Friday, 2 January 2026

ஜனநாயகமும் பண்பாடும்

ஜனநாயகத்தை நான் மதிக்கிறேன். ஜனநாயக அரசியலின் ஒரு பகுதி அதிகார அரசியல் என்பதை புரிந்து கொள்கிறேன். ஜனநாயகத்தில் குடிகளின் கடமைகள் தீவிரமாக முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என விரும்புகிறேன். எந்த ஜனநாயக அரசும் அதில் வாழும் மக்களின் பண்பாட்டுக்கு அரணாக இருக்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. ஜனநாயகம் கருத்து சுதந்திரத்தை அளித்துள்ளது. குடிகள் நீதிமன்றங்களை நாடும் உரிமையை அளித்துள்ளது. ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்க நாட்டின் குடிகள் அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றுவதும் குடிமைப் பண்புடன் இருப்பதும் அவசியம். ஜனநாயகத்தின் ஆகச் சிறப்பான நிலை அதுவே.  

கரைந்து போதல்

அமைதியை 
துல்லியமாக நேர்த்தியாக 
உணர வேண்டியிருக்கிறது
துல்லியமான அமைதி
நேர்த்தியான அமைதி
இனிய அமைதி
அமைதி நிறைந்திருக்கும் பொழுதுகள்
அமைதி நிறைந்திருக்கும் நாட்கள் 
அமைதி நிறைந்திருக்கும் பிரதேசங்கள் 
இவற்றில் தான்
இருத்தல் 
அத்தனை இனிதாக அமர்கிறது
இருத்தல் இனிதாகையில் 
இருப்பு 
கரைந்து போகிறது
அத்தனை இனிமையுடன்  

Thursday, 1 January 2026

மகிழ்ச்சியான துவக்கம்

 இன்று என் நண்பர் ஒருவருடன் ***** அருகில் உள்ள கிராமத்தில் இருக்கும் மூன்று குழந்தைகள் காணச் சென்றிருந்தேன். சென்னை நண்பர் அந்த மூன்று குழந்தைகளுக்கு மூன்று மாதங்களுக்குத் தேவைப்படும் அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை அவர்களுக்கு வாங்கித் தருமாறு கூறினார். அதற்கான தொகையை UPI மூலம் அனுப்பி வைப்பதாகக் கூறினார். நானும் நண்பரும் ஒரு மளிகைக்கடைக்குச் சென்று மூன்று மாதத்துக்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை அளிக்குமாறு கேட்டுக் கொண்டோம். அவர் அதற்கான தொகையைக் கூறியதும் நண்பர் மளிகைக்கடையின் வங்கிக் கணக்குக்கு தொகையை அனுப்பி விட்டார். மளிகைக் கடைக்காரர் என்ன விபரம் எனக் கேட்க நான் அவரிடம் மூன்று குழந்தைகள் குறித்துக் கூறினேன். கடைக்காரர் தன் பங்களிப்பாக கணிசமான மளிகைப் பொருட்களைக் கொடுத்தார். என்னுடன் வந்த  நண்பர் குழந்தைகளுக்கு இனிப்புகள் எடுத்துச் சென்று கொடுக்க விரும்பினார். கடைவீதியில் அதனையும் வாங்கிக் கொண்டோம். இரண்டு பெரிய மூட்டைகளுடன் ***** நோக்கி புறப்பட்டோம். சென்னை நண்பரின் உறவினர்கள் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். குழந்தைகளின் கல்விச் செலவுக்கு அவர்கள் பங்களிக்க விரும்புகிறார்கள். இந்த 3 மாதங்களுக்கான உணவுப் பொருட்கள் ஒரு துவக்கமாக அமையும் என எண்ணினோம். 

ஒரு வாரம் முன்பு 25.12.2025 அன்று அங்கே சென்றிருந்தேன். அவர்கள் துயரத்தைக் கேள்விப்பட்டு அவர்களுக்கு உதவ சிலர் முன்வந்திருக்கின்றனர். தற்போது அவர்கள் வீட்டுக் கூரை புதிதாக வேயப்பட்டிருக்கிறது. சிலர் தங்களால் இயன்ற உதவியாக மளிகைப்பொருட்களை அளித்திருக்கின்றனர்.

உதவிகள் அந்த மூன்று குழந்தைகளுக்கும் வாழ்க்கை மீதான நம்பிக்கையை மிகத் தீவிரமாக அளித்திருக்கிறது. அவர்கள் உணரும் அவர்கள் கொள்ளும் நம்பிக்கையே மிக முக்கியமானது என எனக்குத் தோன்றியது. 

என்னுடைய கவனத்துக்கு வந்த ஒரு விஷயத்தில் ஏதேனும் உதவ முடியுமா என முயல்கிறேன். இந்த விஷயம் பலருடைய கவனத்தில் இருப்பதும் பலர் உதவ விரும்புவதும் பலர் உதவுவதும் மிகவும் பயனுள்ளது. இந்த உலகில் வாழும் அனைவருக்குமே ஏதோ ஒரு விஷயத்தில் உதவிகள் தேவைப்படவே செய்கின்றன. நம்மால் முடிந்ததை பிறருக்குச் செய்வது எப்போதும் நன்மையை அனைவருக்கும் அளிக்கும். 

எனது நண்பர்கள் சிலர் அந்த குழந்தைகளின் படிப்புச் செலவில் பங்களிக்க விருப்பம் தெரிவித்தார்கள். எந்த உதவியும் அதன் அளவைப் பொறுத்தது அல்ல ; உணர்வைப் பொறுத்தது என்பதால் சிறிய உதவியாயினும் அதனைச் செய்க என்றே நண்பர்களிடம் கூறுகிறேன். 

2026ம் ஆண்டின் முதல் தினத்தை மூன்று குழந்தைகள் சந்திப்புடன் தொடங்கியது மகிழ்ச்சி அளித்தது. 

புத்தாண்டு விடுமுறை (நகைச்சுவைக் கட்டுரை)

எனது நண்பன் தேசிய வங்கி ஒன்றில் வெளிமாநிலம் ஒன்றில் பணிபுரிகிறான். அவனுடன் நேற்று உரையாடிக் கொண்டிருந்த போது நாளை ( அதாவது இன்று) வங்கிக்குச் செல்ல வேண்டும் என்று கூறினான்.  

‘’தம்பி ! நாளைக்கு நியூ இயர்’’

‘’அதனால என்ன அண்ணன்? எங்களுக்கு பேங்க் உண்டு’’

‘’என்ன சொல்ற? இங்கெல்லாம் லீவு. தமிழ்நாட்டுல எல்லாமே ஆஃப் ஆகியிருக்கும்.மத்த எந்தெந்த ஸ்டேட்-க்கு நியூ இயர் லீவுன்னு பாரு’’

’’சரி அண்ணன்’’

இன்று காலை ‘’லிஸ்ட் ஆஃப் ஹாலிடேஸ் இன் பேங்க் 2026’’ என இணையத்தில் தேடினேன். CN, KO ஆகிய பிராந்தியங்களுக்கு மட்டும் விடுமுறை என குறிப்பிட்டிருந்தது. 

மேற்படி சுருக்கப் பெயர் கொண்ட பிராந்தியங்கள் எவை எனப் பார்த்தேன். 

தமிழ்நாடு, கொல்கத்தா.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி முதலில் ஏற்பட்ட பகுதிகள். 

அடுத்த புத்தாண்டுக் கொண்டாட்டம்

 பழைய ஆண்டு முடிந்து விட்டது என்கிறார்கள்
செய்ய நினைத்த பணிகள் பல நிலுவையில் இருக்கின்றன
இன்னும் ஆற்றலை அதிகரித்துக் கொள்வதா
இன்னும் ஆழமாக உற்று நோக்குவதா
மாற்றம் மாற்றம் என்கிறது மனம்
மாற்றமின்மை மாற்றமின்மை என்கிறது உடல்
எனது அறையை
எனது பொருட்களை
எனது அன்றாடங்களை
நான் விரும்பும் விதத்தில் 
அமைத்துக் கொள்ள விரும்புகிறேன்
எத்தனை கூடுதலான முறைகளில்
அது அத்தனை எளிதல்ல
என அறிய முடியுமோ
அத்தனை அறிந்து கொள்கிறேன்
பழைய ஆண்டு முடிந்து 
புதிய ஆண்டு பிறந்திருக்கும்
இன்று
ஆண்டின் இறுதி வாரத்துக்கான
அடுத்த ஆண்டின் முதல் வாரத்துக்கான
விருப்பம் ஒன்றை
உருவாக்கிக் கொள்கிறேன்
எத்தனையோ புதிய ஆண்டுகள் வருகை தந்தன
அடுத்த புத்தாண்டை 
ஒரு வாரம் முன்பிருந்தே
மௌனம் உறைந்திருக்கும் மலைப்பிரதேசங்களிலோ
அலைகள் ஆர்ப்பரிக்கும் கடற்கரையிலோ
அந்தி நிலவின் அழகு மிளிறும் பாலை நிலத்திலோ
புதிய நிலத்தில்
புதிய மண்ணில் 
எதிர்கொள்ள 
விருப்பம் கொள்கிறேன்
என் லௌகிகங்கள் என்னைச் சூழ்ந்து கொள்ளாத
என் மானசீக என் நடைமுறைத் தடைகள் 
என்னைத் தளைக்காத
விடுதலை கொண்ட வாழ்வொன்றை
இந்த ஆண்டில் அடைய 
இந்த ஆண்டில் உருவாக்கிக் கொள்ள
உளம் கொள்கிறேன்
செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன
ஏற்க வேண்டிய பொறுப்புகள் நிறைய இருக்கின்றன
நம்பிக்கையுடன் தொடங்குகிறது ஆண்டுடனான பயணம்

Wednesday, 31 December 2025

பாரதம்


பாரதம் எனது மண். பாரதம் எனது நிலம். பாரதம் எனது தேசம். உலகில் எந்த தேசமெல்லாம் ஒட்டுமொத்த புவியையும் தனது தேசமாக எண்ணுகிறதோ உலகில் எந்த தேசமெல்லாம் எல்லா தேசங்களின் குடிகளையும் தன் குடிகளாக  எண்ணுகிறதோ எந்த தேசமெல்லாம் பிற நிலங்களில் வாழும் மானுட குடிகளைக் கொன்றழிக்காமல் இருக்கிறதோ அந்த தேசமெல்லாம் எனது தேசம்.  அந்த தேசமும் பாரதமே. பாரதம் எந்த தேசம் மீதும் படையெடுத்துச் சென்றதில்லை ; எந்த மக்களையும் கொன்று குவித்ததில்லை. எந்த நாட்டின் மானுடப் பண்பாட்டுச் சின்னங்களையும் அழித்தொழித்ததில்லை. படையெடுப்புகளால் உடனிருப்போர் கொலையுற்று ஆதரவற்று தங்கள் தேசத்தைத் துறந்து புகலிடம் நாடி வந்த எத்தனையோ சமூகங்களுக்கு பாரதம் தன் நிலத்தில் அவர்கள் பண்பாட்டு அடையாளங்களைப் பேணி வாழ்வதற்கான சூழலை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது என்பதை உலக வரலாற்றை அறிந்தவர்கள் அறிவார்கள். 

பாரதம் என்பது பாரதப் பண்பாடே. பாரதப் பண்பாடு என்பது எல்லா சிந்தனைகளையும் வாழ்க்கைமுறைகளையும் உயிர்ப்புடன் இருக்கச் செய்வதே. ஒரு சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும் மற்றவை அழித்தொழிக்கப்பட வேண்டும் என்னும் எண்ணம் ஆபிரகாமிய சமூகங்களுக்கு உரியது. இன்றைக்கும் ஆபிரகாமிய சமூகங்களாக தங்களை எண்ணிக் கொள்பவர்கள் மானுட பண்பாட்டு அடையாளங்களை அழிக்கிறார்கள். 2500 ஆண்டு தொன்மை கொண்ட பாமியான் புத்தர் சிலைகள் பீரங்கிகள் கொண்டு தகர்க்கப்பட்டதை 20 ஆண்டுகளுக்கு முன்னர் கூட உலகம் பார்த்தது. இன்றும் வங்கதேசத்தில் அந்நாட்டின் சக குடிமக்கள் ஆபிரகாமிய சமூகத்தினரால் தாக்கப்படுகின்றனர். அவர்கள் வீடுகள் கொளுத்தப்படுகின்றன. 

பாரதப் பண்பாட்டில் சனாதனம், சமணம், பௌத்தம், சாக்தம், சீக்கியம் ஆகியவை நாடெங்கும் பரஸ்பர மரியாதையுடன் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நிலைபெற்றிருக்கின்றன. நம் நாட்டில் புகலிடம் தேடி வந்த யூதர்களும், ஜெராஸ்டிரியர்களும் கூட தங்கள் பண்பாடு வழக்கங்களின் படி வாழ்கிறார்கள். 

இயற்கையே இறைமையின் ஒரு வடிவம் என எண்ணுவது பாரதப் பண்பாடு. மானுட சமூகங்கள் அதனை உணரும் போது உலகில் வன்முறை இருக்காது ; அமைதி இருக்கும். உலகை அந்நிலைக்கு கொண்டு செல்லும் பொறுப்பு பாரத மண்ணில் பிறந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. 

Tuesday, 30 December 2025

மறைபிரதி (நகைச்சுவைக் கட்டுரை)

இலக்கிய வாசகரான எனது இளம் நண்பருக்கு ரா.ஸ்ரீ.தேசிகனின் ‘’சக கமனம்’’ கதையை வாசிக்கப் பரிந்துரைத்தேன். இணையத்தில் இருந்த அந்த கதையை தனது திறன்பேசி மூலம் மெல்ல வாசித்தார். ரொம்ப நேரம் அந்த கதையை வாசிக்க எடுத்துக் கொண்டதாக எனக்குத் தோன்றியது. சற்று நேரம் சென்ற பின் வாசித்து விட்டேன் என்று கூறினார்.  

‘’அந்தக் கதையில என்ன வாசிச்ச?’’ என்றேன். 

நண்பருக்கு நான் கேட்ட கேள்வியே சற்று சங்கடமாக இருந்தது. மௌனம்தான் பதில். 

‘’அந்த கதையை என்கிட்ட சொல்லு. அதுலயிருந்து நீ என்ன உள்வாங்கியிருக்கன்னு நான் தெரிஞ்சுக்கறன்’’ என்றேன். 

நண்பர் அந்த கதையை சொல்லி விட்டார். 

‘’கதை உனக்குள்ள போயிருக்கு. நல்ல விஷயம். அந்த கதையில கதையோட ஆசிரியன் நேரடியா சொல்லாத ஆனா காட்டுற வாசகன் கற்பனை செஞ்சு போக வேண்டிய இடைவெளிகள் இருக்கு. அத நோக்கி நீ போகணும். அத நீ கற்பனை செஞ்சுக்கணும் ‘’ 

நண்பருக்கு அவ்விதமான இடைவெளிகள் எவை என்று யோசிக்க முற்பட்டார். 

‘’சாதவாகன அரசன் பேரரசன். போர்க்களங்களில் பெரும் வெற்றிகளைப் பெற்றவன். ஆனால் அவன் மொழித்திறன் குறைவு. இங்கே வாசகன் கற்பனை வேண்டிய விஷயம் அரசன் பருப்பொருளான நிதியையும் செல்வத்தையும் ஆள்பவன். மொழியின் அருவமான சில சுபாவங்களை அவன் கற்கவோ உணரவோ இல்லை. இங்கே திடம் அருவம் என்ற எதிரிடை இருக்கிறது என்பது வாசகன் உணர வேண்டியது ‘’ என்றேன். 

வாசகருக்கு நான் சொல்வதில் விஷயம் இருக்கிறது என்று தோன்றியது. 

‘’அவன் மொழி பயில வேண்டும் என முடிவெடுக்கிறான். அப்போது அவன் ஏன் இலக்கணம் பயில விரும்புகிறான்?’’

வாசகர் யோசித்தார். 

’’அவன் ஓர் எதிர்மறை உணர்வால் மொழி நோக்கி வருகிறான். மொழியின் சாரத்தை அணுக திறந்த மனம் வேண்டும். அது அவனுக்கு இல்லை. இலக்கணத்தையே அவன் சென்றடைகிறான்.’’

வாசகர் என்னிடம் ஒரு தெளிவான வரைபடம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார். 

‘’இலக்கணத்தை முற்றறிய 12 ஆண்டுகள் ஆகும் என்கின்றனர். இலக்கணம் படிக்கவே அத்தனை உழைப்பு தேவை. அவ்விதமெனில் இலக்கியம் படைக்க?’’

வாசகர் என் மனஓட்டத்துடன் இணையத் தொடங்கினார். 

‘’அரசி சொல்கிறாள் : இலக்கணம் அறிந்த மன்னர் ஒரு பூங்காவில் இருக்கும் வேலியின் முட்களையே காண முடிகிறது. பூக்களை அவர் காண்பதே இல்லை என’’

இந்த வரியைச் சொன்னதும் வாசகருக்கு அந்த கதையின் சாரம் என்ன என்பது புரிந்து விட்டது. புன்னகை பூக்கத் தொடங்கினார். 

‘’இப்ப ஏன் சிரிக்கற?’’

‘’இப்ப எனக்கு அந்த கதை புரிய ஆரம்பிச்சிடுச்சு.’’

‘’சுப்ரதிஷ்டா மாநகரை விட்டு குணாட்யர் ஏன் பர்வதத்துக்கு வரார். அவரோட சென்சிபிளிட்டி எதனால டிஸ்டர்ப் ஆகுது. இதெல்லாம் வாசகன் யோசிக்க வேண்டிய விஷயங்கள். கற்பனை பண்ண வேண்டிய விஷயங்கள்.’’

வாசகருக்கு திருப்தி உண்டானது. 

‘’என் பிளாக்ல அந்த கதை பத்தி எழுதியிருக்கன். வாசிச்சுப் பாரு.’’ 

Sunday, 28 December 2025

எமக்குத் தொழில் கவிதை

சொல்லில் உறையும் தன்மை கொண்டது இறைமை என்கின்றன உலகின் தொல்நம்பிக்கைகள். சொல்லால் உலகங்களை உருவாக்குகிறான் கவிஞன். சொல்லில் இருந்து உருவாகிறது உணர்ச்சி. உணர்ச்சியின் உணர்ச்சிகளின் வசமாகின்றனர் மானுடர். அமைதியும் அலைபாய்தலும் மானுட வாழ்க்கையில் அந்த உணர்ச்சியின் விளைவுகளே. அண்டத்தின் ஆதிசொல் ஒற்றை ஒலி. அந்த ஒலியின் வெவ்வேறு உச்சரிப்புகளே அனாதிகாலமாக ஆயிரமாயிரம் ஆண்டாக நிகழும் மானுட வாழ்க்கை. 

***

குர் அதுல் ஐன் ஹைதரின் ‘’அக்னி நதி’’ நாவலில் ஒரு கதாபாத்திரம் இவ்விதம் கூறும். ‘’நான் கலைஞன் ; மனதின் சங்கேதங்களையும் குறிப்புகளையும் துணையாகக் கொண்டு கலையைப் படைப்பவன். விஸ்வகர்மாவே ஆனாலும் என்னை மதித்துத் தான் தீர வேண்டும்’’.

எமக்குத் தொழில் கவிதை என்கிறான் தமிழ் மூதாதை பாரதி. 

படைப்பதனால் என் பெயர் இறைவன் என்பது கண்ணதாசனின் வரி. 

***

உலகின் ஆகப் பெரிய படைப்பாளிகள் பலருக்கு தங்கள் கலையும் படைப்பும் எவ்விதம் மக்களால் சமூகத்தால் உள்வாங்கப்படுகிறது என்னும் அவதானம் நுண்ணினும் நுண்ணியதாக இருந்திருக்கிறது. கவிஞன் மொழியின் பெருங்கடல். அவன் கடலின் அலைகளே மானுட வாழ்க்கை. தன் படைப்பின் சில கணங்களேனும் அவன் மண்ணில் இருந்து எழுந்து எழுந்து உயர்ந்து உயர்ந்து இறைமை உறையும் விண்ணிலிருந்து சிறு துகள்களென ஒட்டு மொத்த மண்ணுலகையும் கண்டிருப்பான். இருப்பினும் தன் படைப்பை சரியாக உள்வாங்காத சரியாக புரிந்து கொள்ளாத தருணங்களில் அவன் உணர்ச்சிகரமாகக் கொந்தளிக்கிறான். அந்த சூழலையும் தருணத்தையும் மௌனமாக அமைதியாகக் கடந்து சென்றவர்கள் உண்டு. உணர்ச்சிகரமாக எதிர்வினையாற்றியவர்களும் உண்டு. 

ஷீரசாத் உலகின் மிகப் பெரிய கதைசொல்லிகளில் ஒருவர். ஆயிரம் இரவுகளும் மற்றும் ஒரு இரவும் கதைசொல்கிறாள். எனினும் அவள் கதை சொல்லும் தருணம் மரணத்தின் விளிம்பு. சிக்கலான அந்த மரணத்தின் விளிம்பில் நின்றவாறு சொல் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கதை சொல்கிறாள். மரணத்தை வெல்கிறாள். 

உலகின் மிகப் பெரிய காவியம் பாட முடிவெடுக்கிறான் கிருஷ்ண துவைபாயனன். ஆனைமுகன் அவன் சொற்களை ஓலையில் பதிக்க அவன் முன் வந்தமர்கிறான். தனது கவிப்பாய்ச்சலை எந்த இடத்திலும் மட்டுப் படுத்தக் கூடாது என்கிறான் கிருஷ்ண துவைபாயனன். அக்கணமே தன் அழகிய தந்தம் ஒன்றை பாதியாக உடைத்து காவிய ஆசிரியனின் சொற்களை எழுத்தாக்கத் தொடங்குகிறான் கணபதி. 

படைப்பை சரியாக உள்வாங்கிக் கொள்வதும் சிந்தனையில் சரியான இடத்தில் பொருத்திக் கொள்வதும் அவ்விதம் நிகழாமல் போவதும் உலகத்தில் மாறி மாறி நடந்து கொண்டிருக்கவே செய்கிறது. 

கதைகள் குறித்த படைப்பாளிகள் குறித்த கதைகளில் குணாட்யரின் கதை மறக்க முடியாதது ; நெஞ்சை உருக்குவது. 

***

நம் நாட்டின் பெரும் சொத்து சோமதேவரின் ‘’கதா சரித் சாகர்’’. அதில் கதா சரித் சாகர் எழுதப்பட்ட கதையென குணாட்யரின் கதை வருகிறது. பின்னர் குணாட்யரின் கதை விதவிதமாக எழுதப் பெற்றிருக்கிறது. எல்லா விதமான கற்பனைகளுக்கும் சாத்தியங்களும் இடமளிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது குணாட்யரின் வாழ்வும் படைப்பும். 

சாதவாகன தேசத்தின் தலைநகரான சுப்பிரதிஷ்டா நகரின் அரசன் மகிழ்ந்திருக்கும் தருணம் ஒன்றில் அவனது அரசி ‘’மன்னா போதும்’’ என சமஸ்கிருதத்தில் சொல்கிறாள். அம்மொழியில் அதற்கு ‘’பட்சணங்கள் வேண்டும்’’ என இன்னொரு அர்த்தமும் உண்டு. அவன் அவ்விதமாகப் புரிந்து கொண்டு பட்சணங்கள் கொண்டு வர ஆணையிடுகிறான். அனைவரும் நகைக்கின்றனர். மிக அவமானமாக உணர்ந்த தான் இலக்கணம் கற்க வேண்டும் என்கிறான். குறைந்தது 12 ஆண்டுகள் ஆகும் என்கின்றனர். ஒரு ஆசிரியர் அவனுக்கு ஓராண்டில் இலக்கணம் கற்பிக்கிறார். அவமானம் என்னும் எதிர்மறை உணர்வால் உந்தப்பட்டு இலக்கணம் கற்றுக் கொண்ட அரசனுக்கு படைப்பின் மொழியின் உயிர்த்தன்மையை உணரும் புலன்கள் அவன் கற்ற இலக்கணம் மூலம் அவனுக்குக் கிடைக்கவில்லை. ஜீவன் கொண்ட படைப்பை அவனால் அடையாளம் காண முடியாமல் போகிறது. மேலும் காலத்தை வெல்லும் இயல்பு கொண்ட படைப்புகளை எதிர்மறையாக நிராகரிக்கச் செய்கிறான். மன்னனின் இயல்பு உணர்ந்த குணாட்யர் அரசவையிலிருந்து வெளியேறுகிறார். விந்திய மலையில் 12 ஆண்டுகள் முழு மௌனத்தில்   தன்னை ஆழ்த்திக் கொள்கிறார். அவர் சீடர்கள் அனைவரும் அவர் காலடியில் அமர்ந்து அவர் ஏதேனும் உரைப்பாரா என்று காத்திருக்கின்றனர். குணாட்யர் நீங்கிய அவை மேன்மை குன்றுகிறது. 12 ஆண்டுகளுக்குப் பின் வேள்வித்தீ வளர்க்கக் கூறி தனது படைப்பின் ஏழு தொகுதிகளையும் அதில் வீச முடிவெடுத்து ஒவ்வொரு தொகுதியாக அதில் வீசுகிறார். ஏழாவது தொகுதியுடன் தானே வேள்வித்தீக்கு ஆகுதி ஆகிறார். அந்தக் கணத்தில் மனம் மாறி தனது ஏழாவது தொகுதியை மட்டும் தீக்கு வெளியே எறிகிறார். சீடர்கள் கண்ணீருடன் அதனை எடுத்துக் கொள்கின்றனர். குணாட்யரின் படைப்பாக அது மட்டும் எஞ்சுகிறது. குணாட்யர் இறப்பு குறித்து அறிந்து நாடே துயரம் கொள்கிறது. சாதவாகன அரசி குணாட்யர் மறைந்த இடத்துக்கு வந்து வணங்கி அவருக்கு ஒரு ஆலயம் எழுப்புகிறாள். 

***

ரா.ஸ்ரீ.தேசிகன் சக கமனம் என்ற பெயரில் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். 

தமிழின் சிறந்த சிறுகதைகளில் ’’சக கமனம்’’ ஒன்று. சிறுகதையின் ஒவ்வொரு சொல்லும் மிகத் தேர்ந்தெடுக்கப்பட்டவையும் மிக உணர்ச்சிகரமானவையும் ஆகும். படைப்பூக்கத்தின் உச்சத்தில் திளைக்கும் நிலையிலேயே இவ்விதமான கதையை எழுத முடியும். அந்த சிறுகதையின் சிறப்பான வரிகள் என அடையாளம் காட்ட வேண்டுமெனில் ஒட்டு மொத்த சிறுகதையின் வரிகளையும் காட்ட வேண்டியிருக்கும். 

சிறுகதை என்னும் இலக்கிய வடிவம் மேல் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய கதை ‘’சக கமனம்’’. 

***

Friday, 26 December 2025

வாணியின் மாணவி

 
இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் கல்லூரி மாணவனாக இருந்த போது இந்த புவிக்கு வந்த குழவி என் நண்பரின் மகள். அவள் பிறந்த அன்றைய தினத்திலேயே அவளை கைகளில் ஏந்தியிருக்கிறேன். அவள் மழலை பேசிய நாட்களும் புத்தகப்பை சுமந்து பள்ளி சென்ற நாட்களும் இன்னும் என் நினைவில் இருக்கின்றன. பள்ளி நாட்களில் அவள் பயில வேண்டிய பள்ளி எது எனத் தீர்மானிப்பதில் அவள் பெற்றோருடன் எனக்கும் சிறு பங்கு இருந்திருக்கிறது. அவள் பட்டயக் கணக்காளராக ஆக வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்தது. அவள் தந்தைக்கும் அதே எண்ணம் இருந்தது. அவள் தனது இளநிலைப் படிப்பாக பி.காம் பயின்றாள். தற்போது கம்பெனி செகரட்ரிஷிப் படித்து வருகிறாள். அவள் பள்ளி மாணவியாக இருந்த போது அவளுக்கு எவ்விதம் புத்தகங்களின் உலகுடன் பரிச்சயம் ஏற்படுத்துவது என்பது குறித்து அவள் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவளுடைய தந்தை இலக்கிய வாசிப்பு கொண்டவர். அவளது அன்னை ஒரு பள்ளி ஆசிரியை. 

கடந்த ஓராண்டு காலமாக நண்பரின் மகள் இலக்கியம் வாசிக்க ஆரம்பித்திருக்கிறாள். சிறுகதைகள் மேல் பேரார்வம் கொண்டிருக்கிறாள். தொடர்ந்து வாசிப்பதால் இலக்கிய வாசகர்களுக்குரிய நுண்ணுணர்வுகளை அடைந்திருக்கிறாள். வாழ்வின் நுட்பங்களை உணரும் உணர்கொம்புகள் அவள் வசமாகியிருக்கின்றன என்பதை அவளுடன் உரையாடுகையில் அறிந்தேன். 

இப்போதும் அவளிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவளை சிறு குழவியாய் பார்த்ததே நினைவில் தோன்றுகிறது. கவிதை, நாவல், அ-புனைவுகள், மரபிலக்கியம் ஆகியவையும் வாசிக்குமாறு அவளிடம் சொன்னேன். 

அவளுடன் உரையாடிக் கொண்டிருந்த போது அவள் கலைத்தாயின் மாணவி என ஒரு கணம் தோன்றியது.