Tuesday, 15 September 2026

காவியகர்த்தா (மறுபிரசுரம்)


 
படைப்போன் அகத்தில்
கணமும் உயிர்பெறுகின்றன கோடானுகோடி உயிர்கள்
அவனுக்கு எல்லா உயிர்களும் குழந்தைகளே
இருப்பினும்
சில ம்கவுகள் 
தன்னைப் போல் படைக்க இருப்பதை
அகக்காட்சியில் கண்டு 
புவியில் அவை பிறக்கும் முன்னே
அவற்றுக்கு மேலும் மேலும் ஆசியளிக்கிறான்
படைப்போன்

படைப்போன் மேலும் மேலும் ஆசியளிக்கும்
குழந்தைகள் 
யாரெனக் காண்பதில் எப்போதும் ஆர்வம்
சொல்லரசிக்கு
படைப்போன் தேர்வை
மேலும் தேர்ந்து
அம்மகவுக்கு
தன் ஆசியையும் தருகிறாள்
சொல்லன்னை

எல்லா அன்னையரையும் போலவே
சொல்லன்னைக்கும்
மகவைக் குறித்த விசனங்கள்
சொல்லின் உலகம் பெரிதும் அருவமானது
புறத்தினும் அகத்தில் வியாபிப்பது
மானிட உயிர்கள்
கண்ணால் காண்பதையும்
திட்டவட்டமான பொருள் உலகையும்
மட்டுமே 
உலகம் என்றும்
வாழ்க்கை என்றும்
கொள்வார்கள்
படைப்போன் ஆசி பெற்ற
தன் ஆசி பெற்ற
மகவு
மானிடச் சூழலுடன்
இயல்பாகப் பொருந்திக் கொள்ள வேண்டுமே
என்னும் விசனத்துடன்
எப்போதும் இருந்தாள் சொல்லன்னை
அம்மகவு மண்ணில் பிறப்பதற்கு முன்பிருந்தே

சொல்லை ஆராதிக்கும் மானிடப் பெண்ணின்
கருப்பையில்
அம்மகவை உதிக்க வைத்தான் படைப்போன்
அம்மகவின் மானிட அன்னைக்கு
அம்மகவு சொல்லின் உலகத்தில் மட்டுமே சிறப்பாக இருக்கும்
என்பது  
மூட்டமாகத் தெரிந்திருந்தது
சொல்லன்னை கொண்ட விசனம் மானிட அன்னைக்கும்
மானிடச் சூழலில் தன் மகவு பொருந்தியிருப்பது குறித்து

புவிக்கு வந்த அம்மகவு
இந்த உலகைப் பார்த்துக் கொண்டேயிருந்தது
பார்க்கப் பார்க்க வளர்ந்து கொண்டேயிருக்கும்
இந்த உலகத்தில் 
இந்த உலகத்தை
இதை விடவும் சிறப்பான அழகான உலகத்தை உலகங்களை
படைக்கத் தொடங்கியது 
படைப்போன் புன்னகைத்தான்
அகத்தில் நிகழ்வதை சொல்லில் அம்மகவு வடிக்கத் தொடங்கியதும்
சொல்லன்னையும் புன்னகைத்தாள்

படைப்பவர்களுக்குரிய நிலையின்மை 
மகவாயிருந்து பாலனாகி இளைஞனான அவனைச் சூழ்ந்தது
அவன் அலையத் துவங்கினான்
அனாதி காலமாக அலைந்து திரிந்தவர்களின் நிலம் அவன் ஜன்மபூமி
அனாதி காலமாக துறந்து கொண்டேயிருப்பவர்களின் நிலம் அவன் ஜன்மபூமி

ஊழ் அவனை நல்லாசிரியர்களிடமும் கொண்டு சென்றது
துறவியாயிருந்த ஒரு நல்லாசிரியர் சொன்னார் :
‘’நீ உண்மையை அறிவாயென்றால் அது கற்பனை வழியாகவே’’

தன் தீரா அலைச்சலில்
தன் தீரா நகர்வுகளில்
அவன் மேலும் மேலும் மேலும் என
நல்லாசிரியர்களைக் கண்டு கொண்டேயிருந்தான்
மொழியில் தன் படைப்புகளை வடித்துக் கொண்டேயிருந்தான்

அவன்
தன் படைப்புகளை வடித்த மொழி 
உலகில் கோடானுகோடி மானிடர் அறிந்தது
இருப்பினும்
அவன் சொற்கள் சிலருக்கே புரிந்தது
எமக்குத் தொழில் படைத்தல்
என 
படைத்துக் கொண்டேயிருந்தான்

தன் சொற்களால்
அவன் 
பல கடவுள்களைப் படைத்திருக்கிறான்
கடவுள்களை மானிட மொழியில் பேச வைத்திருக்கிறான்
ஞானிகளை தீர்க்கதரிசிகளை மீண்டும் உருவாக்கியிருக்கிறான்

அவன் சொற்கள்
மானிடர் பலருக்கு 
இதமளித்தது
நம்பிக்கையளித்தது

ஆதி மானிடன் கண்டறிந்த முதல் தீச்சுடர்
ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு
என
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக
சென்று கொண்டேயிருப்பது போல
அவன் சொற்கள்
செல்லத் துவங்கின

அவன் குறித்து
ஈன்ற பொழுதிற் பெரிதுவந்தாள்
சொல்லன்னை

*** 

Friday, 11 September 2026

இன்னும் சற்று தூரம் (மறுபிரசுரம்)

இன்னும் சற்று தூரம் தான் இருக்கிறது
நாம் சென்று சேர வேண்டிய இடம் வந்து விடும்
பாட்டி வீடு
மாமா வீடு
சித்தி வீடு
அருண் இருப்பான்
செல்வி இருப்பாள்
லீவுக்கு ஊருக்கு வந்த பசங்க இருப்பாங்க
தீமிதி
திருவிழா
பலூன் வாங்கித் தரேன்
பஞ்சு மிட்டாய் வாங்கித் தரேன்
இன்னும் கொஞ்ச நாள்ல
நம்ம கஷ்டம்லாம் சரியாயிடும்

நம்பிக்கையின்மையிலிருந்து
நம்பிக்கைக்கு
அம்மாக்கள்
நடந்து கொண்டேயிருக்கிறார்கள்

நம்மையும் கூட்டிக் கொண்டு 

Thursday, 10 September 2026

உயிரும் உறவும்

நேற்று இரவு எனது நெருங்கிய உறவினர் ஒருவர் மூர்ச்சையானார். எனக்குத் தகவல் தெரிந்து உடன் அங்கு சென்றேன். ஒரு ஆம்புலன்ஸ் வரச் சொல்லி முதலுதவிக்கு ஒரு மருத்துவமனைக்குச் சென்று விட வேண்டும் என முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து மருத்துவமனைக்கு மூர்ச்சையானவரை அழைத்துச் சென்றேன். மூர்ச்சையாயிருந்தவர் உடலின் சில பகுதிகளைக் காணும் போது அவர் மூளை  நரம்புமண்டலம் தொடர்பான பாதிப்புக்கு ஆளாகியிருக்கக் கூடும் என்று எனக்குத் தோன்றியது ; அதனால்தான் அவரை எக்காரணம் கொண்டு நடத்தி அழைத்துச் செல்லக் கூடாது என முடிவு செய்து ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்து ஆம்புலன்ஸில் இருந்த நகரும் படுக்கையில் அவரை அவர் படுக்கையில் படுத்திருந்த வண்ணமே மாற்றி ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர் முதல் எண்ணமாக மூளை நரம்புமண்டல பாதிப்பு எனக் கணித்து மூளையில் இரத்தக்கட்டு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதினார். ஆரம்பகட்ட முதல் உதவி சிகிச்சைகள் தரப்பட்டன. அங்கிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள ஊரின் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தலைப்பகுதியை சி டி ஸ்கேன் செய்து பார்த்தனர். மூளையில் இரத்தக்கட்டு இருப்பதை அறிந்தனர். சில மணி நேரங்களில் தலைப்பகுதியில் ஒரு மண்டையோட்டைத் துளைத்து ஓர் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவைசிகிச்சைக்கு சில மணி நேரங்களுக்குப் பின் உறவினர் உடலில் அசைவுகள் தென்படலாயின. அவர் உடலை அசைக்கத் தொடங்கினார். அவர் விழிகளைத் திறக்க முயன்றார். சுற்றி இருப்பவர் பேசுவதை அவர் புரிந்து கொள்கிறார் என்பதையும் அவர் முகம் அவர் மனம் அதை உள்வாங்கிக் கொள்வதையும் காட்டுகிறது. அறுவைசிகிச்சைக்குப் பின் மீண்டும் ஒரு ஸ்கேன் செய்யப்பட்டது. ஸ்கேன் அறிக்கை அடிப்படையில் இன்னொரு அறுவைசிகிச்சை தேவைப்படுமா அல்லது மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்தால் போதுமா என்பது முடிவு செய்யப்படும்.  

Thursday, 3 September 2026

தெருவிளக்கு - முதல் மேல்முறையீடு

அனுப்புநர்

ர.பிரபு
&&&&&
&&&&
&&&

பெறுநர்

மேல்முறையீட்டு அதிகாரி
தகவல் பெறும் உரிமைச் சட்டம்
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை

ஐயா,

பொருள் : தகவல் பெறும் உரிமைச் சட்டம் - முதல் மேல்முறையீடு
பார்வை : த.பெ.உ.ச.ப. ***/2026/அ*நாள்.25.08.2026 

15.08.2026 அன்று ***** ஊராட்சியில் நிகழ்ந்த கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் கோட்டாட்சியர் கலந்து கொண்டார். அந்தக் கிராம சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஊராட்சியின் வரவு செலவு அறிக்கையில் ( 01.04.2026 தேதி முதல் 31.07.2026 வரை) தெரு விளக்கு சரி செய்ய என ரூ.25,000 மற்றும் மின் விளக்கு வாங்க என ரூ.8000 என 4 மாதத்தில் ரூ.33,000 செலவிடப்பட்டுள்ளது என கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பார்வையாளனாக கலந்து கொண்ட நான் அதனை தணிக்கை அல்லது மறுதணிக்கை செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தேன். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்படி காலகட்டத்தின் தெருவிளக்கு தொடர்பான செலவு விபரங்களைக் கோரியிருந்தேன்.  

இந்த விஷயம் குறித்த எனது கடிதமும் இந்த விஷயம் தொடர்பான எனது தகவல் பெறும் உரிமைச்சட்ட மனுவும் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு உரிய பதில் அளிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கவும் அனுப்பி வைக்கப்பட்டு அக்கடிதங்களின் நகல் எனக்கு தபாலில் அனுப்பப்பட்டுள்ளது. 

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முதல் மேல்முறையீட்டு அதிகாரி என்ற விதத்தில் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் என்னுடைய மேல்முறையீட்டை பணிவுடன் முன்வைக்கிறேன். 

(1) ***** ஊராட்சியின் 01.04.2026 முதல் 31.07.2026 வரையிலான தெருவிளக்கு செலவு தொடர்பான விபரங்களை ***** ஊராட்சி அலுவலகத்திடம் பெற்று மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகமே அளிக்க வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அதிகாரம் உள்ளது. 

(2) கிராம நிர்வாகம் ஊராட்சி நிர்வாகத்தையும் உள்ளடிக்கியது என்ற விதத்திலும் வருவாய் கோட்டாட்சியர் ஊராட்சி வரவு செலவு கணக்குகளின் தணிக்கை அதிகாரி என்ற அதிகாரத்திலும் ஊராட்சியிடம் மேற்படி தெருவிளக்கு செலவு தொடர்பான விபரங்களைக் கேட்டுப் பெற முடியும். 

(3) ஊராட்சி நிர்வாகம் வருவாய் கோட்டாட்சியருக்கு அளிக்கும் பதில் கணக்கு தணிக்கை அடிப்படையில் ஒரு சாமானியக் குடிமகனுக்கு அளிக்கும் பதிலை விட பல மடங்கு அடர்த்தி கொண்டது. ஊராட்சி நிர்வாகம் அளிக்கும் கணக்கை எப்போது வேண்டுமானாலும் தணிக்கைக்கு உட்படுத்த வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அதிகாரம் உண்டு என்பதால் வருவாய் கோட்டாட்சியருக்கு ***** ஊராட்சி அளிக்கும் பதிலைக் கூட தணிக்கைக் கோணத்தில் கோட்டாட்சியர் அலுவலகத்தால் ஆராய முடியும். தகவல் தொடர்பு இடைவெளி இன்றி யதார்த்த நிலவரம் ஆக சீக்கிரம் வருவாய் கோட்டாட்சியர் கவனத்துக்கு வரும். 

(4) அரசு பல துறைகளாகப் பிரிந்து பணியாற்றுவது என்பது குடிமக்களுக்கு சிறப்பான அரசு சேவை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே என்பதால் வருவாய் கோட்டாட்சியர் ஊராட்சிகளின் தணிக்கை அதிகாரி என்ற முறையில் நேரடியாகவே விபரம் கோரி அதனை தன் அலுவலகம் மூலமாகவே அளிக்க சட்டம் அனுமதிக்கிறது என்பதை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

(5) இந்த மேல்முறையீட்டின் மூலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முதல் மேல்முறையீட்டு அதிகாரியான வருவாய் கோட்டாட்சியரிடம் 01.04.2026 முதல் 31.07.2026 வரையிலான ***** ஊராட்சியின் தெருவிளக்கு பழுது பார்த்தல் தொடர்பான கணக்கை வருவாய் கோட்டாட்சியரே தன் அதிகாரம் மூலம் ***** ஊராட்சியிடமிருந்து பெற்று தகவல் கோரிய எனக்கு அனுப்பி வைக்குமாறு மேல்முறையீடு செய்து கொள்கிறேன். 

தங்கள் உண்மையுள்ள,

*****


இடம் : மயிலாடுதுறை
நாள் : 01.09.2026   

Tuesday, 1 September 2026

வருவாய் கோட்டாட்சியர் பதில்

 இன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ஒரு கடிதமும் ஒரு ஆர் டி ஐ பதிலும் வந்திருந்தன. கடிதம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பப்பட்டு அதன் நகல் எனக்கு அனுப்பப்பட்டிருந்தது. ***** ஊரின் கிராம சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 01.04.2026 - 31.07.2026 வரையிலான வரவு செலவு விபரங்களில் தெருவிளக்கு பழுது பார்த்தல் என்னும் வகையில் ரூ.33,000 செலவு செய்ததாக கூறியிருந்தார்கள். அவ்வாறெனில் ஆண்டுக்கு அந்த ஊராட்சி தெருவிளக்கு பராமரிப்புக்கு ரூ. 1,00,000 செலவழிக்கிறது என்று பொருள். இந்த செலவை மறுதணிக்கை செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தேன். வருவாய் கோட்டாட்சியர் அதனை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பியிருக்கிறார். மேற்படி செலவின் ரசீதுகளை அளிக்குமாறு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி கோரியிருந்தேன். அந்த கோரிக்கையையும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பியிருந்தார். 

தெருவிளக்கும் தமிழக அரசியலும் (மறுபிரசுரம்)

தமிழக அரசியலுக்கும் தெருவிளக்குகளுக்கும் மிக நெருங்கிய பொருத்தம் இருக்கிறது. தமிழக கிராமங்களில் குழல் விளக்குகள் எனப்படும் டியூப் லைட்டுகள் தெருவிளக்குகளாக இருந்தன. அதற்கு முன் குண்டு பல்புகள் தெருவிளக்குகளாக இருந்தன. இரவு நேரத்தில் மக்கள் நடமாட தெருக்களில் தெருவிளக்குகள் ஒளிர்வது அவசியம் என்பதால் தெருவிளக்கு ஓர் அத்தியாவசியத் தேவை. ஊராட்சிகள் தெருவிளக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். 

தமிழகத்தில் 2006ம் ஆண்டு தேர்தல் முடிவுகளின் படி 93 இடங்களில் வெற்றி பெற்றிருந்த திமுக காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவோடு ஒரு மைனாரிட்டி அரசை அமைத்து நடத்தியது. மேற்படி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தந்ததால் அந்த மைனாரிட்டி அரசு 2006 - 2011 வரை நீடித்தது. அந்தக் காலகட்டத்தில் மைனாரிட்டி திமுக அரசு இந்தோனேஷியாவிலிருந்து தரக்குறைவான நிலக்கரியை இறக்குமதி செய்து அனல் மின் நிலையங்களில் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தியதால் மின்சார உற்பத்தி குறைந்தது. தமிழகம் மிக அதிக மின்வெட்டைச் சந்தித்தது. ஒரு நாளைக்கு காலை 2 மணி நேரம் மாலை 2 மணி நேரம் என 4 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் ஆனது. அப்போது மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் ’’ஆற்காடு’’ வீராசாமி. 

அந்தக் காலகட்டத்தில் இன்னொரு விஷயமும் நடந்தது. தமிழக மின்சார அமைச்சர் ‘’ஆற்காடு’’ வீராசாமி தமிழகத்தின் எல்லா ஊராட்சிகளிலும் உள்ள தெருவிளக்குகளை சோடிய ஆவி விளக்குகளாகவும் பாதரச ஆவி விளக்குகளாகவும் மாற்றும் திட்டத்துக்கு ஒப்புதல் தந்தார். சாதாரண குழல் விளக்கு அமைக்க ரூ.200 செலவாகிறது என்றால் சோடிய ஆவி விளக்குகளும் பாதரச ஆவி விளக்குகளும் அமைக்க குறைந்தபட்சம் ரூ.5000 செலவாகும். தமிழகத்தில் 12,500 கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் 200 விளக்குகள் அமைத்தால் கூட 25,00,000 விளக்குகள் அமைக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.5000 செலவாகும் என்றால் அரசியல்வாதிகள் அதற்கு ரூ.8000 செலவாகும் என கணக்கு எழுதுவார்கள் . ஒரு விளக்குக்கு ரூ.3000 ஊழல் எனில் 25,00,000 விளக்குகளுக்கு ரூ.750 கோடி ஊழல் செய்து வெளியே எடுத்தார்கள். இது குறைந்தபட்ச கணக்கீடு. நிகழ்ந்தது இன்னும் பல மடங்கு இருக்கும். 

இதில் இன்னொரு எதிர்பாராத விஷயம் நடந்தது. குழல் விளக்குகள் எரிந்தால் ஆகும் மின்சாரப் பயன்பாட்டை விட சோடிய ஆவி விளக்குகள் எரிந்தால் ஆகும் மின்சாரப் பயன்பாடு மிக அதிகம். பல மடங்கு யூனிட் மின்சாரம் அதற்கு தேவைப்பட்டது. தரமற்ற நிலக்கரியால் மின் உற்பத்தி குறைந்த நிலையில் சோடிய பாதரச ஆவி விளக்குகளும் கூடுதல் மின்சாரம் எடுத்துக் கொண்டன. இவை அத்தனையும் தினம் 4 மணி நேர மின்வெட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தன. பல ஊராட்சிகள் இந்த சோடிய பாதரச ஆவி விளக்குகளால் மின்சார வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய மின் கட்டணம் செலுத்த இயலாமல் ஆனது. கோடிக்கணக்கான ரூபாய் மின்வாரியத்துக்கு ஊராட்சிகளின் நிலுவைத்தொகை ஆனது. 

2014ம் ஆண்டு நிகழ்ந்த நிகழ்வையும் குறிப்பிடுகிறேன். 

2014ம் ஆண்டு மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றது. பியூஷ் கோயல் மத்திய மின்சாரத்துறை அமைச்சராகப் பதவியேற்றார். அவர் ஒரு பட்டயக் கணக்காளர் (சார்டட் அக்கவுண்டண்ட்). சி ஏ தேர்வில் நாட்டில் இரண்டாம் இடத்தில் தேர்ச்சி பெற்றவர். அவர் மின்சார சேமிப்பை நாடெங்கும் நிகழ்த்த மாநில அரசாங்கங்கள் தங்கள் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி , மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில் குண்டு பல்பு, குழல் பல்பு, சோடிய ஆவி விளக்கு, பாதரச ஆவி விளக்கு இவற்றுக்குப் பதில் சி எஃப் எல் அல்லது எல் இ டி விளக்குகளை மத்திய அரசு வழங்கும் எனக் கூறினார். நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளின் குண்டு பல்பு, குழல் பல்பு, சோடிய பாதரச ஆவி விளக்குகளுக்குப் பதிலாக மின்சாரம் குறைவாகத் தேவைப்படும் எல் இ டி விளக்குகள் பயன்பாட்டுக்கு வந்தன. இதனால் நாட்டுக்கு பல லட்சம் யூனிட் மின்சாரம் சேமிக்கப்பட்டது.   

வருவாய் கோட்டாட்சியருக்கு ஒரு கடிதம் (மறுபிரசுரம்)

  அனுப்புநர்

ர.பிரபு
&&&&&
&&&&&
&&&

பெறுநர்

வருவாய் கோட்டாட்சியர்
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை

ஐயா,

பொருள் : ***** ஊராட்சி - கிராம சபைக் கூட்டம் - 01.04.2026 லிருந்து 31.07.2026 வரையிலான வரவு செலவு விபரம் - தெரு விளக்கு பழுது பார்த்தல் தொகை ரூ.25,440 & தெரு விளக்கு பொருள் வாங்கியது ரூ.8140

15.08.2026 அன்று ***** ஊராட்சியின் கிராம சபைக் கூட்டத்தில் தாங்கள் கலந்து கொண்டீர்கள். அக்கூட்டத்தில் 01.04.2026 லிருந்து 31.07.2026 வரையிலான ஊராட்சி வரவு செலவு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதில் தெருவிளக்கு பழுது பார்த்தல் செலவாக ரூ.25,440ம் தெருவிளக்கு பொருட்கள் வாங்கிய செலவாக ரூ.8140ம் செலவுக் கணக்கில் காட்டப்பட்டுள்ளது. மேற்படி 120 நாட்களில் மேற்படி ஊராட்சியில் தெருவிளக்கு தொடர்பாக ரூ. 33,580 செலவாகியிருக்கிறது என்றால் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.280 செலவாகிறது. முதற்பார்வைக்கு இந்த செலவு மிகைப்படுத்தப்பட்ட செலவு என்பது தெரிகிறது அல்லவா? தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த கிராமத்தின் தெருவிளக்கு செலவை தணிக்கை அல்லது மறுதணிக்கை செய்யுமாறும் அவ்விதம் தணிக்கை அல்லது மறுதணிக்கை செய்கையில் மேற்படி ரூ.33,580 மிகைப்படுத்தப்பட்ட செலவு எனத் தெரிய வந்தால் அதனை அரசுக் கணக்கில் சேர்க்காமல் இருக்கவும் தெருவிளக்கு பராமரிப்புத் தொகை இல்லாத புதிய கணக்கை அரசு ஏடுகளில் பதிவு செய்யுமாறும் உத்தரவிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். 

இன்று பொதுவாக எல் இ டி மின்விளக்குகள் தெருவிளக்குகளாகப் பயன்படுகின்றன. அவை குறைந்தபட்சம் 18 மாதத்திலிருந்து 24 மாதங்கள் வரை ஒளிரக்கூடியவை. மேற்படி செலவுக் கணக்கின் படி பார்த்தால் ஓராண்டுக்குத் தோராயமாக அந்த ஊராட்சி தெருவிளக்கு பராமரிப்புக்கு ரூ.1,00,000 செலவழிக்கிறது என்று ஆகி விடும் அல்லவா?

கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் எனக் கோரப்படுவது அரசு நிர்வாகத்தில் மக்கள் பங்களிக்க வேண்டும் என்பதற்காகவே. அவ்வகையில் இந்த விஷயத்தை தங்கள் கவனத்துக்கு கொண்டு வந்திருப்பதன் மூலம் ஒரு குடிமகனாக எனது கடமையைச் செய்திருப்பதாக எண்ணுகிறேன். 

நன்றி

தங்கள் உண்மையுள்ள், 


இடம் : மயிலாடுதுறை
நாள் : 15.08.2026

நகல்

1. மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை

வருவாய் கோட்டாட்சியருக்கு ஒரு ஆர் டி ஐ மனு (மறுபிரசுரம்)

அனுப்புநர்

ர.பிரபு
&&&&&
&&&&&
&&&

பெறுநர்

வருவாய் கோட்டாட்சியர்
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை

ஐயா,

பொருள் : தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் படி தகவல் கோரி விண்ணப்பம்

பார்வை : 15.08.2026 - தாங்கள் கலந்து கொண்ட ***** ஊராட்சி கிராம சபைக் கூட்டம் - 01.04.2026 லிருந்து 31.07.2026 வரையிலான வரவு செலவு அறிக்கை

15.08.2026 அன்று ***** ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தாங்கள் கலந்து கொண்டீர்கள். அந்தக் கூட்டத்தில் அந்தக் கிராம ஊராட்சி மன்றத்தால் 01.04.2026 லிருந்து 31.07.2026 வரையிலான ஊராட்சியின் செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு அது சுவரொட்டியாக ஒட்டப்பட்டிருந்தது. அதில் மேற்படி 120 நாட்களில் மணக்குடி ஊராட்சியில் தெருவிளக்கு பழுது பார்க்க என ரூ.25,440 செலவிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி விபரத்தின் மூலம் ***** ஊராட்சியில் ஒரு நாளைக்கு சராசரியாக தெருவிளக்கு பழுது பார்க்க ரூ.200 செலவாகிறது என்று ஆகிறது அல்லவா? 

தகவல் பெறும் உரிமைச் சட்டம் படி தங்களிடம் கீழ்க்காணும் விபரங்களைக் கோருகிறேன். 

(1) ***** ஊராட்சியில் உள்ள மொத்த தெருவிளக்குகள் எத்தனை? 

(2) *****ஊராட்சியில் 01.04.2026 லிருந்து 31.07.2026 வரை எரியாத மின்விளக்குகள் என எத்தனை இருந்தன? 

(3) மின்விளக்கு பழுது பார்க்க செலவழித்த தொகை ரூ.25,440க்கான ரசீதுகள், வவுச்சர்கள் முதலானவற்றின் தகவல்

மேற்படி விபரங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அதற்கான கட்டணம் ரூ.10 ஐ மனுவில்லையாக செலுத்தியுள்ளேன். 

தங்கள் உண்மையுள்ள,


இடம் : மயிலாடுதுறை
நாள் : 15.08.2026 

கிராம சபைக் கூட்டம் ( மறுபிரசுரம்)

இன்று ஊருக்குப் பக்கத்தில் உள்ள கிராமத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்துக்குச் செல்ல வேண்டும் என் காலையிலிருந்தே எண்ணம் கொண்டிருந்தேன். தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகள் தோற்கடிக்கப்பட்டு ஒரு புதிய கட்சி ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் கிராம அளவில் சூழல் எவ்விதம் இருக்கிறது என்பதை அறிய கிராம சபைக் கூட்டம் உதவும் என எண்ணினேன். 

தமிழக அரசியல் என்பது ஒரு மூடுமந்திரம். என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்குள் எந்த விஷயமும் முடிந்து விடும். 

காலை 10 மணி அளவில் கிராம சபை கூட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்றேன். கூட்டம் 12 மணி அளவில் தொடங்கியது. வருவாய் கோட்டாட்சியர் கூட்டத்துக்கு வருகை புரிந்திருந்தார். மாவட்ட ஆட்சித் தலைவருடன் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்று அது முடிவடைந்த பின் வந்ததால் சற்று தாமதம்.  

தமிழக மக்கள் எந்நேரமும் அரசியலையும் அரசையும் குறித்து பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அடிப்படைக் கடமையைச் செய்வதில் சுணக்கம் காட்டுபவர்கள். ஒரு கிராமத்தின் மக்கள் தொகை 1000 - 5000 வரை இருக்கும். கிராம சபைக் கூட்டத்துக்கு குறைந்தபட்சம் 50 பேர் வருகை தர வேண்டும். நான் கலந்து கொண்ட கூட்டத்தில் இழுத்துப் பிடித்து 50 பேர் வந்திருந்தனர். 01.04.20226 லிருந்து 31.07.2026 வரை அந்த கிராமத்துக்கு ஆன செலவுகளை ஒரு போஸ்டராக சபை அரங்கில் வைத்திருந்தார்கள். அந்த விபரங்களைக் குறிப்பேட்டில் குறித்துக் கொண்டேன். அங்கிருந்த அரசு ஊழியர் நான் விபரங்களைக் குறித்துக் கொள்வதைப் பார்த்து என்னிடம் நான் யார் என்ற விபரங்களை கேட்டுக் கொண்டார். 120 நாளில் ரூ.4,80,000 செலவு செய்திருக்கின்றனர். ஒரு நாளைக்கு ரூ.4000 செலவாகிறது. 

முதற் பார்வையில் தெரு விளக்கு பழுது நீக்கம் ரூ.25,000 எனக் குறிப்பிட்டிருந்தனர். 120 நாளில் ரூ.25,000 செலவு எனில் ஒரு நாளைக்கு ரூ.200 செலவாகிறது என்று பொருள். அந்த ஊரில் தினம் ஒரு மின்விளக்கு மாற்றினால் தான் அந்த செலவு ஆகும். தினம் ஒரு விளக்கு பழுதடைய சாத்தியம் இல்லை. 

தெருவிளக்கு பொருள் வாங்கியது என ரூ.8000 செலவு. முன்னர் குறிப்பிட்டது தெருவிளக்கு பழுது நீக்க. இப்போது பொருள் வாங்கியது என்பதற்காக. ரூ.8000க்கு வாங்கிய பொருளை ரூ.25,000 செலவு செய்து பொருத்தினார்களா என்னும் கேள்வி எழுகிறது. 

கை பம்ப் வாங்க என ரூ.6000 செலவு. கை பம்ப் பழுது நீக்க என ரூ.8000 செலவு. 

தெரு விளக்கு, கை பம்ப் செலவை தணிக்கை செய்ய வேண்டும் எனக் கேட்கலாம் என உள்ளேன். 

அரசு மக்களை இணைக்க வேண்டும். மக்கள் இணைந்தால் மகத்தான மாற்றங்கள் நடக்கும். 

தமிழகம் இப்போது தான் ஒரு ஆட்சிமாற்றத்தை நிகழ்த்தி மாற்றங்களுக்குத் தயாராகி உள்ளது. இனி வரும் காலங்களில் இன்னும் அதிக மாற்றங்கள் நிகழும் என நம்புவோம்.    

Sunday, 30 August 2026

ஒரு குடும்பத்துக்கு என்னென்ன மரக்கன்று வழங்கலாம்?

வாழை மரம்

பப்பாளி 

பலா மரம்

நெல்லி மரம்

கொய்யா மரம்

எலுமிச்சை

நாவல்

வில்வ மரம்

வன்னி மரம்

அகத்தி

முருங்கை

சந்தனம்

வேம்பு 

மூங்கில்

சீதாப்பழம்

மாதுளை

கொடுக்காப்புளி

புங்கன்

மகிழ மரம்