Sunday, 30 June 2024

குஞ்சமேடு

 ஊரிலிருந்து 15 கி.மீ தொலைவில் மணல்மேடு என்ற ஊர் உள்ளது. எழுத்தாளர் கல்கி பிறந்த ஊர். மணல்மேடு கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. மணல்மேட்டுக்கு வடக்கே கொள்ளிடம் ஆற்றுக்கு அப்பால் அமைந்துள்ள கிராமம் முட்டம். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் முட்டத்தையும் மணல்மேட்டையும் இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் ஒரு பாலம் கட்டப்பட்டது. 

செவிவழிச் செய்தியாக முட்டம் அருகே இருக்கும் கொள்ளிடக் கரை கிராமம் ஒன்றில் ஸ்ரீராகவேந்திர சுவாமி அதிஷ்டானம் இருப்பதாக அறிந்தேன். அங்கே செல்ல வேண்டும் என்ற ஆவல் நெடுநாட்களாக இருந்தது. அந்த ஆவலை பூர்த்தி செய்ய இப்போது வாய்ப்பு கிடைத்தது. 

முட்டத்துக்கு கிழக்கே கொள்ளிடக் கரையில் குஞ்சமேடு என்ற கிராமம் அமைந்துள்ளது. அங்கே கொள்ளிட நதிக்கரையிலேயே ஸ்ரீராகவேந்திர சுவாமி அதிஷ்டானம் அமைந்திருக்கிறது. துவைத மார்க்கத்தைச் சேர்ந்த துறவியான ஸ்ரீராகவேந்திரர் பிறந்தது சிதம்பரத்துக்கு அருகில் உள்ள புவனகிரியில். சிதம்பரம் புவனகிரி இரு ஊர்களுக்கும் பக்கத்தில் இருக்கும் ஸ்ரீமுஷ்ணம் என்ற ஊரில் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். கும்பகோணத்தில் உள்ள விஜயீந்திர தீர்த்தர் சுவாமிகளிடம் சீடனாகக் கல்வி பயின்றிருக்கிறார். தஞ்சாவூரில் பல ஆண்டுகள் தவம் புரிந்திருக்கிறார். பழைய தென்னாற்காடு பழைய தஞ்சாவூர் மாவட்டங்களில் ஸ்ரீராகவேந்திரர் வாழ்வுடன் தொடர்புடைய பல ஊர்கள் உள்ளன. அங்கெல்லாம் அதிஷ்டானங்களும் ஆலயங்களும் அமையப் பெற்று பூசனைகள் நடைபெறுகின்றன. 

120 ஆண்டுகளுக்கு முன்பு பழைய தென்னாற்காடு மாவட்டம் ( தற்போது கடலூர் மாவட்டம்) குஞ்சமேடு கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் பாத யாத்திரையாக ஸ்ரீராகவேந்திரர் ஜீவ சமாதியடைந்த மந்த்ராலயம் சென்று அங்கிருந்து அதிஷ்டானத்தின் புனித மண்ணை குஞ்சமேடு கிராமத்துக்குக் கொண்டு வந்து அதிஷ்டானம் அமைத்து பூசனை புரிகின்றனர். 

துறவியை வணங்குவதும் துறவைப் போற்றுவதும் நம் நாட்டின் சிறப்பியல்புகள். அதிஷ்டானத்தை வணங்கியது மனநிறைவைத் தந்தது.  

Saturday, 29 June 2024

நேரு குடும்ப பண்டிட்கள்

இன்று ஒரு நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்த போது நேரு குடும்பத்தில் ஜவஹர்லால் நேருவுக்குப் பின் இளநிலை பல்கலைக்கழக பட்டம் பெற மூன்று தலைமுறை ஆகியிருக்கிறது என்று நான் அறிந்திருந்த சாதாரண தகவல் ஒன்றைச் சொன்னேன். நண்பர் அதிர்ச்சி அடைந்தார். அவர்கள் குடும்பமே பண்டிதர்கள் குடும்பம் ; நீங்கள் கூறுவது பிழையான தகவல் என்றார். அவரிடம் சொன்னேன். நேரு பண்டிட் நேரு என அழைக்கப்படுவதற்குக் காரணம் அவர் ‘’காஷ்மீர் பண்டிட்’’ என்னும் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் என்றேன். அவருக்கு அந்த தகவலும் புதிதாக இருந்தது. நேருஜி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும் சட்டத்தில் பாரிஸ்டர் பட்டமும் பெற்றவர். நேருஜி அறிஞர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.  

நேருவின் மகளான இந்திரா பள்ளிப்படிப்பை நிறைவு செய்தவர். கல்லூரியில் சேர்ந்தார். எனினும் கல்லூரிப்படிப்பை நிறைவு செய்யவில்லை. கல்லூரிப்படிப்பை பட்டம் பெறாமல் பாதியிலேயே நிறுத்தி விட்டார். 

இந்திராவின் மகனும் நேருவின் பேரனுமான ராஜிவ் டேராடூன் ’’டூன் ராணுவப் பள்ளி’’யில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்தவர். பட்டப்படிப்பு பயில லண்டன் சென்றார். ஆனால் பட்டம் பெறவில்லை. படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு இந்தியா திரும்பினார். இந்தியாவில் விமானம் ஓட்டுவதற்கான ‘’பைலட் லைசன்ஸ்’’ பரீட்சை எழுதி பைலட் ஆனவர். 

இந்திராவின் மகனும் நேருவின் பேரனுமான சஞ்சய் காந்தியும் பள்ளிப்படிப்பை முடித்தவர். கல்லூரிப் படிப்பை நிறைவு செய்யாதவர். 

நேரு குடும்பத்தில் நேருவுக்குப் பின் அடுத்த இரண்டு தலைமுறையைச் சேர்ந்த அவரது வாரிசுகள் பட்டம் பெற்றவர்கள் அல்ல. 

நான் கூறுவதில் பிழை இருந்தால் அவர்கள் பட்டப்படிப்பை நிறைவு செய்த கல்லூரி எது படித்த பட்டம் என்ன என்று  எனக்கு கூறுங்கள் என்று சொன்னேன். நண்பர் இணையத்தில் ரொம்ப நேரமாக விதவிதமாக தேடிப் பார்த்தார். பின்னர் சோர்வுடன் ‘’நீங்கள் சொல்வது உண்மை’’ என்றார்.   

Friday, 28 June 2024

’’பாரத ரத்னா’’ நரசிம்ம ராவ் பிறந்த தினம் (28.06.2024)

 


சுழற்சி

தினமும் உரையாடும் இலக்கிய நண்பனுக்கு ஃபோன் செய்தேன். நண்பன் திரையரங்கில் ஒரு ஹாலிவுட் திரைப்படம் பார்த்து விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். சமீபத்தில் வெளியான திரைப்படம். என்ன கதை என்று கேட்டேன். நண்பன் கதையைச் சொல்லத் துவங்கினான். கதையின் முதல் இரண்டு வரிகளைக் கூறியதுமே மனம் எப்போதோ பார்த்த தமிழ் திரைப்படத்தின் சாயல் இந்த கதையில் இருக்கிறது என்று எண்ணத் தொடங்கியது. நண்பன் மேலும் கதையைக் கூற கூற அது உறுதியானது. நன்றாகத் தெரிந்த கதையை மீண்டும் கேட்கும் அசுவாரசியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தேன். 1978ல் வெளியான ஒரு ஆங்கிலப் புத்தகத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று நண்பன் சொன்னான். நான் பார்த்த தமிழ் படமும் 1984 - 85 ஆண்டுகளில் வெளிவந்திருக்கக் கூடும். அந்த புத்தகம் படித்த பாதிப்பில் எவரேனும் சினிமாவாக எடுத்திருக்கலாம். தமிழ்ச் சூழலுக்குப் பொருந்தும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கதைக்களத்தை தமிழில் மாற்றியிருக்கிறார்கள். இருப்பினும் தமிழ்ச் சூழலுடன் எந்த விதத்திலும் பொருந்தாத தன்மையுடன் அந்த படம் இருந்தது. நண்பன் சொன்ன ஹாலிவுட் படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தும் தமிழ் படத்தில் சற்று மாற்றியமைக்கப்பட்டு இருந்தது ஞாபகம் இருந்தது. நான் அந்த படத்தை 92-93 வாக்கில் தூர்தர்ஷனில் பார்த்த ஞாபகம். 1985ல் வெளியாகியிருந்தால் அந்த படத்தில் பணியாற்றிய பலருக்கு இப்போது 85 வயதுக்கு மேல் இருக்கும். படத்தின் நாயகன் அப்போது ஒரு முன்னணி நட்சத்திரம். அந்த திரைப்படம் சில நாட்கள் மட்டுமே ஓடியிருக்கிறது. படத்தைப் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் குவிந்திருக்கின்றன. இன்று அந்த திரைப்படம் தமிழகத்தில் ஒரு சிலருக்கு மட்டும் ஞாபகம் இருக்கக்கூடும். அவர்களில் எத்தனை பேர் இப்போது வெளிவந்திருக்கும் ஹாலிவுட் திரைப்படம் குறித்து கேள்விப்பட்டிருப்பார்கள் என்பது தெரியவில்லை. 

டெயில் பீஸ் : இந்த குறிப்பை எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு ஆர்வத்தில் 1985 - 1990 வரை வெளியான அந்த திரைப்படத்தின் கதாநாயகனின் படங்கள் என்னென்ன என்று பார்த்தேன். அவற்றிலிருந்து அந்த திரைப்படத்தின் பெயர் என்ன என்பதை அறிந்தேன். எனது யூகம் சரியானதுதான் என உறுதி செய்து கொண்டேன். 

Thursday, 27 June 2024

குரோதி

இந்திய மரபு காலத்தைக் கணக்கிட பல்வேறு விதமான கணிப்பு முறைகளைக் கொண்டிருக்கிறது. வானியலும் கணிதமும் இணைந்த பெரும் முறைகள் அவை. அவற்றின் பிரபலமான சில வழிமுறைகளே பொதுஜன அறிதலில் இருப்பது. இந்திய மரபு சூரியனைப் பிரதானமாகக் கொண்ட நாட்காட்டி முறையையும் சந்திரனைப் பிரதானமாகக் கொண்ட நாட்காட்டி முறையையும் கொண்டிருக்கிறது. அவற்றில் பொதுவான அம்சங்களும் உண்டு. வேறுபடும் அம்சங்களும் உண்டு. அவற்றை அளவுகோல்களாகக் கொண்டு ஒரு பொது முடிவு மேற்கொள்ளப்படுவதும் உண்டு.  

27 நட்சத்திரங்கள் என்பவை இந்திய நாட்காட்டிகளில் அடிப்படையானவை. இவற்றின் சுழற்சியில் 12 மாதங்கள் உண்டு. இந்திய மரபு காலத்தை ஒரு சுழற்சி எனக் கொள்கிறது. சுழற்சி அல்லது வட்டம். பூமி சூரியனைச் சுற்றி வருவதால் அளவிடப்படும் காலமும் ஒரு சுழற்சி அல்லது வட்டம் என உருவகிக்கப்படுகிறது. 27 நட்சத்திரங்கள் 12 மாதங்களைக் கொண்டு 60 வருடங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. பிரபவ , விபவ தொடங்கி அட்சய ஆண்டு வரை 60 ஆண்டுகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெயரைக் கொண்டிருக்கிறது. 

ஒருவர் பிரபவ ஆண்டில் சித்திரை மாதம் முதல் நாளில் பிறக்கிறார் என வைத்துக் கொள்வோம். அன்று ஞாயிற்றுக்கிழமை பரணி நட்சத்திரம் எனில் 60 ஆண்டுகளுக்குப் பின் , சித்திரை மாத முதல் நாளும் ஞாயிற்றுக்கிழமை பரணி நட்சத்திரத்தில் அமையும். எனவே பிரபவ ஆண்டில் பிறந்த ஒருவர் அடுத்த பிரபவ ஆண்டைச் சந்திக்கும் போது அவருக்கு 60 வயது பூர்த்தியாகியிருக்கும். அவருக்கு 61 வயது நடக்கும். ஒரு முழு சுழற்சி முடிந்து மீண்டும் ஒரு புதிய சுழற்சி துவங்குவதால் அவர் வயதை ஒரு கோணத்தில் 61-60= 1 என்றும் கூற முடியும். ஒருவருக்கு 60 வயது பூர்த்தியானால் அதனால் தான் சஷ்டி யப்த பூர்த்தி கொண்டாடுகிறார்கள். 

மழை , காலநிலை, சமூக நிகழ்வுகள் ஆகியவையும் தோராயமாக ஏறக்குறைய ஒரே விதமாக இருக்கும் என்னும் கணிப்பு இந்திய வானியலுக்கு உண்டு. அவை கணிப்புகள் மட்டுமே. அவற்றைக் கொண்டு காலத்துக்கு தகுந்தவாறு முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும் என்பதே அதன் பொருள். 

இப்போது குரோதி ஆண்டு நடக்கிறது. 60 ஆண்டுகளுக்கு முன் குரோதி ஆண்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சி என்ன என்று 1964ம் ஆண்டின் நிகழ்வுகளைக் கண்டேன். சுதந்திர இந்தியாவில் ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு தனது மூன்றாவது ஆட்சிக் காலத்தில் இருந்திருக்கிறது. தற்போது 2024ல் தற்போதைய பிரதமர் தலைமையிலான ஆட்சியும் மூன்றாம் பதவிக் காலத்தில் இருக்கிறது. 


Tuesday, 25 June 2024

தாக்கப்பட்ட தேசம் - நெருக்கடி நிலைப் பிரகடனம்

இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகின் அதிகார அடுக்கு பெரிதாக மாறியது. போரில் ஈடுபட்ட நாடுகள் பொருளியல் சரிவைச் சந்தித்தன.  யுத்தத்தில் மிகப் பிந்தி நுழைந்த அமெரிக்கா உலகின் பெரிய பொருளியல் சக்தியாக உருவானது. அதனை அடுத்து சோவியத் யூனியன் பெரிய பொருளியல் சக்தியானது. 

அமெரிக்கா - சோவியத் யூனியன் என்னும் இரு துருவ அரசியல் உலக அரசியலில் உண்டானது. இரண்டு நாடுகளும் தங்கள் முகாமுக்கு ஆள் சேர்த்தன. உலக நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுதல், தங்கள் வலுவான உளவு அமைப்புகள் மூலம் உலக நாடுகளின் அரசியல், பொருளியல், ராணுவச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் ஆகிய செயல்பாடுகளில் பல ஆண்டுகளாக இரு நாடுகளும் ஈடுபட்டு வந்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பின் நிகழ்ந்த பல யுத்தங்களுக்கு கலவரங்களுக்கு ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கு இந்த ‘’பனிப்போர்’’ காரணமாக அமைந்தது என்பதே வரலாற்று உண்மை. 

சோவியத் யூனியன் இந்தியாவை தனது கட்டுப்பாட்டில் எளிதில் கொண்டு வரலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தது. சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் ஆட்சியாளர்கள் சோவியத் யூனியன் பாணி திட்டமிடுதல்களை அரசாங்கத்திலும் பொருளாதாரத்திலும் செயல்படுத்திக் கொண்டிருந்தது முக்கிய காரணம். அப்போது உலகில் கம்யூனிசம் ஏற்றத் தாழ்வுகள் இல்லாத உலகை உருவாக்கும் என்னும் நம்பிக்கை பரவலாக இருந்ததும் இன்னொரு காரணம். உலகெங்கும் கம்யூனிசம் பஞ்சம் , படுகொலை, பேரழிவு, யுத்தங்களை மட்டுமே உருவாக்கியிருக்கிறது என்னும் உண்மையை இரண்டாம் உலகப் போர் முடிந்து 40 ஆண்டுகளுக்குப் பின் சோவியத் யூனியன் சுக்கு நூறாக உடைந்த போதே உலகம் உணர்ந்தது. 

கட்சியில் தனது பிடி இளகத் தொடங்குவதைக் கண்ட இந்திரா காந்தியின் மனச்சாய்வு சோவியத் யூனியனின் பக்கம் முழுமையாகத் திரும்பியது. இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் சோவியத் யூனியனின் பங்கு இருந்திருக்கிறது என்னும் உண்மை பின்னாட்களில் மெல்ல வெளிவரலானது. வெளிநாட்டு தூண்டுதலுக்கு ஆட்பட்டு ஜூன் 25 1975ம் ஆண்டு இந்திரா காந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். 

இந்திய அரசியல் சாசனம் முடக்கப்பட்டது. நீதிமன்றங்கள் அதிகாரமிழந்தன. பத்திரிக்கை சுததிரம் இல்லாமல் போனது. எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சிக்கு எதிரானவர்கள் எனக் கருதப்பட்ட ஒவ்வொருவரும் நாடெங்கும் ஒவ்வொரு ஊரிலும் வேட்டையாடப்பட்டனர். எனினும் ஆட்சியாளர்கள் அறியாத ஒரு விஷயம் இருந்தது. 

அதாவது நம் மண்ணில் மக்களாட்சி மாண்புகள் என்பவை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இங்கே ஜனநாயகம் என்னும் உணர்வு சிறு சிறு குடிகளிடமும் சிறு சிறு குலங்களிடமும் இருந்து வந்துள்ளது. குடிகளையும் குலங்களையும் ஏதேனும் நியதிகள் கட்டுப்படுத்தியிருக்கின்றன. நியதிக்கு உட்படும் குலங்களும் குடிகளும் என்பதே இந்திய ஜனநாயகத்தின் சிறப்பு அம்சம் ஆகும். அடிப்படை நியதியில் இந்தியக் குலங்களையும் குடிகளையும் சமரசம் செய்ய வைக்க முடியாது. அவர்கள் பல நூற்றாண்டுகளாக பழகி வந்த உணர்வு அது. 

நாட்டு மக்கள் மௌனமாக இருந்தனர். நாடும் நாட்டின் ஜனநாயகமும் காக்கப்பட வேண்டும் என்ற உணர்வு கொண்டவர்கள் தலைமறைவாக இருந்து நாட்டு மக்களைச் சந்தித்து ஆட்சியாளர்களின் அவலங்களை எடுத்துக் கூறிக் கொண்டிருந்தனர். நாட்டு மக்களின் மௌனத்தை தங்கள் செயல்பாடுகள் மீதான ஏற்பு என எண்ணிய ஆட்சியாளர்கள் இரண்டு ஆண்டுகளில் எமர்ஜென்சியை விளக்கி தேர்தலை அறிவித்தனர். 

பிரதமர் இந்திரா காந்தி தன் சொந்த தொகுதி ரே பரேலியில் பாரதிய லோக் தளம் வேட்பாளர் ராஜ் நாராயணிடம் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். காங்கிரஸ் ஆட்சியிலிருந்து மக்களால் தூக்கியெறியப்பட்டது. நாட்டின் வாக்காளர்கள் ஜனதா கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வந்தனர். ஜனநாயகம் வென்றது. 

நெருக்கடி நிலையை முறியடிக்க இரண்டு ஆண்டுகளும் போராடியவர்களின் தியாகம் வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும். 

ஜெய்ஹிந்த் 

பெருக்கெடுக்கும் மது - தமிழ்ச் சூழலின் அவலம்

ஒரு கிராமத்தில் சராசரியாக ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. ஆயிரம் குடும்பங்கள் உள்ள ஒரு கிராமத்தின் மக்கள்தொகை சராசரியாக ஐயாயிரம் இருக்கும். அந்த ஐயாயிரம் பேரில் பெண்கள் இரண்டாயிரத்து ஐந்நூறு பேர் இருப்பார்கள். 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர் ஐந்நூறு பேர் இருப்பார்கள் எனக் கொள்ளலாம். 2500 பெண்கள் 500 சிறுவர் சிறுமியர் போக மீதி உள்ள 2000 பேர் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள். 

ஒரு கிராமத்தின் சராசரியான இந்த 2000 ஆண்களே கிராமத்தின் பொருளியல் உற்பத்தியில் கணிசமான பங்களிப்பை அளிக்கக்கூடியவர்கள். கிராமத்தின் பொது காரியங்களை பெருமளவு முன்னெடுப்பவர்கள். இன்றைய தமிழக யதார்த்தம் என்பது இந்த 2000 பேரில் 1800 பேர் குடி அடிமைகளாக இருக்கிறார்கள் என்பதே. இந்த எண்ணிக்கை கூடுதலாக இருக்குமே தவிர குறைவதற்கு வாய்ப்பில்லை. 

குடிப்பழக்கம் ஆதி காலம் முதல் இருந்திருக்கிறது. என்றாலும் என்ன விதமான மது அருந்தப்பட்டிருக்கிறது அது உடலுக்கும் மனதுக்கும் அளிக்கும் தீமைகள் எவ்விதமானவை என்பதும் கருதப்பட வேண்டியவை. ஆதி காலம் முதல் பனங்கள்ளும் தென்னங்கள்ளும் மதுவாக அருந்தப்பட்டிருக்கின்றன. 

இப்போது சாராயம் மதுவாக புழக்கத்தில் உள்ளது. தீய பயத்தலில் கள் 1 எனில் சாராயம் 100 எனக் கூறத் தக்கது. கள்ளச்சாராயம் 1000 எனக் கூறத் தக்கது. 

ஒரு ஊரில் இருக்கும் 2000 ஆண்களில் 500 பேர் குடி பழக்கம் கொண்டவர்கள் எனில் அந்த ஊரின் நிலை ஒரு விதமாயிருக்கும். 1000 பேர் குடி பழக்கம் கொண்டவர்கள் எனில் அந்த ஊரின் நிலை வேறுவிதமாய் 500 பேர் குடிப்பழக்கம் கொண்ட நிலையை விட இரு மடங்கல்ல மேலும் பல மடங்கு பாதிப்புடன் இருக்கும். இன்றைய நிலை ஒரு கிராமத்தில் 90 சதவீதம் ஆண்கள் குடி அடிமைகளாக இருக்கிறார்கள் என்னும் நிலை உள்ளது. 

தமிழகத்தின் எதார்த்தம் என்னவெனில் குடிகாரர்களே மதுக்கடைகள் குறைவாக இருந்தால் தங்கள் குடிப்பழக்கம் குறையும் என நினைக்கிறார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக மதுக்கடைகள் இருக்குமானால் தாங்கள் மது அருந்துவது குறையக்கூடும் என்பது அவர்கள் விருப்பம். 

சாராயத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இன்று தமிழ்ச் சூழலுக்கு உள்ளது.  

Monday, 24 June 2024

நன்முயற்சி

சமீபத்தில் இருபது கல்லூரி மாணவர்கள் இணைந்து திட்டமிட்டு செயல்படுத்தியிருக்கும் ஒரு நன்முயற்சியைப் பற்றி அறிந்தேன். ( ஜனநாயக சோதனை அறிக்கை - பெருந்தலையூர் )

ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் சந்தித்து அவர்களிடம் ஓட்டுக்கு பணம் வாங்குவது என்பது வாக்காளரின் சுயமரியாதையை இல்லாமல் ஆக்கும் செயல் என்பதையும் ஜனநாயகத்தின் மாண்பைக் குலைக்கும் நடவடிக்கை என்பதையும் மிகப் பரிவுடன் பொறுமையுடன் பல்வேறு விதங்களில் விளக்கிச் சொல்லியிருக்கிறார்கள். கிராம மக்களைச் சந்திக்கும் முன், மாணவர் குழுவின் இருபது மாணவர்களும் தேர்தல் அரசியல், ஜனநாயகத்தில் வாக்காளர் பெற்றிருக்கும் முக்கியத்துவம், தமிழகத்தில் வாக்குக்கு பணம் அளித்தல் பழக்கம் உருவானது எப்படி, நிலைபெற்றது எப்படி, பணம் பெறுவதற்கு கூறப்படும் காரணங்கள் , வாக்குக்கு பணம் பெறுதல் ஏன் மாண்பற்ற செயல் என பல விஷயங்களை அதன் சகல கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து தாங்கள் சொல்லப்போகும் விஷயம் என்ன எதிர்கொள்ளப் போகும் கேள்விகள் என்ன என பல விதமான மனத் தயாரிப்புகளை மேற்கொண்டு பின்னர் மக்களைச் சந்தித்திருக்கின்றனர். 

எல்லாரும் பணம் பெறும் போது சிலர் பணம் பெறாமல் இருந்தால் அந்த  பணத்தை வாக்குக்கு பணம்  வினியோகம் செய்யும் கட்சிக்காரர் தானே வைத்துக் கொள்வார் ; அது அந்த நபருக்கு பயனாகப் போகும் என்ற காரணம் பலரால் கூறப்பட்டிருக்கிறது. மாணவர் குழு பொறுமையுடன் இந்த கேள்விக்கும் தக்க பதிலை அளித்து பொதுமக்கள் காணத் தவறும் பார்வைக்கோணத்தைக் காட்டி வாக்குக்கு பணம் பெறுதல் எல்லா விதத்திலும் தீமை என்பதை மக்களுக்குப் புரிய வைத்திருக்கின்றனர். 

மாணவர்கள் குழு வெவ்வேறு பரப்புரை பாணிகளில் அந்த கிராம மக்களை மீண்டும் மீண்டும் சந்தித்து வாக்குக்கு பணம் பெற மாட்டோம் என்ற வாக்குறுதியை அளிக்கச் செய்திருக்கிறது. கிராமத்தின் ஒவ்வொரு வாக்காளரையும் மாணவர்கள் குழு 15 நாட்களில் மூன்று முறையேனும் சந்தித்திருக்கிறது. 

அந்த ஊரின் வாக்காளர்களில் 85 சதவீதம் பேர் வாக்குக்கு பணம் வாங்காமல் தங்கள் வாக்கை பதிவு செய்திருக்கின்றனர். இது நிச்சயமாக மாணவர் குழுவின் முயற்சிக்கு கிடைத்த பெருவெற்றி. 

ஜனநாயகத்தின் மாண்புக்கு வலு சேர்க்கும் விதமான இத்தகைய பெருஞ்செயலை எண்ணி திட்டமிட்டு நிகழ்த்தியிருக்கும் இருபது கல்லூரி மாணவர்களும் போற்றுதலுக்குரியவர்கள். 

Sunday, 23 June 2024

மரங்களும் மக்களும்

வனத்தின் மௌனம் சில்வண்டுகளின் ஒலியாலானது என்பதை வனத்திற்குச் சென்றவர்கள் உணர்ந்திருப்பார்கள். நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான சில்வண்டுகள் தங்களையும் மற்றவற்றையும் தனித்தனி என பிரித்து உணர்வது இல்லை. அவை தங்களை ஒன்றென்றே உணர்கின்றன.  சில்வண்டுகள் மட்டுமல்ல காட்டில் வாழும் அனைத்து உயிர்களுமே தங்களை ஒன்றென்றே உணர்கின்றன. தனது உணவு யாது என்பதையும் தான் எதன் உணவு என்பதையும் மட்டும் தன் உணர்வில் கொண்ட அவ்வுயிர்கள் சூழலுடன் முற்றும் இணைந்தே இருக்கின்றன. வாழ்விலும் சாவிலும். வனம் தன் பரப்பில் இருக்கும் எல்லா உயிர்த்தொகைகளும் வாழும் விதத்தில் தன்னை தகவமைத்துக் கொள்கிறது. 

‘’காவிரி போற்றுதும்’’ அமைப்பாளனாக நான் உணரும் விஷயம் ஒன்று உண்டு. மரங்கள் மேல் கிராம மக்களுக்கு நிச்சயம் ஈடுபாடு இருக்கிறது. பூ மரங்களைக் கிராமத்துப் பெண்கள் விரும்புகிறார்கள். வீட்டில் விளக்கேற்றும் போது தீபத்துக்கு மலரிட ; மங்கல அணியாய் மலர்ச்சரம் சூடிக் கொள்ள ; ஆலயங்களில் இறைவனுக்கு அர்ப்பணிக்க என அவர்கள் பூ மலர்களை விரும்ப காரணங்கள் பல இருக்கின்றன. நந்தியாவட்டை , விருட்சி, அரளி ஆகிய மரக்கன்றுகள் அதிக எண்ணிக்கையில் பூக்கும் இயல்பு கொண்டவை. பெரிய உயரம் போகாதவை. அவற்றை வளர்த்து விடுகின்றனர். எனினும் பாரிஜாதம், செண்பகம் ஆகிய பூமரக் கன்றுகளை வளர்ப்பதில் அவர்களுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. அவற்றை ஆடுகள் மேய்ந்து விடும். தான் வளர்த்த செடி ஆடுகளால் மேயப்பட்டால் மனமுடைகிறார்கள். அந்த உடைவு அவர்களை ஆடுகள் மேயும் வாய்ப்புள்ள மரக்கன்றுகளை வளர்ப்பதிலிருந்து தடுக்கிறது. விளைவு யாதெனில் ஒரு கிராமத்தில் எல்லா விதமான பூமரக் கன்றுகளும் உள்ளன என்ற நிலையை உருவாக்குவது சிரமமாக இருக்கிறது. 

‘’காவிரி போற்றுதும்’’ விவசாயிகளின் பொருளியல் நிலையை உயர்த்த தேக்கு மரக்கன்றுகளை அளித்து அவர்கள் வயல் வரப்புகளிலோ வீட்டுத் தோட்டங்களிலோ நடச் சொல்லலாம் என்ற முறையில் தனது முயற்சிகளை முன்னெடுத்தது. நமது முன்னெடுப்புக்கு நிச்சயம் நல்ல வரவேற்பு இருந்தது; எல்லாரும் பிரியம் காட்டினார்கள். அன்பு செலுத்தினார்கள். மதிப்பு அளித்தார்கள். இருப்பினும் அதிலும் ஆடுகளின் மேய்ச்சல் என்ற சாத்தியம் ஒரு தடையாக வந்தது. 

மின்சாரக் கம்பிகள் கிராமங்கள் முழுதும் எல்லா பகுதிகளிலும் குறுக்கும் நெடுக்குமாக செல்கின்றன. கிராமத்தின் பரந்த பரப்பில் மரக்கிளைகள் காற்றில் மின்சாரக் கம்பிகளில் உரசினால் அந்த பகுதியில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் கிராம மக்கள் உயரமாக கிளை பரப்பு வளரக் கூடிய மரங்கள் மீது லேசான மனவிலக்கம் கொள்கின்றனர். சற்று முயற்சித்தால் சரி செய்யக் கூடிய விஷயமே இது. இருப்பினும் மின்சாரமே முதன்மை பெற்று பொது இடத்தில் மரம் வளர்க்கும் முயற்சிகள் தடையாகின்றன. 

மரங்கள் ஒவ்வொரு தலைமுறையாலும் நட்டு பராமரித்து வளர்க்கப்பட வேண்டியவை என்ற எண்ணமும் உணர்வும் ஏற்படுத்தப்பட வேண்டும். பல வகையான மரங்கள் ஒரு கிராமத்தில் இருக்க வேண்டும். புங்கன், வேம்பு, ஆல், அரசு, இலுப்பை, வன்னி, கொன்றை, பனை, பலா, வில்வம் என விதவிதமான மரங்கள் ஒரு கிராமத்தில் வளர்க்கப்பட வேண்டும். கிராம மக்களுக்கு அந்த உணர்வு உருவாக்கப்பட வேண்டும். மரங்கள் வளர்ப்பதில் மக்களுக்கு அந்த உணர்வை உருவாக்குவதில் ஈடுபடுவதே அடிப்படையான முக்கியமான பணியாக உள்ளது.  

Saturday, 22 June 2024

மழைக்காடுகள் தினம் - 22.06.2024

எண்ணிப் பார்க்கையில் ஒரு மரம் என்பதே மிக பிரும்மாண்டமானது; அளவில் மட்டுமல்ல ; அதன் தன்மையில்; செயல்பாடுகளில் என எல்லா விதங்களிலும் அது பிரும்மாண்டமானதும் பிரமிக்கத்தக்கதும் ஆகும். மண்ணுக்கு அடியில் வேரூன்றியிருக்கிறது மரம். மண்ணில் இருந்து நீரையும் சத்துக்களையும் மரத்தின் கிளைகளுக்கும் இலைகளுக்கும் கொண்டு செல்கிறது. நீண்ட ஒரு மரத்தைத் தாங்குவதற்கான அற்புதமான வலிமையை விதையிலிருந்தே உருவாக்கிக் கொண்டு வளர்கிறது.  இலைகள் ஒளிச்சேர்க்கையை நிகழ்த்துகின்றன. கனிகளும் காய்களும் இலைகளும் உணவாகவும் மருந்தாகவும் பயன் தருகின்றன. ஆயிரக்கணக்கான பூச்சிகளுக்கும் பறவைகளுக்கும் வாழிடமாய் மரம் இருக்கிறது. மரம் ஒரு அற்புதம். 

மரம் ஒரு அற்புதம் எனில் காடு என்பது பேரற்புதம். நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மரங்களும் செடி கொடிகளும் இணைந்துள்ள காடு ஒரே உயிராக ஐக்கியம் கொள்கிறது. சில கணங்கள் காட்டுக்குச் செல்லும் எவரும் கூட அந்த ஐக்கிய உணர்வை அனுபவபூர்வமாக உணர முடியும். 

மழைக்காடுகள் உலகம் மானுடர்க்கு அளித்திருக்கும் கொடை. அவற்றிலிருந்தே நதிகள் உற்பத்தியாகி நெடுந்தொலைவு பயணிக்கின்றன. கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்க்கையை சாத்தியமாக்குகின்றன. 

எனது மோட்டார்சைக்கிள் பயணத்தில் குறிப்பிடத் தகுந்த சில மழைக்காடுகளுக்குச் சென்றிருக்கிறேன். இன்றும் அந்த காடுகளை எண்ணும் போது என் அகம் அவற்றை வணங்குகிறது. வணக்கம் என்ற உணர்வுடனேயே அந்த காடுகளை எண்ணிப் பார்க்க முடியும். அத்தனை பவித்ரமும் புனிதமும் கொண்டவை அவை. 

கருநாட்கத்தில் கண்ட குதிரைமுகே, ஆகும்பே ஆகிய மழைக்காடுகள் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளன. சிருங்கேரி ஆகும்பே மழைக்காட்டின் ஒரு பகுதியாகும்.