Sunday, 1 February 2026

இராம நாடகம்


 உலகின் முதல் காவியம் இராமாயணம். இராமன் கதை பாடவே கவிதை பிறந்தது என்கிறது நம் மரபு. 

இராம கதை விதவிதமாக தொடர்ந்து பாடப்பட்டுக் கொண்டே இருக்கிறது. 

18ம் நூற்றாண்டில் தில்லையாடியில் பிறந்த சைவரான அருணாசலக் கவிராயர் கம்பன் மீது ஈடுபாடு கொள்கிறார். கம்பன் மீது கொண்ட ஆர்வத்தால் இராம கதையை கீர்த்தனைகளாகப் பாடுகிறார். தமிழ் மீது அவர் கொண்டிருக்கும் ஆர்வம் அறிந்த தருமபுரம் ஆதீனத்தின் சைவத் துறவிகள் அவருக்கு சீர்காழியில் வீடொன்றை அளித்து அவரை ஆதரிக்கின்றனர். 

ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் சிறந்த உதாரணம் அருணாசலக் கவிராயரின் வாழ்வு. 

கூலி சேதாரம் ( நகைச்சுவைக் கட்டுரை)

நகைக்கடைக்குச் சென்று தங்க நகை வாங்கிய அனுபவம் எனக்கு இல்லை. எந்த நகைக்கடைக்கும் நகை வாங்க நான் சென்றதில்லை. ஒருமுறை எனது நண்பர் ஒருவர் - வெளியூர்க்காரர் - ஒரு நகைக்கடையில் இருந்து அலைபேசியில் பேசினார். உறவினர்களுடன் நகை வாங்க வந்திருப்பதாகவும் கடைக்கு வர முடியுமா என்று கேட்டார். அங்கே சென்றேன். என்னைப் பார்த்ததும் கடைக்கு வெளியே வந்து விட்டார். பத்து நிமிடம் அவரிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு நான் புறப்பட்டேன். அவர் கடைக்குள் மீண்டும் சென்றார். அந்த ஒருமுறை மட்டுமே நான் நுழைந்தது. அதுவே முதல் முறை நான் நகைக்கடைக்கு சென்றது.  இதுவரை அதுவே கடைசி தடவையும் கூட! 

வங்கியில் அடகு வைக்க நகைகளை ஆண்டுக்கு ஒருமுறையோ இருமுறையோ எடுத்துச் செல்வது உண்டு. நகை எத்தனை கிராம் என கேட்டுக் கொள்வேன். வீட்டில் சொன்ன எடையும் வங்கியில் மின்னணு தராசில் அவர்கள் நிறுத்துச் சொல்லும் எடையும் ஒத்துப் போகிறதா என சரிபார்த்துக் கொள்வேன். வங்கி அளிக்கும் நகைக்கடன் அட்டையை வீட்டில் கொண்டு வந்து கொடுத்து விடுவேன். கடன் வங்கிக் கணக்கில் வரவாகி விடும். அடுத்த நாள் அதனை எடுத்துக் கொள்வேன். நகையை மீட்க முதல் நாள் சென்று எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் எனக் கேட்டு வந்து அடுத்த நாள் வங்கிக் கணக்கில் செலுத்தி மீட்பேன். தங்கத்துடனான எனது பரிச்சயம் அவ்வளவே. 

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தங்கம் குறித்த செய்திகள் அதிகம் வரத் துவங்கின. தங்கம் குறித்த எனது அறிதல் பூஜ்யம் என்னும் நிலையில் இருந்ததால் இதில் அறிவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றனவே என அறியத் தொடங்கினேன். 

இந்தியாவில் ‘’எக்ஸ்’’ கிராம் தங்கம் விலை ரூ.100 எனில் துயாபில் ‘’எக்ஸ்’’ கிராம் தங்கம் விலை ரூ.85, ஸ்விட்சர்லாந்தில் ‘’எக்ஸ்’’ கிராம் தங்கம் விலை ரூ. 75 என்பதை இணையம் மூலம் அறிந்தேன். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் ஒருவர் அரசால் வரையறுக்கப்பட்ட அளவு தங்கத்தைக் கொண்டு வர் முடியும். அதற்கு தீர்வை ஏதும் கிடையாது. அதற்கு மேல் கொண்டு வர 9 சதவீதம் இறக்குமதி வரி செலுத்த வேண்டும். அரசிடம் அனுமதி பெற வேண்டும். முன்னர் இந்த வரி 15 சதவீதமாக இருந்திருக்கிறது. இப்போது 9 சதவீதமாக உள்ளது. 

இத்தனை நாள் அறியாமல் இருந்து புதிதாக அறிந்ததால் இந்த விபரங்களை உற்சாகமாக வீட்டில் பகிர்ந்து கொண்டிருந்தேன். அப்போது வீட்டில் ஒரு விபரம் சொன்னார்கள். ‘’நீ இந்தியாவில் 8 கிராம் தங்கம் வாங்க வேண்டும் எனில் 9 கிராமுக்கான விலையை கொடுக்க வேண்டும். நீ 8 கிராம் தங்கத்தை விற்று பணமாக்கிக் கொள்ள வேண்டும் என்றால் 7 கிராமுக்கான விலையை மட்டுமே தருவார்கள்.’’

’’இது என்ன நடைமுறை ?’’ என்றேன் அதிர்ச்சியுடன். 

‘’இதற்கு கூலி சேதாரம் என்று பெயர்’’

‘’செய்கூலி இல்லை. சேதாரம் 6 சதவீதம்னு விளம்பரத்துல சொல்றாங்களே?’’ 

‘’விளம்பரத்துல மட்டும் தான் அப்படி இருக்கும். நேரா போனா அது இதுன்னு 12 பர்செண்ட் வந்துடும். அப்புறம் கடையில தங்க நகையைக் கொடுத்தா இன்னொரு தங்க நகை தான் தருவாங்க. பணமா தர மாட்டாங்க.’’

‘’ஆ’’ என்றேன் மீண்டும் அதிர்ச்சியுடன். 

‘’இப்ப ஒரு ஆள் 8 கிராம் தங்க நகையை விற்கப் போனா 7 கிராம் விலைக்கு வாங்கறாங்க. 8 கிராம் தங்கம் வாங்க வர இன்னொரு ஆள்ட்ட 9 கிராம் விலைக்கு விக்கறாங்க. அப்ப 7 கிராம்க்கு 2 கிராம் லாபம். அதாவது 28.6 சதவீத லாபமா?’’

‘’ஆமாம்’’ 

‘’ஸ்விட்சர்லாந்து துபாய்ல தங்கம் வாங்கி இங்க வித்தா கிடைக்கற லாபத்தை விட நகை வியாபாரிகளுக்கு கூலி சேதாரத்துல லாபம் கிடைக்கும் போல இருக்கே’’ என்றேன்.    

தேடி வந்த பேரருளாளன்

 

இன்று எனது நண்பர் எனக்கு சீர்காழி அருணாசலக் கவிராயரின் ‘’இராம நாடகக் கீர்த்தனைகள்’’ நூலை அளித்தார். ஸ்ரீராமனை தேடி வந்த பேரருளாளனாக அத்தருணத்தில் உணர்ந்தேன். 

Saturday, 31 January 2026

இரண்டு கோணங்கள்

 லாக் டவுன் அறிவிக்கப்பட்ட போது 20 நாட்களுக்கு மேல் எங்கும் வெளியில் செல்ல முடியாத நிலை இருந்தது. அப்போது வீடுகளில் விதவிதமான உணவுப் பண்டங்கள் தயாரிக்கப்பட்டன. பாயசம், பஜ்ஜி, கேசரி, சர்க்கரைப் பொங்கல், வடை ஆகிய பண்டங்கள் தயாரிக்கப் பட்டன. உலகமே ஓர் இடரில் இருக்கும் போது இவ்விதமான விதவிதமான பண்டங்கள் தயாரிப்பது உகந்ததா கஞ்சி , கூழ் போன்ற எளிய உணவுகள் மட்டும் தயாரித்து உண்ணக் கூடாதா என்பது ஒரு கோணம். அதனை நான் கேட்ட போது பெண்கள் அதற்கு ஒரு பதில் சொன்னார்கள். அதாவது எல்லாரும் புதிய விதமான இடரில் அதனை எவ்விதம் எதிர்கொள்வது என அறியாமல் திகைத்து இருக்கும் போது சுவையான ருசியான உணவுகள் அளிக்கப்பட்டால் அந்த திகைப்பிலிருந்து மீள வழி பிறக்கலாம். எளிய உணவுகளை வழக்கமான காலத்திலேயே பழகாதவர்கள் இவ்விதமான இடர் மிகுந்த காலங்களில் உண்டால் மேலும் திகைப்பும் சோர்வும் அடைவார்கள் என்று கூறினார்கள். 100 க்கு 99 பேருக்குப் பொருந்தும் நடைமுறைக் கோணம் பெண்கள் தெரிவித்தது என எண்ணுகிறேன். 

கடிதம் (2)

 அன்புள்ள நண்பனுக்கு,

நலமாக இருக்கிறாயா? வீட்டில் அனைவரும் நலம்தானே? அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் அனைவரும் நலமா? நீ குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் குடும்பத்தில் அனைவரும் நலமாக இருக்கிறார்கள் அல்லவா? வாழ்க்கையில் நலம் விசாரித்தல் மிகவும் நல்ல மங்களமான விஷயம் என்று தோன்றுகிறது. நாம் - மனிதர்கள் - ஒற்றுமையுடன் இருப்போமென்றால் யாவரும் நலத்துடன் சிறப்பாக இருப்பது சாத்தியமே என்று மனதுக்குப் படுகிறது. நடுவயதுக்கு வரும் போது மனிதன் சில விஷயங்களை உணர்கிறான். அனுபவம் உணர்த்தும் விஷயங்கள். உனது ஊருக்கு வர வேண்டும் என்பதும் உனது அலுவலகம் இருக்கும் இடத்தைக் காண வேண்டும் என்பதும் உன்னுடன் ஒரு சில நாட்களாவது இருக்க வேண்டும் என்பதும் எனது தீவிரமான விருப்பங்கள். இருப்பினும் பல நாட்களாக நிறைவேறாமலேயே இருக்கிறது. அதற்கான தருணம் விரைவில் வாய்க்கும் என நம்புவோம். 

உன்னுடைய கவிதைத் தொகுப்பையும் சிறுகதைத் தொகுப்பையும் கொண்டு வருவதற்கான பணிகளைத் துவக்கலாம் என இருக்கிறேன். ஃபிப்ரவரி மாதம் பிறக்க இருக்கிறது. மாதங்களில் ஃபிப்ரவரி ஒரு மினிமலிஸ்ட் மாதம். லீப் ஆண்டுக்குக் கூட 29 நாட்கள் தான்! இந்த ஃபிப்ரவரியின் 28 நாட்களில் உனது படைப்புகளை நூலாகக் கொண்டு வந்து விடலாம் என எண்ணுகிறேன். நாம் இருவரும் சந்தித்தோம் எனில் உரையாடல் மட்டுமே நடக்கும். படைப்புகளைத் தொகுக்கும் பணி நடக்காது. எனவே என்னுடைய எண்ணப்படி தொகுத்து உனக்கு அனுப்புகிறேன். நீ அவற்றில் ஏதும் மாற்றம் செய்ய நினைத்தால் செய்து விடவும். இந்த விஷயங்களில் எனக்கு ஓரளவு பரிச்சயம் உண்டு என்பதை நீ அறிவாய். 

கைப்பட கடிதம் எழுதத் தொடங்கி சென்ற மாதம் உனக்கு ஒரு கடிதம் எழுதிய பின் அடுத்த கடிதமும் உனக்குதான் எழுதியிருக்கிறேன். சமீபத்தில் நண்பர் ஒருவரின் வீட்டில் ‘’5 சப்ஜெக்ட் நோட் புக்’’ என ஒன்றைப் பார்த்தேன். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அனேகமாக 2 குயர் நோட்டை 5 ஆகப் பிரித்திருந்தார்கள். ஒரு பிரிவுக்கும் இன்னொரு பிரிவுக்கும் மத்தியில் ஒரு வண்ணக் காகிதம் வைத்திருந்தார்கள். எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. ஐந்து பிரிவுகள் என்பது தமிழ், இங்கிலீஷ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என நினைத்துக் கொண்டேன். எம் -1, எம் -2, ஸ்ட்ரெந்த் ஆஃப் மெட்டீரியல், ஆர். சி. சி-1, ஈ.டி என நினைவுக்கு வந்திருக்கலாம். மானசீகமாக இன்னும் பள்ளி நாட்களைத் தாண்டவில்லையோ என்ற எண்ணம் ஏற்பட்டது. 

இந்த மாதம் ஒரு வாரம் குஜராத் சென்றிருந்தது மனதுக்கு உற்சாகமாக இருந்தது. ஃபிப்ரவரியில் ஒரு வாரம் உத்திரப் பிரதேசம் செல்கிறேன். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒரு வாரம் பயணம் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள். வாழ்வின் மிகப் பெரிய வரங்களாகவும் வரப்பிரசாதங்களாகவும் செல்வமாகவும் அவை அமையும். இமயமலையில் மலையேற்றம் செய்ய அந்த ஒரு வாரத்தை திட்டமிட்டுக் கொள். 

உனக்கு கடிதம் எழுதியது மகிழ்ச்சி தருகிறது. 

அன்பும் பிரியமும்

பிரபு

Friday, 30 January 2026

*சங்கிரகம்*

சில நாட்களாக தளத்தில் ’’காவிரி போற்றுதும்’’ பணிகளை மீள்பதிவு செய்து கொண்டிருந்தேன். அது பணிகளைத் தொகுத்துக் கொள்ள உதவிகரமாக இருந்தது. என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை புறவயமாக அறியச் செய்தது. இச்செயல்கள் அமைப்பின் செயல்கள் மட்டும் அல்ல ; மக்களின் செயல்களும் கூட. மக்கள் பங்களிப்பு இருக்கும் விதத்திலேயே ‘’காவிரி போற்றுதும்’’ தன் செயல்களை வடிவமைக்கிறது. எனவே மக்களுக்கு முதற்கண் நன்றி தெரிவிக்கிறது.  தமிழ்ச் சூழலில் எவ்விதமான பங்களிப்பும் நிதிப்பங்களிப்பே என்ற மனப்பதிவு பரவலாக உள்ள நிலையில் நூற்றுக்கணக்கான - ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் செயல்கள் மூலம் பங்கெடுப்பதும் பெரும் பயன் விளைவிக்கக் கூடியது என்பதை ‘’காவிரி போற்றுதும்’’  அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளது. 

புதிதாக ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என ‘’காவிரி போற்றுதும்’’ கூறும் போதெல்லாம் அதற்கு ஊக்கம் தந்து அது நிகழ்வதற்கு சகலவிதமான உதவிகளும் செய்து அதனைச் சாத்தியமாக்குவது நண்பர்களே. அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல இந்த தருணம் பொருத்தமானது ஆகும். 

உண்மையில் ‘’காவிரி போற்றுதும்’’  ஓர் இணைப்புப் பாலமாகவே செயல்படுகிறது. சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் ஒரு பக்கம். சாமானிய மக்கள் இன்னொரு பக்கம். அவர்கள் இருவரும் ‘’காவிரி போற்றுதும்’’ வழியாக இணைக்கப்படுகிறார்கள். அந்த இணைப்பின் மூலம் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்கிறது என்பதே உண்மை. 


















Thursday, 29 January 2026

வடக்கும் தெற்கும்

இன்று காலை சிதம்பரம் சென்றிருந்தேன். நண்பர் ஒருவரைச் சந்திக்க. சமீபத்தில் சிறப்பான முதலீட்டு யோசனை ஒன்று மனதில் உதித்தது. அதனைத் துல்லியமாகச் செயலாக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டேன். இந்த விஷயத்தை ஒத்த மனப்பான்மையும் ஒற்றுமையில் நம்பிக்கையும் கொண்டவர்கள் சேர்ந்து சிந்தித்தால் சேர்ந்து செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என்பதால் நண்பரைச் சந்தித்து விபரம் கூறினேன். நண்பர் நான் சொன்ன விஷயங்களை உள்வாங்கிக் கொண்டார். பரிசீலிக்கிறேன் என்று கூறினார். காலை 6 மணிக்கு ஊரிலிருந்து புறப்பட்ட நான் 12 மணிக்கு ஊர் திரும்பினேன். இன்று காலை 11 மணி அளவில் திருவாரூரில் ஒருவரைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தேன். அவருக்கு 11 மணிக்கு ஃபோன் செய்தேன். அவர் மதியம் 3 மணிக்கு வரச் சொன்னார். 

பனி படர்ந்திருக்கும் சூழலில் காலையில் பயணித்தது சிறு உடற்சோர்வை அளித்தது. மதிய உணவருந்தி விட்டு அலாரம் 15 நிமிடத்துக்கு வைத்து விட்டு உறங்கி விட்டேன். அலாரம் அடித்ததும் எழுந்து திருவாரூர் கிளம்பினேன். சென்ற விஷயம் சுபமங்களமாக நிகழ்ந்தது. ‘’காவிரி போற்றுதும்’’ தொடர்பான பணி. 

வடக்கும் தெற்குமாக இன்று மட்டும் 160 கி.மீ பயணம்.   

காலைக்குளிர் (நகைச்சுவைக் கட்டுரை)

இன்று காலை நண்பரைச் சந்திக்க சிதம்பரம் செல்ல வேண்டியிருந்தது. காலை 4.45க்கு அலாரம் வைத்தேன். முதல் அலாரத்திலேயே எழுந்து விட்டேன். வென்னீருக்கு ஹீட்டரை ஆன் செய்தேன். கொஞ்ச நேரத்தில் குளித்துத் தயாரானேன். 40 கிலோ மீட்டர் தூரம் தான். இருந்தாலும் வண்டி செண்டிமீட்டர் கணக்கில் நகர்ந்து கொண்டிருந்தது. வழக்கமான வேகம் இயக்க முடியாததால் டிரைவிங் ரொம்ப கடினமாக இருந்தது. மெல்ல மெல்ல ஊர்ந்து சிதம்பரம் சென்று சேர்ந்தேன். நண்பர் இந்த குளிரில் எவ்விதம் வந்தீர்கள் என்று கேட்டார். அவரது அலைபேசி வெப்பநிலை 22 டிகிரி செல்ஷியஸ் எனக் காட்டியது. குளிர்ப்பிரதேசங்களின் வெப்பநிலை. ஏ.சி யை கோடைக்காலத்தில் 21 டிகிரி என செட் செய்வது தமிழகத்தின் வழக்கம். காலை உணவு அருந்தி விட்டு அங்கிருந்து காலை 10 மணிக்குப் புறப்பட்டேன். அப்போதும் முழுமையாக குளிர் நீங்கியிருக்கவில்லை.  

முகச்சவரம் (நகைச்சுவைக் கட்டுரை)

 வாரத்துக்கு ஒருநாள் முகச்சவரம் செய்து கொள்வது என வைத்திருந்தேன். ஒரு வாரம் என்பது இரண்டு வாரம் ஆகி விடும். சமயத்தில் 20 அல்லது 30 நாளையும் தொட்டு விடும். முக்கியமாக எவரையும் சந்திக்கச் சென்றால் முகச்சவரம் செய்து கொண்டு செல்ல வேண்டும் என நினைப்பேன். ஆனால் அது செயலாகாது. புதனற்று ஒருவரைச் சந்திக்க வேண்டும் எனில் திங்கள்கிழமையிலிருந்தே சவரம் செய்ய வேண்டும் என நினைப்பேன். திங்கள் செவ்வாய் கடந்து புதனும் வந்து விடும். சந்திப்பும் நிகழ்ந்து விடும். அதன் பின் அடுத்த நாள் சவரம் செய்து கொள்வேன். திங்கள் உதித்த எண்ணம் வியாழனில் நிறைவேறும். ஒவ்வொரு முறை கடையில் சவரம் செய்யும் போதும் தினமும் வீட்டில் முகச்சவரம் செய்ய வேண்டும் என நினைப்பேன். அது அவ்வளவு எளிதில் நடந்ததில்லை.  

Monday, 26 January 2026

மரக்கன்றுகள் உருவாக்கம்

’’காவிரி போற்றுதும்’’ சார்பில் மரக்கன்றுகள் வழங்க ஏதுவாக மரக்கன்றுகள் உருவாக்க இடம் பார்த்து வருகிறேன். திருவீழிமிழலை அருகில் பொருத்தமான இடம் ஒன்று அமைய வாய்ப்பு உள்ளது. அந்த ஊரில் ஒருவர் அறிமுகம் ஆனார். ஜனவரி 4 அன்று அவரை முதன்முதலாக சந்தித்தேன். பின் அலைபேசியில் சிலமுறை பேசினேன். ஆமதாவாத் சென்ற போது அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். ஊர் திரும்பியதும் எனது வலைப்பூவின் முகவரியை அவருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பினேன். அவர் ‘’வானெழும் பட்டங்களின் நிலம்’’ வாசித்து விட்டு எனக்கு ஃபோன் செய்தார். இன்று அவரை சந்தித்தேன். ஊரில் மேலும் இருவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கு ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் பிடித்திருந்தது. பொருத்தமான இடம் அமைந்தால் அந்த பிரதேசத்துக்கே பலன் இருக்கும் என்பதை சொன்னேன். 

குஜராத் சென்றிருந்த போது அங்கே 5 அடியிலிருந்து 6 அடி உயரம் மட்டுமே வளரக்கூடிய செடி முருங்கைகள் பயிராவதைக் கண்டேன். வல்லம்படுகை, ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்கள் செடி முருங்கைக்கு பேர் போனவை. 

நம் சமூகத்தில் மக்களுக்கு இரத்த சோகை அதிகம் உள்ளது. முருங்கை இரும்புச்சத்து மிக்கது. முருங்கை அதிகம் பயிராக வேண்டும். எந்த காய்கறியும் உணவாக மாறுவதால் நற்பயனையே விளைவிக்கிறது. கிராம மக்களுக்கு செடி முருங்கை கன்றுகளும் அதிக அளவில் வழங்க வேண்டும் என முடிவு செய்து கொண்டேன்.