Wednesday, 29 June 2022

வினாக்களும் விடைகளும்

’’நாடினேன் நான் கண்டுகொண்டேன்’’ கட்டுரையை வாசித்து விட்டு எனது நண்பரும் எனது பிரியத்துக்குரியவருமான இளம் வாசகர் ஒருவர் என்னை அலைபேசியில் அழைத்திருந்தார். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களை மிக இளம் வயதில் சந்தித்தது குறித்து தனது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினார். சமூகப் பிரக்ஞை என்பது நுட்பமானது. இன்னும் சரியாகச் சொன்னால் பிரக்ஞை என்பதே மிக நுட்பமானது. நாம் ஒரு விஷயத்தை முழுமையாக அறிய முற்பட்டால் அல்லது ஒரு விஷயத்துக்கு நம்மை முழுமையாகக் கொடுத்தால் நாம் அதனை முற்றறிவோம் அல்லது அதனை முற்றறிவதற்கான மார்க்கத்தில் பயணிப்போம். அப்போது அதன் நிறை குறைகள் , சாதக பாதகங்கள் என அனைத்தையும் அறிந்து கொள்வதற்கான புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு உருவாகும். ஒன்றின் மீது நம்பிக்கை வைப்பது என்பது வேறு ; ஒன்றினை முழுமையாகப் புரிந்து கொள்வது என்பது வேறு.  

ஸ்டாலின் ரஷ்ய மக்கள் தொகையில் கோடானு கோடி பேரைக் கொன்று குவித்தவர். ஸ்டாலினைப் போல் ஒரு கொடுங்கோலனை உலகம் கண்டதில்லை. சோவியத் யூனியன் இருக்கும் வரை ஸ்டாலின் செய்த படுகொலைகள் ஒரு உயரிய சித்தாந்ததை நிலைநிறுத்த செய்யப்பட்டன என நியாயப்படுத்தப்பட்டது. உலகெங்கும் இருந்த கம்யூனிஸ்டுகள் அதனை நியாயப்படுத்தினர். 1990ல் சோவியத் யூனியன் சுக்குநூறாக உடைந்தது. அதுநாள் வரை கம்யூனிஸ்டுகள் நம்பிய ஒரு உலகம் ஒரு கணத்தில் இல்லாமல் போனது. 

‘’பின்தொடரும் நிழலின் குரல்’’ நாவல் சோவியத் யூனியனின் உடைவைப் பின்புலமாகக் கொண்டு மானுட அறம் தொடர்பான வினாக்களை எழுப்பக் கூடிய நாவல். அதனை நான் கல்லூரி மாணவனாயிருந்த போது வாசித்தேன். அவை என் உளத்தில் பெரும் கொந்தளிப்புகளை உருவாக்கின. உலக வரலாற்றில் பலியாகிக் கொண்டேயிருக்கும் எளியோரின் பெரும் நிரை என் உள்ளத்தை உலுக்கியது. அந்த நாவல் பெரும் வினாக்களை என்னுள் எழுப்பியது. வினாக்கள் அதிகரிக்க அதிகரிக்க விடை கிடைக்குமா என்ற ஏக்கம் எழுந்தது. 2000ம் ஆண்டில் ’’பின்தொடரும் நிழலின் குரல்’’ வாசித்தேன். 2003ம் ஆண்டுல் லூயி ஃபிஷரின் ‘’ The life of Mahatma Gandhi'' நூலை வாசித்தேன். மகாத்மா காந்தியின் வாழ்க்கை என்பது என்னுடைய பல கேள்விகளுக்கு பதில் அளித்தது. 

‘’சத்யம்’’ என்பதை மகாத்மா தன் வாழ்வாக ஏற்றார். தான் ஏற்ற ஒன்றுக்கு தன்னை முழுவதுமாக அளித்தார். அவர் வாழ்க்கையில் , குழந்தைப் பருவத்தில் தான் பார்த்த ஹரிச்சந்திர நாடகத்தின் ராஜா ஹரிச்சந்திரனைப் போல. அவர் ஏற்றுக் கொண்ட விஷயம் அவரை ஒரு மனிதராக எவ்விதம் உலகத் தளைகளிலிருந்து விடுவித்து ஒரு மகாத்மாவாக ஆக்கியது என்பதன் சித்திரத்தை லூயி ஃபிஷர் அளித்திருப்பார். வரலாறு குறித்த வரலாற்று நாயகர்கள் குறித்த கேள்விகளுக்கு மகாத்மாவின் வாழ்க்கையிலிருந்து எனக்கு பதில் கிடைத்தது. அந்த நூலை நான் வாசித்தது என் நல்லூழ் என்றே கூற வேண்டும்.  

முதலாளித்துவம் , கம்யூனிசம் என்ற இரண்டு சிந்தனைகளுமே இயற்கையை ஒரு பண்டமாகக் காணும் தன்மை கொண்டவை. இயற்கையை உச்சபட்சமாக சுரண்டும் தன்மையை தங்கள் வழிமுறையாகக் கொண்டவை. 

இந்திய மரபு இயற்கையுடன் இயைந்து வாழும் தன்மை கொண்டது. சுரண்டல் இல்லாத ஒரு ஆட்சி முறையே ‘’இராம இராஜ்யம்’’ எனப்பட்டது. பகவான் புத்தர் ‘’கருணையுள்ள பேரரசு’’ என்ற கருதுகோளை முன்வைத்தார். மகாவீரர் அஹிம்சையையும் உண்மையையும் அரசியலின் நெறிகளாகவே கண்டார். 

நிகழ்வுகளை உளச்சான்றின் படி அணுகுதல் ( இதனை மகாத்மா அந்தராத்மாவின் குரல் என்கிறார் ) , சக மனிதர்கள் மேல் கருணையுடன் இருத்தல் , விழுமியங்களைப் பயிற்றுவித்தலின் மூலம் மேலான வாழ்க்கைநிலைக்கு மக்கள் வாழ்வை உயர்த்துதல் , மக்கள் அனைவரையும் ஏற்பு மறுப்பு என்னும் இருநிலை இன்றி சமமாகப் பார்த்தல் ஆகிய தன்மைகளை மகாத்மா காந்தி அரசியலில்  தனது பாணியாகக் கொண்டார். இந்த தன்மைகள் அனைத்தும் முழுக்க முழுக்க இந்திய மரபில் வேர் கொண்டவை. சமத்துவத்தின் குரல் உபநிடதங்களில் ஒலிக்கின்றது. தூய பிரக்ஞை முற்றிலும் கருணைத்தன்மை கொண்டது என்பதை பகவான் புத்தர் எடுத்துரைத்தார்.  

சமூக முன்னேற்றத்துக்கு - சமூக மாற்றத்துக்கு - சமூக நீதிக்கு -  அரசியல் அதிகாரம் மட்டுமே ஒரே தீர்வு அல்ல என்பதை காந்தி உணர்ந்திருந்தார். அரசியல் அதிகாரத்தின் எல்லைகள் காந்தியால் முழுமையாக உணரப்பட்டிருந்தன. உலக வரலாற்றில் மகாத்மாவைப் போல் காலை 3 மணியிலிருந்து இரவு 11 மணி வரை ஒவ்வொரு நொடிப் பொழுதையும் மக்களுக்காகவும் சக மனிதர்களுக்காகவும் உழைத்த இன்னொரு தலைவர் இல்லை. உலகின் எந்த பெரிய எழுத்தாளனை விடவும் அதிகமான பக்கங்களை தனது வாழ்நாளில் எழுதியிருக்கிறார். அவரது நூல் தொகுப்பு நாற்பதாயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ளது. 

அவரிடம் ஒவ்வொரு தனிமனிதனிடமும் பேசுவதற்கு சொற்கள் இருந்தன. இருக்கின்றன. 

அவர் மனிதர்களை எந்தெத்த வழியில் இணைக்க முடியுமோ அத்தனை வழியிலும் இணைத்தார். அவரது தினசரி நடைமுறையில் முக்கிய பங்கு வகித்தது பிராத்தனை. இராட்டையில் நூல் நூற்கும் செயலை தினமும் மேற்கொண்டார். லட்சக்கணக்கான மக்கள் அவரைப் பின்பற்றி தினமும் அதனை மேற்கொண்டனர். அதுதான் உண்மையான புரட்சி. தனது ஆசிரமத்தில் அனைவருக்குமான பொது நடைமுறைகளை உருவாக்கிக் கொடுத்தார். 

இந்திய மரபின் தொல் அறம் அவர் செயல்பாடுகளின் அடிநாதமாக இருக்கிறது. அவரை அறிபவர்களால் அவரை சிறிதேனும் பின் தொடர முடியும். அவருடன் சிறிது தூரம் தொடர்ந்தாலே எவ்வளவோ விஷயங்களை உணர்ந்து கொள்ள முடியும். அப்போது கொந்தளிப்புகள் இருக்காது ; அமைதியே இருக்கும். எல்லா வினாக்களுக்கும் விடைகள் இருக்கும். விடைகள் மட்டும் அல்ல தீர்வுகளும் இருக்கும்.  


Monday, 27 June 2022

நாடி நான் கண்டுகொண்டேன்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் இலக்கியப் பணி குறித்து அவரது 60வது வயது நிறைவதையொட்டி தமிழ் எழுத்தாளர்கள் அவருடனான - அவரது படைப்புகளுடனான - தங்கள் உறவு குறித்து எழுதியிருக்கும் கட்டுரைகள்  ‘’சியமந்தகம்’’ என்ற  வலைப்பூவில் தொகுக்கப்பட்டு வருகின்றன. 

அதில் எனது கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. அதன் இணைப்பு : 



Saturday, 25 June 2022

நெருக்கடி நிலை

ஜூன் 25, 1975 என்ற தேதியை இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட எவரும் மறக்க மாட்டார்கள். 

இந்திரா காந்தி என்ற தனிப்பட்ட மனிதரின் நலனுக்காக இந்திய அரசியல் சட்டம் முடக்கப்பட்ட தினம் இன்று. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் மாண்புகளை நெஞ்சில் கொண்டு உருவாக்கப்பட்ட - உலகின் தலைசிறந்த சட்டங்களில் ஒன்றான - இந்திய அரசியல் சட்டம் இன்று முடக்கப்பட்டது. இந்திய அரசியல் சட்டம் இந்தியக் குடிமக்களுக்கு அளித்திருக்கும் எல்லா உரிமைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்திய அரசியல் சட்டம் இந்தியாவில் வாழும் அனைவருக்கும் ‘’உயிர் வாழ்வதற்கான உரிமையை’’ வழங்குகிறது. நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் மூலம் இந்தியக் குடிகளின் உயிர் வாழும் உரிமையும் முடக்கப்பட்டது. 

ஜனநாயகத்தின் மீது - சட்டத்தின் ஆட்சியின் மீது - நீதிமன்ற நடைமுறைகளின் மீது நம்பிக்கை கொண்ட எவரும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட தினத்தை நினைவு கூர்ந்து கொண்டே இருப்பார்கள். 

எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சிறையில் வைக்கப்பட்டிருந்த போது, இந்த நாட்டின் சாமானிய பின்னணியில் இருந்து வந்த பலர் நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடினர். அவர்களின் உறுதியான போராட்டமே நெருக்கடி நிலையை அறிவித்த ஆதிக்க சக்திகளை அடுத்து வந்த தேர்தலில் வீழ்த்தியது. அவர்களே இந்திய ஜனநாயகத்தைக் காத்த காவலர்கள். அவர்களின் தியாகம் இந்திய வரலாற்றில் என்றும் நினைவு கூரப்படும். 

 

பறவை நோக்கு

நேற்று காலை ஒரு நண்பர் என்னை அலைபேசியில் அழைத்தார். அவர் ‘’டிரோன் கேமரா’’ இயக்கக் கூடியவர். 3 ஏக்கர் வயலில் தேக்கு பயிரிட்டிருக்கும் வயலை டிரோன் கேமரா மூலம் படமெடுக்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன். அவர் வணிக ரீதியில் பயன்படுத்துபவர் அல்ல. தனது விருப்பத்தால் டிரோன் மூலம் புகைப்படங்கள் எடுக்கிறார். அவரை அழைத்துக் கொண்டு வயலுக்குச் சென்றேன்.  

டிரோனை காற்றில் எழுப்பி வயலை புகைப்படங்கள் எடுத்தோம். பறவைப் பார்வையில் முழு ஊரே அலைபேசியில் தெரிந்தது. புதிதாகப் பறக்கும் இந்த பறவை எந்த பறவை என கரிச்சான்களும் மீன்கொத்திகளும் பக்கத்தில் பறந்து பார்த்து விட்டு சென்றன. 

வானத்திலிருந்து பார்க்கும் போது எல்லாம் கையில் அடங்கக்கூடியவை என்று தோன்றிவிடுகிறது. வானத்தின் உள்ளங்கை தான் பூமியா? நாம் அனைவரும் அந்த உள்ளங்கை ரேகைகளில் சிறு சிறு புள்ளிகள் தானா?

ஊரின் பரப்பு பறவைக் கோணத்தில் மிகப் பரந்து விரிந்து தெரிந்தது. அதைக் கண்ட போது மலைப்பாக இருந்தது. ‘’காவிரி போற்றுதும்’’ முயற்சிப்பது ஒரு ஏக்கரில் 20 தேக்கு மரங்கள் என்பது மட்டும்தான். அது நிலத்தின் பரப்பில் ஒரு சதவீதம் மட்டுமே. மீதம் உள்ள 99 % நிலத்தில் அவர்கள் வழக்கமாக செய்யும் பயிரை செய்து கொள்ளலாம். இன்னும் செல்ல வேண்டிய தொலைவு மிக நீண்டதாக இருக்கிறதே என்ற எண்ணத்துடன் வீட்டுக்கு வந்தேன். 

கணினியைத் திறந்தேன். தஞ்சாவூருக்குப் பக்கத்தில் இருக்கும் கிராமத்திலிருந்து ஒரு நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவர் பத்து நாட்களுக்கு முன்னால் 3 ஏக்கரில் தேக்கு பயிரிடப்பட்டிருக்கும் வயலை பார்வையிட்டு என்ன முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை குறிப்பெடுத்துக் கொண்டு சென்றிருந்தார். இன்று அவருடைய வயலில் தேக்கு நட மேட்டுப்பாத்தி எடுக்க ஜே.சி.பி பணி புரியத் தொடங்கியுள்ளது என்று கூறி ஜே.சி.பி பணி புரியும் புகைப்படங்களை மின்னஞ்சலில் இணைத்திருந்தார். அந்த புகைப்படங்களில் ஒன்றை இத்துடன் இணைத்துள்ளேன். 



Friday, 24 June 2022

இசை

சிறு வயதிலிருந்தே எனக்கு இசை கேட்க வேண்டும் என்ற ஆவல் உண்டு. ஆனால் அந்த ஆவல் இதுநாள் வரை நிறைவேறவேயில்லை. எனக்கு பொருட்களை வாங்கும் பழக்கம் குறைவு. அதனால் எலெக்ட்ரானிக் பொருட்களிலிருந்து சற்று தள்ளியே இருக்கும் நிலை ஏற்பட்டது. எனக்கு நெருக்கமான ஒரே எலெக்ட்ரானிக் பொருள் என்றால் அது மடிக்கணினி மட்டும் தான். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாகக் கூட உள்ளது. இந்த பதினைந்து ஆண்டுகளில் முதலில் வாங்கிய மடிக்கணினி சென்ற ஆண்டு பழுதானது. அதற்கு மாற்றாக புதிய ஒன்றை சென்ற ஆண்டு வாங்கினேன். இப்போது அதுதான் பயன்பாட்டில் உள்ளது.  

ரேடியோ, டேப் ரெக்கார்டர், வாக்மேன் என எதையுமே நான் வாங்கி பயன்படுத்தியதில்லை. ரேடியோ வாங்க பல ஆண்டுகள் நினைத்தேன். ஆனால் வாங்கவில்லை. 

இருப்பினும் இசை கேட்டு நெகிழும் உள்ளம் என்னுடையது. இசையின் இனிமையை அவ்வப்போது நான் உணர்ந்திருக்கிறேன். அவ்வாறு உணரும் போதெல்லாம் தினமும் இசை கேட்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று எண்ணுவேன். 

என்னுடைய தொழில் என்பது எப்போதும் திறந்த வெளியில் குறைந்தபட்சம் பதினைந்து இருபது பேருடன் இருக்கும் தன்மை கொண்டது. ஜல்லி அள்ளப்படும் சத்தம், மிக்சர் மிஷின் சுழலும் ஓசை, ஆட்களின் கூச்சல் ஆகியவை சூழ்ந்திருப்பது. பழக்கத்தின் விளைவாக மனம் அங்கே நிகழ வேண்டியவற்றை மட்டுமே முன்னிலைப்படுத்தி அவற்றை நிகழ்த்திக் கொள்ளும். காலையிலிருந்து இரவு எட்டு மணி வரை ஏதாவது வேலை இருக்கும். காலை விழிக்கும் போது இன்று என்ன வேலை என்ற நினைவுடன் தான் பொழுதின் முதல் கணம் மனதில் விழிக்கும். இரவு வீட்டுக்கு வந்தால் உணவு அருந்தி விட்டு படுத்தால் அடுத்த கணம் உறக்கம் சூழ்ந்து விடும். 

நூல் வாசிக்கும் பழக்கம் சிறு வயது முதல் இருப்பதால் ஒரு நூலை வாசிக்கத் தொடங்கினால் அதற்கான நேரத்தை உண்டாக்கிக் கொண்டு வாசித்து விடுவேன். ஆனால் இசைக்காக அவ்வாறான நேரத்தை என்னால் ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஹிந்துஸ்தானி சங்கீதத்தால் நான் பெரிதும் ஈர்க்கப்படுவேன். வெகுநேரம் இசை கேட்க தேவையான சூழலை உண்டாக்க நான் இப்போதும் முயற்சி செய்கிறேன். கொடுப்பினை இருக்கிறதா என பார்க்க வேண்டும். 

பத்து ஆண்டுகளுக்கு முன்னால், திருவாரூர் அருகே ஒரு கல்லூரி. அந்த வளாகத்தில் ஒரு பெரிய பள்ளியும் உண்டு. பள்ளி, கல்லூரி, விளையாட்டு மைதானம், ஆடிட்டோரியம் என அனைத்தும் ஒரு பெரிய வளாகத்தின் வெவ்வேறு பகுதிகளாய் விளங்கும் தன்மை கொண்டது. அங்கே நான் ஒரு வேலையாய் சென்றிருந்தேன். அப்போது அங்கே ஒரு கர்நாடக இசைக் கச்சேரி நிகழ இருப்பதை அறிந்து ஆடிட்டோரியம் சென்றேன். 

இரு இளம் பெண்கள் பாடினார்கள். இனிமையான குரல். தங்கள் குரலிசை மூலம் மேகங்களில் சஞ்சரிக்கும் உணர்வை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தினார்கள். செவி மனம் இவை கடந்து உயிர் கேட்கும் இசை என இருந்தது அவர்கள் சங்கீதம். இரண்டரை மணி நேரம் அவர்கள் கச்சேரி. கச்சேரி முடிந்ததும் அவர்கள் மேடைக்கு அருகில் இருக்கும் கதவு வழியாக வெளியேறுவார்கள் என்பதை யூகித்து நான் அவர்களுடைய கார் என்னுடைய பார்வையில் படும்படியும் இருப்பினும் காரிலிருந்து சற்று தள்ளியும் நின்று கொண்டேன். அவர்களிடம் எதுவும் பேச வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் புறப்பட்டுச் செல்லும் போது மானசீகமாக வழியனுப்ப அங்கே இருக்க வேண்டும் என்றே நினைத்தேன்.  இருவரும் காருக்குப் பக்கத்தில் வந்து விட்டார்கள். ஆனால் அவர்களுடைய அன்னை இன்னும் காருக்கு வரவில்லை. எனவே காரில் ஏறாமல் மைதானத்தைப் பார்த்த வண்ணம் நின்றிருந்தனர். மைதானத்தில் அந்த நேரத்தில் மென்காற்று வீசியவாறு இருந்தது. இருவரும் சற்று தள்ளி நான் நிற்பதைப் பார்த்து விட்டார்கள். நான் மெல்ல முன்னே வந்து இருவருக்கும் வணக்கம் சொன்னேன். இருவரும் வணக்கம் தெரிவித்தனர். ‘’அம்மா ! ரொம்ப நல்லா பாடினீங்க அம்மா. உங்க பாட்டு மனசை உருக்கிடுச்சி. நான் இசை கேட்டு பழக்கம் இல்லாதவன். ஆனா இரண்டரை மணி நேரம் போனதே தெரியல. அவ்வளவு நேரத்த உங்க இசையால சில நிமிஷமா ஆக்கிட்டீங்க. கடவுளோட பிரியம் என்னைக்கும் உங்க மேல இருக்கும்’’ என்று கூறினேன். இருவரும் ரொம்ப சந்தோஷப்பட்டனர். என்னைப் பற்றி விசாரித்தனர். என்ன தொழில் செய்கிறேன் என்று கேட்டனர். பின்னர் அந்த இரண்டரை மணி நேரத்தில்  அவர்கள் பாடியதில் எனக்கு நினைவிருந்த சில பாடல்களைச் சொன்னேன். அவர்களுக்கு மேலும் மகிழ்ச்சி. அதற்குள் அவர்களுடைய அம்மா வந்து விட்டார்கள். அவர்கள் அம்மாவிடம் இருவரும் என்னை அறிமுகம் செய்து வைத்தார்கள். அவர்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. பின்னர் விடைபெற்றுச் சென்றனர். எனக்கும் சில கணங்கள் அவர்களுடன் உரையாட நேர்ந்தது நிறைவையும் மகிழ்ச்சியையும் தந்தது. 

அன்று நான் கேட்டது ஒரு காந்தர்வ சங்கீதம். அவர்கள் இருவரையும் குறித்து கர்நாடக இசை அறிந்த என் நண்பர்களிடம் கேட்டேன். அவர்கள் கேள்விப்பட்டிருக்கவில்லை. அப்போது தான் பாடத் தொடங்கியிருக்க வேண்டும். அதன் பின்னர், அவர்களுடைய பெயரை இசை உலகில் எங்குமே கேட்கவில்லை. அவர்களுடைய கச்சேரிகளும் இணையத்தில் இல்லை. இருவராகப் பாடும் சகோதரிகளான அவர்கள் பின்னாட்களில் வேறு வேறு ஊர்களில் வசிக்க நேரிட்டதா என்பது தெரியவில்லை. யாராவது ஒருவராவது தனியாக கச்சேரி செய்தனரா என்பதையும் அறிய முடியவில்லை. 
 

எனினும் அன்று கேட்ட இசை மட்டும் ஒரு உயிர்ப்புள்ள விதையாக மனதில் இருக்கிறது.  

Thursday, 23 June 2022

பறவையின் துயர் தீர்த்தவன்

இந்த பதிவின் தலைப்பைப் பார்த்ததும் அனைவரும் இது சித்தார்த்தனைப் பற்றியது என எண்ணக் கூடும் ! இது வேறொருவரைப் பற்றியது. இன்னும் சரியாகச் சொன்னால் வேறு சிலரைப் பற்றியதும் கூட.  

இன்று ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் எனது நண்பரின் நண்பர். இருவரும் உரையாடிக் கொண்டிருந்தனர். அவரை இப்போதுதான் முதல் முறையாக சந்திக்கிறேன். நண்பர் தேனீர் அருந்துவோம் என்று சொன்னார். நானும் நண்பரும் எப்போதாவது ‘’லெமன் மிண்ட்’’ அருந்துவோம். அதாவது புதினாச் சாறில் எலுமிச்சைப் பழம் பிழிந்து அதில் கொஞ்சம் ஐஸ் கலந்து தயார் செய்யப் படுவது ‘’லெமன் மிண்ட்’’. தேனீருக்குப் பதிலாக ‘’லெமன் மிண்ட்’’ஐ நான் பரிந்துரைத்தேன். நாங்கள் இருந்த இடம் ஒரு கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம். அதற்கு அடுத்த தெருவில் நாங்கள் செல்ல வேண்டிய கடை இருந்தது. மூவரும் பேசிக் கொண்டு நடந்தோம். 

புதிதாக அறிமுகமான நண்பரிடம் , ‘’உங்கள் பெயர் என்ன?’’ என்று கேட்டேன். 

அவர் ‘’சிபிச்சக்கரவர்த்தி’’ என்றார். 

அந்த பெயரைக் கேட்டதும் ’’சிலப்பதிகாரத்துல உங்க பேருக்கு ஒரு ரெஃபரண்ஸ் இருக்கு. உங்களுக்குத் தெரியுமா?’’ என்றேன். 

நண்பர் ‘’சிலப்பதிகாரத்திலயா?’’ என்றார். 

‘’ஆமாம். கண்ணகி கையில சிலம்போட பாண்டியனோட அவைக்குப் போய் நீதி கேக்கறா. அப்ப தன்னை அறிமுகப்படுத்திக்கிறா. அதுக்கு முன்னால பாண்டியனை ‘’தேரா மன்னா’’ன்னு சொல்றா. ’’தேரா மன்னா’’ன்னா ஒரு விஷயத்தை முழுமையா புரிஞ்சுகிற தன்மை இல்லாத மன்னனேன்னு அர்த்தம்.’’

’’தேரா மன்னா’’ன்னு தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை நான் மனப்பாடமாகச் சொன்னேன். எப்போதோ படித்தது. மனதில் தங்கி விட்டது. 

‘தேரா மன்னா! செப்புவது உடையேன்;
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே’ என-

இந்த பாட்டுல இளங்கோ , ‘’புள் உறு புன்கண் தீர்த்தோன்’’ அன்றியும் சொல்றது சிபிச்சக்கரவர்த்தியைப் பத்தி. கழுகால துரத்தப்படுற புறா சிபிகிட்ட வந்து தஞ்சமடையுது. பின்னால துரத்திட்டு வர்ர கழுகு அந்த புறா என்னோட இரை. அத என்கிட்ட ஒப்படைக்கணும்னு சொல்லுது. மன்னன் தஞ்சம் அடைஞ்ச உயிரை காப்பாத்தறதுதான் என்னோட தர்மம்னு சொல்றான். அப்ப கழுகு நான் உணவு கொண்டு வருவன்னு என்னோட குஞ்சுகள் காத்துக்கிட்டு இருக்கு. நீ எடுத்த முடிவால என் குஞ்சுகள் சாக நேர்ந்தா என்ன பண்றது. அவையும் உன்னோட பிரஜைகள் தானே. அதுங்களையும் உன்னோட தர்மம் காப்பாத்த வேண்டாமான்னு கழுகு கேக்குது. சிபி ஒரு தராசு கொண்டு வர்ர சொல்லி புறாவை ஒரு தட்டுல வச்சு இன்னொரு தட்டுல தன் உடம்போட தசையை அறிஞ்சு வைக்கிறாரு. ஆனா புறாவோட எடையை சமனப்படுத்தவே முடியலை. தன் உடம்போட எல்லா தசையும் அறிஞ்சு கொடுத்தும் புறா எடைக்கு சமமாகலையேன்னு கடைசி தசையையும் அரியப் போகும் போகும் போது ‘’மன்னா நீ பெரிய நீதிமான். பிரஜைகளுக்கு சிறந்த அரசன்’’னு அசரீரி கேக்குது. சிபிக்கு பழைய உடம்பு திரும்ப கிடைக்குது. கழுகுக் குஞ்சுகளோட பசியை வானத்துத் தெய்வம் போக்குது. அதைப் பார்த்து இந்திர லோகத்துல இருக்கறவங்க சிபியை வாழ்த்தறாங்க. அப்படிப் பட்ட சிபிச் சக்கரவர்த்தியின் குலத்தில் உதித்த சோழ மன்னர்களால் ஆளப்படும் நாட்டிலிருந்து நான் வந்திருக்கன்னு கண்ணகி சொல்றா’’ என்றேன். 

‘’சார் சார் ! நான் இந்த கதையைக் கேட்டிருக்கன். ஆனா சிபிச்சக்கரவர்த்தி சோழ வம்சத்த சேர்ந்தவர்னு நீங்க சொல்லித்தான் தெரிஞ்சுகிட்டன்’’ 

‘’நான் சொல்லல. இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்துல எழுதி வச்சிருக்கார்.’’

‘’புதல்வனை ஆழியில் மடித்தோன் - அப்படின்னா மனுநீதி சோழன் தானே சார்’’

‘’அந்த மன்னனுக்கு மனுநீதி சோழன்னு பேருன்னா அப்ப சோழர்கள் தங்களை மனுவின் வழி வந்தவர்கள்னு நினைக்கறாங்கன்னு அர்த்தம்’’ 

‘’நீங்க சொல்ற விஷயங்கள் ஆச்சர்யமா இருக்கு சார்’’ 

‘’இந்தியாவில சூர்ய குலம் , சந்திர குலம் தான் ரொம்ப தொன்மையானது. ஸ்ரீராமன் சூர்ய குலத் தோன்றல். கிருஷ்ணன் சந்திர குலம். எல்லா ராஜாக்களுமே தங்களை சூர்ய குலமாகவோ சந்திர குலமாகவோ தான் உணர்வாங்க’’

‘’எனக்கு 34 வயசாகுது. இந்த சிலப்பதிகார விஷயத்தை நீங்க சொல்லித்தான் நான் முதல்ல கேள்விப்படறன். ‘’

‘’திருவள்ளுவர் அறிவு அற்றம் காக்கும் கருவின்னு சொல்றார். அதை எப்பவுமே ரொம்ப ஷார்ப்பா வச்சிருக்கணும் சிபி’’ என்றேன். 

Wednesday, 22 June 2022

போர்த்தொழில் பழகு

எல்லா சிறுவர்களையும் போல நானும் சிறுவனாயிருந்த போது ஒரு ராணுவ வீரனாக வேண்டும் என்று விரும்பினேன். 

1990ஐ ஒட்டிய ஆண்டு. வி.பி. சிங் நாட்டின் பிரதமராயிருந்த நேரம். காஷ்மீர் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களை கடத்தி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இஸ்ரேல் மாணவர்களை கடத்தி வைத்திருந்த இடத்தில் மாணவர்களை ஒரு அறையில் கை கால்களை கட்டாமல் அறையில் பூட்டி வைத்திருக்கின்றனர். அங்கே காவலுக்கு இருந்த பயங்கரவாதி தனது துப்பாக்கியை அந்த அறையில் வைத்து விட்டு எங்கோ வெளியே சென்ற நேரத்தில் இஸ்ரேல் மாணவர்கள் அந்த துப்பாக்கியை எடுத்து இயக்கி பயங்கரவாதிகளைத் தாக்கி விட்டு அந்த இடத்திலிருந்து தப்பினர் என்ற செய்தி நாடெங்கும் பரபரப்பாக பேசப்பட்டது. இஸ்ரேலில் எல்லா மாணவர்களும் கட்டாயம் அடிப்படை இராணுவப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் ; மேலும் கட்டாயமாக நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் பணியை ஓராண்டுக்கு மேற்கொள்ள வேண்டும். இஸ்ரேல் மாணவர்கள் பெற்ற பயிற்சி பயங்கரவாதிகளை வீழ்த்துவதில் அவர்களுக்கு உதவியிருக்கிறது. இந்த செய்தியை செய்தித்தாள்களில் படித்த போது நம் நாட்டிலும் அவ்வாறான ஒரு ஏற்பாடு இருந்தால் நலமாக இருக்கும் என எண்ணியதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.  

பூனாவில் தேசிய பாதுகாப்பு அகாடெமி என்ற கல்வி நிறுவனம் உள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் படித்த மாணவர்கள் அதில் சேர விண்ணப்பிக்கலாம். ‘’எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்’’ என்ற செய்தித்தாளில் தான் அதற்கான அறிவிப்பு வெளியாகும். நான் தவறாமல் அதனை வாராவாரம் வாங்கி அறிவிப்பு வெளியாகி உள்ளதா என்று காண்பேன். வந்த போது விண்ணப்பித்தேன். ஆங்கிலம், கணிதம், பொது அறிவு, அறிவியல் ஆகிய நான்கு தாள்களில் தேர்வு எழுத வேண்டும். சென்னையில் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் சென்னை மதுரை என இரு இடங்கள் தேர்வு மையங்கள். அந்த தேர்வை 1000 பேர் சென்னையில் எழுதியிருப்போம். அதில் நானும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இன்னொருவரும் மட்டுமே தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். மற்ற அனைவருமே தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இராணுவத்தில் பணி புரிபவர்களின் வாரிசுகள். இரண்டு நாட்கள் அந்த தேர்வு நடந்ததாக ஞாபகம். காலை மதியம் என இரு பிரிவுகளாக நடப்பதால் தேர்வு எழுதும் அனைவருமே ஒரே இடத்தில் காத்திருப்போம். அப்போது தான் அதனை அறிந்தேன். 

தமிழ்நாட்டுப் பள்ளிகளோ கல்லூரிகளோ தேசிய பாதுகாப்பு அகாடெமி, தேசிய கடற்படை அகாடெமி போன்ற கல்வி மையங்களுக்கு மாணவர்களை தயார் செய்யும் விதமாக எந்த முயற்சியும் மேற்கொள்வதில்லை. அவை குறித்த தகவல்கள் கூட தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் தெரிந்திருப்பதில்லை. 

தேசிய பாதுகாப்பு அகாடெமி பன்னிரண்டாம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்களுக்கு நான்கு ஆண்டு பயிற்சி அளித்து இந்திய ராணுவத்தில் அதிகாரிகளாக உருவாக்கும் பணியை மேற்கொள்கிறது. சென்னையிலும் ஊட்டியிலும் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடெமிகள் இளநிலை பட்டம் பெற்ற மாணவர்களுக்கு தேர்வு வைத்து தேர்வு செய்து பயிற்சி கொடுத்து இராணுவ அதிகாரிகளாக உருவாக்குகிறது. உலகின் தலை சிறந்த கல்வி நிறுவனங்கள் இவை. 

இஸ்ரேலைப் போல நம் நாட்டிலும் அடிப்படை இராணுவப் பயிற்சி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். 

Tuesday, 21 June 2022

தேக்கு - அதிகமாக கேட்கப்பட்ட வினாக்கள்

’’காவிரி போற்றுதும்’’ முன்னெடுக்கும் பணிகளை கவனிப்பவர்கள் அதன் குவிமையம் எதை நோக்கி என அறிய முற்படுவதுண்டு. ‘’காவிரி போற்றுதும்’’ மரங்கள் அதிக அளவில் கிராமங்களில் வளர்க்கப் பட வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருக்கிறது. கிராம மக்களுக்கு மழைக்காலத்தில் உணவளித்திருக்கிறது. தடுப்பூசி விழிப்புணர்வுக்காக செயலாற்றியிருக்கிறது. குடியரசு தினத்தன்று ஒரு கிராமத்தில் எல்லா வீடுகளும் ஒரு மரக்கன்று நட்டு அன்று மாலை ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் ஏழு தீபங்கள் ஏற்றுமாறு அழைப்பு விடுத்து அதனை முழுமையாக ஒருங்கிணைத்தது. மாவட்டம் முழுக்க எல்லா முடி திருத்தும் நிலையங்களுக்கும் நூல்களை அன்பளிப்பாக அளித்து ‘’சலூன் நூலகங்களை’’ உருவாக்கியது. இதைப் போன்ற மேலும் சில சிறு பணிகளை நடத்தியது.  

ஒரே வரியில் கூற வேண்டும் எனில் அதனை ‘’மக்களை இணைத்தல்’’ என்று கூறி விடலாம். ‘’காவிரி போற்றுதும்’’ இந்திய மக்களை உலகின் மாபெரும் பண்பாடொன்றின் சொந்தக்காரர்களாகப் பார்க்கிறது. அவர்கள் கல்வி கற்றவர்களாக இருக்கலாம் ; பள்ளிக்கூடமே போகாதவர்களாக இருக்கலாம் ; பெரும் நிலச்சுவான்தாராக இருக்கலாம் ; விவசாயக் கூலிகளாக இருக்கலாம். யாராக இருந்தாலும் அவர்கள் உலகின் ஆகச் சிறந்த பண்பாட்டின் உரிமையாளர்கள். 

அவர்கள் எப்போதெல்லாம் இணைக்கப்பட்டிருக்கிறார்களோ அப்போதெல்லாம் மானுடம் கண்டதில் ஆகச் சிறந்த வாழ்க்கைகள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. அடித்தட்டு மக்களின் தலைவனாக எழுந்தவர் சந்திர குப்த மௌரியர். விவசாயக் குடிகளின் மேம்பாட்டையும் ஆலயப் பணிகளையும் தம் அரசின் சிரம் மேல் கொண்டிருந்த அரசு பிற்காலச் சோழர்களுடையது. ஆநிரை புரக்கும் மக்கள் தம் பண்பாடு காக்க எழுப்பிய அரசே விஜயநகரப் பேரரசு. மலைக்குடிகளின் துணையோடு ஒரு பேரரசு மராத்தியர்களால் உருவாக்கப்பட்டது. 

’’மக்களை இணைத்தல்’’ என்பதையே அரசியல் செயல்பாடாகக் கொண்டிருந்தது இந்தியா. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆள நேர்ந்த போது ‘’பிரித்து ஆள்தல்’’ என்னும் முறைக்குச் சென்று நம் வளத்தைச் சுரண்டினர். அவர்கள் நாட்டை விட்டு நீங்கிய பின்னும் அவர்கள் விட்டுச் சென்ற எச்சங்களை அவர்களுக்குப் பின்னால் நாட்டை ஆண்டவர்கள் கைக்கொண்டனர் என்பது நம் துயரம். 

’’சிட்டுக் குருவிகளுக்கு வல்லூறுகளை எதிர்க்கும் ஆற்றலைத் தருவேன்’’ என்றார் குரு கோவிந்த் சிங். எளிய மக்கள் எழுச்சி பெறுவதை ஆன்மீகமான ஒன்றாகக் காண்கிறது இந்திய மரபு. இந்திய ஆன்மீகம் பொருளியல் எழுச்சியை ஆன்ம எழுச்சியின் முதற்படியாகக் காண்கிறது. அவ்வகையில் ‘’காவிரி போற்றுதும்’’ விவசாயிகளின் பொருளியல் விடுதலையை சமூக எழுச்சியின் அடிப்படையாகக் காண்கிறது. அதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்கிறது. 

உலகின் தேவைக்கு ஆண்டொன்றுக்கு 2.5 மில்லியன் கன மீட்டர் தேக்கு தேவைப்படுகிறது. நம் நாடு தன் தேவைக்கு தேக்கு மரத்தை மியன்மார்ரிலிருந்தும் ஆஃப்ரிக்காவிலிருந்தும் இறக்குமதி செய்கிறது. காவிரி டெல்டா பிராந்தியத்தில் தேக்கு மிக நன்றாக வளரக் கூடிய மரம் என்பதால் ‘’காவிரி போற்றுதும்’’ விவசாயிகளை தங்கள் நெல்வயலில் சில தேக்கு மரக்கன்றுகளையாவது வளர்க்குமாறு கேட்டுக் கொள்கிறது. 

தேக்கு - அதிகமாக கேட்கப்பட்ட வினாக்கள்

1. ‘’காவிரி போற்றுதும்’’ ஏன் தேக்கு மரத்துக்கு முக்கியத்துவம் தருகிறது?

‘’Seeing is believing'' என்று கூறுவார்கள். கட்டுமானத் துறையில் இருப்பவர்களுக்கு தேக்கு மரத்தின் தேவை எவ்வாறு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது என்பது தெரியும். சற்று முயன்றால் நம் கிராமங்களில் தேக்கின் உற்பத்தியை அதிகப்படுத்த முடியும். அதன் பொருளியல் பலன் முழுமையாக விவசாயிகளுக்குக் கிடைக்கும். 

2. ‘’காவிரி போற்றுதும்’’ அறிந்திருப்பதை விவசாயிகள் அறிய மாட்டார்களா? 

இது ஆழ்ந்து யோசிக்க வேண்டிய கேள்வி. விவசாயத்தின் வரலாறுடன் சமூக வரலாறுடன் இணைந்து யோசிக்க வேண்டிய விஷயம் இது. இந்திய நிலத்தில் வேளாண் குடிகளே பேரரசுகள் உருவாக காரணமாக இருந்துள்ளனர். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை தங்கள் நிலத்தில் விளைந்த வேளாண் விளைபொருட்களையே அரசுக்கு வரியாக வேளாண் குடிகள் செலுத்தினர். கிராமங்கள் தங்கள் தேவைகளை தாமே நிறைவேற்றிக் கொள்ளும் சுயசார்பு தனமையுடன் விளங்கின. ஆங்கிலேயர்கள் நிலவரியை பணமாக செலுத்த வேண்டும் என்ற முறையை உருவாக்கினர். விவசாயிகளின் வீழ்ச்சி அங்கிருந்து துவங்குகிறது. 

பொருத்தமில்லாத ஈவிரக்கமற்ற பிரிட்டிஷ் முறைகள் இந்திய விவசாயிகளின் மனோதிடத்தை வீழ்த்தின. அவர்கள் வறிய நிலைக்குச் சென்றனர். சுதந்திரத்துக்குப் பின் வந்த அரசுகளும் அரசின் இயங்குமுறை குறித்து ஐரோப்பிய மனநிலையே கொண்டிருந்தன. 

நாட்டின் தேவை, உலகச் சூழல் ஆகியவற்றை கணக்கில் கொண்டு விவசாயத்தை லாபகரமான தொழிலாகச் செய்யும் நிலை விவசாயிகளிடம் வந்து சேரவே இல்லை. செயற்கை உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் எப்போதும் நம்பியிருக்கும் நிலையிலேயே விவசாயிகள் இருக்க நேர்ந்தது. 

3. இது நம்புவதற்கு கடினமாக இருக்கிறதே?

நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இதுதான் உண்மை. இதில் வேறு சில கூறுகளும் உள்ளன. நாம் பொதுவாக சொன்னாலும் விவசாய நிலம் என்பது நாடெங்கும் ஒரே விதமானது இல்லை. பருவமழையை மட்டுமே நம்பியிருக்கும் விவசாயமும் உண்டு. ஆற்றுப்பாசனத்தை நம்பும் விவசாயம் உண்டு. ஏரிப்பாசனம் உண்டு. கடலை ஒட்டியிருக்கும் பகுதிகள் உண்டு. நாம் கூறுவது அந்தத்த பிராந்தியங்களைப் பொறுத்து சிற்சில மாறுதல்களுடன் உண்மை. 

4. ''காவிரி போற்றுதும்’’ விவசாயிகளை தேக்கு வளர்க்க சொல்வதால் மாற்றம் உண்டாகுமா? 

நிச்சயம் உண்டாகும். பலவிதங்களில் உண்டாகும். முதன்மையாக நாம் அவர்கள் இத்தனை ஆண்டுகள் எதனை தவற விட்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். அவ்வாறு கொண்டு வரப்படும் போது அது குறித்து யோசித்து நாம் சொல்வது உண்மை என அவர்கள் உணர்கிறார்கள். இது முதல் படி. அடுத்து, விவசாயிகளின் பொருளியல் விடுதலையை ‘’காவிரி போற்றுதும்’’ ஏன் முக்கியமாக நினைக்கிறது என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். அதன் பின்னர் விவசாய முறைகளில் வழக்கமாகச் செய்யப்படும் பூச்சிக்கொல்லி , ரசாயன உரம் போன்ற செலவுகளை எவ்விதம் குறைப்பது என்பது குறித்து அவர்களுக்கு எடுத்துச் சொல்லப்படுகிறது. 

விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான முழு விளைநிலத்திலும் தேக்கு பயிரிட வேண்டும் என்பது இல்லை. ஒரு ஏக்கர் நிலத்தில் 5 சதவீத பரப்பினை ஒதுக்கி அதில் தேக்கு நடலாம். மீதம் உள்ள 95 சதவீத நிலத்தில் தாங்கள் வழக்கமாக செய்யும் பயிரை செய்து கொள்ளலாம். 

5. எல்லா நிலத்திலும் தேக்கு வளருமா?

காவிரி வடிநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் தேக்கு வளரும். மண் தன்மை சற்று மாறியிருக்கும் பகுதிகளில் குறைந்தபட்சமாக சில சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டால் போதுமானது. 

6. விவசாயிகள் இதனை வரவேற்கிறார்களா?

முதலில் விஷயத்தை எடுத்துச் சொல்லும் போது கவனமாகக் கேட்கிறார்கள். நடப்பட்டுள்ள இடங்களை சுட்டிக் காட்டி கூறும் போது நம்பிக்கையுடன் முன்வருகிறார்கள். 

7. விவசாயிகள் தேக்கு நடுவதில் பொதுவாக செய்யும் தவறுகள் என்ன?

ஒரு தேக்கு கன்று நட இரண்டு அடி நீளம் இரண்டு அடி அகலம் இரண்டு அடி ஆழம் கொண்ட குழி எடுக்கப்பட்டு அதில் மக்கிய சாண எரு இடப்பட வேண்டும். இது கன்றின் ஆரம்ப கட்ட வளர்ச்சிக்கு மிக முக்கியம். முதல் ஒரு மாதம் தினமும் ஒரு முறையும் அடுத்த ஒரு மாதம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும் தண்ணீர் விட வேண்டும். அதன் பின்னர் குறைந்தபட்சம் வாரம் இரு நாட்கள் தண்ணீர் விட வேண்டும். 

இவ்வளவு கவனம் செலுத்த வேண்டிய இடத்தில் மரம் தானாக வளரும் என விவசாயிகள் இருந்து விடுகிறார்கள். 

‘’காவிரி போற்றுதும்’’ இந்த விஷயத்தில் விவசாயிகளிடம் விழிப்புணர்வை உண்டாக்குகிறது. 

Monday, 20 June 2022

யானை பிழைத்தவேல்

கம்ப ராமாயணம் குறித்து எழுதிய ‘’யானை பிழைத்தவேல்’’ தொடரின் தொகுப்பு கீழே :


யானை பிழைத்தவேல் - பகுதி 1   


எண்கள்

Physics for entertainment , Mathematics can be fun போன்ற நூல்கள் சோவியத் யூனியனின் ராதுகா பதிப்பகம் மூலம் வெளியான நூல்கள். அவற்றை நான் ஆர்வத்துடன் வாசித்திருக்கிறேன். எண்கள் மாயத்தன்மை கொண்டவை. எண்களின் மாயமே லௌகிகம் என நாம் உணரும் வாழ்க்கை. எண்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அமையும் தன்மை கொண்டிருந்தாலும் எல்லையின்மையும் எண்களின் இயல்பே. அனந்தம் என்பது எண்ண சாத்தியமில்லாத ஒரு எண்ணே.  இந்திய ம்ரபு எண்களை அவதானிப்பதை ஒரு யோக வழிமுறையாகக் கொண்டிருக்கிறது. தமிழ் மூதாட்டி ‘’எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’’ என்கிறாள்.