மானுட இனம் உருவான காலம் முதல் சேர்ந்து வாழ்வதற்கான வாழிடங்களை மானுடர் உருவாக்கிக் கொண்டேயிருக்கின்றனர். தொல் பழம் காலத்திலிருந்தே மானுடர்கள் மாநகரங்களை நிர்மாணிக்க விரும்பி அவற்றை நிர்மாணித்திருக்கின்றனர். உலக வரலாற்றில் அவ்வாறான மாநகரங்கள் என பலவற்றை அடையாளப்படுத்த முடியும். காசி, ஹஸ்தினாபுரம், இந்திரப் பிரஸ்தம், ரோம், ஏதென்ஸ், பாக்தாத், பாடலிபுத்திரம், பூம்புகார், இஸ்தான்புல், மதுரை, காஞ்சி, தஞ்சாவூர், தில்லி, விஜயநகர், லண்டன், பாரிஸ், பெர்லின், மாஸ்கோ, வியன்னா, டோக்கியோ, பீகிங், நியூயார்க் என மாநகரங்கள் உருவாகி இன்று வரை நிலைகொண்டிருக்கின்றன. மிகப் பெரிதாக உருவாகி பின்னர் கரைந்து போன நகரங்களும் உண்டு.
ஒரு மாநகரின் உருவாக்கம் என்பது பல விஷயங்கள் இணைந்து கலந்து முயங்கி உருவாகி வருவதாகும். ஒரு மாநகரம் உருவாக்கப்பட பெரும் செல்வம் தேவை. அந்த செல்வத்தை அளிக்கும் வலிமையான தொலைநோக்கு கொண்ட அரசு தேவை. ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்களை அங்கே குடியமர்த்த வேண்டும் எனில் அத்தனை பேருக்கும் உருவாக இருக்கும் நகரின் மீது நம்பிக்கை தேவை. தொழிலாளர்களின் தீரா உழைப்பு தேவை. நீர்நிலைகள் போதிய அளவில் தேவை. கல்விச்சாலைகளும் ஓவிய சிற்ப இசைக் கூடங்களும் தேவை. விளையாட்டு மைதானங்கள் தேவை.
இத்தனை அம்சங்களுடன் இன்று உலக நாடுகளில் புதிதாக ஒரு மாநகரம் உருவாகுமா என்பது ஐயமே. எந்த அரசும் இருக்கும் மாநகரங்களைப் பராமரிக்க செலவிடுமே தவிர புதிதாக உருவாக்குமா என்பது ஐயமே. என்னுடைய அவதானத்தில் பூடான் ஒரு மாபெரும் மாநகரத்தை நிர்மாணிக்கலாம். அதன் புவியியல் அமைப்பு எவ்விதம் அதற்கு உகந்ததாக இருக்கும் என்பது தெரியவில்லை. பூடானுக்கு பௌத்தப் பின்னணி இருக்கிறது. பெரும் பண்பாட்டுப் பாரம்பர்யம் கொண்ட தேசம் என்பதால் உலகின் ஆன்மீக, இலக்கிய, கலை, நுண்கலை, கைவினைக் கலை, கல்வி ஆகியவற்றுக்கான ஒரு மாநகரை அவர்கள் நிர்மாணிக்க சாத்தியம் உள்ளது. இருப்பினும் அவ்வாறு ஒரு மாநகரம் உருவானால் அதன் நிதித்தேவையை பூடானால் எவ்விதம் பூர்த்தி செய்ய முடியும் என்பது பெரிய கேள்வி. பூடானுக்கு அவ்வளவு பொருளியல் பலம் இல்லை.
நம் நாட்டில் ஒரு விஷயத்தைக் கவனித்துப் பார்க்கலாம். பெரும் மாநகரங்கள் பல நம் நாட்டில் உருவாகியிருந்த காலத்திலும் கிராமங்கள் வலிமையாக நிலை கொண்டிருந்தன. எண்ணிப் பார்த்தால் கிராமங்களின் பலத்தில் தான் மாநகரங்கள் நிலை கொண்டன. இன்னும் அணுக்கமாக எண்ணிப் பார்த்தால் மாந்கரங்களை நிர்மாணிக்கத் தொடங்கும் முன்னே நம் நாட்டில் கிராம நிர்மாணம் தொடங்கி விட்டது.
நாம் விரும்பும் விதத்தில் ஒரு கிராமத்தை நிர்மாணித்துக் கொள்ள அரசோ அரசின் நிதியோ தேவையில்லை. சேர்ந்து வாழ நினைக்கும் சிலர் சேர்ந்து யோசித்தால் கூட மேன்மை பொருந்திய எழிலார்ந்த கிராமம் ஒன்றை உருவாக்கிட முடியும். ஆழ்ந்து யோசிக்க வேண்டிய விஷயம் இது.
.svg.png)