Sunday, 12 April 2026

கல்வி குறித்த யோசனைகள் -2

 ’’மெக்காலே கல்வி முறை’’ என்பது பாடத்திட்டத்தில் மட்டும் இல்லை. பள்ளிகள் செயல்படும் முறையிலும் இருக்கிறது. பள்ளிகள் காலை 9 மணியிலிருந்து 4 மணி வரை இயங்கினால் போதுமானது என்பது ‘’எழுத்தர்’’ பணிகளுக்கே உகந்தது. ஒரு மாணவனின் அக ஆற்றலை முழுமையாக வெளிக் கொணர பள்ளி உறைவிடப் பள்ளியாக இருக்க வேண்டும். 

காலை 4 மணிக்கு விழிப்பதிலிருந்து இரவு 9 மணிக்கு உறங்குவது வரை ஆசிரியர் மாணவர் ஆகியோர் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். 

Saturday, 11 April 2026

ஆசானும் மாணவனும் (நகைச்சுவைக் கட்டுரை)

 ஆசானும் மாணவனும் மேற்கொண்ட உரையாடல் கீழே :

‘’சார் ! என்கிட்ட ஸ்மார்ட்ஃபோன் இல்ல. அதோட அடுத்த கட்டமா செல்ஃபோனே வேண்டாம்ங்கற முடிவுக்குத் தான் போவேன். இருந்தாலும் சின்ன சஞ்சலம். என் முடிவு சரிதான?’’

‘’என்கிட்ட ஸ்மார்ட்ஃபோன் இருக்கு. அதுல தான் மெயில் அனுப்புவேன். மெயிலுக்கு ரிப்ளை பண்ணுவன். பாட்டு கேப்பன். என் ஆஃபிஸ் ஃபைல்ஸ்ஸை மெயிண்டய்ன் பண்ணுவன். ஆனா அதை ஃபோன் பேச பயன்படுத்த மாட்டேன். ஃபோன் வந்தாலும் எடுக்க மாட்டன். ஒரு நாளைக்கு எனக்கு 100 ஃபோன் வரும். ஆனா எதையும் அட்டண்ட் பண்ண மாட்டேன்.’’

கல்வி குறித்த யோசனைகள் - 1

 ஒரு தனியார் பள்ளி அதில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு மிகச் சிறப்பான ஊதியம் அளிக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ. 60,000 பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு ஊதியமாகத் தரப்பட வேண்டும். 

Friday, 10 April 2026

கல்வி குறித்த யோசனைகள்

நண்பரின் கல்வி நிலையத்தை எவ்விதம் விரிவாக்குவது என்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன். நம் நாட்டின் வரலாற்றில் கல்வி நிலையம் என்பதைத் துறவிகளே நடத்தியிருக்கிறார்கள். அரசுகள் அவற்றுக்கு ஆதரவு அளித்திருக்கின்றன. ஜனநாயக அரசியலில் அரசாங்கமே கல்வி நிலையங்களை நடத்துகிறது. தனியாராலும் கல்வி நிலையங்கள் நடத்த முடிகிறது. இன்று கல்வி நிலையம் நடத்துவது என்பது பெரும் முதலீடு தேவைப்படும் செயல். எனினும் அது ஓர் இலட்சியவாத செயல்பாடும் கூட.  

சிறுவனாயிருந்த நாட்கள் முதலே மொழி மீது ஆர்வம் கொண்டிருந்திருக்கிறேன். படைப்பூக்கம் கொண்ட மனநிலை கொண்டிருக்கிறேன். வணிகத்தில் ஈடுபடுகிறேன். இவையே இந்த யோசனைகள் உருவாகக் காரணம். 

Thursday, 9 April 2026

விசும்பின் துளி

 விசும்பின் துளி வீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண்ப அரிது என்பது திருக்குறள். ஆகாயத்தின் ஒரு துளி மண்ணில் வீழாமல் போனால் இங்கே ஒரு புல் கூட முளைக்க முடியாது என்பது அதன் பொருள். வள்ளுவர் விசும்பு என்கிறார். வானம் என மானுடர் உணர்வது அவர்கள் கட்புலனுக்குத் தென்படும் பரப்பை. விசும்பு மானுடப் பார்வைக்கும் மானுட அறிதலுக்கும் அப்பாற்பட்ட பிரம்மாண்டம் என்பதால் அதனைக் குறிப்பிடுகிறார். 

இன்று சீர்காழியில் ஒரு இடத்தை அளக்க நண்பருடன் சென்றிருந்தேன். ஏற்கனவே உருவாகி இருக்கும் குடியிருப்பு நகருக்கான விரிவாக்கமாக ஒரு பகுதியை அமைக்கிறார்கள். மொத்த பரப்பு 2 ஏக்கர் இருக்கக் கூடும். நண்பர் தன் அதி நவீன் அளக்கும் கருவியில் இடத்தின் எல்லைகளை பதித்துக் கொண்டார். ஒரு கோலை எல்லைப் பகுதியில் நடுவதே வேலை. கோல் அளவீடுகளை உருவாக்கிக் கொள்கிறது. நடுவது கூட அல்ல தொடுவதே வேலை. தொட்டால் அளவை எடுத்துக் கொள்கிறது. நண்பர் வேலையைத் தொடக்கினார். 

அப்பரப்பில் ஒரு மூதாட்டி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். 

‘’எத்தனை ஆடு உங்க கிட்ட இருக்கு அம்மா?’’

’’8 ஆடு. 2 குட்டி’’

‘’பங்குனி வெயில் காய்ச்சலா காயுதே ; இதுல என்னத்த மேயும்?’’

’’மேயற வரைக்கும் மேயட்டும். வானம் கருணை வச்சா புல் முளைக்கும்’’

இந்த 10 ஆடுகள் பசியாறக் கூட வானத்தின் கருணை வேண்டும். 

வள்ளுவன் ஏன் பேராசான் என்பது எனக்கு அக்கணத்தில் புரிந்தது. 

Wednesday, 8 April 2026

எல்லைப் பயணம்

ஊரில் மதியம் 1.30 அளவில் பகல் விரைவு வண்டி இருக்கிறது. அதில் 6 மணி நேரம் பயணிக்க வேண்டும். இரவு 8 மணி அளவில் அவ்வண்டியின் கடைசி சேருமிடம் சென்றடைய முடியும். அங்கிருந்து இரவு 10 மணிக்கு ஒரு ரயிலைப் பிடிக்க வேண்டும். அந்த ரயில் 32 மணி நேரம் பயணிக்கும். இரண்டாம் நாள் காலை 7 மணி அளவில் சேருமிடம் சென்று சேரும். அங்கே 12 மணி நேரம் காத்திருக்க வேண்டும். மாலை 7 மணிக்கு ஒரு ரயில் புறப்படும். அந்த ரயில் 12 மணி நேரப் பயணம் செய்யும். அங்கே இருந்து ஒரு பேருந்தைப் பிடிக்க வேண்டும். அப்பேருந்து 30 மணி நேரம் பயணித்து ஒரு இடத்தில் சென்று சேரும். ஞாயிற்றுக்கிழமை ஊரில் கிளம்பினால் சனிக்கிழமை நான் செல்ல உத்தேசித்திருக்கும் இடத்தைச் சென்றடைய முடியும். அங்கே 3 நாட்களாவது இருக்க வேண்டும். அதன் பின் அதே விதமாக அங்கிருந்து புறப்பட்டு ஊர் வந்து சேர வேண்டும். இந்தப் பயணம் நிகழ்ந்தால் என் வாழ்வில் மேற்கொண்ட மிகப் பெரிய பயணங்களில் ஒன்றாக இது அமையக் கூடும்.  

Tuesday, 7 April 2026

காலை உணவு (ஹாஸ்யம்)

4 ஏக்கர் பரப்பு கொண்ட வீடுடைய நண்பர் காலை 4.30க்கு எழுவார். எழுந்ததும் அன்றைய தினத்தின் அலுவல்கள் சார்ந்து குறிப்புகள் தயார் செய்வார். காலை 6 மணிக்கு வந்து சந்திக்குமாறு கூறுவார். அதுவே இப்போது நாங்கள் சந்தித்துக் கொள்ளும் நேரம் என்றாகி விட்டது.  காலை 8 மணி வரை சற்று சாவகாசமாக இருப்பார். அதன் பின் அலைபேசி அழைப்புகள் வரத் துவங்கும். இரவு 8 மணி வரை தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கும். அவற்றுக்கு பதில் சொல்வதிலேயே நாளின் பெருமளவு நேரம் செலவாகும். ஒரு அழைப்பை பேசிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே மேலும் 4 அழைப்புகள் வந்து விடும். தவறிய அழைப்புகளை ஒவ்வொன்றாக மீண்டும் அழைத்து பேசி அது தொடர்பான அடுத்த அழைப்புகளைப் பேசி என நேரம் சுழன்று விடும். நண்பர் வீட்டில் எப்போதும் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் 5 பேர். அடுமனைப் பணிக்கு ஒரு பணியாளர் இருக்கிறார். அவர்கள் வீட்டின் வழக்கம் முதலில் நண்பர் காலை உணவருந்துவார். அவரது பொதுவான நேரம் காலை 9 மணி. அவருடனோ அவருக்குப் பின்னோ அவரது சகோதரரும் உணவருந்துவார். நான் காலை 8.30 வரை அவருடன் உரையாடி விட்டு புறப்படுவேன் ; உணவருந்தி விட்டு புறப்படுமாறு நண்பர் சொல்வார். நாங்கள் சேர்ந்து உணவருந்துவோம். காலை 6.30க்கு நான் நண்பர் வீட்டில் இருந்தாலே அவர்கள் வீட்டில் எனக்கும் சேர்த்து காலை உணவு தயாரித்து விடுவார்கள். அவர் வீடு 2000 சதுர அடி பெரியது என்பதால் ஒவ்வொரு பணிகள் ஒவ்வொரு இடத்தில் நடக்கும். ஒருநாள் எனக்கும் சேர்த்து காலை உணவு தயாராகி விட்டது. நண்பர் 8.30க்கு ஒரு அலைபேசி அழைப்பை ஏற்று பேசிக் கொண்டிருந்தார். அதனைப் பேசி முடித்து அதன் பின் அவர் நீராடி வர வேண்டும். எப்படியும் 9.15 ஆகி விடும். மற்ற உறுப்பினர்கள் இன்னும் தயாராகி வரவில்லை. ஆனால் டயனிங் டேபிளில் காலை உணவு தயாராகி ஹாட் பேக்கில் இருக்கிறது. பொங்கல், இட்லி, பூரி, சட்னி, சாம்பார், குருமா என அனைத்தும் உள்ளது. டயனிங் டேபிள் அருகில் யாரும் இல்லை. அடுமனையிலும் யாரும் இல்லை. நான் அடுமனையிலிருந்து உணவருந்தும் தட்டு ஒன்றை எடுத்துக் கொண்டேன். டயனிங்கில் அமர்ந்து உணவு வகைகளை தட்டில் வைத்துக் கொண்டு உணவருந்தத் தொடங்கினேன். சாப்பிட்டு கை கழுவி சிறிது நேரம் ஹாலில் அமர்ந்திருந்த போது நண்பரின் சகோதரர் வந்தார். அவரிடம் நடந்ததைக் கூறி விட்டு புறப்பட்டேன்.  

Monday, 6 April 2026

ஓய்வில் இருக்கும் நண்பர்

 குடவாயிலில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். இலக்கியம் இசை மற்றும் நுண்கலைகளில் தீவிரமான ஆர்வமும் ஈர்ப்பும் பயிற்சியும் மிக்கவர். கலைஞர்களுக்கே உரிய உணர்ச்சிகரமான அகம் கொண்டவர். அவரது உணர்ச்சிகர இயல்பு குறித்து நான் மிகுந்த கவலை கொண்டிருந்தேன். அவர் இயல்பு குறித்து புறவயமாக நோக்குமாறு அவரிடம் அவ்வப்போது மெலிதாக மென்மையாக சொல்லிக் கொண்டிருந்தேன். புதிய வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொண்டிருந்தார். வீட்டின் நிறைவுப் பணிகள் அவருடைய நேரத்தையும் மனத்தின் பெரும்பாலான பகுதியையும் எடுத்துக் கொண்டிருந்தது. வீட்டு கிரகப் பிரவேசத்துக்கு எனக்கு அழைப்பு அளித்திருந்தார். நான் அன்று ஊரில் இல்லை ஆதலால் செல்ல முடியவில்லை. கிரகப் பிரவேசம் சிறப்பாக நடந்தது என பின்னர் அறிந்தேன். விழாவுக்கு 10 நாட்களுக்குப் பின் சாலையில் இரவில் சென்று கொண்டிருந்த போது சிறு சாலை விபத்து ஒன்று நண்பருக்கு ஏற்பட்டிருக்கிறது. சிறு எலும்பு முறிவு. கட்டு போட்டிருக்கின்றனர். ஒரு மாத காலம் அதிகம் நடக்காமல் படுக்கையில் இருக்குமாறு மருத்துவ அறிவுரை. அதனை முறையாகப் பின்பற்றுகிறார். இன்று நண்பரைக் காணச் சென்றிருந்தேன். வீட்டின் நிறைவுப் பணிகள் பிரமாதமாக நிகழ்ந்திருக்கின்றன என்பதைக் கண்டது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அரண்மனை போன்ற எழிலுடன் வீடு இருக்கிறது என அவரிடம் கூறினேன். நாள் முழுதும் நாதஸ்வர இசை கேட்டுக் கொண்டு இலக்கியம் வாசித்துக் கொண்டிருக்கிறார். இசையில் முழுமையாக மூழ்கியிருப்பதற்கான வாய்ப்பாக நிகழ் நிலையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினேன். என்னை இரண்டு நாட்கள் வந்து தங்கியிருங்கள் என்று சொன்னார். சென்று வர வேண்டும். 

Sunday, 5 April 2026

ஆனைமுகன் நீராட்டு

 இன்று மாயூரநாதர் ஆலயம் சென்ற போது ஆகம பாடசாலை மாணவர்கள் 25 பேர் வேத மந்திரம் முழங்கிக் கொண்டு ஆலயத்தினுள் நுழைவதைக் கண்டேன். நான்கு வயது இருக்கும் சிறு குழந்தை சங்கீத அப்பியாசத்தைத் துவங்குவதைக் கண்டேன். அக்குழந்தையின் பெற்றோரும் ஆசிரியரும் உடனிருந்து அக்குழந்தைக்கு வழிகாட்டினர். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தங்கள் குடும்ப நலனுக்காக ஆனைமுகனை நீராட்டி வழிபட திரவியங்களுடன் வந்திருந்தனர். மாயூரநாதர் ஆலய ஆனைமுகன் உருவத்தில் மிகப் பெரியவர். ஏழடி உயரம் இருக்கக் கூடும். முதலில் நல்லெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்தனர். பின்னர் மஞ்சள் பொடி, நெய், தயிர், தேன், பால் ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. சந்தன அபிஷேகம் செய்யப்பட்டு சுடராட்டு நிகழ்ந்தது. 

ஒரு குழந்தையை அன்னை நீராட்டி அலங்கரிப்பது போன்றதே தெய்வத்துக்கு மானுடர் நிகழ்த்தும் நீராட்டு. 

பெருமாள் கோவிலில் உற்சவர் ஏகாதசி கண்ணாடி மண்டபத்தில் எழுந்தருளியிருந்தார். 

Saturday, 4 April 2026

பள்ளியும் கல்வியும்

பன்னெடுங்காலமாக இந்தியர்கள் அவர்களுடைய விவசாய வாழ்க்கைக்குத் தேவையான விவசாயக் கல்வியறிவைக் கொண்டிருந்தனர். அடிப்படை மொழிக் கல்வியும் கணிதக் கல்வியும் இந்தியர்கள் பெற்றிருந்தனர்.  விஞ்ஞானத்தையும் தொழிற்கல்வியையும் தொழிலை தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்ட சமூகங்கள் கற்றன. நுண்கலைகளை ஆர்வமுடையவர்கள் ஆசிரியர்களிடம் சென்று கற்றனர். 

கிராமத்தில் இருக்கும் சாமானியர்களுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு ஆசிரியர் இருந்து கல்வி கற்பித்திருக்க முடியும். அந்த ஆசிரியரின் உலகியல் தேவைகளை கிராமம் பூர்த்தி செய்திருக்கக்கூடும். விஞ்ஞானமும் தொழிலும் தொழில் பட்டறைகளில் போதிக்கப்பட்டிருக்கக்கூடும். 

நம் நாட்டில் பெரும் கல்வி நிலையங்கள் இருந்திருக்கின்றன ; பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்கலைக்கழகங்கள் இருந்திருக்கின்றன. அவை யாரால் நடத்தப் பட்டிருக்கும்? நாட்டின் துறவிகளே அவற்றில் ஆசிரியர்களாக இருந்திருக்கின்றனர். துறவிகள் வாழும் இடமே பள்ளி. 

பிரிட்டிஷ் ஆட்சி தங்கள் தேவைக்காக எழுத்தர்களை உருவாக்கும் ‘’மெக்காலே கல்வி’’ முறையைக் கொண்டு வந்தது. இன்றும் அந்த வடிவமே ஏதோ ஒரு வகையில் நீடிக்கிறது. 

நம் நாட்டில் ஏதோ ஒரு வகையில் பள்ளிகள் தொல்கல்வி முறைக்கு இடம் தர வேண்டும். இது குறித்த சிந்தனை எழ வேண்டிய நேரம் இது.