பிரபு மயிலாடுதுறை
Friday, 12 September 2025
தேன்சிட்டு
திருவாரூர் சாலை
ஊரிலிருந்து திருவாரூருக்குச் செல்லும் பாதை அகலமாக்கிப் போடப்பட்டுள்ளது. சிறு ஊர்களுக்குக் கூட புறவழிச்சாலை வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தில் பயணித்த போது பல ஊர்கள் அகலப்படுத்தப்பட்ட சாலையால் அடையாளம் தெரியாத அளவு மாறியுள்ளன. பயண நேரம் என்பது கணிசமாகக் குறைந்திருக்கிறது. இரு சக்கர வாகனத்தில் பயணித்த போது அதனை உணர்ந்தேன். காரில் பயணிப்பவர்கள் அதனை மேலும் உணரக் கூடும்.
Tuesday, 9 September 2025
குமரகுருபரர் சொல்லில் தமிழ்நாடு
குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் நூலில் கீழ்க்காணும் பாடல் இடம் பெற்றுள்ளது. அதில் ‘’தமிழ்நாடு’’ என்ற சொல் உள்ளது.
விண்ணளிக் கும்சுடர் விமானமும் பரநாத வெளியில் துவாதசாந்த
வீடும் கடம்புபொதி காடும் தடம்பணை விரிந்ததமிழ் நாடும்நெற்றிக்
கண்அளிக் கும்சுந் தரக்கடவுள் பொலியும்அறு கால்பீட மும்எம்பிரான்
காமர்பரி யங்கக் கவின் தங்கு பள்ளிஅம் கட்டிலும் தொட்டில்ஆகப்
Monday, 8 September 2025
தமிழ்நாடு
பாரதியாரின் ‘’செந்தமிழ் நாடு’’ என்னும் பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது.
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)
வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)
காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி - என
மேவிய யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)
முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம்
எத்தனையுண்டு புவிமீதே - அவை
யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)
நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்)
கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)
வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)
சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)
விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)
சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)
பாரதியார் 1921ம் ஆண்டு மறைந்தார். அவ்வாறெனில் இப்பாடல் இயற்றப்பட்டிருக்கக் கூடிய ஆண்டு 1921க்கும் முன்னால்.
காங்கிரஸின் முக்கிய தலைவராகவும் பின்னாட்களில் ஹிந்து மஹா சபாவின் தமிழ்நாடு தலைவராகவும் இருந்த சேலம் வரதராஜூலு நாயுடு ‘’தமிழ்நாடு’’ என்ற தினசரி பத்திரிக்கையை 1925ல் தொடங்கி நடத்தி வந்தார்.
ம.பொ.சி யின் தமிழரசுக் கழகம் 1955ம் ஆண்டிலிருந்தே சென்னை மாகாணத்துக்கு ‘’தமிழ்நாடு’’ என்று பெயரிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது.
Sunday, 7 September 2025
ஸ்ரீகுமரகுருபரரும் உ.வே.சா-வும்
உ.வே.சா வின் ‘’என் சரிதம்’’ நூலில் திருவாவடுதுறை மடத்தில் நிகழும் பட்டினப் பிரவேசம் குறித்து விவரிக்கப்படுகையில் ஐயர் திருவாவடுதுறையை ‘’சிவ ராஜதானி’’ என்று குறிப்பிடுவார். எனக்கு அந்த சொல் மிகுந்த ஆர்வம் அளித்தது. அந்த சொல் என் மனதில் மிகவும் தங்கியிருந்தது. இன்று ஸ்ரீகுமரகுருபரரின் ‘’மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’’ என்னும் நூலினை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் ஸ்ரீகுமரகுருபரர் மீனாட்சியம்மையும் சொக்கநாதப் பெருமானும் வாசம் புரியும் மதுரையை ‘’சிவ ராசதானி’’ எனச் சிறப்பித்துக் கூறுகிறார். ஐயர் அவர்கள் உளத்தில் குமரகுருபரரின் சொல் பதிந்திருந்ததால் திருவாவடுதுறை குறித்த அவரது சித்தரிப்பில் அச்சொல் வெளிப்பட்டிருக்கிறது என எண்ணினேன்.
Saturday, 6 September 2025
சினிமா காட்சி
குறைவாக மிகக் குறைவாக சினிமா பார்க்கும் வழக்கம் எனக்கு உண்டு. கடைவீதிக்குச் செல்லும் போது சினிமா போஸ்டர்களைக் காண்பேன். சினிமா போஸ்டர் என்றல்ல ; எல்லா விதமான சுவரொட்டிகளையும் நான் காண்பேன் ; வாசிப்பேன். இப்போது ஃபிளக்ஸ் வந்து விட்டது. தமிழ்நாட்டில் அவற்றில் மனித முகங்கள் மட்டுமே அதிகமாக இருக்கின்றன. அதிகமான மனித முகங்களும் குறைவான வாசகங்களும். தமிழ்ச் சமூகம் சினிமாவின் மீது அதிகம் ஈர்ப்பு கொண்ட சமூகம். தமிழ்ச் சமூகமும் தெலுங்கு சமூகமும் இவ்விதத்தில் ஒப்புமை கொண்டவை. சில மாதங்களுக்கு முன்னால் கடைவீதி வழியாக நடந்து கொண்டிருந்த போது ஏதோ ஒரு அமைப்பின் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது ; மாவட்ட பொறுப்பு அளிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்ட சுவரொட்டி. நான் நின்று வாசித்துக் கொண்டிருந்தேன். எனது நண்பர் ஒருவர் எனக்குப் பின்னால் வாகனத்தில் வந்து நின்றிருக்கிறார். நான் அவர் வந்ததை கவனிக்கவில்லை. வாசித்து முடித்ததும் தான் அவரைப் பார்த்தேன். இருவரும் புன்னகைத்துக் கொண்டோம். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார். இந்த போஸ்டரை பார்த்துக் கொண்டிருந்தேன் என்றேன். பரபரப்பான கடைவீதி என்றார். சிலராலாவது பார்க்கப்பட வேண்டும் என்பதற்காகத்தானே ஒட்டப்படுகிறது என்றேன். நான் சிறிய திரைகளில் அதாவது தொலைக்காட்சி மடிக்கணினி ஆகியவற்றில் திரைப்படம் பார்க்க மாட்டேன். பெரிய திரையில் மட்டுமே காண்பேன். ஆனால் இப்போது பெரிய திரையில் சினிமா பார்ப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது. அனைவரும் அலைபேசியில் படம் பார்க்கிறார்கள். பெருந்திரளுடனான தொடர்பு ஊடகமாக திரைப்படங்களைப் பார்ப்பது உண்டு. ஜனத்திரள் அதனுடன் எவ்விதம் தொடர்பு கொள்கிறார்கள் என்பதை அறிய அதிலிருந்து சில விஷயங்களை ஆராய திரைப்படங்கள் உதவும். நான் பரவாயில்லை என்னும் வகையில் மதிப்பிடும் படங்கள் பொதுமக்கள் மிக விரும்புவதாய் இருக்காது. பொதுமக்கள் மிக விரும்பி பார்க்கும் படங்களை நான் பார்த்தால் எனக்கு பரவாயில்லை என்று தோன்றாது. இது ஒரு அவதானம் மட்டுமே. மூன்று மாதத்துக்கு ஒரு படம் என்பது எனக்கு ஒரு சராசரி கணக்கு. இப்போது திரையரங்கங்கள் பெரிதும் மாறி விட்டன. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.150 எனில் பொதுமக்கள் குடும்பத்துடன் வரும் போது ஒவ்வொரு டிக்கெட்தாரருமே பாப் கார்ன், பப்ஸ், ஐஸ் கிரீம் ஆகியவற்றுக்கு ரூ.150 செலவழிப்பார்கள் என்று தோன்றுகிறது. சினிமா டிக்கெட்டில் கிடைக்கும் வருமானத்தை விட பாப் கார்ன், பப்ஸ் விற்று கிடைக்கும் வருமானம் கணிசமாக இருக்கும் என்று தோன்றுகிறது. குடும்பங்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தை சினிமா தியேட்டரில் வைத்துக் கொள்கிறார்கள். சினிமா தியேட்டரில் கேக் ஆர்டர் செய்து அங்கேயே கேக் வெட்டி கொண்டாடி அலைபேசியில் செல்ஃபி எடுத்து விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். சினிமா தியேட்டர்களும் தங்கள் அரங்குகளை இவ்விதத்தில் வடிவமைக்கின்றன. நேற்று ஒரு சினிமாவுக்கு சென்றிருந்தேன். ஒரு டிக்கெட் அளித்தார்கள். ஆங்கில அட்சரம் ’’ஈ’’ எனக் குறிக்கப்பட்டிருந்தது. அது முன் வரிசை. நான் அதனை அவர்களிடம் திருப்பி அளித்து விட்டு ‘’ஏ’’ வரிசையில் அளிக்குமாறு கேட்டேன். அதுதான் பின் வரிசை. சினிமாவைப் பார்க்க சிறந்த இடம் ஆகக் கடைசி வரிசை. நாடகம் சர்க்கஸ் பார்க்க சிறந்த இடம் ஆக முன் வரிசை. உள்ளே சென்று அமர்ந்ததும் யோசித்தேன். ஏன் முன் வரிசை டிக்கெட்டை முதலில் தருகிறார்கள் என. பின்வரிசையிலிருந்து கொடுத்துக் கொண்டு வந்தால் தாமதமாக வருபவர்களுக்கு முன்வரிசையில் கொடுக்க நேரிடும். படத்தின் ஆரம்பக் காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கும் போது இருக்கை எண்ணைத் தேடுகிறேன் என படம் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு ம்றைப்பார்கள். பார்வையாளர்கள் பலருக்கு அதிருப்தி ஏற்படும். அதைக் குறைக்கவே இந்த வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டேன்.