Monday, 27 January 2025

விரல்

 ஒரு கனவான். மிகவும் நாசுக்கானவர். இது அவருடைய ஒரு இயல்பு. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சில அற்பத்தனங்களைச் செய்கிறார். அவர் வீணை வாசிக்கக் கூடியவர். அவரது விரல்கள் வீணை மூலம் நிகழ்த்தும் அற்புதத்தை கண்ட ஒருவர் அந்த கரங்களா அற்பத்தனம் நிகழ்த்தின என துணுக்குறுகிறார். எதிர்பாரா சிறு விபத்து அவர் விரல்களை நசுக்கி விடுகிறது. தி.ஜா வின் விரல் சிறுகதை ஒரு கனவானின் ஒளி மிக்க பக்கத்தையும் இருள் கப்பியிருக்கும் பகுதியையும் அடையாளம் காட்டிச் செல்கிறது. 

Sunday, 26 January 2025

இவனும் அவனும் நானும்

 காம குரோத மோகம் லோபம் மதம் மாச்சர்யம் என்பது மனித மனத்தின் ஆறு ப்கைவர்கள். எனினும் மனித மனம் அவற்றை பகையென்று எண்ணி விலகி நின்றிருப்பதில்லை. அவை உட்பகைவர்கள். உடனிருந்தே அழிப்பவை. அவற்றுடன் நேரடியாகப் போராடுவதை விட அவற்றை விலக்கி வைப்பதே பாதுகாப்பான அணுகுமுறை. மனித மனம் அந்த ஆறு பகைவர்களுடனும் எப்போதும் விஷப் பரீட்சை செய்து கொண்டேயிருக்கிறது. அந்த விஷப்பரீட்சை குறித்த கதை தி.ஜா வின் ‘’இவனும் அவனும் நானும்’’. 

ஒரு விசாரணை

 நவரசங்களை வெளிப்படுத்தி நாடகம் போடும் ஒரு கோஷ்டி. அந்த கோஷ்டியில் இருவர் காதலிக்கின்றனர். காதலித்து பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த திருமணத்துக்கு நாடகக் கோஷ்டியில் பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர். வாதப் பிரதிவாதங்கள் நிகழ்கின்றன. விசாரணை முடிகிறது. காலைக் காட்சி முடிந்து மாலைக் காட்சி தொடங்குவது போல விசாரணை முடிந்து நடிகர்களின் அன்றாட வாழ்க்கை தொடங்குகிறது. இதுவே தி.ஜா வின் ‘’ஒரு விசாரணை’’ சிறுகதை. 

போர்ஷன் காலி

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நடுவயது கொண்ட இரண்டு நண்பர்கள். கலையில் பொது விஷயங்களில் ஆர்வம் கொண்ட ஒரு பேராசிரியர் ஒருவர். அவரது நண்பரான சூது வாது அறியாத இன்னொருவர். பேராசிரியர்  மகள் பிரசவத்துக்காக பிறந்தகம் வந்திருக்கும் சமயம் பேராசிரியர் தன் வீட்டின் கீழ் போர்ஷனில் குடியிருக்கும் குடும்பத்தின் இளம் பெண்ணுக்கு ஒரு காதல் கடிதம் எழுதிக் கொடுத்ததாக ஒரு பேச்சு எழுகிறது. சுற்றியிருப்பவர்கள் கொதித்துப் பொகிறார்கள். குடித்தனக்காரர் வீட்டை காலி செய்து விட்டு சென்று விடுகிறார். நீண்ட ஆண்டுகளாக வீட்டை காலி செய்யாமல் இருந்தார் ; எந்நேரமும் சினிமாப் பாட்டு அவர்கள் வீட்டில் ஓடிக் கொண்டேயிருந்தது ; அதன் காரணத்துக்காகவே இப்படி ஒரு அதிர்ச்சிகரமான நடவடிக்கை எடுத்தேன் என்கிறார் பேராசிரியர் சூது வாது அறியாத நண்பரிடம். நண்பருக்கு நம்புவதா நம்பாமல் இருப்பதா என்று தெரியவில்லை. தன் மனைவியிடம் பேராசிரியர் சொன்னதை அப்படியே வந்து சொல்கிறார். முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்; அதை அப்படியே கேட்டு நம்புகிறீர்களே என்கிறாள் மனைவி. தி.ஜா வின் ‘’போர்ஷன் காலி’’ நல்ல ஒரு ஹாஸ்ய கதை. 

Saturday, 25 January 2025

ஒரு காட்சி

வீட்டிலிருந்து 600 மீட்டர் தூரத்தில் சற்றே பெரிய மனை ஒன்றில் சிறு புதர்கள் அடர்த்தியாக மண்டியிருந்தது. அதனைக் கடந்து செல்கையில் வானில் நூறு கருடன்கள் வட்டமிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டேன். அத்தனை கருடன்களை ஒரே இடத்தில் பார்த்தது ஆச்சர்யம் அளித்தது. ஏன் அவை அந்த இடத்தை வட்டமிடுகின்றன என சற்று நின்று நோக்கினேன். அந்த புதரிலிருந்து ஈசல்கள் ஆயிரக்கணக்கில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. வெளிப்படும் ஈசல்களை உணவாக்கிக் கொள்ள கருடன்கள் வட்டமிடுகின்றன. வட்டமிடும் வேகத்தில் தன் உகிர்களால் ஈசலைக் கவ்விக் கொள்கின்றன. கவ்விய அடுத்த கணமே தன் வாய்க்குக் கொண்டு சென்று ஈசலை விழுங்கி விடுகின்றன. ஆயிரக்கணக்கான ஈசல்கள்- நூற்றுக்கணக்கான கருடன்கள்.  ஈசல் சில மணி நேரம் மட்டுமே உயிர்த்திருக்கும் ஜீவன். அந்திப் பொழுது தொடங்குகையில் பிறந்து சில மணி நேரங்களில் தன் வாழ்வை நிறைவு செய்து கொள்வது. ஆக்கல் காத்தல் அழித்தல் என பிரபஞ்ச இயக்கத்தை நிகழ்த்தும் இறைமையின் எல்லையின்மையை ஒரு கணம் நினைத்து வியந்தேன். 

Wednesday, 22 January 2025

24 மணி நேரம்

திங்களன்று மதியம் 1 மணிக்கு சோழன் விரைவு வண்டியில் சென்னை கிளம்பினேன். மறைமலை நகரில் எனது நண்பர் ஒருவர் தனது மனை ஒன்றை விற்பனை செய்து தரக் கூறினார். அந்த இடத்தை முதலில் கண்ணால் பார்க்க வேண்டும் என எண்ணினேன். அந்த இடத்தின் ஜி.பி.எஸ் ஒளிப்படத்தை மின்னஞ்சலில் நண்பர் அனுப்பியிருந்தார். என்னிடம் ஸ்மார்ட்ஃபோன் கிடையாது. எனக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலை கூடுவாஞ்சேரியில் வசிக்கும் எனது உறவினருக்கு அனுப்பினேன். அவர் அதனை தன் திறன்பேசி மூலம் திறந்து அந்த இடம் எங்கே இருக்கிறது என யூகித்து வைத்திருந்தார். அவர் என்னை மறைமலைநகர் ரயில் நிறுத்தத்தில் வந்து அழைத்துச் செல்வதாகத் திட்டம். சோழன் விரைவு வண்டி மறைமலை நகரில் நிற்காது. செங்கல்பட்டில் இறங்கி மின்சார ரயிலுக்கு மாற வேண்டும்.  

ரயிலில் நல்ல கூட்டம். பொங்கல் விடுமுறை முடிந்த பின் வரும் முதல் வேலைநாள் என்பதால் நல்ல கூட்டம். ரயிலில் நின்று கொண்டு தான் சென்றேன். ரயிலில் நின்று கொண்டு செல்வது குறித்து எனக்கு எந்த புகாரும் இல்லை. இந்திய ரயில்வே சிறப்பாக செயல்படும் நிர்வாகம். லட்சக்கணக்கான ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார்கள். ரயில்வே உருவாக்கியிருக்கும் போக்குவரத்து கட்டமைப்பால் தான் இத்தனை மக்கள் பயணம் செய்கிறார்கள். எந்த ஊருக்கும் இருக்கையில் அமர்ந்து செல்ல வேண்டும் என்றால் இன்றும் பயணிகள் ரயில்கள் இருக்கவே இருக்கின்றன. மதியம் 1 மணிக்கு கிளம்பும் நான் காலை 6 மணிக்கு ஒரு பயணிகள் ரயிலில் சென்றிருக்க முடியும். அதில் சாவகாசமாக அமர்ந்து விழுப்புரம் வரை செல்ல முடியும். அங்கே சென்று சேர்ந்த அடுத்த 15 நிமிடத்தில் சென்னைக்கு வண்டி இருக்கிறது. 12 மணி அளவில் சென்னை சென்று விடலாம். எனக்கு நாளின் முதல் பாதி வரை சில பணிகள் இருந்தன. அவற்றை பூர்த்தி செய்தேன். நான் முன்பதிவு இல்லாத பெட்டியில் செல்வதை விரும்புபவன். சாமானிய மக்களுடன் தொடர்பு கொள்ள அது ஒரு உபயோகமான வழி. 

என்னுடன் நின்று கொண்டு ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர் பயணித்தார். தட்கால் முன்பதிவு முயன்றதாகவும் ஒரு சில நிமிடங்களில் டிக்கெட் நிரம்பி முன்பதிவு கிடைக்காததால் பொது பகுதியில் பயணிக்க நேர்ந்ததாகவும் கூறினார். நீட் தேர்வு குறித்து அவருடைய அபிப்ராயம் என்ன என்று கேட்டேன். நீட் தேர்வு இருந்ததன் காரணமாகவே தன்னால் மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது என்று கூறினார். அவர் படிப்பது ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில். நீட் தேர்வு வருவதற்கு முன்னால் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்ணயிக்கும் தொகையே கட்டணம் என்றும் ஏழை நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் எவரும் பெருந்தொகை செலுத்தி சேர முடியாது என்றும் கூறினார். நீட் தேர்வினால் மட்டுமே ஒரே கலந்தாய்வு நடக்கிறது; தனியார் கல்லூரி சேர்க்கையும் கலந்தாய்வு மூலம் என்பதால் தன்னைப் போன்றவர்களுக்கு சேர்க்கை அனுமதி கிடைக்கிறது என்று கூறினார் அந்த மாணவர். ரயில் பயணங்கள் இவ்வகையான நேரடி மனப்பதிவுகளை உருவாக்கக் கூடியவை என்பதால் எனக்கு முக்கியமானவை. 

செங்கல்பட்டில் ரயில் மாறி மறைமலைநகர் சென்றடைந்தேன். எனது உறவினர் எனக்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தார். மனைக்கு அழைத்துச் சென்றார். பிரதான சாலையில் ஒரு பெரிய திருமண மண்டபம் இருந்தது. அதன் அருகே இருந்த சாலையில் திரும்பி நேராகச் சென்று இடது பக்கம் திரும்பினால் சிறு தொலைவில் ஒரு பெரிய பள்ளியின் மைதானம். அங்கிருந்து வலது பக்கம் திரும்பினால் ஒரு கிண்டர் கார்டன் பள்ளிக்கூடம். அதனைத் தாண்டிச் சென்றால் ஒரு ஏரிக்கரை சாலை. அந்த சாலையிலிருந்து சில மீட்டர் தொலைவில் மனை இருந்தது. நண்பர் அனுப்பிய புகைப்படத்தில் இருந்த வீடுகள் எளிதில் கண்டறியப்பட்டன. மனை அவற்றுக்கு அருகில் என அடையாளப்படுத்தப்பட்டிருந்ததால் வந்த பணி திருப்தியாக நிறைவு பெற்றது. அந்த பகுதியில் நிறைய அடுக்ககங்கள் இருந்தன. புதிய வீடுகளின் கட்டுமானம் நடந்து கொண்டிருந்தது. அங்கே இருப்பவர்களிடம் மனைகளின் விலை நிலவரங்களை விசாரித்துக் கொண்டேன். 

பின்னர் உறவினர் என்னை அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு மணி நேரம் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்து விட்டு உறவினரிடம் இந்திரா காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாய்க் கொண்ட ‘’எமர்ஜென்சி’’ திரைப்படம் பார்க்க வேண்டும் என்று சொன்னேன். நண்பர் இணையம் மூலம் டிக்கெட் பதிவு செய்தார். வேளச்சேரியில் உள்ள ஒரு தியேட்டருக்கு செல்ல வேண்டும். இரு சக்கர வாகனத்தில் இருவரும் பயணித்தோம். ஹிந்தி திரைப்படம். ஆங்கிலத்தில் சப் டைட்டில். நள்ளிரவு 1.30க்கு படம் முடிந்தது. உறவினர் நாங்கள் முன்னரே திட்டமிட்ட விதத்தில் என்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் டிராப் செய்தார். அவரை ஜாக்கிரதையாக வீடு திரும்பும்படியும் வீட்டுக்குச் சென்றதும் எனக்கு அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பும்படியும் சொன்னேன். பேருந்து நிலையம் உள்ளே சென்றதும் ‘’ திருச்சி ஏறிக் கொள்ளுங்கள் திருச்சி ஏறிக் கொள்ளுங்கள் ‘’ என பேருந்து கண்டக்டர்கள் அழைத்தனர். அவர்களைத் தாண்டிச் சென்றேன். கடலூருக்கு ஒரு வண்டி தயாராக இருந்தது. எத்தனை மணிக்கு கடலூர் செல்லும் எனக் கேட்டேன். காலை 6 மணியாகும் என்றனர். காலை 7 மணியை ஒட்டி அங்கே ஊருக்கு ஒரு பாசஞ்சர் வண்டி வரும். அதனைப் பிடிக்க முடியும் என எண்ணினேன். எனது இரு சக்கர வாகனம் ரயில் நிலைய பார்க்கிங்கில் இருந்தது. கிளாம்பாக்கத்தில் வண்டி கிளம்பும் முன் தூங்கி விட்டேன். உறவினரின் குறுஞ்செய்தி வந்து சேர்ந்த ஒலி எழுந்தது. வீடடைந்தேன் என செய்தி அனுப்பியிருந்தார். மகிழ்ச்சி என பதில் செய்தி அனுப்பி விட்டு உறங்கி விட்டேன். உறக்கம் விழித்த போது வண்டி கடலூரை நெருங்கியிருந்தது. பேருந்து நிலையத்திலிருந்து அருகில் இருந்த ரயில் நிலையம் வந்து பயணிகள் ரயிலைப் பிடித்தேன். 9 மணிக்கு ஊர் வந்து சேர்ந்தேன். 

பத்து மணி அளவில் ஒரு அலைபேசி அழைப்பு. எனது நண்பர் ஒருவருக்கு வீட்டுக்கடன் பெற விண்ணப்பம் வங்கி ஒன்றில் தரப்பட்டுள்ளது. அவர் வெளியூரில் வசிக்கிறார். அந்த விண்ணப்பம் தொடர்பான பணிகளை செய்து தருமாறு உதவி கேட்டிருந்தார். 10.30க்கு புறப்பட்டு இரு சக்கர வாகனத்தில் கும்பகோணம் சென்றடைந்தேன். அவர்கள் கேட்ட விபரங்களை அளித்து விட்டு வீடு திரும்பிய போது நேரம் மதியம் 1.15. 

24 மணி நேரத்துக்கு முன்னால் இந்த நேரத்தில் தான் மறைமலைநகர் கிளம்பினேன் என்பதை எண்ணிப் பார்த்தேன். 
 

Sunday, 19 January 2025

ஒரு திருப்தி

 சில நாட்களுக்கு முன்னால், ராஜாஜியின் கல்வித் திட்டம் நூலும் தி.ஜானகிராமன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு நூலும் ஆர்டர் செய்திருந்தேன். கூரியர் மூலம் வந்திருந்தன. அப்போது வீட்டில் நான் இல்லை. எனது மேஜை மீது பார்சல் இருந்தது. எனது மேஜையில் இருக்கும் ஸ்விஸ் கத்தி மூலம் பார்சலைப் பிரித்தேன். இரண்டு நூல்கள் என் முன்னால்.ராஜாஜியின் கல்வித் திட்டம் குறித்த நூலை முதலில் கையில் எடுத்தேன். முன்னட்டையைப் பார்த்தேன். பின்னட்டையை வாசித்தேன். நூலை சில பக்கங்கள் வாசிக்கத் தொடங்கினேன்.அன்றைய தினம் அந்நூலை வாசித்து முடித்தேன். அது குறித்து ஒரு பதிவும் எழுதினேன். இருப்பினும் புனைவா அல்லது அ-புனைவா எது முதல் தேர்வு என்னும் பரிசீலனையில் மனம் ஈடுபட்டது. நான் இரண்டையும் வாசிப்பவன். இருந்தாலும் மனம் கேட்டது எது முதல் தேர்வு என. சில மாதங்களுக்கு முன்னால் தினமும் தி.ஜானகிராமனின் ஒவ்வொரு சிறுகதையையும் வாசித்து அந்த கதைகள் குறித்த குறிப்புகளை எழுதி வந்தேன். இரண்டு பகுதிகளில் முதல் பகுதி மட்டுமே என்னிடம் இருந்தது. புதிய பதிப்பை ஆர்டர் செய்து வாங்க நாள் ஆகி விட்டது. 

இன்று ராஜாஜியின் கல்வித் திட்டம் நூல் குறித்த குறிப்பை வாசித்து விட்டு நண்பர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். இந்த விஷயம் தொடர்பாக எழுதப்பட்டிருக்கும் இன்னொரு நூல் குறித்தும் நண்பர் அதில் குறிப்பிட்டிருந்தார். என் மனக் கேள்விகள் நீங்கி மனம் சமாதானம் ஆனது.  

ராஜாஜியின் கல்வித்திட்டம் - வாசகர் கடிதம்

அன்பு பிரபு,
வணக்கம் ! வாழ்த்துகள்!
நீங்களும் உங்கள் இல்லத்தாரும் நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சாதிக்குப் பாதி நாளா? நூல் பற்றிய உங்களுடைய பதிவைப் படித்தேன். கடந்த வருடமே நான் அந்த நூலைப் படித்து இருக்கிறேன். பட்ட ஆய்வு நூலுக்கான மொழி நடை கொண்டது. சி ஆர் அவர்களுடைய கல்வித் திட்டம் பற்றிய ஒரு முக்கியமான ஆவணம். (ஒரு முழுமையின்மை தெரிந்தாலும் ).  BR mahaadevan அவர்களுடைய நூல் ஒன்று இதே கல்வித் திட்டம் பற்றியது. இந்த புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். கல்வித்திட்டம் பற்றிய பேரவை விவாதங்கள், C R அவர்களால் அமைக்கப்பட்ட  பருலேகர் கமிட்டி பரிந்துரைகள் மற்றும் மசோதா விலக்கிக் கொள்வது பற்றிய கல்வி அமைச்சர் சி எஸ் அவர்களின் உரை ஆகியவற்றைக் கொண்டது.

நன்றி 

அன்புடன்

ஆர்

ஒப்புகைச் சீட்டு விவகாரம் - அடுத்து என்ன செய்யப் போகிறேன்?

ஒரு மாதம் முன்பு ஒப்புகைச் சீட்டு விவகாரம் தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் அவ்விஷயத்தின் கோப்பினைக் கேட்பது என முடிவு செய்த போது என் முன் மூன்று சாத்தியங்கள் இருந்தன. முதலாவது, சி.பி.கி.ராம்.ஸ் புகாரின் கோப்பைக் கேட்பது. இரண்டாவது, சி.பி.கி.ராம்.ஸ் புகார் , எழுத்துபூர்வமான புகார் இரண்டின் கோப்பையும் கேட்பது, மூன்றாவது எழுத்துப்பூர்வமான புகாரின் கோப்பைக் கேட்பது.  

எழுத்துப்பூர்வ புகாரின் கோப்பை முதலில் கேட்பது என்ற வாய்ப்பைத் தேர்ந்தெடுத்தேன். எனது உள்ளுணர்வு அவ்விதம் செய்யச் சொன்னது. 

எழுத்துப்பூர்வமான புகார் சி.பி.கி.ராம்.ஸ் புகாருடன் இணைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டிருந்தாலும் ஒருவேளை சி.பி.கி.ராம்.ஸ் புகார் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தால் பதிலளிக்கும் ஒரு மாத காலகட்டத்தில் ஏதேனும் நிகழ்த்த விசாரணை அதிகாரிக்கு கூடுதல் அவகாசம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இவ்விதம் செய்தேன். 

நாளை தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் சி.பி.கி.ராம்.ஸ் புகாரின் கோப்பை கேட்க இருக்கிறேன். முப்பது நாட்களுக்குள் பதில் அளிக்கப்பட வேண்டும். விசாரணை அதிகாரிக்கு மேலும் முப்பது நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. 

என்ன நிகழ்கிறது என்பதைக் காண்போம்.

ஒப்புகைச் சீட்டு விவகாரம் - RTI பதில் - சில அவதானங்கள்

 அவதானம் 1

புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு அஞ்சல்துறை கண்காணிப்பாளர் துணை அஞ்சல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டிருக்கிறார். 43 நாட்கள் கடந்த பின்னும் 06.12.2024 வரை விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. 06.12.2024 அன்றும் அந்த புகார் சி.பி.கி.ராம்.ஸ் உடன் இணைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவதானம் 2

19.10.2024ல் புகார் அனுப்பப்பட்ட பின் ஒப்புகைச்சீட்டு விவகாரத்துடன் தொடர்புடைய ஊழியர்களிடம் எழுத்துப்பூர்வமான விளக்கம் கோரப்படவில்லை என்பதை ஆர்.டி.ஐ தகவல் மூலம் அறிய நேர்கிறது.

அவதானம் 3

அக்டோபரில் நான் அளித்த புகார் ஒரு நிகழ்வு. நவம்பரில் நான் அளித்த சி.பி.கி.ராம்.ஸ் புகார் இன்னொரு நிகழ்வு. இரண்டுமே ஒப்புகைச்சீட்டு விவகாரம் என்றாலும் இரண்டும் இரண்டு தனித்தனி நிகழ்வுகள்.