எனது நண்பன் ஒருவன் வெளிமாநிலத்தில் வசிக்கிறான். அவனது உறவினர் அவனைக் காண அங்கு முதல்முறையாக வருகிறார். அவர் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்மணி. ரயில் ஏறும் போதே நண்பன் அலைபேசியில் அவருக்கு ஒரு குறிப்பை வழங்கியிருக்கிறான். அதாவது, வண்டி தமிழகத்தைத் தாண்டியதும் அலைபேசியை ஸ்விட்ச் ஆஃப் செய்து மீண்டும் ஸ்விட்ச் ஆன் செய்யவும் என்று. ரோமிங் வசதி கிடைப்பதற்கு அவ்வாறு செய்யச் சொல்லியிருக்கிறான் ; ரயில் நிலையத்தில் தொடர்பு கொள்வதற்கு வசதியாக. அந்த மூதாட்டி 12 மணி நேரப் பயணத்தை அந்த ரயிலில் மேற்கொண்டிருக்கிறார். ஃபோனை ஆஃப் செய்து ஆன் செய்தும் ரோமிங் கிடைக்கவில்லை. அவராலும் ஃபோன் செய்ய முடியவில்லை. அவருக்கும் ஃபோன் செய்ய முடியவில்லை. நண்பன் சற்று பதட்டமாகி விட்டான். உறவினர் மேலும் பதட்டமாகி விடுவாரே என்ற பதட்டமும் சேர்ந்து கொண்டது. ரயில்வேவின் இணையதளத்துக்குச் சென்று அதில் இருந்த 139 என்ற எண்ணுக்கு டயல் செய்திருக்கிறான். அதில் என்ன உதவி தேவை என்று கேட்டிருக்கிறார்கள். இன்ன ரயிலில் இன்ன பெட்டியில் எனது வயது மூத்த உறவினர் வருகிறார் ; அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை ; தொடர்பு கொள்ள முடியுமா என்று கேட்டிருக்கிறான். 15 நிமிடத்தில் ரயில்வே பாதுகாப்பு படையின் காவலர் ஒருவர் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருக்கிறார். அவரும் விபரம் கேட்டுக் கொண்டார். பின்னர் அந்த பெட்டியின் டிக்கெட் பரிசோதகர் தனது அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பயணியின் இருக்கை எண் கேட்டு அவரைச் சென்று சந்தித்து நண்பனிடம் அவரைப் பேச வைத்திருக்கிறார். டிக்கெட் பரிசோதகரிடம் நண்பன் இன்ன ரயில் நிலையத்தில் மூதாட்டியை இறக்கி விடுமாறு கூற அவ்விதமே செய்திருக்கிறார்கள். இவை அனைத்தும் 25 நிமிடங்களில் நிகழ்ந்திருக்கின்றன. நண்பன் மிகுந்த மகிழ்ச்சியுடன் என்னிடம் இந்த சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டான்.
Monday, 30 June 2025
Sunday, 29 June 2025
கணேசன்
ரயிலில் திரும்பிக் கொண்டிருக்கும் போது சென்னையில் எனக்கு எதிர் இருக்கையில் ஒருவர் அமர்ந்தார். அவர் தனக்கு வந்த அலைபேசி அழைப்புகளை ஒரிய மொழியில் பேசிக் கொண்டிருந்தார். அவரது தோற்றம் அவர் ஒரியாக்காரர் என்றே கூறியது. ஒரு அலைபேசி அழைப்புக்கு அவர் சில வார்த்தைகள் தமிழில் பேசுவது கேட்டது. அவரிடம் அவரைப் பற்றி விசாரித்தேன். ஒரிஸ்ஸாவில் பிறந்து வளர்ந்தவர் அவர். அவரது பெற்றோர் ஒரிஸ்ஸாவில் இருக்கின்றனர். அவர் ஈரோட்டில் உள்ள வெல்டிங் பட்டறை ஒன்றில் பணிபுரிகிறார். ஈரோடு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. வருடத்துக்கு ஒருமுறையோ இருமுறையோ ஒரிஸ்ஸா சென்று வருவார். அவர் பேசும் தமிழ் கோயம்புத்தூர் தமிழ். அந்த பாணிக்கே உரிய ஏற்ற இறக்கங்கள். அவரிடம் தமிழில் பேச நேரும் எவரும் அவர் கோவைப் பிராந்தியத்தைச் சேர்ந்தவர் என்றே எண்ணுவார்கள். அவரது பெயரைக் கேட்டேன். கணேஷ் என்றார்.
Saturday, 28 June 2025
பெருநிலம்
பெருநிலம்
ஆந்திர மாநிலத்தைச்
சுற்றி வர வேண்டும் என மனம் மிகவும் விரும்பிக்
கொண்டிருந்தது. ஆந்திரத்தை ஒரு சிறிய இந்தியா என்று கூற முடியும். ஆந்திர மண்ணின் இயல்பு
அத்தகையது. லௌகிகப் பணிகள் அல்லது லௌகிகப் பொறுப்புகள் அல்லது லௌகிக பந்தங்கள் அதற்கான
வாய்ப்பை தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தன. அவற்றுடன் சமரசம் செய்ய முடியாது ; தற்காலிகமாகப்
புறக்கணிப்பதே நடைமுறைத் தீர்வு என்பதால் ஒரு கணத்தில் சட்டெனப் புறப்பட முடிவு செய்தேன்.
முன்னர் புதிய நிலம் காண ரயிலில் செல்வேன் ; அதன் பின் மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்டேன்.
இப்போது நான் உணர்வது அவ்வப்போது எவ்வகையான பயணம் வாய்க்கிறதோ அத்தகைய பயணங்களை சிறிதும்
தள்ளிப் போடாமல் மேற்கொண்டு விட வேண்டும் என்பதே. எனக்கு மிகவும் பிடித்தது மோட்டார்சைக்கிள்
பயணம் என்றாலும் ரயில் பயணமும் பிடித்தமானதே.
நான்கு நாட்கள்
பயணம் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதாவது , நான்கு நாட்கள் பயணம் செய்ய ஒரு வாய்ப்பை
உருவாக்கிக் கொண்டேன். கடைசி நிமிடம் வரை பயணம் உறுதியாகாமல் இருந்தது. சட்டென ஒரு
தூண்டல் ஏற்பட்டு புறப்பட்டே தீருவது என முடிவு செய்தேன். புறப்பட்டே தீருவது என முடிவு
செய்யும் மனமே பயணிக்குத் தேவை. நம் இடத்தில் நாம் இருந்தால் லௌகிகம் சரியாக இயங்கிக்
கொண்டிருக்கிறது என்னும் எண்ணத்தை நாம் அடைவோம் எனினும் அது முழு உண்மை அல்ல ; பகுதி
உண்மையே. நமது லௌகிகம் நாம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல ; நம்முடன் இணைந்து
செயல்படுபவர்கள், வாடிக்கையாளர்கள், சமூகம், சமூக மனநிலை என பல்வேறு கூறுகள் அதில்
உள்ளன.
‘’விலை நிர்ணயம்’’
செய்து வைத்திருந்த மனை உரிமையாளரின் நண்பருக்கு அலைபேசியில் அழைத்து மூன்று நாட்கள்
ஊரில் இருக்க மாட்டேன் ; அப்போது அலைபேசிக்கு அழைத்தால் அலைபேசி ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருக்கிறது
என்னும் செய்தியே கிட்டும் என்பதால் நான்கு நாட்கள் கழித்து செல்ஃபோனில் தொடர்பு கொள்ளவும்
என்று கூறினேன். நான் அவருக்கு அழைத்த போது அவர் பக்கத்திலேயே மனை உரிமையாளர் இருந்திருக்கிறார்.
நான் கூறிய செய்தியை உடன் அவர் கூறி விட்டார். ‘’விலை நிர்ணயம்’’ செய்து வைத்திருக்கும்
மனையை வாங்க இருப்பவருக்கும் ஃபோன் செய்தேன். மூன்று தினங்கள் ஊரில் இல்லை ; மூன்றாவது
நாள் இரவோ அல்லது நள்ளிரவோ ஊர் திரும்பி விடுவேன் என்று சொன்னேன். நான் ஊர் திரும்பும்
தினத்துக்கு மறுதினம் ஒரு சந்திப்பு தேவைப்படும் எனத் திட்டமிட்டிருந்ததாகக் கூறினார்.
நிச்சயம் வந்து விடுவேன் என்று கூறினேன். ஒருநாள் முன்னதாகத் திட்டமிட்டிருந்தால் நிச்சயம்
ஆந்திரப் பயணத்தைக் கைவிட்டிருப்பேன். தொழில் தொடர்பான பணிகள் என்பவை எனது பணிகள் மட்டுமல்ல
; பல தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு அதில் இருக்கிறது. நாம் ஒரு விஷயம் திட்டமிடுகிறோம்
என்றால் கண்ணுக்குத் தெரியாத பல வேலைவாய்ப்புகளும் பணிகளும் தொழிலாளர்களும் அதில் இருக்கிறார்கள்
என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நண்பரின் மனைக்கு பட்டா விண்ணப்பித்திருந்தோம்.
அந்த மனையின் தனிப்பட்டா வந்து விட்டது. பட்டா வரைபடம் இன்னும் கைக்கு வந்து சேரவில்லை.
அதற்கான பணியை செய்து கொடுப்பவருக்கு ஃபோன் செய்து இரண்டு நாட்கள் ஊரில் இல்லை ; மேலும்
ஒருநாள் ஆனாலும் ஆகலாம்; நான் ஊர் திரும்பியதும் ஃபோன் செய்கிறேன் என்று சொன்னேன்.
வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் எனது நண்பர். 15 நாட்களுக்கு முன் நாங்கள் சந்தித்திருந்தோம்.
அவருக்கும் தகவல் சொன்னேன். ஊர் திரும்பிய அடுத்த நாள் நாம் சந்திக்க வேண்டும் என்றார்.
ஊர் திரும்பியதும் ஃபோன் செய்கிறேன் என்றேன். உடனடி தகவல் தெரிவித்தல்கள் முடிந்தன.
அவர்கள் எவருக்குமே நான் பயணத்தின் போது அலைபேசி வைத்துக் கொள்ள மாட்டேன் என்னும் தகவல்
தெரியாது அல்லது நான் நேரடியாகத் தெரிவிக்கவில்லை ; மறைமுகமாக இந்த 3 நாட்களில் என்னைத்
தொடர்பு கொள்ள முடியாது ; அலைபேசி தொடர்பு எல்லையில் இல்லை என்றோ ஸ்விட்ச் ஆஃப் என்றோ
தகவல் தெரிவிக்கும் எனக் கூறியிருந்தேன். ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்தவுடன் பயணம்
புறப்பட்டு விட்டதான உணர்வு ஏற்பட்டது. கையில் ரூ.3000 மட்டும் பணம் இருந்தது. இருக்கும்
பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்புவது என்பதைப் போன்ற மகத்தான வழி இன்னொன்று இல்லை.
***
இரவு உணவாக
வரகரிசிக் கஞ்சி தயாரித்திருந்தேன். தயாரித்து முடித்ததும் காவிரியில் மூழ்கி எழ வேண்டும்
எனத் தோன்றியது. நதிக்குச் சென்று மூழ்கி எழுந்தேன். ஒரு பயணம் என்பது மிகவும் முக்கியமானது.
பெரிய விஷயமாகும் அது. அதில் ஏற்படும் ஓர் அனுப்வம் மிக முக்கியமானதாக இருக்கலாம்
; நாம் இதுநாள் வரை நம்பிய விஷயத்தை மாற்றியமைக்கலாம். எனவே நம்மை விடப் பெரிய ஒன்றிடம்
ஆசி பெறுவது நல்லது என நினைத்தேன். நதியில் மூழ்கி எழுந்ததில் நதியின் ஆசியைப் பெற்றதாக
உணர்ந்தேன். வீட்டுக்கு வந்து வரகரிசிக் கஞ்சியைக் குடித்து விட்டு இரவு 10.15 சென்னை
விரைவு ரயிலைப் பிடிக்கக் கிளம்பினேன்.
இந்த ரயில் மிகவும் பரிச்சயமானது. நான் இந்த ரயிலை
அடிக்கடி தாம்பரத்தில் மாலை 6.10க்குபிடித்து இரவு 10.20க்கு ஊர் வந்து சேர்வேன். இன்று
அதன் இணை ரயிலைப் பிடித்து சென்னை செல்கிறேன். ராமேஸ்வரம் தாம்பரம் ரயிலும் தாம்பரம்
ராமேஸ்வரம் ரயிலும் மயிலாடுதுறை சந்திப்பில் சந்தித்துக் கொள்கின்றன. பயணச்சீட்டு சாளரத்தில்
நான் செல்ல இருக்கும் ஊரின் பெயரைக் கூறி இரண்டாம் வகுப்பு சாதாரண பயணச்சீட்டு கேட்டேன்.
அந்த ஊர் 1580 கி.மீ தொலைவில் இருக்கிறது. ரூ.385 கொடுங்கள் என்றார் சாளர எழுத்தர்.
இத்தனை கிலோமீட்டர் தூரத்துக்கு இத்தனை குறைவாகக் கட்டணம் வசூலிக்கும் ஒரு அமைப்பு
உலகிலேயே இந்திய ரயில்வே மட்டுமே. ஒவ்வொரு இந்தியனும் இந்திய ரயில்வே சாதித்திருக்கும்
விஷயங்கள் குறித்து அவசியம் பெருமை கொள்ள வேண்டும்.
ரயில் வந்தது.
முன்பதிவு இல்லாத சாதாரண பெட்டியில் ஏறிக் கொண்டேன். இருக்கைகள் முழுவதுமாக நிரம்பியிருந்தன.
பதினைந்து பேர் நின்று கொண்டு பயணித்தனர். நான் புறப்பட்ட அன்று பயணிகள் எண்ணிக்கை
குறைவாக இருப்பதை நடைமேடையிலேயே அவதானித்தேன். ரயிலில் ஒரு தம்பதி . அவர்களுக்கு ஒரு
பெண் குழந்தை. குழந்தை அப்போது தூங்கி விட்டது. அவர்கள் மூவரும் மூன்று இருக்கைகளில்
அமர்ந்திருந்தனர். குழந்தை தூங்கியதும் அந்த குழந்தையின் அன்னை அக்குழந்தையை தன் மடியில்
அமர்த்திக் கொண்டார். ஒரு இருக்கை கிடைத்தது. அதில் அமர்ந்து கொண்டேன். ஊரிலிருந்து
6 கி.மீ தொலைவில் ஆனந்ததாண்டவபுரம் என்ற ஊர் உள்ளது. கர்நாடக சங்கீதத்தில் புகழ் பெற்ற
கோபாலகிருஷ்ண பாரதியாரின் ஊராகும் அது. அவரது ‘’நந்தன் சரித்திரத்தை’’ யாவரும் அறிவார்கள்.
அந்த ஊரின் பெயர் மிகப் பெரிதாக இருப்பதால் அதனை எங்கள் ஊர்க்காரர்கள் ஏ.டி.பி என்று
சொல்வோம். எங்கள் ஊரின் ரயில் நிலையம் ரயில்வே சந்திப்பு ஆகும். வடக்கே விழுப்புரத்துக்கும்
தெற்கே திருவாரூருக்கும் மேற்கே கும்பகோணத்துக்கும் செல்லும் ரயில் பாதைகள் சந்தித்துக்
கொள்ளும் இடமாகும் எங்கள் ஊரின் ரயில்வே சந்திப்பு. எனவே இங்கு ரயில் பிளாட்ஃபாரங்களும்
அதிகம். ஒப்பீட்டளவில் அதிக ரயில்களை உள்வாங்கி நிறுத்தி வைக்க முடியும். எனினும் இங்கும்
அதிக ரயில்கள் இருந்தால் பயணத்தில் உள்ள ரயில்களை ஆனந்ததாண்டவபுரத்திலோ அல்லது குத்தாலத்திலோ
அல்லது மங்கநல்லூரிலோ மட்டுமே நிறுத்தி வைத்து அந்த ரயில்களுக்கு வழியமைத்துக் கொடுக்க
முடியும். எனவே ஆனந்த தாண்டவபுரம் என்னும் ஏ.டி.பி எங்களுக்கு மிகவும் பழக்கமான ஊர்
அல்லது பழக்கமான பெயர். இந்த ஊர் குறித்து என்னிடம் ஒரு சுவாரசியமான தகவல் உள்ளது.
இது நான் பல வருடங்களுக்கு முன்னால் சிறுவனாக இருந்த போது கேட்டது. ஆனந்ததாண்டவபுரத்துக்காரர்
ஒருவர் தென்னக ரயில்வேயின் பொது மேலாளராக இருந்தார். ரயில்வேயில் மிகப் பெரிய உயர்
அதிகாரப் பதவி அது. அவரது பதவிக் காலத்தில் மெயின் லைன் வழியாக செல்லும் எல்லா எக்ஸ்பிரஸ்
ரயில்களும் இரண்டு நிமிடம் ஆ. தா. புரத்தில் நின்று செல்லும் என்ற அறிவிப்பு வெளியானது.
எப்படி இருந்தாலும் அங்கே கிராஸிங் காக வண்டிகள் நிற்பது வழக்கமாகி விட்டதால் எல்லா
வண்டிகளும் நின்று செல்லும் என்னும் வரவேற்பு எங்கள் ஊர் ரயில்வே சந்திப்பின் பணிகளை
எளிதாக்கிக் கொடுத்தது என்பது உண்மை. இந்த தகவலை நான் சொல்லும் போது உங்கள் ஊருக்கு
பக்கத்து ஊர்க்காரர் சதர்ன் ரயில்வேயின் பொது மேலாளரா என பலரும் ஆச்சர்யமாகக் கேட்பார்கள்.
அந்த 6 கி.மீ தொலைவில் இருக்கும் ஏ.டி.பி யில் உட்கார இடம் கிடைத்தது எவ்வளவு நல்ல
விஷயம் என்பது 6 மணி நேரப் பயணத்துக்கு 5 நிமிடத்தில் இடம் கிடைத்த எனக்குத்தான் தெரியும்.
நான் முன்பதிவு செய்யும் வசதியைப் பயன்படுத்தியிருக்கிறேன். எப்போதெனில் ரயில் நிலையங்களில்
மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்னும் வசதி இருந்த போது. அதன் பின் இணையம் அந்த
பணியை எளிதாக்கியது. அதனை ஸ்மார்ட்ஃபோன் மேலும் எளிதாக்கியது. நான் ஸ்மார்ட்ஃபோனுக்குள்
வரவில்லை. அது என்னுடைய விருப்பம். என்னுடைய தனிப்பட்ட விருப்பம். இருப்பினும் என்
மீது ஸ்மார்ட் ஃபோன் வைத்துக் கொள்ளவில்லை என்பது உறவினர்களால் நண்பர்களால் புகாராக
முன்வைக்கப்படுகிறது. உலகில் எவ்வளவோ பொருட்கள் உள்ள்ன . எல்லாமும் எல்லாரிடமும் இருப்பதில்லை.
அது போல ஒரு விஷயமே என்னிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லாமல் இருப்பதும். நான் முன்பதிவு இருந்தால்
தான் பயணிப்பேன் என எண்ணுவதில்லை. ஒரு ஊருக்குக் கிளம்ப வேண்டும் எனத் தோன்றினால் கிளம்பி
போய்க் கொண்டேயிருப்பேன். ரயில் விழுப்புரம் வந்ததும் எங்கள் பெட்டியில் பாதிக்குப்
பாதி பேர் இறங்கி விட்டனர். நான் படுத்துத் தூங்கிக் கொண்டு சென்றேன். காலை 4 மணிக்கு
தாம்பரம் சென்றடந்தேன். நான் 7 மணிக்கு கோரமண்டல் ரயிலைப் பிடிக்க வேண்டும். மின்சார
ரயிலைப் பிடித்து சென்னை பூங்கா ரயில் நிலையத்துக்குச் சென்று எதிரில் இருக்கும் செண்ட்ரல்
ரயில் நிலையம் செல்ல வேண்டும்.
சோழ மண்டலக்
கடற்கரை என்னும் வார்த்தையே ’’கோரமண்டல்’’ என மருவியது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே
சர்வதேச கடல் மாலுமிகள் நம் நாட்டின் கிழக்குக் கடற்கரையைக் குறிக்க இந்த வார்த்தையைப்
பயன்படுத்தியிருக்கலாம். அந்த வார்த்தையும் அந்த வார்த்தையின் திரிபும் என்னை மிகவும்
ஈர்க்கும். சோழ மண்டலக் கடற்கரை வழியே ஒரு மோட்டார்சைக்கிள் பயணம் நிகழ்த்த வேண்டும்
என விரும்பினேன். நாட்டின் வட கிழக்கு பகுதிக்கு மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொள்ள
கோரமண்டல் வழியே கல்கத்தா செல்வது என்பது சிறப்பான வழி. அவ்வாறான ஒரு பயணத்தை விரைவில்
நிகழ்த்துவேன். சென்னையையும் கல்கத்தாவையும் இணைக்கும் ‘’கோரமண்டல் எக்ஸ்பிரஸில்’’
பயணிக்க வேண்டும் என்னும் எனது நீண்ட நாள் ஆசை இப்போது நிறைவேறியது. ரயிலைப் பிடிக்க
எந்த நடைமேடைக்குச் செல்ல வேண்டும் என அறிவிப்பு பலகையைக் கண்டேன். எந்த அறிவிப்பும்
இல்லை. விசாரணை சாளரத்துக்குச் சென்று விசாரித்தேன். இணை ரயில் தாமதமாக வருகிறது என்பதால்
கோரமண்டல் ஒன்றரை மணி நேரம் தாமதமாக 8.30க்கு புறப்படும் என்றனர். நடைமேடையில் பொதுமக்கள்
கூடி நின்றிருந்தனர். பொதுப்பெட்டியில் ஏற இரயில் என்ஜின் இருக்கும் என உத்தேசிக்கும்
பகுதியை ஒட்டியும் ரயிலின் பின் பக்கம் உள்ள ’’ ரயில் கார்டு’’ பெட்டிக்கும் அருகிலும்
மக்கள் வரிசையில் நின்றனர். முன்பதிவு பெட்டிகளில் ஏற இருப்பவர்களும் குழுமி நின்றிருந்தனர்.
நான் என்ஜினுக்கு அருகில் இருக்கும் பகுதியில் இருந்தேன். அங்கே வரிசையைப் பராமரிக்க
ரயில்வே காவல் படை காவலர்கள் மூன்று பேர் முயன்று கொண்டிருந்தனர். நான் வரிசையில் இருக்கும்
பொதுமக்களின் எண்ணிக்கை எவ்வளவு என எண்ணிப் பார்த்துக் கணக்கிட்டேன். மொத்தம் 160 பேர்
இருந்தனர். முன்னால் உள்ள பொதுப் பெட்டியில் 200 பேர் அமர முடியும். நான் சென்று தலைமைக்
காவலரிடம் இந்த செய்தியைக் கூறி அவரது பணியை எளிதாக்கினேன். இன்னும் பலர் வரக்கூடும்
என்றார். ரயிலின் நேரம் 7 மணி. 7 மணி ரயிலைப் பிடிக்க தாமதமாக வருப்வர்கள் கூட
7.10க்கோ 7.15க்கோ வருவார்கள். இப்போது நேரம் 8. இந்த ரயிலுக்கு இனி யாரும் புதிதாகக்
கிளம்பி வர மாட்டார்கள் என்று சொன்னேன். அவருக்கு விஷயம் புரிந்து விட்டது. புன்னகைத்தார்.
நான் நடைமேடையில் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டேன். ரயில் வந்தது. பொதுப் பெட்டி,
முன்பதிவுப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி என அனைத்துக்கும் பெட்டிக்கு 3 தொழிலாளர்கள்
என உள்ளே சென்று குப்பையைப் பெறுக்கி சுத்தப்படுத்தினர். கழிவறைகளைத் தூய்மைப்படுத்தும்
ரசாயன திரவம் குழாய் மூலம் பாய்ச்சப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன. வண்டி காலை 9 மணிக்குப்
புறப்பட்டது.
எனக்குப் பிடித்தமான
இடது பக்க ஜன்னல் இருக்கை எனக்குக் கிடைத்தது. எனக்கு எதிரில் என்னுடன் அமர்ந்து பயணித்தவர்
பெயர் அசோக் ஜகன்நாத். அவர் ஒரு தொழிலாளர். ராணுவ வீரர் போல ’’ஹேர் கட்’’ செய்திருந்தார்.
தினமும் ஜிம் சென்று உடலை அவ்வளவு கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். அதனால் தான் அவரிடம்
அப்படிக் கேட்டேன். தனக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என சின்ன வயதில் ஆசை இருந்ததால்
உடலை ராணுவ வீரன் போல பராமரிக்கிறேன் என்றார். எங்கள் அறிமுகம் இனிய அறிமுகமாயிற்று.
அன்று இரவு வரை அவருடன் பல விஷயங்கள் பேசிக் கொண்டு விவாதித்துக் கொண்டு சிரித்துக்
கொண்டு சென்றேன் என்பதே உண்மை. அவருக்கு ஒரிய பாஷை மட்டுமே நன்றாகத் தெரியும். ஹிந்தி
கொஞ்சம் தெரிந்திருக்கிறது. என்னிடம் ஹிந்தியில் பேசினார். நான் அவரிடம் ஆங்கிலத்தில்
பேசினேன். இருந்தாலும் இருவரும் பேசி உரையாடினோம் என்பதே உண்மை. இரு மனங்கள் உரையாடிக்
கொள்ள வேண்டும் என நினைத்தாலே போதும் அவர்களுக்குள் உரையாடல் சாத்தியமாகும் என்பதை
பயணிகள் அறிவார்கள். அவர் ஒடிஸ்ஸாவின் புவனேஸ்வரைச் சேர்ந்தவர். அவர் பெயர் அசோக்.
அசோகர் ஒடிஸ்ஸா அதாவது கலிங்கத்தின் மேல் படை எடுத்தவர். எனினும் ஏன் அவர் பெயர் ஏன்
ஒடிஸ்ஸாவில் சூட்டப் படுகிறது ? அவர் போர் போதும் என நிறுத்திக் கொண்டவர் என்பதும்
வன்முறையால் மனிதர்களை வெல்வதை விட அன்பால் மனித மனங்களை வெல்வதே மேலும் சிறப்பான வழி
என்பதை அனுபவத்தால் உணர்ந்து மனம் திரும்பியவர். கலிங்கம் அவரை மன்னிக்கிறது என்பதற்கு
நான் கண்ட மனிதரின் பெயரே சாட்சி. நான் காணும் நான் உணரும் வரலாறு இப்படிப்பட்டதே
! பயணத்தில் எனக்கு உற்ற துணைவராக இருந்தார். எந்த ரயில் நிலையத்தில் ரயில் நின்றாலும்
உடன் இறங்கிச் சென்று இரண்டு வாட்டர் பாட்டில்களில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வருவார்.
பயணத்தின் நடுநடுவே இவ்விதம் இறங்க எனக்குத் தயக்கமாக இருக்கும். ரயில் கிளம்பிப் போய்
விட்டால் என்ன செய்வது என யோசிப்பேன். அவர் சில நிமிடங்களில் தண்ணீருடன் வந்து விடுகிறார்.
எனக்கு பயணம்
என்பது காட்சிகள். அந்த ஒவ்வொரு காட்சியின் மூலமாக எனது மனம் பல விஷயங்களை அவதானம்
செய்து கொள்ளும். எனது மனத்தின் ஒரு பகுதி அவை இரண்டையும் கவனிக்கும். அவற்றை மனம்
தொகுப்பதும் உண்டு. தொகுத்தே ஆக வேண்டும் என மனதுக்கு எந்த கட்டாயமும் அளிக்க மாட்டேன்.
மனதில் மகிழ்ச்சியை உணர ஆரம்பித்து விட்டாலே நான் காண்பவை இனியவை ஆகி விடும். அசோக்
ஜகன்நாதன் அந்த இனிமையைத் துவங்கி வைத்தார்.
ஆந்திரக் கடற்கரை
1000 கி.மீ நீளம் கொண்டது. இதுவே ஒரு பிரும்மாண்டமான விஷயம். வானியல் முன்னறிவிப்புகள்
ஆகாசவாணியில் ஒலிபரப்பப்படும் போது ஆந்திராவை ராயல சீமா, சீமா ஆந்திரா, தெலங்கானா,
கோஸ்டல் ஆந்திரா என்ற உட்பிரிவுப் பெயர்களுடன் கூறுவார்கள். சிறுவனாக இருந்த போது எனக்கு
ராயலசீமா என்னும் பெயர் மிகவும் பிடிக்கும். ஏன் என்று தெரியவில்லை. அந்த பெயரின் மீது
ஒரு வசீகரம் எனக்கு இருந்தது. ஆந்திர நிலத்தில் ராயலசீமாவில் நான் மோட்டார்சைக்கிளில்
பயணித்திருக்கிறேன். ராயல என்னும் தெலுங்குச் சொல்லுக்கு கற்பாறை என்று பொருள். அங்கிருக்கும்
குன்றுகள் சிறு சிறு கற்பாறைகளால் ஆனவை. அவற்றைக் காணும் எவருக்கும் பெரும் மலைப்பு
ஏற்பட்டு விடும். ராயலசீமா பகுதியின் குன்றுகளின் தொடர்ச்சியை தமிழகத்தில் திருவண்ணாமலை,
வேலூர் மாவட்டங்களிலும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் காணலாம். கடலோர ஆந்திராவும் மிக
நீண்ட ஒரு பிரதேசம். நம் நாட்டுக்கு தென்மேற்கு பருவ மழையும் வட கிழக்கு பருவ மழையும்
மழை தருகின்றன. ஜூன் 1 ம் தேதி தென் மேற்கு பருவ மழை கன்னியாகுமரியில் பொழியத் தொடங்கும்.அங்கிருந்து
அப்படியே முழு கேரளாவும் பெய்து கர்நாடகம், கோவா, மகாராஷ்ட்ரா, குஜராத், ராஜஸ்தான்
வழியாக தில்லி சென்று ஹரித்வார் வழியாக இமயத்தைத் தொடும் வரை தென்மேற்கு பருவ மழை பொழியும்.
நம் நாட்டின் எல்லா நதி உற்பத்தி இடங்களும் தென் மேற்கு பருவமழையால் மழையைப் பெறுப்வை.
அக்டோபர் 1ம் தேதி வட கிழக்கு பருவ மழை தொடங்கும். பாக் ஜல சந்தி அருகே உற்பத்தி ஆகி
தமிழகத்தின் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் தொடங்கி கடலோர தமிழகத்துக்கு மழையைக்
கொடுத்து தொடர்ந்து கடலோர ஆந்திரத்துக்கும் ஒடிஸ்ஸா , மேற்கு வங்கம் மாநிலங்களுக்கும்
வங்கதேசத்துக்கும் மழையைக் கொடுப்பது வட கிழக்கு பருவ மழையே. இந்த பருவ மழையின் போது
தமிழகத்தில் உருவாக்கும் புயல் சின்னங்கள் வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திராவையோ ஒடிஸ்ஸாவையோ
அல்லது மேற்கு வங்காளத்தையோ தாக்கும். கடலோர ஆந்திரப் பிரதேசத்தைப் புரிந்து கொள்ள
வேண்டும் என்றால் வட கிழக்கு பருவ மழையைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகாசவாணியில் வானிலை
அறிக்கை கேட்கும் வழக்கம் எனக்கு இருந்ததால் அதில் கூறப்படும் பல ஊர்களின் பெயரைக்
கொண்டு நான் அவற்றை என் மனதுக்குள் கற்பனை செய்து கொள்வேன். நெல்லூர், ஓங்கோல், விசாகப்பட்டினம்,
தெனாலி, ஸ்ரீகாகுளம் எனப் பல பெயர்கள். இந்த முறை ரயில் பயணத்தில் கடலோர ஆந்திரத்தின்
1000 கிலோ மீட்டரையும் இருமுறை பயணித்துக் கடந்தேன்.
ஆந்திரத்தை
அடைந்த சில மணி நேரங்களில் பெண்ணாறு ஆற்றைக் கடந்தோம். பெண்ணாறை நான் வணங்கினேன். அசோக்
இந்த நதியின் பெயர் என்ன என்று கேட்டார். காவிரி தென்பெண்ணை பாலாறு புது வையை கண்டதோர்
பொருநை நதி என மேவிய ஆறு பல ஓட மேனி செழித்த தமிழ்நாடு என்றான் மூதாதை பாரதி. அவனது
சொற்கள் வழியாகவே நான் காணத் தொடங்கினேன். அவனது உணர்ச்சிகளை அவனது பாட்டின் மூலம்
உணர்ந்தேன். பெண்ணாறு ஆந்திரத்தில் பென்னா என்றும் தமிழகத்தில் தென்பெண்ணை என்றும்
ஓடுகிறது. விஜயவாடாவில் கிருஷ்ணா நதியைக் கடந்தோம். அதனையும் வணங்கினேன். இந்த பயணத்தின்
முக்கியமான கட்டம் என்பது கோதாவரி பாயும் ராஜமுந்திரி என்னும் பிரதேசத்தைக் கண்டது
தான். கம்பன் ‘’சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி’’ என்கிறான். கவிதையின் சொற்கள் பெருக்கெடுத்துப்
பாய்வதைப் போல பாய்ந்து செல்லும் கோதாவரி. கோதாவரிப் பெருக்கைக் கூற கம்பன் ஏன் கவிதைப்
பெருக்கைச் சொல்கிறான்? கவிதைக்கும் நதிக்கும்
ஊற்றுமுகங்கள் கண்ணால் காண இயலாதவை எனினும் பொங்கிப் பிரவகிப்பவை என்பதாலா? ரயில் பெட்டியில்
இருந்த அனைவரும் கோதாவரியை வணங்கினர். கோதாவரி பாயும் பிரதேசத்தில் பலவிதமான விவசாயப்
பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. எனக்கு கோதாவரியில் படகு ஒன்றில் நெடுஞ்தொலைவு பயணிக்க
வேண்டும் என்றும் கோதாவரிக்கரையில் சில வாரங்கள், சில மாதங்களாவது வாழ வேண்டும் என்றும்
ஆசை உண்டானது.
ஆந்திரத்தில்
மிக அதிகமாக அபார்ட்மெண்ட் கட்டுமானப் பணிகள் நடப்பதை இந்த ரயில் பயணத்தில் கண்டேன்.
கிட்டத்தட்ட எல்லா ரயில் நிலையங்களும் பரப்பளவில் பெரிதாகக் கட்டப்படுவதைக் கண்டேன்.
நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வே அடுத்த 50 ஆண்டுகளுக்கு நம் நாட்டின் வரலாற்றில்
முக்கியமானதாக இருக்கும் என்னும் உணர்வு ஏற்பட்டது.
பயணத்தில்
நான் காணும் காட்சிகளும் அடையும் உணர்வுகளும் விதைகளைப் போன்றவை. அவை மனதில் தூவப்படுகின்றன.
ஆழுளத்திலிருந்து அவை என்றாவது ஒருநாள் ஏதாவது ஒரு விதத்தில் முளைக்கக் கூடும். ஒரு
பயணம் அடுத்த பயணத்துக்கான தூண்டுதலாகவும் அமைகிறது. ஒவ்வொரு பயணமுமே நதியில் முழுக்காடுவது
போன்றவையே. மூழ்கும் போது ஒருவராக இருக்கும் நாம் மூழ்கி எழும் போது வேறொருவராகிறோம்.
நிலக்காட்சிகளைக் காண்பதற்கென்றே மேற்கொண்ட இப்பயணம் என்னளவில் எனக்கு மிகவும் முக்கியமானது.
ஒரு மாநிலத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியினை பகல் பொழுதில் ரயிலில் பார்க்கும் வண்ணம்
ரயில் பயணங்களை அடிக்கடி நிகழ்த்த வேண்டும் என்ற ஆவல் உண்டாகியிருக்கிறது !!
Thursday, 26 June 2025
Wednesday, 25 June 2025
நதியறிதல்
நடைப்பயிற்சி செல்லத் துவங்கிய தினத்தில் ஊருக்கு காவிரி நீர் வந்து விட்டது. வெள்ளம் நிரம்ப சென்று கொண்டிருந்தது. நதியில் மூழ்கி எழ வேண்டும் என விரும்பினேன். நதியளவு அகத்துக்கு நெருக்கம் கொண்ட இன்னொருவர் இருக்க முடியுமா எனத் தெரியவில்லை. நதிக்கு வணக்கம். நதிக்கு வாழ்த்து. காவிரி போற்றுதும் !
Monday, 23 June 2025
லௌகிகக் கணக்குகள்
வீட்டில் இரு தென்னை மரங்கள் இருக்கின்றன. அதனால் தேங்காய் எப்போதும் தேவையைக் காட்டினும் மிகையாகவே இருக்கும். தேங்காய் மட்டையை காயவைத்து காலி சிமெண்ட் சாக்குகளில் நிரப்பி வைத்திருப்பர். வீட்டின் பணியாளரிடம் அவற்றை அவர்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று எரிபொருளாகப் பயன்படுத்திக் கொள்ளும் படி கூறுவர். மூட்டையாக இருப்பதால் அந்தப் பெண்மணி தனது மகனை வந்து எடுத்துச் செல்ல கூறுகிறேன் என்று கூறுவார். அந்த நபர் வந்து எடுத்துச் செல்ல சற்று முன் பின் ஆகும். இவை வழக்கமான காட்சிகள். இன்று கடைவீதி வழியே நடந்து சென்று கொண்டிருந்தேன். ஒரு உணவகத்தின் வாசலில் ஒரு தள்ளுவண்டியில் காய்ந்த தேங்காய் மட்டை மூட்டைகள் பலவற்றை இறக்கிக் கொண்டிருந்தனர். குறைந்தது பத்து மூட்டையாவது இருக்கும். உணவகத்தின் பணியாளர் இறக்கிக் கொண்டிருந்தார். அவரிடம் இவற்றை விலைக்கு வாங்குகிறீர்களா என்று கேட்டேன். எங்களிடம் இல்லாத தேங்காய் மட்டைகளா என்றார் அந்த பணியாளர். ஒரு வீட்டில் பயன்படுவதை விட பல மடங்கு தேங்காய் தினமும் தேவைப்படும் இடம் உணவகம். வீட்டில் ஒரு நாளைக்கு நான்கு பேருக்கு உணவு தயாரிப்பார்கள். உணவகத்தில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 300 பேருக்கு உணவு தயாரிப்பார்கள். அவ்விதம் என்றால் அவர்களிடமே உரித்த தேங்காய் மட்டைகள் குவிந்திருக்கும். பின்னர் இந்த மூட்டைகள் எங்கிருந்து வருகின்றன? இந்த கேள்வியை ஆர்வத்துடன் எழுப்பினேன். உணவக உரிமையாளர் வீட்டில் இருந்து வருகின்றன என்று பதில் சொன்னார். ஓர் எளிய காட்சிக்குப் பின்னால் எத்தனை காட்சிகளும் எத்தனை மாந்தர்களும் எத்தனை உணர்வுகளும் எத்தனை செயல்பாடுகளும் இருக்கின்றன என எண்ணிப் பார்த்தேன். வியப்பாக இருந்தது. உணவக உரிமையாளருக்குத் தங்கள் கடையில் அவை மிகுந்து கிடக்கின்றன என்பது தெரியும். எனினும் தங்கள் குடும்பத் தொழிலுக்கு தங்களால் இயன்ற அளவு உதவ வேண்டும் என்ற நோக்கில் உரிமையாளரின் குடும்பத்தினர் அவற்றை சேகரித்து அனுப்பி வைக்கின்றனர். தள்ளுவண்டிக்காரருக்கு நடைக்கூலி கிடைக்கிறது. உணவகப் பணியாளர் ஒருவர் இந்த விஷயத்துக்காக மிகைப்பணி பார்க்கிறார். வழிப்போக்கன் ஒருவனுக்கு வியப்பான காட்சி ஆகிறது. ஒரு பதிவாகவும் ஆகிறது !
Saturday, 21 June 2025
மா & கொய்யா
இன்று காலை கம்மங்களி செய்து உண்டேன். மதியம் வரகரிசிக் கஞ்சி. வரகில் கம்பின் அளவுக்கு பணி கிடையாது. எளிதில் வெந்து விடும். இரவு என்ன உணவு அருந்தலாம் என யோசித்தேன். கடைத்தெருவுக்குச் சென்று ஏதேனும் பழங்கள் வாங்கி வந்தால் என்ன என்று யோசித்தேன். ஒரு பையை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். பழக்கடை ஒன்றில் மூன்று கொய்யாப்பழங்களும் ஒரு மாம்பழமும் வாங்கிக் கொண்டேன். பங்கனப்பள்ளி மாம்பழம். வீட்டுக்கு வந்ததும் ஒரு கொய்யாவும் ஒரு மாம்பழமும் உண்டேன். மாம்பழம் அத்தனை தித்திப்பு. வயிறு நிரம்பிய உணர்வை உண்டாக்கியது. இன்றைய நாள் இனிதே நிறைவு பெற்றது. நாளை காலை 16 கி.மீ நடை செல்ல வேண்டும்.
16 கி.மீ நடை
Thursday, 19 June 2025
ஒரு சுருக்கமான வழி
கம்மங்கூழ் தயாரிப்பதில் உள்ள எல்லா சாத்தியங்களையும் முயற்சி செய்து பார்த்ததில் எனக்கு மிக உகந்த வழி என்ன என்பதைக் கண்டுகொண்டேன். அதாவது ஒரு டம்ளர் கம்பு மாவுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து கரைத்துக் கொள்வது என்பது எளிய வழி என்று தோன்றியது. கம்புமாவு 1 : 1 என்ற விகிதத்தில் முழுமையாக கரைந்து விடுகிறது. தேவையெனில் கட்டிகள் இருந்தால் அவற்றைக் கையால் கரைத்து விட முடிகிறது. அதனை அடுப்பில் வைத்து சூடாக்கும் போது சில நிமிடங்களில் கொதிக்கத் தொடங்குகிறது. களி பதம் வரும் வரை கிண்டிக் கொண்டேயிருக்க வேண்டும். 15 நிமிடத்துக்குக் குறைவான நேரத்தில் கூட பதம் வந்து விடுகிறது. அடுப்பை நிறுத்தி விட்டு களியை ஒரு தட்டைப் போட்டு மூடி வைத்தால் ஒரு மணி நேரம் கழித்து களியின் மேல் நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டால் களியும் தண்ணீரும் மெல்ல வேதிவினை புரிந்து கொண்டிருக்கும். களி ஓரளவு தண்ணீரைக் குடிக்க முயலும். அடுப்பிலிருந்து இறக்கிய போது இருந்த நிலையை விட சற்று மேலான பதத்தை அடைந்திருக்கும். காலையில் களியையும் அதன் மேல் இருக்கும் நீரையும் கரைத்துக் கொள்ளலாம்.
முன்னர் நான் ஒரு டம்ளர் கம்புமாவுக்கு ஐந்து டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொதிக்க வைப்பேன். இதில் உள்ள நன்மை என்னவெனில் 15 நிமிடம் கொதிக்க வைத்து விட்டு அடுப்பை அணைத்து விடலாம். மிக நெருக்கி களி பதம் கிடைக்கும். நீர்மமாகவே இருக்கும். காலையில் அப்படியே அருந்தலாம். இருப்பினும் ஐந்து டம்ளர் தண்ணீர் கொதிக்க சற்று கூடுதல் நேரம் தேவைப்படும். ஒரு டம்ளர் தண்ணீர் சீக்கிரம் கொதிநிலைக்கு வந்து விடும்.
இன்று மாலை 6.30க்கு கம்மங்கூழ் தயாரித்தேன். 15லிருந்து 20 நிமிடங்களில் தயாரித்து விட்டேன். அடுத்த தினத்துக்கான உணவு கையிருப்பு இருக்கிறது என்னும் உணர்வே பெரும் விடுதலையை உணரச் செய்கிறது. காலை 7 மணிக்கு கூழ் அருந்தி விட்டு எங்கேனும் செல்ல வேண்டும் என்று நினைத்தால் ஒரு தண்ணீர் பாட்டிலில் கூழை எடுத்துக் கொண்டு சென்றால் கூட செல்லும் இடத்தில் குடித்துக் கொள்ளலாம். ஒருநாள் பயணங்களுக்கு கூழ் மிகவும் பயன் தரத்தக்கது என்பதைப் புரிந்து கொண்டேன். அவ்விதமாக ஏதேனும் முயன்று பார்க்க வேண்டும்.
இந்த குறுகிய கால அனுபவத்தில் நான் உணர்ந்தது என்னவெனில் கம்மங்கூழ் அருந்தினால் அருந்திய பின் 7 மணி நேரத்துக்கு வயிறு நிரம்பியிருக்கும் உணர்வே இருக்கிறது. அதன் பின்னும் பெரும்பசி இல்லை. காலை 7 மணிக்கு கூழ் அருந்தினால் மாலை 4 மணிக்கு அடுத்த வேளை கூழை அருந்தினால் போதுமானதாக இருக்கிறது. இரவு உணவு தேவைப்படுவதில்லை. ஒருநாளைக்கு இரண்டு வேளை உணவு என்னும் நடைமுறைக்குச் செல்ல இந்த உணவுமுறை பயன் உள்ளதாக இருக்கும் என்று படுகிறது.
Wednesday, 18 June 2025
பன்மை
ஊரில் 120 ஆண்டு காலம் தொன்மையான ஒரு ஓட்டு வீடு இருக்கிறது. அத்தனை தொன்மையான வீடுகள் ஊரில் மேலும் ஒன்றோ அல்லது இரண்டோ இருக்கலாம். அந்த வீட்டில் கூடத்தில் ஒரு அறை மட்டும் கட்டிக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். அந்த வீட்டில் வீட்டு உரிமையாளரும் அவர் மனைவியும் மட்டுமே வசிக்கிறார்கள். இரு குழந்தைகள். இருவருமே அமெரிக்காவில் வசிக்கிறார்கள். பேரக் குழந்தைகள் இப்போது பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். இந்த தம்பதிக்கு வயது எழுபதுக்கு மேல் இருக்கும். அந்த வீட்டின் தொன்மை மாறாமல் அந்த வீட்டில் அறை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். ஆர்வத்தின் காரணமாக மேற்கொண்ட பணி. கடந்த சில நாட்களாக பணியிடமாகிய அந்த வீட்டில் இருப்பதால் அந்த தம்பதியினர் மிகவும் பரிச்சயமாகி விட்டனர். இந்த நாட்களில் நான் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். அந்த தம்பதிகளில் கணவர் தன் மனைவியிடம் பேசும் போது ‘’நீ’’ என ஒருமையில் அழைக்காமல் ‘’நீங்கள்’’ என பன்மையில் அழைத்தார். இது எனக்கு வியப்பளித்தது. எங்கும் நான் அப்படி கண்டதில்லை. அவர்களிடம் ‘’ சார் உங்களை எப்போதும் நீங்கள் என பன்மையில் தான் அழைப்பாரா ?’’ என்று கேட்டேன். வீட்டு மனிதர்களின் முன்னால் ‘’நீ’’ என்று ஒருமையில் அழைப்பார்; வெளி மனிதர்கள் இருந்தால் ‘’நீங்கள்’’ என பன்மையில் அழைப்பார் என்று கூறினார். அப்படியா என்று கேட்டுக் கொண்டேன்.
திருமதுர விருந்து
Monday, 16 June 2025
வரகரிசிச் சோறு
காடறிதல் - 2
அன்னம் - வாசகர் கடிதம்
மூன்று நாட்கள்
மூன்று தினங்களாக எனது உணவை நானே சமைத்து உண்கிறேன். எனது வாழ்வின் பெரும் அறிதல்களில் ஒன்று என சமையலை உணர்கிறேன். ஒட்டு மொத்த மானுடத்துக்கும் கூட அவ்வாறே இருக்கக் கூடும். தானியத்தைக் கொதிக்கும் நீரிலிட்டு அன்னமாக்கிய முதல் மானுடனும் இவ்வாறு உணர்ந்திருக்கக் கூடும். நவீன வாழ்வில் நாம் உணவுக்கென மிக அதிக நேரம் செலவழிக்கிறோம். நம்மைச் சூழ்ந்திருக்கும் உணவுப்பழக்கத்துக்கு நம்மை முற்றிலும் ஒப்புக் கொடுத்து விடுகிறோம். காலை எழுந்தவுடன் தேனீருக்கு பால் தேவைப்படுகிறது. பாலுடன் சர்க்கரை சேர்க்கிறோம். பாலும் சீனியும் வயிற்றில் இருக்கும் சீரண சுரப்பிகளின் ரசாயனத்தை மாற்றியமைக்கக் கூடியவை. சீனி உடனடி குளுக்கோஸாக மாறுகிறது. உடல் அந்த குளுக்கோஸூக்கு ஏங்குவதால் நாம் அவ்வப்போது தேனீர் அருந்துகிறோம். தமிழகத்தில் நாம் அரிசி உணவுக்கு முழுமையாகப் பழகியிருக்கிறோம். ஒரு நாளின் உணவில் அரிசியின் வெவ்வேறு வகை மாதிரிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும். அரிசியை மாவாக அரைத்து அதனுடன் உளுந்தையையும் சேர்த்து மாவாக்கிப் புளிக்க வைத்து அந்த மாவை வேகவைத்து செய்யப்படும் இட்லி, அதே விதமாக சில மாறுதல்களுடன் செய்யப்படும் தோசை, பொங்கல் , மதிய உணவுக்கு அரிசிச் சோறு என ஒவ்வொரு நாளும் அரிசியின் வெவ்வேறு வகைகளை உணவாக உண்கிறோம். அரிசி உணவில் கார்போஹைட்ரேட் அதிகம். உணவில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால் ஏற்படும் உடல்நலச் சிக்கல்கள் நம் சமூகத்துக்கு ஏற்படுகிறது.
நாம் அரிசி உணவைப் பிரதானமாக உண்பதற்கு பல சமூகப் பொருளியல் காரணங்கள் உள்ளன. எனினும் எந்த மனிதனும் தனக்கு எது மிகுந்த நலம் பயக்கும் உணவு என அறிந்திருப்பது வாழ்க்கையின் அடிப்படையான விஷயம் என்று தோன்றுகிறது. நம் சமூகத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை கம்பும் கேழ்வரகும் பெரும்பான்மையானாரோல் உண்ணப்படும் உணவாக இருந்திருக்கிறது. கம்பு உணவும் கேழ்வரகு உணவும் தயாரிக்க எளியவை. அந்த இரண்டு தானியங்களும் தண்ணீரும் மட்டும் இருந்தால் போதும். அவற்றை முழுமையான உணவாக்கிட முடியும். இந்த உணவு தயாரிக்க மிகக் குறைவான நேரம் மட்டுமே தேவைப்படுகிறது. அதிகபட்சம் 30 நிமிடங்கள். ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்துக்குத் தேவையான உணவு தயாராகி விடுகிறது. நமக்கு உகந்த பொழுதில் தயாரித்துக் கொள்ள முடியும். முதல் நாள் இரவு தயாரித்து வைத்துக் கொண்டால் அடுத்த நாள் காலையும் இரவும் பயன்படுத்த முடியும்.
கம்மங்கூழ் குடித்தால் அது முழுமையாக ஜீரணம் ஆக ஆறிலிருந்து எட்டு மணி நேரம் தேவைப்படுகிறது. அதுவரை வயிற்றில் பசி ஏற்படுவது இல்லை. எட்டு மணி நேரம் கழித்தும் பசி மிக லேசாகவே இருக்கிறது. காலை 7 மணிக்கு வயிறு நிறைய கம்மங்கூழ் குடித்தால் அதன் பின் மாலை 5 மணி அளவில் அடுத்த வேளை உணவாக மீண்டும் கம்மங்கூழ் குடித்தால் அந்த இருவேளை உணவுகளே முழு நாளின் இயக்கத்துக்கும் உகந்ததாக இருக்கிறது. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயத் தொழிலாளர்கள் விடிகாலை கூழ் அருந்தி விட்டு விவசாயப் பணிகளுக்குச் சென்றால் மீண்டும் மாலை உணவருந்திருயிருக்கிறார்கள். சென்ற 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் சமூகத்தில் மக்கள் மாதம் ஒருநாள் அமாவாசை தினத்தன்று இட்லி அல்லது தோசை செய்து சாப்பிட்டிருக்கிறார்கள்.
யோக வகுப்புகளில் உணவு குறித்தும் ஒருவேளை உணவுக்கும் இன்னொரு வேளை உணவுக்கும் இருக்க வேண்டிய நேர இடைவெளி குறித்தும் யோகப் பயிற்சிகள் செய்வதற்கு எத்தனை மணி நேரம் முன்பு உணவு உண்டிருக்க வேண்டும் என்பது குறித்தும் தொடர்ந்து வலியுறுத்தப்படும். இந்த மூன்று நாட்களில் அதனை அனுபவபூர்வமாக உணர்கிறேன். சிறு வயது முதல் கம்மங்கூழ் மற்றும் கேழ்வரகுக் கூழ் அவ்வப்போது வீட்டில் செய்யும் போது விரும்பி அருந்தும் வழக்கம் எனக்கு உண்டு. எனினும் முதல் முறை அதனை சமைக்கையில் தானியம் தானியமாகவே இருக்கும் போது அதன் நிலை என்ன மாவாக மாறும் போது எப்படி இருக்கிறது கொதிக்கும் நீரில் இட்டதும் அது ஆகும் நிலை என்ன களி பதத்துக்கு வரும் போது அதனில் நிகழ்வது என்ன என்பதை உடலும் மனமும் முழுமையாக ஈடுபட்டு உள்வாங்கிக் கொள்கிறது. நாமே சமைத்த உணவை நாம் உண்ணும் போது நாம் சமைத்த உணவு நம் உடலுக்குள் எவ்விதமான செயல்களில் ஈடுபடுகிறது என்பதை நம் உள்ளுணர்வு கவனிக்கிறது.
இப்போது என் மனம் வேறு தானியங்களைக் கொண்டு எவ்விதம் கூழ் தயாரிக்கலாம் என யோசிக்கிறது. நவதானியங்களை முளைக்க வைத்து அவற்றை கொதிக்கும் தண்ணீரில் சில நிமிடங்கள் இட்டு வேகவைத்து ஒருவேளை உணவாக அருந்தலாம் என்ற எண்ணம் தோன்றியது.
சுயமாக சமைத்துக் கொள்வதன் மூலம் எனக்கு ஒரு புதிய உலகம் அறிமுகமாகியிருக்கிறது. அந்த உலகம் மகத்தானது.
Sunday, 15 June 2025
காடறிதல் - 1
காடும் காட்டுப்பாதையும் ஒன்றல்ல.
காட்டுப்பாதையும் காட்டுப்பாதையின் இரு மருங்கிலும் தென்படும் காடும் காட்டின் சிறு பகுதி. மிகச் சிறு பகுதி என்றும் சொல்லலாம்.
காட்டுப்பாதை எவ்விதமாகவும் உருவாகியிருக்கலாம். மனிதர்கள் நடந்து உருவான காட்டுப்பாதைகளே அடிப்படையான காட்டுப்பாதைகள். அதன் பின் சகடம் கொண்ட வண்டிகள் செல்லும் பாதைகள் உருவாயின. சகட வண்டிகள் காலத்துக்கு ஏற்றார் போல் மாற்றம் கண்டு வந்திருக்கின்றன.
காட்டுப்பாதையில் நாம் செல்லும் போது நாம் யானைகளைக் காணக் கூடும். குரங்குகளைக் காணக் கூடும். காட்டு அணில்களைக் காணக் கூடும்.
காடு என்பது தீவிரமான அடர்த்தி கொண்ட உயிர்த்தொகை.
ஒரு பதிவு & ஒரு சிறுகதை
சில நாட்களுக்கு முன், ‘’திக்குத் தெரியாத காட்டில்’’ என்ற பதிவினை தளத்தில் எழுதினேன். அதனை ஒரு சிறுகதையாக எழுதிப் பார்க்கலாமா என்று தோன்றியது. சிறுகதையை எழுதத் தொடங்கினேன். கணிசமான பகுதி எழுதிய பின் தளத்தில் பதிவிட்டிருந்த பதிவிலிருந்து சில பகுதிகளை நீக்கி விட்டு பெரும்பாலான பகுதிகளை அப்படியே சிறுகதையில் இணைத்துக் கொண்டேன். கடைசியாக சில பாராக்களை எழுதினேன். சிறுகதை நிறைவு பெற்றது.
பதிவினை ‘’நகைச்சுவைக் கட்டுரை’’ என்று பதிவிட்டிருந்தேன்.சிறுகதையாக எழுதிய போது அதில் வேறு பல பரிமாணங்கள் இணைந்தன.
நான் வியப்படைந்தது பதிவு சிறுகதையில் மிகக் கச்சிதமாகப் பொருந்திக் கொண்டதே ஆகும். எனது அ-புனைவு எழுத்துக்களும் புனைவு எழுத்துக்குரிய தன்மையுடன் இருப்பதாக என்னிடம் கூறப்படுவதுண்டு.
இந்த சிறுகதை எழுதப்பட்டதில் இத்தனை எதிர்பாராமைகளும் வியப்புகளும் இருந்தது என்னை மிகவும் மகிழச் செய்தது.
Saturday, 14 June 2025
அன்னம்
இன்று என் வாழ்வின் முக்கியமான நாள். இன்று நான் மேற்கொண்ட முயற்சி எனக்கு பலவிதங்களில் பெரும்பயன் அளிக்கக்கூடியது. நான் இன்று பெருமகிழ்வையும் பெரும் அகவிடுதலையையும் உணர்கிறேன். இன்று சுடர்ந்திருக்கும் தீபத்தை என்றும் அணையாமல் காப்பேன்.
வீட்டில் எல்லோரும் ஊருக்குச் சென்றிருக்கிறார்கள்.
இன்று மதியம் எனது உணவை நானே சமைத்துக் கொண்டால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. இதுநாள் வரை எனக்கு உணவை சமையல் செய்த பழக்கம் இல்லை. அடுப்பின் முன் பல நிமிடங்கள் நின்றிருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததேயில்லை. அல்லது அந்த வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளாமல் இருந்திருக்கிறேன்.
கம்பு, கேழ்வரகு ஆகிய இரு தானியங்களை மட்டும் உணவாக எடுத்துக் கொள்ளும் எளிய உணவுமுறைக்கு மாற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. கர்நாட்க மாநிலத்தில் கம்பும் கேழ்வரகும் மிகவும் விரும்பப்படும் உணவுகள்.
இன்று மதியம் கடைக்குச் சென்று கம்பு மாவு அரை கிலோ வாங்கி வந்தேன். அடுப்பை சுடரச் செய்து அதன் மேல் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஐந்து டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொண்டேன். தண்ணீர் சில நிமிடங்களில் கொதிக்கத் தொடங்கியது. அதில் கல் உப்பை போட்டுக் கொண்டேன். பின்னர் ஒரு டம்ளர் கம்பு மாவை அதில் கலந்தேன். ஒரு கரண்டி மூலம் தொடர்ந்து கலக்கி விட்டுக் கொண்டேயிருந்தேன். 15 நிமிடம் இவ்விதம் தொடர்ந்து கலக்கி விட்டுக் கொண்டேயிருந்தேன். 10 நிமிடத்திலேயே கம்பு மாவு களி பதத்துக்கு வந்தது. மேலும் 5 நிமிடங்கள் கலக்கி விட்டேன். அடுப்பின் நெருப்பை 15 நிமிடமும் சன்னத்திலேயே வைத்திருந்தேன். அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை வெளியே எடுத்து மூடி வைத்தேன். 15 நிமிடம் ஆறியதும் அதன் மேல் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி மேலும் ஆறவைத்தேன். இது 6 மணி நேரம் மேலும் ஆற வேண்டும். எனினும் தேவை கருதி உடன் அருந்தவும் செய்யலாம்.
சமையல் செய்து கொண்டிருக்கும் போதே தீவிரமான பசி இருந்தது. உணவு அருந்தும் மேஜையின் மேல் நான் சமைத்த உணவைக் கொண்டு வந்து வைத்தேன்.
அதனைத் தொட்டு வணங்கினேன். இத்தனை ஆண்டுகளாக இவ்வாறான முறைகளால் ஆக்கப்பட்ட உணவுதான் உயிரைக் காத்துள்ளது ; உடலை வளர்த்துள்ளது என நினைத்த போது என் கண்களில் நீர் துளிர்த்தது.
பசி தீவிரமாக இருந்தது.
கம்மங்கூழைப் பருகத் தொடங்கினேன். மேலும் உப்பு தேவை என்று தோன்றியது. சேர்த்துக் கொண்டேன். முழுமையாகப் பருகினேன். இன்னும் கொஞ்சம் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. முக்கால் வயிறு நிரம்பி இன்னும் கால் வயிறு தேவை என்னும் நிலையில் உணவு முழுமையாகத் தீர்ந்திருந்தது. சமையலுக்குப் பயன்படுத்திய பாத்திரங்களை நீரால் கழுவி வைத்து விட்டு வந்தேன்.
சமையலுக்குத் தேவையான கலன்களையும் உணவுப் பொருள்களையும் எடுத்து வைத்தல், அடுப்பை சுடரிட்டு சமையல் செய்தல், உணவு உண்ணல், உண்ட பாத்திரங்களை கழுவி வைத்தல் ஆகியவை ஒரே செயலின் வெவ்வேறு நிலைகள் என்ற எண்ணம் தோன்றியது. இன்றைய நாள் முழுவதும் பரவசமாக இருந்தது.
மகாபாரதத்தில் யக்ஷப் பிரசன்னத்தில் யக்ஷன் கவலை இல்லாத மனிதன் யார் என்று கேட்க யுதிர்ஷ்டன் எந்த மனிதன் தனது உணவை தானே சமைத்துக் கொள்கிறானோ அவனே கவலை இல்லாதவன் என்று கூறுகிறான்.
இன்றைய அனுபவத்தின் பின் இனி எனது உணவை நானே சமைத்துக் கொள்வேன் என எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
Thursday, 12 June 2025
திக்குத் தெரியாத காட்டில் ( நகைச்சுவைக் கட்டுரை)
Tuesday, 10 June 2025
திறப்பு
Monday, 9 June 2025
பிச்சாண்டி
Saturday, 7 June 2025
மிக அவசரம் ( நகைச்சுவைக் கட்டுரை)
நண்பர் ஒருவர் வெளியூர்க்காரர். இங்கே அவருக்கு இரண்டு கிரவுண்டுக்கும் கூடுதலான அளவுள்ள மனையை வாங்கிக் கொடுத்திருக்கிறேன். அவரது மனையின் ஆவணங்கள் வங்கிக்கு அளிக்கப்பட்டு அவற்றின் பேரில் கடன் பெறப்பட்டுள்ளது. நண்பர் ஆவணங்களின் நகல் என்னிடம் இருந்தது. நான் எல்லா அசல் ஆவணங்களையும் ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டேன். நேற்று இரவு 7.55க்கு நண்பரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி என்னுடைய அலைபேசிக்கு வந்தது. அதாவது, மனையின் ஆவணங்களின் நகல் வருமான வரி தாக்கலுக்காக அவருக்குத் தேவைப்படுகிறது. எனவே உடன் கூரியரில் அனுப்புமாறு கேட்டிருந்தார். விஷயம் மிக அவசரம் எனக் குறிப்பிட்டிருந்தார். அடுத்த நாளான சனிக்கிழமையான இன்று தான் கூரியர் அனுப்ப முடியும். அது அவருக்கு திங்களன்று கிடைக்கும். நான் ஸ்கேன் செய்து சேமித்து வைத்திருந்த ஆவணங்களை அவருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினேன். மிக அவசரம் என்பதால் அவர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்வார் என. எனவே மின்னஞ்சல் அனுப்பப்பட்ட விபரத்தை குறுஞ்செய்தியில் தெரிவித்தேன். கொஞ்ச நேரத்தில் நண்பரிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. ‘’நான் உங்களை கூரியரில் அனுப்பச் சொன்னேன்’’ என்றார். ‘’ரொம்ப அவசரம்னு மெசேஜ் செஞ்சீங்க. அதனால தான் மெயில் போட்டேன். உங்க மெசேஜ் வந்தப்ப நேரம் நேத்து நைட் 8 மணி. அதுக்கு மேல கூரியர் அனுப்ப முடியாது. சனிக்கிழமை புக் பண்ணா நடுவுல ஞாயிறு லீவு. திங்கட்கிழமைதான் உங்க கைக்கு கிடைக்கும். அது உங்களுக்கு ஓ.கே னா எனக்கும் ஓ.கே.’’ என்றேன்.
Wednesday, 4 June 2025
கவசம்
நான் தினமும் கணிசமான தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் வழக்கம் கொண்டவன். இருபத்து ஏழு ஆண்டுகளாக இரு சக்கர வாகனத்தை இயக்குகிறேன். நான் வாகனம் இயக்கத் துவங்கிய நாட்களில் இருந்த சாலை அமைப்பும் சாலையில் செல்லும் வாகன அளவும் இன்று இல்லை. சாலைகள் அகலமாகி உள்ளன. சாலையில் செல்லும் வாகன அளவு அதிகரித்து உள்ளது. என் மீது அக்கறை கொண்ட நண்பர் என்னை இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்து பயணிக்குமாறு கேட்டுக் கொண்டார். அவர் கூறி சில வாரங்கள் ஆகின்றன. இன்று என் அறையின் பரணில் இருந்த ஹெல்மெட்டை வெளியே எடுத்து பைக்கில் பயணிக்கும் போது அணிந்து சென்றேன்.
சில ஆண்டுகளுக்கு முன்னால், ‘’காவிரியிலிருந்து கங்கை வரை’’ பயணித்த போது பயணத்தின் எல்லா நாட்களும் ஹெல்மெட் அணிந்திருந்தேன். தன் மண்ணின் எல்லா பிராந்தியங்களிலும் அமைதியாக சகஜமாக பயணிக்கும் வாய்ப்பை நாடு வழங்கியிருக்கிறது ; அந்நாட்டின் மகனாக பயணியாக நாடு வகுத்திருக்கும் போக்குவரத்து விதியைப் பின்பற்ற வேண்டும் என்ற உணர்வின் மேலீட்டால் பயண நாட்கள் முழுமைக்கும் ஹெல்மெட் அணிந்தேன்.
முதல் நாள் ஹெல்மெட் அணியும் போது உடலுக்கு பாரமான ஒன்று உடலுடன் இருப்பதாகத் தோன்றும். வெளி ஓசைகள் எதுவும் இல்லாதது போல் ஆகி விடும். இருப்பினும் சில மணி நேரங்களில் உடல் பழகி விடும் ஹெல்மெட் உடலின் ஒரு பகுதி என உடலும் மனமும் ஏற்றுக் கொள்ளும்.
இன்று அணிந்த ஹெல்மெட் சென்ற ஆண்டு புதிய இரு சக்கர வாகனம் வாங்கிய போது அந்த வாகனத்துடன் வழங்கப்பட்ட ஒன்று. இன்று அதனை அணிந்ததும் ‘’காவிரியிலிருந்து கங்கை வரை’’ பயணம் நினைவில் எழுந்தது. அந்த பயணத்தின் மனநிலையும் உருவானது.
இன்றும் ஓசைகள் இல்லாமல் போய் விட்டதாக ஒரு எண்ணம். மெல்ல வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்தேன் ஹெல்மெட்டுடன்.
Monday, 2 June 2025
ஒரு புதிய வாரம்
லௌகிகமாக ஒரு வாரம் என்பது திங்கள்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைகிறது. ஒருநாள் அல்லது இரண்டு நாள் வார இறுதி விடுமுறைக்குப் பின் திங்கள்கிழமையில் மீண்டும் பணிகள் தொடங்கும் என்பதால் திங்கட்கிழமை காலை என்பது மிகவும் பரபரப்பு கொண்டதாக இருக்கக்கூடியது. எல்லா விதமான தொழில் புரிபவர்களுக்கும் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை காலை நல்விதமாக இருந்தால் அந்த வாரம் முழுவதும் நன்றாக இருக்கும் என்னும் நம்பிக்கை உண்டு.
இந்த வாரம் மூன்று மாதங்களுக்கு முன்னால் விண்ணப்பித்த நண்பர் நிலத்தின் தனிப்பட்டா கைக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எங்களுக்கு அது முக்கியமான ஆவணம். எங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அது தேவை. ஓரிரு நாட்களுக்குள் எங்களுக்கு அந்த பணி செய்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு மூன்று மாதங்கள் ஆக்கியிருக்கிறார்கள். அப்படியும் இன்னும் கைக்கு வரவில்லை. வாரத்தின் முதல் நாளான திங்களன்று கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
பேச்சுவார்த்தைகள் மூலம் முக்கிய கட்டத்துக்கு கொண்டு வந்த வணிகங்களை ஒப்பந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். நிறைய பணிகள் இந்த வாரம் இருக்கின்றன.
Sunday, 1 June 2025
அந்த புத்தகத்தை அங்கேயே வைத்து விடுங்கள் (நகைச்சுவைக் கட்டுரை)
நண்பர் புத்தகங்கள் சூழ இருப்பவர். அவரது வீட்டுக் கூடத்தில் அவரது எழுது மேஜையில் மேலும் புத்தகங்களுக்காக ஒதுக்கியுள்ள புத்தகப் பரண்கள் கொண்ட அறையில் என எங்கும் புத்தகங்கள் இருந்தன. அவருடன் கூடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது யுவால் நோவா ஹராரியின் ‘’சேப்பியன்ஸ்’’ புத்தகம் கண்ணில் பட்டது. அவரது அலுவலக அறையில் கண்ட புத்தகத்தின் பிரதிகள் அவரிடம் 4 இருப்பதைக் கண்டேன். ஒரு பிரதியை படித்து விட்டுத் தருகிறேன் என எடுத்து வந்து உடன் வாசித்து விட்டு அடுத்த சில நாட்களில் அவரைக் காணச் சென்ற போது அவரிடம் அதனை திருப்பிக் கொடுத்து விட்டேன். என்னிடம் இருக்கும் 1000 க்கும் மேற்பட்ட புத்தகங்களை வைத்திருக்கும் புத்தக அலமாரி வீட்டில் என்னுடைய அறையில் இருக்கிறது. எனது அறை மாடியில் இருப்பதால் என் புத்தக அலமாரி யார் கண்ணிலும் படாது. நானாக அழைத்துச் சென்று காட்டினால் தான் உண்டு. நண்பர் வீட்டில் இருந்த புத்தகங்களை முழுமையாகக் காண வேண்டும் என விரும்பினேன். இருப்பினும் எனது ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். ஒருநாள் என் கட்டுப்பாட்டைத் தளர்த்தி அவரது புத்தகப் பரண்களைத் துழாவினேன். நண்பரிடம் நுண்கலைகள் தொடர்பான புத்தகங்கள் அதிகம் இருக்கின்றன என்பதை அவதானித்தேன். தமிழகத்தில் நவீன இலக்கியம் வாசிப்பவர்கள் எண்ணிக்கை 1000 என ஒரு கணக்கீடு உண்டு. நவீன இலக்கிய நூல்களைப் பிரசுரிக்கும் பதிப்பகங்கள் 1000 பிரதிகள் அச்சிட்டு அத்தனை பிரதிகளையும் 5 லிருந்து 7 ஆண்டுகளில் விற்பனை செய்து முடிப்பார்கள். எனவே நவீன இலக்கியத்தை 1000 பேர் வாசிப்பதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. தமிழகத்தின் மக்கள்தொகை 7 கோடி. அதில் புத்தகம் வாசிப்பவர்கள் 1000 பேர். ஒரு ஊரில் ஒரு லட்சம் பேர் வசித்தால் அதில் ஒருவர் நவீன இலக்கியம் வாசிக்கிறார் என்று பொருள். இலக்கியத்தின் நிலைமை இவ்விதம் என்றால் நுண்கலை நூல்களை வாசிப்பவர் எண்ணிக்கை இலக்கியம் வாசிப்பவர் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பாகமாக இருக்க வாய்ப்பு மிக மிக அதிகம். நுண்கலை நூல்களை நண்பர் அதிக எண்ணிக்கையில் வாசித்திருக்கிறார். புத்தகப் பரணில் இருந்து சோழர் கால சிற்பங்கள் குறித்த நூல் ஒன்றை எடுத்து வந்து நண்பர் முன் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். நண்பர் ஆர்வத்துடன் அந்த நூல் குறித்து என்னிடம் கூறினார். பின்னர் ‘’அந்த புத்தகத்தை அங்கேயே வைத்து விடுங்கள்’’ என்றார். நண்பர் பரவாயில்லை. புத்தகங்களைக் கண்ணில் படும் படி வைத்து எவரேனும் எடுத்தால் நிறைய நேரம் அமைதியாய் இருந்து விட்டு கடைசியில் புத்தகத்தை எடுத்த இடத்தில் வைத்து விடுங்கள் என பணிவுடன் விண்ணப்பிக்கிறார். நான் என் புத்தக அலமாரியை எவருக்கும் காட்டுவதே இல்லை!