Tuesday, 10 January 2023
மரபும் சமூகமும் இயற்கையும்
Monday, 9 January 2023
நூறு பூமரங்கள்
இன்று காலை 6 மணிக்கு ஒரு அலைபேசி அழைப்பு. நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன். அலைபேசி மணி துயில் கலையச் செய்தது. ஏற்பட்ட முதல் எண்ணம் ஒரு வியப்பு. ‘’இன்று 100 பூமரங்கள் நட நியமித்த பணியாளர் இத்தனை சீக்கிரமா தனது ஊரிலிருந்து புறப்பட்டு விட்டு அந்த செய்தியைச் சொல்ல நம்மை அழைக்கிறார்’’ என்று எண்ணினேன்.
‘’சார்! சொந்தக்காரங்க ஒருத்தருக்கு உடம்பு சரியில்லாம கும்பகோணம் ஆஸ்பத்திரில சேத்துருக்காங்க. அவரைப் போய் பாக்கணும் சார்”
எனது தூக்கம் முழுமையாகக் கலைந்து ‘’இன்னைக்கு மரக்கன்றுகளை நட வேறு யாரை ஏற்பாடு செய்வது ?’’ என்ற வினா கவலையாக உருமாற்றம் பெற்றது.
பணியாளரின் கூற்றுக்கு ஆமோதிப்பைத் தவிர வேறெந்த பதிலையும் கூறி விட முடியாது. அதனால் எந்த பயனும் இல்லை.
தெரிந்த நண்பர்களுக்கு ஃபோன் செய்து அவர்கள் தூக்கத்தைக் கலைத்து இன்று ஒரு பணியாளர் மட்டும் வேண்டும் என்றேன்.
‘’சார் ! ரெண்டு பேரை அனுப்பலாமா?’’
‘’அனுப்பலாம். ஆனால் அவங்க ரெண்டு பேரும் ஒரு ஆள் சம்பளத்தை சமமா பிரிச்சு எடுத்துக்கணும்.’’
‘’இல்லை சார் ரெண்டு பேர் வந்தா ரெண்டு ஆள் சம்பளம் கேப்பாங்க’’
‘’நூறு நந்தியாவட்டை கன்றுகள். காலைல 10 மணிக்கு ஆரம்பிச்சா கூட சாயந்திரம் 6 மணிக்கு ஒருத்தரே வச்சுரலாம். ஒரு மணி நேரத்துல 10 கண்ணு வச்சாக்கூட 100 கன்னு ஒருத்தரே நடலாம்’’
‘’ரெண்டு பேர் ரெண்டு ஆள் சம்பளம்னா டிரை பன்றோம் சார்’’
‘’ஒருத்தர் ஒரு ஆள் சம்பளம்னு டிரை பண்ணுங்க’’
ஒரு நண்பர் ஒரு ஆளைப் பிடித்து அனுப்பி வைத்தார். கல்லூரி முடித்த இளைஞன். ஆர்வமாக பணியைத் துவக்கினான்.
நாங்கள் பூமரக் கன்றுகள் நட்ட சாலையில் சென்ற எனது நண்பர் ஒருவர் இரும்புப் பாறை கொண்டு வந்து கொடுத்து உதவினார்.
அரைமணிக்கு ஒருமுறை சென்று மேற்பார்வை இட்டேன்.
சில லௌகிகப் பணிகள் இருந்தன. அவற்றையும் செய்தேன்.
மாலை 6 மணிக்குள் 100 பூமரக் கன்றுகள் நடப்பட்டன. அனைத்துக்கும் நீர் ஊற்றினோம்.
Sunday, 8 January 2023
ஒரு வாசகர்
சில நாட்களுக்கு முன்னால், ஒரு வாசகர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ஒரு நாளின் அதிகாலையில் அவரது கடிதத்தைக் கண்டேன். அவர் தனது அலைபேசி எண்ணை அளித்திருந்தார். அந்த எண்ணுக்கு அழைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். அடுத்தடுத்த பணிகளில் மறந்து விட்டேன். இன்று அவரை அழைத்துப் பேசினேன்.
’’லீலாவதி’’ சிறுகதைக்குள் இடம் பெற்றிருக்கும் நாட்டிய நாடகம் , ‘’புள்ளரையன் கோவில்’’ சிறுகதையில் இடம் பெற்றிருக்கும் கொற்றப்புள் ஆகிய்வை அவரை மிகவும் கவர்ந்திருந்தது. தனது வாசக அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
சாகித்ய அகாடெமி, தேசிய புத்தக நிறுவனம் ஆகியவை வெளியிட்டிருக்கும் இந்திய நாவல்களை வாசிக்குமாறு அவருக்குப் பரிந்துரைத்தேன். தாரா சங்கர் பானர்ஜி, விபூதி பூஷண் பந்தோபாத்யாய, கிரிராஜ் கிஷோர், குர் அதுல் ஐன் ஹைதர், பைரப்பா, சிவராம் காரந்த் மற்றும் தகழி சிவசங்கர பிள்ளை ஆகியோரின் நாவல்கள் அவருடைய இலக்கிய வாசிப்பு மனநிலைக்கு மிக அணுக்கமாக இருக்கும் என்று கூறினேன்.
Saturday, 7 January 2023
14 மரங்கள் - தொடர் பிழைகள்
Wednesday, 4 January 2023
அன்புத் தம்பியின் கடிதம்
ஒற்றை மதிப்பெண்
மரங்கள் வெட்டப்படும் விஷயத்திற்கு நான் கொடுக்கும் தீவிர கவனம் எனது நண்பர்கள் பலரை சங்கடப்படுத்துகிறது. மென்மையாகவும் சற்று கடுமையாகவும் கூட தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் முதல் காரணமாகச் சொல்வது மரங்கள் வெட்டப்படுவது குறித்து நாம் முறையீடு செய்யும் இடமான அரசாங்க அலுவலகம் அதனை ஒரு முக்கிய விஷயமாகக் கருதாது என்பதுடன் அதனை ஒரு முக்கியத்துவம் இல்லாத விஷயமாகவே கருதும்; அதனால் அது தொடர்பாக தொடர்ந்து செயல்படும் உங்கள் மேல் அதிகாரிகள் அதிருப்தி கொள்வார்கள் என்பது. இரண்டாவது காரணம், உங்கள் நேரத்தை இந்த விஷயம் அதிகமாக எடுத்துக் கொள்ளும் என்பது. மூன்றாவது நண்பர்கள் , நலம் விரும்பிகளின் சொற்களையும் மீறிய செயல்பாடு நண்பர்களின் நட்பில் இடைவெளியை உண்டாக்கும் என்பது.
மரம் என்பது தன்னளவில் ஒரு உயிர் என்பதுடன் அது பல உயிர்களுக்கு உறைவிடமாக இருக்கிறது. ஒரு மரம் வெட்டப்படும் போது அதில் வசிக்கும் பறவைகள், பூச்சிகள், புழுக்கள் ஆகியவற்றுக்கான உறைவிடமும் இல்லாமல் ஆக்கப்படுகிறது. மரங்கள் வெளியிடும் பிராண வாயுவால் மிகுந்த பலன் அடையக் கூடியது அதனைச் சூழ்ந்திருக்கும் மனிதர்களே. ஒரு மரம் அனாவசியமாக வெட்டப்படுவதால் மனிதர்களே முதன்மையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே அதனை முக்கியமான விஷயமாக நினைப்பது என்பது அவசியமானதே. ஓர் அரசு அலுவலகம் என்பதை பலர் இணைந்த ஒரு குழுவாகவே நான் எண்ணுகிறேன். சில படிநிலைகளில் அது குறைந்தபட்சம் மூன்று மனிதர்கள் கவனத்துக்காகவாவது செல்கிறது. அதற்கு மேல் அவர்களுடைய மாவட்ட அலுவலகம் இருக்கிறது. மாநில அலுவலகம் இருக்கிறது. எனவே தலைமை அலுவலகத்தின் கவனம் இருக்கும் என்ற நிலையிலாவது சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புவதற்கு இடம் உள்ளது. அதனால் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நான் எப்போதும் நம்பிக்கை இழக்க மாட்டேன். அது என் இயல்பு. எந்த சூழ்நிலையிலும் அதனை சீர் செய்ய எனது பங்களிப்பை எவ்வாறு அளிப்பது என்றே யோசிப்பேனே தவிர அதனை விட்டு விட்டு செல்ல மாட்டேன்.
இரண்டாவது விஷயம் என் நேரத்தை எடுத்துக் கொள்கிறது என்பது. உண்மைதான். ஆனால் நான் அதனை விரும்பியே செய்கிறேன். என் கண்ணில் படும் வெட்டப்பட்ட மரங்கள் குறித்து தான் நான் புகார் செய்கிறேன். ஓரிரு நாட்கள் முன் வெட்டப்பட்ட மரங்கள் குறித்து தான் புகார் செய்கிறேன். பொது இடத்தில் உள்ள ஒரு மரம் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது அங்கே செல்ல நேரிட்டதில்லை. அவ்வாறு நேரிட்டால் மரத்தை வெட்டுபவர்களிடம் வெட்ட அனுமதி இருக்கிறதா என்று கேட்பேன். இல்லை என்று கூறினால் மரத்தை வெட்டாதீர்கள் என்று கூறுவேன். அவர்கள் மரத்தை வெட்ட அனுமதிக்க மாட்டேன்.
மூன்றாவது விஷயம் நண்பர்கள் மனஸ்தாபம் கொள்வார்கள் என்பது. நான் மென்மையான அணுகுமுறையே கையாள்கிறேன் என்பதை நண்பர்கள் அறிவார்கள். வருத்தம் அடைந்தாலும் அவர்கள் விஷயத்தைப் புரிந்து கொள்கிறார்கள்.
பொறியியல் கல்லூரியில் எங்களுக்கு ஒரு பேராசிரியர் இருந்தார். அவர் கல்லூரியில் பருவத் தேர்வு நடந்து விடைத்தாள்களைத் திருத்தி வகுப்பில் கொண்டு வந்து கொடுக்கும் போது ’’ நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நீங்கள் ஒரு மதிப்பெண்ணாவது எடுக்க வேண்டும். பூஜ்யம் எடுக்கக் கூடாது. நீங்கள் தேர்வு எழுதிய பாடத்துக்கான வகுப்பு உங்களுக்கு மூன்று மாதம் நடந்திருக்கிறது. வாரத்துக்கு நான்கு பிரிவேளைகள் என மூன்று மாதத்தில் ஐம்பது பிரிவேளைகள் அமர்ந்து இந்த பாடத்தைக் கேட்டிருக்கிறீர்கள். எனவே நீங்கள் பூஜ்ய மதிப்பெண் பெறக்கூடாது. எழுதப் படிக்கத் தெரியாத ஒருவரை இந்த தேர்வை எழுதச் செய்தாலும் அவர் பூஜ்யம் பெறுவார். அவருக்கும் உங்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று ஆகி விடும்’’ என்று கூறுவார்.
மரங்கள் வெட்டப்படும் விஷயத்துக்காக முனைப்பு காட்டுவதில் நான் ஒற்றை மதிப்பெண் பெற்றிருப்பதாகவே எண்ணுகிறேன்.
Tuesday, 3 January 2023
இரு மரங்கள்
மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகத்துக்கு அருகில் உள்ள தெருவில் வீதி ஓரத்தில் வளர்ந்திருந்த இரண்டு புங்கன் மரங்கள் ஓரிரு தினங்கள் முன்னால் வெட்டப்பட்டிருக்கின்றன. அந்த இரண்டு மரங்களுக்கும் நான்கு வயது இருக்கக்கூடும். இருபது அடி உயரம் வளர்ந்திருந்த மரங்கள். மரம் வெட்டும் பணியாளர்களைக் கொண்டு மரம் அறுக்கும் எந்திரம் கொண்டு மரங்கள் வெட்டப்பட்டுள்ளன என்பதை மரங்கள் வெட்டப்பட்டிருக்கும் முறை காட்டுகிறது. ஒரு மரத்தின் மதிப்பு ரூ.3500 இருக்கக் கூடும். இன்னொரு மரத்தின் மதிப்பு ரூ.2000 இருக்கக் கூடும்.
நேற்று இரு மனுக்களை தயார் செய்தேன். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு ஒன்று ; வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ஒன்று. இரண்டுமே தகவல் பெறும் உரிமைச் சட்டப்படியான மனுக்கள். மனுவுடன் வெட்டப்பட்ட இரண்டு மரங்களின் புகைப்படத்தையும் இணைத்து அனுப்பியிருந்தேன். இந்த இரண்டு மரங்களும் வெட்டப்பட வருவாய் கோட்டாட்சியரிடம் அனுமதி பெறப்பட்டதா என்பது முதல் கேள்வி. அனுமதி கேட்டு விண்ணப்பித்தது யார் என்பது இரண்டாவது கேள்வி. அனுமதி அளிக்கப்பட்ட போது மரங்களின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு அந்த மதிப்புக்கான தொகை அரசு கணக்கில் செலுத்தப்பட்டதா என்பது அடுத்த கேள்வி. வெட்டப்பட்ட பின் வெட்டப்பட்ட மரம் பொது ஏலம் விடப்பட்டு அந்த தொகை அரசு கணக்கில் சேர்க்கப்பட்டதா என்பது இன்னொரு கேள்வி.
இந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்களே மரங்கள் வெட்டப்பட்டிருக்கும் விஷயத்தை வட்டாட்சியர் அலுவலகத்துக்கும் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கும் தெரிவித்து விடும். அனுமதி பெறப்படவில்லையெனில் , பதில் கொடுப்பதற்கான காலக்கெடுவான 30 நாட்களில் தவறிழைத்தவர் யாரெனக் கண்டறிந்து மரக்கிரயமும் அபராதத்தொகையும் வசூல் செய்து விட்டு அந்த தகவலை ஒரு பதிலாக அளிக்க முடியும். அந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்கவே புகார் மனு அளிக்காமல் தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவை அனுப்பியுள்ளேன்.
நமது கடமையை நாம் செய்துள்ளோம். அரசாங்கம் தனது கடமையைச் செய்யும் என நாம் எதிர்பார்க்கிறோம்.