பிரபு மயிலாடுதுறை
Tuesday, 7 April 2026
காலை உணவு (ஹாஸ்யம்)
Monday, 6 April 2026
ஓய்வில் இருக்கும் நண்பர்
குடவாயிலில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். இலக்கியம் இசை மற்றும் நுண்கலைகளில் தீவிரமான ஆர்வமும் ஈர்ப்பும் பயிற்சியும் மிக்கவர். கலைஞர்களுக்கே உரிய உணர்ச்சிகரமான அகம் கொண்டவர். அவரது உணர்ச்சிகர இயல்பு குறித்து நான் மிகுந்த கவலை கொண்டிருந்தேன். அவர் இயல்பு குறித்து புறவயமாக நோக்குமாறு அவரிடம் அவ்வப்போது மெலிதாக மென்மையாக சொல்லிக் கொண்டிருந்தேன். புதிய வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொண்டிருந்தார். வீட்டின் நிறைவுப் பணிகள் அவருடைய நேரத்தையும் மனத்தின் பெரும்பாலான பகுதியையும் எடுத்துக் கொண்டிருந்தது. வீட்டு கிரகப் பிரவேசத்துக்கு எனக்கு அழைப்பு அளித்திருந்தார். நான் அன்று ஊரில் இல்லை ஆதலால் செல்ல முடியவில்லை. கிரகப் பிரவேசம் சிறப்பாக நடந்தது என பின்னர் அறிந்தேன். விழாவுக்கு 10 நாட்களுக்குப் பின் சாலையில் இரவில் சென்று கொண்டிருந்த போது சிறு சாலை விபத்து ஒன்று நண்பருக்கு ஏற்பட்டிருக்கிறது. சிறு எலும்பு முறிவு. கட்டு போட்டிருக்கின்றனர். ஒரு மாத காலம் அதிகம் நடக்காமல் படுக்கையில் இருக்குமாறு மருத்துவ அறிவுரை. அதனை முறையாகப் பின்பற்றுகிறார். இன்று நண்பரைக் காணச் சென்றிருந்தேன். வீட்டின் நிறைவுப் பணிகள் பிரமாதமாக நிகழ்ந்திருக்கின்றன என்பதைக் கண்டது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அரண்மனை போன்ற எழிலுடன் வீடு இருக்கிறது என அவரிடம் கூறினேன். நாள் முழுதும் நாதஸ்வர இசை கேட்டுக் கொண்டு இலக்கியம் வாசித்துக் கொண்டிருக்கிறார். இசையில் முழுமையாக மூழ்கியிருப்பதற்கான வாய்ப்பாக நிகழ் நிலையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினேன். என்னை இரண்டு நாட்கள் வந்து தங்கியிருங்கள் என்று சொன்னார். சென்று வர வேண்டும்.
Sunday, 5 April 2026
ஆனைமுகன் நீராட்டு
இன்று மாயூரநாதர் ஆலயம் சென்ற போது ஆகம பாடசாலை மாணவர்கள் 25 பேர் வேத மந்திரம் முழங்கிக் கொண்டு ஆலயத்தினுள் நுழைவதைக் கண்டேன். நான்கு வயது இருக்கும் சிறு குழந்தை சங்கீத அப்பியாசத்தைத் துவங்குவதைக் கண்டேன். அக்குழந்தையின் பெற்றோரும் ஆசிரியரும் உடனிருந்து அக்குழந்தைக்கு வழிகாட்டினர். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தங்கள் குடும்ப நலனுக்காக ஆனைமுகனை நீராட்டி வழிபட திரவியங்களுடன் வந்திருந்தனர். மாயூரநாதர் ஆலய ஆனைமுகன் உருவத்தில் மிகப் பெரியவர். ஏழடி உயரம் இருக்கக் கூடும். முதலில் நல்லெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்தனர். பின்னர் மஞ்சள் பொடி, நெய், தயிர், தேன், பால் ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. சந்தன அபிஷேகம் செய்யப்பட்டு சுடராட்டு நிகழ்ந்தது.
ஒரு குழந்தையை அன்னை நீராட்டி அலங்கரிப்பது போன்றதே தெய்வத்துக்கு மானுடர் நிகழ்த்தும் நீராட்டு.
பெருமாள் கோவிலில் உற்சவர் ஏகாதசி கண்ணாடி மண்டபத்தில் எழுந்தருளியிருந்தார்.
Saturday, 4 April 2026
பள்ளியும் கல்வியும்
குழப்புதல் (நகைச்சுவைக் கட்டுரை)
திட்டமிடல்கள் -2 (ஹாஸ்யம்)
Friday, 3 April 2026
ஊர் மாற்றம்
நமது மனம் பழக்கத்துக்கு உட்பட்டது. அதனை பழக்கப்படுத்த முடியும் ; ஒரு பிராணியைப் பழக்குவதைப் போல. பழகிய விஷயத்துக்கு மீண்டும் மீண்டும் உட்பட்டவாறே இருப்பது மனதின் இயல்பு. மனதுக்குப் புதிய ஒன்றை அறிமுகப்படுத்தினால் அதனை உடனே ஏற்காது. அதற்கு சில தடைகளை அளிக்கும். அதைத் தாண்டியும் நாம் உறுதியாக இருந்தால் புதியவற்றை மனம் ஏற்கத் துவங்கி விடும்.
நாம் முதல் நாள் இரவு ஒரு புதிய ஊருக்குச் சென்றிருக்கிறோம் என வைத்துக் கொள்வோம். தூங்கி காலை விழிக்கிறோம். ஒரு நடை செல்கிறோம் எனில் நம் மனம் அங்கே இருக்கும் சிறு சிறு விஷயங்களையும் கவனிக்கும். பூத்து நிற்கும் மரம், சிறு செடிகள், மண்டிக் கிடக்கும் புல், வீதியில் திரியும் நாய்கள், அப்பகுதியின் கட்டிடங்கள், அதன் மதில் சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் என அனைத்தையும் நம் மனம் நுட்பமாக கவனிக்கும். பார்க்கும் காட்சிகளில் மனம் லயிக்கும். நாம் வருஷக்கணக்காக வாழ்ந்த ஊரில் ஒரு புது ஊரில் ஏற்படும் லயிப்பு ஏற்படாது.
மனம் இயங்கும் விதத்தை ஒரு அளவீட்டுக்குள் கொண்டு வருவோமானால் அதற்கு 1 -10 வரை என அளவீடு அளித்தால் பல வருஷம் பழகிய ஊரில் அதன் உற்சாகம் 3 என இருக்கும் ; புதிய ஊரில் அதன் உற்சாகம் 7 என இருக்கலாம். வழமையை விட உற்சாகத்தை விரும்புபவர்கள் புதிய ஊருக்குச் செல்லலாம் என நினைப்பார்கள். பத்தாயிரத்தில் ஒருவருக்கே அவ்விதம் தோன்றும். ஏனென்றால் மனிதர்கள் பொதுவாக வழமையில் தங்களைப் பொருத்திக் கொள்பவர்கள். புதிய ஒன்றை நோக்கிச் செல்ல தயங்குபவர்கள்.
நீங்கள் பல வருஷம் ஒரு ஊரில் வசித்திருக்கிறீர்கள். பின் 3 ஆண்டுகள் வேறு ஒரு ஊரில் இருந்து விட்டு அதன் பின் மீண்டும் பழைய ஊருக்கு வருகிறீர்கள் என்றால் அப்போது பழைய ஊரிலும் புதிதாக உணர வாய்ப்பு உண்டு.
Thursday, 2 April 2026
திட்டமிடல்கள் (ஹாஸ்யம்)
Wednesday, 1 April 2026
உத்தரவு கிடைத்தது
இன்று காலையிலேயே எழுந்து விட்டேன். அதிகாலை நேரத்தில் ஒரு நல்ல கனவொன்று கண்ட பின் எழுந்திருந்ததால் மகிழ்ச்சியாக இருந்தது. வீட்டின் கதவுகளைத் திறந்து வைத்தேன். கலனில் நீர் நிரப்பி குடிநீர்த்தேவைக்கான ஏற்பாடுகளை செய்தேன். பின்னர் எனது உணவை சமைத்து விடுவோம் என முடிவு செய்து கேழ்வரகுக் களி கிண்டினேன். ஐந்திலிருந்து ஏழு நிமிடங்களில் எனது உணவு தயாராகி விடும். ஒரு சிறு தட்டில் அதனை வைத்து அதன் மீது இன்னொரு சிறு தட்டை மூடி டயனிங் டேபிள் மீது கொண்டு சென்று வைத்தேன். இன்று காலை நேரத்திலேயே கோவிலுக்குச் செல்ல வேண்டும் என எண்ணியிருந்ததால் சிறு தூரம் மட்டுமே நடைப்பயிற்சி சென்று வந்தேன். அதன் பின் வீட்டுக்கு வந்து காலையிலேயே சில பதிவுகள் எழுதி தளத்தில் பதிவிட்டேன். நேரம் காலை 8 மணியாக இருந்தது. குளித்து விட்டு ஆலயத்துக்குச் சென்றேன்.
ஆலயம் சென்ற போது எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. ஊரின் மிகப் பெரிய கட்டுமானம் ஆலயம். இன்றும் கூட. இத்தனை பெரிய நிலமும் இத்தனை பெரிய கட்டுமானமும் இன்றும் ஊரில் ஒரே இடத்தில் இணைந்து இல்லை. ஒவ்வொரு ஆலயத்திலும் வேதம் படிக்கும் 100 மாணவர்களுக்கு மாதம் கணிசமான தொகை உதவித் தொகையாக அளித்து ஆலயத்தில் எப்போதும் வேத முழக்கம் கேட்கும் வகையில் ஏன் ஏற்பாடு செய்யப்படக் கூடாது? அதைப் போலவே திருமுறைகள், தமிழிசை, பரதம் முதலிய நுண் கலைகள் ஆகியவற்றுக்கு ஏன் ஆலயம் இடம் தரக் கூடாது? ஆலயத்துக்கு எவ்வளவோ வருமானம் இருக்கிறது. வேதக் கல்வியும் திருமுறைக் கல்வியும் நுண்கலைக் கல்வியும் ஆலயத்தின் வருமானத்தை பலவகைகளிலும் அதிகரிக்கவே செய்யும். ஆலய நிர்வாகம் என்பது அப்பிரதேசத்தின் பண்பாட்டுச் செயல்பாடாக இருக்க வேண்டிய காலம் வந்து விட்டது. ஆலயம் பண்பாட்டுச் செயல்பாடுகளின் மையமாகவும் இருக்க வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம்.
உள எழுச்சியும் உள நெகிழ்ச்சியும் கொண்டிருந்த நிலையில் இன்று ஆலயம் சென்றிருந்தேன். நேற்று எழுதிய ‘’உத்தரவு’’ என்னும் பதிவு உருவாக்கியிருந்த மனநிலை. ஊரில் ஆலயத்தில் மஹாகணபதி சன்னிதி ஒன்று உள்ளது. தமிழ் மக்களுக்கு ஆனைமுகனைப் போல் இன்னொரு ஆப்த தெய்வம் இல்லை. ஆற்றல் கொண்டிருப்பவனும் குழந்தையாயிருப்பவனும். அவன் முன் சென்று நின்றேன். அவனிடம் என் துயரங்களைத் தெரிவிக்க நினைத்தேன். கடவுள் மிகப் பெரியவன். அவனிடம் என் லௌகிகத் துயரங்களைக் கூற வேண்டுமா என ஓர் எண்ணம். என் துயரங்களைச் சொல்ல என் வலிகளைச் சொல்ல என் வேதனைகளைச் சொல்ல அவனன்றி வேறு துணை இல்லை. சொல்வதை முழுதாகக் கேட்டுக் கொள்ளக் கூட அவனன்றி வேறு உறவு இல்லை. எதுவும் சொல்லாமல் தான் அவன் முன் நின்றிருந்தேன். அபயாம்பிகையை தரிசனம் செய்தேன். நான் சென்ற போது மயூரநாதருக்கு சுடராட்டு நிகழ்ந்தது. ‘’திருச்சிற்றம்பலம்’’ ‘’திருச்சிற்றம்பலம்’’ எனத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தேன். நாம் இருப்பது மாயூரத்தில் ; திருச்சிற்றம்பலம் என்பது சிதம்பரம். மாயூரத்தில் ஏன் சிதம்பரத்தைச் சொல்கிறோம் என நினைத்தேன். தமிழகத்தில் எல்லா ஆலயங்களிலும் திருச்சிற்றம்பலம் என்று சொல்வார்கள். திருமுறைகள் ஓதத் துவங்கும் போதும் நிறைவு செய்யும் போதும் திருச்சிற்றம்பலம் என்று சொல்வார்கள். சிவ பக்தர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது திருச்சிற்றம்பலம் என்று சொல்வார்கள். எனவே எந்த ஊரிலும் திருச்சிற்றம்பலம் சொல்லலாம் என எண்ணினேன். ஆடலரசன் நடராஜன் ஆடுவது காஸ்மிக் நடனம். எனவே நடராஜன் சபையில் ஒட்டு மொத்த பிரபஞ்சமும் அடக்கம். எனவே திருச்சிற்றம்பலம் என்பது ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் குறிக்கும் மந்திரம் என எண்ணினேன்.
கோவிலுக்கு வெளியே வரும் போது ஒரு பெண் கூடையில் வில்வ இலைகளையும் நாலலிங்கப் பூவையும் வைத்திருப்பதைக் கண்டேன். கர்நாடகாவில் சிவாலயங்கள் அனைத்திலும் வில்வ இலைகளும் வில்வ இலை மாலைகளும் பெருமளவில் விற்பனை ஆகும்.
மாயூரநாதர் கோவிலிலிருந்து திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயத்துக்குச் சென்றேன். பெருமாள் கோயிலுக்கு மாலை செல்லலாமா என ஒரு கணம் எண்ணினேன். பெருமாள் தரிசனத்தை மாலை வரை தள்ளி வைக்க வேண்டாம் என முடிவெடுத்துப் புறப்பட்டேன்.
திருஇந்தளூர் கீழவீதி அருகே வந்த போது பரிமள ரங்கன் பக்தர்கள் வடம் இழுக்க தேர் பவனி வருவதைக் கண்டேன். இறைவன் எனக்கான உத்தரவை அளித்து விட்டான் என்பதை உணர்ந்த போது உளம் நெகிழ்ந்தது. பரமாத்மா ஜீவன்களுடன் ஆடுவது ஆடல் ; விளையாடல். தேரில் இறைவனைக் கண்ட கணம் அவனை என் குழந்தையாக எண்ணினேன். என் கடவுள் எனக்கு அனுமதி அளித்து விட்டான். புதிய நிலம் காண புதிய காட்சிகளைக் காண புறப்பட்டுச் செல் என்பதே அவன் எனக்கு அளித்திருக்கும் உத்தரவு. மூலவர் யோக நித்திரையில் சயனித்திருக்கிறார். உற்சவர் ஊர் உலகம் கண்டு வருகிறார். எனக்கு இன்று காட்சி கொடுத்தது உற்சவர்.
இறைவா ! உன் லோகங்களில் கோடானுகோடி ஜீவன்கள். அந்தக் கோடானுகோடி ஜீவன்களில் ஓர் எளிய ஜீவன் அடியேன். உன் திருவுளம் அடியேனையும் கருதுகிறதா ? உன் கருணை பெரியது இறைவனே. உன் கருணையால் தான் ஜீவன்கள் ஜீவித்திருக்கிறோம். அதனை நாங்கள் எப்போதும் உணர்ந்திருப்பதில்லை இறைவனே ! எப்போதாவது உணர்கிறோம். இறைவா உன் கருணை எங்கள் மீது எப்போதும் இருக்கட்டும்.