நேற்று நண்பர் ஒருவருடன் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். அவரை நான் இன்னும் நேரில் சந்திக்கவில்லை. அலைபேசியில் அவ்வப்போது பேசிக் கொள்வோம். ஊருக்கு வாருங்கள் என ஒவ்வொரு முறையும் அவரிடம் கூறுவேன். இந்த மாதம் ஆகஸ்ட் 15 ஐ ஒட்டி வருவதாகக் கூறினார். அவர் கூறிய ஒரு விஷயம் என்னை யோசிக்க வைத்தது. அவர் காலை எழுந்தவுடன் எனது வலைப்பூவை வாசிப்பேன் என்று சொன்னார். தினம் ஒரு பதிவாவது எழுத வேண்டும் என நினைப்பேன். பெரும்பாலும் எழுதி விடுவேன். அப்படியும் ஓரிரு நாட்கள் விடுபடும். முன்னரெல்லாம் இரவு 12 மணிக்கு பதிவு வெளியாகும் வண்ணம் முன்பதிவு செய்து வைத்திருப்பேன். அந்த வழக்கம் எப்படியோ தவறி விட்டது. நண்பர் கூறியதிலிருந்து தினமும் இரவு 12 மணிக்கு வெளியாகும் வழக்கத்தை மீண்டும் செயல்படுத்தலாம் என உள்ளேன்.
Thursday, 31 July 2025
கிராமத்துக்கான பொதுப்பணிகள்
கிராமங்களில் அலைந்து திரிவதை பல ஆண்டு வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். எந்த ஊரையும் நம் சொந்த ஊராக எண்ண வைப்பவை அந்த ஊர்களின் பிரும்மாண்டமான நிழல் தரும் மரங்களே. மரம் தரும் நிழலின் இதத்தை சில கணங்களேனும் உணர்பவர்கள் தெய்வத்தின் அருளின் சிறுதுளி ஒன்றை அறிந்தவர்கள் ஆகிறார்கள். மனிதகுலம் உருவான காலத்திலிருந்தே மனிதர்கள் தங்களுக்கான வாழிடத்தை உருவாக்கிக் கொள்வதில் மிகத் தீவிரமாக இருந்திருக்கிறார்கள். உலகின் எந்த பகுதியாயினும் ஒரு மனிதக்குழு ஒருநாளில் தன்னால் புழங்கக் கூடிய வெளி ஒன்றையே ஊர் என்று உருவாக்கிக் கொண்டிருக்கிறது. நமது நாட்டின் மரபு ஊர் என்பதை எல்லா உயிரினங்களுக்கான இடமாகக் காண்கிறது. ஊரில் மனிதர்கள் இருக்க வேண்டும் ; பிராணிகள் இருக்க வேண்டும் ; பறவைகள் இருக்க வேண்டும் ; பூச்சிகள் இருக்க வேண்டும். எல்லா உயிர்களுக்கும் இடம் தரும் வகையில் அமையும் வாழிடமே அங்கே இருப்பவர்கள் மனிதர்களின் தனித்திறனான சிந்திக்கும் இயல்பைக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான சாட்சியம் ஆகும். இன்று உலகம் நுகர்வில் மிகவும் தீவிரமாக மூழ்கியிருக்கிறது. இயற்கை என்பது நுகர வேண்டிய பண்டம் என்பது எல்லா மேலைப் பொருளியல் சிந்தனைகளின் அடிப்படைப் பாடம். அது மானுடத்துக்கு உருவாக்கியிருக்கும் சிக்கல்கள் மிகப்பல. நம் நாட்டின் மரபு உலகின் எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்பதை அடிப்படையாய்க் கொண்டது. இன்று மானுட குலம் எதிர்கொள்ளும் சிக்கலை ஒட்டுமொத்த மானுட குலமும் தான் சிந்தித்து செயலாற்றி தீர்வு காண வேண்டும்.
உலகம் என்ற மாபெரும் பரப்பின் நுண் அலகான ஒரு கிராமத்தில் அடிப்படையாக என்னென்ன விஷயங்கள் குறைந்தபட்சமாக செய்ய வேண்டும் என்பதை பட்டியலிட்டுக் கொள்வோம்.
1. கிராமத்தின் எல்லா குழந்தைகளும் விளையாட வேண்டும். கிராமத்தின் உள்ள எல்லா குழந்தைகளும் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானங்களும் விளையாட்டு உபகரணங்களும் தேவை. நமது நாடு - நமது நாட்டு மக்கள் - நமது நாட்டின் சாமானிய மக்கள் - இன்று வறுமையை வென்றிருக்கிறார்கள். உணவுப் பற்றாக்குறை என்பது இல்லாமல் ஆகியிருக்கிறது. முன்னர் நாம் நாட்டு மக்களுக்குப் போதிய உணவு வழங்க முடியாத துயரில் இருந்தோம் ; இப்போது உணவுப் பஞ்சம் தீர்ந்த சமூகங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களில் மூழ்கத் தொடங்குகிறோம்.
உணவுப் பஞ்சம் தீர்ந்த சமூகம் தனது உடல்நலனில் அக்கறை கொண்டிருக்க வேண்டும். உடல் உணவை மிகையாக கொள்ளத் தொடங்கினால் நோய்மை கொள்ளத் தொடங்கும். நூற்றுக்கணக்கானோ ஆயிரக்கணக்கானோர் லட்சக்கணக்கானோர் கோடிக்கணக்கானோர் நோய்மை கொள்ளும் போது அந்த நோய்மைக்கு நிகழும் மருத்துவம் பெருந்தொழில் ஆகிறது. இன்று உலகம் முழுக்க கோடானு கோடி புழங்கும் அந்த துறை மனிதர் வாழ்க்கை முறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. வலிமை நிறைந்த உடலே சிந்திக்கும் மனத்தைக் கொண்டிருக்க முடியும்.
நாம் இன்று கிராமத்தின் எல்லா குழந்தைகளும் உணவு பெறுவதை உறுதி செய்திருக்கிறோம். இது முக்கியமான பாராட்ட வேண்டிய விஷயம். ஏழைக் குடும்பத்துக் குழந்தைகள் தொடங்கி கிராமத்தில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் உணவு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாம் நம் கிராமத்துக் குழந்தைகள் உடல் வலிமை பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே எல்லா குழந்தைகளும் விளையாடி உடல் நலம் பெறும் வகையில் விளையாட்டு மைதானங்களும் விளையாட்டு உபகரணங்களும் தேவை. நம் நாட்டில் குழந்தைகளை தெய்வ ரூபங்களாகக் காணும் மரபு உண்டு. முயன்றால் இப்பணி நிகழும். சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார் : ‘’இந்த உலகம் மிகப் பெரிய உடற்பயிற்சிக் கூடம் . இங்கே நாம் நம்மை வலிமை படைத்தவர்களாக ஆக்கிக் கொள்ளவே வந்திருக்கிறோம்’’.
2. நமது நாட்டில் நான்மறைகள் நாடெங்கும் ஒலித்துள்ளன. புராணங்களும் உபநிடதங்களும் காவியங்களும் பயிலப்பட்டுள்ளன. உலகின் தொன்மையான நாட்டின் தொன்மையான ஞானம் உறையும் சமஸ்கிருத மொழி பயில கிராமங்களில் வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். சமஸ்கிருதம் கலைக்கான மொழி மட்டுமல்ல ; நுண்கலைகள், மருத்துவம் (ஆயுர்வேதம்) ஆகியவையும் சமஸ்கிருதத்தில் இன்றும் பயிலப்படுகின்றன.
3. உலகம் முழுக்க மானுடர்கள் இன்று போக்குவரத்து வசதிகளால் சென்று வருகின்றனர். உலகில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த பேரரசர்களுக்கும் கிட்டிராத வசதிகள் ஆகும் இவை. எனவே பல மொழிகள் பயில கிராமத்தில் வாய்ப்பு இருக்க வேண்டும். மொழிக்கல்வியே ஞானங்களுக்கான கல்வி என்பதால் பலவிதமான மொழிகள் பயில வாய்ப்பு இருக்க வேண்டும்.
4. நூல் வாசிப்பே மனிதர்களை சிந்திக்கவும் தன் சிந்தனையை தொகுத்துக் கொள்ளவும் செயலாக்கவும் உதவும். எனவே கிராமத்தில் படைப்பூக்கம் கொண்ட நூலகம் ஒன்று நிறுவப்பட வேண்டும்.
5. ஒரு கிராமத்தில் எத்தனை மரங்கள் இருப்பதற்கு சாத்தியமோ அத்தனை மரங்கள் அங்கே வளர்ந்திருக்க வேண்டும். அவ்விதம் இருந்தால்தான் பிராணிகள் , பூச்சிகள், பறவைகள் ஆகியவற்றின் சக இருப்பை நாம் உறுதி செய்ய முடியும். அப்பணியும் அடிப்படையான குறைந்தபட்சமான பணியாகும்.
6. எவ்விதமான வேலையாக இருந்தாலும் உடல் உழைப்பை நல்கும் வகையிலானதோ அல்லது மூளை உழைப்பை நல்கும் வகையிலானதோ அந்த வேலையைக் கோரும் கிராமவாசிகளுக்கு பணி வாய்ப்புகளின் பரிந்துரையை அளிக்கும் மையம் ஒன்று கிராமத்தில் இருக்க வேண்டும்.
’’காவிரி போற்றுதும்’’ ஏதேனும் ஒரு கிராமத்தில் இந்த பணிகளை முழுமையாகச் செய்ய விரும்புகிறது. இந்த நல்விஷயங்கள் சிறப்பான கற்பனை என்பது ‘’காவிரி போற்றுதும்’’மின் துணிபு. இந்த செயல்களை நோக்கி முன்னேறிச் செல்கிறது ‘’காவிரி போற்றுதும்’’; மிக மெதுவாகச் சென்றாலும் இலக்கை நோக்கி சரியான பாதையில் செல்வதை நன்றென்றே கருதுகிறது ‘’காவிரி போற்றுதும்’’
தமிழும்,சமஸ்கிருதமும்,பல மொழிகளும் பயிற்றுவிக்கும் மொழி ஆசிரியர்களுக்கு மிகச் சிறப்பான ஊதியமும் மிகச் சிறப்பான வசதிகளும் செய்து தர வேண்டும் என்பதில் ‘’காவிரி போற்றுதும்’’ உறுதி கொள்கிறது. கல்வியையும் கல்வி அளிக்கும் ஆசான்களையும் மதிக்கும் சமூகமே பிரக்ஞை கொண்ட சமூகம் ஆகும்.
இவை நிகழும் என்ற நம்பிக்கை ‘’காவிரி போற்றுதும்’’க்கு எப்போதும் திடமாக உள்ளது.
அமைப்பு உருவாக்கம் ( நகைச்சுவைக் கட்டுரை)
Wednesday, 30 July 2025
நீங்கள் செய்துள்ள செயல்கள் என்ன? (நகைச்சுவைக் கட்டுரை)
காவிரி போற்றுதும் - புதிய செயல் வடிவம்
’’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து அறிமுகமாகியிருந்த நர்சரி உரிமையாளர் ஒருவரை இன்று காலை சந்தித்தேன். ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளுக்குத் தேவையான மரக்கன்றுகளை தனது பங்களிப்பாக வழங்கி ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளுக்கு ஆதரவு அளிக்க விருப்பம் தெரிவித்தார். அவருடனான உரையாடல் திருப்திகரமாக இருந்தது. நண்பரின் ஆதரவை எவ்விதம் கிராம வளர்ச்சியுடனும் விவசாயிகள் நலனுடனும் முழுமையாக இணைப்பது என்பது குறித்து யோசித்தேன். ஒரு புதிய வடிவம் மனதில் தோன்றியது.
முன்னர் செயல்படுத்திய முறை என்பது கிராமத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாகச் சென்று கணக்கெடுப்பது. இம்முறையும் அது நீடிக்கிறது ; சிறு மாற்றத்துடன். ஒரு கிராமத்தில் 450 வீடுகள் இருக்கும். 1 லிருந்து 450 என டோக்கன் எண் மட்டும் குறித்து ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று வழங்கி விடுவது. அந்த டோக்கனுக்கு ஒரு தென்னம்பிள்ளை, ஒரு நெல்லிக்கன்று, ஒரு கொய்யாக் கன்று, ஒரு எலுமிச்சைச் செடி என நான்கு கன்றுகளை வழங்குவது. கன்றுகள் வழங்குவதற்கு ஒன்பது நாட்கள் முன்பு இராமாயண நவாஹம் ஒன்றைத் துவக்குவது. ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் அன்று மரக்கன்றுகள் வழங்கப்படும். டோக்கன் வழங்கும் போது இராமாயண நவாஹம் ஒன்பது நாட்கள் நடப்பதைக் கூறி ஒவ்வொரு நாளும் நிகழ்வுக்கு வருகை புரியவேண்டும் என கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்தையும் கேட்டுக் கொள்வது. இராமாயண நவாஹம் நடைபெறும் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு வீடாகச் சென்று 2 அடி நீளம் 2 அடி அகலம் 2 அடி ஆழம் கொண்ட குழியினை வெட்டி அதில் மக்கிய சாண எருவையோ மக்கிய குப்பையையோ கொட்டி மரம் நடும் முறையை விளக்கிச் சொல்வது. நவாஹத்தின் ஒன்பதாவது நாள் மக்கள் பெருமளவு கூடும் விதத்தில் கூடுகை ஏற்பாடு செய்து அன்றும் மரம் நடும் முறையை விளக்குவது. மக்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் அளிப்பது. அவை வளர்வதை உறுதி செய்வது. பராமரிப்பு குறைவாக இருந்தால் சிறிய அளவில் மாற்றித் தந்து துணை நிற்பது. நன்றாக எல்லாரும் வளர்க்கையில் அவர்கள் விரும்பும் கன்றுகள் எத்தனை என்று கேட்டு அவற்றையும் அளிப்பது. இவை அனைத்தும் நிறைவு பெற்றதும் கிராமத்தின் பொது இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது.
கீழ்க்காணும் வரிசையில் செயல்கள் நிகழ்த்த திட்டமிட்டுள்ளேன்.
1. டோக்கன் வினியோகம். டோக்கன் வினியோகத்தின் போதே இராமாயண நவாஹம் துவங்கும் நாளையும் ஸ்ரீராமர் பட்டாபிஷேக நாளையும் கூறி நவாஹத்துக்கு அனைவரையும் அழைத்தல்.
2. ஒவ்வொரு வீடாகச் சென்று மரக்கன்றுகள் நடும் முறையை விளக்குதல்
3. ஸ்ரீராமர் பட்டாபிஷேக தினத்தன்று சமபந்தி போஜனம் ஏற்பாடு செய்வது. அப்போதே மரக்கன்றுகளை மக்களுக்கு வழங்குவது.
4. மரக்கன்றுகள் வளர்ச்சியை கண்காணிப்பது.
5. கூடுதலாக மரக்கன்றுகள் வேண்டும் என்பவர்களுக்கு வழங்குதல்
6. கிராமத்தின் பொது இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்த்தல்.
Monday, 28 July 2025
ஆங்கிலம் (நகைச்சுவைக் கட்டுரை)
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள் அனைவருக்குமே ஆங்கிலம் தெரியும். இதில் ஒரு சுவாரசியம் என்னவெனில் ஆங்கிலத்தில் பேசுவதை விட ஆங்கிலத்தில் எழுதத் தெரிந்திருப்பார்கள். ஆனால் ஆங்கிலத்தில் ஏதேனும் எழுதுவதற்கான தேவை எழாது. எனவே அவர்களின் ஆங்கிலம் தூரமான ஆழம் ஒன்றில் இருக்கும். ஒரு மொழியைப் பேச அந்த மொழி அதிகம் காதில் கேட்கும் சூழ்நிலையில் இருக்க வேண்டும். ஒருவர் இன்னொருவர் இன்னொருவர் என பலர் அந்த மொழியை விதவிதமாக உச்சரிப்பதிலிருந்து நாம் நமக்கான உச்சரிப்பை தொனியை உருவாக்கிக் கொள்ள முடியும். ஒருவர் பேசுவதைப் நாம் புரிந்து கொள்வது என்பது மொழியை உச்சரிக்கும் விதத்திலிருந்து உச்சரிப்பவரின் உணர்வைப் புரிந்து கொள்வது என்பதே. நாம் பதிலளிப்பது என்பதும் அவர் வெளிப்படுத்தும் உணர்வை நாம் எவ்விதம் எதிர்கொள்கிறோம் என்பதும் அதற்கு என்ன சொல்லில் பதில் சொல்கிறோம் என்பதும் தான். சில நாட்களுக்கு முன்னால் ஒருவர் தன்னிடம் பணி புரிபவரிடம் ‘’Remember ! Your life is in my hand'' என்று கோபமாகச் சொன்னார். ’’உன்னுடைய உத்யோகம் என் கையில் இருக்கிறது’’ என்பதுதான் அவர் சொல்ல வந்தது. தமிழில் ‘’உன் வாழ்க்கை என் கையில் இருக்கிறது ‘’ என்று அவர் சொல்லியிருந்தால் ஒருவேளை பணி புரிபவர் ‘’சார்! என்னோட உத்யோகம் தான் உங்கள் கையில் இருக்கு. என் வாழ்க்கை எப்படி உங்கள் கையில் இருக்கும்?’’ என்று கேட்டிருப்பார். இலக்கணத்தில் ஆகுபெயர் என ஒன்றை பள்ளி நாட்களில் படித்த்திருக்கிறேன். ’’ஊர் மகிழ்ந்தது’’ என்ற கூற்றில் ஊர் என்பது ஊரில் இருக்கும் மக்களைக் குறிக்கும். ஊர் என்பது அஃறிணை. உயர்திணையாகிய மாந்தர் மட்டுமே மகிழ்ச்சி என்னும் உணர்வை அடைய முடியும். இங்கே ஊர் என்னும் அஃறிணை ஊரில் இருக்கும் மனிதர்கள் என்னும் பொருளில் ஆகி வந்ததால் இங்கே ஊர் என்பது ஆகுபெயர். இங்கே அனைவருக்குமே ஆங்கிலம் அன்னியமான மொழி என்பதால் ஒரு விஷயத்தை கறாராக வரையறுத்து எழுத ஆங்கிலம் உபயோகமாக இருப்பது உண்டு. சங்கடமான ஒரு விஷயத்தை சற்றே மென்மையாகத் தெரிவிக்க ஆங்கிலம் உதவுவதுண்டு. அதன் காரணம் என்னவெனில் , ஆங்கிலத்தில் பேசும் போது சொந்த மொழியில் பேசுவது போல உணர்வு 100 சதவீதம் இணைந்திருக்காது. 90 சதவீதம் அல்லது 80 சதவீதம் மட்டுமே இணையும். கிடைக்கும் மீதி இடைவெளியில் உணர்வை மட்டுப்படுத்திட முடியும். மொழியில் எழுத மூளையின் குறிப்பிட்ட சில பகுதிகள் செயல்படுகின்றன. மொழியில் பேச மூளையின் வேறு சில பகுதிகள் செயல்படுகின்றன. பாடும் திறன் கொண்ட ஒருவர் மூளையின் பேச்சுக்கான பகுதியையோ எழுத்துக்கான பகுதியையோ பயன்படுத்துவதில்லை . பாடும் திறனுக்கு இவை இரண்டும் இல்லாத வேறு பகுதிகள் இருக்கின்றன. எனவே தான் சிறப்பாகப் பாடும் ஒருவரின் பேச்சு கோர்வையாக நேர்த்தியாக இல்லாமல் சாதாரணமாக இருப்பதைக் காணலாம். தமிழகம் பிரிட்டிஷ் ஆங்கிலத்தின் தாக்கம் அதிகம் கொண்ட பகுதி. எனவே ஆங்கிலம் என்றாலே பிரிட்டிஷ் ஆங்கிலம் என்றே நாம் எண்ணுகிறோம். சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்னால் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை நான் தீவிரமாக வாசித்தேன். ஒன்றிலிருந்து இன்னொன்று என. அப்போது எனக்குத் தோன்றியது ஆங்கிலம் என்னும் மொழியின் பல சொற்றொடர்கள் பிரயோகங்கள் பதங்கள் ஷேக்ஸ்பியர் எழுதியவை. எண்ண எண்ண வியப்பளிப்பது. ‘’All the scents of Arabia will not sweeten the little hand'' எளிய சொற்கள். தனித்தனியே பார்க்கும் போது பத்து தனி சொற்கள். அதில் ஒரே சொல் இரண்டு இடத்தில் வருகிறது. அவ்வாறெனில் ஒன்பது சொற்கள். ‘’All the scents of Arabia'' வையும் ‘’the little hand'' ஐயும் ஒரே சொல்லாகக் கருத முடியும். அவ்வாறெனில் ஐந்து சொற்கள். இந்த வாக்கியம் கொடுக்கும் வாசிப்பு அனுபவம் என்பது எத்தனை பெரியது. எனக்கு எட்டு வயது இருந்த போது ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அங்கே அத்தர் தெளித்து வரவேற்றார்கள். அத்தர் தெளிப்பதற்கென்றே ஒருவர் இருந்தார். அந்த வாசனை என்னைப் பரவசப்படுத்தியது. அந்த திருமண நிகழ்வில் மங்கள இசை, ஹோமம், சடங்குகள் என அத்தனை அம்சங்கள் இருப்பினும் அத்தர் தெளித்து வரவேற்றது எனக்கு புதிதாக இருந்தது. சிறுவனான எனக்கு எப்படி அந்த மிகச் சிறு துளியான அத்தர் அத்தனை மணி நேரம் நறுமணம் அளித்துக் கொண்டிருக்க முடியும் என்ற ஆச்சர்யத்தை அளித்துக் கொண்டேயிருந்தது. ஷேக்ஸ்பியரின் இந்த வரியை அந்த ஒரு அத்தர் துளியிலிருந்தே திறக்கத் தொடங்கினேன். ‘’All the scents of Arabia'' . அரேபிய வாசனைத் திரவியங்கள் நூற்றுக்கணக்கானவை. ஆயிரக்கணக்கானவை. அவை அத்தனையும் கொண்டு கழுவினாலும் அவள் சிறு கரத்தை வாசனைப்படுத்த முடியாது. பிரமித்துப் போய் விட்டேன். ஷேக்ஸ்பியரின் ஆங்கிலம் குறித்து நான் ஒரு பதிவை எழுதினேன். ஆங்கிலமே தெரியாதவர்களிடம் கூட ஷேக்ஸ்பியர் குறித்து பேசிக் கொண்டிருந்தேன்.
எந்த மொழியையும் பேசுவது என்பது ஒரு பழக்கம். நம்முடைய சுபாவத்துடன் சிந்தனையுடன் மனநிலையுடன் அதனை இணைத்துக் கொள்ள வேண்டும். முன்னாள் பாரதப் பிரதமர் நரசிம்ம ராவ் ஆறு மொழிகள் பேசத் தெரிந்தவர். ஆறு மொழியிலும் மௌனமாகவும் இருக்கத் தெரிந்தவர் ! சமீபத்தில் ஆந்திர நிலத்தில் ரயில் பயணம் மேற்கொண்ட போது சந்தித்த வங்காள இளைஞனிடம் நீண்ட நேரம் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தேன். அடர்த்தியான பல விஷயங்கள். பிரிய மனமில்லாமல் இருவரும் பிரிந்தோம். அந்த ஆங்கிலம் எப்படி அந்த தருணத்தில் வெளிப்பட்டது ? பின்னர் எங்கே சென்றது ? நூல் வாசிக்கும் போது மனதுக்குள் துடிப்பாய் இருக்கும் ஆங்கிலம் பின்னர் எங்கே இருக்கிறது ?
நமது மரபு கல்விக் கடவுளான சரஸ்வதி ஒரு கையில் அட்சரமாலையை ஏந்தியிருப்பார் என்கிறது. அவருடைய அட்சர மாலையில் உலகில் இருக்கும் எல்லா மொழிகளின் அட்சரமும் இருக்கும் !
பெருநிகழ்வு
Saturday, 26 July 2025
வாழ்த்துக்கள் பிரதமர்!
இந்தியா விவசாய தேசம். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தியாவின் முக்கிய தொழிலாக விவசாயமே இருந்திருக்கிறது. இன்றும் நாட்டில் கோடிக்கணக்கான மக்களின் தொழில் விவசாயமே. இத்தனை கோடி விவசாயிகள் உலகில் வேறு எங்கும் இருப்பார்களா என்பது ஐயம். ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவே இந்தியாவில் சிறு விவசாயிகளும் குறு விவசாயிகளும் மிக அதிகம். ஒருவரிடம் இன்றைய கணக்கில் ஒரு ஏக்கர் நிலம் இருந்தால் கூட அவரால் ஐந்திலிருந்து ஆறு பேர் கொண்ட குடும்பத்துக்கான உணவை விளைவித்துக் கொண்டு வாழ்ந்து விட முடியும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இவ்விதமே கோடிக்கணக்கானோருக்கு நம் நாட்டில் வாழ்க்கை நிகழ்கிறது. அதே போல் நம் நாட்டில் சிறு தொழில் புரிபவர்கள் அதிகம். விவசாயிகளும் சிறு தொழில் புரிபவர்களும் இணைந்து கிராமத்தில் வாழும் வாழ்க்கை முறையே நம் நாட்டின் வாழ்க்கை முறை. இந்த அமைப்பில் உழைப்புச் சுரண்டல் என்பது மிக மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். இயற்கையைச் சுரண்டும் பெருந்தொழில்கள் நிகழும் போது மட்டுமே மனிதர்கள் மிகப் பெரிய அளவில் சுரண்டப்படுவார்கள் என்பதை உலக வரலாறு எடுத்துக் காட்டுகிறது.
கிராமங்களே இந்த நாட்டின் ஆன்மா. பேரரசுகள் இங்கே உருவான போது கூட அவை தன் அடித்தளமாய் கொண்டது கிராமங்களையே. கூர்ந்து கவனித்தால் இன்றும் நம் நாட்டு மக்களின் அகம் ஒரு கிராமவாசியின் அகமே என்பதைக் காண முடியும். நாட்டின் ஐயாயிரம் ஆண்டு வரலாற்றில் எவ்வளவோ விஷயங்கள் நிகழ்ந்துள்ளன. இன்றும் நம் நாட்டின் அடிப்படைத்தன்மை பெருமளவில் மாறாமல் இருப்பதற்கு காரணம் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டிருக்கும் கிராமவாசிகளே. கிராமங்களிலும் நகரங்களிலும் சிறிய மூலதனத்தில் சிறிய தொழில் செய்பவர்களே. இந்தியப் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள இந்த விஷயத்தைப் புரிந்து கொள்வது அவசியம். இந்த புரிதலிலிருந்தே எனது இந்திய அரசியல் குறித்த புரிதலை உருவாக்கிக் கொள்கிறேன்.
எனது அரசியல் நிலைப்பாடு என்ன ? கோடானுகோடி மக்கள் வாழும் இந்திய ஜனநாயகத்தில் ஒரு தனிமனிதன் கொள்ளும் நிலைப்பாடு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தோன்றலாம். ஜனநாயகம் ஒரே ஒரு குடிமகன் கூட சுதந்திரமாக சிந்திக்கவும் தான் சிந்தித்ததை சுதந்திரமாக வெளிப்படுத்தவும் அதனை நோக்கிச் செல்லவும் உரிமை கொண்டவன் என்பதை அங்கீகரிக்கிறது. ஜனநாயகத்தின் சிறப்பே அதுதான். நம் நாடு பழக்கமாய் கொண்டிருக்கும் கிராம அமைப்பு என்பதும் அதுவே. எனது அரசியல் நிலைப்பாட்டை இந்த இடத்திலிருந்தே இந்த புரிதலிலிருந்தே உருவாக்கிக் கொள்கிறேன். எனது அரசியல் நிலைப்பாடை இவ்விதம் சுருக்கமாகக் கூறலாம் : கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை இந்த நாடு சிறு விவசாயிகளின் சிறு தொழில் புரிபவர்களின் நாடு. இந்த சிறு விவசாயிகளும் இந்த சிறு தொழில் புரிபவர்களுமே நம் நாட்டின் பண்பாட்டை ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் காத்து வந்துள்ளனர். சிறு விவசாயிகளையும் சிறு தொழில் புரிபவர்களையும் கிராம அளவிலிருந்து தேச அளவு வரை இணைக்கும் அரசியலே எனது அரசியல் நிலைப்பாடு.
மகாபாரத காலத்திலிருந்து கூட இந்த விஷயத்தைத் தொடங்க முடியும் என்றாலும் கூட ஒரு புரிதலுக்காக மகாத்மா காந்தியிடமிருந்து துவங்குகிறேன். மகாத்மா ஓர் அரசியல்வாதியாக விவசாயிக்குப் பயன்படும் வகையில் பருத்தி ஆடைகளை தேசத்தவர் அணிய வேண்டும் என்றார். அதனை கைத்தறியில் நெய்து அணிய வேண்டும் என்றார். கோடானுகோடி விவசாயிகளுக்கும் சிறு தொழில் செய்யும் நெசவாளர்களுக்கும் அது பயன் தரும் என்பதால் நாட்டு மக்கள் அந்த விழிப்புண்ர்வை அடைய வேண்டும் என வாழ்நாள் முழுவதும் அதனைத் தன் அரசியலாக முன்வைத்தார். சிந்திக்கும் திறன் கொண்ட மனிதன் இன்னொரு மனிதனை தனக்காக கசக்கிப் பிசைந்து உழைக்க வைக்க மாட்டான் என்பதையும் பணியாளனும் உரிமையாளனும் சூழலைப் புரிந்து கொண்டு உழைப்பையும் ஊதியத்தையும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என்பதையும் முன்வைத்தவர் காந்தி. தேசியம் என்பதை இவ்விதமாகவே புரிந்து கொள்கிறேன். இந்த தேசியத்தையே நான் விரும்புகிறேன் ; முன்வைக்கிறேன். நம் நாட்டின் சிறு விவசாயிக்கும் சிறு தொழில் புரிபவருக்கும் துணை நிற்கும் அரசியலே எனது அரசியல் நிலைப்பாடு. இந்த அடிப்படையிலேயே நான் இந்திய அரசியலைப் பார்க்கிறேன்.
காங்கிரஸ் நாட்டின் முதல் தேசியக் கட்சி. நூற்றுக்கணக்கான தேசியவாதிகளை நாட்டுக்கு வழங்கியிருக்கும் கட்சி. பால கங்காதர திலகர், மகாத்மா காந்தி, வல்லபாய் படேல், பாரதி, ராஜாஜி, கோகலே ... சொல்லிக் கொண்டே போகலாம். இந்த நிரையிலும் காந்தியால் ஈர்க்கப்பட்டு சமூக மாற்றத்துக்காக செயலாற்றியவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள். இவர்களே நம் நாட்டை நம் மக்களை நம் பண்பாட்டை மீட்டெடுத்தவர்கள். அவர்கள் முன்வைத்த இந்திய தேசியத்தின் மீது பெரும் பற்று கொண்டவன் நான்.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டின் பிரதமர் ஆக பதவியேற்பவர் எவராயினும் அவர் நாட்டு மக்களைத் தன் குழந்தைகளாய் எண்ணும் உணர்வுக்கு ஆளாவார் என்று நான் அவ்வப்போது எண்ணுவதுண்டு. இது ஒரு அகவய உணர்வே. நாட்டின் பிரதமர் ஒரு அரசியல் கட்சியை நடத்துபவரும் கூட ; ஜனநாயகம் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே பிரதமர் பதவியை வழங்குகிறது . மீண்டும் கோடிக்கணக்கான மக்களைச் சந்திக்க வேண்டும். கோடிக்கணக்கான மக்களுக்கு பல விஷயங்களைப் புரிய வைக்க வேண்டும். நாட்டின் பதவிகளிலேயே மிகப் பெரிய பதவி அது. இது அத்தனையும் அறிவேன் எனினும் நாட்டின் பிரதமர் நாட்டு மக்களைத் தன் குழந்தைகளாய் எண்ணும் உணர்வுக்கு ஆளாவார் என்றே எண்ணுகிறேன்.
ஜவகர்லால் நேரு நாட்டின் முதல் பிரதமர். காந்தியால் அடையாளம் காட்டப்பட்டவர். நான் ஜவஹர்லால் நேருவின் சுயசரிதையை வாசித்திருக்கிறேன். வறிய நிலையில் பலவிதமான கொதிப்புகளுடன் இருந்த தேசத்தை மூன்று ஆட்சிக் காலம் வழிநடத்தியவர் நேரு. தேச நிர்வாகம் எவ்விதம் நிகழ வேண்டும் என்னும் பாதையை உருவாக்கியவர் நேரு. அதிகார வர்க்கம் இன்னும் அந்த திசையிலேயே நடந்து கொண்டிருக்கிறது. நேரு செய்த நற்செயல்கள் பலவற்றின் மீது எனக்கு மதிப்பு உண்டு. சாகித்ய அகாதெமியும் நேஷனல் புக் டிரஸ்ட்டும் அவரால் உருவாக்கப்பட்டவை. தேசம் என்னும் கனவை கோடானுகோடி மக்களுக்கு தம் சொற்களால் உண்டாக்கியவர் நேரு. அவருக்கு மார்க்சியம் மீது ஈடுபாடு இருந்தது. அதன் அடிப்படையில் அவர் மக்களுக்கான பல விஷயங்களை திட்டமிட்டார். அவை போதிய பலனைத் தரவில்லை. மார்க்சியத்தின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையே அவரை சீனாவை ஐயமின்றி நம்ப வைத்தது. ஏகாதிபத்திய சீனா நம் முதுகில் குத்தி நம்மை ஆக்கிரமித்தது. அதற்கான விலையை நாம் இன்றும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
மிகக் குறைந்த காலம் நாட்டை வழிநடத்தினாலும் தனது உறுதியான ஆளுமைத்திறனால் நாட்டு மக்களிடம் பெரும் தாக்கம் ஏற்படுத்தியவர் லால்பகதூர் சாஸ்திரி. அவரது ‘’ஜெய் ஜவான் ஜெய் கிஸான்’’ என்னும் முழக்கம் ஒரு மந்திரத்தை ஒத்தது. ருஷ்யாவில் தாஷ்கண்டில் அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவருடைய மரணம் கம்யூனிச ருஷ்யாவில் நிகழ்ந்தது மேலும் ஐயங்களை எழுப்புவதாய் இருக்கிறது. நான் மிகவும் நேசிக்கும் ஒருவர் சாஸ்திரி.
இந்திரா காந்தி. பெரும் ஆதரவையும் அதற்கு சமமான எதிர்ப்பையும் பெற்றவர் இந்திரா காந்தி. நம் நாட்டை உடைக்க தொடர்ந்து முயன்று வந்தது பாகிஸ்தான். இந்திரா ஒரு சரியான தருணத்தில் பாகிஸ்தானை உடைத்தார். ஒட்டு மொத்த நாடும் அவருக்குத் துணையாக நின்றது. அவர் கொண்டு வந்த நெருக்கடி நிலை நாட்டின் ஜனநாயகத்தை ஜனநாயகப் பண்புகளை ஜனநாயக மாண்புகளை குழியில் புதைக்கும் செயல். நெருக்கடி நிலை என்பது ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்ட எவராலும் எப்போதும் எந்நிலையிலும் ஏற்க முடியாத செயல். நாட்டின் சாமானிய குடிகள் - சிறு விவசாயிகளும் சிறு தொழில் புரிபவர்களுமான சாமானிய குடிகள் - இந்திரா சர்க்காரைத் தூக்கி வீசி ஜனநாயகத்தைக் காத்தனர். அவரது மகன் சஞ்சய் காந்தி ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அகாலி தள் அரசைக் கவிழ்க்க பிந்தரன்வாலேவை வளர்த்து விட்டார். பஞ்சாப்பின் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பிந்தரன்வாலேயின் பயங்கரவாதத்துக்கு பலியாயினர். சஞ்சய் வளர்த்த பயங்கரவாதம் இந்திராவைக் காவு வாங்கியது.
மொரார்ஜி தேசாய் மகத்தான கண்ணியமான மனிதர். நாட்டின் கொள்கை உருவாக்கத்தில் அவர் முக்கியமான திருப்புமுனையை உண்டாக்கினார். நான் மிகவும் மதிக்கும் ஒருவர்.
நான் சிறுவனாயிருந்த போது ராஜிவ் காந்தி பிரதமராயிருந்தார். என்னுடைய ஆறு வயதில் அவரை சீர்காழியில் கடைவீதியில் பார்த்தேன். ஜீப்பை ஓட்டிக் கொண்டு வந்தார். அவரைப் பார்த்தது நன்றாக நினைவிருக்கிறது. பின்னர் ஒருமுறை கும்பகோணத்தில் பார்த்தேன். எனக்கு 10 வயது இருந்த போது பயங்கரவாதிகளால் சென்னை அருகே கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டதும் கொல்லப்பட்ட விதமும் என்னால் இன்றும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது அரசியல் மீது எனக்கு விமர்சனங்கள் தீவிரமாக உண்டு.
நரசிம்ம ராவ் நான் மிகவும் விரும்பும் பிரதமர். அறிஞரும் அரசியல்வாதியும் ஆனவர். சிறந்த ராஜதந்திரி. நாட்டின் பொருளாதாரத்தைக் காத்தவர். அவர் தொடர்ந்து காங்கிரஸை வழிநடத்தியிருக்க வேண்டும். நேரு இந்திரா குடும்ப வாரிசு அரசியல் அவருக்கு பல நெருக்கடிகளைக் கொடுத்தது.
தேவ கௌட விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர். மாநில அரசியலிலிருந்து தேசிய அரசியலுக்குச் சென்றவர்.
வாஜ்பாய் என்றால் சாலைகள். சாலைகள் என்றால் வாஜ்பாய். நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு என்னும் விஷயத்துக்கான பெரும் கனவொன்றை நாட்டு மக்களுக்கு அளித்தவர் வாஜ்பாய். தங்க நாற்கரத் திட்டமும் கிராம சாலைகள் திட்டமும் அவரது புகழை எப்போதும் பறைசாற்றும்.
பொருளியல் அறிஞரும் திட்ட கமிஷன் துணைத் தலைவராகவும் இருந்து பின்னர் நிதியமைச்சராகவும் இருந்து நாட்டின் பிரதமராகவும் இருந்தவர் மன்மோகன் சிங். அவர் நிதியமைச்சராக இருந்த போது பூம்புகாருக்கு வந்திருக்கிறார். அங்கே அவரைப் பார்த்திருக்கிறேன்.
ஒரு சாமானியக் குடும்பத்தில் பிறந்து சிறு வயதில் குடும்பத்துக்கு உதவ பகுதி நேரமாக தேனீர் விற்று நாடெங்கும் அலைந்து திரிந்து தேர்தல் அரசியலும் அதிகார அரசியலிலும் நேரடியாகப் பங்கெடுக்காமல் தனது 51 வது வயதில் மாநில முதலமைச்சராக பதவியேற்றவர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி. அவரைப் போல தனிப்பட்ட முறையில் வசை பாடப்பட்ட இன்னொரு அரசியல்வாதி இல்லை. குஜராத் மாநில முதல்வராக பல ஆண்டுகள் பதவி வகித்த அவரை ‘’தேனீர் விற்பதற்கு மட்டுமே தகுதி கொண்டவர்’’ என்றார் ஒரு காங்கிரஸ் தலைவர். ’’நீசன்’’ என வசைபாடினார் நேரு குடும்ப வாரிசு ஒருவர். 2014ம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றார். 2014, 2019,2024 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை தொடர்ச்சியாக தேர்தலில் வென்று ஜவஹர்லால் நேரு செய்த சாதனையை சமன் செய்திருக்கிறார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை துணிச்சலுடன் நீக்கியவர் மோடி. நாடெங்கும் சாலைகள் ,விமான நிலையங்கள் முதலிய அடிப்படைக் கட்டுமானப் பணிகளை மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து அமைத்தவர் மோடி. நாட்டின் வட கிழக்கு மாநிலங்களில் இந்த 11 ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கும் சாலைப் பணிகள் பிரமிக்கத்தக்கவை. 4078 நாட்கள் நாட்டின் பிரதமராயிருந்து நீண்ட நாட்கள் நாட்டின் பிரதமராயிருந்தவர் என்னும் பெருமையைப் பெற்றிருக்கிறார் மோடி. இது இந்திய ஜனநாயக முறையின் பெருமையும் கூட. வாழ்த்துக்கள் பிரதமர் !
Friday, 25 July 2025
ஜெய் ஜவான்
கருவறை
நேற்று அதிகாலையிலேயே விழித்து விட்டேன். காவிரியிலிருந்து 3 நிமிட நடைப்பயண தூரத்தில் இருக்கிறது வீடு. காவிரியில் நீராடக் கிளம்பிச் சென்றேன். அடர்ந்திருந்தது அதிகாலை கருக்கல். படித்துறையின் படிகள் ஏதும் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. தோராயமாக அவற்றை தெளிந்து நதியில் இறங்கி மூழ்கினேன். அதிகாலை நேரத்தில் நதியில் மூழ்கும் போது நதி எப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது என்னும் உணர்வு ஏற்பட்டது. நதி யாருக்காகவும் எதற்காகவும் தன்னை மாற்றிக் கொள்வதில்லை ; மேன்மைகளே அதன் இயல்பெனினும் தன் இயல்பை சுபாவத்தை இயற்கையை யார் இருப்பினும் இல்லாமல் இருப்பினும் ஆற்றிய வண்ணம் இருக்கிறது. நதியில் மூழ்கிய பின் வீட்டுக்கு வந்து கிளம்பி கங்கை கொண்ட சோழபுரம் சென்றேன். காலை 6 மணியிருக்கும். ஆலயம் அப்போது தான் திறக்கப்பட்டிருந்தது. கங்கை கொண்ட சோழபுரம் துவாரபாலகர் சிற்பங்கள் பெரியவை. அவை மனிதர்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்கின்றன. உள்ளே இருப்பவன் மிக மிகப் பெரியவன் என்று.
அதிகாரமும் நம்பிக்கையும்
Monday, 21 July 2025
சமயம் பண்பாடு அரசு
Sunday, 20 July 2025
மூன்று மனிதர்கள் கதை : ஜெயமோகன் தளத்தில்
சமீபத்தில் எழுதிய ’’கடல் : மூன்று மனிதர்கள் கதை ‘’ பதிவின் இணைப்பு ஜெயமோகன் தளத்தில் வழங்கப்பட்டுள்ளது.
Saturday, 19 July 2025
ஏரிக்கரை உரையாடல்கள்
Friday, 18 July 2025
ஸ்மைலி ( நகைச்சுவைக் கட்டுரை)
அமைப்பாளர் வைத்திருப்பது சாதாரண அலைபேசி. அதாவது ஜி.எஸ்.எம் அலைபேசி. அவர் திறன் அலைபேசி என்ற வஸ்துவை வாங்கவேயில்லை. எனவே அது குறித்தும் அதில் இருக்கும் வசதிகள் குறித்தும் அனேகமாக எதுவும் தெரியாது. அமைப்பாளரின் ஜி.எஸ்.எம் அலைபேசி குறுஞ்செய்திகளை எழுத்துப் பிரதியாக அளிக்கவல்லவை. எவரேனும் தங்கள் குறுஞ்செய்தியில் ஏதேனும் ஸ்மைலியை அனுப்பினால் இரு சதுர வடிவம் கொண்ட கட்டங்களைக் காட்டும்.ஒருமுறை நண்பர் ஒருவர் குறுஞ்செய்தி ஒன்றுக்குப் பதிலாக ஒரு ஸ்மைலியை அனுப்பியிருக்கிறார். அமைப்பாளருக்கு அது சதுரக் கட்டமாக அவரது ஜி.எஸ்.எம் அலைபேசியில் காட்டியிருக்கிறது. அமைப்பாளர் அதற்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினார். அதாவது, தாங்கள் அனுப்பிய பதிலை என்னால் வாசிக்க முடியவில்லை. அலைபேசி வெறுமைக் கட்டங்களைக் காட்டுகிறது என. நண்பர் ஃபோனில் அழைத்து தான் அனுப்பியது ஒரு ஸ்மைலி என்றார். அமைப்பாளர் அவரிடம் அப்படி என்றால் என்ன என்று கேட்க நண்பர் திகைத்துப் போய் ஸ்மைலி குறித்து விளக்கினார். அமைப்பாளர் என்ன புரிந்து கொண்டாரோ இல்லையோ அவரது ஜி.எஸ்.எம் அலைபேசி எல்லா ஸ்மைலிகளையும் வெறுமைச் சதுரக் கட்டங்களாகவே புரிந்து வைத்திருக்கிறது.
அமைப்பாளர் இப்போது தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கும் விஷயம் சாதாரண ஜி.எஸ்.எம் அலைபேசியையும் பயன்படுத்தாமல் இருப்பதைக் குறித்து !
கங்கை கொண்ட சோழபுரம்
ஒளி மிகுந்திருந்த
காலைப் பொழுதொன்றில் கோடைக்கால நாள் ஒன்றில் என்னுடைய ஆறு வயதில் முதன் முதலில் கங்கை
கொண்ட சோழபுரத்தின் பிரகதீஸ்வரர் ஆலய விமானத்தைக் கண்டேன். மிகப் பெரிய ஒன்றாகவும்
மிக அழகிய ஒன்றாகவும் உணர வைத்த அக்காட்சி உள்ளத்தை இன்னதென வகுத்திட முடியாத பரவசத்துக்கும்
தத்தளிப்புக்கும் ஆளாக்கியது ஆண்டுகள் பல கடந்த பின்னரும் இன்னமும் நினைவில் இனிய ஒன்றாகப்
பதிவாகியிருக்கிறது. பெரிதினும் பெரிதாய் விளங்கிய அந்த ஆலயத்தின் ஒவ்வொரு அம்சமும்
பாலனாயிருந்த எனக்கு வியப்பை அளித்துக் கொண்டேயிருந்தன. கருவறையில் பிரும்மாண்டமான
உருவம் கொண்டு வீற்றிருந்த பிரகதீஸ்வரரை அந்த பாலன் தன் உள்ளத்தால் அணைத்துக் கொண்டான்.
இத்தனை பெரிய பேரிருப்பை நிர்மாணிக்க உளம் கொண்ட மானுடன் யாராக இருப்பான் என்று தெரிந்து
கொள்ள ஆர்வமாக இருந்தேன். அதனை உருவாக்க முனைந்தவனின் பெயர் ராஜேந்திர சோழன் என அறிந்து
கொண்டேன். அறிந்த நாள் முதல் அவன் மேல் மதிப்பு கொள்ளத் தொடங்கினேன். வருடங்கள் பெருகும்
தோறும் அம்மதிப்பு வளர்பிறை நிலவென வளர்ந்து கொண்டே செல்கிறது.
கங்கை கொண்ட
சோழபுரம் ஊர் நினைவுடன் அந்த பாலனுக்கு இன்னொரு நினைவும் ஒட்டிக் கொண்டது. அது தாமரை
இலையின் நினைவு. அந்த பிரதேசத்தில் தாமரைத் தடாகங்கள் மிகுதி. அங்கே உணவருந்த நேர்ந்த
உணவகம் ஒன்றில் அவர்கள் அளித்த இலை தாமரை இலை. வாழையிலையைக் கண்டிருந்த அதில் உணவருந்தியிருந்த
எனக்கு தாமரை இலையில் உணவருந்தியது மறக்க முடியாத அனுபவமாகி விட்டது.
கங்கை கொண்ட
சோழபுரத்தைக் கண்ட பின் அடுத்த நான்கு ஆண்டுகளில் என்னுடைய பத்தாவது வயதில் கல்கியின்
‘’பொன்னியின் செல்வன்’’ நாவலை வாசித்தேன். சோழர்கள் மனதுக்கு மிக நெருக்கமாக ஆனார்கள்.
நிலமெங்கும் குதிரையில் எப்போதும் பயணித்துக் கொண்டேயிருக்கும் வந்தியத்தேவன் மீது
பெரும் பிரியம் உண்டானது. பழையாறையும் கோடிக்கரையும் வீர நாராயண ஏரியும் என் கற்பனையில்
உயிர்ப்புடன் இருந்து கொண்டேயிருந்தன.
பொன்னியின்
செல்வன் வாசித்த நாள் முதலே வீர நாராயண ஏரியைக் காண வேண்டும் என ஆவல் கொண்டிருந்தேன்.
எனக்குத் தெரிந்த அனைவரிடமும் நீங்கள் வீர நாராயண ஏரியைப் பார்த்திருக்கிறார்களா என
விசாரிப்பேன். பார்த்தவர்கள் மிகக் குறைவாகவும் கேள்விப்பட்டவர்கள் சற்றே அதிகமாகவும்
இருந்தனர். யாருக்குமே எனது ஊரிலிருந்து இப்படி செல்லலாம் என ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தைக்
கூறத் தெரியவில்லை. காட்டுமன்னார்குடி சென்று செல்ல வேண்டும் எனக் கூறுவார்கள். சேத்தியாத்தோப்பு
சென்று செல்ல வேண்டும் என்று சொல்வார்கள். இரு சக்கர வாகனம் ஓட்ட கற்றுக் கொண்டு அதில்
பயணிக்கத் தொடங்கிய நாட்களில் நான் வீர நாராயண ஏரியைக் கண்டேன். அந்த ஏரியின் ஒரு முனை
சேத்தியாதோப்பு என்பதையும் அதன் இன்னொரு முனை காட்டுமன்னார்குடி என்பதையும் இந்த இரண்டு
ஊர்களையும் இணைக்கும் பெருந்தூரம் முழுவதுமே ஏரிக்கரை என்பதையும் உணர்ந்த போது மனம்
பிரமித்தது. தனது குடிகளின் விவசாயத் தேவைக்காக சோழர்கள் நிர்மாணித்த வீர நாராயண ஏரியைக்
காணக் காண சோழர்கள் மேல் கொண்டிருந்த மதிப்பு கூடிக் கொண்டேயிருந்தது. ஒரு காலகட்டத்தில்,
வீட்டில் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினால் நேராக சிதம்பரம் சென்று
நடராஜர் ஆலயத்தில் சாமி கும்பிட்டு விட்டு அங்கிருந்து காட்டுமன்னார்குடி வந்து வீர
நாராயண ஏரிக்கரையில் நாள் முழுக்க இருந்து விட்டு மாலை கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தில்
இருந்து விட்டு இருட்டத் தொடங்கியதும் அணைக்கரை பந்தநல்லூரி வழியாக ஊர் வந்து சேர்வதை
வழக்கமாகக் கொண்டிருந்தேன். இளைஞனாயிருந்த எனது உள்ளம் அப்போது ததும்பிக் கொண்டிருக்கும்.
மனதில் மகிழ்ச்சி இருந்தாலும் இந்த பயணத்துக்கு கிளம்பி விடுவேன். சிறு சோர்வு இருந்தாலும்
கிளம்பி விடுவேன். கிளம்பிச் செல்வதற்கு மகிழ்ச்சியோ சோர்வோ ஒரு நிமித்தம் என்ற அளவில்
இருந்த நாட்கள் அவை.
காட்டுமன்னார்குடி
பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கும் போது அங்கே சந்தித்த ஒருவர் என்னிடம் நான் எந்த
ஊரைச் சேர்ந்தவன் என்று கேட்டார். ஊரைச் சொன்னதும் உங்கள் ஊருக்கு செல்ல முட்டத்தில்
கொள்ளிடம் ஆற்றை படகில் கடந்தால் மணல்மேடு சென்று அங்கிருந்து மிகக் குறைந்த தூரத்தில்
ஊரை அடைந்து விடலாம் என்று சொன்னார். அவர் காட்டிய மார்க்கத்தில் செய்த அந்த பயணம்
சுவாரசியமாயிருந்தது. முட்டத்தில் மறுகரைக்குச் செல்ல மக்கள் படகுக்குக் காத்துக் கொண்டிருந்தார்கள்.
படகு வந்ததும் இருபதுக்கும் மேற்பட்டோர் அதில் ஏறிக் கொண்டனர். சிலர் தங்கள் இரு சக்கர
வாகனங்களையும் ஏற்றிக் கொண்டனர். நானும் ஏற்றிக் கொண்டேன். மறுகரையில் சில நிமிடங்களில்
படகு சென்று சேர்ந்தது. மணல்மேடு வந்து ஊர் வந்து சேர்ந்தேன். கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர்
இருக்கும் போது படகிலும் ஆறு வறண்டிருக்கும் போது மணல் பரப்பில் வண்டியை தள்ளிக் கொண்டு
சென்றும் நதியின் இரு கரைகளிலும் அலைந்து கொண்டிருப்பேன். மோவூர் என்ற ஊரில் ஒரு முச்சந்தி
இருந்தது. அதில் ஒரு பாதை காட்டுமன்னார்குடி செல்வது ; இன்னொன்று முட்டம் செல்வது
; மூன்றாவது பாதை எங்கே செல்கிறது என விசாரித்தேன். ஒரு பெரியவர் இப்படியே சென்றால்
ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையைச் சென்றடையும் என்று கூறினார். குச்சூர், ஆய்க்குடி,
சண்டன் ஆகிய ஊர்களின் வழியாகவும் வடவாற்றைக் கடந்தும் ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையை
வந்தடைந்தேன். அங்கிருந்து கூப்பிடு தொலைவில் உள்ள ஊர் கங்கை கொண்ட சோழபுரம். டூ-வீலரின்
ஸ்பீடாமீட்டர் ரீடிங் வழியாக ஊருக்கும் பிரகதீஸ்வரர் ஆலயத்துக்கும் உள்ள தூரம் எவ்வளவு
எனக் கணக்கிட்டேன். 38 கிலோமீட்டர் என ரீடிங் காட்டியது. அந்த பாதையைப் பயன்படுத்தி
அடிக்கடி கங்கை கொண்ட சோழபுரம் செல்வேன். பின்னாட்களில் , நான் அடிக்கடி படகில் கடந்த
பாதையில் மணல்மேட்டுக்கும் முட்டத்துக்கும் இடையே பெரும் பாலம் ஒன்று கட்டப்பட்டது.
வீட்டிலிருந்து புறப்பட்டால் ஒரு மணி நேரத்தில் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இருக்கலாம்.
பிரகதீஸ்வரரைக் காணச் செல்வது எப்போதுமே உற்சாகமளிக்கும் பயணம் தான்!