Thursday, 23 July 2026

கிஷோர்

திருவாரூர் வடக்கு வீதி முக்கில் ஒரு சிறுவன் என்னிடம் ‘’லிஃப்ட்’’ கேட்டான். பள்ளி மாணவன்.  சீருடை அணிந்திருந்தான்.

வண்டியை நிறுத்தி ஏற்றிக் கொண்டேன். ‘’ரொம்ப நன்றி அண்ணன்’’ என்றான்.

’’இப்பதானே டிராவல் ஆரம்பிச்சுருக்கோம். நீ போக வேண்டிய இடத்துக்கு கொண்டு போய் விட்டதும் நன்றி சொல்லு’’எனக் கூறி வாகனத்தை தொடர்ந்து இயக்கினேன். 

‘’உன் பேரு என்ன தம்பி’’

‘’கிஷோர்’’

‘’உன் பேருக்கு என்ன அர்த்தம்னு உனக்குத் தெரியுமா?’’

‘’பேருக்கு அர்த்தம் இருக்குமா அண்ணன். எனக்கு இந்த விஷயம் புதுசா இருக்கு அண்ணன்’’ 

‘’எல்லா பேருக்கும் ஒரு அர்த்தம் இருக்கும் தம்பி. ஒன்னு அது நவுனா இருக்கும் இல்லன்னா வெர்ப் ஆ இருக்கும். இப்ப ஒருத்தருக்கு பேரு ராஜன் அப்படின்னா ராஜ்யத்தை ஆள்றவன் அப்படின்னு அர்த்தம். ராஜ்யத்தை ஆள்றவன் ராஜன்’’

‘’என் பேருக்கு என்ன அர்த்தம்னு தெரியல அண்ணன்?’’

‘’நீ வேலைக்கு ஒரு இண்டர்வியூக்கு போனா உன் கிட்ட முதல் கேள்வியே உன் பேருக்கு என்ன அர்த்தம்னு கேப்பாங்க. உனக்கு தெரிஞ்சுருந்து நீ சொன்னா நீ பிரிபேர்டா வந்திருக்கன்னு அர்த்தம். தெரியலன்னு சொன்னா அவங்களுக்கு ஆரம்பத்துலய உன் மேல ஒரு அப்பர் ஹேண்ட் உருவாகும்.’’

‘’இதெல்லாம் இண்டர்வியூ ல கேப்பாங்களா அண்ணன்’’

‘’நிச்சயம் கேப்பாங்க.’’

‘’உங்களுக்கு என் பேருக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா அண்ணன்?’’

‘’கிஷோர். உன் பேருக்கு என்ன அர்த்தம்னா பிறந்த குழந்தையை சிசுன்னு சொல்வாங்க. 3 வயசு குழந்தையை பாலன்னு சொல்வாங்க, 10 வயசு இருக்கற குழந்தையை கிஷோர்னு சொல்வாங்க. 18 வயசானா தருண் - இளைஞன்னு சொல்வாங்க. கிஷோர்னா சிறுவன்னு அர்த்தம். இந்த பேரு ஸ்ரீகிருஷ்ணனைக் குறிக்கற பேரு. அவன் தான் சிசுவாவும் கடவுளாவும் இருந்தவன். பாலனாவும் கடவுளாவும் இருந்தவன். சிறுவனாவும் கடவுளாவும் இருந்தவன். இளைஞனாவும் கடவுளாவும் இருந்தவன். ராமனுக்கும் இந்த பேரு பொருந்தும் ஆனா கிருஷ்ணனுக்குத்தான் ரொம்ப பொருந்தும்.’’

’’அண்ணன் இதே மாதிரி வேற ஏதாவது பேருக்கு அர்த்தம் சொல்லுங்க’’

‘’ஜெய் அப்படின்னா வெற்றின்னு அர்த்தம். விஜய் அப்படின்னா புகழுடன் கூடிய வெற்றின்னு அர்த்தம்’’

‘’அண்ணன்! உங்களுக்கு நிறைய விஷயம் தெரிஞ்சுருக்கு அண்ணன்’’

‘’எந்த விஷயத்துலயும் ஆர்வமா இருக்கணும். ஆர்வம் இருந்தா நிறைய விஷயம் தெரிஞ்சுக்கலாம்’’

‘’உலகத்துல உள்ள எல்லா மொழிகள்ல இருக்கற பேருக்கும் அர்த்தம் உண்டா அண்ணன்’’

‘’நிச்சயம் உண்டு’’

கிஷோர் இறங்க வேண்டிய இடம் வந்தது. இறக்கி விட்டேன். 

கிஷோர் நன்றி சொன்னான். 

’’வீட்டுக்குப் போய் கூகுள் செஞ்சு கிஷோர் மீனிங் பாரு’’என்று கூறி விட்டு புறப்பட்டேன்.