Tuesday, 6 January 2026

எனது சிறுகதைகள் (மறுபிரசுரம்)

சொல்வனம் இதழில் வெளியான எனது சிறுகதைகள்











வருகை              





இரு பள்ளிகள்

சொல்வனம் இதழில் எழுதும் ‘’யானை பிழைத்தவேல்’’ கம்பராமாயணத் தொடரின் கட்டுரைகள் இணைப்பு

யானை பிழைத்தவேல் - பகுதி 1   யானை பிழைத்தவேல் - பகுதி 2

யானை பிழைத்தவேல் - பகுதி 3   யானை பிழைத்தவேல் - பகுதி 4

யானை பிழைத்தவேல் - பகுதி 5

 

புத்தாண்டுக் கொண்டாட்டம்

 புத்தாண்டு அன்று கணிசமான தூரம் மோட்டார்சைக்கிளில் பயணிக்க நேர்ந்தது. அப்போது ஆலயங்களில் மக்கள் கூட்டமாக சென்று வழிபட்டனர். ஜனவரி 1ம் தேதி கிரிகோரியன் நாட்காட்டியில் புத்தாண்டு. அந்த நாட்காட்டி நாம் ஏற்கும் நாம் பயன்படுத்தும் ஒன்று என்பதால் ஆண்டு மாற்றத்தை புதிய துவக்கமாகக் கொள்ளும் வழக்கம் மக்களுக்கு இருப்பது என்பது சுவாரசியமான ஒன்று தான். 

Monday, 5 January 2026

பண்பாடு

பண்பாடு என்பது மானுடத்தின் உச்சமான உணர்வுநிலை. மானுடத்தின் தலைசிறந்த பண்பாடுகளில் ஒன்று பாரதப் பண்பாடு. பாரத மண்ணில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டிய பெருமை கொள்ள வேண்டிய விஷயமாகும் அது. பாரத நாட்டவர் ஒவ்வொருவருக்கும் இந்நினைவு எப்போதும் இருக்குமாயின் அதனால் உலகுக்கு  கதிமோட்சம் கிடைக்கும். 

பாரத பூமி பழம்பெரும் பூமி
நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்
பாரத நாடு பாருக்கெல்லாம் திலகம்
நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்

என்பது தமிழ் மூதாதை பாரதியின் வாக்கு. 

’’காவிரியிலிருந்து கங்கை வரை’’ மேற்கொண்ட மோட்டார்சைக்கிள் பயணத்தில் தெலங்கானாவில் நான் ஒரு காட்சியைக் கண்டேன். அன்று செவ்வாய்க்கிழமை. ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் ஓர் சிற்றாலயம். ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அந்த லாரி முஸ்லீம் ஒருவருக்கு சொந்தமானது என்பதை லாரியில் எழுதப்பட்டிருந்த பெயர் மூலம் அறிய முடிந்தது. அதன் டிரைவர் கிருஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதை அவர் கழுத்தில் அணிந்திருந்த ஏசுநாதர் டாலர் மூலம் அறிய முடிதது. அவர் மிக மும்மரமாக லாரியை வாளிக்கணக்கில் நீர் ஊற்றிக் கழுவி லாரிக்கு மஞ்சள் குங்குமம் இட்டு சாம்பிராணி போட்டுக் கொண்டிருந்தார். அவர் ஆந்திரத்தின் தென்கோடியிலிருந்து வட இந்தியா நோக்கி செல்பவர். அவரிடம் கேட்டேன் : ‘’ நீங்கள் கிருஸ்தவர். உங்கள் உரிமையாளர் முஸ்லீம். லாரியைக் கழுவி அதற்கு மஞ்சள் குங்குமம் இடுவது ஹிந்துக்களின் வழக்கம் அல்லவா?’’

என் கேள்விக்கு அவர் பதில் கூறினார். ‘’ லாரி தான் எங்களுக்கு எல்லாம். எங்கள் ஓனர் செவ்வாய் வெள்ளி கிழமைகளில் லாரியை கழுவி அதற்கு மஞ்சள் குங்குமம் இட வேண்டும் என்று கூறுவார். அதை மிகவும் வற்புறுத்துவார்.  அவ்விதம் செய்வதன் மூலம் எங்களுக்கு பெரும் மனநிறைவு கிடைக்கிறது ‘’ 

பாரத நிலத்தில் பிறந்தவன் இறைமை தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் என்பதால் உலகில் அனைத்துமே இறை சொரூபமே என எண்ணுவான். பாரதப் பண்பாடு என்பது அதுவே. 

Sunday, 4 January 2026

திருவீழிமிழலை

இன்று காலை திருவீழிமிழலை சென்றிருந்தேன். அவ்வூரின் ஆலயம் பேராலயம். ஊருக்குத் தெற்கே திருவாரூர் செல்லும் சாலையில் மங்கநல்லூர், கொல்லுமாங்குடி, பூந்தோட்டம், சன்னா நல்லூர் ஆகிய ஊர்களில் கிழக்கும் மேற்கும் செல்லக் கூடிய சாலைகள் ஆரூர் சாலையில் இணைந்து நாற்சந்தியை உருவாக்கும். மங்கநல்லூருக்கு மேற்கே சென்றால் ஆடுதுறை ; கிழக்கே சென்றால் தரங்கம்பாடி. கொல்லுமாங்குடிக்கு மேற்கே சென்றால் குடந்தை ; கிழக்கே சென்றால் காரைக்கால். பூந்தோட்டத்திற்கு மேற்கே நாச்சியார் கோவில். கிழக்கே நிரவி. சன்னாநல்லூருக்கு மேற்கே கும்பகோணம் கிழக்கே நாகூர். பழைய தஞ்சாவூர் கிராமங்கள் இவை. இந்த நான்கு சாலைகள் ஆங்காங்கே கிளைச் சாலைகள் வழியாக இணையும்.  பூந்தோட்டத்துக்கு மேற்கே சென்று திருவீழிமிழலையை அடைந்தேன். அந்த ஊரின் ஆலயம் மிகப் பெரும் பேராலயம். அந்த ஊரின் தடாகமும் மிகப் பெரியது. தடாகத்தில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் தடாகத்தில் இடும் அவல்பொறியை உண்ண மீன்கள் துள்ளி வருவது பெரும் மகிழ்வையளிக்கிறது. 

நம் மரபில் ஜீவராசிகளுக்கு உணவிடுவது என்பது இறைவனுக்கு உணவளிப்பது என்றே கருதப்படுகிறது. ‘’யாவர்க்கும் ஆவுக்கு ஒரு வாயுறை’’ என்பது திருமந்திரம். வட இந்தியாவில் பெரும் கடைவீதிகளில் பறவைச் சத்திரங்கள் இருப்பதைக் கண்டிருக்கிறேன். அங்கே பறவைகளுக்கு தானியங்களை இடுவர். நம் பிராந்தியத்திலும் அவ்விதம் ஆலயங்களில் பசு, கன்று, பறவைகள், மீன்கள் ஆகியவற்றுக்கு உணவிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யலாம். திருவீழிமிழலை தடாகத்தைக் கண்ட போது எனக்கு அந்த எண்ணம் ஏற்பட்டது. அந்த ஊரின் தடாகத்தை இன்னும் நல்ல விதமாகப் பராமரிக்கலாம். புதர்களை அகற்றி குளத்தின் சுவர்களில் திருவிளையாடல் ஓவியங்கள் வரைந்து சிறு பூங்கா போல் ஆக்கலாம். குஜராத் காந்தி நகரில் சபர்மதி நதிக்கரை அவ்விதம் அழகுடன் வடிவமைக்கப்பட்ட ஒன்று. 

திருஞானசம்பந்தருக்கும் திருநாவுக்கரசருக்கும் இறைவன் படிக்காசு வழங்கிய தலம் திருவீழிமிழலை. எனது நண்பர் ஒருவர் நன்னிலம் அருகே நர்சரி அமைக்கும் விதமாக ஓர் இடத்தைப் பார்க்கக் கூறியிருந்தார். இரண்டு மூன்று இடங்களைப் பார்த்து வைத்திருந்தேன். மழைக்காலம் செல்லட்டும் தை பிறந்தால் வழி பிறக்கும் எனக் காத்திருந்தேன். இன்று நன்னிலம் பிராந்தியத்தில் சுற்றியதில் நர்சரிக்கு சிறப்பான இடமாக ஒன்று தேர்ந்தெடுத்து விடலாம் என்னும் நம்பிக்கையும் உற்சாகமும் ஏற்பட்டது. 

திருவீழிமிழலையில் சென்னையிலிருந்து வந்த குழு ஒன்று சுந்தரர் பயணித்த மார்க்கத்தில் பயணித்துச் செல்கிறது. அவர்கள் குழுவில் இருந்த ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு என்னிடம் அளவளாவினார். அவருக்கும் எனக்கும் ஒரே வயது. இருவரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒரே ஆண்டில் பொறியியல் படித்திருக்கிறோம். அவர் மின்னியல் மற்றும் மின்னணுவியல். நான் கட்டுமானம். 

அங்கிருந்து அன்னியூர் என்னும் ஊருக்குச் சென்று அங்கிருக்கும் ஆலயத்தில் வழிபட்டேன். அங்கே தலவிருட்சம் வன்னி மரம். அங்கு ஓர் இளைஞர் இருந்தார். அவர் விவசாயத்தில் பட்டம் பெற்றவர். அரசாங்க வேலைக்கான தேர்வுகளுக்கு தயார் செய்து கொண்டிருக்கிறார். அவரிடம் ஏதேனும் ஓர் வங்கியை அணுகி ‘’முத்ரா கடன்’’ பெற்று நர்சரி ஆரம்பியுங்கள் என்று சொன்னேன். அவருக்கு மகிழ்ச்சி. தனக்கும் அவ்விதமான எண்ணம் இருக்கிறது என்று சொன்னார். 

அன்னியூரிலிருந்து கும்பகோணம் - காரைக்கால் சாலையைப் பிடித்து வந்து கொண்டிருந்தேன். ஒரு வீட்டு வாசலில் பெரிய பெரிய பழங்களாக எலுமிச்சைப் பழங்களை ஒரு தட்டில் வைத்து அதனை ஒரு ஸ்டூலின் மேல் சாலையோரத்தில் வைத்திருந்தார்கள். எலுமிச்சைப் பழங்கள் மிகப் பெரியவை. எனக்கு எலுமிச்சையின் ருசியும் வாசனையும் மிகவும் பிடிக்கும். வண்டியை நிறுத்தி 20 பழங்கள் வாங்கிக் கொண்டேன். 

‘’இருக்கறதுலயே பெரிய பழங்களா எடுத்துக்கிட்டீங்க சார்’’ என்றார் அந்த வீட்டின் பெண்மணி புன்னகையுடன். 

அந்த சாலையிலிருந்து ஆடுதுறை - தரங்கம்பாடி சாலையை அடைந்து மங்கநல்லூரி வந்து வடக்கே திரும்பி ஊர் வந்து சேர்ந்தேன். 

Saturday, 3 January 2026

கடைசி தேனீர்

கடைசி தேனீர்
--------------------------

எனது புத்தாண்டுத் தீர்மானங்களில்
பிரதான இடம் வகிப்பது
தேனீரைத் தவிர்த்தல்
பலமுறை தீர்மானித்து
சிலமுறை வென்று
பலமுறை தோற்றிருக்கிறேன்

காலை எழுந்தவுடன்
பத்து மணி என்னும் வங்கி நேரத் துவக்கத்தில்
பதினொன்று மணிக்கு
மாலை நான்கு மணிக்கு
மாலை ஆறு மணிக்கு
எவரையும் புதிதாக சந்தித்தால்
பழகிய எவரையும் கண்டால்
எவர் வீட்டுக்காவது சென்றால்
ஒரு புதிய ஊருக்குச் சென்றால்
தேனீர் 
எங்குமே ஒரு மறுதுவக்கமாக 
இருந்திருக்கிறது

சில ஆண்டுகள் 
பல மாதங்கள் 
தேனீர் அருந்தாமல் இருந்திருக்கிறேன்
அருந்த்தாமல் இருந்தது நினைவிருக்கிறது
எப்படி 
மறுபடியும் அருந்தத் தொடங்கினேன் 
என்பது நினைவில் இல்லை

நாளெல்லாம்
பொழுதெல்லாம்
தேனீர் அருந்துபவனல்ல
எனினும்
காலை எழுந்ததும்
மாலை தொடங்கியதும்
இருவேளை மட்டும்

தேனீரைத் தவிர்ப்பவனை 
ஆர்வமாகவே பார்க்கின்றனர் அவைவரும்
அதே ஆர்வம்
எனக்கும் இருக்கிறது
இம்முறை எவ்விதம் 
தவிர்க்க இருக்கிறேன் என
அதே ஆர்வம் 
தேனீருக்கும் 
இருக்கக் கூடும்


Friday, 2 January 2026

ஜனநாயகமும் பண்பாடும்

ஜனநாயகத்தை நான் மதிக்கிறேன். ஜனநாயக அரசியலின் ஒரு பகுதி அதிகார அரசியல் என்பதை புரிந்து கொள்கிறேன். ஜனநாயகத்தில் குடிகளின் கடமைகள் தீவிரமாக முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என விரும்புகிறேன். எந்த ஜனநாயக அரசும் அதில் வாழும் மக்களின் பண்பாட்டுக்கு அரணாக இருக்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. ஜனநாயகம் கருத்து சுதந்திரத்தை அளித்துள்ளது. குடிகள் நீதிமன்றங்களை நாடும் உரிமையை அளித்துள்ளது. ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்க நாட்டின் குடிகள் அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றுவதும் குடிமைப் பண்புடன் இருப்பதும் அவசியம். ஜனநாயகத்தின் ஆகச் சிறப்பான நிலை அதுவே.  

கரைந்து போதல்

அமைதியை 
துல்லியமாக நேர்த்தியாக 
உணர வேண்டியிருக்கிறது
துல்லியமான அமைதி
நேர்த்தியான அமைதி
இனிய அமைதி
அமைதி நிறைந்திருக்கும் பொழுதுகள்
அமைதி நிறைந்திருக்கும் நாட்கள் 
அமைதி நிறைந்திருக்கும் பிரதேசங்கள் 
இவற்றில் தான்
இருத்தல் 
அத்தனை இனிதாக அமர்கிறது
இருத்தல் இனிதாகையில் 
இருப்பு 
கரைந்து போகிறது
அத்தனை இனிமையுடன்  

Thursday, 1 January 2026

மகிழ்ச்சியான துவக்கம்

 இன்று என் நண்பர் ஒருவருடன் ***** அருகில் உள்ள கிராமத்தில் இருக்கும் மூன்று குழந்தைகள் காணச் சென்றிருந்தேன். சென்னை நண்பர் அந்த மூன்று குழந்தைகளுக்கு மூன்று மாதங்களுக்குத் தேவைப்படும் அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை அவர்களுக்கு வாங்கித் தருமாறு கூறினார். அதற்கான தொகையை UPI மூலம் அனுப்பி வைப்பதாகக் கூறினார். நானும் நண்பரும் ஒரு மளிகைக்கடைக்குச் சென்று மூன்று மாதத்துக்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை அளிக்குமாறு கேட்டுக் கொண்டோம். அவர் அதற்கான தொகையைக் கூறியதும் நண்பர் மளிகைக்கடையின் வங்கிக் கணக்குக்கு தொகையை அனுப்பி விட்டார். மளிகைக் கடைக்காரர் என்ன விபரம் எனக் கேட்க நான் அவரிடம் மூன்று குழந்தைகள் குறித்துக் கூறினேன். கடைக்காரர் தன் பங்களிப்பாக கணிசமான மளிகைப் பொருட்களைக் கொடுத்தார். என்னுடன் வந்த  நண்பர் குழந்தைகளுக்கு இனிப்புகள் எடுத்துச் சென்று கொடுக்க விரும்பினார். கடைவீதியில் அதனையும் வாங்கிக் கொண்டோம். இரண்டு பெரிய மூட்டைகளுடன் ***** நோக்கி புறப்பட்டோம். சென்னை நண்பரின் உறவினர்கள் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். குழந்தைகளின் கல்விச் செலவுக்கு அவர்கள் பங்களிக்க விரும்புகிறார்கள். இந்த 3 மாதங்களுக்கான உணவுப் பொருட்கள் ஒரு துவக்கமாக அமையும் என எண்ணினோம். 

ஒரு வாரம் முன்பு 25.12.2025 அன்று அங்கே சென்றிருந்தேன். அவர்கள் துயரத்தைக் கேள்விப்பட்டு அவர்களுக்கு உதவ சிலர் முன்வந்திருக்கின்றனர். தற்போது அவர்கள் வீட்டுக் கூரை புதிதாக வேயப்பட்டிருக்கிறது. சிலர் தங்களால் இயன்ற உதவியாக மளிகைப்பொருட்களை அளித்திருக்கின்றனர்.

உதவிகள் அந்த மூன்று குழந்தைகளுக்கும் வாழ்க்கை மீதான நம்பிக்கையை மிகத் தீவிரமாக அளித்திருக்கிறது. அவர்கள் உணரும் அவர்கள் கொள்ளும் நம்பிக்கையே மிக முக்கியமானது என எனக்குத் தோன்றியது. 

என்னுடைய கவனத்துக்கு வந்த ஒரு விஷயத்தில் ஏதேனும் உதவ முடியுமா என முயல்கிறேன். இந்த விஷயம் பலருடைய கவனத்தில் இருப்பதும் பலர் உதவ விரும்புவதும் பலர் உதவுவதும் மிகவும் பயனுள்ளது. இந்த உலகில் வாழும் அனைவருக்குமே ஏதோ ஒரு விஷயத்தில் உதவிகள் தேவைப்படவே செய்கின்றன. நம்மால் முடிந்ததை பிறருக்குச் செய்வது எப்போதும் நன்மையை அனைவருக்கும் அளிக்கும். 

எனது நண்பர்கள் சிலர் அந்த குழந்தைகளின் படிப்புச் செலவில் பங்களிக்க விருப்பம் தெரிவித்தார்கள். எந்த உதவியும் அதன் அளவைப் பொறுத்தது அல்ல ; உணர்வைப் பொறுத்தது என்பதால் சிறிய உதவியாயினும் அதனைச் செய்க என்றே நண்பர்களிடம் கூறுகிறேன். 

2026ம் ஆண்டின் முதல் தினத்தை மூன்று குழந்தைகள் சந்திப்புடன் தொடங்கியது மகிழ்ச்சி அளித்தது. 

புத்தாண்டு விடுமுறை (நகைச்சுவைக் கட்டுரை)

எனது நண்பன் தேசிய வங்கி ஒன்றில் வெளிமாநிலம் ஒன்றில் பணிபுரிகிறான். அவனுடன் நேற்று உரையாடிக் கொண்டிருந்த போது நாளை ( அதாவது இன்று) வங்கிக்குச் செல்ல வேண்டும் என்று கூறினான்.  

‘’தம்பி ! நாளைக்கு நியூ இயர்’’

‘’அதனால என்ன அண்ணன்? எங்களுக்கு பேங்க் உண்டு’’

‘’என்ன சொல்ற? இங்கெல்லாம் லீவு. தமிழ்நாட்டுல எல்லாமே ஆஃப் ஆகியிருக்கும்.மத்த எந்தெந்த ஸ்டேட்-க்கு நியூ இயர் லீவுன்னு பாரு’’

’’சரி அண்ணன்’’

இன்று காலை ‘’லிஸ்ட் ஆஃப் ஹாலிடேஸ் இன் பேங்க் 2026’’ என இணையத்தில் தேடினேன். CN, KO ஆகிய பிராந்தியங்களுக்கு மட்டும் விடுமுறை என குறிப்பிட்டிருந்தது. 

மேற்படி சுருக்கப் பெயர் கொண்ட பிராந்தியங்கள் எவை எனப் பார்த்தேன். 

தமிழ்நாடு, கொல்கத்தா.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி முதலில் ஏற்பட்ட பகுதிகள். 

அடுத்த புத்தாண்டுக் கொண்டாட்டம்

 பழைய ஆண்டு முடிந்து விட்டது என்கிறார்கள்
செய்ய நினைத்த பணிகள் பல நிலுவையில் இருக்கின்றன
இன்னும் ஆற்றலை அதிகரித்துக் கொள்வதா
இன்னும் ஆழமாக உற்று நோக்குவதா
மாற்றம் மாற்றம் என்கிறது மனம்
மாற்றமின்மை மாற்றமின்மை என்கிறது உடல்
எனது அறையை
எனது பொருட்களை
எனது அன்றாடங்களை
நான் விரும்பும் விதத்தில் 
அமைத்துக் கொள்ள விரும்புகிறேன்
எத்தனை கூடுதலான முறைகளில்
அது அத்தனை எளிதல்ல
என அறிய முடியுமோ
அத்தனை அறிந்து கொள்கிறேன்
பழைய ஆண்டு முடிந்து 
புதிய ஆண்டு பிறந்திருக்கும்
இன்று
ஆண்டின் இறுதி வாரத்துக்கான
அடுத்த ஆண்டின் முதல் வாரத்துக்கான
விருப்பம் ஒன்றை
உருவாக்கிக் கொள்கிறேன்
எத்தனையோ புதிய ஆண்டுகள் வருகை தந்தன
அடுத்த புத்தாண்டை 
ஒரு வாரம் முன்பிருந்தே
மௌனம் உறைந்திருக்கும் மலைப்பிரதேசங்களிலோ
அலைகள் ஆர்ப்பரிக்கும் கடற்கரையிலோ
அந்தி நிலவின் அழகு மிளிறும் பாலை நிலத்திலோ
புதிய நிலத்தில்
புதிய மண்ணில் 
எதிர்கொள்ள 
விருப்பம் கொள்கிறேன்
என் லௌகிகங்கள் என்னைச் சூழ்ந்து கொள்ளாத
என் மானசீக என் நடைமுறைத் தடைகள் 
என்னைத் தளைக்காத
விடுதலை கொண்ட வாழ்வொன்றை
இந்த ஆண்டில் அடைய 
இந்த ஆண்டில் உருவாக்கிக் கொள்ள
உளம் கொள்கிறேன்
செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன
ஏற்க வேண்டிய பொறுப்புகள் நிறைய இருக்கின்றன
நம்பிக்கையுடன் தொடங்குகிறது ஆண்டுடனான பயணம்