Friday, 28 November 2025

ரயில்வே கால அட்டவணை

 இந்த சம்பவம் நடந்த வருடம் 1993 ஆக இருக்கலாம். அப்போது நாகூரிலிருந்து பெங்களூருக்கு ஒரு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. பின்னர் நடுவில் பல ஆண்டுகள் அந்த ரயில் இயங்காமல் இருந்து இப்போது சில ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இப்போது காரைக்காலுக்கும் பெங்களூருக்கும் இடையில் இயங்குவதாக ஞாபகம். காரைக்காலிலிருந்து நாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை கடலூர் துறைமுகம் வழியாக நெய்வேலி விருத்தாஜலம் சேலம் வழியாக பெங்களூர் செல்லும் வாகனம். மாலை 5 மணியை ஒட்டி ஊரில் வண்டி ஏறினால் மறுநாள் காலை 6 மணி அளவில் பெங்களூர் சென்று சேரலாம். அந்த ரயிலில் அந்த வயதில் சிலமுறை பெங்களூருக்கு பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. முதல் முறை சென்றதிலிருந்தே பெங்களூர் எனக்கு மிகவும் பிரியமான ஊராகி விட்டது. பெங்களூர் நகரமெங்கும் எப்போதும் பூத்துக் குலுங்கும் பூ மரங்கள் நிறைந்திருக்கும். அந்த பூத்திருக்கும் மரங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதே இனிமை மிக்க அனுபவமாக இருக்கும். ஒரு சிறுவனாக அந்த நகரம் அளித்த மகிழ்ச்சி என்பது இப்போதும் மனதின் ஒரு பகுதியில் பசுமையான நினைவாக இனிமை மிக்க ஞாபகமாக பதிவாகியிருக்கிறது. பெங்களூர் மெஜஸ்டிக் சர்க்கிள், ஜலஹள்ளி, விதான் சபா ஆகிய பகுதிகள் மனதுக்கு மிகவும் நெருக்கம் கொண்டவையாக ஆயின. லால் பாக், கப்பன் பாக் ஆகிய பூங்காக்கள் என்னை மிகவும் கவர்ந்தன. சிறுவனான நான் அப்போது எனக்குத் தெரிந்தவர்கள் , நண்பர்கள், உறவினர்கள் அனைவரிடமும் அப்போதெல்லாம் நீங்கள் பெங்களூர் சென்றிருக்கிறீர்களா என்று கேட்பேன். உலகமே எனக்கு அப்போது பெங்களூர் சென்றிருப்பவர்கள் , பெங்களூர் செல்லாதவர்கள் என்று இரண்டாகப் பிரிந்திருந்தது. 1993ம் ஆண்டு பெங்களூர் பயணிகள் ரயிலில் சென்ற போது ரயில்வே கால அட்டவணை வெளியாகியிருந்தது என பயணச்சீட்டு சாளரத்தில் இருந்த அறிவிப்பின் மூலம் அறிந்து ஒரு கால அட்டவணை வாங்கினேன். அந்த பயணத்திலேயே அந்த கால அட்டவணை மூலம் எவ்விதம் ரயில் செல்லும் பாதையை அறிவது என்பதையும் ரயில்வே அட்டவணையைப் பயன்படுத்துவது என்பதையும் அறிந்தேன். அந்த பயணத்திற்குப் பின்னர் கிட்டத்தட்ட தினமும் கூட ரயில்வே அட்டவணைய வாசிக்க ஆரம்பித்தேன். அதில் இருக்கும் பல்வேறு ஊர்களின் பெயர்களைப் படிப்பதற்காகவே தினமும் வாசிப்பேன். தமிழகத்தில் மட்டுமின்றி தென்னிந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் ரயில்வே நிலையங்களின் பெயர்களையும் அதில் காண்பேன். மானசீகமாக அந்த ஊர்களில் இருப்பதாக எண்ணிக் கொள்வேன். எனது மனோ சஞ்சாரத்துக்கான முகாந்திரமாக ரயில்வே கால அட்டவணை இருந்தது. கணிணிப் பயன்பாடு ரயில்வேயில் அதிகமாகத் தொடங்கியதும் ரயில்வே அட்டவணை வடிவமைப்பு மாறியது. எனினும் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் ரயில்வே அட்டவணையை வாங்கி விடுவேன். எனது நண்பர்களுக்கு அதனை பரிசளிப்பேன். புது ஆண்டு தொடங்கினால் நாட்காட்டிக்குப் பதிலியாக ரயில்வே அட்டவணையைப் பரிசளித்திருக்கிறேன். இப்போது முறைமைகள் பல தலைகீழாக மாறி விட்டன. ரயில்கள் இயங்கும் விதமே மாறியிருக்கிறது. முன்னர் தினசரி இயங்கும் ரயில்கள் அதிகமாக இருக்கும். இப்போது வாராந்திர வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இயங்கும் ரயில்கள் அதிகம் உள்ளன. ரயில் ஒன் இணையதளத்தில் ரயில்களைத் தேடும் வழக்கம் வந்து விட்டது. அது எனக்கு முழுமையைத் தருவதில்லை. இப்போதும் என்னிடம் ரயில்வே அட்டவணை இருக்கிறது. அதைக் கொண்டு தான் ரயில் நேரம் அறிந்து கொள்கிறேன். 

இந்த இடத்தில் நான் ஒரு விஷயத்தைப் பதிவு செய்வது அவசியம் என எண்ணுகிறேன். ரயில்வே கால அட்டவணை ஒன்றை அதன் வடிவிலேயே டிஜிட்டலில் இணையத்தில் ஓர் இணையதள பக்கமாக பராமரிக்கலாம். ரயில்வே முன்னர் கால அட்டவணையை நூல் வடிவில் வெளியிட்டுக் கொண்டிருந்தது. இப்போது அதன் தொடர்ச்சியாக விரிவாக்கமாக ரயில்வே கால அட்டவணையின் இணைய தள பக்கம் திகழ வேண்டும்.  மேலும் தொலைபேசி அல்லது அலைபேசி மூலம் குறிப்பிட்ட எண்ணுக்குப் பேசி ரயிலின் நேரங்களை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். ரயில் பயணிகள் நம் நாட்டில் லட்சக்கணக்கானோர். அதில் ஆயிரக்கணக்கானோர் ரயில் நேரம் குறித்த ஐயங்களுடன் இருப்பார்கள். அவர்களுக்கு உதவும் விதத்தில் ரயில் விசாரணைக்கான தொலைபேசி சேவை பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.  தொலைபேசி பரவலாயிருந்த காலகட்டத்தில் கூட ரயில்வே நிலையத்துக்கு ஃபோன் செய்து ரயில் நேரங்களைக் கேட்டறிந்து ரயில் பயணம் செய்ய முடியும். இப்போது அந்த நிலை இல்லை.    

Thursday, 27 November 2025

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

 
சாமானிய வாழ்க்கை என்பது பந்த பாசங்களால் ஆனது. அவை முற்றிலும் எதிர்மறையானவையா என்று கேட்போமாயின் அதற்கு ஆம் என்று நாம் பதில் சொல்ல முடியாது. மானுடம் தன்னை  உட்படுத்திக் கொள்ளும் பந்தங்கள் அவர்களுக்கு விடுதலை அளிக்கவும் செய்கின்றன என்பது வாழ்வின் நூதனங்களில் ஒன்று. இந்திய மரபு இல்வாழ்க்கையை துறவுக்கு சமமாகச் சொல்கிறது. திருவள்ளுவர் திருக்குறளில் சில இடங்களில் துறவுக்கும் மேலானதாக சில இடங்களில் குறிப்பிடுகிறார்.  

லௌகிக வாழ்க்கையை நம் மரபு சம்சார சாகரம் என்கிறது. எத்தனை பெரிய உவமை அது! ஒரு கடற்கரை என்பது எத்தனை பேரைக் கொண்டது. மீனவர்கள், மீன் வாங்குபவர்கள், மீன் விற்பவர்கள், கடல் காண வந்தவர்கள், உறவினர் சாம்பலைக் கரைக்க வந்தவர்கள், வாகன ஓட்டிகள் என எத்தனை பேர். கடற்கரை என்பது கடலின் ஒரு சிறு துளி. அதனுள்ளேயே ஆயிரமாயிரம் கதைகள். அப்போது கடலுக்கு எத்தனை கதை ? முதல் செல் அமீபா தன்னில் உருவானதிலிருந்து கடலுக்கு எத்தனை கதைகள் தெரிந்திருக்கும்? சம்சாரம் சாகரம் எனில் சம்சாரிகள் அதில் கரையேறுவது எவ்விதம்?

அமிழும் கால்களையும் பறக்கும் சிறகுகளையும் கொண்டிருக்கிறான் மனிதன். மண்ணைத் தொடும் தனது கால்களை அவன் தினமும் காண்கிறான்; உணர்கிறான். விண் நோக்கிப் பறக்கும் சிறகுகள் தனக்கு இருப்பதை மனிதன் பொதுவாக உணர்வதில்லை ; காண்பதில்லை. மானிடர் எண்ணிக்கை ஒரு கோடி எனில் அதில் ஒருவரே அதனை உணர்கிறார். 

கோடியில் ஒரு மனிதன் தான் என்னும் உணர்வைக் கடந்து செல்கிறான். அவனது பாதை அன்பின் பாதையாயிருக்கிறது. தன்னைச் சுற்றியிருக்கும் உயிர்களுக்கு அவன் இதத்தை அளிக்கிறான் ; நம்பிக்கையை அளிக்கிறான். அத்தகைய ஒரு மனிதனின் கதையை ஜெயகாந்தன் எழுதியிருக்கிறார்- ‘’ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’’. 

அன்புமயமான மனிதன் தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களிடம் வெளிப்படும் அன்பை மட்டுமே காண்கிறான். அன்பின் பாதையின் இயல்பு அத்தகையது. மானுடத்தின் அதி தூய உணர்வுக்கு சொல் வடிவம் கொடுக்கப்பட்ட படைப்பு என்னும் விதத்தில் மிக முக்கியமான நாவல் ஜெயகாந்தனின் ‘’ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’’. 

Wednesday, 26 November 2025

ஆலோசனை புகார் புத்தகம் ( நகைச்சுவைக் கட்டுரை)

இன்று காலையிலிருந்து நவம்பர் 26 ஒரு முக்கியத்துவம் கொண்ட நாள் என்பதை மனம் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தது. இன்று ஒரு முக்கியமான தினம் எனத் தோன்றியதே தவிர எதற்காக என்பதை சிறிது நேரம் கழித்தே உணர்ந்தேன். இன்று இந்திய அரசியலமைப்பு நிர்ணய நாள்.  

ஒரு வருடத்துக்கு முன்பு இதே தினத்தில் தான் சி.பி.கி.ராம்.ஸ்-ல் நான் அளித்த புகாருக்காக உதவி அஞ்சல்துறை கண்காணிப்பாளர் என்னை நேரில் சந்தித்து என் புகார் குறித்த விபரங்களை நேரில் கேட்டறிந்தார். அன்று அவரிடம் அன்றைய தினம் இந்திய அரசியலமைப்பு நிர்ணய தினம் என்பதைக் கூறினேன். அது நினைவுக்கு வந்தது. என்னுடைய புகாருக்கு அஞ்சல்துறை உயரதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்தனர். 

இன்று பிற்பகல் ஆகாஷ்வாணி சென்னை இயக்குநருக்கும் ஆகாஷ்வாணி - திருச்சிராப்பள்ளி, காரைக்கால் - நிலையங்களுக்கும் வானிலை அறிக்கை குறித்த கடிதத்தை அனுப்பி வைக்க ஊரில் உள்ள ஒரு சிறு அஞ்சல் நிலையத்துக்கு சென்றேன். 3 அஞ்சல் உறை வேண்டும் என்று கேட்டேன். அஞ்சல் உறை கையிருப்பில் இல்லை எனக் கூறினர். 

அஞ்சலகம் விற்பனை செய்வது அஞ்சல் வில்லை, அஞ்சல் உறை, அஞ்சல் அட்டை ஆகியவற்றைத் தான். அவற்றை கையிருப்பில் வைத்துக் கொள்வதே அவர்கள் பணி. அவர்கள் அளித்த பதில் எனக்கு மிகுந்த அதிருப்தியைத் தந்தது. எனினும் அங்கிருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள ஸ்டேஷனரி கடைக்குச் சென்று 3 ஆஃபிஸ் கவர் வாங்கி வந்து அஞ்சலகத்தில் 3 அஞ்சல் வில்லைகள் வாங்கி கவரில் வைத்து ஒட்டி அனுப்பினேன். புறப்படும் போது ‘’ஆலோசனை புகார் புத்தகம்’’ தருமாறு கேட்டேன். தங்கள் அலுவலகத்தில் அது இல்லை என்றும் தலைமை தபால் நிலையத்தில் மட்டுமே அது இருக்கும் என்றும் அங்கிருந்த ஊழியர் கூறினார். 

எல்லா அஞ்சல் அலுவலகத்திலும் ஆலோசனை புகார் புத்தகம் இருக்கும். இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்கள் புகாரையும் ஆலோசனைகளையும் அதில் பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட புகாரை ஊழியர் தன் மேலதிகாரிக்கு அனுப்ப வேண்டும். அஞ்சல் அலுவலகங்களின் நூற்றாண்டு கால வழக்கம் அது. அந்த புத்தகம் தங்களிடம் இல்லை என்றார் அந்த ஊழியர். அஞ்சல் உறை இல்லை எனக் கூறியதையோ ஆலோசனை புகார் புத்தகம் இல்லை எனக் கூறியதையோ அந்த ஊழியர் ஒரு பிழையாகவே எண்ணவில்லை ; மிக இயல்பான ஒன்று என்பதாகவே எண்ணினார். 

வீட்டுக்கு வந்தேன். நடந்த சம்பவத்தை சி.பி.கி.ராம்.ஸ்-ல் புகாராகப் பதிவு செய்தேன்.  

ஆகாஷ்வாணிக்கு ஒரு கடிதம்

அனுப்புநர்

ர.பிரபு
***
**
*

பெறுநர்

நிலைய இயக்குநர்
ஆகாஷ்வாணி
சென்னை

ஆகாஷ்வாணி சென்னை நிலைய இயக்குநருக்கு,

வணக்கம். 

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வானிலை முன்னறிவிப்பு பிற்பகல் 1.55க்கு ஒலிபரப்பாவது ஆகாஷ்வாணியின் பல்லாண்டு கால வழக்கம். மாநிலச் செய்திகள் (திருச்சிராப்பள்ளி வானொலி) பிற்பகல் 1.45க்கு ஒலிபரப்பாகி முடிந்ததும் பிற்பகல் 2 மணி ஆங்கிலச் செய்திகள் துவங்குவதற்கு இடையே இருக்கும் ஐந்து நிமிட நேரத்தில் வானிலை முன்னறிவிப்பு ஒலிபரப்பாவது வழக்கம்.  

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வானிலை அறிக்கைகள் விரிவான தரவுகளின் அடிப்படையிலானவை. நேர்த்தியான முறையில் தயாரிக்கப்படுபவை. வானிலை குறித்து  உருவாக்கும் விழிப்புணர்வுக்கு சமமாக நாட்டின் புவியியல் குறித்தும் விழிப்புணர்வை உருவாக்குபவை. கன்னியாகுமரியிலிருந்து அடிலாபாத் வரை தமிழகம், கேரளம், கருநாடகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள பெரும்பாலான ஊர்களின் மழையளவைக் காட்டுபவை. மீனவர்களுக்கும் பொதுப்பணித் துறையினருக்கும் தனி அறிவுறுத்தல்களை அளிப்பவை. தொலைபேசி, அலைபேசி , இணையம் போன்ற தொழில்நுட்பங்கள் புழக்கத்துக்கு வருவதற்கு முன்பிலிருந்தே வானொலி மூலமான இந்த வானிலை முன்னறிவிப்புகள் இலட்சக்கணக்கானோருக்கு பயன் அளித்திருக்கின்றன. 

வானிலை முன்னறிவிப்பு என்பதைத் தாண்டி இதில் வேறு பல உணர்வுபூர்வமான அம்சங்களும் உள்ளன. நமது நாட்டின் தென் பகுதியின் ஐந்து மாநிலங்களுக்கும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கும் அறிவிக்கப்படும் இந்த அறிவிப்புகள் மக்களுக்கு தேச ஒருமைப்பாட்டு உணர்வை அளிக்கக்கூடியவை. நாங்குநேரியைச் சேர்ந்த ஒருவர் ஹைதராபாத்தில் வசிக்கிறார் என்றால் அவருடைய சொந்த ஊரில் அன்று எத்தனை செ.மீ மழை பெய்திருக்கிறது என்பதை வானொலி மூலம் கேட்டு அறியும் போது அவர் மகிழ்வார். கட்டுமாவடியில் வசிக்கும் ஒருவரது மகனோ மகளோ பெங்களூரில் பணி புரிந்தால் அவர்களின் பெற்றோர் கட்டுமாவடியிலிருந்தே பெங்களூரில் பெய்யும் மழையளவை அறிந்து மகிழ்ச்சி கொள்வார்கள். இவ்விதமான உணர்வு பூர்வமான ஒருமைப்பாட்டு விஷயங்களும் இதில் அடங்கியுள்ளது. 

நமது நாட்டில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஒரு மரபு உண்டு. காலை எழுந்ததும் ‘’அயோத்தி மதுரா மாயா காசி காஞ்சி அவந்தி துவாரகா’’ ஆகிய ஏழு நகரங்களையும் ‘’ கங்கை யமுனை சரஸ்வதி சிந்து காவேரி கோதாவரி நர்மதா ‘’ ஆகிய ஏழு நதிகளையும் நினைவுபடுத்திக் கொண்டு அவற்றின் பெயரை உச்சரித்து வணங்கும் மரபு நமக்கு உண்டு. மேலும் குழந்தைகளுக்கு ஊர்களின் பெயரை சூட்டும் வழக்கமும் நமக்கு உண்டு. அண்ணாமலை, சிதம்பரம், பழநி, திருப்பதி, திருமலை, தில்லை, காசி, துவாரகா ஆகிய ஊர்களின் பெயரை குழந்தைகளுக்கு  சூட்டி மகிழும் பண்பாடு கொண்டவர்கள் நாம். இந்த மரபுடன் பண்பாட்டுடன் இணைத்து வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்படும் ஊர்களின் பெயர்கள் அளிக்கும் அனுபவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். 

திருச்சிராப்பள்ளி ஆகாஷ்வாணி 1.45க்கு தமிழ்ச் செய்தி அறிக்கை வாசிக்கிறது. அதன் பின் வானிலை அறிக்கை இடம் பெறும். இது பல்லாண்டு கால வழக்கம். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கம் இருந்திருக்கிறது. இரண்டு செய்தி அறிக்கைக்கு இடைப்பட்ட நேரத்தில் வருவதால் அது செய்தி அறிக்கையின் ஒரு பகுதியாகவே கேட்கப்படுகிறது. திருச்சிராப்பள்ளி ஆகாஷ்வாணியின் ஒலிபரப்பு பரப்பளவுக்குள் இருக்கும் காவிரி வடிநில மாவட்டங்கள், மற்றும் தமிழகத்தின் கணிசமான வட மாவட்டப் பகுதிகள் அனைத்திலும் இந்த வழக்கம் நேயர்களுக்கு மனதில் பதிவாகியிருக்கிறது. கடந்த சில வாரங்களாக பிற்பகல் 1.55க்கு ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த வானிலை அறிக்கை பிற்பகல் 2.55க்கு நேரம் மாற்றப்பட்டதாக அறிய நேர்ந்தது. எவ்விதம் அறிய நேர்ந்தது எனில் தமிழ்ச் செய்தி அறிக்கைக்குப் பின் வரும் வானிலை அறிக்கை ஏன் ஒலிபரப்பாகாமல் இருக்கிறது என பல நாட்கள் அவதானித்த பின்னரே அறிய முடிந்தது. 

இந்த விஷயம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அவர்கள் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்வதாக பதில் மின்னஞ்சல் அனுப்பினார்கள். என்னுடைய வலைப்பூவிலும் இது குறித்து எழுதினேன். 

காவிரி வடிநிலப் பகுதியில் பிற்பகல் 1.55 என்பது கிராமத்தின் தேனீர்க்கடைகளில் கிராமத்தின் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் உச்சபட்சமாக குழுமியிருக்கும் நேரம். அவர்களுடைய விழிப்புணர்வுக்காகவும் இந்த விஷயத்துடன் இணைந்திருக்கும் ஒருமைப்பாட்டு உணர்வு விஷயங்களுக்காகவும் பிற்பகல் 1.45 செய்தி அறிக்கைக்குப் பின் வானிலை அறிக்கை ஒலிபரப்பாவதையும் அதனை திருச்சிராப்பள்ளி வானொலியின் செய்திகளை ஒலிபரப்பும் காரைக்கால் பண்பலை வானொலியும் ஒலிபரப்பு செய்வதையும் உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

தங்கள் உண்மையுள்ள,

பிரபு

இடம் : மயிலாடுதுறை
நாள் : 26.11.2025

நகல் 

1. நிலைய இயக்குநர், ஆகாஷ்வாணி, திருச்சிராப்பள்ளி
2. நிலைய இயக்குநர், ஆகாஷ்வாணி, காரைக்கால் 

Tuesday, 25 November 2025

வானிலை ஆய்வு மையம் - பதில்

நேற்று சென்னை வானிலை ஆய்வு மையத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அதாவது, ஆகாஷ்வாணி வானொலியில் பிற்பகல் 1.45 தமிழ்ச் செய்திகளுக்குப் பின் ஒலிபரப்பாகும் வானிலை முன்னறிவிப்பு ஒலிபரப்பப்படாமல் இருக்கிறது என்பதை சென்னை வானிலை ஆய்வு மையத்துக்குத் தெரிவித்திருந்தேன். என்னுடைய வலைப்பூவிலும் இந்த விஷயம் குறித்து எழுதியிருந்தேன்.  இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் நான் அனுப்பிய மின்னஞ்சலுக்குப் பதில் அளித்து எனக்கு பதில் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். சுட்டிக்காட்டப்பட்ட விஷயம் குறித்து கவனம் கொள்ளப்படும் எனக் கூறியிருந்தார்கள். அவர்கள் அளித்த பதில் மின்னஞ்சல் மகிழ்ச்சி அளித்தது எனத் தெரிவித்தேன். 

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செயல் போற்றத்தகுந்தது !

Monday, 24 November 2025

வானிலை ஆய்வு மையத்துக்கு ஒரு கடிதம்

பிரபு  

மொழிபெயர்ப்பு

ராஜாஜியின் கட்டுரை ஒன்றை ஆர்வத்தின் காரணமாக மொழிபெயர்த்தேன். ராஜாஜியின் ஆங்கிலம் எளிய ஆங்கிலம் எனினும் கூரியது. அவர் பயன்படுத்திய சில ஆங்கில வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்பதை அகராதியின் துணை கொண்டு அறிந்து கொண்டேன். மொழிபெயர்ப்பு மகிழ்ச்சி அளித்தது எனினும் அதனை இன்னும் சிறப்பாகச் செய்திருக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது.  

Sunday, 23 November 2025

விருட்சத்தின் கீதம் - ராஜாஜி

 Rajaji Reader என்ற நூலில் இடம்பெற்றுள்ள ராஜாஜியின் கட்டுரையொன்றை மொழிபெயர்த்துள்ளேன். 

***

விருட்சத்தின் கீதம் 



கர்னல் ராய் ஜான்சன் பிரிட்டிஷ் அரசால் இராணுவ மருத்துவப் பிரிவாகத் தொடங்கப்பட்டு பின்னாட்களில் மாநில நிர்வாகத்தின் அலகாகிப் போன ஐ.எம்.எஸ் எனப்படும் இந்திய மருத்துவப் பணியின் மருத்துவர். அப்பணியை அர்ப்பணிப்புடன் ஆற்றியவர்களும் உண்டு. அந்தஸ்தாக மட்டும் கருதியவர்களும் உண்டு.நான் சேலத்தில் இருந்த போது ராய் ஜான்சன் மாவட்ட மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இனிய மனிதர் அவர்.

’’இன்று அவர் மிகவும் தாமதமாக வருவார் என்று தோன்றுகிறது. தனது பிரியத்துக்குரிய நண்பர்களான மரங்களுடன் அளவளாவ நிறைய நேரம் செலவிடுபவர் என்றாலும் இன்று அவருக்கு வேறு ஏதோ சிக்கல் இருப்பதாக என் மனதுக்குப் படுகிறது.’’ என்றார் திருமதி. ஜான்சன். ‘’தாங்கள் காத்திருக்கலாம். இல்லையேல் அவர் வந்ததும் தங்கள் வருகை குறித்தும் சிறிது நேரம் காத்திருந்து நீங்கள் திரும்பிச் சென்றது குறித்தும் நான் அவரிடம் கூறுகிறேன்.’’

‘’நன்றி ! நான் செல்ல வேண்டும். அவருக்குக் கிடைத்திருக்கும் பதவி உயர்வு எனக்கு பெருமகிழ்ச்சியை அளித்திருக்கிறது. உங்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவிக்கவே நான் வந்தேன்.’’

’’ஓ! அப்படியா ! மகிழ்ச்சி. தாமதமாக வருவதில் அவர் மன்னர். அவரை அறிந்தவர்களுக்கு இது புதிதில்லை’’

டாக்டருக்கு தான் நடைப்பயிற்சிக்கு செல்லும் போது பாதையில் இருக்கும் மரங்களுடன் உரையாடும் வழக்கம் உண்டு. மரங்களைத் தொட்டு அவற்றுடன் ஆத்மார்த்தமாகப் பேசுவார். காண்பதற்கு அழகிய விஷயம் அது. இதனைக் காணும் எவரும் அவர்கள் உரையாடலில் உள்நுழையவோ குறுக்கிடவோ மாட்டார்கள். தாறுமாறான லௌகிக உலகில் இக்காட்சி அரியது என இதனைத் தொலைவில் இருந்து காண்பவர்கள் கூட உணர்வார்கள். 

அன்றைய தினத்தின் மாலை டாக்டர் ஜான்சனுக்கு மிகவும் துயர் நிறைந்தது என்பதைப் பின்னர் அறிந்தேன். அவர் நேசித்த மரம் ஒன்றை முழுதாக வெட்டி ஒரு ஆனை வீழ்ந்து கிடப்பதைப் போல தரையில் கிடத்தியிருந்தார்கள். 

அடுத்த நாள் சந்தித்த போது டாக்டர் என்னிடம் சொன்னார்: ‘’வளத்தியாயிருந்த என் மகளைக் கொன்று விட்டார்கள்.’’

துரதிர்ஷ்டவசமாக அந்த மரம் ஜில்லா போர்டு கட்டிடத்துக்கு மிக நெருக்கமாக இருந்திருக்கிறது. அந்த மரத்தால் அந்த கட்டிடத்தின் அஸ்திவாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் என பொறியாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். 

கண்ணீருடன் டாக்டர் என்னிடம் கேட்டார் : ‘’மரம் கட்டிடத்துக்கு மிக அருகில் இருப்பதாகக் கூறுகிறார்கள். மரத்துக்குப் பக்கத்தில் அந்த கட்டிடத்தை அமைத்தது யார்? நாற்பது வருடமாக அந்த மரம் அங்கே இருக்கிறது. ஜில்லா போர்டு கட்டிடம் ஒரு வருடம் முன்பு கட்டப்பட்டிருக்கிறது’’

திருமதி.ஜான்சன் சொன்னார் : ‘’ டாக்டர் இதனை பெரிய பிரச்சனையாக்குகிறார். அது நன்மைக்கா என எனக்குத் தெரியவில்லை. மரம் வெட்டப்பட்டு விட்டது. டாக்டர் இந்த விஷயத்தைப் பார்க்கும் விதமாக யாரும் பார்க்க மாட்டார்கள்.’’

‘’உண்மை’’ என்றேன்.

‘’மிகத் தவறான ஒரு செயல் நிகழ்ந்திருக்கிறது. அது தெரிந்தும் நமக்கு எழும் தார்மீகச் சீற்றத்தைத் தணித்துக் கொண்டு எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருப்பது தீமையை மேலும் வளர்க்கவே செய்யும். நமது அறச்சீற்றத்தை வெளிப்படுத்துவதே நாகரிகமும் மானுடத் தன்மையும்’’

விஷயம் சிக்கல்தான். ராய் ஜான்சன் இந்த விஷயத்தைத் தார்மீகமாகக் காண்கிறார். அவர் செய்வது சரியானதும் கூட !

ஈவு இரக்கமற்ற அதிகாரிகள் மத்தியில் ராய் ஜான்சன் விதிவிலக்கானவர். டாக்டர் ராய் ஜான்சனுக்கு ஒரே மகன்; ராணுவத்தில் பணி புரிந்தான். பர்மிய போர்க்களத்தில் ஜப்பானுடனான போரில் மரணமடைந்தான். 

டாக்டரின் உணர்வுகள் என்னை ஆழமாகப் பாதித்தன. ஒரு ஹிந்துவால் இந்த உணர்வை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். ஹிந்துக்கள் ஒவ்வொரு மரமும் ஒரு ஜீவன் என்றும் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு ஆத்மா உண்டென்றும் நம்புகிறார்கள். அவர்கள் அவ்விதம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்த நாள் மாலை மரம் வெட்டப்பட்ட அந்த இடத்தைப் பார்த்தேன். ஆனை போல் பேருரு கொண்டு வீழ்ந்து கிடந்த அந்த விருட்சத்தின் கிளையொன்றில் உட்கார்ந்து நடந்தவற்றை அசை போட்டேன். அந்த மரத்தை என் மனம் பல உயிர்களாகவும் பிடுங்கி எறியப்பட்ட ஒரு குடும்பமாகவும் எண்ணற்ற தேவமலர்களாகவும் ஜனங்கள் நெருங்கி வாழும் மாநகரம் போன்ற வாழிடமாகவும் என் மனம் உணர்ந்தது. அப்போது குழலிசை என் செவியில் ஒலிப்பதை உணர்ந்தேன். மிக மெல்லிய இசை. எனக்கு மட்டும் கேட்ட இசை. மொழியற்ற இசை. இது விருட்சத்தின் கீதம் என நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். 

அன்றிரவு நூதனமான கனவொன்றைக் கண்டேன். எல்லாக் கனவுகளும் நூதனமானவை எனினும் அக்கனவு அதிநூதனமானது. 

கனவில் ஒரு குரல் கேட்டது. அது மரத்தின் குரல். 

‘’இது கனவென்று எண்ணாதே. உன்னால் என்னைப் பார்க்க முடியாது. ஆனால் நான் இருக்கிறேன். என் குரல் உனக்குக் கேட்கிறதா?’’

‘’கேட்கிறது. சொல்’’

‘’நான் கொலை செய்யப்பட்டேன். நீ அதற்கு நியாயம் கேட்க வேண்டும். என் தமையன் டாக்டர் ஜான்சன் அரசு ஊழியன். அவனால் எதுவும் செய்திட முடியாது. நீ வழக்கறிஞன். உன்னால் ஏதாவது செய்ய முடியும். மரம்வெட்டி என்னை வெட்ட முதலில் மறுத்தான். அவனுக்குப் பணத்தாசை காட்டி அதிகக் கூலி கொடுத்து அவன் மனதை மாற்றினார்கள். என்னை வெட்டச் செய்தார்கள்.’’

‘’நீதிபதி இதனை வழக்காக ஏற்றுக் கொள்வாரா என்பது தெரியவில்லை. என்னால் என்ன செய்ய முடியும்?’’

‘’மூடா நீ என்ன நாத்திகனா? யாவற்றுக்கும் செவி மடுக்கும் மிகப் பெரிய நீதிபதி ஒருவர் இருக்கிறார் என்பதை நீ அறிய மாட்டாயா?’’

‘’இந்த வழக்கை நான் நடத்துகிறேன். முதலில் செய்தித்தாள்களில் இது குறித்து எழுதுகிறேன்’’

‘’அவ்விதமே செய். அரச மரமாக நான் இருந்த போது வருவாய்த்துறை அதிகாரி சுப்பையரும் அவரது மனைவியும் என் மரத்தடிக்கு வந்து எனக்கு குங்குமமும் சந்தனமும் இட்டு வணங்குவார்கள். பல வாரங்களாக காய்ச்சல் பீடித்து உணர்வற்றுக் கிடந்த அவர்கள் மகன் உடல்நலம் பெற என்னிடம் பிராத்தித்துக் கொள்வார்கள். என் அருளால் அவன் நலம் பெற்றான். சுப்பையர் மனம் மகிழ்ந்து என் மரத்தடியில் ஏழைகள் பலருக்கு அன்னதானம் செய்தார். அப்போது என்னைச் சுற்றி மகிழ்ச்சிகரமாக இருந்தனர் அம்மக்கள். மகத்தான நாட்கள் அவை. இப்போது கொல்லப்பட்டு வெட்டுண்டு கிடக்கிறேன்.’’

உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்த நான் இந்த விஷயம் குறித்து தீவிரம் காட்டுவது என்று முடிவெடுத்தேன். 

பத்திரிக்கைகளுக்கு வளர்ந்த பெரிய மரங்கள் வெட்டப்படுவது மூடத்தனம் என கடிதம் எழுதினேன். 

எனது வழக்கறிஞர் நண்பர்கள் ஆச்சர்யப்பட்டனர் ; சிலர் கோபப்படவும் செய்தனர். 

‘’நண்பரே ! நாம் சுதந்திரத்துக்காகப் போராடுகிறோம். இது ரொம்ப சின்ன விஷயம். அது தெரியவில்லையா உங்களுக்கு’’

கனவில் வந்த விருட்சம் குறித்து நான் அவர்களிடம் ஏதும் கூறவில்லை. 

‘’நம் தேசத் தலைவர்கள் நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் சாலையோரத்தில் வெட்டப்பட்ட மரத்துக்காக வாதாடிக் கொண்டிருக்கிறீர்கள்’’ வழக்கறிஞர் சங்க செயலாளர் என்னிடம் கோபமாகச் சொன்னார். 

என் வாழ்நாளில் நான் தேசத்துக்காகப் பலவிதமான போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறேன். ஓர் அரச மரத்துக்காகக் குரலெழுப்பியதும் எனக்கு மகிழ்வான செயலே. 

***  



Saturday, 22 November 2025

காகிதமும் டிஜிட்டலும் (நகைச்சுவைக் கட்டுரை)

இன்று காலை டிம்மி ஷீட் எடுத்து மார்ஜின் போட்டு நண்பனுக்கு கடிதம் எழுதினேன். ஷீட்டின் நான்கு பக்கங்களுக்கு அந்த கடிதம் வந்தது. அளவில் சற்று பெரிய கடிதம் என்றுதான் எண்ணினேன். இருப்பினும் எழுதி முடித்து சிறிது நேரம் கழித்து அதனை வலைப்பூவில் பதிவிட வேண்டும் என விரும்பினேன். எழுதியதைப் பார்த்து வலைப்பூவில் தட்டச்சிட்டேன். பொதுவாக நான் அவ்விதம் செய்வதில்லை.  எழுதும் முறையில் எழுதும் மனநிலையில் அது சிறு பாதிப்பை உண்டாக்கும் என்பதால். காகிதத்தில் எழுத வேண்டி வந்தால் காகிதத்தில் எழுத வேண்டும். கணினியில் தட்டச்சிட வேண்டும் என்றால் தனியாக தட்டச்சிட வேண்டும். இதைப் பார்த்து அதையோ அதைப் பார்த்து இதையோ செய்யக் கூடாது. எழுதிய கடிதத்தை தபாலில் அனுப்பி விட்டால் என்னிடமிருந்து சென்று விடும் என்பதால் அதனை வலைப்பூவில் எழுத நினைத்தேன். 

தட்டச்சிட்ட போது நான்கு பக்க கடிதம் வலைப்பூவில் நடுத்தரமான அளவில் மட்டுமே இருந்தது. எழுத்துருவின் தடிமன் சீராக இருப்பதால் டிஜிட்டல் அட்சரங்கள் கையால் எழுதப்படும் அட்சரங்களை விட குறைவான இடத்தையே எடுத்துக் கொள்கின்றன. எம் எஸ் வேர்டு-ல் தட்டச்சிடப்பட்ட ஒரு பக்கம் கூட வலைப்பூவில் சிறிதாகவே இருக்கும் என்பதைக் கண்டிருக்கிறேன். 

தபாலில் அனுப்பும் முன் கடிதத்தை வலைப்பூவில் பதிவிட்டேன். கடிதம் நண்பனை திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை சென்றடையும். நண்பன் தினமும் என் வலைப்பூவை வாசிப்பவன். அனேகமாக இன்றே கூட வாசித்து விடுவான். நண்பன் வாசிப்பதற்கு முன்பு கூட பலர் வாசித்திருக்க முடியும். 

***

இந்த விஷயத்திலிருந்து நான் ஒரு முக்கியமான விஷயம் குறித்து கற்பனை செய்து பார்த்தேன். அது ஒரு முக்கியமான அவதானம் ; முக்கியமான புரிதல் என்று தோன்றியது. 

அச்சுமுறை வழக்கத்துக்கு வந்த பின் மட்டுமே மனிதர்கள் மிக அதிக அளவில் எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். காகிதத்தில் அச்சிடும் முறை தோன்றுவதற்கு முன் தாவரப்பட்டைகள் மரப்பட்டைகள் ஆகியவற்றில் மட்டுமே எழுதும் முறை உலகெங்கும் இருந்திருக்க முடியும். நம் நாட்டில் பனையோலைகளில் எழுதியிருக்கிறார்கள். பனையோலையில் எழுத்தாணி கொண்டு எழுதுவது என்பது சாமானிய காரியம் இல்லை. அது ஓர் அரும்பெரும் செயல். 

பனையோலைகளில் எழுதப்பட்டவற்றை குறைந்தது ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது புதிய பனையோலைகளில் மறுபடி எழுதிக் கொள்ள வேண்டும். நம் நாட்டின் அனைத்து இலக்கியப் பிரதிகளுமே அவ்விதமாகவே 2500 ஆண்டுகள் பயணித்து வந்திருக்கின்றன. நம் நாட்டின் பண்டைய கல்வி நிலையங்கள் அனைத்திலுமே பனையோலைப் பிரதிகளை மீண்டும் பனையோலையில் எழுதிக் கொள்வது என்பதை முக்கியப் பணியாகச் செய்திருப்பார்கள். 

இந்த விஷயத்தில் இன்னொரு விஷயத்தையும் கற்பனை செய்து பார்த்தேன். அதாவது கல்வி என்பது பனையோலைகளைப் பார்த்து படிப்பது என்னும் வகையில் இருந்திருக்காது ; இப்போது நாம் புத்தகங்களைப் பார்த்து படிப்பது போல. மனனம் செய்யும் விதமாகவே கல்வி இருந்திருக்கும். வேதக்கல்வி மனனம் செய்யும் விதமாகவே அமைக்கப்பட்டிருப்பதால் அந்த பாணியே மற்ற கல்வியிலும் இருந்திருக்கும். ஒருவர் தேவாரமோ திவ்யப் பிரபந்தமோ பயில்கிறார் என்றால் அதனை இசையுடன் சந்தத்துடன் பாடவே பயில்வார். பயின்றதை தினமும் மீண்டும் மீண்டும் பாடி தன் நினைவிலும் உணர்விலும் வைத்திருப்பதே கல்வி. 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரை இவ்விதமான கல்வியே இருந்திருக்கிறது. தான் கல்வி கற்ற முறை குறித்து ‘’என் சரித்திரத்தில்’’ பதிவு செய்யும் போது உ.வே.சா அதனைக் குறிப்பிடுகிறார். 

நம் நாட்டை ஞானத்தின் தாயகமாக எண்ணி மதித்த சீனப் பயணி யுவான் சுவாங், ஃபாஹியான் ஆகியோர் நம் நாட்டிலிருந்து மூட்டை மூட்டையாக பனையோலைச் சுவடிகளை சீன நாட்டுக்குக் கொண்டு சென்றனர் என்பது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

இஸ்லாமியப் படையெடுப்பின் போது பக்ருதீன் கில்ஜி நாளந்தா பல்கலைக்கழகத்தை எரியூட்டிய போது அங்கிருந்த ஓலைச்சுவடிகள் மாதக்கணக்கில் எரிந்தன என்பது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. 

இன்னொரு விஷயமும் யோசித்தேன்.

அதாவது கல்வியறிவும் எழுத்தறிவும் இப்போது ஒருங்கிணைந்து இருப்பது போல அப்போது இந்த அளவு ஒருங்கிணைந்திருக்கவில்லை என்று தோன்றுகிறது. 

அன்புள்ள நண்பனுக்கு,

இன்று என் நண்பனுக்கு என் கைப்பட ஒரு கடிதம் எழுதி தபாலில் அவன் முகவரிக்கு அனுப்பினேன். அக்கடிதத்தை கீழே அளித்துள்ளேன். 

***

அன்புள்ள நண்பனுக்கு,

வணக்கம். நலமாக இருக்கிறாயா? நான் நலமாக இருக்கிறேன். இந்த வாரத்தில் எனக்கு குதூகலமும் ஒரு நிலையின்மையும் இருந்தது. ஜெயகாந்தனின் ‘’ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’’ வாசித்துக் கொண்டிருந்தேன். பல ஆண்டுகளுக்கு முன்னால் வாசித்தது. இப்போது மறுவாசிப்பு செய்கிறேன். மீண்டும் ஒருமுறை ஜெயகாந்தன் மகத்தான கலைஞன் என்பதை உணர்ந்தேன்.  மனித வாழ்க்கையை அறிய அறிய மனிதர்களின் எல்லைகளும் மனிதர்களின் போதாமைகளும் மட்டுமே பேருரு கொண்டு முன்நிற்கிறது. லௌகிகத்தின் இயல்பு அது. மனிதர்களை நம்ப மனிதர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பளிக்க மனிதர்களை மன்னிக்க மனிதர்களை நேசிக்க நாம் லௌகிக மனநிலைக்கு அப்பால் செல்ல வேண்டியிருக்கிறது ; லௌகிக மனநிலைக்கு அப்பால் இருக்க வேண்டியிருக்கிறது. அவ்விதமான மனிதர்களே கலைஞர்களே அழகான சிறப்பான ஒத்திசைவு கொண்ட உலகம் ஒன்றைக் கற்பனை செய்கிறார்கள் ; படைக்கிறார்கள். ‘’ஒரு மனிதம் ஒரு வீடு ஒரு உலகம்’’ நாவல் மகத்தான கற்பனை. அதி தூய உணர்வின் சொல் வெளிப்பாடு. 

இந்த வாரத்தின் என் நிலையின்மைக்கு இன்ன காரணம் எனக் கூறிட முடியாது. பெரிய காரணங்கள் என ஏதுமில்லை ; சிறிய காரணங்கள் தான். இங்கே ஊரின் மிகப் பழமையான வீடொன்றின் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருக்கிறேன். 99 % பணிகள் நிறைவடைந்து விட்டன. இன்னும் 1 % எஞ்சியிருக்கிறது. எஞ்சியிருக்கும் 1% பணியைத் துவங்க முடியவில்லை. அது வீட்டுக்கு வெளிப்பக்கம் செய்ய வேண்டிய பணி. மழை இல்லாமல் இருக்கும் போது செய்ய வேண்டும். கடந்த ஒரு வாரமாக இங்கே தினமும் மழை. மன நிலையின்மைக்கு அதுவும் ஒரு காரணம்.

அந்த வீடு ஊரிலேயே மிகத் தொன்மையான வீடு. அந்த வீடு கட்டப்பட்டு 125 ஆண்டுகள் இருக்கும். சுவர்களின் அகலம் இரண்டேகால் அடிக்கு மேல் இருக்கக் கூடும். ஓட்டு வீடு. இப்போது அந்த வீட்டில் தம்பதியினரான மூத்த குடிமக்கள் இருவர் இருக்கிறார்கள். அவர்களுடைய குழந்தைகளும் பேரக் குழந்தைகளும் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள் ; பணி புரிகிறார்கள். தொன்மையான அந்த வீட்டில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பது அந்த முதிய தம்பதிகளின் விருப்பம். வீட்டின் ஒரு பகுதியில் குளியலறை நிர்மாணித்து முப்பது அடி நீளத்துக்கு முக்கால் அடி சுவரொன்றை பத்து அடி உயரத்துக்கு அமைத்துக் கொடுத்து வீட்டின் பழைய சுவர்களில் வெள்ளைப்பூச்சு தீட்ட வேண்டும் என்பதே பணி. அந்த வீட்டில் ஒரு யோகி 100 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்திருக்கிறார். ஊரின் சில ஆலயங்களை அவர் கட்டியிருக்கிறார். கட்டிடப் பணியாளர் அனைவரும் யோகி வாழ்ந்த வீடு என்பதால் இன்னதென வகுக்க இயலாத ஒரு நூதன உணர்வுடன் பணி புரிந்தோம். அந்த வீட்டின் முதிய தம்பதியினரிட்ம் அந்த யோகி குறித்த கதைகளைக் கேட்டுக் கொண்டேன். அவர்களுக்கு இப்போது 75 வயது. அவர்களுடைய பாட்டனார் காலத்தில் நடந்தவை அவர்கள் சொன்ன சம்பவங்கள். 

நீ எப்படி இருக்கிறாய்? அலுவலகப் பணிகள் எவ்விதம் செல்கின்றன? அலுவலகத்தில் உன் பணிச்சூழல் எப்படி இருக்கிறது? உன் புறச்சூழலை சிறப்பாக பராமரித்துக் கொள்ளவும். உன் பெற்றோர் எப்படி இருக்கிறார்கள்? அவர்களின் உடல்நலம் எவ்விதம் உள்ளது? மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நலம்தானே?

இந்த கடிதம் எழுதுவது மகிழ்ச்சியைத் தருகிறது. இச்செயல் மனதுக்கு இதம் அளிக்கிறது. மனதுக்கு அற்புதமான உணர்வைத் தருகிறது. ஒரு வெள்ளைக் காகிதத்தில் பென்சிலால் மார்ஜின் போட்டு தடையின்றி எழுதும் பேனாவால் இனிய நண்பனுக்கு கடிதம் எழுதுவது என்பது ஓர் அழகான செயல். இவ்விதமான கடிதங்களை நண்பர்களுக்கு உறவினர்களுக்கு பரிச்சயமானவர்களுக்கு எழுத வேண்டும் என முடிவு செய்துள்ளேன். எளிய நலம் விசாரிப்புகள் என எண்ணுகிறோம். ஒரு மனிதன் தன் சக மனிதனின் நலம் நாடுகிறான் என்பதும் நலம் விசாரிக்கிறான் என்பதும் அற்புதமான செயல்கள். 

தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்த வாரம் கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. மனம் மிகவும் குதூகலமாகவும் உற்சாகமாகவும் இருந்தது. உலகின் உயர்தனிச்செம்மொழிகளில் ஒன்று நமது தாய்மொழி. இருப்பினும் நம் சமூகம் இன்னும் போதிய அளவு இலக்கிய வாசிப்புக்குள் வரவில்லை. இலக்கியத்தின் மேல் ஆர்வம் இல்லாத இலக்கியம் வாசிக்காத சமூகம் பெரிய அளவில் வளர்ந்து விடாது என்பதே யதார்த்தம். தமிழ்ச் சமூகம் உன்னதமான உயரங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே பாரதி முதலான எல்லா படைப்பாளிகளுக்கும் பெருவிருப்பம். எனவேதான் தமிழ்ச் சமூகம் இலக்கியம் வாசிக்க வேண்டும் என்று எல்லா படைப்பாளிகளும் ஓயாமல் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். படைப்பூக்க மனநிலை கொண்ட ஒருவர் தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்களிலிருந்தும் கல்லூரிகளிலிருந்தும் பல்கலைக்கழகங்களிலிருந்தும் தப்பி ஓடி வர வேண்டியிருக்கிறது. ஒட்டு மொத்த சமூகமும் தொழில்நுட்பக் கல்வியினை வழிபட்டுக் கொண்டிருக்கிறது. இங்கே மொழிக்கும் நுண்கலைகளுக்கும் மட்டும் அல்ல கணிதத்துக்கும் அறிவியலுக்கும் கூட இடமில்லை. இந்த நிலை மாற பலவிதங்களிலும் பலவிதமான பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இவ்விதத்தில் தமிழ் இலக்கியப் படைப்பாளி ஜெயமோகன் டாக்டர் பட்டம் பெறுவது முக்கியத்துவம் கொண்டதாகிறது. 

22 ஆண்டுகளுக்கு முன் பொறியியல் பட்டம் பெற்றேன். அதன் பின் எந்த பட்டமும் பெறவில்லை. கணிதம், புவியியல், வணிகம், கணக்கியல், பொருளாதாரம், தடய அறிவியல், சட்டம் ஆகியவை எனக்கு ஆர்வம் உள்ள துறைகள். இவற்றைப் பயில வேண்டும் என்பது என் ஆர்வங்களில் ஒன்று. 

கடிதம் எழுதி அதனை உறையில் இட்டு தபால் வில்லை ஒட்டி முகவரி எழுதி அஞ்சல்பெட்டியில் போடுவது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செயல். சிறுவனாக இருந்த போது நான் பலருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். இப்போது அந்த வழக்கத்தை மீண்டும் துவங்கலாம் என இருக்கிறேன். 

உன்னைச் சந்திக்க வேண்டும் போல் இருக்கிறது ; உன்னுடன் சில நாட்கள் இருக்க வேண்டும் போல் இருக்கிறது. 

அன்புடன்,

பிரபு

22.11.2025
மயிலாடுதுறை