Friday 19 April 2024

ஓட்டு

 

இன்று காலை வழக்கமாக எழும் நேரத்துக்கு சற்று முன்னதாகவே எழுந்து விட்டேன். காலையிலேயே குளித்துத் தயாரானேன். திருச்சிற்றம்பலம் சொல்லி மூன்று முறை , திருஞானசம்பந்தர் அருளிய ‘’கோளறு பதிகம்’’ படித்தேன். ஊரும் நாடும் உலகமும் நலமடைய தமிழ்க் குழந்தை சம்பந்தர் இயற்றிய பதிகம்.

தேனமர் பொழில்கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் திகழ

நான்முகன் ஆதியாய பிரம்மா புரத்து மறைஞான ஞான முனிவன்

தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்

ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே

என்பது சம்பந்தர் சொல். 

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் இன்று தொடங்குகிறது. ஒரு கணம் இந்தியப் பெருநிலத்தினை நினைத்துப் பார்த்தால் இந்த நடைமுறையின் பிரம்மாண்டம் புரியும்.

வீட்டிலிருந்து வாக்குச் சாவடி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. வாக்குச் சாவடிக்கு நடந்து சென்றேன். ஏன் என்று தெரியவில்லை. நடந்து செல்ல வேண்டும் என்று தோன்றியது. நடந்து செல்கையில் இதுவரை வாக்களித்த தேர்தல்கள் நினைவுக்கு வந்தன. அவற்றை எண்ணிய வண்ணம் சென்றேன். சாவடியை அடைந்த போது நேரம் 7.02. எனக்கு முன் ஒருவர் வாக்களிக்க தயாராக நின்றிருந்தார். சாவடியின் முதல் வாக்கை அவர் செலுத்தினார். இரண்டாவதாக நான் வாக்களித்தேன். 

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் லட்சக்கணக்கான பணியாளர்கள் இந்த ஒரு நாளுக்காக பல நாள் தயாரிப்புடன் பணி புரிகிறார்கள். பொதுமக்கள் அதிக அளவில் வாக்களிப்பதே அவர்கள் பணிக்கு அளிக்கப்படும் மரியாதை. 

காலை 7 மணிக்கே வெயில் அதிகமாக இருப்பதாகத் தோன்றியது. பகல் பொழுதில் இன்னும் உக்கிரமாக இருக்கக்கூடும். காலை நேரத்தில் வாக்காளர்கள் அதிகம் வாக்களித்தால் வாக்குப் பதிவு சதவீதம் அதிகம் இருக்கும்.  


Wednesday 17 April 2024

ராமனும் கம்பனும்


 இன்று ஸ்ரீராம நவமி. கம்பன் பிறந்த திருவழுந்தூரில் இன்று இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தேன். காலைப் பொழுதில் திருவழுந்தூர் ஆமருவிப் பெருமாள் ஆலயம் சென்றேன். அங்கே கம்பனுக்கு ஒரு சிறு சன்னிதி உண்டு. அங்கே சென்று தமிழின் ஆகப் பெரிய கவிஞனை வணங்கினேன். 

திருவழுந்தூர் ஆலயக் கருவறையில் பெருமாளுடன் பிரகலாதன் இருப்பார். கம்பருக்கு நரசிம்ம சுவாமி மீது பெரும் ஈர்ப்பு அதனால் உண்டு. கம்பர் தனது இராமாயணத்தை ஸ்ரீரங்கம் ஆலய நரசிம்மர் சன்னிதிக்கு எதிரே அரங்கேற்றம் செய்தார் என்பது நாம் அறிந்ததே. 

திருவழுந்தூர் ஆலயத்தில் சிறுவர்கள் சிலர் காலை நேரத்தில் திருப்பாவை பாராயணம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பாராயணம் செய்ததைக் கண்ட போது செயல் புரியும் கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு திருப்பாவை மனனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எண்ணம் கொண்டேன். எளிமையான இனிமையான தமிழ் சொற்களால் ஆன 30 பாடல்கள். பாசுரம் பாடும் முறையில் பாட பயிற்சி தர வேண்டும். ஈஸ்வர ஹிதம். 

இன்று கம்பன் பிரதியில் ஒரு படலமாவது வாசிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஸ்ரீராமன் பிறக்கும் திருஅவதாரப் படலம் வாசித்திருக்க வேண்டும். எனினும் ‘’இரணியன் வதைப் படலம்’’ வாசித்தேன். பிரகலாதன் என்னும் குழந்தை குறித்த படலம் என்பது ஒரு காரணம். நரசிம்மர் தோன்றும் தருணத்தை விவரிக்கும் படலம் என்பது இன்னொரு காரணம். நரசிம்மர் இரணியனை சம்ஹாரம் செய்யும் செயலை விவரிக்கும் படலம் என்பது மற்றொரு காரணம். 

Sunday 14 April 2024

புத்தாண்டு தினத்தில்

இன்று காலை அமெரிக்காவிலிருந்து நண்பர் அழைத்திருந்தார். நமது தளத்தின் பதிவுகளை வாசிப்பது தினமும் உரையாடலில் இருக்கும் உணர்வைத் தரக்கூடியது ; கடந்த சில நாட்களாக புதிய பதிவு இல்லாததால் ஃபோனில் அழைத்தேன் என்று கூறினார். இந்த பிரியங்கள் தான் என்னை எழுத வைக்கின்றன. புதிய ஆண்டில் நண்பருடன் உரையாடியது உற்சாகமான துவக்கமாக அமைந்தது. 

தொழில் நிமித்தமாக வடலூர் அருகே உள்ள நண்பரை சந்திக்கச் சென்றேன். மயிலாடுதுறை - சிதம்பரம் சாலை என்பது நம்ப முடியாத அளவுக்கு மாற்றம் கண்டுள்ளது. மிக பிரும்மாண்டமான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. வளைவுகள் அனைத்தும் நேராக்கப் பட்டுள்ளன. கொள்ளிடம் ஆற்றில் ஒரு புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டுக்கு ஜி.எஸ்.டி மூலம் கிடைத்த வருவாயே இந்த மாற்றத்துக்குக் காரணம். ஜி.எஸ்.டி அமலாக்கத்தில் உறுதி காட்டிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பாராட்டுக்குரியது. 

வடலூர் செல்லும் வழியில் புவனகிரியில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி ஆலயத்துக்குச் சென்று சுவாமியை வழிபட்டேன். வருடத்தின் முதல் நாளில் சுவாமி சன்னிதானத்தில் இருந்தது மனதுக்கு அமைதியாக உணர வைத்தது. 

நண்பரை அவருடைய வீட்டில் சந்தித்தேன். ஒரு மணி நேரம் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். நண்பர் மிக இனிய மனிதர். 

வடலூர் அருகே இருக்கும் சித்தப்பா வீட்டுக்குச் சென்றிருந்தேன். சித்தப்பா வீடு மிக அமைதியானது. வீட்டைச் சுற்றி பலவிதமான பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இரண்டு நாட்கள் இங்கே வந்து முழுமையாக தங்கியிருக்க வேண்டும் என எண்ணினேன். சித்தப்பா வீட்டுக்கு அருகே ஒரு குளம் உள்ளது. அந்த குளக்கரையில் நடுவதற்கு 6 ஆல மரக் கன்றும் 6 அரச மரக் கன்றும் வாங்கிக் கொண்டு அடுத்த வாரம் வருவதாக் கூறி விடை பெற்றுக் கொண்டேன். சுவையான மதிய உணவை சித்தி அளித்திருந்தார்கள். 

புதிய ஆண்டின் முதல் தினம் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருந்தது. 

இரவு 7 மணி அளவில் வீடு திரும்பினேன். 

Monday 1 April 2024

வசந்த காலம்

உக்கிரமான கோடை தனக்குள் வசந்த காலத்தை உட்பொதிந்திருப்பது ஓர் இனிய அற்புதம். கோடையில் சூரிய அஸ்தமனத்துக்கு முந்தைய இரண்டு மணி நேரம் என்பது இனிமையானது. இந்த காலத்தில் தான் மரங்கள் புதிய இலைகளைத் துளிர்க்கின்றன. மரங்களில் மலர்கள் மலர்கின்றன. 

இன்று வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு புரச மரம் ( பலாசம்) மலரத் தொடங்கியிருப்பதைக் கண்டேன்.  

Sunday 31 March 2024

நிதி ஆண்டு




 இன்று நிதி ஆண்டின் கடைசி நாள் மாலை ஊருக்கு அண்மையில் இருக்கும் நண்பரான ஐ.டி கம்பெனியில் பணி புரியும் தேக்கு விவசாயியின் வயலுக்குச் சென்றிருந்தேன். அவருடைய வீட்டில் அவரது இளைய சகோதரருக்கு மகன் பிறந்திருக்கிறான். பிறந்து ஒரு வாரம் ஆகிறது. 

எனது நண்பரின் குழந்தையை அம்மகவு பிறந்த அன்று மருத்துவமனையில் பார்த்தேன். இப்போது அந்த குழந்தைக்கு 18 வயது பூர்த்தியாகி உள்ளது. பொறியியல் மாணவியான அப்பெண் இன்னும் 19 நாளில் நாடாளுமன்றத் தேர்தலில் தனது முதல் வாக்கை செலுத்த ஆர்வமாக இருக்கிறாள். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் முதல் நாள் மகவாக பார்த்த ஞாபகமே இப்போதும் இருக்கிறது. 

உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையுமே இந்த உலகை மேலும் சிறப்பானதாக ஆக்கும் சாத்தியத்துடனே பிறக்கிறது.  

நண்பரின் சகோதரருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு நண்பருடன் தேக்கு வயலுக்குச் சென்றேன். தேக்கு மரங்கள் அடிப்பாகம் பருக்கத் தொடங்கியிருக்கின்றன. தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்ட நாளிலிருந்து வாரம் இரண்டு முறை தண்ணீர் வைக்க வேண்டும் என்று அலுக்காமல் வலியுறுத்தி வந்தேன். நம் தமிழ்ச் சமூகத்தில் மரக்கன்றுகளுக்கு உணவுப்பயிர்களைப் போல கவனம் செலுத்தி தண்ணீர் வைக்க வேண்டும் என்ற எண்ணம் விவசாயிகளுக்கு இல்லை. உணவுப் பயிர்கள் குறுகிய காலத்தவை. 90லிருந்து 110 நாட்களுக்குள் அறுவடைக்கு வந்து விடும். எனவே அதற்கு பார்த்து பார்த்து தண்ணீர் வைப்பார்கள். மரங்கள் தானாக வளரும் என்று எண்ணுகிறார்கள். நண்பர் விவசாயத்தை பொருளியல் லாபம் மிக்கதாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் நெல் வயலை தேக்கு வயலாக்கியவர். இருந்தாலும் அவர் மனதில் வாரம் இரண்டு நாள் தண்ணீர் வைத்தல் என்பதை பெரும் பிரயத்தனம் செய்தே பதிய வைக்க நேர்ந்தது. வருடத்தில் வடகிழக்கு பருவமழை பொழியும் 100 நாட்கள் தண்ணீர் வைக்க தேவையில்லை என்பதால் மழைக்காலத்தில் இந்த பிரச்சனை இருக்காது. கோடையில் நான் வலியுறுத்துவதும் அதற்கு மெதுவாக செவி சாய்த்து அவர் நீர் வார்ப்பதும் நடக்கும். இப்போது தண்ணீரின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து நீர் பாய்ச்சலை முக்கிய வேலையாகச் செய்யத் தொடங்கியிருக்கிறார். கோடையில் நீர் கிடைத்ததும் கன்றுகள் சிறப்பாக வளர்ந்து அடி பருத்துள்ளன. 

நிதி ஆண்டின் கடைசி நாள் மாலை சிறப்பாக வளர்ச்சி பெற்றிருக்கும் தேக்கு மரக்கன்றுகள் உள்ளத்துக்கு நம்பிக்கை அளித்தன. 

நண்பரின் முயற்சி வெற்றிகரமாக இருப்பதைக் கண்ட அவரது உறவினர் நண்பரின் வயலுக்குப் பக்கத்தில் இருக்கும் தனது 3 ஏக்கர் நெல்வயலை தேக்குத் தோட்டமாக மாற்ற முடிவு செய்திருக்கிறார். 

Friday 29 March 2024

தாடி ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளருக்கு ஒரு நண்பர் இருக்கிறார். 35 ஆண்டு கால நண்பர். அமைப்பாளர் தந்தைக்கும் நண்பர். அவருக்கு வயது 68 இருக்கும். சமீபத்தில் வீட்டுக்கு வந்திருந்தார். 

‘’பிரபு ! என்ன ஷேவ் பண்ணாம தாடி வச்சுருக்கீங்க’’

அமைப்பாளருக்கு கோபம் வந்தது என்பதை சற்று மென்மையாகச் சொல்வது என்றால் அமைப்பாளர் அசௌகர்யமாக உணர்ந்தார் என்று சொல்லலாம். 

சாங்கிய யோக நூல்கள் தங்கள் முதற் சொல்லாக ‘’அதாவது’’ என்ற சொல்லைக் கொண்டுள்ளன. அந்த துவக்கம் இந்த விஷயம் இதற்கு முன்னாலும் இருந்தது ; பேசப்பட்டது ; விவாதிக்கப்பட்டது. இதன் பின்னும் பேசப்படும் விவாதிக்கப்படும் என்னும் பொருள் கொண்டது. 

அமைப்பாளர் ‘’அதாவது’’ என்று தொடங்கினார். 

‘’செல்ஃப் ஷேவ் ரெகுலரா செஞ்சுக்கற பழக்கம் எனக்கு இல்லை. வாரம் ஒருநாள் சலூனுக்குப் போய் ஷேவ் செஞ்சுப்பன். முன்னாடி எல்லாம் ஷேவிங்க்கு 50 ரூபாய் சார்ஜ் பண்ணாங்க. இப்ப 80 ரூபாய் ஆகுது. எனக்கு வாரம் 80 ரூபாய்ங்கறது காஸ்ட்லின்னு தோணுது. திங்கள்கிழமை காலைல ஷேவ் பண்ணிக்க போவன். அது அடுத்த திங்கள் வரைக்கும் தாங்கும். இப்படி வாரம் ஒரு தடவை ஷேவ் பண்றதை ரிப்பீடடா பண்றதுல ஒரு டயர்ட் உருவாகிடுச்சு. அதான் ஒரு முடிவு பண்ணன். ஒவ்வொரு மாசத்துலயும் முதல் தேதி குளோஸ் கட் பண்ணி டிரிம்மர் மெஷின்ல தாடியை கம்ப்ளீட் டிரிம் பண்ணிடலாம்னு முடிவு பண்ணன். அதுக்கு மாசத்துக்கு ரூ.120 மட்டும் தான் செலவாகும்.’’

முதல் கட்ட விளக்கம் கொடுத்த பின் தாடிக்குப் பின்னால் இருக்கும்  பொருளியல்  எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்னும் எண்ணம் அமைப்பாளருக்கே தோன்றியது. 

நண்பருக்கு இந்த விளக்கம் திருப்தியளிக்கவில்லை. அமைப்பாளர் இரண்டாம் கட்டத்துக்கு தயாரானார். 

‘’பிரிட்டிஷ்காரங்க இந்தியாவுக்கு வந்தப்புறம் அவங்களோட உத்யோகஸ்தர்கள் தினசரி ஷேவ் பண்ணிட்டு ஆஃபிஸுக்கு வரணும்னு ஒரு நெறியை உருவாக்குனாங்க. பிரிட்டிஷ் ஆர்மி நேவில அந்த நெறி உண்டு. அது அவங்க கவர்மெண்ட் ஸ்டாஃபுக்கும் வந்தது. அவங்க ஆளுகைல இருந்த எல்லா இடத்துலயும் இந்த விஷயத்தை இம்ப்ளிமெண்ட் செஞ்சாங்க. தமிழகம் அவங்க ஆளுகைல ரொம்ப வருஷமா இருந்த இடம். அதனால கவர்மெண்ட் ஆஃபிஸ் ஸ்டாஃப்னா ஷேவ் பண்ணியிருக்கனும்னு ஆச்சு. காலேஜ் மாதிரி கல்வி நிலையங்களிலும் ஸ்டூடண்ட்ஸ் ஷேவ் பண்ணி இருக்கனும்னு ஆச்சு. இந்தியால ஆயிரக்கணக்கான ஆண்டுகளா ஷேவிங் செஞ்சுக்கற வழக்கம் இருக்கு. ஆனா மக்கள் டெய்லி ஷேவ் செஞ்சுருப்பாங்களா செல்ஃப் ஷேவ் செஞ்சுருப்பாங்களாங்கறது யோசிச்சுப் பாக்க வேண்டிய விஷயம். இந்தியா முழுக்க ‘’நாவிதர்’’ கம்யூனிட்டி இருக்காங்க. அவங்க மருத்துவத் தொழிலோட ஒரு பகுதியா சவரத்தை வச்சிருந்தாங்க. நோய்க்கு மருந்து கொடுக்கற வேலை அவங்களோடது. இன்னைக்கும் நாலு ஊருக்கு ஒரு நாவிதர் குடும்பம்ங்கற அளவுல தான் அவங்க இருக்காங்க’’

பொருளியல் விளக்கத்துக்குப் பிறகு அமைப்பாளர் வரலாற்று விளக்கமும் அளித்தார். 

நண்பரை அமைப்பாளர் சொன்ன பதில் சென்று சேரவில்லை. 

‘’கிரியேட்டிவ் மைண்ட் செட் உள்ளவங்க தோற்றத்துக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்க மாட்டாங்க. அது அவங்க கவனத்துக்கே வராது. அவங்க வேற உலகுல சஞ்சரிச்சுட்டு இருப்பாங்க. உடனே கிரியேட்டிவ் ஃபீல்டுல டெய்லி ஷேவ் செஞ்சுக்கறவங்க இருக்காங்கலேன்னு சொல்லாதீங்க. கிரியேட்டிவ் ஆளுங்களுக்கு கிரியேஷன் தான் முக்கிய விஷயம். அதான் அதுல பாயிண்ட். இன்னைக்கு 25ம் தேதி . இன்னைக்கு தாடி மீசை இருக்கு. நீங்க 4ம் தேதி வந்தா தாடி மீசை ரெண்டும் இருக்காது. மெஷின்ல 0 போட்டு டிரிம் ஆகியிருக்கும். மாசத்தோட முதல் வாரம் தாடி மீசை இல்லாம இருப்பன். மாசத்தோட ரெண்டு மூணாவது வாரம் நடுத்தரமான தாடி மீசையோட இருப்பன். கடைசி வாரம் நல்லா வளந்த தாடி மீசையோட இருப்பன். எந்த தேதில நீங்க என்னை பாக்கறீங்கன்னு பொருத்து தான் என்னோட தாடி மீசை’’ 

நண்பர் தாடிக்குக் கொடுக்கப்பட்ட பொருளியல் வரலாற்று விளக்கத்தையும் ஏற்றவில்லை. அதை விட அதிகமாக கிரியேட்டிவ் மைண்ட் செட் குறித்து அளித்த விளக்கத்தையும் ஏற்கவில்லை. 

Thursday 21 March 2024

நந்தி மலர்

வீட்டுக்கு அருகே ஒரு நந்தியாவட்டை மலர்ச்செடி உள்ளது. பல மாதங்களுக்கு முன்னால் என்னால் நடப்பட்டது. ஒரு கோடையையும் ஒரு மழைக்காலத்தையும் கடந்து இப்போது அடுத்த சுற்றுக்குத் தயாராகி உள்ளது. கோடையின் வெப்பம் பெரு உக்கிரம் கொள்ளத் துவங்கியிருக்கும் பருவம். தார்ச்சாலைக்கும் மதில் சுவருக்கும் இடையில் அமைந்திருக்கிறது அச்செடி. எப்போதும் சாலையில் செல்லும் வாகனங்களால் செடியின் தழைகள் முழுவதிலும் புழுதி படிந்திருந்தது. அதனைக் கடந்து செல்லும் போது சிலமுறை அச்செடியைப் பார்த்தேன். கோடை, புழுதி வறட்சி என அத்தனை தடைகள் இருப்பினும் அதில் பல மலர்கள் மலர்ந்திருந்தன. அன்றலர்ந்த மலர்கள் என்ற கம்பன் நினைவில் எழுந்தான். மலர்ச்சி என்பது ஒரு சுபாவம். சூழல் வசதியோ அசௌகர்யமோ மலர்களுக்கு அதில் எந்த சொல்லும் இல்லை. எந்த புகாரும் இல்லை. அவை மலர்ந்திருக்கின்றன. யோகம் மலர்தல் என ஏன் கூறப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டேன். 

நந்தி மலர்ச்செடிக்கு ஒரு வாளியில் நீர் கொண்டு சென்று அதன் மீது மழை போலத் தூவினேன்.  

Tuesday 19 March 2024

எனது படைப்புகள்

   2016ம் ஆண்டு மயிலாடுதுறையிலிருந்து ரிஷிகேஷ் வரை 22 நாட்கள் மோட்டார்சைக்கிளில் பயணித்தேன். அப்பயணம் குறித்த  பயணக் கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. அதன் இணைப்பு

காவிரியிலிருந்து கங்கை வரை - பகுதி 1

அதன் இரண்டாம் பகுதியின் இணைப்பு

ஹம்பி - நிலவைக் காட்டும் விரல்

சொல்வனம் இதழில் வெளியான எனது சிறுகதைகள்











வருகை              





இரு பள்ளிகள்

சொல்வனம் இதழில் எழுதும் ‘’யானை பிழைத்தவேல்’’ கம்பராமாயணத் தொடரின் கட்டுரைகள் இணைப்பு

யானை பிழைத்தவேல் - பகுதி 1   யானை பிழைத்தவேல் - பகுதி 2

யானை பிழைத்தவேல் - பகுதி 3   யானை பிழைத்தவேல் - பகுதி 4

யானை பிழைத்தவேல் - பகுதி 5

ஜெயமோகன் இணையதளத்தில் வெளியான எனது கட்டுரைகள் & கடிதங்கள்


சுப்பு ரெட்டியார்         



வீரப்ப வேட்டை                         







சங்கிரகம் (மறு பிரசுரம்)

சில நாட்களாக தளத்தில் ’’காவிரி போற்றுதும்’’ பணிகளை மீள்பதிவு செய்து கொண்டிருந்தேன். அது பணிகளைத் தொகுத்துக் கொள்ள உதவிகரமாக இருந்தது. என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை புறவயமாக அறியச் செய்தது. இச்செயல்கள் அமைப்பின் செயல்கள் மட்டும் அல்ல ; மக்களின் செயல்களும் கூட. மக்கள் பங்களிப்பு இருக்கும் விதத்திலேயே ‘’காவிரி போற்றுதும்’’ தன் செயல்களை வடிவமைக்கிறது. எனவே மக்களுக்கு முதற்கண் நன்றி தெரிவிக்கிறது.  தமிழ்ச் சூழலில் எவ்விதமான பங்களிப்பும் நிதிப்பங்களிப்பே என்ற மனப்பதிவு பரவலாக உள்ள நிலையில் நூற்றுக்கணக்கான - ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் செயல்கள் மூலம் பங்கெடுப்பதும் பெரும் பயன் விளைவிக்கக் கூடியது என்பதை ‘’காவிரி போற்றுதும்’’  அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளது. 

புதிதாக ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என ‘’காவிரி போற்றுதும்’’ கூறும் போதெல்லாம் அதற்கு ஊக்கம் தந்து அது நிகழ்வதற்கு சகலவிதமான உதவிகளும் செய்து அதனைச் சாத்தியமாக்குவது நண்பர்களே. அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல இந்த தருணம் பொருத்தமானது ஆகும். 

உண்மையில் ‘’காவிரி போற்றுதும்’’  ஓர் இணைப்புப் பாலமாகவே செயல்படுகிறது. சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் ஒரு பக்கம். சாமானிய மக்கள் இன்னொரு பக்கம். அவர்கள் இருவரும் ‘’காவிரி போற்றுதும்’’ வழியாக இணைக்கப்படுகிறார்கள். அந்த இணைப்பின் மூலம் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்கிறது என்பதே உண்மை. 


















Saturday 16 March 2024

பேரம் ( நகைச்சுவைக் கட்டுரை)

ஒரு புதிய இரு சக்கர வாகனத்தை வாங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை அமைப்பாளருக்கு ஏற்படுத்திக் கொண்டேயிருந்தனர் அமைப்பாளர் உடன் இருப்பவர்கள். அமைப்பாளர் அதற்கான வாய்ப்புகளை பலமுறை ஒத்திப் போட்டார். எங்களுக்குப் பிடித்த வாகனத்தை வாங்கிக் கொண்டு வந்து நிறுத்தி விடுவோம் என அமைப்பாளருக்குத் தெரிவிக்கப்பட்டதும் அமைப்பாளர் இனியும் ஒத்தி வைப்பதோ தள்ளி வைப்பதோ இயலாது என உணர்ந்து ஒரு புதிய வாகனம் வாங்கிக் கொள்கிறேன் என்றார். முடிவெடுத்து பல நாட்கள் ஆனாலும் வாகனம் வாங்கவில்லை. டீலரிடம் காலையில் சென்றால் மாலையில் வண்டி எடுத்துக் கொண்டு வந்து விடலாம். இருந்தாலும் அமைப்பாளர் வண்டி வாங்கிய பாடில்லை. 

ஊரில் இருந்த டீலர் ஒரு விலை சொன்னார். விலையைக் குறைக்க முயற்சித்தார் அமைப்பாளர். உள்ளூர் டீலர் விலை இறுதியானது என்றார். அமைப்பாளர் எந்த முடிவும் எடுக்கவில்லை. சில தருணங்களில் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதே ஒரு நல்ல முடிவாக இருப்பது உண்டு. 

வண்டி வாங்க சொல்லி நெருக்கடி கூடிக் கொண்டே இருந்தது. இது இறுதிக் கட்டம் என்று அமைப்பாளர் எண்ணினார். 

இணையத்தில் தேடி தனது ஊரைச் சுற்றி இருக்கும் ஊர்களின் டீலர் அலைபேசி எண்களை  சேகரித்துக் கொண்டார். ஒவ்வொருவருக்கும் ஃபோன் செய்தார். தான் இன்ன பிராண்ட் இன்ன மாடல் தான் எடுக்கப் போவதாக முடிவு செய்து விட்டதாகவும் ‘’பெட்டர் பிரைஸ்’’ கிடைத்தால் தங்களிடமே வாகனத்தை எடுத்துக் கொள்வதாகவும் உறுதி அளித்து பேரத்தை துவக்கினார் அமைப்பாளர். ஒரு வெளியூர் டீலர் உள்ளூர் விலையை விட ரூ. 5000 /- குறைத்துக் கொடுக்க ஒப்புக் கொண்டார். 

ஒரு நல்ல டீல் முடித்த நிறைவில் அதனை ஏற்றுக் கொண்டார் அமைப்பாளர். 

பேரத்தின் மூலம் மிச்சமான ரூ.5000 தொகையில் ஒரு சைக்கிள் வாங்கிக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார் அமைப்பாளர்.