ஒருநாள் ஊரில் இல்லை என்றால் அடுத்த நாள் பல வேலைகள் குவிந்து விடும். வெள்ளியன்று இரவு 7.30 மணியளவில் முத்துநகர் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது ரயில்வே பாதுகாப்பு படையிலிருந்து ஃபோன் வந்தது. சீர்காழி தீ விபத்து தொடர்பாக நான் அளித்த புகார் தொடர்பாக என்னிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என. சனிக்கிழமை காலை 10 மணிக்கு ரயில் நிலையத்தில் இருக்கும் ரயில்வே பாதுகாப்பு படை நிலையத்துக்கு வருகிறேன் என சொன்னேன். காலை 8 மணி அளவில் தான் வீடு வந்து சேர்ந்தேன். குளித்து உணவருந்தி விட்டு கிளம்ப 9.45 ஆகி விட்டது. காலையிலேயே ரயிலில் சீட்டாடும் கும்பல் குறித்த புகாரை சி பி கி ராம் ஸ் ல் பதிவு செய்தேன். பயண விபரங்களை எழுதி தளத்தில் பதிவிட்டேன். அதற்கே நேரம் சரியாக இருந்தது. நான் அளித்த சி பி கி ராம் ஸ் புகாரை ’’கட் காபி பேஸ்ட்’’ செய்து பிரிண்ட் அவுட் எடுத்து கையில் வைத்துக் கொண்டேன். சம்பவம் நடந்த நாள் என்ன என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். எட்டாம் தேதி. புதன்கிழமை. சம்பவம் நடந்து 17 நாட்கள் ஆகியிருப்பதால் நினைவுகள் மங்கியிருக்கும் என விசாரணை செய்பவர்கள் எதிர்பார்ப்பார்கள் என யூகித்தேன். ரயில் நிலையம் வீட்டிலிருந்து 5 கி.மீ. பாதி தூரம் சென்றிருப்பேன். 9.56க்கு ரயில்வே பாதுகாப்பு படையிலிருந்து ஃபோன் வந்தது. ‘’ஆன் தி வே . இன்னும் 5 நிமிடத்தில் இருப்பேன்’’ என்று சொன்னேன். ரயில் நிலையம் சென்று பிளாட்ஃபாரம் டிக்கெட் எடுத்துக் கொண்டு நடைமேடை 1 ல் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை நிலையத்துக்குச் சென்றேன். அங்கே ஆய்வாளர் ஒருவர் இருந்தார் ; சார் ஆய்வாளர் வந்து விடுவார்; சற்று காத்திருங்கள்’’ என்றனர். காத்திருந்தேன். பின்னர் அவர் வந்தார். என்னைப் பற்றி விசாரித்தார். சிவில் என்ஜினியர். கன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் ரியல் எஸ்டேட். இதையெல்லாம் சொன்னேன். நீங்கள் வாக்குமூலம் தர வேண்டும் எனக் கூறினார். ஒரு காகிதம் கொடுங்கள் ; எழுதிக் கொடுக்கிறேன் என்றேன். நான் வாக்குமூலம் கொடுக்க அவர் எழுதி பதிவு செய்து அதில் நான் கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும் என்பதே அவர்கள் முறை என்றார். நான் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. ஒரு முழு வெள்ளைக் காகிதத்தில் தேதி நேரம் இடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு ரயில்வே பாதுகாப்பு படை நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சார் ஆய்வாளர் இன்னார் முன்னிலையில் பதிவு செய்யப்படும் இன்னாரின் வாக்குமூலம் என எழுதி அதன் அடியில் ஒரு கார்பன் தாள் வைத்து எழுதிக் கொண்டார். வாக்கிய அமைப்புகள் எவ்விதம் அமைக்க வேண்டும் என அவருக்கு முன் தீர்மானம் இருந்தது. அதன் படி அமைத்தார். நான் ஆட்சேபம் ஏதும் தெரிவிக்கவில்லை. சம்பவம் நடந்த தேதி என்ன என்று கேட்டார். ஜூலை 8ம் தேதி என்றேன். அன்று என்ன நாள் என்றார். புதன்கிழமை என்றேன். அன்று அஷ்டமியும் கூட எனக் கூற எழுந்த ஆவலை மனதுக்குள்ளேயே வைத்துக் கொண்டேன். அவர் ஒரு வாசகம் சொல்ல அதில் நான் திருத்தம் சொல்ல என நான் கூறிய திருத்தங்களுடன் வாக்குமூலம் பதிவானது. நான் மிகவும் இழுத்துப் பிடிக்கவில்லை ; சி பி கி ராம் ஸ் ல் புகார் பதிவான பின் சம்பவ இடத்தில் கரிக்கட்டையாய் இருந்த 11 மரங்கள் ரயில்வே நிர்வாகத்தால் நீக்கப்பட்டன.விசாரணை பல அளவில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் நிறுத்திக் கொள்வது சிறப்பு என எனக்குத் தோன்றியது. அங்கே தீ எரிந்து கொண்டிருந்த போது 3 ரயில்கள் அப்பாதையைக் கடந்து சென்றிருக்கின்றன. ரயில்வே லைனுக்கு அருகில் தீ எரிந்து கொண்டிருக்கிறது என்னும் தகவல் ரயில் லோகோ பைலட், ரயிலின் கார்டு, ரயிலில் பயணித்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் ஆகிய மூவராலும் சீர்காழி ஸ்டேஷன் மாஸ்டருக்குத் தெரிவித்திருக்கப்பட வேண்டும். 3 ரயில்கள் என்பதால் 9 பேர் இதற்கு பொறுப்பு. இரண்டு ரயில்கள் பயணிகள் ரயில்கள் என்பதால் 7 பேர் இதற்கு பொறுப்பு. இந்த 7 பேரிடம் ரயில்வே லைன் அருகில் தீ பற்றி எரிந்து கொண்டிருப்பது குறித்து ஸ்டேஷன் மாஸ்டருக்குத் தகவல் தெரிவித்தீர்களா என விளக்கம் கேட்க வேண்டும். அவ்விதம் நிகழ்ந்ததா என்பது இனிமேல் தான் தெரியும். துறை ரீதியான விசாரணை நடத்துங்கள் என எனது புகார் மனுவில் கோரியிருந்தேன். இப்போதே விசாரணை நடந்து கொண்டிருக்கிறது ; எரிந்து போய் நின்றிருந்த 11 மரங்களின் ஒளிப்படம் அவர்கள் கோப்பில் இருந்ததைக் கண்டேன். அந்த மரங்கள் நீக்கப்பட்டதன் ஒளிப்படங்களும் இருந்தன. நான் அளித்த சி பி கிரா ம் ஸ் புகார் இன்னும் நடப்பில் இருக்கிறது என்பதை எனது சி பி கி ராம் ஸ் கணக்கில் நுழைந்து தினமும் பார்க்க முடிகிறது. கோப்பு தீர்வு காணப்பட்டது எனக் கூறப்படும் போது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி அந்த முழுக் கோப்பையும் கோர முடியும். முழுக் கோப்பையும் கண்டால் என்ன செய்தார்கள் என்பது தெரியவரும். அந்தக் கோப்பை ஆதாரமாகக் கொண்டு தேவையெனில் சி பி கி ராம் ஸ் ல் மேலும் ஒரு அப்பீல் செய்ய முடியும். சூழலை உன்னிப்பாகக் கவனிப்போம் என இருந்தேன். என்னுடைய ஆதார் அட்டையின் நகல் இரண்டு வேண்டும் எனக் கேட்டனர். வீட்டுக்கு வந்து எடுத்துக் கொண்டு போய் கொடுத்தேன்.
பிரபு மயிலாடுதுறை
Sunday, 26 July 2026
ஆர்யா
மறைமலை நகரிலிருந்து எழும்பூர் மின்சார ரயிலில் சென்ற போது இடையில் இருந்த ரயில் நிலையம் ஒன்றில் ஒரு விளையாட்டுக் குழு ஏறியது. அவர்களின் உபகரணங்கள் பையைப் பார்த்த போது ஹாக்கி வீரர்களாக இருக்கலாம் எனத் தோன்றியது. என் எதிரில் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் ‘’ஹாக்கி வீரர்களா?’’எனக் கேட்டு பேச்சைத் தொடக்கினேன். அவர்கள் ஹாக்கி வீரர்கள்தான். விருத்தாசலத்தில் மேட்ச் விளையாடி விட்டு ஊர் திரும்புகின்றனர். உடற்கல்வி பட்டப்படிப்பு படிக்கின்றனர். அனைவருமே இளம் பெண்கள். அவர்களிடம் ஐரோப்பா செல்ல உள்ள கால்பந்து வீரனைக் குறித்து கூறினேன். அவனுடைய கல்லூரி சேர்க்கை தொடர்பாக ஒருவரிடம் உதவி கேட்க சென்று கொண்டிருப்பதாகச் சொன்னேன். அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. ஐரோப்பாவில் விளையாட்டு வீரர்களுக்கு நிறைய ஊக்கம் கிடைக்கிறது ; நம் நாட்டில் அவ்விதம் இல்லை என்றார்கள். ஒரு குழந்தைக்கு விளையாட்டு அறிமுகம் பெற்றோர்கள் மூலமே நிகழ வேண்டும் ; நம் நாட்டில் பெற்றோர்கள் குழந்தைகள் படிப்பில் மட்டுமே ஈடுபட வேண்டும் வேறு எதிலும் ஈடுபடக்கூடாது என்னும் எண்ணம் கொண்டவர்கள் ; அதுவே முதற் பிழை - அது களையப்பட வேண்டும் எனக் கூறினேன். என்னிடம் உரையாடிக் கொண்டிருந்த பெண்ணிடம் ‘’உன் பெயர் என்ன?’’ என்று கேட்டேன். ‘’ஆர்யா’’ எனக் கூறினாள். அவளுக்கு யாருடைய பெயர் இடப்பட்டுள்ளது என அவள் அறிவாளா என்று கேட்டேன். அவளுக்கு விடை தெரியவில்லை. ‘’உனக்கு ஆதி சங்கரரின் அன்னையின் பெயர் இடப்பட்டுள்ளது. ஆதி சங்கரரின் அன்னை ஆர்யாம்பாள். தந்தை சிவகுரு.’’ என்றேன். அவளுக்கு ஆச்சர்யம். அந்தக் குழு தாம்பரத்தில் விடை பெற்றுக் கொண்டது ; கால்பந்து வீரனுக்கு வாழ்த்துக்கள் சொன்னது.
Saturday, 25 July 2026
ரயில் சீட்டாட்டக் கும்பல் - சி பி கி ராம் ஸ் புகார்
24.07.2026 அன்று மாலை 6.20 மணி அளவில் சென்னை எழும்பூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் முத்துநகர் அதிவிரைவு ரயிலில் விழுப்புரம் வரை பயணம் செய்ய பயணச்சீட்டு எடுத்துக் கொண்டு ரயிலின் என்ஜினுக்கு அருகில் இருக்கும் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறினேன். தொலைதூரம் செல்லக் கூடிய வண்டி என்பதால் ரயில் புறப்படும் நேரத்துக்கு 1 மணி நேரம் முன்பிருந்தே பயணிகள் அமர்ந்திருந்தனர். ஒரு பகுதியில் 8 பேர் அமரக்கூடிய இருக்கையில் 4 பேர் மட்டுமே அமர்ந்திருந்ததால் அங்கு சென்று அமர்ந்து கொண்டேன். அங்கே இருந்த 4 பேரும் இங்கே அமர ஆட்கள் வருவார்கள் என்றார்கள். நான் அதனைப் பொருட்படுத்தவில்லை. எனக்குத் தேவை அமர ஒரு இருக்கை. அதில் அமர்ந்து கொண்டேன். தொடர்ந்து என்னிடம் இங்கே ஆட்கள் வருவார்கள் என்று கூறிக் கொண்டேயிருந்தார்கள். நான் அதனைப் பொருட்படுத்தவில்லை. ரயிலில் தொலைதூரங்களுக்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு வரும் பயணிகள் இருக்கை காலியாக இருக்கிறதே என அமர முயல்வதும் அவர்களிடம் அங்கிருந்தவர்கள் ஆட்கள் வருவார்கள் எனக் கூறுவதும் நடந்து கொண்டேயிருந்தது. ரயில் புறப்படும் நேரத்தில் அவர்கள் குறிப்பிட்ட நபர்கள் இவர்கள் முடக்கி வைத்திருந்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் சீசன் டிக்கெட் எடுத்து பயணிப்பவர்கள் என்பதை அவர்கள் பேச்சிலிருந்து யூகிக்க முடிந்தது. ரயில் புறப்பட்டதும் அந்த 7 பேரும் சீட்டுக்கட்டு சூதாட்டம் ஆடத் தொடங்கினர். பணம் வைத்து ஆடினர். இந்த சூதாட்டத்தை நிகழ்த்துவதற்காகவே ரயிலில் தொலைதூரங்களுப் பயணிக்கும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். பணம் வைத்து சூதாடுவது குற்றம். பணம் வைத்து சூதாடும் குற்றச்செயலை ரயிலில் ரயில் இயக்கத்தில் இருக்கும் போது செய்வது அதை விடப் பெரிய குற்றம். ரயில் என்பது குழந்தைகள், மாணவர்கள் , இளைஞர்கள், நடுத்தர வயதினர், மூத்த குடிமக்கள் ஆகியோர் பயணிக்கும் வாகனம். அவர்கள் முன்னிலையில் சூதாட்டம் போன்ற குற்றச் செயலில் ஒரு கும்பல் ஈடுபடுவது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். மேலும் ஸ்பீக்கர் மூலம் மிக அதிக சத்தத்தில் திரைப்படப்பாடல்களை ஒலிக்க விடவும் செய்தனர். இந்த கும்பலில் சிலர் மேல்மருவத்தூரில் இறங்கிக் கொண்டனர் ; பலர் திண்டிவனத்தில் இறங்கிக் கொண்டனர். 24.07.2026 மாலை 7.20க்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட முத்துநகர் விரைவு ரயிலில் என்ஜினுக்கு அருகில் இருந்த பொதுப் பெட்டியில் 7 பேர் கொண்ட கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டது என்பதை இந்த புகார் மூலம் பதிவு செய்கிறேன். சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு தொலைதூரம் செல்லும் ரயில்களின் பொதுப் பெட்டியில் பயணிகளுக்கு இடையூறாக ஸ்பீக்கர் மூலம் இரைச்சலை உருவாக்கியும் சீட்டுக்கட்டு சூதாட்டம் ஆடும் கும்பலை மொத்தமாக அடையாளப்படுத்தி அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்குமாறு இந்தப் புகார் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.
ஆயிரமும் பூஜ்யமும்
Thursday, 23 July 2026
ஆம்புலன்ஸ்
இன்று மதியம் சீர்காழியிலிருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தேன். சோழசக்கர நல்லூர் அருகில் சைக்கிளில் சென்ற ஒருவரும் மோட்டார்சைக்கிளில் சென்ற ஒருவரும் மோதி இருவருக்கும் பலத்த அடி. இருவர் தலையிலும் ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. மக்கள் கூட்டமாகக் கூடியிருந்தனர். நான் வண்டியை நிறுத்தி விட்டு 108 ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்தேன். மயிலாடுதுறை தலைமை மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வரும் எனக் கூறினார்கள். சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் டிரைவர் எனக்கு ஃபோன் செய்தார். ‘’இருவருக்கு வலுவான் அடி. இருவர் தலையிலும் ரத்தம் கொட்டுகிறது. முதலுதவி அவசியத் தேவை ‘’ என்றேன். 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. ஒருவர் சிகிச்சை எடுக்க பைக்கின் பின்னால் அமர்ந்து சென்று விட்டார். இன்னொருவருக்கு ஆம்புலன்ஸ் மருத்துவப் பணியாளர்கள் முதல் உதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆம்புலன்ஸ் புறப்பட்டுச் சென்றதும் நான் கிளம்பினேன்.
விரிவான செய்திக் கட்டுரை
இன்று மதியம் தினமலர் நிருபர் ஃபோன் செய்தார். தினமலர் பத்திரிக்கை மைதானத்தில் கூடாரத்தில் வசிக்கும் 7 குடும்பங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் குறித்து விரிவான செய்திக் கட்டுரை கேட்டிருப்பதாகச் சொன்னார். நாளை காலை அங்கு சென்று முழு தரவுகளைச் சேகரிக்க உள்ளோம்.
பத்திரிக்கை செய்தி
ஏற்றம் பெறுமா ஏழு குடும்பங்கள்?
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், செம்பனார் கோவில் கிராமத்தில் காவல் நிலையத்துக்கு எதிரில் இருக்கும் மைதானத்தில் ஏழு பட்டியல் பழங்குடியினர் குடும்பத்தைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வடலூரைப் பூர்வீகமாகக் கொண்ட அவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக செம்பனார்கோவில் காவல் நிலையத்துக்கு எதிரில் இருக்கும் மைதானத்தில் வசிக்கின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதும் மூங்கில் கூடை முடைவதும் அவர்கள் தொழில் ஆகும். ஏழு குடும்பத்தைச் சேர்ந்த 50 பேரில் குழந்தைகள், சிறுவர் சிறுமிகள், இளைஞர்கள், இளம்பெண்கள் முதியவர்கள் ஆகியோரும் உள்ளனர்
அவர்கள் மைதானத்தின் தெற்குப் பகுதியில் பாலிதீன் ஷீட்களால் ஆன கூடாரங்களை அமைத்துக் கொண்டு வாழ்கின்றனர். கூடாரத்தின் தரை மண் தரை ஆகும். கூடாரத்தின் கூரையும் பக்கச்சுவர்களும் பாலிதீன் ஷீட்டால் ஆனவை. மின்சார வசதி இல்லை. இரவில் விளக்கு வசதி இல்லை. குழந்தைகள் சாலையில் இருக்கும் மின்விளக்கு வெளிச்சத்தில் படிக்கின்றன. சமையல் திறந்தவெளியில் விறகடுப்பு கொண்டு நடக்கிறது. சமையல் எரிவாயு இணைப்பு எவருக்கும் இல்லை. குளியலறை வசதி இல்லை. 7 குடும்பத்தைச் சேர்ந்த 50 பேருக்கும் கழிவறை வசதி இல்லை. பிளாஸ்டிக் பொருள் வணிகத்துக்குச் செல்லும் ஆண்கள் இரு சக்கர வாகனம் வைத்திருக்கின்றனர். அனைத்து குடும்பங்களும் அலைபேசி பயன்படுத்துகின்றனர். அலைபேசி பயன்படுத்துவதால் இணைய வசதி இருக்கிறது.
ஜூலை 19, ஞாயிற்றுக்கிழமை அன்று செம்பனார்கோவில் காவல் நிலையத்துக்கு எதிரில் வசிக்கும் ஏழு பட்டியல் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த 7 குடும்பத்தினர் மக்கள்தொகை கணக்கெடுப்பு சுய விபர இணையதளத்தில் தங்கள் குடியிருப்பின் நிலை குறித்து கேட்கப்பட்ட 33 கேள்விகளுக்கும் பதில் அளித்து மக்கள்தொகை கணக்கெடுப்பு சுய விபரப் பதிவு எண்ணைப் பெற்றனர்.
வீட்டின் தரை எதனால் ஆனது என்னும் கேள்விக்கு மண்ணால் ஆனது என்றும் வீட்டின் கூரையும் பக்கச்சுவரும் எதனால் ஆனது என்னும் கேள்விக்கு பாலிதீன் ஷீட்டால் என்றும் சொந்த வீடா வாடகை வீடா அல்லது மற்றவை என்னும் பகுப்பில் வரும் வீடா என்னும் கேள்விக்கு மற்றவை என்றும் விளக்கு வசதி இருக்கிறதா என்னும் கேள்விக்கு இல்லை என்றும் சமையலறை , குளியலறை, கழிவறை இருக்கிறதா என்னும் கேள்விக்கு இல்லை என்றும் பதிலைப் பதிவு செய்தனர். குடிநீர் ஆதாரம் என்ன என்னும் கேள்விக்கு ஊராட்சியின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் மூலம் சற்று தொலைவில் கிடைக்கிறது என பதிவு செய்தனர். இணைய வசதி உள்ளதா என்னும் கேள்விக்கு அலைபேசி மூலம் இணைய வசதி இருக்கிறது என்றும் பதிவு செய்தனர்.
நாட்டின் குடிமக்களாக அரசு எதிர்பார்க்கும் விதமாக மக்கள்தொகை கணக்கெடுப்பின் சுய விபரம் அளித்தலில் ஈடுபட்டிருக்கும் செம்பனார்கோவில் பட்டியல் பழங்குடியின 7 குடும்பங்களும் மாவட்ட நிர்வாகத்தையும் மாநில அரசையும் மத்திய அரசையும் தாங்கள் பதிவு செய்திருக்கும் தரவுகள் சென்றடையும் என நம்புகிறார்கள். சாமானிய வசதிகள் கூட இல்லாமல் வாழும் தங்கள் வாழ்நிலையை மக்கள்தொகை கணக்கெடுப்பின் சுய விபரப் பதிவு மாற்றியமைக்கும் என அந்த 7 குடும்பத்தினரும் தீவிரமாக நம்புகிறார்கள். அவர்கள் நம்பிக்கையை மெய்யாக்குவது மாவட்ட நிர்வாகம், மாநில மத்திய அரசுகள் கையில் இருக்கிறது.
சுய விபரப் பதிவு (நகைச்சுவைக் கட்டுரை)
நேற்று ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.
இப்போது யாரைச் சந்தித்தாலும் மக்கள்தொகை கணக்கெடுப்பு சுய விபரப் பதிவு செய்து விட்டீர்களா எனக் கேட்கிறேன். பலரும் இல்லை என்கிறார்கள். சிலர் நான் கேட்ட பிறகு அதனால் உந்தப்பட்டு செய்து விட்டு பின்னர் என்னிடம் தகவல் தெரிவிக்கிறார்கள்.
நண்பரின் வீட்டில் நண்பரும் அவரது மனைவியும் இருக்கிறார்கள். இருவருமே சீனியர் சிட்டிசன். குழந்தைகள் வெளியூரிலும் வெளிநாட்டிலும் வேலை பார்க்கிறார்கள்.
சிறிது நேர உரையாடலுக்குப் பின் ‘’மக்கள்தொகை கணக்கெடுப்பு சுய விபரப் பதிவு செய்து விட்டீர்களா’’ எனக் கேட்டேன்.
‘’வாட்ஸப் பில் நிறைய மெஸேஜ் இது பத்தி வந்தது. இன்னும் செய்யல’’ என்றார்கள்.
‘’உங்களோட ஐ பேட் கொடுங்க’’
’’ஐ பேட் , லேப் டாப் இரண்டையும் தம்பி கொண்டு போயிருக்கான்’’
‘’உங்க ஸ்மார்ட்ஃபோன் கொடுங்க’’
சற்று தயக்கத்துடனே கொடுத்தனர்.
எனக்கு இந்த சுய விபரப் பதிவில் நல்ல பழக்கம் இருப்பதால் சர சர என ஸ்மார்ட்ஃபோனில் இயங்க ஆரம்பித்தேன். அவர்கள் இருவருக்கும் இவன் சாதாரண ஜி எஸ் எம் ஃபோன் பயன்படுத்துபவன் தானே . ஸ்மார்ட்ஃபோனில் இவனால் 33 கேள்விகளுக்கும் பதில் சொல்லி எடுத்த காரியத்தை முழுக்க முடிக்கத் தெரியுமா அல்லது பாதி பிராசஸில் விஷயத்தை நிறுத்தி வைத்து விடுவானா என ஐயம். எனக்கு ‘’நாள் முழுவதும் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துகிறார்கள். என்ன ஏது என உள்நுழைந்து பார்த்தால் தான் என்ன’’ என்று எண்ணம்.
பெயரும் அலைபேசி எண்ணும் உள்ளிட்டு பக்கத்தைத் திறந்தேன். வீட்டின் அமைவிடத்தை கூகுள் மேப்பில் குறிக்க வேண்டும். முதல் முறை இணையத்தின் வேகம் ஒத்துழைக்கவில்லை ; இருவரும் சோர்ந்து விட்டார்கள். உடன் விரைவாக மீண்டும் உள்சென்று கூகுள் மேப்பில் வீட்டின் அட்ச ரேகையையும் தீர்க்க ரேகையையும் குறித்து விட்டேன். எல்லா கேள்விகளுக்கும் பதில் பதிவு செய்தேன். வீடு சொந்த வீடு. வீட்டின் தரை கல் ( மார்பிள்). வீட்டு வளாகத்தில் சுத்திர்கரிக்கப்பட்ட குடிநீர் இருக்கிறது. சமையல் எரிவாயு இணைப்பு உண்டு. பிரதான உணவு அரிசி. இணையம், டிவி, ரேடியோ, இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் உண்டு. பதிவு முடிந்தது.
சுய விபர எண் கிடைத்தது.
‘’இதை ஒரு நோட்ல எழுதி வச்சுக்கங்க. கணக்கெடுக்க வர்ரப்ப சொல்லுங்க’’ என்றேன்.
‘’ஸ்கிரீன் ஷாட் எடுத்துக்கறன்’’ எனக் கூறி எடுத்துக் கொண்டார்கள்.
