Thursday, 11 December 2025

பாரதி -11.12.1882

 


செய்தித்தாள் வாசித்தல் ( நகைச்சுவைக் கட்டுரை)

இந்திய ஆட்சிப்பணித் தேர்வுக்கும் மத்திய அரசு மாநில அரசு வங்கித் தேர்வுகள் ஆகியவற்றுக்கும் தயார் செய்யும் பலரை நான் அறிவேன். அவர்கள் அனைவருமே தங்கள் தேர்வு தயாரித்தலின் ஒரு பகுதியாக தினமும் ஒரு மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் செய்தித்தாள் வாசிப்பார்கள். அவர்கள் வாசிக்கும் செய்தித்தாள் ‘’தி ஹிந்து’’. நான் அவர்களிடம் ‘’ இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ சேர்த்து வாசிக்குமாறு சொல்வேன்.   அவர்களிடம் நான் ஒரு விஷயம் கவனித்ததுண்டு. பட்டப்படிப்பு முடித்து 21 வயதுக்கு மேல் மட்டுமே அவர்கள் செய்தித்தாள் வாசிக்கத் துவங்கியிருப்பார்கள். அதற்கு முன் அவர்களுக்கு அந்த வழக்கம் இருந்திருக்காது. மூன்றிலிருந்து நான்கு வருடம் தேர்வுக்குத் தயார் செய்கிறார்கள் என்றால் அந்த காலகட்டத்தில் தீவிரமாக செய்தித்தாள் வாசிப்பார்கள். அரசுப் பணி கிடைத்து உத்யோகத்துக்கு வந்த பின்னர் செய்தித்தாள் வாசிப்பதை நிறுத்தி விடுவார்கள். ஜனநாயக நாட்டில் செய்தித்தாள் என்பது ஆயிரக்கணக்கானோர் கவனத்துக்கு ஒரு விஷயத்தைக் கொண்டு செல்லும் சாதனம். ஒரு செய்தித்தாள் சில ஆயிரம் அல்லது சில லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு காலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள் சில ஆயிரம் அல்லது சில லட்சம் நபர்களை அடைந்து அவர்களால் வாசிக்கப்படுகிறது என்றால் வாசிக்கப்படும் விஷயம் மேலும் துலக்கமும் அடர்த்தியும் கொள்கிறது. இன்று ஏகப்பட்ட நாளிதழ்கள் வெளியாகின்றன. ஒருவர் அனைத்து நாளிதழ்களையும் படிக்க வேண்டியதில்லை. அது அவசியமும் இல்லை. ஆனால் ஏதேனும் ஒரு நாளிதழையாவது வாசிக்கும் வழக்கம் கொண்டிருப்பது உகந்தது . இன்று பெரும்பான்மையான செய்தித்தாள்கள் இணையத்தில் இலவசமாக வாசிப்புக்குக் கிடைக்கின்றன. அதற்கென செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இவ்வளவு எளிதாக நாளிதழ்கள் எப்போதும் வாசகரை அடைந்ததில்லை. செய்தித்தாள் வாசிக்கும் வழக்கம் கொண்டிருக்கும் மாநில அரசு மத்திய அரசு அதிகாரிகளை நான் கண்டதில்லை. அந்த பொறுப்பில் இருக்கும் நண்பர்களிடம் தினமும் செய்தித்தாள் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருங்கள் என்று கூறுவேன். அது அவர்களை அசௌகர்யமாக உணர வைக்கிறது என்பதை அறிந்தேன். அவர்கள் செய்தித்தாள் வாசிக்கத் தயாராக இல்லை. அதில் அவர்களுக்கு பெரும் மனத்தடையும் எதிர்ப்பும் இருக்கிறது என்பதை அவதானித்துக் கொண்டேன். 

ஊருக்கு அருகில் முக்கியமான சாலை ஒன்றையொட்டி அமைந்திருந்த பள்ளியின் வளாகத்தினுள் பத்து ஆண்டு வளர்ந்திருந்த மரம் ஒன்று அரசு அனுமதியின்றி வெட்டப்பட்டது. அந்த பாதை வழியாக நான் தினமும் செல்வேன். அந்த மரம் வெட்டப்பட்ட அன்று நான் ஊரில் இல்லை ; வெளியூர் சென்றிருந்தேன். மறுநாள் அந்த பாதையில் சென்ற போது அந்த மரம் வெட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரே பள்ளி வளாகத்தில் இருந்த மரம் வெட்டப்பட்டதற்கு பொறுப்பு என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வெட்டப்பட்ட மரத்துக்கான அபராதம் செலுத்தப்பட வேண்டும் என வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். ஒரு பிரபலமான பத்திரிக்கை ஒன்றின் உள்ளூர் நிருபரைச் சந்தித்து இந்த விஷயத்தை எடுத்துக் கூறி மரம் வெட்டப்பட்ட புகைப்படங்களை அளித்து ‘’பொது இடங்களில் மரங்கள் மாயம் : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?’’ என செய்தி வெளியிடுமாறு கேட்டுக் கொண்டேன். இந்த விஷயம் குறித்து நிருபர் விசாரித்து அறிந்து தலைமை அலுவலகத்துக்கு செய்தி அனுப்புமாறு கேட்டுக் கொண்டேன். அவர் அந்த இடத்தை நேரில் சென்று பார்த்தார். விசாரித்தார். மேற்படி தலைப்பிலேயே செய்தி வெளியானது. அதில் இன்னொரு விஷயமும் இணைந்திருந்தது. அது என்னவெனில் மாவட்டத்தின் புராதானமான விஷ்ணு ஆலயம் ஒன்றின் சன்னிதித் தெருவில் இருந்த 14 வேம்பு, மலைவேம்பு, புங்கன் மரங்களை தனது செங்கல் காலவாய்க்கு எரிபொருளாகப் பயன்படுத்த வெட்டி எடுத்துச் சென்ற ஊராட்சி மன்றத் தலைவருக்கு ரூ.2100 மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என்னும் செய்தியும் மேற்படி செய்தியுடன் இணைந்து வெளியானது. நூற்றுக்கணக்கானோர் வாசிக்கும் செய்தித்தாளில் வெளியானதால் அந்த மரம் வெட்டப்பட்ட பள்ளி இருந்த கிராமத்தின் மக்களுக்கும் கல்வித்துறை சம்பந்தப்பட்ட செய்தி என்பதால் ஆசிரியர்களுக்கும் இந்த விஷயம் தெரியவந்தது. அவர்கள் அனைவருமே நாளிதழில் செய்தியாக வாசித்திருப்பார்களா என்பது ஐயம் ஆனால் யாரோ சிலர் தாங்கள் வாசித்த செய்தியை ஒளிப்படம் எடுத்து தங்கள் வாட்ஸ்-அப் குழுக்களில் பகிர்ந்தனர். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் நாளிதழின் தலைமை அலுவ்லகத்துக்கு ஃபோன் செய்து நாளிதழ் மேல் வழக்கு போடுவேன் எனக் கூறினார். வழக்கறிஞர் மூலம் நோட்டிஸ் அனுப்பவும் செய்தார். நாளிதழ் நிர்வாகம் பள்ளி வளாகத்தில் இருக்கும் மரம் வெட்டப்பட்டிருப்பதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியரே பொறுப்பாவார் என்பதால் வெளியான செய்தி சரியானதே அதில் எந்த பிழையும் இல்லை என பதில் கூறியது. நாளிதழில் செய்தி வந்து பலரின் கவனத்துக்கு விஷயம் வந்ததால் கல்வித்துறை இந்த விஷயத்தை நிலுவையில் வைத்தது. வருவாய்த்துறை அதிகாரிகளும் நிலுவையில் வைத்தனர். தலைமை ஆசிரியரிடம் புகார் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டது. இந்த செய்தியை வாட்ஸ் அப் மூலம் மாவட்ட நிர்வாகம் அறிந்திருந்ததால் தலைமை ஆசிரியரை உடனடியாகப் பாதுகாக்க கல்வித்துறை தயங்கியது. 

அமெரிக்கா நாட்டின் நிர்வாகத்தில் ஒரு வழக்கம் உண்டு என்று பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். சந்தேகத்துக்கு இடமான விதத்தில் ஏதேனும் விஷயம் பொதுமக்கள் கண்ணில் பட்டால் அவர்கள் அதனை ஓர் அரசாங்க தொலைபேசி எண்ணுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவார்கள். இந்த வழக்கம் அமெரிக்கர்களுக்கு உண்டு. அந்த அடிப்படையிலேயே நான் இந்த விஷயங்களைக் காண்கிறேன். செய்தித்தாள் செய்திகளைக் கூட இவ்விதமாகவே அணுகுகிறேன். அரசாங்கம் போன்ற பொதுமக்கள் தொடர்பு கொண்ட பணிகளில் ஓர் அதிகாரிக்கு நிறைய விதமான பணிகள் பொறுப்புகள் வேலைகள் இருக்கும். எனினும் பொது ஊடகங்கள் மூலம் பொதுமக்கள் குறித்த செய்திகளை விபரங்களை அறிந்து கொள்வது என்பதும் அரசாங்க அதிகாரியின் பணிகளில் ஒன்றே. 

எனது நண்பர் ஒருவர் ரயில்வேயில் உயர் அதிகாரியாக இருந்தார். அவர் சிதம்பரத்துக்கு ரயில்வே தொடர்பான நிகழ்ச்சி ஒன்றனுக்கு வந்திருந்தார். புவனகிரி அவருடைய சொந்த ஊர். நிகழ்ச்சி முடிந்து அவர் சொந்த ஊருக்குச் சென்று தனது வீட்டில் இருந்தார். அன்று காலை எனக்கு ஃபோன் செய்தார். அவரைச் சந்திக்க வரும் போது இரண்டு குறிப்பிட்ட செய்தித்தாள்களைக் கூறி அதனை வாங்கி வர முடியுமா என்று கேட்டார். எதற்காக என்று நான் கேட்டேன். நேற்றைய நிகழ்ச்சி குறித்த பதிவு அந்த நாளிதழ்களில் வெளியாகியிருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் கோப்புகளில் பதிவு செய்ய அது தேவை என்றார். எனது ஊருக்கு நாளிதழ்களின் திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் பதிப்புகளே வரும். நிகழ்ச்சி நடந்திருப்பது சிதம்பரத்தில் என்பதால் அங்கே புதுச்சேரி கடலூர் பதிப்புகளில் அந்த செய்தி இருக்கும் என யூகித்து சிதம்பரம் சென்று நண்பர் கூறிய நாளிதழ்களில் முதல்நாள் ரயில்வே நிகழ்வு குறித்த செய்தி வெளியாகியிருக்கிறதா என்று பார்த்தேன். வெளியாகியிருந்தது. மேலும் அந்த கடையில் இருந்த எல்லா ஆங்கில தமிழ் செய்தித்தாள்களிலும் அந்த செய்தி வெளியாகியிருக்கிறதா என்று பார்த்தேன். அனைத்திலும் வெளியாகியிருந்தது. அனைத்து செய்தித்தாள்களையும் வாங்கிக் கொண்டேன். நண்பருக்கு குறுஞ்செய்தி மூலம் முதல்நாள் நிகழ்வு எல்லா பத்திரிக்கைகளிலும் வெளியாகியிருக்கிறது என்றும் அவற்றுடன் நண்பர் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறேன் என தகவல் அனுப்பினேன். நன்றி என நண்பர் பதில் அனுப்பினார். நண்பர் வீட்டுக்குச் சென்றேன். வரவேற்பு அறையின் மையத்தில் ஒரு நாற்காலி இருந்தது. அதன் இடதுபுறமும் வலதுபுறமும் நாற்காலிகள் இருந்தன. நான் இடதுபுறத்தின் முதல் நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். சிறிது நேரம் கழித்து ரயில்வேயின் அதிகாரி ஒருவர் எனக்கு நேர் எதிரில் வலதுபக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார். என் மடி மீது ஏகப்பட்ட செய்தித்தாள்கள் இருந்தன. ரயில்வே உயர் அதிகாரி வந்தார். நாங்கள் இருவரும் எழுந்து வணக்கம் சொல்லி விட்டு அமர்ந்து கொண்டோம். தனது வலதுபக்கத்தில் இருந்த அதிகாரியிடம் நேற்றைய நிகழ்வு குறித்த செய்தி ஏதேனும் செய்தித்தாளில் வெளியாகியிருக்கிறதா என்று உயர் அதிகாரி கேட்டார். அதற்கு அந்த அதிகாரி எந்த செய்தித்தாளிலும் வெளியாகவில்லை என்று கூறினார். என் மடி மீது இருந்த செய்தித்தாள்களைக் கண்ட போதாவது அவர் யூகித்திருக்க வேண்டும். நான் எல்லா செய்தித்தாளிலும் செய்தி வந்திருக்கிறது என உயர் அதிகாரியிடம் கொடுத்தேன். ஓர் உயர் அதிகாரியின் முன் இவ்விதம் உண்மைக்கு மாறான ஒன்றைக் கூறுவார்களா என நான் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தேன். உயர் அதிகாரி முகத்தில் சிறு சலனம் கூட இல்லாமல் இருந்தார் என்பது அவருடைய பெருந்தன்மை. அதிகாரவர்க்கம் என்பது எப்படிப்பட்டது என்பதை அன்று புரிந்து கொண்டேன். உயர் அதிகாரி அவரிடம் விளக்கம் கேட்க மாட்டார். கேட்டால் தனக்கு கீழ் இருக்கும் அதிகாரிகளை இதற்கு பொறுப்பாக்குவார். இதுதான் பதில் என்று கூறப்போகிறார் என்பது தெரிந்த பின் அதை அவர் கூற கேட்க வேண்டியதில்லை என்பதால் உயர் அதிகாரி அமைதியாக இருந்து விட்டார். அதில் இன்னொரு விஷயமும் செய்தியும் இருந்தது. உயர் அதிகாரி தனது மௌனம் மூலம் தனது கீழ் அதிகாரிக்கு உணர்த்தியது என்ன எனில் தான் அவரையும் அவரது பணி புரியும் தன்மையையும் சாக்கு போக்குகள் கூறும் இயல்புகளையும் அறிவேன் என்றும் மேலும் நிகழ வேண்டிய பணிகளை மேற்படி அதிகாரி இல்லாமல் வேறு நபரை அல்லது நபர்களைக் கொண்டும் நிகழ்த்திட முடியும் என்பதையும் சொல்லாமல் சொன்னார் ; வெகு இயல்பாகக் காட்டினார். அதிகாரவர்க்கம் என்பது எவ்விதமானது என்பதற்கு சிறு உதாரணம் இந்நிகழ்வு என எண்ணிக் கொண்டேன். 

தமிழகத்தின் உயர் பொறுப்பில் இருந்த ஒருவர் தன்னைப் பணி நிமித்தம் சந்திக்க வரும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளிடம் அன்றைய செய்தித்தாள் அவர்கள் வாசித்திருக்கிறீர்களா என வினவுவார் என பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதனை முதல் கேள்வியாகக் கேட்பார் என்பது தெரிந்தும் அவர் முன் அன்றைய செய்தித்தாளை வாசிக்காமலேயே அனைத்து ஆட்சிப் பணி அதிகாரிகளும் செல்வார்கள் என்பதையும் கேட்டிருக்கிறேன். 

இன்று சாமானியர்களும் சரளமாக பயன்படுத்தும் விதத்தில் இணையம் உள்ளது. பெரும்பாலான பத்திரிக்கைகள் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. ஏதேனும் ஒரு நாளிதழை - குறைந்தபட்சம் தலைப்புச் செய்திகளையாவது - வாசிக்கும் வழக்கத்தை குடிமக்களும் பணி புரிபவர்களும் அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் கைக்கொள்ள வேண்டும்.  

Wednesday, 10 December 2025

கேள்வியும் பதிலும்

 
எனது நண்பர் ஒருவர் மருத்துவர். மாநில அரசாங்கத்தில் பணி புரிகிறார். சுற்றுச்சூழல், யோக மார்க்கம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். கடுமையான வேலைப்பளு கொண்டவர். காலை 8 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தொடர்ச்சியாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த வண்ணம் இருப்பார். 

சில மாதங்களுக்கு முன்பு அவரைச் சந்தித்த போது என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். அவரது கேள்வி இதுதான் : ஊரிலிருந்து சிதம்பரம் செல்லும் சாலையிலும் ஊரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையிலும் சாலையின் இருபக்கமும் நிறைய நிலம் இருக்கிறதே அதில் ஏன் விவசாயிகள் மரங்கள் பயிரிடுவதில்லை ? அவ்விதம் மரங்கள் நட்டால் அவர்களுக்கு பொருளியல் பயன் அதிகம் இருக்குமே எனக் கேட்டார். 

முதற்பார்வைக்கு படக் கூடிய விஷயத்திலிருந்து நண்பர் இந்த கேள்வியை எழுப்பியிருக்கிறார். 

அதற்கு நான் ஒரு பதில் கூறினேன். அந்த பதில் சமூகவியல், பொருளியல், மானிட நடத்தையியல், நில வணிகம், நேரடி கள அனுபவம் என பல விஷயங்களின் கூறுகள் இணைந்த பதிலாகும் அது. அது என்னவென்றால்

‘’அதாவது, பிரதான சாலையை ஒட்டி இருக்கும் நிலம் ரியல் எஸ்டேட் மதிப்புப்படி பல லட்சங்கள் அல்லது பல கோடிகள் மதிப்பு கொண்டதாக இருக்கும். அந்த நிலத்தின் உரிமையாளர் பல லட்சங்கள் அல்லது பல கோடிகள் மதிப்பு தன்னிடம் இருப்பதாக எண்ணுவார். அவரிடம் இருப்பது யூகச் செல்வம். அந்த யூகச் செல்வம் இருப்புச் செல்வத்துக்கு சமமாகாது எனினும் தான் ஒரு லட்சாதிபதி என்றே எண்ணம் கொண்டிருப்பார். எனவே அவர் அந்த வயலை ஏதும் செய்யாமல் போட்டு வைத்திருப்பார். அதில் சீமைக்கருவை வளர்ந்து கொண்டிருக்கும். ஊர்க்காரர்களுக்கு சாலையை ஒட்டியிருக்கும் நிலம் என்பதால் பெரிய மதிப்புக்கு விற்பனை ஆகும் என்பது தெரியும். எனவே அவரிடம் ஏன் நிலத்தை ஏதும் செய்யாமல் வைத்திருக்கிறாய் என்று கேட்க மாட்டார்கள். அவ்விதம் கேட்டால் அந்த நிலத்தின் மீதான பொறாமையால் கேட்டதாக ஆகி விடும் என்பதால் யாரும் அந்த கேள்வியை எழுப்ப மாட்டார்கள். 100 நிலத்துண்டுகள் சாலைக்கு அருகில் இருந்தால் ஓராண்டில் ஒன்று அல்லது இரண்டு விற்பனையாவது அதிகம். எனினும் மேற்படி மனோபாவமே எல்லா நில உரிமையாளர்களிடமும் இருக்கும். பல ஆண்டுகளுக்கு நிலம் அப்படியே இருக்கும். அசையா சொத்துக்கள் அவை.’’

இதுதான் நான் கூறிய பதில். 

நான் கூறிய பதிலை கேட்டுக் கொண்டாரே தவிர இந்த பதில் அவருக்குத் திருப்தியைத் தரவில்லை. 

இந்த பதிலைப் புரிந்து கொள்ள அவர் என்ன செய்ய வேண்டும் என எண்ணிப் பார்த்தேன். 

மருத்துவம் அவரது துறை. அவர் ரியல் எஸ்டேட்டும் கூடுதலாக மேற்கொண்டால் அவருக்கு நான் கூறும் பதில் புரியலாம். இன்று நண்பர் ஃபோன் செய்தார். அவரிடம் இதனைக் கூறினேன். 

கால்பந்து

 
நேற்று நண்பரின் வீட்டுக்குச் சென்ற போது அங்கே அவரது ஏழு வயது மகனைச் சந்தித்தேன். புத்தர் மகவாயிருந்த போது கொண்டிருந்த பெயரை உடையவன் அச்சிறுவன். மிருதங்கத்தில் ஆர்வம் கொண்டு பயின்று வருகிறான். நேற்று அவனிடம் உரையாடிக் கொண்டிருந்த போது உனக்கு என்ன விளையாட்டு பிடிக்கும் என்று கேட்டேன். கால்பந்து என்று கூறினான். இன்று காலை முதல் வேலையாக காலை 10 மணிக்கு விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடை திறந்ததும் அங்கே சென்று ஒரு கால்பந்து வாங்கினேன். இரு சக்கர வாகனத்தில் நண்பரின் ஊருக்குச் சென்று அவர்கள் வீட்டில் குழந்தையிடம் எனது அன்புப் பரிசாக கொடுத்து விடுங்கள் எனக் கூறி அளித்து விட்டு வந்தேன். நண்பர் பணிக்குச் சென்றிருந்தார். நண்பரின் வீட்டில் இருந்தவர்களுக்கு ஆச்சர்யம். நேற்று இரவு வந்தவர் மீண்டும் வந்திருக்கிறாரே என. எனக்கு இலேசான இருமல் இருக்கிறது. அதனைக் கவனித்து பாலில் சுக்கு கலந்து கொடுத்தனர். அருந்தி விட்டு நண்பரிடம் ஃபோனில் விஷயத்தைக் கூறி விட்டு புறப்பட்டேன். 

பழைய தஞ்சாவூர்

சில நாட்களுக்கு முன்னால் எனக்கு ஒரு நண்பர் அறிமுகமானார். உரையாடிய சில கணங்களில் நாங்கள் நண்பர்களாகி விட்டோம். அவரது வீட்டுக்குச் செல்ல வேண்டும் என விரும்பினேன். அவர் குடவாயில் என்ற கிராமத்தில் வசிக்கிறார். ஊரிலிருந்து அவர் ஊருக்குச் செல்ல திருவாரூர் சென்று அங்கிருந்து குடவாயில் செல்ல வேண்டும் அல்லது கும்பகோணம் சென்று அங்கிருந்து குடவாயில் செல்ல வேண்டும் என எண்ணியிருந்தேன். நண்பரிடம் ஊருக்கு வருவதாகச் சொன்னேன். எந்த வழி என்று கேட்டார். திருவாரூர் வழியாக என்றேன். ‘’வேண்டாம் பிரபு . சன்னாநல்லூர் வந்து ஸ்ரீவாஞ்சியம் வாங்க. அங்கிருந்து குடவாசல் வந்துடலாம்’’ என்றார் நான் மேற்படி 3 ஊர்களுக்கும் சென்றிருக்கிறேன். இருந்தாலும் இந்த மார்க்கம் ஒரு சுருக்கமான வழி என்பதை அறிய நேர்ந்தது புதியதாக இருந்தது. சன்னாநல்லூரிலிருந்து குடவாயில் வரை தொடர்ச்சியாக கிராமங்கள். செழிப்பான நெல் வயல்கள். ஒரு கிராமம் என்பது 1000 ஏக்கர் எனில் 500 ஏக்கர் நெல்வயல்கள். 500 ஏக்கர் தெருக்கள், வீதிகள், சாலைகள், குடியிருப்புப் பகுதிகள். 500 ஏக்கர் நிலத்தில் 10 ஏக்கர் நிலம் ஊரில் 3 அல்லது 4 பேரிடம் இருக்கும். மீதி 460 ஏக்கர் 200 பேரிடம் இருக்கும். அந்த கிராமத்தின் ஒட்டு மொத்த பொருளியல் 200 பேரிடம் இருக்கும். 200 பேரிடம் என்றால் 200 குடும்பத்திடம். ஒரு குடும்பத்துக்கு 5 பேர் எனக் கணக்கிட்டால் 1000 பேரிடம். கிராமத்தின் மக்கள் தொகை 4000 எனக் கொண்டால் அதில் 1000 பேர் சிறு விவசாயக் குடும்பத்தினர். விவசாயம் தவிர்த்து இதர தொழில் செய்பவர்கள் 500 பேர் இருப்பார்கள். 1500 பேர் விவசாயத் தொழிலாளர்களாக இருப்பார்கள். ஏறக்குறைய தஞ்சைப் பிராந்தியத்தின் கிராமங்களுக்கு இந்த பொதுச் சித்திரத்தை அளித்திட முடியும். இங்கே விவசாயம் எப்படி நிகழ்கிறது என்றால் வயலின் நெல் விளைச்சலை அரசாங்கம் விலை கொடுத்து வாங்கி விடும். அரசாங்கம் தன் கருவூலத்திலிருந்து பெரும் தொகையை அளித்து நட்டத்துக்கு கொள்முதல் செய்கிறது. எனவே அவர்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த மாட்டார்கள். விவசாயிகள் உபரியாக நெல்லை விளைவிக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் விற்பனை விலையில் பாதிக்குப் பாதி விவசாயத் தொழிலாளர்களுக்கான ஊதியமாக சென்று விடும். மூலதனம் மட்டும் வட்டிக்கு 40 சதவீதம். 10 சதவீதம் லாபம் இருக்கும். ஒருவர் 2 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார் என்றால் அவருக்கு வருடத்துக்கு ரூ.40,000 - ரூ.50,000 வருமானம் கிடைக்கும். இது மிக சொற்பமான வருமானம். கிராமத்தின் 1000 பேருக்கும் இதே விதமான வருமானம் இருப்பதால் மொத்த கிராம மக்களும் இதுவே யதார்த்தம் என இருப்பர். அவர்களால் இந்த பொருளியல் கணக்கையும் அவர்களுடைய பொருளாதார நிலையையும் இணைத்துப் புரிந்து கொள்ளத் தெரியாது. இந்த கிராமங்களில் மக்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றம் நிகழ வேண்டுமென்றால் அங்கே பெரும் லாபம் தரக்கூடிய விவசாயப் பயிர்கள் உற்பத்தியாக வேண்டும். ஏன் மஞ்சள் உற்பத்தி செய்யும் ஈரோடு விவசாயிகள் பொருளியலில் வளர்ந்து காணப்படுகிறார்கள் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் சிரமத்தில் இருக்கிறார்கள் என விவசாயிகள் யோசிக்க வேண்டும். ‘’காவிரி போற்றுதும்’’ இந்த விஷயத்தில் தான் விவசாயிகளுக்கு ஏதேனும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமா என முயல்கிறது. இந்த பொருளியல் புரிதலுடன் நான் கிராமங்களைக் காண்பேன் என்பதால் ஒவ்வொரு கிராமத்தையும் பார்த்தாலே அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது முதற்பார்வைக்கே புலப்பட்டு விடும் என்பதால் எனது ஒவ்வொரு கிராமப் பயணமும் சுவாரசியமானதே. இந்த பிராந்தியத்தில் அதிக அளவில் ஆலமரங்களும் அரசமரங்களும் இருப்பதைக் கண்டது மகிழ்ச்சி அளித்தது. நான் விரும்புவது ஒரு கிராமத்தில் இருக்கும் கிராம மக்கள் ஒவ்வொரு வருடமும் 10 ஆலமரமாவது தங்கள் கிராமத்தில் நட வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. அது அந்த கிராமத்தின் சமூக வாழ்வில் பெரும் மாற்றம் கொண்டு வரும் என்பது எனது நம்பிக்கை.

 நண்பர் மிகவும் சுவாரசியமானவர். இசை, சிற்பம், வரலாறு , இலக்கியம் என பலதுறைகளில் ஆர்வமாக இருக்கிறார். நண்பர் குடவாயிலில் புதிதாக வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். 1000 சதுர அடி பரப்பு கொண்ட வீடு. வீடு நல்ல முறையில் எழும்பிக் கொண்டிருக்கிறது. இன்னும் 60 நாட்களுக்கு பணி இருக்கிறது. தை மாதத்தில் குடி புகுந்து விடுவார். வீட்டுக்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வைத்திருக்கிறார். பக்கத்தில் உள்ள கிராமத்தில் அவரது சொந்த வீடு இருக்கிறது. குடும்பத்தினர் அனைவரும் அங்கே இருக்கின்றனர். அவரது நூல் சேமிப்பை எனக்குக் காட்டினார். இலக்கியம், கலை, நுண்கலை ஆகிய நூல்களை சேகரித்து வைத்திருக்கிறார். தமிழகத்தில் அறிவுச் செயல்பாட்டில் ஆர்வம் கொள்ளும் எவருக்குமே ஊக்கமளிக்கும் புறச்சூழல் அமைந்திருக்க வாய்ப்பில்லை. அதனையும் தாண்டி ஒருவர் அறிவார்ந்த விஷயங்களின் மேல் ஆர்வமாக இருக்கிறார் என்றால் அது மிகச் சிறப்பான ஒன்றே. நண்பரால் குடவாயில் அகத்துக்கு அணுக்கமான ஊராகி விட்டது. 

குடவாயில்

 


நேற்று மாலை அந்தியில் குடவாயில் கோணேசர் ஆலயம் சென்று வழிபட்டேன். மாடக் கோயில் வகையிலானது. இந்த ஆலயத்தின் ஆடலரசனின் செப்புத் திருமேனி எழிலார்ந்தது. கருவறையில் வீற்றிருக்கும் சிவலிங்கம் அகத்தை உருகச் செய்வது. அந்திப் பொழுதில் சென்றிருந்த போது ஆலயம் உள்ளிருக்கும் நேரமெல்லாம் ஒலித்துக் கொண்டிருந்த ஆலய இசைக்கலைஞர்களின் மங்கள இசை மனதுக்கு இனிமையாக இருந்தது. 

Tuesday, 9 December 2025

தாயின் மணிக்கொடி ( மறுபிரசுரம்)

’’தாயின் மணிக்கொடி பாரீர்’’ என்ற பாரதியின் பாடலை நாம் கேட்டிருப்போம். பாரதியார் இந்த பாடலை இயற்றிய போது இந்திய தேசத்தின் கொடியாக  மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த மேடம் ருஸ்தம்ஜி காமா வடிவமைத்த கொடியே இருந்திருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் மாநாடுகளில் இந்த கொடியே ஏற்றப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளுக்கு காங்கிரஸின் கொடியாகவும் இந்த கொடி இருந்திருக்கிறது. கொடியின் நடுவில் ‘’வந்தே மாதரம்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரதி அதனை ‘’மந்திரம்’’ என்கிறான். 






தாயின் மணிக்கொடி பாரீர்

பல்லவி

தாயின் மணிக்கொடி பாரீர்! - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!

சரணங்கள்

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்
உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதித் திகழும் - செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்)

பட்டுத் துகிலென லாமோ? - அதில்
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிகுந்தடித் தாலும் - அதை
மதியாதவ் வுறுதிகொள் மாணங்க்கப் படலம் (தாயின்)

இந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில்
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்
மந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்)

கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற்க் குரியர் அவ்வீரர் - தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார். (தாயின்)

அணியணி யாயவர் நிற்கும் - இந்த
ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?
பணிகள் பொருந்திய மார்பும் - விறல்
பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்! (தாயின்)

செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந்
தீக்கண் மறவர்கள் சேரன்றன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின்
சேவடிக் கேபணி செய்திடு துளுவர். (தாயின்)

கன்னடர் ஓட்டிய ரோடு - போரில்
காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்,
பொனகர்த் தேவர்க ளொப்ப - நிற்கும்
பொற்புடையார் இந்துஸ் தானத்து மல்லர் (தாயின்)

பூதலம் முற்றிடும் வரையும் - அறப்
போர்விறல் யாவும் மறுப்புறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும் - பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் (தாயின்)

பஞ்ச நதத்துப் பிறந்தோர் - முன்னைப்
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,
துஞ்சும் பொழுதினும் தாயின் - பதத்
தொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும் (தாயின்)

சேர்ந்ததைக் காப்பது காணீர்! அவர்
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத - நிலத்
தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்)

*** 

Monday, 8 December 2025

ராஜராஜபுரத்தில் ஓர் அந்தி

 ஒரு ஆப்பிள் கேக்கை ஆரம்பத்திலிருந்து செய்ய வேண்டுமென்றால் முதலில் ஒரு பிரபஞ்சத்தைக் கட்ட வேண்டும் . - கார்ல் சகன்

ஆலயக்கலை வகுப்பு முடித்து விட்டு வந்த பின்னர் இன்று ஏதேனும் ஒரு தொல் ஆலயம் ஒன்றனுக்குச் செல்ல வேண்டும் என விரும்பினேன்.  கார்ல் சகன் தாராசுரம் ஆலயத்தில் பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்து ஆவணப்படம் ஒன்றில் பேசியதன் காணொளியை இன்று காலை மீண்டும் கண்டேன். முன்னர் பலமுறை அந்த காணொளியைக் கண்டிருக்கிறேன் என்றாலும் இன்று ஆலயத்துக்குச் செல்வதற்கு முன் மீண்டும் கேட்க விரும்பினேன். 

மானுடக்கலையின் உச்சம் என தாராசுரம் ஆலயத்தைக் கூறிட முடியும். ஒரு சதுர அடி பரப்பில் அரை சதுர அடி பரப்பில் எவ்விதம் இவ்வளவு நுணுக்கமாக சிற்பம் வடிக்க முடியும் என்பது மாபெரும் வியப்பே. இந்த ஆலயத்தை நிர்மாணித்த கலை உள்ளத்தை போற்றாமல் இருக்க முடியாது. 

இந்த ஆலயத்தை ஓரளவேனும் புரிந்து கொள்ள சில சிற்பவியல் நூல்களேனும் வாசித்திருக்க வேண்டும். சோழ வரலாறு குறித்து சில நூல்களேனும் வாசித்திருக்க வேண்டும். சில தமிழ் இலக்கிய நூல்களேனும் வாசித்திருக்க வேண்டும். 

இந்த ஆலயத்தின் கலையின் சிறு துளி ஒன்றை ஒரு மானுடன் அறிவானாயின் அவனை உலகக் கலையின் மாணவன் என்று தயக்கமின்றி சொல்ல முடியும். 



எனது சிறுகதைகள்

சொல்வனம் இதழில் வெளியான எனது சிறுகதைகள்











வருகை              





இரு பள்ளிகள்

சொல்வனம் இதழில் எழுதும் ‘’யானை பிழைத்தவேல்’’ கம்பராமாயணத் தொடரின் கட்டுரைகள் இணைப்பு

யானை பிழைத்தவேல் - பகுதி 1   யானை பிழைத்தவேல் - பகுதி 2

யானை பிழைத்தவேல் - பகுதி 3   யானை பிழைத்தவேல் - பகுதி 4

யானை பிழைத்தவேல் - பகுதி 5


ஆலயக்கலை - உணர்தலும் அறிதலும்

விண்ணின் ஒரு துளி மண்ணுலகம். ஆழி சூழ்ந்த உலகில் நிலத்தில் வாழ்கின்றனர் மானுடர் அனாதி காலமாக. உலகில் நிலத்தில் உயிரினங்கள் கோடி கோடி. அதில் ஓர் எளிய உயிர் மானுட இனம். யாவையும் படைத்த இறைமை மானுட இனத்துக்கு சிந்தனையை அளித்தது. உயிர்கள் அனைத்துக்கும் இருந்த தடைகள் மானுடத்துக்கும் இருந்தாலும் அந்த தடைகளைத் தாண்டிச் சென்று தானே படைப்பும் படைத்தவனும் என்னும் இரண்டற்ற நிலை நோக்கி சென்றனர் மானுடர் சிலரினும் சிலர்.  விரல்களால் எண்ணக்கூடிய அளவில் அந்த தூய உயிர்களின் எண்ணிக்கை இருந்தாலும் கோடானுகோடி மானிடர் அந்த தூய உயிர்களின் முன் வாழ்வுடன் எப்போதும் இணைந்திருக்கும் துயர் நீக்கக் கோரி துயர் நீக்கும் மார்க்கம் கோரி அரற்றி நின்றனர். மண்ணுலகில் எங்கெங்கோ உற்பத்தி ஆகும் நதிகள் அனைத்தும் இறுதியில் ஆழியை அடைவது போல துயருற்ற மானுடருக்கு மார்க்கங்கள் பலவற்றை போதித்தனர் தூயோர். 

மண்ணுலகுக்குத் திலகம் என்று கூறத்தக்க நிலமொன்று தெற்கே இருக்கும் பெருங்கடல் ஒன்றனுக்கும் வடக்கே இருக்கும் பெருமலை ஒன்றனுக்கும் இடையே இருக்கிறது. அந்த நிலத்தில் தூயோர் பிறந்து மானுடம் உய்ய வழிமுறைகளைக் கூறிக் கொண்டேயிருந்தனர். நிலைபெயராமையை தன் தவத்தின் பயனென அடைந்த துருவன், சொல்லறுத்து சும்மா இருந்து தன் சீடர்களுக்கு விடுதலையின் வழியே மௌனம் எனக் காட்டிய ஆலமர்ச்செல்வன், செயல் புரிதலும் இமைப்பொழுதும் சோராமல் செயல்புரிதலுமே வீடுபேறு என உணர்த்திய இளைய யாதவனும் தன்னுடன் இணைந்து வாழும் எல்லா சக உயிர்கள் மீதும் அன்பும் கருணையும் உணரச் சொன்ன அருக தேவனும் தன் அன்பால் அருளால் பிறந்த பிறக்கும் பிறக்க இருக்கும் எல்லா உயிர்களையும் அணைத்துக் கொண்ட புத்தனும் மண்ணுலகுக்குத் திலகமாயிருந்த தேசத்தில் உதித்தார்கள். இந்த மண்ணில் தோன்றிய ஒரு துறவி ‘’மலைமகள் என் அன்னை ; ஈஸ்வரன் என் தந்தை ; அம்மையப்பனின் குழந்தைகளான எல்லா உயிர்களும் உறவினர்கள் ; இந்த உலகமே எனது தாய்நாடு’’ என்றான். ‘’சிறந்தவை உலகில் எங்கிருந்தாலும் அதனை நாடி ஏற்க வேண்டும் ‘’ என்றது இந்த நாட்டின் தொல்பழம் பாடல் ஒன்று. ’’எல்லா உயிர்களும் இன்புற்று இருக்கட்டும்’’ என இறைமையிடம் வேண்டிக் கொண்டது இந்நாட்டின் தொல்நூல் ஒன்று. 

வாழ்க்கை புனிதமானது ; யாவுமே புனிதமானவை என உணர்ந்திருந்த இந்த தேசம் மலையை, நதியை, மரத்தை, பறவையை, பிராணியை என அனைத்தையும் இறைமையின் சொரூபமாக இருப்பதைக் காணச் சொன்னது. கடவுளின் குழந்தைகளாய் தங்களை உணர்ந்த மக்கள் ஆடிப் பாடிக் கூடிக் களித்திருந்தனர். உயர்ந்த இசையை இறையை நோக்கி பாடினர். இறைமையின் ஒத்திசைவை தங்கள் நடனத்தில் நிகழ்த்திக் காட்டி தாங்களும் மகிழ்ந்து இறைமையையும் மகிழ்வித்தனர். இறைமையை தங்கள் பெற்றோராக ஆசிரியராக குழந்தையாக எண்ணி உருவமற்ற இறைக்கு தங்கள் அன்பினால் உருவம் அளித்து அதில் இறையை எழுந்தருளச் செய்தனர். அவர்கள் நட்டு வைத்த கல்லில் தெய்வம் எழுந்தருளியது. அவர்கள் சுற்றி நின்று வணங்கிய மரத்தில் தெய்வம் எழுந்தருளியது. அவர்கள் வணங்கிய நதியில் தெய்வம் எழுந்தருளியது. 

***

பாரத தேசத்தில் ஆலயங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எழுப்பப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இறைவன் யாதுமாகி நிற்பவன் என உணர்ந்திருந்தாலும் இறைவனைத் தாங்கள் அமைக்கும் உருவத்தில் எழுந்தருளச் செய்கின்றனர். உலகில் விதவிதமான ஜீவராசிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இணைந்திருப்பது போலவும் சேர்ந்திருப்பது போலவும் பாடல், கவிதை, ஓவியம், சிற்பம், இசை என கலைகள் பலவற்றை இணைத்து சேர்த்து ஆலயம் அமைக்கும் தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தங்கள் அடுத்த தலைமுறைகளுக்கு அளித்து இன்று வரை தொடரச் செய்திருக்கின்றனர் இத்தேசத்தின் மூதாதையர். 

***

டிசம்பர் 5,6,7 ஆகிய தேதிகளில் ஈரோடு அந்தியூர் அருகில் இருக்கும் வெள்ளிமலையில் ‘’முழுமையறிவு’’ அமைப்பு ஒருங்கிணைத்த பிரஸ்தாரா அமைப்பின் நிறுவனர் ஜெயகுமார் வகுப்பெடுத்த ஆலயக்கலை வகுப்பில் பங்கு பெற்றேன். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் நம் நாட்டின் ஆலயக்கலை என்பது ஒட்டுமொத்த மானுடமும் சாதித்த பெரும் சாதனைகளுள் ஒன்று என்பதை பங்கேற்பாளர்கள் உணரும் வகையில் அதன் விரிவை ஆழத்தை எடுத்துக் காட்டினார் ஜெயகுமார். 

நம் நாட்டின் ஆலயக்கலை பல்வேறு விதமான அழிவு சக்திகளின் அழிவுப் பணியை எதிர்கொண்டிருக்கிறது. மானுடத்தின் மகத்தான கலைப் படைப்புகளான ஆலயங்களை நாடெங்கும் இடித்து தரைமட்டமாக்கினர் அன்னிய ஆட்சியாளர்கள். கல்லை சிற்பமாக்கி அதனை உயிர் பெறச் செய்து வணங்கிக் கொண்டிருந்த மக்கள் தங்கள் தெய்வம் உடைத்து நொறுக்கப்பட்டாலும் அகத்தில் தங்கள் சொல்லில் இறைவனை தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து இருக்கச் செய்து நிலைநிறுத்திக் கொண்டனர். எப்போதெல்லாம் மீண்டும் வாய்ப்பு கிடைத்ததோ அப்போதெல்லாம்  இடிக்கப்பட்ட ஆலயங்களை மீண்டும்  நிர்மாணித்துக் கொண்டனர். 

மானுடத்தின் மகத்தான உருவாக்கங்களில் ஒன்றான பாரத ஆலயக்கலை மேலும் வளர உயிர்ப்புடன் இருக்க புதிய ஆலயங்கள் மரபான முறையில் தொடர்ந்து எழுப்பப்படுவது அவசியம் என்னும் தனது அபிப்ராயத்தை முன்வைத்தார் ஜெயகுமார். அந்த கோணம் மிகவும் முக்கியமானது என்று எனக்குப் பட்டது. மரபான ஒரு முறை பாதுகாக்கப்பட அந்த முறை அதன் மரபான வடிவில் முறையில் தொடர்வது மிகவும் முக்கியமானது. ஆலயக்கலை என்பது சமயம், இசை, நடனம், சிற்பம் என பல விஷயங்கள் இணைந்த ஒன்றாக இருப்பதால் ஒரே சமயத்தில் ஒரு ஆலயத்தில் இத்தனை விஷயங்களும் புரக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பதை எடுத்துக் காட்டினார் ஜெயகுமார். 

இந்த விஷயத்தின் இன்னொரு பக்கமாக ஆலயத்துக்குச் செல்பவர்கள் ஆலயத்தின் கலை, நுண்கலை, வரலாறு, இலக்கியம் குறித்தும் அறிந்திருப்பது ஆலயக்கலை மரபு தொடர அடிப்படையானது ; முக்கியமானது என்னும் விதத்தில் மேலே குறிப்பிட்ட கலை, நுண்கலை, வரலாறு, இலக்கியம் ஆகியவை குறித்து மிக விரிவாக அறிமுகம் செய்தார் ஜெயகுமார். புதிய ஆலயங்கள் நிர்மாணிக்கப்படும் வேகத்தினும் மிகப் பல மடங்கு வேகத்தில் நாட்டின் குடிகளுக்கு ஆலயக்கலை குறித்த அறிமுகம் நிகழ்த்தப்பட வேண்டும் என்னும் அடிப்படையில் இந்த மகத்துவம் மிக்க பணிக்காக தனது உழைப்பையும் நேரத்தையும் நல்கும் ஜெயகுமாரின் பணி போற்றுதலுக்குரியது. 

***

’’நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ’’ என்று அரற்றினான் தமிழ் மூதாதை பாரதி. இன்று தமிழகத்தில் ஆலயக்கலை என்பது அவ்விதமான தன்மையிலேயே இருக்கிறது. தமிழ்க் குடிகள் எவருக்கும் தங்கள் மரபான கலையான ஆலயக்கலை குறித்த எந்த அறிமுகமோ கல்வியோ இல்லை. தமிழக பள்ளிக் கூடங்களிலோ கல்லூரிகளிலோ பாடத்திட்டத்தில் ஆலயக்கலைக்கு இடமே இல்லை. இந்நிலையில் நமது மரபான ஆலயக்கலை காக்கப்பட வேண்டும் குறைந்தபட்சம் ஆலயம் மீது ஆர்வம் கொண்ட ஆர்வலர்கள் சாமானிய மக்களுக்கு இமைப் பொழுதும் சோராது எடுத்துரைத்துக் கொண்டிருந்தாலே சாத்தியம். 

தமிழக ஆலயக்கலையை மூன்று நாள் வகுப்பில் மிக விரிவாக எடுத்துரைத்தார் ஜெயகுமார். பல்லவர் கால ஆலயக் கட்டுமானங்களையும் பாண்டியர் கால ஆலயக் கட்டுமானங்களையும் குறித்து மிக விரிவாக எடுத்துரைத்தது சிறப்பான விஷயம். அந்த இரு காலகட்டங்களே தமிழக ஆலயக்கலைக்கு அடிக்கட்டுமானமாக இருந்தவை. இந்த இரண்டு அரசுகளும் 300 ஆண்டுகளாக உருவாக்கியிருந்த ஆலய மரபினை அடிப்படையாகவும் அடிப்படை அறிதலாகவும் கொண்டு சோழர்கள் தங்கள் ஆலயக்கலை செயல்பாடுகளை முன்னெடுத்தனர் என்னும் வரலாற்றுப் புரிதலை பங்கேற்பாளர்களிடம் உருவாக்கினார் ஜெயகுமார். 

கணபதி ஸ்தபதி, ஐராவதம் மகாதேவன், நாகசாமி, நீலகண்ட சாஸ்திரி, சதாசிவப் பண்டாரத்தார் என பலர் எழுதிய நூல்களை ஆலயக்கலையைப் புரிந்து கொள்ள உதவும் புத்தகங்கள் என்பதை விரிவான பட்டியலாக அளித்துக் கொண்டேயிருந்தது ஆலயக்கலை என்பது எத்தனை பிரும்மாண்டமானது என்பதை உணர்த்தியது. 

ஆலயத்துக்கு வழிபடச் செல்லும் ஒருவராயினும், ஓவியம் வரையும் திறன் கொண்ட நுண்கலையாளராயினும் இலக்கியம் வாசிக்கும் இலக்கிய வாசகராயினும் அனைவருக்குமே ஆலயங்களைப் பராமரிக்கும் கூட்டுப் பொறுப்பு இருக்கிறது என்பதை மிக மென்மையாக சுட்டுக் காட்டினார். மூன்று நாள் வகுப்பில் ஆலய ஆகம முறைகள், சிற்பவியல், ஆலய கட்டிடவியல் குறித்து பங்கேற்பாளர்களுக்கு மிக விரிவான அறிமுகத்தை மிகப் பெரிய பரிச்சயத்தை உண்டாக்கினார் ஜெயகுமார். 

ஆலயக்கலை குறித்த பரந்து பட்ட ஞானம் கொண்டவராயினும் அறிமுக நிலையில் பங்கேற்பாளர் ஒவ்வொருவரையும் மிகுந்த பிரியத்துடன் மிக்க கனிவுடன் எதிர்கொண்டு 3 நாட்களில் பங்கேற்பாளர் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆலயக்கலையின் உன்னத தீபத்தை ஏந்திக் கொள்ள வாய்ப்பளித்த ஜெயகுமார் போற்றுதலுக்குரியவர் ; அவரது பணி போற்றுதலுக்குரியது.