Monday, 24 November 2025

வானிலை ஆய்வு மையத்துக்கு ஒரு கடிதம்

பிரபு  

மொழிபெயர்ப்பு

ராஜாஜியின் கட்டுரை ஒன்றை ஆர்வத்தின் காரணமாக மொழிபெயர்த்தேன். ராஜாஜியின் ஆங்கிலம் எளிய ஆங்கிலம் எனினும் கூரியது. அவர் பயன்படுத்திய சில ஆங்கில வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்பதை அகராதியின் துணை கொண்டு அறிந்து கொண்டேன். மொழிபெயர்ப்பு மகிழ்ச்சி அளித்தது எனினும் அதனை இன்னும் சிறப்பாகச் செய்திருக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது.  

Sunday, 23 November 2025

விருட்சத்தின் கீதம் - ராஜாஜி

 Rajaji Reader என்ற நூலில் இடம்பெற்றுள்ள ராஜாஜியின் கட்டுரையொன்றை மொழிபெயர்த்துள்ளேன். 

***

விருட்சத்தின் கீதம் 



கர்னல் ராய் ஜான்சன் பிரிட்டிஷ் அரசால் இராணுவ மருத்துவப் பிரிவாகத் தொடங்கப்பட்டு பின்னாட்களில் மாநில நிர்வாகத்தின் அலகாகிப் போன ஐ.எம்.எஸ் எனப்படும் இந்திய மருத்துவப் பணியின் மருத்துவர். அப்பணியை அர்ப்பணிப்புடன் ஆற்றியவர்களும் உண்டு. அந்தஸ்தாக மட்டும் கருதியவர்களும் உண்டு.நான் சேலத்தில் இருந்த போது ராய் ஜான்சன் மாவட்ட மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இனிய மனிதர் அவர்.

’’இன்று அவர் மிகவும் தாமதமாக வருவார் என்று தோன்றுகிறது. தனது பிரியத்துக்குரிய நண்பர்களான மரங்களுடன் அளவளாவ நிறைய நேரம் செலவிடுபவர் என்றாலும் இன்று அவருக்கு வேறு ஏதோ சிக்கல் இருப்பதாக என் மனதுக்குப் படுகிறது.’’ என்றார் திருமதி. ஜான்சன். ‘’தாங்கள் காத்திருக்கலாம். இல்லையேல் அவர் வந்ததும் தங்கள் வருகை குறித்தும் சிறிது நேரம் காத்திருந்து நீங்கள் திரும்பிச் சென்றது குறித்தும் நான் அவரிடம் கூறுகிறேன்.’’

‘’நன்றி ! நான் செல்ல வேண்டும். அவருக்குக் கிடைத்திருக்கும் பதவி உயர்வு எனக்கு பெருமகிழ்ச்சியை அளித்திருக்கிறது. உங்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவிக்கவே நான் வந்தேன்.’’

’’ஓ! அப்படியா ! மகிழ்ச்சி. தாமதமாக வருவதில் அவர் மன்னர். அவரை அறிந்தவர்களுக்கு இது புதிதில்லை’’

டாக்டருக்கு தான் நடைப்பயிற்சிக்கு செல்லும் போது பாதையில் இருக்கும் மரங்களுடன் உரையாடும் வழக்கம் உண்டு. மரங்களைத் தொட்டு அவற்றுடன் ஆத்மார்த்தமாகப் பேசுவார். காண்பதற்கு அழகிய விஷயம் அது. இதனைக் காணும் எவரும் அவர்கள் உரையாடலில் உள்நுழையவோ குறுக்கிடவோ மாட்டார்கள். தாறுமாறான லௌகிக உலகில் இக்காட்சி அரியது என இதனைத் தொலைவில் இருந்து காண்பவர்கள் கூட உணர்வார்கள். 

அன்றைய தினத்தின் மாலை டாக்டர் ஜான்சனுக்கு மிகவும் துயர் நிறைந்தது என்பதைப் பின்னர் அறிந்தேன். அவர் நேசித்த மரம் ஒன்றை முழுதாக வெட்டி ஒரு ஆனை வீழ்ந்து கிடப்பதைப் போல தரையில் கிடத்தியிருந்தார்கள். 

அடுத்த நாள் சந்தித்த போது டாக்டர் என்னிடம் சொன்னார்: ‘’வளத்தியாயிருந்த என் மகளைக் கொன்று விட்டார்கள்.’’

துரதிர்ஷ்டவசமாக அந்த மரம் ஜில்லா போர்டு கட்டிடத்துக்கு மிக நெருக்கமாக இருந்திருக்கிறது. அந்த மரத்தால் அந்த கட்டிடத்தின் அஸ்திவாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் என பொறியாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். 

கண்ணீருடன் டாக்டர் என்னிடம் கேட்டார் : ‘’மரம் கட்டிடத்துக்கு மிக அருகில் இருப்பதாகக் கூறுகிறார்கள். மரத்துக்குப் பக்கத்தில் அந்த கட்டிடத்தை அமைத்தது யார்? நாற்பது வருடமாக அந்த மரம் அங்கே இருக்கிறது. ஜில்லா போர்டு கட்டிடம் ஒரு வருடம் முன்பு கட்டப்பட்டிருக்கிறது’’

திருமதி.ஜான்சன் சொன்னார் : ‘’ டாக்டர் இதனை பெரிய பிரச்சனையாக்குகிறார். அது நன்மைக்கா என எனக்குத் தெரியவில்லை. மரம் வெட்டப்பட்டு விட்டது. டாக்டர் இந்த விஷயத்தைப் பார்க்கும் விதமாக யாரும் பார்க்க மாட்டார்கள்.’’

‘’உண்மை’’ என்றேன்.

‘’மிகத் தவறான ஒரு செயல் நிகழ்ந்திருக்கிறது. அது தெரிந்தும் நமக்கு எழும் தார்மீகச் சீற்றத்தைத் தணித்துக் கொண்டு எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருப்பது தீமையை மேலும் வளர்க்கவே செய்யும். நமது அறச்சீற்றத்தை வெளிப்படுத்துவதே நாகரிகமும் மானுடத் தன்மையும்’’

விஷயம் சிக்கல்தான். ராய் ஜான்சன் இந்த விஷயத்தைத் தார்மீகமாகக் காண்கிறார். அவர் செய்வது சரியானதும் கூட !

ஈவு இரக்கமற்ற அதிகாரிகள் மத்தியில் ராய் ஜான்சன் விதிவிலக்கானவர். டாக்டர் ராய் ஜான்சனுக்கு ஒரே மகன்; ராணுவத்தில் பணி புரிந்தான். பர்மிய போர்க்களத்தில் ஜப்பானுடனான போரில் மரணமடைந்தான். 

டாக்டரின் உணர்வுகள் என்னை ஆழமாகப் பாதித்தன. ஒரு ஹிந்துவால் இந்த உணர்வை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். ஹிந்துக்கள் ஒவ்வொரு மரமும் ஒரு ஜீவன் என்றும் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு ஆத்மா உண்டென்றும் நம்புகிறார்கள். அவர்கள் அவ்விதம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்த நாள் மாலை மரம் வெட்டப்பட்ட அந்த இடத்தைப் பார்த்தேன். ஆனை போல் பேருரு கொண்டு வீழ்ந்து கிடந்த அந்த விருட்சத்தின் கிளையொன்றில் உட்கார்ந்து நடந்தவற்றை அசை போட்டேன். அந்த மரத்தை என் மனம் பல உயிர்களாகவும் பிடுங்கி எறியப்பட்ட ஒரு குடும்பமாகவும் எண்ணற்ற தேவமலர்களாகவும் ஜனங்கள் நெருங்கி வாழும் மாநகரம் போன்ற வாழிடமாகவும் என் மனம் உணர்ந்தது. அப்போது குழலிசை என் செவியில் ஒலிப்பதை உணர்ந்தேன். மிக மெல்லிய இசை. எனக்கு மட்டும் கேட்ட இசை. மொழியற்ற இசை. இது விருட்சத்தின் கீதம் என நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். 

அன்றிரவு நூதனமான கனவொன்றைக் கண்டேன். எல்லாக் கனவுகளும் நூதனமானவை எனினும் அக்கனவு அதிநூதனமானது. 

கனவில் ஒரு குரல் கேட்டது. அது மரத்தின் குரல். 

‘’இது கனவென்று எண்ணாதே. உன்னால் என்னைப் பார்க்க முடியாது. ஆனால் நான் இருக்கிறேன். என் குரல் உனக்குக் கேட்கிறதா?’’

‘’கேட்கிறது. சொல்’’

‘’நான் கொலை செய்யப்பட்டேன். நீ அதற்கு நியாயம் கேட்க வேண்டும். என் தமையன் டாக்டர் ஜான்சன் அரசு ஊழியன். அவனால் எதுவும் செய்திட முடியாது. நீ வழக்கறிஞன். உன்னால் ஏதாவது செய்ய முடியும். மரம்வெட்டி என்னை வெட்ட முதலில் மறுத்தான். அவனுக்குப் பணத்தாசை காட்டி அதிகக் கூலி கொடுத்து அவன் மனதை மாற்றினார்கள். என்னை வெட்டச் செய்தார்கள்.’’

‘’நீதிபதி இதனை வழக்காக ஏற்றுக் கொள்வாரா என்பது தெரியவில்லை. என்னால் என்ன செய்ய முடியும்?’’

‘’மூடா நீ என்ன நாத்திகனா? யாவற்றுக்கும் செவி மடுக்கும் மிகப் பெரிய நீதிபதி ஒருவர் இருக்கிறார் என்பதை நீ அறிய மாட்டாயா?’’

‘’இந்த வழக்கை நான் நடத்துகிறேன். முதலில் செய்தித்தாள்களில் இது குறித்து எழுதுகிறேன்’’

‘’அவ்விதமே செய். அரச மரமாக நான் இருந்த போது வருவாய்த்துறை அதிகாரி சுப்பையரும் அவரது மனைவியும் என் மரத்தடிக்கு வந்து எனக்கு குங்குமமும் சந்தனமும் இட்டு வணங்குவார்கள். பல வாரங்களாக காய்ச்சல் பீடித்து உணர்வற்றுக் கிடந்த அவர்கள் மகன் உடல்நலம் பெற என்னிடம் பிராத்தித்துக் கொள்வார்கள். என் அருளால் அவன் நலம் பெற்றான். சுப்பையர் மனம் மகிழ்ந்து என் மரத்தடியில் ஏழைகள் பலருக்கு அன்னதானம் செய்தார். அப்போது என்னைச் சுற்றி மகிழ்ச்சிகரமாக இருந்தனர் அம்மக்கள். மகத்தான நாட்கள் அவை. இப்போது கொல்லப்பட்டு வெட்டுண்டு கிடக்கிறேன்.’’

உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்த நான் இந்த விஷயம் குறித்து தீவிரம் காட்டுவது என்று முடிவெடுத்தேன். 

பத்திரிக்கைகளுக்கு வளர்ந்த பெரிய மரங்கள் வெட்டப்படுவது மூடத்தனம் என கடிதம் எழுதினேன். 

எனது வழக்கறிஞர் நண்பர்கள் ஆச்சர்யப்பட்டனர் ; சிலர் கோபப்படவும் செய்தனர். 

‘’நண்பரே ! நாம் சுதந்திரத்துக்காகப் போராடுகிறோம். இது ரொம்ப சின்ன விஷயம். அது தெரியவில்லையா உங்களுக்கு’’

கனவில் வந்த விருட்சம் குறித்து நான் அவர்களிடம் ஏதும் கூறவில்லை. 

‘’நம் தேசத் தலைவர்கள் நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் சாலையோரத்தில் வெட்டப்பட்ட மரத்துக்காக வாதாடிக் கொண்டிருக்கிறீர்கள்’’ வழக்கறிஞர் சங்க செயலாளர் என்னிடம் கோபமாகச் சொன்னார். 

என் வாழ்நாளில் நான் தேசத்துக்காகப் பலவிதமான போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறேன். ஓர் அரச மரத்துக்காகக் குரலெழுப்பியதும் எனக்கு மகிழ்வான செயலே. 

***  



Saturday, 22 November 2025

காகிதமும் டிஜிட்டலும் (நகைச்சுவைக் கட்டுரை)

இன்று காலை டிம்மி ஷீட் எடுத்து மார்ஜின் போட்டு நண்பனுக்கு கடிதம் எழுதினேன். ஷீட்டின் நான்கு பக்கங்களுக்கு அந்த கடிதம் வந்தது. அளவில் சற்று பெரிய கடிதம் என்றுதான் எண்ணினேன். இருப்பினும் எழுதி முடித்து சிறிது நேரம் கழித்து அதனை வலைப்பூவில் பதிவிட வேண்டும் என விரும்பினேன். எழுதியதைப் பார்த்து வலைப்பூவில் தட்டச்சிட்டேன். பொதுவாக நான் அவ்விதம் செய்வதில்லை.  எழுதும் முறையில் எழுதும் மனநிலையில் அது சிறு பாதிப்பை உண்டாக்கும் என்பதால். காகிதத்தில் எழுத வேண்டி வந்தால் காகிதத்தில் எழுத வேண்டும். கணினியில் தட்டச்சிட வேண்டும் என்றால் தனியாக தட்டச்சிட வேண்டும். இதைப் பார்த்து அதையோ அதைப் பார்த்து இதையோ செய்யக் கூடாது. எழுதிய கடிதத்தை தபாலில் அனுப்பி விட்டால் என்னிடமிருந்து சென்று விடும் என்பதால் அதனை வலைப்பூவில் எழுத நினைத்தேன். 

தட்டச்சிட்ட போது நான்கு பக்க கடிதம் வலைப்பூவில் நடுத்தரமான அளவில் மட்டுமே இருந்தது. எழுத்துருவின் தடிமன் சீராக இருப்பதால் டிஜிட்டல் அட்சரங்கள் கையால் எழுதப்படும் அட்சரங்களை விட குறைவான இடத்தையே எடுத்துக் கொள்கின்றன. எம் எஸ் வேர்டு-ல் தட்டச்சிடப்பட்ட ஒரு பக்கம் கூட வலைப்பூவில் சிறிதாகவே இருக்கும் என்பதைக் கண்டிருக்கிறேன். 

தபாலில் அனுப்பும் முன் கடிதத்தை வலைப்பூவில் பதிவிட்டேன். கடிதம் நண்பனை திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை சென்றடையும். நண்பன் தினமும் என் வலைப்பூவை வாசிப்பவன். அனேகமாக இன்றே கூட வாசித்து விடுவான். நண்பன் வாசிப்பதற்கு முன்பு கூட பலர் வாசித்திருக்க முடியும். 

***

இந்த விஷயத்திலிருந்து நான் ஒரு முக்கியமான விஷயம் குறித்து கற்பனை செய்து பார்த்தேன். அது ஒரு முக்கியமான அவதானம் ; முக்கியமான புரிதல் என்று தோன்றியது. 

அச்சுமுறை வழக்கத்துக்கு வந்த பின் மட்டுமே மனிதர்கள் மிக அதிக அளவில் எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். காகிதத்தில் அச்சிடும் முறை தோன்றுவதற்கு முன் தாவரப்பட்டைகள் மரப்பட்டைகள் ஆகியவற்றில் மட்டுமே எழுதும் முறை உலகெங்கும் இருந்திருக்க முடியும். நம் நாட்டில் பனையோலைகளில் எழுதியிருக்கிறார்கள். பனையோலையில் எழுத்தாணி கொண்டு எழுதுவது என்பது சாமானிய காரியம் இல்லை. அது ஓர் அரும்பெரும் செயல். 

பனையோலைகளில் எழுதப்பட்டவற்றை குறைந்தது ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது புதிய பனையோலைகளில் மறுபடி எழுதிக் கொள்ள வேண்டும். நம் நாட்டின் அனைத்து இலக்கியப் பிரதிகளுமே அவ்விதமாகவே 2500 ஆண்டுகள் பயணித்து வந்திருக்கின்றன. நம் நாட்டின் பண்டைய கல்வி நிலையங்கள் அனைத்திலுமே பனையோலைப் பிரதிகளை மீண்டும் பனையோலையில் எழுதிக் கொள்வது என்பதை முக்கியப் பணியாகச் செய்திருப்பார்கள். 

இந்த விஷயத்தில் இன்னொரு விஷயத்தையும் கற்பனை செய்து பார்த்தேன். அதாவது கல்வி என்பது பனையோலைகளைப் பார்த்து படிப்பது என்னும் வகையில் இருந்திருக்காது ; இப்போது நாம் புத்தகங்களைப் பார்த்து படிப்பது போல. மனனம் செய்யும் விதமாகவே கல்வி இருந்திருக்கும். வேதக்கல்வி மனனம் செய்யும் விதமாகவே அமைக்கப்பட்டிருப்பதால் அந்த பாணியே மற்ற கல்வியிலும் இருந்திருக்கும். ஒருவர் தேவாரமோ திவ்யப் பிரபந்தமோ பயில்கிறார் என்றால் அதனை இசையுடன் சந்தத்துடன் பாடவே பயில்வார். பயின்றதை தினமும் மீண்டும் மீண்டும் பாடி தன் நினைவிலும் உணர்விலும் வைத்திருப்பதே கல்வி. 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரை இவ்விதமான கல்வியே இருந்திருக்கிறது. தான் கல்வி கற்ற முறை குறித்து ‘’என் சரித்திரத்தில்’’ பதிவு செய்யும் போது உ.வே.சா அதனைக் குறிப்பிடுகிறார். 

நம் நாட்டை ஞானத்தின் தாயகமாக எண்ணி மதித்த சீனப் பயணி யுவான் சுவாங், ஃபாஹியான் ஆகியோர் நம் நாட்டிலிருந்து மூட்டை மூட்டையாக பனையோலைச் சுவடிகளை சீன நாட்டுக்குக் கொண்டு சென்றனர் என்பது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

இஸ்லாமியப் படையெடுப்பின் போது பக்ருதீன் கில்ஜி நாளந்தா பல்கலைக்கழகத்தை எரியூட்டிய போது அங்கிருந்த ஓலைச்சுவடிகள் மாதக்கணக்கில் எரிந்தன என்பது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. 

இன்னொரு விஷயமும் யோசித்தேன்.

அதாவது கல்வியறிவும் எழுத்தறிவும் இப்போது ஒருங்கிணைந்து இருப்பது போல அப்போது இந்த அளவு ஒருங்கிணைந்திருக்கவில்லை என்று தோன்றுகிறது. 

அன்புள்ள நண்பனுக்கு,

இன்று என் நண்பனுக்கு என் கைப்பட ஒரு கடிதம் எழுதி தபாலில் அவன் முகவரிக்கு அனுப்பினேன். அக்கடிதத்தை கீழே அளித்துள்ளேன். 

***

அன்புள்ள நண்பனுக்கு,

வணக்கம். நலமாக இருக்கிறாயா? நான் நலமாக இருக்கிறேன். இந்த வாரத்தில் எனக்கு குதூகலமும் ஒரு நிலையின்மையும் இருந்தது. ஜெயகாந்தனின் ‘’ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’’ வாசித்துக் கொண்டிருந்தேன். பல ஆண்டுகளுக்கு முன்னால் வாசித்தது. இப்போது மறுவாசிப்பு செய்கிறேன். மீண்டும் ஒருமுறை ஜெயகாந்தன் மகத்தான கலைஞன் என்பதை உணர்ந்தேன்.  மனித வாழ்க்கையை அறிய அறிய மனிதர்களின் எல்லைகளும் மனிதர்களின் போதாமைகளும் மட்டுமே பேருரு கொண்டு முன்நிற்கிறது. லௌகிகத்தின் இயல்பு அது. மனிதர்களை நம்ப மனிதர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பளிக்க மனிதர்களை மன்னிக்க மனிதர்களை நேசிக்க நாம் லௌகிக மனநிலைக்கு அப்பால் செல்ல வேண்டியிருக்கிறது ; லௌகிக மனநிலைக்கு அப்பால் இருக்க வேண்டியிருக்கிறது. அவ்விதமான மனிதர்களே கலைஞர்களே அழகான சிறப்பான ஒத்திசைவு கொண்ட உலகம் ஒன்றைக் கற்பனை செய்கிறார்கள் ; படைக்கிறார்கள். ‘’ஒரு மனிதம் ஒரு வீடு ஒரு உலகம்’’ நாவல் மகத்தான கற்பனை. அதி தூய உணர்வின் சொல் வெளிப்பாடு. 

இந்த வாரத்தின் என் நிலையின்மைக்கு இன்ன காரணம் எனக் கூறிட முடியாது. பெரிய காரணங்கள் என ஏதுமில்லை ; சிறிய காரணங்கள் தான். இங்கே ஊரின் மிகப் பழமையான வீடொன்றின் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருக்கிறேன். 99 % பணிகள் நிறைவடைந்து விட்டன. இன்னும் 1 % எஞ்சியிருக்கிறது. எஞ்சியிருக்கும் 1% பணியைத் துவங்க முடியவில்லை. அது வீட்டுக்கு வெளிப்பக்கம் செய்ய வேண்டிய பணி. மழை இல்லாமல் இருக்கும் போது செய்ய வேண்டும். கடந்த ஒரு வாரமாக இங்கே தினமும் மழை. மன நிலையின்மைக்கு அதுவும் ஒரு காரணம்.

அந்த வீடு ஊரிலேயே மிகத் தொன்மையான வீடு. அந்த வீடு கட்டப்பட்டு 125 ஆண்டுகள் இருக்கும். சுவர்களின் அகலம் இரண்டேகால் அடிக்கு மேல் இருக்கக் கூடும். ஓட்டு வீடு. இப்போது அந்த வீட்டில் தம்பதியினரான மூத்த குடிமக்கள் இருவர் இருக்கிறார்கள். அவர்களுடைய குழந்தைகளும் பேரக் குழந்தைகளும் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள் ; பணி புரிகிறார்கள். தொன்மையான அந்த வீட்டில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பது அந்த முதிய தம்பதிகளின் விருப்பம். வீட்டின் ஒரு பகுதியில் குளியலறை நிர்மாணித்து முப்பது அடி நீளத்துக்கு முக்கால் அடி சுவரொன்றை பத்து அடி உயரத்துக்கு அமைத்துக் கொடுத்து வீட்டின் பழைய சுவர்களில் வெள்ளைப்பூச்சு தீட்ட வேண்டும் என்பதே பணி. அந்த வீட்டில் ஒரு யோகி 100 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்திருக்கிறார். ஊரின் சில ஆலயங்களை அவர் கட்டியிருக்கிறார். கட்டிடப் பணியாளர் அனைவரும் யோகி வாழ்ந்த வீடு என்பதால் இன்னதென வகுக்க இயலாத ஒரு நூதன உணர்வுடன் பணி புரிந்தோம். அந்த வீட்டின் முதிய தம்பதியினரிட்ம் அந்த யோகி குறித்த கதைகளைக் கேட்டுக் கொண்டேன். அவர்களுக்கு இப்போது 75 வயது. அவர்களுடைய பாட்டனார் காலத்தில் நடந்தவை அவர்கள் சொன்ன சம்பவங்கள். 

நீ எப்படி இருக்கிறாய்? அலுவலகப் பணிகள் எவ்விதம் செல்கின்றன? அலுவலகத்தில் உன் பணிச்சூழல் எப்படி இருக்கிறது? உன் புறச்சூழலை சிறப்பாக பராமரித்துக் கொள்ளவும். உன் பெற்றோர் எப்படி இருக்கிறார்கள்? அவர்களின் உடல்நலம் எவ்விதம் உள்ளது? மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நலம்தானே?

இந்த கடிதம் எழுதுவது மகிழ்ச்சியைத் தருகிறது. இச்செயல் மனதுக்கு இதம் அளிக்கிறது. மனதுக்கு அற்புதமான உணர்வைத் தருகிறது. ஒரு வெள்ளைக் காகிதத்தில் பென்சிலால் மார்ஜின் போட்டு தடையின்றி எழுதும் பேனாவால் இனிய நண்பனுக்கு கடிதம் எழுதுவது என்பது ஓர் அழகான செயல். இவ்விதமான கடிதங்களை நண்பர்களுக்கு உறவினர்களுக்கு பரிச்சயமானவர்களுக்கு எழுத வேண்டும் என முடிவு செய்துள்ளேன். எளிய நலம் விசாரிப்புகள் என எண்ணுகிறோம். ஒரு மனிதன் தன் சக மனிதனின் நலம் நாடுகிறான் என்பதும் நலம் விசாரிக்கிறான் என்பதும் அற்புதமான செயல்கள். 

தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்த வாரம் கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. மனம் மிகவும் குதூகலமாகவும் உற்சாகமாகவும் இருந்தது. உலகின் உயர்தனிச்செம்மொழிகளில் ஒன்று நமது தாய்மொழி. இருப்பினும் நம் சமூகம் இன்னும் போதிய அளவு இலக்கிய வாசிப்புக்குள் வரவில்லை. இலக்கியத்தின் மேல் ஆர்வம் இல்லாத இலக்கியம் வாசிக்காத சமூகம் பெரிய அளவில் வளர்ந்து விடாது என்பதே யதார்த்தம். தமிழ்ச் சமூகம் உன்னதமான உயரங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே பாரதி முதலான எல்லா படைப்பாளிகளுக்கும் பெருவிருப்பம். எனவேதான் தமிழ்ச் சமூகம் இலக்கியம் வாசிக்க வேண்டும் என்று எல்லா படைப்பாளிகளும் ஓயாமல் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். படைப்பூக்க மனநிலை கொண்ட ஒருவர் தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்களிலிருந்தும் கல்லூரிகளிலிருந்தும் பல்கலைக்கழகங்களிலிருந்தும் தப்பி ஓடி வர வேண்டியிருக்கிறது. ஒட்டு மொத்த சமூகமும் தொழில்நுட்பக் கல்வியினை வழிபட்டுக் கொண்டிருக்கிறது. இங்கே மொழிக்கும் நுண்கலைகளுக்கும் மட்டும் அல்ல கணிதத்துக்கும் அறிவியலுக்கும் கூட இடமில்லை. இந்த நிலை மாற பலவிதங்களிலும் பலவிதமான பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இவ்விதத்தில் தமிழ் இலக்கியப் படைப்பாளி ஜெயமோகன் டாக்டர் பட்டம் பெறுவது முக்கியத்துவம் கொண்டதாகிறது. 

22 ஆண்டுகளுக்கு முன் பொறியியல் பட்டம் பெற்றேன். அதன் பின் எந்த பட்டமும் பெறவில்லை. கணிதம், புவியியல், வணிகம், கணக்கியல், பொருளாதாரம், தடய அறிவியல், சட்டம் ஆகியவை எனக்கு ஆர்வம் உள்ள துறைகள். இவற்றைப் பயில வேண்டும் என்பது என் ஆர்வங்களில் ஒன்று. 

கடிதம் எழுதி அதனை உறையில் இட்டு தபால் வில்லை ஒட்டி முகவரி எழுதி அஞ்சல்பெட்டியில் போடுவது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செயல். சிறுவனாக இருந்த போது நான் பலருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். இப்போது அந்த வழக்கத்தை மீண்டும் துவங்கலாம் என இருக்கிறேன். 

உன்னைச் சந்திக்க வேண்டும் போல் இருக்கிறது ; உன்னுடன் சில நாட்கள் இருக்க வேண்டும் போல் இருக்கிறது. 

அன்புடன்,

பிரபு

22.11.2025
மயிலாடுதுறை   

Friday, 21 November 2025

ஜெயமோகன் ஏன் முக்கியமானவர்?


1. நவீனத் தமிழிலக்கிய வாசகர் எண்ணிக்கை கடந்த 75 ஆண்டுகளாக 1000 - 2000 என்ற அளவிலேயே உள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் தமிழகத்தின் மக்கள் தொகை 2 கோடி -7 கோடி என்ற அளவில் இருந்திருக்கிறது. எவ்வளவு கறாராக மதிப்பிட்டாலும் தமிழ்ச் சமூகத்தில் பத்தாயிரத்தில் ஒருவர் மட்டுமே தீவிர இலக்கியம் வாசிப்பார். தீவிர இலக்கியம் இவ்வளவு குறைவாக வாசிக்கப்படுவதால் எந்த படைப்பாளியின் படைப்பும் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தும் சலனங்கள் என்பவை மிகக் குறைவாகவே இருக்கும். மௌனம் மட்டுமே எதிர்வினையாக இருக்கும். படைப்பாளி தன் படைப்பு சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகளுக்காக எழுதுவதில்லை தன் ஆத்ம திருப்திக்காகவே எழுதுகிறான் என்றாலும் மக்கள்தொகையில் பத்தாயிரத்தில் ஒருவர் மட்டுமே வாசிக்கும் சூழல் என்பது எந்த படைப்பாளிக்கும் தொடர்ந்து படைப்புகளை படைக்க ஊக்கம் கொடுக்காது. புறச்சூழல் ஊக்கமளிக்கும் விதமாக இல்லையெனினும் தன் அகவலிவால் முழுமையாக படைப்பாளியாக மட்டுமே இருப்பது என முடிவு செய்து கடந்த 40 ஆண்டுகளாக படைப்புச் செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதால் ஜெயமோகன் முக்கியமானவர்.

2. தமிழகம் இந்தியாவில் மிக நீண்ட காலம் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த பகுதிகளில் ஒன்று. எனவே இந்தியாவின் எந்த பகுதியை விடவும் இங்கே ஆங்கில மனோபாவத்தின் தாக்கம் அதிகம். நவீனத்துவமும் இருத்தலியமும் தமிழ் படைப்புலகை ஆக்கிரமித்திருந்த காலகட்டத்தில் ஜெயமோகன் தாரா சங்கர் பானர்ஜி, விபூதி பூஷண் பந்தோபாத்யாய, கிரி ராஜ் கிஷோர், குர் அதுல் ஐன் ஹைதர், வெங்கடேஷ் மாட்கூல்கர், காளிந்தி சரண் பாணிக்கிராஹி, லஷ்மி நந்தன் போரா,சிவராம் காரந்த் ஆகிய இந்திய செவ்வியல் படைப்பாளிகளின் படைப்புலகின் விரிவையும் ஆழத்தையும் குறித்து தொடர்ந்து எழுதி அவர்களின் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நாவல்களை தமிழ் இலக்கியச் சூழலில் புதிய தலைமுறை வாசகர்களிடம் நிலை நிறுத்தியதால் ஜெயமோகன் முக்கியமானவர். 

3. இருத்தலியல் மற்றும் நவீனத்துவத்தின் எல்லைக்குள் இருந்த நவீனத் தமிழ் இலக்கியச் சூழலில் திருக்குறள், சிலப்பதிகாரம், குறுந்தொகை, தேவாரம், திருவாசகம், ஸ்ரீநாலாயிர திவ்யப் பிரபந்தம், கம்ப ராமாயணம், குமரகுருபரர் பிரபந்தங்கள் என 2000 ஆண்டு கால பரப்பு கொண்ட தமிழ் மரபிலக்கியத்தின் அழகியலை நவீனத் தமிழ் இலக்கிய வாசகனின் பிரங்ஞைக்கு கொண்டு சென்றவர் என்பதால் ஜெயமோகன் முக்கியமானவர். 

4. உலகு தழுவிய மானுட நோக்கு என்பது இலக்கியத்தின் சிறப்பியல்பு. உலகின் எல்லா நிலத்திலும் இருந்த படைப்புகளுக்கு இந்த சிறப்பியல்பு இருப்பினும் ‘’வசுதைவ குடும்பம்’’ என்றும் ‘’யாதும் ஊரே யாவரும் கேளிர் ‘’ என்று பறைசாற்றிய பாரத நிலத்துக்கு அத்தன்மை தொல் பழங்காலத்திலிருந்து இருந்திருக்கிறது. உலகு தழுவிய மானுட நோக்கே இலக்கியம் என்னும் அழியாத தீச்சுடரை சமகாலத்தில் ஏந்தி நிற்கும் படைப்பாளியாதலால் ஜெயமோகன் முக்கியமானவர். 

5. அச்சு ஊடகம் மூலம் தமிழ்க் கல்வி பரவலாகிறது. தொல் தமிழ் நூல்களைப் பதிப்பித்த தமிழ் அறிஞர் பெருமக்கள் தமிழ்ச் சமூகத்தால் உரிய கௌரவம் அளிக்கப்படவில்லை. அவர்களின் அர்ப்பணிப்பையும் அரும்பணியையும் எப்போதும் தன் எழுத்துக்களால் நினைவுபடுத்திக் கொண்டிருப்பதால் ஜெயமோகன் முக்கியமானவர். 

6. தனித்தமிழியக்க முன்னோடிகளை அறிஞர்களைக் குறித்து தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டேயிருப்பதால் ஜெயமோகன் முக்கியமானவர். 

7. தனித்தமிழியக்கத்தின் சாதனைகளை திராவிட அரசியல் இயக்கம் தன் சாதனைகளாக சொல்லிக் கொண்டது. திராவிட இயக்கம் ஓர் பரப்பிய இயக்கம் ; தமிழுக்கு பெரிதாக ஏதும் அவர்கள் செய்தது இல்லை எனக் கூறி திராவிட இயக்கத்தை நான் ஏன் நிராகரிக்கிறேன் என கட்டுரை எழுதியதால் ஜெயமோகன் முக்கியமானவர். 

8. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம், இதழியல் பத்தி ஆகியவை இலக்கிய வடிவங்கள். உலகெங்கும் படைப்பாளிகள் இவற்றில் ஏதேனும் ஒன்றையோ அல்லது சிலவற்றையோ தங்கள் கலை வெளிப்பாட்டுக்கு கைக்கொள்வார்கள்.  கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம், இதழியல் பத்தி ஆகிய அத்தனை இலக்கிய வடிவங்களிலும் செயல்பட்டதால் ஜெயமோகன் முக்கியமானவர். 

9. சங்க காலத்தில் எழுதப்பட்டிருந்த தமிழ்ப் பிரதிகளில் இருந்த பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை கண்டடைந்து அல்லது உருவாக்கி ‘’கொற்றவை’’ என்ற காப்பியம் படைத்ததால் ஜெயமோகன் முக்கியமானவர். 

10. 26 நாவல்களாக 23,000 பக்கங்களுக்கு மேல் மகாபாரதத்தை மறுபுனைவு செய்து 7 ஆண்டுகள் தினமும் தொடர்ந்து எழுதியதால் ஜெயமோகன் முக்கியமானவர். 

11. ஜெயமோகன் எழுதிய அளவு பக்க எண்ணிக்கையை உலகின் எந்த படைப்பாளியும்  எழுதியதில்லை. உலகில் மகாத்மா காந்தியின் எழுத்துக்கள் 40,000 பக்கங்களாக ‘’The complete works of Mahatma Gandhi'' எனத் தொகுக்கப்பட்டுள்ளன. காந்தி அளவுக்கு காந்தியை விடவும் கூடுதலான பக்கங்கள் எழுதியவர் என்பதால் ஜெயமோகன் முக்கியமானவர். 

12. இலக்கியம் அளவுக்கே செவ்வியல் நுண்கலைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்ததால் ஜெயமோகன் முக்கியமானவர். 

13. நாராயண குரு மரபில் வந்த தனது ஆசிரியர் குரு நித்ய சைதன்ய யதி செய்ய நினைத்ததை தன் இலக்கியப் பணி வாயிலாக செய்து கொண்டிருப்பதால் ஜெயமோகன் முக்கியமானவர். 

14. நித்யவனம் பயிலகம் மூலமாக இந்திய தத்துவம், ஆலயக் கலை, மேலைத் தத்துவம், சைவத் திருமுறைகள், பிரபந்தம், ஓவியம், காட்சிக் கலை , மரபிசை , யோகம், விபாசனா, தியானம் ஆகியவற்றை தமிழ்ச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்துவதால் ஜெயமோகன் முக்கியமானவர். 

15. தமிழுக்காக பணியாற்றிய எல்லா ஆளுமைகள் வாழ்க்கையைக் குறித்தும் அவர் தம் இலக்கியப் பணியைக் குறித்தும் தமிழ் விக்கி இணையதளத்தில் பதிவு செய்யும் அரும்பணியைச் செய்வதால் ஜெயமோகன் முக்கியமானவர். 

மேற்கண்ட செயல்களால் ஜெயமோகன் மகத்தானவரும் கூட. 

ஏதேனும் ஒரு விடுபடல் (நகைச்சுவைக் கட்டுரை)

தமிழ் இலக்கியப் படைப்பாளி ஜெயமோகன் தனது இணையதளத்தில் நாளுக்கு ஒரு அத்தியாயம் என ஏழு வருடங்கள் தொடர்ச்சியாக வெண்முரசு நாவலை எழுதினார். உலக இலக்கியத்தில் ஏழு வருடங்கள் தினமும் எழுதப்பட்டு தினமும் வாசிக்கப்படுதல் என்னும் நிகழ்வு வெண்முரசுக்கு முன்னும் நிகழ்ந்ததில்லை. இன்று வரை வெண்முரசுக்குப் பின்னும் நிகழ்ந்ததில்லை.  தினமும் எழுதப்பட்டு தினமும் பதிவேற்றம் செய்யப்பட்ட அத்தியாயத்தை உலகெங்கும் உள்ள வாசகர்கள் தினமும் வாசித்தார்கள். 

முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம், பிரயாகை, வெண்முகில் நகரம், இந்திர நீலம், காண்டீபம், வெய்யோன், பன்னிரு படைக்கலம், சொல்வளர்க்காடு, கிராதம், மாமலர், நீர்க்கோலம், எழுதழல், குருதிச்சாரல், இமைக்கணம், செந்நா வேங்கை, திசைதேர் வெள்ளம், கார்கடல், இருட்கனி, தீயின் எடை, நீர்ச்சுடர், களிற்றியானை நிரை, கல்பொருசிறுநுரை, முதலாவிண் என மொத்தம் 26 நாவல்கள் வெண்முரசுக்குள் அடக்கம். 

அவ்வப்போது வெண்முரசு வாசகர்கள் வெண்முரசு குறித்து உரையாடிக் கொள்ளும் போது மொத்த 26 நாவல்களின் பெயரையும் ஒருமுறை திரும்பச் சொல்லிப் பார்ப்போம். மொத்த 26ல் ஓரிரு நாவல்களின் பெயர்கள் மறந்து போவதும் அதனை இன்னொருத்தர் நினைவுபடுத்துவதும் அவ்வப்போது நடக்கும். 

முதற்கனல் அம்பையின் கதை, மழைப்பாடல் சதசிருங்கத்தில் பாண்டவர் பிறப்பு, வண்ணக்கடலில் துரோணரின் குருகுலம், நீலம் பாகவதம், பிரயாகை திரௌபதியின் கதை, வெண்முகில் நகரம் இந்திரபிரஸ்த உருவாக்கம், இந்திர நீலம் துவாரகை மற்றும் சியமந்தக மணியின் கதை, காண்டீபம் அர்ஜூனனின் பயணங்கள், வெய்யோன் கர்ணனின் கதை, பன்னிரு படைக்களம் சூதாட்டம், சொல்வளர்காடு ஆரண்ய வாசம், கிராதம் அர்ஜூனனின் ஆன்மீகப் பயணங்கள், மாமலர் பீமன் கல்யாணசௌகந்திக மலர் நாடிச் செல்வது அதில் இடம்பெறும் அனுமன், நீர்க்கோலம் அக்ஞாதவாசம் என எளிதில் என் நினைவில் இருக்கும். இமைக்கணம் கீதோபதேசம். செந்நா வேங்கை பீஷ்மர் படைத்தலைமை என நினைவுபடுத்திக் கொள்வேன். இருப்பினும் யுத்தம் குறித்த நாவல்களின் பெயர்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து விடும். 

ஒரு வாசகர் நினைவில் இருந்து விடுபட்டதை இன்னொரு வாசகர் கூறுவார் ; எனினும் எல்லாருக்குமே ஏதேனும் ஒரு நாவல் பெயர் விடுபட்டு விடும். 

இரண்டு டாக்டர் பட்டங்கள்



தமிழ் ஓர் உயர்தனிச்செம்மொழி. இருப்பினும் தமிழின் உரைநடை இலக்கியம் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மட்டுமே தோன்றத் தொடங்கியது. அச்சு ஊடகம் மூலம் உரைநடை பரவலாக மக்களைச் சென்றடையத் தொடங்கிய பின்னர் இலக்கியப் படைப்பாளிகள் உரைநடையில் தங்கள் படைப்புகளை எழுதத் தொடங்கினர். தமிழில் பாரதி எழுதத் துவங்கியதற்கு சற்று முன்னர் உரைநடை இலக்கியம் தொடங்கியிருந்தாலும் பாரதியை நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடியாகவும் தலைமகனாகவும் கொள்வது மரபு. மொழி என்பது கோடானுகோடி மக்கள் அறியும் பேசும் அன்றாடம் புழங்கும் ஒன்றாயினும் மொழியின் சாரமான பகுதி என்பது அந்த மொழியின் இலக்கியப் படைப்பாளியின் இலக்கியப் படைப்பே. ஆதலால் தான் உலகெங்கும் இலக்கியம் கற்பிக்கப்படுகிறது. இலக்கியம் முன்னெடுக்கப்படுகிறது. நமக்குக் கிடைக்கும் இலக்கியப் பிரதிகளைக் கொண்டு மதிப்பிடுகையில் தமிழ் குறைந்தபட்சம் 2500 ஆண்டுகள் தொன்மையானது என்பதை உணர்கிறோம். புறவயமான ஆய்வுகளும் இதனை உறுதி செய்கின்றன. இந்த 2500 ஆண்டுகளில் கடைசி 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை அதாவது 2350 ஆண்டுகள் தமிழில் செய்யுளே படைப்பு வடிவமாக இருந்திருக்கிறது. கவிதை செய்யுள் வடிவில் எழுதப்பட்டிருக்கிறது. பாரதி செய்யுள் வடிவிலும் தனது கவிதைகளை எழுதியிருப்பதாலும் செய்யுள் நடைக்கு அப்பால் வசன நடையிலும் கவிதைகளை எழுதியிருப்பதாலும் கதை, கட்டுரை ஆகியவற்றை எழுதி உரைநடை இலக்கியத்திலும் தடம் பதித்ததாலும் நாளிதழ்களின் ஆசிரியராக இருந்து இதழியலிலும் பங்காற்றியிருப்பதாலும் பாரதியை நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடியாகவும் தலைமகனாகவும் கொள்கிறோம்.


மரபிலக்கியம் அதனை நாடிச் சென்ற மிகச் சிலரால் மட்டுமே பயிலப்பட்டது. அந்த எண்ணிக்கை மிக மிகக் குறைவு. எவ்வளவு கறாராக மதிப்பிட்டாலும் மக்கள்தொகையில் ஆயிரத்தில் ஒருவர் மட்டுமே மரபிலக்கியக் கல்வியை நோக்கிச் சென்றிருக்க முடியும். அதனை ஆசிரியர் ஒருவரிடம் சென்று அவரிடம் உடனிருந்து மாணவர்கள் கற்றிருக்கின்றனர். அந்த கல்விநிலையங்களுக்கு அரசுகள் ஆதரவு அளித்திருக்கின்றன. அரச ஆதரவும் சமூக ஆதரவும் இருந்ததால் தமிழ் இலக்கியக் கல்வி பல்லாயிரம் ஆண்டுகளாக முன்நகர்ந்து வந்திருக்கின்றது.  சேர ,சோழ, பாண்டிய மன்னர்கள், சிற்றரசர்கள், வேத பாடசாலைகள், சமணத் துறவு நிலையங்கள், பௌத்த துறவு சங்கங்கள், சைவ ஆலயங்கள், வைணவ ஆலயங்கள், வைணவ மடங்கள், சைவ மடங்கள், விஜயநகரப் பேரரசு, நாயக்கர் ஆட்சி ஆகியவை தமிழின் 2500 ஆண்டு கால வரலாற்றில் தமிழின் மொழிக்கல்வியும் இலக்கியக் கல்வியும் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வருவதற்கு ஆதரவளித்தவர்களும் அதன் காரணமும் ஆவர்.

இந்த நீண்ட வரலாற்றுப் பின்னணி தமிழகத்துக்கு இருக்க பல்வேறு உலகளாவிய அரசியல் நிகழ்வுகளின் பின்னணியில் அச்சு ஊடகம் தமிழகத்துக்கு வருகிறது. அச்சு ஊடகம் தமிழில் அறிமுகமாகும் அதே காலகட்டத்தில் தான் ஏறக்குறைய உலகின் எல்லா பகுதிகளிலும் அச்சு ஊடகங்கள் அறிமுகமாகின்றன. உலகின் சாமானியர்கள் பெரிய அளவில் அடிப்படைக் கல்வி பயின்று எழுத்தறிவு அடைவது இந்த காலத்திலேயே. பலர் கல்விக்குள் வந்து எழுத்தறிவு பெற்று வாசிக்கத் தொடங்குவதால் இதழ்கள் வெளிவரத் தொடங்குகின்றன. அச்சு நூல்கள் வெளிவரத் துவங்குகின்றன. அப்போதும் உலகின் தொன்மையான நூல்கள் அச்சு நூல் வடிவில் வருவதும் முன்னர் அதனைப் பயின்று கொண்டிருந்தவர்கள் அச்சு நூல் வடிவில் தொல் நூல்களைப் பயில்வதும் நிகழ்கிறது. தமிழில் உரைநடை இலக்கியம் உருவாவதற்கு சற்று முன் முதன்மையான அறிவுச் செயல்பாடாக பண்டைத் தமிழ் இலக்கியங்கள் அச்சு நூல் வடிவில் பதிப்பிக்கப்படுவது நிகழ்வதை இதனுடன் சேர்ந்து யோசிக்கலாம். பண்டைத் தமிழ் நூல்களைப் பதிப்பித்ததில் டாக்டர். உ.வே.சாமிநாத ஐயர், சி. வை. தாமோதரம் பிள்ளை, ஆறுமுக நாவலர் ஆகியோர் முக்கியமானவர்கள்.




மரபிலக்கியமும் உரைநடை இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று மோதி ஒன்றுடன் ஒன்று கலக்கும் ஒன்றையொன்று இட்டு நிரப்பும் சமூகவியல் செயல்பாடு தமிழ் மொழியிலும் தமிழ்ச் சமூகத்திலும் நிகழத் தொடங்கி அவை தம் செல்வழிகளைத் தேரத் தொடங்கின. அச்சு ஊடகம் உருவாகி நிலைகொண்ட அதே காலகட்டத்தில்தான் உலகின் ஒரு மொழியின் இலக்கியப் படைப்புகள் இன்னொரு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு ‘’மொழிபெயர்ப்பு இலக்கியம்’’ உருவாகி வருகிறது. மொழியின் இலக்கியத்தின் அழகியலுக்கு பல்வேறு விதங்களில் மேலும் அணி சேர்த்தது ‘’மொழிபெயர்ப்பு இலக்கியம்’’.



கவிஞனின் கலைஞனின் அகம் படைப்பூக்கம் கொண்டது. கற்பனையும் உணர்வெழுச்சியும் நிரம்பியது. கவிதையின் கலையின் இலக்கியத்தின் இயங்கு தளம் சாமானிய லௌகிக மனநிலையிலிருந்து மிக உயரத்தில் இருப்பது. மரபான இலக்கியம் வரலாறு நெடுக பயிலப்பட்ட காலத்தில் அதனை சமூகத்தின் மிகச் சிறு எண்ணிக்கையிலானோர் மட்டுமே பயின்றிருப்பதையும் சாமானியர் அதனுள் பிரவேசிக்காமலேயே இருந்திருப்பதையும் காண முடியும். கலையை இலக்கியத்தை ஆதரிப்பவர்கள் இருப்பினும் கணிசமான கவிஞர்களும் படைப்பாளிகளும் தன் உள்ளுணர்வை மட்டுமே பின்பற்றும் இயல்பு கொண்டிருப்பதையும் எந்த அதிகார அமைப்புக்கும் முழுமையாக கட்டுப்பட்டவர்களாக இல்லாமல் இருப்பதையும் வரலாறு நெடுக காண முடியும்.

நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடியான தலைமகனான பாரதி எதிர்காலத்தில் நவீனத் தமிழிலக்கியவாதிகள் எதிர்கொள்ள இருந்த எல்லா சமூக இடர்களையும் எல்லா லௌகிக நெருக்கடிகளையும் அவன் காலத்தில் அவன் வாழ்வில் எதிர்கொள்வதிலும் முன்னோடியாக தலைமகனாக இருந்தான். தமிழ் 2500 ஆண்டு கால தொன்மையைக் கொண்ட மொழியாயினும் இருபதாம் நூற்றாண்டில் நவீனத் தமிழிலக்கியச் செயல்பாடுகள் நிகழத் தொடங்கிய காலகட்டத்தில் தமிழகத்தின் எழுத்தறிவு சதவீதம் 10 சதவீதமாக இருந்திருக்கிறது. எழுத்தறிவு 10 சதவீதம் எனில் மொழியை வாசிக்கும் வழக்கம் அதிகபட்சம் 5 சதவீதம் பேருக்கு இருந்திருக்கும். பாரதி வாழ்ந்த காலகட்டத்தில் அவன் தமிழின் ஆகப் பெரிய வரலாற்று இலக்கிய ஆளுமைகளில் ஒருவன் என்னும் உணர்வு தமிழ்ச் சமூகத்துக்கு போதிய அளவில் ஏற்படவில்லை. தன் கவிதைகளின் உயிரால் ஒளியால் ஜீவனால் பாரதி தன் மறைவுக்குப் பின்னால் வெகு காலம் கழித்து அவனுக்குரிய படைப்பு முக்கியத்துவத்தை அடைந்தான். பெரும்பாலான நவீனத் தமிழிலக்கியப் படைப்பாளிகளுக்கும் இவ்விதமே நிகழ்ந்தது. போதிய அளவு வாசகர் இன்மை, சமூகத்தின் குறை இலக்கிய உணர்வு, அரசு மற்றும் கல்வித்துறையின் ஆதரவின்மை, வெகுஜன சமூகத்தின் விலக்கல் உணர்வு இன்னும் பல என எண்ணற்ற எதிர்மறை அம்சங்கள் இருப்பினும் மொழியின் கலையின் இலக்கியத்தின் ஜீவனை தன்னுள் கொண்டு நவீனத் தமிழிலக்கியவாதிகள் தமிழுக்கும் மொழிக்கும் இலக்கியத்துக்கும் நேர்மறையான ஆக்கபூர்வமான பங்களிப்பை அளித்து 2500 ஆண்டு கால தமிழின் வரலாற்றுத் தொடர்ச்சியை உயிர்ப்புடனிருக்கச் செய்தார்கள் ; உயிர்ப்புடன் இருக்கச் செய்கிறார்கள்.

நவீனத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளின் நிரை மிகவும் பெரியது. எந்த மகத்தான உலகப் படைப்பாளிக்கும் நிகரான நவீனத் தமிழ் படைப்பாளிகள் சிலரின் பெயரைப் பட்டியலிடுகிறேன். இது முழுமையான பட்டியல் அல்ல. எனினும் இவர்கள் தமிழின் முதன்மையான இலக்கியப் படைப்பாளிகளாவார்கள். பாரதி, புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், எம்.எஸ்.கல்யாணசுந்தரம், ப.சிங்காரம், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன், தேவதச்சன், தேவதேவன்,ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன்.











19.11.2025 அன்று திண்டிவனம் அருகில் உள்ள ஓங்கூரில் அமைந்துள்ள ‘’தக்‌ஷசீலா பல்கலைக்கழகம்’’ தமிழ் இலக்கியப் படைப்பாளியான ஜெயமோகனுக்கு ‘’டாக்டர்’’ பட்டம் அளித்து கௌரவித்துள்ளது. பாரதி கிருஷ்ண துவைபாயன வியாசனின் பாதிப்பில்  தான் இயற்றிய ’’பாஞ்சாலி சபதம்’’ காவியத்தினை கீழ்க்கண்டவாறு சமர்ப்பித்துள்ளான் : ‘’தமிழ் மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப் போகிற வரகவிகளுக்கும் அவர்களுக்குத் தக்கவாறு கைங்கர்யங்கள் செய்யப் போகிற பிரபுக்களுக்கும் இந்நூலை பாத காணிக்கையாகச் செலுத்துகிறேன்’’. 


ஜெயமோகன் கடந்த 38 ஆண்டுகளாக நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார். தமிழுக்கு அவரளவு பங்களிப்பாற்றிய இன்னொரு படைப்பாளி இல்லை ; உலக இலக்கியத்துக்கு அவரளவு பங்களிப்பு அளித்த இன்னொரு படைப்பாளியும் கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் இல்லை. இலக்கியத்தில் என்னென்ன படைப்பு வடிவங்கள் உள்ளனவோ அத்தனையிலும் தனது படைப்புகளை அளித்தவர் ஜெயமோகன். தனது இயலாமைகளாலும் தனது போதாமைகளாலும் தமிழ்ச் சமூகம் கௌரவிக்காது போன நவீனத் தமிழிலக்கிய முன்னோடிகளுக்கு இன்றைய தமிழ்ச் சமூகம் செய்யும் பிழையீடாக தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் ‘’டாக்டர்’’ பட்டத்தை ஏற்றுக் கொள்வதாகக் கூறும் ஜெயமோகன் தன்னை நவீனத் தமிழிலக்கிய முன்னோடிகள் தங்கள் அர்ப்பணிப்பாலும் தியாகத்தாலும் உருவாக்கிய பாதையில் தொடர்ந்து நடக்கும் தமிழிலக்கியப் படைப்பாளியாகவே தன்னை உணர்கிறார். ஜெயமோகனுக்கு டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டிருப்பது ஒரு வரலாற்று நிகழ்வு. அதனைச் செய்து தன்னை வரலாற்றில் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது ‘’தக்‌ஷசீலா பல்கலைக்கழகம்’’. அந்த பல்கலைக்கழகம் வாழ்த்துக்குரியது.

***

1971ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு ’’டாக்டர்’’ பட்டம் அளிக்க முனைந்தது. அறிஞர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் அளிக்கப்படும் ‘’டாக்டர்’’ பட்டத்தை அரசியல் அதிகாரத்தில் இருக்கும் கருணாநிதிக்கு அளிக்ககூடாது என  அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும் மாணவர் அமைப்புகளும் கடுமையாக எதிர்த்தனர். அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதி ஒருவருக்கு அளிக்கப்படும் இந்த கௌரவம் ‘’டாக்டர்’’ பட்டத்தின் மாண்பையே குலைக்கக் கூடியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பும் அதன் தலைவரான உதயகுமார் என்ற மாணவரும் கூறினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பும் அதன் தலைவரான உதயகுமாரும் சிதம்பரம் நகரில் இருந்த கழுதைகளின் கழுத்தில் ‘’டாக்டர்’’ என அட்டைகளில் எழுதித் தொங்கவிட்டனர். நகரெங்கும் கழுதைகள் கழுத்தில் ‘’டாக்டர்’’ பட்டம் தொங்குவது போல் கேலிச் சித்திரங்களை சுவரில் தீட்டினர். சிதம்பரம் நகரெங்கும் மாணவர் போராட்டத்தால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. மாணவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பு ஆகியோரின் எதிர்ப்பையும் மீறி கருணாநிதி சிதம்பரம் வருகை புரிந்து பல்கலைக்கழகம் வழங்கிய ‘’டாக்டர்’’ பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். விழா முடிந்து கருணாநிதி சென்னை புறப்பட்டுச் சென்றதும் மாநிலக் காவல்துறையினர் பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் சென்று அங்கிருந்த மாணவர்களைத் தாக்கினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பின் தலைவரான உதயகுமார் கொல்லப்பட்டு அவரது பிணம் பல்கலைக்கழகத்தில் இருந்த குட்டை ஒன்றில் காவல்துறையினரால் வீசப்பட்டது. உதயகுமாரின் பெற்றோர்கள் காவல்துறையாலும் ஆளும்கட்சியாலும் மிரட்டப்பட்டு உதயகுமாரின் பிணத்தை தங்கள் மகனின் பிணம் அல்ல அது எனக் கூறுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள். ஆளும்கட்சியின் காவல்துறையின் மிரட்டலுக்குப் பயந்து அவர்கள் அவ்விதமே கூறினர். அந்த பிணம் யாருடையது என்பதை அறிய ‘’சிவசுப்ரமணியம் கமிஷன்’’ என்ற விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. தமிழக சட்டசபையில் இந்த விஷயத்தை இந்திய தேசிய காங்கிரஸ் பலமுறை எழுப்பியது. ‘’சிவசுப்ரமணியம் கமிஷன்’’ இறந்தது மாணவர் தலைவர் உதயகுமார் தான் என்று கூறினால் தான் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கருணாநிதி கூறினார். சிவசுப்ரமணியம் கமிஷன் இறந்தது உதயகுமார்தான் என்று அறிக்கை அளித்தது. காங்கிரஸ்காரர்கள் தமிழக சட்டசபையில் ‘’சிவசுப்ரமணியம் கமிஷன் அறிக்கை இங்கே ; கருணாநிதி ராஜினாமா எங்கே’’ என்று கேட்டனர். கமிஷன் அறிக்கை வந்த பின்னும் கருணாநிதி ராஜினாமா செய்யவில்லை. கருணாநிதி கட்சிக்காரர்கள் கருணாநிதியை ‘’டாக்டர் கலைஞர்’’ என இன்றளவும் அழைக்கிறார்கள்.  இந்த சம்பவத்துக்குப் பின் தமிழக அரசியல்வாதிகள் பலருக்கு தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் ‘’டாக்டர்’’ பட்டம் அளித்துள்ளன. தமிழக அரசியல்வாதிகள் பலர் அதனைப் பெற்றிருக்கிறார்கள்.

***

  

Thursday, 20 November 2025

ஒளிமகள்

 

நமது நாட்டை ஆண்ட பிரிட்டிஷார் நம் நாட்டின் பொருளியலைச் சுரண்டிக் கொண்டிருந்தனர் ; நம் நாட்டின் பொருளியலை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். பிரிட்டிஷார் நம் நாட்டின் மீது நிகழ்த்திய பொருளியல் சுரண்டலால் - பொருளியல் கொள்ளையால் மிகவும் பாதிப்புக்குள்ளானது நம் நாட்டின் சாமானியர்கள் ; விவசாயத் தொழிலாளகள் ; சிறு விவசாயிகள் ; கைவினைஞர்கள் ; சிறு விவசாயிகள் ஆகியோரே. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நம் நாட்டின் மக்கள் தொகை முப்பது கோடி எனில் அதில் 99.99 சதவீதம் பேரை பிரிட்டிஷ் அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் சுரண்டியது. உணவுப் பொருட்கள் பதுக்கப்பட்டு கொள்ளை லாபத்தால் விற்கப்படுவது இந்த காலகட்டத்தில் மிகத் தீவிரமாக இருந்தது. செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சங்களால் இந்தியர்கள் கோடிக்கணக்கில் மடிந்தனர். ’’தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு பாழ்பட்டு நின்ற ‘’ தேசம் என பாரதி நம் நாட்டின் அன்றைய நிலையை எடுத்துக் கூறுகிறான். 

நாடு சுதந்திரம் பெற்று நாம் நம் குடிகள் அனைவருக்கும் உணவு கொடுக்க வேண்டிய அவசியத்தை ஒவ்வொரு நாளும் எதிர்கொண்டோம். அந்தப் பணி எளிய ஒன்றாக இருக்கவில்லை ; ஒவ்வொரு நாளும் சவால் மிக்கதாகவே அப்பணி இருந்தது. உணவு உற்பத்தியைப் பெருக்கி பதுக்கலைத் தடுத்து நம் நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை நாம் உறுதி செய்தோம். இருபதாம் நூற்றாண்டின் மைய காலகட்டத்திலும் கடைசி இருபது ஆண்டுகளிலும் இந்தியாவின் சாமானிய குடும்பங்களுக்கு தன் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு மாத ஊதியம் கிடைக்கும் ஒரு வேலை என்பதே மிகப் பெரிய கனவாக இருந்தது. அந்த கனவையே ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் கண்டு கொண்டிருந்தது. அந்த கனவை நோக்கியே ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் சென்று கொண்டிருந்தது. பசியிலிருந்து விடுபட்டு இருத்தலே ஒவ்வொரு இந்தியக் குடும்பத்தின் இலட்சியமாக இருந்தது. பசிக்கு உணவு என்னும் உணர்வுப் பேரலையில் ‘’சத்தான உணவு ஆரோக்கியமான உடல் நோய்மையற்ற வாழ்க்கை ‘’ என எந்த விஷயத்தின் மீதும் யாருக்கும் கவனம் இருக்கவில்லை. 

ஒவ்வொரு சாமானிய இந்தியன் வயிற்றிலும் இடைவிடாமல் எரிந்து கொண்டிருந்த பசித்தீயே அவன் வாழ்வை எண்ணங்களை செயல்களை தீர்மானித்துக் கொண்டிருந்தது. முற்றிலும் எதிர்மறையான இந்த சூழலிலிருந்து தேசத்துக்காகவும் தேச மக்களுக்காகவும் தேச நலனுகாகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மாபெரும் இந்தியர்களின் நிரை உருவான காலகட்டமும் இதுவே. பெரும் கல்வியாளர்களும் விஞ்ஞானிகளும் அறிஞர்களும் விளையாட்டு வீரர்களும் இந்த காலகட்டத்திலிருந்தே உருவாகி வந்தனர். அவ்விதம் உருவாகி வந்தவர்களில் முக்கியமானவர் பி.டி. உஷா. 

பி.டி. உஷா என்பது ஒரு பெயரல்ல ; அது கோடானுகோடி எளிய இந்தியர்களின் நம்பிக்கைகளின் அடையாளம். கேரளத்தின் எளிய கிராமம் ஒன்றிலிருந்து எழுந்து வந்த உஷா அவர்களின் சூழலை இருநூறு ஆண்டு கால பிரிட்டிஷ் ஆட்சி சூழலிலிருந்தும் நமது சமூக மனநிலையிலிருந்தும் துவங்கினால் மட்டுமே முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். 

தடகளப் பயிற்சிக்கான எந்த உள்கட்டமைப்பும் அவர் உருவான காலகட்டத்தில் கிடையாது. ஒரு விளையாட்டு வீரரைப் புரிந்து கொள்ளும் ஒரு விளையாட்டு வீரருக்கு மதிப்பளிக்கும் சமூகச் சூழல் நம்மிடம் இல்லை. அவர் ஒரு தடகள வீரராக தன்னை எண்ணிக் கொள்ள ஒரு தடகள வீரராக தன்னை முன்னிறுத்திக் கொள்ள ஒரு தடகள வீரராகச் செயல்பட அவர் தடைகளை மட்டுமே தன் வாழ்வில் கண்டிருப்பார். அவர் ஓர் ஒளி பொருந்திய ஆளுமையாக அடையாளம் காணப்படுவதற்கு அவர் அந்த தடைகளை பொறுமையாக உடைத்து முன்னேறி தனது இலக்கை அடைந்ததே காரணம். அதற்காக அவர் தாங்கிய வலிகள் அவரை மகத்தான ஒருவராக ஆக்கியிருக்கின்றன. 

என்னுடைய பால பருவத்திலிருந்து அவர் பெயரை அடிக்கடி கேட்டிருக்கிறேன். அவரைச் சந்திக்கும் வாய்ப்பு நேற்று கிடைத்தது. அவருடைய ஆட்டோகிராஃபை கேட்டு பெற்றுக் கொண்டேன். அவரது  அசாத்தியமான உடல் வலிமையை நேரில் கண்ட போது பெருவியப்பு ஏற்பட்டது. 


இன்று இந்தியர்களாகிய நாம் வறுமையை வென்றிருக்கிறோம். உணவுத் தன்னிறைவு பெற்ற நமது நாடு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்கிறது. இன்று இந்தியர்கள் உணவுக்காக மிகப் பெரிய அளவில் செலவு செய்கின்றனர். ‘’உடல் பருமன்’’ இன்றைய இந்தியர்களின் உடல் ஆரோக்கியப் பிரச்சனைகளில் முக்கியமானதாக உருவாகியிருக்கிறது. பசி எவ்விதம் ஒரு தீமையோ அதை விட ‘’மிகை உணவு’’ என்பது தீயது. 

’’இந்த உலகம் மிகப் பெரிய உடற்பயிற்சிக் கூடம் ; இங்கே நாம் நம்மை வலிமை படைத்தவர்களாக ஆக்கிக் கொள்ள்வே வந்திருக்கிறோம் ‘’ என்றார் சுவாமி விவேகானந்தர். ‘’வலிமை கொள்க’’ என்பது வேதாந்தம் மானுடத்துக்கு வழங்கும் அறைகூவல். 


பி.டி உஷா தடகளத் துறையில் தான் வழங்கிய பங்களிப்புக்காக நாட்டின் மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையையும் அவருக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வழங்கியுள்ளது. அர்ப்பணிப்பும் தலைமைப் பண்பும் கொண்ட மனிதரான பி.டி. உஷா வின் வழிகாட்டுதல் இன்றைய தடகள வீரர்களுக்கு கிடைப்பது நாட்டின் நல்லூழ்.     

Wednesday, 19 November 2025

காவியகர்த்தா


 
படைப்போன் அகத்தில்
கணமும் உயிர்பெறுகின்றன கோடானுகோடி உயிர்கள்
அவனுக்கு எல்லா உயிர்களும் குழந்தைகளே
இருப்பினும்
சில ம்கவுகள் 
தன்னைப் போல் படைக்க இருப்பதை
அகக்காட்சியில் கண்டு 
புவியில் அவை பிறக்கும் முன்னே
அவற்றுக்கு மேலும் மேலும் ஆசியளிக்கிறான்
படைப்போன்

படைப்போன் மேலும் மேலும் ஆசியளிக்கும்
குழந்தைகள் 
யாரெனக் காண்பதில் எப்போதும் ஆர்வம்
சொல்லரசிக்கு
படைப்போன் தேர்வை
மேலும் தேர்ந்து
அம்மகவுக்கு
தன் ஆசியையும் தருகிறாள்
சொல்லன்னை

எல்லா அன்னையரையும் போலவே
சொல்லன்னைக்கும்
மகவைக் குறித்த விசனங்கள்
சொல்லின் உலகம் பெரிதும் அருவமானது
புறத்தினும் அகத்தில் வியாபிப்பது
மானிட உயிர்கள்
கண்ணால் காண்பதையும்
திட்டவட்டமான பொருள் உலகையும்
மட்டுமே 
உலகம் என்றும்
வாழ்க்கை என்றும்
கொள்வார்கள்
படைப்போன் ஆசி பெற்ற
தன் ஆசி பெற்ற
மகவு
மானிடச் சூழலுடன்
இயல்பாகப் பொருந்திக் கொள்ள வேண்டுமே
என்னும் விசனத்துடன்
எப்போதும் இருந்தாள் சொல்லன்னை
அம்மகவு மண்ணில் பிறப்பதற்கு முன்பிருந்தே

சொல்லை ஆராதிக்கும் மானிடப் பெண்ணின்
கருப்பையில்
அம்மகவை உதிக்க வைத்தான் படைப்போன்
அம்மகவின் மானிட அன்னைக்கு
அம்மகவு சொல்லின் உலகத்தில் மட்டுமே சிறப்பாக இருக்கும்
என்பது  
மூட்டமாகத் தெரிந்திருந்தது
சொல்லன்னை கொண்ட விசனம் மானிட அன்னைக்கும்
மானிடச் சூழலில் தன் மகவு பொருந்தியிருப்பது குறித்து

புவிக்கு வந்த அம்மகவு
இந்த உலகைப் பார்த்துக் கொண்டேயிருந்தது
பார்க்கப் பார்க்க வளர்ந்து கொண்டேயிருக்கும்
இந்த உலகத்தில் 
இந்த உலகத்தை
இதை விடவும் சிறப்பான அழகான உலகத்தை உலகங்களை
படைக்கத் தொடங்கியது 
படைப்போன் புன்னகைத்தான்
அகத்தில் நிகழ்வதை சொல்லில் அம்மகவு வடிக்கத் தொடங்கியதும்
சொல்லன்னையும் புன்னகைத்தாள்

படைப்பவர்களுக்குரிய நிலையின்மை 
மகவாயிருந்து பாலனாகி இளைஞனான அவனைச் சூழ்ந்தது
அவன் அலையத் துவங்கினான்
அனாதி காலமாக அலைந்து திரிந்தவர்களின் நிலம் அவன் ஜன்மபூமி
அனாதி காலமாக துறந்து கொண்டேயிருப்பவர்களின் நிலம் அவன் ஜன்மபூமி

ஊழ் அவனை நல்லாசிரியர்களிடமும் கொண்டு சென்றது
துறவியாயிருந்த ஒரு நல்லாசிரியர் சொன்னார் :
‘’நீ உண்மையை அறிவாயென்றால் அது கற்பனை வழியாகவே’’

தன் தீரா அலைச்சலில்
தன் தீரா நகர்வுகளில்
அவன் மேலும் மேலும் மேலும் என
நல்லாசிரியர்களைக் கண்டு கொண்டேயிருந்தான்
மொழியில் தன் படைப்புகளை வடித்துக் கொண்டேயிருந்தான்

அவன்
தன் படைப்புகளை வடித்த மொழி 
உலகில் கோடானுகோடி மானிடர் அறிந்தது
இருப்பினும்
அவன் சொற்கள் சிலருக்கே புரிந்தது
எமக்குத் தொழில் படைத்தல்
என 
படைத்துக் கொண்டேயிருந்தான்

தன் சொற்களால்
அவன் 
பல கடவுள்களைப் படைத்திருக்கிறான்
கடவுள்களை மானிட மொழியில் பேச வைத்திருக்கிறான்
ஞானிகளை தீர்க்கதரிசிகளை மீண்டும் உருவாக்கியிருக்கிறான்

அவன் சொற்கள்
மானிடர் பலருக்கு 
இதமளித்தது
நம்பிக்கையளித்தது

ஆதி மானிடன் கண்டறிந்த முதல் தீச்சுடர்
ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு
என
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக
சென்று கொண்டேயிருப்பது போல
அவன் சொற்கள்
செல்லத் துவங்கின

அவன் குறித்து
ஈன்ற பொழுதிற் பெரிதுவந்தாள்
சொல்லன்னை

***