Wednesday, 2 July 2025

கடல் : மூன்று மனிதர்களின் கதை



நாவல் : கடல் ஆசிரியர் : ஜெயமோகன் பக்கம் : 576 விலை ரூ.690 பதிப்பகம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், 1/28, நேரு நகர், கஸ்தூரிநாயக்கன் பாளையம், வடவள்ளி, கோயம்புத்தூர்.

ஆசாபாசங்களால் ஆனது சாமானிய உலகு. இந்தச் சாமானிய உலகின் சாமானிய மனிதர்களின் அகங்களில் நிறைந்திருக்கிறது இச்சையும் அறியாமையும். இரண்டு ஆடிகள் ஒன்றையொன்று பிரதிபலித்து அதன் பிம்பங்கள் முடிவிலி வரை நீள்வது போல சாமானிய மனிதர்களை எப்போதும் துயரம் நிறைத்துக் கொண்டேயிருக்கிறது. துயர் அளிக்கும் வலியில் வாழ்நாள் முழுக்கக் கதறுப்வர்கள் இருக்கிறார்கள். தங்கள் வாழ்வின் உச்சமான சில கணங்களில் கதறுபவர்கள் இருக்கிறார்கள். அன்பு கொண்டவர்களும் ஞானம் கொண்டவர்களும் இந்தத் துயரிலிருந்து மீள்கிறார்கள். அகத்தில் அன்பைக் கொண்டிருக்க தங்கள் முழு வாழ்நாளையும் அளிப்பவர்கள் உண்டு ; பயணம் துவங்கிய கணத்திலிருந்து அவர்கள் அகம் அன்பில் நிறைந்திருந்ததா என்பதும் பயணத்தின் பாதியிலோ அல்லது இறுதியிலோ அவர்கள் பயண நோக்கம் நிறைவேறியதா என்பதும் அவரவர்கள் மட்டுமே அறிந்த ஒன்று. அன்பின் சுடரேந்தி நிகழ்த்தும் பயணம் இனிமையான ஒன்றாக இருக்கிறதா என்பதையே அப்பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள் கணமும் எண்ண வேண்டியதாய் இருப்பது அவர்கள் தேர்ந்தெடுத்த பாதையின் தன்மை.

உலகின் எல்லையற்ற வலைகளில் ஒன்று தாமஸ், சாம், பெர்க்மான்ஸ் என்ற மூன்று பேரை மிக நெருக்கமாகக் கொண்டு வருகிறது. தாமஸ் கடல்புறத்தில் வறுமை அளித்த அத்தனை வலிகளையும் இழிவுகளையும் தாங்கி அரற்றிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவன். சாம் ஒரு பெரிய செல்வந்தக் குடும்பத்தில் பிறந்து ஏசுவின் ஊழியராக தன்னை ஆக்கிக் கொள்ள விரும்பி தாமஸ் இருக்கும் கிராமத்துக்கு வந்து சேர்ந்த ஒருவர். பெர்க்மான்ஸ் சாமுடன் இறையியல் கல்லூரியில் ஒன்றாகப் படித்து அவர் செய்த தவறு ஒன்றுக்கு சாம் நேரில் கண்ட சாட்சியாகி , சாமிடம் தனக்கு மன்னிப்பு அளிக்குமாறு கேட்கப்பட்டும் அம்மன்னிப்பு அளிக்கப்படாமல் இறையியல் கல்லூரியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு பின்னாளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு செல்வந்தராகும் ஒருவர். இந்த மூன்று பேரும் ஒருவரோடொருவர் இணைந்து விலகி என்னவாகிறார்கள் என்பதும் வாழ்க்கை அவர்களுக்கு அளித்தது என்ன என்பதுமே ‘’கடல்’’ நாவல்.

இந்த நாவலின் கலாபூர்வமான வெற்றி என்பது இந்த மூன்று மனிதர்களின் பார்வையில் உலகம் உணரப்படுவதையும் காணப்படுவதையும் நாவலாசிரியன் தனது மொழியில் அளித்திருக்கும் விதம் என உறுதியாகக் கூறமுடியும். வாசகன் நாவலை வாசிக்கையில் பரஸ்பர வன்முறை நிறைந்த மனித உறவுகளையும் அந்த உறவுகளின் மோதலையும் ஜெயமோகனின் சொற்களில் காணுகையில் உணர்கையில் அகம் பதைக்கிறான்.

ஜெயமோகன் நாவல்களில் சிறப்பு என்பது அவரது நாவல்களின் கதைப்புலத்தில் வரலாறும் அந்த வரலாற்றின் முக்கிய பகுதியாக சமூக மாற்றத்தின் சித்திரமும் இருக்கும். அந்த சமூக மாற்றம் எழுச்சியாகவும் இருக்கலாம் ; வீழ்ச்சியாகவும் இருக்கலாம். அவை அவரது நாவல்களின் தனிமுத்திரை எனலாம். ‘’கடல்’’ நாவலிலும் தமிழகத்தின் தென் மாவட்ட கடலோர கிராமங்களின் சித்தரிப்பில் அந்த சமூக மாற்றக் கூறுகளை அடையாளம் காண முடியும். அவை அந்த நாவல் மாந்தர்களின் இயல்பு குறித்து புரிந்து கொள்ள அடிக்குறிப்புகளாக இருக்கின்றன. தென் கடலின் பரதவர்கள் பாண்டியர்களின் பட்டக்காரர்களாகி பின் போர்ச்சுகீசியர்களின் மேஜைக்காரர்களாகி பின்னாளில் ஃபெர்ணாண்டோக்களாக ஆவது குறித்த வரிகளிலிருந்து தென்கடல் மக்களின் வரலாற்றில் ஒரு நீண்ட தொடர்ச்சியை கண்டறிய முடியும். தாமஸ் இருளின் பாதையில் செல்ல நேர்கையில் கடலில் நடக்கும் ஆயுதக் கள்ளக்கடத்தல் குறித்தும் அந்த கள்ளக்கடத்தல் வலைப்பின்னல் குறித்தும் அந்த வலைப்பின்னலில் விடுதலைப்புலிகளுக்கு இருந்த முக்கிய பங்கு குறித்தும் கூறிச் செல்லும் வரிகளிலிருந்து வாசகன் பல்வேறு விஷயங்களை ஊகித்து அறிய முடியும். அந்த ஆயுதக் கடத்தல் கும்பல் உருவானதற்கும் சோவியத் யூனியன் உடைந்ததற்கும் உள்ள தொடர்பு குறித்தும் நாவல் ஒரு சில வரிகளில் கூறிச் செல்கிறது. தன்னையொத்த வல்லமையை எதிர்க்க ருஷ்யா சேர்த்து வைத்த ஆயுதங்கள் ஆஃப்ரிக்காவின் வறிய மக்கள் சகோதர யுத்தம் நிகழ்த்திக் கொள்ள போய் சேர்வதில் இருக்கும் சுரண்டலையும் வன்முறையையும்   வாசகர்கள் அறிய முடியும்.

நாவலின் பல இடங்கள் நுட்பமானவை ; ஒன்றையொன்று நிரப்புபவை. உதாரணத்துக்கு இரு இடங்களைக் கூறமுடியும். சாம் , தாமஸிடம் பாம்புகள் குறித்து முதலில் விளக்கும் இடம். பாம்பு தன் வாலை பொந்தின் உட்புறத்திலும் தலையை பொந்தின் வெளிப்புறத்தில் தன் தலையையும் வைத்திருக்கும் என்பது குறித்து தாமஸிடம் கூறுவார். வெளியேறுவதற்கு ஒரு வழியை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும் என்பதே அது சொல்லித் தரும் பாடம் எனக் கூறுவார். பெர்க்மான்ஸை தாமஸ் சந்திக்கும் போது அவர் பாம்புகள் குறித்து தாமஸிடம் கூறுவார். இந்த இரு சம்பவங்களையும் இணைத்து யோசித்தால் அது பல விஷயங்களைக் கூறும். நாவல் நெடுகிலும் பைபிளின் பல படிமங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன.

மனிதர்கள் சேர்ந்து வாழும் இடங்கள் அனைத்திலும் இருக்கும் பரஸ்பர வன்முறையை நாவல் காட்டிக் கொண்டேயிருக்கிறது. கடலோர கிராமத்தின் வறிய சிறுவர்கள் குழாம், இறையியல் கல்லூரி, சர்ச், கள்ளக்கடத்தல் உலகம், சிறைச்சாலை, மனநல மருத்துவமனை என அனைத்திலும் இருக்கும் இயங்குமுறைகள் குறித்தும் அதில் இருக்கும் வன்முறை குறித்தும் நாவல் பேசும் சொற்கள் வாசகனுக்குக் காட்டிக் கொண்டே செல்கின்றன.

இருளாலும் ஒளியாலும் ஆனது இந்த உலகம் எனக் காட்டும் இந்த நாவல் இருளிலிருந்து ஒளிக்கு இட்டுச் செல்லப்படும்  மாந்தர் குறித்தும் எடுத்துரைக்கிறது.   

Monday, 30 June 2025

நற்பணி

 எனது நண்பன் ஒருவன் வெளிமாநிலத்தில் வசிக்கிறான். அவனது உறவினர் அவனைக் காண அங்கு முதல்முறையாக வருகிறார். அவர் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்மணி. ரயில் ஏறும் போதே நண்பன் அலைபேசியில் அவருக்கு ஒரு குறிப்பை வழங்கியிருக்கிறான். அதாவது, வண்டி தமிழகத்தைத் தாண்டியதும் அலைபேசியை ஸ்விட்ச் ஆஃப் செய்து மீண்டும் ஸ்விட்ச் ஆன் செய்யவும் என்று. ரோமிங் வசதி கிடைப்பதற்கு அவ்வாறு செய்யச் சொல்லியிருக்கிறான் ; ரயில் நிலையத்தில் தொடர்பு கொள்வதற்கு வசதியாக. அந்த மூதாட்டி 12 மணி நேரப் பயணத்தை அந்த ரயிலில் மேற்கொண்டிருக்கிறார். ஃபோனை ஆஃப் செய்து ஆன் செய்தும் ரோமிங் கிடைக்கவில்லை. அவராலும் ஃபோன் செய்ய முடியவில்லை. அவருக்கும் ஃபோன் செய்ய முடியவில்லை. நண்பன் சற்று பதட்டமாகி விட்டான். உறவினர் மேலும் பதட்டமாகி விடுவாரே என்ற பதட்டமும் சேர்ந்து கொண்டது. ரயில்வேவின் இணையதளத்துக்குச் சென்று அதில் இருந்த 139 என்ற எண்ணுக்கு டயல் செய்திருக்கிறான். அதில் என்ன உதவி தேவை என்று கேட்டிருக்கிறார்கள். இன்ன ரயிலில் இன்ன பெட்டியில் எனது வயது மூத்த உறவினர் வருகிறார் ; அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை ; தொடர்பு கொள்ள முடியுமா என்று கேட்டிருக்கிறான். 15 நிமிடத்தில் ரயில்வே பாதுகாப்பு படையின் காவலர் ஒருவர் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருக்கிறார். அவரும் விபரம் கேட்டுக் கொண்டார். பின்னர் அந்த பெட்டியின் டிக்கெட் பரிசோதகர் தனது அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பயணியின் இருக்கை எண் கேட்டு அவரைச் சென்று சந்தித்து நண்பனிடம் அவரைப் பேச வைத்திருக்கிறார். டிக்கெட் பரிசோதகரிடம் நண்பன் இன்ன ரயில் நிலையத்தில் மூதாட்டியை இறக்கி விடுமாறு கூற அவ்விதமே செய்திருக்கிறார்கள். இவை அனைத்தும் 25 நிமிடங்களில் நிகழ்ந்திருக்கின்றன. நண்பன் மிகுந்த மகிழ்ச்சியுடன் என்னிடம் இந்த சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டான். 

Sunday, 29 June 2025

கணேசன்

ரயிலில் திரும்பிக் கொண்டிருக்கும் போது சென்னையில் எனக்கு எதிர் இருக்கையில் ஒருவர் அமர்ந்தார். அவர் தனக்கு வந்த அலைபேசி அழைப்புகளை ஒரிய மொழியில் பேசிக் கொண்டிருந்தார். அவரது தோற்றம் அவர் ஒரியாக்காரர் என்றே கூறியது. ஒரு அலைபேசி அழைப்புக்கு அவர் சில வார்த்தைகள் தமிழில் பேசுவது கேட்டது. அவரிடம் அவரைப் பற்றி விசாரித்தேன். ஒரிஸ்ஸாவில் பிறந்து வளர்ந்தவர் அவர். அவரது பெற்றோர் ஒரிஸ்ஸாவில் இருக்கின்றனர். அவர் ஈரோட்டில் உள்ள வெல்டிங் பட்டறை ஒன்றில் பணிபுரிகிறார். ஈரோடு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. வருடத்துக்கு ஒருமுறையோ இருமுறையோ ஒரிஸ்ஸா சென்று வருவார். அவர் பேசும் தமிழ் கோயம்புத்தூர் தமிழ். அந்த பாணிக்கே உரிய ஏற்ற இறக்கங்கள். அவரிடம் தமிழில் பேச நேரும் எவரும் அவர் கோவைப் பிராந்தியத்தைச் சேர்ந்தவர் என்றே எண்ணுவார்கள். அவரது பெயரைக் கேட்டேன். கணேஷ் என்றார். 

Saturday, 28 June 2025

பெருநிலம்

 

 

பெருநிலம்

ஆந்திர மாநிலத்தைச் சுற்றி வர வேண்டும்  என மனம் மிகவும் விரும்பிக் கொண்டிருந்தது. ஆந்திரத்தை ஒரு சிறிய இந்தியா என்று கூற முடியும். ஆந்திர மண்ணின் இயல்பு அத்தகையது. லௌகிகப் பணிகள் அல்லது லௌகிகப் பொறுப்புகள் அல்லது லௌகிக பந்தங்கள் அதற்கான வாய்ப்பை தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தன. அவற்றுடன் சமரசம் செய்ய முடியாது ; தற்காலிகமாகப் புறக்கணிப்பதே நடைமுறைத் தீர்வு என்பதால் ஒரு கணத்தில் சட்டெனப் புறப்பட முடிவு செய்தேன். முன்னர் புதிய நிலம் காண ரயிலில் செல்வேன் ; அதன் பின் மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்டேன். இப்போது நான் உணர்வது அவ்வப்போது எவ்வகையான பயணம் வாய்க்கிறதோ அத்தகைய பயணங்களை சிறிதும் தள்ளிப் போடாமல் மேற்கொண்டு விட வேண்டும் என்பதே. எனக்கு மிகவும் பிடித்தது மோட்டார்சைக்கிள் பயணம் என்றாலும் ரயில் பயணமும் பிடித்தமானதே.

நான்கு நாட்கள் பயணம் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதாவது , நான்கு நாட்கள் பயணம் செய்ய ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேன். கடைசி நிமிடம் வரை பயணம் உறுதியாகாமல் இருந்தது. சட்டென ஒரு தூண்டல் ஏற்பட்டு புறப்பட்டே தீருவது என முடிவு செய்தேன். புறப்பட்டே தீருவது என முடிவு செய்யும் மனமே பயணிக்குத் தேவை. நம் இடத்தில் நாம் இருந்தால் லௌகிகம் சரியாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்னும் எண்ணத்தை நாம் அடைவோம் எனினும் அது முழு உண்மை அல்ல ; பகுதி உண்மையே. நமது லௌகிகம் நாம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல ; நம்முடன் இணைந்து செயல்படுபவர்கள், வாடிக்கையாளர்கள், சமூகம், சமூக மனநிலை என பல்வேறு கூறுகள் அதில் உள்ளன.

‘’விலை நிர்ணயம்’’ செய்து வைத்திருந்த மனை உரிமையாளரின் நண்பருக்கு அலைபேசியில் அழைத்து மூன்று நாட்கள் ஊரில் இருக்க மாட்டேன் ; அப்போது அலைபேசிக்கு அழைத்தால் அலைபேசி ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருக்கிறது என்னும் செய்தியே கிட்டும் என்பதால் நான்கு நாட்கள் கழித்து செல்ஃபோனில் தொடர்பு கொள்ளவும் என்று கூறினேன். நான் அவருக்கு அழைத்த போது அவர் பக்கத்திலேயே மனை உரிமையாளர் இருந்திருக்கிறார். நான் கூறிய செய்தியை உடன் அவர் கூறி விட்டார். ‘’விலை நிர்ணயம்’’ செய்து வைத்திருக்கும் மனையை வாங்க இருப்பவருக்கும் ஃபோன் செய்தேன். மூன்று தினங்கள் ஊரில் இல்லை ; மூன்றாவது நாள் இரவோ அல்லது நள்ளிரவோ ஊர் திரும்பி விடுவேன் என்று சொன்னேன். நான் ஊர் திரும்பும் தினத்துக்கு மறுதினம் ஒரு சந்திப்பு தேவைப்படும் எனத் திட்டமிட்டிருந்ததாகக் கூறினார். நிச்சயம் வந்து விடுவேன் என்று கூறினேன். ஒருநாள் முன்னதாகத் திட்டமிட்டிருந்தால் நிச்சயம் ஆந்திரப் பயணத்தைக் கைவிட்டிருப்பேன். தொழில் தொடர்பான பணிகள் என்பவை எனது பணிகள் மட்டுமல்ல ; பல தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு அதில் இருக்கிறது. நாம் ஒரு விஷயம் திட்டமிடுகிறோம் என்றால் கண்ணுக்குத் தெரியாத பல வேலைவாய்ப்புகளும் பணிகளும் தொழிலாளர்களும் அதில் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நண்பரின் மனைக்கு பட்டா விண்ணப்பித்திருந்தோம். அந்த மனையின் தனிப்பட்டா வந்து விட்டது. பட்டா வரைபடம் இன்னும் கைக்கு வந்து சேரவில்லை. அதற்கான பணியை செய்து கொடுப்பவருக்கு ஃபோன் செய்து இரண்டு நாட்கள் ஊரில் இல்லை ; மேலும் ஒருநாள் ஆனாலும் ஆகலாம்; நான் ஊர் திரும்பியதும் ஃபோன் செய்கிறேன் என்று சொன்னேன். வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் எனது நண்பர். 15 நாட்களுக்கு முன் நாங்கள் சந்தித்திருந்தோம். அவருக்கும் தகவல் சொன்னேன். ஊர் திரும்பிய அடுத்த நாள் நாம் சந்திக்க வேண்டும் என்றார். ஊர் திரும்பியதும் ஃபோன் செய்கிறேன் என்றேன். உடனடி தகவல் தெரிவித்தல்கள் முடிந்தன. அவர்கள் எவருக்குமே நான் பயணத்தின் போது அலைபேசி வைத்துக் கொள்ள மாட்டேன் என்னும் தகவல் தெரியாது அல்லது நான் நேரடியாகத் தெரிவிக்கவில்லை ; மறைமுகமாக இந்த 3 நாட்களில் என்னைத் தொடர்பு கொள்ள முடியாது ; அலைபேசி தொடர்பு எல்லையில் இல்லை என்றோ ஸ்விட்ச் ஆஃப் என்றோ தகவல் தெரிவிக்கும் எனக் கூறியிருந்தேன். ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்தவுடன் பயணம் புறப்பட்டு விட்டதான உணர்வு ஏற்பட்டது. கையில் ரூ.3000 மட்டும் பணம் இருந்தது. இருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்புவது என்பதைப் போன்ற மகத்தான வழி இன்னொன்று இல்லை.

***

இரவு உணவாக வரகரிசிக் கஞ்சி தயாரித்திருந்தேன். தயாரித்து முடித்ததும் காவிரியில் மூழ்கி எழ வேண்டும் எனத் தோன்றியது. நதிக்குச் சென்று மூழ்கி எழுந்தேன். ஒரு பயணம் என்பது மிகவும் முக்கியமானது. பெரிய விஷயமாகும் அது. அதில் ஏற்படும் ஓர் அனுப்வம் மிக முக்கியமானதாக இருக்கலாம் ; நாம் இதுநாள் வரை நம்பிய விஷயத்தை மாற்றியமைக்கலாம். எனவே நம்மை விடப் பெரிய ஒன்றிடம் ஆசி பெறுவது நல்லது என நினைத்தேன். நதியில் மூழ்கி எழுந்ததில் நதியின் ஆசியைப் பெற்றதாக உணர்ந்தேன். வீட்டுக்கு வந்து வரகரிசிக் கஞ்சியைக் குடித்து விட்டு இரவு 10.15 சென்னை விரைவு ரயிலைப் பிடிக்கக் கிளம்பினேன்.

 இந்த ரயில் மிகவும் பரிச்சயமானது. நான் இந்த ரயிலை அடிக்கடி தாம்பரத்தில் மாலை 6.10க்குபிடித்து இரவு 10.20க்கு ஊர் வந்து சேர்வேன். இன்று அதன் இணை ரயிலைப் பிடித்து சென்னை செல்கிறேன். ராமேஸ்வரம் தாம்பரம் ரயிலும் தாம்பரம் ராமேஸ்வரம் ரயிலும் மயிலாடுதுறை சந்திப்பில் சந்தித்துக் கொள்கின்றன. பயணச்சீட்டு சாளரத்தில் நான் செல்ல இருக்கும் ஊரின் பெயரைக் கூறி இரண்டாம் வகுப்பு சாதாரண பயணச்சீட்டு கேட்டேன். அந்த ஊர் 1580 கி.மீ தொலைவில் இருக்கிறது. ரூ.385 கொடுங்கள் என்றார் சாளர எழுத்தர். இத்தனை கிலோமீட்டர் தூரத்துக்கு இத்தனை குறைவாகக் கட்டணம் வசூலிக்கும் ஒரு அமைப்பு உலகிலேயே இந்திய ரயில்வே மட்டுமே. ஒவ்வொரு இந்தியனும் இந்திய ரயில்வே சாதித்திருக்கும் விஷயங்கள் குறித்து அவசியம் பெருமை கொள்ள வேண்டும்.

ரயில் வந்தது. முன்பதிவு இல்லாத சாதாரண பெட்டியில் ஏறிக் கொண்டேன். இருக்கைகள் முழுவதுமாக நிரம்பியிருந்தன. பதினைந்து பேர் நின்று கொண்டு பயணித்தனர். நான் புறப்பட்ட அன்று பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதை நடைமேடையிலேயே அவதானித்தேன். ரயிலில் ஒரு தம்பதி . அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை. குழந்தை அப்போது தூங்கி விட்டது. அவர்கள் மூவரும் மூன்று இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். குழந்தை தூங்கியதும் அந்த குழந்தையின் அன்னை அக்குழந்தையை தன் மடியில் அமர்த்திக் கொண்டார். ஒரு இருக்கை கிடைத்தது. அதில் அமர்ந்து கொண்டேன். ஊரிலிருந்து 6 கி.மீ தொலைவில் ஆனந்ததாண்டவபுரம் என்ற ஊர் உள்ளது. கர்நாடக சங்கீதத்தில் புகழ் பெற்ற கோபாலகிருஷ்ண பாரதியாரின் ஊராகும் அது. அவரது ‘’நந்தன் சரித்திரத்தை’’ யாவரும் அறிவார்கள். அந்த ஊரின் பெயர் மிகப் பெரிதாக இருப்பதால் அதனை எங்கள் ஊர்க்காரர்கள் ஏ.டி.பி என்று சொல்வோம். எங்கள் ஊரின் ரயில் நிலையம் ரயில்வே சந்திப்பு ஆகும். வடக்கே விழுப்புரத்துக்கும் தெற்கே திருவாரூருக்கும் மேற்கே கும்பகோணத்துக்கும் செல்லும் ரயில் பாதைகள் சந்தித்துக் கொள்ளும் இடமாகும் எங்கள் ஊரின் ரயில்வே சந்திப்பு. எனவே இங்கு ரயில் பிளாட்ஃபாரங்களும் அதிகம். ஒப்பீட்டளவில் அதிக ரயில்களை உள்வாங்கி நிறுத்தி வைக்க முடியும். எனினும் இங்கும் அதிக ரயில்கள் இருந்தால் பயணத்தில் உள்ள ரயில்களை ஆனந்ததாண்டவபுரத்திலோ அல்லது குத்தாலத்திலோ அல்லது மங்கநல்லூரிலோ மட்டுமே நிறுத்தி வைத்து அந்த ரயில்களுக்கு வழியமைத்துக் கொடுக்க முடியும். எனவே ஆனந்த தாண்டவபுரம் என்னும் ஏ.டி.பி எங்களுக்கு மிகவும் பழக்கமான ஊர் அல்லது பழக்கமான பெயர். இந்த ஊர் குறித்து என்னிடம் ஒரு சுவாரசியமான தகவல் உள்ளது. இது நான் பல வருடங்களுக்கு முன்னால் சிறுவனாக இருந்த போது கேட்டது. ஆனந்ததாண்டவபுரத்துக்காரர் ஒருவர் தென்னக ரயில்வேயின் பொது மேலாளராக இருந்தார். ரயில்வேயில் மிகப் பெரிய உயர் அதிகாரப் பதவி அது. அவரது பதவிக் காலத்தில் மெயின் லைன் வழியாக செல்லும் எல்லா எக்ஸ்பிரஸ் ரயில்களும் இரண்டு நிமிடம் ஆ. தா. புரத்தில் நின்று செல்லும் என்ற அறிவிப்பு வெளியானது. எப்படி இருந்தாலும் அங்கே கிராஸிங் காக வண்டிகள் நிற்பது வழக்கமாகி விட்டதால் எல்லா வண்டிகளும் நின்று செல்லும் என்னும் வரவேற்பு எங்கள் ஊர் ரயில்வே சந்திப்பின் பணிகளை எளிதாக்கிக் கொடுத்தது என்பது உண்மை. இந்த தகவலை நான் சொல்லும் போது உங்கள் ஊருக்கு பக்கத்து ஊர்க்காரர் சதர்ன் ரயில்வேயின் பொது மேலாளரா என பலரும் ஆச்சர்யமாகக் கேட்பார்கள். அந்த 6 கி.மீ தொலைவில் இருக்கும் ஏ.டி.பி யில் உட்கார இடம் கிடைத்தது எவ்வளவு நல்ல விஷயம் என்பது 6 மணி நேரப் பயணத்துக்கு 5 நிமிடத்தில் இடம் கிடைத்த எனக்குத்தான் தெரியும். நான் முன்பதிவு செய்யும் வசதியைப் பயன்படுத்தியிருக்கிறேன். எப்போதெனில் ரயில் நிலையங்களில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்னும் வசதி இருந்த போது. அதன் பின் இணையம் அந்த பணியை எளிதாக்கியது. அதனை ஸ்மார்ட்ஃபோன் மேலும் எளிதாக்கியது. நான் ஸ்மார்ட்ஃபோனுக்குள் வரவில்லை. அது என்னுடைய விருப்பம். என்னுடைய தனிப்பட்ட விருப்பம். இருப்பினும் என் மீது ஸ்மார்ட் ஃபோன் வைத்துக் கொள்ளவில்லை என்பது உறவினர்களால் நண்பர்களால் புகாராக முன்வைக்கப்படுகிறது. உலகில் எவ்வளவோ பொருட்கள் உள்ள்ன . எல்லாமும் எல்லாரிடமும் இருப்பதில்லை. அது போல ஒரு விஷயமே என்னிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லாமல் இருப்பதும். நான் முன்பதிவு இருந்தால் தான் பயணிப்பேன் என எண்ணுவதில்லை. ஒரு ஊருக்குக் கிளம்ப வேண்டும் எனத் தோன்றினால் கிளம்பி போய்க் கொண்டேயிருப்பேன். ரயில் விழுப்புரம் வந்ததும் எங்கள் பெட்டியில் பாதிக்குப் பாதி பேர் இறங்கி விட்டனர். நான் படுத்துத் தூங்கிக் கொண்டு சென்றேன். காலை 4 மணிக்கு தாம்பரம் சென்றடந்தேன். நான் 7 மணிக்கு கோரமண்டல் ரயிலைப் பிடிக்க வேண்டும். மின்சார ரயிலைப் பிடித்து சென்னை பூங்கா ரயில் நிலையத்துக்குச் சென்று எதிரில் இருக்கும் செண்ட்ரல் ரயில் நிலையம் செல்ல வேண்டும்.

சோழ மண்டலக் கடற்கரை என்னும் வார்த்தையே ’’கோரமண்டல்’’ என மருவியது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சர்வதேச கடல் மாலுமிகள் நம் நாட்டின் கிழக்குக் கடற்கரையைக் குறிக்க இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கலாம். அந்த வார்த்தையும் அந்த வார்த்தையின் திரிபும் என்னை மிகவும் ஈர்க்கும். சோழ மண்டலக் கடற்கரை வழியே ஒரு மோட்டார்சைக்கிள் பயணம் நிகழ்த்த வேண்டும் என விரும்பினேன். நாட்டின் வட கிழக்கு பகுதிக்கு மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொள்ள கோரமண்டல் வழியே கல்கத்தா செல்வது என்பது சிறப்பான வழி. அவ்வாறான ஒரு பயணத்தை விரைவில் நிகழ்த்துவேன். சென்னையையும் கல்கத்தாவையும் இணைக்கும் ‘’கோரமண்டல் எக்ஸ்பிரஸில்’’ பயணிக்க வேண்டும் என்னும் எனது நீண்ட நாள் ஆசை இப்போது நிறைவேறியது. ரயிலைப் பிடிக்க எந்த நடைமேடைக்குச் செல்ல வேண்டும் என அறிவிப்பு பலகையைக் கண்டேன். எந்த அறிவிப்பும் இல்லை. விசாரணை சாளரத்துக்குச் சென்று விசாரித்தேன். இணை ரயில் தாமதமாக வருகிறது என்பதால் கோரமண்டல் ஒன்றரை மணி நேரம் தாமதமாக 8.30க்கு புறப்படும் என்றனர். நடைமேடையில் பொதுமக்கள் கூடி நின்றிருந்தனர். பொதுப்பெட்டியில் ஏற இரயில் என்ஜின் இருக்கும் என உத்தேசிக்கும் பகுதியை ஒட்டியும் ரயிலின் பின் பக்கம் உள்ள ’’ ரயில் கார்டு’’ பெட்டிக்கும் அருகிலும் மக்கள் வரிசையில் நின்றனர். முன்பதிவு பெட்டிகளில் ஏற இருப்பவர்களும் குழுமி நின்றிருந்தனர். நான் என்ஜினுக்கு அருகில் இருக்கும் பகுதியில் இருந்தேன். அங்கே வரிசையைப் பராமரிக்க ரயில்வே காவல் படை காவலர்கள் மூன்று பேர் முயன்று கொண்டிருந்தனர். நான் வரிசையில் இருக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை எவ்வளவு என எண்ணிப் பார்த்துக் கணக்கிட்டேன். மொத்தம் 160 பேர் இருந்தனர். முன்னால் உள்ள பொதுப் பெட்டியில் 200 பேர் அமர முடியும். நான் சென்று தலைமைக் காவலரிடம் இந்த செய்தியைக் கூறி அவரது பணியை எளிதாக்கினேன். இன்னும் பலர் வரக்கூடும் என்றார். ரயிலின் நேரம் 7 மணி. 7 மணி ரயிலைப் பிடிக்க தாமதமாக வருப்வர்கள் கூட 7.10க்கோ 7.15க்கோ வருவார்கள். இப்போது நேரம் 8. இந்த ரயிலுக்கு இனி யாரும் புதிதாகக் கிளம்பி வர மாட்டார்கள் என்று சொன்னேன். அவருக்கு விஷயம் புரிந்து விட்டது. புன்னகைத்தார். நான் நடைமேடையில் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டேன். ரயில் வந்தது. பொதுப் பெட்டி, முன்பதிவுப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி என அனைத்துக்கும் பெட்டிக்கு 3 தொழிலாளர்கள் என உள்ளே சென்று குப்பையைப் பெறுக்கி சுத்தப்படுத்தினர். கழிவறைகளைத் தூய்மைப்படுத்தும் ரசாயன திரவம் குழாய் மூலம் பாய்ச்சப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன. வண்டி காலை 9 மணிக்குப் புறப்பட்டது.

எனக்குப் பிடித்தமான இடது பக்க ஜன்னல் இருக்கை எனக்குக் கிடைத்தது. எனக்கு எதிரில் என்னுடன் அமர்ந்து பயணித்தவர் பெயர் அசோக் ஜகன்நாத். அவர் ஒரு தொழிலாளர். ராணுவ வீரர் போல ’’ஹேர் கட்’’ செய்திருந்தார். தினமும் ஜிம் சென்று உடலை அவ்வளவு கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். அதனால் தான் அவரிடம் அப்படிக் கேட்டேன். தனக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என சின்ன வயதில் ஆசை இருந்ததால் உடலை ராணுவ வீரன் போல பராமரிக்கிறேன் என்றார். எங்கள் அறிமுகம் இனிய அறிமுகமாயிற்று. அன்று இரவு வரை அவருடன் பல விஷயங்கள் பேசிக் கொண்டு விவாதித்துக் கொண்டு சிரித்துக் கொண்டு சென்றேன் என்பதே உண்மை. அவருக்கு ஒரிய பாஷை மட்டுமே நன்றாகத் தெரியும். ஹிந்தி கொஞ்சம் தெரிந்திருக்கிறது. என்னிடம் ஹிந்தியில் பேசினார். நான் அவரிடம் ஆங்கிலத்தில் பேசினேன். இருந்தாலும் இருவரும் பேசி உரையாடினோம் என்பதே உண்மை. இரு மனங்கள் உரையாடிக் கொள்ள வேண்டும் என நினைத்தாலே போதும் அவர்களுக்குள் உரையாடல் சாத்தியமாகும் என்பதை பயணிகள் அறிவார்கள். அவர் ஒடிஸ்ஸாவின் புவனேஸ்வரைச் சேர்ந்தவர். அவர் பெயர் அசோக். அசோகர் ஒடிஸ்ஸா அதாவது கலிங்கத்தின் மேல் படை எடுத்தவர். எனினும் ஏன் அவர் பெயர் ஏன் ஒடிஸ்ஸாவில் சூட்டப் படுகிறது ? அவர் போர் போதும் என நிறுத்திக் கொண்டவர் என்பதும் வன்முறையால் மனிதர்களை வெல்வதை விட அன்பால் மனித மனங்களை வெல்வதே மேலும் சிறப்பான வழி என்பதை அனுபவத்தால் உணர்ந்து மனம் திரும்பியவர். கலிங்கம் அவரை மன்னிக்கிறது என்பதற்கு நான் கண்ட மனிதரின் பெயரே சாட்சி. நான் காணும் நான் உணரும் வரலாறு இப்படிப்பட்டதே ! பயணத்தில் எனக்கு உற்ற துணைவராக இருந்தார். எந்த ரயில் நிலையத்தில் ரயில் நின்றாலும் உடன் இறங்கிச் சென்று இரண்டு வாட்டர் பாட்டில்களில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வருவார். பயணத்தின் நடுநடுவே இவ்விதம் இறங்க எனக்குத் தயக்கமாக இருக்கும். ரயில் கிளம்பிப் போய் விட்டால் என்ன செய்வது என யோசிப்பேன். அவர் சில நிமிடங்களில் தண்ணீருடன் வந்து விடுகிறார்.

எனக்கு பயணம் என்பது காட்சிகள். அந்த ஒவ்வொரு காட்சியின் மூலமாக எனது மனம் பல விஷயங்களை அவதானம் செய்து கொள்ளும். எனது மனத்தின் ஒரு பகுதி அவை இரண்டையும் கவனிக்கும். அவற்றை மனம் தொகுப்பதும் உண்டு. தொகுத்தே ஆக வேண்டும் என மனதுக்கு எந்த கட்டாயமும் அளிக்க மாட்டேன். மனதில் மகிழ்ச்சியை உணர ஆரம்பித்து விட்டாலே நான் காண்பவை இனியவை ஆகி விடும். அசோக் ஜகன்நாதன் அந்த இனிமையைத் துவங்கி வைத்தார்.

ஆந்திரக் கடற்கரை 1000 கி.மீ நீளம் கொண்டது. இதுவே ஒரு பிரும்மாண்டமான விஷயம். வானியல் முன்னறிவிப்புகள் ஆகாசவாணியில் ஒலிபரப்பப்படும் போது ஆந்திராவை ராயல சீமா, சீமா ஆந்திரா, தெலங்கானா, கோஸ்டல் ஆந்திரா என்ற உட்பிரிவுப் பெயர்களுடன் கூறுவார்கள். சிறுவனாக இருந்த போது எனக்கு ராயலசீமா என்னும் பெயர் மிகவும் பிடிக்கும். ஏன் என்று தெரியவில்லை. அந்த பெயரின் மீது ஒரு வசீகரம் எனக்கு இருந்தது. ஆந்திர நிலத்தில் ராயலசீமாவில் நான் மோட்டார்சைக்கிளில் பயணித்திருக்கிறேன். ராயல என்னும் தெலுங்குச் சொல்லுக்கு கற்பாறை என்று பொருள். அங்கிருக்கும் குன்றுகள் சிறு சிறு கற்பாறைகளால் ஆனவை. அவற்றைக் காணும் எவருக்கும் பெரும் மலைப்பு ஏற்பட்டு விடும். ராயலசீமா பகுதியின் குன்றுகளின் தொடர்ச்சியை தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிலும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் காணலாம். கடலோர ஆந்திராவும் மிக நீண்ட ஒரு பிரதேசம். நம் நாட்டுக்கு தென்மேற்கு பருவ மழையும் வட கிழக்கு பருவ மழையும் மழை தருகின்றன. ஜூன் 1 ம் தேதி தென் மேற்கு பருவ மழை கன்னியாகுமரியில் பொழியத் தொடங்கும்.அங்கிருந்து அப்படியே முழு கேரளாவும் பெய்து கர்நாடகம், கோவா, மகாராஷ்ட்ரா, குஜராத், ராஜஸ்தான் வழியாக தில்லி சென்று ஹரித்வார் வழியாக இமயத்தைத் தொடும் வரை தென்மேற்கு பருவ மழை பொழியும். நம் நாட்டின் எல்லா நதி உற்பத்தி இடங்களும் தென் மேற்கு பருவமழையால் மழையைப் பெறுப்வை. அக்டோபர் 1ம் தேதி வட கிழக்கு பருவ மழை தொடங்கும். பாக் ஜல சந்தி அருகே உற்பத்தி ஆகி தமிழகத்தின் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் தொடங்கி கடலோர தமிழகத்துக்கு மழையைக் கொடுத்து தொடர்ந்து கடலோர ஆந்திரத்துக்கும் ஒடிஸ்ஸா , மேற்கு வங்கம் மாநிலங்களுக்கும் வங்கதேசத்துக்கும் மழையைக் கொடுப்பது வட கிழக்கு பருவ மழையே. இந்த பருவ மழையின் போது தமிழகத்தில் உருவாக்கும் புயல் சின்னங்கள் வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திராவையோ ஒடிஸ்ஸாவையோ அல்லது மேற்கு வங்காளத்தையோ தாக்கும். கடலோர ஆந்திரப் பிரதேசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் வட கிழக்கு பருவ மழையைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகாசவாணியில் வானிலை அறிக்கை கேட்கும் வழக்கம் எனக்கு இருந்ததால் அதில் கூறப்படும் பல ஊர்களின் பெயரைக் கொண்டு நான் அவற்றை என் மனதுக்குள் கற்பனை செய்து கொள்வேன். நெல்லூர், ஓங்கோல், விசாகப்பட்டினம், தெனாலி, ஸ்ரீகாகுளம் எனப் பல பெயர்கள். இந்த முறை ரயில் பயணத்தில் கடலோர ஆந்திரத்தின் 1000 கிலோ மீட்டரையும் இருமுறை பயணித்துக் கடந்தேன்.

ஆந்திரத்தை அடைந்த சில மணி நேரங்களில் பெண்ணாறு ஆற்றைக் கடந்தோம். பெண்ணாறை நான் வணங்கினேன். அசோக் இந்த நதியின் பெயர் என்ன என்று கேட்டார். காவிரி தென்பெண்ணை பாலாறு புது வையை கண்டதோர் பொருநை நதி என மேவிய ஆறு பல ஓட மேனி செழித்த தமிழ்நாடு என்றான் மூதாதை பாரதி. அவனது சொற்கள் வழியாகவே நான் காணத் தொடங்கினேன். அவனது உணர்ச்சிகளை அவனது பாட்டின் மூலம் உணர்ந்தேன். பெண்ணாறு ஆந்திரத்தில் பென்னா என்றும் தமிழகத்தில் தென்பெண்ணை என்றும் ஓடுகிறது. விஜயவாடாவில் கிருஷ்ணா நதியைக் கடந்தோம். அதனையும் வணங்கினேன். இந்த பயணத்தின் முக்கியமான கட்டம் என்பது கோதாவரி பாயும் ராஜமுந்திரி என்னும் பிரதேசத்தைக் கண்டது தான். கம்பன் ‘’சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி’’ என்கிறான். கவிதையின் சொற்கள் பெருக்கெடுத்துப் பாய்வதைப் போல பாய்ந்து செல்லும் கோதாவரி. கோதாவரிப் பெருக்கைக் கூற கம்பன் ஏன் கவிதைப் பெருக்கைச் சொல்கிறான்?  கவிதைக்கும் நதிக்கும் ஊற்றுமுகங்கள் கண்ணால் காண இயலாதவை எனினும் பொங்கிப் பிரவகிப்பவை என்பதாலா? ரயில் பெட்டியில் இருந்த அனைவரும் கோதாவரியை வணங்கினர். கோதாவரி பாயும் பிரதேசத்தில் பலவிதமான விவசாயப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. எனக்கு கோதாவரியில் படகு ஒன்றில் நெடுஞ்தொலைவு பயணிக்க வேண்டும் என்றும் கோதாவரிக்கரையில் சில வாரங்கள், சில மாதங்களாவது வாழ வேண்டும் என்றும் ஆசை உண்டானது.

ஆந்திரத்தில் மிக அதிகமாக அபார்ட்மெண்ட் கட்டுமானப் பணிகள் நடப்பதை இந்த ரயில் பயணத்தில் கண்டேன். கிட்டத்தட்ட எல்லா ரயில் நிலையங்களும் பரப்பளவில் பெரிதாகக் கட்டப்படுவதைக் கண்டேன். நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வே அடுத்த 50 ஆண்டுகளுக்கு நம் நாட்டின் வரலாற்றில் முக்கியமானதாக இருக்கும் என்னும் உணர்வு ஏற்பட்டது.

பயணத்தில் நான் காணும் காட்சிகளும் அடையும் உணர்வுகளும் விதைகளைப் போன்றவை. அவை மனதில் தூவப்படுகின்றன. ஆழுளத்திலிருந்து அவை என்றாவது ஒருநாள் ஏதாவது ஒரு விதத்தில் முளைக்கக் கூடும். ஒரு பயணம் அடுத்த பயணத்துக்கான தூண்டுதலாகவும் அமைகிறது. ஒவ்வொரு பயணமுமே நதியில் முழுக்காடுவது போன்றவையே. மூழ்கும் போது ஒருவராக இருக்கும் நாம் மூழ்கி எழும் போது வேறொருவராகிறோம். நிலக்காட்சிகளைக் காண்பதற்கென்றே மேற்கொண்ட இப்பயணம் என்னளவில் எனக்கு மிகவும் முக்கியமானது. ஒரு மாநிலத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியினை பகல் பொழுதில் ரயிலில் பார்க்கும் வண்ணம் ரயில் பயணங்களை அடிக்கடி நிகழ்த்த வேண்டும் என்ற ஆவல் உண்டாகியிருக்கிறது !!    

  

 

Wednesday, 25 June 2025

நதியறிதல்

 நடைப்பயிற்சி செல்லத் துவங்கிய தினத்தில் ஊருக்கு காவிரி நீர் வந்து விட்டது. வெள்ளம் நிரம்ப சென்று கொண்டிருந்தது. நதியில் மூழ்கி எழ வேண்டும் என விரும்பினேன். நதியளவு அகத்துக்கு நெருக்கம் கொண்ட இன்னொருவர் இருக்க முடியுமா எனத் தெரியவில்லை. நதிக்கு வணக்கம். நதிக்கு வாழ்த்து. காவிரி போற்றுதும் ! 

Monday, 23 June 2025

லௌகிகக் கணக்குகள்

வீட்டில் இரு தென்னை மரங்கள் இருக்கின்றன. அதனால் தேங்காய் எப்போதும் தேவையைக் காட்டினும் மிகையாகவே இருக்கும். தேங்காய் மட்டையை காயவைத்து காலி சிமெண்ட் சாக்குகளில் நிரப்பி வைத்திருப்பர். வீட்டின் பணியாளரிடம் அவற்றை அவர்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று எரிபொருளாகப் பயன்படுத்திக் கொள்ளும் படி கூறுவர். மூட்டையாக இருப்பதால் அந்தப் பெண்மணி தனது மகனை வந்து எடுத்துச் செல்ல கூறுகிறேன் என்று கூறுவார். அந்த நபர் வந்து எடுத்துச் செல்ல சற்று முன் பின் ஆகும். இவை வழக்கமான காட்சிகள். இன்று கடைவீதி வழியே நடந்து சென்று கொண்டிருந்தேன். ஒரு உணவகத்தின் வாசலில் ஒரு தள்ளுவண்டியில் காய்ந்த தேங்காய் மட்டை மூட்டைகள் பலவற்றை இறக்கிக் கொண்டிருந்தனர். குறைந்தது பத்து மூட்டையாவது இருக்கும். உணவகத்தின் பணியாளர் இறக்கிக் கொண்டிருந்தார். அவரிடம் இவற்றை விலைக்கு வாங்குகிறீர்களா என்று கேட்டேன். எங்களிடம் இல்லாத தேங்காய் மட்டைகளா என்றார் அந்த பணியாளர். ஒரு வீட்டில் பயன்படுவதை விட பல மடங்கு தேங்காய் தினமும் தேவைப்படும் இடம் உணவகம். வீட்டில் ஒரு நாளைக்கு நான்கு பேருக்கு உணவு தயாரிப்பார்கள். உணவகத்தில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 300 பேருக்கு உணவு தயாரிப்பார்கள். அவ்விதம் என்றால் அவர்களிடமே உரித்த தேங்காய் மட்டைகள் குவிந்திருக்கும். பின்னர் இந்த மூட்டைகள் எங்கிருந்து வருகின்றன? இந்த கேள்வியை ஆர்வத்துடன் எழுப்பினேன். உணவக உரிமையாளர் வீட்டில் இருந்து வருகின்றன என்று பதில் சொன்னார். ஓர் எளிய காட்சிக்குப் பின்னால் எத்தனை காட்சிகளும் எத்தனை மாந்தர்களும் எத்தனை உணர்வுகளும் எத்தனை செயல்பாடுகளும் இருக்கின்றன என எண்ணிப் பார்த்தேன். வியப்பாக இருந்தது. உணவக உரிமையாளருக்குத் தங்கள் கடையில் அவை மிகுந்து கிடக்கின்றன என்பது தெரியும். எனினும் தங்கள் குடும்பத் தொழிலுக்கு தங்களால் இயன்ற அளவு உதவ வேண்டும் என்ற நோக்கில் உரிமையாளரின் குடும்பத்தினர் அவற்றை சேகரித்து அனுப்பி வைக்கின்றனர். தள்ளுவண்டிக்காரருக்கு நடைக்கூலி கிடைக்கிறது. உணவகப் பணியாளர் ஒருவர் இந்த விஷயத்துக்காக மிகைப்பணி பார்க்கிறார். வழிப்போக்கன் ஒருவனுக்கு வியப்பான காட்சி ஆகிறது. ஒரு பதிவாகவும் ஆகிறது !   

Saturday, 21 June 2025

மா & கொய்யா

 இன்று காலை கம்மங்களி செய்து உண்டேன். மதியம் வரகரிசிக் கஞ்சி. வரகில் கம்பின் அளவுக்கு பணி கிடையாது. எளிதில் வெந்து விடும். இரவு என்ன உணவு அருந்தலாம் என யோசித்தேன். கடைத்தெருவுக்குச் சென்று ஏதேனும் பழங்கள் வாங்கி வந்தால் என்ன என்று யோசித்தேன். ஒரு பையை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். பழக்கடை ஒன்றில் மூன்று கொய்யாப்பழங்களும் ஒரு மாம்பழமும் வாங்கிக் கொண்டேன். பங்கனப்பள்ளி மாம்பழம். வீட்டுக்கு வந்ததும் ஒரு கொய்யாவும் ஒரு மாம்பழமும் உண்டேன். மாம்பழம் அத்தனை தித்திப்பு. வயிறு நிரம்பிய உணர்வை உண்டாக்கியது. இன்றைய நாள் இனிதே நிறைவு பெற்றது. நாளை காலை 16 கி.மீ நடை செல்ல வேண்டும். 

16 கி.மீ நடை

இன்று அலாரம் அடிப்பதற்கு பத்து நிமிடம் முன்பாகவே விழிப்பு வந்து விட்டது. காலை 2.30க்கு அலாரம் வைத்திருந்தேன். விழித்துக் கொண்டு சில நிமிடங்கள் வெறுமனே படுத்திருந்தேன். இன்று நடைப்பயிற்சியை மீண்டும் தொடங்க வேண்டும் என தீவிரமாக முடிவு செய்திருந்தேன். உணவு சமைக்கத் தொடங்கியதும் எனக்கு சில விஷயங்கள் முழுமையாகப் புரியத் தொடங்கின. 15 நிமிடமோ 30 நிமிடமோ நேரம் ஒதுக்கி உணவு சமைப்பது என்பதன் நோக்கம் உணவு நம் உடலுக்குள் சென்று நமக்குப் போதிய ஆற்றலைத் தர வேண்டும் என்பதற்காகவே. குடலில் இருக்கும் ஜீரண சுரப்பிகளின் பணியை எந்த அளவுக்கு எளிமையாக்குகிறோமோ அந்த அளவு ஜீரணம் சிறப்பாக நடக்கும். ஜீரண மண்டலத்தை ஓர் உயிர் இயந்திரம் என்று கொண்டால் கூட அந்த எந்திரம் அல்லலின்றி இயங்கத் தேவையான அடிப்படையை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது நம் கடமை. சமைக்கத் தொடங்கியுள்ள இந்த சில நாட்களில் எனக்கு இந்த பிரக்ஞை வந்துள்ளது என்பதை உணர்கிறேன். இத்தனை நாள் இந்த பிரக்ஞை போதிய அளவு இல்லாமல் இருந்தது குறித்து வருந்துகிறேன். இதனுடன் எனக்கு இன்னொரு உணர்வும் ஏற்பட்டது. அதாவது நாம் அருந்தும் உணவினால் கிடைக்கும் ஆற்றல் என்பது நம் உடலால் முழுமையாக செலவு செய்யப்பட்டு விட வேண்டும். மிகை ஆற்றல் ரசாயனங்களாக சேமிக்கப் படுவதே பல உடல் நல சிக்கல்களுக்குக் காரணமாக அமைகிறது என எண்ணத் தொடங்கினேன். காலைப் புலரி தொடங்கி நள்ளிரவு வரை ஒருநாள் நமக்குக் கிடைக்கிறது. அதில் நம் உடல் என்ன சேகரித்ததோ அது முழுமையாக செலவழிக்கப்பட்டு விடவும் வேண்டும். அவ்விதம் நிகழும் என்றால் உடல் துல்லியமான செயல்பாட்டில் இருக்கிறது என்று அர்த்தம். உண்ட உணவை உடல் முழுமையாகச் செரிக்க தேவைப்படும் உடல் உழைப்பைக் கொடுப்பதும் உணவு உண்ணலின் ஒரு பகுதியே என்னும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது. பாரதி ‘’நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’’ எனக் கேட்பது நம் உடல்நலம் குறித்து நாம் கொள்ள வேண்டிய பிரக்ஞை என்னும் விதமாக நான் அர்த்தப்படுத்திக் கொள்கிறேன். ஒரு வீணையை மீட்டுவதைப் போலத்தான் நாம் உடலைப் பேண வேண்டும். வீணை நுட்பமான கருவி ; உடல் வீணையினும் நுட்பமான கருவி.  

எனக்கு ஒரு இயல்பு உண்டு. என் மனதின் எண்ணங்களை நான் கவனித்துக் கொண்டேயிருப்பேன். எதைச் செய்தாலும் ஏதும் செய்யாமல் இருந்தாலும் அந்தக் கவனம் இருந்து கொண்டே இருக்கும். படைப்பூக்கத்தின் ஒரு தன்மை அது. அவ்விதமான சுபாவம் இருப்பதால் எனது உடல் இயக்கம் சற்று குறைவாக இருக்கும். அமர்ந்திருக்கும் நேரம் அதிகமாக இருக்கும். இருப்பினும் எனது தொழில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் சென்று கொண்டேயிருப்பது என்பதால் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருப்பேன். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்லும் போது மனத்தின் நனவோட்டம் புத்துணர்வு கொண்டு விடும். வீட்டிலிருந்து நண்பர் அலுவலகம் செல்கிறேன் என்றால் வீட்டிலிருந்து புறப்பட்டதுமே மனம் புத்துணர்வு கொண்டு விடும். அங்கிருந்து மீண்டும் வீட்டுக்கு வந்தால் மீண்டும் புத்துணர்வு பெறும். போதுமான உடல் இயக்கம் உடலுக்குக் கொடுக்காமல் இருக்கிறேன் என்ற குறை எனக்கு எப்போதுமே உண்டு. அதைத் தீர்க்க வேண்டும் என விடாமல் முயல்வேன். பல விதங்களில் தோல்வி நிகழும். எந்த உடல்நலச் சிக்கலும் இல்லை என்பதால் உடற்பயிற்சிக்கு போதிய முக்கியத்துவம் அளிக்காமல் இருந்து விட்டேன். 

தினமும் 16 கி.மீ தூரம் நடக்க வேண்டும் என்பது எனது விருப்பங்களில் ஒன்று. மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு முழுத் தொலைவையும் ஓடிக் கடக்க வேண்டும் என்னும் விருப்பமும் உண்டு. மலையேற்றம் செய்ய வேண்டும் என்னும் விருப்பமும் உண்டு. இத்தனை விருப்பங்கள் இருந்தும் அதற்கான அடிப்படைத் தயாரிப்புகளைச் செய்யாமல் இருக்கிறேனே என வருந்துவேன். எனது தொழில் என்பது நான் மட்டும் செய்யக்கூடியது அல்ல ; பலவிதமான பலவகையான தொழிலாளர்களை ஈடுபடுத்தும் தொழில். வாடிக்கையாளர்கள், கட்டுமானப் பொருட்கள் விற்பவர்கள் என பலருடன் தொடர்பு கொள்ள வேண்டிய தொழில். பத்திரப் பதிவு , பட்டா மாறுதல் ஆகிய அரசாங்க அலுவலக விஷயங்களிலும் ஈடுபட வேண்டும். என் தொழிலில் மனச்சோர்வு உருவாவது சாதாரணமானது. எனக்கும் அவ்வப்போது உருவாகும். அந்த மனச்சோர்வு உடலை இயங்க விடாமல் அழுத்தும். எங்கள் தொழில் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிந்து விடும். எங்கள் எல்லா பணிகளும் பகலில் தான் என்பதால் அந்த முழு நேரத்தில் என்னால் என்ன செய்ய முடியுமோ அதனை முழுமையாகச் செய்வேன். மற்றவர்கள் பங்கும் நிறைய வேண்டும். நிறையவில்லை என்றால் அடுத்த நாளைக்கு அந்த பணி செல்லும். இழுத்துப் பிடித்து செய்ய வேண்டிய தொழில் இது. எனது பகல் நேரத்தை எனது பணிக்காகக் கொடுத்து விடுவேன். 

ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம். அன்றிலிருந்து ‘’சூர்ய நமஸ்கார்’’ செய்யத் தொடங்கலாம் என உத்தேசித்திருக்கிறேன். ஷண்மதங்களில் சௌரம் சூரியனைக் கடவுளாய்க் கொண்டது. சூர்ய நமஸ்கார் உடலால் மனதால் உணர்வால் சூரியனை வணங்கும் முறை. சூரியன் கண் கண்ட தெய்வம். காலை ஒருமுறையும் மாலை ஒருமுறையும் சூர்ய நமஸ்கார் செய்ய விருப்பம் கொண்டுள்ளேன். காலை ஒருவேளை மட்டுமாவது நிச்சயம் செய்ய வேண்டும். ஜூன் 21லிருந்து 48 நாளுக்கு தினமும் 16 கிமீ தூரம் நடப்பது என்று முடிவு செய்திருக்கிறேன். முயன்று பலமுறை கைவிட்ட விஷயம். மீண்டும் இம்முறை முயல்கிறேன். இம்முறை நிச்சயம் வெல்வேன் என என் உள்ளுணர்வு சொல்கிறது. சமையல் செய்யத் தொடங்கியிருப்பதால் அது அளித்திருக்கும் உடல் குறித்த பிரக்ஞை என் இலக்கை எட்டுவதில் துணையாயிருக்கும் என்று படுகிறது. திங்களன்று துவங்குவதற்கு முன்னோட்டமாக இன்றும் நாளையும் நடக்கத் தொடங்கி விடலாம் என 16 கி.மீ தொலைவை இன்றே நடக்கத் தொடங்கினேன். 

காலை எழுந்ததும் பல் தேய்த்து விட்டு சில டம்ளர் தண்ணீர் குடித்தேன். சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு 5 கி.மீ தூரம் நடக்க முடியும். 16 கி.மீ எனில் 3 மணி 12 நிமிடம் ஆகும். நான் சற்று மெதுவாக நடப்பவன். எனவே 16 கி.மீ தொலைவைக் கடக்க 4 மணி நேரம் ஆகும் எனக் கணக்கிட்டிருந்தேன். காலை 2.45க்கு வீட்டிலிருந்து புறப்பட்டேன். காலை 6 மணி அளவில் வீட்டு வாசலுக்கு காக்கைகளும் தவிட்டுக் குருவிகளும் மைனாக்களும் வந்து கிரீச்சிடும். அவற்றுக்கு உணவிடுவது காலைப் பொழுதில் வீட்டின் வழக்கங்களில் ஒன்று. நான் திரும்ப ஏழு மணியாகும் என்பதால் அவற்றுக்கான உணவை வாசலில் தூவி விட்டு கிளம்பினேன். 

சிதம்பரம் சாலையில் நடக்கலாம் என முடிவு செய்திருந்தேன். எங்கள் ஊருக்கு நான்கு திசைகளிலும் சாலைகள் இருந்தாலும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் சாலை சிதம்பரம் சாலை. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலோனோர் ஏதேதோ காரணங்களுக்காக சென்னை நோக்கி சென்று கொண்டேயிருக்கிறார்கள். அந்த சாலையின் ஒவ்வொரு இடமும் மிகவும் பரிச்சயமானது. வீட்டிலிருந்து சிதம்பரம் சாலையுடன் இணையும் பாதை 1.5 கி.மீ தூரம் கொண்டது. ஊரின் மையத்துக்கு வருவதற்கு அதுவே சுருக்கமான சாலை. அந்த சாலையில் தான் ஆரம்பப் பள்ளி மாணவனாக நடந்து சென்றேன். உயர்நிலைப் பள்ளி மாணவனாக சைக்கிளில் சென்றேன். இரு சக்கர வாகனம் ஓட்டக் கற்று கொண்டதும் அதில் பயணித்ததும் அந்த சாலையில் தான். இன்று நடைப்பயிற்சிக்கு காலில் செருப்பு அணியவில்லை. காலை நேரம் என்பதால் தரை சுடாது. வெறும் காலில் நடப்பது பாதத் தசைகளை இறுக்கமடையச் செய்யக் கூடும் என்பதால் அவ்விதம் செய்தேன். நான் வீட்டை விட்டு சில மீட்டர் தூரம் சென்றால் கூட காலில் செருப்பு இல்லாமல் செல்ல மாட்டேன். பல வருடப் பழக்கம் அது. எனவே எனது பாதத் தசை மிகவும் மென்மையாக இருக்கிறது. நீண்ட தூரம் வெறும் காலில் நடந்தால் தசைகள் சற்று இறுக்கமடையும் என எண்ணி அவ்வாறு செய்தேன். ‘’நர்மதா பரிக்கிரமா’’ என்னும் நதிவலம் நர்மதை நதியின் கரையில் நிகழும். 3000 கி.மீ தூரம் கொண்டது நர்மதையின் பாதை. காலில் செருப்பில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நர்மதா பரிக்கிரமா மேற்கொள்வார்கள். எனக்கும் வாழ்வில் ஒருமுறையாவது நர்மதா பரிக்கிரமா மேற்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உண்டு. ஊரிலிருந்து காசிக்கு நடந்து செல்ல வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு உண்டு. 

அதிகாலை நேரம் என்பதால் வெறும் காலில் நடப்பது வித்தியாசமாகத் தெரியவில்லை. அத்தனை காலை நேரத்தில் நான் சாலையில் நடந்து செல்வதைக் கண்டு சில வீதி நாய்கள் குரைத்தன. என்னிடமிருந்து குறிப்பிட்ட தொலைவில் பக்கவாட்டில் வந்து அவை வகுத்து வைத்திருக்கும் அவற்றின் எல்லையை நான் கடந்ததும் மெல்ல அவை படுத்திருந்த இடத்துக்கு சென்றன. சிதம்பரம் சாலைக்கு வந்து சேர்ந்தேன். 

நேரம் அப்போது காலை 3 மணி. இருப்பினும் சாலையில் ஒரு சில இரு சக்கர வாகனங்கள் சென்று கொண்டுதான் இருந்தன. பால்காரர் ஒருவர் கடந்து சென்றார். காவிரிப் பாலத்தின் மீது நடந்து போது ஆற்றில் தண்ணீர் வந்திருப்பதைக் கண்டேன். புது வெள்ளத்தைக் கண்டது மனதை மகிழச் செய்தது. நடைப்பயிற்சியைத் துவங்கியிருக்கும் முதல் நாளில் ஆற்றில் தண்ணீர் வந்ததைக் கண்டது நன்நிமித்தம் என்று தோன்றியது. பாலத்தைக் கடந்து வந்ததும் எதிர்ப்பக்கம் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் ‘’ஆத்துல தண்ணி வந்திடுச்சா?’’ என உற்சாகமாகக் கேட்டார். நான் பதில் சொன்னதும் அதனைக் காண ஆர்வமாகச் சென்றார். 

நண்பரின் மனை ஒன்றனுக்கு தனிப்பட்டா விண்ணப்பித்திருந்தோம். கிட்டத்தட்ட 3 மாத காலம் ஆகி விட்டது. இன்னும் பட்டா கிடைக்கவில்லை. அது கிடைத்தால்தான் கட்டிட அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியும். மூன்று நாளில் முடிய வேண்டிய வேலை. அதிகபட்சம் ஒரு வாரம். ஆனால் இன்னும் முடியாமல் இருக்கிறது. அந்த ஞாபகம் வந்து விட்டது. அந்த ஞாபகம் வந்தாலே சோர்வு வந்து விடும். இருப்பினும் அதனைக் கவனித்தவாறே தொடர்ந்து நடந்தேன். ஊர் எல்லை முடிந்து சேந்தன்குடி என்ற பகுதி தொடங்கியது. அங்கே சாலையின் இரு புறமும் மருதமரங்கள் இருக்கும். வெண் மருது. மருதமரம் பார்க்கவே மிகவும் கம்பீரமாக இருக்கும். அவற்றுடன் சில ஆலமரங்களும் உண்டு. ஒரு ஆலமரம் தன் விழுதுகளை புவியைத் தொட்டு விடும் தொலைவில் வைத்திருக்கிறது. இன்னும் சில மாதங்களில் அவை பூமியைத் தொட்டு விடும் என்று தோன்றியது. அந்த விழுதுகளை என் இரு உள்ளங்கைகளிலும் அணைத்துக் கொண்டேன். ஆலம் விழுதின் ஸ்பரிசம் என்பது மகத்தானது. உயிர் ததும்பும் அதன் உயிர்மையை நாம் நம் கைகளால் உணர முடியும். புவனகிரி அருகே ஒரு கிராமத்தில் 100 ஆண்டுக்கும் மேற்பட்ட அகவை கொண்ட ஆலமரம் ஒன்று உள்ளது. அதனை தற்செயலாகக் கண்டேன். பின்னர் 4 முறை அந்தப் பக்கம் செல்லும் போது போய் பார்த்து விட்டு வந்தேன். அந்த ஆலமரத்தின் விழுதுகள் ஏழு திசைகளில் மண்ணைத் தொட்டு விட்டன. அவை அனைத்துமே பிரதான மரத்தைக் காட்டிலும் தடிமனாக பருக்கத் தொடங்கி விட்டன.  அந்த மரத்துக்கு நன்றி பாராட்டும் விதமாக அந்த மரத்தின் நூற்றாண்டினைக் கொண்டாடும் விதமாக அந்த ஊரில் புதிதாக 100 ஆலமரங்களை நட வேண்டும் ; அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என எனக்கு ஒரு திட்டம் இருந்தது. அதன் நினைவுகள் இந்த விழுதுகளை கையில் ஏந்திக் கொண்ட போது மனதில் துளிர்த்தது. 

மெல்ல நடந்து கொண்டேயிருந்தேன். அந்தப் பகுதி ஊரின் புறநகர். இரு சக்கர வாகனங்கள் பெருகத் தொடங்கிய 1991ம் ஆண்டுக்குப் பின் அந்தப் பகுதியில் நகர்கள் உருவாயின. ஐந்து நிமிட இரு சக்கர வாகனப் பயண தூரத்தில் அமைந்திருந்தன அந்த நகர்கள். மெல்ல விரிவாகி விரிவாகி 15 நிமிடப் பயண தூரம் வரை சென்று விட்டன. அதற்கு மேல் பெரிய விரிவாக்கம் நிகழ வாய்ப்பு இல்லை. மேலும் ஒரு சில கி.மீ செல்லத் தொடங்கியதும் வீடுகள் குறையத் தொடங்கின. வீடுகள் முற்றிலும் இல்லாமல் ஆகி நெல்வயல்கள் இருந்த பகுதிகளில் ஒரு பூனை தென்பட்டது. நாய்கள் இல்லாத பகுதி பூனைக்கு வசதியானது. நெல்வயல்களின் வரப்பில் எலிகள் இருக்கக்கூடும். அவை பூனையின் உணவு. அதன் பின் உளுத்துக்குப்பை என்ற ஊர் வந்தது. அந்தக் கிராமத்தின் சிறு பகுதி மட்டுமே நெடுஞ்சாலையில் இருக்கும். அதனைக் கடந்து சென்றால் சோழ சக்கர நல்லூர் என்னும் ஊர் வரும். நரசிம்ம ராவ் பாரதப் பிரதமராக இருந்த போது இந்த ஊரில் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் அமைக்கப்பட்டது. அப்போது தகவல் ஒலிபரப்பு அமைச்சராக இருந்த மாதவராவ் சிந்தியா அதனைத் துவக்கி வைக்க அந்த ஊருக்கு வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் நானும் பங்கு பெற்றேன். அப்போது நான் சிறுவன். இது நடந்தது 1992ம் ஆண்டாக இருக்கக்கூடும். 33 ஆண்டுகள் ஆகி விட்டது. தொலைக்காட்சிக்கு ஆண்டெனா என ஒன்று இருந்தது என்பதே 90க்குப் பின் பிறந்தவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

கால் நடந்து கொண்டேயிருந்தது. சலிப்பில்லை ; சோர்வில்லை. நடைக்கு ஏற்ப என் மனமும் அதன் தாளகதியில் இயங்கிக் கொண்டிருந்தது. நடை நெடுக விடிவெள்ளி கண்ணில் பட்டுக் கொண்டேயிருந்தது. வெள்ளி அழகு வாய்ந்தது. அதன் வெண்நிறமும் அதனைச் சுற்றி இருக்கும் சிறு ஒளி வட்டமும் வசீகரமானவை. எத்தனை முறை பார்க்க முடியுமோ அத்தனை முறை அதனைக் கண்டவாறு சென்றேன். விடிவெள்ளி என்பது எத்தனை பேருக்கு வாழ்க்கையில் வாழ்க்கையின் மீது நம்பிக்கை கொடுத்திருக்கும். ஒவ்வொரு முறை விடிவெள்ளியைக் காணும் போதும் எனக்கு நினைவுக்கு வரும் கவிதை வரிகள் ராஜசுந்தர்ராஜனுடையவை . கொடுப்பினை என்ற கவிதை. ‘’இரா முழுக்க தவம் கிடந்தன வான் நிறைய மீன்கள் பரிதியை நேர் நின்று கண்டதோ விடிய வந்த ஒரு வெள்ளி’’. 

நத்தம் என்ற கிராமத்தை வந்தடைந்தேன். அங்கேயிருக்கும் ஒரு மைல்கல் திருவாரூர் எத்தனை கி.மீ தூரம் எனக் காட்டிக் கொண்டிருந்தது. அந்த இடம் தான் எட்டாவது கிலோ மீட்டர். அங்கே திரும்பி வந்த பாதை வழியாகவே வீட்டுக்குச் சென்றால் 16 கி.மீ நிறைவு பெற்றிருக்கும். எட்டாவது கிலோ மீட்டர் மைல்கல்லில் நின்று வானில் இருந்த விடிவெள்ளியைத் தொழுதேன்.

பாதி தூரம் வந்து விட்டோம் என்னும் நிலை மகிழ்ச்சியைத் தந்தது. மீண்டும் நடக்க ஆரம்பித்தேன். பள்ளிவாசல் ஒன்று உறக்கத்தை விட தொழுகை மேலானது என அறிவித்துக் கொண்டிருந்தது. சர்ச் ஒன்றில் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கியிருந்தன. ஆலயம் ஒன்றிலிருந்து வேங்கடேச சுப்ரபாதம் கேட்கத் தொடங்கியது. உடல் முழுதும் லேசாக வியர்த்திருந்தது. இன்னும் பொழுது புலரவில்லை. இன்னும் சற்று நேரத்தில் புலர்ந்து விடும் என்னும் சூழ்நிலை. மெல்ல நடந்து கொண்டிருந்தேன். சோழ சக்கர நல்லூரில் ஒரு பெண்மணி வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார். நேரம் எத்தனை என்று தெரியவில்லை. நேரத்தைத் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. நடக்க நடக்க பொழுது விடிந்து கொண்டிருந்தது. சேந்தன்குடியைத் தாண்டி ஊருக்குள் பிரவேசித்தேன். காவிரிப் பாலத்தில் பலர் நின்று காவிரி புதுவெள்ளம் கண்டு கொண்டிருந்தனர். காலை வெளிச்சம் வந்ததும் காலில் சிறு கற்கள் குத்துவது போன்ற உணர்வு இருந்தது. ஏன் என்று யோசித்துப் பார்த்தேன். நடையின் கடைசி ஒரு கிலோ மீட்டர் என்பதால் மனம் சிறு கற்களைப் பொருட்படுத்துகிறதா என எண்ணியவாறு சென்றேன். தெரிந்தவர் ஒருவர் எதிர்ப்பட்டு காலை வணக்கம் சொல்லி ‘’என்ன சார் ! வெறும் காலோட வாக்கிங் கா?’’ என்று கேட்டார். அவருக்கு ஆமோதிப்பை பதிலாக அளித்து விட்டு நடந்தேன். இன்னொரு தெரிந்தவர் எதிர்ப்பட்டார். அவரிடம் இரண்டு நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்து விட்டு நடக்கத் தொடங்கினேன். 

வீடு வந்து சேர்ந்த போது குருவிகளும் காக்கைகளும் தங்கள் உணவைக் கொத்தித் தின்றிருந்தன. வாசலில் இருந்த வாளியின் தண்ணீரின் மூலம் பாதத்தைத் தேய்த்துக் கழுவிக் கொண்டு வீட்டினுள் நுழைந்தேன். கை கால் முகம் கழுவி விட்டு காலை உணவாக ‘’கம்மங்களி’’யைத் தயாரிக்கத் தொடங்கினேன். தயாரானதும் டைனிங் மேஜை மீது அதனை எடுத்து வைத்து விட்டு நீராடச் சென்றேன்.  

Thursday, 19 June 2025

ஒரு சுருக்கமான வழி

கம்மங்கூழ் தயாரிப்பதில் உள்ள எல்லா சாத்தியங்களையும் முயற்சி செய்து பார்த்ததில் எனக்கு மிக உகந்த வழி என்ன என்பதைக் கண்டுகொண்டேன். அதாவது ஒரு டம்ளர் கம்பு மாவுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து கரைத்துக் கொள்வது என்பது எளிய வழி என்று தோன்றியது. கம்புமாவு 1 : 1 என்ற விகிதத்தில் முழுமையாக கரைந்து விடுகிறது. தேவையெனில் கட்டிகள் இருந்தால் அவற்றைக் கையால் கரைத்து விட முடிகிறது. அதனை அடுப்பில் வைத்து சூடாக்கும் போது சில நிமிடங்களில் கொதிக்கத் தொடங்குகிறது. களி பதம் வரும் வரை கிண்டிக் கொண்டேயிருக்க வேண்டும். 15 நிமிடத்துக்குக் குறைவான நேரத்தில் கூட பதம் வந்து விடுகிறது. அடுப்பை நிறுத்தி விட்டு களியை ஒரு தட்டைப் போட்டு மூடி வைத்தால் ஒரு மணி நேரம் கழித்து களியின்  மேல் நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டால் களியும் தண்ணீரும் மெல்ல வேதிவினை புரிந்து கொண்டிருக்கும். களி ஓரளவு தண்ணீரைக் குடிக்க முயலும். அடுப்பிலிருந்து இறக்கிய போது இருந்த நிலையை விட சற்று மேலான பதத்தை அடைந்திருக்கும். காலையில் களியையும் அதன் மேல் இருக்கும் நீரையும் கரைத்துக் கொள்ளலாம். 

முன்னர் நான் ஒரு டம்ளர் கம்புமாவுக்கு ஐந்து டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொதிக்க வைப்பேன். இதில் உள்ள நன்மை என்னவெனில் 15 நிமிடம் கொதிக்க வைத்து விட்டு அடுப்பை அணைத்து விடலாம். மிக நெருக்கி களி பதம் கிடைக்கும். நீர்மமாகவே இருக்கும். காலையில் அப்படியே அருந்தலாம். இருப்பினும் ஐந்து டம்ளர் தண்ணீர் கொதிக்க சற்று கூடுதல் நேரம் தேவைப்படும். ஒரு டம்ளர் தண்ணீர் சீக்கிரம் கொதிநிலைக்கு வந்து விடும். 

இன்று மாலை 6.30க்கு கம்மங்கூழ் தயாரித்தேன். 15லிருந்து 20 நிமிடங்களில் தயாரித்து விட்டேன். அடுத்த தினத்துக்கான உணவு கையிருப்பு இருக்கிறது என்னும் உணர்வே பெரும் விடுதலையை உணரச் செய்கிறது. காலை 7 மணிக்கு கூழ் அருந்தி விட்டு எங்கேனும் செல்ல வேண்டும் என்று நினைத்தால் ஒரு தண்ணீர் பாட்டிலில் கூழை எடுத்துக் கொண்டு சென்றால் கூட செல்லும் இடத்தில் குடித்துக் கொள்ளலாம். ஒருநாள் பயணங்களுக்கு கூழ் மிகவும் பயன் தரத்தக்கது என்பதைப் புரிந்து கொண்டேன். அவ்விதமாக ஏதேனும் முயன்று பார்க்க வேண்டும். 

இந்த குறுகிய கால அனுபவத்தில் நான் உணர்ந்தது என்னவெனில் கம்மங்கூழ் அருந்தினால் அருந்திய பின் 7 மணி நேரத்துக்கு வயிறு நிரம்பியிருக்கும் உணர்வே இருக்கிறது. அதன் பின்னும் பெரும்பசி இல்லை. காலை 7 மணிக்கு கூழ் அருந்தினால் மாலை 4 மணிக்கு அடுத்த வேளை கூழை அருந்தினால் போதுமானதாக இருக்கிறது. இரவு உணவு தேவைப்படுவதில்லை. ஒருநாளைக்கு இரண்டு வேளை உணவு என்னும் நடைமுறைக்குச் செல்ல இந்த உணவுமுறை பயன் உள்ளதாக இருக்கும் என்று படுகிறது.