Wednesday, 22 April 2026

நன்முடிவு

 எனது நண்பர் ஒருவர் அவரது இன்னொரு நண்பரைக் குறித்து சொன்னார். எனக்கு அவர் சொன்ன விஷயம் மிக சுவாரசியமானதாக இருந்தது. அதாவது நண்பரின் நண்பர் அலைபேசி உபயோகத்துக்குள் வரவேயில்லை. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுகிறார் என்றாலும் அவர் அலைபேசி வைத்துக் கொள்ளவில்லை. அதனால் அவர் தொழில் வாழ்வில் சில இடர்கள் உருவாகின்றன என்றாலும் அந்த இடர்களை எதிர்கொண்டு களைகிறாரே அன்றி அலைபேசி வைத்துக் கொள்ளலாமா என எப்போதும் யோசித்ததில்லை அவர் என்றார் என் நண்பர். அந்த முடிவு ஒரு நன்முடிவு என்பது என் அபிப்ராயம். 

Tuesday, 21 April 2026

இனிய நிகழ்வு

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவரது குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக பெரும் படிப்பாளிகள். நாட்டின் மிக உயர்ந்த படிப்புகளில் ஒன்றை மூன்று தலைமுறையினரும் படித்திருக்கிறார்கள். ஒருமுறை நண்பரைக் காணச் சென்ற போது அவருக்கு சட்ட மேதை ஃபாலி நாரிமன் எழுதிய ’’Before memory fades'' என்ற நூலை பரிசாக அளித்தேன். அந்த நூல் வீட்டின் நூல் நிலைய அடுக்கில் இருந்திருக்கிறது. நண்பரின் மகள் அந்த நூலை அடிக்கடி எடுத்துப் பார்த்திருக்கிறார். நேற்று நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது பல்கலைக்கழகத்தில் பயிலும் நண்பரின் மகள் நண்பருக்கு ஃபோன் செய்தார். அவர்கள் பல்கலைக்கழகத்தில் ஒரு குவிஸ் நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அதில் முதல் பரிசு பெற்றிருக்கிறார். அந்த விபரத்தைத் தெரிவித்ததுடன் இன்னொரு விபரமும் தனது தந்தையிடம் கூறினார். அதாவது, அந்த குவிஸில் ஒரு புகைப்படத்தைக் காட்டி இது யார் எனக் கேட்டிருக்கிறார்கள். நண்பரின் மகள் ‘’ஃபாலி நாரிமன்’’ என சரியாக பதில் கூறியிருக்கிறார். இதனைக் கூறி ‘’ இந்த புத்தகத்தை நம்ம வீட்டு லைப்ரரில நாம் அடிக்கடி பாத்திருக்கன். வீட்ல இருக்கும் போது அந்த புத்தகத்தையும் யுனிவர்சிட்டி வரும் போது அதோட கிண்டில் எடிஷனையும் வாசிச்சிருக்கன். இத நமக்கு கிஃப்ட் பண்ணது உங்களோட மயிலாடுதுறை ஃபிரண்ட்’’ என்று நண்பரிடம் சொன்னார். நானும் நண்பரும் உரையாடிக் கொண்டிருந்த போது இந்த ஃபோன் வந்தது. நண்பர் இந்த விபரத்தை என்னிடம் சொன்னார். எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. என் நினைவுகளில் நண்பரின் மகள் 10 வயது சிறுமியாகவே இருக்கிறார். பல்கலைக்கழக மாணவியாக எண்ண முடியவில்லை.  


பள்ளியும் சமூகமும்

பள்ளி நடத்தும் நண்பரிடம் நேற்று உரையாடிக் கொண்டிருந்த போது நண்பர் என்னிடம் ஒரு வினாவை எழுப்பினார். அதாவது, ‘’நீங்கள் முன்வைக்கும் விதத்தில் நடக்கும் பள்ளிகள் எவை?’’ என்று கேட்டார். எல்லா வினாக்களுக்கும் ஒரு விடை உண்டு என அறிந்தவன் நான். வினாக்களிலிருந்து விடைகளை நோக்கிச் செல்வதே அறிதல். உடனடியாக நான் சில பள்ளிகளின் பெயரையும் குறிப்பிட்டேன். அதில் ஓரிரண்டு பள்ளிகளை நேரடியாகச் சென்று காண்பது என்றும் முடிவு செய்தோம்.  இருப்பினும் நண்பர் கேட்ட கேள்வி என் மனதில் அலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது. நேற்று மாலை அந்தக் கேள்விக்கான கூடுதல் பதில்கள் ஒவ்வொன்றாக எழுந்தன. 

நாம் பள்ளி எனக் கூறும் போது நம் சமூகத்தில் அது ஒரு குருநிலை என்னும் அர்த்தத்திலும் புரிந்து கொள்ளப்படுகிறது. குருநிலை என்பது நம் சமூகத்தில் 5000 ஆண்டு கால தொன்மை வாய்ந்தது. இருப்பினும் நாம் இப்போது ஐரோப்பிய பாணியிலான ‘’மெக்காலே’’ பாணி கல்வியையே பயின்று கொண்டிருக்கிறோம். மெக்காலே பாணி கல்வி என்பது மாணவனுக்கு ஆங்கில மொழியையும் கணக்கு அறிவியல் அடிப்படைகளையும் கற்பிக்கும். பள்ளிக்கல்வி நிறைவு செய்தால் ஓர் அரசு வேலை நிச்சயம். இந்த முறை பல ஆண்டுகளாக - சில நூற்றாண்டுகளாக - நடப்பில் உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி வேரூன்றிய போது ஒரு விதமாக இருந்தது - 1857 ஐ ஒட்டி ஒரு விதமாக இருந்தது - முதல் உலகப் போர் சூழலில் ஒரு விதம் - இரண்டாம் உலகப் போரை ஒட்டி ஒரு விதம் - என இருந்தது. அப்போதைய உலகச் சூழல் தேச சூழல் சார்ந்து பள்ளிக்கல்வி இருந்தது. அதன் பின் நாடு சுதந்திரம் பெற்ற பின் கல்வி சமூகம் முழுமைக்கும் சென்றடைய அரசு நடவடிக்கை எடுத்தது. பள்ளியின் இடத்தை கல்லூரி பிடித்தது. முதலில் கலைப் பாடங்கள் விரும்பி படிக்கப்பட்டன. பின்னர் வணிகப் பாடங்கள். அதன் பின் அறிவியல் பாடங்கள். இப்போது தொழில்நுட்பமும் மருத்துவமும். அதாவது எல்.கே.ஜி சேர்க்கப்படும் மாணவன் அவன் என்ன பட்டம் பெற்று என்ன உத்யோகத்துக்குச் சென்று ஊதியம் பெறப் போகிறான் என்னும் எதிர்பார்ப்பே அவனது பெற்றோருக்கு இருக்கிறது. இந்த உத்யோக அம்சம் நம் சமூகத்தில் பள்ளிக் கல்வியில் இருந்து கொண்டே இருக்கும். அதனை கருத்தில் கொள்ளாமல் வேறு ஏதும் திட்டமிட முடியாது. 

இந்த சூழ்நிலையில் ஒரு பள்ளி, தன்னிடம் பயிலும் மாணவனுக்கு அதிக லௌகிகத் திறன்கள் பயிற்றுவிக்கும் விதமாக  தனது இயங்குமுறையை அமைத்துக் கொள்ளலாம். நம் சமூகத்தில் அதுவே சாத்தியம். உதாரணத்துக்கு, ஆரம்பப் பள்ளியில் 200 மாணவர்கள் பயில்கிறார்கள் என்றால் அதில் 20 பேர் சைனிக் பள்ளியில் சேரும் விதமாக தயார் செய்யலாம். இதைப் போல ஒன்று ஒன்றாக சேர்த்துக் கொள்ள முடியும். 

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சமூகங்களில் பள்ளிக்கல்விக்கும் கல்லூரிக் கல்விக்கும் இடையே ஒரு நிலை இருக்கிறது. மாணவர்கள் தான் ஆர்வமாக இருக்கும் விஷயங்கள் குறித்து அதில் மேலும் பயில்வார்கள். நம் சமூகம் அவ்விதமான அமைப்பு குறித்து சிந்திக்க வேண்டும். 

Monday, 20 April 2026

கரைப்பார் கரைத்தால் ( ஹாஸ்யம்)

பள்ளி நடத்திக் கொண்டிருகும் நண்பரை இன்று சந்தித்தேன். சென்ற வாரம் பயணங்களில் இருந்ததால் அடிக்கடி சந்திக்க இயலவில்லை.  

சந்தித்ததுமே என்னிடம் சொன்னார். ‘’நீங்கள் சொன்ன விஷயத்தை ஃபேமிலி மெம்பர்ஸிடம் சொல்லியிருக்கிறேன். எல்லாரும் அதைப் பத்தி இப்ப யோசிச்சுக்கிட்டு இருக்காங்க’’ 

வீட்டு பிளான்

 எனது நண்பர் ஒருவர் வீடு கட்ட உள்ளார். நம் மாநிலத்தில் வீடு கட்ட உள்ள வீட்டு உரிமையாளர்கள் அடையும் அத்தனை உணர்ச்சிகரங்களுடன் மிகை மற்றும் பிழைப் புரிதல்களுடன் இருந்தார். அவரைத் தெளிவிப்பது எளிய செயலல்ல. இருப்பினும் வீடு கட்டுவதன் அடிப்படை விஷயங்களை அவருக்குக் கூறினேன். 

வீடு கட்டுவதை ஒரே செயல்பாட்டுக்குள் அடக்கலாம். வீட்டின் பிளான் எவ்விதமோ அவ்விதமே அந்த வீடு அமையும். எனவே வீட்டின் பிளானை உருவாக்கத் தேவையான காலம் எடுத்துக் கொண்டு அதனை இறுதி செய்ய வேண்டும். வீட்டு பிளானை வீட்டின் கட்டுமானம் தொடங்கிய பின் எக்காரணம் கொண்டும் மாற்றக் கூடாது. அவ்விதம் மாற்றினால் பல விஷயங்கள் நாம் எதிர்பார்த்தது போல் இல்லாமல் போய் விடும். 

வீட்டைப் பயன்படுத்தப் போகும் நபர்கள் எத்தனை பேர் அவர்களின் இயல்பு என்ன என்பது வீட்டு பிளானை அமைப்பதில் கணிசமான பங்களிப்பை பெற வேண்டும். 

‘’எகானமி’’ வகை பொருகள் ஒப்பீட்டளவில் பலரால் பல காலம் பயன்படுத்தப்பட்டிருக்கும். அவ்வகையான பொருட்கள் நெடுங்காலத்தில் நுகர்வோர் தேவைக்கான சிறு சிறு மேம்பாடுகள் செய்யப்பட்டு சிறப்பான செயல்பாடு கொண்டிருக்கும். ‘’லக்சுரி’’ வகைகளை விட ‘’எகானமி’’ சிறப்பானவை. 

நடுத்தர வர்க்கத்தினர் நடுத்தர வர்க்கத்தினருக்கான வீட்டு அமைப்பை எழுப்பிக் கொள்வது நலம் பயக்கும். உயர் நடுத்தர வர்க்கத்துக்குரிய உயர் வர்க்கத்துக்குரிய வீட்டு அமைப்பை நோக்கிச் சென்றால் சில மாதங்களில் அந்த வீடுகள் புழக்கத்தில் நடுத்தர வர்க்க தன்மைக்கே வந்து சேரும்.  

Sunday, 19 April 2026

காஞ்சிபுரம்

திருவண்ணாமலை சென்றிருந்த போது ஒரு விஷயத்தை உணர்ந்தேன். 2500 ஆண்டுகளுக்கும் மேலாக அந்நகரம் இயங்கிக் கொண்டிருக்கிறது. மலையும் மலை சார்ந்த இடமுமாக இருந்ததிலிருந்து இன்று பேராலய நகரமாக இருப்பது வரை. அண்ணாமலை ஆலயம் பல்வேறு காலகட்டங்களில் விரிவுபடுத்தப்பட்டுக் கொண்டேயிருந்திருக்கிறது. விஜயநகரப் பேரரசே இப்போது இருக்கும் ஆலயத்தின் பெரும் கோபுரங்களை எழுப்பியது.  இஸ்லாமியத் தாக்குதலுக்கு இந்த ஆலயம் உள்ளாகி இருளுக்குச் சென்றது. மராட்டியப் பேரரசு அதனை இருளிலிருந்து மீட்டது. அந்த நகரில் இருக்கும் போது அந்த நகர் பல்வேறு நூற்றாண்டுகளில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர முடிந்தது. 

ஸ்ரீரங்கம் செல்லலாம் என முடிவெடுத்திருந்த நிலையில் இப்போது என்னுடைய பரிசீலனையில் உள்ள இன்னொரு நகரம் காஞ்சிபுரம். 

எனது நண்பர் ஒருவரிடம் இது குறித்து பேசிக் கொண்டிருந்த போது நண்பர் சொன்னார். தொல்பழம் காலத்தில் காஞ்சிபுரத்தின் பாலாறு இப்போது ஓடிக் கொண்டிருக்கும் இடத்துக்கு பல கிலோ மீட்டர் தொலைவில் வடக்கு திசையில் இருந்திருக்கிறது. பின்னர் நதியின் பாதை சற்று நகர்ந்து நகர்ந்து இப்போதிருக்கும் இடத்தில் இருக்கிறது. எனவே ஒட்டுமொத்த காஞ்சிபுரமும் பாலாற்றின் மணல்சாரியான நிலம். வாழ்தலுக்கு மிக உகந்த நிலம் என்று சொன்னார். 

Friday, 17 April 2026

அறைக்கலன்

சென்னை நண்பர் மூன்று குழந்தைகள்  நலனில் தொடர்ந்து அக்கறை எடுத்துக் கொள்கிறார். அவர்களுக்குத் தேவையான அறைக்கலன் ஏதும் வாங்கித் தருமாறு என் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பியிருந்தார். ஏகப்பட்ட உலகியல் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் மனதின் ஒரு ஓரத்தில் நண்பர் பணித்திருந்த பணியை செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. அந்த குழந்தைகளின் ஊர் இங்கிருந்து 2 மணி நேர பயண நேரத்தில் இருக்கிறது. நண்பர் சொன்ன அறைக்கலனை இங்கிருந்து வாங்கி அங்கே எடுத்துச் செல்வது என்பதில் வண்டி வாகன வாடகையே நண்பர் அனுப்பிய தொகையில் கணிசமான பங்கை எடுத்துக் கொள்ளும். இந்த சூழ்நிலையில் ஒரு அறைக்கலன் செய்யும் தச்சரை சந்தித்தேன். அவர் இரும்புக் குழாய்களைக் கொண்டும் அறைக்கலன் செய்பவர். குழந்தைகளின் ஊரிலிருந்து 15 நிமிட பயண தூரத்தில் அவர் ஊர் இருக்கிறது என்பதை அறிந்தேன். குழந்தைகளின் ஊருக்குச் சென்று அறைக்கலனை செய்து தருமாறு கேட்டுக் கொண்டேன். அவர் அவ்விதமே செய்து கொடுத்தார். வேலையை முடித்ததும் நண்பர் ஒருவரிடம் சொல்லி மின்னணு பரிமாற்றம் மூலம் அவர் அலைபேசியிலிருந்து தச்சரின் கணக்குக்கு பணம் மாற்ற சொன்னேன். அவரும் அவ்விதமே செய்தார். நண்பரிடம் ரொக்கமாக தொகையை நேரில் சந்தித்து அளித்தேன். சென்னை நண்பருக்கும் பணி நிறைவு பெற்றது என்னும் தகவல் தெரிவித்தேன். அனைவருக்கும் திருப்தி. 

Thursday, 16 April 2026

நிறையும் காட்சிகள்

 ஒரு பயணம் நிகழ்ந்து முடிந்த பின் அடுத்து வரும் சில நாட்களில் பயணித்த போது நாம் கண்ட காட்சிகள் மேலும் துல்லியமாகி நம் அகத்தில் நிறைகின்றன. பயணத்துக்கு இணையான அனுபவம் அது. 

அடுத்த பயணத்துக்குக் கிளம்ப மனம் குதூகலிக்கிறது. 

Wednesday, 15 April 2026

கல்வி குறித்த யோசனைகள் - 5

 வருடத்தின் எல்லா நாளும் இயங்கக்கூடிய விதத்தில் பொதுமக்களும் பயன்படுத்தக் கூடிய முறையில் ஒரு நூலகம் கல்வி நிலையத்தின் ஒரு பகுதியாக இயங்க வேண்டும். 

Tuesday, 14 April 2026

கல்வி குறித்த யோசனைகள் - 4

 ஒரு கல்வி நிலையம் அனைத்து விதமான கல்வியையும் ஒரே இடத்தில் அளிக்க ஏற்பாடுகளுடன் இருக்க வேண்டும். ஒருவர் ஒரு கல்வியைப் பயில அல்லது தான் பயில விரும்பும் கல்வி குறித்த விபரங்களை அறிய ஒரு கல்வி நிலையத்துக்கு வந்தால் அவருக்கு அக்கல்வி அங்கு அளிக்கப்பட வேண்டும் அல்லது அவர் விரும்பும் கல்வி குறித்த ஆலோசனை அவருக்கு வழங்கப்பட வேண்டும்.