இன்று மதியம் சீர்காழியிலிருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தேன். சோழசக்கர நல்லூர் அருகில் சைக்கிளில் சென்ற ஒருவரும் மோட்டார்சைக்கிளில் சென்ற ஒருவரும் மோதி இருவருக்கும் பலத்த அடி. இருவர் தலையிலும் ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. மக்கள் கூட்டமாகக் கூடியிருந்தனர். நான் வண்டியை நிறுத்தி விட்டு 108 ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்தேன். மயிலாடுதுறை தலைமை மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வரும் எனக் கூறினார்கள். சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் டிரைவர் எனக்கு ஃபோன் செய்தார். ‘’இருவருக்கு வலுவான் அடி. இருவர் தலையிலும் ரத்தம் கொட்டுகிறது. முதலுதவி அவசியத் தேவை ‘’ என்றேன். 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. ஒருவர் சிகிச்சை எடுக்க பைக்கின் பின்னால் அமர்ந்து சென்று விட்டார். இன்னொருவருக்கு ஆம்புலன்ஸ் மருத்துவப் பணியாளர்கள் முதல் உதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆம்புலன்ஸ் புறப்பட்டுச் சென்றதும் நான் கிளம்பினேன்.
பிரபு மயிலாடுதுறை
Thursday, 23 July 2026
விரிவான செய்திக் கட்டுரை
இன்று மதியம் தினமலர் நிருபர் ஃபோன் செய்தார். தினமலர் பத்திரிக்கை மைதானத்தில் கூடாரத்தில் வசிக்கும் 7 குடும்பங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் குறித்து விரிவான செய்திக் கட்டுரை கேட்டிருப்பதாகச் சொன்னார். நாளை காலை அங்கு சென்று முழு தரவுகளைச் சேகரிக்க உள்ளோம்.
பத்திரிக்கை செய்தி
ஏற்றம் பெறுமா ஏழு குடும்பங்கள்?
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், செம்பனார் கோவில் கிராமத்தில் காவல் நிலையத்துக்கு எதிரில் இருக்கும் மைதானத்தில் ஏழு பட்டியல் பழங்குடியினர் குடும்பத்தைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வடலூரைப் பூர்வீகமாகக் கொண்ட அவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக செம்பனார்கோவில் காவல் நிலையத்துக்கு எதிரில் இருக்கும் மைதானத்தில் வசிக்கின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதும் மூங்கில் கூடை முடைவதும் அவர்கள் தொழில் ஆகும். ஏழு குடும்பத்தைச் சேர்ந்த 50 பேரில் குழந்தைகள், சிறுவர் சிறுமிகள், இளைஞர்கள், இளம்பெண்கள் முதியவர்கள் ஆகியோரும் உள்ளனர்
அவர்கள் மைதானத்தின் தெற்குப் பகுதியில் பாலிதீன் ஷீட்களால் ஆன கூடாரங்களை அமைத்துக் கொண்டு வாழ்கின்றனர். கூடாரத்தின் தரை மண் தரை ஆகும். கூடாரத்தின் கூரையும் பக்கச்சுவர்களும் பாலிதீன் ஷீட்டால் ஆனவை. மின்சார வசதி இல்லை. இரவில் விளக்கு வசதி இல்லை. குழந்தைகள் சாலையில் இருக்கும் மின்விளக்கு வெளிச்சத்தில் படிக்கின்றன. சமையல் திறந்தவெளியில் விறகடுப்பு கொண்டு நடக்கிறது. சமையல் எரிவாயு இணைப்பு எவருக்கும் இல்லை. குளியலறை வசதி இல்லை. 7 குடும்பத்தைச் சேர்ந்த 50 பேருக்கும் கழிவறை வசதி இல்லை. பிளாஸ்டிக் பொருள் வணிகத்துக்குச் செல்லும் ஆண்கள் இரு சக்கர வாகனம் வைத்திருக்கின்றனர். அனைத்து குடும்பங்களும் அலைபேசி பயன்படுத்துகின்றனர். அலைபேசி பயன்படுத்துவதால் இணைய வசதி இருக்கிறது.
ஜூலை 19, ஞாயிற்றுக்கிழமை அன்று செம்பனார்கோவில் காவல் நிலையத்துக்கு எதிரில் வசிக்கும் ஏழு பட்டியல் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த 7 குடும்பத்தினர் மக்கள்தொகை கணக்கெடுப்பு சுய விபர இணையதளத்தில் தங்கள் குடியிருப்பின் நிலை குறித்து கேட்கப்பட்ட 33 கேள்விகளுக்கும் பதில் அளித்து மக்கள்தொகை கணக்கெடுப்பு சுய விபரப் பதிவு எண்ணைப் பெற்றனர்.
வீட்டின் தரை எதனால் ஆனது என்னும் கேள்விக்கு மண்ணால் ஆனது என்றும் வீட்டின் கூரையும் பக்கச்சுவரும் எதனால் ஆனது என்னும் கேள்விக்கு பாலிதீன் ஷீட்டால் என்றும் சொந்த வீடா வாடகை வீடா அல்லது மற்றவை என்னும் பகுப்பில் வரும் வீடா என்னும் கேள்விக்கு மற்றவை என்றும் விளக்கு வசதி இருக்கிறதா என்னும் கேள்விக்கு இல்லை என்றும் சமையலறை , குளியலறை, கழிவறை இருக்கிறதா என்னும் கேள்விக்கு இல்லை என்றும் பதிலைப் பதிவு செய்தனர். குடிநீர் ஆதாரம் என்ன என்னும் கேள்விக்கு ஊராட்சியின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் மூலம் சற்று தொலைவில் கிடைக்கிறது என பதிவு செய்தனர். இணைய வசதி உள்ளதா என்னும் கேள்விக்கு அலைபேசி மூலம் இணைய வசதி இருக்கிறது என்றும் பதிவு செய்தனர்.
நாட்டின் குடிமக்களாக அரசு எதிர்பார்க்கும் விதமாக மக்கள்தொகை கணக்கெடுப்பின் சுய விபரம் அளித்தலில் ஈடுபட்டிருக்கும் செம்பனார்கோவில் பட்டியல் பழங்குடியின 7 குடும்பங்களும் மாவட்ட நிர்வாகத்தையும் மாநில அரசையும் மத்திய அரசையும் தாங்கள் பதிவு செய்திருக்கும் தரவுகள் சென்றடையும் என நம்புகிறார்கள். சாமானிய வசதிகள் கூட இல்லாமல் வாழும் தங்கள் வாழ்நிலையை மக்கள்தொகை கணக்கெடுப்பின் சுய விபரப் பதிவு மாற்றியமைக்கும் என அந்த 7 குடும்பத்தினரும் தீவிரமாக நம்புகிறார்கள். அவர்கள் நம்பிக்கையை மெய்யாக்குவது மாவட்ட நிர்வாகம், மாநில மத்திய அரசுகள் கையில் இருக்கிறது.
சுய விபரப் பதிவு (நகைச்சுவைக் கட்டுரை)
நேற்று ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.
இப்போது யாரைச் சந்தித்தாலும் மக்கள்தொகை கணக்கெடுப்பு சுய விபரப் பதிவு செய்து விட்டீர்களா எனக் கேட்கிறேன். பலரும் இல்லை என்கிறார்கள். சிலர் நான் கேட்ட பிறகு அதனால் உந்தப்பட்டு செய்து விட்டு பின்னர் என்னிடம் தகவல் தெரிவிக்கிறார்கள்.
நண்பரின் வீட்டில் நண்பரும் அவரது மனைவியும் இருக்கிறார்கள். இருவருமே சீனியர் சிட்டிசன். குழந்தைகள் வெளியூரிலும் வெளிநாட்டிலும் வேலை பார்க்கிறார்கள்.
சிறிது நேர உரையாடலுக்குப் பின் ‘’மக்கள்தொகை கணக்கெடுப்பு சுய விபரப் பதிவு செய்து விட்டீர்களா’’ எனக் கேட்டேன்.
‘’வாட்ஸப் பில் நிறைய மெஸேஜ் இது பத்தி வந்தது. இன்னும் செய்யல’’ என்றார்கள்.
‘’உங்களோட ஐ பேட் கொடுங்க’’
’’ஐ பேட் , லேப் டாப் இரண்டையும் தம்பி கொண்டு போயிருக்கான்’’
‘’உங்க ஸ்மார்ட்ஃபோன் கொடுங்க’’
சற்று தயக்கத்துடனே கொடுத்தனர்.
எனக்கு இந்த சுய விபரப் பதிவில் நல்ல பழக்கம் இருப்பதால் சர சர என ஸ்மார்ட்ஃபோனில் இயங்க ஆரம்பித்தேன். அவர்கள் இருவருக்கும் இவன் சாதாரண ஜி எஸ் எம் ஃபோன் பயன்படுத்துபவன் தானே . ஸ்மார்ட்ஃபோனில் இவனால் 33 கேள்விகளுக்கும் பதில் சொல்லி எடுத்த காரியத்தை முழுக்க முடிக்கத் தெரியுமா அல்லது பாதி பிராசஸில் விஷயத்தை நிறுத்தி வைத்து விடுவானா என ஐயம். எனக்கு ‘’நாள் முழுவதும் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துகிறார்கள். என்ன ஏது என உள்நுழைந்து பார்த்தால் தான் என்ன’’ என்று எண்ணம்.
பெயரும் அலைபேசி எண்ணும் உள்ளிட்டு பக்கத்தைத் திறந்தேன். வீட்டின் அமைவிடத்தை கூகுள் மேப்பில் குறிக்க வேண்டும். முதல் முறை இணையத்தின் வேகம் ஒத்துழைக்கவில்லை ; இருவரும் சோர்ந்து விட்டார்கள். உடன் விரைவாக மீண்டும் உள்சென்று கூகுள் மேப்பில் வீட்டின் அட்ச ரேகையையும் தீர்க்க ரேகையையும் குறித்து விட்டேன். எல்லா கேள்விகளுக்கும் பதில் பதிவு செய்தேன். வீடு சொந்த வீடு. வீட்டின் தரை கல் ( மார்பிள்). வீட்டு வளாகத்தில் சுத்திர்கரிக்கப்பட்ட குடிநீர் இருக்கிறது. சமையல் எரிவாயு இணைப்பு உண்டு. பிரதான உணவு அரிசி. இணையம், டிவி, ரேடியோ, இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் உண்டு. பதிவு முடிந்தது.
சுய விபர எண் கிடைத்தது.
‘’இதை ஒரு நோட்ல எழுதி வச்சுக்கங்க. கணக்கெடுக்க வர்ரப்ப சொல்லுங்க’’ என்றேன்.
‘’ஸ்கிரீன் ஷாட் எடுத்துக்கறன்’’ எனக் கூறி எடுத்துக் கொண்டார்கள்.
கிஷோர்
திருவாரூர் வடக்கு வீதி முக்கில் ஒரு சிறுவன் என்னிடம் ‘’லிஃப்ட்’’ கேட்டான். பள்ளி மாணவன். சீருடை அணிந்திருந்தான்.
வண்டியை நிறுத்தி ஏற்றிக் கொண்டேன். ‘’ரொம்ப நன்றி அண்ணன்’’ என்றான்.
’’இப்பதானே டிராவல் ஆரம்பிச்சுருக்கோம். நீ போக வேண்டிய இடத்துக்கு கொண்டு போய் விட்டதும் நன்றி சொல்லு’’எனக் கூறி வாகனத்தை தொடர்ந்து இயக்கினேன்.
‘’உன் பேரு என்ன தம்பி’’
‘’கிஷோர்’’
‘’உன் பேருக்கு என்ன அர்த்தம்னு உனக்குத் தெரியுமா?’’
‘’பேருக்கு அர்த்தம் இருக்குமா அண்ணன். எனக்கு இந்த விஷயம் புதுசா இருக்கு அண்ணன்’’
‘’எல்லா பேருக்கும் ஒரு அர்த்தம் இருக்கும் தம்பி. ஒன்னு அது நவுனா இருக்கும் இல்லன்னா வெர்ப் ஆ இருக்கும். இப்ப ஒருத்தருக்கு பேரு ராஜன் அப்படின்னா ராஜ்யத்தை ஆள்றவன் அப்படின்னு அர்த்தம். ராஜ்யத்தை ஆள்றவன் ராஜன்’’
‘’என் பேருக்கு என்ன அர்த்தம்னு தெரியல அண்ணன்?’’
‘’நீ வேலைக்கு ஒரு இண்டர்வியூக்கு போனா உன் கிட்ட முதல் கேள்வியே உன் பேருக்கு என்ன அர்த்தம்னு கேப்பாங்க. உனக்கு தெரிஞ்சுருந்து நீ சொன்னா நீ பிரிபேர்டா வந்திருக்கன்னு அர்த்தம். தெரியலன்னு சொன்னா அவங்களுக்கு ஆரம்பத்துலய உன் மேல ஒரு அப்பர் ஹேண்ட் உருவாகும்.’’
‘’இதெல்லாம் இண்டர்வியூ ல கேப்பாங்களா அண்ணன்’’
‘’நிச்சயம் கேப்பாங்க.’’
‘’உங்களுக்கு என் பேருக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா அண்ணன்?’’
‘’கிஷோர். உன் பேருக்கு என்ன அர்த்தம்னா பிறந்த குழந்தையை சிசுன்னு சொல்வாங்க. 3 வயசு குழந்தையை பாலன்னு சொல்வாங்க, 10 வயசு இருக்கற குழந்தையை கிஷோர்னு சொல்வாங்க. 18 வயசானா தருண் - இளைஞன்னு சொல்வாங்க. கிஷோர்னா சிறுவன்னு அர்த்தம். இந்த பேரு ஸ்ரீகிருஷ்ணனைக் குறிக்கற பேரு. அவன் தான் சிசுவாவும் கடவுளாவும் இருந்தவன். பாலனாவும் கடவுளாவும் இருந்தவன். சிறுவனாவும் கடவுளாவும் இருந்தவன். இளைஞனாவும் கடவுளாவும் இருந்தவன். ராமனுக்கும் இந்த பேரு பொருந்தும் ஆனா கிருஷ்ணனுக்குத்தான் ரொம்ப பொருந்தும்.’’
’’அண்ணன் இதே மாதிரி வேற ஏதாவது பேருக்கு அர்த்தம் சொல்லுங்க’’
‘’ஜெய் அப்படின்னா வெற்றின்னு அர்த்தம். விஜய் அப்படின்னா புகழுடன் கூடிய வெற்றின்னு அர்த்தம்’’
‘’அண்ணன்! உங்களுக்கு நிறைய விஷயம் தெரிஞ்சுருக்கு அண்ணன்’’
‘’எந்த விஷயத்துலயும் ஆர்வமா இருக்கணும். ஆர்வம் இருந்தா நிறைய விஷயம் தெரிஞ்சுக்கலாம்’’
‘’உலகத்துல உள்ள எல்லா மொழிகள்ல இருக்கற பேருக்கும் அர்த்தம் உண்டா அண்ணன்’’
‘’நிச்சயம் உண்டு’’
கிஷோர் இறங்க வேண்டிய இடம் வந்தது. இறக்கி விட்டேன்.
கிஷோர் நன்றி சொன்னான்.
’’வீட்டுக்குப் போய் கூகுள் செஞ்சு கிஷோர் மீனிங் பாரு’’என்று கூறி விட்டு புறப்பட்டேன்.
Sunday, 19 July 2026
ஏழு குடும்பங்கள்
Saturday, 18 July 2026
நாம் எதிர்பார்ப்பது என்ன?
நான் வங்கி அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டவன். வங்கிகள் சமூக வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிப்பாற்ற முடியும் என்பதை உணர்ந்தவன். அந்த அடிப்படையிலேயே வங்கிகள் மீதும் வங்கிச் சேவைகள் மீதும் வங்கிப் பணியாளர்கள் மீதும் சேவைக் குறைபாடு தொடர்பான புகார்களை பதிவு செய்பவன்.
சென்ற ஆண்டு நம் நாட்டின் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் ஆண்டு வணிகம் ரூ.383 லட்சம் கோடி என புள்ளிவிபரம் கூறுகிறது. நம் நாட்டின் மொத்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 85,000. இந்த கணக்கீட்டின் படி ஒவ்வொரு வங்கிக் கிளையும் ஓராண்டுக்கு சராசரியாக 450 கோடி ரூபாய்க்கு வணிகம் புரிகின்றன. ஒரு மாதத்துக்கு ரூ.37.5 கோடி. ஒரு நாளைக்கு சராசரியாக 1.25 கோடி ரூபாய்க்கு ஒவ்வொரு வங்கியிலும் வணிகம் நடக்கிறது.
ஒரு நாளைக்கு ரூ.1,25,00,000 வணிகம் நடத்தும் வணிக நிறுவனம் போல் வங்கிகள் வாடிக்கையாளர்களை நடத்துகின்றனவா? வங்கிக்கிளைக்கு சென்ற ஒரு வாடிக்கையாளரை எந்த வங்கி ஊழியராவது ‘’வருக வருக’’ எனக் கூறி வரவேற்றது உண்டா? இவர்கள் நடத்தும் வணிகத்துக்கு பணம் தருபவர்கள் வாடிக்கையாளர்களாகிய பொது மக்கள். ஒரு வட்டிக்கடைக்காரர் கூட தன்னுடைய சொந்த பணத்தை வட்டிக்கு விடுகிறார். வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் குறைந்த வட்டிக்கு வாங்கி வாடிக்கையாளர்களிடம் அதிக வட்டிக்கு கடன் கொடுக்கின்றன. வட்டிக்கடைக்காரர் அளவுக்கு கூட வங்கிகளுக்கு சிரமம் இல்லை.
வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அடிப்படை வங்கிச் சேவையைக் கூட திருப்தியாக அளிப்பது இல்லை. ஒரு பெட்டிக்கடை வைத்திருப்பவர் கூட சிறப்பான கனிவான வாடிக்கையாளர் சேவையை அளிக்கிறார். அதனால் தான் வணிகத்தில் நிலைத்திருக்கிறார். ஆண்டுக்கு 383 லட்சம் கோடி வணிகம் செய்யும் வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான கனிவான சேவையை அளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது இயல்பானது தானே?
Friday, 17 July 2026
மக்கள்தொகை கணக்கெடுப்பு
இன்று இணையம் மூலமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரும் விபரங்களை அளித்தேன்.
1980கள் அச்சு ஊடகங்களின் காலம். மத்திய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக அளிக்கும் விளம்பரங்கள் தினமணியில் வெளியாகும். வீடு வீடாகக் கணக்கெடுக்க வரும் அரசு ஊழியர் கேட்கும் விபரங்களை அளித்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவுங்கள் எனக் கோரும் நாளிதழின் கால் பக்க விளம்பரங்கள் பசுமையாக நினைவில் இருக்கின்றன.
இன்று இணையம் மூலம் மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரும் விபரங்களைப் பதிவு செய்தேன். மிக எளிய வடிவமைப்பு கொண்ட பக்கம். மிக எளிதாக விபரங்கள் நிரப்பலாம். பொதுமக்கள் அனைவரும் சுயமாக தங்கள் அலைபேசி மூலமோ அல்லது கணினி மூலமோ இதனை மேற்கொண்டால் ஊழியர்களுக்கு நேரமும் உழைப்பும் கணிசமாக மிச்சமாகும்.
மிக எளிய கேள்விகளும் மிக அடிப்படையான விபரங்களும் மட்டுமே கோரப்பட்டுள்ளன. எனினும் அவற்றிலிருந்து ஒரு ஊரின் ஒரு தாலுக்காவின் ஒரு ஜில்லாவின் ஒரு மாநிலத்தின் மக்கள் வாழ்நிலையை எளிதில் உய்த்துணரலாம்.
வீட்டுக்கூரை எதனால் ஆனது என ஒரு கேள்வி. நம் நாட்டில் பல மாநிலங்கள் 90 சதவீதத்துக்கு மேல் கான்கிரீட் என்ற பதிலைக் கொண்டிருக்கக் கூடும். வீட்டின் சமையல் எரிபொருள் என்ன என இன்னொரு கேள்வி. இதற்கும் பல மாநிலங்கள் 90 சதவீதத்துக்கு மேல் எரிவாயு என்ற பதிலைக் கொண்டிருக்கக்கூடும்.
‘’காவிரி போற்றுதும்’’ பணிக்காக ஒரு கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் வீடு வீடாக சென்றவன் என்ற முறையில் இந்த கணக்கெடுப்பின் விபரங்களை எப்படிப் புரிந்து கொள்வது என்பதும் இந்தத் தரவுகளிலிருந்து எவ்விதம் புதிய திட்டங்களை உருவாக்கிக் கொள்வது என்பதையும் என் மனம் யூகிக்கிறது ; கற்பனை செய்கிறது.
ஏதேனும் ஒரு கிராமத்தில் 100 பேருக்கு சுய மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவைச் செய்தால் ஒரு ஊழியரின் 500 நிமிடங்களை மிச்சப்படுத்த முடியும். ஒரு ஊழியரின் ஒரு நாள் பணியை மிச்சமாக்கலாம். இதனை முயற்சி செய்யலாம் என இருக்கிறேன்.
