Monday, 8 December 2025

ராஜராஜபுரத்தில் ஓர் அந்தி

 ஒரு ஆப்பிள் கேக்கை ஆரம்பத்திலிருந்து செய்ய வேண்டுமென்றால் முதலில் ஒரு பிரபஞ்சத்தைக் கட்ட வேண்டும் . - கார்ல் சகன்

ஆலயக்கலை வகுப்பு முடித்து விட்டு வந்த பின்னர் இன்று ஏதேனும் ஒரு தொல் ஆலயம் ஒன்றனுக்குச் செல்ல வேண்டும் என விரும்பினேன்.  கார்ல் சகன் தாராசுரம் ஆலயத்தில் பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்து ஆவணப்படம் ஒன்றில் பேசியதன் காணொளியை இன்று காலை மீண்டும் கண்டேன். முன்னர் பலமுறை அந்த காணொளியைக் கண்டிருக்கிறேன் என்றாலும் இன்று ஆலயத்துக்குச் செல்வதற்கு முன் மீண்டும் கேட்க விரும்பினேன். 

மானுடக்கலையின் உச்சம் என தாராசுரம் ஆலயத்தைக் கூறிட முடியும். ஒரு சதுர அடி பரப்பில் அரை சதுர அடி பரப்பில் எவ்விதம் இவ்வளவு நுணுக்கமாக சிற்பம் வடிக்க முடியும் என்பது மாபெரும் வியப்பே. இந்த ஆலயத்தை நிர்மாணித்த கலை உள்ளத்தை போற்றாமல் இருக்க முடியாது. 

இந்த ஆலயத்தை ஓரளவேனும் புரிந்து கொள்ள சில சிற்பவியல் நூல்களேனும் வாசித்திருக்க வேண்டும். சோழ வரலாறு குறித்து சில நூல்களேனும் வாசித்திருக்க வேண்டும். சில தமிழ் இலக்கிய நூல்களேனும் வாசித்திருக்க வேண்டும். 

இந்த ஆலயத்தின் கலையின் சிறு துளி ஒன்றை ஒரு மானுடன் அறிவானாயின் அவனை உலகக் கலையின் மாணவன் என்று தயக்கமின்றி சொல்ல முடியும். 



எனது சிறுகதைகள்

சொல்வனம் இதழில் வெளியான எனது சிறுகதைகள்











வருகை              





இரு பள்ளிகள்

சொல்வனம் இதழில் எழுதும் ‘’யானை பிழைத்தவேல்’’ கம்பராமாயணத் தொடரின் கட்டுரைகள் இணைப்பு

யானை பிழைத்தவேல் - பகுதி 1   யானை பிழைத்தவேல் - பகுதி 2

யானை பிழைத்தவேல் - பகுதி 3   யானை பிழைத்தவேல் - பகுதி 4

யானை பிழைத்தவேல் - பகுதி 5


ஆலயக்கலை - உணர்தலும் அறிதலும்

விண்ணின் ஒரு துளி மண்ணுலகம். ஆழி சூழ்ந்த உலகில் நிலத்தில் வாழ்கின்றனர் மானுடர் அனாதி காலமாக. உலகில் நிலத்தில் உயிரினங்கள் கோடி கோடி. அதில் ஓர் எளிய உயிர் மானுட இனம். யாவையும் படைத்த இறைமை மானுட இனத்துக்கு சிந்தனையை அளித்தது. உயிர்கள் அனைத்துக்கும் இருந்த தடைகள் மானுடத்துக்கும் இருந்தாலும் அந்த தடைகளைத் தாண்டிச் சென்று தானே படைப்பும் படைத்தவனும் என்னும் இரண்டற்ற நிலை நோக்கி சென்றனர் மானுடர் சிலரினும் சிலர்.  விரல்களால் எண்ணக்கூடிய அளவில் அந்த தூய உயிர்களின் எண்ணிக்கை இருந்தாலும் கோடானுகோடி மானிடர் அந்த தூய உயிர்களின் முன் வாழ்வுடன் எப்போதும் இணைந்திருக்கும் துயர் நீக்கக் கோரி துயர் நீக்கும் மார்க்கம் கோரி அரற்றி நின்றனர். மண்ணுலகில் எங்கெங்கோ உற்பத்தி ஆகும் நதிகள் அனைத்தும் இறுதியில் ஆழியை அடைவது போல துயருற்ற மானுடருக்கு மார்க்கங்கள் பலவற்றை போதித்தனர் தூயோர். 

மண்ணுலகுக்குத் திலகம் என்று கூறத்தக்க நிலமொன்று தெற்கே இருக்கும் பெருங்கடல் ஒன்றனுக்கும் வடக்கே இருக்கும் பெருமலை ஒன்றனுக்கும் இடையே இருக்கிறது. அந்த நிலத்தில் தூயோர் பிறந்து மானுடம் உய்ய வழிமுறைகளைக் கூறிக் கொண்டேயிருந்தனர். நிலைபெயராமையை தன் தவத்தின் பயனென அடைந்த துருவன், சொல்லறுத்து சும்மா இருந்து தன் சீடர்களுக்கு விடுதலையின் வழியே மௌனம் எனக் காட்டிய ஆலமர்ச்செல்வன், செயல் புரிதலும் இமைப்பொழுதும் சோராமல் செயல்புரிதலுமே வீடுபேறு என உணர்த்திய இளைய யாதவனும் தன்னுடன் இணைந்து வாழும் எல்லா சக உயிர்கள் மீதும் அன்பும் கருணையும் உணரச் சொன்ன அருக தேவனும் தன் அன்பால் அருளால் பிறந்த பிறக்கும் பிறக்க இருக்கும் எல்லா உயிர்களையும் அணைத்துக் கொண்ட புத்தனும் மண்ணுலகுக்குத் திலகமாயிருந்த தேசத்தில் உதித்தார்கள். இந்த மண்ணில் தோன்றிய ஒரு துறவி ‘’மலைமகள் என் அன்னை ; ஈஸ்வரன் என் தந்தை ; அம்மையப்பனின் குழந்தைகளான எல்லா உயிர்களும் உறவினர்கள் ; இந்த உலகமே எனது தாய்நாடு’’ என்றான். ‘’சிறந்தவை உலகில் எங்கிருந்தாலும் அதனை நாடி ஏற்க வேண்டும் ‘’ என்றது இந்த நாட்டின் தொல்பழம் பாடல் ஒன்று. ’’எல்லா உயிர்களும் இன்புற்று இருக்கட்டும்’’ என இறைமையிடம் வேண்டிக் கொண்டது இந்நாட்டின் தொல்நூல் ஒன்று. 

வாழ்க்கை புனிதமானது ; யாவுமே புனிதமானவை என உணர்ந்திருந்த இந்த தேசம் மலையை, நதியை, மரத்தை, பறவையை, பிராணியை என அனைத்தையும் இறைமையின் சொரூபமாக இருப்பதைக் காணச் சொன்னது. கடவுளின் குழந்தைகளாய் தங்களை உணர்ந்த மக்கள் ஆடிப் பாடிக் கூடிக் களித்திருந்தனர். உயர்ந்த இசையை இறையை நோக்கி பாடினர். இறைமையின் ஒத்திசைவை தங்கள் நடனத்தில் நிகழ்த்திக் காட்டி தாங்களும் மகிழ்ந்து இறைமையையும் மகிழ்வித்தனர். இறைமையை தங்கள் பெற்றோராக ஆசிரியராக குழந்தையாக எண்ணி உருவமற்ற இறைக்கு தங்கள் அன்பினால் உருவம் அளித்து அதில் இறையை எழுந்தருளச் செய்தனர். அவர்கள் நட்டு வைத்த கல்லில் தெய்வம் எழுந்தருளியது. அவர்கள் சுற்றி நின்று வணங்கிய மரத்தில் தெய்வம் எழுந்தருளியது. அவர்கள் வணங்கிய நதியில் தெய்வம் எழுந்தருளியது. 

***

பாரத தேசத்தில் ஆலயங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எழுப்பப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இறைவன் யாதுமாகி நிற்பவன் என உணர்ந்திருந்தாலும் இறைவனைத் தாங்கள் அமைக்கும் உருவத்தில் எழுந்தருளச் செய்கின்றனர். உலகில் விதவிதமான ஜீவராசிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இணைந்திருப்பது போலவும் சேர்ந்திருப்பது போலவும் பாடல், கவிதை, ஓவியம், சிற்பம், இசை என கலைகள் பலவற்றை இணைத்து சேர்த்து ஆலயம் அமைக்கும் தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தங்கள் அடுத்த தலைமுறைகளுக்கு அளித்து இன்று வரை தொடரச் செய்திருக்கின்றனர் இத்தேசத்தின் மூதாதையர். 

***

டிசம்பர் 5,6,7 ஆகிய தேதிகளில் ஈரோடு அந்தியூர் அருகில் இருக்கும் வெள்ளிமலையில் ‘’முழுமையறிவு’’ அமைப்பு ஒருங்கிணைத்த பிரஸ்தாரா அமைப்பின் நிறுவனர் ஜெயகுமார் வகுப்பெடுத்த ஆலயக்கலை வகுப்பில் பங்கு பெற்றேன். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் நம் நாட்டின் ஆலயக்கலை என்பது ஒட்டுமொத்த மானுடமும் சாதித்த பெரும் சாதனைகளுள் ஒன்று என்பதை பங்கேற்பாளர்கள் உணரும் வகையில் அதன் விரிவை ஆழத்தை எடுத்துக் காட்டினார் ஜெயகுமார். 

நம் நாட்டின் ஆலயக்கலை பல்வேறு விதமான அழிவு சக்திகளின் அழிவுப் பணியை எதிர்கொண்டிருக்கிறது. மானுடத்தின் மகத்தான கலைப் படைப்புகளான ஆலயங்களை நாடெங்கும் இடித்து தரைமட்டமாக்கினர் அன்னிய ஆட்சியாளர்கள். கல்லை சிற்பமாக்கி அதனை உயிர் பெறச் செய்து வணங்கிக் கொண்டிருந்த மக்கள் தங்கள் தெய்வம் உடைத்து நொறுக்கப்பட்டாலும் அகத்தில் தங்கள் சொல்லில் இறைவனை தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து இருக்கச் செய்து நிலைநிறுத்திக் கொண்டனர். எப்போதெல்லாம் மீண்டும் வாய்ப்பு கிடைத்ததோ அப்போதெல்லாம்  இடிக்கப்பட்ட ஆலயங்களை மீண்டும்  நிர்மாணித்துக் கொண்டனர். 

மானுடத்தின் மகத்தான உருவாக்கங்களில் ஒன்றான பாரத ஆலயக்கலை மேலும் வளர உயிர்ப்புடன் இருக்க புதிய ஆலயங்கள் மரபான முறையில் தொடர்ந்து எழுப்பப்படுவது அவசியம் என்னும் தனது அபிப்ராயத்தை முன்வைத்தார் ஜெயகுமார். அந்த கோணம் மிகவும் முக்கியமானது என்று எனக்குப் பட்டது. மரபான ஒரு முறை பாதுகாக்கப்பட அந்த முறை அதன் மரபான வடிவில் முறையில் தொடர்வது மிகவும் முக்கியமானது. ஆலயக்கலை என்பது சமயம், இசை, நடனம், சிற்பம் என பல விஷயங்கள் இணைந்த ஒன்றாக இருப்பதால் ஒரே சமயத்தில் ஒரு ஆலயத்தில் இத்தனை விஷயங்களும் புரக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பதை எடுத்துக் காட்டினார் ஜெயகுமார். 

இந்த விஷயத்தின் இன்னொரு பக்கமாக ஆலயத்துக்குச் செல்பவர்கள் ஆலயத்தின் கலை, நுண்கலை, வரலாறு, இலக்கியம் குறித்தும் அறிந்திருப்பது ஆலயக்கலை மரபு தொடர அடிப்படையானது ; முக்கியமானது என்னும் விதத்தில் மேலே குறிப்பிட்ட கலை, நுண்கலை, வரலாறு, இலக்கியம் ஆகியவை குறித்து மிக விரிவாக அறிமுகம் செய்தார் ஜெயகுமார். புதிய ஆலயங்கள் நிர்மாணிக்கப்படும் வேகத்தினும் மிகப் பல மடங்கு வேகத்தில் நாட்டின் குடிகளுக்கு ஆலயக்கலை குறித்த அறிமுகம் நிகழ்த்தப்பட வேண்டும் என்னும் அடிப்படையில் இந்த மகத்துவம் மிக்க பணிக்காக தனது உழைப்பையும் நேரத்தையும் நல்கும் ஜெயகுமாரின் பணி போற்றுதலுக்குரியது. 

***

’’நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ’’ என்று அரற்றினான் தமிழ் மூதாதை பாரதி. இன்று தமிழகத்தில் ஆலயக்கலை என்பது அவ்விதமான தன்மையிலேயே இருக்கிறது. தமிழ்க் குடிகள் எவருக்கும் தங்கள் மரபான கலையான ஆலயக்கலை குறித்த எந்த அறிமுகமோ கல்வியோ இல்லை. தமிழக பள்ளிக் கூடங்களிலோ கல்லூரிகளிலோ பாடத்திட்டத்தில் ஆலயக்கலைக்கு இடமே இல்லை. இந்நிலையில் நமது மரபான ஆலயக்கலை காக்கப்பட வேண்டும் குறைந்தபட்சம் ஆலயம் மீது ஆர்வம் கொண்ட ஆர்வலர்கள் சாமானிய மக்களுக்கு இமைப் பொழுதும் சோராது எடுத்துரைத்துக் கொண்டிருந்தாலே சாத்தியம். 

தமிழக ஆலயக்கலையை மூன்று நாள் வகுப்பில் மிக விரிவாக எடுத்துரைத்தார் ஜெயகுமார். பல்லவர் கால ஆலயக் கட்டுமானங்களையும் பாண்டியர் கால ஆலயக் கட்டுமானங்களையும் குறித்து மிக விரிவாக எடுத்துரைத்தது சிறப்பான விஷயம். அந்த இரு காலகட்டங்களே தமிழக ஆலயக்கலைக்கு அடிக்கட்டுமானமாக இருந்தவை. இந்த இரண்டு அரசுகளும் 300 ஆண்டுகளாக உருவாக்கியிருந்த ஆலய மரபினை அடிப்படையாகவும் அடிப்படை அறிதலாகவும் கொண்டு சோழர்கள் தங்கள் ஆலயக்கலை செயல்பாடுகளை முன்னெடுத்தனர் என்னும் வரலாற்றுப் புரிதலை பங்கேற்பாளர்களிடம் உருவாக்கினார் ஜெயகுமார். 

கணபதி ஸ்தபதி, ஐராவதம் மகாதேவன், நாகசாமி, நீலகண்ட சாஸ்திரி, சதாசிவப் பண்டாரத்தார் என பலர் எழுதிய நூல்களை ஆலயக்கலையைப் புரிந்து கொள்ள உதவும் புத்தகங்கள் என்பதை விரிவான பட்டியலாக அளித்துக் கொண்டேயிருந்தது ஆலயக்கலை என்பது எத்தனை பிரும்மாண்டமானது என்பதை உணர்த்தியது. 

ஆலயத்துக்கு வழிபடச் செல்லும் ஒருவராயினும், ஓவியம் வரையும் திறன் கொண்ட நுண்கலையாளராயினும் இலக்கியம் வாசிக்கும் இலக்கிய வாசகராயினும் அனைவருக்குமே ஆலயங்களைப் பராமரிக்கும் கூட்டுப் பொறுப்பு இருக்கிறது என்பதை மிக மென்மையாக சுட்டுக் காட்டினார். மூன்று நாள் வகுப்பில் ஆலய ஆகம முறைகள், சிற்பவியல், ஆலய கட்டிடவியல் குறித்து பங்கேற்பாளர்களுக்கு மிக விரிவான அறிமுகத்தை மிகப் பெரிய பரிச்சயத்தை உண்டாக்கினார் ஜெயகுமார். 

ஆலயக்கலை குறித்த பரந்து பட்ட ஞானம் கொண்டவராயினும் அறிமுக நிலையில் பங்கேற்பாளர் ஒவ்வொருவரையும் மிகுந்த பிரியத்துடன் மிக்க கனிவுடன் எதிர்கொண்டு 3 நாட்களில் பங்கேற்பாளர் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆலயக்கலையின் உன்னத தீபத்தை ஏந்திக் கொள்ள வாய்ப்பளித்த ஜெயகுமார் போற்றுதலுக்குரியவர் ; அவரது பணி போற்றுதலுக்குரியது.    

Sunday, 7 December 2025

ஏழாம் இசைக் குறிப்பு

 

Saturday, 6 December 2025

இசை கேட்டல் (நகைச்சுவைக் கட்டுரை)

 இசைக்கு தன் செவி திறக்கும் திறன் பூஜ்யம் என எண்ணியிருந்த அமைப்பாளருக்கு தன் இசை கேட்கும் திறன் சராசரி என அறிந்ததிலிருந்து ஆர்வமாகவும் பரபரப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கிறார். இசை கேட்கத் துவங்க வேண்டும் என எண்ணுகிறார். 

எதில் கேட்பது எதைக் கேட்பது என்னும் இரு கேள்விகள் அவருக்கு எழுந்தன. 

முதலில் தினமும் ஒரு மணி நேரம் இசை கேட்கலாம் என முடிவு செய்து கொண்டார். அந்த ஒரு மணி நேரத்தை காலையில் வைத்துக் கொள்வதா அல்லது மாலையில் வைத்துக் கொள்வதா என்னும் வினா அவர் அகத்தில் எழுந்தது. தன் மனம் ஏன் இப்படி தர்க்கபூர்வமாகவே இருக்கிறது என யோசித்த அவர் மனத்தை தர்க்கத்தின் பின் செலுத்தாமல் இசையின் பின் செலுத்த முயன்றார். 

முதலில் கேட்கத் துவங்கி விடுவோம். இப்போது இருக்கும் மடிக்கணினியில் சில நாட்கள் கேட்போம். அதன் பின் இசை கேட்க வேறு உபகரணம் வாங்கிக் கொள்ளலாம் என முடிவு செய்தார். 

இசை என்றால் என்ன இசையைக் கேட்பது எதிலிருந்து துவங்குவது என யோசித்துப் பார்த்தார். அமைப்பாளருக்கு இசை என்றால் சில பெயர்கள் நினைவில் இருந்தன. 

முதலில் நினைவுக்கு வந்தது பீம்சேன் ஜோஷி. அதன் பின்னர் ஜஸ்ராஜ் என்ற பெயரும் குமார் கந்தர்வா என்ற பெயரும் நினைவுக்கு வந்தன. ஒரு நோட்டில் இந்த பெயர்களை எழுதிக் கொள்ள வேண்டும் என்று அமைப்பாளருக்குத் தோன்றியது. ஷெனாய் என்ற வாத்தியம் அமைப்பாளர் கேட்டறிந்தது. தமிழில் என்னென்ன கேட்கலாம் என யோசித்த போது தேவாரம், திவ்யப் பிரபந்தம் கேட்க வேண்டும் என்று எண்ணினார். அமைப்பாளருக்கு தருமபுரம் சுவாமிநாதன் என்ற பெயர் தெரியும். அவர் புகழ் பெற்ற தேவார ஓதுவார். திவ்யப் பிரபந்தம் பெருமாள் கோயில்களில் பாடப்பட்டு கேட்ட ஞாபகம் அமைப்பாளருக்கு வந்தது. மேலை இசையில் பீத்தோவன் இசையை அமைப்பாளர் கேட்டிருக்கிறார். ‘’ஏழாம் இசைக் குறிப்பு’’ என பீத்தோவன் கேட்ட பாதிப்பில் ஒரு கவிதையே எழுதியிருக்கிறார் அமைப்பாளர். வாக்னர் என்ற பெயர் தெரியும். 

தினம் ஒரு மணி நேரம் என இசை கேட்போம் ; கேட்க கேட்க கேட்கவேண்டியவை பெருக்கெடுக்கும் என நினைத்துக் கொள்கிறார் அமைப்பாளர். 

Friday, 5 December 2025

இசை சராசரி (நகைச்சுவைக் கட்டுரை)

 எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் இசை நிகழ்வுகளை ஒருங்கமைப்பவர். அதிலும் வாத்திய இசை நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர். அந்த நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைப்பார். நான் வரவேண்டும் என்று மிகவும் எதிர்பார்ப்பார். அவரிடம் மிகப் பணிவாக இசையில் முழுமையாக லயிக்கும் அகம் எனக்கு இல்லை என்று ஒவ்வொரு முறையும் கூறுவேன். இருப்பினும் ஒவ்வொரு முறையும் என்னை அழைக்கவே செய்வார். 

இசை ரசனை என்பது கேட்டலின் ரசனை. ஒலியையும் ஒலி மாறுபாடுகளையும் உள்வாங்கிக் கொள்வதின் கலை இசை ரசனை. அதற்கு செவிகள் முழுமையாகத் திறந்திருக்க வேண்டும். காதில் கேட்கும் ஒலியை அகத்தில் இசையாக உணர்தலே இசை கேட்டல். 

எனது மன அமைப்பு எவ்விதமானது எனில் ஓசையை என் மனம் சொல்லின் ஒரு பகுதியாகப் புரிந்து கொள்ளும். சொல்லற்ற ஓசைகள் ஒலிக்கும் போது என் மனம் அந்த ஒலித்தொகுப்பை ஏதேனும் சொல்லாகவோ சொற்பெருக்காகவோ உள்வாங்கி விடும். எனவே இசையின் பிரவாகத்தை என் மனம் தொடர்ந்து பின் தொடராது ; தவற விட்டு விடும். 

ஒரு பாடலைக் கேட்கிறேன் என்றால் அதன் இசையினும் அதில் உள்ள வரிகளை என் மனம் எளிதில் கண்டடைந்து அதனை கற்பனை செய்யத் தொடங்கி விடும். 

இசை கேட்பது என்பது செவியையும் அகத்தையும் ஒத்திசைவில் கொண்டு வருதல். இசை நிறைய கேட்க கேட்க செவி இசைக்கு பழகி அகத்தில் அந்த ஒத்திசைவு உண்டாகும். இசை என் மனதைத் தொடும். அகத்தைத் தொடும். ஆனால் நான் தினமும் இசை கேட்கும் வழக்கம் கொண்டவனோ வாரத்துக்கு சில மணி நேரங்களோ மாதத்துக்கு சில மணி நேரங்களோ இசை கேட்கும் வழக்கம் கொண்டவனோ அல்ல. இசை, ராகம், ஆலாபனை என்றெல்லாம் யாரேனும் பேசுவதைக் கண்டால் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆச்சர்யமாக அவர்களைப் பார்ப்பேன். 

ஹிந்துஸ்தானி சங்கீதம் சிறிது கேட்டால் கூட மனம் அதில் உடனே ஈடுபடும். ஆனால் என் மன அமைப்பின் காரணமாகவா அல்லது எனது வாழ்க்கை முறையின் காரணமாகவா என்பது எனக்குத் தெரியவில்லை இன்று வரை தீவிரமாக இசை கேட்டது இல்லை. 

இன்று தற்செயலாக ஒரு காணொளியைக் கண்டேன். அது மேற்கத்திய இசை தொடர்பான காணொளி. அதன் தலைப்பு ‘’நீங்கள் இசைக்கு செவி திறவாதவரா அல்லது ஆசிர்வதிக்கப்பட்ட செவிசார் இசை நுண்ணுணர்வு கொண்டவரா ?’’ என்று அந்த காணொளி கேள்வி கேட்டிருந்தது. இசைக்கு செவி திறவாத ஆள் நான் என்று எனக்கு நன்றாகவே தெரியும். இதனை பரீட்சித்து வேறு உறுதி செய்து கொள்ள வேண்டுமா என்று தோன்றினாலும் பரீட்சித்துப் பார்த்து விடுவோமே என அந்த பரீட்சையில் ஈடுபடுத்திக் கொண்டேன். 

மொத்தம் 15 கேள்விகள். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். ஒரு ஒலிக்குறிப்பு ஒலிக்கும். வாத்திய ஒலி. அதனைக் குறித்து கேள்வி இருக்கும். நாம் எடுக்கும் மதிப்பெண் பூஜ்யம் எனில் நாம் இசைக்கு செவி திறவாதவர். நமது மதிப்பெண் 1-4 எனில் இசைக்கு செவி திறப்பதில் சராசரிக்கு கீழே இருப்பவர். நாம் 5-9 மதிப்பெண் எடுத்தால் சராசரி நிலை. 10 -14 எனில் சராசரிக்கு மேலே. 15 என்றால் ஆசிர்வதிக்கப்பட்ட செவிசார் நுண்ணுணர்வு கொண்டவர். இந்த மதிப்பெண் படிநிலை தேர்வு துவங்கும் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. எனக்கு ஐயமே இருக்கவில்லை. என்னுடைய மதிப்பெண் நிச்சயம் பூஜ்யமாகவே இருக்கும் என நினைத்தேன். பரீட்சைக்குள் சென்றேன். என்ன கேட்கிறார்கள் என்பதும் கேள்வி உத்தேசிப்பது என்ன என்பதும் எனக்குப் புரிந்தது. அதுவே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. உற்சாகமாக எனது பதில்களைக் குறித்துக் கொண்டேன். காணொளியின் நிறைவில் ஒவ்வொரு கேள்விக்குமான பதில் என்ன என்பதைத் தெரிவித்தார்கள். எனது பதில்களில் சரியான பதில்களும் இருந்தன என்பது எனக்கே வியப்பு. 

15க்கு 8 மதிப்பெண். சராசரி நிலை. 

எனக்கு ஒரே சந்தோஷம். 

இதை ஒரு நல்நிமித்தமாகக் கொண்டு தினமும் ஒரு மணி நேரமாவது இசை கேட்க வேண்டும் என எண்ணினேன்.  

Thursday, 4 December 2025

இரண்டாம் கடிதம்

 சில நாட்களுக்கு முன் எனது நண்பனுக்கு ஒரு கடிதம் எழுதி தபாலில் அனுப்பினேன். அதனை வலைப்பூவிலும் வெளியிட்டேன். ஊரில் ஆஸ்திரேலியாவிலிருந்து ஊருக்கு வந்திருக்கும் நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவருடன் சிறு பயணம் ஒன்று செய்ய நேர்ந்தது. அவருக்கு ஒரு கடிதம் எழுதி தபாலில் அனுப்பினேன். அக்கடிதத்தை இங்கே வெளியிடுகிறேன். 

***

அன்புள்ள நண்பருக்கு,

இன்று தங்களுடன் ஒரு சிறுபயணம் மேற்கொண்டது மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. நாம் இருவருமே இப்போது நடுவயது எனக் கூறத்தக்க வயதுக்கு வந்து விட்டோம். உத்வேகமும் தீரா ஊக்கமும் கொண்ட மன அமைப்பு நாம் இளைஞர்களாயிருந்த போது வாய்த்த விதத்தில் இனி அமையுமா என்பதை நாம் சிலமுறையாவது ஆழமாக யோசித்துப் பார்த்திருப்போம். புரிதல்களும் அனுபவங்களும் மனம் இயங்கும் விதத்தைக் கட்டமைக்கும் நிலையிலும் நாம் வாழ்வுக்கும் உலகுக்கும் நம் எல்லைகளைத் தாண்டி நம் தடைகளைத் தாண்டி திறந்திருப்போம் எனில் வாழ்க்கை கணந்தோறும் புதியதாகவே இருக்கும். வாழ்வின் இனிமையைக் காணும் விதத்தில் வாழ்வின் இனிமைகளைக் காணும் விதத்தில் தங்களின் ஒவ்வொரு நாளும் அமையவேண்டும் என்பது எனது விருப்பம். 

நீண்ட நாட்களுக்குப் பின்  எழுதும் கடிதம் இது. நம் சந்திப்புகளின் நம் பயணங்களின் இனிய நினைவுகளை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்ளலாம் என எண்ணுகிறேன். தங்களுக்கு நினைவிருக்கிறதா ? நாம் இருவரும் ஒருமுறை பூம்புகார் சென்றோம். வருடம் 2003 என ஞாபகம். கடலில் இறங்கி குளித்தோம். நம் இருவருக்கும் நீச்சல் தெரியாது. கரையிலிருந்து கணிசமான தொலைவு கிழக்கு நோக்கி கடலில் சென்றதும் அங்கே ஒரு பள்ளமான பகுதி இருப்பதை நம் கால்கள் ஒருங்கே உணர்ந்தன. உணர்ந்த கணமே நாம் கைகளை இணைத்துக் கொண்டோம். சில கணங்கள் ஆழத்தினுள் சென்று விட்டோம். நம் சிரசுக்கு மேலே கடல்நீர் இருப்பது நம் இருவருக்கும் தெரிந்து விட்டது. நமது கரங்களின் பிணைப்பை மேலும் வலுவாக்கிக் கொண்டோம். ஒரு பெரிய அலை வந்து நம் இருவரையும் கரை நோக்கித் தள்ளியது. கைகள் இணைந்தவாறே நாம் கரையேறினோம். இத்தனை வருடங்கள் கழித்து இந்த சம்பவத்தை நினைவுபடுத்திக் கொள்ளும் போது மனம் இப்போதும் பரபரப்பாக உணர்கிறது. நாம் இருவரும் இணைந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திவ்யதேசங்களுக்குச் செல்வது எனத் தீர்மானித்துக் கொண்டு ஒரு மார்கழி மாதத்தில் நாளைக்கு ஒன்று என 30 திவ்யதேசங்களைச் சேவித்தோம். அதன் பின் நீங்கள் வெளியூர் வெளிநாடு சென்று விட்டீர்கள். நாம் இணைந்து பயணித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. இன்று தங்களுடன் திருக்குடந்தை சாரங்கபாணி பெருமாளைச் சேவிக்கச் சென்றது நாம் மீண்டும் பல விஷ்ணு ஆலயங்களுக்கு சேர்ந்து செல்வோம் என்ற உணர்வைத் தந்தது. 

தங்கள் பெற்றோர் , உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அன்பும் பிரியமும். 

இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எல்லா நலங்களையும் மகிழ்ச்சிகளையும் தருவார். 

அன்புடன்,

பிரபு

இடம் ; மயிலாடுதுறை

நாள் : 02.12.2025 

Wednesday, 3 December 2025

ஆலோசனை புகார் புத்தகம் - சி.பி.கி.ராம்.ஸ் தீர்வு

 ஊரின் அஞ்சல் நிலையம் ஒன்றில் அஞ்சல் உறை வாங்கச் சென்ற போது அஞ்சல் உறை இருப்பு இல்லை என்று கூறினார்கள். பின்னர் அந்த அஞ்சல் நிலையத்துக்கு அருகில் இருந்த ஸ்டேஷனரி கடைக்குச் சென்று ஆஃபிஸ் கவர் வாங்கி பின் அஞ்சலகம் திரும்பி 3 அஞ்சல் வில்லைகள் வாங்கி தபாலை அனுப்பினேன். போதிய அஞ்சல் உறைகளை இருப்பு வைத்துக் கொள்ளவும் என ‘’ஆலோசனை புகார் புத்தகத்தில்’’ எழுதுவதற்கு அந்த புத்தகத்தைக் கேட்டேன். அதுவும் இல்லை என பதில் தரப்பட்டது. இந்த விஷயத்தை சி.பி.கி.ராம்.ஸ் -ல் பதிவு செய்தேன். அஞ்சல்துறை உயர் அதிகாரி அலுவலகத்திலிருந்து அலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார்கள். நான் நேரில் அங்கு சென்று எனது புகாரை எழுதி வாங்கிக் கொண்டனர். இன்று சி.பி.கி.ராம்.ஸ் இணையதளம் மூலன் அவர்கள் அளித்த பதில் என்னை அடைந்தது. அதாவது, அஞ்சல் நிலையத்தில் போதிய தபால் துறை விற்பனைப் பொருட்கள் ( அஞ்சல் அட்டை, இன்லாண்ட் கடிதம், அஞ்சல் உறை, அஞ்சல் வில்லை) போதிய கையிருப்பில் இருக்க ஆவன செய்யப்பட்டுள்ளதாகவும் ‘’ஆலோசனை புகார் புத்தகம்’’ வாடிக்கையாளர் கேட்கும் போது வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பதில் அளித்திருக்கின்றனர். நேர்ந்த சேவைக் குறைபாட்டுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் எழுதியிருந்தனர்.  

Tuesday, 2 December 2025

உரு அரு

எனது நண்பர் ஆஸ்திரேலியாவிலிருந்து ஊருக்கு வந்திருக்கிறார். எங்கள் இருவருக்கும் சம வயது. ஊரில் அவர் படித்த பள்ளியும் நான் படித்த பள்ளியும் வேறானவை. நாங்கள் வெவ்வேறு கல்லூரிகளில் படித்தோம். கல்வி முடிந்த பின் அவர் சென்னையில் ஐ டி நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்தார். பின்னர் வெளிநாடு சென்று விட்டார். இரண்டு மூன்று நாடுகளில் இருந்து விட்டு இப்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். பள்ளி கல்லூரி நாட்களில் அடிக்கடி சந்திப்போம். அவர் வெளிநாடு சென்ற பின் ஆண்டுக்கு ஒருமுறை ஊருக்கு வரும் போது பார்ப்பதுண்டு.  அவர் ஒரு பெருமாள் பக்தர். பெருமாள் ஆலயத்தில் நிறைய கைங்கர்யங்கள் செய்வார். 20 ஆண்டுகளுக்கு முன்னால் நானும் அவரும் ஒரு மார்கழி மாதத்தில் தினம் ஒரு பெருமாள் கோவில் திவ்யதேசம் என 30 சோழ நாட்டுத் திருப்பதிகளை தரிசித்தோம். மறக்க முடியாத பயணங்கள் அவை. 

இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரைத் தற்செயலாக சந்தித்த போது திருக்குடந்தை சாரங்கபாணி பெருமாள் கோவிலுக்குச் செல்வோமா என்று கேட்டேன். இன்று காலை செல்வதாக முடிவாகியது. காலை 5 மணிக்கு அவரை அவருடைய வீட்டுக்கு வந்து அழைத்துச் செல்வதாகக் கூறினேன். மோட்டார்பைக் பயணம். பத்து நிமிடம் முன்னதாகவே அவர் வீட்டுக்குச் சென்றேன். அவர் தயாராகியிருந்தார். 

அவருடைய பெயர் ‘’பொன்னியின் செல்வன்’’ நாவலில் இடம் பெற்றிருக்கும் ஒரு வரலாற்றுக் கதாபாத்திரத்தின் பெயர். அவரது உறவினர் ஒருவர் கல்கியின் தீவிர வாசகர். அவரே அப்பெயரை நண்பர் குழந்தையாயிருந்த போது சூட்டியிருக்கிறார். நண்பருக்கு இப்போது 17 வயதில் ஒரு மகனிருக்கிறான். ஆஸ்திரேலியாவில் பொருளாதாரமும் வணிகமும் பயில்கிறான். அவன் பெயரும் ‘’பொன்னியின் செல்வன்’’ நாவலில் இடம் பெற்றிருக்கும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர். 

இன்று அதிகாலை 3 மணிக்கே எழுந்து விட்டேன். அலாரம் 4 மணிக்குத் தான் வைத்திருந்தேன் எனினும் பயண ஞாபகம் காரணமாக ஒரு மணி நேரம் முன்பே விழித்து விட்டேன். ஸ்ரீகுமரகுருபரரின் பிரபந்தத் திரட்டு என்ற நூலை எடுத்து வாசித்துக் கொண்டிருந்தேன். நண்பரை அழைக்கச் சென்ற போது அவர் ‘’விஷ்ணு சஹஸ்ரநாமம்’’ பாராயணம் செய்திருந்தார். 

நமது நாட்டில் இறைவன் சொல் மூலம் வர்ணிக்கப்படுவதும் இறைவன் சொல் மூலம் துதிக்கப்படுவதும் 7000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட நெடிய வழக்கமாக இருப்பது குறித்தும் அதன் பின்னணியில் உருவ வழிபாடு எப்படி புரிந்து கொள்ள வேண்டியது என்பது குறித்தும் உரையாடியவாறு சென்றோம். உருவமா அருவமா என்னும் கேள்வி எங்கள் உரையாடலின் மையப் பொருளாக இருந்தது. எதைக் குறித்து பேசினாலும் விஷயம் மீண்டும் மீண்டும் அங்கேயே வந்தது. 

உரையாடியவாறே திருக்குடந்தை ஆலயம் வந்தடைந்தோம். நேரம் காலை 6.30. விஸ்வரூப தரிசனம் 7  மணிக்கு. ஆலயத்தின் கோபுரம் முன் வந்து நின்று கோபுர தரிசனம் செய்தோம். மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞா, சகஸ்ரஹாரா என சக்கரங்கள் 7. இவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிற்பங்கள் கோபுரங்களில் உள்ளன என்று கூறினேன். எட்டு கைகளுடன் ஒரு கையில் வாள் ஏந்திய இன்னொரு கையில் பாஞ்சஜன்யம் ஏந்திய நரசிம்மர் சிற்பம் ஒன்றைக் கோபுர சிற்பங்களில் கண்டேன். இன்றைய பயணத்தின் கண்டடைதல் அந்த நரசிம்மர். 

ஆலயம் திறக்கப்பட்டு பசுமாடொன்று தாயார் சன்னிதியில் தாயாரை தரிசித்தது. பின்னர் சுவாமி சன்னிதியில். 

சாரங்கபாணி ஒரு குண்டான கருப்புக் குழந்தை. ஐந்து வயது பாலகனுக்குரிய முகம். ஆழ்ந்த யோக உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறான் யாவருக்கும் குழந்தையாயிருப்பவன். பவள வாய், கமலச் செங்கண், ஆயர் தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான் போய் இந்திரர் லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்றார் ஆழ்வார். அந்த குழந்தைக்கு முன்னால் அந்த குழந்தையின் தூய்மைக்கு முன்னால் அந்த குழந்தையின் அன்புக்கு முன்னால் அந்த குழந்தையின் அருளுக்கு முன்னால் அனைத்துமே சிறியவை. அனைத்துமே தூசானவை. அந்த குழந்தையிடம் சரணடைவதை விட வாழ்வுக்கு இனிமை என்பது இல்லை. 

ராஜாஜி ஊரிலிருந்து

 இன்று தருமபுரியிலிருந்து ஒரு வாசகர் அலைபேசியில் பேசினார். 

சமீபத்தில் எழுதிய ‘’மரங்களின் மறைவாழ்வு’’ நூலைக் குறித்து வலைப்பூவில் எழுதிய கட்டுரையை வாசித்திருந்த நண்பர் அதனால் ஆர்வமுற்று அந்த புத்தகத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி வாசித்திருக்கிறார். அவருக்கு அந்தப் புத்தகம் மிகவும் பிடித்திருந்தது. 

இருவரும் நூல் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் பேச்சு ராஜாஜியை நோக்கித் திரும்பியது. ராஜாஜி பிறந்த ஊர் ஹோசூருக்கும் கிருஷ்ணகிரிக்கும் இடையே இருக்கிறது. ராஜாஜி குறித்து உரையாடியது எங்கள் இருவருக்கும் பெருமகிழ்ச்சியை அளித்தது.