Thursday, 31 July 2025

பதிவு

 நேற்று நண்பர் ஒருவருடன் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். அவரை நான் இன்னும் நேரில் சந்திக்கவில்லை. அலைபேசியில் அவ்வப்போது பேசிக் கொள்வோம். ஊருக்கு வாருங்கள் என ஒவ்வொரு முறையும் அவரிடம் கூறுவேன். இந்த மாதம் ஆகஸ்ட் 15 ஐ ஒட்டி வருவதாகக் கூறினார். அவர் கூறிய ஒரு விஷயம் என்னை யோசிக்க வைத்தது. அவர் காலை எழுந்தவுடன் எனது வலைப்பூவை வாசிப்பேன் என்று சொன்னார். தினம் ஒரு பதிவாவது எழுத வேண்டும் என நினைப்பேன். பெரும்பாலும் எழுதி விடுவேன். அப்படியும் ஓரிரு நாட்கள் விடுபடும். முன்னரெல்லாம் இரவு 12 மணிக்கு பதிவு வெளியாகும் வண்ணம் முன்பதிவு செய்து வைத்திருப்பேன். அந்த வழக்கம் எப்படியோ தவறி விட்டது. நண்பர் கூறியதிலிருந்து தினமும் இரவு 12 மணிக்கு வெளியாகும் வழக்கத்தை மீண்டும் செயல்படுத்தலாம் என உள்ளேன். 

கிராமத்துக்கான பொதுப்பணிகள்

கிராமங்களில் அலைந்து திரிவதை பல ஆண்டு வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். எந்த ஊரையும் நம் சொந்த ஊராக எண்ண வைப்பவை அந்த ஊர்களின் பிரும்மாண்டமான நிழல் தரும் மரங்களே. மரம் தரும் நிழலின் இதத்தை சில கணங்களேனும் உணர்பவர்கள் தெய்வத்தின் அருளின் சிறுதுளி ஒன்றை அறிந்தவர்கள் ஆகிறார்கள்.  மனிதகுலம் உருவான காலத்திலிருந்தே மனிதர்கள் தங்களுக்கான வாழிடத்தை உருவாக்கிக் கொள்வதில் மிகத் தீவிரமாக இருந்திருக்கிறார்கள். உலகின் எந்த பகுதியாயினும் ஒரு மனிதக்குழு ஒருநாளில் தன்னால் புழங்கக் கூடிய வெளி ஒன்றையே ஊர் என்று உருவாக்கிக் கொண்டிருக்கிறது. நமது நாட்டின் மரபு ஊர் என்பதை எல்லா உயிரினங்களுக்கான இடமாகக் காண்கிறது. ஊரில் மனிதர்கள் இருக்க வேண்டும் ; பிராணிகள் இருக்க வேண்டும் ; பறவைகள் இருக்க வேண்டும் ; பூச்சிகள் இருக்க வேண்டும். எல்லா உயிர்களுக்கும் இடம் தரும் வகையில் அமையும் வாழிடமே அங்கே இருப்பவர்கள் மனிதர்களின் தனித்திறனான சிந்திக்கும் இயல்பைக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான சாட்சியம் ஆகும். இன்று உலகம் நுகர்வில் மிகவும் தீவிரமாக மூழ்கியிருக்கிறது. இயற்கை என்பது நுகர வேண்டிய பண்டம் என்பது எல்லா மேலைப் பொருளியல் சிந்தனைகளின் அடிப்படைப் பாடம். அது மானுடத்துக்கு உருவாக்கியிருக்கும் சிக்கல்கள் மிகப்பல. நம் நாட்டின் மரபு உலகின் எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்பதை அடிப்படையாய்க் கொண்டது. இன்று மானுட குலம் எதிர்கொள்ளும் சிக்கலை ஒட்டுமொத்த மானுட குலமும் தான் சிந்தித்து செயலாற்றி தீர்வு காண வேண்டும். 

உலகம் என்ற மாபெரும் பரப்பின் நுண் அலகான ஒரு கிராமத்தில் அடிப்படையாக என்னென்ன விஷயங்கள் குறைந்தபட்சமாக செய்ய வேண்டும் என்பதை பட்டியலிட்டுக் கொள்வோம். 

1. கிராமத்தின் எல்லா குழந்தைகளும் விளையாட வேண்டும். கிராமத்தின் உள்ள எல்லா குழந்தைகளும் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானங்களும் விளையாட்டு உபகரணங்களும் தேவை. நமது நாடு - நமது நாட்டு மக்கள் - நமது நாட்டின் சாமானிய மக்கள் - இன்று வறுமையை வென்றிருக்கிறார்கள். உணவுப் பற்றாக்குறை என்பது இல்லாமல் ஆகியிருக்கிறது. முன்னர் நாம் நாட்டு மக்களுக்குப் போதிய உணவு வழங்க முடியாத துயரில் இருந்தோம் ; இப்போது உணவுப் பஞ்சம் தீர்ந்த சமூகங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களில் மூழ்கத் தொடங்குகிறோம். 

உணவுப் பஞ்சம் தீர்ந்த சமூகம் தனது உடல்நலனில் அக்கறை கொண்டிருக்க வேண்டும். உடல் உணவை மிகையாக கொள்ளத் தொடங்கினால் நோய்மை கொள்ளத் தொடங்கும். நூற்றுக்கணக்கானோ ஆயிரக்கணக்கானோர் லட்சக்கணக்கானோர் கோடிக்கணக்கானோர் நோய்மை கொள்ளும் போது அந்த நோய்மைக்கு நிகழும் மருத்துவம் பெருந்தொழில் ஆகிறது. இன்று உலகம் முழுக்க கோடானு கோடி புழங்கும் அந்த துறை மனிதர் வாழ்க்கை முறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. வலிமை நிறைந்த உடலே சிந்திக்கும் மனத்தைக் கொண்டிருக்க முடியும். 

நாம் இன்று கிராமத்தின் எல்லா குழந்தைகளும் உணவு பெறுவதை உறுதி செய்திருக்கிறோம். இது முக்கியமான பாராட்ட வேண்டிய விஷயம். ஏழைக் குடும்பத்துக் குழந்தைகள் தொடங்கி கிராமத்தில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் உணவு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாம் நம் கிராமத்துக் குழந்தைகள் உடல் வலிமை பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே எல்லா குழந்தைகளும் விளையாடி உடல் நலம் பெறும் வகையில் விளையாட்டு மைதானங்களும் விளையாட்டு உபகரணங்களும் தேவை. நம் நாட்டில் குழந்தைகளை தெய்வ ரூபங்களாகக் காணும் மரபு உண்டு. முயன்றால் இப்பணி நிகழும். சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார் : ‘’இந்த உலகம் மிகப் பெரிய உடற்பயிற்சிக் கூடம் . இங்கே நாம் நம்மை வலிமை படைத்தவர்களாக ஆக்கிக் கொள்ளவே வந்திருக்கிறோம்’’.  

2. நமது நாட்டில் நான்மறைகள் நாடெங்கும் ஒலித்துள்ளன. புராணங்களும் உபநிடதங்களும் காவியங்களும் பயிலப்பட்டுள்ளன. உலகின் தொன்மையான நாட்டின் தொன்மையான ஞானம் உறையும் சமஸ்கிருத மொழி பயில கிராமங்களில் வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். சமஸ்கிருதம் கலைக்கான மொழி மட்டுமல்ல ; நுண்கலைகள், மருத்துவம் (ஆயுர்வேதம்) ஆகியவையும் சமஸ்கிருதத்தில் இன்றும் பயிலப்படுகின்றன. 

3. உலகம் முழுக்க மானுடர்கள் இன்று போக்குவரத்து வசதிகளால் சென்று வருகின்றனர். உலகில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த பேரரசர்களுக்கும் கிட்டிராத வசதிகள் ஆகும் இவை. எனவே பல மொழிகள் பயில கிராமத்தில் வாய்ப்பு இருக்க வேண்டும். மொழிக்கல்வியே ஞானங்களுக்கான கல்வி என்பதால்  பலவிதமான மொழிகள் பயில வாய்ப்பு இருக்க வேண்டும். 

4. நூல் வாசிப்பே மனிதர்களை சிந்திக்கவும் தன் சிந்தனையை தொகுத்துக் கொள்ளவும் செயலாக்கவும் உதவும். எனவே கிராமத்தில் படைப்பூக்கம் கொண்ட நூலகம் ஒன்று நிறுவப்பட வேண்டும். 

5. ஒரு கிராமத்தில் எத்தனை மரங்கள் இருப்பதற்கு சாத்தியமோ அத்தனை மரங்கள் அங்கே வளர்ந்திருக்க வேண்டும். அவ்விதம் இருந்தால்தான் பிராணிகள் , பூச்சிகள், பறவைகள் ஆகியவற்றின் சக இருப்பை நாம் உறுதி செய்ய முடியும். அப்பணியும் அடிப்படையான குறைந்தபட்சமான பணியாகும். 

6. எவ்விதமான வேலையாக இருந்தாலும் உடல் உழைப்பை நல்கும் வகையிலானதோ அல்லது மூளை உழைப்பை நல்கும் வகையிலானதோ அந்த வேலையைக் கோரும் கிராமவாசிகளுக்கு பணி வாய்ப்புகளின் பரிந்துரையை அளிக்கும் மையம் ஒன்று கிராமத்தில் இருக்க வேண்டும். 

’’காவிரி போற்றுதும்’’ ஏதேனும் ஒரு கிராமத்தில் இந்த பணிகளை முழுமையாகச் செய்ய விரும்புகிறது. இந்த நல்விஷயங்கள் சிறப்பான கற்பனை என்பது ‘’காவிரி போற்றுதும்’’மின் துணிபு. இந்த செயல்களை நோக்கி முன்னேறிச் செல்கிறது ‘’காவிரி போற்றுதும்’’; மிக மெதுவாகச் சென்றாலும் இலக்கை நோக்கி சரியான பாதையில் செல்வதை நன்றென்றே கருதுகிறது ‘’காவிரி போற்றுதும்’’

தமிழும்,சமஸ்கிருதமும்,பல மொழிகளும் பயிற்றுவிக்கும் மொழி ஆசிரியர்களுக்கு மிகச் சிறப்பான ஊதியமும் மிகச் சிறப்பான வசதிகளும் செய்து தர வேண்டும் என்பதில் ‘’காவிரி போற்றுதும்’’ உறுதி கொள்கிறது. கல்வியையும் கல்வி அளிக்கும் ஆசான்களையும் மதிக்கும் சமூகமே பிரக்ஞை கொண்ட சமூகம் ஆகும். 

இவை நிகழும் என்ற நம்பிக்கை ‘’காவிரி போற்றுதும்’’க்கு எப்போதும் திடமாக உள்ளது.    

அமைப்பு உருவாக்கம் ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளர் எப்போதும் விவாதிப்பது அவரது வெளி மாநில நண்பனிடம் ( நண்பன் கேட்கிறான் : இளவல் னு சொல்றீங்க. சகோதரனுக்கு சமமான நண்பன்னு சொல்றீங்க. நான் எங்க வேலை பாக்கறன்னு சொன்னா என்ன அண்ணன்? ஏன் எப்போதும் வெளி மாநில நண்பன் னு நீளமா சொல்றீங்க. இதுல என்ன ரகசியம் ? அமைப்பாளர் சொல்கிறார் : தம்பி ஒரு விஷயத்தை எந்த அளவு சொல்லணுமோ அந்த அளவு சொன்னா போதும். அப்ப தான் எந்த விஷயமும் செறிவா இருக்கும். நண்பன் சொல்கிறான் : ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு தியரி வச்சிருக்கீங்க அண்ணன் ). வெளி மாநில நண்பனுக்கு அமைப்பாளர் மேல் மிகுந்த பிரியமும் அன்பும் உண்டு. ஆனால் அமைப்பாளர் ‘’கொஞ்சம்’’ பழைய ஆள் என்று எண்ணுவான். (நண்பன் : ‘’கொஞ்சம்’’ இல்ல அண்ணன் ‘’ரொம்ப’’). நேற்று அமைப்பாளர் நண்பனுக்கு ஃபோன் செய்தார். ‘’தம்பி ! ‘’காவிரி போற்றுதும்’’ இப்ப ஒரு நுண் அமைப்பா இருக்கு. அத கொஞ்சம் பெரிய அமைப்பா ஆக்கணும். அத பத்தி தான் உங்கிட்ட டிஸ்கஸ் செய்யணும்னு நினைச்சன்’’. நண்பன் சொன்னான் : ‘’உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கணும். நீங்க அமைப்பாளரா செயல்படற விஷயங்களை நிறைய ‘’நகைச்சுவைக் கட்டுரை’’ தலைப்புல தான் எழுதியிருக்கீங்க. அது சரியான்னு எனக்குத் தெரியல?’’ அமைப்பாளர் சொன்னார் : ‘’தம்பி தமிழ்ச் சமூகத்துக்கு ஹாஸ்ய உணர்ச்சி ரொம்ப குறைவா இருக்கு. எந்த சூழ்நிலையிலயும் ஹாஸ்யத்துக்கு கொஞ்சம் இடமாவது கொடுக்கறது நல்லது’’ 

இருவரும் விஷயத்துக்குள் சென்றார்கள். 

அமைப்பாளர் துவக்கினார் : ‘’காவிரி போற்றுதும்’’ இப்ப ஒரு நுண் அமைப்பு. சின்னதா ஒரு கிராமத்தை எடுத்துக்கறோம். அதுல ஒரு வேலைய செய்யறோம். நாம செய்யற வேலைல ஒரு சிம்பாலிசம் இருக்கு. நாம ஒட்டுமொத்த கிராமத்துக்கும் வேலை செய்திருக்கோம். இப்ப நீ இருக்க. இன்னும் சில ஃபிரண்ட்ஸ் இருக்காங்க. அப்பப்ப என்ன தேவையோ அதுக்கு சப்போர்ட் பண்றீங்க. ஃபீல்டுல நான் வேலை பாத்துடறன். ஒரு நுண் அமைப்பு இப்படித்தான் இருக்க முடியும். நம்ம ஃபங்ஷனிங் ஸ்டைல்ல எந்த பெரிய சிக்கலும் கிடையாது ; ஏன்னா நம்மோடது மைக்ரோ ; மேக்ரோ இல்ல. இப்ப நாம் கொஞ்சம் பெருசா ஆகணும்ணா அத எப்படி செய்யறது ?’’

‘’அண்ணன் ! நீங்க ரொம்ப பழைய ஆள். அதோட கன்ஸ்ட்ரக்‌ஷன் ஃபீல்டுல இருக்கீங்க. உங்களோட இந்த ரெண்டு தன்மையும் நீங்க அமைப்பாளரா ஃபங்ஷன் ஆகற விதத்துல இன்ஃபுளூயன்ஸ் பண்ணுது. அத நீங்க மாத்திக்கணும்’’

‘’தம்பி ! என் ஃபங்ஷனிங் விஷயங்களை துல்லியமா நிறைவேத்தி இருக்கே. என் தொழிலோட இன்ஃபுளூயன்ஸ் நல்ல விஷயம் தானே. அப்புறம் ஏன் என்னை மாத்திக்கணும்னு சொல்லற?’’

‘’பத்து பேர் இருபது பேரோட சேர்ந்து ஃபங்ஷன் செய்யணும்னா நீங்க டோட்டலா மாறணும்’’

‘’எப்படி மாறறது?’’

‘’உதாரணத்துக்கு நீங்க ‘’வாட்ஸ் அப்’’ வச்சுக்கணும்?’’

அமைப்பாளர் அதிர்ச்சி அடைந்து விட்டார். ‘’தம்பி ! என்கிட்ட சாதாரண ஃபோன் தான் இருக்கு. நான் ஸ்மார்ட்ஃபோன் வாங்கவே இல்லையே? மென் அண்ட் மெஷின் ரிலேஷன்ஷிப் னு ஒரு விஷயம் இருக்கு. எந்த மனுஷனும் அவன் ஈஸியா ஃபீல் பண்ற மெஷினோட தான் இலகுவா இருப்பான். எனக்கு டூ-வீலர் வசதி. கார் அவ்வளவு வசதின்னு ஃபீல் பண்ண மாட்டன். டிரெயின் எனக்கு பிடிக்கும். ஆகாய விமானம் கூட எனக்கு ட்ரெயின் அளவு கன்வீனியண்ட் இல்ல. ஃபிளைட்ல போறதா டிரெயின்ல போறதாண்ணா நான் டிரெயின்ல தான் போக விரும்புவன். எனக்கு செல்ஃபோன் பிடிக்கல. டெலிஃபோன் ரொம்ப பிடிச்ச ஒன்னு’’

‘’இப்படி இருந்தா கஷ்டம் அண்ணன்’’

’’கோச்சுகாதடா தம்பி ! என்ன ரெமிடி ன்னு சொல்லு’’

‘’ஸ்மார்ட்ஃபோன் யூஸ் பண்ணலன்னா ஐ-பேட் யூஸ் பண்ணுங்க’’

‘’ஐ பேட் னா செவ்வகமா இருக்குமே அதுவா ? கிண்டில் போல இருக்குமே?’’

‘’அதே தான்’’

‘’ஐ பேட் யூஸ் பண்ண ஆரம்பிச்சா பெரிய அமைப்பு உருவாயிடுமா?’’

‘’இப்ப நீங்க மெயின் ஸ்ட்ரீம் டிரண்ட்ல இருந்து ரொம்ப தள்ளி இருக்கீங்க. ஐ பேட் அந்த டிஸ்டன்ஸ்ஸ இல்லாம ஆக்கும். அதுக்கப்பறம் நம்ம ஆக்டிவிட்டியை சப்போர்ட் பண்றவங்கள ஒரு குரூப் குள்ள கொண்டு வரணும். நம்ம அஜெண்டாவை அவங்க பார்வைக்கு வைக்கணும். அவங்ககிட்ட இருந்து இன்புட்ஸ் எடுத்துக்கணும். ஒவ்வொரு நாளும் என்ன நடக்குதுன்னு அப்டேட் செய்யணும். அவங்களோட எப்போதும் கனெக்ட் ஆகி இருக்கணும். ஜூம் மீட்டிங் நடத்தணும். வாய்ஸ் மெஸேஜ் போடணும். இன்னும் எவ்வளவோ இருக்கு’’

‘’தம்பி ! நான் பிளாக் எழுதறேணே?’’

‘’எழுதறீங்க. அத தேடி வந்து படிக்கறவங்க தான் படிப்பாங்க’’

‘’சமுதாயம் எலெக்ட்ரானிக் கேட்ஜட்ஸ்ல சிக்கிக்கக் கூடாதுன்னு விழிப்புணர்வு பிரசாரம் ‘’காவிரி போற்றுதும்’’ சார்பா செய்யணும்னு பிளான் வச்சிருக்கன் தம்பி’’

‘’இப்ப அந்த பிரச்சாரத்துக்குக் கூட கேட்ஜட்ஸ் தேவை’’

‘’இந்த விஷயத்தல்லாம் இத பத்தி நல்லா தெரிஞ்ச இதுல ஆர்வம் இருக்கற வேற யாராவது செய்ங்களேன். நான் என்னால என்ன செய்ய முடியுமோ அத செய்யறன்’’

‘’அண்ணன் ! நீங்க அமைப்பாளர். அமைப்போட எல்லா விஷயத்துலயும் உங்க இன்வால்வ்மெண்ட் இருக்கணும். அப்ப தான் ஒருங்கிணைப்பு சரியா இருக்கும்’’

‘’நீ சொன்னதை உள்வாங்கி கிட்டன் தம்பி’’

‘’நான் சொன்னதை ஏத்துக்கிட்டன்னு சொல்லுங்க அண்ணன்’’

அமைப்பாளர் மௌனமாக இருந்தார் ! 

Wednesday, 30 July 2025

நீங்கள் செய்துள்ள செயல்கள் என்ன? (நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளருடைய தொழில் கட்டுமானம். அவரிடம் பணி புரிபவர்கள் திறன் மிக்கவர்கள். கடமை உணர்வு மிகுந்தவர்கள். எனினும் 40 பேர் வேலை பார்த்தால் 4 பேராவது கொஞ்சம் முன் பின் இருப்பார்கள் என்பது இயற்கை இல்லையா? பணியாளர்கள் எப்போதும் பணியாளர்களை ஏதேனும் விவகாரம் என்றால் தனித்து விட மாட்டார்கள். எந்த பணியாளரும் இன்னொரு பணியாளர் செயல்பாட்டின் மீது அதிருப்தி வெளிப்படும் போது அந்த சூழலை மௌனத்தின் மூலமே கடக்க விரும்புவார்கள். வாழ்க்கையின் விதவிதமான சூழல் பெருக்கில் தானும் இன்னொரு பணியாளர் இப்போது சிக்கியிருக்கும் சூழலுக்கு வரலாம் என்னும் வாய்ப்பால் அமைதியாகவே கடப்பார்கள்.  அமைப்பாளரின் பணிச்சூழலில் பெரும் நெருக்கடிகள் ஏதும் ஏற்பட்டதில்லை - கடவுள் புண்ணியத்தில். சிறு சிறு நெருக்கடிகள் வரும். பணியாளர்கள் சாவியை இடம் மாற்றி வைத்திருப்பார்கள். அல்லது தொலைத்திருப்பார்கள். இது அடிக்கடி நிகழும் என்பதால் பூட்டு எப்போதும் 50 ரூபாய்க்கு மட்டுமே போடப்பட்டிருக்கும். சாவி இல்லை என்றால் அந்த பூட்டை உடைத்துக் கொள்ளலாம். பூட்டை உடைத்த ஒரு மணி நேரத்தில் சாவி கிடைக்கும். இன்னொரு பணியாளர் சாவியை கண்டடைந்தால் அதனைக் கூற மாட்டார். பூட்டை உடைத்தாயிற்று ; இனி சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன என இருப்பார்கள். இது போல சிறு சிறு விஷயங்கள். எப்போதும் சிறு சிறு சிக்கல்கள் இருப்பது நல்லது. பெரிய சிக்கல் வராது. பணியாளர்கள் மௌனத்திலிருந்தும் சாதாரண உரையாடலிலிருந்தும் அவர்கள் எண்ணுவது என்ன என்பதை அமைப்பாளரால் பெருமளவு யூகித்து விட முடியும். இந்த யூகிக்கும் திறனை தனது தொழில் சார்ந்த விஷயம் தாண்டி வேறு விஷயங்களில் அமைப்பாளர் பயன்படுத்த மாட்டார். அதை ஒரு பழக்கமாகவே வைத்திருக்கிறார். 

இதில் இன்னொரு விஷயம் உண்டு. அமைப்பாளரின் தொழில் கட்டுமானம். நிலம் கட்டிடம் ஆகியவை ஸ்தூல வஸ்துக்கள். கண்ணுக்கு முன்னால் தெரிபவை. நிலம் என்றால் அது எத்தனை ஏக்கர் எத்தனை கிரவுண்ட் எத்தனை சதுர அடி என்று எண்ணில் கூறி விட முடியும். ஜல்லி மணல் என்றால் எத்தனை கன அடி என. சிமெண்ட் என்றால் எத்தனை மூட்டைகள் என. கம்பி என்றால் எத்தனை கிலோ என. ஸ்தூல வஸ்துக்களின் மத்தியில் பணி புரிவதால் கட்டுமானத் தளத்தில் பணி புரியும் அனைவருமே சொல்லின்றி தங்கள் பணியை செய்யும் வழக்கம் கொண்டிருப்பார்கள். இங்கே கூடுதலாக ஒரு சொல் எடுப்பது கூட அவசியமின்மையாகக் கொள்ளப்படும். சிறிய மௌனங்களும் பெரிய மௌனங்களும் நிறைந்த இடமாக இருக்கும் கட்டுமானப் பணியிடம். மெஷின் ஓடும் சத்தமோ ஜல்லி அள்ளும் சத்தமோ மட்டுமே பணியிடத்தில் கேட்கும். 

ஆங்கிலத்தில் இண்ட்ராவெர்ட், எக்ஸ்ட்ராவெர்ட்,ஆம்பிவெர்ட் என மூன்று மனித சுபாவங்கள் உண்டு. இண்ட்ராவெர்ட் என்பவர் தன்னில் மூழ்கியிருப்பவர். எக்ஸ்ட்ராவெர்ட் என்பவர் பிறருடன் உரையாடிக் கலந்து இருப்பவர். ஆம்பிவெர்ட் என்பவர் இந்த இரண்டு இயல்புகளும் கொண்டிருப்பவர். அமைப்பாளர் தன்னை ஆம்பிவெர்ட் என்றே எண்ணிக் கொண்டிருந்தார். அவருடன் பழக்கம் உள்ள ஒருவர் அமைப்பாளரை  இண்ட்ராவெர்ட் இயல்பு கொண்டவர் என்றார். வெளிமாநிலத்தில் வங்கியில் பணி புரியும் தனது நண்பனுக்கு ஃபோன் செய்து இன்னார் என்னை இண்ட்ராவெர்ட் என்று சொல்கிறார் ; நான் என்னை ஆம்பிவெர்ட் என்று நினைக்கிறேன். நீ சொல் ; நான் இண்ட்ராவெர்ட் இயல்பு உள்ளவனா ஆம்பிவெர்ட் இயல்பு உள்ளவனா என்று கேட்டார். நண்பன் அவரிடம் அண்ணன் நான் சாயந்திரம் ஏழு மணிக்கு உங்களுக்கு ஃபோன் செய்கிறேன் என்றான். அமைப்பாளர் சரியாக ஏழு மணிக்கு அவனுக்கு ஃபோன் செய்தார். இப்போ சொல்லு என்றார். நண்பன் யோசித்துப் பார்த்து விட்டு அண்ணன் என் மனசுல நீங்க இந்த பக்கமா அந்த பக்கமா என ஊசல் அலையுது இண்ட்ராவெர்ட் பக்கம்தான் அண்ணன் ஊசல் போகுது என்றான். ஆம்பிவெர்ட் னு கூட சொல்ல முடியாதாடா தம்பி என்றார். நண்பன் அமைதியாக இருந்தான். 

‘’தம்பி ! ஒரு கிராமத்துல இருக்கற 450 குடும்பம் 5000 பேர் எனக்கு நேரடியா பழக்கம் டா. அவங்க எல்லாருக்கும் என்னை தெரியும்.  எப்படி 5000 பேரோட பேர ஒரு ஆள் ஞாபகம் வச்சுக்க முடியும் சொல்லு. அவங்க எல்லாரோட வீட்டுக்கும் போயிருக்கன். எங்க பாத்தாலும் என்னை விசாரிப்பாங்க. ஏன் அடிக்கடி வரதில்லைன்னு கேப்பாங்க. எவ்வள்வு பிரியம் தெரியுமா? இத்தனை பேரோட பழகி கனெக்ட் ஆகியிருக்கற ஒருத்தன நீங்க இண்ட்ராவெர்ட்னு சொல்லுவீங்களா? 

அண்ணன்! நீங்க கிரியேட்டிவ் ஆளு அண்ணன். கிரியேட்டிவ் ஆளுங்க கொஞ்சம் இண்ட்ராவெர்ட்டா தான் இருப்பாங்க. உங்களுக்குத் தெரியாததுல்ல. 

கிரியேட்டிவிட்டியைச் சொன்னதும் அமைப்பாளர் அமைதியாகி விட்டார். இப்போது அவர் தன்னை ஆம்பிவெர்ட் என சொல்லிக் கொள்வதா வேண்டாமா என ஐயம். இந்த விஷயத்தை எந்த முடிவும் எடுக்காமல் அப்படியே விட்டு விடுவோம் என விட்டு விட்டார். 

அமைப்பாளரிடம் ‘’காவிரி போற்றுதும்’’ செய்திருக்கும் செயல்கள் என்ன என்று எப்போதாவது யாராவது கேட்பதுண்டு. பல செயல்களைக் கூறலாம். இந்த செயல்கள் அனைத்தும் சாமானியமான கிராம மக்கள் செய்தவை ; மை நஹி ; தூ ஹி என ஒரு வாக்கியம் உண்டு. நான் அல்ல ; எல்லாம் நீயே என்பது அதன் பொருள். நான் அல்ல ; எல்லாம் கிராம மக்களே. 

பல செயல்களைப் பட்டியல் போட முடியும் :

 1. காவிரி வடிநில கிராமம் ஒன்றில் 20,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை விவசாயிகளின் தோட்டங்களில் நடச் செய்தது. அந்த எண்ணிக்கை ஒரு மேஜிக்கல் எண்ணிக்கையே. மத்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் பணி புரியும் விஞ்ஞானியான ஒரு நண்பர் என்னிடம் ‘’கல்லில் நார் உரிக்கும் ஆளுயா நீ’’ என்றார் ; காவிரி வடிநிலத்தில் இந்த விஷயம் செய்தது குறித்து.  

2. ஒரு கிராமம் முழுமைக்கும் கோவிட் தடுப்பூசி போடப்பட்டது. முழுக்க முழுக்க ஒவ்வொரு வீடாகச் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து சாதித்த விஷயம் இது. மாவட்டத்திலேயே அந்த கிராமம் தடுப்பூசி போட்டுக் கொண்டதில் முதலிடம் பெற்றதற்காக மாவட்ட ஆட்சியரின் விருது பெற்றது. அந்த கிராமத்துக்கு இப்போது ஆரம்ப சுகாதார நிலையம் கிடைத்துள்ளது. 

3. நாட்டின் குடியரசு தினத்தைக் கொண்டாட கிராமத்தின் எல்லா வீடுகளிலும் தீபம் ஏற்றப்பட்டது.

இன்னும் இன்னும் என மேலும் கூட பட்டியலிட முடியும். 

அமைப்பாளர் என்ன எண்ணுகிறார் என்றால் இன்னும் அவரால் ஒரு அமைப்பாக உருவாகிட முடியவில்லையே என. அமைப்பை ஆதரிப்பவர்கள் இருக்கிறார்கள். உடனிருந்து உதவுபவர்கள் இருக்கிறார்கள். ஊக்கப்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அமைப்பாளரால் ஸ்தூலமாக ஒரு அமைப்பைக் காட்ட முடியவில்லையே என்பதே அவர் தீவிரமாக சிந்திக்கும் விஷயம். இதனை அடுத்து அமைப்பாளருக்கு தோன்றும் விஷயம் ஆற்றும் செயல்கள் தானே முக்கியம் அதனை அமைப்பை உருவாக்கிக் கொண்டு செய்தால் என்ன அமைப்பு இல்லாமல் செய்தாமல் என்ன என்று. அமைப்பு உருவாக்குவதையே ஒரு செயலாகச் செய்தால் என்ன என்று அமைப்பாளர் யோசித்தார். அப்போது அவருக்கு ஒரு கேள்வி வந்தது. தான் இண்ட்ராவெர்ட்டா அல்லது ஆம்பிவெர்ட்டா என. சுற்றி சுற்றி ஆரம்பித்த இடத்தில் வந்து நிற்பது அமைப்பாளருக்கு நகைச்சுவையாக இருக்கிறது. தனக்குள் புன்னகைத்துக் கொள்கிறார். 

காவிரி போற்றுதும் - புதிய செயல் வடிவம்

’’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து அறிமுகமாகியிருந்த நர்சரி உரிமையாளர் ஒருவரை இன்று காலை சந்தித்தேன். ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளுக்குத் தேவையான மரக்கன்றுகளை தனது பங்களிப்பாக வழங்கி ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளுக்கு ஆதரவு அளிக்க விருப்பம் தெரிவித்தார். அவருடனான உரையாடல் திருப்திகரமாக இருந்தது. நண்பரின் ஆதரவை எவ்விதம் கிராம வளர்ச்சியுடனும் விவசாயிகள் நலனுடனும் முழுமையாக இணைப்பது என்பது குறித்து யோசித்தேன். ஒரு புதிய வடிவம் மனதில் தோன்றியது.  

முன்னர் செயல்படுத்திய முறை என்பது கிராமத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாகச் சென்று கணக்கெடுப்பது. இம்முறையும் அது நீடிக்கிறது ; சிறு மாற்றத்துடன். ஒரு கிராமத்தில் 450 வீடுகள் இருக்கும். 1 லிருந்து 450 என டோக்கன் எண் மட்டும் குறித்து ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று வழங்கி விடுவது. அந்த டோக்கனுக்கு ஒரு தென்னம்பிள்ளை, ஒரு நெல்லிக்கன்று, ஒரு கொய்யாக் கன்று, ஒரு எலுமிச்சைச் செடி என நான்கு கன்றுகளை வழங்குவது. கன்றுகள் வழங்குவதற்கு ஒன்பது நாட்கள் முன்பு இராமாயண நவாஹம் ஒன்றைத் துவக்குவது. ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் அன்று மரக்கன்றுகள் வழங்கப்படும். டோக்கன் வழங்கும் போது இராமாயண நவாஹம் ஒன்பது நாட்கள் நடப்பதைக் கூறி ஒவ்வொரு நாளும் நிகழ்வுக்கு வருகை புரியவேண்டும் என கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்தையும் கேட்டுக் கொள்வது. இராமாயண நவாஹம் நடைபெறும் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு வீடாகச் சென்று 2 அடி நீளம் 2 அடி அகலம் 2 அடி ஆழம் கொண்ட குழியினை வெட்டி அதில் மக்கிய சாண எருவையோ மக்கிய குப்பையையோ கொட்டி மரம் நடும் முறையை விளக்கிச் சொல்வது. நவாஹத்தின் ஒன்பதாவது நாள் மக்கள் பெருமளவு கூடும் விதத்தில் கூடுகை ஏற்பாடு செய்து அன்றும் மரம் நடும் முறையை விளக்குவது. மக்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் அளிப்பது. அவை வளர்வதை உறுதி செய்வது. பராமரிப்பு குறைவாக இருந்தால் சிறிய அளவில் மாற்றித் தந்து துணை நிற்பது. நன்றாக எல்லாரும் வளர்க்கையில் அவர்கள் விரும்பும் கன்றுகள் எத்தனை என்று கேட்டு அவற்றையும் அளிப்பது. இவை அனைத்தும் நிறைவு பெற்றதும் கிராமத்தின் பொது இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது. 

கீழ்க்காணும் வரிசையில் செயல்கள் நிகழ்த்த திட்டமிட்டுள்ளேன். 

1. டோக்கன் வினியோகம். டோக்கன் வினியோகத்தின் போதே இராமாயண நவாஹம் துவங்கும் நாளையும் ஸ்ரீராமர் பட்டாபிஷேக நாளையும் கூறி நவாஹத்துக்கு அனைவரையும் அழைத்தல். 

2. ஒவ்வொரு வீடாகச் சென்று மரக்கன்றுகள் நடும் முறையை விளக்குதல்

3. ஸ்ரீராமர் பட்டாபிஷேக தினத்தன்று சமபந்தி போஜனம் ஏற்பாடு செய்வது. அப்போதே மரக்கன்றுகளை மக்களுக்கு வழங்குவது. 

4. மரக்கன்றுகள் வளர்ச்சியை கண்காணிப்பது. 

5. கூடுதலாக மரக்கன்றுகள் வேண்டும் என்பவர்களுக்கு வழங்குதல்

6. கிராமத்தின் பொது இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்த்தல். 

Monday, 28 July 2025

ஆங்கிலம் (நகைச்சுவைக் கட்டுரை)

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள் அனைவருக்குமே ஆங்கிலம் தெரியும். இதில் ஒரு சுவாரசியம் என்னவெனில் ஆங்கிலத்தில் பேசுவதை விட ஆங்கிலத்தில் எழுதத் தெரிந்திருப்பார்கள். ஆனால் ஆங்கிலத்தில் ஏதேனும் எழுதுவதற்கான தேவை எழாது. எனவே அவர்களின் ஆங்கிலம் தூரமான ஆழம் ஒன்றில் இருக்கும். ஒரு மொழியைப் பேச அந்த மொழி அதிகம் காதில் கேட்கும் சூழ்நிலையில் இருக்க வேண்டும். ஒருவர் இன்னொருவர் இன்னொருவர் என பலர் அந்த மொழியை விதவிதமாக உச்சரிப்பதிலிருந்து நாம் நமக்கான உச்சரிப்பை தொனியை உருவாக்கிக் கொள்ள முடியும். ஒருவர் பேசுவதைப் நாம் புரிந்து கொள்வது என்பது மொழியை உச்சரிக்கும் விதத்திலிருந்து உச்சரிப்பவரின் உணர்வைப் புரிந்து கொள்வது என்பதே. நாம் பதிலளிப்பது என்பதும் அவர் வெளிப்படுத்தும் உணர்வை நாம் எவ்விதம் எதிர்கொள்கிறோம் என்பதும் அதற்கு என்ன சொல்லில் பதில் சொல்கிறோம் என்பதும் தான். சில நாட்களுக்கு முன்னால் ஒருவர் தன்னிடம் பணி புரிபவரிடம் ‘’Remember ! Your life is in my hand'' என்று கோபமாகச் சொன்னார்.  ’’உன்னுடைய உத்யோகம் என் கையில் இருக்கிறது’’ என்பதுதான் அவர் சொல்ல வந்தது. தமிழில் ‘’உன் வாழ்க்கை என் கையில் இருக்கிறது ‘’ என்று அவர் சொல்லியிருந்தால் ஒருவேளை பணி புரிபவர் ‘’சார்! என்னோட உத்யோகம் தான் உங்கள் கையில் இருக்கு. என் வாழ்க்கை எப்படி உங்கள் கையில் இருக்கும்?’’ என்று கேட்டிருப்பார். இலக்கணத்தில் ஆகுபெயர் என ஒன்றை பள்ளி நாட்களில் படித்த்திருக்கிறேன். ’’ஊர் மகிழ்ந்தது’’ என்ற கூற்றில் ஊர் என்பது ஊரில் இருக்கும் மக்களைக் குறிக்கும். ஊர் என்பது அஃறிணை. உயர்திணையாகிய மாந்தர் மட்டுமே மகிழ்ச்சி என்னும் உணர்வை அடைய முடியும். இங்கே ஊர் என்னும் அஃறிணை ஊரில் இருக்கும் மனிதர்கள் என்னும் பொருளில் ஆகி வந்ததால் இங்கே ஊர் என்பது ஆகுபெயர். இங்கே அனைவருக்குமே ஆங்கிலம் அன்னியமான மொழி என்பதால் ஒரு விஷயத்தை கறாராக வரையறுத்து எழுத ஆங்கிலம் உபயோகமாக இருப்பது உண்டு. சங்கடமான ஒரு விஷயத்தை சற்றே மென்மையாகத் தெரிவிக்க ஆங்கிலம் உதவுவதுண்டு. அதன் காரணம் என்னவெனில் , ஆங்கிலத்தில் பேசும் போது சொந்த மொழியில் பேசுவது போல உணர்வு 100 சதவீதம் இணைந்திருக்காது. 90 சதவீதம் அல்லது 80 சதவீதம் மட்டுமே இணையும். கிடைக்கும் மீதி இடைவெளியில் உணர்வை மட்டுப்படுத்திட முடியும். மொழியில் எழுத மூளையின் குறிப்பிட்ட சில பகுதிகள் செயல்படுகின்றன. மொழியில் பேச மூளையின் வேறு சில பகுதிகள் செயல்படுகின்றன. பாடும் திறன் கொண்ட ஒருவர் மூளையின் பேச்சுக்கான பகுதியையோ எழுத்துக்கான பகுதியையோ பயன்படுத்துவதில்லை . பாடும் திறனுக்கு இவை இரண்டும் இல்லாத வேறு பகுதிகள் இருக்கின்றன. எனவே தான் சிறப்பாகப் பாடும் ஒருவரின் பேச்சு கோர்வையாக நேர்த்தியாக இல்லாமல் சாதாரணமாக இருப்பதைக் காணலாம். தமிழகம் பிரிட்டிஷ் ஆங்கிலத்தின் தாக்கம் அதிகம் கொண்ட பகுதி. எனவே ஆங்கிலம் என்றாலே பிரிட்டிஷ் ஆங்கிலம் என்றே நாம் எண்ணுகிறோம். சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்னால் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை நான் தீவிரமாக வாசித்தேன். ஒன்றிலிருந்து இன்னொன்று என. அப்போது எனக்குத் தோன்றியது ஆங்கிலம் என்னும் மொழியின் பல சொற்றொடர்கள் பிரயோகங்கள் பதங்கள் ஷேக்ஸ்பியர் எழுதியவை. எண்ண எண்ண வியப்பளிப்பது. ‘’All the scents of Arabia will not sweeten the little hand''  எளிய சொற்கள். தனித்தனியே பார்க்கும் போது பத்து தனி சொற்கள். அதில் ஒரே சொல் இரண்டு இடத்தில் வருகிறது. அவ்வாறெனில் ஒன்பது சொற்கள். ‘’All the scents of Arabia'' வையும் ‘’the little hand'' ஐயும் ஒரே சொல்லாகக் கருத முடியும். அவ்வாறெனில் ஐந்து சொற்கள். இந்த வாக்கியம் கொடுக்கும் வாசிப்பு அனுபவம் என்பது எத்தனை பெரியது. எனக்கு எட்டு வயது இருந்த போது ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அங்கே அத்தர் தெளித்து வரவேற்றார்கள். அத்தர் தெளிப்பதற்கென்றே ஒருவர் இருந்தார். அந்த வாசனை என்னைப் பரவசப்படுத்தியது. அந்த திருமண நிகழ்வில் மங்கள இசை, ஹோமம், சடங்குகள் என அத்தனை அம்சங்கள் இருப்பினும் அத்தர் தெளித்து வரவேற்றது எனக்கு புதிதாக இருந்தது.  சிறுவனான எனக்கு எப்படி அந்த மிகச் சிறு துளியான அத்தர் அத்தனை மணி நேரம் நறுமணம் அளித்துக் கொண்டிருக்க முடியும் என்ற ஆச்சர்யத்தை அளித்துக் கொண்டேயிருந்தது. ஷேக்ஸ்பியரின் இந்த வரியை அந்த ஒரு அத்தர் துளியிலிருந்தே திறக்கத் தொடங்கினேன். ‘’All the scents of Arabia'' . அரேபிய வாசனைத் திரவியங்கள் நூற்றுக்கணக்கானவை. ஆயிரக்கணக்கானவை. அவை அத்தனையும் கொண்டு கழுவினாலும் அவள் சிறு கரத்தை வாசனைப்படுத்த முடியாது. பிரமித்துப் போய் விட்டேன். ஷேக்ஸ்பியரின் ஆங்கிலம் குறித்து நான் ஒரு பதிவை எழுதினேன். ஆங்கிலமே தெரியாதவர்களிடம் கூட ஷேக்ஸ்பியர் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். 

எந்த மொழியையும் பேசுவது என்பது ஒரு பழக்கம். நம்முடைய சுபாவத்துடன் சிந்தனையுடன் மனநிலையுடன் அதனை இணைத்துக் கொள்ள வேண்டும். முன்னாள் பாரதப் பிரதமர் நரசிம்ம ராவ் ஆறு மொழிகள் பேசத் தெரிந்தவர். ஆறு மொழியிலும் மௌனமாகவும் இருக்கத் தெரிந்தவர் ! சமீபத்தில் ஆந்திர நிலத்தில் ரயில் பயணம் மேற்கொண்ட போது சந்தித்த வங்காள இளைஞனிடம் நீண்ட நேரம் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தேன். அடர்த்தியான பல விஷயங்கள். பிரிய மனமில்லாமல் இருவரும் பிரிந்தோம். அந்த ஆங்கிலம் எப்படி அந்த தருணத்தில் வெளிப்பட்டது ? பின்னர் எங்கே சென்றது ? நூல் வாசிக்கும் போது மனதுக்குள் துடிப்பாய் இருக்கும் ஆங்கிலம் பின்னர் எங்கே இருக்கிறது ? 

நமது மரபு கல்விக் கடவுளான சரஸ்வதி ஒரு கையில் அட்சரமாலையை ஏந்தியிருப்பார் என்கிறது. அவருடைய அட்சர மாலையில் உலகில் இருக்கும் எல்லா மொழிகளின் அட்சரமும் இருக்கும் !

பெருநிகழ்வு

பெருநிகழ்வான பொது நிகழ்ச்சி ஒன்றுக்கான ஏற்பாடுகள் நிகழ்வதை பத்து நாட்களாக நாளின் கணிசமான நேரத்தை அளித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். கட்டுமானம் என்னுடைய தொழில் என்பதால் பணிகள் நிகழும் எந்த இடத்தில் இருந்தாலும் பணி புரிபவர்களில் யார் ஆர்வத்துடன் பணி புரிகிறார்கள் யாருக்கு ஆர்வமில்லை எவருக்கு நிகழ்வுகளில் விருப்பமும் மகிழ்ச்சியும் இருக்கிறது யாருக்கு அவை இல்லை என்பதை எளிதில் அவதானித்து விட முடியும். இது நீண்ட நாட்கள் ஒரே விதமான பணியை மேற்கொள்வதால் ஏற்படும் உள்ளுணர்வு. அந்த உள்ளுணர்வு ஒரு துவக்கப் புள்ளியே. ஒவ்வொரு சூழ்நிலையிலும் அதனைத் துவக்கமாகக் கொண்டு அங்குள்ள பொருள், ஏவல் ஆகியவற்றின் பின்னணியில் விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் பல வருடம் அனுபவம் கொண்டிருக்கிறோமே என எண்ணி விடக்கூடாது. சூழல் நாம் இதுவரை எதிர்கொண்டிராத ஒரு விஷயத்தை நம் முன் கொண்டு வந்து நிறுத்தும். எனது கல்லூரிப் பேராசிரியர் எங்களிடம் ஒன்று சொல்வார் : ‘’The college will teach you to solve ''n'' number of problems But you have to face ''n+1'' number of problem in real life'' என்பார்.  பொது நிகழ்ச்சி ஏற்பாடுகளில் அரசின் பல்வேறு துறைகளின் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. துறை எதுவாயினும் பணிகளைப் புரிவது தொழிலாளர்களே. அவர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் காலவரையறைக்குள் பணிகளைச் செய்ய முயல்கின்றனர். சமயத்தில் சில பணிகள் கெடுவைத் தாண்டி விடுகிறது. அவை மற்ற பணிகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பின்னர் அவை சரிசெய்யப்படுகின்றன. இந்த இந்த பணிகள் எனக் கூறி விட்டு அதை இவ்விதம் செய்ய வேண்டும் என துல்லியமான குறிப்புகள் அளிக்காமல் மேலோட்டமாகவே குறிப்புகள் அளித்து விட்டு சிக்கல் என ஏதேனும் உருவாகி வந்தால் அவற்றைத் தீர்க்கும் விதத்தைக் கூறி விஷயங்களை முன்நகர்த்துவது என்பது ஒரு நிர்வாக முறை. பெரிய அளவில் அது உபயோகமானதும் வேலை செய்வதும்   ஆன முறை ஆகும். நமது மாநிலத்தில் அரசாங்கம், தனியார் என எல்லாவற்றிலும் பெரும்பாலும் இந்த முறையே வழக்கத்தில் உள்ளது. நிறைய பேர் ஒரு இடத்தில் கூடும் போது மனிதர்கள் அடையும் மகிழ்ச்சி என ஒன்று இருக்கிறது. இந்த மகிழ்ச்சி மனிதனுக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. ஒன்று கூடுகையில் ஒத்திசைவின் சுருதியுடன் நுண்ணியதிலும் நுண்ணியதான நுண்கணப் பொழுது மனிதர்கள் இணைகிறார்கள். அந்த நுண் கணம் அளிக்கும் பரவசத்துக்காகவே மனிதர்கள் கூடுகைகளை விரும்புகிறார்கள். இயற்கை வானத்திலும் பெரிய வானங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கையிலும் அணுவிலும் அணுவாகவும் இருக்கிறது. அருமணியொன்று இயற்கையின் சௌந்தர்ய வெளிப்பாடாக இருக்கும் அதே வேளையில் மனித விழைவின் அடையாளமாகவும் ஆகிறது. எவ்விதமான லௌகிகமாயினும் அதற்கு இந்த எல்லை உண்டு. அந்த எல்லையை உணர்ந்து கொள் ; உணர்ந்து கொள் என்றே மானுட இனத்திடம் நம் மரபும் ஞானமும் அனாதி காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறது. 

ஒரு ஹாஸ்யமான சம்பவம். ராஜாஜியிடம் ஒரு முறை கேட்டார்கள். பொது விஷயம் குறித்து இரு தரப்புகள் இருக்கும் நிலையில் எதைச் செய்வது என்று எப்படி முடிவெடுப்பது என. அதற்கு ராஜாஜி சொன்ன பதில் : ‘’அந்த விஷயத்தை கம்யூனிஸ்டுகளிடம் சொல். அவர்கள் செய் என்று சொன்னால் அதனை நிச்சயம் செய்யக் கூடாது ; அவர்கள் செய்யக் கூடாது என்று சொன்னால் உடனே செய்ய வேண்டும்.’’. கட்டுமானத் துறையில் இருப்பவர்களுக்கு ஒரு விஷயம் தெரியும். தொழிலாளர்கள் ஒரு விஷயத்தைச் சொன்னால் அது பணி ஒருங்கிணைப்பாளர்களுக்கு நெருக்கடியை உண்டாக்கும் ஒன்றாகவே இருக்கும். அனுபவம் உள்ள பணி ஒருங்கிணைப்பாளர்கள் தொழிலாளர் கூற்றிலிருந்து உருவாக வாய்ப்புள்ள நெருக்கடி என்ன என்பதைப் புரிந்து கொள்வார்கள். அந்த நெருக்கடி ஏற்படா வண்ணம் திட்டமிட்டுக் கொள்வார்கள். பணியாளர்கள் உடல் உழைப்பைக் கொடுக்கும் நிலையில் இருப்பவர்கள். பணிகள் சடுதியில் நிகழ வேண்டும் என ஒருங்கிணைப்பாளர்கள் எதிர்பார்ப்பார்கள். அவ்விதம் நிகழ வேண்டும் எனில் கூடுதலாக ஒரு பணியாளரையோ இரு பணியாளர்களையோ சில பணியாளர்களையோ இணைத்துக் கொள்ள வேண்டும் என பணியாளர்கள் சொல்ல வேண்டும். ஆனால் அவ்விதம் அவர்கள் கூற மாட்டார்கள். கெடு நெருங்கும் போது அந்த முடிவை ஒருங்கிணைப்பாளர்கள் எடுக்கட்டும் என பணியாளர்கள் நினைப்பார்கள். தொழிலாளர்கள் பணி உரிய காலத்தில் நிகழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தங்கள் உடல் உழைப்பை மேலும் கோரப்போகும் செயல் என்றே புரிந்து கொள்வார்கள். தங்கள் ஒத்துழையாமையை மறைமுகமாக வெளிப்படுத்துவார்கள். இந்த சிக்கல்கள் அனைத்தையும் தாண்டி ஒரு விஷயம் இருக்கிறது. அது என்னவெனில் பணிகள் முற்றிலும் நிகழாமல் நின்று கொண்டிருக்கக் கூடாது ; ஏதேனும் சிறிதாகவோ பெரிதாகவோ நடந்து கொண்டிருக்க வேண்டும். நூற்றுக்கணக்கானோர் இணைந்து பணியாற்றும் போது எதிர்பாரா கணம் ஒன்றில் ஒரு ஒத்திசைவு ஏற்பட வாய்ப்புண்டு. அந்த ஒத்திசைவு பெரும் அற்புதங்களை நிகழ்த்தி விடும். பணிகளில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்கள், பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்பார்கள் என அனைவரும் ஆழ்மனத்தில் இதனை அறிந்திருப்பார்கள். எனவே அக்கணம் நோக்கி முன்னேறிச் சென்ற வண்ணம் இருப்பார்கள். 

அறிவும் பிரக்ஞையும் மனிதர்கள் அனைவரிடமும் இருப்பவை. எனவே விஷயம் எதுவாயினும் அதனை விளக்கிச் சொல்லி புரிய வைத்து விழிப்புணர்வை உண்டாக்கி மனிதர்களை இணைக்க முடியும் என நான் நம்புகிறேன். உணரவும் செய்கிறேன். இந்த அடிப்படையிலேயே எனது செயல்பாடுகளை அமைத்துக் கொள்கிறேன்.   

Saturday, 26 July 2025

வாழ்த்துக்கள் பிரதமர்!

இந்தியா விவசாய தேசம். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தியாவின் முக்கிய தொழிலாக விவசாயமே இருந்திருக்கிறது. இன்றும் நாட்டில் கோடிக்கணக்கான மக்களின் தொழில் விவசாயமே. இத்தனை கோடி விவசாயிகள் உலகில் வேறு எங்கும் இருப்பார்களா என்பது ஐயம். ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவே இந்தியாவில் சிறு விவசாயிகளும் குறு விவசாயிகளும் மிக அதிகம். ஒருவரிடம் இன்றைய கணக்கில் ஒரு ஏக்கர் நிலம் இருந்தால் கூட அவரால் ஐந்திலிருந்து ஆறு பேர் கொண்ட குடும்பத்துக்கான உணவை விளைவித்துக் கொண்டு வாழ்ந்து விட முடியும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இவ்விதமே கோடிக்கணக்கானோருக்கு நம் நாட்டில் வாழ்க்கை நிகழ்கிறது.  அதே போல் நம் நாட்டில் சிறு தொழில் புரிபவர்கள் அதிகம். விவசாயிகளும் சிறு தொழில் புரிபவர்களும் இணைந்து கிராமத்தில் வாழும் வாழ்க்கை முறையே நம் நாட்டின் வாழ்க்கை முறை. இந்த அமைப்பில் உழைப்புச் சுரண்டல் என்பது மிக மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். இயற்கையைச் சுரண்டும் பெருந்தொழில்கள் நிகழும் போது மட்டுமே மனிதர்கள் மிகப் பெரிய அளவில் சுரண்டப்படுவார்கள் என்பதை உலக வரலாறு எடுத்துக் காட்டுகிறது. 

கிராமங்களே இந்த நாட்டின் ஆன்மா. பேரரசுகள் இங்கே உருவான போது கூட அவை தன் அடித்தளமாய் கொண்டது கிராமங்களையே. கூர்ந்து கவனித்தால் இன்றும் நம் நாட்டு மக்களின் அகம் ஒரு கிராமவாசியின் அகமே என்பதைக் காண முடியும். நாட்டின் ஐயாயிரம் ஆண்டு வரலாற்றில் எவ்வளவோ விஷயங்கள் நிகழ்ந்துள்ளன. இன்றும் நம் நாட்டின் அடிப்படைத்தன்மை பெருமளவில் மாறாமல் இருப்பதற்கு காரணம் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டிருக்கும் கிராமவாசிகளே. கிராமங்களிலும் நகரங்களிலும் சிறிய மூலதனத்தில் சிறிய தொழில் செய்பவர்களே. இந்தியப் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள இந்த விஷயத்தைப் புரிந்து கொள்வது அவசியம். இந்த புரிதலிலிருந்தே எனது இந்திய அரசியல் குறித்த புரிதலை உருவாக்கிக் கொள்கிறேன். 

எனது அரசியல் நிலைப்பாடு என்ன ? கோடானுகோடி மக்கள் வாழும் இந்திய ஜனநாயகத்தில் ஒரு தனிமனிதன் கொள்ளும் நிலைப்பாடு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தோன்றலாம். ஜனநாயகம் ஒரே ஒரு குடிமகன் கூட சுதந்திரமாக சிந்திக்கவும் தான் சிந்தித்ததை சுதந்திரமாக வெளிப்படுத்தவும் அதனை நோக்கிச் செல்லவும் உரிமை கொண்டவன் என்பதை அங்கீகரிக்கிறது. ஜனநாயகத்தின் சிறப்பே அதுதான். நம் நாடு பழக்கமாய் கொண்டிருக்கும் கிராம அமைப்பு என்பதும் அதுவே. எனது அரசியல் நிலைப்பாட்டை இந்த இடத்திலிருந்தே இந்த புரிதலிலிருந்தே உருவாக்கிக் கொள்கிறேன். எனது அரசியல் நிலைப்பாடை இவ்விதம் சுருக்கமாகக் கூறலாம் : கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை இந்த நாடு சிறு விவசாயிகளின் சிறு தொழில் புரிபவர்களின் நாடு. இந்த சிறு விவசாயிகளும் இந்த சிறு தொழில் புரிபவர்களுமே நம் நாட்டின் பண்பாட்டை ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் காத்து வந்துள்ளனர். சிறு விவசாயிகளையும் சிறு தொழில் புரிபவர்களையும் கிராம அளவிலிருந்து தேச அளவு வரை இணைக்கும் அரசியலே எனது அரசியல் நிலைப்பாடு. 

மகாபாரத காலத்திலிருந்து கூட இந்த விஷயத்தைத் தொடங்க முடியும் என்றாலும் கூட ஒரு புரிதலுக்காக மகாத்மா காந்தியிடமிருந்து துவங்குகிறேன். மகாத்மா ஓர் அரசியல்வாதியாக விவசாயிக்குப் பயன்படும் வகையில் பருத்தி ஆடைகளை தேசத்தவர் அணிய வேண்டும் என்றார். அதனை கைத்தறியில் நெய்து அணிய வேண்டும் என்றார். கோடானுகோடி விவசாயிகளுக்கும் சிறு தொழில் செய்யும் நெசவாளர்களுக்கும் அது பயன் தரும் என்பதால் நாட்டு மக்கள் அந்த விழிப்புண்ர்வை அடைய வேண்டும் என வாழ்நாள் முழுவதும் அதனைத் தன் அரசியலாக முன்வைத்தார். சிந்திக்கும் திறன் கொண்ட மனிதன் இன்னொரு மனிதனை தனக்காக கசக்கிப் பிசைந்து உழைக்க வைக்க மாட்டான் என்பதையும்  பணியாளனும் உரிமையாளனும் சூழலைப் புரிந்து கொண்டு உழைப்பையும் ஊதியத்தையும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என்பதையும் முன்வைத்தவர் காந்தி. தேசியம் என்பதை இவ்விதமாகவே புரிந்து கொள்கிறேன். இந்த தேசியத்தையே நான் விரும்புகிறேன் ; முன்வைக்கிறேன். நம் நாட்டின் சிறு விவசாயிக்கும் சிறு தொழில் புரிபவருக்கும் துணை நிற்கும் அரசியலே எனது அரசியல் நிலைப்பாடு. இந்த அடிப்படையிலேயே நான் இந்திய அரசியலைப் பார்க்கிறேன். 

காங்கிரஸ் நாட்டின் முதல் தேசியக் கட்சி. நூற்றுக்கணக்கான தேசியவாதிகளை நாட்டுக்கு வழங்கியிருக்கும் கட்சி. பால கங்காதர திலகர், மகாத்மா காந்தி, வல்லபாய் படேல், பாரதி, ராஜாஜி, கோகலே ... சொல்லிக் கொண்டே போகலாம். இந்த நிரையிலும் காந்தியால் ஈர்க்கப்பட்டு சமூக மாற்றத்துக்காக செயலாற்றியவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள். இவர்களே நம் நாட்டை நம் மக்களை நம் பண்பாட்டை மீட்டெடுத்தவர்கள். அவர்கள் முன்வைத்த இந்திய தேசியத்தின் மீது பெரும் பற்று கொண்டவன் நான். 

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டின் பிரதமர் ஆக பதவியேற்பவர் எவராயினும் அவர் நாட்டு மக்களைத் தன் குழந்தைகளாய் எண்ணும் உணர்வுக்கு ஆளாவார் என்று நான் அவ்வப்போது எண்ணுவதுண்டு. இது ஒரு அகவய உணர்வே. நாட்டின் பிரதமர் ஒரு அரசியல் கட்சியை நடத்துபவரும் கூட ; ஜனநாயகம் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே பிரதமர் பதவியை வழங்குகிறது . மீண்டும் கோடிக்கணக்கான மக்களைச் சந்திக்க வேண்டும். கோடிக்கணக்கான மக்களுக்கு பல விஷயங்களைப் புரிய வைக்க வேண்டும். நாட்டின் பதவிகளிலேயே மிகப் பெரிய பதவி அது. இது அத்தனையும் அறிவேன் எனினும் நாட்டின் பிரதமர் நாட்டு மக்களைத் தன் குழந்தைகளாய் எண்ணும் உணர்வுக்கு ஆளாவார் என்றே எண்ணுகிறேன். 


ஜவகர்லால் நேரு நாட்டின் முதல் பிரதமர். காந்தியால் அடையாளம் காட்டப்பட்டவர். நான் ஜவஹர்லால் நேருவின் சுயசரிதையை வாசித்திருக்கிறேன். வறிய நிலையில் பலவிதமான கொதிப்புகளுடன் இருந்த தேசத்தை மூன்று ஆட்சிக் காலம் வழிநடத்தியவர் நேரு. தேச நிர்வாகம் எவ்விதம் நிகழ வேண்டும் என்னும் பாதையை உருவாக்கியவர் நேரு. அதிகார வர்க்கம் இன்னும் அந்த திசையிலேயே நடந்து கொண்டிருக்கிறது. நேரு செய்த நற்செயல்கள் பலவற்றின் மீது எனக்கு மதிப்பு உண்டு. சாகித்ய அகாதெமியும் நேஷனல் புக் டிரஸ்ட்டும் அவரால் உருவாக்கப்பட்டவை. தேசம் என்னும் கனவை கோடானுகோடி மக்களுக்கு தம் சொற்களால் உண்டாக்கியவர் நேரு. அவருக்கு மார்க்சியம் மீது ஈடுபாடு இருந்தது. அதன் அடிப்படையில் அவர் மக்களுக்கான பல விஷயங்களை திட்டமிட்டார். அவை போதிய பலனைத் தரவில்லை. மார்க்சியத்தின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையே அவரை சீனாவை ஐயமின்றி நம்ப வைத்தது. ஏகாதிபத்திய சீனா நம் முதுகில் குத்தி நம்மை ஆக்கிரமித்தது. அதற்கான விலையை நாம் இன்றும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். 


மிகக் குறைந்த காலம் நாட்டை வழிநடத்தினாலும் தனது உறுதியான ஆளுமைத்திறனால் நாட்டு மக்களிடம் பெரும் தாக்கம் ஏற்படுத்தியவர் லால்பகதூர் சாஸ்திரி. அவரது ‘’ஜெய் ஜவான் ஜெய் கிஸான்’’ என்னும் முழக்கம் ஒரு மந்திரத்தை ஒத்தது. ருஷ்யாவில் தாஷ்கண்டில் அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவருடைய மரணம் கம்யூனிச ருஷ்யாவில் நிகழ்ந்தது மேலும் ஐயங்களை எழுப்புவதாய் இருக்கிறது. நான் மிகவும் நேசிக்கும் ஒருவர் சாஸ்திரி. 


இந்திரா காந்தி. பெரும் ஆதரவையும் அதற்கு சமமான எதிர்ப்பையும் பெற்றவர் இந்திரா காந்தி. நம் நாட்டை உடைக்க தொடர்ந்து முயன்று வந்தது பாகிஸ்தான். இந்திரா ஒரு சரியான தருணத்தில் பாகிஸ்தானை உடைத்தார். ஒட்டு மொத்த நாடும் அவருக்குத் துணையாக நின்றது. அவர் கொண்டு வந்த நெருக்கடி நிலை நாட்டின் ஜனநாயகத்தை ஜனநாயகப் பண்புகளை ஜனநாயக மாண்புகளை குழியில் புதைக்கும் செயல். நெருக்கடி நிலை என்பது ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்ட எவராலும் எப்போதும் எந்நிலையிலும் ஏற்க முடியாத செயல். நாட்டின் சாமானிய குடிகள் - சிறு விவசாயிகளும் சிறு தொழில் புரிபவர்களுமான சாமானிய குடிகள் - இந்திரா சர்க்காரைத் தூக்கி வீசி ஜனநாயகத்தைக் காத்தனர். அவரது மகன் சஞ்சய் காந்தி ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அகாலி தள் அரசைக் கவிழ்க்க பிந்தரன்வாலேவை வளர்த்து விட்டார். பஞ்சாப்பின் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பிந்தரன்வாலேயின் பயங்கரவாதத்துக்கு பலியாயினர். சஞ்சய் வளர்த்த பயங்கரவாதம் இந்திராவைக் காவு வாங்கியது. 


மொரார்ஜி தேசாய் மகத்தான கண்ணியமான மனிதர். நாட்டின் கொள்கை உருவாக்கத்தில் அவர் முக்கியமான திருப்புமுனையை உண்டாக்கினார். நான் மிகவும் மதிக்கும் ஒருவர். 


நான் சிறுவனாயிருந்த போது ராஜிவ் காந்தி பிரதமராயிருந்தார். என்னுடைய ஆறு வயதில் அவரை சீர்காழியில் கடைவீதியில் பார்த்தேன். ஜீப்பை ஓட்டிக் கொண்டு வந்தார். அவரைப் பார்த்தது நன்றாக நினைவிருக்கிறது. பின்னர் ஒருமுறை கும்பகோணத்தில் பார்த்தேன். எனக்கு 10 வயது இருந்த போது பயங்கரவாதிகளால் சென்னை அருகே கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டதும் கொல்லப்பட்ட விதமும் என்னால் இன்றும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது அரசியல் மீது எனக்கு விமர்சனங்கள் தீவிரமாக உண்டு. 


நரசிம்ம ராவ் நான் மிகவும் விரும்பும் பிரதமர். அறிஞரும் அரசியல்வாதியும் ஆனவர். சிறந்த ராஜதந்திரி. நாட்டின் பொருளாதாரத்தைக் காத்தவர். அவர் தொடர்ந்து காங்கிரஸை வழிநடத்தியிருக்க வேண்டும். நேரு இந்திரா குடும்ப வாரிசு அரசியல் அவருக்கு பல நெருக்கடிகளைக் கொடுத்தது. 


தேவ கௌட விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர். மாநில அரசியலிலிருந்து தேசிய அரசியலுக்குச் சென்றவர். 


வாஜ்பாய் என்றால் சாலைகள். சாலைகள் என்றால் வாஜ்பாய். நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு என்னும் விஷயத்துக்கான பெரும் கனவொன்றை நாட்டு மக்களுக்கு அளித்தவர் வாஜ்பாய். தங்க நாற்கரத் திட்டமும் கிராம சாலைகள் திட்டமும் அவரது புகழை எப்போதும் பறைசாற்றும். 


பொருளியல் அறிஞரும் திட்ட கமிஷன் துணைத் தலைவராகவும் இருந்து பின்னர் நிதியமைச்சராகவும் இருந்து நாட்டின் பிரதமராகவும் இருந்தவர் மன்மோகன் சிங்.  அவர் நிதியமைச்சராக இருந்த போது பூம்புகாருக்கு வந்திருக்கிறார். அங்கே அவரைப் பார்த்திருக்கிறேன்.


ஒரு சாமானியக் குடும்பத்தில் பிறந்து சிறு வயதில் குடும்பத்துக்கு உதவ பகுதி நேரமாக தேனீர் விற்று நாடெங்கும் அலைந்து திரிந்து தேர்தல் அரசியலும் அதிகார அரசியலிலும் நேரடியாகப் பங்கெடுக்காமல் தனது 51 வது வயதில் மாநில முதலமைச்சராக பதவியேற்றவர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி. அவரைப் போல தனிப்பட்ட முறையில் வசை பாடப்பட்ட இன்னொரு அரசியல்வாதி இல்லை. குஜராத் மாநில முதல்வராக பல ஆண்டுகள் பதவி வகித்த அவரை ‘’தேனீர் விற்பதற்கு மட்டுமே தகுதி கொண்டவர்’’ என்றார் ஒரு காங்கிரஸ் தலைவர். ’’நீசன்’’ என வசைபாடினார் நேரு குடும்ப வாரிசு ஒருவர். 2014ம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றார். 2014, 2019,2024 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை தொடர்ச்சியாக தேர்தலில் வென்று ஜவஹர்லால் நேரு செய்த சாதனையை சமன் செய்திருக்கிறார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை துணிச்சலுடன் நீக்கியவர் மோடி. நாடெங்கும் சாலைகள் ,விமான நிலையங்கள் முதலிய அடிப்படைக் கட்டுமானப் பணிகளை மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து அமைத்தவர் மோடி. நாட்டின் வட கிழக்கு மாநிலங்களில் இந்த 11 ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கும் சாலைப் பணிகள் பிரமிக்கத்தக்கவை. 4078 நாட்கள் நாட்டின் பிரதமராயிருந்து நீண்ட நாட்கள் நாட்டின் பிரதமராயிருந்தவர் என்னும் பெருமையைப் பெற்றிருக்கிறார் மோடி. இது இந்திய ஜனநாயக முறையின் பெருமையும் கூட. வாழ்த்துக்கள் பிரதமர் !   

Friday, 25 July 2025

ஜெய் ஜவான்

இன்று காலை ’’அதிகாரமும் மதிப்பும்’’ என்ற பதிவை எழுதினேன். இன்று மாலை இரு சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த போது காலை எழுதிய பதிவில் ஒரு முக்கிய விஷயம் விடுபட்டிருப்பதை உணர்ந்தேன். அது எவ்விதம் விடுபட்டுப் போனது என்று ஆச்சர்யப்பட்டேன். பின்னர் அந்த விஷயம் விடுபட்டுப் போனதற்கான காரணம் என்ன என்பதைப் புரிந்து கொண்டேன்.  

நீங்கள் அரசு அலுவலகம் சென்றிருக்கிறீர்களா என்ற வினாவுடனேயே எனது பதிவைத் துவக்கினேன். குடிமக்கள் எவரும் செல்லாத ஒரு துறை இருக்கிறது. அந்த துறையில் லட்சக்கணக்கானோர் பணி புரிகின்றனர். தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணிக்காலம் முழுவதும் பணி புரிகின்றனர். உலகின் பெரும் பொருளியல் சக்திகள் தங்கள் வணிக நோக்கங்களுக்காக நாடு பிடிக்கும் பேராசையைத் தடுத்து நிறுத்துகின்றனர். இந்திய இராணுவம் இந்திய அரசுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டது. ராணுவம் எல்லையில் நாட்டைக் காப்பதால் மட்டுமே நாம் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

சாமானியத்தின் அளவீடுகளால் மதிப்பிட முடியாதது இந்திய ராணுவம்.  

கருவறை

 நேற்று அதிகாலையிலேயே விழித்து விட்டேன். காவிரியிலிருந்து 3 நிமிட நடைப்பயண தூரத்தில் இருக்கிறது வீடு. காவிரியில் நீராடக் கிளம்பிச் சென்றேன். அடர்ந்திருந்தது அதிகாலை கருக்கல்.  படித்துறையின் படிகள் ஏதும் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. தோராயமாக அவற்றை தெளிந்து நதியில் இறங்கி மூழ்கினேன். அதிகாலை நேரத்தில் நதியில் மூழ்கும் போது நதி எப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது என்னும் உணர்வு ஏற்பட்டது. நதி யாருக்காகவும் எதற்காகவும் தன்னை மாற்றிக் கொள்வதில்லை ; மேன்மைகளே அதன் இயல்பெனினும் தன் இயல்பை சுபாவத்தை இயற்கையை யார் இருப்பினும் இல்லாமல் இருப்பினும் ஆற்றிய வண்ணம் இருக்கிறது. நதியில் மூழ்கிய பின் வீட்டுக்கு வந்து கிளம்பி கங்கை கொண்ட சோழபுரம் சென்றேன். காலை 6 மணியிருக்கும். ஆலயம் அப்போது தான் திறக்கப்பட்டிருந்தது. கங்கை கொண்ட சோழபுரம் துவாரபாலகர் சிற்பங்கள் பெரியவை. அவை மனிதர்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்கின்றன. உள்ளே இருப்பவன் மிக மிகப் பெரியவன் என்று. 


கருவறை முன் சென்று நின்றேன். தெய்வ சன்னிதி எப்போதும் இந்த உலகம் எவ்வளவு பெரியது என்பதை உணர்த்திக் கொண்டேயிருக்கிறது. அது பள்ளி கொண்ட பெருமாளாக இருந்தாலும் ; மகாலிங்கமாக இருந்தாலும். ஆலயத்தின் கருவறையைச் சுற்றி ஒரு உள்பிரகாரம் உண்டு ; பிரதட்சணமாக சுற்றி வரும் வகையில். அதில் பிரதட்சணம் செய்தேன். இடப்பக்கமாக சென்று வலப்பக்கம் திரும்பியதும் கருவறையில் ஏற்றப்பட்டிருந்த தீபத்தின் சிறு ஒளி முற்றிலும் நீங்கி விட்டது. முழுமையான இருள் எங்கும் நிரம்பியிருக்கிறது. கற்சுவரை பிடித்துக் கொண்டு மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தேன். முன்னர் விளக்குகள் சுடர்ந்து கொண்டிருக்கையில் பிரதட்சணம் செய்ததை நினைவில் கொண்டு வர முயன்றேன். சில நிமிடங்கள் கண்கள் இருளுக்குப் பழகட்டும் என முயன்று பார்த்தேன். கண்கள் முழுக்க இருளை மட்டுமே கண்டு கொண்டிருந்தன. மெல்ல நடந்து வலது பக்கம் சுவர் திரும்புவதை உணர்ந்து திரும்பினேன். சுவரைப் பற்றிய வண்ணமே நடந்தேன். பிரகதீஸ்வரர் கருவறையின் பின்பக்கத்தில் அப்போது இருந்தேன். விமானத்திலிருந்து சிறு ஒளி வரும் வகையில் கருவறை நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டேன். அந்த ஒளியின் சிறு கூறு உள்பிரகாரத்தின் பின்புறத்தில் தெரிந்தது. தொடர்ந்து நடந்து வலப்பக்கம் திரும்பி உள்பிரகாரத்தின் நான்காவது பாகத்தைக் கடந்தேன். சன்னிதிக்கு வந்து சேர்ந்தேன். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் ரங்கராஜன் யோக நித்திரையில் இருப்பதாக தொன்மங்கள் கூறுகின்றன. லிங்கேசன் பிரப்ஞ்சப் பெருவெளியின் மையத்தில் ஊழ்கத்தில் ஆழ்ந்திருக்கிறானா பிரபஞ்சங்களை உருவாக்கிக் கொண்டு ?

அதிகாரமும் நம்பிக்கையும்

நீங்கள் எந்த அரசு அலுவலகத்துக்காவது சென்றிருக்கிறீர்களா? அடிக்கடி சென்றிருக்கிறீர்களா? அடிக்கடி செல்ல நேரிடும் அரசு அலுவலகம் என்னவாக இருக்கும்? அரசு மருத்துவமனை கூட்டமாக இருக்கும்.வருவாய்த்துறை அலுவலகம் நிறைய மக்களால் நிறைந்திருக்கும்.  இப்போது போக்குவரத்துத்துறை அலுவலகங்களில் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களை பதிவு செய்யவும் வாகன ஓட்டுநர் உரிமம் பெறவும் அதிக அளவில் மக்கள் செல்கின்றனர். வங்கிகளுக்கு மக்கள் செல்கின்றனர். ரயில் நிலையத்துக்கும் அஞ்சல் அலுவலகத்துக்கும் மக்கள் அதிக அளவில் செல்கின்றனர். 

அரசு மருத்துவமனைகளின் ஊழியர்கள் பொதுமக்களை நடத்தும் விதம் திருப்திகரமாக இல்லை என்பதே பொதுவான பரவலான அவதானம். அரசு மருத்துவமனைகளுக்கு செயல்பாட்டின் அடிப்படையில் மதிப்பெண் அளிக்க வேண்டும் எனில் 100க்கு 10 மதிப்பெண் அளிக்கலாம். வருவாய்த்துறையின் செயல்பாடுகளுக்கு 100க்கு 1 மதிப்பெண் அளிக்கலாம். போக்குவரத்து துறைக்கும் 1/100 என்ற மதிப்பெண்ணே அளிக்க இயலும். வங்கிகள் அளிக்கும் வாடிக்கையாளர் சேவைக்கு மதிப்பெண் அளிக்க வேண்டும் எனில் நூற்றுக்கு 25 மதிப்பெண் அளிக்க இயலும். அஞ்சல் அலுவலகங்களின் செயல்பாட்டுக்கு நூற்றுக்கு 50 மதிப்பெண்ணும் ரயில்வே செயல்பாட்டுக்கு நூற்றுக்கு 50 மதிப்பெண்ணும் அளிக்க இயலும். எனது இந்த மதிப்பிடலை தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் பரிசீலித்துப் பார்த்தால் எவரும் சரியானது என்றே உணர்வார்கள். சாமானிய பொதுமக்கள் இந்த அரசுத்துறைகளைத் தாண்டி பெரிதாக வேறு எந்த அரசு அலுவலகத்துக்கும் செல்வது இல்லை ; செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வணிகர்களுடன் தொடர்புடைய அரசு அலுவலகங்கள் உள்ளன. விவசாயிகளுடன் தொடர்புடைய அலுவலகங்கள் உள்ளன. அவற்றுக்கு செல்பவர்களின் அனுபவங்களும் உவப்பானவை அல்ல. இந்த மதிப்பிடலில் 100க்கு ஐம்பது மதிப்பெண் மட்டுமே தேர்ச்சி அளவீடு என்று கொண்டால் அரசு மருத்துவமனைகளின் இயக்கத்தை மேலாண்மை செய்யும் பொது சுகாதாரத் துறை, நில ஆவணங்களை பராமரிக்கும் சான்றளிக்கும் வருவாய்த்துறை, வாகன சான்றிதழ்களை வழங்கும் போக்குவரத்துத் துறை ஆகியவை 50க்கு குறைவான மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சியடையாமல் உள்ளன. ரயில்வேயும் அஞ்சல்துறையும் குறைந்தபட்ச மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறுகின்றனர். இந்த பின்னணியில் நான் ஒரு விஷயத்தை சிந்தித்துப் பார்க்கிறேன். 

ஒரு அரசியல் கட்சியின் தலைவர் மீது பொதுமக்களுக்கு ஏன் பிரியம் இருக்கிறது ? இதனை இரண்டு விதமாகக் காண முடியும். உலகின் பல இடங்களில் உள்ள குகை ஓவியங்களைக் காணும் போது அதில் பறவை இறகை அணிகலனாகச் சூடிய மனிதக் கூட்டத்தின் தலைவனின் ஓவியங்கள் அதில் இருக்கின்றன. அப்போது மனிதர்களுக்குள் மொழி உருவாகியிருக்கவில்லை. எழுத்து உருவாகவில்லை. இந்நிலையில் மானுடம் இருந்த போது கூட கூட்டத்தின் தலைவன் மீது அவர்களுக்கு ஒரு ஆர்வம் இருந்திருக்கிறது. மானுடம் அதன் பின் எவ்வளவோ பெரிய அளவில் வளர்ந்து வந்திருக்கிறது. மொழி உருவானது. எழுத்து உருவானது. விவசாயம் செய்யத் தொடங்கினர். உலோகங்கள் கண்டுபிடித்தனர். அறிவுத்துறைகள் உருவாயின. பண்ட மாற்றம் நடந்தது. செல்வம் என ஒன்று உருவானது. இன்னும் எத்தனை எத்தனையோ மாற்றங்கள் ; வளர்ச்சிகள். இப்போதும் மனிதர்களை வழிநடத்தும் ஒருவர் மீது மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். மன்னராட்சியாக இருந்தாலும் ஜனநாயகமாக இருந்தாலும் சரி எந்த மன்னராலும் மக்கள் பிரதிநிதியாலும் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டிட முடியாது. அவர்கள் எண்ணிக்கையில் சிறிய ஒரு குழுவையே இயக்க முடியும். வரலாறெங்கும் இவ்விதமே நிகழ்கிறது. இதற்கு எவரும் விதிவிலக்கு இல்லை. 

நாட்டின் ஜனநாயகத்தில் அரசாங்கம் மக்களுக்கு அளிக்கும் சேவைகள் போதுமானதாக இல்லை என்பதை அரசுத்துறைகளுக்கு நாம் அளித்த மதிப்பெண்கள் மூலம் பார்த்தோம். மக்கள் அரசின் மீது திருப்தியாக இல்லை என்றாலும் ஏன் உயர் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் மீது பிரியம் வைக்கிறார்கள் என்பது ஆழமாக யோசிக்க வேண்டிய விஷயம். 

பொதுமக்கள் அதிகார வர்க்கத்தையும் அதன் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஜனநாயக மக்கள் பிரதிநிதியையும் நுட்பமாகப் பிரித்து புரிந்து வைத்திருக்கிறார்கள். தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஜனநாயக மக்கள் பிரதிநிதியை தங்களில் ஒருவராக உணர்கிறார்கள். அந்த உணர்வு கண்ணுக்குத் தெரியாதது. ஆனால் மிகப் பெரியது. ஜனநாயக அரசின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் ஒவ்வொரு நாளும் பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்க முடியாது ; அது சாத்தியம் அல்ல. எப்போதாவது அவரைக் காண வாய்ப்பு கிடைக்கும் போது மணிக்கணக்கில் காத்திருந்து உயர் பொறுப்பில் இருக்கும் ஜனநாயக மக்கள் பிரதிநிதியைக் காண்கிறார்கள். கையசைத்து தங்கள் மகிழ்ச்சியைப் பிரியத்தை தெரிவிக்கின்றனர். அந்த மகிழ்ச்சியும் பிரியமும் உண்மையானது. ஜனநாயகத்திற்கு முக்கியமானது. சாமானியன் ஜனநாயகம் மேல் கொண்டிருக்கும் நம்பிக்கையின் அடையாளம் அது. 

Monday, 21 July 2025

சமயம் பண்பாடு அரசு

நேற்று எனது நண்பர் ஒருவருடன் ஒரு விஷயம் குறித்து சிறு விவாதம் எழுந்தது. எனது நண்பரின் நண்பர் முன்வைத்த ஒரு பார்வையைக் குறித்து எங்களுக்குள் நிகழ்ந்த விவாதம் அது. அதாவது, எனது நண்பரின் நண்பர் முன்வைத்த ஒரு பார்வை என்னவெனில் அரசு என்னும் அமைப்பும் சமயம் என்னும் அமைப்பும் தனித்தனியே இருக்க வேண்டும். அரசின் இயங்குமுறையில் சமயம் இருக்கக்கூடாது ; சமயத்தின் இயங்குமுறையில் அரசு தலையிடக்கூடாது. பரவலாக ஒலிக்கும் இந்த அபிப்ராயம் மேற்பார்வைக்கு மிகச் சிறந்த ஒன்றெனத் தோற்றம் தரும் ; ஆனால் இதனை சிறந்த அபிப்ராயமாக கொள்ள முடியாமைக்குக் காரணம் இது அரசு சமயம் ஆகிய விஷயங்களை மிக மேம்போக்காக அணுகுகிறது ; புரிந்து கொள்கிறது என்பதே.  

நான் இந்திய நாட்டைச் சேர்ந்தவன். இந்த நாட்டில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எல்லா சமயங்களையும் வழிபாட்டு முறைகளையும் இறைவனை நோக்கிச் செல்லும் மார்க்கங்களாகக் கருதி அவற்றை சமமாகக் காணும் தன்மை என்பது உண்டு. இதனை வேதகாலத்திலிருந்தே நாம் காண முடியும். இதற்கான ஆதாரங்கள் வேதங்களிலேயே உள்ளன. வேதங்கள் என்பவை வெவ்வேறு விதமான குரல்களின் பிராத்தனைகளின் பார்வைகளின் தொகுப்பே. வேதம் நம் நாட்டில் உயிர்ப்புடன் இருக்கிறது. எனினும் வேதத்தில் குறிப்பிடப்படும் சில தெய்வங்களின் வழிபாடு இன்று வழக்கத்தில் இல்லை. இந்திர வழிபாடும், வருணனின் வழிபாடும் இன்று இல்லை. இஷ்ட தெய்வம் என்னும் படிமம் உலகிலேயே இருக்கக் கூடிய ஒரே இடம் நம் நாடே. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாண்டவர்கள் 5 பேரில் பீமன் ஆஞ்சனேயரை வழிபடுபவனாகவும் அர்ஜூனன் கிராத சிவனை வழிபடுபவனாகவும் சகாதேவன் பிரபஞ்சப் பேரிருப்பை தியானிக்கும் இயல்பு கொண்டவனாகவும் இருப்பதைக் காண முடியும். மகாபாரத காலத்திலேயே கிருஷ்ணனின் உறவினரான நேமிநாதர் சமண தீர்த்தங்கராக இருந்திருக்கிறார். இந்த அடிப்படைப் புரிதலிலிருந்து நாம் சமகாலம் குறித்த புரிதல்களை அடைவது இந்த விஷயங்களை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவும். 

உலக வரலாற்றிலிருந்து நாட்டின் வரலாற்றிலிருந்து பல விஷயங்களை எடுத்துக் காட்ட முடியும். எனினும் இந்தந்த கோணங்களில் சிந்தித்துப் பார்க்கலாம் என்பதற்கு சில விஷயங்களை மட்டும் கோடிட்டுக் காட்டுகிறேன். 

1. வித்யாரண்யர் ஒரு துறவி. மாலிக்காபூர் படையெடுப்புக்குப் பின் தென்னிந்தியா பேரிருளில் மூழ்கியிருந்தது. அப்போது அவர் ஹரிஹரர் , புக்கர் ஆகிய இரு சகோதரர்களிடம் நாடும் சமூகமும் பண்பாடும் இருள் சூழ்ந்து கிடக்கும் நிலையைச் சொல்லி அதனை மீட்டெடுப்பது சமூகக் கடமை என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார். அவரைத் தங்கள் ஆசானாக ஏற்று ஹரிஹர புக்க சகோதரர்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தை அமைக்கிறார்கள். அலை அலையென நம் நாட்டைத் தாக்கிய பல ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தென்னிந்தியாவையும் அதன் சமூகங்களையும் காத்தது விஜயநகர சாம்ராஜ்யமே என்பதை தென்னிந்தியாவை முழுக்க சுற்றிப் பார்த்தவர்கள் அறிவார்கள். 

2. குரு நானக் தோற்றுவித்த சீக்கிய சமயம் அமைதியையும் நல்லிணக்கத்தையும் முன்வைப்பது. மொகலாய ஆட்சியாளர்கள் அந்த சமூகத்தினரை தொடர்ந்து துன்புறுத்தினர். குரு கோவிந்த் சிங் தனது சமயத்தை தற்காத்துக் கொள்ள அதனை ஒரு போர்ச் சமூகமாக மாற்றினார். கேசம், கங்கணம். குறுவாள், நீள்வாள் ஆகியவை ஒரு சீக்கியன் உடலின் அங்கங்களைப் போல இணைந்தேயிருக்க வேண்டும் என்று கூறினார். குரு கோவிந்த் சிங் உருவாக்கிய போர் சமூகமான ‘’கால்சா’’ வே நம் நாட்டை பல நூற்றாண்டுகளுக்குக் காத்தது. இன்றும் நம் ராணுவத்தில் பெரும் எண்ணிக்கையில் இருந்து நம் நாட்டைக் காப்பவர்கள் சீக்கியர்கள். அதன் துவக்கம் குரு கோவிந்த் சிங். 

3. லோக மான்ய திலகர், மதன் மோகன் மாளவியா, மகாத்மா காந்தி ஆகிய பல காங்கிரஸ் தலைவர்கள் சமூகங்களுக்குள் ஒற்றுமையை உருவாக்க உதவும் வழிகளில் சமயம் முக்கியமானது என்பதை உணர்ந்திருந்தார்கள். மகாத்மா காந்தி ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் தினமும் பிராத்தனையில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார். தன் வாழ்நாளின் கடைசி தினம் வரை அவர் தொடர்ந்து பிராத்தனையில் ஈடுபட்டார். 

நான் கூறியிருப்பவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இன்னும் ஏராளமான தரவுகளுடன் இந்த விஷயத்தை மேலும் நுணுக்கமாக எடுத்துரைக்க முடியும். இந்த விஷயம் குறித்து யோசிக்கையில் உலக மக்கள் தொகை குறித்த இணையதளம் ஒன்றினைப் பார்வையிட்டேன். அதில் இருந்த விபரங்களை நண்பர் தனித்தனியாக அறிந்திருப்பார் ; அவற்றைத் தொகுத்துப் பார்ப்பார் என்றால் அவருக்கு மேலும் சில விஷயங்கள் புரியக் கூடும். 

மக்கள் தொகை இணைய தளத்தில் எந்தெந்த நாடுகள் உலகில் இன்றும் சர்வாதிகார நாடுகளாக இருக்கின்றன என்பதைக் காட்டியது. உலகில் இன்றும் சர்வாதிகார நாடுகளாக இருப்பவை : ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ஈரான், ஈராக், சவுதி அரேபியா, சிரியா, ஏமன், ஓமன்.

நம் நாட்டை மன்னர்கள் ஆண்ட போது கூட ஒவ்வொரு கிராமமும் சுயசார்புடன் ஜனநாயக அடிப்படையில் இயங்கியிருக்கிறது. இன்னும் உலகின் ஒரு பாதி ஜனநாயகத்தின் கிரணங்களே விழாமல் இருக்கிறதே ? அதைக் குறித்து அல்லவா நாம் அதிகம் கவலை கொள்ள வேண்டும்?

Sunday, 20 July 2025

மூன்று மனிதர்கள் கதை : ஜெயமோகன் தளத்தில்

 சமீபத்தில் எழுதிய ’’கடல் : மூன்று மனிதர்கள் கதை ‘’ பதிவின் இணைப்பு ஜெயமோகன் தளத்தில் வழங்கப்பட்டுள்ளது. 

மூன்று மனிதர்களின் கதை : ஜெயமோகன் தளத்தில்

Saturday, 19 July 2025

ஏரிக்கரை உரையாடல்கள்

நேற்று கங்கை கொண்ட சோழபுரம் குறித்தும் வீர நாராயண ஏரி குறித்தும் ஒரு பதிவை எழுதியிருந்தேன். நேற்று மாலையே அந்த ஏரிக்குச் செல்ல ஒரு சந்தர்ப்பம் உருவானது. எனது நண்பன் வெளியூரில் பணிபுரிகிறான். அவரது உறவினர் உடல் நலம் குன்றியிருக்கிறார். சிதம்பரத்தில் வசிக்கும் அவரைக் காண நண்பன் வந்திருக்கிறான். இந்த விபரத்தைக் கூறி எனக்கு ஃபோன் செய்தான். நண்பரின் உறவினரின் உடல்நலம் மேம்பட்டவுடன் அவரை சந்திக்கலாம் என எண்ணினேன். நண்பனும் அதனை ஆமோதித்தான்.  ’’அண்ணன் ! சிதம்பரம் வந்துடுங்க. வீராணம் ஏரிக்கரைக்கு போவோம்’’ என்றான். மாலை 4 மணிக்குப் புறப்பட்டு சிதம்பரம் சென்றடைந்தேன்.  

என் மனதில் ஓடும் எண்ணங்களை எப்போதும் என் மனத்தின் ஒரு பகுதி கவனித்துக் கொண்டிருக்கும். எல்லாருக்கும் இந்த வழக்கம் இருக்கும். கிரியேட்டிவ் ஆட்கள் இதில் திறன் கூடியவர்களாய் இருப்பார்கள். மனம் என்னென்ன எண்ணுகிறது என்பதை நிர்ணயிப்பதில் ஒவ்வொருவரின் அகமும் புறமும் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும். அவரவர் தன்மையைப் பொறுத்தே அவர்கள் மனத்தின் மகிழ்ச்சியும் சோர்வும் அமையும். 

நண்பன் பணி புரியும் இடத்தில் அவனுக்கு பணி மாறுதல் அளிக்கப்பட்டிருக்கிறது. சிறு நகரம் ஒன்றில் பணி புரிந்த நண்பன் தற்போது தலைமையிடத்தில் இருக்கும் தலைமை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறான். அவன் அலுவலகப் பணிக்கு மாற்றப்பட்டிருப்பது குறித்து அறிந்ததிலிருந்து நான் மகிழ்ச்சியே அடைந்தேன். தற்போது பணி புரியும் நகரில் அவன் அலுவலகத்தில் அவனே தலைமைப் பொறுப்பில் இருப்பவன். அங்கே அவனுக்கு ஊழியர்கள் மத்தியிலும் அலுவலகம் தொடர்பான அனைவரின் மத்தியிலும் நல்ல பெயரும் செல்வாக்கும் இருக்கிறது. இப்போது மாறுதல் செய்யப்பட்டிருக்கும் இடம் நாள் முழுக்க கணினி முன் அமர்ந்து செய்யும் ஒரு மேஜைப் பணி. அதனால் நண்பனுக்கு சிறு சோர்வு இருந்தது. 

‘’தம்பி ! இந்த விஷயத்துக்கு நீ சோர்வாகக் கூடாது. உனக்கு நிறுவனம் ஒரு வேலை கொடுத்தது. நீ அந்த வேலையை சிறப்பா செஞ்ச. நீ சிறப்பா செஞ்சிருக்கங்கறது உன் ஸ்டாஃப் மனசுலயும் உன் கஸ்டமர் மனசுலயும் பதிவாகியிருக்கு. உனக்கும் திருப்தி இருக்கு. உன் மேனேஜ்மெண்ட் உன்னோட பெர்ஃபாமன்ஸ் ஃபைலை பாத்தே அதை தெரிஞ்சுகிட்டு இருப்பாங்க. அஞ்சு வருஷம் அங்க வேலை பாத்துட்ட. உனக்கு ஒரு செட் ஆஃப் எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்சிருக்கு. இப்ப அதுக்கு காண்டிராஸ்ட்டா இருக்கற இன்னொரு வேலையை நிர்வாகம் கொடுக்குது. இது ஒரு மாறுதல். நாம எப்பவுமே மாறுதல்களை வரவேற்கற மனசோட இருக்கணும். ஒரு விஷயத்தை புதுசா உருவாக்கத்தான் மாறுதல் தேவைங்கறது இல்ல. இருக்கற விஷயத்தை இருக்கறபடியே பாதுகாத்துக்கக் கூட மாறுதல் தேவை. ஒரு சின்ன ஆஃபிஸ்ஸோட தலைமைப் பொறுப்பில இருந்தப்ப நீ 95 சதவீதம் விஷயங்களை கத்துக்குட்டு இருந்திருக்கலாம். இப்ப இந்த மேஜைப் பணி கூட உனக்கு தலைமைப் பொறுப்போட மீதி 5 சதவீதத்தைக் கத்துத் தரலாம். நீ விரும்பற பணியில உனக்கு முழுமை கிடைக்கணும்னா கூட உனக்கு ஒரு மாறுதல் தேவையா இருக்கலாம். நீ உன் விருப்பத்தால எட்டின 95 சதவீத பர்ஃபெக்‌ஷன் உன்னை மீதி இருக்கற 5 சதவீத பெர்ஃபெக்‌ஷனுக்கு இந்த இடம் நோக்கி அனுப்பியிருக்கலாம் இல்லையா?’’ 

ஒரு டிரான்ஸ்ஃபருக்குப் பின்னாடி இத்தனை அப்ஸ்ட்ராக்ட் விஷயங்களா என நண்பன் யோசித்தான். சாதாரண விஷயங்களை நான் அப்ஸ்ட்ராக்ட் ஆக்குகிறேனோ என்ற ஐயம் நண்பனுக்கு உருவானது. அதைச் சொன்னால் இன்னும் ஆழமாக வேறு எதையும் கூறுவேன் என அமைதியாக இருந்து விட்டான். 

இரு சக்கர வாகனத்தை நண்பன் இயக்கினான். நான் பின்னால் அமர்ந்திருந்தேன். 

‘’தம்பி ! நேத்து ஒரு விஷயம் அப்சர்வ் பண்ணேன்’’

‘’என்ன விஷயம்ணா?’’

‘’நேத்து நானும் என்னோட ஃபிரண்டும் பூம்புகார் போய்ட்டு இருந்தோம். கடலுக்குப் போய் ரொம்ப நாளான மாதிரி தோணுச்சு. சரின்னும் கிளம்புனேன். நண்பர் வழியில ஜாயின் பண்ணிக்கிட்டார். ஒரு கிராமத்தைத் தாண்டினோம். அந்த கிராமத்தோட ஊராட்சி மன்றத் தலைவர் ஒருத்தர கொலை பண்ணிட்டார். அவர் ஜெயில்ல இருந்தார். அந்த கிராமத்தின் ஊராட்சி மன்ற அலுவலகத்தைத் தாண்டின போது எனக்கு ஒரு விஷயம் தோனுச்சு. ஃபிரண்டுகிட்ட கேட்டேன். இந்த ஊரோட ஊராட்சி மன்றத் தலைவர் மேல கொலை கேஸ் இருக்கே. அவர் எப்படி ஊராட்சி மன்றத் தலைவரா தொடர்ந்து இருக்க முடியும்? நண்பரும் ஆமாம் நீங்க சொல்றது சரிதான் என்றார். ஒரு ஊரின் ஊராட்சி மன்றத் தலைவர் மீது கிரிமினல் வழக்கு பதிவானால் அவரை மாவட்ட ஆட்சியர் பதவி நீக்கம் செய்ய வேண்டும். இவர் மீது வழக்கு பதிவாகி நீதிமன்றத்தால் ஜெயில் தண்டனையும் பெற்று விட்டார். ஏன் எந்த நடவடிக்கையும் இல்லை? நண்பருக்கும் நான் சொல்வது சரிதான் என்பது புரிந்து விட்டது’’

நண்பனிடம் கேட்டேன். ‘’ஏன் அவர் பதவி நீக்கம் செய்யப்படல? உனக்கு என்ன தோணுது?’’

‘’என்ன காரணம்ணா? எனக்கு ஒன்னும் தெரியலயே!’’

‘’நான் என்ன நினைக்கிறேன்ணா கலெக்டருக்கு ஒரு முறைமை பின்பற்றப்படாம இருக்கேன்னு கவலை இல்லை. பி.டி.ஓ க்கும் அக்கறை இல்லை. அரசியல் கட்சிகளாவது கொலை வழக்குல ஜெயிலுக்குப் போன ஒருத்தர் எப்படி ஊராட்சி மன்றத் தலைவரா இருக்க முடியும்னு மாவட்ட நிர்வாகத்தைக் கேக்கணும். அவங்களுக்கும் இதுல அக்கறை இல்லை. அவரோட கட்சிக்கு எதிர்க்கட்சிக்காவது இந்த விஷயம் தோணியிருக்கணும். அவங்களும் அதை செய்யல. இவங்க எல்லாருமே ஒரே தரப்பு. ஒருத்தர் ஒரு கிரைம செஞ்சிருக்கார். மத்தவங்க இதைச் செய்யலையே தவிர கிரைம் செஞ்ச ஆள் மாதிரி தான் இவங்களும். ஒரு கிரைம்ல ஈடுபட்ட ஒருவர் உள்ளாட்சி பதவில இருக்கக் கூடாது என்கிற சட்டம் இவங்களுக்கு அசௌகர்யமான ஒன்னு. தங்களுக்கு அசௌகர்யமான ஒரு விஷயத்தை இவங்க செய்ய மாட்டாங்க. ஒருவேளை கொலை வழக்குல தண்டனை பெற்ற ஒருத்தர் ஊராட்சி பொறுப்புல இருக்கக் கூடாதுன்னு யாராவது ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டுனா நியூஸ் பேப்பர்ல அறிக்கை கொடுத்தா கொஞ்சம் பேர் கூடி ஒரு போராட்டம் நடத்தினா இந்த விஷயம் பப்ளிக் கவனத்துக்கு வரும். அப்ப நடவடிக்கை எடுக்கலாம். வாய்ப்பு இருக்கு.’’

நண்பன் கேட்டான் ; ‘’சட்டத்தை நிறைவேற்றணும்னு பியூரோகிராட்ஸ் நினைக்கவே மாட்டாங்களா?’’

‘’இந்தியன் பியூரோகிராஸி அப்படித்தான். அவங்களுக்கு பெரிய நெருக்கடி வந்தா மட்டும் தான் செயல்படவே ஆரம்பிப்பாங்க’’

வாகனம் மெதுவாக சென்று கொண்டிருந்தது. 

‘’தம்பி ! நேத்து ஃபிரண்ட் கிட்ட இந்த விஷயம் பேசிக்கிட்டு இருந்தப்ப எனக்கு ஒரு ஷாக் ஏற்பட்டுச்சு. அது என்னன்னா நாலு வருஷம் முன்னாடி ஒரு ஊராட்சி மன்றத் தலைவர் அவரோட கிராமத்துல இருந்த புராதானமான விஷ்ணு கோயில் சன்னிதித் தெருவுல அந்த தெரு மக்கள் பத்து வருஷமா தங்களோட வீட்டு வாசல்ல வளத்த வேம்பு, மலைவேம்பு, புங்கன் என 14 மரங்களை வேரோட வெட்டி எடுத்துட்டு போய் தன்னோட செங்கல் காலவாய்க்கு எரிபொருளா பயன்படுத்தினாரு. அவர் மேல கலெக்டர்கிட்ட புகார் கொடுத்தோம். வருவாய்த்துறை அவருக்கு ஃபைன் போட்டுச்சு. ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்புல இருக்கற ஒருத்தர் குற்றச்செயல் ஒன்னுக்காக ஃபைன் கட்டியிருக்கார். இந்த பேஸிஸ்ல அவரை பதவி நீக்கம் செய்யணும்னு அந்த தெருவோட மக்கள் அரசாங்கத்தைக் கேட்டாங்க. கொலை வழக்குல தண்டனை கிடைச்ச ஒருத்தரையே ஊராட்சி மன்றத் தலைவரா இருக்க அனுமதிச்சிருக்க மாவட்ட நிர்வாகமா மரம் வெட்டின ஊராட்சி மன்றத் தலைவர் மேல நடவடிக்கை எடுக்கும்னு நான் யோசிச்சன் தம்பி. ஷாக்கா இருந்தது. ‘’ 

’’உண்மைதான் அண்ணன்!’’ நண்பன் ஆமோதித்தான். 

‘’நான் நம்பிக்கை இழக்கல. ஆனா நேத்து இந்த ரெண்டு விஷயத்தையும் சேத்து யோசிக்க சந்தர்ப்பம் கிடைச்சுப்ப எனக்கு இது புரிஞ்சது. இத இப்பதான் புரிஞ்சிகிட்டு இருக்கமாங்கறதுதான் அதிர்ச்சிக்குக் காரணம். இட் இஸ் பெட்டர் லேட் தேன் நெவர்’’

ஏரிக்கரையில் சென்று அமர்ந்தோம். ஏரி நிரம்பியிருந்தது. நீரில் காற்று சிறு சிறு அலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது. சின்னஞ்சிறு அலைகள் எழும் நீர்ப்பரப்பு மனத்தை இளகச் செய்யக் கூடியது. 

‘’தம்பி ! மீதி இருக்கற வாழ்க்கையை இந்த மாதிரி ஒரு நீர்ப்பரப்பை மட்டும் பாத்துக்கிட்டு இருந்தா போதும்னு தோணுதுடா?’’

‘’வானப்பிரஸ்தம் ங்றது அதானே அண்ணன்’’ என்றான் நண்பன்.  

Friday, 18 July 2025

ஸ்மைலி ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளர் வைத்திருப்பது சாதாரண அலைபேசி. அதாவது ஜி.எஸ்.எம் அலைபேசி. அவர் திறன் அலைபேசி என்ற வஸ்துவை வாங்கவேயில்லை. எனவே அது குறித்தும் அதில் இருக்கும் வசதிகள் குறித்தும் அனேகமாக எதுவும் தெரியாது. அமைப்பாளரின் ஜி.எஸ்.எம் அலைபேசி குறுஞ்செய்திகளை எழுத்துப் பிரதியாக அளிக்கவல்லவை. எவரேனும் தங்கள் குறுஞ்செய்தியில் ஏதேனும் ஸ்மைலியை அனுப்பினால்  இரு சதுர வடிவம் கொண்ட கட்டங்களைக் காட்டும்.ஒருமுறை நண்பர் ஒருவர் குறுஞ்செய்தி ஒன்றுக்குப் பதிலாக ஒரு ஸ்மைலியை அனுப்பியிருக்கிறார். அமைப்பாளருக்கு அது சதுரக் கட்டமாக அவரது ஜி.எஸ்.எம் அலைபேசியில் காட்டியிருக்கிறது. அமைப்பாளர் அதற்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினார். அதாவது, தாங்கள் அனுப்பிய பதிலை என்னால் வாசிக்க முடியவில்லை. அலைபேசி வெறுமைக் கட்டங்களைக் காட்டுகிறது என. நண்பர் ஃபோனில் அழைத்து தான் அனுப்பியது ஒரு ஸ்மைலி என்றார். அமைப்பாளர் அவரிடம் அப்படி என்றால் என்ன என்று கேட்க நண்பர் திகைத்துப் போய் ஸ்மைலி குறித்து விளக்கினார். அமைப்பாளர் என்ன புரிந்து கொண்டாரோ இல்லையோ அவரது ஜி.எஸ்.எம் அலைபேசி எல்லா ஸ்மைலிகளையும் வெறுமைச் சதுரக் கட்டங்களாகவே புரிந்து வைத்திருக்கிறது. 

அமைப்பாளர் இப்போது தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கும் விஷயம் சாதாரண ஜி.எஸ்.எம் அலைபேசியையும் பயன்படுத்தாமல் இருப்பதைக் குறித்து ! 

கங்கை கொண்ட சோழபுரம்

 

ஒளி மிகுந்திருந்த காலைப் பொழுதொன்றில் கோடைக்கால நாள் ஒன்றில் என்னுடைய ஆறு வயதில் முதன் முதலில் கங்கை கொண்ட சோழபுரத்தின் பிரகதீஸ்வரர் ஆலய விமானத்தைக் கண்டேன். மிகப் பெரிய ஒன்றாகவும் மிக அழகிய ஒன்றாகவும் உணர வைத்த அக்காட்சி உள்ளத்தை இன்னதென வகுத்திட முடியாத பரவசத்துக்கும் தத்தளிப்புக்கும் ஆளாக்கியது ஆண்டுகள் பல கடந்த பின்னரும் இன்னமும் நினைவில் இனிய ஒன்றாகப் பதிவாகியிருக்கிறது. பெரிதினும் பெரிதாய் விளங்கிய அந்த ஆலயத்தின் ஒவ்வொரு அம்சமும் பாலனாயிருந்த எனக்கு வியப்பை அளித்துக் கொண்டேயிருந்தன. கருவறையில் பிரும்மாண்டமான உருவம் கொண்டு வீற்றிருந்த பிரகதீஸ்வரரை அந்த பாலன் தன் உள்ளத்தால் அணைத்துக் கொண்டான். இத்தனை பெரிய பேரிருப்பை நிர்மாணிக்க உளம் கொண்ட மானுடன் யாராக இருப்பான் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். அதனை உருவாக்க முனைந்தவனின் பெயர் ராஜேந்திர சோழன் என அறிந்து கொண்டேன். அறிந்த நாள் முதல் அவன் மேல் மதிப்பு கொள்ளத் தொடங்கினேன். வருடங்கள் பெருகும் தோறும் அம்மதிப்பு வளர்பிறை நிலவென வளர்ந்து கொண்டே செல்கிறது.

கங்கை கொண்ட சோழபுரம் ஊர் நினைவுடன் அந்த பாலனுக்கு இன்னொரு நினைவும் ஒட்டிக் கொண்டது. அது தாமரை இலையின் நினைவு. அந்த பிரதேசத்தில் தாமரைத் தடாகங்கள் மிகுதி. அங்கே உணவருந்த நேர்ந்த உணவகம் ஒன்றில் அவர்கள் அளித்த இலை தாமரை இலை. வாழையிலையைக் கண்டிருந்த அதில் உணவருந்தியிருந்த எனக்கு தாமரை இலையில் உணவருந்தியது மறக்க முடியாத அனுபவமாகி விட்டது.

கங்கை கொண்ட சோழபுரத்தைக் கண்ட பின் அடுத்த நான்கு ஆண்டுகளில் என்னுடைய பத்தாவது வயதில் கல்கியின் ‘’பொன்னியின் செல்வன்’’ நாவலை வாசித்தேன். சோழர்கள் மனதுக்கு மிக நெருக்கமாக ஆனார்கள். நிலமெங்கும் குதிரையில் எப்போதும் பயணித்துக் கொண்டேயிருக்கும் வந்தியத்தேவன் மீது பெரும் பிரியம் உண்டானது. பழையாறையும் கோடிக்கரையும் வீர நாராயண ஏரியும் என் கற்பனையில் உயிர்ப்புடன் இருந்து கொண்டேயிருந்தன.

பொன்னியின் செல்வன் வாசித்த நாள் முதலே வீர நாராயண ஏரியைக் காண வேண்டும் என ஆவல் கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்த அனைவரிடமும் நீங்கள் வீர நாராயண ஏரியைப் பார்த்திருக்கிறார்களா என விசாரிப்பேன். பார்த்தவர்கள் மிகக் குறைவாகவும் கேள்விப்பட்டவர்கள் சற்றே அதிகமாகவும் இருந்தனர். யாருக்குமே எனது ஊரிலிருந்து இப்படி செல்லலாம் என ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தைக் கூறத் தெரியவில்லை. காட்டுமன்னார்குடி சென்று செல்ல வேண்டும் எனக் கூறுவார்கள். சேத்தியாத்தோப்பு சென்று செல்ல வேண்டும் என்று சொல்வார்கள். இரு சக்கர வாகனம் ஓட்ட கற்றுக் கொண்டு அதில் பயணிக்கத் தொடங்கிய நாட்களில் நான் வீர நாராயண ஏரியைக் கண்டேன். அந்த ஏரியின் ஒரு முனை சேத்தியாதோப்பு என்பதையும் அதன் இன்னொரு முனை காட்டுமன்னார்குடி என்பதையும் இந்த இரண்டு ஊர்களையும் இணைக்கும் பெருந்தூரம் முழுவதுமே ஏரிக்கரை என்பதையும் உணர்ந்த போது மனம் பிரமித்தது. தனது குடிகளின் விவசாயத் தேவைக்காக சோழர்கள் நிர்மாணித்த வீர நாராயண ஏரியைக் காணக் காண சோழர்கள் மேல் கொண்டிருந்த மதிப்பு கூடிக் கொண்டேயிருந்தது. ஒரு காலகட்டத்தில், வீட்டில் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினால் நேராக சிதம்பரம் சென்று நடராஜர் ஆலயத்தில் சாமி கும்பிட்டு விட்டு அங்கிருந்து காட்டுமன்னார்குடி வந்து வீர நாராயண ஏரிக்கரையில் நாள் முழுக்க இருந்து விட்டு மாலை கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தில் இருந்து விட்டு இருட்டத் தொடங்கியதும் அணைக்கரை பந்தநல்லூரி வழியாக ஊர் வந்து சேர்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இளைஞனாயிருந்த எனது உள்ளம் அப்போது ததும்பிக் கொண்டிருக்கும். மனதில் மகிழ்ச்சி இருந்தாலும் இந்த பயணத்துக்கு கிளம்பி விடுவேன். சிறு சோர்வு இருந்தாலும் கிளம்பி விடுவேன். கிளம்பிச் செல்வதற்கு மகிழ்ச்சியோ சோர்வோ ஒரு நிமித்தம் என்ற அளவில் இருந்த நாட்கள் அவை.

காட்டுமன்னார்குடி பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கும் போது அங்கே சந்தித்த ஒருவர் என்னிடம் நான் எந்த ஊரைச் சேர்ந்தவன் என்று கேட்டார். ஊரைச் சொன்னதும் உங்கள் ஊருக்கு செல்ல முட்டத்தில் கொள்ளிடம் ஆற்றை படகில் கடந்தால் மணல்மேடு சென்று அங்கிருந்து மிகக் குறைந்த தூரத்தில் ஊரை அடைந்து விடலாம் என்று சொன்னார். அவர் காட்டிய மார்க்கத்தில் செய்த அந்த பயணம் சுவாரசியமாயிருந்தது. முட்டத்தில் மறுகரைக்குச் செல்ல மக்கள் படகுக்குக் காத்துக் கொண்டிருந்தார்கள். படகு வந்ததும் இருபதுக்கும் மேற்பட்டோர் அதில் ஏறிக் கொண்டனர். சிலர் தங்கள் இரு சக்கர வாகனங்களையும் ஏற்றிக் கொண்டனர். நானும் ஏற்றிக் கொண்டேன். மறுகரையில் சில நிமிடங்களில் படகு சென்று சேர்ந்தது. மணல்மேடு வந்து ஊர் வந்து சேர்ந்தேன். கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் இருக்கும் போது படகிலும் ஆறு வறண்டிருக்கும் போது மணல் பரப்பில் வண்டியை தள்ளிக் கொண்டு சென்றும் நதியின் இரு கரைகளிலும் அலைந்து கொண்டிருப்பேன். மோவூர் என்ற ஊரில் ஒரு முச்சந்தி இருந்தது. அதில் ஒரு பாதை காட்டுமன்னார்குடி செல்வது ; இன்னொன்று முட்டம் செல்வது ; மூன்றாவது பாதை எங்கே செல்கிறது என விசாரித்தேன். ஒரு பெரியவர் இப்படியே சென்றால் ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையைச் சென்றடையும் என்று கூறினார். குச்சூர், ஆய்க்குடி, சண்டன் ஆகிய ஊர்களின் வழியாகவும் வடவாற்றைக் கடந்தும் ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையை வந்தடைந்தேன். அங்கிருந்து கூப்பிடு தொலைவில் உள்ள ஊர் கங்கை கொண்ட சோழபுரம். டூ-வீலரின் ஸ்பீடாமீட்டர் ரீடிங் வழியாக ஊருக்கும் பிரகதீஸ்வரர் ஆலயத்துக்கும் உள்ள தூரம் எவ்வளவு எனக் கணக்கிட்டேன். 38 கிலோமீட்டர் என ரீடிங் காட்டியது. அந்த பாதையைப் பயன்படுத்தி அடிக்கடி கங்கை கொண்ட சோழபுரம் செல்வேன். பின்னாட்களில் , நான் அடிக்கடி படகில் கடந்த பாதையில் மணல்மேட்டுக்கும் முட்டத்துக்கும் இடையே பெரும் பாலம் ஒன்று கட்டப்பட்டது. வீட்டிலிருந்து புறப்பட்டால் ஒரு மணி நேரத்தில் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இருக்கலாம். பிரகதீஸ்வரரைக் காணச் செல்வது எப்போதுமே உற்சாகமளிக்கும் பயணம் தான்!

 

Wednesday, 16 July 2025

வந்தே மாதரம்

சில வாரங்களுக்கு முன்னால், ஆந்திரப் பெருநிலத்தில் ரயில் பயணம் மேற்கொண்டிருந்த போது ஒரு வங்காள இளைஞனை சந்தித்தேன். இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டியில் அந்த இளைஞன் எனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தான். இன்னொரு பக்கம் அமர்ந்திருந்தவரிடம் நான் ஆங்கிலத்தில் ஏதோ கேட்பதைக் கவனித்த அந்த இளைஞன் என்னிடம் ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்கினான்.  

காவிரி நதிக்கரையில் வளர்ந்த எனக்கு கங்கை மற்றும் அதன் கிளை நதிகளின் கரைகளால் ஆன வங்க நிலம் மீது பெரும் ஈர்ப்பு உண்டு. மூதாதை பாரதி ‘’லால் - பால் - பால்’’ ஆகியோர் மீதும் அரவிந்தர் மீதும் பெரும் ஈர்ப்பு கொண்டவன். 

பல ஆண்டுகளுக்கு முன்னால், தில்லி ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பெறுவதற்காக நின்று கொண்டிருந்தேன். என் முன்னால் நின்று கொண்டிருந்த இளைஞன் என்னிடம் உரையாடுகையில் அவன் தனது பெயரைக் கூறினான் ; அவனுடைய பெயரின் மூலம் அவன் வங்காளத்தைச் சேர்ந்தவன் என்பதை புரிந்து கொண்டேன். தாரா சங்கர் பானர்ஜியின் ‘’ஆரோக்கிய நிகேதனம்’’ நாவலை நான் வாசித்திருக்கிறேன் என்று அவனிடம் சொன்னேன். அந்த இளைஞன் உணர்ச்சிகரமாகி விட்டான். என் மீது பெரும் பிரியம் கொண்டு விட்டான். விபூதி பூஷன் பந்தோபாத்யாய, மைத்ரேயி தேவி ஆகியோர் பெயரையும் கூறினேன். அவன் எனக்கு மிகப் பெரிய மதிப்பளிக்கத் தொடங்கி விட்டான். ஒரு ரயில் நிலைய கியூவில் பத்து நிமிடம் ஒன்றாக நின்றிருப்போம். எனினும் அது வாழ்வின் மறக்க முடியாத அனுபவமாகி விட்டது. 

இந்த முறை சந்தித்த இளைஞனிடம் உரையாடுகையில் பேச்சு இலக்கியம் நோக்கி திரும்பியது. த. நா. குமாரசாமி, த. நா. சேனாபதி என்ற இரு சகோதரர்கள் 1950 வாக்கிலேயே முக்கியமான பல வங்க நாவல்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள் ; அவர்கள் மூலம் தமிழக வாசகர்களுக்கு வங்க இலக்கியத்தின் சாரமான பகுதிகள் அனைத்துமே அறிமுகம் ஆயின என்று சொன்னேன். அவனுக்கு மிகவும் ஆச்சர்யம். வங்கத்தின் பல ஊர்களைப் பற்றி பல முக்கிய ஆளுமைகளைப் பற்றி சொந்த ஊரைப் பற்றி மிகவும் பழகியவர்களைப் பற்றி சொல்வதைப் போல சொல்லிக் கொண்டிருந்ததைக் கண்ட அந்த இளைஞன் உணர்ச்சிகரமாகி கண் கலங்கி விட்டான். 

அப்போது எனக்கு சுவாமி சித்பவானந்தரின் நினைவு எழுந்தது. தனது குருவின் குருவான பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் நூல்களை தமிழில் கொண்டு வர அவர் வங்க மொழியைப் பயின்றார். ஸ்ரீராமகிருஷ்ணரின் சொற்களை வங்க மொழியிலிருந்து தமிழ் மொழிக்குக் கொண்டு வந்தார்.  

Monday, 14 July 2025

பொருளுக்கு அப்பால்

ஊரில் ஒரு வீட்டின் பராமரிப்புப் பணியை மேற்கொண்டிருக்கிறேன். எனது முக்கிய பணி கட்டுமானம். ஒரு காலிமனையில் அஸ்திவாரம் தோண்டி அஸ்திவாரமிட்டு அதன் மேல் கட்டிடத்தை எழுப்பி நிறைவு செய்து வர்ணம் பூசி ஒப்படைப்பது என்னும் முழுமையான பணியை மேற்கொள்வதே கட்டுமானம். பராமரிப்புப் பணி என்பது கட்டி முடித்து 10 வருடம் , 20 வருடம் அதற்கு மேல் ஆன கட்டிடங்களில் ஏதேனும் பணியைப் பார்ப்பது. அவ்விதமான பணியை நான் விரும்புவதில்லை. கட்டுமானத்தை முக்கிய தொழிலாக வைத்திருப்பவர்கள் பராமரிப்பை மேற்கொள்ள மாட்டார்கள்.  அரசாங்க இலாகாக்களில் கூட இவை இரண்டும் தனித்தனியாகவே இருக்கும். இருப்பினும் தவிர்க்க இயலாமல் சில பணிகளை மேற்கொண்டிடுவது உண்டு. 

ஊரில் இருக்கும் வீடுகளிலேயே மிகத் தொன்மையான வீடாக இப்போது பராமரிப்பு பணி மேற்கொள்ளும் வீடு இருக்கக்கூடும். அதன் உரிமையாளர் அந்த வீட்டின் அகவை 125 இருக்கும் என்று சொல்கிறார். நான் 100 வருடம் ஆன வீடு என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எங்கள் பணியாக அந்த வீட்டில் ஒரு பெரிய சுவர் எழுப்பினோம். குளியல் அறையும் ஒப்பனை அறையும் அமைத்தோம். காரை உதிர்ந்திருந்த பகுதிகளை சிமெண்ட்டால் பூசினோம். வீட்டுக்கு வெள்ளையடிக்க வேண்டும். நாங்கள் பணி புரிந்து கொண்டிருந்த போது இன்னொரு பிரிவினர் வீட்டுக்கு ஓடு மாற்றிக் கொண்டிருந்தார்கள். அந்த வீட்டு உரிமையாளரிடம் ஓடு மாற்றுதல் குறித்து ஒரு சம்பவத்தை அல்லது கதையை சொன்னேன். எனக்கு சம்பவங்களை கதையாகக் காணும் வழக்கம் உண்டு. அல்லது சம்பவங்களைக் கதையாக காணும் இயல்பு உண்டு எனக் கொள்ளலாம். அந்த கதை என்னவெனில், சி. என். அண்ணாத்துரை கட்சி தொடங்கிய போது ‘’அடைந்தால் திராவிட நாடு ; இல்லையேல் சுடுகாடு’’ என்ற முழக்கத்தை முன்வைத்தார். அவரது கட்சி ஒவ்வொரு மேடையிலும் இந்த முழக்கத்தைக் கூறியது. அதாவது , தற்போதைய கேரள மாநிலம், கர்நாடகா மாநிலம், ஆந்திர மற்றும் தெலங்கானா மாநிலங்கள், கோவா ஆகியவற்றுடன் தமிழகமும் இணைந்த பகுதியை இந்தியாவிலிருந்து துண்டாடி தனிநாடாக ஆக்குவோம் என்பது அவர்களின் முழக்கம். அன்றும் சரி, இன்றும் சரி சி.என். அண்ணாத்துரையின் கட்சிக்கு கேரளா, கர்நாடகா, கோவா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கட்சி அமைப்பும் கிடையாது ; தொண்டர்களும் கிடையாது. தனிநாடு கோரிக்கையை இந்திய நாட்டில் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஒரு பதிவு பெற்ற அரசியல் கட்சியாய் இருந்தும் தொடர்ந்து முன்வைத்ததால் சி.என். அண்ணாத்துரையின் கட்சியை தடை செய்யலாமா என தீவிரமாக யோசித்தது மத்தியில் ஆட்சியிலிருந்த நேருவின் காங்கிரஸின் அரசு. தனது கட்சி தடை செய்யப்பட்டு விடுமோ என்ற தயக்கம் சி.என். அண்ணாத்துரைக்கு இருந்தது. அந்த நேரத்தில் சீனா இந்தியா மீது படையெடுத்தது. கம்யூனிசம் மேல் நம்பிக்கை கொண்டிருந்த நேரு, சீனாவால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற எச்சரிக்கை உணர்வைக் கொண்டிருக்கவில்லை. அவர் கம்யூனிசத்தின் மீது அத்தனை நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த காலகட்டத்தில் உலகம் முழுக்கவே அப்படி ஒரு நம்பிக்கை பரவலாக இருந்தது. சீனா நம் எல்லையின் கணிசமான பகுதியை ஆக்கிரமித்தது. சீனா படையெடுத்த சமயத்தில் சி.என். அண்ணாத்துரை தனிநாடு கோரிக்கையை அதாவது திராவிட நாடு கோரிக்கையைத் தனது கட்சி கைவிடுவதாக அறிவித்தார். இத்தனை ஆண்டுகள் கூறிவந்த கோரிக்கையை ஏன் கைவிட்டீர்கள் என அவரிடம் கேட்ட போது ‘’வீடு இருந்தால் தான் ஓடு மாற்ற முடியும்’’ என்றார். 

இந்திய அரசியலில் இதே காலகட்டத்தில் நிகழ்ந்த ஒரு துன்பியல் சம்பவம் உண்டு. அது என்னவெனில், சீனா நம் நாட்டை ஆக்கிரமித்த போது நம் நாட்டின் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சீனாவின் ஆக்கிரமிப்பு செயலை ஆதரித்தது. சீனா ஒரு கன்யூனிச நாடு என்பதனால்.  இந்த மார்க்ஸிஸ்டுகளின் தொழிற்சங்கமே நாடு முழுவதும் அரசாங்க ஊழியர் அமைப்புகளை தன் கையில் வைத்திருந்தது. அரசு ஊழியர் ஊதியத்தில் ஒரு சதவீதம் அளவு அவர்கள் தொழிற்சங்கத்துக்காக மாத சந்தா என வசூல் செய்வார்கள். ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது அந்த தொகை ஒரு பெருந்தொகை. அந்த தொகையைக் கொண்டு இயங்கிய கட்சி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இந்தியாவில் இருந்து கொண்டு சீன ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாக இருந்த கட்சி. இன்று வரை சீனா இந்தியாவின் மீது படையெடுத்ததை ஆதரிக்கும் கட்சி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி. அப்போது அவர்கள் ஆதரவளித்த போது அது ஒரு துன்பியல் நிகழ்வு. இப்போதும் அவர்கள் அளிக்கும் ஆதரவு துன்பியலாக அல்ல ; மாறாக நகைச்சுவையாகவே மக்களால் பார்க்கப்படுகிறது. 

இந்தியாவைத் துண்டாட சீனாவால் நிதியளித்து ஆயுதம் அளித்து வளர்க்கப்பட்ட அமைப்பு மாவோயிஸ்டுகள். நக்சலைட்டுகள் என அறியப்படும் இவர்கள் சீனாவின் ஏஜெண்ட்கள். சீனாவின் நலன்களை இந்தியாவில் இருந்து உருவாக்குவதற்கு சீனாவிடம் ஊதியம் பெறுபவர்கள். யோசித்துப் பார்த்தால், இந்திய அரசாங்கம் இந்த அமைப்பையும் சற்று மென்மையாகவே அணுகியது என்பதைக் காணலாம். நுணுக்கமாகக் காணின், சீனாவின் சதி வலைக்கு இரையான ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்வை இந்திய அரசு கரிசனத்துடன் பார்த்திருக்கிறது என்பதை உணர முடியும். 

1991-1996 ஆண்டில் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்ற நரசிம்ம ராவ் நாட்டின் பொருளியல் பாதையை மாற்றியமைத்தார். நேருவின் சோஷலிசத்தை சுமந்து கொண்டிருந்த காங்கிரஸை தாராளமயமாக்கல் பக்கம் திருப்பியவர் நரசிம்ம ராவ். அவருக்குத் துணை நின்றவர் மன்மோகன் சிங். 1998-2004ம் ஆண்டில் 1000 குடிமக்கள் வாழும் ஒவ்வொரு ஊரும் சாலையால் இணைக்கப்பட வேண்டும் என்ற ‘’கிராமச் சாலைகள் திட்டத்தை’’க் கொண்டு வந்தவர் வாஜ்பாய். நாட்டின் நான்கு மாநகரங்களும் நான்கு வழிச் சாலைகளால் இணைக்கப்பட வேண்டும் என தங்க நாற்கரத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் வாஜ்பாய். 

உலகின் பெரும் மக்கள்தொகை கொண்ட நாடு இந்தியா. கோடானுகோடி சாமானியர்கள் வாழும் நாடு. இவர்கள் அனைவருக்குமே விபரங்களும் நுண் விபரங்களும் தெரியுமா? இவர்களுக்காக சிந்தித்தவர்கள் யார் உழைத்தவர்கள் யார் என்பதை அம்மக்கள் அறிவார்களா? நரசிம்ம ராவும் வாஜ்பாயும் அதனை எண்ணியிருக்க மாட்டார்கள். இந்த மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்தார்கள். சீனா தனது சொந்த மக்களைச் சுரண்டுகிறது. சீனாவில் நிலவுவது ஒரு அடிமை முறை. உலகில் இத்தனை அப்பட்டமான உழைப்புச் சுரண்டல் சீனாவின் அளவு வேறு எங்கும் இல்லை. நரசிம்ம ராவுக்கும் வாஜ்பாய்க்கும் இந்த உண்மை மிக நன்றாகத் தெரிந்திருக்கும். 

இப்போது பராமரிப்புப் பணியை மேற்கொண்டிருக்கும் வீட்டின் கூடத்தில் ஒரு சிறு ஷெல்ஃபில் ஒரு புகைப்படம் இருந்தது. உடல் மெலிந்த ஒருவர் புலித்தோலில் பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார். வீட்டு உரிமையாளரிடம் அவர் யார் என்று கேட்டேன். அவர் ஒரு சித்தர் என்று கூறினார். அதாவது, தற்போதைய வீட்டு உரிமையாளரின் பாட்டனார் சென்னை எழும்பூர் சென்றிருக்கிறார். அங்கே ரயில் நிலையத்தில் அந்த சித்தர் அமர்ந்திருக்கிறார். அவர் முகத்தில் இருந்த அமைதியைக் கண்டு அவரை வணங்கியிருக்கிறார். அவருடன் வேறு எந்த உரையாடலும் இல்லை. தனது பணி முடிந்து ஊர் திரும்பி விட்டார். சில வாரங்களில் அந்த சித்தர் இவருடைய வீட்டுக்கு வந்திருக்கிறார். வீட்டு உரிமையாளரின் பாட்டனாருக்கு ஆச்சர்யம். தங்களுக்குள் எந்த உரையாடலும் நிகழாத போது அவர் எங்கனம் தனது வீட்டை அறிந்து வந்தார் என்ற ஆச்சர்யம் அவருக்கு. சித்தர் அந்த வீட்டிலேயே தங்கியிருக்கிறார். வீட்டு உரிமையாளரின் பாட்டனார் தனது வீட்டிலிருந்து சிறிது தொலைவில் ஒரு தோட்டத்தை உருவாக்கி அதில் சித்தரை வாசம் செய்யச் செய்திருக்கிறார். தீவிரமான சாதனைகளைச் செய்பவராக அந்த சித்தர் இருந்திருக்கிறார். பின்னர் அந்த தோட்டத்தில் சமாதி ஆகியிருக்கிறார். பல சம்பவங்களுடன் வீட்டின் உரிமையாளர் என்னிடம் சொன்னார்.  அந்த சித்தர் பல நாட்கள் வசித்த வீடு இது என்று வீட்டு உரிமையாளர் என்னிடம் சொன்னார். 

இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பு பாதுகாப்பு படை என்னும் அமைப்பு மேற்கொள்கிறது. நம் நாட்டின் பிரதமராயிருந்த இந்திரா காந்தி பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் சில ஆண்டுகள் கழித்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமராயிருந்த ராஜிவ் காந்தி சென்னைக்கு அருகே பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பின்னர் இந்த அமைப்பு இந்தியாவின் முக்கிய தலைவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கத் தொடங்கியது. இந்த அமைப்பில் இந்தியப் பிரதமருக்கு மிக அருகில் நின்று பாதுகாக்கும் வீரர்கள் தன்னார்வத்தின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்களை ஒரு சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். ஏழு நாட்கள் - ஏழு பகல் பொழுதுகள் ஏழு இரவுப் பொழுதுகள் = 168 மணி நேரம் உடலில் உச்சபட்ச ஆயுதங்களைச் சுமந்த வண்ணம் ஒரு கணம் கூட கண் அயர்ந்து தூங்கி விடாமல் நிற்க வேண்டும். இது அவர்களுக்கான சோதனை. இந்த சோதனையில் ஒருமுறை மட்டுமே பங்கு பெற முடியும். இன்னொரு வாய்ப்பு கிடைக்காது. இதனை ஒரு நுண் தவம் என்று கூட சொல்ல முடியும். 

இந்திய அரசியலமைப்பு சட்டம் 21 வயதான எந்த இந்தியக் குடிமகனும் பிரதமராகலாம் என்கிறது. அந்த இந்தியக் குடிமகன் எந்த ஜாதியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம் ; எந்த மதத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்; எந்த மொழியைப் பேசுபவராகவும் இருக்கலாம். சிறப்பு பாதுகாப்பு படையினர் தங்களை நுண் தவத்துக்கு உட்படுத்திக் கொள்ளும் போது தான் இன்னாருக்கு பாதுகாப்பு அளிக்கப் போகிறோம் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கிறது ; இந்திய அரசியலமைப்பு சட்டப்படியும் இந்திய ஜனநாயகத்தின் படியும் எவர் வேண்டுமானாலும் பிரதமராக முடியும். சிறப்பு பாதுகாப்பு படையினர் தங்களை நுண் தவத்துக்கு உட்படுத்திக் கொள்ளும் போது அவர்கள் எண்ணத்தில் சிந்தனையில் உணர்வில் நிறைந்திருப்பது எது? நிறைவது எது? 

பொருளால் ஆனது இவ்வுலகம். பொருளுக்கு அப்பால் இருக்கும் விஷயங்களால் அது இயங்குகிறது என்பதை உணர மிகச் சிலருக்கே சாத்தியம் ஆகிறது.  

பிராந்தியமும் தேசியமும்

நேற்று நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே அவரைக் காண ஒருவர் வந்திருந்தார். மூவரும் நண்பரின் அறையில் அமர்ந்திருந்தோம். எனக்கு மனிதர்களைப் பிடிக்கும். ஒவ்வொரு மனிதரையும். ஒவ்வொரு மனிதருக்கும் சொல்வதற்கு ஒரு கதை இருப்பதனால் ஒவ்வொருவரையும் ஒரு கதைசொல்லியாகவே பார்ப்பேன். சுவாரசியமான கதையைக் கூறுபவர்கள் உண்டு. சாதாரண கதையைக் கூறுபவர்களும் உண்டு. கதையைக் கேட்க தயாராக இருக்க வேண்டும். அவ்வளவே.  

நண்பர் வீட்டுக்கு வந்த வந்திருந்த உறவினரை எனக்கு அறிமுகப்படுத்தினார். முதலில் அவருடைய ஊரின் பெயரைச் சொன்னார். அந்த ஊர் தமிழகத்தின் சமூக வரலாறு தெரிந்தவர்களுக்குப் பரிச்சயமானது. வங்கியைக் கொள்ளையடித்த பயங்கரவாதி ஒருவர் பொதுமக்களால் அடித்துக் கொள்ளப்பட்ட ஊர் அது. பின்னர் அவருடைய பெயரைக் கூறினார். விருந்தினர் சாமானிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 40 ஆண்டுகளுக்கு முன்னால், அப்பகுதியில் வளர்ந்து கொண்டிருந்த பிராந்தியக் கட்சி ஒன்றில் உறுப்பினராக இருந்திருக்கிறார். தலைமை மீது தீராத விசுவாசம். திரளானவர்கள் கூட்டமாகக் கூடி கூட்டாக ஏதேனும் செய்வதில் ஆர்வமுள்ள சாமானியர். அவர் சார்ந்திருந்த பிராந்தியக் கட்சியின் தலைவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதனால் சிலர் சேர்ந்து ஒரு அரசுப் பேருந்தை எரித்திருக்கிறார்கள். அச்செயலுக்கு விருந்தினர்தான் தலைமை. பேருந்தை எரித்து விட்டு முந்திரிக்காட்டிற்குச் சென்று நாள்கணக்கில் தலைமறைவாகி விட்டார்கள். போலிஸ் அவருடைய வீட்டை சல்லடையாய் சலித்து நாசமாக்கியது. அவருடைய தந்தை மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறது. அவருடைய தந்தை எந்த விபரமும் அறியாதவர். பெரும் அலைக்கழிப்புக்கு ஆளாகிறது அவருடைய குடும்பம். பல நாட்கள் முந்திரிக்காட்டிலிருந்து வெளிவராமல் இருந்திருக்கிறார் விருந்தினர்.

உங்கள் பெயரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லையா என்று கேட்டேன். போலிஸ் தேடிவந்த போது தான் இல்லை என்பதால் தனது தந்தையின் பெயரில் முதல் தகவல் அறிக்கை பதிவானது என்றார் விருந்தினர். போலிஸ் பேருந்தை எரித்த குற்றச் செயலுக்கான முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயரையும் சேர்த்திருந்தால் அவரது வாழ்க்கை வேறுவிதமாக ஆகியிருக்கும். பல நாட்களுக்குப் பின் முந்திரிக்காட்டில் இருந்து ஊர் திரும்பியிருக்கிறார். அப்பாவியான அவரது தந்தையும் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டதற்கு மனித உரிமை கமிஷனில் முறையீடு செய்யப்பட்டு அவர்கள் அடைந்த பாதிப்பின் ஒரு பகுதி இழப்பீடாக அளிக்கப்பட்டிருக்கிறது.   கதை இந்த இடத்தில் ஒரு திருப்பத்தை அடைந்தது. 

அதாவது, விருந்தினர் சில மாதங்களுக்குப் பிறகு அரசாங்கத்தில் தனது பட்டப்படிப்பைப் பதிவு செய்திருந்த விதத்தில் ஆசிரியராகப் பணியில் சேர அரசாங்க உத்தரவைப் பெறுகிறார். ஆசிரியராக பணியில் சேர்கிறார். 

‘’உங்கள் தந்தையின் பெயரைச் சேர்க்காமல் உங்கள் பெயரை முதல் தகவல் அறிக்கையில் சேர்த்திருந்தால் உங்களுக்கு அரசாங்கப் பணி கிடைத்திருக்காது இல்லையா ?’’ என்று கேட்டேன். அவர் பணியில் சேர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டது. எனினும் இந்தக் கேள்வி அவரிடம் முதல் முறையாகக் கேட்கப்படுகிறது. அவர் அந்த கோணத்தில் சிந்தித்திருக்கவில்லை. அவ்விதம் நிகழ்ந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என அப்போது தான் யோசிக்கிறார். இந்த விஷயத்தைக் கூட இப்போதுதான் யோசிக்கிறாரே என எண்ணினேன். இப்போதாவது யோசித்துப் பார்க்க அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறதே என சந்தோஷப்பட்டுக் கொண்டேன். 

ஒரு தேசியக் கட்சி தனது தொண்டர்களை பொதுச் சொத்தை நாசமாக்க அனுமதிக்குமா என்ற கேள்வியை எனக்குள் கேட்டுக் கொண்டேன். இந்தியா போன்ற பரந்த நாட்டில் இரு கட்சித் தொண்டர்கள் மோதிக் கொள்வதுண்டு. பல்வேறு காரணங்களால் கலவரங்கள் நடந்ததுண்டு ; நடப்பதுண்டு. இந்தியாவை ஆண்ட தேசியக் கட்சிகள் எவையும் தன் தொண்டர்களை பொதுச் சொத்துக்களை நாசம் செய்ய ஏவியதில்லை. தேசியக் கட்சிகள் ஏன் இந்தியாவை ஆள்கின்றன ; பிராந்தியக் கட்சிகள் ஏன் தேசியக் கட்சிகளுடன் ஏதாவது ஒரு விதத்தில் இணைந்து கொண்டு அதிகாரம் பெற நினைக்கின்றன என்னும் கதையை - பல்வேறு கதைகளை விருந்தினர் சொன்ன கதையிலிருந்து நான் மனதுக்குள் உருவாக்கிக் கொண்டேன்.   

Wednesday, 9 July 2025

14 மரங்கள் - 4 ஆண்டுகள்

சில நாட்களுக்கு முன்னால், 14 மரங்கள் வெட்டப்பட்ட ஊரின் புராதானமான விஷ்ணு ஆலயத்தின் சன்னிதித் தெருவுக்குச் சென்றிருந்தேன். அந்த ஊரைக் கடந்து செல்லும் போது எப்போதும் அந்தத் தெருவுக்கு சென்று வெட்டப்பட்ட மரங்களுக்கு பிழையீடாக நடப்பட்ட மரங்களைக் காண்பது எனது வழக்கம். இந்த நான்கு ஆண்டுகளில் அவை பெரிய மரங்களாகி விட்டன. அவற்றில் நிழல் தரும் மரங்கள் உண்டு ; பூ மரங்கள் உண்டு ; கனி தரும் மரங்களும் உண்டு. நான்கு கோடைக்காலங்களைக் கடந்து வந்திருக்கின்றன அந்த மரங்கள். இன்னும் ஓரிரு மாதத்தில் பிரதேசத்தின் மழைக்காலம் துவங்க இருக்கிறது. மழைக்காலம் 100 தினங்கள் இருக்கும். அந்த காலகட்டத்தில் அந்த மரங்கள் மேலும் பெருவளர்ச்சி பெறும். தன்னை வெட்ட வருபவர்களுக்கும் நிழல் அளிக்கும் மரங்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு மனிதனுக்கு எத்தனையோ இருக்கிறது.  

Tuesday, 8 July 2025

மந்தார மலர் (மறுபிரசுரம்)

  
14 மரங்கள் வெட்டப்பட்ட கிராமத்தின் அதே வீதியில் நாம் நட்ட 100 மரங்கள் இந்த இரண்டே கால் வருடத்தில் சிறப்பாக வளர்ந்து கணிசமான உயரத்தை எட்டியுள்ளன. மகிழம், பாரிஜாதம், மந்தாரை ஆகிய பூமரங்களும் கொன்றை, சொர்க்கம் ஆகிய நிழல் மரங்களும் நாவல்பழ மரமும் அங்கே உள்ளன. அங்கே மந்தாரை வண்ண மலராக பூக்கத் தொடங்கியுள்ளது. 

மக்கள் வழிபடும் ஆலயத்தை இடிக்கவும் மக்கள் வழிபடும் வேப்ப மரத்தை வெட்டவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தடுத்து நிறுத்த இரண்டு நாட்களில் பலமுறை அந்த கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்த சிறுவன் ஒரு மந்தார மலரைப் பறித்து வந்து என்னிடம் காட்டினான். அதன் ஒளிப்படம் மேலே. 

14 மரங்கள் - 3 ஆண்டுகள் (மறுபிரசுரம்)

09.07.2021 அன்று புராதானமான விஷ்ணு ஆலயம் அமைந்திருக்கும் ஊரின் சன்னிதித் தெருவில் வசிக்கும் மக்கள் பல ஆண்டுகள் வளர்த்திருந்த வேம்பு, மலைவேம்பு, புங்கன் என 14 மரங்கள் அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவரால் ஜே.சி.பி மூலம் வேரோடு சாய்க்கப்பட்டு முழுமையாக வெட்டப்பட்டு அவை அந்த ஊராட்சி மன்றத் தலைவருக்குச் சொந்தமான செங்கல் காலவாயில் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டன. பொது இடத்தில் இருக்கும் எந்த ஒரு மரமும் அரசாங்கத்தின் சொத்தாகும். பொது இடத்தில் இருக்கும் எந்த ஒரு மரத்தையும் வெட்ட வேண்டும் எனில் வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். வருவாய் கோட்டாட்சியர் அந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்து மரம் இருக்கும் இடத்தை நேரடியாகப் பார்வையிட்டு  அந்த மரம் வெட்டப்பட வேண்டும் என்பதற்கு தகுந்த காரணம் இருப்பதாக நினைத்தால் அந்த ம்ரத்தை வெட்ட உத்தரவு தருவார். அந்த உத்தரவில் அந்த மரம் அரசாங்கத்தால் ஏலம் விடப்பட்டு அந்த ஏலத்தொகை அரசு கணக்கில்  சேர்ந்த பின்னரே அந்த மரத்தை வெட்ட முடியும் என்ற நிபந்தனையும் இருக்கும். எவரேனும் பொது இடத்தில் இருக்கும் மரத்தை வெட்டினால் வெட்டிய நபரிடம் வெட்டப்பட்ட மரத்தின் மதிப்பு மேலும் அந்த மதிப்பில் 1 மடங்கிலிருந்து 20 மடங்கு வரை அபராதம் விதிக்கப்பட்டு மரத்தை வெட்டிய நபர் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டும் என்பது விதி. சாதாரண குடிமக்களுக்கே இந்த நெறி எனில் அரசுப் பொறுப்பில் இருக்கும் ஊராட்சி மன்றத் தலைவருக்கு இந்த விதி தீவிரமாகப் பொருந்தும். 

பத்து ஆண்டுகளுக்கு மேல் அகவை கொண்ட அந்த மரங்கள் குரூரமாக வெட்டப்பட்டதைக் கண்ட விஷ்ணு ஆலய சன்னிதித் தெருவாசிகளான குழந்தைகளும் பெண்களும் ஆண்களும் மனம் வெதும்பி கலங்கி நின்றார்கள். தங்கள் பிள்ளைகளைப் போல் போற்றி வளர்த்த மரங்கள் சில நிமிடங்களில் இல்லாமல் ஆக்கப்பட்டதைக் கண்டு அச்சத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்தனர். விஷயம் கேள்விப்பட்டு அந்த இடத்தைக் காண நேரில் சென்றேன். 

மக்களிடம் பொது இடத்தில் இருக்கும் மரங்கள் வெட்டப்படாமல் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் வருவாய் கோட்டாட்சியரிடம் அனுமதி பெற்றால் மட்டுமே மரங்களை வெட்ட முடியும் என்ற விதியை உருவாக்கியுள்ளது. இங்கே மிகத் தீவிரமான விதிமீறல் நிகழ்ந்துள்ளது. இதனை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினேன். மக்கள் தயங்கினார்கள். மக்கள் அச்சப்பட்டார்கள். நிகழ்ந்ததைத் தெரிவிக்க வேண்டியது குடிமக்களாக நமது கடமை. அதனை செய்யாமல் இருந்தால் நாம் கடமை தவறியவர்களாக ஆவோம். எனவே மாவட்ட ஆட்சியருக்கு நிகழ்ந்த விஷயங்களைத் தெரிவித்து ஒரு மனு அனுப்புவோம் என்று சொன்னேன். மக்கள் அதனை ஏற்றார்கள். 

அதற்கு முன், மரங்கள் வெட்டப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை சேட்டிலைட் செய்தி சேனலுக்கு அளித்து அந்த செய்தி மரங்கள் வெட்டப்பட்ட வீடியோ காட்சியுடன் வெளியானது. வெளிநாடுகளில் வசிக்கும் அந்த ஊர்வாசிகள் வரை அந்த செய்தி சென்று சேர்ந்தது. உள்ளூர்க்காரர்கள், அண்டை கிராமத்துக் காரர்கள் என அனைவருக்கும் ஒரே நேரத்தில் அந்த செய்தி சென்று சேர்ந்தது. வெளியூரிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் உள்ளூர்க்காரர்களுக்கு ஃபோன் செய்து 14 மரங்கள் வெட்டப்பட்டது குறித்து விசாரிக்கத் தொடங்கினார்கள். ஊர் முழுக்க இந்த விஷயம் விவாதிக்கப்பட்டது. 

மாவட்ட ஆட்சியரிடம் மனுநீதி நாள் அன்று புராதானமான விஷ்ணு ஆலயம் அமைந்திருக்கும் சன்னிதித் தெருவாசிகளுடன் சென்று நேரடியாக மனு அளிக்கப்பட்டது. அந்த மனு வருவாய் கோட்டாட்சியருக்கு அறிக்கை கேட்டு அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையின் நகலை மனுதாரர்களுக்கும் அளிக்க மாவட்ட ஆட்சியர் வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டிருந்தார்.

மரங்கள் வெட்டப்பட்ட அதே ஜூலை மாதத்தில் ஜூலை 30 அன்று புராதானமான விஷ்ணு ஆலயம் அமைந்திருக்கும் ஊரின் சன்னிதித் தெருவில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. அவை இப்போது பத்து அடி உயரத்துக்கும் மேலாக வளர்ந்த விருட்சங்களாக உயர்ந்து நிற்கின்றன. 

மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் வருவாய் கோட்டாட்சியரின் அறிக்கையின் நகல் கிடைக்கப் பெறாததால் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் கடிதம் மேல் எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கை என்ன என்ற விபரத்தைக் கேட்டோம். வெட்டப்பட்ட மரங்களின் மதிப்பு ரூ.950 என நிர்ணயிக்கப்பட்டு அதன் மேல் ஒரு மடங்கு அபராதம் ரூ950ம் ஜி.எஸ்.டி தொகை ரூ.252ம் சேர்த்து ரூ.2052 ஊராட்சி மன்றத் தலைவரால் செலுத்தப்பட வேண்டும் என வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்ற விபரம் கிடைக்கப் பெற்றது. 

வட்டாட்சியருக்கு கிராம நிர்வாக அலுவலரும் வருவாய் ஆய்வாளரும் அறிக்கை அளித்த தேதி 13.07.2021. வட்டாட்சியர் உத்தரவின் தேதி 11.07.2021. வட்டாட்சியர் அந்த உத்தரவில் 13.07.2021 அன்று வருவாய் ஆய்வாளரால் தனக்கு அளிக்கப்பட்ட அறிக்கையின் படி மரங்களை வெட்டிய ஊராட்சி மன்றத் தலைவருக்கு ரூ.2052 பணம் செலுத்த உத்தரவிடப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார். 

வருவாய் ஆய்வாளர் அறிக்கை 13.07.2021 அன்று அளிக்கப்பட்டிருக்கையில் அந்த அறிக்கையின் தொடர் நடவடிக்கையான வட்டாட்சியர் உத்தரவு 13.07.2021 அன்றோ அதற்குப் பிந்தைய தினத்திலோ பிறப்பிக்கப்பட முடியுமே தவிர எவ்விதம் அதற்கு முன் தேதியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்க முடியும்? வட்டாட்சியரின் இந்த செயல் 14 மரங்களை வெட்டிய ஊராட்சி மன்றத் தலைவரை காக்கும் விதத்தில் அமைந்திருப்பது கண்கூடான விஷயமாகிறது. வெட்டப்பட்ட மரங்கள் பல ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்டவை. அவற்றின் மதிப்பு ரூ.950 என மிகக் குறைவாக மதிப்பிடப்பட்டிருப்பதும் 14 மரங்களை வெட்டிய ஊராட்சி மன்றத் தலைவரை சட்டத்தின் பிடியிலிருந்து காக்க மேற்கொண்ட நடவடிக்கை என்பதும் அதற்கு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் , வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்பதும் இதன் மூலம் புலனாகிறது என்பதால் இது குறித்து மாவட்ட ஆட்சியர் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் 14 மரங்களை வெட்டியவருக்கு உடந்தையாக இருந்த அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பப்பட்டது. 

14 மரங்கள் வெட்டப்பட்ட விஷயத்தின் கோப்பினை முழுமையாக அளிக்குமாறு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி கோரினோம். அந்த தகவல்கள் தகவல் உரிமைச் சட்டத்தின் காலக்கெடுவான 30 நாட்களுக்குள் அளிக்கப்படாமல் பல நாட்கள் கடந்தன. தகவல் உரிமை பெறும் சட்டத்தின் படி காலக்கெடுவுக்குப் பின்னும் விபரங்கள் அளிக்கப்படவில்லை என்று முதல் மேல்முறையீடு செய்தோம். முதல் மேல்முறையீடுக்கு பதில் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த கோப்பின் முக்கியமான குறிப்பிட்ட சில பகுதிகள் அளிக்கப்படாமல் வேறு சில பகுதிகளே தரப்பட்டன. முழுமையான தகவல்கள் முழுமையான கோப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கோரி மாநில தகவல் ஆணையத்துக்கு இரண்டாம் மேல் முறையீடு அனுப்பப்பட்டது. மாநில தகவல் ஆணையத்தால் இந்த இரண்டாம் மேல்முறையீடு ஒரு வழக்காக பதிவு செய்யப்பட்டு வழக்கு எண் அளிக்கப்பட்டுள்ளது. 

சில மாதங்களுக்கு முன் , 14 மரங்களை வெட்டிய ஊராட்சி மன்றத் தலைவர் புராதானமான விஷ்ணு ஆலயம் அமைந்திருக்கும் அதே தெருவில் இருக்கும் ஸ்ரீ முனீஸ்வரன் கோவிலில் இருக்கும் 15 ஆண்டு அகவை கொண்ட வேப்பமரம் ஒன்றை வெட்டவும் அந்த கோவிலை இடிக்கவும் சில முயற்சிகளை மேற்கொண்டார். வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கவனத்துக்கு விஷயம் கொண்டு செல்லப்பட்டு ஆலயமும் 15 ஆண்டு அகவை கொண்ட வேப்பமரமும் காக்கப்பட்டது. 

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பில் இருந்த பல அதிகாரிகள் இப்போது அந்த பொறுப்பில் இல்லை. ஒருவர் ஓய்வு பெற்றிருக்கிறார். பலர் மாற்றலாகி வெளியூர் சென்று விட்டனர். எனினும் அந்த முழுமையான கோப்பு என்னும் விஷயம் அவர்களுக்கு பெரும் அசௌகர்யமாகவே இருக்கிறது. தகவல் ஆணையத்திடம் இந்த விஷயம் சென்றிருப்பதால் அந்த கோப்பினை மூடுவது எளிதான விஷயம் இல்லை. தகவல் ஆணையத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போது கோப்பு அளிக்கப்பட்டே ஆக வேண்டும். அவ்வாறு அளிக்கப்பட்ட கோப்பின் அடிப்படையில் நம்மால் துறை ரீதியான விசாரணை கோர முடியும். அந்த கோப்பின் அடிப்படையில் நீதிமன்றத்தையும் நாட முடியும். 

சில வாரங்களுக்கு முன்னால், 14 மரங்கள் வெட்டப்பட்ட புராதானமான விஷ்ணு ஆலயம் அமைந்திருக்கும் தெருவின் பக்கத்துத் தெருவைச் சேர்ந்தவர்கள் தங்கள் தெருவில் நிழல் தரும் மரங்களும் இறைப்பூசனைக்கு உதவும் பூமரங்களும் என 100 மரக்கன்றுகளை தங்கள் தெருவில் நட விரும்புவதாக தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தார்கள். அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

ஜனநாயகக் குடிகளாக நாம் அரசாங்கத்தின் மீதும் அரசாங்க அமைப்பின் மீதும் நம்பிக்கை வைக்கிறோம். அதனாலேயே விதிகளுக்கு உட்பட்ட விதத்தில் நாம் இந்த விஷயத்தை அணுகுகிறோம். செயல்படுகிறோம். நம் கடமையை நம்மால் முடிந்த அளவு செய்திருக்கிறோம் என்ற நிறைவு இருக்கிறது. 

14 மரங்கள் வெட்டப்பட்ட புராதானமான விஷ்ணு ஆலயம் அமைந்திருக்கும் சன்னிதித் தெருவில் இந்த மூன்று ஆண்டுகளில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டு அவை விருட்சமாக வளர்ந்திருப்பதைக் காணும் போது மனம் அமைதி கொள்கிறது.