Saturday, 9 December 2023

சேலம் / விஸ்வகர்மா பதிவுகள் - கடிதம்

அன்புள்ள அண்ணா,

உங்கள் பதிவுகளை படித்தேன். சேலம் பகுதியில் ’’காவிரி போற்றுதும்’’ பணிகளைத் துவக்குவது மகிழ்ச்சிக்குரிய செய்தி. வாழ்த்துக்கள்.  

~~~~~

விஸ்வகர்மா பெண்கள், உறங்கி கொண்டு இருக்கும் இந்தியாவின் தங்கம் பற்றிய பதிவும் படித்தேன். தேவதத் பட்நாயக் பொதுவாக எல்லா உலக mythology பற்றி எழுதுபவர். அவர் இந்தியாவில் மட்டும் தான் பணம்/ செல்வத்தின் தெய்வம் ஒரு பெண்ணாக இருக்கிறாள் - லக்ஷ்மி - என்று சொல்கிறார்.

பணம்/ செல்வம் நம் கையில் உள்ள வரை ஒரு மதிப்பும் அற்றது. அது இருக்கிறது - அவ்வளவு தான். எப்போது அது நம் கையை விட்டு விலகுகிறதோ அப்போது அதன் மதிப்பு உறுதி ஆகிறது. 

மகள் வீட்டை விலகி திருமணம் ஆகி போகும் போது பிறந்த வீட்டின் மதிப்பை விளங்க செய்கிறாள். 

இந்த தொடர்பு இந்தியாவின் தெய்வமாகிய லட்சுமியை குறிக்கிறது. 

அவள் நிலம் ஆளும் நாராயணனை நீங்காதிருகட்டும்.

நன்றி

அன்புடன்,
பெரியண்ணன்

வெளி மாவட்ட அழைப்பு

நேற்று சென்னையிலிருந்து ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதாவது , அவரது நண்பர் ஒருவருக்கு சேலம் அருகே 6 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் அவர் முழுமையாக தேக்கு பயிரிட விரும்புகிறார் ; ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக ஆலோசனை வழங்க முடியுமா என்று கேட்டிருந்தார். இருவரும் ஊருக்கு வந்து என்னை நேரடியாகச் சந்திக்க விரும்புவதாகவும் நாம் செயல் புரிந்திருக்கும் தேக்கு வயல்களை நேரில் காண விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். நான் பதில் மின்னஞ்சல் அனுப்பினேன். இன்று என்னைத் தொடர்பு கொண்டு பேசினார்கள்.  

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. எவ்விதம் அவர்கள் ‘’காவிரி போற்றுதும்’’ குறித்து அறிந்தார்கள் என்று கேட்டேன். நமது வலைப்பூவை பல ஆண்டுகளாக வாசிப்பதாகக் கூறினார்கள். வலைப்பூ மட்டுமே நாம் எழுதுகிறோம். வேறு எந்த சமூக ஊடகத்திலும் இல்லை. அவ்வாறு இருப்பினும் பலர் வாசிக்கிறார்கள் என்பதை அறிய நேர்ந்தது உவகை அளித்தது. 

முதல் முறை பேசுகிறோம் என்ற போதும் நண்பர் ‘’காவிரி போற்றுதும்’’ மேற்கொள்ளும் செயல்கள் குறித்து பல நற்சொற்களையும் பாராட்டுக்களையும் உரைத்தார். ‘’காவிரி போற்றுதும்’’ அமைப்பாளனாக என்னால் ஒரு விஷயம் மட்டு்மே சொல்ல முடியும். இந்த நற்சொற்களுக்கும் பாராட்டுக்களுக்கும் உரியவர்கள் செயல் புரியும் கிராமத்தின் மக்களே. அடியேன் எளிய கருவி மட்டுமே. 

நண்பரிடம் 3 விஷயங்கள் சொன்னேன். 

(1) இரண்டு அடி நீளம் இரண்டு அடி அகலம் இரண்டு அடி ஆழம் கொண்ட குழியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மக்கிய சாண எருவை இடுங்கள். ஒரு குழிக்கும் இன்னொரு குழிக்கும் இடையே 12 அடி இடைவெளி இருக்க வேண்டும். 

(2) தேக்கு மரத்துக்கு வாரத்துக்கு குறைந்தபட்சம் 2 நாட்கள் தண்ணீர் விட வேண்டும். செவ்வாய் வெள்ளி என இரண்டு நாட்களும் தண்ணீர் விட வேண்டும். ஒரு குடம் அளவு தண்ணீர் போதுமானது. 

(3) நமக்கு அந்த தாவரத்திடமிருந்து தேவை அதன் பத்து அடி உயர தண்டு மட்டுமே. எனவே குறைந்தபட்சம் பத்து அடி உயரத்துக்கு பக்கக் கிளைகள் ஏதும் இல்லாதவாறு ‘’கவாத்து’’ செய்ய வேண்டும். 

இந்த 3 விஷயங்களை மனதில் உறுதி செய்து கொண்டு செயலில் இறங்குமாறு கூறினேன். 

இன்னும் ஓரிரு நாளில் சேலம் வருவதாகக் கூறியிருக்கிறேன். 6 ஏக்கர் வயலை நேரடியாகப் பார்ப்பது அந்த வயலின் சூழலை அவதானிக்கவும் அதற்கு ஏற்றார் போல திட்டமிடவும் உகந்தது.  

நீண்ட நாள் நண்பன்

 எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். எனது நீண்ட நாள் நண்பன். தற்போது மும்பையில் வசிக்கிறான். விளையாட்டுக்கான தொலைக்காட்சி சேனல் ஒன்றின் நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறான். விவசாயம் சார்ந்த பணிகளில் ஆர்வமுடையவன். மும்பை சென்ற பின் விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட முடியவில்லை என்ற மனக்குறை அவனுக்கு இருக்கிறது. ஊரில் 10 ஏக்கர் நிலம் வாங்கி அதில் தேக்கு பயிரிட வேண்டும் என்று விரும்புகிறான். ‘’காவிரி போற்றுதும்’’ தேக்கில் காட்டும் ஆர்வம் அவனுக்கு அந்த எண்ணத்தை உருவாக்கியுள்ளது. நமது தளத்தில் வெளியாகும் தேக்கு குறித்த பதிவுகளை தொடர்ச்சியாக வாசித்திருக்கிறான். நான்கு நாட்களுக்கு முன் மும்பையிலிருந்து ஃபோன் செய்து தேக்கு பயிரிட 10 ஏக்கர் நிலம் வாங்கிக் கொடு என்றான். நாம் ரியல் எஸ்டேட் தொழிலிலும் இருப்பதால் ஒரு பார்ட்டி என்னிடம் விற்றுக் கொடுக்குமாறு சொன்ன 10 ஏக்கர் நிலம் குறித்து சொன்னேன். நேற்று மாலை அவனிடமிருந்து ஃபோன் அழைப்பு. ஒரு திருமணத்துக்காக திருச்சி வந்திருப்பதாகச் சொன்னான். அங்கிருந்து கோவிந்தபுரம் போதேந்திராள் சன்னிதி வந்து வழிபாடு நடத்தி விட்டு ஊருக்கு வருவதாகக் கூறினான். நான் காலையில் அவனுக்காகக் காத்திருந்தேன். பேருந்தில் வந்தான். அவனை அழைத்துக் கொண்டு தேக்கு பயிரிட்டிருக்கும் இடத்துக்குக் கொண்டு சென்று காட்டினேன். மரக்கன்றுகள் நட்டு எத்தனை வருடங்கள் ஆகின்றன என்று கேட்டான். 15 மாதங்கள் என்று சொன்னேன். அவனால் நம்ப முடியவில்லை. இவ்வளவு உயரம் வளர்ந்திருக்கிறதே என மிகவும் ஆச்சர்யப்பட்டான். பின்னர் அவனுக்குப் பொருத்தமான நிலம் என நான் எண்ணிய வயலைக் கொண்டு சென்று காட்டினேன். அவனுக்கு இடம் பிடித்திருந்தது. அங்கிருந்து வைத்தீஸ்வரன் கோவில் சென்று வைத்தியநாத சுவாமி தையல்நாயகி அம்பாளை வணங்கினோம். மதியம் 12.10க்கு சோழன் எக்ஸ்பிரஸில் அவன் திருச்சி செல்ல வேண்டும். 11.50க்கு வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையம் வந்தோம். அவனை திருச்சிக்கு ரயிலேற்றி விட்டு விட்டு நான் மோட்டார்சைக்கிளில் ஊர் திரும்பினேன். 

Wednesday, 6 December 2023

விஸ்வகர்மா

தொழில் தேவைக்காக வீட்டில் இருந்த நகை ஒன்றை வங்கியில் அடமானம் வைத்திருந்தேன். அதனை மீட்க நேற்று நண்பர் ஒருவருடன் சென்றிருந்தேன். 

நகை மதிப்பீட்டாளர் ஒரு பெண்மணி. அவரது உதவியாளரும் ஒரு பெண்மணி. அந்த வங்கி ஒரு சிறிய கிளை. நகருக்கு மிக அருகில் அடுத்திருக்கும் கிராமத்தின் கிளை. மேலாளர், காசாளர் என இரு வங்கி ஊழியர்கள். நகை மதிப்பீட்டாளர் வங்கியின் நிரந்தர ஊழியர் அல்ல ; ஒப்பந்த ஊழியர். கிராமக் கிளை என்பதால் அந்த வங்கியின் வணிகம் அதிகமும் தங்க நகை அடகுக் கடனே. எனவே அங்கே நகை மதிப்பீட்டாளரே முக்கிய நபர். அவர் எப்போதும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருப்பார். 

’’வணக்கம் ! அம்மா’’ என்று சொல்லி நகை மதிப்பீட்டாளரின் எதிரில் அமர்ந்தோம். 

புன்னகையுடன் ‘’வணக்கம் சார்’’ என்றார். 

நகைக்கடன் அட்டையைக் கொடுத்தோம். எவ்வளவு தொகை செலுத்தப்பட வேண்டியது என்பதை அட்டையில் குறித்துக் கொடுத்தார். சலானை பூர்த்தி செய்து தொகையை காசாளரின் சாளரத்தில் அளித்தோம். ஒப்புகைச் சீட்டை காசாளர் அளித்தார். நாங்கள் நகை மதிப்பீட்டாளரின் எதிரில் அமர்ந்து கொண்டோம். 

‘’எனக்குத் தெரிந்து ஒரு பெண் நகை மதிப்பீட்டாளராக நியமனம் ஆகியிருப்பது இங்கு தான் என்று நினைக்கிறேன்’’ என்றேன். 

நகை மதிப்பீட்டாளர் முகம் புன்னகையால் ஒளிர்ந்தது. 

‘’நாகப்பட்டினத்தில் ஒரு அம்மா நகை மதிப்பீட்டாளராக இருக்காங்க சார்’’ என்றார். 

மதிப்பீட்டாளரின் உதவியாளர் ‘’கடலூர்ல ஒரு அம்மா இருக்காங்க சார்’’ என்றார். 

‘’நம்ம மாவட்டத்துல நீங்க தான் மேடம்’’ என்றேன்.

அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. 

‘’நாங்க விஸ்வகர்மா சார்’’ என்றார். 

‘’ஓ ! அப்படியா’’ என்றேன். தொடர்ந்து , ‘’நிறைய ஸ்பெஷாலிட்டிஸ் கொண்ட சமூகம் அது’’ என்று சொன்னேன். 

அந்த இரு பெண்களுக்கும் ஆச்சர்யம். என்ன சொல்லப் போகிறேன் என்று. 

‘’விஸ்வகர்மா மக்கள் கன்யாகுமரில இருந்து காஷ்மீர் வரைக்கும் இருக்காங்க. அதனால அது ஒரு ஆல் இண்டியா கம்யூனிட்டி. குறைஞ்சது 5000 வருஷ வரலாறு அவங்களுக்கு இருக்கு. நம்ம நாட்டு மக்கள் செல்வத்துக்கான கடவுளா லஷ்மியை கும்பிடறாங்க. லஷ்மி விதவிதமான பொன் நகைகளை விரும்பி அணியக் கூடியவங்க. அம்பாளுக்கும் பொன் ஆபரணங்கள் மேல பிரியம் அதிகம். லலிதா சகஸ்ர நாமம், சௌந்தர்ய லஹரி போன்ற நூல்கள் அம்பிகை விரும்பி அணியும் பொன் ஆபரணங்கள் பத்தி சொல்ற படைப்புகள். அப்ப அந்த காலத்துலயே விதவிதமான பொன் நகைகள் செஞ்சிருக்காங்க. அதப் பத்தி மக்கள் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குன்னு தானே அர்த்தம்.’’

கண்கள் பெரிதாக விரிய ‘’ஆமாம் சார்’’ என்றனர். 

‘’இப்ப உலகத்துல அமெரிக்கா கிட்ட இருக்கற தங்கம்னா அது அவங்களோட அரசு தலைமை வங்கில தங்கக்கட்டியா இருப்பு வச்சிருப்பாங்க. அரசாங்கத்துக்கிட்ட மட்டும் தான் தங்கம் இருக்கும். வீடுகள்ல தங்கம் இருக்காது. அதாவது பெண்கள் தங்கத்துல நகை செஞ்சு போட்டுக்க மாட்டாங்க.’’

‘’அங்கல்லாம் பெண்கள் தங்க நகை வாங்க மாட்டாங்களா ?’’ என்று நம்ப முடியாமல் கேட்டனர் இருவரும். 

‘’உலக நாடுகளோட பல பெண் தலைவர்கள் இங்க வராங்களே அவங்க யாரும் கோல்டு அணியறது இல்லை . நீங்க பாத்திருக்கலாம்’’ என்றேன். இருவரும் ‘’ஆமாம் சார்’’ என்றனர். 

‘’நம்ம நாட்டுல தான் சாமானியமான ஏழைக் குடும்பத்துக்குக் கூட 5 பவுன் தங்க நகை இருக்கும். 140 கோடி நம்ம பாபுலேஷன். அப்பன்னா இங்க 28 கோடி குடும்பம் இருக்குன்னா நம்ம கிட்ட இருக்கற மினிமம் தங்கம் 140 கோடி பவுன். அவ்வளவு தங்கம் அமெரிக்கா கிட்ட கூட கிடையாது.’’ 

‘’நாம அவ்வளவு பணக்கார நாடா சார்?’’

‘’நிச்சயமா! நாளைக்கே நம்ம அரசாங்கம் மக்கள் கிட்ட இருந்து தங்கத்தை வாங்கிட்டு ரொக்கமா பணம் கொடுத்தா உலகத்துல நம்ம கையில தான் கோல்டு அதிகமா இருக்கும். மத்த நாடுகள் காசு செலவு செஞ்சு சுரங்கத்துல இருந்து தங்க தாது எடுத்து அதை தங்கமாக்கனும். நமக்கு நம்ம கையிலயே இருக்கு. செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லாம். உலகத்துல தங்கத்தோட விலை என்னவா இருக்கணும்ங்கறத நாம தான் தீர்மானிப்போம்‘’

’’விஸ்வகர்மா 4 தொழில் செய்யறவங்க சேர்ந்து இருக்கற ஜாதி சார். நாங்க பொன் நகை செய்யறவங்க. இரும்பு தளவாடங்கள் செய்ர ஜாதியும் இதுல சேந்தது. பாத்திரம் செய்யறவங்க. தச்சு வேலை செய்யறவங்க. ’’

’’மத்திய அரசாங்கத்துல இப்ப விஸ்வகர்மா யோஜனா ன்னு ஒரு ஸ்கீம் இருக்கு. மத்திய அரசாங்கம் அதுக்கு ரூ.13,000 கோடி ஒதுக்கியிருக்கு. இந்த 4 தொழிலோட மேல பல தொழில் சேத்து இருக்காங்க. அவங்களோட தொழிலுக்கு உபயோகமா இருக்கற விதமா அவங்களுக்கு லோன் கொடுங்க’’

‘’விஸ்வகர்மா ஸ்கீம்ல கவர் ஆகறவங்க யாருன்னு பாத்து மேனேஜர் கிட்ட ரெஃபர் பண்றோம் சார்’’ என்றனர் மகிழ்ச்சியுடன். 

மேலாளர் கஜானாவிலிருந்து நகையைக் கொண்டு வந்து கொடுத்தார். நாங்கள் பெற்றுக் கொண்டு எல்லாருக்கும் நன்றி சொல்லி கிளம்பினோம்.   

மூன்று ஓவியங்கள்


நமக்கு 
ஒரு அகம் இருக்கிறது
எளிய
அழகிய
நேர்த்தியான அகம்

தென்னைகள் நிறைந்த
அங்கும் இங்கும் 
அணிலாடும்
சின்னஞ்சிறு பறவைகள்
கீச்சொலி
எப்போதும் எழுப்பும்
அகம்

நடந்து நடந்து நடந்து
எந்நேரமும்
சிறு சிறு
சீரமைத்தல்களை
எப்போதும் மேற்கொள்கிறாள்
அன்னை

அன்னை அமைத்த அகத்தில்
மனிதர்கள் பிறக்கிறார்கள்
மனிதர்கள் இறக்கிறார்கள்

அகத்தில் எப்போதும் சுடர்கிறது
அன்னை ஏற்றிய தீபச்சுடர்
அன்னையர் ஏற்றிய தீபச்சுடர்

அந்த 
அந்தி தீபத்தின்
சிறு ஒளியை
நாளும்
தன்னுள் 
ஏந்திக் கொள்கிறான்
நாளவன்

***



  தீர்த்தக் கரையில்
காத்திருக்கிறேன்
நீ சொன்ன படி

இந்த உலகம் அழகியது
என்பதை
மீண்டும் மீண்டும் மீண்டும்
உணர்ந்து கொண்டு

நீ சொன்ன நேரம்
கடந்து விட்டது
அதன் பின்
எத்தனையோ 
அந்திகள் விடியல்கள்
எழுந்து மறைந்து விட்டன
யுகங்கள் 
தோன்றி மறைந்து விட்டன

எதிர்பார்ப்பு
ஏக்கம்
வலிகள்
துயரங்கள்
துக்கம்
தவிப்பு
அலைகளென எழுந்தன
வித வித
உணர்வுகள்

தன் சிறகுகளால்
தன் சிறகுகளுக்குள் 
வானும்
விண்மீன்களும்
காற்றும்
ஒளியும்
மண்ணும்
நீரும்
பொதிந்து கொண்டன
என்னை

அலைகள் அல்ல கடல்

தீர்த்தக்கரையில்
காத்திருக்கிறேன்
நீ சொன்ன படி

***




காட்டாளன்
சுடலைப் பொடி பூசி
உடுக்கடிக்கிறான்

எனக்கு ஆயிரம் உடல்கள்
எனக்கு ஆயிரம் கபாலங்கள்
எனக்கு ஆயிரம் அறியாமைகள்

காட்டாளனே வா

என்னை அழி 

என் கபாலங்களை
சூடிக்கொள்

காட்டாளனே வா
என்னை அழி
என் கபாலங்களை
சூடிக்கொள்
 ***

ஓவியம் : எல் ஆர்

Tuesday, 5 December 2023

பூம்புகார்

கடல் காணச் செல்வது என்பது என்றுமே உற்சாகம் கொள்ளச் செய்வது. முன்னர், வாரத்தில் ஒருநாள் மாலை கடற்கரைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இப்போது மீண்டும் அந்த வழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். 

இன்று பூம்புகார் சென்றிருந்தேன். நெல்லூர் அருகே நிலை கொண்டிருக்கும் புயலால் வங்கக் கடல் நுரைத்து அலையடித்துக் கொண்டிருந்தது. ஆர்ப்பரித்து கரையை நோக்கி விரைந்து கொண்டிருந்தன கடலலைகள். கரையிலிருந்து அலைகளை நோக்கிச் சென்று அலைகளுக்குள் நின்று கொண்டேன். கடலில் நிற்கையில் எப்போதும் என் உளம் பொங்கும். உள்ளத்தில் இப்போது எத்தனையோ எண்ண அலைகள். கடலலைகளில் எனது எண்ண அலைகள் சங்கமமாயின. 

அலைகளில் நிற்கும் போது ‘’காவிரி போற்றுதும்’’ நினைவு வந்தது. ஏன் என்று தெரியவில்லை. அந்நினைவு எழுந்த போது ஒரு நிறைவும் எழுந்தது. அதுவும் ஏன் என்று தெரியவில்லை. சமுத்திர நீரை மும்முறை தலையில் தெளித்துக் கொண்டேன்.  

Sunday, 3 December 2023

காவிரி போற்றுதும் - பணிகளின் நிதிநிலை

’’காவிரி போற்றுதும்’’ ஒரு நுண் அமைப்பு. அதன் அமைப்பாளரே அதன் செயல்களை ஆற்றும் செயலாளரும். அமைப்பாளரின் நண்பர்களே அமைப்பின் ஆதரவாளர்கள். இந்த பின்னணியிலேயே ‘’காவிரி போற்றுதும்’’ செயல்கள் நிகழ்ந்தன. நிதிநிலையின் அடிப்படையில் அவை எவ்விதம் நிகழ்ந்தன என்பதை அமைப்பு முன்னெடுத்த ஒவ்வொரு செயல்பாடுகளையும் அடிப்படையாய்க் கொண்டு தொகுத்துக் கொள்வது இந்த தருணத்தில் உபயோகமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஒரு நுண் அமைப்பு எவ்விதம் தன் செயல்களை திட்டமிட்டது செயல்படுத்தியது என்பதை புறவயமாக அறிந்து கொள்வது நமக்கு மட்டுமன்றி இவ்வகையான செயலை முன்னெடுக்க நினைக்கும் அனைவருக்கும் உதவிகரமாக இருக்கும் என்பதால் இந்த விஷயம் பதிவு செய்யப்பட வேண்டும் என நினைக்கிறேன். நாட்டில் உலகத்தில் நடக்கும் எல்லா விதமான பொதுப்பணிகளையும் அவை திட்டமிட்டு செயல்படுத்தப்படும் விதங்களையும் என்னுடைய கவனத்துக்கு வருபவற்றை ஒரு அமைப்பாளனாக கூர்ந்து   நோக்குகிறேன். 

நாம் நமது செயற்களமாக ஒரு கிராமம் என்பதைக் கொண்டோம். நாடு , மாநிலம், மாவட்டம் ஆகிய அலகுகளுடன் ஒப்பிட்டால் கிராமம் என்பது சிறிய அலகே. எனினும் அமைப்பாளரே செயலாளராகவும் இருக்கும் நுண் அமைப்புக்கு கிராமம் என்பது மிகப் பெரிய பேரலகு ஆகும். 

நாம் இதுவரை செய்திருக்கும் பணிகளை நினைவில் இருந்து வரிசைப்படுத்திக் கொள்கிறேன். அவை எவ்விதம் திட்டமிடப்பட்டன ; . எவ்வளவு நிதி தேவைப்பட்டது : அது எவ்விதம் திரட்டப்பட்டது. அந்த பணிகளின் மூலம் நிகழ்ந்த விளைவுகள் என்ன என்பதை ஒவ்வொன்றாகக் கூறுகிறேன். 

1. கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் மரக்கன்றுகள்

2. கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் முன்னால் மலர்ச்செடிகள்

3. கிராமம் முழுவதும் தீபம் ஏற்றிய நிகழ்வு

4. கோவிட் தடுப்பூசிக்கான முயற்சி

5. இரண்டாம் கிராமம் : கோவிட் தடுப்பூசிக்கான முயற்சி

6. இரண்டாம் கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் மலர்ச்செடிகள்

7. குடியரசு தினத்தன்று முதல் நாள் எல்லா வீடுகளுக்கும் நந்தியாவட்டை செடிகள்

8. குடியரசு தினத்தன்று மாலை எல்லா வீடுகளும் தீபம் ஏற்றுதல்

9. ஐ.டி நிறுவன ஊழியர் ஒருவரின் 3 ஏக்கர் வயலை முழுமையாக தேக்குத் தோட்டமாக மாற்றுவதில் ஆலோசனை வழங்கியது

10. இரண்டாம் கிராமத்தில் இரு விவசாயிகளின் வயலில் கணிசமான தேக்கு மரக்கன்றுகள் நட ஆலோசனை வழங்கியது . கூட இருந்து உதவியது. 

11. இரண்டாம் கிராமத்தின் குடிசைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மழைக்காலத்தில் ஒரு வாரம் உணவளித்தது. 

12. இரண்டாம் கிராமத்தின் குடிசைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இரண்டாம் வருடம் ஒரு வாரத்துக்குத் தேவையான உணவுப்பொருட்களை வழங்கியது

13. மாவட்டத்தில் இருக்கும் எல்லா சலூன்களுக்கும் ஏழு புத்த்கங்கள் கொண்ட தொகுப்பை அளித்தது

14. கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் பூசணி, சுரை, பரங்கி, பீர்க்கன் ஆகிய விதைகளை ஆடிப்பட்டத்தில் வழங்கியது

15. நண்பர் ஒருவரின் தந்தையின் நினைவு தினத்தையொட்டி கிராமம் முழுதுக்கும் நெல்லி மரக்கன்றுகளை வழங்கியது. 

16. நண்பர் ஒருவரின் தந்தையின் நினைவாக ஒரு விவசாயிக்கு 100 எலுமிச்சை கன்றுகளை வாங்கித் தந்தது. 

இந்த செயல்கள் எவ்விதம் திட்டமிடப்பட்டன ; எவ்விதம் நிகழ்ந்தன ; அவற்றின் மூலம்  பெறப்பட்ட அனுபவம் என்ன அது எவ்விதம் அடுத்த பணிகளுக்கு உதவியது என்பதை பதிவு செய்கிறேன். என்னுடைய வலைப்பூவில் அவ்வப்போது நிகழும் பணிகள் குறித்து பதிவு செய்கிறேன் என்றாலும் ஒட்டுமொத்தமாக தொகுத்துப் பார்ப்பது எல்லாவற்றுக்கும் நலன் பயப்பது என்பதால் இந்த பதிவில் விரிவாகப் பதிவிடுகிறேன். 

1. கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கியது

நாம் முதலில் துவக்கிய பணி இது. பொதுப்பணி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் பல ஆண்டுகளாக இருந்ததேயன்றி ஒரு அமைப்பாக உருவாகி செயல்பட்ட அனுபவம் இல்லை. மக்களை நம்பி ஒரு பொதுப்பணி அமைப்பை துவங்கினேன். அது ஒரு நிமித்தம் மட்டுமே. பலரும் இணைவதற்கு ஒரு தளம் தேவை என்பதால் அமைப்பு உருவாக்கப்பட்டது. ‘’காவிரி போற்றுதும்’’ என்று பெயரிடப்பட்டது. 

ஒரு கிராமத்தில் உள்ள எல்லா குடும்பங்களையும் சந்தித்து அவர்கள் ஏதும் மரக்கன்றுகள் வளர்க்க விரும்பினால் அவர்களுக்கு அந்த மரக்கன்றுகளை ஏற்பாடு செய்து வழங்கலாம் எனத் திட்டமிட்டிருந்தேன். ஒரு கிராமத்தின் விவசாயக் குடும்பத்தில் 5 பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் வீட்டில் இருக்கும் ஆண்களில் ஒருவருக்கு மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தால் அவர்கள் அருகில் உள்ள நகரத்தில் உள்ள நர்சரிகளுக்கு சென்று வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் நடுவார்கள். பெண்களுக்கோ குழந்தைகளுக்கோ ஆர்வம் இருந்தால் அவர்கள் வீட்டில் உள்ள ஆண்களிடம் சொல்லி அவர்கள் வாங்கி வருவதற்கு சாத்தியம் உச்சபட்சமானது இல்லை என்பதால் அப்படி விருப்பப்படுபவர்களுக்கு நாம் மரக்கன்றுகளை வழங்கினால் அவர்கள் ஆர்வமும் விருப்பமும் நிறைவேறும் ; கிராமத்தில் இருக்கும் மரக்கன்றுகளின் எண்ணிக்கை அதிகமாகும் என்று உத்தேசித்தேன். எனது உத்தேசம் சரியாக இருந்தது. கிராமத்தின் குடும்பங்களில் இருந்த அனைவருக்குமே வீட்டின் தோட்டத்தில் மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. மாறாத தன்மை கொண்ட விவசாயப் பணிச்சூழலால் நகருக்குச் சென்று நர்சரியில் வாங்கி நடுவதில் சுணக்கம் கொண்டிருந்தனர். நாம் அவர்களை அணுகி அவர்களுக்குத் தேவையான மரக்கன்றுகள் என்ன எனக் கேட்டு கணக்கெடுத்த போது அதனை ஒரு நன்நிமித்தமாகக் கொண்டு ஆர்வத்துடன் தேவையான மரக்கன்றுகளைக் கூறினர். எனது உத்தேசம் என்ன என்பதை ஒவ்வொருவரிடம் கூறினேன். அதன் மூலம் எனக்கும் மக்களுக்கும் உணர்வுபூர்வமான தொடர்பு உருவானது. தேக்கு குறித்து அவர்களிடம் எடுத்துச் சொன்ன போது அவர்களின் குடும்பத்தின் பொருளியல் கஷ்டத்தைத் தீர்க்க வந்த ஒருவனாக என்னைப் பார்த்தார்கள். அடியேன் எளியவன். மிக அளியவன். என்னிடம் அவர்களுக்கு ஏதாவது ஒருவகையில் உதவ வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. அவர்களுக்கு வழங்க ஆலோசனை மட்டுமே இருந்தது. அதைத் தாண்டி என்னிடம் ஏதும் இருக்கவில்லை. 

500 குடும்பங்களைச் சந்தித்தேன். ஒரு இடத்தில் கூட ஒருவர் கூட என்னை அன்னியமாக நினைக்கவில்லை. ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் மட்டுமே ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒதுக்க முடியும் என்ற நிலையிலும் அந்த குறைந்த நிமிடங்களிலேயே உணர்வுபூர்வமான பிணைப்பு உருவானது. 

அனைத்து வீடுகளிலும் கணக்கெடுப்பை முடித்த போது அந்த கிராமத்து மக்களுக்கு 20, 000 மரக்கன்றுகள் தேவைப்படுகின்றன என்ற எண்ணிக்கை கிடைத்தது. அதாவது, சராசரியாக ஒரு கிராமத்துக்கு 20,000 மரக்கன்றுகள் நடும் அளவுக்கு இடமும் நட்டு வளர்க்க வேண்டும் என்ற விருப்பம் கொண்ட கிராம விவசாய மக்களும் இருக்கிறார்கள். 

கணக்கெடுப்பைத் தொடங்கிய போது அந்த கிராமத்தில் உள்ள மரங்களின் எண்ணிக்கையை ‘’T''  எனக் கொண்டால் கணக்கெடுப்பு நிகழ்ந்த பின் அந்த கிராமத்தில் மக்கள் கோரிய வண்ணம் அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டால் அந்த கிராமத்தில் உள்ள மரங்களின் எண்ணிக்கை ‘’ T + 20,000'' என்றாகும். அந்த எண்ணிக்கை உண்மையிலேயே மிகப் பெரியது. சிறு துளி பெருவெள்ளம் என்பதைப் போன்றது. இதே கணக்கை ஒரு புரிதலுக்காக விரிவுபடுத்தினால் எங்கள் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இருக்கும் மொத்த மரங்களின் எண்ணிக்கையை ''DT'' எனக் கொண்டால் , தோராயமாக 300 கிராமங்களைக் கொண்ட எங்கள் மாவட்டத்தின் சாத்தியம் ‘’DT + 60,00,000'' என்றாகும்.  

ஒரு கிராமத்தில் ‘’T + 20,000'' என்பது சாத்தியம் எனில் ஒரு மாவட்டத்தில் ''DT + 60,00,000 '' என்பதும் சாத்தியமே என்பதை 15 நாட்கள் கணக்கெடுத்து மக்கள் மனநிலையை அவர்களுடன் உணர்வுபூர்வமாகத் தொடர்பு கொண்டு உரையாடியதன் மூலம் முழுமையாக அறிந்தேன். இந்த அறிதலும் புரிதலும் ஏற்பட்டது எனக்கு முக்கியமான அனுபவமானது. பொதுப்பணியில் இவ்வாறு களத்தில் ஏற்படும் அனுபவங்களே பொதுப்பணியாளனின் மனத்தை உறுதிப்படுத்துகின்றன. 

இந்த கணக்கெடுப்பை மேற்கொள்ள எனக்கு பெரிதாக எந்த செலவும் ஆகவில்லை. செயல் புரியும் கிராமம் ஊரிலிருந்து 45 நிமிட பயண தூரத்தில் இருந்தது. மாவட்டத்தின் எல்லையில் அமைந்திருக்கும் கிராமம் அது. அதற்கு அடுத்த கிராமம் பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்தது. ஊருக்கு அருகில் கிராமத்தில் பொதுப்பணி செய்வதை விட கணிசமான தூரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் பணி புரிந்தால் சற்றே கடின இலக்கொன்றை எட்டிய நிறைவு இருக்கும் என்பதால் அதனைத் தேர்ந்தெடுத்தேன். அந்த முடிவு சரியானதே என்பதை பின்னாட்கள் உணர்த்தின. 

காலை 6.30 மணிக்கு காலை உணவை அருந்தி விட்டு அந்த கிராமத்துக்குச் செல்வேன். சென்று சேர காலை 7.15 ஆகும். அப்போதிலிருந்து மதியம் 2 மணி வரை கணக்கெடுப்பேன். ஏழு மணி நேரத்தில் இழுத்துப் பிடித்து 50 வீடுகளில் கணக்கெடுப்பேன். சில வீடுகளில் அமரச் சொல்லி தேனீர் தயாரித்து அளிப்பார்கள். சிலர் அருந்த மோர் கொடுப்பார்கள். சிலர் சோடா கலர் வாங்கி வந்து தருவார்கள். அவர்கள் உபசரிப்பை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும் ; அதே நேரம் அடுத்தடுத்து தேனீர் மோர் சோடா என அருந்துவதும் சாத்தியம் இல்லை என்பதால் உபசரிப்புகளை மென்மையாகத் தவிர்த்து விட்டு கணக்கெடுப்பை நிறைவு செய்து விட்டு மதியம் 3 மணிக்கு வீடு திரும்பி மதிய உணவருந்துவேன். இந்த 15 நாட்கள் கணக்கெடுப்புக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று வந்த வகையில் ரூ. 1000 ( ரூபாய் ஆயிரம் மட்டும்) செலவாகியிருக்கும். 

கணக்கெடுப்பை முடித்த பின் தான் 20,000 மரக்கன்றுகள் தேவை என்ற எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டது. அப்போது என்னிடம் ஒரு மரக்கன்று கூட கைவசம் இல்லை. 

என்னுடைய நம்பிக்கையையும் தீவிரத்தையும் பார்த்த எனது நெருங்கிய நண்பர்கள் தங்கள் ஏற்பாட்டில் 20,000 மரக்கன்றுகளை வழங்கினர். கிராம மக்கள் அனைவரின் தோட்டத்தையும் அவை சென்றடைந்தன. 

அத்தனை மரக்கன்றுகளும் வளர்ந்து விட்டதா என்ற கேள்வி எப்போதும் எழுப்பப்படும், ஒரு மரக்கன்று நடப்பட்டு முதல் 6 மாத காலத்தில் தொடர் மழை, புயல் , வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களைக் கடந்து வர வேண்டும். அது ஒரு பொது உண்மை. ஐந்து நாட்கள் தொடர்மழை பெய்து தண்ணீர் நின்றால் கன்றுகளின் வேர் அழுகும். இவை விவசாயத்தில் எப்போதும் உள்ளவை. அவற்றைத் தாண்டி பிழைத்த மரங்களின் எண்ணிக்கையே மிக மிக அதிகம். 

2. கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் முன்னால் மலர்ச்செடிகள் 

20,000 மரக்கன்றுகள் வழங்கப்பட்ட போது அந்த கிராமமே புத்தெழுச்சி பெற்றிருந்தது என்பதை இப்போது நினைவுபடுத்திக் கொள்கிறேன். இன்னும் நுணுக்கமாக நோக்கினால் , கணக்கெடுப்பு தொடங்கிய நாளிலிருந்தே அந்த கிராமமும் கிராம மக்களும் உற்சாகமும் எழுச்சியும் கொண்டார்கள். என் அகத்தில் எழுந்த யோசனை என்பதால் அதன் மீது நான் பெரும் நம்பிக்கையும் தீவிரமும் கொண்டிருந்தேன். மக்களின் ஆர்வத்தையும் அன்பையும் காணக் காண என் செயலூக்கம் மேலும் மேலும் அதிகமானது. என் அகமும் கிராம மக்களின் அகமும் எவ்வித வேறுபாடும் இன்றி ஒன்றானது. ஒற்றுமை என்பது அதுதான். ஒருமைப்பாடு என்பது அதுதான். அந்த அனுபவத்தை இந்த எளியவனுக்கு அந்த கிராம மக்கள் வழங்கினார்கள். 

பணியின் பெரும்பகுதி நிறைவுற்ற போது அந்த கிராமத்தின் ஆலயம் ஒன்றில் கிராமத்தில் பணிக்கு உதவிய தன்னார்வலர்களின் கூடுகையொன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் நான் பேசினேன் ‘’ ஒட்டு மொத்த பிரபஞ்சமும் இறையின் வடிவம் என பக்தன் உணர்ந்திருந்தாலும் ஆலயத்தின் கருவறை விக்ரகத்தையே பிரபஞ்ச ரூபமான இறைவன் என வணங்குகிறான். பக்தன் ஒருவனுக்கு தெய்வ விக்ரகம் எவ்வாறோ அதைப் போன்றது எனக்கு இந்த கிராமம். இந்த கிராமத்தை நான் தேசம் என்றே பார்க்கிறேன் ; உணர்கிறேன்’’ என்று சொன்னேன். இந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு மலர்ச்செடி பூத்திருக்குமானால் நான் மிகவும் மகிழ்வேன் என்று சொன்னேன். மேலும் இத்தனை நாட்கள் நாம் இணைந்து செயல்பட்டிருப்பதன் அடையாளமாக நம் ஒற்றுமையைக் குறிக்கும் விதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் மாலை 6 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் 7 தீபங்கள் ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அனைவரும் அவ்வாறே செய்து விடலாம் என்று சொன்னார்கள்.

3. கிராமம் முழுவதும் தீபம் ஏற்றிய நிகழ்வு

 அடுத்த இரண்டு நாட்களில் 500 பூமரக் கன்றுகளை நண்பர் ஒருவர் அளித்தார். ஒவ்வொரு வீட்டுக்கும் அளித்து 7 தீபங்கள் குறித்து தகவல் தெரிவித்தேன். குறிப்பிட்ட நாளில் எல்லா மக்களும் தங்கள் வீட்டு வாசலில் 7 தீபங்கள் ஏற்றினார்கள். அந்த ஒளி வெள்ளம் நம்பிக்கையின் நல்லெண்ணத்தின் அடையாளம். 

500 பூமரக் கன்றுகளை நண்பர் ஒருவர் வழங்கியதால் கிராமமே ஒருங்கிணைந்த அந்த அபூர்வ நிகழ்வுக்கு பொருட்செலவு என எதுவும் இல்லை.

பரஸ்பர அன்பும் பிரியமும் நல்லெண்ணமும் மரியாதையும் வெளிப்பட்ட ஒரு கிராமமே இணைந்து உருவாக்கிய அந்த தீப ஒளி வெள்ளத்தின் மதிப்பு என்ன என்பதை உணர்வுபூர்வமாக மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும் அல்லவா?

 4. கோவிட் தடுப்பூசிக்கான முயற்சி

கிராமம் முழுவதும் தீபம் ஏற்றப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் அவ்வப்போது அந்த கிராமத்துக்குச் சென்று வருவேன். அந்த காலகட்டத்தில் கோவிட் தடுப்பூசி அரசாங்கத்தால் அரசு மருத்துவமனைகளில் இடப்பட்டது. அந்த கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் ஒவ்வொரு வீடாகச் சென்று கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். எளியவனான எனது வார்த்தைக்கு மதிப்பளித்து கிராமத்தின் எல்லா குடும்பங்களும் தீபம் ஏற்றிய நிகழ்வில் பங்கெடுத்ததால் அவர்களுக்கு ஒரு கைமாறு செய்ய வேண்டும் என எண்ணினேன். எனவே எல்லா வீடுகளுக்கும் சென்று கோவிட் தடுப்பூசி இட்டுக் கொள்ள சொன்னேன். எனினும் அப்போது மக்களுக்கு தடுப்பூசி குறித்து தயக்கமும் ஐயமும் இருந்தது. ஆர்வம் கொண்டிருந்த 50 பேரை என்னுடைய காரில் இரண்டு மூன்று நாட்களுக்கு காலை மாலை மதியம் என நகருக்கு அழைத்து வந்து ஊசி போட்டு கிராமத்தில் திரும்பக் கொண்டு சென்று விட்டேன். இதில் எனது வாகனத்தின் பெட்ரோல் செலவு என ரூ. 2000 ( ரூபாய் இரண்டு ஆயிரம்) ஆகியிருக்கலாம். 

5. இரண்டாம் கிராமம் : கோவிட் தடுப்பூசிக்கான முயற்சி

செயல் புரிந்த முதல் கிராமம் ஊரிலிருந்து 45 நிமிட பயண தூரம் என்பதால் ஊரிலிருந்து 15 நிமிட பயண தூரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தை செயல் புரியும் கிராமமாக்கிக் கொண்டேன். அங்கே தொடங்கிய முதல் பணியே கோவிட் தடுப்பூசி பணி தான். முதல் கிராமத்தில் கோவிட் தடுப்பூசி அனுபவம் இருந்தால் இரண்டாம் கிராம மக்களிடம் தடுப்பூசி முக்கியத்துவம் குறித்து எடுத்துச் சொல்லும் முறையில் சற்று மாற்றம் ஏற்படுத்தி அந்த கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் சென்று தகவல் தெரிவித்தேன். நமது பரப்புரையால் தடுப்பூசி முகாம் கிராமத்தில் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட போது மக்கள் ஆர்வமாக தடுப்பூசி இட்டுக் கொண்டனர். அந்த கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கிடையாது ; அரசு மருத்துவமனை கிடையாது ; எனினும் அந்த கிராமமே மாவட்டத்தில் உள்ள 300 கிராமங்களில் தடுப்பூசி இட்டுக் கொண்ட எண்ணிக்கையில் முதலிடம் பெற்று சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியரால் விருது பெற்றது. ஊரின் 95 சதவீத மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டனர். ( மீதி 5 சதவீத மக்கள் வெளியூர் சென்றிருந்தவர்கள் : வெளியூரில் குடியிருந்தவர்கள் )

இந்த பெருநிகழ்வுக்கும் செலவு என எனக்கு ஏதும் ஆகவில்லை. குறைந்தபட்சமான பெட்ரோல் செலவு தான். 

6. இரண்டாம் கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் மலர்ச்செடிகள் 

நமது கோரிக்கையை ஏற்று இரண்டாம் கிராமத்தின் பொதுமக்கள் ஏற்று கோவிட் தடுப்பூசி இட்டுக் கொண்டதால் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக கிராமத்தின் எல்லா குடும்பங்களுக்கும் அரளி மலர்ச்செடிகளை வழங்கினேன். அரளி ஆடு மாடு மேயாத வறட்சியைத் தாங்கி வளரும் செடி என்பதால் அதனை வழங்கினேன். மேலும் அரளி மலர்கள் சிவ பூசனைக்கும் துர்க்கை பூசனைக்கும் உகந்தவை என்பதும் அதனை வழங்க காரணம். சிலர் வீட்டு வாசலில் வைத்தார்கள். சிலர் வீட்டு தோட்டத்தில் வைத்தார்கள். 

ஐந்நூறு அரளிச் செடிகளை எனது சொந்த செலவில் வழங்கினேன். ஒரு செடியின் விலை ரூ. 10 

7. குடியரசு தினத்துக்கு முதல் நாள் எல்லா வீடுகளுக்கும் நந்தியாவட்டை மரக்கன்றுகள் வழங்குதல்  

குடியரசு தினத்துக்கு முதல் நாள் அந்த ஊரின் எல்லா குடும்பங்களுக்கும் நந்தியாவட்டை மரக்கன்றை வழங்கி வீட்டின் முன் நடச் சொன்னேன். நண்பர்கள் மரக்கன்றுகளை வாங்கி அளித்தனர். மக்கள் அனைவரும் நட்டனர். எனது செலவு ஏதுமில்லை. இப்போது அந்த கிராமத்தில் நந்தியாவட்டை மலர்கள் பூத்துக் குளுங்குகின்றன . ஆலய பூசனைக்கு காலையும் மாலையும் மலர்கள் கொய்யப்பட்டு இறைமையிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. 

8. குடியரசு தினத்தன்று மாலை மக்கள் தீபம் ஏற்றுதல்

குடியரசு தினத்தன்று மாலை வீட்டு வாசலில் 7 தீபம் ஏற்றுமாறு கேட்டுக் கொண்டோம். மக்கள் அவ்விதமே செய்தனர். இந்த நிகழ்வும் அவரவர் வீடுகளில் கிராம மக்களால் செய்யப்பட்டதால் செலவு என ஏதுமில்லை

9. ஐ.டி நிறுவன ஊழியரின் வயலை தேக்குத் தோட்டமாக்கியது 

‘’காவிரி போற்றுதும்’’ கிராம விவசாயிகள் பலம் பொருந்திய பொருளியல் சக்தியாக எழ வேண்டும் என விரும்புகிறது. எனவே ‘’காவிரி போற்றுதும்’’ தொடர்புக்கு வந்த ஐ.டி நிறுவன ஊழியர் வயலில் மேட்டுப்பாத்தி அமைத்து 1000 தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்டன. அந்த தோட்டம் ஒரு மாதிரித் தோட்டமாக அமையும் என்பதால் நான்கு மாத கால அளவில் நண்பருடன் உடனிருந்து வயலை தேக்குத் தோட்டமாக மாற்ற உதவினோம். ஊருக்கு மிக அருகில் இருக்கும் அவரது வயலுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று வந்த செலவு மட்டுமே இதன் செலவு.

10. இரண்டாம் கிராமத்தில் இரு விவசாயிகளுக்கு தேக்கு நட உதவியது

இரண்டாம் கிராமத்தின் இரு விவசாயிகளுக்கு 200 தேக்கு கன்றுகள் வழங்கி அது இப்போது 10 அடி உயர மரங்களாக உள்ளது. 

11. இரண்டாம் கிராமத்தின் குடிசைப்பகுதி மக்களுக்கு மழைக்காலத்தில் ஒரு வார காலம் உணவளித்தது 

‘’காவிரி போற்றுதும்’’ கிராம மக்கள் அனைவருக்கும் சொந்தமானது ; கிராம மக்கள் அனைவருக்கும் பொதுவானது. நமக்கு பெருநிலக்கிழாரும் நண்பரே. விவசாயத் தொழிலாளரும் நண்பரே. நாம் கிராம மக்கள் என்னும் போது ஒட்டு மொத்த கிராமத்தையும் உத்தேசிக்கிறோம் . அவ்வாறான புரிதல் இருப்பதால் தான் - இருப்பதால் மட்டுமே நாம் முழுமையாக ஏற்கப்படுகிறோம். மழைக்காலத்தில் கிராமத்தின் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழை ஈரத்தின் அசௌகர்யங்களுக்கு ஆளாவார்கள் என்பதால் அவர்கள் சிரமத்தினைக் குறைக்கும் சிறு முயற்சியாக ஏழு நாட்கள் அந்த ஊரின் குடிசைப்பகுதி முழுமைக்கும் ஒரு வார காலம் ஒரு வேளை  உணவளித்தோம். அதன் மூலம் இரண்டாம் கிராமத்தின் குடிசைப்பகுதி மக்கள் அனைவருடனும் நேரடித் தொடர்பு ஏற்பட்டது. எனக்கு சொந்தமான ஃபிளாட் ஒன்றில் மூன்று சமையல்காரர்களைக் கொண்டு உணவு தயாரிக்கப்பட்டது. ஒவ்வொரு நாள் செலவை ஒவ்வொருவர் என ஏழு நாள் செலவை ஏழு நண்பர்கள் ஏற்றுக் கொண்டனர். 

இரு சிறுமிகளின் தாயாரான ஒரு பெண்மணி இவ்வாறு உணவளித்த ஒரு நாளில் என்னிடம் குடிசைப்பகுதிகளின் குழந்தைகளின் கல்விக்கு உதவுங்கள் எனக் கூறினார். நான் அதனைக் கோரிக்கையாக அல்ல மாறாக கட்டளையாகவே கொள்கிறேன். 

12. இரண்டாம் கிராமத்துக்கு மறுமுறை ஒரு வார மளிகைப் பொருள் வழங்கியது

முதல் வருடம் ஒரு வார காலம் உணவளித்தோம். இரண்டாம் வருடம் நிதிப்பற்றாக்குறை. இருப்பினும் துவங்கிய செயலை இரண்டாம் படிநிலையில் நிறுத்துக் கூடாது என்பதால் உணவாக சமைத்து அளிக்கவில்லை என்றாலும் ஒரு வார காலத்துக்கான மளிகைப் பொருட்களாக வழக்கினோம்.  

13. மாவட்டத்தில் உள்ள 400 சலூன்களுக்குச் சென்று ஒவ்வொரு சலூனுக்கும் 7 புத்தகங்கள் கொண்ட தொகுப்பை அளித்தது. 

மாவட்டத்தில் உள்ள எல்லா சலூன்களுக்கும் சென்று ஒவ்வொரு சலூனுக்கும் ஏழு புத்தகங்கள் கொண்ட தொகுப்பை அளித்தோம். 

14. கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் ஆடிப்பட்டத்தின் போது நாட்டுக் காய்கறி விதைகளைக் கொடுத்தது

50 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, கிராமத்தில் வசிக்கும் மக்கள் கிராமத்தை விட்டு வெளியே சென்று பணிகள் புரிவதற்கோ வேறு லௌகிக விஷயங்களை ஆற்றுவதற்கோ வாய்ப்புகள் சற்று குறைவு. இத்தனை போக்குவரத்து வசதிகள் இல்லை. விவசாயப் பணியாளர்கள் உபரியாக இருப்பர். எனவே ஆடிப்பட்டத்தில் வீட்டுத் தோட்டத்தில் காய்கறி விதைப்பது எல்லா வீட்டிலும் நடக்கும். இப்போது போக்குவரத்து வசதிகள் மிகுந்திருக்கும் நிலையில் ஆடிப்பட்டத்தில் விவசாயிகள் வீட்டுத் தோட்டத்தில் காய்கறி பயிரிடுவது மிகுந்திருக்க வேண்டும். எனினும் மிக மிகக் குறைந்து விட்டது. ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக பூசணி, பீர்க்கன், பரங்கி, சுரை ஆகிய நாட்டுக் காய்கறி விதைகள் வழங்கப்பட்ட போது அந்த கிராமத்தினர் அதனை தங்கள் தொட்டங்களில் விதைத்து 3 மாதம் கழித்து பொங்கல் சமயத்தில் அறுவடை செய்த காய்கறிகளை அருகில் உள்ள நகரில் விற்பனை செய்தனர். தங்கள் உணவாகவும் பயன்படுத்தினர்.

15. நண்பர் தந்தையின் நினைவாக எல்லா வீடுகளுக்கும் நெல்லி மரக்கன்றுகள் வழங்கியது

நெல்லி மரத்தில் திருமகள் வசிக்கிறாள் என்பது நம் நாட்டின் நம்பிக்கை. எனது நண்பர் தனது தந்தையின் நினைவாக கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் நெல்லி மரக்கன்றுகளை வழங்க விரும்பினார். அவரது விருப்பம் நிறைவேற்றப்பட்டது

16. இன்னொரு நண்பர் தந்தையின் நினைவாக ஒரு விவசாயிக்கு 100 எலுமிச்சைக் கன்றுகள் அளிக்கப்பட்டன  

இந்த பணிகள் அனைத்தும் கடந்த மூன்று ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கின்றன என்பது பட்டியலிடப்படும் போது தெரிய வருகிறது. ஏதேனும் சில பணிகள் பட்டியலில் விடுபட்டிருக்கக்கூடும். 

செயல் திட்டமிடல்கள் எவ்விதம் ஒன்றன் பின் ஒன்றனாக நிகழ்ந்தது என்பதையும் அவற்றுக்குள் உள்ள தொடர்புகளையும் நம்மால் உய்த்தறிய முடியும். 

அடுத்து நாம் முன்னகர இருக்கும் பாதையை தீர்மானித்துக் கொள்ள இந்த பட்டியல் உதவக்கூடும்.  

சித்திரம் - கவிதை - கடிதம்

லலிதம்
-------------

மென்குளிர் சிறு தடாகம்
மலர்ந்திருக்கிறது முழுமை கொண்ட பத்மம்
தடாகத்தின் கரையில் வான் நோக்கி விரிந்திருக்கிறான்
மரங்களின் கொற்றவன்
மரத்தின் உகிரில்
மலரமர்வில் அமர்ந்து
மோனித்திருக்கிறான்
புத்தன்
மென்மை
மெல்லிய புன்னகை
அவன் மௌனமும் மென்மை 
அன்றொரு நாள்
அவனுக்கு அன்னமிட்டவள்
இன்று 
காட்டு மலர்கள் சேகரித்து
புத்தனுக்கு சூடுகிறாள்
மகவை அலங்கரிக்கும் அன்னையென

***

அன்புள்ள கவிஞர் பிரபு அவர்களுக்கு,

வணக்கம்!  

மிகவும் அருமையான, மனதை தொடும் வரிகள் ஒவ்வொன்றும். முதலில் அதை பார்த்த பொழுது சிறு குழந்தை போல் ஒரு சிறிய வெட்கம் கொண்ட புன்னகை தான் என்னுள் தோன்றியது. ஒவ்வொரு வரிகளும் ஓவியத்திற்கும், புத்தருக்கும் மிக சிறந்த அணிகள் என்றே அமைந்தன. என்னுடைய அன்பு நன்றிகள்!

அன்புடன்,
ல ரா

***

 

Saturday, 2 December 2023

இராமாயண நவாஹமும் தென்னம்பிள்ளைகளும்

நமது மரபில் சப்தாகம் நவாஹம் என இரு விஷயங்கள் உள்ளன. அதாவது, சப்தாகம் என்பது ஏழு நாட்களில் பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் பால லீலைகளைக் குறிக்கும் பாகவதத்தை  பாராயணம் செய்வது ; நவாஹம் என்பது பகவான் ஸ்ரீராமனின் வாழ்க்கைக் கதையான ஸ்ரீராமாயணத்தை ஒன்பது நாட்களில் பாராயணம் செய்வது.  நமது நாட்டினருக்கு ஸ்ரீராமனும் ஸ்ரீகிருஷ்ணனும் எப்போதும் குழந்தைகள். எனவே தங்கள் குழந்தைகளின் கதையாகவே ராமாயணத்தையும் கிருஷ்ண சரிதத்தையும் காண்கின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளாக நமது தேசம் தன் தலைமுறைகளுக்கு அந்த கதையைக் கூறிக் கொண்டேயிருக்கிறது. 

கேரளாவில் ஒரு வழக்கம் உண்டு. ஸ்ரீராமாயணப் பாராயணத்தைத் தொடங்கும் போது தென்னம்பிள்ளைகளை அங்கே வைத்திருப்பார்கள். தினமும் கொஞ்சம் நீர் வார்ப்பார்கள். ஸ்ரீராமாயணப் பாராயணம் பட்டாபிஷேக வைபவத்துடன் நிறைவு பெறும் போது தென்னம்பிள்ளைகளை அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு வினியோகிப்பார்கள். தென்னை உயிர்த்தன்மையும் உணர்வுத்தன்மையும் மிக்க தாவரம் என்பதால் அது ராமன் கதையை ராமன் புகழை தன் நினைவில் வைத்திருந்து நடப்படும் வீட்டுக்கு நன்மங்களங்களை அளிக்கும் என்பது மலையாளிகளின் நம்பிக்கை. 

’’காவிரி போற்றுதும்’’ தற்போது செயல் புரியும் கிராமம் ஊருக்கு அருகில் உள்ள கிராமமாகும். ‘’காவிரி போற்றுதும்’’ தனது முதற் பணியைத் துவக்கிய கிராமம் ஊரிலிருந்து 45 நிமிட பயண தூரத்தில் உள்ள கிராமம் ஆகும். எனது மோட்டார்சைக்கிள் பயணத்தில் பல இந்திய கிராமங்களை பல இந்திய கிராம மக்களை பல இந்திய கிராம மக்களின் முகங்களை நேரடியாகக் கண்டவன் என்ற அடிப்படையிலான புரிதலில் கிராம மக்கள் மீது கிராம மக்கள் நிலை கொண்டிருக்கும் பண்பாட்டு அடிப்படையின் மீது நம்பிக்கை கொண்டு கிராம மக்களுக்கான பணியைத் துவக்கினேன். ஒரு கிராமத்தில் இருக்கும் எல்லா வீடுகளுக்கும் அவர்களுக்குத் தேவையான மரக்கன்றுகளை முழுமையாக வழங்குவது என்னும் எண்ணத்துடன் அந்த கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டையும் தொடர்பு கொண்டு கணக்கெடுப்பைத் துவக்கினேன். அந்த கிராமத்திற்குச் செல்வது அதுவே முதல் முறை. அந்த கிராமத்தின் பெயரை பேருந்து பெயர்ப்பலகையில் கண்டது அன்றி அந்த ஊர் பற்றி வேறு ஏதும் அறியேன். இருப்பினும் கிராம மக்கள் நல்லெண்ணத்தையும் நன்முயற்சிகளையும் மிகச் சரியாகப் புரிந்து கொள்வார்கள் என்னும் நம்பிக்கையுடன் அவர்களை அணுகினேன். என்னை வரவேற்றார்கள். என் முயற்சியைப் பாராட்டினார்கள். என்னை அவர்களில் ஒருவனாக ஏற்றார்கள். ஐந்நூறு வீடுகள் கொண்ட அந்த கிராமத்தில் ஒரு நாளைக்கு 50 வீடுகளில் மட்டுமே கணக்கெடுக்க முடியும். ஒரு வீட்டுக்கு 10 நிமிடம் ஒதுக்கினால் கூட 50 வீடுகளை நிறைவு செய்ய 8 மணி நேரம் ஆகி விடும். பதினைந்து நாட்களில் எல்லா வீடுகளையும் அணுகினேன். அதில் ஒரு ஆச்சர்யம் இருந்தது. இரண்டு நாட்களில் 100 வீடுகளைக் கணக்கெடுத்த போது இவ்வாறு ஒரு முயற்சி நடப்பதும் இவ்விதம் ஒரு கணக்கெடுப்பு நிகழ்வதும் கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் வாய்மொழிப் பரவலாக பரவி இருந்தது. அது என் பணியை மேலும் லகுவாக்கியது. இன்னும் கணக்கெடுப்புக்குச் செல்லாத ஒரு வீட்டின் விவசாயி தன் கொல்லையை மரம் நடுவதற்காக சீர் படுத்திக் கொண்டிருப்பதைக் கண்ட போது என் உளம் நெகிழ்ந்தது. கணக்கெடுத்த போது என்னிடம் எண்ணியதை எப்படியாவது செய்து விடலாம் என்ற எண்ணம் இருந்ததே தவிர என் கையில் ஒரு மரக்கன்று கூட இல்லை. அந்த 500 வீடுகளில் ஒரு வீட்டில் கூட நீங்கள் மரக்கன்று வழங்குவீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்ற கேள்வியை எழுப்பவில்லை. அது அவர்களின் பெருந்தன்மை. நம் பண்பாடு அவர்களுக்கு அளித்த தன்மை அது. 

நெல்லி, கொய்யா, பலா, தேக்கு , மகாகனி என 20,000 மரக்கன்றுகள் அக்கிராம மக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த எண்ணிக்கை மிகப் பெரும் சாதனை என்பதை விவசாயத்துறை , தோட்டக்கலைத்துறையை சார்ந்தவர்கள் அறிவார்கள்.  காவிரி வடிநில கிராமத்தில் இந்த எண்ணிக்கை எட்டப்பட்டிருப்பது குறித்த வியப்பை வேளாண்மைத் துறையில் ஆய்வு விஞ்ஞானிகளாக இருக்கும் எனது நண்பர்கள் பகிர்ந்து கொண்டார்கள். பூனாவில் உள்ள வேளாண் விஞ்ஞானியான எனது நண்பர் ‘’ நீ கல்லில் நார் உரிக்கும் ஆள்’’ என்றார். 

கிராம மக்கள் கோரியிருந்த தென்னை , மா மரக்கன்றுகளைத் தவிர மற்ற மரக்கன்றுகள் அனைத்தும் அவர்களுக்கு ஏற்பாடு செய்து வழங்கப்பட்டன. கிராம மக்கள் அனைவரும் தங்கள் கொல்லைகளிலும் வயல்களிலும் மரக்கன்றுகளை நட்டார்கள். அத்தனை மரக்கன்றுகளையும் 500 குடும்பங்களும் நட்டு பராமரித்து வளர்த்ததன் மூலம் அந்த கிராம மக்கள் தங்களுக்கும் சமூகத்துக்கும் நாட்டுக்கும் உலகத்துக்கும் உயிர் வாயுவை உற்பத்தி செய்ய உதவி பேருதவி புரிந்திருக்கிறார்கள். அவர்கள் ஆற்றியிருக்கும் பொதுப்பணியே மிகப் பெரியது. அதனுடன் ஒப்பிட்டால் அவர்களுக்கு மரக்கன்று வழங்கியது என்னும் பொதுப்பணி மிகச் சிறியதே. பொதுப்பணியாளனாக நான் இதனை நன்றாக உணர்ந்திருக்கிறேன். 

என் பணி அங்கே பெரும்பகுதி நிறைவுற்ற போது நான் அந்த கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் ஒரு கோரிக்கை வைத்தேன். கிராமத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டிருந்தாலும் கிராமம் முழுவதும் மரக்கன்றுகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன. அந்த இணைப்பு நம் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் குறிக்கிறது. எனவே நம் ஒற்றுமையையும் கூட்டுச் செயல்பாட்டையும் குறிக்கும் விதத்தில் ஒரு குறிப்பிட்ட தினத்தில் மாலை 6 மணிக்கு வீட்டு வாசலில் 7 தீபங்கள் ஏற்றுமாறு கேட்டுக் கொண்டேன். இந்த எளிய பொதுப்பணியாளனின் கோரிக்கையை ஏற்று அந்த கிராமத்தின் அத்தனை குடும்பங்களும் குறிப்பிட்ட நேரத்தில் அவரவர் வீட்டு வாசலில் ஏழு தீபங்கள் ஏற்றி அந்த ஊரை ஒளி வெள்ளத்தால் நிறையச் செய்தனர். 

ஊரிலிருந்து 45 நிமிட பயண தூரத்தில் இருந்த கிராமத்திலிருந்து ஊரிலிருந்து 15 நிமிட பயண தூரத்தில் இருக்கும் கிராமத்துக்கு ‘’காவிரி போற்றுதும்’’ தனது செயற்களத்தை மாற்றிக் கொண்டது. அங்கும் பல பல பணிகளை ஆற்றினோம். முதல் கிராமத்தில் பெற்ற அனுபவம் இரண்டாம் கிராமத்தில் பல பணிகளை சுலபமாக்கியது. நாம் தொடர்ந்து முன்னேறிச் செல்கிறோம். 

முதல் கிராமத்தின் மக்களை நகரில் அவ்வப்போது காண்பேன். அங்கே இருக்கும் மக்களைக் குறித்து விசாரிப்பேன். எனது நண்பரின் நிறுவனம் ஒன்றில் அக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பணி புரிகிறார். இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை எனது நண்பரைக் காண அங்கு செல்லும் போதெல்லாம் அந்த இளைஞரிடம் அக்கிராமம் குறித்து கேட்டறிவேன். எனினும் நேரடியாகச் சென்று பல மாதங்கள் ஆகி விட்டன. 

இன்று காலை அங்கே சென்றிருந்தேன். பார்த்த அனைவரும் ஆர்வத்துடன் என்னை வரவேற்றனர். வீடுகளுக்கு வருமாறு அழைத்தனர். ‘’சார் ! நீங்க கொடுத்த மரமெல்லாம் கொல்லையில 15 அடி வளந்திருக்கு சார். வந்து பாருங்க சார்’’ என்றனர். எல்லாரும் பார்வையிட அழைக்கின்றனர். அந்த கிராமத்துக்கு கணக்கெடுக்க சென்ற போது ஒரு வீட்டுக்கு 10 நிமிடம் என ஒதுக்கிய போது எல்லா வீடுகளிலும் கணக்கெடுத்து முடிக்க 15 நாட்கள் ஆனது. இப்போது ஒவ்வொரு வீட்டு கொல்லையிலும் வளர்ந்திருக்கும் மரங்களைக் காண வேண்டுமானால் ஒரு வீட்டுக்கு 20 நிமிடம் ஒதுக்க வேண்டும் ; அவ்வாறெனில் எல்லா வீடுகளிலும் பார்வையிட்டு முடிக்க 30 நாட்கள் ஆகும். 

அக்கிராமத்தில் இருக்கும் மரக்கன்றுகள் பணிக்கு உதவும் தன்னார்வலர்களிடம் கிராமத்தில் ஒரு இராமாயண நவாஹம் நடத்தி ஒன்பதாம் நாள் பட்டாபிஷேகத்தன்று 2000 தென்னம்பிள்ளைகளை கிராம மக்களுக்கு வினியோகிக்கத் திட்டமிடுவதைக் கூறினேன்.  மிகவும் மகிழ்ந்தார்கள். ஒரு தன்னார்வலரின் வீட்டில் முன்னர் ஒரு வன்னி மரக்கன்றை அளித்திருந்தேன். அவர் தன் குலதெய்வம் ஆலயத்தில் நட்டிருக்கிறார். இப்போது அது பெருவிருட்சமாகி உள்ளது என்பதைக் கூறினார் ; ஊரில் இருக்கும் தனது நண்பர்கள் 50 பேர் வன்னி மரக்கன்றுகளை தங்கள் வீட்டில் வளர்க்க ஆர்வமாக இருப்பதாகக் கூறினார். நவாஹத்தின் நிறைவில் வழங்குவதாகக் கூறினேன். இன்று காலை கிராம மக்களிடம் நவாஹம் நிறைவடையும் வரை இங்கு தான் இருப்பேன் எனக் கூறி பிரியாவிடை பெற்று ஊர் திரும்பினேன். 

ஊருக்கு வந்ததும் எப்போதும் மரக்கன்றுகளை வாங்கும்  பண்ணைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 2000 தென்னம்பிள்ளைகள் கையிருப்பு உள்ளதா என வினவினேன். சிறிதும் பெரிதுமாக கேட்கும் எண்ணிக்கை இருக்கும் என கையிருப்பை சோதித்து பதிலளித்தனர். ஒரு தென்னம்பிள்ளையின் விலை ரூ.60. அதிக எண்ணிக்கையில் எடுப்பதால் ரூ. 55க்கு அளிக்க இயலும் என்று கூறினர். அந்த ஊரில் பொது இடங்களில் ஆடு மாடு மேயாத நந்தியாவட்டை , அரளி ஆகிய மரக்கன்றுகளை நட்டு ஆறு மாதம் தண்ணீர் ஊற்ற ஒரு பணியாளரை ஏற்பாடு செய்தால் தமிழகத்தில் மிக அதிகமான மரக்கன்றுகள் பொது இடத்தில் இருக்கும் கிராமமாக அந்த கிராமம் மாறக் கூடும். அவ்வாறு நிகழ்ந்தால் மற்ற கிராமங்களுக்கு அது முன்மாதிரியாக அமையக் கூடும். கடமை மட்டுமே நாம் ஆற்ற வேண்டியது என்கிறது பகவத்கீதை. 

‘’காவிரி போற்றுதும்’’ ஒரு நுண் அமைப்பு. அதன் ஆதரவாளர்களான நண்பர்கள் நடுத்தர பொருளியல் பின்னணியைக் கொண்டவர்கள். எனினும் நம் மீது கொண்ட பிரியத்தின் காரணமாகவும் நம் செயல்கள் மேல் கொண்ட நம்பிக்கை காரணமாகவும் நமக்குக் கொடையளிக்கிறார்கள். அவர்களுக்கு அதிக சிரமம் கொடுக்கக்கூடாது என ‘’காவிரி போற்றுதும்’’ அமைப்பாளராக நான் எண்ணுவேன். நமது திட்டமிடல்கள் அனைத்தும் மிகச் சிறு பொருளியல் தேவை கொண்டதாக அமைத்துக் கொள்வதற்கான காரணங்களில் அதுவும் ஒன்று. இருப்பினும் நண்பர்கள் ஒவ்வொரு மின்னஞ்சலிலும் ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளை அதிகமாக நிகழ்த்துமாறும் தயக்கமின்றி தேவைகளைக் கூறுமாறும் கேட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் அளிக்கும் ஊக்கத்துக்கும் அவர்கள் அளிக்கும் நம்பிக்கைக்கும் அமைப்பாளராக நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். 

எனது நண்பன் ஒருவனிடம் விஷயத்தைக் கூறிக் கொண்டிருந்தேன். ‘’அண்ணன் ! ஒரு ரூபாய் பட்ஜெட் . செஞ்சுடலாம் அண்ணன் ! நீங்க வேலையை ஸ்டார்ட் பண்ணுங்க’’ என்றான். ‘’காவிரி போற்றுதும்’’ ஆலோசனையில் தேக்கு பயிரிட்டிருக்கும் தஞ்சை விவசாயி ‘’ அண்ணா ! நான் உங்க கிட்ட பல தடவை சொல்லிட்டன். உங்க முயற்சிக்கு சப்போர்ட் பண்ண எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்கன்னு. இந்த தடவை எனக்கு வாய்ப்பு தாங்க’’ என்றார். ஒரு வணிகர் ‘’ஒன் ஃபோர்த் எக்ஸ்பெண்டிச்சர் நான் ஏத்துக்கறேன்’’ என்றார். செட்டிநாட்டைச் சேர்ந்த ஒரு நண்பர் ‘’எதுன்னாலும் தயங்காம சொல்லுங்க ‘’ என்றார். 

நவாஹம் நிகழும் ஒன்பது நாட்களும் கிராமத்தில் இருக்க நேரிடும். முதல் எட்டு நாட்களும் கிராமத்தின் ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் கொல்லைகளில் தென்னம்பிள்ளைகள் நட குழி எடுத்து அதில் மக்கிய சாண எரு இட்டு வைக்குமாறு ஒருங்கிணைத்துக் கொண்டால் ஒன்பதாம் நாள் பட்டாபிஷேக வைபவம் நிறைவு பெற்றதும் அனைவருக்கும் தென்னம்பிள்ளைகளை அளித்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து தென்னம்பிள்ளைகளையும் அவரவர் வீடுகளில் நடுமாறு செய்யலாம். அச்செயல் மூலம் ஒட்டுமொத்த கிராமமும் உணர்வுபூர்வமாக இணையும். அச்செயல் மூலம் ஸ்ரீராமாயணத்தின் இருப்பு எல்லா கிராம வீடுகளையும் சென்றடையும்.  

Friday, 1 December 2023

தஞ்சாவூர் (நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளர் அவரது நண்பர் ஒருவரைச் சந்தித்தார். நண்பருக்கும் அமைப்பாளருக்கும் பல மாதங்களாகப் பழக்கம். எனினும் நேரில் சந்தித்தது இல்லை. முதல் முறையாகச் சந்தித்தார்கள். 

இருவரும் 15 நிமிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். இருப்பினும் அந்த 15 நிமிட உரையாடலில் புதிதாக அறிமுகமாகி முதல் முறையாக உரையாடிக் கொள்ளும் இரு நபர்களின்  மனநிலையே இருந்தது. சட்டென அமைப்பாளர் நண்பரிடம் கேட்டார் : ‘’அண்ணன் ! உங்க சொந்த ஊர் என்ன அண்ணன்?’’ 

நண்பர் சொன்னார்: ‘’மன்னார்குடி’’

அமைப்பாளருக்கு முகமெல்லாம் புன்னகை. உற்சாகத்தால் உடல் ததும்பத் தொடங்கியது.

 ‘’என்னது மன்னார்குடியா?’’

’’ஆமாம்’’

‘’அப்ப நீங்க தஞ்சாவூர்காரரா?’’

நண்பர் பெருமிதத்துடன் ‘’ஆமாம் ஆமாம்’’ என ஆமோதித்தார். 

அமைப்பாளர் அமர்ந்திருந்த நாற்காலியின் நுனிக்கு வந்தார். எதிரில் இருந்த மேஜை மீது இரு கைகளையும் வைத்தார். இருக்கையில் மேலும் மேலும் லகுவானார். அமைப்பாளர் நண்பர் இருவரின் சிரிப்பொலியால் அந்த அறையே நிரம்பியது. 

நண்பர் என்ன நினைத்து எதைப் புரிந்து கொண்டு சிரித்தார் என்பதும் அமைப்பாளர் என்ன நினைத்து எதைப் புரிந்து கொண்டு சிரித்தார் என்பதும் அவர்களுக்கும் கடவுளுக்கும்தான் வெளிச்சம். 

நண்பர் அமைப்பாளரிடம் சமீபத்தில் ‘’துவாரகா’’ சென்று வந்ததைக் கூறினார். நண்பர் விஷ்ணு பக்தர் என்பதை அமைப்பாளர் புரிந்து கொண்டார். 

‘’அண்ணன் ! நாங்கூர் 14 திவ்ய தேசத்துக்கு வாங்க அண்ணன். ரெண்டு நாள்ல 14 பெருமாளை சேவிக்கலாம். இதுக்கு முன்னாடி நாங்கூர் சேவிச்சிருக்கீங்களா?’’ 

நண்பர் ‘’இல்ல . சேவிச்சதில்லையே’’ என்றார்.

‘’என்ன அண்ணன்! இப்படி சொல்லீட்டீங்க. திருமங்கை ஆழ்வார் பிறந்த ஊர் திருவாலி திருநகரி நாங்கூர் திவ்ய தேசத்துல இருக்கு. தை மாசம் நடக்கற நாங்கூர் கருடசேவை ரொம்ப விசேஷம்’’ 

நண்பர் ’’கூடிய சீக்கிரம் சேவிச்சுடலாம்’’ என்றார். 

பின்குறிப்பு : நண்பரின் சொந்த ஊர் மன்னார்குடி இப்போது திருவாரூர் மாவட்டத்தில் இருக்கிறது. அமைப்பாளரின் சொந்த ஊர் மயிலாடுதுறையும் தனி மாவட்டமாகி விட்டது. இருந்தாலும் அவர்கள் தங்களை தஞ்சாவூர் என்றே சொல்லிக் கொள்வதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. எல்லா பழைய தஞ்சாவூர்காரர்களைப் போல!