக்கு வந்து இது குறித்த ஒரு புகார் மனுவைத் தயாரித்து அனுப்பினேன். அதன் மொழிபெயர்ப்பைக் கீழே அளித்துள்ளேன். தமிழகத்தில் , அரசு அலுவலகங்களில் ஆங்கிலத்தில் அனுப்பப்படும் புகார் மனுக்கள் சற்று மேலதிக கவனத்துடன் அணுகப்படுகின்றன என்பது ஒரு நடைமுறை உண்மை. நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்படலாம் என்னும் சாத்தியக்கூறு அந்த மேலதிக கவனத்தை உருவாக்குகிறது. 

*******

அனுப்புநர்

&&&&&&

பெறுநர்

1. மாவட்ட ஆட்சியர்

2. வருவாய் கோட்டாட்சியர்

3. வட்டாட்சியர்

4. மாவட்டக் கல்வி அதிகாரி

ஐயா,

பொருள் : சட்டவிரோதமாக மரம் வெட்டுதல் குறித்த புகார்

பார்வை : ஊராட்சி ஒன்றியப் பள்ளி, &&&&& கிராமம், 14.10.2023

14.10.2023 அன்று , 11 மணி அளவில், மயிலாடுதுறை மாவட்டம், &&&&&& வட்டம், &&&&&& கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் இருந்த மரம் தோராயமாக 7 நபர்களால் வெட்டப்பட்டுக் கொண்டிருந்தது. இரும்பு ஆயுதங்கள், இரும்பு உபகரணங்கள், கட்டிங் மெஷின் மற்றும் டிராக்டர் ஆகியவை அவர்களால் மரம் வெட்ட பயன்படுத்தப்பட்டன. மரத்தின் கிளைகளை இழுக்க டிராக்டர் பயன்பட்டது. இந்த காட்சியை நான் அப்பகுதியைக் கடந்த போது கண்டேன். 

அதிர்ச்சியடைந்து நடந்த சம்பவத்தைக் குறித்து கூற வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்றேன். அங்கிருந்த ஊழியர்களிடம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் செயல் குறித்து கூறி அதனைத் தடுத்து நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன். அங்கிருந்த ஊழியர்கள் வருவாய் ஆய்வாளரை அலைபேசியில் அழைத்து விஷயத்தைக் கூறி மரம் வெட்டுதலை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கையை உடன் மேற்கொள்ளுமாறு கூறினர். 

மேற்படி பள்ளி வளாகத்தில் மரம் வெட்ட வருவாய்த்துறையிடம் உரிய அனுமதி பெறப்பட்டதா என்பதை விசாரித்து அறியுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 

அவ்வாறு அனுமதி பெறப்படவில்லையெனில் அங்கே மரம் வெட்டப்பட்டது ஒரு கிரிமினல் குற்றம் ஆகும். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், மரம் வெட்டியவர்கள், டிராக்டர் ஓட்டுநர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாவர். சட்டபூர்வமான நடவடிக்கை அவர்கள் மேல் மேற்கொள்ளப்பட வேண்டும். 

முதன்மையாக , கள்ளத்தனமாக மரம் வெட்டுதலுக்கு அளிக்கப்படும் ‘’சி’’ படிவம் உரிய விதத்தில் அளிக்கப்பட வேண்டும். உச்சபட்சமான அபராதம் விதிக்கப்பட வேண்டும். மரம் வெட்டுதலில் ஈடுபடுத்தப்பட்ட டிராக்டர் வருவாய்த்துறையால் பறிமுதல் செய்யப்பட வேண்டும். 

இந்த மனுவின் மூலம், நிகழ்ந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளுமாறும் குற்றம் இழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் வருவாய்த்துறையை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

தங்கள் உண்மையுள்ள,

*****

இடம் : 

நாள் : 14.10.2023

 

பெரும் திருவிழா

தமிழ் சமூகத்தில் தீபாவளி என்பது மிகப் பெரும் திருவிழா. ஐப்பசி அமாவாசை அன்று தீபாவளி தினம். ஒரு மாதம் முன்பாக புரட்டாசி அமாவாசையில் தீபாவள் விற்பனை தொடங்கி விடும். எங்கள் வட்டாரத்தில் ஒரு லட்சம் குடும்பங்கள் இருக்கிறது எனக் கொண்டால் குடும்பத்துக்கு நான்கிலிருந்து ஐந்து பேர் என ஐந்து லட்சம் பேருக்கு புத்தாடைகள் வாங்கப்பட வேண்டும். சாலையோரக் கடைகளிலிருந்து பெரும் கடைகள் வரை விதவிதமான ஆடைகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.   வெளியூரில் இருக்கும் உடன் பிறந்த சகோதரிகளுக்கு தீபாவளி சீர் செய்ய வேண்டும் என்பதற்காக அவர்கள் குடும்பத்துக்கும் ஆடை எடுத்துக் கொண்டு இனிப்புகள் , பழங்கள் , தாம்பூலம் ஆகியவை வாங்கிக் கொண்டு செல்லும் சகோதரர்கள் தீபாவளி வணிகத்தின் முக்கியமான நுகர்வோர். கடைவீதிகளில் பலவிதமான உணவுப்பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. நெல்லிக்காய், பனங்கிழக்கு, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகியவை குவிக்கப்பட்டுள்ளன. கையில் பணத்துடன் கடைவீதி வருபவர்கள் கண்டதும் வாங்குவார்கள் என. 

தீபாவளி முடிந்து 15 நாளில் திருக்கார்த்திகை. அதன் பின் ஒரு மாதம் ஒன்றரை மாதம் கழித்து தைப்பொங்கல். ஓரிரு மாதங்களில் சித்திரைப் புத்தாண்டு. 

Thursday, 2 November 2023

நிறைவு ( நகைச்சுவைக் கட்டுரை)

கே. எஸ் ஃபோன் செய்தான்.

‘’என்ன அண்ணன் ! 21 நாள் ஃபாஸ்டிங் 7 நாள்ல முடிஞ்சிருக்கு’’

‘’பசி கடுமையா இருந்துச்சு தம்பி ‘’

‘’ 7 நாள்ங்கறது கணிசமான நாள் தான். இந்த முயற்சியே நல்ல முயற்சி தான்’’

‘’ரொம்ப நாள் ஃபாஸ்டிங் இருக்கற மாதிரி சூழ்நிலை அமையும்னு நம்பறன்’’

‘’இந்த ஃபாஸ்டிங்கால என்னென்ன பெனிஃபிட்?’’

‘’முதல் விஷயம் ஏழு கிலோ உடல் எடை குறைஞ்சிருக்கு’’

‘’என்னது ஏழு கிலோவா? கிரேட் அண்ணன்’’

‘’காஃபி டீ பால் அவாய்ட் பண்ணியிருக்கன். இந்த மூணையும் தவிர்த்திருக்கறதே உடம்பை ரொம்ப ஆரோக்கியமா ஃபீல் பண்ண வைக்குது’’

‘’ஒவ்வொரு நாள் தாண்டும் போதும் எனக்கு ரொம்ப ஃபீலா இருந்துச்சுன்ணன்’’

’’ஒர்க் சைட்ல வேலை நடக்குது. அங்க தினமும் போகணும். நம்ம முயற்சியால ஒர்க் பிராக்ரஸ்ஸுக்கு பாதிப்பு வந்திடக் கூடாது. இந்த விஷயங்களால தான் 7 நாள்ல ஸ்டாப் பண்ணன். இல்லன்னா இன்னும் கொஞ்ச நாள் கண்டினியூ பண்ணியிருப்பன்’’

‘’அண்ணன் ! நீங்க ஃபாஸ்டிங் இருந்தப்ப நானும் ஒருநாள் ஃபாஸ்டிங் இருந்தன்’’

’’ஃபாஸ்டிங் எப்பவுமே நல்ல விஷயம் தான்’’