Friday, 17 October 2025

சகவாசம் (நகைச்சுவைக் கட்டுரை)

 எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். நானாவித அலுவல்களில் ஈடுபடுபவர். காலை 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தொடர்ச்சியாக ஏதேனும் பணிகளில் ஈடுபட்டிருப்பார். எனக்கு அவரை 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தெரியும். 30 ஆண்டுகளாக அவர் அப்படித்தான். அவரது அலைபேசிக்கு அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கும். அனைத்துக்கும் அவர் பதிலளிப்பார். எவ்வளவு கறாராக கணக்கிட்டாலும் அவருக்கு ஒரு நாளைக்கு 30 அழைப்புகளாவது வரும் ; அவர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 30 அழைப்புகளாவது மேற்கொள்வார். இது என்னுடைய கணக்கீடு. நண்பரிடம் கேட்டால் இதற்கு மூன்று மடங்கு எனக் கூறக் கூடும் ! ஏகப்பட்ட அலைபேசி அழைப்புகள் வருகின்றனவே என்று அவர் சலிப்பு அடைந்ததில்லை ; எல்லா அழைப்புகளுக்கும் மிகப் பொறுமையாக பிரியமாக பதிலளிப்பார். அழைப்புகள் தவறிய அழைப்புகளாக இருந்தால் ஒவ்வொன்றுக்கும் மீண்டும் அழைத்துப் பேசுவார். கடந்த ஒரு வருடமாக நானும் அவரும் வாரத்துக்கு ஒரு நாளாவது சந்திக்கிறோம். அவரிடம் இருப்பது ஐ-ஃபோன். என்னிடம் இருப்பது சாதாரண ஜி.எஸ்.எம் அலைபேசி. தொழில்ரீதியில் ஸ்மார்ட்ஃபோன் வைத்துக் கொள்வது ஆவணங்கள், வரைபடங்கள், இட அமைவுகள் ஆகியவற்றை அனுப்ப பெரும் உதவியாய் இருக்கும் என்பதை மிக மென்மையாய் எனக்கு சுட்டிக் காட்டினார். அவர் நயத்தக்க நாகரிகம் கொண்டவர். எதையும் எவரிடமும் வற்புறுத்த மாட்டார் ; ஒருவர் பிறர் சொல்லி கேட்பதை விட தானாகவே யோசித்தோ உணர்ந்தோ எடுக்கும் முடிவு சிறப்பானது எனப் புரிந்தவர். நான் அவரிடம் என்னிடம் ஜி.எஸ்.எம் அலைபேசியும் கணிணியும் இருப்பதால் மேற்படி விஷயங்களை மேலாண்மை செய்து விடுகிறேன் எனக் கூறினேன். உண்மையில் நான் இப்போது தீவிரமாகச் சிந்திப்பது இந்த ஜி.எஸ்.எம் ஃபோன் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டு லேண்ட் லைன் தொலைபேசியை பயன்படுத்தலாமா என்பதைக் குறித்தே. நான் அவரிடம் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டைக் குறைக்கச் சொல்லி சொல்வேன். ‘’சார் ! எல்லாத்தையும் விட நமக்கு நம்ம மனநிலையும் உடல்நிலையும் முக்கியம் சார். நாம ஒவ்வொரு டயத்துல ஒவ்வொரு மாதிரியா இருப்போம். மனுஷ வாழ்க்கையோட அமைப்பு அந்த மாதிரி. நீங்க எந்த வெளித் தொந்தரவும் இல்லாம 30 நிமிஷம் பூஜை அறையில சாமி கும்பிடனும்னு நினைப்பீங்க. குழந்தைகளோட விளையாடணும்னு நினைப்பீங்க. எந்த விஷயத்தைப் பத்தியாவது முக்கிய முடிவு எடுக்கணும்னு அமைதியா யோசிப்பீங்க. இந்த மாதிரி மனநிலைகளை இன்ஃபுளூயன்ஸ் செய்யறது மாதிரி ஏதாவது ஃபோன் வரும். உங்க நம்பர் ஆயிரம் பேர்ட்டயாவது இருக்கும் ( நண்பர் சொன்னார் : ’’ஆயிரமா என்னப்பா இவ்வளவு கம்மியா சொல்ற. மினிமம் 10,000 பேர்ட்டயாவது என் நம்பர் இருக்கும்’’ ) யார் நம்மகிட்ட பேசப் போறாங்கன்னு நமக்குத் தெரியாது. வர்ர ஃபோன் கால் சாதாரணமா இருக்கலாம். பேசறவங்க அவங்க சொந்த சிக்கல் எதையாவது சொல்வாங்க. நம்ம மனநிலையை ரொம்ப ஸ்லைட்டா அது இன்ஃபுளூயன்ஸ் பண்ணா கூட மனசோட கிரியேட்டிவிட்டிக்கு அது பெரிய இடைஞ்சல். நீங்க ஃபோனை கம்மியா யூஸ் பண்ணனும் நினைக்க ஆரம்பிங்க சார். நீங்க இப்படி நினைக்க ஆரம்பிச்சாலே யூசேஜ் குறைஞ்சிடும்’’  என அவரிடம் கூறினேன். அவர் மிக நாசூக்காக ஸ்மார்ட்ஃபோன் வைத்துக் கொள்வது தொழில்ரீதியாகப் பயன் உள்ளது என்பதை மெல்லக் கூறுவதும் நான் அவருக்கு தடாலடியாக ஃபோன் பயன்பாட்டைக் குறையுங்கள் என்று சொல்வதும் நடக்கும். கடந்த ஒரு மாதமாக நண்பரின் ஃபோனுக்கு அழைத்தால் அவ்வப்போது ஃபோன் சுவிட்ச் ஆஃப் என்று  தகவல் தெரிவிக்கிறது அலைபேசி நிறுவனம். பொதுவாக ஒருவருக்கு ஃபோன் செய்து அவருடைய ஃபோன் சுவிட்ச் ஆஃப் ஆக இருந்தால் ஃபோன் செய்பவருக்கு சிறு சோர்வு உருவாவது இயல்பு ; ஆனால் எனக்கு நண்பரின் ஃபோன் அவ்வப்போது சுவிட்ச் ஆஃப் ஆவது நல்ல விஷயமே என்னும் மகிழ்ச்சி உருவானது. 

தண்டவாளப் பாதை

 சிறுவர்கள் ஆடும் மைதானத்துக்கும்
புதர்ப்பரப்புக்கும்
இடையே இருக்கிறது
தண்டவாளப் பாதை

கிரிக்கெட் பந்து
கடந்து செல்கிறது
தண்டவாளப் பாதையை

இப்படியும்
அப்படியும்
இப்படியும் அப்படியும்
செல்லும் ரயில்கள்
போன
பிறகு

{ 2 }

Thursday, 16 October 2025

சின்னஞ் சிறு பெண்

 எனக்கு சிதம்பரத்தில் ஒரு நண்பர் இருக்கிறார். அவருக்கும் எனக்கும் பல வருடப் பழக்கம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட அவரை மூன்று மாதத்துக்கு ஒருமுறையாவது சந்திப்பேன். கோவிட்டுக்குப் பின் அவரைச் சந்திப்பது மிகவும் குறைந்து விட்டது. நான் ஒருவரை அடிக்கடி சந்தித்தாலும் நீண்ட நாள் சந்திக்காமல் இருந்தாலும் உணர்வுநிலையில் ஒன்றாகவே இருப்பேன். சந்திக்காமல் இருந்ததால் எந்த இடைவெளியையும் நான் உணர மாட்டேன். அவருக்கு மூன்று குழந்தைகள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் குழந்தைகள். இப்போது மூத்த பையன் அமெரிக்காவில் சட்ட மேற்படிப்பு படிக்கிறான். இரண்டாவது பையன் சட்டக்கல்லூரியில் இறுதி ஆண்டு பயில்கிறான். நண்பரின் மகள் சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். நண்பரின் மகளை சின்னஞ் சிறு பெண்ணாகப் பார்த்தது. மிக மெல்லிய கீச்சுக்குரல் அப்பெண்ணுக்கு நான் பார்த்த போது. மூன்று குழந்தைகளின் கல்வியிலும் நண்பரை விட நண்பரின் மனைவி மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டார். குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி கிடைப்பதை ஓர் அன்னையாக உறுதி செய்ய வேண்டும் என்ற தீரா வேட்கை கொண்டவர் அவர். மூன்று குழந்தைகளையும் அவர் காரில் பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவார். பின்னர் பள்ளியிலிருந்து அழைத்து வருவார். சிறப்பு வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வார். இசைப் பயிற்சிக்கு அழைத்துப் போவார். கோடை விடுமுறை நாட்களிலும் கலையோ நுண்கலையோ குழந்தைகள் பயில வேண்டும் என முனைப்புடன் செயல்படுவார். நண்பர் இந்த விஷயங்களில் பெரிதாக தலையிட மாட்டார். இன்று நண்பரின் மகள் நான் அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்த போது சட்டக் கல்லூரியிலிருந்து தனது தந்தையிடம் பேசினார். கணீர் குரல். வழக்கறிஞர்களுக்கேயுரிய தொனி. ‘’கீச்சுக்குரல்ல பேசிக்கிட்டு இருந்த குழந்தையா சார் இப்ப அட்வகேட் மாதிரி பேசுது’’ என்றேன். நண்பருக்கு மிகுந்த மகிழ்ச்சி. 

நண்பர் தன் மகள் தமிழ் , ஆங்கிலம், சமஸ்கிருதம், தெலுங்கு, ஹிந்தி, ஜெர்மன் ஆகிய ஆறு மொழிகள் அறிந்தவர் என்று கூறினார். எனக்கு பெருவியப்பாக இருந்தது. தனது சுய ஆர்வத்தின் விளைவாக இத்தனை மொழிகளையும் கற்றுக் கொண்டார் என சொன்னார் நண்பர். மேலும் தனது மகள் சிறு குழந்தையாயிருந்த நாளிலிருந்து தினமும் குமரகுருபரரின் ‘’சகலகலாவல்லி மாலை ‘’ நூலை மாட்டுக் கொட்டகையில் அமர்ந்து பாராயணம் செய்து பசுவை வலம் செய்து பின் அடி பணிந்து வணங்கும் கொண்டவர் என்றும் கூறினார். தமிழகத்திலிருந்து ஆன்மீகப் பணியாற்ற காசி சென்ற ஸ்ரீகுமரகுருபரர் ஹிந்தியை விரைவாகப் பயில கல்விக் கடவுள் சரஸ்வதியைப் போற்றி ‘’சகலகலாவல்லி மாலை’’ இயற்றி மொழியை சுலபமாகக் கற்கும் அருளைப் பெற்றார் என்பது ஐதீகம். பல மொழித் திறன் பெற விரும்புபவர்கள் குமரகுருபரரின் சகலகலாவல்லி மாலையைப் பாராயணம் செய்வது தமிழகத்தின் மரபுகளில் ஒன்று. 

எழுச்சி

 உதயத்தின்
செந்நிறச் சூரியன்
அலைகளிலிருந்து எழும்

வான் சுழலும்
கொற்றப்புள்


புல்நுனி
மேலும்
மேலெழும்
ஒவ்வொரு நாளிலும்

{ 1 } 

Wednesday, 15 October 2025

காதற்ற ஊசியும்

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே
-பட்டினத்துப் பிள்ளை

இணையம் கடந்த 20 ஆண்டுகளாக உலகெங்கும் பரவலாகி உள்ளது. கல்வித்துறையில் இணையத்தின் பரவலாக்கம் கற்பித்தலில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது என்றே சொல்லலாம். நான் பள்ளிக்கல்வியும் கல்லூரிக் கல்வியும் என மொத்தம் 21 ஆண்டுகள் பயின்றிருக்கிறேன். எனக்கு மொழியின் மீது ஆர்வமும் ஈர்ப்பும் உண்டு. மிகச் சிறு வயதிலிருந்தே அவை என்னிடம் உண்டு. எனக்கு சொற்களை காட்சிகளாக கற்பனை செய்து கொள்ளும் திறன் சின்ன வயதிலிருந்தே இருந்திருக்கிறது. அதனால் தான் பாலனாயிருந்த பருவத்திலிருந்தே நான் வாசிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்தேன். காணும் காட்சிகளை உணரும் உணர்வை சொல்லாக்கும் திறன் அதன் மறுபக்கமாக என்னுள் இருந்திருக்கிறது ; அதனை உணரத் தொடங்கிய போது எழுதத் தொடங்கினேன். எழுதக் கூடியவனாக இருக்க வேண்டும் என்ற ஆர்வம் விருப்பம் வேட்கையும் எனது பால பருவத்திலிருந்து இருந்தாலும் இளமைப் பருவத்தில்தான் எழுதத் தொடங்கினேன். மொழிக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த பாடம் கணிதம். எண்களின் புதிர்த்தனமையும் துல்லியத் தன்மையும் என்னை ஈர்த்தன. அதன் பின்னர் வரலாறு, புவியியல் ஆகியவற்றின் மீதும் ஆர்வம் கொண்டிருந்தேன். பதினைந்து வயதுக்குப் பின்னர் அறிவியலும் தொழில்நுட்பமும் பயில வேண்டியிருந்தது. மொழியில் கணித்தத்தில் ஆர்வம் கொண்டிருந்த எனக்கு அறிவியலும் தொழில்நுட்பமும் பயில்வதில் பெருவேகம் கொள்ள முடியவில்லை. மொழியின் மீது ஆர்வம் கொண்ட மனம் இயங்கு விதமும் தொழில்நுட்பத்தைப் புரிந்து கொள்ளும் உருவாக்கும் மனம் இயங்கும் விதமும் வேறுவேறானவை. மொழியோ கணிதமோ சமூகவியலோ பயின்றிருந்தால் நான் பயின்றிருக்கக் கூடிய படிப்பும் தொழில்நுட்பம் பயின்றதால் பெற்ற பட்டமும் தூரம் கொண்டவை. 21 வயதில் பொறியியலில் இளநிலைப் பட்டம் பெற்றவுடன் எனது கல்லூரிக் கல்வி நிறைவு பெற்று விட்டது. பொறியியல் பட்டம் பெற்று 10 ஆண்டுகளுக்குப் பின் எம். ஈ படிக்க விரும்பி கல்லூரியில் விண்ணப்பத்தை வாங்கினேன். பகுதி நேரக் கல்லூரியில். கல்லூரியின் நிர்வாகக் காரணங்களால் அந்த பட்டப்படிப்பை அவர்களால் தொடங்க முடியவில்லை. இப்போதும் ஏதேனும் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று நினைப்பேன்.  

இணையம் பரவலாவதற்கு முன் அறிவியலும் தொழில்நுட்பமும் புத்தகங்களில் இரு பரிமாண வடிவில் மட்டுமே படித்தறிவதாக இருக்கும். ஒரு நுரையீரல் குறித்த பாடம் நடத்தப்படுகிறது எனில் அதில் நுரையீரலின் வரைபடம் இருக்கும். அந்த வரைபடம் நூலின் அளவுக்கு ஏற்றவாறு பெரிதுபடுத்தப்பட்டு இருக்கும். ஒரு கான்கிரீட் தூணின் படம் இரு பரிமாணத்தில் மட்டுமே இருக்கும். ஒரு என்ஜினின் உள்பாகங்களும் அவ்வாறே. இணையம் வந்ததற்குப் பின் ஒரு நுரையீரல் என்றால் அது எங்கே இருக்கிறது என்பதை எப்படி இயங்குகிறது என்பதை நம் கண்களால் முப்பரிமாணத்தில் காண இயலும். ஒரு கான்கிரீட் தூண் எவ்விதம் கம்பிகளாலும் கான்கிரீட்டாலும் உருவாக்கப்படுகிறது என்பதன் காணொளியைக் காண முடியும். கல்வியியலில் இந்த விஷயம் ஒரு பாய்ச்சல். 2000க்குப் பின் பிறந்தவர்களுக்கு கிடைத்திருக்கக் கூடிய வாய்ப்பு. ஒரு பாடம் குறித்து விரும்பிய பொழுதில் விரும்பிய விரிவுரைகளை காணொளிகள் மூலம் கேட்க முடியும் காண முடியும் என்பது பெரும் வாய்ப்பு. 

இன்று இணையத்தில் ஒரு மனித உடல் பிணக்கூறாய்வு ( போஸ்ட் மார்ட்டம்) செய்யப்படுவதைக் கண்டேன். மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் தனது கல்லூரியின் சார்பாக மருத்துவ மாணவர்களுக்கு புரியும் விதத்தில் நடைமுறைப் பாடமாக அதனைக் காட்டுகிறார். 45 நிமிடம் நிகழ்ந்த அந்த பிணக்கூறாய்வின் மூலமாக நான் இது நாள் வரை அறிந்திராத கவனப்படுத்திக் கொள்ளாத பல விஷயங்களை அறிந்து கொண்டேன். உணர்ந்து கொண்டேன். அந்த பாடம் என்னைப் பலவாறாக யோசிக்கச் செய்தது. என்னைப் பலவிதத்தில் பரவசப்படுத்தியது. நாம் ஒன்றைக் கற்கும் போது நாம் வளர்கிறோம். கற்பிக்கப்படும் கல்வி மாணவனுக்கு கணக்கற்ற சாத்தியங்களை உண்டாக்கித் தருவதால் ஆசிரியனை இறைவன் என்கிறது நமது மரபு. ‘’ஆசார்ய தேவோ பவ’’ என ஆசிரியனை வணங்குகிறோம் நாம். 

காதின் அருகில் இருக்கும் தசை ஒரு அறுவைசிகிச்சைக் கத்தியால் கிழிக்கப்பட்டு தலையின் ஒரு பாதி கூறிடப்படுகிறது. மரணித்து நிறைய நேரம் ஆகியிருந்ததால் குருதி அதிகம் வரவில்லையா அல்லது தலைப்பகுதியில் ஒப்பீட்டளவில் ரத்த ஓட்டம் குறைவா எனத் தெரியவில்லை ; ரத்தம் அதிகம் வரவில்லை. முகம் பிய்த்து எடுக்கப்படுகிறது. தோல் உரித்தல் என்னும் பதத்துக்கு என்ன அர்த்தம் என்பதை இன்று நேரடியாகப் பார்த்தேன். பின்னர் ஒரு ரம்பத்தைக் கொண்டு மண்டை ஓட்டை அறுத்தார்கள். ஐந்து நிமிடம் அறுத்திருப்பார்கள். பின்னர் அதனை உடைத்து மூளையை வெளியே எடுத்தார்கள். கொழ கொழ என இருந்தது. இரு பரிமாணத்தில் பார்க்கும் போதும் அதனை வைத்து விளக்கப்படும் போதும் மூளையை காலிஃபிளவர்க்கு ஒப்பிடுவார்கள். ஆனால் மூளை வெட்டப்பட்ட வெண்டைக்காய் போல் இருந்தது. மூளையைத் தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொண்டார்கள். அதன் பின் மார்பு அறுக்கப்பட்டது. அறுவைசிகிச்சைக் கத்தி வெள்ளைக் காகிதத்தில் மார்ஜின் போடுவது போல எளிதாக மேல்தோலைக் கிழித்து விடுகிறது. மார்பின் எலும்பும் தோள்பகுதிக்கு செல்லும் எலும்பும் சந்திக்கும் சந்தியை ரம்பத்தால் அறுத்து அந்த எலும்பை உடைத்து விலக்குகிறார்கள். இரைப்பை, கல்லீரல், பெருங்குடல், சிறுகுடல் ஆகியவை தனித்தனியே வெளியே எடுக்கப்படுகிறது. இரைப்பையில் செரிமான திரவங்கள் சுரந்து இருக்கின்றன. அந்த உடலுக்குரியவர் இறந்து ஒருநாள் அல்லது 24 மணி நேரத்துக்குள் தான் இருக்கும் என்று தோன்றியது. இதயத்தை ஆழமாகத் தோண்டி எடுத்தார்கள். பெரிக்கார்டியல் திரவம் இதயத்தைச் சூழ்ந்திருப்பதைக் கண்டேன். சிறுநீரகத்தை வெளியே எடுத்தார்கள். மஞ்சள் நிறத்தில் தோலின் ஆழத்தில் கொழுப்பு இருந்தது. உடல் பருமனுக்கு காரணம் இந்த பொருள் தானா என நினைத்துக் கொண்டேன். 

கண்ணால் நாம் காணும் நம் வெளித்தோற்றத்தையும் பிறரின் வெளித்தோற்றத்தையும் மட்டுமே நாம் உடல் என எண்ணுகிறோம். உடலின் மிகச் சிறு பகுதி நாம் காணும் பகுதி. நமது உடலைக் கூட நாம் முற்றறிவதில்லை. எனது அறிதல்கள் எவ்வளவு சிறிய அளவு என்னும் எண்ணம் வந்தது. கல்லாதது உலகளவு என்பதை உணர்ந்தேன். புரிதலின் அறிதலின் பல கதவுகள் திறப்பதாக உணரத் தொடங்கினேன். 

இந்த உலகில் மனிதர்கள் எத்தனை புற பாகுபாடுகளை உருவாக்கிக் கொண்டு அதனை நம்பிக் கொண்டு ஒருவரோடொருவர் பூசலிட்டு மோதி தங்களை அழித்துக் கொள்கிறார்கள் என்பதை நினைத்த போது ஒரு கணம் கண் கலங்கினேன். 

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்றார் பட்டினத்தார். 

போவோம் ; காலம் வந்தது காண் ; பொய் விட்டு ,உடையான் கழல் புகவே என்கிறார் மாணிக்கவாசகர். 

ஹரிச்சந்திரா காட் மயானத்தில் அன்றெரிந்த உடலின் சாம்பலை அபிடேக திரவியமாய் ஏற்று கண் விழிக்கிறான் காசியின் விசுவநாதன்.  

Tuesday, 14 October 2025

ஆசிய ஜோதி

 
இன்று காலைப் பொழுதில் கவிமணி தேசிக வினாயகம் பிள்ளையின் ‘’ஆசிய ஜோதி’’ வாசித்தேன். புத்தனின் கதையும் புத்தனின் சொற்களும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கூறப்பட்டுக் கொண்டேயிருக்கிறது ; ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கேட்கப்படும் ஒவ்வொரு முறையும் அந்தக் கதையும் அந்தச் சொற்களும் கேட்பவர் உள்ளத்தை உருக்கிக் கொண்டேயிருக்கிறது. அவன் கதை கேட்பது ஓர் புனிதச் செயல்.  

Monday, 13 October 2025

அற்புதப் பெருவெளி

ஒரு சிறு விதை மண்ணில் ஊன்றப்படுகையில் மெல்ல முளைத்து வேர், இலை, கிளைகளுடன் மண்ணில் பெருவிருட்சமாக எழுந்து விண்ணைத் தொட துழாவுகிறது.  

கருவறையில் துளியினும் துளியாக சூல் கொண்டிருக்கும் உயிர் முதல் மாதத்தில் ஓர் அரிசி மணியின் அளவில் மட்டுமே இருக்கிறது ; பின்னர் ஓர் அருநெல்லியின் அளவில் இருக்கிறது. மூன்றாம் மாதத்தில் அந்த அருநெல்லி அளவுள்ள உயிர் கொண்டுள்ள உடலில் இதயம் துடிக்கத் தொடங்குகிறது ; மனித உடலின் நுட்பமான சீரண மண்டலம் நுண் அளவில் பதிட்டை ஆகிறது. மூளை உருவாகிறது. அரிசி மணி அளவில் சில மில்லிகிராம்கள் எடை கொண்டிருந்த உயிர் உடல் 30 வாரங்களில் 3000 கிராம் எடைக்கு வளர்கிறது. எலும்புகள், கண்களின் தசைகள், காற்றை ஜீவனாக்கும் நுரையீரல் அனைத்தும் கருவறைக்குள் முழு வளர்ச்சி பெற்று உலகில் நிறைய உலகை நிறைக்க உலகைக் காண வருகிறது. 

இந்த உலகம் ஓர் அற்புதப் பெருவெளி. கணந்தோறும் அற்புதம் நிகழும் அற்புதப் பெருவெளி. 

Sunday, 12 October 2025

என் ஈசன் என் சிசு

என் ஈசனே
உன்னைக் கண்டிருக்கிறேன்
உன்னைக் காண்கிறேன் என்னும் உணர்வு இன்றி
உன்னுடன் இருக்கிறேன் என்னும் உணர்வு இன்றி
என் முயற்சி இன்றி
என் தீரா வேட்கை இன்றி
உன் கருணையினால்
உன் பிரியத்தால்
உன் அன்பால்
உன்னைக் கண்டிருக்கிறேன்
எளிய உயிர் நான்
சிறிய உயிர் நான்
பெரும் அறியாமை மட்டுமே நான் கொண்டிருப்பது
நின் உளம் கணத்தின் கணமான நுண் நேரம் நினைவு கொண்டதால்
நின் கருணைப் பார்வை கணத்தின் கணமான நுண் நேரம் பார்த்ததால்
என்னிடம் பெரும் அறியாமை மட்டுமே இருக்கிறது 
என்பதை 
உணர்ந்து கொண்டேன்
அறிந்து கொண்டேன்
என் எண்ணங்கள்
என் நினைவுகள்
அனைத்திலுமே அறியாமை 
துயராகவே 
என் இருப்பை 
பெரும்பாலும் 
உணர்கிறேன்
என் ஈசனே
வலி கொண்டிருக்கிறது இறைவனே என் வாழ்வு
விழைவுகளின் வலி
உறவின் வலி
சுமந்து கொண்டிருக்கும்
வலிகளை
துயரங்களை 
அறியாமையை 
என்னா உதற முடியவில்லை
என் இறைவா
உன்னிடம் 
முழுவதும் சரணடைந்து விடவும் 
என்னால் முடியவில்லை
என் இறைவா
உன்னுடன் இருக்க வேண்டும்
உன்னுடன் கலந்து விட வேண்டும்
உன் கருணை மட்டுமே இதை நிகழ்த்தும்
உன் கருணையன்றி வேறேதாலும் இது நிகழாது
உயிர்கள் கருவறையில் இருப்பது போல் 
நீயும் கருவறையில் இருக்கிறாய்
கருவறையில் இருப்பதால் 
நீ சிசு
கருவறையில் இருப்பதால்
நீ சிசுவும்
சிசுவாகிய இறைவா
சிசுவாகிய ஈசா
உன்னை சிசுவாக எண்ணும்
இக்கணம் 
நான் இளைப்பாறுதல் கொள்கிறேன்
சிசுவின் பாதங்களை சென்னி சூடுகிறேன் 

திராவிடக் கட்சிகளின் அரசுகள் சாராய அரசுகள்

நம் நாட்டுக்கு படையெடுத்து வந்த முஸ்லீம்கள் நம் நாட்டின் ஆலயங்களை இடித்து அதன் செல்வங்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். நம் நாட்டுக்கு வணிகம் செய்யும் நோக்கத்தோடு வந்து நம் நாட்டின் பெரும் பகுதியை தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்த பிரிட்டிஷ்காரர்கள் நம் நாட்டின் பாரம்பர்யத் தொழில்களை நசித்து மக்கள் மீது கொள்ளை வரி விதித்து அந்த செல்வத்தை தம் நாட்டுக்குக் கொண்டு சென்றனர். அவர்களின் 190 ஆண்டுகால ஆட்சியில் அவ்விதம் அவர்கள் கொண்டு போன செல்வம் எவ்வளவு அப்போது அவர்களால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட பஞ்சங்களால் மடிந்து போன மக்கள் எத்தனை கோடி போன்ற விபரங்கள் இன்றளவும் புதிதாக கணக்கிடப்பட்டு அந்த எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கின்றன. நம் நாட்டுக்கு படையெடுத்து வந்து நம் நாட்டின் செல்வங்களைக் கொள்ளையடித்துச் சென்ற முஸ்லீம்களும் சரி நம் நாட்டின் ஏழை எளிய மக்களை வாட்டி வதைத்த பிரிட்டிஷ் அரசும் சரி அவை சாராய விற்பனையில் இறங்கவில்லை. பிரிட்டிஷார் கள்ளுக்கடை திறக்க அனுமதி அளித்தனர். கள்ளுக்கடை நடத்த அனுமதிக்கான தொகையைப் பெற்றுக் கொண்டனரே தவிர அவர்களே கள்ளுக்கடை நடத்தவில்லை. 

இந்திய ஜனநாயகத்தில் ஒரு மாநில அரசு ஊருக்கு ஊர் சாராயக்கடை திறந்து தன் குடிமக்களுக்கு சாராயம் விற்கிறது என்றால் அது தமிழக அரசு மட்டும்தான். உலகெங்கும் சாராயம் குடிக்கும் வழக்கம் இருக்கிறது. எல்லா அரசுகளும் சாராயத்தின் மீதும் சாராயக்கடைகளின் மீதும் கணிசமான வரி விதிக்கின்றன. ஓர் அரசாங்கமே மது வாங்குகிறது ; மதுவை விற்க ஊருக்கு ஊர் வாடகைக்கு கடைகளைப் பிடிக்கிறது ; மது விற்க அரசு ஊழியர்களை நியமிக்கிறது ; தனது குடிமக்களுக்கு மதுவை விற்கிறது ; ஒவ்வொரு மதுவும் ஒவ்வொரு கடையிலும் மது விற்பனை இவ்வளவு கூட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கிறது என்பது தமிழகத்தில் மட்டுமே நடக்கும் செயல். 

அரசாங்கங்களின் வரலாற்றில் ஜனநாயக அரசுகளே மக்கள் நலன் என்னும் மையக் கருத்தை பிரதானமாகக் கொண்டிருப்பவை. அவ்விதமான ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் தமிழக அரசு தன் குடிகளை அழிக்கும் ஒரு செயலை அரச ஆதரவுடன் அரச பாதுகாப்புடன் செய்வது என்பதைப் போல ஒரு வெட்கக்கேடு ஜனநாயகத்துக்கு வேறு ஏதும் கிடையாது. ஒரே அரசாங்கமே மாநிலமெங்கும் மருத்துவமனைகளை நடத்தும் ; அதே அரசாங்கமே சாராயமும் விற்கும் எனில் அதனை மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசாக எவ்விதம் கூற இயலும். ஒருபுறம் கருவுற்ற தாய்மார்களுக்கு அவர்கள் உடல்நலத்தைப் பேணும் பலவிதமான மருத்துவ உதவிகளை அளிப்பதாய் கூறும் அரசு அந்த பெண்ணின் கணவன் மது குடித்து தனது ஆரோக்கியத்தை அழித்துக் கொண்டு மரணத்தை நோக்கிச் செல்வதற்கு வழி அமைத்துக் கொடுக்கிறது. இந்த இரண்டில் மது விற்று தன் குடிகளை அழிக்கும் முகமே தமிழக அரசின் உண்மையான முகம். 1989ம் ஆண்டு ஆட்சி புரிந்த தி.மு.க சர்க்கார் மலிவு விலை மதுக்கடை என பாக்கெட் சாராயம் விற்கத் துவங்கியது. அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து அ.தி.மு.க சர்க்கார் ‘’டாஸ்மாக்’’ மூலம் சகல விதமான மதுவும் விற்க ஆரம்பித்தது. தி.மு.க சர்க்கார் மீண்டும் வந்ததும் ‘’டாஸ்மாக்’’கை பலமடங்கு தீவிரப்படுத்தினர். 

இன்று தமிழக அரசுக்கு டாஸ்மாக் வருமானமே பிரதான வருமானம் என்னும் நிலை ஏற்பட்டு விட்டது. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கக்கூட டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானமே காரணம் என்னும் நிலை உள்ளது. இதன் காரணமாக குடிமக்களுக்கு மது விற்று அரசாங்கம் நடத்துவது என்னும் இழிவான முடிவை முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை எடுத்து செயல்படுத்துவதற்கு லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும் அந்த பழியில் பாவத்தில் கை நனைக்கும் நிலை உள்ளது. 

2026ல் தேர்தல் வர இருக்கிறது. அடுத்து அமையவிருக்கும் தமிழக அரசு மது விற்க கூடாது. Either rule or quit என்று சொல்வார்கள். மது வருமானம் இல்லாமல் வேறு வரி வருவாய்களைக் கொண்டு ஆட்சி நடத்த முடியும் என்றால் ஆட்சி நடத்தட்டும். இல்லையெனில் அதிகாரத்தில் இல்லாமல் இருக்கட்டும்.    

Saturday, 11 October 2025

ஓர் அலைபேசி அழைப்பு

 இன்று மதியம் தில்லியிலிருந்து ஒரு நண்பர் அழைத்தார். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளைக் குறித்து கேள்விப்பட்டு அவர் என்னைத் தொடர்பு கொண்டார். நண்பர் தில்லியில் ஐ ஏ எஸ் தேர்வுக்காக தயார் செய்து கொண்டிருக்கிறார். ஆண்டுக்கு ஒரு முறை ஐ ஏ எஸ் தேர்வு நடைபெறும் எனினும் நண்பர் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை அந்த தேர்வினை எழுதுகிறார். ஒரு தேர்வாளர் இத்தனை முறை தான் தேர்வு எழுத வேண்டும் என அந்த தேர்வுமுறையில் நிபந்தனை உள்ளது. தனது முயற்சிகளின் எண்ணிக்கையை சேமித்துக் கொள்வதற்காக சிலர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு எழுதுவது உண்டு. இரண்டு ஆண்டுமே தொடர் தயாரித்தல்களில் இருப்பார்கள். தேர்வு எழுதாத ஆண்டில் கூட நிகழும் தேர்வுகளின் வினாத்தாள்களுக்கு பதில் எழுதிப் பார்த்து பயிற்சி நிறுவனங்களின் ஆசிரியர்களைக் கொண்டு திருத்திக் கொண்டு தங்கள் நிலையை சுயமதிப்பீடு செய்து கொள்வார்கள். இது ஒரு யுக்தி. பலபேருக்கு உதவியிருக்கிறது. அரசாங்கம் என்பது மக்களிடமிருந்து வரி வாங்கும் ஓர் அமைப்பு. ஆதிகாலத்திலிருந்து அவற்றின் மாறாத பணி அதுவே. அரசாங்கத்துக்கு சீராக வருமானம் கிடைக்க வேண்டும் என்றால் நாட்டில் பலவிதமான தொழில்கள் நல்லவிதமாக நடக்க வேண்டும். அவ்விதம் நடந்தால் மக்களிடம் நல்ல வருவாய் இருக்கும். அந்த வருவாயின் ஒரு பகுதி அரசுக்கு வரியாக வரும். அதைக் கொண்டு அரசு தனது ஊழியர்களுக்கு ஊதியம் அளித்து அரசாங்கத்தை சீராக நடத்திச் செல்லும். ஜனநாயக அரசுக்கு தன்னை வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் சாமானிய மக்களுக்கு உகந்த சிலவற்றைச் செய்ய வேண்டிய ஒரு பொறுப்பு இருக்கிறது. ஜனநாயக அரசியலில் இந்த அம்சம் தவிர்க்க முடியாதது. அரசாங்கத்துக்கு அதிக வரி செலுத்துபவர்கள் தொழில் புரிபவர்கள். பெருந்தொழில்களிலிருந்து சிறு தொழில் புரிபவர்கள் வரை. தனக்கு அதிக வருவாய் அளிக்கிறார்கள் என்பதற்காக தொழில் புரிபவர்களுக்கு மட்டும் அரசு சிந்திக்க முடியாது ; தனக்கு வரி அதிகம் கொடுக்காத சாமானிய மக்களுக்காகவும் அரசு சிந்திக்க வேண்டும். 

1970களில் நாட்டை இந்திரா சர்க்கார் ஆண்டு கொண்டிருந்தது. ‘’கரீஃபி கடாவ்’’ என முழங்கியது அந்த அரசு. வறுமையை ஒழிப்போம் என்பது அதன் பொருள். அந்த அரசின் முக்கிய வருவாய் என்பது சாமானிய மக்கள் அளிக்கும் வரியே. அதாவது ஒரு சாமானியன் ஐந்து ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்குகிறான் என்றால் அதில் இருபத்து ஐந்து பைசா அரசுக்கு வருவாயாகச் செல்லும். இவ்விதமாக சாமானியனிடமிருந்து வாங்கிய இருபத்து பைசா ஐம்பது பைசாவை தனது வருமானமாக வைத்துக் கொண்டு கிடைத்த சொற்ப வரி வருவாயில் நாட்டை நடத்திக் கொண்டிருந்தது இந்திரா சர்க்கார். 1991ம் ஆண்டு நரசிம்ம ராவ் சர்க்கார் ஆட்சிக்கு வந்தது. வரி விதிப்பில் அனேக மாற்றங்கள் செய்யப்பட்டன. அவ்வாறு செய்யப்பட்ட மாற்றங்களின் வழியாகவே நாட்டின் வரி வருவாய் கூடியது. இங்கே நாம் ஒரு விஷயத்தைக் கவனித்துப் பார்க்கலாம். அதாவது குறைவான வரி வருவாயுடன் தள்ளாடிக் கொண்டிருந்த இந்திராவின் சர்க்காரும் காங்கிரஸ் சர்க்கார்தான். வரி விதிப்பில் சீர்திருத்தம் மேற்கொண்ட நரசிம்ம ராவ் சர்க்காரும் காங்கிரஸ் சர்க்கார் தான். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2014ம் ஆண்டில் பதவியேற்றதும் ஓரிரு ஆண்டுகளில் சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தியது. கடந்த 11 ஆண்டுகளாக அந்த வரி விதிப்பு நாட்டுக்கு அளிக்கும் வருவாய் பங்களிப்பு அளப்பரியது.  நாட்டின் வருவாய் பெருகுவதற்கு ஏற்ப அரசு சாமானிய மக்களுக்காகத் தீட்டும் திட்டங்களும் புதுப்புது வடிவங்கள் பெறுகின்றன. சாமானிய மக்கள் ஏழ்மையுடன் இருக்கும் நாட்டை வழிநடத்துவதற்கும் சாமானிய மக்கள் குறைந்தபட்ச பொருளியல் பாதுகாப்புடன் குறைந்தபட்ச வசதிகளுடன் இருக்கும் நாட்டை வழிநடத்துவதற்கும் எவ்வளவோ வேறுபாடுகள் உண்டு. நிர்வாக பாணி இரண்டுக்கும் வேறுவேறானவை. ஜனநாயக அரசுக்கும் மக்களுக்கும் இடையே இருந்து செயல்பட வேண்டிய நிலையில் இருப்பது அதிகார வர்க்கம். ஐ ஏ எஸ் அதிகாரிகள் அந்த இடத்திலேயே இருக்கிறார்கள். 

என்னைத் தொடபு கொண்ட இளைஞர் காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வில் தன்னார்வம் காரணமாக ஈடுபடுகிறார். பருவநிலை மாற்றம் , கார்பன் உமிழ்வு ஆகியவை அவருக்கு பிடித்தமான துறைகள். காலநிலை மாற்றம் தொடர்பான தமிழ்நாடு அரசின் அறிக்கை தமிழக மாவட்டங்களிலேயே மயிலாடுதுறை மாவட்டம் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதலிடத்தில் இருப்பதாகக் கூறினார். இங்கே மிக அதிகமாக நெல் வயல்கள் மட்டுமே இருப்பதால் மரங்களின் பரப்பு வெறும் 1.6 சதவீதம் மட்டுமே இருப்பதை சுட்டிக் காட்டினார். மயிலாடுதுறை மாவட்டம் 100 பங்கு கார்பனை உமிழ்ந்தால் 1 பங்கு கார்பனை மட்டுமே உறிஞ்சிக் கொள்கிறது என்னும் புள்ளிவிபரத்தை சுட்டிக் காட்டினார். வேதியியல் தொழிற்சாலைகள் இருக்கும் மாவட்டங்களில் கூட இந்த அளவு நிலை இல்லை என்பது கவனத்துக்குரியது என்றார். மயிலாடுதுறை மாவட்டத்தில் மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது என்பதைக் கூறினார். எனக்கு இந்த புள்ளிவிபரங்கள் புதியவை. நான் அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டேன். 

’’காவிரி போற்றுதும்’’ ஒரு நுண் அமைப்பு. ஒரு கிராமம் என்னும் அடிப்படை அலகை செயல்களமாய்க் கொண்டு செயல்பட்டு வருவதை தனது வழக்கமாய்க் கொண்டுள்ளது. நம்மால் முடிந்ததை நாம் செய்வோம். ‘’காவிரி போற்றுதும்’’ நம்பிக்கையுடன் செயலாற்றுகிறது.