எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். நானாவித அலுவல்களில் ஈடுபடுபவர். காலை 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தொடர்ச்சியாக ஏதேனும் பணிகளில் ஈடுபட்டிருப்பார். எனக்கு அவரை 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தெரியும். 30 ஆண்டுகளாக அவர் அப்படித்தான். அவரது அலைபேசிக்கு அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கும். அனைத்துக்கும் அவர் பதிலளிப்பார். எவ்வளவு கறாராக கணக்கிட்டாலும் அவருக்கு ஒரு நாளைக்கு 30 அழைப்புகளாவது வரும் ; அவர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 30 அழைப்புகளாவது மேற்கொள்வார். இது என்னுடைய கணக்கீடு. நண்பரிடம் கேட்டால் இதற்கு மூன்று மடங்கு எனக் கூறக் கூடும் ! ஏகப்பட்ட அலைபேசி அழைப்புகள் வருகின்றனவே என்று அவர் சலிப்பு அடைந்ததில்லை ; எல்லா அழைப்புகளுக்கும் மிகப் பொறுமையாக பிரியமாக பதிலளிப்பார். அழைப்புகள் தவறிய அழைப்புகளாக இருந்தால் ஒவ்வொன்றுக்கும் மீண்டும் அழைத்துப் பேசுவார். கடந்த ஒரு வருடமாக நானும் அவரும் வாரத்துக்கு ஒரு நாளாவது சந்திக்கிறோம். அவரிடம் இருப்பது ஐ-ஃபோன். என்னிடம் இருப்பது சாதாரண ஜி.எஸ்.எம் அலைபேசி. தொழில்ரீதியில் ஸ்மார்ட்ஃபோன் வைத்துக் கொள்வது ஆவணங்கள், வரைபடங்கள், இட அமைவுகள் ஆகியவற்றை அனுப்ப பெரும் உதவியாய் இருக்கும் என்பதை மிக மென்மையாய் எனக்கு சுட்டிக் காட்டினார். அவர் நயத்தக்க நாகரிகம் கொண்டவர். எதையும் எவரிடமும் வற்புறுத்த மாட்டார் ; ஒருவர் பிறர் சொல்லி கேட்பதை விட தானாகவே யோசித்தோ உணர்ந்தோ எடுக்கும் முடிவு சிறப்பானது எனப் புரிந்தவர். நான் அவரிடம் என்னிடம் ஜி.எஸ்.எம் அலைபேசியும் கணிணியும் இருப்பதால் மேற்படி விஷயங்களை மேலாண்மை செய்து விடுகிறேன் எனக் கூறினேன். உண்மையில் நான் இப்போது தீவிரமாகச் சிந்திப்பது இந்த ஜி.எஸ்.எம் ஃபோன் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டு லேண்ட் லைன் தொலைபேசியை பயன்படுத்தலாமா என்பதைக் குறித்தே. நான் அவரிடம் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டைக் குறைக்கச் சொல்லி சொல்வேன். ‘’சார் ! எல்லாத்தையும் விட நமக்கு நம்ம மனநிலையும் உடல்நிலையும் முக்கியம் சார். நாம ஒவ்வொரு டயத்துல ஒவ்வொரு மாதிரியா இருப்போம். மனுஷ வாழ்க்கையோட அமைப்பு அந்த மாதிரி. நீங்க எந்த வெளித் தொந்தரவும் இல்லாம 30 நிமிஷம் பூஜை அறையில சாமி கும்பிடனும்னு நினைப்பீங்க. குழந்தைகளோட விளையாடணும்னு நினைப்பீங்க. எந்த விஷயத்தைப் பத்தியாவது முக்கிய முடிவு எடுக்கணும்னு அமைதியா யோசிப்பீங்க. இந்த மாதிரி மனநிலைகளை இன்ஃபுளூயன்ஸ் செய்யறது மாதிரி ஏதாவது ஃபோன் வரும். உங்க நம்பர் ஆயிரம் பேர்ட்டயாவது இருக்கும் ( நண்பர் சொன்னார் : ’’ஆயிரமா என்னப்பா இவ்வளவு கம்மியா சொல்ற. மினிமம் 10,000 பேர்ட்டயாவது என் நம்பர் இருக்கும்’’ ) யார் நம்மகிட்ட பேசப் போறாங்கன்னு நமக்குத் தெரியாது. வர்ர ஃபோன் கால் சாதாரணமா இருக்கலாம். பேசறவங்க அவங்க சொந்த சிக்கல் எதையாவது சொல்வாங்க. நம்ம மனநிலையை ரொம்ப ஸ்லைட்டா அது இன்ஃபுளூயன்ஸ் பண்ணா கூட மனசோட கிரியேட்டிவிட்டிக்கு அது பெரிய இடைஞ்சல். நீங்க ஃபோனை கம்மியா யூஸ் பண்ணனும் நினைக்க ஆரம்பிங்க சார். நீங்க இப்படி நினைக்க ஆரம்பிச்சாலே யூசேஜ் குறைஞ்சிடும்’’ என அவரிடம் கூறினேன். அவர் மிக நாசூக்காக ஸ்மார்ட்ஃபோன் வைத்துக் கொள்வது தொழில்ரீதியாகப் பயன் உள்ளது என்பதை மெல்லக் கூறுவதும் நான் அவருக்கு தடாலடியாக ஃபோன் பயன்பாட்டைக் குறையுங்கள் என்று சொல்வதும் நடக்கும். கடந்த ஒரு மாதமாக நண்பரின் ஃபோனுக்கு அழைத்தால் அவ்வப்போது ஃபோன் சுவிட்ச் ஆஃப் என்று தகவல் தெரிவிக்கிறது அலைபேசி நிறுவனம். பொதுவாக ஒருவருக்கு ஃபோன் செய்து அவருடைய ஃபோன் சுவிட்ச் ஆஃப் ஆக இருந்தால் ஃபோன் செய்பவருக்கு சிறு சோர்வு உருவாவது இயல்பு ; ஆனால் எனக்கு நண்பரின் ஃபோன் அவ்வப்போது சுவிட்ச் ஆஃப் ஆவது நல்ல விஷயமே என்னும் மகிழ்ச்சி உருவானது.
பிரபு மயிலாடுதுறை
Friday, 17 October 2025
தண்டவாளப் பாதை
இடையே இருக்கிறது
தண்டவாளப் பாதை
கிரிக்கெட் பந்து
கடந்து செல்கிறது
தண்டவாளப் பாதையை
இப்படியும்
அப்படியும்
இப்படியும் அப்படியும்
செல்லும் ரயில்கள்
போன
பிறகு
Thursday, 16 October 2025
சின்னஞ் சிறு பெண்
எனக்கு சிதம்பரத்தில் ஒரு நண்பர் இருக்கிறார். அவருக்கும் எனக்கும் பல வருடப் பழக்கம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட அவரை மூன்று மாதத்துக்கு ஒருமுறையாவது சந்திப்பேன். கோவிட்டுக்குப் பின் அவரைச் சந்திப்பது மிகவும் குறைந்து விட்டது. நான் ஒருவரை அடிக்கடி சந்தித்தாலும் நீண்ட நாள் சந்திக்காமல் இருந்தாலும் உணர்வுநிலையில் ஒன்றாகவே இருப்பேன். சந்திக்காமல் இருந்ததால் எந்த இடைவெளியையும் நான் உணர மாட்டேன். அவருக்கு மூன்று குழந்தைகள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் குழந்தைகள். இப்போது மூத்த பையன் அமெரிக்காவில் சட்ட மேற்படிப்பு படிக்கிறான். இரண்டாவது பையன் சட்டக்கல்லூரியில் இறுதி ஆண்டு பயில்கிறான். நண்பரின் மகள் சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். நண்பரின் மகளை சின்னஞ் சிறு பெண்ணாகப் பார்த்தது. மிக மெல்லிய கீச்சுக்குரல் அப்பெண்ணுக்கு நான் பார்த்த போது. மூன்று குழந்தைகளின் கல்வியிலும் நண்பரை விட நண்பரின் மனைவி மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டார். குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி கிடைப்பதை ஓர் அன்னையாக உறுதி செய்ய வேண்டும் என்ற தீரா வேட்கை கொண்டவர் அவர். மூன்று குழந்தைகளையும் அவர் காரில் பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவார். பின்னர் பள்ளியிலிருந்து அழைத்து வருவார். சிறப்பு வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வார். இசைப் பயிற்சிக்கு அழைத்துப் போவார். கோடை விடுமுறை நாட்களிலும் கலையோ நுண்கலையோ குழந்தைகள் பயில வேண்டும் என முனைப்புடன் செயல்படுவார். நண்பர் இந்த விஷயங்களில் பெரிதாக தலையிட மாட்டார். இன்று நண்பரின் மகள் நான் அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்த போது சட்டக் கல்லூரியிலிருந்து தனது தந்தையிடம் பேசினார். கணீர் குரல். வழக்கறிஞர்களுக்கேயுரிய தொனி. ‘’கீச்சுக்குரல்ல பேசிக்கிட்டு இருந்த குழந்தையா சார் இப்ப அட்வகேட் மாதிரி பேசுது’’ என்றேன். நண்பருக்கு மிகுந்த மகிழ்ச்சி.
நண்பர் தன் மகள் தமிழ் , ஆங்கிலம், சமஸ்கிருதம், தெலுங்கு, ஹிந்தி, ஜெர்மன் ஆகிய ஆறு மொழிகள் அறிந்தவர் என்று கூறினார். எனக்கு பெருவியப்பாக இருந்தது. தனது சுய ஆர்வத்தின் விளைவாக இத்தனை மொழிகளையும் கற்றுக் கொண்டார் என சொன்னார் நண்பர். மேலும் தனது மகள் சிறு குழந்தையாயிருந்த நாளிலிருந்து தினமும் குமரகுருபரரின் ‘’சகலகலாவல்லி மாலை ‘’ நூலை மாட்டுக் கொட்டகையில் அமர்ந்து பாராயணம் செய்து பசுவை வலம் செய்து பின் அடி பணிந்து வணங்கும் கொண்டவர் என்றும் கூறினார். தமிழகத்திலிருந்து ஆன்மீகப் பணியாற்ற காசி சென்ற ஸ்ரீகுமரகுருபரர் ஹிந்தியை விரைவாகப் பயில கல்விக் கடவுள் சரஸ்வதியைப் போற்றி ‘’சகலகலாவல்லி மாலை’’ இயற்றி மொழியை சுலபமாகக் கற்கும் அருளைப் பெற்றார் என்பது ஐதீகம். பல மொழித் திறன் பெற விரும்புபவர்கள் குமரகுருபரரின் சகலகலாவல்லி மாலையைப் பாராயணம் செய்வது தமிழகத்தின் மரபுகளில் ஒன்று.
எழுச்சி
Wednesday, 15 October 2025
காதற்ற ஊசியும்
Tuesday, 14 October 2025
ஆசிய ஜோதி
Monday, 13 October 2025
அற்புதப் பெருவெளி
Sunday, 12 October 2025
என் ஈசன் என் சிசு
திராவிடக் கட்சிகளின் அரசுகள் சாராய அரசுகள்
Saturday, 11 October 2025
ஓர் அலைபேசி அழைப்பு
இன்று மதியம் தில்லியிலிருந்து ஒரு நண்பர் அழைத்தார். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளைக் குறித்து கேள்விப்பட்டு அவர் என்னைத் தொடர்பு கொண்டார். நண்பர் தில்லியில் ஐ ஏ எஸ் தேர்வுக்காக தயார் செய்து கொண்டிருக்கிறார். ஆண்டுக்கு ஒரு முறை ஐ ஏ எஸ் தேர்வு நடைபெறும் எனினும் நண்பர் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை அந்த தேர்வினை எழுதுகிறார். ஒரு தேர்வாளர் இத்தனை முறை தான் தேர்வு எழுத வேண்டும் என அந்த தேர்வுமுறையில் நிபந்தனை உள்ளது. தனது முயற்சிகளின் எண்ணிக்கையை சேமித்துக் கொள்வதற்காக சிலர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு எழுதுவது உண்டு. இரண்டு ஆண்டுமே தொடர் தயாரித்தல்களில் இருப்பார்கள். தேர்வு எழுதாத ஆண்டில் கூட நிகழும் தேர்வுகளின் வினாத்தாள்களுக்கு பதில் எழுதிப் பார்த்து பயிற்சி நிறுவனங்களின் ஆசிரியர்களைக் கொண்டு திருத்திக் கொண்டு தங்கள் நிலையை சுயமதிப்பீடு செய்து கொள்வார்கள். இது ஒரு யுக்தி. பலபேருக்கு உதவியிருக்கிறது. அரசாங்கம் என்பது மக்களிடமிருந்து வரி வாங்கும் ஓர் அமைப்பு. ஆதிகாலத்திலிருந்து அவற்றின் மாறாத பணி அதுவே. அரசாங்கத்துக்கு சீராக வருமானம் கிடைக்க வேண்டும் என்றால் நாட்டில் பலவிதமான தொழில்கள் நல்லவிதமாக நடக்க வேண்டும். அவ்விதம் நடந்தால் மக்களிடம் நல்ல வருவாய் இருக்கும். அந்த வருவாயின் ஒரு பகுதி அரசுக்கு வரியாக வரும். அதைக் கொண்டு அரசு தனது ஊழியர்களுக்கு ஊதியம் அளித்து அரசாங்கத்தை சீராக நடத்திச் செல்லும். ஜனநாயக அரசுக்கு தன்னை வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் சாமானிய மக்களுக்கு உகந்த சிலவற்றைச் செய்ய வேண்டிய ஒரு பொறுப்பு இருக்கிறது. ஜனநாயக அரசியலில் இந்த அம்சம் தவிர்க்க முடியாதது. அரசாங்கத்துக்கு அதிக வரி செலுத்துபவர்கள் தொழில் புரிபவர்கள். பெருந்தொழில்களிலிருந்து சிறு தொழில் புரிபவர்கள் வரை. தனக்கு அதிக வருவாய் அளிக்கிறார்கள் என்பதற்காக தொழில் புரிபவர்களுக்கு மட்டும் அரசு சிந்திக்க முடியாது ; தனக்கு வரி அதிகம் கொடுக்காத சாமானிய மக்களுக்காகவும் அரசு சிந்திக்க வேண்டும்.
1970களில் நாட்டை இந்திரா சர்க்கார் ஆண்டு கொண்டிருந்தது. ‘’கரீஃபி கடாவ்’’ என முழங்கியது அந்த அரசு. வறுமையை ஒழிப்போம் என்பது அதன் பொருள். அந்த அரசின் முக்கிய வருவாய் என்பது சாமானிய மக்கள் அளிக்கும் வரியே. அதாவது ஒரு சாமானியன் ஐந்து ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்குகிறான் என்றால் அதில் இருபத்து ஐந்து பைசா அரசுக்கு வருவாயாகச் செல்லும். இவ்விதமாக சாமானியனிடமிருந்து வாங்கிய இருபத்து பைசா ஐம்பது பைசாவை தனது வருமானமாக வைத்துக் கொண்டு கிடைத்த சொற்ப வரி வருவாயில் நாட்டை நடத்திக் கொண்டிருந்தது இந்திரா சர்க்கார். 1991ம் ஆண்டு நரசிம்ம ராவ் சர்க்கார் ஆட்சிக்கு வந்தது. வரி விதிப்பில் அனேக மாற்றங்கள் செய்யப்பட்டன. அவ்வாறு செய்யப்பட்ட மாற்றங்களின் வழியாகவே நாட்டின் வரி வருவாய் கூடியது. இங்கே நாம் ஒரு விஷயத்தைக் கவனித்துப் பார்க்கலாம். அதாவது குறைவான வரி வருவாயுடன் தள்ளாடிக் கொண்டிருந்த இந்திராவின் சர்க்காரும் காங்கிரஸ் சர்க்கார்தான். வரி விதிப்பில் சீர்திருத்தம் மேற்கொண்ட நரசிம்ம ராவ் சர்க்காரும் காங்கிரஸ் சர்க்கார் தான். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2014ம் ஆண்டில் பதவியேற்றதும் ஓரிரு ஆண்டுகளில் சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தியது. கடந்த 11 ஆண்டுகளாக அந்த வரி விதிப்பு நாட்டுக்கு அளிக்கும் வருவாய் பங்களிப்பு அளப்பரியது. நாட்டின் வருவாய் பெருகுவதற்கு ஏற்ப அரசு சாமானிய மக்களுக்காகத் தீட்டும் திட்டங்களும் புதுப்புது வடிவங்கள் பெறுகின்றன. சாமானிய மக்கள் ஏழ்மையுடன் இருக்கும் நாட்டை வழிநடத்துவதற்கும் சாமானிய மக்கள் குறைந்தபட்ச பொருளியல் பாதுகாப்புடன் குறைந்தபட்ச வசதிகளுடன் இருக்கும் நாட்டை வழிநடத்துவதற்கும் எவ்வளவோ வேறுபாடுகள் உண்டு. நிர்வாக பாணி இரண்டுக்கும் வேறுவேறானவை. ஜனநாயக அரசுக்கும் மக்களுக்கும் இடையே இருந்து செயல்பட வேண்டிய நிலையில் இருப்பது அதிகார வர்க்கம். ஐ ஏ எஸ் அதிகாரிகள் அந்த இடத்திலேயே இருக்கிறார்கள்.
என்னைத் தொடபு கொண்ட இளைஞர் காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வில் தன்னார்வம் காரணமாக ஈடுபடுகிறார். பருவநிலை மாற்றம் , கார்பன் உமிழ்வு ஆகியவை அவருக்கு பிடித்தமான துறைகள். காலநிலை மாற்றம் தொடர்பான தமிழ்நாடு அரசின் அறிக்கை தமிழக மாவட்டங்களிலேயே மயிலாடுதுறை மாவட்டம் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதலிடத்தில் இருப்பதாகக் கூறினார். இங்கே மிக அதிகமாக நெல் வயல்கள் மட்டுமே இருப்பதால் மரங்களின் பரப்பு வெறும் 1.6 சதவீதம் மட்டுமே இருப்பதை சுட்டிக் காட்டினார். மயிலாடுதுறை மாவட்டம் 100 பங்கு கார்பனை உமிழ்ந்தால் 1 பங்கு கார்பனை மட்டுமே உறிஞ்சிக் கொள்கிறது என்னும் புள்ளிவிபரத்தை சுட்டிக் காட்டினார். வேதியியல் தொழிற்சாலைகள் இருக்கும் மாவட்டங்களில் கூட இந்த அளவு நிலை இல்லை என்பது கவனத்துக்குரியது என்றார். மயிலாடுதுறை மாவட்டத்தில் மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது என்பதைக் கூறினார். எனக்கு இந்த புள்ளிவிபரங்கள் புதியவை. நான் அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டேன்.
’’காவிரி போற்றுதும்’’ ஒரு நுண் அமைப்பு. ஒரு கிராமம் என்னும் அடிப்படை அலகை செயல்களமாய்க் கொண்டு செயல்பட்டு வருவதை தனது வழக்கமாய்க் கொண்டுள்ளது. நம்மால் முடிந்ததை நாம் செய்வோம். ‘’காவிரி போற்றுதும்’’ நம்பிக்கையுடன் செயலாற்றுகிறது.