Monday, 22 December 2025

காரைக்குடி பயணம் ( நகைச்சுவைக் கட்டுரை)

இன்று எனது நண்பர் ஒருவர் காரைக்குடியிலிருந்து ஃபோன் செய்திருந்தார். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிக நன்றாக அறிவோம். எனினும் நாங்கள் அதிகம் சந்தித்துக் கொண்டதில்லை. அதிகம் உரையாடிக் கொள்ளவும் வாய்ப்பு அமையவில்லை. இந்நிலை அரிதானது என்றாலும் இலக்கிய வாசகர்களுக்கு இடையே இது சாத்தியம் தான்.  இலக்கிய வாசிப்பில் பேரார்வம் கொண்டவர் நண்பர். மேலும் பல ஆண்டுகளாக ஐந்து ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். ஒரு ஏக்கரில் அடர்வனம் ஒன்றை அமைத்திருக்கிறார். இப்போது பறவை பார்த்தலில் மிகுந்த ஆர்வம் கொண்டு செயல்படுகிறார். அவரது அழைப்பு எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவரை நேரில் சந்திக்க விரும்பினேன். எனது விருப்பத்தைக் கூறினேன். அவசியம் வருமாறு கூறினார். நாளையே செல்வது என முடிவு செய்தேன். 

எப்படி செல்வது என்ற கேள்வி எழுந்தது. இரு சக்கர வாகனம்தான் என் முதல் தேர்வாக இருக்கும். அவ்வாறெனில் நாளை காலை 5 மணிக்குப் புறப்பட்டால் கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மார்க்கமாக காரைக்குடி செல்ல வேண்டும். சாலைகள் அகலமாக பெரிதாகத்தான் இப்போது இருக்கின்றன. எவ்விதமான சாலைகளாக இருந்தாலும் எனது வாகன வேகம் என்பது மணிக்கு 40 - 50 கி.மீ ஆகவே இருக்கும். காரைக்குடி தோராயமாக 170 கி.மீ இருக்கும். அவ்வாறெனில் 4.5 மணி நேரம் ஆகிவிடும். காலை 5 மணிக்குக் கிளம்பினால் 9.30க்கு அங்கே இருக்கலாம். இருப்பினும் காலையில் முன் நேரத்தில் எழுவது நீண்ட நேரம் வாகனம் ஓட்டுவது ஆகியவை சிறு சோர்வை உண்டாக்கக் கூடும். 

பொதுவாக நான் எங்கும் இரு சக்கர வாகனத்தில் தான் பயணப்படுவேன் என பரவலாகக் கருதுகிறார்கள். எனக்கு எந்த பயண சாதனமாக இருந்தாலும் உகந்ததே. பயணம் தான் எனக்கு முக்கியம். 

ஸ்ரீநகருக்கோ தில்லிக்கோ கௌஹாத்திக்கோ டேராடூனுக்கோ தனியாக இரு சக்கர வாகனத்தில் செல்வது என்பது முற்றிலும் அகவயமான அனுபவம். முதல் உடலும் மனமும் வெளியுலகமும் ஒத்திசையும் தன்மையே நீண்ட தூர இரு சக்கர வாகனத்தின் உண்மையான அனுபவம். கையில் அலைபேசி இல்லாமல் ஊரிலிருந்து 100 கி.மீ தாண்டி விட்டாலே பயணிப்பவர் முற்றிலும் வேறொரு மனிதர் ஆகி விடுவார். பயணிப்பவர் அறிந்த பயணிப்பவருக்குத் தெரிந்த பயணிப்பவர் மனதில் சுமக்கும் பொறுப்புகள் அனைத்தின் எடையும் 99 சதவீதம் குறைந்து விடும். லௌகிகத்தில் இருக்கும் மனிதர்களுக்கு கிடைக்கக்கூடிய ஆகப் பெரிய ஆக சாத்தியமான விடுதலை அது. அந்த எடையின்மை அதன் பின் பயணியை வழிநடத்திச் செல்லும். காணும் ஒவ்வொரு பொருளும் புதிதாக இருக்கும். காணும் ஒவ்வொரு காட்சியும் புதிதாக இருக்கும். உலகம் கணந்தோறும் புதியதே எனினும் நாம் வழக்கமாகப் பழகியிருக்கும் இடத்திலேயே இருக்கும் போது நாம் அதனை உணர்வதில்லை. பயணத்தின் முதல் நாள் மாலை பயணி 250 கி.மீ சென்று சேர்ந்திருந்தாலும் உடலும் மனமும் நாம் புதிய இடத்தில் இருக்கிறோம் என்பதை 100 சதவீதம் உணர்ந்திருக்காது. 90 சதவீதம் உணர்ந்திருக்கும். நீண்ட பயணத்தின் விளைவாக உறக்கம் சூழ்ந்து விடும். மறுநாள் காலை விழித்ததும் மனமும் உடலும் தான் புதிய இடத்தில் இருப்பதை முழுமையாக உணரும். இரண்டாம் நாள் பயணம் எப்போதும் புத்தம் புதியதாக இருக்கும். அதன் பின் பயணத்தின் ஒவ்வொரு நாளுமே ஒவ்வொரு பொழுதுமே ஒவ்வொரு கணமுமே அந்த உணர்வு பயணியை வியாபித்து விடும். 

காரைக்குடிக்கு இரு சக்கர வாகனத்தில் கிளம்பினால் அன்று மாலை ஊருக்குப் புறப்பட முடியாது. மாலை 4 மணிக்குக் கிளம்பினால் இரவு 9 அல்லது 10 மணியாகி விடும் ஊர் திரும்ப. மாலை 6 மணிக்கு மேல் நீண்ட தூரம் இரு சக்கர வாகனம் இயக்குவது உகந்தது அல்ல. நண்பரும் உடன் புறப்பட்டு விட்டதாக எண்ணுவார். என்ன செய்வது என்று யோசித்தேன். பேருந்துப் பயணம் என்றால் கும்பகோணத்தில் தஞ்சாவூரில் புதுக்கோட்டையில் என பேருந்து மாற வேண்டும். ரயில் ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்தேன். 

திருவாரூரில் காலை 6.30க்கு காரைக்குடிக்கு ஒரு ரயில் இருந்தது. காலை 9.30க்கு காரைக்குடி சென்று விடும். அந்த ரயில் பாதையில் உள்ள ஊர்கள் சிறு சிறு கிராமங்கள். சுவாரசியமான ரயில் மார்க்கம் அது. முன்னர் மயிலாடுதுறை காரைக்குடி என பாசஞ்சர் வண்டி இயங்கிக் கொண்டிருந்தது. இப்போது அது திருவாரூர் காரைக்குடி என்றாகி விட்டது. வெகு ஆண்டுகளுக்கு முன்னால் காலை 6.30க்கும் மாலை 5.30க்கும் என காரைக்குடி பாசஞ்சர் இருந்தது என நினைவு. மாலை செல்லும் ரயிலில் நான் சில முறை சென்றிருக்கிறேன். 

காலையில் 6.30க்கு திருவாரூரில் காரைக்குடி ரயிலைப் பிடித்து விடுவது என முடிவு செய்து கொண்டேன். ஆரூரில் பழைய பேருந்து நிலையத்துக்கு பக்கத்திலேயே ரயில் நிலையம் இருக்கிறது. 6.30க்கு ரயிலைப் பிடிக்க வேண்டும் என்றால் ரயில் நிலையத்தில் 6.15க்கு இருக்க வேண்டும். ஊரில் 5 மணிக்கு திருவாரூருக்கு பேருந்து ஏறினால் தான் சரியாக இருக்கும். 5 மணிக்கு பேருந்து ஏற வீட்டில் 4 மணிக்கு கிளம்பிட வேண்டும். நாளை காலை 3 மணிக்கு அலாரம் வைத்துக் கொள்ள வேண்டும். 

ராமேஸ்வரத்திலிருந்து தாம்பரம் செல்லும் விரைவு ரயில் திருவாரூர் மயிலாடுதுறை மார்க்கமாகச் செல்லக் கூடியது. காரைக்குடியில் இரவு 7.30க்கு இரவு 10.15க்கு ஊர் வந்து சேரும். அதில் திரும்பி விடலாம்.

99 சதவீதம் நாளை காரைக்குடிக்கு ரயிலில் தான் செல்வேன். 1 சதவீதம் இரு சக்கர வாகனத்துக்கும் வாய்ப்பு இருக்கிறது. 

செட்டிநாடு பகுதியின் நிலக்காட்சிகள் எனக்கு மிக இனியவை. தஞ்சைப் பிராந்தியத்தில் பசுமையை மட்டுமே கண்ட எனக்கு மண்ணின் விதவிதமான வண்ணங்கள் காணக் கிடைக்கும் செட்டிநாடு மிகவும் விருப்பத்துக்குரிய ஒன்று. 

நாளைய பயணம் இன்றே உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.

***  

Saturday, 20 December 2025

ஜாதி அரசியல் (நகைச்சுவைக் கட்டுரை)

அரசியல் என்பது 99 சதவீதத்தினரால் 99 சதவீதம் அதிகார அரசியல் என்றே புரிந்து கொள்ளப்படுகிறது. அரசியலை அதிகார அரசியல் எனப் புரிந்து கொள்பவர்களில் 99 சதவீதம் பேர் அதனை ஜாதி அரசியல் என்றே புரிந்து கொள்கிறார்கள்.  

ஒரு ஊரில் ‘’அ’’, ‘’ஆ’’, ‘’இ’’, ’’ஈ’’ என நான்கு ஜாதிகள் இருப்பதாகக் கொள்வோம். ‘’அ’’ ஜாதியினர் ஊரின் மக்கள்தொகையில் 35 சதவீதமும் ‘’ஆ’’ ஜாதியினர் ஊரின் மக்கள்தொகையில் 37 சதவீதமும் ‘’இ’’ ஜாதியினர் 5 சதவீதமும் ‘’ஈ’’ ஜாதியினர் 23 சதவீதமும் வாழ்கிறார்கள் என எடுத்துக் கொள்வோம். 

அங்கே 4 மளிகைக் கடைகள் இருக்கின்றன எனவும் அதனை முறையே ‘’அ’’, ‘’ஆ’’, ‘’இ’’, ’’ஈ’’ ஜாதியினர் நடத்துவதாகக் கொள்வோம். ஊர்க்காரர்கள் எந்த கடையில் பொருள் தரமாக இருக்கிறதோ விலை சகாய விலையாக இருக்கிறதோ அந்த கடையில் தான் பொருள் வாங்குவார்கள். தனது ஜாதிக்காரர் கடை வைத்திருக்கிறார் என்பதற்காக விலை அதிகமாயிருந்து பொருளும் தரமற்றதாக இருந்தால் அந்த கடைக்குச் சென்று பொருள் வாங்க மாட்டார்கள். பணம் கொடுத்து பொருள் வாங்கும் வணிகத்தில் பின்பற்றும் வழக்கத்தை மக்கள் ஜனநாயக அரசியலில் அப்படியே பின்பற்றுவதில்லை. வேட்பாளர் தங்கள் ஜாதியைச் சேர்ந்தவரா எனப் பார்த்து வாக்களிக்கின்றனர். 

அந்த ஊரில் ‘’அ’’ ஜாதியைச் சேர்ந்த மூன்று பேர் போட்டியிடுகிறார்கள் என்றால் ‘’ஆ’’ ஜாதியைச் சேர்ந்த ஒருவர் தானும் போட்டியில் இறங்குவார். ‘’அ’’ ஜாதியைச் சேர்ந்தவர் தனது ஜாதியின் 35 சதவீத வாக்குகளைப் பெற்றால் ‘’ஆ’’ ஜாதியைச் சேர்ந்தவர் ‘’அ’’ ஜாதி வாக்குகள் போக மீதம் இருக்கும் 65 சதவீத ‘’அ’’ ஜாதி அல்லாத வாக்குகளை தன் பக்கம் திருப்ப முயல்வார். இதனை அறியும் உணரும் ‘’அ’’ ஜாதி வேட்பாளர்களில் ஒருவர் தனது மறைமுக ஆதரவுடன் ‘’இ’’ மற்றும் ‘’ஈ’’ சமூகத்தில் இருந்து இரு வேட்பாளர்களை போட்டியிடச் செய்வார். 

தனது ஜாதிக்காரர் என்பதற்காக மொத்த ஜாதியும் ஒருவருக்கே வாக்களித்து விடுவதில்லை ; பெரும்பான்மை வாக்குகள் அங்கு செல்லும். மற்ற ஜாதியினர் எவ்விதம் வாக்களித்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே வெற்றி தோல்வி நிர்ணயம் ஆகும். மக்கள் பிரதிநிதித்துவ தேர்தல் முறை இரண்டாம் இடம் பிடிப்பவரைக் காட்டினும் ஒரு வாக்கேனும் கூடுதலாகப் பெறுபவர் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கூறுகிறது. எனவே கூடுதல் வாக்குகள் எவ்விதம் பெறுவது என்பதே கட்சிகளின் இலக்காகி விடுகிறது. 

கிராமம், நகரம், சட்டமன்றத் தொகுதி, நாடாளுமன்றத் தொகுதி என அனைத்திலுமே 99 சதவீதம் இவ்விதமாகவே அரசியல் நடக்கிறது. இதனை ஜனநாயக விரோதம் எனக் கூற முடியாது. ஜனநாயகம் 21 வயதுக்கு மேற்பட்ட எவரும் தேர்தலில் போட்டியிடலாம் என்ற உரிமையை வழங்குகிறது. அதன் படியே வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எனவே இது வேட்பாளர்கள் தொடர்பானதோ கட்சி தொடர்பானதோ இல்லை. வாக்காளர் மனோபாவம் தொடர்பானது. வாக்காளர்கள் அரசாங்க இயங்குமுறையையும் செயல்பாடுகளையும் கவனிக்க வேண்டும். எது தரமான அரசியல் எது தரமற்ற அரசியல் அல்லது எது அதிக தரங்கெட்ட அரசியல் எது குறைந்த தரங்கெட்ட அரசியல் என்பதை முடிவு செய்து தங்கள் வாக்கைச் செலுத்த வேண்டும். ஜாதி அரசியலின் காலத்தை முடிவுக்குக் கொண்டு வருவது அரசியல் கட்சிகளை விட பொதுமக்களின் கைகளிலேயே இருக்கிறது.  

Thursday, 18 December 2025

தமிழகத்தில் பள்ளிமாணவர்களிடம் தாராளமாகப் புழங்கும் போதைமருந்துகள்

எனது நண்பர் ஒருவர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர். ஊருக்கு கிழக்கே 20 கி.மீ தொலைவில் இருக்கும் அவர் தலைமை ஆசிரியராய் இருக்கும் பள்ளிக்குச் சென்றிருந்தேன். பள்ளி மாணவர்களிடம் சர்வ சாதாரணமாக போதை மருந்துகள் புழங்குகின்றன என்று அவர் கூறியதைக் கேட்ட போது பேரதிர்ச்சியாக இருந்தது. மிகச் சிறிய போதை மருந்து சாக்லெட்டில் வைத்து ரூ.10க்கு அளிக்கின்றனர் என்று சொன்னார்.  

இன்றைய மாணவர்களிடம் பாக்கெட் மணியாக ஒவ்வொரு நாளும் ரூ.20 அல்லது ரூ.30 பெற்றொர்கள் அளிக்கின்றனர். அதனைக் குறிவைத்து ரூ.10க்கு போதை மருந்து சாக்லெட் விற்பனை செய்கின்றனர். அந்த சாக்லெட்டை உண்டால் உடலுக்கு ஒரு அதிர்வு உண்டாவதைப் போல் மாணவர்கள் உணர்கின்றனர். அந்த அதிர்வு தினமும் தேவை என தினமும் ரூ.10 கொடுத்து போதை மருந்து சாக்லெட்டை வாங்கத் துவங்குகின்றனர். அது பழகியதும் மேலும் போதைக்கு அதிக விலை கொடுத்து போதை வஸ்துக்களை நுகரும் நிலைக்குச் செல்கின்றனர் என்று சொன்னார். பள்ளியில் 2000 மாணவர்கள் பயில்கிறார்கள் என்றால் 500 பேருக்காவது போதை மருந்து சாக்லெட் பழக்கம் இருக்கிறது என்று கூறினார். பள்ளி மாணவர்கள் வழியாக பள்ளி மாணவிகளுக்கும் இந்த பழக்கம் ஏற்பட்டு விடுகிறது என்பதைக் கூறிய போது நான் அதிர்ந்து போனேன். 

தினமும் 500 மாணவர்கள் ரூ.10க்கு சாக்லெட் வாங்குகிறார்கள் என்றால் அந்த பள்ளியின் மாணவர்களால் ரூ.5000க்கு தினமும் போதை வியாபாரம் நடக்கிறது என்று பொருள். சாக்லெட் மற்றும் போதைப் பொருள் ரூ.500 + ரூ.500 எனக் கொண்டால் அடக்கம் ரூ.1000. விற்பனை விலை ரூ. 5000. ஒரு நாளைக்கு இந்த சாக்லெட் விற்பனை செய்யும் போதை வியாபாரிக்கு ரூ.4000 லாபமாகக் கிடைக்கும். ஒரு மாதத்துக்கு ரூ.1,00,000. 

ஒரு காலத்தில் தமிழகக் காவல்துறையின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போதைப் பொருட்களை மிகத் தீவிரமாக எடுத்துக் கொள்வார்கள் என அறிந்ததுண்டு. தமிழகம் போதைப் பொருள் இல்லாத மாநிலமாக இருக்க வேண்டும் என்பதில் தமிழகக் காவல்துறை பிடிவாதமாக இருக்கும் எனக் கூறுவார்கள். இன்றைய நிலையை எண்ணினால் பேரதிர்ச்சியே மிஞ்சுகிறது. உடைந்த மனத்துடன் நண்பரிடம் விடை பெற்று வீடு திரும்பினேன். 

பயங்கரவாத ஊற்று

பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத ஊற்று. தனது சொந்த குடிமக்களையும் உலகின் எல்லா நாடுகளின் சாமானியக் குடிமக்களையும் படுகொலை செய்வதை தன் வரலாறாகக் கொண்ட பயங்கரவாதக் குழு பாகிஸ்தான். அங்கே உண்மையான அதிகாரம் இராணுவத்துக்கும் அதன் உளவு அமைப்புக்குமே உள்ளது. இது தவிர மத அடிப்படைவாதிகளும் பெருவணிகர்களும் அதிகாரம் கொண்டிருக்கின்றனர். அரசியல்வாதிகள் அதிகாரம் என்பது பெயரளவுக்கானதே.  பயங்கரவாதத்தை உற்பத்தி செய்து உலகம் முழுவதும் அனுப்புவதே அவர்களின் செயல்திட்டமாக இருக்கிறது. அணு ஆயுதம் தொடங்கி எல்லா வகையான அழிவு வேலைகளிலும் அவர்களுக்கு கடந்த கால வரலாறு இருக்கிறது. உலகெங்கும் இருக்கும் பல்வேறு பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆயுதங்களை விற்பதன் மூலம் கள்ள ஆயுதச் சந்தையில் பெரும் பங்கினைக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். உலகெங்கும் நடக்கும் போதை மருந்து கடத்தலிலும் முக்கிய பங்கு பாகிஸ்தானுக்கு உண்டு. அபாயமான ஒரு நாட்டை நாம் அண்டை நாடாகக் கொண்டிருக்கிறோம். பாகிஸ்தானை பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு ஊற்றுமுகமாய் இருக்கும் சித்தாந்தத்தை இந்தியக் குடிகள் தெளிவாக அடையாளம் காண வேண்டும். அது உலக நலனுக்கு உகந்தது.  

Tuesday, 16 December 2025

சில விஷயங்கள்

கல்லூரி நாட்களில் மிகத் தீவிரமாக இலக்கியம் வாசித்துக் கொண்டிருந்தேன். வாசிக்கத் தொடங்கிய நாளிலிருந்தே இலக்கியத்துக்கு சமமாக அ-புனைவுகளையும் வாசிப்பேன். இன்று அந்த நாட்களை எண்ணிப் பார்த்தால் வியப்பாகத்தான் இருக்கிறது.  வியப்புக்கான காரணம் அன்று மனதில் பொங்கி வழியும் உற்சாகமும் நம்பிக்கையும். எனது நம்பிக்கை மற்றும் உற்சாகத்துக்கு கரை அமைத்துக் கொடுத்தது எனது வணிகம். வணிகம் பல விஷயங்களை எனக்குப் புரிய வைத்தது. மனித சுபாவங்கள் குறித்து நான் நிறைய தெரிந்து கொண்டேன். மனிதர்களுடைய எல்லைகளையும் தடைகளையும் என்னால் தெளிவாகப் பார்க்கவும் உணரவும் முடிந்தது. அதனை நான் என்னுடைய கட்டுமானத் தொழிலில் பணியாளர்களிடமிருந்தும் கட்டுமான பொருட்கள் சப்ளை செய்பவர்களிடமிருந்தும் தெரிந்து கொண்டேன். பணியாளர்கள் ஒருவித மெல்லிய கண்ணுக்குத் தெரியாத ஒத்துழையாமையை வெளிப்படுத்துவர். நான் அதை கூர்ந்து நோக்கினேன். அதில் இருப்பது வேலை செய்வதன் மந்தம் மட்டுமல்ல. மனிதர்களுக்கு ஒரு குறிப்புக்கு முழுமையாக உட்படாமல் இருப்பதில் சிறு இன்பம் இருக்கிறது. அதற்காகவே அதனைச் செய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். எப்போது அந்த பார்வை கவனம் பார்ப்பவரிடம் ஏற்பட்டு விடுகிறதோ அதன் பின் அவர் அந்த ஒத்துழையாமையை எளிதில் செயலற்றதாக்கி விடுவார். 99 சதவீதம் மனிதர்கள் தாங்கள் எதைப் பழகியிருக்கிறார்களோ அதையே திரும்பத் திரும்ப செய்வார்கள். ஒருவர் தன்னை மாற்றிக் கொள்வது என்பதும் மேம்படுத்திக் கொள்வது என்பதும் மிகவும் அபூர்வமானது. அக புறத் தடைகளை விளக்கி தன்னைக் கூர்ந்து கவனிப்பவருக்கே அது சாத்தியம். ஒரு பணியாளன் இரண்டு நாள் செய்யும் வேலையை மூன்று நாளாக்க முயல்வான். ஒரு நாள் கூடுதல் ஊதியத்துக்காக என்று மட்டும் அதனைச் சொல்ல முடியாது. அதைத் தாண்டி வேறு விஷயங்களும் அதில் உண்டு. நாம் ஒரு திட்டத்தை உருவாக்கி அதனை முன்வைத்தால் அது நாம் திட்டமிட்ட வண்ணம் நிகழ்ந்து விடக்கூடாது என பணியாளர் மனத்தில் ஒரு எண்ணம் உண்டாகிவிடும். அவ்வாறு உருவாகும் எண்ணமே அந்த திட்டத்துக்கு சிறுதடையாய் வந்து சேரும். இவை எவையும் கண்ணுக்குத் தெரியும் வகையில் பொருட்படுத்தத்தக்க அளவில் இருக்காது. சிறு அளவில் இருக்கும். இருப்பினும் சமயத்தில் எதிர்பாரா சிக்கல்களை ஏற்படுத்தும். உறுதியாக இருந்து அவற்றைக் கடந்து வர வேண்டும். 

Saturday, 13 December 2025

மாநகரங்களும் கிராமங்களும்

மானுட இனம் உருவான காலம் முதல் சேர்ந்து வாழ்வதற்கான வாழிடங்களை மானுடர் உருவாக்கிக் கொண்டேயிருக்கின்றனர். தொல் பழம் காலத்திலிருந்தே மானுடர்கள் மாநகரங்களை நிர்மாணிக்க விரும்பி அவற்றை நிர்மாணித்திருக்கின்றனர். உலக வரலாற்றில் அவ்வாறான மாநகரங்கள் என பலவற்றை அடையாளப்படுத்த முடியும். காசி, ஹஸ்தினாபுரம், இந்திரப் பிரஸ்தம், ரோம், ஏதென்ஸ்,  பாக்தாத், பாடலிபுத்திரம், பூம்புகார், இஸ்தான்புல், மதுரை, காஞ்சி, தஞ்சாவூர், தில்லி, விஜயநகர், லண்டன், பாரிஸ், பெர்லின், மாஸ்கோ, வியன்னா, டோக்கியோ, பீகிங், நியூயார்க் என மாநகரங்கள் உருவாகி இன்று வரை நிலைகொண்டிருக்கின்றன. மிகப் பெரிதாக உருவாகி பின்னர் கரைந்து போன நகரங்களும் உண்டு. 

ஒரு மாநகரின் உருவாக்கம் என்பது பல விஷயங்கள் இணைந்து கலந்து முயங்கி உருவாகி வருவதாகும். ஒரு மாநகரம் உருவாக்கப்பட பெரும் செல்வம் தேவை. அந்த செல்வத்தை அளிக்கும் வலிமையான தொலைநோக்கு கொண்ட அரசு தேவை. ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்களை அங்கே குடியமர்த்த வேண்டும் எனில் அத்தனை பேருக்கும் உருவாக இருக்கும் நகரின் மீது நம்பிக்கை தேவை. தொழிலாளர்களின் தீரா உழைப்பு தேவை. நீர்நிலைகள் போதிய அளவில் தேவை. கல்விச்சாலைகளும் ஓவிய சிற்ப இசைக் கூடங்களும் தேவை. விளையாட்டு மைதானங்கள் தேவை. 

இத்தனை அம்சங்களுடன் இன்று உலக நாடுகளில் புதிதாக ஒரு மாநகரம் உருவாகுமா என்பது ஐயமே. எந்த அரசும் இருக்கும் மாநகரங்களைப் பராமரிக்க செலவிடுமே தவிர புதிதாக உருவாக்குமா என்பது ஐயமே. என்னுடைய அவதானத்தில் பூடான் ஒரு மாபெரும் மாநகரத்தை நிர்மாணிக்கலாம். அதன் புவியியல் அமைப்பு எவ்விதம் அதற்கு உகந்ததாக இருக்கும் என்பது தெரியவில்லை. பூடானுக்கு பௌத்தப் பின்னணி இருக்கிறது. பெரும் பண்பாட்டுப் பாரம்பர்யம் கொண்ட தேசம் என்பதால் உலகின் ஆன்மீக, இலக்கிய, கலை, நுண்கலை, கைவினைக் கலை, கல்வி ஆகியவற்றுக்கான ஒரு மாநகரை அவர்கள் நிர்மாணிக்க சாத்தியம் உள்ளது. இருப்பினும் அவ்வாறு ஒரு மாநகரம் உருவானால் அதன் நிதித்தேவையை பூடானால் எவ்விதம் பூர்த்தி செய்ய முடியும் என்பது பெரிய கேள்வி. பூடானுக்கு அவ்வளவு பொருளியல் பலம் இல்லை. 

நம் நாட்டில் ஒரு விஷயத்தைக் கவனித்துப் பார்க்கலாம். பெரும் மாநகரங்கள் பல நம் நாட்டில் உருவாகியிருந்த காலத்திலும் கிராமங்கள் வலிமையாக நிலை கொண்டிருந்தன. எண்ணிப் பார்த்தால் கிராமங்களின் பலத்தில் தான் மாநகரங்கள் நிலை கொண்டன. இன்னும் அணுக்கமாக எண்ணிப் பார்த்தால் மாந்கரங்களை நிர்மாணிக்கத் தொடங்கும் முன்னே நம் நாட்டில் கிராம நிர்மாணம் தொடங்கி விட்டது. 

நாம் விரும்பும் விதத்தில் ஒரு கிராமத்தை நிர்மாணித்துக் கொள்ள அரசோ அரசின் நிதியோ தேவையில்லை. சேர்ந்து வாழ நினைக்கும் சிலர் சேர்ந்து யோசித்தால் கூட மேன்மை பொருந்திய எழிலார்ந்த கிராமம் ஒன்றை உருவாக்கிட முடியும். ஆழ்ந்து யோசிக்க வேண்டிய விஷயம் இது. 

Friday, 12 December 2025

பட்டினப்பாலை

பண்டைய இலக்கியங்கள் பல அளவில் சின்னஞ்சிறியவை என்பதை நாம் கவனித்திருக்க மாட்டோம். இன்று நாம் அச்சுப்புத்தக வடிவில் காணும் சங்க இலக்கிய நூல்கள் பல உரையுடன் வெளிவருபவை. பதவுரை, தெளிவுரை, விளக்கவுரை ஆகியவையே நூலின் 90 சதவீத இடத்தை எடுத்துக் கொள்ளக்கூடியவை. தொல்நூலின் பிரதி 10 சதவீத இடத்துக்குள் அடங்கி விடும். சிலப்பதிகாரம் மூலப்பிரதி மட்டும் ஒரு நூலாக வெளியிடப்பட்டிருந்தது. அதனை நான் வாசித்திருக்கிறேன். சிலப்பதிகாரம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிரதியாயினும் தமிழார்வம் கொண்டவர்கள் எளிதில் வாசிக்கக் கூடிய நூலே.  திருக்குறள் 133 பக்கங்களுக்குள் அடங்கும் நூல் என்பதை நாம் அறிவோம். அகநானூறு, புறநானூறு தங்கள் பெயரிலேயே சுட்டுவது போல 400 பாடல்களைக் கொண்ட நூல்கள். சீவக சிந்தாமணி சற்றே பெரிய நூல். 

தமிழின் ஆகப் பெரிய படைப்பான கம்பராமாயணம் 10,000 பாடல்களுக்கு மேல் கொண்டது என்பதால் அளவில் பெரியது கம்பராமாயணம். பன்னிரு திருமுறைகளும் ஸ்ரீநாலாயிர திவ்யப் பிரபந்தமும் அளவில் பெரியவை. கம்பராமாயணம் எழுதப்பட்டு தோராயமாக 200 ஆண்டுகளுக்குப் பின் தமிழகம் இஸ்லாமிய படையெடுப்புக்கு ஆளானது. அது தமிழகத்தின் இருண்ட காலம். விஜயநகர சாம்ராஜ்யம் தனது ஆட்சியை மதுரையில் நிலைநாட்டிய பின்னரே தமிழ் புத்துயிர் பெறுகிறது. அந்த காலகட்டத்தில் குமரகுருபரரும் அருணகிரிநாதரும் தங்கள் படைப்புகளை படைத்தனர். அவர்களது இலக்கியப் படைப்புகள் அளவில் கணிசமானவை. 

இன்று பட்டினப்பாலை என்னும் சங்க கால நூலை வாசித்தேன். 

சோழர் தலைநகரான காவிரிப்பூம்பட்டினம் குறித்த நூல். பிறந்த நாள் முதல் வாழும் நிலம் காவிரியின் சோழ நிலம் என்பதால் அந்நூலின் பல காட்சிகளை மனம் இயல்பாக உள்வாங்கிக் கொண்டது. நெல்லும் மஞ்சளும் இஞ்சியும் புகாரையொட்டி விளைவதாக பட்டினப்பாலை காட்டுகிறது. இன்றும் சோழ நிலத்தின் காட்சியாகும் அது. பூம்புகார் நகரின் ஒரு பகுதி விவசாயம் செழித்திருக்கும் பட்டினப்பாக்கம் என்றும் இன்னொரு பகுதி பரதவர் மிகுந்த மருவூர்ப்பாக்கம் என்கிறது பட்டினப்பாலை. இன்றும் புகார் அவ்விதமே உள்ளது ; மாநகரமாக அல்ல கிராமமாக. பட்டினப்பாலை காட்டும் கடல் இப்போதும் ஆர்ப்பரித்து ஒலித்துக் கொண்டு நம் புராதானத் தொன்மையை பறைசாற்றுகிறது. பல்விதமான பண்டங்கள் வந்து இறங்கிய துறைமுகத்தை பட்டினப்பாலை காட்டுகிறது. இப்போது புகாரில் ஒரு கலங்கரை விளக்கம் சில ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. 

பட்டினப்பாலை வாசித்த போது எனக்கு ஒரு விஷயம் புலப்பட்டது. இனி வரும் காலங்களில் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைப் போல மாநகரங்கள் உருவாகுமா என்று யோசித்தேன். 

சிறிய அளவிலேனும் ஒரு மாநகரம் உருவாக்கப்பட வேண்டும் எனில் குறைந்தது 15,000 ஏக்கர் நிலமாவது தேவைப்படும். அதில் 15,00,000 மக்களாவது குடியமர்த்தப்பட வேண்டும். அத்தனை மக்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் குடிநீர் ஏற்பாடுகள் செய்தல் வேண்டும். ஜனநாயக நாட்டில் ஒரு ஜனநாயக அரசு ஒரு மாநகருக்கு இத்தனை செலவு செய்ய சாத்தியம் இல்லை. நம் தமிழ்நாட்டில் கடந்த 75 ஆண்டுகளில் எந்த மாநகரும் உருவாக்கப்படவில்லை. திருவரம்பூர், நெய்வேலி ஆகிய இரண்டு நகரங்கள் உருவாயின. அவற்றை உருவாக்கியது மத்திய அரசு. ஒரு மாநகரம் உருவாவது ஒரு ஜனநாயக அரசில் சாத்தியம் இல்லை என்று தோன்றுகிறது. 

Thursday, 11 December 2025

பாரதி -11.12.1882

 


செய்தித்தாள் வாசித்தல் ( நகைச்சுவைக் கட்டுரை)

இந்திய ஆட்சிப்பணித் தேர்வுக்கும் மத்திய அரசு மாநில அரசு வங்கித் தேர்வுகள் ஆகியவற்றுக்கும் தயார் செய்யும் பலரை நான் அறிவேன். அவர்கள் அனைவருமே தங்கள் தேர்வு தயாரித்தலின் ஒரு பகுதியாக தினமும் ஒரு மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் செய்தித்தாள் வாசிப்பார்கள். அவர்கள் வாசிக்கும் செய்தித்தாள் ‘’தி ஹிந்து’’. நான் அவர்களிடம் ‘’ இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ சேர்த்து வாசிக்குமாறு சொல்வேன்.   அவர்களிடம் நான் ஒரு விஷயம் கவனித்ததுண்டு. பட்டப்படிப்பு முடித்து 21 வயதுக்கு மேல் மட்டுமே அவர்கள் செய்தித்தாள் வாசிக்கத் துவங்கியிருப்பார்கள். அதற்கு முன் அவர்களுக்கு அந்த வழக்கம் இருந்திருக்காது. மூன்றிலிருந்து நான்கு வருடம் தேர்வுக்குத் தயார் செய்கிறார்கள் என்றால் அந்த காலகட்டத்தில் தீவிரமாக செய்தித்தாள் வாசிப்பார்கள். அரசுப் பணி கிடைத்து உத்யோகத்துக்கு வந்த பின்னர் செய்தித்தாள் வாசிப்பதை நிறுத்தி விடுவார்கள். ஜனநாயக நாட்டில் செய்தித்தாள் என்பது ஆயிரக்கணக்கானோர் கவனத்துக்கு ஒரு விஷயத்தைக் கொண்டு செல்லும் சாதனம். ஒரு செய்தித்தாள் சில ஆயிரம் அல்லது சில லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு காலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள் சில ஆயிரம் அல்லது சில லட்சம் நபர்களை அடைந்து அவர்களால் வாசிக்கப்படுகிறது என்றால் வாசிக்கப்படும் விஷயம் மேலும் துலக்கமும் அடர்த்தியும் கொள்கிறது. இன்று ஏகப்பட்ட நாளிதழ்கள் வெளியாகின்றன. ஒருவர் அனைத்து நாளிதழ்களையும் படிக்க வேண்டியதில்லை. அது அவசியமும் இல்லை. ஆனால் ஏதேனும் ஒரு நாளிதழையாவது வாசிக்கும் வழக்கம் கொண்டிருப்பது உகந்தது . இன்று பெரும்பான்மையான செய்தித்தாள்கள் இணையத்தில் இலவசமாக வாசிப்புக்குக் கிடைக்கின்றன. அதற்கென செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இவ்வளவு எளிதாக நாளிதழ்கள் எப்போதும் வாசகரை அடைந்ததில்லை. செய்தித்தாள் வாசிக்கும் வழக்கம் கொண்டிருக்கும் மாநில அரசு மத்திய அரசு அதிகாரிகளை நான் கண்டதில்லை. அந்த பொறுப்பில் இருக்கும் நண்பர்களிடம் தினமும் செய்தித்தாள் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருங்கள் என்று கூறுவேன். அது அவர்களை அசௌகர்யமாக உணர வைக்கிறது என்பதை அறிந்தேன். அவர்கள் செய்தித்தாள் வாசிக்கத் தயாராக இல்லை. அதில் அவர்களுக்கு பெரும் மனத்தடையும் எதிர்ப்பும் இருக்கிறது என்பதை அவதானித்துக் கொண்டேன். 

ஊருக்கு அருகில் முக்கியமான சாலை ஒன்றையொட்டி அமைந்திருந்த பள்ளியின் வளாகத்தினுள் பத்து ஆண்டு வளர்ந்திருந்த மரம் ஒன்று அரசு அனுமதியின்றி வெட்டப்பட்டது. அந்த பாதை வழியாக நான் தினமும் செல்வேன். அந்த மரம் வெட்டப்பட்ட அன்று நான் ஊரில் இல்லை ; வெளியூர் சென்றிருந்தேன். மறுநாள் அந்த பாதையில் சென்ற போது அந்த மரம் வெட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரே பள்ளி வளாகத்தில் இருந்த மரம் வெட்டப்பட்டதற்கு பொறுப்பு என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வெட்டப்பட்ட மரத்துக்கான அபராதம் செலுத்தப்பட வேண்டும் என வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். ஒரு பிரபலமான பத்திரிக்கை ஒன்றின் உள்ளூர் நிருபரைச் சந்தித்து இந்த விஷயத்தை எடுத்துக் கூறி மரம் வெட்டப்பட்ட புகைப்படங்களை அளித்து ‘’பொது இடங்களில் மரங்கள் மாயம் : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?’’ என செய்தி வெளியிடுமாறு கேட்டுக் கொண்டேன். இந்த விஷயம் குறித்து நிருபர் விசாரித்து அறிந்து தலைமை அலுவலகத்துக்கு செய்தி அனுப்புமாறு கேட்டுக் கொண்டேன். அவர் அந்த இடத்தை நேரில் சென்று பார்த்தார். விசாரித்தார். மேற்படி தலைப்பிலேயே செய்தி வெளியானது. அதில் இன்னொரு விஷயமும் இணைந்திருந்தது. அது என்னவெனில் மாவட்டத்தின் புராதானமான விஷ்ணு ஆலயம் ஒன்றின் சன்னிதித் தெருவில் இருந்த 14 வேம்பு, மலைவேம்பு, புங்கன் மரங்களை தனது செங்கல் காலவாய்க்கு எரிபொருளாகப் பயன்படுத்த வெட்டி எடுத்துச் சென்ற ஊராட்சி மன்றத் தலைவருக்கு ரூ.2100 மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என்னும் செய்தியும் மேற்படி செய்தியுடன் இணைந்து வெளியானது. நூற்றுக்கணக்கானோர் வாசிக்கும் செய்தித்தாளில் வெளியானதால் அந்த மரம் வெட்டப்பட்ட பள்ளி இருந்த கிராமத்தின் மக்களுக்கும் கல்வித்துறை சம்பந்தப்பட்ட செய்தி என்பதால் ஆசிரியர்களுக்கும் இந்த விஷயம் தெரியவந்தது. அவர்கள் அனைவருமே நாளிதழில் செய்தியாக வாசித்திருப்பார்களா என்பது ஐயம் ஆனால் யாரோ சிலர் தாங்கள் வாசித்த செய்தியை ஒளிப்படம் எடுத்து தங்கள் வாட்ஸ்-அப் குழுக்களில் பகிர்ந்தனர். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் நாளிதழின் தலைமை அலுவ்லகத்துக்கு ஃபோன் செய்து நாளிதழ் மேல் வழக்கு போடுவேன் எனக் கூறினார். வழக்கறிஞர் மூலம் நோட்டிஸ் அனுப்பவும் செய்தார். நாளிதழ் நிர்வாகம் பள்ளி வளாகத்தில் இருக்கும் மரம் வெட்டப்பட்டிருப்பதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியரே பொறுப்பாவார் என்பதால் வெளியான செய்தி சரியானதே அதில் எந்த பிழையும் இல்லை என பதில் கூறியது. நாளிதழில் செய்தி வந்து பலரின் கவனத்துக்கு விஷயம் வந்ததால் கல்வித்துறை இந்த விஷயத்தை நிலுவையில் வைத்தது. வருவாய்த்துறை அதிகாரிகளும் நிலுவையில் வைத்தனர். தலைமை ஆசிரியரிடம் புகார் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டது. இந்த செய்தியை வாட்ஸ் அப் மூலம் மாவட்ட நிர்வாகம் அறிந்திருந்ததால் தலைமை ஆசிரியரை உடனடியாகப் பாதுகாக்க கல்வித்துறை தயங்கியது. 

அமெரிக்கா நாட்டின் நிர்வாகத்தில் ஒரு வழக்கம் உண்டு என்று பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். சந்தேகத்துக்கு இடமான விதத்தில் ஏதேனும் விஷயம் பொதுமக்கள் கண்ணில் பட்டால் அவர்கள் அதனை ஓர் அரசாங்க தொலைபேசி எண்ணுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவார்கள். இந்த வழக்கம் அமெரிக்கர்களுக்கு உண்டு. அந்த அடிப்படையிலேயே நான் இந்த விஷயங்களைக் காண்கிறேன். செய்தித்தாள் செய்திகளைக் கூட இவ்விதமாகவே அணுகுகிறேன். அரசாங்கம் போன்ற பொதுமக்கள் தொடர்பு கொண்ட பணிகளில் ஓர் அதிகாரிக்கு நிறைய விதமான பணிகள் பொறுப்புகள் வேலைகள் இருக்கும். எனினும் பொது ஊடகங்கள் மூலம் பொதுமக்கள் குறித்த செய்திகளை விபரங்களை அறிந்து கொள்வது என்பதும் அரசாங்க அதிகாரியின் பணிகளில் ஒன்றே. 

எனது நண்பர் ஒருவர் ரயில்வேயில் உயர் அதிகாரியாக இருந்தார். அவர் சிதம்பரத்துக்கு ரயில்வே தொடர்பான நிகழ்ச்சி ஒன்றனுக்கு வந்திருந்தார். புவனகிரி அவருடைய சொந்த ஊர். நிகழ்ச்சி முடிந்து அவர் சொந்த ஊருக்குச் சென்று தனது வீட்டில் இருந்தார். அன்று காலை எனக்கு ஃபோன் செய்தார். அவரைச் சந்திக்க வரும் போது இரண்டு குறிப்பிட்ட செய்தித்தாள்களைக் கூறி அதனை வாங்கி வர முடியுமா என்று கேட்டார். எதற்காக என்று நான் கேட்டேன். நேற்றைய நிகழ்ச்சி குறித்த பதிவு அந்த நாளிதழ்களில் வெளியாகியிருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் கோப்புகளில் பதிவு செய்ய அது தேவை என்றார். எனது ஊருக்கு நாளிதழ்களின் திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் பதிப்புகளே வரும். நிகழ்ச்சி நடந்திருப்பது சிதம்பரத்தில் என்பதால் அங்கே புதுச்சேரி கடலூர் பதிப்புகளில் அந்த செய்தி இருக்கும் என யூகித்து சிதம்பரம் சென்று நண்பர் கூறிய நாளிதழ்களில் முதல்நாள் ரயில்வே நிகழ்வு குறித்த செய்தி வெளியாகியிருக்கிறதா என்று பார்த்தேன். வெளியாகியிருந்தது. மேலும் அந்த கடையில் இருந்த எல்லா ஆங்கில தமிழ் செய்தித்தாள்களிலும் அந்த செய்தி வெளியாகியிருக்கிறதா என்று பார்த்தேன். அனைத்திலும் வெளியாகியிருந்தது. அனைத்து செய்தித்தாள்களையும் வாங்கிக் கொண்டேன். நண்பருக்கு குறுஞ்செய்தி மூலம் முதல்நாள் நிகழ்வு எல்லா பத்திரிக்கைகளிலும் வெளியாகியிருக்கிறது என்றும் அவற்றுடன் நண்பர் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறேன் என தகவல் அனுப்பினேன். நன்றி என நண்பர் பதில் அனுப்பினார். நண்பர் வீட்டுக்குச் சென்றேன். வரவேற்பு அறையின் மையத்தில் ஒரு நாற்காலி இருந்தது. அதன் இடதுபுறமும் வலதுபுறமும் நாற்காலிகள் இருந்தன. நான் இடதுபுறத்தின் முதல் நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். சிறிது நேரம் கழித்து ரயில்வேயின் அதிகாரி ஒருவர் எனக்கு நேர் எதிரில் வலதுபக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார். என் மடி மீது ஏகப்பட்ட செய்தித்தாள்கள் இருந்தன. ரயில்வே உயர் அதிகாரி வந்தார். நாங்கள் இருவரும் எழுந்து வணக்கம் சொல்லி விட்டு அமர்ந்து கொண்டோம். தனது வலதுபக்கத்தில் இருந்த அதிகாரியிடம் நேற்றைய நிகழ்வு குறித்த செய்தி ஏதேனும் செய்தித்தாளில் வெளியாகியிருக்கிறதா என்று உயர் அதிகாரி கேட்டார். அதற்கு அந்த அதிகாரி எந்த செய்தித்தாளிலும் வெளியாகவில்லை என்று கூறினார். என் மடி மீது இருந்த செய்தித்தாள்களைக் கண்ட போதாவது அவர் யூகித்திருக்க வேண்டும். நான் எல்லா செய்தித்தாளிலும் செய்தி வந்திருக்கிறது என உயர் அதிகாரியிடம் கொடுத்தேன். ஓர் உயர் அதிகாரியின் முன் இவ்விதம் உண்மைக்கு மாறான ஒன்றைக் கூறுவார்களா என நான் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தேன். உயர் அதிகாரி முகத்தில் சிறு சலனம் கூட இல்லாமல் இருந்தார் என்பது அவருடைய பெருந்தன்மை. அதிகாரவர்க்கம் என்பது எப்படிப்பட்டது என்பதை அன்று புரிந்து கொண்டேன். உயர் அதிகாரி அவரிடம் விளக்கம் கேட்க மாட்டார். கேட்டால் தனக்கு கீழ் இருக்கும் அதிகாரிகளை இதற்கு பொறுப்பாக்குவார். இதுதான் பதில் என்று கூறப்போகிறார் என்பது தெரிந்த பின் அதை அவர் கூற கேட்க வேண்டியதில்லை என்பதால் உயர் அதிகாரி அமைதியாக இருந்து விட்டார். அதில் இன்னொரு விஷயமும் செய்தியும் இருந்தது. உயர் அதிகாரி தனது மௌனம் மூலம் தனது கீழ் அதிகாரிக்கு உணர்த்தியது என்ன எனில் தான் அவரையும் அவரது பணி புரியும் தன்மையையும் சாக்கு போக்குகள் கூறும் இயல்புகளையும் அறிவேன் என்றும் மேலும் நிகழ வேண்டிய பணிகளை மேற்படி அதிகாரி இல்லாமல் வேறு நபரை அல்லது நபர்களைக் கொண்டும் நிகழ்த்திட முடியும் என்பதையும் சொல்லாமல் சொன்னார் ; வெகு இயல்பாகக் காட்டினார். அதிகாரவர்க்கம் என்பது எவ்விதமானது என்பதற்கு சிறு உதாரணம் இந்நிகழ்வு என எண்ணிக் கொண்டேன். 

தமிழகத்தின் உயர் பொறுப்பில் இருந்த ஒருவர் தன்னைப் பணி நிமித்தம் சந்திக்க வரும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளிடம் அன்றைய செய்தித்தாள் அவர்கள் வாசித்திருக்கிறீர்களா என வினவுவார் என பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதனை முதல் கேள்வியாகக் கேட்பார் என்பது தெரிந்தும் அவர் முன் அன்றைய செய்தித்தாளை வாசிக்காமலேயே அனைத்து ஆட்சிப் பணி அதிகாரிகளும் செல்வார்கள் என்பதையும் கேட்டிருக்கிறேன். 

இன்று சாமானியர்களும் சரளமாக பயன்படுத்தும் விதத்தில் இணையம் உள்ளது. பெரும்பாலான பத்திரிக்கைகள் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. ஏதேனும் ஒரு நாளிதழை - குறைந்தபட்சம் தலைப்புச் செய்திகளையாவது - வாசிக்கும் வழக்கத்தை குடிமக்களும் பணி புரிபவர்களும் அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் கைக்கொள்ள வேண்டும்.  

Wednesday, 10 December 2025

கேள்வியும் பதிலும்

 
எனது நண்பர் ஒருவர் மருத்துவர். மாநில அரசாங்கத்தில் பணி புரிகிறார். சுற்றுச்சூழல், யோக மார்க்கம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். கடுமையான வேலைப்பளு கொண்டவர். காலை 8 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தொடர்ச்சியாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த வண்ணம் இருப்பார். 

சில மாதங்களுக்கு முன்பு அவரைச் சந்தித்த போது என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். அவரது கேள்வி இதுதான் : ஊரிலிருந்து சிதம்பரம் செல்லும் சாலையிலும் ஊரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையிலும் சாலையின் இருபக்கமும் நிறைய நிலம் இருக்கிறதே அதில் ஏன் விவசாயிகள் மரங்கள் பயிரிடுவதில்லை ? அவ்விதம் மரங்கள் நட்டால் அவர்களுக்கு பொருளியல் பயன் அதிகம் இருக்குமே எனக் கேட்டார். 

முதற்பார்வைக்கு படக் கூடிய விஷயத்திலிருந்து நண்பர் இந்த கேள்வியை எழுப்பியிருக்கிறார். 

அதற்கு நான் ஒரு பதில் கூறினேன். அந்த பதில் சமூகவியல், பொருளியல், மானிட நடத்தையியல், நில வணிகம், நேரடி கள அனுபவம் என பல விஷயங்களின் கூறுகள் இணைந்த பதிலாகும் அது. அது என்னவென்றால்

‘’அதாவது, பிரதான சாலையை ஒட்டி இருக்கும் நிலம் ரியல் எஸ்டேட் மதிப்புப்படி பல லட்சங்கள் அல்லது பல கோடிகள் மதிப்பு கொண்டதாக இருக்கும். அந்த நிலத்தின் உரிமையாளர் பல லட்சங்கள் அல்லது பல கோடிகள் மதிப்பு தன்னிடம் இருப்பதாக எண்ணுவார். அவரிடம் இருப்பது யூகச் செல்வம். அந்த யூகச் செல்வம் இருப்புச் செல்வத்துக்கு சமமாகாது எனினும் தான் ஒரு லட்சாதிபதி என்றே எண்ணம் கொண்டிருப்பார். எனவே அவர் அந்த வயலை ஏதும் செய்யாமல் போட்டு வைத்திருப்பார். அதில் சீமைக்கருவை வளர்ந்து கொண்டிருக்கும். ஊர்க்காரர்களுக்கு சாலையை ஒட்டியிருக்கும் நிலம் என்பதால் பெரிய மதிப்புக்கு விற்பனை ஆகும் என்பது தெரியும். எனவே அவரிடம் ஏன் நிலத்தை ஏதும் செய்யாமல் வைத்திருக்கிறாய் என்று கேட்க மாட்டார்கள். அவ்விதம் கேட்டால் அந்த நிலத்தின் மீதான பொறாமையால் கேட்டதாக ஆகி விடும் என்பதால் யாரும் அந்த கேள்வியை எழுப்ப மாட்டார்கள். 100 நிலத்துண்டுகள் சாலைக்கு அருகில் இருந்தால் ஓராண்டில் ஒன்று அல்லது இரண்டு விற்பனையாவது அதிகம். எனினும் மேற்படி மனோபாவமே எல்லா நில உரிமையாளர்களிடமும் இருக்கும். பல ஆண்டுகளுக்கு நிலம் அப்படியே இருக்கும். அசையா சொத்துக்கள் அவை.’’

இதுதான் நான் கூறிய பதில். 

நான் கூறிய பதிலை கேட்டுக் கொண்டாரே தவிர இந்த பதில் அவருக்குத் திருப்தியைத் தரவில்லை. 

இந்த பதிலைப் புரிந்து கொள்ள அவர் என்ன செய்ய வேண்டும் என எண்ணிப் பார்த்தேன். 

மருத்துவம் அவரது துறை. அவர் ரியல் எஸ்டேட்டும் கூடுதலாக மேற்கொண்டால் அவருக்கு நான் கூறும் பதில் புரியலாம். இன்று நண்பர் ஃபோன் செய்தார். அவரிடம் இதனைக் கூறினேன்.