Thursday, 9 July 2026

14 மரங்கள் - 5 ஆண்டுகள் - 09.07.2021 - 09.07.2026

இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட் டாலும்

பதந்திரு இரண்டும் மாறி பழிமிகுந் திழிவுற் றாலும்

விதந்தரு கோடி இன்னல் விளைந்தென்னை அழித்திட்டாலும்

சுதந்திர தேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே !

-பாரதி

 

ஒரு பொது விஷயத்தில் சட்டபூர்வமான நியாயம் தீர்வாக இருக்க வேண்டும் என்று முயற்சிகளை முன்னெடுத்ததன் விளைவாக இன்று நான் தாக்கப்படும் சூழ்நிலை உண்டாகியுள்ளது. நான் தாக்கப்படலாம். என் மீது பொய் வழக்குகள் போடப்படலாம். அவ்வாறான ஒரு சூழ்நிலை உண்டாகியிருப்பதால் எதற்காக நான் முயற்சி செய்தேன் என்பதை விரிவாக விளக்க வேண்டிய காலம் வந்திருக்கிறது. எனவே இதனை விளக்குகிறேன்.

ஒரு வருடத்துக்கு முன்னால், 09.07.2021 அன்று எனது நண்பர்கள் சிலருடன் நான் உரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நண்பருக்கு அலைபேசி அழைப்பு வந்தது. அலைபேசியில் சகஜமாக அழைப்பை ஏற்று பேசத் துவங்கியவர் சில வினாடிகளில் பதட்டம் அடைந்தார். பதட்டத்துடனே அலைபேசியில் பேசியவரிடம் விபரங்கள் கேட்டார். சில நிமிடங்களில் அவர்கள் உரையாடல் நிறைவு பெற்றது. நண்பரிடம் பதட்டப்படுமளவுக்கு என்ன விஷயம் என்று கேட்டோம்.

நண்பர் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த கிராமத்தில் உள்ள தொன்மையான விஷ்ணு ஆலயம் ஒன்றின் சன்னிதித் தெருவில் அவரது வீடு அமைந்துள்ளது. அந்த விஷ்ணு ஆலய சந்திதித் தெருவாசிகள் தங்கள் வீடுகளுக்கு முன்னால் வேம்பு, புங்கன், மலைவேம்பு முதலிய நிழல் தரும் மரங்களை நட்டு வளர்த்திருந்தனர். ஒவ்வொரு மரமும் பெரியவை. ஒவ்வொரு மரமும் ஆறு ஆண்டிலிருந்து பத்து ஆண்டு வரை அகவை கொண்டவை. அந்த வீதியில் அவ்வாறு பதினான்கு (14) மரங்கள் இருந்திருக்கின்றன. சம்பவ தினத்தன்று (09.07.2021), அந்த ஊரின் ஊராட்சித் தலைவர் ஊராட்சியின் வாகனங்கள் மற்றும் பணியாளர்களுடன் தொன்மையான விஷ்ணு ஆலயம் முன்னால் வந்து சன்னிதித் தெருவில் இருந்த மரங்களை ஜே.சி.பி வாகனம் மூலம் வேருடன் சாய்த்து கிளைகளை வெட்டி ஊராட்சி வாகனத்தில் எடுத்துச் சென்று தனக்குச் சொந்தமான செங்கல் காலவாயில் எரிபொருளாகப் பயன்படுத்த எடுத்துச் சென்றிருக்கிறார். மரங்கள் அடியோடு வெட்டி சாய்க்கப்பட்ட போது பெரும்பாலான வீடுகளில் ஆண்கள் தங்கள் பணிக்குச் சென்றிருந்தனர். வீடுகளில் பெண்கள் மட்டுமே இருந்திருக்கின்றனர். ஏன் இவ்வாறு மரங்களை வெட்டுகிறீர்கள் என்று பெண்கள் கேட்ட போது பெண்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டியவர்கள்; அவர்கள் எந்த கேள்வியும் கேட்கக் கூடாது என்று ஊராட்சி மன்றத் தலைவர் கூறியிருக்கிறார். பெண்கள் கேள்வி கேட்ட போது அவர்கள் முன் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு சிகரெட் புகையை ஊதியவாறு அலட்சியமாக பதில் கூறியிருக்கிறார். தெருவில் இருந்த இளைஞர்கள் சிலர் ஊராட்சி மன்றத் தலைவரிடம் தங்கள் எதிப்பைத் தெரிவித்திருக்கின்றனர். அவர்களிடம் ‘’ ஒன்னரை ரூபாய் செலவு செய்து நீங்கள் மரக்கன்று வைத்து விட்டால் உங்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை வந்து விடுமா ?’’ என்று கேட்டிருக்கிறார். நண்பர் தனக்கு அலைபேசியில் தெரிவிக்கப்பட்ட விபரங்களை எங்களிடம் சொன்னார்.

நான் நண்பரிடம் ஒரு கேள்வி கேட்டேன். ‘’ சன்னிதித் தெருவில் இருந்த மரங்களை வெட்ட ஊராட்சி மன்றத் தலைவர் வருவாய் கோட்டாட்சியரிடம் (சப் கலெக்டர்) விண்ணப்பித்து உத்தரவைப் பெற்றிருந்தாரா?’’ என்றேன். நண்பர் ஊருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு நான் கேட்ட கேள்வியை அவர்களிடம் கேட்டார். அவர்கள் ஊராட்சிப் பணியாளர்களைத் தொடர்பு கொண்டு பேசி விபரம் கேட்டிருக்கின்றனர். அவ்வாறான அனுமதிக்கு விண்ணப்பிக்கப் படவும் இல்லை. அவ்வாறு அனுமதி பெறப்படவும் இல்லை என பதில் கிடைத்தது. ‘’அரசு புறம்போக்கு நிலமான தெருவில் இருக்கும் மரம் அல்லது மரங்களுக்கு பொருள் மதிப்பு உண்டு. அவை அரசாங்கத்தின் சொத்துக்கள். அவை எந்த காரணத்துக்கு அகற்றப்பட வேண்டும் என்றாலும் சப் கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அவர் அந்த மரத்தை நேரடியாக வந்து பார்வையிடுவார். மரம் அகற்றப்பட வேண்டும் என்ற விண்ணப்பம் அளிக்கப்பட்டிருப்பது உசிதமானதா என ஆராய்வார். அந்த மரம் வெட்டப்படுவது தேவை என்று நினைத்தால் அந்த மரத்தின் பொருள் மதிப்பை முழுமையாக அரசுக் கணக்கில் செலுத்தச் சொல்வார். அவ்வாறு செலுத்தப்பட்ட பின் அந்த மரத்தை வெட்ட அனுமதி அளிப்பார். இவ்வளவு நடைமுறைகள் இந்த விஷயத்தில் ஏற்படுத்தப்பட்டிருப்பதற்கு காரணம் அரசு புறம்போக்கு நிலத்தில் வளரும் எந்த மரத்தையும் வெட்ட எவரும் துணிந்து விடக் கூடாது என்பது தான். ஆனால் உங்கள் ஊரின் ஊராட்சி மன்றத் தலைவர் அரசு புறம்போக்கு நிலத்தில் இருக்கும் மரங்களை வெட்டி தனது சொந்த செங்கல் காலவாயில் எரிபொருளாகப் பயன்படுத்தியிருக்கிறார். அவர் இந்த விஷயத்தில் செய்துள்ள குற்றங்கள் மூன்று. முதலாவது சப் கலெக்டர் அனுமதி இல்லாமல் 14 மரங்களை வெட்டியது. இது கள்ளத்தனமாக மரம் வெட்டுதல் என்னும் சட்டப் பிரிவின் கீழ் குற்றம். இரண்டாவது அதனை சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்திக் கொண்டது . இது அதிகார துஷ்பிரயோகம். மூன்றாவது அவர் அரசாங்க சொத்தான் பெரும் பொருள் மதிப்பு கொண்ட 14 மரங்களை வெட்டி அரசாங்க சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியிருக்கிறார். மூன்று குற்றங்களில் ஆகப் பெரிய குற்றம் இது. அரசாங்கம் இதனை எளிதாக எடுத்துக் கொள்ளாது;  நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் ’’ என்று நண்பரிடம் பதில் சொன்னேன். நண்பருக்கு நான் சொன்ன இந்த விஷயங்கள் புதிதாக இருந்தன. சம்பவ இடத்தை நான் மறுநாள் காலை நேரில் வந்து பார்ப்பதாகச் சொன்னேன்.

தமிழ்ச் சூழலில் பொதுமக்கள் அரசாங்கம் மீது எந்த விதமான நம்பிக்கையும் இல்லாமல் இருப்பார்கள். எனக்கு எப்போதும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை உண்டு. ஒரு ஜனநாயக நாட்டின் அரசாங்க அமைப்பு அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படையிலேயே இயங்க முடியும். ஆங்காங்கே தவறுகள் இருக்கலாம். குறைகள் இருக்கலாம். முறைகேடுகள் இருக்கலாம் . அதற்காக ஒட்டு மொத்த அமைப்பின் மேலும் அவநம்பிக்கை கொள்வது சரியானது அல்ல என்ற எண்ணத்தை வலுவாகக் கொண்டவன் நான்.

மறுநாள் நண்பரின் கிராமத்துக்குச் சென்றேன். அவரது வீடு இருந்த சன்னிதித் தெரு எந்த மரமும் இல்லாமல் வெட்டவெளியாய் இருந்தது. மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டதன் பள்ளங்கள் மொத்தம் பதிநான்கு (14) இருந்தன. அவற்றைப் பார்வையிட்டேன். பொதுமக்கள் சிலர் என்னைக் கவனித்து முதல் நாள் நடைபெற்ற சம்பவத்தை என்னிடம் தெரிவித்தனர். அந்த தெருவின் முதியவர்கள் கண் கலங்கி சொன்னதைக் கேட்ட போது மனம் மிகவும் வலித்தது. மரம் வெட்டுவதன் நடைமுறைகள் குறித்து அவர்களுக்குச் சொல்லி நடந்த இந்த விஷயத்தை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினேன். சன்னிதித் தெருவின் பொதுமக்கள் அஞ்சினர் ; தயங்கினர். ’’நன்கு வளர்ந்த 14 மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டிருக்கின்றன.  இதனை நாம் அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லாமல் இருப்பது சரியான அணுகுமுறை அல்ல; நாம் மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு செல்வோம் ‘’ என்று சொன்னேன். மக்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. ‘’நீங்கள் யாரும் இந்த விஷயத்தை கலெக்டரிடம் தெரிவிக்காவிட்டாலும் நான் தெரிவிப்பேன். இங்கே நிகழ்ந்திருக்கும் அநீதியைப் பார்த்து விட்டு இப்படியே திரும்பிப் போய்விட மாட்டேன். வெட்டப்பட்ட மரங்களுக்கு நான் நியாயம் கேட்பேன்’’ என்று சொல்லி விட்டு ஊர் திரும்ப யத்தனித்தேன். அங்கே இருந்த விஷயங்கள் இந்த விஷயத்தின் சட்ட அம்சங்கள் குறித்துக் கேட்டனர். நான் எனக்குத் தெரிந்த விபரங்களைச் சொன்னேன். ஆனால் அவர்கள் அனைவருமே நான் கூறித்தான் இந்த மரங்கள் வெட்டப்பட்டது சட்ட விரோதம் என அறிந்தனர். அதற்கு முன் அவர்கள் கேள்விப்பட்டிருக்கவில்லை.

வீட்டுக்கு வந்து மாவட்ட ஆட்சியருக்கு ஒரு மனுவை தயார் செய்து கொண்டிருந்தேன். இந்த விஷயம் காட்சி ஊடகட்த்தில் வந்தால் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஒரு அழுத்தம் உருவாகும் என்பதால் ஒரு சேட்டிலைட் தொலைக்காட்சியின் எண்ணை இணையம் மூலம் கண்டறிந்து அவர்களைத் தொடர்பு கொண்டு நிகழ்ந்ததைக் கூறினேன். அவர்கள் உள்ளூர் செய்தியாளரின் எண்ணை எனக்கு அளித்து அவரைத் தொடர்பு கொள்ளுமாறு கூறினர். அவரிடம் பேசினேன். அவர் சம்பவ இடத்துக்கு வந்து விடுவதாகக் கூறினார். நான் அங்கே விரைந்து சென்றேன். நான் சென்ற சில நிமிடங்களில் அவரும் வந்து விட்டார். காலையில் மக்களிடம் அதிக நேரம் உரையாடியிருந்ததால் மாலை சென்ற போது அனைவரும் என்னுடைய முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தனர். ஒரு குடிமகனாக நான் என் கடமையைச் செய்வதாக அவர்களிடம் கூறினேன். டி.வி செய்தியாளர் நிகழ்ந்தவற்றை மக்களிடம் கேட்டு ஒளிப்பதிவு செய்து கொண்டார். அந்த தெருவின் இளைஞர்கள் ஊராட்சி மன்றத் தலைவர் மரங்களை வெட்டிய போது தெருவாசிகள் அலைபேசி மூலம் எடுத்த வீடியோக்களை அளித்தனர். அவற்றைத் தன் அலைபேசியில் பதிவேற்றம் செய்து கொண்டு புறப்பட்டார். அந்த வீதியின் பொதுமக்கள் அனைவரும் தாங்களே மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்புவதாகக் கூறினர். அந்த தெருவின் பொதுமக்கள் அனைவரும் மனு எழுதத் துவங்கினர். இளைஞர்கள் அவர்களுக்கு உதவினர். தயாரித்து வையுங்கள் என்று கூறி விட்டு நான் ஊர் திரும்பி விட்டேன். பின்னர் மீண்டும் அன்று இரவு சென்று மனுக்களை தபாலில் அனுப்புவதற்காக வாங்கி வந்தேன்.

மறுநாள் காலை என்னை ஊருக்கு வருமாறு அங்கிருந்த இளைஞர்கள் அழைத்தனர். இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் எனது முயற்சிகள் மகிழ்ச்சி அளித்தன. என் மீது மிகுந்த பிரியம் காட்டத் துவங்கினர். சில இளைஞர்கள் இந்த தெருவில் வசிக்கும் மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுப்போம் என்றார்கள். அதுவும் நல்ல யோசனைதான் என ஒத்துக் கொண்டேன். அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை. மறுநாள் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாள். அதாவது, மக்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்கும் நாள். காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தால் அரைமணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்துக்குள் சந்தித்து மனு அளித்து விடலாம் என எண்ணினோம். சேட்டிலைட் தொலைக்காட்சி செய்தியாளர் எங்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு ஊராட்சி மன்றத் தலைவர் மரங்களை வெட்டிய செய்தி திங்கள் கிழமை காலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று கூறினார்.  

திங்களன்று காலை அந்த செய்தி சேட்டிலைட் சேனலில் ஒளிபரப்பானது. அந்த பிரதேசம் முழுக்க அந்த செய்தி பரவியது. வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் தாங்கள் வேலை பார்க்கும் நாடுகளிலிருந்து ஊர்க்காரர்களுக்கு ஃபோன் செய்து என்ன நடந்தது என்று விசாரித்த வண்ணம் இருந்தனர். காலை 10 மணிக்கு கிராம மக்கள் 25 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளை தூக்கிக் கொண்டு வந்திருந்தார்கள். முதியவர்கள் வந்திருந்தார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்கள் அப்போது குறைவாகவே இருந்தனர். வந்த பணி விரைவில் முடிந்து விடும் என்றே அனைவரும் எண்ணினர். நேரம் போய்க்கொண்டே இருந்தது. மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதிக்கவில்லை. அலுவலக எழுத்தரிடம் மனுவை அளித்து விட்டு செல்லுங்கள் என்றனர். சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் சென்று மனு கொடுங்கள் என்றனர். வட்டாட்சியரிடம் மனு கொடுங்கள் என்றனர். மாவட்ட ஆட்சியரிடம் நடந்ததைக் கூற நாங்கள் வந்திருக்கிறோம். எங்களுக்கு இரண்டு நிமிடம் போதும் மனுவை நேரில் பார்த்து கொடுத்து விட்டு செல்கிறோம் என்று கிராம மக்கள் சொன்னார்கள். நேரம் போய்க் கொண்டே இருந்தது. கலெக்டர் வெளியே புறப்படும் போது கார் அருகில் சென்று மனுவைக் கொடுக்கிறோம் என்று மக்கள் சொன்னார்கள். நான் எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்தேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கு மேல் ஆனது. ஊரிலிருந்து வந்தவர்கள் அலுவலக வாசலில் கால் கடுக்க நின்று கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நான் அமைதி இழந்தேன். ’’தங்களுக்கு நிகழ்ந்த அநியாயத்தை அரசாங்கத்திடம் தெரிவிக்க இந்த மக்கள் வந்திருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக நடந்ததைத் தெரிவிப்பதால் இந்த மக்களுக்கு ஒரு மன ஆறுதல் கிடைக்கக்கூடும். மக்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை மக்களுடைய குரலில் மாவட்ட ஆட்சியர் நேரடியாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். எங்களுக்கு இரண்டு நிமிடம் போதும் ‘’ என்று உரத்த குரலில் தெரிவித்தேன். உரத்த குரலில் வெளிப்பட்ட எதிர்வினையைக் கண்டதும் வளாகமே ஒரு நிமிடத்துக்கு நிசப்தம் ஆனது. ஐந்து நிமிடத்தில் இரண்டு பேரை மட்டும் கலெக்டர் வரச் சொல்வதாக ஒரு பணியாளர் வந்து சொன்னார். நான் ஒரு பெண்மணியையும் ஒரு இளைஞனையும் செல்லச் சொன்னேன். மக்கள் அனைவரும் என்னையும் உடன் செல்லுமாறு கூறினர். மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து நடந்ததை அந்த பெண்மணியும் இளைஞனும் கூறினார்கள். ‘’எங்கள் பிள்ளைகளைப் போல பார்த்து பார்த்து வளர்த்த மரங்களை எங்கள் கண் முன்னால் வெட்டி விட்டார்கள்’’ என்று கூறிய போது அந்த பெண்மணி அழுது விட்டார். தாசில்தாரிடம் அறிக்கை கேட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கிறேன் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். தேவைப்படின் காவல்துறை நடவடிக்கையும் மேற்கொள்வதாகக் கூறினார். வெளியே வந்து மக்களைச் சந்தித்து ஆட்சியரிடம் தெரிவித்த விஷயங்களைக் கூறினோம். குற்றம் இழைத்தவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறி அனைவரையும் ஊருக்கு அனுப்பி வைத்தேன்.

அடுத்த சில நாட்களில் அங்கிருந்த இளைஞர்களைச் சந்தித்து மரங்கள் வெட்டப்பட்ட அதே தெருவில் நாம் மீண்டும் மரங்களை நட வேண்டும் என்று சொன்னேன். அதுவே காந்திய வழிமுறை. ஆக்க பூர்வமான விஷயங்களை எப்போதும் முன்னெடுத்தவாறே இருப்பது. 14 மரங்கள் வெட்டப்பட்டதற்கு மாற்றாக அந்த தெருவில் 100 மரங்கள் நடப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன். இளைஞர்களும் பொதுமக்களும் அவ்வாறே செய்வோம் என்றனர். மரக்கன்றுகளையும் மரக்கன்றுகளுக்குத் தேவையான இரும்புக்கூண்டுகளையும் வழங்கினேன். நூறு மரக்கன்றுகள் நடப்பட்டன. தொன்மையான விஷ்ணு ஆலயம் உள்ள சன்னிதித் தெரு என்பதால் பாரிஜாதம், மகிழம், மந்தாரை ஆகிய பூமரக் கன்றுகளும் இயல்வாகை, சொர்க்கம், நாவல் ஆகிய நிழல்மரக்கன்றுகளும் நடப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் மனுக்களை வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பினார். உரிய மேல்நடவடிக்கை எடுத்து மேல்நடவடிக்கை விபரத்தை மனுதாரர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் தெரிவிக்குமாறும் உத்தரவிட்டிருந்தார். எனினும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் எந்த தபாலும் வரவில்லை. நூறு மரக்கன்றுகளையும் மக்கள் ஆர்வமாகப் பராமரித்து வந்தனர். செடிகள் வளரத் துவங்கியது அனைவருக்கும் நன்னம்பிக்கையை அளித்தது. மேலும் ஒரு மாதம் ஆனது. அப்போதும் தகவல் இல்லை. வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்று விசாரித்தோம். வட்டாட்சியர் அலுவலகம் சென்று கேட்டோம். நாங்கள் தகவலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி விட்டோம் என்று சொன்னார்கள். அலைக்கழிப்பு அதிகம் ஆனதால் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் படி விபரங்கள் கோருவது என்று முடிவு செய்தோம்.

வட்டாட்சிய்ருக்கும் கோட்டாட்சியருக்கும் விபரங்கள் கேட்டோம். சில தகவல்களை அளித்தனர். நாங்கள் கோரிய பல விபரங்களை அளிக்கவில்லை. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி மேல்முறையீடு செய்தோம். ஒரு மனுவுக்கு பதில் அளிக்க தகவல் பெறும் உரிமைச் சட்டம் 30 நாள் கெடு அளிக்கிறது. ஆனால் அந்த கெடுவிலிருந்து பத்து நாட்கள் அதிகமாக எடுத்துக் கொண்டு முக்கியத்துவம் கொண்ட தகவல்களை அளிக்காமல் துணை விபரங்களை மட்டும் அளித்துக் கொண்டிருந்தனர். அந்த தெருவின் மக்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் மறைமுகமாக சில நெருக்கடிகளை அளித்தார்.

இந்த விஷயத்தில் நான் ஆரம்பத்தில் இருந்தே ஒரு உறுதியுடன் இருந்தேன். இந்த மக்கள் மிகவும் எளிய மக்கள். இவர்களை எக்காரணம் முன்னிட்டும் காவல்துறையின் பக்கம் கொண்டு சென்று விடக் கூடாது. ஒரு ஜனநாயக அமைப்பில் நியாயம் பெற எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. மென்மையான முறைகள் மூலமே இந்த விஷயம் முன்நகர வேண்டும் என்ற உறுதியை எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். இது எந்த தனிநபருக்கும் எதிரான விஷய்ம் இல்லை. குடிமக்களின் உரிமை தொடர்பானது. ஒரு ஜனநாயக  நாட்டில் தங்களுக்கு நடந்த ஒன்றை அரசின் கவனத்துக்குக் கொண்டு வரவும் தங்களுக்கான தீர்வை எதிர்நோக்கவும் எல்லா குடிகளுக்கும் உரிமை உண்டு. இவ்வாறான உரிமையை அவர்கள் கேட்டுப் பெறவே எத்தனையோ பேர் நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் போது தங்கள் குருதியைக் கொட்டி சுதந்திரம் பெற்றுத் தந்திருக்கின்றனர்.

மீண்டும் மீண்டும் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்தி விபரம் கோரியதன் விளைவாக சில அடிப்படை விபரங்கள் எங்களுக்குக் கிடைத்தன. அந்த விபரங்கள் எங்களுக்கு பேரதிர்ச்சியை அளித்தன.

சட்டவிரோதமாக மரம் வெட்டப்படுவது தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி அந்த குற்றம் இழைத்தவருக்கு ‘’சி’’ படிவ அறிக்கை என்ற அறிக்கையை அளிக்க வேண்டும். அந்த அறிக்கையில் வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை, வெட்டப்பட்ட மரத்துண்டுகளின் கன அளவு, பொருள் மதிப்பு ஆகிய்வை குறிப்பிடப்பட வேண்டும். முக்கிய விபரங்கள் எதுவும் நிரப்பப்படாமல் முழுமையானதாக இல்லாமல் அந்த அறிக்கை அளிக்கப்பட்டிருப்பதைக் கண்டோம். இந்த அறிக்கையை அரைகுறையாக அளித்ததன் மூலம் கிராம நிர்வாக அதிகாரி குற்றம் இழைத்தவருக்கு துணை சென்றிருப்பதை அறிந்தோம். வெட்டப்பட்ட மரங்களின் மதிப்பு ரூ. 950 என நிர்ணயிக்கப்பட்டு அதற்கு ஒரு மடங்கு அபராதம் விதிக்கப்பட்டு வரியுடன் சேர்த்து ரூ. 2052 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. வெட்டப்பட்ட மரங்களின் மதிப்பு ரூபாய் இரண்டு லட்சத்துக்கு மேல் இருக்கும். அந்த ‘’சி’’ படிவ அறிக்கையின் மீது வருவாய் வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு பல குளறுபடிகளைக் கொண்டிருந்தது. அத்தனை குளறுபடிகளையும் அப்படியே ஏற்ர்றுக் கொண்டு வருவாய் கோட்டாட்சியர் ரூ. 2052 என்ற மதிப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்த விஷயங்களை மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு சென்றோம். சி.பி.கி.ரா.ம்.ஸ் இணைய தளம் மூலம் இந்த புகாரை பதிவு செய்தோம். நாளாக நாளாக வருவாய்த்துறை நடைமுறைகள் குறித்து அறிந்த பலரைச் சந்தித்து  இந்த விஷயத்தில் என்னென்ன நிர்வாகக் குளறுபடிகள் நடந்துள்ளன என்பதை முழுமையாக அறிந்தோம். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி இந்த விஷயம் தொடர்பான கோப்பின் முழு நகலைக் கோரி விண்ணப்பம் அனுப்பினோம். சி. பி. கி. ரா. ம்.ஸ் தளத்தில் பதிவு செய்ததன் பலனாக வருவாய் கோட்டாட்சியர் மரம் வெட்டிய ஊராட்சித் தலைவர் மீது மேலும் அபராதம் விதிக்குமாறு வட்டாட்சியருக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக பதில் அளித்தார். முழுக் கோப்பை அளிப்பதில் பல சங்கடங்களை அதிகாரிகள் உணர்கிறார்கள்.

உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு உருவாகி வரும் காலகட்டம் இது. எல்லா உலக நாடுகளும் மரங்களை வளர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் காலகட்டம் இது. மரம் ஒன்றினை வளர்ப்பது என்பது ஒரு சாமானியனை சுற்றுச்சூழலுடன் உணர்வுபூர்வமாக இணைக்கும் குறியீட்டுச் செயல். தமிழ்நாட்டில் பொது இடங்களில் இருக்கும் மரங்களை வெட்டுவது தொடர்பாக பல நடைமுறைகள் இருப்பது மரங்களைக் காக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துக்காகவே. ஒவ்வொரு கிராமத்திலும் எந்த நெறிமுறைகளும் இல்லாமல் சுயலாபத்துக்காக மரங்கள் வெட்டப்படும் என்றால் அதனால் உண்டாகும் அழிவு என்பது பேரழிவாகவே இருக்கும்.

நாட்களைக் கடத்தினால் தவறுகளிலிருந்து தப்பி விடலாம் என அதிகாரிகள் நினைக்கிறார்கள். மரங்களை வெட்டி தவறிழைத்தவர் ஊராட்சி மன்றத் தலைவர். எனினும் அதற்கு உடந்தையாக பல வருவாய்த்துறை அதிகாரிகள் இருந்திருக்கின்றனர். இப்போது அவர்கள் அனைவருமே புகார் வளையத்தில் உள்ளனர். இந்த விஷயத்தில் ஆவணங்களே முதன்மையான சாட்சியமாக உள்ளன என்பதை குற்றம் இழைத்தவரும் அதற்கு துணை நின்றவர்களும் உணர்கிறார்கள். நிலைமையின் தீவிரம் இப்போதுதான் முழுமையாக அவர்களுக்குப் புரியத் துவங்கியிருக்கிறது.

எனது நண்பர்களும் நலம் விரும்பிகளும் இந்த விஷயத்தால் நான் தாக்கப்படுவேன் என கவலை கொள்கிறார்கள். என் மீது பொய் வழக்கு ஏதும் எப்போது வேண்டுமானாலும் போடப்படும் என வருந்துகின்றனர். அவ்வாறு ஒரு நிலை வந்தால் ஏன் அவ்வாறு நடந்தது என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதால் இவற்றை எழுதிப் பதிவு செய்துள்ளேன்.

கடந்த சில தினங்களாக என்னுடைய அலைபேசிக்கு ஊராட்சி மன்றத் தலைவரிடமிருந்து அலைபேசி அழைப்புகள் வருகின்றன. அவ்வாறு வரக் கூடும் என்ற யூகம் இருந்ததால் நான் புதிய எண்களிலிருந்து வரும் அலைபேசி அழைப்புகளை ஏற்காமல் இருந்தேன். ஒரு எண்ணிலிருந்து தொடர்ந்து அலைபேசி அழைப்புகள் வந்ததால் ஒருமுறை எடுத்தேன். பேசியவர் தான் யார் என்பதைத் தெரிவித்தார். நான் இணைப்பைத் துண்டித்து அலைபேசியை அணைத்து வைத்து விட்டேன்.

மரங்களை வெட்டியவருக்கு தனது தரப்பை சொல்ல தனது விளக்கத்தை அளிக்க இந்திய அரசியல் சட்டம் வாய்ப்பு தருகிறது. அவ்வாறு வாய்ப்பு தரப்படுவதை நாம் வரவேற்கிறோம். ஒரு தவறோ குற்றமோ நம் கவனத்துக்கு வந்தால் அதனை அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டியது ஒரு குடிமகனின் கடமை. நான் அந்த கடமையை மட்டுமே செய்திருப்பதாக எண்ணுகிறேன். ஒரு ஊரில் 14 மரங்கள் அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவரால் வெட்டப்படும் ; முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் என அனைவரின் கவனத்துக்கும் சென்ற பின்னும் அந்த விஷயத்தில் எந்த நம்பிக்கையளிக்கும் தீர்வும் ஏற்படாது என்ற நிலை இருந்தால் அது எவ்வாறான நிலை என்பதை நாம் அனைவருமே சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நான் கிராம மக்களைத் தொடர்ந்து சந்தித்து அவர்களுடைய வீட்டுக் கொல்லையில் வயல் வரப்பில் ஆக சாத்தியமான எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடச் சொல்லி ஊக்கம் அளிப்பவன். கிராம முன்னேற்றத்தையும் சுற்றுச்சூழலையும் இணையாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பணி புரிபவன். ‘’காவிரி போற்றுதும்’’ ஒரு நுண் அமைப்பாக இருப்பினும் குறிப்பிடத்தகுந்த சில விஷயங்களை குறுகிய காலகட்டத்தில் சில கிராமங்களிலாவது செய்திருக்கிறது.

நேற்று இங்கே நல்ல மழை. அந்த மழையில் செயல் புரியும் கிராமத்துக்குச் சென்றிருந்தேன். சென்ற ஆண்டு அந்த கிராமத்தின் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக நண்பர்களின் உதவியுடன் ஆறு நாட்களுக்கு ஒரு வேளை உணவளிக்கப்பட்டது. எங்கள் பகுதிகளில் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் சமையல் என்பதை ஒருநாளைக்கு ஒரு வேளைதான் சமைக்கிறார்கள். காலை உணவாக முதல் நாள் சமைத்த அன்னத்தில் நீரூற்றி வைக்கப்பட்ட பழையன்னமாக உண்கிறார்கள். பகல் பொழுதுகளில் அதிகம் தேனீர் தான் அருந்துகிறார்கள். கையில் பால் இருப்பு பெரிதாக வைத்துக் கொள்வதில்லை என்பதால் அருகில் இருக்கும் தேனீர்க்கடையில் தேனீர் வாங்கி அருந்துகிறார்கள். அவர்கள் உணவு சமைப்பது என்பது மாலை ஐந்து மணியை ஒட்டித்தான். அப்போது உலை வைப்பார்கள். உலை கொதித்து சோறு பொங்கி மாலை 6.30 மணியை ஒட்டி உணவு தயாராகும். மழைக்காலம் என்றால் வீடு ஒழுகும். தரை ஈரமாக இருக்கும். இவ்வாறான சிக்கலால் உணவு தயாரிப்பதில் சில இடையூறுகள் அவர்களுக்கு இருக்கக் கூடும் என்பதால் செயல் புரியும் கிராமத்தின் குடிசைப் பகுதி ஒன்றில் அங்கிருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் மாலை 6 மணிக்கு சமைத்த உணவை அளித்தோம். ஆறு நாட்களுக்கு அளித்தோம். ‘’காவிரி போற்றுதும்’’ போன்ற நுண் அமைப்பால் அவ்வளவுதான் இயலும். அதனை முழுமையாகச் செய்தோம். இந்த ஆண்டு மழை கொட்டத் தொடங்கியதும் சென்ற ஆண்டு செய்ததைப் போல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. போதுமான நிதி இருப்பு இல்லை. எனினும் ஒரு துவக்கத்தை நிகழ்த்தி விட்டு இரண்டாவது அடி எடுத்து வைக்காமல் இருக்கக் கூடாது என்பதற்காக என்ன செய்வது என்று யோசித்தேன். ஒரு வாரம் அவர்கள் சமையல் செய்வதற்கு தேவையான உணவுப் பொருட்களையும் மளிகைப் பொருட்களையும் வழங்கலாம் என முடிவு செய்தேன். குடிசைப் பகுதியைப் பார்த்து மொத்தம் எத்தனை வீடுகள் என கணக்கெடுக்கச் சென்றேன். முற்றிலும் நீர் சூழ்ந்திருந்தது. என்னைக் கண்டதும் மக்களுக்கு மகிழ்ச்சி. ஒரு மனிதனைக் கண்டு இன்னொரு மனிதன் அகமகிழ்கிறான் என்பது ஒரு மகத்தான விஷயம். அனேகமாக நாளை மாலைக்குள் அந்த பகுதி முழுமைக்கும் எல்லா வீடுகளிலும் ஒரு வாரத்துக்குத் தேவையான உணவுப்பொருட்களும் மளிகைப்பொருட்களும் வழங்கப்பட்டு விடும்.

’’ஒன்று பரம்பொருள் ; நாம் அதன் மக்கள்’’ என்கிறான் நம் மூதாதையான பாரதி.  

சம்பவத்துக்கு மறுநாள்

நேற்று இரவு 7 மணி அளவில் வீட்டுக்கு வந்தேன். உணவருந்தி விட்டு முன் நேரத்திலேயே உறங்கி விட்டேன். காலை எழுந்ததும் நேற்றைய சம்பவங்களின் மனத்தொடர்ச்சி மனதில் நிகழ்ந்து கொண்டிருந்தது. இணையத்தைத் திறந்து ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே போலீஸ் ஆகியவற்றின் தொடர்பு எண்களைக் குறித்துக் கொண்டேன். சில எண்கள் இயங்கவில்லை. ஒரு எண் இயங்கியது. அது ரயில்வே போலீஸின் எண். நேற்று நடந்த விபரம் சொன்னேன். 15 நிமிடத்தில் உள்ளூர் ரயில்வே போலீஸிடமிருந்து ஃபோன் எனது அலைபேசிக்கு வந்தது. அந்த அழைப்புக்கும் பதில் அளித்தேன். அடுத்த 15 நிமிடத்தில் ரயில்வே போலீஸிடமிருந்து இன்னொரு ஃபோன். அதற்கும் பதில் சொன்னேன். 

ரயில்வேக்கு நடந்த சம்பவத்தைத் தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன். இணையத்தில் இருந்து சில தென்னக ரயில்வே பொது மேலாளர், தென்னக ரயில்வே துணை பொது மேலாளர், தென்னக ரயில்வே டிவிஷனல் மேனேஜர் ஆகியோர் மின்னஞ்சல் முகவரிகளை ஒரு காகிதத்தில் குறித்துக் கொண்டேன். நேற்று நடந்த விஷயங்களை எழுதி ரயில்வே லைனுக்கு மிக அருகில் நிகழ்ந்த தீ விபத்து என்ற கோணத்தில் இந்த விஷயத்தை விசாரிக்க வேண்டும் எனக் கோரி மூவருக்கும் ஒரே மின்னஞ்சலில் கார்பன் காப்பி  அனுப்பினேன். 

சற்று சோர்வாக இருந்தது. தீ அணைக்கப்பட்டது நிம்மதி என்றாலும் இதைப் போன்ற விஷயங்களில் இன்னும் கூடுதல் வேகம் இருந்திருக்க வேண்டும். அதுதான் பொதுமக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். சாமானியமாக பொதுமக்கள் அரசாங்கம் மீதும் அரசு அமைப்புகள் மீதும் அரசு ஊழியர்கள் மேலும் நம்பிக்கையில்லாமல் இருக்கிறார்கள் ; இதைப் போன்ற விஷயங்களில் மிக விரைவாகச் செயல்பட்டால் மட்டுமே பொதுமக்கள் அரசு என்னும் முறைமை மேல் நம்பிக்கை கொள்வார்கள். 

சி.பி.கி.ராம்.ஸ் நினைவு வந்தது. ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பிய மின்னஞ்சல் உள்ளடக்கத்தை சி.பி.கி.ராம்.ஸ் ல் புகாராகப் பதிவு செய்தேன். 

காலை உள்ளூரில் சில பணிகள் இருந்தன. அவற்றை முற்பகல் செய்தேன். பிற்பகல் 3 மணி அளவில் சிதம்பரம் புறப்பட்டேன். செல்லும் வழியில் சீர்காழியில் ரயில்வே மேம்பாலத்தின் மேல் இருந்து நேற்று தீ விபத்து ஏற்பட்ட இடத்தைப் பார்த்தேன். பின் சிதம்பரம் சென்று விட்டேன். அங்கே வேலை முடிந்து ஊர் திரும்பிய போது சீர்காழி ரயில் நிலையம் சென்று அங்கே நேற்றைய சம்பவம் குறித்து கூறலாம் எனத் தோன்றியது. ரயில் நிலையம் சென்று பிளாட்ஃபாரம் டிக்கெட் எடுத்துக் கொண்டு நிலைய மேலாளர் இருக்கும் இடம் நோக்கிச் சென்றேன். ரயில்வே ஊழியர்கள் சிலர் அங்கே இருந்தனர். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நேற்றைய சம்பவம் குறித்தும் ரயில்வே போலீஸுக்கு இன்று காலை பேசியது சி.பி.கி.ராம்.ஸ் ல் பதிவு செய்தது ஆகியவற்றைக் கூறினேன். நேற்று தீயணைப்பு வண்டியைக் கொண்டு வர எடுத்துக் கொண்ட முயற்சிகளைச் சொன்னேன். 

‘’நமது நாடு இப்போது மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அரசாங்கங்களின் இயங்குமுறையில் குடிமக்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது மிகவும் முக்கியமானது. நம் வளர்ச்சியைப் பொறுக்காத எதிரி நாடுகள் நம் நாட்டிற்கு மேற்கிலும் கிழக்கிலும் இருக்கிறார்கள். இஸ்ரேலைச் சுற்றியிருக்கும் அத்தனை அண்டை நாடுகளுமே இஸ்ரேல் மேல் பகைமை கொண்டவை. இஸ்ரேல் மீது பயங்கரவாதத்தை ஏவுபவை. இஸ்ரேல் தன் குடிமக்களுக்கு குடிமைப் பண்பையும் எச்சரிக்கை உணர்வையும் இயல்பாக கல்வி மூலம் தனது விரிவான பரப்புரை மூலம் ஏற்படுத்துகிறது. இஸ்ரேலியர்களின் குடிமை உணர்வே அந்நாட்டின் முதன்மைப் பாதுகாப்பு. மாறுபாடாக எதையேனும் பொது இடங்களில் உணர்ந்தால் அதனை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்னும் குணம் நம் நாட்டு மக்களுக்கு வர வேண்டும். இந்த உணர்வின் மூலம் பல விபத்துகளைத் தடுக்க முடியும் ; பல சதிவேலைகளை பல பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்க முடியும்’’ என்றேன். 

அனைவருக்கும் மகிழ்ச்சி. அங்கிருந்து வீடு திரும்பினேன். மின்னஞ்சலைத் திறந்து பார்த்த போது பொது மேலாளருக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சல் மேலும் சிலருக்கு ஃபார்வர்டு செய்யப்பட்டிருந்தது ; எனக்கு சிசி அனுப்பப்பட்டிருந்தது.  

Wednesday, 8 July 2026

பொறுப்பின்மையின் உச்சம்

இன்று ஒரு பணி நிமித்தம் சீர்காழி சென்று விட்டு சீர்காழி புறவழிச்சாலையில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். புறவழிச் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தைக் கடக்கத் தொடங்கினேன். மேம்பாலத்துக்குக் கீழே பல ஏக்கரில் பரவிக் கடந்த சீமைக்கருவை மரங்களின் கணிசமான பகுதி பற்றி எரிந்து கரும்புகை முழு மேம்பாலத்தையும் நிறைத்திருந்தது.  நீளமான அந்த மேம்பாலத்தின் மேல் புகையைக் குறித்து சாமானியமாக எண்ணி 25 சதவீத தூரத்தைக் கடந்திருப்பேன். அப்போது உடல் அந்தக் கரும்புகை அனல்புகையாகவும் இருந்து அனல் கக்குவதை உணர்ந்தது. உடல் முழுவதையும் அனல் வெம்மை சுட்டது. காட்டுத்தீ என்பது என்ன என்பதையும் காட்டுத்தீயில் மனிதர்களும் பிராணிகளும் எவ்விதம் உயிரிழக்கிறார்கள் என்பதையும் அப்போது உணர்ந்தேன். காட்டுத்தீயின் வெம்மை அதன் புகையிலும் இருக்கும். அந்த வெம்மையை தாங்க இயலாமல் தோல் வேகும். புகை நுரையீரலை நிரப்பி உடலுக்கு பிராணவாயு இல்லாமல் ஆக்கி மூச்சுத்திணறச் செய்து சாவைக் கொண்டு வரும். வண்டியை வேகமெடுத்தேன். ஒரு கணம் தொடர்ந்து செல்லாமல் வந்த பாதையில் திரும்பி விடலாமா என எண்ணினேன். மனதைத் திடப்படுத்திக் கொண்டு அந்த மேம்பாலத்தைக் கடந்து விட்டேன். அந்த மேம்பாலத்தை மணிக்கு 40 கி.மீ வேகத்தில் கடந்தால் 2 லிருந்து 3 நிமிடங்களில் கடக்க முடியும். புகை மண்டியிருக்கும் சூழலில் இன்னும் கூடுதல் நேரமாகலாம். எனக்கு மூச்சுத் திணறி இருமல் வந்தது. சற்றுத் தள்ளி வந்து புகை மண்டலத்தைக் கண்டேன். நேரம் அப்போது மாலை 3 மணி இருக்கும். புகை மண்டலத்தைக் கடந்து வந்தவுடன் எனது அலைபேசியை எடுத்து 108 என்ற எண்ணுக்கு ஃபோன் செய்தேன். சாலை விபத்துகள் நிகழ்ந்திருக்கும் இடங்களைக் கடக்கும் போது பலமுறை 108 என்ற எண்ணுக்கு ஃபோன் செய்திருக்கிறேன். ஆம்புலன்ஸ் வந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறது. 108க்கு அழைத்தால் அழைப்பை ஏற்பவர்கள் சாலை விபத்தா அல்லது தீ விபத்தா அல்லது காவல்துறை உதவி வேண்டுமா எதனுடன் தொடர்பு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்பார்கள். ஆனால் இந்த முறை அப்படிக் கேட்கவில்லை. நானாக தீ விபத்து என்று சொன்னேன். அழைப்பை ஏற்றவர் சற்று குழப்பமடைந்ததாக உணர்ந்தேன். எனினும் அவர் எந்த மாவட்டம் எந்த ஊர் என்று கேட்டு விட்டு தீயணைப்பு நிலையத்துக்கு உங்கள் எண்ணைக் கொடுத்து விடுகிறோம் ; அவர்கள் உங்களை அழைப்பார்கள் என்று சொன்னார்கள். ஓரிரு நிமிடம் காத்திருந்தேன். அழைப்பு ஏதும் வரவில்லை. எனக்கு அந்த ஊரின் தீயணைப்பு நிலையம் எங்கேயிருக்கும் என்பது தெரியும். அங்கே விரையத் தொடங்கினேன். அப்போது எரிவாயு நிரம்பிய சரக்கு வாகனம் ஒன்று அந்த மேம்பாலத்தைக் கடக்கத் தொடங்கியது. அனல் நிரம்பிய புகை மண்டலத்தில் எரிவாயு சிலிண்டர்கள் சூடானால் என்ன விபரீதம் நிகழுமோ என்ற அச்சம் என்னைச் சூழ்ந்தது. இன்னும் எத்தனை வாகனங்கள் வருமோ என்ற அச்சம். கைக்குழந்தைகளும் சிறு குழந்தைகளும் காரிலோ பேருந்திலோ பயணித்து இந்தப் பாலத்தைக் கடக்க நேர்ந்து மூச்சுத் திணறினால் என்ன ஆகும் என்ற அச்சம். விரைந்து சென்றேன். 108 அழைத்ததையும் அவர்கள் தீயணைப்பு நிலையம் என்னைத் தொடர்பு கொள்ளும் எனக் கூறியதையும் கூறினேன். அவர்கள் அவ்விதம் அழைப்பு ஏதும் வரவில்லை எனக் கூறியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர்களிடம் அங்கிருக்கும் சூழ்நிலையை நானே விளக்கினேன். அங்கே 4 பேர் இருந்தனர். விபரம் கேட்டுக் கொண்டார்களே தவிர நடவடிக்கையில் உடனடியாக இறங்கியதாகத் தெரியவில்லை. என்னுடைய பெயரையும் முகவரியையும் கேட்டு எழுதிக் கொண்டார்கள். எழுதியவர் ‘’நீங்க வெளியூரா?’’ என்றார். எனது நண்பன் ஒருவனுக்கு ஃபோன் செய்து ‘’மிக அவசரம்’’ எனக் கூறி இணையத்தில் சீர்காழி காவல்துறையின் எண் எது இருந்தாலும் அனுப்பு என்று கூறினேன். சீர்காழி துணை காவல்துறை கண்காணிப்பாளர் எண்ணை அனுப்பினான். அந்த எண்ணுக்கு ஃபோன் செய்தேன். முழு சுற்றும் ஒலித்து ஓய்ந்தது. மீட்டிங்கில் இருக்கக் கூடும் என எண்ணினேன். நேராக சீர்காழி காவல்நிலையத்துக்குச் சென்று அதுவரை நடந்தது அனைத்தையும் கூறினேன். அப்போது அங்கே இரண்டு காவலர்கள் இருந்தனர். ஒருவர் ஒரு வழக்கு குறித்து ஒரு வெள்ளைக் காகிதத்தை நீளவாக்கில் நான்காக மடித்து சில பெயர்களையும் அந்தப் பெயர்களை இணைக்கும் காரணிகளையும் அம்புக்குறி போட்டு எழுதிக் கொண்டிருந்தார். இன்னொருவர் அலைபேசியை எடுத்து ஃபோன் செய்தார். இந்த தீ விபத்து தொடர்பாகத்தான் யாருக்கோ தகவல் தெரிவிக்கிறார் என எண்ணினேன். 

‘’ஐயா ! அந்த பொண்ணு புதுசா கல்யாணம் ஆன பொண்ணுங்க ஐயா. கல்யாணம் ஆகி ரெண்டு மாசம் தான் ஆகுது. புருஷன் திட்றான். மாமியார் திட்றாங்கன்னு சொல்லுது ஐயா. யாரோ சிங்கப்பெண்-ல புகார் கொடுங்க சொல்லியிருக்காங்க. அதான் ஐயா விஷயம். சி எஸ் ஆர் மட்டும் போட்ருக்கோம். அந்த நம்பர் சொல்றன் ஐயா’’ என்ற படி ஒரு எண்ணைக் கூறினார். 

நான் அங்கிருந்து நேராக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்றேன். வருவாய் கோட்டாட்சியர் இருந்தார். அவரிடம் விஷயத்தை முழுக்கக் கூறினேன். ‘’அந்த ஏரியா வி ஏ ஓ வை அனுப்பி பாக்கச் சொல்றன்’’ என்றார். 

‘’சார் ! உங்க கிட்ட போலிஸ் டி எஸ் பி நம்பர் இருந்தா கொடுங்க. என்கிட்ட ஒரு நம்பர் இருக்கு. ஆனா அது ஃபுல் ரிங் ஆகி கட் ஆகுது ‘’ என்றேன். 

கையைக் காட்டி ‘’ரொம்ப பக்கத்துல தான் டி எஸ் பி ஆஃபிஸ் இருக்கு. அங்க போய் சொல்லுங்க ‘’ என்றார். 

நான் டி எஸ் பி ஆஃபிஸுக்கு சென்றேன். அங்கே ஒருவர் இருந்தார். அவரிடம் விஷயத்தைக் கூறினேன். ‘’சார் ! மைக்ல ஹை வே பேட்ரோல் கூப்பிட்டு அந்த ஸ்பாட்டுக்கு போகச் சொல்லுங்க. நான் மிகைப்படுத்தி சொல்லலங்கறது அப்ப உங்களுக்குத் தெரியும்’’ என்றேன். 

‘’ஃபயர் சர்வீஸ்ல சொல்லீட்டிங்கள்ல ; அவங்க போவாங்க ‘’ என்றார். 

மீண்டும் தீயணைப்புத்துறை அலுவலகத்துக்குச் சென்றேன். பிரதான சாலையிலிருந்து பிரிந்து செல்லும் பக்கவாட்டுச் சாலையின் உள்ளே அந்த அலுவலகம் இருக்கிறது. பிரதான சாலையிலிருந்து பக்கவாட்டுச் சாலை பிரியும் இடத்தில் ஒரு இஸ்திரி கடை இருந்தது. அந்தக் கடைக்காரரிடம் என்னுடைய டூ-வீலரில் இருந்தவாறே ‘’ கொஞ்ச நேரம் முன்னாடி ஃபயர் சர்வீஸ் வண்டி இந்தப் பக்கம் போனதா ?’’ எனக் கேட்டேன். அவர் உறுதியாக ‘’இல்லை’’ எனத் தலையாட்டினார். அதன் பின் பக்கவாட்டுச் சாலையின் உள்ளே சென்றேன். அவர்கள் புறப்படும் முஸ்தீபில் இல்லை. நான் திரும்பி வருவேன் என்றும் எதிர்பார்க்கவில்லை. இருந்த 4 பேரில் சீனியரான ஒருவர் ‘’டூ வீலரை எடு. ஸ்பாட்டை பார்த்து விட்டு வருவோம்’’ என்றார். அந்த நேரத்தில் டி எஸ் பி என்னுடைய மிஸ்டு கால் பார்த்து விட்டு ஃபோன் செய்தார். அவரிடம் சுருக்கமாக விஷயத்தைக் கூறி விட்டு ‘’சார் நான் மிகைப்படுத்தி சொல்லல. நிலைமை சீரியஸ். அதனால தான் எல்லா ஆஃபிஸ்க்கும் தகவல் சொல்றன். கைக்குழந்தைகளும் சின்ன குழந்தைகளும் அந்த பாலத்தை கிராஸ் செஞ்சா நிச்சயம் மூச்சுத் திணறும். எனக்கே மூச்சு திணறிடுச்சு. ஒரு சாமானியப் பிரஜையா இதை அரசாங்க அதிகாரிகளுக்கு சொல்ல வேண்டியது எனது கடமை. அதைத்தான் நான் செஞ்சிருக்கன். தேங்க்யூ சார்’’ எனக் கூறினேன். 

டூ வீலரில் ஃபயர் சர்வீஸ் ஊழியர்கள் செல்லையில் நானும் பின் தொடர்ந்து சென்றேன். வந்து பார்த்த அந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி.  அவர்கள் நான் கூறிய விஷயம் ஒரு சாமானியனின் பார்வையில் மிகைப்படுத்தப்பட்டது என்றே எண்ணினார்கள். நேரில் பார்த்த போது விஷயம் சீரியஸ் தான் என புரிந்து கொண்டார்கள். சீனியராக இருந்தவர் சட்டென தன் ஜூனியருக்கு எவ்விதம் மேம்பாலத்திலிருந்து கீழே இறங்க வேண்டும் ; தண்ணீர் ஹோஸ் எப்படி லே அவுட் செய்து கொள்ள வேண்டும் என விளக்கினார். ஆஃபிஸுக்கு ஃபோன் செய்து தீயணைப்பு வாகனத்தை வரச் சொன்னார்கள். கிராம நிர்வாக அலுவலரும் அவரது உதவியாளரும் வந்து வருவாய்த்துறைக்கு செய்தி கூறத் தொடங்கினர். அந்த நேரத்தில் அந்த மேம்பாலத்தின் கீழ் 3 ரயில்கள் வடக்கும் தெற்குமாக கடந்து சென்றன. ஸ்டேஷன் மாஸ்டருக்குத் தகவல் தெரியுமா என யோசித்தேன். அவரிடமும் சொல்லி விட்டு வருவோமா என எண்ணினேன். ஊரில் இருந்த பத்திரிக்கை நிருபருக்கு ஃபோன் செய்து அங்கேயிருக்கும் பத்திரிக்கை நிருபர்களுக்கு ஃபோன் செய்ய வேண்டும் என்று சொன்னேன். எண்களை எஸ். எம். எஸ் செய்தார். அவர்கள் இரண்டு பேர் வந்தனர். என் ஹெச் எ ஐ என்பட்டும் தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு ஆணைய பணியாளர்கள் 4 பேர் நெடுஞ்சாலையில் தீயணைப்பு வாகனம் நிற்கிறது என வாகன ஓட்டிகள் சொன்ன தகவல் அடிப்படையில் அவர்களும் வந்தனர். 

அந்தத் தீ நெடிந்து வளர்த்திருந்த 11 பனை மரங்களை எரியச் செய்து கருக்கியிருந்ததைக் கண்டவர்களின் உள்ளம் வேதனைப்பட்டது. 

3.15 அளவில் நான் தகவல் தெரிவிக்க முயற்சி எடுத்ததிலிருந்து 3 மணி நேரம் இந்த விஷயம் நீடித்து 6.15க்கு தீ முழுமையாக அணைக்கப்பட்டு இந்த விஷயம் நிறைவுற்றது. தீயணைப்பு வாகனம் திரும்பிச் சென்றது. வருவாய்த்துறை ஊழியர்கள் திரும்பிச் சென்றனர். நெடுஞ்சாலை பாதுகாப்பு ஆணைய ஊழியர்கள் திரும்பிச் சென்றனர். நிருபர்களும் திரும்பிச் சென்றனர். அனைவரும் சென்ற பின்பு நானும் ஊர் நோக்கி புறப்பட்டேன். 

***

அரசு என்பது பிரும்மாண்டமான ஓர் அமைப்பு. அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு பணி இருக்கிறது. ஒவ்வொரு துறைக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது. மேற்படி விஷயங்கள் வாஸ்தவமான விஷயங்கள். ஒவ்வொரு முறையும் ஜனநாயக அரசமைப்பின் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையைக் கூறி விட்டே விமர்சனங்களை முன்வைக்கிறேன். இன்றைய விஷயத்தில் எவை சற்று சீக்கிரம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பதைக் கூறுகிறேன். 

(1) 108 எண் சேவை இந்த தீ விபத்து குறித்த தகவலை சீர்காழி தீயணைப்பு நிலையத்துக்குத் தெரிவித்ததா என்பது விசாரணைக்குரிய விஷயம். 

(அ) அவர்கள் தெரிவிக்காமல் இருந்திருந்தால் அது பெரிய பிழை. 

(ஆ) அவர்கள் தகவல் தெரிவித்து அதனை தீயணைப்பு நிலையம் சாதாரணமாக எடுத்திருந்தால் அது இன்னும் பெரிய பிழை. 

(2) முதல் முறை நான் தீயணைப்பு நிலையம் சென்ற போதே அவர்கள் குறைந்தபட்சமாக ஒரு டூ வீலரில் ஒருவரையோ அல்லது இரண்டு பேரையோ அனுப்பி நிலைமையை மதிப்பிட்டிருக்கலாம். அவ்விதம் நிகழ்ந்திருந்தால் தீயணைப்பு நடவடிக்கைகள் 3.35 மணி அளவில் துவங்கியிருக்கும். அவ்விதம் நிகழாமல் போனதால் தீயணைப்பு நடவடிக்கைகள் தொடங்க 4.45 ஆகி விட்டது. 

(3) காவல் துறை தங்கள் வயர்லெஸ்ஸில் புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலம் அருகில் தீ விபத்து எனக் கூறி ஹைவே பேட்ரோல் வாகனத்தை அனுப்பியிருந்தாலும் நிலைமை என்ன என்பது முன்னரே மதிப்பிடப்பட்டிருக்கும். 

அதிர்ஷ்டவசமாக துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை. ஆனால் அவ்விதம் நிகழ பெரும் வாய்ப்பு இந்த சம்பவத்தில் இருந்தது. வழக்கத்துக்கு மாறான விஷயங்கள் நிகழ்வதாக அரசின் கவனத்துக்கு ஒரு விஷயம் கொண்டு வரப்படும் போது அதனை உள்வாங்கும் பொறுப்பில் இருப்பவர்கள் கூடுதல் பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும். சக அரசுத் துறைகளுக்குள் கூடுதல் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 

***

இந்த சம்பவங்களின் முதல் பாதியில் அரசு அலுவலகங்களின் பொறுப்பின்மை வெளிப்பட்டிருக்கிறது. எனவே இந்தப் பதிவுக்கு ‘’பொறுப்பின்மையின் உச்சம்’’ எனத் தலைப்பிட்டேன். 

***

சம்பவத்தில் முழுக்க உடனிருந்தவன் என்ற முறையில் தீயணைப்பு வாகனம் வந்தவுடன் விரைந்து பணியாற்றி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் என் ந்ன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்ற அரசுத்துறை ஊழியர்களுக்கும் நன்றி. பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி. 

***

எதிர்பார்ப்புகள் : 

(1) இந்தத் தீ விபத்து மனிதர்களால் உருவாக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்பே அதிகம். அதுவும் மது அருந்தியவர்களால் நிகழ்ந்திருக்க வாய்ப்பு அதிகம். இந்தத் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். 

(2) பனை தமிழகத்தின் மாநில மரம் ஆகும்.தமிழக அரசு விதிமுறைகள் படி தனியார் தன் சொந்த இடத்தில் இருக்கும் பனை மரத்தை வெட்ட வேண்டும் என்றால் கூட அரசிடம் அனுமதி பெற்றே வெட்ட வேண்டும். இல்லையென்றால் அது குற்றம் என அறிவித்துள்ளது தமிழக அரசு. இந்த சம்பவத்தில் 11 பனை மரங்கள் எரிந்து போயுள்ளன. வருவாய்த்துறை இந்த கோணத்தில் விசாரணை நடத்தி 11 பனை மரங்கள் எரிந்து போகக் காரணமானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு அபராதமும் தண்டனையும் விதிக்க வேண்டும். 

(3) புற வழிச் சாலையில் பலநூறு பேர் போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் சாலையில் அந்தச் சாலையில் பயணிப்போர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சீமைக்கருவேலக் காட்டில் தீ வைத்தவர்களை காவல்துறை விசாரணை மூலம் கண்டறிந்து நீதியின் முன் நிறுத்த வேண்டும். 

Tuesday, 7 July 2026

என்ன மாற்றம் தேவை?

பிரிட்டிஷார் நம்மை ஆண்டது என்பதன் நேரடி அர்த்தம் நம் நாட்டு மக்களிடம் வரிவசூல் செய்தார்கள் என்பதே. நிலவரியே பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிரதான வருவாய். இன்னொரு விதத்தில் அவர்கள் நாட்டில் உற்பத்தியான பண்டங்களை நம் நாட்டில் விற்பனை செய்து லாபம் ஈட்டினர். அவர்கள் நாட்டின் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை நம் நாட்டில் குறைந்த விலைக்கு வாங்கி அதிலும் லாபம் அடைந்தனர். ஒரு விதமான கூட்டுக் கொள்ளை அது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நம் நாட்டில் எழுத்தறிவு 10 சதவீதம் என்ற அளவில் இருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் காகிதக் கோப்புகளால் ஆனது என்பதால் எழுத்தறிவு பெற்ற கல்வியறிவு பெற்றிருக்கும் சிலரே 2 சதவீதம் மக்கள்தொகை வீதத்தில் இருக்கும் அரசு அலுவலகங்களை அணுகவே முடியும் என்னும் நிலை. எனவே சாமானியன் அரசு அலுவலகத்தை அணுகுவது என்பதே அரிதான ஒன்று என்னும் நிலை. எனவே அரசு ஊழியர்கள் குறுங்குழு மனப்பான்மையுடன் செயல்படுவார்கள். நாடு சுதந்திரம் பெற்ற பின்னும் அரசு ஊழியர்களுக்கு இந்த குறுங்குழு மனநிலை மாறவில்லை. 

தமிழகத்தில் நீங்கள் எந்த அரசு அலுவலகத்துக்குச் சென்றாலும் உங்கள் வருகையை விரும்பாத முகபாவத்தையும் பேச்சையும் செயல்களையுமே நீங்கள் வாழ்நாள் முழுக்க எதிர்கொண்டிருப்பீர்கள். அனேகமாக வருகை புரிந்த எவரையும் ‘’தங்கள் வருகையின் நோக்கத்தை அறியலாமா?’’ என மரியாதையுடன் கேட்கப்பட்ட ஒரு நிகழ்வைக் கூட வாழ்நாளில் ஒருநாளும் சந்தித்திராதவர்களே 99.99 சதவீதம் இருப்பார்கள். அதற்குக் காரணம் அங்கே நிலவும் ஊழல் மனப்பான்மை. ஒருவரிடம் சகஜமாகப் பேசினால் அவரை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவது கடினம். மிகக் கடினமான சொற்களில் மிகக் குறைவாகப் பேசினால் மட்டுமே சாமானியக் குடிமகனை உளவியல்ரீதியாக அச்சுறுத்த முடியும்.இதனை அத்தனை அரசு அலுவலகங்களும் செய்வதைக் காணலாம். 

நாட்டின் வரிவிதிப்பில் எவ்வளவோ மாற்றம் வந்து விட்டது. நிலவரி மட்டுமே பிரதான வருவாய் என்னும் நிலை இப்போது இல்லை. ‘’வறுமையை ஒழிப்போம்’’ எனக் கூறிய இந்திரா காந்தி சாமானிய மக்களிடமிருந்தே பெரும் வரியை வாங்கினார். ‘’கார்பொரேட் வரி’’ என்னும் வரியைக் கொண்டு வந்து நாட்டின் நிதி நிலையை உயர்த்தியது காங்கிரஸ் பிரதமரான நரசிம்ம ராவ் ; இந்திரா அந்த முடிவை எடுக்கவில்லை. இப்போது ஜி.எஸ்.டி நடப்பில் உள்ளது. சாமானிய மக்களின் நுகர்விலிருந்து ஜி.எஸ்.டி கிடைக்கிறது. அவர்களே அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை வரியாக அளிக்கும் எஜமானர்கள். அரசு ஊழியர்கள் இந்த பொருளாதாரக் கணக்கைப் புரிந்து கொள்வது இல்லை. அரசு அதிகாரிகளும் புரிந்து கொள்ள வேண்டும். சாமானிய மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.  

Sunday, 5 July 2026

என் நிலம் என் மக்கள்

கால்பந்து ஆடும் சிறுவன்

எங்கள் பகுதியில் ஒரு விவசாயக் குடும்பம் இருக்கிறது. அந்த விவசாயக் குடும்பத்தின் தலைவர் எனது நண்பர். சென்ற ஆண்டு எதிர்பாராமல் நோய்வாய்ப்பட்டு சில நாட்களில் இயற்கை எய்தினார். 

அவரது மகனுக்கு 18 வயது ஆகிறது. பன்னிரண்டாம் வகுப்பு நிறைவு செய்துள்ளான். காமர்ஸ் அக்கவுண்டன்சி பிரிவு. தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கிறான். IELTS தேர்வில் 6.5 மதிப்பெண் பெற்றிருக்கிறான். 

18 வயது ஆகியிருக்கும் அந்த இளைஞன் தனது 6 வயதிலிருந்து 12 வருடமாக தினமும் காலை 3 மணி நேரம் மாலை 3 மணி நேரம் என தினமும் 6 மணி நேரம் கால்பந்து வீரனாகப் பயிற்சி எடுத்தான். பள்ளிப்பாடங்களில் எப்போதும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வந்ததால் அவனது கால்பந்து ஆர்வத்துக்கு வீட்டில் யாரும் தடை ஏற்படுத்தவில்லை. அவன் சிறுவனாயிருந்த நாட்களிலிருந்தே அவனை எங்கள் பகுதிக்கு அருகில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் மட்டுமே காண முடியும். நம் சூழலில் ஒரு சிறுவன் தன்னார்வத்தில் 6 வயதிலிருந்து தினமும் 6 மணி நேரம் 12 ஆண்டுகள் பயிற்சி எடுப்பது என்பது அபூர்வமானது என்பதை எவரும் உணர முடியும். வாரத்தின் ஏழு நாட்களும் வருடத்தின் 365 நாட்களும் அவன் பயிற்சி நடந்து கொண்டேயிருந்தது ; இருக்கிறது. 

அவன் தனது கால்பந்து ஆர்வத்தை மேம்படுத்திக் கொள்ள ஐரோப்பா செல்ல விரும்புகிறான். சில ஐரோப்பிய பல்கலைக்கழகங்களைத் தொடர்பு கொண்டுள்ளான். IELTS மதிப்பெண் நன்றாக இருப்பதால் அவனுக்கு  ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் அட்மிஷன் கிடைக்கக் கூடும். 

இங்கே ஊரில் மாநகரங்கள் போல கல்விக்காக வெளிநாடு செல்ல ஆலோசனை கூறும் மையங்கள் இல்லை.  

விசா கிடைக்க கடந்த 2 ஆண்டுகளின் வங்கிப் பரிவர்த்தனைகள், கடந்த 3 ஆண்டுகளின் வருமான வரித்தாக்கல் ஆகிய விஷயங்கள் தேவைப்படுகின்றன. நண்பரின் குடும்பம் விவசாயக் குடும்பம் என்பதால் வங்கியில் குறைந்தபட்சமான வரவு செலவு மட்டுமே உள்ளது. விவசாயத் தொழிலுக்கு வருமான வரி தாக்கல் தேவையில்லை என்பதால் அவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 

15 நாட்களுக்கு முன் அந்த சிறுவன் என்னிடம் உதவி கேட்டு வந்தான். அவனுக்குத் தேவைப்படும் உதவி விசாவை உறுதி செய்வதில் தான். எனக்கு இந்த விஷயம் புதிது. என்னால் இயன்ற உதவியைச் செய்கிறேன் என அச்சிறுவனிடம் கூறியிருக்கிறேன். 

அசாத்தியத்தை சாத்தியமாக்குபவர் : 

கால்பந்தில் ஆர்வம் கொண்ட சிறுவனுக்காக என்ன உதவி செய்ய முடியும் என யோசித்தேன். ஏ ஐ யிடம் இந்த விஷயத்தில் என்ன செய்ய முடியும் என்று கேட்டேன். ஏ ஐ சென்னையில் வெளிநாட்டுப் படிப்புக்கு வழிகாட்டும் ஒரு நிறுவனத்தைப் பரிந்துரைத்தது. அந்த நிறுவனத்தின் தொடர்பு எண்ணுக்குப் பேசினேன். அந்த அழைப்பை ஏற்றவர் ஓர் இளைஞர். அவரிடம் விபரம் கூறினேன். சிறுவனின் 12ம் வகுப்பு மதிப்பெண், ஐ இ எல் டி எஸ் மதிப்பெண் ஆகிய விபரங்களைக் கேட்டுக் கொண்டார். அவர் விபரங்களைக் கேட்டுக் கொண்ட விதத்திலும் உள்வாங்கிக் கொண்ட விதத்திலும் மிகச் சிறப்பான முதிர்ச்சியும் பக்குவமும் வெளிப்படுவதை உணர்ந்தேன். சிறுவனின் ஐரோப்பா பயணம் அந்த இளைஞரின் வழிகாட்டலில் சிறப்பாக நிகழும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. கால்பந்து ஆடும் சிறுவனுடன் சென்று சென்னையில் அந்த இளைஞரைச் சந்தித்தால் விஷயம் வேகம் எடுக்கும் என எண்ணினேன். இருப்பினும் நான் எண்ணிய வண்ணம் உடன் நானும் சிறுவனும் சென்னை செல்ல வாய்ப்பு அமையவில்லை. சென்னை இளைஞர் எனக்கு சில முறை ஃபோன் செய்தார். நான் இரு சக்கர வாகனப் பயணத்தில் இருந்ததால் அலைபேசி அழைப்பை ஏற்க முடியவில்லை. தகவல் தொடர்பு இடைவெளி ஏற்பட்டது. சில நாட்களுக்குப் பின் சிறுவன் என்னிடம் வந்தான். மீண்டும் அந்த இளைஞரைத் தொடர்பு கொண்டு விபரம் கூறினேன். மறுநாளே சென்னையில் நேரில் வந்து சந்திக்கிறேன் என்று கூறினேன். 

சிறுவன் ஐரோப்பா செல்ல வேண்டும் என விரும்புவதே அங்கே கால்பந்து ஆட வேண்டும் என்பதற்காகத்தான். ஐரோப்பா கால்பந்துக்கு பிரசித்தி பெற்ற கண்டம். சிறுவனுக்கு சேர்க்கை அளிக்கக்கூடிய கல்லூரி கால்பந்து கிளப்களுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது. இந்த விஷயத்தை இளைஞருக்கு ஃபோனில் விளக்கினேன். 

மறுநாள் நேரில் சந்தித்தேன். சிறுவனின் தேவையை நிறைவேற்றும் கல்லூரியை அவர் தேர்ந்தெடுத்து விட்டார். அந்தச் சிறுவனுக்கு அட்மிஷன் கிடைக்கும் விதமாக இண்டர்வியூவுக்கு தயார் செய்யும் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டார். விசா நடவடிக்கைகளிலும் முழுமையாக உடனிருப்பதாகக் கூறினார். எனக்குப் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. 

சில முறை அலைபேசியில் உரையாடிய வகையில் அவரது வயது என நான் கணித்திருந்ததற்கும் மிகக் குறைவான வயதுடைய இளைஞராயிருந்தார். எந்த ஒரு விஷயத்திலும் அதன் தீர்வுகளும் அதனை அடைவதற்கான வழிமுறைகளுமே அவர் பார்வையில் இருந்தன. முற்றிலும் நேர்மறையானவராகவும் நம்பிக்கையை அளிப்பவராகவும் இருந்தார். 

ஊருக்கு வந்து சிறுவனிடன் அவரது எண்ணை அளித்து அவர் கூறும் குறிப்புகளின் படி செயல்படு எனக் கூறினேன். 

விஷயம் சரியான திசையில் நகர்கிறது. 

இராமாயணத்தில் கம்பன் அனுமனை ‘’சொல்லின் செல்வன்’’ என்கிறான். வால்மீகி அனுமனை ‘’அசாத்தியத்தை சாத்தியமாக்குபவன்’’ என்கிறார். இந்த இரண்டு மொழிகளும் அந்த இளைஞருக்குப் பொருந்தும். சீதை அனுமனை ‘’இன்றென இருத்தி’’ என வாழ்த்துகிறார். அந்த வாழ்த்து அந்த இளைஞருக்கும் உரியது.   

என் நிலம் என் மக்கள்

தற்செயலாக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் குறித்தும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கை குறித்தும் தரவுகள் சேகரித்து அறிய கால்பந்து ஆடும் சிறுவன் முன்வைத்த கோரிக்கை உதவியது. ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் பல மொழிகள் பேசும் மாணவர்களை தம் கல்வி நிலையங்கள் நோக்கி வரவேற்பதைக் கண்டேன். கல்வி பயில வேண்டும் என விரும்பும் மாணவர்களுக்கு அவர்கள் பலவிதமான வசதிகளை ஏற்படுத்தித் தருவதைக் கண்டேன். 

நம் நாடு உலகுக்குக் கல்வி அளிக்கும் பணியை 2500 ஆண்டுகளாக செய்திருக்கிறது. வேதக் கல்வி, கலைகள், பொருளியல், இலக்கியம், தத்துவம் என பல விஷயங்களை உலக மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறது. 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வேதம் எவ்விதம் பயிலப்பட்டதோ அதே விதமாக இன்றும் மாணவர்களால் வேதம் பயிலப்படுகிறது. கல்வி பயிற்றுவிக்கும் முறைகளில் இது ஓர் அற்புதம் ஆகும். இந்த அற்புதத் தன்மைக்காகவேனும் வேதக்கல்வி உலக மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். நம் நாட்டில் உலக மாணவர்கள் வேதக்கல்வி பயில பல வாய்ப்புகள் ஏற்படுத்தித் தர வேண்டும். ஒரு கல்வியாக வேதம், உபநிடதங்கள், பௌத்தம், சமணம் ஆகியவை உலகில் ஏற்படுத்த சாத்தியம் உள்ள அமைதிக்கும் நல்லிணக்கத்துக்கும் எதையும் ஒப்பிட முடியாது. 

சமஸ்கிருத மொழிக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பொருள் ஒதுக்குகிறது என புகார் தெரிவிக்கும் திராவிடக் கட்சிகளை எண்ணிப் பார்த்தேன். கல்விக்கும் அவர்களுக்கும் எவ்வளவு தூரம் என்பதை எண்ணிய போது திகைப்பு ஏற்பட்டது. 

நம் நாட்டின் பாரம்பர்ய ஞானம் குறித்த அறிமுகமும் நம் நாட்டின் பாரம்பர்ய வாழ்க்கை முறை குறித்த அறிமுகமும் உலக மக்களுக்கு ஏற்படும் போது மட்டுமே உலகம் அமைதியாக வாழும்.  

 

Saturday, 4 July 2026

செல்வ நிலையம் : ஒரு மாமனிதனின் கதை (மறுபிரசுரம்)

 இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் மதுரையில் ஒரு மனிதன் பிறக்கிறான். தனது இளம் வயதில் ‘’வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்ப’’ கப்பலேறி மலேசியா செல்கிறான். பொருள் ஈட்டுகிறான். ஈட்டிய பொருளுடன் ஊருக்கு வந்து விட்டு மீண்டும் மலேசியா செல்கிறான். ஊழின் மாயக்கரம் அவனையும் அவன் உடனிருந்தோரையும் அவன் வாழ்ந்த நாட்டின் மக்களையும் வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையே அலைக்கழிக்கிறது. தனது வணிக நிறுவனத்தின் உரிமையாளரிடம் கப்பலில் நாடு திரும்ப அனுமதி கேட்கிறான் அந்த மனிதன். உரிமையாளர் அனுமதி அளிக்க மறுக்கிறார். நிகழ்த்த விரும்பிய பயணம் நிகழாமலேயே போகிறது. கப்பலில் பயணிக்காத அந்த மனிதனுக்கு ஊழ் நீண்ட வாழ்நாளை அளிக்க இருந்தது அந்த மனிதனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. ஒரு சில நாட்களில் தெரிய வந்தது. அவன் பயணிக்க இருந்த கப்பல் நடுக்கடலில் ஜப்பான் விமானப்படைத்  தாக்குதலுக்கு ஆளாகி அதில் பயணித்த ஒருவருமே உயிர்பிழைக்கவில்லை. 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ‘’இந்திய தேசிய ராணுவ’’த்தில் தன்னை இணைத்துக் கொண்ட அந்த மனிதனுக்கு நேதாஜியுடன் மிக நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்திய தேசிய ராணுவத்தின் மிக முக்கியமான நிர்வாகப் பொறுப்பை ஏற்று சிறப்பாக நடத்தித் தருகிறார் அந்த மனிதர். 

உலக அரசியலின் பல்வேறு திருப்பங்களுக்குப் பின் இரண்டாம் உலகப் போர் முடிவடைகிறது. அந்த மனிதர் ஊர் திரும்புகிறார். களங்கமற்ற ஒரு மாவீரனுடன் உடனிருந்தவர். வாழ்வும் சாவும் முட்டி மோதும் படுகளங்களைக் கடந்து வந்தவர். சிவில் வாழ்க்கையில் தன்னை முழுமையாகப் பொருத்திக் கொள்கிறார். 

அவரது வீட்டின் பெயர் ‘’செல்வ நிலையம்’’. ‘’ஸ்ரீநிவாஸம்’’ என்பதனை அவர் செல்வ நிலையம் என தமிழில் பெயரிட்டிருக்கலாம். அவர் வீட்டின் முன்னே இரு வேப்ப மரங்கள். அந்த வேப்ப மரம் நூற்றுக்கணக்கானோருக்கு நிழல் அளிப்பது போல தனது வாழ்வில் பல எளிய மனிதர்களுக்கு நண்பனாகவும் வழிகாட்டியாகவும் ஆசானாகவும் விளங்கியிருக்கிறார் அந்த மனிதர். 

தனது பேரக்குழந்தைகளின் அக உலகில் தனது அன்பின் நீர்மையாலும் அன்பின் உயிர்மையாலும் நிறைகிறார் அந்த மனிதர். தனது எல்லா பேரக் குழந்தைகளுக்கும் மொழிகளும் கணிதமும் அறிவியலும் கற்பிக்கும் ஆசிரியராகவும் அவர்களுக்கு யோகத்தின் துவக்க நிலைகளை அறிமுகப்படுத்தி ஆன்ம மார்க்கத்தைக் காட்டுபவராகவும் விளங்குகிறார். 

அவருடன் இருந்த ஒவ்வொரு நாளும் ஆசிர்வதிக்கப்பட்ட நாட்கள் என உணர்கின்றனர் அவரது குடும்பத்தினர். அவருடனான நட்பை விலைமதிப்பில்லா அரிய ஒன்று என எண்ணுகின்றனர் அவரது நண்பர்கள். 

அவரது முதல் பேத்தி எழுத்தாளர் சுபஸ்ரீ எழுத்தில் அந்த மாமனிதர் வாழ்வை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் அந்த மாமனிதரை எண்ணி பெரும் உளஎழுச்சியும் உளநெகிழ்வும் கொள்கிறான். பாட்டனாருக்கும் பேத்திக்குமான ஒரு உரையாடல்  : வீட்டின் முன்னால் நிற்கும் வேம்ப மரத்தின் நிழலில் காகங்களும் மைனாக்களும் தவிட்டுக் குருவிகளும் கூடி கிறீச்சிட்டுக் கொண்டிருக்கின்றன. தவிட்டுக் குருவிகள் ’’சுப்ரி சுப்ரி’’ என அழைப்பது சுபஸ்ரீயை என தாத்தா சொல்ல அந்த சிறு குழந்தை தவிட்டுக் குருவிகளைக் கொண்டு ஒவ்வொரு நாளும் அகமகிழ்கிறது.  எழுத்தாளர் சுபஸ்ரீயின் சொற்களில் இந்த சம்பவம் சித்தரிக்கப்பட்டிருக்கும் இடம் மிகச் சிறப்பானது. ஒவ்வொரு கணமும் கோடானுகோடி மனிதர்களின் வாழ்வில் கோடானுகோடி உணர்ச்சிகள் அலைமோதி அதன் விளைவாய் கோடானுகோடி நிகழ்வுகள் நிகழ்கின்றன. அருநிகழ்வாக சுபஸ்ரீ சித்தரிக்கும் சம்பவம் போன்றும் நடக்கின்றன. 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பதவியேற்கும் நிகழ்வு குறித்து எழுத்தாளர் சுபஸ்ரீ எழுதியிருக்கும் பகுதி மிகவும் உயிர்ப்பானது ; உணர்ச்சிகரமானது. 

தனது வலைப்பூவில் எழுத்தாளர் சுபஸ்ரீ தனது ஞான ஆசானான தனது பாட்டனார் குறித்து எழுதியிருக்கும் பதிவுகள் நூல் வடிவம் பெற வேண்டும். தமிழின் முக்கியமான நூலாக அது நிலை பெறும்.

சென்னைப் பயண வாடிக்கைகள் (நகைச்சுவைக் கட்டுரை)

வியாழனன்று காலை 7.30 சென்னை விரைவு வண்டியில் சென்னை செல்ல முடிவு செய்தது புதன்கிழமை இரவு. வழக்கப்படி இரு சக்கர வாகனத்தை வீட்டிலேயே வைத்து விட்டு வீட்டில் இருப்பது போன்ற உணர்வை வீட்டில் இருப்பவர்களுக்கு ஏற்படுத்தி விட்டு சென்னை கிளம்பத் திட்டம்.  இந்த முறை ஒரே ஒரு விஷயத்தைச் சேர்த்தேன். அதாவது நண்பர் ஒருவர் என்னை ஜங்ஷனில் காலை டிராப் செய்வதாக ஏற்பாடு. காலை 5 மணிக்கு அலாரம் வைத்திருந்தேன். ஆனால் காலை 4 மணிக்கே விழித்து விட்டேன். 4.45க்கு நண்பருக்கு ஃபோன் செய்தேன். நண்பர் ஃபோனை எடுக்க வில்லை. சில முறை மீண்டும் செய்தேன். ஃபோன் எடுக்கப்படவில்லை. அதிகாலை நேரத்தில் வாக்கிங் செல்ல மைதானத்துக்கு டூ வீலரில் சென்று கொண்டிருந்த ஒருவர் லிஃப்ட் கொடுத்தார். உணவகம் ஒன்றில் காலை உணவு அருந்தி விட்டு மினி பேருந்தில் ஜங்ஷன் சென்று சேர்ந்தேன். அலுப்பாக இருந்தது. நடைமேடை இருக்கை ஒன்றில் படுத்து உறங்கி விட்டேன். ரயிலுக்கு அதிக அவகாசம் இருந்தது. 7.30 ரயிலுக்குப் பதிலாக 6 மணி ரயிலைப் பிடிக்க விரும்பினேன். அது நிகழவில்லை. நண்பர் வந்து எழுப்பினார். அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். ரயில் வந்தது. முன்பதிவு இல்லாத பெட்டி காலியாக இருந்தது . இப்போதெல்லாம் ரயில்களில் முன்பதிவுப் பெட்டிகள் நிறைந்து விடுகின்றன ; சமயத்தில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் காலியாக இருக்கின்றன. ரயிலில் ஏறியதும் படுத்து உறங்கி விட்டேன். எழுந்த போது சிதம்பரம் வந்திருந்தது. கையில் இருந்த 200 பக்க நூலை படிக்கத் தொடங்கினேன். செங்கல்பட்டில் வாசித்து முடித்தேன். மீண்டும் சிறு உறக்கம். எழுந்த போது வண்டி நுங்கம்பாக்கத்தை தாண்டிக் கொண்டிருந்தது. 

எழும்பூரில் இறங்கி அங்கிருந்து ஒரு பேருந்தைப் பிடித்து சி ஐ டி காலனி சென்றேன். பேருந்தில் ஓட்டுநர் நடத்துநர் சேர்த்து மொத்தம் 6 பேர் தான் இருந்தோம். சென்னைப் பேருந்துகள் இவ்விதமும் இருக்கும் என்பதை அன்று அறிந்தேன். 

சந்திப்பு 45 நிமிடம் நிகழ்ந்தது. விடைபெற்றுக் கிளம்பினேன். 

இம்முறை சி ஐ டி காலனியிலிருந்து எழும்பூருக்கு ஆட்டோ. 

காலை 5 மணிக்கு உணவருந்தியது. மதிய உணவை 330க்கு அருந்தினேன். 

ரயில் 4 மணிக்கு. ஓப்பன் டிக்கெட் எடுத்துக் கொண்டேன். ரயிலில் இருந்த டி டி ஆர் ஒருவரிடம் ஒரு டிக்கெட் ரிசர்வேஷன் வேண்டும் எனக் கேட்டேன். எஸ் - 5ல் ஏறிக் கொள்ளுமாறு கூறினார். செங்கல்பட்டில் வந்து கூடுதல் கட்டணத்துக்கு ரசீது கொடுத்து ஒரு முன்பதிவு டிக்கெட் கொடுத்தார். வண்டி 20 நிமிடம் தாமதம். இரவு 9 மணிக்கு வரவேண்டிய வண்டி 920க்கு வந்தது. நண்பர் ரயில் நிலைய வாசலில் காத்திருந்தார். ஒரு ஜூஸ் கடைக்குச் சென்றோம். தர்பூசணி ஜூஸ் ஆர்டர் செய்து குடித்தோம். வீட்டில் டிராப் செய்தார். வீட்டுக்கு வந்த போது மணி இரவு 950. வந்ததும் படுத்து உறங்கி விட்டேன். 

ஒருநாள் நிறைவு பெற்றது ; சென்னைப் பயணமும் நிறைவு பெற்றது. 

அசாத்தியத்தை சாத்தியமாக்குபவர்

கால்பந்தில் ஆர்வம் கொண்ட சிறுவனுக்காக என்ன உதவி செய்ய முடியும் என யோசித்தேன். ஏ ஐ யிடம் இந்த விஷயத்தில் என்ன செய்ய முடியும் என்று கேட்டேன். ஏ ஐ சென்னையில் வெளிநாட்டுப் படிப்புக்கு வழிகாட்டும் ஒரு நிறுவனத்தைப் பரிந்துரைத்தது. அந்த நிறுவனத்தின் தொடர்பு எண்ணுக்குப் பேசினேன். அந்த அழைப்பை ஏற்றவர் ஓர் இளைஞர். அவரிடம் விபரம் கூறினேன். சிறுவனின் 12ம் வகுப்பு மதிப்பெண், ஐ இ எல் டி எஸ் மதிப்பெண் ஆகிய விபரங்களைக் கேட்டுக் கொண்டார். அவர் விபரங்களைக் கேட்டுக் கொண்ட விதத்திலும் உள்வாங்கிக் கொண்ட விதத்திலும் மிகச் சிறப்பான முதிர்ச்சியும் பக்குவமும் வெளிப்படுவதை உணர்ந்தேன். சிறுவனின் ஐரோப்பா பயணம் அந்த இளைஞரின் வழிகாட்டலில் சிறப்பாக நிகழும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. கால்பந்து ஆடும் சிறுவனுடன் சென்று சென்னையில் அந்த இளைஞரைச் சந்தித்தால் விஷயம் வேகம் எடுக்கும் என எண்ணினேன். இருப்பினும் நான் எண்ணிய வண்ணம் உடன் நானும் சிறுவனும் சென்னை செல்ல வாய்ப்பு அமையவில்லை. சென்னை இளைஞர் எனக்கு சில முறை ஃபோன் செய்தார். நான் இரு சக்கர வாகனப் பயணத்தில் இருந்ததால் அலைபேசி அழைப்பை ஏற்க முடியவில்லை. தகவல் தொடர்பு இடைவெளி ஏற்பட்டது. சில நாட்களுக்குப் பின் சிறுவன் என்னிடம் வந்தான். மீண்டும் அந்த இளைஞரைத் தொடர்பு கொண்டு விபரம் கூறினேன். மறுநாளே சென்னையில் நேரில் வந்து சந்திக்கிறேன் என்று கூறினேன். 

சிறுவன் ஐரோப்பா செல்ல வேண்டும் என விரும்புவதே அங்கே கால்பந்து ஆட வேண்டும் என்பதற்காகத்தான். ஐரோப்பா கால்பந்துக்கு பிரசித்தி பெற்ற கண்டம். சிறுவனுக்கு சேர்க்கை அளிக்கக்கூடிய கல்லூரி கால்பந்து கிளப்களுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது. இந்த விஷயத்தை இளைஞருக்கு ஃபோனில் விளக்கினேன். 

மறுநாள் நேரில் சந்தித்தேன். சிறுவனின் தேவையை நிறைவேற்றும் கல்லூரியை அவர் தேர்ந்தெடுத்து விட்டார். அந்தச் சிறுவனுக்கு அட்மிஷன் கிடைக்கும் விதமாக இண்டர்வியூவுக்கு தயார் செய்யும் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டார். விசா நடவடிக்கைகளிலும் முழுமையாக உடனிருப்பதாகக் கூறினார். எனக்குப் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. 

சில முறை அலைபேசியில் உரையாடிய வகையில் அவரது வயது என நான் கணித்திருந்ததற்கும் மிகக் குறைவான வயதுடைய இளைஞராயிருந்தார். எந்த ஒரு விஷயத்திலும் அதன் தீர்வுகளும் அதனை அடைவதற்கான வழிமுறைகளுமே அவர் பார்வையில் இருந்தன. முற்றிலும் நேர்மறையானவராகவும் நம்பிக்கையை அளிப்பவராகவும் இருந்தார். 

ஊருக்கு வந்து சிறுவனிடன் அவரது எண்ணை அளித்து அவர் கூறும் குறிப்புகளின் படி செயல்படு எனக் கூறினேன். 

விஷயம் சரியான திசையில் நகர்கிறது. 

இராமாயணத்தில் கம்பன் அனுமனை ‘’சொல்லின் செல்வன்’’ என்கிறான். வால்மீகி அனுமனை ‘’அசாத்தியத்தை சாத்தியமாக்குபவன்’’ என்கிறார். இந்த இரண்டு மொழிகளும் அந்த இளைஞருக்குப் பொருந்தும். சீதை அனுமனை ‘’இன்றென இருத்தி’’ என வாழ்த்துகிறார். அந்த வாழ்த்து அந்த இளைஞருக்கும் உரியது.   

கால்பந்து ஆடும் சிறுவன்

எங்கள் பகுதியில் ஒரு விவசாயக் குடும்பம் இருக்கிறது. அந்த விவசாயக் குடும்பத்தின் தலைவர் எனது நண்பர். சென்ற ஆண்டு எதிர்பாராமல் நோய்வாய்ப்பட்டு சில நாட்களில் இயற்கை எய்தினார். 

அவரது மகனுக்கு 18 வயது ஆகிறது. பன்னிரண்டாம் வகுப்பு நிறைவு செய்துள்ளான். காமர்ஸ் அக்கவுண்டன்சி பிரிவு. தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கிறான். IELTS தேர்வில் 6.5 மதிப்பெண் பெற்றிருக்கிறான். 

18 வயது ஆகியிருக்கும் அந்த இளைஞன் தனது 6 வயதிலிருந்து 12 வருடமாக தினமும் காலை 3 மணி நேரம் மாலை 3 மணி நேரம் என தினமும் 6 மணி நேரம் கால்பந்து வீரனாகப் பயிற்சி எடுத்தான். பள்ளிப்பாடங்களில் எப்போதும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வந்ததால் அவனது கால்பந்து ஆர்வத்துக்கு வீட்டில் யாரும் தடை ஏற்படுத்தவில்லை. அவன் சிறுவனாயிருந்த நாட்களிலிருந்தே அவனை எங்கள் பகுதிக்கு அருகில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் மட்டுமே காண முடியும். நம் சூழலில் ஒரு சிறுவன் தன்னார்வத்தில் 6 வயதிலிருந்து தினமும் 6 மணி நேரம் 12 ஆண்டுகள் பயிற்சி எடுப்பது என்பது அபூர்வமானது என்பதை எவரும் உணர முடியும். வாரத்தின் ஏழு நாட்களும் வருடத்தின் 365 நாட்களும் அவன் பயிற்சி நடந்து கொண்டேயிருந்தது ; இருக்கிறது. 

அவன் தனது கால்பந்து ஆர்வத்தை மேம்படுத்திக் கொள்ள ஐரோப்பா செல்ல விரும்புகிறான். சில ஐரோப்பிய பல்கலைக்கழகங்களைத் தொடர்பு கொண்டுள்ளான். IELTS மதிப்பெண் நன்றாக இருப்பதால் அவனுக்கு  ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் அட்மிஷன் கிடைக்கக் கூடும். 

இங்கே ஊரில் மாநகரங்கள் போல கல்விக்காக வெளிநாடு செல்ல ஆலோசனை கூறும் மையங்கள் இல்லை.  

விசா கிடைக்க கடந்த 2 ஆண்டுகளின் வங்கிப் பரிவர்த்தனைகள், கடந்த 3 ஆண்டுகளின் வருமான வரித்தாக்கல் ஆகிய விஷயங்கள் தேவைப்படுகின்றன. நண்பரின் குடும்பம் விவசாயக் குடும்பம் என்பதால் வங்கியில் குறைந்தபட்சமான வரவு செலவு மட்டுமே உள்ளது. விவசாயத் தொழிலுக்கு வருமான வரி தாக்கல் தேவையில்லை என்பதால் அவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 

15 நாட்களுக்கு முன் அந்த சிறுவன் என்னிடம் உதவி கேட்டு வந்தான். அவனுக்குத் தேவைப்படும் உதவி விசாவை உறுதி செய்வதில் தான். எனக்கு இந்த விஷயம் புதிது. என்னால் இயன்ற உதவியைச் செய்கிறேன் என அச்சிறுவனிடம் கூறியிருக்கிறேன். 

 

Saturday, 27 June 2026

தொழிலதிபர்

சிதம்பரம் அருகே ஒரு சிற்றூர். அங்கே புதிய விதத்தில் ஓர் உணவகம் அமைத்திருந்தார்கள். எவ்விதம் என்றால் அந்த உணவகத்தில் கேக் வகைகள் கிடைக்கும் ; சாண்ட்விச், கட்லெட் போன்றவை இருக்கும் ; ஐஸ்கிரீம்கள் இருக்கும். இவை அனைத்துமே வழக்கமான முறையில் மைதா, ஜீனி ஆகியவை பயன்படுத்தப்படாமல் பாரம்பர்ய வகை அரிசி ரகங்களான கருப்பு கவுனி மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றைப் பயன்படுத்தித் தயார் செய்கிறார்கள். வித்தியாசமான முறையில் ஐஸ்கிரீமும் தயார் செய்கிறார்கள். அவர்கள் உணவகத்தில் 20 லிருந்து 25 பேர் அமர்ந்து உணவருந்த முடியும். மாலை 3 மணியிலிருந்து இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  அந்த சிற்றூரை ஒரு பெரிய கிராமம் என்று கூற முடியும்.  கருப்பு கவுனி கேக் ஆர்டர் செய்தால் 20 நிமிடத்தில் அந்த கேக்கை அந்த தருணத்தில் தயாரித்துக் கொடுக்கிறார்கள். பெரும்பாலும் அவர்களுக்கு கேக் ஆர்டர் மற்றும் உணவு ஆர்டர் ஃபோன் மூலம் வருகிறது. மாலை 3 மணிக்கு ஒரு ஆர்டர் வந்தால் மாலை 3.30க்கு வந்து கேக்கைப் பெற்றுக் கொள்ளவும் என செய்தி அனுப்பி விடுகிறார்கள். கேக் தயாராகி விடுகிறது. 3.30க்கு வந்து பெற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளின் பிறந்த நாள் நிகழ்வுகள் அந்த உணவகத்தில் நிகழ்கின்றன. அந்த உணவகத்தில் கேக் , சாட் வகைகள், ஐஸ்கிரீம் அனைத்துமே வழக்கமான விலையை விட 50 சதவீதம் குறைவான விலையில் கிடைக்கிறது என்பது எனக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஐஸ்கிரீம் கூட இயற்கை உணவுப்பொருட்களால் தயாரிக்கிறார்கள். எனக்கு அங்கே இருந்த போது ‘’ஸ்டார்பக்ஸ்’’ காஃபி ஷாப்கள் நினைவுக்கு வந்தன. இரண்டு தினங்களுக்கு முன் நண்பர் ஒருவருடன் அங்கே தற்செயலாக செல்ல நேர்ந்தது. நண்பர் சென்னையிலிருந்து வந்திருந்தார். அந்த உணவகத்தின் புறச்சூழல் மிக இனிமையானதாக இருந்ததால் எங்கள் உரையாடலிலும் அந்த இனிமை கூடுதல் இனிமையைச் சேர்த்தது. 

இந்த உணவகத்தின் உரிமையாளர்கள் இளம் தம்பதியர். கணவனுக்கு 30 வயது இருக்கக் கூடும் . அவரது மனைவிக்கு 26 வயது இருக்கலாம். கேக் , ஐஸ்கிரீம் என அனைத்தையும் இந்த தம்பதியினரே செய்கின்றனர். பரிமாற ஓரிரு பணியாளர்கள்  இருக்கின்றனர். தம்பதியர் இருவருக்குமே உணவு சமைத்தலில் ஆர்வம் இருந்திருக்கிறது. அதனால் இவ்விதமான ஒரு தொழில் முயற்சியை செய்து பார்த்திருக்கிறார்கள். என்னுடைய கணிப்பின் படி அங்கே சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.5000க்கு வணிகம் நிகழக் கூடும். 

அந்தப் பிரதேசத்தில் இருக்கும் வங்கிகள் இந்த இருவரையும் கௌரவிக்க வேண்டும் என்பது என் எண்ணம். அவர்கள் வணிகத்தின் வடிவத்தை புதிய தொழில்முனைவோருக்கான ஒரு சாத்தியமாக வங்கிகள் மாநிலமெங்கும் முன்வைக்கலாம்.

அவர்களின் சிறு குழந்தைக்கு 6 வயது இருக்கும். அவன் தன் அன்னையின் பக்கத்திலேயே நிற்கிறான். அன்னை எங்கு சென்றாலும் உடன் செல்கிறான். கேஷ் சாளரத்தில் அடுமனையில் பரிமாறும் இடத்தில் எங்கும் கூட கூட வருகிறான். அன்னை தன்னுடன் நேரம் செலவிட வேண்டும் என்பது அக்குழந்தையின் எதிர்பார்ப்பு. அந்த அன்னை அவனையும் பார்த்துக் கொண்டு தன் வேலையையும் செய்து கொண்டு இருக்கிறார். 

உணவுக்கான தொகையை அளித்த போது எவ்விதம் எல்லா உணவுப் பொருட்களும் 50 சதவீதம் குறைவான விலையில் தர முடிகிறது என்று வியப்புடன் கேட்டேன். அந்தப் பெண் ‘’இடம் சொந்த இடம் என்பதால்’’ எனச் சுருக்கமாகச் சொன்னார். 

இந்த உணவகத்தின் உரிமையாளர்களான தம்பதியரைப் போன்ற தொழிலதிபர்கள் வாழ்க்கையின் மீதும் மனிதர்கள் மீதும் மேலும் நம்பிக்கை ஏற்படுத்துகிறார்கள். 

அவர்கள் குடும்பம் நலமுடன் வாழ இறைமையிடம் வேண்டிக் கொண்டேன்.