சீர்காழி தீ விபத்து குறித்த சி.பி.கி.ராம்.ஸ் புகாரின் மேல் விசாரணை நடத்தி தெற்கு ரயில்வே பதில் அளித்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு படையை விசாரணை மேற்கொள்ள ரயில்வே பணித்திருக்கிறது. அவர்கள் தங்கள் விசாரணையை நிறைவு செய்து ரயில்வே நிர்வாகத்துக்கு அறிக்கை அளித்திருக்கின்றனர்.
சீமைக் கருவேல மரங்கள் காட்டுத்தீ என எரிந்து ரயில்வே லைனுக்கு அருகில் இருந்த 11 பனைமரங்களைக் கருக வைத்து கரிக்கட்டையாக்கியிருந்தன. சம்பவம் நடந்தது 08.07.2026 அன்று மாலை 3.15 மணி அளவில். அன்று மாலை 6.15 வரை சம்பவ இடத்தில் இருந்து தீயணைப்பு, காவல் துறை, வருவாய்த்துறை ஆகியவற்றுக்குத் தகவல் தெரிவித்து முழுமையாக அந்த காட்டுத்தீயை அணைத்த பின் அங்கிருந்து கிளம்பினேன். 09.07.2026 அன்று சி.பி.கி.ராம்.ஸ் ல் புகார் பதிவு செய்தேன்.
ரயில்வே நிர்வாகம் 10.07.2026 அன்று தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்த கரிக்கட்டைக்களாய் எஞ்சியிருந்த 11 பனை மரங்களையும் அகற்றியது. ரயில்வே நிர்வாகம் விரைந்து செயல்பட்டது பாராட்டுக்குரியது.
சம்பவம் நிகழ்ந்த போது மூன்று ரயில்கள் அந்தப் பகுதியைக் கடந்து சென்றன. விசாரணை அறிக்கை, ரயிலில் இருந்த ரயில்வே ஊழியர்கள் லோகோ பைலட், ரயில் கார்டு, ரயிலில் இருந்த ஆர் பி எஃப் காவலர்கள் எவரும் சீர்காழி ரயில் நிலைய மேலாளருக்குத் தீ விபத்து நிகழ்ந்தது குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை எனக் கூறுகிறது. வருந்தத்தக்க நிலையாகும் இது. அந்த 3 ரயில்களில் இருந்த ரயில்வே ஊழியர்களிடம் ரயில்வே நிர்வாகம் குறைந்தபட்சம் எழுத்துப்பூர்வ விளக்கமாவது கோரியிருக்க வேண்டும். அவ்விதம் நிகழ்ந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.