Saturday, 18 October 2025
நெடுஞ்சாலை புளியமரங்கள்
Friday, 17 October 2025
ஸ்கைலேப்
வீட்டில் இருந்து 1 கி.மீ தொலைவில் மரங்கள் அடந்த ஒரு பகுதி இருக்கிறது. நன்கு வளர்ந்த 5 புங்கன் மரங்கள் அங்கு உண்டு. அதில் 3 மரங்களின் கீழே ஒரு சிமெண்ட் பெஞ்ச் அமைக்கப்பட்டுள்ளது. மதிய நேரத்திலோ மாலை நேரத்திலோ நான் அங்கு சென்று சிறிது நேரம் அமர்வேன். இன்று அமர்ந்திருந்த போது என்னருகே ஒருவர் வந்து அமர்ந்தார். அவர் ஊரிலிருந்து 10 கி.மீ தொலைவில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர். தீபாவளி கொண்டாட்டத்துக்குத் தேவையான பண்டங்களை வாங்க இங்கே வந்திருக்கிறார். அவரிடம் எதிரில் இருக்கும் மரத்தில் சில பகுதிகளில் படர்ந்திருக்கும் மஞ்சள் நிறத்தில் பூ கொண்ட கொடியைக் காட்டி ‘’ அந்த கொடி என்ன அண்ணன்?’’ என்ற அறிவினாவைக் கேட்டு உரையாடலைத் தொடங்கினேன். மரத்தில் அவ்விதம் படர்ந்திருக்கும் கொடி புள்ளுருவி என்பதை நான் அறிவேன். உரையாடலைத் துவங்கும் முகமாக அவ்விதம் கேட்டேன்.
‘’அது புள்ளுவி தம்பி’’ என்றார் அவர்.
‘’அப்படினா?’’
‘’இது மரத்துல வளர்ற கொடி . பறவைகள் உடம்புல இதோட விதை ஒட்டிகிட்டு மரத்துக்கு மரம் போகும். இந்த புள்ளுவி மண்ணுல வளராது. மரத்துல ஒட்டிட்டு மரத்தோட தண்டுல இருந்து சத்தை எடுத்துக்கிட்டு வளரும். புள்ளுவி ஒரு மரத்தில பாஞ்சுட்டா அது அந்த மரத்தையே அழிச்சிடும். மரத்தில இருக்கற புள்ளுவியை மட்டும் அழிச்சா போது அது இருக்கற மரக்கிளையையே வெட்டி விட்டுற்றணும். அப்ப தான் மரம் பிழைக்கும். ‘’
’’ஓகோ அப்படியா’’
பின்னர் அவருடைய கிராமம் எது என்று கேட்டேன். அவர் கிராமத்தின் பெயரைச் சொன்னார். அந்த கிராமத்துக்கு நான் சென்றிருக்கிறேன். அந்த நினைவுகளை அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.
’’உங்க பேர் என்ன அண்ணன்?’’
‘’ஸ்கைலேப்’’
எனக்கு இந்த பெயர் புதிதாக இருந்தது. நான் யோசித்துப் பார்த்தேன். பைபிளில் இந்த பெயர் இருக்கிறதா என என் மனம் துழாவியது. ஒன்றும் பிடி கிடைக்கவில்லை.
‘’உங்க பேருக்கு என்ன அர்த்தம் அண்ணன்?’’
‘’இது அமெரிக்காவோட ராக்கெட் ஒண்ணோட பேரு. நான் 1979வது வருஷம் பிறந்தேன். அந்த வருஷத்துல அமெரிக்கா இந்த ராக்கெட்டை விண்வெளிக்கு ஏவுச்சு. ஆனா அந்த ராக்கெட் ஃபெயிலியர் ஆகி கடல்ல விழுந்துடுச்சு. அப்ப இது ஒரு பெரிய செய்தியா இருந்துச்சு. அதனால எனக்கு அந்த ராக்கெட்டோட பேர வச்சிட்டாங்க.’’
எனக்கு அவர் சொன்ன தகவல் மிகவும் புதிதாக இருந்தது.
‘’உங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து நீங்க உங்க பேர் கேட்கப்பட்டு சொல்லப்படற ஒவ்வொரு தடவையும் நீங்க ஒவ்வொருத்தர்கிட்டயும் இந்த விளக்கத்தைக் கொடுத்திட்டே இருக்கீங்க இல்லையா?’’
‘’ஆமாம் தம்பி 46 வருஷமா என் பேருக்கு விளக்கம் சொல்லாத நாள் கிடையாது’’
‘’நீங்க கிருஸ்தவரான்னு எல்லாரும் கேப்பாங்களே?’’
‘’ஆமாம் தம்பி’’
நான் கேட்டேன் : ‘’நீங்க கிருஸ்தவரா?’’
‘’இல்ல தம்பி . ஹிந்து’’
‘’உங்களுக்கு பொன்னு பாத்தப்ப இந்த விளக்கம் எல்லாருக்கும் கொடுத்திருப்பீங்களே’’
‘’ஆமாம் தம்பி. பொன்னு வீட்டுக்காரங்களை சமாளிக்கறது பெரிய வேலை ஆயிடுச்சு.’’
’’உங்களுக்கு எட்வின் ஆல்ட்ரின் தெரியுமா?’’
அவர் யோசித்தார்.
‘’நிலவுக்கு அமெரிக்கா ஒரு விண்கலத்தை அனுப்புச்சு. அதுல போனவங்க ரெண்டு பேர். எட்வின் ஆல்ட்ரின் , நீல் ஆம்ஸ்ட்ராங். ஆக்சுவலா எட்வின் ஆல்ட்ரின் தான் கேப்டன். அவர் தான் விண்கலம் நிலவுக்குப் போனதும் நிலவுல முதல் காலடி எடுத்து வச்சிருக்கணும். ஆனா அவர் தயங்கிட்டார். அதனால நீல் ஆம்ஸ்ட்ராங் தன்னோட காலடியை நிலவுல வச்சார். இதன் மூலமா நிலவுல கால் வச்ச முதல் மனுஷனா நீல் ஆம்ஸ்ட்ராங் ஆனார். நீல் ஆம்ஸ்ட்ராங் சொன்னார் : ‘’என்னோட ஒரு சின்ன காலடி. ஆனா மனுஷகுலத்துக்கு இது மிகப் பெரிய பாய்ச்சல்''
ஸ்கைலேப் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.
''கொஞ்ச வருஷம் முன்னாடி நாம விக்ரம் லேண்டரையும் பிரக்ஞான் ரோவரையும் நிலாவுக்கு அனுப்பினோம்.’’
’’ஆமாம் சார் நான் வீடியோ பார்த்தன்.’’
‘’உங்க பேருக்கு அர்த்தம் கேக்கப்படற ஒவ்வொரு தடவையும் நீங்க மனிதனோட விண்வெளி முயற்சிகள் பத்தி கேக்கறவங்களுக்கு எடுத்துச் சொல்லுங்க. அந்த பரப்புரைக்கு அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் வாய்ப்பா பயன்படுத்திக்கீங்க’’
ஸ்கைலேப் சிரித்தார்.
’’உங்களுக்கு இந்த பேரை வச்சுது யாரு?’’
‘’என்னோட சித்தி சார்’’
‘’அவங்க நியூஸ் பேப்பர் படிக்கற வழக்கம் உள்ளவங்களா?’’
‘’ஆமாம் சார் எப்போதும் ஏதாவது படிச்சுக்கிட்டே இருப்பாங்க’’
ஸ்கைலேப்பின் சித்தி குறித்த உளச்சித்திரம் ஒன்றை கற்பனையில் எழுப்பிக் கொண்டேன். யோசித்துப் பார்த்தால் ஸ்கைலேப் ராக்கெட் இலக்கை எட்டவில்லை ; தனது பயணத்தில் பாதியில் திசைமாறி ஆஸ்திரேலியா அருகே இந்தியப் பெருங்கடலில் விழுந்து விட்டது. இருப்பினும் சித்தி அதனை தோல்வியின் சின்னமாகப் பார்க்கவில்லை ; முயற்சியின் சின்னமாகப் பார்க்கிறார். அது ஒரு ஆக்கபூர்வமான பார்வை என்று எனக்குப் பட்டது. அந்த சித்தியை ஒரு கதாபாத்திரமாக எழுத வேண்டும் என்ற எண்ணம் உருவானது.
சகவாசம் (நகைச்சுவைக் கட்டுரை)
எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். நானாவித அலுவல்களில் ஈடுபடுபவர். காலை 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தொடர்ச்சியாக ஏதேனும் பணிகளில் ஈடுபட்டிருப்பார். எனக்கு அவரை 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தெரியும். 30 ஆண்டுகளாக அவர் அப்படித்தான். அவரது அலைபேசிக்கு அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கும். அனைத்துக்கும் அவர் பதிலளிப்பார். எவ்வளவு கறாராக கணக்கிட்டாலும் அவருக்கு ஒரு நாளைக்கு 30 அழைப்புகளாவது வரும் ; அவர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 30 அழைப்புகளாவது மேற்கொள்வார். இது என்னுடைய கணக்கீடு. நண்பரிடம் கேட்டால் இதற்கு மூன்று மடங்கு எனக் கூறக் கூடும் ! ஏகப்பட்ட அலைபேசி அழைப்புகள் வருகின்றனவே என்று அவர் சலிப்பு அடைந்ததில்லை ; எல்லா அழைப்புகளுக்கும் மிகப் பொறுமையாக பிரியமாக பதிலளிப்பார். அழைப்புகள் தவறிய அழைப்புகளாக இருந்தால் ஒவ்வொன்றுக்கும் மீண்டும் அழைத்துப் பேசுவார். கடந்த ஒரு வருடமாக நானும் அவரும் வாரத்துக்கு ஒரு நாளாவது சந்திக்கிறோம். அவரிடம் இருப்பது ஐ-ஃபோன். என்னிடம் இருப்பது சாதாரண ஜி.எஸ்.எம் அலைபேசி. தொழில்ரீதியில் ஸ்மார்ட்ஃபோன் வைத்துக் கொள்வது ஆவணங்கள், வரைபடங்கள், இட அமைவுகள் ஆகியவற்றை அனுப்ப பெரும் உதவியாய் இருக்கும் என்பதை மிக மென்மையாய் எனக்கு சுட்டிக் காட்டினார். அவர் நயத்தக்க நாகரிகம் கொண்டவர். எதையும் எவரிடமும் வற்புறுத்த மாட்டார் ; ஒருவர் பிறர் சொல்லி கேட்பதை விட தானாகவே யோசித்தோ உணர்ந்தோ எடுக்கும் முடிவு சிறப்பானது எனப் புரிந்தவர். நான் அவரிடம் என்னிடம் ஜி.எஸ்.எம் அலைபேசியும் கணிணியும் இருப்பதால் மேற்படி விஷயங்களை மேலாண்மை செய்து விடுகிறேன் எனக் கூறினேன். உண்மையில் நான் இப்போது தீவிரமாகச் சிந்திப்பது இந்த ஜி.எஸ்.எம் ஃபோன் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டு லேண்ட் லைன் தொலைபேசியை பயன்படுத்தலாமா என்பதைக் குறித்தே. நான் அவரிடம் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டைக் குறைக்கச் சொல்லி சொல்வேன். ‘’சார் ! எல்லாத்தையும் விட நமக்கு நம்ம மனநிலையும் உடல்நிலையும் முக்கியம் சார். நாம ஒவ்வொரு டயத்துல ஒவ்வொரு மாதிரியா இருப்போம். மனுஷ வாழ்க்கையோட அமைப்பு அந்த மாதிரி. நீங்க எந்த வெளித் தொந்தரவும் இல்லாம 30 நிமிஷம் பூஜை அறையில சாமி கும்பிடனும்னு நினைப்பீங்க. குழந்தைகளோட விளையாடணும்னு நினைப்பீங்க. எந்த விஷயத்தைப் பத்தியாவது முக்கிய முடிவு எடுக்கணும்னு அமைதியா யோசிப்பீங்க. இந்த மாதிரி மனநிலைகளை இன்ஃபுளூயன்ஸ் செய்யறது மாதிரி ஏதாவது ஃபோன் வரும். உங்க நம்பர் ஆயிரம் பேர்ட்டயாவது இருக்கும் ( நண்பர் சொன்னார் : ’’ஆயிரமா என்னப்பா இவ்வளவு கம்மியா சொல்ற. மினிமம் 10,000 பேர்ட்டயாவது என் நம்பர் இருக்கும்’’ ) யார் நம்மகிட்ட பேசப் போறாங்கன்னு நமக்குத் தெரியாது. வர்ர ஃபோன் கால் சாதாரணமா இருக்கலாம். பேசறவங்க அவங்க சொந்த சிக்கல் எதையாவது சொல்வாங்க. நம்ம மனநிலையை ரொம்ப ஸ்லைட்டா அது இன்ஃபுளூயன்ஸ் பண்ணா கூட மனசோட கிரியேட்டிவிட்டிக்கு அது பெரிய இடைஞ்சல். நீங்க ஃபோனை கம்மியா யூஸ் பண்ணனும் நினைக்க ஆரம்பிங்க சார். நீங்க இப்படி நினைக்க ஆரம்பிச்சாலே யூசேஜ் குறைஞ்சிடும்’’ என அவரிடம் கூறினேன். அவர் மிக நாசூக்காக ஸ்மார்ட்ஃபோன் வைத்துக் கொள்வது தொழில்ரீதியாகப் பயன் உள்ளது என்பதை மெல்லக் கூறுவதும் நான் அவருக்கு தடாலடியாக ஃபோன் பயன்பாட்டைக் குறையுங்கள் என்று சொல்வதும் நடக்கும். கடந்த ஒரு மாதமாக நண்பரின் ஃபோனுக்கு அழைத்தால் அவ்வப்போது ஃபோன் சுவிட்ச் ஆஃப் என்று தகவல் தெரிவிக்கிறது அலைபேசி நிறுவனம். பொதுவாக ஒருவருக்கு ஃபோன் செய்து அவருடைய ஃபோன் சுவிட்ச் ஆஃப் ஆக இருந்தால் ஃபோன் செய்பவருக்கு சிறு சோர்வு உருவாவது இயல்பு ; ஆனால் எனக்கு நண்பரின் ஃபோன் அவ்வப்போது சுவிட்ச் ஆஃப் ஆவது நல்ல விஷயமே என்னும் மகிழ்ச்சி உருவானது.
தண்டவாளப் பாதை
இடையே இருக்கிறது
தண்டவாளப் பாதை
கிரிக்கெட் பந்து
கடந்து செல்கிறது
தண்டவாளப் பாதையை
இப்படியும்
அப்படியும்
இப்படியும் அப்படியும்
செல்லும் ரயில்கள்
போன
பிறகு
Thursday, 16 October 2025
சின்னஞ் சிறு பெண்
எனக்கு சிதம்பரத்தில் ஒரு நண்பர் இருக்கிறார். அவருக்கும் எனக்கும் பல வருடப் பழக்கம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட அவரை மூன்று மாதத்துக்கு ஒருமுறையாவது சந்திப்பேன். கோவிட்டுக்குப் பின் அவரைச் சந்திப்பது மிகவும் குறைந்து விட்டது. நான் ஒருவரை அடிக்கடி சந்தித்தாலும் நீண்ட நாள் சந்திக்காமல் இருந்தாலும் உணர்வுநிலையில் ஒன்றாகவே இருப்பேன். சந்திக்காமல் இருந்ததால் எந்த இடைவெளியையும் நான் உணர மாட்டேன். அவருக்கு மூன்று குழந்தைகள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் குழந்தைகள். இப்போது மூத்த பையன் அமெரிக்காவில் சட்ட மேற்படிப்பு படிக்கிறான். இரண்டாவது பையன் சட்டக்கல்லூரியில் இறுதி ஆண்டு பயில்கிறான். நண்பரின் மகள் சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். நண்பரின் மகளை சின்னஞ் சிறு பெண்ணாகப் பார்த்தது. மிக மெல்லிய கீச்சுக்குரல் அப்பெண்ணுக்கு நான் பார்த்த போது. மூன்று குழந்தைகளின் கல்வியிலும் நண்பரை விட நண்பரின் மனைவி மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டார். குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி கிடைப்பதை ஓர் அன்னையாக உறுதி செய்ய வேண்டும் என்ற தீரா வேட்கை கொண்டவர் அவர். மூன்று குழந்தைகளையும் அவர் காரில் பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவார். பின்னர் பள்ளியிலிருந்து அழைத்து வருவார். சிறப்பு வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வார். இசைப் பயிற்சிக்கு அழைத்துப் போவார். கோடை விடுமுறை நாட்களிலும் கலையோ நுண்கலையோ குழந்தைகள் பயில வேண்டும் என முனைப்புடன் செயல்படுவார். நண்பர் இந்த விஷயங்களில் பெரிதாக தலையிட மாட்டார். இன்று நண்பரின் மகள் நான் அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்த போது சட்டக் கல்லூரியிலிருந்து தனது தந்தையிடம் பேசினார். கணீர் குரல். வழக்கறிஞர்களுக்கேயுரிய தொனி. ‘’கீச்சுக்குரல்ல பேசிக்கிட்டு இருந்த குழந்தையா சார் இப்ப அட்வகேட் மாதிரி பேசுது’’ என்றேன். நண்பருக்கு மிகுந்த மகிழ்ச்சி.
நண்பர் தன் மகள் தமிழ் , ஆங்கிலம், சமஸ்கிருதம், தெலுங்கு, ஹிந்தி, ஜெர்மன் ஆகிய ஆறு மொழிகள் அறிந்தவர் என்று கூறினார். எனக்கு பெருவியப்பாக இருந்தது. தனது சுய ஆர்வத்தின் விளைவாக இத்தனை மொழிகளையும் கற்றுக் கொண்டார் என சொன்னார் நண்பர். மேலும் தனது மகள் சிறு குழந்தையாயிருந்த நாளிலிருந்து தினமும் குமரகுருபரரின் ‘’சகலகலாவல்லி மாலை ‘’ நூலை மாட்டுக் கொட்டகையில் அமர்ந்து பாராயணம் செய்து பசுவை வலம் செய்து பின் அடி பணிந்து வணங்கும் கொண்டவர் என்றும் கூறினார். தமிழகத்திலிருந்து ஆன்மீகப் பணியாற்ற காசி சென்ற ஸ்ரீகுமரகுருபரர் ஹிந்தியை விரைவாகப் பயில கல்விக் கடவுள் சரஸ்வதியைப் போற்றி ‘’சகலகலாவல்லி மாலை’’ இயற்றி மொழியை சுலபமாகக் கற்கும் அருளைப் பெற்றார் என்பது ஐதீகம். பல மொழித் திறன் பெற விரும்புபவர்கள் குமரகுருபரரின் சகலகலாவல்லி மாலையைப் பாராயணம் செய்வது தமிழகத்தின் மரபுகளில் ஒன்று.
எழுச்சி
Wednesday, 15 October 2025
காதற்ற ஊசியும்
Tuesday, 14 October 2025
ஆசிய ஜோதி
Monday, 13 October 2025
அற்புதப் பெருவெளி
Sunday, 12 October 2025
என் ஈசன் என் சிசு
திராவிடக் கட்சிகளின் அரசுகள் சாராய அரசுகள்
Saturday, 11 October 2025
ஓர் அலைபேசி அழைப்பு
இன்று மதியம் தில்லியிலிருந்து ஒரு நண்பர் அழைத்தார். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளைக் குறித்து கேள்விப்பட்டு அவர் என்னைத் தொடர்பு கொண்டார். நண்பர் தில்லியில் ஐ ஏ எஸ் தேர்வுக்காக தயார் செய்து கொண்டிருக்கிறார். ஆண்டுக்கு ஒரு முறை ஐ ஏ எஸ் தேர்வு நடைபெறும் எனினும் நண்பர் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை அந்த தேர்வினை எழுதுகிறார். ஒரு தேர்வாளர் இத்தனை முறை தான் தேர்வு எழுத வேண்டும் என அந்த தேர்வுமுறையில் நிபந்தனை உள்ளது. தனது முயற்சிகளின் எண்ணிக்கையை சேமித்துக் கொள்வதற்காக சிலர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு எழுதுவது உண்டு. இரண்டு ஆண்டுமே தொடர் தயாரித்தல்களில் இருப்பார்கள். தேர்வு எழுதாத ஆண்டில் கூட நிகழும் தேர்வுகளின் வினாத்தாள்களுக்கு பதில் எழுதிப் பார்த்து பயிற்சி நிறுவனங்களின் ஆசிரியர்களைக் கொண்டு திருத்திக் கொண்டு தங்கள் நிலையை சுயமதிப்பீடு செய்து கொள்வார்கள். இது ஒரு யுக்தி. பலபேருக்கு உதவியிருக்கிறது. அரசாங்கம் என்பது மக்களிடமிருந்து வரி வாங்கும் ஓர் அமைப்பு. ஆதிகாலத்திலிருந்து அவற்றின் மாறாத பணி அதுவே. அரசாங்கத்துக்கு சீராக வருமானம் கிடைக்க வேண்டும் என்றால் நாட்டில் பலவிதமான தொழில்கள் நல்லவிதமாக நடக்க வேண்டும். அவ்விதம் நடந்தால் மக்களிடம் நல்ல வருவாய் இருக்கும். அந்த வருவாயின் ஒரு பகுதி அரசுக்கு வரியாக வரும். அதைக் கொண்டு அரசு தனது ஊழியர்களுக்கு ஊதியம் அளித்து அரசாங்கத்தை சீராக நடத்திச் செல்லும். ஜனநாயக அரசுக்கு தன்னை வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் சாமானிய மக்களுக்கு உகந்த சிலவற்றைச் செய்ய வேண்டிய ஒரு பொறுப்பு இருக்கிறது. ஜனநாயக அரசியலில் இந்த அம்சம் தவிர்க்க முடியாதது. அரசாங்கத்துக்கு அதிக வரி செலுத்துபவர்கள் தொழில் புரிபவர்கள். பெருந்தொழில்களிலிருந்து சிறு தொழில் புரிபவர்கள் வரை. தனக்கு அதிக வருவாய் அளிக்கிறார்கள் என்பதற்காக தொழில் புரிபவர்களுக்கு மட்டும் அரசு சிந்திக்க முடியாது ; தனக்கு வரி அதிகம் கொடுக்காத சாமானிய மக்களுக்காகவும் அரசு சிந்திக்க வேண்டும்.
1970களில் நாட்டை இந்திரா சர்க்கார் ஆண்டு கொண்டிருந்தது. ‘’கரீஃபி கடாவ்’’ என முழங்கியது அந்த அரசு. வறுமையை ஒழிப்போம் என்பது அதன் பொருள். அந்த அரசின் முக்கிய வருவாய் என்பது சாமானிய மக்கள் அளிக்கும் வரியே. அதாவது ஒரு சாமானியன் ஐந்து ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்குகிறான் என்றால் அதில் இருபத்து ஐந்து பைசா அரசுக்கு வருவாயாகச் செல்லும். இவ்விதமாக சாமானியனிடமிருந்து வாங்கிய இருபத்து பைசா ஐம்பது பைசாவை தனது வருமானமாக வைத்துக் கொண்டு கிடைத்த சொற்ப வரி வருவாயில் நாட்டை நடத்திக் கொண்டிருந்தது இந்திரா சர்க்கார். 1991ம் ஆண்டு நரசிம்ம ராவ் சர்க்கார் ஆட்சிக்கு வந்தது. வரி விதிப்பில் அனேக மாற்றங்கள் செய்யப்பட்டன. அவ்வாறு செய்யப்பட்ட மாற்றங்களின் வழியாகவே நாட்டின் வரி வருவாய் கூடியது. இங்கே நாம் ஒரு விஷயத்தைக் கவனித்துப் பார்க்கலாம். அதாவது குறைவான வரி வருவாயுடன் தள்ளாடிக் கொண்டிருந்த இந்திராவின் சர்க்காரும் காங்கிரஸ் சர்க்கார்தான். வரி விதிப்பில் சீர்திருத்தம் மேற்கொண்ட நரசிம்ம ராவ் சர்க்காரும் காங்கிரஸ் சர்க்கார் தான். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2014ம் ஆண்டில் பதவியேற்றதும் ஓரிரு ஆண்டுகளில் சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தியது. கடந்த 11 ஆண்டுகளாக அந்த வரி விதிப்பு நாட்டுக்கு அளிக்கும் வருவாய் பங்களிப்பு அளப்பரியது. நாட்டின் வருவாய் பெருகுவதற்கு ஏற்ப அரசு சாமானிய மக்களுக்காகத் தீட்டும் திட்டங்களும் புதுப்புது வடிவங்கள் பெறுகின்றன. சாமானிய மக்கள் ஏழ்மையுடன் இருக்கும் நாட்டை வழிநடத்துவதற்கும் சாமானிய மக்கள் குறைந்தபட்ச பொருளியல் பாதுகாப்புடன் குறைந்தபட்ச வசதிகளுடன் இருக்கும் நாட்டை வழிநடத்துவதற்கும் எவ்வளவோ வேறுபாடுகள் உண்டு. நிர்வாக பாணி இரண்டுக்கும் வேறுவேறானவை. ஜனநாயக அரசுக்கும் மக்களுக்கும் இடையே இருந்து செயல்பட வேண்டிய நிலையில் இருப்பது அதிகார வர்க்கம். ஐ ஏ எஸ் அதிகாரிகள் அந்த இடத்திலேயே இருக்கிறார்கள்.
என்னைத் தொடபு கொண்ட இளைஞர் காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வில் தன்னார்வம் காரணமாக ஈடுபடுகிறார். பருவநிலை மாற்றம் , கார்பன் உமிழ்வு ஆகியவை அவருக்கு பிடித்தமான துறைகள். காலநிலை மாற்றம் தொடர்பான தமிழ்நாடு அரசின் அறிக்கை தமிழக மாவட்டங்களிலேயே மயிலாடுதுறை மாவட்டம் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதலிடத்தில் இருப்பதாகக் கூறினார். இங்கே மிக அதிகமாக நெல் வயல்கள் மட்டுமே இருப்பதால் மரங்களின் பரப்பு வெறும் 1.6 சதவீதம் மட்டுமே இருப்பதை சுட்டிக் காட்டினார். மயிலாடுதுறை மாவட்டம் 100 பங்கு கார்பனை உமிழ்ந்தால் 1 பங்கு கார்பனை மட்டுமே உறிஞ்சிக் கொள்கிறது என்னும் புள்ளிவிபரத்தை சுட்டிக் காட்டினார். வேதியியல் தொழிற்சாலைகள் இருக்கும் மாவட்டங்களில் கூட இந்த அளவு நிலை இல்லை என்பது கவனத்துக்குரியது என்றார். மயிலாடுதுறை மாவட்டத்தில் மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது என்பதைக் கூறினார். எனக்கு இந்த புள்ளிவிபரங்கள் புதியவை. நான் அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டேன்.
’’காவிரி போற்றுதும்’’ ஒரு நுண் அமைப்பு. ஒரு கிராமம் என்னும் அடிப்படை அலகை செயல்களமாய்க் கொண்டு செயல்பட்டு வருவதை தனது வழக்கமாய்க் கொண்டுள்ளது. நம்மால் முடிந்ததை நாம் செய்வோம். ‘’காவிரி போற்றுதும்’’ நம்பிக்கையுடன் செயலாற்றுகிறது.
Friday, 10 October 2025
முக்கியமான புரிதல் (நகைச்சுவைக் கட்டுரை)
Tuesday, 7 October 2025
தவிர்க்க வேண்டிய மூன்று
முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நான் ஒரு சமூக சேவகரைச் சந்தித்தேன். அப்போது அவருக்கு 70 வயது இருக்கும். தனது வாழ்நாளை முழுமையாக சமூக மேம்பாட்டுக்காக அர்ப்பணித்தவர். சமூகப் பணி என்பது மனிதர்களை இணைக்கும் பணி ; ஒற்றுமையுடன் மனிதர்கள் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டும் அதிகப்படுத்திக் கொண்டும் இருக்கும் பணி. மனிதர்களை தினமும் சந்திப்பதும் அவர்களிடம் உரையாடுவதும் அவர்கள் மனம் இயங்கும் விதத்தைக் கவனிப்பதும் அவர்கள் ஐயங்களுக்கு விடை பகர்வதும் சமூகப் பணியின் பெரும்பான்மையான அங்கம். அவர் ஒரு விஷயம் சொன்னார். சக மனிதர்களுடனான உரையாடல்களில் தவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்களை அவர் சொன்னார். அவை 1. அரசியல் 2. சினிமா 3. விளையாட்டு. இவற்றைக் குறித்து பேசாமல் விவாதிக்காமல் இருப்பது பயன் தரக்கூடியது என்று கூறினார். பல்லாண்டுகள் அனுபவத்தின் விளைவாக அவர் பரிந்துரைத்த விஷயம் அது. அது உபயோகமானது என்றே நான் நினைக்கிறேன்.
என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து இந்த விஷயங்களை இவ்விதம் புரிந்து கொண்டேன். அரசியல் குறித்து உரையாடும் இரண்டு பேர் இரண்டு விதமான நிலைப்பாடு எடுத்து விடுவார்கள். உரையாட உரையாட தங்கள் தரப்பில் இருவருமே தீவிரம் கொள்ளத் தொடங்குவார்கள். அந்த உரையாடல் அவர்களுக்குள் உளப்பூசல் உருவாவதற்கான துவக்கத்தை நிகழ்த்தி விடும். பூசலின் இயல்பு நாளாக நாளாக அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பதே. பின்னர் அந்த இருவரின் உறவில் அப்பூசல் குறித்த நினைவே பூதாகரமாகி நிற்கும்.
ஜனநாயகத்தில் அரசியல் பேச்சு என்பது கட்சியினர் தங்கள் பரப்புரையின் போது தங்கள் கருத்தைத் தெரிவிப்பது. அது ஒருவர் ஒரு பெருந்திரளை நோக்கிப் பேசுவது எழுதுவது ஆகியவையே. ஒருவர் நூறு பேருக்கு ஒருவர் ஆயிரம் பேருக்கு என்ற கணக்கில் அது நிகழும். இரண்டு பேர் சந்தித்து உரையாடும் போது - அவர்கள் அறிமுகமானவர்களோ பரிச்சயமானவர்களோ நண்பர்களோ உறவினர்களோ - அரசியல் விஷயங்கள் பேசாமல் இருப்பது நலம் பயப்பது ; நன்மை தருவது.
சினிமா குறித்த பேச்சும் இத்தகையதே. இருவர் பேசிக் கொள்ளும் போது ஒருவருக்கு ஒருவிதமான ரசனை இருக்கும். இன்னொருவருக்கு இன்னொரு விதமான ரசனை இருக்கும். அவர்கள் உரையாடலில் சினிமா வந்தால் அந்த உரையாடல் பூசலில்தான் சென்று நிற்கும். விளையாட்டு குறித்த பேச்சும் அவ்வாறே.
நான் எவருடன் உரையாடும் போதும் 1. அரசியல் 2.சினிமா 3. விளையாட்டு ஆகிய விஷயங்களைப் பேசுவது இல்லை.
3 விவசாயிகள் - வாசகர் கடிதம் - பதில்
அன்புள்ள நண்பருக்கு,
வணக்கம். நலமாக இருக்கிறேன்.
தங்கள் விரிவான கடிதம் கண்டது மகிழ்ச்சி. நம் நாட்டில் கல்வி என்பது கல்விக்கூடங்களில் மட்டுமே நிகழ முடியும் என்னும் நிலையும் கல்வி என்பது உத்யோகம் பெறுவதற்கான வழி என்ற மனநிலையும் உருவாகி விட்டது. அரசு மட்டுமே கல்விக்கான முதலீடுகளைச் செய்ய வேண்டும் என்பது இல்லை. சமூகத்துக்கும் அதற்கான பொறுப்பு இருக்கிறது . சமூக நிறுவனங்கள், செல்வந்தர்கள், தனி மனிதர்கள் கல்வி அளிக்கும் பணியை தன்னார்வத்துடன் ஏற்க வேண்டும்.
1950களில் மரவள்ளிக் கிழங்கு தமிழகத்தின் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது குறித்த அனுபவம் ஆர்வமூட்டியது.
தங்கள் கடிதத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அந்த மாணவனுக்கு அனுப்பியிருக்கிறேன். நன்றி!
அன்புடன்,
பிரபு
Monday, 6 October 2025
பால்ய நண்பரின் நினைவு
எனக்கு அப்போது 7 வயது. எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அவருக்கு அப்போது 15 வயது. என்னை விட 8 வயது பெரியவராயிருந்தாலும் என்னை அவர் நண்பனாகவே நடத்தினார். நாங்கள் இருவரும் நிறைய பேசுவோம். என்னிடம் நிறைய விஷயங்களை கேட்பார். சொல்வார். அது சைக்கிள்களின் காலம். என்னை வார இறுதி விடுமுறை நாட்களிலும் தினமும் மாலை நேரத்திலும் சைக்கிளில் உட்கார வைத்து ஊர் முழுக்க அழைத்துச் செல்வார். நாங்கள் இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்போம். எனது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் குடியிருந்த குடும்பத்தின் உறவினர் அவர். படிப்புக்காக அங்கே வந்து தங்கியிருந்தார். ஒன்பதாம் வகுப்பில் இரண்டு முறை தோல்வியடைந்து விட்டார். அவர் உறவினர் சமூகத்தில் பெரிய மனிதர். அவரது பரிந்துரையின் பேரில் பள்ளி நிர்வாகம் மூன்றாவது முறை ஃபெயில் ஆக்காமல் பாஸ் செய்தது ; பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அவரது கல்வியை முடிவு செய்யட்டும் என. அப்போது ஒரு நிகழ்ந்ததாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. அது ஒரு பெரிய நகைச்சுவை. இந்த சம்பவம் உண்மையா அல்லது கற்பனையா என்பது தெரியவில்லை. பெரிய மனிதர் என் நண்பரை பாஸ் செய்யுமாறு சொன்னதும் பள்ளி நிர்வாகம் விவாதித்திருக்கிறது. அப்போது பள்ளி நிர்வாகம் என்ன முடிவு செய்தது என்றால் ஃபெயில் ஆகியிருக்கும் ஒருவரை மட்டும் பாஸ் செய்ய முடியாது ; அதற்கு பதிலாக ஃபெயில் ஆன எல்லாரையும் பாஸ் செய்து விடலாம் என முடிவெடுத்து செயல்படுத்தினர். இந்த விஷயம் கேள்விப்பட்டு நண்பரால் பாஸ் ஆன அவரது வகுப்புத் தோழர்கள் பழம், வெற்றிலைப் பாக்குடன் வந்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து விட்டு சென்றனர் என. நண்பர் ஒருமுறை என்னை அழைத்துக் கொண்டு ‘’என் அண்ணன்’’ என்ற எம்.ஜி.ஆர் படத்துக்கு கூட்டிச் சென்றார். அந்த படத்தில் எம்.ஜி.ஆர் குதிரை வண்டி ஓட்டுபவராக நடித்திருப்பார். குதிரை வண்டியில் சென்று ஓடும் ரயிலை சேஸ் செய்து நிறுத்துவார். ஒரு வருடம் அங்கே இருந்தேன். அதன் பின் அப்பாவுக்கு பணி மாறுதல் கிடைக்கப் பெற்று வேறு ஊருக்குச் சென்று விட்டோம். நண்பரைப் பிரிய நேர்ந்த போது நான் மிகவும் அழுதேன். நண்பர் எனக்கு ஆறுதல் கூறினார். நாம் அடிக்கடி சந்திப்போம் என்றார். அதன் பின்னும் பல ஆண்டுகள் தொடர்பில் இருந்தோம். நண்பர் பத்தாம் வகுப்பு முடித்து 12ம் வகுப்பு முடித்து உடற்பயிற்சிக் கல்வியில் இளநிலைப் பட்டம் பெற்று முதுநிலைப் பட்டமும் பெற்று உடற்பயிற்சி ஆசிரியராக இருக்கிறார். அவருக்கு சின்ன வயதிலிருந்தே விளையாட்டில் நல்ல ஆர்வம் உண்டு. தனது ஆர்வத்துக்கு ஏற்ற பணி அவருக்குக் கிடைத்தது மகிழ்ச்சியானது. நான் பொறியியல் கல்லூரி முடித்த ஆண்டில் பல்கலைக்கழகத்தில் அட்மினி பிளாக் எனப்படும் இடத்தில் அவரைத் தற்செயலாக சந்தித்தேன். இருவரும் கண் கலங்கி விட்டோம். இப்போதும் அவரை நினைக்கும் போது அவர் காட்டிய பிரியத்தை நினைக்கும் போது உளம் நெகிழ்கிறேன்.
Sunday, 5 October 2025
மூன்று விவசாயிகள் - வாசகர் கடிதம்
அன்பு பிரபு,
நீங்கள் நலமென நம்புகிறேன் . தங்களின் “மூன்று விவசாயிகள்” பதிவைப் படித்தேன் . நிறைய புதுத் தகவல்கள் கொண்டிருந்தது. மரவள்ளிக் கிழங்கு உயிர் காக்கும் உணவாகவே பயன்பட்டுள்ளது. ஐம்பதுகளின் இறுதியில் தமிழகத்தில் ஊர் மக்கள் பங்களிப்புடன் துவக்கப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் செயல்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் சில சிறு கிராமப் பள்ளிகளில் நிதிப் பற்றாக்குறையினால் வெந்த கிழங்கே குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டதாக அப்போது ஆசிரியராக வேலை பார்த்த என் அத்தையார் கூறக்கேட்டதுண்டு.
நான் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு MSc வேதியியல் முடித்து அந்த வருடத்திலேயே UGC-NET (eligibility for lectureship) தகுதியும் பெற்றவன். 2001 லும் 2019-20 லும் ஒரோர் ஆண்டுகள் கல்லூரியில் பணியாற்றியவன். மூன்று வருடங்கள் csir ஆராய்ச்சி நிறுவனத்தில் ப்ராஜக்ட் அசிஸ்டென்ட் ஆக PhD க்கு உழைத்தவன் ஆனால் முடிததுப் பட்டம் பெறவில்லை. பிறகு ஏறக்குறைய 20 ஆண்டுகளாக (இடையில் ல் ஒரு ஆண்டு நீங்கலாக) தனியார் ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறை ஆய்வகத்தில் பணியாற்றி வருகிறேன்.இந்த 25 வருடங்களாக கல்வி மற்றும் முனைவர் பட்ட ஆய்வு நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பவன் என்ற முறையில் என அனுபவங்களையும் அவதானிப்புகளையும் இங்கே பதிவு செய்கிறேன்
அந்தப் பதிவின் இறுதியில் தங்கள் சந்தித்த ஒரு கல்லூரி மாணவரைப் பற்றி பதிவிட்டுள்ளீர்கள் . அவரை மாஸ்டர்ஸ் படிக்கும் படி ஊக்கியது மிகச்சரி. ஒரு துறையின் ஆடிப்படை நிபுணத்துவம் முதுகலைப் படிப்பின் வாயிலாகவே அடைய முடியும். அதுவும் வேதியியலில் முதுகலைப் பட்டம் என்பது இன்றைய வேலைவாய்ப்புச் சந்தையில் மிக்க மதிப்பு வாய்ந்தது. கணிப்பொறி மற்றும் வணிகவியல் பட்டங்களைப் போல் உடனடியாக வேலை ஈட்டித் தருவது. அதுவும் ஐஐடி , என் ஐ டி, ஐ ஐ எஸ் சி முதலிய தேசியத் தரம் வாய்ந்த நிறுவனங்களில் பெறப்படும் முதுகலைப் பட்டம் வேலை வாய்ப்புக்கு மட்டுமல்லாது வேதியியல் துறையில் சிறந்த வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் டாக்டர் பட்ட ஆய்வு மாணாக்கனாகச் சேர உதவும் கடவுச் சீட்டாகவும் இருக்கும்.
இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும் போதே JAM (ஐஐடி , என் ஐ டி, ஐ ஐ எஸ் சி ) CUET-PG (திருவாரூர் /புதுச்சேரி முதலான மத்தியப் பல்கலைக் கழகங்கள் ) மற்றும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலை மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கான படிப்பு , (உதவித்தொகையுடன் கூடியது) TIFR மும்பை , JNCASR Bangalore , ஐ ஐ எஸ் சி Bangalore நிறுவனங்கள் தனியாக நடத்தும் நுழைவுத் தேர்வுகள் அல்லது JAM தேர்வு மதிப்பீட்டுடன் கூடிய நேர்காணல், இவற்றுக்கெல்லாம் தயார் செய்துகொண்டு தேர்வு எழுதவேண்டும் . இந்தத் தேர்வுகள் நுட்பமான மற்றும் ஆய்வுத் திறனைச் சோதிப்பதாகவும் “ logical- ability -to -solve- problems “ என்ற வகையில் அமையும். சுயமான, திட்டமிடப்பட்ட படிப்பும், கல்லூரிப் படத்திட்டத்திற்கு வெளியேயான படிப்பும் மிக்க அவசியம். எந்த விதமான paid coaching வகுப்புகளும் பெரிதாக உதவாது.
முதுகலை முடித்ததும் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களில் MSc வேதியியல் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன. கரிம வேதியியல் எனப்படும் ஆர்கானிக் கெமிஸ்ட்ரியிலும் பகுப்பாய்வு வேதியியல் எனும் அனலிட்டிக்கல் கெமிஸ்டரியிலும் சற்று ஆழமான அறிவு இருந்தால் போதும் . இந்தியாவில் Biocon /syngene , Dr Reddy’s, Sun Pharma, Cipla., Aurobindo Pharma Ltd., Lupin Ltd., Glenmark Pharmaceuticals Ltd., முதலிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்கள் (R&D centres) எல்லா பெரிய நகரங்களிலும் உள்ளன. புதியோருக்கே நல்ல சம்பளம் கிடைக்கும் . ஓரு ஈரண்டுகள் வேலை செய்தபின் கூட முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொள்ளலாம்.
வேதியியலில் முதுகலை முடித்த பின்னர் வேலைக்குப் போகும் தேவை இல்லாமல் இருந்து, ஆராய்ச்சி படிப்பில் (PhD) இறங்கும் முடிவு இருந்தால், இந்த இடத்தில் தெளிவும்,கவனமும் பாரபட்சம் இல்லாத சுய பரிசோதனையும் அவசியம். ஏனென்றால் ஒரு முடிவு எடுத்து முனைவர் பட்ட ஆராய்ச்சிதான் செய்யப்போகிறேன் என்று துவங்கும் போது ஒரே ஒரு விஷயத்தை நன்றாக்க மனத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும் . என்னவென்றால் முன்செல்லும் பாதை குறுகியதாகவும், அதிக நேரமும் பொருட் செலவும் பிடிப்பதாகவும் அதிக சேதாரத்துடனேயே பின்னெடுக்கக் கூடியதாகவும் இருக்கும் என்பதே.
மத்திய அரசாங்கம் நடத்தும் GATE, CSIR-NET தேர்வுகளில் தகுதியும் உடவித்தொகையும் பெற்று அரசால் நடத்தப்படும் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் (CSIR labs) ஐஐடி (IIT) , என் ஐ டி(NIT), ஐ ஐ எஸ் சி (IISc Bangalore ), ஐ ஐ எஸ் இ ஆர் (IISER), TIFR மும்பை , JNCASR Bangalore , ஆகியவற்றிலோ இணைவது சிறந்தது. ஆராய்ச்சி உதவித்தொகையும் , வருடாந்திர வழங்கல் தொகை (annual grant) யும் பொருளாதார சிரமத்தைக் குறைப்பதுடன் அந்த நிறுவனத்தின் பெயரால் ஒரு அங்கீகாரமும் கிடைக்கும். நிறுவன வளாகத்துக்கு உள்ளேயே தேவையான கட்டமைப்பு வசதிகள் இருப்பதால் அதிக நேரம் ஆராச்சிக்குச் செலவிட முடியும் . மாநிலப் பல்கலைக் கழகங்களில் கூட, அங்கே உள்ள கட்டமைப்புகளை நன்றாக அவதானித்து உதவித்தொகை பற்றிய விவரங்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு இணையலாம்.
வேதியியல் முனைவர் பட்ட ஆய்வைப் பொறுத்தவரை ஆர்கானி கெமிஸ்ட்ரி PhD மட்டும் தான் வேலை வாய்ப்பை அளிக்கக் கூடியதாக உள்ளது அதுவும் மேலே சொன்ன தனியார் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்க (R&D centres) ளில் மட்டுமே . அரசாங்க வேலை வாய்ப்புகள் மிகக்குறைவே. வேதியியலிலேயே மற்ற பிரிவுகளில் (பிசிகல் மற்றும் இன்ஆர்கானிக் கெமிஸ்ட்ரி) படிக்கப்படும் முதுகலை (PG with specialization in physical or inorganic chemistry ) படிப்புகளுக்கு அத்தனை வேலை வாய்ப்புகள் இல்லை என்பதே கசப்பான உண்மை .
கடைசியாக , வேதியியலில் மட்டுமின்றி வேறு எந்தத்துறையிலும் ,முனைவர் பட்டமும் பெற்று விரிவுரையாளர் தகுதிக்கான CSIR-UGC-NET (eligibility for lectureship) தகுதியும் பெற்று ஆசிரியப்பணியைத் தேர்வு செய்வது போலக் கொடுமை வேறொன்றில்லை. அரசுக் கல்லூரி வேலைக்கு TRB எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. வருமா என்றே தெரியாது. சில பல வருடங்களுக்குப் பின் சென்ற 2024 ஆகஸ்டில் நடப்பதாக இருந்த தேர்வு திடீரென காலவரையறை இன்றி ஒத்தி வைக்கப் பட்டது, அப்படியே நடந்தாலும் தகுதியானவர்களுக்கும் காலிப் பணியிடங்களுக்கும் உள்ள விகிதம் மலைக்கும் மடுவுக்கும் நிகர். அரசு உதவி பெரும் கல்லூரிகளில் (Aided ) UGC ஊதியத்துடனான பணியிடங்கள் , என்றோ அனுமதிக்கபடப்போகும் ஒரு பணியிடத்தை நம்பி அதே கல்லூரியில் சுய நிதிப் பிரிவில் (self-financing section ) இருபதில் இருந்தது முப்பதாயிரத்துக்கு எந்த சலுகையும் இன்றி கையறு நிலையில் கடுமையாக உழைக்கும் 35 வயதைக் கடந்த முனைவர் /முதுமுனைவர் பட்ட தாரிகள், அதிலும் roster method இல் எந்த சமூகப் பிரிவுக்கு ஒதுக்கப் படப்போகிறது என்பதும் தெரியாமல் நாளையைப் பற்றிய எந்த நல்ல நம்பிக்கையும் இல்லாமல் வேறு எங்கும் செல்ல வழி யின்றி உழைப்பவர்கள். சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு roster விதி பொருந்தாத போதும் அங்கேயும் இதே அளவு தகுதி வாய்ந்த பட்டதாரிகளின் கும்பல். எனவே இனியெல்லாம் ஆசிரியப்பணி எல்லாம் வெறும் கனவே.
வேதியியலில் மட்டுமாவது ஆர்கானிக் மற்றும் அனாலிட்டிகல் கெமிஸ்ட்ரி முடித்தவர்களுக்கு ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன . மற்ற பிரிவுகளுக்கும் துறைகளுக்கும் எந்த உறுதிப்பாடும் கிடையாது.
ராகி முட்டே (நகைச்சுவைக் கட்டுரை)
Saturday, 4 October 2025
தேசியம்
நான் தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்டவன். அந்த நம்பிக்கையை எனது மூதாதை பாரதியிடமிருந்து நான் இளம் வயதில் பெற்றுக் கொண்டேன். தேசம் முழுமைக்கும் சிந்திக்கும் தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்காகவும் சிந்திக்கும் அரசியலே தேசிய அரசியல். இந்திய ஜனநாயகம் எல்லா விதமான அரசியல் சக்திகளையும் தனது கூடாரத்தின் கீழ் கொண்டு வருகிறது ; அதில் மொழி ரீதியில் அரசியல் செய்பவர்கள் இருக்கிறார்கள். ஜாதி ரீதியில் அரசியல் செய்பவர்கள் இருக்கிறார்கள். தொழிலாளர் யூனியன்களை கையில் வைத்துக் கொண்டு அரசியல் செய்பவர்கள் இருக்கிறார்கள். மத ரீதியில் அரசியல் செய்பவர்கள் இருக்கிறார்கள். தேர்தல் அரசியலில் அதிகாரம் மையப்புள்ளி. அதனை நோக்கி பல்வேறு விதமான குழுக்கள் முன்னேறி வருவது ஜனநாயகத்தின் இயல்புகளில் ஒன்று. அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது அரசியல் கட்சிகளின் விருப்பங்களில் ஒன்று எனினும் அதிகாரம் செயல்படும் விதம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுடன் முடிந்து விடும் ஒன்று அல்ல. நுணுக்கமாக கவனித்துப் பார்த்தால் ஜனநாயக அரசியலில் உண்மையான அதிகாரம் உயர் அதிகாரிகளிடமும் அரசு ஊழியர்களிடமும் மட்டுமே இருக்கிறது. அவர்களே பல ஆண்டுகள் பணியில் இருப்பவர்கள். எல்லா அரசியல்வாதிகளும் ஐந்தாண்டுகள் மட்டுமே பதவி வகிக்க முடியும். மீண்டும் தொடர மீண்டும் தேர்தலில் வெல்ல வேண்டும். இந்திய அரசியலைப் புரிந்து கொள்ள இந்தப் புள்ளியை புரிந்து கொள்ளுதல் அவசியம் என நினைக்கிறேன்.
தேசியக் கட்சிகள் அரசியலை நோக்குவதற்கும் செயல்படுத்துவதற்கும் பிராந்தியக் கட்சிகள் செயல்படுத்துவதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. அனைவருமே அதிகார அரசியலில் இருக்கின்றனர் என்றாலும் இந்த வேறுபாடு ‘’யானை படுத்தாலும் குதிரை மட்டம்’’ என்னும் நிலையில் இருக்கவே செய்யும்.
பிராந்திய அரசியலை செய்யும் பிராந்தியக் கட்சிகள் தங்கள் பிராந்தியத்தின் அரசியலை தாங்கள் மட்டுமே செய்ய முடியும் என எண்ணத் தொடங்குகின்றன ; நம்ப முற்படுகின்றன. தங்கள் பிராந்தியத்தில் அவர்கள் வலுவானவர்களாக இருக்கலாம். தங்கள் பிராந்தியத்தின் முழு அரசியலையும் தங்கள் கையில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் பிராந்தியத்தில் அவர்களால் பெரும் முன்னேற்றத்தையோ அல்லது வளர்ச்சியையோ உருவாக்கிட முடியாது. ஏனென்றால் பிராந்திய சக்திகளுக்கு சமூகங்களைப் பிரிக்க மட்டுமே தெரியும். மக்களைப் பிரித்து அவர்களைத் தனித்தனியாக வைத்துக் கொண்டு அதன் மூலம் அரசியல் அதிகாரத்துக்கு அவர்களுக்கு வரத் தெரியும். இவ்விதமான சக்திகள் நன்றாக அறிந்த விஷயம் என்பது தங்கள் பிராந்தியம் வளர்ச்சி பெறும் எனில் வளர்ச்சி அடைந்த சமூகத்தின் மக்கள் தங்களை எளிதில் புறக்கணிப்பார்கள் என்பதாகும். எனவே வளர்ச்சியை உருவாக்கும் எந்த பணியையும் அவர்கள் முன்னெடுப்பதில்லை என்பதே உண்மை.
நான் இங்கே தேசியக் கட்சிகள் எனக் குறிப்பிடுவது காங்கிரஸ், ஜனதா கட்சி, ஜனதா தளம், பாரதிய ஜனதா ஆகிய மத்திய அதிகாரத்துக்கு வந்த கட்சிகளையும் மத்திய அதிகாரத்துக்கு வராத பகுஜன் சமாஜ் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் ஆகியவை அனைத்தையும் தான்.
எனது நண்பர் ஒருவர் பிராந்தியக் கட்சி ஒன்றின் உறுப்பினர். அவருக்கு தேசியக் கட்சிகள் மீதும் தேசியம் மீதும் சிறு இளக்காரம் எப்போதும் உண்டு. அவர் புரிந்து கொள்ள வேண்டியது ‘’யானை படுத்தாலும் குதிரை மட்டம்’’ என்பதையே.
பின்குறிப்பு (1) :
நாடெங்கும் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருக்கும் தேசியக் கட்சிகளின் பட்டியலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டு, பா.ஜ.க ஆகிய கட்சிகள் உள்ளன. இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மாநிலக் கட்சிகளின் பட்டியலில் இருக்கும் கட்சிகளில் பல ஒரு மாநிலத்தில் மட்டும் செயல்பட்டாலும் தேசியத்தின் மீது முழு நம்பிக்கை கொண்ட கட்சிகள். உதாரணம் : திருணமூல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், சிவசேனா, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், பாரத் ராஷ்ட்ர சமிதி, மதச்சார்பற்ற ஜனதா தளம், லோக் ஜன சக்தி ஆகியவை.
பின்குறிப்பு (2)
தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் கட்சி என்னும் கட்சி இடம் பெற்றுள்ளது. கான்ராட் சங்மா தலைவராக உள்ள அந்த கட்சி மேகாலயா தவிர மற்ற வட கிழக்கு மாநிலங்களிலும் தேர்தலில் போட்டியிடுவதாலும் அந்த மாநிலங்களில் கணிசமான வாக்குகளைப் பெறுவதாலும் தேசியக் கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது.
பின்குறிப்பு (3)
பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் உத்திரப் பிரதேசத்தின் முக்கிய அரசியல் சக்திகள். 3 முறை சமாஜ்வாதி கட்சியும் 4 முறை பகுஜன் சமாஜ் கட்சியும் அந்த மாநிலத்தை ஆண்டுள்ளன. பிற மாநிலங்களிலும் அவை செயல்படுகின்றன. எனினும் பகுஜன் சமாஜ்க்கு தேசிய கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. சமாஜ்வாதி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லை. அரசியல் தெரிந்த எனது நண்பர் அதற்கான காரணத்தை யூகித்துக் கொள்வார் என எண்ணுகிறேன்.
மூன்று விவசாயிகள்
Friday, 3 October 2025
செயலா ? வழிமுறையா ? (நகைச்சுவைக் கட்டுரை)
ரியல் எஸ்டேட் என அழைக்கப்படும் நில வணிகம் எனது தொழில். கட்டுமானப் பொறியியல் படித்த நான் ஒரு கட்டுமானப் பொறியாளராகவே எனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினேன். வாடிக்கையாளர் தனது மனையில் வீடு கட்டிக் கொடுக்குமாறு கூறினால் அவருக்கு அந்த வீட்டை ஒப்பந்த அடிப்படையில் கட்டிக் கொடுப்பது என்னும் அடிப்படையில் செயல்படத் தொடங்கினேன். பின்னர் மனைகளை வாங்கி அதில் கட்டிடம் கட்டி விற்க ஆரம்பித்தேன். மனைகளை வாங்கத் தொடங்கியதால் அவற்றின் விலை விபரங்களும் விலையின் ஏற்ற இறக்கங்களும் கவனத்துக்கு வரத் தொடங்கின. வீட்டு மனைகளுடன் விவசாய நிலங்களின் விற்பனை குறித்த விபரங்களும் கவனத்துக்கு வரத் தொடங்கின. வாடிக்கையாளர்களுக்கு விவசாய நிலங்களும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன் ; விற்றுக் கொடுத்திருக்கிறேன். ரியல் எஸ்டேட் என்பது பொதுவான வார்த்தை. ரூ. 2,00,000 க்கு விற்பனையாகும் மனையும் ரியல் எஸ்டேட்டைச் சார்ந்ததுதான் ; ரூ. 100 கோடிக்கு விற்பனையாகும் மனையும் ரியல் எஸ்டேட்டைச் சார்ந்ததுதான். இன்று ரூ.2,00,000 என்பது சாமானியமாகத் தோன்றும். நான் இந்த தொழிலுக்கு வந்த போது - அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்னால்- ஊரில் 2400 சதுர அடி மனையை சதுர அடி ரூ.80 என்ற வீதத்தில் ஓர் உயர் நடுத்தர பகுதியில் வாங்குவது பெரிய முதலீடாகக் கருதப்படும். இன்று அவ்வாறு வாங்கப்பட்ட 2400 சதுர அடி கொண்ட மனையில் விலை சதுர அடி ரூ.2500 என்ற வீதத்தில் ரூ. 60.00.000 ஆகும். 2005ம் ஆண்டு ஒருவர் தான் ரூ.2,00,000க்கு வாங்கிய மனையை இன்று ரூ. 60,00,000 விலை சொல்வார். 40 ஆண்டுகளுக்கு முன் இந்த மனையின் விலை சதுர அடி ரூ.1 என இருந்திருக்கிறது. அதாவது 1985ல் ரூ.2400க்கு விற்பனை செய்யப்பட்ட மனை 2005ல் ரூ. 2,00,000 க்கு விற்பனை ஆகி 2025ல் ரூ.60,00,000 விற்பனை ஆகிறது. இந்த தொழிலின் சுவாரசியமான அம்சங்களில் ஒன்று அது.
நாம் ஒரு மேஜை வாங்க வேண்டுமென்றால் ஃபர்னிச்சர் கடைக்கு ( அறைக்கலன் கடைக்கு) சென்று என்ன விலை என்று கேட்டு வாங்கலாம். தச்சுப் பட்டறையில் தச்சர் எவரும் மேஜை செய்து வைத்திருந்தால் அவரிடம் சென்று என்ன விலை என்று கேட்டு வாங்கலாம். துவரம்பருப்பு வாங்க வேண்டும் என்றால் மளிகைக் கடையில் சென்று வாங்கலாம். சுண்டைக்காயோ பூசணிக்காயோ வாங்க வேண்டும் என்றால் காய்கறிக் கடைக்குச் சென்று வாங்கலாம். மேற்படி உதாரணங்களில் கடைக்காரர்தான் விற்பனையாளர். சாமானியர் வாடிக்கையாளர். ஆனால் மனை வணிகத்தில் 90 சதவீத விற்பனையாளர்கள் சாமானியர்களே. 90 சதவீத விற்பனைகளில் விற்பனையாளரும் சாமானியராக இருப்பார் ; வாங்குபவரும் சாமானியராக இருப்பார். இந்த தொழிலின் இன்னொரு சுவாரசிய அம்சம் இது.
ஒரு இடத்தை அல்லது மனையை ஒருவர் வாங்க வேண்டும் என்றால் அந்த இடத்தின் அல்லது மனையின் ஆவணங்களை விற்பனையாளரிடமிருந்து வாங்க வேண்டும். அதனை வழக்கறிஞரிடம் காட்டி சட்ட அபிப்ராயம் பெற வேண்டும். அதன் பின்னர் விலை பேச வேண்டும். விலை பேசி ஒரு சிறு தொகை ‘’அடையாள முன்பணம்’’ ஆக தரப்படும். அதன் பின் ஒரு வாரத்தில் அல்லது 15 நாளில் மொத்த கிரயத் தொகையில் மூன்றில் ஒரு பாகம் அல்லது நான்கில் ஒரு பாகம் அல்லது பாதிக்குப் பாதி முன்பணமாக அளிக்கப்பட்டு கிரய ஒப்பந்தம் போடப்படும். இது ஒரு பொது வழிமுறை என்று சொல்ல முடியும். ஆனால் இந்த வழிமுறை பெரும்பாலும் அனுசரிக்கப்படும் என்றும் சொல்லலாம் அல்லது பெரும்பாலும் இதே விதத்தில் இதே வரிசையில் அனுசரிக்கப்படுவதில்லை என்றும் சொல்லலாம். தொகை பெரிதாக இருப்பதால் சாமானியர்கள் கிரய ஒப்பந்தத்தை விரும்ப மாட்டார்கள். ஒரு அட்வான்ஸ் கொடுத்து நேரடியாக கிரயத்துக்கு செல்ல விரும்புவார்கள். இங்கிருந்து பணம் கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையில் விவகாரங்கள் தொடங்கும்.
நான் மனை வணிகத் தொழிலுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்த போது ரூ.10,000 என்பது டோக்கன் அட்வான்ஸ் ஆக இருந்தது. அதாவது ஒருவர் ரூ.2,00,000க்கு மனை வாங்குகிறார் எனில் அவர் ரூ.10,000 டோக்கன் அட்வான்ஸ் தருவார். இப்போதும் ரூ. 10,000 டோக்கன் அட்வான்ஸ் ஆக நீடிக்கிறது. ரூ.1,00,000 டோக்கன் அட்வான்ஸ் ஆகத் தரப்படுவதுண்டு. ரூ.1000 அல்லது ரூ.1001 டோக்கன் அட்வான்ஸ் ஆகத் தரப்படுவதுண்டு. ரூ. 1 மட்டும் டோக்கன் அட்வான்ஸ் தரப்படும் என பிறர் கூறி கேள்விப்பட்டிருக்கிறேன்.
விற்பனை செய்பவர் மனை அல்லது நிலம் வில்லங்கம் இல்லாமல் இருக்க வேண்டும். வாங்குபவர் கையில் முழுப் பணமும் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் அனைத்தும் இயல்பாக நடக்கும். இதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் விதவிதமான சிக்கல்கள் வரும்.
கிரய ஒப்பந்தம் 3 மாதத்துக்கு போடுவார்கள். எனினும் சட்டப்படி அது 3 வருடத்துக்கு செல்லுபடி ஆகும். ஒருவர் ரூ.2,00,000 க்கு ஒரு மனையை வாங்க ரூ.50,000 முன்பணம் செலுத்தி கிரய ஒப்பந்தம் போட்டிருந்தால் மீதித் தொகையை மூன்று மாதத்துக்குள் கொடுக்க வேண்டும். ஆனால் சட்டம் அவருக்கு 3 ஆண்டு அவகாசம் கொடுக்கிறது. வாங்குபவர் ஒருவர் இந்த எண்ணத்துடன் வந்தால் விற்பனையாளர் நிலை சிக்கல்தான்.
நான் சில விஷயங்களை கூறியிருக்கிறேன். இந்த விஷயத்தில் மனைத்தரகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கான தரகுத் தொகை இருக்கிறது. ‘’உள்ளடி’’ எனக் கூறப்படும் விஷயம் இருக்கிறது. பத்திரப் பதிவு அலுவலகம் இருக்கிறது. ஆவண எழுத்தர்கள் இருக்கிறார்கள். இந்த வகையில் நிகழும் கொடுக்கல் வாங்கல்கள் உண்டு. சொத்துக்கு பட்டா பெறுதல் இருக்கிறது.
ஒருவர் மனை அல்லது நிலம் வாங்குவது என்பது ஒரு செயல். அதற்கு ஆகி வந்த சில வழிமுறைகள் அல்லது வழக்கங்கள் இருக்கின்றன. செயலும் வழிமுறையும் கைக்கொள்ளும் மனிதனைப் பொறுத்தே அமையும் என்பது இந்த தொழிலின் இன்னொரு சுவாரசியமான அம்சம்.
Thursday, 2 October 2025
சுழலும் சக்கரம்
2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் கடைசி நாள் ஊரில் ஒரு திரைப்படம் வெளியானது. அத்திரைப்படம் வெளியான திரையரங்கம் ஊரின் பழமையான திரையரங்குகளில் ஒன்று. 1969ம் ஆண்டு கட்டப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது. அரங்கின் முன்னால் இரண்டு இரும்பு கிரில் கதவுகள் கொண்ட பழைய பாணி முன்பக்க சுற்றுச் சுவர். சுற்றுச்சுவருக்கும் அரங்குக்கும் இடையே நூறு அடிக்கும் மேலாக திறந்தவெளி. அதன் வலதுபுறம் பாக்ஸ் ஆஃபிஸ். இடதுபுறம் இரு சக்கர வாகன பார்க்கிங். 50 ஆண்டுகளுக்கு முன்பு எவ்விதமான ஏற்பாடு இருந்ததோ அதே விதமான ஏற்பாடுகளே அப்படியே தொடர்ந்தன. அந்த திரையரங்கினுள் நுழைந்தால் சென்ற தலைமுறைக்கு சென்று விட்ட உணர்வு ஏற்பட்டு விடும். அவ்விதமான தன்மை திரையில் காணும் சினிமா அனுபவத்துக்கு உகந்ததாகவே அமைந்திருக்கும். சற்று முயன்றால் என்னால் எந்த திரையரங்கில் எந்த திரைப்படம் பார்த்தேன் என்பதை நினைவுபடுத்திக் கூறிட முடியும். ஒப்பீட்டளவில் நான் குறைவாகவே சினிமா பார்ப்பவன். சினிமா பார்த்தால் அது திரையரங்கில் மட்டுமே என்னும் வழக்கம் உள்ளவன். எனவே அவ்வாறு நினைவுபடுத்திக் கொள்வது இயல்கிறது.
30.09.22 அன்று மதியம் அத்திரையரங்கை கடந்து செல்கையில் அங்கே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியைக் கண்டேன். அப்படத்தின் பெயர் புதிதாக இருந்தது. வழக்கமான தமிழ்ப் பெயர் போல் தெரியவில்லை. அது டப்பிங் செய்யப்பட்ட திரைப்படம் போல் இருந்தது. சுவரொட்டியிலிருந்து டப்பிங் திரைப்படமா அல்லது பல மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படமா என்பதையும் அறிய முடியவில்லை. அக்கணத்தில் ஏற்பட்ட ஆர்வத்தில் எனது இரு சக்கர வாகனத்தை திரையரங்கினுள் நுழைத்தேன். காட்சிசீட்டு பெற்றுக் கொண்டு உள்ளே நுழைந்தேன். கடலோர தென் கன்னட தேசத்தில் நிகழும் ஒரு கதை. அந்த படத்தின் கதையும் காட்சிகளும் மறக்க முடியாத சினிமா அனுபவமாயின. இந்திய அளவில் பல மொழிகளில் அத்திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.
இன்று அத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.
மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. இப்போது அந்த திரையரங்கம் அதே பெயருடன் இருக்கிறது. பழைய திரையரங்க நிர்வாகத்துடன் ஒரு மல்டிஃபிளக்ஸ் நிறுவனம் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டு பழைய திரையரங்கை முழுமையாக இடித்து புதிய மல்டிஃபிளக்ஸ் திரையரங்கம் கட்டியிருக்கிறார்கள். சுற்றுச்சுவருக்கும் அரங்குக்கும் இடையே இருக்கும் இடம் முழுமையாக நான்கு சக்கர வாகன பார்க்கிங்குக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாக்ஸ் ஆஃபிஸ் அரங்கின் முன்பகுதியில் அமைந்துள்ளது. இப்போது அந்த அரங்கில் ஒரே நேரத்தில் மூன்று திரைப்படங்கள் திரையிட முடியும். அதி நவீன ஒலி அமைப்புகள் கொண்டதாக இப்போது இருக்கிறது.
இன்று வெளியாகும் இரண்டாம் பாகம் அதே திரையரங்கில் வெளியாகிறது. நேற்று மாலை அந்த வழியாகச் சென்ற போது அப்படத்தின் சுவரொட்டியைக் கண்டேன். இன்றைய காலைக்காட்சிக்கு ஒரு டிக்கெட் முன்பதிவு செய்து வாங்கிக் கொண்டேன். டிக்கெட் கொடுக்கும் சாளரத்தினுள் மூன்று பெண் ஊழியர்கள் கணினி மூலம் டிக்கெட் வழங்கிக் கொண்டிருந்தார்கள். எனக்கு டிக்கெட் வழங்கியவரிடம் இப்படத்தின் முதல் பாகத்தை இங்கேதான் பார்த்தேன் என்று சொன்னேன். அவருக்கு நான் சொல்வது என்ன என்பது புரிந்தது. மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார்.
காலச்சக்கரம் கணமும் நில்லாமல் சுழன்று கொண்டேயிருக்கிறது !
Wednesday, 1 October 2025
டெண்டுல்கர் நினைவுகள்
எனக்கு பத்து வயது இருந்த போது நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒன்றில் முதன் முதலில் சச்சின் டெண்டுல்கரைக் கண்டேன். சச்சின் டெண்டுல்கரின் ஆட்டம் வழியாகவே கிரிக்கெட்டைப் புரிந்து கொண்டேன். சச்சின் அப்போது பதின்வயதைக் கடக்காத ஒருவராக இருந்தார். தொலைக்காட்சியின் காலமும் சச்சினின் காலமும் ஒன்று. கிரிக்கெட் மேட்ச்களை டி.வி யில் மட்டுமே காண முடியும். பகலிரவு ஆட்டங்கள் அறிமுகமானது நினைவில் இருக்கிறது. தூர்தர்ஷனில் இரவு 8.30க்கு செய்திகளுக்காக கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு அரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும். இன்று அவ்வாறான நிலையை கற்பனை செய்வது கடினம். கல்கத்தாவில் நடைபெற்ற ஹீரோ கோப்பை இறுதிப் போட்டி நன்றாக நினைவிருக்கிறது. பரபரப்பான ஆட்டம் ஒன்றில் மேட்ச்சின் கடைசி ஓவரை டெண்டுல்கர் வீச வருவார். யாரும் எதிர்பாராத ஒரு முடிவு அது. அதில் டெண்டுல்கர் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி இந்தியாவுக்கு கோப்பையை வாங்கித் தந்தார். மறக்க முடியாத போட்டி.
ராகுல் திராவிட் விளையாடத் தொடங்கிய போது எனக்கு மிகவும் பிடித்த வீரராக திராவிட் ஆனார். நிதானமாக நிலைத்து விளையாடும் ராகுலின் பாணி மீது எனக்கு பெரும் ஈர்ப்பு இருந்தது. இப்போதும் இருக்கிறது. ராகுல் திராவிட் அளவு ஈர்ப்பு கொண்ட இன்னொரு கிரிக்கெட் வீரர் இல்லை.
தோனி மீதும் பிரியம் உண்டு.
பள்ளி நாட்களிலும் கல்லூரி நாட்களிலும் கிரிக்கெட் விளையாட்டைக் கவனிக்கும் வழக்கம் இருந்தது. அதன் பின் மிக மிகக் குறைந்து விட்டது. இன்று இந்திய கிரிக்கெட் அணியில் யார் யார் விளையாடுகிறார்கள் என்னும் அளவு கூட அவதானம் இல்லை.