Monday, 3 March 2025

பஞ்சத்து ஆண்டி

 இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் இந்தியாவை உணவுப் பஞ்சம் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது. இன்று அதனை நம்புவது கடினம். அன்று அது யதார்த்தம். அந்த பஞ்ச காலகட்டத்தை அந்த காலகட்டத்தின் மனிதர்களின் இயல்புகளை சுபாவங்களை அடிப்படையாய்க் கொண்டு எழுதப்பட்ட கதை தி.ஜா வின் ‘’பஞ்சத்து ஆண்டி’’. 

கொட்டு மேளம்

 வாழ்க்கையை நம்பிக்கையுடன் எளிமையாக அணுகும் ஒருவர். சிக்கலான அகம் கொண்ட பலர் அவரை பலவிதங்களில் ஏய்க்க முயல்கின்றனர். எளிய விஷயத்தை எளிய விஷயங்களை ஏன் இத்தனை சிக்கலாக்கிக் கொள்கின்றனர் என்னும் கரிசனமே அவர்கள் மேல் அவருக்கு இருக்கிறது. இத்தகைய கதாபாத்திரம் குறித்த கதை தி.ஜா வின் ‘’கொட்டு மேளம்’’. 

வேறு வழியில்லை

 தி. ஜானகிராமனின் ‘’பசி ஆறிற்று’’ கதையை நினைவுபடுத்தும் கதை. ஏறக்குறைய ஒரே கதைக்களம். கிட்டத்தட்ட ஒரே இயல்பு கொண்ட கதாபாத்திரங்கள். ஒரே விதமான கதையின் முடிவு. 

Sunday, 2 March 2025

அத்துவின் முடிவு

சாமானிய நிலையிலிருந்து செல்வம் ஈட்டி பெரும் செல்வந்தன் ஆனவன் ஒருவன். உடல்நலம் குன்றி படுத்த படுக்கையாகிறான். அவனது குடும்பம் அவனை பாரமாக நினைக்கிறது. மரணம் மிக விரைவில் அவனை அழைத்துக் கொள்கிறது.  மரணித்தவன் ஈட்டிய செல்வத்தில் கணிசமான அளவு கடனும் இருக்கிறது. கடன் செல்வத்தை ஈடு செய்து விடுகிறது. இதுவே தி.ஜா வின் அத்துவின் முடிவு கதை. 

ரசிகரும் ரசிகையும்

 முகஸ்துதியை விரும்பாதவர் இல்லை. இருப்பினும் ஒருவர் அதன் எல்லையைக் கடந்து ஸ்துதி செய்கிறார். ஸ்துதி செய்யப்பட்டவர் ராட்சச கோலம் பூண்டு ரணகளம் செய்து விடுகிறார். இதுவே தி.ஜா வின் ‘’ரசிகரும் ரசிகையும்’’ கதை. 

ஜீவனாம்சம்

 ஒரு முதியோனுக்கு இளையாளாக வாழ்க்கைப்பட்டு வருகிறாள் ஓர் இளம்பெண். ஓயாத சண்டை சச்சரவு. கணவனுக்கு போதுமான ஊதியமும் இல்லை. இளம் மனைவி தன்னை அந்த சூழ்நிலையிலிருந்து வெளியேற்றிக் கொள்கிறாள். வெளியேறிய அவளின் பொருளாதார சூழ்நிலை மேம்படுகிறது. கணவனுக்கு மாதா மாதம் ஒரு தொகையை அனுப்பி வைக்கிறாள் ஜீவனாம்சமாக. இதுவே தி.ஜா வின் ‘’ஜீவனாம்சம்’’ கதை. 

Saturday, 1 March 2025

கடன் தீர்ந்தது

 கடன் நெருப்பு பகை மூன்றையும் மிச்சமில்லாமல் அழிக்க வேண்டும். மிச்சம் வைத்தால் நாம் எதிர்பார்க்காத வண்ணம் பேரழிவை உண்டாக்கி விடும். நல்ல மனிதன் ஒருவனை சூழ்ச்சியில் சிக்க வைத்து பெருநஷ்டமடையச் செய்கிறான் துர்குணம் கொண்ட ஒருவன். துர்குணம் கொண்டவன் மோசடி செயல்பாடுகளுக்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறை சென்று உடல்நலம் குன்றி சாகக் கிடக்கிறான். நற்குணம் வாய்ந்தவன் துர்குணம் கொண்டவனின் மரணத் தறுவாயில் அவனிடம் வந்து நீ செய்த துரோகத்தை மன்னித்தேன் எனக் கூறி துர்குணம் கொண்டவன் பட்ட கடனிலிருந்து பாபத்தின் சுமையிலிருந்து விடுவித்துச் செல்கிறான் என்பதே தி.ஜா வின் ‘’கடன் தீர்ந்தது’’

அவப்பெயர்

 ஒரு செல்வந்தன். செல்வச் செருக்கில் ஒரு பெண்ணை கருவுறச் செய்கிறான். வயிற்றில் சிசுவுடன் அந்த இளம்பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். மரணித்த சிசுவை நூதனமான சூழல் ஒன்றில் அந்த செல்வந்தன் காண நேர்வதன் கதையே தி.ஜா வின் ‘’அவப்பெயர்’’ . 

அதிர்ஷ்டம்

மத்திய தர வர்க்க ஆசாமி ஒருவன். மத்திய தர வர்க்கத்தின் எல்லைகளும் கட்டுப்பாடுகளும் அதற்கேயுரிய பிரத்யேகமான பற்றாக்குறைகளும் கொண்டவன்.  அசந்தர்ப்பமாக யாரோ ஒருவருடைய ‘’மணி பர்ஸ்’’ அவன் கைக்கு வந்து விடுகிறது. தன் எல்லைகளும் கட்டுப்பாடுகளும் அளிக்கும் எச்சரிக்கைகளை மீறி வீட்டுக்குக் கொண்டு வந்து விடுகிறான். அந்த பர்ஸில் சல்லிக்காசு கூட இல்லை. உண்மையில் அது அவனுக்கு அதிர்ஷ்டமே. இதுவே தி.ஜா வின் ‘’அதிர்ஷ்டம்’’ கதை.