Wednesday, 19 November 2025

காவியகர்த்தா


 
படைப்போன் அகத்தில்
கணமும் உயிர்பெறுகின்றன கோடானுகோடி உயிர்கள்
அவனுக்கு எல்லா உயிர்களும் குழந்தைகளே
இருப்பினும்
சில ம்கவுகள் 
தன்னைப் போல் படைக்க இருப்பதை
அகக்காட்சியில் கண்டு 
புவியில் அவை பிறக்கும் முன்னே
அவற்றுக்கு மேலும் மேலும் ஆசியளிக்கிறான்
படைப்போன்

படைப்போன் மேலும் மேலும் ஆசியளிக்கும்
குழந்தைகள் 
யாரெனக் காண்பதில் எப்போதும் ஆர்வம்
சொல்லரசிக்கு
படைப்போன் தேர்வை
மேலும் தேர்ந்து
அம்மகவுக்கு
தன் ஆசியையும் தருகிறாள்
சொல்லன்னை

எல்லா அன்னையரையும் போலவே
சொல்லன்னைக்கும்
மகவைக் குறித்த விசனங்கள்
சொல்லின் உலகம் பெரிதும் அருவமானது
புறத்தினும் அகத்தில் வியாபிப்பது
மானிட உயிர்கள்
கண்ணால் காண்பதையும்
திட்டவட்டமான பொருள் உலகையும்
மட்டுமே 
உலகம் என்றும்
வாழ்க்கை என்றும்
கொள்வார்கள்
படைப்போன் ஆசி பெற்ற
தன் ஆசி பெற்ற
மகவு
மானிடச் சூழலுடன்
இயல்பாகப் பொருந்திக் கொள்ள வேண்டுமே
என்னும் விசனத்துடன்
எப்போதும் இருந்தாள் சொல்லன்னை
அம்மகவு மண்ணில் பிறப்பதற்கு முன்பிருந்தே

சொல்லை ஆராதிக்கும் மானிடப் பெண்ணின்
கருப்பையில்
அம்மகவை உதிக்க வைத்தான் படைப்போன்
அம்மகவின் மானிட அன்னைக்கு
அம்மகவு சொல்லின் உலகத்தில் மட்டுமே சிறப்பாக இருக்கும்
என்பது  
மூட்டமாகத் தெரிந்திருந்தது
சொல்லன்னை கொண்ட விசனம் மானிட அன்னைக்கும்
மானிடச் சூழலில் தன் மகவு பொருந்தியிருப்பது குறித்து

புவிக்கு வந்த அம்மகவு
இந்த உலகைப் பார்த்துக் கொண்டேயிருந்தது
பார்க்கப் பார்க்க வளர்ந்து கொண்டேயிருக்கும்
இந்த உலகத்தில் 
இந்த உலகத்தை
இதை விடவும் சிறப்பான அழகான உலகத்தை உலகங்களை
படைக்கத் தொடங்கியது 
படைப்போன் புன்னகைத்தான்
அகத்தில் நிகழ்வதை சொல்லில் அம்மகவு வடிக்கத் தொடங்கியதும்
சொல்லன்னையும் புன்னகைத்தாள்

படைப்பவர்களுக்குரிய நிலையின்மை 
மகவாயிருந்து பாலனாகி இளைஞனான அவனைச் சூழ்ந்தது
அவன் அலையத் துவங்கினான்
அனாதி காலமாக அலைந்து திரிந்தவர்களின் நிலம் அவன் ஜன்மபூமி
அனாதி காலமாக துறந்து கொண்டேயிருப்பவர்களின் நிலம் அவன் ஜன்மபூமி

ஊழ் அவனை நல்லாசிரியர்களிடமும் கொண்டு சென்றது
துறவியாயிருந்த ஒரு நல்லாசிரியர் சொன்னார் :
‘’நீ உண்மையை அறிவாயென்றால் அது கற்பனை வழியாகவே’’

தன் தீரா அலைச்சலில்
தன் தீரா நகர்வுகளில்
அவன் மேலும் மேலும் மேலும் என
நல்லாசிரியர்களைக் கண்டு கொண்டேயிருந்தான்
மொழியில் தன் படைப்புகளை வடித்துக் கொண்டேயிருந்தான்

அவன்
தன் படைப்புகளை வடித்த மொழி 
உலகில் கோடானுகோடி மானிடர் அறிந்தது
இருப்பினும்
அவன் சொற்கள் சிலருக்கே புரிந்தது
எமக்குத் தொழில் படைத்தல்
என 
படைத்துக் கொண்டேயிருந்தான்

தன் சொற்களால்
அவன் 
பல கடவுள்களைப் படைத்திருக்கிறான்
கடவுள்களை மானிட மொழியில் பேச வைத்திருக்கிறான்
ஞானிகளை தீர்க்கதரிசிகளை மீண்டும் உருவாக்கியிருக்கிறான்

அவன் சொற்கள்
மானிடர் பலருக்கு 
இதமளித்தது
நம்பிக்கையளித்தது

ஆதி மானிடன் கண்டறிந்த முதல் தீச்சுடர்
ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு
என
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக
சென்று கொண்டேயிருப்பது போல
அவன் சொற்கள்
செல்லத் துவங்கின

அவன் குறித்து
ஈன்ற பொழுதிற் பெரிதுவந்தாள்
சொல்லன்னை

***

Tuesday, 18 November 2025

டாக்டர். பா. ஜெயமோகன்

 

தமிழ் இலக்கியப் படைப்பாளியான ஜெயமோகன் நாளை ( 19.11.2025) அன்று தக்‌ஷசீலா பல்கலைக்கழகத்தால் டாக்டர் பட்டம் அளித்து கௌரவிக்கப்படுகிறார். ’’படைப்பூக்கத்தின் இமயம்’’ ஆன ஜெயமோகனுக்கு டாக்டர் பட்டம் அளித்து தன்னை வரலாற்றில் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது தக்‌ஷசீலா பல்கலைக்கழகம். தக்‌ஷசீலா பல்கலைக்கழகம் வாழ்த்துக்குரியது. 

’’மகாமகோபாத்தியாய’’ உ.வே.சா அவர்களுக்கு பாரதி எழுதிய வாழ்த்துப்பா ஜெயமோகனுக்கும் உரியது. 

செம்பரிதி யொளிபெற்றான்‌ பைந்நறவு, சுவைபெற்றுத்‌ திகழ்ந்த தாங்கண்‌ உம்பரெலாம்‌ இறவாமை பெற்றனரென்‌ றெவரேகொல்‌ உவத்தல்‌ செய்வார்‌ ? கும்பமுனி பெனத்தோன்றும்‌ சாமிநா 'தப்புலவன்‌ குறைவில்‌ சீர்த்தி 
பம்பலுறப்‌ பெற்றனனேல்‌, இதற்கென்கொல்‌ பேருவகை படைக்கின்‌ நீரே ?

அன்னியர்கள்‌ தமிழ்ச்செவ்வி யறியாதார்‌ இன்றெம்மை ஆள்வோ ரேனும்‌ பன்னியசீர்‌ மகாமகோ பாத்தியா யப்ப.தவி பரிவின்‌ ஈந்து 
பொன்னிலவு குடந்தைநகர்ச்‌ சாமிநா தன்றனக்குப்‌ புகழ்செய்‌ வாரேல்‌, முன்னிவனப்‌ பாண்டியர்நாள்‌ இருந்திருப்பின்‌ இவன்பெருமை மொழியலாமோ                                                                                                                                                                       
“நிதியறியோம்‌' இவ்வுலகத்‌ தொருகோடி இன்பவகை நித்தந்‌ துய்க்கும்‌ “கதியறியோம்‌' என்றுமனம்‌ வருந்தற்க ;: குடந்தைநகர்க்‌ கலைஞர்‌ கோவே !! பொதியமலைப்‌ பிறந்தமொழி வாழ்வறியும்‌ காலமெலாம்‌ புலவோர்‌ வாயில்‌ துதியறிவாய்‌, அவர்நெஞ்சின்‌ வாழ்த்தறிவாய்‌, இறப்பின்றித்‌ துலங்கு வாயே. 


  

மாற்று பொருட்கள் (நகைச்சுவைக் கட்டுரை)

 உலகியல் மிகவும் சுவாரசியமானது ; அதிலிருந்து சற்று தள்ளி இருந்தால். இன்று மண் மூட்டைகளையும் வைக்கோல் சுருள்களையும் கொண்டு கட்டுமானங்களை எழுப்பும் முறை குறித்து வாசித்தேன். அவை மிகவும் ஆர்வமூட்டின. சில நிமிடங்களுக்குப் பின் எனக்கு இரு யோசனைகள் தோன்றின. அந்த யோசனைகளும் சுவாரசியமானவை. அவை மனதில் உதித்த விதமும் சுவாரசியமானது.  

அரிசி ஆலைகளில் கரித்தூள் மிக அதிக அளவில் இருக்கும். நெல்லைப் புழுங்கல் அரிசியாக ஆக்குகையில் பாய்லர் மூலம் நீரை ஆவியாக்க கரியை எரிப்பார்கள். கரி எரிந்து கரித்தூளாக எஞ்சும். உமியையும் எரிப்பதுண்டு . அதுவும் கரித்தூளாக எஞ்சும். கரித்தூள் அவர்களுடைய ஆலையில் குவிந்து கிடக்கும். அது வயலுக்கு நல்ல உரம். விவசாயிகள் அதனை எடுத்துச் சென்று ஆலையிலிருந்து அவற்றினைக் காலி செய்தாலே போதும் என ஆலையில் இருப்பவர்கள் நினைப்பார்கள். மண் மூட்டைகளை இந்த கரித்தூள் மூட்டைகளால் பதிலி செய்யலாம். ( எனது ஆலோசனையின் படி தனது 3 ஏக்கர் நிலத்தில் 1000 தேக்கு மரங்கள் நட்ட ஐ.டி கம்பெனி ஊழியர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனது வயலில் அரிசி ஆலையின் கரித்தூளைக் கொண்டு வந்து கொட்டுகிறார். போக்குவரத்து செலவு கணிசமாக ஆகிறது என்பதால் நான் அதனை ஆதரிப்பதில்லை. இருப்பினும் அவர் அதிகம் தனது வயலில் கரியைக் கொண்டு வந்து கொட்டுகிறார்).

அனல் மின் நிலையங்களில் ஃபிளை ஆஷ் எஞ்சும். அதனை மூட்டைகளில் நிரப்பி அந்த மூட்டைகளைக் கொண்டு வீடு கட்டலாம். ஃபிளை ஆஷ் கற்கள் கட்டுமானத் தொழிலில் பயன்பாட்டில் உள்ளன. 

அரிசி ஆலைகளின் கரித்தூள் தேக்கு பண்ணை வழியாகவும் ஃபிளை ஆஷ் எனது தொழிலின் வழியாகவும் என் கவனத்துக்கு வந்தவை. அவற்றின் மூலம் மாற்று கட்டுமான சாதனங்களில் நானும் என் சிந்தனையை முன்வைத்திருக்கிறேன். 

கோடுகள் சித்திரங்கள்

 அரவிந்த் குப்தா இணையதளத்திலிருந்து தினமும் ஏதாவது ஒரு சிறுநூலை வாசிப்பதை கடந்த சில நாட்களாக வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அதிலும் படங்கள் வரையப்பட்டிருக்கும் நூல்களை அதிகம் தெரிவு செய்கிறேன். கணிணியில் சித்திர நூல்கள் வாசிப்பது விருப்பத்துக்குரியதாக இருக்கிறது. 

இன்று மண்மூட்டைகளாலும் வைக்கோல் கட்டுகளாலும் வீடு கட்டும் முறையை ஒரு நூலில் கண்டேன். என்னுடைய தொழில் கட்டிடக் கட்டுமானம். இன்று கட்டுமானம் மிகச் செலவேறிய ஒன்றாக ஆகியிருக்கிறது. மண்மூட்டைக் கட்டுமானம் என்பது மண்மூட்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி செங்கல் கட்டுமானம் போல் எழுப்புவது. செங்கல் அளவில் சிறியது என்பதால் ஒரு கல்லுக்கும் இன்னொரு கல்லுக்கும் இடையே சேறு அல்லது சிமெண்ட் பூச்சை இணைப்புப் பசையாகப் பயன்படுத்த வேண்டும். மண்மூட்டைக் கட்டுமானத்தில் அது அவசியமில்லை. ஒரு மூட்டை மேல் இன்னொரு மூட்டையை வைக்கலாம். ஒன்றின் பக்கத்தில் இன்னொன்றை வைக்கலாம். அதன் மிகுஎடையின் காரணமாக ஒன்றன் மேல் ஒன்றாக அவை படிந்து கொள்ளும். 

இப்போது வயல்களில் அறுவடைக்குப் பின் எஞ்சும் வைக்கோல் எந்திரங்கள் மூலம் சுருள் வடிவில் சுருட்டப்படுகின்றன. அவ்விதமான வைக்கோல் சுருள்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வீடு கட்டும் முறை ஒன்றை ஒரு நூலில் கண்டேன். நம் நாட்டில் அறுவடைக்குப் பின் வயலில் எஞ்சும் வைக்கோலை விவசாயிகள் தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். அது மிக அதிக கார்பன் உமிழ்வை உருவாக்குகிறது. வைக்கோல் சுருள்கள் கட்டுமானத்தில் பயன்படுமானால் கட்டுமானச் செலவு பெருமளவில் குறையும். 

பொருளியல் வளர்ச்சி நுகர்வு மனநிலையை தீவிரமாக்குகிறது. பொருளியல் வளர்ச்சிக்கும் நுகர்வுக்கும் பிரக்ஞை என்னும் கடிவாளம் தேவை. அவ்விதம் இருந்தால் மட்டுமே அது ஆக்கபூர்வமாக இருக்கும். இல்லையேல் அது அனைவருக்கும் அழிவைக் கொண்டு வரும். 

Monday, 17 November 2025

மழையில் மேற்கொண்ட பணி (நகைச்சுவைக் கட்டுரை)

இரண்டு நாட்களாக நல்ல மழை. இன்று திங்கள். வாரத்தின் முதல் நாள். செய்ய வேண்டிய பணிகள் அனைத்தும் மனதில் வரிசை கட்டி நின்றன. எனது தொழிலில் வேலையில் என்னுடைய பகுதியை மட்டும் நான் செய்து முடித்தால் போதாது. அதனுடன் தொடர்புடைய மற்றவர்களும் அவர்கள் பணியைச் செய்திருக்க வேண்டும். என்னுடைய பணியை எவ்வளவு விரைவாகச் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவில் செய்து விட்டு அடுத்தவர்கள் அவர்கள் பகுதியைச் செய்யட்டும் எனக் காத்திருக்க வேண்டும். சமயத்தில் இவ்விதம் காத்திருப்பதே பணி என்றாகி விடும்.  

சென்ற வாரம் ஒரு பெரிய சொத்து தொடர்பான ஆவணங்களை ஊரிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள ஊரில் இருக்கும் ஒரு வழக்கறிஞரிடம் சட்ட அபிப்ராயம் தெரிந்து கொள்ள கொடுத்திருந்தேன். ஊரில் ஏற்கனவே இரண்டு பேரிடம் சட்ட அபிப்ராயம் கேட்டுக் கொண்டேன். பெரிய சொத்து என்பதாலும் மதிப்பும் பெரியது என்பதாலும் 1 க்கு 3 பேரிடம் கேட்டுக் கொள்ளலாம் என நினைத்தேன். நான் சந்தித்த வழக்கறிஞர் ‘’சார் ! நான் செல்ஃபோன் ரொம்ப குறைவா யூஸ் பண்ணுவன்’’ என்றார். ‘’நானும் அப்படித்தான் சார்’’ என்றேன். ‘’கோர்ட்ல இருக்கும் போது கிளைண்ட் கிட்ட பேசிட்டு இருக்கும் போது ஃபோன் எடுக்க மாட்டன்’’என்றார். ‘’நான் எஸ்.எம்.எஸ் பண்றன் சார் ‘’ என்றேன். 

இன்று காலை நினைவுபடுத்தல் குறுஞ்செய்தி அனுப்பினேன். அவரிடமிருந்து பதில் வந்தது. இன்று மாலை 6.30க்கு அலுவலகத்தில் சந்திக்கவும் என்று. இன்று முழுக்க மழை. மாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து ஒரு குடையை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். மழை என்பதால் பேருந்தில் பயணம் செய்ய விரும்பினேன். பேருந்து நிறுத்தத்தில் சென்று நின்றதுமே பேருந்து வந்தது. இன்று கிளம்பும் போது பயணச்சீட்டுக்கான தொகையை நாணயங்களாக பாக்கெட்டில் வைத்திருந்தேன். ரூ.1, ரூ.2 நாணயங்கள். இப்போது ரூபாய் நாணயங்களின் அளவு மிகவும் சிறிதாகி விட்டது. இரண்டு நாணயங்களும் ஒரே அளவில் இருக்கின்றன. என்ன எழுதியிருக்கிறது என்பதை கண் கூர்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது. வயதாகி விட்டதோ ? பயணச்சீட்டுக்குத் தேவையான நாணயங்களைக் கொடுத்து சீட்டு பெற்றுக் கொண்டேன். 

விதவிதமான மக்கள் உடன் பயணித்தனர். எனக்கு பல விதமான மக்களைப் பார்ப்பதும் அவர்களுடன் உடனிருப்பதும் மகிழ்ச்சிக்குரியவை எப்போதும். 

இறங்க வேண்டிய இடம் வந்தது. 

இறங்கி வழக்கறிஞர் அலுவலகம் நோக்கி நடந்தேன். மழை கொட்டிக் கொண்டிருந்தது. இந்த மழையில் வீட்டிலிருந்து கிளம்பி வந்திருப்பாரா என்ற ஐயம் ஏற்பட்டது. செல்ஃபோன் மூலம் இருக்கிறாரா எனக் கேட்டு விட்டு கிளம்பியிருக்கலாமோ என விசனப்பட்டேன். அவர் அலுவலகம் முன் சென்ற போது நேரம் 6.20. குறித்த நேரத்துக்கு 10 நிமிடம் முன்னதாகவே வந்து விட்டேன் என்ற நிறைவுடன் உள்நுழைந்தேன். வழக்கறிஞர் சில வினாடிகளுக்கு முன்பு தான் வந்திருந்தார். தனது ரெயின் கோட்டை கழற்றி தன் இரு சக்கர வாகனத்தின் மேல் வைத்துக் கொண்டிருந்தார். 

இருவரும் ஒன்றாக அலுவலகம் உள்ளே சென்றோம். 

ஆவணங்கள் குறித்த அவரது அவதானங்களைச் சொன்னார். விஷயத்தை நுணுக்கமாக அணுகியுள்ளார் என்பதைப் புரிந்து கொண்டேன். அவரிடம் ஆவணங்களைப் பெற்று பேருந்து நிறுத்தம் வந்து பேருந்தில் ஏறி ஊர் வந்து மழையில் குடை பிடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.  

நாமரூபம்

 


எனது நண்பர் ஒருவர் கடைவீதியில் கடை வைத்திருக்கிறார். அவர் கடையில் ஐந்து பணியாளர்கள் பணி புரிகின்றனர். எனது வாகனம் ரயில் நிலையத்தில் ‘’பார்க்’’ செய்யப்பட்டிருந்தது. முதல் நாள் நான் ரயிலில் திரும்பாமல் பேருந்தில் திரும்பி விட்டேன். பார்க்கிங் செய்த வாகனத்தை எடுத்து வர வேண்டும் ; எனது நண்பர் கடைக்குச் சென்று அவர் பணியாளர் ஒருவரை என்னுடன் அனுப்பச் சொன்னேன். நண்பரும் அவ்விதமே செய்தார். நண்பரின் இரு சக்கர வாகனத்தில் நாங்கள் இருவரும் பயணித்தோம். 

அந்த பணியாளர் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார் என யூகித்தேன். 

‘’தம்பி ! கடைக்கு புதுசா வேலைக்குச் சேந்தியா? உன்னை நான் பாத்தது இல்லயே?’’

‘’ஆமாம் சார் ! ஒரு வாரம் ஆகுது’’

‘’ஓ அப்படியா! உன் பேரு என்ன?’’

‘’திருமாவளவன்’’

’’உன் பேருக்கு என்ன அர்த்தம்?’’

அந்த தம்பி யோசித்தான். ‘’இது ஒருத்தரோட பேரு. தமிழ்நாட்டுல இருக்கற கட்சித் தலைவர் ஒருத்தரோட பேரு’’ 

‘’நீ சொல்ற பதில் சரிதான் தம்பி . உனக்கு அவரோட பேரை வச்சிருக்காங்க. உனக்கு இப்ப 21 வயசு இருக்குமா. நீ பொறந்தப்ப அவரு தமிழ்நாட்டுல ஒரு பெரிய ஃபோர்ஸ்ஸா வளந்துட்டு இருந்தாரு. அவர் மேல இருக்கற அபிமானத்துல உனக்கு அவரோட பேரை வச்சிருக்காங்க. அவருக்கு இப்ப 60 வயசு இருக்குமா ? அறுபது வருஷம் முன்னாடியே அவருக்கு ‘’திருமாவளவன்’’னு பேரு வச்சிருக்காங்களே அது யாரோட பேரு?’’

தம்பி நான் சொன்ன கோணத்தில் யோசித்திருக்கவில்லை. 

‘’அதாவது தம்பி , காவிரி பாயற பகுதி எல்லாமே ரொம்ப வளமான பகுதிகள். அதனால காவிரி பாயற சோழநாட்டுக்கு வளநாடுன்னு பேரு. வளநாட்டை ஆட்சி செய்யறதால சோழ அரசர்களுக்கு ’’வளவன்’’னு பேரு உண்டு. மாவளவன் அப்படின்னா பெரிய நாட்டை ஆள்றவன்னு அர்த்தம். திருமாவளவன் அப்படின்னா செல்வமும் வளமும் கொண்ட சோழ நாட்டுக்கு அரசன்னு அர்த்தம். திருமாவளவன் என்னும் பேரு சோழ அரசர்களைக் குறிக்கும் பேர் என்றாலும் அது கல்லணை கட்டிய கரிகாற்சோழனை சிறப்பிச்சு சொல்லப்படற பேர்’’

தம்பிக்கு தன் பெயருக்கு பின்னால் இவ்வளவு பெரிய விளக்கம் இருக்கிறதா என்னும் வியப்பு. 

‘’தம்பி ! எந்த இண்டர்வியூக்கு போனாலும் முதல்ல கேக்கற கேள்வி இண்ட்ர்வியூ அட்டண்ட் பண்றவரோட பேருக்கு என்ன அர்த்தம் என்பதாகத்தான் இருக்கும். திருமாவளவன் மாநிலக் காவல்துறைல ‘’ஃபாரன்ஸிக் டிபார்ட்மெண்ட்’’ல வேலை செஞ்சார். அப்ப அந்த வேலைக்கு ஒரு இண்டர்வியூ நடக்குது. அவரை இண்டர்வியூ செய்யறவர் ஃபாரன்சிக் டிபார்ட்மெண்ட் அறிஞரான சந்திரசேகர் என்பவர். அவர் திருமாவளவன் கிட்ட கேட்ட முதல் கேள்வி திருமாவளவன் யாரோட பேர் என்று. அதுக்கு கல்லணை கட்டிய கரிகாற்சோழனோட பேருன்னு திருமா பதில் சொல்றார். இதை அவரு விகடன் டிவி இண்டர்வியூல சொல்லியிருக்கார்.’’

பெயருக்குப் பின்னால் இவ்வளவு விஷயங்களா என தம்பி மேலும் வியந்து மௌனமாக இருந்தான். 

‘’உன்கிட்ட இன்னொரு கேள்வி கேக்கறன்?’’

தம்பி இவர் என்ன கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் என எண்ணியிருப்பான். இருந்தாலும் ‘’கேளுங்க சார்’’ என்றான். 



‘’அம்பேத்கருக்கு அவரோட பெற்றோர்கள் வச்ச பேரு என்ன?’’

தம்பி ‘’அம்பேத்கர்’’ என்றான்.

‘’இல்லை. அவரோட பெற்றோர் அவருக்கு வச்ச பேரு பீமராவ். அவர் ரொம்ப நல்லா படிக்கக்கூடியவர். சின்ன வயசுலயே அவருக்கு படிப்பு மேல நிறைய ஆர்வம் இருந்தது. அவர் ரொம்ப நல்லா ஸ்கூல்ல படிச்சார். அந்த காலகட்டத்துல நம்ம சமூகத்துல மனுஷங்களுக்கு ஜாதிவெறி ரொம்ப ஜாஸ்தியா இருந்துச்சு. இப்பவும் இருக்கு. ஆனா பொது இடத்துல வெளிக்காட்ட முடியாம உள்ளுக்குள்ள அமுக்கி வச்சுக்கிறாங்க. அவரை எல்லா ஸ்டூடண்ட்ஸ் போலயும் பெஞ்ச்ல ஒக்காந்து பாடம் கேட்க அனுமதிக்க மாட்டாங்க. அவர் தரையிலதான் ஒக்காரணும். மத்த ஸ்டூடண்ட்ஸ் கிட்ட இருந்து தள்ளி தான் இருக்கணும். அப்போ அவரோட ஸ்கூல் க்கு ஒரு ஆசிரியர் வந்தார். அவர் பிறப்பால் பிராமண ஜாதியை சேர்ந்தவர். அவர் மனசுல ஜாதி வேறுபாடு கிடையாது. கடவுள் படைக்கற ஜீவராசிகள்ள ஒன்னா இருக்கற மனுஷங்க கிட்ட வித்தியாசம் பாக்கறது கடவுளை அவமதிக்கறதுன்னு அவர் நினைச்சார். பீமராவ் படிக்க நிறைய ஹெல்ப் பண்ணார். பீமராவ்வை தினமும் தன்னோட சேர்ந்து மதிய உணவு சாப்பிடச் சொன்னார். அவருக்கு நிறைய ஊக்கம் கொடுத்தார். அந்த ஆசிரியரோட பேருதான் அம்பேத்கர். அவரோட ஞாபகமா பீமராவ் தன்னோட பேரோட தன்னோட ஆசிரியர் பெயரையும் சேர்த்துக்கிட்டார். பீமராவ் அம்பேத்கர். பி. ஆர். அம்பேத்கர்.’’

நாங்கள் சென்று சேர வேண்டிய இடம் வந்தது. 

Sunday, 16 November 2025

மாபெரும் சூதாட்டம் - அலைபேசி அழைப்பு

இன்று நான் மிகவும் நேசிக்கும் இளம் படைப்பாளியொருவர் அலைபேசியில் அழைத்து ‘’மாபெரும் சூதாட்டம்’’ சிறுகதை குறித்து பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. இந்த வாரத்தில் மேலும் சில வாசகர்களும் கதை குறித்து உரையாடினர்.  

மழையுடன் வாழ்தல்

 இன்று காவிரி கடைமுகம். ஐப்பசி மாதம் முழுமையும் மயிலாடுதுறையில் தங்கி முப்பது நாளும் காவிரியில் நீராடும் வழக்கம் தமிழகத்தில் பலருக்கு இருந்திருக்கிறது. இப்போது ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஐப்பசி கடைசி நாளன்று காவிரியில் நீராடும் வழக்கம் கொண்டிருக்கிறார்கள். ஊர்க்காரர்கள் ஐப்பசி மாதத்தில் ஏதேனும் ஒருநாள் காவிரியில் நீராடுகிறார்கள். இன்று காலைப் பொழுதில் சற்றே பெரிய கட்டுரை ஒன்றை எழுத வேண்டியிருந்தது. மதியம் வரை அந்த பணி நீடித்தது. அப்பணி முடியும் சமயம் இங்கே மழைப்பொழிவு துவங்கியது. என்னுடைய தொழில் நிமித்தமாக சில ஆவணங்களை ஸ்கேன் செய்ய வேண்டியிருந்தது. கடைத்தெருவுக்குச் சென்று ஞாயிறன்றும் திறந்திருந்த கடை ஒன்றில் அப்பணியை அளித்து விட்டு வந்தேன். வரும் போது நல்ல மழை. மழையில் முழுமையாக நனைந்தேன். மழையில் நனைவதும் நதி நீராட்டுதான் என எண்ணினேன். மனிதர்கள் எந்த அளவு மழையுடன் இணைந்திருக்கிறார்களோ அந்த அளவு மனிதர்களை நலம் சூழ்ந்திருக்கும் என எண்ணிக் கொண்டேன். 

Saturday, 15 November 2025

அமர் சித்ர கதா - பாபாசாகேப் அம்பேத்கர்

 

அரவிந்த் குப்தா இணையதளத்தில் நூற்றுக்கணக்கான நூல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை தினமும் துழாவி வருகிறேன். அதில் இன்று கண்டடைந்த நூல் அமர் சித்ர கதாவின் பாபாசாகேப் அம்பேத்கர் என்னும் நூல். 

சில மனித முகங்கள் தீவிரமான வசீகரம் கொண்டவை. அம்பேத்கரின் முகம் அத்தகையது. இன்னும் நாவில் மொழி படியா குழந்தையின் முகத்தைக் கொண்டிருப்பவர் அம்பேத்கர். தன் முதிய வயதில் கூட அதே குழந்தை முகத்தைக் கொண்டிருந்தார். 

எத்தனை முறை வாசித்தாலும் ஒவ்வொரு முறையும் அம்பேத்கரின் வாழ்க்கை என்பது வாசிப்பவர் நெஞ்சை இரங்கச் செய்வது. விடாமுயற்சியின் மனித உருவம் அம்பேத்கர். மானுடன் அடைய சாத்தியமான ஆக உன்னதமான ஆகப் பெரிய மனோநிலையை தனது வாழ்நாளில் தன்னியல்பாக அடைந்தவர் அம்பேத்கர். புத்தர்பிரானின் அருள் அம்பேத்கரை நிறைத்தது நம் நாட்டின் நல்லூழ். 

அம்பேத்கர் பௌத்தத்தைத் தழுவிய நாகபுரியின் தீக்‌ஷா பூமிக்குச் சென்றிருக்கிறேன். அந்த நினைவுகள் எப்போதும் புனிதம் மிக்கவை. 

சங்கம் சரணம் கச்சாமி  

***

சிராக் பாஸ்வான் : நம்பிக்கை நட்சத்திரம்

 

பிராந்தியப் பார்வையைத் தாண்டி தேசம் குறித்த முழுமையான பார்வையை சிந்தனையைக் கொண்டிருக்கும் தேசியக் கட்சிகள் மீது நான் எப்போதும் நம்பிக்கை கொள்வேன். ஜனநாயகம் மட்டுமே வறிய நிலையில் இருக்கும் நாட்டின் கடைசி மனிதனுக்கும் வாக்குரிமையை அளித்து ஆட்சியில் அந்த மனிதனுக்கு இருக்கும் பங்கை உறுதிப்படுத்துகிறது. வாக்குரிமை கிடைத்து விடுவதால் அவனுக்கு அனைத்தும் கிடைத்து விடுகிறதா என்பது எப்போதும் எழுப்பப்படும் கேள்வி எனினும் அதற்கான பதில் ஜனநாயகம் மட்டுமே அவனுக்கு குறைந்தபட்சம் வாக்குரிமையை அளித்து அதனை ஒரு முதற்தொடக்கமாக நிலைநிறுத்துகிறது என்பதே. எனது அரசியல் புரிதலில் நான் தேசிய கட்சிகளின் மீது நம்பிக்கை கொள்வதற்கு காரணம் அவையே பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களை ஜனநாயகத்தின் உயர் அதிகாரத்துக்குக் கொண்டு வந்துள்ளன என்பதே. இந்திய தேசிய காங்கிரஸ் (இ) அன்றும் இன்றும் பல பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களை தாம் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களாக ஆக்கியிருக்கிறது. சஞ்சீவையா மற்றும் அஞ்சையா என்ற இரண்டு பட்டியல் சாதியைச் சார்ந்த தலைவர்களை ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் முதலமைச்சர் ஆக்கியிருக்கிறது. போலா பஸ்வான் சாஸ்திரி என்னும் பட்டியல் சாதியைச் சார்ந்த தலைவரை பிகாரில் காங்கிரஸ் முதலமைச்சர் ஆக்கியிருக்கிறது. மகாராஷ்டிராவில் முதலமைச்சராயிருந்த சுஷில் குமார் ஷிண்டே என்னும் காங்கிரஸ்காரர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர். காங்கிரஸ் நாட்டின் ஜனநாயக அரசியலுக்கு வழங்கிய பெரும் பங்களிப்பு இந்த நிகழ்வுகள்.பட்டியல் சாதியைச் சார்ந்த ராம்நாத் கோவிந்த் அவர்களையும் பட்டியல் பழங்குடியினர் சாதியைச் சார்ந்த திரௌபதி முர்மு அவர்களையும் நாட்டின் குடியரசுத் தலைவராக ஆக்கியது பா.ஜ.க. இந்த நிகழ்வுகள் பா.ஜ.க நாட்டின் ஜனநாயக அரசியலுக்கு வழங்கிய பெரும் பங்களிப்புகள். நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் பட்டியல் சாதியினர் மொத்த வாக்காளர்களில் 18 லிருந்து 23 சதவீதம் வரை இருக்கின்றனர். எல்லா அரசியல் கட்சிகளும் அவர்களுடைய வாக்குகளைப் பெறுவதில் பெரும் முனைப்பு காட்டுகின்றனர். நாட்டின் உழைப்பாளர்களான விவசாயத் தொழிலாளர்களான பட்டியல் சாதி மக்கள் பொருளியல் தன்னிறைவைப் பெற்றால் மட்டுமே ஜனநாயகம் அவர்களை முழுமையாகச் சென்றடைந்துள்ளது என்று பொருள். நாம் - நமது தேசம்- அதனை நோக்கி மெல்ல பயணிக்கிறோம். இன்னும் விரைவாகப் பயணிக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.   ( இந்திய அரசியல் என்பது இடைநிலை சாதிகளின் அதிகார அரசியல். முன்னர் அது முன்னேறிய சாதிகளின் அதிகார அரசியலாக இருந்தது. இப்போது இடைநிலை சாதிகளின் அதிகார அரசியலாக மாறியிருக்கிறது. இந்திய தேசிய காங்கிரஸ் (இ) பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களை உயர் அதிகாரத்துக்கு கொண்டு வந்துள்ளது என்பதைப் பதிவு செய்யும் அதே நேரத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்த முதலமைச்சர் ஒருவரிடம் காங்கிரஸ் எவ்விதம் மோசமான முறையில் நடந்து கொண்டது என்பதையும் குறிப்பிட வேண்டும். ஆந்திரப் பிரதேசம் நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து காங்கிரஸை மிகத் தீவிரமாக ஆதரிக்கும் மாநிலமாக இருந்தது. நெருக்கடி நிலைப் பிரகடனத்துக்குப் பின் நடைபெற்ற முதல் தேர்தலில் நாடு முழுவதும் காங்கிரஸ் தோல்வி கண்ட போது கூட ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கணிசமாக வெற்றி பெற்றது. அத்தகைய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்துக்கு நாட்டின் பிரதமராயிருந்த இந்திரா காந்தி வருகை புரிந்தார். அப்போது ஹைதராபாத் விமான நிலையத்தில் மக்கள் பெருந்திரளாகக் கூடியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட நெருக்கடியில் கோபமடைந்த ராஜிவ் காந்தி ( இந்திராவின் மகன் - அப்போது அவர் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை) ஆந்திரப் பிரதேச முதலமைச்சரான பட்டியல் சாதியைச் சார்ந்த அஞ்சையாவை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் 5 கோடி ஆந்திர மக்களின் சுயமரியாதைக்கு இழுக்கு எனக் கூறிய என்.டி. ராம ராவ் ‘’தெலுங்கு தேசம்’’ என்னும் கட்சியைத் தொடங்கி காங்கிரஸை அதிகாரத்திலிருந்து நீக்கி விட்டு ஆட்சிக்கு வந்தார். ) 

பொருளியல் அடுக்கில் கீழ் இடத்தில் இருக்கிறார்கள் பட்டியல் சாதிகள். அவர்கள் உழைப்பாளர்களாகவும் தொழிலாளர்களாகவும் இருப்பதால் சமூகத்தின் பொருளியல் சுழற்சியில் அவர்களின் இடம் கடைசி இடமாகவே இருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்துள்ள 75 ஆண்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள் இந்த விஷயத்தில் நடந்திருப்பினும் இன்னும் அதிக மாற்றங்கள் எப்போதும் தேவைப்படுகின்றன. பட்டியல் சாதி மக்கள் சுயதொழிலிலும் வணிகத்திலும் கணிசமான அளவு ஈடுபடும் நிலை எப்போது ஏற்படுகிறதோ அப்போதே அவர்களின் தன்னிறைவு எட்டப்பட்டதாகப் பொருள். 

இடைநிலை சாதிகள் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அரசியலும் இந்திய அதிகார வர்க்கமும் பட்டியல் சாதியினருக்கு என்ன செய்து விட விரும்பும் என்பது மிகப் பெரிய கேள்வியாக இருப்பினும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதனைக் குறைந்தபட்சம் பட்டியல் சாதியினர் பெறுவது கூட இடைவிடாமல் இந்திய அதிகார அரசியலில் நிகழ்ந்து கொண்டேயிருக்க வேண்டும். 

நடந்து முடிந்த பிகார் தேர்தலில் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த லோக் ஜனசக்தி கட்சி போட்டியிட்ட 29 இடங்களில் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் குறிப்பிடத் தக்க ஒரு விஷயம் என்னவெனில் லோக் ஜனசக்தி வெற்றி பெற்றுள்ள 19 இடங்களில் 4 இடங்கள் மட்டுமே பட்டியல் சாதியினருக்கான ரிசர்வ் தொகுதிகள். மீதி 15 இடங்களும் பொதுத் தொகுதிகள் ஆகும். பிகாரின் மொத்த சட்டமன்றத் தொகுதிகள் 243. அதில் பட்டியல் சாதியினருக்கான ரிசர்வ் தொகுதிகள் 40. 

நாடும் சமூகமும் பட்டியல் சாதியினருக்கு தனிக் கவனம் அளிக்க வேண்டும். அந்த தனிக் கவனம் அவர்களுக்கு அளிக்கப்பட எல்லா விதமான சமூக, அரசியல், பொருளாதார காரணங்களும் இருந்து கொண்டேயிருக்கின்றன. நாட்டையும் சமூகத்தையும் காணும் அவதானிக்கும் எவராலும் இதனை அறிய முடியும் ; உணர முடியும். 

தமிழ்நாடும் பிகாரும் சட்டப் பேரவை உறுப்பினர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஏறக்குறைய சமமானவை. பிகாரின் சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கை 243. தமிழகத்தில் 234. பிகாரின் ரிசர்வ் தொகுதிகள் 40. தமிழகத்தின் ரிசர்வ் தொகுதிகள் 42. பிகாரில் பட்டியல் சாதியினர் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதம் இருக்கின்றனர். தமிழகத்தில் பட்டியல் சாதியினர் 25 சதவீதத்தினர் இருக்கின்றனர். 

தமிழகத்தில் பட்டியல் சாதியினர் முன்னேற்றத்தை தங்கள் அரசியல் லட்சியமாகக் கொண்டுள்ள பட்டியல் சாதியைச் சார்ந்த தலைவர்கள் சிராக் பாஸ்வானின் அரசியலை தங்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் இருக்கும் பட்டியல் சாதி மக்களுக்கு அதனால் பலவிதமான நன்மைகள் நிகழும். சிராக் பாஸ்வான் பொதுத் தொகுதிகளில் தனது கட்சி சார்பாக பல பட்டியல் சாதி அல்லாத வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்திருக்கிறார். அதன் மூலம் மாநில அரசியலிலும் தேசிய அரசியலிலும் வலுவான ஒரு சக்தியாக நிலைகொண்டுள்ளார். தமிழகத்துக்கும் சிராக் பாஸ்வான் போன்ற ஒரு தலைவர் தேவை.