Wednesday, 3 September 2025
மல்லிகார்ஜூன் கார்கேவும் மத பயங்கரவாதமும்
Tuesday, 2 September 2025
ஆத்மார்த்த உரையாடல்
Monday, 1 September 2025
ஒளி முடி
பிரதிபா சேது
பிரதமர் மனதின் குரல் -125வது நிகழ்ச்சியில் மத்திய அரசின் ‘’பிரதிபா சேது’’ என்ற டிஜிட்டல் தளம் குறித்து விரிவாகப் பேசியிருந்தார். அதாவது, மத்திய அரசின் குடிமைப்பணிக்குத் தேர்வு நடக்கும் போது அது மூன்று கட்டமாக நிகழும். முதலில் துவக்கநிலைத் தேர்வு நிகழும். இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். அதில் கணிசமான மதிப்பெண் பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலுக்கு அழைக்கப்படுபவர்களில் பாதிக்குப் பாதி பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். துவக்க நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவதே சவாலான ஒன்று. முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அதனினும் சவாலான ஒன்று. நேர்காணலில் வெற்றி பெறுவது மிக மிக மிக சவாலான ஒன்று. துவக்க நிலைத் தேர்வில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்று நேர்காணலில் தேர்வாகாமல் போனால் மீண்டும் துவக்க நிலைத் தேர்விலிருந்து எழுதத் தொடங்க வேண்டும். பட்டப்படிப்பு படித்த பின்னர் குறைந்தது 5 லிருந்து 7 ஆண்டுகள் முழுமையாக தயாரிப்புகளைச் செய்து இந்த தேர்வுகளை எழுதுவார்கள். அரை மதிப்பெண் ஒரு மதிப்பெண்ணில் வெற்றி வாய்ப்பைத் தவற விடுபவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். அவர்கள் பெருந்திறன் கொண்டவர்களே. ஒவ்வொருவரும் இத்தனை முறைதான் தேர்வு எழுத முடியும் என்ற கணக்கீடு உண்டு. வயது உச்சவரம்பு உண்டு. இவற்றால் மீண்டும் தேர்வு எழுத முடியாமல் போகிறவர்களும் உண்டு. இவர்கள் நாட்டைக் குறித்தும் நாட்டின் அரசியல் சாசனம் குறித்தும் நாட்டின் நிர்வாக முறை குறித்தும் தாங்கள் விருப்பப்பாடமாகத் தேர்வு செய்திருக்கும் கலை அல்லது அறிவியல் அல்லது பொறியியல் பாடங்கள் குறித்தும் விரிவான அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் திறனை பயன்படுத்திக் கொள்ளும் விதத்திலும் அவர்களுக்கு உதவும் விதத்திலும் மத்திய அரசு ‘’பிரதிபா சேது’’ என்ற திட்டத்தைத் துவங்கியுள்ளது. இது ஒரு டிஜிட்டல் இணையதளம் ஆகும். இதில் குடிமைப்பணித் தேர்வுகளின் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு வெற்றி வாய்ப்பை இழந்த மாணவர்களின் பெயரும் அவர்கள் பெற்ற மதிப்பெண்களும் அட்டவணையிடப்படும். தனியார் நிறுவனங்கள் அவர்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் விரும்பினால் அவர்கள் நிறுவனங்களில் வேலை கொடுக்கலாம் என்பது ‘’பிரதிபா சேது’’ டிஜிட்டல் தளத்தின் நோக்கம். இவ்விதம் குடிமைப்பணிக்குத் தேர்வுக்கு தயாரிப்புகள் செய்து நேர்காணல் வரை சென்று வெற்றி வாய்ப்பை இழந்த பலருடன் எனக்கு அறிமுகம் இருந்தது. அவர்களுக்காக நான் சில உதவிகள் செய்து கொடுத்திருக்கிறேன். பிரதமரின் மனதின் குரலைக் கேட்ட போது எனக்கு அந்த நினைவுகள் வந்தன. இந்த சம்பவங்கள் நடந்து எட்டு ஆண்டுகள் இருக்கும்.
அப்போது குடிமைப்பணித் தேர்வுகளின் துவக்க நிலைத் தேர்வில் மத்திய பணியாளர் தேர்வாணையம் சில மாறுதல்களை ஏற்படுத்தியிருந்தது. எவ்வாறெனில் முன்னர் பொதுத்தாள் ஒன்றும் விருப்பத்தாள் ஒன்றும் இருக்கும். இரண்டிலும் தேர்ச்சி பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்களைப் பெற்று முதல்நிலை எழுத்துத் தேர்வுக்குச் செல்ல வேண்டும். அப்போது நிகழ்ந்த மாற்றம் என்னவெனில் பொதுத்தாளுடன் விருப்பத்தாள் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ‘’ஆப்டிடியூட் திறன்’’ சோதிக்கும் தாள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. இதனால் நிறைய பொறியியல் பட்டதாரிகள் ஐ ஏ எஸ் தேர்வின் துவக்க நிலையில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வுக்கு முன்னேறிச் சென்றார்கள். அரசு பொறியியல் பட்டதாரிகளின் நுண் திறன் அரசாங்கத்துக்குத் தேவை என நினைத்தது. இந்த மாறுதல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது கொண்டு வரப்பட்டது. கொண்டு வரப்பட்டு இரண்டு மூன்று ஆண்டுகளின் தேர்வும் நடந்து விட்டது. அதற்கு முன்பு வரை கலை அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வியாபித்திருந்த இடத்தில் இப்போது பொறியியல் பட்டதாரிகள் வியாபிக்கத் தொடங்கினார்கள். கலை அறிவியல் பட்டதாரிகள் தங்களுக்கு ஒரு கூடுதல் வாய்ப்பு அளிக்கக் கோரினார்கள். அரசு ஒருமுறை அளித்தது. மீண்டும் ஒருமுறை கோரினார்கள். அப்போது அரசு ஏற்கவில்லை. இந்த சூழ்நிலையில் மன்மோகன் அரசுக்குப் பின் மோடி அரசு பதவியேற்றது. புதிய அரசிடம் தங்கள் கோரிக்கைகளைச் சொல்ல சென்னையில் ஐ ஏ எஸ் தேர்வுக்காக தயார் செய்து கொண்டிருக்கும் மாணவர்கள் விரும்பினார். அவர்களுக்கு வேண்டியவர் ஒருவர் இந்த விஷயத்தில் என்னால் அவர்களுக்கு உதவ முடியும் என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். அவர்களிடம் ஏன் அவ்வாறு கூறப்பட்டது என்பது எனக்கு இன்று வரை புரியாத விஷயம். சென்னையிலிருந்து எனக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. பேசியவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். தான் ஐ ஏ எஸ் தேர்வுக்கு தயார் செய்வதாகவும் என்னை ஊரில் வந்து சந்திக்க விரும்புவதாகவும் கூறினார். என்ன விஷயம் என்று கேட்டேன். அவர் தேர்வு முறைகள் குறித்தும் இப்போது அவர்களைச் சூழ்ந்திருக்கும் இடர் குறித்தும் கூறினார். எனக்கு ஐ ஏ எஸ் தேர்வு குறித்து விபரங்கள் தெரியும் என்பதால் அவர் கூறியதைப் புரிந்து கொண்டேன். பள்ளி மாணவனாயிருந்த போது ‘’ஐ ஏ எஸ் தேர்வும் அணுகுமுறையும்’’ என்ற நூலை வாசித்திருக்கிறேன். எனவே இந்த விஷயங்கள் குறித்து எனக்கு பரிச்சயம் இருந்தது. இரண்டு நாட்களில் சென்னைக்கு வந்து அவர்களை நேரில் சந்திக்கிறேன் என்று கூறினேன். அவர்களுக்கு நான் காட்டும் ஆர்வம் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. கூறிய விதமே சென்னை சென்றேன். அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் 10 பேர் இருந்தனர். சென்னையில் பரீட்சைக்குத் தயார் செய்யும் மாணவர்கள் இந்த விஷயத்தை அரசாங்கத்திடம் பேச ஒரு குழுவை உருவாக்கியிருந்தார்கள். அவர்களையே நான் சந்தித்தேன்.
இந்த விஷயத்தில் அவர்களுக்கு ஏதேனும் ஒரு விஷயத்தில் உதவ வாய்ப்புள்ளவர்கள் என்று நான் இரண்டு பேரைக் கூறினேன். இருவருமே பெண்கள். ஒருவர் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக இருந்த முன்னாள் ஐ பி எஸ் அதிகாரி. அவர் நாட்டின் முதல் பெண் ஐ பி எஸ் அதிகாரியும் ஆவார். சென்னைக்கு மிக அருகில் புதுச்சேரி இருப்பதால் அவருக்கு விஷயத்தை விளக்கி ஒரு கடிதம் எழுதும்படியும் அவரது அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு சந்திக்க நேரம் பெறுமாறும் ஆலோசனை சொன்னேன். இன்னொருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அப்போது மத்திய அரசில் இணை அமைச்சராகப் பதவி வகித்தார். திருச்சியில் தனது பட்டப்படிப்பையும் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பும் பயின்றவர். அவரையும் சந்திக்கச் சொன்னேன். அரசை அணுக தில்லியில் நாடெங்கும் இருந்த மாணவர்கள் முயற்சித்து வருகிறார்கள் என்றும் கூறினர். நான் அளித்த ஆலோசனைகள் அவர்களுக்கு ஊக்கம் கொடுத்தன. நான் பொறியியல் பட்டதாரியாக இருந்தாலும் கலை அறிவியல் மாணவர்களுக்கு உதவுகிறேன் என்பது அவர்களுக்கு பெரும் நெகிழ்வைக் கொடுத்தது. என்னிடம் உதவி கேட்கிறார்கள் ஆலோசனை கேட்கிறார்கள். அதனை அவர்களுக்கு வழங்குகிறேன் அவ்வளவே என்பதாக நான் நினைத்தேன். ஒரு சில வாரங்களில் என்னை தில்லி சென்று அங்கே உதவ முடியுமா என்று கேட்டார்கள். நான் சில முறை தில்லி சென்றிருக்கிறேன் என்றாலும் இதைப் போன்ற விஷயங்களில் எனக்கு பழக்கம் இல்லை. என் மீது நம்பிக்கை வைத்துக் கேட்கிறார்களே என்று நான் அவர்களுக்காக தில்லி சென்றேன். என்னுடன் சென்னையைச் சேர்ந்த ஐ ஏ எஸ் தேர்வில் நேர்காணலில் வெற்றி வாய்ப்பை இழந்த ஒருவர் உடன் வந்தார். தில்லி மாணவர்களை அவர் அறிமுகம் செய்து வைப்பார் என்று அனுப்பி வைத்தவர்கள் கூறினார்கள். தில்லி செல்ல தில்லியிலிருந்து மீண்டும் திரும்பி வர என நீண்ட அந்த பயணங்களில் நாங்கள் பல விஷயங்களை விவாதித்தோம். பாடப்புத்தகத்தில் படித்த அரசியல் மேடைகளில் முழங்கப்படும் விஷயங்களை அந்த நண்பர் தீவிரமாக நம்பியிருந்தார். நான் கூறிய விபரங்கள் அவருக்கு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அளித்தன. அவருக்கு கம்யூனிசம் மேல் ஈடுபாடு இருந்தது. உலகில் அப்பாவி பொது மக்களை கோடிக்கணக்கில் கொன்று குவித்தது ஸ்டாலினின் கம்யூனிச சர்க்காரும் மாவோவின் கம்யூனிச சர்க்காரும் என்று நான் கூறிய போது அவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த தரவுகள் இருக்கும் இணையதளங்களை நான் அவருக்குக் குறித்துக் கொடுத்தேன். ஐ ஏ எஸ் தேர்வுக்கு தயார் செய்பவர் என்பதால் நிதானமாக இந்த விஷயங்கள் குறித்து படித்து விட்டு என்னுடன் விவாதியுங்கள் என்று கூறினேன். நிறைய கேள்விகள். எல்லா கேள்விகளுக்கும் என்னிடம் விடை இருந்தன. அவர்கள் வந்து நிற்கும் இடத்திலிருந்து தான் நான் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறேன் என்பதால் அது இயல்பே.
தில்லியில் மாளவியா நகர் என்ற பகுதி என்று ஞாபகம். அங்கே ஆயிரக்கணக்கான மாணவர்கள் குழுமியிருந்தார்கள். அவர்களின் தலைவர் அஸ்ஸாமைச் சேர்ந்த மாணவர். அவரது பாட்டனார் வங்கதேசப் போரில் பங்கேற்றவர். ராணுவத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்ரா விருதைப் பெற்றவர். தனது பாட்டனார் குறித்து என்னிடம் விரிவாகக் கூறினார். இந்த விஷயம் எனக்கு நேரடியாக தொடர்பு இல்லாத விஷயமாக இருப்பினும் உதவி கேட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு 2500 கி.மீ க்கு மேல் நான் பயணித்து அவர்கள் உடன் இருப்பது அவர்களை சிலிர்க்கச் செய்கிறது என்று கண்களில் நீர் திரள அந்த இளைஞன் சொன்னது இன்னும் என் நினைவில் இருக்கிறது. உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களின் முயற்சியால் அப்போது மத்திய அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்குடன் இந்த விஷயம் தொடர்பாக பேச நேரம் கிடைத்திருக்கிறது என்னும் தகவலை அந்த அஸ்ஸாம் இளைஞன் எங்களிடம் சொன்னான். இரண்டு நாட்கள் அவர்களுடன் இருந்து விட்டு நாங்கள் இருவரும் தமிழகம் புறப்பட்டோம். அதன் பின் சில நாட்களில் அவர்கள் ராஜ்நாத் சிங் அவர்களைச் சந்தித்தார்கள். அந்த புகைப்படங்களை அந்த அஸ்ஸாம் இளைஞன் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தான்.
பிரதமர் மனதின் குரலில் கூறிய ‘’பிரதிபா சேது’’ குறித்த செய்தி இந்த நினைவுகளை மீட்டுக் கொண்டு வந்தது.
பின்குறிப்பு : என்னுடன் தில்லி வரை உடன் பயணித்த மீண்டும் தில்லியிலிருந்து சென்னை வரை உடன் பயணித்த என்னுடன் பல விஷயங்களை விவாதித்த அந்த நண்பர் ஆன்மீக அமைப்பொன்றில் இணைந்து துறவியாகி விட்டார் என்ற தகவலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அறிந்தேன்.