Wednesday, 5 June 2024

வி. பி. சிங் ( மறு பிரசுரம்)

 எனது தந்தை தீவிரமான காங்கிரஸ் ஆதரவாளர். அவரிடமிருந்தே எனக்கு சுதந்திரத்துக்குப் பின் இந்தியா சந்தித்த சவால்கள் குறித்த சித்திரங்கள் உருவாயின. அப்போது  தொழில்நுட்பத்தின் மீது தீராப் பற்று கொண்டிருந்தார்.  இப்போதும். தொழில்நுட்பமே நாட்டின் எல்லா சிக்கல்களுக்குமான தீர்வு என்று உறுதியாக நம்பினார். அந்த காலகட்டத்தின் இயல்பு அது. ‘’இருபத்து ஓராம் நூற்றாண்டை நோக்கி’’ என்பது அன்றைய ஆகப் பெரிய கோஷம். ஆதலால் அன்று காங்கிரஸுக்கு எதிரான அத்தனை சக்திகளும் பிற்போக்கு சக்திகளாக அடையாளம் காட்டப்பட்டன. அப்பா என்னிடம் அவரது எண்ணங்களைத் தொடர்ந்து சொல்வார். எனக்கு அவர் சொல்வது அத்தனையும் முக்கியமாகத் தோன்றும். எனது சித்தப்பா அப்பா சொல்லும் விஷயங்களில் இருக்கும் இடைவெளிகளை என்னிடம் சுட்டிக் காட்டுவார். அவற்றை நான் நானே யோசித்துக் கேட்பதாக அப்பாவிடம் கேட்பேன். அல்லது மனதுக்குள் வைத்துக் கொள்வேன். அப்பா வி.பி.சிங்கை கடுமையாக விமர்சித்தார். அவரது கடுமையான விமர்சனங்கள் மூலமே எனக்கு வி.பி. சிங் அறிமுகமானார். சிறுவனாயிருந்த எனக்கு வி.பி. சிங் முகத்தைப் பார்க்கும் போது அவர் நல்லவர்; நம்பகமானவர் என்ற எண்ணம் உண்டாயிற்று. 

அப்பா ஒருமுறை கடுமையாக வி.பி.சிங்கை விமர்சித்த போது, ‘’சில நாட்கள் முன்பு வரை அவர் காங்கிரஸ் தலைவர்தானே. கட்சியிலிருந்து விலகியதும் எல்லா தீமைக்கும் அவர் காரணமாகி விட்டாரா’’ என்று கேட்டேன். அப்போது எனக்கு ஒன்பது வயதிருக்கும் என்று நினைக்கிறேன். வி. பி. சிங் பிரதமரான போது நான் மகிழ்ந்தேன். அப்போது தூர்தர்ஷனில் ஆங்கிலச் செய்திகளிலும் தமிழ்ச் செய்திகளிலும் ‘’தேசிய முன்னணி’’ அரசாங்கம் குறித்த செய்திகள் வரும். அந்த அமைச்சரவையில் பிரதமரை அடுத்து நான் மிகவும் விரும்பியது ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸை. 

‘’பரீக்‌ஷா’’ ஞாநி வி. பி. சிங்கின் தமிழ்நாட்டு சுற்றுப்பயணங்கள் போது உடனிருந்து அவரது ஹிந்தி உரைகளை தமிழில் மொழிபெயர்ப்பவர். அதைப் பற்றி ‘’தீம்தரிகிட’’ இதழ்களில் எழுதியிருக்கிறார். கிண்டலும் பகடியும் வாக்கியத்துக்கு வாக்கியம் வெளிப்படும் உரைகள் அவை என்கிறார். அக்கட்டுரைகளில் வி.பி.சிங்கின் இயல்புகள் குறித்த தன் அவதானங்களை எழுதுகிறார் ஞாநி.

வி.பி.சிங் ஓர் ஓவியர். ஞாநியிடம் தமிழில் வி.பி.சிங் என்று எழுதிக் காட்டி தமிழில் தன் பெயரை இப்படித்தானே எழுத வேண்டும் என்று கேட்டாராம். ஞாநி வியப்புடன் எவ்வாறு அறிந்தீர்கள் என்று கேட்டிருக்கிறார். சுவரெழுத்துக்களில் பார்த்தேன். ‘’தேசிய முன்னணி’’ தேர்தல் சுவரெழுத்துக்களில் இரண்டு எழுத்து பெயருக்கு முன் வருவது எனக்குத்தான் என்பதால் இதுவே தமிழில் என் பெயரை எழுதும் முறை என்று அறிந்தேன் என பதில் சொல்லியிருக்கிறார்.

‘’மண்டல் கமிஷன்’’ பரிந்துரைகளை செயலாக்கியது அவர் எடுத்த துணிச்சலான நடவடிக்கை. அவர் மீதும் அவர் அரசின் மீதும் எந்த ஊழல் புகாரும் இல்லை.

தேடலும் வேட்டையும் ( மறுபிரசுரம்)


சில மாதங்களுக்கு முன்னால், புதுச்சேரி நண்பர்களுடன் நடுநாட்டில் இருக்கும் மூன்று நரசிம்ம ஷேத்திரங்களுக்குச் சென்றிருந்தேன். பரிக்கல், பூவரசங்குப்பம் மற்றும் அபிஷேகப்பாக்கம். காலை சென்னை எக்ஸ்பிரஸைப் பிடித்து விழுப்புரத்தில் நான் இறங்கிக் காத்திருந்தேன். நண்பர்கள் காரில் வந்தனர். அவர்களுடன் இணைந்து கொண்டேன். 

ஆங்காங்கே சந்தனக் கடத்தல்காரன் வீரப்பனின் ஆளுயர பேனர்கள். மாலை போட்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். எனக்கு அருவருப்பாக இருந்தது. பலரைக் கொன்ற - தன் சொந்த மகளான கைக்குழந்தையைக் கொன்ற-  ஒரு கொலைகாரனுக்கு எப்படி விசிறிகள் உருவாக முடியும் என்பது அதிர்ச்சியாக இருந்தது. தமிழ் வாழ்க்கை இப்படியான பல சமூக அதிர்ச்சிகளை  எப்போதும் அளிக்கவே செய்யும். 

இன்று சில அரசியல் கட்சிகள் பல யானைகளைக் கொன்ற வீரப்பனை ‘’இயற்கையின் காவலன்’’ என்கின்றனர். மணிமண்டபம் கட்டுவோம் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுகின்றனர். 

ஒரு காவல்துறை ஆய்வாளரின் மகனாகப் பிறந்து சட்டம் படித்து ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று நிர்வாகப் பணியைத் தேர்ந்தெடுக்காமல் காவல்துறைப் பணியைத் தேர்ந்தெடுத்து சவாலான கடும் பணிகளை கேட்டு பெற்றுக் கொண்டு ஏற்ற பல பொறுப்புகளை நிறைவுடன் செய்து முடிக்கிறார் கி. விஜயகுமார் ஐ.பி.எஸ்.,. அவர் வெற்றிகரமாக முடித்த பல பணிகளில் ஒன்று ‘’ஆபரேஷன் ககூன்’’. 

அது பற்றி அவர் எழுதியிருக்கும் Veerappan chasing the brigand என்ற நூலை சமீபத்தில் வாசித்தேன். சிறப்பு அதிரடிப்படையின் தலைமையை ஏற்கிறார் விஜயகுமார். அப்போது அவருக்கு ஐம்பது வயது. அவர் மனைவி அவரிடம் பணி ஓய்வு பெறுவதற்குள் வீரப்பனைப் பிடித்து விடுவீர்களா என்று கேட்கிறார். எட்டு வருடம் தேவைப்படும் என்று நினைக்கிறாயா என்று பதிலுக்குக் கேட்கிறார் விஜயகுமார். வீட்டுக்குள் இடம் மாறியிருக்கும் பொருளைத் தேடவே சிரமப்படுவீர்கள் என்பதால் கேட்கிறேன் என்கிறார் அவர் மனைவி.

வீரப்பனைத் தேடும் வேட்டையில் இருபது ஆண்டுகளாக இருப்பவர்கள்- வீரப்பனை நூலிழையில் தவற விட்டவர்கள் என அனைவரையும் சந்தித்து அவர்கள் அனுபவங்களைக் கேட்டுத் தொகுத்துக் கொள்கிறார். அதைத் தொகுத்ததும் தான் செய்ய வேண்டியது என்ன என்பது அவர் மனத்தில் மூட்டமாகப்  புலப்படுகிறது. இந்த நூலே அவ்வாறுதான் விஷயங்களைத் தொகுக்கிறது.

பலர் பல வருடங்களாக தேடிக் கொண்டிருந்த - காத்துக் கொண்டிருந்த - கணம் அவர்கள் முன் வந்து சேர்கிறது. ’’ஆபரேஷன் ககூன்’’ வெற்றிகரமாக நிறைவு பெறுகிறது.

வாசிக்க சுவாரசியமான புத்தகம் 

ஒரு நினைவூட்டல்

 காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. ஜெய்ராம் ரமேஷ் காங்கிரஸ் கட்சியின் கருத்தியலாளர்களில் ஒருவர். பரந்து பட்ட வாசிப்பைக் கொண்டவர். பல நூல்களை எழுதியவர். அறிவார்ந்த செயல்பாடுகள் மீது நம்பிக்கை கொண்டவர். 

நேற்று ( 04.06.2024) அன்று அவர் ஒரு விஷயத்தைக் கூறியிருக்கிறார். அதாவது, ஜூன் 4 அன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது வாரணசி தொகுதியில் முதல் சில சுற்றுகளில் இந்தியப் பிரதமர் பின் தங்கி இருப்பதாக செய்தி வந்தது. அதனைக் கண்ட திரு. ஜெய்ராம் ரமேஷ் எந்த இந்தியப் பிரதமரும் வாக்கு எண்ணிக்கையின் போது எந்த ஒரு சுற்றிலும் பின்னடைவைச் சந்தித்தது இல்லை ; ஜூன் 4ல் இது முதல் முறை நிகழ்ந்திருக்கிறது என்று கூறினார். 

திரு. ஜெய்ராம் ரமேஷ் இந்திய தேர்தல் வரலாற்றில் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டார். நினைவுபடுத்தினால் அதனை அவர் உணரக்கூடும். 

1977ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக இருந்தவர் திருமதி. இந்திரா காந்தி. அவர் உத்திரப் பிரதேசத்தின் ரே பரேலி தொகுதியில் காங்கிரஸ் (இ) சார்பில் போட்டியிட்டார். அதே தொகுதியில் பாரதிய லோக் தளம் கட்சியைச் சேர்ந்த திரு. ராஜ் நாராயணன் என்பவர் போட்டியிட்டார். மக்கள் வாக்களித்து வாக்குகள் எண்ணப்பட்டு ரே பரேலி தொகுதியின் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதியில் பாரதிய லோக் தளம் கட்சியின் வேட்பாளர் திரு. ராஜ் நாராயணன் வெற்றி பெற்றிருந்தார். அதாவது இந்தியப் பிரதமர் திருமதி . இந்திரா காந்தி தோல்வி அடைந்திருந்தார். வாக்கு வித்யாசம் 55,000 க்கும் மேல். 

தமிழ் மொழியில் உள்ள இரு பழமொழிகள் என் நினைவில் எழுகின்றன. ‘’கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறியக் கூடாது’’ என்பது ஒன்று. ‘’கற்றவன் கழுநீர் பானையில் கைவிட்டதைப் போல’’ என்பது மற்றொன்று. 

வாழ்த்துக்கள் தேர்தல் ஆணையம் !

 

Monday, 3 June 2024

மாசின்மை

 மோட்டார்சைக்கிளில் இந்தியப் பயணம் மேற்கொண்ட போது உணர்ந்த விஷயம் ஒன்று உண்டு. வாகனம் உடலின் ஒரு பகுதி என்ற உணர்வு உண்டாகி விடும். மாலை 6 மணிக்குப் பயணத்தை நிறைவு செய்யும் போது அன்று காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை வாகனம் செய்த பயணமும் கடந்த தொலைவும் தூரமும் வாகனம் மேல் பெருங்கனிவை உண்டாக்கி விடும். வாகனத்தை மைய ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியதும் பெட்ரோல் டேங்க் கவர் உள்ளே இருக்கும் துணியைக் கொண்டு வாகனத்தைத் தூய்மையாகத் துடைத்து வைப்பேன். தன் மேல் இருந்த தூசுகளும் மாசுகளும் நீங்கிய பின்னர் வாகனம் அடுத்த நாள் காலை பயணத்துக்கு தயாராக இருக்கிறேன் என அறிவிப்பதாகத் தோன்றும். வழக்கமாக வாகனத்தைத் துடைக்க ஆகும் நேரத்தில் மூன்றில் ஒரு பகுதி நேரமே அப்போது ஆகும். என்றாலும் வாகனம் பளிச் என இருக்கும். தூரதேசங்கள் அளிக்கும் ஆசிகளால் ஆனது அந்த மாசின்மை என எண்ணிக் கொள்வேன். 

Sunday, 2 June 2024

பயிற்சி

கடந்த சில மாதங்களாக காஃபி தேனீர் பால் ஆகியவற்றை முழுமையாகத் தவிர்த்திருக்கிறேன். பொதுப்பணியில் உள்ள எவரும் இதனைத் தவிர்ப்பது என்பது கடுமையான செயலே. உபசரிப்புடன் இணைந்திருப்பவை இம்மூன்றும் என்பதால் உபசரிப்பவர்கள் திருப்திக்காவேனும் அருந்த வேண்டிய நிலை ஏற்படும். ஒருவர் அளிக்கும் உபசரிப்பை ஏற்றுக் கொண்டு இன்னொருவரிடம் மறுத்தால் அது நன்றாக இராது. எனவே அனைவரிடமும் ஏற்பது என்ற நிலை உண்டாகி விடும். சற்று முயன்று இந்த மூன்று பானங்களையும் தவிர்த்து விட்டேன். 

ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவருந்தவும் ஒரு வேளை உணவுக்கும் இன்னொரு வேளை உணவுக்கும் நடுவே பானங்களோ தீனியோ அருந்தாமலோ உண்ணாமலோ இருக்கவே மனிதர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இருப்பினும் மனிதர்கள் முயன்று பானங்களையும் தீனிகளையும் பழகிக் கொள்கிறார்கள்; குழந்தைகளுக்குப் பழக்குகிறார்கள். 

சமணர்களில் ஒரு பிரிவினர் ஒரு நாளைக்கு இரு வேளை மட்டுமே உணவு உண்பார்கள். காலை சூரிய உதயம் ஆகி ஒரு மணி நேரம் கழித்து காலை உணவு. மாலை சூரிய அஸ்தமனம் ஆவதற்கு ஒரு மணி நேரம் முன்பு மாலை உணவு. மாலை உணவு அருந்திய பின் மறுநாள் காலை வரை நீர் கூட அருந்த மாட்டார்கள். இரவு துயிலப் போகையில் உண்ட உணவு செரித்திருக்கும். வாழ்வுக்கு உதவும் துணை நிற்கும் விஷயங்களைப் பழக்கமாக நிலைநிறுத்துவதில் சமணம் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. மானுடன் தனது லௌகிக வாழ்க்கைத் தேவைகளை எவ்வளவு குறைவாக வைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு குறைவாக வைத்துக் கொண்டு தனது ஆன்ம வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு அதிக கவனம் அளிக்க வேண்டும் என்பது அதன் சிந்தனை. காலை விழிப்பதிலிருந்து இரவு உறங்குவது வரை ஒவ்வொரு செயலையும் எவ்விதம் செய்ய வேண்டும் என்பதில் சமணத்திற்கு தனிப்பார்வை எப்போதும் உண்டு. எல்லா சமயங்களும் தினசரி வாழ்வின் நியதிகளை வகுத்திருக்கின்றன. மிகக் குறைந்தபட்ச தேவைகளைக் கொண்டு தினசரி வாழ்வை அமைத்துக் கொள்வது சமணத்தின் தனித்தன்மை. அதன் நோக்கம் லௌகிகத்தை எத்தனை குறைவாக வைத்துக் கொள்ள முடியுமோ அத்தனை குறைவாக வைத்துக் கொண்டு ஆன்ம வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே. 

லௌகிகம் முக்குணங்களால் ஆனது. ஆன்ம வாழ்வு முக்குணங்களுக்கு அப்பால் உள்ளது. கோடானுகோடி மனிதர்கள் லௌகிகத்தையே வாழ்க்கை என உணரும் நிலையில் உள்ளனர். கோடானுகோடியில் ஒருவரே லௌகிகத்துக்கு அப்பால் செல்கிறார். அத்தகையவர் உணர்ந்து பின்பற்றும் விஷயமே எளிய கோடானுகோடி மனிதர்களுக்கான நெறியாக அமைகிறது என்பது எண்ணிப் பார்க்க விந்தையானது . எனினும் அதுவே யதார்த்தமும் கூட.  

Wednesday, 29 May 2024

சுந்தர தரிசனம்

எனது நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். சில நாட்கள் முன்பு அவர் தன் சகோதரரின் கண்ணில் மருந்து விட்டுக் கொண்டிருந்தார். கண் மருந்தினை இன்னொருவரைக் கொண்டே இட வேண்டும். அதுவே ஆகச் சிறந்த வழிமுறை. மருந்துத் துளி கண் முழுமையையும் அடைய அதுவே வழி. தானே இட்டுக் கொள்வது 80 சதவீதம் பயனளிக்கும். இமைகளை விரித்து தானே இட்டுக் கொள்வது அத்தனை லகுவானது இல்லை.  அன்று அது குறித்து விசாரிக்க வாய்ப்பு இல்லை. இன்று சென்றிருந்த போது நண்பரின் சகோதரர் மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது அவரிடம் விசாரித்தேன். சூரிய ஒளி பெரும் கூச்சத்தை கண்ணுக்கு அளிப்பதாகச் சொன்னார். அதாவது காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை. மிகக் கடுமையான நிலை. கூலிங் கிளாஸ் போட்டாலும் கூச்சம் இருக்கிறது என்றார். கண்ணில் எப்போதும் நீர் வடிகிறது ; கண்ணைக் கசக்கும் உணர்வு உருவாகிக் கொண்டேயிருக்கிறது என்று சொன்னார். எந்த மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்கிறீர்கள் என்று விசாரித்தேன். புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை என்று சொன்னார். சிகிச்சைக்கு சிறப்பான இடம். அவரிடம் திருவெள்ளியங்குடி சுந்தர பெருமாள் குறித்து சொன்னேன். பகலில் பயணிக்க இயலாத நிலையைக் கூறி வருந்தினார். சற்று நேரத்தில் நண்பர் வந்து விட்டார். நண்பருடன் நாளை காலை திருவெள்ளியங்குடி சென்று வருவோம் என்று சொன்னேன். நண்பர் காலை 7.45 அளவில் புறப்படுவோம் என்றார். அவர்கள் இருவரிடமும் திருவெள்ளியங்குடி ஆலயத்தின் ’’நேத்ர தீபம்’’ குறித்து சொன்னேன். இங்கே ஒரு  எண்ணெய் செக்காலை இருக்கிறது. அங்கே சென்று நல்லெண்ணெய் வாங்கிக் கொண்டால் காலை முன் நேரம் புறப்படுவதற்கு வசதியாக இருக்கும் என்று கூறி எண்ணெய் வாங்க புறப்பட்டேன். நாளைய பயணத்துக்கு பைக்குக்கு பெட்ரோல் போட்டுக் கொள்ள வேண்டியதும் இருந்தது. 

செக்காலை சென்று நல்லெண்ணெய் வாங்கிக் கொண்டேன். ஆலை உரிமையாளரிடம் வெள்ளியங்குடி கோவிலின் நேத்ர தீபத்துக்கானது இந்த எண்ணெய் என்று சொன்னேன். அவர் என்ன விபரம் என்று கேட்டார். ஆலயம் குறித்து சொன்னேன். அவருக்கு இந்த விஷயங்கள் பெரும் வியப்பைத் தந்தன. தனது கடை ஊழியர் ஒருவரை அழைத்து திருவெள்ளியங்குடி செல்லும் வழியை எழுதிக் கொள்ள சொன்னார். தனக்கு பல ஆண்டுகளாக கண் நோய் இருப்பதாகவும் இந்த விபரம் கேள்விப்பட்டதும் அங்கே செல்ல விரும்புவதாகவும் சொன்னார். ஞாயிறு செக்காலை விடுமுறை. அன்று காரில் சென்று வருகிறேன் என்று கூறினார். 

அடுத்தடுத்து சுந்தர பெருமாளை தரிசிக்க வாய்ப்பது மகிழ்ச்சி அளித்தது. 

Friday, 24 May 2024

காட்டுக்கேது தோட்டக்காரன் ?

இசை மொழி  ) நண்பர் (அனுபல்லவி சரணம்) வீட்டுக்கு வந்திருந்தார். 

’’தெய்வம் தந்த வீடு’’ என்ற கண்ணதாசன் பாடலை மெல்ல முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அனேகமாக முதல் நாள் இரவு காரைக்கால் வானொலியில் கேட்டிருப்பார். 

அமைப்பாளர் அவரிடம் கீழ்க்கண்ட நான்கு வரிகளை கவனித்தீர்களா என்றார். 

வெறும் கோயில் இதிலென்ன அபிஷேகம் ? 
உன் மனமெங்கும் தெருக்கூத்து பகல்வேஷம்
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி
காட்டுக்கென்ன தோட்டக்காரன் இதுதான் என் கட்சி

இசைமொழி நண்பர் நன்றாகத் தெரிந்த வரிகள் தானே என எண்ணினார். 

அமைப்பாளர் பேசத் தொடங்கினார். ‘’ கவிஞர் வெறும் கோயில்னு சொல்றதை முழுமையா புரிஞ்சுக்கணும்னா கோலாகலமாக பூஜையும் பிராத்தனையும் நடக்கற கோயில் நம்ம நினைவுக்கு வந்து அதுக்கப்பறம் வெறும் கோயில் நம்ம ஞாபகத்துக்கு வரணும் . கோலாகலமான கோயில் என்னும் இமேஜ் வெறும் கோயில் என்னும் வார்த்தையோட நிழலா அந்த வார்த்தைல அமர்ந்திருக்கு. ஒரு காலத்துல ஐந்து கால பூஜையும் நடந்த கோயில் தான் வேறொரு காலத்துல வெறும் கோயிலா ஆகுது. ஹம்பியை நேர்ல பாத்தவங்களுக்கு அந்த விஷயம் தெரியும். ஸ்வாமியே இல்லாத கோயில். அதிலென்ன அபிஷேகம். உன் மனமெங்கும் தெருக்கூத்து பகல்வேஷம் வரில ஒரு சுவாரசியமான அம்சம் இருக்கு. தெருக்கூத்து பாக்க மக்கள் திரண்டு போவாங்க. திருவிழாவோட ஒரு அம்சமா தெருக்கூத்து நடக்கும். எல்லாரும் திரண்டு போய் பாப்பாங்க. தெருக்கூத்து தெருவில நடக்கும். புராண கதாபாத்திரங்கள் அத்தனை பேரும் சாமானியர்களோட தெருவுக்கு வந்து கூத்துல வாழ்வாங்க. மேடை இல்லாம தெருவுல நடக்குறது தெருக்கூத்து. பொதுமக்களால திரண்டு போய் பார்க்கப்படுறது. பகல்வேஷம் என்னும் கலை எப்படின்னா புராண கதாபாத்திரங்களா வேஷம் போட்டுட்டு சாமானிய மக்களோட வீடுகளுக்கு முன்னால போய் ஒவ்வொரு வீட்டு முன்னாலயும் புராணத்துல இருந்தும் இதிகாசத்துல இருந்தும் சில பாடலை பாடிட்டு அந்த வீட்டுல இருக்கறவங்கள ஆசிர்வதிப்பாங்க. கவிஞர் தெருக்கூத்து பகல்வேஷம் இரண்டையும் அடுத்தடுத்து வைக்கறதுல ஒரு கிரியேட்டிவ் ஆர்டர் இருக்கு. கள்ளிக்கென்ன முள்ளில் வேலி ? கள்ளி பக்கத்துல போனால கையை உடம்பை கூர் முள்ளால கிழிக்கும். அது வளர வேலி தேவையில்லை. தோட்டம் சீராக பராமரிக்கப்படுவது. காடு தன்னியல்பில் தானாக வளர்வது.  தோட்டத்தையும் காட்டையும் கவிஞர் ஈக்குவேட் செஞ்சு காட்டறார். உள்ளதை உள்ளபடி சொல்லும் யதார்த்தமே என் கட்சி என கவிதை செல்கிறது ‘’ என்றார். 

இத்தனை விஷயங்கள் இந்த நான்கு வரிகளிலேயே இருக்கிறதா என எண்ணத் தொடங்கினார் இசைமொழி நண்பர். 

Wednesday, 22 May 2024

விஜயநகரப் பேரரசு - எஸ். கிருஷ்ணன்


 
கடந்த ஆயிரம் ஆண்டுகளில், உலகம் கண்ட பேரரசுகளில் மிக முக்கியமான பேரரசு விஜயநகரப் பேரரசு ஆகும். உலகின் பெரிய பேரரசுகளுடன் ஒப்பிடுகையில் நிலப்பரப்பில் சிறியது என்றாலும் செல்வ வளத்திலும் கலைக் கட்டுமானங்களை உருவாக்கியதிலும் எப்போதும் முன்னணியில் வைக்கத் தக்கது விஜயநகரப் பேரரசு. எஸ். கிருஷ்ணன் ‘’விஜயநகரப் பேரரசு’’ என்ற நூலை எழுதி அந்நூல் கிழக்குப் பதிப்பக வெளியீடாக பிரசுரம் கண்டுள்ளது. 

விஜயநகரப் பேரரசின் உருவாக்கம் குறித்தும் அதன் மன்னர்கள் குறித்தும் அவர்கள் ஆற்றிய செயல்கள் மேற்கொண்ட போர்கள் குறித்து இந்நூல் விரிவாகப் பதிவு செய்கிறது. இந்நூலின் ஆசிரியர் அளிக்கும் சில விபரங்கள் ஆர்வமூட்டக்கூடியதாகவும் சுவாரசியமாகவும் இருந்தன. ஒரு தகவல் : கிராமத்தில் கர்ணம், மணியம் , தலையாரி என்னும் பெயர் கொண்ட நிர்வாக ஊழியர்கள் விஜயநகரப் பேரரசில் நியமிக்கப்பட்டதையும் அதே முறையை ஆங்கில ஆட்சி பின்னாட்களில் பின்பற்றியதையும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். எளிய குறிப்பாயினும் கிட்டத்தட்ட ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் ஓர் அடிப்படை நிர்வாக முறை விஜயநகரப் பேரரசு காலத்தில் உருவாக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டிருப்பதை சமகாலத்துடன் இணைத்து பல புரிதல்களை அடைய முடியும். இதைப் போன்ற அவதானங்கள் முக்கியமானவை. இவ்விதமான குறிப்புகள் கடந்த காலத்தை சமகாலத்துடன் இணைக்கின்றன. அத்வைத , மாத்வ, சைவ மடங்கள் பல விஜயநகரப் பேரரசு காலத்தில் ஸ்தாபிக்கப்பட்டவை என்னும் தகவலை நூலாசிரியர் வழங்குகிறார். சைவ ஆதீனங்களான தருமபுரம் ஆதீனமும் திருவாவடுதுறை ஆதீனமும் விஜயநகரப் பேரரசின் ஆதரவைப் பெற்றிருந்தன என்னும் தகவல் சமகால வரலாற்றுடன் இணைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று.  ஆழ்வார்கள், நாயன்மார்களுக்கு அடுத்து அருணகிரிநாதர் தமிழ் பக்தி மறுமலர்ச்சியில் முக்கியமான பங்களிப்பை ஆற்றியவர் என்னும் தனது அவதானத்தை நூலாசிரியர் முன்வைத்துள்ளதும் முருகன், சிவன் , விஷ்ணு , திருமகள் ஆகிய தெய்வங்களைத் துதித்த அருணகிரிநாதர் விஜயநகர மன்னர் பிரபுட தேவநாதர் என்பவரை தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ளதை நூலாசிரியர் எடுத்துக் காட்டியதும் சிறப்பானது. ( விஜயநகரப் பேரரசின் காலகட்டத்தின் தொடர்ச்சியான நாயக்கர் காலகட்டத்தைச் சேர்ந்த இன்னொரு தமிழ்க் கவிஞர் குமரகுருபரர். கலைமகள், குமரன், மீனாட்சி ஆகியோர் குறித்து பாடல்கள் புனைந்த அவர் தருமபுரம் ஆதீனத்தின் மாணவராக காசி கேதார கட்டத்தில் ‘’ காசி மடம்’’ நிறுவி காசியில் தமிழையும் சைவத்தையும் வளர்த்தவர்)

காலம் கணந்தோறும் பெருகும் பெருநதியென ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் ஒவ்வொரு துளி எனத் தக்க அளவில் ஒவ்வொரு மானுடனின் வாழ்க்கையும் அமைகிறது. மானுடர்கள் குழுக்களாக சமூகங்களாகத் திரள்கின்றனர். சமூகங்கள் அரசுகளாகின்றன. தன் குடிகளின் வாழ்வை உயர்த்தி நற்செயல்கள் பல புரிந்து கலைச் செல்வங்களை உருவாக்கி மேன்மை கொண்ட அரசுகள் சில. அவற்றில் முக்கியமானது விஜயநகரப் பேரரசு. 

நூல் : விஜயநகரப் பேரரசு ஆசிரியர் : எஸ். கிருஷ்ணன் பக்கம் 216 விலை ரூ. 250 கிழக்கு பதிப்பகம்

Thursday, 16 May 2024

எழுதாக் கிளவி

எனது நண்பரின் மகன் மர்ஃபி. மர்ஃபி என்பது நான் அவனை செல்லமாக அழைக்கும் பெயர். அவன் சிறு குழந்தையாயிருந்த போது பிரபலமான மர்ஃபி ரேடியோ விளம்பரத்தில் வரும் குழந்தையைப் போல இருந்ததால் அவனை மர்ஃபி என அழைக்கத் துவங்கினேன். அதுவும் அவனது பெயர்களில் ஒன்றாகி நிலைபெற்று விட்டது. மர்ஃபியை வைத்து நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறேன். மர்ஃபி கவிதைகள்

மர்ஃபி இப்போது பெங்களூரில் இருக்கும் வேத பாடசாலை ஒன்றில் ஐந்து ஆண்டுகளாக வேதம் படித்துக் கொண்டு இருக்கிறான். வருடத்தின் 365 நாட்களில் 350 நாட்கள் அவனுக்கு வகுப்பு உண்டு. 15 நாள் விடுமுறையில் மர்ஃபி தன் பெற்றோருடனும் குடும்பத்தினருடனும் வெளிமாநிலத்துக்கு சுற்றுலா சென்று விட்டு பாடசாலை திரும்பி விடுவான். கடந்த 5 ஆண்டுகளில் அவனை சந்திப்பது அரிதாகி விட்டது. இருப்பினும் தினமும் எங்கள் வீட்டில் அவனைப் பற்றி பேசுவோம். நான் தினம் சில முறைகளாவது அவனைப் பற்றி சொல்வேன். நான் அடிக்கடி சொல்லும் சம்பவம் ஒன்று உண்டு. அதாவது , மர்ஃபி பிரி கே ஜி படித்த போது அவனை பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வேன். வீட்டிலிருந்து பள்ளி வரைக்கும் பைக்கில் பயணம் செய்யும் மகிழ்ச்சியில் வந்து விடுவான். பள்ளியைக் கண்டதும் உள்ளே செல்ல மாட்டேன் என அழத் துவங்குவான். சமாதானப்படுத்தி வகுப்பில் விட்டு வருவேன். காலை 9 மணிக்கு விட்டால் பின்னர் மதியம் 12 மணிக்கு அழைத்து வந்து விடலாம். பிரி கே ஜி யின் எல்லா குழந்தைகளும் அழும். அவனது வகுப்பு ஆசிரியை பள்ளி துவங்கிய சில நாட்களில் என்னிடம் சொன்னார் ; ‘’ எல்லா குழந்தைகளும் அம்மாட்ட போகணும் ; அப்பாட்ட போகணும் னு அழறாங்க. இவன் மட்டும் வித்யாசமா பிரபு மாமாட்ட போகணும் னு அழறான்’’. பள்ளிக்கு கொண்டு விடுவதும் அழைத்துச் செல்வதும் நான் என்பதால் அவ்வாறு அழுதிருக்கிறான். படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான். கணிதத்திலும் பேரார்வம் கொண்டிருந்தான். 

எட்டு வயதில் வேத பாடசாலைக்கு வேதம் படிக்க அனுப்புவது என அவனது பெற்றோர் முடிவு செய்தனர். அவனுக்கும் அந்த முடிவில் முழு சம்மதம் இருந்தது. தன் விருப்பத்தின் காரணமாகவே வேதம் படிக்கச் சென்றான். ஆண்டுக்கு ஒரு முறை வரும் போது நீ படித்த வேதத்தை சொல்லிக் காட்டு என்று கேட்போம். அவன் சொன்னதில்லை. இந்த முறை பாடசாலை மாணவர்கள் இணையம் மூலம் வேத பாராயணம் செய்தார்கள். ஒரு மணி நேரம். விடுமுறையின் 15 நாட்களிலும் தினம் ஒரு மணி நேரம் கூட்டாக பாராயணம் செய்யுமாறு அவர்கள் ஆசிரியர் அறிவுறுத்தியிருக்கிறார். அதன் படி இன்றைய பாராயணம் செய்தார்கள். 

மர்ஃபி ஒரு மணி நேரம் வேத பாராயணம் செய்தான். கையில் எந்த புத்தகமும் இல்லை. பாராயணம் செய்யும் இன்றைய பகுதி அவனுக்கு முழு மனப்பாடமாக இருந்தது. ஒரு மணி நேரம் எந்த புத்தகமும் இல்லாமல் எந்த குறிப்பும் இல்லாமல் முழுதும் மனப்பாடமாக வேதம் ஓதியதைக் கண்ட போது எனக்கு பிரமிப்பாக இருந்தது. ரிக் வேதத்தின் ‘’சோம சூக்தம்’’ என்னும் பகுதியை இன்று பாராயணம் செய்தார்கள். 

வேதத்தை ‘’எழுதாக் கிளவி’’ என்று கூறுவார்கள். வானின் தூய ஒலிகளை தம் தவத்தால் அறிந்த முனிவர்கள் அவற்றை ஒலி வடிவமாக புவி உயிர்களுக்கு வழங்கியவையே வேதங்கள். ஐயாயிரம் ஆண்டுகளாக ஒலி வடிவமாகவே பயிலப்படுகிறது. ஒலிக்கிறது. 

மேன்மையான தவ ஆளுமைகளால் உலகுக்குக் கிடைத்த கொடை வேதங்கள். அவற்றைக் காப்பது உலக மானுடர் அனைவரின் கடமை.