Wednesday, 3 June 2026

6 பதிவுகள்

ஒரு சாமானிய பிரஜையின் தேவை

மனுவும் தபாலும்

திறனற்ற நிர்வாகம்

மனுநீதி நாள்

மனுநீதி நாள் முகாம் குறித்த புகார்

அரசாங்கம் என்பது அறிக்கைகள்

அரசாங்கம் என்பது அறிக்கைகள்

ஒரு விஷயத்தை எவரும் அவதானிக்கலாம் ; அரசாங்கச் செயல்பாடுகளில் கணிசமானவை அறிக்கைகள் தயாரித்தலே. ஒரே அறிக்கையை குறுகிய காலத்துக்குள்ளோ அல்லது நீண்ட காலத்திலோ திரும்பத் திரும்ப தயாரித்து அளித்துக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கும். ஒரு காலத்தில் அதனால் தான் இந்திய அரசியலில் வழக்கறிஞர்கள் மிக அதிக அளவில் ஈடுபட்டனர். மொழி மற்றும் கலைப் படிப்புகள் படித்தவர்களின் தேவை இந்திய அரசியலில் இருந்தது. இந்திய ஆட்சிப் பணியாளர்கள் தேர்வில் மொழியறிவு தேர்ச்சிக்கான முக்கிய விஷயமாக இருந்தது ; இருக்கிறது. இந்திய ஆட்சிப்பணி தன் தேர்வர்களின் ஆங்கில மொழியறிவை முக்கியமாக நினைக்கிறது. தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவருக்கு வேறு மாநிலத்தில் பணி நியமனம் நிகழ்ந்தால் அந்த மாநில மொழியைக் கற்று அதிலும் தேர்வு எழுதி தேர்ச்சி அடைய வேண்டும் என்னும் தேர்வுமுறையைக் கொண்டிருக்கிறது.  சட்டம் இயற்றப்படுதல் என்பது முன்பு சட்டம் படித்தவர்களை அதிகம் சார்ந்திருந்தது. சட்டங்கள் அதிகமாக அதிகமாக சட்டங்கள் குடிமக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகையில் அதிகாரிகள் சட்ட திருத்தங்களை மேற்கொள்வதில் பங்களிப்பு ஆற்றத் தொடங்கினர். இன்று இந்திய அரசியலில் நீதித்துறையும் வழக்கறிஞர்களும் ஒரு தனிக்குழுவாக உள்ளனர். அதிகாரவர்க்கம் தனிக்குழுவாக உள்ளது. அரசியல்வாதிகள் தனிக்குழுவாக உள்ளனர். இவர்களுக்கிடையேயான மோதல்களும் ஒத்துப் போதல்களுமே அரசாங்கத்தின் இயக்கம். 

இந்திய ஜனநாயகத்தில் கடைசி குடிமகனின் பங்களிப்பு கூட தினந்தோறும் இருக்கிறது. இன்று நாட்டின் கடைசி குடிமகன் கூட ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.1 என்ற அளவில் ஜி.எஸ்.டி செலுத்துகிறான். அவ்விதம் எனில் ஒரு நாளைக்கு ரூ.140 கோடி. ஒரு மாதத்துக்கு ரூ.4200 கோடி. ஒரு ஆண்டுக்கு ரூ.49,200 கோடி. சென்ற ஆண்டு மத்திய அரசின் ஜி எஸ் டி வருமானம் ரூ. 22 லட்சம் கோடி. 

நம் நாடு சுதந்திரம் அடைந்த போது நம் நாட்டின் வரி வருவாய் என்பது மிகக் குறைவாக இருந்தது. அரசாங்கம் செயல்படும் விதம் ஒருவிதமாக இருந்தது. இன்று நாட்டின் வருவாய் பெருகியுள்ளது. அதற்கேற்ற விதத்தில் பொதுமக்கள் மனநிலையிலும் பங்களிப்பிலும் மாற்றம் இருக்க வேண்டும். வருவாய் வளர்ச்சியை அப்போது தான் நாட்டு மக்களும் சமூகமும் பயன்படுத்திக் கொள்ள முடியும். 

இரண்டு தினங்களுக்கு முன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாள் முகாமுக்குச் சென்றிருந்தேன். அங்கே இணைய இணைப்பு கிடைக்கவில்லை. மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்து ஒப்புகைச்சீட்டைப் பெற்றுக் கொண்டு சென்றனர். இதனை நான் தொழில்நுட்பப் பிரச்சனையாகப் பார்க்கவில்லை. இதில் நான் வேறு ஒரு கோணத்தைக் காண்கிறேன். இன்று அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கும் அரசு அலுவலகச் செயல்பாடுகளுக்கும் அரசு வருமானத்தின் பெரும் தொகையை அளிக்கிறது. ஆனால் அரசு ஊழியர் மனோபாவத்தில் மாற்றம் இல்லை. அந்த மாற்றம் நிகழ வேண்டிய காலகட்டம் வந்து விட்டது.  

Monday, 1 June 2026

மனுநீதி நாள் முகாம் குறித்த புகார்

அனுப்புநர்
&&&&
&&&
&&
&

பெறுநர்
மாவட்ட ஆட்சியர் அவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை

ஐயா, 

பொருள் : 01.06.2026 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் மனுதாரர்களுக்கு ஏற்பட்ட இடையூறுகளையும் சேவைக் குறைபாட்டையும் மாவட்ட ஆட்சியர் கவனத்துக்குக் கொண்டு வரும் கடிதம்

01.06.2026 அன்று நடந்த மனுநீதி நாள் முகாமுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தேன். அங்கு பொதுமக்களுக்கு ஏற்பட்ட சேவைக் குறைபாட்டையும் இடையூறுகளையும் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். 

அதாவது, மனுநீதி நாள் முகாமில் பொதுமக்களால் தரப்படும் மனுக்கள் அலுவலக முத்திரை இடப்பட்டு மனுவின் முதல் பக்கம் ஸ்கேன் செய்யப்பட்டு பிரிண்ட் அவுட் ஆக அளிக்கப்படும். அதன் மறுபக்கத்தில் மனு எண், மனுதாரர் பெயர், முகவரி மற்றும் மனு விபரம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். மனுநீதி நாள் கணினி மயமாக்கப்பட்டு இணையம் மூலம் இணைக்கப்பட்ட பின் இவை நிகழ்கின்றன. தனது மனு மீது என்ன மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை மனுதாரர் அறிய இணைய இணைப்பு உதவும். 

01.06.2026 அன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் அரசு அலுவலர்களின் கணினிகள் இணையத்துடன் இணையவில்லை. இணைய இணைப்பில் பல்வேறு சிக்கல்கள். பல மனுதாரர்கள் இந்த இடையூறின் காரணமாக தங்கள் ஒப்புகைச்சீட்டினைப் பெற முடியவில்லை. காலை 11 மணிக்கு மனு அளிக்க வந்தவர்களிடம் மதியம் 2 மணிக்கு மேல் பெற்றுக் கொள்ளுமாறு அலுவலர்கள் கூறினர். மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த மனுதாரர்கள் இதனால் பல மணி நேரம் காத்திருக்க நேரிட்டது. 

ஒவ்வொரு வாரமும் வாரநாட்கள் துவங்கும் திங்கட்கிழமையன்று மனுநீதி நாள் என்பது ஆகி வந்த வழக்கம். மாவட்ட அரசு அலுவலகங்களின் தலைமை அலுவலகமான மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நூற்றுக்கணக்கான மக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வருகை புரிவதும் ஆகி வந்த வழக்கம். 

அன்றைய தினம் மனுதாரர்களுக்கு கிடைக்க வேண்டிய சேவைகள் சிறப்பான முறையில் கிடைப்பதை உறுதி செய்வது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கடமை. 

01.06.2026 மாவட்ட ஆட்சியர் அலுவலக மனுநீதி நாளில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முழுமையாகக் கலந்து கொண்டார். மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு இந்த விஷயம் கொண்டு வரப்பட்டதா என்பதை ஆய்வு செய்யுமாறு மாவட்ட ஆட்சியரைக் கேட்டுக் கொள்கிறேன். இது போன்ற சேவைக் குறைபாடுகளும் இடையூறுகளும் இனி மனுதாரர்களுக்கு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சிய்ரை கேட்டுக் கொள்கிறேன். 

தங்கள் உண்மையுள்ள,
&&&

இடம் : மயிலாடுதுறை
நாள் : 01.06.2026

நகல்

கனம் மாநில வருவாய்த்துறை அமைச்சர்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
தலைமைச் செயலகம்
சென்னை

மனுநீதி நாள்

சீட் கவர் தைக்கும் டெய்லரின் ரேஷன் கார்டு தொடர்பான மனுவை இன்று அளித்து விட வேண்டும் என பொழுது விடிந்ததுமே எண்ணம் கொண்டேன். அவர் காலை 9.30 மணி அளவில் கடைக்கு வந்து கடையைத் திறக்கிறார். சென்ற ஒரு மாதத்தில் கணிசமான முறை அவர் கடைக்குச் சென்றிருக்கிறேன். எப்போதாவது இன்னொரு பணியாளர் இருப்பார். கடை உரிமையாளரை நான் எப்போதும் கடையில் பார்த்தது இல்லை. ஒரு நாளைக்கு குறிப்பிட்ட தொகை செலுத்தி விட வேண்டும் என்னும் ஒப்பந்தம் அவர்கள் இருவருக்கும் இருக்கக் கூடும். என்னுடைய யூகம் தான் எனினும் யூகம் சரியாக இருக்கவே வாய்ப்பு அதிகம். பார்த்தாலே தெரியும் எந்த ஒரு விஷயத்தையும் நான் வார்த்தையால் கேட்க மாட்டேன்.  மனுநீதி நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதாக இருந்தாலும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் மனு கொடுப்பதாக இருந்தாலும் அலுவலக வேலை நேரமான காலை 10 - மாலை 5ல் ஏதேனும் ஒரு மணி நேரம் ஒதுக்கி அவர் வர வேண்டும். ஜீனி ரேஷன் கார்டை அரிசி ரேஷன் கார்டாக மாற்றித் தரக் கோரும் மனுவை இரு வாரங்கள் முன்பே எழுதி விட்டேன். அவருடைய ரேஷன் கார்டின் எண் தேவைப்பட்டது. அவருடைய வீட்டு எண் தேவைப்பட்டது. அவர் வசிக்கும் தெருவின் பெயரைக் கூறுகிறாரேயன்றி வீட்டு எண் அவரால் கூற இயலவில்லை. வீட்டு எண் என்ன என்று அவருக்குத் தெரியவில்லை. ரேஷன் கார்டு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் வீட்டுக்கு விசாரிக்க வருவார்கள் என்பதால் வீட்டு எண் தேவை. அதன் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி வீட்டு எண் அறிந்தேன். ரேஷன் கார்டு அட்டையின் எண் கேட்டு அதனை மனுவில் எழுதினேன். 

இன்று காலை 10.15க்கு அவருடைய கடைக்குச் சென்றேன். சில இரு சக்கர வாகனங்கள் சீட் கவர் மாற்ற வந்திருந்தன. அவர் வேலை செய்து கொண்டிருந்தார். இன்று மனுநீதி நாள் ; இன்று மனு கொடுத்து விடுவோம் என சொன்னேன். அவருடைய மனைவிக்கு ஃபோன் செய்து அவரை வரச் சொன்னார். அவர் ஒரு இரு சக்கர வாகனத்தை இரவலாக வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தார். கடைப் பணியாளர் தனக்குப் பதிலாக தனது மனைவியை மனு கொடுக்க அனுப்பி வைக்கிறேன் எனக் கூறினார். அவர் கடையிலிருந்து கலெக்டர் ஆஃபிஸ் 5 கி.மீ தூரம். எனது இரு சக்கர வாகனத்தில் நான் முன்னால் சென்றேன் ; தனது வாகனத்தில் அவர் தொடர்ந்து வந்தார். கலெக்டர் ஆஃபிஸ் வாசலில் சீருடை அணிந்த 15 போலீஸார் கும்பலாக நின்று இரு சக்கர வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர்.இந்த வழக்கம் புதிதாக இருக்கிறதே என்ன சோதனை என விசாரித்தேன். மனுநீதி நாள் அன்று மனுதாரர் எவரேனும் பெட்ரோலை உடலின் மீது ஊற்றிக் கொண்டு  தீ வைத்துக் கொள்ள முயல்வதுண்டு. அப்படி எதுவும் ஆட்சியர் அலுவலகத்துக்குள் நிகழ்ந்திடாமல் இருக்க இவ்விதம் சோதனை செய்கிறோம் என்றார்கள். என் பின்னால் வந்த சீட் கடைக்காரர் மனைவியின் வண்டியை சோதனை செய்தார்கள். அதில் 250 மி.லி பெட்ரோல் ஒரு பாட்டிலில் இருந்தது. அதனை வாங்கி போலீஸார் வைத்துக் கொண்டார்கள். அவர் வாகனம் உள்ளே வந்து என் வாகனம் நின்ற இடத்துக்குப் பக்கத்தில் நின்றது. ‘’ஏன் பெட்டியில் பெட்ரோல் வைத்திருந்தீர்கள்?’’ எனக் கேட்டேன். பாதி வழியில் நின்றால் இதனை நிரப்பிக் கொள்ள என்றார். ‘’இது மாதிரி செய்யாதீங்க. மூடி லூஸா இருந்து பெட்ரோல் சிந்தி என்ஜின் ஹீட்ல பத்திடுச்சுன்னா விபரீதம் ஆயிடும்’’ என்றேன். 

மனுநீதி நாள் முகாம் நடக்கும் இடத்துக்குச் சென்றோம். 250 பேர் கூட்ட அரங்கில் இருந்தனர். ஆளும்கட்சிக் காரர்களோ எதிர்க்கட்சிக் காரர்களோ அங்கே இல்லை என்பதை கவனித்தேன். 

இந்த மனுநீதி நாள் மனுவின் சிறப்பம்சம் இன்று அளிக்கப்படும் மனுவுக்கு ஒரு ஒப்புகை எண் கொடுப்பார்கள். அந்த ஒப்புகை எண்ணை இணையத்தில் மனுநீதி நாள் தளத்தில் உள்ளீடு செய்தால் அனைவரும் அந்த மனுவையும் மனுவின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையையும் அதிகாரிகளும் மனுதாரரும் காண முடியும்.

கூட்ட அரங்குக்கு வெகு தள்ளி மனுக்களுக்கு ஒப்புகைச்சீட்டு அளிக்கும் இடம் இருந்தது. அங்கு சென்றால் இணையம் வேலை செய்யவில்லை என்று கூறினர். மனுநீதி நாள் குறித்தே மனு அளிக்க வேண்டியிருக்கிறது என எண்ணினேன். கணிசமான நேரம் காத்திருந்தும் ஒப்புகை எண் தரப்படவில்லை. கூட்ட அரங்குக்கு சென்று மனுவை அளிக்கச் சொன்னேன். இன்று மாவட்ட ஆட்சியரே கூட்டத்தை நடத்தினார். மேடையில் 8 அதிகாரிகள் இருந்தனர். எவரிடம் வேண்டுமானாலும் மனு அளிக்கலாம். கூட்டம் இல்லாமல் இருந்த ஒரு வரிசையில் சென்று மனு அளித்தார். மாவட்ட குடிமைப் பொருள் வழங்கும் அலுவலகத்திலிருந்து வந்த ஒருவரை ஒலிபெருக்கியில் அழைத்தார்கள். அவர் மனுவைப் படித்துப் பார்த்து பெற்றுக் கொண்டார். 

சீட் கடைக்காரர் மனைவியிடம் ஒப்புகை எண்ணுக்காகக் காத்திருந்த போது சில விபரங்கள் கேட்டுக் கொண்டேன். 

‘’உங்களுக்கு சொந்த ஊர் எந்த ஊருமா?’’

‘’மாயரம் தான் அண்ணன்’’

‘’உங்க வீட்டுக்காரரும் மாயரம்னு சொன்னாரு’’

‘’அண்ணன் !அவரு என்னோட சொந்த தாய்மாமா’’

‘’அப்படியா ? நீங்க வேலைக்கு ஏதும் போலலையா?’’

‘’திருப்பூர்ல இருந்தப்ப கம்பெனிக்கு வேலைக்கு போனேன். இங்க வந்ததுல இருந்து வேலைக்குப் போகலை’’

‘’என்ன படிச்சிருக்கீங்க?’’

‘’ பிளஸ் டூ படிச்சுருக்கன் அண்ணன்’’

’’ஏன் மேல படிக்கலையா? கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்ல ஏதாவது டிகிரி படிக்கலாம்ல?’’ 

அவர் பதில் ஏதும் சொல்லவில்லை. 

‘’நீங்க என்ன வேலை செய்வீங்க?’’

‘’கடையில பொருள் எடுத்துக் கொடுக்கற வேலை செய்வன் அண்ணன்’’ 

‘’எந்தக் கடையில ?’’

‘’மளிகைக் கடை’’

‘’மளிகைக் கடையா ? என் ஃபிரண்டு ஒரு ஹார்டுவேர் கடை வச்சுருக்கார். அங்க வேலை செய்யறீங்களா? ஆனா அங்க நூறு விதமான பொருள் இருக்கும். அத்தனையையும் நீங்க அடையாளப்படுத்தி எடுக்கணும். உங்களால முடியுமா? நான் ஃபிரண்டு கிட்ட கேட்டு சொல்றன்’’ 

‘’செய்வேன் அண்ணன்’’ என்றார். 

மனுவைக் கொடுத்த பின் மீண்டும் ஒப்புகை எண்ணுக்காக வந்தோம். அப்போதும் இணைய இணைப்பு கிடைக்கவில்லை. மதியம் 2 மணிக்கு வரச் சொன்னார்கள். உங்களுக்கு எஸ் எம் எஸ் வரும். அதில் ஒப்புகை எண் இருக்கும். அது போதும் என்றார்கள். எனக்கு அதில் நம்பிக்கையில்லை. அஜாக்கிரதையாக டெய்லர் மெஸேஜை டெலிட் செய்து விட்டால் சிரமம். டெய்லர் மனைவியை வீட்டுக்கு கிளம்பி போகச் சென்னேன். 2 மணிக்கு மேல் வரலாம் என நான் முடிவு செய்து கொண்டேன். 

அந்தப் பெண் வாகனம் அருகே சென்றதும் ஒரு பையிலிருந்து ரூ.100 எடுத்தார். 
‘’அண்ணன் ! இத பெட்ரோல் செலவுக்காக வச்சுக்கங்க. பல தடவை நீங்க இந்த விஷயத்துக்காக மெனக்கெட்டீங்கன்னு வீட்டுக்காரர் சொன்னார்’’ என்றார். 

‘’அதெல்லாம் வேண்டாம் அம்மா! பரவாயில்லை. உங்களுக்கு அரிசி கார்டு கிடைச்சா அது போதும்’’ 

நண்பரின் அலுவலகத்தில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேன். நண்பரின் ஹார்டுவேர் கடைக்குச் சென்று அங்கே கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தேன். மணி இரண்டு ஆனதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றேன். ஒப்புகை எண் வழங்கும் இடத்தில் யாரும் இல்லை ; மனு நீதி நாள் கூட்ட அரங்கிலும் யாரும் இல்லை. அலுவலர்கள் அனைவரும் மதிய உணவு அருந்த சென்று விட்டார்கள். ஒப்புகை எண்ணுக்காக பொதுமக்கள் இருபது பேர் அமர்ந்திருந்தனர். 2.45க்கு ஊழியர்கள் வந்தனர். அப்போதும் இணையம் வேலை செய்யவில்லை. கொஞ்சம் காத்திருந்து ஒப்புகைச் சீட்டை பெற்றுக் கொண்டேன். 

சீட் கவர் கடைக்குச் சென்றேன். நேரம் அப்போது மதியம் 3.45. மதிய உணவு நான் இன்னும் அருந்தவில்லை. அவரிடம் ஒப்புகைச்சீட்டை அளித்தேன். 

‘’இந்த சீட்டு ரொம்ப முக்கியம். பத்திரமா வச்சுக்கங்க. ஒரு வாரம் 10 நாள்ல எப்படியும் மனு மேல மேல் நடவடிக்கை இருக்கும். நடுவுல நான் வந்து விபரம் கேட்டுக்கறன்’’ என வாசலில் இருந்தே விபரம் கூறி விட்டு வீட்டுக்குப் புறப்படத் தயாரானேன். 

‘’சார் ! பெட்ரோலுக்கும் ஏதும் வாங்கிக்க மாட்டேன்னு சொல்லீட்டீங்கன்னு வீட்ல சொன்னாங்க. நான் உங்களுக்கு என்ன செய்ய முடியும்னு எனக்குத் தெரியல்’’ என்றார் சீட் கடைக்காரர். சொன்ன போது மிகவும் நெகிழ்ந்து கண் கலங்கி விட்டார். 

‘’இன்னைக்கு தான் மனு கொடுத்திருக்கோம். உங்களுக்கு அரிசி கார்டு கிடைச்சா அதுவே போதும்’’ எனக் கூறி விட்டு வீடு நோக்கிப் புறப்பட்டேன் ; மதிய உணவருந்த.    

90 கி.மீ (நகைச்சுவைக் கட்டுரை)

நேற்று மாலை 4 மணிக்கு தரங்கம்பாடி கடற்கரைக்குப் புறப்படுவோம் என நண்பர் ஒருவரிடம் சொன்னேன். 3.58க்கு நான் தயாராகி விட்டேன். நண்பருக்கு ஃபோன் செய்தேன். கிளம்பிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். தரங்கம்பாடி மார்க்கத்தில் நடந்து கொண்டிருப்பதாகக் கூறினேன். 700 மீட்டர் தூரம் நடந்திருப்பேன். நண்பர் என்ஃபீல்டில் வந்தார். ஏறி அமர்ந்து கொண்டேன். 

நண்பர் அரசாங்க மாற்றம் குறித்து கேட்டார். தமிழக அலுவலகங்களில் ஊழல் மிக முக்கியமான பிரச்சனை. சாமானியன் அரசு அலுவலகத்துக்குச் செல்வது பெரும்பாலும் மூன்று காரியங்களுக்காக. ஒன்று தனது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தைப் பதிவு செய்வதற்காக. இதற்கு ரூ.2000 முதல் ரூ.5000 வரை லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அந்த வாகனம் சாமானியர்கள் தினமும் பயன்படுத்துவது. தமது அன்றாடப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தும் வாகனத்தைப் பதிவு செய்து கொள்ள ஏன் லஞ்சம் தர வேண்டும் என்பதும் அதற்கு ஏன் பெரும் பணம் தேவைப்படுகிறது என்பதும் சாமானியனின் கேள்வி. அடுத்து பத்திரப்பதிவுத் துறை. பத்திரப்பதிவு அலுவ்லகத்துக்குச் சென்றாலே எந்த ஆவணமாக இருந்தாலும் ஒரு ஆவணத்துக்கு ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை லஞ்சம் கேட்கப்படுகிறது. அடுத்து வருவாய்த்துறை. ஒருவர் தனது சொந்த சொத்துக்கு பட்டா வாங்க வேண்டும் என்றால் அதற்கு ரூ.20,000 லஞ்சமாக எதிர்பார்க்கிறார்கள். இந்த லஞ்சப் பணம் இத்தோடு முடிந்து விடாது. இந்த 3 துறை அதிகாரிகளின் இயல்பு என்ன என்றால் தன்னிடம் வரும் ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் ஆயிரக்கணக்கில் பணம் கேட்பதால் தன் மீது புகார் வந்து விடுமோ எவரும் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்து விடுவார்களோ என்னும் பயம் அவர்களுக்கு இருக்கும். எனவே தங்கள் லஞ்சப் பணத்தை இடைத்தரகர்கள் மூலம் வாங்குவார்கள். இந்த 3 அலுவலகங்களிலும் இதற்கென இடைத்தரகர்கள் இருப்பார்கள். அவர்கள் பொதுமக்களிடமிருந்து லஞ்சப் பணத்தைப் பெற்று அரசு அதிகாரிக்கு அளிப்பார்கள். அவ்விதம் செய்யும் போது லஞ்சப் பணத்தில் 25 சதவீதத்தை சேர்த்துக் கேட்டு வாங்கிக் கொள்வார்கள். பொதுமக்கள் கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச லஞ்சம் ரூ.15,000 என்றாகும். இந்த 3 அலுவலகங்களிலும் இருக்கும் இடைத்தரகர்கள் தினமும் லஞ்சப் பணம் வாங்கி அரசு அலுவலர்களுக்குக் கொடுப்பதால் பெரும் பணம் சேர்த்து விடுவார்கள். இவர்கள் அறிவிக்கப்படாத அரசாங்கம் போல் செயல்படுவார்கள். இந்த துறைகளில் பொதுமக்கள் அரசாங்கத்தை அணுக அரசாங்கத்தில் லஞ்சம் இன்றி தங்கள் காரியங்களைச் செய்து கொள்ள அரசாங்கம் ஏதேனும் முன்னெடுப்புகளை மேற்கொண்டால் அவற்றை நடைமுறையில் முறியடிக்க செய்ய வேண்டிய அத்தனையையும் செய்வார்கள். இந்த 3 துறைகளுடன் இன்னொரு முக்கியமான துறை கட்டிட அனுமதி. 

சாமானியர்கள் அரசைத் தொடர்பு கொள்ளும் இந்த நான்கு துறைகளில் லஞ்சம் இல்லை என்னும் நிலையை அரசாங்கம் மேற்கொண்டால் மட்டுமே அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் அந்த அரசாங்கத்தைக் குறைந்தபட்சம் ஊழலைக் கட்டுப்படுத்த விரும்பும் அரசாங்கம் என்று கூற முடியும். 

நண்பரிடம் இந்த விஷயத்தைக் கூறினேன். பொதுமக்கள் இந்த 4 துறைகளில் நிலவும் லஞ்ச ஊழல் குறித்து தமிழக அரசாங்கத்துக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டே இருந்தால் மட்டுமே உறுதியான நடவடிக்கை இருக்கும். ஆனால் நம் தமிழக வழக்கம் இதைப் பற்றி சாமானியர்கள் பேசுவதில்லை ; தங்கள் வருத்தத்தையும் ஆற்றாமையையும் பதிவு செய்வதில்லை. இனி அதனை செய்ய வேண்டும் என்று சொன்னேன். 

பேருந்து கட்டணம் ரூ.1 விலை ஏறினால் அதனை மக்கள் பெரிதாகப் பார்க்கிறார்கள். தான் வாங்கிய மனையைப் பதிவு செய்ய ரூ.25,000 ஒரு குடிமகன் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதே தமிழக சாமானியர்களின் ஆகப் பெரிய பிரச்சனை. 

நண்பருக்குப் பொறுமையாக இந்த விஷயங்களைச் சொன்னேன்.  

தமிழக அரசியலில் இனி இந்த விஷயங்கள் அரசியல் விஷயங்களாக ஆக வேண்டும் ; அந்த இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு தமிழக மக்களுக்கு இருக்கிறது என்பதை நண்பருக்குப் பதிவு செய்தேன். 

இந்த விஷயங்களை விரிவாகப் பேசி முடித்த போது தரங்கம்பாடி வந்து சேர்ந்திருந்தோம். 

கடற்கரையில் எங்கள் இருவருக்கும் நண்பரான ஒருவரைக் கண்டோம். குடும்பத்துடன் காரில் வந்திருந்தார். இன்னும் 4 தினங்களில் பள்ளி மறுதிறப்பு இருப்பதால் கடற்கரையே குழந்தைகளாலும் பெற்றோராலும் நிறைந்திருந்தது. கடலைக் காணும் போதும் கடலில் கும்மாளம் போடும் போதும் குழந்தைகள் அடையும் மகிழ்ச்சி மகத்தானது. கடற்கரைக் காட்சிகளில் குழந்தைகள் அடையும் மகிழ்ச்சியின் சித்திரம் மிக இனிமையானது. 

கடற்கரையில் நின்றிருந்த போது அங்கு வந்திருந்த ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டது. அவர் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ‘’ஆபரேஷன் ககூன்’’ என்னும் வீரப்பன் தேடுதல் வேட்டையில் பங்காற்றியவர். பல என்கவுண்டர் செயல்பாடுகளில் பங்கேற்றிருக்கிறார். மத்திய அரசாங்கம் ‘’ஆபரேஷன் ககூன்’’ தலைமை அதிகாரியான டிஜிபி விஜயகுமார் அவர்களுக்கு ‘’பத்மஸ்ரீ’’ விருது இந்த ஆண்டு அளித்திருப்பதைக் கூறினேன். ’’ஆபரேஷன் ககூன்’’ அணியில் இருந்தவர்கள் அவர் ‘’பத்மஸ்ரீ’’ பெற்றதற்காக ஒரு பாராட்டு விழாவை நடத்த இருப்பதாகவும் அதில் தான் பங்கேற்கப் போகிறேன் என்றும் கூறினார். டிஜிபி விஜயகுமார் எழுதிய ‘’Chasing the forest brigand'' என்ற நூலை வாசித்திருக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். சமீபத்தில் முன்னாள் காவல்துறை உயர் அதிகாரியான அனூப் ஜெய்ஸ்வால் குறித்து எழுதப்பட்ட நூலை வாசித்ததையும் சொன்னேன். நாங்கள் இருவரும் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தோம். 

நடிகர் ஜோசஃப் விஜய்யின் கட்சி வெற்றி பெறும் எனக் கணித்திருந்தீர்களா என்று கேட்டேன். தி.மு.க ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதைக் கணித்ததாகவும் ஆனால் ஜோசஃப் விஜய் கட்சிக்கு இத்தனை வாக்குகள் கிடைக்கும் எனக் கணிக்கவில்லை என்றும் ஜோசஃப் விஜய் கட்சிக்கு 20 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்னும் கணிப்பு தனக்கு இருந்தது என்றும் கூறினார். 

இனி தமிழக அரசியல் எந்த திசையில் செல்லும் என்று அவருடைய கணிப்பைக் கேட்டேன். 

தமிழக அரசியலில் அண்ணாமலை பெரிய அளவில் வருவார் என்று சொன்னார். 

‘’அவர் முன்னாள் காவல்துறை அதிகாரி என்பதால் காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்றவரான நீங்கள் அவ்விதம் நினைக்கிறீர்களா’’ என்று கேட்டேன். அது காரணமல்ல என்று கூறி ‘’அண்ணாமலை ஒரு மக்கள் தலைவர்’’ என்று சொன்னார். 

அவர் எங்கு வசிக்கிறார் என விசாரித்துக் கொண்டேன். அனூப் ஜெய்ஸ்வால் நூலை அவருக்குப் பரிசளிக்க விரும்புவதைக் கூறினேன். இருவரும் விடை பெற்றுக் கொண்டோம். 

எனது நண்பர்கள் ‘’ ரொம்ப நேரமாக ஒருத்தரிடம் பேசிக் கொண்டிருந்தீர்களே. அவர் உங்கள் நண்பரா ‘’ என்று கேட்டனர். 

‘’இப்போதுதான் சந்தித்தேன். நண்பர்களாகி விட்டோம்’’ என்று சொன்னேன். 

மாலை 7 மணி ஆனது. காரில் வந்திருந்த நண்பர் குடும்பம் காரைக்காலில் இரவு உணவு அருந்த திட்டமிட்டிருந்தனர். எங்களையும் அழைத்தனர். அங்கே சென்று உணவருந்தினோம். 

காரைக்காலிலிருந்து ஊருக்கு வர பல வழிகள் இருக்கின்றன. நண்பருக்கு ரியல் எஸ்டேட் சம்பந்தமாக ஒரு இடம் காட்ட வேண்டியிருந்தது. அதனை அவரிடம் முதலில் சொல்லாமல் ஒரு புதிய பாதை வழியாக அழைத்து வந்து இடத்தைக் காட்டினேன். அது இடம் பார்க்கும் நேரமல்ல. ஒரு இடத்தைப் பார்க்க வேண்டுமென்றால் சூரிய வெளிச்சத்தில் பகல் பொழுதில் தான் பார்க்க வேண்டும். நேற்றைய நிகழ்வு ஒரு விதிவிலக்கு. இடத்தைக் காட்டினேன். நண்பருக்குப் பிடித்திருந்தது. வீடு வந்து சேர்ந்த போது இரவு 10.10. 

நேற்று மாலை 4 மணியிலிருந்து இரவு 10.10க்குள் 90 கி.மீ பயணம் நிகழ்ந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தேன்.   

Sunday, 31 May 2026

அதிதி

திதி என்பது நாளைக் குறிக்கும் சொல். பிரதமை தொடங்கி சதுர்தசி ஈறாக 30 திதிகள் உள்ளன. அமாவாசையிலிருந்து எத்தனையாவது நாள் என்பதே திதி ஆகும். அமாவாசையிலிருந்து இரண்டாம் நாள் திவிதியை ஆகும். அமாவாசையிலிருந்து 30வது நாள் சதுர்தசி ஆகும்.  

இன்ன நாள் இன்ன கிழமை வருகிறேன் என்ற அறிவிப்பு இன்றி நம் வீட்டுக்கு வருபவரே அதிதி ஆவார். அதிதியைக் கடவுளுக்குச் சமமாக நினைக்க வேண்டும் என்கிறது நம் மரபு. ‘’அதிதி தேவோ பவ’’ என்பது மறை வாக்கியம்.  இன்ன நாள் இன்ன கிழமை வருகிறேன் என்ற அறிவிப்பு இல்லாமல் வரும் நண்பர்களும் உறவினர்களும் ( மித்ர பந்துக்கள்) அதிதி ஆக மாட்டார்கள். அவர்கள் மித்ர பந்துக்களே. 

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு. 

என்பது திருக்குறள். 

இன்று அலைபேசி சமூகத்தில் பெரும்பாலோனோர் கையில் இருக்கிறது. ஒருவரைச் சந்திக்க செல்லும் முன் வருகையை அறிவித்து விட்டு செல்ல வேண்டும் என்னும் வழக்கம் உருவாகியிருக்கிறது. வணிகத்துக்கு அது மிகவும் உகந்த செயல்பாடும் கூட. ‘’இடம் பொருள் ஏவல்’’ ஆகியவை முக்கியத்துவம் கொள்ளும் செயல்பாடு வணிகத்துக்குரியது. 

ஒரு நண்பனைச் சந்திக்க , ஓர் உறவினரைச் சந்திக்க, பரிச்சயம் உள்ள ஒருவரைச் சந்திக்க அலைபேசியில் கூறி விட்டு தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவ்விதமாக பலரைச் சென்று சந்திக்கலாம் என இருக்கிறேன். 

திருச்சிராப்பள்ளியில் ஒரு நண்பர் இருக்கிறார் என்றால் வீட்டிலிருந்து நடந்து பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து ரயில்வே சந்திப்புக்கு டவுன் பஸ்ஸில் சென்று ரயில் பிடித்து திருச்சி சென்று அங்கே உள்ள டவுன் பேருந்தில் எந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டுமோ அங்கு சென்று நண்பனைச் சந்திப்பது. ஒரு மணி நேரம் மட்டும் அங்கே இருப்பது. அதன் பின் கிளம்பி சென்ற விதமாகவே ஊர் திரும்பி விடுவது. அந்தப் பயணத்தில் வேறு இடங்களுக்குச் செல்வதோ வேறு நபர்களைச் சந்திப்பதோ கிடையாது. அந்த நாள் அந்த பயணம் அந்த ஒரு நபருக்கு அந்த ஒரு குடும்பத்துக்கு மட்டும் தான். இவ்வாறான பயணங்களை நிகழ்த்த வேண்டும் என விரும்புகிறேன். 

யாரைக் காணச் செல்கிறோமோ அவர்கள் ஊரில் இல்லாமல் இருக்கலாம். வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கலாம். அவ்விதம் இருந்தால் அதனை அவ்விதமே ஏற்றுக் கொள்வது. அங்கே இருக்கப் போவது குறைந்தபட்சமாக ஒரு மணி நேரம் தான். 

இவ்விதமாக நிகழ்த்தும் பயணங்கள் குறித்து எழுதலாம் என இருக்கிறேன். 

Saturday, 30 May 2026

உபயோகமான பொருள்

 

இன்று நண்பர் ஒருவர் ஃபோன் செய்திருந்தார். ஒரு விஷயத்தைத் தெரிவிக்க. அதாவது, எனது வலைப்பூவில் சில நாட்களுக்கு முன் எழுதியிருந்த ‘’ஃபாரடே பை’’ குறித்த பதிவை வாசித்ததாகவும் அதனால் கவரப் பெற்று தனக்கு ஒரு ‘’ஃபாரடே பை’’ ஆர்டர் செய்ததாகவும் தற்போது அது தனது பயன்பாட்டில் இருப்பதாகவும் மிகவும் உபயோகமான பொருள் என்றும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.  

Thursday, 28 May 2026

ஆர்வமும் முன்னேற்றமும்

நேற்று வந்திருந்த ரியல் எஸ்டேட் குழு நேற்று பார்த்த இடத்தைச் சுற்றியிருக்கும் மனை நிலவரம் குறித்து விசாரித்து சொல்லுமாறு கேட்டிருந்தார்கள். நேற்று தீவிரமாக விசாரித்தேன். அப்போது ஒரு இடத்தை அறிந்தேன். 

அந்த இடம் ஊரிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. அருகில் ஒரு கடைத்தெரு. பஸ் ஸ்டாண்ட். சாலைகள் நல்ல விதமாக அமைக்கப்பட்டிருந்தன. மின் கம்பங்கள் நிறுவப்பட்டிருந்தன. 2000 சதுர அடி மனைகள் அதிகம் இருந்தன. 1800 சதுர அடியிலும் மனைகள் இருந்தன. அவர்கள் சகாய விலைக்கு விற்கின்றனர். ஒரு மனை வாங்க விசாரிக்க வந்தவன் போல அவர்களிடம் பேசி விபரம் கேட்டுக் கொண்டேன். ஒரே பேமெண்ட்டாகக் கொடுத்தால் விலையில் 10 சதவீதம் குறைத்துக் கொள்கிறோம் என்று சொன்னார்கள். அவ்வாறெனில் அவர்களுக்குத் தீவிரமான நிதித்தேவை இருக்கிறது எனப் புரிந்து கொண்டேன். 

அந்த ஊரில் இருக்கும் மனைத்தரகர்களை தொடர்பு கொண்டு இந்த இடத்தை மொத்தமாக வாங்கலாமா என ஆலோசனை கேட்டேன். எல்லாரும் ஆர்வமாக இருந்தனர். 

இன்று காலை, மதியம், மாலை ஆகிய 3 வேளையும் அங்கு செல்ல நேர்ந்தது. அங்கே 100 மனைப்பிரிவுகள் இருக்கின்றன. அவர்கள் 60 விற்பனை செய்துள்ளார்கள். மீதி 40 மனையை விற்க வேண்டும் ; வாங்கினால். அவர்களுக்கு இப்போது 2 சி தேவை. அந்தப் பகுதியில் நான் அறிந்த அனைவருக்கும் ஃபோன் செய்து அந்த இடம் குறித்து விசாரித்தேன். எல்லாரும் நல்ல விதமாகவே தெரிவித்தார்கள். 

ஒரு வாரத்தில் பதில் சொல்வதாகக் கூறியிருக்கிறேன்.  

Wednesday, 27 May 2026

மனை பிராப்தி

வீடு மனை வாகனப் பிராப்தி எனக் கூறுவார்கள். பிராப்தி என்றால் என்ன என்று எனக்குத் தெரியும். இணையத்தில் பிராப்திக்கு சமமான தமிழ்ச்சொற்கள் எவை என்று தேடினேன். பல சொற்கள் இருந்தது ; அதில் ஒன்று கொடுப்பினை. ராஜசுந்தர்ராஜனின் கவிதை ஒன்றின் தலைப்பு கொடுப்பினை என்பது நினைவுக்கு வந்தது. 

கொடுப்பினை

------------------------

இரா முழுக்கத் 
தவம் கிடந்தன
வான் நிறைய மீன்கள்
பரிதியை
நேர்நின்று கண்டதோ
விடிய வந்த ஒரு வெள்ளி

-ராஜசுந்தர்ராஜன் 

ரியல் எஸ்டேட்டில் இருப்பவன் என்பதால் வீடு பிராப்தி , மனை பிராப்தி எவ்வளவு முக்கியம் என்பதை அறிவேன். இந்தத் தொழிலுக்கு வாகன பிராப்தியும் மிக முக்கியம். ஓரிடத்துக்குச் செல்ல வேண்டும் என மனம் நினைத்தால் நம் கையில் இருக்கும் வாகனத்துக்கு நம்மை விட அந்த எண்ணம் அதிகமாக ஏற்பட வேண்டும். நாம் கையில் வைத்திருக்கும் வாகனத்துடன் நமக்கு ஒரு உரையாடல் இருக்க வேண்டும். அதுதான் உச்சபட்சமான வாகன பிராப்தி. இன்று வாகனம் என்பது உருளியாக ஆகியுள்ளது. 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜீவன்களே வாகனங்களில் முக்கியமாக இருந்திருக்கின்றன. மாடு, குதிரை ஆகியவை மனிதர்களைச் சுமந்திருக்கின்றன. சமணத் துறவிகள் 2500 ஆண்டுகளாக ச்கடம் வைத்த எந்த வண்டியிலும் ஏறுவதில்லை என்னும் நெறி கொண்டவர்கள். இப்போதும் அந்த நெறி கொண்டிருக்கும் சமணத் துறவிகள் உண்டு. அவர்கள் எங்கு சென்றாலும் எத்தனை கிலோமீட்டர் சென்றாலும் நடந்தே செல்வார்கள். ராணா பிரதாப் சிங்கின் குதிரையின் பெயர் சேட்டக். மொகலாயர்களை எதிர்த்து ராணா பெரும் யுத்தம் நிகழ்த்திய போது அவருக்கு உறுதுணையாக இருந்தது சேட்டக். தன் உயிரைக் கொடுத்து ராணாவின் உயிரைக் காத்தது சேட்டக். இந்தியாவில் பஜாஜ் நிறுவனம் 1980களில் அறிமுகப்படுத்திய ஸ்கூட்டருக்கு ராணாவின் குதிரையின் பெயரான சேட்டக் என்பதைச் சூட்டியது. 

இன்று காலை ஒரு ரியல் எஸ்டேட் குழு வருகை தந்தது. ஊருக்கு 40 கிமீ தெற்கே இருக்கும் ஊரின் பெயரைச் சொல்லி அங்கே ஓர் இடம் இருக்கிறது. அதைப் பார்க்க வருகிறோம் என்று கூறினார்கள். நான் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். காரில் வந்தனர். ஒருவர் ஓட்டுநர். ஒருவர் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர். மூன்றாவது நபர் மீடியேட்டர். நான்காவதாக நான் அவர்களுடன் சென்று சேர்ந்து கொண்டேன். ஊரில் நான் அறிந்த இரண்டு இடங்களை காட்டினேன். 

பின்னர் உத்தேசித்த ஊருக்குப் பயணமானோம். அப்போது தான் தெரிய வந்தது பார்க்க இருந்த இடம் ஊரிலிருந்து 40 கிமீ தொலைவில் இல்லை. 15 கிமீ தொலைவில் தான் இருக்கிறது என. இந்தத் தொழிலில் ஒரு விஷயத்தை சின்ன அளவிலோ பெரிய அளவிலோ மாற்றிச் சொல்லியவண்ணமே இருப்பார்கள். இதுவும் அப்படியே. இடம் காட்டினார்கள். அந்த இடத்தில் முதலீடு செய்தால் முதலீட்டுக்கு மோசம் உண்டாகும் என எனக்குத் தோன்றியது. மீடியேட்டர் இல்லாத நேரத்தில் அதனைச் சொன்னேன். இரண்டு நாட்களில் மீண்டும் இந்த இடத்துக்கு தனியாக வந்து விசாரித்து முழுமையாகக் கூறும் படி சொன்னார். மீடியேட்டர் வேறு வேலை இருக்கிறது என அங்கே இறங்கிக் கொண்டார். நான் ஊரில் இறங்கிக் கொண்டேன். 

நண்பர் இரண்டு நாள் நேரம் கொடுத்திருந்தாலும் மாலையே அங்கே சென்றேன். நாங்கள் பார்த்த இடத்துக்கு 4 கிமீ முன்னதாகவே ஒரு பிரமாதமான இடம் இருந்தது. ரெரா அப்ரூவல், டி டி சி பி அப்ரூவல் அனைத்தும் வாங்கியிருந்தார்கள். சகாயமான விலைக்கு மொத்த பிளாட்டில் பாதியை விற்றிருக்கிறார்கள். மீதி இருக்கும் பிளாட்டை மொத்தமாக வாங்கினால் விலை கணிசமாகக் குறைத்துக் கிடைக்கும். ஒரு பெரிய தொகையை அட்வான்ஸாகக் கொடுத்து விட்டு நேரடியாக மனைகளை விற்கலாம். அது ஒரு சிறிய ஊர். அந்த ஊரில் இருக்கும் மீடியேட்டர்களை சந்தித்து அறிமுகப்படுத்திக் கொண்டேன். சந்திப்புகள் உற்சாகம் அளித்தன. நாளை மீண்டும் வருகிறேன் எனக் கூறி விட்டு வந்தேன். 

வீட்டுக்கு வரும் போது வீடு மனை வாகனப் பிராப்தி என்னும் வாசகம் நினைவில் சுழன்று கொண்டிருந்தது. 

Tuesday, 26 May 2026

திறனற்ற நிர்வாகம்

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு ஒரு மனு அனுப்பப்பட்டால் அதன் மீது நடவடிக்கை சற்று கூடுதல் வேகத்துடன் இருக்கும். தமிழகத்தின் பெரும்பாலான புகார்கள் பட்டா , ரேஷன் கார்டு தொடர்பானவை. அதிலும் பட்டா கோரி மேற்கொள்ளப்படும் விண்ணப்பங்களே மிகுதி. பட்டா என்பது அசையா சொத்து தொடர்புடையது என்பதால் அதில் லஞ்சம் அதிகமாக கேட்கப்படும். இன்றைய நிலை என்ன என்றால் குடிமக்கள் தாசில்தார், டி எஸ் ஓ போன்ற தாலுக்கா அளவு அதிகாரிகள் மீதும் அவர்களின் தாலுக்கா அலுவலகங்கள் மீதும் நம்பிக்கை வைப்பதில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மீதும் நம்பிக்கை கொள்வதில்லை. எனவே முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பல புகார்கள் செல்கின்றன. அங்கே மாநிலம் முழுவதிலிமிருந்து லட்சக்கணக்கான புகார்கள் குவிகின்றன. அதன் செயல்திறன் குன்றுகிறது. சரி செய்ய வேண்டிய தமிழக நிலையாகும் இது.