Wednesday, 6 August 2025

மறையொலி

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரது தேவாரப் பதிகங்களைக் கேட்கும் போது நமது கவனத்துக்கு ஒரு விஷயம் தெரியவரும். ஒவ்வொரு திருத்தலத்தின் வர்ணனையை அவர்கள் தங்கள் பதிகங்களில் பாடும் போது அத்திருத்தலங்களின் இறைவனான சிவபெருமான் அத்திருத்தலங்களில் எப்போதும் ஒலிக்கும் நான்மறைகளின் ஒலியைக் கேட்ட வண்ணம் இருப்பது குறித்து குறிப்பிடுவார்கள். தேவார மூவரால் பாடல் பெற்ற எந்த தலமாக இருந்தாலும் ஊர்களில் மறையொலி கேட்கும் இந்த சித்திரம் முன்வைக்கப்பட்டிருக்கும். அந்த திருத்தலம் சிதம்பரமாக இருக்கலாம் ;  திருவண்ணாமலையாக இருக்கலாம் ; திருவாரூராக இருக்கலாம் ; திருமயிலையாக இருக்கலாம். இந்த தேவாரப் பதிகங்களைக் கேட்ட போது எனக்கு நான்மறை ஓதப்படுவதை முழுமையாக ஒருமுறை கேட்க வேண்டும் என்று தோன்றியது. வேதங்கள் நம் நாட்டில் தோன்றியவை. உலக ஞானத்தில் அரிய பொக்கிஷங்கள் அவை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவை எழுதப்படாத பிரதிகளாக ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு மனப்பாடமாக அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. இத்தகைய ஒரு மரபு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து இன்றும் தொடர்கிறது என்பது மாபெரும் மானுட அதிசயம். மானுடத்தின் மாபெரும் சாதனைகளில் ஒன்று. நான்மறைகள் மனப்பாடமாக ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு வந்து சேர்ந்திருப்பதன் பிரும்மாண்டம் புரிய வேண்டும் எனில் அவற்றை ஒருமுறையாவது முழுமையாகக் கேட்க வேண்டும் என்று தோன்றியது. இணையத்தில் நான்கு வேதங்கள் ஓதப்படுவதன் ஒலிப்பதிவுகள் முழுமையாக உள்ளன. முழுமையாக அவற்றைக் கேட்பதற்கு 150 மணி நேரம் ஆகும். நான்மறைகள் குறித்த ஆர்வம் உடைய சிலர் ஒரே இடத்தில் பன்னிரண்டு நாட்கள் கூடி முழுமையாக மறையொலியைக் கேட்கும் விதமாக ஏற்பாடு ஏதேனும் செய்ய இயலுமா என யோசிக்கிறேன் ; திட்டமிடுகிறேன். அதிகாலை படைப்போன் பொழுதிலிருந்து மாலை அந்தி வரை ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மறையொலியை மட்டும் கேட்ட வண்ணம் இருக்க வேண்டும். பங்கேற்பாளர்கள் தங்களுக்குள் எந்த சொல்லெடுத்தும் பேசிக் கொள்ளக் கூடாது. 

ஒரு விஷயம் கடினம் எனத் தோன்றினாலும் அசாத்தியம் என எண்ணப்பட்டாலும் அதனை எவ்விதம் செய்யலாம் எவ்விதம் சாத்தியப்படுத்தலாம் என முயற்சிப்பதே மானுடத்தின் சிறப்புத் தன்மையாக இருந்திருக்கிறது. 

ஆர்வமுள்ளவர்கள் காலை ஒரு மணி நேரம் மாலை ஒரு மணி நேரம் என 12 வாரங்கள் அவரவர் இடத்திலிருந்து கூட முயன்று பார்க்கலாம்.   

Tuesday, 5 August 2025

சாரதி

 எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவரிடம் பெரிய கார் ஒன்று இருக்கிறது. அந்த காருக்கு ஒரு சாரதி உள்ளார். நான் நண்பரின் வீட்டுக்கு எப்போது சென்றாலும் அது காலை 6.30 ஆக இருந்தாலும் காலை 8.30 ஆக இருந்தாலும் நண்பகலாக இருந்தாலும் மாலை 4 மணியாக இருந்தாலும் எந்நேரமும் அவர் காரை துடைத்துக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். ஒருவரால் எப்படி நாள் முழுவதும் இதே வேலையைச் செய்ய முடிகிறது என ஆச்சர்யப்படுவேன். ஒருநாளில் ஒருமுறை அவர் காரைத் தூய்மை செய்யும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார் எனில் அவர் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்த பணியை வைத்துக் கொள்வார். உதாரணத்துக்கு காலை 10 மணி. நம் சூழலில் ஊரே காலை 10 மணிக்குத் தான் செயல்படத் துவங்குகிறது. அவரை நான் ஏன் எல்லா நேரங்களிலும் தூய்மைப்படுத்திக் கொண்டிருப்பதைக் காண்கிறேன் ? அவர் மேற்கொள்ளும் செயல் உலகியலான செயல் மட்டும் அல்ல ; அவர் அந்த வாகனத்தின் சாரதியாக உலகியலுக்கு அப்பால் இருக்கும் அம்சம் ஒன்றைத் தொடுகிறார். அவர் ஒரு நாளைக்கு ஒருமுறை தான் தூய்மை செய்வார் ; நாள் முழுவதும் அதை மட்டுமே ஒருவர் செய்வதில்லை. ஆனால் தனது வாகனத்தை தனது உணர்வில் ஏந்தியுள்ளார் சாரதி. அந்த உணர்வே அவரை எப்போதும் அந்த வாகனத்தின் பக்கத்திலேயே இருக்க வைக்கிறது. அவர் வாகனத்தை நினைவில் கொண்டிருப்பது ஓர் அன்னை தன் மகவை எப்போதும் நினைவில் வைத்திருப்பது போல. ‘’மாத்ருபாவம்’’ என்கிறது நம் மரபு. தனது வாகனம் மேல் சாரதி கொள்ளும் உணர்வும் ‘’மாத்ருபாவம்’’ தான். 

Monday, 4 August 2025

அதிகார வர்க்கமும் ஜனநாயக அரசியலும்

இந்தியாவை ஆள்வது யார் ? தேசியக் கட்சி அல்லது தேசியக் கட்சிகள் அல்லது தேசியக் கட்சியும் மாநிலக் கட்சிகளும் இணைந்த கூட்டணிகள் அல்லது அரசியல்வாதிகள். மேற்கூறிய அனைத்துமே சரியான விடைகள் தான். ஆனால் அவையே பிறிதொன்றில்லாத முழுமையான பதில்களா என்று கேட்டுக் கொள்வோமாயின் அதன் பதில் ‘’ஆம்’’ என்று இருக்க முடியாது. இந்தியாவை அதிகார வர்க்கம் ஆள்கிறது. இந்தியாவில் உள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543. மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 245. மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 4123. இந்த மூன்று எண்ணிக்கைகளையும் சேர்த்தால் கூட அந்த எண்ணிக்கை 5000 க்கு குறைவானது. இந்தியாவில் மொத்த மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்கள்  எண்ணிக்கை 2,00,00,000 ( இரண்டு கோடி). அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை இந்திய ஜனநாயகத்துடன் இணைத்துப் பார்த்துக் கொள்வது நமக்கு சில விஷயங்களில் சில மேலான புரிதல்களை அளிக்கும். 

அரசின் பணிகளில் முதன்மையானது என்ன ? சமூகத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். குடிகள் அதனை அரசிடமிருந்து எதிர்பார்ப்பார்கள். இதை இன்னும் ஆழமாகப் பார்த்தால் அரசின் பணிகளில் முதன்மையானது மக்களிடமிருந்து வரி வசூல் செய்வது. ஏனென்றால் அரசு என்பது இரண்டு கோடி பேரைக் கொண்ட ஒரு அமைப்பு. அதில் உள்ள அனைவருக்கும் மாதாமாதம் ஊதியம் வழங்க வேண்டும். வரி வருவாய் சீராக இருக்க வேண்டும் என்றால் சமூகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும். நிறைய தொழில்கள் நடக்க வேண்டும். சமூகத்தில் அமைதியை நிலவச் செய்வதும் வரி வசூல் செய்வதும் மட்டுமே அரசின் வேலை. பல தொழில் செய்ய வேண்டிய பொறுப்பு நாட்டின் குடிகளுடையது. குடிகள் கோடிக்கணக்கானோர். அவர்கள் போதிய அளவு தொழில் செய்து வருமானத்தைப் பெருக்கிக் கொள்கிறார்களா என்பதையும் அரசு கவனிக்க வேண்டும். 

இந்திய ஜனநாயகத்தில் அரசு என்பது மிகவும் மெதுவாக செயல்படும் அமைப்பு என்பதை அனைவரும் அனுபவபூர்வமாக உணர்ந்திருப்பார்கள். எந்த அரசாங்கமும் முயன்றால் அடையக் கூடியது என்பது தங்கள் செயல் வேகத்தை கூட்டிக் கொள்வது மட்டும் தான். அதற்கு மேல் அரசிடம் வேறு எதுவும் எதிர்பார்க்க முடியாது. 

ஜனநாயகத்தின் மேன்மை என்பது மக்கள் பொறுப்பேற்றுக் கொள்வதே. ஜனநாயகத்தின் மேன்மை என்பது மக்கள் சுயசார்புடன் விளங்க முடியும் என்பதே. 

சிறு மாற்று

ஊரிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்துக்கு செல்லும் சுருக்கமான வழியொன்றை பயணத்துக்கு எப்போதும் பயன்படுத்தி வருகிறேன். 38 கி.மீ தூரம் கொண்ட அந்த பாதையில் 1 கி.மீ க்கும் குறைவான தூரம் மேடு பள்ளமாக இருந்தது. அந்த சாலை சீரடைந்தால் முழுமையாக நான்கு சக்கர வாகனங்கள் பயணிக்க முடியும். சீரடையாமல் இருக்கும் பாதையின் தெற்கு முனைக்கு மேற்கே ஒரு சாலை செல்கிறது. அதில் 1 கி.மீ தூரம் சென்று அங்கிருக்கும் திருப்பத்தில் வடக்கு பக்கம் திரும்பினால் மேலும் ஒரு கி.மீ பயணம் செய்தால் கிழக்கு நோக்கி ஒரு திருப்பம். அங்கே திரும்பினால் சீரடையாத சாலையின் வடக்கு முனையை வந்தடைகிறோம். இது ஒரு சிறு மாற்றுப்பாதை. இந்த பாதை ஊருக்கும் கங்கை கொண்ட சோழபுரத்துக்குமான நான்கு சக்கர வாகனப் பயணத்தை எளிதாக்குகிறது.  

Sunday, 3 August 2025

வாரத்தின் இறுதி நாள்

இன்று ஆடிப்பெருக்கு. நேற்று இரவு கிளம்பி ஸ்ரீரங்கம் செல்லலாம் என நினைத்தேன். அம்மா மண்டபத்துக்கு நம்பெருமாள் எழுந்தருளி காவிரி அன்னைக்கு சீர் கொடுக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள விருப்பம் கொண்டிருந்தேன். பராமரிப்புப் பணி நிகழும் பணியிடத்தில் நேற்று ஊழியர்கள் வரவில்லை. இன்று வருவதாகக் கூறினார்கள். பணி என வந்து விட்டால் மற்ற விஷயங்கள் அனைத்தையும் ஒத்தி வைப்பது என்பது ஆகி வந்த வழக்கம். எனவே இன்று ஊரிலேயே இருப்பது என முடிவு செய்தேன். சிமெண்ட், ஸ்டீல், ஜல்லி ஆகியவை வாங்கித் தர வேண்டியிருந்தது.   நண்பரைச் சந்திக்க வெளியூர் செல்ல வேண்டும் என நினைத்தேன். அவருடைய அலைபேசி எண்ணுக்கு முயற்சி செய்து கொண்டேயிருந்தேன். அலைபேசியுடன் தொடர்பு கிடைக்கவில்லை. இரவு 7 மணிக்கு சந்திக்கிறேன் என காலை குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். மாலை 5.30 மணிக்கு இரவு சந்திக்கலாமா அல்லது காலை சந்திக்கவா என மீண்டும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். நண்பர் அலைபேசியில் அழைத்தார். சில முக்கிய விஷயங்களைப் பேசினோம். வங்கி மேலாளர் ஒருவரை காலை 10.15 மணியளவில் சந்திக்க உள்ளதாகக் கூறினேன். வாரத்தின் முதல் நாள் காலை மேலாளர் பரபரப்பாக இருப்பார் ; மாலை 3 மணிக்கு மேல் சென்று சந்திக்குமாறு கூறினார். இன்று ஆட்கள் செய்த பணியில் சில பணிகள் மீதம் உள்ளன. நாளை இரண்டு ஆட்கள் வேலைக்கு வருவார்கள். உலகியலில் தொடர்ந்து வேலை செய்து கொண்டு இருந்தால் கடவுளிடம் அமைதியைக் கொடு என்பதைத் தவிர வேறு ஏதும் கேட்கத் தோன்றாது. 

தாமரை இலை தண்ணீர்

பெயர், குடும்பம், குலம், குடி, ஊர், தொழில் ஆகிய அடையாளங்கள் மனிதர்களுக்கு சூட்டப்படுகின்றன ; அதனை மனிதர்கள் சூடிக் கொள்ளவும் செய்கிறார்கள்.  அந்த அடையாளங்கள் குறுகியவை. அதனை உணர்பவர்கள் அதில் தங்களை பிணைத்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். தாமரை இலையின் மீது தண்ணீர்த்துளி இருக்கிறது. தாமரை இலை மேல் தண்ணீர்த்துளி இருந்தாலும் தனித்தே இருக்கிறது. 

Saturday, 2 August 2025

மூன்று திருவிழாக்கள்

 இந்த மாதத்திலும் அடுத்த மாதத்திலும் மூன்று முக்கிய திருவிழாக்கள் இருக்கின்றன. இந்த மாதத்தின் மத்தியில் ஜென்மாஷ்டமி. மதுரா செல்ல உத்தேசித்துள்ளேன். மாத இறுதியில் ஓணம் பண்டிகை. கேரள மாநிலம் திருச்சூரில் கொண்டாட விருப்பம். அதன் பின் கணேஷ் சதுர்த்தி. மும்பை செல்ல உள்ளேன். 

ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யப் போகிறேனா அல்லது வழக்கம் போல் முதல் நாள் இரவு கிளம்பி முன்பதிவு இல்லாமல் ரயில் பயணமா என்பது தெரியவில்லை. 

Friday, 1 August 2025

திருப்தி

எங்கள் பிரதேசத்தில் உள்ள பெரிய பண்ணையார் ஒருவரைக் காண ஐ டி கம்பெனியில் பணி புரியும் தேக்கு பண்ணை நண்பருடன் சென்றேன். அவர் 50 ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரர். இளைஞர். இயற்கை விவசாயத்தில் தீவிரமான ஆர்வம் கொண்டு பல வருடங்களாக இயற்கை விவசாய பயிற்சி முகாம்களை அவரது கிராமத்தில் ஒருங்கிணைத்திருக்கிறார். அவ்வாறான முகாம் ஒன்றுக்கு நான் சென்றிருந்தேன். பண்ணையாரான இளைஞர் முகாமுக்கான பணிகளை தீவிரமாக செய்து கொண்டிருந்தாரே தவிர மேடையில் தான் இருக்க வேண்டும் என்பதையோ தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விருப்பமோ இன்றி கடமையாற்றிக் கொண்டிருந்தார். அவரை அவருடைய இந்த மேன்மையான குணத்துடன் நினைவில் வைத்துக் கொண்டேன். 

நண்பருக்கு பாரம்பர்ய ரக நெல் தேவைப்பட்டது. விதைநெல்லுக்காக. அதை அவரிடமிருந்து பெறுவதற்காக சென்றார். என்னையும் கூட்டிக் கொண்டு சென்றார். அழகான வழவழப்பான அவரது வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தோம். சில வினாடிகளில் பண்ணையார் வந்தார். 

ஐ டி கம்பெனி நண்பர் தனது வயல் 3 ஏக்கரில் முற்றிலும் தேக்கு மரம் வளர்ப்பதைக் கூறி அதற்கான தூண்டுதலாக நான் இருந்ததாகக் கூறினார். ஐ டி கம்பெனி நண்பர் பண்ணையார் வயலில் ஒரு ஏக்கர் அளவில் தேக்கு பயிரிடுமாறு கேட்டுக் கொண்டார். 

பண்ணையார் அதற்கு ‘’50 ஏக்கர்லயும் இரண்டு போகம் பாரம்பர்ய நெல் பயிர் செய்யறோம். ஏக்கருக்கு 25,000 லாபம் கிடைக்குது. இதுவே போதும். இந்த வேலையை வாழ்க்கை முழுக்க ஒழுங்கா பாத்தா போதும் ‘’என்றார். 

யக்‌ஷப் பிரசனத்தில் யக்‌ஷன் ‘’எதை மிஞ்சிய செல்வம் இல்லை ? என்று கேட்க யுதிர்ஷ்ட்ரன் ‘’திருப்தியை மிஞ்சிய செல்வம் இல்லை’’ என்கிறார்.  

கோதாவரி

கோதாவரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது என அறிந்தேன். ராஜமுந்திரி என்னும் ராஜமகேந்திரவரம் சென்று கோதாவரியைக் கண்ட வண்ணம் அதன் படித்துறை ஒன்றில் இரண்டு நாட்களாவது அமர்ந்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன். கோதாவரி அன்னை அழைக்க வேண்டும்.  


கிராமத்துக்கான பொதுப்பணிகள் - செயல்திட்டம் (நகைச்சுவைக் கட்டுரை)

’’கிராமத்துக்கான பொதுப்பணிகள்’’ பதிவை வாசித்து விட்டு தம்பி ஃபோன் செய்தான். ‘’அண்ணன் ! நீங்க என்ன ஐ-பேட் வாங்கலாம் என யோசிக்கறத்துக்குள்ள என்னென்ன ஒர்க் செய்ய விரும்புறீங்கன்னு லிஸ்ட் பண்ண ஆரம்பிச்சிட்டீங்க’’ 

‘’நான் அப்படித்தான் தம்பி இருக்கன்’’

‘’நீங்க பிளான் செஞ்சிருக்கறது எல்லாமே பெரிய விஷயங்கள்’’

‘’என்னோட பிளான் இல்ல தம்பி. நம்மோட பிளான்’’

‘’அப்படி சொல்றீங்களா?’’

‘’நாம் முன்வச்சிருக்கற விஷயத்தை ஒரு துவக்கப் புள்ளியா எடுத்துக்கிட்டு அதை இன்னும் ஃபைன் டியூன் செய்யணும். டிஸ்கஸ் செய்யணும்’’

’’கிராமத்துல இருக்கற குழந்தைகள் விளையாட விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டு மைதானம் இந்த விஷயம் எல்லாருமே ஏத்துப்பாங்க. சப்போர்ட் பண்ணுவாங்க’’

‘’நல்ல விஷயம்’’

’’நிறைய லாங்வேஜ் சொல்லித் தரணும்னு சொல்றீங்க. அந்த ஐடியாவுக்கு ரெஸிஸ்டன்ஸ் இருக்கலாம். ‘’

‘’நாம கிராமத்துல இருக்கற ஒரு குழந்தை விரும்புன மொழியை படிக்க வாய்ப்பு இருக்கணும்னு நினைக்கறோம். என்னோட விருப்பம் என்னன்னா நாம ஒர்க் பண்ற ஊர்ல தமிழ், சமஸ்கிருதம், மலையாளம், ஹிந்தி, ஜப்பானிஸ், அரபி, ஃபிரஞ்ச், இங்கிலிஷ் னு நிறைய மொழி படிக்க வாய்ப்பு இருக்கணும். ரெண்டுலேந்து மூணு வருஷம் தொடர்ந்து படிச்சா ஒரு லாங்வேஜ்ஜோட எழுத்தறிவும் வாசிப்பறிவும் வந்துடும். அதுக்கப்பறம் அவங்களே அதை இம்ப்ரூவ் பண்ணிப்பாங்க’’

‘’உங்க ஐடியா நல்லா இருக்கு . புதுசா இருக்கு. ஆனா நிறைய மொழி படிக்கறது கஷ்டம் இல்லையா?’’

‘’மொழியைக் கத்துக்கறது மனுஷ மூளைல இருக்கற சில பகுதிகள். நிறைய மொழி கத்துக்கும் போது அந்த பகுதி தீவிரமான தூண்டுதலுக்கு ஆளாகும். அது குழந்தைகளுக்கு நல்ல விஷயம் தான். இது மார்க்குக்காக படிக்கற விஷயம் இல்ல. அவங்க பர்சனாலிட்டியை தீர்மானிக்கற விஷயம். நம்ம நாட்டுல நம்ம மரபுல நிறைய மொழி தெரிஞ்சுக்கற ஒருத்தர் சரஸ்வதியோட ஆசிர்வாதம் உள்ளவர்னு சாதாரண கிராம மக்களுக்கு நல்லாவே தெரியும்’’

‘’உங்க ஆங்கிள் புதுசு அண்ணன்’’

‘’இப்ப நாம மலையாளம் சொல்லித் தரோம்னு வச்சுக்கோ. நம்ம நாட்டுல கடந்த 100 வருஷத்துக்கு மேல கல்வியறிவு அதிகமா இருக்கற மாநிலம் கேரளம். அதோட விளைவு என்னன்னா உலகத்துல உள்ள எல்லா மொழியோட முக்கியமான படைப்புகளும் மலையாளத்துல மொழிபெயர்க்கப்பட்டு இருக்கு. நீ உலக இலக்கியம் படிக்கணும்னா உனக்கு மலையாளம் தெரிஞ்சா எல்லாத்தையும் மலையாளத்துல படிச்சுடலாம். வெட்டம் மாணி ன்னு ஒருத்தர். அவர் ஒரு சிரியன் கிருஸ்தவர். ‘’புராணக் கலைக்களஞ்சியம்’’ ஒரு என்சைக்ளோபீடியாவை மலையாளத்துல எழுதியிருக்காரு. மாஸ்டர் பீஸ் அந்த ஒர்க்’’

‘’இத எல்லாரும் புரிஞ்சுப்பாங்களா?’’

‘’பத்து பேர் ஐம்பது பேர் நூறு பேர் சேந்து பல மொழிகளைக் கத்துக்க ஆரம்பிச்சாலே இதெல்லாம் தானா நடக்கும்’’

‘’சமஸ்கிருதம் எதுக்கு?’’

‘’சமஸ்கிருதம் படிச்சா நிறைய இந்திய மொழியோட ஈஸியா கனெக்ட் ஆகிட முடியும். உதாரணம் : ஹிந்தி, மலையாளம். ஒருத்தருக்கு சமஸ்கிருதம் தெரியும்னா அவர் ஈசியா ஹிந்தி மலையாளம் கத்துப்பார்’’

‘’அரபி எதுக்கு?’’

‘’அரபி ஒரு கிளாஸிக் லாங்வேஜ். ஆயிரம் மற்றும் ஓர் அராபிய இரவு அரபு மொழில தான் இருக்கு’’

‘’ஜப்பானிஸ் எதுக்கு?’’

’’ஜப்பான் கலை உணர்வு மிக்க சமுதாயம். அந்த கலை உணர்வு நமக்கும் தேவை’’ 

‘’அண்ணன் ! கிராமத்துல நாம ஒரு ஸ்கூல் நடத்தறதுக்கு சமமான காரியம் நீங்க சொல்றது ‘’

‘’ஸ்கூல் னு சொல்லலாம். அதுல நான் ஒரு விஷயம் ஃபைன் டியூன் செய்யறன். என்னன்னா நம்ம ஊர்ல ஸ்கூல் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர்க்கு அதிக செலவு செய்யறாங்க. டீச்சர்ஸ் சேலரி குறைவா இருக்கும். அதான் இங்க உள்ள பேடர்ன். உதாரணத்துக்கு 200 அல்லது 300 ஸ்டூடண்ட்ஸ் படிக்கற ஸ்கூல் கட்ட  ஒரு ஏக்கர் இடம் வாங்க ஐம்பது லட்சம் வரைக்கும் செலவு பண்ணுவாங்க. அதுல கிளாஸ் ரூம் கட்ட ஐம்பது லட்சத்தில இருந்து ஒரு கோடி வரைக்கும் செலவாகும். மொத்த பட்ஜெட் ஒன் பாயிண்ட் ஃபைவ் குரோர். வேலை பாக்கற டீச்சர்ஸ்க்கு கொடுக்கற சம்பளம் மாசம் 6000 இல்லன்னா 7000 இருக்கும். ‘’

‘’ஆமா அப்படித்தான் இருக்கு’’

‘’நம்ம பிளான் என்னன்னா இன்ஃப்ராஸ்ட்ரக்சருக்கு பெரிய செலவு செய்யக் கூடாது. டீச்சர்ஸ் சேலரி உச்சபட்சமா கொடுக்கணும். என்னோட விருப்பம் லாங்வேஜ் சொல்லிக் கொடுக்கற ஒவ்வொரு டீச்சருக்கும் மாசம் ரூ.25,000 சம்பளம் கொடுக்கணும்.’’

‘’எட்டு மொழி சொல்லிக் கொடுக்கணும்னு சொல்றீங்க. அப்ப டீச்சர்ஸ் சேலரி மட்டுமே மாசம் ரூ.2,00,000’’

‘’நாம இன்ஃப்ராஸ்ட்ரக்சருக்கு எந்த செலவும் பண்ணல. இனிஷியலா ஒரு தொகையை கையில ரிசர்வா வச்சுக்கிட்டோம்னா அந்த அமௌண்ட்டோட பேங்க் இண்ட்ரஸ்ட்டே டீச்சர்ஸ் சேலருக்கு போதும். ஆக்டிவிட்டி ஆரம்பிச்சிடும்’’

‘’பெரிய பணம் தேவைப்படுமே அண்ணன்’’

‘’என்னோட இம்மூவபிள் பிராபர்ட்டி ஒன்னை சேல் பண்ண போறேன். அந்த பணத்தை இந்த விஷயத்துக்காக முழுக்க யூஸ் செய்யலாம்னு இருக்கன்’’ 

‘’எப்பவுமே ஒரு அஜெண்டா வோட இருக்கீங்க அண்ணன்’’

‘’எல்லாம் நல்லபடியா நடக்கணும் தம்பி’’