Monday, 31 December 2018

ஒரு புதிய துவக்கம்

தோன்றித் தோன்றி மறையும் உலகம். தோன்றி மறையும் இன்பங்கள். தோன்றி மறையும் துன்பங்கள். வாழ்வென்னும் பேரொழுக்கில் மிதந்து சென்று கொண்டேயிருக்கிறது மானுடம். எத்தனையோ திருப்பங்கள். எத்தனையோ எதிர்பாரா சுழல்கள். ஒரு கணமும் இடைநில்லாமல் பயணிக்கிறது மானுடம். 

சாராம்சம் என்பது சாராம்சத்துக்கான தேடலே என்கிறார் ஆதிசங்கரர்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அதாவது
ஒற்றுமை பரவலாக ஏற்கப்பட்டு
ஒருங்கிணையும் சாத்தியங்கள் தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு
பேதத்தை முன்நிறுத்தும் யுக்திகள்
தொலைதூரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு
சுமைதாங்கி கற்கள் அனைத்தும்
இறக்கப்பட்ட சுமைகளுடன் இருக்கையில்
அன்றும்
ஒரு பூங்காவில்
காற்றில் நிற்கும் பட்டாம்பூச்சி
சிறகுகளை அசைத்தது
குளத்தின் படிக்கட்டுக்கு அருகில்
மேற்பரப்பில் மிதக்கும்
அரிசிப் பொறியை
ஆர்வத்துடன் மீன்கள் தின்றன
அன்றும்
வெள்ளி முளைத்தது
அந்தி சாய்ந்தது

Sunday, 30 December 2018

காலசந்தி

நீ
நிறைந்திருக்கும் வெளி
ஓர் அந்தியைப் போல
மெல்ல நுழைந்து
ஆழ் இரவாய்
அடர்கிறது
விண் மீன்கள் உதிரும்
மணியொலிகள் எழும்
பொழுதில்
நீ
பிரசவிக்கிறாய்
ஒரு மலரை
அதன் இதழிலிருந்து
ஒரு சூரியனை

மழையாவது

அன்பையும் சொல்லையும் இணைப்பது எப்படி என்பது இன்னும் தெரியாமலே இருக்கிறது
உனக்கு என்ன பரிசு தருவது என்பதை முடிவுசெய்ய முடியாமல்
வெறும் கைகளுடன் வந்து சேர்கிறேன்
எவ்வளவு
உணர்ந்த பின்னும்
உச்சரிக்கப்பட்ட
எத்தனை
சொற்களுக்கு அப்பாலும்
அகம் நொறுங்கும் வலியின் சத்தம்
ஒரு பேப்பர் வெயிட் தரையில் விழுவதாகவோ
உடையும் கண்ணாடி வளையல்களைப் போலவோ
அணிலின் இடையறாத கிரீச்சிடலாகவோ
மனதைப் பிசைகிறது
மேகத்துக்கும்
மண்ணுக்கும்
இடையில் இருப்பது தானே
மழை

உடனிருத்தல்

இவ்வளவு பிரம்மாண்டமான ஏரி
ஆங்காங்கே பறக்கின்றன தும்பிகள்
நீ ண்டிருக்கிறது கரை
துடுப்புகள் அமிழ
தெறிக்கிறது
ஒலி
தண்ணீர்
நகரும் படகில்
நீ மௌனம் சூடுகிறாய்
அஸ்தமனத்தின் மௌனம்
உன் நெற்றிப் பொட்டு
அந்திச் சூரியனின் செங்குழம்பில்
ஒரு துளியாகிறது
உன் விழிக் கோள ஈரம்
வானின்
கார்மேகமாகிறது

Saturday, 29 December 2018

பரந்த
மிகப் பரந்த
கூடத்தில்
உன்னைத் தவிர யாருமற்ற
வீட்டில்
அந்த அந்திப் பொழுதின்
மௌனம் நிறையும்
சாநித்யத்தில்
உன் விரல்கள் மீட்டும்
வீணையின்
அதிர்வில்
ஒரு நுண் கணத்தில்
சிற் றகல் சுடர்
மெல்ல
அசைந்து
மீள்கிறது
நீ புன்னகைக்கிறாய்

Tuesday, 25 December 2018

புள்ளே
புள்களின் கொற்றவனே
உன்னை வணங்குகிறேன்

முடிவிலியில் சயனிக்கும்
இறைவனை
தோள்களில்
சுமந்து கொண்டு
புறப்பாட்டுக்கு
வெளியே வரும்
உன்னைக்
கண்ட போது
உன் கண்களும்
உன் முக பாவனையும்
எனக்கு குதூகலம் தந்தன
உன்னை
அம்மாவிடம்
யார் என்று கேட்டேன்
கருடன்
என உன் பெயர்
அறிமுகம் ஆனது

பிரபந்தம் அறிந்த நாளில்
நீ எப்படி ஆழ்வார்
என்று கேட்டேன்

பின்னர்
பலப்பல நிலங்களில்
வான் பார்த்த போது
பெருவட்டமாய்
சுற்றிக் கொண்டிருந்தாய்

உச்சி மரங்களில்
அமைக்கப்பட்டிருந்த
உன் கூடுகளும்
உன் நிமிர்வும்
உன் தீர்க்கப் பார்வையும்
உன்னைப் புள்ளாகவும்
உன்னைக் கொற்றவனாகவும்
இரண்டுமாகவும்
இரண்டுமான ஒன்றாகவும்
காட்டின

மண்ணிலிருந்து விண்ணுக்கு
நீ எழுவதைக் காணும்தோறும்
அகம் எழுக
அகம் அழுக
என பிராத்திக்கிறேன்
என் இறையாய் உன்னிடம்

Wednesday, 19 December 2018

சயனத் திருக்கோலம்

அடர் மேகங்கள் குழைந்து
கடலில்
மிதந்தன
அலை தொடா மேகம்
ஒன்றிலிருந்து
விண்ணுக்கு எழுந்தது
ஒரு தாவரத் தண்டு
அதன் உச்சியில்
காலாதீத மலர்
தேன் கொத்தும்
சிட்டின்
அலகில்
ஆங்காங்கே
ஒட்டிக் கொண்டு
அங்கங்கே
சிந்துகிறது
அலகிலாப்
பிரபஞ்சம்

Tuesday, 18 December 2018

பணி நிமித்தம்
ஊர் நீங்கிச் செல்லும்
நண்பனுக்கு
விடை கொடுக்கும் முன்
நுரை பொங்கும் அலை கடலின்
கரையில்
பாதங்கள் கரைய
நின்றிருந்தோம்

புதிதாய் நிகழும்
ஒரு புதிய துவக்கம்
எதிர்பார்ப்புகளின்
சாத்தியக் கூறுகளை
அதிகரித்துக் கொண்டே
சென்றது

விளையாட்டுச் சிறுவன்
ஒருவன்
விரல்களிலிருந்து
விடுபட்ட
பலூனை
காற்றில் துழாவி
ஓடிக்கொண்டிருந்தான்

அத்தருணம்
அக்கறைகளை வெளிப்படுத்தவோ
பிரியத்தைச் சொற்களாக்கவோ
உணர்வுகளைப் பகிரவோ
முழுக்க
தோதாய் இல்லாமல் இருந்தது

விடை கொடுக்க
நீட்டிய
கரத்தை
என் கரங்களுக்குள்
வைத்துக் கொண்டேன்

வீடு திரும்பிய பின்
ஒட்டிக் கொண்டு
வந்து சேர்ந்த
கடல் மணல் போல்
ஈரமாயிருந்தன
நட்பின் நினைவுகள்

Monday, 17 December 2018

பிசுபிசுக்கும்
இலைகள்
மூடிய தடாகத்தில்
பார்வையில் படாத மீன்கள்
சலம்புகின்றன
நீர் ஒலியாய்

அந்தரத்தில் தெறிக்கும்
துளிகள்
ஒளிக்கதிர் வாங்கி
அமர்ந்து
பின்னர் நகர்கின்றன
ஆழத்து மீன்களாய்