Thursday, 9 April 2020

144 ஆண்டுகளுக்கு முன்னால்

தமிழ்நாட்டில் இந்த காலகட்டத்தில் தாது வருஷப் பஞ்சம் குறித்தும் அப்போது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்தும் அப்போதைய ஆட்சி பஞ்சத்தை எப்படி எதிர்கொண்டது என்பது குறித்தும் ஓர் உரையாடல் எழக் கூடும் என்று எதிர்பார்த்தேன். அவ்வாறு ஏதும் நிகழவில்லை. 

தமிழ்நாட்டில் எப்போதுமே இந்திய அரசாங்கத்துக்கு எதிரான குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கும். இந்திய அரசாங்கம் தமிழக மக்களுக்கு எதிராக எப்போதும் செயல்படுகிறது என்ற பரப்புரை சுதந்திரம் பெற்றதிலிருந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. ‘’வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’’ என்று மேடைதோறும் முழங்கினார்கள். ‘’அடைந்தால் திராவிட நாடு ; இல்லையேல் சுடுகாடு’’ என்றார்கள். தமிழ்நாட்டின் பொது மக்கள் சிந்தையில் எப்போதும் தில்லி குறித்த ஐயங்களை தமிழ்நாட்டில் உருவாக்கிக் கொண்டேயிருந்தனர். அந்த காலகட்டத்திலும் இந்திய அரசின் நிதியிலிருந்து மக்கள் பிரதிநிதிகளாக ஊதியம் பெற்றுக் கொண்டு இருந்தனர் என்பது நகைமுரண்.

பிரிட்டிஷ் ஆட்சி இந்திய மக்களைப் பொருளாதார ரீதியாக சுரண்டுகிறது என்பதை மகாத்மா காந்தி தேசத்திடம் எடுத்துரைத்தவண்ணம் இருந்தார். நாம் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ளும் மிகச் சிறிதளவு உப்பிலிருந்து கூட வரி பெறும் அளவுக்கு பிரிட்டிஷார் இரக்கமற்றவர்கள் என்பதை இந்தியாவின் எளிய மக்களுக்கும் புரிய வைத்தார். ( காந்தி வாழ்வில் நடந்த ஒரு சம்பவம். இந்திய சுதந்திரத்தின் போது காந்தி தில்லியில் இல்லை. வங்காளத்தில் இருந்தார். தில்லி திரும்பிய போது நேரு மகாத்மாவைச் சந்திக்கிறார். காந்தி அன்று மௌன விரதத்தில் இருக்கும் நாள். நேரு காந்தியிடம் சுதந்திர சர்க்கார் செய்ய வேண்டிய காரியமாக நீங்கள் நினைப்பது என்ன என்று கேட்கிறார். மகாத்மா ஒரு காகிதத்தில் பென்சிலில் ''Remove salt tax'' என்று எழுதிக் காட்டுகிறார்). ஒத்துழையாமை இயக்கம் இந்தியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் பிரிட்டிஷார் ஆட்சி நடத்த முடியாது என்பதை குறியீட்டு ரீதியில் எடுத்துரைத்தது. அவரது காங்கிரஸ் கட்சி நாட்டின் ஒவ்வொரு கிராமங்களிலும் ஊழியர்களையும் தொண்டர்களையும் கொண்டு கிட்டத்தட்ட ஓர் இணை அரசாங்கமாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தது. 

சுதந்திரத்தை ஒட்டி நம் நாடு பெரும் மதக்கலவரத்தைச் சந்தித்தது. தகவல் தொடர்பு மிகக் குறைவாய் இருந்த காலகட்டத்தில் பொருளாதார நிலை வலுவாக இல்லாத ஓர் அரசாங்கத்தைக் கொண்டு இந்திய ஜனநாயகம் நடைபோடத் துவங்கியது. ஜனநாயகம் அனைவருக்குமான பிரதிநிதித்துவத்தை அளிப்பது . நமது அரசியல் சாசனம் அவ்வகையில் மேலான ஒன்றே. நாம் ஒரு தேசமாக மெல்ல மெல்ல எனினும் முன்னேறியவாறே இருக்கிறோம் என்பதே உண்மை. 

நாம் சாதிக்க வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன. நாம் மாற்றிக் கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்று வரை நாம் குடிமைப்பண்புகள் மிக்க சமூகமாக உருவாகி விட்டோமா என்பது மிகப் பெரிய கேள்வி. அரசியல் கொந்தளிப்புகள் மற்றும் பூசல் மனநிலையைத் தாண்டி கோடிக்கணக்கான சாமானிய இந்தியர்கள் இந்திய அரசு உருவாக்கிக் கொடுத்த வாய்ப்புகளின் வழியாகவே வெற்றி பெற்று எழுந்தனர் என்பது வரலாறு.

தமிழ்நாட்டில் மத்திய அரசை எப்போதுமே வசைபாடியே பழகி விட்டனர். இந்த வசைபாடல் லட்சக்கணக்கான தமிழ் மக்களை தவறான திசையில் வழிநடத்துகிறது என்பதே உண்மை. எந்த நாடாயினும், எந்த ஜனநாயகமாயினும் தனது தார்மீக அடிப்படைகளுக்கு எதிராகப் பேசும் எந்த குழுவையும் அனுமதிக்காது என்பதே உண்மை. ஆயினும் இந்தியாவில் பல்வேறு காரணங்களால் இவ்வகையான குழுக்கள் இடைவெளியின்றி செயல்படுகின்றனர் என்பது ஒரு துயர். தமிழ்நாட்டில் அதன் தாக்கம் இன்னும் அதிகம் என்பது மேலதிகத் துயர்.

தமிழ்நாட்டில் இந்திய அரசாங்கத்தை எதிர்க்கும் போக்கை திராவிடக் கட்சிகள் பின்பற்றின. அவர்கள் இந்தியா சுதந்திரம் பெற்ற போது பிரிட்டிஷார் இந்த நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று தீர்மானம் போட்டார்கள். அந்த பிரிட்டிஷ் அரசாங்கம் தமிழ் நாட்டு மக்களுக்கு அந்த தீர்மானம் போடப்பட்டதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் என்ன செய்தது என்பதைப் பார்ப்போம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் தமிழ்நாட்டின் மக்கள்தொகை இன்று இருப்பதைப் போல நான்கு மடங்கு குறைவாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து கொள்வோம். இன்றைய மக்கள் தொகை 7 கோடியே 20 லட்சம். அன்று 1 கோடியே 80 லட்சம் மக்கள் தொகை இருந்திருக்கும் என்று கற்பனை செய்து கொள்வோம். அதில் 40,00,000 மக்கள் உண்ண உணவின்றி இறந்து போயிருக்கிறார்கள். கிட்டத்தட்ட தமிழ்நாட்டு மக்கள் தொகையில் கால் பங்கு சில மாதங்களில் பிணமாகி விழுந்திருக்கின்றனர். அதனை பிரிட்டிஷ் அரசாங்கம் வேடிக்கை பார்த்தது. வரலாற்றின் குரூரமான உண்மைகளில் ஒன்று அந்த பஞ்சம் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பேராசையால் மக்கள் மீது திணிக்கப்பட்டது என்பது. அப்போது நாட்டின் பல பகுதிகளில் இருந்த உபரி விளைச்சலை பிரிட்டிஷ் அரசாங்கம் துறைமுகங்கள் மூலம் தனது நாட்டுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. அன்று இருந்த நிலைமையில் சாகக் கிடந்த மக்கள் உணவளிக்கப்பட்டிருந்தால் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு கணக்கேயில்லாமல் தங்களால் ஆன உடல் உழைப்பை அளித்திருப்பார்கள். ஆனால் அவர்களை தங்கள் பிரஜைகளாக மனிதர்களாகக் கூட கருதாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் சாக விட்டது. இந்த அரசாங்கம் எங்களை நீங்கிச் செல்லக்கூடாது என்று தீர்மானம் போட்டது திராவிட இயக்கம்.

அந்த காலகட்டத்தில் வள்ளலார் உருவாக்கிய சத்திய ஞான சபை அன்னதானத்தை ஒரு சமயச் செயல்பாடாக முன்னெடுத்தது. இன்றும் அதன் பணி தொடர்கிறது. 

இந்தியா இன்று உணவுத் தன்னிறைவைப் பெற்றிருக்கிறது என்பது ஓர் உண்மை. நாடே முடங்கியிருக்கும் நிலையிலும் தனது கையிருப்பில் உள்ள உணவு தானியத்தை இந்தியாவின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிவாரணமாக வழங்கும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறது இந்திய அரசு. இது ஒவ்வொரு இந்தியனுக்குமான பெருமிதம் இல்லையா? ஒரு உலகளாவிய நெருக்கடியை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்வது அறமற்ற முறையில் நம்மை ஆண்ட அன்னியர்களுக்கு நாம் ஆக்கபூர்வமாக அளிக்கும் பதில் இல்லையா?

Wednesday, 8 April 2020

இந்திய நிலத்தின் வாய்ப்புகள்

எனது சிறுவயதில் நான் சுவாமி விவேகானந்தர் நூல்களை வாசித்திருக்கிறேன். அப்போது பத்து வயதிருக்கும். சுவாமிஜியின் சொற்கள் பெரும் மனஎழுச்சியை உண்டாக்கும். ஒவ்வொரு மனிதனும் கொள்ள வேண்டிய தன்னம்பிக்கை குறித்து சுவாமிஜி சொல்வார். இந்திய மண்ணின் பெருமைகள் குறித்து பேசுவார். இந்தியாவின் ஆன்மீகப் பாரம்பர்யம் குறித்து எடுத்துரைப்பார். இந்தியா உலகிற்கு வழிகாட்டியாய் அமையும் என்று உறுதியாகக் கூறுவார். இவை என் மனதில் பதிவாகியிருந்தன. இப்போதும் அந்த சொற்கள் அகத்தில் உள்ளன.

நான் இப்போது இந்த தருணத்தில் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கிறேன். தமிழ்நாட்டின் பாடநூல்கள், பத்திரிக்கைகள் எவற்றிலும் இந்தியாவின் உயிரான தன்மை குறித்து முன்வைக்கப்படுகிறதா என எண்ணிப் பார்க்கிறேன்.  இல்லை என்பதே உண்மை. 



இந்தியா அரசியலை அடிப்படையாய்க் கொண்ட சமூகம் இல்லை. இந்த நிலம் இன்றும் பிரதானமாக விவசாயத்தையே அடிப்படையாய்க் கொண்டது. இன்றும் இந்த மண்ணின் கோடிக்கணக்கான மக்கள் விவசாயத்தையே நம்பியிருக்கின்றனர். தாமோதர் தர்மானந்த கோசாம்பி போன்ற இந்திய மார்க்ஸிய அறிஞர்களே இந்த உண்மையை உரைத்துள்ளனர். கோசாம்பி அரசாங்கம் கிராமங்களில் குடிமக்களிடமிருந்து பெறும் வரியை தானியமாகப் பெற வேண்டும் என்ற திட்டத்தை முன்வைக்கிறார். 



ஓர் இந்திய கிராமம் என்பது ஆயிரம் பேர் கொண்ட ஒரு ஜனத்திரளை அவர்களுக்குள் தன்னிறைவுடன் வாழும் ஒரு வாழ்க்கைமுறையை பல நூற்றாண்டுகள் பழக்கமாகக் கொண்டுள்ளது. அதில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன. மிகச் சில எதிர்மறையான அம்சங்கள் உள்ளன. எதிர்மறை அம்சங்களைக் குறைத்து நேர்மறையான விஷயங்களை அதிகரிப்பதே ஆக்கபூர்வமான செயல்பாடாக இருக்கும். உலகின் எந்த அரசும் மக்களின் சமூகப் பழக்கத்தையே அடித்தளமாய்க் கொண்டு எழுப்பப்படுகிறது. அது உருவாக்கும் எந்த விஷயமும் அந்த மக்களுக்கு உதவுவதாய் இருக்க வேண்டும்.



இந்தியாவின் சுதந்திரத்துக்குப் பின் நிகழும் பல்வேறு திட்டமிடல்களில் மேற்கத்திய நாடுகளின் முறைகளே பின்பற்றப்படுகின்றன. அவர்கள் மேற்கொள்ளும் திட்டமிடல்கள் அப்படியே நகலெடுக்கப்படுகின்றன. அது இந்திய கிராமங்களையும் கிராம மக்களையும் விவசாயத்தையும் சிதைத்தது என்பதே உண்மை. நான் ஒரு உதாரணம் சொல்கிறேன். இந்தியாவில் சோழர்கள், ஹொய்சாளர்கள், காகதீயர்கள், மௌரியர்கள், மராத்தியர்கள், ராஜபுத்திரர்கள், சீக்கியர்கள் அரசாங்கங்களை நடத்தியிருக்கின்றனர். அவர்கள் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர் மேலாண்மைத் திட்டங்களின் பயன்களை இன்றும் நாம் அனுபவிக்கிறோம். இந்த அரசுகள் அனைத்துமே கிராமங்களை - கிராமத்தின் இயங்குமுறையை வலுப்படுத்தியிருக்கின்றனர். விளைநிலங்கள், அதற்கான பாசன வசதிகள், பாசனக் கருவிகளை உருவாக்கி பழுதுபார்ப்பவர்கள், பூசகர், கல்விப் பணியாற்றும் ஆசிரியர், மருத்துவர், கால்நடைகளுக்கு வைத்தியம் செய்பவர்கள் ஆகியோரின் ஜீவனோபாயத்திற்கான பொறுப்பினை அந்தந்த கிராமங்களே எடுத்துக் கொண்டுள்ளது. அதனால் தலைமுறை தலைமுறைகளாகத் தொடரும் ஒரு பண்பாட்டுப் பாரம்பர்யத்தை நமது நாடு தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஒரு கிராமம் தன்னளவில் தனது தேவையை சமாளித்துக் கொள்ளும் எனில் அரசாங்கம் என்ற அமைப்பு மிகக் குறைவாய் இருந்தாலே போதுமானது. நிர்வாகச் செலவும் மிகவும் குறைவாக இருக்கும். 



தமிழ்நாட்டில் சித்த மருத்துவம் பாரம்பர்யமானது. பத்து கிராமத்துக்கு ஒரு சித்த மருத்துவர் இருப்பது போல ஒரு அமைப்பை உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்டே உருவாக்கிக் கொண்டிருக்க முடியும். மூலிகைகளின் முக்கியத்துவம் மக்களுக்கு உணர்த்தப்படும். மூலிகைகள் விளைவிக்கப்படுவது நிகழும். மக்களின் வருவாய் பெருமுதலாளிகளின் மருந்து நிறுவனங்களுக்கு செல்வது குறையும். ஒரு இந்திய பாணி சிந்தனையால் மட்டுமே சின்னஞ்சிறு அலகு குறித்து சிந்திக்க முடியும். 



முதலாளித்துவம் எப்போதுமே சிறு அலகு குறித்து சிந்திப்பதில்லை. ஒரு சிறு அலகு என்பது அதற்கு தனது விற்பனைச் சங்கிலியின் கடைசி முனை மட்டுமே. அங்கிருந்து சங்கிலியின் முதல் கண்ணியான உற்பத்தியாளனுக்கு வந்து சேரும் வருவாயை மட்டுமே அது கருதும். அந்த விற்பனைச் சங்கிலியை லாபகரமாக ஆக்கிக் கொள்ள பராமரிக்க தனது லாபத்தின் ஒரு பகுதியை எப்போதும் செலவிட்டவாறே இருக்கும். இந்தியப் பாரம்பர்வையும் இந்தியப் பார்வையும் சிதைக்கப்படுவது முதலாளித்துவத்துக்கே பயன் தரும். 



கிராமங்களை வலுவூட்டும் ஒரு பொருளாதார அமைப்பை நாம் உருவாக்க வேண்டிய நேரம் இது.



Friday, 3 April 2020

நினைவு

உன்னை எண்ணும் போது
நீர்ச்சாரல் சுமக்கும் காற்று
அலைகடலின் இள வெம்மை
குளிர் நிறையும் மலைப்பிரதேசம்
நிலம் கரைக்கும் மழை
பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள்
சில்வண்டுகளின் சீரொலி
சோலையில் கேட்கும் ஒற்றைக் குயிலோசை
வண்டிக்காளையின் கழுத்து மணி அசைவு
மௌனம் நிரம்பிய அந்திப் பொழுது
நினைவில் எழுகின்றன
கண்ணீர்த்துளிகள்
மெல்ல கரைத்துக் கொண்டிருக்கின்றன
அகம் கொள்ளும் தளைகளை

பொழுதிணைவு

மாலைப் பொழுதின்
சிவப்புக் கதிர்கள்
மிதந்து கொண்டிருக்கும் காற்று
நம்மைத் தீண்டிய போது
நீ
ஒரு மலரைப் பற்றி
என்னிடம்
சொன்னாய்
காட்டுத்தீயை
நான்
சொன்னேன்
அரசமரத்தின்
கணநாதன்
சிலை முன்னால்
நாம் ஏற்றிய
தீச்சுடரை
ஒரு மலரைப் போல்
காக்கின்றன
உன் விரல்கள்

Tuesday, 31 March 2020

கருணைப் பெருவெளி


நாம் வாழும் காலகட்டத்தில் தொழில்நுட்பம் பல்வேறு விதமான உபகரணங்களை நமக்கு வழங்கியுள்ளது. தொழில்நுட்பம் வழங்கும் சாதனங்களை உலகளாவிய வணிகம் மனிதத்திரள் உயிர்த்திருக்கும் எந்த நிலத்துக்கும் கொண்டு சென்றுள்ளது. இன்று உலகின் எந்த மானுட சமூகமும் உலகாயதத்தையே தன் எண்ணமாய் செயலாய்க் கொண்டுள்ளது. கடந்த நூற்றாண்டுகளில் மண் ஆண்ட மன்னர்களுக்கு இல்லாத வசதிகள் இன்று சாமானிய மனிதனுக்கும் கிடைக்கிறது. மக்களாட்சி கொள்கையளவினேனும் பொருள் ஈட்டுவதற்கான வாய்ப்பை அனைவருக்கும் தருகிறது. இவை உண்மைகள். ஆனால் இந்த உண்மைகள் மானுடத்துக்கு நலத்தை மட்டுமே வழங்கியுள்ளனவா என்பதை நாம் யோசிக்க வேண்டும். மனித உழைப்பு சுரண்டப்படுவது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பினும் அறமற்ற வணிகம் மனித குலத்தை அதன் வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு மனதளவிலும் கருத்தாகவும் அடிமைப்படுத்தியுள்ளது. சக மனிதன் மேல் நம்பிக்கை இருக்க வேண்டிய இடத்தில் நம்பிக்கையின்மையை எங்கும் நிரப்பியுள்ளது. பொருளியல் விடுதலை என்ற போர்வையில் ஒட்டு மொத்த மானுடத்தின் மேலும் நுகர்வு திணிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தால் மானுடம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக திரட்டியிருக்கும் ஞானம் எல்லா மனிதனுக்கும் கிடைக்கும் இக்காலகட்டத்திலேயே வரலாற்றில் என்றும் இல்லாத அளவு நுகர்வு, வணிகத்தாலும் அரசியலாலும் ஒவ்வொரு தனிமனிதன் மேலும் திணிக்கப்பட்டுள்ளது.

மானுடன் தன் உலகியல் வாழ்வு தனக்கு அளிக்கும் சமூக, அரசியல், பொருளாதார அடையாளங்களுடன் பிணைக்கப்பட்டவன் மட்டும் தானா? அவனது விடுதலை சாத்தியம் தானா? என்ற வினாக்கள் மிகப் பெரிதாக எழுந்து நிற்கும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட யோகிகளும் ஞானிகளும் வாழும் உலகை நமக்கு அறிமுகம் செய்யும் நூல் ’’ஒரு யோகியின் சுயசரிதம்’’. இறைமை என்பது ஒவ்வொருவருக்குள்ளும் நிரம்பியிருக்கிறது; புற அடையாளங்கள் முழு உண்மை அல்ல; அவை பகுதி உண்மைகளே என்னும் அடிப்படையிலிருந்து தங்கள் புரிதலைத் துவங்கி வாழ்வின் முழுமையான நிலையை அடைந்த ஜீவன்களின் வாழ்க்கை குறித்த சில சுவடுகளை அடையாளம் காட்டுகிறது இந்நூல். 

சமூக உறவுகளையும் அதன் எல்லைகளையும் மட்டுமே நாம் புறவய யதார்த்தமாகக் கண்டிருக்கும் வாழ்வில் நம் கண்ணுக்குத் தெரியாமல் யுகயுகமாக உயிர்த்திருக்கும் யுக புருஷர்கள் மனிதர்கள் மேல் கொண்டிருக்கும் எல்லையற்ற அன்பையும் கருணையையும் உணர்வதற்கான வாய்ப்பை இந்நூல் வழங்குகிறது. 

யோகம் என்பது பிரபஞ்சத்துடன் ஒன்றுதலைக் குறிக்கும். நானும் உலகும் வேறல்ல என உணரும் நிலையே மனிதனின் முழு விடுதலை. இந்திய மரபு ஞான , பக்தி, கர்ம, கிரியா யோகங்களை மானுட விடுதலைக்கான கருவிகளாகக் கொண்டுள்ளது. பகவத்கீதை இந்த வெவ்வேறு விதமான மார்க்கங்களுகிடையே ஓர் ஒருங்கிணைப்பை உருவாக்கிய நூல். அல்லது இந்த மார்க்கங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்த நூல். 

கிரியா யோகம் மனிதன் தன்னை - தனது உடலை - தனது மனத்தை - தனது எண்ணத்தை - தனது மூச்சை தொடர்ந்து குறிப்பிட்ட முறையில் கவனிப்பதன் மூலம் வாழ்வின் எல்லா உண்மைகளையும் அறியும் மார்க்கம் என்று சொல்ல முடியும். மானுடன் வாழ்வின் போக்கிலேயே சென்று விடுதலை பெற லட்சக்கணக்கான ஆண்டுகள் தேவைப்படும் என்று இந்நூல் சொல்கிறது. இந்த உலகில் மனிதர்கள் சில ஆயிரம் ஆண்டுகளாக உயிர்வாழ்கிறார்கள் எனில் கிரியா யோகம் சொல்லும் லட்சக்கணக்கான ஆண்டுகள் புவியில் தோன்றிய முதல் உயிரிலிருந்து நிகழும் பயணத்தைக் குறிக்கிறது எனப் புரிந்து கொள்ள முடிகிறது. உயிரின் பரிணாமத்தில் லட்சக்கணக்கான ஆண்டுகளில் நிகழும் மாற்றத்தை மிக விரைவில் நிகழ்த்தக்கூடியது கிரியா யோகம். நெடுந்தொலைவை கால்நடையாகக் கடப்பதற்கும் விமானத்தில் கடப்பதற்குமான வேறுபாடு. மானுடப் பிரக்ஞையை மிக உயர் தளங்களுக்கு மிகக் குறுகிய காலத்தில் கொண்டு செல்லும் கருவியே கிரியா யோகம். 

கிரியா யோகம் பயிலும் மாணவர்களின் புற உலகத் தடைகளை சூட்சும வடிவத்தில் இருக்கும் குருமார்கள் அவ்வப்போது தோன்றி தகுந்த வழிகாட்டல் மூலம் நீக்குவதன் சித்திரம் இந்நூல் முழுதும் உள்ளது. இமயமலையின் குகைகளும் பனி பொழியும் பிராந்தியங்களும் இந்நூலை வாசிப்பவர்களை அவர்கள் மனத்தில் உணரச் செய்கிறது. அமைதியற்ற சமூகம் அதன் பிரஜைகள் ஒவ்வொருவர் மனத்திலும் உருவாக்கியிருக்கும் அவநம்பிக்கைகளை அகற்றி வாழ்வின் அற்புதங்களை உணர வைக்கும் கருணைப் பெருவெளியாகவும் இந்த உலகம் இருப்பதை இந்நூல் குறிப்புணர்த்துகிறது.

இந்தியா ஆன்மீகமான சாதனைகளுக்கான தேசமாகவே காலங்காலமாக இருந்துள்ளது.  இந்தியா ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தன் நாட்டை நோக்கி ஆக்கிரமிக்க வந்தவர்களுடன் போராடியதும் அதன் ஆன்மீகப் பாரம்பர்யத்தைத் தொடர்வதற்காகத்தான். இந்திய ஆன்மீகத்தின் முக்கியமான பகுதியான கிரியா யோகம் குறித்து ஒரு ஞானியால் எழுதப்பட்டிருக்கும் நூல் ‘’ஒரு யோகியின் சுயசரிதம்’’.

கருணைப் பெருவெளியின் அன்பான கண்கள் நம்மைக் காண்கின்றன என்பதே வாழ்வுக்கு பெரும் நம்பிக்கை தருகிறது. நமது அறிதலுக்கு அப்பாற்பட்ட அற்புதப் பெருவெளிகளில் அலைந்து திரியும் அனுபவத்தைத் தரும் நூல் ‘’ஒரு யோகியின் சுயசரிதம்’’.

Monday, 30 March 2020

புதுக்கோட்டையிலிருந்து ஒரு வாசகர் கடிதம்

அன்புள்ள பிரபு,

இப்போதுதான் ஒரு வாரமாக உங்கள் வலைப்பூவைப் படித்து வருகின்றேன். மறையூர்ச்சாலைக்குச் செல்ல வேண்டும் போலுள்ளது.  உங்களின் வட இந்தியப் பயணம் ஒரு சாகசக் கலை. அங்கங்கே உள்ள மனிதர்களுடன் மிக இயல்பாக ஒட்டிக்கொள்கிறீர்கள். இந்தியா எங்கணுமே உள்ள மனிதர்கள் இவ்வாறு பயணிகளுக்கு உதவுவது மகிழ்வாகவும் பெருமையாகவும் உள்ளது. திரும்பி வரும் போது ஏற்பட்ட அனுபவங்களையும் எழுதியிருக்கலாம். கம்பராமாயணக் கட்டுரைகளும் மிக ந்ன்றாக உள்ளன. சோமே‍சுவரனுடன் சென்ற‌ நடை அழகு. நான் இன்னும் சோமேசுவரன் அளவுக்குக் கூட கவிதைகள் படிக்கத் தொடங்கவில்லை.

நன்றி

நாரா.சிதம்பரம்

Saturday, 28 March 2020

இராமன் கதை

நான்கு நாட்களாக வீட்டில் இருக்கும் போது சில விஷயங்கள் துலக்கம் பெற்று வந்தன. சில ஆண்டுகளுக்கு முன் இயற்கை விவசாயம் சார்ந்த  ஒரு சமூகச் செயல்பாட்டில் ஈடுபட்டிருந்தேன். அதன் ஒரு பகுதியாக ஊருக்கு அண்மையில் இருக்கும் பல கிராமங்களுக்குச் சென்று வந்தேன். சில கிராமங்கள் மிகவும் உள்ளடிங்கியவை. அந்த கிராமங்களில் நான் அவதானித்த விஷயம் ஒன்று உண்டு. அந்த  கிராமங்களுக்கு அவற்றின் வெளிப்புறத்திலிருந்து வருபவர்கள் சிறு வணிகர்களே. பாத்திர வியாபாரிகள். அண்மையில் உள்ள நகருக்கு அவர்கள் வர வேண்டும் என்றால் இரண்டு கிலோ மீட்டர் நடந்து வந்து பக்கத்தில் உள்ள சற்று பெரிய கிராமத்துக்கு வந்து அங்கு பேருந்து பிடித்து பத்து கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். நான் அங்கிருந்த போது வந்த பாத்திர வியாபாரியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவருடைய வாடிக்கையான ‘’லைன்’’. மீண்டும் பத்து நாள் கழித்து வருவேன் என்றார்.

தமிழக கிராமங்கள் தங்கள் ஊரைத் தாண்டி பெரும்பாலும் எங்கும் செல்லாத பழக்கம் கொண்டவர்கள். அவர்களுடைய பிரதான தொழில் விவசாயம். அவர்களுடைய பொருளியல் சுழற்சி கிராமத்துக்குள்ளேயே பெரும்பாலும் நிறைவு பெற்று விடும். அவ்வாறெனில் அவர்கள் எவ்வாறு தங்கள் வாழ்வியலை உயிரோட்டத்துடன் வைத்துக் கொண்டார்கள்?

கிராம மக்களின் வாழ்வில் நாட்டுப்புறக் கலைஞர்கள் பெரும் பங்கு வகித்தனர். பறை வாத்தியத்தை இசைத்தவாறு மொத்த மகாபாரதத்தையும் சொல்லும் கலைஞர்கள் ஊருக்கு ஊர் இருந்திருக்கின்றனர். அவர்களைப் பேணும் மரபு தமிழக கிராமங்களுக்கு இருந்திருக்கிறது. அவர்களே இந்தியாவின் இதிகாசங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள். அதன் மூலம் தமிழ் கிராமங்களின் பண்பாட்டை உயிர்த்திருக்கச் செய்தவர்கள். 

இன்றும் ஒவ்வொரு தமிழ்நாட்டின் கிராமத்திலும் இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் கதையாகச் சொல்லக்கூடிய கதைசொல்லிகள் தேவைப்படுகிறார்கள். கிராமத்தின் சிறு குழந்தைகள் - மூன்றிலிருந்து எட்டு வயது வரையிலான குழந்தைகள் மனிதக் குரலின் வழியாக இந்த கதைகளைக் கேட்க வேண்டும். காட்சி ஊடகத்தின் மூலம் பார்ப்பதைக் காட்டிலும் இது பயன் மிக்கது. அந்த ‘’கதைசொல்லிகள்’’  அவர்கள் பண்பாட்டுப் பணிக்காக நல்ல ஊதியம் பெற வேண்டும். 

Thursday, 26 March 2020

நாம் உருவாக்கிய உலகம்
ஒரு பலூனின்
எளிமையுடன்
குதூகலத்துடன்
உல்லாசமாக
மிதந்து
சென்று கொண்டே யிருக்கிறது

ஒரு தீபத்தை
ஏற்றுவதற்குத்தான்
நாம் எத்தனை
உணர்ச்சி கொள்கிறோம்
சுரம் கொண்ட குழந்தையை
அணைத்துக் கொள்ளும்
தாயைப் போல

பலிச்சோறு
ஏற்கும்
காகத்தின் கரைதல்
ஏன்
கண்ணீரைக் கொண்டு வருகிறது?

சொல்லா
மௌனமா
என்பதன் தெரிவு
எப்போதும்
அலைக்கழிக்கிறது

இனிமையும்
பிரிவும்
ஊற்றெடுக்கச் செய்யும்
கண்ணீர்
ஒன்றாகவே இருக்கிறது
தினமும்
உதயமும்
அஸ்தமனமும்
நிகழும் உலகில்

Wednesday, 25 March 2020

காரணிகள்

அன்பே
சாதாரணமான பொருட்களை
மாற்றமின்றி
மீண்டும் மீண்டும் நிகழும்
சாதாரணமான சம்பவங்களை
மிகச் சாதாரணமான மனநிலைகளை
நீ
மகத்துவம் நிறைந்தவையாக
நெசவு செய்தாய்
சாதாரணத்தின் அகல்களில்
அற்புதங்களென
ஒளிர்ந்தன
நீ ஏற்றிய தீபங்கள்
எப்போதாவது
அல்லது
எப்போதும்
மகத்தானவையும்
துயர் கொள்ளும்
இந்த மண்ணின்
வேதியியல்
காரணிகள்
என்னென்ன?

Tuesday, 24 March 2020

சத்யம் சிவம்

இன்று மாலை வீட்டிற்கு சோமேஸ்வர் வந்திருந்தான். ஈஷ் என்று கூப்பிடுவோம். அவனது தங்கை பத்மா. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் சென்னையில் விவேகானந்தா கல்விக் கழகம் நடத்தும் பள்ளியில் இருவரும் படிக்கிறார்கள். அவரது தந்தை இவர்கள் சிறு குழந்தையாயிருந்த போது வட இந்தியாவில் பணி புரிந்தார். ஆதலால் இருவரும் சரளமாக ஹிந்தி பேசுவார்கள். அவர்கள் வீடு எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ளது. இருவரும் தினமும் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பார்கள். ஈஷ் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு சமீபத்தில் எதிர்பாராத ஒரு அசௌகர்யம் வந்து விட்டது. இவனுடைய படிப்புப் பிரிவு கம்ப்யூட்டர் சயின்ஸ். இவன் பிரிவைத் தவிர மற்றவர்களுக்கு சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வு முடிந்து விட்டது. கோவிட்19 வைரஸ் முன்னேற்பாடுகள் காரணமாக இவனது பரீட்சையை தள்ளி வைத்து விட்டார்கள். 

‘’அங்கிள்! என் ஸ்கூல்ல வேற குரூப் படிச்ச என்னோட ஃபிரண்ட்ஸ் எல்லாம் டுவெல்த் முடிச்சுட்டாங்க அங்கிள். நான் மட்டும் இன்னும் டுவெல்த்தாவே இருக்கன்”

‘’என்ன எக்ஸாம் மீதி இருக்கு ஈஷ்?’’

‘’கம்ப்யூட்டர் சயின்ஸ்’’

‘’பரீட்சை ஈஸி தானே?’’

‘’ஈஸி தான். ஆனா முடிஞ்சுருந்தா நிம்மதியா இருக்கும்”

‘’பத்து நாள்ல எல்லாம் சரியாயிடும். டோண்ட் ஒர்ரி.’’

அவர்கள் சென்ற வாரமே இங்கு வந்து விட்டார்கள். சொந்தமாக கார் உள்ளது. அவனுடைய அப்பா டிரைவ் செய்து வந்து விட்டார். 

இங்கே அருகில் இருக்கும் அபார்ட்மெண்டில் சில குழந்தைகள் உள்ளன. பத்து வயதிலிருந்து பதினான்கு வயது வரை உள்ள குழந்தைகள். ஒரு வாரமாக ஒரே விளையாட்டு. ஹைட் அண்ட் சீக், பாட்மிட்டன். ரிங் பால். ஒரே கும்மாளம்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஈஷ் தீவிரமான கிரிக்கெட் ரசிகன். கிரிக்கெட் பற்றிய புள்ளிவிபரங்களை அள்ளி வீசுவான். எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். பௌலிங்கில் நல்ல பயிற்சி உள்ளவன். கிரிக்கெட் தன் வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்று விரும்பினான். பின்னர் சட்டென ஒரு தருணத்தில் , கிரிக்கெட் விளையாடுவதை விட்டு விட்டான். அப்போது வந்திருந்த போது அவன் ஒரு வார்த்தை கூட கிரிக்கெட் பற்றி பேசாமல் இருந்ததைப் பார்த்து அது குறித்து விசாரித்தேன். 

‘’அப்பாவுக்கு பிராமிஸ் பண்ணியிருக்கன் அங்கிள். இனிமே கிரிக்கெட் விளையாட மாட்டன்னு. அத பத்தி பேசுனா மனசுக்கு கஷ்டமா இருக்கும். அதனால பேசுறது இல்ல’’

‘’விளையாட மாட்டன். பிராக்டிஸுக்கு போக மாட்டேன்னு தான பிராமிஸ் பன்ன. பேசக் கூடவா கூடாது?’’

‘’பேசுனா ஞாபகம் வரும் அங்கிள். அதனால தான் பேசறது இல்ல”

ஈஷ் சிறு குழந்தையாயிருந்த போது - அவன் எல்.கே.ஜி படித்த போது அவனை நான் ஸ்கூலில் என்னுடைய பைக்கில் அழைத்துச் சென்று விட்டிருக்கிறேன். அவனுடைய தங்கை பிறந்து சில மாதங்களே ஆன கைக்குழந்தையாயிருந்த போது ஈஷ் அம்மாவையும் பாட்டியையும் என்னுடைய காரில் அழைத்துச் சென்று சிதம்பரத்தில் டிராப் செய்திருக்கிறேன். இன்று அவன் ஒரு டீன் ஏஜ் சிறுவன். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இளைஞனாகி விடுவான்.

அபார்ட்மெண்டில் இருக்கும் குழந்தைகளுடன் விளையாடி முடித்ததும் அவர்களை இன்னும் பக்குவம் பெறாத சிறுவர்கள் என்று தீவிரமாக ஒரு வாரத்துக்குப் பின் இன்று உணரத் துவங்கியதும் என்னைக் காண வந்தான்.

‘’ஹாய் அங்கிள்’’

”ஹாய் கண்ணா!”

‘’வீட்லயே இருக்கறது எப்படி இருக்கு அங்கிள்? இந்த டயத்துல என்ன செய்றீங்க?’’

’’புக்ஸ் படிக்கறது. சில பொயட்ரி எழுதுனன். சில கட்டுரை எழுதனன்”

ஈஷ் தன் மொபைலை எடுத்தான். ’’அங்கிள் உங்க பிளாக் அட்ரஸ் சொல்லுங்க”

”கூகுள்ல என்னோட பேர போட்டு ஒரு ஸ்பேஸ் விட்டு நம்ம ஊரை டைப் பண்ணு ஈஷ் ‘’

அவன் என்னுடைய தளத்திற்குள் சென்று விட்டான்.

’’ரெண்டு நாள் முன்னாடி அழகு ன்னு ஒரு பொயட்ரி எழுதியிருக்கன். வாசிச்சுட்டு இரு. நான் ஷர்ட் போட்டுட்டு வர்ரேன். நாம ஒரு சின்ன வாக் போய்ட்டு வருவோம். சரியா?’’

சோமேஸ்வருடன் நடக்கத் துவங்கினேன். உற்சாகம் ததும்பும் ஒருவர் உடனிருக்கும் போது மனம் தளர்வாக இருக்கிறது. சந்தோஷமும் நம்பிக்கையும் உண்டாகிறது. நான் ஊக்கம் நிரம்பிய மனிதர்கள் உடனிருப்பதை விரும்புபவன்.

‘’அங்கிள்! நீங்க எப்படி பொயட்ரி எழுதுவீங்க?’’

‘’அதை எப்படி சொல்றது ராஜா? ஒரு மொமண்ட் சட்டுன்னு ஒண்ணு தோணும். அது ஒரு காட்சியா இருக்கலாம். இல்ல ஒரு வார்த்தையா இருக்கலாம். இல்ல ஒரு ரிதமா இருக்கலாம். ஒரு ஓசையா இருக்கலாம். அது உண்டானதும் அதை எழுதணும்னு தோணும். அது ஒரு பொயட்ரியா இருக்கலாம்.’’

‘’நான் கூட இங்கிலீஷ்ல சில போயம் எழுதியிருக்கன் அங்கிள் ‘’

‘’எனக்கு காட்டறியா . நான் படிச்சு பாத்துட்டு எப்படியிருக்குன்னு சொல்றன். சரி, இப்ப வாசிச்சயே இந்த போயம் எப்படி இருந்தது?’’

‘’ரொம்ப நல்லா இருந்தது அங்கிள்”

சோமேஸ் முக தாட்சயண்யத்துக்காகச் சொல்கிறேனோ என்ற ஐயம் எனக்கு எழுந்தது.

‘’அந்த போயத்தை நீ எப்படி வாசிச்சன்னு சொல்லு பார்க்கலாம்’’

அவன் சொற்களுக்குத் திணறினான். இரண்டு மூன்று முறை எதையோ சொல்ல ஆரம்பிக்க முயன்றான். அவனுக்கு சரியான துவக்கம் அமையவில்லை. மௌனமாக நடந்தோம். சில அடிகள் நடைக்குப் பின், சட்டென்று பேசத் துவங்கினான்.

’’ யாரோ யார்ட்டயோ ஒரு ஃபீலை சொல்ல முயற்சி பண்றாங்க. அது ரொம்ப பியூரிடியோட இருக்கு. ஒரு சாதாரண ஃபீலை ஈஸியா சொல்லிடலாம். ஆனா ரொம்ப பியூரான ஃபீலை அந்த மாதிரி சொல்ல முடியாது. அதனாலயே சொல்ல முடியாம ஆகுது. அந்த ஃபீலோட காத்திருக்கறது பத்திய போயம் இது.’’

நான் கைக்குழந்தையாய் பார்த்த ஒருவன் என்னிடம் வாழ்வின் தீவிரமான நுட்பமான ஓர் உணர்வைக் குறித்து பேசுவது வியப்பைத் தந்தது. குழந்தைகள் தரும் மகிழ்ச்சி அகத்தைப் புனிதப்படுத்துகிறது.

‘’சோமேஷ்! உன்னை சின்னப் பையன்னு நினைச்சன். நீ ரொம்ப கிரியேட்டிவ்வா இருக்க ராஜா.’’

‘’நான் சொன்னது கரெக்டா?’’

’’பொயட்ரி-ல கரெக்ட் தப்புன்னு எதுவும் கிடையாது. அது பொயட்ரியா இருக்கா இல்லையாங்கறதுதான் கேள்வி. நாம எப்படி வாசிக்கிறோம் என்பது தான் முக்கியம்”

நான் சில கணங்கள் மௌனமாக நடந்தேன்.

‘’இந்தியாவுல காத்திருப்பு குறித்து மூவாயிரம் வருஷத்துக்கு மேல கவிதை எழுதப்படுது. சகுந்தலை துஷ்யந்தனுக்காகக் காத்திருக்கா. ராதை கிருஷ்ணனுக்காகக் காத்திருக்கா. பரதன் வனவாசம் முடிஞ்சு ராமர் எப்ப வருவார்னு காத்திருக்கார். சீதை ராமன் வருவார்னு அசோகவனத்துல காத்திருக்கா. சங்க இலக்கியத்துல காத்திருப்போட சித்திரங்கள் இருக்கு. கண்ணகி காத்திருப்பது. மாதவி காத்திருப்பது. இந்திய மரபுல காத்திருப்பு ரொம்ப ஆழமான படிமம். ஒவ்வொரு காலத்திலயும் அத பத்தி கவிதை எழுதப்படுது ‘’ எனக்கு சோமேஸ் நான் சொல்வதைப் புரிந்து கொள்வானா என்ற ஐயம் இப்போது இருக்கவில்லை.

‘’உனக்கு கிரிக்கெட்ல யாரை ரொம்ப பிடிக்கும்?’’

‘’எம்.எஸ். தோனி. உங்களுக்கு?’’

‘’ராகுல் திராவிட்’’

‘’ரொம்ப பொறுமையானவர் அங்கிள் திராவிட்.’’

‘’இந்தியாவுக்கு நிறைய வெற்றியைத் தந்தவர். தோனிக்கு அடித்தளமா இருந்தவர்’’

‘’உண்மைதான் அங்கிள். எனக்கு தோனி அளவுக்கே பிடிச்ச இன்னொரு பர்சனாலிட்டி ரஜினி அங்கிள்’’

நான் ஆச்சர்யமாக அவனைப் பார்த்தேன்.

‘’ரெண்டு பேருக்குமே ஒரு ஒற்றுமை இருக்கு அங்கிள். அவங்க ரெண்டு பேரையும் அவங்க ஆப்போசிட் ஆளுங்களால அவ்வளவு ஈஸியா பிரவோக் பண்ண முடியாது. தோனியை சீண்டுவாங்க. ஆனா தோனியோட கவனம் ஆட்டத்தின் மேலேயே இருக்கும். எதிர் டீமுக்கான பதிலை அடுத்த பந்துலயே தருவார். ஒரு ஹெலிகாப்டர் ஷாட். ரஜினியும் அப்படித்தான். தான் என்ன செய்யறோம்ங்றதல தெளிவா இருக்கார். இப்ப மக்கள்ட்ட சொல்லியிருக்கார். தூத் கி தூத்; பானி கி பானி. எல்லாருக்கும் தெரியும் அங்கிள். எது பால் எது தண்ணின்னு. மக்களே முடிவு செய்யட்டும்னு நினைக்கறார். மக்கள் ரஜினி சொல்றதைக் கேட்டுறுவாங்கன்னு அவரோட எதிரிகளுக்குத் தெரியும் அங்கிள். அதனாலதான் அவர் சாதாரணமா சொல்றதைக் கூட விதவிதமா வேற மாதிரி சொல்றாங்க”

‘’சோமு கண்ணா! எப்படிடா உனக்கு இந்த மாதிரில்லாம் யோசிக்கத் தெரியுது.’’

’’சிஸ்டத்தை சரி பண்ணனும் அங்கிள். நேரோ மைண்டடான ஆளுங்க இந்த உலகத்தை வாழத் தகுதியில்லாம ஆக்குறாங்க. இந்த பூமியை சூப்பரா மாத்தணும் அங்கிள்’’

வாக்கிங் முடிந்து வீட்டுக்கு வந்ததும் பத்மாவை அழைத்து வரச் சொன்னேன். உத்தராயணை ஒட்டி அகமதாபாத் சென்ற போது சபர்மதி ஆசிரமம் சென்றிருந்தேன். அங்கே வாங்கிய மகாத்மா காந்தி படம் பொறித்த கீ-செயின்களை அவர்களுக்குப் பரிசளித்தேன். மனம் இனிமையை உணர்ந்தது.