Thursday, 29 June 2023

இறைவன்

எளிமையானது
தொட்டு கடந்து செல்லும்
இச்சிறுகாற்று
இனியது
நண் பகலில்
ஒலிக்கும் 
மாமரக் குயிலின் இசை
முகர்ந்து முகந்து
புதிய பொருட்களை 
உணர்ந்து கொள்ளும்
வீதியில்
பிறந்து சில வாரங்கள் ஆன
நாய்க்குட்டிகளுக்கு
உலகம்
நூதனங்களின்
முடிவிலா வெளியாக
இந்த 
பெரிய உலகில்
சுழலும் கோள்கள்
விண்மீன்கள்
நிறைந்த வெளியில்
சிறு 
மிகச்சிறு
பரப்பில்
மண்ணில் வேரூன்றித்
துளிர்க்கும் 
தளிர்தான்
எத்தனை
மகிழ்ச்சி கொண்டிருக்கிறது
இறைவனென 

Wednesday, 28 June 2023

திறனும் தொலைநோக்கும்

 

இன்று முன்னாள் பாரதப் பிரதமர் திரு. பமுளபர்த்தி வெங்கட நரசிம்ம ராவ் அவர்களின் பிறந்த தினம். 

அவரது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை இன்று நினைவுகூர்கிறேன். 

ஆந்திர மாநிலத்தின் நிதி அமைச்சராக இருக்கிறார் ராவ். அவருடைய குடும்பம் பல தலைமுறைகளாக மிகப்பெரிய ஜமீன் குடும்பம். அவர் குடும்பத்துக்குச் சொந்தமாக பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. ஆந்திராவில் நிலச் சீர்திருத்த சட்டங்கள் கொண்டு வரப் பட வேண்டும் என எண்ணுகிறார் ராவ். அவ்வாறு அவர் செய்ய வேண்டும் என எவ்விதமான புற அழுத்தமும் கட்சியிலிருந்தோ ஆட்சியிலிருந்தோ அவருக்கு அளிக்கப்படவில்லை. மக்கள் நலனுக்கு நிலச் சீர்திருத்தம் தேவை என ராவ் எண்ணுகிறார். சொல்லப் போனால் கட்சியிலிருந்தும் ஆட்சியிலிருந்தும் நிலச் சீர்திருத்தங்களை முடிந்த அளவு தள்ளி வைக்கச் சொல்லியே அவரிடம் கூறப்படுகிறது. 

மக்கள் நலன் கருதி ராவ் நிலச்சீர்திருத்த சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தி அதனை சட்டமாக்கினார். அதனால் அவருடைய குடும்பத்துக்கு சொந்தமான பத்து கிராமங்கள் முழுமையும் அவர்கள் இழக்க நேரிட்டது. 

ஓர் அரசியல்வாதி இவ்வாறு செயல்பட்டதைப் புரிந்து கொள்ளவே குறிப்பிட்ட நுண்ணுணர்வு தேவை. 

ராவ் நாட்டு மக்களை நேசித்த ஒரு தலைவர். அவர் நாட்டுக்கு ஆற்றிய பணிகள் மேலும் பல ஆண்டுகளுக்கு நினைவுகூரப்படும். 

உள்ளும் புறமும்

 என்னுடைய வாழ்நிலமாகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் கிராமங்களில் பேரூராட்சிகளில் நகரப் பகுதிகளில் அரசியல் கட்சியினர் அனேகம் பேர் இருப்பார்கள். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். வீதிகளில் கொடிக் கம்பம் அமைத்து கொடி ஏற்றுபவர்கள், சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள், மாநாடு என்றால் வாகனம் ஏற்பாடு செய்து ஆதரவாளர்களை அழைத்துச் செல்பவர்கள், தேர்தல் காலங்களில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பவர்கள் என பலவிதமான பணிகளை அவர்கள் மேற்கொள்வார்கள். இவர்களில் கட்சி உறுப்பினர் அட்டை பெற்றிருப்பவர்கள் உண்டு. உறுப்பினர் அட்டை என்பது கட்சி அரசியலின் நுழைவு என அறியாதவர்களும் உண்டு. இவர்கள் அனைவருமே பெரும்பாலும் சாமானியர்கள். கட்சியிலோ அதிகாரத்திலோ எந்த பொறுப்பிலும் இல்லாதவர்களாக இருப்பார்கள். எனினும் இவர்கள் அனைவருக்குமே மானசீகமாக அதிகாரத்துக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். 

ஒரு கிராமத்தின் மக்கள்தொகை 4000 என இருக்கிறது என வைத்துக் கொள்வோம். டெல்டா மாவட்டங்களில் ஒரு கிராமத்தில் 5 அல்லது 6 கட்சிகள் இருக்கும். ஒவ்வொரு கட்சியுமே அந்த கிராமத்தில் 15 லிருந்து 20 பேரை மட்டுமே உறுப்பினர்களாக வைத்திருப்பார்கள். இந்த எண்ணிக்கையையும் பரவலாக இருக்கும் 6 கட்சிகளில் 3 கட்சிக்கு மட்டுமே இருக்கும். மற்ற மூன்று கட்சிகளில் அந்த எண்ணிக்கையும் குறையும். இந்த 15 லிருந்து 20 பேரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் இரண்டு அல்லது மூன்று தனித்தனி குழுக்களாக இருப்பார்கள். ஒரே கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்கும் இணக்கத்தை விட விலக்கமே மிகுந்திருக்கும். 

மகாத்மா காந்தி காங்கிரஸை வழிநடத்திய போது கட்சியில் ஒவ்வொரு கிராமத்திலும் மிக அதிக எண்ணிக்கையில் சாமானிய மக்களை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என விரும்பினார். கட்சி உறுப்பினர்களின் ஆண்டு சந்தாவாக ‘’நாலணா’’ ( 25 பைசா) வை நிர்ணயம் செய்தார். கட்சியின் சாமானிய உறுப்பினனுக்கும் ஜனநாயகமும் சமூக நெறிகளும் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என விரும்பினார். குடிகள் சமூகங்களாக ஒருங்கிணைவதற்கான பயிற்சியை கட்சி தன் தொண்டர்கள் அளவில் முதல் கட்டமாக பயிற்றுவிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்தார். 


 

Tuesday, 27 June 2023

போற்றலும் தூற்றலும்

 இளைஞனாக இருந்த நான் கட்டுமானத் தொழிலுக்கு வந்தேன். கட்டுமான இடத்தில் தொடர்ந்து ஏதேனும் செயல்கள் நடந்து கொண்டே இருக்கும். பலவிதமான ஆட்கள் இருப்பார்கள். பணியில் முழுமையான ஈடுபாட்டை செலுத்திக் கொண்டு பொறுப்பேற்று பணி செய்பவர்கள் , அன்றைய தினத்தின் பாடு என குறைவான ஈடுபாடு கொண்டு வேலை செய்பவர்கள், நேர உணர்வு மிக்கவர்கள், நேர உணர்வே இல்லாதவர்கள், தகவல் தொடர்பு இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்பவர்கள் , தகவல்களைப் பரிமாறிக் கொள்வதன் முக்கியத்துவத்தை உணராதவர்கள், உண்மையை மட்டுமே பேசுபவர்கள், உண்மைக்கு மாறானதையும் அவ்வப்போது பேசுபவர்கள் என பலவிதமான ஆட்கள் இருப்பார்கள். அவர்களுடன் தான் பணி செய்ய நேரும். உண்மையில் சில நாட்களில் எனக்கு இவ்விதமான இயல்புகளை பார்த்ததும் அறியும் தன்மை வந்து விட்டது.  கட்டுமானத் தொழிலில் விரும்பாத குணங்கள் கொண்டவர்கள் இருந்தால் கூட அவர்களை முற்றிலும் விலக்கி விட மாட்டார்கள். அவர்களுக்கு மேலும் மேலும் தங்களைத் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு தருவார்கள். ஒரு கட்டுமான இடத்தில் பணி புரியும் ஒருவரை குறைந்த பட்சம் அந்த இடத்தில் பணி முடியும் சில மாதங்களுக்காவது பணியிலிருந்து நீக்காமல் இருப்பார்கள். வேலை முழு வீச்சில் நடைபெறும் போது இத்தகைய மனிதக் குறைபாடுகள் அந்த வீச்சின் வேகத்திலேயே மிக மிகச் சிறியதாகி விடும். கட்டுமானத் தொழில் முழு வீச்சில் செயலாற்றுக என்னும் பாடத்தையே எப்போதும் போதிக்கும். நிறைகளைப் பெருக்கி குறைகளை இல்லாமல் ஆக்கிக் கொள்ள ஆகச் சிறந்த வழியும் அதுவே. 

மனிதர்களை அவர்கள் இருக்கும் நிலையில் ஏற்றுக் கொள்வது என்பதும் ஆற்ற நினைக்கும் பணிகளை நோக்கி முழு விசையுடன் முன்னேறிச் செல்வது என்பதும் எனது வழிமுறைகள். உடன் இருப்பவர்கள் உள்ளம் கூட நமக்கு எதிராகத் திரும்பக் கூடும். அதற்கான காரணங்கள் எண்ணற்றவை. அவை ஒவ்வொன்றின் பின்னாலும் சென்று ஆராய்ந்து கொண்டிருப்பது என்பது நேர விரயம் அன்றி வேறல்ல. 

ஒரு மனிதன் உள்ளதைச் சொல்கிறானா உள்ளதை மாற்றிச் சொல்கிறானா என்பதை கட்டுமானத் தொழிலில் இருப்பவர்கள் மிக எளிதில் உய்த்தறிந்து விடுவோம். அது பல வருட அனுபவத்தின் விளைவு. யாரேனும் உள்ளதை மாற்றிச் சொல்லி திட்டமிட்டு ஒரு விஷயத்தை குறிப்பிட்ட சில திசைக்கு நினைத்தால் உள்ளுணர்வில் ஒரு சலனம் ஏற்பட்டு மனதை எச்சரிக்கை செய்து விடும். அத்தகைய தருணங்களைக் கடந்து செல்வதற்கு எளிய மற்றும் உபயோகமான வழி எதுவும் பேசாமல் மௌனமாய் இருந்து விடுவது. 

தந்திரம் மிக்கவர்களிடம் உரையாட நேரும் போது பெரும்பாலும் மௌனமாக இருந்து விடுவது என்பது நல்ல வழிமுறை. அவர்களிடமிருந்து சற்று விலகியிருப்பது  அதனினும் சிறந்த வழிமுறை.

‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து பேசப்படும் போது பேசும் பலருக்கு ‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து மாற்று கருத்துக்கள் இருக்கும் ; விமர்சனங்கள் இருக்கும் ; நக்கல் நையாண்டி கூட இருக்கும். அவர்கள் பார்ப்பதை அவர்கள் முன்வைப்பார்கள். நான் மௌனமாக கேட்டுக் கொள்வேன். இவ்வாறெல்லாம் தங்களை அவர்கள் வெளிப்படுத்திக் கொள்வது அவர்கள் மகிழ்ச்சி எனின் அவர்கள் அதனை அடைந்து விட்டு போகட்டும் என்றே நான் எண்ணுவேன். 

நாம் பாராட்டப்படும் போது நாம் அதனை ஏற்றுக் கொள்கிறோம் என்னும் போது சிலர் நம்மைத் தூற்றினால் அதனையும் இயல்பாக எடுத்துக் கொள்வதே நன்மை தரும். போற்றலும் நமக்கானதல்ல தூற்றலும் நம்மைச் சேர்வதல்ல என்னும் விவேகம் உண்டாகுமாயின் எத்தகைய சூழலையும் எதிர் கொள்ள அது பேருதவி புரியும். மனிதர்களை இணைக்க விரும்புபவர்களுக்கான நல்வழியும் அதுவே. 

Sunday, 25 June 2023

இருளிலிருந்து ஒளிக்கு

 1975ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி இந்தியாவில் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டது. இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. அடிப்படை உரிமைகளில் ஒன்று எந்த இந்தியக் குடிமகனுக்கும் இந்திய நிலத்தில் உயிர் வாழும் உரிமை உண்டென்பது. அதாவது எந்த இந்தியக் குடிமகனின் உயிர் வாழும் உரிமையையும் பாதுகாக்க இந்திய அரசியல் சட்டம் பொறுப்பேற்றுள்ளது என்பது அதன் பொருள். நெருக்கடி நிலையின் போது எல்லா அடிப்படை உரிமைகளும் முடக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதன் அர்த்தம் என்னவெனில் இந்தியக் குடிமக்களின் உயிர் வாழும் உரிமை என்பதும் அரசாங்கத்தால் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறது என்பதே. இதை விட ஒரு மிக மோசமான கொடிய நிலை இருக்க வாய்ப்பில்லை. 

ஆளும் கட்சியின் மீது விமர்சனம் இருந்த அனைத்து அரசியல் தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். பத்திரிக்கைகள் அனைத்தும் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு அரசாங்கம் விரும்பும் செய்திகளே வெளிவர முடியும் என்ற நிலை. 

இந்தியாவில் அரசாங்கம் என்பது இந்திய சமூகத்தின் மிகச் சிறு பகுதியே. நுண்மதி கொண்ட ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் அதனை அறிவார்கள். இலட்சக்கணக்கான கிராமங்களில் வேர் கொண்டிருக்கும் ஒரு நாட்டை  அதிகாரவர்க்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஆண்டிட முடியாது. 

இந்தியாவின் நடுத்தர வர்க்க , கீழ் நடுத்தர வர்க்க இளைஞர்கள் நெருக்கடி நிலைக்கு எதிராக தலைமறைவு இயக்கத்தை முன்னெடுத்தனர். நாட்டில் எந்த மூலையில் எந்த அத்துமீறல் அரசாங்கத்தால் நடந்தாலும் தலைமறைவு இயக்கத்தின் தொடர்பு சங்கேத வலை மூலம் நாடெங்கும் அந்த செய்தி மக்களைச் சென்றடைந்து கொண்டே இருந்தது. அந்த இளைஞர்கள் முக்கியமானவர்கள். அவர்களின் தியாகம் மகத்தானது. சாமானிய குடிமகன் உச்சபட்ச ஆட்சியாளனுக்கு சமமானவன் என முன்வைக்கும் ஜனநாயகம் என்ற உணர்வின் வரலாறு எழுதப்படும் போது அந்த வரலாற்றில் இந்தியாவின் நெருக்கடி நிலையை எதிர்த்து நின்ற அந்த இளைஞர்களின் தியாகம் அதில் குறிக்கப்பட்டிருக்கும். 

அதிகாரத்தின் வெற்றுக் கூச்சல்களுக்கும் கூப்பாடுகளும் கேட்டுக் கொண்டிருந்த போது இந்தியாவின் சாமானிய குடிகள் மௌனமாய் நோக்கிக் கொண்டிருந்தார்கள். 

சாமானியர்களின் மௌனத்தை தங்கள் வெற்றி என நினைத்த ஆட்சியாளர்கள் நெருக்கடி நிலையை விலக்கி தேர்தலை அறிவித்த போது அந்த சாமானியர்களின் மௌனம் எத்தனை அடர்த்தி கொண்டது என்பதை உலகமே வியந்து பார்த்தது. 

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடிய தலைமறைவு இயக்கத்தின் இளைஞர்களின் தியாகத்தை மீண்டும் ஒருமுறை நினைவு கூரும் தினம் இன்று.

Saturday, 24 June 2023

பெருக்கம்

 நெடுநாள் நண்பரின் மகன் இப்போது எனக்கும் நண்பனாகி விட்டான். என்னுடைய வயதில் பாதி அவனுக்கு. உடனிருந்த நாட்களில் மனதுக்கு மிகவும் நெருக்கமாகி விட்டான். 

நாளின் பெரும் பொழுது உடனிருந்த போது நான் ஏதாவது ஒரு விஷயம் குறித்து ஆரம்பிப்பேன். அடுத்த தலைமுறை அந்த விஷயத்தை எவ்விதம் அணுகுகிறது புரிந்து கொள்கிறது என்பதை அவதானிப்பேன். இருப்பினும் எப்போதும் தீவிரமான விஷயங்களாக இல்லாமல் உரையாடல் இருக்க வேண்டும் என்றும் எண்ணுவேன். 

இரண்டு தினங்களுக்கு முன்னால் எனக்கும் அவனுக்கும் ஒரு போட்டி. போட்டியை நான் தான் அறிவித்தேன். அதாவது இரண்டு பேரும் தங்கள் நினைவில் இருக்கும் திருக்குறள்களை எழுத வேண்டும். யார் அதிகமாக திருக்குறளை எழுதுகிறார்கள் என்பதை அறிவதற்காக இந்த போட்டி. நண்பன் கணிசமான திருக்குறள்களை எழுதினான். நான் அவன் எழுதியதைப் போல் இரண்டு மடங்கு குறள்களை எழுதினேன். போட்டி முடிந்த பின் எங்கள் இருவருக்கும் மேலும் பல குறள்கள் நினைவில் எழுந்தன. அப்போது எனக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. 

தமிழ்க் குடும்பங்களில் உறவினர்களும் நண்பர்களும் சந்திக்கும் போது திருக்குறள், திருப்பாவை, திருவெம்பாவை, சிவ புராணம், கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், தனிப்பாடல்கள், கம்ப ராமாயணம் ஆகிய்வற்றில் உள்ள பாடல்களை நினைவில் இருந்து ஒப்பிக்கும் எழுதும் போட்டிகளை நடத்தலாம். அவற்றில் வினாடி வினா நிகழ்ச்சி கூட நடத்தலாம். இந்த எண்ணம் எளிமையானது. எளிதில் செயல்படுத்தக் கூடியது. நமது மொழியை மக்களிடம் சகஜமாக ஆக்க இவ்வகை முயற்சிகள் உதவும். 

நம் நாட்டில் குழந்தைகளுக்கு தெய்வங்களின் பெயர்களை இடுவதே இறைவனின் நாமங்கள் மீண்டும் மீண்டும் அழைக்கப்பட்டு வீடு இறை நாமங்கள் எப்போதும் ஒலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே. இறைவனின் பெயர்களும் கீர்த்திகளும் நிறைந்த தமிழ்ப் பாடல்கள் சாமானிய மக்களின் மனத்திலும் உரையாடலிலும் இடம் பெற இது ஒரு நல்ல வழி. 


Friday, 23 June 2023

ஓர் உரையாடல்

 எனது நெடுநாள் நண்பரின் மகன் வீட்டுக்கு வந்திருந்தான். ஒரு வார காலம் இங்கு இருந்தான். கல்லூரிப் படிப்பை முடித்திருக்கும் அவனுக்கு சமூக விஷயங்கள் குறித்த அறிமுகம் இருக்க வேண்டும் என நண்பர் விரும்பினார். என்னுடன் ஒரு வார காலம் இருப்பது அவனுக்கு சமூகம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்பட உதவியாய் இருக்கும் என நண்பர் கருதினார். அவன் பிறந்த அன்று அவனை கைக்குழந்தையாக நான் மருத்துவமனையில் பார்த்தது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. இன்று பெரிய இளைஞனாக இருக்கிறான். ஒரு வார காலமாக வெவ்வேறு விதங்களில் அவனுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். இன்று என்னிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று விரும்பினான் ; சொன்னான். அது விரும்பத்தக்க விஷயம் என்பதால் கேள்விகளைக் கேட்கச் சொன்னேன். 


கே : நீங்கள் மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொள்கிறீர்கள் ? தனியாகப் பயணிக்க உங்களுக்கு விருப்பமா ? அல்லது குழுவுடன் பயணிக்க விருப்பமா?

நான் மோட்டார்சைக்கிளில் தனியாகவும் பயணித்திருக்கிறேன். நண்பர்கள் குழுடனும் பயணித்திருக்கிறேன். நண்பர்கள் குழுவுடன் பயணித்தவை அளவிலும் தூரத்திலும் சிறியவை. நீண்ட பயணங்களை தனியாக மேற்கொண்டிருக்கிறேன். 

தனியாகப் பயணிக்கும் போது நம் அகம் புதிய சூழ்நிலைகளை புதிய காட்சிகளை புதிய அனுப்வங்களை எதிர்கொள்கிறது. அவை நாம் அறியாதவற்றை நம்மை உணர வைக்கின்றன. காட்சிகளாக ஒலிகளாக அவை நினைவின் அடுக்குகளில் சென்றமர்கின்றன. அவை முக்கியமான அறிதல்கள் ஆகின்றன. 

கே : உங்கள் பயணத்தில் எழிலார்ந்த பல இடங்களுக்குச் சென்றிருப்பீர்கள். இங்கேயே இருந்து விடலாம் என எண்ணிய இடம் அல்லது இடங்கள் என ஏதேனும் உண்டா?

இந்திய அகத்துக்கு கங்கை எப்போதுமே நெருக்கமானது. அளவில் பெரியதும் பிரவாகித்தலை தன் இயல்பாகக் கொண்டதுமான அது மானுடனுக்கு காலங்காலமாக ‘’உள்ள விரிவு கொள்க’’ என்னும் தன்மையை கூறிக்கொண்டே இருக்கிறது. கங்கையைக் காணும் எவரும் கங்கையின் முன் தங்கள் உள்ளம் விரிவதை உணர முடியும். குளிர்மை நிரம்பிய அந்த நீர்ப்பெருக்கின் முன் ஒவ்வொரு மானுடனும் தன்னை மகவாக உணர்கிறான். ரிஷிகேஷ் எனக்கு மிகவும் விருப்பமான இடம். 

கர்நாடகத்தில் குதிரைமுகே என்னும் வனப்பகுதி உள்ளது. தூய காடு அது. அதுவும் மிக விருப்பமான இடம். 

கே : நீங்கள் செல்லும் இடம் இப்படி இருக்கும் என்று எண்ணிச் செல்வதுண்டா? 

இந்திய நிலம் நோக்கிச் செல்கையில் நாம் எந்த பகுதியை நோக்கிச் செல்கிறோமோ அந்த பகுதியின் இலக்கியங்களை வாசிப்பது என்பது பெரும் அளவில் உதவிகரமானது. இந்திய நிலம் என்பது வடக்கும் தெற்கும் கிழக்கும் மேற்கும் என யாத்ரீகர்களால் தொடர்ந்து பயணிக்கப்பட்டுக் கொண்டே இருந்த நிலம். கம்ப ராமாயணத்தில் ஒரு இடத்தில் கம்பன் கோதாவரியைக் குறித்து கூறும் போது ‘’சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி’’ என்கிறார். கவிதை என்பது ஒன்று பலவாக இருப்பது. கோதாவரி நதி என்ற ஒன்று நதியினும் பெரிய பல கூறுகளாலும் அம்சங்களாலும் ஆன ஒன்று என்பதை அதனைக் காண்பவர்கள் அறிய முடியும். இந்தியாவின் இதிகாசங்களும் காளிதாசனும் இந்திய நிலம் குறித்த சித்திரத்தை அளிக்க வல்லவை. தாரா சங்கர் பானர்ஜி, குர் அதுல் ஐன் ஹைதர், கிரிராஜ் கிஷோர், பைரப்பா, சிவராம் காரந்த், வெங்கடேஷ் மாட்கூல்கர் ஆகிய செவ்வியல் நாவலாசிரியர்களின் நாவல்களை வாசிப்பது அந்த பகுதி குறித்த அருவமான உள சித்திரத்தை உருவாக்கிக் கொள்ள உதவும். அவர்கள் எழுதிய நிலம் நோக்கிச் செல்கிறோம் என்னும் உணர்வே அற்புதமானது. அவை நாம் நேரில் காணும் காட்சிகளுடன் இணையும் போது மேலும் சிறப்பான அனுபவமாகும். இது என் அனுபவம். 


கே : ஏன் எழுதுகிறீர்கள் ?

என் எழுத்து எனக்கு எழுதுகிறோம் என்ற நிறைவைத் தருகிறது. அதனால் எழுதுகிறேன். 


கே : வாழ்க்கையில் உங்களை மிகவும் பாதித்த விஷயம் எது ?

உலகின் பல மனிதர்கள் வறுமையின் பிடியில் பீடிக்கப்பட்டு இருப்பது என்னை மிகவும் பாதித்த விஷயம். மானுட குலம் தன் பரிணாமத்தில் அடுத்த படிநிலைக்குச் செல்வது என்பது வறுமை அகற்றப்பட்டால் மட்டுமே நிகழ முடியும். வறுமையை அகற்ற பெருமுயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 


கே : நீங்கள் செய்ய நினைக்கும் முக்கியமான பல செயல்களில் முதன்மையானது எது ?

செயல் புரியும் கிராமத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் ஒரு சதவீதப் பரப்பில் மரப்பயிர் சாகுபடி செய்வார்களானால் அவர்களால் 15 ஆண்டுகளில் பொருளியல் தன்னிறைவு பெற முடியும். அவ்வாறு ஒரு கிராமத்தையாவது பொருளியல் தன்னிறைவு பெறச் செய்ய வேண்டும் என்பதே நான் செய்ய நினைக்கும் செயல். 

Tuesday, 20 June 2023

மரங்களின் உயிர் மதிப்பு

 உதவி வரைத்தன்று உதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து - திருக்குறள்


செய்நன்றி அறிதல் அதிகாரத்தில் மேற்கூறிய குறள் இடம் பெற்றுள்ளது. உதவியின் மதிப்பு என்பது உதவியின் அளவால் அளவிடப்படக் கூடியது அல்ல ; உதவி செய்யப்பட்டவர்களின் செம்மையான இயல்பைப் பொறுத்து அதற்கேற்ற அளவில் மதிப்பைப் பெறுவது என்பது அதன் பொருள். 

இன்று நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். அதாவது, உச்சநீதிமன்றம் முன் ஒரு வழக்கு வந்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக பொது இடங்களில் உள்ள மரங்கள் வெட்டப்படும் நிலை வரும் போது அந்த மரங்களின் மதிப்பை எவ்விதம் நிர்ணயம் செய்வது என்னும் கேள்வி எழுகையில் எவ்வகையில் நடந்து கொள்வது என்பதற்கான வழிகாட்டல்களை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இவ்வகை வழிகாட்டலை அளிப்பதற்காக உச்சநீதிமன்றம் முக்கியமான ஆறு துறைகளின் துறைச் செயலாளர்களின் அளவிலான குழுவை அமைத்திருக்கிறது. இது நிகழ்ந்த ஆண்டு 2021. அந்த குழு தனது பரிந்துரைகளை உச்சநீதிமன்றத்துக்கு அளித்துள்ளது. 

அதில் அவர்கள் மரங்கள் வெட்டப்படுகையில் மரங்களின் ‘’டிம்பர் வேல்யூ’’வை மட்டும் கணக்கெடுப்பது என்பது முழுமையானது அல்ல ; அதன் தழைகள் மண்ணுக்கு உரமாகப் பயன்படுகின்றன ; அதன் கிளைகளில் வாழும் உயிரினங்கள் மூலம் மகரந்தசேர்க்கை நிகழ்ந்து பல தாவரங்கள் முளைத்து வளர்கின்றன ; மரம் வளிமண்டலத்துக்கு அளிக்கும் ஆக்சிஜனை அளிக்கிறது ; இவை அத்தனையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் ‘’டிம்பர் வேல்யூ’’ மட்டும் கணக்கிடப்படுவது சரியான கணக்கீட்டு முறையாக இருக்காது என அக்குழு கூறியிருக்கிறது. 

ஒரு மரத்தின் வயது 100 எனில் அதன் மதிப்பு ரூபாய் ஒரு கோடி என நிர்ணயம் செய்துள்ளது அந்த குழு. ரூ. 74,500 ஐ அடிப்படை மதிப்பாக நிர்ணயித்து மரத்தின் வயது எத்தனையோ அத்தனை மடங்கு அதன் மதிப்பாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. ( உதாரணத்துக்கு ஐந்து ஆண்டு வயது கொண்ட மரத்தின் மதிப்பு ரூ. 3,72,500).

இந்த மதிப்பீடு மரங்களுக்கு மிகக் குறைந்த ‘’டிம்பர் வேல்யூ’’ நிர்ணயம் செய்து வெட்டுவதை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் மேலும் சில வழிகாட்டுதல்களையும் அளித்துள்ளது உச்சநீதிமன்றம். 

14 மரங்கள் விஷயத்திலும், பள்ளி வளாகத்தில் வெட்டப்பட்ட மரம் விவகாரத்திலும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டல் பெரிய அளவில் துணை புரியும் என்ற நம்பிக்கையை அடைந்தேன்.  


Sunday, 18 June 2023

முதன்மை மானுடன்

 இந்தியர்கள் ராமனை மகனாக சகோதரனாக குடிகளின் பிரியத்துக்குரிய இளவரசனாக குடிகளின் தந்தையாக விளங்கும் அரசனாகக் காண்கிறார்கள். விண்ணுருவன் மண் திகழ்ந்த வடிவம் என்றே அவனை இன்றும் கொண்டாடுகிறார்கள். ராமன் எத்தனை ராமன் என்னும் தீராவியப்பு இன்றும் இருந்து கொண்டே இருக்கிறது. ராமன் எண்ணற்ற வகைகளில் அணுகப்பட்டுக் கொண்டே இருக்கிறான். 

இத்தனை சிறப்புகள் இருந்தும் ராமன் மேலும் மேலும் என பரிமாணம் பெற்று மானுடத்துக்கு வெவ்வேறு வகைகளில் வழிகாட்டுகிறான். மகாத்மா காந்தி உலகில் ‘’ராம ராஜ்யம்’’ அமைய வேண்டும் என விரும்பினார். ராஜ்யத்தின் பிரஜைகளை தனது குழந்தைகளாக எண்ணும் அறத்தை முதன்மையாக முன்னிறுத்தும் அரசாட்சியையே மகாத்மா ‘’ராம ராஜ்யம்’’ என்றார்.  

சமூகங்களின் வாழ்வு மாற்றமடைந்து முன்னேற்றம் காணும் ஒவ்வொரு காலசந்தியிலும் இராமனுடைய வாழ்வு சமூகத்துக்கு ஒவ்வொரு விதத்தில் வழிகாட்டுகிறது. 

இராமன் அரசன் மட்டுமல்ல ; சாதாரண வனவாசியும் தான். தனது வாழ்வில் 14 ஆண்டுகள் ஒரு வனவாசியாக ஒரு சாதாரண பிரஜையாக வாழ்ந்திருக்கிறான். அவ்வாறு ஒரு சாதாரண மனிதனாக வாழ்ந்த காலத்தில் பெரும் துயர்களை எதிர்கொள்கிறான். எந்த மானுடனுக்கும் மிகக் கடினமான துயர்கள் அவனுக்கு நேர்கின்றன. அவற்றைத் தன் விடாமுயற்சியின் மூலம் தகர்க்கிறான். சொல்லொணாப் பெருந்துயர் அவனைச் சூழ்ந்திருக்கும் நிலையிலும் ஜடாயுவிற்கு ஈமக்கிரியைகளைச் செய்கிறான் ; சுக்ரீவனை அரசனாக்குகிறான். இலங்கையை தகுதி வாய்ந்த வீடணனுக்கு அளிக்கிறான். அவனது வாழ்வின் அரிய நிகழ்வுகளான இவற்றை நிகழ்த்தும் போது அவன் ஒரு சாதாரணக் குடிமகனே. அவ்வகையில் அவனது வாழ்வு சாமானியர்களுக்கு தங்கள் செல்திசையை உணர்த்தக் கூடியது. 

ஜனநாயகம் பிரதானமாக இருக்கும் ஒரு சூழலில் ஜனநாயக நாட்டின் குடிகள் தங்கள் கடமைகளை உணர்வதற்கு இராமனின் வாழ்வு வழிகாட்டக் கூடியது. 

இராமகதை எங்கெல்லாம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் அனுமன் இருப்பார் என்பது இந்தியர்களின் தொன்மம். சிரஞ்சீவியான அவர் இராமகதை எவ்வாறு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக மக்களுக்கு வழிகாட்டுகிறது என்பதை வியந்து நோக்கிக் கொண்டிருக்கலாம். 

இணையம் இணையாமை

 கடந்த ஒரு வாரகாலமாக எனது இணைய இணைப்பில் ஏதோ குறைபாடு. இணைப்பு சீராக இல்லை. அவ்வப்போது இணைய சேவை இணைவதும் விலகுவதுமாக இருந்தது. இன்னும் முழுமையாகச் சீரடையவில்லை. ஓரிரு தினங்களில் சீராகக் கூடும். இணைய சேவைக் குறைபாடு காரணமாக பதிவுகள் பதிவேற்ற முடியாத நிலை.