பிரபு மயிலாடுதுறை
Monday, 24 November 2025
வானிலை ஆய்வு மையத்துக்கு ஒரு கடிதம்
மொழிபெயர்ப்பு
ராஜாஜியின் கட்டுரை ஒன்றை ஆர்வத்தின் காரணமாக மொழிபெயர்த்தேன். ராஜாஜியின் ஆங்கிலம் எளிய ஆங்கிலம் எனினும் கூரியது. அவர் பயன்படுத்திய சில ஆங்கில வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்பதை அகராதியின் துணை கொண்டு அறிந்து கொண்டேன். மொழிபெயர்ப்பு மகிழ்ச்சி அளித்தது எனினும் அதனை இன்னும் சிறப்பாகச் செய்திருக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது.
Sunday, 23 November 2025
விருட்சத்தின் கீதம் - ராஜாஜி
Rajaji Reader என்ற நூலில் இடம்பெற்றுள்ள ராஜாஜியின் கட்டுரையொன்றை மொழிபெயர்த்துள்ளேன்.
***
விருட்சத்தின் கீதம்
’’இன்று அவர் மிகவும் தாமதமாக வருவார் என்று தோன்றுகிறது. தனது பிரியத்துக்குரிய நண்பர்களான மரங்களுடன் அளவளாவ நிறைய நேரம் செலவிடுபவர் என்றாலும் இன்று அவருக்கு வேறு ஏதோ சிக்கல் இருப்பதாக என் மனதுக்குப் படுகிறது.’’ என்றார் திருமதி. ஜான்சன். ‘’தாங்கள் காத்திருக்கலாம். இல்லையேல் அவர் வந்ததும் தங்கள் வருகை குறித்தும் சிறிது நேரம் காத்திருந்து நீங்கள் திரும்பிச் சென்றது குறித்தும் நான் அவரிடம் கூறுகிறேன்.’’
‘’நன்றி ! நான் செல்ல வேண்டும். அவருக்குக் கிடைத்திருக்கும் பதவி உயர்வு எனக்கு பெருமகிழ்ச்சியை அளித்திருக்கிறது. உங்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவிக்கவே நான் வந்தேன்.’’
’’ஓ! அப்படியா ! மகிழ்ச்சி. தாமதமாக வருவதில் அவர் மன்னர். அவரை அறிந்தவர்களுக்கு இது புதிதில்லை’’
டாக்டருக்கு தான் நடைப்பயிற்சிக்கு செல்லும் போது பாதையில் இருக்கும் மரங்களுடன் உரையாடும் வழக்கம் உண்டு. மரங்களைத் தொட்டு அவற்றுடன் ஆத்மார்த்தமாகப் பேசுவார். காண்பதற்கு அழகிய விஷயம் அது. இதனைக் காணும் எவரும் அவர்கள் உரையாடலில் உள்நுழையவோ குறுக்கிடவோ மாட்டார்கள். தாறுமாறான லௌகிக உலகில் இக்காட்சி அரியது என இதனைத் தொலைவில் இருந்து காண்பவர்கள் கூட உணர்வார்கள்.
அன்றைய தினத்தின் மாலை டாக்டர் ஜான்சனுக்கு மிகவும் துயர் நிறைந்தது என்பதைப் பின்னர் அறிந்தேன். அவர் நேசித்த மரம் ஒன்றை முழுதாக வெட்டி ஒரு ஆனை வீழ்ந்து கிடப்பதைப் போல தரையில் கிடத்தியிருந்தார்கள்.
அடுத்த நாள் சந்தித்த போது டாக்டர் என்னிடம் சொன்னார்: ‘’வளத்தியாயிருந்த என் மகளைக் கொன்று விட்டார்கள்.’’
துரதிர்ஷ்டவசமாக அந்த மரம் ஜில்லா போர்டு கட்டிடத்துக்கு மிக நெருக்கமாக இருந்திருக்கிறது. அந்த மரத்தால் அந்த கட்டிடத்தின் அஸ்திவாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் என பொறியாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
கண்ணீருடன் டாக்டர் என்னிடம் கேட்டார் : ‘’மரம் கட்டிடத்துக்கு மிக அருகில் இருப்பதாகக் கூறுகிறார்கள். மரத்துக்குப் பக்கத்தில் அந்த கட்டிடத்தை அமைத்தது யார்? நாற்பது வருடமாக அந்த மரம் அங்கே இருக்கிறது. ஜில்லா போர்டு கட்டிடம் ஒரு வருடம் முன்பு கட்டப்பட்டிருக்கிறது’’
திருமதி.ஜான்சன் சொன்னார் : ‘’ டாக்டர் இதனை பெரிய பிரச்சனையாக்குகிறார். அது நன்மைக்கா என எனக்குத் தெரியவில்லை. மரம் வெட்டப்பட்டு விட்டது. டாக்டர் இந்த விஷயத்தைப் பார்க்கும் விதமாக யாரும் பார்க்க மாட்டார்கள்.’’
‘’உண்மை’’ என்றேன்.
‘’மிகத் தவறான ஒரு செயல் நிகழ்ந்திருக்கிறது. அது தெரிந்தும் நமக்கு எழும் தார்மீகச் சீற்றத்தைத் தணித்துக் கொண்டு எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருப்பது தீமையை மேலும் வளர்க்கவே செய்யும். நமது அறச்சீற்றத்தை வெளிப்படுத்துவதே நாகரிகமும் மானுடத் தன்மையும்’’
விஷயம் சிக்கல்தான். ராய் ஜான்சன் இந்த விஷயத்தைத் தார்மீகமாகக் காண்கிறார். அவர் செய்வது சரியானதும் கூட !
ஈவு இரக்கமற்ற அதிகாரிகள் மத்தியில் ராய் ஜான்சன் விதிவிலக்கானவர். டாக்டர் ராய் ஜான்சனுக்கு ஒரே மகன்; ராணுவத்தில் பணி புரிந்தான். பர்மிய போர்க்களத்தில் ஜப்பானுடனான போரில் மரணமடைந்தான்.
டாக்டரின் உணர்வுகள் என்னை ஆழமாகப் பாதித்தன. ஒரு ஹிந்துவால் இந்த உணர்வை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். ஹிந்துக்கள் ஒவ்வொரு மரமும் ஒரு ஜீவன் என்றும் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு ஆத்மா உண்டென்றும் நம்புகிறார்கள். அவர்கள் அவ்விதம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்த நாள் மாலை மரம் வெட்டப்பட்ட அந்த இடத்தைப் பார்த்தேன். ஆனை போல் பேருரு கொண்டு வீழ்ந்து கிடந்த அந்த விருட்சத்தின் கிளையொன்றில் உட்கார்ந்து நடந்தவற்றை அசை போட்டேன். அந்த மரத்தை என் மனம் பல உயிர்களாகவும் பிடுங்கி எறியப்பட்ட ஒரு குடும்பமாகவும் எண்ணற்ற தேவமலர்களாகவும் ஜனங்கள் நெருங்கி வாழும் மாநகரம் போன்ற வாழிடமாகவும் என் மனம் உணர்ந்தது. அப்போது குழலிசை என் செவியில் ஒலிப்பதை உணர்ந்தேன். மிக மெல்லிய இசை. எனக்கு மட்டும் கேட்ட இசை. மொழியற்ற இசை. இது விருட்சத்தின் கீதம் என நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
அன்றிரவு நூதனமான கனவொன்றைக் கண்டேன். எல்லாக் கனவுகளும் நூதனமானவை எனினும் அக்கனவு அதிநூதனமானது.
கனவில் ஒரு குரல் கேட்டது. அது மரத்தின் குரல்.
‘’இது கனவென்று எண்ணாதே. உன்னால் என்னைப் பார்க்க முடியாது. ஆனால் நான் இருக்கிறேன். என் குரல் உனக்குக் கேட்கிறதா?’’
‘’கேட்கிறது. சொல்’’
‘’நான் கொலை செய்யப்பட்டேன். நீ அதற்கு நியாயம் கேட்க வேண்டும். என் தமையன் டாக்டர் ஜான்சன் அரசு ஊழியன். அவனால் எதுவும் செய்திட முடியாது. நீ வழக்கறிஞன். உன்னால் ஏதாவது செய்ய முடியும். மரம்வெட்டி என்னை வெட்ட முதலில் மறுத்தான். அவனுக்குப் பணத்தாசை காட்டி அதிகக் கூலி கொடுத்து அவன் மனதை மாற்றினார்கள். என்னை வெட்டச் செய்தார்கள்.’’
‘’நீதிபதி இதனை வழக்காக ஏற்றுக் கொள்வாரா என்பது தெரியவில்லை. என்னால் என்ன செய்ய முடியும்?’’
‘’மூடா நீ என்ன நாத்திகனா? யாவற்றுக்கும் செவி மடுக்கும் மிகப் பெரிய நீதிபதி ஒருவர் இருக்கிறார் என்பதை நீ அறிய மாட்டாயா?’’
‘’இந்த வழக்கை நான் நடத்துகிறேன். முதலில் செய்தித்தாள்களில் இது குறித்து எழுதுகிறேன்’’
‘’அவ்விதமே செய். அரச மரமாக நான் இருந்த போது வருவாய்த்துறை அதிகாரி சுப்பையரும் அவரது மனைவியும் என் மரத்தடிக்கு வந்து எனக்கு குங்குமமும் சந்தனமும் இட்டு வணங்குவார்கள். பல வாரங்களாக காய்ச்சல் பீடித்து உணர்வற்றுக் கிடந்த அவர்கள் மகன் உடல்நலம் பெற என்னிடம் பிராத்தித்துக் கொள்வார்கள். என் அருளால் அவன் நலம் பெற்றான். சுப்பையர் மனம் மகிழ்ந்து என் மரத்தடியில் ஏழைகள் பலருக்கு அன்னதானம் செய்தார். அப்போது என்னைச் சுற்றி மகிழ்ச்சிகரமாக இருந்தனர் அம்மக்கள். மகத்தான நாட்கள் அவை. இப்போது கொல்லப்பட்டு வெட்டுண்டு கிடக்கிறேன்.’’
உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்த நான் இந்த விஷயம் குறித்து தீவிரம் காட்டுவது என்று முடிவெடுத்தேன்.
பத்திரிக்கைகளுக்கு வளர்ந்த பெரிய மரங்கள் வெட்டப்படுவது மூடத்தனம் என கடிதம் எழுதினேன்.
எனது வழக்கறிஞர் நண்பர்கள் ஆச்சர்யப்பட்டனர் ; சிலர் கோபப்படவும் செய்தனர்.
‘’நண்பரே ! நாம் சுதந்திரத்துக்காகப் போராடுகிறோம். இது ரொம்ப சின்ன விஷயம். அது தெரியவில்லையா உங்களுக்கு’’
கனவில் வந்த விருட்சம் குறித்து நான் அவர்களிடம் ஏதும் கூறவில்லை.
‘’நம் தேசத் தலைவர்கள் நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் சாலையோரத்தில் வெட்டப்பட்ட மரத்துக்காக வாதாடிக் கொண்டிருக்கிறீர்கள்’’ வழக்கறிஞர் சங்க செயலாளர் என்னிடம் கோபமாகச் சொன்னார்.
என் வாழ்நாளில் நான் தேசத்துக்காகப் பலவிதமான போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறேன். ஓர் அரச மரத்துக்காகக் குரலெழுப்பியதும் எனக்கு மகிழ்வான செயலே.
***
Saturday, 22 November 2025
காகிதமும் டிஜிட்டலும் (நகைச்சுவைக் கட்டுரை)
இன்று காலை டிம்மி ஷீட் எடுத்து மார்ஜின் போட்டு நண்பனுக்கு கடிதம் எழுதினேன். ஷீட்டின் நான்கு பக்கங்களுக்கு அந்த கடிதம் வந்தது. அளவில் சற்று பெரிய கடிதம் என்றுதான் எண்ணினேன். இருப்பினும் எழுதி முடித்து சிறிது நேரம் கழித்து அதனை வலைப்பூவில் பதிவிட வேண்டும் என விரும்பினேன். எழுதியதைப் பார்த்து வலைப்பூவில் தட்டச்சிட்டேன். பொதுவாக நான் அவ்விதம் செய்வதில்லை. எழுதும் முறையில் எழுதும் மனநிலையில் அது சிறு பாதிப்பை உண்டாக்கும் என்பதால். காகிதத்தில் எழுத வேண்டி வந்தால் காகிதத்தில் எழுத வேண்டும். கணினியில் தட்டச்சிட வேண்டும் என்றால் தனியாக தட்டச்சிட வேண்டும். இதைப் பார்த்து அதையோ அதைப் பார்த்து இதையோ செய்யக் கூடாது. எழுதிய கடிதத்தை தபாலில் அனுப்பி விட்டால் என்னிடமிருந்து சென்று விடும் என்பதால் அதனை வலைப்பூவில் எழுத நினைத்தேன்.
தட்டச்சிட்ட போது நான்கு பக்க கடிதம் வலைப்பூவில் நடுத்தரமான அளவில் மட்டுமே இருந்தது. எழுத்துருவின் தடிமன் சீராக இருப்பதால் டிஜிட்டல் அட்சரங்கள் கையால் எழுதப்படும் அட்சரங்களை விட குறைவான இடத்தையே எடுத்துக் கொள்கின்றன. எம் எஸ் வேர்டு-ல் தட்டச்சிடப்பட்ட ஒரு பக்கம் கூட வலைப்பூவில் சிறிதாகவே இருக்கும் என்பதைக் கண்டிருக்கிறேன்.
தபாலில் அனுப்பும் முன் கடிதத்தை வலைப்பூவில் பதிவிட்டேன். கடிதம் நண்பனை திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை சென்றடையும். நண்பன் தினமும் என் வலைப்பூவை வாசிப்பவன். அனேகமாக இன்றே கூட வாசித்து விடுவான். நண்பன் வாசிப்பதற்கு முன்பு கூட பலர் வாசித்திருக்க முடியும்.
***
இந்த விஷயத்திலிருந்து நான் ஒரு முக்கியமான விஷயம் குறித்து கற்பனை செய்து பார்த்தேன். அது ஒரு முக்கியமான அவதானம் ; முக்கியமான புரிதல் என்று தோன்றியது.
அச்சுமுறை வழக்கத்துக்கு வந்த பின் மட்டுமே மனிதர்கள் மிக அதிக அளவில் எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். காகிதத்தில் அச்சிடும் முறை தோன்றுவதற்கு முன் தாவரப்பட்டைகள் மரப்பட்டைகள் ஆகியவற்றில் மட்டுமே எழுதும் முறை உலகெங்கும் இருந்திருக்க முடியும். நம் நாட்டில் பனையோலைகளில் எழுதியிருக்கிறார்கள். பனையோலையில் எழுத்தாணி கொண்டு எழுதுவது என்பது சாமானிய காரியம் இல்லை. அது ஓர் அரும்பெரும் செயல்.
பனையோலைகளில் எழுதப்பட்டவற்றை குறைந்தது ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது புதிய பனையோலைகளில் மறுபடி எழுதிக் கொள்ள வேண்டும். நம் நாட்டின் அனைத்து இலக்கியப் பிரதிகளுமே அவ்விதமாகவே 2500 ஆண்டுகள் பயணித்து வந்திருக்கின்றன. நம் நாட்டின் பண்டைய கல்வி நிலையங்கள் அனைத்திலுமே பனையோலைப் பிரதிகளை மீண்டும் பனையோலையில் எழுதிக் கொள்வது என்பதை முக்கியப் பணியாகச் செய்திருப்பார்கள்.
இந்த விஷயத்தில் இன்னொரு விஷயத்தையும் கற்பனை செய்து பார்த்தேன். அதாவது கல்வி என்பது பனையோலைகளைப் பார்த்து படிப்பது என்னும் வகையில் இருந்திருக்காது ; இப்போது நாம் புத்தகங்களைப் பார்த்து படிப்பது போல. மனனம் செய்யும் விதமாகவே கல்வி இருந்திருக்கும். வேதக்கல்வி மனனம் செய்யும் விதமாகவே அமைக்கப்பட்டிருப்பதால் அந்த பாணியே மற்ற கல்வியிலும் இருந்திருக்கும். ஒருவர் தேவாரமோ திவ்யப் பிரபந்தமோ பயில்கிறார் என்றால் அதனை இசையுடன் சந்தத்துடன் பாடவே பயில்வார். பயின்றதை தினமும் மீண்டும் மீண்டும் பாடி தன் நினைவிலும் உணர்விலும் வைத்திருப்பதே கல்வி. 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரை இவ்விதமான கல்வியே இருந்திருக்கிறது. தான் கல்வி கற்ற முறை குறித்து ‘’என் சரித்திரத்தில்’’ பதிவு செய்யும் போது உ.வே.சா அதனைக் குறிப்பிடுகிறார்.
நம் நாட்டை ஞானத்தின் தாயகமாக எண்ணி மதித்த சீனப் பயணி யுவான் சுவாங், ஃபாஹியான் ஆகியோர் நம் நாட்டிலிருந்து மூட்டை மூட்டையாக பனையோலைச் சுவடிகளை சீன நாட்டுக்குக் கொண்டு சென்றனர் என்பது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இஸ்லாமியப் படையெடுப்பின் போது பக்ருதீன் கில்ஜி நாளந்தா பல்கலைக்கழகத்தை எரியூட்டிய போது அங்கிருந்த ஓலைச்சுவடிகள் மாதக்கணக்கில் எரிந்தன என்பது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.
இன்னொரு விஷயமும் யோசித்தேன்.
அதாவது கல்வியறிவும் எழுத்தறிவும் இப்போது ஒருங்கிணைந்து இருப்பது போல அப்போது இந்த அளவு ஒருங்கிணைந்திருக்கவில்லை என்று தோன்றுகிறது.
அன்புள்ள நண்பனுக்கு,
Friday, 21 November 2025
ஜெயமோகன் ஏன் முக்கியமானவர்?
1. நவீனத் தமிழிலக்கிய வாசகர் எண்ணிக்கை கடந்த 75 ஆண்டுகளாக 1000 - 2000 என்ற அளவிலேயே உள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் தமிழகத்தின் மக்கள் தொகை 2 கோடி -7 கோடி என்ற அளவில் இருந்திருக்கிறது. எவ்வளவு கறாராக மதிப்பிட்டாலும் தமிழ்ச் சமூகத்தில் பத்தாயிரத்தில் ஒருவர் மட்டுமே தீவிர இலக்கியம் வாசிப்பார். தீவிர இலக்கியம் இவ்வளவு குறைவாக வாசிக்கப்படுவதால் எந்த படைப்பாளியின் படைப்பும் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தும் சலனங்கள் என்பவை மிகக் குறைவாகவே இருக்கும். மௌனம் மட்டுமே எதிர்வினையாக இருக்கும். படைப்பாளி தன் படைப்பு சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகளுக்காக எழுதுவதில்லை தன் ஆத்ம திருப்திக்காகவே எழுதுகிறான் என்றாலும் மக்கள்தொகையில் பத்தாயிரத்தில் ஒருவர் மட்டுமே வாசிக்கும் சூழல் என்பது எந்த படைப்பாளிக்கும் தொடர்ந்து படைப்புகளை படைக்க ஊக்கம் கொடுக்காது. புறச்சூழல் ஊக்கமளிக்கும் விதமாக இல்லையெனினும் தன் அகவலிவால் முழுமையாக படைப்பாளியாக மட்டுமே இருப்பது என முடிவு செய்து கடந்த 40 ஆண்டுகளாக படைப்புச் செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதால் ஜெயமோகன் முக்கியமானவர்.
ஏதேனும் ஒரு விடுபடல் (நகைச்சுவைக் கட்டுரை)
இரண்டு டாக்டர் பட்டங்கள்
தமிழ் ஓர் உயர்தனிச்செம்மொழி. இருப்பினும் தமிழின் உரைநடை இலக்கியம் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மட்டுமே தோன்றத் தொடங்கியது. அச்சு ஊடகம் மூலம் உரைநடை பரவலாக மக்களைச் சென்றடையத் தொடங்கிய பின்னர் இலக்கியப் படைப்பாளிகள் உரைநடையில் தங்கள் படைப்புகளை எழுதத் தொடங்கினர். தமிழில் பாரதி எழுதத் துவங்கியதற்கு சற்று முன்னர் உரைநடை இலக்கியம் தொடங்கியிருந்தாலும் பாரதியை நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடியாகவும் தலைமகனாகவும் கொள்வது மரபு. மொழி என்பது கோடானுகோடி மக்கள் அறியும் பேசும் அன்றாடம் புழங்கும் ஒன்றாயினும் மொழியின் சாரமான பகுதி என்பது அந்த மொழியின் இலக்கியப் படைப்பாளியின் இலக்கியப் படைப்பே. ஆதலால் தான் உலகெங்கும் இலக்கியம் கற்பிக்கப்படுகிறது. இலக்கியம் முன்னெடுக்கப்படுகிறது. நமக்குக் கிடைக்கும் இலக்கியப் பிரதிகளைக் கொண்டு மதிப்பிடுகையில் தமிழ் குறைந்தபட்சம் 2500 ஆண்டுகள் தொன்மையானது என்பதை உணர்கிறோம். புறவயமான ஆய்வுகளும் இதனை உறுதி செய்கின்றன. இந்த 2500 ஆண்டுகளில் கடைசி 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை அதாவது 2350 ஆண்டுகள் தமிழில் செய்யுளே படைப்பு வடிவமாக இருந்திருக்கிறது. கவிதை செய்யுள் வடிவில் எழுதப்பட்டிருக்கிறது. பாரதி செய்யுள் வடிவிலும் தனது கவிதைகளை எழுதியிருப்பதாலும் செய்யுள் நடைக்கு அப்பால் வசன நடையிலும் கவிதைகளை எழுதியிருப்பதாலும் கதை, கட்டுரை ஆகியவற்றை எழுதி உரைநடை இலக்கியத்திலும் தடம் பதித்ததாலும் நாளிதழ்களின் ஆசிரியராக இருந்து இதழியலிலும் பங்காற்றியிருப்பதாலும் பாரதியை நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடியாகவும் தலைமகனாகவும் கொள்கிறோம்.
மரபிலக்கியம்
அதனை நாடிச் சென்ற மிகச் சிலரால் மட்டுமே பயிலப்பட்டது. அந்த எண்ணிக்கை மிக மிகக் குறைவு.
எவ்வளவு கறாராக மதிப்பிட்டாலும் மக்கள்தொகையில் ஆயிரத்தில் ஒருவர் மட்டுமே மரபிலக்கியக்
கல்வியை நோக்கிச் சென்றிருக்க முடியும். அதனை ஆசிரியர் ஒருவரிடம் சென்று அவரிடம் உடனிருந்து
மாணவர்கள் கற்றிருக்கின்றனர். அந்த கல்விநிலையங்களுக்கு அரசுகள் ஆதரவு அளித்திருக்கின்றன.
அரச ஆதரவும் சமூக ஆதரவும் இருந்ததால் தமிழ் இலக்கியக் கல்வி பல்லாயிரம் ஆண்டுகளாக முன்நகர்ந்து
வந்திருக்கின்றது. சேர ,சோழ, பாண்டிய மன்னர்கள்,
சிற்றரசர்கள், வேத பாடசாலைகள், சமணத் துறவு நிலையங்கள், பௌத்த துறவு சங்கங்கள், சைவ
ஆலயங்கள், வைணவ ஆலயங்கள், வைணவ மடங்கள், சைவ மடங்கள், விஜயநகரப் பேரரசு, நாயக்கர் ஆட்சி
ஆகியவை தமிழின் 2500 ஆண்டு கால வரலாற்றில் தமிழின் மொழிக்கல்வியும் இலக்கியக் கல்வியும்
தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வருவதற்கு ஆதரவளித்தவர்களும் அதன் காரணமும் ஆவர்.
இந்த நீண்ட வரலாற்றுப் பின்னணி தமிழகத்துக்கு இருக்க பல்வேறு உலகளாவிய அரசியல் நிகழ்வுகளின் பின்னணியில் அச்சு ஊடகம் தமிழகத்துக்கு வருகிறது. அச்சு ஊடகம் தமிழில் அறிமுகமாகும் அதே காலகட்டத்தில் தான் ஏறக்குறைய உலகின் எல்லா பகுதிகளிலும் அச்சு ஊடகங்கள் அறிமுகமாகின்றன. உலகின் சாமானியர்கள் பெரிய அளவில் அடிப்படைக் கல்வி பயின்று எழுத்தறிவு அடைவது இந்த காலத்திலேயே. பலர் கல்விக்குள் வந்து எழுத்தறிவு பெற்று வாசிக்கத் தொடங்குவதால் இதழ்கள் வெளிவரத் தொடங்குகின்றன. அச்சு நூல்கள் வெளிவரத் துவங்குகின்றன. அப்போதும் உலகின் தொன்மையான நூல்கள் அச்சு நூல் வடிவில் வருவதும் முன்னர் அதனைப் பயின்று கொண்டிருந்தவர்கள் அச்சு நூல் வடிவில் தொல் நூல்களைப் பயில்வதும் நிகழ்கிறது. தமிழில் உரைநடை இலக்கியம் உருவாவதற்கு சற்று முன் முதன்மையான அறிவுச் செயல்பாடாக பண்டைத் தமிழ் இலக்கியங்கள் அச்சு நூல் வடிவில் பதிப்பிக்கப்படுவது நிகழ்வதை இதனுடன் சேர்ந்து யோசிக்கலாம். பண்டைத் தமிழ் நூல்களைப் பதிப்பித்ததில் டாக்டர். உ.வே.சாமிநாத ஐயர், சி. வை. தாமோதரம் பிள்ளை, ஆறுமுக நாவலர் ஆகியோர் முக்கியமானவர்கள்.
மரபிலக்கியமும் உரைநடை இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று மோதி ஒன்றுடன் ஒன்று கலக்கும் ஒன்றையொன்று இட்டு நிரப்பும் சமூகவியல் செயல்பாடு தமிழ் மொழியிலும் தமிழ்ச் சமூகத்திலும் நிகழத் தொடங்கி அவை தம் செல்வழிகளைத் தேரத் தொடங்கின. அச்சு ஊடகம் உருவாகி நிலைகொண்ட அதே காலகட்டத்தில்தான் உலகின் ஒரு மொழியின் இலக்கியப் படைப்புகள் இன்னொரு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு ‘’மொழிபெயர்ப்பு இலக்கியம்’’ உருவாகி வருகிறது. மொழியின் இலக்கியத்தின் அழகியலுக்கு பல்வேறு விதங்களில் மேலும் அணி சேர்த்தது ‘’மொழிபெயர்ப்பு இலக்கியம்’’.
கவிஞனின் கலைஞனின் அகம் படைப்பூக்கம் கொண்டது. கற்பனையும் உணர்வெழுச்சியும் நிரம்பியது. கவிதையின் கலையின் இலக்கியத்தின் இயங்கு தளம் சாமானிய லௌகிக மனநிலையிலிருந்து மிக உயரத்தில் இருப்பது. மரபான இலக்கியம் வரலாறு நெடுக பயிலப்பட்ட காலத்தில் அதனை சமூகத்தின் மிகச் சிறு எண்ணிக்கையிலானோர் மட்டுமே பயின்றிருப்பதையும் சாமானியர் அதனுள் பிரவேசிக்காமலேயே இருந்திருப்பதையும் காண முடியும். கலையை இலக்கியத்தை ஆதரிப்பவர்கள் இருப்பினும் கணிசமான கவிஞர்களும் படைப்பாளிகளும் தன் உள்ளுணர்வை மட்டுமே பின்பற்றும் இயல்பு கொண்டிருப்பதையும் எந்த அதிகார அமைப்புக்கும் முழுமையாக கட்டுப்பட்டவர்களாக இல்லாமல் இருப்பதையும் வரலாறு நெடுக காண முடியும்.
நவீனத் தமிழிலக்கியத்தின்
முன்னோடியான தலைமகனான பாரதி எதிர்காலத்தில் நவீனத் தமிழிலக்கியவாதிகள் எதிர்கொள்ள இருந்த
எல்லா சமூக இடர்களையும் எல்லா லௌகிக நெருக்கடிகளையும் அவன் காலத்தில் அவன் வாழ்வில்
எதிர்கொள்வதிலும் முன்னோடியாக தலைமகனாக இருந்தான். தமிழ் 2500 ஆண்டு கால தொன்மையைக்
கொண்ட மொழியாயினும் இருபதாம் நூற்றாண்டில் நவீனத் தமிழிலக்கியச் செயல்பாடுகள் நிகழத்
தொடங்கிய காலகட்டத்தில் தமிழகத்தின் எழுத்தறிவு சதவீதம் 10 சதவீதமாக இருந்திருக்கிறது.
எழுத்தறிவு 10 சதவீதம் எனில் மொழியை வாசிக்கும் வழக்கம் அதிகபட்சம் 5 சதவீதம் பேருக்கு
இருந்திருக்கும். பாரதி வாழ்ந்த காலகட்டத்தில் அவன் தமிழின் ஆகப் பெரிய வரலாற்று இலக்கிய
ஆளுமைகளில் ஒருவன் என்னும் உணர்வு தமிழ்ச் சமூகத்துக்கு போதிய அளவில் ஏற்படவில்லை.
தன் கவிதைகளின் உயிரால் ஒளியால் ஜீவனால் பாரதி தன் மறைவுக்குப் பின்னால் வெகு காலம்
கழித்து அவனுக்குரிய படைப்பு முக்கியத்துவத்தை அடைந்தான். பெரும்பாலான நவீனத் தமிழிலக்கியப்
படைப்பாளிகளுக்கும் இவ்விதமே நிகழ்ந்தது. போதிய அளவு வாசகர் இன்மை, சமூகத்தின் குறை
இலக்கிய உணர்வு, அரசு மற்றும் கல்வித்துறையின் ஆதரவின்மை, வெகுஜன சமூகத்தின் விலக்கல்
உணர்வு இன்னும் பல என எண்ணற்ற எதிர்மறை அம்சங்கள் இருப்பினும் மொழியின் கலையின் இலக்கியத்தின்
ஜீவனை தன்னுள் கொண்டு நவீனத் தமிழிலக்கியவாதிகள் தமிழுக்கும் மொழிக்கும் இலக்கியத்துக்கும்
நேர்மறையான ஆக்கபூர்வமான பங்களிப்பை அளித்து 2500 ஆண்டு கால தமிழின் வரலாற்றுத் தொடர்ச்சியை
உயிர்ப்புடனிருக்கச் செய்தார்கள் ; உயிர்ப்புடன் இருக்கச் செய்கிறார்கள்.
நவீனத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளின் நிரை மிகவும் பெரியது. எந்த மகத்தான உலகப் படைப்பாளிக்கும் நிகரான நவீனத் தமிழ் படைப்பாளிகள் சிலரின் பெயரைப் பட்டியலிடுகிறேன். இது முழுமையான பட்டியல் அல்ல. எனினும் இவர்கள் தமிழின் முதன்மையான இலக்கியப் படைப்பாளிகளாவார்கள். பாரதி, புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், எம்.எஸ்.கல்யாணசுந்தரம், ப.சிங்காரம், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன், தேவதச்சன், தேவதேவன்,ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன்.
19.11.2025 அன்று திண்டிவனம் அருகில் உள்ள ஓங்கூரில் அமைந்துள்ள ‘’தக்ஷசீலா பல்கலைக்கழகம்’’ தமிழ் இலக்கியப் படைப்பாளியான ஜெயமோகனுக்கு ‘’டாக்டர்’’ பட்டம் அளித்து கௌரவித்துள்ளது. பாரதி கிருஷ்ண துவைபாயன வியாசனின் பாதிப்பில் தான் இயற்றிய ’’பாஞ்சாலி சபதம்’’ காவியத்தினை கீழ்க்கண்டவாறு சமர்ப்பித்துள்ளான் : ‘’தமிழ் மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப் போகிற வரகவிகளுக்கும் அவர்களுக்குத் தக்கவாறு கைங்கர்யங்கள் செய்யப் போகிற பிரபுக்களுக்கும் இந்நூலை பாத காணிக்கையாகச் செலுத்துகிறேன்’’.
ஜெயமோகன் கடந்த 38 ஆண்டுகளாக நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார். தமிழுக்கு அவரளவு பங்களிப்பாற்றிய இன்னொரு படைப்பாளி இல்லை ; உலக இலக்கியத்துக்கு அவரளவு பங்களிப்பு அளித்த இன்னொரு படைப்பாளியும் கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் இல்லை. இலக்கியத்தில் என்னென்ன படைப்பு வடிவங்கள் உள்ளனவோ அத்தனையிலும் தனது படைப்புகளை அளித்தவர் ஜெயமோகன். தனது இயலாமைகளாலும் தனது போதாமைகளாலும் தமிழ்ச் சமூகம் கௌரவிக்காது போன நவீனத் தமிழிலக்கிய முன்னோடிகளுக்கு இன்றைய தமிழ்ச் சமூகம் செய்யும் பிழையீடாக தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் ‘’டாக்டர்’’ பட்டத்தை ஏற்றுக் கொள்வதாகக் கூறும் ஜெயமோகன் தன்னை நவீனத் தமிழிலக்கிய முன்னோடிகள் தங்கள் அர்ப்பணிப்பாலும் தியாகத்தாலும் உருவாக்கிய பாதையில் தொடர்ந்து நடக்கும் தமிழிலக்கியப் படைப்பாளியாகவே தன்னை உணர்கிறார். ஜெயமோகனுக்கு டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டிருப்பது ஒரு வரலாற்று நிகழ்வு. அதனைச் செய்து தன்னை வரலாற்றில் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது ‘’தக்ஷசீலா பல்கலைக்கழகம்’’. அந்த பல்கலைக்கழகம் வாழ்த்துக்குரியது.
***
1971ம் ஆண்டு
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு ’’டாக்டர்’’ பட்டம்
அளிக்க முனைந்தது. அறிஞர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் அளிக்கப்படும் ‘’டாக்டர்’’ பட்டத்தை அரசியல் அதிகாரத்தில் இருக்கும் கருணாநிதிக்கு அளிக்ககூடாது என அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும் மாணவர் அமைப்புகளும் கடுமையாக
எதிர்த்தனர். அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதி ஒருவருக்கு அளிக்கப்படும் இந்த கௌரவம்
‘’டாக்டர்’’ பட்டத்தின் மாண்பையே குலைக்கக் கூடியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
மாணவர் அமைப்பும் அதன் தலைவரான உதயகுமார் என்ற மாணவரும் கூறினர். இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் மாணவர் அமைப்பும் அதன் தலைவரான உதயகுமாரும் சிதம்பரம் நகரில் இருந்த கழுதைகளின்
கழுத்தில் ‘’டாக்டர்’’ என அட்டைகளில் எழுதித் தொங்கவிட்டனர். நகரெங்கும் கழுதைகள் கழுத்தில்
‘’டாக்டர்’’ பட்டம் தொங்குவது போல் கேலிச் சித்திரங்களை சுவரில் தீட்டினர். சிதம்பரம்
நகரெங்கும் மாணவர் போராட்டத்தால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. மாணவர்கள் இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பு ஆகியோரின் எதிர்ப்பையும் மீறி கருணாநிதி சிதம்பரம்
வருகை புரிந்து பல்கலைக்கழகம் வழங்கிய ‘’டாக்டர்’’ பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். விழா
முடிந்து கருணாநிதி சென்னை புறப்பட்டுச் சென்றதும் மாநிலக் காவல்துறையினர் பல்கலைக்கழக
மாணவர் விடுதிக்குள் சென்று அங்கிருந்த மாணவர்களைத் தாக்கினர். இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் மாணவர் அமைப்பின் தலைவரான உதயகுமார் கொல்லப்பட்டு அவரது பிணம் பல்கலைக்கழகத்தில்
இருந்த குட்டை ஒன்றில் காவல்துறையினரால் வீசப்பட்டது. உதயகுமாரின் பெற்றோர்கள் காவல்துறையாலும்
ஆளும்கட்சியாலும் மிரட்டப்பட்டு உதயகுமாரின் பிணத்தை தங்கள் மகனின் பிணம் அல்ல அது
எனக் கூறுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள். ஆளும்கட்சியின் காவல்துறையின் மிரட்டலுக்குப்
பயந்து அவர்கள் அவ்விதமே கூறினர். அந்த பிணம் யாருடையது என்பதை அறிய ‘’சிவசுப்ரமணியம்
கமிஷன்’’ என்ற விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. தமிழக சட்டசபையில் இந்த விஷயத்தை இந்திய
தேசிய காங்கிரஸ் பலமுறை எழுப்பியது. ‘’சிவசுப்ரமணியம் கமிஷன்’’ இறந்தது மாணவர் தலைவர்
உதயகுமார் தான் என்று கூறினால் தான் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கருணாநிதி கூறினார்.
சிவசுப்ரமணியம் கமிஷன் இறந்தது உதயகுமார்தான் என்று அறிக்கை அளித்தது. காங்கிரஸ்காரர்கள்
தமிழக சட்டசபையில் ‘’சிவசுப்ரமணியம் கமிஷன் அறிக்கை இங்கே ; கருணாநிதி ராஜினாமா எங்கே’’
என்று கேட்டனர். கமிஷன் அறிக்கை வந்த பின்னும் கருணாநிதி ராஜினாமா செய்யவில்லை. கருணாநிதி
கட்சிக்காரர்கள் கருணாநிதியை ‘’டாக்டர் கலைஞர்’’ என இன்றளவும் அழைக்கிறார்கள். இந்த சம்பவத்துக்குப் பின் தமிழக அரசியல்வாதிகள் பலருக்கு தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் ‘’டாக்டர்’’ பட்டம் அளித்துள்ளன. தமிழக அரசியல்வாதிகள் பலர் அதனைப் பெற்றிருக்கிறார்கள்.
***
Thursday, 20 November 2025
ஒளிமகள்
