பிரபு மயிலாடுதுறை
Wednesday, 19 November 2025
காவியகர்த்தா
Tuesday, 18 November 2025
டாக்டர். பா. ஜெயமோகன்
மாற்று பொருட்கள் (நகைச்சுவைக் கட்டுரை)
உலகியல் மிகவும் சுவாரசியமானது ; அதிலிருந்து சற்று தள்ளி இருந்தால். இன்று மண் மூட்டைகளையும் வைக்கோல் சுருள்களையும் கொண்டு கட்டுமானங்களை எழுப்பும் முறை குறித்து வாசித்தேன். அவை மிகவும் ஆர்வமூட்டின. சில நிமிடங்களுக்குப் பின் எனக்கு இரு யோசனைகள் தோன்றின. அந்த யோசனைகளும் சுவாரசியமானவை. அவை மனதில் உதித்த விதமும் சுவாரசியமானது.
அரிசி ஆலைகளில் கரித்தூள் மிக அதிக அளவில் இருக்கும். நெல்லைப் புழுங்கல் அரிசியாக ஆக்குகையில் பாய்லர் மூலம் நீரை ஆவியாக்க கரியை எரிப்பார்கள். கரி எரிந்து கரித்தூளாக எஞ்சும். உமியையும் எரிப்பதுண்டு . அதுவும் கரித்தூளாக எஞ்சும். கரித்தூள் அவர்களுடைய ஆலையில் குவிந்து கிடக்கும். அது வயலுக்கு நல்ல உரம். விவசாயிகள் அதனை எடுத்துச் சென்று ஆலையிலிருந்து அவற்றினைக் காலி செய்தாலே போதும் என ஆலையில் இருப்பவர்கள் நினைப்பார்கள். மண் மூட்டைகளை இந்த கரித்தூள் மூட்டைகளால் பதிலி செய்யலாம். ( எனது ஆலோசனையின் படி தனது 3 ஏக்கர் நிலத்தில் 1000 தேக்கு மரங்கள் நட்ட ஐ.டி கம்பெனி ஊழியர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனது வயலில் அரிசி ஆலையின் கரித்தூளைக் கொண்டு வந்து கொட்டுகிறார். போக்குவரத்து செலவு கணிசமாக ஆகிறது என்பதால் நான் அதனை ஆதரிப்பதில்லை. இருப்பினும் அவர் அதிகம் தனது வயலில் கரியைக் கொண்டு வந்து கொட்டுகிறார்).
அனல் மின் நிலையங்களில் ஃபிளை ஆஷ் எஞ்சும். அதனை மூட்டைகளில் நிரப்பி அந்த மூட்டைகளைக் கொண்டு வீடு கட்டலாம். ஃபிளை ஆஷ் கற்கள் கட்டுமானத் தொழிலில் பயன்பாட்டில் உள்ளன.
அரிசி ஆலைகளின் கரித்தூள் தேக்கு பண்ணை வழியாகவும் ஃபிளை ஆஷ் எனது தொழிலின் வழியாகவும் என் கவனத்துக்கு வந்தவை. அவற்றின் மூலம் மாற்று கட்டுமான சாதனங்களில் நானும் என் சிந்தனையை முன்வைத்திருக்கிறேன்.
கோடுகள் சித்திரங்கள்
அரவிந்த் குப்தா இணையதளத்திலிருந்து தினமும் ஏதாவது ஒரு சிறுநூலை வாசிப்பதை கடந்த சில நாட்களாக வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அதிலும் படங்கள் வரையப்பட்டிருக்கும் நூல்களை அதிகம் தெரிவு செய்கிறேன். கணிணியில் சித்திர நூல்கள் வாசிப்பது விருப்பத்துக்குரியதாக இருக்கிறது.
இன்று மண்மூட்டைகளாலும் வைக்கோல் கட்டுகளாலும் வீடு கட்டும் முறையை ஒரு நூலில் கண்டேன். என்னுடைய தொழில் கட்டிடக் கட்டுமானம். இன்று கட்டுமானம் மிகச் செலவேறிய ஒன்றாக ஆகியிருக்கிறது. மண்மூட்டைக் கட்டுமானம் என்பது மண்மூட்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி செங்கல் கட்டுமானம் போல் எழுப்புவது. செங்கல் அளவில் சிறியது என்பதால் ஒரு கல்லுக்கும் இன்னொரு கல்லுக்கும் இடையே சேறு அல்லது சிமெண்ட் பூச்சை இணைப்புப் பசையாகப் பயன்படுத்த வேண்டும். மண்மூட்டைக் கட்டுமானத்தில் அது அவசியமில்லை. ஒரு மூட்டை மேல் இன்னொரு மூட்டையை வைக்கலாம். ஒன்றின் பக்கத்தில் இன்னொன்றை வைக்கலாம். அதன் மிகுஎடையின் காரணமாக ஒன்றன் மேல் ஒன்றாக அவை படிந்து கொள்ளும்.
இப்போது வயல்களில் அறுவடைக்குப் பின் எஞ்சும் வைக்கோல் எந்திரங்கள் மூலம் சுருள் வடிவில் சுருட்டப்படுகின்றன. அவ்விதமான வைக்கோல் சுருள்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வீடு கட்டும் முறை ஒன்றை ஒரு நூலில் கண்டேன். நம் நாட்டில் அறுவடைக்குப் பின் வயலில் எஞ்சும் வைக்கோலை விவசாயிகள் தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். அது மிக அதிக கார்பன் உமிழ்வை உருவாக்குகிறது. வைக்கோல் சுருள்கள் கட்டுமானத்தில் பயன்படுமானால் கட்டுமானச் செலவு பெருமளவில் குறையும்.
பொருளியல் வளர்ச்சி நுகர்வு மனநிலையை தீவிரமாக்குகிறது. பொருளியல் வளர்ச்சிக்கும் நுகர்வுக்கும் பிரக்ஞை என்னும் கடிவாளம் தேவை. அவ்விதம் இருந்தால் மட்டுமே அது ஆக்கபூர்வமாக இருக்கும். இல்லையேல் அது அனைவருக்கும் அழிவைக் கொண்டு வரும்.
Monday, 17 November 2025
மழையில் மேற்கொண்ட பணி (நகைச்சுவைக் கட்டுரை)
நாமரூபம்
எனது நண்பர் ஒருவர் கடைவீதியில் கடை வைத்திருக்கிறார். அவர் கடையில் ஐந்து பணியாளர்கள் பணி புரிகின்றனர். எனது வாகனம் ரயில் நிலையத்தில் ‘’பார்க்’’ செய்யப்பட்டிருந்தது. முதல் நாள் நான் ரயிலில் திரும்பாமல் பேருந்தில் திரும்பி விட்டேன். பார்க்கிங் செய்த வாகனத்தை எடுத்து வர வேண்டும் ; எனது நண்பர் கடைக்குச் சென்று அவர் பணியாளர் ஒருவரை என்னுடன் அனுப்பச் சொன்னேன். நண்பரும் அவ்விதமே செய்தார். நண்பரின் இரு சக்கர வாகனத்தில் நாங்கள் இருவரும் பயணித்தோம்.
அந்த பணியாளர் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார் என யூகித்தேன்.
‘’தம்பி ! கடைக்கு புதுசா வேலைக்குச் சேந்தியா? உன்னை நான் பாத்தது இல்லயே?’’
‘’ஆமாம் சார் ! ஒரு வாரம் ஆகுது’’
‘’ஓ அப்படியா! உன் பேரு என்ன?’’
‘’திருமாவளவன்’’
’’உன் பேருக்கு என்ன அர்த்தம்?’’
அந்த தம்பி யோசித்தான். ‘’இது ஒருத்தரோட பேரு. தமிழ்நாட்டுல இருக்கற கட்சித் தலைவர் ஒருத்தரோட பேரு’’
‘’நீ சொல்ற பதில் சரிதான் தம்பி . உனக்கு அவரோட பேரை வச்சிருக்காங்க. உனக்கு இப்ப 21 வயசு இருக்குமா. நீ பொறந்தப்ப அவரு தமிழ்நாட்டுல ஒரு பெரிய ஃபோர்ஸ்ஸா வளந்துட்டு இருந்தாரு. அவர் மேல இருக்கற அபிமானத்துல உனக்கு அவரோட பேரை வச்சிருக்காங்க. அவருக்கு இப்ப 60 வயசு இருக்குமா ? அறுபது வருஷம் முன்னாடியே அவருக்கு ‘’திருமாவளவன்’’னு பேரு வச்சிருக்காங்களே அது யாரோட பேரு?’’
தம்பி நான் சொன்ன கோணத்தில் யோசித்திருக்கவில்லை.
‘’அதாவது தம்பி , காவிரி பாயற பகுதி எல்லாமே ரொம்ப வளமான பகுதிகள். அதனால காவிரி பாயற சோழநாட்டுக்கு வளநாடுன்னு பேரு. வளநாட்டை ஆட்சி செய்யறதால சோழ அரசர்களுக்கு ’’வளவன்’’னு பேரு உண்டு. மாவளவன் அப்படின்னா பெரிய நாட்டை ஆள்றவன்னு அர்த்தம். திருமாவளவன் அப்படின்னா செல்வமும் வளமும் கொண்ட சோழ நாட்டுக்கு அரசன்னு அர்த்தம். திருமாவளவன் என்னும் பேரு சோழ அரசர்களைக் குறிக்கும் பேர் என்றாலும் அது கல்லணை கட்டிய கரிகாற்சோழனை சிறப்பிச்சு சொல்லப்படற பேர்’’
தம்பிக்கு தன் பெயருக்கு பின்னால் இவ்வளவு பெரிய விளக்கம் இருக்கிறதா என்னும் வியப்பு.
‘’தம்பி ! எந்த இண்டர்வியூக்கு போனாலும் முதல்ல கேக்கற கேள்வி இண்ட்ர்வியூ அட்டண்ட் பண்றவரோட பேருக்கு என்ன அர்த்தம் என்பதாகத்தான் இருக்கும். திருமாவளவன் மாநிலக் காவல்துறைல ‘’ஃபாரன்ஸிக் டிபார்ட்மெண்ட்’’ல வேலை செஞ்சார். அப்ப அந்த வேலைக்கு ஒரு இண்டர்வியூ நடக்குது. அவரை இண்டர்வியூ செய்யறவர் ஃபாரன்சிக் டிபார்ட்மெண்ட் அறிஞரான சந்திரசேகர் என்பவர். அவர் திருமாவளவன் கிட்ட கேட்ட முதல் கேள்வி திருமாவளவன் யாரோட பேர் என்று. அதுக்கு கல்லணை கட்டிய கரிகாற்சோழனோட பேருன்னு திருமா பதில் சொல்றார். இதை அவரு விகடன் டிவி இண்டர்வியூல சொல்லியிருக்கார்.’’
பெயருக்குப் பின்னால் இவ்வளவு விஷயங்களா என தம்பி மேலும் வியந்து மௌனமாக இருந்தான்.
‘’உன்கிட்ட இன்னொரு கேள்வி கேக்கறன்?’’
தம்பி இவர் என்ன கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் என எண்ணியிருப்பான். இருந்தாலும் ‘’கேளுங்க சார்’’ என்றான்.
‘’அம்பேத்கருக்கு அவரோட பெற்றோர்கள் வச்ச பேரு என்ன?’’
தம்பி ‘’அம்பேத்கர்’’ என்றான்.
‘’இல்லை. அவரோட பெற்றோர் அவருக்கு வச்ச பேரு பீமராவ். அவர் ரொம்ப நல்லா படிக்கக்கூடியவர். சின்ன வயசுலயே அவருக்கு படிப்பு மேல நிறைய ஆர்வம் இருந்தது. அவர் ரொம்ப நல்லா ஸ்கூல்ல படிச்சார். அந்த காலகட்டத்துல நம்ம சமூகத்துல மனுஷங்களுக்கு ஜாதிவெறி ரொம்ப ஜாஸ்தியா இருந்துச்சு. இப்பவும் இருக்கு. ஆனா பொது இடத்துல வெளிக்காட்ட முடியாம உள்ளுக்குள்ள அமுக்கி வச்சுக்கிறாங்க. அவரை எல்லா ஸ்டூடண்ட்ஸ் போலயும் பெஞ்ச்ல ஒக்காந்து பாடம் கேட்க அனுமதிக்க மாட்டாங்க. அவர் தரையிலதான் ஒக்காரணும். மத்த ஸ்டூடண்ட்ஸ் கிட்ட இருந்து தள்ளி தான் இருக்கணும். அப்போ அவரோட ஸ்கூல் க்கு ஒரு ஆசிரியர் வந்தார். அவர் பிறப்பால் பிராமண ஜாதியை சேர்ந்தவர். அவர் மனசுல ஜாதி வேறுபாடு கிடையாது. கடவுள் படைக்கற ஜீவராசிகள்ள ஒன்னா இருக்கற மனுஷங்க கிட்ட வித்தியாசம் பாக்கறது கடவுளை அவமதிக்கறதுன்னு அவர் நினைச்சார். பீமராவ் படிக்க நிறைய ஹெல்ப் பண்ணார். பீமராவ்வை தினமும் தன்னோட சேர்ந்து மதிய உணவு சாப்பிடச் சொன்னார். அவருக்கு நிறைய ஊக்கம் கொடுத்தார். அந்த ஆசிரியரோட பேருதான் அம்பேத்கர். அவரோட ஞாபகமா பீமராவ் தன்னோட பேரோட தன்னோட ஆசிரியர் பெயரையும் சேர்த்துக்கிட்டார். பீமராவ் அம்பேத்கர். பி. ஆர். அம்பேத்கர்.’’
நாங்கள் சென்று சேர வேண்டிய இடம் வந்தது.
Sunday, 16 November 2025
மாபெரும் சூதாட்டம் - அலைபேசி அழைப்பு
இன்று நான் மிகவும் நேசிக்கும் இளம் படைப்பாளியொருவர் அலைபேசியில் அழைத்து ‘’மாபெரும் சூதாட்டம்’’ சிறுகதை குறித்து பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. இந்த வாரத்தில் மேலும் சில வாசகர்களும் கதை குறித்து உரையாடினர்.
மழையுடன் வாழ்தல்
இன்று காவிரி கடைமுகம். ஐப்பசி மாதம் முழுமையும் மயிலாடுதுறையில் தங்கி முப்பது நாளும் காவிரியில் நீராடும் வழக்கம் தமிழகத்தில் பலருக்கு இருந்திருக்கிறது. இப்போது ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஐப்பசி கடைசி நாளன்று காவிரியில் நீராடும் வழக்கம் கொண்டிருக்கிறார்கள். ஊர்க்காரர்கள் ஐப்பசி மாதத்தில் ஏதேனும் ஒருநாள் காவிரியில் நீராடுகிறார்கள். இன்று காலைப் பொழுதில் சற்றே பெரிய கட்டுரை ஒன்றை எழுத வேண்டியிருந்தது. மதியம் வரை அந்த பணி நீடித்தது. அப்பணி முடியும் சமயம் இங்கே மழைப்பொழிவு துவங்கியது. என்னுடைய தொழில் நிமித்தமாக சில ஆவணங்களை ஸ்கேன் செய்ய வேண்டியிருந்தது. கடைத்தெருவுக்குச் சென்று ஞாயிறன்றும் திறந்திருந்த கடை ஒன்றில் அப்பணியை அளித்து விட்டு வந்தேன். வரும் போது நல்ல மழை. மழையில் முழுமையாக நனைந்தேன். மழையில் நனைவதும் நதி நீராட்டுதான் என எண்ணினேன். மனிதர்கள் எந்த அளவு மழையுடன் இணைந்திருக்கிறார்களோ அந்த அளவு மனிதர்களை நலம் சூழ்ந்திருக்கும் என எண்ணிக் கொண்டேன்.
Saturday, 15 November 2025
அமர் சித்ர கதா - பாபாசாகேப் அம்பேத்கர்
சிராக் பாஸ்வான் : நம்பிக்கை நட்சத்திரம்