புனைவுகளை விரும்பி வாசிக்கும் அடியேன் அ-புனைவுகளையும் விரும்பி வாசிப்பேன். அ-புனைவுகளின் பிரதி தன்னளவில் பலவிதமான சுவாரசியமான புனைவுப் பிரதிகளை உருவாக்கிக் கொள்கிறது என நினைப்பேன். உ.வே.சாமிநாத ஐயரின் ‘’வித்துவான் தியாகராஜ செட்டியார் சரிதம்’’ என்ற நூலை அடியேன் வாசித்திருந்தேன். வித்துவான் தியாகராஜ செட்டியார் உ.வே.சா வின் ஆசிரியரான மயிலாடுதுறையைச் சேர்ந்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் மூத்த மாணவர். உ.வே.சா வின் தமிழ்ப் பற்றையும் தமிழ் ஆர்வத்தையும் கண்ட தியாகராஜ செட்டியார் திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்த உ.வே.சா வை சென்னைக்கு வந்து கல்லூரி ஆசிரியராக ஆக வேண்டும் என்ற முயற்சி எடுத்தவர். அவரது முயற்சியே உ.வே.சா வை சென்னைக்குக் கொண்டு வந்தது ; தமிழ் நூல்கள் பதிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட சூழ்நிலையை உருவாக்கித் தந்தது. உ.வே.சா சென்னையில் தன் இல்லத்துக்கு ‘’தியாகராஜ நிலையம்’’ என்ற பெயர் சூட்டினார். அவருடைய வாழ்க்கை வரலாறையும் எழுதினார். அந்நூலில் தியாகராஜ செட்டியாரின் பூர்வீகம் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் இருக்கும் பூவாளியூர் என்று குறிப்பிட்டிருப்பார். அந்த ஊரின் இறைவன் பெயர் திருமூலநாதன் என்றும். பூ என்றால் மலர். வாளி என்னும் சொல்லுக்கு அம்பு என்று பெயர். மலர்களை அம்புகளாகத் தொடுப்பவன் மன்மதன். அவனது வில் கரும்பால் ஆனது. தாமரை, அசோகம், மாம்பூ,முல்லை, குவளை ஆகிய மலர்கள் அவனது அம்புகள் - அதாவது - வாளிகள். பூவாளியூரில் கோயில் கொண்டிருக்கும் திருமூலநாத சுவாமியை பிழையீட்டுக்காக மன்மதன் அந்த ஊருக்கு வந்து வணங்கினான் என்பது தொன்மம். சில ஆண்டுகளுக்கு முன்னால், கவனகர் திருமூலநாதன் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது அவரிடம் ஒரு விஷயம் சொன்னேன். அது என்னவென்றால் ‘’அதாவது சமீபத்தில் உ.வே.சா வின் ‘’வித்துவான் தியாகராஜ செட்டியார்’’ நூலை வாசித்தேன். அதில் தியாகராஜ செட்டியாரின் பூர்வீகம் திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள பூவாளியூர். அதனை இப்போது பூவாளூர் என்று சொல்கிறார்கள். அந்த ஊரின் இறைவனின் பெயர் திருமூலநாதன். அதனை வாசித்த போது எனக்கு உங்கள் ஞாபகம் வந்தது’’ என ஆரம்பித்து சிவன் தவமிருந்த கதை, சிவன் தவத்தைக் கலைத்த மன்மதன் எரிந்து போன கதை, மன்மதன் சாப விமோசனம் பெற்ற கதை, உ.வே.சா கதை, மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் கதை, உ.வே.சா தியாகராஜ செட்டியாரால் சென்னை சென்ற கதை, தன் வீட்டுக்கு ‘’தியாகராஜ விலாசம்’’எனப் பெயர் சூட்டிய கதை என அனைத்தையும் சொன்னேன். திருமூலநாதன் என்ற பெயர் இத்தனை கதைகளைக் கொண்டிருக்கிறது என்பதையும் தமிழ் தொல்மொழியாதலால் ஒவ்வொரு சொல்லும் பல கதைகளைக் கொண்டிருக்கும் என்பதையும் அ-புனைவுகள் புனைவுகள் அளவுக்கு எனக்கு சுவாரசியம் அளிப்பவை என்றும் சொன்னேன். திருமூலநாதன் நான் கூறுவதை முழுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். பின்னர் அவர் பேசினார். ‘’ எனக்கு சொந்த ஊர் பூவாளூர். வித்துவான் தியாகராஜ செட்டியாருடைய கொள்ளுப் பேரன் நான்’’.
இரண்டு நாட்கள் முன்னால், டாக்டர் எம்.சந்திரசேகரன் எழுதிய ‘’ நினைவில் நின்ற நிகழ்வுகள்’’ என்ற நூலை வாசித்தேன். அந்த நூல் எனக்கு பெரும் சுவாரசியம் அளித்தது. டாக்டரின் தமிழ் புனைவுத்தன்மையைக் கொண்டிருந்தது. அவர் சம்பவங்களை சூழல்களை மனிதர்களை அவதானிக்கும் விதம் மிக நுண்மையாக இருந்தது. அது கலைமனம் படைத்தவர்களுக்கு இருக்கும் கூறு. இருப்பினும் டாக்டர் அந்த நூலை தனது 70 வயதுக்கு மேல் எழுதியிருக்கிறார். கலைமனம் கொண்ட ஒருவர் தன் கலையை ஏதோ ஒரு விதத்தில் வெளிப்படுத்தவே விரும்புவார். ஒன்றைத் தாண்டி இன்னொன்று என பல விஷயங்கள் மனதில் முட்டி மோதின. அந்த நூலில் அவர் தனது தந்தை நீதிபதி மகராஜன் குறித்து எழுதியிருந்தார். அந்தப் பெயர் பல வருடங்களுக்கு முன்னால் கேள்விப்பட்ட பெயர். கிட்டத்தட்ட 3 தலைமுறைகள் கடந்து விட்டன. டாக்டரின் நூலை வாசித்துக் கொண்டிருந்ததால் அந்த நூலில் ஒரு உப கதாபாத்திரமாகவே நீதிபதி மகராஜன் அறிமுகமானார். சிறுவனாக இருக்கும் சந்திரசேகரன் சிறுவனான தன் இன்னொரு நண்பனை ஒரு அடி அடித்து விடுகிறார். சிறுவன் சந்திரசேகரனின் தந்தையான நீதிபதி மகராஜன் வீட்டுக்கு வந்ததும் அந்தச் சிறுவன் அவரிடம் தயங்கிச் சென்று திக்கித் திணறி ‘’சந்துரு இன்னைக்கு என்னை அடிச்சுது’’ எனக் கூறி விட்டார். என்ன நடந்தது என விசாரித்து அறிகிறார் நீதிபதி. அடிபட்ட சிறுவனிடம் ‘’இன்னொரு தடவை உன்னை சந்துரு அடிச்சா நீ திருப்பி பெருசா ரெண்டு அடி போட்டுட்டு என்கிட்ட வந்து சொல்லு’’ என்கிறார் நீதிபதி மகராஜன். அடுத்த வாரத்திலேயே சந்துருவுக்கு ‘’ரெண்டு அடி’’ கிடைக்கிறது. இன்னொரு சம்பவம் இந்த நூலில் இருக்கிறது. புதுச்சேரியில் நீதிபதியாகப் பணியாற்றுகிறார் நீதிபதி மகராஜன். அங்கே இருக்கும் நீதிபதியின் அரசு வீடு மிகப் பிரமாதமானது. வீட்டுக்கு முன் பெரிய வெளி இருக்கிறது. சந்துருவும் அவரது தோழர்களும் விளையாட மிக உகந்த இடம். ஒருநாள் ஒரு போலீஸ் பட்டாளம் வந்து வீட்டுக்கு முன் இருக்கும் வெளியில் ஒரு பந்தல் போட்டு பாதுகாப்பு கொடுக்க என வந்து குவிந்து விடுகிறார்கள். சிறுவர்களுக்கு ஒரே அதிருப்தி. நீதிமன்றத்திலிருந்து வீட்டுக்கு வந்த நீதிபதி வாசலில் குவிந்திருக்கும் காவலர்களிடம் என்ன விஷயம் என்கிறார். அரசாங்கம் பாதுகாப்பு கொடுக்கச் சொல்லியிருக்கிறது என்கின்றனர். ‘’எதுவும் தேவையில்லை’’ எனக் கூறிவிடுகிறார் நீதிபதி மகராஜன். உடனடியாக காவலர்கள் சென்று விடுகிறார்கள் ; பந்தலைப் பிரித்து எடுத்துக் கொண்டு. சந்துரு உட்பட சிறுவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. டாக்டர் சந்திரசேகரனின் நூலில் இருந்த டாக்டர் மகராஜனின் சித்திரம் எனக்கு சுவாரசியமளித்தது. டாக்டரின் நூல் குறித்து அவருக்கு ஒரு வாசகர் கடிதம் அனுப்பினேன். அவர் எனக்கு ஒரு பதில் எழுதினார். வாசகர் கடிதம் எழுதுவது போல எனக்கு மகிழ்ச்சியளிக்கும் செயல் வேறொன்றில்லை. இன்று இணையத்தில் ‘’நீதிபதி மகராஜன்’’ எனத் தேடினேன். அவரைப் பற்றி நிறையத் தகவல்கள் இருந்தன.நீதிபதி மகராஜன் அவர்கள் சிறந்த தமிழ் அறிஞர். தமிழ் அறிஞர்களான ராஜாஜி, டி.கே.சி, தொ.மு. பாஸ்கரத் தொண்டமான் ஆகியோரின் நண்பர். டி கே சி யின் வட்டத்தொட்டி அமைப்பை சென்னையில் நடத்தியவர். கம்பனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். ஷேக்ஸ்பிய்ரைத் தமிழில் மொழிபெயர்த்தவர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர். அவரது எழுத்துக்கள் நூல்வடிவம் பெற்றிருக்கின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் அவரது நூற்றாண்டு விழா நடைபெற்றிருக்கிறது. https://justicemaharajan.org என்ற இணையதளமே இருந்தது. அதில் நீதிபதி மகராஜன் அவர்கள் எழுதிய நீதிமன்ற நினைவுகள் என்ற நூல் இருந்தது. அதனை வாசித்தேன்.
நீதிபதி மகராஜனின் மொழிநடை என்பது மிகவும் இனிய மொழிநடை. அவரது சொற்தேர்வுகளும் வாக்கிய அமைப்புகளும் கூறுமுறைகளும் அதிசயிக்க வைக்கின்றன. அவர் கூறும் விஷயத்தை மேலும் இனிமையாகக் கூறுவது சாத்தியமான ஒன்றுதானா என்ற ஐயம் வாசிக்கும் எவருக்கும் ஏற்படும். அத்தனை இனிய நடை அவரது மொழிநடை.
தமிழ்ச் சமூக வரலாற்றிலும் தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றிலும் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவராக விளங்கியிருக்கிறார் நீதிபதி மகராஜன் அவர்கள்.
அ-புனைவு நூல் எவ்விதம் தனக்குள் பல புனைவு சாத்தியங்களைக் கொண்டிருக்கும் என்பதற்கு ‘’நீதிமன்ற நினைவுகள்’’ நூல் ஒரு சிறந்த உதாரணம். மகராஜன் சிறுவனாக இருந்த போது அவரது வீட்டுக்கு வாராவாரம் பழநியிலிருந்தும் திருச்செந்தூரிலிருந்தும் பழனியாண்டவனின் திருச்செந்திலாண்டவனின் திருநீற்றுப் பிரசாதம் தபாலில் வருகிறது. அதனை மகராஜனுக்குப் பூசி விடும் அவரது அன்னை ஒவ்வொரு முறையும் ‘’ ஊருக்கு நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும்’’ என்று கூறி பூசுகிறார். ஊருக்கு நல்ல பிள்ளையாக இருத்தல் என்பது அவரது மனதில் பதிந்து விடுகிறது. சிறுவனாயிருக்கும் போது கடவுள் பக்தி கொண்டிருந்த மகராஜன் இளைஞரான போது திராவிட இயக்கம் மேல் ஈர்ப்பு கொண்டவராகிறார். கல்லூரி மாணவர்கள் அனைவரும் கடவுள் மறுப்பு விஷயங்கள் மேல் ஈர்க்கப்படுகின்றனர். ‘’சாமியாவது மந்திரமாவது’’ என இருக்கிறார் மகராஜன். சட்டம் படிக்கும் போது ஒரு சட்டப் புத்தகத்தை நூலகத்தில் எடுக்கும் போது பல ஆண்டுகள் யாரும் எடுக்காத அந்தப் புத்தகத்தில் ஒரு விஷத்தேள் ஒன்று இருந்து அது மகராஜன் கையில் கொட்டி விடுகிறது. பொறுக்க முடியாத வலியில் அவதிப்படுகிறார் மகராஜன். நேரம் ஆக ஆக தேள் விஷத்தின் கடுப்பு கூடிக் கொண்டே போகிறது. சொந்தக்கார பையன் ஒருவன் வருகிறான். ஒரு மந்திரம் சொல்லி தன் கையில் வைத்திருந்த வேப்பிலையால் தேள் கொட்டிய இடத்தில் நான்கு தடவை அடிக்கிறான் அந்தப் பையன். அடுத்த கணம் மகராஜனின் வலி இருந்த இடம் தெரியாமல் போகிறது. இது எப்படி சாத்தியம் என அந்த இளைஞனிடம் கேட்கிறார் மகராஜன். தனக்கு ’’மந்திர சித்தி’’ உண்டு என்கிறான் அந்த இளைஞன். இந்த சம்பவம் மகராஜனின் மன அமைப்பை மாற்றுகிறது. திராவிட இயக்க கடவுள் மறுப்பு விஷயங்களிலிருந்து விலக்கம் கொள்கிறார். ஆன்மீகம் மீது ஈடுபாடு ஏற்படுகிறது. கொல்லங்கோடு கண்ணப்ப சுவாமிகள் அவருக்கு ஆன்மீக குருவாக விளங்குகிறார்.
அவரது சட்ட வாழ்க்கையில் நடக்கும் பல சுவாரசியமான சம்பவங்களைக் குறிப்பிடுகிறார் நீதிபதி மகராஜன். அந்த சம்பவங்களுக்கு அவர் காட்டும் இலக்கிய மேற்கோள்கள் வாசகன் கற்பனையை பல திசைகளுக்கும் விரிவடையச் செய்கிறது. ஒரு அத்தியாயத்தில் நீதிபதி மகராஜன் ஒரு சம்பவத்தைச் சொல்கிறார். அதாவது மில்டன் வாழ்க்கையில் நடந்த சம்பவம். கவிஞர் மில்டனுக்கு கண் பார்வை பறிபோகிறது. அப்போது மில்டன் கடவுளுக்குத் தன் கவிதை மூலம் ஒரு விஷயத்தைச் சொல்கிறான். அதாவது, ஓர் அரசனுக்கு இரண்டு பணியாளர்கள் இருக்கிறார்கள். ஒருவன் வெளிநாட்டில் ஒரு மாடமாளிகையில் அரசனின் தூதனாக இருந்து அரசுப்பணியை மேற்கொள்கிறான். இன்னொருவன் அரச அரண்மனையின் வாயிற்கதவுக்குப் பக்கத்தில் காவலனாக இருக்கிறான். மில்டன் இருவருமே அரசுப் பணியாளர்களே என்கிறார். அதே போல கண் இருப்பவர்கள் தூதர்களைப் போல பணியாற்றட்டும் ; நான் வாயிற்காப்பாளன் போல இருக்கிறேன் என்கிறான். He also serves who stands and waits என்பது மில்டனின் கவிதை வரி. மில்டனின் மிக மேன்மையான கவிதை வரிகளில் ஒன்று இது என எனக்குத் தோன்றியது. இந்த வரியைக் குறிப்பிடும் நீதிபதி மகராஜன் ஒரு ஆங்கில் நீதிபதியின் தீர்ப்பை சுட்டிக் காட்டுகிறார். அதாவது, வீட்டுக்குள் இருக்கும் ஒருவனைக் கொலை செய்ய இரண்டு பேர் செல்கிறார்கள். ஒருவன் வாசலில் நின்று கொண்டு வெளியில் இருந்து யாரும் உள்ளே சென்று விடாமல் பார்த்துக் கொள்கிறான். இன்னொருவன் உள்ளே சென்று உள்ளே இருப்பவனைக் கொலை செய்கிறான். கொலை செய்தவனுக்கு மரண தண்டனையும் வெளியில் நின்றவனுக்கு ஆயுள் தண்டனையும் கிடைக்கும் என்ற நிலை. அப்போது வழக்கறிஞர் மில்டனின் He also serves who stands and waits என்ற கவிதை வரியைக் குறிப்பிட்டு வாசலில் நின்று கொலைக்கு உடந்தையாய் இருந்தவனுக்கும் தூக்கு வாங்கிக் கொடுக்கிறார்.
தமிழறிஞர் பாஸ்கரத் தொண்டைமான் டிஸ்டிரிக்ட் மாஜிஸ்ட்ரேட்டாக இருந்த போது எந்த வக்கீலுக்கும் வாய்தா கொடுக்க மறுக்கிறார். ஒரு வக்கீல் தொண்டைமானிடம்