Saturday, 30 December 2023
சீவல் ( நகைச்சுவைக் கட்டுரை)
Friday, 29 December 2023
அந்தி நிலவும் அதிகாலைச் சூரியனும் : கவிஞர் சுபஸ்ரீ கவிதைகள்
மலர்ந்திருக்கும் தாமரைகள்
வீழ்ந்தும் எழுந்துவரும் சூரியன்
வரம்தரவே பயணம் அனைத்தும்
வரம்பெறக் காத்திருத்தலே போதும்
கனன்ற சொல்லொன்று
புடமிட்டுத் தகத்தக்க
புள்ளொன்றால் கலைந்ததவம்
புலன்மறுத்த சித்தனவன்
கல்லென்று சபித்திட்டான்
கடுஞ்சொல்லால்
தவம் இழந்தான்.
காடுறையும் காலம்
கல்லாய் உறைந்திட
கூர்முனைகள் மழுங்கிட
உருட்டியது காலநதி.
உருவமிலி உருவேறி
பூசனைக்கு வந்தமர்ந்த
யுகங்கடந்த கல்தன்னை
பூசித்த முனிவனின்
யாசித்த கரங்களில்
கல்உறையும் புள்தருமோ
சாபவிமோசனம்
ஆதியின் மூலமென்ன
அறியொணாத ஒன்றென்றால்
உன் அறிவால் ஆவதென்கொல்
தேடிடும் இரந்திடும் நீ
அகந்தையென்றாகிடும் நீ
அறியாத ஒன்றுள்ள வரை
அறிவின் ஆணவம் ஏன்
மறுபடி ஐனனம்
இடையினில் இருளினில்
தேடல்தான் பயணம்..
சிலர் வழிகாட்டுவார்
பலர் நடைபோட்டிட -
சிலர் பலராகவே
அவர் வலிதாங்குவார்
பிறன் நலம்வாழ்ந்திடத்தன்
பிறவியை மாற்றுவார்
முள்முடி தாங்கியும்
முகமலர் காட்டுவார்
விறகொடு எரிவது
உடலது தானே
உடன்வரப் போவது
அவனருள் தானே
மண்ணொடு கலந்தபின்
எஞசுவதென்ன
மனதொடு கலந்திடும்
நினைவுகள்தானே
வெற்றுத் தாளொடு
பிறந்தவர் நாமே
எழுதுவோம் பாக்களை
அன்பொடு தினமே
தாளது ஒருதினம்
அவன்தாள் சேரும்
எழுதிய கவிதைகள்
மனதிடை வாழும்
அன்பது சிவமாம்
அன்பது தவமாம்
வாழ்வை நீட்டும்
அன்பின் கரமாம்..
அன்பே சிவம்! அன்பே சிவம்!!
கிணற்றுறையில் கூடுகட்டி
தவறி விழும் சிறுகுருவி..
பிசின் வடியும் பட்டை
தூரில்துளிர் சிறு வேம்பு..
வால் தூக்கி அணில் துரத்த
தாவும் ஒரு காகம்..
துணி துவைக்கும் கல்லில்
காக்கை அணில் சமபந்தி..
மஞ்சள் உரசிப் பச்சையான
கல்லிடுக்கு ரசவாதம்..
நிலவொளியை வடிகட்டி
இளநீராக்கும் தென்னை..
நிலவுதிர் கால இரவுகளில்
இறைந்து கிடக்கும் வேப்பம்பூ..
நடைபயின்ற நாட்களின்
நாற்றங்கால் பதியங்கள்..
நேற்று'கள்' நிறைந்திட்ட
இன்றைய கனவுகளில்
இன்றுக்கு இடமில்லை..
நாளைவரும் கனவுகளில்
அசைபோட இசைகூட
இன்றெவையோ கருப்பொருட்கள்..
என் விதையாம் கவிதைகளை
நிழலில் ஒளிதேடி
நிறமில்லை என்னாதே
நன்றாகத் தேடிப்பார்
தொலையும்வரை கிட்டும்வரை
குடைதேடிக் கவிகள்
கூரையுள் புகும்போது
நனைந்தபடி கவிதை
மழையோடு போனது
சந்தையடி சந்தடியில்
நடமாட இடமின்றி
அஞ்சுவதஞ்சிக் காணாமல்போன
பஞ்சுமிட்டாய் பொம்மையுடன்
தோளேறிப் போனது
என்றும் இன்றுதானோ
எங்கேயோ வழிதவறி
சொற்காட்டில் சிக்கி
திக்குத்தெரியாமல்
மயங்கி நிற்கலாம்
அந்தமயக்க விதை
நித்தமும் நீள்வாக்கு
நடந்த தடம் காணாது
மேகம்போல் கடந்துவிடும்
எங்கேனும் எவரேனும்
கண்ணால் கண்டுகொண்டால்
கண்டவர் அக்கணமே
காணாமல் போகுங்கால்
பிழைத்திருக்கக் கூடும்
பிழையாத என் கவிதை!!
என்னிடமிருந்து?
நில்லாத பயணமா
ஆயிரம் காதமா
அதுவொன்றும் தூரமல்ல
ஒற்றைக்கால் தவமா
தென்திசைக் கன்னிக்கு
அலைகடலும் சாரமல்ல
நூறு பிறவிகளின் தவிப்பா
வேறொன்றில்லா சித்தமிது
எண்ணங்களும் பாரமல்ல
கண்கட்டை நீக்கிவிட்டு
ஒளிந்து கொள்பவனே
இது என்ன ஆடல்?
பல்லாயிரம் சொற்களை முன் வைக்கிறேன்
சொல்கடந்த மௌனத்தை
நிகர் வைக்கிறாய்
நில்லாத என் விழிநீரை
நறுமண நீரென்று சூடுகிறாய்
உறக்கமழிந்த என் விழிகளை
உறுமணியாய் அணிந்தோய்
கனமொழியா நினைவுகளை
குழல் மூச்சாய் நிறைத்தவனே
உனைச் சேரும்
தவமன்றி ஏதுமில்லை
இந்நதிக்கு
8. இசைத்தும்பி
மணத்தை அனுப்பிவிட்டு கிளையமரும் சிறுமலர்
அருந்தேன் தேடி எங்கோ கிளம்பிவிட்ட இசைத்தும்பி
மகரந்தத்துகள் சுமந்து
திசைபரவும்
நாளைய மலர்களுக்காய்
தும்பியின் கீதம்
இரவு நடமாடுகிறது
மணலில் கிடக்கும்
நேற்றின் பாதச்சுவடுகளில்
வெப்பம் ஏறுகிறது
யுகச்சிமிட்டலுக்குக் காத்திருந்த
அச்சிறு விண்மீன்
நீல வெளியுள்
மூழ்கி மறைகிறது
வானில் அலைகள் எழ
கடலில் விண்மீன்கள் மிதக்கின்றன
படகை செலுத்தியபடி
வலை விரிக்கிறான்
கொஞ்சமாய் துள்ளல்கள்
இன்னும் முடியவில்லை
வலைக்குள் துடிக்கும்
மீன்களின் இரவு
வட்டங்களால் ஆன வானமொன்றை
வரைந்து செல்கிறது புள்
வண்ணங்களால் ஆனதே வானமென்று
சிறகசைக்கிறது தும்பி
ஒலியால் ஆனதென்று
சிலம்பியது குருவி
ஒளியால் ஆனதென்றது விழி
தானற்றதனைத்துமே வெளியென்றது புவி
ஏதுமில்லாது ஏகாந்தித்திருந்தது அது
1
நீளும் மழையை இரவு நனைக்கிறது
மூடாத கனவுகளை விழிகள் நிறைக்கிறது
பரவும் திசை குழலிசை தேடி அலைகிறது
சொட்டி ஓய்ந்த நாளோரம் வழி தேங்கிக் கிடக்கிறது
சிதறிய உன்னை சேகரிக்கும் என்னை
அறிந்து கண்சிமிட்டும் ஆயிரம் நிலவுகள்
46. மறப்பதெப்படி
உன் புன்னகையை
அடுக்கி வைக்கிறாள்
பூவிற்கும் பெண்
உன் அழைப்பை
கூவிச் சொல்கிறது
சிறுகுருவி
உன் மௌனத்தை
வாயிலிட்டு சுவைக்கிறது
இந்த இரவு
உன் தனிமையை
அறிவிக்கிறது
ஒற்றை விண்மீன்
இங்கு நான் உனை மறப்பதெப்படி
Thursday, 28 December 2023
வாடகை ( நகைச்சுவைக் கட்டுரை)
1000 மணி நேர வாசிப்பு
2023ம் ஆண்டு தொடங்குகையில் இந்த ஆண்டில் 1000 மணி நேரம் வாசிக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டு 1000 மணி நேர வாசிப்பு சவாலில் பங்கு கொண்டேன். 365 நாட்கள் நிறைவாக உள்ள இந்நிலையில் விரும்பிய இலக்கில் பாதியை எட்டியுள்ளேன் என்பது மகிழ்ச்சியையே தருகிறது. எந்த போட்டியுமே நம்மை நாம் அறிவதற்கான ஒரு வாய்ப்பே. எனவே அதில் நாம் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். வாசிப்பு சவாலில் ஆர்வத்துடன் பங்கேற்றேன். நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.
நானாவிதமான பணிகளில் ஈடுபட்டிருக்கும் வாழ்க்கைமுறை என்னுடையது. படைப்பூக்கச் செயல்பாடுகள். அறிவுச் செயல்பாடுகள். வணிகச் செயல்பாடுகள். பொதுப்பணிகள் என என் மனம் எப்போதும் ஏதேனும் ஒரு தீவிரமான இயக்கத்தில் இருந்து கொண்டிருக்கும். அவை என் வாசிப்பின் மீது பாதிப்பைச் செலுத்தக்கூடியவை. இருப்பினும் தினமும் வாசிப்புக்கு கணிசமான நேரம் ஒதுக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். இலக்கியம் வாசிக்கும் போது அந்த படைப்பு அளிக்கும் அனுபவம் என்பது வாசகனை சில நாட்கள் இறுக்கிப் பிடித்திருக்கும். அந்த பிடி தீவிரமானது. இலக்கியத்தின் நுட்பமே அதுதான். அவ்வாறான நாட்களில் சில நாட்கள் ஏதும் செய்ய இயலாமல் போகும். உண்மையில் அவ்வாறான தருணங்களும் இந்த ஆண்டில் நிகழ்ந்தன.
இந்த வாசிப்பு சவாலில் நான் உணர்ந்த தடை என ஒன்று உண்டு. அது நுண்ணியது. மென்மையானது. அதாவது, என்னால் வாசிப்பையும் நேரத்தையும் இணைத்துக் கொள்வதில் ஒரு போதாமையை உணர முடிந்தது. நூல் வாசிப்பில் நேரப் பிரக்ஞை என்பதை எப்போதும் இணைத்து வைத்துக் கொண்டது இல்லை. வாசிக்க நேர்ந்த முதல் நூலிலிருந்தே நூலை எடுத்தால் நேரம் போவது தெரியாமல் வாசித்துத் தான் பழக்கம் இருக்கிறதே தவிர ஒரு நாளில் எவ்வளவு நேரம் வாசிக்கிறோம் என கணக்கிட்டுக் கொண்டதில்லை. எனவே அது சார்ந்தும் சில அகத்தடைகள் இருந்தன. ஸ்டாப்வாட்ச் போன்ற உபகரணங்கள் பயன்படுத்தினால் இதனைக் கடக்க முடியும் என்று தோன்றுகிறது.
இலக்கை முழுமையாக எட்ட முடியாமல் போய் விட்டதே என எந்த வருத்தமும் இல்லை. இந்த முயற்சியில் நாம் சில விஷயங்களைக் கவனித்திருக்கிறோம். கற்றிருக்கிறோம். அடுத்த முயற்சியில் ஊக்கத்துடன் ஈடுபட இது உதவும் என்னும் நினைவு பெருமகிழ்ச்சியையேத் தருகிறது. கற்றல் என்பது இந்த உணர்வே என்பதை ஒரு வாசகனாக நான் அறிவேன்.
வாசகன் ஒவ்வொரு நாளும் நாம் வாசிக்க வேண்டிய நூல்கள் இன்னும் இன்னும் இருக்கிறதே என்னும் எண்ணமே கொள்வான்.
கல்வி கரையில ; கற்பவர் நாள் சில.
Sunday, 24 December 2023
ட்ரிப் கேன்சல் ( நகைச்சுவைக் கட்டுரை)
அமைப்பாளர் காஞ்சிபுரம் செல்ல ஒரு வார காலமாக ஏற்பாடு செய்கிறார். இருப்பினும் ஏற்பாடுகளில் ஏதேனும் ஒரு இடைவெளி ஏற்பட்டு விடுகிறது. அடுத்தடுத்து முயன்று ஏதேதோ செய்து பார்த்தார். எதுவும் சரிவரவில்லை. மனம் தளராமல் முயற்சியைத் தொடர்ந்தார்.
ஏன் தள்ளிப் போகிறது என்பதை அமைப்பாளரால் கண்டுபிடிக்க முடியவில்லை. முக்கிய காரணம் ரயிலிலோ அல்லது பேருந்திலோ இரவுப் பயணம் செய்வதை அமைப்பாளர் தவிர்க்க விரும்புகிறார். இரவுப் பயணத்தின் உடல் அசதி மறுநாள் பகலில் இருக்கும் என்பது காரணம். செல்ல வேண்டிய ஊருக்கு பகலில் பயணம் செய்தால் திட்டமிட்டதை விட இரண்டு நாட்கள் கூடுதலாக தேவைப்படும். கட்டுமானத் தொழிலில் இருக்கும் அமைப்பாளருக்கு கூடுதலாக இரண்டு நாட்கள் என்பது சாத்தியமில்லை.
இன்று காலை கிளம்பினார் அமைப்பாளர். அவருடைய உறவினர் அவரை செங்கல்பட்டில் பிக் - அப் செய்து கொண்டு மாலை 4 மணியிலிருந்து இரவு 9.30 வரை காஞ்சி ஆலயங்களை சேவித்து விட்டு பின்னர் இரவு சென்னை திரும்பி உறவினரின் வீட்டில் உறங்கி விட்டு நாளை காலை 4 மணி அளவில் புறப்பட்டு 5.30 அளவில் காஞ்சிபுரம் சென்று மீண்டும் ஆலயங்களை சேவிப்பதாகத் திட்டம். திட்டம் நல்ல திட்டம்தான்.
இன்று காலை ஒரு ரியல் எஸ்டேட் மீடியேட்டரை சந்தித்து அமைப்பாளர் சொன்ன இடம் ஒன்றுக்கு பர்சேஸர் ஒருவரை ஏற்பாடு செய்யுமாறு கூறினார். பின்னர் தற்போது நடக்கும் வணிக வளாகக் கட்டுமானத்துக்கு 1000 செங்கற்கள் வந்து சேர வேண்டும். அதன் வருகையை உறுதி செய்தார். இன்று வணிக வளாக வேலை நடப்பதாக இருந்தது. பணியாளர்கள் தெருவில் ஒரு துக்கம். எனவே இன்றைய வேலை ‘’கேன்சல்’’. இன்று ஒரு பார்ட்டிக்கு அமைப்பாளர் இடம் காட்ட வேண்டும். நாளை மறுநாள் காட்டலாம் என இருந்து விட்டார்.
காலை உணவு அருந்தி விட்டு பயணம் புறப்பட்டார். வழக்கம் போல் அலைபேசியை சுவிட்ச் ஆஃப் செய்து கையில் வைத்துக் கொண்டார். இப்போது ஒரு புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறார். 700 பக்க புத்தகம். 300 பக்கம் வாசித்திருக்கிறார். எனவே பேருந்துப் பயணத்தில் வாசிக்கலாம் என கையில் எடுத்துக் கொண்டார். தண்ணீர் பாட்டிலும் எடுத்துக் கொண்டார். பைக் வீட்டில் இருப்பது தானே வீட்டில் இருப்பதாக வீட்டில் இருப்பவர்களை நம்ப வைக்கும் என நம்பும் அமைப்பாளர் பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கினார். கொஞ்ச தூரம் நடந்திருப்பார் ; அமைப்பாளரின் நண்பர் ஒருவர் வந்து ‘’லிஃப்ட்’’ கொடுத்தார். பேருந்து நிலையம் சென்றடைந்தார். பேருந்து நிலையத்தில் செங்கல்பட்டு வழியே சென்னை செல்லும் பேருந்து மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. நடத்துநர் அதன் படியில் நின்றிருந்தார். அமைப்பாளர் செங்கல்பட்டு என்றார். நடத்துநர் ‘’சீட் இல்ல சார். வண்டி ஃபுல் ‘’ என்றார். பின்னர் ஒரு சிதம்பரம் பேருந்தில் ஏறி சிதம்பரம் சென்று சேர்ந்தார். சென்னையில் இருக்கும் உறவினருக்கு அலைபேசியை ஆன் செய்து ஃபோன் செய்தார். அப்போது அவர் நண்பர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. இரண்டு நிமிடம் முன்னால் அழைத்திருந்தாலோ இரண்டு நிமிடம் கழித்து அழைத்திருந்தாலோ ஃபோன் சுவிட்ச் ஆஃப் என இருந்திருக்கும். அவர் அழைத்த நேரமும் ஃபோன் ஆன் ஆகியிருந்த நேரமும் ஒன்றாக இருந்திருக்கிறது. வெளியூர்க்காரர் . ஊருக்கு வருகிறார். அமைப்பாளர் உடனிருக்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார். அமைப்பாளர் சரி என்று விட்டார்.
எந்த பேருந்தில் சிதம்பரம் வந்தாரோ அதே பேருந்தில் ஏறி ஊர் திரும்பினார். இடம் காட்ட வேண்டிய பார்ட்டிக்கு இன்று மாலை இடத்தைப் பார்க்கலாம் என குறுஞ்செய்தி அனுப்பினார். பேருந்து நிலையத்திலிருந்து வீட்டுக்கு மெல்ல நடந்து வந்து கொண்டிருந்த போது காலையில் யார் லிஃப்ட் கொடுத்து பேருந்து நிலையத்தில் கொண்டு போய் விட்டாரோ அவர் அந்த பாதை வழியே வந்தார்.
‘’என்ன சார் இங்க இருக்கீங்க’’ என வியப்புடன் கேட்டார்.
அமைப்பாளர் சொன்னார் ‘’ட்ரிப் கேன்சல்’’.
நண்பர் அமைப்பாளரை வீட்டில் ‘’டிராப்’’ செய்து விட்டு சென்றார்.
Saturday, 23 December 2023
சுஷிலுக்கு ஒரு கடிதம்
அன்புள்ள சுஷில் குமார் பாரதி,
சற்று நேரம் முன்னால் , தங்களுடன் உரையாடியது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. நாவல் குறித்து எதையெல்லாம் கூற வேண்டும் என்று நினைத்தேனோ அதையெல்லாம் பதிவில் எழுதி விட்டேன். என்றாலும் தங்கள் குரல் கேட்க வேண்டும் என்று ஒரு ஆசை. சில மணி நேரங்கள் முழுமையாக என் மனத்தை ஆக்கிரமித்து நிறைந்த எழுத்தின் சொந்தக்காரனின் குரலைக் கேட்க முயலாமல் இருந்திருந்தால் இந்த நாள் பூர்த்தியாகியிருக்காது. தங்களுடனான உரையாடல் அளித்த மகிழ்ச்சி மிகப் பெரிது சுஷில்.
உங்கள் நாவலை மிகவும் கச்சிதமானது என வாசிக்கும் போதும் வாசிக்கும் பின்னும் உணர்ந்தேன் சுஷில். உடல் உணரும் வலிகளுக்கு இருக்கும் கச்சிதம். மனம் உணரும் வலிகளுக்கு இருக்கும் கச்சிதம்.
நீங்கள் மேலும் பல நாவல்களை எழுதுவீர்கள் சுஷில். பல பெரிய நாவல்கள். அவற்றை எழுத நீங்கள் மெனக்கெட வேண்டும் என்பதில்லை . உங்கள் மனதில் நாவலுக்கான கரு என ஒன்று உருவாகியிருப்பதை நீங்கள் கவனிக்கும் கணத்திலிருந்து உங்கள் மனதில் அது தானாகவே வளர்ந்து ஒரு நாவலாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். இது முகஸ்துதி இல்லை சுஷில். உங்கள் முதல் நாவலின் பிரதி கொண்டிருக்கும் அடர்த்தி கூறும் கட்டியம் அதனைக் காட்டுகிறது.
மீண்டும் வாழ்த்துக்கள் சுஷில்.
அன்புடனும் பிரியத்துடனும்,
பிரபு
சுந்தரவனம் : தொலைந்து போவதும் காணாமல் போவதும்
Thursday, 21 December 2023
நீர் வார்த்தல்
சேலம் அருகே தங்கள் வயலில் முழுமையாக தேக்கு நட உள்ள விவசாயிகளுக்கு எழுதிய கடிதம் :
பிரபு
பணிகளும் பயணங்களும்
என்னுடைய இளம் வயதிலிருந்தே எனக்கு நீண்ட பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கனவு உண்டு. அந்த கனவே என்னை ‘’காவிரியிலிருந்து கங்கை வரை’’ செல்ல வைத்தது. மோட்டார்சைக்கிளில் மேற்கொண்ட அப்பயணமே என் அகத்தைக் கிராமங்களுக்கான பணியை நோக்கி இட்டுச் சென்றது.
இப்போது என் அகம் இரண்டு கனவுகளைக் காண்கிறது. கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த கனவு. இன்னும் மேற்கொள்ள வேண்டிய நீண்ட தூர பயணங்கள் குறித்த கனவு.
பொதுவாக வாசிக்கும் ஏதாவது ஒரு நூலிலிருந்து நீண்ட தூரப் பயணத்துக்கான தூண்டலைப் பெறுவது எனது வழக்கம். இப்போது நான் மேற்கொள்ள வேண்டிய நீண்ட தூரப் பயணங்கள் என நான் எண்ணுவதைப் பட்டியலிடுகிறேன். இவை நிகழ வேண்டும் என்பது எனது பேராவல். பல்வேறு விதமான லௌகிகப் பணிகளும் பொதுப் பணிகளும் சூழ்ந்துள்ளன. ஒரு கூட்டத்தில் யானை தனக்கான பாதையை உருவாக்கிக் கொள்வதைப் போல நான் கனவு காணும் பெரும் பயணங்கள் தனக்கான துவக்கத்தை உருவாக்கிக் கொள்ளும் என்பதை ஒரு பயணியாக நான் உணர்கிறேன்.
1. தொண்டை நாட்டு திவ்யதேசங்களுக்கான ஒரு பயணம்
2. பாண்டிய நாட்டு திவ்யதேசங்களுக்கான ஒரு பயணம்
3. மலை நாட்டு திவ்யதேசங்களுக்கான ஒரு பயணம்
4. தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் மேற்கொண்ட ‘’வேங்கடம் முதல் குமரி வரை’’ நூலில் உள்ள தலங்கள் நோக்கி ஒரு பயணம். ( பாலாறு, காவிரி, வைகை, தாமிரபரணி கரைகளில் உள்ள ஆலயங்களை நோக்கிய பயணம்)
5. வட நாட்டு திவ்ய தேசங்களுக்கான ஒரு பயணம்
6. ஆந்திரா தெலங்கானா மாநிலங்களில் மட்டும் ஒரு பயணம்
7. தமிழகத்தில் தொடங்கி குஜராத் சென்று அங்கிருந்து காஷ்மீர் சென்று முழு உத்திரப்பிரதேசத்திலும் பயணித்து வங்காளம் வழியே அஸ்ஸாம் சென்று வடகிழக்கு மாநிலங்களில் பயணித்து மீண்டும் வங்காளம் வந்து அங்கிருந்து ஒரிஸ்ஸா வழியே கிழக்குக் கடற்கரை வழியாகப் பயணித்து ஆந்திரா வழியே தமிழகம் வந்தடையும் பயணம்.
8. நர்மதா நதி வலம்
9. கோதாவரி நதியின் கரையில் பயணிக்கும் ஒரு பயணம்.
எந்த ஒரு நீண்ட நெடிய பயணமும் சிறிய உறுதியான முதல் அடியிலிருந்தே துவங்குகிறது. ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு மனிதனுக்கும் கற்றுத் தருவது அதையே.
Wednesday, 20 December 2023
ந.சுப்புரெட்டியார் நூல்
அறிஞர் ந.சுப்புரெட்டியார் எழுதிய ‘’தொண்டைநாட்டுத் திருப்பதிகள்’’ நூலின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
Tuesday, 19 December 2023
தொண்டை நாட்டு திருப்பதிகள்
Monday, 18 December 2023
திருவெள்ளறை
தஞ்சைப் பகுதி விவசாயியான பெரியண்ணன் சென்னைவாசி. ஒரு வார காலம் அவர் சொந்த ஊருக்கு வந்திருப்பதை அலைபேசி உரையாடல் மூலம் அறிந்தேன். திருவெள்ளறை திருத்தலத்திற்குச் செல்ல அவரும் மிகுந்த ஆர்வம் காட்டினார். மதிய உணவு முடித்து தஞ்சை புறப்பட்டேன். பேருந்து நிலையத்தில் என்னை அழைத்துக் கொண்டார். நண்பர் பெரியண்ணனின் காரில் திருச்சி பயணமானோம்.
நண்பர் பெரியண்ணன் ஆலய சிற்பங்கள் குறித்து தனது தன்னார்வத்தின் மூலம் பயின்று சிற்பவியல் குறித்து சிறப்பான ஞானம் கொண்டுள்ளார். ஆலய சிற்பங்கள் குறித்து நிறைய விஷயங்களைக் கூறினார்.
இந்திய சிற்பவியல் என்பது மொழியும் சிற்பமும் இணைந்தது. நம் நாட்டில் முதலில் பெரும் படைப்புகள் உருவாயின. மிகப் பிரம்மாண்டமானவை என்பவை நமது இரண்டு இதிகாசங்களான இராமாயணமும் மகாபாரதமும். அதற்கு முன்பே மொழியில் உருவானவை புராணங்கள். புராணங்களும் இதிகாசங்களும் எழுதப்பட்டு அவை நம் நாடெங்கும் புழக்கத்தில் இருந்த மொழிகளில் மொழி மாற்றம் பெற்று நாட்டு மக்களால் கேட்கப் பெற்றன. இவை நிகழ்ந்து பலநூறு ஆண்டுகளுக்குப் பின்னரே பேராலயங்களின் உருவாக்கம் நிகழலாயிற்று. நம் நாட்டில் முதலில் எழுந்தது சொல். அதன் பின்னரே சொல்லின் விளக்கமாக சிற்பம் எழுந்தது. இந்திய சிற்பவியலை பயில விரும்பும் எவரும் இந்திய புராணங்களையும் இந்திய இதிகாசங்களையும் குறைந்தபட்சமாகவேனும் பயில வேண்டும். அப்போதுதான் சிற்பவியல் தனது கதவுகளைத் திறக்கும்.
அன்னப்பறவை பிரம்மனின் வாகனம். வராகம் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று. ஒரு சிற்பத்தில் வராகம் மண்ணைத் தோண்டிக் கொண்டும் அன்னப்பறவையில் அமர்ந்த ஒருவர் வான் நோக்கி பறந்து கொண்டும் இருந்தால் சிவனின் அடி முடி காண பிரம்மனும் விஷ்ணுவும் முயன்ற செயல் என்னும் தொன்மம் நினைவுக்கு வர வேண்டும். அந்த சிற்பத்தை அப்போது மேலும் புரிந்து கொள்ள முடியும். நான் சிற்பவியலுக்குள் மொழியின் மார்க்கத்தில் செல்பவன். அது எனக்கு மிகவும் அணுக்கமான வழி.
திருச்சி செல்லும் வழியில் துவாக்குடிக்கு அருகில் பல்லவர் கால குடைவரை ஒன்று இருப்பதாகக் கூறிய பெரியண்ணன் அங்கே அழைத்துச் சென்றார். ஒரு குகையைக் குடைந்து ‘’கண் நிறைந்த பெருமாள்’’ என சயனக் கோலத்தில் இருந்த பெருமாளைச் செதுக்கியிருந்தனர். அருகில் ஒரு குகையில் ‘’சப்த கன்னியர்’’ சிற்பம் செதுக்கப்பட்டிருந்தது.
நமது மண் சாக்தத்தின் தாக்கம் வலுவாக உள்ள மண். இன்றும் எந்த ஊரில் எடுத்துக் கொண்டாலும் சக்தியை வழிபடுபவர்களே அதிகம். எந்த ஊரிலும் மாரியம்மன் கோவிலின் திருவிழாக்களுக்கு கூடும் பக்தர்களே மிக அதிகம். அது அன்னைக்கும் பிள்ளைகளுக்குமான உறவு. எந்த பிள்ளையும் அன்னை தன்னை அறிவாள் என்பதையும் தன் கோரிக்கைகளை நிறைவேற்றுவாள் என்பதையும் உணர்வின் ஆழத்தில் உணர்ந்திருக்கும். சாக்த வழிபாட்டின் ஒரு வழிமுறை ‘’சப்த கன்னியர்’’ வழிபாடு. நாடெங்கும் ‘’சப்த கன்னியர்’’ சிற்பங்கள் உள்ளன. தன் பிள்ளைகளின் உளம் அறிந்து ஓடோடி வருபவள் அன்னை. இங்கே ஏழு அன்னையர். துயர் நீக்கவும் வளம் நிறைக்கவும் ஏழு அன்னையரை காலகாலமாக வணங்குகிறது நம் மக்கள் திரள்.
அங்கிருந்து திருவெள்ளறை சென்று சேர்ந்தோம். மிகப் பெரும் மதில்கள் நிறைந்த பேராலயம் திருவெள்ளறை . ஆலயத்தைச் சுற்றி இருக்கும் வீடுகளில் இருந்து சிறுமிகளும் இளம்பெண்களும் ஆலயத்தில் மாக்கோலம் இட்டுக் கொண்டிருந்தார்கள். அதனைக் காணுகையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த பணியை ஆற்றிய போது ஆலயத்தின் இறைவனிடம் அவர்களுக்கு அந்த செயல் மூலம் உள்ளபூர்வமான உணர்வும் பிணைப்பும் உருவானதைக் காண முடிந்தது. அழகிய கோலங்கள். தாமரையின் வெவ்வேறு வடிவங்களை அவர்கள் கோலத்தில் காண முடிந்தது. அங்கே இறைவனின் நாமம் ‘’செந்தாமரைக் கண்ணன்’’.
இறைவன் நின்ற திருக்கோலம். சூரியனும் சந்திரனும் சேஷனும் கருடனும் ஒன்றாக கருவறையில் பெருமாளை சூழ்ந்து நின்றார்கள். திருவெள்ளறை தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் சொந்த ஊர்.
எனது உளம் நெகிழ்ந்தும் தத்தளித்துக் கொண்டும் இருந்தது. ஏன் என்று தெரியவில்லை. சோழ தேசத்து திவ்ய தேசங்கள் 40ஐயும் தரிசித்ததால் இருக்கலாம். நடு நாட்டு திவ்ய தேசங்கள் இரண்டையும் முழுமையாக தரிசித்திருக்கிறேன். தொண்டை நாடு மலை நாடு பாண்டிய நாட்டில் எஞ்சியிருக்கும் திவ்ய தேசங்களை சேவிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. இந்த மார்கழியில் ஏதேனும் ஒரு நாடாகினும் நிறைவுற்றால் மகிழ்ச்சி. ஈஸ்வர ஹிதம்.
Sunday, 17 December 2023
மார்கழித் திங்கள்
மார்கழி மாதம் பிறக்கிறது. விவசாயப் பணிகளுக்கு அதிகாலை விழித்தெழல் என்பது அவசியமானது ; உபயோகமானது. ஆநிரைகள் வளர்ப்பவர்களுக்கும் அதிகாலைப் பொழுதில் பணிகள் இருக்கும். மாட்டுக்கு தண்ணீர் காட்டுவது ; வைக்கோல் வைப்பது என. இன்று நாம் பணி புரியும் முறை என்பது பெரும் மாற்றம் கண்டு விட்டது. எனினும் இப்போதும் அதிகாலை விழித்தெழல் ஓட்டப்பயிற்சிக்கும் உடற்பயிற்சிக்கும் உகந்தது. மார்கழி அதிகாலை விழித்தெழலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு மாதம்.
இன்று எனக்கு ஒரு விஷயம் தோன்றியது. அதாவது இந்த மார்கழியில் ‘’சோழ நாட்டு திவ்யதேசங்கள்’’ அனைத்தையும் ஒருமுறை சேவிக்கலாம் என எண்ணினேன். வைணவத்தில் திவ்ய தேசங்கள் என்பவை பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலங்கள். மொத்த திவ்யதேசங்கள் 108. அதில் வைகுண்டம், பரமபதம் இரண்டையும் தவிர மற்றவை பூலோகத்தில் உள்ளன. சோழ நாட்டில் 40, நடுநாட்டில் 2, பாண்டிய நாட்டில் 18, தொண்டை நாட்டில் 22, மலைநாட்டில் 13, வடநாட்டில் 11 என்பதாக இந்த 106 திவ்யதேசங்கள் அமைகின்றன.
பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மார்கழி மாதத்தில் ஒரு நாளைக்கு ஒரு திவ்ய தேசம் என மோட்டார்சைக்கிளில் சோழ நாட்டு திவ்ய தேசங்களை சேவித்தேன். பின்னர் அவ்வப்போது சில திவ்ய தேசங்களை சேவித்திருக்கிறேன்.
இன்று மீண்டும் ‘’சோழ நாட்டு திவ்யதேசங்கள்’’ என்ற எண்ணம் தோன்றியதும் இதுவரை சேவித்த தலங்கள் எவை என்று கணக்கிட்டேன். மொத்த 40 சோழ நாட்டு திவ்ய தேசங்களில் 39 திவ்ய தேசங்களை சேவித்திருப்பதை அறிந்து ஆச்சர்யம் கொண்டேன். திருச்சி அருகில் உள்ள திருவெள்ளறை திவ்ய தேசம் தவிர மற்ற அனைத்து திவ்ய தேசங்களையும் சேவித்திருக்கிறேன்.
நடுநாட்டின் இரண்டு திவ்ய தேசங்களையும் சேவித்திருக்கிறேன்.
இந்த ஆண்டில் இன்னும் தரிசிக்காத திவ்யதேசங்களை சேவிக்க உளம் கொண்டுள்ளேன். காஞ்சிபுரத்தில் இரண்டு நாட்கள் தங்கினால் கணிசமான தொண்டை நாட்டு திவ்ய தேசங்களை சேவிக்க முடியும். சென்னையில் இரு நாட்கள் தங்கினாலும் சேவிப்பதற்கு பல திவ்ய தேசங்கள் உள்ளன.
இப்போது கட்டுமானப் பணி நடைபெறுவதால் ஊரில் எப்போதும் இருக்க வேண்டிய நிலை. இராமாயண நவாஹத்துக்கான ஏற்பாடுகள் உள்ளன. ஈஸ்வர ஹிதம்.
Friday, 15 December 2023
உரையாடல்
இன்று நானும் எனது நண்பனும் பேசிக் கொண்டிருந்தோம். நண்பன் நான் வசிக்கும் ஊருக்கு மேற்கே 500 கி.மீ தொலைவில் இருக்கிறான். அவனிடம் பேசுவதற்கு சில நிமிடங்கள் முன்பாக எனக்குத் தோன்றிய யோசனை ஒன்றை அவனிடம் முன்வைத்தேன். அதாவது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்து தினமும் 30 நிமிடம் உரையாடுவது மிகுந்த பயனளிக்கும் என்று கூறினேன். நண்பனும் ஆர்வமாக ஒத்துக் கொண்டான். முதலில் பேசப் போகும் விஷயம் என்ன என்று கேட்டான். ‘’இந்திய அரசியல் சாசனம்’’ என்று சொன்னேன்.
நமது சமூகத்தில் அதிக அளவில் உரையாடல்கள் நிகழ வேண்டும். ஜனநாயகம் என்பது உரையாடலே.
என்னென்ன விஷயங்கள் குறித்து பேசலாம் என்பது குறித்து பேசினோம். நான் ஒரு பட்டியல் அளிக்கிறேன் என்று சொன்னேன். அவனையும் ஒரு பட்டியல் அளிக்குமாறு சொன்னேன். இரண்டிலிருந்தும் நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னேன்.
இந்திய அரசியல் சாசனம், பண்டைய இந்திய சாம்ராஜ்யங்கள், சமஸ்கிருத இலக்கியங்கள், பௌத்தம், சமணம், சீக்கியம், இந்தியப் பொருளியல், இந்திய விவசாயம் ஆகியன என்னுடைய முதற்பட்டியல். இந்த உலகில் சூரியனுக்குக் கீழே இருக்கும் அனைத்தையும் குறித்து பேச முடியும்.
நூல் வாசிப்பு ஒருவருக்கு எந்த அளவில் உதவுமோ அதில் 25 சதவீதம் அளவுக்கு உரையாடல்கள் உதவும். இது ஒரு வாசகனின் கூற்று.
ஒரு புதிய முயற்சியைத் துவக்குகிறோம். இந்த முயற்சி நலம் பயக்கட்டும்.
Tuesday, 12 December 2023
கொல்லிமலை அடிவாரத்தில்
நண்பரின் நிலம் அமைந்திருப்பது கொல்லிமலை அடிவாரத்தில். சில ஆண்டுகளுக்கு முன்பு நான் கொல்லிமலை சென்றிருக்கிறேன். தமிழ்நாட்டில் கொல்லிமலை செல்லும் மலைப்பாதைதான் ஏகப்பட்ட கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பேருந்தில் செல்லும் போது வண்டி சட் சட் என வளைகையில் சற்று பரபரப்பாக இருக்கும். மலைப்பகுதி என்பதாலும் வனம் அடர்ந்த பகுதி என்பதாலும் அங்கே நாளின் பெரும்பகுதியிலோ அல்லது ஏதாவது ஒரு நேரத்திலோ வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும். சமவெளியில் இருந்து சென்றவர்களுக்கு அந்த குளிர்ச்சி மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். மரங்களில் மிளகுக்கொடி படர்ந்திருக்கும். மரங்களில் படர்ந்திருக்கும் மிளகுக்கொடிகளின் பச்சை மிளகை மென்றவாறு அந்த மலைப்பாதையில் சிறுதூரம் நடந்தது நினைவில் இருக்கிறது. கொல்லிமலை நினைவுகளுடன் அந்த பச்சை மிளகின் மென்காரமும் இணைந்திருக்கிறது.
நண்பரின் நிலம் கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. ஆறு ஏக்கர் நிலமும் முள்வேலியிடப்பட்டிருக்கிறது என்பது அதன் சாதக அம்சம். எனவே ஆடு மாடு நிலத்துக்குள் வந்து செடியை மேயாது என்பது நல்ல விஷயம். மண் செம்மண் கலந்த மண். அதுவும் மிகச் சாதகமான விஷயமே. தேக்கு அந்த மண்ணில் நன்றாக வளரும்.
இரண்டு கிணறுகள் இருக்கின்றன. தண்ணீர் சற்று உப்புத்தன்மை கொண்டது என்று கூறினார்கள். மகாராஷ்ட்ராவில் ‘’டிரென்ச்’’ வெட்டி வயலில் பெய்யும் மழைநீரை கிணற்றிலோ அல்லது குளத்திலோ கொண்டு வந்து சேர்ப்பார்கள். தண்ணீரின் அதி தூய வடிவம் மழைநீரே. அதனை சற்று உப்புத்தன்மை கொண்ட கிணற்றில் கொண்டு சேர்த்தால் சில மாதங்களில் உப்புத்தன்மை முற்றிலும் இல்லாமலாகி விடும்.
ஆறு ஏக்கர் நிலத்தில் 2000 தேக்கு கன்றுகள் நட முடியும். தினமும் ஒரு கன்றுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றினால் ஒரு நாளைக்கு அந்த பண்ணைக்கு 2000 லிட்டர் தண்ணீர் மட்டுமே தேவை. ஆறு ஏக்கர் நிலப்பரப்புடன் ஒப்பிடுகையில் அந்த நீர்த்தேவை என்பது மிக மிக சொற்பமானது. கிணற்றுநீரை 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் நிரப்பி அதில் சில மூட்டைகளில் துளைகளிட்டு மாட்டுச் சாணத்தை நிரப்பினால் அந்த மாட்டுச் சாணம் நீரின் உப்புத்தன்மையை பெருமளவில் கட்டுப்படுத்தி விடும். பொதுவாக நான் விவசாயிகளுக்கு இருப்பதிலேயே மிகக் குறைந்த அளவில் செலவாகும் விஷயத்தையே பரிந்துரைப்பேன். விவசாயி குறைந்த அளவு செலவு செய்து அதிக லாபம் அடையும் முறையே நான் பரிந்துரைப்பது.
பரீட்சார்த்தமாக ஒரு தேக்கு மரக்கன்றை நட்டோம்.
விவசாயியும் அந்த நிலத்தில் பணி புரிபவர்களும் ஒரு மாத காலத்தில் அந்த கன்று எவ்விதம் வளர்கிறது என்பதை அவதானிக்கட்டும் என்பதற்காக ஒரு கன்றை மட்டும் நடச் சொன்னேன். மரக்கன்றுக்கு தண்ணீர் தேவையான அளவு ஊற்றப்படுகிறதா பணியாளர்கள் அந்த கன்றின் வளர்ச்சியில் எவ்விதமான ஆர்வம் காட்டுகிறார்கள் விவசாயிக்கும் பணியாளர்களுக்கும் இந்த ஒரு மாதத்தில் ஏற்படும் ஐயங்கள் என்ன என்பதை இந்த ஒரு மாதத்தில் அறிந்து விடலாம் என்பதால் இவ்விதமான ஒரு திட்டமிடல்.
மரம் என்பது தானாக வளரக் கூடியது என்னும் மனப்பதிவு சமூகத்தில் உருவாகி விட்டது. மரம் தானாக வளரும் தான் ; ஆனால் அதில் இருந்து நமக்கு நாம் விரும்பும் விதத்தில் பலன் கிடைக்க வேண்டும் என்றால் அந்த ம்ரத்துக்கு குறைந்தபட்சம் நாம் வாரம் இருமுறையாவது தண்ணீர் ஊற்ற வேண்டும்.
இரண்டு அடி நீளம் இரண்டு அடி அகலம் இரண்டு அடி ஆழம் கொண்ட குழியை எடுத்து அதில் மக்கிய சாண எருவை இட்டு தேக்கு கன்றை நட்டு நீர் வார்த்தோம்.
அங்கிருந்து புறப்பட்டேன். ஆறு மணி நேர பேருந்து பயணம். மூன்று மணி நேரம் மலைப்பகுதிகளும் அதை ஒட்டிய நிலங்களும். மூன்று மணி நேரம் காவிரி வடிநிலம். கொங்கு நாட்டில் மூன்று நான்கு நாட்கள் ஒரு மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவானது.
Sunday, 10 December 2023
ராஜூ பிஸ்வாஸ்
இன்று ஞாயிற்றுக்கிழமை சேலம் செல்லலாம் எனத் திட்டமிட்டிருந்தேன். அதாவது, 6 ஏக்கரில் தேக்கு பயிரிட விரும்பும் விவசாயியின் நிலத்தை நேரடியாகப் பார்வையிட விரும்பினேன். நேற்று தான் அவரிடம் முதல் முறையாகப் பேசினேன். ஓரிரு நாட்களில் சேலம் வருவதாகக் கூறியிருந்தேன். ரயில் அட்டவணையை இணையத்தில் சோதித்த போது காலை 6.20க்கு ஊரிலிருந்து சேலத்துக்கு திருச்சி கரூர் மார்க்கமாக ஒரு ரயில் புறப்படுகிறது என்பதைக் கண்டேன். உடன் விவசாயிக்கு ஃபோன் செய்து நாளையே வருகிறேன் என்றேன். ‘’சுபஸ்ய சீக்கிரம்’’ என்று சொல்வார்கள். நற்செயல்களை உடனே செய்ய வேண்டும் என்கிறது நம் மரபு. அவர் ஞாயிற்றுக்கிழமை முன்னரே திட்டமிட்ட ஒரு பணி இருந்ததால் ஒரு நாள் பயணத்தைத் தள்ளி வைக்க முடியுமா என்று கேட்டார். நானும் ஒத்துக் கொண்டேன். தற்போது நமது கட்டுமானப் பணி நிகழும் பணியிடத்தில் பூச்சுவேலை நடைபெறுகிறது. தினமும் ஐந்து பணியாளர்கள் பூச்சுவேலையில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலை பணியிடத்துக்குச் செல்வோம் என மோட்டார்சைக்கிளில் புறப்பட்டேன். நாளை காலை 6.20க்கு சேலம் கிளம்பினால் நாளை இரவு 9.30க்குத் தான் ஊர் திரும்ப முடியும். நாளை நாள் முழுதும் பணியிடத்தில் இருக்க முடியாது என்பதால் இன்று மாலை நான் செல்வது அவசியமாகிறது. இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். பணியிடம் வீட்டிலிருந்து தோராயமாக 3.5 கி.மீ தூரத்தில் உள்ளது. ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற போது ஒரு இளைஞன் ‘’லிஃப்ட்’’ கேட்டான். அவனை ஏற்றிக் கொண்டேன்.
கொஞ்ச தூரம் வண்டி நகர்ந்ததும் அந்த இளைஞனிடம் ‘’எங்கே செல்ல வேண்டும் ‘’ என்று கேட்டேன். ரயில்வே ஸ்டேஷன் என்று சொன்னான். ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியில்தான் பணியிடம் இருக்கிறது. எனவே அங்கே ‘’டிராப்’’ செய்கிறேன் என்று சொன்னேன். அவன் உச்சரிப்பு மலையாளம் போல் இருந்தது. நான் அந்த இளைஞனைக் குறித்து விசாரித்தேன்.
அவன் பெயர் ராஜூ பிஸ்வாஸ். அவனது தந்தை பெயர் ராம்குமார் பிஸ்வாஸ். நம் நாட்டின் 51 சக்தி பீடங்களில் முக்கியமானதான ‘’காமாக்யா’’ என்ற தலத்துக்கு பக்கத்தில் தான் ராஜூ பிஸ்வாஸின் பூர்வீக கிராமம். பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறான். பின்னர் கட்டிடத் தொழிலுக்கு வந்து விட்டான். திருவனந்தபுரத்தில் ‘’லாரி பெக்கர்’’ பாணி கட்டிடங்களை நிர்மாணிக்கும் கட்டிட நிறுவனம் ஒன்றில் சில ஆண்டுகள் வேலை பார்த்திருக்கிறான். அவர்களின் பணி ஒன்று கோயம்புத்தூரில் நடந்திருக்கிறது. அங்கு பணி செய்திருக்கிறான். இங்கும் அந்த நிறுவனத்தின் கட்டிட வேலை நடக்கிறது. ராஜூவும் அவனது நண்பன் ஒருவனும் இங்கே வந்திருக்கிறார்கள். வேலை இன்னும் ஒரு வாரத்தில் முடிந்து விடும். அதன் பின் ஒரு மாதம் அஸ்ஸாம் செல்வான். பின் திருவனந்தபுரம் வந்து விடுவான்.
கட்டிடத் தொழிலைச் சேர்ந்தவன் என்பதால் அவனை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கும் கட்டிடத் தொழில் என்பதால் அவனுக்கும் மகிழ்ச்சி.
அஸ்ஸாமிய நாவலாசிரியரான ‘’லஷ்மி நந்தன் போரா’’ வை வாசித்திருக்கிறாயா என்று அவனிடம் கேட்டேன். பள்ளி மாணவனாக இருந்த போது அவரது எழுத்துக்களை வாசித்திருக்கிறேன் என்று சொன்னான். நான் ‘’லஷ்மி நந்தன் போரா’’ வை அறிந்திருந்தது அவனுக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளித்தது. ஒரே குதூகலமாகி விட்டான்.
ஒருமுறை தில்லி ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய நின்று கொண்டிருந்த போது எனக்கு முன்னால் ஒரு வங்காள இளைஞன் நின்று கொண்டிருந்தான். அவனை அறிமுகம் செய்து கொண்டு அவனிடம் உரையாடுகையில் எனக்கு மிகவும் பிடித்த நாவலாசிரியர்களில் ஒருவர் ‘’தாராசங்கர் பானர்ஜி’’ என்று சொன்னேன். மேலும் ‘’ விபூதி பூஷண் , மைத்ரேயி தேவி, மாணிக் பந்தோபாத்யாய’’ ஆகிய வங்காளப் படைப்பாளிகளின் நாவல் மொழியாக்கத்தை தமிழில் வாசித்திருக்கிறேன் என்று சொன்னேன். அந்த இளைஞன் உணர்ச்சிகரமாகி கண்ணீர் மல்கி விட்டான்.
அஸ்ஸாம் குறித்து மேலும் பேசினோம். ‘’சரத் சந்திர சின்ஹா’’ என்ற காந்தியர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அஸ்ஸாம் முதலமைச்சராக இருந்தவர். அவர் பெயரைச் சொன்னேன். அவனுக்கு ரொம்ப ஆச்சர்யம். ‘’ஹிதேஷ்வர் சைக்கியா பி.கே. மகந்தா தருண் கோகோய் சர்பானந்த சோனாவால் ஹேமந்த பிஸ்வாஸ் சர்மா’’ ஆகிய எனக்குத் தெரிந்த அஸ்ஸாம் முதலமைச்சர்களின் பெயர்களை சொன்னேன். அவன் நான் அஸ்ஸாமில் நீண்ட நாள் வசித்தவன் என்றே முடிவு செய்து விட்டான்.
என்னுடைய பணியிடத்துக்கு அஸ்ஸாம் குறித்து உரையாடியபடியே வந்து சேர்ந்தோம். ஐந்து நிமிடம் அங்கே இருந்தேன். சிமெண்ட் மூட்டை கால் மூட்டை மட்டுமே எஞ்சி இருந்தது. நாளை காலை சிமெண்ட் கலவை போட சிமெண்ட் மூட்டை வேண்டும் . காலை 9 மணிக்கே சிமெண்ட் வந்து சேர வேண்டும். காலை 8 மணிக்கு ஃபோன் செய்தால் பணி தொடங்கும் முன் சிமெண்ட் வந்து விடும்.
ராஜூவை அழைத்துக் கொண்டு ரயில் நிலையம் சென்றேன். கன்யாகுமரி திப்ரூகர் ரயிலில் கன்யாகுமரியிலிருந்து திப்ரூகருக்கு டிக்கெட் பதிவு செய்ய வேண்டும் என்று சொன்னான். இந்தியாவின் மிக அதிக தூரம் பயணிக்கும் ரயில் என்று அந்த ரயிலைச் சொன்னான் ராஜூ. நான்கு இரவுகள் நான்கு பகல்கள் பயண நேரம். ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணியுடன் ரயில்வே டிக்கெட் முன்பதிவு முடிந்து விடும் என்று முன்பதிவு சாளரத்தில் கூறியிருக்கிறார்கள். திரும்பி வந்து விட்டான். நான் ரயில் நிலைய வாசலில் நின்றிருந்தேன். அவன் இந்த விபரம் கூறியதும் நானும் உள்ளே சென்று விசாரித்து உறுதி செய்து கொண்டேன்.
ராஜூ பிஸ்வாஸ் அவனுக்கு சில ஆடைகள் வாங்கும் வேலை இருப்பதால் துணிக்கடைகள் நிறைந்த பட்டமங்கலத் தெருவில் ‘’டிராப்’’ செய்யுமாறு கேட்டுக் கொண்டான். அது வீடு திரும்பும் வழியில் இருக்கிறது. வண்டி நகர்ந்து கொண்டேயிருந்தது. பிரியத்துடன் ‘’நாம் தேனீர் அருந்துவோம்’’ என்று சொன்னான். அவன் தேயிலைக்குப் பேர் போன மாநிலத்திலிருந்து வந்தவன் என்பதை நினைத்துக் கொண்டேன்.
நண்பனுக்கு ஒரு யோசனை
Saturday, 9 December 2023
சேலம் / விஸ்வகர்மா பதிவுகள் - கடிதம்
வெளி மாவட்ட அழைப்பு
நீண்ட நாள் நண்பன்
எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். எனது நீண்ட நாள் நண்பன். தற்போது மும்பையில் வசிக்கிறான். விளையாட்டுக்கான தொலைக்காட்சி சேனல் ஒன்றின் நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறான். விவசாயம் சார்ந்த பணிகளில் ஆர்வமுடையவன். மும்பை சென்ற பின் விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட முடியவில்லை என்ற மனக்குறை அவனுக்கு இருக்கிறது. ஊரில் 10 ஏக்கர் நிலம் வாங்கி அதில் தேக்கு பயிரிட வேண்டும் என்று விரும்புகிறான். ‘’காவிரி போற்றுதும்’’ தேக்கில் காட்டும் ஆர்வம் அவனுக்கு அந்த எண்ணத்தை உருவாக்கியுள்ளது. நமது தளத்தில் வெளியாகும் தேக்கு குறித்த பதிவுகளை தொடர்ச்சியாக வாசித்திருக்கிறான். நான்கு நாட்களுக்கு முன் மும்பையிலிருந்து ஃபோன் செய்து தேக்கு பயிரிட 10 ஏக்கர் நிலம் வாங்கிக் கொடு என்றான். நாம் ரியல் எஸ்டேட் தொழிலிலும் இருப்பதால் ஒரு பார்ட்டி என்னிடம் விற்றுக் கொடுக்குமாறு சொன்ன 10 ஏக்கர் நிலம் குறித்து சொன்னேன். நேற்று மாலை அவனிடமிருந்து ஃபோன் அழைப்பு. ஒரு திருமணத்துக்காக திருச்சி வந்திருப்பதாகச் சொன்னான். அங்கிருந்து கோவிந்தபுரம் போதேந்திராள் சன்னிதி வந்து வழிபாடு நடத்தி விட்டு ஊருக்கு வருவதாகக் கூறினான். நான் காலையில் அவனுக்காகக் காத்திருந்தேன். பேருந்தில் வந்தான். அவனை அழைத்துக் கொண்டு தேக்கு பயிரிட்டிருக்கும் இடத்துக்குக் கொண்டு சென்று காட்டினேன். மரக்கன்றுகள் நட்டு எத்தனை வருடங்கள் ஆகின்றன என்று கேட்டான். 15 மாதங்கள் என்று சொன்னேன். அவனால் நம்ப முடியவில்லை. இவ்வளவு உயரம் வளர்ந்திருக்கிறதே என மிகவும் ஆச்சர்யப்பட்டான். பின்னர் அவனுக்குப் பொருத்தமான நிலம் என நான் எண்ணிய வயலைக் கொண்டு சென்று காட்டினேன். அவனுக்கு இடம் பிடித்திருந்தது. அங்கிருந்து வைத்தீஸ்வரன் கோவில் சென்று வைத்தியநாத சுவாமி தையல்நாயகி அம்பாளை வணங்கினோம். மதியம் 12.10க்கு சோழன் எக்ஸ்பிரஸில் அவன் திருச்சி செல்ல வேண்டும். 11.50க்கு வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையம் வந்தோம். அவனை திருச்சிக்கு ரயிலேற்றி விட்டு விட்டு நான் மோட்டார்சைக்கிளில் ஊர் திரும்பினேன்.
Wednesday, 6 December 2023
விஸ்வகர்மா
மூன்று ஓவியங்கள்
நமக்கு
Tuesday, 5 December 2023
பூம்புகார்
கடல் காணச் செல்வது என்பது என்றுமே உற்சாகம் கொள்ளச் செய்வது. முன்னர், வாரத்தில் ஒருநாள் மாலை கடற்கரைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இப்போது மீண்டும் அந்த வழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.
இன்று பூம்புகார் சென்றிருந்தேன். நெல்லூர் அருகே நிலை கொண்டிருக்கும் புயலால் வங்கக் கடல் நுரைத்து அலையடித்துக் கொண்டிருந்தது. ஆர்ப்பரித்து கரையை நோக்கி விரைந்து கொண்டிருந்தன கடலலைகள். கரையிலிருந்து அலைகளை நோக்கிச் சென்று அலைகளுக்குள் நின்று கொண்டேன். கடலில் நிற்கையில் எப்போதும் என் உளம் பொங்கும். உள்ளத்தில் இப்போது எத்தனையோ எண்ண அலைகள். கடலலைகளில் எனது எண்ண அலைகள் சங்கமமாயின.
அலைகளில் நிற்கும் போது ‘’காவிரி போற்றுதும்’’ நினைவு வந்தது. ஏன் என்று தெரியவில்லை. அந்நினைவு எழுந்த போது ஒரு நிறைவும் எழுந்தது. அதுவும் ஏன் என்று தெரியவில்லை. சமுத்திர நீரை மும்முறை தலையில் தெளித்துக் கொண்டேன்.