நேற்று மகாதானத் தெரு தென்கோடிக்கும் வடகோடிக்கும் இடையே இருக்கும் தூரம் 700 மீட்டர் எனக் கூறியிருந்தேன். இன்று காலை நடைப்பயிற்சிக்கு செல்லும் போது இரு சக்கர வாகனத்தின் ஸ்பீடாமீட்டர் அளவுபடி அளந்து பார்த்தேன். மகாதானத் தெருவில் நீளம் 700 மீட்டர் தான்.
பிரபு மயிலாடுதுறை
Sunday, 2 August 2026
Saturday, 1 August 2026
மனச்செயல்
மனம் என்பதை மனச்செயல் என்று கூறுவார்கள்.
இன்று காலை நடைப்பயிற்சியின் போது அதனை உணர்ந்தேன். இன்று உணர்ந்ததை மிக முக்கியமானதாக நினைக்கிறேன். ரியல் எஸ்டேட் தொடர்பான பல விஷயங்கள் மனதில் நிறைந்திருக்கின்றன. அவை பெருகிக் கொண்டேயிருக்கின்றன. லௌகிகத்தில் அது இயல்பானது. என்றாலும் இன்று அதிகாலையிலேயே அவ்விதம் இருந்தது புதிதாக இருந்தது. இன்று காலை 3 மணி 30 நிமிடம் நடந்தேன். மனம் தன் பல்கிப் பெருகும் செயலிலிருந்து அமைதி கொண்டது 2 மணி 30 நிமிடத்துக்குப் பிறகு தான். கடைசி ஒரு மணி நேரம் மனதில் எழும் எண்ணங்கள் மிக மெதுவானதாக ஆகி விட்டன. அடர்த்தி குறைவான விஷயங்களே மனதில் உதித்தன. உடல் சோர்வுற்றதைப் போல மனமும் சோர்வு கொண்டது. மிக வேகமாக இயங்கிக் கொண்டிருந்த மனம் சோர்வு கொண்டு மெதுவாக ஆனதை விரும்பினேன். அதன் பின் நாள் முழுவதும் மனம் அமைதியாக இருந்தது.
எனக்கு எப்போதுமே மனதை கவனிக்கும் வழக்கம் உண்டு.
ஒரு பேருந்தில் பயணிக்கும் போது மனம் ஒரு விதமாக இருக்கும் ; ரயிலில் பயணிக்கும் போது ஒரு விதமாக இருக்கும் ; இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது ஒரு விதமாக இருக்கும் ; பிரியமான ஒருவருடன் பேசும் போது ஒரு விதமாக இருக்கும்; நம்மை அசௌகர்யமாக உணரும் ஒருவருடன் பேசும் போது மனம் ஒரு விதமாக இருக்கும். ஒரு இரைச்சல் கேட்கும் போது மனம் ஒரு விதமாக இருக்கும். ஒரு குழந்தையிடம் பேசும் போது ஒரு விதமாக இருக்கும். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
நான் சொல்கிறபடி மனம் கேட்கிறதா? மனம் சொல்கிறபடி நான் கேட்கிறேனா? எனக்குள் இருக்கும் மனம் ஒன்று தானா? எனக்குள் பல மனங்கள் இருக்கின்றனவா?
இவ்விதமான கேள்விகள் எழுந்தன. இவ்விதம் கேள்விகள் எழுந்தது நல்ல விஷயம் என்று தான் எண்ணினேன். ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என ஆர்வம் எழுந்தால் அதைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு உருவாகிறது அல்லவா?
இன்று காலை மனதில் பிரவாகித்த பல எண்ணங்களில் ஒரு பகுதியைத் தான் இன்று காலை எழுதினேன்.
மனம் பற்றி மேலும் எழுதுகிறேன்.
உறக்கத்தை விட நடைப்பயிற்சி மேலானது (நகைச்சுவைக் கட்டுரை)
Friday, 31 July 2026
இந்தியன் வங்கி தலைமை நிர்வாக அதிகாரிக்கு ஒரு கடிதம்
கீழ்க்கண்ட கடிதத்தை ஆங்கிலத்தில் இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு விரைவுத் தபாலில் அனுப்பியுள்ளேன். அதன் நகலை மத்திய நிதியமைச்சருக்கு விரைவுத் தபாலில் அனுப்பியுள்ளேன்.
@@@@
&&&
&&
To
தலைமை நிர்வாக அதிகாரி
இந்தியன் வங்கி
சென்னை
ஐயா,
பொருள் : இந்தியன் வங்கியின் ‘’ஸ்விஃப்ட்’’ படிவத்தில் ஒப்புகைச்சீட்டு வசதி செய்து கொடுக்க விண்ணப்பம்
இத்துடன் தங்கள் பார்வைக்காக இந்தியன் வங்கியின் ‘’ஸ்விஃப்ட்’’
படிவத்தையும் பாரத ஸ்டேட் வங்கியின் ‘’ஸ்விஃப்ட்’’ படிவத்தையும் இணைத்துள்ளேன். ஸ்டேட்
வங்கி படிவத்தில் ‘’ஒப்புகைச் சீட்டு’’ வசதி இருப்பதையும் இந்தியன் வங்கி படிவத்தில்
‘’ஒப்புகைச் சீட்டு’’ வசதி இல்லாமல் இருப்பதையும் காணலாம். இக்கடிதத்தை தொடங்கும் இத்தருணத்திலேயே
இந்தியன் வங்கி ‘’ஸ்விஃப்ட்’’ படிவங்கள் இனி வாடிக்கையாளருக்கு ‘’ஒப்புகைச் சீட்டு’’
வழங்கும் வசதி கொண்டதாக இருக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.
***
இந்தக் கடிதம் நீண்டது. சற்று உணர்வுபூர்வமானதும் கூட. உணர்வின்
அம்சங்கள் இன்றி தர்க்கபூர்வமாகவே இந்த விஷயத்தை அணுக வேண்டும் ; இந்த விஷயம் தொடர்பான
கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என எண்ணுகிறேன். இருப்பினும் இந்தக் கடிதம் எழுதப்படுவதற்கு
காரணமான சம்பவத்தை முன்வைக்காமல் போனால் இக்கடிதம் ஏன் உணர்வுபூர்வமான அம்சங்களையும்
கொண்டிருக்கிறது என்பது விளக்கப்படாமலேயே போகும். இந்தியன் வங்கிக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்குமான
உறவு உணர்வுபூர்வமான உறவும் கூட என்பதை அதன் தலைமை நிர்வாக அதிகாரியான தாங்கள் ஏற்பீர்கள் என நம்புகிறேன்.
***
வங்கித்துறையின் பல பொறுப்புகளை வகித்து இன்று தாங்கள் இந்தியன்
வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி என்னும் உயர் பதவியை அடைந்திருக்கிறீர்கள். வங்கி நடைமுறைகள்
அனைத்திலும் நீங்கள் ஆழங்கால் பட்டவராக இருப்பீர்கள். ஒரு எளிய விஷயத்தை தங்கள் கவனத்துக்குக்
கொண்டு வருகிறேன்.
ஒரு வாடிக்கையாளர் வங்கிக்கு வருகிறார். வங்கி எழுது மேஜையில்
இருக்கும் ‘’பே இன் சிலிப்’’ நிரப்பி தனது பாஸ் புத்தகத்துடன் வங்கி சாளரத்தில் தருகிறார்.
அந்த ‘’பே இன் சிலிப்’’ 25 சதவீத இடம் ஒப்புகைச் சீட்டுக்கும் 75 சதவீத இடம் வங்கி
உபயோகத்துக்கும் உரியது. சாளரத்தின் எழுத்தர் படிவத்தைச் சரிபார்த்து வங்கி முத்திரையிட்டு
வாடிக்கையாளர் தரும் பணத்தை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைத்து விட்டு ஒப்புகைச்சீட்டை
வாடிக்கையாளரிடம் கொடுத்து விடுவார் அல்லவா? இதுதானே வங்கி நடைமுறை. அனேகமாக உலகில்
வங்கி என்னும் ஸ்தாபனம் துவங்கிய நாள் முதல் நிகழும் வங்கி முறைமையாகவும் வங்கி என்னும்
ஸ்தாபனத்தில் முதல் வங்கி முறைமையாகவும் இந்த ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறை இருந்திருக்கும்
அல்லவா? இந்த முறை இருப்பதால் தான் வாடிக்கையாளர்
வங்கிக்கு வந்து பணம் செலுத்தினார் என்பதற்கான அத்தாட்சி அவர் கையில் இருக்கிறது.
இந்த முறை இல்லையென்றால் வாடிக்கையாளர்கள் பணம் வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில்
வரவு வைக்கப்படாமல் முறைகேடுகள் மிக சாதாரணமாக நடக்கும் அல்ல்வா? ஒப்புகைச்சீட்டு மட்டுமே
இன்ன வாடிக்கையாளர் இன்ன தேதியில் வங்கிக்கு வந்தார் ; தனது கணக்கில் பணம் செலுத்தினார்
என்பதற்கான ஆதாரம் அல்லவா? வாடிக்கையாளரிடம் ஒப்புகைச்சீட்டு இல்லை என்றால் அவர் வங்கிக்கே
வரவில்லை என்று சொல்லி விடலாம் அல்லவா? வங்கி வாடிக்கையாளரின் நலனைக் காக்க ஒப்புகைச்சீட்டுக்கு
அப்பாலும் முறைகேடுகள் நடக்காமல் இருக்க பல முன்னேற்பாடுகளையும் முன்னேற்பாட்டு முறைமைகளையும்
செய்துள்ளது என்றாலும் ஒப்புகைச்சீட்டு என்பது வாடிக்கையாளர் கையில் இருக்கும் அடிப்படை
ஆதாரம் என்பதை தாங்கள் ஏற்பீர்கள் என நம்புகிறேன்.
***
நான் வசிக்கும் பகுதியில் 78 வயதான முதிய பெண்மணி ஒருவர்
இருக்கிறார். அவரது மூத்த மகன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இயற்கை எய்தினார். இறந்து
போன தனது மூத்த மகனின் மகனான தனது பேரன் ஐரோப்பியக் கல்லூரி ஒன்றில் சேர்க்கை அனுமதி
பெற்றதற்காக ஐரோப்பாவில் இருக்கும் கல்லூரிக்கு தனது கணக்கிலிருந்து பணம் அனுப்ப
28.07.2026 அன்று காலை 10.30 மணிக்கு மயிலாடுதுறை இந்தியன் வங்கிக்கு வந்தார். 78 வயதான
மூத்த குடிமகள் என்பதால் அவருக்கு வங்கி நடைமுறைகளில் உதவ அவர்களின் குடும்ப உறுப்பினர்கள்
சிலரும் அவர்களின் குடும்ப நண்பனான நானும் வந்திருந்தேன். ( மயிலாடுதுறை இந்தியன் வங்கிக்
கிளையின் 28.07.2026 அன்று முழு நாளைய சி சி டி வி காட்சிகளை தங்கள் அலுவலகம் கோரிப்
பெற்று நான் கூறுவதை உறுதி செய்து கொள்ளலாம்). அந்தப் பெண்மணியிடம் ‘’ஸ்விஃப்ட்’’ நடைமுறைக்கு
வங்கி கோரிய அனைத்து ஆவணங்களும் இருந்தன. தன்னுடைய ஆதார் நகல், தன்னுடைய பான் கார்டு
நகல், தன்னுடைய கேன்சல் செய்யப்பட்ட இந்தியன் வங்கி காசோலை, தனது பேரனின் பாஸ்போர்ட்
நகல், தனது பேரனின் ஆதார் நகல், தனது பேரனின் பான் கார்டு நகல், தனது பேரனின் கல்லூரி
சேர்க்கை அனுமதி கடிதம், தனது பேரனின் கல்லூரிக் கட்டண விபரங்கள் ஆகியவை அவரால் வங்கி துணை மேலாளரிடம் காலை 11.30 மணி அளவில் ஒப்படைக்கப்பட்டன. இந்தியன் வங்கியின் ‘’ஸ்விஃப்ட்’’ படிவத்தில் வாடிக்கையாளரால் நிரப்பப்பட
வேண்டிய அனைத்து விபரங்களும் அந்த 78 வயதான மூதாட்டியால் நிரப்பப்பட்டிருந்தன. இந்தியன்
வங்கி ஸ்விஃப்ட் படிவத்தில் ‘’ஒப்புகைச்சீட்டு’’க்கான இடம் இல்லை என்பதை இத்துடன் இணைத்துள்ள
படிவம் மூலம் அறியலாம். ஆதலால் ஒப்புகைச்சீட்டு எவ்விதத்தில் வழங்கப்படும் என அந்த
மூதாட்டியோ மூதாட்டி உடன் வந்த நாங்களோ அறிந்திருக்கவில்லை. நாங்கள் ‘’ஸ்விஃப்ட்’’
விண்ணப்பம் அளித்ததற்கு ஒப்புகைச்சீட்டு கேட்டோம். மதியம் 3 மணிக்கு வருமாறு கூறினார்கள்.
மதியம் 3 மணிக்கு சென்று கேட்டோம். மாலை 5.30 மணிக்கு வருமாறு கூறினார்கள். மாலை
3.30 உடன் வங்கி வேலை நேரம் முடிந்து விடுமே என பதட்டம் அடைந்தோம். அன்றைய பொழுது முழுவதுமே
எங்கள் கணக்கிலிருந்து ஐரோப்பிய கல்லூரிக்கு செலுத்த வேண்டிய தொகை எங்கள் கணக்கிலிருந்து
எடுக்கப்படவில்லை. மறுநாள் 29.07.2026 அன்று முழு நாள் பொழுதும் பலமுறை வங்கிக்கு சென்று
28.07.2026 அன்று அந்த மூதாட்டி கொடுத்த ‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பத்தின் அடிப்படையில்
அந்த மூதாட்டியின் கணக்கிலிருந்து ஐரோப்பாவில் உள்ள கல்லூரிக்கு பணம் மாற்றப்பட்டு
விட்டதா எனக் கேட்டோம். அன்றைய வங்கி நேரமும் மாலை 3.30க்கு முடிந்தது. மாலை 6 மணிக்கு
வருமாறு கூறினார்கள். மாலை 6 மணிக்கும் மூதாட்டியின் கணக்கிலிருந்து பணம் மாற்றப்படவில்லை. ஐரோப்பிய
கல்லூரி நிர்வாகத்துக்கு நாங்கள் 28.07.2026 அன்று வங்கியில் ‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பம்
கொடுத்திருக்கிறோம் என தகவல் தெரிவித்திருந்தோம். நாங்கள் தகவல் தெரிவித்து 33 மணி
நேரம் கடந்த பின்னும் எந்த முன்னேற்றமும் இல்லை. எங்கள் விண்ணப்பத்தைப் பரிசீலித்து
எங்களுடன் தொடர்பில் இருந்தது மயிலாடுதுறை இந்தியன் வங்கியின் துணை மேலாளர் ஒருவர்.
28.07.2026, 29.07.2026 ஆகிய இரு தினமும் மயிலாடுதுறை இந்தியன் வங்கி கிளையின் மேலாளர்
டெபுடேஷனில் வெளியூர் சென்றிருந்தார். அவருக்கு ஃபோன் செய்து பேசினோம். 29.07.2026
அன்று மாலை 6.45 க்கு மூதாட்டியின் கணக்கிலிருந்து தொகை மாற்றப்பட்டிருக்கிறது என்னும்
குறுஞ்செய்தி வங்கியிடமிருந்து வந்ததால் ஆசுவாசமடைந்தோம்.
***
இந்த விஷயத்தை மேலோட்டமாகப் பார்த்தால் வெளிநாட்டுக்கு பணம்
அனுப்புவது பல கட்டங்களால் ஆனது என்பதால் ‘’ஸ்விஃப்ட்’’ முறையில் பணம் ஒரு கணக்கிலிருந்து
இன்னொரு கணக்குக்கு மாற கால அவகாசம் தேவை எனத் தோன்றும். ஆனால் இந்த விஷயத்தை சற்று
கூர்ந்து கவனிக்க வேண்டும். ஒவ்வொரு வங்கிக்கும் ‘’ஃபாரெக்ஸ்’’ என்னும் அன்னியச் செலாவணி
பரிவர்த்தனைக்கு ஒரு நேரம் இருக்கும் அல்லவா? இந்தியன் வங்கிக்கு மதியம் 2 மணியிலிருந்து
மதியம் 3 மணி வரை ‘’ஃபாரெக்ஸ்’’க்கான நேரம் என்றால் ஒரு வாடிக்கையாளர் காலை 11.30க்கு
‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பம் கொடுத்தால் அதனை வங்கி ஊழியர் மாலை 3.15க்கு உள்ளிடுவார்
என்றால் அன்றைய தினத்தின் ‘’ஃபாரெக்ஸ்’’ முடிந்து அது அடுத்த நாள் கணக்குக்கு சென்று
விடாதா? ஒரு வாடிக்கையாளர் மாலை 3.25க்கு ‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பம் கொடுத்தால் அது
அடுத்த நாள் கணக்கில் சேரும் எனக் கூறலாம். காலை 11.30க்கு கொடுத்ததை எவ்விதம் மாலை
3.15க்கு உள்ளிடலாம்? இது விதிமீறல் இல்லையா? இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது.
‘’ஃபாரெக்ஸ்’’ நாணய மதிப்புகள் நாளுக்கு நாள் மாறிக் கொண்டேயிருப்பவை. வெளிநாட்டு நாணயத்தின்
மதிப்பு உயர்ந்தால் முதல் நாள் விண்ணப்பத்தை இரண்டாம் நாள் உள்ளிடுவதால் வாடிக்கையாளருக்கு
பண இழப்பு ஏற்படாதா? ஒரு வாடிக்கையாளர் விண்ணப்பத்தை அவர் விண்ணப்பம் அளிக்கும் நாளன்றே உள்ளீடு செய்தால் அது ஒரு வங்கி முறைமை எனக் கொள்ள
முடியும். கிளையின் பணியான உள்ளீடு செய்தலையே அடுத்த நாள் அதற்கு அடுத்த நாள் என ஊழியர்கள்
தங்கள் வசதிக்கு செய்தால் அதனை ஒரு நாள் இரண்டு நாட்கள் ஒரு வாரம் ஒரு வருடம் எனத்
தாமதித்து அந்த நாட்களை இன்ஃபினிட்டி வரை கொண்டு செல்லலாம் என்றாகி விடுகிறது அல்லவா?
இந்நிலையைத் தான் இந்தியன் வங்கி நிர்வாகம் விரும்புகிறதா? இவ்விதமான வாடிக்கையாளர்
சேவையைத்தான் இந்தியன் வங்கி உயரதிகாரிகள் விரும்புகிறார்களா?
***
இந்தியாவின் தேசிய மயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள் சென்ற
நிதி ஆண்டில் 383 லட்சம் கோடி ரூபாய்க்கு வணிகம் செய்ததாக புள்ளிவிபரம் கூறுகிறது.
இத்தனை பெரிய வணிகம் நிகழ்த்தும் இந்திய பொதுத்துறை வங்கிகள் ‘’ஒப்புகைச் சீட்டு’’
போன்ற எளிய சேவையைக் கூட அளிக்க இயலாத நிலையிலா இருக்கின்றன? ஆண்டுக்கு 383 லட்சம்
கோடி வணிகம் கொடுக்கும் கோடானுகோடி வாடிக்கையாளர்களின் நலன் மீது பொதுத்துறை வங்கிகளின்
நிர்வாகத்துக்கு ஒரு ‘’ஒப்புகைச்சீட்டு’’ கூட வழங்க இயலாத அக்கறை தான் இருக்கிறதா?
***
நான் குறிப்பிட்டிருக்கும் மேற்படி சம்பவத்தை ‘’சு மோட்டோ’’
வாக இந்தியன் வங்கி நிர்வாகம் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
28.07.2026 அன்று 78 வயதான மூதாட்டியான வங்கி வாடிக்கையாளர் வங்கிக்கு வந்த நேரம்
, அவருக்கு உதவியாக வந்தவர்கள் விண்ணப்பம் அளித்த நேரம் , மயிலாடுதுறை இந்தியன் வங்கி
துணை மேலாளரால அந்த விண்ணப்பம் அவரது கணிணியில் உள்ளீடு செய்யப்பட்ட நேரம்,
29.07.2026 அன்று வாடிக்கையாளர் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்ட நேரம் ஆகியவற்றை
ஆராய்ந்து துணை மேலாளரான இந்தியன் வங்கி ஊழியர் 78 வயதான மூதாட்டி அளித்த ‘’ஸ்விஃப்ட்’’
விண்ணப்பத்தை வங்கி ஊழியர்களுக்கு அளித்திருக்கும் குறிப்புகளின் படி வங்கி சட்ட திட்டங்களின்
படி முறைப்படி உள்ளீடு செய்து பணம் மாற்றியிருக்கிறாரா என்பதை ஆராயுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
வங்கி ஊழியர் செயல்பட்ட விதத்தில் சட்ட திட்டங்கள் அனுசரிக்கப்படாமல் இருந்தால் வங்கி
அளித்திருக்கும் குறிப்புகள் படி மேற்படி ஊழியர் நடக்காமல் இருந்திருந்தால் அவர் மீது
வங்கி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 28.07.2026,
29.07.2026 ஆகிய இரு தினங்களும் வாடிக்கையாளரான 78 வயது மூதாட்டியும் அவர் உடன் வந்தவர்களும்
முழுமையாகப் பொறுமை காத்தோம். ‘’திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை’’என அமைதியாய் இருந்தோம்.
***
இந்தியன் வங்கி தலைமை நிர்வாக அதிகாரி அவர்களே!
அல்லற் பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
என்பது திருக்குறள். ஒரு வங்கி தலைமை நிர்வாக அதிகாரிக்கு நாட்டின் சாதாரண குடிமகன் ஒருவன் எழுதும் கடிதத்தில் திருக்குறள் மேற்கோள் காட்டப்படுவது அபூர்வமான ஒன்று தான். நாட்டின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யும் போது நிதி நிலை அறிக்கை உரையில் திருக்குறளும் அர்த்தசாஸ்திரமும் கபீரின் கவிதைகளும் இடம் பெறுவதை நாம் காண்கிறோம். எனவே வங்கி பொது மேலாளருக்கு எழுதப்படும் கடிதத்தில் ஒரு திருக்குறள் இடம் பெற்றிருப்பது இயல்பானது தான். அந்தத் திருக்குறளின் அர்த்தம் இதுதான் தலைமை நிர்வாக அதிகாரி அவர்களே. ‘’ துயரப்பட்டு நிர்கதியாக இருக்கும் ஒருவன் சிந்தும் கண்ணீர்த்துளி ஒரு நாட்டின் கருவூலத்தை இல்லாமல் ஆக்கும் பெரும் படையாக மாறும்’’ . 28.07.2026 அன்றும் 29.07.2026 அன்றும் இந்தியன் வங்கி மயிலாடுதுறை கிளைக்கு வந்த 40 ஆண்டு காலம் இந்தியன் வங்கி வாடிக்கையாளராக இருக்கும் 78 வயதான மூதாட்டி மௌனமாக அந்த இரு நாட்களின் சில பொழுதுகளேனும் வங்கி தமக்கு அளித்த சேவைக் குறைபாட்டை எண்ணி வங்கியின் செயலின்மையை எண்ணி கண்ணீர் சிந்தினார். அந்தக் கண்ணீருக்கு இந்தியன் வங்கி பிழையீடு செய்ய வேண்டும்.
***
இந்தக் கடிதத்தின் முடிவுப் பகுதியாக எனது கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.
1.
பாரத
ஸ்டேட் வங்கி ‘’ஸ்விஃப்ட்’’ படிவத்தில் உள்ளவாறு இந்தியன் வங்கி ‘’ஸ்விஃப்ட்’’ படிவத்திலும்
‘’ஒப்புகைச் சீட்டு’’ இருக்கும் விதமாக படிவத்தை இந்தியன் வங்கி வடிவமைக்க வேண்டும்.
2.
உலகில்
எந்த இந்தியன் வங்கிக் கிளைக்கு வாடிக்கையாளர் ‘’ஸ்விஃப்ட்’’ செய்ய வந்து தங்கள் ஆவணங்களை
அளிக்கும் பட்சத்தில் அவற்றை உடன் பரிசீலித்து வாடிக்கையாளருக்கு உடன் ஒப்புகைச்சீட்டு
வழங்க ஆவன செய்ய வேண்டும்.
3.
28.07.2026,
29.07.2026 ஆகிய இரு தினங்களும் மயிலாடுதுறை இந்தியன் வங்கியில் இந்தியன் வங்கியின்
40 ஆண்டு கால வாடிக்கையாளரான 78 வய்தான மூதாட்டி அளித்த ‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பம் மீதான
வங்கி துணை மேலாளரின் நடவடிக்கைகளை உரிய மேலதிகாரிகளைக் கொண்டு துறை ரீதியான விசாரணை
மேற்கொள்ள வேண்டும் ; சி சி டி வி காட்சிகள் , வங்கியின் கணிணி ஆவணங்கள் ஆகியவற்றைப்
பரிசீலித்து நிகழ்ந்த சேவைக் குறைபாடுக்கு பொறுப்பான துணை மேலாளர் மீது துறை ரீதியான
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
***
நாட்டின் சாமானியக் குடிமகனான நான் இந்தக் கடிதத்தை தபால்
மூலமாகவே அனுப்புகிறேன். இந்தக் கடிதம் இந்தியன் வங்கியின் பொது மேலாளரான தங்களைச்
சென்றடையுமா என்பது ஐயம். தங்கள் காரியதரிசியின் கவனத்துக்கு வர வாய்ப்பிருக்கிறது.
வங்கியின் குறைதீர் பிரிவு மற்றும் வங்கியின் மண்டல அலுவலகத்துக்கு தங்கள் அலுவலகத்திலிருந்து
பிரதி எடுத்து அனுப்பப்பட வாய்ப்புள்ளது. குறைந்தது இந்தியன் வங்கியின் உயரதிகாரிகள்
10 பேராவது இந்தக் கடிதத்தை வாசிக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு.
ஆண்டுக்கு 383 லட்சம் கோடி ரூபாய்க்கு வணிகம் அளிக்கும் நாட்டின் வங்கி வாடிக்கையாளர்களிடம்
வங்கி ஊழியர்கள் எவ்விதம் நடந்து கொள்கிறார்கள் என்பதை அறிய உதவும் உரைகல் இந்தக் கடிதம்.
இந்தக் கடிதத்தின் நகலை மத்திய நிதியமைச்சருக்கும் அனுப்புகிறேன்.
அங்கிருக்கும் உயர் அதிகாரிகளும் இந்தியன் வங்கியின் 40 வருட வாடிக்கையாளரான 78 வயது
மூதாட்டிக்கு இந்தியன் வங்கியின் மயிலாடுதுறை கிளையில் நிகழ்ந்த சம்பவம் குறித்து அறியட்டும்.
மயிலாடுதுறை இந்தியன் வங்கியின் 40 வருட வாடிக்கையாளரான
78 வயது மூதாட்டி 28.07.2026 அன்று காலை 10.30க்கு அளித்த ‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பத்தின்
படி அவர் வங்கிக் கணக்கிலிருந்து தொகை மறுநாள் 29.07.2026 அன்று மாலை 6.45 மணிக்கு
கிட்டத்தட்ட 32 மணி நேரம் கழித்து எடுக்கப்பட்டது. குறுஞ்செய்தியாக அவர் அதனை அறிந்தார்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள,
&&&
இடம் : மயிலாடுதுறை
நாள் : 31.07.2026
நகல்
மத்திய நிதியமைச்சர்
பாரத் சர்க்கார்
புதுதில்லி
Thursday, 30 July 2026
ஒரு காதல் கடிதம்
அன்புள்ள அண்ணனுக்கு,
Wednesday, 29 July 2026
விண்ணப்பம் - 7 குடும்பங்கள்
@@@@@ கிளை அஞ்சல் நிலையம் மீது சி பி கி ராம் ஸ் புகார்
29.07.2026 அன்று 1315 மணிக்கு @@@@@அஞ்சல் நிலையம் சென்று 9 போஸ்டல் கவர் வேண்டும் எனக் கேட்டேன். அங்கிருந்த சப் போஸ்ட் மாஸ்டர் போஸ்டல் கவர் கையிருப்பு இல்லை ; வேண்டுமானால் ரூ.5 போஸ்டல் ஸ்டாம்ப் 9 தருகிறேன். வெளிமார்க்கெட்டில் ஆஃபிஸ் கவர் வாங்கி ரூ.5 ஸ்டாம்ப் வாங்கி ஒட்டி அனுப்பிக் கொள்ளுங்கள் என்று கூறினார். மேலும் போஸ்டல் கவர் கையிருப்பு வைத்துக் கொள்வதில்லை என்றும் கூறினார். என்னுடைய புரிதலின் படி போஸ்ட் ஆஃபிஸ் என்பது போஸ்டல் டிபார்ட்மெண்ட் தொடர்பான அடிப்படையான விஷயங்கள் கிடைக்கும் இடம். அது விதிமுறைகளின் படியும் சட்ட திட்டங்களின் படியும் இயங்கக் கூடிய இடம் என்றே கருதுகிறேன். என் கையில் ரூ.50 இருந்தது. நான் 9 போஸ்டல் கவர் வாங்கி அதில் 9 தபால்களை வைத்து அனுப்புவதாக இருந்தேன். போஸ்டல் ஸ்டாம்பும் வெளிமார்க்கெட்டில் கவரில் வாங்கினால் எனக்கு ரூ.54 ஆகும். கூடுதல் செலவாகும் என்பதுடன் என் கையில் ரூ.54 இல்லை எனில் என் பணி நிறைவடையாது. இந்த விஷயத்தை சில்லறை விஷயமாக நான் நினைக்கவில்லை. ஒரு வாடிக்கையாளருக்கு இது ரூ.4 சம்பந்தப்பட்ட பிரச்சனையாக இருக்கும். ஒரு நாளில் அந்த அஞ்சல் நிலையத்துக்கு 10 பேர் வருவார்கள் எனில் அது ரூ.40 சம்பந்தப்பட்டது. 300 நாட்கள் ஒரு ஆண்டில் வேலைநாட்கள் எனில் அது ரூ.12,000 தொடர்பான பிரச்சனை. இந்த சி பி கி ராம் ஸ் புகார் மூலம் அஞ்சல்துறை மேலதிகாரிகளை @@@@@ கிளை அஞ்சல் நிலையம் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்துடன் மேற்கொண்ட வரவு செலவுகளை ஆடிட் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். @@@@@ கிளை அஞ்சல் நிலையத்துக்கு கடைசியாக எப்போது போஸ்டல் கவர் வழங்கப்பட்டது ? அது விற்று தீர்ந்தது எப்போது? விற்ற பின் ஏன் போஸ்டல் கவர் ஆர்டர் செய்யவில்லை? ஆகிய வினாக்களைக் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேட்டு விசாரணை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். மத்திய அரசின் முக்கிய துறைகளில் ஒன்றான தபால் துறையின் அஞ்சல் அலுவலகம் ஒன்றில் போஸ்டல் கவர் இருப்பு வைத்துக் கொள்ளாமல் இருப்பதையும் போஸ்டல் கவர் கேட்டு வரும் வாடிக்கையாளரிடம் போஸ்டல் கவர் இருப்பு வைத்துக் கொள்வதில்லை என சப் போஸ்ட் மாஸ்டர் பதில் கூறுவதையும் அஞ்சல்துறை உயர் அதிகாரிகள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என நம்புகிறேன். மேற்படி விஷயம் குறித்து விசாரணை நடத்தி உரிய மேல்நடவடிக்கை எடுக்குமாறு அஞ்சல்துறை உயர் அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன்,
மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை (நகைச்சுவைக் கட்டுரை)
பணி நிமித்தம் சிதம்பரம் சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். சீர்காழி அருகே வரும் போது அலைபேசி ஒலித்தது. இரு சக்கர வாகனத்தின் ஒலியையும் தாண்டி அலைபேசி ஒலி கேட்டது. எனது வாகனம் சென்று கொண்டிருந்த இடம் சீர்காழி புறவழிச்சாலை. வாகனத்தை ஓரங்கட்டி அலைபேசியை எடுத்தேன். சுருக்கமாக ‘’எக்மோர் எஸ் ஐ பேசறன்’’ என்றார் ஃபோனில் பேசியவர். ‘’வணக்கம் மேடம்’’ என்றேன். ‘’முத்துநகர் எக்ஸ்பிரஸ்ல ஜெனரல் கம்பார்ட்மெண்ட்ல கேம்ளிங் நடக்கறதா கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கீங்க இல்லையா?’’ என்றார். ‘’ஆமாம் மேடம்! சி பி கி ராம் ஸ் ல புகார் கொடுத்திருந்தேன்.’’ என்றேன். ‘’நீங்க டிராவல் பண்ண அன்னைக்கு டிரெயின்ல டி டி ஈ யாரும் ஜெனரல் கம்பார்ட்மெண்ட்க்கு வரலியா?’’ என்று கேட்டார். ‘’அன்னைக்கு யாரும் வரலை மேடம். வந்திருந்தா அவங்க சீட்டாடி இருக்க மாட்டாங்க’’ என்றேன். ‘’இன்னைக்கு முத்துநகர் டிரெயின்ல ரெய்ட் பண்ண போறோம்’’ என்றார். ‘’மேடம் ! ஈவ்னிங் 1815க்கு புதுச்சேரி மெமு இருக்கு. அதுலயும் ரெய்டு பண்ணுங்க’’ என்றேன். ‘’ஓ சரி’’. ‘’கேம்ளிங் குக்கு பப்ளிக் டிரான்ஸ்போர்ட் ஆன டிரெயின யூஸ் பண்றது இஸ் நாட் நைஸ் மேடம்’’. ‘’நீங்க புகார் கொடுத்தது நல்ல விஷயம். உங்களுக்கு தாம்பரம் எஸ் ஐ யும் செங்கல்பட்டு திண்டிவனம் எஸ் ஐ யும் ஃபோன் பண்ணுவாங்க. அவங்ககிட்டயும் விபரம் சொல்லுங்க’’ என்றார்.
சனிக்கிழமை காலை 10 மணிக்கு சீர்காழி தீ விபத்து தொடர்பாக மயிலாடுதுறை ஆர் பி எஃப் அலுவலகத்தில் வாக்குமூலம் பதிவு. புதன்கிழமை எக்மோர் எஸ் ஐ யிடமிருந்து அலைபேசி அழைப்பு. மேலும் தாம்பரம் செங்கல்பட்டு திண்டிவனம் எஸ் ஐ யும் ஃபோனில் அழைப்பார்கள் என கூடுதல் தகவல்.
ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது ‘’மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை வதைக்க நினைத்திடும் சிறைச்சாலை’’ என்னும் வரி மனதில் ஓடிக் கொண்டேயிருந்தது.
இளைஞர்கள் குழு
அசாத்தியத்தை சாத்தியமாக்குபவர்
Tuesday, 28 July 2026
பொறுப்பில்லாதவர்கள் - 2
நேரம் இப்போது மாலை 6.55. இப்போது வரை எங்களுக்கு ‘’ஸ்விஃப்ட்’’முறையில் பணம் செலுத்த விண்ணப்பித்ததற்கான ஒப்புகைச் சீட்டு அளிக்கப்படவில்லை.
