லாக் டவுன் அறிவிக்கப்பட்ட போது 20 நாட்களுக்கு மேல் எங்கும் வெளியில் செல்ல முடியாத நிலை இருந்தது. அப்போது வீடுகளில் விதவிதமான உணவுப் பண்டங்கள் தயாரிக்கப்பட்டன. பாயசம், பஜ்ஜி, கேசரி, சர்க்கரைப் பொங்கல், வடை ஆகிய பண்டங்கள் தயாரிக்கப் பட்டன. உலகமே ஓர் இடரில் இருக்கும் போது இவ்விதமான விதவிதமான பண்டங்கள் தயாரிப்பது உகந்ததா கஞ்சி , கூழ் போன்ற எளிய உணவுகள் மட்டும் தயாரித்து உண்ணக் கூடாதா என்பது ஒரு கோணம். அதனை நான் கேட்ட போது பெண்கள் அதற்கு ஒரு பதில் சொன்னார்கள். அதாவது எல்லாரும் புதிய விதமான இடரில் அதனை எவ்விதம் எதிர்கொள்வது என அறியாமல் திகைத்து இருக்கும் போது சுவையான ருசியான உணவுகள் அளிக்கப்பட்டால் அந்த திகைப்பிலிருந்து மீள வழி பிறக்கலாம். எளிய உணவுகளை வழக்கமான காலத்திலேயே பழகாதவர்கள் இவ்விதமான இடர் மிகுந்த காலங்களில் உண்டால் மேலும் திகைப்பும் சோர்வும் அடைவார்கள் என்று கூறினார்கள். 100 க்கு 99 பேருக்குப் பொருந்தும் நடைமுறைக் கோணம் பெண்கள் தெரிவித்தது என எண்ணுகிறேன்.