Sunday, 11 January 2026

நாகபுரி

இந்திய நிலப்பகுதிகளில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் நாக்பூர் என்னும் நாகபுரியின் பெயரை பரிச்சயமாக அறிந்திருப்பார்கள். இன்று மும்பை செல்லும் சில ரயில்களின் நேரத்தை அறிய இணையம் மூலம் தேடிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு சுவாரசியமான விஷயம் கண்ணில் பட்டது.   

நாகபுரிக்கு மேற்கே இருக்கிறது மும்பை. நாகபுரிக்கு கிழக்கே இருக்கிறது பூரி. நாகபுரிக்கும் மும்பைக்கும் இடையேயிருக்கும் தூரம் 800 கி.மீ. நாகபுரிக்கும் பூரிக்குமான தூரம் 900 கி.மீ. வங்கக் கடலும் அரபிக் கடலும் நாகபுரிக்கு ஏறக்குறைய சமத் தொலைவில் உள்ளன. 

நாகபுரிக்கும் தில்லிக்குமான தூரம் 1200 கி.மீ. நாகபுரிக்கும் சென்னைக்குமான தூரம் 1100 கி.மீ. சென்னைக்கும் தில்லிக்கும் ஏறக்குறைய சமத் தொலைவில் இருக்கிறது நாக்பூர். 

நாட்டின் வட எல்லையான லடாக் நாகபுரியிலிருந்து 2000 கி.மீ. நாட்டின் தென் எல்லையான திருவனந்தபுரம் 1900 கி.மீ. 

Saturday, 10 January 2026

அலைகடல்

 இங்கே இன்று காலையிலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்தது. பெருமழை பெய்யக்கூடும் என ஓர் எதிர்பார்ப்பு நிலவியது. மாலை 3 மணிக்கு தரங்கம்பாடி நோக்கி புறப்பட்டேன். செம்பொன்னார்கோவிலிலிருந்து இலேசாக தூறத் தொடங்கியிருந்தது. தரங்கம்பாடியில் அலைகடல் முன் சென்று நின்றேன். அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. அலையோசை நிரம்பியிருந்தது அகமும் புறமும். 

அழிவும் ஆக்கமும்


 நூல் : பௌத்த வேட்கை ஆசிரியர் : தர்மானந்த கோசம்பி தமிழில் : தி. அ. ஸ்ரீனிவாஸன் பக்கம் : 271 விலை : ரூ. 340 பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில், 629001. 

ஒரு காலத்தில் மும்பையிலிருந்து கோவா செல்ல சாலை மார்க்கம் இல்லாமல் படகில் பயணம் செய்ய வேண்டியிருந்திருக்கிறது. கோவாவின் கிராமங்களில் மாலை அந்திக்குப் பிறகு இரண்டொரு நாட்களுக்கு ஒருமுறை புலியின் உறுமல் கேட்கும் சூழல் இருந்திருக்கிறது. பஞ்சமும் நோயும் நாடெங்கும் நிலவிய காலம். அத்தகைய சூழலிலிருந்து ஒருவர் கல்வி கற்க வேண்டும் என்ற ஆவலுடன் நாடெங்கும் பல்லாண்டுகள் அலைகிறார். புத்தரின் வாழ்க்கையையும் செய்தியையும் பொதுமக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது அவரது ஆவல். பசியும் பற்றாக்குறையும் அவரை நீங்காமல் பற்றுகிறது. அவர் கல்வி கற்ற வண்ணம் இருக்கிறார். கோவாவிலிருந்து பூனா அங்கிருந்து காசி காசியிலிருந்து நேபாளம் பின் கல்கத்தா அங்கிருந்து கொழும்பு பின் ரங்கூன் மீண்டும் மும்பை கோவா அதன் பின் அமெரிக்கா என அவரது பயணம் நீள்கிறது. தனி ஒரு மனிதராக அலைகிறார். 

அபுனைவுகள் வாசிக்கையில் அதிலிருந்து நாம் வெகுதூரம் கற்பனை செய்து கொள்ள முடியும் என்பதால் நான் அவற்றை விரும்பி வாசிப்பேன். இந்நூல் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியின் இந்திய சித்திரத்தை எனக்கு அளித்தது. நாடெங்கும் பசி பற்றாக்குறை வறுமை நோய்மை. பண்பாட்டு மாண்புகள் அனைத்தும் பாழ்பட்டுக் கிடக்கின்றன. 

தர்மானந்த கோசாம்பி நூலில் எங்கும் மகாத்மா காந்தியின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஏனெனில் 1890 - 1905 வரையிலான அவரது பயணங்கள் தேடல்கள் நூலில் பதிவாகியுள்ளன. காந்தியின் அரசியல் பிரவேசம் அதன் பின்னரே நிகழ்கிறது. காந்தி எவ்விதம் தனது ஒருமைப்பாட்டு முயற்சிகளை வடிவமைத்தார் என்பதை கோசாம்பி காட்டும் சமூகச் சித்திரத்திலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. 

எல்லா வகையிலும் எதிர்மறையான சூழல் நிலவிய காலகட்டத்திலும் மகாத்மா காந்தி ஐயமின்றி நாம் ஒரே தேசம் என்றார். அதனை இந்திய தேசிய காங்கிரஸ் செயல்பாடுகள் மூலம் செய்தும் காட்டினார். கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை அவர் சாமானியரான மிகப் புதிய பலரை அரசியலுக்குள் கொண்டு வந்தார் என்பதும் அவர்களே இந்த தேசத்தின் அரசியல் கட்டுமானத்துக்கு அடிகோலியவர்கள் என்பதையும் நான் எண்ணிப் பார்த்தேன். 

Friday, 9 January 2026

வெள்ளை நிறத்தொரு பூனை

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வீட்டைச் சுற்றி சுற்றி ஒரு பூனை வந்து போய் கொண்டிருந்தது. குட்டிகளைப் பிரசவித்திருக்குமோ என ஐயம். குட்டிகளை எங்கே வைத்திருக்கிறது என்பது தெரியவில்லை. முன் பின் கதவுகளின் வழியாக ஜன்னல் வழியாக என பலவகைகளில் வீட்டுக்குள் வரவே விரும்பியது. பூனைக்குட்டிகளின் ‘’மியாவ் மியாவ்’’ சத்தம் கேட்கவேயில்லை. ஒருமுறை நான் பார்க்கையில் தரையிலிருந்து வாஷிங் மெஷின் மீது தாவி ஏறி அங்கிருந்து குளியலறையின் ‘’லோ-ரூஃப்’’ மீது தாவி ஏறியது. அங்கேயே வெகுநேரம் இருந்தது. குளியலறையின் ரூஃப் ஏழு அடி உயரத்தில் இருந்ததால் வீட்டின் பத்து அடி உயர ரூஃப்-க்கும் அதற்கும் இடையில் மூன்று அடி உயரம் கொண்ட பரண் இருந்தது. அதில் குட்டிகள் இருக்கின்றன என யூகித்தேன். 

பூனை வெளியில் போயிருந்த நேரத்தில் லாஃப்ட் மீது ஏறி பார்த்தேன். இரண்டு குட்டிகள் இருந்தன. அவற்றை எடுத்து வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் புதர் மண்டிய இடத்தில் கொண்டு போய் விட்டு விட்டேன். 

அவ்விதம் செய்தாலும் மனம் அமைதியற்று இருந்தது. நாய் காகம் போன்ற வேறு பிராணிகளால் அந்த குட்டிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விடுமா என என் மனம் துயருற்றது. பத்து நிமிடத்துக்கு ஒருமுறை என நான் விட்டு விட்டு வந்த இடத்தில் குட்டிகள் பாதிப்பு இல்லாமல் இருக்கிறதா என பார்த்து விட்டு வந்தேன். மூன்றாம் முறை பார்க்கச் செல்கையில் குட்டிகளை நான் விட்ட இடத்திற்கு 20 அடி தொலைவில் தாய்ப்பூனை அமர்ந்திருந்தது. குட்டிகளை அது பார்த்திருக்கும். மோப்பத்தின் மூலமே அவை அறிந்து விடும் என்றாலும் பூனைக்குட்டிகளை நோக்கிச் சென்றேன். நான் முன்நகர்ந்து வருவதால் பூனை பக்கவாட்டில் நடந்து சென்றது . பூனைக்குட்டிகள் அருகே சென்றதும் அவற்றுக்கு 10 அடி தொலைவில் அவற்றை நோக்கிய வண்ணம் பூனை நின்றது. நான் விலகினேன். பூனை குட்டிகளை கவ்விக் கொண்டு வேறொரு இடத்துக்குச் சென்றது. 

தாயும் சேயும் நலமாயிருப்பது மகிழ்ச்சி அளித்தது. என் மனம் அமைதியடைந்தது.  

பாரதியின் ‘’வெள்ளை நிறத்தொரு பூனை’’ வாசித்த நினைவு வந்தது. 

Thursday, 8 January 2026

அப்படி ஒன்று எப்படி இருக்கும்?

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதனை பல அரசியல் கட்சிகள் விரும்பவில்லை. நாடாளுமன்றத்தின் போதிய பெரும்பான்மையுடன் இரு அவைகளிலும் அந்தச் சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டது.  தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ‘’அந்தச் ச்ட்டம் எல்லா குடிமக்களுக்கும் எதிரானது’’ என்று கருத்து தெரிவித்தார். 

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் ஒரு கிராமத்து மனிதர். மாநிலக் கட்சி ஒன்றில் கிராம அளவிலான பொறுப்பு வகிக்கிறார். செய்தித்தாளில் மேற்படி நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்தை வாசித்து விட்டு என்னிடம் கேட்டார் : ‘’சார் ! ஒரு சட்டம் வந்தா இந்த சட்டம் ஏழைகளுக்கு எதிரானது அப்படின்னு சொன்னா அது பணக்காரங்களுக்கு சாதகமானதுன்னு புரிஞ்சுக்கலாம். தொழிலாளிகளுக்கு எதிரானதுன்னா முதலாளிகளுக்கு சகாயம் செய்வதுன்னு புரிஞ்சிக்கலாம். நடுத்தர வர்க்கத்துக்கு எதிரானதுன்னா உயர் நடுத்தர வர்க்கத்துக்கு ஆதரவானதுன்னு புரிஞ்சுக்கலாம். யாரோ ஒருத்தருக்கு எதிரா இருந்தா யாரோ ஒருத்தருக்கு ஆதரவா இருக்கும். அது எப்படி சார் ஒரு சட்டம் எல்லாருக்கும் எதிரா இருக்க முடியும் ?’’

எனக்கு கிராமத்து மனிதருடைய பொதுப் பிரக்ஞை திருப்தியளித்தது.  

Wednesday, 7 January 2026

அன்புள்ள திரு.அனூப் ஜெய்ஸ்வால் அவர்களுக்கு,

அன்புள்ள திரு.அனூப் ஜெய்ஸ்வால் அவர்களுக்கு,

இன்று பத்திரிக்கையாளர் திரு.வி.சுதர்ஷன் எழுதிய ‘’குற்றமும் கருணையும்’’, ‘’குற்றமும் அநீதியும்’’ ஆகிய இரு நூல்களை அடுத்தடுத்து வாசித்தேன். திரு.சுதர்ஷன் எழுதிய ‘’குற்றமும் தீர்ப்பும்’’ என்ற நூலை சென்ற ஆண்டில் வாசித்திருந்தேன். சி.பி.ஐ -ல் பணி புரிந்த திரு. ரகோத்தமன் விசாரணை செய்த கொலை வழக்கைக் குறித்த நூல் அது.  

வாசிக்கும் போது சில நூல்கள் நம் இதயத்துடனும் நம் மன்சாட்சியுடனும் பேசுகின்றன. தங்களைக் குறித்த இரு நூல்களும் அவ்வாறானதே. இயற்கை மனிதர்களைப் பிரக்ஞை கொண்டவர்களாகப் படைத்திருக்கிறது. பிரக்ஞையுடன் செயல்படுவது என்பது அடிப்படையான மனித இயல்பாகும். மனித வரலாற்றில் செல்வமும் அதிகாரமும் மனிதர்களின் பிரக்ஞையை மறைத்திருப்பதைக் காணலாம். காவல்துறையின் முக்கியமான பொறுப்பில் அதிகாரத்தில் இருந்த போதும் சக மனிதர்களை - அவர்கள் பொதுமக்களாக இருக்கலாம் ; அவர்கள் காவலர்களாக இருக்கலாம் ; அவர்கள் குற்றவாளிகளாக இருக்கலாம் - சக மனிதர்களாக நீங்கள் நடத்தியிருக்கிறீர்கள் என்பதை இந்த நூல்களின் பக்கங்களில் காண முடிந்தது. அதிகாரவர்க்கத்தில் ஆயிரத்தில் ஒருவரே இவ்விதம் இருக்க முடியும். தமிழகம் தங்கள் இயல்புக்கும் தங்கள் பணிகளுக்கும் என்றும் கடன்பட்டுள்ளது. 

பிரிட்டிஷார் நம் நாட்டை விட்டுச் சென்ற பின் நம் நாட்டின் அதிகாரம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் அரசு ஊழியர்களின் கைக்கு வருகிறது. அவர்களே எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கானோர் ; லட்சக்கணக்கானோர். அவர்களுடன் ஒப்பிட்டால் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை என்பது மிகவும் சொற்பமானதே. 

உயர் அதிகாரத்தில் இருப்பவர் ஆயினும் அடிப்படையில் நீங்கள் முதன்மையாக பிரக்ஞை கொண்ட மனிதர் என்பதை ‘’தொலைந்துபோன கைக்கடிகாரம்’’ சம்பவம் மூலம் உணர முடிந்தது. ஒரு கைக்கடிகாரம் தொலைந்து போன விஷயத்தை சிறு விஷயம் என்று கருதாமல் அதற்கு மனதில் இடமளித்து அந்த சம்பவத்தில் தொடர்பு கொண்டிருப்பவர்களும் மனிதர்களே என்னும் உணர்வுடன் அதனைப் புலனாய்வு செய்திருக்கும் தங்கள் சுபாவம் மிகவும் மேன்மையானது. கோயம்புத்தூர் அருகே வனத்துறை ரேஞ்சர் ஒருவர் மீது கொடுக்கப்பட்ட புகார் பொய்யானது என்பதைக் கண்டுபிடித்தது மிகப் பெரிய விஷயம். தங்களைப் போன்ற ஒருவரே இவற்றைச் செய்ய முடியும். உண்மையில் தங்கள் பணி கைக்கடிகாரம் விஷயத்தில் சிறுவனையும் கோவை பொய்ப்புகார் விஷயத்தில் வனத்துறை ரேஞ்சரையும் காத்துள்ளது. தாங்களே உண்மையான காவலர். 

‘’அந்தோணி மூக்கன்’’ கதை சிலிர்க்கச் செய்வது. அந்தோணி மூக்கன் இயல்புகளும் தாங்கள் அந்தோணி மூக்கனுக்கு செய்த உதவிகளும் பெரும் சிலிர்ப்பை ஏற்படுத்தக் கூடியவை. தற்செயலாக ‘’லாக்-அப்’’பில் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் ஒருவராக அந்தோணி மூக்கனுடன் தங்கள் அறிமுகம் நிகழ்கிறது. சில வினாடிகளில் சில நிமிடங்களில் கடந்து போயிருக்கக் கூடிய மனிதன் ‘’அந்தோணி மூக்கன்’’. அவன் என்ன சொல்கிறான் என்பதற்கு தங்கள் செவிகளைத் தருகிறீர்கள். அதனால் அவருடைய மனைவிக்கு மருத்துவம் பார்க்க ஒரு வாய்ப்பு உருவாகிறது. மருத்துவ சிகிச்சையால் உடல்நலம் மீள்கிறாள் அந்தப் பெண்மணி. அந்தோணி மூக்கன் காவல்துறைக்கு குற்றச் செயல்கள் குறித்து பல தகவல்கள் கொடுக்கிறார். வங்கிக் கடன் பெற்று மீன்பிடித் தொழில் செய்கிறார். அந்தோணி மூக்கன் தன் இளம் வயதில் எந்த சூழ்நிலையில் ஒரு கொலை செய்ய நேர்கிறது என்பதைக் கூறும் சம்பவம் எவர் அகத்தையும் நெகிழச் செய்யும். 

‘’தர்மாவை சுட்டுக் கொன்றது யார்?’’ சம்பவமும் பரபரப்பானது. ஒரு பெண்ணின் கண்ணீருக்கு பதில் கூற துணிச்சலான ஒரு முடிவை மேற்கொள்கிறீர்கள். தங்களுடைய தலைமைப் பண்புக்கும் முடிவெடுக்கும் திறனுக்கும் அந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாகும். 

‘’அம்மத்தாய் அம்மாளின் பென்ஷன்’’ உலக அளவில் காவல்துறைக்கு சாதனை என்பதில் எந்த ஐயமும் இல்லை. தூத்துக்குடியில் ஜின்சர் என்னும் சாராயம் 1980-1985ல் சர்வசாதாரணமாக விற்பனையாகிக் கொண்டிருந்ததை எடுத்துரைக்கும் அத்தியாயமும் அதனைத் தாங்கள் தடுத்த விதமும் எந்த அரசுக்கும் எந்த சமூகத்துக்கும் ஒரு எடுத்துக்காட்டு ஆகும். கந்துவட்டிக்காரர்கள் அப்பாவித் தொழிலாளர்களிடம் வாங்கி வைத்திருந்த அத்தனை ‘’கடன் பாண்டு’’களையும் வருமானவரித்துறை ரெய்டு மூலம் தீயிலிட்டு எரித்ததும் கந்துவட்டிக்காரர்களிடம் தாங்கள் எவருக்கும் கடன் அளிக்கவில்லை என எழுதி வாங்கியதும் பிரமிக்கத்தக்க செயல்கள். 

’’9வது பட்டாலியன்’’ நூலின் சுவாரசியமான நகைச்சுவையான அத்தியாயம். தாங்கள் பணி நீக்க உத்தரவை ரத்து செய்து பணி நியமன ஆணை பெற்றது ஆகப் பெரிய சுவாரசியமான கதை. 

சிறப்பான நூல். சிறப்பான சம்பவங்கள். சிறப்பான வாழ்க்கை. 

மனிதர்களை மனிதர்களாகப் பார்த்த மனிதர்களை மனிதர்களாக அணுகிய தங்களுக்கு இறைமையின் ஆசி எப்போதும் உடனிருக்கும். 

அன்புடன்,
பிரபு

மயிலாடுதுறை
07.01.2026

மக்கள் - சட்டம்- அதிகார வர்க்கம்


நூல் : குற்றமும் கருணையும் - இளம் ஐ.பி.எஸ் அதிகாரியின் தூத்துக்குடி அனுபவங்கள். ஆசிரியர் : வி. சுதர்ஷன் தமிழில் : மு.குமரேசன் பக்கம் : 223 விலை : ரூ.275 பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில்,629001. 

இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் நமது நாடு பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் பெறுவதற்கு முன்னும் பின்னும் தேசப் பிரிவினையின் கோரங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வன்முறையும் வறுமையும் நிரம்பிய ஒரு காலகட்டத்தில் நாம் முன்நகரத் தொடங்கினோம்.  கோடானுகோடி மக்கள் வாழும் நாட்டில் ஒரு நிர்வாக முறையை ஏற்படுத்தி மக்களை முன்னேற்றம் நோக்கி கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு இந்திய ஜனநாயகத்துக்கு இருந்தது ; பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் நிர்வாக முறையே இந்திய ஜனநாயகத்திடம் இருந்தது. அன்னிய ஆட்சிமுறைக்கு இருந்த அத்தனை அன்னியத் தன்மைகளையும் கொண்டிருந்தது அந்த நிர்வாக முறை. இந்தியாவின் நிர்வாக முறையை கவனிப்பவர்கள் ஒரு விஷயத்தை எளிதில் கண்டுகொள்ளலாம் ; அதாவது இங்கே அதிகாரவர்க்கமே முழு அதிகாரம் கொண்டது ; அரசியல்வாதிகள் அதிகாரவர்க்கம் அளவு அதிகாரம் கொண்டவர்கள் அல்ல. அரசியல்வாதிகள் அதிகாரவர்க்கத்தை விட பலபடிகள் குறைவான அதிகாரம் கொண்ட இரண்டாம் இடத்தில் இருப்பவர்கள். அதிகாரத்தில் முதலிடத்தில் இருக்கும் அதிகாரவர்க்கமும் அதிகாரத்தில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அரசியல்வாதிகளும் மேற்கொள்ளும் ’’புரிதலுடன்’’ கூடிய ’’கூட்டுச்செயல்களே’’ இந்திய நிர்வாக இயங்குமுறை ஆகும். 

அனூப் ஜெய்ஸ்வால் மாணவப் பருவத்திலிருந்தே எந்த விஷயத்தையும் நுணுக்கமாக அணுகும் நுணுக்கமாகப் புரிந்து கொள்ளும் தன்மையுடன் இருக்கிறார். பள்ளி நாட்களிலிருந்தே அவருக்கு பல்வேறு வகைகளில் அதிகார வர்க்க வழமைகள் குறித்த அனுபவங்கள் ஏற்படுகின்றன. அவர் அதனைப் புரிந்து கொள்ள முயல்கிறார். உண்மையில் அதிகார வர்க்கம் இயங்கும் விதத்தைப் புரிந்து கொள்ள முயல்வதும் தொகுத்துக் கொள்ள முயல்வதும் வரையறைப்படுத்துவதுமே அதிகார வர்க்கத்தால் மீறல் என்றே கொள்ளப்படும். சிறிய அதிகாரத்திலிருந்து பெரிய அதிகாரம் வரை கொண்ட பலரால் அனூப் ஜெய்ஸ்வால் மீறல்களை மிக எளிதாக மிக இயல்பாக நிகழ்த்தும் ஓர் அசௌகர்ய நபராக காணப்படுகிறார். அசௌகர்யங்களின் நபரின் ’’அக ஆற்றல்’’ உணரப்படுவதற்கு சாத்தியக்கூறுகள் மிக மிக சொற்பமானவை என்றாலும் அரிதினும் அரிதாக அவர் தனக்கான இடத்தை அடைவதற்கான வாய்ப்பும் இந்திய நிர்வாக முறையில் அனூப் ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்திருக்கிறது என்பதும் இந்திய நிர்வாக முறையின் நூதனங்களில் ஒன்றாகவே கருத வேண்டியிருக்கிறது. 

தேசிய பாதுகாப்பு அகாதெமியில் சேரும் அனூப் அங்கிருந்து ராஜினாமா செய்து வெளியேறுகிறார். அவ்வாறு வெளியேறுகையில் அகாதெமியுடன் ஒரு சட்டப் போராட்டம் ஏற்படுகிறது. அதன் பின் ஐ.பி.எஸ் க்கு தேர்வாகிறார். பயிற்சி அகாதெமியில் அவருக்கு பணி கிடைக்கும் முன்பே பணி நீக்க உத்தரவு கிடைக்கிறது. உச்சநீதிமன்றத்தை அணுகி பணி நீக்க உத்தரவை ரத்து செய்து பணி நியமன ஆணை பெறுகிறார். 

உத்திரப் பிரதேசத்தின் கோரக்பூரைச் சேர்ந்த அனூப் ஜெய்ஸ்வால் தூத்துக்குடி மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளராக பணியில் சேர்கிறார். தனது பணியை தனது பொறுப்பை நிறைவேற்றத் தொடங்குகிறார். அவரது பணி அனுபவங்களின் சுவாரசியமான முக்கியமான அனுபவங்கள் பத்திரிக்கையாளர் வி.சுதர்ஷன் -னால் ‘’குற்றமும் கருணையும்’’ என்ற நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. 

1980களில் இருந்த சமூக நிலையையும் நிர்வாக இயங்குமுறையையும் இந்நூலின் சம்பவங்கள் மூலம் அறிய நேரிடும் போது இன்றைக்கு இருக்கும் சமூகமும் நிர்வாக முறையும் 40 ஆண்டுகளில் பல மைல் தூரம் முன்னேறி வந்திருப்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. 

அனூப் ஜெய்ஸ்வால் தூத்துக்குடியில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கிறார். கந்துவட்டியை ஒழிக்கிறார். அரசியல்வாதிகளின் பின்புலம் கொண்ட ரவுடிகளை கைது செய்கிறார். பொதுமக்களுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை அணுகும் விதமாக ஏற்பாடு செய்கிறார். அங்கே சில நல்ல மாற்றங்கள் நடக்கின்றன. அனூப் இடமாற்றமும் நடக்கிறது. பொதுமக்கள் ஆதரவு அவருக்கு பெருமளவில் கிடைக்கிறது. 

இந்த நூலில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு சம்பவமுமே தனித்துவமானது. பிரக்ஞை கொண்ட மனிதராக அரசியல் சட்டத்தை மதிப்பவராக காவல்துறை அதிகாரியாக அவர் ஒவ்வொரு விஷயத்தையும் அணுகும் போது தனிமனிதப் பிரக்ஞை, சட்டம் மற்றும் அதிகாரம் ஆகியவை ஒத்திசைகின்றன ; அப்போது உண்மையிலேயே பெரும் மாற்றம் நடக்கிறது. ‘’குற்றமும் கருணையும்’’ நூல் அத்தகைய மாற்றங்களின் கதை. 

வீடும் அளவும்

ஊரிலிருந்து 10 கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு கிராமத்துக்கு தொழில் நிமித்தமாக ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். ஊரிலிருந்து பிரியும் ஒரு கிராமச் சாலை மேலும் பிரிந்து இன்னொரு கிராமச் சாலையில் சேர்கிறது. அந்த சாலை பிரிந்து இன்னொரு கிராமச் சாலையாகச் செல்கிறது. நான் சென்ற கிராமம் அந்த சாலையில் அமைந்திருந்தது. ஊரிலிருந்து 10 கி.மீ தொலைவு என்றாலும் அதன் அமைவிடத் தன்மையைப்பொறுத்து காலத்தால் 50 ஆண்டுகள் பின்னால் இருக்கிறது என எளிதில் கூறி விட முடியும். அந்த ஊரில் நான் சென்ற வீடு மிகப் பெரிய வீடு. ஒரு பங்களா என்று கூற முடியும். ஆனால் அதில் வசிப்பவர்கள் இரண்டு பேர் மட்டுமே.  

ஒருவர் பங்களாவில் வசிப்பது மிக நல்ல விஷயமே. எனினும் பங்களாவுக்கென பங்களா பராமரிப்புக்கென சில குறைந்தபட்ச தேவைகள் உள்ளன. அதில் ஒரு வாட்ச்மேன் இருப்பது அவசியம். ஒரு தோட்டக்காரரேனும் இருக்க வேண்டும். வீட்டின் பணியாளர்கள் என இருவராவது இருக்க வேண்டும். அப்போது தான் அவ்வளவு பெரிய வீட்டை தூய்மையாக நேர்த்தியாக வைத்துக் கொள்ள முடியும். 

இரண்டு பேரால் 600 - 800 சதுர அடி கொண்ட வீட்டை மட்டுமே பராமரிக்க இயலும். 

Tuesday, 6 January 2026

எனது சிறுகதைகள் (மறுபிரசுரம்)

சொல்வனம் இதழில் வெளியான எனது சிறுகதைகள்











வருகை              





இரு பள்ளிகள்

சொல்வனம் இதழில் எழுதும் ‘’யானை பிழைத்தவேல்’’ கம்பராமாயணத் தொடரின் கட்டுரைகள் இணைப்பு

யானை பிழைத்தவேல் - பகுதி 1   யானை பிழைத்தவேல் - பகுதி 2

யானை பிழைத்தவேல் - பகுதி 3   யானை பிழைத்தவேல் - பகுதி 4

யானை பிழைத்தவேல் - பகுதி 5

 

புத்தாண்டுக் கொண்டாட்டம்

 புத்தாண்டு அன்று கணிசமான தூரம் மோட்டார்சைக்கிளில் பயணிக்க நேர்ந்தது. அப்போது ஆலயங்களில் மக்கள் கூட்டமாக சென்று வழிபட்டனர். ஜனவரி 1ம் தேதி கிரிகோரியன் நாட்காட்டியில் புத்தாண்டு. அந்த நாட்காட்டி நாம் ஏற்கும் நாம் பயன்படுத்தும் ஒன்று என்பதால் ஆண்டு மாற்றத்தை புதிய துவக்கமாகக் கொள்ளும் வழக்கம் மக்களுக்கு இருப்பது என்பது சுவாரசியமான ஒன்று தான்.