Wednesday, 17 June 2026

கம்யூனிஸ்டுகள் (நகைச்சுவைக் கட்டுரை)

சிதம்பரம் நகரில் ஒரு வேலை இருந்தது. காலை 10 மணி அளவில் சென்றிருந்தேன். வேலை முடிய மதியம் 1 மணி ஆகும் என்ற நிலை. 12 மணி அளவில் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கேன்டீனுக்கு வந்தேன். ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தேன். என் அருகில் மூன்று மாணவர்கள் இருந்தனர். கம்யூனிஸ்டு மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள். கையில் ஒரு மனு வைத்திருந்தனர். வாங்கிப் பார்த்தேன். அவர்களுடைய லெட்டர்பேடில் அச்சிடப்பட்டு பின் இன்னொரு தாளில் இரண்டாம் பக்கம் அச்சிடப்பட்டிருந்தது.  

‘’தம்பி ! இந்த மனுவை ஏன் இரண்டு தனித்தனி தாள்ல பிரிண்ட் பண்ணியிருக்கீங்க. ரெண்டு பக்கம் தானே இருக்கு. ஃபிரண்ட் அண்ட் பேக் பிரிண்ட் பண்ணலாமே?’’ என்றேன். 

ஒரு மாணவன் யோசித்தான்.’’ஃபைல் பண்ண இதுதான் ஈஸி’’ என்றான். 

‘’ஃபிரண்ட் அண்ட் பேக் தான் ஃபைல் பண்ண ஈஸி. தனித்தனியா இருந்தா ரெண்டாவது பக்கத்தை ஃபைல்ல இருந்து எடுக்கறது ரொம்ப சுலபம். டைப் ரைட்டர் புழக்கத்தில இருந்தப்ப தனித்தனி தாள்ல டைப் செய்வாங்க. டைப் பண்ண தாளோட பின் பக்கத்துல டைப் பண்ணா ரெண்டு பக்கமும் தெளிவா இருக்காது. இப்ப பிரிண்டிங் டெக்னாலஜி பெருசா வளர்ந்துடுச்சு. ஒரு பக்கத்தோட இம்ப்ரஷன் பின் பக்கத்துல இருக்காது.’’

’’நீங்கள் சொல்றது கரெக்ட் தான் சார்’’ என்றான் ஒரு மாணவன். 

‘’நீங்க ஸ்டூடண்ட் யூனியன்ல என்ன பொறுப்புல இருக்கீங்க?’’

ஒரு மாணவன் மாவட்டப் பொறுப்பு. இன்னொரு மாணவன் வட்டப் பொறுப்பு.

‘’1971ல சிதம்பரம் அண்ணாமலை நகர்ல கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் யூனியனைச் சேர்ந்த உதயகுமார் என்னும் மாணவரை கருணாநிதி சர்க்கார் அடிச்சு கொலை செஞ்சது. உங்களுக்கு இந்த விஷயம் தெரியும் தானே?’’

அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. மாணவர்கள் என்பதால் நான் சொன்ன விஷயம் அவர்களுக்கு பரபரப்பை அளித்தது. தங்கள் கட்சிக்காரர்களிடம் ஃபோன் செய்து கேட்கிறோம் என்றான் ஒரு மாணவன். 

‘’உதயகுமார் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்னு கூகுள் செய்ங்க ‘’ என்றேன்.

இரண்டு மாணவர்கள் இரு திசைகளில் சென்று இரண்டு கட்சிக்காரர்களிடம் ஃபோன் பேசி விட்டு வந்தனர். 

‘’உதயகுமார்னு ஒரு ஸ்டூடண்ட் கொல்லப்பட்டிருக்கார். ஆனா அவர் கம்யூனிஸ்டு மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர் இல்லைன்னு கட்சிக்காரங்க சொல்றாங்க’’ 

‘’கூகுள் செய்ங்க’’

கூகுள் உதயகுமார் கம்யூனிஸ்டு மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதைத் தெரிவித்தது. மாணவர்களுக்கு அதிர்ச்சி. 

‘’கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து திமுக கூட தேர்தல் கூட்டணி வச்சு எம் எல் ஏ வா எம் பி யா இருந்திருக்காங்க தம்பி. அதனால திமுக தலைவர் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கறதும் ஊர்ல திரியற கழுதைக்கு டாக்டர் பட்டம் கொடுக்கறதும் ஒன்னுன்னு சொல்லி கழுதைங்க கழுத்தில டாக்டர்னு எழுதித் தொங்கவிட்ட உதயகுமார் கம்யூனிஸ்டு ஸ்டூடண்ட் யூனியன் மெம்பர்னு சொல்றதை அவங்க அசௌகர்யமா நினைப்பாங்க இல்லயா?’’

பின்னர் உதயகுமார் கொலை குறித்த விபரங்களை அவர்களுக்குக் கூறினேன். போலீஸ் உதயகுமாரைக் கொலை செய்து அவர் உடலை குளத்தில் வீசியது ; அவர்கள் பெற்றோரை மிரட்டி உதயகுமாரின் பிணத்தை உதயகுமாரின் பிணம் அல்ல எனக் கூற வைத்தது. பின்னர் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் இறந்தது உதயகுமார்தான் எனக் கூறியது. அனைத்து விஷயங்களும் சொன்னேன்.  

Monday, 15 June 2026

நன்றி

அனுப்புநர்

&&&&&
&&&&
&&&

பெறுநர்

மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை

நகல் மனு : கனம் வருவாய்த்துறை அமைச்சர்

ஐயா,

பொருள் : மனுநீதி நாள் முகாமில் மனுதாரர்களுக்கு உடனடியாக ஒப்புகைச்சீட்டு வழங்கக் கோரிய கோரிக்கையை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்துக் கடிதம்

ஜூன் 1, ஜூன் 8 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மனுதாரர்களுக்கு உடனடியாக மனுக்களுக்கான ஒப்புகைச்சீட்டு வழங்கப்படாமல் பலமணி நேரம் தாமதமாக வழங்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டது . அதன் நகல் வருவாய்த்துறை அமைச்சருக்கும் அனுப்பப்பட்டது. இன்று ஜூன் 15 ம் தேதி மனுநீதி நாள் முகாமில் ஒப்புகைச்சீட்டு மனுதாரர்களுக்கு உடனடியாக வழங்கப்பட்டது என்பதை நான் நேரில் கண்டேன். கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியருக்கு நன்றி. 

தங்கள் உண்மையுள்ள, 

&&&

இடம் : மயிலாடுதுறை
நாள் : 15.06.2026

ரயில்களும் சென்னையும்

சென்னை எனக்கு ரயில் நிலையங்களின் நகரமும் கூட. எழும்பூர் என்பது எனக்கு எழும்பூர் ரயில் நிலையம். தாம்பரம் என்பது தாம்பரம் ரயில் நிலையம். கிண்டியும் அவ்வாறே. இப்போது மெட்ரோ ரயில் நிலையங்களும் அவ்விதம் இணைந்து விட்டன.  மொத்த மெட்ரோ நிலையங்களும் ஒரே நிலையம் என எண்ணும் விதமாக மெட்ரோ ரயில் உள்ளது. மெட்ரோ ரயில் பூமிக்குக் கீழேயும் செல்கிறது ; பூமிக்கு மேலேயும் செல்கிறது. வெளிக்காட்சிகளைக் காண்பது அரிது. எனவே மொத்த மெட்ரோவும் ஒன்றே என எண்ணும் விதமாக இருக்கிறது. இந்த முறை சென்னை பயணத்தில் ஊரில் காலை 7.40க்கு ஒரு விரைவு ரயில் இருந்தது. அது 12.30க்கு தாம்பரம் போகும். அங்கிருந்து ரயில் மாற வேண்டும். அதனைத் தவிர்க்கவே காலை 6 மணி பயணிகள் வண்டியில் சென்றேன். விழுப்புரத்தில் ரயில் மாறி 12.30க்கு எழும்பூர் ரயில் நிலையம் சென்றேன். எழும்பூர் ரயில் நிலையத்தின் ஒரு பகுதியாக எதிர்திசையில் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. அங்கு சென்று வடபழனிக்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு வடபழனி சென்றேன். அங்கே வேலையை முடித்து விட்டு மீண்டும் வடபழனி வந்து 12 X என்ற பேருந்தைப் பிடித்து திருவள்ளுவர் சிலைக்கு வந்தேன். வடபழனியிலிருந்து திருவள்ளுவர் சிலை கணிசமான நேரத்தை எடுத்துக் கொண்டது. எனினும் பயணச்சீட்டு ரூ.9 தான். ஆச்சர்யமாக இருந்தது. அங்கே வேலையை முடித்து விட்டு இரவு அங்கிருந்து அருகிலிருந்த ஆயிரம் விளக்கு மெட்ரோவுக்குச் சென்று கிண்டி மெட்ரோ ரயில் நிலையம் சென்றேன். பின்னர் அதன் ஒரு பகுதியில் இருந்த கிண்டி ரயில் நிலையத்தில் ஊருக்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு மின்சார ரயிலில் தாம்பரம் வந்து சேர்ந்தேன். அந்த்யோதயா புறப்பட்டத் தயாராக இருந்தது. ரயிலின் கடைசிக்கு சென்று கொண்டே இருக்கையில் 8 பேர் இருக்கையில் 4 பேர் அமர்ந்திருந்தனர். அங்கே சென்று அமர்ந்தேன். காலையிலிருந்து தொடர் பயணங்கள். சந்திப்புகள். இடம் இருந்ததால் உடலை நீட்டிப் படுத்தேன். படுத்தவுடன் உறங்கி விட்டேன். வண்டி புறப்பட்டதோ வண்டி நகர்ந்து கொண்டிருந்ததோ தெரியவில்லை. ஆழமான உறக்கம். எழுந்து பார்த்த போது வண்டி ஏதோ ஒரு ஊரில் நின்று கொண்டிருந்தது. பக்கத்தில் இருந்தவர்களிடம் என்ன ஊர் எனக் கேட்டேன். சிதம்பரம் என்றார்கள். எழுந்து அமர்ந்து கொண்டேன். ஊர் வரை விழுத்திருப்பதே உகந்தது. மீண்டும் ஆழ உறங்கி விட்டால் வண்டி தஞ்சாவூர் சென்றடைந்து விடும். அதன் பின் அங்கிருந்து ஊருக்கு தனியே பயணித்து வர வேண்டும். 

Sunday, 14 June 2026

ஐந்து பெண்கள்

நேற்று சென்னை செல்ல வேண்டிய வேலை இருந்தது. எனது வழக்கப்படி காலை 3 மணிக்கு அலாரம் வைத்து எழுந்தேன். 4 மணிக்கு வெளியே புறப்படும் விதமாக தயாரானேன். மெல்ல நடந்து அதிகாலையில் காலைஉணவு தயாராக இருக்கும் உணவகத்துக்குச் சென்று உணவருந்தி விட்டு டவுன்பஸ் பிடித்து ரயில்வே சந்திப்புக்குச் சென்றேன். காலை 5.30 அளவில் அங்கே சென்று சேர்ந்திருப்பேன். திருவாரூர் - விழுப்புரம் பயணிகள் ரயில் காலை 6.02க்கு வரும். அதில் விழுப்புரம் சென்று சேர காலை 9 மணி ஆகும். அங்கே 9.30க்கு பல்லவன் விரைவு வண்டி வரும். அதில் ஏறினால் 12 மணிக்கு சென்னை எழும்பூர். பயணிகள் ரயில் 30 நிமிடம் தாமதமாக வந்தது. ரயிலில் பெரிய கூட்டம் இல்லை. 10 பேருக்கான இருக்கையில் 5 பேர் அமர்ந்திருந்த இடத்தில் நானும் சென்று அமர்ந்து கொண்டேன். அதிகாலையில் எழுந்தது ; உணவகம் பேருந்து நிலையம் வரை நடந்தது ; வழக்கமான நேரத்துக்கு முன்பாகவே உணவு எடுத்துக் கொண்டது ஆகியவற்றால் தூக்கம் கண்களைச் சுழற்றியது. 10 பேருக்கான இருக்கையில் 6 பேர் மட்டுமே அமர்ந்திருந்ததால் உடலை நீட்டிப் படுத்து விட்டேன். எழுந்து பார்க்கும் போது வண்டி புதுச்சத்திரத்தைத் தாண்டியிருந்தது. சக பயணிகள் யார் என கவனித்தேன். பெட்டியில் ஏறும் போதே அவர்கள் பேச்சில் சன்னாநல்லூர் என்னும் பெயர் கேட்டது. திருவாரூர் விழுப்புரம் பயணிகள் ரயிலில் சன்னாநல்லூரில் ஏறியிருக்கிறார்கள். ஒரு மூதாட்டி, மூதாட்டியின் மகள், மூதாட்டியின் பேத்தி, மூதாட்டியின் சகோதரி, மூதாட்டியின் சகோதரி மகள் என ஐந்து பெண்கள் பேரங்கியூர் என்னும் ஊருக்கு பயணிக்கின்றனர். அவர்களது குடும்ப நண்பர் ஒருவர் உடல்நலம் குன்றியிருக்கிறார். அவருக்காக பேரங்கியூரில் இருக்கும் சிவனுக்கு அபிஷேகம் செய்து குடும்ப நண்பர் உடல்நலம் பெற வேண்டிக் கொள்ள சென்று கொண்டிருக்கிறார்கள். எனக்கு இப்போது லேசாக இருமல் இருக்கிறது. நான் இருமியதைக் கண்டு வென்னீர் வேண்டுமா எனக் கேட்டு கொடுத்தார்கள். சகஜமாக பேசிக் கொண்டு வந்தார்கள். கடலூர் முதுநகர் அடைந்தும் அவர்களுக்கு காலை உணவு கொண்டு வரும் விற்பனையாளர்களைப் பார்க்க முடியவில்லை. அனைவரும் உணவுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு கொய்யாக்காய் விற்பனை செய்யும் மூதாட்டி வந்தார். ஒருவருக்கு ஒரு கொய்யாக்காய் என 6 கொய்யாக்காய்களை கொடுக்கச் சொன்னேன். பணம் நான் கொடுத்து விட்டேன். அந்தப் பெண்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ‘’ குடும்ப நண்பர் ஒருவர் உடல்நலம் பெற வேண்டி சிவனிடம் வேண்டிக் கொள்ள சென்று கொண்டிருக்கிறோம். பக்தர்களாகிய எங்கள் பசியை சற்று முன் அறிமுகமான ஒருவரான நீங்கள் தீர்த்து வைக்கிறீர்கள். எங்களுக்கு கொய்யா கிடைக்க வேண்டும் என்பது இறை சங்கல்பம். அது உங்கள் மூலமாக நிறைவேறியிருக்கிறது ‘’ என்று சொன்னார்கள். அவர்கள் அந்தச் சூழலை மிக உணர்ச்சிகரமாகப் புரிந்து கொண்டாலும் மிக உணர்ச்சிகரமாக எதிர்கொண்டாலும் உலகில் பாரதம் என்னும் இந்த மண்ணில் தான் கடவுளைத் தன் தோழனாகத் தன் பணியாளனாகத் தன் உறவினனாக மக்கள் காண்கிறார்கள். பேரங்கியூர் கோயில் குறித்து நிறைய விஷயம் சொல்லிக் கொண்டு வந்தார்கள். என்னிடம் என்ன தொழில் செய்கிறேன் எனக் கேட்டார்கள். ரியல் எஸ்டேட் என்று சொன்னேன். விழுப்புரம் வந்து ரயில் நின்றதும் அனைவரும் இறங்கினோம். ஐந்து பெண்களும் உங்கள் தொழில் மிகச் சிறப்பாக நடக்கும் ; ரியல் எஸ்டேட்டில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என வாழ்த்தி விட்டு சென்றார்கள். 

Friday, 12 June 2026

எஸ் எம் எஸ் அனுப்புவது எப்படி? (நகைச்சுவைக் கட்டுரை)

நேற்று ஒரு தொழிலதிபரைச் சந்தித்தேன். பல தொழில் செய்பவர். அசையா சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் கொண்டவர். எனக்கு அவரைப் பல ஆண்டுகளாகத் தெரியும். அவருக்கும் என்னைத் தெரியும். சாலையில் பொது இடத்தில் கடக்கும் போது புன்னகைத்துக் கொள்வோம் ; அரிதாக நலம் விசாரித்துக் கொள்வோம். அவருக்கு நெருக்கமான உறவினர் ஒருவர் எனது நண்பர். அவரை மாதம் ஒருமுறையாவது நேரில் சந்திப்பேன். ஒரு இடத்தின் விற்பனை தொடர்பாக நேற்று நண்பரைச் சந்தித்தேன். அவரது நெருக்கமான உறவினரிடம் இந்த விஷயம் தொடர்பாக நேரில் பேசுமாறு கூறினார். அவருக்கு ஃபோன் செய்து வீட்டில் இருக்குமாறு கூறினார். நான் புறப்பட்டுச் சென்றேன். சகஜமாக பேசிக் கொண்டிருந்தோம்.  விற்பனைக்கு உள்ள இடம் தொடர்பான ஆவணங்கள் என்னிடம் மின்னஞ்சலில் பி டி எஃப் ஆக இருந்தன. அவரது மின்னஞ்சல் முகவரியை எஸ் எம் எஸ் அனுப்புமாறு கூறினேன். அவர் தன் ஸ்மார்ட் ஃபோனை எடுத்தார். ‘’சார் ! எஸ் எம் எஸ் அனுப்பி பல வருஷம் ஆச்சு. எப்படி அனுப்பனும்னு மறந்து போச்சு.’’ என்றார். பின்னர் ஒரு விதமாக சமாளித்து அவரது மின்னஞ்சலை எனக்கு எஸ் எம் எஸ் அனுப்பினார். 

Thursday, 11 June 2026

தேர்வை அஞ்சும் ஆசிரியர் (நகைச்சுவைக் கட்டுரை)

இன்று காலை எனது நண்பருக்கு ஃபோன் செய்தேன். அவர் ஒரு துவக்கப்பள்ளி ஆசிரியர். அவரிடம் எப்போது சாவகாசமாக ஃபோனில் பேச முடியும் என்று கேட்டேன். மாலை நேரத்தில் என்றார். இப்போது அதாவது இந்தக் காலகட்டத்தில் ஏதும் முக்கிய பணி இல்லையே என்று கேட்டேன். ‘’இருக்கிறது’’ என்றார். ’’என்ன பணி?’’ என்றேன். 

மிகவும் சோகமாக ‘’டெட் எக்ஸாம் வருது’’ என்றார். 

‘’அதை ஏன் இவ்வளவு சோகமா சொல்றீங்க?’’ என்றேன். 

‘’தீவிரமா பிரிபேர் செஞ்சுட்டு இருக்கன்’’ 

‘’தீவிரமாவா?’’

’’ஆமா சிலபஸ் மாத்தியிருக்காங்க. அதான் தினமும் ரொம்ப நேரம் படிக்கறன்’’ என்றார். 

‘’பதட்டமா இருக்கா?’’

சற்று தயங்கி ‘’ஆமா ரொம்ப பதட்டமா இருக்கு’’ என்றார். 

‘’நீங்களே ஆசிரியர். தேர்வு எழுத தேர்வை நினைச்சு நீங்க பதட்டப்படலாமா ?’’ என்றேன். 

‘’டெட் எக்ஸாம் முக்கியமாச்சே?’’ என்றார். 

’’எத்தனை மார்க்குக்கு எக்ஸாம் ? பாஸ் பண்ண 80% எடுக்கணுமா?’’ என்றேன். 

‘’150 மார்க்குக்கு எக்ஸாம் எழுதணும். அதுல 80 மார்க் எடுக்கணும் பாஸ் செய்ய’’ என்றார். 

‘’ஐம்பது பர்செண்ட் மார்க் எடுத்தா பாஸ்ங்கறதுக்குத் தான் இவ்வளவு பதட்டமா ?’’ என்றேன். 

‘’ஆமா’’ என்றார்.

‘’இந்த மாதிரி ஆட்களை நம்பித்தான் தமிழ்க் குடும்பங்கள் அவங்க குழந்தைகளோட கல்வியை ஒப்படைக்கிறாங்க’’ என்றேன்.

நண்பர் அமைதியாக இருந்தார். 

‘’நீங்க ரொம்ப ஸ்மார்ட் ஆச்சே ? நீங்க ரொம்ப இண்டெலிஜெண்ட் ஆச்சே? ஏன் டெட் எக்ஸாமைக் கண்டு பயம் ?’’ என்றேன். 

‘’பேப்பர் டஃப் ஆ இருந்தா?’’ என்றார். 

‘’எதைப் பத்தியும் நினைச்சு பதட்டப்படாதீங்க. டெய்லி கன்சிஸ்டெண்ட்டா பிரிபரேஷன் மட்டும் செய்ங்க. நல்ல ஸ்கோர் எடுத்து பாஸ் செய்வீங்க ‘’ என்றேன். 

நண்பர் நம்பிக்கை கொண்டார்.   

பண்ணையாரா? பட்டயக் கணக்காளரா? (நகைச்சுவைக் கட்டுரை)

ஊரிலிருந்து 40 கி.மீ தொலைவில் இருக்கிறார் எனது பட்டயக் கணக்காளர். அவர் குடும்பத்தில் மூன்று தலைமுறையாக பட்டயக் கணக்காளர்கள் இருக்கிறார்கள். அவர் வீட்டில் 6 பேர் பட்டயக் கணக்காளர்களாக இருந்திருக்கின்றனர்.  அவரது பாட்டனாரும் தந்தையும் சகோதரரும் பட்டயக் கணக்காளர்கள். மனைவியும் மகனும் பட்டயக் கணக்காளர்கள். சந்தித்த முதல் நாளிலிருந்து எங்களுக்குள் அன்பும் பிரியமும் உருவாகி விட்டது. அவர் வீட்டில் அனைவருமே என் மீது பிரியம் கொண்டவர்கள். 

3 தலைமுறையாக பட்டயக் கணக்காளர்கள் எனினும் பல தலைமுறைகளாக அவர்கள் பூர்வீக கிராமத்தில் பண்ணையார்கள். பல வேலி நிலங்களுக்கு சொந்தக்காரர்கள். ‘’வேலி’’ என்னும் நில அளவு ‘’7 ஏக்கர்’’ ஐ குறிக்கும். பல வேலி நிலத்துக்குச் சொந்தக்காரர் என்று ஒருவரைச் சொன்னால் அவர் பெரிய பண்ணையார் என்று அர்த்தம். 

பழைய தஞ்சாவூர் பண்ணையார்களுக்கென்று பிரத்யேகமான பல வழக்கங்கள் உண்டு. இப்போது பரம்பரையாக பண்ணையார்கள் என்று மிகச் சிலரே இருக்கின்றனர். பெரும்பாலான பண்ணையார்கள் 70 ஆண்டுகளுக்கு 80 ஆண்டுகளுக்கு முன்பே தங்கள் நிலங்களை விற்பனை செய்து விட்டார்கள். ஒருவர் இன்று 50 ஏக்கர் நிலம் வைத்திருக்கலாம் ; அவர் பண்ணையார் தான். ஆனால் அவர் பழைய பண்ணையார் மனோபாவம் கொண்டவராக இருக்க மாட்டார். மளிகைக் கடை வைத்திருத்தல், டூ வீலர் ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்திருத்தல், பால் வியாபாரம் செய்தல், ஃபார்மஸி வைத்திருத்தல் போல 50 ஏக்கர் நிலம் வைத்திருப்பதையும் ஒரு தொழிலாகக் கருதும் நில உரிமையாளர்கள் உண்டு. அவர்கள் பண்ணையார்கள் இல்லை. நில உரிமையாளர் மட்டும் தான். நான் சொல்லக் கூடிய விதமான பழைய பண்ணையார்கள் மொத்த காவிரி டெல்டாவில் இன்று ஒற்றை இலக்க எண்ணிக்கையில் இருக்கக் கூடும். 

எனது பட்டயக் கணக்காளரையும் அந்த பட்டியலில் கொஞ்சம் முயன்றால் சேர்த்திட முடியும். 

வழக்கமாக பட்டயக் கணக்காளர்கள் அலுவலகங்கள் காலை 10 மணிக்குத் துவங்கும். இவர் அலுவலகமும் அவ்விதம் தான். ஆனால் அவர் மதியம் 12.30க்கு தான் வருவார். பூஜை ஜபம் செய்து முடித்து விட்டு BRUNCH எனப்படும் காலை மதிய உணவுக்கு இடையேயான ’’ஃபுல் மீல்ஸ்’’ உணவை முடித்து விட்டு தனது பெரிய காரில் அலுவலகம் வந்து சேருவார். அவரது வேலை நேரம் என்பது 12.30 - 3.30 . மூன்று மணி நேரம் தான் அலுவலகத்தில் இருப்பார். 4 மணிக்கு வீட்டுக்குச் சென்றதும் ஒரு காஃபி அருந்துவார். பல தசாப்தங்களாக இதுவே அவரது வழக்கம். அவரது கிளையண்ட் அனைவரும் 12.30 - 3.30 நேரத்தில் தான் சந்திப்பார்கள். 

அவர் கிளைண்ட் அனைவரும் ஊரின் பெரும் செல்வந்தர்கள். அவர்கள் அனைவரும் பட்டயக் கணக்காளரிடம் மிகப் பணிவாக முதலாளியிடம் பணிந்து பேசும் பணியாள் போல தான் பேசுவார்கள். 

முதல் சந்திப்பிலிருந்தே என்னைத் தன் நண்பனாக எண்ணினார் என் பட்டயக் கணக்காளர். நண்பனாகவே நடத்தினார். நண்பனாக எனக்கு அவர் அலுவலகத்தில் பல உரிமைகளைக் கொடுத்திருக்கிறார். ஒருநாள் நான் அவரிடம் சொன்னேன் : ‘’சார் ! நீங்க நம்ம ஆஃபிஸை ஒரு பண்ணையார் போல நடத்துறீங்க.’’ 

கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்து விட்டு பதில் சொன்னார். ‘’ நீ சொல்றது உண்மைதான்’’

Wednesday, 10 June 2026

பிரவீன் சக்கரவர்த்தி - புன்னகைக்கும் அரசியல்வாதி


பொதுவாக அரசியல்வாதிகள் மிகவும் இறுக்கமானவர்கள். தமிழக அரசியல்வாதிகள் மேலும் இறுக்கமானவர்கள். தமிழக அரசியல்வாதிகளை அதிகாரவர்க்க அதிகாரிகள் மனநிலை கொண்டவர்கள் என்று கூறி விட முடியும். அதிகாரவர்க்க அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகளைப் போல பதவி 5 ஆண்டுகள் தான் என்னும் கட்டுப்பாடு இல்லை ; தமிழக அரசியல்வாதிகளுக்கு அது உண்டு என்பது அவர்களை மேலும் இறுக்கம் கொண்டவர்களாகவும் பதட்டம் மிக்கவர்களாகவும் ஆக்கி விடுகிறது. இன்றைய தமிழக அரசியல்வாதிகளில் இயல்பாகப் புன்னகைக்கக் கூடியவர் பிரவீன் சக்கரவர்த்தி என்பது எனது எண்ணம். அறுபது ஆண்டுகளாக தமிழக அரசியலில் பதவியில் இல்லாத காங்கிரஸை அதிகாரத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார் பிரவீன் சக்கரவர்த்தி. சட்டசபைத் தேர்தலுக்கு முன்னும் பின்னும் அவர் காங்கிரஸைப் பதவிக்குக் கொண்டு வர பல முயற்சிகளை முன்னெடுத்தார். தேர்தலுக்கு முன் அவர் எடுத்த முன்னெடுப்புகள் இலக்கை நோக்கி 99 சதவீதம் சென்றன. 1 சதவீதத்தில் தான் எண்ணியதை எண்ணிய வண்ணம் எய்தாமல் தவற விட்டார். அப்போதும் அவர் புன்னகையுடனே இருந்தார். தேர்தலுக்குப் பின் நடிகர் ஜோசஃப் விஜய் கட்சியுடன் காங்கிரஸின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அளித்து தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி என ஆட்சி அமைக்க உரிமை கோரப்பட்டதில் பிரவீன் சக்கரவர்த்தியின் பங்களிப்பு கணிசமாக இருந்திருக்கும் என்பதை எவரும் யூகிக்க முடியும். அவ்விதமான உரிமை கோரலே திமுக விடமிருந்து அதன் கூட்டணிக் கட்சிகளைப் பிரித்தது. தேர்தலில் பெரிய தோல்வியைக் கண்டிருந்த அவர்களுக்கு பிரவீன் தேர்தலுக்குப் பின்னும் இன்னொரு பெரிய இழப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் ; புன்னகை மாறாமல். அசோகா பல்கலைக்கழகத்தில் வருகை தரு பேராசிரியராக இருக்கிறார் பிரவீன். தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின் கல்லூரியில் வகுப்பெடுக்க அவர் தனது வகுப்பறைக்குள் நுழைந்த போது அவரது மாணவர்கள் சீட்டியடித்து சினிமாப் பாடல் ஒன்றைப் பாடி உற்சாகமாக வரவேற்கும் காட்சியை இணையத்தில் காண நேர்ந்தது. மாணவர்களின் உற்சாகத்தை அவர் உள்வாங்கிக் கொண்ட விதம் மேலும் உற்சாகமாக இருந்தது. 

பிரவீன் ராஜ்யசபா உறுப்பினராவது மகிழ்ச்சி. அவருக்கு வாழ்த்துக்கள். 

Tuesday, 9 June 2026

தாமரை மலர்களின் நிலம்

இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றேன். ஜூன் 1ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்டத்தின் பலபகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்களுக்கு மனுக்களுக்கான ஒப்புகைச் சீட்டு வழங்கத் தாமதமானதால் பொதுமக்கள் பலர் காத்திருக்க நேரிட்டது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். வருவாய்த்துறை அமைச்சருக்கு அதன் நகலை அனுப்பினேன். நேற்று ஜூன் 8ம் தேதி நடந்த மனுநீதி நாள் கூட்டத்தில் ஒப்புகைச் சீட்டு தாமதமின்றி வழங்கப்படுகிறதா என்பதைக் காணச் சென்றேன். நேற்றும் முந்தைய வாரம் இருந்த நிலையே இருந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த அஞ்சல் அலுவலகத்தில் இரண்டு அஞ்சல் அட்டைகள் வாங்கி சென்ற வாரம் தெரிவிக்கப்பட்ட புகார் குறித்தும் அந்தப் புகார் இந்த வாரமும் சரி செய்யப் படாமல் இருப்பது குறித்தும் புகார் எழுதி மாவட்ட ஆட்சியருக்கும், வருவாய்த்துறை அமைச்சருக்கும் அனுப்பி வைத்தேன். அடுத்த வாரம் இதே விஷயம் தொடர்ந்தால் மனுநீதி நாள் முகாமில் இந்த விஷயம் குறித்தே ஒரு மனு எழுதி மாவட்ட ஆட்சியர் கையில் நேரடியாகக் கொடுக்கலாம் எனத் திட்டமிட்டிருந்தேன். இந்த விஷயத்தைச் சரி செய்ய இன்னொரு வாய்ப்பு அளிக்கலாம் என எண்ணி இன்று மாவட்ட ஆட்சியரின் முதல் தனி உதவியாளரைச் சந்தித்து விஷயத்தைக் கூறுவோம் என எண்ணினேன். அங்கே சென்றேன். மாவட்ட ஆட்சியரின் முகாம் உதவியாளர் அவர் அறையில் இருந்தார். என் பெயரைக் கூறி விஷயத்தைச் சொன்னேன். அவர் சற்று அதிருப்தி அடைந்ததை உணர்ந்தேன். ஜூன் 1ம் தேதி கடிதத்தையும் ஜூன் 8ம் தேதி கடிதத்தையும் அவர் வாசித்திருக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கடிதம் கொண்டு செல்லப்பட்டிருக்குமா என்பது ஓர் ஐயமே. ‘’ரெண்டாவது மாடியில் டி எம் இருப்பாங்க. அவங்க கிட்ட சொல்லுங்க. சரி செய்வாங்க’’ என்றார். அங்கே சென்றேன். கலெக்டரின் முகாம் உதவியாளர் அனுப்பினார் எனக் கூறி அங்கே இருந்தவரிடம் விஷயம் சொன்னேன். கிரவுண்ட் ஃபுளோர்ல டிரிபிள் எஸ் மேடம் இருப்பாங்க ; அவங்க கிட்ட சொல்லுங்க என்றார். சொல்கிறேன் அடுத்த வாரம் இந்தபிரச்சனை சரி ஆகலைன்னா இன்னைக்கு நடந்ததையும் சொல்லி புகார் கொடுப்பன் என்றேன். பணிவாகவே என்னுடைய வேண்டுகோளையும் கோரிக்கையையும் கூறினேன். பணிவாகப் பேசினாலே விஷயங்கள் நடப்பதில்லை; சினம் கொண்டு பேசினால் கேட்பானேன்? டிரிபிள் எஸ் மேடத்தை சென்று பார்த்தேன். என் பெயரைக் கூறியதும் ‘’உட்காருங்க சார்’’ என்றார். ‘’பரவாயில்லை அம்மா’’ என்றேன். நான் அமரவில்லை. அமர்ந்தால் உணர்வுகள் கொஞ்சம் குறையும். அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் பொறுமையாக அமைதியாக சொல்ல வேண்டியதைச் சொன்னேன். ‘’அம்மா ! பொதுமக்கள் கொள்ளிடத்துல இருந்தும் எருக்கூர்ல இருந்தும் வராங்க. காலைல 11 மணிக்கு வந்து மனு கொடுத்ததும் ஒப்புகைச் சீட்டை உடனே கொடுத்தீங்கன்னா மதியம் 1 மணி 1.30 மணிக்கு வீட்டுக்குப் போய் லஞ்ச் சாப்பிடுவாங்க. இங்க 11 மணிக்கு மனு கொடுத்தா ஒப்புகைச் சீட்டு 3 மணிக்குக் கொடுக்கறாங்க. ஒரு முழு நாள் அவங்க கலெக்டர் ஆஃபிஸ்ல இருக்க வேண்டியிருக்கு. ஏன் 5 நிமிஷத்துல முடிக்க வேண்டிய வேலையை 5 மணி நேரம் செய்யறீங்க?’’ என்றேன். ‘’சார் ! நான் இண்டர்நெட் கனெக்‌ஷனுக்கு ரயில்டெல் கனெக்‌ஷன் எக்ஸ்ட்ராவா கொடுக்க சொல்லிட்டன். அடுத்த வாரம் இந்த பிரச்சனை இருக்காது.’’ என்றார். ‘’ரொம்ப நன்றி அம்மா’’ எனக் கூறி விட்டு புறப்பட்டேன்.  ஊரின் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்பது அவ்வளவு பெரிய கட்டணம். அத்தனை அறைகள். அத்தனை தளங்கள். எனது எதிர்பார்ப்பு என்பது மிக அடிப்படையானது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினுடைய வாரத்தின் முதல் பணி என்பது திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மனுநீதி நாள் முகாமில் மனுக்களை வாங்குவது. அந்த மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது என்பதற்கு ஒப்புகைச் சீட்டை வழங்குவது. ஒப்புகைச் சீட்டை வழங்குவதற்கு 2 நிமிடங்கள் போதும். ஆனால் பொதுமக்கள் 5 மணி நேரம் காத்திருக்கிறார்கள். 10 மணிக்கு ஒருவர் வந்து மனு கொடுக்கிறார் என்றால் அவருக்கு 10.02க்கு ஒப்புகைச் சீட்டைக் கொடுத்து விட வேண்டும். ஆனால் அவருக்கு மாலை 3 மணிக்கு ஒப்புகைச்சீட்டைக் கொடுக்கிறார்கள். உள்ளூர்க்காரர் என்றால் மனு கொடுத்த பின் மீண்டும் திரும்பி வந்து மாலை பெற்றுக் கொள்வார். அதுவும் உகந்த வழிமுறை இல்லை. நகரின் மையப்பகுதியிலிருந்து 4 கி.மீ தள்ளி இருக்கிறது மாவட்ட ஆட்சியர் அலுவலகம். 200 பேர் மனு கொடுக்க உள்ளூர்க்காரர்கள் காலை வருகிறார்கள் என்றால் அவர்கள் மீண்டும் ஒருமுறை திரும்ப வர நேர்ந்தால் அது ஒருவருக்கு 4+4 =8 கி.மீ கூடுதல் பயணம். 200 பேருக்கு என அது ஆகும் போது 1600 கி.மீ கூடுதல் பயணம். ஒரு இரு சக்கர வாகனம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 80 கி.மீ மைலேஜ் தருகிறது என்றால் அது 20லிட்டர் பெட்ரோல் விரயமாவதன் கணக்கு. மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தின் நிர்வாகத் திறனின்மை ஒவ்வொரு திங்கட்கிழமையும் 20லிட்டர் பெட்ரோலை விரயமாக்குகிறது. வெளியூர்க்காரர்கள் 100 பேர் காத்திருக்கின்றனர். ஒவ்வொருவரும் 10 மணிக்கு கிடைக்க வேண்டிய ஒப்புகைச் சீட்டுக்கு மாலை 3 மணி வரை காத்திருக்கின்றனர். ஒருவருக்கு 5 மணி நேரத் தாமதம். 100 பேருக்கும் சேர்த்து 500 மணி நேரத் தாமதம். நிர்வாகத் திறனில்லாத ஒரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் ஒப்புகைச்ச்சீட்டு வழங்குவதில் தாமதம் செய்வதால் குறைந்தபட்சமாக 20லிட்டர் பெட்ரோலையும் 500 மணி நேரத்தையும் விரயம் செய்கிறது. ஏழு நாட்கள் கொண்ட ஒரு வாரத்தில் 168 மணி நேரங்களே உள்ளன. எனினும் மிக எளிதாக 500 மணி நேரத்தை வீணாக்கி வாரத்தைத் துவங்குகின்றனர். பொதுமக்களின் மனுக்களை மாவட்ட ஆட்சியர் படிக்கிறாரா என்பதே பெரிய ஐயம். ஒரு மாவட்ட ஆட்சியர் தனக்கு வரும் கடிதங்களை மனுக்களை வாசிக்க வேண்டும். அவருக்கு பலவேலைகள் இருக்கலாம். பல பொறுப்புகள் இருக்கலாம். இருந்தாலும் அவருக்கு வரும் கடிதங்களை மனுக்களை அவர் வாசிக்க வேண்டும். அதில் உறுதியாக இருக்க வேண்டும். அது நேர விரயம் அல்ல. உதாரணத்துக்கு, ஜூன் 1ம் தேதி ஒப்புகைச்சீட்டு விஷயம் குறித்து கடிதம் எழுதினேன். வாசித்திருந்தார் என்றால் அதில் என்ன சிக்கல் என்பதை 2 நிமிடத்தில் அறிந்து 3 நிமிடங்களில் சரி செய்திருக்க முடியும். அடுத்த வாரமும் அதே சிக்கல் தொடர்ந்ததால் அவர் கடிதங்களை வாசிக்கிறாரா என்னும் ஐயம் உருவாகி அலுவலகம் மீதான நம்பிக்கையை குறைக்கிறது. பொதுமக்களின் 500 மணி நேரம் வீணானதும் 20லிட்டர் பெட்ரோல் விரயமாவதும் எடுத்துக் கூறப்படுகிறது. அடுத்த வாரம் இந்த சிக்கல் நீடித்தால் இந்த 3 வாரங்களிலும் நிகழ்ந்தது தொகுத்துக் கூறப்பட்டு  பெரியதாகும். நிர்வாகம் எப்போதும் பெரிய விஷயங்களைக் கூட தன் திறனால் மிகச் சிறிதாக்கிட வேண்டும். திறனில்லாதவர்கள் சிறிய விஷயத்தை பெரிதாக்கி விடுகிறார்கள். 

போஸ்ட் ஆஃபிஸில் ஒரு வேலை இருந்தது. கலெக்டரேட் போஸ்ட் ஆஃபிஸிலேயே அந்த வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்தேன். மதிய உணவருந்தி விட்டு உடையார்பாளையம் புறப்பட்டேன். 

ஊரிலிருந்து குத்தாலம் வழியாக அணைக்கரை வந்து அங்கிருந்து ஜெயங்கொண்டம் செல்ல கொல்லாபுரம் வழியே செல்லாமல் ஒரு உள்பாதை இருந்தது. அதில் பயணித்தேன். சிறு கிராமச் சாலைகள். அப்பகுதி சிறு காட்டுப் பகுதி போல் இருக்கும். அதில் பயணித்து ஜெயங்கொண்டம் சென்று அங்கே ஒரு வேலையை முடித்துக் கொண்டு உடையார்பாளையம் புறப்பட்டேன். இந்தப் பிராந்தியத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம் இரண்டு குளங்களாவது இருக்கின்றன. அதில் அத்தனை தாமரை மலர்கள் மலர்ந்திருக்கின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் மலர்ந்திருக்கும் நூற்றுக் கணக்கான தாமரை மலர்களைக் கண்டு கொண்டே செல்லும் பயணம் என்பது மிக்க இனிமை கொண்டது. 


உடையார்பாளையம் பயறணீநாத சுவாமி ஆலயத்துக்குச் சென்றேன். அப்பனும் அம்மையும் சிறு குழந்தைகள் போல் இருக்கின்றனர். அம்பிகையின் முன்னால் நின்ற போது மீனாட்சியம்மன் முன்னால் நிற்பது போல் இருந்தது. அம்பாள் மூன்று வயது பெண் குழந்தை போலவும் தோன்றினாள். ‘’அம்மா’’ ‘’அம்மா’’ என பலமுறை சொன்னேன். உடையார்பாளையம் சிவன் சிவபாலன் என எனக்குத் தோன்றியது. இந்த தலத்தில் அர்ஜூனன் வழிபட்டதாக ஐதீகம். நூற்றுக்கணக்கான முனிவர்கள் இந்த ஆலயத் தடாகத்தில் தினமும் தவம் செய்வதாக நம்பிக்கை. ஆலயம் உணர்வின் ஆழங்களைத் தொடும் வகையில் இருக்கிறது. 

வழிபாடு முடித்து சிலால் என்ற ஊரின் வழியாக அணைக்கரை வந்து அங்கிருந்து பந்தநல்லூர் குத்தாலம் வழியாக ஊர் திரும்பினேன். இன்றைய பயணத்தில் கோடாலி என்ற ஊரைப் பார்த்தேன்; உதயநத்தம் என ஒரு ஊர் ; கடாரம் கொண்டான் என ஒரு ஊர். 

இந்தப் பிரதேசத்தை தாமரை மலர்களின் நிலம் எனக் கூற முடியும். அத்தனை தாமரைத் தடாகங்கள். அத்தனை தாமரை மலர்கள். 

ஓர் எண்ணம்

இரண்டு வாரங்களுக்கு முன்னால், அரியலூர் கலியபெருமாள் கோவிலுக்குச் சென்றிருந்தேன். வழிபாடு முடிந்து மாலை ஊர் திரும்பிய போது எனக்கு ஒரு மனச்சித்திரம் தோன்றியது. மேற்கே திருச்சிராப்பள்ளி கிழக்கே சிதம்பரம் வடக்கே சித்தூர் வடகிழக்கே நெல்லூர் என இந்த எல்லைக்கு உட்பட்ட 48,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு ஒரு செவ்வகமாக என் மனதில் எழுந்தது. இந்த நான்கு ஊர்களையும் இந்த நான்கு ஊர்களுக்கு இடைப்பட்ட பெரும்பரப்பையும் என் பயணங்களில் அறிந்திருக்கிறேன். பழைய வடார்க்காடு, பழைய தென்னாற்காடு, செங்கல்பட்டு, பழைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் வட பகுதி ஆகியவை இந்த பிரதேசத்தில் அடங்கும்.

வீர நாராயண ஏரி, சோழ கங்கம் ஏரி, பெருமாள் ஏரி, பாகூர் ஏரி, பாணாம்பட்டு ஏரி, மதுராந்தகம் ஏரி,புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி என பல ஏரிகள் இப்பிராந்தியத்தில் அமைந்திருக்கின்றன. இவை சோழர்களால் மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்டவை. தமிழகத்தின் சிறு விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் சம அளவில் வாழும் பகுதிகள் இவை. 

இந்தப் பகுதியில் 8500 கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் 100 ஏக்கர் பரப்பு கொண்ட ஒரு ஏரி உருவாக்கப்பட வேண்டும். இவ்விதம் 8500 ஏரிகள் உருவாக்கப்படுமானால் இந்தப் பிராந்தியம் 370 டி எம் சி தண்ணீரைச் சேமிக்க முடியும். தென்னிந்தியாவின் நீர்க்குடுவையாக இப்பிராந்தியம் உருவாகும். (கவனிக்க வேண்டிய விஷயம் : கர்நாடகா தமிழகத்துக்கு வழங்கும் காவிரி நீர் ஆண்டுக்கு 177 டி எம் சி. இந்த 8500 ஏரிகளில் அதைப் போல இரு மடங்கு நீரைச் சேமிக்க முடியும்) இந்த 8500 ஏரிகளை உருவாக்க ரூ.34,000 கோடி தேவைப்படும். 

சோழ மன்னர்களுக்கு நடுநாட்டையும் தொண்டை நாட்டையும் பெரிய அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்னும் எண்ணம் இருந்திருக்கிறது என்பதை அவர்களின் வரலாற்றை நோக்கும் போது அறிய முடியும். அவர்களுக்கு அப்பிராந்தியத்தின் மீது பெரும் நம்பிக்கையும் இருந்திருக்கிறது. சோழ நாட்டில் பேராலயங்களை நிர்மாணித்த சோழர்கள் நடுநாட்டிலும் தொண்டை நாட்டிலும் பெரும் ஏரிகளை உருவாக்கியிருக்கின்றனர். ராஜாதித்த சோழனால் உருவாக்கப்பட்டது வீர நாராயண ஏரி. ராஜராஜ சோழன் தன் வாழ்வின் பெரும்பகுதியைச் செலவிட்ட ஊர் காட்டுமன்னார்குடி. ராஜேந்திரன் உருவாக்கியது சோழகங்கம் ஏரி. தஞ்சையிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்துக்கு மாற்றப்பட்ட தலைநகர் கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் தலைநகராகவே நீடித்திருக்கிறது. 

இன்றும் முந்திரி, பலா, கொய்யா ஆகிய மரப்பயிர்கள் அதிகம் பயிர் செய்யப்படுவது இந்தப் பிராந்தியத்திலேயே. எனது விருப்பம் என்னவெனில் இந்தப் பிராந்தியத்தை தென்னிந்தியாவின் நீர்க்குடுவையாக மாற்ற வேண்டும் என்பதே. ஒவ்வொரு கிராமத்திலும் 100 ஏக்கர் பரப்பு கொண்ட ஏரிகள். அவை நிலத்தடி நீர் மட்டத்தை சில வருடங்களில் பெருமளவில் உயர்த்தி விடும். ஒவ்வொரு கிராமத்திலும் 1000 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது என்றால் அதில் குறைந்தபட்சம் 100 ஏக்கர் தேக்கு, சந்தனம் போன்ற மரப்பயிர்களைப் பயிரிடலாம். மாநிலத்தின் வனப் பரப்பு 8,50,000 ஏக்கர் கூடும். 

உலகில் 40 சதவீத மக்கள் மட்டுமே ஜனநாயக அமைப்பில் இருக்கின்றனர். உலகில் 60 சதவீத மக்கள் சர்வாதிகார ஆட்சிக்குக் கீழே இருக்கின்றனர். ஜனநாயகத்தில் ஒரு பிரஜையால் அரசுக்கு தன்னுடைய எண்ணத்தைச் சொல்ல முடிகிறது. என்றாவது ஒரு நாள் இது நடக்கலாம் என நம்பவும் முடிகிறது. 1000 ஆண்டுகளுக்கு முன்னால் சோழ மன்னர்கள் சிந்தித்ததை நினைவுபடுத்திக் கொண்டு நாட்டின் பிரஜையால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது என்பது நல்ல விஷயமே.