சிதம்பரம் நகரில் ஒரு வேலை இருந்தது. காலை 10 மணி அளவில் சென்றிருந்தேன். வேலை முடிய மதியம் 1 மணி ஆகும் என்ற நிலை. 12 மணி அளவில் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கேன்டீனுக்கு வந்தேன். ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தேன். என் அருகில் மூன்று மாணவர்கள் இருந்தனர். கம்யூனிஸ்டு மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள். கையில் ஒரு மனு வைத்திருந்தனர். வாங்கிப் பார்த்தேன். அவர்களுடைய லெட்டர்பேடில் அச்சிடப்பட்டு பின் இன்னொரு தாளில் இரண்டாம் பக்கம் அச்சிடப்பட்டிருந்தது.
‘’தம்பி ! இந்த மனுவை ஏன் இரண்டு தனித்தனி தாள்ல பிரிண்ட் பண்ணியிருக்கீங்க. ரெண்டு பக்கம் தானே இருக்கு. ஃபிரண்ட் அண்ட் பேக் பிரிண்ட் பண்ணலாமே?’’ என்றேன்.
ஒரு மாணவன் யோசித்தான்.’’ஃபைல் பண்ண இதுதான் ஈஸி’’ என்றான்.
‘’ஃபிரண்ட் அண்ட் பேக் தான் ஃபைல் பண்ண ஈஸி. தனித்தனியா இருந்தா ரெண்டாவது பக்கத்தை ஃபைல்ல இருந்து எடுக்கறது ரொம்ப சுலபம். டைப் ரைட்டர் புழக்கத்தில இருந்தப்ப தனித்தனி தாள்ல டைப் செய்வாங்க. டைப் பண்ண தாளோட பின் பக்கத்துல டைப் பண்ணா ரெண்டு பக்கமும் தெளிவா இருக்காது. இப்ப பிரிண்டிங் டெக்னாலஜி பெருசா வளர்ந்துடுச்சு. ஒரு பக்கத்தோட இம்ப்ரஷன் பின் பக்கத்துல இருக்காது.’’
’’நீங்கள் சொல்றது கரெக்ட் தான் சார்’’ என்றான் ஒரு மாணவன்.
‘’நீங்க ஸ்டூடண்ட் யூனியன்ல என்ன பொறுப்புல இருக்கீங்க?’’
ஒரு மாணவன் மாவட்டப் பொறுப்பு. இன்னொரு மாணவன் வட்டப் பொறுப்பு.
‘’1971ல சிதம்பரம் அண்ணாமலை நகர்ல கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் யூனியனைச் சேர்ந்த உதயகுமார் என்னும் மாணவரை கருணாநிதி சர்க்கார் அடிச்சு கொலை செஞ்சது. உங்களுக்கு இந்த விஷயம் தெரியும் தானே?’’
அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. மாணவர்கள் என்பதால் நான் சொன்ன விஷயம் அவர்களுக்கு பரபரப்பை அளித்தது. தங்கள் கட்சிக்காரர்களிடம் ஃபோன் செய்து கேட்கிறோம் என்றான் ஒரு மாணவன்.
‘’உதயகுமார் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்னு கூகுள் செய்ங்க ‘’ என்றேன்.
இரண்டு மாணவர்கள் இரு திசைகளில் சென்று இரண்டு கட்சிக்காரர்களிடம் ஃபோன் பேசி விட்டு வந்தனர்.
‘’உதயகுமார்னு ஒரு ஸ்டூடண்ட் கொல்லப்பட்டிருக்கார். ஆனா அவர் கம்யூனிஸ்டு மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர் இல்லைன்னு கட்சிக்காரங்க சொல்றாங்க’’
‘’கூகுள் செய்ங்க’’
கூகுள் உதயகுமார் கம்யூனிஸ்டு மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதைத் தெரிவித்தது. மாணவர்களுக்கு அதிர்ச்சி.
‘’கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து திமுக கூட தேர்தல் கூட்டணி வச்சு எம் எல் ஏ வா எம் பி யா இருந்திருக்காங்க தம்பி. அதனால திமுக தலைவர் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கறதும் ஊர்ல திரியற கழுதைக்கு டாக்டர் பட்டம் கொடுக்கறதும் ஒன்னுன்னு சொல்லி கழுதைங்க கழுத்தில டாக்டர்னு எழுதித் தொங்கவிட்ட உதயகுமார் கம்யூனிஸ்டு ஸ்டூடண்ட் யூனியன் மெம்பர்னு சொல்றதை அவங்க அசௌகர்யமா நினைப்பாங்க இல்லயா?’’
பின்னர் உதயகுமார் கொலை குறித்த விபரங்களை அவர்களுக்குக் கூறினேன். போலீஸ் உதயகுமாரைக் கொலை செய்து அவர் உடலை குளத்தில் வீசியது ; அவர்கள் பெற்றோரை மிரட்டி உதயகுமாரின் பிணத்தை உதயகுமாரின் பிணம் அல்ல எனக் கூற வைத்தது. பின்னர் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் இறந்தது உதயகுமார்தான் எனக் கூறியது. அனைத்து விஷயங்களும் சொன்னேன்.