Friday, 6 March 2026

விபரம் (நகைச்சுவைக் கட்டுரை)

எனது நண்பர் ஒருவர் மும்பையில் வசிக்கிறார். அவருக்கு இங்கே ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் கல்லூரி அருகே 5 ஏக்கர் நிலம் உள்ளது. குத்தகைக்கு விட்டிருக்கிறார். புறவழிச்சாலை புதிதாக அமைவதால் அவரது நிலத்துக்கு சிறப்பான சாலை வசதி கிடைக்க இருக்கிறது. சாலைப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக அவரது நிலத்தின் விலை இப்போது கணிசமாக ஏறி விட்டது.  நல்ல விலை கிடைப்பதால் நிலத்தை விற்கலாம் என முடிவு செய்திருக்கிறார். இப்போது விற்றாலும் லாபம் இன்னும் சில வருடங்கள் தள்ளி விற்றாலும் லாபம் என இருக்கிறார். இடத்தை வாங்க நல்ல பார்ட்டி இருந்தால் சொல்லவும் என்று எனக்கு ஃபோன் செய்தார். இடத்தின் ஆவணம், மூல ஆவணம், பட்டா ஆகியவற்றை மின்னஞ்சலில் அனுப்பச் சொன்னேன். அவருக்குத் தெரிந்த மீடியேட்டர்களிடமும் விபரம் சொல்லி விடுமாறு சொன்னேன். அவர் என் வழியாக நடப்பதை விரும்புகிறேன் என்று சொன்னார். இருந்தாலும் நாம் மற்றவர்களிடமும் சொல்லுங்கள் என வற்புறுத்திக் கூறினேன். அது நன்மை பயப்பது என்பது என்பது எனது நடைமுறைப் புரிதல். பொதுவாக ரியல் எஸ்டேட் விஷயங்கள் கமுக்கமாக இருப்பது நல்லது என எண்ணுவார்கள். அதன் உப விளைவு என்னவெனில் அந்த இடம் தொடர்பாக பல புனைவுகள் உருவாகிவிடும். பலரிடம் விஷயத்தைத் தெரியப்படுத்தினாலும் மேலும் புனைவுகள் உருவாகும் என்றாலும் விஷயம் பலரிடம் கொண்டு செல்லப்படுவது அந்த இடம் முடிய ஒரு வாய்ப்பை உருவாக்கும்.  

நான் சொன்னபடி அவர் பலரிடமும் சொல்லியிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன் ஒருவர் எங்கள் தெருவில் நில உரிமையாளரான நண்பரின் பெயரைச் சொல்லி வீடு விசாரிக்கிறார். புறவழிச்சாலை அருகே வயல் உள்ளவர் என்பது தான் அவர் கூறும் தகவல். நில உரிமையாளரின் வீடு ஊரிலிருந்து 10 கி.மீ தொலைவு கொண்ட இன்னொரு கிராமத்தில் இருக்கிறது. அவர் வீட்டை ஏன் என் வீடு இருக்கும் பகுதியில் தேடிக் கொண்டிருக்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை. இருந்தாலும் புறவழிச்சாலை அருகே நிலம் உள்ளவர் எனக் கூறியதால் எனக்கு ஒரு சிறு ‘’பொறி’’ தட்டியது. என்ன காரணத்துக்காக அவரை நீங்கள் பார்க்க வேண்டும் என்று கேட்டேன். அவர் வயலில் டிராக்டர் உழ என்று கூறினார். புறவழிச்சாலை அருகே நிலம் உள்ளவர் என நீங்கள் கூறுபவர் எனக்குத் தெரிந்தவர் தான் ஆனால் அவர் நிலத்தைக் குத்தகைக்கு விட்டிருக்கிறார். அந்த குத்தகைதாரர் யார் என விசாரித்து அவரைச் சென்று பார்ப்பது உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று கூறினேன். அவர் சற்று குழப்பமாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. அவர் வீடு எங்கே இருக்கிறது என விசாரித்துக் கொண்டு அவருடைய அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டேன். அவர் கிட்டத்தட்ட தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் விசாரித்ததை நான் பார்த்தேன். யாரேனும் என்னிடம் முகவரி கேட்டு விசாரித்தால் அவர்களை உரிய இடத்தில் சேர்க்க வேண்டும் என எப்போதும் விரும்புவேன். ஆனால் அவர் யாரைப் பார்க்க விரும்பினாரோ அவரைப் பார்க்காமலே சென்று விட்டார். ஏனென்றால் அவர் பார்க்க விரும்பிய நபர் எங்கள் தெருவில் எங்கள் ஊரிலேயே இல்லை. 10 கி.மீ தள்ளி இருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் அவர் வீடு 10 கி.மீ தள்ளி இருக்கிறதே தவிர அவர் இப்போது இருப்பது மும்பையில். அந்த விஷயத்தை அப்படியே சில பொழுது விட்டு விடுவோம் என விட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மும்பை நண்பருக்கு ஃபோன் செய்து விபரம் சொல்வோமோ என நினைத்தேன். கொஞ்சம் தெளிவாகட்டும் என விட்டு விட்டேன். 

மறுநாள் காலை எழுந்ததும் முகவரி தேடி வந்தவர் வீடு எந்த பகுதியில் இருக்கிறதோ அங்கு சென்று அவருக்கு அவர் தேடிய நில உரிமையாளரின் அலைபேசி எண்ணை அளித்து விடுவோம் ; அவர் என்ன பேச நினைக்கிறாரோ பேசிக் கொள்ளட்டும் என அவர் பகுதி நோக்கிச் சென்றேன். அப்போது அவர் எதிரில் இரு சக்கர வாகனத்தில் எதிர்ப்பட்டார். என்னைக் கவனிக்கவில்லை. வேகமாக சென்று விட்டார். நான் வாகனத்தைத் திருப்பிச் சென்று அவரை நிறுத்தினேன். அவருக்கு என்னைப் பார்த்தது ஆச்சர்யம். நான் அவரிடம் மெல்ல விஷயத்தைச் சொன்னேன். அவர் தேடி வந்தவரின் எண் என்னிடம் இருக்கிறது ; அவர் மும்பையில் இருக்கிறார். அவர் எண்ணைத் தருகிறேன். அவரிடம் பேசுவதென்றாலும் பேசுங்கள். உங்கள் எண்ணை அவருக்குத் தந்து அவரைப் பேசச் சொல்வதானாலும் பேசச் சொல்கிறேன். டிராக்டர் உழுவது தொடர்பாக அவருக்கு சொல்ல எதுவும் இருக்காது ; அவர் விவசாயம் செய்யவில்லை. அவர் மெல்ல புறவழிச்சாலை அருகே இருக்கும் விலைக்கு வந்திருக்கிறது என்று சொன்னார்கள். அது குறித்து விசாரிக்க வந்தேன் என்றார். மூட்டமாக இருந்த விஷயங்கள் எனக்கு புலப்பட்டன. 

அவர் புறவழிச்சாலை அருகே இருக்கும் இடத்தை நன்றாக அறிந்திருக்கிறார். அந்த இடம் விற்பனைக்கு என்று அவரிடம் யாரோ சொல்லியிருக்கிறார்கள். உரிமையாளரின் பெயரையும் கூறியிருக்கிறார்கள். உரிமையாளர் எனது நண்பர் என்பதைக் கூறி என்னைச் சந்தித்தால் நான் இடத்தை முடித்துக் கொடுப்பேன் என்று கூறியிருக்கிறார்கள். அவர் என் பெயரை மறந்து விட்டார். நண்பரின் பெயரும் எனது வீடு இருக்கும் பகுதியின் தெருவின் பெயரும் நினைவில் இருந்திருக்கிறது. அங்கே வந்து தேடியிருக்கிறார். அவர் அந்த இடத்தை வாங்க விரும்புகிறார். ஆனால் நிலம் வாங்க என்று சொல்லாமல் டிராக்டர் உழ என்று மாற்றிக் கூறியிருக்கிறார். இவை எனக்குப் புரிந்து விட்டன. 

சட்டென , ‘’அண்ணன்! நான் ரியல் எஸ்டேட் தான் பண்றன். நீங்க சொல்ற இடத்தோட ஓனர் எனக்கு ஃபிரண்டு. அவர் நம்பர் உங்களுக்குத் தரன். நீங்க பேசறீங்களா?’’ என்று கேட்டேன். 

‘’என்ன விலை சொறாங்க?’’ என்றார். 

நான் விலை விபரம் கூறினேன்.

‘’விலை கொஞ்சம் குறைச்சு முடிச்சுத் தர முடியுமா? ஒரே பேமெண்ட் கொடுத்துடலாம்’’

‘’பை பாஸ் வந்ததுல இருந்து டிமாண்ட் அதிகமா இருக்கு. ரேட் கூடிட்டே போகுது. நான் ஓனர்கிட்ட பேசிப் பாக்கறன். இன்னைக்கு நாளைக்கு ஊர்ல இருக்க மாட்டேன். வெளியூர் போறன். அதுவும் ஒரு லேண்ட் டீலிங் தான். நான் உங்களுக்கு ஃபோன் செய்யறன்’’

***

வீட்டுக்கு வந்ததும் கணினியில் கீழ்க்கண்டவாறு எழுதினேன். தலைப்பு விலை விபரம் என தட்டச்சிட்டேன். பின்னர் யோசித்து விபரம் என மாற்றினேன். முதல் வரியாக ‘’ஸ்தலம் 5 ஏக்கர் நன்செய் நிலமாகும். போர்வசதி கொண்டது’’ என எழுதினேன். அதன் பின் ஒரு ஏக்கர் = 43,560 சதுர அடி என்பதை அடுத்த வரியாக எழுதினேன். 5 ஏக்கர் = என எழுதி எத்தனை சதுர அடியோ அந்த எண்ணை எழுதினேன். பின்னர் ஒரு குழி = 144 சதுர அடி என எழுதினேன். ஐந்து ஏக்கரில் எத்தனை குழி இருக்குமோ அந்த எண்ணை எழுதினேன். நில உரிமையாளர் ஒரு குழி என்ன விலை சொல்கிறாரோ அந்த விலையை எழுதினேன். குழியின் எண்ணிக்கையையும் உரிமையாளர் கூறும் குழியின் விலையையும் பெருக்கி மொத்த தொகையை எண்ணால் எழுதுவோமோ என நினைத்தேன். அவ்விதம் செய்ய வேண்டாம் என அந்த முடிவைக் கைவிட்டேன். போர் வசதிக்கு ரூ.3,00,000 என எழுதினேன். நிலத்தை அளந்து கொள்ளலாம். இடம் கூடுதலாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாதோ நில உரிமையாளர் மொத்த விற்பனைத் தொகையில் மாற்றம் இல்லை எனக் குறிப்பிடுகிறார் என்று எழுதினேன். பட்டா என எழுதி நில உரிமையாளர் தன் பெயரில் தனிப்பட்டா வைத்துள்ளார் என்பதைக் குறிப்பிட்டேன். ஆவண விபரம் என்பதில் நிலத்தின் ஆவண எண்களைக் குறித்தேன். மூல ஆவண விபரங்களையும் குறிப்பிட்டேன்.பின்னர் அரசு இணையதளத்தில் அந்த சர்வே எண்ணின் பத்திர மதிப்பைத் தேடி எடுத்து பத்திர மதிப்பையும் குறிப்பிட்டேன். அடுத்த வரியாக மீடியேட்டர் கமிஷன் 1 % என எழுதி எழுத்தால் (ஒரு சதவீதம்) என எழுதினேன்.

இவற்றை ஒரு தாளில் பிரிண்ட் அவுட் எடுத்து நிலத்தை வாங்க விரும்புபவரிடம் கொடுத்து விடலாம் என இருக்கிறேன். அந்த பிரிண்ட் அவுட்டில் தேதியையும் எனது அலைபேசி எண்ணையும் பேனாவால் எழுதிக் கொடுத்து விட்டால் அந்த இடம் குறித்து விபர அறிக்கையாக இருக்கும் என எனக்குத் தோன்றியது. இதில் பல விஷயங்கள் எளிதாகும் என எண்ணினேன். 

வழக்கமாக என்ன நடைமுறை என்னவெனில் முதலில் விலை பேசுவார்கள்.பின்னர் ஆவண நகல் வாங்கி வழக்கறிஞர் அபிப்ராயம் பெறுவார்கள்.  அதன் பின் அளக்க முயற்சி செய்வார்கள். அதிலிருந்து வாங்குபவருக்கும் விற்பவருக்கும் பிணக்கு தொடங்கிவிடும். இடம் முடிப்பதற்குள் மீடியேட்டர்கள் பாடு போதும் போதும் என்றாகி விடும். இந்த விபர அறிக்கை வாங்குபவர் கைக்குச் செல்லும் போது அவர் பல தடவை இவற்றை மீண்டும் மீண்டும் எடுத்துப் பார்க்கவும் படித்துப் பார்க்கவும் வாய்ப்பு உருவாகும். மீடியேட்டரான என் கையிலும் ஒரு நகல் இருக்கும். இவ்விதம் செய்வது அந்த விஷயத்தை ஒரு வடிவத்துக்குள் கொண்டு வரும் என எண்ணினேன். 

ரியல் எஸ்டேட்டில் இருப்பவர்கள் ஒரு விஷயம் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்றால் வானத்தைத்தான் பார்ப்போம். மண் தொடர்பான முடிவுகள் வானில் தானே எடுக்கப்படுகிறது என!

Thursday, 5 March 2026

உணர்ச்சிகரமான மனிதர்

 ரியல் எஸ்டேட் விஷயங்கள் தொடர்பாக எனது பேராசிரியரை சென்ற வாரத்தில் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆசிரியர் - மாணவர் என்னும் நிலையைத் தாண்டி மிகவும் நட்பார்ந்த உணர்வுடன் நாங்கள் பல விஷயங்களைப் பேசிக் கொண்டோம். நேற்று தான் கவிதைகள் எழுத முயல்வதுண்டு என்று கூறினார். அவர் எழுதியவற்றைக் காட்டுமாறு கேட்டேன். சிலவற்றை என்னிடம் காட்டினார். 

ஜப்பானில் ஜென் ஆலயங்களில் ஓர் வழக்கம் உண்டு. அங்கே அந்த ஊரில் இருப்பவர்கள் - சாமானியர்கள், தொழிலாளர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், பெண்கள் - என சகலதரப்பினரும் தாங்கள் எழுதும் கவிதைகளை ஜென் ஆலயத்தில் உள்ள மரத்தில் சிறு நூல் மூலம் கட்டித் தொங்க விடுவார்கள். கவிதையை மிக உயர்ந்த உணர்வாக எண்ணுவதையும் தாங்கள் படைத்ததை மிக உயர்வான உணர்வுநிலையாகக் கருதுவதையும் வெளிப்படுத்தும் நிகழ்வு அது. 

முதலீட்டியம் சகல மனிதனையும் நுகர்வோனாக மட்டுமே ஆக்க வேண்டும் என்னும் தீவிரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நுகர்வு வெறியூட்டப்படுகிறது சமூகம். இந்த தளையிலிருந்து சமூகத்தை விடுவிக்கும் தன்மை படைப்பூக்கத்துக்கு மட்டுமே இருக்கிறது. 

படைப்பாளிகள் எப்போதும் படைப்பூக்கத்துடன் இருக்கும் இயல்பு கொண்டவர்கள். இருப்பினும் எல்லா மனிதனும் படைப்பூக்கத் தன்மையை சில கணங்களிலேனும் பெற இயல்பு கொண்டவனே. 

பேராசிரியர் படைப்பூக்க இயல்புக்கு தினம் கொஞ்ச நேரம் சென்று வருகிறார் என்பது மிகச் சிறப்பான விஷயம். தனக்கு இசை, நடனம் ஆகிய நுண்கலைகளிலும் ஆர்வம் உண்டு எனக் கூறியதைக் கேட்ட போது ஆச்சர்யமாக இருந்தது. ரியல் எஸ்டேட்டில் இப்படி ஒருவரா என!

Tuesday, 3 March 2026

நூதனச் சூழல்

 நேற்று எனது கவனத்துக்கு ஒரு விஷயம் வந்தது. எனது ஆலோசனையைக் கேட்டார்கள். 

அதாவது, பெங்களூரில் எனது நண்பர் ஒருவர் ஃபிளாட் வாங்குகிறார். ஃபிளாட் உரிமையாளர் அமெரிக்காவில் இருக்கிறார். அவரது மேலாளர் கிரயத் தொகையில் 10 சதவீதத்தை உரிமையாளர் சார்பாக நண்பரிடமிருந்து பெற்றுக் கொண்டிருக்கிறார். கிரய ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு தபாலில் அனுப்பப்பட்டு உரிமையாளரின் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. நண்பர் வங்கிக் கடன் ஏற்பாடு செய்து விட்டார். கிரய ஆவணத்திலும் தபால் மூலம் கையெழுத்திட்டு அனுப்புகிறேன் எனக் கூறுகிறார் உரிமையாளர். அந்த கையெழுத்திட்ட ஆவணத்தை மட்டும் பதிவாளர் முன் சமர்ப்பிக்க தனது மேலாளருக்கு பவர் ஆஃப் அட்டர்னி தந்துள்ளார். இவ்விதமே தொடரலாமா என்று நண்பர் என்னிடம் கேட்டார். 

நண்பர் மிகவும் சோர்வான குரலில் பேசினார். பலரிடம் விவாதித்து சோர்ந்திருப்பார் என யூகித்தேன். 

ஃபிளாட் உரிமையாளரை அவரது மேலாளருக்கு முழுமையான பவர் ஆஃப் அட்டர்னி கொடுக்கச் சொல்லுங்கள் என்று சொன்னேன். அந்த பவர் ஆஃப் அட்டர்னியில் நண்பர் வாங்க இருக்கும் சொத்தை முழுமையாகக் குறிப்பிட்டு பவர் வாங்க வேண்டும். அதன் பின் மேலாளர் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரில் வர உரிமையாளர் சார்பில் கையெழுத்திட்டு பதிவினை நிறைவு செய்யுங்கள் என்று சொன்னேன். 

ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவன் என்ற முறையில் நண்பரின் வலியை உணர்கிறேன். நான் சொன்ன வழிமுறையைத் தவிர வேறு எது செய்தாலும் நண்பர் சிக்கலில் சிக்கிக் கொள்வார். ஃபிளாட் உரிமையாளர் தான் ‘’வெளிநாடு வாழ் இந்தியர்’’ என்பதை வெளிக்காட்டாமல் பத்திரப்பதிவை முடிக்கப் பார்க்கிறார். அதற்கு அவர் பத்திரப்பதிவுக்காவது இந்தியா வர வேண்டும். அவ்விதம் இல்லாமல் அமெரிக்காவில் இருந்து கிரய ஆவணத்திலும் கையெழுத்திட்டு அதில் அமெரிக்க அட்வகேட்டின் முத்திரையுடன் அனுப்புகிறார் என்றால் அவர் வெளிநாடு வாழ் இந்தியர் என்பது ‘’ஃபிளாட் வாங்குபவர்’’ ஆன நண்பரும் அறிந்த விஷயம் இது என்றாகிவிடும். கிரய ஆவணத்தின் தேதிக்கும் வங்கி அளிக்கும் வரைவோலை அல்லது காசோலையின் தேதிக்கும் வித்தியாசம் வந்து விடும். உதாரணத்துக்கு மார்ச் 1ம் தேதி கிரய ஆவணம் கையெழுத்தாகிறது எனில் அதில் மார்ச் 4 தேதியிட்ட காசோலையோ அல்லது வரைவோலையோ குறிப்பிடப்பட முடியாது. காசோலை அல்லது வரைவோலையின் தேதியை ஆவணத்தில் குறிப்பிடாமல் இருந்தால் அது நண்பருக்குத்தான் பின்னடைவு. 

நண்பருக்குக் கடன் அளிப்பது தேசியமயமாக்கப்பட்ட வங்கி. அவர்கள் வழக்கறிஞர் இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் கவனமாக அணுகியிருக்க வேண்டும் என்பதும் வங்கி மேலாளர் இந்த கோப்பு தொடர்பாக நண்பருக்கு முன்னெச்சரிக்கை அளித்திருக்க வேண்டும் என்பதும் என் எதிர்பார்ப்பு. 

அவசியம் என்றால் சொல்லுங்கள் நான் வந்து உடன் இருக்கிறேன் என்றேன்.  

Monday, 2 March 2026

எஸ்டிமேட் (நகைச்சுவைக் கட்டுரை)

 எனக்கு ஓர் அழைப்பு வந்தது. அழைத்தவருக்கு சொந்தமாக 4 வீடுகள் இருக்கின்றன. பக்கத்து பக்கத்தில் அடுத்தடுத்து இருக்கும் 4 வீடுகள். 

‘’பிரபு ! வீட்டுக்கெல்லாம் பெயிண்ட் அடிக்கணும்’’

‘’அப்படியா ! மெட்டீரியல் நீங்க வாங்கிக் கொடுத்திடறீங்களா?’’

‘’லேபர் வித் மெட்டீரியல்னா என்ன காஸ்ட். லேபர் மட்டும்னா என்ன காஸ்ட்?’’

‘’அத நான் சொல்றன். அதுக்கு முன்னால நீங்க எப்படி செய்ய நினைக்கறீங்கன்னு யோசிக்காமலே காஸ்ட் தெரிஞ்சுக்க விரும்பறீங்களா? நீங்க ஒரு முடிவுக்கு வாங்க.’’

அவர் இதனை எதிர்பார்த்திருக்கவில்லை. ‘’மெட்டீரியல் நான் வாங்கி கொடுத்தடறன்’’

‘’ஓ.கே ! ஃபைன். இப்ப உங்க 4 வீடு பெயிண்ட் அடிக்க எத்தனை லேபர் ஆகும்னு உத்தேசமா சொன்னா போதும். பெயிண்ட் அடிக்க சாரக் கழி தேவைப்படும். சாரக்கழி வாடகைக்கு எடுத்து கொடுத்திடறீங்களா?’’

‘’அது வந்து’’ என்ன சொல்வதென்று தெரியாமல் தயங்கினார். ‘’கயித்துல தொங்கி பெயிண்ட் அடிப்பாங்களே?’’

‘’வெயிட் தாங்காம கயிறு அறுந்து விழுந்தா தன்னோட குடும்பத்துக்கு யார் இருக்கான்னு பெயிண்டர் யோசிக்க மாட்டாங்களா?’’

அமைதி நிலவியது. 

‘’ 4 வீடு பெயிண்ட் அடிக்க மினிமம் 15 நாள் ஆகும். நீங்க 15 நாளும் கூட இருங்க. மெட்டீரியல் வாங்கிக் கொடுங்க. சாரக்கழி வாடகைக்கு எடுத்துக் கொடுங்க. மொத்த பட்ஜெட்ல 60 பர்செண்ட் இதுக்கே ஆகும். நான் இப்ப தோராயமா எத்தனை பெயிண்டிங் லேபர் ஆவாங்கன்னு சொல்லிடறன். மெட்டீரியல் காஸ்ட் எவ்வளவு ஆகும் சாரக்கழி வாடகை எவ்வளவு ஆகும்னும் சொல்லிடறன்’’

‘’சரி ‘’ என்றார். 

‘’முதல்ல இப்ப உங்க பில்டிங் எப்படி இருக்குன்னு பாக்கணும். பாசி படிஞ்சிருக்கா. ரஸ்ட் அதிகமாக இருக்கா ? கிரில் எல்லாம் எப்படி இருக்கு?இதெல்லாம் தெரிஞ்சுக்கணும். நானும் என் ஸ்டாஃப்ஃபும் வரோம். வந்து பாத்துட்டு எஸ்டிமேட் கொடுக்கறோம். உங்க பில்டிங் மெஷர்மெண்ட் எடுக்கணும். அப்பதான் மெட்டீரியல் எவ்வளவு தேவைன்னு துல்லியமா சொல்ல முடியும். நீங்க என்ன செய்ங்க. எனக்கு 1000 ரூபாய் கொடுங்க. எல்லா விவரமும் துல்லியமா சொல்லிடறன்.’’

’’சரி சார்’’

அதன் பின் எனக்கு ஃபோன் வரவில்லை. 

ஸ்ரீ காவேரி ரஹஸ்யம்

 
நூல் : ஸ்ரீ காவேரி ரஹஸ்யம் ஆசிரியர் : பி. மஹாதேவ ஐயர் பக்கம் : 320 விலை : ரூ. 400 பதிப்பகம் : அல்லயன்ஸ் பதிப்பகம், பழைய எண் 244, ராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை, 600004 

நதியே மனிதருக்கு வாழ்க்கையைத் தந்தது. தருகிறது. நதியே மனிதர்களை சமூகமாக ஆக்கியது. பாரத நிலம் நதியை அன்னையாகக் கடவுளாக வணங்கும் உணர்வு கொண்டது. உறக்கம் தெளிந்து விழித்ததும் ‘’ கங்கை யமுனை சரஸ்வதி சிந்து காவேரி நர்மதை கோதாவரி’’ என்ற ஏழு நதி அன்னையரை நிலத்தில் பிறந்த ஒவ்வொரு மானுடனும் நன்றியுடன் நினைத்து மதிப்புடன் அப்பெயர்களை உச்சரிக்க வேண்டும் என்கிறது நமது மரபு. 

தமிழகத்துக்கு அன்னை போல் விளங்கும் காவிரியின் சிறப்புகளை காவிரிக்கரையில் வாழ்ந்த ஞானியரின் சிறப்புகளை எடுத்துக் கூறும் நூல் ‘’ஸ்ரீ காவேரி ரஹஸ்யம்’’. தத்தாத்ரேய குரு மரபு சிறப்புற்றிருக்கும் குடகு மலைப் பிராந்தியத்தில் பிறந்து வீரசைவ மரபு கோலோச்சும் மைசூர் பிராந்தியத்தைத் தாண்டி இறையும் உயிரும் வேறல்ல எனக் காட்டும் அத்வைதிகளின் அருள் வெளியான தமிழகத்தில் பாய்ந்து ஜீவன்கள் பரம்பொருளை அடைவது போல் காவேரி சமுத்திரத்தை அடைகிறது. 

காவிரிக்கரையில் வாழ்ந்த முக்கியமான சான்றோர்களின் யோகிகளின் ஆசான்களின் வாழ்வினை கூறிச் செல்கிறது இந்நூல். அத்தகு பெரியோர்கள் காவிரி குறித்து எழுதிய நூல்களையும் பக்தித் துதிகளையும் வாசகர் முன் கொண்டு வருகிறது ‘’ஸ்ரீ காவேரி ரஹஸ்யம்’’. சதாசிவ பிரம்மேந்திரர், போதேந்திராள், மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள், ஸ்ரீதர ஐயாவாள் ஆகிய பெரியோரின் வாழ்க்கையைக் கூறுவதுடன் காவிரி குறித்து பாடப்பட்ட தேவாரப் பாடல்களையும் ஆழ்வார்களின் பாசுரங்களையும் காவிரிக்கரையில் வாழ்ந்த ஆழ்வார், நாயன்மார்களின் முழுமையான பட்டியலையும் இந்நூல் அளிக்கிறது. சங்க இலக்கியத்தில் காவிரி இடம் பெற்றிருக்கும் நூல்களை வரிசைப்படுத்தி உள்ளது இந்நூல். நமது மரபில் உன்னதமான விஷயங்களை ‘’ஸ்மரணை’’ செய்ய வேண்டும். நலம் நல்குவதும் பயன் பயப்பதுமான செயல் அது. காவிரியைத் தன் ஸ்மரணையில் கொண்டவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் ‘’ஸ்ரீ காவேரி ரஹஸ்யம்’’. 

Sunday, 1 March 2026

சோறிடும் நாடு ; துணி தரும் குப்பை

’’சோறிடும் நாடு ; துணிதரும் குப்பை’’ என உலகியலை எள்ளளவும் பொருட்டாக மதிக்காமல் அலைந்து திரிபவர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள். இந்த தேசம் அவ்விதமாக அலைந்து திரிபவர்களின் தேசம். இன்று சிதம்பரம் சாலையில் தேசாந்திரி ஒருவரைச் சந்தித்தேன். அவர் ராமேஸ்வரத்திலிருந்து நடந்து வந்து கொண்டிருந்தார். இளைஞராக இருந்தார். வயது 30 லிருந்து 35 இருக்கலாம். கையில் ஒரே ஒரு சிறுபை. கையில் ஒரு சிறிய கழி வைத்திருந்தார். அவரது தோற்றம் மூலம் அவர் ஒரு தேசாந்திரியாக இருப்பார் என யூகித்தேன். இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நான் எனது வாகனத்தை நிறுத்தி இறங்கி அவரைப் பற்றி விசாரித்தேன். அவர் காசியிலிருந்து தனது யாத்திரையைத் துவக்கியிருக்கிறார். 12 ஜ்யோதிர்லிங்கங்களையும் தரிசிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். பாதசாரியாக தனது பயணத்தைத் துவங்கி விட்டார். ராமேஸ்வரம் வரை சென்று விட்டு அங்கிருந்து ஸ்ரீரங்கம் சென்று பள்ளி கொண்ட பெருமாளை சேவித்து விட்டு சிதம்பரம் நடராஜரை தரிசிக்க சிதம்பரம் சென்று கொண்டிருக்கிறார். ’’தங்களுக்கு உணவளிக்க விரும்புகிறேன்’’ என்று சொன்னேன். சரி என்றார். நான் இரு சக்கர வாகனத்தில் அருகில் இருந்த நகரத்துக்குச் சென்று உணவு பார்சல் வாங்கி வந்து அவரிடம் வணங்கி அளித்தேன். அவர் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் புன்னகைத்து விட்டு நடக்கத் தொடங்கினார்.    

Saturday, 28 February 2026

எஸ் ஐ ஆர் (நகைச்சுவைக் கட்டுரை)

எனது வீட்டுக்கு பக்கத்துத் தெருவில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவருக்கு 82 வயது. அவரது ஒரு மகன் அமெரிக்காவில் இருக்கிறார் ; இன்னொரு மகன் சென்னையில் இருக்கிறார். ஒரு மகள். அவர் இருப்பது பெங்களூரில். நண்பர் அதனால் அவ்வப்போது சென்னை பெங்களூர் சென்று விடுவார்.  

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் அறிவிக்கப்பட்டதும் எனக்கு ஃபோன் செய்தார். ‘’பிரபு ! எஸ் ஐ ஆர் க்கு எனக்கு ஃபார்ம் ஃபில் அப் செய்யணும்’’

‘’சார் ! இப்பதான் அனௌன்ஸ்மெண்ட் வந்திருக்கு. கணக்கெடுப்பு ஆரம்பிக்க இன்னும் 1 மாசமாவது ஆகும்’’

இருப்பினும் வாரத்துக்கு இரண்டு நாள் எனக்கு ஃபோன் செய்து நினைவூட்டுவார். 

கணக்கெடுப்பு ஆரம்பித்ததும் தினமும் ஃபோன் செய்வார். ‘’பிரபு ! எங்க வீட்டுக்கு யாரு கணக்கெடுக்க வர்ராங்கன்னு பாருங்க’’

‘’சார் எங்க வீட்டுல கணக்கெடுக்க வந்தா என்கிட்ட சொல்லுங்கன்னு சொல்லியிருக்கன். இன்னும் யாரும் வரல. அவங்க 3 தடவை வருவாங்க. நிச்சயம் உங்க பேரை சேத்துடலாம்’’

எங்கள் பகுதிக்கு ஒருவர். அவர் பகுதிக்கு இன்னொருவர். இருந்தாலும் அவரது படிவத்தை ஃபில் அப் செய்து சென்னைக்கு தபாலில் அனுப்பி கையெழுத்து வாங்கி சேர்த்து விட்டேன். 

’’தற்காலிகப் பட்டியல் எப்போ வெளியிடுவாங்க?’’ என்று கேட்கத் துவங்கினார். 

பட்டியல் வெளியானது. அவரது வீட்டில் எல்லாருடைய பெயரும் இருந்தது அவர் பெயரைத் தவிர.

மீண்டும் வாக்காளர் பட்டியல் சேர்ப்பு படிவம் சென்னைக்கு அனுப்பி கையெழுத்து வாங்கி தாலுகா ஆஃபிஸில் கொடுத்தேன். 

இறுதிப் பட்டியல் எப்போது வரும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

இறுதிப் பட்டியல் வந்ததும் அதில் என் பெயரைத் தேடவில்லை ; அவருடைய பெயரைத்தான் தேடினேன். இருந்தது. ஃபோன் செய்து சொன்னேன். 

‘’பிரபு ! எனக்கு இப்ப ஒரு புது வோட்டர் ஐ டி கொடுப்பாங்க. அது தபாலில் வரும் . வாங்கி வச்சுக்கங்க’’

இன்று போஸ்ட்மேனைப் பார்த்தேன். பெரியவர் விபரம் சொல்லி வோட்டர் ஐ டி வந்தால் என்னிடம் கொடுங்கள் என்றேன். 

‘’சார் அவருக்கு போன வாரமே வோட்டர் ஐ டி வந்திடுச்சு. வீடு பூட்டியிருக்கு. அதனால டெலிவரி பண்ண முடியல’’ 

இன்று போஸ்ட் ஆஃபிஸ் சென்று நான் கையெழுத்து போட்டு அவருடைய வோட்டர் ஐ டி யை வாங்கினேன். 

புதிய சூழல் - 5 (நகைச்சுவைக் கட்டுரை)

 ஒரு ஊரையும் இன்னொரு ஊரையும் இணைக்கும் சாலைகளின் அகலம் முன்னர் மிகக் குறைவாக இருக்கும். இப்போது பெரும்பாலான சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக இருக்கின்றன. 

Friday, 27 February 2026

ஆசிரியரும் மாணவரும் ( நகைச்சுவைக் கட்டுரை)

 எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். எங்களுக்கு 35 ஆண்டு கால பழக்கம். அவரது மிக நெருங்கிய உறவினர் ஒருவர் எனக்கு கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். எனது பேராசிரியர் எனது நண்பரின் நெருங்கிய உறவினர் என்பது எனக்கு கல்லூரியை நிறைவு செய்த பின்னரே தெரியும். நண்பரின் ஊர் எனக்கு கிழக்கே இருக்கிறது. கல்லூரி வடக்கே இருக்கிறது. எனது பேராசிரியர் நண்பரின் உறவினர் என்பது சமீபகாலமாகத்தான் எனக்குத் தெரிய வந்தது. பேராசிரியர் தனது நிலம் ஒன்றை விற்க விரும்புகிறார். நண்பர் மூலம் அந்த தகவல் வரப்பெற்றதும் பேராசிரியரைக் காணச் சென்றேன். ஒரு மாணவனுக்கு கல்லூரியில் நான்கு ஆண்டுகளில் 50 லிருந்து 60 பேராசிரியர்கள் வகுப்பு எடுத்திருப்பார்கள். எனவே மாணவனுக்கு ஆசிரியர்களை நன்றாக நினைவிருக்கும். பேராசிரியர்கள் ஓர் ஆண்டில் 200 மாணவர்களுக்கு வகுப்பெடுத்தால் 35 ஆண்டுகளில் 7000 மாணவர்களுக்கு வகுப்பெடுத்திருப்பார்கள். அத்தனை பேரையும் நினைவில் வைத்திருப்பது இயலாது. நண்பர் பேராசிரியரின் அலைபேசி எண் கொடுத்தார். எனக்கு அது அவ்வளவாக வசதி இல்லாத உபகரணம். அதில் குறுஞ்செய்தி அனுப்பினால் தெரிவிக்க வேண்டிய விஷயத்தை தெளிவாகத் தெரிவித்து விட்டேன் என எண்ணுவேன். பேசுவது சரியாக இருக்கிறதா என்பது எனக்கு ஐயம். இரண்டு முறை பேசினேன். ஆனால் நான் அவரது மாணவன் என்பதை தெரிவிக்கவில்லை. நண்பரின் பெயரைச் சொல்லி அறிமுகம் செய்து கொண்டேன். இன்று நேரில் சந்தித்தேன். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறோம். நான் படித்த ஆண்டைக் கூறி அவருடைய மாணவன் என்பதைக் கூறினேன். எங்களுக்குள் மிகவும் சகஜத்தன்மை ஏற்பட்டு விட்டது. அவர் கல்லூரியில் ‘’ஸ்டாஃப் ரூம்’’க்குள் இருக்கும் மனநிலைக்கு வந்து விட்டார். பல நகைச்சுவைகளைக் கூறினார். அவர் மிகவும் நகைச்சுவையாகப் பேசக் கூடியவர் என மாணவர்களிடம் பிரபலம். எனக்கு காலவெள்ளத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்னால் போய் விட்டதாகத் தோன்றியது. அவரது மகனை அறிமுகப்படுத்தினார். அவர் லண்டனில் வணிக மேலாண்மை படித்தவர். அவரிடம் நில விஷயங்களை நாம் பேசிக் கொள்வோம் ; தங்கள் தந்தை எனது பேராசிரியர் எனக் கூறினேன். அவரும் உற்சாகமாக சரி என்றார். 

புதிய சூழல் - 4 (நகைச்சுவைக் கட்டுரை)

முன்னர் கல்லூரி மாணவர்கள் சிகரெட் புகைக்கப் பழகுவார்கள். இப்போது பள்ளி மாணவர்களுக்கே போதை மருந்து பழக்கம் இருக்கிறது.