Wednesday, 3 September 2025

மல்லிகார்ஜூன் கார்கேவும் மத பயங்கரவாதமும்

மது நாடு நீண்ட கால போராட்டத்துக்குப் பின் பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுதந்திரம் பெற்றது. பிரிட்டிஷார் நம் நாட்டை இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாகத் துண்டாடி பிரிவினையை நம் நாட்டின் மீது திணித்தனர். பிரிவினையையொட்டி நடந்த கலவரங்களில் இருபது லட்சத்திலிருந்து முப்பது லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்திய சமஸ்தானங்கள் தங்கள் விருப்பப்படி தனி நாடாக இருக்கலாம் அல்லது இந்தியாவுடன் இணையலாம் அல்லது பாகிஸ்தானுடன் இணையலாம் என்னும் வாய்ப்பு பிரிட்டிஷாரால் சமஸ்தானங்களுக்கு வழங்கப்பட்டது. பிரிவினைக் கலவரங்களின் கோர முகத்தைக் கண்ட சர்தார் வல்லபாய் படேல் இந்திய நாடெங்கும் விரவியிருந்த 543 சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்க உறுதி பூண்டு அச்செயலை செம்மையாக செய்து கொண்டிருந்தார். காஷ்மீரைக் கைப்பற்ற விரும்பிய பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமித்தது. அந்த இக்கட்டான சூழ்நிலையில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. எனினும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் 370-வது சட்டப் பிரிவு இந்திய அரசியல் சாசனத்தில் இணைக்கப்பட்டது. காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா.சபையின் தலையீட்டைக் கோரினார் நேரு. அது அந்த விஷயத்தை மேலும் சிக்கலாக்கியது.  காஷ்மீரில் தொடர்ந்து மத பயங்கரவாதத்தை ஊக்குவித்து வந்தது பாகிஸ்தான். இப்போதும் ஊக்குவிக்கிறது. 1949ம் ஆண்டு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 70 ஆண்டுகளுக்குப் பின் 2019ம் ஆண்டு நீக்கப்பட்டது. 

இன்னொரு காஷ்மீர் ஆகி விடுமோ என்ற பதட்டத்தை உருவாக்கிய இன்னொரு சமஸ்தானம் ஹைதராபாத். இந்திய நாட்டின் மையப் பகுதிக்கு மிக அருகே அமைந்திருந்த அந்த சமஸ்தானத்தை பாகிஸ்தானுடன் இணைக்க ஹைதராபாத் நிஜாம் விரும்பினார். அங்கு வாழ்ந்த மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்பினர். தற்போது அசாசுதீன் ஒவைஸியின் தலைமையில் செயல்படும் ஏ.ஐ.எம்.ஐ.எம் என்னும் கட்சி அப்போது எம்.ஐ.எம் என்ற பெயரில் இயங்கி வந்தது. அக்கட்சியின் ரவுடிகள் ரஸாக்கர்கள் என அழைக்கப்பட்டார்கள். இந்த ரஸாக்கர்களின் தலைமைப் பொறுப்பில் இருந்தது ஹைதராபாத் நிஜாமின் அமைச்சர்களில் ஒருவரான காசிம் ரஸ்வி. பாகிஸ்தானின் ஏஜெண்டாக செயல்பட்ட ரஸ்வி ஹைதராபாத்திலும் அதனைச் சுற்றியிருந்த பகுதிகளிலும் பெரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டார். கிராமங்கள் கொளுத்தப்பட்டன. விளைநிலங்கள் எரிக்கப்பட்டன. மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டனர். ஹைதராபாத் சமஸ்தானத்தில் வாழ்ந்த அப்பாவி பொதுமக்களான ஹிந்துக்களை கொலை செய்யும் அச்செயலை சமயக் கடமை என ரஸாக்கர்களுக்குப் போதித்தார் காசிம் ரஸ்வி. நாள்தோறும் வன்முறை பெருகிக் கொண்டேயிருந்தது. காங்கிரஸ் தலைவர்கள் நேரு ஹைதராபாத்தை இன்னொரு காஷ்மீர் ஆக்கி விடுவாரோ எனக் கவலை கொள்ளத் துவங்கினர். அன்றைய சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஹைதராபாத் விவகாரம் குறித்து பெரும் கவலை கொண்டிருந்ததையும் தில்லியின் நேரு சர்க்காரை தொடர்ச்சியாகத் தொடர்பு கொண்டு ஹைதராபாத் நிலவரங்களை தெரிவித்து வந்ததையும் அவரது சரிதையான ‘’விவசாய முதலமைச்சர்’’ என்னும் நூல் தெரிவிக்கிறது. ரஸாக்கர்கள் நிகழ்த்திய வன்முறைகளின் பின்னணியில் எழுதப்பட்ட தமிழ் நாவல் அசோகமித்ரனின் ‘’பதினெட்டாவது அட்சக் கோடு’’. 

நேரு வெளிநாடு சென்றிருந்த சமயத்தில் நாட்டின் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல் ‘’ஆபரேஷன் போலோ’’ என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு ஹைதராபாத்தை இந்தியாவ்டன் இணைத்தார். இருப்பினும் ரஸாக்கர்கள் நிகழ்த்திய வன்முறையின் இரத்தக் கறை இன்னும் மறக்க இயலாத ஒன்றாகவே இருக்கிறது. 

தற்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜூன் கார்கே 1942ம் ஆண்டு பிறந்தவர். அவருக்கு ஏழு வயது இருந்த போது அதாவது 1949ம் ஆண்டு அவருடைய குடும்பம் ரஸாக்கர்களால் தாக்கப்பட்டது. அவருடைய அன்னையும் சகோதரியும் ரஸாக்கர்களால் தீ வைத்து உயிருடன் கொளுத்தப்பட்டனர். அந்த சம்பவத்தில் உயிர் பிழைத்தவர் மல்லிகார்ஜூன் கார்கே. மத பயங்கரவாதத்தின் கொடூர முகத்தை தன்னுடைய சிறு வயதிலேயே கண்டவர் கார்கே.    

Tuesday, 2 September 2025

ஆத்மார்த்த உரையாடல்

அந்த மகவு
அந்த மருத்துவமனையின் தாழ்வாரத்தில் அமர்ந்திருந்த
அன்னையிடம் 
கண்களால் பேசிக் கொண்டிருந்தது
மிகக் குறைவான இமைத்தலுடன்
அன்னையின் கண்களையே 
கண்டு கொண்டிருந்தது
காணுதலே அம்மகவு அறிந்த மொழி
அன்னையின் கண்களைக் காணுகையில் 
பல பல பலவற்றை உணர்ந்து கொண்டிருந்தது
தானும் தனது உணர்வும் அன்னையும் அன்னையின் உணர்வும்
ஒன்றென மட்டுமே உணர்ந்திருந்தது அம்மகவு
முன்னர் திங்கள் ஒன்பது
ஓர் அறையில் இருந்தது
சிறியது
திரவங்கள் சூழ்ந்தது
அன்னையின் உணர்வு உணரப்பட்டுக் கொண்டும்
அன்னையின் குரல் கேட்டுக் கொண்டும் 
இருந்தது
மேலும் பல குரல்களும் கேட்டன
இப்போது 
அவ்வப்போது அன்னையிடமும்
அவ்வப்போது அன்னையிடமிருந்து தள்ளியும்
இருக்கும் 
இன்னொரு பெரிய அறைக்கு 
வந்திருக்கிறது
அன்னையின் கண்கள் புதியவை
அன்னையின் கண்கள் இனியவை
அன்னையின் கண்கள் அன்பானவை
தனது இருப்பை
தனது மொழியை
தனது உணர்வை
உணர்ந்து கொள்கிறது
அன்னையின் கண்கள் வழியே
அன்னையுடனான ஆத்மார்த்த உரையாடல் வழியே 

Monday, 1 September 2025

ஒளி முடி

அதிகாலையிலேயே நடக்கத் தொடங்கி விட்டேன்
விண்மீன்கள் நிலவு பார்த்துக் கொண்டிருந்தன
வெள்ளி ஆர்வம் மிகக் கொண்டு கண்டது
கதிர் ஒளி குறைவாயிருந்த பகுதியிலிருந்து
கதிர் ஒளி மிகுந்திருந்த பகுதிக்கு
எப் போது வந்து சேர்ந்தேன் என
எண்ணி எண்ணிப் பார்த்தேன்
நட்சத்திரங்களைத் தன்னுள் ஏந்திக் கொண்டது ஒளி சூரியன்
வெட்டவெளி வானத்தில் 
சிறிதினும் சிறிதான பரப்பொன்றில்
இருந்தது மேகத்திரள் ஒன்று
அதனுள் மறைந்த சூரியன்
அடர்ந்திருந்த மரம் ஒன்றின்
உச்சிப்பகுதியில் ஒளி முடி சூட்டியது
அக் கணமும் தெய்வமான
அதன்
தரிசனம் கண்டேன்
அப்பொழுது 

பிரதிபா சேது

 பிரதமர் மனதின் குரல் -125வது நிகழ்ச்சியில் மத்திய அரசின் ‘’பிரதிபா சேது’’ என்ற டிஜிட்டல் தளம் குறித்து விரிவாகப் பேசியிருந்தார். அதாவது, மத்திய அரசின் குடிமைப்பணிக்குத் தேர்வு நடக்கும் போது அது மூன்று கட்டமாக நிகழும். முதலில் துவக்கநிலைத் தேர்வு நிகழும். இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். அதில் கணிசமான மதிப்பெண் பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலுக்கு அழைக்கப்படுபவர்களில் பாதிக்குப் பாதி பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். துவக்க நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவதே சவாலான ஒன்று. முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அதனினும் சவாலான ஒன்று. நேர்காணலில் வெற்றி பெறுவது மிக மிக மிக சவாலான ஒன்று. துவக்க நிலைத் தேர்வில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்று நேர்காணலில் தேர்வாகாமல் போனால் மீண்டும் துவக்க நிலைத் தேர்விலிருந்து எழுதத் தொடங்க வேண்டும். பட்டப்படிப்பு படித்த பின்னர் குறைந்தது 5 லிருந்து 7 ஆண்டுகள் முழுமையாக தயாரிப்புகளைச் செய்து இந்த தேர்வுகளை எழுதுவார்கள். அரை மதிப்பெண் ஒரு மதிப்பெண்ணில் வெற்றி வாய்ப்பைத் தவற விடுபவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். அவர்கள் பெருந்திறன் கொண்டவர்களே. ஒவ்வொருவரும் இத்தனை முறைதான் தேர்வு எழுத முடியும் என்ற கணக்கீடு உண்டு. வயது உச்சவரம்பு உண்டு. இவற்றால் மீண்டும் தேர்வு எழுத முடியாமல் போகிறவர்களும் உண்டு. இவர்கள் நாட்டைக் குறித்தும் நாட்டின் அரசியல் சாசனம் குறித்தும் நாட்டின் நிர்வாக முறை குறித்தும் தாங்கள் விருப்பப்பாடமாகத் தேர்வு செய்திருக்கும் கலை அல்லது அறிவியல் அல்லது பொறியியல் பாடங்கள் குறித்தும் விரிவான அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் திறனை பயன்படுத்திக் கொள்ளும் விதத்திலும் அவர்களுக்கு உதவும் விதத்திலும் மத்திய அரசு ‘’பிரதிபா சேது’’ என்ற திட்டத்தைத் துவங்கியுள்ளது. இது ஒரு டிஜிட்டல் இணையதளம் ஆகும். இதில் குடிமைப்பணித் தேர்வுகளின் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு வெற்றி வாய்ப்பை இழந்த மாணவர்களின் பெயரும் அவர்கள் பெற்ற மதிப்பெண்களும் அட்டவணையிடப்படும். தனியார் நிறுவனங்கள் அவர்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் விரும்பினால் அவர்கள் நிறுவனங்களில் வேலை கொடுக்கலாம் என்பது ‘’பிரதிபா சேது’’ டிஜிட்டல் தளத்தின் நோக்கம். இவ்விதம் குடிமைப்பணிக்குத் தேர்வுக்கு தயாரிப்புகள் செய்து நேர்காணல் வரை சென்று வெற்றி வாய்ப்பை இழந்த பலருடன் எனக்கு அறிமுகம் இருந்தது. அவர்களுக்காக நான் சில உதவிகள் செய்து கொடுத்திருக்கிறேன். பிரதமரின் மனதின் குரலைக் கேட்ட போது எனக்கு அந்த நினைவுகள் வந்தன. இந்த சம்பவங்கள் நடந்து எட்டு ஆண்டுகள் இருக்கும். 

அப்போது குடிமைப்பணித் தேர்வுகளின் துவக்க நிலைத் தேர்வில் மத்திய பணியாளர் தேர்வாணையம் சில மாறுதல்களை ஏற்படுத்தியிருந்தது. எவ்வாறெனில் முன்னர் பொதுத்தாள் ஒன்றும் விருப்பத்தாள் ஒன்றும் இருக்கும். இரண்டிலும் தேர்ச்சி பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்களைப் பெற்று முதல்நிலை எழுத்துத் தேர்வுக்குச் செல்ல வேண்டும். அப்போது நிகழ்ந்த மாற்றம் என்னவெனில் பொதுத்தாளுடன் விருப்பத்தாள் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ‘’ஆப்டிடியூட் திறன்’’ சோதிக்கும் தாள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. இதனால் நிறைய பொறியியல் பட்டதாரிகள் ஐ ஏ எஸ் தேர்வின் துவக்க நிலையில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வுக்கு முன்னேறிச் சென்றார்கள். அரசு பொறியியல் பட்டதாரிகளின் நுண் திறன் அரசாங்கத்துக்குத் தேவை என நினைத்தது. இந்த மாறுதல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது கொண்டு வரப்பட்டது. கொண்டு வரப்பட்டு இரண்டு மூன்று ஆண்டுகளின் தேர்வும் நடந்து விட்டது. அதற்கு முன்பு வரை கலை அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வியாபித்திருந்த இடத்தில் இப்போது பொறியியல் பட்டதாரிகள் வியாபிக்கத் தொடங்கினார்கள். கலை அறிவியல் பட்டதாரிகள் தங்களுக்கு ஒரு கூடுதல் வாய்ப்பு அளிக்கக் கோரினார்கள். அரசு ஒருமுறை அளித்தது. மீண்டும் ஒருமுறை கோரினார்கள். அப்போது அரசு ஏற்கவில்லை. இந்த சூழ்நிலையில் மன்மோகன் அரசுக்குப் பின் மோடி அரசு பதவியேற்றது. புதிய அரசிடம் தங்கள் கோரிக்கைகளைச் சொல்ல சென்னையில் ஐ ஏ எஸ் தேர்வுக்காக தயார் செய்து கொண்டிருக்கும் மாணவர்கள் விரும்பினார். அவர்களுக்கு வேண்டியவர் ஒருவர் இந்த விஷயத்தில் என்னால் அவர்களுக்கு உதவ முடியும் என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். அவர்களிடம் ஏன் அவ்வாறு கூறப்பட்டது என்பது எனக்கு இன்று வரை புரியாத விஷயம். சென்னையிலிருந்து எனக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. பேசியவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். தான் ஐ ஏ எஸ் தேர்வுக்கு தயார் செய்வதாகவும் என்னை ஊரில் வந்து சந்திக்க விரும்புவதாகவும் கூறினார். என்ன விஷயம் என்று கேட்டேன். அவர் தேர்வு முறைகள் குறித்தும் இப்போது அவர்களைச் சூழ்ந்திருக்கும் இடர் குறித்தும் கூறினார். எனக்கு ஐ ஏ எஸ் தேர்வு குறித்து விபரங்கள் தெரியும் என்பதால் அவர் கூறியதைப் புரிந்து கொண்டேன். பள்ளி மாணவனாயிருந்த போது ‘’ஐ ஏ எஸ் தேர்வும் அணுகுமுறையும்’’ என்ற நூலை வாசித்திருக்கிறேன். எனவே இந்த விஷயங்கள் குறித்து எனக்கு பரிச்சயம் இருந்தது. இரண்டு நாட்களில் சென்னைக்கு வந்து அவர்களை நேரில் சந்திக்கிறேன் என்று கூறினேன். அவர்களுக்கு நான் காட்டும் ஆர்வம் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. கூறிய விதமே சென்னை சென்றேன். அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் 10 பேர் இருந்தனர். சென்னையில் பரீட்சைக்குத் தயார் செய்யும் மாணவர்கள் இந்த விஷயத்தை அரசாங்கத்திடம் பேச ஒரு குழுவை உருவாக்கியிருந்தார்கள். அவர்களையே நான் சந்தித்தேன். 

இந்த விஷயத்தில் அவர்களுக்கு ஏதேனும் ஒரு விஷயத்தில் உதவ வாய்ப்புள்ளவர்கள் என்று நான் இரண்டு பேரைக் கூறினேன். இருவருமே பெண்கள். ஒருவர் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக இருந்த முன்னாள் ஐ பி எஸ் அதிகாரி. அவர் நாட்டின் முதல் பெண் ஐ பி எஸ் அதிகாரியும் ஆவார். சென்னைக்கு மிக அருகில் புதுச்சேரி இருப்பதால் அவருக்கு விஷயத்தை விளக்கி ஒரு கடிதம் எழுதும்படியும் அவரது அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு சந்திக்க நேரம் பெறுமாறும் ஆலோசனை சொன்னேன். இன்னொருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அப்போது மத்திய அரசில் இணை அமைச்சராகப் பதவி வகித்தார். திருச்சியில் தனது பட்டப்படிப்பையும் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பும் பயின்றவர். அவரையும் சந்திக்கச் சொன்னேன். அரசை அணுக தில்லியில் நாடெங்கும் இருந்த மாணவர்கள் முயற்சித்து வருகிறார்கள் என்றும் கூறினர். நான் அளித்த ஆலோசனைகள் அவர்களுக்கு ஊக்கம் கொடுத்தன. நான் பொறியியல் பட்டதாரியாக இருந்தாலும் கலை அறிவியல் மாணவர்களுக்கு உதவுகிறேன் என்பது அவர்களுக்கு பெரும் நெகிழ்வைக் கொடுத்தது. என்னிடம் உதவி கேட்கிறார்கள் ஆலோசனை கேட்கிறார்கள். அதனை அவர்களுக்கு வழங்குகிறேன் அவ்வளவே என்பதாக நான் நினைத்தேன். ஒரு சில வாரங்களில் என்னை தில்லி சென்று அங்கே உதவ முடியுமா என்று கேட்டார்கள். நான் சில முறை தில்லி சென்றிருக்கிறேன் என்றாலும் இதைப் போன்ற விஷயங்களில் எனக்கு பழக்கம் இல்லை. என் மீது நம்பிக்கை வைத்துக் கேட்கிறார்களே என்று நான் அவர்களுக்காக தில்லி சென்றேன். என்னுடன் சென்னையைச் சேர்ந்த ஐ ஏ எஸ் தேர்வில் நேர்காணலில் வெற்றி வாய்ப்பை இழந்த ஒருவர் உடன் வந்தார். தில்லி மாணவர்களை அவர் அறிமுகம் செய்து வைப்பார் என்று அனுப்பி வைத்தவர்கள் கூறினார்கள். தில்லி செல்ல தில்லியிலிருந்து மீண்டும் திரும்பி வர என நீண்ட அந்த பயணங்களில் நாங்கள் பல விஷயங்களை விவாதித்தோம். பாடப்புத்தகத்தில் படித்த அரசியல் மேடைகளில் முழங்கப்படும் விஷயங்களை அந்த நண்பர் தீவிரமாக நம்பியிருந்தார். நான் கூறிய விபரங்கள் அவருக்கு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அளித்தன. அவருக்கு கம்யூனிசம் மேல் ஈடுபாடு இருந்தது. உலகில் அப்பாவி பொது மக்களை கோடிக்கணக்கில் கொன்று குவித்தது ஸ்டாலினின் கம்யூனிச சர்க்காரும் மாவோவின் கம்யூனிச சர்க்காரும் என்று நான் கூறிய போது அவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த தரவுகள் இருக்கும் இணையதளங்களை நான் அவருக்குக் குறித்துக் கொடுத்தேன். ஐ ஏ எஸ் தேர்வுக்கு தயார் செய்பவர் என்பதால் நிதானமாக இந்த விஷயங்கள் குறித்து படித்து விட்டு என்னுடன் விவாதியுங்கள் என்று கூறினேன். நிறைய கேள்விகள். எல்லா கேள்விகளுக்கும் என்னிடம் விடை இருந்தன. அவர்கள் வந்து நிற்கும் இடத்திலிருந்து தான் நான் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறேன் என்பதால் அது இயல்பே.

தில்லியில் மாளவியா நகர் என்ற பகுதி என்று ஞாபகம். அங்கே ஆயிரக்கணக்கான மாணவர்கள் குழுமியிருந்தார்கள். அவர்களின் தலைவர் அஸ்ஸாமைச் சேர்ந்த மாணவர். அவரது பாட்டனார் வங்கதேசப் போரில் பங்கேற்றவர். ராணுவத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்ரா விருதைப் பெற்றவர். தனது பாட்டனார் குறித்து என்னிடம் விரிவாகக் கூறினார். இந்த விஷயம் எனக்கு நேரடியாக தொடர்பு இல்லாத விஷயமாக இருப்பினும் உதவி கேட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு 2500 கி.மீ க்கு மேல் நான் பயணித்து அவர்கள் உடன் இருப்பது அவர்களை சிலிர்க்கச் செய்கிறது என்று கண்களில் நீர் திரள அந்த இளைஞன் சொன்னது இன்னும் என் நினைவில் இருக்கிறது. உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களின் முயற்சியால் அப்போது மத்திய அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்குடன் இந்த விஷயம் தொடர்பாக பேச நேரம் கிடைத்திருக்கிறது என்னும் தகவலை அந்த அஸ்ஸாம் இளைஞன் எங்களிடம் சொன்னான். இரண்டு நாட்கள் அவர்களுடன் இருந்து விட்டு நாங்கள் இருவரும் தமிழகம் புறப்பட்டோம். அதன் பின் சில நாட்களில் அவர்கள் ராஜ்நாத் சிங் அவர்களைச் சந்தித்தார்கள். அந்த புகைப்படங்களை அந்த அஸ்ஸாம் இளைஞன் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தான்.    

பிரதமர் மனதின் குரலில் கூறிய ‘’பிரதிபா சேது’’ குறித்த செய்தி இந்த நினைவுகளை மீட்டுக் கொண்டு வந்தது.  

பின்குறிப்பு : என்னுடன் தில்லி வரை உடன் பயணித்த மீண்டும் தில்லியிலிருந்து சென்னை வரை உடன் பயணித்த என்னுடன் பல விஷயங்களை விவாதித்த அந்த நண்பர் ஆன்மீக அமைப்பொன்றில் இணைந்து துறவியாகி விட்டார் என்ற தகவலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அறிந்தேன். 

Sunday, 31 August 2025

பயணமும் யோசனைகளும்

நேற்று நிகழ்ந்த ஒரு பயணத்தின் விளைவாக ஒரு யோசனை உதித்தது. அவ்வாறு யோசனைகள் உருவாவது நலம் பயப்பது என்பதே என் எண்ணம். அனைத்து யோசனைகளும் அப்படியே செயலாகி விட வேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஒரு யோசனை பலரின் மனத்தில் ஒரு சலனத்தை ஏற்படுத்துகிறது. இன்றில்லா விட்டால் என்றோ ஒரு நாள் நமக்கில்லா விட்டால் வேறு யாருக்கோ எந்த யோசனையும் பயன் தரலாம்.  

பள்ளிக்கு ஒரு கடிதம் ( விரிவானது)

அனுப்புநர்

ர.பிரபு
*****
******
*******
மயிலாடுதுறை

பெறுநர்

தாளாளர்
***** பள்ளி,
*******
*****

அன்புடையீர்!

இன்று இரு சக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது தங்கள் பள்ளியில் பணி புரியும் வேன் டிரைவரை சந்திக்க நேர்ந்தது. எனது வாகனத்தில் அவருக்கு ‘’லிஃப்ட்’’ கொடுத்தேன். இருவரும் சேர்ந்து பயணிக்கையில் நாங்கள் உரையாடிய ஒரு விஷயம் குறித்து தங்களுக்குத் தெரிவிப்பது பலருக்குப் பயன் தரத்தக்கதாக இருக்கக்கூடும் என எண்ணினேன். அதற்காகவே இக்கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன்.  

தங்கள் பள்ளியின் பள்ளி வாகன ஓட்டுநர்கள் காலை பணி முடிந்த பின் மாலை தங்கள் பணி துவங்கும் வரை - கிட்டத்தட்ட காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை 6 மணி நேரம் தங்கள் பள்ளியில் தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் அறையில் காத்திருப்பதாக அறிந்தேன். வாகன ஓட்டுநர்களுக்காக பள்ளியில் பிரத்யேக அறை ஒன்றை ஒதுக்கி அதில் குடிநீர் வசதி செய்து அளித்திருப்பதும் அவர்கள் ஓய்வெடுக்க வசதி செய்தி கொடுத்திருப்பதும் அந்த அறையில் அவர்கள் பொழுதுபோக்குக்காக தொலைக்காட்சி ஏற்பாடு செய்து கொடுத்திருப்பதும் நல்ல விஷயங்கள். பாராட்டத்தக்க விஷயங்கள். அதற்காக எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை அவர்கள் தங்களுக்கும் பள்ளிக்கும் பலன் தரும் வேறு ஏதேனும் செயல்களில் ஈடுபட முடியுமா என்று சிந்தித்துப் பார்க்கலாம் எனத் தோன்றியது. எனக்குத் தோன்றிய சில யோசனைகளை தங்கள் பரிசீலனைக்கு முன்வைக்கிறேன். வாய்ப்பு இருந்தால் செயல்படுத்த முயற்சிக்கவும். 

(1) 40 வாகன ஓட்டுநர்களைக் கொண்டு பள்ளியில் ஒரு காய்கறித் தோட்டம் அமைக்கலாம். அதில் இயற்கை முறையில் காய்கறிகளை விளைவிக்கலாம். அந்த காய்கறிகளை விற்பனை செய்து கொள்ள ஓட்டுநர்களை அனுமதிக்கலாம். இடம் அளிப்பதற்கு பள்ளி நிர்வாகத்துக்கு ஒரு குறைவான தொகையை அவர்கள் செலுத்தும் விதமாக ஏற்பாடு செய்யலாம். 

(2) 40 வாகன ஓட்டுநர்களைக் கொண்டு பள்ளியில் ஒரு நர்சரி உருவாக்கலாம். அதில் கொய்யா, பலா, நாவல், எலுமிச்சை ஆகிய பழ மரக் கன்றுகளை உற்பத்தி செய்து கொள்ள அவர்களுக்கு அனுமதி அளிக்கலாம். 

(3) 40 வாகன ஓட்டுநர்களில் ஆர்வமுள்ளவர்களைக் கண்டடைந்து அவர்களுக்குத் துணிப்பை தயாரிப்பதில் பயிற்சி அளித்து துணிப்பை தயார் செய்யச் சொல்லலாம். 

(4) வாகன ஓட்டுநர்களுக்கு ஏதேனும் ஒரு புதிய மொழியை கற்றுக் கொடுக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அவர்கள் புதிய மொழியைக் கற்றுக் கொள்ளும் வகையில் பள்ளி ஆசிரியர்களில் ஒருவரை நியமிக்கலாம். 

5. அகர்பத்தி தயாரித்தல் 

ஒரு வகுப்பறைக்குள் பத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்து செய்யக்கூடிய பொருள். ஓட்டுநர்கள் காத்திருக்கும் நேரத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்வதே நோக்கம் என்பதால் இந்த முயற்சிக்கு பெரும் முதலீடோ பெரும் லாபமோ எதிர்பார்க்கத் தேவையில்லை. மிகக் குறைந்த முதலீடு மட்டுமே தேவை. அதனை பள்ளி நிர்வாகம் அளிக்க வேண்டும். மிகக் குறைந்தபட்ச லாபம் கிடைத்தால் போதும். அதனை ஓட்டுநர்களுக்கு பகிர்ந்தளிக்கலாம். ஓட்டுநர்கள் பள்ளி அளித்த முதலீட்டை சில மாதங்களில் பள்ளிக்குத் திருப்பி அளித்திட வேண்டும்.

6. தேனீ வளர்த்தல்

பள்ளி அமைந்திருக்கும் கிராமம் முழுவதிலும் வருடத்தின் எல்லா நாட்களும் மலர்கள் மலரும் மலர் மரங்களை ஓட்டுநர்களைக் கொண்டு நடவேண்டும். அந்த ஊரே 40 ஆண்டுகளுக்கு முன்னால் பெங்களூர் இருந்ததைப் போல் ஆகி விடும். மலர்ந்திருக்கும் மலர்களிலிருந்து தேன் சேகரிக்க பள்ளியின் ஒரு பகுதியில் ஓட்டுநர்கள் தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம். ஊரும் பசுமையும் மலர்வும் கொண்டதாக ஆகும். ஓட்டுநர்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும். 

7. மர பொம்மைகள் தயாரித்தல்

சீன நாட்டிலிருந்து கள்ளத்தனமாக நம் நாட்டுக்குக் கொண்டு வரப்படும் விளையாட்டுப் பொருட்களே நம் சந்தைகளில் அதிகம் இருக்கின்றன. இந்நிலையை மாற்ற விளையாட்டுப் பொருட்களை நாம் அதிகம் உற்பத்தி செய்ய வேண்டிய தேவையிருக்கிறது. மர விளையாட்டுப் பொம்மைகள் தயாரிப்புக்கு ஓட்டுநர்களுக்குப் பயிற்சி அளித்துப் பயன்படுத்தலாம். 

8. பஞ்சகவ்யா பொருட்கள்

பஞ்சகவ்யாவிலிருந்து சோப், ஷாம்பூ, ஹேண்ட் வாஷ், இயற்கை உரம் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் தயாரிப்பில் ஈடுபடலாம்.

9. கைகளால் தயாரிக்கப்படும் காகிதம்

துணிக்கழிவுகளிலிருந்து கைகளால் தயாரிக்கப்படும் காகிதம் உற்பத்தி செய்யப்படுகிறது. அவ்விதமான காகிதம் தயாரித்து சகாயமான விலையில் பள்ளி மாணவர்களுக்கே விற்பனை செய்யலாம்.

10. பனங்கிழக்கு தயாரித்தல்

பனங்கிழக்கு தயாரித்தல் மிக எளிய செயல்முறை கொண்டது. ஊரெங்கும் இருக்கும் பனைமரங்களில் தினமும் பனம்பழம் கொட்டிக் கொண்டேயிருக்கிறது. அவற்றை சேகரித்து எடுத்து வர வேண்டும். 10 அடி நீளம் 10 அடி அகலம் ஒரு அடி உயரம் கொண்ட மணல் பரப்பை உருவாக்கி அதில் பனம்பழங்களை நட்டு வைத்து நீர் வார்க்க வேண்டும். பனங்கிழங்கு வேர் விடத் துவங்கும். கொஞ்ச நாட்களில் அவற்றை அகழ்ந்தெடுத்து உணவுப்பொருளாக விற்பனை செய்யலாம். புரதச்சத்து மிகுந்த இந்த உணவை இலங்கைவாசிகள் முக்கிய உணவாக உண்கின்றனர். நம் நாட்டிலும் விரும்பி உண்ணப்படுகிறது. 

11. பிளம்பர் எலெக்ட்ரீஷியன் பயிற்சி

40 ஓட்டுநர்களுக்கும் பிளம்பிங் எலெக்ட்ரிக்கல் பணிகளில் அடிப்படைப் பயிற்சி அளிக்கலாம். பள்ளிக்கு அருகில் இருக்கும் நகரில் காலை 10 மணியிலிருந்து மாலை 3 மணிக்குள் செய்யும் விதமாக சிறு பிளம்பிங் எலெக்ட்ரிக்கல் பணிகளை மேற்கொள்ளலாம். 

பள்ளி என்பது கல்வி பயிலும் இடம் ; கற்றுக் கொள்ளும் இடம். எனவே அங்கிருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றை கற்று வளர்ச்சி அடையும் விதத்தில் இருப்பது மகத்தானது. மாணவர்கள் மட்டுமன்றி பள்ளியின் பணியாளர்களுக்கும் தங்கள் பள்ளி புதிய கல்விக்கான வாய்ப்பை அளிக்கும் எனில் அச்செயல் ஒரு பெருஞ்செயலாக அமைந்து நாட்டின் பிற பள்ளிகளுக்கு மாதிரியாக எடுத்துக்காட்டாக அமையும். 

அன்புடன்,

***

நாள் : 30.08.2025
இடம் : மயிலாடுதுறை 

மேலும் சில தொழில்கள்

பள்ளி வாகன ஓட்டுநர்கள் 40 பேர் பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுத்தும் விதமாக என்னென்ன தொழில்களை மேலும் பரிந்துரைக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன். மனதில் சில விஷயங்கள் தோன்றின.  அவற்றைப் பட்டியலிட்டுள்ளேன். 

1. அகர்பத்தி தயாரித்தல் 

ஒரு வகுப்பறைக்குள் பத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்து செய்யக்கூடிய பொருள். ஓட்டுநர்கள் காத்திருக்கும் நேரத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்வதே நோக்கம் என்பதால் இந்த முயற்சிக்கு பெரும் முதலீடோ பெரும் லாபமோ எதிர்பார்க்கத் தேவையில்லை. மிகக் குறைந்த முதலீடு மட்டுமே தேவை. அதனை பள்ளி நிர்வாகம் அளிக்க வேண்டும். மிகக் குறைந்தபட்ச லாபம் கிடைத்தால் போதும். அதனை ஓட்டுநர்களுக்கு பகிர்ந்தளிக்கலாம். ஓட்டுநர்கள் பள்ளி அளித்த முதலீட்டை சில மாதங்களில் பள்ளிக்குத் திருப்பி அளித்திட வேண்டும்.

2. தேனீ வளர்த்தல்

பள்ளி அமைந்திருக்கும் கிராமம் முழுவதிலும் வருடத்தின் எல்லா நாட்களும் மலர்கள் மலரும் மலர் மரங்களை ஓட்டுநர்களைக் கொண்டு நடவேண்டும். அந்த ஊரே 40 ஆண்டுகளுக்கு முன்னால் பெங்களூர் இருந்ததைப் போல் ஆகி விடும். மலர்ந்திருக்கும் மலர்களிலிருந்து தேன் சேகரிக்க பள்ளியின் ஒரு பகுதியில் ஓட்டுநர்கள் தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம். ஊரும் பசுமையும் மலர்வும் கொண்டதாக ஆகும். ஓட்டுநர்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும். 

3. மர பொம்மைகள் தயாரித்தல்

சீன நாட்டிலிருந்து கள்ளத்தனமாக நம் நாட்டுக்குக் கொண்டு வரப்படும் விளையாட்டுப் பொருட்களே நம் சந்தைகளில் அதிகம் இருக்கின்றன. இந்நிலையை மாற்ற விளையாட்டுப் பொருட்களை நாம் அதிகம் உற்பத்தி செய்ய வேண்டிய தேவையிருக்கிறது. மர விளையாட்டுப் பொம்மைகள் தயாரிப்புக்கு ஓட்டுநர்களுக்குப் பயிற்சி அளித்துப் பயன்படுத்தலாம். 

4. பஞ்சகவ்யா பொருட்கள்

பஞ்சகவ்யாவிலிருந்து சோப், ஷாம்பூ, ஹேண்ட் வாஷ், இயற்கை உரம் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் தயாரிப்பில் ஈடுபடலாம்.

5. கைகளால் தயாரிக்கப்படும் காகிதம்

துணிக்கழிவுகளிலிருந்து கைகளால் தயாரிக்கப்படும் காகிதம் உற்பத்தி செய்யப்படுகிறது. அவ்விதமான காகிதம் தயாரித்து சகாயமான விலையில் பள்ளி மாணவர்களுக்கே விற்பனை செய்யலாம்.

6. பனங்கிழக்கு தயாரித்தல்

பனங்கிழக்கு தயாரித்தல் மிக எளிய செயல்முறை கொண்டது. ஊரெங்கும் இருக்கும் பனைமரங்களில் தினமும் பனம்பழம் கொட்டிக் கொண்டேயிருக்கிறது. அவற்றை சேகரித்து எடுத்து வர வேண்டும். 10 அடி நீளம் 10 அடி அகலம் ஒரு அடி உயரம் கொண்ட மணல் பரப்பை உருவாக்கி அதில் பனம்பழங்களை நட்டு வைத்து நீர் வார்க்க வேண்டும். பனங்கிழங்கு வேர் விடத் துவங்கும். கொஞ்ச நாட்களில் அவற்றை அகழ்ந்தெடுத்து உணவுப்பொருளாக விற்பனை செய்யலாம். புரதச்சத்து மிகுந்த இந்த உணவை இலங்கைவாசிகள் முக்கிய உணவாக உண்கின்றனர். நம் நாட்டிலும் விரும்பி உண்ணப்படுகிறது. 

7. பிளம்பர் எலெக்ட்ரீஷியன் பயிற்சி

40 ஓட்டுநர்களுக்கும் பிளம்பிங் எலெக்ட்ரிக்கல் பணிகளில் அடிப்படைப் பயிற்சி அளிக்கலாம். பள்ளிக்கு அருகில் இருக்கும் நகரில் காலை 10 மணியிலிருந்து மாலை 3 மணிக்குள் செய்யும் விதமாக சிறு பிளம்பிங் எலெக்ட்ரிக்கல் பணிகளை மேற்கொள்ளலாம். 

Saturday, 30 August 2025

பள்ளிக்கு ஒரு கடிதம்

அனுப்புநர்

ர.பிரபு
*****
******
*******
மயிலாடுதுறை

பெறுநர்

தாளாளர்
***** பள்ளி,
*******
*****

அன்புடையீர்!

இன்று இரு சக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது தங்கள் பள்ளியில் பணி புரியும் வேன் டிரைவரை சந்திக்க நேர்ந்தது. எனது வாகனத்தில் அவருக்கு ‘’லிஃப்ட்’’ கொடுத்தேன். இருவரும் சேர்ந்து பயணிக்கையில் நாங்கள் உரையாடிய ஒரு விஷயம் குறித்து தங்களுக்குத் தெரிவிப்பது பலருக்குப் பயன் தரத்தக்கதாக இருக்கக்கூடும் என எண்ணினேன். அதற்காகவே இக்கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன்.  

தங்கள் பள்ளியின் பள்ளி வாகன ஓட்டுநர்கள் காலை பணி முடிந்த பின் மாலை தங்கள் பணி துவங்கும் வரை - கிட்டத்தட்ட காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை 6 மணி நேரம் தங்கள் பள்ளியில் தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் அறையில் காத்திருப்பதாக அறிந்தேன். வாகன ஓட்டுநர்களுக்காக பள்ளியில் பிரத்யேக அறை ஒன்றை ஒதுக்கி அதில் குடிநீர் வசதி செய்து அளித்திருப்பதும் அவர்கள் ஓய்வெடுக்க வசதி செய்தி கொடுத்திருப்பதும் அந்த அறையில் அவர்கள் பொழுதுபோக்குக்காக தொலைக்காட்சி ஏற்பாடு செய்து கொடுத்திருப்பதும் நல்ல விஷயங்கள். பாராட்டத்தக்க விஷயங்கள். அதற்காக எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை அவர்கள் தங்களுக்கும் பள்ளிக்கும் பலன் தரும் வேறு ஏதேனும் செயல்களில் ஈடுபட முடியுமா என்று சிந்தித்துப் பார்க்கலாம் எனத் தோன்றியது. எனக்குத் தோன்றிய சில யோசனைகளை தங்கள் பரிசீலனைக்கு முன்வைக்கிறேன். வாய்ப்பு இருந்தால் செயல்படுத்த முயற்சிக்கவும். 

(1) 40 வாகன ஓட்டுநர்களைக் கொண்டு பள்ளியில் ஒரு காய்கறித் தோட்டம் அமைக்கலாம். அதில் இயற்கை முறையில் காய்கறிகளை விளைவிக்கலாம். அந்த காய்கறிகளை விற்பனை செய்து கொள்ள ஓட்டுநர்களை அனுமதிக்கலாம். இடம் அளிப்பதற்கு பள்ளி நிர்வாகத்துக்கு ஒரு குறைவான தொகையை அவர்கள் செலுத்தும் விதமாக ஏற்பாடு செய்யலாம். 

(2) 40 வாகன ஓட்டுநர்களைக் கொண்டு பள்ளியில் ஒரு நர்சரி உருவாக்கலாம். அதில் கொய்யா, பலா, நாவல், எலுமிச்சை ஆகிய பழ மரக் கன்றுகளை உற்பத்தி செய்து கொள்ள அவர்களுக்கு அனுமதி அளிக்கலாம். 

(3) 40 வாகன ஓட்டுநர்களில் ஆர்வமுள்ளவர்களைக் கண்டடைந்து அவர்களுக்குத் துணிப்பை தயாரிப்பதில் பயிற்சி அளித்து துணிப்பை தயார் செய்யச் சொல்லலாம். 

(4) வாகன ஓட்டுநர்களுக்கு ஏதேனும் ஒரு புதிய மொழியை கற்றுக் கொடுக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அவர்கள் புதிய மொழியைக் கற்றுக் கொள்ளும் வகையில் பள்ளி ஆசிரியர்களில் ஒருவரை நியமிக்கலாம். 

பள்ளி என்பது கல்வி பயிலும் இடம் ; கற்றுக் கொள்ளும் இடம். எனவே அங்கிருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றை கற்று வளர்ச்சி அடையும் விதத்தில் இருப்பது மகத்தானது. மாணவர்கள் மட்டுமன்றி பள்ளியின் பணியாளர்களுக்கும் தங்கள் பள்ளி புதிய கல்விக்கான வாய்ப்பை அளிக்கும் எனில் அச்செயல் ஒரு பெருஞ்செயலாக அமைந்து நாட்டின் பிற பள்ளிகளுக்கு மாதிரியாக எடுத்துக்காட்டாக அமையும். 

அன்புடன்,

***

நாள் : 30.08.2025
இடம் : மயிலாடுதுறை

ஒரு யோசனை

இன்று சென்னை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஓர் இளைஞர் என்னிடம் ‘’லிஃப்ட்’’ கேட்டார். வண்டியை நிறுத்தி ஏற்றிக் கொண்டேன். 

‘’தம்பி ! லிஃப்ட் கேட்கும் போது டூ-வீலர் 100 மீட்டர் தூரத்தில இருக்கும் போதே கேட்டுடுங்க. அப்ப தான் ஸ்லோ பண்ணா நீங்க நிக்கற இடத்துக்கிட்ட நிறுத்த முடியும். தாண்டி கொஞ்ச தூரம் போய்ட்டா அப்புறம் லிஃப்ட் கொடுக்க முடியாதில்லையா?’’ என்றேன். 

இளைஞர் ஆமோதித்தார். ‘’இப்ப நேஷனல் ஹை வே ரொம்ப பக்காவா இருக்கு சார்! அதனால வாகனம் எல்லாமே வேகமாத்தான் போகுது’’.

‘’நீங்க என்ன வேலை செய்யறீங்க?’’ என்று கேட்டேன்.

அவர் அந்த பிராந்தியத்தின் பெரிய பிரபலமான பள்ளி ஒன்றைக் குறிப்பிட்டார். அதில் பள்ளி வேனின் ஓட்டுநராக இருப்பதைக் கூறினார். 

‘’உங்களோட ஒர்க்கிங் ஹவர்ஸ் என்ன தம்பி ?’’

’’காலையில 7.30க்கு வண்டியை எடுப்பன் சார். 9.15க்கு ஸ்டூடண்ட்ஸை அழச்சுக்கிட்டு ஸ்கூலுக்கு வந்திடுவன். அப்புறம் சாயந்திரம் 4 மணிக்கு ஸ்டூடண்ட்ஸ்ஸை ஏத்திக்கிட்டு கிளம்புவன். 5.45க்கு எம்ப்டி வண்டியை ஸ்கூல்ல கொண்டு வந்து விட்டுடுவன். இது தான் சார் வேலை’’

’’இந்த வேலைக்கு உங்களுக்கு எவ்வளவு சேலரி தம்பி?’’

‘’மாசம் 15,000 ரூபாய் சார். இது இல்லாம தினமும் 100 ரூபாய் கொடுப்பாங்க’’

‘’எத்தனை டிரைவர் இருக்கீங்க?’’

‘’நாப்பது பேர் இருக்கோம் சார்’’

‘’நாப்பது பேரா?’’

‘’ஆமாம் சார்’’

’’வேலை நேரம் போக மீதி நேரம் என்ன செய்வீங்க?’’

‘’எங்களுக்கு தனியா ரூம் இருக்கு சார். அதுல இருப்போம். டி.வி பார்ப்போம். செல்ஃபோன் பார்ப்போம்’’

‘’நீங்க காலையில இருந்து சாயந்திரம் வரைக்கும் உங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கறாப் போல ஏதாவது செய்யலாமே?’’

‘’என்ன சார் செய்ய முடியும்?’ நாங்க டிரைவர்ஸ். எங்களுக்கு வேன் கார் ஓட்டத்தானே தெரியும்’’

அவர்களுக்கு என்ன பணி பரிந்துரைக்கலாம் என யோசித்தேன். 

‘’தம்பி இப்ப பேண்ட் சட்டை தைக்கணும்னா கொஞ்சம் டெக்னிக்கலா தெரிஞ்சிருக்கணும். ஆனா துணிப்பை தைக்க அந்த அளவு டெக்னிக்கல் நாலெட்ஜ் தேவையில்ல. ஒரு பத்து தையல் மெஷின் வாங்கிப் போட்டு துணிப்பை தைக்கலாம். நீங்க 40 பேர் இருக்கீங்கன்னா ஆளுக்கு ஒரு மணி நேரம் ஷிஃப்ட் மாதிரி வச்சுக்கலாம். 40 பேருக்கும் 4 மணி நேரத்துல வாய்ப்பு கிடைக்கும்.’’

‘’நீங்க சொல்றது நல்ல ஐடியா தான் சார்’’

‘’ஸ்கூல்ல நிறைய இடம் இருக்கும்ல . அதுல ஒரு போர்ஷன்ல இயற்கை முறைல காய்கறிகள விளைவிக்கலாம். அந்த வேலைல ஒரு பத்து டிரைவர்ஸ் ஈடுபடலாம்’’

‘’இதுவும் நல்ல யோசனை சார்’’

‘’இப்ப நீங்க 40 பேர் இருக்கீங்க. உங்களுக்கான மதிய சாப்பாட்டை உங்கள்ல 10 பேர் சேர்ந்து சமைக்கலாம்.’’

‘’நீங்க நிறையா யோசிக்கறீங்க சார்’’

‘’ஸ்கூல்ல ஒரு போர்ஷன்ல நர்சரி போட்டு பழ மரக்கன்றுகள் - கொய்யா, பலா, நாவல், எலுமிச்சை - செடியா தயார் செஞ்சு விக்கலாம்’’

‘’இதுவும் நல்லா இருக்கு சார்’’

’’எனக்கு இன்னும் வேற யோசனை வந்தாலும் சொல்றன். ‘’

‘’நாள் முழுக்க ஒக்காந்து டி.வி பாத்துக்கிட்டு இருக்கறதுக்கு கூடுதலா வருமானம் வர்ர மாதிரி ஏதாவது செய்தால் நல்லது தான் சார்’’

‘’இந்த மாதிரி ஏதாவது புதுசா யோசிச்சு செஞ்சா உங்க ஸ்கூலோட குட் வில் அதிகமாகும். தமிழ்நாட்டுல இருக்கற மத்த ஸ்கூல்களுக்கு உங்க ஸ்கூல் ஒரு மாடலா ஆகும்.’’

‘’நீங்க சொல்றது உண்மை தான் சார்’’

‘’நான் உங்க ஸ்கூல் கரெஸ்பாண்டண்ட்டுக்கு இந்த விஷயம் பத்தி ஒரு லெட்டர் எழுதரன். உங்க ஸ்கூல் கரெஸ்பாண்டண்ட் என்னோட ஃபிரண்டோட ஃபிரண்டு. அவர் கிட்ட சொல்லி நேராவும் சொல்ல சொல்றன்’’

இளைஞர் இறங்க வேண்டிய இடம் வந்தது. இறக்கி விட்டு விட்டு எனது பயணத்தைத் தொடர்ந்தேன்.  
 

Thursday, 28 August 2025

தோள் பை ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளர் கல்லூரியில் படித்த போது நீல நிறத்தில் ஒரு தோள் பை வைத்திருந்தார். நீல நிற ஜீன்ஸ் துணியில் தயாரான தோள் பை அது. அதில் இரண்டு தோல்வார் இருக்காது. ஒரு தோல்வார் தான் இருக்கும். இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் அவை கல்லூரி மாணவர்களால் அதிகம் உபயோகிக்கப்பட்டன. இரண்டு தோல்வார் உள்ள பைகள் அதற்கு முன்னும் இருந்தன ; அப்போதும் இருந்தன ; இப்போதும் இருக்கின்றன.   அமைப்பாளர் இப்போது தன்னிடம் ஒரு தோள் பை இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறார். இப்போது அவர் கைவசம் நான்கு பணிகள் இருக்கின்றன. தினமும் அவற்றுக்காக ஏதேனும் செயல் செய்து கொண்டிருக்கிறார். நாளின் பெரும்பொழுதை அப்பணிகள் எடுத்துக் கொள்கின்றன ; அத்துடன் மன ஓட்டத்தின் பெரும் பகுதியையும் அவை எடுத்துக் கொள்கின்றன. அன்றைய தினம் என்ன செய்தோம் என எழுதி வைத்துக் கொள்வது நல்லது என அமைப்பாளருக்குத் தோன்றும். எனவே நான்கு நோட்டு புத்தகங்கள் அல்லது நான்கு பழைய எழுதாத டைரிகளை அந்த பையில் வைத்துக் கொள்ளலாம் என அமைப்பாளர் எண்ணினார். அமைப்பாளர் சட்டைப்பையில் எப்போதும் பேனா இருக்கும். தேவையெனில் அந்த தோள் பையிலும் ஒரு பேனா ஒரு பென்சில் போட்டு வைக்கலாம். 15மீ டேப் அந்த பையில் போட்டுக் கொள்ளலாம். கல்லூரி மாணவராயிருந்த போது பையில் சயிண்டிஃபிக் கால்குலேட்டர் இருக்கும். இப்போது வேண்டுமானால் ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளலாம். தண்ணீர் பாட்டில் ஒன்று வைத்துக் கொள்ள வேண்டும். தோள் பை தயாராக இருப்பதைக் கண்டாலே காலைப் பொழுதில் ஏதேனும் பணி செய்ய வேண்டும் என்று தோன்றும். மடிக்கணினியை அமைப்பாளர் மேஜைக்கணினி போல் பயன்படுத்தும் வழக்கம் கொண்டவர். எனவே மடிக்கணினியை எங்கு சென்றாலும் எடுத்துச் செல்லும் வழக்கம் இல்லை. அலைபேசியை அந்த பைக்குள் போட்டு விடலாம் ; சுவிட்ச் ஆஃப் செய்து போட்டு விட்டால் உத்தமம். எவருக்கேனும் பேச வேண்டும் என்றால் ஆன் செய்து பேசிக் கொள்ளலாம். தோள் பையில் இருக்கப் போகும் அம்சங்கள் இவைதான் என முடிவு செய்த பின் அமைப்பாளர் ஊரில் இருக்கும் பை விற்பனைக் கடைக்குச் சென்றார். 

ஒற்றை தோல்வார் கொண்ட தோள் பை வேண்டும் என்று கேட்டார். ‘’சார் ! நீங்க சொல்ற மாடல்லாம் ரொம்ப ரொம்ப பழசு. இப்ப அந்த மாடல் வரது இல்ல’’ என்றார். ‘’நீங்க பை தச்சு தானே சேல் பண்றீங்க. நான் சொல்ற மாடல்ல தச்சு கொடுங்க’’. கடைக்காரர் யோசித்தார். ‘’சார் ! ரெண்டு தோல்வார் இருக்கற பைய வாங்கிக்கங்க. ஒரு தோல்வார் மட்டும் பயன்படுத்துங்க.’’ அமைப்பாளர் ஒரு பொருளை வாங்குவதை எவ்வளவு தள்ளி போட முடியுமோ அவ்வளவு தள்ளி போடுவார். ஆந்திரப் பயணத்தின் போது அவர் வாங்கிய கைத்தறித் துணிப்பை ஒன்று அவர் நினைவுக்கு வந்தது. நான்கு டைரி, ஒரு டேப், ஒரு கால்குலேட்டர், ஒரு வாட்டர் பாட்டில் வைக்க அந்த பை போதும். இரு சக்கர வாகனக் குலுக்கலில் வாட்டர் பாட்டிலில் இருந்து தண்ணீர் கசிந்தால் காகிதங்கள் ஈரமாகும். அது மட்டும் தான் யோசிக்க வேண்டிய விஷயம். மானசீகமாக அந்த கைத்தறிப்பையில் பொருட்களை வைத்து அந்த பையுடன் பயணிப்பதை எண்ணிப் பார்க்கத் துவங்கி விட்டார். 

’’எவ்வளவு ரூபாய் ?’’ 

‘’520 சார் . நீங்க 480 கொடுங்க’’

’’நாளைக்கு காலைல வந்து வாங்கிக்கறன்’’ அமைப்பாளர் புறப்பட்டார். புறப்படும் போது கடைக்காரரிடம் கேட்டார். 

‘’நான் முன்னாடி இந்த கடைக்கு வரும் போது வேற ஒருத்தர் இருப்பாரு’’

முன்னாடி என அமைப்பாளர் சொன்னது 25 ஆண்டுகளுக்கு முன்பு. 

கடைக்காரர் சொன்னார். ‘’நான் அவரோட மகன் தான் சார். அப்பா ஊருக்குப் போயிருக்காங்க’’. 

அடுத்த முறை அமைப்பாளர் இந்த கடைக்கு வரும் போது முன்னாடி இருந்தவரின் பேரன் கூட கடையில் இருக்கலாம்!