Thursday 30 April 2020

தீதும் நன்றும்

சில ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு பத்திரப்பதிவுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தேன். பதிவுச்செலவுக்குப் பணம் தேவைப்பட்டது. என் கைக்கு வந்திருக்க வேண்டிய தொகை சில நாட்கள் தள்ளிப் போனது. எனது உடனடித் தேவை ஒரு லட்ச ரூபாய். இரண்டே நாளில் பதிவு முடிந்ததும் திருப்பித் தந்து விடலாம். கைக்கு உடனடியாக பணம் வேண்டும். வெளிநாட்டில் பணி புரிந்த எனது நண்பருக்குத் தகவல் சொன்னேன். அவர் ‘’மணி டிரான்ஸ்ஃபர்’’ முறையில் பணம் அனுப்பி விட்டார். எனது அடையாள அட்டையையும் குறிப்பு எண்ணையும் தெரிவித்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று அலைபேசியில் கூப்பிட்டுச் சொன்னார். நான் அதனை என் கைவசமாக்குவதற்கு ‘’மணி டிரான்ஸ்ஃபர்’’ மையத்திற்குச் சென்றேன். அவர்கள் ரூ. 50,000க்குள் என்றால் ரொக்கமாகத் தருவோம். அதற்கு மேல் என்றால் கோடிட்ட காசோலையாகவே தர முடியும் என்றனர். அவ்வாறு அளிக்குமாறு சொன்னேன். எங்கள் வங்கிக் கணக்கில் அவ்வளவு தொகை இல்லை. மாலை 3 மணிக்கு மேல் எங்கள் கணக்கில் பணம் சேர்ந்திருக்கும்; அப்போது தருகிறோம் என்றார்கள். நான் அடுத்த மையத்துக்குச் சென்றேன். அதே பதில். அடுத்தடுத்து மூன்று மையங்கள். சொல்லி வைத்தாற் போல ஒரே பதில். எனது தேவையையும் அவசரமும் யார் கவனத்திலும் இல்லை. இந்த ‘’மணி டிரான்ஸ்ஃபர்’’ வசதி தலைமை அஞ்சல் நிலையத்தில் இருப்பது என் நினைவுக்கு வந்தது. அங்கே சென்றேன். 

ஒரு நடுத்தர வயது பெண்மணி ‘’மணி டிரான்ஸ்ஃபர்’’ சாளரத்தின் பொறுப்பில் இருந்தார். என்னுடைய தேவையையும் நிலையையும் சொன்னேன். நான்கு இடங்களுக்குச் சென்று விட்டு இங்கே வந்திருப்பதைத் தெரிவித்தேன். அவரும் காசோலையாகவே வழங்க முடியும்; ஆனால் உடன் பெற்றுக் கொள்ளலாம் என்றார். அப்போதே நேரம் காலை பத்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. காசோலையில் மேலதிகாரி கையெழுத்திட வேண்டும்; நீங்கள் 11 மணிக்கு வாருங்கள் என்றார். அதன் பின் சென்று வங்கியில் கொடுத்தால் அவர்கள் தங்கள் காசோலைகளை கலெக்‌ஷனுக்கு அனுப்பி இருப்பார்களே என்றேன். அவர் இதனை எப்படி அணுகுவது என்பது குறித்து யோசித்தார். 

‘’உங்களுக்கு அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு இருக்கிறதா’’ என்று கேட்டார். நான் என்னுடைய சிறு வயதில் முதல் சேமிப்புக் கணக்கை அஞ்சல் அலுவலகத்தில் தான் துவக்கினேன். ஆனால் இப்போது அஞ்சலகக் கணக்கு இல்லை; வங்கிக் கணக்கு மட்டுமே இருக்கிறது என்றேன். வீட்டுக்குச் சென்று உங்கள் புகைப்படமும் அடையாள அட்டை ஒன்றும் கொண்டு வாருங்கள்; நாம் இங்கே ஒரு கணக்கை இன்றே துவக்கி உங்கள் கணக்கில் ‘’மணி டிரான்ஸ்ஃபர்’’ தொகையை டெபாசிட் செய்து உடனே எடுத்து விடலாம் என்றார். சரி என்று நான் புறப்பட்டேன். ‘’ஒரு நிமிடம்’’ என்று காத்திருக்கச் சொன்னார். அவருக்கு இரண்டு சாளரம் தள்ளியிருந்த கணக்கு துவங்கும் பிரிவுக்குச் சென்று கணக்கு துவங்கும் படிவமும் பணம் எடுக்கும் படிவத்தையும் கொடுத்து நிரப்பச் சொன்னார். நிரப்பிக் கொடுத்தேன். வீட்டுக்குச் சென்று அவர் கேட்டதை எடுத்து வந்து தந்தேன். என் கையில் மொத்த ரொக்கத்தையும் அவர் கொடுத்த போது நேரம் காலை 10.15. பாஸ் புத்தகத்தை மதியம் மூன்று மணிக்கு மேல் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். 

நான் நன்றி தெரிவித்தேன்.

‘’என்னுடைய அனுபவத்தில் நான் எளிய பணியைக் கூட சிக்கலாக்கி வாடிக்கையாளர்களைச் சிரமப்படுத்தும் வங்கி ஊழியர்களையே பெரும்பாலும் கண்டிருக்கிறேன். உங்களைப் போன்றவர்கள் அபூர்வமானவர்கள்’’ என்றேன். 

அவர் மெலிதாகப் புன்னகைக்க மட்டுமே செய்தார்.

Wednesday 29 April 2020

பிரமிப்பு

ஒரு மோட்டார் சைக்கிள் பயணியான என்னைப் பயணத்தில் பிரமிக்கச் செய்யும் இந்திய மாநிலம் ஒன்று உண்டென்றால் அது ஆந்திரப் பிரதேசம். அதாவது தற்போதைய ஆந்திரமும் தெலங்கானாவும் சேர்ந்திருக்கும் மாநிலம். எனது ஊரிலிருந்து வடக்கே முன்னூறு கிலோமீட்டர் பயணித்தாலே தமிழ்நாட்டைத் தாண்டி விடலாம். தில்லி வரை சென்றோம் என்றால் அந்த பாதையில் மகாராஷ்ட்ராவை ஒரே நாள் பயணத்தில் தாண்டிச் செல்ல முடியும். மத்தியப் பிரதேசமும் அவ்வாறே. கடலோரக் கருநாடகத்தை ஒரே நாள் பயணத்தில் கடக்கலாம். காலை மங்களூரில் கிளம்பினால் இரவு கோவா சென்று விடலாம். தேவை என்றால் கார்வாரில் ஒரு இரவுத் தங்கல். ஆனால் ஆந்திரம் பெரும் வெளி. பாறைகள், வெட்டவெளிகள், வயல்பரப்புகள், பெருநதிகள், வாய்க்கால்கள் என நம்மால் எளிதில் மனதில் தொகுக்க இயலாத பிராந்தியம். கிராமங்களின் தரிசனம் என்பதைக் கண்கூடாகக் காண முடியும். நிறைய பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வேப்பமரங்கள், அதன் அடியில் இருக்கும் அம்மன் ஆலயங்கள், மாலையில் மரநிழலில் கூடி நிற்கும் மக்கள் என மறக்க முடியாத காட்சிகளால் ஆனது ஆந்திரம். விநாயகர் அம்மையப்பனைச் சுற்றி வந்தது போல நாம் பழைய ஒருங்கிணைந்த ஆந்திராவைச் சுற்றினாலே கால்வாசி இந்தியாவைச் சுற்றி வந்ததற்கு சமம்.

Monday 27 April 2020

ஓர் ஆரம்பம்

இன்று ஒரு சிறுகதையை எழுதினேன். மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதனைக் கவனித்த போது எனக்கே வியப்பாக இருந்தது. ஒரு படைப்பை உருவாக்கும் போது அது நம்மை நமக்கு உணர்த்துகிறது. பெரும் ஊக்கத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. லௌகிகம் எத்தனைதான் பிரும்மாண்டமாக இருந்தாலும் அது எல்லைக்குட்பட்டதே. படைப்புச் செயல்பாடு வாழ்வின் நுட்பத்தை உணரும் செயல். ஒரு படைப்பாளியிடம் வாழ்க்கை அவனை எழுது எழுது என்று தூண்டியவாறே இருக்கிறது. அந்த தூண்டலே வாழ்க்கையை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. இன்று எழுதிய கதை மேலும் எழுத வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கியுள்ளது.

Friday 24 April 2020

மாலை உரையாடல்கள் - புதுச்சேரியிலிருந்து ஒரு வாசகர் கடிதம்

அன்பு பிரபு

உங்களது மாலை உரையாடல்கள் பத்தும் வாசித்தேன்.

பயணம் மற்றும் வாசிப்பின் ஊடாக உருவான சிந்தனை கொண்டு இந்த தேசத்தின் தன்மையைப் பற்றி நீங்கள் கற்றுணர்ந்தவற்றை ஐயம்திரிபின்றி ஆராய்ந்து, கருத்தில் தெளிந்து, அதன்படி நின்று அடைந்த புரிதல்கள் யாவையும் உங்களது தரப்பாக கொண்டு முன்வைத்த விதம் சிறப்பு.  இயல்பாக அமையப்பெறும் இது போன்ற சந்தர்ப்பங்களில் வெளிப்படும் போதே தன்னளவில் தொகுக்கப்பட்டு அவை மேலும் கூர்கொள்கின்றன.  கேட்பவர்க்கும் அவற்றை பரீசீலிப்பதற்கான ஆர்வத்தையும் தேடலையும் அதிகரிக்க வைக்க வல்லதாக திகழ்கின்றன.  எளிமையின் அழகியலோடு அடிப்படைகளை அத்தனை செறிவாக சொல்லிச்செல்லும் கலை கைவரப்பெற்றவர் நீங்கள் என்பது மீண்டும் நிரூபணம்.  

வாழ்த்துகள்.  

மிக்க அன்புடன்
மணிமாறன்.

Thursday 23 April 2020

மாலை உரையாடல்கள் - ஒரு வாசகர் கடிதம்

அன்புள்ள பிரபு,

தங்களுடைய மாலை உரையாடல்கள் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றன. பத்தாம் நாள் மாலை உங்கள் ந‌ண்பர் கூறுவது போலவே நானும் நெடுநாட்கள் இருந்தேன். நம்மில் பலர் இன்னும் அவ்வாறே உள்ளனர். திட்டமிட்டு நிறைய நம் பண்பாட்டுக்கூறுகள் நம்மிடம் இருந்து விலக்கப்பட்டன. நம்மில் பலருக்கும் அவற்றைத் தேடி அறிய ஆர்வமில்லை. இவ்வாறு நிறைய இழந்துவிட்டோம். இந்தப் பத்து நாள் உரையாடல்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். நாம் இழந்த பண்பாடுகளை மீண்டும் பற்றிக் கொள்ளவும், சேர்த்துக் கொண்ட ஊழல் முதலியவற்றை விட்டு விடவும் இந்த உரையாடல்கள் நிச்சயமாக ஒரு தூண்டுகோலாக அமையும் என்பது என் எண்ணம் மற்றும் விருப்பம். நன்றி பிரபு!

நாரா.சிதம்பரம்.

இந்தியா என்னும் அற்புதம்

இந்தியா அடிப்படையில் ஒரே பண்பாடு கொண்ட தேசம். இதனை இந்தியாவெங்கும் பயணித்தவர்களால் உணர முடியும். இந்திய மக்கள் பேசும் மொழியால் அணியும் ஆடைகளால் உண்ணும் உணவால் உணவுப்பழக்கங்களால் நிகழ்த்திக் கொள்ளும் சமயச் சடங்குகளால் கூட வேறுபட்டே இருக்கிறார்கள். ஒரு மாநிலத்தில் ஒவ்வொரு நூறு கிலோமீட்டருக்கும் இந்த மாற்றம் இருந்து கொண்டேயிருக்கிறது. அவ்வாறெனில் நம்மால் எப்படி இந்தியா அடிப்படையில் ஒரே பண்பாடு கொண்ட தேசம் என்று கூறமுடிகிறது? அதனை இயற்கையுடன் ஒத்திசையும் தன்மை என்று சொல்ல முடியும். 

ஐரோப்பாவை - உலகைப் புரட்டிப் போட்ட அரசியல் சித்தாந்தங்கள் மனித மைய சிந்தனை கொண்டவை. இயற்கையை எப்படிச் சுரண்டி மனிதன் வளம் பெறுவது என்பதற்கான வாய்ப்புகளை முன்வைப்பவை. அவை பேருரு கொண்டு எழுந்த போது மனித உழைப்பே சுரண்டப்பட்டது. தொழிற்புரட்சியை ஒட்டிய ஐரோப்பாவின் காலகட்டம் மனித உழைப்பு உலக வரலாற்றில் உச்சமாக சுரண்டப்பட்ட காலம். 

இந்திய சிந்தனை இந்திய நிலமெங்கும் ஒரே அடிப்படையை உருவாக்கியுள்ளது. அச்சிந்தனையின் அடிப்படையிலிருந்தே ஒவ்வொரு இந்திய சமூகத்தின் பழக்கவழக்கங்கள் உருவாகி வந்துள்ளன. இந்தியாவின் பொதுவான பண்பாடு என ஒன்றைக் கூற முடியுமானால் அது இயற்கையை தெய்வமாக வழிபடுதல் என்பதாகும். நதி, மலை, மண் ஆகிய அனைத்தையும் தெய்வ வடிவமாகப் பார்ப்பது என்பது இந்தியாவின் பழங்குடிகள், விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள் என அனைவருக்குமான பழக்கமாக இன்று வரை இருந்து வருகிறது. இந்தியத் தன்மை என்பது இந்த அடிப்படையிலிருந்து உருவாகி வரும் ஒன்றே.

இங்கே ஞானிகளின் யோகிகளின் பெருநிரை எப்போதும் உருவாகி வந்து கொண்டேயிருப்பதின் ரகசியமும் இதுவே. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய மனம் இயற்கையை வழிபடுகிறது. இயற்கையுடன் இயைந்து இருக்கிறது. தானும் தான் வாழும் சூழலும் வேறல்ல என்பதே இந்தியனின் ஆழ்மனதில் பதிந்திருக்கும் உண்மை. உலகின் எந்த சமூகத்துக்கும் இல்லாத தனித்துவம் இது. ஐரோப்பாவின் நுகர்வுத் தன்மை இந்தியத்தன்மை மீது பலவிதங்களில் தாக்குதல் தொடுக்கிறது. அதனைக் கடந்து மேலெழும் அற்புதத்தை இந்தியா நிகழ்த்தும்.


Wednesday 22 April 2020

மாலை உரையாடல்கள்

மாலை உரையாடல்கள் - 10

’’தம்பி! இந்த பத்து நாள் நாம பல விஷயம் பேசியிருக்கோம். இதுநாள் வரைக்கும் எனக்குத் தெரியாத பல விஷயங்களை நீங்க சொல்லியிருக்கீங்க. முதல் தடவையா இந்த மாதிரி விஷயங்களைக் கேட்கிறேன். நானும் பட்டப்படிப்பு படிச்சன். தினமும் நியூஸ் பேப்பர் படிக்கிறன். ஆனா இது எதுவுமே இத்தனை நாள் தெரியாம இருந்துட்டனேன்னு வருத்தமா இருக்கு தம்பி” . நண்பர் மிகவும் விசனப்பட்டார்.

தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் என்பது ஒரு பாப்புலிச இயக்கம். பல்வேறு யுக்திகளால் ஜனத்திரளைக் கூட்டி அவர்கள் உணர்ச்சிகளை ஒரு இல்லாத எதிரியைக் கட்டமைத்து அவர்கள் மேல் வெறுப்பை உண்டாக்கி அவர்களால்தான் நாம் வளராமல் இருக்கிறோம் என்ற எண்ணத்தை தொடர்ச்சியாக விதைப்பது அவர்களுடைய அரசியல் பாணி. இன்று தமிழ்நாட்டில் அவர்களுடன் இணைந்து செயல்படுபவர்கள் அவர்களை எதிர்ப்பவர்கள் கூட திராவிட இயக்கம் பின்பற்றும் அரசியல் பாணியையே பின்பற்றும் அளவுக்கு தமிழ் மக்கள் மனத்தில் வெறுப்பு அரசியல் வேரூன்றி உள்ளது. பெரும்பாலான பத்திரிக்கைகள் திராவிட இயக்க ஆதரவாளர்களான பத்திரிக்கையாளர்களால் ஆனவை. திராவிட இயக்கம் உருவாக்கும் தேய்வழக்குகளும் மனோநிலைகளும் தமிழ் நாட்டில் பரவரலான பொதுஜனங்களிடம் கூட பதிந்திருப்பது தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டங்களில் ஒன்று.

நம் நாட்டின் பண்பாடு என்பது மதம் தொடர்பானது அல்ல. அதனுடன் நீதி உணர்வும் மனித நேயமும் மானுட ஒருமைப்பாடும் இணைந்து இருக்கிறது. தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக நம் பண்பாட்டின் மீது தமிழ்நாட்டில் தொடர்ந்து தாக்குதல் தொடுக்கப்படுகிறது. இதனை தமிழ்நாட்டின் குடிமக்கள் உணர வேண்டும்.

நாம் மக்களாட்சியில் 73 ஆண்டுகளாக இயங்கி வருகிறோம். இன்று நமது தேசம் அதன் பயணத்தைத் தொடங்கிய 1947லிருந்து கணக்கிட்டால் ஒரு நிலையான இடத்திற்கு வந்திருக்கிறது. நமது நாட்டின் குடிமக்கள் இணைந்து ஒரு முன்னேற்றமான சமூகமாக மாறுவதற்கான காலகட்டம் இது. 

தமிழ்நாட்டின் குடிமக்களைத் தினமும் பாதிக்கும் பிரச்சனைகள்:

1. தமிழ்நாடு அரசாங்கம் மது விற்கிறது. தமிழ்நாட்டுப் பெண்களின் உழைப்பை தினமும் உறிஞ்சி மீளாத் துயரில் அவர்களை ஆழ்த்தும் செயல் இது.

2. வாக்குக்குப் பணம் தருதல் என்பது தமிழ் மக்களின் அகத்தை கறை படிந்ததாக ஆக்குகிறது. 

3. நீர் ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. அது குறித்த அடிப்படை அறிவோ புரிதலோ கூட தமிழ் மக்களிடம் இல்லை.

4. அரசு அலுவலகங்களில் புறையோடிப் போயிருக்கும் லஞ்சம்.

5. கல்வித்தரம் பெரும் பாதிப்பைச் சந்திந்துள்ளது. அதனால் நம் மொழிக்கே பேராபத்து நிகழ்ந்துள்ளது. 

இந்த முக்கிய விஷயங்களின் மீது கவனம் திரும்பாமல் இருக்கவே இங்கே வெற்று அரசியல் கோஷங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

மேடையில் இல்லாத எதிரியை உருவாக்கிக் கத்தும் வெறுப்பு அரசியல் பேச்சுக்களை நம்பாமல் எது தொடர்பான முடிவை எடுப்பதற்கும் முன்னால் அதன் மறுதரப்பு என்ன அதன் உண்மைத்தன்மை என்ன ஆராய்வதற்குத் தேவைப்படும் மூளை உழைப்பை நல்குவது தமிழ்ச் சமூகத்துக்கு நலம் பயக்கும். 

மாலை உரையாடல்கள் - 9

’’தம்பி! தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்கள் எந்த விஷயங்களை மாணவர்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்கணும்னு நினைக்கிறீங்க?’’

மாலை உரையாடலுக்கு இந்த கேள்வியுடன் வந்து சேர்ந்தார் நண்பர்.

1. ஐந்து வயதில் பள்ளியில் வந்து சேர்கிறான் ஒரு மாணவன். பன்னிரண்டு ஆண்டுகள் படிக்கிறான். இந்த 12 ஆண்டுகளில் தமிழ் மொழியை சரளமாக எழுத மொழிப்பாடத்தில் பயிற்சி அளிப்பது இன்றைய அவசியத் தேவை. 

ஒருமுறை எனது நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவரது மனைவி அரசுப் பள்ளி ஆசிரியை. மாணவர்களின் அரையாண்டு விடைத்தாள்களை வீட்டில் வைத்து திருத்திக் கொண்டிருந்தார். நான் ஒரு விடைத்தாளை எடுத்துப் பார்த்தேன். நூற்றுக்கு 83 மதிப்பெண் பெற்றிருந்தான் அந்த விடைத்தாளை எழுதிய மாணவன். முழுவதும் படித்துப் பார்த்தேன். 

வள்ளலார் - சிறு குறிப்பு வரைக. என்று கேள்வி. பதிலில் பெயர்: , இயற்பெயர்: , தந்தையார் பெயர்: பிறந்த ஊர்:, எழுதிய நூல்: என்பதாக ஒற்றை வார்த்தை பதிலாக எழுதியிருந்தான். இது மொழிப்பாடம் தானே? ஏன் இவ்வாறு வார்த்தை வார்த்தையாக விடை தருகிறார்கள். முழு வாக்கியம் எழுதத் தெரியாதா என்று கேட்டேன். அந்த ஆசிரியை சங்கடத்துடன் பத்தில் ஒன்பது மாணவர்களுக்கு பிழையின்றி வாக்கியம் எழுத வராது. அதனால் இப்படி எழுதச் சொல்லி விடுவோம் என்றார். பொதுத்தேர்விலும் இப்படித்தானா என்று கேட்டேன். அதிலும் அப்படித்தான். தேர்ச்சி சதவீதம் அதிகமாக இருந்தால்தான் அரசு மக்களுக்கு கல்வி அளிப்பதில் முனைப்பாக இருக்கிறது என்ற தோற்றம் உருவாகும் என்பதால் வாக்கியமாக இல்லாமல் ஒற்றை வார்த்தை பதில் எழுதியிருந்தாலே முழு மதிப்பெண் அளிக்கச் சொல்லி விடுவார்கள் என்றார்.

இப்படி மாணவர்களைப் பயிற்றுவிப்பது ஓர் ஆசிரியராக உங்களுக்கு வருத்தம் தரவில்லையா என்று கேட்டேன். வருத்தமாகத்தான் இருக்கிறது; எங்களால் என்ன செய்ய முடியும் என்றார்.

2. இந்தியாவில் வங்கிக் கணக்கு என்பது ஒவ்வொருவருக்கும் தேவை. மத்திய அரசாங்கமோ அல்லது மாநில அரசாங்கமோ குடிமக்களுக்கு ஏதேனும் மானியமோ அல்லது நிவாரணமோ அளிக்க நினைத்தால் நேரடியாக மக்கள் கணக்கில் வரவு வைத்தால் பலவிதமான இடைநிலை ஊழல்களைத் தவிர்க்க முடியும். வங்கிக் கணக்கின் முக்கியத்துவத்தை பள்ளி மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்தில் எடுத்துரைக்கலாம்.

3. ஆயுள் காப்பீடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவை. ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் அவசியம் தேவை. ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்த எளிய அறிமுகத்தை சமூக அறிவியல் பாடத்தில் சேர்க்கலாம்.

4. அரசு தொழில் முனைவோரை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை அறிவிக்கிறது. அவை குறித்த விழிப்புணர்வு மக்களிடம் மிகவும் குறைவு. அந்த திட்டங்கள் குறித்து எடுத்துரைப்பது சமூகத்தின் எல்லா படிநிலையிலும் இருக்கும் மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

5. பொருளியல் குறித்த அறிமுகம் 6 - 12 வகுப்பு மாணவர்களுக்கு அளிப்பது அவர்களுக்கு பயன் அளிக்கும்.

6. சிற்பவியலின் அடிப்படைகளையும் சிற்பங்களை அடையாளம் காணும் பயிற்சியையும் ஓர் அறிமுகமாக அளிக்கலாம்.

சமூகத்தின் யானைப் பசிக்கு சோளப்பொறி என்பதாகவே இவை அமையும். தமிழ்நாட்டில் இதை எதிர்பார்ப்பதே அதிகம் என்பதாக இருக்கிறது.

(தொடரும்)

Tuesday 21 April 2020

மாலை உரையாடல்கள் - 8

’’தம்பி! உத்யோகம் வீடுன்னு நேரம் சரியா இருக்கு தம்பி. தமிழ்ல ஏதாவது படிக்கணும்னு ஆசைப்படறேன். நீங்க நிறைய புத்தகம் பேரை சொல்றீங்க. கேட்கும் போது ஆசையா இருக்கு. ஒரு ஆரம்ப வாசகன் படிக்கற மாதிரி பத்து புத்தகத்தை அறிமுகம் செய்யுங்க தம்பி. புத்தகங்களை வாங்கி அவசியம் வாசிக்கிறேன்.’’ நண்பர் மாலை உரையாடலுக்கு ஒரு கோரிக்கையுடன் வந்தார். 

சில புத்தகங்களைப் பரிந்துரைத்தேன்.

1. பனி மனிதன்

இது குழந்தைகளுக்கான நாவல். வயதில் பெரியவர்களுக்கும் வாசிக்க சுவாரசியமானது. இமயமலையைப் பின்னணியாகக் கொண்டு அறிவியல், வரலாறு, பண்பாடு மற்றும் ஆன்மீகத்தினை விரிவாக விவாதிக்கும் நாவல். இந்தியா குறித்து பரவலாக அறியப்படாத பல்வேறு செய்திகளை பெட்டிச்செய்தி வடிவில் கொடுத்திருப்பது வாசிப்பை இன்னும் சுவாரசியமாக்குகிறது. இந்நூலின் ஆசிரியர் ஜெயமோகன்.

2. இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் 

இந்தியாவின் ஞான மரபைப் புரிந்து கொள்ள சாங்கியம், வைசேஷிகம், நியாயம், தர்க்கம், மீமாம்சம் மற்றும் வேதாந்தம் ஆகிய ஆறு தரிசனங்களைப் புரிந்து கொள்வது இன்றியமையாதது. இந்திய மண்ணின் எந்த சிந்தனையும் இந்த ஆறு தரிசனங்களில் வேர் கொண்டிருக்கும். இந்து ஞான மரபைப் புரிந்து கொள்ள இந்த நூல் மிகவும் உதவிகரமானது. இந்நூலின் ஆசிரியர் ஜெயமோகன்.

3. சங்கச் சித்திரங்கள்

கவிதையை வாசிக்க அதனை வாழ்க்கை அனுபவங்களிலிருந்து திறக்க வேண்டும். நாளும் ஒவ்வொரு கணமென நம்மைச் சூழ்ந்து நிரம்பித் ததும்பும் அனுபவக் கணங்களிலிருந்து கவிதையைத் திறப்பதன் மாயத்தை சுட்டிக் காட்டும் நூல். இரண்டாயிரம் ஆண்டுக்கும் மேற்பட்டு தமிழில் எழுதப்படும் கவிதையின் அடிப்படையான நுண்ணுணர்வைப் பின் தொடரும் நூல்.

4. துணையெழுத்து

எழுத்தாளனின் அனுபவங்கள் அலாதியானவை. வாசிப்பும் பயணமும் அவனை நிலமெங்கும் அலைய உந்திக் கொண்டேயிருக்கின்றன. கையில் ஒரு பையில் ஒரே ஒரு மாற்றுத்துணி மற்றும் சில புத்தகங்களுடன் இந்தியாவெங்கும் பயணித்த ஒரு எழுத்தாளனின் அகக் குறிப்புகள் இந்நூல். ஆசிரியர் எஸ். ராமகிருஷ்ணன்

5. கம்பன் - கவியும் கருத்தும்

தமிழ் இலக்கியத்தின் ஆகப் பெரிய செல்வம் கம்பராமாயணம். தமிழ்க் கவிதையின் உச்சபட்சமான சாதனை. கம்பனில் ஆழமாய்த் தோய்ந்து கம்பனை ரசித்த திரு. பி. ஜி. கருத்திருமன் அவர்கள் கம்பராமாயணத்திலிருந்து தேர்ந்தெடுத்த இனிமையான 900 பாடல்களை தமிழ் வாசகனுக்கு அறிமுகப்படுத்தும் நூல்.

6. சொன்னால் நம்ப மாட்டீர்கள்

தமிழின் மிக சுவாரசியமான சுயசரிதை நூல்களில் ஒன்று. தமிழ்நாட்டில் தேசியம் தழைக்க வேண்டும் என்று ஓயாமல் செயலாற்றிய ஒரு செயல் வீரனின் கதை. சுதந்திரத்துக்குப் பின்னான தமிழ்நாட்டின் வரலாற்றின் முக்கியமான அரசியல் தலைவர்களுடனான அனுபவங்களை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். ஆசிரியரின் சொற்கள் வழியே உருவாகி வரும் ராஜாஜியின் சித்திரம் அற்புதமானது.  இந்நூலின் ஆசிரியர் சின்ன அண்ணாமலை.

7. காந்தி வாழ்க்கை

லூயி ஃபிஷர் எழுதிய காந்தியின் சரிதம். மகாத்மாவை மிகச் சரியாக இந்திய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நூல். தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

8. சிலிர்ப்பு

தமிழ்ச் சிறுகதையில் ஆகச் சிறந்த படைப்புகளைக் கொடுத்த கலைஞன் தி.ஜானகிராமன். எளிய மனிதர்களின் வாழ்வின் நுட்பமான மிக அரிதான தருணங்களைக் கலையாக்கியவர் அவர். அவரின் குறிப்பிட்ட சில சிறுகதைகள் ‘’சிலிர்ப்பு’’ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தமிழ்ச் சிறுகதைகளை வாசிக்க ஆரம்பிக்க இந்நூல் முழுமையாக உதவும்.

9. பாரதி நினைவுகள்

பாரதி புதுச்சேரியில் வாழ்ந்த போது சிறு குழந்தையாயிருந்த சிறுமி யதுகிரி பின்னாளில் தன் நினைவுகளிலிருந்து எழுதிய குறிப்புகளே பாரதி நினைவுகள் என்னும் இந்நூல். ஒரு குழந்தைக்கும் குழந்தை மனம் கொண்ட ஒரு கவிஞனுக்கும் இடையேயான உரையாடல்கள் ஒரு மகா கலைஞனை நமக்கு அறிமுகப்படுத்தும். ஆசிரியர் யதுகிரி அம்மாள்.

10. ஸ்ரீ விவேகானந்தர் ஜீவிதம்

புதிய இந்தியாவை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவரான சுவாமி விவேகானந்தரின் வாழ்வை பணியை செய்தியை படைப்பூக்கம் கொண்ட மொழியில் வெளிப்படுத்தும் நூல். தன் வாழ்நாள் முழுதும் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் தொண்டாற்றிய சுவாமி சித்பவானந்தரால் எழுதப்பட்டது.

(தொடரும்)

Monday 20 April 2020

மாலை உரையாடல்கள் - 7

’’தம்பி! தமிழ்நாட்டு மக்களோட பலவீனம்னு எந்தெத்த இயல்புகளை நினைக்கிறீங்க?

1. எந்த விஷயத்தையும் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் இயல்பை முற்றிலும் இழந்திருக்கிறார்கள். சிந்தனைக்குத் தேவைப்படும் உழைப்பை நல்க விருப்பமில்லாதவர்களாக இருக்கிறார்கள்.

2. கல்வி என்பதை ஞானம் பெறுவதற்கான வழி என எண்ணாமல் லௌகிகப் பிழைப்புக்கான வழியென எண்ணத் துவங்கி விட்டனர்.

3. அரசியல் மேடைகளில் திரும்பத் திரும்ப கூறப்படும் தேய்வழக்குகளை உண்மை என நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

4. ஜாதி குறித்த விஷயங்களில், சமூகத்தில் வெளிப்படுத்த ஒரு முகமும் தங்கள் அகத்தில் வேறொரு முகமும் கொண்டிருக்கின்றனர்.

5. லஞ்சத்தை உள்ளார்ந்து அங்கீகரித்துள்ளனர்.

6. மது தங்களை முழுமையாக ஆட்கொள்வதை இயல்பாக எடுத்துக் கொண்டுள்ளார்கள்.

7. தங்கள் பண்பாட்டுப் பெருமிதங்களான ஆலயங்களை திருப்பணி என்ற பெயரில் பேரழிவுக்கு உட்படுத்துகிறார்கள். 

8. தங்கள் பண்பாடு குறித்து எவ்விதமான கல்வியும் பயிற்சியும் இன்றி இருக்கிறார்கள்,

9. இன்று பெரும்பாலானோர் தங்கள் மொழியில் பத்து வாக்கியம் எழுதக் கூட பயிற்சி இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

10. சமூகத்திற்கான கடமைகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் இருக்கிறார்கள். 

11. விதிமுறைகளை மீறுவதில் அலாதியான சுகம் காண்கிறார்கள்.

12. பணியிடத்திற்கு குறித்த நேரத்துக்கு வருவது, வேலை நேரத்தில் முழுமையாக ஈடுபடுவது, பணி நேரம் முடிந்த பின் புறப்படுவது, பணியிடத்துக்கு வரும் நபரிடம் சுமுகமாக நடந்து கொள்வது போன்ற பணிப்பண்பாட்டின் மீது நம்பிக்கையின்றி இருக்கிறார்கள்.

13. அறிவுச் செயல்பாடுகளில் ஆர்வமற்றவர்களாக இருக்கிறார்கள்.

14. வாழ்க்கைக்கான சௌகர்யங்கள் குறித்து கவனம் கொள்ளும் அளவுக்கு தங்கள் உடல்நிலை குறித்து கவனம் இன்றி இருக்கின்றனர்.

(தொடரும்)

Sunday 19 April 2020

மாலை உரையாடல்கள் - 6

வழக்கமாக வரும் நேரத்தை விட சற்று தாமதமாக நண்பர் வந்தார். மாலை விடைபெற்றுச் செல்லும் பொழுது. திண்ணையில் அமர்ந்து கொண்டார் நண்பர்.

‘’தம்பி! உங்ககிட்ட பேசும் போது நீங்க அடிக்கடி சிவிக் ஸென்ஸ் அப்படின்னு ஒரு வார்த்தையை சொல்றீங்களே அது என்ன? தமிழ்ல அப்பப்ப குடிமைப்பண்புன்னு சொல்லுவீங்க.’’

உலகில் மிகப் பெரும்பாலானவர்கள் குழந்தைகளாக இருக்கும் போது குடும்பத்தால் வளர்க்கப்படுகிறார்கள். பெற்றோர் நமது குருதி உறவுகள். சமூகத்தில் வீடு என்பது நுண்ணிய அலகு. வீட்டுக்குள் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பெற்றோர் மிகப் பரிவுடன் சொல்லித் தருகின்றனர். எந்த மனிதனுக்குமே அவன் குழந்தையாய் இருக்கும் போது பயிலும் விஷயங்களும் உருவாக்கிக் கொள்ளும் மனநிலைகளும் அவனது அந்திமக் காலம் வரை தொடர்கின்றன. வீட்டில் எப்போதுமே நமக்கு சலுகைகள் உண்டு. வீடு கொடுக்கும் சலுகைகளை சமூகம் கொடுக்காது. சமூகத்தில் நாம் செயல்படும் போது அதற்கென சில விஷயங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அதுவே குடிமைப் பண்பு எனப்படுகிறது.

நண்பர் யோசித்தார். நெடுநேரத்துக்குப் பின் ஒரு ஐயத்தைக் கேட்டார்.

‘’இதெல்லாம் எங்கியாவது கத்துக்கணுக்குமா என்ன? சொசைட்டில மூவ் பண்ணும் போது அவங்க அவங்களே தெரிஞ்சுக்க மாட்டாங்களா?’’

குடிமைப்பண்புகள் வீட்டில் பெற்றோரால் பயிற்றுவிக்கப்பட வேண்டும். பின்னர் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு குடிமைப்பண்புகள் குறித்து எடுத்துச் சொல்லியவாறு இருக்க வேண்டும். குடிமைப்பண்பு போதிக்கப்படாமல் போகும் எனில் அதனை சமூகத்தில் உருவாக்க மிகக் கடுமையாக முயற்சி செய்ய வேண்டிய தேவை உருவாகும். அதற்கு நீண்ட காலம் தேவைப்படும்.

‘’நம்ம நாட்டுல குடிமைப்பண்பை போதிச்சிருக்காங்களா?’’

இன்றைய காலகட்டத்தில் நாம் தேசம் குறித்து பேசும் போது சாலைகளால் எல்லா கிராமங்களும் இணைக்கப்பட்ட மின்சாரமும் இரு சக்கர வாகனங்களும் கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் உலகின் எங்கு உற்பத்தி ஆகும் பொருளும் சிறு கிராமத்தையும் வந்தடையும் வணிக வலைப்பின்னல் நிரம்பிய சூழலைக் கணக்கில் எடுக்கிறோம். ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் நாட்டில் ஒரு நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பே இருந்திருக்கிறது. விவசாயமே பிரதான தொழில். அவர்களுடைய உடலும் மனமும் விவசாய வேலைகளுக்கே பழகியிருக்கும். அவர்களுடைய சமூகம் என்பது கிராமத்தின் எல்லைக்குள்ளேயே முடிந்து விடும். பெரிய அளவில் வெளித்தொடர்புகள் இருக்காது. வணிகம் நுழைந்த பின், கிராமத்தில் இருப்பவர்கள் வணிகம் மூலம் பொருளீட்ட முயலும் போதே எல்லா விதமான சமூக ஸ்தாபனங்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. ரயில் நிலையம், பேருந்து நிலையம், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், உணவு விடுதிகள் ஆகியவற்றில் மக்கள் குழுமத் தொடங்குகின்றனர். ஜனநாயக ஆட்சி உருவாகும் போது அதில் பங்களிப்பதற்கான வாய்ப்பு சாமானிய மக்களுக்கும் கிடைக்கிறது. ஒரு கிராமத்துக்குள்ளேயே வாழ்க்கை நடத்திக் கொள்வதற்கு குறிப்பிட்ட சில விதிகளும் குறிப்பிட்ட சில மனநிலைகளும் போதுமானது. பெரிய சமூகமாக இயங்கும் போது இன்னும் விரிவான பயிற்சி தேவைப்படுகிறது. அதற்கான பயிற்சியை அளிக்கத் துவங்கியவர் மகாத்மா காந்தி.

டொமினிக் லாப்பியர், ’’நள்ளிரவில் சுதந்திரம்’’னு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் அவர் ஒரு காட்சியைப் பதிவு செய்கிறார். காந்தி ஒரு கிராமத்துக்குச் செல்லும் போது அவருக்கு முன்னால் இண்டியன் வாட்டர் கிளாசெட்டும் ஒரு துடைப்பமும் ஏந்திச் செல்லப்படுகிறது. அது காந்தியின் பதாகை போல என்கிறார் டொமினிக் லாப்பியர். பொது இடங்களில் தூய்மையைப் பேண வேண்டும் என்பதை ஒட்டு மொத்த இந்தியச் சமூகத்துக்கும் தன் வாழ்நாள் முழுவதும் ஞாபகப்படுத்திக் கொண்டேயிருந்தவர் மகாத்மா காந்தி.

ஒரு நாகரிக சமூகம் தன்னைப் போலவே பிறரை எண்ணும் பிரஜைகளால் மட்டுமே சாத்தியம். குடிமைப்பண்பு எல்லா விதமாக குறுகிய மனோபாவங்களுக்கும் குறுகிய எல்லைகளுக்கும் எதிரானது; மாற்றானது. நமது சமூகத்தில் குடும்பத்தைத் தாண்டி ஜாதி மட்டுமே அடுத்த சமூக நிறுவனமாக அறிமுகமாகிறது. ஜாதி அடையாளமும் ஜாதி அரசியலும் தனி மனித அகத்தில் நுழைகின்றன. இந்திய ஜனநாயகம் பலவித சமூகக்களின் மனிதர்களின் பங்களிப்பால் உருவானது. உலகின் ஆறில் ஒரு பங்கு மக்கள்தொகையை நிர்வகிக்கும் அமைப்பு இந்திய ஜனநாயகம்.

சமூக விதிகளைப் பின்பற்றுவதில் இந்தியர்கள் எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை. சாலை விதிகளை மதிப்பதில்லை. ரயில் நிலையத்திலோ வங்கியிலோ வரிசையைப் பின்பற்றுவதில்லை. எந்த வித குற்ற உணர்வும் இன்றி ‘’கியூ’’வில் முன்னால் இருப்பவர்களைத் தாண்டி டிக்கெட் கவுண்டருக்குள் கை நீட்டி பயணச்சீட்டு கேட்கிறோம். பொது இடத்தில் சத்தமாகப் பேசுகிறோம். எந்த வித கூச்சமும் இன்றி நம் சுயநலத்தை முன்வைக்கிறோம். விதிகளை கடுமையாக்கினால் அது ஜனநாயக விரோத சர்வாதிகாரச் செயல் என்கிறோம்.

எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. இது நடந்து 15 ஆண்டுகள் இருக்கக்கூடும். பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்களுக்கு வாடகைப் படி தரப்படுகிறது. வங்கி ஊழியர் சொந்த வீட்டில் வசிக்கவில்லையெனில் அவர்கள் மாதந்தோறும் செலுத்தும் வாடகையை வங்கி ஊழியருக்குக் கொடுத்து விடும். அவர் சொந்த வீடு கட்டினாலோ அல்லது வாங்கினாலோ வாடகைப்படி பெறும் உரிமையை இழந்து விடுவார். ஸ்டேட் வங்கி ஊழியர்கள் அரசிடம் சொந்த வீட்டில் இருக்கும் ஊழியருக்கும் வாடகைப்படி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கை பொருத்தமற்றது என அரசு நிராகரித்தது. அதனை நிறைவேற்றக் கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அரசை எச்சரித்தனர். அந்த கோரிக்கையுடன் வழக்கமான வேறு சில கோரிக்கைகளும் இருந்தன. அரசு வாடகைப்படி தொடர்பாக ஊழியர் சங்கங்கள் விடுத்த கோரிக்கையை நாளிதழ்களில் விளம்பரமாக வெளியிட்டது. பொதுமக்கள் வங்கி ஊழியர்களின் நியாயமற்ற கோரிக்கையைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். வங்கி ஊழியர்களிடம் அந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். ஓரிரு நாளில், திட்டமிடப்பட்டிருந்த அந்த வேலைநிறுத்தம் கைவிடப்படுவதாக ஊழியர் சங்கங்கள் அறிவித்தன.

குடிமைப்பண்புகள் மிக்க சமூகம் இன்னும் மேலானதாக இருக்கும். மேலான நிலையை நோக்கி எப்போதும் முன்னேறிச் சென்றவாறே இருக்கும்.

(தொடரும்)

Saturday 18 April 2020

மாலை உரையாடல்கள் - 5

நண்பர் அமைதியற்று இருந்தார். ஒவ்வொரு எளிய விஷயத்துக்கும் பின்னால் இருக்கும் பிரும்மாண்டமான பின்னணியும் நோக்கங்களும் அவரை அமைதி இழக்கச் செய்திருந்தன.

மனதில் இருந்த கேள்வியைக் கேட்டார்.

‘’தமிழ்நாட்டில் கோயில்கள் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றனவா?’’

’’உங்கள் அனுபவத்தில் நீங்கள் உங்கள் சிறு வயதிலிருந்து குறைந்தபட்சம் மாதம் ஒரு முறையாவது கோயிலுக்குச் சென்றிருப்பீர்கள். எந்த கோவிலிலாவது அரசியல் விஷயங்கள் பேசப்பட்டதுண்டா?’’

‘’இல்லை; அவ்வாறு எதுவும் பேசப்பட்டதில்லை’’

‘’இந்த கேள்வி ஏன் உங்கள் மனதில் உருவானது?’’

‘’இங்கே மத ஆதிக்க சக்திகள் தலைதூக்கப் பார்க்கின்றன என்று பொது மேடைகளில் முழங்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அதனால் தான் கேட்டேன்’’

என்னுடைய விளக்கத்தை ஆரம்பித்தேன்.

தமிழ்நாடு பெரும்பாலும் விவசாயத்தை நம்பியிருக்கும் மாநிலம். இன்றும் அதுதான் நிலவரம். பிரிட்டிஷ் ஆட்சியில் வசூலிக்கப்பட்ட நிலவரி மாநிலத்தின் விவசாயத்தை பெரும் நெருக்கடியில் தள்ளியது. அவர்கள் ஊருக்குள் தானியமாகப் பங்கிட்டுக் கொள்ளும் பழக்கத்துக்கு உட்பட்டிருந்தவர்கள். திடீரென நிலவரியை பணமாகச் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்ட போது அது பல எதிர்பாராத விளைவுகளை உண்டாக்கியது. தமிழ்நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சியில் ஏற்பட்ட பஞ்சங்கள் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் பேரச்சத்தில் ஆழ்த்தியது. அந்த அச்சம் இன்று வரை தமிழ் மக்களின் ஆழ்மனத்தில் உள்ளது. 

திரு. பக்தவத்சலம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த போது உணவுப்பொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. மீண்டும் ஒரு உணவுப்பஞ்சம் வந்து விடுமோ என தமிழ் மக்கள் பதட்டமடைந்தனர். அதைப் பயன்படுத்திக் கொண்ட தி.மு.க ரூபாய்க்கு மூன்று படி அரிசி தருவோம் என்றார்கள். அவ்வாறு தரவில்லை என்றால் முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள் என்றார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் ரூபாய்க்கு மூன்று படி அரிசி தரவில்லை என்பதே வரலாறு. 

மின் மோட்டார் பயன்பாடு 1990ம் ஆண்டுக்குப் பிறகே தமிழகமெங்கும் மிகப் பரவலாக அதிகரித்தது. ஆற்றுப்பாசனத்தை நம்பியிருந்த பகுதிகளில் மட்டுமே நெல் விவசாயம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து நெல் மற்ற மாவட்டத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவது ஒரு கடத்தல் நடவடிக்கையாக எண்ணப்பட்டது. தமிழகத்தில் மானாவாரி நிலங்களில் கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகியவையே அதிகம் பயிரிடப்பட்டன.

1970களில் எழுதப்பட்ட இரண்டு தமிழ்ப் புத்தகங்களை நான் பரிந்துரைக்கிறேன். 1. தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய வேங்கடம் முதல் குமரி வரை 2. சிட்டி எழுதிய சேக்கிழார் அடிச்சுவட்டில்

இந்த இரண்டு நூல்களையும் வாசித்துப் பார்ப்பவர்களால் ஆலயங்கள் எவ்வாறு கைவிடப்பட்டு இருந்தன என்பதன் சித்திரத்தைக் காட்டக் கூடியது. சிட்டி நாயன்மார்களின் ஒவ்வொரு ஊருக்கும் செல்கிறார். அந்த ஊர்க்காரர்களுக்கோ அதற்கு பக்கத்து ஊரில் இருப்பவர்களுக்கோ கூட அவர் தேடும் ஆலயம் எது என்பதை அறியாமல் இருக்கிறார்கள் என்று கூறுகிறார். சிவசேவையில் தலைமுறைகளாக ஈடுபட்டிருப்பதால் எந்த வருமானமும் இல்லாமல் வறுமையில் இருந்தாலும் பணியைத் தொடர்கிறோம் என பல ஆலயங்களில் அர்ச்சகர்கள் கூறுவதை சிட்டி பதிவு செய்கிறார்.

அதாவது இருபதாம் நூற்றாண்டின் வரலாறு என்பது தமிழ்நாடு பஞ்சத்துக்கு அஞ்சிய வரலாறு. அப்போது ஆலயங்கள் பெரும்பாலும் கைவிடப்பட்டிருந்தன.  சித்திரை, வைகாசி, ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்களில் கிராமங்களில் நடக்கும் இராமாயண , மஹாபாரத பிரசங்கங்களே சமயச் செயல்பாடாக இருந்துள்ளன. அவற்றை சமயச் செயல்பாடு என்றும் முழுமையாகக் கூற முடியாது. அவை பண்பாட்டுச் செயல்பாடுகள். அதிலும் மஹாபாரதக் கூத்து வட தமிழ்நாட்டில் மட்டுமே இருந்துள்ளது. எல்லா பகுதிகளிலும் இராமாயணக் கதை நடக்கும். 

பொருளியல் ரீதியாக கைவிடப்பட்டிருந்த ஆலயங்களில் வருடத்துக்கு ஒரு வாரமோ பத்து நாளோ நடக்கும் இராமாயண உபன்யாசம் மட்டுமே கிராம மக்களுக்கு அவர்களின் பண்பாட்டின் வரலாற்றை எடுத்துரைப்பதற்கான வழியாக இருந்துள்ளது. இராமாயணமும் மஹாபாரதமும் இந்தியர்கள் வாழ்வுடன் நேரடியானத் தொடர்புடையது. ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் இராமன் கதையையும் கிருஷ்ணன் கதையையும் கேட்டே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வளர்ந்தனர். அதன் கடைசிக் கண்ணி திருவிழா பிரசங்கங்கள் மூலம் தமிழ்நாட்டில் தொடர்ந்தது. 

திராவிட இயக்கம் அந்த மரபின் மேல் தனது அரசியலுக்காக தாக்குதலைத் தொடுத்தது. இராமாயணமும் மஹாபாரதமும் ஆரியர்களின் படைப்புகள் என்றும் அவை தமிழ் மக்கள் மீது செயற்கையாகத் திணிக்கப்பட்டது என்று மேடைக்கு மேடை கூறினர். திராவிட இயக்கம் ஒரு பாப்புலிச இயக்கம். அவர்களுக்கு சமூக மாற்றம் இலக்கு அல்ல; அரசியல் அதிகாரமே அவர்களின் தேவை. இராமயணம் மீதும் மஹாபாரதம் மீதும் இன்று வரை திராவிட இயக்கம் பரப்பி வரும் அவதூறுக்காக அவர்கள் வரலாற்றால் மன்னிக்கப்படப் போவதில்லை.

ஹிந்து மதமே ஜாதியை திணிக்கிறது என்றனர். சமத்துவத்துக்கு எதிரானது ஹிந்து மதம் என்றனர். பொய் பரப்புரை மூலம் ஒரு மொழியின் பண்பாட்டு சாரத்தின் மீது பெரும் தாக்குதல் தொடுத்தது திராவிட இயக்கம்.

இன்றும் ஆலயங்களுக்கு பொருளியல் வருமானம் இல்லை. இராமாயணத்தையும் மஹாபாரதத்தையும் தமிழ் மக்களிடம் கொண்டு செல்லும் பண்பாட்டுச் செயல்பாடு தேக்கம் கண்டுள்ளது. கம்ப இராமாயணமும் தேவாரமும் நாலாயிர திவ்யப் பிரபந்தமும் தமிழ் மொழியின் பண்பாட்டுச் செல்வங்கள். அவை எல்லா வழியிலும் காக்கப்பட வேண்டும்.

(தொடரும்)

Friday 17 April 2020

மாலை உரையாடல்கள் - 4

’’தம்பி! நம்ம சமூகம் பழைய விஷயங்களையே விடாம பிடிச்சுக்கிட்டு இருக்கறதால தான் முன்னேறாம இருக்கா?’’

‘’எதை பழைய விஷயங்கள்னு சொல்றீங்க’’

‘’பிறப்புலேந்து இறப்பு வரைக்கும் சடங்குகள் இருக்கே?’’

‘’உலகத்துல சடங்குகள் இல்லாத சமூகம் உண்டா?’’

‘’அங்கெல்லாம் சடங்குகள் குறைச்சலா இருக்கு’’

‘’எல்லா சமூகத்திலயும் திருமணம் உண்டு. குழந்தைக்குப் பெயரிடும் சடங்கு உண்டு. நிச்சயதார்த்தம் உண்டு. சாவுக்குப் பிற்பாடான சடங்குகள் உண்டு. நினைவு தினம் உண்டு.’’

‘’நீங்கள் சொல்வது உண்மைதான்.’’

நண்பர் சில கணங்கள் அமைதியானார். பின்னர் கேட்டார்.

‘’நாம சடங்குகள் செய்யறதாலதான் பிற்போக்கா இருக்கோம்னு நம்மள தமிழ்நாட்டில நம்ப வச்சுடறாங்க. இது ஏன் நடக்குது?’’

மனிதர்கள் சமூகமாக வாழத் துவங்கியதிலிருந்து சடங்குகள் இருக்கின்றன. ஒரு பெரிய கதையைச் சொல்வதற்கான துவக்கத்தை உருவாக்குகிறார் நண்பர். என்னால் எவ்வளவு தூரம் செல்ல முடிகிறது என்று பார்ப்போம் என என் பதிலை கூறத் தொடங்கினேன்.

குகை ஓவியங்கள் ஆதி மனிதர்களால் மொழி உருவாகும் காலத்திற்கு முன்பே வரையப்பட்டவை. தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் முக்கியமான குகை ஓவியங்கள் இருக்கின்றன. ஒரு தொல் குடித்தலைவன் பறவையின் இறகுகளால் ஆன கிரீடம் ஒன்றை தலையில் சூட்டியிருப்பதன் சித்திரம் அதில் வருகிறது. தனி மனிதன் இரண்டு விதமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்படுகிறான். ‘’நான்’’ என்ற தன்னுணர்வு. அது உருவானதுமே அதனைக் கடந்து செல்ல வேண்டும் என்ற உணர்வு. இந்த இரண்டு நிலையும் அவனுக்கு மாறி மாறி ஏற்பட்ட வண்ணமே இருக்கிறது. எல்லா சடங்குகளுமே தனிமனிதன் தன்னைக் கடந்து சென்று குடும்பத்துடன், சமூகத்துடன், இயற்கையுடன் இணைத்துக் கொள்வதற்கான முயற்சியே. சடங்குகள் உருமாறும் இயல்பு கொண்டவை. மானுடப் பிரக்ஞை வளரும் தோறும் சடங்குகள் மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. பிராணிகள் தீயில் பலியிடப்பட்டிருக்கின்றன. இப்போது  மனதின் தீய இயல்புகளை தீயில் இடுங்கள் என்று சொல்கிறார்கள். இரண்டுமே குறியீடு தான். சாலையில் பச்சை விளக்கு எரிந்தால் செல்லலாம் என்றும் சிவப்பு விளக்கு எரிந்தால் செல்லக் கூடாது என்றும் நாம் ஒரு பொதுப் புரிதலில் புரிந்து கொள்வது போல.
எல்லா சடங்கும் எல்லா சமூகங்களிலும் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன. 

இந்திய மண் எப்போதுமே மனிதர்கள் எல்லைகளுடன் உருவாக்கிக் கொள்ளும் எல்லாவற்றையும் தாண்டிச் சென்றவாறு இருக்கவே அறைகூவல் விடுக்கிறது. ஸ்ரீகிருஷ்ணர், புத்தர், சங்கரர், ராமானுஜர், ஸ்ரீராம கிருஷ்ணர் என காலங்காலமாக ஞானிகள் இங்கே தனி மனித அகத்தை மேலான நிலைக்கு வழிநடத்தியிருக்கிறார்கள். உலகிலேயே தனி மனிதர்கள் மேற்கொள்ளும் சடங்குகளுக்கு எந்த கட்டாயமும் உருவாக்காத சமூகம் ஒன்று இருக்குமானால் அது இந்திய சமூகமாகவே இருக்க முடியும். எந்த சமூக நியதிகளுக்கும் எந்த விதமான சடங்குகளுக்கும் உட்படாத பெரும் குழுக்களை பேணிய சமூகமும் இந்திய சமூகமாகவே இருக்கிறது. 

சுயநலமற்ற அனைத்தும் என்னை வந்தடைகின்றன என்றார் ஸ்ரீகிருஷ்ணர். தூய பிரக்ஞையின் மூலம் இருப்பை உணருங்கள் என்றார் புத்தர். அறிவே தெய்வம் என்றார் ஆதி சங்கரர். மனிதனுக்குச் செய்யும் சேவை இறைவனுக்குச் சேவை என்றார் ராமானுஜர். அன்பின் பெருக்கால் யாவும் ஒன்றே என்றார் ராமகிருஷ்ணர்.

பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னால், இந்தியா அன்னியத் தாக்குதலுக்கு ஆளான வண்ணம் இருந்தது. அன்னிய ஆட்சியாளர்கள் ஹிந்து மதத்தை அழிக்க விரும்பினர். ஆலயங்கள் அழிக்கப்பட்டன. இன்றும் வட இந்தியாவில் பேராலயங்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. அப்போது தங்கள் சமயத்தை மரபைக் காப்பாற்றிக் கொள்ள நாம சங்கீர்த்தனம் முன்னெடுக்கப்பட்டது. திரளாக ஓரிடத்தில் கூடி தெய்வ உருவத்தை வழிபட முடியாத நிலையில் இறைவன் பெயரை உச்சரியுங்கள் என்றனர். ஹிந்து மதம் அவ்வாறே தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.

ஒரு சமூகத்தில் பெரும்பான்மையானோரின் மன அமைப்புக்கு சடங்குகள் எளிதில் பொருந்திப் போகின்றன என்பது ஓர் உண்மை. பெரும்பான்மையானோருக்கு மன அமைதியைத் தருகின்றன என்பது ஓர் நடைமுறை. சமூக மாற்றத்துடன் ஒத்துப் போகாத சடங்குகள் இல்லாமல் ஆகின்றன.

நாராயண குரு தனது வாழ்வில் பல சடங்குகளை மாற்றியமைத்தார். திருமணங்களை எளிமையாகச் செய்யுங்கள் என்றார். மிகக் குறைந்த நபர்கள் உடனிருந்தால் போதும் என்றார். மணமகனின் தாய் தந்தையும் மண மகளின் தாய் தந்தையும் மட்டும் உடனிருக்க திருமணங்கள் நடந்தால் போதும் என்றார். பெரும் தொகை செலவழிக்க நினைத்தால் அதனை மணமக்களின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்து விடுங்கள்; அவர்கள் எதிர்கால வாழ்விற்கு அது பயன்படும் என்றார்.

மகாத்மா காந்தி பட்டாடை அணியாமல் கதராடை அணிந்து எளிய முறையில் திருமணங்களை நடத்திக் கொள்ள வேண்டும் என்றார். தன் குடும்பத்தில் நிகழ்ந்த திருமணங்களை மிக எளிமையாகவே காந்தி நடத்தினார்.

ஆர்ய சமாஜிகள் திருமணங்கள் எளிமையாக நடத்தப்பட வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். அதன் நிறுவனர் சுவாமி தயானந்த சரஸ்வதி விதவை மறுமணத்தை ஆதரித்தவர்.

திராவிட இயக்கம் ஒரு பாப்புலிச இயக்கம். தங்கள் அரசியல் நலன்களுக்காக அவர்கள் பண்பாட்டின் மீது பெரும் தாக்குதல் தொடுத்தார்கள். ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் சடங்குகளை மற்ற ஜாதிகள் மீது திணிக்கிறார்கள் என்ற பரப்புரையை மேற்கொண்டார்கள். மக்கள் சிந்தனையில் நாராயண குருவோ அல்லது மகாத்மா காந்தியோ ஏற்படுத்திய மாற்றத்தை அவர்கள் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கிறார்களா என்பதை யோசித்துப் பார்த்தால் உண்மை புரியும்.

(தொடரும்)

Thursday 16 April 2020

மாலை உரையாடல்கள் - 3

நண்பர் மாலை உரையாடலை ஒரு கேள்வி மூலம் துவக்கினார்.

ஊழல் அரசு அலுவலர்கள் தொடர்பான விஷயமும் கூட. எந்த கட்சி ஆட்சி வந்தாலும் அதே அரசு ஊழியர்கள்தான் இருக்கப் போகிறார்கள். திராவிடக் கட்சிகள் மட்டும் ஊழல்வாதிகள் என விமர்சிக்கப்படுவது எதனால்?

நான் என் தரப்பைக் கூறினேன்.

உலகில் எல்லா அரசுகளிலும் ஊழல் நடக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஏன் ஜப்பான் அரசின் மீது கூட ஊழல் புகார் அவ்வப்போது எழுவதுண்டு. ஆனால் அவற்றுக்கும் தமிழ்நாட்டின் மாநில அரசில் நடக்கும் ஊழலுக்கும் பெரும் வேறுபாடு உண்டு. 

மேற்படி நாடுகளில் சாமானிய குடிமக்கள் தங்கள் அவசியமான பணிகளை மேற்கொள்ள அங்குள்ள அரசு அலுவலகங்களை அணுகும் போது அங்கிருக்கும் அரசு ஊழியர்கள் எவரும் லஞ்சம் கேட்பதில்லை. அவை எந்த லஞ்சமும் பெறப்படாமல் முறைப்படியே நடக்கின்றன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரசு அலுவலகங்களை அணுகி தங்கள் பணிகள் நிறைவு செய்யப்பட்டு வெளியேறுகின்றனர்.

தமிழ்நாட்டில் பொதுமக்கள் என்ன காரணத்துக்காக அரசு அலுவலங்களுக்குச் செல்கிறார்கள்? சாமானியர்கள் இரு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற அரசு அலுவலகங்களை அணுகுகிறார்கள். இரு சக்கர வாகனமோ அல்லது நான்கு சக்கர வாகனமோ பதிவு செய்ய அணுகுகிறார்கள். வாழ்வில் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தாங்கள் வாங்கும் சொத்தை பத்திரப் பதிவு செய்ய அணுகுகிறார்கள். சொந்தமாக ஒரு வீடு கட்டிக் கொள்ள கட்டிட அனுமதி கேட்டு நகராட்சி அலுவலகம் செல்கிறார்கள். கட்டிய வீட்டுக்கு வரி மதிப்பீடு கேட்டு மீண்டும் செல்கிறார்கள். வரி பெயர் மாற்றம் தேவைப்பட்டால் செல்கிறார்கள். ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கிறார்கள். இதைத் தவிர நடுத்தர வர்க்க சாமானியனுக்கு அரசு அலுவலகம் செல்லும் வேலை மிகவும் குறைவு. போக்குவரத்துத் துறை, பத்திரப் பதிவுத் துறை, உள்ளாட்சித் துறை மற்றும் நுகர்பொருள் வழங்கல் ஆகியவற்றையே சாமானியர்கள் அரசாங்கம் என நினைக்கிறார்கள். அதனையே சற்று விரிவாக்கி தேசம் தங்களுக்குச் செய்யும் செயல்களாக எண்ணுகிறார்கள்.

1. தமிழ்நாட்டில் இந்த அலுவலகங்களில் முறையாக மதிப்புடன் நடத்தப்பட்டவர்கள் என எவரும் இருக்கின்றனரா?

2.  தமிழ்நாட்டில் இந்த அலுவலங்களில் லஞ்சம் கொடுக்காமல் தங்கள் செயல்களை நிறைவேற்றிக் கொண்டவர்கள் என எவரும் உள்ளனரா?

3. இந்த அலுவலகங்களில் லஞ்சம் தர மாட்டோம் என உறுதியாய் இருந்தவர்கள் அலைக்கழிப்புக்கு ஆளாகாமல் இருந்திருக்கிறார்களா?

4. இந்த அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்கும் மக்கள் அரசின் மீதும் நிர்வாகம் மீதும் தேசம் மீதும் எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கிக் கொள்கிறார்களே அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்?

5. அரசு அலுவலகம் என்றாலே லஞ்சம் தர வேண்டும் என்ற மனப்பதிவு பொதுமக்கள் மனதில் உருவாகியிருப்பது தார்மீக வீழ்ச்சி இல்லையா? 

நான் இவற்றுக்கு தமிழ்நாட்டை கடந்த 53 ஆண்டுகளாக ஆண்ட திராவிட இயக்கத்தைக் குற்றம் சாட்டுகிறேன். அவர்கள் அதனை எப்படி நடைமுறைப்படுத்தினார்கள் என்பதை எடுத்துரைக்கிறேன். 

திராவிட இயக்கம் ஒரு பாப்புலிச இயக்கம். அவர்கள் காங்கிரஸ்ஸை எதிர்த்து அரசியல் செய்தார்கள். அன்றைய காங்கிரஸ் லட்சியவாதத் தன்மை கொண்டது. அதன் தலைவர்கள் லட்சியவாதம் மீது நம்பிக்கை கொண்டவர்கள். தேசத்தில் பூசலைக் குறைத்து ஒற்றுமையை நிலைநாட்டி வலுவான தேசத்தைக் கட்டமைப்பதின் சவாலை ஏற்றுக் கொண்டு ஆக்கபூர்வமாக செயல்பட்டவர்கள். அவர்களுக்கு எதிராக பாப்புலிச பரப்புரையை மேற்கொண்டு அரசியலில் தங்கள் இடத்தை அடைந்தவர்கள் திராவிட இயக்கத்தினர். அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஊழலைப் பரவலாக்கினர். ஒரு பாப்புலிச ஆட்சி எவ்வழியிலேனும் தனது ஆதரவுத் தளத்தை உருவாக்கிக் கொள்ளும். நிர்வாகத்தில் ஊழலை ஊக்குவித்து அந்த தொகையில் தங்களுக்கும் பங்கு பெற்றுக் கொண்டனர்.

மத்திய அரசின் துறைகளில் சாமானியர்கள் அணுகுவது ரயில்வே, தபால் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகம். அவற்றில் சாமானியர்களுக்கு அளிக்கப்படும் சேவைகளுக்கு லஞ்சம் பெறப்படுவதில்லை.

மாநில அரசு நிர்வாகத்தில் லஞ்சம் மிகுந்திருப்பதால் ஏற்படும் கேடுகள்.

1. லஞ்சம் ஆயிரக்கணக்கான மக்கள் மனதில் அவநம்பிக்கையை உண்டாக்குகிறது. அது தேசத்தின் மீதான அவநம்பிக்கையாக மாறுகிறது. 

2. லட்சியவாத அரசியலுக்கான இடம் இல்லாமல் போய் பாப்புலிச அரசியல் மட்டுமே நிலைக்கிறது.

3. மக்கள் அரசின் மீது நம்பிக்கை இழக்கிறார்கள். அதனை பயங்கரவாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். 

4. ஒவ்வொரு குடிமகனுக்கும் அது தனது தேசம் குறித்த தாழ்வுணர்ச்சியை உருவாக்குகிறது. 

5. ஒரு சமூகத்தின் தார்மீக மதிப்பீடுகள் அழிக்கப்படுகின்றன. 

6. ஊழல் மனித மனத்தின் பேராசை சார்ந்தது. அதனை கட்டுக்குள் வைக்க முடியாது. கட்டற்று பெருகிக் கொண்டு செல்வது பேரழிவை உண்டாக்கும்.

7. திராவிட இயக்கத்தின் ஊழல் செயல்பாடுகளால் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. எ.டு மணற் கொள்ளை.

லஞ்சத்தின் கரங்கள் கடைசியில் மக்களின் கழுத்தையும் இறுக்கத் துவங்கியுள்ளது. வாக்குக்கு பணம் தருவதன் மூலம் ஜனநாயகத்தை கழுவேற்றியுள்ளனர் திராவிட இயக்கத்தினர்.

திராவிட இயக்க பாப்புலிச அரசியல் நம்மை ஒரு விஷச்சுழலில் சிக்க வைத்துள்ளது. அதனை உணர்வதற்கான நேரம் இது.

(தொடரும்)

மாலை உரையாடல்கள் - 2

மாலை நண்பர் வந்திருந்தார்.

’’தம்பி! கோயில் நிலம் பற்றி நீங்கள் சொன்னதை யோசித்துப் பார்த்தேன். நீங்கள் சொல்வது உண்மைதான்.’’

‘’அப்படியா’’ என்று கேட்டுக் கொண்டேன்.

’’ராஜாஜி பெரிய தலைவரா தம்பி?’’ என நண்பர் வினா எழுப்பினார்.

‘’ஏன் அவ்வளவு சந்தேகமா அந்த கேள்வியக் கேட்கிறீங்க?’’

‘’அவர் செய்த சாதனைகள் பற்றி தமிழ்நாட்டுல யாரும் பேசறது இல்லையே ஏன்?’’

‘’தமிழ்நாட்டுல கிட்டத்தட்ட 30 வருஷ காலம் மதுவிலக்கு அமலில் இருந்தது. அதைக் கொண்டு வந்தவர் ராஜாஜி.’’

நண்பர் ஆச்சர்யமடைந்தார். அவர் அதனைக் கேள்விப்பட்டிருக்கவில்லை.

’’பல வருஷமா ஹோசூர்ல பல விதமான தொழிற்சாலைகள் இருக்கே. அந்த ஊரை ஒரு தொழில் மையமா மாத்தணும்னு திட்டமிட்டு வேலைகள் செஞ்சவர் ராஜாஜி’’

நண்பர் அதனையும் கேள்விப்பட்டிருக்கவில்லை.

‘’நீங்கள் ராஜாஜி பற்றி என்னதான் கேள்விப்பட்டீர்கள்?’’

‘’அவர் குலக்கல்வி திட்டம் கொண்டு வந்தார்னு கேள்விப்பட்டிருக்கேன்?’’

‘’வேற என்ன கேள்விப்பட்டீங்க?’’

‘’தம்பி! கோச்சுக்காதீங்க. குலக்கல்வி திட்டம் ஜாதியை வளர்க்கற திட்டம்னு கேள்விப்பட்டேன்.’’

ராஜாஜியின் கல்வித் திட்டம் குறித்து அவருக்கு விளக்கினேன்.

நாடு சுதந்திரம் பெற்றவுடன், மத்திய அரசு மக்களுக்கு கல்வியறிவு அளிக்க வேண்டும் என்று விரும்பியது. கல்வியறிவு பெற்ற சமூகமே ஒப்பீட்டளவில் சட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும். சட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் சமூகத்திலேயே அமைதி நிலவும். அதனால் வளர்ச்சி ஏற்பட சாத்தியமாகும். மேலும் மனிதர்களின் உழைப்பு சுரண்டப்படாமல் இருக்க அவர்கள் கல்வியறிவு பெற்றிருப்பது அவசியமானதாகும்.

நாம் இந்த விஷயத்தை பலவிதங்களில் அணுக முடியும். தமிழ்நாடெங்கும் நடைமுறை விஷயங்கள் பல திண்ணைப் பள்ளிக்கூடங்களில்  பயிற்றுவிக்கப்பட்டன. ஒவ்வொரு ஊரிலும் ஓர் ஆசிரியர் இருந்து கிராம மக்களுக்கு கல்வி அளித்துக் கொண்டிருந்தார். அவர்களையும் உள்ளடிக்கிய ஒரு கல்விமுறை கொண்டு வந்திருக்கப்பட வேண்டும். ஜவகர்லால் நேரு சோவியத் யூனியனை தன் ஆதர்சமாகக் கொண்டவர். அதன் அடிப்படையும் இயங்குமுறையும் முற்றிலும் வேறானது. சோவியத் கல்வியை அரசாங்கத்தின் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அதே போல் இங்கும் திட்டமிட்டார் நேரு.

ராஜாஜி தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த போது பள்ளிகளின் எண்ணிக்கைக்கும் படிக்க வாய்ப்புள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கும் இடையே பெரும் இடைவெளி இருந்ததைக் கண்டார். அதனைக் குறைக்க பள்ளிகளின் வேலை நேரத்தை சில மணி நேரங்கள் கூடுதலாக்கினார். அதாவது , காலை 9.30 மணியிலிருந்து மாலை 4.30 மணி வரை  என இருக்கும் பள்ளி நேரத்தை காலை 8 மணியிலிருந்து 5.30 மணி வரை என ஆக்கினார். மாணவர்களை இரண்டு பிரிவாகப் பிரித்து ஒரு பிரிவு காலை 8 மணியிலிருந்து 12.30 மணி வரையும் இன்னொரு பிரிவுக்கு மதியம் 1.30 மணியிலிருந்து 5.30 மணி வரைக்கும் என கல்வி கற்க வாய்ப்பு தந்தார். அரசாங்கத்திற்கு உபரி செலவு இன்றி மாணவர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் திட்டம் இது. தங்கள் பணி நேரம் அதிகரிக்கும் என்பதால் ஆசிரியர்கள் அதனை விரும்பவில்லை. அன்று ஆசிரியர்களே கிராமங்களில் அரசாங்கத்தைப் பற்றிய அரசியல் தலைவர்களைப் பற்றிய பொது அபிப்ராயத்தை உருவாக்குபவர்கள். அவர்களுடைய அதிருப்தியைப் புரிந்து கொண்ட திராவிட இயக்கம் அதனை எதிர்த்தது.

ஷிஃப்ட் முறையில் பயின்ற நேரம் போக மீதி நேரம் மாணவர்கள் என்ன செய்வது என்று கேட்கப்பட்ட போது பெற்றோருக்கு அவர்கள் தொழிலில் உதவட்டும் என்றார் ராஜாஜி. அதனை உள்நோக்கத்துடன் திரித்து மேடைக்கு மேடை பரப்புரை செய்து தந்தை செய்யும் தொழிலை மகனை செய்யச் சொல்லி ஜாதியை வளர்க்கிறார் ராஜாஜி என்றனர். சட்டநாதக் கரையாளர் என்னும் சுதந்திரப் போராட்ட வீரர் ’’திருச்சி சிறை’’ என்ற நூலை எழுதியிருக்கிறார். அதனை எவரும் வாசித்துப் பார்க்கலாம். அதில் சுதந்திரத்துக்காக சிறை சென்று எவ்வாறு சிறைக் கொட்டடியில் பல மாதங்கள் அடைபட்டுக் கிடந்தார் ராஜாஜி என்பதன் பதிவுகள் இருக்கின்றன. சிறையில் சிறைக் கைதிகளுக்கு திருக்குறளும் ஷேக்ஸ்பியரும் வகுப்பாக எடுத்தவர் ராஜாஜி. மகாத்மா காந்தி ராஜாஜியை தனது மனசாட்சி என்றார்.அவரை ஜாதி வெறியர் என்றனர். பிற்போக்குவாதி என்றனர்.

திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்ததும் கல்வித்தரம் கீழிறிங்கியது. ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு என உருவாக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வழங்கும் பட்டயம் போல நகைப்புக்குரிய திட்டம் வேறேதும் இருக்குமா என்பது கேள்விக்குறி. பத்தாம் வகுப்பு முடித்து ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பட்டயம் பெற்றால் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ஆக முடியும். திராவிட இயக்கம் ஏன் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து இளங்கலை, முதுகலை மற்றும் அறிவியல் பட்டம் பெற்ற மாணவர்களை ஆரம்பப் பள்ளிக்குத் தேர்ந்தெடுக்கவில்லை. அன்று மேற்படி படிப்புகள் படித்து வேலையில்லாமல் இருந்த பட்டதாரிகளின் எண்ணிக்கை மிக அதிகம் தானே? இன்று மாநில அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் 40 சதவீதத்துக்கு மேல் பள்ளி ஆசிரியர்கள் இருக்கின்றனர். கல்வித்தரம் எப்படி இருக்கிறது? எல்லா ஊரிலும் அரசுப் பள்ளிகள் இருக்கின்றன என்றால் ஏன் அத்தனை தனியார் பள்ளிகள் துவக்கப்பட்டன? பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஏன் திராவிட இயக்க அரசியல்வாதிகளால் நடத்தப்படுகின்றன?

ராஜாஜியின் திட்டம் கூர்மதியுடனும் தொலைநோக்குடனும் வடிவமைக்கப்பட்டது. மக்கள் நலனை மையமாகக் கொண்டது.

ராஜாஜியின் கல்வித்திட்டம் ஜாதியை வளர்க்கும் என்றார்களே அவர்களிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி இருக்கிறது. தமிழ்நாட்டின் பல பள்ளிகளில் மாணவர்கள் குறிப்பிட்ட வண்ணங்கள் கொண்ட கயிறுகளை தங்கள் ஜாதிகளை அடையாளப்படுத்தும் விதத்தில் கைகளில் அணிந்திருப்பதாகச் சொல்கிறார்கள். திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்து 53 ஆண்டுகள் ஆகி விட்டது. ராஜாஜியின் கல்வித் திட்டம் தோற்கடிக்கப்பட்டு 65 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. ஏன் ஜாதி வெறி பள்ளிகளில் கூட இத்தனை கூர் கொண்டுள்ளது?

ஓர் உண்மையான தேசபக்தர் பிற்போக்குவாதி என வசைபாடப்படுவதும் மக்களை ஜாதியால் பிரித்தவர்கள் தலைவர்கள் என போற்றப்படுவதும் தமிழ்நாட்டில் நடக்கிறது. செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் என்று ஒரு பழமொழி உள்ளது. அது தமிழ்ச் சமூகம் பற்றியதோ?

(தொடரும்)

Wednesday 15 April 2020

மாலை உரையாடல்கள் - 1

சில நாட்களாக, மாலை வேலைகளில் என் நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருக்கிறேன். அவர் சமூகப் பிரக்ஞை கொண்டவர். என் மீது மிகவும் பிரியமாக இருப்பார். நெடுநாட்களாக எங்களுக்கு பழக்கம். இந்த காலகட்டத்தில் பகல் பொழுதுகளில் சந்தித்துக் கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. 

பொதுவாக ஒருவர் உரையாடலைத் தொடங்கினால் நான் அதனைக் கவனமாக கேட்டுக் கொள்வேன். அவர்கள் பயன்படுத்தும் சொற்கள், அவர்களுடைய ஆர்வம், அவர்களுடைய உணர்வுகள், பேசும் விஷயத்தில் அவர்களுக்கு இருக்கும் ஈடுபாடு ஆகியவற்றைக் கவனிப்பேன். பின்னர் அவர்கள் கூறுவதில் எனக்கு இருக்கும் ஐயங்களைக் கேட்பேன். அதற்கான விளக்கங்களைப் பெறுவேன். அதன் பின்னர் நான் என்னுடைய அவதானங்களைக் கூறத் துவங்குவேன். 

சிந்திக்கும் பழக்கம் கொண்ட ஒருவனாக , நான் சமூகம் சார்ந்த எந்த விஷயத்தையும் தர்க்கபூர்வமாக அணுகி அதன் வரலாற்று இடத்தை ஆராய்ந்து அதனை நான் எப்படி பார்க்கிறேன் என்பதையே எப்போதும் முன்வைக்கிறேன். எனது தரப்பை ஏற்பதும் ஏற்காமல் போவதும் எதிராளியின் முடிவு. நான் முன்வைக்கும் தர்க்கம் முழுமையானதாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு மாறா உறுதி உண்டு. 

நண்பர் என்னிடம் ஒருநாள் ஆரம்பித்தார்.

‘’தம்பி! வீட்டு மனை விவசாய நிலத்தை கோயில் இடம் பட்டான்னு இரண்டாகச் சொல்றாங்களே ; இதுல பட்டா இடம்னா என்னன்னு புரியுது. கோயில் இடம்னா என்ன?’’

அவரிடம் விளக்கம் கொடுத்தேன்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஊர்களில் அந்த ஊர்களில் இருக்கும் ஆலயங்களுக்கு அந்த ஊரில் இருக்கும் நிலத்தில் கிட்டத்தட்ட பாதி நிலம் சொந்தமாக இருக்கும். அந்த நிலத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் அந்த ஆலயத்துக்குரியது. ஆலயத்தைச் சேர வேண்டியது. அந்த இடத்தில் ஆலய நிர்வாகம் நேரடியாக விவசாயம் செய்யலாம். குத்தகைக்கு விடலாம். வாடகைக்கு விடலாம். அந்த வருமானம் ஆலயத்தைச் சேர வேண்டும். 

அந்த சொத்து ஆலயத்தைச் சேர்ந்தது. ஆலயத்தை நம்பியிருக்கும் அர்ச்சகர்கள், தேவார ஓதுவார்கள், இசைக் கலைஞர்கள், ஆலயத்தின் தூய்மைப் பணியாளர்கள் , தமிழ் கற்றுத் தரும் ஆசிரியர்கள், நடனம் பயிற்றுவிப்போர், சிற்பிகள், சொற்பொழிவாளர்கள் ஆகியோரை நல்ல முறையில் பேண அந்த தொகை செலவழிக்கப்பட வேண்டும். அது ஆலயத்தை மட்டும் பேணும் செயல் அல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நிகழும் ஒரு பண்பாட்டுச் சூழலைத் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சியும் கூட. 

1970களில் குத்தகைச் சட்டம் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டது. அதில் நில உரிமையாளர் , குத்தகையாளர் ஆகியோரில் நில உரிமையாளரின் உரிமைகள் பெருமளவில் முடக்கப்பட்டு குத்தகைதாரர்களுக்கு பெரும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இது வாக்கு வங்கிக்காக நிகழ்த்தப்பட்டது. 2005ம் ஆண்டுக்குப் பின் வங்கிகள் தங்கள் பிணையில் இருக்கும் வாராக்கடன் சொத்துக்களை ஏலத்துக்கு கொண்டு வருவது தொடர்பாக ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதனை எதிர்த்து சிலர் உச்சநீதிமன்றம் சென்ற போது நீதிபதிகள் தடை தர முடியாது என்று சொல்லி உரிமையாளர் - குத்தகையாளர் குறித்து விளக்கங்களை அளித்தனர். நிலத்தின் உரிமையாளரே முதன்மையானவர் என நீதிபதிகள் கூறினர். 

நண்பர் என்னிடம் ஒரு விளக்கம் கேட்டார்.

’’கோயில் இடத்தை விற்க முடியுமா தம்பி?’’

‘’விற்க முடியாது. விற்கக் கூடாது. சட்டப்படியும் தார்மீகப்படியும் அது தவறு. பல நீதிமன்ற தீர்ப்புகள் அதனை உறுதிப்படுத்தி விட்டன’’

‘’குத்தகைச் சட்டத்தை எப்படி அரசியல் லாபத்துக்காக என்று கூறுகிறீர்கள்?’’

‘’தமிழ்நாட்டில் ஒரு ஊரின் சராசரி நிலப்பரப்பு 1000 ஏக்கர். சராசரி மக்கள் தொகை 1000. அதில் கோயில் நிலம் 400 ஏக்கர் என எடுத்துக் கொள்வோம். இந்த 400 ஏக்கர் நிலம் 200 பேருக்கு 2 ஏக்கர் வீதம் குத்தகைக்குத் தரப்படும். இந்த 200 பேரும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து குடும்பத்துக்கு மூன்று பேர் எனக் கணக்கிட்டால் 600 பேர் இருப்பார்கள். இதில் 400 பேர் வாக்குரிமை உள்ளவர்களாக இருப்பார்கள். நிலத்தின் விவசாயக் கூலிகளாக 250 பேர் இருப்பார்கள். ஆலயத்தை நம்பி வாழ்பவர்களாக 100 பேர் இருப்பார்கள். ஆலயத்துக்கு முறையாக குத்தகை வருமானம் வருமானால் ஆலயம் உயிர்ப்புடன் செயல்பட அது உதவும். குத்தகை நிலத்தின் 25 சதவீதத்தை சுழற்சி முறையில் கூலித் தொழிலாளர்களுக்கு வழங்கினால் அவர்களும் பொருளியல் வளர்ச்சி பெற அது உதவும். ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்காக குத்தகைச் சட்டம் கொண்டு வந்தனர். திராவிட இயக்கம் ஆலயங்களை அழிக்க வேண்டும் என்று பரப்புரை செய்த இயக்கம். அவர்கள் ஆட்சிக்கு வந்த போது ஆலயங்களை பொருளியல் ரீதியாக முடக்கினர். மறைமுகமாக குத்தகைதாரர்களை குத்தகை செலுத்தாமல் இருக்க ஊக்கப்படுத்தினர். ஆலயங்களுக்கும் கிராம மக்களுக்கும் இருக்கும் உணர்வுபூர்வமான பிணைப்பு மெல்ல அகற்றப்பட்டது.’’

‘’கோயில்கள் ஆக்கபூர்வமான சமூகப் பணிகளை எங்கயாவது செய்யறாங்களா தம்பி’’

‘’கர்நாடகா-ல தர்மஸ்தலான்னு ஒரு ஊர் இருக்கு. மஞ்சுநாத சுவாமி கோயில் இருக்கு. எப்போதும் பெரிய அன்னதானம் நடக்கற இடம். டிஸ்கவரி சேனல்-ல உலகின் மிகப் பெரிய சமையலறைகள் நிகழ்ச்சியில் அத அடிக்கடி காட்டுவாங்க. அந்த கோயில் டிரஸ்டிக்கு பத்ம விபூஷன் விருது கொடுத்துச்சு இந்திய அரசாங்கம்.அது ஒரு உதாரணம். இந்தியாவுல எல்லா மடமும் எல்லா பெரிய கோயிலும் அவங்களால முடிஞ்ச கல்விப்பணி செஞ்சுகிட்டுதான் இருக்காங்க’’

‘’இந்த விஷயத்துக்குள்ள இவ்வளவு கணக்கு வழக்கு இருக்கா. நம்பவே முடியலை தம்பி”

‘’யார் சொல்றதையும் நம்ப வேண்டிய அவசியம் இல்லை. நீங்களே சுயமா யோசிச்சுப் பார்த்து முடிவுக்கு வாங்க’’

(தொடரும்)

Tuesday 14 April 2020

வாழ்வின் வசந்தம்

புதுத் தளிர்கள் துளிர்க்கும் மலர்கள் மலரும் தாவரங்களில் கனிகள் கனியும் வசந்த காலம் மெல்ல சூழ்கிறது. கோடை உச்சம் பெற்றிருக்கும் காலங்களில் நான் அதிகம் அலைந்து திரிந்திருக்கிறேன். பகலெல்லாம் வெயிலை உடலில் ஏந்தி வியர்வைச் சுரப்பிகள் வற்றிப் போய் தோலின் உப்பு அதன் மேற்பரப்பில் வறண்டு ஒட்டிக் கொண்டிருக்கும் போது அனல்காற்றில் நான் பெரும்பாலும் பயணித்திருக்கிறேன். கோடையின் பகல்பொழுது விடை பெற்று அந்திக்குப் பின் தெற்கிலிருந்து வரும் தென்றல் உடலைத் தீண்டும் போது உணரும் இனிமைக்காக இன்னும் எத்தனை கோடையிலும் அலையலாம். உடலைத் தீண்டும் தென்றல் இளைப்பாற்றுகிறது. நம்பிக்கை அளிக்கிறது. தொடர்ந்து முன்னேறிச் செல்வதற்கான உத்வேகம் அளிக்கிறது. 

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Thursday 9 April 2020

144 ஆண்டுகளுக்கு முன்னால்

தமிழ்நாட்டில் இந்த காலகட்டத்தில் தாது வருஷப் பஞ்சம் குறித்தும் அப்போது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்தும் அப்போதைய ஆட்சி பஞ்சத்தை எப்படி எதிர்கொண்டது என்பது குறித்தும் ஓர் உரையாடல் எழக் கூடும் என்று எதிர்பார்த்தேன். அவ்வாறு ஏதும் நிகழவில்லை. 

தமிழ்நாட்டில் எப்போதுமே இந்திய அரசாங்கத்துக்கு எதிரான குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கும். இந்திய அரசாங்கம் தமிழக மக்களுக்கு எதிராக எப்போதும் செயல்படுகிறது என்ற பரப்புரை சுதந்திரம் பெற்றதிலிருந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. ‘’வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’’ என்று மேடைதோறும் முழங்கினார்கள். ‘’அடைந்தால் திராவிட நாடு ; இல்லையேல் சுடுகாடு’’ என்றார்கள். தமிழ்நாட்டின் பொது மக்கள் சிந்தையில் எப்போதும் தில்லி குறித்த ஐயங்களை தமிழ்நாட்டில் உருவாக்கிக் கொண்டேயிருந்தனர். அந்த காலகட்டத்திலும் இந்திய அரசின் நிதியிலிருந்து மக்கள் பிரதிநிதிகளாக ஊதியம் பெற்றுக் கொண்டு இருந்தனர் என்பது நகைமுரண்.

பிரிட்டிஷ் ஆட்சி இந்திய மக்களைப் பொருளாதார ரீதியாக சுரண்டுகிறது என்பதை மகாத்மா காந்தி தேசத்திடம் எடுத்துரைத்தவண்ணம் இருந்தார். நாம் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ளும் மிகச் சிறிதளவு உப்பிலிருந்து கூட வரி பெறும் அளவுக்கு பிரிட்டிஷார் இரக்கமற்றவர்கள் என்பதை இந்தியாவின் எளிய மக்களுக்கும் புரிய வைத்தார். ( காந்தி வாழ்வில் நடந்த ஒரு சம்பவம். இந்திய சுதந்திரத்தின் போது காந்தி தில்லியில் இல்லை. வங்காளத்தில் இருந்தார். தில்லி திரும்பிய போது நேரு மகாத்மாவைச் சந்திக்கிறார். காந்தி அன்று மௌன விரதத்தில் இருக்கும் நாள். நேரு காந்தியிடம் சுதந்திர சர்க்கார் செய்ய வேண்டிய காரியமாக நீங்கள் நினைப்பது என்ன என்று கேட்கிறார். மகாத்மா ஒரு காகிதத்தில் பென்சிலில் ''Remove salt tax'' என்று எழுதிக் காட்டுகிறார்). ஒத்துழையாமை இயக்கம் இந்தியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் பிரிட்டிஷார் ஆட்சி நடத்த முடியாது என்பதை குறியீட்டு ரீதியில் எடுத்துரைத்தது. அவரது காங்கிரஸ் கட்சி நாட்டின் ஒவ்வொரு கிராமங்களிலும் ஊழியர்களையும் தொண்டர்களையும் கொண்டு கிட்டத்தட்ட ஓர் இணை அரசாங்கமாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தது. 

சுதந்திரத்தை ஒட்டி நம் நாடு பெரும் மதக்கலவரத்தைச் சந்தித்தது. தகவல் தொடர்பு மிகக் குறைவாய் இருந்த காலகட்டத்தில் பொருளாதார நிலை வலுவாக இல்லாத ஓர் அரசாங்கத்தைக் கொண்டு இந்திய ஜனநாயகம் நடைபோடத் துவங்கியது. ஜனநாயகம் அனைவருக்குமான பிரதிநிதித்துவத்தை அளிப்பது . நமது அரசியல் சாசனம் அவ்வகையில் மேலான ஒன்றே. நாம் ஒரு தேசமாக மெல்ல மெல்ல எனினும் முன்னேறியவாறே இருக்கிறோம் என்பதே உண்மை. 

நாம் சாதிக்க வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன. நாம் மாற்றிக் கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்று வரை நாம் குடிமைப்பண்புகள் மிக்க சமூகமாக உருவாகி விட்டோமா என்பது மிகப் பெரிய கேள்வி. அரசியல் கொந்தளிப்புகள் மற்றும் பூசல் மனநிலையைத் தாண்டி கோடிக்கணக்கான சாமானிய இந்தியர்கள் இந்திய அரசு உருவாக்கிக் கொடுத்த வாய்ப்புகளின் வழியாகவே வெற்றி பெற்று எழுந்தனர் என்பது வரலாறு.

தமிழ்நாட்டில் மத்திய அரசை எப்போதுமே வசைபாடியே பழகி விட்டனர். இந்த வசைபாடல் லட்சக்கணக்கான தமிழ் மக்களை தவறான திசையில் வழிநடத்துகிறது என்பதே உண்மை. எந்த நாடாயினும், எந்த ஜனநாயகமாயினும் தனது தார்மீக அடிப்படைகளுக்கு எதிராகப் பேசும் எந்த குழுவையும் அனுமதிக்காது என்பதே உண்மை. ஆயினும் இந்தியாவில் பல்வேறு காரணங்களால் இவ்வகையான குழுக்கள் இடைவெளியின்றி செயல்படுகின்றனர் என்பது ஒரு துயர். தமிழ்நாட்டில் அதன் தாக்கம் இன்னும் அதிகம் என்பது மேலதிகத் துயர்.

தமிழ்நாட்டில் இந்திய அரசாங்கத்தை எதிர்க்கும் போக்கை திராவிடக் கட்சிகள் பின்பற்றின. அவர்கள் இந்தியா சுதந்திரம் பெற்ற போது பிரிட்டிஷார் இந்த நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று தீர்மானம் போட்டார்கள். அந்த பிரிட்டிஷ் அரசாங்கம் தமிழ் நாட்டு மக்களுக்கு அந்த தீர்மானம் போடப்பட்டதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் என்ன செய்தது என்பதைப் பார்ப்போம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் தமிழ்நாட்டின் மக்கள்தொகை இன்று இருப்பதைப் போல நான்கு மடங்கு குறைவாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து கொள்வோம். இன்றைய மக்கள் தொகை 7 கோடியே 20 லட்சம். அன்று 1 கோடியே 80 லட்சம் மக்கள் தொகை இருந்திருக்கும் என்று கற்பனை செய்து கொள்வோம். அதில் 40,00,000 மக்கள் உண்ண உணவின்றி இறந்து போயிருக்கிறார்கள். கிட்டத்தட்ட தமிழ்நாட்டு மக்கள் தொகையில் கால் பங்கு சில மாதங்களில் பிணமாகி விழுந்திருக்கின்றனர். அதனை பிரிட்டிஷ் அரசாங்கம் வேடிக்கை பார்த்தது. வரலாற்றின் குரூரமான உண்மைகளில் ஒன்று அந்த பஞ்சம் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பேராசையால் மக்கள் மீது திணிக்கப்பட்டது என்பது. அப்போது நாட்டின் பல பகுதிகளில் இருந்த உபரி விளைச்சலை பிரிட்டிஷ் அரசாங்கம் துறைமுகங்கள் மூலம் தனது நாட்டுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. அன்று இருந்த நிலைமையில் சாகக் கிடந்த மக்கள் உணவளிக்கப்பட்டிருந்தால் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு கணக்கேயில்லாமல் தங்களால் ஆன உடல் உழைப்பை அளித்திருப்பார்கள். ஆனால் அவர்களை தங்கள் பிரஜைகளாக மனிதர்களாகக் கூட கருதாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் சாக விட்டது. இந்த அரசாங்கம் எங்களை நீங்கிச் செல்லக்கூடாது என்று தீர்மானம் போட்டது திராவிட இயக்கம்.

அந்த காலகட்டத்தில் வள்ளலார் உருவாக்கிய சத்திய ஞான சபை அன்னதானத்தை ஒரு சமயச் செயல்பாடாக முன்னெடுத்தது. இன்றும் அதன் பணி தொடர்கிறது. 

இந்தியா இன்று உணவுத் தன்னிறைவைப் பெற்றிருக்கிறது என்பது ஓர் உண்மை. நாடே முடங்கியிருக்கும் நிலையிலும் தனது கையிருப்பில் உள்ள உணவு தானியத்தை இந்தியாவின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிவாரணமாக வழங்கும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறது இந்திய அரசு. இது ஒவ்வொரு இந்தியனுக்குமான பெருமிதம் இல்லையா? ஒரு உலகளாவிய நெருக்கடியை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்வது அறமற்ற முறையில் நம்மை ஆண்ட அன்னியர்களுக்கு நாம் ஆக்கபூர்வமாக அளிக்கும் பதில் இல்லையா?

Wednesday 8 April 2020

இந்திய நிலத்தின் வாய்ப்புகள்

எனது சிறுவயதில் நான் சுவாமி விவேகானந்தர் நூல்களை வாசித்திருக்கிறேன். அப்போது பத்து வயதிருக்கும். சுவாமிஜியின் சொற்கள் பெரும் மனஎழுச்சியை உண்டாக்கும். ஒவ்வொரு மனிதனும் கொள்ள வேண்டிய தன்னம்பிக்கை குறித்து சுவாமிஜி சொல்வார். இந்திய மண்ணின் பெருமைகள் குறித்து பேசுவார். இந்தியாவின் ஆன்மீகப் பாரம்பர்யம் குறித்து எடுத்துரைப்பார். இந்தியா உலகிற்கு வழிகாட்டியாய் அமையும் என்று உறுதியாகக் கூறுவார். இவை என் மனதில் பதிவாகியிருந்தன. இப்போதும் அந்த சொற்கள் அகத்தில் உள்ளன.

நான் இப்போது இந்த தருணத்தில் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கிறேன். தமிழ்நாட்டின் பாடநூல்கள், பத்திரிக்கைகள் எவற்றிலும் இந்தியாவின் உயிரான தன்மை குறித்து முன்வைக்கப்படுகிறதா என எண்ணிப் பார்க்கிறேன்.  இல்லை என்பதே உண்மை. 



இந்தியா அரசியலை அடிப்படையாய்க் கொண்ட சமூகம் இல்லை. இந்த நிலம் இன்றும் பிரதானமாக விவசாயத்தையே அடிப்படையாய்க் கொண்டது. இன்றும் இந்த மண்ணின் கோடிக்கணக்கான மக்கள் விவசாயத்தையே நம்பியிருக்கின்றனர். தாமோதர் தர்மானந்த கோசாம்பி போன்ற இந்திய மார்க்ஸிய அறிஞர்களே இந்த உண்மையை உரைத்துள்ளனர். கோசாம்பி அரசாங்கம் கிராமங்களில் குடிமக்களிடமிருந்து பெறும் வரியை தானியமாகப் பெற வேண்டும் என்ற திட்டத்தை முன்வைக்கிறார். 



ஓர் இந்திய கிராமம் என்பது ஆயிரம் பேர் கொண்ட ஒரு ஜனத்திரளை அவர்களுக்குள் தன்னிறைவுடன் வாழும் ஒரு வாழ்க்கைமுறையை பல நூற்றாண்டுகள் பழக்கமாகக் கொண்டுள்ளது. அதில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன. மிகச் சில எதிர்மறையான அம்சங்கள் உள்ளன. எதிர்மறை அம்சங்களைக் குறைத்து நேர்மறையான விஷயங்களை அதிகரிப்பதே ஆக்கபூர்வமான செயல்பாடாக இருக்கும். உலகின் எந்த அரசும் மக்களின் சமூகப் பழக்கத்தையே அடித்தளமாய்க் கொண்டு எழுப்பப்படுகிறது. அது உருவாக்கும் எந்த விஷயமும் அந்த மக்களுக்கு உதவுவதாய் இருக்க வேண்டும்.



இந்தியாவின் சுதந்திரத்துக்குப் பின் நிகழும் பல்வேறு திட்டமிடல்களில் மேற்கத்திய நாடுகளின் முறைகளே பின்பற்றப்படுகின்றன. அவர்கள் மேற்கொள்ளும் திட்டமிடல்கள் அப்படியே நகலெடுக்கப்படுகின்றன. அது இந்திய கிராமங்களையும் கிராம மக்களையும் விவசாயத்தையும் சிதைத்தது என்பதே உண்மை. நான் ஒரு உதாரணம் சொல்கிறேன். இந்தியாவில் சோழர்கள், ஹொய்சாளர்கள், காகதீயர்கள், மௌரியர்கள், மராத்தியர்கள், ராஜபுத்திரர்கள், சீக்கியர்கள் அரசாங்கங்களை நடத்தியிருக்கின்றனர். அவர்கள் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர் மேலாண்மைத் திட்டங்களின் பயன்களை இன்றும் நாம் அனுபவிக்கிறோம். இந்த அரசுகள் அனைத்துமே கிராமங்களை - கிராமத்தின் இயங்குமுறையை வலுப்படுத்தியிருக்கின்றனர். விளைநிலங்கள், அதற்கான பாசன வசதிகள், பாசனக் கருவிகளை உருவாக்கி பழுதுபார்ப்பவர்கள், பூசகர், கல்விப் பணியாற்றும் ஆசிரியர், மருத்துவர், கால்நடைகளுக்கு வைத்தியம் செய்பவர்கள் ஆகியோரின் ஜீவனோபாயத்திற்கான பொறுப்பினை அந்தந்த கிராமங்களே எடுத்துக் கொண்டுள்ளது. அதனால் தலைமுறை தலைமுறைகளாகத் தொடரும் ஒரு பண்பாட்டுப் பாரம்பர்யத்தை நமது நாடு தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஒரு கிராமம் தன்னளவில் தனது தேவையை சமாளித்துக் கொள்ளும் எனில் அரசாங்கம் என்ற அமைப்பு மிகக் குறைவாய் இருந்தாலே போதுமானது. நிர்வாகச் செலவும் மிகவும் குறைவாக இருக்கும். 



தமிழ்நாட்டில் சித்த மருத்துவம் பாரம்பர்யமானது. பத்து கிராமத்துக்கு ஒரு சித்த மருத்துவர் இருப்பது போல ஒரு அமைப்பை உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்டே உருவாக்கிக் கொண்டிருக்க முடியும். மூலிகைகளின் முக்கியத்துவம் மக்களுக்கு உணர்த்தப்படும். மூலிகைகள் விளைவிக்கப்படுவது நிகழும். மக்களின் வருவாய் பெருமுதலாளிகளின் மருந்து நிறுவனங்களுக்கு செல்வது குறையும். ஒரு இந்திய பாணி சிந்தனையால் மட்டுமே சின்னஞ்சிறு அலகு குறித்து சிந்திக்க முடியும். 



முதலாளித்துவம் எப்போதுமே சிறு அலகு குறித்து சிந்திப்பதில்லை. ஒரு சிறு அலகு என்பது அதற்கு தனது விற்பனைச் சங்கிலியின் கடைசி முனை மட்டுமே. அங்கிருந்து சங்கிலியின் முதல் கண்ணியான உற்பத்தியாளனுக்கு வந்து சேரும் வருவாயை மட்டுமே அது கருதும். அந்த விற்பனைச் சங்கிலியை லாபகரமாக ஆக்கிக் கொள்ள பராமரிக்க தனது லாபத்தின் ஒரு பகுதியை எப்போதும் செலவிட்டவாறே இருக்கும். இந்தியப் பாரம்பர்வையும் இந்தியப் பார்வையும் சிதைக்கப்படுவது முதலாளித்துவத்துக்கே பயன் தரும். 



கிராமங்களை வலுவூட்டும் ஒரு பொருளாதார அமைப்பை நாம் உருவாக்க வேண்டிய நேரம் இது.



Friday 3 April 2020

நினைவு

உன்னை எண்ணும் போது
நீர்ச்சாரல் சுமக்கும் காற்று
அலைகடலின் இள வெம்மை
குளிர் நிறையும் மலைப்பிரதேசம்
நிலம் கரைக்கும் மழை
பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள்
சில்வண்டுகளின் சீரொலி
சோலையில் கேட்கும் ஒற்றைக் குயிலோசை
வண்டிக்காளையின் கழுத்து மணி அசைவு
மௌனம் நிரம்பிய அந்திப் பொழுது
நினைவில் எழுகின்றன
கண்ணீர்த்துளிகள்
மெல்ல கரைத்துக் கொண்டிருக்கின்றன
அகம் கொள்ளும் தளைகளை

பொழுதிணைவு

மாலைப் பொழுதின்
சிவப்புக் கதிர்கள்
மிதந்து கொண்டிருக்கும் காற்று
நம்மைத் தீண்டிய போது
நீ
ஒரு மலரைப் பற்றி
என்னிடம்
சொன்னாய்
காட்டுத்தீயை
நான்
சொன்னேன்
அரசமரத்தின்
கணநாதன்
சிலை முன்னால்
நாம் ஏற்றிய
தீச்சுடரை
ஒரு மலரைப் போல்
காக்கின்றன
உன் விரல்கள்