Saturday, 12 September 2020

ஆசான் சொல்

 திருக்குறள் ஒரு கவிதை நூலும் கூட என்பது அதன் சிறப்புகளில் தலையாயது. கவிதை காலங்களை யுகங்களைக் கடந்தும் புதிதாக மலர்ந்திருக்கும் இந்த தருணத்துக்கானது என்று எண்ண வைக்கிறது. அறத்தின் குரல் ஒலிக்கும் ஆசானாக இருக்கும் போதே வாழ்வின் நுட்பமான தன்மையை எழுதும் கவிஞராகவும் இருக்கிறார் திருவள்ளுவர். கவிதையின் மீது மாளாக் காதல் கொண்ட வாசகனாக திருக்குறளை நான் அணுகும் விதத்தை ‘’ஆசான் சொல்’’ என்ற பெயரில் எழுதலாம் என இருக்கிறேன். 

Friday, 11 September 2020

ஆசான்

 

கவியுள்ளம் என்பது நுண்ணிய அரிதான மெல்லிய உணர்வுகளால் ஆனதாக இருக்கிறது. கோடானுகோடி மண் துகள்களில் ஒளி விடும் ஒரு பொன் துகளென அரிதான வாழ்க்கைத் தருணம் ஒன்றை கண்டு கொள்ளும் விழிகள் கவிஞனுக்கு அமைகிறது. அவன் அழகை ஆராதிப்பவனாக இருக்கிறான். விழுமியம் ஒன்றின் வெளிப்பாடு கண்டு உணர்ச்சி மேலிட்டு கண்ணீர் சிந்துபவனாகிறான். அநீதிக்கு எதிராக அறச்சீற்றத்துடன் முதல் குரல் எழுப்புபவனாகிறான். ஒரு தருணத்தில் வாழ்க்கையின் ஈவிரக்கமற்ற இயங்குமுறையை அச்சமின்றி அறிஞனாக எதிர்கொள்கிறான். ஞானியர் அடையும் மௌனத்தையும் உணர்ந்தவனாகிறான்.

கவிதை எழுதப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை கவிதையும் கவிஞனும் உருவாக்கும் வியப்பும் வெளிப்படுத்தும் புதுமையும் இன்னதென்றும் இவ்வாறென்றும் வகுக்கவோ கூறவோ இயலாதது. கவிதை பல காலடிகள் பட்டிடாத ஒரு மர்மப் பிராந்தியமாகவே நீடிக்கிறது.

என்னுடைய சிறு வயதிலிருந்தே திருக்குறளை வாசித்திருக்கிறேன். அப்போதே திருவள்ளுவர் ஆச்சர்யம் அளிக்கக் கூடிய ஒருவராகவே இருந்திருக்கிறார். திருக்குறள் வாசிக்கும் எவருமே வள்ளுவரின் மேதமையையும் படைப்பூக்கத்தையும் பலமுறை நேருக்கு நேராகக் காணும் அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள்.

ஆசிரியர்கள் பல வகையினர். சிறந்த ஆசிரியன் மிகப் பெரிய விஷயத்தை கற்றலின் ஆரம்ப படிநிலையில் இருக்கும் மாணவனைக் கூட ஆர்வத்துடன் தனது பிரும்மாண்டமான ஞானத்தின் வெள்ளத்தில் மாணவன் மீதான கருணையின் ஓடத்தில் பயணிக்கச் செய்பவராக இருக்கிறார். அந்த வெள்ளத்தில் சொந்த முயற்சியில் நீந்திக் கரை காணும் மாணவர்கள் உண்டு. ஓடத்தில் பயணிப்பவர்கள் உண்டு. பெரும் நாவாய்களை அதில் இயக்கியவர்கள் உண்டு. உள்ளத் தனையது உயர்வு.

பள்ளிப்பாடங்களில் திருக்குறள் படித்து, அம்மாவிடம் மனப்பாடம் செய்து ஒப்புவித்து, தேர்வுகளில் ‘’விசும்பின்’’ எனத் துவங்கும் குறளையும் ‘’தரும்’’ என முடியும் குறளையும் சரியாக எழுதி மதிப்பெண் பெற்று, இப்போது கவிதைகள் எழுதிக் கொண்டு கவிதைத் தொகுப்பு கொண்டு வரலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டம் வரையும் திருவள்ளுவர் வசீகரிக்கக் கூடியவராக இருக்கிறார்.

இப்போதும் எண்ணிப் பார்ப்பதுண்டு. ஒரு வாழ்க்கையில் எப்படி இத்தனை அனுபவங்கள். இத்தனை ஞானம். வள்ளுவரிடம் இந்த கேள்வியைக் கேட்கும் தோறும் அவர் புன்னகைக்கிறார். கங்கை ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு கைப்பிடி அள்ளிக் குடித்து தாகம் தணிந்தவர்கள் உண்டு. பல கைப்பிடிகள் அள்ளிக் குடித்து தாகத்தைத் தணித்துக் கொண்டவர்கள் உண்டு. தாகமும் கங்கையும் எப்போதும் இருக்கும். அவரவர் அவரவர் வழியில் தாகம் தணிப்பர்.

இளம் வயதில் ஒரு வணிகனாக திருவள்ளுவரை நான் மிகவும் நெருங்கினேன்.

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று

உண்டாகச் செய்வான் வினை. (பொருள் செயல்வகை)

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள் (பொருள் செயல்வகை)

ஒரு வணிகன் இதன் பொருளை எத்தனை அணுக்கமாக அறிந்திருப்பான்.

வர இருக்கும் பொருளை நம்பி ஒரு வணிகச் செயலைத் துவக்குவது எத்தனை ஆபத்தானது என்பதை வணிகர்கள் அறிவார்கள். எதிர்பாராத இடையூறுகள் வரும். தொழிலில் சகஜமாக உறவைப் பேணியவர்கள் வேறு குரலில் பேசத் துவங்குவார்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையலாம். எதிர்பாராத ஏதேனும் திடீரென முளைத்து வரலாம். எதிராளியிடம் ஒன்றை எதிர்பார்த்து செயல் செய்வது என்பது உண்மையில் சண்டையிடும் இரண்டு யானைகளுக்கு அருகில் நின்று சண்டையைப் பார்ப்பது போன்றதே. நம் கையில் இருக்கும் பொருள் இருக்கும் போது செயல் புரிந்தால் அனைத்தும் நம் கட்டுப்பாட்டில் இருக்கும். கட்டுப்பாட்டை மீறும் எவற்றையும் சீரமைக்க மாற்றியமைக்க முடியும். நினைப்பதை நடத்திக் கொள்ள முடியும். கையில் பொருள் இல்லாமல் வினை ஆற்றுவது யானைகளுக்கு அருகிலிருந்து யானைச்சண்டையைப் பார்ப்பது. கையில் இருக்கும் பொருளுடன் வினை ஆற்றுவது என்பது குன்றின் மேல் நின்று அபாய உணர்வின்றி யானைச் சண்டையை அவதானிப்பது. ஒரு வணிகனிடம் சொல்ல வேண்டியதை எப்படி இவ்வளவு நுட்பமாக வள்ளுவர் சொன்னார்?

எனக்கு மிகவும் நெருக்கமான குறள்களில் ஒன்று.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து. (வினைத்திட்பம்)

அளவினாலோ அனுபவத்தினாலோ சிறியதாக இருந்தாலும் மிக முக்கியமான பணியை எவராலும் ஆற்ற முடியும் என்ற நம்பிக்கையை இந்த திருக்குறள் வழங்கியது. அளவில் பெரிய தேரில் மிக அவசியமான பணியை அச்சாணி ஆற்றுகிறது. உலகில் எதையும் பெரிது சிறிது என வகைப்படுத்திக் கொள்வது பகுதி அறிதலே. முழுமையான அறிதலும் புரிதலும் அனைத்தையும் உள்ளடிக்கியதாகவே இருக்கும்.

முயற்சியின் சிறப்பைக் கூறும்

கான முயலெய்த அம்பினில் யானைபிழைத்த

வேல் ஏந்தல் இனிது

என்ற திருக்குறளை எனது ஒவ்வொரு முயற்சிகளிலும் எண்ணிக் கொள்வது உண்டு.

ஆசான் அருகமர்ந்து மேலும் கற்பதற்கான விருப்பம் கூடிக் கொண்டே இருக்கிறது. திருவள்ளுவர் இனிமையாகக் கற்பிப்பவர். இனிதாகக் கற்பிக்கும் ஆசான் வாய்ப்பது ஓர் நல்லூழ்.

 

Saturday, 29 August 2020

விவசாயக் கல்வி

 இந்திய விவசாயத்தைப் புரிந்து கொள்ள நாம் வரலாறு, புவியியல், வானியல், சமயம், மானுடவியல், உயிரியல், கால்நடை அறிவியல், பொருளாதாரம், வணிகம், சமூகவியல் என பல்வேறு அறிவுத்துறைகளை அறிந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டு விவசாயம் கூட எளிய வரையறைகளுக்குள் உட்படும் ஒன்றல்ல. இந்த முரண்பாடான தன்மையே தமிழ் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளைத் தீர்மானிக்கிறது. 

நான் எப்போதுமே பத்தொன்பதாம் நூற்றாண்டின் தாது வருஷப் பஞ்சத்தை தமிழ் சமூக மனத்தைக் கட்டமைத்த கூறுகளில் முக்கியமானதாக எண்ணுவதுண்டு. கிட்டத்தட்ட 40 லட்சம் மக்கள் உயிரிழந்த மானுடத் துயர் அது. பிரிட்டிஷ் அரசாங்கமே அதற்கு முழுப் பொறுப்பு. 

தமிழ்நாட்டின் பாரம்பர்யமான நெல் வகைகளை பின்னுக்குத் தள்ளி புதிய ரகங்கள் வந்தன. அவற்றை சமூகவியல், பொருளியல் நோக்கில் ஆய்வு செய்து மதிப்பிடும் அளவீடுகள் தமிழ்ச் சமூகத்திடம் இல்லை. நீர் மேலாண்மையில் இயந்திரங்களை விட மனித உழைப்பை அதிக அளவில் ஈடுபடுத்தும் பழக்கம் பெரிய அளவில் குறைய ஆரம்பித்து இன்று அனேகமாக இல்லாமலேயே போய்விட்டது. கால்நடைகளின் சாணம் மண்ணை வளப்படுத்தும் உரமாக பயன்படுவது இல்லாமல் ஆனது. ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மாடுகளால் நாட்டு மாட்டு இனங்கள் அழிவின் விளிம்பிற்குச் சென்றன. இவை அனைத்தையும் விட பெரிய இழப்பு விவசாயம் குறித்த பாரம்பர்ய அறிவை விவசாயிகள் இழந்துள்ளனர்.

இந்திய சுதந்திரத்துக்குப் பின், அதுவரை வேளாண்மை செய்யப்படாத நிலப்பரப்புகள், செயற்கை ரசாயன உரங்களின் துணையோடு விளைநிலம் ஆயின. இன்று, உர நிறுவனங்கள் ஒரு ஏக்கர் நிலத்தில் கொட்டப்படும் உரத்தால் அடையும் லாபத்தை ஒரு ஏக்கர் விளைச்சல் நிகர லாபமாக விவசாயி பெற்று விட முடியாது என்பதே யதார்த்தம். 

பாரம்பர்யமான விவசாய முறைகள் மீண்டும் பலவிதங்களில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். 

Friday, 28 August 2020

 இன்று
பெய்து கொண்டிருக்கும்
இந்த அந்தி மழை
எத்தனை இதயங்களை மகிழச் செய்திருக்கும்
எத்தனை துயர்களுக்கு மருந்தளித்திருக்கும்
எத்தனை குதூகலங்களுக்கு சாட்சி கூறும்
சாரலின் தீண்டலில்
எத்தனை மலர்களை மலரச் செய்திருக்கும்?

Thursday, 27 August 2020

 தாரைகளுக்கு
இடைப்பட்ட காற்றின் பரப்பு
தாழ்வாரத்தில் நிற்கும்
முகங்கள் மீது
சாரல் தெளித்திடும்
இந்த மழையில்
சில நாட்கள் முன் நட்ட
செடிகள் 
வளரத் துவங்குகின்றன
மலர்கள் நோக்கி
அந்திப் பொழுதில்
சாலையோரத்தில்
நீர்ப்பயணம் செல்கின்றன
அன்று அலர்ந்த மலர்கள்

Wednesday, 26 August 2020

தீர்வுகள்

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவரது தொழில் விவசாயம். அவரிடம் சொந்தமாக நிலம் உள்ளது. பல வருட நட்பு. அவரிடம் நான் விவசாயம் குறித்த விபரங்களைக் கேட்டு அறிவதுண்டு. 

நண்பருடனான உரையாடல்கள் சுவாரசியமானவை. 

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தித் தர வேண்டும்; அதுவே விவசாயிகளின் பொருளியல் சிக்கல் தீர வழி என்று ஒருமுறை சொன்னார். 

நான் சில கேள்விகளை முன்வைத்தேன். 

1. இந்தியாவில் குறைந்தபட்சம் பத்தாயிரம் ஆண்டுகளாக விவசாயம் நடக்கிறது. பண்டைய அரசுகளில் விவசாயிகள் தானியமாக அரசாங்கத்துக்கான வரிகளைச் செலுத்தியுள்ளனர். அந்த தானியம் அரசால் பெரிய அளவில் பல இடங்களில் சேகரித்து வைக்கப்படிருக்கிறது. ஆனால் பண்டைய அரசுகள் எவையும் விளைபொருட்களை கொள்முதல் செய்ததில்லை. சுதந்திர இந்தியாவில் அரசு தானியக் கொள்முதல் செய்யும் வழக்கம் உருவானது. தாமோதர் தர்மானந்த கோசாம்பி அரசுக்குக் குடிமக்களால் செலுத்தப்படும் வரியினங்கள் தானியமாகவும் செலுத்தப்படலாம் என வகுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார். 

லட்சக்கணக்கான மெட்ரிக் டன் தானியத்தை அரசே வாங்குவதைக் காட்டிலும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் வாங்குகிறார்களா என்பதைப் பெரிய அளவில் கண்காணிப்பதே விவசாயிகளுக்கு நெடுங்காலத்துக்கு உதவும் என்றேன். 

நண்பர் மௌனமாக இருந்தார்.

2. காந்திய அறிஞர் தரம்பால், பிரிட்டிஷ் ஆட்சியில், சென்னை மாகாணத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் வருவாய்த்துறை ஆவணங்களை ஆய்வு செய்து அப்போது ஒரு ஏக்கருக்கு 80 மூட்டை நெல் சராசரியாக அறுவடை செய்யப்பட்ட விபரத்தைத் தெரிவிக்கிறார். 

இப்போது ஏக்கருக்கு  சராசரியாக 20 மூட்டை நெல் விளைகிறது. 

பாரம்பர்யமான முறைகள் பின்பற்றப்படாமல் போனது விவசாயிகளுக்கு பெரும் பொருளியல் இழப்பு. 

3. இந்தியா பருப்பு வகைகளை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. பருப்பு வகைகள் உற்பத்தியை அதிகப்படுத்துவது விவசாயிகளுக்கு லாபம் தருவது. 

நண்பர் மௌனத்தை கலைக்கவே இல்லை. 

Saturday, 22 August 2020

கணேஷ் சதுர்த்தி

நமக்குத் தொழில்கவிதை, நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோராதிருத்தல்-உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்;
சிந்தையே! இன்மூன்றும் செய்.

-பாரதி

Friday, 21 August 2020

இருளும் ஒளியும்

 மனிதர்கள் அடிப்படையில் நல்லியல்பு கொண்டவர்கள் என்று நம்புபவன் நான். எல்லையும் தடைகளும் எல்லா உயிர்களுக்கும் உண்டு. அதைப் போலவே மனிதனுக்கும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. எல்லைகளையும் தடைகளையும் புரிந்து கொள்வதற்கு அதைப் பற்றிய கவனம் மிக முக்கியம். என்னால் சில செயல்களை இலகுவாகச் செய்ய முடியும். சில பணிகள் எனக்குக் கடினமானவை. என்னால் எதைச் செய்ய முடியும் எதைச் செய்ய முடியாது என்பதை நான் தெரிவித்து விடுவேன். நெருங்கியவர்களிடம் மட்டுமல்ல; புதிதாகச் சந்திக்கும் ஒருவரிடமும் தயக்கம் இன்றி கூறி விடுவேன். அமெரிக்காவில் ஒரு அலுவலகத்துக்குச் சென்றால் அதன் வரவேற்புப் பிரிவில் இருப்பவர் முதலில் ‘’நான் உங்களுக்குச் செய்ய வேண்டிய விஷயம் என்ன?’’ என்று கேட்பார்களாம். நீங்கள் விஷயத்தைக் கூறினால் அந்த அலுவலகத்தால் செய்து தரக்கூடிய பணி என்றால் ‘’ஆம்! நீங்கள் எதிர்பார்ப்பதை நாங்கள் செய்து தருகிறோம்’’ என்று கூறுவார்கள். அவர்களால் அதனை செய்ய முடியாது என்றால், ‘’மன்னிக்கவும். எங்களால் இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவ முடியாது’’ என்று கூறுவார்களாம். லௌகிகத்தைத் திறந்த மனத்துடன் அணுகுவது உதவிகரமானது என்பது என் எண்ணம். 

Wednesday, 19 August 2020

பரிசு

நேற்று ஒரு நண்பரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அவர் ஒரு பார்சல் சர்வீஸ் நடத்தி வந்தார். அப்போது லாரியில் வரும் பார்சல்களைப் பெற்றுக் கொள்வதற்காகச் செல்வேன். எலெக்ட்ரிகல் பொருட்கள், பிளம்பிங் உபகரணங்கள் ஆகியவை வெளியூரிலிருந்து வரும். மாருதி ஆம்னியில் சென்று எடுத்து வருவேன். அப்போது பழக்கமாகி நண்பரானார். பின்னர் பால் டீலராகி பால் விற்பனை செய்து வந்தார். பால் விற்பனைக்கு எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு என்று தற்செயலாக ரயில் நிலையத்தில் சந்தித்த போது சொன்னார். நேற்று அவருடைய பார்சல் அலுவலகத்துக்கு பக்கத்தில் இருந்த மரவாடிக்குச் சென்றிருந்தேன். அப்போது பார்சல் அலுவலக வாசலில் ஜெனரேட்டர், இரும்புப் பொருட்கள் ஆகியவை கிடந்தன. என்ன என்று சென்று பார்த்தேன். நண்பர் உள்ளே ஒரு பட்டறையை வைத்திருந்தார். காக்கிச் சட்டை காக்கி பேண்ட் சீருடையில் பணி புரிந்து கொண்டிருந்தார். பால் வியாபாரம் என்ன ஆயிற்று என்று கேட்டேன். பணியாளர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்; காலையும் மாலையும் தான் பால் வினியோகம். இடைப்பட்ட பொழுதில் பட்டறையைப் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அங்கே ஒரு ஃபோட்டா மாட்டியிருந்தது. நெற்றி முழுக்க நீறு அணிந்திருந்த ஒரு பெரியவரின் ஃபோட்டோ. நண்பர் வைணவர். மயிலாடுதுறைக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் அவர்கள் குடும்பம் பராமரிக்கும் பஜனை மடம் இருக்கிறது. அதற்கு என்னை மார்கழி மாதத்தில் அழைத்துச் சென்றிருக்கிறார். அவர் தந்தை ஒவ்வொரு ஆண்டும் திருப்பதிக்கு நடந்து சென்று சுவாமியை சேவித்து விட்டு நடந்தே திரும்பி வருவார். அதனை நான் அறிவேன். பின்னர் இந்த சைவர் யார் என்று எனக்கோர் ஐயம். இவர் உங்கள் உறவினரா என்று கேட்டேன். உறவினர் இல்லை; எனது முதலாளி என்றார். 

இவர் பட்டறைத் தொழிலை கும்பகோணத்தில் கற்றிருக்கிறார். இவர் தொழில் பயின்ற பட்டறையில் எண்பது பேர் வேலை பார்த்திருக்கின்றனர். உரிமையாளர் தொழில் செய்நேர்த்தியிலும் தொழிலாளரின் பண்பு வெளிப்பாடுகளிலும் மிக்க கவனத்துடன் இருப்பார் என்றும் தொழிலாளர் நலனில் மிக்க அக்கறை காட்டுவார் என்றும் கூறினார். பல சம்பவங்களை எடுத்துச் சொன்னார். 

தவிர்க்க இயலாத காரணங்களால் குடந்தைப் பட்டறையை விட்டு மயிலாடுதுறை வர வேண்டிய நிலை. முதலாளி விடை கொடுக்கிறார். அப்போது உனக்கு ஏதாவது தர விரும்புகிறேன்; என்ன வேண்டும் கேள் என்கிறார் முதலாளி. உங்கள் புகைப்படத்தைக் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி வந்து தன் பட்டறையில் மாட்டி வைத்திருக்கிறார் நண்பர். 

சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்ற ஔவையை நினைத்துக் கொண்டேன்.

Saturday, 15 August 2020

எனது படைப்புகள்

 2016ம் ஆண்டு மயிலாடுதுறையிலிருந்து ரிஷிகேஷ் வரை 22 நாட்கள் மோட்டார்சைக்கிளில் பயணித்தேன். அப்பயணம் குறித்த  பயணக் கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. அதன் இணைப்பு


காவிரியிலிருந்து கங்கை வரை - பகுதி 1

அதன் இரண்டாம் பகுதியின் இணைப்பு

ஹம்பி - நிலவைக் காட்டும் விரல்

சொல்வனம் இதழில் வெளியான எனது சிறுகதைகள்

லீலாவதி


புள்ளரையன் கோவில்


ஃபிப்ரவரிக்கு 29 நாட்கள்


காத்திருப்பு


நாகரிகம்


துவக்கம்


வசந்த மண்டபம்


விடை


இரு பள்ளிகள்

சொல்வனம் இதழில் எழுதும் ‘’யானை பிழைத்தவேல்’’ கம்பராமாயணத் தொடரின் கட்டுரைகள் இணைப்பு

யானை பிழைத்தவேல் - பகுதி 1

யானை பிழைத்தவேல் - பகுதி 2

யானை பிழைத்தவேல் - பகுதி 3

யானை பிழைத்தவேல் - பகுதி 4

யானை பிழைத்தவேல் - பகுதி 5

ஜெயமோகன் இணையதளத்தில் வெளியான எனது கட்டுரைகள் & கடிதங்கள்


சுப்பு ரெட்டியார்


வேங்கடத்துக்கு அப்பால்


நமது ஊற்றுக்கள்


கண்ணீரும் வாழ்வும்


வீரப்ப வேட்டை


கிருஷ்ணப்பருந்து


நீரெனில் கடல்


அந்தரப்பந்துகளின் உலகு


உற்சாகமான பார்வையாளன்


சுழித்து நுரைக்கும் வாழ்க்கை


பங்கர் ராய் - வெறும் பாதக் கல்லூரி


காவேரி - வெள்ளமும் வறட்சியும்


கெடிலக்கரை நாகரிகம்


படைப்பாளியைப் படைக்கலனுடன் சந்திப்பவர்களுக்கு


அஞ்சலி : செழியன்


 சித்தாந்தத்தால் மனம் நிரம்பியிருக்கும் நண்பனுக்கு


ஜனனி


மறைந்த தோழன்


சொன்னால் வெட்கப்பட வேண்டும்


காத்தல்

சொல்வனம் இதழில் வெளியான எனது கட்டுரைகளின் இணைப்பு :

யாமறிந்த புலவரிலே

புனைதலும் கலைதலும்

இறுதி அஞ்சலி : ஆ ப ஜெ அப்துல் கலாம்

**