Friday, 9 September 2022

நீங்குதல்

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.
-திருக்குறள்

சில எளிய விஷயங்கள் அனுபவமாகும் போது சில சிமயம் பெரும் திகைப்பு உண்டாகி விடுகிறது. 

இன்று என்னுடைய மேஜையையும் ஷெல்ஃபில் இருக்கும் என்னுடைய காகிதங்களையும் அடுக்கி வைக்க முயன்றேன். பல நாட்கள் பல மாதங்கள் ஆகி ஒரே இடத்தில் இருப்பதால் எத்தனையோ தேவையில்லாத காகிதங்கள் நிறைந்து விட்டன. எடுக்க எடுக்க வந்து கொண்டேயிருப்பது ஒருவித அச்சத்தை அளித்தது. நம்மை அறியாமலே சில விஷயங்கள் இவ்வாறு சூழ்ந்து விடுகின்றன. 

சொத்து ஆவணங்களின் நகல்கள், சொத்து வரி ரசீதுகள், பதிவுத்துறை ரசீதுகள் என அவை ஒருபக்கம். பொது விஷயங்கள் குறித்த மனுக்கள், தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுக்கள், நகல்கள், பதிவுத் தபால் ஒப்புகைகள் என அவை ஒரு பக்கம். பெருமளவு ஒழுங்கு படுத்தி விட்டேன். 

இந்த எளிய விஷயம் கூட நமது ஆற்றலை இந்த அளவு எடுக்கும் என்பது நம்ப முடியாததாக இருந்தது என்றாலும் இப்போது அதனை உணர்ந்து கொண்டேன். 

இந்த விஷயத்திலிருந்து ஒரு படிப்பினை எனக்குக் கிடைத்தது. தினசரி நாம் புழங்கும் வெளியில் ஒரு நல்லொழுங்கை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்றால் நமது விடுதலை அங்கிருந்தே தொடங்கும் என்று உணர்ந்தேன்.  

Thursday, 8 September 2022

கோப்பு

இணையத்தின் மூலம் வாங்கிய பிளாஸ்டிக் டிராவ் என் மேஜைக்கு அருகில் உள்ளது. அது காகிதங்களால் நிரம்பி இருக்கிறது. காகிதங்கள் எப்படியோ தங்களுக்கான இடத்தையும் தாண்டி எடுத்துக் கொள்கின்றன. கிளை மூலம் இலை விரியும் மரத்திலிருந்து தயாராகி வந்ததால் காகிதங்களுக்கு இந்த இயல்பா என்பது தெரிய்வில்லை.  

கோப்புகளைப் பராமரிப்பது என்பது ஒரு கலை. சட்டவிரோதமாக மரம் வெட்டப்படுவது குறித்த கோப்பில் அனுப்பிய ம்னுக்களின் நகல்கள், வரப்பெற்ற பதில்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி விபரம் கோரிய மனுக்களின் நகல்கள் என அனைத்தையும் கோப்பில் வைத்திருப்பேன். மனு அனுப்பும் போது கையொப்பமிட்ட பின் அதனை நகல் எடுக்க வேண்டும். அந்த நகலில் பதிவுத் தபாலில் அந்த மனுவை அனுப்பியதற்கான ரசீதை ஒட்டி வைக்க வேண்டும். 

சர்க்கார் என்பது ஒரு மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க வேண்டியதற்கான பயிற்சியையும் பழக்கத்தையும் கொண்டது. அதனால் எல்லா மனுக்களுமே நிலுவையில் வைக்கப்படும். அனுப்பும் மனு நிலுவையில் மட்டுமே வைக்கப்படும் என்பதும் இறுதி கட்டம் நீதிமன்றம் என்றும் நமக்குத் தெரியும் என்பதால் மனு அனுப்புதல், தகவல் பெறும் உரிமைச் சட்டம் படி விபரம் கோருதல், மனு அனுப்பி 30 நாள் ஆன பின் மேலதிகாரிகளுக்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்ற விபரத்தை கொண்டு செல்லுதல், தகவல் உரிமைச் சட்டத்தின் கெடுவுக்குள் பதில் வரவில்லை என்றால் முதல் மேல்முறையீடு செய்தல், மேலதிகாரிக்கு அனுப்பிய மனு 30 நாள் ஆன பின் நினைவூட்டல் ஒன்று அனுப்புதல் என இந்த வரிசை முதல் மனுவை அனுப்பும் போதே மனக்கண்ணால் காணப்பட்டு விடும். 

மத்திய அரசின் சி.பி.கி.ரா.ம்.ஸ் ல் மனுவை பதிவு செய்த பின்னரும் இத்தனை நடவடிக்கையும் தேவைப்படும். காகிதங்களுடன் அரசாங்கத்துக்கு நூற்றுக்கணக்கான் ஆண்டுகள் பழக்கம் உள்ளது. அதற்கே ஊழியர்கள் அசைந்து கொடுப்பதில்லை. கணிணி இன்னும் அவர்கள் பிரக்ஞைக்கு முழுமையாக வரவில்லை. ஆனாலும் கணிணியில் பதியப்படும் புகார் உயர் அதிகாரிகளாலும் மேலதிகாரிகளாலும் தவிர்க்க இயலாமல் அவர்கள் மேஜையில் கணிணித் திரையில் எப்போதும் பார்க்கப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பதால் அது அவர்களுக்கு ஒரு அசௌகர்யம். 

சட்ட விரோதமாக மரம் வெட்டப்படுவது தொடர்பான சட்டங்களைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பேன். அவ்வப்போது ஒரு புது எண்ணம் ஒரு புது சிந்தனை அந்த வாசிப்பை ஒட்டி உருவாகும். சட்டங்களைப் படிப்பது என்பது வித்யாசமான அனுபவம். நான் எண்ணாதது யூகிக்காதது நாம் காணத் தவறியது ஆகிய்வை நம் முன் வந்து நிற்கும். 

ஒரு ஸ்கேனர் மெஷின் வாங்கி விடலாமா என யோசிக்கிறேன். அதிலேயே ஜெராக்ஸும் எடுத்துக் கொள்ளலாம். ஜெராக்ஸ் கடைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. 

நகல்களைப் பராமரிக்க ஒரு தனிக் கோப்பு உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் எண்ணுகிறேன். 

ஒரு குடிமகனாக நான் எனது கடமையைச் செய்வதாகவே எண்ணுகிறேன்.  

தி.ஜாமம்

 சில வருடங்களுக்கு முன்னால், ஓர் இலக்கிய வாசகரைச் சந்தித்தேன். அப்போது இளைஞர். இப்போதும் இளைஞர்தான். தமிழில் வாசிப்பவர்கள் மிகவும் குறைவு. அதனினும் இலக்கியத்தை முக்கியமான ஒன்றாக முக்கியத்துவம் கொண்ட ஒன்றாகக் கருதுபவர்கள் குறைவு. நான் சந்தித்த இளைஞர் இலக்கிய ஆசான்கள் மீது பெரும் மதிப்பும் பெரும் பித்தும் கொண்டு ததும்பிக் கொண்டிருந்தார். எங்கள் ஓரிரு சந்திப்புகளிலேயே அவர் புதுமைப்பித்தன் மீது தனக்குள்ள ஈடுபாடு குறித்து சொன்னார். அப்போது அவர் தி. ஜானகிராமனை அதிகம் வாசித்ததில்லை. நீங்கள் தி.ஜானகிராமன் வாசித்துப் பாருங்கள் என்றேன். தி. ஜா வின் ஓரிரு கதைகளை அவருக்குச் சொன்னேன். ‘’சிலிர்ப்பு’’, ‘’பாயசம்’’ ஆகிய்வை. பின்னர் அவர் தி.ஜா முழுத் தொகுப்பு வாங்கி அவரது அனைத்துக் கதைகளையும் வாசித்து விட்டு ஒவ்வொரு கதை குறித்தும் என்னிடம் மணிக்கணக்காகப் பேசுவார். இப்போது அவருக்கு பிடித்த இரு தமிழ் ஆசான்கள் புதுமைப்பித்தனும் தி.ஜா வும். எங்கள் உரையாடல்கள் எனக்கு புதுமைப்பித்த்னையும் அவருக்கு தி.ஜா வையும் மேலும் புரிந்து கொள்ள உதவின. 

Wednesday, 7 September 2022

பாபநாசம்

நான் சிறுவனாயிருந்த போது , இரண்டு ஆண்டுகள் பாபநாசத்தில் குடியிருந்தோம். அதாவது , தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம். காவிரியும் அதன் கிளை நதிகளும் பாபநாசத்தை தன் மகவெனக் கையில் ஏந்திக் கொள்ளும். வருடத்தில் முதல் முறையாக தண்ணீர் வரும் போது ஆற்றுமணலில் நீர் உள்ளே செல்லும் போது மணலின் இடைவெளிகளிலிருந்து ‘’குபுக் குபுக் குபுக்’’ என காற்று வெளிவரும் ஓசை கேட்கும். ஆறு முழுக்க அந்தப் பேரோசை நிரம்பி ஓங்காரமென ஒலிக்கும். குடமுருட்டி என ஒரு ஆறு. அதில் நான் குளிக்கச் செல்வேன். ஆற்றில் இறங்கினாலே சிறு சிறு மீன்கள் வந்து உடலில் லேசாக கடிக்கும். என் மொத்த உடலையும் மீன்கள் கொத்தி தின்று விடுமோ என நினைப்பேன். நிறைய பேர் உடன் குளிப்பதால் அவ்வாறு நடக்காது என எனக்கு நானே சமாதானம் செய்து கொள்வேன். 

இன்று காவிரியில் குளித்த போது உடலை சில மீன்கள் கொத்தின. மீன்களால் கொத்தப்பட்டது மகிழ்ச்சியைத் தந்தது.   

Tuesday, 6 September 2022

ஸ்நானம்

இன்று மாலை காவிரியில் ஸ்நானம் செய்தேன். 

நதி கணந்தோறும் புதியதாக இருக்கிறது. நதியில் மூழ்கும் போது நாமும் புதிதாகிறோம். காலை ஸ்நானம் ஒரு விதம். நதி நம்முடன் பேசும் பொழுது. மாலை ஸ்நானம் நதியை நாம் மேலும் அணுக்கமாக உணரும் பொழுது. நதியின் சான்னியத்தில் இருப்பது பெரும் அகமகிழ்வை உண்டாக்குகிறது.  

எனது பள்ளித்தோழர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் மகாதேவன். அவரது வீடு காவிரியிலிருந்து கூப்பிடு தொலைவில் இருக்கிறது. சென்னையில் பணிபுரிந்து விட்டு இப்போது ஊரில் வீட்டிலிருந்து பணி புரிகிறார். இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டவர். தகவல் தொழில்நுட்ப பணி புரிவதால் நாளின் பெரும்பகுதி வேலையில் மூழ்கியிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார். அடிப்படையில் நான் லௌகிக நியதிகள் தெரிந்தவன். ஒருவருடைய உத்யோகத்துக்கு முடிந்தால் உதவியாய் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சும்மா இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தொந்தரவாய் இருக்கக் கூடாது என்று எண்ணுபவன். எனவே அவர் வீட்டுக்கு ரொம்ப நாளாக செல்லவே இல்லை. சில நாட்களுக்கு முன்னால் அவரைச் சென்று சந்தித்து அவருடன் கொஞ்ச நேரம் உரையாடிக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. அங்கு சென்று அவர் என்ன செய்கிறார் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். அவ்வப்போது ஏதும் பேசிக் கொண்டிருந்தேன். 

மீட்டிங் மீட்டிங் என்று மீட்டிங்கில் இருந்தார். அவருடைய புத்தக கலெக்‌ஷனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு புத்தகங்களைப் பார்ப்பது மிகவும் பிடிக்கும். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டிருப்பேன். 

மகாதேவன் என்னிடம், ‘’பிரபு ! புத்தகம் எடுத்துப் படிங்க . வீட்டுக்கு எடுத்துட்டு போய் படிச்சுட்டு கொண்டு வந்து தர்ரதுன்னாலும் கொடுங்க. ‘’ என்றார். 

அடிப்படையில் நான் என்னுடைய புத்தகங்களை இரவல் தர விரும்பாதவன். அவ்வாறெனில் அடுத்தவர்களிடமும் அதே நியதியின் அடிப்படையில் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவன். என்னிடம் உள்ள புத்தகங்களிலேயே இன்னும் வாசிக்காத சில புத்தகங்கள் உள்ளன. இதில் ஏன் இரவல் வாங்கி வாசிக்க வேண்டும்? 

சில நாட்களாக அவரைச் சந்தித்ததில் அவர் என்ன பணி செய்கிறார் என்பதை எனக்குத் தெரிந்த விதத்தில் ஓரளவு புரிந்து கொண்டு அவரிடம் கேட்டேன். ’’மகாதேவன் ! நீங்க நீங்க மீட்டிங் மீட்டிங்னு பேசுறீங்களே அது என் காதுல விழுது. ஆணும் பெண்ணுமா பத்துக்கும் மேலான குரல் கேக்குது. அதுல உங்களோட குரல் மட்டும் தான் ‘அட்டெண்டிவ்’’ஆ இருக்கு. ஒரு சில பெண்கள் ஆர்வமா பதில் சொல்றாங்க. மத்த எல்லாரும் ஆர்வமே இல்லாம விருப்பமே இல்லாம பதில் சொல்றாங்க. அது அவங்க குரல்லயே தெரியுது’’ என்றேன். நாங்கள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பரிதாபமாக பார்த்துக் கொண்டோம். என்னை அவர் ஏன் பரிதாபமாக பார்க்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை. கேட்டுத் தெரிந்து கொள்ளலாமா என்று எண்ணினேன். வேறொரு சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்ளலாம் என விட்டு விட்டேன். அவர் மீட்டிங் பேசிக் கொண்டிருக்கும் போது நான் புத்தகங்களைப் பார்ப்பேன். அவருடைய அணி உறுப்பினர்கள் பெயர் சொல்லிக் கூப்பிடப் படும் போது அந்த உலகத்துக்குள் மானசீகமாக நானும் செல்வேன். ஆனால் மகாதேவன் தினமும் சோர்வாக இருக்கிறார் என்பதை உணர்ந்தேன். 

‘’எந்த சூழ்நிலைக்கும் நீங்க எமோஷனலா ரியாக்ட் செய்யாதீங்க. நாம எமோஷனல் ஆனா அந்த விஷயம் ஒரு ஸ்டெப் பின்னாடி போகுமே தவிர முன்னாடி போகாது. இதை இருபது வயசா இருக்கற ஒருத்தர் கிட்ட சொல்ல முடியாது. உங்களுக்கு 43 வயசு. அதனால சொல்றன்’’ 

மகாதேவன் அமைதியாக இருந்தார். 

‘’ஒரு நாளைக்கு 12 மணி நேரம் இந்த சூழ்நிலைலயே இருக்கீங்க. உங்களுக்கு தினமும் மனமாற்றம் தேவை. நான் ஒரு விஷயம் சஜெஸ்ட் செய்றன். கேப்பீங்களா?’’

‘’சொல்லுங்க பிரபு’’ 

‘’காவேரில தண்ணி முழுசா போய்ட்டு இருக்கு. வீட்டுலேந்து கூப்பிடு தூரத்துல ஆறு. தினமும் காலையிலயும் சாயந்திரமும் பதினைஞ்சு பதினைஞ்சு நிமிஷம் ஆத்துல குளிங்க.’’

நண்பர் அமைதியாக கேட்டுக் கொண்டார். எதனையோ உணர்ந்தவர் போல் தீவிரம் கொண்டார். ‘’அப்படியா சொல்றீங்க’’

’’ஓடும் நதி என்பது எப்போதும் அசைவிலேயே இருப்பது. அந்த அசைவு நம்மகிட்ட இருக்கற வேண்டாத எல்லாத்தையும் அசைச்சு அசைச்சு நீக்கிடும். நாம ஒரு தடவை இறங்குன நதியில திரும்ப இறங்க முடியாது தெரியுமா? அது கணந்தோறும் மாறிக்கிட்டே இருக்கு. நாம ஸ்தூலமா பாக்கற வாழ்க்கை அல்லது கடவுள் தான் நதி’’

விஷயம் ரொம்ப மிஸ்டிக்கலான இடத்துக்கு சென்று விட்டதாக இருவரும் உணர்ந்தோம். 

‘’நாம ரேஷனலா இருக்கறதா நினைக்கிறோம். ஆனா அப்படியும் இல்ல. பத்து வயசு கொழந்தைங்க நதியைப் பாத்தா குளிக்கணும் நினைச்சு ஆத்துல குதிச்சு கும்மாளம் போடுது. நம்ம மனசை குழந்தைங்க மனசாவே வச்சுக்கலாம். நதியைப் பாக்கும் போதாவது.’’

நான் புறப்பட்டேன். ‘’பிரபு ! ஏதாவது புக் எடுத்துட்டு போங்க’’ 

’’சரி நான் ஒரு புக் எடுத்துக்கறன். ஆனா இப்ப எதிர இருக்கற நூற்றுக் கணக்கான புத்தகங்கள்ல எந்த புக் என் கைக்கு வரப்போகுதுங்கறதுல ஒரு மிஸ்ட்டிக்கல் எலிமெண்ட் இருக்கு. அது என்னன்னு பாத்துடுவோம்.’’

நவீன தமிழ் இலக்கிய கர்த்தாக்களின் புத்தகங்களைக் கண்கள் கடந்து கொண்டிருந்தன. 

தி. ஜானகிராமன் சிறுகதைகள் தொகுதி - 1 என்ற புத்தகம் இரண்டு பிரதிகள் இருந்தன. ‘’என்ன மகா இது ஒரே புக் ரெண்டு காப்பி இருக்கு. நான் இதை எடுத்துக்கறன்’’

கையில் எடுத்துக் கொண்டு சொன்னேன். ‘’இந்த புக்கை எடுத்தது ஒரு சிவில் எஞ்சினியர் . உங்க கலெக்‌ஷன்ல ஒரு புக்கும் குறையலை. ஆனா எனக்கும் ஒரு காப்பி வந்திடுச்சு. ‘’ 

தி.ஜா நூலை கையில் வைத்திருப்பதே மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு மிக மிக நெருங்கிய நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் தீவிரமான தி. ஜானகிராமனின் ரசிகன். தி. ஜா குறித்து பேசும் பொதெல்லாம் மிக உணர்ச்சிகரமாகி விடுவான். அவனை அந்த கணம் நினைத்தேன். 

புத்தகத்தினுள் சென்று அந்த தொகுப்பின் முதல் சிறுகதையின் தலைப்பைப் பார்த்தேன் . ‘’கங்கா ஸ்நானம்’’. 

மகாவிடம் காண்பித்தேன். அவருக்கு ஆச்சர்யம். 

’’தகவல் உங்களுக்கு வந்திருக்கு மகா. காவேரி மாதா உங்களைப் பாக்கணும்னு நினைக்கறா’’ 

மகா கண் கலங்கி விட்டார். 

நான் விடைபெற்று வீட்டுக்கு வந்தேன். ‘’ஸ்நானம்’’ என்று தலைப்பிட்டு ஒரு பதிவை எழுத வேண்டும் என்று எழுத அமர்ந்தேன். தி. ஜா தீவிர ரசிகனான என் மிக மிக நெருங்கிய நண்பனிடமிருந்து வந்த குறுஞ்செய்தி ஒலி எழுப்பிக் கொண்டு என் அலைபேசியில் வந்தமர்ந்தது. 

நேற்று தளத்தில் பதிவிட்ட நினைவு கவிதையிலிருந்து 

’’அந்திப் பொழுதில்
அந்திப் பொழுதைத் 
தொழுகிறான்
ஓர் எளிய மனிதன்’’

என்ற எனது கவிதை வரிகளை எனக்கு அனுப்பியிருந்தான். 

Monday, 5 September 2022

நினைவு

ஒரு மலர்க்காட்டின் 
மலரிதழ்
காற்றில்
மிதந்து
சென்று கொண்டேயிருக்கிறது

உனது உள்ளங்கைகளில்
நித்யமாக
ஒட்டிக் கொண்டிருக்கிறது
மேகங்களின் நீர்மை

ஒளி வீசும் உன் புன்னகைகள்
நம்பிக்கைகளை அளித்துக் கொண்டே இருக்கும் 
உனது வார்த்தைகள்
எப்போதும் அமைதி தரும் உனது கருணை

நினைவுகளில்
நீ
ஒளியானாய்
நீ
நிலவானாய்
நீ
சுடரானாய்

அந்திப் பொழுதில்
அந்திப் பொழுதை
தொழுகிறான்
ஓர் எளிய மனிதன் 

தீர்த்தம்

நீரை வாழ்வளிக்கும் அமிர்தமாக உணர்வது இந்திய மரபு. நதியை நூற்றுக்கணக்கான தலைமுறைகளுக்கு கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளிக்கும் அன்னையாகக் காண்பது இந்தியர்களின் இயல்பு. இந்தியர்கள் நதிகளுடன் பிணைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய சுக துக்கங்களை நதியே அறிகிறது. அவர்களுடைய பிராத்தனைகளை நதியே சுமந்து செல்கிறது. அவர்களுடைய துயரங்களை நதியே நீக்குகிறது. நதியில் மூழ்குதல் என்பதை ஒரு வழிபாடாக மேற்கொள்வது இந்தியர்களின் பழக்கம். காவிரியிலிருந்து சில நூறு அடிகள் தொலைவில் எனது வீடு அமைந்துள்ளது. இன்று காலை கருக்கல் பொழுதில் காவிரிக்குச் சென்றேன். நதி சலசலக்கும் ஓசை இசையெனக் கேட்டது. நதியில் மூழ்கினேன். மீண்டும் மீண்டும் மூழ்கி மூழ்கி எழுந்தேன். உடலும் மனமும் உணர்வும் பெரும் நம்பிக்கை கொண்டன. ஒரு நதித்தடம் என்பது எத்தனை பேருக்கு அளிக்கப்பட்ட நம்பிக்கையின் சாட்சியம். இந்த நதியில் எத்தனை மகத்தான மனிதர்கள் மூழ்கி எழுந்திருக்கிறார்கள். எத்தனை மகத்தான விஷயங்களின் ஆதாரமாக நதி இருந்திருக்கிறது. அகம் நதியென பிரவாகிக்க வேண்டியது. வாழ்வு நதியென அமைய வேண்டியது.  

காவிரி போற்றுதும் ! காவிரி போற்றுதும் !

Sunday, 4 September 2022

இன்னொரு நிலம்

 இன்று ஊருக்கு அருகே 3 ஏக்கர் நிலமொன்றில் 1200 தேக்கு கன்றுகள் நடும் பணியை ஒரு நில உரிமையாளர் துவக்கி உள்ளார். ‘’காவிரி போற்றுதும்’’ அவர் தேக்கு பயிரிட முடிவு செய்ததில் முக்கியக் காரணிகளில் ஒன்றாக இருந்தது. ஒரு கன்றை நடுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார்கள்.  விவசாயிகளின் வருமானம் பெருக வேண்டும் என பிராத்தித்து ஒரு தேக்கு மரக் கன்றை நட்டேன். 

Saturday, 3 September 2022

விரதம்

சில செயல்களைத் தொடங்க இருக்கிறேன். சில செயல்களை மேலும் தீவிரமாக்க இருக்கிறேன். சில விஷயங்களில் ஆழம் கொள்ள விரும்புகிறேன்.  

நமது மரபு நமது விருப்பங்களை பிரக்ஞைபூர்வமாக நேருக்கு நேராக நோக்கச் சொல்கிறது. நம்மை நமது விருப்பங்களைப் புரிந்து கொள்ள அது மிகவும் உதவிகரமானது.

எதைத் தொடங்க இருக்கிறோமோ எதில் தீவிரம் கொள்ள விரும்புகிறோமோ எதை முக்கியம் என்று நினைக்கிறோமோ அதற்கு நம்மை முழுமையாக அளிக்க வேண்டியது அவசியம். நம்முடைய நேரத்தை நம்முடைய எண்ணங்களை நமது கணத்தையும் அதற்காக அளிக்க வேண்டியது முக்கியம். எவ்விதமான சிதறலும் இன்றி மனதை ஒருமுகப்படுத்திக் கொள்வது முக்கியமாக தேவைப்படுவது. 

இந்திய மரபு பரிந்துரைக்கும் விரதம் என்பது ஒரு முக்கியமான உபகரணம். வாரத்துக்கு ஏதேனும் ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பது என்பது இந்தியா முழுதும் உள்ள நடைமுறை. அவ்வாறெனில் வருடத்துக்கு 52 நாட்கள். நான் விரதம் இருக்க வேண்டும் என்று விரும்புவேன். ஆனால் எண்ணியபடி என்னால் முழுமையாக விரதம் இருக்க முடியாது போகும். எனது வாழ்க்கைமுறை எனது தொழில் எனது தவிர்க்க முடியாத அப்போதைய சூழ்நிலைகள் என பல காரணிகள். பசியைப் பொறுத்துக் கொள்வது என்பது எனக்கு மிகவும் கடினமானது. பல திசைகளில் சிதறிப் பரவும் இயல்பு கொண்ட எனது மனத்தை பசி மேலும் மேலும் சிதறச் செய்து விடும். 

விரதம் இருப்பது குறித்து யாரிடமும் சொல்லாமல் இருப்பது என்பது விரதத்துக்கு வலுவூட்டும். ஆனால் நான் தினமும் பலரைச் சந்திப்பவன். அவர்கள் உபசரிக்கும் போது அதனை மறுக்கும் நிலை வரும் போது விரதம் இருப்பதைக் கூறும் நிலை ஏற்படும். அது குறித்து அவர்கள் கூறும் சொற்கள் பசியுடன் இருக்கும் நிலையில் விரதத்தில் தாக்கம் ஏற்படுத்தும். என்னுடைய இயல்பு என்பது மேலும் மேலும் என பல செயல்களில் ஈடுபடுவது. ஏதோ ஒன்றை கற்பனை செய்து கொண்டே இருப்பது. அவ்வாறான ஒரு இயல்பு உணவின் மேல் தீவிரமான ஆர்வம் கொண்டிருக்கும். அதைக் கடந்து செல்ல வேண்டிய ஒரு பருவம் வந்து விட்டதாக உணர்கிறேன். 

நாற்பது நாட்களுக்கு ஒரு விரதத்தைத் துவக்க உள்ளேன். ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு உண்பது என்றும் பகல் பொழுது முழுவதையும் முழுமையாக செயல்களுக்காக வழங்குவது என்றும் முடிவு செய்துள்ளேன். இந்த விரதம் எனக்கு பலவிதங்களில் உதவியாக இருக்கும் என்று என்னுடைய உள்ளுணர்வு இந்த கணம் கூறுகிறது. 

திருவாசகத்தில் ‘’யாத்திரைப் பத்து’’ என்ற பகுதி உள்ளது. ஜீவன்கள் சில சிவனைக் காண யாத்திரை செல்ல வேண்டும் என்று கிளம்பும். அந்த ஜீவன்கள் அனைத்துமே எல்லைக்குட்பட்டவை. மிக மிகக் குறைந்த சக்தி கொண்டவை. அப்போது சில ஜீவன்கள் சிவன் வாழும் லோகம் எங்கோ உள்ளது ; நம்முடைய குறைந்த சக்தியைக் கொண்டு அங்கு நம்மால் போக முடியுமா என்று அகத்துயருடன் ஐயம் எழுப்பும். அதற்கு ஒரு ஜீவன் விடை அளிக்கும் : ‘’நாம் சக்தி குறைந்தவர்கள் தான். ஆனால் நாம் சென்றடைய நினைக்கும் சிவன் அளப்பரிய சக்தி கொண்டவன். கருணையின் கடல் அவன். தடைகளுடன் இயலாமைகளுடன் நாம் பயணித்து வருகிறோம் என்பதை அவன் அறிவான். நம் நோக்கம் மீது கருணை கொண்டு நம்மை நோக்கி அவன் வருவான். அல்லது அவனை வந்தடைய தேவையான சக்தியை அவனே கொடுப்பான்’’ . 

எல்லையற்ற பரம்பொருளின் கருணை துணை நிற்கும் என்ற நம்பிக்கையுடன் எனது விரதத்தைத் துவங்குகிறேன். 

Friday, 2 September 2022

யாருக்கு யார் உதவி (நகைச்சுவைக் கட்டுரை)

நண்பர் ஒரு உதவி கேட்டார். 

‘’பிரபு ! என் பையனுக்கு ஒரு செக் கொடுத்திருக்கன். அத கேஷ் பண்ணி என் சொந்தக்காரர் ஒருத்தர் கிட்ட கொடுக்கணும். உங்க கூட அவன அனுப்பி வைக்கறேன். எனக்காக அந்த வேலையை முடிச்சுக் கொடுக்கணும். பிளீஸ்’’ 

நண்பர் தன் மகனிடம் , ‘’அங்கிள் கூட போ. அவருக்கு ஹெல்ப் பண்ணு’’ என்றார். அவன் அதனை ஆமோதிக்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை. 

வங்கிக்கு தம்பியை அழைத்துக் கொண்டு சென்றேன். 

நிதிச் சாளரத்தில் உள்ளவரிடம் செக்கைக் கொடுக்கச் சொன்னேன். 

அவன் என் கையில் செக் கொடுத்தான். 

‘’தம்பி ! உனக்குக் கொடுக்கப்பட்ட செக் ஐ நான் பிரசண்ட் பண்ணக் கூடாது. நீதான் பண்ணனும். ‘’ 

அவன் அதை பெரிதாக உள்வாங்கவில்லை. உள்ளே கொடுத்தான். 

சாளரத்தில் இருப்பவர் என்னையும் அவனையும் சேர்ந்து பார்த்துக் கொண்டார். 

கணிசமான நேரம் ஆனது. தம்பி அதற்குள் வங்கிக்கு வெளியே ஃபோன் பேச சென்று விட்டான். இவன் இல்லை என்ற அடுத்த பேமெண்ட்டுக்கு சென்று விடப் போகிறார்கள் என்று நான் உள்ளே அழைத்தேன். கொஞ்ச நேரம் கழித்துத்தான் வந்தான். 

‘’தம்பி ! ஒரு வேலைன்னு வந்தா அந்த வேலையை முடிக்கற வரைக்கும் அங்கேயே இருக்கணும்’’

அதெல்லாம் சென்ற தலைமுறையின் மதிப்பீடுகள் என்பது போல இருந்தான். 

அவனுக்கு ஃபோன் மேல் ஃபோன் வந்து கொண்டிருந்தது. 

‘’அதை கொஞ்ச நேரம் சைலண்ட்ல தான் வையன் தம்பி’’

‘’முக்கியமான ஃபோன் வரும்’’

‘’யார் பேசுவா?’’

‘’ஃபிரண்ட்ஸ்’’

அனைவரும் பட்டம் பெற்று விட்டு வீட்டில் இருப்பவர்கள் என்பது எனக்குத் தெரியும். 

சாளரத்தில் இருப்பவர் அவனை அழைத்தார். அவன் நகர மறுக்கிறான். என்னைப் போகச் சொல்கிறான். ‘’தம்பி ! செக் உனக்குத்தான் கொடுத்திருக்காங்க. நீதான் போகணும்.’’

நாங்கள் இருவரும் சென்றோம். 

சாளரத்தில் இருப்பவர் , ‘’அட்ரஸ் ப்ரூஃப் ஜெராக்ஸ் வேணும். ஆதார் அல்லது டிரைவிங் லைசண்ஸ்’’ என்றார். 

நான் ‘’ஆதார் நம்பர் கொடுத்தா போதுமா?’’ என்றேன். 

‘’இல்லை சார். ஜெராக்ஸ் மஸ்ட். நீங்க நான்-கஸ்டமர்’’

தம்பியிடம் கேட்டேன். ‘’ஆதார் கார்டு கையில் இருக்கா?’’

‘’இல்ல’’

‘’டிரைவிங் லைசண்ஸ்’’

‘’இல்ல’’

‘’ஸ்மார்ட் ஃபோன்ல ஆதார் கார்டை ஃபோட்டோ எடுத்து சேவ் பண்ணி வச்சுருக்கயா?’’ 

‘’இல்ல’’

‘’ஆதார் கார்டு எங்க இருக்கு?’’

‘’வீட்ல இருக்கு’’

‘’வீட்டுக்கு ஃபோன் பண்ணி ஆதார் நம்பர் சொல்ல சொல்லு. நாம இ- ஆதார் டவுண்லோடு பண்ணலாம். ‘’

‘’ஆதாரோட இன்னும் ஃபோன் நம்பர் லிங்க் பண்ணல’’

அப்புறம் எதுக்குத் தான் எந்நேரமும் ஸ்மார்ட் ஃபோனும் கையுமா இருக்க என்று கேட்க நினைத்தேன். ஆனால் கேட்கவில்லை. 

‘’வீட்ல யாருக்காவது ஃபோன் பண்ணி ஆதார் கார்டை ஃபோட்டோ எடுத்து அனுப்பச் சொல்லு’’

இரண்டு மூன்று ஃபோன் ஃபாலோ அப்புக்கு பிறகு ஆதாரின் ஃபோட்டோ வந்தது. அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து வங்கியில் கொடுத்தோம். பணம் தம்பியின் கைக்கு வந்தது. 

வங்கியிலிருந்து வெளியே வந்ததும் தம்பிக்கு ஒரு ஃபோன் வந்தது. 

‘’அங்கிள் ! இந்த அமௌண்ட் ஐ அப்பா சொன்னவர்ட்ட நீங்களே கொடுத்திடறீங்களா ? என்னோட ஃபிரண்டு கால் பண்ணி வர சொல்றான்’’

அவனை இழுத்துப் பிடித்து அழைத்துச் சென்று வேலையை முடித்தேன். 

அன்று மாலை நண்பரைச் சந்தித்தேன். 

நண்பர் என்னிடம் கேட்டார். ‘’ தம்பி ! ஹெல்ப் பண்ணானா?’’