Wednesday, 8 July 2026

பொறுப்பின்மையின் உச்சம்

இன்று ஒரு பணி நிமித்தம் சீர்காழி சென்று விட்டு சீர்காழி புறவழிச்சாலையில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். புறவழிச் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தைக் கடக்கத் தொடங்கினேன். மேம்பாலத்துக்குக் கீழே பல ஏக்கரில் பரவிக் கடந்த சீமைக்கருவை மரங்களின் கணிசமான பகுதி பற்றி எரிந்து கரும்புகை முழு மேம்பாலத்தையும் நிறைத்திருந்தது.  நீளமான அந்த மேம்பாலத்தின் மேல் புகையைக் குறித்து சாமானியமாக எண்ணி 25 சதவீத தூரத்தைக் கடந்திருப்பேன். அப்போது உடல் அந்தக் கரும்புகை அனல்புகையாகவும் இருந்து அனல் கக்குவதை உணர்ந்தது. உடல் முழுவதையும் அனல் வெம்மை சுட்டது. காட்டுத்தீ என்பது என்ன என்பதையும் காட்டுத்தீயில் மனிதர்களும் பிராணிகளும் எவ்விதம் உயிரிழக்கிறார்கள் என்பதையும் அப்போது உணர்ந்தேன். காட்டுத்தீயின் வெம்மை அதன் புகையிலும் இருக்கும். அந்த வெம்மையை தாங்க இயலாமல் தோல் வேகும். புகை நுரையீரலை நிரப்பி உடலுக்கு பிராணவாயு இல்லாமல் ஆக்கி மூச்சுத்திணறச் செய்து சாவைக் கொண்டு வரும். வண்டியை வேகமெடுத்தேன். ஒரு கணம் தொடர்ந்து செல்லாமல் வந்த பாதையில் திரும்பி விடலாமா என எண்ணினேன். மனதைத் திடப்படுத்திக் கொண்டு அந்த மேம்பாலத்தைக் கடந்து விட்டேன். அந்த மேம்பாலத்தை மணிக்கு 40 கி.மீ வேகத்தில் கடந்தால் 2 லிருந்து 3 நிமிடங்களில் கடக்க முடியும். புகை மண்டியிருக்கும் சூழலில் இன்னும் கூடுதல் நேரமாகலாம். எனக்கு மூச்சுத் திணறி இருமல் வந்தது. சற்றுத் தள்ளி வந்து புகை மண்டலத்தைக் கண்டேன். நேரம் அப்போது மாலை 3 மணி இருக்கும். புகை மண்டலத்தைக் கடந்து வந்தவுடன் எனது அலைபேசியை எடுத்து 108 என்ற எண்ணுக்கு ஃபோன் செய்தேன். சாலை விபத்துகள் நிகழ்ந்திருக்கும் இடங்களைக் கடக்கும் போது பலமுறை 108 என்ற எண்ணுக்கு ஃபோன் செய்திருக்கிறேன். ஆம்புலன்ஸ் வந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறது. 108க்கு அழைத்தால் அழைப்பை ஏற்பவர்கள் சாலை விபத்தா அல்லது தீ விபத்தா அல்லது காவல்துறை உதவி வேண்டுமா எதனுடன் தொடர்பு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்பார்கள். ஆனால் இந்த முறை அப்படிக் கேட்கவில்லை. நானாக தீ விபத்து என்று சொன்னேன். அழைப்பை ஏற்றவர் சற்று குழப்பமடைந்ததாக உணர்ந்தேன். எனினும் அவர் எந்த மாவட்டம் எந்த ஊர் என்று கேட்டு விட்டு தீயணைப்பு நிலையத்துக்கு உங்கள் எண்ணைக் கொடுத்து விடுகிறோம் ; அவர்கள் உங்களை அழைப்பார்கள் என்று சொன்னார்கள். ஓரிரு நிமிடம் காத்திருந்தேன். அழைப்பு ஏதும் வரவில்லை. எனக்கு அந்த ஊரின் தீயணைப்பு நிலையம் எங்கேயிருக்கும் என்பது தெரியும். அங்கே விரையத் தொடங்கினேன். அப்போது எரிவாயு நிரம்பிய சரக்கு வாகனம் ஒன்று அந்த மேம்பாலத்தைக் கடக்கத் தொடங்கியது. அனல் நிரம்பிய புகை மண்டலத்தில் எரிவாயு சிலிண்டர்கள் சூடானால் என்ன விபரீதம் நிகழுமோ என்ற அச்சம் என்னைச் சூழ்ந்தது. இன்னும் எத்தனை வாகனங்கள் வருமோ என்ற அச்சம். கைக்குழந்தைகளும் சிறு குழந்தைகளும் காரிலோ பேருந்திலோ பயணித்து இந்தப் பாலத்தைக் கடக்க நேர்ந்து மூச்சுத் திணறினால் என்ன ஆகும் என்ற அச்சம். விரைந்து சென்றேன். 108 அழைத்ததையும் அவர்கள் தீயணைப்பு நிலையம் என்னைத் தொடர்பு கொள்ளும் எனக் கூறியதையும் கூறினேன். அவர்கள் அவ்விதம் அழைப்பு ஏதும் வரவில்லை எனக் கூறியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர்களிடம் அங்கிருக்கும் சூழ்நிலையை நானே விளக்கினேன். அங்கே 4 பேர் இருந்தனர். விபரம் கேட்டுக் கொண்டார்களே தவிர நடவடிக்கையில் உடனடியாக இறங்கியதாகத் தெரியவில்லை. என்னுடைய பெயரையும் முகவரியையும் கேட்டு எழுதிக் கொண்டார்கள். எழுதியவர் ‘’நீங்க வெளியூரா?’’ என்றார். எனது நண்பன் ஒருவனுக்கு ஃபோன் செய்து ‘’மிக அவசரம்’’ எனக் கூறி இணையத்தில் சீர்காழி காவல்துறையின் எண் எது இருந்தாலும் அனுப்பு என்று கூறினேன். சீர்காழி துணை காவல்துறை கண்காணிப்பாளர் எண்ணை அனுப்பினான். அந்த எண்ணுக்கு ஃபோன் செய்தேன். முழு சுற்றும் ஒலித்து ஓய்ந்தது. மீட்டிங்கில் இருக்கக் கூடும் என எண்ணினேன். நேராக சீர்காழி காவல்நிலையத்துக்குச் சென்று அதுவரை நடந்தது அனைத்தையும் கூறினேன். அப்போது அங்கே இரண்டு காவலர்கள் இருந்தனர். ஒருவர் ஒரு வழக்கு குறித்து ஒரு வெள்ளைக் காகிதத்தை நீளவாக்கில் நான்காக மடித்து சில பெயர்களையும் அந்தப் பெயர்களை இணைக்கும் காரணிகளையும் அம்புக்குறி போட்டு எழுதிக் கொண்டிருந்தார். இன்னொருவர் அலைபேசியை எடுத்து ஃபோன் செய்தார். இந்த தீ விபத்து தொடர்பாகத்தான் யாருக்கோ தகவல் தெரிவிக்கிறார் என எண்ணினேன். 

‘’ஐயா ! அந்த பொண்ணு புதுசா கல்யாணம் ஆன பொண்ணுங்க ஐயா. கல்யாணம் ஆகி ரெண்டு மாசம் தான் ஆகுது. புருஷன் திட்றான். மாமியார் திட்றாங்கன்னு சொல்லுது ஐயா. யாரோ சிங்கப்பெண்-ல புகார் கொடுங்க சொல்லியிருக்காங்க. அதான் ஐயா விஷயம். சி எஸ் ஆர் மட்டும் போட்ருக்கோம். அந்த நம்பர் சொல்றன் ஐயா’’ என்ற படி ஒரு எண்ணைக் கூறினார். 

நான் அங்கிருந்து நேராக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்றேன். வருவாய் கோட்டாட்சியர் இருந்தார். அவரிடம் விஷயத்தை முழுக்கக் கூறினேன். ‘’அந்த ஏரியா வி ஏ ஓ வை அனுப்பி பாக்கச் சொல்றன்’’ என்றார். 

‘’சார் ! உங்க கிட்ட போலிஸ் டி எஸ் பி நம்பர் இருந்தா கொடுங்க. என்கிட்ட ஒரு நம்பர் இருக்கு. ஆனா அது ஃபுல் ரிங் ஆகி கட் ஆகுது ‘’ என்றேன். 

கையைக் காட்டி ‘’ரொம்ப பக்கத்துல தான் டி எஸ் பி ஆஃபிஸ் இருக்கு. அங்க போய் சொல்லுங்க ‘’ என்றார். 

நான் டி எஸ் பி ஆஃபிஸுக்கு சென்றேன். அங்கே ஒருவர் இருந்தார். அவரிடம் விஷயத்தைக் கூறினேன். ‘’சார் ! மைக்ல ஹை வே பேட்ரோல் கூப்பிட்டு அந்த ஸ்பாட்டுக்கு போகச் சொல்லுங்க. நான் மிகைப்படுத்தி சொல்லலங்கறது அப்ப உங்களுக்குத் தெரியும்’’ என்றேன். 

‘’ஃபயர் சர்வீஸ்ல சொல்லீட்டிங்கள்ல ; அவங்க போவாங்க ‘’ என்றார். 

மீண்டும் தீயணைப்புத்துறை அலுவலகத்துக்குச் சென்றேன். பிரதான சாலையிலிருந்து பிரிந்து செல்லும் பக்கவாட்டுச் சாலையின் உள்ளே அந்த அலுவலகம் இருக்கிறது. பிரதான சாலையிலிருந்து பக்கவாட்டுச் சாலை பிரியும் இடத்தில் ஒரு இஸ்திரி கடை இருந்தது. அந்தக் கடைக்காரரிடம் என்னுடைய டூ-வீலரில் இருந்தவாறே ‘’ கொஞ்ச நேரம் முன்னாடி ஃபயர் சர்வீஸ் வண்டி இந்தப் பக்கம் போனதா ?’’ எனக் கேட்டேன். அவர் உறுதியாக ‘’இல்லை’’ எனத் தலையாட்டினார். அதன் பின் பக்கவாட்டுச் சாலையின் உள்ளே சென்றேன். அவர்கள் புறப்படும் முஸ்தீபில் இல்லை. நான் திரும்பி வருவேன் என்றும் எதிர்பார்க்கவில்லை. இருந்த 4 பேரில் சீனியரான ஒருவர் ‘’டூ வீலரை எடு. ஸ்பாட்டை பார்த்து விட்டு வருவோம்’’ என்றார். அந்த நேரத்தில் டி எஸ் பி என்னுடைய மிஸ்டு கால் பார்த்து விட்டு ஃபோன் செய்தார். அவரிடம் சுருக்கமாக விஷயத்தைக் கூறி விட்டு ‘’சார் நான் மிகைப்படுத்தி சொல்லல. நிலைமை சீரியஸ். அதனால தான் எல்லா ஆஃபிஸ்க்கும் தகவல் சொல்றன். கைக்குழந்தைகளும் சின்ன குழந்தைகளும் அந்த பாலத்தை கிராஸ் செஞ்சா நிச்சயம் மூச்சுத் திணறும். எனக்கே மூச்சு திணறிடுச்சு. ஒரு சாமானியப் பிரஜையா இதை அரசாங்க அதிகாரிகளுக்கு சொல்ல வேண்டியது எனது கடமை. அதைத்தான் நான் செஞ்சிருக்கன். தேங்க்யூ சார்’’ எனக் கூறினேன். 

டூ வீலரில் ஃபயர் சர்வீஸ் ஊழியர்கள் செல்லையில் நானும் பின் தொடர்ந்து சென்றேன். வந்து பார்த்த அந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி.  அவர்கள் நான் கூறிய விஷயம் ஒரு சாமானியனின் பார்வையில் மிகைப்படுத்தப்பட்டது என்றே எண்ணினார்கள். நேரில் பார்த்த போது விஷயம் சீரியஸ் தான் என புரிந்து கொண்டார்கள். சீனியராக இருந்தவர் சட்டென தன் ஜூனியருக்கு எவ்விதம் மேம்பாலத்திலிருந்து கீழே இறங்க வேண்டும் ; தண்ணீர் ஹோஸ் எப்படி லே அவுட் செய்து கொள்ள வேண்டும் என விளக்கினார். ஆஃபிஸுக்கு ஃபோன் செய்து தீயணைப்பு வாகனத்தை வரச் சொன்னார்கள். கிராம நிர்வாக அலுவலரும் அவரது உதவியாளரும் வந்து வருவாய்த்துறைக்கு செய்தி கூறத் தொடங்கினர். அந்த நேரத்தில் அந்த மேம்பாலத்தின் கீழ் 3 ரயில்கள் வடக்கும் தெற்குமாக கடந்து சென்றன. ஸ்டேஷன் மாஸ்டருக்குத் தகவல் தெரியுமா என யோசித்தேன். அவரிடமும் சொல்லி விட்டு வருவோமா என எண்ணினேன். ஊரில் இருந்த பத்திரிக்கை நிருபருக்கு ஃபோன் செய்து அங்கேயிருக்கும் பத்திரிக்கை நிருபர்களுக்கு ஃபோன் செய்ய வேண்டும் என்று சொன்னேன். எண்களை எஸ். எம். எஸ் செய்தார். அவர்கள் இரண்டு பேர் வந்தனர். என் ஹெச் எ ஐ என்பட்டும் தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு ஆணைய பணியாளர்கள் 4 பேர் நெடுஞ்சாலையில் தீயணைப்பு வாகனம் நிற்கிறது என வாகன ஓட்டிகள் சொன்ன தகவல் அடிப்படையில் அவர்களும் வந்தனர். 

அந்தத் தீ நெடிந்து வளர்த்திருந்த 11 பனை மரங்களை எரியச் செய்து கருக்கியிருந்ததைக் கண்டவர்களின் உள்ளம் வேதனைப்பட்டது. 

3.15 அளவில் நான் தகவல் தெரிவிக்க முயற்சி எடுத்ததிலிருந்து 3 மணி நேரம் இந்த விஷயம் நீடித்து 6.15க்கு தீ முழுமையாக அணைக்கப்பட்டு இந்த விஷயம் நிறைவுற்றது. தீயணைப்பு வாகனம் திரும்பிச் சென்றது. வருவாய்த்துறை ஊழியர்கள் திரும்பிச் சென்றனர். நெடுஞ்சாலை பாதுகாப்பு ஆணைய ஊழியர்கள் திரும்பிச் சென்றனர். நிருபர்களும் திரும்பிச் சென்றனர். அனைவரும் சென்ற பின்பு நானும் ஊர் நோக்கி புறப்பட்டேன். 

***

அரசு என்பது பிரும்மாண்டமான ஓர் அமைப்பு. அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு பணி இருக்கிறது. ஒவ்வொரு துறைக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது. மேற்படி விஷயங்கள் வாஸ்தவமான விஷயங்கள். ஒவ்வொரு முறையும் ஜனநாயக அரசமைப்பின் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையைக் கூறி விட்டே விமர்சனங்களை முன்வைக்கிறேன். இன்றைய விஷயத்தில் எவை சற்று சீக்கிரம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பதைக் கூறுகிறேன். 

(1) 108 எண் சேவை இந்த தீ விபத்து குறித்த தகவலை சீர்காழி தீயணைப்பு நிலையத்துக்குத் தெரிவித்ததா என்பது விசாரணைக்குரிய விஷயம். 

(அ) அவர்கள் தெரிவிக்காமல் இருந்திருந்தால் அது பெரிய பிழை. 

(ஆ) அவர்கள் தகவல் தெரிவித்து அதனை தீயணைப்பு நிலையம் சாதாரணமாக எடுத்திருந்தால் அது இன்னும் பெரிய பிழை. 

(2) முதல் முறை நான் தீயணைப்பு நிலையம் சென்ற போதே அவர்கள் குறைந்தபட்சமாக ஒரு டூ வீலரில் ஒருவரையோ அல்லது இரண்டு பேரையோ அனுப்பி நிலைமையை மதிப்பிட்டிருக்கலாம். அவ்விதம் நிகழ்ந்திருந்தால் தீயணைப்பு நடவடிக்கைகள் 3.35 மணி அளவில் துவங்கியிருக்கும். அவ்விதம் நிகழாமல் போனதால் தீயணைப்பு நடவடிக்கைகள் தொடங்க 4.45 ஆகி விட்டது. 

(3) காவல் துறை தங்கள் வயர்லெஸ்ஸில் புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலம் அருகில் தீ விபத்து எனக் கூறி ஹைவே பேட்ரோல் வாகனத்தை அனுப்பியிருந்தாலும் நிலைமை என்ன என்பது முன்னரே மதிப்பிடப்பட்டிருக்கும். 

அதிர்ஷ்டவசமாக துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை. ஆனால் அவ்விதம் நிகழ பெரும் வாய்ப்பு இந்த சம்பவத்தில் இருந்தது. வழக்கத்துக்கு மாறான விஷயங்கள் நிகழ்வதாக அரசின் கவனத்துக்கு ஒரு விஷயம் கொண்டு வரப்படும் போது அதனை உள்வாங்கும் பொறுப்பில் இருப்பவர்கள் கூடுதல் பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும். சக அரசுத் துறைகளுக்குள் கூடுதல் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 

***

இந்த சம்பவங்களின் முதல் பாதியில் அரசு அலுவலகங்களின் பொறுப்பின்மை வெளிப்பட்டிருக்கிறது. எனவே இந்தப் பதிவுக்கு ‘’பொறுப்பின்மையின் உச்சம்’’ எனத் தலைப்பிட்டேன். 

***

சம்பவத்தில் முழுக்க உடனிருந்தவன் என்ற முறையில் தீயணைப்பு வாகனம் வந்தவுடன் விரைந்து பணியாற்றி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் என் ந்ன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்ற அரசுத்துறை ஊழியர்களுக்கும் நன்றி. பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி. 

***

எதிர்பார்ப்புகள் : 

(1) இந்தத் தீ விபத்து மனிதர்களால் உருவாக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்பே அதிகம். அதுவும் மது அருந்தியவர்களால் நிகழ்ந்திருக்க வாய்ப்பு அதிகம். இந்தத் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். 

(2) பனை தமிழகத்தின் மாநில மரம் ஆகும்.தமிழக அரசு விதிமுறைகள் படி தனியார் தன் சொந்த இடத்தில் இருக்கும் பனை மரத்தை வெட்ட வேண்டும் என்றால் கூட அரசிடம் அனுமதி பெற்றே வெட்ட வேண்டும். இல்லையென்றால் அது குற்றம் என அறிவித்துள்ளது தமிழக அரசு. இந்த சம்பவத்தில் 11 பனை மரங்கள் எரிந்து போயுள்ளன. வருவாய்த்துறை இந்த கோணத்தில் விசாரணை நடத்தி 11 பனை மரங்கள் எரிந்து போகக் காரணமானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு அபராதமும் தண்டனையும் விதிக்க வேண்டும். 

(3) புற வழிச் சாலையில் பலநூறு பேர் போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் சாலையில் அந்தச் சாலையில் பயணிப்போர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சீமைக்கருவேலக் காட்டில் தீ வைத்தவர்களை காவல்துறை விசாரணை மூலம் கண்டறிந்து நீதியின் முன் நிறுத்த வேண்டும். 

Tuesday, 7 July 2026

என்ன மாற்றம் தேவை?

பிரிட்டிஷார் நம்மை ஆண்டது என்பதன் நேரடி அர்த்தம் நம் நாட்டு மக்களிடம் வரிவசூல் செய்தார்கள் என்பதே. நிலவரியே பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிரதான வருவாய். இன்னொரு விதத்தில் அவர்கள் நாட்டில் உற்பத்தியான பண்டங்களை நம் நாட்டில் விற்பனை செய்து லாபம் ஈட்டினர். அவர்கள் நாட்டின் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை நம் நாட்டில் குறைந்த விலைக்கு வாங்கி அதிலும் லாபம் அடைந்தனர். ஒரு விதமான கூட்டுக் கொள்ளை அது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நம் நாட்டில் எழுத்தறிவு 10 சதவீதம் என்ற அளவில் இருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் காகிதக் கோப்புகளால் ஆனது என்பதால் எழுத்தறிவு பெற்ற கல்வியறிவு பெற்றிருக்கும் சிலரே 2 சதவீதம் மக்கள்தொகை வீதத்தில் இருக்கும் அரசு அலுவலகங்களை அணுகவே முடியும் என்னும் நிலை. எனவே சாமானியன் அரசு அலுவலகத்தை அணுகுவது என்பதே அரிதான ஒன்று என்னும் நிலை. எனவே அரசு ஊழியர்கள் குறுங்குழு மனப்பான்மையுடன் செயல்படுவார்கள். நாடு சுதந்திரம் பெற்ற பின்னும் அரசு ஊழியர்களுக்கு இந்த குறுங்குழு மனநிலை மாறவில்லை. 

தமிழகத்தில் நீங்கள் எந்த அரசு அலுவலகத்துக்குச் சென்றாலும் உங்கள் வருகையை விரும்பாத முகபாவத்தையும் பேச்சையும் செயல்களையுமே நீங்கள் வாழ்நாள் முழுக்க எதிர்கொண்டிருப்பீர்கள். அனேகமாக வருகை புரிந்த எவரையும் ‘’தங்கள் வருகையின் நோக்கத்தை அறியலாமா?’’ என மரியாதையுடன் கேட்கப்பட்ட ஒரு நிகழ்வைக் கூட வாழ்நாளில் ஒருநாளும் சந்தித்திராதவர்களே 99.99 சதவீதம் இருப்பார்கள். அதற்குக் காரணம் அங்கே நிலவும் ஊழல் மனப்பான்மை. ஒருவரிடம் சகஜமாகப் பேசினால் அவரை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவது கடினம். மிகக் கடினமான சொற்களில் மிகக் குறைவாகப் பேசினால் மட்டுமே சாமானியக் குடிமகனை உளவியல்ரீதியாக அச்சுறுத்த முடியும்.இதனை அத்தனை அரசு அலுவலகங்களும் செய்வதைக் காணலாம். 

நாட்டின் வரிவிதிப்பில் எவ்வளவோ மாற்றம் வந்து விட்டது. நிலவரி மட்டுமே பிரதான வருவாய் என்னும் நிலை இப்போது இல்லை. ‘’வறுமையை ஒழிப்போம்’’ எனக் கூறிய இந்திரா காந்தி சாமானிய மக்களிடமிருந்தே பெரும் வரியை வாங்கினார். ‘’கார்பொரேட் வரி’’ என்னும் வரியைக் கொண்டு வந்து நாட்டின் நிதி நிலையை உயர்த்தியது காங்கிரஸ் பிரதமரான நரசிம்ம ராவ் ; இந்திரா அந்த முடிவை எடுக்கவில்லை. இப்போது ஜி.எஸ்.டி நடப்பில் உள்ளது. சாமானிய மக்களின் நுகர்விலிருந்து ஜி.எஸ்.டி கிடைக்கிறது. அவர்களே அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை வரியாக அளிக்கும் எஜமானர்கள். அரசு ஊழியர்கள் இந்த பொருளாதாரக் கணக்கைப் புரிந்து கொள்வது இல்லை. அரசு அதிகாரிகளும் புரிந்து கொள்ள வேண்டும். சாமானிய மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.  

Sunday, 5 July 2026

என் நிலம் என் மக்கள்

கால்பந்து ஆடும் சிறுவன்

எங்கள் பகுதியில் ஒரு விவசாயக் குடும்பம் இருக்கிறது. அந்த விவசாயக் குடும்பத்தின் தலைவர் எனது நண்பர். சென்ற ஆண்டு எதிர்பாராமல் நோய்வாய்ப்பட்டு சில நாட்களில் இயற்கை எய்தினார். 

அவரது மகனுக்கு 18 வயது ஆகிறது. பன்னிரண்டாம் வகுப்பு நிறைவு செய்துள்ளான். காமர்ஸ் அக்கவுண்டன்சி பிரிவு. தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கிறான். IELTS தேர்வில் 6.5 மதிப்பெண் பெற்றிருக்கிறான். 

18 வயது ஆகியிருக்கும் அந்த இளைஞன் தனது 6 வயதிலிருந்து 12 வருடமாக தினமும் காலை 3 மணி நேரம் மாலை 3 மணி நேரம் என தினமும் 6 மணி நேரம் கால்பந்து வீரனாகப் பயிற்சி எடுத்தான். பள்ளிப்பாடங்களில் எப்போதும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வந்ததால் அவனது கால்பந்து ஆர்வத்துக்கு வீட்டில் யாரும் தடை ஏற்படுத்தவில்லை. அவன் சிறுவனாயிருந்த நாட்களிலிருந்தே அவனை எங்கள் பகுதிக்கு அருகில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் மட்டுமே காண முடியும். நம் சூழலில் ஒரு சிறுவன் தன்னார்வத்தில் 6 வயதிலிருந்து தினமும் 6 மணி நேரம் 12 ஆண்டுகள் பயிற்சி எடுப்பது என்பது அபூர்வமானது என்பதை எவரும் உணர முடியும். வாரத்தின் ஏழு நாட்களும் வருடத்தின் 365 நாட்களும் அவன் பயிற்சி நடந்து கொண்டேயிருந்தது ; இருக்கிறது. 

அவன் தனது கால்பந்து ஆர்வத்தை மேம்படுத்திக் கொள்ள ஐரோப்பா செல்ல விரும்புகிறான். சில ஐரோப்பிய பல்கலைக்கழகங்களைத் தொடர்பு கொண்டுள்ளான். IELTS மதிப்பெண் நன்றாக இருப்பதால் அவனுக்கு  ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் அட்மிஷன் கிடைக்கக் கூடும். 

இங்கே ஊரில் மாநகரங்கள் போல கல்விக்காக வெளிநாடு செல்ல ஆலோசனை கூறும் மையங்கள் இல்லை.  

விசா கிடைக்க கடந்த 2 ஆண்டுகளின் வங்கிப் பரிவர்த்தனைகள், கடந்த 3 ஆண்டுகளின் வருமான வரித்தாக்கல் ஆகிய விஷயங்கள் தேவைப்படுகின்றன. நண்பரின் குடும்பம் விவசாயக் குடும்பம் என்பதால் வங்கியில் குறைந்தபட்சமான வரவு செலவு மட்டுமே உள்ளது. விவசாயத் தொழிலுக்கு வருமான வரி தாக்கல் தேவையில்லை என்பதால் அவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 

15 நாட்களுக்கு முன் அந்த சிறுவன் என்னிடம் உதவி கேட்டு வந்தான். அவனுக்குத் தேவைப்படும் உதவி விசாவை உறுதி செய்வதில் தான். எனக்கு இந்த விஷயம் புதிது. என்னால் இயன்ற உதவியைச் செய்கிறேன் என அச்சிறுவனிடம் கூறியிருக்கிறேன். 

அசாத்தியத்தை சாத்தியமாக்குபவர் : 

கால்பந்தில் ஆர்வம் கொண்ட சிறுவனுக்காக என்ன உதவி செய்ய முடியும் என யோசித்தேன். ஏ ஐ யிடம் இந்த விஷயத்தில் என்ன செய்ய முடியும் என்று கேட்டேன். ஏ ஐ சென்னையில் வெளிநாட்டுப் படிப்புக்கு வழிகாட்டும் ஒரு நிறுவனத்தைப் பரிந்துரைத்தது. அந்த நிறுவனத்தின் தொடர்பு எண்ணுக்குப் பேசினேன். அந்த அழைப்பை ஏற்றவர் ஓர் இளைஞர். அவரிடம் விபரம் கூறினேன். சிறுவனின் 12ம் வகுப்பு மதிப்பெண், ஐ இ எல் டி எஸ் மதிப்பெண் ஆகிய விபரங்களைக் கேட்டுக் கொண்டார். அவர் விபரங்களைக் கேட்டுக் கொண்ட விதத்திலும் உள்வாங்கிக் கொண்ட விதத்திலும் மிகச் சிறப்பான முதிர்ச்சியும் பக்குவமும் வெளிப்படுவதை உணர்ந்தேன். சிறுவனின் ஐரோப்பா பயணம் அந்த இளைஞரின் வழிகாட்டலில் சிறப்பாக நிகழும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. கால்பந்து ஆடும் சிறுவனுடன் சென்று சென்னையில் அந்த இளைஞரைச் சந்தித்தால் விஷயம் வேகம் எடுக்கும் என எண்ணினேன். இருப்பினும் நான் எண்ணிய வண்ணம் உடன் நானும் சிறுவனும் சென்னை செல்ல வாய்ப்பு அமையவில்லை. சென்னை இளைஞர் எனக்கு சில முறை ஃபோன் செய்தார். நான் இரு சக்கர வாகனப் பயணத்தில் இருந்ததால் அலைபேசி அழைப்பை ஏற்க முடியவில்லை. தகவல் தொடர்பு இடைவெளி ஏற்பட்டது. சில நாட்களுக்குப் பின் சிறுவன் என்னிடம் வந்தான். மீண்டும் அந்த இளைஞரைத் தொடர்பு கொண்டு விபரம் கூறினேன். மறுநாளே சென்னையில் நேரில் வந்து சந்திக்கிறேன் என்று கூறினேன். 

சிறுவன் ஐரோப்பா செல்ல வேண்டும் என விரும்புவதே அங்கே கால்பந்து ஆட வேண்டும் என்பதற்காகத்தான். ஐரோப்பா கால்பந்துக்கு பிரசித்தி பெற்ற கண்டம். சிறுவனுக்கு சேர்க்கை அளிக்கக்கூடிய கல்லூரி கால்பந்து கிளப்களுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது. இந்த விஷயத்தை இளைஞருக்கு ஃபோனில் விளக்கினேன். 

மறுநாள் நேரில் சந்தித்தேன். சிறுவனின் தேவையை நிறைவேற்றும் கல்லூரியை அவர் தேர்ந்தெடுத்து விட்டார். அந்தச் சிறுவனுக்கு அட்மிஷன் கிடைக்கும் விதமாக இண்டர்வியூவுக்கு தயார் செய்யும் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டார். விசா நடவடிக்கைகளிலும் முழுமையாக உடனிருப்பதாகக் கூறினார். எனக்குப் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. 

சில முறை அலைபேசியில் உரையாடிய வகையில் அவரது வயது என நான் கணித்திருந்ததற்கும் மிகக் குறைவான வயதுடைய இளைஞராயிருந்தார். எந்த ஒரு விஷயத்திலும் அதன் தீர்வுகளும் அதனை அடைவதற்கான வழிமுறைகளுமே அவர் பார்வையில் இருந்தன. முற்றிலும் நேர்மறையானவராகவும் நம்பிக்கையை அளிப்பவராகவும் இருந்தார். 

ஊருக்கு வந்து சிறுவனிடன் அவரது எண்ணை அளித்து அவர் கூறும் குறிப்புகளின் படி செயல்படு எனக் கூறினேன். 

விஷயம் சரியான திசையில் நகர்கிறது. 

இராமாயணத்தில் கம்பன் அனுமனை ‘’சொல்லின் செல்வன்’’ என்கிறான். வால்மீகி அனுமனை ‘’அசாத்தியத்தை சாத்தியமாக்குபவன்’’ என்கிறார். இந்த இரண்டு மொழிகளும் அந்த இளைஞருக்குப் பொருந்தும். சீதை அனுமனை ‘’இன்றென இருத்தி’’ என வாழ்த்துகிறார். அந்த வாழ்த்து அந்த இளைஞருக்கும் உரியது.   

என் நிலம் என் மக்கள்

தற்செயலாக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் குறித்தும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கை குறித்தும் தரவுகள் சேகரித்து அறிய கால்பந்து ஆடும் சிறுவன் முன்வைத்த கோரிக்கை உதவியது. ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் பல மொழிகள் பேசும் மாணவர்களை தம் கல்வி நிலையங்கள் நோக்கி வரவேற்பதைக் கண்டேன். கல்வி பயில வேண்டும் என விரும்பும் மாணவர்களுக்கு அவர்கள் பலவிதமான வசதிகளை ஏற்படுத்தித் தருவதைக் கண்டேன். 

நம் நாடு உலகுக்குக் கல்வி அளிக்கும் பணியை 2500 ஆண்டுகளாக செய்திருக்கிறது. வேதக் கல்வி, கலைகள், பொருளியல், இலக்கியம், தத்துவம் என பல விஷயங்களை உலக மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறது. 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வேதம் எவ்விதம் பயிலப்பட்டதோ அதே விதமாக இன்றும் மாணவர்களால் வேதம் பயிலப்படுகிறது. கல்வி பயிற்றுவிக்கும் முறைகளில் இது ஓர் அற்புதம் ஆகும். இந்த அற்புதத் தன்மைக்காகவேனும் வேதக்கல்வி உலக மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். நம் நாட்டில் உலக மாணவர்கள் வேதக்கல்வி பயில பல வாய்ப்புகள் ஏற்படுத்தித் தர வேண்டும். ஒரு கல்வியாக வேதம், உபநிடதங்கள், பௌத்தம், சமணம் ஆகியவை உலகில் ஏற்படுத்த சாத்தியம் உள்ள அமைதிக்கும் நல்லிணக்கத்துக்கும் எதையும் ஒப்பிட முடியாது. 

சமஸ்கிருத மொழிக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பொருள் ஒதுக்குகிறது என புகார் தெரிவிக்கும் திராவிடக் கட்சிகளை எண்ணிப் பார்த்தேன். கல்விக்கும் அவர்களுக்கும் எவ்வளவு தூரம் என்பதை எண்ணிய போது திகைப்பு ஏற்பட்டது. 

நம் நாட்டின் பாரம்பர்ய ஞானம் குறித்த அறிமுகமும் நம் நாட்டின் பாரம்பர்ய வாழ்க்கை முறை குறித்த அறிமுகமும் உலக மக்களுக்கு ஏற்படும் போது மட்டுமே உலகம் அமைதியாக வாழும்.  

 

Saturday, 4 July 2026

செல்வ நிலையம் : ஒரு மாமனிதனின் கதை (மறுபிரசுரம்)

 இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் மதுரையில் ஒரு மனிதன் பிறக்கிறான். தனது இளம் வயதில் ‘’வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்ப’’ கப்பலேறி மலேசியா செல்கிறான். பொருள் ஈட்டுகிறான். ஈட்டிய பொருளுடன் ஊருக்கு வந்து விட்டு மீண்டும் மலேசியா செல்கிறான். ஊழின் மாயக்கரம் அவனையும் அவன் உடனிருந்தோரையும் அவன் வாழ்ந்த நாட்டின் மக்களையும் வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையே அலைக்கழிக்கிறது. தனது வணிக நிறுவனத்தின் உரிமையாளரிடம் கப்பலில் நாடு திரும்ப அனுமதி கேட்கிறான் அந்த மனிதன். உரிமையாளர் அனுமதி அளிக்க மறுக்கிறார். நிகழ்த்த விரும்பிய பயணம் நிகழாமலேயே போகிறது. கப்பலில் பயணிக்காத அந்த மனிதனுக்கு ஊழ் நீண்ட வாழ்நாளை அளிக்க இருந்தது அந்த மனிதனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. ஒரு சில நாட்களில் தெரிய வந்தது. அவன் பயணிக்க இருந்த கப்பல் நடுக்கடலில் ஜப்பான் விமானப்படைத்  தாக்குதலுக்கு ஆளாகி அதில் பயணித்த ஒருவருமே உயிர்பிழைக்கவில்லை. 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ‘’இந்திய தேசிய ராணுவ’’த்தில் தன்னை இணைத்துக் கொண்ட அந்த மனிதனுக்கு நேதாஜியுடன் மிக நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்திய தேசிய ராணுவத்தின் மிக முக்கியமான நிர்வாகப் பொறுப்பை ஏற்று சிறப்பாக நடத்தித் தருகிறார் அந்த மனிதர். 

உலக அரசியலின் பல்வேறு திருப்பங்களுக்குப் பின் இரண்டாம் உலகப் போர் முடிவடைகிறது. அந்த மனிதர் ஊர் திரும்புகிறார். களங்கமற்ற ஒரு மாவீரனுடன் உடனிருந்தவர். வாழ்வும் சாவும் முட்டி மோதும் படுகளங்களைக் கடந்து வந்தவர். சிவில் வாழ்க்கையில் தன்னை முழுமையாகப் பொருத்திக் கொள்கிறார். 

அவரது வீட்டின் பெயர் ‘’செல்வ நிலையம்’’. ‘’ஸ்ரீநிவாஸம்’’ என்பதனை அவர் செல்வ நிலையம் என தமிழில் பெயரிட்டிருக்கலாம். அவர் வீட்டின் முன்னே இரு வேப்ப மரங்கள். அந்த வேப்ப மரம் நூற்றுக்கணக்கானோருக்கு நிழல் அளிப்பது போல தனது வாழ்வில் பல எளிய மனிதர்களுக்கு நண்பனாகவும் வழிகாட்டியாகவும் ஆசானாகவும் விளங்கியிருக்கிறார் அந்த மனிதர். 

தனது பேரக்குழந்தைகளின் அக உலகில் தனது அன்பின் நீர்மையாலும் அன்பின் உயிர்மையாலும் நிறைகிறார் அந்த மனிதர். தனது எல்லா பேரக் குழந்தைகளுக்கும் மொழிகளும் கணிதமும் அறிவியலும் கற்பிக்கும் ஆசிரியராகவும் அவர்களுக்கு யோகத்தின் துவக்க நிலைகளை அறிமுகப்படுத்தி ஆன்ம மார்க்கத்தைக் காட்டுபவராகவும் விளங்குகிறார். 

அவருடன் இருந்த ஒவ்வொரு நாளும் ஆசிர்வதிக்கப்பட்ட நாட்கள் என உணர்கின்றனர் அவரது குடும்பத்தினர். அவருடனான நட்பை விலைமதிப்பில்லா அரிய ஒன்று என எண்ணுகின்றனர் அவரது நண்பர்கள். 

அவரது முதல் பேத்தி எழுத்தாளர் சுபஸ்ரீ எழுத்தில் அந்த மாமனிதர் வாழ்வை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் அந்த மாமனிதரை எண்ணி பெரும் உளஎழுச்சியும் உளநெகிழ்வும் கொள்கிறான். பாட்டனாருக்கும் பேத்திக்குமான ஒரு உரையாடல்  : வீட்டின் முன்னால் நிற்கும் வேம்ப மரத்தின் நிழலில் காகங்களும் மைனாக்களும் தவிட்டுக் குருவிகளும் கூடி கிறீச்சிட்டுக் கொண்டிருக்கின்றன. தவிட்டுக் குருவிகள் ’’சுப்ரி சுப்ரி’’ என அழைப்பது சுபஸ்ரீயை என தாத்தா சொல்ல அந்த சிறு குழந்தை தவிட்டுக் குருவிகளைக் கொண்டு ஒவ்வொரு நாளும் அகமகிழ்கிறது.  எழுத்தாளர் சுபஸ்ரீயின் சொற்களில் இந்த சம்பவம் சித்தரிக்கப்பட்டிருக்கும் இடம் மிகச் சிறப்பானது. ஒவ்வொரு கணமும் கோடானுகோடி மனிதர்களின் வாழ்வில் கோடானுகோடி உணர்ச்சிகள் அலைமோதி அதன் விளைவாய் கோடானுகோடி நிகழ்வுகள் நிகழ்கின்றன. அருநிகழ்வாக சுபஸ்ரீ சித்தரிக்கும் சம்பவம் போன்றும் நடக்கின்றன. 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பதவியேற்கும் நிகழ்வு குறித்து எழுத்தாளர் சுபஸ்ரீ எழுதியிருக்கும் பகுதி மிகவும் உயிர்ப்பானது ; உணர்ச்சிகரமானது. 

தனது வலைப்பூவில் எழுத்தாளர் சுபஸ்ரீ தனது ஞான ஆசானான தனது பாட்டனார் குறித்து எழுதியிருக்கும் பதிவுகள் நூல் வடிவம் பெற வேண்டும். தமிழின் முக்கியமான நூலாக அது நிலை பெறும்.

சென்னைப் பயண வாடிக்கைகள் (நகைச்சுவைக் கட்டுரை)

வியாழனன்று காலை 7.30 சென்னை விரைவு வண்டியில் சென்னை செல்ல முடிவு செய்தது புதன்கிழமை இரவு. வழக்கப்படி இரு சக்கர வாகனத்தை வீட்டிலேயே வைத்து விட்டு வீட்டில் இருப்பது போன்ற உணர்வை வீட்டில் இருப்பவர்களுக்கு ஏற்படுத்தி விட்டு சென்னை கிளம்பத் திட்டம்.  இந்த முறை ஒரே ஒரு விஷயத்தைச் சேர்த்தேன். அதாவது நண்பர் ஒருவர் என்னை ஜங்ஷனில் காலை டிராப் செய்வதாக ஏற்பாடு. காலை 5 மணிக்கு அலாரம் வைத்திருந்தேன். ஆனால் காலை 4 மணிக்கே விழித்து விட்டேன். 4.45க்கு நண்பருக்கு ஃபோன் செய்தேன். நண்பர் ஃபோனை எடுக்க வில்லை. சில முறை மீண்டும் செய்தேன். ஃபோன் எடுக்கப்படவில்லை. அதிகாலை நேரத்தில் வாக்கிங் செல்ல மைதானத்துக்கு டூ வீலரில் சென்று கொண்டிருந்த ஒருவர் லிஃப்ட் கொடுத்தார். உணவகம் ஒன்றில் காலை உணவு அருந்தி விட்டு மினி பேருந்தில் ஜங்ஷன் சென்று சேர்ந்தேன். அலுப்பாக இருந்தது. நடைமேடை இருக்கை ஒன்றில் படுத்து உறங்கி விட்டேன். ரயிலுக்கு அதிக அவகாசம் இருந்தது. 7.30 ரயிலுக்குப் பதிலாக 6 மணி ரயிலைப் பிடிக்க விரும்பினேன். அது நிகழவில்லை. நண்பர் வந்து எழுப்பினார். அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். ரயில் வந்தது. முன்பதிவு இல்லாத பெட்டி காலியாக இருந்தது . இப்போதெல்லாம் ரயில்களில் முன்பதிவுப் பெட்டிகள் நிறைந்து விடுகின்றன ; சமயத்தில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் காலியாக இருக்கின்றன. ரயிலில் ஏறியதும் படுத்து உறங்கி விட்டேன். எழுந்த போது சிதம்பரம் வந்திருந்தது. கையில் இருந்த 200 பக்க நூலை படிக்கத் தொடங்கினேன். செங்கல்பட்டில் வாசித்து முடித்தேன். மீண்டும் சிறு உறக்கம். எழுந்த போது வண்டி நுங்கம்பாக்கத்தை தாண்டிக் கொண்டிருந்தது. 

எழும்பூரில் இறங்கி அங்கிருந்து ஒரு பேருந்தைப் பிடித்து சி ஐ டி காலனி சென்றேன். பேருந்தில் ஓட்டுநர் நடத்துநர் சேர்த்து மொத்தம் 6 பேர் தான் இருந்தோம். சென்னைப் பேருந்துகள் இவ்விதமும் இருக்கும் என்பதை அன்று அறிந்தேன். 

சந்திப்பு 45 நிமிடம் நிகழ்ந்தது. விடைபெற்றுக் கிளம்பினேன். 

இம்முறை சி ஐ டி காலனியிலிருந்து எழும்பூருக்கு ஆட்டோ. 

காலை 5 மணிக்கு உணவருந்தியது. மதிய உணவை 330க்கு அருந்தினேன். 

ரயில் 4 மணிக்கு. ஓப்பன் டிக்கெட் எடுத்துக் கொண்டேன். ரயிலில் இருந்த டி டி ஆர் ஒருவரிடம் ஒரு டிக்கெட் ரிசர்வேஷன் வேண்டும் எனக் கேட்டேன். எஸ் - 5ல் ஏறிக் கொள்ளுமாறு கூறினார். செங்கல்பட்டில் வந்து கூடுதல் கட்டணத்துக்கு ரசீது கொடுத்து ஒரு முன்பதிவு டிக்கெட் கொடுத்தார். வண்டி 20 நிமிடம் தாமதம். இரவு 9 மணிக்கு வரவேண்டிய வண்டி 920க்கு வந்தது. நண்பர் ரயில் நிலைய வாசலில் காத்திருந்தார். ஒரு ஜூஸ் கடைக்குச் சென்றோம். தர்பூசணி ஜூஸ் ஆர்டர் செய்து குடித்தோம். வீட்டில் டிராப் செய்தார். வீட்டுக்கு வந்த போது மணி இரவு 950. வந்ததும் படுத்து உறங்கி விட்டேன். 

ஒருநாள் நிறைவு பெற்றது ; சென்னைப் பயணமும் நிறைவு பெற்றது. 

அசாத்தியத்தை சாத்தியமாக்குபவர்

கால்பந்தில் ஆர்வம் கொண்ட சிறுவனுக்காக என்ன உதவி செய்ய முடியும் என யோசித்தேன். ஏ ஐ யிடம் இந்த விஷயத்தில் என்ன செய்ய முடியும் என்று கேட்டேன். ஏ ஐ சென்னையில் வெளிநாட்டுப் படிப்புக்கு வழிகாட்டும் ஒரு நிறுவனத்தைப் பரிந்துரைத்தது. அந்த நிறுவனத்தின் தொடர்பு எண்ணுக்குப் பேசினேன். அந்த அழைப்பை ஏற்றவர் ஓர் இளைஞர். அவரிடம் விபரம் கூறினேன். சிறுவனின் 12ம் வகுப்பு மதிப்பெண், ஐ இ எல் டி எஸ் மதிப்பெண் ஆகிய விபரங்களைக் கேட்டுக் கொண்டார். அவர் விபரங்களைக் கேட்டுக் கொண்ட விதத்திலும் உள்வாங்கிக் கொண்ட விதத்திலும் மிகச் சிறப்பான முதிர்ச்சியும் பக்குவமும் வெளிப்படுவதை உணர்ந்தேன். சிறுவனின் ஐரோப்பா பயணம் அந்த இளைஞரின் வழிகாட்டலில் சிறப்பாக நிகழும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. கால்பந்து ஆடும் சிறுவனுடன் சென்று சென்னையில் அந்த இளைஞரைச் சந்தித்தால் விஷயம் வேகம் எடுக்கும் என எண்ணினேன். இருப்பினும் நான் எண்ணிய வண்ணம் உடன் நானும் சிறுவனும் சென்னை செல்ல வாய்ப்பு அமையவில்லை. சென்னை இளைஞர் எனக்கு சில முறை ஃபோன் செய்தார். நான் இரு சக்கர வாகனப் பயணத்தில் இருந்ததால் அலைபேசி அழைப்பை ஏற்க முடியவில்லை. தகவல் தொடர்பு இடைவெளி ஏற்பட்டது. சில நாட்களுக்குப் பின் சிறுவன் என்னிடம் வந்தான். மீண்டும் அந்த இளைஞரைத் தொடர்பு கொண்டு விபரம் கூறினேன். மறுநாளே சென்னையில் நேரில் வந்து சந்திக்கிறேன் என்று கூறினேன். 

சிறுவன் ஐரோப்பா செல்ல வேண்டும் என விரும்புவதே அங்கே கால்பந்து ஆட வேண்டும் என்பதற்காகத்தான். ஐரோப்பா கால்பந்துக்கு பிரசித்தி பெற்ற கண்டம். சிறுவனுக்கு சேர்க்கை அளிக்கக்கூடிய கல்லூரி கால்பந்து கிளப்களுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது. இந்த விஷயத்தை இளைஞருக்கு ஃபோனில் விளக்கினேன். 

மறுநாள் நேரில் சந்தித்தேன். சிறுவனின் தேவையை நிறைவேற்றும் கல்லூரியை அவர் தேர்ந்தெடுத்து விட்டார். அந்தச் சிறுவனுக்கு அட்மிஷன் கிடைக்கும் விதமாக இண்டர்வியூவுக்கு தயார் செய்யும் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டார். விசா நடவடிக்கைகளிலும் முழுமையாக உடனிருப்பதாகக் கூறினார். எனக்குப் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. 

சில முறை அலைபேசியில் உரையாடிய வகையில் அவரது வயது என நான் கணித்திருந்ததற்கும் மிகக் குறைவான வயதுடைய இளைஞராயிருந்தார். எந்த ஒரு விஷயத்திலும் அதன் தீர்வுகளும் அதனை அடைவதற்கான வழிமுறைகளுமே அவர் பார்வையில் இருந்தன. முற்றிலும் நேர்மறையானவராகவும் நம்பிக்கையை அளிப்பவராகவும் இருந்தார். 

ஊருக்கு வந்து சிறுவனிடன் அவரது எண்ணை அளித்து அவர் கூறும் குறிப்புகளின் படி செயல்படு எனக் கூறினேன். 

விஷயம் சரியான திசையில் நகர்கிறது. 

இராமாயணத்தில் கம்பன் அனுமனை ‘’சொல்லின் செல்வன்’’ என்கிறான். வால்மீகி அனுமனை ‘’அசாத்தியத்தை சாத்தியமாக்குபவன்’’ என்கிறார். இந்த இரண்டு மொழிகளும் அந்த இளைஞருக்குப் பொருந்தும். சீதை அனுமனை ‘’இன்றென இருத்தி’’ என வாழ்த்துகிறார். அந்த வாழ்த்து அந்த இளைஞருக்கும் உரியது.   

கால்பந்து ஆடும் சிறுவன்

எங்கள் பகுதியில் ஒரு விவசாயக் குடும்பம் இருக்கிறது. அந்த விவசாயக் குடும்பத்தின் தலைவர் எனது நண்பர். சென்ற ஆண்டு எதிர்பாராமல் நோய்வாய்ப்பட்டு சில நாட்களில் இயற்கை எய்தினார். 

அவரது மகனுக்கு 18 வயது ஆகிறது. பன்னிரண்டாம் வகுப்பு நிறைவு செய்துள்ளான். காமர்ஸ் அக்கவுண்டன்சி பிரிவு. தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கிறான். IELTS தேர்வில் 6.5 மதிப்பெண் பெற்றிருக்கிறான். 

18 வயது ஆகியிருக்கும் அந்த இளைஞன் தனது 6 வயதிலிருந்து 12 வருடமாக தினமும் காலை 3 மணி நேரம் மாலை 3 மணி நேரம் என தினமும் 6 மணி நேரம் கால்பந்து வீரனாகப் பயிற்சி எடுத்தான். பள்ளிப்பாடங்களில் எப்போதும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வந்ததால் அவனது கால்பந்து ஆர்வத்துக்கு வீட்டில் யாரும் தடை ஏற்படுத்தவில்லை. அவன் சிறுவனாயிருந்த நாட்களிலிருந்தே அவனை எங்கள் பகுதிக்கு அருகில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் மட்டுமே காண முடியும். நம் சூழலில் ஒரு சிறுவன் தன்னார்வத்தில் 6 வயதிலிருந்து தினமும் 6 மணி நேரம் 12 ஆண்டுகள் பயிற்சி எடுப்பது என்பது அபூர்வமானது என்பதை எவரும் உணர முடியும். வாரத்தின் ஏழு நாட்களும் வருடத்தின் 365 நாட்களும் அவன் பயிற்சி நடந்து கொண்டேயிருந்தது ; இருக்கிறது. 

அவன் தனது கால்பந்து ஆர்வத்தை மேம்படுத்திக் கொள்ள ஐரோப்பா செல்ல விரும்புகிறான். சில ஐரோப்பிய பல்கலைக்கழகங்களைத் தொடர்பு கொண்டுள்ளான். IELTS மதிப்பெண் நன்றாக இருப்பதால் அவனுக்கு  ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் அட்மிஷன் கிடைக்கக் கூடும். 

இங்கே ஊரில் மாநகரங்கள் போல கல்விக்காக வெளிநாடு செல்ல ஆலோசனை கூறும் மையங்கள் இல்லை.  

விசா கிடைக்க கடந்த 2 ஆண்டுகளின் வங்கிப் பரிவர்த்தனைகள், கடந்த 3 ஆண்டுகளின் வருமான வரித்தாக்கல் ஆகிய விஷயங்கள் தேவைப்படுகின்றன. நண்பரின் குடும்பம் விவசாயக் குடும்பம் என்பதால் வங்கியில் குறைந்தபட்சமான வரவு செலவு மட்டுமே உள்ளது. விவசாயத் தொழிலுக்கு வருமான வரி தாக்கல் தேவையில்லை என்பதால் அவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 

15 நாட்களுக்கு முன் அந்த சிறுவன் என்னிடம் உதவி கேட்டு வந்தான். அவனுக்குத் தேவைப்படும் உதவி விசாவை உறுதி செய்வதில் தான். எனக்கு இந்த விஷயம் புதிது. என்னால் இயன்ற உதவியைச் செய்கிறேன் என அச்சிறுவனிடம் கூறியிருக்கிறேன். 

 

Saturday, 27 June 2026

தொழிலதிபர்

சிதம்பரம் அருகே ஒரு சிற்றூர். அங்கே புதிய விதத்தில் ஓர் உணவகம் அமைத்திருந்தார்கள். எவ்விதம் என்றால் அந்த உணவகத்தில் கேக் வகைகள் கிடைக்கும் ; சாண்ட்விச், கட்லெட் போன்றவை இருக்கும் ; ஐஸ்கிரீம்கள் இருக்கும். இவை அனைத்துமே வழக்கமான முறையில் மைதா, ஜீனி ஆகியவை பயன்படுத்தப்படாமல் பாரம்பர்ய வகை அரிசி ரகங்களான கருப்பு கவுனி மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றைப் பயன்படுத்தித் தயார் செய்கிறார்கள். வித்தியாசமான முறையில் ஐஸ்கிரீமும் தயார் செய்கிறார்கள். அவர்கள் உணவகத்தில் 20 லிருந்து 25 பேர் அமர்ந்து உணவருந்த முடியும். மாலை 3 மணியிலிருந்து இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  அந்த சிற்றூரை ஒரு பெரிய கிராமம் என்று கூற முடியும்.  கருப்பு கவுனி கேக் ஆர்டர் செய்தால் 20 நிமிடத்தில் அந்த கேக்கை அந்த தருணத்தில் தயாரித்துக் கொடுக்கிறார்கள். பெரும்பாலும் அவர்களுக்கு கேக் ஆர்டர் மற்றும் உணவு ஆர்டர் ஃபோன் மூலம் வருகிறது. மாலை 3 மணிக்கு ஒரு ஆர்டர் வந்தால் மாலை 3.30க்கு வந்து கேக்கைப் பெற்றுக் கொள்ளவும் என செய்தி அனுப்பி விடுகிறார்கள். கேக் தயாராகி விடுகிறது. 3.30க்கு வந்து பெற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளின் பிறந்த நாள் நிகழ்வுகள் அந்த உணவகத்தில் நிகழ்கின்றன. அந்த உணவகத்தில் கேக் , சாட் வகைகள், ஐஸ்கிரீம் அனைத்துமே வழக்கமான விலையை விட 50 சதவீதம் குறைவான விலையில் கிடைக்கிறது என்பது எனக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஐஸ்கிரீம் கூட இயற்கை உணவுப்பொருட்களால் தயாரிக்கிறார்கள். எனக்கு அங்கே இருந்த போது ‘’ஸ்டார்பக்ஸ்’’ காஃபி ஷாப்கள் நினைவுக்கு வந்தன. இரண்டு தினங்களுக்கு முன் நண்பர் ஒருவருடன் அங்கே தற்செயலாக செல்ல நேர்ந்தது. நண்பர் சென்னையிலிருந்து வந்திருந்தார். அந்த உணவகத்தின் புறச்சூழல் மிக இனிமையானதாக இருந்ததால் எங்கள் உரையாடலிலும் அந்த இனிமை கூடுதல் இனிமையைச் சேர்த்தது. 

இந்த உணவகத்தின் உரிமையாளர்கள் இளம் தம்பதியர். கணவனுக்கு 30 வயது இருக்கக் கூடும் . அவரது மனைவிக்கு 26 வயது இருக்கலாம். கேக் , ஐஸ்கிரீம் என அனைத்தையும் இந்த தம்பதியினரே செய்கின்றனர். பரிமாற ஓரிரு பணியாளர்கள்  இருக்கின்றனர். தம்பதியர் இருவருக்குமே உணவு சமைத்தலில் ஆர்வம் இருந்திருக்கிறது. அதனால் இவ்விதமான ஒரு தொழில் முயற்சியை செய்து பார்த்திருக்கிறார்கள். என்னுடைய கணிப்பின் படி அங்கே சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.5000க்கு வணிகம் நிகழக் கூடும். 

அந்தப் பிரதேசத்தில் இருக்கும் வங்கிகள் இந்த இருவரையும் கௌரவிக்க வேண்டும் என்பது என் எண்ணம். அவர்கள் வணிகத்தின் வடிவத்தை புதிய தொழில்முனைவோருக்கான ஒரு சாத்தியமாக வங்கிகள் மாநிலமெங்கும் முன்வைக்கலாம்.

அவர்களின் சிறு குழந்தைக்கு 6 வயது இருக்கும். அவன் தன் அன்னையின் பக்கத்திலேயே நிற்கிறான். அன்னை எங்கு சென்றாலும் உடன் செல்கிறான். கேஷ் சாளரத்தில் அடுமனையில் பரிமாறும் இடத்தில் எங்கும் கூட கூட வருகிறான். அன்னை தன்னுடன் நேரம் செலவிட வேண்டும் என்பது அக்குழந்தையின் எதிர்பார்ப்பு. அந்த அன்னை அவனையும் பார்த்துக் கொண்டு தன் வேலையையும் செய்து கொண்டு இருக்கிறார். 

உணவுக்கான தொகையை அளித்த போது எவ்விதம் எல்லா உணவுப் பொருட்களும் 50 சதவீதம் குறைவான விலையில் தர முடிகிறது என்று வியப்புடன் கேட்டேன். அந்தப் பெண் ‘’இடம் சொந்த இடம் என்பதால்’’ எனச் சுருக்கமாகச் சொன்னார். 

இந்த உணவகத்தின் உரிமையாளர்களான தம்பதியரைப் போன்ற தொழிலதிபர்கள் வாழ்க்கையின் மீதும் மனிதர்கள் மீதும் மேலும் நம்பிக்கை ஏற்படுத்துகிறார்கள். 

அவர்கள் குடும்பம் நலமுடன் வாழ இறைமையிடம் வேண்டிக் கொண்டேன். 

Friday, 26 June 2026

ஒரு சாமானியக் குடிமகனின் மனு

 அனுப்புநர்

ர.பிரபு
&&&&&
&&&
மயிலாடுதுறை - 609001

பெறுநர்
மாவட்ட ஆட்சியர் அவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை - 609001

ஐயா,

பொருள் : மயிலாடுதுறை மாவட்டம் - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - மனுநீதி நாள் முகாமில் பெறப்படும் மனுக்கள் உரிய விதத்தில்                         தீர்வு காணப்படுவதில்லை என்பதைத் தெரிவிப்பது - உரிய விதத்தில் தீர்வு காணப்படாமல் பைசல் செய்யப்படுவது குறித்து புகாரளிப்பது. 


இந்த மனுவின் நகல் கனம் தமிழக ஆளுநருக்கும் கனம் தமிழக முதலமைச்சருக்கும் கனம் தமிழக வருவாய்த்துறை அமைச்சருக்கும் கனம் குடிமைப்பொருள் வழங்கல் அமைச்சருக்கும் அனுப்பப்படுவதால் சற்று விரிவானது என்பதை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். 

டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்திய அரசியல் நிர்ணய சபையால் முறைப்படி உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் மீது மாறாப் பற்று கொண்ட குடிமகன் என்ற வகையில் இந்திய அரசியலமைப்பின் முக்கிய அங்கங்கள் ஆன ராஷ்ட்ரபதி பவன், நீதி அமைப்புகள், பாராளுமன்றம், சட்டமன்றம், அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மீது மதிப்பும் நம்பிக்கையும் கொண்டவன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவற்றின் மீது மதிப்பும் நம்பிக்கையும் இருப்பதனாலேயே இந்த மனுவை எழுதுகிறேன். இந்த மனுவில் குறிப்பிடப்படும் விஷயங்கள் முற்றிலும் சரிசெய்யப்படும் என்ற நம்பிக்கை என் அகத்தில் இக்கணத்திலும் நிறைந்தே இருக்கிறது. 

2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் எனது நண்பர் ஒருவருடன் இரு சக்கர வாகனத்தின் சீட் கவர் மாற்றும் கடைக்குச் சென்றிருந்தேன். நண்பரின் வாகனத்துக்கு சீட் கவர் மாற்ற வேண்டியிருந்தது. அது 30 லிருந்து 45 நிமிடம் தேவைப்படும் பணி. அந்தக் கடையின் பணியாளர் சீட் கவர் மாற்றத் தொடங்கினார். ஜனநாயகத் திருவிழாவான தேர்தலுக்கு வாக்களிக்கத் தயாராகி விட்டீர்களா என்று கேட்டேன். சற்று சோர்வுடன், ‘’ ஒவ்வொரு தேர்தலுக்கும் ஓட்டு போடுகிறோம் ; ஆனால் அரசாங்க அலுவலகத்தில் ஒரு சாதாரண வேலை கூட நடப்பதில்லை’’ என அலுப்புடன் கூறினார். அரசாங்க அலுவலகத்தில் அவருக்கு நடக்காமல் இருக்கும் வேலை என்ன என்று கேட்டேன். அவர் தன்னைப் பற்றி சொன்னார். அவர் பெயர் %%% த/பெ %%%%. திருஇந்தளூர் %%%% பகுதியைச் சேர்ந்தவர். திரு. %%% , அவரது மனைவி, இரு குழந்தைகள் என நான்கு பேர் கொண்ட குடும்பம். சீட் கவர் தைக்கும் கடையில் பணி புரிவதால் சொற்பமான மாத ஊதியம் கிடைக்கிறது. அதைக் கொண்டு தன் வாழ்வை தன் குடும்பத்தின் வாழ்வை அமைத்துக் கொள்கிறார். அவருக்கு அரிசி ரேஷன் கார்டுக்குப் பதிலாக ஜீனி ரேஷன் கார்டு வழங்கி விட்டார்கள். %%% பள்ளிப்படிப்பைத் தாண்டாதவர். ஆகையால் எவ்விதம் ஜீனி கார்டை அரிசி கார்டாக மாற்றிக் கொள்வது என்பது தெரியவில்லை. காலை 9 மணியிலிருந்து இரவு 8 மணி வரை கடையில் வேலை இருப்பதால் அவரால் வட்ட வழங்கல் அலுவலகம் தொடர்ந்து செல்ல முடியவில்லை ; ஒரு சில முறை சென்று விட்டு பின்னர் சோர்ந்து போய் அந்த விஷயத்தை அப்படியே விட்டு விட்டார். என்னிடம் என் கேள்விக்குப் பதிலாக மேற்படி விபரங்களைத் தெரிவித்தார். 

அவரிடம் நான், ‘’ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை மனுநீதி நாள் முகாம் நடக்கும். அங்கே பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளிக்கலாம். அந்த மனுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும். உங்கள் மனுவுக்கு ஒரு ஒப்புகைச்சீட்டு அளிக்கப்படும். அதில் ஒப்புகை எண் இருக்கும். அதனைக் கொண்டு மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறியலாம். அங்கே உங்கள் கோரிக்கையை முன்வைத்து மனு கொடுக்கலாம். மனுவின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஜீனி கார்டு அரிசி கார்டாக மாற்றித் தரப்படும் ’’என்று கூறினேன். நம்பிக்கையுடன் நான் இத்தனை முறைமைகளைக் கூறியதால் அவருக்கு நம்பிக்கை உண்டானது. ’’தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. எனவே இந்தக் காலகட்டத்தில் மனுநீதி நாள் முகாம் இருக்காது. வாக்குப் பதிவுக்குப் பின் மீண்டும் துவங்கும் ; அப்போது வந்து உங்களுக்கு மனு எழுத உதவுகிறேன்’’ என்றும் சொன்னேன். 

ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு முடிந்தது. மனுநீதி நாள் நடைமுறைகள் அதன் பின் தொடங்கின. ஆகாஷ்வாணி செய்திகள் மூலம் அதனை அறிந்த நான் திரு. %%% அவர்களை அவருடைய பணியிடத்தில் சந்தித்து அவர் மனு எழுத உதவினேன். அவர் நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து ‘’மனுநீதி நாள் முகாமில் மனு அளித்தால் அரசின் இயங்குமுறையைத் தெரிந்து கொள்ள உணர்ந்து கொள்ள அவருக்கு உதவியாக இருக்கும் என எண்ணினேன். தனது கடையின் பணியிலிருந்து அவரால் வர இயலவில்லை. பலமுறை மனுநீதி நாள் முகாமின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறிய பின் ஜூன் 1 மாவட்ட ஆட்சியர் அலுவலக மனுநீதி நாளில் திரு. %%%% மனு அளிக்கப்பட்டது. 

ஜூன் 1ம் தேதி மனுநீதி நாள் முகாமுக்கு நானும் வந்திருந்ததால் அன்றைய தினத்தில் மனுதாரர்களுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டிய மனு ஒப்புகைச் சீட்டு 5 மணி நேரம் தாமதமாக மாலை 3 மணிக்கு மேல் வழங்கப்படுவதை நேரில் கண்டேன். இந்த விஷயத்தை மாவட்ட ஆட்சித் தலைவருக்குத் தெரிவித்து அதனை சரி செய்யக் கோரி ஒரு கடிதமாக எழுதினேன்.மாவடத்தின் பல பகுதியிலிருந்து வருகை தரும் மனுதாரர்களுக்கு உடன் ஒப்புகைச் சீட்டு வழங்கி அவர்கள் 5 மணி நேரம் காத்திருக்கும் அல்லலை நீக்குமாறு கோரினேன். எனது கோரிக்கை மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சரி செய்யப் பட்டிருக்கிறதா என்பதைக் காண ஜூன் 8ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக மனுநீதி நாள் முகாம் சென்றேன். அன்றும் மனுதாரர்கள் ஒப்புகைச்சீட்டு பெற 5 மணி நேரம் காத்திருந்தார்கள் என்பதைக் கண்டேன். அன்றே இன்னொரு கடிதம் எழுதினேன். ஜூன் 11 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் வந்து மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளரைச் சந்தித்து ஜூன் 1, ஜூன் 8 ஆகிய தேதிகளில் மனுநீதி நாள் முகாம் தொடர்பான புகார் குறித்து தெரிவித்து அந்தப் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஜூன் 15 மனுநீதி நாளுக்கு வரும் மனுதாரர்கள் ஒப்புகைச் சீட்டுக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இராமல் உடன் வழங்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் ஆட்சியர் அலுவலகத்தின் ஒரு பகுதியான மின் ஆளுகை அலுவலகத்தில் சென்று சொல்லும்படி சொன்னார். அங்கு சென்று சொன்னேன். அவர்கள் ‘’சமூகப் பாதுகாப்பு திட்டம்’’ அலுவலகம் சென்று தெரிவிக்குமாறு கூறினர். அவ்விதமே செய்தேன். ஜூன் 15 அன்று ஆட்சியர் அலுவலகம் வந்து மனுதாரர்களுக்கு ஒப்புகைச்சீட்டு உடன் வழங்கப்படுகிறதா என்பதைக் காண வந்தேன். மனுதாரர்களுக்கு ஒப்புகைச்சீட்டு உடனுக்குடன் வழங்கப்படுவதை நேரில் கண்டேன். மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அன்றைய தினமே நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதினேன். 

ஜூன் 1ம் தேதி திரு. %%% அளித்த மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை அறிய ஜூன் 24 அன்று மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கு வந்தேன். மனுநீதி நாள் முகாம் கோப்புகளுக்கு பொறுப்பான எழுத்தர் விடுப்பில் சென்றிருப்பதால் ஜூன் 25 அன்று வருமாறு கேட்டுக் கொண்டனர். 

ஜூன் 25 அன்று சென்று பார்த்தேன். திரு. %%% அவர்களின் மனுநீதி நாள் புகார் கோப்பு ஜூன் 4 அன்று பைசல் செய்யப்பட்டிருந்தது என்பதை இணையத்தில் மனுதாரரின் ஒப்புகை எண்ணை உள்ளிட்டு மனுநிலை அறிந்து கூறினர். ஆனால் மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கு வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து 21 நாட்களாக இந்த விஷயம் குறித்து எந்த தபாலும் வரவில்லை. தங்களிடம் எந்த தபாலும் இல்லை ; வட்ட வழங்கல் அலுவலகம் சென்று விசாரியுங்கள் என்று கூறினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் விசாரித்தேன். வட்ட வழங்கல் அலுவலகத்திலிலிருந்து மனுதாரருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டு கோப்பு மூடப்பட்டது எனத் தகவல் தெரிவித்தனர். ‘’நான் மனுதாரருடன் தொடர்பில் இருக்கிறேன் ; அவருக்கு வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து எந்த தபாலும் வரவில்லை ‘’ என்று கூறினேன். மேலும் ‘’வட்ட வழங்கல் அலுவலகமாகிய தங்கள் அலுவலக தபால் ஆவணத்தைப் பரிசீலியுங்கள் ; ஜூன் 4 க்குப் பிறகு மனுதாரருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தால் அதில் பதிவாகியிருக்கும் அத்துடன் அதன் நகல் மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டிருக்கிறதா என்பதையும் பரிசீலியுங்கள் ‘’ என்று சொன்னேன்.

அந்த மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை வட்ட வழங்கல் அலுவலகத்தால் மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது கட்டாயம். அதனால் தான் அந்தக் கோப்பு தங்களிடம் இருக்கிறதா என மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் தேடிப் பார்த்தனர் என யூகித்தேன். அதாவது, வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கும் எந்த தபாலும் வரவில்லை. மனுதாரருக்கும் எந்தத் தபாலும் வரவில்லை. மனுதாரருக்கும் மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கும் எந்த தபாலும் அனுப்பாமல் மனுதாரர் கோப்பை மூடியுள்ளனர். 

மேற்படி விஷயம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மனுநீதி நாள் முகாம், மாவட்ட வழங்கல் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் தனி உதவியாளர், மின் ஆளுகை முகமை, சமூகப் பாதுகாப்புத் திட்டம் ஆகிய அலுவலகங்களுக்குப் பலமுறை சென்று வந்த அனுபவத்தின் அடிப்படையில் மனுதாரர் மனு தொடர்பாக முறைமைகள் ஏதும் பின்பற்றப்படாமல் பிழையாக் கோப்பு மூடப்பட்டுள்ளது என்பதை ஒரு சாமானியக் குடிமகனாக என்னால் யூகிக்க முடிகிறது. ஜூன் 1 அன்று திரு. %%% என்ற மனுதாரர் தனது ஜீனி கார்டை அரிசி கார்டாக மாற்றித் தர வேண்டி அளித்த மனு மீது மாவட்ட வழங்கல் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் மேற்கொண்ட மேல்நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேரடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த மனுவைக் கையாண்டவர்கள் அதனைக் கையாண்ட விதத்திலோ முறைமைகளிலோ பிழை செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த மனுவின் மூலம் கேட்டுக் கொள்கிறேன். 

தமிழக மக்கள் மாநில அரசு அலுவலகங்களுக்குச் செல்ல அஞ்சுகிறார்கள் ; தயங்குகிறார்கள் என்பதே இன்றைக்கும் யதார்த்தமாக இருக்கும் நிலை. சாமானிய மக்கள் எல்காட் தலைமை அலுவ்லகம், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம் ஆகிய அலுவலக வாயிற்படிகளை மிதிப்பது இல்லை. தங்கள் சொந்த நிலத்துக்கு பட்டா வாங்க தங்கள் இடவிற்பனையைப் பத்திரப்பதிவு செய்ய தங்கள் வாகனத்துக்கு பதிவு எண் பெற ரேஷன் கார்டு விண்ணப்பிக்க என முறையே வருவாய்த்துறை, பத்திரப்பதிவு அலுவலகம், வாகனப் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம், குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலக வாயிற்படிகளையே மீண்டும் மீண்டும் மிதிக்கின்றனர். மேற்படி அலுவலகங்களில் குடிமக்களுக்கு நிகழ வேண்டிய சிறு பணிகளுக்குக் கூட - குடிமக்களின் அடிப்படை உரிமையான அரசு சேவைகளைப் பெறுவதற்கு கூட பெரும் பணம் லஞ்சமாகக் கேட்கப்படுகிறது என்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் மாவட்ட ஆட்சியரையும் நம்பி ‘’மனுநீதி நாள்’’ முகாம் அன்று மாவட்ட ஆட்சியரை நோக்கி நம்பிக்கையுடன் வருகிறார்கள். தமிழக மக்கள் இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி ஆகியவற்றுக்குத் தேர்வான குடியரசுத் தலைவர் கையொப்பமிட்டு பணி நியமன ஆணை வழங்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது இப்போதும் நம்பிக்கை கொள்கிறார்கள். அடிமட்டத்தில் இருக்கும் அரசு அலுவலகங்கள் தங்களுக்கு இழைக்கும் அசௌகர்யங்களிலிருந்து - தங்களுக்கு இழைக்கும் அவமதிப்புகளிலிருந்து - தங்களுக்கு இழைக்கும் அநீதிகளிலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் தங்களைக் காப்பார் என உறுதியாக நம்புகிறார்கள். இந்த மனுவின் மூலம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் முன்வைக்கும் கோரிக்கை என்னவென்றால் ‘’மனுநீதி நாள் முகாம்’’ மனுக்கள் அரசு அலுவலகங்களால் முறையாகக் கையாளப்படுவதை உ றுதிப்படுத்த வேண்டும் என்பதும் இது குறித்து மாவட்டத்தின் அனைத்து அரசுத்துறை அலுவ்லகங்களுக்கும் கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்பதுமே ஆகும். 

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் வாக்குக்கு வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் கட்சிகள் வெற்றி பெறுகின்றன என அரசியல் கட்சிகள் மீதும் அதன் மறுபக்கமாக தமிழக வாக்காளர்கள் வாக்குக்குப் பணம் பெற்றுக் கொண்டு வாக்களிக்கிறார்கள் என்னும் புகார் தமிழக வாக்காளர்கள் மீதும் இருந்தது. 2026ல் தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் கட்சி மீது அதன் அரசியல் எதிரிகள் கூட வாக்குக்கு பணம் அளித்தார்கள் என்னும் குற்றம் சாட்டவில்லை. இன்றைய ஆளுங்கட்சி எந்த வாக்காளருக்கும் பணம் கொடுத்து வெற்றி பெற்று தமிழக சட்டசபையில் தனிப்பெரும் கட்சியாக வரவில்லை. தமிழக அரசியல் வரலாற்றில் இந்நிகழ்வு முக்கியமான ஒன்று என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். தமிழக மக்கள் மாநில அரசின் அரசாட்சி முறைகளில் மாற்றம் தேவை என்பதற்காகவே ஒரு புதிய கட்சிக்கு வாக்களித்துள்ளனர். கோடானுகோடி தமிழக மக்களின் அபிலாஷை வெளிப்படையான ஊழலற்ற அரசு நிர்வாகமே ஆகும். ‘’ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’’ என்ற அளவில் எனது ஜூன் மாத அனுபவத்தை முன்வைத்துள்ளேன். இந்த விரிவான மனு தமிழக அரசு அலுவலக ஊழியர்களின் அலட்சிய மனோபாவத்தையும் சாமானியக் குடிமக்களுக்கு ஏற்படும் அலைக்கழிப்பையும் எடுத்துக் காட்டுவதாக இருக்கக் கூடும். 

‘’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்பது தமிழ்மறையின் வாக்கு. இவ்விதமாக , குடிமக்கள் என்ற விதத்தில் அரசு அதிகாரிகளும் குடிமக்களும் சமமே. சாமானியக் குடிமக்களை அலைக்கழிக்க எந்த அரசு அதிகாரிக்கும் உரிமையில்லை. அவ்விதம் அரசு அதிகாரிகள் நடந்து கொள்வது நீதிக்கும் நிர்வாகத்துக்கும் ஒவ்வாதது ஆகும். 

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களே ! தாங்கள் கேரளம் மாநிலத்தைச் சேர்ந்தவர். ‘’தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்’’ எனப் போதித்த ஐயா வைகுண்டரும் ‘’மனுஷனுக்கு ஒரே ஜாதி ஒரே மதம் ஒரே கடவுள்’’ எனப் போதித்த ஸ்ரீநாராயண குருவும் வாழ்ந்து வழிகாட்டிய மண்ணிலிருந்து தமிழகத்துக்கு வந்துள்ளீர்கள். தாங்கள் மாவட்ட ஆட்சித்த்லைவராக இருக்கும் காலத்தில் ‘’மனுநீதி நாள் முகாம்’’ மனுக்கள் சிறப்பாகக் கையாளப்பட்ட்ன என்னும் நிலையை மாவட்ட நிர்வாகத்தில் உருவாக்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த மனுவின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். சொற்ப மாத ஊதியம் பெற்று வறிய நிலையில் இருக்கும் மனுதாரர் திரு. %%% அவர்களின் ஜீனி கார்டை அரிசி கார்டாக மாற்றித் தர ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

இந்த விரிவான மனு - கடிதம் கனம் தமிழக ஆளுநர், கனம் தமிழக முதலமைச்சர், கனம் வருவாய்த்துறை அமைச்சர், கனம் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், கனம் சமூகநீதித்துறை அமைச்சர் ஆகியோர் நேரடி கவனத்துக்குச் செல்லுமா என்பது ஓர் ஐயம். இந்த விரிவான மனு - கடிதம் மாவட்ட ஆட்சியரின் நேரடி கவனத்துக்கு செல்லுமா என்பது அதை விடப் பெரிய ஐயம். எனினும் மேற்கூறியோரின் அலுவலகங்களின் உயர் அதிகாரிகளின் கவனத்துக்குச் செல்ல வாய்ப்புண்டு. அவர்கள் கவனம் கொடுத்தால் தீர்க்கக்கூடிய விஷயங்களே இந்த மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளவை. மனுவின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்பது மட்டுமே மனுதாரரின் விருப்பமும் எதிர்பார்ப்பும்.. 

ஜெய்ஹிந்த்!

தங்கள் உண்மையுள்ள,

&&&


இடம் : மயிலாடுதுறை
நாள் : 26.06.2026

நகல் 

1. கனம் தமிழக ஆளுநர்
லோக் பவன்
கிண்டி - சென்னை

2. கனம் தமிழக முதலமைச்சர்
தலைமைச் செயலகம்
சென்னை

3. கனம் தமிழக வருவாய்த்துறை அமைச்சர்
தலைமைச் செயலகம்
சென்னை

4. கனம் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்
தலைமைச் செயலகம்
சென்னை

5. கனம் சமூகநீதித்துறை அமைச்சர்
தலைமைச் செயலகம்
சென்னை  
  

Thursday, 25 June 2026

அரசும் அலைக்கழிப்பும்

இரு சக்கர வாகன சீட் கவர் தைப்பவரின் ஜீனி ரேஷன் அட்டையை அரிசி ரேஷன் அட்டையாக மாற்ற ஜூன் 1ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக மனுநீதி நாளில் மனு தரப்பட்டது. 24 நாட்கள் ஆகிறது. வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்தோ அல்லது மாவட்ட வழங்கல் அலுலகத்திலிருந்தோ எந்தத் தகவலும் இல்லை. வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு நேரில் சென்றேன். ஒரு குயர் நோட் ஒன்றில் ‘’மனுநீதி நாள் மனுக்கள்’’ என வரிசை எண். ஆன்லைன் பதிவு எண், மனுதாரர் பெயர் & முகவரி, மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என ஒரு பட்டியல் இருந்தது. சம்பந்தப்பட்ட விஷயத்தில் மனுதாரர் பெயர் மற்றும் முகவரி ஆகிய விஷயங்கள் மட்டுமே இருந்தன. மற்ற எந்த விபரமும் ஏட்டில் குறிப்பிடப்படவில்லை என்பதைக் கவனித்தேன். அந்த ஏட்டைப் பராமரிப்பவர் கிராம நிர்வாக அதிகாரியிடமிருந்து ஒரு சான்றிதழ் பெற்று வர வேண்டும் எனக் கோரினார். அது முக்கியத் தேவை என்றால் அலுவலகத்திலிருந்து ஒரு தபால் அனுப்பியிருப்பார்கள். இவ்விதம் இப்போது கோருவது அலைக்கழிக்கும் செயல் என எனக்குத் தோன்றியது. அலமாரியில் அவர் ஒரு படிவத்தைத் தேடினார். அவர் உத்தேசித்த படிவம் கிடைக்கவில்லை. மறுநாள் வருமாறு கூறினார். மறுநாளான நேற்று அங்கே செல்லவில்லை ; வட்ட வழங்கல் அலுவலகத்தின் தலைமை அலுவலகமான மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்குச் சென்றேன். மனுதாரர் பெயரையும் ஜூன் 1ம் தேதி ‘’மனுநீதி நாள் முகாம்’’ மனு என்று சொன்னேன். ஒரு கிளார்க் இன்னொரு கிளார்க்கிடம் விபரம் கேட்கச் சொன்னார். இன்னொருவர் இன்னொருவரிடம். மூன்றாவது கிளார்க் என்னிடம் இந்த விஷயத்தைப் பார்க்கும் கிளார்க் இன்று விடுமுறையில் இருக்கிறார். நாளை வாருங்கள் என்றார். மனுவின் விபரம் கூறி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்டேன். 

மனு சென்னைக்கு அனுப்படும் என்றனர். ‘’மனுநீதி நாள் முகாம்’’ ஆன்லைன் கோப்பு நிலுவையில் தானே இருக்கும் எனக் கேட்டேன். சென்னைக்கு மனு அனுப்பப்பட்டால் மனுவின் கோப்பு மூடப்பட்டு விடும் எனக் கூறினர். ஜூன் 1 ஒரு கோரிக்கைக்காக மனு தரப்படுகிறது. அரசு அந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் ; இல்லையென்றால் நிறைவேற்ற இயலாத கோரிக்கை என்று பதில் சொல்ல வேண்டும் அல்லது நிலுவையிலாவது வைத்திருக்க வேண்டும். கோப்பினை மூடி விட்டால் யார் எவ்விதம் சென்னை அலுவலகத்துக்கு தொடர்பு கொள்வது. சென்னை அலுவலகத்துக்கு மனுவை அனுப்பினால் அதன் நகலையாவது மனுதாரருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவை எதுவுமே இல்லாமல் ஒரு கோப்பை மூடினால் மனுதாரர் என்ன செய்ய முடியும் ? 

ஏன் இந்த சாதாரண விஷயத்தைக் கூட அரசிடம் எதிர்பார்க்க முடியவில்லை? மாவட்ட வழங்கல் அலுவலகம் அமைந்திருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மிகப் பெரிய பிரும்மாண்டமான கட்டிடம். மாவட்ட வழங்கல் அலுவலகம் ஒரு மல்டிநேஷனல் கம்பெனியின் அலுவலகம் போல மிகப் பெரிதாக சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் நிறைந்து அமைக்கப்படுகிறது. அலுவலகத்தில் குறைந்தது 7 பேர் பணி புரிகிறார்கள். ஒரு மனுவின் கோப்பை எவ்விதம் உருவாக்கிப் பராமரிப்பது என்பதும் மனுதாரருக்கு பதில் அளிப்பது என்பதும் அடிப்படையான விஷயங்கள். எனினும் இதனைச் செய்ய அரசு ஊழியர்களுக்கு விருப்பம் இல்லை. 

‘’நாளை வாருங்கள்’’ என்று சொன்ன கிளார்க்கிடம் ‘’காலை 10.30 க்கு வரட்டுமா’’ என்று கேட்டேன். ‘’11 மணிக்கு வாருங்கள்’’ என்றார். 

எந்த விஷயமாக இருந்தாலும் அமைதியான அணுகுமுறையை மேற்கொள்வதே எனது வழக்கம்.