Saturday, 18 April 2020

மாலை உரையாடல்கள் - 5

நண்பர் அமைதியற்று இருந்தார். ஒவ்வொரு எளிய விஷயத்துக்கும் பின்னால் இருக்கும் பிரும்மாண்டமான பின்னணியும் நோக்கங்களும் அவரை அமைதி இழக்கச் செய்திருந்தன.

மனதில் இருந்த கேள்வியைக் கேட்டார்.

‘’தமிழ்நாட்டில் கோயில்கள் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றனவா?’’

’’உங்கள் அனுபவத்தில் நீங்கள் உங்கள் சிறு வயதிலிருந்து குறைந்தபட்சம் மாதம் ஒரு முறையாவது கோயிலுக்குச் சென்றிருப்பீர்கள். எந்த கோவிலிலாவது அரசியல் விஷயங்கள் பேசப்பட்டதுண்டா?’’

‘’இல்லை; அவ்வாறு எதுவும் பேசப்பட்டதில்லை’’

‘’இந்த கேள்வி ஏன் உங்கள் மனதில் உருவானது?’’

‘’இங்கே மத ஆதிக்க சக்திகள் தலைதூக்கப் பார்க்கின்றன என்று பொது மேடைகளில் முழங்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அதனால் தான் கேட்டேன்’’

என்னுடைய விளக்கத்தை ஆரம்பித்தேன்.

தமிழ்நாடு பெரும்பாலும் விவசாயத்தை நம்பியிருக்கும் மாநிலம். இன்றும் அதுதான் நிலவரம். பிரிட்டிஷ் ஆட்சியில் வசூலிக்கப்பட்ட நிலவரி மாநிலத்தின் விவசாயத்தை பெரும் நெருக்கடியில் தள்ளியது. அவர்கள் ஊருக்குள் தானியமாகப் பங்கிட்டுக் கொள்ளும் பழக்கத்துக்கு உட்பட்டிருந்தவர்கள். திடீரென நிலவரியை பணமாகச் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்ட போது அது பல எதிர்பாராத விளைவுகளை உண்டாக்கியது. தமிழ்நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சியில் ஏற்பட்ட பஞ்சங்கள் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் பேரச்சத்தில் ஆழ்த்தியது. அந்த அச்சம் இன்று வரை தமிழ் மக்களின் ஆழ்மனத்தில் உள்ளது. 

திரு. பக்தவத்சலம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த போது உணவுப்பொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. மீண்டும் ஒரு உணவுப்பஞ்சம் வந்து விடுமோ என தமிழ் மக்கள் பதட்டமடைந்தனர். அதைப் பயன்படுத்திக் கொண்ட தி.மு.க ரூபாய்க்கு மூன்று படி அரிசி தருவோம் என்றார்கள். அவ்வாறு தரவில்லை என்றால் முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள் என்றார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் ரூபாய்க்கு மூன்று படி அரிசி தரவில்லை என்பதே வரலாறு. 

மின் மோட்டார் பயன்பாடு 1990ம் ஆண்டுக்குப் பிறகே தமிழகமெங்கும் மிகப் பரவலாக அதிகரித்தது. ஆற்றுப்பாசனத்தை நம்பியிருந்த பகுதிகளில் மட்டுமே நெல் விவசாயம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து நெல் மற்ற மாவட்டத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவது ஒரு கடத்தல் நடவடிக்கையாக எண்ணப்பட்டது. தமிழகத்தில் மானாவாரி நிலங்களில் கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகியவையே அதிகம் பயிரிடப்பட்டன.

1970களில் எழுதப்பட்ட இரண்டு தமிழ்ப் புத்தகங்களை நான் பரிந்துரைக்கிறேன். 1. தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய வேங்கடம் முதல் குமரி வரை 2. சிட்டி எழுதிய சேக்கிழார் அடிச்சுவட்டில்

இந்த இரண்டு நூல்களையும் வாசித்துப் பார்ப்பவர்களால் ஆலயங்கள் எவ்வாறு கைவிடப்பட்டு இருந்தன என்பதன் சித்திரத்தைக் காட்டக் கூடியது. சிட்டி நாயன்மார்களின் ஒவ்வொரு ஊருக்கும் செல்கிறார். அந்த ஊர்க்காரர்களுக்கோ அதற்கு பக்கத்து ஊரில் இருப்பவர்களுக்கோ கூட அவர் தேடும் ஆலயம் எது என்பதை அறியாமல் இருக்கிறார்கள் என்று கூறுகிறார். சிவசேவையில் தலைமுறைகளாக ஈடுபட்டிருப்பதால் எந்த வருமானமும் இல்லாமல் வறுமையில் இருந்தாலும் பணியைத் தொடர்கிறோம் என பல ஆலயங்களில் அர்ச்சகர்கள் கூறுவதை சிட்டி பதிவு செய்கிறார்.

அதாவது இருபதாம் நூற்றாண்டின் வரலாறு என்பது தமிழ்நாடு பஞ்சத்துக்கு அஞ்சிய வரலாறு. அப்போது ஆலயங்கள் பெரும்பாலும் கைவிடப்பட்டிருந்தன.  சித்திரை, வைகாசி, ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்களில் கிராமங்களில் நடக்கும் இராமாயண , மஹாபாரத பிரசங்கங்களே சமயச் செயல்பாடாக இருந்துள்ளன. அவற்றை சமயச் செயல்பாடு என்றும் முழுமையாகக் கூற முடியாது. அவை பண்பாட்டுச் செயல்பாடுகள். அதிலும் மஹாபாரதக் கூத்து வட தமிழ்நாட்டில் மட்டுமே இருந்துள்ளது. எல்லா பகுதிகளிலும் இராமாயணக் கதை நடக்கும். 

பொருளியல் ரீதியாக கைவிடப்பட்டிருந்த ஆலயங்களில் வருடத்துக்கு ஒரு வாரமோ பத்து நாளோ நடக்கும் இராமாயண உபன்யாசம் மட்டுமே கிராம மக்களுக்கு அவர்களின் பண்பாட்டின் வரலாற்றை எடுத்துரைப்பதற்கான வழியாக இருந்துள்ளது. இராமாயணமும் மஹாபாரதமும் இந்தியர்கள் வாழ்வுடன் நேரடியானத் தொடர்புடையது. ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் இராமன் கதையையும் கிருஷ்ணன் கதையையும் கேட்டே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வளர்ந்தனர். அதன் கடைசிக் கண்ணி திருவிழா பிரசங்கங்கள் மூலம் தமிழ்நாட்டில் தொடர்ந்தது. 

திராவிட இயக்கம் அந்த மரபின் மேல் தனது அரசியலுக்காக தாக்குதலைத் தொடுத்தது. இராமாயணமும் மஹாபாரதமும் ஆரியர்களின் படைப்புகள் என்றும் அவை தமிழ் மக்கள் மீது செயற்கையாகத் திணிக்கப்பட்டது என்று மேடைக்கு மேடை கூறினர். திராவிட இயக்கம் ஒரு பாப்புலிச இயக்கம். அவர்களுக்கு சமூக மாற்றம் இலக்கு அல்ல; அரசியல் அதிகாரமே அவர்களின் தேவை. இராமயணம் மீதும் மஹாபாரதம் மீதும் இன்று வரை திராவிட இயக்கம் பரப்பி வரும் அவதூறுக்காக அவர்கள் வரலாற்றால் மன்னிக்கப்படப் போவதில்லை.

ஹிந்து மதமே ஜாதியை திணிக்கிறது என்றனர். சமத்துவத்துக்கு எதிரானது ஹிந்து மதம் என்றனர். பொய் பரப்புரை மூலம் ஒரு மொழியின் பண்பாட்டு சாரத்தின் மீது பெரும் தாக்குதல் தொடுத்தது திராவிட இயக்கம்.

இன்றும் ஆலயங்களுக்கு பொருளியல் வருமானம் இல்லை. இராமாயணத்தையும் மஹாபாரதத்தையும் தமிழ் மக்களிடம் கொண்டு செல்லும் பண்பாட்டுச் செயல்பாடு தேக்கம் கண்டுள்ளது. கம்ப இராமாயணமும் தேவாரமும் நாலாயிர திவ்யப் பிரபந்தமும் தமிழ் மொழியின் பண்பாட்டுச் செல்வங்கள். அவை எல்லா வழியிலும் காக்கப்பட வேண்டும்.

(தொடரும்)

Friday, 17 April 2020

மாலை உரையாடல்கள் - 4

’’தம்பி! நம்ம சமூகம் பழைய விஷயங்களையே விடாம பிடிச்சுக்கிட்டு இருக்கறதால தான் முன்னேறாம இருக்கா?’’

‘’எதை பழைய விஷயங்கள்னு சொல்றீங்க’’

‘’பிறப்புலேந்து இறப்பு வரைக்கும் சடங்குகள் இருக்கே?’’

‘’உலகத்துல சடங்குகள் இல்லாத சமூகம் உண்டா?’’

‘’அங்கெல்லாம் சடங்குகள் குறைச்சலா இருக்கு’’

‘’எல்லா சமூகத்திலயும் திருமணம் உண்டு. குழந்தைக்குப் பெயரிடும் சடங்கு உண்டு. நிச்சயதார்த்தம் உண்டு. சாவுக்குப் பிற்பாடான சடங்குகள் உண்டு. நினைவு தினம் உண்டு.’’

‘’நீங்கள் சொல்வது உண்மைதான்.’’

நண்பர் சில கணங்கள் அமைதியானார். பின்னர் கேட்டார்.

‘’நாம சடங்குகள் செய்யறதாலதான் பிற்போக்கா இருக்கோம்னு நம்மள தமிழ்நாட்டில நம்ப வச்சுடறாங்க. இது ஏன் நடக்குது?’’

மனிதர்கள் சமூகமாக வாழத் துவங்கியதிலிருந்து சடங்குகள் இருக்கின்றன. ஒரு பெரிய கதையைச் சொல்வதற்கான துவக்கத்தை உருவாக்குகிறார் நண்பர். என்னால் எவ்வளவு தூரம் செல்ல முடிகிறது என்று பார்ப்போம் என என் பதிலை கூறத் தொடங்கினேன்.

குகை ஓவியங்கள் ஆதி மனிதர்களால் மொழி உருவாகும் காலத்திற்கு முன்பே வரையப்பட்டவை. தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் முக்கியமான குகை ஓவியங்கள் இருக்கின்றன. ஒரு தொல் குடித்தலைவன் பறவையின் இறகுகளால் ஆன கிரீடம் ஒன்றை தலையில் சூட்டியிருப்பதன் சித்திரம் அதில் வருகிறது. தனி மனிதன் இரண்டு விதமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்படுகிறான். ‘’நான்’’ என்ற தன்னுணர்வு. அது உருவானதுமே அதனைக் கடந்து செல்ல வேண்டும் என்ற உணர்வு. இந்த இரண்டு நிலையும் அவனுக்கு மாறி மாறி ஏற்பட்ட வண்ணமே இருக்கிறது. எல்லா சடங்குகளுமே தனிமனிதன் தன்னைக் கடந்து சென்று குடும்பத்துடன், சமூகத்துடன், இயற்கையுடன் இணைத்துக் கொள்வதற்கான முயற்சியே. சடங்குகள் உருமாறும் இயல்பு கொண்டவை. மானுடப் பிரக்ஞை வளரும் தோறும் சடங்குகள் மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. பிராணிகள் தீயில் பலியிடப்பட்டிருக்கின்றன. இப்போது  மனதின் தீய இயல்புகளை தீயில் இடுங்கள் என்று சொல்கிறார்கள். இரண்டுமே குறியீடு தான். சாலையில் பச்சை விளக்கு எரிந்தால் செல்லலாம் என்றும் சிவப்பு விளக்கு எரிந்தால் செல்லக் கூடாது என்றும் நாம் ஒரு பொதுப் புரிதலில் புரிந்து கொள்வது போல.
எல்லா சடங்கும் எல்லா சமூகங்களிலும் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன. 

இந்திய மண் எப்போதுமே மனிதர்கள் எல்லைகளுடன் உருவாக்கிக் கொள்ளும் எல்லாவற்றையும் தாண்டிச் சென்றவாறு இருக்கவே அறைகூவல் விடுக்கிறது. ஸ்ரீகிருஷ்ணர், புத்தர், சங்கரர், ராமானுஜர், ஸ்ரீராம கிருஷ்ணர் என காலங்காலமாக ஞானிகள் இங்கே தனி மனித அகத்தை மேலான நிலைக்கு வழிநடத்தியிருக்கிறார்கள். உலகிலேயே தனி மனிதர்கள் மேற்கொள்ளும் சடங்குகளுக்கு எந்த கட்டாயமும் உருவாக்காத சமூகம் ஒன்று இருக்குமானால் அது இந்திய சமூகமாகவே இருக்க முடியும். எந்த சமூக நியதிகளுக்கும் எந்த விதமான சடங்குகளுக்கும் உட்படாத பெரும் குழுக்களை பேணிய சமூகமும் இந்திய சமூகமாகவே இருக்கிறது. 

சுயநலமற்ற அனைத்தும் என்னை வந்தடைகின்றன என்றார் ஸ்ரீகிருஷ்ணர். தூய பிரக்ஞையின் மூலம் இருப்பை உணருங்கள் என்றார் புத்தர். அறிவே தெய்வம் என்றார் ஆதி சங்கரர். மனிதனுக்குச் செய்யும் சேவை இறைவனுக்குச் சேவை என்றார் ராமானுஜர். அன்பின் பெருக்கால் யாவும் ஒன்றே என்றார் ராமகிருஷ்ணர்.

பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னால், இந்தியா அன்னியத் தாக்குதலுக்கு ஆளான வண்ணம் இருந்தது. அன்னிய ஆட்சியாளர்கள் ஹிந்து மதத்தை அழிக்க விரும்பினர். ஆலயங்கள் அழிக்கப்பட்டன. இன்றும் வட இந்தியாவில் பேராலயங்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. அப்போது தங்கள் சமயத்தை மரபைக் காப்பாற்றிக் கொள்ள நாம சங்கீர்த்தனம் முன்னெடுக்கப்பட்டது. திரளாக ஓரிடத்தில் கூடி தெய்வ உருவத்தை வழிபட முடியாத நிலையில் இறைவன் பெயரை உச்சரியுங்கள் என்றனர். ஹிந்து மதம் அவ்வாறே தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.

ஒரு சமூகத்தில் பெரும்பான்மையானோரின் மன அமைப்புக்கு சடங்குகள் எளிதில் பொருந்திப் போகின்றன என்பது ஓர் உண்மை. பெரும்பான்மையானோருக்கு மன அமைதியைத் தருகின்றன என்பது ஓர் நடைமுறை. சமூக மாற்றத்துடன் ஒத்துப் போகாத சடங்குகள் இல்லாமல் ஆகின்றன.

நாராயண குரு தனது வாழ்வில் பல சடங்குகளை மாற்றியமைத்தார். திருமணங்களை எளிமையாகச் செய்யுங்கள் என்றார். மிகக் குறைந்த நபர்கள் உடனிருந்தால் போதும் என்றார். மணமகனின் தாய் தந்தையும் மண மகளின் தாய் தந்தையும் மட்டும் உடனிருக்க திருமணங்கள் நடந்தால் போதும் என்றார். பெரும் தொகை செலவழிக்க நினைத்தால் அதனை மணமக்களின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்து விடுங்கள்; அவர்கள் எதிர்கால வாழ்விற்கு அது பயன்படும் என்றார்.

மகாத்மா காந்தி பட்டாடை அணியாமல் கதராடை அணிந்து எளிய முறையில் திருமணங்களை நடத்திக் கொள்ள வேண்டும் என்றார். தன் குடும்பத்தில் நிகழ்ந்த திருமணங்களை மிக எளிமையாகவே காந்தி நடத்தினார்.

ஆர்ய சமாஜிகள் திருமணங்கள் எளிமையாக நடத்தப்பட வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். அதன் நிறுவனர் சுவாமி தயானந்த சரஸ்வதி விதவை மறுமணத்தை ஆதரித்தவர்.

திராவிட இயக்கம் ஒரு பாப்புலிச இயக்கம். தங்கள் அரசியல் நலன்களுக்காக அவர்கள் பண்பாட்டின் மீது பெரும் தாக்குதல் தொடுத்தார்கள். ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் சடங்குகளை மற்ற ஜாதிகள் மீது திணிக்கிறார்கள் என்ற பரப்புரையை மேற்கொண்டார்கள். மக்கள் சிந்தனையில் நாராயண குருவோ அல்லது மகாத்மா காந்தியோ ஏற்படுத்திய மாற்றத்தை அவர்கள் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கிறார்களா என்பதை யோசித்துப் பார்த்தால் உண்மை புரியும்.

(தொடரும்)

Thursday, 16 April 2020

மாலை உரையாடல்கள் - 3

நண்பர் மாலை உரையாடலை ஒரு கேள்வி மூலம் துவக்கினார்.

ஊழல் அரசு அலுவலர்கள் தொடர்பான விஷயமும் கூட. எந்த கட்சி ஆட்சி வந்தாலும் அதே அரசு ஊழியர்கள்தான் இருக்கப் போகிறார்கள். திராவிடக் கட்சிகள் மட்டும் ஊழல்வாதிகள் என விமர்சிக்கப்படுவது எதனால்?

நான் என் தரப்பைக் கூறினேன்.

உலகில் எல்லா அரசுகளிலும் ஊழல் நடக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஏன் ஜப்பான் அரசின் மீது கூட ஊழல் புகார் அவ்வப்போது எழுவதுண்டு. ஆனால் அவற்றுக்கும் தமிழ்நாட்டின் மாநில அரசில் நடக்கும் ஊழலுக்கும் பெரும் வேறுபாடு உண்டு. 

மேற்படி நாடுகளில் சாமானிய குடிமக்கள் தங்கள் அவசியமான பணிகளை மேற்கொள்ள அங்குள்ள அரசு அலுவலகங்களை அணுகும் போது அங்கிருக்கும் அரசு ஊழியர்கள் எவரும் லஞ்சம் கேட்பதில்லை. அவை எந்த லஞ்சமும் பெறப்படாமல் முறைப்படியே நடக்கின்றன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரசு அலுவலகங்களை அணுகி தங்கள் பணிகள் நிறைவு செய்யப்பட்டு வெளியேறுகின்றனர்.

தமிழ்நாட்டில் பொதுமக்கள் என்ன காரணத்துக்காக அரசு அலுவலங்களுக்குச் செல்கிறார்கள்? சாமானியர்கள் இரு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற அரசு அலுவலகங்களை அணுகுகிறார்கள். இரு சக்கர வாகனமோ அல்லது நான்கு சக்கர வாகனமோ பதிவு செய்ய அணுகுகிறார்கள். வாழ்வில் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தாங்கள் வாங்கும் சொத்தை பத்திரப் பதிவு செய்ய அணுகுகிறார்கள். சொந்தமாக ஒரு வீடு கட்டிக் கொள்ள கட்டிட அனுமதி கேட்டு நகராட்சி அலுவலகம் செல்கிறார்கள். கட்டிய வீட்டுக்கு வரி மதிப்பீடு கேட்டு மீண்டும் செல்கிறார்கள். வரி பெயர் மாற்றம் தேவைப்பட்டால் செல்கிறார்கள். ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கிறார்கள். இதைத் தவிர நடுத்தர வர்க்க சாமானியனுக்கு அரசு அலுவலகம் செல்லும் வேலை மிகவும் குறைவு. போக்குவரத்துத் துறை, பத்திரப் பதிவுத் துறை, உள்ளாட்சித் துறை மற்றும் நுகர்பொருள் வழங்கல் ஆகியவற்றையே சாமானியர்கள் அரசாங்கம் என நினைக்கிறார்கள். அதனையே சற்று விரிவாக்கி தேசம் தங்களுக்குச் செய்யும் செயல்களாக எண்ணுகிறார்கள்.

1. தமிழ்நாட்டில் இந்த அலுவலகங்களில் முறையாக மதிப்புடன் நடத்தப்பட்டவர்கள் என எவரும் இருக்கின்றனரா?

2.  தமிழ்நாட்டில் இந்த அலுவலங்களில் லஞ்சம் கொடுக்காமல் தங்கள் செயல்களை நிறைவேற்றிக் கொண்டவர்கள் என எவரும் உள்ளனரா?

3. இந்த அலுவலகங்களில் லஞ்சம் தர மாட்டோம் என உறுதியாய் இருந்தவர்கள் அலைக்கழிப்புக்கு ஆளாகாமல் இருந்திருக்கிறார்களா?

4. இந்த அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்கும் மக்கள் அரசின் மீதும் நிர்வாகம் மீதும் தேசம் மீதும் எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கிக் கொள்கிறார்களே அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்?

5. அரசு அலுவலகம் என்றாலே லஞ்சம் தர வேண்டும் என்ற மனப்பதிவு பொதுமக்கள் மனதில் உருவாகியிருப்பது தார்மீக வீழ்ச்சி இல்லையா? 

நான் இவற்றுக்கு தமிழ்நாட்டை கடந்த 53 ஆண்டுகளாக ஆண்ட திராவிட இயக்கத்தைக் குற்றம் சாட்டுகிறேன். அவர்கள் அதனை எப்படி நடைமுறைப்படுத்தினார்கள் என்பதை எடுத்துரைக்கிறேன். 

திராவிட இயக்கம் ஒரு பாப்புலிச இயக்கம். அவர்கள் காங்கிரஸ்ஸை எதிர்த்து அரசியல் செய்தார்கள். அன்றைய காங்கிரஸ் லட்சியவாதத் தன்மை கொண்டது. அதன் தலைவர்கள் லட்சியவாதம் மீது நம்பிக்கை கொண்டவர்கள். தேசத்தில் பூசலைக் குறைத்து ஒற்றுமையை நிலைநாட்டி வலுவான தேசத்தைக் கட்டமைப்பதின் சவாலை ஏற்றுக் கொண்டு ஆக்கபூர்வமாக செயல்பட்டவர்கள். அவர்களுக்கு எதிராக பாப்புலிச பரப்புரையை மேற்கொண்டு அரசியலில் தங்கள் இடத்தை அடைந்தவர்கள் திராவிட இயக்கத்தினர். அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஊழலைப் பரவலாக்கினர். ஒரு பாப்புலிச ஆட்சி எவ்வழியிலேனும் தனது ஆதரவுத் தளத்தை உருவாக்கிக் கொள்ளும். நிர்வாகத்தில் ஊழலை ஊக்குவித்து அந்த தொகையில் தங்களுக்கும் பங்கு பெற்றுக் கொண்டனர்.

மத்திய அரசின் துறைகளில் சாமானியர்கள் அணுகுவது ரயில்வே, தபால் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகம். அவற்றில் சாமானியர்களுக்கு அளிக்கப்படும் சேவைகளுக்கு லஞ்சம் பெறப்படுவதில்லை.

மாநில அரசு நிர்வாகத்தில் லஞ்சம் மிகுந்திருப்பதால் ஏற்படும் கேடுகள்.

1. லஞ்சம் ஆயிரக்கணக்கான மக்கள் மனதில் அவநம்பிக்கையை உண்டாக்குகிறது. அது தேசத்தின் மீதான அவநம்பிக்கையாக மாறுகிறது. 

2. லட்சியவாத அரசியலுக்கான இடம் இல்லாமல் போய் பாப்புலிச அரசியல் மட்டுமே நிலைக்கிறது.

3. மக்கள் அரசின் மீது நம்பிக்கை இழக்கிறார்கள். அதனை பயங்கரவாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். 

4. ஒவ்வொரு குடிமகனுக்கும் அது தனது தேசம் குறித்த தாழ்வுணர்ச்சியை உருவாக்குகிறது. 

5. ஒரு சமூகத்தின் தார்மீக மதிப்பீடுகள் அழிக்கப்படுகின்றன. 

6. ஊழல் மனித மனத்தின் பேராசை சார்ந்தது. அதனை கட்டுக்குள் வைக்க முடியாது. கட்டற்று பெருகிக் கொண்டு செல்வது பேரழிவை உண்டாக்கும்.

7. திராவிட இயக்கத்தின் ஊழல் செயல்பாடுகளால் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. எ.டு மணற் கொள்ளை.

லஞ்சத்தின் கரங்கள் கடைசியில் மக்களின் கழுத்தையும் இறுக்கத் துவங்கியுள்ளது. வாக்குக்கு பணம் தருவதன் மூலம் ஜனநாயகத்தை கழுவேற்றியுள்ளனர் திராவிட இயக்கத்தினர்.

திராவிட இயக்க பாப்புலிச அரசியல் நம்மை ஒரு விஷச்சுழலில் சிக்க வைத்துள்ளது. அதனை உணர்வதற்கான நேரம் இது.

(தொடரும்)

மாலை உரையாடல்கள் - 2

மாலை நண்பர் வந்திருந்தார்.

’’தம்பி! கோயில் நிலம் பற்றி நீங்கள் சொன்னதை யோசித்துப் பார்த்தேன். நீங்கள் சொல்வது உண்மைதான்.’’

‘’அப்படியா’’ என்று கேட்டுக் கொண்டேன்.

’’ராஜாஜி பெரிய தலைவரா தம்பி?’’ என நண்பர் வினா எழுப்பினார்.

‘’ஏன் அவ்வளவு சந்தேகமா அந்த கேள்வியக் கேட்கிறீங்க?’’

‘’அவர் செய்த சாதனைகள் பற்றி தமிழ்நாட்டுல யாரும் பேசறது இல்லையே ஏன்?’’

‘’தமிழ்நாட்டுல கிட்டத்தட்ட 30 வருஷ காலம் மதுவிலக்கு அமலில் இருந்தது. அதைக் கொண்டு வந்தவர் ராஜாஜி.’’

நண்பர் ஆச்சர்யமடைந்தார். அவர் அதனைக் கேள்விப்பட்டிருக்கவில்லை.

’’பல வருஷமா ஹோசூர்ல பல விதமான தொழிற்சாலைகள் இருக்கே. அந்த ஊரை ஒரு தொழில் மையமா மாத்தணும்னு திட்டமிட்டு வேலைகள் செஞ்சவர் ராஜாஜி’’

நண்பர் அதனையும் கேள்விப்பட்டிருக்கவில்லை.

‘’நீங்கள் ராஜாஜி பற்றி என்னதான் கேள்விப்பட்டீர்கள்?’’

‘’அவர் குலக்கல்வி திட்டம் கொண்டு வந்தார்னு கேள்விப்பட்டிருக்கேன்?’’

‘’வேற என்ன கேள்விப்பட்டீங்க?’’

‘’தம்பி! கோச்சுக்காதீங்க. குலக்கல்வி திட்டம் ஜாதியை வளர்க்கற திட்டம்னு கேள்விப்பட்டேன்.’’

ராஜாஜியின் கல்வித் திட்டம் குறித்து அவருக்கு விளக்கினேன்.

நாடு சுதந்திரம் பெற்றவுடன், மத்திய அரசு மக்களுக்கு கல்வியறிவு அளிக்க வேண்டும் என்று விரும்பியது. கல்வியறிவு பெற்ற சமூகமே ஒப்பீட்டளவில் சட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும். சட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் சமூகத்திலேயே அமைதி நிலவும். அதனால் வளர்ச்சி ஏற்பட சாத்தியமாகும். மேலும் மனிதர்களின் உழைப்பு சுரண்டப்படாமல் இருக்க அவர்கள் கல்வியறிவு பெற்றிருப்பது அவசியமானதாகும்.

நாம் இந்த விஷயத்தை பலவிதங்களில் அணுக முடியும். தமிழ்நாடெங்கும் நடைமுறை விஷயங்கள் பல திண்ணைப் பள்ளிக்கூடங்களில்  பயிற்றுவிக்கப்பட்டன. ஒவ்வொரு ஊரிலும் ஓர் ஆசிரியர் இருந்து கிராம மக்களுக்கு கல்வி அளித்துக் கொண்டிருந்தார். அவர்களையும் உள்ளடிக்கிய ஒரு கல்விமுறை கொண்டு வந்திருக்கப்பட வேண்டும். ஜவகர்லால் நேரு சோவியத் யூனியனை தன் ஆதர்சமாகக் கொண்டவர். அதன் அடிப்படையும் இயங்குமுறையும் முற்றிலும் வேறானது. சோவியத் கல்வியை அரசாங்கத்தின் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அதே போல் இங்கும் திட்டமிட்டார் நேரு.

ராஜாஜி தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த போது பள்ளிகளின் எண்ணிக்கைக்கும் படிக்க வாய்ப்புள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கும் இடையே பெரும் இடைவெளி இருந்ததைக் கண்டார். அதனைக் குறைக்க பள்ளிகளின் வேலை நேரத்தை சில மணி நேரங்கள் கூடுதலாக்கினார். அதாவது , காலை 9.30 மணியிலிருந்து மாலை 4.30 மணி வரை  என இருக்கும் பள்ளி நேரத்தை காலை 8 மணியிலிருந்து 5.30 மணி வரை என ஆக்கினார். மாணவர்களை இரண்டு பிரிவாகப் பிரித்து ஒரு பிரிவு காலை 8 மணியிலிருந்து 12.30 மணி வரையும் இன்னொரு பிரிவுக்கு மதியம் 1.30 மணியிலிருந்து 5.30 மணி வரைக்கும் என கல்வி கற்க வாய்ப்பு தந்தார். அரசாங்கத்திற்கு உபரி செலவு இன்றி மாணவர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் திட்டம் இது. தங்கள் பணி நேரம் அதிகரிக்கும் என்பதால் ஆசிரியர்கள் அதனை விரும்பவில்லை. அன்று ஆசிரியர்களே கிராமங்களில் அரசாங்கத்தைப் பற்றிய அரசியல் தலைவர்களைப் பற்றிய பொது அபிப்ராயத்தை உருவாக்குபவர்கள். அவர்களுடைய அதிருப்தியைப் புரிந்து கொண்ட திராவிட இயக்கம் அதனை எதிர்த்தது.

ஷிஃப்ட் முறையில் பயின்ற நேரம் போக மீதி நேரம் மாணவர்கள் என்ன செய்வது என்று கேட்கப்பட்ட போது பெற்றோருக்கு அவர்கள் தொழிலில் உதவட்டும் என்றார் ராஜாஜி. அதனை உள்நோக்கத்துடன் திரித்து மேடைக்கு மேடை பரப்புரை செய்து தந்தை செய்யும் தொழிலை மகனை செய்யச் சொல்லி ஜாதியை வளர்க்கிறார் ராஜாஜி என்றனர். சட்டநாதக் கரையாளர் என்னும் சுதந்திரப் போராட்ட வீரர் ’’திருச்சி சிறை’’ என்ற நூலை எழுதியிருக்கிறார். அதனை எவரும் வாசித்துப் பார்க்கலாம். அதில் சுதந்திரத்துக்காக சிறை சென்று எவ்வாறு சிறைக் கொட்டடியில் பல மாதங்கள் அடைபட்டுக் கிடந்தார் ராஜாஜி என்பதன் பதிவுகள் இருக்கின்றன. சிறையில் சிறைக் கைதிகளுக்கு திருக்குறளும் ஷேக்ஸ்பியரும் வகுப்பாக எடுத்தவர் ராஜாஜி. மகாத்மா காந்தி ராஜாஜியை தனது மனசாட்சி என்றார்.அவரை ஜாதி வெறியர் என்றனர். பிற்போக்குவாதி என்றனர்.

திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்ததும் கல்வித்தரம் கீழிறிங்கியது. ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு என உருவாக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வழங்கும் பட்டயம் போல நகைப்புக்குரிய திட்டம் வேறேதும் இருக்குமா என்பது கேள்விக்குறி. பத்தாம் வகுப்பு முடித்து ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பட்டயம் பெற்றால் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ஆக முடியும். திராவிட இயக்கம் ஏன் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து இளங்கலை, முதுகலை மற்றும் அறிவியல் பட்டம் பெற்ற மாணவர்களை ஆரம்பப் பள்ளிக்குத் தேர்ந்தெடுக்கவில்லை. அன்று மேற்படி படிப்புகள் படித்து வேலையில்லாமல் இருந்த பட்டதாரிகளின் எண்ணிக்கை மிக அதிகம் தானே? இன்று மாநில அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் 40 சதவீதத்துக்கு மேல் பள்ளி ஆசிரியர்கள் இருக்கின்றனர். கல்வித்தரம் எப்படி இருக்கிறது? எல்லா ஊரிலும் அரசுப் பள்ளிகள் இருக்கின்றன என்றால் ஏன் அத்தனை தனியார் பள்ளிகள் துவக்கப்பட்டன? பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஏன் திராவிட இயக்க அரசியல்வாதிகளால் நடத்தப்படுகின்றன?

ராஜாஜியின் திட்டம் கூர்மதியுடனும் தொலைநோக்குடனும் வடிவமைக்கப்பட்டது. மக்கள் நலனை மையமாகக் கொண்டது.

ராஜாஜியின் கல்வித்திட்டம் ஜாதியை வளர்க்கும் என்றார்களே அவர்களிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி இருக்கிறது. தமிழ்நாட்டின் பல பள்ளிகளில் மாணவர்கள் குறிப்பிட்ட வண்ணங்கள் கொண்ட கயிறுகளை தங்கள் ஜாதிகளை அடையாளப்படுத்தும் விதத்தில் கைகளில் அணிந்திருப்பதாகச் சொல்கிறார்கள். திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்து 53 ஆண்டுகள் ஆகி விட்டது. ராஜாஜியின் கல்வித் திட்டம் தோற்கடிக்கப்பட்டு 65 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. ஏன் ஜாதி வெறி பள்ளிகளில் கூட இத்தனை கூர் கொண்டுள்ளது?

ஓர் உண்மையான தேசபக்தர் பிற்போக்குவாதி என வசைபாடப்படுவதும் மக்களை ஜாதியால் பிரித்தவர்கள் தலைவர்கள் என போற்றப்படுவதும் தமிழ்நாட்டில் நடக்கிறது. செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் என்று ஒரு பழமொழி உள்ளது. அது தமிழ்ச் சமூகம் பற்றியதோ?

(தொடரும்)

Wednesday, 15 April 2020

மாலை உரையாடல்கள் - 1

சில நாட்களாக, மாலை வேலைகளில் என் நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருக்கிறேன். அவர் சமூகப் பிரக்ஞை கொண்டவர். என் மீது மிகவும் பிரியமாக இருப்பார். நெடுநாட்களாக எங்களுக்கு பழக்கம். இந்த காலகட்டத்தில் பகல் பொழுதுகளில் சந்தித்துக் கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. 

பொதுவாக ஒருவர் உரையாடலைத் தொடங்கினால் நான் அதனைக் கவனமாக கேட்டுக் கொள்வேன். அவர்கள் பயன்படுத்தும் சொற்கள், அவர்களுடைய ஆர்வம், அவர்களுடைய உணர்வுகள், பேசும் விஷயத்தில் அவர்களுக்கு இருக்கும் ஈடுபாடு ஆகியவற்றைக் கவனிப்பேன். பின்னர் அவர்கள் கூறுவதில் எனக்கு இருக்கும் ஐயங்களைக் கேட்பேன். அதற்கான விளக்கங்களைப் பெறுவேன். அதன் பின்னர் நான் என்னுடைய அவதானங்களைக் கூறத் துவங்குவேன். 

சிந்திக்கும் பழக்கம் கொண்ட ஒருவனாக , நான் சமூகம் சார்ந்த எந்த விஷயத்தையும் தர்க்கபூர்வமாக அணுகி அதன் வரலாற்று இடத்தை ஆராய்ந்து அதனை நான் எப்படி பார்க்கிறேன் என்பதையே எப்போதும் முன்வைக்கிறேன். எனது தரப்பை ஏற்பதும் ஏற்காமல் போவதும் எதிராளியின் முடிவு. நான் முன்வைக்கும் தர்க்கம் முழுமையானதாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு மாறா உறுதி உண்டு. 

நண்பர் என்னிடம் ஒருநாள் ஆரம்பித்தார்.

‘’தம்பி! வீட்டு மனை விவசாய நிலத்தை கோயில் இடம் பட்டான்னு இரண்டாகச் சொல்றாங்களே ; இதுல பட்டா இடம்னா என்னன்னு புரியுது. கோயில் இடம்னா என்ன?’’

அவரிடம் விளக்கம் கொடுத்தேன்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஊர்களில் அந்த ஊர்களில் இருக்கும் ஆலயங்களுக்கு அந்த ஊரில் இருக்கும் நிலத்தில் கிட்டத்தட்ட பாதி நிலம் சொந்தமாக இருக்கும். அந்த நிலத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் அந்த ஆலயத்துக்குரியது. ஆலயத்தைச் சேர வேண்டியது. அந்த இடத்தில் ஆலய நிர்வாகம் நேரடியாக விவசாயம் செய்யலாம். குத்தகைக்கு விடலாம். வாடகைக்கு விடலாம். அந்த வருமானம் ஆலயத்தைச் சேர வேண்டும். 

அந்த சொத்து ஆலயத்தைச் சேர்ந்தது. ஆலயத்தை நம்பியிருக்கும் அர்ச்சகர்கள், தேவார ஓதுவார்கள், இசைக் கலைஞர்கள், ஆலயத்தின் தூய்மைப் பணியாளர்கள் , தமிழ் கற்றுத் தரும் ஆசிரியர்கள், நடனம் பயிற்றுவிப்போர், சிற்பிகள், சொற்பொழிவாளர்கள் ஆகியோரை நல்ல முறையில் பேண அந்த தொகை செலவழிக்கப்பட வேண்டும். அது ஆலயத்தை மட்டும் பேணும் செயல் அல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நிகழும் ஒரு பண்பாட்டுச் சூழலைத் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சியும் கூட. 

1970களில் குத்தகைச் சட்டம் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டது. அதில் நில உரிமையாளர் , குத்தகையாளர் ஆகியோரில் நில உரிமையாளரின் உரிமைகள் பெருமளவில் முடக்கப்பட்டு குத்தகைதாரர்களுக்கு பெரும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இது வாக்கு வங்கிக்காக நிகழ்த்தப்பட்டது. 2005ம் ஆண்டுக்குப் பின் வங்கிகள் தங்கள் பிணையில் இருக்கும் வாராக்கடன் சொத்துக்களை ஏலத்துக்கு கொண்டு வருவது தொடர்பாக ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதனை எதிர்த்து சிலர் உச்சநீதிமன்றம் சென்ற போது நீதிபதிகள் தடை தர முடியாது என்று சொல்லி உரிமையாளர் - குத்தகையாளர் குறித்து விளக்கங்களை அளித்தனர். நிலத்தின் உரிமையாளரே முதன்மையானவர் என நீதிபதிகள் கூறினர். 

நண்பர் என்னிடம் ஒரு விளக்கம் கேட்டார்.

’’கோயில் இடத்தை விற்க முடியுமா தம்பி?’’

‘’விற்க முடியாது. விற்கக் கூடாது. சட்டப்படியும் தார்மீகப்படியும் அது தவறு. பல நீதிமன்ற தீர்ப்புகள் அதனை உறுதிப்படுத்தி விட்டன’’

‘’குத்தகைச் சட்டத்தை எப்படி அரசியல் லாபத்துக்காக என்று கூறுகிறீர்கள்?’’

‘’தமிழ்நாட்டில் ஒரு ஊரின் சராசரி நிலப்பரப்பு 1000 ஏக்கர். சராசரி மக்கள் தொகை 1000. அதில் கோயில் நிலம் 400 ஏக்கர் என எடுத்துக் கொள்வோம். இந்த 400 ஏக்கர் நிலம் 200 பேருக்கு 2 ஏக்கர் வீதம் குத்தகைக்குத் தரப்படும். இந்த 200 பேரும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து குடும்பத்துக்கு மூன்று பேர் எனக் கணக்கிட்டால் 600 பேர் இருப்பார்கள். இதில் 400 பேர் வாக்குரிமை உள்ளவர்களாக இருப்பார்கள். நிலத்தின் விவசாயக் கூலிகளாக 250 பேர் இருப்பார்கள். ஆலயத்தை நம்பி வாழ்பவர்களாக 100 பேர் இருப்பார்கள். ஆலயத்துக்கு முறையாக குத்தகை வருமானம் வருமானால் ஆலயம் உயிர்ப்புடன் செயல்பட அது உதவும். குத்தகை நிலத்தின் 25 சதவீதத்தை சுழற்சி முறையில் கூலித் தொழிலாளர்களுக்கு வழங்கினால் அவர்களும் பொருளியல் வளர்ச்சி பெற அது உதவும். ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்காக குத்தகைச் சட்டம் கொண்டு வந்தனர். திராவிட இயக்கம் ஆலயங்களை அழிக்க வேண்டும் என்று பரப்புரை செய்த இயக்கம். அவர்கள் ஆட்சிக்கு வந்த போது ஆலயங்களை பொருளியல் ரீதியாக முடக்கினர். மறைமுகமாக குத்தகைதாரர்களை குத்தகை செலுத்தாமல் இருக்க ஊக்கப்படுத்தினர். ஆலயங்களுக்கும் கிராம மக்களுக்கும் இருக்கும் உணர்வுபூர்வமான பிணைப்பு மெல்ல அகற்றப்பட்டது.’’

‘’கோயில்கள் ஆக்கபூர்வமான சமூகப் பணிகளை எங்கயாவது செய்யறாங்களா தம்பி’’

‘’கர்நாடகா-ல தர்மஸ்தலான்னு ஒரு ஊர் இருக்கு. மஞ்சுநாத சுவாமி கோயில் இருக்கு. எப்போதும் பெரிய அன்னதானம் நடக்கற இடம். டிஸ்கவரி சேனல்-ல உலகின் மிகப் பெரிய சமையலறைகள் நிகழ்ச்சியில் அத அடிக்கடி காட்டுவாங்க. அந்த கோயில் டிரஸ்டிக்கு பத்ம விபூஷன் விருது கொடுத்துச்சு இந்திய அரசாங்கம்.அது ஒரு உதாரணம். இந்தியாவுல எல்லா மடமும் எல்லா பெரிய கோயிலும் அவங்களால முடிஞ்ச கல்விப்பணி செஞ்சுகிட்டுதான் இருக்காங்க’’

‘’இந்த விஷயத்துக்குள்ள இவ்வளவு கணக்கு வழக்கு இருக்கா. நம்பவே முடியலை தம்பி”

‘’யார் சொல்றதையும் நம்ப வேண்டிய அவசியம் இல்லை. நீங்களே சுயமா யோசிச்சுப் பார்த்து முடிவுக்கு வாங்க’’

(தொடரும்)

Tuesday, 14 April 2020

வாழ்வின் வசந்தம்

புதுத் தளிர்கள் துளிர்க்கும் மலர்கள் மலரும் தாவரங்களில் கனிகள் கனியும் வசந்த காலம் மெல்ல சூழ்கிறது. கோடை உச்சம் பெற்றிருக்கும் காலங்களில் நான் அதிகம் அலைந்து திரிந்திருக்கிறேன். பகலெல்லாம் வெயிலை உடலில் ஏந்தி வியர்வைச் சுரப்பிகள் வற்றிப் போய் தோலின் உப்பு அதன் மேற்பரப்பில் வறண்டு ஒட்டிக் கொண்டிருக்கும் போது அனல்காற்றில் நான் பெரும்பாலும் பயணித்திருக்கிறேன். கோடையின் பகல்பொழுது விடை பெற்று அந்திக்குப் பின் தெற்கிலிருந்து வரும் தென்றல் உடலைத் தீண்டும் போது உணரும் இனிமைக்காக இன்னும் எத்தனை கோடையிலும் அலையலாம். உடலைத் தீண்டும் தென்றல் இளைப்பாற்றுகிறது. நம்பிக்கை அளிக்கிறது. தொடர்ந்து முன்னேறிச் செல்வதற்கான உத்வேகம் அளிக்கிறது. 

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Thursday, 9 April 2020

144 ஆண்டுகளுக்கு முன்னால்

தமிழ்நாட்டில் இந்த காலகட்டத்தில் தாது வருஷப் பஞ்சம் குறித்தும் அப்போது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்தும் அப்போதைய ஆட்சி பஞ்சத்தை எப்படி எதிர்கொண்டது என்பது குறித்தும் ஓர் உரையாடல் எழக் கூடும் என்று எதிர்பார்த்தேன். அவ்வாறு ஏதும் நிகழவில்லை. 

தமிழ்நாட்டில் எப்போதுமே இந்திய அரசாங்கத்துக்கு எதிரான குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கும். இந்திய அரசாங்கம் தமிழக மக்களுக்கு எதிராக எப்போதும் செயல்படுகிறது என்ற பரப்புரை சுதந்திரம் பெற்றதிலிருந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. ‘’வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’’ என்று மேடைதோறும் முழங்கினார்கள். ‘’அடைந்தால் திராவிட நாடு ; இல்லையேல் சுடுகாடு’’ என்றார்கள். தமிழ்நாட்டின் பொது மக்கள் சிந்தையில் எப்போதும் தில்லி குறித்த ஐயங்களை தமிழ்நாட்டில் உருவாக்கிக் கொண்டேயிருந்தனர். அந்த காலகட்டத்திலும் இந்திய அரசின் நிதியிலிருந்து மக்கள் பிரதிநிதிகளாக ஊதியம் பெற்றுக் கொண்டு இருந்தனர் என்பது நகைமுரண்.

பிரிட்டிஷ் ஆட்சி இந்திய மக்களைப் பொருளாதார ரீதியாக சுரண்டுகிறது என்பதை மகாத்மா காந்தி தேசத்திடம் எடுத்துரைத்தவண்ணம் இருந்தார். நாம் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ளும் மிகச் சிறிதளவு உப்பிலிருந்து கூட வரி பெறும் அளவுக்கு பிரிட்டிஷார் இரக்கமற்றவர்கள் என்பதை இந்தியாவின் எளிய மக்களுக்கும் புரிய வைத்தார். ( காந்தி வாழ்வில் நடந்த ஒரு சம்பவம். இந்திய சுதந்திரத்தின் போது காந்தி தில்லியில் இல்லை. வங்காளத்தில் இருந்தார். தில்லி திரும்பிய போது நேரு மகாத்மாவைச் சந்திக்கிறார். காந்தி அன்று மௌன விரதத்தில் இருக்கும் நாள். நேரு காந்தியிடம் சுதந்திர சர்க்கார் செய்ய வேண்டிய காரியமாக நீங்கள் நினைப்பது என்ன என்று கேட்கிறார். மகாத்மா ஒரு காகிதத்தில் பென்சிலில் ''Remove salt tax'' என்று எழுதிக் காட்டுகிறார்). ஒத்துழையாமை இயக்கம் இந்தியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் பிரிட்டிஷார் ஆட்சி நடத்த முடியாது என்பதை குறியீட்டு ரீதியில் எடுத்துரைத்தது. அவரது காங்கிரஸ் கட்சி நாட்டின் ஒவ்வொரு கிராமங்களிலும் ஊழியர்களையும் தொண்டர்களையும் கொண்டு கிட்டத்தட்ட ஓர் இணை அரசாங்கமாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தது. 

சுதந்திரத்தை ஒட்டி நம் நாடு பெரும் மதக்கலவரத்தைச் சந்தித்தது. தகவல் தொடர்பு மிகக் குறைவாய் இருந்த காலகட்டத்தில் பொருளாதார நிலை வலுவாக இல்லாத ஓர் அரசாங்கத்தைக் கொண்டு இந்திய ஜனநாயகம் நடைபோடத் துவங்கியது. ஜனநாயகம் அனைவருக்குமான பிரதிநிதித்துவத்தை அளிப்பது . நமது அரசியல் சாசனம் அவ்வகையில் மேலான ஒன்றே. நாம் ஒரு தேசமாக மெல்ல மெல்ல எனினும் முன்னேறியவாறே இருக்கிறோம் என்பதே உண்மை. 

நாம் சாதிக்க வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன. நாம் மாற்றிக் கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்று வரை நாம் குடிமைப்பண்புகள் மிக்க சமூகமாக உருவாகி விட்டோமா என்பது மிகப் பெரிய கேள்வி. அரசியல் கொந்தளிப்புகள் மற்றும் பூசல் மனநிலையைத் தாண்டி கோடிக்கணக்கான சாமானிய இந்தியர்கள் இந்திய அரசு உருவாக்கிக் கொடுத்த வாய்ப்புகளின் வழியாகவே வெற்றி பெற்று எழுந்தனர் என்பது வரலாறு.

தமிழ்நாட்டில் மத்திய அரசை எப்போதுமே வசைபாடியே பழகி விட்டனர். இந்த வசைபாடல் லட்சக்கணக்கான தமிழ் மக்களை தவறான திசையில் வழிநடத்துகிறது என்பதே உண்மை. எந்த நாடாயினும், எந்த ஜனநாயகமாயினும் தனது தார்மீக அடிப்படைகளுக்கு எதிராகப் பேசும் எந்த குழுவையும் அனுமதிக்காது என்பதே உண்மை. ஆயினும் இந்தியாவில் பல்வேறு காரணங்களால் இவ்வகையான குழுக்கள் இடைவெளியின்றி செயல்படுகின்றனர் என்பது ஒரு துயர். தமிழ்நாட்டில் அதன் தாக்கம் இன்னும் அதிகம் என்பது மேலதிகத் துயர்.

தமிழ்நாட்டில் இந்திய அரசாங்கத்தை எதிர்க்கும் போக்கை திராவிடக் கட்சிகள் பின்பற்றின. அவர்கள் இந்தியா சுதந்திரம் பெற்ற போது பிரிட்டிஷார் இந்த நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று தீர்மானம் போட்டார்கள். அந்த பிரிட்டிஷ் அரசாங்கம் தமிழ் நாட்டு மக்களுக்கு அந்த தீர்மானம் போடப்பட்டதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் என்ன செய்தது என்பதைப் பார்ப்போம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் தமிழ்நாட்டின் மக்கள்தொகை இன்று இருப்பதைப் போல நான்கு மடங்கு குறைவாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து கொள்வோம். இன்றைய மக்கள் தொகை 7 கோடியே 20 லட்சம். அன்று 1 கோடியே 80 லட்சம் மக்கள் தொகை இருந்திருக்கும் என்று கற்பனை செய்து கொள்வோம். அதில் 40,00,000 மக்கள் உண்ண உணவின்றி இறந்து போயிருக்கிறார்கள். கிட்டத்தட்ட தமிழ்நாட்டு மக்கள் தொகையில் கால் பங்கு சில மாதங்களில் பிணமாகி விழுந்திருக்கின்றனர். அதனை பிரிட்டிஷ் அரசாங்கம் வேடிக்கை பார்த்தது. வரலாற்றின் குரூரமான உண்மைகளில் ஒன்று அந்த பஞ்சம் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பேராசையால் மக்கள் மீது திணிக்கப்பட்டது என்பது. அப்போது நாட்டின் பல பகுதிகளில் இருந்த உபரி விளைச்சலை பிரிட்டிஷ் அரசாங்கம் துறைமுகங்கள் மூலம் தனது நாட்டுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. அன்று இருந்த நிலைமையில் சாகக் கிடந்த மக்கள் உணவளிக்கப்பட்டிருந்தால் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு கணக்கேயில்லாமல் தங்களால் ஆன உடல் உழைப்பை அளித்திருப்பார்கள். ஆனால் அவர்களை தங்கள் பிரஜைகளாக மனிதர்களாகக் கூட கருதாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் சாக விட்டது. இந்த அரசாங்கம் எங்களை நீங்கிச் செல்லக்கூடாது என்று தீர்மானம் போட்டது திராவிட இயக்கம்.

அந்த காலகட்டத்தில் வள்ளலார் உருவாக்கிய சத்திய ஞான சபை அன்னதானத்தை ஒரு சமயச் செயல்பாடாக முன்னெடுத்தது. இன்றும் அதன் பணி தொடர்கிறது. 

இந்தியா இன்று உணவுத் தன்னிறைவைப் பெற்றிருக்கிறது என்பது ஓர் உண்மை. நாடே முடங்கியிருக்கும் நிலையிலும் தனது கையிருப்பில் உள்ள உணவு தானியத்தை இந்தியாவின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிவாரணமாக வழங்கும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறது இந்திய அரசு. இது ஒவ்வொரு இந்தியனுக்குமான பெருமிதம் இல்லையா? ஒரு உலகளாவிய நெருக்கடியை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்வது அறமற்ற முறையில் நம்மை ஆண்ட அன்னியர்களுக்கு நாம் ஆக்கபூர்வமாக அளிக்கும் பதில் இல்லையா?

Wednesday, 8 April 2020

இந்திய நிலத்தின் வாய்ப்புகள்

எனது சிறுவயதில் நான் சுவாமி விவேகானந்தர் நூல்களை வாசித்திருக்கிறேன். அப்போது பத்து வயதிருக்கும். சுவாமிஜியின் சொற்கள் பெரும் மனஎழுச்சியை உண்டாக்கும். ஒவ்வொரு மனிதனும் கொள்ள வேண்டிய தன்னம்பிக்கை குறித்து சுவாமிஜி சொல்வார். இந்திய மண்ணின் பெருமைகள் குறித்து பேசுவார். இந்தியாவின் ஆன்மீகப் பாரம்பர்யம் குறித்து எடுத்துரைப்பார். இந்தியா உலகிற்கு வழிகாட்டியாய் அமையும் என்று உறுதியாகக் கூறுவார். இவை என் மனதில் பதிவாகியிருந்தன. இப்போதும் அந்த சொற்கள் அகத்தில் உள்ளன.

நான் இப்போது இந்த தருணத்தில் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கிறேன். தமிழ்நாட்டின் பாடநூல்கள், பத்திரிக்கைகள் எவற்றிலும் இந்தியாவின் உயிரான தன்மை குறித்து முன்வைக்கப்படுகிறதா என எண்ணிப் பார்க்கிறேன்.  இல்லை என்பதே உண்மை. 



இந்தியா அரசியலை அடிப்படையாய்க் கொண்ட சமூகம் இல்லை. இந்த நிலம் இன்றும் பிரதானமாக விவசாயத்தையே அடிப்படையாய்க் கொண்டது. இன்றும் இந்த மண்ணின் கோடிக்கணக்கான மக்கள் விவசாயத்தையே நம்பியிருக்கின்றனர். தாமோதர் தர்மானந்த கோசாம்பி போன்ற இந்திய மார்க்ஸிய அறிஞர்களே இந்த உண்மையை உரைத்துள்ளனர். கோசாம்பி அரசாங்கம் கிராமங்களில் குடிமக்களிடமிருந்து பெறும் வரியை தானியமாகப் பெற வேண்டும் என்ற திட்டத்தை முன்வைக்கிறார். 



ஓர் இந்திய கிராமம் என்பது ஆயிரம் பேர் கொண்ட ஒரு ஜனத்திரளை அவர்களுக்குள் தன்னிறைவுடன் வாழும் ஒரு வாழ்க்கைமுறையை பல நூற்றாண்டுகள் பழக்கமாகக் கொண்டுள்ளது. அதில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன. மிகச் சில எதிர்மறையான அம்சங்கள் உள்ளன. எதிர்மறை அம்சங்களைக் குறைத்து நேர்மறையான விஷயங்களை அதிகரிப்பதே ஆக்கபூர்வமான செயல்பாடாக இருக்கும். உலகின் எந்த அரசும் மக்களின் சமூகப் பழக்கத்தையே அடித்தளமாய்க் கொண்டு எழுப்பப்படுகிறது. அது உருவாக்கும் எந்த விஷயமும் அந்த மக்களுக்கு உதவுவதாய் இருக்க வேண்டும்.



இந்தியாவின் சுதந்திரத்துக்குப் பின் நிகழும் பல்வேறு திட்டமிடல்களில் மேற்கத்திய நாடுகளின் முறைகளே பின்பற்றப்படுகின்றன. அவர்கள் மேற்கொள்ளும் திட்டமிடல்கள் அப்படியே நகலெடுக்கப்படுகின்றன. அது இந்திய கிராமங்களையும் கிராம மக்களையும் விவசாயத்தையும் சிதைத்தது என்பதே உண்மை. நான் ஒரு உதாரணம் சொல்கிறேன். இந்தியாவில் சோழர்கள், ஹொய்சாளர்கள், காகதீயர்கள், மௌரியர்கள், மராத்தியர்கள், ராஜபுத்திரர்கள், சீக்கியர்கள் அரசாங்கங்களை நடத்தியிருக்கின்றனர். அவர்கள் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர் மேலாண்மைத் திட்டங்களின் பயன்களை இன்றும் நாம் அனுபவிக்கிறோம். இந்த அரசுகள் அனைத்துமே கிராமங்களை - கிராமத்தின் இயங்குமுறையை வலுப்படுத்தியிருக்கின்றனர். விளைநிலங்கள், அதற்கான பாசன வசதிகள், பாசனக் கருவிகளை உருவாக்கி பழுதுபார்ப்பவர்கள், பூசகர், கல்விப் பணியாற்றும் ஆசிரியர், மருத்துவர், கால்நடைகளுக்கு வைத்தியம் செய்பவர்கள் ஆகியோரின் ஜீவனோபாயத்திற்கான பொறுப்பினை அந்தந்த கிராமங்களே எடுத்துக் கொண்டுள்ளது. அதனால் தலைமுறை தலைமுறைகளாகத் தொடரும் ஒரு பண்பாட்டுப் பாரம்பர்யத்தை நமது நாடு தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஒரு கிராமம் தன்னளவில் தனது தேவையை சமாளித்துக் கொள்ளும் எனில் அரசாங்கம் என்ற அமைப்பு மிகக் குறைவாய் இருந்தாலே போதுமானது. நிர்வாகச் செலவும் மிகவும் குறைவாக இருக்கும். 



தமிழ்நாட்டில் சித்த மருத்துவம் பாரம்பர்யமானது. பத்து கிராமத்துக்கு ஒரு சித்த மருத்துவர் இருப்பது போல ஒரு அமைப்பை உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்டே உருவாக்கிக் கொண்டிருக்க முடியும். மூலிகைகளின் முக்கியத்துவம் மக்களுக்கு உணர்த்தப்படும். மூலிகைகள் விளைவிக்கப்படுவது நிகழும். மக்களின் வருவாய் பெருமுதலாளிகளின் மருந்து நிறுவனங்களுக்கு செல்வது குறையும். ஒரு இந்திய பாணி சிந்தனையால் மட்டுமே சின்னஞ்சிறு அலகு குறித்து சிந்திக்க முடியும். 



முதலாளித்துவம் எப்போதுமே சிறு அலகு குறித்து சிந்திப்பதில்லை. ஒரு சிறு அலகு என்பது அதற்கு தனது விற்பனைச் சங்கிலியின் கடைசி முனை மட்டுமே. அங்கிருந்து சங்கிலியின் முதல் கண்ணியான உற்பத்தியாளனுக்கு வந்து சேரும் வருவாயை மட்டுமே அது கருதும். அந்த விற்பனைச் சங்கிலியை லாபகரமாக ஆக்கிக் கொள்ள பராமரிக்க தனது லாபத்தின் ஒரு பகுதியை எப்போதும் செலவிட்டவாறே இருக்கும். இந்தியப் பாரம்பர்வையும் இந்தியப் பார்வையும் சிதைக்கப்படுவது முதலாளித்துவத்துக்கே பயன் தரும். 



கிராமங்களை வலுவூட்டும் ஒரு பொருளாதார அமைப்பை நாம் உருவாக்க வேண்டிய நேரம் இது.



Friday, 3 April 2020

நினைவு

உன்னை எண்ணும் போது
நீர்ச்சாரல் சுமக்கும் காற்று
அலைகடலின் இள வெம்மை
குளிர் நிறையும் மலைப்பிரதேசம்
நிலம் கரைக்கும் மழை
பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள்
சில்வண்டுகளின் சீரொலி
சோலையில் கேட்கும் ஒற்றைக் குயிலோசை
வண்டிக்காளையின் கழுத்து மணி அசைவு
மௌனம் நிரம்பிய அந்திப் பொழுது
நினைவில் எழுகின்றன
கண்ணீர்த்துளிகள்
மெல்ல கரைத்துக் கொண்டிருக்கின்றன
அகம் கொள்ளும் தளைகளை

பொழுதிணைவு

மாலைப் பொழுதின்
சிவப்புக் கதிர்கள்
மிதந்து கொண்டிருக்கும் காற்று
நம்மைத் தீண்டிய போது
நீ
ஒரு மலரைப் பற்றி
என்னிடம்
சொன்னாய்
காட்டுத்தீயை
நான்
சொன்னேன்
அரசமரத்தின்
கணநாதன்
சிலை முன்னால்
நாம் ஏற்றிய
தீச்சுடரை
ஒரு மலரைப் போல்
காக்கின்றன
உன் விரல்கள்