பிரபு மயிலாடுதுறை
Wednesday, 29 July 2026
விண்ணப்பம் - 7 குடும்பங்கள்
@@@@@ கிளை அஞ்சல் நிலையம் மீது சி பி கி ராம் ஸ் புகார்
29.07.2026 அன்று 1315 மணிக்கு @@@@@அஞ்சல் நிலையம் சென்று 9 போஸ்டல் கவர் வேண்டும் எனக் கேட்டேன். அங்கிருந்த சப் போஸ்ட் மாஸ்டர் போஸ்டல் கவர் கையிருப்பு இல்லை ; வேண்டுமானால் ரூ.5 போஸ்டல் ஸ்டாம்ப் 9 தருகிறேன். வெளிமார்க்கெட்டில் ஆஃபிஸ் கவர் வாங்கி ரூ.5 ஸ்டாம்ப் வாங்கி ஒட்டி அனுப்பிக் கொள்ளுங்கள் என்று கூறினார். மேலும் போஸ்டல் கவர் கையிருப்பு வைத்துக் கொள்வதில்லை என்றும் கூறினார். என்னுடைய புரிதலின் படி போஸ்ட் ஆஃபிஸ் என்பது போஸ்டல் டிபார்ட்மெண்ட் தொடர்பான அடிப்படையான விஷயங்கள் கிடைக்கும் இடம். அது விதிமுறைகளின் படியும் சட்ட திட்டங்களின் படியும் இயங்கக் கூடிய இடம் என்றே கருதுகிறேன். என் கையில் ரூ.50 இருந்தது. நான் 9 போஸ்டல் கவர் வாங்கி அதில் 9 தபால்களை வைத்து அனுப்புவதாக இருந்தேன். போஸ்டல் ஸ்டாம்பும் வெளிமார்க்கெட்டில் கவரில் வாங்கினால் எனக்கு ரூ.54 ஆகும். கூடுதல் செலவாகும் என்பதுடன் என் கையில் ரூ.54 இல்லை எனில் என் பணி நிறைவடையாது. இந்த விஷயத்தை சில்லறை விஷயமாக நான் நினைக்கவில்லை. ஒரு வாடிக்கையாளருக்கு இது ரூ.4 சம்பந்தப்பட்ட பிரச்சனையாக இருக்கும். ஒரு நாளில் அந்த அஞ்சல் நிலையத்துக்கு 10 பேர் வருவார்கள் எனில் அது ரூ.40 சம்பந்தப்பட்டது. 300 நாட்கள் ஒரு ஆண்டில் வேலைநாட்கள் எனில் அது ரூ.12,000 தொடர்பான பிரச்சனை. இந்த சி பி கி ராம் ஸ் புகார் மூலம் அஞ்சல்துறை மேலதிகாரிகளை @@@@@ கிளை அஞ்சல் நிலையம் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்துடன் மேற்கொண்ட வரவு செலவுகளை ஆடிட் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். @@@@@ கிளை அஞ்சல் நிலையத்துக்கு கடைசியாக எப்போது போஸ்டல் கவர் வழங்கப்பட்டது ? அது விற்று தீர்ந்தது எப்போது? விற்ற பின் ஏன் போஸ்டல் கவர் ஆர்டர் செய்யவில்லை? ஆகிய வினாக்களைக் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேட்டு விசாரணை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். மத்திய அரசின் முக்கிய துறைகளில் ஒன்றான தபால் துறையின் அஞ்சல் அலுவலகம் ஒன்றில் போஸ்டல் கவர் இருப்பு வைத்துக் கொள்ளாமல் இருப்பதையும் போஸ்டல் கவர் கேட்டு வரும் வாடிக்கையாளரிடம் போஸ்டல் கவர் இருப்பு வைத்துக் கொள்வதில்லை என சப் போஸ்ட் மாஸ்டர் பதில் கூறுவதையும் அஞ்சல்துறை உயர் அதிகாரிகள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என நம்புகிறேன். மேற்படி விஷயம் குறித்து விசாரணை நடத்தி உரிய மேல்நடவடிக்கை எடுக்குமாறு அஞ்சல்துறை உயர் அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன்
மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை (நகைச்சுவைக் கட்டுரை)
பணி நிமித்தம் சிதம்பரம் சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். சீர்காழி அருகே வரும் போது அலைபேசி ஒலித்தது. இரு சக்கர வாகனத்தின் ஒலியையும் தாண்டி அலைபேசி ஒலி கேட்டது. எனது வாகனம் சென்று கொண்டிருந்த இடம் சீர்காழி புறவழிச்சாலை. வாகனத்தை ஓரங்கட்டி அலைபேசியை எடுத்தேன். சுருக்கமாக ‘’எக்மோர் எஸ் ஐ பேசறன்’’ என்றார் ஃபோனில் பேசியவர். ‘’வணக்கம் மேடம்’’ என்றேன். ‘’முத்துநகர் எக்ஸ்பிரஸ்ல ஜெனரல் கம்பார்ட்மெண்ட்ல கேம்ளிங் நடக்கறதா கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கீங்க இல்லையா?’’ என்றார். ‘’ஆமாம் மேடம்! சி பி கி ராம் ஸ் ல புகார் கொடுத்திருந்தேன்.’’ என்றேன். ‘’நீங்க டிராவல் பண்ண அன்னைக்கு டிரெயின்ல டி டி ஈ யாரும் ஜெனரல் கம்பார்ட்மெண்ட்க்கு வரலியா?’’ என்று கேட்டார். ‘’அன்னைக்கு யாரும் வரலை மேடம். வந்திருந்தா அவங்க சீட்டாடி இருக்க மாட்டாங்க’’ என்றேன். ‘’இன்னைக்கு முத்துநகர் டிரெயின்ல ரெய்ட் பண்ண போறோம்’’ என்றார். ‘’மேடம் ! ஈவ்னிங் 1815க்கு புதுச்சேரி மெமு இருக்கு. அதுலயும் ரெய்டு பண்ணுங்க’’ என்றேன். ‘’ஓ சரி’’. ‘’கேம்ளிங் குக்கு பப்ளிக் டிரான்ஸ்போர்ட் ஆன டிரெயின யூஸ் பண்றது இஸ் நாட் நைஸ் மேடம்’’. ‘’நீங்க புகார் கொடுத்தது நல்ல விஷயம். உங்களுக்கு தாம்பரம் எஸ் ஐ யும் செங்கல்பட்டு திண்டிவனம் எஸ் ஐ யும் ஃபோன் பண்ணுவாங்க. அவங்ககிட்டயும் விபரம் சொல்லுங்க’’ என்றார்.
சனிக்கிழமை காலை 10 மணிக்கு சீர்காழி தீ விபத்து தொடர்பாக மயிலாடுதுறை ஆர் பி எஃப் அலுவலகத்தில் வாக்குமூலம் பதிவு. புதன்கிழமை எக்மோர் எஸ் ஐ யிடமிருந்து அலைபேசி அழைப்பு. மேலும் தாம்பரம் செங்கல்பட்டு திண்டிவனம் எஸ் ஐ யும் ஃபோனில் அழைப்பார்கள் என கூடுதல் தகவல்.
ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது ‘’மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை வதைக்க நினைத்திடும் சிறைச்சாலை’’ என்னும் வரி மனதில் ஓடிக் கொண்டேயிருந்தது.
இளைஞர்கள் குழு
அசாத்தியத்தை சாத்தியமாக்குபவர்
Tuesday, 28 July 2026
பொறுப்பில்லாதவர்கள் - 2
நேரம் இப்போது மாலை 6.55. இப்போது வரை எங்களுக்கு ‘’ஸ்விஃப்ட்’’முறையில் பணம் செலுத்த விண்ணப்பித்ததற்கான ஒப்புகைச் சீட்டு அளிக்கப்படவில்லை.
பொறுப்பில்லாதவர்கள்
Sunday, 26 July 2026
வாக்குமூலம் (நகைச்சுவைக் கட்டுரை)
ஒருநாள் ஊரில் இல்லை என்றால் அடுத்த நாள் பல வேலைகள் குவிந்து விடும். வெள்ளியன்று இரவு 7.30 மணியளவில் முத்துநகர் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது ரயில்வே பாதுகாப்பு படையிலிருந்து ஃபோன் வந்தது. சீர்காழி தீ விபத்து தொடர்பாக நான் அளித்த புகார் தொடர்பாக என்னிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என. சனிக்கிழமை காலை 10 மணிக்கு ரயில் நிலையத்தில் இருக்கும் ரயில்வே பாதுகாப்பு படை நிலையத்துக்கு வருகிறேன் என சொன்னேன். காலை 8 மணி அளவில் தான் வீடு வந்து சேர்ந்தேன். குளித்து உணவருந்தி விட்டு கிளம்ப 9.45 ஆகி விட்டது. காலையிலேயே ரயிலில் சீட்டாடும் கும்பல் குறித்த புகாரை சி பி கி ராம் ஸ் ல் பதிவு செய்தேன். பயண விபரங்களை எழுதி தளத்தில் பதிவிட்டேன். அதற்கே நேரம் சரியாக இருந்தது. நான் அளித்த சி பி கி ராம் ஸ் புகாரை ’’கட் காபி பேஸ்ட்’’ செய்து பிரிண்ட் அவுட் எடுத்து கையில் வைத்துக் கொண்டேன். சம்பவம் நடந்த நாள் என்ன என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். எட்டாம் தேதி. புதன்கிழமை. சம்பவம் நடந்து 17 நாட்கள் ஆகியிருப்பதால் நினைவுகள் மங்கியிருக்கும் என விசாரணை செய்பவர்கள் எதிர்பார்ப்பார்கள் என யூகித்தேன். ரயில் நிலையம் வீட்டிலிருந்து 5 கி.மீ. பாதி தூரம் சென்றிருப்பேன். 9.56க்கு ரயில்வே பாதுகாப்பு படையிலிருந்து ஃபோன் வந்தது. ‘’ஆன் தி வே . இன்னும் 5 நிமிடத்தில் இருப்பேன்’’ என்று சொன்னேன். ரயில் நிலையம் சென்று பிளாட்ஃபாரம் டிக்கெட் எடுத்துக் கொண்டு நடைமேடை 1 ல் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை நிலையத்துக்குச் சென்றேன். அங்கே ஆய்வாளர் ஒருவர் இருந்தார் ; சார் ஆய்வாளர் வந்து விடுவார்; சற்று காத்திருங்கள்’’ என்றனர். காத்திருந்தேன். பின்னர் அவர் வந்தார். என்னைப் பற்றி விசாரித்தார். சிவில் என்ஜினியர். கன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் ரியல் எஸ்டேட். இதையெல்லாம் சொன்னேன். நீங்கள் வாக்குமூலம் தர வேண்டும் எனக் கூறினார். ஒரு காகிதம் கொடுங்கள் ; எழுதிக் கொடுக்கிறேன் என்றேன். நான் வாக்குமூலம் கொடுக்க அவர் எழுதி பதிவு செய்து அதில் நான் கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும் என்பதே அவர்கள் முறை என்றார். நான் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. ஒரு முழு வெள்ளைக் காகிதத்தில் தேதி நேரம் இடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு ரயில்வே பாதுகாப்பு படை நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சார் ஆய்வாளர் இன்னார் முன்னிலையில் பதிவு செய்யப்படும் இன்னாரின் வாக்குமூலம் என எழுதி அதன் அடியில் ஒரு கார்பன் தாள் வைத்து எழுதிக் கொண்டார். வாக்கிய அமைப்புகள் எவ்விதம் அமைக்க வேண்டும் என அவருக்கு முன் தீர்மானம் இருந்தது. அதன் படி அமைத்தார். நான் ஆட்சேபம் ஏதும் தெரிவிக்கவில்லை. சம்பவம் நடந்த தேதி என்ன என்று கேட்டார். ஜூலை 8ம் தேதி என்றேன். அன்று என்ன நாள் என்றார். புதன்கிழமை என்றேன். அன்று அஷ்டமியும் கூட எனக் கூற எழுந்த ஆவலை மனதுக்குள்ளேயே வைத்துக் கொண்டேன். அவர் ஒரு வாசகம் சொல்ல அதில் நான் திருத்தம் சொல்ல என நான் கூறிய திருத்தங்களுடன் வாக்குமூலம் பதிவானது. நான் மிகவும் இழுத்துப் பிடிக்கவில்லை ; சி பி கி ராம் ஸ் ல் புகார் பதிவான பின் சம்பவ இடத்தில் கரிக்கட்டையாய் இருந்த 11 மரங்கள் ரயில்வே நிர்வாகத்தால் நீக்கப்பட்டன.விசாரணை பல அளவில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் நிறுத்திக் கொள்வது சிறப்பு என எனக்குத் தோன்றியது. அங்கே தீ எரிந்து கொண்டிருந்த போது 3 ரயில்கள் அப்பாதையைக் கடந்து சென்றிருக்கின்றன. ரயில்வே லைனுக்கு அருகில் தீ எரிந்து கொண்டிருக்கிறது என்னும் தகவல் ரயில் லோகோ பைலட், ரயிலின் கார்டு, ரயிலில் பயணித்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் ஆகிய மூவராலும் சீர்காழி ஸ்டேஷன் மாஸ்டருக்குத் தெரிவித்திருக்கப்பட வேண்டும். 3 ரயில்கள் என்பதால் 9 பேர் இதற்கு பொறுப்பு. இரண்டு ரயில்கள் பயணிகள் ரயில்கள் என்பதால் 7 பேர் இதற்கு பொறுப்பு. இந்த 7 பேரிடம் ரயில்வே லைன் அருகில் தீ பற்றி எரிந்து கொண்டிருப்பது குறித்து ஸ்டேஷன் மாஸ்டருக்குத் தகவல் தெரிவித்தீர்களா என விளக்கம் கேட்க வேண்டும். அவ்விதம் நிகழ்ந்ததா என்பது இனிமேல் தான் தெரியும். துறை ரீதியான விசாரணை நடத்துங்கள் என எனது புகார் மனுவில் கோரியிருந்தேன். இப்போதே விசாரணை நடந்து கொண்டிருக்கிறது ; எரிந்து போய் நின்றிருந்த 11 மரங்களின் ஒளிப்படம் அவர்கள் கோப்பில் இருந்ததைக் கண்டேன். அந்த மரங்கள் நீக்கப்பட்டதன் ஒளிப்படங்களும் இருந்தன. நான் அளித்த சி பி கிரா ம் ஸ் புகார் இன்னும் நடப்பில் இருக்கிறது என்பதை எனது சி பி கி ராம் ஸ் கணக்கில் நுழைந்து தினமும் பார்க்க முடிகிறது. கோப்பு தீர்வு காணப்பட்டது எனக் கூறப்படும் போது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி அந்த முழுக் கோப்பையும் கோர முடியும். முழுக் கோப்பையும் கண்டால் என்ன செய்தார்கள் என்பது தெரியவரும். அந்தக் கோப்பை ஆதாரமாகக் கொண்டு தேவையெனில் சி பி கி ராம் ஸ் ல் மேலும் ஒரு அப்பீல் செய்ய முடியும். சூழலை உன்னிப்பாகக் கவனிப்போம் என இருந்தேன். என்னுடைய ஆதார் அட்டையின் நகல் இரண்டு வேண்டும் எனக் கேட்டனர். வீட்டுக்கு வந்து எடுத்துக் கொண்டு போய் கொடுத்தேன்.
ஆர்யா
மறைமலை நகரிலிருந்து எழும்பூர் மின்சார ரயிலில் சென்ற போது இடையில் இருந்த ரயில் நிலையம் ஒன்றில் ஒரு விளையாட்டுக் குழு ஏறியது. அவர்களின் உபகரணங்கள் பையைப் பார்த்த போது ஹாக்கி வீரர்களாக இருக்கலாம் எனத் தோன்றியது. என் எதிரில் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் ‘’ஹாக்கி வீரர்களா?’’எனக் கேட்டு பேச்சைத் தொடக்கினேன். அவர்கள் ஹாக்கி வீரர்கள்தான். விருத்தாசலத்தில் மேட்ச் விளையாடி விட்டு ஊர் திரும்புகின்றனர். உடற்கல்வி பட்டப்படிப்பு படிக்கின்றனர். அனைவருமே இளம் பெண்கள். அவர்களிடம் ஐரோப்பா செல்ல உள்ள கால்பந்து வீரனைக் குறித்து கூறினேன். அவனுடைய கல்லூரி சேர்க்கை தொடர்பாக ஒருவரிடம் உதவி கேட்க சென்று கொண்டிருப்பதாகச் சொன்னேன். அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. ஐரோப்பாவில் விளையாட்டு வீரர்களுக்கு நிறைய ஊக்கம் கிடைக்கிறது ; நம் நாட்டில் அவ்விதம் இல்லை என்றார்கள். ஒரு குழந்தைக்கு விளையாட்டு அறிமுகம் பெற்றோர்கள் மூலமே நிகழ வேண்டும் ; நம் நாட்டில் பெற்றோர்கள் குழந்தைகள் படிப்பில் மட்டுமே ஈடுபட வேண்டும் வேறு எதிலும் ஈடுபடக்கூடாது என்னும் எண்ணம் கொண்டவர்கள் ; அதுவே முதற் பிழை - அது களையப்பட வேண்டும் எனக் கூறினேன். என்னிடம் உரையாடிக் கொண்டிருந்த பெண்ணிடம் ‘’உன் பெயர் என்ன?’’ என்று கேட்டேன். ‘’ஆர்யா’’ எனக் கூறினாள். அவளுக்கு யாருடைய பெயர் இடப்பட்டுள்ளது என அவள் அறிவாளா என்று கேட்டேன். அவளுக்கு விடை தெரியவில்லை. ‘’உனக்கு ஆதி சங்கரரின் அன்னையின் பெயர் இடப்பட்டுள்ளது. ஆதி சங்கரரின் அன்னை ஆர்யாம்பாள். தந்தை சிவகுரு.’’ என்றேன். அவளுக்கு ஆச்சர்யம். அந்தக் குழு தாம்பரத்தில் விடை பெற்றுக் கொண்டது ; கால்பந்து வீரனுக்கு வாழ்த்துக்கள் சொன்னது.
Saturday, 25 July 2026
ரயில் சீட்டாட்டக் கும்பல் - சி பி கி ராம் ஸ் புகார்
24.07.2026 அன்று மாலை 6.20 மணி அளவில் சென்னை எழும்பூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் முத்துநகர் அதிவிரைவு ரயிலில் விழுப்புரம் வரை பயணம் செய்ய பயணச்சீட்டு எடுத்துக் கொண்டு ரயிலின் என்ஜினுக்கு அருகில் இருக்கும் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறினேன். தொலைதூரம் செல்லக் கூடிய வண்டி என்பதால் ரயில் புறப்படும் நேரத்துக்கு 1 மணி நேரம் முன்பிருந்தே பயணிகள் அமர்ந்திருந்தனர். ஒரு பகுதியில் 8 பேர் அமரக்கூடிய இருக்கையில் 4 பேர் மட்டுமே அமர்ந்திருந்ததால் அங்கு சென்று அமர்ந்து கொண்டேன். அங்கே இருந்த 4 பேரும் இங்கே அமர ஆட்கள் வருவார்கள் என்றார்கள். நான் அதனைப் பொருட்படுத்தவில்லை. எனக்குத் தேவை அமர ஒரு இருக்கை. அதில் அமர்ந்து கொண்டேன். தொடர்ந்து என்னிடம் இங்கே ஆட்கள் வருவார்கள் என்று கூறிக் கொண்டேயிருந்தார்கள். நான் அதனைப் பொருட்படுத்தவில்லை. ரயிலில் தொலைதூரங்களுக்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு வரும் பயணிகள் இருக்கை காலியாக இருக்கிறதே என அமர முயல்வதும் அவர்களிடம் அங்கிருந்தவர்கள் ஆட்கள் வருவார்கள் எனக் கூறுவதும் நடந்து கொண்டேயிருந்தது. ரயில் புறப்படும் நேரத்தில் அவர்கள் குறிப்பிட்ட நபர்கள் இவர்கள் முடக்கி வைத்திருந்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் சீசன் டிக்கெட் எடுத்து பயணிப்பவர்கள் என்பதை அவர்கள் பேச்சிலிருந்து யூகிக்க முடிந்தது. ரயில் புறப்பட்டதும் அந்த 7 பேரும் சீட்டுக்கட்டு சூதாட்டம் ஆடத் தொடங்கினர். பணம் வைத்து ஆடினர். இந்த சூதாட்டத்தை நிகழ்த்துவதற்காகவே ரயிலில் தொலைதூரங்களுப் பயணிக்கும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். பணம் வைத்து சூதாடுவது குற்றம். பணம் வைத்து சூதாடும் குற்றச்செயலை ரயிலில் ரயில் இயக்கத்தில் இருக்கும் போது செய்வது அதை விடப் பெரிய குற்றம். ரயில் என்பது குழந்தைகள், மாணவர்கள் , இளைஞர்கள், நடுத்தர வயதினர், மூத்த குடிமக்கள் ஆகியோர் பயணிக்கும் வாகனம். அவர்கள் முன்னிலையில் சூதாட்டம் போன்ற குற்றச் செயலில் ஒரு கும்பல் ஈடுபடுவது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். மேலும் ஸ்பீக்கர் மூலம் மிக அதிக சத்தத்தில் திரைப்படப்பாடல்களை ஒலிக்க விடவும் செய்தனர். இந்த கும்பலில் சிலர் மேல்மருவத்தூரில் இறங்கிக் கொண்டனர் ; பலர் திண்டிவனத்தில் இறங்கிக் கொண்டனர். 24.07.2026 மாலை 7.20க்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட முத்துநகர் விரைவு ரயிலில் என்ஜினுக்கு அருகில் இருந்த பொதுப் பெட்டியில் 7 பேர் கொண்ட கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டது என்பதை இந்த புகார் மூலம் பதிவு செய்கிறேன். சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு தொலைதூரம் செல்லும் ரயில்களின் பொதுப் பெட்டியில் பயணிகளுக்கு இடையூறாக ஸ்பீக்கர் மூலம் இரைச்சலை உருவாக்கியும் சீட்டுக்கட்டு சூதாட்டம் ஆடும் கும்பலை மொத்தமாக அடையாளப்படுத்தி அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்குமாறு இந்தப் புகார் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.
