Sunday, 30 April 2023
1111 மணி நேரம் நோக்கி
Friday, 28 April 2023
ஒரு புதிய எண்ணம்
’’காவிரி போற்றுதும்’’ பணிகளை அதிகப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் ஆவலும் வேட்கையும் அதன் அமைப்பாளர் என்ற முறையில் எனக்கு எப்போதுமே உண்டு. அருகு போல் வேரூன்றி ஆல் போல் ‘’காவிரி போற்றுதும்’’ தழைக்க வேண்டும் என்பதை எண்ணாத நாள் இல்லை. எனினும் நாம் நுண் அலகிலான செயல்களை முன்னெடுக்கிறோம். அனைவரையும் பங்கெடுக்க செயலாற்ற வைக்கிறோம். அதன் மூலம் கிராம மக்களை இணைக்கிறோம் அல்லது இணைக்க முயற்சி செய்கிறோம்.
தமிழகத்தின் விவசாயியை தன்னம்பிக்கை கொண்ட சுய சார்புள்ள ஒரு பொருளியல் சக்தியாக மாற்ற வேண்டும் என்பது ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளுக்கு அடிப்படை. தமிழகத்தின் ஒரு கிராமத்திலாவது அந்த கிராமத்தில் உள்ள விவசாயக் குடும்பங்களும் பொருளியல் தன்ன்றைவு பெற்றுள்ள நிலையை அடையச் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் ‘’காவிரி போற்றுதும்’’ செயல்படுகிறது. ஒரு கிராமத்தின் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் 20 தேக்கு மரக்கன்றுகளை அளிப்பதன் மூலம் 15 ஆண்டுகளில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.20,00,000 வருமானம் கிடைக்க வேண்டும் என்று உத்தேசித்து நாம் செயல்படுகிறோம்.
சிறப்பான இலக்குதான். திட்டமிடலும் சிறப்பாகவே உள்ளது. எனினும் நாம் ஐந்நூறு விவசாயக் குடும்பங்களை உத்தேசிக்கும் போது விவசாயம் செய்வதில் விவசாயத்தை செயல்படுத்தும் முறைகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியை பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். மரங்கள் சிறப்பாக வளர என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை அவர்களுக்கு உருவாக்க வேண்டியிருக்கிறது. பொதுவாக விவசாயிகள் ஒரே கிராமத்தில் உள்ள மண் சில இடங்களில் சத்து மிகுந்ததாகவும் சில இடங்களில் சத்து குறைந்ததாகவும் இருக்கும் என்று நினைக்கிறார்கள். அது ஒரு பகுதி உண்மை. முழு உண்மை அல்ல. எந்த இடத்திலும் ஒரு மரக்கன்றை நடும் போது 2 அடி நீளம் 2 அடி அகலம் 2 அடி ஆழம் கொண்ட ஒரு குழியை எடுத்து அதில் மக்கிய சாண எரு இட வேண்டும். இந்த எட்டு கன அடி (2*2*2) சாண எரு அந்த மரக்கன்றின் அடிமண்ணாகச் செயல்பட்டு மரத்தின் வளர்ச்சியை உறுதி செய்யும். ஏற்கனவே இருக்கும் மண் சத்தானதா இல்லையா என்பது முதன்மையான விஷயம் இல்லை. மக்கிய சாண எரு எந்த சத்தான மண்ணையும் விட சத்து மிகுந்தது. குழி எடுக்கப்படும் எட்டு கன அடி கொள்ளளவிலேயே கன்றுகள் வேர்விடப் போகின்றன. அந்த கொள்ளளவு மரங்களுக்கு தங்களுக்குத் தேவையான சத்துக்களை எடுத்துக் கொள்ள போதுமானது. இதனை விவசாயிகள் மனதில் பதிக்க வேண்டியிருக்கிறது. பொதுவாக ‘’காவிரி போற்றுதும்’’ இருப்பதிலேயே மிக மிக செலவு குறைந்த வழிமுறை எதுவோ அதையே விவசாயிகளுக்குப் பரிந்துரைக்கிறது. ஐந்நூறு பேரிடம் இந்த விஷயம் சென்று சேரும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் இதனை உள்வாங்கிக் கொள்வார்கள் என்பதும் ஒவ்வொரு விதத்தில் செயலாற்றுவார்கள் என்பதும் நடைமுறை உண்மை.
தேக்கு மரம் விவசாயிகளுக்கு பொருளியல் பலன் தரும் என்றாலும் அதனை அவர்களுக்கு அளிக்கும் முன் மரம் வளர்ப்பில் வேறு சில மரங்களைக் கொண்டு அவற்றை வளர்த்து அவர்களுக்கு ஒரு பழக்கத்தை உருவாக்கலாம் என எண்ணினேன்.
செயல் புரியும் கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மா, பலா, வாழை, நெல்லி, கொய்யா, எலுமிச்சை, நாவல் என ஏழு மரக்கன்றுகளை அளிக்கலாம் என ‘’காவிரி போற்றுதும்’’ திட்டமிட்டுள்ளது.
ஒரு நாளைக்கு கிராமத்தின் 20 குடும்பத்தினரை நேரில் சந்தித்து மரம் நடும் முறை குறித்து அவர்களிடம் நேரடியாகப் பேசி இந்த கன்றுகளை வழங்குவது அவர்களுக்குப் பயன் தரும் என எண்ணுகிறேன். அவர்கள் எவ்விதம் நாம் அளிக்கும் குறிப்புகளைப் பின்பற்றுகிறார்கள் என்பதை அவதானிக்கவும் எவ்விதமான ஐயங்கள் எழுகின்றன என்பதை அறிந்து அவற்றைத் தீர்த்து வைக்கவும் ஒரு வாய்ப்பு உருவாகக் கூடும்.
கிராமத்தில் காலை 6 மணியிலிருந்து 9 மணி வரை மூன்று மணி நேரம், நேரம் ஒதுக்கினால் 20 குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு விஷயத்தை விளக்கி அவர்களுக்கு மா, பலா, வாழை, நெல்லி, கொய்யா , எலுமிச்சை ஆகிய மரக்கன்றுகளை அளிக்க முடியும். கிராமத்தின் எல்லா குடும்பங்களுக்கும் மரக்கன்றுகளை கொண்டு சேர்க்க இதே திட்டமிடலில் 30 நாட்கள் ஆகும்.
பணி இத்துடன் முடிந்து விடாது. அவர்கள் எவ்வாறு மரக்கன்றுகளை நட்டிருக்கிறார்கள் என்பதையும் ஆய்வு செய்து அவர்களுக்கு இடத்துக்கு தக்கபடி ஆலோசனைகள் வழங்க வேண்டும். அவர்கள் வாரம் இருமுறை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
Wednesday, 26 April 2023
வண்ணமயம்
Monday, 24 April 2023
காய்ச்சலும் பாய்ச்சலும்
பயிர் சிறப்பாக வளர பயிரின் வேருக்கு தண்ணீர் ‘’காய்ச்சலும் பாய்ச்சலும்’’ என்ற அடிப்படையில் - பாணியில் விடப்பட வேண்டும். அதாவது பயிர் வளர எவ்வளவு நீர் தேவையோ அந்த அளவு நீரே செடியைச் சுற்றி இடப்பட வேண்டும். அவ்வாறு விடப்படும் நீர் மண்ணுக்குள் சென்று பயிரின் வேர்ப்பகுதிகளில் ஈரத்தை நிலைநிறுத்தும். மேல்மண் சூரிய ஒளியால் காயத் துவங்கும். ஈரமான வேர்ப்பரப்பிலிருந்து காய்ந்த மேல்பரப்புக்கு ஈரம் வந்து வெயிலில் ஆவியாகும். பயிரின் வேர் தண்டுக்கும் இலைகளுக்கும் நீரைக் கடத்தி பயிரை வளரச் செய்யும். பயிருடன் களைகளும் வளரும். அந்த களைகளை பிடுங்கி வேரை முறித்து நீக்கி விட்டு தாள்களை பயிரைச் சுற்றி போட்டு விட வேண்டும். அவ்வா\று செய்தால் மேல்மண் சூரிய ஒளியால் உடனடியாகக் காயாது. சில தினங்களுக்கு அந்த களை மூடாக்கு ஈரத்தைத் தக்கவைக்கும். இந்த காய்ச்சலும் பாய்ச்சலும் முறை எல்லா பயிருக்குமே மிகவும் உகந்தது.
‘’காவிரி போற்றுதும்’’ தேக்கில் அதிக கவனம் செலுத்துவதால் தேக்குச் செடிகளுக்கு குடத்தில் நீர் விடுமாறு கேட்டுக் கொள்வேன். வாரம் இருமுறை அரைக்குடம் தண்ணீர் விட்டால் கூட போதுமானது.
காவிரி வடிநிலத்தின் விவசாயிகள் மோட்டாரைப் போட்டு விட்டு வயல் முழுதும் நீரைக் கட்டித் தேக்கும் விவசாயத்துக்குப் பழகியிருக்கிறார்கள். அதன் மறுபக்கமாக மரப்பயிர்கள் தண்ணீர் இன்றி தானாக வளரும் என்றும் எண்ணம் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு கன்றுக்கு வாரம் இருமுறை அரைக்குடம் தண்ணீர் என்று தொடர்ந்து கூறி வருகிறேன்.
காய்ச்சல் இருக்கும் போது கன்று நீருக்கு ஏங்கும். நீர் ஊற்றப்பட்டதும் நீரை உண்டு செடி வேகமாக வளரும். நீரைத் தேடி வேரும் மண்ணை அகழ்ந்து சென்று வேர்பிடிக்கும்.
எனக்குத் தொழில் விவசாயம் இல்லை. எனினும் விவசாயத்தை முழு நேர - முழு வாழ்க்கைப் பணியாக செய்யும் விவசாயிகளிடம் அவர்கள் நோக்கத் தவறும் செயலில் விடுபடும் விஷயங்களை அவர்கள் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது.
காய்ச்சலும் பாய்ச்சலும் தானே விவசாயம். அதுதானே வாழ்க்கையும்.
Monday, 17 April 2023
கள ஆய்வு
இன்று செயல் புரியும் கிராமத்துக்குச் சென்றிருந்தேன். செல்லும் வழியில் பள்ளி சென்று திரும்பும் கிராமத்துச் சிறுவர்கள் ‘’லிஃப்ட்’’ கேட்டு வண்டியை நிறுத்தினர். மாலை நேரத்தில் அங்கு செல்லும் போது வீடு திரும்பும் சிறுவர்கள் எதிர்படுவார்கள். அவர்களை கிராமத்தில் கொண்டு சேர்ப்பேன். இந்த சிறுவர்களைப் பார்த்த போது கிராமத்துச் சிறுவர்களுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்க வேண்டுமே என்ற எண்ணம் ஏற்பட்டது. எப்போதும் மனதில் இருக்கும் எண்ணம் தான். இருப்பினும் இந்த குழந்தைகளைக் காணும் போது அந்த எண்ணம் மேலும் வலிமை அடைந்தது. நல்ல திட்டம். உபயோகமான திட்டம் . என்றாலும் பட்ஜெட் ‘’ஹெவி’’. நிதிப் பற்றாக்குறையால் நிலுவையில் உள்ளது.
கிராமவாசி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்று சென்னை சென்று மருத்துவம் பார்த்து திரும்பியிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அவரைச் சந்தித்து நலம் விசாரிக்க விரும்பினேன். வயதில் மூத்தவர். ஜூரம் என்று ஒரு மருத்துவரைக் காண சென்றிருக்கிறார். அவர் அளித்த ஆண்டிபயாடிக் மருந்துகள் மிக வீரியமானவை. இளைஞர்களுக்கும் நடுத்தர வயதினருக்கும் அளிக்கப்பட வேண்டியவை. வயதில் மூத்தவரான அவருக்கு அந்த மருந்து பரிந்துரைக்கப்பட்டதால் அவரது குடல் பாதித்திருக்கிறது. அதனை சரி செய்ய சென்னை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவரைப் பார்த்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.
ஆறு மாதங்களுக்கு முன் விஜயதசமி அன்று ஒரு விவசாயியின் நிலத்தில் தேக்கு மரக்கன்றுகளை நட்டோம். தண்ணீர் ஊற்ற வேண்டும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று அவரிடம் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டிருந்தேன். ஒரு மாயக் கணத்தில் தண்ணீர் முறையாகக் கொடுத்தால் கன்றின் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொண்டார். வாரம் ஒருநாள் முறையாக இப்போது தண்ணீர் பாய்ச்சி விடுகிறார். அந்த வயலைச் சென்று பார்த்தேன். கன்றுகள் சிறப்பாக வளர்ந்திருந்தன.
இரண்டு ஆண்டுகள் முன் கன்று கொடுத்தவரின் வயலில் இப்போது தேக்கு மரங்கள் இருபது அடி உயரம் சென்றுள்ளது. அதனையும் பார்வையிட்டேன்.
அந்த ஊரில் உள்ள இளைஞர் ஒருவர் தனது சகோதரியின் ஒரு ஏக்கர் நிலத்தில் தேக்கு பயிரிட வேண்டும் என்று சொன்னார். வயலைச் சென்று பார்ப்போம் என்று சொன்னேன். ஊரில் உள்ள விஷ்ணு ஆலயத்தைச் சுற்றி ஒரு நந்தவனம் அமைக்க வேண்டும் என்ற ஆர்வத்தை என்னிடம் கூறினார். தேவையான மரக்கன்றுகளை அளிப்பதாக உறுதி அளித்தேன்.
சென்ற ஆண்டு குடியரசு தினத்தை ஒட்டி அளித்த நந்தியாவட்டை கன்றுகள் அனைத்தும் சிறப்பாக வளர்ந்து சிறப்பாக பூக்கின்றன. அவற்றை ஒவ்வொரு முறை காணும் போதும் மகிழ்ச்சி ஏற்படுகிறது.
Sunday, 16 April 2023
சமூக மாற்றம்
Friday, 14 April 2023
தொடக்கம்
Thursday, 13 April 2023
சுழற்சி
Monday, 10 April 2023
நூறு நாட்கள்
ஜனவரி 31 பிப்ரவரி 28 மார்ச் 31 இப்போது ஏப்ரலில் 10 தேதி என ‘’1111 மணி நேர வாசிப்பு ‘’ நூறு நாட்களை எட்டியுள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு மணி நேரம் வாசித்திருக்கிறேன். நூறு நாட்களிலும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் வாசிக்க வேண்டிய ஒரு மணி நேரம் என்ற இலக்கை விடுபடல் இன்றி வாசித்திருக்கிறேன். சில நாட்களில் அதிகபட்சமாக ஒன்பது மணி நேரம் வரை வாசிப்பு நீண்டிருக்கிறது.
ஒரு தமிழ் வாசகனுக்கு தமிழ் இரண்டாயிரம் ஆண்டு தொன்மையான பிரதியிலிருந்து இன்று எழுதப்படும் பிரதி வரை என மிக நீண்ட காலபரப்பை வழங்குகிறது. ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு ; ஒவ்வொரு தனித்தன்மை. சமஸ்கிருதம் தமிழ் அளவுக்கே தொன்மையான மொழி. இந்திய நிலத்தின் எல்லா மொழிகளுடனும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் உரையாடலில் உள்ள மொழி. ஆங்கில மொழி அறிந்த வாசகனுக்கு உலகின் எல்லா மொழிகளிலும் எழுதப்பட்ட நூல்களை ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அறிவுச் செயல்பாட்டின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் எந்த மொழி மீதும் துவேஷம் கொள்ள மாட்டார்கள்.
இந்த நூறு நாட்கள் எனக்கு என்னுடைய பால பருவத்தின் வாசிப்பை நினைவில் கொண்டு வந்தன. என்னுடைய ஐந்து வயதில் நான் ‘’தினமணி’’ செய்தித்தாளை எழுத்துக் கூட்டி வாசிப்பேன். மாலை பள்ளி சென்று வீடு திரும்பிய பின் செய்தித்தாளை சோஃபாவில் அமர்ந்து வாசிப்பேன். வீட்டுக்கு வரும் உறவினர்கள் அதனை ஆர்வத்துடன் பார்ப்பது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. வீட்டில் பூந்தளிர் கோகுலம் ஆகிய குழந்தைகள் இதழ்கள் வாங்குவார்கள். அவற்றை முழுமையாக வாசிப்பேன். வாசித்த பழைய இதழ்களை மீண்டும் மீண்டும் வாசிப்பேன். ‘’வாண்டு மாமா’’வின் எழுத்துக்களை மிகவும் விரும்புவேன். பல முக மன்னன் ஜோ, கபீஷ் ஆகிய சித்திரக் கதைகளும் அதன் கதாபாத்திரங்களும் என்னால் மிக அணுக்கமாக உணரப்பட்டன.
என்னுடைய பத்து வயதில் ‘’பொன்னியின் செல்வன்’’ வாசித்தேன். பைண்டு செய்யப்பட்ட நூலின் ஐந்து பாகங்களும் ஒருசேர என் கைக்கு வந்தன. கல்கியில் தொடராக வந்ததை ஒவ்வொரு வாரமும் எடுத்து வைத்து பைண்டு செய்யப்பட்ட தொகுப்பு. ‘’ஆதி அந்தமில்லாத காலவெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி பயணிக்குமாறு வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்’’ என்னும் அழைப்புடன் கல்கி தனது நாவலைத் துவக்கியிருப்பார். சிறுவனான நான் அந்த அழைப்பை ஏற்று கல்கியின் பிரதிக்குள் நுழைந்தேன். சோழர் ஆட்சி செய்த மண், காவிரியும் அரசலாறும், வங்கக் கடல், குழகர் கோவில், கோடிக்கரை கலங்கரை விளக்கம் என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சென்று வாழ்ந்து கொண்டிருந்தேன். வந்தியத்தேவனும் அவன் குதிரையும் மறக்க இயலாமல் மனதில் நிறைந்தார்கள். அந்த பைண்டு தொகுப்பு என்னிடம் நீண்ட நாட்கள் இருந்தது. பதினைந்து வயதுக்குள் ‘’பொன்னியின் செல்வனை’’ 15 முறையாவது முழுமையாக வாசித்திருக்கிறேன். எல்லா காலாண்டு அரையாண்டு முழு ஆண்டு விடுமுறையிலும் ஒருமுறை வாசிப்பேன். சாதாரண நாட்களுலும் வாசிப்பது உண்டு. அந்த காலகட்டத்தில் பலவிதமான நூல்களை வாசிக்கத் தொடங்கினேன்.
பிரதியின் மீது மனம் முழுமையாக ஈடுபடுவதே நல்வாசிப்பு. அவ்வாறு வாசிக்கும் மனம் எப்போதும் இளமையுடன் இருக்கிறது.
இந்த காலகட்டம் கடுமையான பணிச்சுமையால் நிறைந்திருக்கிறது. தொழில் சார்ந்த பணிகள் நேரத்தை மிக அதிகமாக எடுத்துக் கொள்கின்றன. ஒரு நாளின் லௌகிகப் பணிகளுக்கான பொழுது என்பது காலை 10 மணிக்குத் துவங்கி மாலை 6 மணி வரையே. தொழில் சார்ந்த பணிகள் அந்த நேரத்துக்கு உட்பட்டவையே. வாசிப்பை காலை பொழுது புலர்ந்ததிலிருந்து இரண்டு மணி நேரமும் இரவு உறங்குவதற்கு முன் இரண்டு மணி நேரமும் என வகுத்துக் கொண்டால் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் புத்தக வாசிப்புக்குக் கொடுக்க முடியும்.
நூறு நாட்கள் நிறைவளிக்கின்றன. மூன்றில் இரு பகுதி இன்னும் மீதம் இருக்கிறது. அவற்றை மேலும் நிறைவான விதத்தில் நிறைவு செய்ய வேண்டும் என்பது என் விருப்பம்.
Thursday, 6 April 2023
பயிற்சி
2023ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியிலிருந்து ‘’ஆயிரம் மணி நேர வாசிப்பு’’ நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறேன். தினமும் ஒரு மணி நேரம் வாசிக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் வாசிக்கலாம்.
பயிற்சிகள் அனைத்துமே எளியவையே. அவை பயிற்சியாளர்களின் உறுதியையும் நிலைத்தன்மையையும் சோதிக்கின்றன. பயிலப் பயில பயிற்சியாளனை வலிமைப்படுத்துகின்றன. நிகழ்வு நூறு நாட்களைத் தொட இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என்ற குறைந்தபட்ச வாசிப்பை எல்லா நாட்களிலும் நிகழ்த்தியிருக்கிறேன். பல நாட்கள் ஆறு மணி நேரத்துக்கு மேல் வாசித்திருக்கிறேன். குறைந்தபட்ச ஒரு மணி நேர வாசிப்பும் அதிகபட்ச வாசிப்புகளும் இணைத்து கணக்கிடப்படுகையில் குறிப்பிடத்தக்க வாசிப்பு சராசரி உருவாகியுள்ளது. இந்த நூறு நாட்கள் ஒரு அடித்தளம். இதனைக் கொண்டு அடுத்த நூறு நாட்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
இந்த பயிற்சியை நிமித்தமாகக் கொண்டு நான் என்னைச் சூழ்ந்திருக்கும் பல விஷயங்களை அவதானித்தேன். லௌகிகப் பணிகள் பெருமளவில் நிறைந்திருக்கும் காலகட்டம் இது. உத்யோகம் சார்ந்த பணிகள் நாளின் பெரும்பகுதியை எடுத்துக் கொள்கின்றன. எதிர்பார்ப்புகள் , காலதாமதங்கள் என மனைவணிகத்துக்கே உரிய விஷயங்கள். லௌகிகம் உருவாக்கும் மனநிலை வாசிப்பில் எதிரொலிக்கும். சற்று ஆசுவாசமாக இருக்கும் நாளில் அதிக நேரம் வாசிக்க முடியும். பணி அழுத்தம் அதிகமாக இருந்தால் குறைந்தபட்ச நேரம் மட்டுமே வாசிக்க முடியும்.
வாசிக்கும் நூல்கள் உருவாக்கும் மன எழுச்சிகளுக்கும் வாசிப்பு நேரத்தை தீர்மானிக்கும். ஒரு நூலில் ஒரு சொல் உருவாக்கும் பரவசம் இருக்கும் இடத்திலிருந்து கிளம்பி ஒரு சிறு பயணம் செய்யத் தூண்டும். இந்த நாட்களில் , அவ்வாறும் நிகழ்ந்தது.
இந்த பயிற்சி உண்மையில் வாசிப்பையும் லௌகிகப்பணிகளையும் தனித்தனியே அணுக பலவிதமான உபகரணங்களை அளித்துள்ளது என்பது சிறப்பானது.
Tuesday, 4 April 2023
கோடைமழை
Sunday, 2 April 2023
நண்பர் - மரங்கள்
Saturday, 1 April 2023
25 ஆண்டுகளுக்குப் பின்
நேற்று எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. 25 ஆண்டுகளுக்கு முன்னால் என்னுடன் பள்ளியில் பயின்ற நண்பர் ஒருவர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதாவது யூ-டியூபில் எனது உரை ஒன்றைக் கேட்டதாகவும் அதன் பின் எனது வலைப்பூவைக் கண்டடைந்ததாகவும் எழுதியிருந்தார். மின்னஞ்சலில் பெயரைக் கண்டதும் அவர் யாரென நினைவுக்கு வந்து விட்டது. மின்னஞ்சலில் அவர் குறிப்பிட்டிருந்த அலைபேசி எண்ணுக்கு அழைத்துப் பேசினேன். ஊருக்கு வந்திருப்பதாகச் சொன்னார். அவருடைய இல்லம் எங்கே இருக்கிறது எனக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். இன்று காலை சந்திப்பதாகக் கூறினேன்.
நாங்கள் 11ம் வகுப்பும் 12ம் வகுப்பும் ஒரே பள்ளியில் படித்தோம். வேறு வேறு வகுப்புகள். 12ம் வகுப்பு முடித்த பின் அவர் குடும்பத்துடன் தஞ்சாவூர் சென்று விட்டார் என்ற தகவல் அ|றிந்திருந்தேன். அதன் பின் 25 ஆண்டுகள் தொடர்பு இல்லை. மீண்டும் இப்போது தான் சந்திக்கிறோம். அவர்கள் தஞ்சாவூரில் ஐந்து ஆண்டுகள் இருந்து விட்டு பின்னர் பெங்களூரில் பல ஆண்டுகள் வசித்து ஐந்து ஆண்டுகள் சென்னை வாசத்துக்குப் பின் சொந்த ஊரில் வீடு வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
’’சங்கிரகம்’’ என்ற தலைப்பில் வெளியான பதிவுகள் மூலம் நான் பொதுப் பணிகளில் ஈடுபட்டிருப்பது குறித்து அறிந்ததாகக் கூறி அச்செயல்களுக்கு தனது மகிழ்ச்சியை என்னிடம் தெரிவித்தார். ஒரு அமைப்பாக செயல்படுகிறீர்களா அமைப்பின் பெயர் என்ன என்று கேட்டார்.
‘காவிரி போற்றுதும்’’ என்று கூறினேன்.
அவர் சற்று யோசித்தார். நான் விளக்கம் கொடுத்தேன்.
‘’அதாவது , சிலப்பதிகாரம் ‘’திங்களைப் போற்றுதும்’’னு துவங்குது. திங்கள்னா நிலவு. இங்க நிலவு பெண்மையைக் குறிக்குது. சிலப்பதிகாரம் கண்ணகியோட சிறப்பை பேசுன நூல் தானே. மேலும் நீதி , அறம் ஆகிய விஷயங்களுக்கும் குறியீடா நிலவைச் சொல்றார். அதனால தான் திங்களைப் போற்றுதும்னு சிலப்பதிகாரத்தைத் துவங்குகிறார். நான் அதுல இருந்து போற்றுதும் ங்கற வார்த்தையை எடுத்துக்கிட்டன். அது முன்னாடி காவிரியை சேத்து ‘’காவிரி போற்றுதும்’’னு அமைப்புக்கு பேர் வச்சேன். ‘’ என்று சொன்னேன்.
நண்பரின் குடும்பத்தினர் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தேன். நண்பருக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதைச் சொன்னார். குழந்தையின் பெயர் என்ன என்று கேட்டேன்.
‘’சந்திரா’’ என்றார்.