Saturday, 3 February 2024

இரு சம்பவங்கள் ( நகைச்சுவைக் கட்டுரை)

சம்பவம் 1 :

இது நடந்து 15 ஆண்டு காலம் இருக்கும். 

அப்போது சென்னை புத்தகக் கண்காட்சி பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் இருக்கும் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் நடைபெறும். புத்தகக் கண்காட்சிக்கு அந்த இடம் மிகவும் உகந்த வசதியான இடம். வேறெந்த இடத்தை விடவும். 

அமைப்பாளரின் நண்பர் ஒரு பதிப்பக உரிமையாளர். நண்பருக்கு உதவி செய்ய அமைப்பாளர் சென்னை புத்தகக் கண்காட்சி செல்வார். புத்தகங்கள் அடுக்கும் ’’ரேக்’’ ஐ வாடகைக்கு எடுத்துக் கொண்டு புத்தகக் கண்காட்சிக்கு முதல் நாள் செல்வதிலிருந்து புத்தகக் கண்காட்சி முடியும் கடைசி நாள் வரை அமைப்பாளர் நண்பருடன் உடனிருந்து உதவுவார். 

கண்காட்சி நடக்கும் 10 நாட்களும் லட்சக்கணக்கான மக்கள் அங்கு வந்து புத்தகம் வாங்கி செய்திப்பத்திரிக்கைகள்  அதனை செய்தியாகப் போட்டு புதிய நூல்கள் வெளியாகி விற்பனை செய்யப்பட்டு என ஏகப்பட்ட விஷயங்கள் நடந்தேறும். 

கண்காட்சி நிறைவு பெற்றதற்கு மறுநாள் புத்தகங்களை அட்டைப்பெட்டிகளில் அடுக்கி ‘’ரேக்’’அனைத்தையும் பிரித்து வைத்து விட்டு டாடா ஏசில் ஏற்றி அனுப்பி விட்டு பார்க்கிங் பகுதியில் உள்ள டூ வீலரை எடுத்துக் கொண்டு வரும் நண்பருக்காக அமைப்பாளர் காத்துக் கொண்டிருந்தார். 

அப்போது ஒரு இளைஞர் மிகுந்த ஆர்வத்துடன் சாலையிலிருந்து டூ வீலரில் வந்தார்.   பள்ளி வாயிலில் நின்று கொண்டிருந்த அமைப்பாளரிடம் , ‘’சார் ! புக் ஃபேர் இங்க தானே நடக்குது?’’ என்றார். 

அமைப்பாளர் ‘’நடந்தது’’ என்றார். 

இளைஞர் ‘’ அப்ப முடிஞ்சுடுச்சா?’’ என்றார் நம்ப முடியாமல். 

அமைப்பாளர் ‘’ஆமாம்’’ என்றார்.

’’இனிமே எப்ப?’’ என்றார் இளைஞர். 

‘’அடுத்த வருஷம் ஜனவரியில்’’ என்றார் அமைப்பாளர். 

இளைஞர் சோர்வுடன் சென்று விட்டார். 

அமைப்பாளர் கல்லூரியில் படித்த போது ஒரு பேராசிரியர் மாணவர்கள் எவரும் தாமதமாக வந்தால் ‘’You are too early to the next class'' என்று கூறுவார். அமைப்பாளருக்கு அந்த ஞாபகம் வந்தது. 

***

சம்பவம் 2 :

இந்த சம்பவம் சில தினங்களுக்கு முன்னால் நடந்தது. 

அமைப்பாளர் வங்கிச் சாளரத்தின் முன் இருந்த ‘’கியூ’’வில் நின்று கொண்டிருந்தார். அமைப்பாளருக்கு முன் ஒரு இளைஞர் நின்றார். வயது 30 இருக்கும். காசோலை ஒன்றை பணமாக்க வந்திருந்தார். அதற்கான டோக்கன் அவரிடம் இருந்தது. 

இளைஞர் டோக்கனை சாளரத்தினுள் கொடுத்து காசாளரிடம் ‘’அமௌண்ட்டை ஹையர் டினாமிஷேன் நோட்டா கொடுங்க’’ என்றார். 

காசாளர் ஒரு 500 ரூபாய் கட்டைக் கொடுத்தார். 

இளைஞர் காசாளரிடம் ‘’ஹையர் டினாமினேஷன்’’ என்றார். 

காசாளர் இளைஞரிடம் ‘’அப்படித்தானே கொடுத்திருக்கன்’’ என்றார். 

இளைஞர் ‘’சார் ! ரெண்டாயிரம் நோட்டா கொடுங்க’’ என்றார். 

காசாளர் அமைதியாக ‘’ இப்ப இந்தியால ரெண்டாயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்துல இல்ல’’ என்றார். 

***

Wednesday, 31 January 2024

டேங்க் ஃபுல் ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளர் மோட்டார்சைக்கிளில் ஒரு இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது தனது வாகனத்தின் பெட்ரோல் டேங்க் ஐ முழுமையாக நிரப்பும் - அதாவது டேங்க் ஃபுல் செய்யும்- பழக்கம் கொண்டவர். ஒருமுறை டேங்க் ஃபுல் செய்தால் வண்டி 650 கி.மீ தூரம் செல்லும். ஒரு மாநிலத்தையோ அல்லது இரண்டு மாநிலத்தையோ கூட தாண்டி விடுவார். வண்டியில் பெட்ரோல் நிரம்பியிருக்கிறது என்பது ஒரு மகிழ்ச்சி. ஒரு உற்சாகம்.   

ஊரில் இருக்கும் போது அமைப்பாளர் ஒரு நாளைக்கு வண்டிக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் போடுவார். அது 60 கி.மீ செல்லும். வீடு கடைத்தெரு பணியிடம் என நகர எல்லைக்குள் சுற்றுவதால் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் என்பது அவருக்கு சரியாக இருக்கும். ஆனால் தினமும் காலை வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டால் முதலில் செல்லும் இடம் பெட்ரோல் பங்க் ஆக இருக்கும். தினமும் ஒரு லிட்டர் பெட்ரோல். 

இந்த மாறாச் செயல்பாட்டை மாற்ற நினைத்தார் அமைப்பாளர். பத்து நாட்களுக்கு முன் பங்க் குக்கு சென்றவர் ’’டேங்க் ஃபுல்’’ என்றார். டேங்க் ஃபுல் செய்து கொண்டார். 

பத்து நாட்களாக பங்க் பக்கம் செல்லவே இல்லை. நாளை அல்லது நாளை மறுநாள் ‘’ரிசர்வ்’’ வரலாம். அப்போது மீண்டும் டேங்க் ஃபுல் செய்து கொள்ளலாம் என இருக்கிறார். 

’’டேங்க் ஃபுல்’’ என்பது அமைப்பாளருக்கு மோட்டார்சைக்கிளில் மீண்டும் ஒரு இந்தியப் பயணத்தை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது. 

Monday, 29 January 2024

யானை பிழைத்தவேல் - ஒரு கடிதம்

வணக்கம் நண்ப! 

நலமா

எனது பெயர் தயானந்தா. லண்டனில் இருக்கும் இலங்கைத் தமிழன்.உங்கள் ராமாயாணத் தேடலின் ரசிகன். ஓர் ஒலிபரப்பாளன், இலங்கை வானொலியிலும் பின்னாட்களில் பிபிசி இலும் பணியாற்றி இப்போது (60 வயதை எட்டுகிறேன்) பழைய பதிவுகளை எண்ணிமப் படுத்துகிறேன். 40 பாகங்களாக இலங்கை வானொலியில் ஒலிபரப்பான எனது ராம நாடகத்தை மீளக்கேட்கவும் பிரதிகளை பதிவிடும் பணியிலும் ஈடுபடுகிறேன்.  இணையத்தை சுற்றியபோது உங்கள் எழுத்துகளை பார்த்து ரசித்தேன்,தொடர்பு கொள்ள விரும்புகிறேன். உங்கள் இலக்கத்தை அனுப்பவும். 
எனது இலக்கம் ------------
 
என்றும் அன்புடன்
இளையதம்பி தயானந்தா 

Friday, 26 January 2024

ஒருமைப்பாடு

 என்னுடைய மோட்டார்சைக்கிள் பயணத்தில் வட இந்தியாவில் - குறிப்பாக ராஜஸ்தானில் - பல தமிழகத் தொழிலாளர்களைச் சந்தித்திருக்கிறேன். தொழிலாளர்கள் என்றும் சொல்லலாம். சிறு தொழில்முனைவோர் என்றும் சொல்லலாம். அதிகமும் நாமக்கல் சேலம் பகுதியைச் சேர்ந்தவர்கள். ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பது அவர்களின் பணி. அதற்கான பெரிய அளவிலான லாரிகள் அவர்களிடம் இருக்கும். ஒரு லாரியில் ஆறிலிருந்து எட்டு பேர் இருப்பார்கள். அந்த லாரியின் அடியில் படுத்து உறங்குவார்கள். அருகில் இருக்கும் மரத்தடியில் சமைத்து உண்பார்கள். காலை 6 மணி அளவில் வேலையைத் தொடங்கி விட்டு ஐந்து மணி நேரம் வேலை செய்து விட்டு காலை 11 மணிக்கு உணவு உண்பார்கள். பின்னர் மதியம் 3 மணி வரை வேலை. முப்பது நிமிடம் ஓய்வெடுத்து விட்டு 3.30க்கு பணி தொடங்கினால் சூரியன் அஸ்தமனம் ஆகும் மாலை 6.30 வரை பணி. அதன் பின் குளியல். இரவு 8 மணிக்கு இரவு உணவு. அங்கெல்லாம் 1000 அடி 1500 அடி ஆழ்துளைக் கிணறு அமைக்க வேண்டியிருக்கும். ஒரு நாளைக்கு 150 அடி ஆழம் சென்றால் கூட ஒரு வேலையை முடிக்க 10 நாள் ஆகும். உடன் அடுத்தடுத்த ஊர்களில் வேலை இருக்கும். 8 பேர் கொண்ட ஒரு குழு நான்கு மாதம் வேலை செய்திருக்கிறது என்றால் அந்த குழுவைச் சேர்ந்தவர்கள் மேலும் 8 பேர் நாமக்கல்லில் இருந்து ராஜஸ்தானுக்கு வந்து சேர்வர். ராஜஸ்தானில் இருந்த குழு ஒரு மாதம் நாமக்கல் வந்து தங்கள் குடும்பத்தினருடன் இருந்து விட்டு மீண்டும் ராஜஸ்தான் சென்று விடுவர். இத்தகைய குழுக்கள் பலவற்றை ராஜஸ்தானிலும் மகாராஷ்டிராவிலும் சந்தித்திருக்கிறேன். அனேகமாக அவர்கள் உணவு உண்ணும் நேரமான காலை 11 மணி அளவில் அவர்களைக் காண்பேன். சேர்ந்து உணவு உண்ண அழைப்பார்கள். 

சொந்த ஊரில் வேலை செய்வதை விட நாட்டின் தொலைவான பகுதிகளில் வேலை செய்வது லாபகரமானது என்று சொல்வார்கள். முதல் விஷயம் செய்வதற்கு நிறைய வேலை இருந்து கொண்டே இருக்கும். இரண்டாம் விஷயம் ஊரில் வேலை நேரம் என்பது காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை. எட்டு மணி நேரம் மட்டுமே. ஆனால் வெளியே 12 மணி நேரம் பணி. அதற்கான கூடுதல் ஊதியம் தினமும் கிடைக்கும். ஊரில் இருந்தால் உறவினர்களின் வீட்டு சுபநிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டும். வெளியூரில் அந்த கட்டாயம் இல்லை. ஏன் இவ்வளவு தொலைவில் வந்து பணி புரிகிறோம் என்பதற்கு பல காரணங்கள் கூறுவார்கள். 

நான் கட்டுமானத் தொழிலுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. முதல் முறையாக என்னுடைய கட்டுமானப் பணியில் வட இந்தியத் தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள். கட்டிடத்துக்கு வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

Tuesday, 23 January 2024

ஸ்ரீராமர் முடிசூடல்

  


அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க வெண்ணையூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி


Monday, 22 January 2024

அஞ்சனக் கருமுகில் கொழுந்து

ஒருபகல் உலகு எலாம் உதரத்து உள் பொதிந்து
அருமறைக்கு உணர்வு அரும் அவனை அஞ்சனக்
கருமுகில் கொழுந்து எழில் காட்டும் சோதியைத்
திருஉறப் பயந்தனள் திறம் கொள் கோசலை (284) (கம்ப ராமாயணம்) 

நின்னொடும் எழுவரானோம்

குகனொடும் ஐவரானோம் முன்புபின் குன்று சூழ்வான்

மகனொடும் அறுவரானோம் எம்முழை அன்பின்வந்த

அகனமர் காதல் ஐய நின்னொடும் எழுவரானோம்

புகலருங் கானம் தந்து புதல்வரால் பொலிங்தான் உங்தை 



Sunday, 21 January 2024

தீனபந்து

ஏந்தினன் இரு கைதன்னால்; ஏற்றினன் ஈமம்தன்மேல்;

சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன்; தலையின் சாரல்

காந்து எரி கஞல மூட்டி, கடன்முறை கடவாவண்ணம்

நேர்ந்தனன் - நிரம்பும் நல் நூல் மந்திர நெறியின் வல்லான். 

 

Saturday, 20 January 2024

ஜன நாயகன்

எதிர்வரும் அவர்களை எமைஉடை இறைவன்
முதிர்தரு கருணையின் முகமலர் ஒளிரா
எது வினை ? இடர் இலை?  இனிது நும் மனையும்
மதி தரும் குமரரும் வலியர் கொல் எனவே ( 314) (கம்ப ராமாயணம்)

வசிட்டரிடம் பாடம் பயின்று விட்டு அரண்மனை திரும்பும் போதெல்லாம் மக்களிடம் முகமலர்ச்சியுடன் இராமன், ‘’நான் தங்களுக்கு ஏதும் செய்ய வேண்டுமா? உங்களுக்கு ஏதேனும் துயரங்கள் உள்ளனவா? வீட்டில் மனைவி நலமாக இருக்கிறார்களா? மைந்தர்கள் நலம் தானே?’’ என வினவுகிறார்.

இப்பாடலில் ஓர் அவதானம் உள்ளது. அரசன் என்பவன் ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தலைவன். அவன் ஆயிரக்கணக்கானோருக்குத் தலைமை ஏற்பதாலேயே குறியீட்டு ரீதியில் குடை, செங்கோல் மற்றும் கிரீடம் ஆகியவற்றைச் சுமக்கிறான். எனினும் மக்களின் எல்லா பிரச்சனைகளையும் அரசனால் தீர்த்துவிட முடியாது. எந்த அரசனாலும். தன்னை அணுகுபவர்கள் கேட்பதை எல்லாம் செய்து விட முடியாது. வழங்கி விட முடியாது. இது அரசாட்சியின் எல்லை. அரசர்களின் எல்லை.

எனவே அரசனை அணுகும் எங்காவது தற்செயலாக சந்திக்க நேரும் எளிய மக்கள் அரச குழாமின் அமைப்பைக் கண்டு திகைத்திருப்பர். நியாயமாக ஏதேனும் கேட்க இருந்தால் கூட சொல்லெடுக்க முடியாமல் திணறிடுவர்.

இராமன் நல்லரசன். மக்களைக் கண்டதும் அவனே நான் ஏதும் தங்களுக்கு செய்ய வேண்டுமா என்று கேட்கிறான். அதுவே அவர்களுக்கு அவன் மேல் நம்பிக்கையூட்டும். நீங்கள் சொல்ல நினைக்கும் துயரங்கள் ஏதும் உண்டா என்கிறான். தங்கள் துயரைக் கேட்பதாலேயே அவர்கள் மனபாரம் குறையும். மக்களிடம் அவர்கள் குடும்பத்தாரைப் பற்றி விசாரிக்கிறான் இராமன். பிரஜைகளுக்கு தங்களை நினைவில் வைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தரும். தங்கள் குடும்பத்தினரிடம் சென்று அரசன் உங்களை விசாரித்தான் எனக் கூறும் போது குடும்பமே மகிழும். தன் குடிகளின் உளம் அறிந்தவனாகவும் அவர்கள் மேல் கருணை கொண்டவனாகவும் இருக்கிறான் இராமன். 

Friday, 19 January 2024

பால காண்டம்

ஓரிரு நாட்களுக்கு முன், ஒரு சிறு குழந்தை பாடும் சங்கீதத்தைக் காணொளிகளில் கண்டேன். அந்த குழந்தை 4 வயதிலிருந்தே பாடல் பாடுவதை அறிந்தேன். நான் இசை கேட்டு பழகியவனில்லை. எனினும் என்னுடைய செவிகளிலும் அக்குழந்தையின் குரல் தேவாமிர்தமாக ஒலித்தது. இப்போது அந்த குழந்தைக்கு 7 வயது. 

அக்குழந்தையின் நேர்காணல்கள் சிலவற்றைக் கண்டேன். பேட்டி எடுப்பவரிடம் அக்குழந்தை நாம் சேர்ந்து ஒரு பாடல் பாடலாமா என்கிறது. பேட்டி காண்பவர் நான் இசை அறியாதவன் என்கிறார். நான் உங்களுக்கு கற்றுத் தருகிறேன் என்று கூறி ஏழு ஸ்வரங்களை சொல்லித் தருகிறது அக்குழந்தை. அதன் இசை ஆசிரியர் அதனிடம் பாடம் நடத்தும் முறையில் பேட்டி எடுப்பவரிடம் கற்றுத் தருகிறது. ‘’பிராக்டிஸ் செஞ்சா சரியா வரும்’’ என நம்பிக்கையூட்டுகிறது. 

தெய்வங்கள் குழந்தையாப் பிறந்து தவழ்ந்து வாழ்ந்த சிறப்பு கொண்டது நம் மண்.