Sunday, 28 December 2025

எமக்குத் தொழில் கவிதை

சொல்லில் உறையும் தன்மை கொண்டது இறைமை என்கின்றன உலகின் தொல்நம்பிக்கைகள். சொல்லால் உலகங்களை உருவாக்குகிறான் கவிஞன். சொல்லில் இருந்து உருவாகிறது உணர்ச்சி. உணர்ச்சியின் உணர்ச்சிகளின் வசமாகின்றனர் மானுடர். அமைதியும் அலைபாய்தலும் மானுட வாழ்க்கையில் அந்த உணர்ச்சியின் விளைவுகளே. அண்டத்தின் ஆதிசொல் ஒற்றை ஒலி. அந்த ஒலியின் வெவ்வேறு உச்சரிப்புகளே அனாதிகாலமாக ஆயிரமாயிரம் ஆண்டாக நிகழும் மானுட வாழ்க்கை. 

***

குர் அதுல் ஐன் ஹைதரின் ‘’அக்னி நதி’’ நாவலில் ஒரு கதாபாத்திரம் இவ்விதம் கூறும். ‘’நான் கலைஞன் ; மனதின் சங்கேதங்களையும் குறிப்புகளையும் துணையாகக் கொண்டு கலையைப் படைப்பவன். விஸ்வகர்மாவே ஆனாலும் என்னை மதித்துத் தான் தீர வேண்டும்’’.

எமக்குத் தொழில் கவிதை என்கிறான் தமிழ் மூதாதை பாரதி. 

படைப்பதனால் என் பெயர் இறைவன் என்பது கண்ணதாசனின் வரி. 

***

உலகின் ஆகப் பெரிய படைப்பாளிகள் பலருக்கு தங்கள் கலையும் படைப்பும் எவ்விதம் மக்களால் சமூகத்தால் உள்வாங்கப்படுகிறது என்னும் அவதானம் நுண்ணினும் நுண்ணியதாக இருந்திருக்கிறது. கவிஞன் மொழியின் பெருங்கடல். அவன் கடலின் அலைகளே மானுட வாழ்க்கை. தன் படைப்பின் சில கணங்களேனும் அவன் மண்ணில் இருந்து எழுந்து எழுந்து உயர்ந்து உயர்ந்து இறைமை உறையும் விண்ணிலிருந்து சிறு துகள்களென ஒட்டு மொத்த மண்ணுலகையும் கண்டிருப்பான். இருப்பினும் தன் படைப்பை சரியாக உள்வாங்காத சரியாக புரிந்து கொள்ளாத தருணங்களில் அவன் உணர்ச்சிகரமாகக் கொந்தளிக்கிறான். அந்த சூழலையும் தருணத்தையும் மௌனமாக அமைதியாகக் கடந்து சென்றவர்கள் உண்டு. உணர்ச்சிகரமாக எதிர்வினையாற்றியவர்களும் உண்டு. 

ஷீரசாத் உலகின் மிகப் பெரிய கதைசொல்லிகளில் ஒருவர். ஆயிரம் இரவுகளும் மற்றும் ஒரு இரவும் கதைசொல்கிறாள். எனினும் அவள் கதை சொல்லும் தருணம் மரணத்தின் விளிம்பு. சிக்கலான அந்த மரணத்தின் விளிம்பில் நின்றவாறு சொல் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கதை சொல்கிறாள். மரணத்தை வெல்கிறாள். 

உலகின் மிகப் பெரிய காவியம் பாட முடிவெடுக்கிறான் கிருஷ்ண துவைபாயனன். ஆனைமுகன் அவன் சொற்களை ஓலையில் பதிக்க அவன் முன் வந்தமர்கிறான். தனது கவிப்பாய்ச்சலை எந்த இடத்திலும் மட்டுப் படுத்தக் கூடாது என்கிறான் கிருஷ்ண துவைபாயனன். அக்கணமே தன் அழகிய தந்தம் ஒன்றை பாதியாக உடைத்து காவிய ஆசிரியனின் சொற்களை எழுத்தாக்கத் தொடங்குகிறான் கணபதி. 

படைப்பை சரியாக உள்வாங்கிக் கொள்வதும் சிந்தனையில் சரியான இடத்தில் பொருத்திக் கொள்வதும் அவ்விதம் நிகழாமல் போவதும் உலகத்தில் மாறி மாறி நடந்து கொண்டிருக்கவே செய்கிறது. 

கதைகள் குறித்த படைப்பாளிகள் குறித்த கதைகளில் குணாட்யரின் கதை மறக்க முடியாதது ; நெஞ்சை உருக்குவது. 

***

நம் நாட்டின் பெரும் சொத்து சோமதேவரின் ‘’கதா சரித் சாகர்’’. அதில் கதா சரித் சாகர் எழுதப்பட்ட கதையென குணாட்யரின் கதை வருகிறது. பின்னர் குணாட்யரின் கதை விதவிதமாக எழுதப் பெற்றிருக்கிறது. எல்லா விதமான கற்பனைகளுக்கும் சாத்தியங்களும் இடமளிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது குணாட்யரின் வாழ்வும் படைப்பும். 

சாதவாகன தேசத்தின் தலைநகரான சுப்பிரதிஷ்டா நகரின் அரசன் மகிழ்ந்திருக்கும் தருணம் ஒன்றில் அவனது அரசி ‘’மன்னா போதும்’’ என சமஸ்கிருதத்தில் சொல்கிறாள். அம்மொழியில் அதற்கு ‘’பட்சணங்கள் வேண்டும்’’ என இன்னொரு அர்த்தமும் உண்டு. அவன் அவ்விதமாகப் புரிந்து கொண்டு பட்சணங்கள் கொண்டு வர ஆணையிடுகிறான். அனைவரும் நகைக்கின்றனர். மிக அவமானமாக உணர்ந்த தான் இலக்கணம் கற்க வேண்டும் என்கிறான். குறைந்தது 12 ஆண்டுகள் ஆகும் என்கின்றனர். ஒரு ஆசிரியர் அவனுக்கு ஓராண்டில் இலக்கணம் கற்பிக்கிறார். அவமானம் என்னும் எதிர்மறை உணர்வால் உந்தப்பட்டு இலக்கணம் கற்றுக் கொண்ட அரசனுக்கு படைப்பின் மொழியின் உயிர்த்தன்மையை உணரும் புலன்கள் அவன் கற்ற இலக்கணம் மூலம் அவனுக்குக் கிடைக்கவில்லை. ஜீவன் கொண்ட படைப்பை அவனால் அடையாளம் காண முடியாமல் போகிறது. மேலும் காலத்தை வெல்லும் இயல்பு கொண்ட படைப்புகளை எதிர்மறையாக நிராகரிக்கச் செய்கிறான். மன்னனின் இயல்பு உணர்ந்த குணாட்யர் அரசவையிலிருந்து வெளியேறுகிறார். விந்திய மலையில் 12 ஆண்டுகள் முழு மௌனத்தில்   தன்னை ஆழ்த்திக் கொள்கிறார். அவர் சீடர்கள் அனைவரும் அவர் காலடியில் அமர்ந்து அவர் ஏதேனும் உரைப்பாரா என்று காத்திருக்கின்றனர். குணாட்யர் நீங்கிய அவை மேன்மை குன்றுகிறது. 12 ஆண்டுகளுக்குப் பின் வேள்வித்தீ வளர்க்கக் கூறி தனது படைப்பின் ஏழு தொகுதிகளையும் அதில் வீச முடிவெடுத்து ஒவ்வொரு தொகுதியாக அதில் வீசுகிறார். ஏழாவது தொகுதியுடன் தானே வேள்வித்தீக்கு ஆகுதி ஆகிறார். அந்தக் கணத்தில் மனம் மாறி தனது ஏழாவது தொகுதியை மட்டும் தீக்கு வெளியே எறிகிறார். சீடர்கள் கண்ணீருடன் அதனை எடுத்துக் கொள்கின்றனர். குணாட்யரின் படைப்பாக அது மட்டும் எஞ்சுகிறது. குணாட்யர் இறப்பு குறித்து அறிந்து நாடே துயரம் கொள்கிறது. சாதவாகன அரசி குணாட்யர் மறைந்த இடத்துக்கு வந்து வணங்கி அவருக்கு ஒரு ஆலயம் எழுப்புகிறாள். 

***

ரா.ஸ்ரீ.தேசிகன் சக கமனம் என்ற பெயரில் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். 

தமிழின் சிறந்த சிறுகதைகளில் ’’சக கமனம்’’ ஒன்று. சிறுகதையின் ஒவ்வொரு சொல்லும் மிகத் தேர்ந்தெடுக்கப்பட்டவையும் மிக உணர்ச்சிகரமானவையும் ஆகும். படைப்பூக்கத்தின் உச்சத்தில் திளைக்கும் நிலையிலேயே இவ்விதமான கதையை எழுத முடியும். அந்த சிறுகதையின் சிறப்பான வரிகள் என அடையாளம் காட்ட வேண்டுமெனில் ஒட்டு மொத்த சிறுகதையின் வரிகளையும் காட்ட வேண்டியிருக்கும். 

சிறுகதை என்னும் இலக்கிய வடிவம் மேல் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய கதை ‘’சக கமனம்’’. 

***

Friday, 26 December 2025

வாணியின் மாணவி

 
இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் கல்லூரி மாணவனாக இருந்த போது இந்த புவிக்கு வந்த குழவி என் நண்பரின் மகள். அவள் பிறந்த அன்றைய தினத்திலேயே அவளை கைகளில் ஏந்தியிருக்கிறேன். அவள் மழலை பேசிய நாட்களும் புத்தகப்பை சுமந்து பள்ளி சென்ற நாட்களும் இன்னும் என் நினைவில் இருக்கின்றன. பள்ளி நாட்களில் அவள் பயில வேண்டிய பள்ளி எது எனத் தீர்மானிப்பதில் அவள் பெற்றோருடன் எனக்கும் சிறு பங்கு இருந்திருக்கிறது. அவள் பட்டயக் கணக்காளராக ஆக வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்தது. அவள் தந்தைக்கும் அதே எண்ணம் இருந்தது. அவள் தனது இளநிலைப் படிப்பாக பி.காம் பயின்றாள். தற்போது கம்பெனி செகரட்ரிஷிப் படித்து வருகிறாள். அவள் பள்ளி மாணவியாக இருந்த போது அவளுக்கு எவ்விதம் புத்தகங்களின் உலகுடன் பரிச்சயம் ஏற்படுத்துவது என்பது குறித்து அவள் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவளுடைய தந்தை இலக்கிய வாசிப்பு கொண்டவர். அவளது அன்னை ஒரு பள்ளி ஆசிரியை. 

கடந்த ஓராண்டு காலமாக நண்பரின் மகள் இலக்கியம் வாசிக்க ஆரம்பித்திருக்கிறாள். சிறுகதைகள் மேல் பேரார்வம் கொண்டிருக்கிறாள். தொடர்ந்து வாசிப்பதால் இலக்கிய வாசகர்களுக்குரிய நுண்ணுணர்வுகளை அடைந்திருக்கிறாள். வாழ்வின் நுட்பங்களை உணரும் உணர்கொம்புகள் அவள் வசமாகியிருக்கின்றன என்பதை அவளுடன் உரையாடுகையில் அறிந்தேன். 

இப்போதும் அவளிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவளை சிறு குழவியாய் பார்த்ததே நினைவில் தோன்றுகிறது. கவிதை, நாவல், அ-புனைவுகள், மரபிலக்கியம் ஆகியவையும் வாசிக்குமாறு அவளிடம் சொன்னேன். 

அவளுடன் உரையாடிக் கொண்டிருந்த போது அவள் கலைத்தாயின் மாணவி என ஒரு கணம் தோன்றியது. 

Thursday, 25 December 2025

மூன்று குழந்தைகள்

இன்று காலை எனது நண்பர் ஒருவர் சென்னையிலிருந்து பேசினார். அவர் ஒரு விஷயம் கேள்விப்பட்டிருக்கிறார். அதாவது ***** அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பள்ளியில் படிக்கும் மூன்று குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து உறவினர்கள் எவரும் இல்லாமல் பள்ளிக்குச் சென்று வருகின்றனர் என்று கூறினார். அந்த குழந்தைகளின் தாயார் ஆறு வருடம் முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்து போயிருக்கிறார். தந்தையார் சில வாரங்களுக்கு முன்னால் இறந்து போயிருக்கிறார். அந்த குழந்தைகளின் அண்டை வீட்டுக்காரர்கள் குழந்தைகளுக்கு உணவு தருகின்றனர். நண்பர் ஏதேனும் உதவ விரும்பினார். அவர்கள் கிராமத்துக்கு நேரடியாகச் சென்று அவர்களை சந்தித்து வருவோம் என சென்றேன். நேரில் பேசி விபரம் தெரிந்து கொண்டேன். நண்பருடன் நண்பர்களுடன் விவாதித்து விட்டு இரண்டு மூன்று நாட்களில் திரும்பி வந்து எவ்விதமான உதவியைச் செய்ய முடியுமோ அதனைச் செய்கிறோம் எனக் கூறி விட்டு வந்தேன். 

வெள்ளை உள்ளம் கொண்ட குழந்தைகள் மூவரும். 

அந்தக் குழந்தைகளுக்கு தெய்வம் துணையிருக்க வேண்டும்.  

திறவுகோல் ( நகைச்சுவைக் கட்டுரை)


மதிய உணவு அருந்திக் கொண்டிருந்தேன். அருந்தி எழும் நேரம். எனது அலைபேசி ‘’கிரிக்’’ என ஒற்றை ஒலியை எழுப்பியது தூரத்தில் கேட்டது. சாப்பிட்டுக் கை கழுவி விட்டு வந்தேன் வாசலில் யாரோ அழைக்கும் சத்தம். எதிர் வீட்டுக்காரர் வெளியூர் சென்றிருக்கிறார். என்னை அழைத்தவர் எதிர் வீட்டில் இருப்பவரின் உறவினர். ஊரில் இருந்து அப்போது தான் வந்திருக்கிறார். கதவின் சாவி அவர் கைவசம் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு முன்னால் இருக்கும் இரும்பு கேட்=டின் சாவி அவர் வசம் கொடுக்க மறந்திருக்கிறார்கள். அவருடைய மனைவி, மகன், மகள் அனைவரும் வந்திருந்தனர். அவர்களை என் வீட்டில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள சொல்லி விட்டு எதிர் வீட்டுக்காரரின் உறவினரை அழைத்துக் கொண்டு கடைத்தெருவில் இருக்கும் பூட்டு ரிப்பேர் செய்யும் ஒருவரிடம் அழைத்துச் சென்றேன். பூட்டு ரிப்பேர் செய்பவர் அங்கு இல்லை. விசாரித்ததில் மதியம் 1 மணிக்கு வரைக்கும்தான் அவர் இருப்பார் என்றார்கள். பின்னர் அங்கிருந்து 2 கி.மீ தள்ளி இருக்கும் இன்னொரு பூட்டு ரிப்பேர் செய்பவரிடம் சென்றோம். அவர் சாலையோரத்தில் ஒரு குடையை விரித்து அதன் கீழ் அமர்ந்து பூட்டு ரிப்பேர் செய்பவர். ‘’கடையை விட்டுட்டு வர முடியாதுங்க’’ என்றார். அங்கிருந்து பக்கத்தில் டூ வீலர் சாவி போடும் கடை இருந்தது. அவரும் இல்லை. அலைபேசி எண் எழுதப்பட்டிருந்தது. அலைபேசியில் அழைத்தோம். அவர் இன்னொரு இடத்தைச் சொன்னார். அங்கு சென்றோம். அது ஒரு கடை. இரு பணியாளர்கள் இருந்தனர். ஒருவர் வந்து பூட்டை திறப்பதாய் கூறினார். அழைத்துச் சென்று மீண்டும் கடையில் கொண்டு வந்து விட்டு விடுமாறு கேட்டுக் கொண்டார். நண்பரை அவருடன் ஆட்டோவில் வருமாறு கூறிவிட்டு நான் வீட்டுக்கு வந்தேன். கொஞ்ச நேரத்தில் பூட்டைத் திறக்கும் முஸ்தீபுகளின் ஒலி கேட்டது. பின்னர் ஆட்டோ கிளம்பிய சத்தம் கேட்டது. நண்பர் வந்து பூட்டு திறக்கப்பட்டது என்றார். நன்றி என மகிழ்ச்சியுடன் சொன்னார்.   

Wednesday, 24 December 2025

அன்றாடயோகி


நூல் : அன்றாடயோகி ஆசிரியர் : ஹெச். எஸ். சிவபிரகாஷ் மொழிபெயர்ப்பு : சுபஸ்ரீ சுந்தரம் பக்கம் : 176 விலை : ரூ.240 பதிப்பகம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், 1/28, நேரு நகர், கஸ்தூரிநாயக்கன் பாளையம், வடவள்ளி, கோயம்புத்தூர், 641041.

மானுட உயிர்கள் எளியவை. அவை அனாதிகாலமாக பிறந்து வாழ்ந்து மடிகின்றன. கோடானுகோடி மானுட உயிர்களில் ஒரு சிலரே ‘’நான் யார்?’’ என்ற வினாவை எழுப்பிக் கொண்டு  அதற்கான பதிலைக் கண்டடைந்தனர். அவ்விதமானவரே ‘’குரு’’ எனப்படுகின்றனர். குருவைக் காணும் குருவின் மொழிகளைக் கேட்கும் மானுடர்க்கு குரு அடைந்த நிலைக்கு தாங்களும் செல்ல வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது. அந்த ஆவல் கோடானுகோடி பேருக்கு காலங்காலமாக ஏற்பட்டுக் கொண்டேயிருக்கிறது. பெரும் சமுத்திரமெனப் பரந்து கிடக்கும் குரு சைதன்யத்திலிருந்து சில அருள் துளிகளை மானுடர் பெறுகின்றனர். தன் முழு ஞானத்தையும் தன் முழு அனுபவத்தையும் அப்படியே வழங்க குரு உளம் கொண்டிருந்தாலும் நாடிச் செல்லும் மானுடனுக்கு அதைப் பெற்றுக் கொள்ளும் பக்குவம் தேவைப்படுகிறது. அந்த பக்குவத்தை பெறுவதற்கான வழியைக் காட்டுகிறார் குரு. அந்த மார்க்கத்தில் முன்னேறிச் செல்ல அனேக ஜென்மங்கள் தேவைப்படுகின்றன மானுடருக்கு. 

தாயின் கருவறையிலிருந்து மண்ணுக்கு வரும் குழவி கத்தியழுது தனது இருப்பைத் தெரிவிக்கிறது. கத்தியழும் குழவி தாயின் ஸ்பரிசத்தால் அமைதி கொள்கிறது. அழுகையும் அமைதியும் துன்பமும் இன்பமும் துக்கமும் சுகமும் பின்னர் வாழ்நாள் முழுக்க மாறி மாறி வாய்க்கப் பெறுகின்றன. இதற்கெல்லாம் என்ன அர்த்தம் இதெல்லாம் என்ன என்னும் கேள்வி எழும்பாத மானுடர் இல்லை. தனக்குள் எழுந்த கேள்விக்கான விடையே தெரியாமல் வாழ்நாள் கணக்கு தீர்ந்தவர்களே கணக்கற்றோர். அடிப்படைக் கேள்விகள் அனைவருக்கும் பொதுவாக இருந்தாலும் உலகின் புவியியல் சார்ந்து உலகின் மானுடர்களின் பழக்கவழக்கங்கள் சார்ந்து உலகின் எல்லா பகுதிகளிலும் வெவ்வேறு சமயங்கள், சித்தாந்தங்கள், வழிபாட்டு முறைகள், அறிவுத்துறைகள் உருவாகி வந்து மானுட ஞானத்தில் தீவிரமாக தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கின்றன. அவை மானுட வாழ்வை மேம்படுத்தியும் அவை மானுடர்களுக்குள் மோதலும் வன்முறையும் உருவாகக் காரணமாக அமைந்ததும் இணையாகவே நடந்து வந்திருக்கின்றன என்பதை மானுட வரலாற்றைக் கவனிக்கும் போது அறிய முடியும். 

கன்னட இலக்கியப் படைப்பாளியான ஹெச். எஸ். சிவபிரகாஷ் தனது குழந்தைப் பருவத்திலிருந்தே பல வகையான ஆன்மீக மரபுகளின் மாணவனாகிறார். வீர சைவ மரபில் பிறந்த அவர் தனது 11 வது வயதிலிருந்தே லிங்காயத்துகளின் வழக்கமான சிவ பூஜையில் ஈடுபடுகிறார். அவரது அன்னை தீவிரமான சிவபக்தை. கலைஞரும் படைப்பாளியுமான அவரது தந்தையும் சிவபக்தர். படைப்பூக்கம் கொண்டவர்கள் கொள்ளும் அதீதமான உணர்வுநிலை அவருடைய தந்தையை வன்முறைக்கு இட்டுச் சென்று தனது மனைவி மேல் எப்போதும் பெருங்கோபம் கொள்ளச் செய்கிறது. அக்கோபம் தனது மனைவியை தாக்கும் நிலைக்கு பலமுறை இட்டுச் செல்கிறது. சிறுவனாக இருந்து அதனைக் காணும் சிவபிரகாஷ் இந்த நிகழ்வுகளால் வகுக்க முடியாத உளக்குழப்பங்களுக்கு ஆளாகிறார். சாதகமற்ற அமைதியற்ற சூழ்நிலையிலும் உள்ளம் உருக திருவாசகம் பாடி தன்னையும் சூழலையும் அமைதியால் நிறைத்துக் கொள்ளும் தனது அன்னையின் சித்திரத்தை தன் நூலில் தீட்டிக் காட்டுகிறார் சிவபிரகாஷ். சிவபிரகாஷின் அன்னையை புற்றுநோய் தாக்குகிறது. தனது 18வது வயதில் அன்னையை இழக்கிறார் சிவபிரகாஷ். அந்நிலையில் பல ஆன்மீக வழிமுறைகள் அறிமுகமாகின்றன. அவர் சந்திக்கும் ஒவ்வொரு குருவும் ஒவ்வொரு விதத்தில் அவரது அறியாமையை நீக்குகின்றனர். ஒரு குரு ‘’நாத்திகமும் ஆத்திகமும் நம்பிக்கைகளே. நீ ஆத்திகன் என எண்ணினால் நாத்திகமும் பயில்’’ எனக் கூறி கார்ல் மார்க்ஸ்ஸின் கம்யூனிஸம் படி என்கிறார்.  இயல்பிலேயே படைப்பூக்கமும் கலை மனமும் கொண்ட சிவபிரகாஷ் புனைவிலக்கியமும் அ-புனைவுகளும் மிகத் தீவிரமாக வாசிக்கத் தொடங்குகிறார். யோகாசனங்கள் கற்றுக் கொள்கிறார். மூச்சுப் பயிற்சிகள் கற்றுக் கொண்டு பிராணாயாமம் செய்யத் தொடங்குகிறார். மந்திர தீட்சை பெற்று மந்திர உச்சாடனம் செய்கிறார். அவருடைய அக வாழ்விலும் புற வாழ்விலும் பெரும் கொந்தளிப்புகள் ஏற்படுகின்றன. யோகப் பயிற்சிகளில் சில முன்னேற்றங்களும் அடைகிறார் சிவபிரகாஷ். வீரசைவ மடங்கள், ஸ்ரீராமகிருஷ்ண மடம், தேரவாத பௌத்தம், பிகார் யோகப் பள்ளி, சூஃபி துறவிகள், கிருஸ்தவம் என தான் வாழ்வில் சந்திக்கும் எல்லா மார்க்கங்களிலும் நீண்ட நாட்கள் ஈடுபட்டு பயணிக்கிறார் சிவபிரகாஷ். வாழ்வை மிக நுட்பமாக மிக மென்மையாக அணுகும் உபகரணங்கள் அவருக்கு கிடைக்கப் பெறுகின்றன எனினும் சாமானிய வாழ்க்கையில் நினைத்தே பார்க்க முடியாத விதவிதமான துயரங்களும் அவரைச் சூழ்கின்றன. அவரது வாழ்க்கையின் மிகப் பெரும்பாலான நாட்களில் அவருக்கு இந்த அலைக்கழிப்பு இருந்திருக்கிறது. தன் சொந்த அனுபவத்தை நிமித்தமாகக் கொண்டும் வாழ்க்கை குறித்த கேள்விகளை தனது குருக்களிடம் எழுப்பி அவர்களின் பதில்களைப் பெறுகிறார். நெருக்கடியான தருணங்களிலும் தான் குருவருளால் காக்கப்படுவதை சிவபிரகாஷ் உணர்ந்து கொள்கிறார். தனக்கான மார்க்கம் எது என்பது அவருக்கு புலப்படுகிறது. 

யோக வழிமுறை மிக சூட்சுமமானது. அதனை சொற்களால் கூற முடியும். யோகியர் தம் அனுபவங்களை அவ்விதம் கூறியிருக்கின்றனர். எனினும் யோக வழிமுறையை சொற்களால் புரிந்து கொள்வது என்பது இயலக் கூடியதல்ல. பயிற்சியே யோகத்தை உணர ஒரே வழி. பயிற்சியை உறுதியாகப் பற்றி முன்னேறிச் செல்வது என்பது பெரும் நெஞ்சுரம் தேவைப்படும் மகத்தான பயணம். அடைபவை இழப்பவை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் நிகழ்த்த வேண்டிய பயணம். சிவபிரகாஷ் கலைஞனுக்கேயுரிய அகத்துடன் கலைஞனக்குரிய தரிசனத்துடன் யோக வழிமுறை குறித்தும் ஆன்மீகம் குறித்தும் பேசியிருக்கும் நூல் ‘’அன்றாடயோகி’’. கற்பனையைத் துணையாகக் கொண்ட இலக்கிய வாசகர்கள் இந்நூலின் மூலம் நீண்ட தூரம் செல்ல முடியும். யோகப் பயிற்சி செய்பவர்கள் சக மாணவனின் அனுபவங்களாக இந்த நூலை உள்வாங்கிக் கொள்ள முடியும். 

வரப்பில் தேக்கு - வாசகர் கடிதம்

வணக்கம் பிரபு,
காரைக்குடியில் தோட்டத்தில் இன்றைய நமது சந்திப்பு காலத்தோடு அவசியமான செய்திகளை முன்னிலைபடுத்தவே நிகழ்ந்தது என்ற எண்ணத்தை தவிர்ப்பதற்கு இல்லை. உங்களின் அக்கறையான அனுபவமிக்க தேக்கு மர வளர்ப்பு பற்றிய செய்திகளும், தோட்டத்தின் நிலை குறித்த உங்கள் எண்ணங்களும், அடுத்த ஒரு கூடுதல் அடி எடுத்து வைக்கவேண்டிய அவசியமும் பகிர்ந்து கொண்டது மிகுந்த நிறைவாக இருக்கிறது. 

வருகிற காலங்களிலும் நிறைய பேசுவோம் அத்றகான சந்தர்ப்பங்கள் நன்கு அமையும்.

நன்றி

அன்புடன்,

மேனா நானா     
 

எஸ் ஐ வி ஏ - நாச்சியார் - ராணா சீனா (நகைச்சுவைக் கட்டுரை)

காரைக்குடி நண்பருக்கு கோட்டையூரில் கோட்டை போல வீடு இருக்கிறது. இருப்பினும் சில வசதிகளுக்காக காரைக்குடியில் வடமலையான் பெயர் கொண்ட அடுக்ககத்தில் ஐந்தாவது மாடியில் வசிக்கிறார். ஐந்தாவது மாடியில் நான்கு வீடுகள். அதில் ஒரு வீட்டில் எஸ் ஐ வி ஏ என்னும் சிவா என்னும் பெரிய கருப்பன் வசிக்கிறார். ‘’வசிக்கிறார்’’ என்பதை விட ‘’பயணிக்கிறார்’’ என்பது பொருத்தமாக இருக்கும். ஐந்தாவது மாடியின் நான்கு வீடுகளுக்கும் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்குப் பயணிப்பதே அவருக்கு வேலை. அவருடைய இல்லத்தில் அவருக்கு பெரியகருப்பன் என நாமகரணம் செய்வித்து சிவா என்பதை அழைப்புப் பெயராக அமைத்துக் கொண்டனர். மேற்படி இரண்டு பெயர்களையும் பரிசீலத்த பெயர்களுக்கு உரியவர் தனக்கு எஸ் ஐ வி ஏ என பெயர் சூட்டிக் கொண்டார்.  ’’இந்தியாவிலேயே ஏன் இந்த வேர்ல்டுலயே’’ இரண்டு வயதில் ஒரு புனைப்பெயரை சூடிக் கொண்டவர் பெரியகருப்பனாகத்தான் இருப்பார். அழகான குண்டான சிறு குழந்தை அவன். குலதெய்வம் கோயிலில் முடி இறக்க நீண்ட தலைமுடியை வளர்த்திருக்கிறான். அடுக்ககத்துக்குள் பயணிப்பவனை ஒரு பிளே ஸ்கூலில் சேர்த்திருக்கின்றனர். 

காரைக்குடியில் நண்பர் வீட்டுக்குச் சென்று சேர்ந்ததும் நண்பர் காரைக்குடியின் முக்கியமான ஆயுர்வேத மருத்துவரும் தமிழின் முக்கியமான படைப்பாளியுமான எழுத்தாளருக்கு ஃபோன் செய்தார். நான் நண்பரிடம் ‘’ டாக்டர் இப்போ ஹாஸ்பிடல்ல பேஷண்ட்ஸ் பாத்துகிட்டு இருப்பார். அவரை டிஸ்டர்ப் செய்யாதீங்க. நாம பண்ணைக்கு போய்ட்டு திரும்பி வர ஈவ்னிங் ஆகும். அப்ப டாக்டரை பாத்துப்போம்’’ என்றேன். இருப்பினும் நண்பர் டாக்டரை டிஸ்டர்ப் செய்யும் விதமாக ஃபோன் செய்தார். ஃபோனை எடுத்த டாக்டர் ‘’ சென்னைல இருந்து ரிலேட்டிவ்ஸ் குழந்தைங்க வக்கேஷனுக்கு இங்க வந்திருக்காங்க. குழந்தைங்க ‘’அவதார்’’ படம் பாக்கணும்னு சொன்னாங்க. நான் இப்ப அவதார் பாத்துக்கிட்டு இருக்கன். அப்புறம் பேசறன்’’ என்றார். 

‘’நாச்சியார் திருமொழி’’ எழுதிய நாச்சியாரின் பெயர் கொண்ட நண்பரின் மகள் சிறப்பான ஓவியர். வயது எட்டு இருக்கும். வீடு முழுக்க அவரது ஓவியங்கள். ஓவியரின் அண்ணன் பெயர் ராணா சீனா. அவர் சிறந்த வில்லாளி. தற்போது பறவை பார்த்தலில் ஆர்வம் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகளை அடையாளப்படுத்த அறிந்திருக்கிறார். 

மூன்று குழந்தைகளும் நேற்றைய தினத்தை ஒளி மிக்கதாக ஆக்கினர். 

ஐந்து ஏக்கர் பண்ணை

காரைக்குடியில் வசிக்கும் நண்பரின் ஐந்து ஏக்கர் பண்ணைக்கு நேற்று சென்றிருந்தேன். தனது ஆர்வத்தாலும் சொந்த முயற்சியாலும் தனது வயலை மிகச் சிறப்பான நிலையில் பராமரித்து வைத்திருக்கிறார். அதில் தன்னை விட தனது தந்தைக்கு அதிக பங்களிப்பு இருக்கிறது என்பதைக் கூறுகிறார். அவரது ஐந்து ஏக்கர் வயலை பின்பக்கம், இடது பக்கம், வலது பக்கம் என நம் புரிதலுக்காக வகுத்துக் கொள்ளலாம். பின்பக்கம் 1 ஏக்கர். இடது பக்கம் 2 ஏக்கர். வலது பக்கம் 2 ஏக்கர். மொத்த 5 ஏக்கர் நிலத்துக்கும் கம்பி வேலி அமைத்துள்ளார். மொத்த பாசனத்துக்கும் சூரிய மின் சக்தியைப் பயன்படுத்துகிறார். இவ்விதம் மட்டுமே செய்ய வேண்டும் என பல விஷயங்களைத் தீர்மானித்துக் கொண்டு மெல்ல அவற்றை நோக்கி முன்சென்றுள்ளார். பின்பக்கத்தில் பல மரங்களை நெருக்கமாக நட்டுள்ளார். அது சிறு வனம் அவரது ஆத்ம திருபதிக்காக அமைக்கப்பட்டது. அதில் ஆஃப்ரிக்கன் தேக்கு என்ற மரவகை மிகச் சிறப்பாக வளர்ந்துள்ளது. நைஜீரியா தேக்கைத்தான் ஆஃப்ரிக்கா தேக்கு என்று கூறுகிறாரா என எண்ணினேன். பிசிறு இல்லாமல் அம்மரங்கள் வளர்ந்திருந்தன. வலது பக்கம் 2 ஏக்கரில் தென்னை நட்டு தென்னந்தோப்பை உண்டாக்கியுள்ளார். ஒரு மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் போதிய இடைவெளி கொடுத்து மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கும் தோப்பு. இடது பக்கம் 2 ஏக்கரில் நெல் வயல். நெல் வயல் வரப்பு இரண்டரை அடி அகலத்துடன் இருந்தது. வயல் வரப்பில் மட்டும் 12 அடிக்கு ஒன்று என்ற வீதத்தில் 2 அடிக்கு 2 அடி என 2 அடி ஆழத்தில் குழு எடுத்து அதில் மக்கிய சாண எரு இட்டு 100 தேக்குக் கன்றுகளை நடுமாறு கூறினேன். அதுவும் நிகழ்ந்தால் அவருடைய பண்ணை எல்லா விவசாயிகளுக்கும் எல்லா வகையிலும் எடுத்துக்காட்டாக அமையும் மாதிரிப் பண்ணையாக அமையும். தை மாத அறுவடைக்குப் பின் நண்பர் அதனையும் நிகழ்த்துவார் என்று தோன்றியது. 

Monday, 22 December 2025

காரைக்குடி பயணம் ( நகைச்சுவைக் கட்டுரை)

இன்று எனது நண்பர் ஒருவர் காரைக்குடியிலிருந்து ஃபோன் செய்திருந்தார். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிக நன்றாக அறிவோம். எனினும் நாங்கள் அதிகம் சந்தித்துக் கொண்டதில்லை. அதிகம் உரையாடிக் கொள்ளவும் வாய்ப்பு அமையவில்லை. இந்நிலை அரிதானது என்றாலும் இலக்கிய வாசகர்களுக்கு இடையே இது சாத்தியம் தான்.  இலக்கிய வாசிப்பில் பேரார்வம் கொண்டவர் நண்பர். மேலும் பல ஆண்டுகளாக ஐந்து ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். ஒரு ஏக்கரில் அடர்வனம் ஒன்றை அமைத்திருக்கிறார். இப்போது பறவை பார்த்தலில் மிகுந்த ஆர்வம் கொண்டு செயல்படுகிறார். அவரது அழைப்பு எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவரை நேரில் சந்திக்க விரும்பினேன். எனது விருப்பத்தைக் கூறினேன். அவசியம் வருமாறு கூறினார். நாளையே செல்வது என முடிவு செய்தேன். 

எப்படி செல்வது என்ற கேள்வி எழுந்தது. இரு சக்கர வாகனம்தான் என் முதல் தேர்வாக இருக்கும். அவ்வாறெனில் நாளை காலை 5 மணிக்குப் புறப்பட்டால் கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மார்க்கமாக காரைக்குடி செல்ல வேண்டும். சாலைகள் அகலமாக பெரிதாகத்தான் இப்போது இருக்கின்றன. எவ்விதமான சாலைகளாக இருந்தாலும் எனது வாகன வேகம் என்பது மணிக்கு 40 - 50 கி.மீ ஆகவே இருக்கும். காரைக்குடி தோராயமாக 170 கி.மீ இருக்கும். அவ்வாறெனில் 4.5 மணி நேரம் ஆகிவிடும். காலை 5 மணிக்குக் கிளம்பினால் 9.30க்கு அங்கே இருக்கலாம். இருப்பினும் காலையில் முன் நேரத்தில் எழுவது நீண்ட நேரம் வாகனம் ஓட்டுவது ஆகியவை சிறு சோர்வை உண்டாக்கக் கூடும். 

பொதுவாக நான் எங்கும் இரு சக்கர வாகனத்தில் தான் பயணப்படுவேன் என பரவலாகக் கருதுகிறார்கள். எனக்கு எந்த பயண சாதனமாக இருந்தாலும் உகந்ததே. பயணம் தான் எனக்கு முக்கியம். 

ஸ்ரீநகருக்கோ தில்லிக்கோ கௌஹாத்திக்கோ டேராடூனுக்கோ தனியாக இரு சக்கர வாகனத்தில் செல்வது என்பது முற்றிலும் அகவயமான அனுபவம். முதல் உடலும் மனமும் வெளியுலகமும் ஒத்திசையும் தன்மையே நீண்ட தூர இரு சக்கர வாகனத்தின் உண்மையான அனுபவம். கையில் அலைபேசி இல்லாமல் ஊரிலிருந்து 100 கி.மீ தாண்டி விட்டாலே பயணிப்பவர் முற்றிலும் வேறொரு மனிதர் ஆகி விடுவார். பயணிப்பவர் அறிந்த பயணிப்பவருக்குத் தெரிந்த பயணிப்பவர் மனதில் சுமக்கும் பொறுப்புகள் அனைத்தின் எடையும் 99 சதவீதம் குறைந்து விடும். லௌகிகத்தில் இருக்கும் மனிதர்களுக்கு கிடைக்கக்கூடிய ஆகப் பெரிய ஆக சாத்தியமான விடுதலை அது. அந்த எடையின்மை அதன் பின் பயணியை வழிநடத்திச் செல்லும். காணும் ஒவ்வொரு பொருளும் புதிதாக இருக்கும். காணும் ஒவ்வொரு காட்சியும் புதிதாக இருக்கும். உலகம் கணந்தோறும் புதியதே எனினும் நாம் வழக்கமாகப் பழகியிருக்கும் இடத்திலேயே இருக்கும் போது நாம் அதனை உணர்வதில்லை. பயணத்தின் முதல் நாள் மாலை பயணி 250 கி.மீ சென்று சேர்ந்திருந்தாலும் உடலும் மனமும் நாம் புதிய இடத்தில் இருக்கிறோம் என்பதை 100 சதவீதம் உணர்ந்திருக்காது. 90 சதவீதம் உணர்ந்திருக்கும். நீண்ட பயணத்தின் விளைவாக உறக்கம் சூழ்ந்து விடும். மறுநாள் காலை விழித்ததும் மனமும் உடலும் தான் புதிய இடத்தில் இருப்பதை முழுமையாக உணரும். இரண்டாம் நாள் பயணம் எப்போதும் புத்தம் புதியதாக இருக்கும். அதன் பின் பயணத்தின் ஒவ்வொரு நாளுமே ஒவ்வொரு பொழுதுமே ஒவ்வொரு கணமுமே அந்த உணர்வு பயணியை வியாபித்து விடும். 

காரைக்குடிக்கு இரு சக்கர வாகனத்தில் கிளம்பினால் அன்று மாலை ஊருக்குப் புறப்பட முடியாது. மாலை 4 மணிக்குக் கிளம்பினால் இரவு 9 அல்லது 10 மணியாகி விடும் ஊர் திரும்ப. மாலை 6 மணிக்கு மேல் நீண்ட தூரம் இரு சக்கர வாகனம் இயக்குவது உகந்தது அல்ல. நண்பரும் உடன் புறப்பட்டு விட்டதாக எண்ணுவார். என்ன செய்வது என்று யோசித்தேன். பேருந்துப் பயணம் என்றால் கும்பகோணத்தில் தஞ்சாவூரில் புதுக்கோட்டையில் என பேருந்து மாற வேண்டும். ரயில் ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்தேன். 

திருவாரூரில் காலை 6.30க்கு காரைக்குடிக்கு ஒரு ரயில் இருந்தது. காலை 9.30க்கு காரைக்குடி சென்று விடும். அந்த ரயில் பாதையில் உள்ள ஊர்கள் சிறு சிறு கிராமங்கள். சுவாரசியமான ரயில் மார்க்கம் அது. முன்னர் மயிலாடுதுறை காரைக்குடி என பாசஞ்சர் வண்டி இயங்கிக் கொண்டிருந்தது. இப்போது அது திருவாரூர் காரைக்குடி என்றாகி விட்டது. வெகு ஆண்டுகளுக்கு முன்னால் காலை 6.30க்கும் மாலை 5.30க்கும் என காரைக்குடி பாசஞ்சர் இருந்தது என நினைவு. மாலை செல்லும் ரயிலில் நான் சில முறை சென்றிருக்கிறேன். 

காலையில் 6.30க்கு திருவாரூரில் காரைக்குடி ரயிலைப் பிடித்து விடுவது என முடிவு செய்து கொண்டேன். ஆரூரில் பழைய பேருந்து நிலையத்துக்கு பக்கத்திலேயே ரயில் நிலையம் இருக்கிறது. 6.30க்கு ரயிலைப் பிடிக்க வேண்டும் என்றால் ரயில் நிலையத்தில் 6.15க்கு இருக்க வேண்டும். ஊரில் 5 மணிக்கு திருவாரூருக்கு பேருந்து ஏறினால் தான் சரியாக இருக்கும். 5 மணிக்கு பேருந்து ஏற வீட்டில் 4 மணிக்கு கிளம்பிட வேண்டும். நாளை காலை 3 மணிக்கு அலாரம் வைத்துக் கொள்ள வேண்டும். 

ராமேஸ்வரத்திலிருந்து தாம்பரம் செல்லும் விரைவு ரயில் திருவாரூர் மயிலாடுதுறை மார்க்கமாகச் செல்லக் கூடியது. காரைக்குடியில் இரவு 7.30க்கு இரவு 10.15க்கு ஊர் வந்து சேரும். அதில் திரும்பி விடலாம்.

99 சதவீதம் நாளை காரைக்குடிக்கு ரயிலில் தான் செல்வேன். 1 சதவீதம் இரு சக்கர வாகனத்துக்கும் வாய்ப்பு இருக்கிறது. 

செட்டிநாடு பகுதியின் நிலக்காட்சிகள் எனக்கு மிக இனியவை. தஞ்சைப் பிராந்தியத்தில் பசுமையை மட்டுமே கண்ட எனக்கு மண்ணின் விதவிதமான வண்ணங்கள் காணக் கிடைக்கும் செட்டிநாடு மிகவும் விருப்பத்துக்குரிய ஒன்று. 

நாளைய பயணம் இன்றே உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.

***