Tuesday, 29 April 2025

சிறிதும் பெரிதும் (நகைச்சுவைக் கட்டுரை)

எனது நண்பர் ஒருவர் மும்பையில் பணிபுரிகிறார். ஊரில் அவர் ஒரு சொத்தை வாங்க விரும்பினார். அந்த சொத்தினை வாங்க வங்கிக்கடன் ஏற்பாடுகளை நான் ஒருங்கிணைத்தேன். அவர் மும்பையில் இருப்பதால் உள்ளூர் வங்கி கோரும் சொத்து குறித்த விபரங்களை நானே திரட்டி அளித்தேன். அவரது மொத்த வருட வருமானம் அரை கோடிக்கும் மேல். மாத சம்பளப் பட்டியல் அதனைக் காட்டியது. நண்பர் 50 லட்சம் வங்கிக் கடனாக எதிர்பார்த்தார். வங்கி அவருடைய ஊதிய ஆவணங்களைப் பரிசீலித்து இரண்டு கோடி ரூபாய் வரை கடன் அளிக்க முடியும் என்றனர். நண்பருடைய மாத ஊதியப் பட்டியல் வங்கி நடைமுறைகளை மிகவும் எளிதாக்கி விட்டது. வங்கியின் ஊழியர்கள் அந்த ஊதியப்பட்டியலை ஒவ்வொருவரும் வியப்புடன் நோக்கி சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தனர். நான் அதில் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். நண்பரின் ஆண்டு வருமானம் அரை கோடிக்கு மேல் என்பதால் அவர் செலுத்தும் வருமான வரி ஆண்டுக்கு பன்னிரண்டு லட்சம் என்பதாக இருந்தது.  அவரது நிறுவனம் ஒவ்வொரு மாதமும் ஒரு லட்ச ரூபாயை வருமான வரி பிடித்தம் செய்கிறது. வங்கி ஊழியர்கள் என்னிடம் ‘’சார் ! உங்க ஃபிரண்டு மாசம் இன்கம் டாக்ஸே ஒரு லட்சம் கட்டுரார்’’ என்றார்கள். 

எனக்கு இன்னொரு நண்பர் இருக்கிறார். அவர் ஒரு ஐ.டி கம்பெனி நடத்துகிறார். மதிப்பு மிக்க ஒரு சொத்தைக் குறித்துக் கூறி அதனை வாங்குமாறு கூறினேன். அந்த சொத்தின் பரப்பும் மிக அதிகம். விலையும் அவ்விதமே. நண்பர் என் பரிந்துரையை ஏற்று வாங்கி விடலாம் என முடிவு செய்தார். நான் அவரிடம் ‘’இந்த சொத்தை வாங்கி அதனை இவ்விதமாகப் பிரித்து விற்றால் வாங்கிய தொகையைப் போல் இரு மடங்கு கிடைக்கும். மொத்த செயல்பாடுகளையும் ஒரு வருடத்தில் முடித்து விடலாம் ‘’ என்று கூறினேன். அவர் சொத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டினாரே தவிர அதனை விற்பனை செய்வதில் அவருக்கு பெரிய ஆர்வமில்லை. ஏன் என்று எனக்குப் புரியவில்லை. 

மனதில் இந்த விஷயங்கள் ஓடிக் கொண்டிருந்த போது மும்பை நண்பரின் ஊதியப் பட்டியல் கதை என் நினைவுக்கு வந்தது. ஐ டி கம்பெனி உரிமையாளரிடம் உள்ள தொகை முழுவதும் அவரிடம் வங்கி டெபாசிட் ஆக உள்ளது. அவர் நடத்துவது ஐ டி நிறுவனம் என்பதால் அவருடைய எல்லா பரிவர்த்தனைகளும் வங்கிக் கணக்கின் வழியாகவே நடக்கின்றன. நம் நாட்டில் வங்கிகள் தங்கள் கணக்கில் இருக்கும் பணத்துக்கு ஆண்டுக்கு 7 சதவீத வட்டி அளிக்கின்றன. அந்த வட்டியும் வருமானமாகக் கணக்கிடப்படும். அவர் ஆண்டு லாபத்துடன் இந்த வட்டி வருமானமும் சேரும். அத்தொகையில் 30 சதவீதம் வரியாக செலுத்த வேண்டும். அவ்வாறெனில் வங்கிக் கணக்கில் அவர் வைத்திருக்கும் தொகைக்கு கிடைக்கும் வட்டி என்பது மிக மிகக் குறைந்து விடும். 

விலை மதிப்பு மிக்க இடத்தை வாங்கி அதனை தன் வசம் வைத்திருந்து எவ்வளவு காலம் தள்ளி விற்பனை செய்கிறாரோ அந்த அளவு அவருக்கு லாபம். நிலம் வாங்குவதை அவர் வங்கி அளிக்கும் வட்டியுடன் ஒப்பிட்டே செய்வார். வாங்கி ஒரு ஆண்டில் இரு மடங்கு லாபம் கிடைப்பதை விட வாங்கி ஐந்து ஆண்டில் மூன்று மடங்கு லாபம் கிடைப்பதே அவருக்கு மேலும் உகந்தது. 

ஒரு விஷயத்தை மைக்ரோவாகக் காண்பதற்கும் மேக்ரோவாகக் காண்பதற்கும் உள்ள வேறுபாடு !

Saturday, 26 April 2025

நல்லார்

சென்ற வாரம் எனது நண்பர் ஒருவர் வெளியூரிலிருந்து வந்திருந்தார் ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் இடம் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. அவர் அந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். ரியல் எஸ்டேட் பணிகளில் ஒரு இடத்தை நேரில் பார்க்கும் போது எவ்விதமான உணர்வு ஏற்படுகிறது என்பதைப் பொறுத்தே அந்த இடத்தை வாங்குவதா வேண்டாமா என்று பெரும்பாலும் முடிவு செய்வார்கள். முதற்பார்வையில் தோன்றும் உணர்வும் முதற்காட்சியில் தெரியும் விஷயங்களும் முக்கியமானவை. நண்பர் இடத்தைப் பார்த்தார். அவருக்கு இடம் பிடித்திருந்தது. அந்த இடத்தின் அணுகுசாலை குறித்து அவர் ஒரு அவதானத்தைக் கூறினார். அது முக்கியமானது. அந்த இடத்தைப் பொறுத்து அடிக்கோடிட்டுக் கவனிக்க வேண்டியது. பிறகு நாங்கள் தேனீர் அருந்தலாம் என முடிவு செய்தோம். உண்மையில் ஒரு சாவகாசமான இடத்தில் நாங்கள் பார்த்த இடம் தொடர்பாக முதல் கட்ட விபரங்களைப் பேசிக் கொள்வதற்கும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து முடிவு செய்து கொள்வதற்குமான அவகாசம் தேனீர் அருந்துகையில் கிடைக்கும் என்பதே அம்முடிவின் நோக்கம். கூட்ட நெரிசலில் பரபரப்பாக இருக்கும் கடைகளைத் தவிர்த்து ஊருக்கு வெளியே இருக்கும் கடை ஒன்றனுக்குச் சென்றோம். அந்த கடை தேனீர்க்கடையாக இருப்பினும் டயனிங் டேபிள் நாற்காலிகள் இடப்பட்டு தூய்மையாக இருந்தது. நண்பர் நான் நண்பரின் வாகன ஓட்டுனர் மூவரும் தேனீர் அருந்த வந்தமர்ந்தோம். நானும் நண்பரும் லெமன் டீ சொன்னோம். ஓட்டுநர் பால் டீ சொன்னார். லெமன் டீ மிக சூடாக இருந்தது. அது ஆறும் வரை நாங்கள் அந்த இடம் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். பில் தொகை ரூ. 57. நண்பர் தன்னிடம் இருந்த ரூ.500 தாளை எடுத்தார். என்னிடம் ஒரு ரூ.50 தாள் இருந்தது. பாக்கெட்டில் இருந்த மீதி நோட்டுகள் ரூ. 500 நோட்டுகள். நான் கடைக்காரரிடம் ரூ. 50 கொடுத்து விட்டு மீதி ரூ.7 ஐ நண்பரை அனுப்பி விட்டு திரும்ப வரும் போது கொடுக்கிறேன் என்று கூறினேன். அவர் சரி என்று கூறினார். அன்று திரும்ப வரும் போது என்னிடம் சில்லறை இல்லை. அதன் பின் ஓரிரு நாட்கள் ஆயின. அந்த பக்கம் செல்லும் போது அந்த தொகையை கடைக்காரருக்கு அளிப்போம் என நினைத்திருந்தேன். இருப்பினும் அது தொடர்ந்து என் ஞாபகத்தில் இருந்து கொண்டே இருந்தது. இன்று நாங்கள் பார்த்திருந்த இடத்தின் ஆவணம் ஒன்றைப் பெறுவதற்கு அங்கு சென்றிருந்தேன். அந்த ஆவணத்தைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பும் வழியில் அந்த தேனீர்க்கடைக்குச் சென்றேன். கடையின் உரிமையாளரைக் கண்டேன். 

‘’போன வாரம் நாங்க 3 பேர் டீ சாப்பிட வந்திருந்தோம். அப்ப நான் உங்களுக்கு 7 ரூபாய் பேலன்ஸ் தரணும். 57 ரூபாய் பில். நான் 50 ரூபாய் தந்தேன். மீதி 7 ரூபாய் இந்தாங்க’’ 

’’சார் ! போன வாரம் நீங்க இன்னோவா கார்ல வந்திருந்தீங்க’’

’’ஆமாங்க ! கார் ஃபிரண்டோடது’’

‘’சார் ! உங்க ஃபிரண்ட் டேபிள் மேல சன் கிளாஸை வச்சிட்டு போயிட்டார். அத நான் எடுத்து வச்சிருக்கன். இத அவர் கிட்ட கொடுத்திடுங்க. ‘’

நான் நண்பருக்கு ஃபோன் செய்தேன். அவர் ஃபோன் பிஸியாக இருந்தது. பத்து நிமிடம் முயற்சி செய்தேன். பத்து நிமிடமும் எங்கேஜ் டோன். 

‘’சார் கிளாஸ் அவரோடதுதான். எனக்கு கன்ஃபார்மா தெரியும். எடுத்துட்டு போங்க ‘’ என தீர்மானமாகச் சொன்னார். 

நான் அவருக்கு நன்றி சொல்லி கிளாஸை எடுத்து வந்தேன். வீட்டுக்கு வந்ததும் நண்பரின் ஃபோன் வந்தது. 

‘’சார் ! நீங்க மிஸ் பண்ண பொருள் ஒன்னு என்கிட்ட இப்ப இருக்கு. என்னன்னு சொல்லுங்க’’ என்றேன். 

அவருக்கு நினைவுக்கு வரவில்லை. 

‘’உங்களோட சன் கிளாஸ்’’ என்றேன். 

பின்னர் நடந்ததை சொன்னேன். 

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்கிறாள் தமிழ் மூதாட்டி. 

 

ஒரு சிறிய கார்

எனது நெருங்கிய நண்பர் ஒருவர் என்னிடம் புதிதாக ஒரு சிறிய கார் வாங்கி அதனைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். அவர் எந்த விஷயத்தையும் தீர்க்கமாக யோசித்துக் கூறுபவர். எந்த விஷயத்திலும் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர். அவரால் கூறப்படும் விஷயங்களை என்னால் மறுக்க முடியாது. சிறிய கார் குறித்து யோசித்தேன்.  

என்னிடம் ஒரு மாருதி ஆம்னி இருக்கிறது. அந்த வாகனத்தின் வயது 20 ஆண்டுகள். என்னிடம் 17 ஆண்டுகளாக இருக்கிறது. அது சிறிய வாகனம் தான். எங்கள் ஊரில் கடைவீதியில் வாகனம் பார்க் செய்வது என்பது பெரும் பாடு. முக்கியமான சாலைகள் ஒரு வழிச்சாலைகள். ஊரில் காரில் செல்வது என்றால் எந்த இடத்துக்கும் சுற்றிக் கொண்டு செல்வது என்பதே அதன் பொருள். முன்னர் சிதம்பரம் செல்லும் சாலையும் கும்பகோணம் செல்லும் சாலையும் வளைந்து வளைந்து செல்லும். ஊரிலிருந்து வடக்கிலும் மேற்கிலும் 40 கி.மீ காரில் பயணிப்பது என்பது இலகுவான செயல் அல்ல. எனினும் இப்போது சாலைகள் அகலமாக்கப்பட்டு பெரிய நான்கு வழிச்சாலைகள் இந்த இரு திசையிலும் அமைந்து விட்டன. 

எனது நண்பர் ஒருவர் மாவட்டத்தில் இருக்கும் சிறைச்சாலைகளில் இருக்கும் சிறைக்கைதிகளுக்கு யோகா வகுப்பை தன்னார்வத்துடன் நடத்துகிறார். அதற்கு தேவையான புரொஜெக்டர், ஸ்கிரீன் ஆகியவற்றை எடுத்துச் செல்ல எனது ஆம்னி வாகனம் வசதியாக இருக்கிறது என்று கூறினார். அந்த நற்செயலுக்குப் பயன்படட்டும் என நண்பரிடம் வாகனத்தை அளித்துள்ளேன். 

தொழில் நிமித்தம் என்று பார்த்தால் எனக்கு இரு சக்கர வாகனமே வசதி. சிமெண்ட் கடை மற்றும் ஹார்டுவேர் கடைக்குச் செல்வதே பணி இருக்கும் போது முக்கிய வேலையாக இருக்கும். கட்டுமானப் பணி நடக்கும் இடத்துக்குச் சென்றாலும் இரு சக்கர வாகனமே வசதி. 

ரியல் எஸ்டேட் தொடர்பான பணிகளுக்குச் செல்லவும் இரு சக்கர வாகனமே வசதி. எந்த சிறு சந்துகள் மற்றும் சிறு சாலைகளிலும் செல்ல முடியும். நமது வருகை எவருடைய கவனத்தையும் ஈர்க்காது. 

இரு சக்கர வாகனத்தை இயல்பாக ஒரு மரத்து நிழலில் நிறுத்தி விட்டு அந்த பகுதியின் இயல்பை அவதானிக்க நடந்து சஞ்சரிக்கலாம். இத்தனை வசதிகளை இழப்பதா என என் மனதில் கேள்வி. 

அடிக்கடி இரு சக்கர வாகனத்தில் பயணிப்பதால் நண்பர் இப்படி ஒரு யோசனையைக் கூறியுள்ளார். அது என் பாதுகாப்பு கருதி கூறப்பட்ட ஆலோசனை. எனவே நண்பரின் ஆலோசனைக்கு ஏற்றவாறு எனது பாதுகாப்பு கருதி இனி இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது ஹெல்மெட் கட்டாயமாக அணியப் போகிறேன். 

சிறிய கார்கள் என்ன விலை விற்கின்றன என இணையத்தில் தேடினேன். சி.என்.ஜி எரிபொருள் பயன்படும் கார்களாகத் தேடினேன். டாடா பஞ்ச், ரினால்ட் கிவிட் ஆகிய வண்டிகள் விருப்பப் பட்டியலில் உள்ளன. No decision is also a decision என்று கூறுவார்கள். இம்முறையும் அம்முடிவாக இருக்கவே வாய்ப்பு இருக்கிறது என உள்ளுணர்வு கூறுகிறது.   

Thursday, 24 April 2025

ஒப்புகைச் சீட்டு விவகாரம் - அஞ்சல்துறை இயக்குநர் பதில்

 ஒப்புகைச்சீட்டு விவகாரம் தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் நான் அளித்த சி.பி.கி.ராம்.ஸ் புகாரின் கோப்பை கோரியிருந்தேன். அது பல அலுவலகங்கள் தொடர்புடையதாக இருப்பதால் அதனை வழங்க இயலவில்லை என்று பதில் கிடைக்கப் பெற்றது. அந்த பதில் கிடைக்கப் பெற்றதும் திருச்சிராப்பள்ளியில் உள்ள போஸ்ட் மாஸ்டர் ஜெனரலுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் முதல் மேல்முறையீடு செய்தேன். இன்று அவரிடமிருந்து பதில் வந்தது. நான் கோரியிருந்த கோப்பின் விபரங்களை ஒரு வாரத்துக்குள் எனக்கு அளிக்குமாறு மயிலாடுதுறை அஞ்சல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. 

Tuesday, 22 April 2025

சென்னை பயணம்

ஊருக்குப் பக்கத்தில் 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் விற்பனைக்கு வருகிறது. நான்கு நாட்கள் முன்பு அந்த இடம் குறித்து என் கவனத்துக்கு வந்தது. இடத்தை நேரில் சென்று பார்த்தேன். எனக்கு அந்த இடம் பிடித்திருந்தது. அதனை வாங்கி மனை அனுமதி பெற்று மனைப்பிரிவுகளாகப் பிரித்து விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. பெரும் முதலீடு தேவைப்படும் இடம் அது. எனது நண்பர் ஒருவரிடம் சொன்னேன். தேவைப்படும் தொகையில் பாதியை தன்னால் முதலீடு செய்ய முடியும் என்று கூறினார் அவர். மீதி பாதி முதலீட்டினை எனது இன்னொரு நண்பரிடம் கேட்கலாம் என எண்ணினேன். அந்த நண்பரை சந்தித்து நீண்ட மாதங்கள் ஆகியிருந்தன. எனக்கு நண்பர்கள் பலர் உண்டு. பலரை பல மாதங்கள் பல ஆண்டுகள் கூட சந்திக்காமல் பேசாமல் இருப்பேன். இருப்பினும் சந்தித்தால் தினமும் சந்தித்து உரையாடும் நண்பர்களைப் போல பேசிக் கொண்டிருப்பேன். அது பழகக் கூடிய ஒரு விஷயம் தான். ஒரு நபரை நாம் புரிந்து வைத்திருக்கும் விதம் சரியாக இருக்குமென்றால் எவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பின்னும் அவர்களுடன் சகஜமாக இணைந்து கொள்ள முடியும். நான் சந்திக்கச் சென்ற நண்பர் சென்னையில் எல்.ஐ.சி கட்டிடம் அருகே ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி நடத்துகிறார். முன்னர் அவருடைய நிறுவனம் கிண்டி தொழிற்பேட்டையில் இருந்தது. அப்போது அவருடைய அலுவலகத்திற்கு சென்றிருக்கிறேன். அது சிறிய அலுவலகம். ஊழியர்கள் பத்து பேர் இருப்பார்கள். இப்போது அவர் நிறுவனத்தில் 100 பேர் வேலை பார்க்கிறார்கள்.   அவர் அலுவலகம் வாடகைக்கு இயங்குகிறது என எண்ணியிருந்தேன். உரையாடலின் போது அந்த கட்டிடம் தனக்கு சொந்தமானது என்று கூறினார். 

எனது வழக்கப்படி சென்னை செல்லும் போது எனது இரு சக்கர வாகனத்தை வீட்டிலேயே வைத்து விட்டு மெல்ல நடந்து பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து ஜங்ஷனுக்கு பஸ் பிடித்து ரயிலின் நேரத்துக்கு 20 நிமிடம் முன்பு ரயில் நிலையம் சென்றடைந்தேன். காலை 7.45க்கு ரயில் புறப்பட்டது. 

எஸ். ராமகிருஷ்ணனின் ’’வீடில்லா புத்தகங்கள்’’ என்ற நூலை மட்டும் கையில் வைத்திருந்தேன். எஸ். ரா பழைய புத்தகக் கடைகளில் வாங்கிய அரிதான நூல்களைக் குறித்து எழுதியிருந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். எனக்கு புத்தகம் வாசிப்பது பிடிக்கும். அதிலும் புத்தகங்களைக் குறித்த புத்தகம் என்பது மிகவும் பிடித்தமானது. 

அமெரிக்காவில் கருப்பினக் குழந்தைகளுக்காக ஒரு பள்ளியைத் தொடங்கி நடத்திய மேரி மெக்லியூட் பெத்யூன் குறித்து எழுதியிருந்ததைப் படித்தது மிக உணர்ச்சிகரமாக இருந்தது. தனிநபராக முயன்று ஒரு பள்ளியைத் தொடங்குகிறார் மேரி. பள்ளியைத் தொடர்ந்து நடத்த நகரின் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அழைப்பு மணியை அழுத்தி கதவைத் திறந்து வருபவர்களிடம் தனது பணி குறித்து கூறி உதவி கேட்கிறார். பலர் முடியாது என மறுக்கின்றனர். ‘’எனது பேச்சை இவ்வளவு நேரம் கேட்டதற்கு நன்றி’’ எனக் கூறி அடுத்த வீடு நோக்கி செல்கிறார் மேரி. இந்த சம்பவத்தை வாசித்த போது மேரி ஏன் இல்லை என்று சொன்னவர்களுக்கும் நன்றி கூறினார் என யோசித்துப் பார்த்தேன். ஒருவர் நாம் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. ஆனால் நாம் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கிறார் என்பதால் நமது எண்ணங்களும் கோரிக்கைகளும் செயல் திட்டங்களும் கேட்பவரைச் சென்றடைகின்றன. அது ஒரு துவக்கம். இன்று மறுத்தவர் நாளை நாம் சொல்வதைக் கேட்கலாம் ; நாளை நம்முடன் இணையலாம். அதற்கான பல சாத்தியக்கூறுகளை ஒரு சிறிய உரையாடலால் உருவாக்க முடியும். மேரி அதற்காகத்தான் நன்றி கூறியிருப்பார் எனப் புரிந்து கொண்டேன். புத்தகத்தில் வாசிக்கும் ஒரு வரி என்னை இவ்விதமாக பல சஞ்சாரங்களுக்கு இட்டுச் செல்லும். மேரி தனது கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவுக்கு தனது அன்னையை அழைக்கிறார். அங்கே அவரிடம் பட்டம் பெறும் 400 குழந்தைகளைக் காட்டி ‘’நான் 400 குழந்தைகளைப் பெற்றிருக்கிறேன்’’ என்று கூறுகிறார். 

கணித மேதை ஸ்ரீநிவாஸ ராமானுஜம் குறித்த ‘’அனந்தத்தை அறிந்தவன்’’ என்னும் நூல் குறித்து எழுதியிருந்த கட்டுரையை ஆர்வமாக வாசித்தேன். மார்டிமர் அட்லர் எழுதிய ‘’How to read a book'' என்ற கட்டுரையும் விருப்பமாக படித்தேன். அருண் ஷோரி எழுதிய ''Does he knows a mother's heart?'' என்ற நூல் குறித்த கட்டுரை ஆழமான துயரொன்றின் வலியை உணர வைத்தது. சென்னை செல்வதற்குள் 230 பக்கம் கொண்ட நூலில் 160 பக்கங்களை வாசித்திருந்தேன். 12.30க்கு தாம்பரம் சென்றடைந்தேன். அங்கிருந்து மின்சார ரயிலில் மீனம்பாக்கம் சென்றேன். 

சென்னை மெட்ரோ ரயிலேறி எல்.ஐ.சி சென்றேன். மெட்ரோவில் பயணித்த நேரத்திலும் மீதி இருந்த 70 பக்கங்களில் பத்து பக்கத்தை வாசித்தேன். எல்.ஐ.சி சென்றதும் அங்கே இருந்த பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தின் விளம்பரப் பதாகை ஒன்றைக் கண்டேன். பல ஆண்டுகளுக்கு முன்னால், நான் சென்னை அமெரிக்கன் நூலகத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறேன். ஊரிலிருந்து அந்த நூலகத்துக்கு ஃபோன் செய்து அவர்களின் கேட்டலாக்-கில் உள்ள ஏதேனும் ஒரு புத்தகத்தைக் கேட்டோம் என்றால் நமக்கு அதனை கூரியரில் அனுப்பி வைப்பார்கள். நாம் அதனை வாசித்து விட்டு மீண்டும் கூரியரில் அனுப்பி விட வேண்டும். அல்லது சென்னை செல்லும் போது அளித்து விட வேண்டும். நான் பல புத்தகங்களைக் கூரியரில் பெற்று வாசித்து விட்டு மீண்டும் கூரியரில் அனுப்பியிருக்கிறேன். ரேச்சல் கார்சனின் ‘’தி சைலண்ட் ஸ்பிரிங்’’ என்ற நூலை வாசித்தது நினைவில் பசுமையாக இருக்கிறது. 

ஞாயிறன்று இரவே நண்பருக்கு மின்னஞ்சலில் இடத்தின் வாங்கும் விலை, அப்ரூவல் செலவு, சாலை அமைக்க ஆகும் செலவுகள், அப்ரூவல் பெற தேவைப்படும் கால அளவு, இடம் விற்பனைக்குத் தேவைப்படும் காலம் , உத்தேச லாபம் ஆகியவற்றை விரிவாக ஒரு அறிக்கையாக அனுப்பி வைத்திருந்தேன். நேரில் சந்திப்பது சூழலையும் சூழ்நிலையையும் அவதானிக்க ஒரு வாய்ப்பாக அமையும். நண்பரின் அலுவலகம் பெரிய கட்டிடம். எளிதில் கண்டடைந்தேன். ரொம்ப நாட்களுக்குப் பின் நண்பரைச் சந்தித்தது மகிழ்ச்சி. ரொம்ப சந்தோஷத்துடன் பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. அவரது ஊழியர்கள் சிலர் அவருடைய குறிப்புகளுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். முக்கிய வேலை என்றால் அதனை மேற்கொள்ளுங்கள் ; நான் காத்திருக்கிறேன் என்று சொன்னேன். அவர் அனைத்தையும் ஒத்தி வைத்து விட்டார். முழுக்க எனக்கான நேரம் என்று சொன்னார். மின்னஞ்சலில் அறிக்கையாக அளித்ததை நேரடியாகவும் விளக்கினேன். அவர் நண்பர் ஒருவருக்கு தனது ஐ-ஃபோனிலிருந்து ஃபோன் செய்தார். அவரும் விபரம் கேட்டுக் கொண்டார். ஃபோன் ஸ்பீக்கரில் இருந்தது. நான் தான் அவரிடம் விபரம் சொன்னேன். ஐ - ஃபோனில் குரல் பிசிறில்லாமல் கேட்கிறது என உணர்ந்தேன்.  

நண்பர் என்னை அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். அவர் ஹோண்டா சிட்டி கார் பிரியர். கடந்த 15 ஆண்டுகளில் 3 கார் மாற்றியிருக்கிறார். ஒரு ஹோண்டா சிட்டியைக் கொடுத்து விட்டு இன்னொரு ஹோண்டா சிட்டி என. ஹோட்டலில் பட்டர் ரொட்டியும் பன்னீர் பட்டர் மசால், கோபி மஞ்சூரியன் ஆர்டர் செய்தோம். உணவு சிறப்பாக இருந்தது. 

மீண்டும் அலுவலகம் வந்து உரையாடிக் கொண்டிருந்தோம். நண்பர் முதலீடு செய்வதில் ஆர்வமாக இருந்தார். முதலீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. நண்பரிடமிருந்து விடை பெற்றேன். மீண்டும் எல்.ஐ.சி மெட்ரோ - மீனம்பாக்கம். அங்கிருந்து தாம்பரம். தாம்பரத்தில் மாலை 6.10க்கு தாம்பரம் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ். இந்த ரயில் சேவை துவங்கி ஒரு மாதம் ஆகிறது. பிரதமர் ராமேஸ்வரத்தில் இந்த ரயிலைத் துவங்கி வைத்தார். 

ரயிலில் எனக்கு எதிரில் அமர்ந்திருவர் கணிதத்தில் பட்டம் பெற்றவர். அன்று அவர் தனது பி. எச் டி ஆய்வை சமர்ப்பித்து நேர்காணலுக்குப் பின் ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறார். அவருடன் விழுப்புரம் வரை கணிதம் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். ஆய்லர் சீரிஸ், ஃபிபினோசி சீரிஸ் என நான் பொறியியலில் படித்ததை நினைவு கூர்ந்து கொண்டிருந்தேன். அவர் விழுப்புரத்தில் இறங்கிக் கொண்டார். ‘’வீடில்லா புத்தகங்களின்’’ மீதி இருந்த பக்கங்களை கடலூர் வருவதற்குள் வாசித்து முடித்தேன். இரவு 10.30க்கு ரயில் ஊருக்கு வந்தது. இறங்கி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். 

Friday, 18 April 2025

சிறுவன்

 கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
உன்னுடன் விளையாடிய போது
வீதிகள் 
எல்லா உலகங்களாகவும் ஆயின
ஓடி வந்தோம்
ஓடிப் போனோம்
திரண்டோம் பிரிந்தோம்
மாயாவிகளாக உணர்ந்து கொண்டோம்
உன்னுடனான விளையாடல்களில் 
விளையாடல் மட்டுமே இருந்தது கிருஷ்ணா
வெற்றி தோல்விகள் இல்லை
நீ 
இக்கணமும்
விளையாடிக் கொண்டிருக்கிறாய்
முடிவே இல்லாத விளையாட்டை 

Tuesday, 15 April 2025

யாதினும் இனிய நண்பர்

 கம்பராமாயணத்தில் ஸ்ரீராமன் குகனை ‘’யாதினும் இனிய நண்ப’’ என்கிறார். எனது வாழ்க்கையில் யாதினும் இனிய நண்பர்கள் சிலர் எனக்கு இருக்கின்றனர். அவர்களே வாழ்க்கையில் நாம் சம்பாதித்த பெருஞ்சொத்துக்கள். அவர்களுடைய நினைவு என்பது எனக்கு ஒவ்வொரு நாளும் இருக்கும். தினமும் சில கணங்களாவது அவர்களைப் பற்றி எண்ணுவேன். 

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். என்னை விட இருபது வயது மூத்தவர். அவரை எனக்கு 35 ஆண்டுகளாகத் தெரியும். நான் சந்தித்த முதல் நாளிலிருந்து இன்று வரை அவர் மீதான ஆர்வமும் வியப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எப்போதும் நான்கு பேர் சூழ இருப்பார். அன்றும் அப்படித்தான். இன்றும் அப்படித்தான். யாரும் உதவி என்று வந்து கேட்டால் அதனை எவ்விதத்திலாவது செய்து கொடுக்க வேண்டும் என்று எண்ணுவார். அன்றும் இன்றும் அவரிடம் தினமும் யாராவது உதவி வேண்டும் என்று கேட்ட வண்ணமே இருக்கிறார்கள். குழந்தையைப் பள்ளியில் சேர்க்க ; கல்லூரியில் சேர்க்க; ஏதேனும் வேலையில் சேர்த்து விட; மருத்துவ உதவி ... இன்ன பிற. லௌகிகமாக என்னென்ன உதவிகள் உண்டோ அத்தனையும் அவரிடம் கேட்கப்படும். அவரால் முடிந்ததை அவர் நிச்சயம் செய்வார். அந்த நம்பிக்கையே பலரை அவரை நோக்கி வரச் செய்கிறது. உண்மையில் வாழ்க்கையில் பெரும் பேறு அது. நூற்றுக்கணக்கானோர் ஒருவரை நம்பி அவரிடம் வருகிறார்கள் என்றால் அவருக்கு இறைமையின் ஆசி இருக்கிறது என்றே பொருள். அவர் கடுமையாகப் பேசியோ கடுமையாக நடந்து கொண்டோ நான் பார்த்ததில்லை; நான் கேள்விப்பட்டதில்லை. கடுமையாக எதைப் பற்றியாவது மனதில் எண்ணியிருப்பாரா என்னும் கேள்விக்கு விடை இல்லை என்பதே. 

கம்பராமாயணத்தில் சீதை அனுமனை ‘’இன்றென இருத்தி’’ என வாழ்த்துகிறார். அந்த வாழ்த்து என் நண்பருக்குமானது.  

கல்பதரு

 இன்றைய சொல்வனம் இணைய இதழில் சமீபத்தில் நான் எழுதிய சிறுகதை பிரசுரமாகியுள்ளது. அதன் இணைப்பு 

கல்பதரு

 கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
சிறுமகவாய் கையளவே இருந்தாய்
உன் கண்கள் ஒளிர்ந்தன
தீச்சுடர் என
தீக்கதிர் என
ஒளிரும் உன் கண்களில்
நிரம்பி வழிகிறது அருள் கிருஷ்ணா
நதியெனப் பெருக்கெடுக்கிறது 
உன் கண்களின் அருள்
அந்நதியில் மூழ்குகிறேன்
அந்நதியில் கரைகிறேன்
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
என் மீட்பே

Monday, 14 April 2025

கிருஷ்ண பிரதேசம்

 கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
நீண்ட தூரம்
நடந்து 
வந்திருக்கிறேன் கிருஷ்ணா
நீண்ட தூரம்
மிக நீண்ட தூரம்
முள்மரங்கள் மண்டியிருக்கும் பாலை
நீர் காண இயலா நிலம்
உனது பெயர் மட்டுமே நம்பிக்கை
என் பாதங்கள் காய்த்துப் போய் உள்ளன
முட்களால் கீறப்பட்ட உடல்
தாகத்துக்கு துளி நீர் அறியா இருப்பு
உன் கருணைத்துளி ஒன்று கிடைத்தது
உன்னால் உன்னால் உன்னால்
உன்னால் உன்னால் மட்டுமே
உனது பிரதேசத்தில் நுழைந்தேன்
உன் பிரதேசத்தில் யாவும் கிருஷ்ணர்கள்
பல பல கிருஷ்ணர்கள்
உன்னைச் சிறு மகவாகக் கண்டேன்
என் கையளவே இருந்தாய்
சிறு விரல்கள்
சிறு கண்கள்
சிறு நாசி
எப்போதும் சிறு புன்னகை
பாலனே
குழந்தையே
உன் புன்னகையால்
கரைகிறேன்
ஒரு நதியெனப் பெருக்கெடுக்கிறது
உன் புன்னகை
அந்நதியில் மூழ்குகிறேன்
அந்நதியில் கரைகிறேன்
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா 
என் மீட்பே

Thursday, 10 April 2025

எருக்கம் பூ

 பிராணிகள் உரையாடிக் கொள்வதைப் போல சில கதைகளை எழுதியிருக்கிறார் தி.ஜா. ‘’எருக்கம் பூ’’ கதையில் பூக்கள் கதாபாத்திரங்களாக வருகின்றன. விநாயகரும் ஒரு கதாபாத்திரமாக வருகிறார். 

அதிர்வு

 தி.ஜா கதைகளில் இந்த கதை சற்றே வித்தியாசமானது. ஒரு பெண் ஒரு சித்தரை சந்திக்கிறாள். அவரது அருளால் அவள் பிரபஞ்ச உணர்வின் ஒரு துளியை சில கணங்கள் பெறுகிறாள். கதையின் மையமாக இந்நிகழ்வைக் கொண்டு மானுட உள நாடகங்களைக் கூறும் கதை.  

Monday, 7 April 2025

ஒரு பொருளியல் பொய்

 இரண்டு தினங்களுக்கு முன்னால், காணொளி ஒன்றில் ஒரு பாடலைக் கேட்க நேர்ந்தது. மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டிருந்த பாடல். அதன் முதல் வரி ‘’மனிதநேயத்தின் மறுபெயர் மார்க்ஸ்சியம்’’ என ஒலித்தது. அது ஒரு பொருளியல் பொய். 

மானுடத்தின் நீண்ட வரலாற்றில் உலகெங்கும் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த போர்களையும் படுகொலைகளையும் குறித்து ஆர்.ஜே.ரம்மல் என்ற அறிஞர் ஆவணப்படுத்தியிருக்கிறார். 1917ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரையிலான கணக்கீட்டின் படி , இந்த எழுபது ஆண்டுகளில் உலகெங்கும் கம்யூனிச ஆட்சியாளர்களால் கொல்லப்பட்ட சாமானிய மக்களின் எண்ணிக்கை பதினான்கு கோடியே எண்பது லட்சம் ( 14,80,00,000). இந்த படுகொலைகளில் மிக அதிக எண்ணிக்கை ருஷ்யாவில் நடந்தது. எளிய மக்களைக் கொன்று குவிக்கச் சொல்லி உத்தரவு கொடுத்தவர் அப்போதைய ருஷ்ய அதிபராயிருந்த ஜோசஃப் ஸ்டாலின். 

இன்றும் தன் கட்சி அலுவலகங்களில் ஜோசஃப் ஸ்டாலின் படத்தை மாட்டி வைத்திருக்கின்றனர் கம்யூனிஸ்டுகள். ஜோசஃப் ஸ்டாலின் படத்தை ஏந்திக் கொண்டு மனிதநேயம் குறித்து மார்க்ஸிஸ்டுகள் பேசுவது வரலாற்றின் நகைமுரண்களில் ஒன்று !

ஸ்டாலின் நிகழ்த்திய படுகொலைகள் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ள :

https://hawaii.edu/powerkills/ 

மயில்சாமியின் தேவை

 மயில்சாமி ஒரு சாமானியன். கைக்கும் வாய்க்கும் பற்றாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தவன். ருஷ்யா விண்வெளியில் ‘’ஸ்புட்னிக்’’ செயற்கைக்கோளை அனுப்பிய தினத்தில் அவன் நடித்த முதல் படம் வெளியாகிறது. அதன் பின் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன. கை நிறைய காசு சேர்ந்து கொண்டேயிருக்கிறது. ஸ்புட்னிக்கின் நினைவாக ‘’சுபத்னியகம்’’ என தான் புதிதாகக் கட்டிய வீட்டுக்கு பெயர் வைக்கிறான் மயில்சாமி. திடீரென ஒரு நாள் எதிர்பாராத பணமுடை ஏற்படுகிறது. மிகச் சிறு தொகைதான். கொல்லத்தில் நடக்கும் படப்பிடிப்புக்கு செல்ல. நாற்பது ரூபாய் கொடுங்கள் ; நான்கு நாளில் நூறு ரூபாயாகத் திருப்பித் தருகிறேன் என வாங்கிச் செல்கிறான். இதுவே தி.ஜா வின் ‘’மயில்சாமியின் தேவை’’ கதை. 

Saturday, 5 April 2025

குழந்தை மேதை

 ஹாஸ்யமான உரையாடல்கள் மூலம் வாசகரைப் புன்னகைக்க வைக்கும் திறன் தி.ஜா வுக்கு மிக அதிகம். அவ்விதம் உரையாடல் மூலம் சொல்லப்பட்ட சுவாரசியமான கதை தி.ஜா வின் ‘’குழந்தை மேதை’’.  

உண்டை வெல்லம்

 திரைத்துறையைப் பின்புலமாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்ட புனைவுகளில் உடன் நினைவுக்கு வருவது அசோகமித்திரனின் ‘’கரைந்த நிழல்கள்’’, ‘’மானசரோவர்’’ சுஜாதாவின் ‘’கனவுத் தொழிற்சாலை’’. தி.ஜா திரைத்துறையை பின்னணியாகக் கொண்டு சில சிறுகதைகளை எழுதியுள்ளார். அதில் ஒன்று ‘’உண்டை வெல்லம்’’. 

மணம்

 ஒரு பெண்ணின் வாழ்வைச் சூழ்ந்திருக்கிறது கேடு. நம்பிக்கையின் ஒளி இல்லா இருளில் சிக்கி வேதனையுறும் ஒரு பெண்ணின் கதை தி.ஜா வின் ‘’மணம்’’. 

சத்தியமா

 பற்றின்மையும் பெருந்தன்மையும் மன்னித்தலும் சிலருக்கு இயல்பிலேயே வாய்க்கிறது. தமிழ் மூதாட்டி நட்பும் கொடையும் தயையும் பிறவி குணம் என்கிறாள். இந்த தன்மையை அடிப்படையாய்க் கொண்ட கதை தி.ஜா வின் ‘’சத்தியமா’’

பரதேசி வந்தான்

 காட்சிகள் மாறும் என்பது உலக நியதி. விவேகிகள் அதனைப் புரிந்து வைத்திருப்பர். சில சாமானியர் அதனை மிகப் பெரிய விலை கொடுத்துப் புரிந்து கொள்கின்றனர். இந்த பின்னணியில் எழுதப்பட்ட கதை தி.ஜா வின் ‘’பரதேசி வந்தான்’’.  

Friday, 4 April 2025

இராவணன் காதல்

 ஒரு அப்சரஸால் பெண் சாபத்துக்கு ஆளான இராவணனுக்கு பிரம்மாவும் ஒரு சாபத்தை அளிக்கிறார். அந்த இரண்டு சாபங்களும் அவனை பல ஆண்டுகள் கழித்து சூழ்ந்து அழிக்கிறது. இதுவே தி.ஜா வின் ‘’இராவணன் காதல்’’. 

தூரப் பிரயாணம்

 தன் செயலால் துயர் கொள்ளும் பின் தெளிந்து அந்த துயரிலிருந்து மீளும் ஒரு பெண்ணின் கதை தி.ஜா வின் ‘’தூரப் பிரயாணம்’’. 

மறதிக்கு

 வாழ்க்கை நூதனமானது. சில வாழ்க்கை சந்தர்ப்பங்களும் நூதனமானவை. ஒரு வாழ்க்கை சந்தர்ப்பம் அளித்த செரிக்க முடியாத கசப்பை எதிர்கொள்ளும் இருவரின் வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்ட கதை தி.ஜா வின் ‘’மறதிக்கு’’. 

செய்தி

 செவ்வியல் உணர்வு கொண்ட கலைஞன் ஒருவன். கலையையே தன் வாழ்வெனக் கொண்டவன். நுண்ணியதிலும் நுண்ணியதாக தன் கலையை கலை உணர்வை நுணுக்கமாகக் கொண்டிருப்பவன். ஜனரஞ்சகம் அவன் சூழலை ஆக்கிரமிக்கத் தொடங்குகிறது. அவனுக்கு அது ஏன் என புரியவில்லை. வாழ்நாள் முழுக்க தான் செய்த கலை சாதனையின் பாதையிலிருந்து அவனால் பாதை மாற முடியவில்லை. இந்த கலைஞனின் செவ்வியல் இசையை முதல் முறையாகக் கேட்கும் ஒரு மேலை நாட்டு இசைக் கலைஞன் செவ்வியல் கலைஞனின் கலை உன்னதத்திலும் அதி உன்னதமானது என உணர்ந்து அக்கலைஞனின் கலை முன் பணிகிறான். அக்கலையில் அவனுக்கு ஒரு செய்தி கிடைக்கிறது ; செவ்வியல் கலைஞனுக்கும் ஒரு செய்தி கிடைக்கிறது. இதுவே தி.ஜா வின் ‘’செய்தி’’.

பாப்பா

 உலகில் ஊடகப் பெருக்கம் அதிகம் இல்லாத ஒரு காலம் இருந்தது. குழந்தைகள் வீட்டு மனிதர்களுடன் நெடுநேரம் இருந்து மொழியும் காரியங்களும் பயின்ற ஒரு காலம். அக்காலகட்டத்தின் கதை தி.ஜா வின் ’’பாப்பா’’.

ஒரு வீட்டில் எட்டு வயது பெண் குழந்தை இருக்கிறாள். அவளது தந்தை உத்யோக நிமித்தமாக வெளியூர் சென்றிருக்கிறார். அவர் சென்ற அன்று இரவு குழந்தையும் அன்னையும் தனித்து வீட்டில் இருக்கும் போது ஒரு திருடன் அந்த வீட்டில் நுழைந்து விடுகிறான். திருடன் நுழைந்ததை பெண் குழந்தை பார்த்து விடுகிறாள். தூங்குவது போல் நடிக்கிறாள் அந்த குழந்தை. பாப்பாவின் அன்னையை கட்டிப் போட்டு விட்டு வீட்டில் பண்டங்கள் இருக்கும் அறைக்குச் செல்கிறான் திருடன். அந்த நேரத்தில் குழந்தை எழுந்து சென்று அந்த அறையின் கதவை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு அண்டை வீட்டுத் திண்ணையில் உறங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்பி அழைத்து வருகிறாள். ஊராரிடம் சரண் அடைகிறான் திருடன். அவன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாப்பாவும் ஒரு சாட்சி. அவனுக்கு தண்டனை தரப்படுகிறது. பாப்பா மனதில் இப்போது உள்ள கேள்வி என்னவெனில் அவன் திருட வந்தான் ; ஆனால் திருட சந்தர்ப்பம் நேரவில்லை; பிடிபட்டுவிட்டான். அவ்வாறெனில் அவனை ஏன் மன்னிக்கக் கூடாது என்பது. 

தங்கம்

 பள்ளிப் படிப்பில் ஆர்வமே இல்லாத ஒரு மாணவன். பள்ளிக்கு நேரத்துக்கு வருவதில்லை. பாடம் படிப்பதில்லை. வகுப்பை கவனிப்பதில்லை. எந்த கேள்விக்கும் பதில் அளிப்பதில்லை. பள்ளி நேரத்தில் சினிமா தியேட்டரிலேயே வாசம் செய்பவன். இவ்வாறான இயல்பு கொண்ட ஒருவன். 100 ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரன் அந்த மாணவன். அவன் அன்னை அவனை எண்ணி கவலை கொள்கிறாள். ஆசிரியர்கள் கவலை கொள்கிறார்கள். அவன் சாமானியர்களால் எண்ணிக் கூட பார்க்க முடியாத ஒரு செயலை மிக இயல்பாகச் செய்கிறான். தங்கம் மண்ணுக்குள் புதைந்திருப்பது போல அரிய இயல்பை தனக்குள் வைத்திருப்பவன் அவன் என அனைவரும் உணரும் சந்தர்ப்பம் வாய்க்கிறது. அந்த சந்தர்ப்பத்தை சிறுகதையாக்கி உள்ளார் தி.ஜா.