பிரபு மயிலாடுதுறை
Sunday, 21 June 2026
25 கவிதைகள்
உச்சபட்சமான பரபரப்பு கொண்ட உலகியல் வணிகச் செயல்பாடு ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். எல்லா வணிகங்களிலும் சிறிதேனும் இந்த அம்சம் உண்டு எனினும் தற்போது ஈடுபட்டிருக்கும் விஷயம் குறிப்பிட்டுக் கூறும் விதமானது. தொடர் சந்திப்புகள். தொடர் பேச்சுவார்த்தைகள். தொடர் உடன்படிக்கை வாசக பரிசீலனைகள். மனதிலிருந்து கொஞ்சம் கூட நீக்கி வைக்க முடியவில்லை. நள்ளிரவிலும் அதிகாலையிலும் விழிப்பு நிகழ்கிறது. விழித்ததும் அச்செயல்பாட்டின் எண்ணங்கள் மனதில் நகரத் தொடங்குகின்றன. என்னில் ஆரம்பித்து என்னில் முடியும் விஷயம் அல்ல அது. இந்த விஷயத்துக்குள் யார் யார் வரப்போகிறார்கள் என்பதை என்னாலேயே கூறிட முடியாது ; இப்போதே பலர் இருக்கிறார்கள் ; மேலும் பலர் வரலாம். எத்தனை பேர் வருவது குறித்தும் விஷய்ம் இல்லை. எண்ணியவாறு விஷயம் முடிய வேண்டும். நடு வயதின் அனுபவம் எந்த விஷயமும் குறிப்பிட்ட காலம் தாண்டி அதிராது என்பதை பல தருணங்களில் உணர்ந்திருக்கும். எந்த விஷயத்துக்கும் அதிர்வு சில வினாடிகள் ; சில நிமிடங்கள் ; சில மணிகள் ; நில நாட்கள்; சில வாரங்கள் ; சில மாதங்களே. மாதக்கணக்கில் எண்ணங்கள் அதிர்வது வெகு அபூர்வம். நாட்கணக்கில் நீடிப்பது கூட அபூர்வமே. சாமானியமாக சில விஷயங்கள் சில நாட்கள் நீடிக்கும்.
இன்று மதியம் ஒரு வணிகச் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தேன். மூன்று நான்கு நாட்களுக்கு முன் நிகழ்ந்திருக்க வேண்டும். ஒரு காலிமனை கிரயம் தொடர்பான வணிகச் சந்திப்பு. சந்திப்புக்கு வாங்குபவர் ஒதுக்கும் நேரமும் விற்பவர் ஒதுக்கும் நேரமும் ஒன்றாக இருக்கவில்லை. நேரம் முடிவு செய்து இரண்டு மூன்று முறை ஒத்திப் போடப்பட்டது. நாளாக நாளாக நான் பேச வேண்டிய விஷயம் இரண்டு தரப்புக்கும் என மனதில் சொல்லிப் பார்த்த சொற்களை இன்னும் எவ்விதம் சிறப்பாகச் சொல்வது என மாற்றி மாற்றி அமைத்துக் கொண்டிருந்தேன். நான் என்ன சொல்கிறேன் என்பது முக்கியம் என்றாலும் அந்த விஷயத்தை வாங்குபவரும் விற்பவரும் எவ்விதம் புரிந்து கொள்கிறார்கள் என்பது தான் முக்கியம் என்பதால் என் மனம் சொற்களைப் பரிசீலிக்கும் தோறும் சோர்வடைந்தது.
இன்று காலை வணிகச் சந்திப்புக்கு ஊரின் 3 நட்சத்திர விடுதி அறை ஒன்றை பதிவு செய்து விட்டு வீட்டுக்கு வந்தேன். சந்திப்புக்கு இன்னும் 3 மணி நேரம் இருந்தது என்னும் நிலையில் என் புத்தக அலமாரியில் இருந்து ஒரு பெரிய கவிதைத் தொகுப்பை கையில் எடுத்தேன். நான் பொதுவாக கவிதை வாசிப்பது எவ்வாறு எனில் ஒரு கவிதையை வாசித்த பின் அந்த கவிதை அளிக்கும் உணர்வில் நெடுநேரம் இருப்பேன். எனவே கவிதையை மெல்ல ஒன்று ஒன்றாக வாசிப்பதே என் வழக்கம். ஒரே தொகுப்பில் இருக்கும் ஒரு கவிதையும் அடுத்த கவிதையும் கூட வெவ்வேறு உணர்வுநிலைகளில் இருக்கக்கூடும் என்பதால் ஒவ்வொரு கவிதையாக மெதுவாகவே வாசிப்பேன். இன்று அந்த பெரிய கவிதைத் தொகுப்பின் கவிதைகளை வாசிக்கத் தொடங்கினேன். ஒன்று இரண்டு மூன்று என வாசித்துக் கொண்டே சென்றேன். அந்தத் தொகுப்பை பல முறை வாசித்திருக்கிறேன். இருப்பினும் இப்போதுதான் முதல் முறை வாசிக்கிறேன் என்னும் விதமாக மனம் இருந்தது. ஒரே கவிதையை பலமுறை வாசித்தேன். குறிப்பிட்ட வரிகளை மீண்டும் மீண்டும் வாசித்தேன். அந்தக் கவிதைத் தொகுப்பின் 25 கவிதைகளை வாசித்திருந்தேன். ஒவ்வொரு கவிதையின் வாசிப்பனுபவம் குறித்தும் எழுத வேண்டும் என எண்ணினேன். அந்த நினைவைப் பின் தள்ளி எப்போதும் கவிதைத் தொகுப்புகளைக் கையில் வைத்திருந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் கவிதைகளை வாசித்துக் கொண்டேயிருப்பது என முடிவு செய்தேன். 25 கவிதைகளைத் தொடர்ச்சியாக வாசித்தது என் மன பரபரப்பை முற்றிலும் இல்லாமல் செய்து விட்டது. கவிதைகளை கையில் வைத்திருத்தல் கவிதைகளுடன் இருத்தலே என உணர்ந்தேன்.
Saturday, 20 June 2026
அரசியல் பயிற்சி அளித்தல்
அரசியல் கட்சிகளின் இயங்குமுறையை சிறு வயதிலிருந்தே கவனித்தது உண்டு. நான் வசிப்பது காவிரி வடிநிலம் என்பதால் இங்கே கட்சிக்கரை கொண்ட வேட்டியை அணிபவர்கள் பலரை தினந்தோறும் கடைத்தெருவில் பேருந்து நிலையத்தில் பொது இடங்களில் காண முடியும். ஒருவர் கட்சிக்காரர் என்றால் பெரும்பாலும் அவர் கட்சிக்கரை போட்ட வேட்டியை அணிந்திருப்பார். கட்சிக் கூட்டங்களுக்குச் செல்வார். கட்சி மாநாடுகளுக்கு செல்வார். அவர் இருக்கும் கட்சியின் மற்ற கட்சிக்காரர்களுடன் அறிமுகமாகியும் பரிச்சயமாகியும் இருப்பார். பொது விஷயங்கள் தொடர்பாக கட்சி என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ அதனையே தனது நிலைப்பாடாகவும் கொள்வார். தமிழகத்தில் ஒரு கட்சிக்காரரிடம் கட்சி எதிர்பார்ப்பதும் கட்சியிடம் கட்சிக்காரர் எதிர்பார்ப்பதும் இவ்வளவே ஆகும். தமிழகத்தை 1967லிருந்து 2026 வரை 60 ஆண்டுகள் ஆண்ட திராவிடக் கட்சிகள் இவ்விதமே கட்சி அரசியலை செய்தன. அவர்களின் இந்த பாணி தமிழகத்தில் அதிகாரத்தில் இல்லாமல் இருந்த மற்ற கட்சிகளின் இயங்குமுறையிலும் பிரதிபலித்து அதுவே அவர்களின் இயங்குமுறையாகவும் நிலை கொண்டது.
தமிழகத்தில் 12,600 கிராமங்கள் உள்ளன. தமிழகத்தில் 75,000 வாக்குச் சாவடிகள் உள்ளன. 60 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் காங்கிரஸ் ஆளும்கட்சியாக இருந்தது. அவர்களுக்கு மாநிலத்தில் உள்ள எல்லாக் கிராமங்களிலும் வாக்குச்சாவடிகளிலும் கட்சிக் கட்டமைப்பு இருந்தது. பின்னர் திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வரத் தொடங்கியதும் தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளுக்கு மட்டுமே 75,000 வாக்குச் சாவடிகளிலும் கட்சிக் கட்டமைப்பு இருக்கிறது என்னும் நிலை இருந்தது.
வாக்குச் சாவடி கட்டமைப்பு என்பது ஒரு கட்சிக்கு ஒரு வாக்குச்சாவடியில் 6லிருந்து 10 பேர் கட்சி வேலை செய்ய இருக்கிறார்கள் என்றால் அந்தக் கட்சிக்கு அந்த வாக்குச் சாவடியில் வாக்குச் சாவடி கட்டமைப்பு இருக்கிறது என்று பொருள். ஒரு வாக்குச் சாவடி என்பது 1500லிருந்து 2500 வாக்காளர்களைக் கொண்டிருக்கும். அதில் கரைவேட்டி தினமும் கட்டும் கட்சிக்காரர்கள் என திராவிடக் கட்சிகளுக்கு குறைந்தது 40 பேர் இருப்பார்கள். எனினும் வாக்குச் சாவடி பொறுப்பு என்பது 6 லிருந்து 10 பேருக்கு மட்டுமே தர முடியும் என்பதால் கரைவேட்டி கட்டும் 40 பேரில் 20 பேருக்கு வார்டு தலைவர், வார்டு செயலாளர், வார்டு பொருளாளர், வார்டு பிரதிநிதி என சில பொறுப்புகளை வழங்குவார்கள். சிலருக்கு கட்சி உறுப்பினர் அட்டை மட்டும் கொடுத்து இருப்பார்கள். அவ்விதம் என்றால் மாநிலத்தில் உள்ள 75,000 வாக்குச் சாவடிகளிலும் சாவடிக்கு 20 பேர் என்றால் ஒரு கட்சி தன் பொறுப்பாளர்களாக 15,00,000 பேரை பராமரிக்கும். இவர்களுக்காகவே கட்சி பத்திரிக்கை, டி வி சேனல், மாநாடு ஆகியவற்றை நடத்தும். மாநிலத் தலைமை ஒரு குடும்பத்திடம் இருப்பது போல வாக்குச்சாவடி உறுப்பினர்களும் பாட்டனார், தந்தை, பேரன் என அந்த வாக்குச்சாவடியில் கட்சிப் பொறுப்பில் இருப்பார்கள். வாக்குச்சாவடியின் கட்சிப் பொறுப்பை அவர்கள் ஒரு சமூக அந்தஸ்தாகவும் எண்ணத் தொடங்குவார்கள்.
கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தில் நிகழ்ந்தது என்னவெனில் திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகள் மட்டுமே தமிழகத்தின் 75,000 வாக்குச்சாவடிகளிலும் கட்சிப் பொறுப்பாளர்களைக் கொண்டிருக்கிறார்கள் என்னும் நிலை உருவானது. 1967ல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அடுத்த 30 ஆண்டுகளில் வாக்குச்சாவடிகள் நிலையில் கட்சிக் கட்டமைப்பை முற்றிலும் இழந்தது. கம்யூனிஸ்டுகளிடம் தொழிலாளர், விவசாயத் தொழிலாளர் வலைப்பின்னல் மட்டுமே இருந்ததால் அவர்களுக்கும் 75,000 வாக்குச்சாவடிகளிலும் கட்சிப் பொறுப்பாளர்கள் இல்லை. பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தின் வட மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் கட்சிக் கட்டமைப்பு கொண்ட கட்சி ; எனினும் அவர்களுக்கு தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்குப் பிராந்தியங்களில் கட்டமைப்பு இல்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் வட மாவட்டங்களில் வாக்குச்சாவடி அளவில் கட்டமைப்பு கொண்ட கட்சியே. அவர்களுக்கும் மேற்கு மற்றும் தெற்கு பிராந்தியத்தில் பலம் இல்லை.
தமிழக மக்கள் தாங்கள் வாக்களிக்கும் கட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என எண்ணுவார்கள். தாங்கள் வாக்களிக்கும் கட்சி வெற்றி பெறாமல் போனால் அதனைத் தங்கள் தோல்வியாகக் கருதுவார்கள். எனவே திராவிடக் கட்சிகள் தங்களுக்குப் போட்டியாக உருவாகும் கட்சிகள் வாக்குச்சாவடி கட்டமைப்பு இல்லாதவை - அமைப்பு பலம் இல்லாதவை என்று சொல்லி அவர்களுக்குப் பின்னடைவை உருவாக்கி விடும். தமிழக மக்களும் அமைப்பு பலம் இல்லாத கட்சிகளுக்கு வாக்களிக்கத் தயங்குவார்கள். இவ்விதமாக தமிழக அரசியல் அதிகாரம் கடந்த 60 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளின் ஏகபோகமாக இருந்தது. இத்தனை அமைப்பு பலம் இருந்தும் கூட திராவிடக் கட்சிகள் காங்கிரஸ், பாரதிய ஜனதா, பா ம க, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே தேர்தலில் போட்டியிடும் வழக்கம் கொண்டிருந்தன.
இவ்விதமான அரசியல் சூழலில் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நிகழ்ந்தது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி உருவானது. தமிழ்த் திரைப்பட நடிகர் ஜோசஃப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2024ம் ஆண்டு உருவானது. நடிகர் ஜோசஃப் விஜய்யின் கட்சிக்கு திராவிடக் கட்சிகள் பாணியிலான கரைவேட்டி கட்டிய கட்சிக்காரர்களோ 75,000 வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி முகவர் கட்டமைப்போ இல்லை. எனினும் தமிழக வெற்றிக் கழகம் ஒரு கோடியே ஐம்பது லட்சம் வாக்குகள் பெற்று பெருவெற்றி பெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த வெற்றிக்குப் பிறகு தமிழக அரசியல் இயங்கும் விதம் தலைகீழாக மாறியிருக்கிறது. கரைவேட்டி கட்சிக்காரர்கள், வாக்குச்சாவடி கட்டமைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் கணிசமாகக் குறைந்துள்ளது. வேறு புதிய பாணி மக்கள் தொடர்பு முறைகள் உருவாகின்றன. தமிழக அரசியலுக்கு இது நல்ல விஷயமே.
தற்போது சில அமைப்புகள் குடிமக்களுக்கு அரசியல் அறிமுகமும் அரசியல் பயிற்சியும் அளிக்கத் திட்டமிடுகின்றன. ஐ ஏ எஸ் , ஐ பி எஸ், ஐ எஃப் எஸ் ஆகிய தேர்வில் தேர்ச்சி பெறுப்வர்களுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். அந்தப் பயிற்சியே அவர்களை அவர்கள் வகிக்கப் போகும் பதவிக்கு தகுதி பெற்றவர்கள் ஆக்கும். அதே விதமாக தமிழகத்தில் குடிமக்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் அரசியல் பயிற்சி பெறும் சூழல் உருவாகியுள்ளது. அவ்விதமான பயிற்சிக்கு லட்சக்கணக்கானோர் தங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
மகாத்மா காந்தி தென்னாஃப்ரிக்காவிலிருந்து இந்தியா வந்து இந்திய சுதந்திரப் போராட்டத்துக்குத் தலைமை ஏற்ற போது காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் கட்டணத்தை 25 பைசா என்றாக்கினார். அந்தக் காலத்தில் அதனை ‘’நாலணா’’ எனக் கூறுவார்கள். அவ்விதம் இணைந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு தமது ‘’யங் இந்தியா’’ ‘’நவஜீவன்’’ பத்திரிக்கைகள் மூலமும் தனது ஆசிரமங்கள் மூலமும் அரசியல் பயிற்சி அளித்தார். அவ்விதம் உருவாகி வந்தவர்களே பின்னாட்களில் இந்தியாவின் ஜனநாயக அரசியலுக்கு அடித்தளமாக விளங்கினர். அதே பாணியில் காலத்தின் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் அரசியல் பயிற்சி துவங்கவிருக்கிறது. எதிர்காலத்தில் அது தமிழகத்துக்கு நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும் என எதிர்பார்ப்போம்.
Thursday, 18 June 2026
குல்ஃபி ஐஸ் (நகைச்சுவைக் கட்டுரை)
35 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம் இது. அப்போது துவக்கப்பள்ளியை நிறைவு செய்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்திருந்தேன். உறவினர் ஒருவர் வீட்டுக்கு சென்னை சென்றிருந்தேன். அந்த வீட்டில் சிறுவர்களும் இளைஞர்களும் அதிகம். ஆகவே சிறுவனான நான் அங்கே உற்சாகமாக இருந்தேன். இரவு 10 மணிக்கு அங்கே குல்ஃபி ஐஸ் வந்து மணியடிக்கும் சத்தம் கேட்கும். எனக்கு குல்ஃபி ஐஸ் வாங்கித் தந்தார்கள். சில தகவல்களுடன் குல்ஃபி ஐஸ் எனக்கு அறிமுகமானது. அதாவது குல்ஃபி ஐஸ் சென்னையில் இரவு 10 மணிக்கு மேல்தான் விற்பனை ஆகும். இரவு 10 லிருந்து காலை 3 வரை. இதற்கென காத்திருந்து வாங்குவார்கள். பகலில் குல்ஃபி ஐஸ் விற்பனை இருக்காது. முதல் நாள் சாப்பிட்டோம். இரண்டாம் நாள் சாப்பிட்டோம். மூன்றாம் நாள் இரவு உணவு அருந்தியதும் சிறுவர்களாகிய நாங்கள் இன்றைக்கும் குல்ஃபி ஐஸ் வேண்டும் என்று சொன்னோம். அந்த வீட்டின் பெரியவர் ‘’தினமும் குல்ஃபி ஐஸ் சாப்பிடக் கூடாது ; என்றைக்காவது ஒருநாள் தான் சாப்பிட வேண்டும்’’ என்றார்.
அவர் சொன்னதற்கு முதல் நாள் குல்ஃபி சாப்பிட்டதோடு சரி ; அதன் பின் 35 ஆண்டுகளுக்குப் பின் நேற்று இரவு ஊரில் குல்ஃபி ஐஸ் சாப்பிட்டேன்.
Wednesday, 17 June 2026
கம்யூனிஸ்டுகள் (நகைச்சுவைக் கட்டுரை)
சிதம்பரம் நகரில் ஒரு வேலை இருந்தது. காலை 10 மணி அளவில் சென்றிருந்தேன். வேலை முடிய மதியம் 1 மணி ஆகும் என்ற நிலை. 12 மணி அளவில் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கேன்டீனுக்கு வந்தேன். ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தேன். என் அருகில் மூன்று மாணவர்கள் இருந்தனர். கம்யூனிஸ்டு மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள். கையில் ஒரு மனு வைத்திருந்தனர். வாங்கிப் பார்த்தேன். அவர்களுடைய லெட்டர்பேடில் அச்சிடப்பட்டு பின் இன்னொரு தாளில் இரண்டாம் பக்கம் அச்சிடப்பட்டிருந்தது.
‘’தம்பி ! இந்த மனுவை ஏன் இரண்டு தனித்தனி தாள்ல பிரிண்ட் பண்ணியிருக்கீங்க. ரெண்டு பக்கம் தானே இருக்கு. ஃபிரண்ட் அண்ட் பேக் பிரிண்ட் பண்ணலாமே?’’ என்றேன்.
ஒரு மாணவன் யோசித்தான்.’’ஃபைல் பண்ண இதுதான் ஈஸி’’ என்றான்.
‘’ஃபிரண்ட் அண்ட் பேக் தான் ஃபைல் பண்ண ஈஸி. தனித்தனியா இருந்தா ரெண்டாவது பக்கத்தை ஃபைல்ல இருந்து எடுக்கறது ரொம்ப சுலபம். டைப் ரைட்டர் புழக்கத்தில இருந்தப்ப தனித்தனி தாள்ல டைப் செய்வாங்க. டைப் பண்ண தாளோட பின் பக்கத்துல டைப் பண்ணா ரெண்டு பக்கமும் தெளிவா இருக்காது. இப்ப பிரிண்டிங் டெக்னாலஜி பெருசா வளர்ந்துடுச்சு. ஒரு பக்கத்தோட இம்ப்ரஷன் பின் பக்கத்துல இருக்காது.’’
’’நீங்கள் சொல்றது கரெக்ட் தான் சார்’’ என்றான் ஒரு மாணவன்.
‘’நீங்க ஸ்டூடண்ட் யூனியன்ல என்ன பொறுப்புல இருக்கீங்க?’’
ஒரு மாணவன் மாவட்டப் பொறுப்பு. இன்னொரு மாணவன் வட்டப் பொறுப்பு.
‘’1971ல சிதம்பரம் அண்ணாமலை நகர்ல கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் யூனியனைச் சேர்ந்த உதயகுமார் என்னும் மாணவரை கருணாநிதி சர்க்கார் அடிச்சு கொலை செஞ்சது. உங்களுக்கு இந்த விஷயம் தெரியும் தானே?’’
அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. மாணவர்கள் என்பதால் நான் சொன்ன விஷயம் அவர்களுக்கு பரபரப்பை அளித்தது. தங்கள் கட்சிக்காரர்களிடம் ஃபோன் செய்து கேட்கிறோம் என்றான் ஒரு மாணவன்.
‘’உதயகுமார் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்னு கூகுள் செய்ங்க ‘’ என்றேன்.
இரண்டு மாணவர்கள் இரு திசைகளில் சென்று இரண்டு கட்சிக்காரர்களிடம் ஃபோன் பேசி விட்டு வந்தனர்.
‘’உதயகுமார்னு ஒரு ஸ்டூடண்ட் கொல்லப்பட்டிருக்கார். ஆனா அவர் கம்யூனிஸ்டு மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர் இல்லைன்னு கட்சிக்காரங்க சொல்றாங்க’’
‘’கூகுள் செய்ங்க’’
கூகுள் உதயகுமார் கம்யூனிஸ்டு மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதைத் தெரிவித்தது. மாணவர்களுக்கு அதிர்ச்சி.
‘’கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து திமுக கூட தேர்தல் கூட்டணி வச்சு எம் எல் ஏ வா எம் பி யா இருந்திருக்காங்க தம்பி. அதனால திமுக தலைவர் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கறதும் ஊர்ல திரியற கழுதைக்கு டாக்டர் பட்டம் கொடுக்கறதும் ஒன்னுன்னு சொல்லி கழுதைங்க கழுத்தில டாக்டர்னு எழுதித் தொங்கவிட்ட உதயகுமார் கம்யூனிஸ்டு ஸ்டூடண்ட் யூனியன் மெம்பர்னு சொல்றதை அவங்க அசௌகர்யமா நினைப்பாங்க இல்லயா?’’
பின்னர் உதயகுமார் கொலை குறித்த விபரங்களை அவர்களுக்குக் கூறினேன். போலீஸ் உதயகுமாரைக் கொலை செய்து அவர் உடலை குளத்தில் வீசியது ; அவர்கள் பெற்றோரை மிரட்டி உதயகுமாரின் பிணத்தை உதயகுமாரின் பிணம் அல்ல எனக் கூற வைத்தது. பின்னர் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் இறந்தது உதயகுமார்தான் எனக் கூறியது. அனைத்து விஷயங்களும் சொன்னேன்.
Monday, 15 June 2026
நன்றி
ரயில்களும் சென்னையும்
சென்னை எனக்கு ரயில் நிலையங்களின் நகரமும் கூட. எழும்பூர் என்பது எனக்கு எழும்பூர் ரயில் நிலையம். தாம்பரம் என்பது தாம்பரம் ரயில் நிலையம். கிண்டியும் அவ்வாறே. இப்போது மெட்ரோ ரயில் நிலையங்களும் அவ்விதம் இணைந்து விட்டன. மொத்த மெட்ரோ நிலையங்களும் ஒரே நிலையம் என எண்ணும் விதமாக மெட்ரோ ரயில் உள்ளது. மெட்ரோ ரயில் பூமிக்குக் கீழேயும் செல்கிறது ; பூமிக்கு மேலேயும் செல்கிறது. வெளிக்காட்சிகளைக் காண்பது அரிது. எனவே மொத்த மெட்ரோவும் ஒன்றே என எண்ணும் விதமாக இருக்கிறது. இந்த முறை சென்னை பயணத்தில் ஊரில் காலை 7.40க்கு ஒரு விரைவு ரயில் இருந்தது. அது 12.30க்கு தாம்பரம் போகும். அங்கிருந்து ரயில் மாற வேண்டும். அதனைத் தவிர்க்கவே காலை 6 மணி பயணிகள் வண்டியில் சென்றேன். விழுப்புரத்தில் ரயில் மாறி 12.30க்கு எழும்பூர் ரயில் நிலையம் சென்றேன். எழும்பூர் ரயில் நிலையத்தின் ஒரு பகுதியாக எதிர்திசையில் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. அங்கு சென்று வடபழனிக்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு வடபழனி சென்றேன். அங்கே வேலையை முடித்து விட்டு மீண்டும் வடபழனி வந்து 12 X என்ற பேருந்தைப் பிடித்து திருவள்ளுவர் சிலைக்கு வந்தேன். வடபழனியிலிருந்து திருவள்ளுவர் சிலை கணிசமான நேரத்தை எடுத்துக் கொண்டது. எனினும் பயணச்சீட்டு ரூ.9 தான். ஆச்சர்யமாக இருந்தது. அங்கே வேலையை முடித்து விட்டு இரவு அங்கிருந்து அருகிலிருந்த ஆயிரம் விளக்கு மெட்ரோவுக்குச் சென்று கிண்டி மெட்ரோ ரயில் நிலையம் சென்றேன். பின்னர் அதன் ஒரு பகுதியில் இருந்த கிண்டி ரயில் நிலையத்தில் ஊருக்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு மின்சார ரயிலில் தாம்பரம் வந்து சேர்ந்தேன். அந்த்யோதயா புறப்பட்டத் தயாராக இருந்தது. ரயிலின் கடைசிக்கு சென்று கொண்டே இருக்கையில் 8 பேர் இருக்கையில் 4 பேர் அமர்ந்திருந்தனர். அங்கே சென்று அமர்ந்தேன். காலையிலிருந்து தொடர் பயணங்கள். சந்திப்புகள். இடம் இருந்ததால் உடலை நீட்டிப் படுத்தேன். படுத்தவுடன் உறங்கி விட்டேன். வண்டி புறப்பட்டதோ வண்டி நகர்ந்து கொண்டிருந்ததோ தெரியவில்லை. ஆழமான உறக்கம். எழுந்து பார்த்த போது வண்டி ஏதோ ஒரு ஊரில் நின்று கொண்டிருந்தது. பக்கத்தில் இருந்தவர்களிடம் என்ன ஊர் எனக் கேட்டேன். சிதம்பரம் என்றார்கள். எழுந்து அமர்ந்து கொண்டேன். ஊர் வரை விழுத்திருப்பதே உகந்தது. மீண்டும் ஆழ உறங்கி விட்டால் வண்டி தஞ்சாவூர் சென்றடைந்து விடும். அதன் பின் அங்கிருந்து ஊருக்கு தனியே பயணித்து வர வேண்டும்.
Sunday, 14 June 2026
ஐந்து பெண்கள்
நேற்று சென்னை செல்ல வேண்டிய வேலை இருந்தது. எனது வழக்கப்படி காலை 3 மணிக்கு அலாரம் வைத்து எழுந்தேன். 4 மணிக்கு வெளியே புறப்படும் விதமாக தயாரானேன். மெல்ல நடந்து அதிகாலையில் காலைஉணவு தயாராக இருக்கும் உணவகத்துக்குச் சென்று உணவருந்தி விட்டு டவுன்பஸ் பிடித்து ரயில்வே சந்திப்புக்குச் சென்றேன். காலை 5.30 அளவில் அங்கே சென்று சேர்ந்திருப்பேன். திருவாரூர் - விழுப்புரம் பயணிகள் ரயில் காலை 6.02க்கு வரும். அதில் விழுப்புரம் சென்று சேர காலை 9 மணி ஆகும். அங்கே 9.30க்கு பல்லவன் விரைவு வண்டி வரும். அதில் ஏறினால் 12 மணிக்கு சென்னை எழும்பூர். பயணிகள் ரயில் 30 நிமிடம் தாமதமாக வந்தது. ரயிலில் பெரிய கூட்டம் இல்லை. 10 பேருக்கான இருக்கையில் 5 பேர் அமர்ந்திருந்த இடத்தில் நானும் சென்று அமர்ந்து கொண்டேன். அதிகாலையில் எழுந்தது ; உணவகம் பேருந்து நிலையம் வரை நடந்தது ; வழக்கமான நேரத்துக்கு முன்பாகவே உணவு எடுத்துக் கொண்டது ஆகியவற்றால் தூக்கம் கண்களைச் சுழற்றியது. 10 பேருக்கான இருக்கையில் 6 பேர் மட்டுமே அமர்ந்திருந்ததால் உடலை நீட்டிப் படுத்து விட்டேன். எழுந்து பார்க்கும் போது வண்டி புதுச்சத்திரத்தைத் தாண்டியிருந்தது. சக பயணிகள் யார் என கவனித்தேன். பெட்டியில் ஏறும் போதே அவர்கள் பேச்சில் சன்னாநல்லூர் என்னும் பெயர் கேட்டது. திருவாரூர் விழுப்புரம் பயணிகள் ரயிலில் சன்னாநல்லூரில் ஏறியிருக்கிறார்கள். ஒரு மூதாட்டி, மூதாட்டியின் மகள், மூதாட்டியின் பேத்தி, மூதாட்டியின் சகோதரி, மூதாட்டியின் சகோதரி மகள் என ஐந்து பெண்கள் பேரங்கியூர் என்னும் ஊருக்கு பயணிக்கின்றனர். அவர்களது குடும்ப நண்பர் ஒருவர் உடல்நலம் குன்றியிருக்கிறார். அவருக்காக பேரங்கியூரில் இருக்கும் சிவனுக்கு அபிஷேகம் செய்து குடும்ப நண்பர் உடல்நலம் பெற வேண்டிக் கொள்ள சென்று கொண்டிருக்கிறார்கள். எனக்கு இப்போது லேசாக இருமல் இருக்கிறது. நான் இருமியதைக் கண்டு வென்னீர் வேண்டுமா எனக் கேட்டு கொடுத்தார்கள். சகஜமாக பேசிக் கொண்டு வந்தார்கள். கடலூர் முதுநகர் அடைந்தும் அவர்களுக்கு காலை உணவு கொண்டு வரும் விற்பனையாளர்களைப் பார்க்க முடியவில்லை. அனைவரும் உணவுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு கொய்யாக்காய் விற்பனை செய்யும் மூதாட்டி வந்தார். ஒருவருக்கு ஒரு கொய்யாக்காய் என 6 கொய்யாக்காய்களை கொடுக்கச் சொன்னேன். பணம் நான் கொடுத்து விட்டேன். அந்தப் பெண்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ‘’ குடும்ப நண்பர் ஒருவர் உடல்நலம் பெற வேண்டி சிவனிடம் வேண்டிக் கொள்ள சென்று கொண்டிருக்கிறோம். பக்தர்களாகிய எங்கள் பசியை சற்று முன் அறிமுகமான ஒருவரான நீங்கள் தீர்த்து வைக்கிறீர்கள். எங்களுக்கு கொய்யா கிடைக்க வேண்டும் என்பது இறை சங்கல்பம். அது உங்கள் மூலமாக நிறைவேறியிருக்கிறது ‘’ என்று சொன்னார்கள். அவர்கள் அந்தச் சூழலை மிக உணர்ச்சிகரமாகப் புரிந்து கொண்டாலும் மிக உணர்ச்சிகரமாக எதிர்கொண்டாலும் உலகில் பாரதம் என்னும் இந்த மண்ணில் தான் கடவுளைத் தன் தோழனாகத் தன் பணியாளனாகத் தன் உறவினனாக மக்கள் காண்கிறார்கள். பேரங்கியூர் கோயில் குறித்து நிறைய விஷயம் சொல்லிக் கொண்டு வந்தார்கள். என்னிடம் என்ன தொழில் செய்கிறேன் எனக் கேட்டார்கள். ரியல் எஸ்டேட் என்று சொன்னேன். விழுப்புரம் வந்து ரயில் நின்றதும் அனைவரும் இறங்கினோம். ஐந்து பெண்களும் உங்கள் தொழில் மிகச் சிறப்பாக நடக்கும் ; ரியல் எஸ்டேட்டில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என வாழ்த்தி விட்டு சென்றார்கள்.
Friday, 12 June 2026
எஸ் எம் எஸ் அனுப்புவது எப்படி? (நகைச்சுவைக் கட்டுரை)
நேற்று ஒரு தொழிலதிபரைச் சந்தித்தேன். பல தொழில் செய்பவர். அசையா சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் கொண்டவர். எனக்கு அவரைப் பல ஆண்டுகளாகத் தெரியும். அவருக்கும் என்னைத் தெரியும். சாலையில் பொது இடத்தில் கடக்கும் போது புன்னகைத்துக் கொள்வோம் ; அரிதாக நலம் விசாரித்துக் கொள்வோம். அவருக்கு நெருக்கமான உறவினர் ஒருவர் எனது நண்பர். அவரை மாதம் ஒருமுறையாவது நேரில் சந்திப்பேன். ஒரு இடத்தின் விற்பனை தொடர்பாக நேற்று நண்பரைச் சந்தித்தேன். அவரது நெருக்கமான உறவினரிடம் இந்த விஷயம் தொடர்பாக நேரில் பேசுமாறு கூறினார். அவருக்கு ஃபோன் செய்து வீட்டில் இருக்குமாறு கூறினார். நான் புறப்பட்டுச் சென்றேன். சகஜமாக பேசிக் கொண்டிருந்தோம். விற்பனைக்கு உள்ள இடம் தொடர்பான ஆவணங்கள் என்னிடம் மின்னஞ்சலில் பி டி எஃப் ஆக இருந்தன. அவரது மின்னஞ்சல் முகவரியை எஸ் எம் எஸ் அனுப்புமாறு கூறினேன். அவர் தன் ஸ்மார்ட் ஃபோனை எடுத்தார். ‘’சார் ! எஸ் எம் எஸ் அனுப்பி பல வருஷம் ஆச்சு. எப்படி அனுப்பனும்னு மறந்து போச்சு.’’ என்றார். பின்னர் ஒரு விதமாக சமாளித்து அவரது மின்னஞ்சலை எனக்கு எஸ் எம் எஸ் அனுப்பினார்.
Thursday, 11 June 2026
தேர்வை அஞ்சும் ஆசிரியர் (நகைச்சுவைக் கட்டுரை)
இன்று காலை எனது நண்பருக்கு ஃபோன் செய்தேன். அவர் ஒரு துவக்கப்பள்ளி ஆசிரியர். அவரிடம் எப்போது சாவகாசமாக ஃபோனில் பேச முடியும் என்று கேட்டேன். மாலை நேரத்தில் என்றார். இப்போது அதாவது இந்தக் காலகட்டத்தில் ஏதும் முக்கிய பணி இல்லையே என்று கேட்டேன். ‘’இருக்கிறது’’ என்றார். ’’என்ன பணி?’’ என்றேன்.
மிகவும் சோகமாக ‘’டெட் எக்ஸாம் வருது’’ என்றார்.
‘’அதை ஏன் இவ்வளவு சோகமா சொல்றீங்க?’’ என்றேன்.
‘’தீவிரமா பிரிபேர் செஞ்சுட்டு இருக்கன்’’
‘’தீவிரமாவா?’’
’’ஆமா சிலபஸ் மாத்தியிருக்காங்க. அதான் தினமும் ரொம்ப நேரம் படிக்கறன்’’ என்றார்.
‘’பதட்டமா இருக்கா?’’
சற்று தயங்கி ‘’ஆமா ரொம்ப பதட்டமா இருக்கு’’ என்றார்.
‘’நீங்களே ஆசிரியர். தேர்வு எழுத தேர்வை நினைச்சு நீங்க பதட்டப்படலாமா ?’’ என்றேன்.
‘’டெட் எக்ஸாம் முக்கியமாச்சே?’’ என்றார்.
’’எத்தனை மார்க்குக்கு எக்ஸாம் ? பாஸ் பண்ண 80% எடுக்கணுமா?’’ என்றேன்.
‘’150 மார்க்குக்கு எக்ஸாம் எழுதணும். அதுல 80 மார்க் எடுக்கணும் பாஸ் செய்ய’’ என்றார்.
‘’ஐம்பது பர்செண்ட் மார்க் எடுத்தா பாஸ்ங்கறதுக்குத் தான் இவ்வளவு பதட்டமா ?’’ என்றேன்.
‘’ஆமா’’ என்றார்.
‘’இந்த மாதிரி ஆட்களை நம்பித்தான் தமிழ்க் குடும்பங்கள் அவங்க குழந்தைகளோட கல்வியை ஒப்படைக்கிறாங்க’’ என்றேன்.
நண்பர் அமைதியாக இருந்தார்.
‘’நீங்க ரொம்ப ஸ்மார்ட் ஆச்சே ? நீங்க ரொம்ப இண்டெலிஜெண்ட் ஆச்சே? ஏன் டெட் எக்ஸாமைக் கண்டு பயம் ?’’ என்றேன்.
‘’பேப்பர் டஃப் ஆ இருந்தா?’’ என்றார்.
‘’எதைப் பத்தியும் நினைச்சு பதட்டப்படாதீங்க. டெய்லி கன்சிஸ்டெண்ட்டா பிரிபரேஷன் மட்டும் செய்ங்க. நல்ல ஸ்கோர் எடுத்து பாஸ் செய்வீங்க ‘’ என்றேன்.
நண்பர் நம்பிக்கை கொண்டார்.