Saturday, 30 December 2023
சீவல் ( நகைச்சுவைக் கட்டுரை)
Friday, 29 December 2023
அந்தி நிலவும் அதிகாலைச் சூரியனும் : கவிஞர் சுபஸ்ரீ கவிதைகள்
மலர்ந்திருக்கும் தாமரைகள்
வீழ்ந்தும் எழுந்துவரும் சூரியன்
வரம்தரவே பயணம் அனைத்தும்
வரம்பெறக் காத்திருத்தலே போதும்
கனன்ற சொல்லொன்று
புடமிட்டுத் தகத்தக்க
புள்ளொன்றால் கலைந்ததவம்
புலன்மறுத்த சித்தனவன்
கல்லென்று சபித்திட்டான்
கடுஞ்சொல்லால்
தவம் இழந்தான்.
காடுறையும் காலம்
கல்லாய் உறைந்திட
கூர்முனைகள் மழுங்கிட
உருட்டியது காலநதி.
உருவமிலி உருவேறி
பூசனைக்கு வந்தமர்ந்த
யுகங்கடந்த கல்தன்னை
பூசித்த முனிவனின்
யாசித்த கரங்களில்
கல்உறையும் புள்தருமோ
சாபவிமோசனம்
ஆதியின் மூலமென்ன
அறியொணாத ஒன்றென்றால்
உன் அறிவால் ஆவதென்கொல்
தேடிடும் இரந்திடும் நீ
அகந்தையென்றாகிடும் நீ
அறியாத ஒன்றுள்ள வரை
அறிவின் ஆணவம் ஏன்
மறுபடி ஐனனம்
இடையினில் இருளினில்
தேடல்தான் பயணம்..
சிலர் வழிகாட்டுவார்
பலர் நடைபோட்டிட -
சிலர் பலராகவே
அவர் வலிதாங்குவார்
பிறன் நலம்வாழ்ந்திடத்தன்
பிறவியை மாற்றுவார்
முள்முடி தாங்கியும்
முகமலர் காட்டுவார்
விறகொடு எரிவது
உடலது தானே
உடன்வரப் போவது
அவனருள் தானே
மண்ணொடு கலந்தபின்
எஞசுவதென்ன
மனதொடு கலந்திடும்
நினைவுகள்தானே
வெற்றுத் தாளொடு
பிறந்தவர் நாமே
எழுதுவோம் பாக்களை
அன்பொடு தினமே
தாளது ஒருதினம்
அவன்தாள் சேரும்
எழுதிய கவிதைகள்
மனதிடை வாழும்
அன்பது சிவமாம்
அன்பது தவமாம்
வாழ்வை நீட்டும்
அன்பின் கரமாம்..
அன்பே சிவம்! அன்பே சிவம்!!
கிணற்றுறையில் கூடுகட்டி
தவறி விழும் சிறுகுருவி..
பிசின் வடியும் பட்டை
தூரில்துளிர் சிறு வேம்பு..
வால் தூக்கி அணில் துரத்த
தாவும் ஒரு காகம்..
துணி துவைக்கும் கல்லில்
காக்கை அணில் சமபந்தி..
மஞ்சள் உரசிப் பச்சையான
கல்லிடுக்கு ரசவாதம்..
நிலவொளியை வடிகட்டி
இளநீராக்கும் தென்னை..
நிலவுதிர் கால இரவுகளில்
இறைந்து கிடக்கும் வேப்பம்பூ..
நடைபயின்ற நாட்களின்
நாற்றங்கால் பதியங்கள்..
நேற்று'கள்' நிறைந்திட்ட
இன்றைய கனவுகளில்
இன்றுக்கு இடமில்லை..
நாளைவரும் கனவுகளில்
அசைபோட இசைகூட
இன்றெவையோ கருப்பொருட்கள்..
என் விதையாம் கவிதைகளை
நிழலில் ஒளிதேடி
நிறமில்லை என்னாதே
நன்றாகத் தேடிப்பார்
தொலையும்வரை கிட்டும்வரை
குடைதேடிக் கவிகள்
கூரையுள் புகும்போது
நனைந்தபடி கவிதை
மழையோடு போனது
சந்தையடி சந்தடியில்
நடமாட இடமின்றி
அஞ்சுவதஞ்சிக் காணாமல்போன
பஞ்சுமிட்டாய் பொம்மையுடன்
தோளேறிப் போனது
என்றும் இன்றுதானோ
எங்கேயோ வழிதவறி
சொற்காட்டில் சிக்கி
திக்குத்தெரியாமல்
மயங்கி நிற்கலாம்
அந்தமயக்க விதை
நித்தமும் நீள்வாக்கு
நடந்த தடம் காணாது
மேகம்போல் கடந்துவிடும்
எங்கேனும் எவரேனும்
கண்ணால் கண்டுகொண்டால்
கண்டவர் அக்கணமே
காணாமல் போகுங்கால்
பிழைத்திருக்கக் கூடும்
பிழையாத என் கவிதை!!
என்னிடமிருந்து?
நில்லாத பயணமா
ஆயிரம் காதமா
அதுவொன்றும் தூரமல்ல
ஒற்றைக்கால் தவமா
தென்திசைக் கன்னிக்கு
அலைகடலும் சாரமல்ல
நூறு பிறவிகளின் தவிப்பா
வேறொன்றில்லா சித்தமிது
எண்ணங்களும் பாரமல்ல
கண்கட்டை நீக்கிவிட்டு
ஒளிந்து கொள்பவனே
இது என்ன ஆடல்?
பல்லாயிரம் சொற்களை முன் வைக்கிறேன்
சொல்கடந்த மௌனத்தை
நிகர் வைக்கிறாய்
நில்லாத என் விழிநீரை
நறுமண நீரென்று சூடுகிறாய்
உறக்கமழிந்த என் விழிகளை
உறுமணியாய் அணிந்தோய்
கனமொழியா நினைவுகளை
குழல் மூச்சாய் நிறைத்தவனே
உனைச் சேரும்
தவமன்றி ஏதுமில்லை
இந்நதிக்கு
8. இசைத்தும்பி
மணத்தை அனுப்பிவிட்டு கிளையமரும் சிறுமலர்
அருந்தேன் தேடி எங்கோ கிளம்பிவிட்ட இசைத்தும்பி
மகரந்தத்துகள் சுமந்து
திசைபரவும்
நாளைய மலர்களுக்காய்
தும்பியின் கீதம்
இரவு நடமாடுகிறது
மணலில் கிடக்கும்
நேற்றின் பாதச்சுவடுகளில்
வெப்பம் ஏறுகிறது
யுகச்சிமிட்டலுக்குக் காத்திருந்த
அச்சிறு விண்மீன்
நீல வெளியுள்
மூழ்கி மறைகிறது
வானில் அலைகள் எழ
கடலில் விண்மீன்கள் மிதக்கின்றன
படகை செலுத்தியபடி
வலை விரிக்கிறான்
கொஞ்சமாய் துள்ளல்கள்
இன்னும் முடியவில்லை
வலைக்குள் துடிக்கும்
மீன்களின் இரவு
வட்டங்களால் ஆன வானமொன்றை
வரைந்து செல்கிறது புள்
வண்ணங்களால் ஆனதே வானமென்று
சிறகசைக்கிறது தும்பி
ஒலியால் ஆனதென்று
சிலம்பியது குருவி
ஒளியால் ஆனதென்றது விழி
தானற்றதனைத்துமே வெளியென்றது புவி
ஏதுமில்லாது ஏகாந்தித்திருந்தது அது
1
நீளும் மழையை இரவு நனைக்கிறது
மூடாத கனவுகளை விழிகள் நிறைக்கிறது
பரவும் திசை குழலிசை தேடி அலைகிறது
சொட்டி ஓய்ந்த நாளோரம் வழி தேங்கிக் கிடக்கிறது
சிதறிய உன்னை சேகரிக்கும் என்னை
அறிந்து கண்சிமிட்டும் ஆயிரம் நிலவுகள்
46. மறப்பதெப்படி
உன் புன்னகையை
அடுக்கி வைக்கிறாள்
பூவிற்கும் பெண்
உன் அழைப்பை
கூவிச் சொல்கிறது
சிறுகுருவி
உன் மௌனத்தை
வாயிலிட்டு சுவைக்கிறது
இந்த இரவு
உன் தனிமையை
அறிவிக்கிறது
ஒற்றை விண்மீன்
இங்கு நான் உனை மறப்பதெப்படி
Thursday, 28 December 2023
வாடகை ( நகைச்சுவைக் கட்டுரை)
1000 மணி நேர வாசிப்பு
2023ம் ஆண்டு தொடங்குகையில் இந்த ஆண்டில் 1000 மணி நேரம் வாசிக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டு 1000 மணி நேர வாசிப்பு சவாலில் பங்கு கொண்டேன். 365 நாட்கள் நிறைவாக உள்ள இந்நிலையில் விரும்பிய இலக்கில் பாதியை எட்டியுள்ளேன் என்பது மகிழ்ச்சியையே தருகிறது. எந்த போட்டியுமே நம்மை நாம் அறிவதற்கான ஒரு வாய்ப்பே. எனவே அதில் நாம் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். வாசிப்பு சவாலில் ஆர்வத்துடன் பங்கேற்றேன். நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.
நானாவிதமான பணிகளில் ஈடுபட்டிருக்கும் வாழ்க்கைமுறை என்னுடையது. படைப்பூக்கச் செயல்பாடுகள். அறிவுச் செயல்பாடுகள். வணிகச் செயல்பாடுகள். பொதுப்பணிகள் என என் மனம் எப்போதும் ஏதேனும் ஒரு தீவிரமான இயக்கத்தில் இருந்து கொண்டிருக்கும். அவை என் வாசிப்பின் மீது பாதிப்பைச் செலுத்தக்கூடியவை. இருப்பினும் தினமும் வாசிப்புக்கு கணிசமான நேரம் ஒதுக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். இலக்கியம் வாசிக்கும் போது அந்த படைப்பு அளிக்கும் அனுபவம் என்பது வாசகனை சில நாட்கள் இறுக்கிப் பிடித்திருக்கும். அந்த பிடி தீவிரமானது. இலக்கியத்தின் நுட்பமே அதுதான். அவ்வாறான நாட்களில் சில நாட்கள் ஏதும் செய்ய இயலாமல் போகும். உண்மையில் அவ்வாறான தருணங்களும் இந்த ஆண்டில் நிகழ்ந்தன.
இந்த வாசிப்பு சவாலில் நான் உணர்ந்த தடை என ஒன்று உண்டு. அது நுண்ணியது. மென்மையானது. அதாவது, என்னால் வாசிப்பையும் நேரத்தையும் இணைத்துக் கொள்வதில் ஒரு போதாமையை உணர முடிந்தது. நூல் வாசிப்பில் நேரப் பிரக்ஞை என்பதை எப்போதும் இணைத்து வைத்துக் கொண்டது இல்லை. வாசிக்க நேர்ந்த முதல் நூலிலிருந்தே நூலை எடுத்தால் நேரம் போவது தெரியாமல் வாசித்துத் தான் பழக்கம் இருக்கிறதே தவிர ஒரு நாளில் எவ்வளவு நேரம் வாசிக்கிறோம் என கணக்கிட்டுக் கொண்டதில்லை. எனவே அது சார்ந்தும் சில அகத்தடைகள் இருந்தன. ஸ்டாப்வாட்ச் போன்ற உபகரணங்கள் பயன்படுத்தினால் இதனைக் கடக்க முடியும் என்று தோன்றுகிறது.
இலக்கை முழுமையாக எட்ட முடியாமல் போய் விட்டதே என எந்த வருத்தமும் இல்லை. இந்த முயற்சியில் நாம் சில விஷயங்களைக் கவனித்திருக்கிறோம். கற்றிருக்கிறோம். அடுத்த முயற்சியில் ஊக்கத்துடன் ஈடுபட இது உதவும் என்னும் நினைவு பெருமகிழ்ச்சியையேத் தருகிறது. கற்றல் என்பது இந்த உணர்வே என்பதை ஒரு வாசகனாக நான் அறிவேன்.
வாசகன் ஒவ்வொரு நாளும் நாம் வாசிக்க வேண்டிய நூல்கள் இன்னும் இன்னும் இருக்கிறதே என்னும் எண்ணமே கொள்வான்.
கல்வி கரையில ; கற்பவர் நாள் சில.
Sunday, 24 December 2023
ட்ரிப் கேன்சல் ( நகைச்சுவைக் கட்டுரை)
அமைப்பாளர் காஞ்சிபுரம் செல்ல ஒரு வார காலமாக ஏற்பாடு செய்கிறார். இருப்பினும் ஏற்பாடுகளில் ஏதேனும் ஒரு இடைவெளி ஏற்பட்டு விடுகிறது. அடுத்தடுத்து முயன்று ஏதேதோ செய்து பார்த்தார். எதுவும் சரிவரவில்லை. மனம் தளராமல் முயற்சியைத் தொடர்ந்தார்.
ஏன் தள்ளிப் போகிறது என்பதை அமைப்பாளரால் கண்டுபிடிக்க முடியவில்லை. முக்கிய காரணம் ரயிலிலோ அல்லது பேருந்திலோ இரவுப் பயணம் செய்வதை அமைப்பாளர் தவிர்க்க விரும்புகிறார். இரவுப் பயணத்தின் உடல் அசதி மறுநாள் பகலில் இருக்கும் என்பது காரணம். செல்ல வேண்டிய ஊருக்கு பகலில் பயணம் செய்தால் திட்டமிட்டதை விட இரண்டு நாட்கள் கூடுதலாக தேவைப்படும். கட்டுமானத் தொழிலில் இருக்கும் அமைப்பாளருக்கு கூடுதலாக இரண்டு நாட்கள் என்பது சாத்தியமில்லை.
இன்று காலை கிளம்பினார் அமைப்பாளர். அவருடைய உறவினர் அவரை செங்கல்பட்டில் பிக் - அப் செய்து கொண்டு மாலை 4 மணியிலிருந்து இரவு 9.30 வரை காஞ்சி ஆலயங்களை சேவித்து விட்டு பின்னர் இரவு சென்னை திரும்பி உறவினரின் வீட்டில் உறங்கி விட்டு நாளை காலை 4 மணி அளவில் புறப்பட்டு 5.30 அளவில் காஞ்சிபுரம் சென்று மீண்டும் ஆலயங்களை சேவிப்பதாகத் திட்டம். திட்டம் நல்ல திட்டம்தான்.
இன்று காலை ஒரு ரியல் எஸ்டேட் மீடியேட்டரை சந்தித்து அமைப்பாளர் சொன்ன இடம் ஒன்றுக்கு பர்சேஸர் ஒருவரை ஏற்பாடு செய்யுமாறு கூறினார். பின்னர் தற்போது நடக்கும் வணிக வளாகக் கட்டுமானத்துக்கு 1000 செங்கற்கள் வந்து சேர வேண்டும். அதன் வருகையை உறுதி செய்தார். இன்று வணிக வளாக வேலை நடப்பதாக இருந்தது. பணியாளர்கள் தெருவில் ஒரு துக்கம். எனவே இன்றைய வேலை ‘’கேன்சல்’’. இன்று ஒரு பார்ட்டிக்கு அமைப்பாளர் இடம் காட்ட வேண்டும். நாளை மறுநாள் காட்டலாம் என இருந்து விட்டார்.
காலை உணவு அருந்தி விட்டு பயணம் புறப்பட்டார். வழக்கம் போல் அலைபேசியை சுவிட்ச் ஆஃப் செய்து கையில் வைத்துக் கொண்டார். இப்போது ஒரு புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறார். 700 பக்க புத்தகம். 300 பக்கம் வாசித்திருக்கிறார். எனவே பேருந்துப் பயணத்தில் வாசிக்கலாம் என கையில் எடுத்துக் கொண்டார். தண்ணீர் பாட்டிலும் எடுத்துக் கொண்டார். பைக் வீட்டில் இருப்பது தானே வீட்டில் இருப்பதாக வீட்டில் இருப்பவர்களை நம்ப வைக்கும் என நம்பும் அமைப்பாளர் பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கினார். கொஞ்ச தூரம் நடந்திருப்பார் ; அமைப்பாளரின் நண்பர் ஒருவர் வந்து ‘’லிஃப்ட்’’ கொடுத்தார். பேருந்து நிலையம் சென்றடைந்தார். பேருந்து நிலையத்தில் செங்கல்பட்டு வழியே சென்னை செல்லும் பேருந்து மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. நடத்துநர் அதன் படியில் நின்றிருந்தார். அமைப்பாளர் செங்கல்பட்டு என்றார். நடத்துநர் ‘’சீட் இல்ல சார். வண்டி ஃபுல் ‘’ என்றார். பின்னர் ஒரு சிதம்பரம் பேருந்தில் ஏறி சிதம்பரம் சென்று சேர்ந்தார். சென்னையில் இருக்கும் உறவினருக்கு அலைபேசியை ஆன் செய்து ஃபோன் செய்தார். அப்போது அவர் நண்பர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. இரண்டு நிமிடம் முன்னால் அழைத்திருந்தாலோ இரண்டு நிமிடம் கழித்து அழைத்திருந்தாலோ ஃபோன் சுவிட்ச் ஆஃப் என இருந்திருக்கும். அவர் அழைத்த நேரமும் ஃபோன் ஆன் ஆகியிருந்த நேரமும் ஒன்றாக இருந்திருக்கிறது. வெளியூர்க்காரர் . ஊருக்கு வருகிறார். அமைப்பாளர் உடனிருக்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார். அமைப்பாளர் சரி என்று விட்டார்.
எந்த பேருந்தில் சிதம்பரம் வந்தாரோ அதே பேருந்தில் ஏறி ஊர் திரும்பினார். இடம் காட்ட வேண்டிய பார்ட்டிக்கு இன்று மாலை இடத்தைப் பார்க்கலாம் என குறுஞ்செய்தி அனுப்பினார். பேருந்து நிலையத்திலிருந்து வீட்டுக்கு மெல்ல நடந்து வந்து கொண்டிருந்த போது காலையில் யார் லிஃப்ட் கொடுத்து பேருந்து நிலையத்தில் கொண்டு போய் விட்டாரோ அவர் அந்த பாதை வழியே வந்தார்.
‘’என்ன சார் இங்க இருக்கீங்க’’ என வியப்புடன் கேட்டார்.
அமைப்பாளர் சொன்னார் ‘’ட்ரிப் கேன்சல்’’.
நண்பர் அமைப்பாளரை வீட்டில் ‘’டிராப்’’ செய்து விட்டு சென்றார்.
Saturday, 23 December 2023
சுஷிலுக்கு ஒரு கடிதம்
அன்புள்ள சுஷில் குமார் பாரதி,
சற்று நேரம் முன்னால் , தங்களுடன் உரையாடியது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. நாவல் குறித்து எதையெல்லாம் கூற வேண்டும் என்று நினைத்தேனோ அதையெல்லாம் பதிவில் எழுதி விட்டேன். என்றாலும் தங்கள் குரல் கேட்க வேண்டும் என்று ஒரு ஆசை. சில மணி நேரங்கள் முழுமையாக என் மனத்தை ஆக்கிரமித்து நிறைந்த எழுத்தின் சொந்தக்காரனின் குரலைக் கேட்க முயலாமல் இருந்திருந்தால் இந்த நாள் பூர்த்தியாகியிருக்காது. தங்களுடனான உரையாடல் அளித்த மகிழ்ச்சி மிகப் பெரிது சுஷில்.
உங்கள் நாவலை மிகவும் கச்சிதமானது என வாசிக்கும் போதும் வாசிக்கும் பின்னும் உணர்ந்தேன் சுஷில். உடல் உணரும் வலிகளுக்கு இருக்கும் கச்சிதம். மனம் உணரும் வலிகளுக்கு இருக்கும் கச்சிதம்.
நீங்கள் மேலும் பல நாவல்களை எழுதுவீர்கள் சுஷில். பல பெரிய நாவல்கள். அவற்றை எழுத நீங்கள் மெனக்கெட வேண்டும் என்பதில்லை . உங்கள் மனதில் நாவலுக்கான கரு என ஒன்று உருவாகியிருப்பதை நீங்கள் கவனிக்கும் கணத்திலிருந்து உங்கள் மனதில் அது தானாகவே வளர்ந்து ஒரு நாவலாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். இது முகஸ்துதி இல்லை சுஷில். உங்கள் முதல் நாவலின் பிரதி கொண்டிருக்கும் அடர்த்தி கூறும் கட்டியம் அதனைக் காட்டுகிறது.
மீண்டும் வாழ்த்துக்கள் சுஷில்.
அன்புடனும் பிரியத்துடனும்,
பிரபு
சுந்தரவனம் : தொலைந்து போவதும் காணாமல் போவதும்
Thursday, 21 December 2023
நீர் வார்த்தல்
சேலம் அருகே தங்கள் வயலில் முழுமையாக தேக்கு நட உள்ள விவசாயிகளுக்கு எழுதிய கடிதம் :
பிரபு
பணிகளும் பயணங்களும்
என்னுடைய இளம் வயதிலிருந்தே எனக்கு நீண்ட பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கனவு உண்டு. அந்த கனவே என்னை ‘’காவிரியிலிருந்து கங்கை வரை’’ செல்ல வைத்தது. மோட்டார்சைக்கிளில் மேற்கொண்ட அப்பயணமே என் அகத்தைக் கிராமங்களுக்கான பணியை நோக்கி இட்டுச் சென்றது.
இப்போது என் அகம் இரண்டு கனவுகளைக் காண்கிறது. கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த கனவு. இன்னும் மேற்கொள்ள வேண்டிய நீண்ட தூர பயணங்கள் குறித்த கனவு.
பொதுவாக வாசிக்கும் ஏதாவது ஒரு நூலிலிருந்து நீண்ட தூரப் பயணத்துக்கான தூண்டலைப் பெறுவது எனது வழக்கம். இப்போது நான் மேற்கொள்ள வேண்டிய நீண்ட தூரப் பயணங்கள் என நான் எண்ணுவதைப் பட்டியலிடுகிறேன். இவை நிகழ வேண்டும் என்பது எனது பேராவல். பல்வேறு விதமான லௌகிகப் பணிகளும் பொதுப் பணிகளும் சூழ்ந்துள்ளன. ஒரு கூட்டத்தில் யானை தனக்கான பாதையை உருவாக்கிக் கொள்வதைப் போல நான் கனவு காணும் பெரும் பயணங்கள் தனக்கான துவக்கத்தை உருவாக்கிக் கொள்ளும் என்பதை ஒரு பயணியாக நான் உணர்கிறேன்.
1. தொண்டை நாட்டு திவ்யதேசங்களுக்கான ஒரு பயணம்
2. பாண்டிய நாட்டு திவ்யதேசங்களுக்கான ஒரு பயணம்
3. மலை நாட்டு திவ்யதேசங்களுக்கான ஒரு பயணம்
4. தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் மேற்கொண்ட ‘’வேங்கடம் முதல் குமரி வரை’’ நூலில் உள்ள தலங்கள் நோக்கி ஒரு பயணம். ( பாலாறு, காவிரி, வைகை, தாமிரபரணி கரைகளில் உள்ள ஆலயங்களை நோக்கிய பயணம்)
5. வட நாட்டு திவ்ய தேசங்களுக்கான ஒரு பயணம்
6. ஆந்திரா தெலங்கானா மாநிலங்களில் மட்டும் ஒரு பயணம்
7. தமிழகத்தில் தொடங்கி குஜராத் சென்று அங்கிருந்து காஷ்மீர் சென்று முழு உத்திரப்பிரதேசத்திலும் பயணித்து வங்காளம் வழியே அஸ்ஸாம் சென்று வடகிழக்கு மாநிலங்களில் பயணித்து மீண்டும் வங்காளம் வந்து அங்கிருந்து ஒரிஸ்ஸா வழியே கிழக்குக் கடற்கரை வழியாகப் பயணித்து ஆந்திரா வழியே தமிழகம் வந்தடையும் பயணம்.
8. நர்மதா நதி வலம்
9. கோதாவரி நதியின் கரையில் பயணிக்கும் ஒரு பயணம்.
எந்த ஒரு நீண்ட நெடிய பயணமும் சிறிய உறுதியான முதல் அடியிலிருந்தே துவங்குகிறது. ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு மனிதனுக்கும் கற்றுத் தருவது அதையே.
Wednesday, 20 December 2023
ந.சுப்புரெட்டியார் நூல்
அறிஞர் ந.சுப்புரெட்டியார் எழுதிய ‘’தொண்டைநாட்டுத் திருப்பதிகள்’’ நூலின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
