Tuesday, 28 July 2026

பொறுப்பில்லாதவர்கள் - 2

நேரம் இப்போது மாலை 6.55. இப்போது வரை எங்களுக்கு ‘’ஸ்விஃப்ட்’’முறையில் பணம் செலுத்த விண்ணப்பித்ததற்கான ஒப்புகைச் சீட்டு அளிக்கப்படவில்லை.  

பொறுப்பில்லாதவர்கள்

கால்பந்து ஆடும் சிறுவன் 17 வயது மட்டுமே ஆனவன். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இயற்கை எய்தினார். தன்னுடைய சுய ஆர்வத்தல் ஐ ஈ எல் டி எஸ் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி அடைந்தான். ஐரோப்பிய பல்கலைக்கழகம் ஒன்றில் சேர்ந்து படித்து அதன் மூலம் ஐரோப்பாவின் கால்பந்து கிளப் ஒன்றில் இணைய வேண்டும் என்பது அவனது ஆவல். அவன் சாமானிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் சேர்க்கை அதன் முறைமைகள் ஆகிய்வை அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் மிகவும் புதிது.  மிகச் சமீபத்தில் அவன் என்னிடம் வந்தான். அவனும் நானும் சேர்ந்து சில விஷயங்களை முயன்றோம். விவாதித்தோம். எங்கள் தொடர் முயற்சியின் விளைவாக 3 வாரங்களுக்கு முன்னால் அவனுக்கு ஐரோப்பிய பல்கலைக்கழகம் ஒன்றில் சேர்க்கை அனுமதி கிடைத்தது. சேர்க்கை கிடைத்த பின் அந்தப் பல்கலை.க்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஓராண்டுக்கான கட்டணம் ரூ.5,30,000. மிகவும் சிரமப்பட்டு அத்தொகையை ஏற்பாடு செய்தோம். மேலும் அவன் ஐரோப்பா செல்ல ரூபாய் தேவைப்படும். முதலில் இந்த ஆண்டுக் கட்டணத்தை செலுத்தி முதல் படியைத் தாண்டுவோம். அதன் பின் மற்ற படிகளையும் கடப்போம் என முடிவு செய்தோம். எங்களிடம் நிறைய நம்பிக்கை இருக்கிறது. போராடியாவது எங்கள் நோக்கத்தை நிறைவேற்ற முயல்வோம் என்னும் உறுதி இருக்கிறது. கட்டணம் அவன் கணக்கிலிருந்து செலுத்தப்படுவதை விட அவன் குடும்ப உறுப்பினர்கள் எவர் கணக்கிலிருந்தாவது செலுத்தப்படுவது உகந்தது என உணர்ந்தோம் ; கால்பந்து ஆடும் சிறுவனுக்கு வயது 17 தான் ஆகிறது. அவன் மைனர். அவன் தன் கணக்கில் பெரும் தொகை வைத்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அவன் குடும்ப உறுப்பினர்கள் கணக்கிலிருந்து மாற்றுவது என முடிவு செய்தோம். அவன் பாட்டி தன்னிடமிருந்த சிறு தொகையை ( மொத்த பணத்தில் 25 சதவீதம்) அவனுக்காக அளித்தார். மொத்த பணமும் அவர் கணக்கில் போட்டு அவர் கணக்கிலிருந்து ‘’ஸ்விஃப்ட்’’ முறை மூலம் வங்கிக் கணக்கிலிருந்து ஐரோப்பிய பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவது என முடிவு செய்தோம். மொத்த பணம் வந்து சேர ஜூலை 24 வெள்ளிக்கிழமை இரவு 8 மணியாகி விட்டது. அடுத்த இரு நாட்கள் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் வங்கி விடுமுறை. திங்கட்கிழமை காலை 10 மணிக்கு வங்கிக்கு சென்று ‘’ஸ்விஃப்ட்’’ மூலம் பணம் அனுப்புவது தொடர்பாக விசாரிக்கச் சென்றோம். நான் தான் வங்கி துணை மேலாளரிடம் விபரம் விசாரித்தேன். ‘’ஸ்விஃப்ட்’’  பணப் பரிவர்த்தனைக்கு அவரே பொறுப்பானவர். 

நேற்று காலை 10 மணிக்கு வங்கிக்குச் சென்றேன். ‘’ஸ்விஃப்ட்’’ படிவம் கொடுங்கள் எனக் கூறினேன். படிவம் எனக்குக் கொடுக்கப்படவில்லை. கணக்கு வைத்திருப்பவரின் ஆதார் நகல், கணக்கு வைத்திருப்பவரின் பான் கார்டு நகல், சிறுவனினி பாஸ்போர்ட் நகல், சிறுவனின் ஆதார் நகல், சிறுவனின் பான் கார்டு நகல், ஐரோப்பியக் கல்லூரி அளித்த சேர்க்கை அனுமதிக் கடிதம், கல்லூரியின் கணக்கு விபரங்கள் அனைத்தும் தேவை என்று கூறினார். சிறுவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து அவர்கள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் ஒரு மணி நேரத்தில் தயார் செய்து எடுத்துக் கொண்டு சென்றேன். காலை 11 மணிக்கு அவர் இருக்கையில் இல்லை. காத்திருந்தோம். மதியம் 12 மணி அளவில் வந்தார். சிறுவனின் பாட்டி கண்க்கு பான் கார்டுடன் இணைக்க்ப்பட வேண்டும் என்றார். நாங்கள் உடன் வீட்டுக்கு வந்து சிறுவனின் பாட்டியை அழைத்துக் கொண்டு வங்கிக்கு வந்து இ-கே ஒய் சி செய்தோம். அதன் பின் இந்தக் கணக்குக்கு காசோலை வசதி இல்லை ; அதனை அப்ளை செய்யுங்கள் என்றார். அதனையும் செய்து காசோலை பெற்றோம். உணவு இடைவேளை நெருங்கி விட்டதால் வங்கி ஊழியர்கள் உணவருந்த சென்று விட்டார்கள். நாங்கள் மூவரும் வீட்டுக்கு வந்து உணவருந்தி விட்டு உடன் வங்கிக்கு சென்றோம். உதவி மேலாளர் வங்கி நேரம் முடியும் வரை இருக்கைக்கு வரவே இல்லை. நாங்கள் சோர்வுடன் வீடு திரும்பினோம். 

இன்று காலை 10 மணிக்குச் சென்று ‘’ஸ்விஃப்ட்’’ படிவம் வாங்கி வந்தேன். அதனை நிரப்பி 10.30க்கு கொடுத்தேன். சிறுவன், சிறுவனின் பாட்டி, நான் ஆகிய மூவரும் வங்கிக்கு சென்றிருந்தோம். எங்களிடம் ‘’ஸ்விஃப்ட்’’ படிவம் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டை கொடுங்கள் எனக் கேட்டேன். எங்களுக்கு ஒப்புகைச்சீட்டு கொடுக்கப்படவில்லை. மாலை 3.15க்கு வாருங்கள் எனக் கூறினர். மாலை 3.15க்கு வங்கிக்கு வந்து எங்களால் பணம் அனுப்ப முடியவில்லை என வங்கியில் கூறினால் என்ன செய்வது என எனக்குப் பதட்டம் உருவானது. வழக்கமான நிலைமை எனில் எங்கள் நுகர்வோர் உரிமையை வலியுறுத்திப் பேசியிருப்பேன். இப்போது , ஒரு சிறுவன் தன் 12 ஆண்டு கால கனவை நிறைவேற்றும் தருவாயில் இருக்கிறான் ; அவனது பாட்டி இறந்து போன தன் மகன் செய்திருக்க வேண்டிய கடமையை நிறைவேற்ற வந்திருக்கிறார். மேலும் கல்லூரி சேர்க்கை என்பது அவர்கள் குடும்பத்தில் நிகழும் மங்களமான செயல் என்பதால் அமைதி காப்போம் என முடிவு செய்தேன். 

நாங்கள் சென்றது தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கி ( இவ்வளவு நடந்தும் நாகரிகம் கருதி வங்கியின் பெயரைத் தெரிவிக்காமல் இருக்கிறேன்). எனது கேள்விகள் : 

1. 27.07.2026 அன்று காலை 10 மணிக்கு வந்த வாடிக்கையாளர் கேட்ட ‘’ஸ்விஃப்ட்’’படிவத்தை ஏன் அப்போதே தரவில்லை? 

2. பாட்டி 1986லிருந்து அந்த வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருக்கிறார். 40 ஆண்டுகளாக் அந்த கிளையின் வாடிக்கையாளர். அவருக்கு செக் புக் தேவைப்படவில்லை. இன்று காலை ‘’ஸ்விஃப்ட்’’ படிவம் நிரப்பி கொடுக்கப்பட்ட போதும் ''pay yourself'' என எழுதி எந்தக் காசோலையும் கோரப்படவில்லை. ஒரு காசோலையை கேன்சல் செய்து படிவத்துடன் இணைக்குமாறு சொன்னார்கள். விண்ணப்பிப்பது அந்தக் கணக்கு எண்ணின் வாடிக்கையாளர்தானா என்பதை அவருடைய கைரேகையை மின்னணு முறையில் சோதித்து ஆதாருடன் இணைந்திருக்கும் வசதி மூலம் அறிய முடியும். அந்த கைரேகையைக் கூட பிரிண்ட் அவுட் எடுத்து ஆதாரமாக வைத்துக் கொள்ள முடியும். அதை ஏன் முயலவில்லை?

3. 28.07.2026 அன்று காலை 10.30க்கு கொடுத்த ‘’ஸ்விஃப்ட்’’படிவத்துக்கு ஒப்புகைச் சீட்டு கொடுக்காதது ஏன்? 

4. நேற்று வந்த வாடிக்கையாளர் கோரிய சேவையை இன்றைக்கு நகர்த்திக் கொண்டு வந்தது ஏன்? 

5. அன்னியச் செலாவணி வர்த்தகத்தில் யூரோ - ரூபாய் மதிப்பு நேற்று இருந்ததற்கும் இன்று இருப்பதற்கும் வேறுபாடு உள்ளது. நேற்று 1 யூரோவின் மதிப்பு ரூ. 108. இன்று 1 யூரோவின் மதிப்பு ரூ.109. துணை மேலாளர் அனாவசியமாக ஒருநாள் நகர்த்தியதால் எங்களுக்கு தோராயமாக ரூ.5000 இழப்பு. 

6. துணை மேலாளர் எவ்விதம் கடமை தவறி விட்டு சகஜமாக இருக்க முடிகிறது?

7. பாட்டியின் வயது 78. அவர் மூத்த குடிமகள். தன் பேரன் வெளிநாட்டுக் கல்லூரியில் சேரப் போகும் மங்களமான தருணத்தை அவர் நினைக்க வேண்டுமா? இந்த நேரத்தில் வங்கி மேலதிகாரிகளுக்கு தனக்கும் தன் பேரனுக்கும் நிகழ்ந்த அலைக்கழிப்பு குறித்து புகார் எழுதிக் கொண்டிருக்க வேண்டுமா? 

8. இந்தப் பதிவை நான் எழுதிக் கொண்டிருக்கும் நேரம் மதியம் 2.34. இன்னும் கணக்கிலிருந்து பணம் மின்னணு பரிமாற்றம் செய்யப்பட்டதாக எந்த குறுஞ்செய்தியும் பாட்டி அலைபேசிக்கு வரவில்லை. 

9. நானும் சிறுவனும் 3.15க்கு செல்ல இருக்கிறோம். 

பி எஸ் என் எல் எனப்படும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் ஊழியர்கள் பொறுப்பின்மைக்கு மிக பெயர் போனவர்கள். நாட்டின் தொலைபேசிகளும் ஆரம்ப கட்டத்து அலைபேசிகளும் அவர்கள் பராமரிப்பில் இருந்தது. உச்சபட்சமான பொறுப்பின்மையையும் அக்கறையின்மையையும் வெளிப்படுத்தி வந்தார்கள். பொதுமக்களும் குடிமக்களும் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளால் நொந்து போயிருந்தனர். ஒரு நல்ல காலைப் பொழுதில், அந்த நிறுவனம் ஒரு ’’விருப்ப ஓய்வு’’ திட்டத்தை அறிவித்தது. அந்த ‘’விருப்ப ஓய்வில்’’ சென்று விடுவது அவர்களுக்கு மிக்க நலம் என்பது குறிப்புணர்த்தப்பட்டது. லட்சக்கணக்கான ஊழியர்கள் அந்த ‘’விருப்ப ஓய்வில்’’ நிறுவனத்தை விட்டு வெளியேறினர். கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை இருக்கும் கோடானுகோடி குடிமக்களும் அந்நிகழ்வால் பெருமகிழ்ச்சி அடைந்தனர். 

நம் நாட்டின் பொதுத்துறை தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்களுக்கும் அந்நிலை வர வேண்டும். அப்படி ஒரு நிலை வருவதே நாட்டுக்கு நலம். 

Sunday, 26 July 2026

வாக்குமூலம் (நகைச்சுவைக் கட்டுரை)

ஒருநாள் ஊரில் இல்லை என்றால் அடுத்த நாள் பல வேலைகள் குவிந்து விடும். வெள்ளியன்று இரவு 7.30 மணியளவில் முத்துநகர் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது ரயில்வே பாதுகாப்பு படையிலிருந்து ஃபோன் வந்தது. சீர்காழி தீ விபத்து தொடர்பாக நான் அளித்த புகார் தொடர்பாக என்னிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என.  சனிக்கிழமை காலை 10 மணிக்கு ரயில் நிலையத்தில் இருக்கும் ரயில்வே பாதுகாப்பு படை நிலையத்துக்கு வருகிறேன் என சொன்னேன். காலை 8 மணி அளவில் தான் வீடு வந்து சேர்ந்தேன். குளித்து உணவருந்தி விட்டு கிளம்ப 9.45 ஆகி விட்டது. காலையிலேயே ரயிலில் சீட்டாடும் கும்பல் குறித்த புகாரை சி பி கி ராம் ஸ் ல் பதிவு செய்தேன். பயண விபரங்களை எழுதி தளத்தில் பதிவிட்டேன். அதற்கே நேரம் சரியாக இருந்தது. நான் அளித்த சி பி கி ராம் ஸ் புகாரை ’’கட் காபி பேஸ்ட்’’ செய்து பிரிண்ட் அவுட் எடுத்து கையில் வைத்துக் கொண்டேன். சம்பவம் நடந்த நாள் என்ன என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். எட்டாம் தேதி. புதன்கிழமை. சம்பவம் நடந்து 17 நாட்கள் ஆகியிருப்பதால் நினைவுகள் மங்கியிருக்கும் என விசாரணை செய்பவர்கள் எதிர்பார்ப்பார்கள் என யூகித்தேன். ரயில் நிலையம் வீட்டிலிருந்து 5 கி.மீ. பாதி தூரம் சென்றிருப்பேன். 9.56க்கு ரயில்வே பாதுகாப்பு படையிலிருந்து ஃபோன் வந்தது. ‘’ஆன் தி வே . இன்னும் 5 நிமிடத்தில் இருப்பேன்’’ என்று சொன்னேன். ரயில் நிலையம் சென்று பிளாட்ஃபாரம் டிக்கெட் எடுத்துக் கொண்டு நடைமேடை 1 ல் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை நிலையத்துக்குச் சென்றேன். அங்கே ஆய்வாளர் ஒருவர் இருந்தார் ; சார் ஆய்வாளர் வந்து விடுவார்; சற்று காத்திருங்கள்’’ என்றனர். காத்திருந்தேன். பின்னர் அவர் வந்தார். என்னைப் பற்றி விசாரித்தார். சிவில் என்ஜினியர். கன்ஸ்ட்ரக்‌ஷன் அண்ட் ரியல் எஸ்டேட். இதையெல்லாம் சொன்னேன். நீங்கள் வாக்குமூலம் தர வேண்டும் எனக் கூறினார். ஒரு காகிதம் கொடுங்கள் ; எழுதிக் கொடுக்கிறேன் என்றேன். நான் வாக்குமூலம் கொடுக்க அவர் எழுதி பதிவு செய்து அதில் நான் கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும் என்பதே அவர்கள் முறை என்றார். நான் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. ஒரு முழு வெள்ளைக் காகிதத்தில் தேதி நேரம் இடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு ரயில்வே பாதுகாப்பு படை நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சார் ஆய்வாளர் இன்னார் முன்னிலையில் பதிவு செய்யப்படும் இன்னாரின் வாக்குமூலம் என எழுதி அதன் அடியில் ஒரு கார்பன் தாள் வைத்து எழுதிக் கொண்டார். வாக்கிய அமைப்புகள் எவ்விதம் அமைக்க வேண்டும் என அவருக்கு முன் தீர்மானம் இருந்தது. அதன் படி அமைத்தார். நான் ஆட்சேபம் ஏதும் தெரிவிக்கவில்லை. சம்பவம் நடந்த தேதி என்ன என்று கேட்டார். ஜூலை 8ம் தேதி என்றேன். அன்று என்ன நாள் என்றார். புதன்கிழமை என்றேன். அன்று அஷ்டமியும் கூட எனக் கூற எழுந்த ஆவலை மனதுக்குள்ளேயே வைத்துக் கொண்டேன். அவர் ஒரு வாசகம் சொல்ல அதில் நான் திருத்தம் சொல்ல என நான் கூறிய திருத்தங்களுடன் வாக்குமூலம் பதிவானது. நான் மிகவும் இழுத்துப் பிடிக்கவில்லை ;  சி பி கி ராம் ஸ் ல் புகார் பதிவான பின் சம்பவ இடத்தில் கரிக்கட்டையாய் இருந்த 11 மரங்கள் ரயில்வே நிர்வாகத்தால் நீக்கப்பட்டன.விசாரணை பல அளவில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் நிறுத்திக் கொள்வது சிறப்பு என எனக்குத் தோன்றியது. அங்கே தீ எரிந்து கொண்டிருந்த போது 3 ரயில்கள் அப்பாதையைக் கடந்து சென்றிருக்கின்றன. ரயில்வே லைனுக்கு அருகில் தீ எரிந்து கொண்டிருக்கிறது என்னும் தகவல் ரயில் லோகோ பைலட், ரயிலின் கார்டு, ரயிலில் பயணித்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் ஆகிய மூவராலும் சீர்காழி ஸ்டேஷன் மாஸ்டருக்குத் தெரிவித்திருக்கப்பட வேண்டும். 3 ரயில்கள் என்பதால் 9 பேர் இதற்கு பொறுப்பு. இரண்டு ரயில்கள் பயணிகள் ரயில்கள் என்பதால் 7 பேர் இதற்கு பொறுப்பு. இந்த 7 பேரிடம் ரயில்வே லைன் அருகில் தீ பற்றி எரிந்து கொண்டிருப்பது குறித்து ஸ்டேஷன் மாஸ்டருக்குத் தகவல் தெரிவித்தீர்களா என விளக்கம் கேட்க வேண்டும். அவ்விதம் நிகழ்ந்ததா என்பது இனிமேல் தான் தெரியும். துறை ரீதியான விசாரணை நடத்துங்கள் என எனது புகார் மனுவில் கோரியிருந்தேன். இப்போதே விசாரணை நடந்து கொண்டிருக்கிறது ; எரிந்து போய் நின்றிருந்த 11 மரங்களின் ஒளிப்படம் அவர்கள் கோப்பில் இருந்ததைக் கண்டேன். அந்த மரங்கள் நீக்கப்பட்டதன் ஒளிப்படங்களும் இருந்தன. நான் அளித்த சி பி கிரா ம் ஸ் புகார் இன்னும் நடப்பில் இருக்கிறது என்பதை எனது சி பி கி ராம் ஸ் கணக்கில் நுழைந்து தினமும் பார்க்க முடிகிறது. கோப்பு தீர்வு காணப்பட்டது எனக் கூறப்படும் போது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி அந்த முழுக் கோப்பையும் கோர முடியும். முழுக் கோப்பையும் கண்டால் என்ன செய்தார்கள் என்பது தெரியவரும். அந்தக் கோப்பை ஆதாரமாகக் கொண்டு தேவையெனில் சி பி கி ராம் ஸ் ல் மேலும் ஒரு அப்பீல் செய்ய முடியும். சூழலை உன்னிப்பாகக் கவனிப்போம் என இருந்தேன். என்னுடைய ஆதார் அட்டையின் நகல் இரண்டு வேண்டும் எனக் கேட்டனர். வீட்டுக்கு வந்து எடுத்துக் கொண்டு போய் கொடுத்தேன்.    

ஆர்யா

மறைமலை நகரிலிருந்து எழும்பூர் மின்சார ரயிலில் சென்ற போது இடையில் இருந்த ரயில் நிலையம் ஒன்றில் ஒரு விளையாட்டுக் குழு ஏறியது. அவர்களின் உபகரணங்கள் பையைப் பார்த்த போது ஹாக்கி வீரர்களாக இருக்கலாம் எனத் தோன்றியது. என் எதிரில் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் ‘’ஹாக்கி வீரர்களா?’’எனக் கேட்டு பேச்சைத் தொடக்கினேன்.  அவர்கள் ஹாக்கி வீரர்கள்தான். விருத்தாசலத்தில் மேட்ச் விளையாடி விட்டு ஊர் திரும்புகின்றனர். உடற்கல்வி பட்டப்படிப்பு படிக்கின்றனர். அனைவருமே இளம் பெண்கள். அவர்களிடம் ஐரோப்பா செல்ல உள்ள கால்பந்து வீரனைக் குறித்து கூறினேன். அவனுடைய கல்லூரி சேர்க்கை தொடர்பாக ஒருவரிடம் உதவி கேட்க சென்று கொண்டிருப்பதாகச் சொன்னேன். அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. ஐரோப்பாவில் விளையாட்டு வீரர்களுக்கு நிறைய ஊக்கம் கிடைக்கிறது ; நம் நாட்டில் அவ்விதம் இல்லை என்றார்கள். ஒரு குழந்தைக்கு விளையாட்டு அறிமுகம் பெற்றோர்கள் மூலமே நிகழ வேண்டும் ; நம் நாட்டில் பெற்றோர்கள் குழந்தைகள் படிப்பில் மட்டுமே ஈடுபட வேண்டும் வேறு எதிலும் ஈடுபடக்கூடாது என்னும் எண்ணம் கொண்டவர்கள் ; அதுவே முதற் பிழை - அது களையப்பட வேண்டும் எனக் கூறினேன். என்னிடம் உரையாடிக் கொண்டிருந்த பெண்ணிடம் ‘’உன் பெயர் என்ன?’’ என்று கேட்டேன். ‘’ஆர்யா’’ எனக் கூறினாள். அவளுக்கு யாருடைய பெயர் இடப்பட்டுள்ளது என அவள் அறிவாளா என்று கேட்டேன். அவளுக்கு விடை தெரியவில்லை. ‘’உனக்கு ஆதி சங்கரரின் அன்னையின் பெயர் இடப்பட்டுள்ளது. ஆதி சங்கரரின் அன்னை ஆர்யாம்பாள். தந்தை சிவகுரு.’’ என்றேன். அவளுக்கு ஆச்சர்யம். அந்தக் குழு தாம்பரத்தில் விடை பெற்றுக் கொண்டது ; கால்பந்து வீரனுக்கு வாழ்த்துக்கள் சொன்னது. 

Saturday, 25 July 2026

ரயில் சீட்டாட்டக் கும்பல் - சி பி கி ராம் ஸ் புகார்

 24.07.2026 அன்று மாலை 6.20 மணி அளவில் சென்னை எழும்பூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் முத்துநகர் அதிவிரைவு ரயிலில் விழுப்புரம் வரை பயணம் செய்ய பயணச்சீட்டு எடுத்துக் கொண்டு ரயிலின் என்ஜினுக்கு அருகில் இருக்கும் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறினேன். தொலைதூரம் செல்லக் கூடிய வண்டி என்பதால் ரயில் புறப்படும் நேரத்துக்கு 1 மணி நேரம் முன்பிருந்தே பயணிகள் அமர்ந்திருந்தனர். ஒரு பகுதியில் 8 பேர் அமரக்கூடிய இருக்கையில் 4 பேர் மட்டுமே அமர்ந்திருந்ததால் அங்கு சென்று அமர்ந்து கொண்டேன். அங்கே இருந்த 4 பேரும் இங்கே அமர ஆட்கள் வருவார்கள் என்றார்கள். நான் அதனைப் பொருட்படுத்தவில்லை. எனக்குத் தேவை அமர ஒரு இருக்கை. அதில் அமர்ந்து கொண்டேன். தொடர்ந்து என்னிடம் இங்கே ஆட்கள் வருவார்கள் என்று கூறிக் கொண்டேயிருந்தார்கள். நான் அதனைப் பொருட்படுத்தவில்லை. ரயிலில் தொலைதூரங்களுக்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு வரும் பயணிகள் இருக்கை காலியாக இருக்கிறதே என அமர முயல்வதும் அவர்களிடம் அங்கிருந்தவர்கள் ஆட்கள் வருவார்கள் எனக் கூறுவதும் நடந்து கொண்டேயிருந்தது. ரயில் புறப்படும் நேரத்தில் அவர்கள் குறிப்பிட்ட நபர்கள் இவர்கள் முடக்கி வைத்திருந்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் சீசன் டிக்கெட் எடுத்து பயணிப்பவர்கள் என்பதை அவர்கள் பேச்சிலிருந்து யூகிக்க முடிந்தது. ரயில் புறப்பட்டதும் அந்த 7 பேரும் சீட்டுக்கட்டு சூதாட்டம் ஆடத் தொடங்கினர். பணம் வைத்து ஆடினர். இந்த சூதாட்டத்தை நிகழ்த்துவதற்காகவே ரயிலில் தொலைதூரங்களுப் பயணிக்கும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். பணம் வைத்து சூதாடுவது குற்றம். பணம் வைத்து சூதாடும் குற்றச்செயலை ரயிலில் ரயில் இயக்கத்தில் இருக்கும் போது செய்வது அதை விடப் பெரிய குற்றம். ரயில் என்பது குழந்தைகள், மாணவர்கள் , இளைஞர்கள், நடுத்தர வயதினர், மூத்த குடிமக்கள் ஆகியோர் பயணிக்கும் வாகனம். அவர்கள் முன்னிலையில் சூதாட்டம் போன்ற குற்றச் செயலில் ஒரு கும்பல் ஈடுபடுவது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். மேலும் ஸ்பீக்கர் மூலம் மிக அதிக சத்தத்தில் திரைப்படப்பாடல்களை ஒலிக்க விடவும் செய்தனர். இந்த கும்பலில் சிலர் மேல்மருவத்தூரில் இறங்கிக் கொண்டனர் ; பலர் திண்டிவனத்தில் இறங்கிக் கொண்டனர். 24.07.2026 மாலை 7.20க்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட முத்துநகர் விரைவு ரயிலில் என்ஜினுக்கு அருகில் இருந்த பொதுப் பெட்டியில் 7 பேர் கொண்ட கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டது என்பதை இந்த புகார் மூலம் பதிவு செய்கிறேன். சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு தொலைதூரம் செல்லும் ரயில்களின் பொதுப் பெட்டியில் பயணிகளுக்கு இடையூறாக ஸ்பீக்கர் மூலம் இரைச்சலை உருவாக்கியும் சீட்டுக்கட்டு சூதாட்டம் ஆடும் கும்பலை மொத்தமாக அடையாளப்படுத்தி அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்குமாறு இந்தப் புகார் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.    

ஆயிரமும் பூஜ்யமும்

நேற்று காலை எனது வழக்கப்படி இரு சக்கர வாகனத்தை சைட் லாக் செய்து வீட்டில் எல்லார் கண்ணிலும் படும் படி வைத்து விட்டு காலை 8 மணிக்கு சென்னை செல்ல கிளம்பினேன். 1 கி.மீ தூரம் நடந்ததும் என் நண்பர் ஒருவர் விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி முடித்து விட்டு வெளியே வந்தார். என்னைக் கண்டதும் பேருந்து நிலையத்தில் டிராப் செய்கிறேன் என்றார். அவருடன் ஒரு உணவகத்துக்குச் சென்று காலை உணவு அருந்தினேன். பின் பேருந்து நிலையம் சென்றோம். திருத்துறைப்பூண்டியிலிருந்து சென்னை செல்லும் பேருந்து நின்று கொண்டிருந்தது. நடத்துனரிடம் ‘’அண்ணன்! சென்னை போக எத்தனை மணியாகும்?’’ எனக் கேட்டேன்.’’ மதியம் 2.30க்கு வண்டி கிளாம்பாக்கத்துல இருக்கும்’’ என்றார். ’’4 மணிக்கு எழும்பூர்ல ஒருத்தரைப் பார்க்கணும் அண்ணன். சென்னை டிக்கெட் எடுத்துடவா? இல்ல சிதம்பரம் போய் பஸ் மாறிக்கவா?’’ என்றேன். ’’சிதம்பரத்துல நம்ம வண்டி 5 நிமிஷம் மட்டும்தான் நிக்கும். போய்கிட்டே இருக்க வேண்டியது தான்’’ என்றார். பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். மொத்தமே 10 பேர் தான் பேருந்தில் இருந்தோம். நம் மாநிலத்தில் வெள்ளிக்கிழமையன்று பொதுவாக வெளியூர் கிளம்பி செல்வதைப் பெண்கள் தவிர்ப்பார்கள். ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டேன் ; பேருந்தில் அந்த இருக்கையை நான் எப்போதும் விரும்புவேன். என் கையில் ரூ.1000 இருந்தது. அதில் காலை உணவுக்கு நண்பருடன் சேர்ந்து அருந்தியதால் ரூ.200 செலவாகி விட்டது. சென்னைக்கு டிக்கெட் ரூ.250. சிதம்பரத்தில் அனைவரும் இறங்கி விட்டார்கள். புதிதாக 5 பேர் மட்டும் ஏறினார்கள். மொத்த பயணிகள் 6 பேர் தான். நிலக்காட்சிகள் எந்த நிலையிலும் எனக்கு இனியவை. அவற்றில் தோய்ந்திருந்தேன். வடலூரில் அவித்த கடலை வாங்கிக் கொண்டேன். தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொண்டேன். வெயில் கடுமையாக இருந்தது. ஓட்டுநரும் நடத்துனரும் நண்பர்களாகி விட்டார்கள். நடத்துநர் என்னிடம் ‘’சார் ! உங்கள மறைமலர் நகர்ல இறக்கி விடறன். அங்க ரயில்வே ஸ்டேஷன் பக்கம். டிரெயின் புடிச்சு எக்மோர் போயிடுங்க’’ என்றார். சொன்னது போலவே மறைமலர்நகரில் இறக்கி விட்டார். பசி கடுமையாக இருந்தது. உணவருந்தி விட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என எண்ணினேன். அங்கே இருந்த ஆட்டோ டிரைவரிடம் ‘’பக்கத்துல வெஜிடேரியன் ஹோட்டல் இருக்கா?’’ என்று கேட்டேன். மெயின் ரோட்டிலிருந்து 500 மீட்டர் தூரம் உள்ளே இருக்கும் ஹோட்டல் ஒன்றைக் கூறினார். அங்கே சென்று உணவருந்தினேன். உணவு உண்ணும் போது அந்த ஹோட்டல் உணவில் தஞ்சாவூர் சாயல் இருப்பதை உணர்ந்தேன். பணம் கொடுக்கும் போது ‘’அண்ணன் ! நீங்க பூர்வீகம் பழைய தஞ்சாவூரா?’’ என்று கேட்டேன். அவர் சிதம்பரத்துக்காரர். சிதம்பரம் பழைய தென்னாற்காடு என்றாலும் காவிரி வீர நாராயண ஏரி புண்ணியத்தில் அதுவும் காவிரி டெல்டா என ஒரு கணக்கு. ஹோட்டல் உரிமையாளர் மறைமலைநகர் வந்து 35 ஆண்டுகள் ஆகிறது. வருடம் ஒரு தடவை குலதெய்வம் கோயிலில் சாமி கும்பிட மட்டும் ஊருக்குச் செல்கிறேன் என்றார். உரையாடிக் கொண்டிருந்ததில் இருவரும் மன அணுக்கத்தை உணர்ந்தோம். ஸ்மார்ட்ஃபோனில் செக் செய்து ‘’சார் ! 3.15க்கு சென்னை கடற்கரை செல்லும் ரயில் இருக்கு. அத புடிச்சுடுங்க’’ என்றார். அந்த ரயிலைப் பிடித்து விட்டேன். உணவுக்கு ரூ.100 கொடுத்தது போக ரூ.450 கையில் இருந்தது. மறைமலை நகரிலிருந்து எழும்பூருக்கு கட்டணம் ரூ.10. எழும்பூர் சென்று சேர்ந்தேன். நண்பரைச் சந்தித்த போது நேரம் மாலை 5 மணி. ஒரு மணி நேரம் தாமதம். மறைமலைநகரில் இருக்கும் போதே குறுஞ்செய்தி அனுப்பி சந்திக்க 5 மணி ஆகும் எனக் கூறியிருந்தேன். ஒரு மணி நேரம் நடந்த சந்திப்பு உபயோகமானதாக இருந்தது. நண்பர் தேனீர் தயாரித்து அளித்தார். சந்திப்பு முடிந்ததும் புறப்பட்டு எழும்பூர் ரயில் நிலையம் வந்தேன். அப்போது நேரம் 6.15. அப்போதுதான் புதுச்சேரி மெமு கிளம்பியது. முத்துநகர் எக்ஸ்பிரஸ் அடுத்த வண்டி அதில் விழுப்புரம் வரை மட்டுமே செல்ல முடியும். அங்கேயிருந்து வண்டி மாற வேண்டும்.  கிளம்பும் மனநிலைக்கு வந்து விட்டதால் அதில் ஏறினேன். பொதுப் பெட்டியில் எட்டு பேர் இருக்கும் இடத்தில் 4 பேர் மட்டும் இருந்தனர். அதில் சென்று அமர்ந்து கொண்டேன். இந்த இடத்துக்கு ஆள் வருகிறார்கள் என அவர்கள் கூறியதை நான் பொருட்படுத்தவில்லை. பல பயணிகளிடம் அவர்கள் இந்த பதிலைக் கூறி அமர விடாமல் செய்தனர். வண்டி கிளம்பும் நேரத்தில் அங்கே அமர்ந்திருந்தவர்களின் நண்பர்கள் வந்து அமர்ந்தனர். அது ஒரு சீட்டாட்டக் கும்பல். வண்டி புறப்பட்டதும் பணம் வைத்து சீட்டுக்கட்டு சூதாட்டம் நடத்தினர். ஒருவர் ஒரு ஸ்பீக்கர் மூலம் திரைப்பாடல்களை அலற வைத்தார். ரயிலில் பெருங்கூட்டம் பொதுப்பெட்டியில் நின்று கொண்டு வந்தது. அந்தப் பெருங்கூட்டம் அவர்கள் சீட்டாட்டத்துக்கு வசதியாக இருந்தது. இவர்கள் அனைவரும் ரயில் சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள். இவ்விதம் சூதாடுவதை பல வருடமாகப் பழகியிருக்கிறார்கள் எனப் புரிந்து கொண்டேன். இதைப் பற்றி ஊருக்குச் சென்றதும் ரயில்வேயில் புகார் கொடுப்போம் என எண்ணினேன். மேல்மருவத்தூரில் சிலரும் திண்டிவனத்தில் அனைவரும் அந்த சீட்டாட்டக் கும்பல் ஆட்கள் இறங்கி விட்டனர். விழுப்புரம் வந்த போது நேரம் இரவு 10. ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்த ஹோட்டல் ஒன்றில் ஒரு தோசை மட்டும் உண்டு விட்டு ரயில் நிலைய நடைமேடை பெஞ்சு ஒன்றில் படுத்து உறங்கி விட்டேன். விழுப்புரம் ரயில் நிலையம் 15 நிமிடத்துக்கு ஒருமுறை ஏதேனும் ஒரு ரயில் கடக்கும் நிலையம். அதனால் எப்போதும் அறிவிப்புகள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். எனவே கொஞ்ச நேரத்தில் விழிப்பு வந்து விடும் என எண்ணித்தான் படுத்தேன். ஆழமாக உறங்கி விட்டேன். விழித்துப் பார்த்தால் நேரம் அதிகாலை 2.45. ஊருக்குச் செல்லும் ரயில்கள் அனைத்தும் கடந்து சென்றிருந்தன. அடுத்த வண்டி காலை 6 மணிக்கு. எனவே கோலியனூர் கூட்டு ரோடு சென்று பஸ் பிடித்து சேத்தியாத்தோப்பு கூட்டு ரோடுக்கு டிக்கெட் எடுத்தேன். பஸ் ஏறியதும் தூங்கி விட்டேன். வண்டி சேத்தியாதோப்பு சென்ற போதுதான் விழிப்பு வந்தது. அங்கே இறங்கி சிதம்பரம் பஸ் பிடித்து வந்தேன். கையில் எவ்வளவு இருக்கிறது எனப் பார்த்தேன். ரூ. 35 இருந்தது. ஊர் செல்லும் பேருந்திற்குச் சென்று ஊருக்கு பஸ் கட்டணம் எவ்வளவு என்று கேட்டேன். ரூ.35 என்றார். பயணச்சீட்டு எடுத்து விட்டு பஸ்ஸில் அமர்ந்து உறங்கத் தொடங்கினேன். ஊரை நெருங்கும் போது விழிப்பு வந்தது. ‘’கால்டெக்ஸ்’’ நிறுத்தத்தில் இறங்கி வீடு நோக்கி நடக்கத் தொடங்கினேன். நேற்று கையில் ரூ.1000 உடன் பயணித்தேன். இப்போது கையில் பூஜ்யத்துடன் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தேன். ‘’ஆயிரமும் பூஜ்யமும்’’ என மனதில் தோன்றியது. இன்று நிறைய வேலைகள் இருந்தன. நேற்று ரயிலில் பயணம் செய்த போது ஊரின் ரயில்வே பாதுகாப்பு படையிலிருந்து ஃபோன் செய்தனர். சீர்காழி தீ விபத்து தொடர்பாக எனது வாக்குமூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று. காலை 10 மணிக்கு வருகிறேன் எனக் கூறியிருந்தேன். முத்துநகர் எக்ஸ்பிரஸின் சூதாட்டக் கும்பல் குறித்து சி பி கி ராம் ஸ் இணையதளத்தில் புகார் பதிவு செய்தேன். 

Thursday, 23 July 2026

ஆம்புலன்ஸ்

 இன்று மதியம் சீர்காழியிலிருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தேன். சோழசக்கர நல்லூர் அருகில் சைக்கிளில் சென்ற ஒருவரும் மோட்டார்சைக்கிளில் சென்ற ஒருவரும் மோதி இருவருக்கும் பலத்த அடி. இருவர் தலையிலும் ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. மக்கள் கூட்டமாகக் கூடியிருந்தனர். நான் வண்டியை நிறுத்தி விட்டு 108 ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்தேன். மயிலாடுதுறை தலைமை மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வரும் எனக் கூறினார்கள். சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் டிரைவர் எனக்கு ஃபோன் செய்தார். ‘’இருவருக்கு வலுவான் அடி. இருவர் தலையிலும் ரத்தம் கொட்டுகிறது. முதலுதவி அவசியத் தேவை ‘’ என்றேன். 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. ஒருவர் சிகிச்சை எடுக்க பைக்கின் பின்னால் அமர்ந்து சென்று விட்டார். இன்னொருவருக்கு ஆம்புலன்ஸ் மருத்துவப் பணியாளர்கள் முதல் உதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆம்புலன்ஸ் புறப்பட்டுச் சென்றதும் நான் கிளம்பினேன். 

விரிவான செய்திக் கட்டுரை

 இன்று மதியம் தினமலர் நிருபர் ஃபோன் செய்தார். தினமலர் பத்திரிக்கை மைதானத்தில் கூடாரத்தில் வசிக்கும் 7 குடும்பங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் குறித்து விரிவான செய்திக் கட்டுரை கேட்டிருப்பதாகச் சொன்னார். நாளை காலை அங்கு சென்று முழு தரவுகளைச் சேகரிக்க உள்ளோம். 

தினமலர் செய்தி

 


பத்திரிக்கை செய்தி

செம்பனார்கோவிலில் மைதானத்தில் பிளாஸ்டிக் ஷீட்டால் ஆன கூடாரத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் வசிக்கும் 7 குடும்பத்தைச் சேர்ந்த 50 பேரைக் குறித்த செய்தி இன்றைய தினமலரில் வெளியாகியிருக்கிறது.