Tuesday, 7 April 2026

காலை உணவு (ஹாஸ்யம்)

4 ஏக்கர் பரப்பு கொண்ட வீடுடைய நண்பர் காலை 4.30க்கு எழுவார். எழுந்ததும் அன்றைய தினத்தின் அலுவல்கள் சார்ந்து குறிப்புகள் தயார் செய்வார். காலை 6 மணிக்கு வந்து சந்திக்குமாறு கூறுவார். அதுவே இப்போது நாங்கள் சந்தித்துக் கொள்ளும் நேரம் என்றாகி விட்டது.  காலை 8 மணி வரை சற்று சாவகாசமாக இருப்பார். அதன் பின் அலைபேசி அழைப்புகள் வரத் துவங்கும். இரவு 8 மணி வரை தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கும். அவற்றுக்கு பதில் சொல்வதிலேயே நாளின் பெருமளவு நேரம் செலவாகும். ஒரு அழைப்பை பேசிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே மேலும் 4 அழைப்புகள் வந்து விடும். தவறிய அழைப்புகளை ஒவ்வொன்றாக மீண்டும் அழைத்து பேசி அது தொடர்பான அடுத்த அழைப்புகளைப் பேசி என நேரம் சுழன்று விடும். நண்பர் வீட்டில் எப்போதும் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் 5 பேர். அடுமனைப் பணிக்கு ஒரு பணியாளர் இருக்கிறார். அவர்கள் வீட்டின் வழக்கம் முதலில் நண்பர் காலை உணவருந்துவார். அவரது பொதுவான நேரம் காலை 9 மணி. அவருடனோ அவருக்குப் பின்னோ அவரது சகோதரரும் உணவருந்துவார். நான் காலை 8.30 வரை அவருடன் உரையாடி விட்டு புறப்படுவேன் ; உணவருந்தி விட்டு புறப்படுமாறு நண்பர் சொல்வார். நாங்கள் சேர்ந்து உணவருந்துவோம். காலை 6.30க்கு நான் நண்பர் வீட்டில் இருந்தாலே அவர்கள் வீட்டில் எனக்கும் சேர்த்து காலை உணவு தயாரித்து விடுவார்கள். அவர் வீடு 2000 சதுர அடி பெரியது என்பதால் ஒவ்வொரு பணிகள் ஒவ்வொரு இடத்தில் நடக்கும். ஒருநாள் எனக்கும் சேர்த்து காலை உணவு தயாராகி விட்டது. நண்பர் 8.30க்கு ஒரு அலைபேசி அழைப்பை ஏற்று பேசிக் கொண்டிருந்தார். அதனைப் பேசி முடித்து அதன் பின் அவர் நீராடி வர வேண்டும். எப்படியும் 9.15 ஆகி விடும். மற்ற உறுப்பினர்கள் இன்னும் தயாராகி வரவில்லை. ஆனால் டயனிங் டேபிளில் காலை உணவு தயாராகி ஹாட் பேக்கில் இருக்கிறது. பொங்கல், இட்லி, பூரி, சட்னி, சாம்பார், குருமா என அனைத்தும் உள்ளது. டயனிங் டேபிள் அருகில் யாரும் இல்லை. அடுமனையிலும் யாரும் இல்லை. நான் அடுமனையிலிருந்து உணவருந்தும் தட்டு ஒன்றை எடுத்துக் கொண்டேன். டயனிங்கில் அமர்ந்து உணவு வகைகளை தட்டில் வைத்துக் கொண்டு உணவருந்தத் தொடங்கினேன். சாப்பிட்டு கை கழுவி சிறிது நேரம் ஹாலில் அமர்ந்திருந்த போது நண்பரின் சகோதரர் வந்தார். அவரிடம் நடந்ததைக் கூறி விட்டு புறப்பட்டேன்.  

Monday, 6 April 2026

ஓய்வில் இருக்கும் நண்பர்

 குடவாயிலில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். இலக்கியம் இசை மற்றும் நுண்கலைகளில் தீவிரமான ஆர்வமும் ஈர்ப்பும் பயிற்சியும் மிக்கவர். கலைஞர்களுக்கே உரிய உணர்ச்சிகரமான அகம் கொண்டவர். அவரது உணர்ச்சிகர இயல்பு குறித்து நான் மிகுந்த கவலை கொண்டிருந்தேன். அவர் இயல்பு குறித்து புறவயமாக நோக்குமாறு அவரிடம் அவ்வப்போது மெலிதாக மென்மையாக சொல்லிக் கொண்டிருந்தேன். புதிய வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொண்டிருந்தார். வீட்டின் நிறைவுப் பணிகள் அவருடைய நேரத்தையும் மனத்தின் பெரும்பாலான பகுதியையும் எடுத்துக் கொண்டிருந்தது. வீட்டு கிரகப் பிரவேசத்துக்கு எனக்கு அழைப்பு அளித்திருந்தார். நான் அன்று ஊரில் இல்லை ஆதலால் செல்ல முடியவில்லை. கிரகப் பிரவேசம் சிறப்பாக நடந்தது என பின்னர் அறிந்தேன். விழாவுக்கு 10 நாட்களுக்குப் பின் சாலையில் இரவில் சென்று கொண்டிருந்த போது சிறு சாலை விபத்து ஒன்று நண்பருக்கு ஏற்பட்டிருக்கிறது. சிறு எலும்பு முறிவு. கட்டு போட்டிருக்கின்றனர். ஒரு மாத காலம் அதிகம் நடக்காமல் படுக்கையில் இருக்குமாறு மருத்துவ அறிவுரை. அதனை முறையாகப் பின்பற்றுகிறார். இன்று நண்பரைக் காணச் சென்றிருந்தேன். வீட்டின் நிறைவுப் பணிகள் பிரமாதமாக நிகழ்ந்திருக்கின்றன என்பதைக் கண்டது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அரண்மனை போன்ற எழிலுடன் வீடு இருக்கிறது என அவரிடம் கூறினேன். நாள் முழுதும் நாதஸ்வர இசை கேட்டுக் கொண்டு இலக்கியம் வாசித்துக் கொண்டிருக்கிறார். இசையில் முழுமையாக மூழ்கியிருப்பதற்கான வாய்ப்பாக நிகழ் நிலையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினேன். என்னை இரண்டு நாட்கள் வந்து தங்கியிருங்கள் என்று சொன்னார். சென்று வர வேண்டும். 

Sunday, 5 April 2026

ஆனைமுகன் நீராட்டு

 இன்று மாயூரநாதர் ஆலயம் சென்ற போது ஆகம பாடசாலை மாணவர்கள் 25 பேர் வேத மந்திரம் முழங்கிக் கொண்டு ஆலயத்தினுள் நுழைவதைக் கண்டேன். நான்கு வயது இருக்கும் சிறு குழந்தை சங்கீத அப்பியாசத்தைத் துவங்குவதைக் கண்டேன். அக்குழந்தையின் பெற்றோரும் ஆசிரியரும் உடனிருந்து அக்குழந்தைக்கு வழிகாட்டினர். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தங்கள் குடும்ப நலனுக்காக ஆனைமுகனை நீராட்டி வழிபட திரவியங்களுடன் வந்திருந்தனர். மாயூரநாதர் ஆலய ஆனைமுகன் உருவத்தில் மிகப் பெரியவர். ஏழடி உயரம் இருக்கக் கூடும். முதலில் நல்லெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்தனர். பின்னர் மஞ்சள் பொடி, நெய், தயிர், தேன், பால் ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. சந்தன அபிஷேகம் செய்யப்பட்டு சுடராட்டு நிகழ்ந்தது. 

ஒரு குழந்தையை அன்னை நீராட்டி அலங்கரிப்பது போன்றதே தெய்வத்துக்கு மானுடர் நிகழ்த்தும் நீராட்டு. 

பெருமாள் கோவிலில் உற்சவர் ஏகாதசி கண்ணாடி மண்டபத்தில் எழுந்தருளியிருந்தார். 

Saturday, 4 April 2026

பள்ளியும் கல்வியும்

பன்னெடுங்காலமாக இந்தியர்கள் அவர்களுடைய விவசாய வாழ்க்கைக்குத் தேவையான விவசாயக் கல்வியறிவைக் கொண்டிருந்தனர். அடிப்படை மொழிக் கல்வியும் கணிதக் கல்வியும் இந்தியர்கள் பெற்றிருந்தனர்.  விஞ்ஞானத்தையும் தொழிற்கல்வியையும் தொழிலை தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்ட சமூகங்கள் கற்றன. நுண்கலைகளை ஆர்வமுடையவர்கள் ஆசிரியர்களிடம் சென்று கற்றனர். 

கிராமத்தில் இருக்கும் சாமானியர்களுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு ஆசிரியர் இருந்து கல்வி கற்பித்திருக்க முடியும். அந்த ஆசிரியரின் உலகியல் தேவைகளை கிராமம் பூர்த்தி செய்திருக்கக்கூடும். விஞ்ஞானமும் தொழிலும் தொழில் பட்டறைகளில் போதிக்கப்பட்டிருக்கக்கூடும். 

நம் நாட்டில் பெரும் கல்வி நிலையங்கள் இருந்திருக்கின்றன ; பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்கலைக்கழகங்கள் இருந்திருக்கின்றன. அவை யாரால் நடத்தப் பட்டிருக்கும்? நாட்டின் துறவிகளே அவற்றில் ஆசிரியர்களாக இருந்திருக்கின்றனர். துறவிகள் வாழும் இடமே பள்ளி. 

பிரிட்டிஷ் ஆட்சி தங்கள் தேவைக்காக எழுத்தர்களை உருவாக்கும் ‘’மெக்காலே கல்வி’’ முறையைக் கொண்டு வந்தது. இன்றும் அந்த வடிவமே ஏதோ ஒரு வகையில் நீடிக்கிறது. 

நம் நாட்டில் ஏதோ ஒரு வகையில் பள்ளிகள் தொல்கல்வி முறைக்கு இடம் தர வேண்டும். இது குறித்த சிந்தனை எழ வேண்டிய நேரம் இது. 

குழப்புதல் (நகைச்சுவைக் கட்டுரை)

குட்டையைக் குழப்புதல் எனக் கூறுவார்கள். இன்று தெளிந்த நீரோடை போல இருந்த ஒருவரைக் குழப்பியிருக்கிறேன். 

ஊரிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் எனது நண்பர் ஒருவர் ஒரு பள்ளியை நடத்துகிறார். அவரை இரண்டு மாதங்கள் முன்பு தான் சந்தித்தேன். அதுவே முதல் சந்திப்பு. அதற்குப் பின் இன்று தான் சந்திக்கிறேன். இது இரண்டாம் சந்திப்பு. ஆனால் இரண்டாம் சந்திப்பிலேயே அவரை 360 பாகைகளிலும் குழப்பி விட்டேன். 

இன்று முதல் முறையாக அவர் பள்ளிக்குள் நுழைந்தேன். வெளியில் இருந்து பார்க்கும் போது சிறிய இடம் போலவே தோற்றமளிக்கிறது. ஆனால் உள்ளே சென்று பார்த்தால் மிகப் பெரிய பரப்பு. 

பரஸ்பர ஷேமநலங்கள் விசாரித்த பின் நான் விஷயத்துக்கு வந்தேன். 

‘’சார் ! இந்த இடம் மொத்தம் எத்தனை ஏக்கர்?’’

அவர் தயக்கத்துடன் ‘’20 ஏக்கர்’’ என்றார்.

‘’சார் ! என்ன சொல்றீங்க? 20 ஏக்கரா? ஸ்டேட் போர்டா இல்ல சி பி எஸ் இ யா?’’

‘’ஸ்டேட் போர்டு’’

‘’ஏன் சார் ஸ்டேட் போர்டா மெயிண்டய்ன் பண்றீங்க? சி பி எஸ் இ பர்மிஷன் வாங்கிடுவோம். அதுக்கான எல்லா இன்ஃப்ரா ஸ்ட்ரக்சரும் இருக்கே. பர்மிஷன் ஏதும் அப்ளை பண்ணியிருக்கீங்களா?’’

அவர் பதட்டத்துடன் ‘’இல்லை’’ என்றார். 

‘’எத்தனை ஸ்டூடண்ட்ஸ் படிக்கறாங்க?’’ அடுத்த கேள்வியைக் கேட்டேன். 

‘’200 பேர்’’ 

‘’என்ன தலைவரே சொல்றீங்க. 22 ஏக்கர் இடத்துல 200 பேரை மட்டும் தான் படிக்க வைக்கிறீங்களா? இந்த ஏரியாவுக்கு மினிமம் 2500 ல இருந்து 3000 ஸ்டூடண்ட்ஸ் படிக்க்ணும்’’

நான் கூறுவதில் இருந்த சாத்தியம் அவருக்கும் மனதில் பட்டது. இருப்பினும் அவரது அச்சம் நீங்கவில்லை. 

‘’சார் ! எல்லா வேலையும் நீங்களே செய்ய முடியாது. ஒரு டீமை ஃபார்ம் பண்ணுங்க. 10 பேர் கொண்ட டீம். உங்க மனநிலைக்கு ஒத்து வரவங்க. உங்க மனநிலைக்கு நேர் எதிர் மைண்ட் செட் கொண்டவங்க. மையமா இருக்கவங்க. எல்லாரையும் அந்த டீம்ல கொண்டு வாங்க. எல்லார்ட்டயும் இன்புட்ஸ் கேளுங்க. நீங்க முடிவெடுங்க. அந்த 10 பேருக்கும் நீங்க பேமெண்ட் குடுங்க. அப்ப தான் உங்களுக்கு எல்லா ஆஸ்பெக்ட்டும் பிடிபடும்’’

மையமாக ‘’நீங்க சொல்றது சரிதான்’’ என்றார். 

‘’வேலூர்ல வி ஐ டி பாத்திருக்கீங்களா? மொத்த காம்பஸும் வெர்டிகல் பில்டிங்ஸ் தான். நாம 3000 ஸ்டூடண்ட்ஸ் அக்காமடேட் பண்றா மாதிரி வெர்டிகல்ஸ் போவோம். வேற வழி இல்ல.’’

நண்பர் கற்பனையில் பல மாடிக் கட்டிடம் அப்போதே எழுந்தது. 

‘’உங்களுக்கு சி பி எஸ் இ, ஐ சி எஸ் இ, என் ஐ ஒ எஸ் லைசன்ஸ் வேணுமா? கைட் செய்ய ஆட்கள் இருக்காங்க. ஸ்கூலை விரிவுபடுத்திக் கட்ட பேங்க் லோன் வேணுமா? அரேஞ்ச் செய்ய முடியும்? எஃபிஷியண்ட் ஸ்டாஃபை எம்ப்ளாய் செய்யணுமா? அதுவும் செய்ய முடியும். உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணுண்ணாலும் கேளுங்க. செஞ்சுடலாம்’’

‘’எஜுகேஷன் இப்ப ரொம்ப கமர்ஷியலா இருக்கு. ஆனா நாங்க ஒரு எதிக்ஸ்ஸோட நடத்தறோம்’’ அவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவர் அப்போது தான் தன் மனதில் இருப்பதை சொற்களாக்கி என் முன் வைத்தார். 

அதனை கீழ்க்கண்டவாறு கூறி நான் முறியடித்தேன்.’’ சார் ! நீங்க வேல்யூஸ்ஸோட செயல்படணும்னு நினைச்சா அந்த வேல்யூவை 3000 பேருக்குக் கொண்டு போற வாய்ப்பு இருக்கும் போது 200 பேர்ட்ட கொண்டு போறது ரொம்ப தப்பு’’

நண்பருக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. 

‘’இன்னைக்கு நான் என்ன செய்யறேன்னா எஜுகேஷன் சம்பந்தமான என் ஃபிரண்ட்ஸ்கிட்ட பேசிட்டு வரேன். நம்ம அடுத்த மீட்டிங் அடுத்த டெவலப்மெண்ட் என்ன என்பது பத்திதான்’’ 

திட்டமிடல்கள் -2 (ஹாஸ்யம்)

காந்திய வழிமுறைகளில் முதன்மையானது ஒரு விஷயத்தை ‘’ஆறப் போடுங்கள்’’ என்பது. ஒரு விஷயம் தீவிரமாக இருக்கும் போது அதன் எல்லா முனைகளும் கொதிநிலையில் இருக்கும். அது அந்த விஷயத்தை செயலாக்குவதற்கு தடையாக உருவாகக் கூடும். ஊர் மாற்றம் குறித்து அமைப்பாளர் மிக அளந்தே தன் அடிகளை முன்னெடுக்கிறார். 

முதல் படியாக ஸ்ரீரங்கத்தில் ஒரு வாடகை வீட்டை பார்க்க இருக்கிறார். மிகக் குறைவான வாடகை மற்றும் மிகக் குறைவான அட்வான்ஸ் கொண்ட ஓட்டு வீடு. அங்கே எந்த பண்டங்களும் கொண்டு செல்லப் போவதில்லை. நான்கு செட் ஆடைகள் மட்டும் வைத்திருப்பது. 

ஒரு வாரத்தில் 3 நாட்கள் ஊரில் இருந்தால் 3 நாட்கள் ஸ்ரீரங்கத்தில் இருப்பது. இவ்விதமே 6 மாதத்திலிருந்து 1 வருடம் தொடர்வது. 

தேவையெனில் காலை முதல் பாசஞ்சர் வண்டியைப் பிடித்து திருச்சிராப்பள்ளியிலிருந்து ஊருக்கு வந்து விட்டு லௌகிகப் பணிகளை முடித்து விட்டு மாலை ரயிலில் திருச்சிராப்பள்ளி சென்று விடுவது. ரயிலில் ஒரு சீசன் டிக்கெட் எடுத்து வைத்துக் கொள்ளலாம். 

ஓராண்டில் இங்கும் அங்கும் என இருந்து விட்டு அதன் பின் அடுத்த கட்டம் நோக்கிச் செல்லலாம்.  

Friday, 3 April 2026

ஊர் மாற்றம்

நமது மனம் பழக்கத்துக்கு உட்பட்டது. அதனை பழக்கப்படுத்த முடியும் ; ஒரு பிராணியைப் பழக்குவதைப் போல. பழகிய விஷயத்துக்கு மீண்டும் மீண்டும் உட்பட்டவாறே இருப்பது மனதின் இயல்பு. மனதுக்குப் புதிய ஒன்றை அறிமுகப்படுத்தினால் அதனை உடனே ஏற்காது. அதற்கு சில தடைகளை அளிக்கும். அதைத் தாண்டியும் நாம் உறுதியாக இருந்தால் புதியவற்றை மனம் ஏற்கத் துவங்கி விடும்.  

நாம் முதல் நாள் இரவு ஒரு புதிய ஊருக்குச் சென்றிருக்கிறோம் என வைத்துக் கொள்வோம். தூங்கி காலை விழிக்கிறோம். ஒரு நடை செல்கிறோம் எனில் நம் மனம் அங்கே இருக்கும் சிறு சிறு விஷயங்களையும் கவனிக்கும். பூத்து நிற்கும் மரம், சிறு செடிகள், மண்டிக் கிடக்கும் புல், வீதியில் திரியும் நாய்கள், அப்பகுதியின் கட்டிடங்கள், அதன் மதில் சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் என அனைத்தையும் நம் மனம் நுட்பமாக கவனிக்கும். பார்க்கும் காட்சிகளில் மனம் லயிக்கும். நாம் வருஷக்கணக்காக வாழ்ந்த ஊரில் ஒரு புது ஊரில் ஏற்படும் லயிப்பு ஏற்படாது. 

மனம் இயங்கும் விதத்தை ஒரு அளவீட்டுக்குள் கொண்டு வருவோமானால் அதற்கு 1 -10 வரை என அளவீடு அளித்தால் பல வருஷம் பழகிய ஊரில் அதன் உற்சாகம் 3 என இருக்கும் ; புதிய ஊரில் அதன் உற்சாகம் 7 என இருக்கலாம். வழமையை விட உற்சாகத்தை விரும்புபவர்கள் புதிய ஊருக்குச் செல்லலாம் என நினைப்பார்கள். பத்தாயிரத்தில் ஒருவருக்கே அவ்விதம் தோன்றும். ஏனென்றால் மனிதர்கள் பொதுவாக வழமையில் தங்களைப் பொருத்திக் கொள்பவர்கள். புதிய ஒன்றை நோக்கிச் செல்ல தயங்குபவர்கள். 

நீங்கள் பல வருஷம் ஒரு ஊரில் வசித்திருக்கிறீர்கள். பின் 3 ஆண்டுகள் வேறு ஒரு ஊரில் இருந்து விட்டு அதன் பின் மீண்டும் பழைய ஊருக்கு வருகிறீர்கள் என்றால் அப்போது பழைய ஊரிலும் புதிதாக உணர வாய்ப்பு உண்டு.  

Thursday, 2 April 2026

திட்டமிடல்கள் (ஹாஸ்யம்)

உத்தரவு கிடைத்து விட்டதால் அமைப்பாளர் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார். 

தனது யூகச் செல்வங்கள் அனைத்தையும் இருப்புச் செல்வங்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். 

பல ஆண்டுகளுக்கு முன்னால் அமைப்பாளரின் பட்டயக் கணக்காளர் ஒரே ஒரு வங்கிக் கணக்கு மட்டும் வைத்துக் கொள்ளுமாறு கூறியிருந்தார். அதாவது ஒரு சேமிப்புக் கணக்கு. ஒரு நடப்புக் கணக்கு. அப்படியே செயலாக்கினார் அமைப்பாளர். ஒரு அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கு இருக்கிறது. இப்போது அமைப்பாளர் என்ன நினைக்கிறார் என்றால் இனிமேல் வங்கிக் கணக்கே தேவையில்லை என்று. வங்கியில் மேற்கொள்ளும் எல்லா பரிவர்த்தனையும் அஞ்சல் அலுவலகத்தில் செய்து கொள்ள முடியும் என்பதால் இனி வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என எண்ணுகிறார். தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஊழியர்கள் குறுநில மன்னர்கள் போன்ற மனோபாவத்துடன் செயல்படுகிறார்கள் ; அவர்களுக்குத் தாங்கள் சேவை அளிக்கும் இடத்தில் இருக்கும் பணியாளர்கள் என்னும் நினைவு இல்லை. ஏன் வங்கிக் கணக்கை முடித்துக் கொள்கிறேன் என்பதை ஒரு கடிதமாக எழுதி கிளைக்கும் மேல் அலுவலகத்துக்கும் அனுப்பி விட்டு முடித்துக் கொள்ள வேண்டும். 

பொதுமக்கள் தங்கள் சேமிப்பை வங்கிக் கணக்கில் இடுவதை விட அஞ்சலக சேமிப்புக் கணக்கில் இடுவதே பாதுகாப்பானது. வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் டெபாசிட் ஆக பணம் பெற்று அந்தப் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு கடனாக அளிக்கின்றன. ஆனால் அஞ்சல் அலுவலகம் வாடிக்கையாளர்களிடம் பெறும் டெபாசிட் மத்திய அரசாங்கத்துக்கு கடனாக அளிக்கப்படுகிறது. வங்கிகள் திவால் ஆக வாய்ப்பு உண்டு. போஸ்ட் ஆஃபிஸ் திவால் ஆகாது. 

இன்று அமைப்பாளர் போஸ்ட் ஆஃபிஸில் என்னென்ன திட்டங்கள் இருக்கின்றன என்று பார்த்தார். 

பி ஓ எம் ஐ எஸ் என ஒரு திட்டம். அதிகபட்சம் ரூ.9,00,000 டெபாசிட் செய்யலாம். மாதம் ரூ.5500 கிடைக்கும். 

பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் என ஒரு திட்டம் உள்ளது. அதில் ஓராண்டுக்கு அதிகபட்சம் ரூ.1,50,000 டெபாசிட் செய்யலாம்.

நேஷனல் சேவிங்ஸ் டைம் டெபாசிட் என ஒரு திட்டம் உள்ளது. அதிகபட்சம் 5 ஆண்டுகாலம் டெபாசிட் செய்யலாம். உச்சபட்ச தொகை என ஏதும் கிடையாது. 

கையிருப்பு இருக்கும் பணத்தில் ரூ.10.5 இலட்சத்தை பி ஓ எம் ஐ எஸ் மற்றும் பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்டிலும் மீதித் தொகையில் பாதியை நேஷனல் சேவிங்க்ஸ் டைம் டெபாசிட்டிலும் செய்து விட்டு இன்னொரு பாதிக்கு நேஷனல் சேவிங்க்ஸ் சர்டிஃபிகேட் வாங்கி வைத்துக் கொள்வது என முடிவு செய்திருக்கிறார் அமைப்பாளர். 

Wednesday, 1 April 2026

உத்தரவு கிடைத்தது

 இன்று காலையிலேயே எழுந்து விட்டேன். அதிகாலை நேரத்தில் ஒரு நல்ல கனவொன்று கண்ட பின் எழுந்திருந்ததால் மகிழ்ச்சியாக இருந்தது. வீட்டின் கதவுகளைத் திறந்து வைத்தேன். கலனில் நீர் நிரப்பி குடிநீர்த்தேவைக்கான ஏற்பாடுகளை செய்தேன். பின்னர் எனது உணவை சமைத்து விடுவோம் என முடிவு செய்து கேழ்வரகுக் களி கிண்டினேன். ஐந்திலிருந்து ஏழு நிமிடங்களில் எனது உணவு தயாராகி விடும். ஒரு சிறு தட்டில் அதனை வைத்து அதன் மீது இன்னொரு சிறு தட்டை மூடி டயனிங் டேபிள் மீது கொண்டு சென்று வைத்தேன். இன்று காலை நேரத்திலேயே கோவிலுக்குச் செல்ல வேண்டும் என எண்ணியிருந்ததால் சிறு தூரம் மட்டுமே நடைப்பயிற்சி சென்று வந்தேன். அதன் பின் வீட்டுக்கு வந்து காலையிலேயே சில பதிவுகள் எழுதி தளத்தில் பதிவிட்டேன். நேரம் காலை 8 மணியாக இருந்தது. குளித்து விட்டு ஆலயத்துக்குச் சென்றேன். 

ஆலயம் சென்ற போது எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. ஊரின் மிகப் பெரிய கட்டுமானம் ஆலயம். இன்றும் கூட. இத்தனை பெரிய நிலமும் இத்தனை பெரிய கட்டுமானமும் இன்றும் ஊரில் ஒரே இடத்தில் இணைந்து இல்லை. ஒவ்வொரு ஆலயத்திலும் வேதம் படிக்கும் 100 மாணவர்களுக்கு மாதம் கணிசமான தொகை உதவித் தொகையாக அளித்து ஆலயத்தில் எப்போதும் வேத முழக்கம் கேட்கும் வகையில் ஏன் ஏற்பாடு செய்யப்படக் கூடாது? அதைப் போலவே திருமுறைகள், தமிழிசை, பரதம் முதலிய நுண் கலைகள் ஆகியவற்றுக்கு ஏன் ஆலயம் இடம் தரக் கூடாது? ஆலயத்துக்கு எவ்வளவோ வருமானம் இருக்கிறது. வேதக் கல்வியும் திருமுறைக் கல்வியும் நுண்கலைக் கல்வியும் ஆலயத்தின் வருமானத்தை பலவகைகளிலும் அதிகரிக்கவே செய்யும். ஆலய நிர்வாகம் என்பது அப்பிரதேசத்தின் பண்பாட்டுச் செயல்பாடாக இருக்க வேண்டிய காலம் வந்து விட்டது. ஆலயம் பண்பாட்டுச் செயல்பாடுகளின் மையமாகவும் இருக்க வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம். 

உள எழுச்சியும் உள நெகிழ்ச்சியும் கொண்டிருந்த நிலையில் இன்று ஆலயம் சென்றிருந்தேன். நேற்று எழுதிய ‘’உத்தரவு’’ என்னும் பதிவு உருவாக்கியிருந்த மனநிலை. ஊரில் ஆலயத்தில் மஹாகணபதி சன்னிதி ஒன்று உள்ளது. தமிழ் மக்களுக்கு ஆனைமுகனைப் போல் இன்னொரு ஆப்த தெய்வம் இல்லை. ஆற்றல் கொண்டிருப்பவனும் குழந்தையாயிருப்பவனும். அவன் முன் சென்று நின்றேன். அவனிடம் என் துயரங்களைத் தெரிவிக்க நினைத்தேன். கடவுள் மிகப் பெரியவன். அவனிடம் என் லௌகிகத் துயரங்களைக் கூற வேண்டுமா என ஓர் எண்ணம். என் துயரங்களைச் சொல்ல என் வலிகளைச் சொல்ல என் வேதனைகளைச் சொல்ல அவனன்றி வேறு துணை இல்லை. சொல்வதை முழுதாகக் கேட்டுக் கொள்ளக் கூட அவனன்றி வேறு உறவு இல்லை. எதுவும் சொல்லாமல் தான் அவன் முன் நின்றிருந்தேன். அபயாம்பிகையை தரிசனம் செய்தேன். நான் சென்ற போது மயூரநாதருக்கு சுடராட்டு நிகழ்ந்தது. ‘’திருச்சிற்றம்பலம்’’ ‘’திருச்சிற்றம்பலம்’’ எனத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தேன். நாம் இருப்பது மாயூரத்தில் ; திருச்சிற்றம்பலம் என்பது சிதம்பரம். மாயூரத்தில் ஏன் சிதம்பரத்தைச் சொல்கிறோம் என நினைத்தேன். தமிழகத்தில் எல்லா ஆலயங்களிலும் திருச்சிற்றம்பலம் என்று சொல்வார்கள். திருமுறைகள் ஓதத் துவங்கும் போதும் நிறைவு செய்யும் போதும் திருச்சிற்றம்பலம் என்று சொல்வார்கள். சிவ பக்தர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது திருச்சிற்றம்பலம் என்று சொல்வார்கள். எனவே எந்த ஊரிலும் திருச்சிற்றம்பலம் சொல்லலாம் என எண்ணினேன். ஆடலரசன் நடராஜன் ஆடுவது காஸ்மிக் நடனம். எனவே நடராஜன் சபையில் ஒட்டு மொத்த பிரபஞ்சமும் அடக்கம். எனவே திருச்சிற்றம்பலம் என்பது ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் குறிக்கும் மந்திரம் என எண்ணினேன். 

கோவிலுக்கு வெளியே வரும் போது ஒரு பெண் கூடையில் வில்வ இலைகளையும் நாலலிங்கப் பூவையும் வைத்திருப்பதைக் கண்டேன். கர்நாடகாவில் சிவாலயங்கள் அனைத்திலும் வில்வ இலைகளும் வில்வ இலை மாலைகளும் பெருமளவில் விற்பனை ஆகும். 

மாயூரநாதர் கோவிலிலிருந்து திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயத்துக்குச் சென்றேன். பெருமாள் கோயிலுக்கு மாலை செல்லலாமா என ஒரு கணம் எண்ணினேன். பெருமாள் தரிசனத்தை மாலை வரை தள்ளி வைக்க வேண்டாம் என முடிவெடுத்துப் புறப்பட்டேன். 

திருஇந்தளூர் கீழவீதி அருகே வந்த போது பரிமள ரங்கன் பக்தர்கள் வடம் இழுக்க தேர் பவனி வருவதைக் கண்டேன். இறைவன் எனக்கான உத்தரவை அளித்து விட்டான் என்பதை உணர்ந்த போது உளம் நெகிழ்ந்தது. பரமாத்மா ஜீவன்களுடன் ஆடுவது ஆடல் ; விளையாடல். தேரில் இறைவனைக் கண்ட கணம் அவனை என் குழந்தையாக எண்ணினேன். என் கடவுள் எனக்கு அனுமதி அளித்து விட்டான். புதிய நிலம் காண புதிய காட்சிகளைக் காண புறப்பட்டுச் செல் என்பதே அவன் எனக்கு அளித்திருக்கும் உத்தரவு. மூலவர் யோக நித்திரையில் சயனித்திருக்கிறார். உற்சவர் ஊர் உலகம் கண்டு வருகிறார். எனக்கு இன்று காட்சி கொடுத்தது உற்சவர். 

இறைவா ! உன் லோகங்களில் கோடானுகோடி ஜீவன்கள். அந்தக் கோடானுகோடி ஜீவன்களில் ஓர் எளிய ஜீவன் அடியேன். உன் திருவுளம் அடியேனையும் கருதுகிறதா ? உன் கருணை பெரியது இறைவனே. உன் கருணையால் தான் ஜீவன்கள் ஜீவித்திருக்கிறோம். அதனை நாங்கள் எப்போதும் உணர்ந்திருப்பதில்லை இறைவனே ! எப்போதாவது உணர்கிறோம். இறைவா உன் கருணை எங்கள் மீது எப்போதும் இருக்கட்டும். 

இறைவன் ஒரு குழந்தை

 புன்சிரிப்பு சிரித்து
அவ்வப்போது கை நீட்டி
அவ்வப்போது மறைந்து ஒளிந்து
பிரியச் சொல் உதிர்த்து
பேர் சொல்லி அழைத்து
கொஞ்சப்படுகையில் மகிழும்
சிறு மகவே
இறைவன்
சிறு மகவும்
இறைவன்