Thursday, 30 November 2023
பயண உரையாடல் ( நகைச்சுவைக் கட்டுரை)
தஞ்சை தேக்கு வயல் - ஒரு கடிதம்
இத்துடன் நமது தேக்கு வயலில் இன்று எடுத்த 16 புகைப்படங்களை இணைத்துள்ளேன். இப்போது மரங்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. மழைக்காலம் என்பது போதுமான தண்ணீர் கிடைப்பது காரணமாக இருக்கலாம். செவ்வாய் வெள்ளி என வாரத்துக்கு இரு தினங்கள் வீதம் ஆண்டு முழுதும் தேக்குக்கு நீர் ஊற்ற வேண்டும் என திரும்பத் திரும்ப நீங்கள் வலியுறுத்தி கூறுவீர்கள் என்பதை இப்போது நினைத்துக் கொள்கிறேன்.
நம் வயலில் தேக்கு இப்போது நன்றாக இருக்கிறது. மஹாகனியும் நன்றாக இருக்கிறது.
அன்புடன்,
பெரியண்ணன்
கோயில் காக்கப்பட்டது - கடிதம்
அன்பு பிரபு
Monday, 27 November 2023
பனைத்தீ
திருஇந்தளூர் பரிமள ரங்கநாத சுவாமி ஆலய சன்னிதித் தெருவில் கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒரு அம்சமாக பனைத்தீ எழுப்பினார்கள். பனையோலைகள் அடுக்கப்பட்டிருந்தது. சிறுவர்கள் உற்சாகமாகக் குழுமியிருந்தனர். நேரம் நெருங்க நெருங்க பெண்களும் குழந்தைகளும் திரண்டனர். அக்கினிக் குஞ்சொன்று அடுக்கப்பட்ட பனந்தாள்களின் அடியில் வைக்கப்பட்டது. சில கணங்களில் எழுந்தது செந்தீ. மண்ணில் எழுந்து விண்ணைத் தொடும் வல்லமை தன் பேருருவில் சுடர் விட்டது. தீ ஒரு வசீகரம். அந்த வசீகரத்தை நோக்கிக் கொண்டிருந்தது திரள். உருவாகி நிலைபெற்று திருநீறானது தீ.
Sunday, 26 November 2023
நம்பிக்கை விண்மீன்
இங்கே மாவட்ட நிர்வாகத்தில் உயர் அதிகாரியாக இருக்கும் ஒருவரைப் பற்றி கேள்விப்பட்டேன். அவர் ஒரு பொறியியல் பட்டதாரி. மின்னணுத் தகவல் தொடர்பியலில் பொறியியல் பட்டம் பெற்ற பின் உலகின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றனுக்கு கல்லூரியின் இறுதி ஆண்டு படிக்கையிலேயே பணி நியமனம் பெற்றிருக்கிறார். உச்சபட்சமான ஊதியம். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் என ஏழு ஆண்டுகள் அந்நிறுவனத்தில் பணி புரிந்திருக்கிறார். ஏழு ஆண்டுகள் ஊதியமாகக் கிடைத்த பெருஞ்செல்வம் கையில் இருக்கிறது ; மேலும் மேலும் நிறுவனத்தில் பதவி உயர்வு அளிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்னும் நிலையில் இத்தனை இருந்தும் மனம் உணரும் ஒரு போதாமை அவரை மாற்றுப்பணி குறித்து சிந்திக்கச் செய்திருக்கிறது. தனது தகவல் தொழில்நுட்ப பணியை ராஜினாமா செய்து விட்டு குரூப் -1 தேர்வுக்கு தயார் செய்ய முனைந்திருக்கிறார். புத்தகம் தேர்வு பரீட்சை ஆகியவை கல்லூரி இறுதி ஆண்டு இறுதி செமஸ்டருக்குப் பின் கிரமமாகக் கையில் எடுக்கக்கூட இல்லை என்னும் நிலையில் துவ்க்க நிலைத் தேர்வு , பிரதானத் தேர்வு ஆகியவற்றுக்குத் தயார் செய்யத் துவங்குகிறார். தான் எடுத்த முடிவு சரிதானா என்ற ஐயமும் குழப்பமும் அவ்வப்போது ஏற்பட்டது எனக் கூறும் அவர் தன் மன உறுதியால் அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு பரீட்சைக்கான தயாரிப்பில் மட்டும் முழுமையாக ஈடுபட்டிருக்கிறார். துவக்க நிலைத் தேர்வில் வெற்றி பெறுகிறார். பிரதானத் தேர்விலும் வெற்றி. நேர்காணலிலும் சிறப்பான பங்களிப்பை அளிக்கிறார். தேர்வு முடிவுகள் வருகின்றன. குரூப் - 1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று தமிழக அரசில் பணி நியமனம் ஆகிறார்.
தொழில்நுட்ப நிறுவனப் பணியில் சக ஊழியர்கள் அனைவரும் பெருந்திறன் கொண்டவர்கள். தனக்கு உகந்த மிக உகந்த நபர்களே தேவை என்பதனால் நிறுவனத்தின் பல கட்ட தேர்வுகளுக்குப் பின்னால் வந்து சேர்ந்தவர்கள். வளர்ந்து கொண்டேயிருக்கும் துறை குறித்த அறிவை ஒவ்வொரு நாளும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பு கொண்டவர்கள். இப்படியான பணிச்சூழலில் இருந்து விட்டு மாநில சர்க்கார் பணிக்கு வருவது என்பது மலைக்கும் மடுவுக்குமான தூரம் கொண்டது. மாநில சர்க்கார் பணிகள் என்றால் ஒரு நாளில் நடக்க வேண்டிய பணி என்பது தொண்ணூறு நாள் ஆனாலும் நடக்காது என்னும் தன்மை கொண்டது. பொதுமக்களுக்கு மாநில சர்க்கார் அலுவலகத்துக்கு வருவது என்றாலே தயக்கமும் அச்சமும் மட்டுமே இருக்கிறது.
தொழில்நுட்ப நிறுவனப் பணியை ராஜினாமா செய்து விட்டு மாநில சர்க்கார் பணிக்கு வருவதற்கு பெரும் மனத்தெளிவும் மனத்திடனும் மன உறுதியும் தேவை. அந்த தெளிவுடன் திடனுடன் உறுதியுடன் செயலாற்றிக் கொண்டிருக்கும் அதிகாரி இளைஞர்களுக்கு ‘’ நம்பிக்கை விண்மீன்’’ எனத் திகழ்பவர்.
நான் எப்போதுமே சர்க்கார் மீது நம்பிக்கை வைப்பவன். சர்க்கார் எந்திரம் சீராக இயங்கினால் பொதுமக்கள் பயன் அடைவார்கள் என்பது நிதர்சனம். ஜனநாயக அமைப்பில் சாமானியர்களே மிகப் பெரும்பான்மையான பொதுமக்கள். ‘’சட்டத்தின் ஆட்சி’’ என்பதே ஜனநாயகத்தின் உயர்ந்த தன்மை.
பல விஷயங்களுக்காக அரசு ஊழியர்கள் மீது பல்வேறு விதமான புகார்களைப் பதிவு செய்திருக்கிறேன். நிகழும் தவறுகளை உயர் அதிகாரிகளின் கவனத்துக்குத் தொடர்ச்சியாகக் கொண்டு சென்றிருக்கிறேன். ஒரு குடிமகனாக அது என் கடமை. என் கடமையையே நான் செய்கிறேன். அதை எப்போதும் செய்வேன்.
மாநில சர்க்கார் பணியை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்கிறார் என்பதைக் காண முடிகிறது. இத்தகைய மனிதர்கள் மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறார்கள். நல்விஷயமாகும் அது.
மூர்க்கர்களும் எளிய மக்களும்
தமிழில் ஒரு பழமொழி உண்டு. ‘’மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா’’ என்று.
மூர்க்கத்தனம் என்பது மனிதர்கள் உருவான காலத்தில் அவர்களிடம் இருந்த குணம். பின்னர் பல்லாயிரம் ஆண்டுகளில் அந்த குணத்தை மட்டுப்படுத்தி மட்டுப்படுத்தி வந்திருக்கின்றனர். எனினும் மனித உடலில் மனித மூளையில் இன்னும் மிகச் சிறு அளவில் அது இருக்கவே செய்கிறது. முன்னர் அது சக மனிதனைத் தாக்கி கொன்று அதில் மகிழ்ச்சி கொள்வதாக இருந்தது. பின்னர் தன்னைக் கண்டு தன் மூர்க்கத்தனம் கண்டு பிற மனிதர்கள் கொள்ளும் அச்சத்தால் மகிழ்ச்சி கொள்வதாக இருந்தது. இவ்வாறான தன்மை கொண்ட மனிதர்கள் சமூகங்கள் உருவாகி வந்த போது தண்டனைகளால் கட்டுப்படுத்தப்பட்டார்கள். மூர்க்கத்தனத்தின் வரையறையும் காலத்துக்குத் தகுந்தாற் போல மாறிக் கொண்டிருக்கிறது.
ஆதிமனிதனிடம் சக மனிதனைத் தாக்கி மகிழும் இயல்பே மூர்க்கம் என இருந்தது. இப்போது உள்ள மூர்க்கர்கள் பிறரை எந்தெந்த விதத்தில் எல்லாம் துன்புறுத்த இயலுமோ அந்தந்த விதத்தில் எல்லாம் துன்புறுத்துகிறார்கள். அவ்வாறான செயலில் ஈடுபடும் போது அவர்கள் பெருமகிழ்ச்சி கொள்கிறார்கள். பொதுவாக மூர்க்கர்களுக்கு சிந்திக்கும் திறன் மட்டு என நாம் நினைப்போம். அப்படி அல்ல ; மூர்க்கத்தில் முழுமையாக திளைப்பவர்கள் நுட்பமாக சிந்திக்கும் திறன் கொண்டிருப்பவர்களை விடவும் அதிநுட்பமாக சிந்திப்பார்கள். புராதானமான விஷ்ணு ஆலயம் அமைந்திருக்கும் ஊரின் ஊராட்சி மன்றத் தலைவர் மூர்க்கத்தனம் என்னும் இயல்புக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
அவர் மனம் எவ்விதம் செயல்பட்டது என்பதை படிப்படியாகக் காண்போம்.
(1) புராதானமான விஷ்ணு ஆலயம் இருக்கும் சன்னிதித் தெருவில் பத்து ஆண்டு அகவை கொண்ட வேம்பு, மலைவேம்பு, புங்கன் ஆகிய பெருமரங்கள் 14 இருந்தன. ஊராட்சி மன்றத் தலைவர் செங்கல் காலவாய் வைத்திருக்கிறார். அதற்கு எரிபொருள் தேவைப்பட்டது. அவரிடம் ஜே.சி.பி வாகனம் சொந்தமாக இருந்தது. டிராக்டர் மற்றும் டிப்பர் இருந்தது. ஊராட்சி மன்ற வாகனத்தையும் பயன்படுத்திக் கொண்டார். ஊராட்சி பணியாளர்களைகளையும் மரம் வெட்டுவதில் பயன்படுத்தினார். வெட்டிய மரங்களை தனது செங்கல் காலவாய்க்கு கொண்டு சென்றார்.
(2) அந்த மரங்களை வெட்ட அவர் தேர்ந்தெடுத்த நாளும் நேரமும் நுட்பமானது. அந்த வீதியின் ஆண்கள் அனைவரும் பணிக்குச் சென்றிருந்த நேரம். மரம் வெட்டுவதை பெண்கள் எதிர்ப்பதை அவர் அகங்காரம் ஏற்கவில்லை. ‘’என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது ; பெண்கள் என்னிடம் கேள்வி கேட்கக் கூடாது ; அவர்கள் அடுப்பங்கரையில் இருக்க வேண்டியவர்கள் ‘’ என்று அவர்களிடம் சத்தம் போட்டிருக்கிறார்.
(3) இந்த விஷயம் புகாராக மாவட்ட நிர்வாகத்துக்குப் போனது. அதனை ஒன்றும் இல்லாமல் செய்ய பலவிதங்களில் பெருந்தொகை செலவு செய்யப்பட்டது. குறைந்த தொகை அபராதமாக விதிக்கப்பட்டது. எனினும் குறைந்த தொகை அபராதமாக விதிக்கப்பட்டதால் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் என அனைவரும் குற்றச் செயல் புரிந்தவருக்கு குற்றத்தை மறைக்க உதவியிருக்கிறார்கள் என்பதால் அவர்கள் மேலும் நடவடிக்கை தேவை என்ற புகார் மனு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த புகார் மனு நிலுவையில் இருக்கிறது.
(4) இப்போது இந்த விஷயம் குற்றம் இழைத்த ஒருவர் தொடர்பான விஷயமாக மட்டும் இல்லாமல் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் என பலர் சம்பந்தப்பட்டதாக மாறியதால் அவர்கள் இந்த விஷயத்தை வீதிவாசிகளிடம் பேசி சுமுகமாகப் பேசி தீர்க்குமாறு அழுத்தம் தந்தார்கள். பலரது அழுத்தம் இருந்ததால் சந்நிதித் தெரு விஷயத்தை ஆறப் போட்டார் ஊராட்சி மன்றத் தலைவர். இந்த விஷயம் குறித்து புகார் எழுப்பப்பட்ட பலர் பணிமாறுதல் பெற்று சென்று விட்டனர். புதியவர்கள் அந்த இடங்களுக்கு வந்திருக்கின்றனர். புதிதாக வந்தவர்கள் கோப்பினைப் பார்க்கும் போது முன்னர் இருந்தவர்கள் என்னென்ன முறைகேடு செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்து இந்த விஷயம் சிக்கலானது என்பதாலும் நீதிமன்றம் செல்ல உள்ளது என்பதாலும் குற்றம் இழைத்தவருக்கோ குற்றம் இழைத்தவருக்கு துணை நின்றவர்களுக்கோ எவ்விதத்திலாவது உதவுவது தங்களுக்கு தீராத சிக்கலை உண்டாக்கி விடும் என்பதால் இந்த விஷயத்திலிருந்து பெருந்தூரம் விலகி இருக்கிறார்கள்.
(5) 14 மரங்கள் வெட்டப்பட்ட விஷயம் தொடர்பான கோப்பை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி கோரியிருந்தோம். முழுக் கோப்பு அளிக்கப்படவில்லை. மாநில தகவல் ஆணையம் வழக்கு பதிவு செய்திருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் விசாரணை நிகழும்.
(6) சன்னிதித் தெருவில் வசிக்கும் மக்கள் சாமானிய பொருளியல் பின்னணி கொண்ட சாமானியர்கள். அவர்களால் தான் இத்தகைய அழுத்தத்துக்கு ஆளாகியிருப்பதை ஊராட்சி மன்றத் தலைவரால் ஏற்க முடியவில்லை.
(7) இந்த 14 மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்துக்குப் பின்னும் அந்த ஊரில் அவர் பல மரங்களை வெட்டியிருக்கிறார். அவர் மரம் வெட்டுவதை குறைத்துக் கொள்ளவோ நிறுத்தவோ இல்லை.
(8) பத்து மாதம் முன்பு அதே தெருவில் ஒரு மரத்தை வெட்ட முயற்சி செய்தார். மாவட்ட நிர்வாகம் கவனத்துக்கு விஷயம் கொண்டு செல்லப்பட்டு முயற்சி தடுக்கப்பட்டது.
(9) விஷ்ணு ஆலயம் அருகே இருக்கும் ஆலயத்தை இடிப்பது அந்த வீதியில் வசிப்பவர்களுக்கு துன்பம் ஏற்படுத்தும் என்பதால் அரசு கட்டிடம் ஒன்றுக்கு இடம் தேவைப்படுகிறது என்ற தபால் வந்த போது ஸ்ரீமுனீஸ்வரன் ஆலயம் அமைந்திருக்கும் இடத்தை பொருத்தமான இடங்களுக்கான தேர்வு பட்டியலில் வைத்தார். அது தான் ஆலயத்தை இடிக்கும் முயற்சிக்கு துவக்கப்புள்ளி. அந்த இடம் தேர்வாகி விட்டால் அரசு எந்திரத்தைக் கொண்டே ஆலயத்தை இடித்து அங்கிருக்கும் வேப்ப மரங்களை வெட்டி மக்களைத் துன்புறுத்தி மகிழலாம் என்பதாக அவரது எண்ணம் இருந்தது. இருப்பினும் பலரது ஆதரவால் ஆலயமும் வேப்ப மரங்களும் காக்கப்பட்டன.
(10) விஷ்ணு ஆலயத்தின் சன்னிதித் தெருவில் வசிப்பவர்கள் எளிய குடிகள். அவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இச்செயல்கள் நிகழும் ஊர் என்ன என்பதை குறிப்பிடாமல் இருக்கிறேன். அவர்களுக்கு பலவிதத்திலும் தீவிரமான அச்சுறுத்தல் இருக்கிறது. அவற்றை முழுமையாக வெளியிட இது உகந்த காலம் அல்ல என்பதால் அந்த கிராமம் எது என்பதைக் கூறாமல் இருக்கிறேன்.
ஆலயம் காக்கப்பட்டது - ஒரு கடிதம்
Saturday, 25 November 2023
ஆலயம் காக்கப்பட்டது
நயத்தக்க நாகரிகம்
ஒரு புகார் கடிதம்
மறைக்கப்படும் உண்மைகள்
{ஒரு மாதம் முன்பு பள்ளி வளாகம் ஒன்றில் இருந்த மரம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு இன்றி வெட்டப்பட்டு பெருந்தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது. நடைபெற்ற இச்செயலுக்கு முழுப் பொறுப்பும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரைச் சேர்ந்தது. இது குறித்து மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோருக்கு மனு அனுப்பினேன். மத்திய அரசின் சி.பி.கி.ரா.ம்.ஸ் தளத்திலும் புகாரைப் பதிவு செய்தேன். அந்த விஷயம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக எனக்கு குறுஞ்செய்தி வந்தது. தளத்தில் சென்று பார்த்தேன். ‘’எடுக்கப்பட்ட முடிவு’’ என்ற பிரிவில் ‘’ PLEASE SEE THE ATTACHED FILE'' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் எந்த கோப்பும் இணைக்கப்படவில்லை. மேற்படி சி.பி.கி.ரா.ம்.ஸ் புகார் எண்ணைத் தெரிவித்து தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி அந்த கோப்பை எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளேன்.}
அனுப்புநர்
Friday, 24 November 2023
லலிதம்
பற்கள் மருத்துவ நாற்காலி ( நகைச்சுவைக் கட்டுரை)
மனு அளித்தல் ( நகைச்சுவைக் கட்டுரை)
இன்று நடைமுறையில் இருக்கும் அரசாங்க வழிமுறைகள் பிரிட்டிஷ் வழிமுறைகளை அடிப்படையாய்க் கொண்டது. பிரிட்டிஷ் முறையில் அரசாங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் மிக அதிகம். அவர்களுக்கு மேல் அவர்களின் மேல் அதிகாரிகள். அதற்கு மேல் அதிகாரம் கொண்டது நீதிமன்றம்.
பிரிட்டிஷ் ஆட்சியில் நம் நாட்டின் வரி வருவாயில் 74 சதவீதம் நிலவரியிலிருந்து வசூல் ஆகியிருக்கிறது. எல்லா வகையான நிலத்துக்கும் வரி நிர்ணயித்தலும் வரி வசூல் செய்தலும் மாவட்ட நிர்வாகத்தின் பணிகள். எனவே தான் மாவட்ட ஆட்சியர் ‘’கலெக்டர்’ எனப்பட்டார். அதாவது , அவர் வரிவசூலை மேற்கொள்பவர் ; கண்காணிப்பவர். ஒழுங்கு படுத்துபவர். அதனால் தான் மாவட்ட நிர்வாகம் ‘’வருவாய்த் துறை’’ என்றே அழைக்கப்பட்டது.
இடத்தை அளப்பதற்கு வரி நிர்ணயம் செய்வதற்கு என மக்கள் எப்போதும் வருவாய்த்துறை அலுவலகத்தை அணுகிக் கொண்டே இருக்க வேண்டிய நிலை இருந்தது. வரி நிர்ணயமும் வரி வசூலும் நிதி தொடர்பான விஷயம் என்பதால் அது முறைகேடுகளுக்கான வாய்ப்பை அதிகம் கொண்டது. எனவே அலுவலகத்தை அணுகும் எவரும் தங்கள் கோரிக்கையைத் தெரிவித்து மனு அளிக்க வேண்டும். பிரிட்டிஷ் நம்மை ஆண்ட போது நம் நாட்டின் எழுத்தறிவு சதவீதம் 20% . ஐந்தில் ஒருவருக்கே எழுதப் படிக்கத் தெரியும். இந்நிலையில் மனு எழுதிக் கொடுப்பதையே பணியாகக் கொண்டிருந்த பலர் உருவானார்கள். இன்றும் வருவாய்த்துறை அலுவலகங்கள் முன்பு ஒரு ஸ்டூலில் அமர்ந்து மனு எழுதிக் கொடுத்து அதற்கு ஒரு தொகை நிர்ணயம் செய்து வாங்கிக் கொள்பவர்களைக் காண முடியும்.
லஞ்சம் என்பது வருவாய்த்துறையில் பேருருவம் கொண்டிருப்பது என்பதால் அரசு அலுவலகங்களுக்கு செல்வது என்றாலே பொதுமக்கள் எவருக்கும் ஒரு தயக்கமும் விருப்பமின்மையும் இருக்கும். இன்னும் சரியாகச் சொன்னால் அச்சமும் இருக்கும். இந்த அச்சம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவு அதிக லஞ்சம் பெற முடியும் என்பதால் அலுவலக ஊழியர்கள் அதனை வளர்த்தெடுப்பார்கள். மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக தொடரும் இந்த பழக்கத்தின் விளைவுதான் இன்றும் அரசு ஊழியர்களிடம் தொடர்கிறது.
காலமாற்றங்கள் பல நடந்து விட்டன. பிரிட்டிஷ் ஆட்சி நீங்கி விட்டது. நாம் ஜனநாயகமானோம். நமது கல்வி அறிவு அதிகரித்தது. எல்லா அரசு ஊழியர்களும் பொது மக்களின் பணியாளர்களே என்றானார்கள். எல்லா பணிகளும் இத்தனை காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற காலவரம்பு உண்டானது. தகவல் பெறும் உரிமைச் சட்டம் வந்தது. இன்னும் பல பல.
இருந்தாலும் இந்த மனு அளிக்கும் மனநிலை அப்படியே இருக்கிறது. பொறுப்புகளும் கடமைகளும் சட்டத்தால் வழங்கப்பட்டிருப்பதால் ஊழியர்கள் முழு விபரம் கொண்ட மனுவை அசௌகர்யமாக உணர்கின்றனர். ஒரு மனு தகவல் போதாமைகளைக் கொண்டிருந்தால் தங்கள் தாமதத்திற்கான காரணமாகக் கூறலாம் என்பதால் முழுமையான மனுவை விட முழுமையற்ற மனுவையே அரசு ஊழியர்கள் விரும்புவார்கள்.
எல்லா அலுவலகங்களிலும் ‘’தபால்’’ என்று ஒரு பிரிவு இருக்கும். அந்த அலுவலகத்தின் அடிப்படையான பிரிவு அது. பெறப்பட்ட எல்லா மனுக்களும் தபால் பிரிவில் பதிவு செய்யப்பட வேண்டும். மனுவை அளிப்பவர் யார் யாருக்கு அளிக்கிறார் என்ன தேதியில் அளிக்கிறார் ஆகிய விபரங்கள் அதில் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் அரசு ஊழியர்கள் முறைப்படி இவற்றை செய்வதில்லை.
மனுக்களை 99 சதவீதம் ‘’தபால்’’ பிரிவில் பதிவு செய்யவே மாட்டார்கள். எனவே பொதுமக்கள் மனுவும் வெறும் காகிதமும் ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட ஒன்றே.
ஒரு மனு அரசாங்க அலுவலகத்துக்கு அளிக்கப்படுகிறது எனில் அது தபாலில் அனுப்பப்பட வேண்டும். அதிலும் பதிவஞ்சலில் அனுப்பப்பட வேண்டும். பதிவஞ்சல் ஒப்புகையுடன் அனுப்பப்பட வேண்டும். அஞ்சல் துறை மூலம் வரும் பதிவஞ்சல் தபால்களுக்கு அஞ்சல்துறையிலேயே பதிவேடு உண்டு. யார் அனுப்பிய தபால் யாருக்கு அனுப்பிய தபால் எந்த தேதியில் பட்டுவாடா ஆனது ஆகிய விபரங்களை அஞ்சல்துறை தனது பதிவேட்டில் ஏற்றிக் கொள்ளும். அரசு ஊழியர்கள் பதிவஞ்சலில் வரும் தபால்களை தங்கள் பதிவேட்டில் ஏற்றியே தீர வேண்டும். பதிவஞ்சல் விபரங்கள் கொண்ட கடித உறை கூட அவர்களால் மனுவுடன் இணைத்து வைக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.
நாம் பொதுவாக இன்னாரிடம் இன்னார் மனு அளித்தனர் என்ற செய்தியை அடிக்கடி வாசிப்போம். காண்போம். மனு அளிப்பதை விட மனுவை பதிவஞ்சலில் அனுப்பி விட்டு மனுவின் நகலை அளிப்பது ஒப்பீட்டளவில் உபயோகமானது.
பதிவஞ்சலில் அனுப்பப்படாத மனு அரசாங்கக் கோப்பில் சென்று சேராமல் இருக்க 99 சதவீத சாத்தியம் உள்ளது.
மந்தார மலர்
Wednesday, 22 November 2023
ஆலயத்தை இடிக்க முயற்சி
காவிரி போற்றுதும் : புதிய செயல்முறைகள் - ஒரு கடிதம்
ஒரு சந்திப்பும் சில சிந்தனைகளும்
சமீபத்தில் நான்கு நண்பர்கள் ஒரே இடத்தில் சந்திக்க நேர்ந்தது. ஒரு சில மணி நேரங்கள் பொதுவான சில விஷயங்கள் குறித்து பேச நேர்ந்தது. நான் எந்த ஒரு விஷயத்தையும் அதன் விரிவான பின்புலத்தின் அடிப்படையில் வைத்து பரிசீலிக்கும் இயல்பு கொண்டவன். எந்த ஒரு விஷயத்தையும் அதன் வரலாற்றுப் பின்னணியில் புரி்ந்து கொள்வதே அதனை அணுக பயனளிக்கும் உகந்த வழிமுறை என்பது எனது அபிப்ராயம். நாங்கள் பேசக்கூடிய விஷயம் யோகம் குறித்து சென்றது. நால்வரில் ஒருவர் யோகம் குறித்து சில விஷயங்களைக் கூறிக் கொண்டிருந்தார். அவர் சொன்ன விஷயங்கள் அகவயமானவை. எங்கள் உரையாடல் புறவயமானது. ஒரு புறவயமான உரையாடலில் அகவயமான விஷயங்கள் கூறப்படும் போது அதன் எல்லைகள் என்ன என்பதை வரையறுத்துக் கொள்வது உபயோகமானது என நான் எண்ணினேன். உரையாடல் யோகம் குறித்து என்பதால் அதன் அடிப்படைகளை யோகம் கடந்து வந்த பாதையை கண்டுகொள்வது என்பது நலம் பயப்பது என்பதால் அது குறித்து எழுத எண்ணினேன்.
தேவதைக்குப் பரிசு
Thursday, 16 November 2023
புதிய முயற்சியொன்றின் துவக்கம்
இங்கே எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவரை பத்தாண்டு காலமாக நான் அறிவேன். அறிமுகமான இரண்டு ஆண்டுகளில் அவர் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டார். ஐந்து ஆண்டுகள் அங்கே இருந்தார். பின்னர் இங்கு வந்து ஒரு வெல்டிங் பட்டறை ஆரம்பித்தார். பட்டறை நல்ல விதமாகப் போகிறது. அவ்வப்போது அவரை சந்திப்பேன். இன்று அவரது பட்டறைக்குப் போயிருந்தேன். அவர் ‘’காவிரி போற்றுதும்’’ ஆற்றும் பணிகள் குறித்து அறிவார். இன்று என்னிடம் நன்னிலம் அருகில் தனக்கு 3 ஏக்கர் நிலம் இருக்கிறது என்று கூறினார். அவரிடம் விவசாய நிலம் இருப்பது எனக்கு இது நாள் வரை தெரியாது ; அதாவது நிலத்தை அவரது மூத்த சகோதரர்தான் இத்தனை நாள் குத்தகைக்கு விவசாய்ம் செய்திருக்கிறார். ஆதலால் இது குறித்த பேச்சு எழுந்ததில்லை. இன்று அவர் என்னிடம் சொன்னதும் அந்த 3 ஏக்கர் நிலத்தில் முழுமையாக தேக்கு பயிரிடுமாறு சொன்னேன்.
‘’அண்ணன் ! நாம எல்லாருமே வேலை செய்றது சம்பாத்தியம் வேணும்ங்கறதுக்காகத் தான். பட்டறைல எவ்வளவு கடுமையா எத்தனை நாள் உழைச்சிருப்பீங்க. இந்த உழைப்புல 10 சதவீதம் தேக்குக்குக் கொடுத்தா போதும். நாமல்லாம் காலைல வேலை செய்யற இடத்துக்கு வந்தா இன்னைக்கு எத்தனை வேலையை செஞ்சு முடிச்சோம்னு நினைச்சு சந்தோஷப்படற ஆளுங்க அண்ணன். சிருஷ்டி ஸ்திதி சம்ஸ்காரம்னு நம்ம மரபு சொல்லுது. இரும்புத் தொழில்ல நீங்க அடைஞ்ச அனுபவம் இது தான் அண்ணன். நாளைக்கே உங்க நிலத்தைப் போய் பார்ப்போம். வயலை மேடாக்கி தேக்கு நடுவோம். வெல்டிங் பட்டறை வேலைக்கான மெனக்கெடுல 10 பர்செண்ட் தான் தேக்கு வயல்ல வேலை. தண்ணீர் ஊத்தறதும், கவாத்து செய்யறது மட்டும் தான் வேலை. நமக்குத் தேவை அந்த தாவரத்தோட 10 அடி உயரத் தண்டுதான். உங்களுக்கு நான் கூட இருந்து கைட் பண்றன். எண்ணி 15 வருஷம் அண்ணன். உங்க கைக்கு பத்து கோடி ரூபாய் வந்து சேரும். இது நிச்சயம்’’ என்றேன்.
அண்ணன் கண் கலங்கி விட்டார்.
’’நாளைக்கு காலைல 9.30க்கு நான் பட்டறைக்கு வந்துடறன். நாம ரெண்டு பேரும் போய் நாளைக்கு வயல பாத்துட்டு வர்ரோம்’’ என்றேன்.
நண்பர் ஆமோதித்தார்.
‘’காவிரி போற்றுதும்’’ என்ன செய்திருக்கிறது என்ற கேள்வி எனக்கு அவ்வப்போது எழும். நண்பர் உளம் பொங்கி எழுந்த கண்ணீரே அதற்கான பதில் என அப்போது எண்ணிக்கொண்டேன்.
Monday, 13 November 2023
இரு வாசிப்புகள்
சமீபத்தில் இரு நூல்களை வித்யாசமான இரண்டு சூழ்நிலைகளில் வாசித்தேன்.
முதல் புத்தகம் வி.சுதர்ஷன் எழுதிய ‘’குற்றமும் தீர்ப்பும்’’ என்ற நூல். ஊரிலிருந்து பண்ணுருட்டி வரை செல்ல வேண்டியிருந்தது. மதியம் பேருந்தில் செல்வதாக திட்டம். பேருந்து நிலையத்திற்கு புறப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு தான் தபால் மூலம் அந்த புத்தகம் என் கைக்கு வந்து சேர்ந்தது. பின்னட்டை வாசகத்தை வாசித்தேன். நடுவே ஒரு பக்கத்தை வாசித்தேன். அந்த நூலைக் கையிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பேருந்து நிலையத்துக்குக் கையிலேயே கொண்டு சென்றேன். பேருந்தில் ஏறி அமர்ந்தேன். நான் ஏறிய பேருந்துக்கு முன்னால் ஒரு பேருந்து கிளம்ப யத்தனித்துக் கொண்டிருந்தது. இருப்பினும் அதில் எல்லா இருக்கைகளும் நிரம்பியிருந்தன. எனவே அமர இடம் இருந்த அடுத்த பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். அமர்ந்த உடன் வாசிக்க ஆரம்பித்தேன். முதல் வரியிலிருந்தே நூலில் ஆழ்ந்து விட்டேன். முதல் வண்டி கிளம்பிப் போனது ; நான் இருந்த வண்டி மேலும் பயணிகளை ஏற்றிக் கொண்டது ; வண்டி ஊர் எல்லையைக் கடந்தது என எதுவுமே நினைவில் இல்லை . வாசித்துக் கொண்டேயிருந்தேன். நடத்துநர் டிக்கெட் என நினைவுபடுத்தினார். டிக்கெட் வாங்கிக் கொண்டு தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். சிதம்பரம் சென்று சேர்வதற்குள் அந்நூலின் மூன்றில் ஒரு பகுதியை வாசித்திருந்தேன். சிதம்பரத்தில் பண்ணுருட்டி செல்லும் பேருந்து ஒன்றில் ஏறினேன். நடத்துநர் கீழே நின்றிருந்தார். அவரிடம் சென்று டிக்கெட் கொடுங்கள் என்று கேட்டேன். வண்டி கிளம்ப 20 நிமிடம் ஆகும் என்றார். பரவாயில்லை என்று சொல்லி டிக்கெட் வாங்கிக் கொண்டேன். ஜன்னல் ஓர இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டு வாசிப்பைத் தொடர்ந்தேன். பேருந்தில் என்ன நடந்தது என்பது என் கவனத்தில் இல்லை. வாசித்துக் கொண்டேயிருந்தேன். நூலுக்குள் ஏகப்பட்ட நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தன. வஞ்சம், பொறாமை, துரோகம், கண்ணீர் , கொலை, ரத்தம் என பல பல நிகழ்வுகள். நூலை முழுமையாக வாசித்து முடித்த போது பண்ணுருட்டி இன்னும் 5 கி.மீ தூரத்தில் இருக்கிறது என மைல்கல் காட்டியது. அதாவது நூறு கிலோ மீட்டர் பயண தூரத்தில் நூலை வாசித்திருக்கிறேன். பின்னர் நண்பர்களிடம் அந்த நூலின் நிகழ்வுகளை ஒரு கதையெனச் சொன்னேன். குறைந்தது 15 பேரிடம் சொல்லியிருப்பேன். பேருந்து பயணத்தின் போது ஜன்னலின் வழியே வெளிக்காற்று முகத்தில் மோதிய நினைவைத் தவிர வெளிக்காட்சி எதையும் கண்ட ஞாபகம் கூட இல்லை. முழுவதும் நூலில் மூழ்கியிருந்தேன்.
சென்ற வாரம் சென்னை செல்ல வேண்டியிருந்தது. நண்பர் ஒருவருடன் சென்றிருந்தேன். அங்கே ஒரு நண்பர் எனக்கு ‘’ஸ்ரீ ரமண விஜயம்’’ நூலை வாசிப்பதற்காக அளித்தார். அன்று இரவு ரயிலில் ஊர் திரும்ப ரயில் நிலையம் வந்தோம். ரயில் நாங்கள் சென்று பதினைந்து நிமிடம் கழித்து வந்தது. முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறி அமர்ந்து கொண்டோம். அமர இடம் கிடைத்தது. ரயில் புறப்பட 30 நிமிடம் இருந்தது. அப்போதே அந்த நூலை வாசிக்கத் தொடங்கினேன். ரயில் புறப்பட்டது தெரிந்தது. ஏதோ ஒரு ரயில் நிலையத்தில் வண்டி ரொம்ப நேரம் நிற்பதாகத் தோன்றியது. நண்பரிடம் ‘’செங்கல்பட்டு நிலையமா?’’ என்று கேட்டேன். நண்பர் தாம்பரம் என்றார். தொடர்ந்து வாசித்துக் கொண்டேயிருந்தேன். வண்டி சீர்காழியை அடைந்த போது நூலை முழுமையாக வாசித்திருந்தேன். ஆறு மணி நேரப் பயணம். ஒரு முழு நூலின் வாசிப்பும் நிறைவு பெற்றிருந்தது.
வாசிக்கும் நூலுடன் ஒத்திசைவது என்பது நூல் வாசிப்பில் மிகவும் முக்கியமானது. நம்மால் எளிதில் ஒத்திசையக்கூடிய நூல்களைக் கண்டடைந்து தொடர்ச்சியாக வாசிப்பது என்பதும் வாசிப்பில் முக்கியமானது.