Saturday, 31 March 2018

யாம் எழுவோம்

யாம் எழுவோம்
எங்கள் பலவீனங்களிலிருந்து
தன்னலக் கண்ணிகளால் ஓயாது வீழும் சேற்றிலிருந்து
நம்பிக்கையின்மையின்மைகளிலிருந்து
அறியாமை அளிக்கும் நிரந்தரமான இருளிலிருந்து
எப்போதும் உடனிருக்கும் ஐயங்களிலிருந்து

உதயத்தின்
செந்நிறச் சூரியன்
அலைகளிலிருந்து எழும்
வான் சுழலும்
கொற்றப்புள்
மர உச்சியில்
அமரும்
புல்நுனி
மேலும்
மேலெழும்
ஒவ்வொரு நாளிலும்

யாம் எழுவோம்

தண்டவாளப் பாதை

சிறுவர்கள் ஆடும் மைதானத்துக்கும்
புதர்ப்பரப்புக்கும்
இடையே இருக்கிறது
தண்டவாளப் பாதை

கிரிக்கெட் பந்து
கடந்து செல்கிறது
தண்டவாளப் பாதையை

இப்படியும்
அப்படியும்
இப்படியும் அப்படியும்
செல்லும் ரயில்கள்
போன
பிறகு

Friday, 30 March 2018

நெடுஞ்சாலைப் புளியமரங்கள்



மாலை
வீட்டு வாசலில்
அவசர அவசரமாய் 
கதவைத் தட்டும்
சீருடையில் புழுதி பூசிய
பள்ளிக் குழந்தைகள்
போல்
நிற்கின்றன
நெடுஞ்சாலைப் புளியமரங்கள்

முன்பெல்லாம்
வருடா வருடம்
ஊர் ஏலத்தில்
புளியம்பழத்துக்காக
மட்டும்
உலுக்கப்படுபவை
இப்போது
ஜே சி பி யால்
அடிக்கடி
பெயர்க்கப்பட்டு
விறகுகளாகின்றன
சாலை விரிவாக்கத்துக்காக

இல்லாமல் போனாலும்
அங்கொன்றும் இங்கொன்றும்
இருந்தாலும்
சாலையின் 
சாலை பற்றிய நினைவுகளில்
நீங்காமல் இருக்கின்றன
புளியமரங்கள்

நெடுஞ்சாலைப் புளியமரங்கள்



Thursday, 29 March 2018

தொலைதூரம்

நீ
முன்கோபம் கொண்ட தருணங்கள்
கூராய் வார்த்தை இறக்கிய நிகழ்வுகள்
கேலிப் புன்னகை பூத்த வினாடிகள்
மெல்ல சீண்டிய சொற்கள்
திட்டமிட்ட மௌனங்கள்
முகம் பொத்தி அழுத நாட்கள்
வேறாய் விலக்கியிருந்த இடைவெளிகள்
மறவாத குறிப்புகளாக
மிதக்கின்றன
மணற் திட்டுகளாக

அன்பின் 
பிரியத்தின்
காதலின்
எத்தனையோ பொழுதுகள்
தொலைதூர ஞாபகங்களாகின்றன
பாலை நிலத்தின்
தூர மலைகளாக
குன்றுகளாக

Wednesday, 28 March 2018

சலனமுறும்



ஏரியாய் சலனமுறும்
சமுத்திரத்திற்கு
எதிரே
ஒரு பழைய கருங்கல் கோட்டை

சர்பத் கடைக்காரன்
அன்றாடத்துக்கு
அப்பால்
வரலாற்று நினைவுகள்

ஆட்டோவில் வந்த
ஒரு குடும்பம்
கருங்கல் கோட்டை
சர்பத் கடைக்காரரிடம்
கண்ணாடி டம்ளரில்
சர்பத் வாங்கி
அருந்தியபடி
பார்க்கிறார்கள்

ஏரியாய் இல்லாத சமுத்திரத்தை
வரலாறு இல்லாத கோட்டையை

ஐந்து நிலம்

கடற்கரையில்
அலை நனைக்கும் கால்களில்
ஒட்டிக் கொள்ளும் நுரை
காணாமல் போகிறது
உடனே

மொட்டை மாடியில்
படுத்திருக்கும்
ஆரம்ப நிமிடங்களில்
நீங்காமல் இருக்கிறது
பெருஞ்சுமை

நான்
காணாமல் போகும் காட்டில்
நிகழ்கிறது
மறுபிறப்பு

இரண்டு குன்றுகளுக்கு
இடைப்பட்ட
குறுகிய பாதை
கடக்கப்படும் போது
முகத்தில் அறைகிறது
தண்ணென்னும் காற்று

ஆர்வத்துடன் காண்கின்றன
வானத்து மீன்கள்
பாலைவனத்தின் ஒற்றைப் பயணியை

20.03.2018
10.15

Tuesday, 27 March 2018

கடைசிக் கதிர்


கடைசிக் கதிரின் காட்சியில்
இருக்கின்றன
ஓர் இள வயது முதல் துக்கம் 
காதலியைக் கைவிட்ட பொழுது
பிறர் கண்ணீர் அர்த்தம் அளிக்காத நாள்
பலி கொடுத்த நட்பு
மகத்தானவற்றிலிருந்து விலகிய தூரம்

ருத்ரப் பிரயாகை


பெரும் புயலாய் காற்று வீசிய நாளில்
அன்றும்
கால நதியில் மிதந்து கொண்டிருந்தன உயிர்கள்
நதி அரிக்கும் மணல் கீழிருக்க
எனது கவசங்களைத் துறந்து
நின்று கொண்டிருக்கிறேன்
ஊழிக் கூத்தின் முன்பு
கருப்பையின் அசைவுகளாய்
புவியும் இருளும் 
நான் பெருகிக் கொண்டேயிருக்கிறேன்
மணல் துகள் எண்ணிக்கையில்
ருத்ரப் பிரவாகமாக

Monday, 26 March 2018

உன்னை எப்படிக் கையாள்வது?

உன்னைச் சந்தித்த நாளிலிருந்தே
எனது ஆகப் பெரிய சிக்கலாய் இருப்பது
உன்னை எப்படிக் கையாள்வது என்பது

பெயரும் நட்சத்திரங்கள் போல
உனது விருப்பங்கள் மாறி விடுகின்றன
உனது தேர்வுகள் மாறி விடுகின்றன
உனது ரசனைகள் மாறி விடுகின்றன

எப்போதும் ஒரு அடி முன்னால் இருக்கிறாய்
எனது கணிப்புகளின் எல்லைக்கு
ஒரு கண்ணாடியைக் கையில் வைத்திருப்பது போல
ஒரு பந்தை சுழற்றிக் கொண்டிருப்பது போல
ஒரு கத்தியை கரத்தில் வைத்திருப்பது போல
உன்னை ஏந்தும் தருணங்கள் இருக்கின்றன

கையாளத் தெரியாததை கையாள்வதின் 
 பதட்டம்  இல்லாமல் இருக்கிறது
உன்னை எதிர்கொள்ளும் போது

உன்னைச் சந்தித்த நாளிலிருந்தே
எனது ஆகப் பெரிய சிக்கலாய் இருப்பது
உன்னைக் கையாள்வது எப்படி
என்பது


Sunday, 25 March 2018

உடனும் தொலைவும்

உன் 
உடன் 
நடந்த போது
நீ நிலவைக் காட்டினாய்

அக்கணத்தின்
எதிர்பாராமையால்
திணறி
நிலைப்படுத்தினேன்

நீ
சொல்லிக் கொண்டே போனாய்
நதிக்கரையின் வசந்தங்களை
ஆறு பெருக்கெடுத்த நாட்களை
ஆலய நாகஸ்வர இசையை
கண்டாமணியின் நள்ளிரவு ஒலித்தல்களை
தேவாலயத்தின் திருமண விழாவை
அதிகாலைத் தொழுகை அழைப்பை

காட்சிப்படுத்திக் கொள்ளவோ
ஒலியாய் கேட்கவோ 
இயலாமல்

உன்னைப் பார்த்துக் கொண்டு
வந்தேன்
உடனும்
தொலைவும்

உன்னைப் போலவே

உன் வசீகரம் பற்றிய மிகப் பொருத்தமான ஒரு சித்தரிப்பை
நீ அளிக்கும் இதம் பற்றிய தெளிவான ஒரு குறிப்பை
உன் ஆடைகளின் வண்ணங்களின் கோலாகலத்தை
பெரும்பாலும் பெருந்தன்மையாய் நீ நடந்து கொள்ளும் சந்தர்ப்பங்களை
சூழல் உனக்கு அளிக்கும் அச்சங்களை
உடன் இருப்பவர்கள் உண்டாக்கும் தயக்கங்களை
கைவிடப்பட்டதாக எண்ணும் போது
உன்னுள் திரண்டு வெளியேறும் முதல்துளி கண்ணீரை
எப்படி சொல்லாக்குவது
என்பது
ஒரு புதிர்ப்பாதையாக இருக்கிறது
உன்னைப் போலவே

Thursday, 22 March 2018

புன்னகை

ஓசை மட்டுமான சமுத்திரம்
தன் விளிம்பில்
நட்சத்திரம் தொலைத்த பொழுதில்
அலையும் அலைகளுக்கு அப்பால்
மெல்ல மெல்ல எழுந்த
சிவப்பு சூரிய தரிசனம்
சட்டென நிகழும்
உன் முகத்தின் புன்னகை

Wednesday, 21 March 2018

ஆர்ட்டிசியன்கள்

அடி நீராக
அன்பு அகழ்ந்திருக்கும்
நிலமாய்
நடமாடுகிறேன்
பாறைப் பிரதேசங்களில்
கடற்கரையில்
சதுப்பு நிலத்தில்
வயல் வெளியில்
நீர் தேடும்
பறவைகள்
தயங்கி முன்வருகின்றன
விடாய் தீர்க்கையில்
தொட்டணைத்தூறுகிறது
அன்பின் ஆர்ட்டிசியன்கள்

மீண்டும்




ஒரு பெரிய முயற்சிக்குப் பிறகு
ஒரு பெரிய நம்பிக்கை இல்லாமல் போன பிறகு
ஓர் எதிர்பார்ப்பு நிறைவேறாத பிறகு
தவிர்க்க நினைத்த கசப்பு வீரியத்துடன் எதிர்ப்பட்ட பிறகு
எந்த விளக்கமும் சொல்ல முடியாத பிறகு
தோல்வி தரும் அசௌகர்யங்கள் அன்றாடம் ஆன பிறகு

நாம்
இந்த உலகின்
முடிவற்ற
தீராத பாடங்களிடமிருந்து
மீண்டும்
கற்கத் தொடங்குகிறோம்

20/03/2018
23.10

யாரோ ஒருத்தி

யாரோ ஒருத்தி
எப்போதோ அளிக்கப்பட்ட சொல்லுக்காக
இன்னும் காத்துக் கொண்டிருக்கிறாள்

யாரோ ஒருத்தி
ஐயங்களின் மேகங்களை மிச்சமில்லாமல் அகற்றி
முழுமையாக நம்புகிறாள்

யாரோ ஒருத்தி
உறவின் இனிமையான பொழுதுகளை
உவகையுடன் எண்ணிப் பார்க்கிறாள்

யாரோ ஒருத்தி
மனதில் ஓயாமல் உழலும்
கசந்த அவமானத்தால் அவதிப்படுகிறாள்

யாரோ ஒருத்தி
கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறாள்

யாரோ ஒருத்தி
பாடும் பாடலில்
தூங்குகிறது
ஒரு குழந்தை

Tuesday, 20 March 2018

எப்போதாவது

டைரிக் குறிப்புகளில் இருக்கின்றன
தன்மை
முன்னிலை
எவரிடமோ சொல்லாமல் போன சொற்கள்
வெளிப்படுத்த இயலாத பிரியங்கள்
விழைவுகள்
செலவுக் கணக்குகள்
மறக்க முடியாத நாட்கள்
மனம் கசந்து வெளிப்பட்ட கண்ணீர்
குறிப்பாய் இருக்கும் அவமானங்கள்

எப்போதாவது
இடம் பெற்று விடுகின்றன
சில கவிதைகள்

14.03.2018
06.45

மழைப்பொழுது

தொலைதூரப் பயணியின் ஆசுவாசத்தோடு
விண்ணிலிருந்து
இறங்கிக் கொண்டிருக்கிறது
மழை நீர்
மாடிப் பரப்பில் கொட்டிக் கொண்டு
கொக்குகளின் ஒற்றைக் கால்களைப் போல ஊன்றி
கொட்டகைகளின் உலோகத் தகடுகளில் ஒலியெழுப்பி
ஊடுறுவவே இல்லாத தார்ச்சாலையில் ஓடி வழிந்து கொண்டு
மேய்ச்சல் மாடுகள் புரியாமல் பார்க்கின்றன
மரக்கிளைகளில் ஒடுங்கிக் கொள்கின்றன பறவைகள்
நின்ற பின்னும் காற்றில் நிரம்பியிருக்கிறது ஈரத்தின் நீர்மை
துலக்கமாகின்றன பகல் காட்சிகள்
எங்கும் தென்படுகின்றன தூய்மையின் சுவடுகள்
செருப்புக் கால்கள் நிறையும் வரை

Monday, 19 March 2018

மழை நீராடல்

மழைக் குளியல் போட்டேன்
மாடியில்
நனைத்து நீராட்டியது
மழையின் ஆதுரத் துளிகள்
மௌனமாய் நீராடின
விருட்சங்களும்
வீட்டுக் கூரைகளும்
வீதிகளும்
உடன் குளித்த கடல் மட்டும்
அலையாட்டம் போட்டது

அலைத்தீவு

கருக்கிருட்டில்
படகுக்காய்
காத்திருந்தோம்
அருகாமைத் தீவு செல்ல

இருள் முறியா
கணம்
ஒன்றில்
துவங்கியது
எம் பயணம்

யாம் முதலில் பெற்றது
உப்புநீர்க் காற்று
பயணத் தள்ளாட்டம்
விடியலின் சிவப்புச் சூர்யோதயம்
எலுமிச்சையின் வாசம்

பெருநகரின் மனிதத்திரளாய்
சூழ்ந்திருந்தது நீர்
அன்னிய அசௌகர்யத்தால்
எம்பிப் பார்த்தன மீன்கள்

உச்சி வெயில் நின்றிருந்த
கடல் உணவுகள் உப்பிட்டு காயவைக்கப்பட்டிருந்த
வலைகள் உலர்ந்து கொண்டிருந்த
தீவில்
அப்பொழுது
யாரும் இல்லை

Sunday, 18 March 2018

நித்தம்

தட்டித் திறக்காத கதவுகள்
சொல்லிக் கேட்காத மனிதர்கள்
கைவிட்டுப் போன வாய்ப்புகள்
இழந்த காதல்கள்
பிரிந்த நட்புகள்
நினைவில் அழிந்து போன நாட்கள்
மீளா சாதாரணத்துவத்தின்
கேடயம் ஏந்தி
சமருக்குச் செல்கிறேன்
வாள் இல்லாமல்
தினமும்

அகக் காட்சி

அனல் பரவும்
கோடை மாதத்தில்
பெரு மரத்தின்
நிழலில்
ஓய்வெடுத்துக்
கொண்டிருந்தார்
ஐயனார்
உடன்
ஒரு பிறழ் மனதினனும்
ஒரு வழிப்போக்கனும்
ஒரு லோடு லாரியும்

பிளந்து வெளியேறிய
பாறைகள்
குவிந்து கிடக்கும் நிலத்தில்
தென்பட்ட
எங்கோ இருக்கும் பச்சையை
நோக்கிப்
பயணப்பட்டன
உள்ளூர் ஆடுகள்
இடையன் பார்த்துக் கொண்டிருக்க

வண்டிக்காரன்
எண்ணப்படி நடக்கின்றன
மாடுகள்
புல் மேய்ந்து
விட்டு
புல் சுமந்து கொண்டு

இயந்திரம்
உரித்து விட்டு
விசிறி எறிகிறது
சோள சக்கைகளை

வேகமாக நடப்பவனைப் போல
பார்வையில் கடந்து செல்கின்றன
கண்டெய்னர் லாரிகள்

வண்ணமான சினிமா போஸ்டர்
உலர்ந்து
பார்க்கிறது
போவோரையும் வருவோரையும்

இயக்கமற்ற இரவில்
தீண்டிச் செல்கிறது
மென் காற்று

Saturday, 17 March 2018

நீர் வேட்டை

வரலாற்று நதியின்
கரை நகரில்
நிகழத் துவங்கியது
நீர் வேட்டை

ஆழ்ந்து
ஆழ்ந்து
எலிகள் போல்
துளைகளிட்டனர்
நகர் மாந்தர்

மணலின்
ஊற்று முகங்களுக்கு
தேடி சலித்தன
விழிகள்

வெவ்வேறு நிறங்களில்
மண்
வெளியே
குமிந்து
கொண்டிருந்தது

வேட்கை
கொண்ட
மக்கள்
தொலை ஆழங்களை
வசப்படுத்த
ஆயத்தமாயினர்

திசைகளை ஆடையாய்க் கொண்ட
கடந்து போகும் துறவி
சிரித்துக் கொண்டே சொன்னான்
எளிமையாய் இருங்கள்
கருணையை வேட்டையாடிப் பெற்றிட முடியாது

சாலையில்

நான் சென்று கொண்டிருந்த சாலையில்
வாகனம் சுமந்த வாகனங்கள் சென்றன
வாகனம் இயக்கும் மனிதர்கள் சென்றார்கள்
வாகனம் இயக்கா மனிதர்கள் சென்றார்கள்
பிராணிகள் சுமக்கும் சரக்குகள் சென்றன
என்னைப் பார்த்து
கண் சிமிட்டியவாறு
முள்ளங்கி கேரட் முட்டைகோஸ்
காய்கறிகளும் சென்றன

Friday, 16 March 2018

ஏதேனும்

மண்ணில் விழுந்து மலர்ந்திருக்கும் மலர்களிடமிருந்தும்
அவ்வப்போது திசை மாற்றும் வண்ணத்துப் பூச்சிகளிடமிருந்தும்
காற்றில் நகரும் விளக்கின் சிறு தீபத்திடமிருந்தும்
கூட்டத்துடன் தன் உணவைச் சுமந்து செல்லும் எறும்பிடமிருந்தும்
வயலை உழும் மண்புழுவிடமிருந்தும்
குளிர்ந்திருக்கும் கிணற்று நீரிடமிருந்தும்
ரயிலுக்குக் கையசைக்கும் குழந்தைகளிடமிருந்தும்

ஏதேனும்
கற்க முடிந்தால்

இந்த உலகம் தான்
எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டது

இந்த வாழ்வு தான்
எவ்வளவு இனிமையானது


13.03.2018
21.45

Thursday, 15 March 2018

காதலாகி

இமைக்காது விழி நோக்கி
மென் காற்றின் சலனங்களில் அலை மோதி
ஈர இரவுகளில் மோனித்திருந்து
நினைவுகளின் நறுமணங்களைப் பரவ விட்டுக்கொண்டு

ஓர் அழைப்பாய்
ஒரு சரணாகதியாய்
கசிந்து உருகி காதல் கொண்டது
ஒரு மலரிடம்

முற்றத்து
தொட்டிச் செடியில்
மலர்ந்திருந்த
ஒரு மலரிடம்

உதயம்

மாறா அன்றாடத்தின்
கசடு படிந்த மாசுகள்
தீண்டாத
உனது பிரதேசங்களில்
தினமும் எழுகிறது
முதல் சூரியக் கதிர்

திங்களின் சுபாவங்களுடன்
நாளின்
உனது வழமையான நகர்வுகள்

உன் துக்கம்
கண்ணீராகும் போது
புவியின் ஒரு பாதி
மூழ்கியிருக்கிறது
இருளின் வெள்ளத்தில்

Wednesday, 14 March 2018

படித்துறை

காலம் தேய்த்துக் கொண்டிருக்கும்
ஒரு கருங்கல் படித்துறையில்
ஓட்டமாய் ஓடிக் கொண்டிருக்கிறது நதி
பாசி இல்லாத படிகளில்
இறங்கி மூழ்கி எழுந்து கொண்டிருந்தனர்
கடந்த நினைவுகளை விட்டு
வலசைப் பறவைகளின் பிம்பங்கள்
நதியால் நெளிந்தன
அசையும் நிழலை
மண்ணிலும் நீரிலும்
பார்த்துக் கொண்டிருந்தது
ஆற்றங்கரை மரம்
சின்னக் குமிழிகள்
இணைந்து
ஒற்றை ஒரே ஓசையாகி
உடைந்து சிதறிக் கொண்டிருந்தது
பல ஒற்றை ஓசைகளாய்
காலம் காலமாய் மிதந்த தக்கை
சுழன்று கொண்டேயிருக்கிறது
விண்ணிலிருந்து மண் நோக்கி

நீரும் நெருப்பும்

மழைத் தாளம்
நிறையும்
நள்ளிரவில்
கருகிக் கொண்டிருந்த
மரத்தின் குஞ்சுகள்
உணர்ந்தன
நீர்மையையும்
நெருப்பையும்

Tuesday, 13 March 2018

புனர்ஜென்மம்

உனது விழி நோக்கி

எனது ஆறாத வடுக்களை காட்டிக் கொண்டிருக்கிறேன்
எனது வன்மங்களை அடையாளப்படுத்துகிறேன்
எனது சொல்லெடுக்கா துக்கங்களை முன்வைக்கிறேன்
எனது கண்ணீரை சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறேன்
எனது புனிதமற்ற ஆசைகளுக்கு மன்னிப்பு கேட்கிறேன்

மண்டியிட்டிருக்கையில்
உனது விரல்
எனது தலையைத் தீண்டும்
அக்கணம்

பிறப்புக்கு முன்னான இருளிலிருந்து
மீண்டும்
பிறந்தெழுந்து வருகிறேன்

Monday, 12 March 2018

தவம்

அலை பார்த்து நிற்கிறாள்
அந்த இளம்பெண்
அலைகளின் நடுவே
மடித்து விடப்பட்ட பேண்ட் கொண்ட கால்களை
தீண்டுகின்றன
நீரலைகள்
விம்மும் அவள் மனதை
பிரதிபலிக்கிறது
கடல்
முதல் முறை நீராடும் 
சிறுகுழந்தையை
ஒக்கலில்
சுமந்து
அமைதிப்படுத்துகிறாள்
அலை நடுவே நிற்கும் இளம்பெண்

Sunday, 11 March 2018

ஒருங்கமைவு

நீ என்னை அகன்றிருக்கும் நாட்களில்
அன்றாடத்தின் ஒழுங்கின்மை என்னை அச்சுறுத்துகிறது
பொழுதின் வெவ்வேறு முகமூடிகளுடன்
நாம் புழங்கும் ஒவ்வொரு பொருளிலும்
வெளிப்படுகிறது
நீ இல்லாமல் இருப்பதன் நிறைவின்மை
வினாடி முள்ளின் தாளம் மாறுகிறது
உதயாதி அஸ்தமனங்களிலும்
அது பிரதிபலிக்கிறது
நீ திரும்பி வந்ததும்
எல்லாம் ஒருங்கு அமைவதின்
புதிர் என்ன?

ஆயிரம் ஆயிரம்

ஆயிரம் ஆனைகள் உலவிக் கொண்டிருக்கும் வெளியில்
ஆயிரம் தும்பிகள் பறந்து கொண்டிருக்கும் வானில்
ஆயிரம் மகரந்தத்தூள்கள் மிதந்து கொண்டிருக்கும் காற்றில்
ஆயிரம் குமிழிகள் உருவாகி உடையும் நதியில்
ஆயிரம் கனிகள் கனிந்து கொண்டிருக்கும் வனத்தில்
ஆயிரம் தளிர்கள் முன்நகரும் பொழுதில்
ஆயிரம் முறை பிறக்கிறேன்
ஆயிரம் முறை இறக்கிறேன்

Saturday, 10 March 2018

இந்த சாலை

இந்த பனி பொழியும் இரவில்
தனியாய் நடக்கும் இச்சாலை
விளக்குகளின் வெளிச்சம் 
சிறிதாய் தரை தொடும் இச்சாலை
சீர் செய்யப்படாத பள்ளங்கள் கொண்ட இச்சாலை
நாளும் பொழுதும்
பலமுறை கடந்த இச்சாலை
மகிழ்ந்து துக்கித்து கசந்து
சென்ற இச்சாலை
மகவாய் அன்னை ஒக்கலில் அமர்ந்து
தந்தை கைவிரல்கள் பற்றி நடந்து
மிதிவண்டி இயக்கி
ஊர்திகளில் சென்ற இச்சாலை
இச்சாலை
இச்சாலை
அப்படியே இருக்கிறது
வானத்தைப் பார்த்துக் கொண்டு
பூமியில்
அவ்வப்போது வந்து செல்பவர்களைப்
பார்த்துக் கொண்டு