Monday, 15 November 2021
மூன்றாம் நாள்
Saturday, 13 November 2021
இரண்டாம் நாள்
தமிழ்நாட்டில் ஒரு பொதுவான நம்பிக்கை உண்டு. முதல் நாள் பணியைப் போலவே இரண்டாம் நாள் பணியும் முக்கியமானது என. முதல் நாள் உருவாக்கித் தரும் துவக்க வேகத்தை முன்னெடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையை இரண்டாம் நாளில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இன்று காலை கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே உள்ள எனது நண்பரிடம் முதல் நாள் விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொள்ளவும் விவாதிக்கவும் எண்ணம். நான் சென்ற போது அவர் பூஜை செய்து கொண்டிருந்தார். ஐம்பது ஆண்டுகளாக காலையில் இருபது நிமிடங்கள் பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இப்போது அவருக்கு எண்பது வயது. கூடத்தில் ஒரு பகுதி பூஜை அறை. நான் அமைதியாக அமர்ந்திருந்து யோசித்துக் கொண்டிருந்தேன்.
பூஜை முடித்து விட்டு நண்பர் வந்தார். நண்பரின் வீட்டுக்கார அம்மா எனக்கு ஒரு தஞ்சாவூர் ஃபில்டர் காஃபி கொண்டு வந்தார்கள். அவர்களுடைய சொந்த ஊரே தஞ்சாவூர்.
‘’அம்மா! இன்னையோட சரியா 43 நாள் ஆகுது காஃபி, டீ, பால் தவிர்த்து. இருந்தாலும் பிரியமா கொண்டு வந்துட்டீங்க. பரவாயில்லை’’
கையில் பூஜைத்தட்டுடன் கோயிலுக்குப் புறப்பட்டார்.
‘’என்னம்மா வழக்கமா சாயந்திரம் தானே கோயிலுக்குப் போவீங்க. இன்னைக்கு என்ன காலையிலயே?’’
’’இன்னைக்கு குருப்பெயர்ச்சி’’
‘’ஓ அப்படியா’’
நண்பர் நேற்று நடைபெற்ற பணி குறித்து கேட்டுக் கொண்டிருந்தார். சட்டென தனது சொந்த அனுபவம் ஒன்றை என்னிடம் சொன்னார்.
‘’என்னோட அப்பா ரொம்ப கரடுமுரடானவர் பிரபு. கடுமையானவர். அவர பாத்து வளந்ததால நான் எந்த விதமான ஹார்டுனெஸ்ஸையும் மனசுல வச்சுக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணன். சாஃப்ட்டா இந்த உலகத்தை அணுகிறவங்க தான் வலிமையானவங்க. இத்தனை வருஷ வாழ்க்கையில நான் உணர்ந்த விஷயம் இது’’
சமையல்கட்டில் வாணலியில் ஏதோ பொறியும் சத்தம் கேட்டது.
‘’சார் அம்மா வாணலியில எதையோ வச்சுட்டு போயிருக்காங்க’’
அவர் சமையல் கட்டுக்குள் சென்றார்.
‘’அவங்களுக்கும் வயசாகுதில்லையா. மறந்திட்டாங்க. எப்படி உங்களுக்கு மட்டும் சத்தம் கேட்டது தெரிஞ்சது?’’
’’சார் நேத்து முழுக்க ஃபுட் பிரிபேர் பண்ண இடத்துல இருந்திருக்கன். வாணலி சூடாகி அதில் உணவுப் பொருள் இருந்தா என்னென்ன மாதிரி சத்தம் போடும்னு நேத்து முழுக்க அந்த சத்தங்களை கேட்டுக்கிட்டு இருந்தன்.’’
கொஞ்ச நேரம் ஆனது.
நண்பரின் மனைவி வந்தார். அவர் உள்ளே நுழைந்ததுமே , ‘’அம்மா ! எண்ணெய் சட்டி அடுப்பில இருக்கும் போது ஆஃப் பண்ணாம கோயிலுக்குப் போய்ட்டீங்க. சார் தான் ஆஃப் செஞ்சார்’’ என்றேன்.
அவர் சமையல்கட்டுக்குள் அவசரமாக சென்றார்.
‘’பிரபு ! நான் ஸ்கூல் படிக்கும் போது படிச்ச ஒரு திருக்குறள் என் மனசை பாதிச்சுது. அதுல இருந்து நான் மாமிசம் சாப்பிடறதை நிறுத்திட்டேன். எங்க வீட்ல எல்லாரும் மாமிச உணவு சாப்பிடறவங்க. எங்க அம்மா எனக்கு மட்டும் சைவ உணவு கொடுக்க ரொம்ப கஷ்டப்படுவாங்க. பல நாள் அவங்களை சிரமப்படுத்த வேணாம்னு மோர் சாதம் மட்டுமே சாப்பிடுவேன். எனக்கு கல்யாணம் ஆன பிறகு எனக்காக ஒய்ஃபும் மாமிசம் சாப்பிடறதை நிறுத்திட்டாங்க.’’
நான் வாழ்க்கைக் காட்சிகளின் சம்பவங்களின் நூதனம் குறித்து எண்ணிக் கொண்டிருந்தேன்.
‘’சார் ! எனக்கு ஒரு ஐடியா இருக்கு. அத நீங்க தான் எக்ஸிகியூட் பண்ணனும்’’
‘’என்ன விஷயம்?’’
‘’நான் இங்க ஒரு மீட்டிங் அரேன்ஞ் செய்யறன். நூறு பெண்கள் கலந்துக்கற மாதிரி. நீங்க இத்தனை வருஷமா செய்யற பூஜையைப் பத்தி நீங்க ஸ்பிரிச்சுவாலிட்டின்னு உணர விஷயங்கள் பத்தி அவங்களுக்குச் சொல்லுங்க’’
‘’நான் ரொம்ப சாதாரண ஆள் பிரபு’’
‘’சாதாரணமானவங்க எந்த விஷயத்தையும் சரியா புரிஞ்சவங்களா கூட இருப்பாங்க சார்’’
‘’நாம சமயப் பிரச்சாரம் செய்யற யாரையாவது கூப்ட்டு மீட்டிங் அரேஞ்ச் செய்வோம்’’
‘’இல்லை சார் ! நீங்களே பேசுங்க. நீங்க விவசாயி. இந்த ஊர்ல இருக்கற நிறைய பேரு உங்களுக்கு சொந்தக்காரங்க. நீங்க சொல்ற விஷயங்களை ஆர்வமா கேட்பாங்க. நூறு பேர்ல பத்து பேரு நீங்க சொல்ற விஷயங்களை கன்சிடர் பண்ணாக் கூட அதுவே பெரிய சக்ஸஸ் சார்’’
நண்பருக்கு நான் என்ன சொல்கிறேன் என்பது முழுதும் பிடிபடவில்லை.
‘’சார் ! ஒரு திருமந்திரப் பாடல் இருக்கு.
யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே
நீங்க கேட்டிருப்பீங்க. முதல் லைன் பூஜை - ஆலய வழிபாடு போன்ற வழிமுறைகள் தொடர்பானது. ரெண்டாவது லைன் நம்மோட சக ஜீவன்கள் மேல காட்டுற பிரியம் அன்பு தொடர்பானது. மூணாவது லைன் சக மனுஷங்கள் மேல நாம எடுத்துக்கற பொறுப்பு அக்கறை அன்பு தொடர்பானது. கடைசி லைன் நம்மோட சோஷியல் இண்டெலிஜென்ஸ் தொடர்பானது. இந்த நாலுமே உங்க லைஃப்ல இருக்கு. உங்களுக்கு சாத்தியம் ஆனது எல்லாருக்கும் சாத்தியம் தான். இந்த நாலும் ஒவ்வொருத்தருக்கும் சாத்தியம் ஆகணும்னு கட்டாயம் இல்லை. நாலுல ஒன்னு அவங்களுக்கு ஓப்பன் ஆனாலோ பிராக்டிஸ் ஆனாலோ அதுவே கிரேட் திங்’’
நண்பர் என்னிடம் ‘’உங்களுக்கு நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கு. நீங்களே பேசுங்க.’’ என்றார்.
’’நாம டிஸ்கஸ் பண்ணி என்ன விஷயம் பேசனும்னு முடிவு பண்ணுவோம். நீங்க பேசுங்க. அதான் கரெக்ட்டா இருக்கும்.’’
நண்பர் சம்மதித்தார்.
‘’மீட்டிங்கை நான் டிசைன் செய்றன். ஆலயத் தூய்மை, எறும்புகளுக்கும் காக்கை பட்சிகளுக்கும் உணவிடுதல், தீப வழிபாட்டின் தொன்மை, சக மனுஷங்க கிட்ட கனிவா நடந்துக்கறது, வீட்டுல மலர்ச்செடிகளை வளக்கறது , மரம் வளக்கறதுன்னு இந்த விஷயங்களை நீங்க பேசணும். இந்த மாதிரி விஷயங்கள் தான் சார் நம்ம நாட்டோட ஆன்மீகம்’’
நண்பர் ஆமோதித்தார்.
‘’மீட்டிங் முடிஞ்சு அவங்க போகும் போது ஒவ்வொருத்தருக்கும் ஒரு வன்னி மரக் கன்னு கொடுத்து வீட்டுல வச்சு வளர்க்க சொல்லுவோம். ஒரே நாள்ல நூறு மரக்கன்னு ஊர்ல பிளாண்ட் ஆகும்’’
அடுத்த திட்டம் உருவான மகிழ்ச்சியுடன் புறப்பட்டேன்.
இன்று 500 பேருக்கு கிச்சடி செய்து எடுத்துக் கொண்டு மாலை 5.30க்கு கிராமத்துக்குச் சென்று வினியோகித்தோம். கல்லூரிப் பேராசியரான எனது நண்பரும் உடன் வந்து வினியோகித்தார். அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. அரைமணி நேரத்தில் கொண்டு சென்ற உணவு தீர்ந்தது. வீடு திரும்பும் போது, நண்பர் நாளை எலுமிச்சை சாதம் அல்லது வெஜிடபுள் சாதம் செய்து கொண்டு செல்வோம் என்றார்.
Friday, 12 November 2021
முதல் நாள்
Thursday, 11 November 2021
அன்னபூரணி தேசம்
பாரத மண் மகத்தான எத்தனையோ பண்பாட்டு விழுமியங்களை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடர் கண்ணியாக நிலைநிறுத்தியிருக்கிறது. இயற்கையை இறைமையாகப் பார்த்தல், ஜீவன்களின் மீது கருணையோடிருத்தல், உயிர்களின் துன்பத்தைப் போக்குதல் என பல்வேறு விழுமியங்களை தலைமுறைகளின் மனதில் பதிய வைத்திருக்கிறது பாரதம். வாழும் உயிர்களுக்கெல்லாம் உணவிடுதலை அறம் என்கிறது நம் மரபு. அதனைப் பேரறம் எனவும் பறைசாற்றுகிறது.
Tuesday, 9 November 2021
பிரம்மார்ப்பணம்
இங்கே சென்ற வாரத்திலிருந்து மழை பொழிந்து கொண்டிருக்கிறது. பகலில் வானம் வெளி வாங்கவே இல்லை. இரவில் சில நாட்கள் சில மணி நேரங்கள் மழை இல்லாமல் இருக்கிறது. நள்ளிரவுக்குப் பின் மீண்டும் மழை தொடங்கி விடுகிறது. கிராமத்தில் இருக்கும் விவசாயத் தொழிலாளர்களின் குடிசை வீடுகள் தொடர் மழையால் தீவிர பாதிப்புக்குள்ளாகும். தரையில் ஈரம் ஊறும். கூரையில் இருக்கும் இடைவெளிகளின் வழியே மழைநீர் ஒழுகும். எரிபொருளாக வைத்திருக்கும் விறகுகள் நனைந்திடும். வீட்டு வாசல் சாலை சேறாகியிருக்கும். ஓரிரு நாள் மழை பொழிந்து அடுத்த சில நாட்கள் வெயில் இருந்தால் சமாளித்து விடுவார்கள். தொடர் மழையை எதிர்கொள்வது என்பது அவர்களுக்கு சற்றே கடினமான ஒன்று. கையில் சேமிப்பாக ஏதேனும் இருக்க வேண்டும். 99.99% எவரிடமும் எந்த சேமிப்பும் இருக்காது. மழை பொழியும் காலத்தில் விவசாய வேலைகள் எவையும் இருக்காது. நடவு, களையெடுப்பு, அறுவடை என எந்த பணிக்கும் வாய்ப்பு இருக்காது. கடினமான சூழ்நிலையை பல வருட பழக்கத்தால் கடந்து செல்ல பழகியிருப்பார்கள்.
தடுப்பூசிக்காக செயல் புரிந்த கிராமத்தின் குடிசைப்பகுதிகள் என் நினைவில் எழுந்தன. தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட போது அப்பகுதிகளின் நிலை என் மனதில் பதிவாகியிருந்தது. கடலூர் வெள்ளத்தின் போது, பல கிராமங்களில் ஒவ்வொரு குடிசை வீடாகச் சென்று அந்த வீடுகளின் சிரமங்களை நேரில் அறிந்த அனுபவம் இங்கே என்ன விதமான சூழல் நிலவும் என்பதை எனக்கு உணர்த்தியது. கிராமத்தில் இருக்கும் எனது நண்பர்களுக்கு ஃபோன் செய்தேன். குடிசைப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக நண்பர்கள் கூறினார்கள்.
கொஞ்ச நேரம் யோசித்தேன். என் உள்ளுணர்வு ஏதேனும் ஒரு செயலை முன்னெடுக்கச் சொன்னது.
கிராமத்தின் நண்பருக்கு ஃபோன் செய்தேன்.
’’ரொம்ப மோசமான பாதிப்பு 100 குடும்பத்துக்கு இருக்குமா?’’
‘’இருக்கும்ங்க’’
‘’நூறு குடும்பம்னா - குடும்பத்துக்கு 5 பேருன்னு வச்சுக்கிட்டா கூட 500 பேர். நாம ஒன்னு செய்யலாம். நான் ஃபிரண்ட்ஸ்கிட்ட பேசறன். உதவி கேக்கறன். அந்த 500 பேருக்கும் ஒரு நாளைக்கு ரெண்டு வேளை ஃபுட்-ன்னு ஆறு நாளைக்கு சப்ளை செஞ்சுடலாம்.’’
‘’6000 ஃபுட் பாக்கெட் . பட்ஜெட் ஹெவியா ஆகுமே?’’
‘’பகவான் மேல பாரத்தைப் போட்டு ஆரம்பிப்போம்.’’
‘’ராமா கிருஷ்ணா ஆண்டவா’’ என்றார் நண்பர்.
சிறிது நேரத்தில் கல்லூரிப் பேராசிரியராய் இருக்கும் எனது நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்தார். அவரிடம் விஷயத்தைச் சொன்னேன். அவர் சமையல் கலை அறிந்தவர். அவரே பிரமாதமாகச் சமைக்கக் கூடியவர்.
‘’ஒரு நாளைக்கு ரெண்டு வேளை மீல்ன்னா காலைல 8 மணிக்கு ஒன்னு. சாயந்திரம் 5.30க்கு ஒன்னு. இந்த டைமிங் சரியாக இருக்கும் ‘’ என்றார்.
‘’என்ன ஃபுட் சப்ளை செய்றது?’’
‘’காலைல புளி சாதம். சாயந்திரம் கிச்சடி’’
‘’இங்கே ஃபுட் பிரிபேர் பண்ணி பேக் பண்ணிடுவோம். கிராமத்துக்குப் போய் அங்க இருக்கற ஒவ்வொரு குடிசை வீட்டுக்கும் நேரடியா கொடுத்துடுவோம். அது தான் ஈசியான வே’’
‘’எப்ப ஆரம்பிக்கலாம்?’’
‘’நாளைக்கு வில்லேஜ் போய் அங்க இருக்கற ஃபிரண்ட்ஸ்கிட்ட பேசிட்டு வரேன். அவங்க அபிப்ராயம் தெரிஞ்சுகிட்டு டேட் ஃபிக்ஸ் பண்ணிடுவோம்’’
’’பட்ஜெட் தாங்குமா?’’
‘’காட் இஸ் கிரேட்’’
நண்பர் சென்றவுடன் ஆதித்யாவுக்கு ஃபோன் செய்தேன். அவன் வங்கியிலிருந்து புறப்படும் தருவாயில் இருந்தான்.
‘’சொல்லுங்க அண்ணா’’
‘’தம்பி. நான் சொல்ற எதையும் நீ மறுத்தது கிடையாது. எங்கிட்ட எந்த விஷயம் பத்தியும் நெகடிவ்வா பேசுனது கிடையாது. என் கிட்ட கோபப்பட்டது கிடையாது. இவ்வளவு இருந்தும் எனக்கு உன்கிட்ட சில விஷயத்தை சொல்லும் போது மனசு கஷ்டப்படுது’’
‘’ஏன் அண்ணா இப்படி ஃபீல் பண்றீங்க. என்ன விஷயம்னு சொல்லுங்க’’
‘’நீ ஒருத்தன் தான் நான் கிரியேட்டிவ் ஒர்க்குக்கு கொடுக்க வேண்டிய நேரத்தை பொது வேலைகளுக்கு கொடுத்திடறன்னு வருத்தப்படுறவன். ‘’
’’அது வருத்தம்னு சொல்ல முடியாது. இன்னும் நிறைய நீங்க எழுதணும்ங்கற விருப்பத்தைத்தான் அப்படி சொல்லியிருப்பன். பரவாயில்லை. நீங்க சொல்ல வந்த விஷயத்தை சொல்லுங்க. ‘’
‘’நாம ஒரு கிராமத்துல வாக்சினேஷனுக்காக ஒர்க் பண்ணோம்ல அந்த கிராமம் இப்ப மழையால ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கு. அங்க இருக்கற 500 பேருக்கு 6 நாளைக்கு சாப்பாடு போடனும்’’
‘’நல்ல விஷயம் தான் அண்ணன் செஞ்சுடலாம். இப்ப அங்க அவ்வளவு மழையா?’’
‘’இந்த விஷயத்துல கொஞ்சம் கூட இருந்து சப்போர்ட் பண்ணு’’
‘’என் சப்போர்ட் உங்களுக்கு எப்பவும் எல்லா விஷயத்துலயும் உண்டு’’
நான் திட்டமிடல் என்ன என்பதை அவனிடம் விளக்கினேன்.
‘’இன்னும் ஒன் ஆர் டூ டேஸ்ல நாம ஆரம்பிக்கணும். நீ இந்த விஷயத்துக்குள்ள பல பேரை இன்குளூட் செய்யணும். ‘’
‘’செஞ்சுடலாம்ணா’’
‘’அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய் போல் போற்றாக் கடை- ன்னு ஒரு திருக்குறள் இருக்கு. அடுத்த உயிரோட துன்பத்த தன்னோட துன்பமா நினைக்கறது தான் அறிவோட லட்சணம்னு வள்ளுவர் சொல்ராரு. ‘’
‘’இந்த திருக்குறள் கேட்டிருக்கேண்ணா. நான் வீட்டுக்கு போய்ட்டு ஃபோன் செய்றன்’’
கல்லூரிப் பேராசிரியர் ஃபோன் செய்து , ‘’பிரபு ! நான் சொல்ற விஷயங்களை நோட்ல குறிச்சு வச்சுக்க.’’ என்றார்.
நான் நோட்டில் பேனாவால் குறித்துக் கொண்டேன்.
‘’அரிசி 600 கிலோ. ரவா 300 கிலோ. கடலை எண்ணெய் 120 லிட்டர். காய்கறி (கேரட், உருளை,தக்காளி) - 50 கிலோ. புளி - 60 கிலோ. ‘’
அன்னமே பிரம்மம் என்னும் உபநிஷத மந்திரத்தை எண்ணிக் கொண்டேன்.
வன்னி
இந்திய மண்ணில் மரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு என்பது மிக ஆழமானது. பல்லாயிரம் ஆண்டு கால பாரம்பர்யம் கொண்டது. இந்தியப் பண்பாடு என்பதே இங்கே வாழ்ந்த குடிகள் உருவாக்கி பேணிய இவ்வாறான நுண்ணுணர்வுகளின் தொகுப்பே ஆகும். கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீரம் வரை நதிகளை தெய்வமாக வணங்கும் வழக்கம் இருக்கிறது. பல இந்தியக் குடும்பங்கள் காலை எழுந்ததும் ‘’ கங்கை யமுனை கோதாவரி நர்மதை சரஸ்வதி சிந்து காவேரி’’ என இந்திய மண்ணின் நதிகளின் பெயர்களை உச்சரிக்கின்றன. இந்தியா இன்றும் விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட நாடு என்பதால் அந்த கண்ணி முற்றிலும் அறுபடாமல் நிலைத்திருக்கிறது. தொல் படிமங்கள் தலைமுறைகளின் ஆழ்மனதில் பல்வேறு விதமான சடங்குகளின் வழியாக வழிபாட்டு முறைகளின் வழியாக நிலைபெறுகின்றன. ஆடிப்பெருக்கு பண்டிகையின் அன்று காவிரியின் படித்துறைகளைக் காண்பவர்களால் அதனை உணர்ந்து கொள்ள முடியும். படித்துறையில் பெரும்பாலும் இருக்கும் வினாயகர் ஆலயங்களில் பூசனைகள் செய்து பெண்கள் மஞ்சள் கயிறை கழுத்திலும் கையிலும் கட்டிக் கொள்வார்கள். கயிறைக் கட்டிக் கொள்ளும் போது மெல்ல நகர்ந்து கொண்டிருக்கும் காவிரியைத் தம் அன்னையாக எண்ணும் அவர்களுடைய உணர்வு சிலிர்க்கச் செய்வது.
காதலின் துயரம்
Monday, 8 November 2021
மழை
நேற்று இரவு முழுக்க மழை பொழிந்து கொண்டேயிருந்தது. இரவில் உறக்கத்தில் விழிக்கும் போதெல்லாம் மழைத்தூறலின் ஒலி கேட்டவாறிந்தது. மழையின் சத்தம் எப்போதும் சூழ்ந்திருப்பது போன்ற உணர்வை மழைக்காலம் எளிதில் உருவாக்கி விடுகிறது. மழை ஓர் ஆசுவாசத்தை மனத்தில் நிறைக்கிறது. மழை நாட்கள் இளம் பிராயத்தின் நினைவுகளை மிக அருகில் கொண்டு வருகிறது. சிறுவர்கள் மழையால் ஆத்மார்த்தமாக மகிழ்கிறார்கள். பெரியவர்கள் உலகம் ஏற்படுத்தும் கட்டுப்பாடுகளை விதிமுறைகளை தற்காலிகமாக ரத்து செய்வதால் மழை மேல் சிறுவர்களுக்குப் பேரார்வம். காலம் காலமாக சிறுவர்களின் காகிதக் கப்பல்களை ஏந்தி முன்னழைத்துச் சென்று கொண்டிருக்கின்றன மழைநீர் ஓடைகள்.










