Wednesday, 27 August 2025
மன்றம்
Tuesday, 26 August 2025
இங்கும் அங்கும்
ஊருக்கு வடக்கே 40 கி.மீ தொலைவில் இருக்கிறது சிதம்பரம். அங்கே எனது நண்பர் ஒருவர் இருக்கிறார். தோட்டம் ஒன்றை வாங்க அவர் ஆர்வம் கொண்டிருந்தார். அந்த தோட்டம் விலைக்கு வருகிறது என்பதை நான் அவருக்குக் கூறினேன். அந்த தோட்டத்தின் உரிமையாளர் சீர்காழியில் உணவகம் ஒன்றை நடத்துகிறார். சீர்காழி ஊருக்கும் சிதம்பரத்துக்கும் இடையில் இரண்டு ஊர்களுக்கும் சம தொலைவில் இருக்கிறது. சீர்காழிக்கு அருகில் இருக்கும் நாங்கூர் தோட்ட உரிமையாளரின் வீடு. நேற்று காலை 5 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டேன். நண்பருக்கு காலை 6.15க்கு சந்திக்க வருகிறேன் என குறுஞ்செய்தி அனுப்பினேன். அவர் வீட்டு வாசலைச் சென்றடைந்த போது நேரம் எத்தனை என்று பார்த்தேன். 6.13 எனக் காட்டியது. அந்த வீட்டின் பணியாள் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். 15 தினங்களுக்கு முன்னால் நண்பர் வீட்டுக்கு இதே நேரத்துக்குச் சென்றிருந்தேன். அப்போதும் அதே பெண்மணி வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு ஆச்சர்யம். ’’தம்பி! நீங்க இந்த ஊர்தானா? உங்க வீடு எங்க இருக்கு?’’ என்று கேட்டார். நான் விபரம் சொன்னேன். அவருக்கு ஆச்சர்யம். நண்பர் 10 தினங்களாக ஊரில் இல்லை. அவருக்கும் தோட்ட உரிமையாளருக்கும் இடையே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டும். நண்பர் சில நிமிடங்களில் தயாராகி விட்டார். எனது வாகனத்தை அவர் வீட்டில் நிறுத்தி விட்டு நண்பருடன் காரில் நாங்கூருக்குப் பயணமானேன். நாங்கூரில் சந்திப்பு 45 நிமிடம் நீடித்தது. பின்னர் அங்கிருந்து சிதம்பரம் புறப்பட்டோம். அங்கே சென்று எங்களுக்குள் பேச வேண்டிய விஷயங்களைப் பேசினோம். நண்பரிடம் விடை பெற்று புறப்பட்டேன். சீர்காழி வந்தேன். தோட்டக்காரரின் உணவகத்துக்குச் சென்றேன். உரிமையாளர் வீட்டில் இருக்கிறார் என்றார்கள். அங்கே சென்று அவரைச் சந்தித்தேன். எங்கள் உரையாடல் 30 நிமிடம் நீடித்தது. சீர்காழியில் இன்னொரு வேலை இருந்தது. மீண்டும் வந்தேன். அந்த வேலையை முடித்து விட்டு ஊர் திரும்பினேன். நேரம் மதியம் 12.30. வீட்டுக்கு வந்ததும் ஓரிரு நிமிடங்கள் அமர்ந்து விட்டு வங்கிக்குச் சென்றேன். அங்கே சில பணிகள். வேலை முடிய 2 மணி ஆயிற்று. வீட்டுக்கு வந்து மதிய உணவருந்தினேன். அமர்ந்திருந்தாலும் நகர்ந்து கொண்டிருப்பதான உணர்வு ஏற்பட்டது.
Monday, 25 August 2025
துறவியுடன் ஒரு நாள்
எனது நண்பர் ஒருவர் காட்டுமன்னார்குடியைச் சேர்ந்தவர். ஆன்மீக அமைப்பொன்றின் இளம் துறவி ஒருவரை கும்பகோணம் அருகில் இருக்கும் மடத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார். தவிர்க்க முடியாத பணியொன்றின் காரணமாக திட்டமிட்ட விதத்தில் அவரால் உடன் செல்ல முடியாத நிலை. என்னை அப்பணியை மேற்கொள்ள முடியுமா என்று கேட்டார். நான் ஒத்துக் கொண்டேன்.
இன்று அதிகாலை எழுந்து நடைப்பயிற்சி முடித்ததும் குளித்துத் தயாரானேன். காலை உணவை ஊரில் முடித்து விட்டு காட்டுமன்னார்குடி சென்றேன். துறவி தன்னார்வலர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தார். விடிகாலை எழுந்து யோகப் பயிற்சிகள் தினமும் மேற்கொள்வது துறவியின் வழக்கம். காலை குறைந்தது 3 மணி நேரம் யோகப் பயிற்சிகள் செய்வார்கள். எஞ்சிய பொழுதில் 2 மணி நேரம் பயிற்சி இருக்கும். நான் சென்ற போது பயிற்சி முடித்து காலை உணவருந்தி தயாராக இருந்தார். காலை 8 மணி அளவில் ஒரு வேளை உணவும் இரவு 7 மணிக்கு அடுத்த வேளை உணவும் என ஒரு நாளைக்கு 2 வேளை மட்டுமே உணவருந்தும் வழக்கம் அவர்களுக்கு.
இரு சக்கர வாகனத்தில் இருவரும் பயணித்தோம். எங்கள் பிராந்தியத்தின் சமூக பொருளாதார சூழ்நிலைகள் குறித்து துறவியிடம் கூறிக் கொண்டு வந்தேன். நாங்கள் செல்ல வேண்டிய மடத்தில் காலை 10 மணி என சந்திப்புக்கு நேரம் கொடுத்திருந்தார்கள். நான் எப்போதும் மணிக்கு 40 லிருந்து 45 கி.மீ வேகம் மட்டுமே வாகனம் ஓட்டக் கூடியவன். எனினும் குறிப்பிட்ட நேரத்துக்கு 10 நிமிடம் முன்பாகவே வந்து சேர்ந்து விட்டோம். சந்திப்பு சிறப்பாக இருந்தது. ஒரு மணி நேரம் அங்கு இருந்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம். இப்போது வண்டியை துறவி ஓட்டினார். அவரது வாகன இயக்குதிறன் சிறப்பாக இருந்தது. ‘’காவிரி போற்றுதும்’’ முன்னெடுக்கும் பணிகள் குறித்து அவரிடம் கூறினேன். சேத்தியாதோப்பில் அவரை இறக்கி விட்டு விட்டு நான் ஊருக்குப் புறப்பட்டேன். அவர் பேருந்தில் கடலூருக்குப் பயணமானார்.
Sunday, 24 August 2025
ஐயம் தெளிதல் ( நகைச்சுவைக் கட்டுரை)
Saturday, 23 August 2025
ஒரு புதிய கண்டடைதல்
இன்று ஒரு புதிய சாலையின் வழியே பயணித்தேன். இந்த பிராந்தியத்தின் எல்லா சாலைகளிலும் அனேகமாக ஒரு முறையேனும் பயணித்திருப்பேன். முன்னரெல்லாம் புதிதாக ஊர்களைக் காணவும் புதிதாக சாலைகளின் வழி பயணிக்கவும் என்ற நோக்கத்துடன் மட்டுமே கூட பயணங்கள் மேற்கொள்வேன். நடுவயதில் இருக்கும் இப்போது ஏதேனும் சாலைகளில் செல்லும் போது கிளைச்சாலைகளைக் கண்டால் இது எங்கே செல்லும் என்பது ஞாபகம் வரும் ; அப்போது இளமைக் காலத்தில் எத்தனை பயணம் மேற்கொண்டிருக்கிறோம் என்னும் வியப்பும் ஏற்படும். தினம் பயணிக்க வேண்டும் என்னும் உணர்வே அகத்தை புதிதாக வைத்துக் கொள்ளும் என எண்ணுவேன். குத்தாலத்திலிருந்து அணைக்கரைக்கு காமாட்சிபுரம் கோணலாம்பள்ளம் ஆகிய ஊர்களின் வழியே செல்ல ஒரு சாலை இருப்பதை மைல்கற்கள் மூலம் அறிந்தேன். அந்த பாதை வழியே நான் சென்றதில்லை என்பதால் இன்று அந்த வழியே பயணித்தேன். அசல் தஞ்சாவூர் கிராமங்கள். எப்போதுமே புதிய நிலத்தைப் பார்க்கும் போது அந்த நிலத்தில் வாழலாம் எனத் தோன்றும். இன்று நான் பார்த்த கிராமங்கள் வளமான தஞ்சாவூர் மாவட்ட கிராமங்கள். மானசீகமாக அந்த ஊர்களில் 15 ஏக்கர் நிலம் வாங்கி அதில் மரப்பயிர்கள் வைத்து தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தேன்! ரியல் எஸ்டேட் எனது தொழில் என்பதால் இவ்விதமான எண்ணமும் கற்பனையும் எழுவதைத் தடுக்க முடியாது ! இன்று ஒரு புதிய வழித்தடத்தை அறிந்து கொண்டதும் அதில் பயணித்ததும் மகிழ்ச்சியை அளித்தது.
Friday, 22 August 2025
புரட்சித் துறவி
நூல் : புரட்சித் துறவி ஆசிரியர் : ரா. கி. ரங்கராஜன் பதிப்பகம் : அல்லயன்ஸ் பதிப்பகம் மயிலாப்பூர் சென்னை.
மேரி கெரெல்லி ‘’தி மாஸ்டர் கிருஸ்டியன்’’ என எழுதிய நாவலை ரா.கி.ரங்கராஜன் தமிழில் புரட்சித் துறவி என எழுதியிருக்கிறார். ஐரோப்பாவின் அரசியல் மோதல்களுக்கும் மத நிறுவனங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கும் நிலையில் அங்கே ‘’சர்ச்’’ எனப்படும் அமைப்பு அரசாங்கங்களை விட வலிமையான அமைப்பாக உருவெடுத்து நிற்பது ஐரோப்பிய மற்றும் உலக நாடுகளையும் அதன் பொதுமக்களையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கும் நிலைக்கு வந்து நிற்கிறது. இந்நிலையில் மதம் உருவாக்கும் அழுத்தத்துக்கு ஐரோப்பிய சமூகம் ஆற்றும் எதிர்வினை ஐரோப்பாவின் சமூக பொருளாதார அரசியல் வாழ்வில் பிரதிபலிக்கிறது. இந்த சூழலைப் பின்புலமாகக் கொண்டு குறியீட்டு ரீதியிலான கதாபாத்திரங்களால் மானுட வாழ்க்கையை இயக்கும் விசைகளையும் மானுடர்களை வியாபிக்கும் உணர்வுகளையும் மானுடர்களின் ஆன்மீகத் தேடலையும் சித்தரிக்கும் நாவல் ‘’புரட்சித் துறவி’’.
Thursday, 21 August 2025
சுற்றுப்பயணம்
ஊரில் எனது நண்பர் ஒருவர் இரண்டு கிரவுண்டுக்கும் அதிகமான இடம் ஒன்றை வாங்கியிருக்கிறார். அவருக்கு மனை வாங்கிக் கொடுத்து அந்த மனைக்கு வங்கிக்கடனும் ஏற்பாடு செய்து கொடுத்து பட்டா மாற்றமும் செய்து கொடுத்துள்ளேன். அந்த மனையில் ஒரு அபார்ட்மெண்ட்ஸ் கட்ட இருக்கிறோம். அதன் பிளான் ஒன்றை நண்பரிடம் அளித்துள்ளேன். ஒவ்வொரு வீடும் 495 சதுர அடி பரப்பளவு கொண்டது. ஒவ்வொன்றும் 1 BHK வீடுகள். இரண்டு வீடுகளைச் சேர்த்தால் ஒரு 3 BHK வீடாக ஆகும். நண்பர் இன்னும் கொஞ்சம் அதிக பரப்பில் வீடுகளை அமைக்கலாமா என்ற யோசனையில் இருக்கிறார். இரண்டு வீடுகளை இணைத்தால் ஒரு பெரிய வீடு கிடைத்து விடும் என்ற நிலையில் இப்போது உள்ள பிளான் சரியாக இருக்கும் என்பது தரப்பு. இந்த பரிசீலனையில் சில வாரங்கள் கடந்தன. ஊரிலிருந்து 10 கி.மீ சுற்றளவுக்குள் உள்ள ஊர்களில் இருப்பவர்களே இந்த அபார்ட்மெண்ட்ஸ்ஸின் வாடிக்கையாளர்கள். ஆகவே அந்த ஊர்கள் எவை எவை என புறவயமாக வரையறுத்துக் கொண்டால் அதற்குள் நமது பணிகளைக் குவித்துக் கொள்ளலாம் என்பதால் அந்த கிராமங்களைப் பட்டியலிட்டுக் கொண்டேன். மொத்தம் 45 கிராமங்கள் உள்ளன. அதில் 20 கிராமங்கள் முக்கியமானவை.
இன்று அந்த கிராமங்களின் வழியே ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். இவற்றுக்குள் தான் பணியாற்ற வேண்டியிருக்கும் என்ற புரிதல் மேம்பட இந்த சுற்றுப்பயணம் உதவியது.
ஒரு குயர் நோட் ஒன்றில் ஒவ்வொரு நாளும் என்னென்ன பணிகள் செய்தேன் எனக் குறித்து வைத்துக் கொண்டு வாடிக்கயாளர்களைச் சந்திக்க இருக்கிறேன்.
Tuesday, 19 August 2025
நாடு முன்னேறியிருக்கிறதா?
இன்று என்னுடைய தொழில் நிமித்தமாக ஒருவரைச் சந்திக்கச் சென்றேன். ஊரிலிருந்து மேற்கே 10 கி.மீ சென்று பின் அங்கிருந்து வடக்கே திரும்பி 10 கி.மீ சென்று அங்கேயிருந்து கிழக்கே திரும்பி மேலும் 10 கி.மீ சென்று அவரைச் சந்தித்து விட்டு அங்கிருந்து 10 கி.மீ தெற்கே வந்து புறப்பட்ட இடமான எனது ஊரை அடைந்தேன். 40 கி.மீ சுற்றளவு கொண்ட சிறு பயணம். சந்திக்கச் சென்றவர் ஊருக்கு வடமேற்கே 20 கி.மீ தூரத்தில் கடை வைத்திருக்கிறார். கடையில் அவர் இன்று இருந்திருந்தால் சென்ற மார்க்கத்திலேயே மீண்டும் திரும்பி வந்திருப்பேன். கடையில் இல்லாததால் அவரைக் காண வீட்டுக்குச் சென்றிருந்தேன். இந்த பயணம் முழுக்க முழுக்க சிறு கிராமங்களினூடாக நிகழ்ந்தது. நான் என்னுடைய ஐந்து வயதிலிருந்து கிராமத்துச் சாலைகளைக் கண்டு வருகிறேன். என்னுடைய இளம் வயதில் அவை எப்படி இருக்கும் என நான் அறிவேன். இன்று அனைத்து சாலைகளும் மிகவும் சிறப்பாக இருந்தன. இப்போது எல்லா சாலைகளும் சிறப்பாக இருக்கின்றன. சிறு சிறு கிராமங்களில் கூட ஹார்டுவேர் கடைகள் இருக்கின்றன என்பதை கவனித்தேன். கிராமங்களில் பெரிய பங்களா அளவிலான வீடுகள் கட்டப்படுகின்றன என்பதைக் கண்டேன். அது ஒரு சிறு கிராமம். அங்கே இரு சக்கர வாகன சீட் கவர் கடை ஒன்று பெரிய அளவில் இருப்பதைக் கண்டேன். கிராமங்களில் எல்லா வீடுகளிலும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் இருக்கின்றன. வீட்டின் ஆணுக்கு ஒரு வாகனம். வீட்டின் பெண்ணுக்கு ஒரு வாகனம். ஒரு கிராமத்தில் 500 வீடுகள் இருந்தால் அங்கே குறைந்தது 800 இரு சக்கர வாகனமாவது இருக்கும். நான் பார்த்த கிராமம் 20 கிராமங்களுக்கு மையம். அவ்வாறெனில் அந்த பிராந்தியத்தில் 16,000 இரு சக்கர வாகனமாவது இருக்கும். அந்த கிராமத்தில் அந்த கடையை அமைக்க வேண்டும் எனத் தோன்றியது மிக நல்ல யோசனையே. அவருக்கு அந்த கடை மூலம் ஒரு நாளைக்கு 1000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இது மிகக் குறைந்தபட்ச கணக்கீடு. இன்னும் அதிகமாக கூட வருமானம் கிடைக்கும். சந்திக்கச் சென்றவரிடம் அவரது சொத்து ஒன்றை அடமானமாக வைத்து வங்கிக் கடன் பெறுமாறு ஒரு யோசனை சொன்னேன். இது வரை வங்கிக் கடன் பெற்றதில்லை என்பதால் புதிதாக அந்த பழக்கத்தை உருவாக்க வேண்டாம் என நினைக்கிறேன் என்று அவர் கூறினார். சூழலைப் பொறுத்து பின்னர் முடிவெடுக்கலாம் என ஒத்துக் கொண்டேன். ஊருக்குத் திரும்பும் வழியில் ஒரு சலூனில் முகச் சவரம் செய்து கொண்டேன். அந்த கடையைத் தொடங்கியிருப்பவர் ஓர் இளைஞர். கடை துவங்கி இரண்டு மாதம் ஆகிறது என்று கூறினார். தேவை ஏதும் இருப்பின் வங்கியை அணுகி கடன் பெற்றுக் கொள்ளுங்கள் என அவரிடம் சொன்னேன். வங்கியில் கடன் வாங்கி பழக்கம் இல்லை ; எனவே அதனை புதிதாக உருவாக்க வேண்டாம் என நினைக்கிறேன் என அந்த சலூன்காரர் சொன்னார். நான் முதலில் சந்திக்கச் சென்றவர் பெரும் செல்வந்தர். அவரும் இதையே சொன்னார். சலூன்கடைக்காரர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர். அவரும் அதையே சொன்னார். அந்த பிராந்தியத்தின் வங்கி அதிகாரிகள் இவர்களைப் போன்றவர்களைக் கண்டடைய வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் இரு தரப்புக்கும் பரஸ்பர பயன் விளையும். நல்ல தரமான சாலைகள், நிறைய புதிய தொழில்கள், நிறைய முயற்சிகள் ஆகியவற்றைக் கண்டது நாடு முன்னேறியிருக்கிறதா என்னும் கேள்விக்க்கான பதில் நேர்மறையானதாகவே இருக்கிறது என்னும் நம்பிக்கையை அளித்தது.
Saturday, 16 August 2025
ஸ்திதப்பிரக்ஞன்
Friday, 15 August 2025
குரு கோவிந்த் சிங்
நூல் : குரு கோவிந்த் சிங் ஆசிரியர் : வ.வே.சு ஐயர் பக்கம் : 80 விலை ரூ.80 பதிப்பகம் : சுடர் பதிப்பகம், 5, ஜோதி நகர் 4-வது தெரு, மாடம்பாக்கம், சென்னை - 600073