Sunday, 19 July 2026

ஏழு குடும்பங்கள்

ஊரின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தூரத்தில் கிழக்கு திசையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ய்யும் 7 குடும்பங்கள் ஒரு மைதானத்தில் பாலிதின் கூடாரம் அமைத்துக் கொண்டு பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். குடும்பத் தலைவர்கள் பகலில் காலையில் கிளம்பி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ய சென்று விடுவார்கள். அவர்கள் வீட்டுப் பெண்கள் சமையல் பணிகளிலும் கூடை பின்னும் பணியிலும் ஈடுபட்டிருப்பார்கள். குழந்தைகள் பள்ளிக்குப் படிக்கச் செல்கின்றன.  

மக்கள்தொகை கணக்கெடுப்பு- சுய விபரம் அளித்தல் முறையில் விபரம் பதிவு செய்ய மைதானத்தில் வசிக்கும் இந்தக் குடும்பத்தினரை அணுக முடிவு செய்தேன். இன்று காலை அங்கே சென்று மக்கள்தொகை கணக்கெடுப்பு சுய விபரம் அளித்தல் தொடர்பான விஷயங்களைச் சொன்னேன். அவர்கள் அனைவரும் ஆர்வமாக இருந்தனர். எவ்விதம் சென்சஸ் இணையதளத்தில் சுய விபரம் பதிவு செய்வது என்பதை அவர்களுக்கு விளக்கினேன். அனைவரிடமும் அலைபேசி இருந்ததால் அனைவரும் சுய விபரம் பூர்த்தி செய்து சென்சஸின் சுய விபர குறியீட்டு எண்ணைப் பெற்றனர். 

மக்கள் தொகை கணக்கெடுப்பு கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் : 

வீட்டின் தரை எதனால் ஆனது ? மண்ணால்

வீட்டின் சுவர் எதனால் ஆனது ? பாலிதீன் ஷீட்டால்

வீட்டின் கூரை எதனால் ஆனது ? பாலிதீன் ஷீட்டால்

குடிநீர் எவ்விதம் கிடைக்கிறது ? ஜல்ஜீவன் திட்டத்தின் பொது தண்ணீர்க் குழாய்

வீட்டில் கழிவறை இருக்கிறதா? இல்லை

வீட்டில் குளியலறை இருக்கிறதா? இல்லை

வீட்டில் விளக்கு இருக்கிறதா? இல்லை

வீட்டிற்குள் சமையல் நடக்கிறதா ? இல்லை ; திறந்த வெளியில்

சமையல் எரிபொருள் என்ன? விறகு

இந்த சுய விபரம் அளித்தல் அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் அவர்கள் வாழ்நிலை மேம்பட உதவும் என்று என் மனத்துக்குப் பட்டது. சுய விபரம் மூலம் பதிவு செய்யப்படும் விபரங்களின் மொத்த தொகுப்பை மாவட்ட ஆட்சியர் தன் கணிணி மூலம் நேரடியாகக் காண முடியும். அவ்விதமெனில் மேற்படி நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்துக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது. இவ்விதமான நிலையில் 7 குடும்பத்தினர் மட்டுமே இப்பிராந்தியத்தில் இருக்கின்றனர் என்பதால் இவர்களின் வாழ்நிலையை மாற்ற இந்த சுய விபரம் அளித்தல் உதவும் என்று என் மனத்துக்குப் பட்டது. 

தினசரி பத்திரிக்கைகளின் நிருபர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு மைதானத்தில் கூடாரத்தில் வாழும் ஏழு குடும்பங்கள் சுய விபரம் அளித்தல் பணிகளைச் செய்திருப்பதைச் சொன்னேன். நேரில் சென்று அந்த விஷயம் குறித்து விசாரித்து பத்திரிக்கையில் செய்தியாக வெளியிட அவர்கள் ஆர்வமாயிருந்தனர். 7 குடும்பத்தினரை அவர்கள் சுய விபர எண்ணுடன் மாவட்ட ஆட்சியருக்கு ஒரு மனு அனுப்பக் கூறலாம் என உத்தேசித்துள்ளேன். 

சில தினங்களுக்கு முன்னால் தமிழக முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் தனது முதல்வர் நாற்காலியில் அமர்ந்து மக்கள்தொகை கணக்கெடுப்பின் சுய விபரப் பதிவை மேற்கொண்டதை பத்திரிக்கைகளும் காட்சி ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன. திறந்தவெளி மைதானத்தில் பாலிதீன் கூரையும் பாலிதீன் சுவரும் கொண்ட கூடாரத்தில் வசிக்கும் மின்வசதி இல்லாத எரிவாயு இணைப்பு இல்லாத விறகில் சமைத்து வாழும் ஏழு குடும்பங்களும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் சுய விபரப் பதிவை மேற்கொண்டிருக்கின்றனர் என்பது முதல்வர் பதிவு செய்து கொண்டதற்கு சமமான செய்தி முக்கியத்துவம் கொண்டது என்றே நான் கருதுகிறேன்.