Monday, 26 January 2026

மரக்கன்றுகள் உருவாக்கம்

’’காவிரி போற்றுதும்’’ சார்பில் மரக்கன்றுகள் வழங்க ஏதுவாக மரக்கன்றுகள் உருவாக்க இடம் பார்த்து வருகிறேன். திருவீழிமிழலை அருகில் பொருத்தமான இடம் ஒன்று அமைய வாய்ப்பு உள்ளது. அந்த ஊரில் ஒருவர் அறிமுகம் ஆனார். ஜனவரி 4 அன்று அவரை முதன்முதலாக சந்தித்தேன். பின் அலைபேசியில் சிலமுறை பேசினேன். ஆமதாவாத் சென்ற போது அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். ஊர் திரும்பியதும் எனது வலைப்பூவின் முகவரியை அவருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பினேன். அவர் ‘’வானெழும் பட்டங்களின் நிலம்’’ வாசித்து விட்டு எனக்கு ஃபோன் செய்தார். இன்று அவரை சந்தித்தேன். ஊரில் மேலும் இருவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கு ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் பிடித்திருந்தது. பொருத்தமான இடம் அமைந்தால் அந்த பிரதேசத்துக்கே பலன் இருக்கும் என்பதை சொன்னேன். 

குஜராத் சென்றிருந்த போது அங்கே 5 அடியிலிருந்து 6 அடி உயரம் மட்டுமே வளரக்கூடிய செடி முருங்கைகள் பயிராவதைக் கண்டேன். வல்லம்படுகை, ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்கள் செடி முருங்கைக்கு பேர் போனவை. 

நம் சமூகத்தில் மக்களுக்கு இரத்த சோகை அதிகம் உள்ளது. முருங்கை இரும்புச்சத்து மிக்கது. முருங்கை அதிகம் பயிராக வேண்டும். எந்த காய்கறியும் உணவாக மாறுவதால் நற்பயனையே விளைவிக்கிறது. கிராம மக்களுக்கு செடி முருங்கை கன்றுகளும் அதிக அளவில் வழங்க வேண்டும் என முடிவு செய்து கொண்டேன்.  

Sunday, 25 January 2026

நாட்டின் வரைபடம் - முப்பரிமாணத்தில்

 போபாலில் உள்ள மத்திய அரசு நிறுவனம் நாட்டின் வரைபடத்தை முப்பரிமாணத்தில் உருவாக்கி உள்ளனர். அது குறித்த காணொளியின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. 


https://www.youtube.com/watch?v=BTkq6eBtLeI

Saturday, 24 January 2026

நண்பனுக்கு அழைப்பு (நகைச்சுவைக் கட்டுரை)

ஆமதாவாத் ( அந்நகரில் அந்நகரை அவ்விதமே அழைக்கிறார்கள் ; அவ்விதமே பெயர் எழுதி வைத்திருக்கிறார்கள்) செல்லும் முதல் தினம் நண்பனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். ஒரு வாரம் ஊரில் இல்லை. செய்தி அது மட்டுமே. ஊர் திரும்பியதும் வீடடைந்தேன் என ஒற்றை வார்த்தையில் இன்னொரு குறுஞ்செய்தி அனுப்பினேன். நண்பன் அறிந்ததில் மகிழ்ச்சி என பதில் அனுப்பினான். ’’வானெழும் பட்டங்களின் நிலம்’’ ஊர் திரும்பியதுமே எழுதி விட்டேன். வழக்கமாக வாசித்து விட்டு நண்பன் பேசுவான். ஒரு வாரமாக எந்த ஃபோன்காலும் இல்லை. பயணம் சென்றது ஒரு வாரம். திரும்பி வந்து ஒரு வாரம். மொத்தம் 15 நாள் ஆகி விட்டது. ஒருவருடன் தினமும் பேசிக் கொண்டிருந்தால் சண்டையும் பூசலும் வர வாய்ப்பு இருக்கிறது. 15 நாளாக பேசவே இல்லை என்றால் பூசல் வர வாய்ப்பில்லை. எனது பயணக்கட்டுரை அவனுக்கு விருப்பமானதாக இல்லையா அல்லது அவன் மனதை நான் ஏதாவது புண்படுத்தி விட்டேனா என சிந்தித்தேன். ஊர் கிளம்பும் முன் சகஜமாகத்தான் இருந்தோம். பேசிக் கொள்ளாத 15 நாளில் புண்படுத்த வாய்ப்பில்லை. இன்று நானே ஃபோன் செய்தேன். லௌகிக விஷயம் ஒன்று தனது நேரத்தை அதிகம் எடுத்துக் கொண்டு விட்டது ; ஒரு மணி நேரத்தில் ஃபோன் செய்கிறேன் என்றான். அந்த இடைவெளியில் பயணக் கட்டுரையை வாசித்து விட்டான். அவனுக்கு பயணக்கட்டுரை பிடித்திருந்தது. 

தான் சிறுவயதில் பட்டம் விட்ட நினைவுகளை கூறிக் கொண்டிருந்தான். 

இந்திய வரலாறு குறித்தும் வட இந்தியாவில் பேராலயங்கள் இல்லாமல் இருப்பதன் வரலாற்றுக் காரணங்கள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். 

‘’தம்பி ! இந்த முறை டிரெயின் ஜர்னி போய்ட்டு வந்தப்புறம் எனக்கு ஒரு விஷயம் தோணுச்சு. நாம நம்ம நாட்டோட வரைபடத்தை 2 டைமன்ஷன்ல தான் பாக்கறோம். ஆனா நம்ம நாட்டோட வரைபடத்தை 3 டைமன்ஷன்ல பாத்தா தான் நிறைய விஷயங்களைப் புரிஞ்சுக்க முடியும். எந்த நிலப்பகுதி உயரமா இருக்கு. எந்த நிலப்பகுதி பள்ளமா இருக்கு. எங்க விளைநிலம் அதிகம். எங்க காடு அதிகம். இதெல்லாம் நாம கண்ணால பாக்கணும். நம்ம ஊர் கடல்மட்டத்துல இருந்து 10 மீட்டர் உயரத்துல இருக்கு. பூனா 1000 மீ உயரத்துல இருக்கு. இது நமக்கு கண்கூடா தெரியணும். இந்திய ரயில்வே நாட்டோட எல்லா ஊர்களையும் இணைச்சுடுச்சு. ஆனா நாம பிளையின் லேண்ட் இல்ல. மேடு பள்ளத்தால ஆன பூமி நம்ம நாடு. நம்ம உலகமே அப்படி ஆனது தான். ஜனநாயகமும் ஜனநாயக அரசியலும் எல்லாருக்கும் சமமானது. ஆனா ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு விதமா இருக்கு. அதுக்கு ஏத்தாப்போல நாம சிந்திக்கணும். கர்நாடகா மேடு. தமிழ்நாடு பள்ளம். அதனால தான் காவேரி கர்நாடகாலயிருந்து தமிழ்நாட்டுக்கு வருது. அவங்க டேம் கட்டனா தான் அங்க இருக்கற விவசாயிக்கு காவேரி தண்ணி கிடைக்கும். காவேரி டெல்டால நீர் சேமிப்பை நாம பலவிதமா செய்ய முடியும். இன்னைக்கு இருக்கற தொழில்நுட்ப வளர்ச்சியை வச்சு நாம நம்ம மண்ணை நிலத்தை சூழலை இன்னும் சிறப்பா செய்ய முடியும். நம்ம மக்களுக்கு வரலாற்று உணர்வு குறைவா இருக்குன்னு நாம நினைப்போம் ; அதை விட குறைவா புவியியல் அறிவு இருக்கு. நம்ம ஊர்ல நம்ம நாட்டோட 3 டைமன்ஷன் வரைபடத்தை 40 அடி அகலம் 60 அடி நீளம் இருக்கற ஒரு இடத்துல 2400 சதுர அடியில உருவாக்கணும்னு நினைக்கறன்’’

‘’அண்ணா ! நீங்க ஒரு நபர்’’

‘’உணமை தான் தம்பி. நீ ஒருத்தன் தான் தினமும் பேசுவ. நீயும் 15 நாளா பேசல’’

‘’15 நாள் இல்லண்ணா. ஒரு வாரம் தான். ஒரு வாரம் உங்க கிட்ட ஃபோன் இல்ல. அதனால அதை கணக்குல இருந்து எடுத்துடுங்க. அப்ப ஒரு வாரம் தானே?’’

நண்பன் சொல்வதும் சரிதான்!

( இந்த வரைபடத்தை இணையத்தில் தேடி எடுத்தேன். இதனை ஓர் புரிதலுக்காக அளித்துள்ளேன். இணையத்தில் தேடிய போது போபாலில் மத்திய அரசு நிறுவனம் 50 அடி அகலம் 50 அடி நீளத்தில் நம் நாட்டின் முப்பரிமாண வரைபடத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்னும் செய்தியைக் கண்டேன். )



Friday, 23 January 2026

உத்தராயண்

 
அடிப்படை அறிவியல் உண்மைகள் மீண்டும் மீண்டும் தினம் தினம் திரும்பத் திரும்ப கூறப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். உலகில் தோராயமாக 12 கோடி குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் பள்ளியில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். அடிப்படை அறிவியல் விஷயங்களை ஒவ்வொரு ஆண்டும் 12 கோடி குழந்தைகளுக்குத் தெரிவித்துக் கொண்டேயிருக்க வேண்டும். 

நமது மரபு 5000 ஆண்டுகளுக்கு முன்பே , புறவய நிரூபண உபகரணங்கள் இல்லாத நிலையிலும் வானியலை துல்லியமாக அறிந்திருக்கிறது. 

மேலே உள்ள வரைபடம் புவி சூரியனைச் சுற்றி வரும் வரைபடம். புவி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது. சூரியனையும் சுற்றி வருகிறது. புவி சுற்றி வருவது நீள்வட்டப்பாதை என்பதால் அதன் ஒரு பாதியைச் சுற்றும் போது புவிக்கும் சூரியனுக்குமான தூரம் ஒரு விதமாகவும் அடுத்த பாதியைச் சுற்றும் போது இன்னொரு விதமாகவும் இருக்கும். இதனால் பகல் பொழுது மற்றும் இரவுப் பொழுதின் நேரத்தில் மாற்றங்கள் இருக்கும். இதுவே உத்தராயண் மற்றும் தக்‌ஷிணாயன். கோடை மற்றும் குளிர் காலங்கள். 


 

Thursday, 22 January 2026

சுவாமி ஆனந்த தீர்த்தர் வாழ்க்கை

 
நூல் : ஆனந்த தீர்த்தர் : தலித் உரிமையின் தனிக்குரல் ஆசிரியர் : ஏ.எம்.அயிரூக்குழியில் மொழியாக்கம் : நிர்மால்யா பக்கம் : 200 விலை ரூ.250 பதிப்பகம் : பரிசல் புத்தக நிலையம், 47, பிளாட் முதல் தளம்,தாமோதர் பிளாட், ஐஸ்வர்யா அபார்ட்மெண்ட், ஓம் பராசக்தி தெரு,வ.உ.சி நகர், பம்மல், சென்னை-600106. 

லட்சியவாதத்தின் வெற்றியை லட்சியவாதிகள் தங்கள் வாழ்க்கையில் தங்கள் கண்களால் காண்கிறார்களா? லட்சியவாதத்தை ஏற்று நடந்த யாரும் தாங்கள் எந்த நோக்கத்தை நோக்கி முன்னேறினார்களோ அந்த நோக்கம் நிறைவேற்றப்பட்டதை முழுமையாகக் கண்டது இல்லை. எனினும் லட்சியவாதம் எப்போதும் இருக்கவே செய்கிறது. இலட்சியவாதிகளும் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

சுவாமி ஆனந்த தீர்த்தர் கேரளத்தில் உள்ள தலச்சேரியில் கௌட சாரவஸ்த பிராமண குடும்பத்தில் ராமசந்திர ராவ், தேவு பாய் தம்பதியருக்கு மகனாகப் பிறக்கிறார். அவரது இயற்பெயர் ஆனந்த ஷெனாய். அவரது தந்தை அரசு அதிகாரியாகப் பணியாற்றியவர். செல்வந்தக் குடும்பம் அவர்களுடைய குடும்பம். சிறு வயதிலிருந்தே சுவாமி ஆனந்த தீர்த்தர் ஆன்மீக அமைப்புகள் பலவற்றுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். ஒரு துறவியாக வாழ வேண்டும் என்னும் தீரா விருப்பம் அவருள் வேரூன்றுகிறது. மானுட சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் எண்ணமும் தீவிரமாக அவருக்கு இருந்திருக்கிறது. புதுச்சேரியில் இருந்த மகான் ஸ்ரீ அரவிந்தருக்கு தனது விருப்பத்தைத் தெரிவித்து கடிதம் எழுதுகிறார். தனது மார்க்கம் வேறுவிதமானது என அவருக்குப் பதிலெழுதிய அரவிந்தர் ‘’சத் சித் ஆனந்தம்’’ என அக்கடிதத்தில் சுவாமி ஆனந்த தீர்த்தருக்கு ஆசியளிக்கிறார். ஸ்ரீநாராயண குருவின் சீடராகவும் மகாத்மா காந்தியின் சீடராகவும் தன் வாழ்வை அமைத்துக் கொள்கிறார் சுவாமி. கேரளாவிலிருந்து குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்துக்கு கால்நடையாக நடந்து சென்று காந்தியை சந்திக்கிறார். தீண்டாமைக்கு எதிராகவும் பட்டியல் சாதி மக்களின் நலனுக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொள்கிறார் சுவாமி ஆனந்த தீர்த்தர். சாதி பேதத்தின் அடிப்படை சுரண்டல் ஆகும். இன்னொரு மனிதனின் உழைப்பைச் சுரண்ட ஒரு மனிதன் எண்ணும் வரை சுரண்டல் இருக்கும். மனித அகத்தின் இருள் முழுவதும் வெளிப்படும் துர்குணங்களில் ஒன்று ‘’மாச்சர்யம்’’ எனப்படும். அகத்தில் சாதியின் இருளைக் கொண்டிருந்த சமூகத்துடன் தன் வாழ்க்கை முழுக்கப் போராடுகிறார் சுவாமி ஆனந்த தீர்த்தர். கணக்கற்ற முறை சாதி வெறியர்களால் உடல்ரீதியாக கடும் தாக்குதலுக்கு ஆளாகிறார். ஒருமுறை அவரை உயிருடன் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்த முயற்சி செய்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புகிறார். ஆலயக்களில் பட்டியல் சாதியினர் நுழைய முழு உரிமையையும் பெறவும் தேனீர்க்கடைகளில் பட்டியல் சாதியினருக்கு சம உரிமை பெற்றுத் தரவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடுகிறார். பட்டியல் சாதி குழந்தைகளுக்காக அவர் ஆரம்பித்த உறைவிடங்களில் தங்கி நிறைய குழந்தைகள் படித்துப் பெரியவர்களாகி சமூகத்தில் முன்னேற்றமான நிலைமைக்குச் சென்றிருக்கின்றனர். சுவாமி ஆனந்த தீர்த்தர் தன் வாழ்வில் எதிர்கொண்ட வன்முறையும் தாக்குதல்களும் வாசிக்கும் எவர் நெஞ்சையும் உருக்கும். லட்சியவாதம் என்பது என்ன என்னும் கேள்விக்கான விடையாக சுவாமி ஆனந்த தீர்த்தரின் வாழ்வைக் கூறலாம்.   

அலைபேசி இல்லாதவர்

நேற்று சிதம்பரத்தில் ஒரு மருத்துவரைச் சந்தித்தேன். அவர் வீட்டின் முன்பகுதியில் மருத்துவம் பார்க்கிறார். தலைவலி, ஜூரம், செரிமானமின்மை ஆகிய எளிய நோய்களுக்கு மட்டுமே மருந்து எழுதித் தருகிறார். ஊசி போடுகிறார். காலை 7 மணியிலிருந்து மருத்துவம் பார்க்கத் தயாராக இருக்கிறார். காலை 7 லிருந்து 11 மணி வரை மக்கள் வருகிறார்கள். பின்னர் மாலை 5லிருந்து 8 மணி வரை வருகிறார்கள். பார்வை நேரம் தினமும் 7 மணி நேரத்துக்குக் குறையாமல் இருப்பதால் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மருத்துவர் மனைக்கு வந்து 10 நிமிடத்தில் ஊசி போட்டுக் கொண்டு அல்லது மருந்து எழுதி வாங்கிக் கொண்டு போய் விடுகிறார்கள். அவரிடம் தரைவழி தொலைபேசி இருக்கிறது. அலைபேசி என்ற சாதனத்தை வாங்கவே இல்லை என்றும் பிறர் பயன்படுத்துவதைக் கண்டிருப்பதாகவும் ஆனால் ஒருமுறை கூட தான் பயன்படுத்தியதில்லை என்றும் சொன்னார்.  

Wednesday, 21 January 2026

வருக வருக

என் நண்பரின் மகள் குறித்து சமீபத்தில் வாணியின் மாணவி என்னும் பதிவை எழுதியிருந்தேன். தினமும் நூல் வாசிப்புக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்குமாறு வலியுறுத்தினேன். துவக்க நிலை வாசிப்புக்கு சில புத்தகங்களைப் பரிந்துரை செய்தேன். இணையம் மூலம் நான் பரிந்துரைத்த புத்தகங்களில் ஒன்றை வாங்கி வாசித்திருக்கிறார். அதனை என்னிடம் தெரிவித்தார். வாசித்த நூல் குறித்து ஒரு கட்டுரை எழுதுமாறு கூறினேன். அந்நூலின் வாசிப்பனுபவத்தை நான்கு பக்கங்களுக்கு எழுதியிருந்தார். நான் பெரிதும் மகிழ்ந்தேன். அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் கல்வி என்பதே ஒரு நூலை வாசிப்பதும் வாசித்த நூலின் வாசிப்பனுபவத்தை எழுதுவதும் தான். ஒரு மாணவன் எந்த பாடத்தைப் படிக்க ஆர்வம் கொண்டுள்ளானோ அந்த பாடத்தையே அங்கே படிக்கிறான். வணிகவியலில் ஆர்வம் கொண்டிருப்பவனை மின் பொறியியலையோ கணிணிப் பொறியியலையோ படிக்க அங்கே சொல்வதில்லை. இங்கே தமிழ்நாட்டில் எல்லா குடும்பங்களும் தங்கள் குழந்தைகளை பொறியியல் படிக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறார்கள். கடந்த 35 ஆண்டுகளில் தமிழகத்தில் கலை, நுண்கலை, அறிவியல் படிப்புகள் ஒளி மங்கிப் போயிருக்கின்றன. இந்நிலை நிச்சயம் சமூகத்தில் பிரதிபலிக்கும். அதனை உணரும் உணர்வுப்புலன்கள் தமிழ்ச் சமூகத்துக்கு இப்போது இல்லை. நண்பரின் மகள் வாசிக்கத் தொடங்கியிருப்பதும் சரளமாக எழுதும் திறன் கொண்டிருப்பதும் நல்ல விஷயங்கள். வாணியின் அருள் அவருக்கு பூரணமாகக் கிட்ட வேண்டும் என்பதே எனது விருப்பம். 

Sunday, 18 January 2026

பயணம் அளித்த சிந்தனைகள்

சென்ற வாரம் பாரத நிலத்தில் 2000 + 2000 என 4000 கி.மீ பயணம் மேற்கொண்டேன். அப்போது எனது நேரடி மனப்பதிவாக சில விஷயங்களை அவதானித்தேன். சில விஷயங்களை சிந்தித்தேன்.  பாரத நிலம் எப்போதுமே ஒரு பயணிக்கு பல விஷயங்களை உணர்த்தும். பாரத நிலமே யாத்ரிகர்களுக்கானது.

1. மகாராஷ்ட்ராவிலும் குஜராத்திலும் வாழை அதிக அளவில் விவசாயம் செய்யப்படுவதைக் கண்டேன். சொட்டு நீர் பாசனம் மூலம் வாழை பயிர் செய்யப்படுகிறது. உத்திரப்பிரதேசத்தில் வாழைப்பழங்களும் காய்கறிகளும் அதிகம் விளையும் என்பதைக் கண்டிருக்கிறேன். இப்போது மகாராஷ்ட்ராவில் குஜராத்தில் அதிகம் விளைவதைக் காண்பது மகிழ்ச்சி தந்தது. நம் மரபு ‘’அன்னம் பஹூ குர்வித:’’ - ‘’உணவைப் பெருக்குங்கள் ; அதனை விரதமாக மேற்கொள்ளுங்கள்’’ என்கிறது. ஓர் இடத்தில் ஒரு ஏக்கர் அளவில் வாழை பயிர் செய்யப்படும் என்றாலும் அது நூற்றுக்கணக்கானோரின் பசியைத் தீர்க்கவிருக்கிறது என்று பொருள். ஓர் இடத்தில் ஒரு வாழைமரம் இருக்குமென்றாலும் அது ஏதோ ஒரு குடும்பத்துக்கு ஒருவேளையின் பசிக்கு உணவாகப் போகிறது என்று பொருள். விதவிதமான பயிர்கள் விளைவிக்கப்படுவது என்பது சிறந்த விஷயம். 

2. பாரத நிலத்தில் பல மொழிகள் கற்க வாய்ப்பு இருக்க வேண்டும். மாநில மொழியும் ஆங்கிலமும் என்பது அரசாங்க உத்யோகத்துக்கும் தனியார் உத்யோகத்துக்கும் பயன்படும். அரசாங்க உத்யோகம் என்பது நாட்டின் மக்கள்தொகையில் 1 சதவீதம் மட்டுமே. தனியார் உத்யோகம் என்பது 4 சதவீதம் இருக்கலாம். இங்கே தொழிலாளர்களும் விவசாயிகளுமே அதிகம். அவர்கள் வாய்ப்பு இருக்கக் கூடிய பல மாநிலங்களுக்கு உத்யோகத்துக்கு செல்ல வேண்டி வரலாம். அப்போது அவர்கள் பல மாநில மொழிகளை குறைந்தபட்சமாக அறிந்திருப்பது உகந்ததே. ஒரு மாநிலத்திலிருந்து ஆயிரம் கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் மாநிலங்களின் மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்னும் நிலை இருக்க வேண்டும். 

உதாரணமாக கர்நாடக மாநிலத்தில் மலையாளம், தமிழ்,தெலுங்கு, மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகள் கற்பிக்கப்பட வேண்டும். தேவையெனில் அரபியும் உருதுவும் கூட கற்பிக்கலாம். மொழிகள் மொழிகளே. அவற்றுக்கு மதம் கிடையாது ; அரசியல் கிடையாது. தமிழகத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, சிங்களம், அரபி, உருது ஆகியவற்றைக் கற்பிக்கலாம். 

கன்னடமும் தெலுங்கும் ஓரளவு ஒன்றியிருக்கும் மொழிகள். மராத்தியும் குஜராத்தியும் அவ்வாறே. ஒரிய மொழியும் பெங்காலியும் கிட்டத்தட்ட ஒன்று போலிருப்பவை. ஹிந்தி மராத்தி, குஜராத்தி, ஒரியா, பெங்காலி ஆகியவற்றுடன் இணைந்திருப்பது. 

பாரதத்தின் எல்லா மாநிலங்களிலும் சமஸ்கிருதம் கற்பிக்கப்பட வேண்டும். நாம் சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளாக நம் கல்வியில் சமஸ்கிருதம் இல்லாமல் இருப்பதைப் போன்ற ஒரு பின்னடைவு வேறில்லை. டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் பாரதத்தின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என்று விரும்பியவர். 

கல்வியின் பொறுப்பு நம் நாட்டில் அரசாங்கத்திடம் இருக்கிறது. மாநில அரசாங்கம் மற்றும் மத்திய அரசாங்கம். அரசாங்கத்தின் வேலை வரிவசூல் செய்வதும் நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதும் சமூக அமைதியை நிலைநாட்டுவதும் மட்டுமே. ஜனநாயக அரசு குடிகள் அனைவருக்கும் கல்வி வழங்கும் பொறுப்பையும் ஏற்கும். நம் நாட்டின் பல்லாயிரம் ஆண்டு கால வரலாற்றை நோக்கும் போது கல்விக்கான பொறுப்பை ஒவ்வொரு கிராமமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதைக் காண முடியும். 

நம் நாட்டின் வளர்ச்சியில் பேரெழுச்சி ஒன்று ஏற்பட வேண்டும் என்றால் மத்திய அரசும் மாநில அரசும் அளிக்கும் கல்விக்கு இணையாக மிகக் குறைந்த அளவிலேனும் கிராமமும் ஊரும் சமூகமும் சமூக அமைப்புகளும் பண்பாட்டு அமைப்புகளும் குடிகளுக்கு கல்வி அளிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும். 

மொழி ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன் அந்த கணத்தில் பேசிக் கொள்வதற்காக மட்டும் உருவானதில்லை. மொழியே மானுடம் அடைந்த ஞானத்தை நமக்கு கற்பிக்கிறது. நாம் அடையும் ஞானத்தை நமது அடுத்த தலைமுறைகளுக்கு அளிக்கிறோம். 

மத்திய அரசும் மாநில அரசும் கல்வி அளிப்பதில் போதாமை என்பது மொழிகளும் விளையாட்டும் இசையும். நம் நாட்டின் குழந்தைகளுக்கு பல மொழிக் கல்வியும் தினமும் விளையாட்டும் தினமும் இசையும் கற்பிக்கப்பட வேண்டும். 

நம் நாட்டின் மொழிகள் மட்டுமல்ல ; உலக மொழிகள் அனைத்தும் கற்பிக்கப்படுவதற்கான வாய்ப்பு பாரத நிலத்தில் இருக்க வேண்டும். கல்விக்கு உலகில் ஒரு நாடு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்தது என்றால் உலக அளவில் அதில் தொன்மை கொண்டது பாரத தேசமே. நம் நாட்டில் கல்வி கற்க 2000 ஆண்டுகளுக்கு முன்பே வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கின்றனர். 

3. பாரதம் பசியை வென்று குறைந்தது 40 ஆண்டுகள் ஆகிறது. இன்று நமது அரசாங்கத்தால் நாட்டின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவையான உணவு தானியங்களை அளிக்க முடிகிறது. இப்போது நம் நாட்டு மக்களுக்குத் தேவைப்படுவது உடற்பயிற்சியும் யோகாவும் ஆகும். பாரத நிலத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் யோகக் கல்வி கிடைக்க வேண்டும்.  

வானெழும் பட்டங்களின் நிலம் - வாசகர் கடிதம்

அன்பு பிரபு, நீங்களும் பெற்றோரும் நலமென நம்புகிறேன். தங்களுடைய ஆமதாபாத் பயணக் கட்டுரை எழுச்சியுடன் அமைந்திருந்தது படிக்க மிக மகிழ்ச்சி யாக உணர்ந்தேன். இந்த வருட சென்னை புத்தகத் திருவிழாவில் வாங்கியவை இணைப்பில். தங்கள் வலைத்தளத்தில் பரிந்துரைத்த இரு நூல்கள் , பௌத்த வேட்கை மற்றும் மரங்களின் மறை வாழ்வு வாங்கி உள்ளேன்.

நன்றி 

அன்புடன்  

ஆர்





Saturday, 17 January 2026

மொழிபெயர்ப்பு (நகைச்சுவைக் கட்டுரை)

இன்று எழுதிய ‘’வானெழும் பட்டங்களின் நிலம்’’ பதிவை ஆமதாபாத்தின் நண்பர்களுக்கு அனுப்ப விரும்பினேன். எனது பதிவின் பிரதியை ‘’கட் காபி பேஸ்ட்’’ செய்து கூகுள் டிரான்ஸ்லேட்டில் ஒட்டினேன். சில வினாடிகளில் அது மொத்த பதிவையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது. ஆர்வம் காரணமாக அதனை வாசித்துப் பார்த்தேன். அது ஒரு நல்ல மொழிபெயர்ப்பு என்று எனக்குத் தோன்றியது. எனது தமிழ் பிரதியின் உணர்வுகள் சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.  பெரிய திருத்தங்கள் ஏதும் தேவைப்படவில்லை. சிறிதாக ஒன்றிரண்டு தேவைப்பட்டது. அதனைச் செய்து கொண்டேன். இந்த முயற்சி எனக்குப் புதிய அனுபவம். இந்தப் புதிய அனுபவம் எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.