Friday 30 August 2024

வங்கி மேலாளரின் பொறுப்பற்ற செயல்களும் பொறுப்பற்ற பதில்களும்

 எனது வீட்டுக்கு அருகாமையில் 65 வயதான முதியவர் ஒருவர் வசிக்கிறார். இன்று காலை அவரை தற்செயலாக சாலையில் சந்திக்க நேர்ந்தது. அவர் தேசியமயமாக்கப்பட்ட வங்கி தொடர்பான ஒரு விஷயத்தை என்னிடம் சொன்னார். அதாவது, அவரது மகன் ஒரு சிறு தொகையை வங்கியில் கடனாகப் பெற்றிருக்கிறார். கடனுக்கு வட்டியும் கட்டி வந்திருக்கிறார். பின்னர் அவர் வெளிநாடு சென்று விட்டார். அந்த கடனுக்கான வட்டி மூன்று மாதங்களுக்கு மேல் செலுத்தப்படாததால் ‘’வாராக் கடன்’’ என அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. வங்கி அந்த கடன் கணக்கை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விற்று விட்டது. அந்த தனியார் நிறுவனம் அப்போது இருந்த அசல் வட்டி சேர்த்து மொத்த தொகையில் கணிசமான ஒரு தொகையை செலுத்தி ’’ஒரு முறை தீர்வு’’ ( one time settlement) முறையில் செலுத்துமாறு கடிதம் அனுப்பியிருக்கின்றனர். மூன்று மாதத்தில் குறிப்பிட்ட மூன்று தினங்களில் செலுத்துமாறு கூறியிருக்கின்றனர். அதன்படி இரண்டு தவணைகள் செலுத்தப்பட்டன. மூன்றாவது தவணை குறிப்பிட்ட தேதிக்கு ஐந்து நாட்கள் தாமதமாக பணம் கட்டப்பட்டிருக்கிறது. மூன்றாவது தவணை IMPS முறையில் கணக்கில் செலுத்தப்பட்டிருக்கிறது. எனினும் ஒரு வருடமாக மாதத்துக்கு இரண்டு மூன்று அலைபேசி அழைப்புகள் அந்த கடன் கணக்கில் பணம் செலுத்துமாறு வந்து கொண்டேயிருந்திருக்கின்றன. முதியவர் பணம் செலுத்தியாகி விட்டது என்ற விஷயத்தைக் கூறியிருக்கிறார். ஆனால் மூன்றாவது தவணை பணம் வரவில்லை என்று கூறியிருக்கின்றனர். என்னிடம் முழு விபரத்தையும் கூறினார். 

முதியவரின் வீட்டுக்கு காலை 11 மணி அளவில் சென்று சம்பந்தப்பட்ட வங்கி மேலாளருக்கு அனுப்ப ஒரு கடிதத்தை தயார் செய்தேன். அதில் முதியவரின் மகனின் வங்கி கணக்கு எண், ‘’ஒரு முறை தீர்வு’’க்கு அனுப்பப்பட்ட கடிதம், மூன்று தவணைகளில் பணம் கட்டப்பட்ட விபரம் ஆகியவற்றின் விபரத்தைத் தெரிவித்து அதன் நகல்களை இணைத்து மேற்படி கடன் கணக்கை நிறைவு செய்து கடன் கணக்கை முடிக்கும் அறிக்கை வழங்குமாறு விண்ணப்பித்து மனு எழுதப்பட்டிருந்தது. முதியவர் அதில் கையெழுத்திட்டார். 

இந்த மனுவை நேரில் சென்று அளிக்காமல் விரைவுத் தபாலில் அனுப்பி விட்டு மறுநாள் வங்கி மேலாளரை நேரில் சந்திக்கலாம் என்பது எனது எண்ணம். வெளியூரில் வங்கியில் பணி புரியும் எனது சகோதரனை ஒத்த நண்பனுக்கு ஃபோன் செய்த போது அவன் முதியவருடன் நேரில் சென்று மனுவை அளிக்குமாறும் ஓரிரு நாளில் அவர்கள் அறிக்கை அளித்து விடுவார்கள் ; இந்த விஷயத்தில் வேறு சிக்கல் இல்லை ; எளிதான விஷயமே என்று கூறினான். அவன் சொல்லுக்கு மதிப்பளித்து முதியவருடன் வங்கிக்கு சென்றேன். 

அந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளர் ஓர் இளைஞர். அவரது வயது 35 இருக்கலாம். முதியவர் அளித்த மனுவை வாங்கிப் பார்த்தார். முழுதாகப் படித்திருப்பாரா என்பது ஐயம். ‘’உங்கள் கடன் கணக்கு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்டிருக்கிறது. அதனால் அந்த கடன் கணக்குக்கும் வங்கிக்கும் எந்த தொடர்பும் இல்லை. நீங்கள் அந்த தனியார் நிறுவனத்தை மட்டுமே அணுக வேண்டும். எங்களிடம் வரக்கூடாது.’’ என்று சற்று கோபத்துடன் எதிர்வினையாற்றினார். 

65 வயது முதியவரிடம் 35 வயதான இளைஞர் இவ்விதமாக கோபமாக பதில் சொல்வது என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. இருப்பினும் பொறுமை காத்தேன். ‘’ நீங்கள் வாய்மொழியாக எங்களுக்கு அளித்திருக்கும் பதிலை நாளை இந்த கடிதம் உங்களுக்கு பதிவுத் தபாலில் வரும் போது எழுத்துபூர்வமாக கொடுங்கள்.’’ என்று கூறி விட்டு முதியவரை அழைத்துக் கொண்டு அவரது வீட்டுக்கு வந்து விட்டேன். 

வெளியூர் வங்கியில் பணி புரியும் எனது நண்பனுக்கு ஃபோன் செய்து நடந்ததைக் கூறினேன். அவனுக்கு வங்கி அதிகாரி அளித்த பதில் மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. அவனால் நம்ப முடியவில்லை. ‘’அப்படியா பதில் சொன்னார்கள் ; அப்படி எப்படி சொல்ல முடியும்’’ எனக் கேட்டுக் கொண்டே இருந்தான். நான் மாலை 5 மணிக்கு மேல் ஃபோன் செய்கிறேன் என்று கூறி விட்டு ஃபோனை வைத்து விட்டேன்.

அந்த வங்கியின் சென்னை தலைமை அலுவலகத்துக்கு ஃபோன் செய்து வங்கியில் நடந்த விஷயத்தைக் கூறினேன். என்னிடம் ஃபோன் பேசிய அதிகாரி அதிர்ச்சி அடைந்தார். ‘’மேலாளர் ஏன் அப்படி சொன்னார்?’’ என்று கேட்டார். பின்னர் ‘’ஒரு முறை தீர்வு’’ தொகை முழுதாக வரவு வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை தான் அளிக்கும் தனியார் நிறுவன எண்ணில் பேசி உறுதி செய்து கொள்ளுமாறு கூறினார். 

அவர் அளித்த எண் ஒரு பெண்மணியுடையது. அவர் அலுவலகம் மும்பையில் இருந்தது. நான் ஃபோன் செய்த போது நேரம் மதியம் 2.15. தான் இப்போது தான் மதிய உணவு அருந்த அமர்ந்ததாகவும் 10 நிமிடம் கழித்து பேச முடியுமா என்று அவர் கேட்டார். சரி என்றேன். அந்த இடைவெளியில் அந்த கடன் கணக்கு எண்ணை குறுஞ்செய்தி மூலம் அனுப்பினேன். 2.45க்கு ஃபோன் செய்தேன். அந்த பெண்மணி கடன் கணக்கு எண் மூலம் அதன் முழு விபரங்களைப் பார்வையிட்டிருந்தார் என்பதை அவர் அந்த விஷயம் குறித்து பேசிய தொனியிலிருந்து புரிந்து கொண்டேன். சென்னை அலுவலகத்தில் பேசியிருப்பதாகவும் சென்னை அலுவலகத்திலிருந்து இன்னும் சற்று நேரத்தில் தங்கள் எண்ணுக்கு அழைப்ப்பார்கள் ; அவர்களிடம் விபரம் சொல்லுங்கள். விஷயம் சுமுகமாக தீர்வு காணப்படும் ; என்ன தீர்வு கூறப்பட்டது என்பதை எனக்கு ஃபோன் செய்து சொல்லுங்கள் என்று கூறினார். உலகில் நூற்றில் ஓரிருவர் பொறுப்புடன் இருக்கிறார்கள். அவர்களாலேயே உலக இயக்கம் என்பது நிகழ்கிறது. மும்பை பெண்மணி அவ்விதமானவர். 

சென்னை அலுவலகத்திலிருந்து ஒரு இளைஞர் அழைத்தார். மூன்றாவது தவணை  IMPS முறையில் செலுத்தப்பட்டிருப்பதை தனக்கு மின்னஞ்சல் மூலம் ஸ்கேன் செய்து அனுப்ப முடியுமா என்று கேட்டார். அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஸ்கேன் இண்டர்நெட் மையத்திலிருந்து அனுப்பப்பட்டது. மையத்தின் வாசலுக்கு வந்து நாங்கள் இரு சக்கர வாகனத்தை எடுப்பதற்குள் சென்னையிலிருந்து ஃபோன் வந்தது. மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றது ; கணக்கை பார்வையிட்டோம்; முழுத் தொகையும் செலுத்தப்பட்டுள்ளது.  நீங்கள் கணக்கு முடிக்கும் அறிக்கையை வங்கியில் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறினார். நான் இந்த விஷயத்தை உடன் மும்பை அலுவலகத்தில் உள்ள பெண்மணிக்கு தெரிவித்தேன். அவருக்கு மகிழ்ச்சி. 

முதியவரின் வீட்டுக்கு வந்து அஞ்சல் உறையில் காலையில் வங்கி மேலாளரிடம் அளிக்க எடுத்துச் சென்றிருந்த மனுவை இட்டு தபால் நிலையம் சென்று விரைவுத் தபால் மூலம் அந்த மனுவை வங்கி மேலாளருக்கு அனுப்பி வைத்தோம். விரைவுத் தபால் ரசீதை எங்கள் பிரதியில் ஒட்டி வைத்தோம். மாலை 5.30 ஆகி விட்டது. 

நான் வீட்டுக்கு வந்து நடந்த விஷயத்தை வங்கியின் ஆன்லைன் புகார் பிரிவில் பதிவு செய்ய வங்கியின் இணையப்பக்கத்துக்கு சென்றேன். புகார் அளிக்கும் பக்கம் வேலை செய்யவில்லை. வங்கியின் இணையப்பக்கத்திலிருந்து அவர்களுடைய ரீஜனல் ஆஃபிஸ் எண்ணை எடுத்து அதற்கு ஃபோன் செய்தேன். ரீஜனல் ஆஃபிஸ் அதிகாரியிடம் நடந்ததைக் கூறினேன். அவர் நிகழ்ந்த தவறுக்கு வங்கி சார்பாக வருத்தம் தெரிவிப்பதாகக் கூறினார். 

இதைப் போன்ற விஷயங்களை வங்கி உயர் அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைப்பேன். வங்கி உயர் அதிகாரிகள் வங்கிக் கிளைகளில் வாடிக்கையாளர்களும் குடிமக்களும் எவ்விதம் வங்கி மேலாளர்களாலும் ஊழியர்களாலும் நடத்தப்படுகின்றனர் என்பதை இவ்விதமான சம்பவங்கள் மூலமே அறிய முடியும். வாடிக்கையாளர்கள் வங்கியில் எவ்விதமாக நடத்தப்பட்டாலும் அமைதியாகப் போய் விடுவார்கள் என்பதாலேயே வங்கி மேலாளர்கள் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்கிறார்கள் ; பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள். 

ரீஜனல் ஆஃபிஸில் தெரிவிக்கப்பட்டிருக்கும் இந்த விஷயம் வாய்மொழியாக ( word of mouth) அந்த மண்டலத்தில் உள்ள அனைத்து கிளைகளுக்கும் பரவும். அது சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தார்மீக நெருக்கடியை உண்டாக்கும். முதியவருக்கு செய்த பிழையை மேலும் ஒருவருக்கு இனி செய்யாமல் இருப்பார். 

அந்த வங்கியின் ஆன்லைன் புகார் பிரிவு இயங்காமல் இருப்பதை தலைமை அலுவலகத்தில் இருக்கும் மூன்று உயர் அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தேன். அது சரியானவுடன் ஆன்லைன் புகார் அளிக்க உள்ளேன். புகார் அளிப்பதன் நோக்கம் நடந்த விஷயத்தை வங்கி உயர் அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு செல்வதே தவிர எவரையும் தண்டிக்கும் நோக்கம் இல்லை. வங்கி மேலாளர் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. 

நான் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மீது நம்பிக்கை கொண்டவன். இந்த பதிவில் கூட சம்பந்தப்பட்ட வங்கியின் பெயரைக் கூறாமல் தவிர்த்திருக்கிறேன் என்பதிலிருந்து அதனைப் புரிந்து கொள்ளலாம்.  

Wednesday 28 August 2024

அன்னை

குழந்தை தீர்த்தனின் குடும்பத்தினர் இன்று திருக்கருகாவூர் ஆலயத்துக்கு வந்து கரு காக்கும் அன்னையை வணங்கினர். அங்கே இருக்கும் நகரும் தொட்டிலில் அமர்ந்து கொண்டு அம்மையை சுற்றி வந்தான் திராத். நான்கு மாதக் குழந்தை. மனித முகங்களை ஆர்வமாகப் பார்க்கிறான். சூழலின் சப்தங்களை அவதானிக்கிறான்.  

நேற்று தீர்த்தனின் குடும்பத்தினர் காலை சென்னையில் புறப்பட்டு ரயிலில் ஸ்ரீரங்கம் வந்தனர். நேற்று காலையிலேயே ஸ்ரீரங்கம் ஆலயத்தில் ஸ்ரீரங்கநாதர் தரிசனம். தீர்த்தனின் எடைக்கு எடை கல்கண்டு துலாபாரம் அர்ப்பணித்தனர். தரிசனம் முடித்த பின்னர் மாலை கும்பகோணம் வந்தடைந்தனர். அங்கே தீர்த்தனின் அன்னையும் தந்தையும் தீர்த்தனுடம் விடுதி அறையில் ஓய்வெடுக்க மற்றவர்கள் சாரங்கபாணி, சக்கரபாணி ஆலயங்களுக்கு சென்று பெருமாளை வழிபட்டிருக்கின்றனர். 

இன்று காலை நான் ஊரிலிருந்து புறப்பட்டு திருக்கருகாவூர் சென்றேன். அவர்கள் எனது வருகைக்கு 30 நிமிடம் முன் ஆலயத்தில் இருந்தனர். நண்பனும் நானும் சில மாதங்கள் முன் அந்த ஆலயம் வந்ததையும் அம்மையிடம் வேண்டிக் கொண்டதையும் உணர்ச்சிகரமாக நினைத்துக் கொண்டோம். சன்னிதியில் பிள்ளை வரம் வேண்டி ஒரு குடும்பத்தினர் பிராத்தனை செய்து கொண்டிருந்தனர். 

அங்கிருந்து புறப்பட்டு பட்டீஸ்வரம் வந்தோம். துர்க்கை அம்மனை வணங்கினோம். 

ரயில் நிலையத்துக்கு மிக அருகில் இருக்கும் அறைக்கு வந்து சேர்ந்த போது சோழன் விரைவு வண்டியைப் பிடிக்க முழுதாக ஒரு மணி நேரம் இருந்தது. ரயில் நிலையத்தில் தீர்த்தன் குடும்பத்தினரை வழியனுப்பி விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்குக் கிளம்பினேன். 

தீர்த்தனின் அன்னையின் உணர்வும் மனமும் முழுமையாக தீர்த்தன் மீதேயிருந்தது. தீர்த்தனுக்காக அவர்கள் ஆற்றும் சிறு செயல் கூட முழுமை கொண்டிருந்தது. அன்னையின் பாதங்கள் மானுடரால் எப்போதும் வணங்கப்பட வேண்டியவை. 

தீர்த்தன் - அஞ்சனக் கருமுகில் கொழுந்து ( மறுபிரசுரம்)


சென்ற மாதம் என் சகோதரன் எனத்தக்க எனது நண்பன் சென்னையிலிருந்து திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகையை வணங்க வந்திருந்தான். நண்பனுடன் திருக்கருகாவூருக்கும் பட்டீஸ்வரத்துக்கும் சென்றிருந்தேன். 

இரண்டு தினங்களுக்கு முன்னால் சென்னையில் நண்பனின் மனைவிக்கு சுகப்பிரசவம் நிகழ்ந்து ஆண் மகவு பிறந்திருக்கிறது. அன்னையும் மகவும் நலமுடன் உள்ளனர். 

இன்று நண்பனிடம் பேசிக் கொண்டிருந்த போது குழந்தைக்குப் பெயர் முடிவு செய்திருக்கிறீர்களா என்று கேட்டேன். தீர்த்தன் என்ற பெயரின் மரூஉ ஆன ‘’திராத்’’ என்ற பெயரை சூட்ட உள்ளோம் என்று சொன்னான். 

நம் நாட்டில் காலை விழித்தெழுந்ததும் ‘’கங்கை யமுனை சரஸ்வதி சிந்து காவேரி நர்மதா கோதாவரி ‘’ என்ற ஏழு புண்ணிய நதி தீர்த்தங்களை நினைத்து அவற்றின் பெயரைக் கூறி வணங்கும் மரபு இன்றும் உண்டு. குழந்தை திராத் பெயர் கூறி அழைக்கப்படும் போதெல்லாம் இந்த 7 புண்ணிய நதிகளின் பெயரையும் கூறும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. 

குழந்தை ஸ்ரீராமனின் பிறப்பை கம்பன் 
ஒரு பகல் உலகு எலாம்  உதரத்துள் பொதிந்து.
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை. அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை.
திரு உறப் பயந்தனள் - திறம் கொள் கோசலை.

என்கிறான்.  

கரு காக்கும் அன்னை ( மறுபிரசுரம்)

எனது சகோதரன் எனக் கூறத் தக்க அளவிலான எனது நண்பன் சென்னையில் வசிக்கிறான். அவனது மனைவிக்கு சென்ற மாதம் வளைகாப்பு நடைபெற்றது. வளைகாப்புக்கு முன்பிருந்தே நான் நண்பனிடம் திருக்கருகாவூர் ஆலயத்துக்கு வந்து முல்லைவன நாத சுவாமியையும் கர்ப்பரட்சாம்பிகை அம்மனையும் வழிபட கூறிக் கொண்டேயிருந்தேன். சென்ற வாரம் அவன் வருகை புரிவதாய் இருந்தது ; அவனது மனைவிக்கு மருத்துவ பரிசோதனைகள் இருந்ததால் தவிர்க்க இயலாமல் அவனது வருகையை ஒத்தி வைக்க வேண்டியதாயிற்று. இன்று காலை சென்னையில் சென்னை - திருச்சி சோழன் விரைவு வண்டியில் புறப்பட்டு வந்தான். நான் அந்த ரயிலில் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ஏறிக் கொண்டேன். என்னிடம் மயிலாடுதுறை - பாபநாசம் ரயில் பயணச் சீட்டு இருந்தது. பாபநாசத்தில் நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டோம். பாபநாசத்தில் மதிய உணவு அருந்தி விட்டு அங்கிருந்து ஒரு ஆட்டோவில் திருக்கருகாவூர் சென்று சேர்ந்தோம். பாபநாசமும் திருக்கருகாவூரும் 6 கி.மீ தூரத்தில் உள்ளன. 3 மணி அளவில் திருக்கருகாவூர் ஆலயம் சென்றடைந்தோம். அம்மன் சன்னிதியை ஒட்டி வெறும் தரையில் சற்று தலை சாய்த்தோம். ஆலயங்களில் இவ்வாறு காத்திருப்பது கடவுளின் நிழலில் இளைப்பாறுவதற்கு ஒப்பானது. ஆலயங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்பது அதுவே. 

நடை திறந்ததும் முல்லைவன நாதரை வணங்கினோம். முல்லை வன நாதர் புற்று மண்ணால் ஆனவர். சுயம்பு. முல்லை வன நாதர் அத்தனை அழகு படைத்தவர். முல்லை வன நாதரை வணங்கி விட்டு அம்மனை வழிபடச் சென்றோம். 

மனிதர்களால் சிறு அளவிலேனும் ஒரு அன்பை உணர்ந்து கொள்ள முடிகிறது என்றால் அது தாயின் அன்பு மட்டுமே. அம்மையப்பன் எல்லா உயிர்களுக்கும் தாயும் தந்தையுமானவர்கள். 

கர்ப்ப ரட்சாம்பிகை முன்னால் குழுமியிருந்தவர்கள் அனைவருமே இளம் தம்பதியினர். மக்கட்பேறு வேண்டி இறைவனை வழிபட வந்திருந்தார்கள். இங்கே வந்து வழிபட்டுச் சென்ற பின் குழந்தைப் பேறு வாய்க்கப்பெற்றவர்கள் தங்கள் நேர்த்திக் கடன் செலுத்த வந்திருந்தனர். குழந்தைகளால் நிரம்பிய ஆலயத்தைக் காணவே சந்தோஷமாக இருந்தது. நண்பன் ஆலயத்தில் நெய்தீபம் ஏற்றினான். 

மாலை 6 மணி வரை அங்கே இருந்து விட்டு பின்னர் பட்டீஸ்வரம் புறப்பட்டோம். அங்கே ஆலயம் சென்று துர்க்கையை வணங்கினோம். 

நண்பனுக்கு இரவு 9 மணிக்கு உழவன் ரயிலில் ஊர் திரும்ப வேண்டியிருந்தது. எனவே தாராசுரம் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து ரயிலேறி மயிலாடுதுறை வந்து சேர்ந்தோம். இரவு உணவு அருந்தி விட்டு நண்பன் புறப்பட்டான். நானும் வீடு வந்து சேர்ந்தேன்.   

Monday 26 August 2024

ஞாயிற்றுக்கிழமை

 நம் சமூகத்தில் ஞாயிற்றுக்கிழமை என்பது முழுமையாக எந்த பணிகளும் இல்லாத நாள் என்பது போல் ஒரு மனப்பதிவு உருவாகி விட்டது. தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பிலிருந்து அனைத்து கடைகளும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் திறந்திருக்கின்றன. அந்த நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணிகள் நடைபெறுகின்றன. ஆவணி, தை ஆகிய மாதங்களில் திருமண முகூர்த்தங்கள் அதிகம் என்பதால் அப்போதும் ஞாயிறுகளில் பணிகள் நடக்கும். பாரத ஸ்டேட் வங்கி பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பரீட்சார்த்த முயற்சியாக தங்கள் கிளைகளை ஞாயிறன்று திறந்து வைத்து குறைந்தபட்ச வங்கி சேவைகளை அளித்தார்கள். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ரயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்குகின்றன. அவை விரும்பப்படுகின்றன. 

ஞாயிறன்று பணி புரிய வேண்டும் என்று நான் விரும்புவேன். நேற்று நான்கு பணிகள் வைத்திருந்தேன். நான்கும் அலுவல் சார்ந்த பணிகள். அதில் மூன்று பணிகளை நிறைவு செய்தேன். 

நண்பர் ஒருவரைச் சந்திக்க மதிய நேரத்தில் வருவதாகக் கூறியிருந்தேன். இருப்பினும் மாலை 5 மணி அளவிலேயே செல்ல முடிந்தது. நண்பர் உற்சாகமான இயல்பு கொண்டவர். பழகுவதற்கு இனியவர். அவர் வீட்டில் 50 வயது கொண்ட வேப்பமரம் இருக்கிறது. அதன் நிழலில் அமர்ந்து கொள்வதே மனதிற்கு இதமாக இருக்கிறது. 

வேம்பின் நிழலில் அமர்ந்து இருவரும் உரையாடிக் கொண்டிருந்தோம். பொழுது அணையும் நேரத்தில் மேற்கு வானில் மாலையின் முதல் நட்சத்திரத்தைக் கண்டோம். 

Wednesday 21 August 2024

விருட்ச சன்னிதானம்


 நேற்று நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவரது வீட்டை ஒட்டி சற்று பெரிய பரப்பில் காலிமனை இருந்தது. அதில் நாற்பது வயதான வேப்பமரம் ஒன்று இருந்தது. இரு கைகளால் சுற்றி நெருங்க முடியாத அளவு பருமன். பெரும் உயரம். தனது நிழல்பரப்பின் மீது கம்பீரமாக நின்றிருந்தது. அதன் நிழல்பரப்பில் உதிர்ந்திருந்த வேப்பம்பழங்களிலிருந்து சிறு சிறு வேப்பஞ்செடிகள் கணிசமாக முளைத்திருந்தன. வேப்பமரத்தின் அடியில் ஒரு நாற்காலி போடப்பட்டிருந்தது. நான் அதில் அமர்ந்து கொண்டேன். அந்த மரத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னர் அருகில் சென்று அந்த மரத்தின் மீது எனது உள்ளங்கைகளை வைத்துக் கொண்டேன். மரத்தின் குளுமையை கரங்கள் உணர்ந்தன. கரங்களின் குளுமை உள்ளத்தைக் குளிர வைத்தது. அந்த ம்ரமும் அதன் நிழல்பரப்பும் விருட்ச சன்னிதானம் என எண்ணினேன். 

வேப்ப மரத்திலிருந்து சற்று தொலைவில் ஒரு பலாமரம் இருந்தது. கைக்கு எட்டும் தொலைவில் அதில் ஒரு பழம் பழுத்திருந்தது. 

Tuesday 20 August 2024

அன்னம் - சிறுகதை - கடலூர் சீனு (மறுபிரசுரம்)

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுது பேர் தன்னை நீக்கி பிணமென்று பெயரிட்டு  காட்டில் சுட்டு நீரில் மூழ்கி நினைப்பொழியும் மயானமும் மயானத்தின் சூழலும் இந்தியர்களின் அகத்துக்கு மிகவும் பக்கத்தில் உள்ள ஒன்று. எதன் பொருட்டும் உண்மையைக் கைவிட மாட்டேன் என்ற உறுதியுடன் மயானத்தின் பிணங்களை எரித்துக் கொண்டிருந்த ராஜா ஹரிச்சந்திரன் கதை இன்றும் தமிழகத்தின் ஏதோ ஒரு கிராமத்தில் இரவுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. யக்‌ஷப் பிரசன்னத்தில் யக்‌ஷன் இந்த உலகின் பெருவியப்பு என்ன எனக் கேட்கும் வினாவுக்கு விடையாக யுதிர்ஷ்ட்ரன் மயானத்துக்குச் செல்லும் பிணங்களை தினமும் பார்க்கும் மனிதர்கள் மனித வாழ்க்கையை சாஸ்வதமாகக் கருதுவது உலகின் பெருவியப்பு என பதில் சொல்கிறான். 

‘’அன்னம்’’ சிறுகதை ஒரு மயானத்தின் பின்புலத்தில் விரிகிறது. இலுப்பையும் எருக்கும் மண்டிக் கிடக்கும் மயானம் சீரான புல்வெளிகள் கொண்ட கொன்றைப்பூக்கள் பூத்துக் குலுங்கும் குரோட்டன் செடிகள் வளர்க்கப்படும் இடமாக காலகதியில் பரிணாமம் பெற்றிருக்கிறது. சுமங்கலியான ஒரு மூதாட்டி மரணித்த பின் எரியூட்டப்பட மயானத்துக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறாள். தவிர்க்க இயலாத சில சூழ்நிலைகளால் பிணம் அங்கே வந்து சேர தாமதமாகி விடுகிறது. உறவினர்கள் அசௌகர்யமான மனநிலையுடன் எரியூட்டல் எப்போது நிகழும் என காத்திருக்கிறார்கள். 

மயானத்தின் தோற்றம் வேறுவிதமாக இருப்பதைக் காணும் கதைசொல்லி அந்த வளாகத்தினுள் நுழைகிறான். அங்கே ஒரு எம்டன் வாத்து இருக்கிறது. அந்த வாத்து தனது இணையை சில மாதங்களுக்கு முன் இழந்திருக்கிறது. தனக்கு நெருக்கமான ஒரு உயிரின் சாவினை சமீபத்தில் எதிர்கொண்டிருக்கிறது. 

அந்த வாத்தினை அந்த வளாகத்தின் பணியாளரான ஒரு பெண்மணி வளர்த்து வருகிறார். தான் உண்ணும் உணவை பகுத்தளித்து அந்த வாத்தை வளர்க்கிறாள். பிணங்களின் வாயில் போடப்படும் வாய்க்கரிசியையும் வாத்து உணவாக உண்கிறது. 

சற்று தாமதமாக மயானத்துக்கு வரும் நடுவயது இளைஞன் மரணித்த மூதாட்டியின் முன் அமர்ந்து கேட்பவர் முதுகெலும்பு சில்லிடும் வகையில் ஒப்பாரி வைக்கிறான். ஒப்பாரியில் அவன் கூறும் சொற்களிலிருந்து அந்த மூதாட்டி அந்த இளைஞன் சிறுவனாயிருந்த போது அவன் குடும்பத்தாரின் ஆதரவு இல்லாமல் தனித்து விடப்பட்ட போது அன்னமிட்டு வளர்த்தவர் என்பதை அறிய முடிகிறது. அனைவரும் திகைத்துப் போய் நிற்கையில் அந்த வாத்து ஒப்பாரி வைப்பவன் அருகில் வந்து தன் குரலை எழுப்புகிறது. அவனை அழாதே என அந்த வாத்து சொல்வதாக அதன் மொழி புரிந்த வாத்து வளர்க்கும் பெண் சொல்கிறாள். 

இந்த சிறுகதையின் வடிவம் மிக நேர்த்தியாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. ஆங்காங்கே விரவி இருக்கும் உணர்வுப் புள்ளிகளை வாசகன் தனது கற்பனையால் நிரப்பிக் கொள்வானாயின் - விரிவாக்கிக் கொள்வானாயின் அவன் இந்த சிறுகதையின் வடிவ ஒருமையை உணர்வான். 

மயானம் என்பது மீதமின்றி பிடி சாம்பல் ஆகும் இடம். இந்திய மரபில் பிடி சாம்பல் என்பது இறுதி அல்ல. இன்னும் சில இருக்கின்றன. சடங்குப் படி அந்த பிடி சாம்பலான அஸ்தி நீரில் கரைக்கப்பட வேண்டும். எரியூட்டல் என்பது ஜீவனின் அன்னமயகோசத்தை சாம்பலாக்கும் நிகழ்வு. ஜீவனின் அன்னமயகோசம் முற்றிலும் சாம்பலாகிப் போனாலும் அது செய்த புண்ணியம் அப்போதும் அதனைப் பற்றி நிற்கும். 

மயானப் பணியாளரின் அன்னை அன்னத்தையும் பிரியத்தையும் நம்பிக்கையையும் அளித்தவர். பணியாளப் பெண்மணியும் வாத்தை தன் அன்னையின் வடிவமாகக் கண்டு அதற்கு அன்னமிட்டவர். மறைந்த மூதாட்டியும் ஒரு ஆதரவற்ற சிறுவனுக்கு அன்னமிட்டு வளர்த்தவர். இந்த மூவருக்கும் பொதுவாக இருப்பது அன்னம். இந்த மூவரும் அருகருகே வரும் இடமாக அன்னமய உடலை எரித்து சாம்பலாக்கும் சுடுகாடு அமைந்திருப்பது புனைவு ரீதியில் சிறப்பானது. 

வாழ்த்துக்கள் சீனு !

புனைவுலகில் நீங்கள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பது நண்பனாக எனது விருப்பம்.

Wednesday 14 August 2024

நான் கண்ட விவேகானந்தர் - சகோதரி கிருஸ்டைன்

 


அமெரிக்காவில் டெட்ராய்ட் நகரில் வசிக்கும் கிறிஸ்டைன் தேவாலயம் ஒன்றில் ஓர் இந்தியத் துறவி உரையாற்றுவதாய் அறிந்து அந்த உரையைக் கேட்கச் செல்கிறார். அன்று கேட்கும் உரை அவரது வாழ்க்கைப் போக்கில் ஒரு திருப்புமுனையாக அமைகிறது. தனது வாழ்க்கையை ஆன்மீகப் பாதையில் அமைத்துக் கொள்ள அந்த உரை காரணமாகிறது. கிறிஸ்டைன் சகோதரி கிறிஸ்டைன் ஆகிறார். டெட்ராய்ட்டில் அன்று நிகழ்ந்த உரையை நிகழ்த்தியவர் சுவாமி விவேகானந்தர். 

சகோதரி கிறிஸ்டைன் தனது குருநாதர் குறித்து தனது நினைவுகளை எழுதியுள்ள நூல் ‘’நான் கண்ட விவேகானந்தர்’’. ஒவ்வொரு சொல்லிலும் ஜீவன் ஒளிரும் நுண்ணிய மொழியும் சித்தரிப்பும் சகோதரி கிறிஸ்டைன் உடையது. கோடானுகோடி ஜீவராசிகளில் ஓரிரண்டு ஜீவன்களுக்கு மட்டுமே வாய்க்கும் உன்னதமான ஆன்மீக அனுபவங்களை சொல்லில் வெளிப்படுத்தும் தருணம் என்பது மிகவும் அபூர்வமானது. சகோதரி கிறிஸ்டைனின் நூல் நெடுக இந்த அபூர்வம் நிகழ்ந்துள்ளது. 

முதல் முறையாக சுவாமிஜியின் உரையைக் கேட்கும் அனுபவத்தை சகோதரி விவரிக்கிறார். சுவாமிஜியின் மனப் பிரவாகத்தைக் காட்டாற்று வெள்ளம் என்கிறார். அவர் முன்வைக்கும் விஷயங்கள் காஷ்மீரச் சால்வையின் நேர்த்தி கொண்டவை என்கிறார். டெட்ராய்ட் நகரில் கேட்ட சுவாமிஜியின் உரை சகோதரி மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

பின்னர் , ஆயிரம் தீவுச் சோலையில் சுவாமிஜி தனது அமெரிக்க சீடர்களுடன் ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டிருக்கும் போது அங்கு ஒரு சீடராக இணைந்து கொள்கிறார் சகோதரி. சுவாமிஜியின் வாழ்க்கை குறித்து சுவாமிஜியின் குருநாதர் குறித்து என பல விஷயங்களை சுவாமிஜியின் சொற்கள் மூலம் நேரடியாகக் கேட்டறியும் வாய்ப்பைப் பெறுகிறார். 

யார் குரு என்ற கேள்வி சுவாமிஜியிடம் கேட்கப்படுகிறது. யார் பிரம்மத்தை உணர்ந்தவரோ அவரே குரு என பதில் சொல்கிறார் சுவாமிஜி. வினாவுக்கு பதில் சொன்னவர் பிரம்மத்தை உணர்ந்த ராமகிருஷ்ண பரமஹம்சரை குருவாகப் பெற்றவர். வினாவை எழுப்பியவர்கள் பிரம்மத்தை உணர்ந்த சுவாமி விவேகானந்தரை குருவாகப் பெற்றவர்கள். இந்த அழகிய தருணம் இந்த நூலில் பதிவாகியுள்ளது. 

சுவாமிஜி தன் சீடர்களிடம் ‘’கன்ஹேரி’’ என்ற இடத்தைக் குறித்துக் கூறுகிறார். நாம் அனைவரும் அங்கே பல நாட்கள் ஆன்மீக சாதனைகள் செய்து பல நாட்கள் பல மாதங்கள் பல வருடங்கள் ஒன்றாக இருந்திருக்கிறோம் என்று சொல்கிறார். இதனை சுவாமிஜி கூறும் போது அங்கிருக்கும் பலர் இந்தியாவுக்கு வந்ததே இல்லை. பின்னர் பல ஆண்டுகள் கழித்து சகோதரி மும்பை அருகில் உள்ள கன்ஹேரி என்ற இடத்துக்கு வருகிறார். அது பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் பௌத்த சங்கமாக இருந்த இடம் என்பதைக் காண்கிறார். பிறவிகள் பலவற்றில் ஒன்றில் தானும் தன் சீடர்களும் துறவிகளாக இருந்ததை சுவாமிஜி கூறியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்கிறார் சகோதரி. 

சகோதரி கிறிஸ்டைனின் அறிவுத்திறனையும் அழகுணர்ச்சியையும் தெய்வீகத் தன்மையையும் அவரது சொற்களில் காணும் போது அவரது குருநாதரான சுவாமி விவேகானந்தர் என்னும் பெரும் ஞான சூரியனை நம் மனம் கற்பனை செய்து கொள்கிறது. அந்த ஞான சூரியன் முன் அடிபணிகிறது.

நான் கண்ட விவேகானந்தர் - சகோதரி கிறிஸ்டைன்- மொழியாக்கம் : கோவை ந. சுப்ரமணியன் பக்கம் : 242 விலை : ரூ.60 பதிப்பகம்: ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை - 4.  
 

Tuesday 13 August 2024

அட்மிஷன் ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளரின் நண்பரான அண்டை கிராமத்து விவசாயியின் மகன் மறுநாள் குலதெய்வம் கோவிலுக்கு குடும்பத்தோடு போய் சாமி கும்பிட்டு விட்டு மாலை வீட்டுக்கு வருவதாகக் கூறி விட்டு சென்றிருந்தான். அமைப்பாளரும் இன்னும் 4 காலேஜ் என்னென்ன என்று யோசித்து வைப்பதாகக் கூறியிருந்தார். மாணவனும் வரவில்லை. அமைப்பாளரும் அடுத்த நாலு காலேஜ் யோசிக்கவில்லை. ஆனால் அமைப்பாளருக்கு 335 என்ற எண்ணும் 185 என்ற எண்ணும் அடிக்கடி நினைவுகளில் வந்து கொண்டிருந்தது. முன்னது ஜெனரல் ரேங்க் . பின்னது பி.சி ரேங்க். கணிணி இந்த எண்களை வரிசைப்படுத்தி அடுக்கி கலக்கி என்னென்னவோ செய்வது போல் எண்ணம் அடிக்கடி வந்து போனது. 

அடுத்த நாளும் மாணவன் வரவில்லை ; ஃபோனும் வரவில்லை. அவனே நாலு காலேஜை லிஸ்டில் சேர்த்திருப்பானோ என்று ஐயுற்றார் அமைப்பாளர். அவன் தனிநபர் இல்லை. அவன் நண்பர்கள் குழாம் திறன்பேசி வலைப்பின்னலில் இருக்கிறது என்பதால் சற்று ஆசுவாசமாக இருந்தார் அமைப்பாளர். 

இன்று காலை 10 மணிக்கு அவனிடமிருந்து ஃபோன். 

சாய்ராம் கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவு கிடைத்திருப்பதாக. அவனுக்கு விரும்பியது கிடைத்ததில் மெத்த சந்தோஷம். அமைப்பாளருக்கும். 

Sunday 11 August 2024

கவுன்சிலிங் ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளரின் நண்பர் ஒருவர் அண்டை கிராமத்து விவசாயி. விவசாயியின் மகன் இந்த ஆண்டு 12ம் வகுப்பு நிறைவு செய்துள்ளான். அவனுடைய என்ஜினியரிங் அட்மிஷன் தொடர்பாக இணையத்தில் விண்ணப்பித்தல், கல்லூரியைத் தேர்ந்தெடுத்தல் ஆகியவை தொடர்பாக உதவிடுமாறு விவசாயி கேட்டுக் கொண்டார்.  

அமைப்பாளர் பொறியியல் கல்வி முடித்து 21 ஆண்டுகள் ஆகிறது. கவுன்சிலிங் முறை எத்தனையோ மாற்றம் கண்டு விட்டது. அமைப்பாளர் மாணவனை தஞ்சாவூர் சாஸ்திரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பி.டெக் அப்ளை செய்யச் சொன்னார். மாணவனும் செய்தான். முதல் பட்டியலில் பெயர் வரவில்லை. இரண்டாம் பட்டியலில் பெயர் வந்தது. ஆனால் மெக்கானிக்கல் என்ஜினியரிங் கிடைத்தது. மாணவன் மெக்கானிக்கல் வேண்டாம் என்று கூறி விட்டான். 

அண்ணா யுனிவர்சிட்டி கவுன்சிலிங்கில் இரண்டாம் பட்டியலில் முதல் மார்க் விவசாயியின் மாணவனுடையது. 200க்கு 179.5. இந்த விபரத்துடன் நேற்று அமைப்பாளர் வீட்டுக்கு வந்தான் மாணவன். அவனுக்கு சாய்ராம் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர வேண்டும் என்பது விருப்பம். வேறு சில கல்லூரிகளின் பெயர்களையும் விருப்பப் பட்டியலில் அளிக்க வேண்டும். 

25 ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டிருந்த பொறியியல் கல்லூரிகளின் பெயர்களை பட்டியலில் இருவரும் தேடிக் கொண்டிருந்தனர். ஆயிரக்கணக்கான கல்லூரிகள் இருக்கின்றன. தேடல் மட்டும் நடக்கிறதே தவிர முடிவு வந்த பாடில்லை. அமைப்பாளர் தன் வழியில் ஒரு முடிவை எட்டுவது என்று முடிவு செய்தார். 

‘’தம்பி ! செகண்ட் லிஸ்ட்ல உன் மார்க் ஃபர்ஸ்ட் இருக்குன்னு சொல்றல்ல. ஒரே மார்க் இருந்தாலும் பல பேர் அதே மார்க் இருப்பாங்க. அதுல நீ எத்தனையாவது இடத்துல இருக்கன்னு உனக்குத் தெரியுமா?’’

‘’335வது இடத்துல’’

’’பேக்வர்டு கம்யூனிட்டி லிஸ்ட்ல நீ எத்தனையாவது ரேங்க்ல இருக்க?’’

‘’185 வது இடத்துல’’

’’நீ எந்த காலேஜ்ல படிக்கலாம்னு நினைக்கற?’’

‘’சாய்ராம், சாய்ராம் அட்டானமஸ், வேலம்மாள்’’

‘’இந்த காலேஜ்ல என்னென்ன கோர்ஸ் கிடைச்சா படிப்ப?’’

‘’கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், சைபர் செக்யூரிட்டி, ஐ.டி, இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்’’

மேற்படி மூன்று கல்லூரிகளிலும் மேற்படி பாடங்களில் எத்தனை சீட் இருக்கிறது என்று கணக்கு செய்யச் சொன்னார் அமைப்பாளர். மொத்தம் 190 சீட் இருந்தது. 

‘’தம்பி ! நீ சொன்ன 3 காலேஜ்ல ஏதாவது ஒரு காலேஜ்ல நீ சொன்ன ஏதாவது ஒரு கோர்ஸ் கிடைச்சுடும் தம்பி. மொத்தம் 190 சீட் இருக்கு. நீ 185வது இடத்துல இருக்க. முதல்ல ஓ.சி லிஸ்ட் ஃபில்லப் ஆகும். நாம அதை கணக்குல சேக்கல. அது உன் பாஸிபிலிட்டியை இன்னும் கொஞ்சம் கூட்டும். அதனால இந்த மூணுல ஒன்னு கன்ஃபார்ம்’’

மாணவன் திரும்ப மறுநாள் வருவதாகக் கூறி விட்டு சென்றான். 

யாரிடமாவது விசாரித்து இன்னும் நாலு கல்லூரியை விருப்பப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நினைத்தார் அமைப்பாளர்.  


Saturday 10 August 2024

அமிர்தம் - தி.ஜானகிராமன்

தி.ஜானகிராமன் 1944ம் ஆண்டு எழுதிய நாவல். கிராம ஊழியன் இதழில் தொடராக வெளியாகியிருக்கிறது. காம குரோத மோக லோப மத மாச்சர்யங்களை ஆறு பகைவர்கள் என்கிறது இந்திய மரபு. நுண்ணினும் நுண்ணியதாய் உள்நுழைந்து ஜீவனை முழுமையாகச் சூழ்ந்து பற்றிக் கொள்ளும் தன்மை கொண்டவை அவை. இந்த இயல்புகளுக்கு இடம் கொடுக்கும் ஜீவன் முழுமையாக இந்த இயல்புகளின் ஊர்தியாகிறான். இந்த இயல்புகளின் கட்டளைகளை நிறைவேற்றும் அடிமை ஆகிறான். இந்த இயல்புகள் கூறும் நடிப்புகளை வெளிப்படுத்தும் நடிகன் ஆகிறான். ஆலய நகரம் ஒன்றின் சில வீதிகளையும் சில வீடுகளையும் அதில் இருக்கும் சில மனிதர்களையும் கதாபாத்திரமாகக் கொண்டு அந்த ஊரின் சமூகப் பொருளியல் பின்னணியில் தீவிரமான உறவுச் சிக்கல்களையும் இந்த புதைமணலிலிருந்து மீண்டு வெளியேறும் ஒரு மனுஷியின் கதையையும் பேசுகிறது தி. ஜானகிராமனின் அமிர்தம் நாவல். 
 

Wednesday 7 August 2024

திருநாங்கூர் திவ்ய தேசங்கள்

வைணவத்தில், ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த ஆலயங்களை திவ்ய தேசங்கள் என்று குறிப்பிடுவர். மொத்த வைணவ திவ்ய தேசங்கள் 108. அவற்றில் 106 பூலோகத்தில் உள்ளன. வைகுண்டம், பரமபதம் ஆகிய இரண்டும் விண்ணுலகில் உள்ளன. பூலோகத்தில் உள்ள 106 திவ்ய தேசங்கள் சோழ தேசத்து திவ்ய தேசங்கள் (40) , நடு நாட்டு திவ்ய தேசங்கள் (2), பாண்டிய நாட்டு திவ்ய தேசங்கள் ( 18), மலை நாட்டு திவ்ய தேசங்கள் (13),  தொண்டை நாட்டு திவ்ய தேசங்கள் (22), வட நாட்டு திவ்ய தேசங்கள் (11) என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளன. சோழ நாட்டு திவ்ய தேசங்கள் 40ல் 11 திவ்ய தேசங்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நாங்கூர் என்ற ஊரைச் சுற்றி அமைந்துள்ளன. நாங்கூரை 11 திவ்ய தேசங்களின் தலம் என்று சொல்வதைப் போல அதன் மிக அருகில் அமைந்திருக்கும் காழிச் சீராம விண்ணகரத்தையும் தலைச்சங்க நாண் மதியத்தையும் சேர்த்து 13 திவ்ய தேசங்கள் என்றும் குறிப்பிடுவது உண்டு. 

சைவத்தில் தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர் எனக் குறிப்பிடப்படுவது உண்டு. அதே போல , வைணவத்தில் நாங்கூர் நாலாயிரம் என ஒரு சொல் உண்டு. அதாவது நாங்கூரில் நாலாயிரம் அந்தணக் குடிகள் இருந்ததாக அதன் பொருள். இதிலிருந்து வைணவத்தில் நாங்கூர் ஒரு முக்கிய இடம் வகித்ததை அறிய முடியும். வைணவ வரலாற்றில் நாங்கூர் ஒரு முக்கிய இடம் வகித்திருக்கிறது. வைணவத்தின் முக்கியமான பெரியவரான திருமங்கை ஆழ்வார் அவதரித்த தலமும் நாங்கூருக்கு மிக அருகில் உள்ளது. 

நாங்கூரில் நான்கு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் 11 ஆலயங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆலயமும் ஆலயம், அதனைச் சுற்றி உள்ள வீதிகள், திருக்குளம், சிறு கோபுரங்கள், பிரகாரம் ஆகியவற்றைக் கொண்டவை. பெருமாள் நின்ற திருக்கோலத்திலும் அமர்ந்த திருக்கோலத்திலும் சயனத் திருக்கோலத்திலும் சேவை சாதிக்கும் ஆலயங்கள். இந்த 11 ஆலயங்களில் ஒரு ஆலயம் பத்ரிநாத் ஆலயத்துக்கு சமமானது என்பது நம்பிக்கை. ஒவ்வொரு ஆலயமாக காலையில் சேவிக்கத் தொடங்கினால் மொத்த 11 ஆலயங்களையும் சேவிக்க மாலை ஆகி விடும். நாங்கூரைப் போல இத்தனை நெருக்கமாக வைணவ ஆலயங்கள் அமைந்திருப்பது தொண்டை நாட்டின் காஞ்சிபுரத்தில் மட்டுமே. 

தை அமாவாசை அன்று நாங்கூரின் 11 பெருமாளும் கருட வாகனத்தில் மணி மாடக் கோயிலில் காட்சி தருவார்கள். நாங்கூர் கருட சேவை என்னும் இந்த உற்சவம் மிகவும் பிரசித்தியானது. 

இந்த 11 ஆலயங்களுக்கும் மிக அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிந்து பெருமாள்களை வணங்கும் வகையில் நாங்கூரை மையமாகக் கொண்டு சில விஷயங்கள் திட்டமிடப்பட வேண்டும். 

ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மந்த்ராலயத்தில் ஒரு நடைமுறை உண்டு. பக்தர்கள் எவரும் அங்கே உள்ள பொதுக் கூடத்தில் தங்க முடியும். பக்தர்கள் தங்கள் உடைமைகளை வைத்துக் கொள்ள பொருள் வைப்பறை(cloak room)யில் பூட்டும் சாவியும் கொண்ட ஒரு தடுப்பு தரப்படும். அதில் தங்கள் உடைமைகளை பக்தர்கள் வைத்துக் கொள்வார்கள். சுகாதாரமான பொது குளியல் அறைகளும், பொது கழிவறைகளும் தங்கும் கூடத்தின் ஒரு பகுதியாக தனியாக இருக்கும். பொருள் வைப்பறை தடுப்பில் மட்டுமே தங்கள் பொருட்களை வைத்திருக்க வேண்டும். பொதுக் கூடத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது. இரவு 9 மணிக்கு கூடத்தில் உள்ள அனைவருக்கும் பாயும் தலையணையும் தரப்படும். காலை 5 மணிக்கு அதனைத் திருப்பித் தந்து விட வேண்டும். காலை 5 மணிக்கு மேல் எவரும் பொதுக் கூடத்தில் உறங்கக் கூடாது. காலையில் எழுந்து நீராடி அனைவரும் சுவாமி சன்னிதிக்கு சென்று விடுவார்கள். இந்த ஒட்டு மொத்த செயல்பாடுகளுக்கும் எந்த கட்டணமும் கிடையாது. ஒருவர் எத்தனை நாள் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம். ஆலயத்தில் ஒரு நாளைக்கு இரண்டு வேளை அன்னதானம் உண்டு. காலை 11.30 மணிக்கு ஒருவேளை. இரவு 7 மணிக்கு இன்னொரு வேளை.  மந்த்ராலயம் தவிர ஆந்திரா , கர்நாடகாவில் பல ஆலயங்களில் இந்த விதமான வழிமுறை உண்டு. இது மிகவும் வெற்றிகரமான அனைவருக்கும் பயனளிக்கும் வழிமுறை. 

நாங்கூரில் இவ்விதமான நடைமுறை ஒன்றை செயல்படுத்திப் பார்க்கலாம். நாடெங்கும் இருக்கும் விஷ்ணு பக்தர்கள் நாங்கூர் வர வாய்ப்பு உருவாகும். நாங்கூரின் 11 ஆலயங்களுக்கும் தினமும் வணங்கச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கூடும். நாங்கூருக்கு அருகே புள்ளிருக்கு வேளூர் எனப்படும் ‘’வைத்தீஸ்வரன் கோவில்’’ அமைந்துள்ளது. வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நாங்கூர் பெருமாள்களை வணங்க ஒரு வாய்ப்பு உருவாகும். இன்று நாட்டின் பல பகுதிகளிலிருந்து திருக்கடவூர் அபிராமி அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் சஷ்டியப்த பூர்த்தி , பீம ரத சாந்தி ஆகிய சடங்குகளை செய்து கொள்வதற்கு வருகை புரிகிறார்கள். அந்த திருக்கடவூர் ஆலயமும் நாங்கூருக்கு மிக அருகில் அமைந்திருக்கும் தலமே. நாங்கூர் இப்போது நான்கு வழிச் சாலையாக்கப்பட்டுள்ள கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு கிழக்கே நான்கு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தலம். எனவே சாலை இணைப்பு சிறப்பாக உள்ளது. 

மத்திய மாநில அரசுகளின் சுற்றுலாத் துறைகள், மத்திய மாநில அரசுகளின் பண்பாட்டுத் துறைகள், வைணவ அமைப்புகள் இது குறித்து சிந்தித்தால் நலம் பயக்கும். 

Monday 5 August 2024

பெரிதினும் பெரிது கேள்


பாரதம் விந்தையான ஒரு நிலம். பாரதத்தின் குடிகள் ஒவ்வொன்றிடமும் அபூர்வமான தன்மைகளும் பிரத்யேகமான குணாதிசயங்களும் இருந்திருக்கின்றன. தன்னைச் சூழ்ந்திருக்கும் இயற்கையை இறையின் வடிவமாகக் காணுதல் என்பது இங்குள்ள சகல குடிகளுக்குமான வழக்கமாக இருந்திருக்கிறது. எழுதாக் கிளவி இயற்கையை உபாசிக்கும் தன்மை கொண்டது என்பதால் தென்குமரி தொடங்கி வட இமயம் வரை உள்ள பல சமூகங்களால் ஏற்கப்பட்டதாக இருந்திருக்கிறது. எழுதாக் கிளவியைத் தொகுத்த தொகுப்பாளனான கிருஷ்ண துவைபாயனனே உலகின் பெரும் காவியமான மகாபாரதத்தைப் படைத்தவன். அவனது சொற்கள் இந்த நாடெங்கும் பல்வேறு கதைசொல்லிகளால் இசைப்பாடகர்களால் சாமானிய மக்களை சென்றடைந்து கொண்டே இருந்தன. இந்த மண்ணின் ஒவ்வொரு வில்லாளியும் தன்னை அந்தரங்கமாக அர்ஜூனனாக உணர்ந்தான். ஒவ்வொரு பலசாலிக்கும் பீமசேனனே இலட்சிய வடிவமானான். திரௌபதியை நினைத்து காந்தாரியை நினைத்து ஒவ்வொரு பெண்ணும் கண்ணீர் சிந்தினர். ஞானப் பாதையில் நடக்கும் ஒவ்வொருவருக்கும்ம் கிருஷ்ணன் சொன்ன சொற்கள் கைவிளக்காய் அமைந்து வழிகாட்டின. ஆதிகவி வால்மீகி படைத்த ஆதிகாவியம் இந்த நிலத்தின் ஒவ்வொரு கிராமத்தையும் ஒவ்வொரு குடும்பத்தையும் சென்றடைந்து கொண்டேயிருந்தது. தசரத குமாரர்களின் ஒற்றுமையே சகோதர ஒற்றுமைக்கும் சகோதர உணர்வுக்குமான மேலான சாத்தியமானது. தசரத குமாரனே தனிமனித மேன்மையின் உச்சபட்ச சாத்தியமானான். அவன் அன்பால் நிறைந்தவன் ; மாவீரன் ; தன்னை நம்பி அபயம் என வந்தவர்க்கு அடைக்கலம் எப்போதும் அளிப்பவன். செல்வத்தைப் பெரிதென எண்ணாதவன். தந்தை சொல்லை எப்போதும் சென்னி சூடியவன். இந்த நிலத்தின் ஒவ்வொரு பெண்ணும் தசரத குமாரனை தனது மகவாகவே கண்டாள். அனுமன் ஆற்றலின் அறிவின் ஸ்தூல வடிவமானான். முயற்சிக்கும் பராக்கிரமத்துக்கும் பக்திக்கும் அனுமனை உதாரணமாகக் கொண்டது இந்த நிலம். தன்னைக் கடந்த - தன்னை வென்ற தீர்த்தங்கரர்களின் சரிதங்கள் அருகநெறி மேற்கொண்ட துறவிகளால் நாட்டின் ஒவ்வொரு குடிக்கும் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒவ்வொரு மலைக்குடிக்கும் அறிவிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தது. அருக நெறி வலியுறுத்தும் பஞ்சசீலங்கள் ஒவ்வொரு சமூகத்தின் கவனத்திலும் அருகத் துறவிகளால் கொண்டு சேர்க்கப்பட்டுக் கொண்டேயிருந்தது. மனிதப் பிறவிகளை வலியிலிருந்தும் துயரிலிருந்தும் மீட்க துக்க நிவாரண மார்க்கம் அருளிய புத்தனின் கருணையும் அருளும் பௌத்தத் துறவிகளால் பாரத நிலமெங்கும் சென்று சேர்ந்தது. எழுதாக் கிளவியும் ஆதிகாவியமும் உலகின் பெரிய காவியமும் சமண் நெறியும் புத்தரின் சொற்களும் சென்று சேர்ந்து உருவான குமுகங்கள் பாரத குமுகங்கள். சொல்லால் உயிர் கொண்ட தேசம் பாரதம். 

கங்கையில் படகு ஓட்டுபவர்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ராமனையும் சீதையையும் குகனையும் பாடுகிறார்கள். போர்வீரர்கள் அனுமனுக்கு வாழ்த்து கூறி சன்னதம் கொண்டு எழுகிறார்கள். இடையர்கள் ஓயாமல் இளைய யாதவனின் கீர்த்தியை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சொற்களால் கதைகளால் ஆனது இந்த நிலம்.  கதை கேட்டு கதை பயின்று கதை சொல்லி கதைகளால் வாழ்கின்றனர் இந்த நிலத்தின் மக்கள். 

***

 பாரதத்தின் மொழிகளில் செவ்வியல் மொழிகள் இரண்டு. தமிழும் சமஸ்கிருதமும். தமிழ் நிலத்தில் தமிழ் அறிஞர்களும் இருந்திருக்கிறார்கள். சமஸ்கிருத அறிஞர்களும் இருந்திருக்கிறார்கள். தொல்காப்பியக் காலத்திற்குப் பின் தொகுக்கப்பட்டிருக்கும் சங்க இலக்கியத்தில் சமணர்களாலும் பௌத்தர்களாலும் இயற்றப்பட்ட நூல்கள் கணிசமானவை. பிற்காலத்தில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் தங்கள் பாசுரங்கள் மூலமும் பதிகங்கள் மூலமும் தமிழ் மக்களின் அகமெங்கும் நிறைந்து மொழியின் மாண்புக்கு மேலும் மாண்பு சேர்த்தனர். அவர்களின் காலகட்டத்துக்கு அப்பால் தமிழின் ஆகப் பெரிய காவியம் கம்பனால் பாடப்பட்டது. தமிழ் நிலத்தின் ஆலயங்கள் அனைத்திலும் தேவாரப் பதிகங்களும் ஆழ்வார் பாசுரங்களும் ஒலித்துக் கொண்டேயிருந்தன. பதிகம் பாடவும் பாசுரம் பாடவும் ஆலயம் தோறும் ஊழியர்கள் இருந்தனர். பாடசாலைகளில் மாணவர் பதிகங்களையும் பாசுரங்களையும் பயின்று கொண்டிருந்தனர். 

***

தமிழகம் இஸ்லாமியப் படையெடுப்புக்கு ஆளாகிறது. தமிழகப் பண்பாட்டின் மையச் சரடான ஆலயங்கள் தாக்கி அழிக்கப்படுகின்றன. ஆலயங்களை மையமாகக் கொண்ட மொழிக் கல்வி பாதிப்புக்குள்ளாகிறது. ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் இருளில் மூழ்கியிருந்த தமிழகத்தை விஜயநகரப் பேரரசு மீட்கிறது. மீண்டும் ஆலயங்கள் உயிர் பெறுகின்றன. பண்பாட்டு அமைப்புகள் புத்துயிர் கொள்கின்றன. விஜயநகரப் பேரரசும் அதன் தொடர்ச்சியான நாயக்கர் அரசுகளும் பின்னர் வந்த மராத்திய அரசும் ஆலயங்களையும் பண்பாட்டுக் கல்வியையும் பேணுகின்றன. பின்னர் தமிழகம் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வருகிறது. தொடர்ந்து நிகழ்ந்த போர்களும் பஞ்சங்களும் மக்கள் வாழ்வை தாழ்நிலைக்குக் கொண்டு செல்கின்றன. அந்த காலகட்டத்தில் பதிகங்களும் பாசுரங்களுமே மொழிக்கல்வியையும் பண்பாட்டுக் கல்வியையும் தொடர்ச்சியாக உயிர்ப்புடன் இருக்கச் செய்தன. பேரிருளில் சிறு விளக்காக அவை பங்காற்றியிருக்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் தமிழ் மறுமலர்ச்சி காண்கிறது. சங்க இலக்கியங்கள் புத்தக வடிவம் பெறுகின்றன. தமிழ் மொழியை புதிய திசைகளுக்கு திசைதிருப்பிய பாரதி என்ற கவியின் சொற்கள் தமிழ் அகங்களில் நிறையத் தொடங்கின. பாரதம் சுதந்திரம் பெற்று கல்வி பரவலாக மக்களைச் சென்றடையத் துவங்குகிறது. உலகின் செவ்வியல் மொழிகளில் ஒன்றான தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழைத் தாய்மொழியாகப் பேசும் கோடிக்கணக்கான மக்கள் எழுத்தறிவு பெறத் தொடங்குகின்றனர். 

***

பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் , மன்னார்குடிக்கு அருகே பரவாக்கோட்டை என்ற கிராமம். அங்கே ஒரு மளிகைக் கடைக்காரர் இருந்தார். அவரது பெயர் ஜெகநாதன். அவரது மனைவி நீலாம்பாள். பரவாக்கோட்டை கிராமத்தில் இருவரும் சேர்ந்து சிறு மளிகைக் கடையொன்றை நிர்வகித்து வந்தனர். அவர்கள் இருவருக்கும் தமிழ் எழுத்தறிவு இருந்தது. ஆனால் இருவரும் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தவர்கள் இல்லை. தங்கள் சொந்த ஆர்வத்தின் காரணமாக எழுத்துக் கூட்டி படித்து நாளிதழ்களையும் சஞ்சிகைகளையும் வாசிக்கப் பழகியிருந்தனர். தங்கள் கடையில் மளிகைப் பொருட்களை மடித்துக் கொடுக்க கிலோ கணக்கில் பழைய சஞ்சிகைகளை வாங்கிப் போடுவதுண்டு. ஓய்வாக இருக்கும் நேரத்தில் அந்த சஞ்சிகைகளை இருவரும் வாசிப்பதுண்டு. இந்த வழக்கத்தைக் காண நேர்ந்த அவர்களது குமாரனான சாந்தமூர்த்திக்கும் வாசிக்கும் பழக்கம் உருவாகிறது. தங்கள் மளிகைக்கடையில் பொருட்களை மடிக்க வைத்திருக்கும் சஞ்சிகைகளை வாசிக்கத் தொடங்கும் சாந்தமூர்த்தி உள்ளூர் நூலகத்தில் உறுப்பினராகிறார். நூலகத்தில் இருக்கும் நூல்களை ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்குகிறார். பரவாக்கோட்டை நூலகம் சிறியது. மன்னார்குடி நூலகம் பெரியது. மன்னார்குடி நூலகத்திலும் உறுப்பினராகி வாசிக்கத் தொடங்குகிறார். நாட்கள் நகர்ந்து ஓடத் தொடங்குகின்றன. சாந்தமூர்த்தியின் வாசிப்பு ஆர்வம் குறையாமல் இருக்கிறது. தனது நாளின் சிறு பகுதியையேனும் வாசிப்புக்கு அளிக்கும் வழக்கம் சாந்தமூர்த்திக்கு பால பருவத்திலிருந்து இருந்திருக்கிறது. அவர் நூல்களை வாசித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழ் மக்கள்தொகையின்  எழுத்தறிவு சதவீதம் கூடிக் கொண்டிருந்ததே தவிர மொழியின் சாரமான இலக்கியம் வாசிக்கும் தன்மை தமிழ்ச் சமூகத்தில் மிகக் குறைவாகவே இருந்தது இன்றும் அந்நிலையே இருக்கிறது. ஏழு கோடி பேர் உள்ள தமிழகத்தில் தீவிர இலக்கிய ஆர்வமும் தீவிர இலக்கிய வாசிப்பும் உள்ள வாசகர்களில் எண்ணிக்கை 2000 ஆக இருக்கிறது. அதாவது ஒரு ஊரில் ஒரு லட்சம் பேர் இருக்கிறார்கள் எனில் ஒருவர் மட்டும் தீவிர இலக்கியம் வாசிக்கக் கூடியவர் என்பது அதன் பொருள். நவீன தமிழ் இலக்கியத்தின் படைப்பாளிகளும் தங்கள் சொந்த ஆர்வத்தின் காரணமாக இலக்கிய மதிப்பீடுகளில் எந்த சமரசமும் இன்றி தீரா ஊக்கத்துடன் செயலாற்றி வந்தனர். 1990ம் ஆண்டு வரை வெகுஜன இலக்கியம் அச்சு ஊடகத்தில் செல்வாக்கு பெற்றிருந்தது. அந்த செல்வாக்கும் பெரும் செல்வாக்கு என்று கூறி விட முடியாது. 1990க்குப் பின் புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள்  வந்த பின் தமிழின் வெகுஜன இலக்கிய வாசிப்பிலும் வீழ்ச்சி ஏற்பட்டது ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் செயற்கைக்கோள் தொலைக்காட்சியை இருபத்து  நான்கு மணி நேரமும் பார்த்துக் கொண்டிருக்கத் தொடங்கியது. இந்த பின்னணியில் கேளிக்கை வெள்ளத்தில் சிக்காமல் நூல் வாசிக்கும் ஒருவர் தமிழ்ச் சூழலில் முக்கியமான ஒருவர் ஆகிறார். இவ்வாறான வாசிப்பை தமிழ்க்குடிகளிடம் கொண்டு சேர்க்க நிலைநிறுத்த மேற்கொள்ளப்படும் எந்த செயல்பாடும் ஒரு பண்பாட்டுச் செயல்பாடு ஆகிறது. 

தமிழ் எழுத்தாளரும் காந்தி - இன்று தளத்தின் ஆசிரியருமான சுநீல் கிருஷ்ணன் 2019ம் ஆண்டு 1000 மணி நேர வாசிப்பு சவால் ஒன்றை அறிவிக்கிறார். அதாவது பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரும் ஓராண்டில் ஓராயிரம் மணி நேரம் வாசிக்க வேண்டும். ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று மணி நேரம் வாசிக்க ஒதுக்க முடியும் என்றால் பங்கேற்பாளர்கள் ஓராண்டில் ஓராயிரம் மணி நேரம் வாசிக்க முடியும். ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் வாசிப்புக்குக் கொடுக்க முடியும் என்றால் ஆறே மாதத்தில் இலக்கை எட்ட முடியும். இது ஒரு சவால். இந்த சவாலை ஏற்பவர் ஏற்கும் நிலையிலேயே முக்கியமானவர்தான். பலர் வாசிப்பு சவாலுக்குள் வருகிறார்கள். பரவாக்கோட்டை பால வாசகர் சாந்தமூர்த்தியும் வாசிப்பு சவாலுக்குள் வருகிறார். சவாலை ஏற்கும் சாந்தமூர்த்தி இப்போது பாலர் இல்லை. மளிகைக்கடையில் கல்கண்டு வாசித்துக் கொண்டிருந்த சாந்தமூர்த்தி இப்போது பள்ளிக் கல்வி முடித்து கல்லூரிக் கல்வி முடித்து பள்ளி ஆசிரியராகப் பணி நியமனம் பெற்று பல பள்ளிகளில் பணியாற்றி மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்று பணி ஓய்வு பெற்று விட்டார். மனைவி இரு பெண் குழந்தைகள் என சிறு குடும்பம் சாந்தமூர்த்திக்கு. மகள்கள் இருவரும் கல்வி பயின்று ஒருவர் அமெரிக்காவிலும் இன்னொருவர் ஆஸ்திரேலியாவிலும் பணி புரிகின்றனர். சாந்தமூர்த்திக்கு இப்போது நான்கு பேரக்குழந்தைகள் 

ஐம்பது ஆண்டுகளாக நூல்கள் வாசித்த அனுபவம் துணையிருக்க சாந்தமூர்த்தி ஆயிரம் மணி நேர வாசிப்பு என்ற சவாலை ஏற்கிறார். நிறைய ஐயங்கள். நிறைய சஞ்சலங்கள். தமிழ்ச் சூழலில் இந்த சவால் மிகப் புதிது என்பதால் இதனை எவ்விதம் அணுகுவது என்பது சாந்தமூர்த்திக்கு முழுமையாகப் புலப்படாத நிலை. மற்ற போட்டியாளர்களுக்கும் கிட்டத்தட்ட இதே நிலை. சாந்தமூர்த்தி காலை 4 மணிக்கு அலாரம் வைத்து எழத் தொடங்குகிறார். காலை 4 மணியிலிருந்து காலை 6 மணி வரையும் பின்னர் 6.30லிருந்து 8.30 வரையும் தினமும் வாசிக்கத் தொடங்குகிறார்.காலைப் பொழுதில் முழுதாக நான்கு மணி நேரம் வாசிக்கக் கிடைத்து விடுகிறது. காலையிலேயே நான்கு மணி நேரம் வாசித்த ஊக்கம் அன்றைய பொழுதின் மீதி இருக்கும் நேரத்தில் கூடுதலாக மூன்று மணியிலிருந்து நான்கு மணி நேரத்தை வாசிப்புக்குக் கொடுக்க வைக்கிறது. நாட்கள் செல்லச் செல்ல வாசிப்பு சவாலில் துவக்கத்தில் பத்தாம் இடத்தில் இருந்த சாந்தமூர்த்தி முன்னணிக்கு வருகிறார். ஐந்து மாதத்தில் ஆயிரம் மணி நேர வாசிப்பை பூர்த்தி செய்து சவாலை வெல்கிறார் சாந்தமூர்த்தி. 

இந்த வாசிப்பு சவாலில் ஈடுபட்டிருக்கும் காலத்தில் ஆஸ்திரேலியாவில் இருக்கும் அவரது பேத்தி மூன்று வயது அட்வி தாத்தா பாட்டியுடன் இருக்க மன்னார்குடி வருகிறார். பேத்திக்கு வாசிப்பு சவாலில் இருக்கும் ஐந்து மாதமும் மகாபாரதக் கதை சொல்கிறார் சாந்தமூர்த்தி. அட்வியின் கற்பனை மகாபாரதக் கதைகள் மூலம் உருவாகத் தொடங்குகிறது. பாரதத்தின் அரசர்கள், வீரர்கள், முனிவர்கள் ஒவ்வொருவரும் அட்வியின் நினைவின் அடுக்குகளில் வாசம் புரியத் தொடங்குகிறார்கள். தன் மழலை மொழியில் தன் மழலை உச்சரிப்பில் பாரத கதாமாந்தரை கூறத் தொடங்குகிறாள் அட்வி. 

1000 மணி நேர வாசிப்பு சவால் சாந்தமூர்த்தியை ஒரு எழுத்தாளனாக்குகிறது. சாந்தமூர்த்தி தனது வாசிப்பு சவால் அனுபவங்களை ஒரு நூலாக எழுதுகிறார். நூலின் தலைப்பு ‘’ஆயிரம் மணி நேர வாசிப்பு சவால்’’. இன்றைய தமிழ்ச் சூழலில் ஒரு வாசகர் ஒரு ஆண்டில் ஓராயிரம் மணி நேரம் வாசிப்புக்கு ஒதுக்குவது என்பது முக்கியமான ஒரு செயல். முக்கியமான செயல் ஒன்றை ஆற்றியவரின் அனுபவக் குறிப்புகள் என்ற வகையில் இந்த நூலும் முக்கியமானது. 

நூல் : ஆயிரம் மணி நேர வாசிப்பு சவால் பக்கம் : 110. விலை : ரூ.100 பதிப்பகம் : நவீன விருட்சம்.   

நூல் வாங்க : https://wp.me/patmC2-YV
***  

Saturday 3 August 2024

ஆடிப் பதினெட்டு

 இன்று ஆடி மாதம் 18ம் நாள். காவிரி வடிநிலப் பகுதிகளில் சிறப்பாக ஆடிப்பெருக்காகக் கொண்டாடப்படும் தினம். இந்த வருடம் காவிரி நீர் இன்னும் ஊரை வந்தடையவில்லை. 

கருநாடக மாநிலத்தின் பருவமழையால் காவிரி வெள்ளம் பெருக்கெடுத்து வந்து கொண்டிருக்கிறது. எனினும் தமிழக அரசால் தண்ணீரின் கணிசமான பகுதியை காவிரி, அரசலாறு, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளில்  திறந்து விட இயலவில்லை. மாநில அரசுக்கு அதில் பெரிய அக்கறையோ ஈடுபாடோ இல்லை. ஒட்டு மொத்த காவிரி நீரும் கொள்ளிடத்தில் திறந்து விடப் படுகிறது. 

காவிரியுடன் மக்களுக்கு உணர்வுபூர்வமான தொடர்பு இருக்கும் வரையே வடிநிலப் பகுதிகளில் செழிப்பும் வளமும் இருக்கும். 

ஆறுதல் செய்தியாக காவிரி நீர் இன்று கும்பகோணம் வரை வந்தடைந்துள்ளது என அறிந்தேன். திருச்சிராப்பள்ளி, திருவையாறு, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் மக்கள் உற்சாகத்துடன் ஆடிப்பெருக்கு கொண்டாடியிருக்கக் கூடும்.  

Friday 2 August 2024

காணுகின்ற காட்சியாய் காண்பதெல்லாம் காட்டுவதாய்

 தமிழறிஞர் ரா. பத்மநாபன் அவர்கள் இயற்றிய ‘’தமிழ்ச் செய்யுள் வடிவில் பகவத் கீதை ‘’ நூலுக்கு தமிழறிஞரும் எழுத்தாளருமான திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதிய பணிந்துரையை இன்று வாசித்தேன். நாஞ்சில் சிறந்த கலைஞர். சிறந்த ஆசிரியர். அவர் எழுதியுள்ள சிறு குறிப்பான இந்த பணிந்துரையிலேயே அவரது அறிவின் விரிவையும் நுணுக்கமான கலைப் பார்வையையும் உணர முடிகிறது. 

திராவிட இயக்கத்தால் தமிழின் ஆகப் பெரிய கவிஞனும் உலகின் ஆகப் பெரிய கவிஞர்களில் ஒருவனுமான கம்பன் ஊருக்கு ஊர் மேடைக்கு மேடை தாக்குதலுக்கு ஆளான போது கம்பனின் சிறப்பை கம்பன் கவியின் மாண்பை தமிழ் மக்களிடம் கொண்டு செல்லும் பணியை மேற்கொண்டன கம்பன் கழகங்கள். நாஞ்சில் மும்பையில் இருந்த போது அங்கு நிறுவப்பட்டிருந்த தமிழ்ச் சங்கம் கம்பன் விழாக்களை மும்பையில் நடத்துகிறது. அதனை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர் அறிஞர் ராய. சொ அவர்களின் மாணவரான ரா. பத்மநாபன். கம்பன் கழகம் நடத்தும் பட்டிமன்றங்களில் இளைஞரான நாஞ்சில் உரையாற்றுகிறார். அப்போது ரா. ப அவர்களிடம் கம்பனை முழுமையாகப் பாடம் கேட்கும் வாய்ப்பு நாஞ்சிலுக்குக் கிடைக்கிறது. 

தமிழ்ச் சங்க கட்டிடத்தில் கம்பராமாயண பாடம் நடக்கிறது. வகுப்பில் மொத்தம் 17 மாணவர்கள். பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து நாஞ்சில் மட்டும் ஒரே மாணவர் என்னும் நிலையை வகுப்பு அடைகிறது. ஒரு மாணவர் என்றாலும் ஊக்கம் குன்றாமல் கம்பனை நாஞ்சிலுக்குப் புகட்டுகிறார் ரா. ப. தமிழ்ச் சங்க கட்டிடம் இருக்கும் இடம் இருவருக்கும் தூரம் என்பதால் நாஞ்சிலை தனது வீட்டுக்கு வரச் சொல்லி பாடம் சொல்கிறார் ரா. ப. நான்கடி அகலம் ஆறடி உயரம் கொண்ட முடிசூடிய ராமன் சித்திரம் முன்பு தினமும் பாடம் நடக்கிறது. அந்த காட்சியை தம் உயிர்ப்பான எழுத்தால் உயிர்ப்புடன் தீட்டிக் காட்டுகிறார் நாஞ்சில். 

சிறு குறிப்பாயிருக்கும் ஒரு பணிந்துரையின் பரப்புக்குள் இலட்சியவாதம் கொண்ட ஆசிரியர் ஒருவரின் உயிர்ச்சித்திரம், மும்பையின் நில அமைப்பு விபரங்கள், மும்பை மற்றும் தமிழக உணவுகள் என பல விஷயங்களை எடுத்துக் காட்டுகிறார் நாஞ்சில். 

நாஞ்சிலின் கம்பன் மீதான பற்று யாவரும் அறிந்ததே. இந்த பணிந்துரை அவருக்கு தன் ஆசிரியர் மீதிருக்கும் பற்றையும் இணைத்துக் காட்டுகிறது. 

பாரதி கலைமகளை ‘’காணுகின்ற காட்சியாய் காண்பதெல்லாம் காட்டுவதாய்’’ என்கின்றான். அறிவின் இயல்பு அது. 

ஒரு ரயில் நிலைய சந்திப்பு

 நண்பர் ஒருவர் இன்று மதியம் 2.30க்கு ஊருக்கு வருவதாகக் கூறியிருந்தார். அவருக்கு கும்பகோணத்தில் ஒரு வேலை. முடித்து விட்டு இங்கு வருவதற்கு திட்டமிட்டிருந்தார். கும்பகோணம் பணியில் எதிர்பாராத ஒரு மாற்றம். சற்று முன்னதாகவே ஊருக்கு வந்து விட்டார். மாயூரநாத சுவாமியையும் பரிமள ரங்கநாதரையும் சேவித்து விட்டு ரயில் நிலையம் சென்றடைந்திருக்கிறார். நான் மதியம் 1 மணி அளவில் அவருக்கு ஃபோன் செய்தேன். நண்பர் விபரம் சொன்னார். 15 நிமிடத்தில் ரயில் நிலையம் சென்று சேர்ந்தேன். நண்பரைச் சந்தித்தேன். நண்பருடன் அலைபேசி மூலம் உரையாடியிருக்கிறேன். நேரில் சந்திப்பது இதுவே முதல் முறை. நண்பர் காலையில் ஒருமுறை அலைபேசியில் அழைத்திருக்கிறார். அழைப்பை எடுக்கத் தவறி விட்டேன். சற்று தாமதமாகத்தான் பார்த்தேன். இன்று வீட்டில் யாரும் இல்லை. எனவே ரயில் நிலைய கேண்டீனில் மதிய உணவு அருந்தினேன். ஆலய தரிசனம் முடித்து மதிய உணவு அருந்தி விட்டு நண்பர் ரயில் நிலையத்துக்கு வந்திருக்கிறார். எனவே அவரை ரயில் நிலைய பிளாட்ஃபார பெஞ்சில் அமரச் சொல்லி விட்டு நான் உணவருந்தச் சென்றேன். மதியம் 1.30லிருந்து மதியம் 3.10 வரை ரயில் நிலையத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். இன்று ஆடிவெள்ளி. நாளை ஆடிப்பெருக்கு. எனவே கோவை ஜன் சதாப்தி ரயிலில் கூட்டம் மிகக் குறைவாக இருந்தது. வழக்கமான நாள் எனில் கூட்டம் அள்ளும். நண்பரை ரயில் நிலையத்தில் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த ரயில் நிலையத்தில் எத்தனை பேரை சந்தித்திருப்பேன். எத்தனை பேரை வழியனுப்பியிருப்பேன் என எண்ணிப் பார்த்தேன். பெரும் எண்ணிக்கை. மீண்டும் ஒரு சந்திப்பு. மீண்டும் ஒரு வழியனுப்பல். 

Thursday 1 August 2024

கடலின் கரையில்

 நேற்று நண்பர் ஒருவரைச் சந்திக்க கடலூர் சென்றிருந்தேன். பேருந்தில் பயணிக்கலாமா என யோசித்து பின்னர் முடிவை மாற்றி இரு சக்கர வாகனத்தில் சென்றேன். காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரையான பயணம் எனில் இரு சக்கர வாகனம் இலகுவானது என்பது என் அனுபவம். இந்த நெறியை நாடு முழுதும் பயணித்த போது முழுமையாகப் பின்பற்றினேன். இப்போதும் அந்த நெறி மனதில் இருப்பதால் இரவில் இரு சக்கர வாகனப் பயணத்தை இயன்ற அளவு தவிர்க்கிறேன். எனினும் நேற்று மதியம் உணவருந்தி விட்டு கிளம்பினேன். 

2014ம் ஆண்டிலிருந்து 2024ம் ஆண்டு வரையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஆகப் பெரிய சாதனை என்பது நாடெங்கும் நடைபெற்றுள்ள சாலைப் பணிகள். அதனை சாலைகளில் பயணிக்கும் எவராலும் உணர முடியும். ஊரிலிருந்து 2.15க்குப் புறப்பட்டேன். 3.00 மணிக்கு சிதம்பரம் தாண்டியிருந்தேன். 4.00 மணிக்கு கடலூரில் இருந்தேன். நண்பர் 15 நிமிடத்தில் வந்து விடுவதாகக் கூறினார். மஞ்சக்குப்பம் போலீஸ் மைதானத்தில் காத்திருந்தேன். லேசான மழை பெய்தது. நண்பர் மழையினூடாக வந்து சேர்ந்தார். மைதானத்துக்கு எதிரில் ஸ்டேடியத்துடன் கூடிய கால்பந்து மைதானம் இருந்தது. ஸ்டேடியத்தில் சென்று அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். நிறைய விளையாட்டு வீரர்கள் மழை ஓய்வதற்காகக் காத்திருந்தார்கள். அந்த சூழல் இனிதாக இருந்தது. மைதானமும் மழையும் சூழலும் மனதுக்கு இனிமையாக இருந்தது. நான் எப்போதும் புதிய ஊர்களையும் புதிய சூழலையும் விரும்புவேன். 

மழை விட்டதும் தேவனாம்பட்டினம் கடற்கரைக்குச் சென்றோம். கடலில் இறங்கினோம். கடலில் அதிக அளவு மழை பெய்திருக்க வேண்டும். கடல் மிகக் குளிர்ச்சியாக இருந்தது. 

கரையில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம். 

இரவு 7 மணிக்கு ஊருக்குக் கிளம்பினேன். இரு சக்கர வாகனப் பயணத்துக்கு பகல் ஒளியே சிறந்தது. பகல் ஒளியிலேயே சாலை துலக்கமாக இருக்கும். இரவின் ஒளி அத்தனை போதுமானதல்ல. மெதுவாக வாகனத்தை இயக்கி 9.30 மணி அளவில் வீடு வந்து சேர்ந்தேன். 

இனிய சந்திப்பு. இனிய உரையாடல். இனிய பயணம். 

ஓட்டுநர்

 கடலூரிலிருந்து இரு சக்கர வாகனத்தில்  ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். 

ஒரு இளைஞன் ‘’லிஃப்ட்’’ கேட்டான்.

வண்டியில் ஏற்றிக் கொண்டேன். காரைக்காட்டில் இறங்கிக் கொள்வதாகச் சொன்னான். 

வழக்கம் போல சீரான வேகத்தில் - அதாவது மெதுவாக - சென்று கொண்டிருந்தேன். 

‘’அண்ணா! கொஞ்சம் ஸ்பீடா ஓட்டுங்க’’ என்றான் இளைஞன். அவன் இறைஞ்சும் குரலில் கூறியதால் நான் பதில் ஏதும் சொல்லவில்லை. 

சற்று வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தினேன். 

சில நிமிடங்களில் ’’அண்ணா ! நீங்க எந்த ஊர் வரைக்கும் போரீங்க?’’ என்றான். 

‘’சிதம்பரம்’’

‘’அப்ப நான் பெரியபட்டுல இறங்கிக்கறேன்’’

வண்டி சென்று கொண்டேயிருந்தது. வண்டி வேகத்தை அதிகப்படுத்துமாறு அவன் இறைஞ்சியது மனதில் இருந்ததால் ‘’ தம்பி ! வண்டியை நீ ஓட்டுறியா?’’ என்றேன். 

வாகன இயக்கம் அவன் கைக்கு மாறியது. 

எடுத்த எடுப்பிலேயே அதிவேகம் எடுத்து விட்டான். வண்டி விர் விர் என வேகமாக சென்று கொண்டேயிருந்தது. ஒரு வண்டியை ஓவர்டேக் செய்தான். எதிர்ப்பக்கம் ஒரு கார். எதிர்திசையில் இரு வாகனங்களும் நெருங்குகின்றன. குறைந்த இடைவெளி மட்டுமே இருந்தது. அதில் புகுந்து ‘’கட்’’ அடித்து கடந்தான். 

‘’தம்பி ! நான் ஓட்டட்டுமா?’’ என்றேன். 

அவன் வாகனத்தைத் தரவில்லை. கிட்டத்தட்ட நான் ஓட்டும் வேகத்தில் வாகனத்தை இயக்கினான். அதாவது சீரான வேகத்தில். அதாவது மெதுவாக.