இந்திய ஜனநாயகத்தின் அங்கமான மாநில அரசாங்கங்களின் இயங்குமுறையின் ஒரு சிறப்பான அம்சம் என்பது என்னவெனில் எந்த ஒரு பிரஜையும் எந்த ஒரு அரசு அலுவலகத்துடனும் தபால் மூலமாக தொடர்பு கொள்ள முடியும் என்பதே. தபாலில் அனுப்பப்படும் கடிதங்கள் முதல்கட்டமாக தபால்களுக்கென உள்ள பதிவேட்டில் பதியப்பட வேண்டும். இந்தப் பணிக்கெனவே ஒவ்வொரு அலுவலகத்திலும் தபால் பிரிவு என ஒரு பிரிவு இருக்கிறது. அதன் வேலை என்னவெனில் அலுவலகத்துக்கு வரும் தபால்களைப் பிரித்து அதன் உறையையும் கடிதத்துடன் சேர்த்து தைத்து அல்லது ஸ்டேப்ளர் செய்து அதற்கு எண்ணிட்டு தபால் அலுவலகத்தை வந்தடைந்த தேதியைக் குறிப்பிட்டு அட்டவணையிட வேண்டும். கடிதத்தை அனுப்பியவர் யார் கடிதம் யாருக்கு அனுப்பப்பட்டது என்பதை முதலில் தபால் பிரிவு பதிவு செய்து கொள்ளும். அதன் பின் அந்தத் தபால்கள் ஒரு எழுத்தருக்குச் செல்லும். அதன் பின் மேலதிகாரிக்குச் செல்லும். பொதுவாக அரசு அலுவலகங்கள் எந்த தபாலின் மீதும் நடவடிக்கை எடுக்காமல் நிலுவையிலேயே வைக்கும் என்பது நடைமுறை. ‘’எந்த விஷயத்தின் மீதும் முடிவெடுக்காமல் இருப்பதே ஒரு முடிவு’’ என்னும் நிலைப்பாடு கொண்டவை அரசு அலுவலகங்கள். இருந்தாலும் ஓர் அலுவலகத்துக்கு ஒரு மனு அனுப்பப்படுகிறது எனில் அந்த மனுவின் உள்ளடக்கம் அந்த அலுவலகத்தில் இருக்கும் அனைவருக்கும் அனேகமாகத் தெரிந்து விடும். அதிகாரபூர்வமாக அல்லது அதிகாரபூர்வமில்லாமலோ அந்த விஷயம் வெளியில் கசியும். மனுவின் கோரிக்கை நிறைவேறவோ அல்லது நிலுவைக்குச் செல்லவோ வாய்ப்பு உண்டாகும். அரசாங்கம் எல்லா தபால்களையும் பராமரித்து வைக்க வேண்டும் ; நிலுவைக்குச் சென்றால் பல மாதங்கள் பல வருடங்களுக்குப் பின்னும் அந்த மனு உயிர் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
ஓர் அரசாங்க அலுவலகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பும் போது அதனை பதிவுத்தபாலாக அனுப்புவது உசிதம். அந்த பதிவுத்தபாலின் ஒப்புகை அட்டையை பாதுகாத்துக் கொள்வது நலம். அனுப்பும் அஞ்சல் உறையின் மேற்புறம் ‘’பதிவுத் தபால்’’ எனக் குறிப்பிடப்பட்டால் அந்த மனு கூடுதல் கவனம் பெற வாய்ப்பு உள்ளது. மனுவை அனுப்புபவர் அரசு அலுவலகம் எந்த தேதியில் மனுவைப் பெற்றிருக்கிறது என்பதை பதிவு செய்து கவனமளிக்கிறார் என்பது அதன் பொருள். மனுவின் நகலில் பதிவுத்தபால் ரசீதை ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது மாநில அரசாங்கத்தின் பல பணிகள் இணையம் மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றன. ஒருவர் பட்டாவுக்காக இணையம் மூலம் விண்ணப்பிக்கிறார் என்றால் அந்த கோப்பினை அரசு அலுவர்களால் மூட முடியும். தபால் மூலம் அனுப்பப்படும் மனுவை அவர்களால் அவ்வளவு எளிதில் மூட முடியாது.
தபால் முறை ஓர் எளிய முறை. ஒரு சாதாரண பிரஜையும் அரசாங்க அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளும் முறை. அரசாங்கம் எப்போதும் பிரஜைகள் அரசாங்கத்தைத் தொடர்பு கொள்ள பலவிதமான வாசல்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும்.
மத்திய அரசாங்கத்தின் CPGRAMS சிறந்த முறை. எளிய புகாரானாலும் முதலில் தலைமை அலுவலகத்துக்கு செல்லும். அங்கிருந்து கீழ் அலுவலகத்துக்கு வரும். இந்திய அரசாங்க அலுவலகங்கள் கீழிருந்து மேல் முறையை பின்பற்றிக் கொண்டிருந்த நிலையில் மேலிருந்து கீழ் முறையைக் கொண்டு வந்த முறை. மனுவின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை மனுதாரருக்குத் தெரிவித்தால் மட்டுமே கோப்புகளை மூட முடியும் என்பது அதன் சிறப்பம்சம். அதில் பல புகார்களை நான் பதிவு செய்திருக்கிறேன். புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
ஜீனி ரேஷன் கார்டை அரிசி ரேஷன் கார்டாக மாற்றிக் கொள்ள விரும்பும் டெய்லருக்காக ஒரு மனுவை எழுதிக் கொடுத்தேன். அதை தபாலின் அனுப்பி விட்டு மேல்நடவடிக்கைக்குக் காத்திருக்கலாமா அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாளில் மனு கொடுக்கலாமா என யோசித்தேன். மனுநீதி நாள் என்பது மாவட்ட ஆட்சியர் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமையில் ஒவ்வொரு வாரமும் பொதுமக்களின் எல்லா துறை சார்ந்த மனுக்களையும் பெறும் நாள். மனுநீதிநாள் மனுக்கள் என அவை அட்டவணையிடப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உடனே அனுப்பி வைக்கப்படும். 90 நாட்களுக்குள் அவற்றுக்குத் தீர்வு காணப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது வழிமுறை.
நேற்று திங்கள்கிழமை. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியே சென்ற போது டெய்லர் ஞாபகம் வந்தது. மனுநீதி நாள் கூட்டத்துக்குச் சென்றேன். அங்கே அப்போது 200 பேர் இருந்தனர். ரேஷன் கடை தொடர்பான அலுவலகர்களைக் கண்டடைந்து அவர்களிடம் விஷயத்தைக் கூறினேன். மனுவை தபால் மூலம் அனுப்புங்கள் ; நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினர்.
டெய்லரைச் சந்தித்து முதலில் ஒரு மனுவை அனுப்ப அவருக்கு உதவ வேண்டும். அதன் பின் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதைப் பார்த்து நடவடிக்கை இல்லையெனில் மத்திய அரசின் CPGRAMS ல் தெரிவிக்கலாம் என முடிவு செய்து கொண்டேன்.