அன்புள்ள திரு.அனூப் ஜெய்ஸ்வால் அவர்களுக்கு,
இன்று பத்திரிக்கையாளர் திரு.வி.சுதர்ஷன் எழுதிய ‘’குற்றமும் கருணையும்’’, ‘’குற்றமும் அநீதியும்’’ ஆகிய இரு நூல்களை அடுத்தடுத்து வாசித்தேன். திரு.சுதர்ஷன் எழுதிய ‘’குற்றமும் தீர்ப்பும்’’ என்ற நூலை சென்ற ஆண்டில் வாசித்திருந்தேன். சி.பி.ஐ -ல் பணி புரிந்த திரு. ரகோத்தமன் விசாரணை செய்த கொலை வழக்கைக் குறித்த நூல் அது.
வாசிக்கும் போது சில நூல்கள் நம் இதயத்துடனும் நம் மன்சாட்சியுடனும் பேசுகின்றன. தங்களைக் குறித்த இரு நூல்களும் அவ்வாறானதே. இயற்கை மனிதர்களைப் பிரக்ஞை கொண்டவர்களாகப் படைத்திருக்கிறது. பிரக்ஞையுடன் செயல்படுவது என்பது அடிப்படையான மனித இயல்பாகும். மனித வரலாற்றில் செல்வமும் அதிகாரமும் மனிதர்களின் பிரக்ஞையை மறைத்திருப்பதைக் காணலாம். காவல்துறையின் முக்கியமான பொறுப்பில் அதிகாரத்தில் இருந்த போதும் சக மனிதர்களை - அவர்கள் பொதுமக்களாக இருக்கலாம் ; அவர்கள் காவலர்களாக இருக்கலாம் ; அவர்கள் குற்றவாளிகளாக இருக்கலாம் - சக மனிதர்களாக நீங்கள் நடத்தியிருக்கிறீர்கள் என்பதை இந்த நூல்களின் பக்கங்களில் காண முடிந்தது. அதிகாரவர்க்கத்தில் ஆயிரத்தில் ஒருவரே இவ்விதம் இருக்க முடியும். தமிழகம் தங்கள் இயல்புக்கும் தங்கள் பணிகளுக்கும் என்றும் கடன்பட்டுள்ளது.
பிரிட்டிஷார் நம் நாட்டை விட்டுச் சென்ற பின் நம் நாட்டின் அதிகாரம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் அரசு ஊழியர்களின் கைக்கு வருகிறது. அவர்களே எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கானோர் ; லட்சக்கணக்கானோர். அவர்களுடன் ஒப்பிட்டால் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை என்பது மிகவும் சொற்பமானதே.
உயர் அதிகாரத்தில் இருப்பவர் ஆயினும் அடிப்படையில் நீங்கள் முதன்மையாக பிரக்ஞை கொண்ட மனிதர் என்பதை ‘’தொலைந்துபோன கைக்கடிகாரம்’’ சம்பவம் மூலம் உணர முடிந்தது. ஒரு கைக்கடிகாரம் தொலைந்து போன விஷயத்தை சிறு விஷயம் என்று கருதாமல் அதற்கு மனதில் இடமளித்து அந்த சம்பவத்தில் தொடர்பு கொண்டிருப்பவர்களும் மனிதர்களே என்னும் உணர்வுடன் அதனைப் புலனாய்வு செய்திருக்கும் தங்கள் சுபாவம் மிகவும் மேன்மையானது. கோயம்புத்தூர் அருகே வனத்துறை ரேஞ்சர் ஒருவர் மீது கொடுக்கப்பட்ட புகார் பொய்யானது என்பதைக் கண்டுபிடித்தது மிகப் பெரிய விஷயம். தங்களைப் போன்ற ஒருவரே இவற்றைச் செய்ய முடியும். உண்மையில் தங்கள் பணி கைக்கடிகாரம் விஷயத்தில் சிறுவனையும் கோவை பொய்ப்புகார் விஷயத்தில் வனத்துறை ரேஞ்சரையும் காத்துள்ளது. தாங்களே உண்மையான காவலர்.
‘’அந்தோணி மூக்கன்’’ கதை சிலிர்க்கச் செய்வது. அந்தோணி மூக்கன் இயல்புகளும் தாங்கள் அந்தோணி மூக்கனுக்கு செய்த உதவிகளும் பெரும் சிலிர்ப்பை ஏற்படுத்தக் கூடியவை. தற்செயலாக ‘’லாக்-அப்’’பில் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் ஒருவராக அந்தோணி மூக்கனுடன் தங்கள் அறிமுகம் நிகழ்கிறது. சில வினாடிகளில் சில நிமிடங்களில் கடந்து போயிருக்கக் கூடிய மனிதன் ‘’அந்தோணி மூக்கன்’’. அவன் என்ன சொல்கிறான் என்பதற்கு தங்கள் செவிகளைத் தருகிறீர்கள். அதனால் அவருடைய மனைவிக்கு மருத்துவம் பார்க்க ஒரு வாய்ப்பு உருவாகிறது. மருத்துவ சிகிச்சையால் உடல்நலம் மீள்கிறாள் அந்தப் பெண்மணி. அந்தோணி மூக்கன் காவல்துறைக்கு குற்றச் செயல்கள் குறித்து பல தகவல்கள் கொடுக்கிறார். வங்கிக் கடன் பெற்று மீன்பிடித் தொழில் செய்கிறார். அந்தோணி மூக்கன் தன் இளம் வயதில் எந்த சூழ்நிலையில் ஒரு கொலை செய்ய நேர்கிறது என்பதைக் கூறும் சம்பவம் எவர் அகத்தையும் நெகிழச் செய்யும்.
‘’தர்மாவை சுட்டுக் கொன்றது யார்?’’ சம்பவமும் பரபரப்பானது. ஒரு பெண்ணின் கண்ணீருக்கு பதில் கூற துணிச்சலான ஒரு முடிவை மேற்கொள்கிறீர்கள். தங்களுடைய தலைமைப் பண்புக்கும் முடிவெடுக்கும் திறனுக்கும் அந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாகும்.
‘’அம்மத்தாய் அம்மாளின் பென்ஷன்’’ உலக அளவில் காவல்துறைக்கு சாதனை என்பதில் எந்த ஐயமும் இல்லை. தூத்துக்குடியில் ஜின்சர் என்னும் சாராயம் 1980-1985ல் சர்வசாதாரணமாக விற்பனையாகிக் கொண்டிருந்ததை எடுத்துரைக்கும் அத்தியாயமும் அதனைத் தாங்கள் தடுத்த விதமும் எந்த அரசுக்கும் எந்த சமூகத்துக்கும் ஒரு எடுத்துக்காட்டு ஆகும். கந்துவட்டிக்காரர்கள் அப்பாவித் தொழிலாளர்களிடம் வாங்கி வைத்திருந்த அத்தனை ‘’கடன் பாண்டு’’களையும் வருமானவரித்துறை ரெய்டு மூலம் தீயிலிட்டு எரித்ததும் கந்துவட்டிக்காரர்களிடம் தாங்கள் எவருக்கும் கடன் அளிக்கவில்லை என எழுதி வாங்கியதும் பிரமிக்கத்தக்க செயல்கள்.
’’9வது பட்டாலியன்’’ நூலின் சுவாரசியமான நகைச்சுவையான அத்தியாயம். தாங்கள் பணி நீக்க உத்தரவை ரத்து செய்து பணி நியமன ஆணை பெற்றது ஆகப் பெரிய சுவாரசியமான கதை.
சிறப்பான நூல். சிறப்பான சம்பவங்கள். சிறப்பான வாழ்க்கை.
மனிதர்களை மனிதர்களாகப் பார்த்த மனிதர்களை மனிதர்களாக அணுகிய தங்களுக்கு இறைமையின் ஆசி எப்போதும் உடனிருக்கும்.
அன்புடன்,
பிரபு
மயிலாடுதுறை
07.01.2026