இன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டேன். இரு சக்கர வாகனத்தை நண்பரின் ஹார்டுவேர் கடைக்கு முன் நிறுத்தி விட்டு வலது பக்கக் கண்ணாடியில் எனது தலைக்கவசத்தை மாட்டினேன். நண்பர் வந்து தலைக்கவசத்துடனான வாகனம் என்றால் எனது வாகனம் என்பதை புரிந்து கொள்வார். அருகிலிருக்கும் பேருந்து நிலையத்துக்கு நடந்து சென்று ஊரிலிருந்து 40 கி.மீ வடக்கில் இருக்கும் ஊருக்குப் பயணமானேன். வைகாசியின் வளர்பிறை முகூர்த்தங்கள் நிறைவு பெற்று விட்டன. எனவே வாகனம் பெரிய கூட்டமில்லாமல் இருந்தது. ஒருமணி நேரம் அளவில் அங்கே சென்று சேர்ந்தேன். பேருந்து நிறுத்தத்திலிருந்து நண்பரின் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். 1990களில் ஒருவரைக் காண நடந்து செல்வது என்பது மிக அதிகமாக நிகழும் செயல். சைக்கிளில் மனிதர்கள் செல்வதும் மனிதர்கள் நடந்து செல்வதும் எப்போதும் காணக் கிடைக்கும் செயல். ஒரு வீட்டின் முன் ஆலமரம் இருந்தது. அதன் விழுதுகளைத் தொட்டுப் பார்த்தேன். அந்தப் பகுதியில் நிறைய புங்கன் மரங்கள் இருந்தன. நாம் மனித உறவுகளையும் மனித நட்பையுமே உறவு என்றும் நட்பு என்றும் எண்ணுகிறோம். மரங்கள் மிகவும் உணர்வுபூர்வமானவை. மிகவும் நட்பார்ந்தவை. நான் மரங்களைத் தொட்டுப் பார்க்க விரும்புவேன். நண்பரைச் சந்தித்தேன். வழக்கமான அலுவலக நேரத்துக்கு 2 மணி நேரம் முன்னால் அவரைச் சந்திக்கிறேன். முதலில் ஒரு விஷயத்தைச் சொன்னேன். பின்னர் இன்னொரு விஷயத்தைச் சொன்னேன். அவர் ஒரு விஷயம் குறித்து கேட்டார். ஒரு விஷயம் குறித்து சொன்னார். தேநீர் அருந்துகிறீர்களா எனக் கேட்டார். தேநீர் வந்தது. புறப்படும் போது அவர் ஊரில் இருந்த அவருடைய பூர்வீக வீட்டில் பழுத்திருந்த ஒரு பெரிய பலாப்பழத்தை ஒரு பிக் ஷாப்பர் பையில் என்னிடம் கொடுத்தார்கள். அவ்வளவு பெரிய பழம் என்பதால் ‘’காரில் தானே வந்தீர்கள்?’’ எனக் கேட்டார்கள். நான் காரை விட மிகப் பல மடங்கு பெரிய வாகனத்தில் வந்திருந்தேன். இருப்பினும் அவர்கள் கேள்விக்கு ஆம் என்னும் உடன்பாட்டு பதிலையே அளித்தேன். பலாப்பழத்துடன் பேருந்து நிலையம் நோக்கி நடந்தேன். இவ்விதம் நடப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அர்த்தபூர்வமான ஒரு செயலைச் செய்வதாய் மனம் எண்ணியது. பேருந்து நிலையம் எதிரில் அமைதியான பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அங்கே முதலில் சாம்பார் இட்லி சொன்னேன். பின்னர் கல்தோசை சொன்னேன். சந்திப்பு குறித்து என் நண்பர் ஒருவருக்கு விபரம் சொன்னேன். அவர் நான் இருந்த ஊருக்கு மேற்கே 70 கி.மீ தொலைவில் இருந்தார். அவரைச் சந்திப்பது நலம் பயப்பது என எண்ணினேன். பேருந்தில் அவர் இருந்த ஊருக்குப் பயணமானேன். முதலில் 40 கி.மீ மேற்கே பயணித்து பின்னர் அங்கே இறங்கி அடுத்த பேருந்தில் ஏறி அடுத்த 30 கி.மீ பயணிக்க வேண்டும். உத்தேசித்த நேரத்தை விட 20 நிமிட தாமதமாக சென்று சேர்ந்தேன். என் கையில் பெரிய பலாப்பழம் இருந்தது. அதனை நண்பருக்குக் கொடுத்தேன். என்னிடம் இருப்பதைக் கொடுப்பது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சி தருவது. நண்பருடன் விபரம் சொன்னேன். புதிய விபரம் ஒன்றும் சொன்னேன். 30 நிமிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு ஊருக்குப் புறப்பட்டேன். ஊர் நான் இருக்கும் இடத்திலிருந்து 35 கி.மீ கிழக்கே இருந்தது. பேருந்து நிறுத்தத்தில் பஸ் பிடித்து ஊர் வந்து சேர்ந்தேன். நண்பர் கடைக்கு வந்தேன். அப்போது நேரம் 2.15. நண்பர் உணவருந்த வீட்டுக்குச் சென்றிருந்தார். நான் வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
பிரபு மயிலாடுதுறை
Wednesday, 3 June 2026
அரசாங்கம் என்பது அறிக்கைகள்
ஒரு விஷயத்தை எவரும் அவதானிக்கலாம் ; அரசாங்கச் செயல்பாடுகளில் கணிசமானவை அறிக்கைகள் தயாரித்தலே. ஒரே அறிக்கையை குறுகிய காலத்துக்குள்ளோ அல்லது நீண்ட காலத்திலோ திரும்பத் திரும்ப தயாரித்து அளித்துக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கும். ஒரு காலத்தில் அதனால் தான் இந்திய அரசியலில் வழக்கறிஞர்கள் மிக அதிக அளவில் ஈடுபட்டனர். மொழி மற்றும் கலைப் படிப்புகள் படித்தவர்களின் தேவை இந்திய அரசியலில் இருந்தது. இந்திய ஆட்சிப் பணியாளர்கள் தேர்வில் மொழியறிவு தேர்ச்சிக்கான முக்கிய விஷயமாக இருந்தது ; இருக்கிறது. இந்திய ஆட்சிப்பணி தன் தேர்வர்களின் ஆங்கில மொழியறிவை முக்கியமாக நினைக்கிறது. தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவருக்கு வேறு மாநிலத்தில் பணி நியமனம் நிகழ்ந்தால் அந்த மாநில மொழியைக் கற்று அதிலும் தேர்வு எழுதி தேர்ச்சி அடைய வேண்டும் என்னும் தேர்வுமுறையைக் கொண்டிருக்கிறது. சட்டம் இயற்றப்படுதல் என்பது முன்பு சட்டம் படித்தவர்களை அதிகம் சார்ந்திருந்தது. சட்டங்கள் அதிகமாக அதிகமாக சட்டங்கள் குடிமக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகையில் அதிகாரிகள் சட்ட திருத்தங்களை மேற்கொள்வதில் பங்களிப்பு ஆற்றத் தொடங்கினர். இன்று இந்திய அரசியலில் நீதித்துறையும் வழக்கறிஞர்களும் ஒரு தனிக்குழுவாக உள்ளனர். அதிகாரவர்க்கம் தனிக்குழுவாக உள்ளது. அரசியல்வாதிகள் தனிக்குழுவாக உள்ளனர். இவர்களுக்கிடையேயான மோதல்களும் ஒத்துப் போதல்களுமே அரசாங்கத்தின் இயக்கம்.
இந்திய ஜனநாயகத்தில் கடைசி குடிமகனின் பங்களிப்பு கூட தினந்தோறும் இருக்கிறது. இன்று நாட்டின் கடைசி குடிமகன் கூட ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.1 என்ற அளவில் ஜி.எஸ்.டி செலுத்துகிறான். அவ்விதம் எனில் ஒரு நாளைக்கு ரூ.140 கோடி. ஒரு மாதத்துக்கு ரூ.4200 கோடி. ஒரு ஆண்டுக்கு ரூ.49,200 கோடி. சென்ற ஆண்டு மத்திய அரசின் ஜி எஸ் டி வருமானம் ரூ. 22 லட்சம் கோடி.
நம் நாடு சுதந்திரம் அடைந்த போது நம் நாட்டின் வரி வருவாய் என்பது மிகக் குறைவாக இருந்தது. அரசாங்கம் செயல்படும் விதம் ஒருவிதமாக இருந்தது. இன்று நாட்டின் வருவாய் பெருகியுள்ளது. அதற்கேற்ற விதத்தில் பொதுமக்கள் மனநிலையிலும் பங்களிப்பிலும் மாற்றம் இருக்க வேண்டும். வருவாய் வளர்ச்சியை அப்போது தான் நாட்டு மக்களும் சமூகமும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இரண்டு தினங்களுக்கு முன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாள் முகாமுக்குச் சென்றிருந்தேன். அங்கே இணைய இணைப்பு கிடைக்கவில்லை. மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்து ஒப்புகைச்சீட்டைப் பெற்றுக் கொண்டு சென்றனர். இதனை நான் தொழில்நுட்பப் பிரச்சனையாகப் பார்க்கவில்லை. இதில் நான் வேறு ஒரு கோணத்தைக் காண்கிறேன். இன்று அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கும் அரசு அலுவலகச் செயல்பாடுகளுக்கும் அரசு வருமானத்தின் பெரும் தொகையை அளிக்கிறது. ஆனால் அரசு ஊழியர் மனோபாவத்தில் மாற்றம் இல்லை. அந்த மாற்றம் நிகழ வேண்டிய காலகட்டம் வந்து விட்டது.
Monday, 1 June 2026
மனுநீதி நாள் முகாம் குறித்த புகார்
மனுநீதி நாள்
90 கி.மீ (நகைச்சுவைக் கட்டுரை)
Sunday, 31 May 2026
அதிதி
திதி என்பது நாளைக் குறிக்கும் சொல். பிரதமை தொடங்கி சதுர்தசி ஈறாக 30 திதிகள் உள்ளன. அமாவாசையிலிருந்து எத்தனையாவது நாள் என்பதே திதி ஆகும். அமாவாசையிலிருந்து இரண்டாம் நாள் திவிதியை ஆகும். அமாவாசையிலிருந்து 30வது நாள் சதுர்தசி ஆகும்.
இன்ன நாள் இன்ன கிழமை வருகிறேன் என்ற அறிவிப்பு இன்றி நம் வீட்டுக்கு வருபவரே அதிதி ஆவார். அதிதியைக் கடவுளுக்குச் சமமாக நினைக்க வேண்டும் என்கிறது நம் மரபு. ‘’அதிதி தேவோ பவ’’ என்பது மறை வாக்கியம். இன்ன நாள் இன்ன கிழமை வருகிறேன் என்ற அறிவிப்பு இல்லாமல் வரும் நண்பர்களும் உறவினர்களும் ( மித்ர பந்துக்கள்) அதிதி ஆக மாட்டார்கள். அவர்கள் மித்ர பந்துக்களே.
Saturday, 30 May 2026
உபயோகமான பொருள்
Thursday, 28 May 2026
ஆர்வமும் முன்னேற்றமும்
நேற்று வந்திருந்த ரியல் எஸ்டேட் குழு நேற்று பார்த்த இடத்தைச் சுற்றியிருக்கும் மனை நிலவரம் குறித்து விசாரித்து சொல்லுமாறு கேட்டிருந்தார்கள். நேற்று தீவிரமாக விசாரித்தேன். அப்போது ஒரு இடத்தை அறிந்தேன்.
அந்த இடம் ஊரிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. அருகில் ஒரு கடைத்தெரு. பஸ் ஸ்டாண்ட். சாலைகள் நல்ல விதமாக அமைக்கப்பட்டிருந்தன. மின் கம்பங்கள் நிறுவப்பட்டிருந்தன. 2000 சதுர அடி மனைகள் அதிகம் இருந்தன. 1800 சதுர அடியிலும் மனைகள் இருந்தன. அவர்கள் சகாய விலைக்கு விற்கின்றனர். ஒரு மனை வாங்க விசாரிக்க வந்தவன் போல அவர்களிடம் பேசி விபரம் கேட்டுக் கொண்டேன். ஒரே பேமெண்ட்டாகக் கொடுத்தால் விலையில் 10 சதவீதம் குறைத்துக் கொள்கிறோம் என்று சொன்னார்கள். அவ்வாறெனில் அவர்களுக்குத் தீவிரமான நிதித்தேவை இருக்கிறது எனப் புரிந்து கொண்டேன்.
அந்த ஊரில் இருக்கும் மனைத்தரகர்களை தொடர்பு கொண்டு இந்த இடத்தை மொத்தமாக வாங்கலாமா என ஆலோசனை கேட்டேன். எல்லாரும் ஆர்வமாக இருந்தனர்.
இன்று காலை, மதியம், மாலை ஆகிய 3 வேளையும் அங்கு செல்ல நேர்ந்தது. அங்கே 100 மனைப்பிரிவுகள் இருக்கின்றன. அவர்கள் 60 விற்பனை செய்துள்ளார்கள். மீதி 40 மனையை விற்க வேண்டும் ; வாங்கினால். அவர்களுக்கு இப்போது 2 சி தேவை. அந்தப் பகுதியில் நான் அறிந்த அனைவருக்கும் ஃபோன் செய்து அந்த இடம் குறித்து விசாரித்தேன். எல்லாரும் நல்ல விதமாகவே தெரிவித்தார்கள்.
ஒரு வாரத்தில் பதில் சொல்வதாகக் கூறியிருக்கிறேன்.
Wednesday, 27 May 2026
மனை பிராப்தி
வீடு மனை வாகனப் பிராப்தி எனக் கூறுவார்கள். பிராப்தி என்றால் என்ன என்று எனக்குத் தெரியும். இணையத்தில் பிராப்திக்கு சமமான தமிழ்ச்சொற்கள் எவை என்று தேடினேன். பல சொற்கள் இருந்தது ; அதில் ஒன்று கொடுப்பினை. ராஜசுந்தர்ராஜனின் கவிதை ஒன்றின் தலைப்பு கொடுப்பினை என்பது நினைவுக்கு வந்தது.
கொடுப்பினை
------------------------