பிரபு மயிலாடுதுறை
Saturday, 6 June 2026
மனிதர்களை அவதானித்தல்
நேற்றும் இன்றும்
நேற்று என்னுடைய கவனத்துக்கு ஒரு இடம் வந்தது. அந்த இடம் 1.5 ஏக்கர் பரப்புடையது. அந்த இடத்தின் இரு பக்கங்களில் சாலைகள் உள்ளன. மொத்த இடத்தைத் தோராயமாக 2000 சதுர அடி கொண்ட 30 மனைகளாகப் பிரித்துக் கொடுக்க முடியும். மனையின் அகலத்தை ஒட்டி சாலை செல்வதால் அந்த இடத்தை மொத்தமாக வாங்கி 30 மனைகளாகப் பிரித்து விற்பனை செய்யத் தொடங்கலாம். இடத்தின் உரிமையாளரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் R என்ற விலையைக் கூறினார். அந்த விலைக்கு வாங்கினால் 2R என்ற விலைக்கு விற்பனை செய்ய முடியும். நேற்று காலை அந்த இடத்தைப் பார்த்த பின் நில உரிமையாளர் சந்திப்பு இருந்தது. முடிய மாலை 3 மணி ஆகி விட்டது. அதன் பின் வீட்டுக்கு 5 மணிக்கு வந்தேன்.
இன்று காலை 8.30 மணிக்கு அந்த இடத்தைக் காணப் பேருந்தில் கிளம்பி சென்றேன். 11 மணி அளவில் அங்கு சென்று சேர்ந்தேன். அந்த இடம் இருக்கும் பகுதிக்கு மிக அருகில் ஒரு பெரிய பாலிடெக்னிக் கல்லூரி இருந்தது. அங்கே ஒரு பெரிய கல்லூரியும் பெரிய பள்ளியும் இருந்தன. இடத்துக்குப் பக்கத்தில் நிறைய 2000 சதுர அடி அளவு கொண்ட மனைகள் விற்பனை செய்யப்பட்டு இரும்பு வேலியிடப்பட்டிருந்தன. அவற்றில் பலவற்றில் பெரிய வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அந்தப் பகுதியில் மனைகள் என்ன விலை போகின்றன எனப் பலரிடம் விசாரித்தேன். எனது விசாரணை நேற்று என்னிடம் கூறப்பட்ட விஷயங்களை ஊர்ஜிதம் செய்தன. இதைப் போன்ற பணிகளில் மோட்டார்சைக்கிள் பெரிய அளவில் துணை புரியும். இருந்தாலும் இன்று பேருந்தில் சென்று அந்த இடத்தைச் சுற்றி நடந்து சென்று விசாரித்து வந்தேன். அது அந்த இடத்தைக் குறித்து நுணுக்கமாக அறிய உதவியது. நான் அங்கே சுற்றிக் கொண்டிருந்த பொழுது நண்பகல் வேளை. வெயில் உக்கிரமாக இருந்தது. ரியல் எஸ்டேட்டில் இடம் பார்ப்பது இடம் குறித்து விசாரிப்பது ஆகியவற்றைப் பகலில் தான் செய்ய வேண்டும். நிலத்துக்கு சூரிய வெளிச்சத்தைப் போல நெருக்கமான நண்பன் கிடையாது. பணி முடிந்ததும் ஊர் திரும்பினேன்.
ஊருக்கு வடக்கே 40 கி.மீ தொலைவில் இருக்கும் ஊரில் நான் பார்த்த இடம் இருக்கிறது.
புகாரும் தீர்வும்
நேற்று வங்கிக்கு பணம் செலுத்தச் சென்றிருந்தேன். சாளரத்தில் ரூபாய்த் தாள்களை எண்ணும் இயந்திரத்தின் டிஸ்பிளே வெளியில் தெரியும் வண்ணம் இருந்தது. காசாளர் தன்னிடம் அளிக்கப்படும் பணத்தை எந்திரம் மூலம் எண்ணுவது எவ்வளவு தொகை என்பதை வாடிக்கையாளர்களும் சரிபார்த்துக் கொள்வதற்காக அந்த டிஸ்பிளே வைக்கப்படுகிறது. நான் சென்ற போது அந்த டிஸ்பிளே சரிவர இயங்கவில்லை ; அதாவது அந்த டிஸ்பிளே எப்போதும் 9900 என்னும் எண்ணைக் காட்டிக் கொண்டு இருக்கிறது. ஏதோ தொழில்நுட்பக் கோளாறு.
கோடிக்கணக்கான ரூபாய் புழங்கும் அந்த வங்கி குறைந்தபட்சம் என்ன செய்ய வேண்டும் ? தொழில்நுட்பக் கோளாறுகளால் எந்திரம் சரிவர இயங்கவில்லை என்னும் தகவலை ஓர் அறிவிப்பாக எழுதி டிஸ்பிளே அருகில் வைத்திருக்கலாம். வங்கிக்கு இருக்கும் வசதிகளுக்கு அவர்கள் ஒரு மெக்கானிக்கை அழைத்து சில நிமிடங்களில் இந்த பிரச்சனையைத் தீர்த்திருக்க முடியும். வங்கி பராமரிப்பு செலவுகளுக்காக தினந்தோறும் பெரும் பணம் அளிக்கப்படுகிறது. வங்கி ஊழியர்கள் பெறும் ஊதியம் என்பது மிகப் பெரும் தொகை. அவர்களுக்குப் பெரும் ஊதியம் அளிக்கப்படுவது வாடிக்கையாளர்களுக்குப் பொருட்டல்ல. பெரும் ஊதியம் பெற்றுக் கொள்ளும் வங்கி ஊழியர்கள் அதற்கான பொறுப்புடன் வங்கியை நிர்வகிக்க வேண்டும் என்னும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தவே வங்கிகளின் சேவைக் குறைபாடு குறித்து பேசப்படும் போதெல்லாம் அவர்கள் ஊதியம் குறித்துப் பேசப்படுகிறது.
நான் மென்மையாக காசாளரிடம் டிஸ்பிளே சரிவர வேலை செய்யவில்லை என்பதை சுட்டிக் காட்டினேன்.
‘’கொஞ்ச நாளாவே அப்படித்தான் சார் இருக்கு’’ என்றார் அந்தப் பெண்மணி.
என் பணி முடிந்ததும் வங்கி மேலாளரிடம் இந்த விஷயத்தைத் தெரிவித்து விட்டுச் செல்லலாம் என நினைத்தேன். அவர் என்ன பதில் சொல்வார் ‘’என்னன்னு பாக்கறன்’’ என்பார்.
முதல் விஷயம் ஒரு முக்கிய விஷயம் பல நாளாக மேலாளர் கவனத்துக்கு வராமல் இருக்கிறது என்பது எதைக் காட்டுகிறது என்றால் மேலாளருக்கு வாடிக்கையாளர் சாளரத்தில் என்ன நடக்கிறது என்னும் விஷயமே தெரியவில்லை. எந்த வாடிக்கையாளரும் இது குறித்து புகார் தெரிவிக்கவில்லை என்றால் அவர்கள் வங்கி நிர்வாகத்துடன் சகஜமாக உணரவில்லை என்பதே அதன் அர்த்தம்.
ஒரு மேலாளர் பொறுப்புள்ளவர் எனில் என்ன செய்ய வேண்டும் என்றால் டிஸ்பிளே வேலை செய்யவில்லை என்னும் புகாரைக் கூறும் வாடிக்கையாளரிடம் அவரது தொடர்பு எண்ணை வாங்கிக் குறித்துக் கொண்டு ‘’உடன் சரி செய்து விட்டு உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன்; சுட்டிக் காட்டியதற்கு நன்றி ‘’ எனத் தெரிவிக்க வேண்டும். அவ்விதமே சரி செய்து தகவல் தெரிவிக்க வேண்டும்.
நான் சென்ற வங்கிக் கிளை சிறியது. ஒரு மேலாளர் , ஒரு கிளை மேலாளர், இரண்டு எழுத்தர்கள், இரண்டு உதவியாளர்கள், இரண்டு தற்காலிகப் பணியாளர்கள் என 8 பேர் பணி புரியும் இடம் அது. தினமும் வேலை நேரத்தில் குறைந்தது 100 வாடிக்கையாளர்களாவது வருவார்கள். வங்கி ஊழியர்கள் தங்களை ஊழியர்கள் என எண்ணுவதே இல்லை ; தங்களைக் குறு நில மன்னர்களாகவே எண்ணுகின்றனர். மேலும் அவர்களுக்கு வாடிக்கையாளர்கள் மீது எப்போதும் ஓர் இளக்காரம் இருக்கிறது. வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணுபவர்களே வங்கி ஊழியர்களில் 99 சதவீதத்தினர். நான் என்னுடைய பல வருட அனுபவத்தில் உணர்ந்த விஷயம் இது.
வீட்டுக்கு வந்ததும் சி.பி.கி.ராம்.ஸ்-ல் வங்கிக் கிளையின் பணம் எண்ணும் எந்திரத்தின் டிஸ்பிளே வேலை செய்யாததால் வாடிக்கையாளர் குழப்பம் அடைகின்றனர் என்னும் உண்மையைப் புகாராக பதிவு செய்தேன்.
இந்தத் தகவல் சென்னையில் இருக்கும் வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு முதலில் சென்றது. பின்னர் வங்கியின் ஸோனல் அலுவலகத்துக்கு தகவல் சென்றது. மேலிடத்திலிருந்து சம்பந்தப்பட்ட இடத்துக்கு வருவதே சி.பி.கி.ராம்.ஸ்-ன் வழிமுறை. இன்று எனது புகாருக்கு சென்னை அலுவலகம் பதில் தந்தது.
அதாவது , நான் குறிப்பிட்ட வங்கிக் கிளையின் பணம் எண்ணும் எந்திரத்தின் டிஸ்பிளே சரி செய்யப்பட்டு விட்டது என்றும் ஸோனல் மேனேஜர் கிளையின் ஊழியர்களை சிறப்பான வாடிக்கையாளர் சேவையில் ஈடுபட அறிவுறுத்தியதாகவும் எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சரி செய்யப்பட்ட எந்திரத்தின் ஒளிப்படமும் பதிலுடன் இணைக்கப்பட்டிருந்தது.
Friday, 5 June 2026
இறைவனின் உள்ளங்கை
பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். ஒரு குடும்பம் வண்டியில் ஏறியது. தந்தையின் தோளில் ஓர் இளமைந்தன் சாய்ந்து கொண்டிருந்தான். தந்தை என்னருகில் அமர்ந்து கொண்டார். இளமகன் என்னை நோக்கி தன் கையை நீட்டினான். குழந்தைக்கு இன்னும் ஒரு வயது ஆகியிருக்காது. ஒரு வயதை நோக்கி மிக ஆர்வமாகச் சென்று கொண்டிருக்கிறான். என் கையை நீட்டினேன். என் விரல் ஒன்றை இறுக்கிப் பிடிக்க முயன்றான். அவனது உள்ளங்கை மிக மென்மையாக இருந்தது. அது இறைவனின் உள்ளங்கை என்பதை அக்கணம் உணர்ந்தேன்.
Thursday, 4 June 2026
கொல்லாபுரம்
Wednesday, 3 June 2026
பஸ் பயணம்
இன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டேன். இரு சக்கர வாகனத்தை நண்பரின் ஹார்டுவேர் கடைக்கு முன் நிறுத்தி விட்டு வலது பக்கக் கண்ணாடியில் எனது தலைக்கவசத்தை மாட்டினேன். நண்பர் வந்து தலைக்கவசத்துடனான வாகனம் என்றால் எனது வாகனம் என்பதை புரிந்து கொள்வார். அருகிலிருக்கும் பேருந்து நிலையத்துக்கு நடந்து சென்று ஊரிலிருந்து 40 கி.மீ வடக்கில் இருக்கும் ஊருக்குப் பயணமானேன். வைகாசியின் வளர்பிறை முகூர்த்தங்கள் நிறைவு பெற்று விட்டன. எனவே வாகனம் பெரிய கூட்டமில்லாமல் இருந்தது. ஒருமணி நேரம் அளவில் அங்கே சென்று சேர்ந்தேன். பேருந்து நிறுத்தத்திலிருந்து நண்பரின் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். 1990களில் ஒருவரைக் காண நடந்து செல்வது என்பது மிக அதிகமாக நிகழும் செயல். சைக்கிளில் மனிதர்கள் செல்வதும் மனிதர்கள் நடந்து செல்வதும் எப்போதும் காணக் கிடைக்கும் செயல். ஒரு வீட்டின் முன் ஆலமரம் இருந்தது. அதன் விழுதுகளைத் தொட்டுப் பார்த்தேன். அந்தப் பகுதியில் நிறைய புங்கன் மரங்கள் இருந்தன. நாம் மனித உறவுகளையும் மனித நட்பையுமே உறவு என்றும் நட்பு என்றும் எண்ணுகிறோம். மரங்கள் மிகவும் உணர்வுபூர்வமானவை. மிகவும் நட்பார்ந்தவை. நான் மரங்களைத் தொட்டுப் பார்க்க விரும்புவேன். நண்பரைச் சந்தித்தேன். வழக்கமான அலுவலக நேரத்துக்கு 2 மணி நேரம் முன்னால் அவரைச் சந்திக்கிறேன். முதலில் ஒரு விஷயத்தைச் சொன்னேன். பின்னர் இன்னொரு விஷயத்தைச் சொன்னேன். அவர் ஒரு விஷயம் குறித்து கேட்டார். ஒரு விஷயம் குறித்து சொன்னார். தேநீர் அருந்துகிறீர்களா எனக் கேட்டார். தேநீர் வந்தது. புறப்படும் போது அவர் ஊரில் இருந்த அவருடைய பூர்வீக வீட்டில் பழுத்திருந்த ஒரு பெரிய பலாப்பழத்தை ஒரு பிக் ஷாப்பர் பையில் என்னிடம் கொடுத்தார்கள். அவ்வளவு பெரிய பழம் என்பதால் ‘’காரில் தானே வந்தீர்கள்?’’ எனக் கேட்டார்கள். நான் காரை விட மிகப் பல மடங்கு பெரிய வாகனத்தில் வந்திருந்தேன். இருப்பினும் அவர்கள் கேள்விக்கு ஆம் என்னும் உடன்பாட்டு பதிலையே அளித்தேன். பலாப்பழத்துடன் பேருந்து நிலையம் நோக்கி நடந்தேன். இவ்விதம் நடப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அர்த்தபூர்வமான ஒரு செயலைச் செய்வதாய் மனம் எண்ணியது. பேருந்து நிலையம் எதிரில் அமைதியான பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அங்கே முதலில் சாம்பார் இட்லி சொன்னேன். பின்னர் கல்தோசை சொன்னேன். சந்திப்பு குறித்து என் நண்பர் ஒருவருக்கு விபரம் சொன்னேன். அவர் நான் இருந்த ஊருக்கு மேற்கே 70 கி.மீ தொலைவில் இருந்தார். அவரைச் சந்திப்பது நலம் பயப்பது என எண்ணினேன். பேருந்தில் அவர் இருந்த ஊருக்குப் பயணமானேன். முதலில் 40 கி.மீ மேற்கே பயணித்து பின்னர் அங்கே இறங்கி அடுத்த பேருந்தில் ஏறி அடுத்த 30 கி.மீ பயணிக்க வேண்டும். உத்தேசித்த நேரத்தை விட 20 நிமிட தாமதமாக சென்று சேர்ந்தேன். என் கையில் பெரிய பலாப்பழம் இருந்தது. அதனை நண்பருக்குக் கொடுத்தேன். என்னிடம் இருப்பதைக் கொடுப்பது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சி தருவது. நண்பருடன் விபரம் சொன்னேன். புதிய விபரம் ஒன்றும் சொன்னேன். 30 நிமிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு ஊருக்குப் புறப்பட்டேன். ஊர் நான் இருக்கும் இடத்திலிருந்து 35 கி.மீ கிழக்கே இருந்தது. பேருந்து நிறுத்தத்தில் பஸ் பிடித்து ஊர் வந்து சேர்ந்தேன். நண்பர் கடைக்கு வந்தேன். அப்போது நேரம் 2.15. நண்பர் உணவருந்த வீட்டுக்குச் சென்றிருந்தார். நான் வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
அரசாங்கம் என்பது அறிக்கைகள்
ஒரு விஷயத்தை எவரும் அவதானிக்கலாம் ; அரசாங்கச் செயல்பாடுகளில் கணிசமானவை அறிக்கைகள் தயாரித்தலே. ஒரே அறிக்கையை குறுகிய காலத்துக்குள்ளோ அல்லது நீண்ட காலத்திலோ திரும்பத் திரும்ப தயாரித்து அளித்துக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கும். ஒரு காலத்தில் அதனால் தான் இந்திய அரசியலில் வழக்கறிஞர்கள் மிக அதிக அளவில் ஈடுபட்டனர். மொழி மற்றும் கலைப் படிப்புகள் படித்தவர்களின் தேவை இந்திய அரசியலில் இருந்தது. இந்திய ஆட்சிப் பணியாளர்கள் தேர்வில் மொழியறிவு தேர்ச்சிக்கான முக்கிய விஷயமாக இருந்தது ; இருக்கிறது. இந்திய ஆட்சிப்பணி தன் தேர்வர்களின் ஆங்கில மொழியறிவை முக்கியமாக நினைக்கிறது. தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவருக்கு வேறு மாநிலத்தில் பணி நியமனம் நிகழ்ந்தால் அந்த மாநில மொழியைக் கற்று அதிலும் தேர்வு எழுதி தேர்ச்சி அடைய வேண்டும் என்னும் தேர்வுமுறையைக் கொண்டிருக்கிறது. சட்டம் இயற்றப்படுதல் என்பது முன்பு சட்டம் படித்தவர்களை அதிகம் சார்ந்திருந்தது. சட்டங்கள் அதிகமாக அதிகமாக சட்டங்கள் குடிமக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகையில் அதிகாரிகள் சட்ட திருத்தங்களை மேற்கொள்வதில் பங்களிப்பு ஆற்றத் தொடங்கினர். இன்று இந்திய அரசியலில் நீதித்துறையும் வழக்கறிஞர்களும் ஒரு தனிக்குழுவாக உள்ளனர். அதிகாரவர்க்கம் தனிக்குழுவாக உள்ளது. அரசியல்வாதிகள் தனிக்குழுவாக உள்ளனர். இவர்களுக்கிடையேயான மோதல்களும் ஒத்துப் போதல்களுமே அரசாங்கத்தின் இயக்கம்.
இந்திய ஜனநாயகத்தில் கடைசி குடிமகனின் பங்களிப்பு கூட தினந்தோறும் இருக்கிறது. இன்று நாட்டின் கடைசி குடிமகன் கூட ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.1 என்ற அளவில் ஜி.எஸ்.டி செலுத்துகிறான். அவ்விதம் எனில் ஒரு நாளைக்கு ரூ.140 கோடி. ஒரு மாதத்துக்கு ரூ.4200 கோடி. ஒரு ஆண்டுக்கு ரூ.49,200 கோடி. சென்ற ஆண்டு மத்திய அரசின் ஜி எஸ் டி வருமானம் ரூ. 22 லட்சம் கோடி.
நம் நாடு சுதந்திரம் அடைந்த போது நம் நாட்டின் வரி வருவாய் என்பது மிகக் குறைவாக இருந்தது. அரசாங்கம் செயல்படும் விதம் ஒருவிதமாக இருந்தது. இன்று நாட்டின் வருவாய் பெருகியுள்ளது. அதற்கேற்ற விதத்தில் பொதுமக்கள் மனநிலையிலும் பங்களிப்பிலும் மாற்றம் இருக்க வேண்டும். வருவாய் வளர்ச்சியை அப்போது தான் நாட்டு மக்களும் சமூகமும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இரண்டு தினங்களுக்கு முன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாள் முகாமுக்குச் சென்றிருந்தேன். அங்கே இணைய இணைப்பு கிடைக்கவில்லை. மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்து ஒப்புகைச்சீட்டைப் பெற்றுக் கொண்டு சென்றனர். இதனை நான் தொழில்நுட்பப் பிரச்சனையாகப் பார்க்கவில்லை. இதில் நான் வேறு ஒரு கோணத்தைக் காண்கிறேன். இன்று அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கும் அரசு அலுவலகச் செயல்பாடுகளுக்கும் அரசு வருமானத்தின் பெரும் தொகையை அளிக்கிறது. ஆனால் அரசு ஊழியர் மனோபாவத்தில் மாற்றம் இல்லை. அந்த மாற்றம் நிகழ வேண்டிய காலகட்டம் வந்து விட்டது.