Monday, 1 June 2020

சாட்சி

நாம்
ஏற்றிய தீச்சுடர்
தன்னியல்பாய்
இவ்வுலகெங்கும்
பரவ
கைகள் விரித்தது

நீ
நீர்த்திரை கண்களுடன்
அதனை
ஓர்
அருமணியாக்குவோம்
என்றாய்

கடலாழத்தில் அது ஒளி விடுவதைக் கண்டோம்
என சான்றுரைத்தன
மீன்கள்

அது வானத்து விண்மீன்களில் ஒன்றாய் இருப்பதை
தினமும் கண்டான்
இன்னும் மொழியத் துவங்காத
சிறு குழந்தை

Saturday, 30 May 2020

மாற்றம்

அலைகடலின் முன்
ஈரக்காற்று முகம் தீண்ட
நனைந்த கால்களுடன்
தொடுவானத்தை
இமைக்காமல்
நீ
பார்த்துக் கொண்டேயிருந்த கணம்

நிழற்சாலையில்
சேர்ந்து
நடந்த போது
அன்றைய
புதிய மலர்
கண்டு
புன்னகைக்கையில்
எழுந்த ஒளி

மேகங்கள் நகரும் வானத்தை
குதூகலத்துடன்
அடையாளப்படுத்திய
உனது கை விரல்கள்

தீபச் சுடரொளி
பிரதிபலிக்கும்
உனது முகம்

பிரிவின் துயர் காட்டிய
கண்ணீர்த் துளிகள்

மணி ஒலிக்கையில்
கோபுரத்திலிருந்து
சடசடத்து எழும் பட்சிகள்
மௌனத்தில்
அமர்கின்றன
மீண்டும்


Thursday, 28 May 2020

மாலை உரையாடல்கள் - 11

வெகு நாட்களுக்குப் பின் , ஒரு மாலை நேரத்தில் , உரையாடுவதற்காக , நானும் நண்பரும் சந்தித்தோம். 

’’பிரபு! நீங்க தொழில்நுட்பம் உண்டாக்குற மகத்தான மாற்றங்களைக் கொஞ்சம் குறைச்சு மதிப்பிடறீங்களோ?’’

‘’அப்படீன்னு நீங்க முடிவுக்கு வர என்ன காரணம்?’’

‘’உங்களுக்கு மரபு மேல தீவிரமான பிடிப்பு இருக்கு. மரபார்ந்த விஷயங்கள்ல ஈடுபாடா இருக்கறவங்க மாற்றத்தை விரும்பாதவங்களா இருப்பாங்க”

நான் என் விரிவான பதிலைச் சொன்னேன்.

ஐரோப்பாவில், தொழிற்புரட்சியின் போது எந்திரங்கள் பெரிய அளவில் கண்டுபிடிக்கப்பட்டன. மிகப் பெரிய அளவில் உற்பத்தி நிகழ்ந்தது. அதன் விளைவாக உலகத்தில் முதலாளித்துவப் பொருளியல் ஆதிக்கம் செலுத்தத் துவங்கியது. மூலதனம் ஒட்டு மொத்த உலகப் பரப்பிலும் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதை மானுடம் கண்டு கொண்டது. அந்த முதலாளித்துவப் பொருளியல் மனித இனம் பல்வேறு நோய்களை வெற்றி கொள்ள உதவியது. ஐரோப்பாவில் பல நூறு ஆண்டுகளாக மாற்றமின்றி இருந்த சமூக அமைப்பை மாற்றம் செய்ய துணை நின்றது. உலகளாவிய வர்த்தகத்தை சாத்தியம் ஆக்கியது. இவை முதலாளித்துவம் ஏற்படுத்திய நல்விளைவுகள். ஆனால் அதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் அளவில் மிகப் பெரியவை.

முதலாளித்துவம், உலகெங்கும் ஏகாதிபத்தியத்தைக் கொண்டு வந்தது. உலக வரலாற்றில் முதலாளித்துவம் கோலோச்சத் துவங்கிய பின்னரே சுரண்டல் மிக மூர்க்கமானது. மனித உழைப்பு மிக மோசமாகச் சுரண்டப்பட்டது. இயற்கை மிக அதிக அளவில் சுரண்டப்பட்டதும் முதலாளித்துவத்திற்குப் பின்னர்தான். ஆயுதப் பெருக்கம், அணு குண்டுகள், இரண்டு உலகப் போர்கள் இவை அனைத்துமே முதலாளித்துவத்தின் விளைவுகள். 

நான் இயற்கையைச் சுரண்டும் மக்களைச் சுரண்டும் தொழில்நுட்பத்தைத் தான் எதிர்க்கிறேன். மரபின் மீது ஈடுபாடு கொண்ட எவரும் தொழில்நுட்பத்துக்கு எதிராக இருக்க மாட்டார்கள். மரபு மட்டுமே சுரண்டல் இல்லாத தொழில்நுட்பத்தை உலகுக்குத் தந்துள்ளது. 

இந்திய மரபில் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி ஆகிய மருந்து முறைகள் உள்ளன. அவை எவராலும் தயாரிக்கப்படக் கூடியவை. எளியவை. அளப்பரிய பலன் தருபவை. அவை தொழிற்சாலைகளில் மட்டுமே தயாரிக்கப்பட்டு நோயாளியை அடைய வேண்டும் என்ற கட்டாயம் இல்லாதவை. உணவாகவும் மருந்தாகவும் பயன்படக் கூடியவை. பக்க விளைவுகள் இல்லாதவை. அவையும் அறிவியல்பூர்வமானவையே. 

இந்திய மரபில் மண்ணை வளப்படுத்த பாரம்பர்யமான இயற்கை உரங்கள் உள்ளன. விவசாயம் செய்யப்படும் மண்ணை அடுத்தடுத்த போகத்துக்குத் தயார் செய்ய பசுந்தாள் உரங்கள், கிடை, சாணம் ஆகியவை தயாரிக்க எளியவை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெரும் மகசூலைத் தந்தவை. பாரம்பர்யமான  தானிய வகைகள் இருக்கின்றன. விதை தானியங்களாக அடுத்த பயிரிடலுக்கு உதவக் கூடியவை. ஆனால் முதலாளித்துவம் ஆதரித்த விவசாயத் தொழில்நுட்பம் விவசாயிகளை எதிலும் சுயசார்பு இல்லாதவர்களாக ஆக்கியது. 

லாரி பேக்கர் என்ற ஆர்க்கிடெக்ட் ஒரு காந்தியர். அவர் இந்தியக் களிமண் வலிமை மிக்கது. அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கட்டுவதற்குக் கூட அவற்றைப் பயன்படுத்த முடியும். சிமெண்டின் ஆயுள் 60 ஆண்டுகள் மட்டுமே. ஐரோப்பாவில் களிமண் இல்லாததால் சிமெண்ட் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அதனை இந்தியா மீது திணிக்கின்றனர் என்று கூறுகிறார்

உலகமே வியந்த பட்டாடைகளையும் பருத்தி ஆடைகளையும் இந்திய கைத்தறி நெசவாளர்கள் நெய்தனர். இன்று அத்தகைய கோடிக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை முதலாளித்துவம் பறித்துள்ளது. 

இயற்கையைச் சுரண்டாத - மனித உழைப்பைச் சுரண்டாத - அத்தகைய சுரண்டலுக்குத் துணை போகாத தொழில்நுட்பத்தை நான் என்றுமே வரவேற்கிறேன்.

நண்பர் யோசிக்கத் தொடங்கினார்.

Monday, 25 May 2020

திருப்பம்

சமீபத்தில் எழுதிய ‘’திருப்பம்’’ சிறுகதை சொல்வனத்தில் வெளியாகியுள்ளது. அதன் இணைப்பு

திருப்பம்

ஒரு கிராமம் - சில அவதானங்கள் (2)

மகாத்மா காந்தி இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்த போது கிராமங்களை புனர் நிர்மாணம் செய்யும் முயற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டார். கதர், கைத்தொழில், சுகாதாரம் ஆகியவற்றையே அவர் வாழ்நாள் முழுவதும் பரப்புரை செய்தார். இந்திய கிராமம் என்பது மிகவும் பொதுவான ஒரு சொல். அதில் எண்ணற்ற நுண்ணிய வேறுபாடுகள் உண்டு. ஒரு நதியின் வடகரையில் இருக்கும் கிராமங்களின் வாழ்க்கைமுறைக்கும் தென்கரையில் இருக்கும் கிராமங்களின் வாழ்க்கைமுறைக்குமே வேறுபாடுகள் உண்டு. அந்த வெவ்வேறு வண்ணங்களே இந்தியாவின் ஆதார சுருதி. அந்த கிராமங்களை ஒருங்கிணைத்ததன் மூலமே உலகின் மகத்தான பல சாம்ராஜ்யங்கள் இந்த மண்ணில் உருவாகி மக்கள் நலம் பேணும் ஆட்சியை - திட்டங்களை வழங்கின. 

பல்வேறு காரணங்களால், இந்திய விடுதலைக்குப் பின், எந்திரப் பெருக்கத்தின் மீது தீவிரமான நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே பெருமளவில் அதிகாரத்தில் இருந்தனர். அவர்களுக்குத் தொழிற்சாலைகள், பெரும் நுகர்வு, பண்ட உற்பத்தி ஆகியவற்றின் மீதே நம்பிக்கை இருந்தது. முற்றிலும் ஐரோப்பிய பாணியிலான திட்டங்களையே அவர்களால் சிந்திக்க முடிந்தது. ஆச்சார்ய வினோபாவே, ஜே.சி.குமரப்பா போன்ற காந்தியவாதிகள் திட்டமிடும் இடத்திலும் வழிகாட்டும் இடத்திலும் இருந்திருக்கவில்லை என்பது இந்தியாவின் துரதிர்ஷ்டங்களில் பெரியது. 

நாம் சுதந்திரம் அடைந்த போது, பிரிட்டிஷாரால் முற்றிலுமாக பொருளாதார ரீதியில் சுரண்டப்பட்டிருந்தோம். வறுமை அரசாங்கத்தின் ஆகப் பெரிய சிக்கலாக இருந்தது. மக்களை மதம், சாதி, இனம் ஆகியவை பிரித்திருந்தன. இவற்றிலிருந்து நாட்டை மீட்க எந்திரப் பெருக்கமே ஒரே வழி என அரசாங்கம் நம்பியது. அதனை பிரச்சாரம் செய்யவும் செய்தது. தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் எந்திரங்கள் அதன் முதலாளிகளுக்கும் விற்பனை வலைப்பின்னலுக்குமே பெரும் பயன் தரும். அதன் கடைசி முனையில் இருக்கும் நுகர்வோருக்கு அது பயனை மட்டுமே தருமா என்பது உறுதியில்லாத ஒன்று. 

இந்திய கிராமங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கியவை. அவற்றின் பாரம்பர்யமான முறைகள் மீண்டும் புழக்கத்துக்கு வர வேண்டும். மரபுக்குத் துணை நிற்கும் வலு சேர்க்கும் தொழில்நுட்பமே இன்றைய இந்தியத் தேவை.


Sunday, 24 May 2020

ஒரு கிராமம் - சில அவதானங்கள்

காவிரி டெல்டா கிராமம் ஒன்றில் பத்து நாட்களாக ஒரு சமூக ஆய்வை மேற்கொண்டிருந்தேன். நாளின் பெரும் பகுதி அங்கேயே இருந்தேன். அப்போது என் மனம் கண்ட உணர்ந்த விஷயங்களை இங்கே பதிவு செய்கிறேன். 

1. எல்லா இந்திய கிராமங்களுக்கும் ஒத்த விஷயங்கள் பல இருக்கின்றன. பெரிய சிறிய வேறுபாடுகளும் உள்ளன. மழைப்பொழிவும் பாசன வசதியுமே ஒரு இந்திய கிராமத்தின் அடிப்படையை உருவாக்குகிறது. எனினும் இந்தியாவின் வறண்ட நிலப்பகுதியில் உள்ள எத்தனையோ கிராமங்கள் எவ்வளவோ சாதித்துள்ளன.

2. ஒவ்வொரு கிராமத்துக்கும் பாரம்பர்யமான அறிவு என்பது இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துள்ளது. அந்த நுண்ணறிவே அவற்றை வாழ வைத்துள்ளது. அந்த அறிவு நம் பண்பாட்டிற்கு அடிப்படையானது. அது முழுமையாக மீட்டெடுக்கப்பட வேண்டும். 

3. நவீனத் தொழில்நுட்பம் தேவையானது. ஆனால் பாரம்பர்யமான எந்த அறிவை நவீனத் தொழில்நுட்பம் பதிலீடு செய்கிறது என்பது மிக கவனத்துடன் உற்று நோக்கப்பட வேண்டியது. 

4. ஒரு கிராமம் எல்லா விதமான உயிர்களுக்கும் வாழிடமாயிருப்பது என்பது இந்தியாவின் பண்பு. பூச்சிகள், பறவைகள், பிராணிகள், பட்சிகள் என அனைத்தும் அடங்கிய உயிர்ச்சூழல் ஒரு இந்திய கிராமத்தின் அடிப்படை. 

5. நுண்ணுயிர்கள் செறிந்த கிராமத்தின் மண் என்பது இந்தியாவின் மிகப் பெரிய சொத்து. கிராமத்து மண்ணைச் செறிவூட்ட பாரம்பர்யமான பல முறைகள் உள்ளன. ரசாயன உரங்களே கதி என நினைப்பதும் செயல்படுவதும் கிராம வருவாயின் உபரியை கிராமத்துக்கு வெளியே வாரிக் கொடுப்பதே. 

6. இந்திய கிராமங்களுக்கான செயல்முறைகளை மகாத்மா காந்தியின் சொற்களிலிருந்தே முற்றும் அறிய முடியும். உடல் உழைப்பை அவர் அனைவருக்கும் கட்டாயமாக்கியது என்பது இந்திய கிராமங்கள் பற்றிய புரிதலிலிருந்தே. 

7. பிரிட்டிஷ் ஆட்சியின் பொருத்தமற்ற வரி முறைகள் இந்திய விவசாயத்தையும் நெசவையும் பெரும் இடரில் தள்ளின. அதன் கருநிழல் இன்றளவும் தொடர்கிறது. 

8. மெக்காலே கல்வி முறைக்கும் இந்திய கிராமத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அதுவே கல்வி என ஒவ்வொரு இந்திய கிராமத்தினரும் எண்ணுகின்றனர். அதுவே தங்கள் வாழ்வை மாற்றும் என நம்புகின்றனர். அது அழிவையே கொண்டு வந்துள்ளது. அது சாதித்தது சொற்பமே.

9. சமயம், வாழ்க்கைமுறை, வழிபாடு ஆகியவை சார்ந்த கல்வி கிராமங்களுக்குக் கிடைக்க வேண்டும். ஒரு தொன்மையான சிவாலயம் திகழும் கிராமம் ஒன்றில் நிச்சயமாக தேவாரமும் திருவாசகமும் திருப்பாவையும் பயிற்றுவிக்கப்பட வேண்டும். அவை கிராமங்களிலிருந்தே எழுந்தன. அவற்றின் உணர்வுகளை ஒரு கிராமத்தைச் சேர்ந்த மனத்தால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். 

10. கிராமங்களில் உற்பத்தியைப் பெருக்க தேவையான உதவிகளைச் செய்வதே அரசாங்கத்தின் பணி. பிரிட்டிஷ் நிர்வாக முறை என்பது இந்திய கிராமங்களைச் சுரண்டுவதற்காக உருவாக்கப்பட்டது. அதன் அரசூழியர் வேலைமுறைக்கு மாற்றாக - கிராமத் தன்னிறைவுக்காக உதவும்- ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

11. உழைக்கும் கரங்களே இந்திய கிராமத்தின் பலம். அவர்கள் உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் சமூக இயங்குமுறையே இந்தியாவுக்கானது. 

12. ஒரு கிராமத்தில் வாழும் மக்கள் ஒற்றுமைப்படுத்தப்படுவதே ஒரு அரசு கிராமத்துக்குத் தரும் நல்ல ஆட்சியாக இருக்க முடியும்.

Thursday, 21 May 2020

எங்கே இருக்கிறாய்
மலர்ச்சிரிப்பின் மலர்களை புவியெங்கும் காண்கிறேன்
மௌனத்தின் மேகங்கள்
பொழிகின்றன
நிலமெங்கும்
கடலலைகளில் நுரைக்கும் உற்சாகம்
காற்றின் ஈரம்
தெள்ளிய வானம்
அகத்தைத் தேடுபவன்
மரத்தடியில்
விழி மூடி அமர்ந்திருக்கிறான்

Wednesday, 20 May 2020

நீயே உலகம்

எத்தனையோ மனித முகங்களில்
உணர்வின் விழிநீர்த் துளிகளில்
வாசலில் குழுமும் பட்சிகளில்
பிராணிகள் காட்டும் நேசத்தில்
ஆறுதல் பெற்று அமைதியுறும் அகத்தில்
ஓயாத கடலலைகளில்
காற்றுடன் அசையும் நீண்ட மரங்களில்
மெல்ல மிக மெல்ல
வருகை தரும் காலைகளில்
உதயத்தின் சிவப்பு சூரியனில்
அந்தியில் எழும் இளநிலவில்

தினம் தினம்

நிகழ்கிறது

நின்
விஸ்வரூபம்

Tuesday, 19 May 2020

கிராமியப் பொருளாதாரம்

சில வருடங்களுக்கு முன்னால், ‘’ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை - செவ்வியல் பொருளாதாரத்தின் வரலாறு’’ என்ற நூலை வாசித்தேன். அந்நூலின் துவக்கத்தில் இவ்வாறு கூறியிருப்பார்கள் : ’’இது பொருளாதாரம் குறித்தது. பணம் எவ்வாறு இயங்குகிறது - எங்ஙனம் மதிப்பு பெறுகிறது என்பதைப் பொறுத்தது. பணம் ஏற்படுத்தும் விளைவுகளால் உண்டாகும் அநீதி பொருளாதாரம் என்ற பிரிவின் கீழ் வராது. இதனை ஏற்றே பொருளாதாரம் குறித்து மேலும் பேச முடியும். எளிமையாக வாழும் ஒருவனைக் காட்டிலும் ஊதாரியே பலவிதமான செலவு செய்து பண சுழற்சியை உண்டாக்குகிறான். ஊதாரித்தனம் தவறு என்பது நீதி - சட்டம் - சமூகவியல் சார்ந்தது. பொருளாதாரம் பணத்தின் இயங்குமுறையை மட்டுமே கணக்கெடுக்கும்.’’ எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பொருளாதாரத்தின் இந்த Disclaimer யாருக்குமே அதிர்ச்சி தரக் கூடும். 

உலகில் இன்று வலுவான பொருளாதாரங்களாக இருக்கும் பல ஐரோப்பிய நாடுகள் 17ம் நூற்றாண்டுக்குப் பின்னரே தலையெடுத்தவை. அமெரிக்கா 20ம் நூற்றாண்டிலேயே பெரிய சக்தியானது. ஆனால் இந்தியா குறைந்தபட்சம் 4000 ஆண்டுகளாக உலகின் பெரிய பொருளாதார சக்தியாக விளங்கி வந்திருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் இங்கிலாந்தால் மிக மோசமாக சுரண்டப்பட்ட போது கூட, இந்தியா பெரிய அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாகவே இருந்திருக்கிறது. இன்றும் இந்தியா உலகின் முக்கியமான பொருளாதாரமே.

ஐரோப்பாவும் அமெரிக்காவும் மனித உழைப்பைச் சுரண்டுவதன் மூலம் செல்வ வளம் மிக்க நாடுகளாக ஆயின. இந்தியா மனிதநேயம் மிக்க பொருளியலையே தனது இயங்குமுறையாக பல ஆயிரம் ஆண்டுகள் கொண்டிருந்தது. இன்று மாற்றங்கள் இருப்பினும், மிகச் சிறு அளவில் அம்முறை நீடிக்கவே செய்கிறது.

இந்தியா வெவ்வேறு விதமான வாழ்க்கைச்சூழல்களைக் கொண்ட நாடு. அதனால் லட்சக்கணக்கான சமூகப் பழக்கங்களைக் கொண்டிருக்கிறது. இங்கே கடலோரத்தில் வாழும் பெரும் சமூகம் உண்டு. ஏரியோரத்தில் வாழும் சமூகங்கள் உண்டு. காட்டையொட்டி வாழும் மக்கள் உண்டு. மலைப்பிரதேசத்தில் வாழ்பவர்கள் உண்டு. ஆற்றையொட்டி வாழ்பவர்கள் உண்டு. பாலை நிலங்களில் வாழ்பவர்கள் உண்டு. பனி பொழியும் மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் உண்டு. அவர்கள் அனைவருக்கும் ஒரு பொதுவான பண்பாடு உண்டு. இங்கே ‘’பண்பாடு’’ என்ற சொல்லை ‘’மதம்’’ என்ற சொல்லுடன் இணைத்துக் குழப்பிக் கொள்கிறார்கள். வயதில் மூத்தவர்களை மதித்தல், முன்னோடிகளின் நினைவைப் போற்றுதல், குழந்தைகளைக் கொண்டாடுதல், பெண்களை மதித்தல், இயற்கையை இறை வடிவமாய் காணல், சக மனிதர்களுக்கு உதவி செய்தல், எல்லா உயிர்களிடத்தும் கருணையுடன் இருத்தல், சொல்லும் செயலும் ஒன்றென இருத்தல் ஆகியவை இந்திய சமூகங்கள் பேணிய பண்பாடுகள். அவை இன்றும் தொடர்கின்றன. இந்தியப் பண்பாடு என்பதை அவற்றை அடிப்படையாய்க் கொண்டு எழுந்ததே. அவற்றை சமயங்கள் ஏற்ற போது அவை வெவ்வேறான சடங்குகளாயின. எந்த சமூகமும் ஒரு விழுமியத்தை தலைமுறைகளின் நினைவில் சடங்குகளாகவே பதிக்க இயலும். இங்கே சடங்குகளோ சமயமோ ஒரு பண்பாட்டை உருவாக்கவில்லை. பண்பாடே சமயத்தையும் சமூகங்களையும் உடுவாக்கியது. இன்னும் சரியாகச் சொல்லப் போனால் பண்பாடே எல்லா இந்திய சமூகங்களையும் இணைத்தது; இப்போதும் இணைக்கிறது. உலகில் இது ஒரு மேலான வழிமுறை.

இந்தியப் பண்பாடு மானுடனுக்கு அளிக்கக் கூடிய எல்லா சலுகைகளையும் எப்போதும் அளித்தவாறே இருக்கிறது. அவன் எந்த நிலையிலும் தன்னுடைய சூழலுக்கு அன்னியப்பட்டு விடாமல் இருக்க செய்ய வேண்டிய அனைத்தையும் செய்கிறது. இங்கே மரத்தை வழிபடுவர்கள் உண்டு. பிராணிகளை வழிபடுபவர்கள் உண்டு. வானத்தை வழிபடுபவர்கள் உண்டு. இந்தியா யாரையும் எதற்கும் கட்டாயப்படுத்துவதில்லை என்பதே உண்மை. நியதிகள் சமூகத்தில் ஒழுங்கும் கட்டுப்பாடும் திகழ உருவானவையே என்பதை இந்தியா புரிந்து வைத்துள்ளது. அதனாலேயே எல்லா விதமான விதிவிலக்குகளையும் அனுமதிக்கச் செய்கிறது.

கிராமம் தன்னளவில் ஒரு அலகு. அதில் வேதியர்கள், பூசாரிகள், விவசாயிகள்,ஆநிரை மேய்ப்பவர்கள், கொல்லர்கள், தச்சர்கள், குயவர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் வசித்தனர். கிராமத்தின் ஒட்டு மொத்த தொழில் விவசாயம். விவசாயத்தில் நெல், காய்கறிகள்,  கால்நடைகள், பழங்கள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவை அடங்கும். ஒரு கிராமம் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி அங்கு உற்பத்தியாகும் உணவுப்பொருளாகவே செலுத்தப்படும். அந்த உணவுப்பொருள் அரசூழியர்களுக்கு ஊதியமாக அளிக்கப்படும். கிராமத்தில் ஒவ்வொரு விவசாயியுமே அக்கிராமத்தில் ஆலயத்துக்கு தனது உற்பத்தியில் ஒரு பங்கை வழங்குவார். ஆலயத்தைச் சார்ந்து வாழ்வோர் தங்கள் ஊதியமாக அதனைப் பகிர்ந்து கொள்வார்கள். ஆலய வழிபாடு கிராமத்தை ஒருங்கிணைக்கும். பெரு தெய்வங்கள், சிறு தெய்வங்கள், காவல் தெய்வங்கள் என அனைத்தும் வழிபடப்படும். அனைத்து தெய்வ ஆலயங்களுக்கும் கிராம உற்பத்தியின் ஒரு பகுதி கிடைக்கும். இது பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வரும் பழக்கம். இன்னும் இதன் அடிப்படை வடிவம் அப்படியே இருக்கிறது. ஒரு கிராமத்தின் உபரி உற்பத்தி வெளியில் எடுத்துச் செல்லப்பட்டு விற்பனையாகும். தன்னளவில் ஒரு கிராமம் தன்னிறைவு பெற்றிருக்கும். இங்கே நெல் என்பதற்குப் பதிலாக, சோளம், கம்பு, கேழ்வரகு, கோதுமை என்பதாக இந்தியா முழுதும் பிராந்தியத்துக்கு பிராந்தியம் மாறுபடும். மற்றபடி ஒரே சித்திரம் தான்.

இன்று விவசாயிகள் விதைநெல்லைக் கூட ஊருக்கு வெளியில் வாங்க வேண்டிய நிலை இருக்கிறது. விதைநெல்லைக் கூட சேமித்து வைக்கச் சொல்லாத ஒரு சமூக ஏற்பாட்டுக்குள் அவர்கள் கட்டாயமாகத் தள்ளப்பட்டுள்ளனர். பயிருக்குத் தேவையான உரம் ஊருக்கு வெளியே நகர்ப்புறங்களிலிருந்து வாங்கி நிலத்தில் இடுகின்றனர். கிராமத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு அவர்கள் உருவாக்கிய இல்லங்கள்
( களிமண்ணால் கட்டப்படும் வீடுகள் பல நூற்றாண்டுகள் தாங்கக் கூடியவை. சிமெண்ட் கட்டிடத்தின் வலிமை 60 ஆண்டுகளே.) இன்று இல்லாமலாகி வீடு கட்டுவதற்கான மூலப்பொருட்களை ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து பெறுகின்றனர். ஒட்டு மொத்த இந்திய கிராமத்தின் உபரி வருவாய் பல விதங்களிலும் சுரண்டப்படுகிறது.

மகாத்மா தனது ‘’ஹிந்த் ஸ்வராஜ்’’ நூலில் இந்தியாவின் மரபான அடிப்படைக் கட்டமைப்பை மீளச் செய்வது குறித்து பேசுகிறார்.

அது பலவிதங்களிலும் மீட்டெடுக்கப்பட வேண்டும். 


Thursday, 14 May 2020

ராஜாஜியின் ஜெயில் டைரி

சமீபத்தில், ராஜாஜியின் ஜெயில் டைரி என்ற நூலை வாசித்தேன். 1920களில், ஒத்துழையாமை இயக்கத்தின் போது ராஜாஜி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் சிறையில் தனக்குத் தோன்றும் எண்ணங்களையும் தனது அன்றாடச் செயல்களையும் ராஜாஜி எழுதி வைக்கிறார். அது ராஜாஜியின் சீடரான சின்ன அண்ணாமலையின் தமிழ்ப் பண்ணை பிரசுரம் மூலம் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளிவந்தது. அதன் சில பகுதிகள் மொழிபெயர்ப்பு மேலும் சீராக்கப்பட்டு ‘’கல்கி’’யில் வெளிவந்திருக்கிறது. அதன் தொகுப்பே ‘’ராஜாஜியின் ஜெயில் டைரி’’.

மிக மோசமாக சிறை பராமரிக்கப்படுகிறது. அரசியல் கைதிகள் குற்றவியல் தண்டனை பெற்ற சிறைக் கைதிகளுடன் ஒன்றாக வைக்கப்படுகின்றனர். சிறை அதிகாரிகள் சாதாரண மருத்துவ வசதிகளைக் கூட செய்து தர விருப்பமில்லாமல் இருக்கின்றனர். ராஜாஜியின் உடல்நிலை அவ்வப்போது சீர்கேடாகிறது. ராஜாஜி அதனை ஆத்ம சோதனை என்று எடுத்துக் கொள்கிறார். எந்த சோதனையையும் சத்யாக்கிரகி வெற்றிகரமாகக் கடப்பான் என தனக்குத் தானே உறுதியாக சொல்லிக் கொள்கிறார் ராஜாஜி. செய்தித்தாள் கூட தரப்படுவதில்லை. அத்தகவலை மகாத்மா காந்திக்கு எழுதும் கடிதத்தில் ராஜாஜி சாதாரணமாகக் குறிப்பிடுகிறார். ராஜாஜிக்கு எழுதும் பதில் கடிதத்தில், ‘’அது மிகவும் நல்ல விஷயம்; வெளி உலக பாதிப்பு இன்றி சிறை வாழ்வில் அகத்துக்குள் ஆழ்ந்து செல்ல அது மிக உதவும்’’ என்று பதில் எழுதுகிறார் காந்தி.

சக கைதிகள் மோசமாக நடத்தப்படும் போது மிகவும் வருந்துகிறார் ராஜாஜி. காந்தியைக் குறித்தும் சுதந்திரப் போராட்டம் குறித்தும் எப்போதும் எண்ணியவாறு இருக்கிறார்.  காங்கிரஸ் காந்தியால் மட்டுமே வழிநடத்தப்பட வேண்டும் என்று உறுதியாக நம்புகிறார் ராஜாஜி.