அனுப்புநர்
பிரபு மயிலாடுதுறை
Saturday, 15 August 2026
வருவாய் கோட்டாட்சியருக்கு ஒரு கடிதம்
வருவாய் கோட்டாட்சியருக்கு ஒரு ஆர் டி ஐ மனு
கிராம சபைக் கூட்டம்
இன்று ஊருக்குப் பக்கத்தில் உள்ள கிராமத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்துக்குச் செல்ல வேண்டும் என் காலையிலிருந்தே எண்ணம் கொண்டிருந்தேன். தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகள் தோற்கடிக்கப்பட்டு ஒரு புதிய கட்சி ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் கிராம அளவில் சூழல் எவ்விதம் இருக்கிறது என்பதை அறிய கிராம சபைக் கூட்டம் உதவும் என எண்ணினேன்.
தமிழக அரசியல் என்பது ஒரு மூடுமந்திரம். என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்குள் எந்த விஷயமும் முடிந்து விடும்.
காலை 10 மணி அளவில் கிராம சபை கூட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்றேன். கூட்டம் 12 மணி அளவில் தொடங்கியது. வருவாய் கோட்டாட்சியர் கூட்டத்துக்கு வருகை புரிந்திருந்தார். மாவட்ட ஆட்சித் தலைவருடன் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்று அது முடிவடைந்த பின் வந்ததால் சற்று தாமதம்.
தமிழக மக்கள் எந்நேரமும் அரசியலையும் அரசையும் குறித்து பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அடிப்படைக் கடமையைச் செய்வதில் சுணக்கம் காட்டுபவர்கள். ஒரு கிராமத்தின் மக்கள் தொகை 1000 - 5000 வரை இருக்கும். கிராம சபைக் கூட்டத்துக்கு குறைந்தபட்சம் 50 பேர் வருகை தர வேண்டும். நான் கலந்து கொண்ட கூட்டத்தில் இழுத்துப் பிடித்து 50 பேர் வந்திருந்தனர். 01.04.20226 லிருந்து 31.07.2026 வரை அந்த கிராமத்துக்கு ஆன செலவுகளை ஒரு போஸ்டராக சபை அரங்கில் வைத்திருந்தார்கள். அந்த விபரங்களைக் குறிப்பேட்டில் குறித்துக் கொண்டேன். அங்கிருந்த அரசு ஊழியர் நான் விபரங்களைக் குறித்துக் கொள்வதைப் பார்த்து என்னிடம் நான் யார் என்ற விபரங்களை கேட்டுக் கொண்டார். 120 நாளில் ரூ.4,80,000 செலவு செய்திருக்கின்றனர். ஒரு நாளைக்கு ரூ.4000 செலவாகிறது.
முதற் பார்வையில் தெரு விளக்கு பழுது நீக்கம் ரூ.25,000 எனக் குறிப்பிட்டிருந்தனர். 120 நாளில் ரூ.25,000 செலவு எனில் ஒரு நாளைக்கு ரூ.200 செலவாகிறது என்று பொருள். அந்த ஊரில் தினம் ஒரு மின்விளக்கு மாற்றினால் தான் அந்த செலவு ஆகும். தினம் ஒரு விளக்கு பழுதடைய சாத்தியம் இல்லை.
தெருவிளக்கு பொருள் வாங்கியது என ரூ.8000 செலவு. முன்னர் குறிப்பிட்டது தெருவிளக்கு பழுது நீக்க. இப்போது பொருள் வாங்கியது என்பதற்காக. ரூ.8000க்கு வாங்கிய பொருளை ரூ.25,000 செலவு செய்து பொருத்தினார்களா என்னும் கேள்வி எழுகிறது.
கை பம்ப் வாங்க என ரூ.6000 செலவு. கை பம்ப் பழுது நீக்க என ரூ.8000 செலவு.
தெரு விளக்கு, கை பம்ப் செலவை தணிக்கை செய்ய வேண்டும் எனக் கேட்கலாம் என உள்ளேன்.
அரசு மக்களை இணைக்க வேண்டும். மக்கள் இணைந்தால் மகத்தான மாற்றங்கள் நடக்கும்.
தமிழகம் இப்போது தான் ஒரு ஆட்சிமாற்றத்தை நிகழ்த்தி மாற்றங்களுக்குத் தயாராகி உள்ளது. இனி வரும் காலங்களில் இன்னும் அதிக மாற்றங்கள் நிகழும் என நம்புவோம்.
சட்டமும் அரசும்
எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் பல அரசியல் கட்சிகளில் செயல்பாட்டாளராக இருந்தவர். திராவிடக் கட்சிகள் மற்றும் பிராந்தியக் கட்சிகளில் செயல்பட்டிருக்கிறார். எந்த விஷயமும் அதனுள் அரசியலைக் கொண்டுள்ளது எனத் தீவிரமாக நம்புபவர். அவர் எந்த விஷயத்தையும் அரசியலின் ஒரு பகுதியாகவே புரிந்து கொள்வார்.
தனது பூர்வீக சொத்து ஒன்றை விற்பனை செய்யும் முயற்சியில் சமீபத்தில் ஈடுபட்டுள்ளார். சிறு அளவில் அதில் அவருக்கு சில ஆலோசனைகள் வழங்கினேன். பூர்வீக சொத்து 100 ஆண்டுகளாக அவர்கள் குடும்பத்திடம் இருக்கிறது. இப்போது விற்பனை செய்யும் நிலையில் ‘’கேப்பிடல் கெயின்’’ எனப்படும் மூலதன ஆதாய வரி அதற்கு வரும். அந்த மூலதன ஆதாய வரியை மொத்த வரித்தொகைக்கு வேறு ஒரு சொத்தை வாங்கினாலோ அல்லது மொத்த வரித்தொகைக்கு அவருடைய சொத்து ஏதேனும் ஒன்றில் கட்டுமானம் மேற்கொண்டாலோ அல்லது மூலதன ஆதாய வரி பத்திரங்கள் வாங்கினோலோ அதனைத் தவிர்க்க முடியும். வருமான வரியில் மிகச் சாதாரணமான விஷயம் இது.
இப்போது அவர் மனதை இந்த விஷயம் முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிறது ; பின் தொடர்கிறது . மூலதன ஆதாய வரி இப்போது அவரை முழுவதுமாக வியாபித்திருக்கிறது. எனினும் அதனை அதன் கணக்கீடுகளை அவர் முழுமையாகப் புரிந்து கொண்டாரா என்பது இப்போதும் ஐயமே.
ஓர் எளிய சட்டத்தினைப் புரிந்து கொள்ளவே இவ்வளவு சிரமப்படுகிறாரே இவர் தன் வாழ்நாள் முழுக்க அரசியலை எப்படி புரிந்து கொண்டிருப்பார் என்று எண்ணினேன்.
Friday, 14 August 2026
நாம்
ஜூலை 28, 29 ஆகிய இரு தினங்களில் வங்கியில் நிகழ்ந்த சேவைக்குறைபாட்டை வங்கியின் சி இ ஓ வுக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன். எனது கடிதம் எந்த தனிநபருக்கும் எதிரானது அல்ல ; சினத்தின் வெளிப்பாடும் அல்ல. ஒரு வித்தியாசமான நிகழ்வை வங்கி நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தினேன் . அவ்வளவுதான். நாம் ரயில் நிலையம் செல்கிறோம் ; அங்கே சந்தேகத்துக்கு இடமாக ஒரு பை கேட்பாரற்று கிடக்கிறது எனில் ஆர் பி எஃப் காவலர்களிடம் தெரிவிப்பதைப் போன்ற நிகழ்வுதான் நான் செய்ததும்.
எங்களுக்கு சேவைக்குறைபாடு நிகழ்ந்த தினத்தில் காலை 11.30க்கு வங்கியில் உரக்க குரலெழுப்பியிருக்க முடியும். அதனை நான் ஒரு வழிமுறையாகவோ அல்லது தீர்வாகவோ எப்போதும் எண்ணுவதில்லை. காலை 11.30 மணிக்கே ‘’ஸோனல் அலுவலகம்’’ ஃபோன் செய்ய முடியும். அந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 100 கிளைகள் இருக்கும். 5 நிமிடத்துக்கு ஒருமுறை அந்த 100 கிளைகளிலிருந்தும் ஏதேனும் ஒரு ஃபோன் வந்தால் அந்த அலுவலகம் ஃபோன் அட்டண்ட் செய்வதை மட்டுமே ஒரு வேலையாகச் செய்ய முடியும். நான் தாமதமாக வேலை முடிந்த பின் நடந்ததை விவரித்து கடிதம் அனுப்பினேன். அது ஒரு நாகரிக வழிமுறை.
எனக்கு வங்கி மீதோ வங்கி ஊழியர்கள் மீதோ வங்கியின் சம்பந்தப்பட்ட ஊழியர் மீதோ அல்லது பிற ஊழியர்கள் மீதோ வருத்தம் கிடையாது. நிகழ்ந்தது ஒரு பிழை. அதனை சுட்டிக் காட்டினேன். அவ்வளவுதான். கடிதம் அனுப்பிய பின் வங்கிக்குச் சிலமுறை செல்ல நேர்ந்த போது வங்கி ஊழியர்களின் பார்வையில் சிறு துணுக்குறலை உணர்ந்தேன். அது ஏன் என யோசித்தேன். அவர்கள் வங்கி என்பது ஊழியர்களான அவர்களுடையது என எண்ணுகிறார்கள். அது முழு உண்மை அல்ல ; பகுதி உண்மை. வங்கி என்பது வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் என்னும் இரு குழாமுக்கும் சொந்தமானது. நான் புரிந்து கொண்டிருப்பது முழு உண்மை.
Tuesday, 11 August 2026
விசாரணை
எனது நண்பர் ஒருவர் அவரது சொத்தை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற விரும்பினார். அவர் சொத்து பத்திரத்தின் நகலை எடுத்துக் கொண்டு அவருக்கு விபரம் கேட்டு சொல்வதற்காக வங்கிக்குச் சென்றேன். மேலாளரின் அறை கண்ணாடி அறை. மேலாளர் இருக்கைக்கு எதிரே கோட் அணிந்திருந்த ஒருவர் அமர்ந்திருப்பதை நான் அறைக்கு வெளியிலிருந்து பார்த்தேன். அவர் வங்கியின் ‘’ஸோனல் மேனேஜர்’’ ஆக இருக்கக் கூடும் என யூகித்தேன். வங்கிக்கு வெளியே வந்து வெளியூர் பதிவு எண் கொண்ட நான்கு சக்கர வாகனம் நிற்கிறதா என்று பார்த்தேன். ‘’இந்திய அரசு’’ என எழுதிய வாகனம் ஒன்று வங்கியிலிருந்து சற்று தள்ளி புங்கன் மர நிழல் ஒன்றில் நின்று கொண்டிருந்தது. ஓட்டுநர் நல்ல தூக்கத்தில் இருந்தார். வாகனம் வந்து நெடுநேரம் ஆகிறது என எண்ணினேன். பின்னர் வங்கிக்கு உள்ளே வந்தேன். மேலாளர் அறையில் வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடந்து கொண்டிருந்தது. ஊழியர்கள் சற்று பதட்டமாக இருந்ததாகத் தோன்றியது. இவ்வாறான சூழ்நிலையில் அங்கு இருப்பதா அல்லது வெளியேறி விடுவதா என யோசித்தேன். மேலாளரிடன் ஆவண நகலைக் காண்பித்து அபிப்ராயம் கேட்டு விட்டு புறப்படலாம் என எண்ணினேன். மேலாளர் மேஜையில் கணிணித் திரை புதிய திசையில் இருந்தது. தலைமை அலுவலகத்திலிருந்து எவரேனும் இணையம் மூலம் வந்திருக்க முடியும் என யூகித்தேன்.
‘’டாகுமெண்டல் எவிடெண்ஸ்’’ பலமாக உள்ளது. ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதி கொண்டவர்கள் விசாரணை நடத்தினால் தாமதத்துக்கு காரணமான ஊழியர் மேல் நடவடிக்கை இருக்கும். எனது கடிதம் சி இ ஓ வை அடைந்து இன்றுடன் ஒன்பது நாள் ஆகிறது. உச்ச அலுவலகத்திலிருந்து கீழ் அலுவலகம் வரை குறைந்தபட்சம் 200 ஊழியர்களையாவது இந்த சம்பவம் சென்றடைந்திருக்கும். கடிதத்தின் நேரடிப் பலன் அதுதான். பெற்றுக் கொண்ட விண்ணப்பத்துக்கு ஒரு ஒப்புகைச்சீட்டு அளித்திருந்தால் இந்த பிரச்சனையே உருவாகியிருக்காது என்றே எல்லாரும் சொல்வார்கள். இருந்தாலும் வங்கிச் சூழல் ஒரு வாடிக்கையாளர் புகார் ஒரு ஊழியரின் ‘’பணிப் பதிவு’’ ஆவணங்களில் எதிர்மறைப் பதிவை உருவாக்குவதை வங்கிச் சூழலின் அகங்காரம் சீண்டப்பட்டு அனுமதிக்காது; அந்த ஊழியரைத் தப்ப வைக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வார்கள். எனது அறிதலின் ஒரு பகுதியாக என்ன நிகழ்கிறது என்பதையும் கவனித்துக் கொள்கிறேன்.
‘’ஸோனல் மேனேஜர்’’ சிஸ்கோ ஃபோன் மூலம் திரையில் பார்த்துப் பேசி அறிமுகம் உள்ளவர். 10 நிமிடம் அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அந்த வகையில் அவரிடம் இன்றும் ஒரு உரையாடலை மேற்கொள்வோமா என எண்ணினேன். விசாரணை ரொம்ப நேரம் பலரிடம் நடந்து கொண்டிருந்ததை கண்ணாடி அறைக்கு வெளியிலிருந்து பார்த்தேன். வேறு ஒரு வாசல் வழியே ‘’ஸோனல் மேனேஜர்’’ வெளியேறிச் சென்றார். மேலாளர் வெளியே வந்தார். அவரிடம் நண்பரின் சொத்து ஆவணத்தைக் காட்டி விட்டு சில ஜயங்களைக் கேட்டு விட்டு புறப்பட்டேன். அப்போது ஜூலை 28,29 ஆகிய தினங்களின் சி சி டி வி காட்சிகளை வங்கி ஊழியர் ஒருவர் சோதித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
Sunday, 9 August 2026
எழுதும் ஒருவர்
எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் அகம் ஆழம் மிக்கது என அவரை சந்தித்த முதல் தினத்திலிருந்து எண்ணியிருக்கிறேன். அவர் உலகியல் பணிகளையும் உலகியல் திட்டமிடல்களையும் சிறப்பாகச் செய்யும் ஒருவர். அவரது உத்யோகம் தொடர்பான பணிகள் அவரது நாளின் பெரும்பகுதி நேரத்தை எடுத்துக் கொள்ளும். அவருடன் சில முறை பயணிக்கவும் வாய்ப்பு அமைந்தது. அவரது காரில் ஒருமுறை நீண்ட பயணம் செய்தோம். அவரது டூ வீலரில் நீண்ட பயணம் ஒன்று மேற்கொண்டோம். சிலமுறை ஒன்றாக ரயிலில் பயணித்திருக்கிறோம். வெவ்வேறு ஊர்களில் சந்தித்திருக்கிறோம். ஓரிரு வாரங்கள் முன்னால் அவர் தனது முதல் சிறுகதையை எழுதி அனுப்பியிருந்தார். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனை நான் எவ்விதம் வாசிக்கிறேன் என்பதை அவருக்குத் தெரிவித்தேன். இன்று ஒரு சிறுகதை எழுதி அனுப்பியிருந்தார். இந்தக் கதையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைப் பற்றி அவரிடம் சொன்னேன். அப்போது அவர் ஒரு விஷயம் சொன்னார் : ‘’அதாவது , ஒரு வாசகர் ஒருவரிடம் நான் எழுதுமாறும் படைப்புச் செயல்பாட்டுக்குள் இருக்குமாறும் சொல்லிக் கொண்டிருந்த போது நான் உடனிருந்தேன் . அச்சொற்களை எனக்கான சொற்களாகவும் எடுத்துக் கொண்டேன்’’ என்றார். நண்பர் தொடர்ந்து எழுத வேண்டும் என விழைகிறேன்.
அகம் நிறைந்த ரயில்கள்
எல்லா ரயில்களுமே என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவைதான். பாசஞ்சர் ரயில்கள் மீதும் பிரியமும் ஈடுபாடும் உண்டு. ரயில் அளவுக்கே ரயில் நிலையங்களும் என்னை ஈர்ப்பவை. ரயில் நிலையங்கள் வாழ்வின் மீது கூடுதல் நம்பிக்கையை உருவாக்குகின்றன. காவிரி வடிநில பிராந்தியத்தின் சிறு ரயில் நிலையங்கள் அனைத்திலும் குறைந்தபட்சம் ஒரு ஆலமரமாவது அல்லது அரசமரமாவது இருக்கும். அனேகமாக நம் நாட்டின் பெரும்பாலான ரயில் நிலையங்களில் நிழல் தரும் மரங்கள் வைத்து பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. ஊரிலிருந்து புறப்படும் பாசஞ்சர் ரயில்கள் விழுப்புரம் பாசஞ்சர், திருச்சிராப்பள்ளி பாசஞ்சர். முன்னர் காரைக்குடி பாசஞ்சர் இருந்தது. இப்போது அது திருவாரூரிலிருந்து புறப்படுகிறது. எல்லா ரயில்களின் பெயர்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். எல்லா ரயில்களும் எனக்குப் பிடிக்கும். கொரமண்டல் எக்ஸ்பிரஸ், நவஜீவன் எக்ஸ்பிரஸ் ஆகிய பெயர்கள் பிடித்த பெயர்கள். ரயில் ஒன்றைப் பிடித்து ஒரு ஊருக்குச் செல்வதில் இன்றும் தீராத உவகை இருக்கிறது ; அந்த உவகையே என் வாழ்க்கை இன்னும் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது என்பதை எனக்குக் காட்டுகிறது.