Thursday, 27 July 2023

முளைப்பு

 மண்ணின் உயிரின் சில துளிகளையும்
வானக அமுதத் துளி ஒன்றையும்
தன்னுள் நிரப்பி
மண்ணிலிருந்து
விண்ணுக்கு
எழுகிறது
ஒரு 
சின்னஞ்சிறு விதை

Wednesday, 26 July 2023

தாவல்

 உற்சாகம் ததும்பும் சின்னக் குழந்தை
மைதானத்தில் சைக்கிள் ஓட்டுகிறான்
இந்த உலகம்
இந்த வானம்
அனைத்துக்கும் சென்று விட வேண்டும்
என்பது
அவன் முனைப்பு
ஐயம் ஏதுமின்றி
அவன் நம்புகிறான்
அது இயலும் என
அம்மா வீட்டுக்கு அழைத்தால்
அவனால் செல்லாமல் இருக்க முடிவதில்லை
அம்மா சொல்லை அவன் தாண்டுவதில்லை
அவன் தாவலுக்குள் 
இருக்கிறது
இந்த வானம்
இந்த உலகம்

Tuesday, 25 July 2023

நிழல்

 ஒரு மரத்தின் நிழலில் அமர்கிறேன்
அரசமரம்
சிறு மகவின் உள்ளங்கையென
இலைகள்
கொட்டிக் கிடக்கின்றன
மண்ணில்
மண்ணுடன் பிணைந்துள்ளன வேர்கள்
தடிமனான அடித் தண்டு
நீண்டிருக்கும் கிளைகள்
அந்த மரம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறது
அந்த மரம் அரற்றிக் கொண்டிருக்கிறது
அந்த மரம் நன்றி பாராட்டிக் கொண்டிருக்கிறது
வானின்
ஒளியின்
நம்பிக்கைகளின் 
கருணையை 
தன் நிழல் பரப்பாக
தன் இருப்பாக
கொள்கிறது
அந்த மரத்தின் நிழலில் அமர்கிறது மானுடம்
காலகாலமாக
அந்த மரத்தின் நிழலில் அமர்ந்திருக்கிறேன்
இப் பொழுது

Monday, 24 July 2023

விசை

 யாவற்றையும் தாங்கும் இந்த மண்
மீது
நடந்து கொண்டிருக்கிறேன்
என்பது மகிழ்ச்சியானது
எவ்வளவு மகிழ்ச்சியானது
இந்த மண்
அனாதி காலமாக 
உயிர்களை 
உயிர்த்திருக்கச் செய்திருக்கிறது
உயிர்களுக்கு 
தீராத மகிழ்ச்சிகளை
அளித்திருக்கிறது
ஆழ்ந்த 
மிக ஆழ்ந்த 
ஓய்வை அளித்திருக்கிறது
இந்த மண் 
உயிரின் சமுத்திரம்
இந்த மண்
உயிரின் களஞ்சியம்
விதையாக மக்கி
தாவரமென மண் கீறி எழுந்து
மலரெனப் புன்னகைத்து
பறவையென 
பறந்து
 அமர
விழைகிறேன்
இந்த மண்ணின் மீது

Friday, 21 July 2023

நூறு எலுமிச்சைகள்

இரண்டு நாட்களுக்கு முன்னால் வெளியூரில் வேலை பார்க்கும் எனது பள்ளித் தோழர் ஊருக்கு வந்திருந்தார். அவரை தற்செயலாக சந்தித்தேன். சில வாரங்களுக்கு முன்னால் அவரது தந்தை 90 வயதில் இயற்கை எய்தினார். அவர் இறந்த சில மணி நேரங்களில் எனக்கு செய்தி வந்தது.  நண்பரின் தந்தை மிகவும் இனிய மனிதர். பல விஷயங்களில் தன்னை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொண்டவர். நண்பர் தந்தையின் மறைவால் மனவருத்தத்துடன் இருந்தார். 90 வயது என்பது நிறை ஆயுள் என்பதால் வருத்தம் கொள்ளாதீர்கள் என்று ஆறுதல் சொன்னேன். 

உரையாடிப் பிரியும் நேரம் வந்த போது நண்பரிடம் அவரது தந்தையின் நினைவாக நூறு மரக்கன்றுகள் நடுவோமா என்று கேட்டேன். நண்பர் மிகவும் உற்சாகமாகி விட்டார். எவ்வளவு தொகை செலவாகும் என்று கேட்டார். ரூ. 1500 ஆகும் என்று சொன்னேன். அடுத்த நாள் என் கணக்குக்கு பணம் அனுப்புவதாகக் கூறி எனது வங்கிக் கணக்கு எண்ணை வாங்கிக் கொண்டார். 

செயல் புரியும் கிராமத்துக்கு ஃபோன் செய்து நூறு மரக்கன்றுகள் நட ஊரில் எந்த இடம் பொருத்தமாக இருக்கும் ; என்ன மரக்கன்றுகள் பொருத்தமாக இருக்கும் என்று வினவினேன். ஒரு விவசாயி தனது நண்பரின் களம் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கே நூறு எலுமிச்சைகளை நடலாம் என்று சொன்னார். அந்த விவசாயிடம் தகவல் கூறி அவருடைய விருப்பத்தைக் கேட்டு என்னிடம் கூறுங்கள் என்று சொன்னேன். 

நேற்று நண்பர் தொகையை என்னுடைய கணக்குக்கு அனுப்பியதன் குறுஞ்செய்தி வந்தது. நண்பருக்கு நன்றி தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பி விட்டு 100 எலுமிச்சை மரக்கன்றுகளை வாங்க காரை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். நர்சரிக்கு சென்றதும் ‘’என்ன சார் ! ரொம்ப நாளாக உங்களைப் பார்க்க முடியவில்லை’’ என்றார்கள். சமீபத்தில் தானே நெல்லிக்கன்றுகள் வாங்கிச் சென்றேன் என ஞாபகப்படுத்தினேன். ’’காவிரி போற்றுதும்’’ மீண்டும் மீண்டும் வர வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். மானசீகமாக உடன் இருக்கிறார்கள். அவர்களிடம் நிகழும் நடவடிக்கைகள் குறித்து கூறி விட்டு மரக்கன்றுகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு விடை பெற்றேன். 

ஊர் எல்லையை அடைந்ததும் விவசாயிக்கு ஃபோன் செய்தேன். அவர் மோட்டார்சைக்கிளில் வந்து தனது வயலுக்கு அழைத்துச் சென்றார். இளைஞர். ஆர்வத்துடன் விவசாயம் செய்கிறார். வயலின் ஒரு பகுதியில் தேக்கு பயிரிடுமாறு ஆலோசனை சொன்னேன். அது நான் எப்போதும் சொல்வது. அவரை ஐ.டி நிறுவன ஊழியரின் தேக்கு வயலுக்கு அழைத்துச் சென்று காட்டுவதாகக் கூறினேன். 

‘’காவிரி போற்றுதும்’’ அணுகுமுறை என்பது கிராமத்தில் விவசாயிகளின் சொந்த இடத்தில் அவர்கள் நெல் விவசாயம் செய்தது போக மீதி உள்ள இடங்களில் எத்தனை மரங்களை வளர்க்க முடியுமோ அத்தனை மரங்களை வளர்க்கச் செய்ய வேண்டும் என்பதே. வேலி அமைக்க வசதி இல்லை என நினைப்பவர்கள் நந்தியாவட்டை , அரளி ஆகிய ஆடு மேயாத மரக்கன்றுகளை வளர்க்கலாம். மா, பலா, நெல்லி,கொய்யா, பப்பாளி, நாவல் ஆகிய பழமரங்களை நடலாம். ஒரு கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஆக சாத்தியமான மரங்கள் நடப்பட வேண்டும் என்பதே ‘’காவிரி போற்றுதும்’’ விருப்பம். 

மரம் நடுதல் என்பது உணர்வுபூர்வமான செயல். உண்மையில் மரம் நடக்கூடிய ஒருவர் தன் ஆழ்மனத்தால் எப்போதும் தான் நட்ட ம்ரத்தின் வளர்ச்சியை கவனித்துக் கொண்டே இருக்கிறார். அது அந்த மரத்துடன் உணர்ச்சிகரமான ஒரு தொடர்பை உண்டாக்குகிறது. மனதில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொண்டு வருகிறது. அவ்விதமாக உணர்வுபூர்வமாக மரங்களுடன் தன்னை பிணைத்துக் கொண்டவர்களின் சூழல் பிரக்ஞை சிறப்பானதாக இருக்கும். அவர்கள் வாழும் கிராமம் சுற்றுச்சூழலுக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை அளிப்பதாய் மாறும். ‘’காவிரி போற்றுதும்’’ அதனால் தான் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை அளிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. 

விவசாயி நண்பர் நாளை தனது களத்தில் நூறு எலுமிச்சை மரங்களை நட உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்தார். நடும் போது உடனிருக்குமாறு கேட்டுக் கொண்டார். 


Tuesday, 18 July 2023

சகஜ நிலை

 யோக தியான வகுப்புகள் ஒரு வார காலம் நடைபெறுகிறது எனில் முதல் மூன்று நாட்கள் பங்கேற்பாளர்களிடம் ஒரு சகஜமான மனநிலையை உருவாக்கும் விதமாக அந்த மூன்று நாள் வகுப்புகளையும் வடிவமைத்திருப்பார்கள். தொழில்நுட்ப உலகம் விரிவாக விரிவாக தனிமனிதன் அகம் தான் பழகிய குறிப்பிட்ட சூழ்நிலைக்கு மட்டுமே சகஜமாக இருக்கிறது. புதிதாக ஒன்றைப் பழகுகையில் முரண்டு பிடிக்கிறது. அந்த முரண்டு பிடிக்கும் மனநிலை எதையும் முழுமையாகப் பயிலவோ பயிற்சி செய்யவோ முற்றாக அனுமதிக்காது. எனவே முதல் மூன்று நாட்கள் பங்கேற்பாளர்களின் மனநிலையை சகஜமாக்குவார்கள். அதன் பின் அங்கே பயிலல் இயல்பாக நிகழும். 

‘’காவிரி போற்றுதும்’’ செயல் புரியும் கிராமத்தில் மேற்கொண்ட எந்த முன்னெடுப்புக்கும் மிக நல்ல ஆதரவு எப்போதும் மக்களால் அளிக்கப்பட்டது. மக்கள் அனைவருமே நமது முன்னெடுப்புகளை வரவேற்றார்கள். 

(1) செயல் புரியும் கிராமத்தில் நாம் ஒவ்வொரு வீடாகச் சென்று கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கூறினோம். கிராமத்தின் எல்லா குடும்பங்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டன. மாவட்டத்திலேயே அந்த கிராமம் தடுப்பூசி போட்டுக் கொண்ட கிராமங்களின் பட்டியலில் முதலிடம் வகித்தது. 

(2) அவர்கள் நமது அழைப்பை ஏற்று தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாம் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மலர்ச்செடி கன்றை அளித்தோம். அவற்றை அவர்கள் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் நட்டனர். 

(3) ஒரு குடியரசு தினத்தன்று முதல் தினம் அந்த ஊரின் எல்லா வீடுகளுக்கும் ஒரு நந்தியாவட்டை மரக்கன்றை அளித்தோம். குடியரசு தினத்தன்று காலை 7 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அதனை நடுமாறு கேட்டுக் கொண்டோம். மேலும் மாலை 6 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் 7 தீபங்கள் ஏற்றுமாறும் கேட்டுக் கொண்டோம். கிராம மக்கள் குடியரசு தினத்தைக் கொண்டாடும் விதமாக நாம் இவற்றை முன்வைத்தோம். இரண்டு நிகழ்வுகளிலும் கிராம மக்கள் முழு ஆர்வத்துடன் பங்கேற்றனர். 

(4) விவசாயிகள் தங்கள் வயல் வரப்புகளில் தேக்கு மரம் நட்டு பொருளியல் பலன்கள் பெற வேண்டும் என்ற நம் விருப்பத்தை நாம் தொடர்ந்து முன்வைக்கிறோம். 

(5) மழை தொடர்ந்து பெய்யும் போது கிராமத்தின் குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏழு நாட்கள் தினம் மாலை வேளையில் உணவு தயாரித்து அளித்தோம். அடுத்த ஆண்டு அவர்களுக்கு ஒரு வாரத்துக்குப் பயன்படும் மளிகைப் பொருட்களை அளித்தோம். குடிசை வீடுகளில் மழைக்காலம் என்பது சற்றே அசௌகர்யமான காலம். அந்த காலத்தில் நாம் அவர்களுக்கு ஆற்றும் பணி என்பது அவர்களுக்கு அளப்பரிய நம்பிக்கையை சமூகத்தின் மீது அளிக்கிறது. 

(6) தொடர்ந்து பல்வேறு விதமான மரக்கன்றுகளை வழங்கி வருகிறோம். 

(7) சென்ற ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக எல்லா வீடுகளுக்கும் காய்கறி விதைகளை வழங்கினோம்.

(8) இந்த ஆண்டு காய்கறி நாற்றுக்களை உருவாக்கி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். 

இந்த செயல்கள் மூலம் ‘’காவிரி போற்றுதும்’’ மக்கள் அனைவருக்குமான அமைப்பாக கிராமத்தில் உள்ளது. நமது செயல்களில் நாம் ஒட்டுமொத்த கிராமத்தையும் கிராமத்தின் மக்களையும் இணைத்திருக்கிறோம். நமக்கு அளிக்கப்படும் ஆதரவும் நம் மீது காட்டப்படும் பிரியமும் கிராமத்தின் சகஜ நிலை என்று கொள்ள முடியும்.   

Friday, 14 July 2023

தென்னைத் தொழில் - தென்னைப் பணி ( சிறு பிரசுரம்)

 காவிரி போற்றுதும்

மயிலாடுதுறை 

***

தென்னைத் தொழில் - தென்னைப் பணி

----------------------------------------------------------------------


மதிப்பிற்குரிய விவசாயிகளுக்கு,

வணக்கம். 

இந்தியர்களின் வாழ்வில் தென்னைமரம் என்பது உணர்வுபூர்வமான ஆழமான தொடர்பைக் கொண்ட உயிராகும். தேங்காய் நமது உணவுமுறையில் கணிசமான பங்கை வகிக்கிறது. நமது வழிபாட்டில் தேங்காய் மிகப் பிரதானமான இடம் கொண்டிருக்கிறது. கேரளத்தில் இன்றும் ஒரு வழிபாட்டு முறை ஒன்று உண்டு. இராமாயணம் வாசிக்கத் தொடங்கும் போது முற்றிய தேங்காய்களை தரையில் அடுக்கி அதன் மீது மண் போட்டு மூடி வைப்பார்கள். ஒவ்வொரு நாளும் இராமாயணம் பாராயணம் செய்யும் போது நீர் வார்ப்பார்கள். நாற்பது நாட்கள் பாராயணம் நிறைவு பெற்று ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் நிகழும் போது தென்னை முளைத்திருக்கும். அந்த தென்னம்பிள்ளைகளை ஊரில் இருப்பவர்களுக்கு தானமாக அளிப்பார்கள்.  இருக்கும் இடத்திலெல்லாம் மகிழ்ச்சியையும் வளர்ச்சியையும் அளிக்கக்கூடியது தென்னை என்பது அவர்களுடைய நம்பிக்கை. 

நமது மாவட்டத்தின் கிராமங்களில் ஒரு கிராமத்தில் சராசரியாக 1000 தென்னை மரங்கள் இருக்கக்கூடும். வீட்டுக்கு இரண்டு தென்னை மரங்கள் இருக்கின்றன என எடுத்துக் கொண்டால் கூட ஆயிரம் மரங்கள் இருக்கும் . மேலும் விவசாயிகளின் தென்னந்தோப்புகளை கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை இரு மடங்காகும். எனினும் ஒரு கணக்கீட்டுக்காக குறைந்தபட்சமாக 1000 மரங்கள் இருப்பதாக எடுத்துக் கொள்வோம். 

நமது கிராமங்களில் இப்போது தென்னை மரம் ஏறுவதற்கான பயிற்சி பெற்றவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் தேங்காய் பறிப்பதிலும் அதனை விற்பனை செய்வதிலும் விவசாயிகளுக்கு பல இடர்கள் ஏற்படுகின்றன. 

கிராமங்களில் தென்னை மரம் ஏறுவதற்கான பயிற்சி பெற்றவர்கள் கிராமத்துக்கு பத்து பேர் என்ற அளவில் இருப்பார்களேயானால் அவர்களுக்கு தென்னை மரம் ஏறுதல் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும். விவசாயிகளுக்கும் சகாய கட்டணத்தில் தேங்காய் பறிக்கவும் நல்ல விலைக்கு விற்பனை செய்யவும் வாய்ப்பு உண்டாகும். 

மத்திய அரசின் ‘’திறன் மேம்பாட்டுப் பயிற்சி’’ தென்னை மரம் ஏறுவதற்கு அளிக்கப்படுகிறது. ஒரு வார காலம் பயிற்சி வழங்கப்படும். இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. தங்குமிடம் உணவு ஆகியவை பயிற்சியாளர்களுக்கு எவ்வித கட்டணமுமின்றி வழங்கப்படும். பயிற்சி முழுமையாக நிறைவு பெற்ற பின் தென்னை மரம் எளிதாக் ஏற உதவும் கருவியும் கட்டணமின்றி வழங்கப்படும். 

தென்னை மரம் ஏறுதலை தொழிலாகவோ உப தொழிலாகவோ கொள்வதன் மூலம் மாதாமாதம் கணிசமான வருவாய் பெற முடியும். இளைஞர்கள், சிறு குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என அனைவருக்கும் இது ஒரு நல்வாய்ப்பு. ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

அன்புடன்,

அமைப்பாளர்

காவிரி போற்றுதும்

தொடர்பு எண் : **********

Thursday, 13 July 2023

தேடலும் கண்டடைதலும்

 இன்று தளத்தில் மக்கள் கல்வி என்ற பதிவினை எழுதி பதிவிட்டேன். 

மத்திய அரசின் திறன் மேம்பாட்டுப் பயிற்சி ‘’ஸ்கில் இந்தியா’’ வின் கீழ் தென்னை மரம் ஏறுதலுக்கான பயிற்சி இருக்கிறதா எனத் தேடிப் பார்த்தேன். ‘’ஸ்கில் இந்தியா’’ இணையதளத்தில் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்த தளத்தின் இணைப்பு இருந்தது. அதிலும் தேடிப் பார்த்தேன். பின் ‘’தேசிய கயிறு வாரியம்’’ என்ற அமைப்பு இருப்பது ஞாபகம் வந்தது. அதில் பார்த்தேன். பின் ‘’தேசிய தென்னை வாரியம்’’ என்ற அமைப்பின் இணையதளத்துக்கு சென்றேன். அதில் தென்னை மரம் ஏறுவதற்கான பயிற்சி குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள தென்னை மரம் ஏறும் பயிற்சி பெற்றவர்களின் பட்டியலும் அதில் இருந்தது. அதில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் பட்டியலில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்த்தேன். ஒரே ஒருவர் இருந்தார். அவருடைய அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டேன். 

காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் அவருக்கு பயிற்சி தரப்பட்டிருக்கிறது. ஒரு வார காலப் பயிற்சி. பயிற்சி பெற்றவர்களுக்கு தென்னை மரம் ஏற உதவும் கருவியும் வழங்கப்படுகிறது என்ற தகவலைத் தெரிவித்தார். அவர் பயிற்சி பெற்ற ஊர் எது என்ற விபரத்தைக் கேட்டுக் கொண்டேன். மேலதிக விபரம் தேவைப்பட்டால் மீண்டும் அழைக்கிறேன் என்று சொன்னேன். அவருடைய ஊர் ஊரிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது. கூடிய விரைவில் நேரில் சந்திப்பதாகக் கூறினேன். 

‘’காவிரி போற்றுதும்’’ சார்பில் இந்த பயிற்சி குறித்த விபரங்களை துண்டுப் பிரசுரமாகத் தயார் செய்து பக்கத்து கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். 10,000 துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டால் 1000 இளைஞர்கள் பயிற்சி பெறுவார்கள் என எதிர்பார்க்கலாம். அவ்வாறு நிகழுமாயின் அது ஒரு நல்ல எண்ணிக்கையே. 

ஒரு பயிற்சி வகுப்பில் 15 பேர் இருப்பார்கள் என பயிற்சி பெற்றவர் சொன்னார். ஒவ்வொருவருக்கும் தனிக்கவனம் கொடுக்க இந்த எண்ணிக்கையே சரியாக இருக்கும் என்பதால் 15 என எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். முதலில் செயல் புரியும் கிராமத்திலிருந்து 15 பேரை அனுப்பி வைக்கலாம் என எண்ணினேன். 

தென்னை மரம் ஏறும் ஒருவருக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ. 20,000 வருமானம் கிடைக்கும். வறுமையில் இருக்கும் ஒரு குடும்பத்துக்கு அது நல்ல ஒரு வருமானமே. 

நாட்டில் ஆக்கபூர்வமான வாய்ப்பளிக்கும் நம்பிக்கையூட்டும் பல செயல்பாடுகள் உள்ளன. தேவைப்படும் நபர்களின் கவனத்துக்கு அது முழுமையாக சென்று சேர்வதில் இருக்கும் தகவல் தொடர்பு இடைவெளி தவிர்க்க இயலாதது. அரசு முன்னெடுக்கும் பல விஷயங்களை தேவைப்படும் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது ஒரு முக்கியமான பொதுப்பணியே. 

இதில் ஒரு சுவாரசியமான விஷயம் ஒன்று இருந்தது. அதாவது நாகப்பட்டினம் மாவட்டத்தில் மரம் ஏறும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர் ஒருவர் மட்டும் இருந்தார். பக்கத்து மாவட்டமான தஞ்சாவூரில் 247 பேரின் பெயர் பட்டியல் இருந்தது. அதற்கு காரணம் , பட்டுக்கோட்டை தென்னை சாகுபடிக்கு பேர் போன பிரதேசம். எனினும் ஒரே நதி பாசனம் பெற்றும் ஒரே வகையான மண் ஆக இருப்பினும் தஞ்சாவூர் சூழ்நிலை நாகப்பட்டினத்தில் இல்லை. கடலூர் மாவட்ட பட்டியலையும் பார்த்தேன். அதில் 15 பேர் இருந்தனர். அதாவது தென்னை மரம் ஏறுபவர்கள் குறைவாக இருக்கும் பிரச்சனை கடலூர் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ளது. அங்கே பயிற்சி பெற்ற ஆயிரம் பேர் உருவாவார்கள் என்றால் அந்த 1000 பேரும் கணிசமான மாத வருமானத்தை உருவாக்கிக் கொள்ளும் நிலைக்கு செல்வார்கள். அவர்கள் குடும்பத்துக்கு அது பெரிய உதவியாக இருக்கும். 

‘’காவிரி போற்றுதும்’’ இந்த விஷயத்தில் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. நாம் சூழலை அவதானிக்கிறோம். அந்த அவதானத்தின் அடிப்படையில் ஒரு முயற்சியை முன்னெடுக்கிறோம். முயற்சி சிறு அளவில் வெற்றி பெறும் என்றால் கூட அதனால் பலருக்குப் பலன் இருக்கும். 

மக்கள் கல்வி

 தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு பல ஆயிரம் கோடி தொகை ஒவ்வொரு ஆண்டும் செலவழிக்கப்படுகிறது. தமிழ்நாடு கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக கல்வி பரவலாக்கப்பட்ட மாநிலம். கல்வி பரலாக்கப்பட்டிருந்தாலும் இன்னும் பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பது கணிசமான அளவில் இங்கே இருக்கவே செய்கிறது. அதன் பொருள் என்னவெனில் இப்போது உள்ள கல்விமுறை ஏழைகள் பொருளியல் நலன்கள் பெற போதுமானதாக இல்லை என்பதே ஆகும். 

ஒரு பள்ளிக்கூடத்தில் ஏன் பாதுகாப்பாக தென்னை மரம் ஏற பனை மரம் ஏற பயிற்சி தரக் கூடாது ? தென்னை மரம் ஏற பனை மரம் ஏற பயிற்சி தருபவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டால் கூட அவர்களுக்கும் பொருளியல் பலன் இருக்கும். தென்னை மரம் பனை மரம் ஏற பயிற்சி பெறும் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் தென்னை மரம் பனை மரம் ஏறுவதை தங்கள் உப தொழிலாக மேற்கொள்ள முடியும். இங்கே காவிரி டெல்டா கிராமங்களில் தென்னை மரம் ஏறி தேங்காய் பறிப்பதற்கே ஆட்கள் இல்லை. எனவே புதிதாக தென்னை பயிரிடவே விவசாயிகளுக்கு தயக்கம் ஏற்படுகிறது. வயது குறைவான மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருக்குமெனில் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு விருப்பத்தின் பேரில் விவசாயத்துறை மூலம் பயிற்சி அளிப்பதில் தடை ஏதும் இல்லை. ஒரு கிராமத்தில் ஆயிரம் தென்னை மரம் இருக்கிறதென்றால் ஒரு மரம் ஏற ரூ. 20 என நிர்ணயம் செய்தால் கூட ஒருவர் மாதம் ரூ. 20,000 பொருளீட்ட முடியும். ( ஒரு தென்னை மரம் ஏற இப்போது ரூ. 50 லிருந்து ரூ. 100 வரை கட்டணமாகக் கேட்கப்படுகிறது. அப்படி இருந்தும் மரம் ஏற ஆட்கள் இல்லை ). தேங்காய் பறிக்க மட்டுமல்லாமல் தென்னையின் உச்சியில் உள்ள மட்டை பாளை இவற்றை ஒழுங்குபடுத்த கூட மரம் ஏற வேண்டியிருக்கும். கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி தரும் போது தென்னைக்கு ஏற்படக்கூடிய நோய்கள் அவற்றுக்கு சரி செய்யும் மருந்துகள் ரசாயணங்கள் ஆகியவை குறித்த அறிமுகத்தையும் அவர்களுக்கு அளிக்கலாம். மரம் ஏறுவதற்கு பயிற்சி தருவதைப் போல கீற்று முடையவும் பயிற்சி தரலாம். மூங்கில் கழிகளை வெட்டுவதற்கு பயிற்சி, மூங்கில் கூடை பின்ன பயிற்சி ஆகியவையும் தரப்படலாம். 

பொருளியல் ஏற்றத்தாழ்வு அதிகமாக இருக்கும் தமிழ்ச் சமூகத்தில் ஒருவர் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ கற்றுக் கொள்ளும் ஒரு கல்வி அல்லது பெறும் ஒரு பயிற்சி அவருக்கு ஏதோ ஒரு வகையில் பொருளீட்ட உதவும் எனில் அது மிகவும் முக்கியமானதாக இருக்கும். 

பொதுவாக இந்த தளத்தில் நான் குறிப்பிடும் விபரங்கள் மிகக் குறைந்தபட்சமான விபரங்களே. உதாரணத்துக்கு காவிரி டெல்டா கிராமம் ஒன்றில் சராசரியாக 2500 லிருந்து 3000 தென்னை மரங்கள் இருக்கக்கூடும். எனினும் நான் குறைந்தபட்சமாக 1000 தென்னை மரங்கள் என்றே எடுத்துக் கொண்டிருக்கிறேன். 

3000 தென்னை மரம் ஏற மரத்துக்கு ரூ. 20 எனில் பராமரிப்புக்காக ஒருமுறையும் காய் பறிக்க ஒரு முறையும் ஏறினால் ஒருவருக்கு மாதம் ரூ. 1,20,000 கிடைக்கக்கூடும். ஒரு கிராமத்தில் நான்கு பேர் மரம் ஏறும் தொழில் செய்தால் ஒருவருக்கு ரூ. 30,000 கிடைக்கும். நான்கு குடும்பங்கள் பொருளியல் மேம்பாடு அடையும். 

இப்போது நடப்பது என்னவெனில் தேங்காய் வியாபாரிகள் தென்னந்தோப்புகளுக்குச் சென்று தாங்களே ஆள் கொண்டு வந்து தேங்காய் பறித்துக் கொள்கிறோம் என்று கூறி காய்களை பறித்துக் கொள்கிறார்கள். ஒரு தேங்காய்க்கு ரூ. 3 அல்லது ரூ. 4 என விலை நிர்ணயயிப்பார்கள். தேங்காய் பறிக்கும் ஒருவரை ஒப்பந்த அடிப்படையில் ஒரு காய் பறிக்க ரூ. 2 என அமர்த்தி காய்களை பறித்துச் செல்வார்கள். கடைவீதியில் ஒரு தேங்காய் ரூ. 15 லிருந்து ரூ. 20 வரை விற்பனை செய்யப்படும். 

Tuesday, 11 July 2023

செழித்து வளர்க

 இன்று என் நண்பனின் குடும்பத்தில் ஒரு மங்கள நிகழ்வு. 

நண்பன் எனக்கு மிகவும் நெருக்கமானவன். என் மீது தீராத அன்பும் பிரியமும் கொண்டவன். எப்போதும் நம்பிக்கையளிக்கும் வண்ணமும் ஊக்கம் தரும் விதமாகவும் பேசுவான். என் மீது மட்டும் அல்ல அவனுடைய நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்குமே அவன் இனிமையானவன். யாவர்க்கும் இனியவனாயிருப்பது அவனது இயல்பு. ’’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளுக்கு தொடர் ஆதரவை அளிப்பவன். 

இன்று அவனது வாழ்வில் முக்கியமான ஒரு தினம். அவனை வாழ்த்தும் விதமாக ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்பினேன். என்ன செய்தால் சிறப்பாக இருக்கும் என சில யோசனைகளைப் பரிசீலித்துப் பார்த்தேன். 

செயல் புரியும் கிராமத்தில் பூசணி, பீர்க்கன், சுரை, பரங்கி ஆகிய காய்கறிகளின் விதைகளை முளைக்க வைத்து கிராம மக்களுக்கு வழங்க எண்ணம் கொண்டிருந்தேன். அதற்கான செயல்களை இன்று செய்யலாம் என இருக்கிறேன். கிராமத்தில் இருக்கும் 1000 குடும்பங்களுக்கு வழங்க வேண்டும். அவ்வாறெனில் 4000 விதைகள் தேவை. 

இன்று காலை சென்று மக்கிய எருவை ஒரு வாளி எடுத்து வர வேண்டும். குப்பைக் கிடங்கில் மக்கிய எருவை விலைக்கு அளிக்கிறார்கள். பின்னர் கோவில்களில் பிரசாதம் அளிக்க பயன்படுத்தப்படும் தொன்னையை 4000 என்ற எண்ணிக்கையில் வாங்கி வர வேண்டும். தொன்னைகளில் மக்கிய எருவை நிரப்பி விதையிட்டு சிறு அளவில் நீர் வார்த்து வர வேண்டும். ஒரு வாரத்திலிருந்து பத்து நாட்களில் விதைகள் முளை விடும். அவற்றை மக்களிடம் அளித்து அப்படியே தொன்னையுடன் வீட்டுத் தோட்டத்தில் நடச் சொல்ல வேண்டும். 

இதில் நூற்றுக்கணக்கான மனிதர்கள் இணைக்கப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான உயிர்கள் செழித்து வளர்கின்றன. ஒரு நாளைக் கொண்டாட உள்ள சிறப்பான வழிகளில் இதுவும் ஒன்று எனத் தோன்றியது. 

என் நண்பனின் வாழ்க்கை என்றும் இறைமையின் ஆசியாலும் சுற்றம் நட்பின் பிரியத்தாலும் சூழப்பட்ட இனிமையான ஒன்றாக அமைய வேண்டும் என இத்தருணத்தில் அவனை வாழ்த்துகிறேன். 


வாழ்க ! செழித்து வளர்க !!