நூல் : கல்லெழும் விதை
பிரபு மயிலாடுதுறை
Saturday, 8 November 2025
ஓர் அறிஞர் காட்டும் உலகம்
ஜனநாயக அரசியல் - ஒரு விளக்கம் (நகைச்சுவைக் கட்டுரை)
நேற்று ஜனநாயக அரசியல் (நகைச்சுவைக் கட்டுரை) என்று ஒரு நகைச்சுவைக் கட்டுரையை எழுதினேன். எழுதும் போதும் எழுதிய பின்னும் மனதில் ஒரு விஷயம் சிறு சஞ்சலம் ஒன்றைத் தோற்றுவித்திருந்தது. அது என்னவெனில் தமிழ்ச் சமூகத்துக்கு ஜனநாயக அரசியல் 75 ஆண்டுகால பழக்கம் கொண்டது என எழுதியிருந்தேன். இருப்பினும் இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலம் முதலே இங்கே கட்சி அரசியல் தீவிரமாக இருந்திருக்கிறது. அப்படியெனில் 75 ஆண்டு காலம் எனக் குறிப்பிட்டிருப்பது சரியான தகவலா என்ற சஞ்சலம் இருந்தது.
இன்று காலை அதற்கான பதில் என் மனதுக்குக் கிடைத்தது. நாடு சுதந்திரம் அடைந்து 1952ம் ஆண்டு முதல் பொதுத்தேர்தல் நடந்த போது தான் நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் வாக்குரிமை கிடைத்திருக்கிறது. அதற்கு முன் பிரிட்டிஷ் ஆட்சியில் நடந்த தேர்தல்களில் சொத்துரிமை உடையவர்களும் பட்டம் பெற்றவர்களும் மட்டும் வாக்களித்திருக்கிறார்கள்.
இன்றைய தேதிப்படி கணக்கிட்டால் கூட ஒரு கிராமத்தின் மக்கள்தொகை 3000 எனில் அதில் சொத்துரிமை உடையவர்கள் என்று அதிகபட்சம் 300 பேர் இருக்கக் கூடும். அந்த காலகட்டத்தில் எழுத்தறிவு சதவீதம் 10 சதவீதமாக இருந்திருக்கிறது. எழுத்தறிவே 10 சதவீதம் என்றால் பட்டம் பெற்றவர்கள் 1 சதவீதம் ஆக இருந்திருப்பார்கள். 3000 மக்கள்தொகை கொண்ட கிராமத்தில் 300 பேர் வாக்களிக்கும் உரிமை பெற்றிருப்பார்கள்.
ஏழ்மை நிலையில் இருப்பவர்கள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு வாக்குரிமையே இருந்திருக்காது.
75 ஆண்டுகளாகவே ஜனநாயக தேர்தல் அதிகார அரசியல் தமிழ்ச்சமூகத்துக்கு அறிமுகமாகியிருக்கிறது எனக் கூறியது சரியான கூற்றே என்னும் புரிதலை அடைந்தேன்.
Friday, 7 November 2025
மாலைப் பயணம்
இன்று நாள் முழுக்க மழை. பெய்த மழை காற்று மண்டலத்தில் இருக்கும் தூசித் துகள்களை துப்புறவாகத் துடைத்து வைத்திருந்தது. மாலை 6.30க்கு 20 கி.மீ தூரத்தில் இருக்கும் ஊர் ஒன்றனுக்கு கிளம்பினேன். வாகன விளக்கு வெளிச்சத்தில் அந்த அந்திப் பொழுதிலேயே துலக்கமாக இருந்தது. மழை பெய்த பின் இருக்கும் பகல் பொழுதைப் போலவே மழை பெய்த பின்னான இரவுப் பொழுதும் வசீகரம் மிக்கதாக இருந்தது. 8 மணிக்கு ஊர் திரும்பி விட்டேன்.
ஜனநாயக அரசியல் (நகைச்சுவைக் கட்டுரை)
எழுதுதல்
இன்று காலை எழுந்து எழுத்துமேஜை முன் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். காலை 9 மணிக்கு எனக்கு ஒரு பணி இருந்தது. வானம் மேகமூட்டமாக இருந்ததால் மழை வந்தால் உத்தேசித்த பணி நிகழுமா அல்லது தள்ளிப் போகுமோ என்னும் ஐயம். லௌகிகப் பணிகள் சிறியவையாயிருப்பினும் மனதின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. பல ஆண்டு பழக்கம் இருப்பினும் ஒவ்வொரு எதிர்கொள்ளலும் புதிய எதிர்கொள்ளலே. வெளிநாட்டு அழைப்பு ஒன்று அலைபேசியில் ஒலித்தது. உடன் அலைபேசியை எடுத்தேன். என்னுடைய அலைபேசியில் ‘’கிரிங்’’ என்ற ஒற்றை ஒலியே அழைப்பு ஒலி. அந்த ஒற்றை ஒலிக்குப் பின் அலைபேசி ஒலி ஏதும் எழுப்பாது. வழக்கமாக எல்லா அலைபேசி அலைப்பு ஒலிகளும் ஒரு நிமிடத்துக்கு ஒலிக்கும். என்னுடைய அழைப்பு ஒலி இரண்டு வினாடிகள் மட்டுமே ஒலிக்கும். குறுஞ்செய்தி ஒலி சிறியது எனினும் என்னுடைய அழைப்பு ஒலியுடன் ஒப்பிட்டால் அதுவே மிக நீண்டது.
நண்பன் அமெரிக்காவிலிருந்து அழைத்திருந்தான். பள்ளி நாட்களிலிருந்து எனது தோழன். பல ஆண்டுகளாக அமெரிக்காவில் பணி புரிகிறான். மொழி , சமூகம், தேசம் ஆகியவை குறித்து தீவிரமான அக்கறை கொண்டவன். அவற்றுக்கு தன்னால் இயன்ற ஆக்கபூர்வமான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்னும் தீராத ஆர்வம் கொண்டவன். இலக்கியத்தில் தீவிரமான ஆர்வம் உண்டு. பல ஆண்டுகளாக நவீனத் தமிழ் இலக்கியத்தின் கணிசமான படைப்புகளை வாசித்திருக்கிறான். இன்று அவன் என்னுடன் உரையாடிய போது அவனை எழுதுமாறு சொன்னேன். அமெரிக்க லௌகிக வாழ்க்கையில் எழுத்துக்கான நேரத்தையும் அதற்கான மனநிலையையும் தன்னால் அளிக்க முடியவில்லை என்று சொன்னான்.
அவனுடைய குழந்தைகள் அமெரிக்காவில் பயில்கின்றனர். அங்குள்ள பள்ளிகளில் எவ்விதம் குழந்தைகள் ஆரம்பப் பள்ளிகளிலேயே ஏதேனும் ஒரு நூலை வாசித்து அந்த நூல் குறித்து விரிவான கட்டுரை அல்லது மதிப்புரை எழுத பயிற்சி அளிக்கப்படுகிறது என்பதை வியந்து கூறினான். ஒருவேளை தனக்கு அவ்விதமான பயிற்சி பள்ளி நாட்களில் இருந்திருந்தால் அது எழுதுவதற்கு உதவியாக இருந்திருக்குமோ என்ற தன்னுடைய எண்ணத்தைத் தெரிவித்தான்.
ஜனநாயக யுகம் சட்டதிட்டங்களால் ஆனது. சட்டத்தின் ஆட்சி ஜனநாயக நாட்டிலேயே எல்லா குடிகளையும் சென்றடைய முடியும். லௌகிகத்தில் கூட எழுதப்பட்ட விஷயங்களே பெரும்பாலான விஷயங்களின் அடிப்படையாய் இருக்கின்றன. பிரிட்டிஷ் அரசு சட்ட உருவாக்கத்தையும் சட்ட செயலாக்கத்தையும் நிர்வாகத்திடமும் நீதிமன்றத்திடமும் அளித்தது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக இதே நிலையே நீடிக்கிறது. செய்தித்தாள்கள் இந்த சூழ்நிலையில் இடையீடாக வந்து பொதுமக்களிடம் பரவலாக வாசிப்பைக் கொண்டு சேர்த்தன. ஒரு சமூகம் பெருமளவு வளர்ச்சி பெற அந்த சமூகத்தில் வாசிப்புப் பயிற்சியும் எழுத்துப் பயிற்சியும் இருப்பது முக்கியமானது. நாம் அந்த நிலையை நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறோம். செல்ல வேண்டிய தூரம் இன்னும் பெருந்தொலைவாக இருக்கிறது.
நண்பனின் குழந்தைகள் சிறு குழந்தைகள். இருவருக்கும் பத்து வயது இருக்கலாம். அங்கே பள்ளியில் வாரம் ஒரு நூலை வாசித்து மதிப்புரை எழுதி அந்த நூல் குறித்து 5 நிமிடங்கள் பேசுகின்றனர் என்று மகிழ்ச்சியுடன் கூறினான்.
‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து விசாரித்தான்.
‘’பி.ஜி. கருத்திருமனின் கம்பர் -கவியும் கருத்தும்’’ நூலில் உள்ள கம்பராமாயணப் பாடல்களை ஜூம் செயலி மூலம் வாசிக்கலாமா என்று கேட்டான் . நான் கணினியில் மிகக் குறைவான செயல்முறைகளை மட்டும் அறிந்தவன். ஜூம் குறித்து முயன்று பார்க்கிறேன் என்று சொன்னேன்.
Tuesday, 4 November 2025
திருமகள்
எனது நண்பர் ஒருவர் நலம் குன்றியிருக்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தவர் வீடு திரும்பியிருக்கிறார். நாளின் பெரும்பாலான பொழுது பிராண வாயு அவரது சுவாசத்தை எளிதாக்க கருவி மூலம் அளிக்கப்படுகிறது. மிகக் குறைவாக உணவருந்துகிறார். நினைவு துல்லியமாக இருக்கிறது. மிகவும் சிரமப்பட்டு பேசுகிறார். அவரைக் காணச் சென்றிருந்தேன். அவரது மகள் அவர் அருகிலேயே அமர்ந்திருக்கிறார். அவருக்குத் தேவையானவை அனைத்தையும் செய்து கொடுக்கிறார். அந்தக் காட்சி மனித வாழ்வின் மகத்தான தருணங்களில் ஒன்று என எனக்குத் தோன்றியது. இந்திய மரபு செல்வத்தின் தெய்வமாக திருமகளைக் கூறுகிறது. பிரியமும் பேரன்பும் கொண்ட மகள் திருமகளின் வடிவமே என்று எனக்குத் தோன்றியது.
Saturday, 1 November 2025
புதிய பாதை
இந்த வாரம் திங்களன்று சந்தித்த போது கடலூர் சீனு சொன்னார். ‘’வீட்டிலிருந்து 5 கி.மீ தூரம் நடந்து ஒரு இடத்துக்குச் சென்றால் கூட அது பயணம் தான். மனிதன் நகர்வதற்காக படைக்கப்பட்டவன்.’’. இங்கே ஊரில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. எனவே ஊரிலிருந்து மேற்கு திசை நோக்கிச் செல்லும் வாகனங்களும் மேற்கு திசையிலிருந்து ஊருக்கு வரும் வாகனங்களும் ரயில்வே சந்திப்பிலிருந்து ஒரு கி.மீ வடக்கில் இருக்கும் கல்லணை - பூம்புகார் சாலை வழியே திருப்பி விடப்படுகின்றன. அதில் ஏகப்பட்ட பேருந்துகளும் நான்கு சக்கர வாகனங்களும் செல்வதால் அந்த சாலையில் இருக்கும் ரயில்வே லெவல் கிராசிங்கில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விடுகிறது. கடலூரிலிருந்து கரி ஏற்றி வரும் கூட்ஸ் வண்டிகள் காரைக்கால் துறைமுகம் செல்வதால் தினமும் கணக்கற்ற தடவை ரயில்வே கிராசிங் மூடப்படுகிறது. ஊரின் ரயில்வே சந்திப்பிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் நீடூர் என்ற ரயில் நிலையம் உள்ளது. ஊரிலிருந்து நீடூர் வரைக்குமான ரயில் பாதைக்கு இணையாக ஒரு கிராமத்து சாலை இருப்பதாக ஒரு பேச்சு எழுந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னால் அந்த பாதையில் பாதி தூரம் பயணித்திருக்கிறேன். இம்முறை அந்த பாதையை முயற்சி செய்து பார்க்கலாமா என எண்ணினேன். நீடூர் சென்று அங்கிருந்து ஆனந்தகுடி என்ற கிராமம் வழியே சென்று அங்கிருந்து கோட்டூர் என்ற ஊரைக் கடந்து கல்லணை - பூம்புகார் சாலையை அடைந்தேன். அருகில் இருக்கும் ஒரு பாதையை இத்தனை நாள் அறியாமல் இருந்தோமே என்ற சிறு வருத்தமும் இன்றைக்கு அறிந்தோமே என்னும் பெருமகிழ்ச்சியும் அடைந்தேன்.