பிரபு மயிலாடுதுறை
Wednesday, 5 August 2026
உடன்பிறந்தானிடம் பிறந்த வீட்டுப் பெருமை
Tuesday, 4 August 2026
முடிவுகளும் தீர்வுகளும்
Monday, 3 August 2026
பேச்சுவார்த்தை
வெள்ளிக்கிழமை மாலை 6.40க்கு இந்தியன் வங்கி தலைமை நிர்வாக அதிகாரிக்கு அனுப்பிய கடிதத்தை விரைவுத் தபாலில் அனுப்பி அதன் நகலை மத்திய நிதியமைச்சருக்கும் விரைவுத் தபாலில் அனுப்பினேன். தபால் இன்று மாலை 4 மணி அளவில் இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி அலுவலகத்துக்குக் கிடைத்திருக்கிறது. இரவு 8 மணி அளவில் இந்தியன் வங்கி கிளையிலிருந்து மேலாளர் பேசினார். அவர் எனக்கு மிக நல்ல பரிச்சயம் உள்ளவர். அவர் அழைத்த மரியாதைக்கு உடனே வருகிறேன் என்று அங்கு சென்றேன். என் கடிதத்தை தலைமை நிர்வாக அதிகாரி வாசிக்க மிகவும் வாய்ப்பு குறைவு என நான் நினைத்தேன். ஆனால் எனது கடிதம் தலைமை நிர்வாக அதிகாரியின் கவனத்துக்குச் சென்றிருக்கிறது என்பதை கிளை மேலாளரின் பேச்சிலிருந்து புரிந்து கொண்டேன். கடிதம் தலைமை நிர்வாக அதிகாரிக்கு எழுதப்பட்டு அதன் நகல் மத்திய நிதியமைச்சர் அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டு இருப்பதால் மத்திய நிதியமைச்சர் அலுவலகத்திலிருந்து தங்களுக்கு வந்த நகல் கடிதத்தை இந்தியன் வங்கி தலைமை நிர்வாக அதிகாரி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வாய்ப்புள்ளது. அந்தக் கடிதம் சில நாட்கள் கழித்தாவது தலைமை நிர்வாக அதிகாரிக்கு வரும். தலைமை நிர்வாக அதிகாரியின் காரியதரிசிகள் அந்தக் கடிதத்தை அதிகாரியின் பார்வைக்கு கொண்டு செல்லாமல் இருக்க முடியாது; அந்நிலையை யூகித்து அதன் மூலாதாரமான என் கடிதத்தை தலைமை நிர்வாக அதிகாரி கவனத்துக்குக் கொண்டு சென்றிருப்பார்கள் என எண்ணினேன். இந்திய அதிகாரவர்க்கம் நூதனமானது ; நூதனமான மனோபாவங்கள் கொண்டது. ஒரு சாமானியன் அவற்றை முழுதும் புரிந்து கொள்ள முடியாது. மேலாளர் இந்தியன் வங்கியின் பல உயரதிகாரிகள் தனக்கு தொடர்ந்து ஃபோன் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னார். மேலாளரை சந்திக்கச் செல்லும் போதே பேச்சுவார்த்தையின் எந்த நிலையிலும் உணர்ச்சிவசப்பட்டு விடக் கூடாது என்னும் முடிவோடு தான் சென்றேன். அவர்கள் என்ன தான் சொல்கிறார்கள் என்பதைக் கேட்போம் என முடிவு செய்து கொண்டேன். மேலாளர் ஏதேதோ விஷயங்கள் சொன்னார். அவர் பல விஷயங்களைப் பேசி விஷயங்களை நீர்த்துப் போகச் செய்ய முயற்சிக்கிறார் எனப் புரிந்து கொண்டேன். அவர் மிகவும் நல்ல மனிதர் ; சிறப்பாக வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிபவர். சம்பவம் நடந்த இரு நாட்களும் அவர் ஊரில் இல்லை ; இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது. எனினும் இந்த விஷயத்தில் குறைந்தபட்ச நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். வங்கியின் இணையதளத்தில் புகாரைப் பதிவு செய்திருந்தாலோ சி பி கி ராம் ஸ் ல் புகாரைப் பதிவு செய்திருந்தாலோ மிக எளிதில் இந்த விஷயத்தை ‘’கேஸ் குளோஸ்’’ செய்து விடுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு கேஸ் என்பது ஒரு எண் ; ஒரு எண்ணிக்கை. இந்த மாதம் 100 புகார்கள் பதிவாயின ; இந்த மாதமே 100 புகார்களுக்கும் தீர்வு கண்டு கேஸ் குளோஸ் செய்தோம் என கணக்கு காட்டுவார்கள். எனவே இம்முறை விரைவுத் தபாலில் அனுப்பி வைத்தேன். இப்போது இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்துக்கும் எனக்கும் இடையில் இந்த விஷயம் இருக்கிறது. கிளை அலுவலகத்துடனோ அல்லது பிராந்திய அலுவலகத்துடனோ நான் பேச வேண்டும் என அவசியம் இல்லை. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் விபரம் கோரினால் தலைமை அலுவலகம் எல்லா அலுவலகங்களுக்கும் அனுப்பிய கடிதங்களை முழுக்க அளிக்க வேண்டியிருக்கும். இந்தியன் வங்கி அளிக்கும் தீர்வு எனக்குத் திருப்தியில்லை என்றால் நான் ரிசர்வ் வங்கியின் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு செல்ல உள்ளேன். அப்போது சம்பந்தப்பட்ட வங்கியின் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு சென்றிருந்தால் தான் அதனை எடுப்பார்கள். அப்போது தலைமை அலுவலகம் பதில் சொல்லும் நிலைக்கு வரும். இந்த விஷயத்தை சரியாக அணுகி மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ரிசர்வ் வங்கிக்கு செல்வேன் என்பதையும் அந்தக் கடிதத்திலேயே குறிப்பிட்டிருந்தேன்.
என் கடிதத்தின் உணர்வையோ அதில் இருக்கும் நியாயத்தையோ வங்கியைச் சேர்ந்தவர்கள் காண மாட்டார்கள். ஒரு சாமானிய வாடிக்கையாளன் ஓர் அசௌகர்யத்தை ஏற்படுத்தி விட்டானே என்பது தான் வங்கியைச் சேர்ந்த அனைவரின் எண்ணமாக இருக்கும். அவர்கள் எளிதில் ஒரு அணியாக மாறுவார்கள். அவர்களுக்கு வாடிக்கையாளர்களை பல ஆண்டுகள் எதிர்கொண்டதன் அனுபவம் இருக்கும். ஒவ்வொரு நிகழ்வும் எவ்விதம் எதிர்கொள்ளப்பட்டன என்னும் நினைவுகள் இருக்கும். அவை அவர்களுக்குள் எளிதில் பரிமாறிக் கொள்ளப்படும். வங்கி நிர்வாகம் கூட்டாகவே எந்த விஷயத்தையும் எதிர்கொள்ளும். இன்னும் சொல்லப் போனால் பிழை இழைத்த தவறிழைத்த ஊழியர்களுக்கு ஆதரவாகவே நிர்வாகம் நடக்கும் ; அதன் மூலம் மொத்த ஊழியர்களின் நன்மதிப்பைப் பெற முயலும்.
இந்த விஷயத்தில் நிறைய ‘’டாகுமெண்டல் எவிடென்ஸ்’’ இருக்கின்றன. வாடிக்கையாளர் வங்கிக்குச் சென்ற நேரம் , ‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பம் அளித்த நேரம் ஆகியவை சி சி டி வி காட்சிகளில் பதிவாகியுள்ளது. வாடிக்கையாளர் விண்ணப்பத்தை அளித்த நேரம் காலை 11.30 மணி. அந்த விண்ணப்பம் அன்றைய ‘’ஃபாரெக்ஸ்’’ நேரத்தைக் கடந்து மாலை 3.30க்கு உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு விண்ணப்பம் 4 மணி நேரம் தாமதமாக உள்ளீடு செய்யப்பட்டது என்பது பெரும் பிழை. அந்த விண்ணப்பம் அடுத்த நாள் மாலை 6.45க்கு மட்டுமே பிராசஸ் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்துமே டிஜிட்டலாக பதிவாகியிருக்கும் பதிவுகள். தகவல் பெறும் உரிமைச்சட்டம் மூலம் விபரம் கோரி இவற்றைப் பெற முடியும். வங்கி தன் ஊழியரைக் காக்க முயன்றால் கூட ரிசர்வ் வங்கி ஆம்டஸ்மன் நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளும்.
நேரம் இரவு 9.30 ஆகியிருந்தது. புறப்படுகிறேன் எனக் கூறி புறப்பட்டேன். வாய்மொழியாக அளிக்கப்படும் எந்த வாக்குறுதியையும் ஏற்கக் கூடாது என இருக்கிறேன்; எதுவாக இருந்தாலும் எழுத்துப்பூர்வமாகக் கொடுங்கள் எனக் கேட்க உள்ளேன். பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு இது ஒரு பயிற்சி ; அனுபவம் என எடுத்துக் கொள்ள வேண்டும் என எண்ணினேன்.
ஒரு புதிய நண்பர்
நேற்று ஊருக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் ஒருவரைச் சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது. அவருடன் 15 நிமிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர் கிராமத்தில் ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளை முன்னெடுக்க வாய்ப்பு இருக்குமா என பரிசீலித்தோம். அவருக்கு ஒரு கடிதம் எழுதுகிறேன் என்று கூறினேன்.
அன்புள்ள நண்பருக்கு,
நமது பண்பாடு மண்ணிலும் கல்லிலும் மரத்திலும் இயற்கையிலும் உறைந்திருக்கும் இறைமையை மானுடரை உணரச் சொல்கிறது. இயற்கையை உணர்பவனும் அறிபவனும் ஆராதிப்பவனுமே இறைமையின் முற்றத்துக்குச் சென்றடைகிறான் என்பது நம் பண்பாட்டின் புரிதல்.
‘’காவிரி போற்றுதும்’’ ஒரு கிராமத்தை ஒரு தேசம் என்றே காண்கிறது. குறியீட்டுரீதியில் ஒரு கிராமத்துக்குச் செய்யும் பணி என்பது தேசம் முழுமைக்கும் செய்யும் பணியே ஆகும்.
நமது கிராமத்தில் நம்மால் பல பணிகளை முன்னெடுக்க முடியும். எளிய அடிப்படையான பணிகள். எனினும் பெருவலிமை கொண்ட அடித்தளமாய் அமைய வாய்ப்புள்ள பணிகள்.
ஒரு கிராமத்தில் தோராயமாக 500 குடும்பங்கள் இருக்கின்றன எனக் கொள்வோம். அந்தக் குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கோ சிறுவர்களுக்கோ சிறுமிகளுக்கோ தங்கள் தோட்டத்தில் பலா, நெல்லி, நாவல், பப்பாளி, விருட்சி, நந்தியாவட்டை, வில்வம் ஆகிய மரக்கன்றுகளை வளர்க்க ஆவல் இருக்கக் கூடும். அதற்கான வாய்ப்பு அமையாமல் இருந்திருக்கும். ‘’காவிரி போற்றுதும்’’ ஒரு கிராமத்தின் 500 வீடுகளையும் நேரடியாக அணுகி அவர்களுக்குத் தேவையான மரக்கன்றுகள் எத்தனை எவை எவை என்னும் கணக்கெடுப்பை மேற்கொள்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் சராசரியாக ஒரு உதாரணத்துக்கு 20 மரக்கன்றுகள் வேண்டும் எனக் கூறினால் அந்த கிராமத்தில் சட்டென 10,000 மரங்கள் நடப்பட ஒரு வாய்ப்பு உருவாகிறது அல்லவா? அந்த வாய்ப்பு மிகவும் மங்களகரமானது என்பது ‘’காவிரி போற்றுதும்’’ எண்ணம். அந்த மரக்கன்றுகளை அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் நட்டு வளர்த்துக் கொள்ள நாம் வழங்குவோம்.
மரங்களைத் தேர்ந்தெடுப்பதில் மரங்களை நடுவதில் மரங்களுக்கு நீர் வார்ப்பதில் நாம் மக்களுக்கு அடிப்படையான சில விஷயங்களைச் சொல்லித் தர வேண்டியிருக்கிறது. 10,000 மரங்களுமே சிறப்பாக வளர அந்த வழிகாட்டல்கள் அவசியம். இருப்பினும் 500 அல்லது 1000 ஆயிரம் பேருக்கு அந்த வழிகாட்டலை அளிப்பது என்பது அதிக நாட்களையும் அதிக நேரத்தையும் எடுத்துக் கொள்ளும் பணி. இருப்பினும் அந்தத் தொடர்பு கொள்ளல் நம் நோக்கங்கங்களை முழுமை செய்யும் என்பதுடன் கிராமத்தின் மொத்த மக்களையும் இணைக்கும் செயலாகவும் இருக்கும்.
முதல் கட்டமாக கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மரக்கன்றுகள் கொடுத்து அவை ஓராண்டில் கணிசமான அளவில் வளர்ச்சி பெற்றன என்றால் அந்தக் கிராமத்தின் மக்களைக் கொண்டே ஊரின் பொது இடங்களில் நிழல் மரங்களையும் பூமரங்களையும் பெரிய அளவில் நட முடியும். நாம் மரங்களை மட்டும் நடவில்லை ; மக்கள் மனங்களில் நம்பிக்கையையும் ஒற்றுமையையும் நடுகிறோம்.
‘’ஒன்று கூடி சிந்தியுங்கள் ; சேர்ந்து அமர்ந்து விவாதம் செய்யுங்கள் ; உங்கள் மனம் ஒன்றாகட்டும்’’ என்கிறது நம் மறை.
‘’காவிரி போற்றுதும்’’ இவ்விதமான பணிகளை சில கிராமங்களில் வெற்றிகரமாக முன்னெடுத்திருக்கிறது. எனவே ‘’காவிரி போற்றுதும்’’ இப்பணிகளை எவ்விதம் வெற்றிகரமாக முன்னெடுப்பது என்பதில் பயிற்சியும் அனுபவமும் பெற்றிருக்கிறது. அதன் விளைவாக எதனை முன்னே செய்வது எதனை அடுத்து செய்வது எனத் திட்டமிடுவதிலும் தேர்ச்சி கொண்டிருக்கிறது.
தங்கள் கிராமத்தில் தங்களுடன் இணைந்து செயல்படுவது மிகவும் மகிழ்ச்சிகரமானது. நாம் சேர்ந்து சிந்திப்போம் ; சேர்ந்து விவாதிப்போம். நம் இலக்கை சேர்ந்து அடைவோம். ‘’காவிரி போற்றுதும்’’ புரிதல்களில் முதன்மையானது ‘’ஒற்றுமையே வலிமை’’ என்பதேயாகும்.
அன்புடன்,
அமைப்பாளர்
‘’காவிரி போற்றுதும்’’
விசாரணையும் முடிவுகளும்
Sunday, 2 August 2026
அம்மை அப்பன்
இன்று காலை சிதம்பரத்தில் கடலூர் சீனு அவர்களைச் சந்தித்தேன். கால்பந்து ஆடும் சிறுவனின் ‘’விசா’’ நடைமுறைகளுக்கு அவனது குடும்பத்தில் யாராவது ஒருவரின் வங்கிக் கணக்கில் ஒரு பெரும் தொகை குறைந்தபட்சம் 3 மாதங்களுக்காகவாவது ‘’டெபாசிட்’’ ஆகியிருக்க வேண்டும். அது ஒரு வழக்கமான நடைமுறை. எனது நண்பர்கள் அனைவரிடமும் உதவி கேட்டிருக்கிறேன். உதவி கேட்பது அடிப்படை விஷயம். அது நிகழ்ந்தது என்றால் தான் உதவி கிடைப்பது அடுத்து நடக்கும். எத்தனை பேரிடம் உதவி கேட்க முடியுமோ அத்தனை பேரிடமும் கேட்டிருக்கிறேன். நான்கு பேர் உதவி செய்ய முன்வந்தால் கூட எளிதாக இருக்கும். 10 பேர் உதவ முன்வந்தால் மிக எளிதாக இருக்கும். கடலூர் சீனு கடந்த 3 வாரங்களாக நீண்ட தூரப் பயணங்களில் இருந்தார். அவ்வப்போது குறுஞ்செய்தி மட்டும் அனுப்பினேன். கடலூர் சீனுவைப் போல் உணர்வு நுட்பம் கொண்ட இன்னொருவரைப் பார்க்க முடியாது. நாங்கள் சந்தித்துக் கொண்டால் எங்களுக்குள் பேசிக் கொள்ள வேண்டிய அவசியமே இருக்காது. பெரும்பாலும் பேசிக் கொள்ளவும் மாட்டோம். எங்களைச் சுற்றி இருக்கும் சூழலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம். எனக்கும் அவருக்கும் பல விஷயங்களில் ஒரே விதமான சிந்தனை இருக்கும். மாறுபாடு இருக்கும் விஷயங்கள் மிகச் சில. மாறுபடும் விஷயத்தில் அவர் பார்வை என்ன கோணம் என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.
கால்பந்து ஆடும் சிறுவன் கல்லூரி சேர்க்கை விஷயத்தில் சீனு பெருமளவு உதவக் கூடிய நபர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் பேசியிருக்கிறார். மிக நல்ல விஷயம் அது. மிக நல்ல உதவியும் கூட. அடுத்த 3 மாதங்களுக்கு பணம் வங்கிக் கணக்கில் இருக்க வேண்டும். கடலூர் சீனு ஒருவரே ஏற்பாடு செய்வதை விட மேலும் சிலரும் இந்த உதவியில் இணைந்தால் சிறப்பாக இருக்கும் என நான் எண்ணுகிறேன். கூட்டுப் பொறுப்பு ஏற்றுக் கொண்டால் பெரிய பாரம் இருக்காது. நாங்கள் உள்ளது உள்ளபடி நிலைமையை பேசிக் கொண்டோம். நாங்கள் சந்தித்து பேசிக் கொண்ட இடம் சிதம்பரம் நடராஜர் ஆலயம். நாங்கள் சிதம்பரத்தில் எப்போது சந்தித்தாலும் நடராஜர் ஆலயத்தில் தான் சந்திப்போம். கோவிந்தராஜப் பெருமாளும் அங்கே இருப்பார் என்பது மேலும் சிறப்பு. எங்கள் இருவருக்குமே சிதம்பரம் கோவிலில் இருப்பது பிடிக்கும். பல மாவட்டக்காரர்களும் பல மாநிலக்காரர்களும் சிதம்பரம் ஆலயத்துக்கு வருவார்கள் என்பதால் சிதம்பரம் எப்போதுமே சிறப்பு மிக்க ஓர் ஆலயம். பெருமாளிடமும் நடராஜரிடமும் சிறுவனுக்காக வேண்டிக் கொண்டோம். நடராஜர் ஆலயத்தில் 3 மணி நேரம் இருந்தோம். நேரம் 12.30 ஆகி விட்டதால் தில்லை காளியம்மன் கோவில் செல்ல முடியவில்லை. அவர் கடலூரிக்கும் நான் ஊருக்கும் புறப்பட்டோம். ஊர் வந்து ‘’வீடடைந்தேன்’’ என குறுஞ்செய்தி அனுப்பினேன். சீனு ‘’குடிகாட்டைக் கடக்கிறேன்’’ எனப் பதில் அனுப்பினார். இன்று மாலை கதிராமங்கலம் வனதுர்க்கையை வணங்கினேன்.
கடலூர் சீனு உடனிருப்பது கால்பந்து ஆடும் சிறுவனின் விஷயத்தில் எனக்கு பெரும் துணையாக உள்ளது.
உத்தேசம் (நகைச்சுவை)
நேற்று மகாதானத் தெரு தென்கோடிக்கும் வடகோடிக்கும் இடையே இருக்கும் தூரம் 700 மீட்டர் எனக் கூறியிருந்தேன். இன்று காலை நடைப்பயிற்சிக்கு செல்லும் போது இரு சக்கர வாகனத்தின் ஸ்பீடாமீட்டர் அளவுபடி அளந்து பார்த்தேன். மகாதானத் தெருவில் நீளம் 700 மீட்டர் தான்.
Saturday, 1 August 2026
மனச்செயல்
மனம் என்பதை மனச்செயல் என்று கூறுவார்கள்.
இன்று காலை நடைப்பயிற்சியின் போது அதனை உணர்ந்தேன். இன்று உணர்ந்ததை மிக முக்கியமானதாக நினைக்கிறேன். ரியல் எஸ்டேட் தொடர்பான பல விஷயங்கள் மனதில் நிறைந்திருக்கின்றன. அவை பெருகிக் கொண்டேயிருக்கின்றன. லௌகிகத்தில் அது இயல்பானது. என்றாலும் இன்று அதிகாலையிலேயே அவ்விதம் இருந்தது புதிதாக இருந்தது. இன்று காலை 3 மணி 30 நிமிடம் நடந்தேன். மனம் தன் பல்கிப் பெருகும் செயலிலிருந்து அமைதி கொண்டது 2 மணி 30 நிமிடத்துக்குப் பிறகு தான். கடைசி ஒரு மணி நேரம் மனதில் எழும் எண்ணங்கள் மிக மெதுவானதாக ஆகி விட்டன. அடர்த்தி குறைவான விஷயங்களே மனதில் உதித்தன. உடல் சோர்வுற்றதைப் போல மனமும் சோர்வு கொண்டது. மிக வேகமாக இயங்கிக் கொண்டிருந்த மனம் சோர்வு கொண்டு மெதுவாக ஆனதை விரும்பினேன். அதன் பின் நாள் முழுவதும் மனம் அமைதியாக இருந்தது.
எனக்கு எப்போதுமே மனதை கவனிக்கும் வழக்கம் உண்டு.
ஒரு பேருந்தில் பயணிக்கும் போது மனம் ஒரு விதமாக இருக்கும் ; ரயிலில் பயணிக்கும் போது ஒரு விதமாக இருக்கும் ; இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது ஒரு விதமாக இருக்கும் ; பிரியமான ஒருவருடன் பேசும் போது ஒரு விதமாக இருக்கும்; நம்மை அசௌகர்யமாக உணரும் ஒருவருடன் பேசும் போது மனம் ஒரு விதமாக இருக்கும். ஒரு இரைச்சல் கேட்கும் போது மனம் ஒரு விதமாக இருக்கும். ஒரு குழந்தையிடம் பேசும் போது ஒரு விதமாக இருக்கும். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
நான் சொல்கிறபடி மனம் கேட்கிறதா? மனம் சொல்கிறபடி நான் கேட்கிறேனா? எனக்குள் இருக்கும் மனம் ஒன்று தானா? எனக்குள் பல மனங்கள் இருக்கின்றனவா?
இவ்விதமான கேள்விகள் எழுந்தன. இவ்விதம் கேள்விகள் எழுந்தது நல்ல விஷயம் என்று தான் எண்ணினேன். ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என ஆர்வம் எழுந்தால் அதைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு உருவாகிறது அல்லவா?
இன்று காலை மனதில் பிரவாகித்த பல எண்ணங்களில் ஒரு பகுதியைத் தான் இன்று காலை எழுதினேன்.
மனம் பற்றி மேலும் எழுதுகிறேன்.
உறக்கத்தை விட நடைப்பயிற்சி மேலானது (நகைச்சுவைக் கட்டுரை)
Friday, 31 July 2026
இந்தியன் வங்கி தலைமை நிர்வாக அதிகாரிக்கு ஒரு கடிதம்
கீழ்க்கண்ட கடிதத்தை ஆங்கிலத்தில் இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு விரைவுத் தபாலில் அனுப்பியுள்ளேன். அதன் நகலை மத்திய நிதியமைச்சருக்கு விரைவுத் தபாலில் அனுப்பியுள்ளேன்.
@@@@
&&&
&&
To
தலைமை நிர்வாக அதிகாரி
இந்தியன் வங்கி
சென்னை
ஐயா,
பொருள் : இந்தியன் வங்கியின் ‘’ஸ்விஃப்ட்’’ படிவத்தில் ஒப்புகைச்சீட்டு வசதி செய்து கொடுக்க விண்ணப்பம்
இத்துடன் தங்கள் பார்வைக்காக இந்தியன் வங்கியின் ‘’ஸ்விஃப்ட்’’
படிவத்தையும் பாரத ஸ்டேட் வங்கியின் ‘’ஸ்விஃப்ட்’’ படிவத்தையும் இணைத்துள்ளேன். ஸ்டேட்
வங்கி படிவத்தில் ‘’ஒப்புகைச் சீட்டு’’ வசதி இருப்பதையும் இந்தியன் வங்கி படிவத்தில்
‘’ஒப்புகைச் சீட்டு’’ வசதி இல்லாமல் இருப்பதையும் காணலாம். இக்கடிதத்தை தொடங்கும் இத்தருணத்திலேயே
இந்தியன் வங்கி ‘’ஸ்விஃப்ட்’’ படிவங்கள் இனி வாடிக்கையாளருக்கு ‘’ஒப்புகைச் சீட்டு’’
வழங்கும் வசதி கொண்டதாக இருக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.
***
இந்தக் கடிதம் நீண்டது. சற்று உணர்வுபூர்வமானதும் கூட. உணர்வின்
அம்சங்கள் இன்றி தர்க்கபூர்வமாகவே இந்த விஷயத்தை அணுக வேண்டும் ; இந்த விஷயம் தொடர்பான
கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என எண்ணுகிறேன். இருப்பினும் இந்தக் கடிதம் எழுதப்படுவதற்கு
காரணமான சம்பவத்தை முன்வைக்காமல் போனால் இக்கடிதம் ஏன் உணர்வுபூர்வமான அம்சங்களையும்
கொண்டிருக்கிறது என்பது விளக்கப்படாமலேயே போகும். இந்தியன் வங்கிக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்குமான
உறவு உணர்வுபூர்வமான உறவும் கூட என்பதை அதன் தலைமை நிர்வாக அதிகாரியான தாங்கள் ஏற்பீர்கள் என நம்புகிறேன்.
***
வங்கித்துறையின் பல பொறுப்புகளை வகித்து இன்று தாங்கள் இந்தியன்
வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி என்னும் உயர் பதவியை அடைந்திருக்கிறீர்கள். வங்கி நடைமுறைகள்
அனைத்திலும் நீங்கள் ஆழங்கால் பட்டவராக இருப்பீர்கள். ஒரு எளிய விஷயத்தை தங்கள் கவனத்துக்குக்
கொண்டு வருகிறேன்.
ஒரு வாடிக்கையாளர் வங்கிக்கு வருகிறார். வங்கி எழுது மேஜையில்
இருக்கும் ‘’பே இன் சிலிப்’’ நிரப்பி தனது பாஸ் புத்தகத்துடன் வங்கி சாளரத்தில் தருகிறார்.
அந்த ‘’பே இன் சிலிப்’’ 25 சதவீத இடம் ஒப்புகைச் சீட்டுக்கும் 75 சதவீத இடம் வங்கி
உபயோகத்துக்கும் உரியது. சாளரத்தின் எழுத்தர் படிவத்தைச் சரிபார்த்து வங்கி முத்திரையிட்டு
வாடிக்கையாளர் தரும் பணத்தை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைத்து விட்டு ஒப்புகைச்சீட்டை
வாடிக்கையாளரிடம் கொடுத்து விடுவார் அல்லவா? இதுதானே வங்கி நடைமுறை. அனேகமாக உலகில்
வங்கி என்னும் ஸ்தாபனம் துவங்கிய நாள் முதல் நிகழும் வங்கி முறைமையாகவும் வங்கி என்னும்
ஸ்தாபனத்தில் முதல் வங்கி முறைமையாகவும் இந்த ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறை இருந்திருக்கும்
அல்லவா? இந்த முறை இருப்பதால் தான் வாடிக்கையாளர்
வங்கிக்கு வந்து பணம் செலுத்தினார் என்பதற்கான அத்தாட்சி அவர் கையில் இருக்கிறது.
இந்த முறை இல்லையென்றால் வாடிக்கையாளர்கள் பணம் வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில்
வரவு வைக்கப்படாமல் முறைகேடுகள் மிக சாதாரணமாக நடக்கும் அல்ல்வா? ஒப்புகைச்சீட்டு மட்டுமே
இன்ன வாடிக்கையாளர் இன்ன தேதியில் வங்கிக்கு வந்தார் ; தனது கணக்கில் பணம் செலுத்தினார்
என்பதற்கான ஆதாரம் அல்லவா? வாடிக்கையாளரிடம் ஒப்புகைச்சீட்டு இல்லை என்றால் அவர் வங்கிக்கே
வரவில்லை என்று சொல்லி விடலாம் அல்லவா? வங்கி வாடிக்கையாளரின் நலனைக் காக்க ஒப்புகைச்சீட்டுக்கு
அப்பாலும் முறைகேடுகள் நடக்காமல் இருக்க பல முன்னேற்பாடுகளையும் முன்னேற்பாட்டு முறைமைகளையும்
செய்துள்ளது என்றாலும் ஒப்புகைச்சீட்டு என்பது வாடிக்கையாளர் கையில் இருக்கும் அடிப்படை
ஆதாரம் என்பதை தாங்கள் ஏற்பீர்கள் என நம்புகிறேன்.
***
நான் வசிக்கும் பகுதியில் 78 வயதான முதிய பெண்மணி ஒருவர்
இருக்கிறார். அவரது மூத்த மகன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இயற்கை எய்தினார். இறந்து
போன தனது மூத்த மகனின் மகனான தனது பேரன் ஐரோப்பியக் கல்லூரி ஒன்றில் சேர்க்கை அனுமதி
பெற்றதற்காக ஐரோப்பாவில் இருக்கும் கல்லூரிக்கு தனது கணக்கிலிருந்து பணம் அனுப்ப
28.07.2026 அன்று காலை 10.30 மணிக்கு மயிலாடுதுறை இந்தியன் வங்கிக்கு வந்தார். 78 வயதான
மூத்த குடிமகள் என்பதால் அவருக்கு வங்கி நடைமுறைகளில் உதவ அவர்களின் குடும்ப உறுப்பினர்கள்
சிலரும் அவர்களின் குடும்ப நண்பனான நானும் வந்திருந்தேன். ( மயிலாடுதுறை இந்தியன் வங்கிக்
கிளையின் 28.07.2026 அன்று முழு நாளைய சி சி டி வி காட்சிகளை தங்கள் அலுவலகம் கோரிப்
பெற்று நான் கூறுவதை உறுதி செய்து கொள்ளலாம்). அந்தப் பெண்மணியிடம் ‘’ஸ்விஃப்ட்’’ நடைமுறைக்கு
வங்கி கோரிய அனைத்து ஆவணங்களும் இருந்தன. தன்னுடைய ஆதார் நகல், தன்னுடைய பான் கார்டு
நகல், தன்னுடைய கேன்சல் செய்யப்பட்ட இந்தியன் வங்கி காசோலை, தனது பேரனின் பாஸ்போர்ட்
நகல், தனது பேரனின் ஆதார் நகல், தனது பேரனின் பான் கார்டு நகல், தனது பேரனின் கல்லூரி
சேர்க்கை அனுமதி கடிதம், தனது பேரனின் கல்லூரிக் கட்டண விபரங்கள் ஆகியவை அவரால் வங்கி துணை மேலாளரிடம் காலை 11.30 மணி அளவில் ஒப்படைக்கப்பட்டன. இந்தியன் வங்கியின் ‘’ஸ்விஃப்ட்’’ படிவத்தில் வாடிக்கையாளரால் நிரப்பப்பட
வேண்டிய அனைத்து விபரங்களும் அந்த 78 வயதான மூதாட்டியால் நிரப்பப்பட்டிருந்தன. இந்தியன்
வங்கி ஸ்விஃப்ட் படிவத்தில் ‘’ஒப்புகைச்சீட்டு’’க்கான இடம் இல்லை என்பதை இத்துடன் இணைத்துள்ள
படிவம் மூலம் அறியலாம். ஆதலால் ஒப்புகைச்சீட்டு எவ்விதத்தில் வழங்கப்படும் என அந்த
மூதாட்டியோ மூதாட்டி உடன் வந்த நாங்களோ அறிந்திருக்கவில்லை. நாங்கள் ‘’ஸ்விஃப்ட்’’
விண்ணப்பம் அளித்ததற்கு ஒப்புகைச்சீட்டு கேட்டோம். மதியம் 3 மணிக்கு வருமாறு கூறினார்கள்.
மதியம் 3 மணிக்கு சென்று கேட்டோம். மாலை 5.30 மணிக்கு வருமாறு கூறினார்கள். மாலை
3.30 உடன் வங்கி வேலை நேரம் முடிந்து விடுமே என பதட்டம் அடைந்தோம். அன்றைய பொழுது முழுவதுமே
எங்கள் கணக்கிலிருந்து ஐரோப்பிய கல்லூரிக்கு செலுத்த வேண்டிய தொகை எங்கள் கணக்கிலிருந்து
எடுக்கப்படவில்லை. மறுநாள் 29.07.2026 அன்று முழு நாள் பொழுதும் பலமுறை வங்கிக்கு சென்று
28.07.2026 அன்று அந்த மூதாட்டி கொடுத்த ‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பத்தின் அடிப்படையில்
அந்த மூதாட்டியின் கணக்கிலிருந்து ஐரோப்பாவில் உள்ள கல்லூரிக்கு பணம் மாற்றப்பட்டு
விட்டதா எனக் கேட்டோம். அன்றைய வங்கி நேரமும் மாலை 3.30க்கு முடிந்தது. மாலை 6 மணிக்கு
வருமாறு கூறினார்கள். மாலை 6 மணிக்கும் மூதாட்டியின் கணக்கிலிருந்து பணம் மாற்றப்படவில்லை. ஐரோப்பிய
கல்லூரி நிர்வாகத்துக்கு நாங்கள் 28.07.2026 அன்று வங்கியில் ‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பம்
கொடுத்திருக்கிறோம் என தகவல் தெரிவித்திருந்தோம். நாங்கள் தகவல் தெரிவித்து 33 மணி
நேரம் கடந்த பின்னும் எந்த முன்னேற்றமும் இல்லை. எங்கள் விண்ணப்பத்தைப் பரிசீலித்து
எங்களுடன் தொடர்பில் இருந்தது மயிலாடுதுறை இந்தியன் வங்கியின் துணை மேலாளர் ஒருவர்.
28.07.2026, 29.07.2026 ஆகிய இரு தினமும் மயிலாடுதுறை இந்தியன் வங்கி கிளையின் மேலாளர்
டெபுடேஷனில் வெளியூர் சென்றிருந்தார். அவருக்கு ஃபோன் செய்து பேசினோம். 29.07.2026
அன்று மாலை 6.45 க்கு மூதாட்டியின் கணக்கிலிருந்து தொகை மாற்றப்பட்டிருக்கிறது என்னும்
குறுஞ்செய்தி வங்கியிடமிருந்து வந்ததால் ஆசுவாசமடைந்தோம்.
***
இந்த விஷயத்தை மேலோட்டமாகப் பார்த்தால் வெளிநாட்டுக்கு பணம்
அனுப்புவது பல கட்டங்களால் ஆனது என்பதால் ‘’ஸ்விஃப்ட்’’ முறையில் பணம் ஒரு கணக்கிலிருந்து
இன்னொரு கணக்குக்கு மாற கால அவகாசம் தேவை எனத் தோன்றும். ஆனால் இந்த விஷயத்தை சற்று
கூர்ந்து கவனிக்க வேண்டும். ஒவ்வொரு வங்கிக்கும் ‘’ஃபாரெக்ஸ்’’ என்னும் அன்னியச் செலாவணி
பரிவர்த்தனைக்கு ஒரு நேரம் இருக்கும் அல்லவா? இந்தியன் வங்கிக்கு மதியம் 2 மணியிலிருந்து
மதியம் 3 மணி வரை ‘’ஃபாரெக்ஸ்’’க்கான நேரம் என்றால் ஒரு வாடிக்கையாளர் காலை 11.30க்கு
‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பம் கொடுத்தால் அதனை வங்கி ஊழியர் மாலை 3.15க்கு உள்ளிடுவார்
என்றால் அன்றைய தினத்தின் ‘’ஃபாரெக்ஸ்’’ முடிந்து அது அடுத்த நாள் கணக்குக்கு சென்று
விடாதா? ஒரு வாடிக்கையாளர் மாலை 3.25க்கு ‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பம் கொடுத்தால் அது
அடுத்த நாள் கணக்கில் சேரும் எனக் கூறலாம். காலை 11.30க்கு கொடுத்ததை எவ்விதம் மாலை
3.15க்கு உள்ளிடலாம்? இது விதிமீறல் இல்லையா? இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது.
‘’ஃபாரெக்ஸ்’’ நாணய மதிப்புகள் நாளுக்கு நாள் மாறிக் கொண்டேயிருப்பவை. வெளிநாட்டு நாணயத்தின்
மதிப்பு உயர்ந்தால் முதல் நாள் விண்ணப்பத்தை இரண்டாம் நாள் உள்ளிடுவதால் வாடிக்கையாளருக்கு
பண இழப்பு ஏற்படாதா? ஒரு வாடிக்கையாளர் விண்ணப்பத்தை அவர் விண்ணப்பம் அளிக்கும் நாளன்றே உள்ளீடு செய்தால் அது ஒரு வங்கி முறைமை எனக் கொள்ள
முடியும். கிளையின் பணியான உள்ளீடு செய்தலையே அடுத்த நாள் அதற்கு அடுத்த நாள் என ஊழியர்கள்
தங்கள் வசதிக்கு செய்தால் அதனை ஒரு நாள் இரண்டு நாட்கள் ஒரு வாரம் ஒரு வருடம் எனத்
தாமதித்து அந்த நாட்களை இன்ஃபினிட்டி வரை கொண்டு செல்லலாம் என்றாகி விடுகிறது அல்லவா?
இந்நிலையைத் தான் இந்தியன் வங்கி நிர்வாகம் விரும்புகிறதா? இவ்விதமான வாடிக்கையாளர்
சேவையைத்தான் இந்தியன் வங்கி உயரதிகாரிகள் விரும்புகிறார்களா?
***
இந்தியாவின் தேசிய மயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள் சென்ற
நிதி ஆண்டில் 383 லட்சம் கோடி ரூபாய்க்கு வணிகம் செய்ததாக புள்ளிவிபரம் கூறுகிறது.
இத்தனை பெரிய வணிகம் நிகழ்த்தும் இந்திய பொதுத்துறை வங்கிகள் ‘’ஒப்புகைச் சீட்டு’’
போன்ற எளிய சேவையைக் கூட அளிக்க இயலாத நிலையிலா இருக்கின்றன? ஆண்டுக்கு 383 லட்சம்
கோடி வணிகம் கொடுக்கும் கோடானுகோடி வாடிக்கையாளர்களின் நலன் மீது பொதுத்துறை வங்கிகளின்
நிர்வாகத்துக்கு ஒரு ‘’ஒப்புகைச்சீட்டு’’ கூட வழங்க இயலாத அக்கறை தான் இருக்கிறதா?
***
நான் குறிப்பிட்டிருக்கும் மேற்படி சம்பவத்தை ‘’சு மோட்டோ’’
வாக இந்தியன் வங்கி நிர்வாகம் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
28.07.2026 அன்று 78 வயதான மூதாட்டியான வங்கி வாடிக்கையாளர் வங்கிக்கு வந்த நேரம்
, அவருக்கு உதவியாக வந்தவர்கள் விண்ணப்பம் அளித்த நேரம் , மயிலாடுதுறை இந்தியன் வங்கி
துணை மேலாளரால அந்த விண்ணப்பம் அவரது கணிணியில் உள்ளீடு செய்யப்பட்ட நேரம்,
29.07.2026 அன்று வாடிக்கையாளர் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்ட நேரம் ஆகியவற்றை
ஆராய்ந்து துணை மேலாளரான இந்தியன் வங்கி ஊழியர் 78 வயதான மூதாட்டி அளித்த ‘’ஸ்விஃப்ட்’’
விண்ணப்பத்தை வங்கி ஊழியர்களுக்கு அளித்திருக்கும் குறிப்புகளின் படி வங்கி சட்ட திட்டங்களின்
படி முறைப்படி உள்ளீடு செய்து பணம் மாற்றியிருக்கிறாரா என்பதை ஆராயுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
வங்கி ஊழியர் செயல்பட்ட விதத்தில் சட்ட திட்டங்கள் அனுசரிக்கப்படாமல் இருந்தால் வங்கி
அளித்திருக்கும் குறிப்புகள் படி மேற்படி ஊழியர் நடக்காமல் இருந்திருந்தால் அவர் மீது
வங்கி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 28.07.2026,
29.07.2026 ஆகிய இரு தினங்களும் வாடிக்கையாளரான 78 வயது மூதாட்டியும் அவர் உடன் வந்தவர்களும்
முழுமையாகப் பொறுமை காத்தோம். ‘’திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை’’என அமைதியாய் இருந்தோம்.
***
இந்தியன் வங்கி தலைமை நிர்வாக அதிகாரி அவர்களே!
அல்லற் பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
என்பது திருக்குறள். ஒரு வங்கி தலைமை நிர்வாக அதிகாரிக்கு நாட்டின் சாதாரண குடிமகன் ஒருவன் எழுதும் கடிதத்தில் திருக்குறள் மேற்கோள் காட்டப்படுவது அபூர்வமான ஒன்று தான். நாட்டின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யும் போது நிதி நிலை அறிக்கை உரையில் திருக்குறளும் அர்த்தசாஸ்திரமும் கபீரின் கவிதைகளும் இடம் பெறுவதை நாம் காண்கிறோம். எனவே வங்கி பொது மேலாளருக்கு எழுதப்படும் கடிதத்தில் ஒரு திருக்குறள் இடம் பெற்றிருப்பது இயல்பானது தான். அந்தத் திருக்குறளின் அர்த்தம் இதுதான் தலைமை நிர்வாக அதிகாரி அவர்களே. ‘’ துயரப்பட்டு நிர்கதியாக இருக்கும் ஒருவன் சிந்தும் கண்ணீர்த்துளி ஒரு நாட்டின் கருவூலத்தை இல்லாமல் ஆக்கும் பெரும் படையாக மாறும்’’ . 28.07.2026 அன்றும் 29.07.2026 அன்றும் இந்தியன் வங்கி மயிலாடுதுறை கிளைக்கு வந்த 40 ஆண்டு காலம் இந்தியன் வங்கி வாடிக்கையாளராக இருக்கும் 78 வயதான மூதாட்டி மௌனமாக அந்த இரு நாட்களின் சில பொழுதுகளேனும் வங்கி தமக்கு அளித்த சேவைக் குறைபாட்டை எண்ணி வங்கியின் செயலின்மையை எண்ணி கண்ணீர் சிந்தினார். அந்தக் கண்ணீருக்கு இந்தியன் வங்கி பிழையீடு செய்ய வேண்டும்.
***
இந்தக் கடிதத்தின் முடிவுப் பகுதியாக எனது கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.
1.
பாரத
ஸ்டேட் வங்கி ‘’ஸ்விஃப்ட்’’ படிவத்தில் உள்ளவாறு இந்தியன் வங்கி ‘’ஸ்விஃப்ட்’’ படிவத்திலும்
‘’ஒப்புகைச் சீட்டு’’ இருக்கும் விதமாக படிவத்தை இந்தியன் வங்கி வடிவமைக்க வேண்டும்.
2.
உலகில்
எந்த இந்தியன் வங்கிக் கிளைக்கு வாடிக்கையாளர் ‘’ஸ்விஃப்ட்’’ செய்ய வந்து தங்கள் ஆவணங்களை
அளிக்கும் பட்சத்தில் அவற்றை உடன் பரிசீலித்து வாடிக்கையாளருக்கு உடன் ஒப்புகைச்சீட்டு
வழங்க ஆவன செய்ய வேண்டும்.
3.
28.07.2026,
29.07.2026 ஆகிய இரு தினங்களும் மயிலாடுதுறை இந்தியன் வங்கியில் இந்தியன் வங்கியின்
40 ஆண்டு கால வாடிக்கையாளரான 78 வய்தான மூதாட்டி அளித்த ‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பம் மீதான
வங்கி துணை மேலாளரின் நடவடிக்கைகளை உரிய மேலதிகாரிகளைக் கொண்டு துறை ரீதியான விசாரணை
மேற்கொள்ள வேண்டும் ; சி சி டி வி காட்சிகள் , வங்கியின் கணிணி ஆவணங்கள் ஆகியவற்றைப்
பரிசீலித்து நிகழ்ந்த சேவைக் குறைபாடுக்கு பொறுப்பான துணை மேலாளர் மீது துறை ரீதியான
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
***
நாட்டின் சாமானியக் குடிமகனான நான் இந்தக் கடிதத்தை தபால்
மூலமாகவே அனுப்புகிறேன். இந்தக் கடிதம் இந்தியன் வங்கியின் பொது மேலாளரான தங்களைச்
சென்றடையுமா என்பது ஐயம். தங்கள் காரியதரிசியின் கவனத்துக்கு வர வாய்ப்பிருக்கிறது.
வங்கியின் குறைதீர் பிரிவு மற்றும் வங்கியின் மண்டல அலுவலகத்துக்கு தங்கள் அலுவலகத்திலிருந்து
பிரதி எடுத்து அனுப்பப்பட வாய்ப்புள்ளது. குறைந்தது இந்தியன் வங்கியின் உயரதிகாரிகள்
10 பேராவது இந்தக் கடிதத்தை வாசிக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு.
ஆண்டுக்கு 383 லட்சம் கோடி ரூபாய்க்கு வணிகம் அளிக்கும் நாட்டின் வங்கி வாடிக்கையாளர்களிடம்
வங்கி ஊழியர்கள் எவ்விதம் நடந்து கொள்கிறார்கள் என்பதை அறிய உதவும் உரைகல் இந்தக் கடிதம்.
இந்தக் கடிதத்தின் நகலை மத்திய நிதியமைச்சருக்கும் அனுப்புகிறேன்.
அங்கிருக்கும் உயர் அதிகாரிகளும் இந்தியன் வங்கியின் 40 வருட வாடிக்கையாளரான 78 வயது
மூதாட்டிக்கு இந்தியன் வங்கியின் மயிலாடுதுறை கிளையில் நிகழ்ந்த சம்பவம் குறித்து அறியட்டும்.
மயிலாடுதுறை இந்தியன் வங்கியின் 40 வருட வாடிக்கையாளரான
78 வயது மூதாட்டி 28.07.2026 அன்று காலை 10.30க்கு அளித்த ‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பத்தின்
படி அவர் வங்கிக் கணக்கிலிருந்து தொகை மறுநாள் 29.07.2026 அன்று மாலை 6.45 மணிக்கு
கிட்டத்தட்ட 32 மணி நேரம் கழித்து எடுக்கப்பட்டது. குறுஞ்செய்தியாக அவர் அதனை அறிந்தார்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள,
&&&
இடம் : மயிலாடுதுறை
நாள் : 31.07.2026
நகல்
மத்திய நிதியமைச்சர்
பாரத் சர்க்கார்
புதுதில்லி