பிரபு மயிலாடுதுறை
Saturday, 4 July 2026
சென்னைப் பயண வாடிக்கைகள் (நகைச்சுவைக் கட்டுரை)
அசாத்தியத்தை சாத்தியமாக்குபவர்
கால்பந்தில் ஆர்வம் கொண்ட சிறுவனுக்காக என்ன உதவி செய்ய முடியும் என யோசித்தேன். ஏ ஐ யிடம் இந்த விஷயத்தில் என்ன செய்ய முடியும் என்று கேட்டேன். ஏ ஐ சென்னையில் வெளிநாட்டுப் படிப்புக்கு வழிகாட்டும் ஒரு நிறுவனத்தைப் பரிந்துரைத்தது. அந்த நிறுவனத்தின் தொடர்பு எண்ணுக்குப் பேசினேன். அந்த அழைப்பை ஏற்றவர் ஓர் இளைஞர். அவரிடம் விபரம் கூறினேன். சிறுவனின் 12ம் வகுப்பு மதிப்பெண், ஐ இ எல் டி எஸ் மதிப்பெண் ஆகிய விபரங்களைக் கேட்டுக் கொண்டார். அவர் விபரங்களைக் கேட்டுக் கொண்ட விதத்திலும் உள்வாங்கிக் கொண்ட விதத்திலும் மிகச் சிறப்பான முதிர்ச்சியும் பக்குவமும் வெளிப்படுவதை உணர்ந்தேன். சிறுவனின் ஐரோப்பா பயணம் அந்த இளைஞரின் வழிகாட்டலில் சிறப்பாக நிகழும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. கால்பந்து ஆடும் சிறுவனுடன் சென்று சென்னையில் அந்த இளைஞரைச் சந்தித்தால் விஷயம் வேகம் எடுக்கும் என எண்ணினேன். இருப்பினும் நான் எண்ணிய வண்ணம் உடன் நானும் சிறுவனும் சென்னை செல்ல வாய்ப்பு அமையவில்லை. சென்னை இளைஞர் எனக்கு சில முறை ஃபோன் செய்தார். நான் இரு சக்கர வாகனப் பயணத்தில் இருந்ததால் அலைபேசி அழைப்பை ஏற்க முடியவில்லை. தகவல் தொடர்பு இடைவெளி ஏற்பட்டது. சில நாட்களுக்குப் பின் சிறுவன் என்னிடம் வந்தான். மீண்டும் அந்த இளைஞரைத் தொடர்பு கொண்டு விபரம் கூறினேன். மறுநாளே சென்னையில் நேரில் வந்து சந்திக்கிறேன் என்று கூறினேன்.
சிறுவன் ஐரோப்பா செல்ல வேண்டும் என விரும்புவதே அங்கே கால்பந்து ஆட வேண்டும் என்பதற்காகத்தான். ஐரோப்பா கால்பந்துக்கு பிரசித்தி பெற்ற கண்டம். சிறுவனுக்கு சேர்க்கை அளிக்கக்கூடிய கல்லூரி கால்பந்து கிளப்களுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது. இந்த விஷயத்தை இளைஞருக்கு ஃபோனில் விளக்கினேன்.
மறுநாள் நேரில் சந்தித்தேன். சிறுவனின் தேவையை நிறைவேற்றும் கல்லூரியை அவர் தேர்ந்தெடுத்து விட்டார். அந்தச் சிறுவனுக்கு அட்மிஷன் கிடைக்கும் விதமாக இண்டர்வியூவுக்கு தயார் செய்யும் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டார். விசா நடவடிக்கைகளிலும் முழுமையாக உடனிருப்பதாகக் கூறினார். எனக்குப் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது.
சில முறை அலைபேசியில் உரையாடிய வகையில் அவரது வயது என நான் கணித்திருந்ததற்கும் மிகக் குறைவான வயதுடைய இளைஞராயிருந்தார். எந்த ஒரு விஷயத்திலும் அதன் தீர்வுகளும் அதனை அடைவதற்கான வழிமுறைகளுமே அவர் பார்வையில் இருந்தன. முற்றிலும் நேர்மறையானவராகவும் நம்பிக்கையை அளிப்பவராகவும் இருந்தார்.
ஊருக்கு வந்து சிறுவனிடன் அவரது எண்ணை அளித்து அவர் கூறும் குறிப்புகளின் படி செயல்படு எனக் கூறினேன்.
விஷயம் சரியான திசையில் நகர்கிறது.
இராமாயணத்தில் கம்பன் அனுமனை ‘’சொல்லின் செல்வன்’’ என்கிறான். வால்மீகி அனுமனை ‘’அசாத்தியத்தை சாத்தியமாக்குபவன்’’ என்கிறார். இந்த இரண்டு மொழிகளும் அந்த இளைஞருக்குப் பொருந்தும். சீதை அனுமனை ‘’இன்றென இருத்தி’’ என வாழ்த்துகிறார். அந்த வாழ்த்து அந்த இளைஞருக்கும் உரியது.
கால்பந்து ஆடும் சிறுவன்
Saturday, 27 June 2026
தொழிலதிபர்
சிதம்பரம் அருகே ஒரு சிற்றூர். அங்கே புதிய விதத்தில் ஓர் உணவகம் அமைத்திருந்தார்கள். எவ்விதம் என்றால் அந்த உணவகத்தில் கேக் வகைகள் கிடைக்கும் ; சாண்ட்விச், கட்லெட் போன்றவை இருக்கும் ; ஐஸ்கிரீம்கள் இருக்கும். இவை அனைத்துமே வழக்கமான முறையில் மைதா, ஜீனி ஆகியவை பயன்படுத்தப்படாமல் பாரம்பர்ய வகை அரிசி ரகங்களான கருப்பு கவுனி மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றைப் பயன்படுத்தித் தயார் செய்கிறார்கள். வித்தியாசமான முறையில் ஐஸ்கிரீமும் தயார் செய்கிறார்கள். அவர்கள் உணவகத்தில் 20 லிருந்து 25 பேர் அமர்ந்து உணவருந்த முடியும். மாலை 3 மணியிலிருந்து இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அந்த சிற்றூரை ஒரு பெரிய கிராமம் என்று கூற முடியும். கருப்பு கவுனி கேக் ஆர்டர் செய்தால் 20 நிமிடத்தில் அந்த கேக்கை அந்த தருணத்தில் தயாரித்துக் கொடுக்கிறார்கள். பெரும்பாலும் அவர்களுக்கு கேக் ஆர்டர் மற்றும் உணவு ஆர்டர் ஃபோன் மூலம் வருகிறது. மாலை 3 மணிக்கு ஒரு ஆர்டர் வந்தால் மாலை 3.30க்கு வந்து கேக்கைப் பெற்றுக் கொள்ளவும் என செய்தி அனுப்பி விடுகிறார்கள். கேக் தயாராகி விடுகிறது. 3.30க்கு வந்து பெற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளின் பிறந்த நாள் நிகழ்வுகள் அந்த உணவகத்தில் நிகழ்கின்றன. அந்த உணவகத்தில் கேக் , சாட் வகைகள், ஐஸ்கிரீம் அனைத்துமே வழக்கமான விலையை விட 50 சதவீதம் குறைவான விலையில் கிடைக்கிறது என்பது எனக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஐஸ்கிரீம் கூட இயற்கை உணவுப்பொருட்களால் தயாரிக்கிறார்கள். எனக்கு அங்கே இருந்த போது ‘’ஸ்டார்பக்ஸ்’’ காஃபி ஷாப்கள் நினைவுக்கு வந்தன. இரண்டு தினங்களுக்கு முன் நண்பர் ஒருவருடன் அங்கே தற்செயலாக செல்ல நேர்ந்தது. நண்பர் சென்னையிலிருந்து வந்திருந்தார். அந்த உணவகத்தின் புறச்சூழல் மிக இனிமையானதாக இருந்ததால் எங்கள் உரையாடலிலும் அந்த இனிமை கூடுதல் இனிமையைச் சேர்த்தது.
இந்த உணவகத்தின் உரிமையாளர்கள் இளம் தம்பதியர். கணவனுக்கு 30 வயது இருக்கக் கூடும் . அவரது மனைவிக்கு 26 வயது இருக்கலாம். கேக் , ஐஸ்கிரீம் என அனைத்தையும் இந்த தம்பதியினரே செய்கின்றனர். பரிமாற ஓரிரு பணியாளர்கள் இருக்கின்றனர். தம்பதியர் இருவருக்குமே உணவு சமைத்தலில் ஆர்வம் இருந்திருக்கிறது. அதனால் இவ்விதமான ஒரு தொழில் முயற்சியை செய்து பார்த்திருக்கிறார்கள். என்னுடைய கணிப்பின் படி அங்கே சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.5000க்கு வணிகம் நிகழக் கூடும்.
அந்தப் பிரதேசத்தில் இருக்கும் வங்கிகள் இந்த இருவரையும் கௌரவிக்க வேண்டும் என்பது என் எண்ணம். அவர்கள் வணிகத்தின் வடிவத்தை புதிய தொழில்முனைவோருக்கான ஒரு சாத்தியமாக வங்கிகள் மாநிலமெங்கும் முன்வைக்கலாம்.
அவர்களின் சிறு குழந்தைக்கு 6 வயது இருக்கும். அவன் தன் அன்னையின் பக்கத்திலேயே நிற்கிறான். அன்னை எங்கு சென்றாலும் உடன் செல்கிறான். கேஷ் சாளரத்தில் அடுமனையில் பரிமாறும் இடத்தில் எங்கும் கூட கூட வருகிறான். அன்னை தன்னுடன் நேரம் செலவிட வேண்டும் என்பது அக்குழந்தையின் எதிர்பார்ப்பு. அந்த அன்னை அவனையும் பார்த்துக் கொண்டு தன் வேலையையும் செய்து கொண்டு இருக்கிறார்.
உணவுக்கான தொகையை அளித்த போது எவ்விதம் எல்லா உணவுப் பொருட்களும் 50 சதவீதம் குறைவான விலையில் தர முடிகிறது என்று வியப்புடன் கேட்டேன். அந்தப் பெண் ‘’இடம் சொந்த இடம் என்பதால்’’ எனச் சுருக்கமாகச் சொன்னார்.
இந்த உணவகத்தின் உரிமையாளர்களான தம்பதியரைப் போன்ற தொழிலதிபர்கள் வாழ்க்கையின் மீதும் மனிதர்கள் மீதும் மேலும் நம்பிக்கை ஏற்படுத்துகிறார்கள்.
அவர்கள் குடும்பம் நலமுடன் வாழ இறைமையிடம் வேண்டிக் கொண்டேன்.
Friday, 26 June 2026
ஒரு சாமானியக் குடிமகனின் மனு
அனுப்புநர்
Thursday, 25 June 2026
அரசும் அலைக்கழிப்பும்
இரு சக்கர வாகன சீட் கவர் தைப்பவரின் ஜீனி ரேஷன் அட்டையை அரிசி ரேஷன் அட்டையாக மாற்ற ஜூன் 1ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக மனுநீதி நாளில் மனு தரப்பட்டது. 24 நாட்கள் ஆகிறது. வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்தோ அல்லது மாவட்ட வழங்கல் அலுலகத்திலிருந்தோ எந்தத் தகவலும் இல்லை. வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு நேரில் சென்றேன். ஒரு குயர் நோட் ஒன்றில் ‘’மனுநீதி நாள் மனுக்கள்’’ என வரிசை எண். ஆன்லைன் பதிவு எண், மனுதாரர் பெயர் & முகவரி, மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என ஒரு பட்டியல் இருந்தது. சம்பந்தப்பட்ட விஷயத்தில் மனுதாரர் பெயர் மற்றும் முகவரி ஆகிய விஷயங்கள் மட்டுமே இருந்தன. மற்ற எந்த விபரமும் ஏட்டில் குறிப்பிடப்படவில்லை என்பதைக் கவனித்தேன். அந்த ஏட்டைப் பராமரிப்பவர் கிராம நிர்வாக அதிகாரியிடமிருந்து ஒரு சான்றிதழ் பெற்று வர வேண்டும் எனக் கோரினார். அது முக்கியத் தேவை என்றால் அலுவலகத்திலிருந்து ஒரு தபால் அனுப்பியிருப்பார்கள். இவ்விதம் இப்போது கோருவது அலைக்கழிக்கும் செயல் என எனக்குத் தோன்றியது. அலமாரியில் அவர் ஒரு படிவத்தைத் தேடினார். அவர் உத்தேசித்த படிவம் கிடைக்கவில்லை. மறுநாள் வருமாறு கூறினார். மறுநாளான நேற்று அங்கே செல்லவில்லை ; வட்ட வழங்கல் அலுவலகத்தின் தலைமை அலுவலகமான மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்குச் சென்றேன். மனுதாரர் பெயரையும் ஜூன் 1ம் தேதி ‘’மனுநீதி நாள் முகாம்’’ மனு என்று சொன்னேன். ஒரு கிளார்க் இன்னொரு கிளார்க்கிடம் விபரம் கேட்கச் சொன்னார். இன்னொருவர் இன்னொருவரிடம். மூன்றாவது கிளார்க் என்னிடம் இந்த விஷயத்தைப் பார்க்கும் கிளார்க் இன்று விடுமுறையில் இருக்கிறார். நாளை வாருங்கள் என்றார். மனுவின் விபரம் கூறி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்டேன்.
மனு சென்னைக்கு அனுப்படும் என்றனர். ‘’மனுநீதி நாள் முகாம்’’ ஆன்லைன் கோப்பு நிலுவையில் தானே இருக்கும் எனக் கேட்டேன். சென்னைக்கு மனு அனுப்பப்பட்டால் மனுவின் கோப்பு மூடப்பட்டு விடும் எனக் கூறினர். ஜூன் 1 ஒரு கோரிக்கைக்காக மனு தரப்படுகிறது. அரசு அந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் ; இல்லையென்றால் நிறைவேற்ற இயலாத கோரிக்கை என்று பதில் சொல்ல வேண்டும் அல்லது நிலுவையிலாவது வைத்திருக்க வேண்டும். கோப்பினை மூடி விட்டால் யார் எவ்விதம் சென்னை அலுவலகத்துக்கு தொடர்பு கொள்வது. சென்னை அலுவலகத்துக்கு மனுவை அனுப்பினால் அதன் நகலையாவது மனுதாரருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவை எதுவுமே இல்லாமல் ஒரு கோப்பை மூடினால் மனுதாரர் என்ன செய்ய முடியும் ?
ஏன் இந்த சாதாரண விஷயத்தைக் கூட அரசிடம் எதிர்பார்க்க முடியவில்லை? மாவட்ட வழங்கல் அலுவலகம் அமைந்திருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மிகப் பெரிய பிரும்மாண்டமான கட்டிடம். மாவட்ட வழங்கல் அலுவலகம் ஒரு மல்டிநேஷனல் கம்பெனியின் அலுவலகம் போல மிகப் பெரிதாக சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் நிறைந்து அமைக்கப்படுகிறது. அலுவலகத்தில் குறைந்தது 7 பேர் பணி புரிகிறார்கள். ஒரு மனுவின் கோப்பை எவ்விதம் உருவாக்கிப் பராமரிப்பது என்பதும் மனுதாரருக்கு பதில் அளிப்பது என்பதும் அடிப்படையான விஷயங்கள். எனினும் இதனைச் செய்ய அரசு ஊழியர்களுக்கு விருப்பம் இல்லை.
‘’நாளை வாருங்கள்’’ என்று சொன்ன கிளார்க்கிடம் ‘’காலை 10.30 க்கு வரட்டுமா’’ என்று கேட்டேன். ‘’11 மணிக்கு வாருங்கள்’’ என்றார்.
எந்த விஷயமாக இருந்தாலும் அமைதியான அணுகுமுறையை மேற்கொள்வதே எனது வழக்கம்.
Tuesday, 23 June 2026
எண்களின் புதிர் (நகைச்சுவைக் கட்டுரை)
அரசியல்வாதியின் துயரங்கள் (நகைச்சுவைக் கட்டுரை)
நம் நாட்டில் சாமானியர்கள் அரசியல்வாதிகளை பிரமிப்புடன் கண்டு அவர்கள் முன் பணிகிறார்கள் என்பது ஓர் உண்மை என்றால் மனதுக்குள் அரசியல்வாதிகளை வெறுக்கவும் வசை பாடவும் செய்கிறார்கள் என்பது இன்னொரு உண்மை.
15 ஆண்டுகளுக்கு முன் நான் சந்தித்த ஓர் இளம் அரசியல்வாதி என்னிடம் சொன்னார். ‘’அண்ணன்! அரசியல்வாதி எல்லாமே டயபிடிஸ் வந்து தான் அண்ணன் சாவோம். முகூர்த்த நாள் வந்தா 20 கல்யாண வீட்டுக்கு போக வேண்டியிருக்கு. நாம அரசியல்வாதிங்கறதால உள்ள நுழைஞ்சதுமே நேரா டயனிங்க்கு கூட்டிட்டு போய்டுவாங்க. கேசரி, பொங்கல், பூரி , தோசை, இட்லி சாப்பிட்டே ஆகணும். நம்மள ரொம்ப பாத்து பாத்து கவனிப்பாங்க. நிறைய கல்யாணத்துக்குப் போகணும் கொஞ்சமா வைங்கன்னு சொன்னாலும் கேட்க மாட்டாங்க. சாப்பிடாம இலையை மூடினாலும் மனசு புண்பட்டுடுவாங்க. யாராவது ஒருத்தர் மனசை புண்படுத்திட்டா அந்த தகவல் கல்யாண மண்டபத்துல இருக்கற 1000 பேருக்கும் பரவிடும். அவங்க ஒவ்வொருத்தர் 4 பேர் கிட்ட சொன்னா 4000 பேர்ட்ட பரவிடும். அதனால ரொம்ப கஷ்டப்பட்டு 20 கல்யாண வீட்டுக்காரர்களும் சந்தோஷப்படுற மாதிரி சாப்பிட்டுத்தான் அண்ணன் வருவோம். ஆனி , ஆடி மாசமும் மார்கழி மாசமும் தான் அண்ணன் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமான மாசம். அந்த மாசங்கள்ல முகூர்த்தமே கிடையாது.’’
அரசியல்வாதிகள் மனித அகத்தின் இருள் பக்கங்களைக் காணவே வாய்ப்பு அதிகமாக இருக்கிறதோ என நான் எண்ணுவேன். ஒரு அரசியல்கூட்டம் நடக்கிறது என்றால் அது உரையாற்றுவதற்கானது ; ஆலோசிப்பதற்கானது. கூட்டத்தில் 100 பேர் இருக்கிறார்கள் என்றால் ஒருவர் 5 நிமிடம் பேசுகிறார் என்றால் அது 100 பேரின் 5 நிமிடம் என்பதால் 500 நிமிடங்களுக்குச் சமம். பேசுபவர் உரையாற்றத் தெரியாமலோ உள்ளடக்கம் இல்லாமலோ பேசினால் கூட்டத்தில் இருக்கும் அனைவரின் மனமும் அசௌகர்யத்தை உணர்ந்து நெளியத் தொடங்கும். கூட்டத்தின் மனநிலையை அது பாதிக்கும். ஆனால் எல்லா கட்சிகளிலும் 99 சதவீத கட்சிக்காரர்கள் உரையாற்றத் தெரியாமலும் உள்ளடக்கம் இல்லாமலும் தான் பேசுப்வார்கள். பதவியில் இருக்கும் அரசியல்வாதி தன் வாழ்நாள் முழுதும் இதனைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது கூட்டமோ ஆலோசனையோ இருக்கும். தினம் இந்தப் பாடினை அரசியல்வாதிகள் பட வேண்டும்.
அரசியல்வாதி ஒரு கூட்டத்துக்கு வந்தால் அந்த கூட்டம் பொதுவாக குறைந்தபட்சம் 2 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரம் நடக்கும். அந்த நேரத்தில் மேடையில் அமர்ந்திருக்கும் அவர்களால் அலைபேசியில் பேச முடியாது . வேறு எந்த விஷயமும் செய்ய முடியாது. உள்ளடக்கம் இல்லாமல் பேசும் உரையாற்றத் தெரியாமல் பேசும் நபர்களின் பேச்சைக் கேட்டே ஆக வேண்டும்.
இந்தத் துயரங்களை எவரிடமும் அரசியல்வாதிகள் பகிர்ந்து கொள்ள முடியாது.
Monday, 22 June 2026
பெருவியப்பு (நகைச்சுவைக் கட்டுரை)
ஊரில் பேருந்து நிலையத்திலிருந்து ( ஊரில் ஒரு பேருந்து நிலையம் தான் இருந்தது ; சென்ற ஆட்சியில் ஊரிலிருந்து 3 கிமீ தொலைவில் இருக்கும் அண்டை கிராமம் ஒன்றில் ( அந்த கிராமத்தை ஊரின் நகராட்சியுடன் இணைக்க நகராட்சி தீர்மானம் போட்டது ; அந்த கிராமம் நாங்கள் ஊராட்சியாகவே இருக்கிறோம் நகராட்சியுடன் இணைய விரும்பவில்லை எனத் தீர்மானம் இயற்றி விட்டது) புதிய பேருந்து நிலையம் கட்டினார்கள். 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு ஒரு வாரம் முன்பு புதிய பேருந்து நிலையத்திலிருந்து எல்லா பேருந்துகளும் இயங்கும் என்றார்கள். மக்கள் யாரும் அங்கே செல்லவில்லை. நகராட்சி எல்லைக்குள் இருக்கும் பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கத் தொடங்கினார்கள். புதிய பேருந்து நிலையத்துக்கு மக்கள் வராததால் பேருந்து நிலையத்தை மீண்டும் பழைய பேருந்து நிலையத்துக்கே மாற்றி விட்டார்கள் ) காவிரிக்கரை நோக்கிச் செல்லும் சாலைக்கு ‘’அஞ்சல் அலுவலக சாலை’’ என்று பெயர். இருந்தாலும் அதனை சினிமா தியேட்டர் சாலை என்றே சொல்வார்கள். ஏனென்றால் அந்த சாலையின் கடைசியில் காவிரியின் தென்கரையில் ஒரு பெரிய சினிமா தியேட்டர் இருந்தது ; இருக்கிறது. இன்று இரவு நண்பர் ஒருவரை ரயில் நிலையத்திலிருந்து ‘’பிக் அப்’’ செய்து கொண்டு பேருந்து நிலையம் வழியே சினிமா தியேட்டர் சாலையில் டூ-வீலரில் சென்று கொண்டிருந்தேன். பேருந்து நிலையம் எதிரில் ஆளும்கட்சியின் கொடிகள் பறந்து கொண்டிருந்தன. அந்த சாலையின் கடைசியில் சினிமா தியேட்டருக்கு எதிரில் அவர்களின் மாவட்டப் பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. நான் கடந்து சென்ற சிறு பொழுதில் ஒருவர் ஒலிபெருக்கியில் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். ‘’இந்த மாவட்டக் கூட்டத்துக்கு வருகை தந்திருக்கிற மாவட்ட, ஒன்றிய , நகர, மாநிலப் பொறுப்பாளர்களே! இந்தப் பொதுக்கூட்டம் நடக்கிற இடம் சினிமா தியேட்டரின் வாசல். இந்தப் பொதுக்கூட்டம் எனக்கு என்னென்ன ஞாபகங்களை நினைவுபடுத்துகிறது என்றால் இங்கே நம் தலைவரின் எத்தனை படங்களுக்கு கட் அவுட் வைத்திருப்போம் ; போஸ்டர் ஒட்டியிருப்போம் ; தலைவர் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்திருப்போம்; எத்தனை படங்களை ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ ரசிகர் மன்ற ஷோவாக பார்த்திருப்போம் ; தலைவர் திரையில் தோன்றும் போது எத்தனை விசில் அடித்திருப்போம் ; அந்த நினைவுகள் தான் எனக்கு வருகின்றன. அப்படி தலைவருக்கு ரசிகர்களாக இருந்த நாம் அரசியல் கட்சியாக ஆகி ஆளும்கட்சியாகவும் ஆகி விட்டோம் என்பதை நினைக்கும் போது அப்படியே ‘’கூஸ்பம்ஸ்’’ மொமெண்ட் ஆக இருக்கிறது. இன்று நாம்தான் ஆளுங்கட்சி என்பதை நம்பவே முடியவில்லை’’ என்றார்.
என்னால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அனைவருக்கும் அதிகாரம்
இன்றைய தேதியில் உலக மக்கள்தொகை தோராயமாக 700 கோடி எனில் அதில் 420 கோடி மக்கள் சர்வாதிகார ஆட்சி அல்லது ராணுவ ஆட்சி அல்லது மன்னர் ஆட்சியின் கீழ் வாழ்கின்றனர் ; 280 கோடி மக்கள் மட்டுமே ஜனநாயகத்தின் கீழ் வாழ்கின்றனர். ஜனநாயகம் நாட்டின் எல்லா குடிமக்களும் அரசியல் அதிகாரத்தின் உச்சநிலையை அடைய முடியும் என்ற உரிமையை அளித்துள்ளது. இயல்பாகவே ஜனநாயக நாட்டில் ஒரு குடிமகன் நாட்டின் உயர்பதவியை அடைய வேண்டும் என விரும்ப முடியும் ; அதற்கான பாதையில் செல்ல முடியும். குடிமகன் விரும்புவதைப் போல குடிமக்கள் சமூகங்களும் நாட்டின் அரசியல் அதிகாரம் தங்கள் கையில் இருக்க வேண்டும் என விரும்பி அதனை நோக்கிச் செல்கின்றன. இந்தியாவின் குடிமக்கள் சமூகங்களில் சாதி மிகப் பெரியதும் பிரதானமானதும் ஆகும். சாதி என்னும் சமூக அமைப்பு இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கு மேலாக உயிர்ப்புடன் இயங்கி வருகிறது. இந்த விஷயத்தைப் புரிந்து கொள்ளும் போது இந்தியாவில் எப்போதுமே விவசாயிகளும் விவசாய சாதிகளுமே எண்ணிக்கையில் மிக அதிகமாக இருந்திருக்கின்றனர் என்பதும் அவர்கள் தங்கள் கிராமத்தை விட்டு வெளியே செல்லுதல் என்னும் தேவை இல்லாமல் இருப்பவர்கள் என்னும் விஷயத்தையும் இதனுடன் சேர்த்து யோசிக்க வேண்டும். நாட்டின் வட பகுதியிலோ அல்லது தென் பகுதியிலோ ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி வசிக்கிறார் என்றால் அவர் தன் வாழ்நாளில் கிராமத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு ஊருக்கு வாழ்நாளில் சிலமுறை சென்றிருப்பார் ; தன் கிராமத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் இருக்கும் கிராமத்துக்கு கணிசமான முறை சென்றிருப்பார். இதற்குக் காரணம் என்னவெனில் அவருக்குத் தேவையான அனைத்தும் அந்த கிராமத்திலேயே இருக்கும். உப்பு, மளிகைப் பொருட்கள், துணி, உலோகங்கள் ஆகியவை வணிகர்களால் ஒவ்வொரு கிராமத்துக்கும் வந்து சேரும் அல்லது 200 கிராமங்களுக்குப் பொதுவாக இருக்கும் ஒரு வணிக நகரில் கிராமத்து மக்கள் தங்கள் நுகர்வுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். இந்தியாவில் விவசாய சாதிகள் இருந்தன ; மேய்ச்சல் சாதிகள் இருந்தன ; போர்ச் சாதிகள் இருந்தன ; வணிகச் சாதிகள் இருந்தன ; உலோகத்தொழில் செய்யும் சாதிகள் இருந்தன ; கைவினைப் பொருட்கள் செய்யும் சாதிகள் இருந்தன; வேதம் ஓதும் சாதிகள் இருந்தன. மேற்படி சாதிகள் இப்போதும் இருக்கின்றன. இந்திய வரலாற்றை உற்று நோக்கினோம் என்றால் அதன் 3000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றில் 3000 ஆண்டுகளாக ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒருவன் தன் வாழ்க்கையை அந்த கிராமத்துக்குள் வாழ்ந்து கொள்ள முடியும் என்னும் நிலை இருந்தது. இந்தியாவில் மட்டுமல்ல ; அனேகமாக உலகின் எல்லா நாடுகளிலுமே இந்த நிலை ஏறக்குறைய இருந்தது. 18ம் நூற்றாண்டிலும் 19ம் நூற்றாண்டிலுமே பொருள் உற்பத்தி ஐரோப்பாவில் பெரிய அளவில் நிகழத் தொடங்குகிறது. அதன் விளைவுகள் உலகம் முழுதையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கத் தொடங்குகின்றன.
இந்தியாவில் இருந்த சாதிகள் கிராம் அளவிலானவை. ஒரு கிராமம் என்பது 3000 மக்கள்தொகை கொண்டது எனில் சாதி என்பதும் அந்த எண்ணிக்கைக்குள் அந்த கிராமத்துக்குள் இருந்ததே ஆகும். 3000 ஆண்டுகளுக்கு முன்போ 200 ஆண்டுகளுக்கு முன்போ கூட ஒரு கிராமத்தைத் தாண்டி இன்னொரு கிராமத்துக்கு திருமணத் தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்ளும் வழக்கம் இருக்கவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட எந்த சாதியினரும் தங்கள் கிராமத்துக்கு அப்பால் சொந்த சாதியைச் சேர்ந்தவர்களுடன் கூட மண உறவு கொள்ளவில்லை. இந்த விஷயம் புவியியல் சார்ந்த ஒன்றாகும். இங்கே குறிப்பிட விரும்புவது சாதி நாடு முழுக்க இருந்தாலும் அது கிராம அளவில் அதிகாரம் கொண்டதே ஆகும். இதில் இன்னொரு விஷயத்தையும் கவனித்துப் பார்க்கலாம். தெற்கு வடக்காக நம் நாடு 3000 கி.மீ நீளம் கொண்டது எனில் ஒவ்வொரு 150 கி.மீ க்கும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பார்கள். எந்த சாதியும் 150கி.மீ அல்லது 300 கி.மீ எல்லைக்கு அப்பால் சிறு எண்ணிக்கையில் கூட இல்லாமல் ஆவார்கள். ஒரு புரிதலுக்காக இன்றைய தேதியில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை அளவிட்டோம் என்றால் கன்னியாகுமரியில் மீனவர்களும் நாடார்களும் எண்ணிக்கையில் அதிகம் ; மதுரையில் முக்குலத்தோர் அதிகம் ; திருச்சியில் முத்தரையர் அதிகம்; விழுப்புரம் வேலூரில் படையாச்சிகள் அதிகம் ; கடப்பாவில் ரெட்டிகள் அதிகம் ; ரெய்ச்சூரில் ஒக்கலிகா அதிகம் ; பூனாவில் மராத்தாக்கள் அதிகம் ; ஆகதாபாத்தில் படேல்கள் அதிகம் ; ஜெய்ப்பூரில் ராஜபுத் அதிகம் ; சண்டிகரில் ஜாட் அதிகம் ; என்னும் விதமாகவே நம் நாட்டில் சாதிப்பரவல் உள்ளது. ஒரு பிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட சாதி அதிக எண்ணிக்கையில் இருக்கிறது என்பதன் பொருள் என்னவெனில் அந்த குறிப்பிட்ட சாதி 20 சதவீதத்திலிருந்து 40 சதவீதம் வரை உள்ளது என்பதே ஆகும். கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை விவசாயத் தொழிலாளர்களாக இருக்கும் சாதிகள் 20 சதவீதம் இருக்கிறார்கள். அவர்கள் நாட்டின் பல இடங்களில் ஒவ்வொரு பிராந்தியத்தில் இரண்டாம் இடத்திலும் பல இடங்களில் முதனமை இடத்திலும் இருக்கிறார்கள். விவசாயத் தொழிலாளர்கள் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் அல்ல ; நூற்றுக்கணக்கான சாதிகள் விவசாயத் தொழிலாளர்களில் இருக்கிறார்கள். அவர்கள் ‘’பட்டியல் சாதிகள்’’ என பொதுவாகக் குறிப்பிடப்படுகின்றனர். பட்டியல் சாதிகள் என்னும் பொதுப் பெயர் நூற்றுக்கணக்கான சாதிகளின் தொகுப்பே ஆகும்.
நம் நாட்டின் வரலாற்றை கவனித்தோம் எனில் 4000 ஆண்டுகளாகவே நம் நாட்டின் அரசுகளும் பேரரசுகளும் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை இருக்கும் சாதிகளுக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் தொகுக்கவுமே முயன்றிருக்கின்றனர் என்பதைக் காணலாம். சாதிகள் மூலம் மக்கள் தொகுக்கப்பட்டனர் என்பது ஓர் உண்மை எனில் சாதிகள் கிராமம் என்னும் அளவில் மட்டுமே முழு அதிகாரம் கொண்டிருந்தன என்பதும் அதன் இன்னொரு உண்மை. வரலாற்றின் சுவாரசியமான விஷயம் என்னவெனில் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நாட்டின் சமூக சித்திரத்தில் பெரிய மாற்றம் நிகழ்ந்திடவில்லை. சிறு சிறு மாற்றங்கள் மட்டுமே நிகழ்ந்து சமூகச் சித்திரம் இன்றும் காணக்கூடியதாக இருக்கிறது.
***
தமிழகத்தின் சமூகச் சித்திரத்தை இவ்விதமாக வரையறுத்துக் கொள்ளலாம். தமிழகத்தில் உள்ள சாதிகள் மாநில மக்கள்தொகையில் யார் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்பதைக் கணக்கிட்டுக் கொள்வோம்.
பட்டியல் சாதிகள் - 20 சதவீதம் ; படையாச்சி - 14 சதவீதம் முக்குலத்தோர் - 11 சதவீதம் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் - 7 சதவீதம் ஆபிரகாமிய மதத்தினர்-12 சதவீதம் நாடார்கள் - 7 சதவீதம் வேளாளர்கள் - 3 சதவீதம் வேதியர்கள் - 3 சதவீதம் இதர சாதிகள் - 23 சதவீதம்.
தமிழகத்தில் 76 வகையான பட்டியல் சாதியினர் இருக்கிறார்கள். எண்ணிக்கையில் கணிசமாக இருக்கும் பட்டியல் சாதியினர் என பறையர், தேவேந்திர குல வேளாளர், அருந்ததியர், சக்கிலியர் ஆகிய சாதிகளைக் கூற முடியும். இதில் தேவேந்திர குல வேளாளரில் ஒரு பகுதி தங்களை பட்டியல் சாதியிலிருந்து நீக்க வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைக்கின்றனர்.
படையாச்சி என்னும் சாதி படையாச்சி, வன்னிய குல ஷத்ரியர், அக்னி குல ஷத்ரியர், வன்னியக் கவுண்டர், கண்டர் ஆகிய சாதிகளின் தொகுப்பு ஆகும்.
முக்குலத்தோர் என்னும் சாதி மறவர், கள்ளர் , அகமுடையார் என்னும் சாதிகளின் தொகுப்பு ஆகும்.
தமிழகத்தில் உள்ள ஆபிரகாமிய மதத்தினரில் லெப்பை, ராவுத்தர், மரக்காயர், மாப்ளா, அன்சார், தக்கனி முஸ்லீம், கிருஸ்தவ நாடார், சி எஸ் ஐ , ஃபெர்ணாண்டோ ஆகிய சாதிகள் உண்டு.
3 சதவீதம் இருக்கும் பிள்ளை சாதியிலும் சைவப் பிள்ளை, நாஞ்சில் நாட்டு பிள்ளைமார், கோட்டைப் பிள்ளை, துளுவ வேளாளர் ஆகிய சாதிகள் உண்டு.
3 சதவீதம் இருக்கும் வேதியரில் வடமா, வாத்திமா, பிருஹத்சரணம், அஷ்ட சஹஸ்ரம், ஐயங்கார், மாத்வா,நியோகி ஆகிய சாதிகள் உண்டு.
சாதி என்பது வகைப்படுத்த வகைப்படுத்த மேலும் மேலும் பிரிந்து கொண்டே செல்லும் இயல்பு கொண்டது. இந்த சாதிகளை ஒருங்கிணைக்கவும் தொகுக்கவும் 4000 ஆண்டுகளாக நம் நாட்டின் அரசுகளும் பேரரசுகளும் முயன்றன. 4000 ஆண்டுகளாக நம் நாட்டின் அரசுகளும் பேரரசுகளும் சாதிகளைத் தொகுக்கவும் ஒருங்கிணைக்கவும் செய்திருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட ஆட்சியில் குறிப்பிட்ட பிராந்தியங்கள் பொருளியல் ரீதியாக முன்னுக்கு வருவதும் அதன் மூலம் அந்தப் பிராந்தியத்தின் குறிப்பிட்ட சாதிகள் பயன்பெற்றதும் நிகழ்ந்தது.
பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவின் சாதிகளின் மொத்தப் பட்டியலை உருவாக்க முயன்றது. இந்தியாவில் இருக்கும் மொத்த சாதிகளை பட்டியல் சாதிகள், முன்னேறிய சாதிகள் என வகைப்படுத்தியது. நாட்டின் சுதந்திரத்துக்குப் பின் பட்டியல் சாதிகள், பிற்பட்ட சாதிகள், முன்னேறிய சாதிகள் என்னும் பிரிவுகள் பட்டியலிடப்பட்டன. கல்வி, அரசு வேலை ஆகிய இரு விஷயங்களில் இட ஒதுக்கீடு வழங்க சாதிப் பட்டியல்கள் உதவின. 1980ம் ஆண்டிலிருந்து 2000 ஆண்டு வரை இட ஒதுக்கீடு இந்திய அரசியலில் முக்கிய விஷயமாக இருந்தது ; இப்போதும் நீறு பூத்த நெருப்பாக இருக்கிறது.
இட ஒதுக்கீடு அரசியல் விஷயமாக மாறி ஆட்சி மாற்றம் வரை தாக்கம் செலுத்துவது உண்மை. இட ஒதுக்கீடு மூலம் பலருக்கு அரசு வேலை கிடைத்து நேரடியாக பலன் அடைந்திருக்கிறார்கள் ; பலன் அடைகிறார்கள் என்பது ஓர் உண்மை. இந்த உண்மையை பரிசீலிக்காமல் இட ஒதுக்கீடு குறித்தோ சாதிப் பட்டியல்கள் குறித்தோ பேசிட முடியாது. எனினும் கல்வி , வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு மட்டுமே எல்லா குடிமக்களுக்கும் லௌகிகத் தீர்வாக இருக்குமா என்னும் கேள்வியை எழுப்பிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்தியாவில் அரசுப்பணி புரிபவர்கள் மொத்த மக்கள்தொகையில் 2 சதவீதத்தினர் மட்டுமே. இன்றைய தேதிக்கு இந்திய மக்கள் தொகை 140 கோடி எனில் அதில் 2 கோடியே 80 லட்சம் பேர் மட்டுமே அரசுப் பணி புரிபவர்கள். மீதி 138 கோடி பேர் அரசுப்பணியில் இல்லாமல் இருப்பவர்கள். இந்திய அரசியல் இட ஒதுக்கீட்டை மையம் கொள்ளும் போது 2 சதவீதம் குறித்து மட்டுமே பேசியிருக்கிறது. மீதி 138 கோடி பேர் குறித்து இந்த விஷயத்தில் சிந்திப்பது இல்லை. இந்தியா கோடிக்கணக்கான சிறு விவசாயிகளின் நாடு ; இந்தியா கோடிக்கணக்கான சிறு வணிகர்கள் சிறு தொழில்முனைவோரின் நாடு. கோடிக்கணக்கான மக்கள் தனியார் துறையில் பணி புரியும் நாடு. இருப்பினும் இந்திய அரசியலில் சாதி கல்வியிலும் இட ஒதுக்கீட்டிலும் பொதுமக்கள் அபிப்ராயத்திலும் கணிசமான தாக்கம் ஏற்படுத்துகிறது.
சாமானிய பொதுமக்கள் தேர்தல் அரசியலை கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் என்றே கருதுகிறார்கள். எனவே ஒரு சாதியினர் மற்ற சாதியினரைப் போட்டியாளர்களாகக் கருதுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட சாதி ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கும் வாக்கு வங்கிகளாக மாறுவது நிகழ்கிறது.
இந்தியத் தேர்தல் முறையில் ஒரு குடிமகனின் வாக்கு என்பது ரகசியமானது. எனினும் பொதுக் கணிப்பில் எந்த சாதியினர் எந்த கட்சிக்குப் பெருமளவு வாக்களிக்கிறார்கள் என்பதை அரசியலை அவதானிப்பவர்களால் கணிக்க முடிகிறது. வாக்குச்சாவடி அளவிலான வாக்கு எண்ணிக்கை விவரங்கள் மின்னணு வாக்குப்பதிவு முறை மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தெரியவருகிறது. எனவே அந்தத் தரவுகளைக் கொண்டு எந்த சாதியினர் எந்த கட்சிக்கு அதிகம் வாக்களிக்கிறார்கள் என்பதை ஓரளவு கணிக்க முடிகிறது.
தமிழகத்தில் ஒரு கட்சி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். 1977ம் ஆண்டு அதிமுக கட்சி 30 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சியமைத்தது. எனினும் தமிழக மக்கள்தொகையில் எந்த சாதியும் 30 சதவீதம் இல்லை. எனவே ஒன்றுக்கு மேற்பட சாதிகளின் ஆதரவைப் பெறும் கட்சிதான் ஆட்சியமைக்க முடியும். இந்த சூழ்நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் ‘’பிரித்து ஆளுதல்’’ என்னும் உபாயத்தை மேற்கொள்வார்கள். எண்ணிக்கை பலம் கொண்ட இரண்டு சாதிகளின் ஆதரவைப் பெற மூன்றாவது சாதியை அந்த இரண்டு சாதிகளுக்கும் போட்டியாளர்களாகக் காட்டுவார்கள். பட்டியல் சாதி இடஒதுக்கீடு பிரிட்டிஷ் காலத்திலிருந்தே இருக்கிறது. எனவே பட்டியல் சாதியினரை இடைநிலை சாதிகளுக்குப் போட்டியாளர்களாகக் காட்டி இடைநிலை சாதியினரின் வாக்குகளைப் பெற முயல்வார்கள்.
தமிழகத்தின் மக்கள்தொகை எண்ணிக்கை அடிப்படையில் பட்டியல் சாதியினர் மக்கள்தொகையில் 20 சதவீதம் அளவில் இருக்கின்றனர். இவர்கள் நாடு சுதந்திரம் அடைந்த போது காங்கிரஸ் கட்சிக்கு அதிக அளவில் வாக்களித்தனர். பின்னர் அதிமுகவுக்கு அதிக அளவில் வாக்களித்தனர். கடந்த 10 ஆண்டுகளாக திமுகவுக்கு வாக்களித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் புதிய தமிழகமும் பட்டியல் சாதியினர் மத்தியில் செல்வாக்கு கொண்ட கட்சிகள். இந்தத் தேர்தலில் ஜோசஃப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு பட்டியல் சாதியினர் வாக்களித்திருக்கின்றனர்.
தமிழக மக்கள்தொகையில் எண்ணிக்கை அடிப்படையில் இரண்டாம் இடத்தில் இருப்பவர்கள் படையாச்சிகள் ஆவர். இவர்கள் எண்ணிக்கை 14 சதவீதம். இவர்கள் நாடு சுதந்திரம் அடைந்த போது காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தனர். பின்னர் திமுக வுக்கு வாக்களித்தனர். பின்னர் திமுக , அதிமுக ஆகிய இருகட்சிகளுக்கும் வாக்களித்தனர். பாட்டாளி மக்கள் கட்சி படையாச்சி சமூகத்தினரின் ஆதரவைப் பெற்ற கட்சி. இந்தத் தேர்தலில் இவர்களின் வாக்குகள் திமுக, அதிமுக, த வெ க ஆகிய மூன்று கட்சிகளுக்கும் சென்றுள்ளது.
தமிழக மக்கள்தொகையில் எண்ணிக்கை அடிப்படையில் மூன்றாம் இடம் வகிப்பவர்கள் முக்குலத்தோர். இவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவுக்கு பெருமளவில் வாக்களிப்பவர்கள். திமுகவுக்கும் வாக்களிப்பது உண்டு.
தமிழக மக்கள்தொகையில் எண்ணிக்கை அடிப்படையில் நான்காம் இடம் வகிப்பவர்கள் கொங்கு வேளாளக் கவுண்டர்கள். இவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவுக்கு பெருமளவில் வாக்களிப்பவர்கள். திமுக வுக்கும் வாக்களிப்பது உண்டு. இந்த முறை த வெ க வுக்கும் வாக்களித்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் பிற சாதியினர் எண்ணிக்கை மிக அதிகம். அவர்களே 23 சதவீதம். இருப்பினும் அவர்கள் ஒரு சாதி இல்லை. எண்ணிக்கையில் பெரிய சாதிகள் எவருக்கு வாக்களித்தாலும் பிற சாதியினர் ஆதரவை எவர் பெறுகிறார்களோ அவர்களே ஆட்சி அதிகாரத்துக்கு வர முடியும்.
தமிழகத்தில் ஆபிரகாமிய மதங்களைச் சேர்ந்தவர்கள் 12 சதவீதம் இருக்கின்றனர். இவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுக வுக்கு வாக்களிப்பவர்கள். இந்தத் தேர்தலில் த வெ க வுக்கு வாக்களித்திருக்கின்றனர்.
இந்த புள்ளிவிபரங்கள் மாநில மக்கள்தொகை அடிப்படையிலானவை. இவற்றை பிராந்தியரீதியாகப் பிரித்துப் பார்த்தால் இவை வேறு சித்திரம் கொடுக்கும். எவ்வாறெனில் படையாச்சிகள் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிகம் இருக்கின்றனர். தென் மாவட்டங்களில் அந்த சமூகம் அதிகம் இல்லை. கொங்கு வேளாளக் கவுண்டர்கள் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் அதிகம் இருக்கின்றனர். தென் தமிழகத்திலும் வட தமிழகத்திலும் இல்லை. முக்குலத்தோர் தென் தமிழகத்தில் இருக்கின்றனர். தமிழகத்தின் வடக்கிலும் மேற்கிலும் இல்லை. பட்டியல் சாதியினர் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் இருக்கின்றனர். ஆபிரகாமிய மதங்களைச் சேர்ந்தவர்களும் எல்லா பகுதிகளிலும் இருக்கின்றனர். எனினும் இந்தத் தரவில் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ஒரு வட மாவட்டத் தொகுதி இருக்கிறது என்றால் அங்கே பட்டியல் சாதியினர் மொத்த மாநில மக்கள்தொகையில் அவர்கள் சதவீதமான 20 சதவீதம் என்ற அளவில் இருப்பார்கள். அந்தத் தொகுதியில் படையாச்சிகள் 25 சதவீதம் இருப்பார்கள். படையாச்சிகளின் மாநில முழுதுக்குமான மக்கள்தொகை சதவீதமே 14 சதவீதம். வட மாவட்டஙளில் மட்டும் கணக்கெடுத்தால் அவர்கள் 25 சதவீதம் இருப்பார்கள். தமிழகத்தின் எந்த தொகுதியிலும் பட்டியல் சாதியினர் 20 சதவீதத்துக்கு மேல் அனேகமாக இல்லை.
தமிழக அரசியலில் இட ஒதுக்கீடு முக்கியமான விஷயமாக கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் இருந்திருக்கிறது ; இருக்கிறது. இட ஒதுக்கீடு நீண்ட காலமாகப் பெற்றவர்கள் பட்டியல் சாதியினர். அதன் பின் படையாச்சிகளும், முக்குலத்தோரும் இதர சாதிகளும் இட ஒதுக்கீடு பெற்றார்கள். தமிழக அரசியல் என்பது இன்னொரு சாதி தங்களை விட அதிகமாக இட ஒதுக்கீடு பெற்று விடுமோ என ஒவ்வொரு சாதியையும் ஐயுற வைப்பதே ஆகும். இந்த ஐய உருவாக்கமே தமிழகக் கட்சிகளின் ‘’பிரித்து ஆளும்’’ முறையின் அடிப்படை விஷயம் ஆகும்.
தமிழக அரசியலில் எவர் முதலமைச்சராக இருந்திருக்கிறார்கள் என்று பார்ப்போம் எனில் எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருக்கும் சாதிகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக முதலமைச்சர்கள் ஆகியிருக்கிறார்கள்.
ராஜாஜி ஐயங்கார் சாதியைச் சேர்ந்தவர். காமராஜ் நாடார் சாதியைச் சேர்ந்தவர். பக்தவத்சலம் முதலியார் சாதியைச் சேர்ந்தவர். அண்ணாதுரை முதலியார் சாதியைச் சேர்ந்தவர். கருணாநிதி இசை வேளாளர் சாதியைச் சேர்ந்தவர். எம் ஜி ஆர் மன்றாடியார் சாதியைச் சேர்ந்தவர். ஜெயலலிதா ஐயங்கார் சாதியைச் சேர்ந்தவர். ஜோசஃப் விஜய் ஆபிரகாமிய மதத்தைச் சேர்ந்த கிருஸ்துவ வெள்ளாள சாதியைச் சேர்ந்தவர்.
இந்தப் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் மட்டுமே மிகச் சிறு அளவில் மாறுபடுபவர்கள். ஓ. பன்னீர்செல்வத்தின் முக்குலத்தோர் சாதி எண்ணிக்கை அடிப்படையில் பட்டியல் சாதி, படையாச்சி, ஆபிரகாமிய மதங்கள் ஆகியவற்றுக்கு அடுத்ததாக வரக்கூடிய சாதியே. எடப்பாடி பழனிச்சாமியின் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சாதி எண்ணிக்கை அடிப்படையில் பட்டியல் சாதி, படையாச்சி, ஆபிரகாமிய மதங்கள், முக்குலத்தோர் ஆகிய சாதிகளுக்கு அடுத்த எண்ணிக்கையில் வரும் சாதியே.
தமிழக வாக்காளர்களில் தேர்தல் தினத்தன்று வாக்குச்சாவடிக்கு சென்று தவறாமல் வாக்களிக்கும் வழக்கம் கொண்டவர்கள் பட்டியல் சாதியினர். மொத்த வாக்காளர்களில் 20 சதவீத எண்ணிக்கை கொண்டவர்கள் பட்டியல் சாதியினர். தமிழகத்தின் பொது வாக்கு சதவீதம் 80 சதவீதம் எனக் கொண்டால் பதிவாகும் வாக்குகளில் 25 சதவீதம் பட்டியல் சாதியினரின் வாக்குகள் என்றாகும். இந்த 25 சதவீத வாக்குகளை ‘’வாக்கு வங்கி’’யாகப் பயன்படுத்துகின்றன தமிழகத்தினை ஆளும்கட்சிகள். பட்டியல் சாதியினருக்கு கிடைக்கும் சலுகைகள் அனைத்துமே நாடு சுதந்திரம் பெற்ற போது அரசியல் நிர்ணய சபை வழங்கிய சலுகைகளே. தனித்தொகுதி என்னும் முறை இருப்பதால் சட்டசபைக்கு பட்டியல் சாதியினர் செல்லும் நிலை உள்ளது. திராவிடக் கட்சிகள் பட்டியல் சாதியினரின் கணிசமான வாக்குகளால் பதவிக்கு வந்தாலும் பட்டியல் சாதியினருக்கு அரசியல் அதிகாரம் அளித்ததில்லை. ஆபிரகாமிய மதங்களின் 12 சதவீத வாக்குகளும் திமுக வுக்கு வாக்கு வங்கியாக உதவியது. அவர்களுக்கும் திமுக அரசியல் அதிகாரத்தில் பங்கு கொடுத்ததில்லை.
இந்த முறை ஆபிரகாமிய மதத்தைச் சேர்ந்த ஜோசஃப் விஜய் முதலமைச்ராக ஆகியிருக்கிறார். அவரது அமைச்சரவையில் முக்கியமான நிதி அமைச்சர் பொறுப்பை பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் பெற்றிருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கும் ஆட்சியில் பங்கு பெற்றிருக்கின்றன.
தமிழக அரசியலின் மையப்புள்ளியாக இருக்கும் சாதி கல்வி , வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என்னும் நிலைக்கு அடுத்த கட்டமாக பட்டியல் சாதியினருக்கும் ஆபிரகாமிய மதத்தினருக்குமான அரசியல் அதிகாரம் என்னும் அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கிறது. வழக்கமாக தமிழக அரசியலில் படையாச்சிகள், முக்குலத்தோர், கொங்கு வேளாளர்கள் என்னும் சாதிகள் கணிசமாகவும் பட்டியல் சாதிகளும் ஆபிரகாமிய மதங்களும் மிகச் சிறு அளவிலும் அரசியல் அதிகாரம் பெறுவார்கள். இந்த முறை த வெ க ஆட்சியில் பட்டியல் சாதியினரும் ஆபிரகாமிய மதத்தினரும் கணிசமாகவும் படையாச்சிகள், முக்குலத்தோர் , கொங்கு வேளாளர்கள் ஆகிய சாதிகள் பட்டியல் சாதியினர், ஆபிரகாமிய மதத்தினருக்கு சமமாகவும் அரசியல் அதிகாரம் பெற்றுள்ளனர். தமிழக அரசியலில் இந்தக் காட்சி புதிய காட்சி ஆகும்.
கடந்த 60 ஆண்டுகளாக தமிழக அரசியல் களத்தில் சாதியே மையப்புள்ளியாக இருந்திருக்கிறது. சாதியை மையமாக வைத்த கல்வி வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு. வாக்காளர்கள் கணிசமானோர் மனதில் பிற சாதியினர் குறித்த ஐயமும் அவநம்பிக்கையும் அரசியல் கட்சிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்து மக்களை இதுவரை ‘’பிரித்து ஆளும்’’ அரசியலே நிகழ்ந்துள்ளது.
இனி, தமிழக மக்களை ‘’ஒன்றிணைக்கும்’’ அரசியலை அரசியல் கட்சிகள் முன்னெடுக்க வேண்டும் என்பது தமிழகப் பொதுஜனங்களின் எதிர்பார்ப்பு.