Wednesday, 19 February 2025

ஜயத்தின் பயம்

 ஆதி காலத்தில் சமூகங்கள் பெண் கவர்தலை ஓர் இயல்பான வழக்கமாக மேற்கொண்டிருக்கின்றன. ஓஷோ சொல்வார், அத்தகைய பெண் கவர்தல் இயல்பு இருப்பதால் திருமணம் நிச்சயிக்கும் சம்பந்திகளுக்குள் இன்றும் சிறு சிறு பிணக்குகளும் பூசல்களும் இருக்கின்றன என்று. சமீபத்தில் திருமணம் நிகழ்ந்த தம்பதிகளுக்குள் ஏற்படும் ஊடலையும் அதைத் தொடர்ந்த கூடலையும் கதையாக்கி இருக்கிறார் தி.ஜா, ‘’ஜயத்தின் பயம்’’ கதையில்.  

வித்தியாசம்

 தி.ஜா தனது சிறுகதைகளில் பிராணிகளையும் பறவைகளையும் கதாபாத்திரமாக்க விரும்பியிருக்கிறார். பூனை இணை ஒன்று வீட்டில் வசிக்கிறது. அந்த வீட்டில் கணவன் மனைவியும் வசிக்கிறார்கள். தம்பதிகள் பூனை இணைகளின் இணக்க விலக்கத்தையும் பூனை இணைகள் தம்பதிகளின் இணக்க விலக்கத்தையும் கண்டு நிகழ்த்திக் கொள்ளும் உரையாடலே தி.ஜா வின் ‘’வித்தியாசம்’’ கதை.  

கமலியின் குழந்தை

 ஒரு வீட்டில் இரு ஓரகத்திகள். மூத்தவளுக்கு ஐந்து பெண் குழந்தை. இளையவள் கருவுற்றிருக்கிராள். இலையவள் ஆண் மகவை ஈன வேண்டும் என்பது பொது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பிரசவம் எதிர்பாராத விபத்தால் சிக்கலாகிறது. பிரசவம் நல்லபடியாக நிகழ வேண்டும் என தெய்வத்திடம் வேண்டிக் கொள்கிறாள் மூத்தவள். தாயும் சேயும் நலமாக பிரசவம் நிகழ்கிறது எனினும் பிறந்தது பெண் குழந்தை என்பதே தி.ஜா வின் ‘’கமலியின் குழந்தை’’ சிறுகதை. 

மணச்சட்டை

 மண்ணாசையும் பொன்னாசையும் பிடித்த ஒருவனை பெண்ணாசை பெரிதாக ஆட்கொள்கிறது. அவன் விரும்பிய பெண் அளிக்கும் நறுமணம் நிரம்பிய சட்டையை அணிந்து கொள்கிறான். அந்த சட்டையின் நறுமண திரவியத்தில் விஷம் இடப்பட்டுள்ளது. அணிந்தவன் சரீரத்தை ஊடுறுவி ரத்தத்தில் கலந்து அவன் உயிரை மாய்க்கிறது. இதுவே தி.ஜா வின் ‘’மணச்சட்டை’’கதை.  

Thursday, 13 February 2025

நர்மதையின் யாத்திரை

நதியின் பாதை என்றுமே கலைஞனுக்கு குதூகலமளிப்பது. தி. ஜா தனது சொற்களில் தனது சிறுகதையில் நர்மதை நதியின் பயணத்தை எழுத முற்பட்ட கதை ‘’நர்மதையின் யாத்திரை’’ 

ஈஸ்வரத் தியானம்

 சாமானியர் சாகும் போதாவது ‘’சங்கரா சங்கரா’’ என்பர். எப்போதும் இறை வழிபாடு குறித்து அடுத்தவருக்கு இடித்துரைத்துக் கொண்டேயிருக்கும் பாட்டிக்கு சாகும் போது பகவந் நாமம் சொல்ல வாய்க்கவில்லை என்னும் நகைமுரணைப் பகடியுடன் காட்டும் கதை தி.ஜா வின் ‘’ஈஸ்வரத் தியானம்’’

மன்னித்து விடு

நல்லன அல்லன இரண்டும் இருப்பது இவ்வுலகம். முயற்சிக்காமல் கூட வந்து ஒட்டிக் கொள்கின்றன அல்லன. நல்லனவற்றைப் பழகிக் கொள்ளவும் நிலை நிறுத்திக் கொள்ளவும் பெரு முயற்சி தேவைப்படுகிறது. நல்லனவற்றைப் பழகிய ஒருவன் அல்லனவற்றைப் பழகிய ஒருவனை மன்னிக்கிறான். இதுவே தி.ஜா வின் ‘’மன்னித்து விடு’’ சிறுகதை.  

Monday, 10 February 2025

மாப்பிள்ளைத் தோழன்

 1960களின் காலகட்டம் இந்திய சமூகத்தின் வறுமையின் காலகட்டம். இன்று அதனைக் கற்பனை செய்வது கடினம். இந்திய சமூகம் தன் கடந்த கால நினைவுகளுடனே வறுமையை எதிர்கொண்டது. நடுத்தர வர்க்கத்தினருக்கும் வறியவர்களுக்கும் திருமணச் செலவு என்பது ஒரு பெரும் மலை போல பாதையில் வந்து நிற்பது. அதனைக் கடந்தே ஆக வேண்டும். இந்த பின்னணியில் தி.ஜா எழுதிய கதை ‘’மாப்பிள்ளைத் தோழன்’’. 

அன்பு வைத்த பிள்ளை

மரணப் படுக்கை என்பது ஓர் அவஸ்தை. சாவு எப்போது என்ற எதிர்பார்ப்பு ம் கேள்வியும் சுற்றி இருப்பவர்களுக்கு உருவாகி விடும். அதைக் கடந்து சென்று நோயாளிக்கு சேவை செய்யும் மனநிலை லட்சத்தில் ஒருவருக்கே வாய்க்கிறது. மரணப் படுக்கையில் இருக்கும் ஒரு கிழவியின் கதையை எழுதிப் பார்க்கிறார் தி.ஜா ‘’அன்பு வைத்த பிள்ளை’’ சிறுகதையில்.   

ஆயிரம் பிறைகளுக்கப்பால்

 தி.ஜா வின் காலகட்டத்தில் தட்டச்சு எந்திரங்கள் அலுவலகங்களின் அன்றாடப் புழக்கத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தன. தட்டச்சு எந்திரங்கள் தாங்கள் அறிந்த கதைகளைச் சொல்வது போல தி.ஜா எழுதிய கதை ‘’ஆயிரம் பிறைகளுக்கப்பால்’’