இரண்டு குடும்பங்கள் எதிரெதிர் வீட்டில் குடியிருக்கின்றன. ஒரு குடும்பத்தின் தலைவருக்கு ‘’ஐலுரோஃபோபியா’’. அதாவது பூனையைக் கண்டால் பயம். எதிர் வீட்டில் குடியிருக்கும் குடும்பம் வளர்ப்புப் பூனையை குழந்தை என வளர்க்கிறது. இந்த இரு குடும்பத்துக்கும் பூனையால் நடக்கும் இரு சம்பவங்களே தி. ஜா வின் ‘’சந்தானம்’’ சிறுகதை.
Wednesday, 29 January 2025
மேகம் - கருநிலவு
இரண்டு சினேகிதிகள். அவர்கள் வாழும் குடும்பத்தின் சுபாவம் இருவரையும் பாதிக்கிறது. ஒருத்தி சூழலின் மூலம் மேலும் பண்பில் வளர்கிறாள். இன்னொருத்தி சூழலால் தன்னை தாழ்த்திக் கொள்கிறாள். தி. ஜா அதனை மேகம்- கருநிலவு என்ற சிறுகதையில் எழுதிப் பார்க்கிறார்.
மேரியின் ஆட்டுக்குட்டி
பதின் வயது சிறுமி ஒருத்தி பெண்கள் விடுதி ஒன்றில் இருந்து கொண்டு பள்ளிப்படிப்பை படிக்கிறாள். அவளது பாடத்தில் ‘’மேரியின் ஆட்டுக்குட்டி’’ என்ற பாடல் வருகிறது. சிறுமி சிறு வயதில் ஏமாற்றப்பட்டு கர்ப்பமடைந்து ஒரு குழந்தையை ஈன்றவள். மேரியின் ஆட்டுக்குட்டி பாடலுக்கும் அவள் வாழ்வுக்கும் ஒற்றுமைகள் பல இருக்கின்றன. துயரம் வெவ்வேறு வகைகளில் சூழ்கிறது அவள் வாழ்வை. அவளுக்கு மீட்பு என நிகழ்ந்தது எது என்னும் கேள்வியை சிறுகதையாக்கி உள்ளார் தி.ஜா
Monday, 27 January 2025
ஸீடிஎன்
1965ல் இந்த கதையை எழுதியிருக்கிறார் தி.ஜா. இந்திய அதிகார வர்க்கம், சராசரி இந்திய மனநிலை ஆகியவற்றைப் பகடி செய்து எழுதப்பட்ட சிறுகதை.
தாத்தாவும் பேரனும்
பண்டைய வரலாற்றுக் காலகட்ட கதை ஒன்றை எழுதியிருக்கிறார் தி.ஜா. அக்கதையே ‘’தாத்தாவும் பேரனும்’’. பேத புத்தியை அகத்தில் கொண்டிருக்கிறான் பாட்டன். பாட்டன் மேல் குரோதம் கொண்டிருக்கிறான் பேரன். பேதமும் குரோதமும் ரணகளத்துக்கு இருவரையும் இட்டுச் செல்கின்றன. இருவரும் அடைந்தது என்ன என்னும் கேள்விக்கான பதிலை வாசகனைச் சிந்திக்கச் செய்கிறது. இருவரும் இழந்தது என்ன என்பதையும் வாசகனை உணர வைக்கிறது.
விரல்
ஒரு கனவான். மிகவும் நாசுக்கானவர். இது அவருடைய ஒரு இயல்பு. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சில அற்பத்தனங்களைச் செய்கிறார். அவர் வீணை வாசிக்கக் கூடியவர். அவரது விரல்கள் வீணை மூலம் நிகழ்த்தும் அற்புதத்தை கண்ட ஒருவர் அந்த கரங்களா அற்பத்தனம் நிகழ்த்தின என துணுக்குறுகிறார். எதிர்பாரா சிறு விபத்து அவர் விரல்களை நசுக்கி விடுகிறது. தி.ஜா வின் விரல் சிறுகதை ஒரு கனவானின் ஒளி மிக்க பக்கத்தையும் இருள் கப்பியிருக்கும் பகுதியையும் அடையாளம் காட்டிச் செல்கிறது.
Sunday, 26 January 2025
இவனும் அவனும் நானும்
காம குரோத மோகம் லோபம் மதம் மாச்சர்யம் என்பது மனித மனத்தின் ஆறு ப்கைவர்கள். எனினும் மனித மனம் அவற்றை பகையென்று எண்ணி விலகி நின்றிருப்பதில்லை. அவை உட்பகைவர்கள். உடனிருந்தே அழிப்பவை. அவற்றுடன் நேரடியாகப் போராடுவதை விட அவற்றை விலக்கி வைப்பதே பாதுகாப்பான அணுகுமுறை. மனித மனம் அந்த ஆறு பகைவர்களுடனும் எப்போதும் விஷப் பரீட்சை செய்து கொண்டேயிருக்கிறது. அந்த விஷப்பரீட்சை குறித்த கதை தி.ஜா வின் ‘’இவனும் அவனும் நானும்’’.
ஒரு விசாரணை
நவரசங்களை வெளிப்படுத்தி நாடகம் போடும் ஒரு கோஷ்டி. அந்த கோஷ்டியில் இருவர் காதலிக்கின்றனர். காதலித்து பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த திருமணத்துக்கு நாடகக் கோஷ்டியில் பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர். வாதப் பிரதிவாதங்கள் நிகழ்கின்றன. விசாரணை முடிகிறது. காலைக் காட்சி முடிந்து மாலைக் காட்சி தொடங்குவது போல விசாரணை முடிந்து நடிகர்களின் அன்றாட வாழ்க்கை தொடங்குகிறது. இதுவே தி.ஜா வின் ‘’ஒரு விசாரணை’’ சிறுகதை.
போர்ஷன் காலி
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நடுவயது கொண்ட இரண்டு நண்பர்கள். கலையில் பொது விஷயங்களில் ஆர்வம் கொண்ட ஒரு பேராசிரியர் ஒருவர். அவரது நண்பரான சூது வாது அறியாத இன்னொருவர். பேராசிரியர் மகள் பிரசவத்துக்காக பிறந்தகம் வந்திருக்கும் சமயம் பேராசிரியர் தன் வீட்டின் கீழ் போர்ஷனில் குடியிருக்கும் குடும்பத்தின் இளம் பெண்ணுக்கு ஒரு காதல் கடிதம் எழுதிக் கொடுத்ததாக ஒரு பேச்சு எழுகிறது. சுற்றியிருப்பவர்கள் கொதித்துப் பொகிறார்கள். குடித்தனக்காரர் வீட்டை காலி செய்து விட்டு சென்று விடுகிறார். நீண்ட ஆண்டுகளாக வீட்டை காலி செய்யாமல் இருந்தார் ; எந்நேரமும் சினிமாப் பாட்டு அவர்கள் வீட்டில் ஓடிக் கொண்டேயிருந்தது ; அதன் காரணத்துக்காகவே இப்படி ஒரு அதிர்ச்சிகரமான நடவடிக்கை எடுத்தேன் என்கிறார் பேராசிரியர் சூது வாது அறியாத நண்பரிடம். நண்பருக்கு நம்புவதா நம்பாமல் இருப்பதா என்று தெரியவில்லை. தன் மனைவியிடம் பேராசிரியர் சொன்னதை அப்படியே வந்து சொல்கிறார். முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்; அதை அப்படியே கேட்டு நம்புகிறீர்களே என்கிறாள் மனைவி. தி.ஜா வின் ‘’போர்ஷன் காலி’’ நல்ல ஒரு ஹாஸ்ய கதை.
Saturday, 25 January 2025
ஒரு காட்சி
Wednesday, 22 January 2025
24 மணி நேரம்
Sunday, 19 January 2025
ஒரு திருப்தி
சில நாட்களுக்கு முன்னால், ராஜாஜியின் கல்வித் திட்டம் நூலும் தி.ஜானகிராமன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு நூலும் ஆர்டர் செய்திருந்தேன். கூரியர் மூலம் வந்திருந்தன. அப்போது வீட்டில் நான் இல்லை. எனது மேஜை மீது பார்சல் இருந்தது. எனது மேஜையில் இருக்கும் ஸ்விஸ் கத்தி மூலம் பார்சலைப் பிரித்தேன். இரண்டு நூல்கள் என் முன்னால்.ராஜாஜியின் கல்வித் திட்டம் குறித்த நூலை முதலில் கையில் எடுத்தேன். முன்னட்டையைப் பார்த்தேன். பின்னட்டையை வாசித்தேன். நூலை சில பக்கங்கள் வாசிக்கத் தொடங்கினேன்.அன்றைய தினம் அந்நூலை வாசித்து முடித்தேன். அது குறித்து ஒரு பதிவும் எழுதினேன். இருப்பினும் புனைவா அல்லது அ-புனைவா எது முதல் தேர்வு என்னும் பரிசீலனையில் மனம் ஈடுபட்டது. நான் இரண்டையும் வாசிப்பவன். இருந்தாலும் மனம் கேட்டது எது முதல் தேர்வு என. சில மாதங்களுக்கு முன்னால் தினமும் தி.ஜானகிராமனின் ஒவ்வொரு சிறுகதையையும் வாசித்து அந்த கதைகள் குறித்த குறிப்புகளை எழுதி வந்தேன். இரண்டு பகுதிகளில் முதல் பகுதி மட்டுமே என்னிடம் இருந்தது. புதிய பதிப்பை ஆர்டர் செய்து வாங்க நாள் ஆகி விட்டது.
இன்று ராஜாஜியின் கல்வித் திட்டம் நூல் குறித்த குறிப்பை வாசித்து விட்டு நண்பர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். இந்த விஷயம் தொடர்பாக எழுதப்பட்டிருக்கும் இன்னொரு நூல் குறித்தும் நண்பர் அதில் குறிப்பிட்டிருந்தார். என் மனக் கேள்விகள் நீங்கி மனம் சமாதானம் ஆனது.
ராஜாஜியின் கல்வித்திட்டம் - வாசகர் கடிதம்
ஒப்புகைச் சீட்டு விவகாரம் - அடுத்து என்ன செய்யப் போகிறேன்?
ஒரு மாதம் முன்பு ஒப்புகைச் சீட்டு விவகாரம் தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் அவ்விஷயத்தின் கோப்பினைக் கேட்பது என முடிவு செய்த போது என் முன் மூன்று சாத்தியங்கள் இருந்தன. முதலாவது, சி.பி.கி.ராம்.ஸ் புகாரின் கோப்பைக் கேட்பது. இரண்டாவது, சி.பி.கி.ராம்.ஸ் புகார் , எழுத்துபூர்வமான புகார் இரண்டின் கோப்பையும் கேட்பது, மூன்றாவது எழுத்துப்பூர்வமான புகாரின் கோப்பைக் கேட்பது.
எழுத்துப்பூர்வ புகாரின் கோப்பை முதலில் கேட்பது என்ற வாய்ப்பைத் தேர்ந்தெடுத்தேன். எனது உள்ளுணர்வு அவ்விதம் செய்யச் சொன்னது.
எழுத்துப்பூர்வமான புகார் சி.பி.கி.ராம்.ஸ் புகாருடன் இணைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டிருந்தாலும் ஒருவேளை சி.பி.கி.ராம்.ஸ் புகார் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தால் பதிலளிக்கும் ஒரு மாத காலகட்டத்தில் ஏதேனும் நிகழ்த்த விசாரணை அதிகாரிக்கு கூடுதல் அவகாசம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இவ்விதம் செய்தேன்.
நாளை தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் சி.பி.கி.ராம்.ஸ் புகாரின் கோப்பை கேட்க இருக்கிறேன். முப்பது நாட்களுக்குள் பதில் அளிக்கப்பட வேண்டும். விசாரணை அதிகாரிக்கு மேலும் முப்பது நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.
என்ன நிகழ்கிறது என்பதைக் காண்போம்.
ஒப்புகைச் சீட்டு விவகாரம் - RTI பதில் - சில அவதானங்கள்
அவதானம் 1
புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு அஞ்சல்துறை கண்காணிப்பாளர் துணை அஞ்சல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டிருக்கிறார். 43 நாட்கள் கடந்த பின்னும் 06.12.2024 வரை விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. 06.12.2024 அன்றும் அந்த புகார் சி.பி.கி.ராம்.ஸ் உடன் இணைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவதானம் 2
19.10.2024ல் புகார் அனுப்பப்பட்ட பின் ஒப்புகைச்சீட்டு விவகாரத்துடன் தொடர்புடைய ஊழியர்களிடம் எழுத்துப்பூர்வமான விளக்கம் கோரப்படவில்லை என்பதை ஆர்.டி.ஐ தகவல் மூலம் அறிய நேர்கிறது.
அவதானம் 3
அக்டோபரில் நான் அளித்த புகார் ஒரு நிகழ்வு. நவம்பரில் நான் அளித்த சி.பி.கி.ராம்.ஸ் புகார் இன்னொரு நிகழ்வு. இரண்டுமே ஒப்புகைச்சீட்டு விவகாரம் என்றாலும் இரண்டும் இரண்டு தனித்தனி நிகழ்வுகள்.
ஒப்புகைச் சீட்டு விவகாரம் - RTI பதில்
Saturday, 18 January 2025
மழைப் பயணம்
இன்று காலை 4 மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது. எழுந்ததும் நீராடினேன். குளிர் கடுமையாக இருந்தது. இன்று தஞ்சாவூர் வரை செல்ல வேண்டிய வேலை இருந்தது. காலை 11 மணி அளவில் சென்றால் சரியாக இருக்கும் என எண்ணினேன். குடந்தைக்கும் தஞ்சாவூருக்கும் இடையே புதிதாக நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. நான்கு வழிச் சாலையில் பயணம் செய்து பழகி விட்டால் அதன் பின் சாதாரண சாலைகளில் பயணிப்பது என்பது அவ்வளவு உவப்பாக இருப்பதில்லை. சமீபத்தில் நானும் எனது நண்பனும் காரில் பயணம் செய்தோம். அப்போது வாகனத்தை இயக்கிய நண்பன் புதிய கார்களில் இப்போது ‘’குரூஸ்’’ என்னும் இயக்க வகை இருக்கிறது. நான்கு வழிச் சாலையில் அந்த வகையில் காரை அமைத்தால் ஆக்சிலேட்டர் கூட அழுத்தத் தேவையில்லை ; வண்டி தானாக செல்லும் என்றான். நான்கு வழிச் சாலைகளால் இந்நிலை சாத்தியமாகியிருக்கிறது என்று கூறினான்.
காலை 9 மணி அளவில் கிளம்பும் போது வானம் முழுக்க மூடியிருந்தது. சூரியக் கதிரே இல்லை. தை மாதம் இந்த மாதிரியான நிலை என்பது அபூர்வம். தஞ்சாவூர் மாவட்டத்துக் காரர்களுக்கு காலை எழுந்ததும் சுள் என இருக்கும் சூரியனைப் பார்த்தால் தான் நாள் பிறந்ததாக அர்த்தம் கொள்வார்கள். வாகனத்தில் செல்லும் போது தீவிரமாகக் குளிர ஆரம்பித்தது. வாகனத்தை சீராக இயக்கிக் கொண்டு சென்றேன்.
தஞ்சாவூரில் சிறுவர்கள் சிலர் வானில் பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். குஜராத்தில் உத்தராயண் என தை முதல் நாள் மாநிலத்தின் எல்லா வீடுகளிலும் பட்டம் விடுவார்கள் என்பதை நினைத்துக் கொண்டேன். தஞ்சாவூரின் சில பகுதிகளில் விற்பனைக்கு இருக்கும் மனைகளைப் பார்வையிட்டு வந்தேன்.
திரும்பி வரும் போது லேசான பூத்தூறல். பாபநாசம் அருகில் இருந்த சிறுமழை. குடந்தையைக் கடந்ததும் பேய்மழை. மழையில் நனைந்தவாறு வீடு வந்து சேர்ந்த போது குளிரில் உடல் நடுங்கியது. பயணக் களைப்பு நீங்க நீராடினேன். அப்போதும் தீவிரமான குளிர்.
தை யில் மழை என்பது பயிர் அறுவடைக்கு இடையூறானது. மழை எத்தனை நாள் நீடிக்கும் என்று தெரியவில்லை.
Friday, 17 January 2025
ராஜாஜியின் கல்வித் திட்டம்
சாதிக்குப் பாதி நாளா? -ராஜாஜியின் கல்வித் திட்டம் , ஆசிரியர் : தே.வீரராகவன் தமிழாக்கம் : அரவிந்தன் பக்கம் : 174, விலை ; ரூ.220 வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில்.
***
நூலாசிரியர் Modified scheme of elementary education of Madras state in the year 1953 and its impact என்ற தலைப்பில் எழுதிய ஆய்வேட்டைக் கொண்டது இந்நூல். நூலாசிரியர் 2009ம் ஆண்டு மறைந்தார். அவர் மறைந்து 11 ஆண்டுகளுக்குப் பின் 2020ல் இந்நூல் வெளியாகி இருக்கிறது.
***
இந்த நூல் இன்று என் கைக்கு வந்து சேர்ந்தது. இன்றே வாசித்தேன். இந்த நூலின் வாசிப்பு அனுபவம் சற்று வித்யாசமானது. கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு விஷயம். இருப்பினும் அது குறித்து எழுதப்பட்ட ஆய்வேட்டை வாசிக்கையில் அக்காலகட்டத்தில் விவாதிக்கப்பட்ட அந்த விஷயம் எக்காலத்துக்குமானது ; கல்வி குறித்தும் கல்வித் திட்டம் குறித்தும் சமூகங்கள் எப்போதும் சிந்தித்துக் கொண்டும் விவாதித்துக் கொண்டு இருக்கும் என்பது ஒரு இயல்பு நிலை என்று தோன்றியது.
***
இந்த நூலை வாசிக்கையில் நான் பலவிதங்களிலும் அதனைப் பின் தொடர்ந்தேன். மூன்று வயது முதல் பதினேழு வயது வரை பள்ளி மாணவனாக இருந்திருக்கிறேன். எனது பள்ளிக் கல்வி முழுமையும் தமிழ் வழியிலேயே பயின்றேன். அந்த பள்ளி மாணவன் மனநிலையிலும் இந்த நூலில் விவாதிக்கப்பட்டிருக்கும் விஷயங்கள் குறித்து யோசித்தேன்.
ஒரு எழுத்தாளனாக சமகாலத்தில் பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் எவ்விதம் மொழியைப் பயில்கிறார்கள் எவ்விதமான மொழித் தேர்ச்சி கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களுடன் உரையாடும் போது கேட்டு அறிவதுண்டு. எனவே அந்த நோக்கிலும் இந்த பிரதியை வாசித்தேன்.
எனது சமூகச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக ஊரைச் சூழ்ந்திருக்கும் பத்து கிராமங்களில் தினமும் காலை 5 மணியிலிருந்து 6 மணி வரை இயங்கும் வகுப்புகளை கிராமத்தின் 5 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆசிரியர்களை நியமித்து நடத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு சில ஆண்டுகளாக இருக்கிறது. பெரும் பொருளும் ஒருங்கிணைப்பும் பொறுப்பும் கொண்ட முயற்சி அது. எண்ணம் செயலாக நீண்ட நாட்கள் ஆகலாம். எனினும் அதனை செய்து பார்த்து விட வேண்டும் என்ற உறுதி என்னில் தீவிரமாக இருக்கிறது. அந்த கண்ணோட்டத்திலும் இந்த விஷயத்தை அணுகினேன்.
***
இந்த நூல் என்னுள் உருவாக்கிய எண்ணங்களை சிறு சிறு குறிப்புகளாக சொல்லிக் கொண்டு போவதே நல்ல வெளிப்பாடு என்று நினைக்கிறேன்.
***
ராஜாஜி கிராமத்தின் பள்ளிகள் காலை 4 மணி நேரம் ஒரு ஷிப்ட் ஆகவும் மதியம் 4 மணி நேரம் ஒரு ஷிஃப்ட் ஆகவும் கல்வி கற்பிக்கும் வகையில் ஒரு மாறுதலைக் கொண்டு வந்தார். முதல் நோக்கிலேயே தெரியக் கூடிய விஷயம் அவர் பள்ளி பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் கொண்டு வரவில்லை ; பள்ளி இயங்கக் கூடிய விதத்தில் தான் மாறுதல் கொண்டு வந்தார் என்பது.
***
நான் 1984 முதல் 1998 வரை பள்ளியில் பயின்றேன். அந்த காலகட்டத்திலும் பள்ளி இடைநிற்றல் என்பது நிகழ்ந்து கொண்டிருந்தது. பத்தாம் வகுப்புடன் பள்ளிக் கல்வியை நிறுத்திக் கொள்ளும் வழக்கமும் பன்னிரண்டாம் வகுப்புடன் கல்வியை நிறுத்திக் கொள்ளும் வழக்கமும் ஐந்து சதவீத மாணவர்களுக்கு இருந்தது. பெரும்பாலும் எனது ஊருக்கு பக்கத்தில் இருக்கும் கிராமத்து மாணவர்கள் அவ்வாறு இடைநிற்றல் செய்வது உண்டு. அவ்வாறு இடைநிற்றல் செய்யும் மாணவர்கள் தொழிற் பயிற்சி மையம் என்னும் ஐ.டி.ஐ-ல் சில ஆண்டுகள் கழித்து இணைவது உண்டு. ஐ டி ஐ விளம்பரங்கள் பத்தாம் வகுப்பு ஃபெயில் மாணவர்களும் 12ம் வகுப்பு ஃபெயில் மாணவர்களும் இணையலாம் என்ற விளம்பரத்தை அப்போது வெளியிடுவார்கள்.
***
பள்ளிக்குச் செல்லாமலே பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் தனித்தேர்வு முறை நடைமுறையில் இருந்தது.
***
தொலைதூரக் கல்வி ஒரு அலையாக எழுந்தது. வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டில் தங்கள் வேலைகளைப் பார்த்த நேரம் போக மீதி நேரத்தில் படித்து பட்டம் பெற்று அரசுத் தேர்வுகள் எழுதி அரசாங்க வேலைக்குக் கூட போனார்கள்.
***
தேசிய திறந்தவெளி பள்ளி என்ற அமைப்பின் மூலம் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே படித்து தேர்வு எழுதும் மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்கிறார்கள்.
***
மாநிலத்தின் எல்லா குடும்பத்திலும் இருக்கும் குழந்தைகள் முழுமையாக பள்ளிக் கல்வியை நிறைவு செய்கிறார்கள் என்னும் நிலை ஏற்பட்டது 1990க்குப் பிறகு தான். அந்நிலைக்கு முக்கிய காரணம் சமூகத்தின் பொருளியலிலும் மனநிலையிலும் விளைந்த மாற்றம். மத்திய மாநில அரசின் நிதி ஒதுக்கீடும் கல்விக் கொள்கைகளும் செயலாக்கங்களும் அதில் பங்கு வகிப்பவை.
***
தேசத் தந்தையான மகாத்மா காந்தியால் தனது மனசாட்சி எனக் கூறப்பட்ட ஆளுமை ராஜாஜி. சட்டநாதக் கரையாளரின் ‘’திருச்சி சிறை’’ நூலில் சிறைக்கைதியாக இருக்கும் போதும் ராஜாஜி எவ்விதம் கைதிகளுக்கு திருக்குறள் வகுப்பும் ஷேக்ஸ்பியர் வகுப்பும் நடத்துவார் என்பதன் சித்திரத்தை அளிக்கிறார்.
***
தேசத் தலைவர்களில் ராஜாஜி அவர்களைப் போன்று பரந்து பட்ட அறிவு கொண்ட அறிஞர்கள் மிக மிகச் சிலரே. கிராம மாணவர்கள் கல்வி பயில்வதை தடுக்க அவர் முனைகிறார் என்னும் குற்றச்சாட்டு அவருக்கு எவ்வளவு வலி தந்திருக்கும்? தவம் போன்ற வாழ்க்கையை தன் நீண்ட வாழ்நாள் முழுக்க வாழ்ந்தவர். இன்ப துன்பங்களையும் புகழ்ச்சி இகழ்ச்சிகளையும் ஒன்றெனக் கருதும் நிலை அடைந்தவர்.மகாபாரதம் யக்ஷப் பிரசன்னத்தில் யக்ஷன் யுதிர்ஷ்ட்ரனிடம் யக்ஷன் இருளை விடக் கருமையானது எது எனக் கேட்கிறார். யுதிர்ஷ்ட்ரன் குற்றமற்ற ஒருவர் மீது நியாயமற்ற முறையில் சுமத்தப்படும் களங்கம் என்று பதில் சொல்கிறார்.
***
Monday, 13 January 2025
அனல் உருவாக்கம்
Friday, 10 January 2025
கனவுகள்
Tuesday, 7 January 2025
140 கி.மீ
நேற்று இரவு எனது நண்பரான மனைத்தரகர் என்னைத் தொடர்பு கொண்டார். விற்பனைக்கு சில இடங்கள் வந்துள்ளன எனக் கூறி என்னைப் பார்வையிட அழைத்தார். அவர் காட்டும் இடத்தை வாங்க எவரும் இருந்தால் அவர்களிடம் விற்பனை செய்து தருமாறு சொன்னார். இவர் மூலம் எனது நண்பர் ஒருவருக்கு இடம் வாங்கித் தந்திருக்கிறேன். வாங்கிய சில ஆண்டுகளில் வாங்கிய விலையைப் போல மூன்று மடங்கு விலைக்கு அந்த இடம் போனது. எனவே அவர் எப்போது அழைத்தாலும் அவர் காட்டும் இடங்களைச் சென்று பார்ப்பேன். காலை 7 மணிக்கு வந்து விட முடியுமா என்று கேட்டார். அவர் சொன்ன நேரத்துக்கு சென்றேன்.
முதலில் ஒரு ஊரின் கடைத்தெருவில் 40,000 சதுர அடி இடத்தைக் காட்டினார். அகலம் 150 அடி. நீளம் 270 அடி. மொத்த இடத்தையும் வாங்கி 4000 சதுர அடியாக பத்து மனையாகப் பிரித்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என எண்ணினேன். 40,000 சதுர அடியையும் மொத்தமாக வாங்குவதென்றால் பெரிய தொகை ஆகும். வாங்குபவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள். அதனைப் பத்தாகப் பிரித்தால் ஒரு மனையின் அளவு 4000 சதுர அடி. இரு மடங்கு விலை வைத்தால் கூட வாங்குவதற்கு நிறைய பேர் இருப்பார்கள். அதன் பல்வேறு சாத்தியங்களை யோசித்துக் கொண்டிருந்தேன்.
அதன் பின் ஒரு கிராமத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரே இடத்தில் 50 ஏக்கர் வயல் இருந்தது. அவ்வாறு அமைவது காவிரி வடிநில பிராந்தியத்தில் அபூர்வம். பின்னர் இன்னொரு ஊரில் 65 ஏக்கர் நிலத்தைக் காட்டினார்.
ஊர் திரும்ப மதியம் ஆயிற்று. காலை உணவு அருந்தவில்லை. இடம் பார்த்ததில் நேரமாகி விட்டது. மதியம் இன்னொரு ஊரில் 8 ஏக்கர் நிலம் இருக்கிறது என்று சொன்னார். நான் மட்டும் இடத்தை அடையாளம் சொல்ல சொல்லி சென்று பார்த்து விட்டு வந்தேன்.
இன்று காலையிலிருந்து மாலை வரை 140 கி.மீ இடம் பார்க்க பயணித்திருப்பதை இரு சக்கர வாகன ஸ்பீடாமீட்டர் அளவீடு மூலம் அறிந்தேன்.
Sunday, 5 January 2025
நடை
அதிகாலையில் எழுந்து நடைப்பயிற்சிக்கு செல்ல வேண்டும் என்பதால் காலை 3.45க்கு அலாரம் வைத்திருந்தேன். இருப்பினும் அலாரம் அடிப்பதற்கு முன்னால் 3.15க்கே விழிப்பு வந்து விட்டது. ஒரு கனவிலிருந்து விழித்தேன். கனவில் என்னிடம் ஒரு சைக்கிள் இருக்கிறது. அது நான் 12 வயதில் பயன்படுத்திய சைக்கிள். அந்த சைக்கிளில் ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டு இருக்கிறேன். அது சின்ன சைக்கிள் என்பதால் அதனை இயக்குவதில் சில சிரமங்கள் இருக்கின்றன. சாலைகளில் தடுப்புகள் இருக்கின்றன. ஏன் தடுப்புகள் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியாமலேயே வந்து கொண்டிருக்கிறேன். அப்போது ஒரு மாநில அரசு அலுவலகம் சென்று அங்கே இருக்கும் ஊழியர் ஒருவரைச் சந்திக்கிறேன். அப்போது அங்கே ஒரு அரசியல் கட்சி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. போராட்டம் வெளியில் நடந்தாலும் உள்ளே அந்த அலுவலகத்தின் வேலைகள் வழக்கமாக நடக்கின்றன. அந்த ஊழியர் வங்கியில் வீட்டுக் கடன் பெறுவது தொடர்பான ஆலோசனைக்கு என்னை அழைத்திருக்கிறார். அவரிடம் விபரம் கூறி விட்டு புறப்பட்டேன். இந்த கனவின் போதுதான் விழித்தேன். 3.45 அளவில் வீட்டிலிருந்து நடைப்பயிற்சிக்கு கிளம்பினேன். கனவைப் பற்றிய எண்ணம் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. தெருவில் ஒரு ஆட்டோ சன்னமான சத்தத்துடன் கடந்து சென்றது. ரயிலில் ஊருக்கு வந்தவர்களாக இருக்கலாம் என எண்ணினேன். ஏன் பேருந்தில் வந்திருக்கக் கூடாது என மனம் இன்னொரு வாய்ப்பைச் சொன்னது. தொலைதூரப் பயணம் என்றால் ரயிலில் என்று மனதில் பதிவாகியிருக்கிறது என எண்ணினேன்.
நடக்கத் துவங்கியதும் ஏன் இடைவெளி இல்லாமல் தினமும் நடக்க முடியவில்லை என்ற ஆதங்கம் ஏற்பட்டது. காலைப் பொழுதை முழுமையாக நடைப்பயிற்சிக்கு ஒதுக்கி விட வேண்டும் என உறுதி கொண்டேன்.
அதிகாலைப் பொழுது அமைதியாக இருந்தது. ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற பின் ஒரு மரக்கிளையில் ஒரு பறவை ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது. முதல் பறவை ஒலி என எண்ணினேன். அதன் பின் ஆங்காங்கே சில சேவல்கள் கூவிக் கொண்டிருந்தன.
நண்பர் ஒருவர் ஒரு மனையை வாங்குகிறார். அதில் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பது எங்கள் திட்டம். மானசீகமாக அஸ்திவாரத்திலிருந்து கட்டிடம் எழுப்பி வெள்ளை அடிப்பது வரை மனதுக்குள் நிகழ்த்திக் கொண்டிருந்தேன். அந்த இடத்தை ஒட்டி 4000 சதுர அடி மனை விற்பனைக்கு வருகிறது. அதனையும் வாங்கச் சொல்லி நண்பரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நண்பர் அதனை வாங்கி விட்டதாகவும் அதிலும் கட்டிடம் கட்டுவதாகவும் எண்ணிக் கொண்டேன்.
சாலையில் செல்லும் போது உடல் வாகன நினைவுக்கு செல்வதை உணர்ந்தேன். இடங்கள் அனைத்துமே வாகனத்தில் எவ்வளவு நேரத்தில் நாம் சென்று சேர்வோம் என்னும் கணக்கீட்டின் அடிப்படையில் நம் மனத்தில் பதிவாகியிருக்கிறது. வாகனம் ஒரு வசதி என்ற அளவில் மட்டுமே இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். நடந்து செல்வதே இயற்கையானது என்று தோன்றியது.
சமணம் குறித்து எண்ணம் தோன்றியது. சமணம் மிகவும் தர்க்கபூர்வமான சமயம். அன்றாட வாழ்க்கையின் பல நியதிகளை அவர்கள் அறிவுபூர்வமாக சிந்தித்து பரிசீலித்து வகுத்து வைத்திருக்கிறார்கள். சகடம் வைத்த வண்டியில் ஏறுவதில்லை என்பது அவர்கள் வழிமுறைகளில் ஒன்று. அவர்கள் நியதிகளை எல்லாரும் பின்பற்ற வேண்டும் என அவர்கள் சொல்வதில்லை. மாறாக தங்கள் நியதிகள் மூலம் எளிய வழிகாட்டுதலை உண்டாக்கி வைக்கிறார்கள்.
கட்டிட அனுமதி தொடர்பான சில எண்ணங்கள் தோன்றின. அவற்றைக் கவனித்துக் கொண்டே நடந்தேன். தருமபுரம், மூங்கில் தோட்டம், மன்னம்பந்தல், விளநகர் ஆகிய ஊர்களைக் கடந்து செம்பனார் கோவில் சென்று சேர்ந்தேன். வானில் அதிக அளவில் நட்சத்திரங்கள் இருந்தன. விடிவெள்ளி தென்படுகிறதா என்று பார்த்தேன். கண்ணில் படவில்லை.
உடல் மிக லேசாக வியர்த்திருந்தது. வந்த பாதை வழியே திரும்பி நடந்த போது உடல் சோர்ந்தது. வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. ‘’சூட்சும சரீரம்’’ மானசீகமாக வீட்டைச் சென்றடைந்து விட்டது. இடைப்பட்ட தூரத்துக்கு ஸ்தூல சரீரத்தை இழுக்கிறது. மனம் தோல்வி அடையும் இடம் இதுதான். அந்த இடத்தை சற்று முயன்று கடந்தேன்.
திரும்பி வந்து கொண்டிருந்த போது நிறைய வீடுகளில் வாசல் பெருக்கி கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அதிகமான கோலங்கள் மலர்களும் தீபங்களும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலும் இதே கோலங்கள் தான் போடப்பட்டிருக்கும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலும் அவ்விதமே இருந்திருக்கும்.
காலை ஒளி எழுந்தது. பறவைகள் பல கிளம்பி வானில் பறப்பதைக் கண்டேன்.
வீடு வந்து சேர்ந்தேன். நேரம் காலை 7.15. கிட்டத்தட்ட 3.30 மணி நேரம் நடந்திருக்கிறேன். இன்று நடந்த தூரம் 16 கிலோ மீட்டராக இருக்கலாம்.
Saturday, 4 January 2025
ஒரு முடிவு ஒரு துவக்கம்
Thursday, 2 January 2025
மரம் மர்மம்
எனது நண்பரின் மனையில் இருந்த மரங்களை வெட்டி அகற்றி மனையை தூய்மை செய்து கொடுக்க வேண்டிய பணியை ஏற்றிருந்தேன். கிட்டத்தட்ட ஏழு நாட்களாக அந்த பணியும் அதன் தொடர் பணிகளும் நடந்தன. நான் வழக்கமாக செல்லும் மரவாடியின் பணியாளர் தனக்குத் தெரிந்த மரம் வெட்டுபவரை ஏற்பாடு செய்து கொடுத்தார். மனையில் இருந்த மரங்களை வெட்டி அகற்ற மொத்தமாக ஒரு தொகையை நிர்ணயித்துக் கொண்டோம்.
பணியாளர்கள் மனநிலை என்பது ஒப்பந்தமாக தொகையை நிர்ணயம் செய்து கொண்டாலும் பணி தொடங்கும் முன் ஒரு தொகை எதிர்பார்ப்பார்கள். பணி நிகழும் போது தேனீர் செலவுக்கு உணவுக்கு என ஒரு தொகை எதிர்பார்ப்பார்கள். ஒப்பந்தமாகத்தானே வேலை செய்கிறீர்கள் என்று கேட்டால் ஒப்பந்தத் தொகையில் நாங்கள் வாங்கும் பணத்தை கழித்துக் கொள்ளுங்கள் என்பார்கள். ஒப்பந்தப் பணி என்பதால் அவர்கள் பணி செய்யும் நேரத்தில் வேறு வேலை பார்த்து விட்டு சற்று சாவகாசமாக வரலாம் என இருக்க முடியாது. பணி நிகழும் நேரம் முழுக்க அல்லது அதில் பெரும் பகுதி அங்கு இருக்க வேண்டிய நிலை இருக்கும். இந்த உரையாடல்கள் ஓய்வதில்லை. அவர்களும் கேட்டு ஓய்வதில்லை. நாங்களும் பதில் சொல்லி ஓய்வதில்லை. ஒவ்வொரு நாளும் புதிதாக எல்லாம் ஆரம்பமாகும்.
மரம் வெட்ட எவ்வளவு ஆகும் என 3 மரம் வெட்டிகளிடம் விசாரித்தேன். ஒருவர் 10,000 என்றார். இன்னொருத்தர் 25,000 என்றார். மூன்றாவது நபர் 26,000 என்றார். இரண்டு நாள் வேலை இருக்கும். குறைந்தபட்சம் தேவைப்படும் மொத்த பணியாளர் எண்ணிக்கை 8 என்பதாக இருக்கும் என நான் கணக்கிட்டிருந்தேன். பணியாளர் ஊதியம் 8000 ஆகும். மரம் வெட்டும் மெஷின் வாடகை 2000 ஆகும். எனது கணக்கீடு இவ்விதம் இருந்தது. எனவே முதல் மரம் வெட்டியை அழைத்து பணி செய்ய சொன்னேன். அவர் தனது தொகையை சற்று மாற்றியமைத்து மேலும் நாலாயிரம் கேட்டார். ஒப்பந்தத் தொகை 14,000 ஆனது. பெரிய துண்டுகள் இல்லாமல் சிறு விறகுகளை விற்பனை செய்து தருகிறேன் என்றார். எவ்வளவு தொகைக்கு விற்பனையாகும் என்று கேட்டேன். 6000 கிடைக்கும் என்றார். 14 லிருந்து 6 ஐ கழித்தால் 8 தான் செலவு என்பதால் பரவாயில்லை என ஒத்துக் கொண்டேன்.
முதல் நாள் 2 பணியாளர்கள் மட்டுமே வேலை செய்தனர். பாதிக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. பாதி வேலையை முடித்து விட்டனர். பணியாளர்களைக் குறைத்து தனக்குக் கிடைக்கும் தொகையை அதிகமாக்கிக் கொள்கிறார் எனப் புரிந்து கொண்டேன். மறுநாள் 6 பணியாளர்கள் வந்திருந்தனர். அன்றைய தினம் 95 சதவீத பணிகளை நிறைவு செய்து விட்டு கிளம்பி விட்டனர். ஒப்பந்தத் தொகையை அளித்து விட்டேன். இருப்பினும் விறகை விற்பனை செய்யும் முயற்சியில் மிக்க முனைப்புடன் மரம் வெட்டி ஈடுபடவில்லை.
ஊரில் இருந்த விறகுக் கடைகளுக்கு சென்று மரம் வெட்டிய விறகு இருக்கிறது விலைக்கு எடுத்துக் கொள்கிறீர்களா என்று கேட்டு வந்தேன். மொத்தம் 3 கடைகள். அதில் ஒருவர் விறகுத் தரகர் ஒருவரின் எண் அளித்து அவரிடம் பேசுமாறு சொன்னார். எனக்குத் தெரிந்த ஒருவர் ஹோட்டல் வைத்திருக்கிறார். அவர் ஹோட்டலில் விறகு அடுப்பு பயன்படுத்துவார்கள். அவரிடமும் கேட்டேன். அவர் அளித்ததும் அதே விறகுத் தரகரின் எண். அந்த விறகுத் தரகரின் எண்ணைத் தொடர்பு கொண்டு விறகைப் பார்த்து மதிப்பிடுமாறு கூறினேன். அவர் வந்து பார்த்து ரூ.6000 என மதிப்பிட்டார். எனது சம்மதத்தைத் தெரிவித்தேன்.
இரண்டு நாட்களில் அவர் வந்தார். இன்று காலை. அவர் இரண்டு பணியாளர்களை அழைத்து வந்தார். மூவருமே அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள். ஒரு வண்டியில் விறகை ஏற்றினர். நானும் விறகு ஏற்ற சிறிது நேரம் உதவினேன். நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று மூவரும் கேட்டனர். வயது முதிர்ந்த மூன்று பேர் பாரம் சுமக்கும் போது சும்மா இருக்க மனது ஒத்துக் கொள்ளவில்லை ; எனவே மிகச் சிறு நேரம் நானும் சுமக்கிறேன் என்றேன். அதன் பின் அடுத்து செய்ய வேண்டிய பணிகள் குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது மனை சுத்தம் செய்யப்படுவதைப் பார்த்து அந்த பகுதியில் குடியிருப்பவர் ஒருவர் வந்தார். அவர் ஒரு விவசாயி. 10 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார். நெல்லுக்குப் பதிலாக தேக்கு பயிர் செய்யுங்கள் என்றேன். அவர் ஆர்வமாக இருந்தார். ஐ டி கம்பெனி ஊழியரின் தேக்கு பண்ணைக்கு அழைத்துச் சென்று காட்டுகிறேன் என்றேன்.
மரம் வெட்டி மாலை அலைபேசியில் அழைத்தார். அவர் சொன்ன இடத்துக்குச் சென்றேன். ரூ.5000 கொடுத்தார். முதியவர்கள் மூன்று பேர் பணியாளர்கள் என்பதால் அவர் கொடுத்த தொகையை அன்புடன் பெற்றுக் கொண்டேன்.
இந்த பணி செய்ததன் மூலம் மரம் வெட்டிகள், மரத் தரகர்கள், சில பணியாளர்கள் ஆகியோர் பழக்கமாகியிருக்கின்றனர். அது ஒரு லாபம். 9000 த்தில் மரம் வெட்டும் பணி முடிந்திருக்கிறது. அது இன்னொரு லாபம். இந்த பணிகள் அனைத்தும் மூன்று நாட்களில் முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏழு நாள் ஆகி விட்டது. வேறொருவர் செய்திருந்தால் இன்னும் நாலு நாள் ஆகியிருக்கும் என சமாதானம் செய்து கொண்டேன்.
Wednesday, 1 January 2025
புத்தாண்டு வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு அனைவருக்கும் சிறப்பானதாக அமையட்டும்.