Saturday, 8 November 2025

ஓர் அறிஞர் காட்டும் உலகம்

 நூல் : கல்லெழும் விதை 

பக்கம் : 282 

ருஷ்ய மொழியில் ‘’ராதுகா’’ என்றால் வானவில் என்று பொருள். சோவியத் யூனியன் ’’ராதுகா பதிப்பகம்’’ என ஒரு பதிப்பகத்தை நடத்தியது. உலகின் பல்வேறு மொழிகளில் குழந்தைகளுக்கான நூல்களை அப்பதிப்பகம் வெளியிட்டது. ராதுகா பதிப்பகத்தின் பல நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன. கெட்டியான அட்டை, தடிமனான தாள்கள், அழுத்தமான அச்சமைப்பு ஆகியவை அந்நூல்களின் சிறப்பம்சங்கள். அந்நூல்களின் வடிவமைப்பே அவற்றை மீண்டும் மீண்டும் எடுத்து வாசிக்கத் தூண்டக்கூடியவை. ராதுகா பதிப்பகத்தின் வெளியீடுகளில் ஒன்றான ‘’Mathematics can be fun'' என்ற நூலை வாசித்தது நினைவில் பசுமையாக இருக்கிறது. அந்நூலின் பல புதிர்கள் பல தகவல்கள் கற்பனையைத் தூண்டக் கூடியவை. சிந்திப்பதற்கு இனிமையானவை . 

அதில் ஒரு புதிர் வரும் : நம் முன் ஒரு சதுரங்கப் பலகை இருக்கிறது. அதில் 8 X 8 என்ற அளவில் 64 கட்டங்கள் உள்ளன. முதல் கட்டத்தில் ஒரு கோதுமை தானியம் வைக்கப்படுகிறது. இரண்டாம் கட்டத்தில் இரண்டு கோதுமை தானியம் வைக்கப்படுகிறது. மூன்றாம் கட்டத்தில் நான்கு தானியம் வைக்கப்படுகிறது. இவ்விதம் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரித்துக் கொண்டே சென்றால் 64 வது கட்டத்தில் எத்தனை தானியங்கள் இருக்கும் என்பது புதிர். 

அந்த புதிருக்கான விடைய அளித்திருப்பார்கள் . அதாவது ஆழி சூழ் உலகு முழுவதையும் மேலும் ஆழியின் பரப்பளவையும் கோதுமை வயலாக்குவதுடன் சந்திரனின் பரப்பு முழுவதையும் கோதுமை வயலாக்கினால் எவ்வளவு கோதுமை விளையுமோ அவ்வளவு கோதுமையை சதுரங்கப் பலகையின் கடைசி கட்டத்தில் வைக்க வேண்டியிருக்கும் என்று கூறியிருப்பார்கள். முதல் கட்டம் ஒரு கோதுமை தானியம் என்பது 2ன் அடுக்கு பூஜ்யம். 64 வது கட்டம் என்பது 2ன் அடுக்கு 64. அது அத்தனை அதிகமானது. 

எனக்கு இந்த புதிர் அளித்த இனிமை என்பது அளப்பரியது. 

அத்தகைய இனிமையை பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு தாவரவியல் நூல் ஒன்றை வாசித்து இன்று அடைந்தேன். அந்த நூலின் பெயர் ‘’கல்லெழும் விதை’’. அதன் ஆசிரியர் அறிஞர் லோகமாதேவி. உண்மையில் அவரது இந்த நூலை தாவரவியல் நூல் என்று மட்டும் குறிப்பிடுவது அந்நூலின் முழுமையான பெருமையை எடுத்துரைக்காது ; அந்நூல் அறிவியல் நூல். இருப்பினும் அதில் இலக்கியம், வரலாறு, மானுடவியல், புவியியல் ஆகியவையும் உள்ளன. 

காஃபி குறித்த அத்தியாயமே நூலின் முதல் அத்தியாயம். காஃபி பயிர் குறித்து ஏகப்பட்ட சுவாரசியமான நுண்ணிய விவரணைகள் இதில் உள்ளன. இந்திய தேசத்துக்கு காஃபி பயிர் வந்தது குறித்து உலவும் கதை ஒன்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நம் நாட்டின் மேற்கு கடற்கரைக்கு அருகில் இருக்கும் சிக்மகளூர் பகுதியைச் சேர்ந்த சூஃபி துறவியொருவர் மெக்காவுக்கு செல்கிறார். அங்கே அளிக்கப்படும் பானம் அவர் அதுவரை அருந்தியிராதது. அந்த பானத்தின் சுவையால் ஈர்க்கப்பட்டு அதனை தன்னுடன் இந்தியாவுக்குக் கொண்டு வர எண்ணுகிறார். ஆனால் அந்த பானம் எந்த தாவரத்தின் கொட்டையிலிருந்து தயாராகிறதோ அதனை அராபியர்கள் அதன் பச்சைத்தன்மையை நீக்கி வறுத்தே மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். அந்த பானத்தின் கொட்டை தங்கள் வழியே வேறு எந்த நாட்டுக்கும் சென்று விடக் கூடாது என்பதில் அவர்கள் தீவிரமாக இருக்கின்றனர். சூஃபி துறவி எப்படியோ அந்த தாவரத்தின் ஏழு பச்சைக் கொட்டைகளை தன்னுடைய நீண்ட அடர்த்தியான தாடியில் மறைத்து இந்தியாவின் மேற்குக் கரைக்கு சிக்மகளூருக்குக் கொண்டு வந்து விடுகிறார். அந்த 7 கொட்டைகள் முளைக்க வைக்கப்பட்டே இந்தியாவில் காஃபி உற்பத்தி துவங்கியது என்கிறார் நூலாசிரியர். கர்நாடகாவின் பிரபலமான காஃபித்தூள் நிறுவனங்களும் காஃபி கடைகளும் நீண்ட அடர்தாடி கொண்ட சூஃபி ஒருவரின் படத்தை தங்கள் சின்னமாக வைத்திருப்பதை சுட்டுகிறார் ஆசிரியர். 

மெக்காவில் ஹஜ் பயணம் வரும் யாத்ரிகர்களுக்கு காஃபி அளிக்கப்படுகிறது. திடீரென காஃபி ஒரு போதைப்பொருள் என ஒரு கருத்து பரவுகிறது. அரேபிய அரசாங்கம் காஃபியை நாடு முழுவதும் தடை செய்கிறது. காஃபி தடை செய்யப்பட்டதைக் கண்டித்து அரேபியா முழுவதும் மக்கள் பெரும் ரகளையில் ஈடுபடுகின்றனர். பின்னர் அரேபிய அரசாங்கம் காஃபி தடையை ரத்து செய்து ஆணை பிறப்பிக்கிறது. 

மேற்படி இரு சம்பவங்களும் பொது யுகம் 15ம் நூற்றாண்டில் நிகழ்ந்திருக்கக் கூடும்!

நீலகிரி மலைப்பகுதியில் பழங்குடிகள் ‘’ஆரோக்கியப் பச்சை’’ என்னும் தாவரத்தை ஆற்றல் தரும் உணவாக உண்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். மலையேற்றம் சென்ற குழு ஒன்று அந்த தாவரத்தின் மகத்துவத்தை உலகுக்கு பறைசாற்றுகிறது. ‘’ஜீவனி’’ என்ற பெயரில் அந்த தாவரத்தின் பொடி பல்வேறு சவால்களை சமாளித்து விற்பனைக்கு வருகிறது. இதைக் குறித்த கட்டுரை நூலின் இரண்டாம் அத்தியாயம். 

பாப்பரஸ் என்ற தாவரம் பதப்படுத்தப்பட்டு அதில் மனிதர்கள் மசி கொண்டு எழுதியிருக்கிறார்கள். இந்த விபரத்தை கிளியோபட்ரா வாழ்வில் அவருக்கு அளிக்கப்பட்ட பரிசு ஒன்றிலிருந்து தொடங்கி மூன்றாம் அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. 

வினாடி வினாக்களில் அதிகம் கேட்கப்படும் கேள்வி ‘’ சாக்ரடீஸுக்கு அளிக்கப்பட்ட நஞ்சின் பெயர் என்ன?’’ என்பது. ஹெம்லாக் என்பது அந்த வினாவுக்கான விடை. ஹெம்லாக் தாவரம் குறித்த கட்டுரையில் ஒட்டு மொத்த சாக்ரடீஸின் வாழ்வை மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். இதனை வாசிப்பவர்கள் சாக்ரடீஸையும் மறக்க மாட்டார்கள்; ஹெம்லாக்கையும் மறக்க மாட்டார்கள். 

சில ஜப்பானிய உணவு வகைகளைக் குறித்த அத்தியாயங்களை வாசிப்பவர்களை ஜப்பான் தேசத்தில் தற்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்களாகவும் சஞ்சரித்துக் கொண்டிருப்பவர்களாகவும் தன் சொற்களின் மாயத்தால் ஆக்கி விடுகிறார் ஆசிரியர். இந்த நூலை வாசிப்பவர்களில் கணிசமானோர் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கும் இந்த உணவு வகைகளுக்காகவேனும் வாழ்வில் ஒரு முறையாவது ஜப்பான் செல்வார்கள் என்று துணிந்து சொல்லலாம் !

தர்ப்பை புல் குறித்து எழுதப்பட்டிருக்கும் அத்தியாயம் மிகச் சிறப்பானது. 

லினன் துணி குறித்து எழுதப்பட்டிருக்கும் அத்தியாயம் இந்நூலின் உச்சம். 

குற்றப் புலனாய்வுத் துறையில் தாவரவியல் எவ்விதம் உதவியிருக்கிறது என்பதைக் குறிப்பிடும் அத்தியாயம் ஒரு வேகப்புனைவு நாவலை வாசிக்கும் அனுபவத்தைத் தந்தது. 

அரிசி, கடுகு, அன்னாசி, சோற்றுக்கற்றாழை ஆகிய்வை குறித்தும் சிறப்பாக சுவாரசியமாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். 

இந்நூலை வாசித்த பின் எந்த வாசகனும் இதுவரை பார்த்த கவனித்த புரிந்து கொண்ட உள்வாங்கிக் கொண்ட எண்ணிக் கொள்ளும் தாவர உலகத்துக்கும் இனி அவன் காணப் போகும் கவனிக்க இருக்கும் புரிந்து கொள்ள இருக்கும் உள்வாங்க இருக்கும் எண்ணப் போகும் தாவர உலகுக்கும் பெரும் தூரம் இருக்கும். 

சதுரங்கப் பலகையின் முதல் கட்டத்துக்கும் 64ம் கட்டத்துக்கும் இருக்கும் தூரத்தைப் போல !   

ஜனநாயக அரசியல் - ஒரு விளக்கம் (நகைச்சுவைக் கட்டுரை)

நேற்று ஜனநாயக அரசியல் (நகைச்சுவைக் கட்டுரை) என்று ஒரு நகைச்சுவைக் கட்டுரையை எழுதினேன். எழுதும் போதும் எழுதிய பின்னும் மனதில் ஒரு விஷயம் சிறு சஞ்சலம் ஒன்றைத் தோற்றுவித்திருந்தது. அது என்னவெனில் தமிழ்ச் சமூகத்துக்கு ஜனநாயக அரசியல் 75 ஆண்டுகால பழக்கம் கொண்டது என எழுதியிருந்தேன். இருப்பினும் இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலம் முதலே இங்கே கட்சி அரசியல் தீவிரமாக இருந்திருக்கிறது. அப்படியெனில் 75 ஆண்டு காலம் எனக் குறிப்பிட்டிருப்பது சரியான தகவலா என்ற சஞ்சலம் இருந்தது.  

இன்று காலை அதற்கான பதில் என் மனதுக்குக் கிடைத்தது. நாடு சுதந்திரம் அடைந்து 1952ம் ஆண்டு முதல் பொதுத்தேர்தல் நடந்த போது தான் நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் வாக்குரிமை கிடைத்திருக்கிறது. அதற்கு முன் பிரிட்டிஷ் ஆட்சியில் நடந்த தேர்தல்களில் சொத்துரிமை உடையவர்களும் பட்டம் பெற்றவர்களும் மட்டும் வாக்களித்திருக்கிறார்கள். 

இன்றைய தேதிப்படி கணக்கிட்டால் கூட ஒரு கிராமத்தின் மக்கள்தொகை 3000 எனில் அதில் சொத்துரிமை உடையவர்கள் என்று அதிகபட்சம் 300 பேர் இருக்கக் கூடும். அந்த காலகட்டத்தில் எழுத்தறிவு சதவீதம் 10 சதவீதமாக இருந்திருக்கிறது. எழுத்தறிவே 10 சதவீதம் என்றால் பட்டம் பெற்றவர்கள் 1 சதவீதம் ஆக இருந்திருப்பார்கள். 3000 மக்கள்தொகை கொண்ட கிராமத்தில் 300 பேர் வாக்களிக்கும் உரிமை பெற்றிருப்பார்கள். 

ஏழ்மை நிலையில் இருப்பவர்கள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு வாக்குரிமையே இருந்திருக்காது. 

75 ஆண்டுகளாகவே ஜனநாயக தேர்தல் அதிகார அரசியல் தமிழ்ச்சமூகத்துக்கு அறிமுகமாகியிருக்கிறது எனக் கூறியது சரியான கூற்றே என்னும் புரிதலை அடைந்தேன்.  

Friday, 7 November 2025

மாலைப் பயணம்

 இன்று நாள் முழுக்க மழை. பெய்த மழை காற்று மண்டலத்தில் இருக்கும் தூசித் துகள்களை துப்புறவாகத் துடைத்து வைத்திருந்தது. மாலை 6.30க்கு 20 கி.மீ தூரத்தில் இருக்கும் ஊர் ஒன்றனுக்கு கிளம்பினேன். வாகன விளக்கு வெளிச்சத்தில் அந்த அந்திப் பொழுதிலேயே துலக்கமாக இருந்தது. மழை பெய்த பின் இருக்கும் பகல் பொழுதைப் போலவே மழை பெய்த பின்னான இரவுப் பொழுதும் வசீகரம் மிக்கதாக இருந்தது. 8 மணிக்கு ஊர் திரும்பி விட்டேன். 

ஜனநாயக அரசியல் (நகைச்சுவைக் கட்டுரை)

எனது நண்பர் ஒருவர் என்னிடம் சொன்னார். என்னுடைய சில நகைச்சுவைக் கட்டுரைகள் சீரியசானவை என்று. அவர் கூறியதை நான் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டேன்.  

தமிழ்ச் சமூகத்துக்கு ஜனநாயக தேர்தல் அரசியல் எழுபத்து ஐந்து ஆண்டுகளாக பழக்கத்தில் உள்ளது. தமிழகத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் பிரதானமான ஒரு அரசியல் சக்தியாக இருந்தது. அதன் எதிர்ப்புறத்தில் திராவிட இயக்கம் இருந்தது. பின்னர் கம்யூனிஸ்டுகள் இந்திய தேசிய காங்கிரஸுக்கு மாற்று சக்தியாக உருவாக முயன்றனர். அந்த இடத்தை திராவிட இயக்கம் எடுத்துக் கொண்டு கம்யூனிஸ்டுகளை சுருக்கினர். இந்திய தேசிய காங்கிரஸ், சுதந்திரா கட்சி, ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் எனப் பிரிந்தது. திராவிட இயக்கம் இரண்டு திராவிடக் கட்சிகளாகப் பிரிந்தது. கம்யூனிஸ்டு கட்சியும் இரண்டானது. ஜனநாயக தேர்தல் அதிகார அரசியலில் கட்சிகள் அதிக எண்ணிக்கையிலாகி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என எண்ணுவது இயல்பானது. தமிழ்ச் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் அதிகாரத்தின் மீது கொள்ளும் பற்று என்பதும் அதிகாரத்தின் மீது கொள்ளும் ஈர்ப்பு என்பதும் பெரும்பான்மையாக விரவிக் கிடப்பது. இங்கே கட்சிகள் தங்களை பழைய மன்னராட்சியின் தொடர்ச்சியாக எண்ணிக் கொள்கிறார்கள். தமிழகத்தின் சராசரி மனிதன் ஓர் அரசு அலுவலகத்தினுள் நுழைய மிகவும் தயங்குவான் ; விரும்பவே மாட்டான். அங்கே ஊழலும் லஞ்சமும் மலிந்து கிடக்கிறது என்பதும் சென்றால் கையில் இருப்பதைப் பிடுங்கிக் கொண்டு விடுவார்கள் என்பதும் அவன் அச்சம் கொள்வதற்கான காரணங்கள். அவன் சாமனியமாக செல்ல நேரிடும் போக்குவரத்துத் துறை ( இரு சக்கர வாகனம் பதிவு செய்ய, ஓட்டுநர் உரிமம் பெற), வருவாய்த்துறை ( தனது சொந்த இடத்துக்கு பட்டா வாங்க) ஆகிய அலுவலகங்களுள்ளேயே இந்த நிலைமை. மற்ற அலுவலகங்கள் இதை விட மோசமான நிலைமை. தமிழ்ச் சமூகத்துக்கு இந்த நிலையின் மீது தீராக் கோபம் இருக்க வேண்டும். ஆனால் தங்களுக்கு மிக மோசமாக அனுபவம் ஆகும் அரசு நிர்வாகம் மீது கோபம் கொள்வது ஒரு புறமும் இத்தகைய நிர்வாகத்தை சீர்திருத்தாமல் இருக்கும் அரசியல் கட்சிகளின் மீது பெரும் பற்று கொள்வது இன்னொரு புறமும் என முரணான நிலையில் தமிழ்ச் சமூகம் கடந்த 60 ஆண்டுகளாகவே இருக்கிறது. தங்கள் மாவட்ட ஆட்சியர் யார் என்று நேரில் பார்த்திருக்காதவர்கள் மாவட்ட ஆட்சியரின் பெயரைக் கூட அறியாதிருப்பவர்களே சட்டமன்ற உறுப்பினரையும் பாராளுமன்ற உறுப்பினரையும் பெரிய பதவியில் இருப்பவர்கள் என்று எண்ணுகிறார்கள். சட்டமன்ற உறுப்பினருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஒரு துணை தாசில்தார் அளவுக்குக் கூட அதிகாரம் இல்லை என்பதை சாமானிய பொதுமக்கள் அறிந்திருக்கிறார்களா என்பது ஓர் ஐயமே. சட்டமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அதனை உணர்ந்திருக்கிறார்களா என்பது இன்னும் பெரிய ஐயம். 

சமூகம் முன்னேற அரசியல் கட்சிகள் மிகச் சிறு பங்கே ஆற்ற முடியும். ஏனென்றால் அவர்கள் ஜனநாயக தேர்தல் அதிகார அரசியலில் இருக்கிறார்கள். எல்லா அரசியல் கட்சிக்கும் எவ்விதம் பதவிக்கு அதிகாரத்துக்கு வருவது என்பதே அவற்றின் இயங்குமுறையைத் தீர்மானிப்பதாக இருக்கும். எதைச் செய்தால் அதிக வாக்குகளைப் பெற முடியுமோ அதனையே அவர்கள் முயல்வார்கள். 

தமிழ்ச் சமூகம் முன்னேற ஜனநாயக தேர்தல் அதிகார அரசியல் மிகச் சிறு அளவே உதவும். கல்வி , வணிகம், விளையாட்டு , சுகாதாரம், பண்பாடு ஆகிய விஷயங்களில் பயிற்சி அளிக்கும் சமூக அமைப்புகள் மட்டுமே பெரும்பாலான மக்களுக்கு ஆக்கபூர்வமான உதவியை அளிக்க முடியும். தமிழ்ச் சூழலில் அவ்வாறான சமூக அமைப்புகள் குறைவாக இருக்கின்றன. தமிழ்ச் சமூகத்தின் ஜனநாயக தேர்தல் அதிகார அரசியல் எங்கும் பரவி சமூகத்தை அரசியல்ரீதியில் பிளவுபடுத்தி வைத்திருக்கின்றனர். கட்சி ரீதியான அரசியல் ரீதியான பிளவு தமிழ்ச் சமூகத்தில் சமூக அமைப்புகள் உருவாகி நிலைபெறுவதை மிகக் குறைவாக ஆக்கியிருக்கிறது. இந்நிலைக்கு தமிழகத்தின் அரசியல் கட்சிகளை மட்டும் பொறுப்பாக்கிட முடியாது. பொதுமக்களுக்கும் இதில் பெரும்பான்மையான பங்கு இருக்கிறது. 

எழுதுதல்

 இன்று காலை எழுந்து எழுத்துமேஜை முன் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். காலை 9 மணிக்கு எனக்கு ஒரு பணி இருந்தது. வானம் மேகமூட்டமாக இருந்ததால் மழை வந்தால் உத்தேசித்த பணி நிகழுமா அல்லது தள்ளிப் போகுமோ என்னும் ஐயம். லௌகிகப் பணிகள் சிறியவையாயிருப்பினும் மனதின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. பல ஆண்டு பழக்கம் இருப்பினும் ஒவ்வொரு எதிர்கொள்ளலும் புதிய எதிர்கொள்ளலே. வெளிநாட்டு அழைப்பு ஒன்று அலைபேசியில் ஒலித்தது. உடன் அலைபேசியை எடுத்தேன். என்னுடைய அலைபேசியில் ‘’கிரிங்’’ என்ற ஒற்றை ஒலியே அழைப்பு ஒலி. அந்த ஒற்றை ஒலிக்குப் பின் அலைபேசி ஒலி ஏதும் எழுப்பாது. வழக்கமாக எல்லா அலைபேசி அலைப்பு ஒலிகளும் ஒரு நிமிடத்துக்கு ஒலிக்கும். என்னுடைய அழைப்பு ஒலி இரண்டு வினாடிகள் மட்டுமே ஒலிக்கும். குறுஞ்செய்தி ஒலி சிறியது எனினும் என்னுடைய அழைப்பு ஒலியுடன் ஒப்பிட்டால் அதுவே மிக நீண்டது. 

நண்பன் அமெரிக்காவிலிருந்து அழைத்திருந்தான். பள்ளி நாட்களிலிருந்து எனது தோழன். பல ஆண்டுகளாக அமெரிக்காவில் பணி புரிகிறான். மொழி , சமூகம், தேசம் ஆகியவை குறித்து தீவிரமான அக்கறை கொண்டவன். அவற்றுக்கு தன்னால் இயன்ற ஆக்கபூர்வமான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்னும் தீராத ஆர்வம் கொண்டவன். இலக்கியத்தில் தீவிரமான ஆர்வம் உண்டு. பல ஆண்டுகளாக நவீனத் தமிழ் இலக்கியத்தின் கணிசமான படைப்புகளை வாசித்திருக்கிறான். இன்று அவன் என்னுடன் உரையாடிய போது அவனை எழுதுமாறு சொன்னேன். அமெரிக்க லௌகிக வாழ்க்கையில் எழுத்துக்கான நேரத்தையும் அதற்கான மனநிலையையும் தன்னால் அளிக்க முடியவில்லை என்று சொன்னான். 

அவனுடைய குழந்தைகள் அமெரிக்காவில் பயில்கின்றனர். அங்குள்ள பள்ளிகளில் எவ்விதம் குழந்தைகள் ஆரம்பப் பள்ளிகளிலேயே ஏதேனும் ஒரு நூலை வாசித்து அந்த நூல் குறித்து விரிவான கட்டுரை அல்லது மதிப்புரை எழுத பயிற்சி அளிக்கப்படுகிறது என்பதை வியந்து கூறினான். ஒருவேளை தனக்கு அவ்விதமான பயிற்சி பள்ளி நாட்களில் இருந்திருந்தால் அது எழுதுவதற்கு உதவியாக இருந்திருக்குமோ என்ற தன்னுடைய எண்ணத்தைத் தெரிவித்தான். 

ஜனநாயக யுகம் சட்டதிட்டங்களால் ஆனது. சட்டத்தின் ஆட்சி ஜனநாயக நாட்டிலேயே எல்லா குடிகளையும் சென்றடைய முடியும். லௌகிகத்தில் கூட எழுதப்பட்ட விஷயங்களே பெரும்பாலான விஷயங்களின் அடிப்படையாய் இருக்கின்றன. பிரிட்டிஷ் அரசு சட்ட உருவாக்கத்தையும் சட்ட செயலாக்கத்தையும்  நிர்வாகத்திடமும் நீதிமன்றத்திடமும் அளித்தது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக இதே நிலையே நீடிக்கிறது. செய்தித்தாள்கள் இந்த சூழ்நிலையில் இடையீடாக வந்து பொதுமக்களிடம் பரவலாக வாசிப்பைக் கொண்டு சேர்த்தன. ஒரு சமூகம் பெருமளவு வளர்ச்சி பெற அந்த சமூகத்தில் வாசிப்புப் பயிற்சியும் எழுத்துப் பயிற்சியும் இருப்பது முக்கியமானது. நாம் அந்த நிலையை நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறோம். செல்ல வேண்டிய தூரம் இன்னும் பெருந்தொலைவாக இருக்கிறது. 

நண்பனின் குழந்தைகள் சிறு குழந்தைகள். இருவருக்கும் பத்து வயது இருக்கலாம். அங்கே பள்ளியில் வாரம் ஒரு நூலை வாசித்து மதிப்புரை எழுதி அந்த நூல் குறித்து 5 நிமிடங்கள் பேசுகின்றனர் என்று மகிழ்ச்சியுடன் கூறினான். 

‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து விசாரித்தான். 

‘’பி.ஜி. கருத்திருமனின் கம்பர் -கவியும் கருத்தும்’’ நூலில் உள்ள கம்பராமாயணப் பாடல்களை ஜூம் செயலி மூலம் வாசிக்கலாமா என்று கேட்டான் . நான் கணினியில் மிகக் குறைவான செயல்முறைகளை மட்டும் அறிந்தவன். ஜூம் குறித்து முயன்று பார்க்கிறேன் என்று சொன்னேன்.  

Tuesday, 4 November 2025

திருமகள்

எனது நண்பர் ஒருவர் நலம் குன்றியிருக்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தவர் வீடு திரும்பியிருக்கிறார். நாளின் பெரும்பாலான பொழுது பிராண வாயு அவரது சுவாசத்தை எளிதாக்க கருவி மூலம் அளிக்கப்படுகிறது. மிகக் குறைவாக உணவருந்துகிறார். நினைவு துல்லியமாக இருக்கிறது. மிகவும் சிரமப்பட்டு பேசுகிறார்.  அவரைக் காணச் சென்றிருந்தேன். அவரது மகள் அவர் அருகிலேயே அமர்ந்திருக்கிறார். அவருக்குத் தேவையானவை அனைத்தையும் செய்து கொடுக்கிறார். அந்தக் காட்சி மனித வாழ்வின் மகத்தான தருணங்களில் ஒன்று என எனக்குத் தோன்றியது. இந்திய மரபு செல்வத்தின் தெய்வமாக திருமகளைக் கூறுகிறது. பிரியமும் பேரன்பும் கொண்ட மகள் திருமகளின் வடிவமே என்று எனக்குத் தோன்றியது. 

Saturday, 1 November 2025

புதிய பாதை

இந்த வாரம் திங்களன்று சந்தித்த போது கடலூர் சீனு சொன்னார். ‘’வீட்டிலிருந்து 5 கி.மீ தூரம் நடந்து ஒரு இடத்துக்குச் சென்றால் கூட அது பயணம் தான். மனிதன் நகர்வதற்காக படைக்கப்பட்டவன்.’’. இங்கே ஊரில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. எனவே ஊரிலிருந்து மேற்கு திசை நோக்கிச் செல்லும் வாகனங்களும் மேற்கு திசையிலிருந்து ஊருக்கு வரும் வாகனங்களும் ரயில்வே சந்திப்பிலிருந்து ஒரு கி.மீ வடக்கில் இருக்கும் கல்லணை - பூம்புகார் சாலை வழியே திருப்பி விடப்படுகின்றன. அதில் ஏகப்பட்ட பேருந்துகளும் நான்கு சக்கர வாகனங்களும் செல்வதால் அந்த சாலையில் இருக்கும் ரயில்வே லெவல் கிராசிங்கில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விடுகிறது. கடலூரிலிருந்து கரி ஏற்றி வரும் கூட்ஸ் வண்டிகள் காரைக்கால் துறைமுகம் செல்வதால் தினமும் கணக்கற்ற தடவை ரயில்வே கிராசிங் மூடப்படுகிறது. ஊரின் ரயில்வே சந்திப்பிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில்  நீடூர் என்ற ரயில் நிலையம் உள்ளது. ஊரிலிருந்து நீடூர் வரைக்குமான ரயில் பாதைக்கு இணையாக ஒரு கிராமத்து சாலை இருப்பதாக ஒரு பேச்சு எழுந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னால் அந்த பாதையில் பாதி தூரம் பயணித்திருக்கிறேன். இம்முறை அந்த பாதையை முயற்சி செய்து பார்க்கலாமா என எண்ணினேன். நீடூர் சென்று அங்கிருந்து ஆனந்தகுடி என்ற கிராமம் வழியே சென்று அங்கிருந்து கோட்டூர் என்ற ஊரைக் கடந்து கல்லணை - பூம்புகார் சாலையை அடைந்தேன். அருகில் இருக்கும் ஒரு பாதையை இத்தனை நாள் அறியாமல் இருந்தோமே என்ற சிறு வருத்தமும் இன்றைக்கு அறிந்தோமே என்னும் பெருமகிழ்ச்சியும் அடைந்தேன்.  

Friday, 31 October 2025

காவிரி மண்ணில்

இந்திய நிலத்தில் மோட்டார்சைக்கிள் பயணங்கள் நிகழ்த்திய போது காலை 6 மணிக்குத் துல்லியமாக கிளம்பி விடுவேன். ஆறு மணிக்கு ஒரு நிமிடம் இரு நிமிடம் பத்து நிமிடம் என முன்னதாகக் கிளம்புவேனே தவிர ஒரு நாளும் காலை 6 ஐ தாண்ட மாட்டேன். அது ஒரு சிறப்பான நிலை.   காலை மணி 6 க்கும் 6.01க்கும் இடையே இருப்பது 60 வினாடிகள் தான் எனினும் காலை மணி 6 என்பது மிகவும் சிறப்பானது. எனது பெரும்பாலான மோட்டாட்சைக்கிள் பயணங்கள் காலை 6 மணிக்குத் துவங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைபவை. 

300 கி.மீ அளவிலான ஒரு மோட்டார்சைக்கிள் பயணத்தை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணம் சில நாட்களாக இருந்தது. எனக்கு திருச்சிராப்பள்ளியில் ஒரு நண்பரைச் சந்திக்க வேண்டியிருந்தது. மோட்டார்சைக்கிளில் சென்று வரலாம் என எண்ணினேன். வழக்கமான சாலையை விட ஒரு புதிய சாலையில் செல்லலாம் எனத் தோன்றியது. என் ஊரிலிருந்து 40 கி.மீ சுற்றளவில் உள்ள எல்லா சாலைகளும் வாரத்தில் ஒரு முறையாவது நான் பயணிக்கும் சாலைகளே . கிழக்கு திசையில் 25 கி.மீ ல் கடல் வந்து விடும். மேற்கு திசையில் 35 கி.மீல் குடந்தை. வடக்கே 40 கி.மீ தொலைவில் சிதம்பரம். தெற்கே திருவாரூர். 40 கி.மீ பயணிக்கவில்லை எனினும் ஏதேனும் பணி நிமித்தம் ஒவ்வொரு திசையிலும் 20 கி.மீ பயணமாவது நடக்கும். 

இன்று காலை 7 மணிக்குப் புறப்பட்டேன். ஊரிலிருந்து காட்டுமன்னார்குடி. அங்கிருந்து மீன்சுருட்டி ஜெயங்கொண்டம் வழியாக அரியலூர் லால்குடி வழியே திருச்சி சென்றேன். காலை 11 மணிக்கு திருச்சியில் இருந்தேன். பல ஆண்டுகளுக்கு முன்னால் என்னுடைய ‘’பாரத் தர்ஷன்’’ பயணம் மேற்கொண்ட போது இந்த மார்க்கம் வழியாகவே சென்றேன். இந்த மார்க்கத்தில் உள்ள கிராமங்களும் நிலக்காட்சிகளும் என் மனதுக்கு என்றும் இனியவை. வழி நெடுக சோளம் பயிரிடப்பட்டு அறுவடை ஆகிக் கொண்டிருந்தது. சோள அறுவடை மெஷின்கள் மும்மரமாக இயங்கிக் கொண்டிருந்தன. நண்பரின் வீட்டில் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு மதியம் 1 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கல்லணை பூம்புகார் சாலையைப் பிடித்து வந்து கொண்டிருந்தேன். 

கல்லணையில் ‘’காவிரி தகவல் மையம்’’ என ஓர் அரசுக் கட்டிடம் இருந்தது. பெயர்ப்பலகையைக் கண்டதும் அதனுள் செல்ல விரும்பினேன். பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிகமாக இயக்கத்தில் இல்லை எனக் கூறினார்கள். அங்கிருந்து திருவையாறு வந்தேன். அங்கே மதிய உணவு. பின்னர் குடந்தை. அங்கிருந்து மயிலாடுதுறை. வீட்டுக்கு வந்த போது நேரம் மாலை 5.50. 

Wednesday, 29 October 2025

வனமும் மரமும்

 
நூல் : மரங்களின் மறைவாழ்வு ஆசிரியர் : பீட்டர் வோலிபென் மொழியாக்கம் : லோகமாதேவி பக்கம் : 318 விலை : ரூ. 390 பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம், 669,கே.பி.சாலை, நாகர்கோவில். 

ஒரு கைப்பிடிக் காட்டு மண்ணில் இந்த பூமியில் இருக்கும் அனைத்து மனிதர்களை விடவும் அதிகமான நுண்ணுயிர்கள் இருக்கின்றன. ஒரு தேக்கரண்டி காட்டு மண்ணில் பல மைல் நீளமுள்ள பூஞ்சை இழையங்கள் இருக்கின்றன. - பீட்டர் வோலிபென் 

வாழ்க்கையின் சில தருணங்கள் நமக்குப் புதிதாக சில விஷயங்களைக் காட்டும் போது உணர்த்தும் போது நாம் வியப்படைவோம் ; சில சமயங்களில் ஆழமான அதிர்ச்சியும் அடைவோம். பீட்டர் வோலிபென் எழுதிய ‘’மரங்களின் மறைவாழ்வு’’ என்னும் நூலை வாசித்த போது நான் வியப்படையவும் செய்தேன். அதிர்ச்சி அடையவும் செய்தேன். இதுநாள் வரை மரங்கள் குறித்து அறிந்திருந்தது எத்தனை எல்லைக்குட்பட்டது என்பதை இந்நூலின் வாசிப்பு எனக்குக் காட்டியது. இந்தப் புத்தகத்தை வாசிக்கும் முன் மரங்களை நான் நோக்கிய விதத்துக்கும் இந்தப் புத்தகத்தை வாசித்த பின் மரங்களை நான் நோக்கும் விதத்துக்கும் மிகப் பெரும் வித்தியாசம் இருக்கிறது. 

ஒரு தனி மனிதனைப் போல மரத்தை தனி மரம் என்று அத்தனை தீர்க்கமாக வரையறுத்துக் கூற முடியாது. எந்த மரமும் தனி மரம் அல்ல. அதன் பூக்கள் காற்றில் பறந்து பரவுகின்றன. விதைகள் பறவைகள் மூலமும் பிராணிகள் மூலமும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்து செல்கின்றன. புவியின் மேற்பரப்பில் சற்று இடைவெளியுடன் இருக்கும் மரங்கள் கூட புவிக்குக் கீழே வேர்வெளியில் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் பிணைந்தும் இருக்கின்றன. மரங்களின் வேர் முடிச்சுகளில் இருக்கும் பூஞ்சைகள் ஓர் வனத்தில் இருக்கும் ஒட்டு மொத்த மரங்களையும் இணைக்கின்றன. 

மரங்கள் கூட்டு வாழ்க்கையே வாழ்கின்றன. ஒரு மரம் இன்னொரு மரம் பலவீனமாக இருந்தால் அதற்கு உணவளித்து உதவுகிறது. தான் சேகரித்து வைத்திருக்கும் ஸ்டார்ச் சர்க்கரையை மண்ணுக்கு அடியில் இருக்கும் பூஞ்சைகள் மூலம் பலவீனமாக இருக்கும் மரத்துக்கு அனுப்புகிறது. அதே பூஞ்சை வலைப் பின்னல் மூலம் காட்டில் வெட்டப்பட்டு துண்டாகக் கிடக்கும் மரங்களுக்கும் உணவளித்து அவை உயிருடன் இருக்க உதவுகிறது. 

தண்ணீருக்காக மரங்களின் வேர்கள் ஒலியெழுப்புகின்றன. மரங்கள் தங்களுக்குள் மீயொலி மூலம் பேசிக் கொள்கின்றன. பட்டை உரிந்து வலியுடன் இருக்கும் மரங்களுக்கு மற்ற மரங்கள் ஆதரவளிக்கின்றன. தங்கள் நிழலில் வளரும் மரங்கள் நீண்ட காலம் உயிர்த்திருக்கவும் தேவை ஏற்பட்டால் இடம் பொருள் ஏவலைப் பொறுத்து தனது வளர்ச்சி பாணியை புதிதாக மாற்றிக் கொள்ளவும் உதவுகின்றன. 

மாந்தரின் இனப் பெருக்கத்தில் லட்சக்கணக்கான அணுக்களில் ஒன்று மட்டும் கருவாக உருவாவதைப் போல ஒரு மரத்தின் ஆயிரக்கணக்கான விதைகளில் ஒன்று மட்டுமே முளைத்து மரமாகும் வாய்ப்பைப் பெறுகிறது. 

நூற்றுக்கணக்கான ஜீவராசிகள் தன்னைச் சார்ந்து வாழும் நிலையை அந்த உயிர்களுக்கு வழங்குகிறது வனத்தின் ஒவ்வொரு மரமும். 

இந்தப் புத்தகத்தை வாசிக்கும் தோறும் நாம் இதுவரை மரங்கள் குறித்த அறியாமையையே இத்தனை நாள் கொண்டிருந்தோம் என்னும் உண்மையை உணர்வோம். 

நாம் ஒரு மரம் குறித்து முழுமையாக அறிந்தோம் என்றால் புவியின் சாரம் குறித்து ஒரு கைப்பிடியளவு அறிகிறோம் எனத் துணிந்து சொல்லலாம்.  

Monday, 27 October 2025

மேகம் நிலம் நீர்

சென்ற வாரம் நானும் நண்பர் கடலூர் சீனுவும் ஏதேனும் ஒரு பயணம் நிகழ்த்த வேண்டும் என்று திட்டமிட்டோம்.  நாங்கள் உத்தேசித்திருந்த நாளில் எங்களால் அந்த பயணத்தை நிகழ்த்த இயலவில்லை. இரண்டு தினங்களுக்கு முன்னால் அவரிடம் பேசிய போது நிலுவையில் இருக்கும் பயணத்தை திங்களன்று நிகழ்த்துவோம் என்று கூறினார். நாங்கள் இருவருமே பயணிப்பவர்கள். ஆனால் நாங்கள் சந்தித்துக் கொள்வதில் எங்களுக்கு சில சிறு தடைகள் உண்டு. எனது ஊருக்கும் சீனுவின் ஊருக்கும் இடையிலான தூரம் 95 கி.மீ. அவர் இங்கு வந்தாலோ நான் அங்கு சென்று திரும்பினாலோ போவதும் வருவதும் 190 கி.மீ என்றாகி விடும். எனவே நாங்கள் எங்கள் இருவருக்கும் ஏறக்குறைய சம தூரத்தில் இருக்கும் சிதம்பரத்தில் சந்திப்போம். சிதம்பரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், பிச்சாவரம், கொடியம்பாளையம், திருச்சோபுரம், காட்டுமன்னார் கோவில், குள்ளஞ்சாவடி, பெருமாள் ஏரி, வடலூர் ஆகிய பகுதிகளில் பலமுறை சுற்றியிருக்கிறோம். இவை மட்டுமன்றி புதுவை, திண்டிவனம் பகுதிகளிலும் சுற்றியிருக்கிறோம். எங்கள் பிராந்தியங்களிலிருந்து வெளியே எங்காவது சென்றால் தான் புதிய பயணம் என்னும் நிலை. 

இன்று காலை 10 மணிக்கு கடலூரில் புறப்படுகிறேன் என்றார் சீனு. நான் அவரை காலை 8.30க்கு புறப்படுங்கள் என்று சொன்னேன். 8.40க்கு ஃபோன் செய்து கிளம்பி விட்டாரா என்று கேட்டேன். ஆலப்பாக்கம் ரயில்வே கேட் தாண்டி விட்டேன் என்றார். நான் காலை உணவை அருந்தியிருக்கவில்லை. அவசரமாக 4 தோசைகளை சாப்பிட்டு விட்டு தலையில் ஹெல்மட்டை மாட்டிக் கொண்டு கிளம்பினேன். சீர்காழி தாண்டியதும் ஃபோன் செய்தேன். அவர் அப்போதுதான் சிதம்பரம் தேரடி கீழவீதி நிறுத்தத்தில் இறங்கியிருந்தார். ‘’சீனு ! கொஞ்சம் சிரமம் பாக்காம சீர்காழி பஸ்ல ஏறி கொள்ளிடன் பஸ் ஸ்டாப்ல இறங்கிடுங்க. நான் 10 நிமிஷத்துல அங்க இருப்பன். உங்களுக்கும் 10 நிமிஷம்தான் ஆகும்.’’ நான் சில நிமிடங்களில் அங்கு சென்று விட்டேன். சீனுவும் ஒரு பேருந்தில் வந்திறங்கினார். நான் வேட்டி சட்டை உடுத்தியிருததாலும் தலையில் ஹெல்மட் அணிந்திருந்ததாலும் என்னை சீனுவால் அடையாளம் காண முடியவில்லை. நான் எங்கே என்று கேட்க தனது அலைபேசியை எடுத்தார். நான் அவரைக் கூப்பிடுவதைக் கண்ட பாதசாரி ஒருவர் சீனுவிடம் உங்களை எதிர்ப்பக்கத்தில் இருக்கும் ஒருவர் கூப்பிடுகிறார் என்று கூறினார். சீனுவும் நானும் சந்தித்துக் கொண்டோம். சீனு எனக்காக ‘’மரங்களின் மறைவாழ்வு’’ என்னும் நூலையும் மேலும் சில நூல்களையும் வாசிக்கக் கொண்டு வந்திருந்தார். நம் கைகளுக்கு வந்தடைய புத்தகமும் பயணிக்கிறது என்பது எத்தனை மகத்துவம் கொண்டது என்ற சிலிர்ப்பு உருவானது. 

‘’சீனு ! நாம கொடியம்பாளையத்துல இருந்து கொள்ளிடம் ஆத்துக்கு மறுகரையில இருக்கற பழையாரைப் பாத்தோம்ல இன்னைக்கு பழையார்லயிருந்து கொடியம்பாளையம் பாக்கப் போறோம்’’.

பைக்கை கிளப்பிக் கொண்டு சென்றோம்.

வானம் முழுதும் மேகமூட்டமாயிருந்தது. சூரியனே இல்லை. சூழல் கருக்கல் பொழுதைப் போலவே இருந்தது. அவ்விதமான சூழல் எவருடைய மனத்தையும் இளகச் செய்யும். உற்சாகம் கொள்ளச் செய்யும். 

சீனுவிடம் நான் கேட்டேன். ‘’சீனு ! தமிழ்நாட்டுல அடுத்த 20 வருஷத்துல மக்களை சமூகத்தை ஆக்கபூர்வமான திசைக்குக் கொண்டு போற சமூக அமைப்பு ஏதேனும் உருவாகுமா?’’

சீனு கொஞ்ச நேரம் யோசித்தார். ‘’ அடுத்த 20 வருஷத்துல உருவாகுமான்னு தெரியல. ஆனா 20 வருஷத்துக்கு அப்புறம் நிச்சயம் உருவாகும்’’. அவர் ஏன் அவ்வாறு அபிப்ராயப்படுகிறார் என்பதற்கான காரணங்களை விரிவாகச் சொன்னார். ’’நுகர்வு மனநிலை உருவாகி நிலை கொண்டிருக்கு. இன்னும் பதினைஞ்சு இருபது வருஷம் அதுதான் ஓடும். அதுக்கப்பறம் தான் அதோட பெருந்தீமைகள் வெளிப்பட ஆரம்பிக்கும். அப்ப அதுல இருந்து மீள மக்கள் நினைப்பாங்க’’. சீனு சொன்னதை மனதுக்குள் அலசி பார்த்தேன். 

சின்ன சின்ன கிராமங்கள் வழியாகச் சென்று பழையாரை அடைந்தோம். அங்கிருந்து கொடியம்பாளையத்தைப் பார்த்தோம். மேட்டூரில் அணை நிரம்பி உபரி நீர் திறந்து விடப்படுவதால் கல்லணையில் கொள்ளிடம் ஆற்றுக்கு அதிக நீர் திறக்கப்பட்டு கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறது. அங்கே கொள்ளிடக் கரையில் 1 மணி நேரம் இருந்தோம். பின்னர் அங்கிருந்து கூழையார் என்ற ஊருக்குச் சென்றோம். அந்த பாதை அரசின் காப்பு வனப்பகுதி. சவுக்கு மரங்கள் சாலையின் இருமருங்கிலும் வளர்க்கப்பட்ட ரம்யமான பகுதி. ஒரு சவுக்குத் தோப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் ஏதோ ஒரு இடத்தில் பாதை தவறி மீண்டும் பிரதான சாலைக்கு வந்து விட்டோம். அங்கிருந்து சிதம்பரம் சென்றோம். 

சிதம்பரம் சென்றால் நாங்கள் ஒரு உணவகத்தில் சப்பாத்தி உண்போம். அது ஒரு சிறு உணவகம். அதனை நடத்துபவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். நான் கல்லூரியில் சேர்ந்த ஆண்டிலிருந்து அங்கே செல்வேன். வாடிக்கையாளராக என்னை அவர்களுக்குத் தெரியும். நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது கடை உரிமையாளரின் மகன்கள் சிறுவர்களாக இருந்தார்கள். இப்போது அவர்கள் தான் கடையை நடத்துகிறார்கள். தந்தை அவ்வப்போது அவர்கள் பூர்வீகமான ராஜஸ்தானுக்கு சென்று விடுகிறார். ‘’இந்த கிளைமேட்டுக்கு சப்பாத்தி சாப்பிட்டா நல்லா இருக்கும்னு நினைச்சன். கரெக்டா இங்க வந்துட்டோம்’’ என்றார். நான் ‘’உள்ளுணர்வு’’ என்றேன். ‘’சீனு! பீடா போடறீங்களா’’ என்று கேட்டேன். ‘’பீடா போட்டால் எனக்கு மயக்கம் வரும் ‘’ என்றார். ‘’ஸ்வீட் பீடாவுக்கே மயக்கம் வருமா’’ என்றேன். ஆமாம் என்றார். அந்த கடையில் அவர்கள் வைத்திருக்கும் வெற்றிலை கொஞ்சம் வித்யாசமாக இருக்கும். இது எந்த ஊர் வெற்றிலை என்று கேட்டேன். இது கல்கத்தாவில் இருந்து வருகிறது என்று சொன்னார். ‘’கோரமண்டல் எக்ஸ்பிரஸில் சென்னை வந்து அங்கிருந்து முழு தமிழ்நாட்டுக்கும் டிஸ்ட்ரிபியூட் ஆகும்’’ என்றார். 

சிதம்பரத்திலிருந்து கண்ணன்குடி, பண்ணப்பட்டு, நெடுஞ்சேரி ஆகிய சின்னஞ்சிறிய கிராமங்களைக் கடந்து கந்தகுமாரன் என்ற ஊரில் வீர நாராயண ஏரிக்கரையை அடைந்தோம். ஏரிக்கரையில் இருந்த அரச மரம் ஒன்றின் நிழலில் சீனு அமர்ந்து கொண்டார். நான் படுத்துக் கொண்டேன். எனக்கு காலையிலிருந்து வண்டி ஓட்டிய களைப்பு இருந்தது. அவர் அமர்ந்த வண்ணமும் நான் கிடந்த வண்ணமும் இருந்தாலும் எங்கள் உரையாடல் தொடர்ந்தது. 

‘’வீர நாராயண ஏரி ஆயிரம் வருஷமா மனுஷ குலத்துக்கும் இன்னும் பல ஜீவராசிகளுக்கும் பயன் கொடுக்குது. கல்கி கிருஷ்ணமூர்த்தி தன்னோட எழுத்தால இதோட இருப்பை கோடிக்கணக்கான மக்களோட மனசுக்கு கொண்டு போய்ட்டார். அட்சரங்களோட உலகத்துல வீர நாராயண ஏரியை பதிட்டை செய்துட்டார் கல்கி’’ என்றேன். 

‘’பொன்னியின் செல்வன் ல ‘’புது வெள்ளம்’’ அத்தியாயம், ஆடிப் பெருக்கு இந்த ரெண்டுமே ரொம்ப மங்களகரமான விஷயம். வீர நாராயண ஏரி குறிச்ச நினைவையே மங்களகரமான ஒன்னா கல்கி ஆக்கிட்டார்’’. 

கொள்ளிடத்தில் சீனுவை சந்தித்த கணத்திலேயே எனது வழக்கப்படி அலைபேசியை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டேன். அதனை ஆன் செய்து வெளி மாநிலத்தில் இருக்கும் வங்கி அதிகாரியான நண்பனுக்கு ஃபோன் செய்தேன். ‘’தம்பி ! நேத்து நான் உனக்கு வேர்டு ஃபார்மட்ல ஒரு சிறுகதை அனுப்பினன்ல. அதை இப்ப உனக்கு ஒரு மெயில் ஐ டி எஸ்.எம்.எஸ் பண்றன். அதுக்கு ஃபார்வர்டு செய்’’ என்றேன். சீனுவின் மெயில் ஐ டி கேட்டு நண்பனுக்கு எஸ் எம் எஸ் அனுப்பினேன். நண்பன் அதனை ஃபார்வர்டு செய்தான். நேற்று எழுதிய மகாபாரத பின்னணி கொண்ட கதை. சீனு அதனை வாசித்தார். அவருக்கு அந்த கதை பிடித்திருந்தது. எனக்கு அது மகிழ்ச்சி அளித்தது. வீர நாராயண ஏரிக்கரையில் நான் எழுதிய சிறுகதை ஒன்றை வாசிக்கவும் அது குறித்து பேசவும் ஒரு வாய்ப்பு கிடைத்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அங்கே ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தோம். பின்னர் காட்டுமன்னார்குடி சென்றோம். முட்டம் மணல்மேடு வழியே வைத்தீஸ்வரன் கோவில் வந்து சேர்ந்தோம். அவரை சிதம்பரம் பேருந்தில் ஏற்றி விட்டு நான் ஊர் வந்து சேர்ந்தேன்.