Monday, 29 May 2023

அமைப்பாளரின் இன்றைய தினம் ( நகைச்சுவைக் கட்டுரை)

 வாரத்தின் முதல் வேலை நாளை அமைப்பாளர் முக்கியம் என்று நினைப்பார். அந்த ஒரு நாளில் ஏதேனும் வேலைகளைப் பார்க்க முடிந்தால் அந்த ஒரு வாரம் என்பது சற்று ஆசுவாசமாகச் செல்லும் என்பது அவரது நம்பிக்கை. ஞாயிற்றுக்கிழமை அன்று நிலுவையில் என்னென்ன பணிகள் இருக்கின்றன என்பது அன்று காலை நினைவில் எழுந்து மதியம் மாலை என வியாபித்து இரவு வரை நீடிக்கும். எனவே திங்கட்கிழமையில் அவர் ஏதாவது செய்து விட வேண்டும் என்று நினைப்பார். நேற்று அமைப்பாளர் என்னென்ன பணிகள் நிலுவையில் நிலுவையில் இருக்கின்றன என்று ஒரு காகிதத்தில் பட்டியலிட்டுக் கொண்டார்.

1. அவருடைய வாகனத்தின் முகப்பு விளக்கு அவ்வப்போது ஒளிர்கிறது ; அவ்வப்போது ஒளிராமல் இருக்கிறது. அது சமயத்தில் ஒளிர்வதில்லை என்பது ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு மேல் வாகனத்தை இயக்கும் போது அவருக்கு நினைவுக்கு வரும். அவருக்கு நினைவு வருகிறதோ இல்லையோ உடன் பயணிப்பவர்கள் சற்று பதட்டம் அடைவார்கள். அடுத்த நாள் காலையே சரி செய்ய வேண்டும் என்று நகர்ந்து நகர்ந்து வந்து பல காலைகளைக் கடந்து இன்றைய தினத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார். 

2. அவருடைய வாகனத்தின் ஹாரன் ‘’டிவீட்’ போல சின்னதாக கீச் கீச் என்கிறது. அதையும் சரி செய்ய வேண்டும் என்று எழுதிக் கொண்டார். 

3. தணிக்கையாளர் அலுவலகத்திலிருந்து பத்து நாள் முன்னதாக ஃபோன் செய்து வங்கி கணக்கு ஒரு வருட அறிக்கைகளை அளிக்குமாறு கேட்டிருந்தார்கள். ஃபோன் வந்த அன்றே தனது வங்கி பாஸ்புக்கை எடுத்துப் பார்த்தார். சென்ற ஆண்டு மார்ச் 10ம் தேதிக்குப் பின்னர் எந்த எண்ட்ரியும் இல்லை. வங்கிக்குச் சென்று எண்ட்ரி போட வேண்டும் என நினைத்தார். ஔவை சொன்ன ஒரு கோடிக்குப் பெருமானமான அறிவுரை அவருக்கு நினைவுக்கு வந்தது. அமைதியாக இருந்து விட்டார். 

4. இப்போது தபால் ஆஃபிஸ் கணக்கை அதிகமாக பயன்படுத்துவதால் ஃபோன் வந்த அன்றே தபால் சேமிப்புக் கணக்கின் இந்த ஆண்டுக்கான பக்கங்களை ஸ்கேன் செய்து தனது மின்னஞ்சலில் சேமித்துக் கொண்டார். அமைப்பாளர் ஸ்கேன் செய்ய ஜெராக்ஸ் எடுக்க என அவருக்கு வாடிக்கையான கடை ஒன்று இருக்கிறது. அந்த கடையின் உரிமையாளர் பணியாளர்கள் அனைவரும் அமைப்பாளரின் நண்பர்கள். அதாவது பல்வேறு விதமான மனுக்கள் அவ்வப்போது அனுப்புவதால் அடிக்கடி செல்ல நேர்ந்து பரிச்சயமாகி நட்பாகி விட்டார்கள். அந்த கடையில் அமைப்பாளருக்கு கணிசமான ‘’டிஸ்கவுண்ட்’’ உண்டு. 

5. சென்ற ஆண்டில் அமைப்பாளர் போஸ்டல் பேமெண்ட் பேங்க் என இந்திய அஞ்சல் துறை ஆரம்பித்திருந்த டிஜிட்டல் வங்கியில் ஒரு கணக்கை ஆரம்பித்தார். ஆதார் எண் சொன்னால் போதும் கணக்கு துவங்கி விடலாம் என்று சொல்லி ஆரம்பிக்கப்பட்ட கணக்கு அது. ஆனால் அதனை ‘’ஸ்மார்ட்ஃபோன்’’ மூலம் மட்டுமே இயக்க முடியும். அதற்கும் அமைப்பாளருக்கும் உள்ள தூரம் அனைவரும் அறிந்ததே. நண்பர் ஒருவரின் ஸ்மார்ட்ஃபோன் மூலம் இயக்கிக் கொண்டிருந்தார். பின்னர் அந்த கணக்கில் எந்த அலைபேசி எண் தரப்பட்டதோ அந்த எண் பயன்படும் ஸ்மார்ட்ஃபோனில் மட்டுமே இயக்க முடியும் என விதிமுறையை தபால் துறை மாற்றி விட்டது. மாதாமாதம் அறிக்கை மின்னஞ்சலில் வரும். அதனை பாஸ்வேர்டு கொடுத்து திறக்க வேண்டும். அவ்வாறு இன்று திறந்து கணிணியில் பதிவிறக்கம் செய்தார். பதிவிறக்கம் செய்ததை மீண்டும் திறக்க முயன்ற போது அந்த கோப்பு மீண்டும் ‘’நுழைவு சங்கேதம்’’ கேட்டது. அமைப்பாளர் அதை ஒத்தி வைப்போம் என முடிவு செய்தார்.  

6. காலை 11.30 மணி அளவில் கொடும் வெயில். வங்கிக்கு சென்று எண்ட்ரி போட்டு விட்டு வாடிக்கை கடைக்கு வந்து அந்த பக்கங்களை ஸ்கேன் செய்து தனது மின்னஞ்சலுக்கு அனுப்பச் சொன்னார். 

7. வண்டியை ஒரு இரு சக்கர வாகனப் பட்டறையில் கொண்டு வந்து விட்டார். முகப்பு விளக்கும் ஒலிப்பானும் முக்கியம் மற்ற வேலைகளையும் பார்த்து விடுங்கள் என சொன்னார். அமைப்பாளர் ஒரு ‘’மினிமலிஸ்ட்’’. அவர் வழக்கமாக விடும் பட்டறை உரிமையாளர் அமைப்பாளரினும் ‘’மினிமலிஸ்ட்’’. எனவே புதிதாக ஒரு பட்டறையைத் தெரிவு செய்துள்ளார்.

8. வீட்டில் இருந்த இன்னொரு வாகனத்தை எடுத்துக் கொண்டு பதிவுத்துறை அலுவலகம் சென்றார். அங்கே ஒரு சான்றிதழ் வாங்க வேண்டும். நாளை மதியம் வாருங்கள் என்று கூறினர். திரும்பி வந்து விட்டார். 

9. இந்த வேலைகளை முடிக்க மதியம் 2 மணி ஆகி விட்டது. ரியல் எஸ்டேட் தொடர்பாக சிலருடன் பேச வேண்டியிருந்தது. அலைபேசி மூலம் பேசினார். அதில் ஒருவரின் ஃபோன் ‘’சுவிட்ச் ஆஃப்’’ல் இருந்தது. அமைப்பாளர் எவருக்கும் ஃபோன் செய்தால் அவர்கள் ஃபோ சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தால் சலிப்படைவதே இல்லை. அவருடைய ஃபோன் அவ்வப்போது ‘’சுவிட்ச் ஆஃப்’’ ஆவது உண்டு என்பது அதற்கான காரணம். 

10. அமைப்பாளர் கல்லூரியில் படிக்கும் போது வாங்கிய ஹீரோ ஹோண்டா ஒன்று அவரிடம் இப்போதும் இருக்கிறது. அது 2,00,000 கிலோ மீட்டர் ஓடியிருக்கும். பல பல மாதங்களாக அதனை ஓட்டாமல் வைத்திருந்தார். காலை பட்டறைக்குச் சென்ற போது அந்த வண்டி பற்றி சொன்னார். பட்டறை உரிமையாளர் மாலை இரண்டு பேரை அனுப்பி பட்டறைக்குக் கொண்டு வந்து சரி செய்து விடுவதாக சொன்னார். அமைப்பாளர் அவர்களிடம் ‘’அதில் ஹெட்லைட் ரொம்ப டேமேஜ் ஆகி விட்டது. ஹெட்லைட் செட்டை கழட்டிடுங்க. அந்த வண்டியை பகல்ல மட்டும் யூஸ் பண்ணிக்கறன் ‘’ என்றார். 

11. வங்கி பாஸ் புத்தக ஸ்கேன், போஸ்ட் ஆஃபிஸ் கணகின் ஸ்கேன், ஹவுசிங் லோன் ஸ்டேட்மெண்ட் ஸ்கேன் என மூன்றையும் தணிக்கையாளருக்கு மின்னஞ்சலில் அனுப்பி விட்டு போஸ்டல் பேமெண்ட் பேங்க் குறித்தும் அதன் மாதாந்திர அறிக்கைகளை மின்னஞ்சலில் அனுப்ப முடியாமல் இருக்கும் நிலை குறித்தும் தணிக்கையாளருக்கு ஒரு மின்னஞ்சல் கடிதத்தில் சொல்லி விட்டு ஆசுவாசமான போது இன்னும் வாசிப்பு சவாலின் இன்றைய தினத்துக்கான ஒரு மணி நேரம் இன்னும் வாசிக்கப்படவில்லை என்பது அமைப்பாளருக்கு நினைவுக்கு வந்தது. 

12. இன்றைய நாள் முடிய இன்னும் நான்கு மணி நேரம் இருக்கிறது. அதற்குள் வாசித்து விடலாம் என எண்ணிக் கொண்டார். 

Thursday, 25 May 2023

எண்ணும் எழுத்தும்

1111 மணி நேர வாசிப்பு சவாலில் ஈடுபடுதலின் தீவிரம் கூடியிருக்கும் ஒரு தருணமாக இத்தருணம் அமைந்திருக்கிறது. தினமும் வாசிப்புக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க முடியுமோ அவ்வளவு நேரம் ஒதுக்குகிறேன். தொழில் சார்ந்த பணிகளும் லௌகிகப் பணிகளும் ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளுக்கும் ஒதுக்க வேண்டிய நேரத்தை ஒதுக்குகிறேன். ஒரு விஷயத்தை புறவயமாக நிர்ணயம் செய்து கொண்டு அதில் ஆர்வத்துடன் ஈடுபடும் போது நமது அகத்துக்குள்ளும் நுண் மாற்றங்கள் ஏற்படுவதை உணர முடிகிறது. நினைவறிந்த நாள் முதல் வாசிப்பில் ஈடுபட்டிருந்தாலும் இந்த வாசிப்பு சவாலின் காலகட்டம் சிறப்பானது ; முக்கியத்துவம் கொண்டது.  

01.01.2023லிருந்து 31.12.2023 வரை 365 நாட்கள் வாசிப்புக்கான காலம். இந்த காலகட்டத்தில் 1111 மணி நேரம் வாசிக்க வேண்டும் என்பது சவால். ஒரு நாளைக்கு சராசரியாக 3 மணி நேரம் வாசித்தால் இந்த இலக்கை எட்டி விடலாம். இந்த இலக்கு எளிய ஒன்றுதான். இருப்பினும் தோற்றமளிக்கும் அளவுக்கு எளிதானதல்ல என்பதை சவாலை தினந்தோறும் சந்திக்கையில் உணர்ந்து கொள்ள முடிந்தது. 

லௌகிகமான ஒரு தளத்தில் நமது வேலை நேரம் என்பது காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை என நிர்ணயமாகியுள்ளது. அலுவலகங்களில் பணி புரிபவர்கள் அந்த நேரத்தில் அங்கே இருந்தாக வேண்டும். அலுவலகங்களில் பணி இருப்பவர்கள் அந்த நேரத்துக்குள் அங்கே சென்று தங்கள் பணிகளை செய்து முடித்துக் கொள்ள வேண்டும். வங்கி, அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், கடைகள் என அனைத்தும் இயங்குவது அந்த நேரத்திலேயே. எனவே அந்த நேரத்தில் வாசிப்பு என்பது சாத்தியமில்லை. ஒரு நாள் பொழுதில் ஆறிலிருந்து எட்டு மணி நேரம் உறக்கத்துக்குச் சென்று விடும். லௌகிக நேரம் என ஏழும் உறக்கம் என எட்டும் என பதினைந்து மணி நேரம் சென்று விடும். வாசிக்க ஒன்பது மணி நேரம் கிடைக்கும். அதில் ஒரு மணி நேரத்தை அவசியமான விஷயங்களுக்கு என ஒதுக்கினால் எட்டு மணி நேரம் வாசிக்கக் கிடைக்கும். 

இந்த எட்டு மணி நேரத்தை உபயோகிக்கத் தக்க நேரமாக மாற்றிக் கொள்ள வேண்டும் எனில் அந்த நேரம் எங்கே இருக்கிறது என்பதை தேடிக் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். காலை 4 மணியிலிருந்து 8 மணி வரை. மாலை 7 மணியிலிருந்து 11 மணி வரை என நாம் கண்டடைவோம் என்றால் சிறப்பு. அந்த நேரம் ஒவ்வொரு நாளும் நமக்கென இருக்கும் நேரம். 

என்னுடைய தொழில் சார்ந்த லௌகிகம் சார்ந்த பணிகள் காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணி வரை இருக்கும். எல்லா நாளும் இந்த நேரம் முழுமையும் பணி இருக்கும் என்றல்ல. பெரும்பாலான நாட்கள் இருக்கும். அவ்வப்போது ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளும் இருக்கும். 

சவாலின் ஐந்தாவது மாதம் நிறைவு கொள்ளப் போகிறது. முந்நூறு மணி நேரத்துக்குப் பக்கத்தில் வந்து விட்டேன். இன்னும் 7 மாதத்தில் 811 மணி நேரம் வாசிக்க வேண்டும். அவ்வப்போது அடுத்து வரும் நாட்களில் ஒருநாளைக்கு சராசரியாக எவ்வளவு நேரம் வாசிக்க வேண்டும் என்று கணக்கிட்டுப் பார்ப்பேன். இருப்பினும் வழக்கமாக வாசிக்கும் நேரத்தை ஒட்டியே வாசிப்பு நேரம அமையும். இந்த ஐந்து மாதமும் ஒருநாள் தவறாமல் தினமும் ஒரு மணி நேரம் வாசித்திருக்கிறேன். அது ஒரு நல்ல விஷயம். அது நல்லதொரு அடித்தளத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த ஐந்து மாத அனுபவத்தைக் கொண்டு அடுத்த 7 மாதங்களின் வாசிப்பை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என இருக்கிறேன். 

திட்டமிடும் பல விஷயங்கள் தவறிப் போகும் போது வருத்தமாக இருக்கும். எனினும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் என எனக்கு நானே சொல்லிக் கொள்ள வேண்டும். இந்த வாசிப்பு சவால் மூலம் நான் என்னை - என் மனத்தை - என் செயலாற்றும் திறனை - என்னுடைய தடைகளை - என்னுடைய எல்லைகளை அணுகி அறிகிறேன் என்பது என்னுடைய உணர்வில் இருக்கிறது. வாசிப்பு சவாலின் ஆறாவது மாதம் நிறையும் போது பாதி இலக்கு எட்டப்பட்டிருக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உள்ளது. காலக்கெடுவின் பாதியும் இலக்கின் பாதியும் நிறைவாகியிருந்தால் அடுத்த ஆறு மாதத்தின் தொடக்கம் இரண்டாம் துவக்க நிலையாக அமையும். அவ்வாறு நிகழ வேண்டுமென்றால் அடுத்த 35 நாளில் 255 நேரம் வாசிக்க வேண்டும். அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு 7 மணி நேரம். 

எண்கள் மாயம் மிக்கவை. எண்கள் வசீகரிக்கக் கூடியவை. வசீகரம் மிக்க எண்களை வசப்படுத்துவது என்பது ஒரு கலை ; ஒரு தவம். 

Sunday, 21 May 2023

14 மரங்கள் - மாநில தகவல் ஆணையம்

 ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் புராதானமான விஷ்ணு ஆலயத்தின் சன்னிதித் தெருவில் அந்த தெருவில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டு வாசலில் நட்டு வளர்த்து பராமரித்த பத்து ஆண்டுகளுக்கு மேல் அகவை கொண்ட வேம்பு, மலைவேம்பு, புங்கன் மரங்கள் அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவரால் 09.07.2021 அன்று வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவு இல்லாமல் வெட்டப்பட்டன. வெட்டப்பட்ட மரங்களின் பொருள் மதிப்பு மிக அதிகம். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு குற்றம் இழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அந்த கிராமத்தின் பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

வட்டாட்சியர் அலுவலகத்தின் பொது தகவல் அதிகாரியிடம் இந்த சம்பவம் தொடர்பான கோப்பினை முழுமையாக அளிக்குமாறு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி கோரப்பட்டது. பொது தகவல் அதிகாரி எந்த தகவலும் அளிக்கவில்லை. அதனால் வட்டாட்சியர் அலுவலக மேல்முறையீட்டு அலுவலரிடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் மேல்முறையீட்டுக்கும் பதில் இல்லை என்பதால் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் இரண்டாம் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு சில நாட்கள் கழித்து வட்டாட்சியர் அலுவலக பொது தகவல் அதிகாரி கோப்பின் சில பகுதிகளை மட்டும் அனுப்பியிருந்தார். அவை நாம் கோரிய முழுமையான தகவல்கள் இல்லை. 

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் சில நாட்களுக்கு முன் எனக்கு ஒரு தபால் அனுப்பியிருந்தது. அதாவது, மாநில தகவல் ஆணையம் வட்டாட்சியர் அலுவலக பொது தகவல் அதிகாரிக்கு ஒரு கடிதம் அனுப்பி விண்ணப்பதாரர் கோரிய விபரங்களை அளித்து விட்டு விபரம் அளிக்கப்பட்டதை ஆணையத்துக்கு ஒரு மாதக் காலக்கெடுவில் தெரிவிக்குமாறு கோரியிருந்திருக்கிறது. அந்த காலக்கெடுவைத் தெரிவித்து அதற்குள் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து எந்த தபாலும் வரவில்லை என்றாலோ அல்லது முழுமையான விபரங்கள் அளிக்கப்படாமல் இருந்தாலோ மாநில தகவல் ஆணையத்துக்கு விபரம் தெரிவிக்குமாறு அந்த தபாலில் கூறப்பட்டிருந்தது. வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து மாநில தகவல் ஆணையத்துக்கு எந்த தபாலும் அனுப்பப்படவில்லை. நமக்கும் எந்த தபாலும் வரவில்லை.  

மாநில தகவல் ஆணையம் என்பது நீதிமன்றத்துக்கு சமானமான அதிகாரம் கொண்ட அமைப்பு. அந்த அமைப்பின் அறிவுறுத்தலின் படி கூட வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் நடக்க மறுக்கிறார்கள் என்றால் அதன் அர்த்தம் என்ன என்பதை எவரும் யூகித்து விட முடியும். அந்த கோப்பு முழுமையாக வழங்கப்பட்டால் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளுக்கு அந்த கோப்பின் மூலம் பலவிதமான அசௌகர்யங்கள் ஏற்படும். அந்த விஷயத்தின் உண்மை முழுமையாக வெளிவரும். எனவே அதனை தவிர்க்கப் பார்க்கிறார்கள். 

மாநில தகவல் ஆணையம் தெரிவித்திருந்தவாறு ஒரு கடிதத்தை ஆணையத்துக்கு அனுப்பி விட்டேன். இனி ஆணையம் இதனை விசாரணை செய்யும். அந்த விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

Saturday, 20 May 2023

நுழைதல்

 எனது நண்பர் ஒருவர் இலக்கிய வாசகர். இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டு தமிழில் தேர்ந்தெடுத்த படைப்புகளை வாசித்துக் கொண்டிருந்தார். அவருடன் இலக்கியம் குறித்து விரிவாகப் பேச ஒரு தருணம் வாய்த்தது. அப்போது அவர் தனது வாழ்வுக்கு மிகவும் அருகில் இருக்கும் ஒரு சம்பவம் குறித்து என்னிடம் சொன்னார். அதனை துல்லியமாக வர்ணித்தார். அவர் வர்ணித்த விதம் மூலம் அந்த சம்பவம் அவர் மனதில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். அவர் என்னிடம் கூறியதை ஒரு நாவலாக எழுதுமாறு சொன்னேன். அவர் எழுதுகிறேன் என்று சொன்னார். நேற்று ‘’காவிரி போற்றுதும்’’ ஆடிப்பட்டம் , கல்வி ஆகிய பதிவுகளை வாசித்து விட்டு பெரும் மகிழ்ச்சியுடன் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டார். நாவல் எழுதத் தொடங்கி விட்டாரா என்று விசாரித்தேன். எழுதத் தொடங்கி 50 பக்கங்கள் வரை வந்திருக்கிறார். 50 பக்கம் என்பது சிறப்பான நற்துவக்கம் என்பதை நான் அறிவேன். அவரது முயற்சியைப் பாராட்டினேன். தொடர்ந்து எழுதுமாறு கூறினேன். படைப்பூக்கம் கொண்ட ஒருவர் படைப்புச் செயல்பாட்டுக்குள் நுழைதல் என்பது சொல்லரசிக்கு மகிழ்வளிக்கும் செயல். நண்பருக்கு வாழ்த்துக்கள். 

Friday, 19 May 2023

கல்வி

 கல்லுதல் என்னும் வினைச்சொல்லிலிருந்து ‘’கல்வி’’ என்னும் பெயர்ச்சொல் உருவானது. கல்லுதல் என்றால் தோண்டுதல் என்று பொருள். நிலத்தைத் தோண்டி அதன் உள்ளிருப்பதை அறிவது போல அகத்தைத் தோண்டி அறிவினை அறிவதே கல்வி எனப்படுகிறது. நிலத்தைத் தோண்டுதல் என்னும் செயல் விவசாயத்துடன் தொடர்புடைய ஒன்றாகவே பொருள்கொள்ளப்படுகிறது. ஒரு மரத்தினை நட மண்ணைத் தோண்டி குழி எடுக்கிறோம். ஒரு செடியினை நடவும் அச்செயல் தேவை. விதையினைத் தூவக் கூட மண்ணை பதப்படுத்த வேண்டியுள்ளது. 

‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் தொடர்பாக நான் சந்திக்கும் நபர்களில் பலரிடம் உரையாடுவதுண்டு. அவர்களிடம் நாம் எவ்விதமான பணிகளை முன்னெடுக்கிறோம் என்பது குறித்து சுருக்கமாகவோ விரிவாகவோ எடுத்துரைப்பேன். எல்லா மனிதர்களும் சமூகத்தின் சிறு சிறு பகுதிகளே. சமூகத்தின் கூட்டு நனவிலியின் ( collective conscious) சிறு துளிகளே தனி மனிதர்களின் அகமும். எனவே சமூக மனநிலையை அறியவும் நான் உரையாடலைப் பயன்படுத்துவேன். 

‘’காவிரி போற்றுதும்’’ பணிகளைத் துவக்கிய போது நான் சில விஷயங்களை அவதானித்தேன். அதாவது நமது சமூகத்தில் எல்லா மனிதர்களுக்குமே ஏதேனும் நற்செயல்கள் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. செய்யும் செயல்கள் அனைத்துமே எண்ணிய வண்ணம் விரும்பிய வண்ணம் நிகழ்ந்து விட வேண்டும் என்றும் விருப்பம் இருக்கிறது. அது இயல்பானது. ஒரு செயல் செய்ய அது முதல் படி. எனினும் அதில் அடுத்தடுத்த சில சில படிநிலைகள் உள்ளன. சிருஷ்டி ஸ்திதி சம்ஸ்காரம் என வகைப்படுத்துகிறது. சிருஷ்டி என்பது துவக்கம். அதன் பின் துவங்கிய ஒன்று நிலைப்பெற வேண்டும். பின்னர் அது தன் இயல்பான அடுத்த வளர்ச்சிக்கு செல்ல வேண்டும். எந்த பொதுப்பணியும் சமூகத்தை நோக்கியே செய்யப்படுகிறது. எனவே அந்த செயலைச் செய்பவர் எவ்விதம் அதில் முதன்மையான ஒரு தரப்போ அதே போல சமூகமும் அந்த செயலில் உள்ள முக்கியமான தரப்பு. சமூகப் பழக்கம், சமூக மனநிலை ஆகியவை பொதுப்பணியில் பெரும் பங்கை வகிக்கும். பொதுப்பணி ஆற்றுபவன் எந்த செயலையும் இந்த அடித்தளத்திலிருந்தே பிரக்ஞைபூர்வமாக எழுப்புவான். 

பலர் சோர்வடையும் இடம் இது. நாம் நல்லெண்ணத்துடன் நற்செயலைத் துவக்கினோமே ஏன் நாம் நினைத்த விதத்தில் அது நடக்கவில்லை என சோர்ந்து விடுவார்கள். பொதுப்பணி ஆற்றுபவர்கள் எப்போதும் எந்நிலையிலும் சோர்வடையவே கூடாது. தங்கள் முயற்சியையும் கைவிடக்கூடாது. சில முயற்சிகள் நாம் எதிர்பார்த்ததை விட நல்ல பலன்களைத் தரும். நமது எதிர்பார்ப்பு சில முயற்சிகளில் ஈடேறாமல் போகும். நாம் அவை அனைத்தையும் கூர்ந்து நோக்கியவாறே இருக்க வேண்டும். 

’’ஆடிப்பட்டம்’’ நிகழ்வுக்கு பலரிடமும் உரையாடினேன். சென்ற ஆண்டு நாட்டு காய்கறி விதைகளை கிராமத்தில் உள்ள எல்லா குடும்பங்களுக்கும் அளித்து மூட்டை மூட்டையாக காய்கறிகள் விளைந்த அனுபவம் நமக்கு இருக்கிறது. அந்த அனுபவத்திலிருந்து இம்முறை காய்கறி நாற்றாக அளிக்க முடிவு செய்தோம். விதையை அளிப்பதில் நமக்கு உள்ள வசதி என்பது நாம் அவற்றை எளிமையாக வழங்கி விடலாம் ஆனால் சில விதைகள் முளைக்காமல் போக வாய்ப்பு உண்டு. நாற்றாக வழங்கும் போது விதை முளைத்து நாற்றாகி நல்ல வளர்ச்சி பெற்று விட்டது என்பதால் முளைக்குமா முளைக்காதா என்ற ஐயம் தேவையில்லை. முளைப்புத்திறன் சிறப்பாக உள்ள விதைகளே நாற்றாக விவசாயியைச் சென்றடையும். இந்த முறையில் நாம் நாற்றங்கால் தயாரிக்க வேண்டும் என்பது நம் முன் உள்ள பெரிய பணி. குழித்தட்டு நல்ல முறை எனினும் அதனினும் எளிய முறை ஏதேனும் இருக்குமா என தேடிக் கொண்டிருந்தேன். 

நர்சரியில் பணி புரியும் எனது நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்து எனது செயல்திட்டத்தைக் கூறிக் கொண்டிருந்தேன். அடிக்கடி நர்சரி செல்வதால் அங்கு பணி புரியும் அவர் எனக்கு நண்பரானார். அவர் என்னிடம் சொன்னார் . ‘’சார் ! டீ கடையில் பேப்பர் டீ கப் இருக்கும். நீங்க பாத்திருப்பீங்க. அந்த மாதிரி பேப்பர் கப் வாங்கிக்கங்க. அந்த கப்ல மக்குன சாண எருவை நிரப்புங்க. ஒண்ணு ஒண்ணுலயும் மூணு விதை போடுங்க. லேசா தண்ணி ஸ்பிரே பண்ணுங்க. ஒரு வாரம் பத்து நாள்ல முளைச்சுடும்.’’

’’பூசணி, பீர்க்கன், சுரை, பரங்கின்னு நாலு வகை. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒன்னொன்னுலயும் மூணு நாத்து. அப்ப மொத்தம் 12 நாத்து. ஒரு வீட்டுக்கு 12 பேப்பர் கப். இல்லயா?’’

’’ஏன் சார் 12? நாலு கப் போதும். இது அத்தனையுமே கொடி வகை தான். ஒரு கப்ல மூணு பூசணியை விதையைப் போட்டா மூணுமே கப்ல முளைக்கும். அப்படியே பேப்பர் கப்போட பூமியில புதைச்சுட்டா மூணு பூசணியும் மூணு திசையில பரவும். அதே போலவே பரங்கி, சுரை,  பீர்க்கனும் ஒவ்வொரு டைரக்‌ஷன்ல அதுங்களுக்குள்ள அட்ஜஸ்ட் பண்ணிட்டு பரவிக்கும்.’’

கல்வி என்னும் பெயர்ச்சொல்லை ஏன் கல்லுதல் என்னும் வினைச்சொல்லில் இருந்து உருவாக்கிக் கொண்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். 

Tuesday, 16 May 2023

ஆடிப்பட்டம் நோக்கி

 நேற்றும் இன்றும் செயல் புரியும் கிராமத்துக்குச் சென்று மக்கள் நெல்லி மரக்கன்றுகளை நட்டுள்ளார்களா என்பதை விசாரித்து வந்தேன். பலர் மரக்கன்றைத் தோட்டத்தில் நட்டுள்ளனர். சிலர் இன்னும் ஓரிரு நாளில் நடலாம் என எண்ணம் கொண்டுள்ளனர். அவ்வாறு எண்ணம் கொண்டவர்களுக்கு நேரில் சென்று விசாரித்தது உடன் செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். 

பூசணி, சுரை, பீர்க்கன், பரங்கி ஆகிய விதைகளை சென்ற முறை அந்த கிராமத்தில் அளித்தோம். அதற்கு நல்ல பலன் இருந்தது. பொங்கலையொட்டி மூட்டை மூட்டையாக அவை விளைந்தன. மக்கள் நகருக்குக் கொண்டு சென்று விற்பனை செய்தனர். இந்த ஆண்டு விதைகளாக இல்லாமல் மேற்படி விதைகளை முளைக்க வைத்து நாற்றுகளாக அளிக்கலாம் எனத் திட்டம். நாற்றுகளை உற்பத்தி செய்வதற்கான முறைகள் பலவற்றை இன்று பரிசீலித்துக் கொண்டிருந்தேன். உண்மை என்னவென்றால், விவசாயம் தொடர்பான எந்த ஒரு விஷயத்தையும் நான் ஆரம்பநிலையிலிருந்து கற்க வேண்டும் என்ற இடத்தில் இருப்பவனே. I think I can ; I knew I can என ஒரு ரயில் என்ஜின் பாடுவதாக ஒரு கவிதை உண்டு. அவ்விதமே என்னால் இயலும் என எண்ணி என்னால் இயலும் என அறிகிறேன்.

குழித்தட்டு முறையில் பூசணி, சுரை, பீர்க்கன் , பரங்கி ஆகிய விதை நாற்றுக்களை உருவாக்கி மக்களிடம் அளிக்கலாம் என இருக்கிறேன். 

Sunday, 14 May 2023

எல்லா வீடுகளிலும் நெல்லி

 இன்று ‘’செயல் புரியும் கிராமத்தில்’’ உள்ள எல்லா வீடுகளுக்கும் நெல்லி மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. எனது நண்பரின் நீண்ட நாள் விருப்பம் அது. சரியான பொருத்தமான தருணத்துக்காக காத்திருக்க நேரிட்டது. ‘’காவிரி போற்றுதும்’’ ஒரு பாலம் மட்டுமே. நற்செயல்கள் நிகழ வேண்டும் என எண்ணுபவர்களுக்கும் நாட்டின் சாதாரண பிரஜைகளுக்கும் இடையே நாம் ஒரு பாலமாக இருக்கிறோம். அவ்வளவே. சாமானிய மக்கள் இணைக்கப்படும் போது மகத்தான செயல்கள் நிகழ்கின்றன என்பது ‘’காவிரி போற்றுதும்’’ அனுபவத்தில் உணர்ந்த உண்மை. மக்களின் இணைவு எண்ணம் செயல் ஆகிய இரண்டில் எதில் வேண்டுமானாலும் நிகழலாம். மேலான விஷயங்களை நோக்கி மகத்தானவற்றை நோக்கி ஒவ்வொரு மனிதனும் ஒத்திசைந்து செல்லுதல் என்பதே  மானுடம் அடைய வேண்டிய நிலை. 

ஒரு கிராமம் என்பதை நாம் ஓர் அடிப்படை அலகாக எடுத்துக் கொள்கிறோம். ஒரு கிராமத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொருளியல் தன்னிறைவு கிடைக்க வேண்டும் என்பதற்கு இப்போதிருக்கும் நிலையிலேயே அவர்கள் என்னென்ன முயற்சி செய்ய முடியுமோ அந்த முயற்சிகளை அவர்களிடம் எடுத்துச் சொல்வதற்கும் அவர்களுக்கு அதற்கு எந்தெந்த விதங்களில் உடனிருக்க முடியுமோ அவ்வாறு உடனிருப்பதற்கும் நாம் முயல்கிறோம். 

ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேக்கு மரக்கன்றுகள் வழங்க வேண்டும் என நாம் நினைப்பது அதற்காகவே. ஒவ்வொரு வீட்டின் குழந்தைகளும் விளையாடுவதற்கு தேவையான விளையாட்டுப் பொருட்களை வழங்க வேண்டும் என எண்ணுவதும் அதற்காகவே. அந்த கிராமத்தின் குழந்தைகளுக்கு ஹிந்தி சொல்லித் தர வகுப்புகள் நடத்த வேண்டும் என்பதும் அதற்காகவே. 

நான் கூறுபவற்றை மக்கள் அனைவரும் முழுமையாகப் புரிந்து கொள்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது. அவர்களுக்கு எந்த அளவு புரியுமோ அந்த அளவு புரிந்து கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவருக்குமே என் மீது பிரியம் இருக்கிறது. அன்பு இருக்கிறது. அந்த பிரியமும் அன்பும் என்னை எப்போதும் நெகிழச் செய்கிறது. 

இன்று மரக்கன்றுகள் வழங்கும் போது ஒரு விஷயம் என் மனதில் தோன்றியது. பொதுப்பணியின் போது இவ்வாறான உள்ளுணர்வுகள் தோன்றும். அந்த உள்ளுணர்வுகளை பின் தொடர்ந்து செல்லும் போது என்ன பணி செய்ய வேண்டும் எவ்வாறு செய்ய வேண்டும் என்பது மனதுக்குள் வடிவம் பெறும். மனத்தில் வடிவம் பெற்றதையே நான் செயலாக்குவேன். அதாவது , சென்ற ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியை ஒட்டி அந்த கிராமம் முழுவதும் நாட்டுக் காய்கறிகளின் விதைகளை அந்த கிராமத்துக்கு வழங்கியிருந்தேன். ஏழு காய்கறிகளின் விதைகள் அளிக்கப்பட்டது. விதைகளாக அளிக்கப்பட்டது. இம்முறை அந்த காய்கறிகளின் விதைகளை சாண உருண்டைகளில் இட்டு முளைக்க வைத்து கிராம மக்களுக்கு வழங்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. முளைக்காத விதைகள் எவை என்பது சாண உருண்டைகளிலிருந்து எவை மேலெழுகின்றன என்பதில் தெரிந்து விடும். முளைக்கும் விதைகள் அனைத்தும் மக்களிடம் சென்று சேரும் என்பதால் காய்கறி மகசூல் அதிகரிக்கும். 

ஒரு புரிதலுக்காக இந்த விஷயத்தை விளக்குகிறேன். கிராமத்தில் ஆயிரம் வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டுக்கும் 5 முளைத்த பூசணி விதைகள் தரப்படுகின்றன எனக் கொள்வோம். அப்போது 5000 பூசணிச் செடிகள் அங்கே முளைக்கும். ஒவ்வொரு பூசணிச் செடியும் குறைந்தபட்சம் 10 காய் காய்த்தது என்றால் அங்கே 50,000 பூசணிக்காய்கள் உற்பத்தியாகும். 

வழக்கமான நிலை என்றால் 1000 வீடுகளில் அதிகபட்சமாக 100 வீடுகளில் சுயமாக தங்கள் ஆர்வத்தின் காரணமாக விருப்பத்தின் காரணமாக ஆடிப்பட்டத்தில் பூசணி போடுவார்கள். மீதி இருப்பவர்கள் ஆர்வம் இல்லாதவர்கள் விருப்பம் இல்லாதவர்கள் என்று அர்த்தம் அல்ல. அவர்கள் காய்கறி விதைகளை ஆடிப்பட்டத்தில் போட வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அது செயலாக மாறுவதில் நடைமுறைப் பிரச்சனைகள் இருக்கும். நாம் அவர்களைத் தேடிச் சென்று வழங்கும் போது அதனை பெரிதாக வரவேற்று பெற்றுக் கொள்கிறார்கள். 

சென்ற முறை ஆடி மாதக் கடைசியில் முடிவெடுத்து நாட்டுக் காய்கறி விதைகளை வழங்கினோம். இம்முறை ஆனி 15 தேதிக்குள் சாண உருண்டைகளில் விதைகளை இட்டு முளைக்க வைத்து ஆடி 1ம் தேதி அன்று மக்களுக்கு வழங்கிட வேண்டும் என முடிவு செய்து கொண்டேன். இன்று ஆயிரம் குடும்பங்களை சந்தித்ததன் விளைவாக உருவான செயல்திட்டம் இது. 

இன்று மக்களைச் சந்தித்த போது மேலும் ஒரு விஷயம் தோன்றியது. அதாவது , ‘’காவிரி போற்றுதும்’’ மக்களிடம் அறிமுகம் என்ற நிலை தாண்டி பரிச்சயம் என்ற நிலையில் உள்ளது. அவ்வாறு எனில் அந்த கிராமத்தில் பத்து பேர் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும் என எண்ணினேன். மாதம் ஒருநாள் அந்த குழு கூடி ஆலோசித்து செயல்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டேன். 

இன்னொரு விஷய்மும் தோன்றியது. நாம் ஒவ்வொரு முறையும் முழு கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளையும் சந்திக்கிறோம். அல்லது அங்கு அதிகம் பரிச்சயம் உள்ளவர்களை அடிக்கடி சந்திக்கிறோம். ஒரு வாரத்துக்கு ஒரு தெரு என எடுத்துக் கொண்டு ஒவ்வொரு விவசாயியையும் நேரில் சந்தித்து அவரிடம் இருக்கும் விவசாய நிலம் எவ்வளவு வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் நிலம் எவ்வளவு விவசாயத்தில் அவர் எதிர்பார்க்கும் வருமானம் என்ன விவசாயம் சார்ந்த வேறு விஷயங்களில் அவருக்கு ஆர்வமிருக்கிறதா என உரையாடி அவர் நிலத்தை தோட்டத்தை நேரடியாக பார்வையிட்டு அவருக்கு ஆலோசனைகள் வழங்குவது தேவையான ஒன்று என்று தோன்றியது. 

ஒருவர் வீட்டுத் தோட்டத்தில் எதுவும் செய்யாமல் இருக்கிறார் என்றால் அவருக்கு காய்கறி விதைகள் வழங்கலாம். வயலில் 20 தேக்கு மரம் வளர்க்க அவருக்கு ஆர்வம் இருக்கும் என்றால் அதனை அவருக்குக் கொடுக்கலாம். தண்ணீர் பாய்ச்சலுக்கு வழியில்லாமல் இருந்தால் வறட்சியிலும் வளரக்கூடிய பூச்செடிகளைத் தரலாம். தேனீ வளர்ப்பில் ஆர்வம் இருந்தால் அதற்கான உதவிகளைச் செய்யலாம். அந்த சந்திப்பால் இத்தனை வாய்ப்புகள் உருவாகும். முயற்சி செய்து பார்க்க வேண்டும். 

நண்பர் விரும்பிய விதத்தில் ஆயிரம் நெல்லிகள் மக்களைச் சென்றடைந்துள்ள்ன. நண்பருக்கு கிராம மக்கள் சார்பாக எனது நன்றி.  

Saturday, 13 May 2023

பணி ஏற்பாடுகள்

 நாளை ‘’செயல் புரியும் கிராமத்தில்’’ ஆயிரம் நெல்லி மரக்கன்றுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை இன்று செய்து கொண்டிருந்தேன். நெல்லி மரத்தின் சிறப்பு குறித்தும் மரக்கன்றுகளை நட வேண்டிய முறை குறித்தும் விளக்கும் ஒரு சிறு பிரசுரம் தயார் செய்து வைத்திருந்தேன். அதனை வீடுகளுக்கு வழங்க பிரதி எடுத்துக் கொண்டேன். பின்னர் அங்கே கிராமத்துக்குச் சென்று சென்ற முறை நந்தியாவட்டை மரக்கன்றுகளை வழங்கும் போது உடனிருந்த டாடா ஏஸ் வாகன ஓட்டுனரைச் சந்தித்து நாளை காலை 8.45க்கு அங்கிருந்து புறப்பட வேண்டும் என்று கூறினேன். அவரை சந்தித்து சில சில வாரங்கள் ஆகிறது. அவர் உடல் மிகவும் மெலிந்திருந்தார். ஏன் திடீரென உடல் மெலிந்தீர்கள் என்று கேட்டேன். சில வாரங்களுக்கு முன்னால் அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. இரத்த வெள்ளணுக்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்திருக்கிறது. பப்பாளி இலையினை வென்னீரில் போட்டு சாறு எடுத்து தொடர்ந்து அருந்தியிருக்கிறார். அதன் பின் வெள்ளணுக்கள் எண்ணிக்கை அதிகமாகி அவர் உட்ல்நலம் மீண்டிருக்கிறது. உடல்நலம் பாதிக்கப்பட்ட போது மருத்துவரைப் பார்த்திருக்கிறார். அதன் பின் சென்று ஆலோசித்தீர்களா என்று கேட்டேன். அதன் பின் அவர் செல்லவில்லை. எனக்குத் தெரிந்த மருத்துவரிடம் நான் அழைத்துச் செல்கிறேன். எதனால் வெள்ளணுக்கள் குறைந்தது என்பதற்கான மூலக்காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அதனை சரிசெய்யும் மாத்திரைகளையும் சரிசெய்யும் உணவையும் நீங்கள் அருந்த வேண்டும் என்று சொன்னேன். 

உண்மை என்னவென்றால், அவர் நான் கூறுகிறேன் என்பதற்காகவேனும் மருத்துவர் கூறுவதைப் பின்பற்றுவார். இருப்பினும் இவை அடிப்படையான முக்கியமான விஷயங்கள். உடல்நலம் குறித்த விழிப்புணர்வுடன் இருப்பதில் தமிழ்ச் சமூகம் மிகுந்த பின்னடைவுடன் இருக்கிறது. செல்வந்தர்கள் சாமானியர்கள் என்றெல்லாம் இதில் எந்த பேதமும் இல்லை. அனைவருமே ஒரே விதமாகத்தான் இருக்கிறார்கள். 

அலோபதி மருத்துவர்கள் மாத்திரைகளை மட்டுமே நம்புகிறார்கள். அலோபதி மாத்திரைகளை மட்டுமே நம்பும் விதத்தில் சமூகத்தையும் பழக்கி விட்டார்கள். ஒருவர் உடல்நலம் குன்றினால் அவர் உண்ணும் உணவிலும் உண்ணும் விதத்திலும் மாற்றங்களை அலோபதி மருத்துவர்கள் அறிவுறுத்த வேண்டும். அலோபதி மருத்துவர்கள் ஒரே வார்த்தையில் விஷயத்தை முடித்து விடுவார்கள் : ‘’நோயாளிக்கு அது எளிய விஷயமில்லை ; அவர்களால் அதைச் செய்ய முடியாது. ஒருவர் செய்யப்போவதில்லை எனத் தெரிந்த பின் அதனை ஏன் சொல்ல வேண்டும் ?’’ 

நான் பொதுவாக நான் சந்திக்கும் ஒருவர் உடல்நலம் குன்றியிருந்தால் அவரை நானே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வேன். அவருக்கு மருத்துவ ஆலோசனை அளிக்கப்படும் போது உடனிருப்பேன். அவர் மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்கிறாரா என்பதை அவ்வப்போது கேட்டறிவேன். ‘’செயல் புரியும் கிராமத்தில்’’ இது என் பழக்கம். 

நமது சமூகம் மாவுச்சத்து மிகுந்த உணவுக்கு முழுமையாகப் பழகியிருக்கிறது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் கொடும் ‘’தாதுப் பஞ்சத்தால்’’ பாதிக்கப்பட்ட சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்தது என்பதே அதற்குக் காரணம். இன்றும் தமிழ் மக்களின் அகத்தில் அவர்கள் அறியாத விதங்களில் அந்த அச்சம் நீடிக்கிறது. 

சிறு தானிய உணவுகள் மக்களின் அன்றாட பழக்கத்துக்கு வர வேண்டும். அந்த தானியங்களை வாங்கி சிறு அளவிலேனும் இருப்பு வைத்துக் கொள்ள அவற்றில் உணவு தயாரிக்க தமிழ் மக்களுக்கு பயிற்சி அவசியம். மாநிலத்தின் ஆரோக்கியம் மேம்பட இது முக்கியமான தேவை. 

நாளை காலை 8.45க்கு புறப்பட வேண்டும் . நர்சரி திறக்க 9 மணி ஆகும். மரக்கன்றுகளை அங்கிருந்து ஏற்றிக் கொண்டு ஊரில் 10 மணி அளவில் கொடுக்கத் தொடங்கினால் முழுவதும் கொடுத்து முடிக்க மாலை 7 மணி வரை ஆகிவிடும். கணிசமான முறைகள் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் ஒவ்வொரு முறையும் பணி தொடங்கும் போதும் இதுதான் முதல் தடவை என்பது போல ஆர்வமும் பரவசமும் ஏற்படுகிறது.    

Friday, 12 May 2023

ஆயிரம் நெல்லி மரங்கள்

எனது நண்பர் ஒருவர் நெடுநாட்களாக ‘’காவிரி போற்றுதும்’’ பணிக்கு தனது நல்லாதரவை அளிக்க விரும்பினார். பல்வேறு விதமான லௌகிகப் பணிகளால் சூழ்ந்திருந்ததால் அதனை தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். இப்போது ஊரில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் நண்பர் விரும்பியவாறு மரக்கன்றுகள் நட இது உகந்த பருவம் என முடிவு செய்தேன்.  

சென்ற ஆண்டு குடியரசு தினத்திற்கு முதல் தினம் ‘’செயல் புரியும் கிராமத்தில்’’ உள்ள எல்லா குடும்பங்களுக்கும் ஆயிரம் நந்தியாவட்டை மரக்கன்றுகளை ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக அளித்தோம். குடியரசு தினத்தன்று காலை 7 மணிக்கு எல்லா வீடுகளுக்கும் முன்னால் அந்த நந்தியாவட்டை மரக்கன்றுகளை நடுமாறும் மாலை 6 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் 7 தீபங்களை ஏற்றுமாறும் கேட்டுக் கொண்டோம். குடியரசு தினத்தைக் கொண்டாடும் விதத்தில் இந்த இரு நற்செயல்களையும் செய்யுமாறு கேட்டுக் கொண்டோம். கிராமத்தில் உள்ள எல்லா குடும்பத்தினரும் நாம் கேட்டுக் கொண்டவாறு செய்தார்கள். பெருநிலக் கிழார்கள், சிறு விவசாயிகள், குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என அனைவரும் தங்கள் வீடுகளில் நாம் கேட்டுக் கொண்டவாறு செய்தார்கள். இப்போது அந்த நந்தியாவட்டை கன்றுகள் பூத்துக் குலுங்குகின்றன. அதனைக் காண்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. 

ஒரே நேரத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் ஆயிரம் குடும்பத்தினரால் நடப்படுவது என்பது ஐயமின்றி ஓர் பெருஞ்செயலே. ஒரு சிறு தீபம் பெரும் இருளை நீக்குவதற்கு ஒப்பானதாகும் அச்செயல்பாடு. இச்செயல் சாத்தியமானதற்கு முழுக்க முழுக்க காரணம் அக்கிராம மக்களே. பல்வேறு சூழ்நிலைகளில் நான் அவர்களைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறேன் என்பதன் அடிப்படையில் நித்தம் அவர்கள் என் மீது காட்டும் பிரியத்தையும் அன்பையும் உணர்ந்தவாறே இருக்கிறேன். நாம் தொடர்ந்து செயல்பட அந்த பிரியத்திலிருந்தும் அன்பிலிருந்துமே ஊக்கம் கொள்கிறேன்.  

இந்த முறை ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு நெல்லி மரக்கன்றை வழங்கலாம் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. நெல்லி மரத்தில் திருமகள் வாசம் செய்வதாக இந்தியர்களின் நம்பிக்கை. உடல் நலத்துக்கு உகந்த நெல்லியை மக்கள் விரும்பி வளர்க்கக் கூடும். நெல்லி மரம் தானிருக்கும் இடத்தைச் சுற்றி நிலத்தடி நீரை சுவை மிக்கதாக மாற்றும் இயல்பு கொண்டது. 

இம்முறை நெல்லி மரக்கன்றுடன் மரம் நடும் முறை குறித்தும் மரக்கன்றுகளை பராமரிக்கும் முறை குறித்தும் ஒரு சிறு பிரசுரத்தையும் இணைத்து அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமமே எனினும் மரம் நடுதல், எரு, சூரிய ஒளியின் அவசியம், நீர் வார்த்தலின் அவசியம் ஆகியவற்றை திரும்பத் திரும்ப கூற வேண்டியிருக்கிறது. அந்த விழிப்புணர்வை உருவாக்குவதையே தமது பணியாக ‘’காவிரி போற்றுதும்’’ எண்ணுகிறது. 

ஆயிரம் மரக்கன்றுகளை கிராம மக்களுக்கு அளிக்கும் நண்பருக்கு ‘’காவிரி போற்றுதும்’’ தனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. ஆயிரம் குடும்பங்கள் இணைந்து ஓர் நற்செயல் மேற்கொள்ள நண்பரால் ஒரு வாய்ப்பு உருவாகியிருக்கிறது. அதனை உருவாக்கிக் கொடுத்த நண்பருக்கு மீண்டும் நன்றி. 

ஞாயிற்றுக்கிழமை அன்று ஆயிரம் நெல்லி மரக்கன்றுகளை வழங்கலாம் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்தையும் நேரில் சந்தித்து வழங்க வேண்டும் என்பதால் காலை 6 மணிக்குத் துவங்கினால் மாலை 4 மணி வரை பணி இருக்கும். பின்னர் அடுத்த 15 நாட்கள் ஒரு நாளைக்கு 50 வீடுகள் என மரக்கன்றுகளை எப்படி நட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்வையிட வேண்டும். ‘’காவிரி போற்றுதும்’’ தனது செயல்களில் துல்லியத்தை எதிர்பார்ப்பதால் மெல்ல நிதானமாகவே முன்னேறிச் செல்கிறோம்.  

நண்பருக்கு ஆலோசனை

அமெரிக்காவில் வசிக்கும் நண்பருக்கு ஒரு ஆலோசனையை அளித்துள்ளேன். அதாவது, அங்கே உள்ள அவர்கள் பள்ளியின் குழந்தைகளுக்கு கம்ப ராமாயணத்தின் நூறு பாடல்களை ஸ்ரீநாலாயிர திவ்யப் பிரபந்தம் இசைக்கப்படும் முறையில் பாட பயிற்சி அளிக்குமாறு கூறியுள்ளேன். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அவர்களுடைய ஆண்டு விழாவில் 12 குழந்தைகள் சேர்ந்து 100 கம்பன் பாடல்களை மேடையில் இசைத்தால் சிறப்பாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறேன். நண்பர் அந்த யோசனையை உள்வாங்கிக் கொண்டார். செயலாக்கத்துக்கான ஆயத்தங்களைத் துவங்கியுள்ளார்.