Saturday, 1 August 2026

மனச்செயல்

மனம் என்பதை மனச்செயல் என்று கூறுவார்கள். 

இன்று காலை நடைப்பயிற்சியின் போது அதனை உணர்ந்தேன். இன்று உணர்ந்ததை மிக முக்கியமானதாக நினைக்கிறேன். ரியல் எஸ்டேட் தொடர்பான பல விஷயங்கள் மனதில் நிறைந்திருக்கின்றன. அவை பெருகிக் கொண்டேயிருக்கின்றன. லௌகிகத்தில் அது இயல்பானது. என்றாலும் இன்று அதிகாலையிலேயே அவ்விதம் இருந்தது புதிதாக இருந்தது. இன்று காலை 3 மணி 30 நிமிடம் நடந்தேன். மனம் தன் பல்கிப் பெருகும் செயலிலிருந்து அமைதி கொண்டது 2 மணி 30 நிமிடத்துக்குப் பிறகு தான். கடைசி ஒரு மணி நேரம் மனதில் எழும் எண்ணங்கள் மிக மெதுவானதாக ஆகி விட்டன. அடர்த்தி குறைவான விஷயங்களே மனதில் உதித்தன. உடல் சோர்வுற்றதைப் போல மனமும் சோர்வு கொண்டது. மிக வேகமாக இயங்கிக் கொண்டிருந்த மனம் சோர்வு கொண்டு மெதுவாக ஆனதை விரும்பினேன். அதன் பின் நாள் முழுவதும் மனம் அமைதியாக இருந்தது. 

எனக்கு எப்போதுமே மனதை கவனிக்கும் வழக்கம் உண்டு. 

ஒரு பேருந்தில் பயணிக்கும் போது மனம் ஒரு விதமாக இருக்கும் ; ரயிலில் பயணிக்கும் போது ஒரு விதமாக இருக்கும் ; இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது ஒரு விதமாக இருக்கும் ; பிரியமான ஒருவருடன் பேசும் போது ஒரு விதமாக இருக்கும்; நம்மை அசௌகர்யமாக உணரும் ஒருவருடன் பேசும் போது மனம் ஒரு விதமாக இருக்கும். ஒரு இரைச்சல் கேட்கும் போது மனம் ஒரு விதமாக இருக்கும். ஒரு குழந்தையிடம் பேசும் போது ஒரு விதமாக இருக்கும். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். 

நான் சொல்கிறபடி மனம் கேட்கிறதா? மனம் சொல்கிறபடி நான் கேட்கிறேனா? எனக்குள் இருக்கும் மனம் ஒன்று தானா? எனக்குள் பல மனங்கள் இருக்கின்றனவா?

இவ்விதமான கேள்விகள் எழுந்தன. இவ்விதம் கேள்விகள் எழுந்தது நல்ல விஷயம் என்று தான் எண்ணினேன். ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என ஆர்வம் எழுந்தால் அதைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு உருவாகிறது அல்லவா?

இன்று காலை மனதில் பிரவாகித்த பல எண்ணங்களில் ஒரு பகுதியைத் தான் இன்று காலை எழுதினேன்.  

மனம் பற்றி மேலும் எழுதுகிறேன்.

உறக்கத்தை விட நடைப்பயிற்சி மேலானது (நகைச்சுவைக் கட்டுரை)

இன்று காலை அலாரம் வைத்து எழுந்தேன். 4 மணி நேரம் நடக்க அலாரம் வைத்துக் கொண்டேன். 3 மணி 30 நிமிடம் நடந்தேன். அதிகாலை நேரம். நடக்கத் தொடங்கிய போது மனம் பெருகிப் பிரவாகித்துக் கொண்டிருந்தது. மனதுக்குள்ளேயே நிறைய ரியல் எஸ்டேட் டீலிங் பேசினேன். நிறைய அட்வான்ஸ் வாங்கினேன். இப்போது கையிருப்பில் இருக்கும் இடங்கள் தொடர்பானவர்களிடம் சொல்ல வேண்டிய சொற்கள் என மனதில் எழுந்தன. அதில் ஒன்று அல்ஜீப்ராவுடன் தொடர்புடையது. ஒரு மீடியேட்டரிடம் சொல்ல வேண்டிய வார்த்தை இது என என் மனத்தில் உருவானது; ‘’நான் ‘’ஒய்’’ என்னும் விலையைச் சொல்கிறேன். இடத்தை வாங்குபவர் ‘’எக்ஸ்’’ என்னும் விலைக்கு கேட்கிறார். நீங்கள் இடைத்தரகர்; ‘’ஒய்’’ என்ற எண்ணுக்கும் ‘’எக்ஸ்’’ என்ற எண்ணுக்கும் இடையில் இருக்கும் ஒரு எண்ணில் தான் பேரம் முடியும். அந்த எண் ‘’இஸட்’’. இடத்தை வாங்குபவரிடம் பேசி  ’’இஸட்’’ என்ன என்பதை என்னிடம் சொல்லுங்கள் ; சொல்லக் கூட வேண்டாம் ; அலைபேசியில் குறுஞ்செய்தியாக அனுப்புங்கள். அந்த ‘’இஸட்’’ என்னும் எண்ணை மட்டும் அனுப்புங்கள் போதும். எனக்கு சம்மதம் என்றால் ‘’யெஸ்’’ என ரிப்ளை அனுப்புகிறேன் ; சம்மதம் இல்லை என்றால் ‘’நோ’’ என ரிப்ளை அனுப்புகிறேன். அவ்வளவுதானே விஷயம்’’ எனக் கூறுகிறேன். இடைத்தரகர்கள் சந்திப்புகளை உருவாக்கவே விரும்புவார்கள் ; சந்திப்பின் மூலம் ஏதேனும் முன்னேற்றம் ஏற்படும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு. இப்போது தொடர்பில் இருக்கும் இடைத்தரகரிடம் இவ்வாறு அல்ஜீபரா எல்லாம் சொன்னால் அவர் எவ்வளவு புரிந்து கொள்வார் என யோசித்தேன். விலை ரொம்பவும் குறைத்துக் கேட்கப் போகிறார்கள் என்பது தெரிந்தால் நான் வாங்குபவரை சந்திப்பதைத் தவிர்த்து விடுவேன். இப்போதெல்லாம் அலைபேசியை எப்போதும் கையில் வைத்திருக்கிறேன். அலைபேசி வந்தால் எடுத்துப் பேசுகிறேன். எனக்கு ஒரு வழக்கம் உண்டு. நான் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறேன் என்றால் அலைபேசி ஒலித்தால் எடுக்க மாட்டேன். எதற்காக வாகனத்தில் செல்கிறேனோ அந்த வேலையை முடித்து விட்டு வீடு திரும்பிய பின் ‘’ ஜஸ்ட் நௌ சீன் யுவர் மிஸ்டு கால். ஷல் ஐ கால் நௌ?’’ என குறுஞ்செய்தி அனுப்புவேன். எல்லா மிஸ்டு காலுக்கும் இவ்விதம் மெசேஜ் அனுப்புவேன். பேசி விடுவேன். என் மீது பொதுவாக ஒரு புகார் உண்டு. நான் அலைபேசியை எடுப்பதில்லை என. ஆனால் எல்லா அழைப்புகளுக்கும் அப்போதில்லை என்றாலும் அதன் பின்னாவது பேசி விடுவேன். எப்போதும் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துபவர்கள் பலர் என்னுடைய ‘’மிஸ்டு கால்’’ பார்த்து விட்டு மெசேஜ் கொடுக்காமலோ பேசாமலோ இருப்பார்கள். என் ஃபோனை எடுக்காமல் இருப்பார்கள். ஃபோன் லைன் மாற்றி வைப்பார்கள். இத்தகையவர்களை ‘’யானை படுத்தாலும் குதிரை மட்டம்’’ என நினைத்துக் கொள்வேன். 

ஏன் காலங்கார்த்தாலேயே ரியல் எஸ்டேட் எண்ணங்கள் என வருந்தினேன். எண்ணங்களை உருவாக்குவதும் மனம் தான். உருவாகும் எண்ணங்களுக்கு வருந்துவதும் மனம் தான் என எண்ணிக் கொண்டு நடந்தேன். 

நடக்கும் போது நடக்க மட்டும் செய்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. 

அப்போது ஒரு ஜென் கதை நினைவுக்கு வந்தது. ஜென் குரு ஒரு சீடனைப் பார்த்து ‘’ஆறு அடி நீளம் ; ஆறு அடி அகலம் ; ஆறு அடி ஆழம்’’ உள்ள குழியைத் தோண்டு என்பார். சீடன் இரண்டு நாள் கடுமையாக வேலை செய்து குரு சொன்ன விதமான குழியைத் தோண்டு விடுவான். குருவிடம் அதனைக் காட்டுவான். ‘’இந்தக் குழியை மூடி விடு’’ என அப்போது சொல்வார் குரு. இதுதான் ஜென் கதை. இது என் மனதில் வந்தது. நான் படித்த கதை என்ன என்றால் குரு ஒரு பெரிய குழியைத் தோண்டு எனக் கூறுவார். சீடன் பெரிய குழியை இரண்டு நாள் வேலை செய்து தோண்டி வைப்பான். இரண்டு நாட்கள் கழித்து அதனைப் பார்க்கும்  குரு ‘’குழியை மூடி விடு’’ என்பார். இதுதான் நான் படித்த கதை. இந்த ‘’6 அடி நீளம் 6 அடி அகலம் 6 அடி ஆழம்’’ என்பது என்னுடைய சிவில் என்ஜினியரிங் ஃபீல்டில் ஃபவுண்டேஷனுக்காக வெட்டப்படும் குழிகளின் அளவுகளில் ஒன்று. அந்தக் குழியை வெட்ட எவ்வளவு கடுமையான உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதில் எவ்வளவு மண் வெளியே வரும் என்பதும் எனக்குத் தெரியும். இந்தக் கதையில் இன்னொரு அம்சம் இருக்கிறது. குழி வெட்டும் போது உதாரணத்துக்கு 1 அடி நீளம் 1 அடி அகலம் 1 அடி ஆழம் கொண்ட குழியை வெட்டினால் சாமானியர்கள் நீளம் Xஅகலம் Xஆழம் மூன்றையும் பெருக்கி 1 கன அடி மண் வெளியே வரும் என எண்ணுவார்கள். அந்த பதில் தவறு. 1.5 கன அடி மண் வெளியே வரும். நிலப்பரப்பு இறுக்கமாக இருக்கும். குழி வெட்டப்படும் போது மண் துகள்களின் இறுக்கம் தளர்ந்து விடுவதால் கன அளவு அதிகமாகி விடும். வெட்டிய குழியை திரும்ப மூடுவது நாம் எண்ணிய அளவு இலகுவாக இருக்காது. கூடுதல் மெனக்கெடு தேவைப்படும். உண்மைக்கும் நமது எண்ணங்களுக்கும் இருக்கும் இடைவெளி குறித்த கதை என்றும் அதனைக் கொள்ளலாம். ஒருவர் ஒரு குழியைத் தோண்ட அறிந்திருக்கிறார் என்றால் அவர் குழி தோண்டுதல் குறித்து பகுதி அறிதலும் பகுதிப் புரிதலும் கொண்டிருக்கிறார் என அர்த்தம். குழி தோண்டி அதனை மூடவும் அறிந்திருக்கிறார் என்றால் அவர் புரிதல் முழுமையானது என்று அர்த்தம். முழுமைப் புரிதல் குறித்த கதை என்றும் அதனைக் கொள்ளலாம். புத்த பிக்குகளின் தோற்றம் மனதில் எழுந்தது. அது மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. 

நடக்கும் போது எண்ணங்கள் கிளரப்பட்டு ஏதாவது யோசனை ஓடிக் கொண்டேயிருந்தது. 

இரு இரு சக்கர வாகனங்களில் 6 பேர் கூச்சல் போட்டுக் கொண்டு சென்றார்கள். 

வாட்ச்மேன் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். இங்கே வாட்ச்மேன்களின் வேலை இரவு 11.30 அளவில் படுத்துத் தூங்கி காலை 5 மணிக்கு எழுந்து விடுவது தான். கடை வாசலில் ஒரு ஆள் இருக்கிறார் என்னும் அளவிலான பாதுகாப்பு போதுமானது என கடைக்காரர்கள் எண்ணுவார்கள் என எண்ணிக் கொண்டேன். 

நான் நடந்து கொண்டிருக்கும் தெரு மகாதானத் தெரு. நீளமான தெரு. 700 மீட்டர் நீளம் இருக்கும். தெரு தெற்கு வடக்கானது. வட கோடியிலிருந்து தென் கோடி வரை சென்று விட்டு பின் தென்கோடியிலிருந்து வடகோடி வரை நடக்கிறேன். இது எனக்கு பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன். நீண்ட தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது புதிய பிராந்தியத்துக்குச் சென்றால் தெருநாய்கள் ஒரு குழுவாக மாறி பின் தொடர்கின்றன. அதனால் மகாதானத் தெருவில் வட கோடிக்கும் தென் கோடிக்கும் நடக்கிறேன். 

நாயின் உடலில் இயற்கையாக ‘’ரேபிஸ்’’ வைரஸ் இருக்காது. பூனையின் உடலில்தான் ‘’ரேபிஸ்’’ வைரஸ் இருக்கும். ‘’ரேபிஸ்’’ உள்ள பூனையை நாய் கடித்திருந்தால் அதன் உடலிலும் ‘’ரேபிஸ்’’ வைரஸ் வந்து விடும். 

ஒரு எலி செத்து கிடந்தது

அந்தத் தெருவில் 10 நாய்கள் இருக்கின்றன. வட கோடியில் 7 நாய்கள். தென் கோடியில் 3 நாய்கள். அந்தத் தெரு இப்போது கடைத்தெருவாக ஆகி விட்ட படியால் அவை மிக அதிக மனிதப் புழக்கத்தில் உள்ளவை. ‘’யார் இவன் வித்தியாசமாக காலை 2 மணிக்கு வாக்கிங் போகிறான்?’’ எனப் பார்த்து விட்டு தங்கள் வழமைகளுக்குத் திரும்பி விட்டன. 

இரண்டு நாய்கள் ஒரு பூனையைத் துறத்திக் கொண்டு பஞ்சாப் நேஷனல் வங்கி வளாகத்துக்குள் ஓடின. பூனை தப்பி விட்டது. பூனை சிறிய உடல் கொண்டது. சட்டென மதில் சுவர் மேல் ஏறி விடும். அவ்வளவு லகுவாக நாய்களால் ஏறிட முடியாது. சற்று நிதானித்துதான் ஏறிட முடியும்.

தெருவை பார்க்கும் பார்வைக்கும் ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தை கவனித்துப் பார்க்கும் பார்வைக்கும் வித்தியாசம் இருக்கிறது என எண்ணினேன். 

நடந்து கொண்டே இருந்தேன். நான் மெதுவாக நடப்பேன் ஆனால் சீராக நடப்பேன். 

வேப்பம்பழங்கள் உதிர்ந்து கிடந்தன. 

வேப்பம்பழத்தின் வாசனையை மனம் உணர்ந்தது. அகம் வாசனைகளால் ஆனது எனத் தோன்றியது. 

என் ஆர் காங்கிரஸ் க்கு ஒருவர் பெரிய பேனர் வைத்திருந்தார். ‘’இன்றைய புதுச்சேரி முதல்வரே! நாளைய தமிழக முதல்வரே! பிறந்தநாள் வாழ்த்துக்கள்’’ என வாழ்த்து சொன்னது அந்த பேனர். திராவிடக் கட்சிகளின் ‘’மோனோபோலி’’ உடைக்கப்பட்டு விட்டது என்பதால் இனி தமிழக அரசியல் ‘’பாலிபோலி’’ எனத் தோன்றியது. நல்ல விஷயம் தான். 

புதிதாகப் பெரிதாக ஒரு கருவுறுதல் மருத்துவமனை பேனர் இருந்தது. ஒருவர் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தார். 

ரொம்ப நேரம் ஆனது போல் இருந்தது. அலைபேசி 6 மணிக்கு அலாரம் வைக்கப்பட்டு சுவிட்ச் ஆஃபில் இருந்தது. அலைபேசி அடிக்கும் வரை நடப்போம் என எண்ணினேன். நடந்து நடந்து உடல் சோர்ந்து விட்டது. உடல் சோர்ந்ததும் எண்ணங்கள் பிரவாகிப்பது மிக மிகக் குறைந்து விட்டது. மனம் உடல் வலியை மட்டுமே உணர்த்திக் கொண்டிருந்தது. 

ஒரு வீட்டில் மங்கள இசை ஒலித்தது. 

ஒரு வீட்டில் வெங்கடேச சுப்ரபாதம் கேட்டது. 

சில பெண்கள் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போடத் துவங்கினார்கள். 

மகாதானத் தெருவிலிருந்து 2 நிமிடத்தில் டூ வீலரில் வீட்டுக்கு வந்து விட்டேன். நேரம் காலை 5.45.

மனம் அமைதியாய் இருப்பதாக எண்ணினேன். 

மனம் என்றால் என்ன என்னும் கேள்வி எழுந்தது.   

Friday, 31 July 2026

இந்தியன் வங்கி தலைமை நிர்வாக அதிகாரிக்கு ஒரு கடிதம்

 கீழ்க்கண்ட கடிதத்தை ஆங்கிலத்தில் இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு விரைவுத் தபாலில் அனுப்பியுள்ளேன். அதன் நகலை மத்திய நிதியமைச்சருக்கு விரைவுத் தபாலில் அனுப்பியுள்ளேன். 


From

@@@@

&&&

&&

To

தலைமை நிர்வாக அதிகாரி

இந்தியன் வங்கி

சென்னை

ஐயா,

பொருள் : இந்தியன் வங்கியின் ‘’ஸ்விஃப்ட்’’ படிவத்தில் ஒப்புகைச்சீட்டு வசதி செய்து கொடுக்க விண்ணப்பம்

இத்துடன் தங்கள் பார்வைக்காக இந்தியன் வங்கியின் ‘’ஸ்விஃப்ட்’’ படிவத்தையும் பாரத ஸ்டேட் வங்கியின் ‘’ஸ்விஃப்ட்’’ படிவத்தையும் இணைத்துள்ளேன். ஸ்டேட் வங்கி படிவத்தில் ‘’ஒப்புகைச் சீட்டு’’ வசதி இருப்பதையும் இந்தியன் வங்கி படிவத்தில் ‘’ஒப்புகைச் சீட்டு’’ வசதி இல்லாமல் இருப்பதையும் காணலாம். இக்கடிதத்தை தொடங்கும் இத்தருணத்திலேயே இந்தியன் வங்கி ‘’ஸ்விஃப்ட்’’ படிவங்கள் இனி வாடிக்கையாளருக்கு ‘’ஒப்புகைச் சீட்டு’’ வழங்கும் வசதி கொண்டதாக இருக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.

***

இந்தக் கடிதம் நீண்டது. சற்று உணர்வுபூர்வமானதும் கூட. உணர்வின் அம்சங்கள் இன்றி தர்க்கபூர்வமாகவே இந்த விஷயத்தை அணுக வேண்டும் ; இந்த விஷயம் தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என எண்ணுகிறேன். இருப்பினும் இந்தக் கடிதம் எழுதப்படுவதற்கு காரணமான சம்பவத்தை முன்வைக்காமல் போனால் இக்கடிதம் ஏன் உணர்வுபூர்வமான அம்சங்களையும் கொண்டிருக்கிறது என்பது விளக்கப்படாமலேயே போகும். இந்தியன் வங்கிக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்குமான உறவு உணர்வுபூர்வமான உறவும் கூட என்பதை அதன் தலைமை நிர்வாக அதிகாரியான தாங்கள் ஏற்பீர்கள் என நம்புகிறேன்.

***

வங்கித்துறையின் பல பொறுப்புகளை வகித்து இன்று தாங்கள் இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி என்னும் உயர் பதவியை அடைந்திருக்கிறீர்கள். வங்கி நடைமுறைகள் அனைத்திலும் நீங்கள் ஆழங்கால் பட்டவராக இருப்பீர்கள். ஒரு எளிய விஷயத்தை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

ஒரு வாடிக்கையாளர் வங்கிக்கு வருகிறார். வங்கி எழுது மேஜையில் இருக்கும் ‘’பே இன் சிலிப்’’ நிரப்பி தனது பாஸ் புத்தகத்துடன் வங்கி சாளரத்தில் தருகிறார். அந்த ‘’பே இன் சிலிப்’’ 25 சதவீத இடம் ஒப்புகைச் சீட்டுக்கும் 75 சதவீத இடம் வங்கி உபயோகத்துக்கும் உரியது. சாளரத்தின் எழுத்தர் படிவத்தைச் சரிபார்த்து வங்கி முத்திரையிட்டு வாடிக்கையாளர் தரும் பணத்தை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைத்து விட்டு ஒப்புகைச்சீட்டை வாடிக்கையாளரிடம் கொடுத்து விடுவார் அல்லவா? இதுதானே வங்கி நடைமுறை. அனேகமாக உலகில் வங்கி என்னும் ஸ்தாபனம் துவங்கிய நாள் முதல் நிகழும் வங்கி முறைமையாகவும் வங்கி என்னும் ஸ்தாபனத்தில் முதல் வங்கி முறைமையாகவும் இந்த ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறை இருந்திருக்கும் அல்லவா? இந்த முறை இருப்பதால் தான் வாடிக்கையாளர்  வங்கிக்கு வந்து பணம் செலுத்தினார் என்பதற்கான அத்தாட்சி அவர் கையில் இருக்கிறது. இந்த முறை இல்லையென்றால் வாடிக்கையாளர்கள் பணம் வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாமல் முறைகேடுகள் மிக சாதாரணமாக நடக்கும் அல்ல்வா? ஒப்புகைச்சீட்டு மட்டுமே இன்ன வாடிக்கையாளர் இன்ன தேதியில் வங்கிக்கு வந்தார் ; தனது கணக்கில் பணம் செலுத்தினார் என்பதற்கான ஆதாரம் அல்லவா? வாடிக்கையாளரிடம் ஒப்புகைச்சீட்டு இல்லை என்றால் அவர் வங்கிக்கே வரவில்லை என்று சொல்லி விடலாம் அல்லவா? வங்கி வாடிக்கையாளரின் நலனைக் காக்க ஒப்புகைச்சீட்டுக்கு அப்பாலும் முறைகேடுகள் நடக்காமல் இருக்க பல முன்னேற்பாடுகளையும் முன்னேற்பாட்டு முறைமைகளையும் செய்துள்ளது என்றாலும் ஒப்புகைச்சீட்டு என்பது வாடிக்கையாளர் கையில் இருக்கும் அடிப்படை ஆதாரம் என்பதை தாங்கள் ஏற்பீர்கள் என நம்புகிறேன்.

***

நான் வசிக்கும் பகுதியில் 78 வயதான முதிய பெண்மணி ஒருவர் இருக்கிறார். அவரது மூத்த மகன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இயற்கை எய்தினார். இறந்து போன தனது மூத்த மகனின் மகனான தனது பேரன் ஐரோப்பியக் கல்லூரி ஒன்றில் சேர்க்கை அனுமதி பெற்றதற்காக ஐரோப்பாவில் இருக்கும் கல்லூரிக்கு தனது கணக்கிலிருந்து பணம் அனுப்ப 28.07.2026 அன்று காலை 10.30 மணிக்கு மயிலாடுதுறை இந்தியன் வங்கிக்கு வந்தார். 78 வயதான மூத்த குடிமகள் என்பதால் அவருக்கு வங்கி நடைமுறைகளில் உதவ அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் அவர்களின் குடும்ப நண்பனான நானும் வந்திருந்தேன். ( மயிலாடுதுறை இந்தியன் வங்கிக் கிளையின் 28.07.2026 அன்று முழு நாளைய சி சி டி வி காட்சிகளை தங்கள் அலுவலகம் கோரிப் பெற்று நான் கூறுவதை உறுதி செய்து கொள்ளலாம்). அந்தப் பெண்மணியிடம் ‘’ஸ்விஃப்ட்’’ நடைமுறைக்கு வங்கி கோரிய அனைத்து ஆவணங்களும் இருந்தன. தன்னுடைய ஆதார் நகல், தன்னுடைய பான் கார்டு நகல், தன்னுடைய கேன்சல் செய்யப்பட்ட இந்தியன் வங்கி காசோலை, தனது பேரனின் பாஸ்போர்ட் நகல், தனது பேரனின் ஆதார் நகல், தனது பேரனின் பான் கார்டு நகல், தனது பேரனின் கல்லூரி சேர்க்கை அனுமதி கடிதம், தனது பேரனின் கல்லூரிக் கட்டண விபரங்கள் ஆகியவை அவரால் வங்கி துணை மேலாளரிடம் காலை 11.30 மணி அளவில் ஒப்படைக்கப்பட்டன. இந்தியன் வங்கியின் ‘’ஸ்விஃப்ட்’’ படிவத்தில் வாடிக்கையாளரால் நிரப்பப்பட வேண்டிய அனைத்து விபரங்களும் அந்த 78 வயதான மூதாட்டியால் நிரப்பப்பட்டிருந்தன. இந்தியன் வங்கி ஸ்விஃப்ட் படிவத்தில் ‘’ஒப்புகைச்சீட்டு’’க்கான இடம் இல்லை என்பதை இத்துடன் இணைத்துள்ள படிவம் மூலம் அறியலாம். ஆதலால் ஒப்புகைச்சீட்டு எவ்விதத்தில் வழங்கப்படும் என அந்த மூதாட்டியோ மூதாட்டி உடன் வந்த நாங்களோ அறிந்திருக்கவில்லை. நாங்கள் ‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பம் அளித்ததற்கு ஒப்புகைச்சீட்டு கேட்டோம். மதியம் 3 மணிக்கு வருமாறு கூறினார்கள். மதியம் 3 மணிக்கு சென்று கேட்டோம். மாலை 5.30 மணிக்கு வருமாறு கூறினார்கள். மாலை 3.30 உடன் வங்கி வேலை நேரம் முடிந்து விடுமே என பதட்டம் அடைந்தோம். அன்றைய பொழுது முழுவதுமே எங்கள் கணக்கிலிருந்து ஐரோப்பிய கல்லூரிக்கு செலுத்த வேண்டிய தொகை எங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்படவில்லை. மறுநாள் 29.07.2026 அன்று முழு நாள் பொழுதும் பலமுறை வங்கிக்கு சென்று 28.07.2026 அன்று அந்த மூதாட்டி கொடுத்த ‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பத்தின் அடிப்படையில் அந்த மூதாட்டியின் கணக்கிலிருந்து ஐரோப்பாவில் உள்ள கல்லூரிக்கு பணம் மாற்றப்பட்டு விட்டதா எனக் கேட்டோம். அன்றைய வங்கி நேரமும் மாலை 3.30க்கு முடிந்தது. மாலை 6 மணிக்கு வருமாறு கூறினார்கள். மாலை 6 மணிக்கும் மூதாட்டியின்  கணக்கிலிருந்து பணம் மாற்றப்படவில்லை. ஐரோப்பிய கல்லூரி நிர்வாகத்துக்கு நாங்கள் 28.07.2026 அன்று வங்கியில் ‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பம் கொடுத்திருக்கிறோம் என தகவல் தெரிவித்திருந்தோம். நாங்கள் தகவல் தெரிவித்து 33 மணி நேரம் கடந்த பின்னும் எந்த முன்னேற்றமும் இல்லை. எங்கள் விண்ணப்பத்தைப் பரிசீலித்து எங்களுடன் தொடர்பில் இருந்தது மயிலாடுதுறை இந்தியன் வங்கியின் துணை மேலாளர் ஒருவர். 28.07.2026, 29.07.2026 ஆகிய இரு தினமும் மயிலாடுதுறை இந்தியன் வங்கி கிளையின் மேலாளர் டெபுடேஷனில் வெளியூர் சென்றிருந்தார். அவருக்கு ஃபோன் செய்து பேசினோம். 29.07.2026 அன்று மாலை 6.45 க்கு மூதாட்டியின் கணக்கிலிருந்து தொகை மாற்றப்பட்டிருக்கிறது என்னும் குறுஞ்செய்தி வங்கியிடமிருந்து வந்ததால் ஆசுவாசமடைந்தோம்.

***

இந்த விஷயத்தை மேலோட்டமாகப் பார்த்தால் வெளிநாட்டுக்கு பணம் அனுப்புவது பல கட்டங்களால் ஆனது என்பதால் ‘’ஸ்விஃப்ட்’’ முறையில் பணம் ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்குக்கு மாற கால அவகாசம் தேவை எனத் தோன்றும். ஆனால் இந்த விஷயத்தை சற்று கூர்ந்து கவனிக்க வேண்டும். ஒவ்வொரு வங்கிக்கும் ‘’ஃபாரெக்ஸ்’’ என்னும் அன்னியச் செலாவணி பரிவர்த்தனைக்கு ஒரு நேரம் இருக்கும் அல்லவா? இந்தியன் வங்கிக்கு மதியம் 2 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை ‘’ஃபாரெக்ஸ்’’க்கான நேரம் என்றால் ஒரு வாடிக்கையாளர் காலை 11.30க்கு ‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பம் கொடுத்தால் அதனை வங்கி ஊழியர் மாலை 3.15க்கு உள்ளிடுவார் என்றால் அன்றைய தினத்தின் ‘’ஃபாரெக்ஸ்’’ முடிந்து அது அடுத்த நாள் கணக்குக்கு சென்று விடாதா? ஒரு வாடிக்கையாளர் மாலை 3.25க்கு ‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பம் கொடுத்தால் அது அடுத்த நாள் கணக்கில் சேரும் எனக் கூறலாம். காலை 11.30க்கு கொடுத்ததை எவ்விதம் மாலை 3.15க்கு உள்ளிடலாம்? இது விதிமீறல் இல்லையா? இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. ‘’ஃபாரெக்ஸ்’’ நாணய மதிப்புகள் நாளுக்கு நாள் மாறிக் கொண்டேயிருப்பவை. வெளிநாட்டு நாணயத்தின் மதிப்பு உயர்ந்தால் முதல் நாள் விண்ணப்பத்தை இரண்டாம் நாள் உள்ளிடுவதால் வாடிக்கையாளருக்கு பண இழப்பு ஏற்படாதா? ஒரு வாடிக்கையாளர் விண்ணப்பத்தை அவர் விண்ணப்பம் அளிக்கும் நாளன்றே  உள்ளீடு செய்தால் அது ஒரு வங்கி முறைமை எனக் கொள்ள முடியும். கிளையின் பணியான உள்ளீடு செய்தலையே அடுத்த நாள் அதற்கு அடுத்த நாள் என ஊழியர்கள் தங்கள் வசதிக்கு செய்தால் அதனை ஒரு நாள் இரண்டு நாட்கள் ஒரு வாரம் ஒரு வருடம் எனத் தாமதித்து அந்த நாட்களை இன்ஃபினிட்டி வரை கொண்டு செல்லலாம் என்றாகி விடுகிறது அல்லவா? இந்நிலையைத் தான் இந்தியன் வங்கி நிர்வாகம் விரும்புகிறதா? இவ்விதமான வாடிக்கையாளர் சேவையைத்தான் இந்தியன் வங்கி உயரதிகாரிகள் விரும்புகிறார்களா?

***

இந்தியாவின் தேசிய மயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள் சென்ற நிதி ஆண்டில் 383 லட்சம் கோடி ரூபாய்க்கு வணிகம் செய்ததாக புள்ளிவிபரம் கூறுகிறது. இத்தனை பெரிய வணிகம் நிகழ்த்தும் இந்திய பொதுத்துறை வங்கிகள் ‘’ஒப்புகைச் சீட்டு’’ போன்ற எளிய சேவையைக் கூட அளிக்க இயலாத நிலையிலா இருக்கின்றன? ஆண்டுக்கு 383 லட்சம் கோடி வணிகம் கொடுக்கும் கோடானுகோடி வாடிக்கையாளர்களின் நலன் மீது பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகத்துக்கு ஒரு ‘’ஒப்புகைச்சீட்டு’’ கூட வழங்க இயலாத அக்கறை தான் இருக்கிறதா?

***

நான் குறிப்பிட்டிருக்கும் மேற்படி சம்பவத்தை ‘’சு மோட்டோ’’ வாக இந்தியன் வங்கி நிர்வாகம் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 28.07.2026 அன்று 78 வயதான மூதாட்டியான வங்கி வாடிக்கையாளர் வங்கிக்கு வந்த நேரம் , அவருக்கு உதவியாக வந்தவர்கள் விண்ணப்பம் அளித்த நேரம் , மயிலாடுதுறை இந்தியன் வங்கி துணை மேலாளரால அந்த விண்ணப்பம் அவரது கணிணியில் உள்ளீடு செய்யப்பட்ட நேரம், 29.07.2026 அன்று வாடிக்கையாளர் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்ட நேரம் ஆகியவற்றை ஆராய்ந்து துணை மேலாளரான இந்தியன் வங்கி ஊழியர் 78 வயதான மூதாட்டி அளித்த ‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பத்தை வங்கி ஊழியர்களுக்கு அளித்திருக்கும் குறிப்புகளின் படி வங்கி சட்ட திட்டங்களின் படி முறைப்படி உள்ளீடு செய்து பணம் மாற்றியிருக்கிறாரா என்பதை ஆராயுமாறு கேட்டுக் கொள்கிறேன். வங்கி ஊழியர் செயல்பட்ட விதத்தில் சட்ட திட்டங்கள் அனுசரிக்கப்படாமல் இருந்தால் வங்கி அளித்திருக்கும் குறிப்புகள் படி மேற்படி ஊழியர் நடக்காமல் இருந்திருந்தால் அவர் மீது வங்கி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 28.07.2026, 29.07.2026 ஆகிய இரு தினங்களும் வாடிக்கையாளரான 78 வயது மூதாட்டியும் அவர் உடன் வந்தவர்களும் முழுமையாகப் பொறுமை காத்தோம். ‘’திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை’’என அமைதியாய் இருந்தோம்.

***

இந்தியன் வங்கி தலைமை நிர்வாக அதிகாரி அவர்களே!

அல்லற் பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை

என்பது திருக்குறள். ஒரு வங்கி தலைமை நிர்வாக அதிகாரிக்கு நாட்டின் சாதாரண குடிமகன் ஒருவன் எழுதும் கடிதத்தில் திருக்குறள் மேற்கோள் காட்டப்படுவது அபூர்வமான ஒன்று தான். நாட்டின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யும் போது நிதி நிலை அறிக்கை உரையில் திருக்குறளும் அர்த்தசாஸ்திரமும் கபீரின் கவிதைகளும் இடம் பெறுவதை நாம் காண்கிறோம். எனவே வங்கி பொது மேலாளருக்கு எழுதப்படும் கடிதத்தில் ஒரு திருக்குறள் இடம் பெற்றிருப்பது இயல்பானது தான். அந்தத் திருக்குறளின் அர்த்தம் இதுதான் தலைமை நிர்வாக அதிகாரி அவர்களே. ‘’ துயரப்பட்டு நிர்கதியாக இருக்கும் ஒருவன் சிந்தும் கண்ணீர்த்துளி ஒரு நாட்டின் கருவூலத்தை இல்லாமல் ஆக்கும் பெரும் படையாக மாறும்’’ . 28.07.2026 அன்றும் 29.07.2026 அன்றும் இந்தியன் வங்கி மயிலாடுதுறை கிளைக்கு வந்த 40 ஆண்டு காலம் இந்தியன் வங்கி வாடிக்கையாளராக இருக்கும் 78 வயதான மூதாட்டி மௌனமாக அந்த இரு நாட்களின் சில பொழுதுகளேனும் வங்கி தமக்கு அளித்த சேவைக் குறைபாட்டை எண்ணி வங்கியின் செயலின்மையை எண்ணி கண்ணீர் சிந்தினார். அந்தக் கண்ணீருக்கு இந்தியன் வங்கி பிழையீடு செய்ய வேண்டும்.

***

இந்தக் கடிதத்தின் முடிவுப் பகுதியாக எனது கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.

1.   பாரத ஸ்டேட் வங்கி ‘’ஸ்விஃப்ட்’’ படிவத்தில் உள்ளவாறு இந்தியன் வங்கி ‘’ஸ்விஃப்ட்’’ படிவத்திலும் ‘’ஒப்புகைச் சீட்டு’’ இருக்கும் விதமாக படிவத்தை இந்தியன் வங்கி வடிவமைக்க வேண்டும்.

2.   உலகில் எந்த இந்தியன் வங்கிக் கிளைக்கு வாடிக்கையாளர் ‘’ஸ்விஃப்ட்’’ செய்ய வந்து தங்கள் ஆவணங்களை அளிக்கும் பட்சத்தில் அவற்றை உடன் பரிசீலித்து வாடிக்கையாளருக்கு உடன் ஒப்புகைச்சீட்டு வழங்க ஆவன செய்ய வேண்டும்.

3.   28.07.2026, 29.07.2026 ஆகிய இரு தினங்களும் மயிலாடுதுறை இந்தியன் வங்கியில் இந்தியன் வங்கியின் 40 ஆண்டு கால வாடிக்கையாளரான 78 வய்தான மூதாட்டி அளித்த ‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பம் மீதான வங்கி துணை மேலாளரின் நடவடிக்கைகளை உரிய மேலதிகாரிகளைக் கொண்டு துறை ரீதியான விசாரணை மேற்கொள்ள வேண்டும் ; சி சி டி வி காட்சிகள் , வங்கியின் கணிணி ஆவணங்கள் ஆகியவற்றைப் பரிசீலித்து நிகழ்ந்த சேவைக் குறைபாடுக்கு பொறுப்பான துணை மேலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

***

நாட்டின் சாமானியக் குடிமகனான நான் இந்தக் கடிதத்தை தபால் மூலமாகவே அனுப்புகிறேன். இந்தக் கடிதம் இந்தியன் வங்கியின் பொது மேலாளரான தங்களைச் சென்றடையுமா என்பது ஐயம். தங்கள் காரியதரிசியின் கவனத்துக்கு வர வாய்ப்பிருக்கிறது. வங்கியின் குறைதீர் பிரிவு மற்றும் வங்கியின் மண்டல அலுவலகத்துக்கு தங்கள் அலுவலகத்திலிருந்து பிரதி எடுத்து அனுப்பப்பட வாய்ப்புள்ளது. குறைந்தது இந்தியன் வங்கியின் உயரதிகாரிகள் 10 பேராவது இந்தக் கடிதத்தை வாசிக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு. ஆண்டுக்கு 383 லட்சம் கோடி ரூபாய்க்கு வணிகம் அளிக்கும் நாட்டின் வங்கி வாடிக்கையாளர்களிடம் வங்கி ஊழியர்கள் எவ்விதம் நடந்து கொள்கிறார்கள் என்பதை அறிய உதவும் உரைகல் இந்தக் கடிதம்.

 

இந்தக் கடிதத்தின் நகலை மத்திய நிதியமைச்சருக்கும் அனுப்புகிறேன். அங்கிருக்கும் உயர் அதிகாரிகளும் இந்தியன் வங்கியின் 40 வருட வாடிக்கையாளரான 78 வயது மூதாட்டிக்கு இந்தியன் வங்கியின் மயிலாடுதுறை கிளையில் நிகழ்ந்த சம்பவம் குறித்து அறியட்டும்.

 

மயிலாடுதுறை இந்தியன் வங்கியின் 40 வருட வாடிக்கையாளரான 78 வயது மூதாட்டி 28.07.2026 அன்று காலை 10.30க்கு அளித்த ‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பத்தின் படி அவர் வங்கிக் கணக்கிலிருந்து தொகை மறுநாள் 29.07.2026 அன்று மாலை 6.45 மணிக்கு கிட்டத்தட்ட 32 மணி நேரம் கழித்து எடுக்கப்பட்டது. குறுஞ்செய்தியாக அவர் அதனை அறிந்தார்.

 

நன்றி

 

தங்கள் உண்மையுள்ள,


&&&

 இடம் : மயிலாடுதுறை

நாள் : 31.07.2026

 

நகல்

மத்திய நிதியமைச்சர்

பாரத் சர்க்கார்

புதுதில்லி

 

 

 

      

Thursday, 30 July 2026

ஒரு காதல் கடிதம்

 அன்புள்ள அண்ணனுக்கு, 


நீங்கள் என்னை தொலைபேசியில் அழைக்காமல் இருப்பது எனக்கு ஒரு வகையில் மன கஷ்டத்தை தான் கொடுக்கிறது. 

ஏதோ ஒரு வகையில் நான் உங்களை ரசிக்க ஆரம்பித்து விட்டேன் கவனிக்க ஆரம்பித்து விட்டேன்.

எதற்காக என்றால் என்னிடம் பதில் இல்லை.

உங்கள் அளவுக்கு என்னால் பேச முடியவில்லை அந்த அளவுக்கு என்னிடம் தகவலும் இல்லை. இருந்தாலும் உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் என்னை ஒரு முறை காசி வரை பயணம் செய்ய வேண்டும் என்பதுதான். 

அந்த ஆசை கூட நான் உங்களிடத்தில் பேச வேண்டிய விஷயத்தை பேசிவிட முடியும் உங்களிடமிருந்து ஒன்றை கற்றுக் கொள்ள முடியும் என்பது தான். 

என்றும் உங்களை நினைவில் வைத்திருக்கும்

உங்கள் அன்புத்தம்பி

Wednesday, 29 July 2026

விண்ணப்பம் - 7 குடும்பங்கள்

அனுப்புநர்

%%%%%
%%%%
%%%
மயிலாடுதுறை- 609001.

பெறுநர்

மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை - 609001

ஐயா, 

பொருள் ; சென்சஸ் - சுய விபரப் பதிவு
பார்வை : செம்பனார்கோவில் மைதானத்தில் கூடாரத்தில் வசிக்கும் பட்டியல் பழங்குடியின 7 குடும்பத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர்.

மத்திய அரசு 2027ம் ஆண்டுக்கான சென்சஸ் மேற்கொண்டு வருகிறது. அதன் முதல் கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பு முறைமைகள் தொடங்கியுள்ளன. அவற்றின் ஒரு பகுதியாக நாட்டின் குடிமக்கள் தங்கள் வாழிடம் குறித்த சுய விபரங்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. 

செம்பனார்கோவில் காவல் நிலையத்துக்கு எதிரில் இருக்கும் மைதானத்தில் கூடாரம் அமைத்துக் கொண்டு பட்டியல் பழங்குடியினரான ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். சுய விபரக் கணக்கெடுப்பில் தங்கள் வாழிடத்தின் தரை மண்ணால் ஆனது ; சுவர்களும் கூரையும் பாலிதீன் ஷீட்டால் ஆனவை ; குளியலறை இல்லை ; கழிவறை இல்லை ; சமையல் திறந்த வெளியில் நடக்கிறது ; மின்சார வசதி இல்லை என சென்சஸ் இணையதளத்தில் பதிவு செய்து சுய விபரப் பதிவு எண்ணைப் பெற்றுள்ளனர். 

இது குறித்த செய்தி தினமலர் நாளிதழில் வெளியாகியுள்ளது. அதன் நகலை இத்துடன் இணைத்துள்ளேன். 

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் வீடுகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளும் போது செம்பனார்கோவில் காவல் நிலையத்துக்கு எதிரில் இருக்கும் மைதானத்தில் வசிக்கும் பட்டியல் பழங்குடியினரான 7 குடும்பங்களின் சுய விபர எண்கள் சென்சஸ் கணக்கெடுப்பில் சேர்க்கப்படுவதை உறுதி செய்யுமாறு மாவட்ட ஆட்சியரைப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 

மேலும் சென்சஸ் சுய விபரப் பதிவை ஒரு நிமித்தமாகக் கொண்டு அவர்களுக்கு மத்திய மாநில அரசுகளின் பல திட்டங்களில் பட்டியல் பழங்குடியின 7 குடும்பங்களுக்குப் பொருந்தும் வகையிலான திட்டங்கள் மூலம் அவர்களுக்கு வசிக்க நல்ல வாழிடமும் மின்சார வசதியும் கழிவறை வசதியும் கிடைக்க ஆவன செய்யுமாறு மாவட்ட ஆட்சித் தலைவரை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 

தங்கள் உண்மையுள்ள,


இடம் : மயிலாடுதுறை
நாள் : 29.07.2026

நகல்

1. கனம் தமிழக ஆளுநர்
லோக்பவன்
கிண்டி - சென்னை

2. கனம் தமிழக முதலமைச்சர்
தலைமைச் செயலகம்
சென்னை

3. கனம் தமிழக வருவாய்த்துறை அமைச்சர்
தலைமைச் செயலகம்
சென்னை

4. கனம் தமிழக சமூகநீதித்துறை அமைச்சர்
தலைமைச் செயலகம் 
சென்னை

5. வருவாய் கோட்டாட்சியர் 
சீர்காழி

6. வருவாய் வட்டாட்சியர்
தரங்கம்பாடி

7. வட்டார வளர்ச்சி அலுவலர்
செம்பனார்கோவில்

8. சென்சஸ் கட்டுப்பாட்டு அறை
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை  



@@@@@ கிளை அஞ்சல் நிலையம் மீது சி பி கி ராம் ஸ் புகார்

 29.07.2026 அன்று 1315 மணிக்கு @@@@@அஞ்சல் நிலையம் சென்று 9 போஸ்டல் கவர் வேண்டும் எனக் கேட்டேன். அங்கிருந்த சப் போஸ்ட் மாஸ்டர் போஸ்டல் கவர் கையிருப்பு இல்லை ; வேண்டுமானால் ரூ.5 போஸ்டல் ஸ்டாம்ப் 9 தருகிறேன். வெளிமார்க்கெட்டில் ஆஃபிஸ் கவர் வாங்கி ரூ.5 ஸ்டாம்ப் வாங்கி ஒட்டி அனுப்பிக் கொள்ளுங்கள் என்று கூறினார். மேலும் போஸ்டல் கவர் கையிருப்பு வைத்துக் கொள்வதில்லை என்றும் கூறினார். என்னுடைய புரிதலின் படி போஸ்ட் ஆஃபிஸ் என்பது போஸ்டல் டிபார்ட்மெண்ட் தொடர்பான அடிப்படையான விஷயங்கள் கிடைக்கும் இடம். அது விதிமுறைகளின் படியும் சட்ட திட்டங்களின் படியும் இயங்கக் கூடிய இடம் என்றே கருதுகிறேன். என் கையில் ரூ.50 இருந்தது. நான் 9 போஸ்டல் கவர் வாங்கி அதில் 9 தபால்களை வைத்து அனுப்புவதாக இருந்தேன். போஸ்டல் ஸ்டாம்பும் வெளிமார்க்கெட்டில் கவரில் வாங்கினால் எனக்கு ரூ.54 ஆகும். கூடுதல் செலவாகும் என்பதுடன் என் கையில் ரூ.54 இல்லை எனில் என் பணி நிறைவடையாது. இந்த விஷயத்தை சில்லறை விஷயமாக நான் நினைக்கவில்லை. ஒரு வாடிக்கையாளருக்கு இது ரூ.4 சம்பந்தப்பட்ட பிரச்சனையாக இருக்கும். ஒரு நாளில் அந்த அஞ்சல் நிலையத்துக்கு 10 பேர் வருவார்கள் எனில் அது ரூ.40 சம்பந்தப்பட்டது. 300 நாட்கள் ஒரு ஆண்டில் வேலைநாட்கள் எனில் அது ரூ.12,000 தொடர்பான பிரச்சனை. இந்த சி பி கி ராம் ஸ் புகார் மூலம் அஞ்சல்துறை மேலதிகாரிகளை @@@@@ கிளை அஞ்சல் நிலையம் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்துடன் மேற்கொண்ட வரவு செலவுகளை ஆடிட் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். @@@@@ கிளை அஞ்சல் நிலையத்துக்கு கடைசியாக எப்போது போஸ்டல் கவர் வழங்கப்பட்டது ? அது விற்று தீர்ந்தது எப்போது? விற்ற பின் ஏன் போஸ்டல் கவர் ஆர்டர் செய்யவில்லை? ஆகிய வினாக்களைக் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேட்டு விசாரணை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். மத்திய அரசின் முக்கிய துறைகளில் ஒன்றான தபால் துறையின் அஞ்சல் அலுவலகம் ஒன்றில் போஸ்டல் கவர் இருப்பு வைத்துக் கொள்ளாமல் இருப்பதையும் போஸ்டல் கவர் கேட்டு வரும் வாடிக்கையாளரிடம் போஸ்டல் கவர் இருப்பு வைத்துக் கொள்வதில்லை என சப் போஸ்ட் மாஸ்டர் பதில் கூறுவதையும் அஞ்சல்துறை உயர் அதிகாரிகள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என நம்புகிறேன். மேற்படி விஷயம் குறித்து விசாரணை நடத்தி உரிய மேல்நடவடிக்கை எடுக்குமாறு அஞ்சல்துறை உயர் அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன்,

மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை (நகைச்சுவைக் கட்டுரை)

பணி நிமித்தம் சிதம்பரம் சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். சீர்காழி அருகே வரும் போது அலைபேசி ஒலித்தது. இரு சக்கர வாகனத்தின் ஒலியையும் தாண்டி அலைபேசி ஒலி கேட்டது. எனது வாகனம் சென்று கொண்டிருந்த இடம் சீர்காழி புறவழிச்சாலை. வாகனத்தை ஓரங்கட்டி அலைபேசியை எடுத்தேன். சுருக்கமாக ‘’எக்மோர் எஸ் ஐ பேசறன்’’ என்றார் ஃபோனில் பேசியவர். ‘’வணக்கம் மேடம்’’ என்றேன். ‘’முத்துநகர் எக்ஸ்பிரஸ்ல ஜெனரல் கம்பார்ட்மெண்ட்ல கேம்ளிங் நடக்கறதா கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கீங்க இல்லையா?’’ என்றார். ‘’ஆமாம் மேடம்! சி பி கி ராம் ஸ் ல புகார் கொடுத்திருந்தேன்.’’ என்றேன். ‘’நீங்க டிராவல் பண்ண அன்னைக்கு டிரெயின்ல டி டி ஈ யாரும் ஜெனரல் கம்பார்ட்மெண்ட்க்கு வரலியா?’’ என்று கேட்டார். ‘’அன்னைக்கு யாரும் வரலை மேடம். வந்திருந்தா அவங்க சீட்டாடி இருக்க மாட்டாங்க’’ என்றேன். ‘’இன்னைக்கு முத்துநகர் டிரெயின்ல ரெய்ட் பண்ண போறோம்’’ என்றார். ‘’மேடம் ! ஈவ்னிங் 1815க்கு புதுச்சேரி மெமு இருக்கு. அதுலயும் ரெய்டு பண்ணுங்க’’ என்றேன். ‘’ஓ சரி’’. ‘’கேம்ளிங் குக்கு பப்ளிக் டிரான்ஸ்போர்ட் ஆன டிரெயின யூஸ் பண்றது இஸ் நாட் நைஸ் மேடம்’’. ‘’நீங்க புகார் கொடுத்தது நல்ல விஷயம். உங்களுக்கு தாம்பரம் எஸ் ஐ யும் செங்கல்பட்டு திண்டிவனம் எஸ் ஐ யும் ஃபோன் பண்ணுவாங்க. அவங்ககிட்டயும் விபரம் சொல்லுங்க’’ என்றார். 

சனிக்கிழமை காலை 10 மணிக்கு சீர்காழி தீ விபத்து தொடர்பாக மயிலாடுதுறை ஆர் பி எஃப் அலுவலகத்தில் வாக்குமூலம் பதிவு. புதன்கிழமை எக்மோர் எஸ் ஐ யிடமிருந்து அலைபேசி அழைப்பு. மேலும் தாம்பரம் செங்கல்பட்டு திண்டிவனம் எஸ் ஐ யும் ஃபோனில் அழைப்பார்கள் என கூடுதல் தகவல். 

ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது ‘’மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை வதைக்க நினைத்திடும் சிறைச்சாலை’’ என்னும் வரி மனதில் ஓடிக் கொண்டேயிருந்தது.    

இளைஞர்கள் குழு

அசாத்தியத்தை சாத்தியமாக்குபவர் 


கால்பந்தில் ஆர்வம் கொண்ட சிறுவனுக்காக வெளிநாட்டுப் படிப்புக்கு வழிகாட்டும் நிறுவனம் ஒன்றுடன் கடந்த 1 மாதத்துக்கு மேலாக தொடர்பில் இருக்கிறேன். சிறுவனின் கல்லூரி சேர்க்கை தொடர்பான பொறுப்பு அந்நிறுவன ஊழியர் ஒருவருக்குத் தரப்பட்டுள்ளது. அவரை சென்னையில் ஒரு முறை நேரில் சந்தித்துப் பேசினேன்.  நிதி ஏற்பாடுகள் தொடர்பாக தேவைப்படும் ஆலோசனை சொல்வதற்காக மற்ற விஷயங்களில் உதவுவதற்காக என  அந்நிறுவனத்தைச் சேர்ந்த வேறு சிலருடனும் பேசினேன். அத்தனை உரையாடல்களும் மிகவும் ஆக்கபூர்வமாக இருந்தன. சிறுவனும் நானும் திட்டமிட்ட நிதி ஏற்பாடுகள் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. மிகவும் சிரமப்பட்டே ஏற்பாடுகள் நடந்தன. உத்தேசித்த நாட்களுக்கு சில நாட்கள் தள்ளியே தொகை ஏற்பாடு செய்ய முடிந்தது ; தொகை அனுப்ப முடிந்தது. எனினும் அந்நிறுவன ஊழியர்களான இளைஞர்கள் தளரா மனத்துடன் எப்போதும் இருந்தனர். ஒவ்வொரு தருணத்திலும் செய்ய வேண்டிய விஷயம் என்னவோ அந்த விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தினர். 

நான் சாதாரண ஜி எஸ் எம் அலைபேசி பயன்படுத்துபவன். மடிக்கணிணியை டெஸ்க் டாப் கணிணி போல உபயோகிப்பவன். சிறுவனின் கல்லூரி சேர்க்கைக்கு பொறுப்பான ஊழியரும் அவரது குழுவும் முழுக்க முழுக்க ஸ்மார்ட்ஃபோனிலும் அதன் வழியே சகலவிதமான தொடர்பு முறைகளிலும் மூழ்கியிருப்பவர்கள். இருப்பினும் என்னிடம் ஒரு வார்த்தை கூட ஸ்மார்ட்ஃபோன் வைத்துக் கொள்ளவில்லையா எனக் கேட்கவில்லை. என்னிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லை என்பதால் எந்த தகவல் இடைவெளியும் ஏற்படவில்லை. விபரங்கள் தேவைப்பட்டால் குறுஞ்செய்தி அனுப்புவார்கள். மின்னஞ்சல் அனுப்புவார்கள். ஃபோனில் அழைப்பார்கள். கால்பந்து ஆடும் சிறுவனிடம் ஸ்மார்ட்ஃபோன் இருக்கிறது ; ஆவணங்களை பி டி எஃப் வடிவில் அனுப்பினால் அவன் ஸ்மார்ட்ஃபோனுக்கு அனுப்பி விட்டு எனக்கு இவ்விதம் அனுப்பப்பட்டுள்ளது என குறுஞ்செய்தி அனுப்புவார்கள். இவை அனைத்தும் தகவல் தொடர்பு முறைகள். இதனைத் தாண்டி அவர்களுக்கு நான் இயங்கும் விதம் குறித்து முழுமையான புரிதல் இருந்திருக்கிறது என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். எங்கள் இலக்கினை நோக்கிச் செல்ல எனது பங்களிப்பை எப்படி சிறப்பாக பயன்பெறச் செய்ய வேண்டுமோ அப்படி பயன்பெறச் செய்தார்கள். 

அந்த இளைஞர் குழுவின் சராசரி வயது 27 ஆக இருக்கக் கூடும். 

விஷயங்களைக் கையாள்வதில் அக்குழு காட்டும் பொறுமையும் அக்குழுவின் விடாமுயற்சியும் மகத்தானது. அக்குழு மகத்தான விஷயங்களை எப்போதும் சாதிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.  

Tuesday, 28 July 2026

பொறுப்பில்லாதவர்கள் - 2

நேரம் இப்போது மாலை 6.55. இப்போது வரை எங்களுக்கு ‘’ஸ்விஃப்ட்’’முறையில் பணம் செலுத்த விண்ணப்பித்ததற்கான ஒப்புகைச் சீட்டு அளிக்கப்படவில்லை.  

பொறுப்பில்லாதவர்கள்

கால்பந்து ஆடும் சிறுவன் 17 வயது மட்டுமே ஆனவன். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இயற்கை எய்தினார். தன்னுடைய சுய ஆர்வத்தல் ஐ ஈ எல் டி எஸ் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி அடைந்தான். ஐரோப்பிய பல்கலைக்கழகம் ஒன்றில் சேர்ந்து படித்து அதன் மூலம் ஐரோப்பாவின் கால்பந்து கிளப் ஒன்றில் இணைய வேண்டும் என்பது அவனது ஆவல். அவன் சாமானிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் சேர்க்கை அதன் முறைமைகள் ஆகிய்வை அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் மிகவும் புதிது.  மிகச் சமீபத்தில் அவன் என்னிடம் வந்தான். அவனும் நானும் சேர்ந்து சில விஷயங்களை முயன்றோம். விவாதித்தோம். எங்கள் தொடர் முயற்சியின் விளைவாக 3 வாரங்களுக்கு முன்னால் அவனுக்கு ஐரோப்பிய பல்கலைக்கழகம் ஒன்றில் சேர்க்கை அனுமதி கிடைத்தது. சேர்க்கை கிடைத்த பின் அந்தப் பல்கலை.க்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஓராண்டுக்கான கட்டணம் ரூ.5,30,000. மிகவும் சிரமப்பட்டு அத்தொகையை ஏற்பாடு செய்தோம். மேலும் அவன் ஐரோப்பா செல்ல ரூபாய் தேவைப்படும். முதலில் இந்த ஆண்டுக் கட்டணத்தை செலுத்தி முதல் படியைத் தாண்டுவோம். அதன் பின் மற்ற படிகளையும் கடப்போம் என முடிவு செய்தோம். எங்களிடம் நிறைய நம்பிக்கை இருக்கிறது. போராடியாவது எங்கள் நோக்கத்தை நிறைவேற்ற முயல்வோம் என்னும் உறுதி இருக்கிறது. கட்டணம் அவன் கணக்கிலிருந்து செலுத்தப்படுவதை விட அவன் குடும்ப உறுப்பினர்கள் எவர் கணக்கிலிருந்தாவது செலுத்தப்படுவது உகந்தது என உணர்ந்தோம் ; கால்பந்து ஆடும் சிறுவனுக்கு வயது 17 தான் ஆகிறது. அவன் மைனர். அவன் தன் கணக்கில் பெரும் தொகை வைத்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அவன் குடும்ப உறுப்பினர்கள் கணக்கிலிருந்து மாற்றுவது என முடிவு செய்தோம். அவன் பாட்டி தன்னிடமிருந்த சிறு தொகையை ( மொத்த பணத்தில் 25 சதவீதம்) அவனுக்காக அளித்தார். மொத்த பணமும் அவர் கணக்கில் போட்டு அவர் கணக்கிலிருந்து ‘’ஸ்விஃப்ட்’’ முறை மூலம் வங்கிக் கணக்கிலிருந்து ஐரோப்பிய பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவது என முடிவு செய்தோம். மொத்த பணம் வந்து சேர ஜூலை 24 வெள்ளிக்கிழமை இரவு 8 மணியாகி விட்டது. அடுத்த இரு நாட்கள் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் வங்கி விடுமுறை. திங்கட்கிழமை காலை 10 மணிக்கு வங்கிக்கு சென்று ‘’ஸ்விஃப்ட்’’ மூலம் பணம் அனுப்புவது தொடர்பாக விசாரிக்கச் சென்றோம். நான் தான் வங்கி துணை மேலாளரிடம் விபரம் விசாரித்தேன். ‘’ஸ்விஃப்ட்’’  பணப் பரிவர்த்தனைக்கு அவரே பொறுப்பானவர். 

நேற்று காலை 10 மணிக்கு வங்கிக்குச் சென்றேன். ‘’ஸ்விஃப்ட்’’ படிவம் கொடுங்கள் எனக் கூறினேன். படிவம் எனக்குக் கொடுக்கப்படவில்லை. கணக்கு வைத்திருப்பவரின் ஆதார் நகல், கணக்கு வைத்திருப்பவரின் பான் கார்டு நகல், சிறுவனினி பாஸ்போர்ட் நகல், சிறுவனின் ஆதார் நகல், சிறுவனின் பான் கார்டு நகல், ஐரோப்பியக் கல்லூரி அளித்த சேர்க்கை அனுமதிக் கடிதம், கல்லூரியின் கணக்கு விபரங்கள் அனைத்தும் தேவை என்று கூறினார். சிறுவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து அவர்கள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் ஒரு மணி நேரத்தில் தயார் செய்து எடுத்துக் கொண்டு சென்றேன். காலை 11 மணிக்கு அவர் இருக்கையில் இல்லை. காத்திருந்தோம். மதியம் 12 மணி அளவில் வந்தார். சிறுவனின் பாட்டி கண்க்கு பான் கார்டுடன் இணைக்க்ப்பட வேண்டும் என்றார். நாங்கள் உடன் வீட்டுக்கு வந்து சிறுவனின் பாட்டியை அழைத்துக் கொண்டு வங்கிக்கு வந்து இ-கே ஒய் சி செய்தோம். அதன் பின் இந்தக் கணக்குக்கு காசோலை வசதி இல்லை ; அதனை அப்ளை செய்யுங்கள் என்றார். அதனையும் செய்து காசோலை பெற்றோம். உணவு இடைவேளை நெருங்கி விட்டதால் வங்கி ஊழியர்கள் உணவருந்த சென்று விட்டார்கள். நாங்கள் மூவரும் வீட்டுக்கு வந்து உணவருந்தி விட்டு உடன் வங்கிக்கு சென்றோம். உதவி மேலாளர் வங்கி நேரம் முடியும் வரை இருக்கைக்கு வரவே இல்லை. நாங்கள் சோர்வுடன் வீடு திரும்பினோம். 

இன்று காலை 10 மணிக்குச் சென்று ‘’ஸ்விஃப்ட்’’ படிவம் வாங்கி வந்தேன். அதனை நிரப்பி 10.30க்கு கொடுத்தேன். சிறுவன், சிறுவனின் பாட்டி, நான் ஆகிய மூவரும் வங்கிக்கு சென்றிருந்தோம். எங்களிடம் ‘’ஸ்விஃப்ட்’’ படிவம் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டை கொடுங்கள் எனக் கேட்டேன். எங்களுக்கு ஒப்புகைச்சீட்டு கொடுக்கப்படவில்லை. மாலை 3.15க்கு வாருங்கள் எனக் கூறினர். மாலை 3.15க்கு வங்கிக்கு வந்து எங்களால் பணம் அனுப்ப முடியவில்லை என வங்கியில் கூறினால் என்ன செய்வது என எனக்குப் பதட்டம் உருவானது. வழக்கமான நிலைமை எனில் எங்கள் நுகர்வோர் உரிமையை வலியுறுத்திப் பேசியிருப்பேன். இப்போது , ஒரு சிறுவன் தன் 12 ஆண்டு கால கனவை நிறைவேற்றும் தருவாயில் இருக்கிறான் ; அவனது பாட்டி இறந்து போன தன் மகன் செய்திருக்க வேண்டிய கடமையை நிறைவேற்ற வந்திருக்கிறார். மேலும் கல்லூரி சேர்க்கை என்பது அவர்கள் குடும்பத்தில் நிகழும் மங்களமான செயல் என்பதால் அமைதி காப்போம் என முடிவு செய்தேன். 

நாங்கள் சென்றது தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கி ( இவ்வளவு நடந்தும் நாகரிகம் கருதி வங்கியின் பெயரைத் தெரிவிக்காமல் இருக்கிறேன்). எனது கேள்விகள் : 

1. 27.07.2026 அன்று காலை 10 மணிக்கு வந்த வாடிக்கையாளர் கேட்ட ‘’ஸ்விஃப்ட்’’படிவத்தை ஏன் அப்போதே தரவில்லை? 

2. பாட்டி 1986லிருந்து அந்த வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருக்கிறார். 40 ஆண்டுகளாக் அந்த கிளையின் வாடிக்கையாளர். அவருக்கு செக் புக் தேவைப்படவில்லை. இன்று காலை ‘’ஸ்விஃப்ட்’’ படிவம் நிரப்பி கொடுக்கப்பட்ட போதும் ''pay yourself'' என எழுதி எந்தக் காசோலையும் கோரப்படவில்லை. ஒரு காசோலையை கேன்சல் செய்து படிவத்துடன் இணைக்குமாறு சொன்னார்கள். விண்ணப்பிப்பது அந்தக் கணக்கு எண்ணின் வாடிக்கையாளர்தானா என்பதை அவருடைய கைரேகையை மின்னணு முறையில் சோதித்து ஆதாருடன் இணைந்திருக்கும் வசதி மூலம் அறிய முடியும். அந்த கைரேகையைக் கூட பிரிண்ட் அவுட் எடுத்து ஆதாரமாக வைத்துக் கொள்ள முடியும். அதை ஏன் முயலவில்லை?

3. 28.07.2026 அன்று காலை 10.30க்கு கொடுத்த ‘’ஸ்விஃப்ட்’’படிவத்துக்கு ஒப்புகைச் சீட்டு கொடுக்காதது ஏன்? 

4. நேற்று வந்த வாடிக்கையாளர் கோரிய சேவையை இன்றைக்கு நகர்த்திக் கொண்டு வந்தது ஏன்? 

5. அன்னியச் செலாவணி வர்த்தகத்தில் யூரோ - ரூபாய் மதிப்பு நேற்று இருந்ததற்கும் இன்று இருப்பதற்கும் வேறுபாடு உள்ளது. நேற்று 1 யூரோவின் மதிப்பு ரூ. 108. இன்று 1 யூரோவின் மதிப்பு ரூ.109. துணை மேலாளர் அனாவசியமாக ஒருநாள் நகர்த்தியதால் எங்களுக்கு தோராயமாக ரூ.5000 இழப்பு. 

6. துணை மேலாளர் எவ்விதம் கடமை தவறி விட்டு சகஜமாக இருக்க முடிகிறது?

7. பாட்டியின் வயது 78. அவர் மூத்த குடிமகள். தன் பேரன் வெளிநாட்டுக் கல்லூரியில் சேரப் போகும் மங்களமான தருணத்தை அவர் நினைக்க வேண்டுமா? இந்த நேரத்தில் வங்கி மேலதிகாரிகளுக்கு தனக்கும் தன் பேரனுக்கும் நிகழ்ந்த அலைக்கழிப்பு குறித்து புகார் எழுதிக் கொண்டிருக்க வேண்டுமா? 

8. இந்தப் பதிவை நான் எழுதிக் கொண்டிருக்கும் நேரம் மதியம் 2.34. இன்னும் கணக்கிலிருந்து பணம் மின்னணு பரிமாற்றம் செய்யப்பட்டதாக எந்த குறுஞ்செய்தியும் பாட்டி அலைபேசிக்கு வரவில்லை. 

9. நானும் சிறுவனும் 3.15க்கு செல்ல இருக்கிறோம். 

பி எஸ் என் எல் எனப்படும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் ஊழியர்கள் பொறுப்பின்மைக்கு மிக பெயர் போனவர்கள். நாட்டின் தொலைபேசிகளும் ஆரம்ப கட்டத்து அலைபேசிகளும் அவர்கள் பராமரிப்பில் இருந்தது. உச்சபட்சமான பொறுப்பின்மையையும் அக்கறையின்மையையும் வெளிப்படுத்தி வந்தார்கள். பொதுமக்களும் குடிமக்களும் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளால் நொந்து போயிருந்தனர். ஒரு நல்ல காலைப் பொழுதில், அந்த நிறுவனம் ஒரு ’’விருப்ப ஓய்வு’’ திட்டத்தை அறிவித்தது. அந்த ‘’விருப்ப ஓய்வில்’’ சென்று விடுவது அவர்களுக்கு மிக்க நலம் என்பது குறிப்புணர்த்தப்பட்டது. லட்சக்கணக்கான ஊழியர்கள் அந்த ‘’விருப்ப ஓய்வில்’’ நிறுவனத்தை விட்டு வெளியேறினர். கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை இருக்கும் கோடானுகோடி குடிமக்களும் அந்நிகழ்வால் பெருமகிழ்ச்சி அடைந்தனர். 

நம் நாட்டின் பொதுத்துறை தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்களுக்கும் அந்நிலை வர வேண்டும். அப்படி ஒரு நிலை வருவதே நாட்டுக்கு நலம்.