Saturday, 1 November 2025

புதிய பாதை

இந்த வாரம் திங்களன்று சந்தித்த போது கடலூர் சீனு சொன்னார். ‘’வீட்டிலிருந்து 5 கி.மீ தூரம் நடந்து ஒரு இடத்துக்குச் சென்றால் கூட அது பயணம் தான். மனிதன் நகர்வதற்காக படைக்கப்பட்டவன்.’’. இங்கே ஊரில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. எனவே ஊரிலிருந்து மேற்கு திசை நோக்கிச் செல்லும் வாகனங்களும் மேற்கு திசையிலிருந்து ஊருக்கு வரும் வாகனங்களும் ரயில்வே சந்திப்பிலிருந்து ஒரு கி.மீ வடக்கில் இருக்கும் கல்லணை - பூம்புகார் சாலை வழியே திருப்பி விடப்படுகின்றன. அதில் ஏகப்பட்ட பேருந்துகளும் நான்கு சக்கர வாகனங்களும் செல்வதால் அந்த சாலையில் இருக்கும் ரயில்வே லெவல் கிராசிங்கில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விடுகிறது. கடலூரிலிருந்து கரி ஏற்றி வரும் கூட்ஸ் வண்டிகள் காரைக்கால் துறைமுகம் செல்வதால் தினமும் கணக்கற்ற தடவை ரயில்வே கிராசிங் மூடப்படுகிறது. ஊரின் ரயில்வே சந்திப்பிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில்  நீடூர் என்ற ரயில் நிலையம் உள்ளது. ஊரிலிருந்து நீடூர் வரைக்குமான ரயில் பாதைக்கு இணையாக ஒரு கிராமத்து சாலை இருப்பதாக ஒரு பேச்சு எழுந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னால் அந்த பாதையில் பாதி தூரம் பயணித்திருக்கிறேன். இம்முறை அந்த பாதையை முயற்சி செய்து பார்க்கலாமா என எண்ணினேன். நீடூர் சென்று அங்கிருந்து ஆனந்தகுடி என்ற கிராமம் வழியே சென்று அங்கிருந்து கோட்டூர் என்ற ஊரைக் கடந்து கல்லணை - பூம்புகார் சாலையை அடைந்தேன். அருகில் இருக்கும் ஒரு பாதையை இத்தனை நாள் அறியாமல் இருந்தோமே என்ற சிறு வருத்தமும் இன்றைக்கு அறிந்தோமே என்னும் பெருமகிழ்ச்சியும் அடைந்தேன்.