Saturday, 18 October 2025

நெடுஞ்சாலை புளியமரங்கள்

சீருடையில் புழுதி பூசிய
பள்ளிக் குழந்தைகள்
போல்
நிற்கின்றன
நெடுஞ்சாலைப் புளியமரங்கள்


இல்லாமல் போனாலும்
அங்கொன்றும் இங்கொன்றும்
இருந்தாலும்
சாலையின் 
சாலை பற்றிய நினைவுகளில்
நீங்காமல் இருக்கின்றன
புளியமரங்கள்

{3} 

Friday, 17 October 2025

ஸ்கைலேப்

 வீட்டில் இருந்து 1 கி.மீ தொலைவில் மரங்கள் அடந்த ஒரு பகுதி இருக்கிறது. நன்கு வளர்ந்த 5 புங்கன் மரங்கள் அங்கு உண்டு. அதில் 3 மரங்களின் கீழே ஒரு சிமெண்ட் பெஞ்ச் அமைக்கப்பட்டுள்ளது. மதிய நேரத்திலோ மாலை நேரத்திலோ நான் அங்கு சென்று சிறிது நேரம் அமர்வேன். இன்று அமர்ந்திருந்த போது என்னருகே ஒருவர் வந்து அமர்ந்தார். அவர் ஊரிலிருந்து 10 கி.மீ தொலைவில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர். தீபாவளி கொண்டாட்டத்துக்குத் தேவையான பண்டங்களை வாங்க இங்கே வந்திருக்கிறார். அவரிடம் எதிரில் இருக்கும் மரத்தில் சில பகுதிகளில் படர்ந்திருக்கும் மஞ்சள் நிறத்தில் பூ கொண்ட கொடியைக் காட்டி ‘’ அந்த கொடி என்ன அண்ணன்?’’ என்ற அறிவினாவைக் கேட்டு உரையாடலைத் தொடங்கினேன். மரத்தில் அவ்விதம் படர்ந்திருக்கும் கொடி புள்ளுருவி என்பதை நான் அறிவேன். உரையாடலைத் துவங்கும் முகமாக அவ்விதம் கேட்டேன். 

‘’அது புள்ளுவி தம்பி’’ என்றார் அவர். 

‘’அப்படினா?’’

‘’இது மரத்துல வளர்ற கொடி . பறவைகள் உடம்புல இதோட விதை ஒட்டிகிட்டு மரத்துக்கு மரம் போகும். இந்த புள்ளுவி மண்ணுல வளராது. மரத்துல ஒட்டிட்டு மரத்தோட தண்டுல இருந்து சத்தை எடுத்துக்கிட்டு வளரும். புள்ளுவி ஒரு மரத்தில பாஞ்சுட்டா அது அந்த மரத்தையே அழிச்சிடும். மரத்தில இருக்கற புள்ளுவியை மட்டும் அழிச்சா போது அது இருக்கற மரக்கிளையையே வெட்டி விட்டுற்றணும். அப்ப தான் மரம் பிழைக்கும். ‘’

’’ஓகோ அப்படியா’’ 

பின்னர் அவருடைய கிராமம் எது என்று கேட்டேன். அவர் கிராமத்தின் பெயரைச் சொன்னார். அந்த கிராமத்துக்கு நான் சென்றிருக்கிறேன். அந்த நினைவுகளை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். 

’’உங்க பேர் என்ன அண்ணன்?’’

‘’ஸ்கைலேப்’’

எனக்கு இந்த பெயர் புதிதாக இருந்தது. நான் யோசித்துப் பார்த்தேன். பைபிளில் இந்த பெயர் இருக்கிறதா என என் மனம் துழாவியது. ஒன்றும் பிடி கிடைக்கவில்லை. 

‘’உங்க பேருக்கு என்ன அர்த்தம் அண்ணன்?’’

‘’இது அமெரிக்காவோட ராக்கெட் ஒண்ணோட பேரு. நான் 1979வது வருஷம் பிறந்தேன். அந்த வருஷத்துல அமெரிக்கா இந்த ராக்கெட்டை விண்வெளிக்கு ஏவுச்சு. ஆனா அந்த ராக்கெட் ஃபெயிலியர் ஆகி கடல்ல விழுந்துடுச்சு. அப்ப இது ஒரு பெரிய செய்தியா இருந்துச்சு. அதனால எனக்கு அந்த ராக்கெட்டோட பேர வச்சிட்டாங்க.’’

எனக்கு அவர் சொன்ன தகவல் மிகவும் புதிதாக இருந்தது. 

‘’உங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து நீங்க உங்க பேர் கேட்கப்பட்டு சொல்லப்படற ஒவ்வொரு தடவையும் நீங்க ஒவ்வொருத்தர்கிட்டயும் இந்த விளக்கத்தைக் கொடுத்திட்டே இருக்கீங்க இல்லையா?’’

‘’ஆமாம் தம்பி 46 வருஷமா என் பேருக்கு விளக்கம் சொல்லாத நாள் கிடையாது’’

‘’நீங்க கிருஸ்தவரான்னு எல்லாரும் கேப்பாங்களே?’’

‘’ஆமாம் தம்பி’’

நான் கேட்டேன் : ‘’நீங்க கிருஸ்தவரா?’’

‘’இல்ல தம்பி . ஹிந்து’’

‘’உங்களுக்கு பொன்னு பாத்தப்ப இந்த விளக்கம் எல்லாருக்கும் கொடுத்திருப்பீங்களே’’

‘’ஆமாம் தம்பி. பொன்னு வீட்டுக்காரங்களை சமாளிக்கறது பெரிய வேலை ஆயிடுச்சு.’’

’’உங்களுக்கு எட்வின் ஆல்ட்ரின் தெரியுமா?’’

அவர் யோசித்தார். 

‘’நிலவுக்கு அமெரிக்கா ஒரு விண்கலத்தை அனுப்புச்சு. அதுல போனவங்க ரெண்டு பேர். எட்வின் ஆல்ட்ரின் , நீல் ஆம்ஸ்ட்ராங். ஆக்சுவலா எட்வின் ஆல்ட்ரின் தான் கேப்டன். அவர் தான் விண்கலம் நிலவுக்குப் போனதும் நிலவுல முதல் காலடி எடுத்து வச்சிருக்கணும். ஆனா அவர் தயங்கிட்டார். அதனால நீல் ஆம்ஸ்ட்ராங் தன்னோட காலடியை நிலவுல வச்சார். இதன் மூலமா நிலவுல கால் வச்ச முதல் மனுஷனா நீல் ஆம்ஸ்ட்ராங் ஆனார். நீல் ஆம்ஸ்ட்ராங் சொன்னார் : ‘’என்னோட ஒரு சின்ன காலடி. ஆனா மனுஷகுலத்துக்கு இது மிகப் பெரிய பாய்ச்சல்''

ஸ்கைலேப் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். 

''கொஞ்ச வருஷம் முன்னாடி நாம விக்ரம் லேண்டரையும் பிரக்ஞான் ரோவரையும் நிலாவுக்கு அனுப்பினோம்.’’

’’ஆமாம் சார் நான் வீடியோ பார்த்தன்.’’ 

‘’உங்க பேருக்கு அர்த்தம் கேக்கப்படற ஒவ்வொரு தடவையும் நீங்க மனிதனோட விண்வெளி முயற்சிகள் பத்தி கேக்கறவங்களுக்கு எடுத்துச் சொல்லுங்க. அந்த பரப்புரைக்கு அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் வாய்ப்பா பயன்படுத்திக்கீங்க’’

ஸ்கைலேப் சிரித்தார். 

’’உங்களுக்கு இந்த பேரை வச்சுது யாரு?’’

‘’என்னோட சித்தி சார்’’

‘’அவங்க நியூஸ் பேப்பர் படிக்கற வழக்கம் உள்ளவங்களா?’’

‘’ஆமாம் சார் எப்போதும் ஏதாவது படிச்சுக்கிட்டே இருப்பாங்க’’

ஸ்கைலேப்பின் சித்தி குறித்த உளச்சித்திரம் ஒன்றை கற்பனையில் எழுப்பிக் கொண்டேன். யோசித்துப் பார்த்தால் ஸ்கைலேப் ராக்கெட் இலக்கை எட்டவில்லை ; தனது பயணத்தில் பாதியில் திசைமாறி ஆஸ்திரேலியா அருகே இந்தியப் பெருங்கடலில் விழுந்து விட்டது. இருப்பினும் சித்தி அதனை தோல்வியின் சின்னமாகப் பார்க்கவில்லை ; முயற்சியின் சின்னமாகப் பார்க்கிறார். அது ஒரு ஆக்கபூர்வமான பார்வை என்று எனக்குப் பட்டது. அந்த சித்தியை ஒரு கதாபாத்திரமாக எழுத வேண்டும் என்ற எண்ணம் உருவானது.  

சகவாசம் (நகைச்சுவைக் கட்டுரை)

 எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். நானாவித அலுவல்களில் ஈடுபடுபவர். காலை 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தொடர்ச்சியாக ஏதேனும் பணிகளில் ஈடுபட்டிருப்பார். எனக்கு அவரை 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தெரியும். 30 ஆண்டுகளாக அவர் அப்படித்தான். அவரது அலைபேசிக்கு அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கும். அனைத்துக்கும் அவர் பதிலளிப்பார். எவ்வளவு கறாராக கணக்கிட்டாலும் அவருக்கு ஒரு நாளைக்கு 30 அழைப்புகளாவது வரும் ; அவர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 30 அழைப்புகளாவது மேற்கொள்வார். இது என்னுடைய கணக்கீடு. நண்பரிடம் கேட்டால் இதற்கு மூன்று மடங்கு எனக் கூறக் கூடும் ! ஏகப்பட்ட அலைபேசி அழைப்புகள் வருகின்றனவே என்று அவர் சலிப்பு அடைந்ததில்லை ; எல்லா அழைப்புகளுக்கும் மிகப் பொறுமையாக பிரியமாக பதிலளிப்பார். அழைப்புகள் தவறிய அழைப்புகளாக இருந்தால் ஒவ்வொன்றுக்கும் மீண்டும் அழைத்துப் பேசுவார். கடந்த ஒரு வருடமாக நானும் அவரும் வாரத்துக்கு ஒரு நாளாவது சந்திக்கிறோம். அவரிடம் இருப்பது ஐ-ஃபோன். என்னிடம் இருப்பது சாதாரண ஜி.எஸ்.எம் அலைபேசி. தொழில்ரீதியில் ஸ்மார்ட்ஃபோன் வைத்துக் கொள்வது ஆவணங்கள், வரைபடங்கள், இட அமைவுகள் ஆகியவற்றை அனுப்ப பெரும் உதவியாய் இருக்கும் என்பதை மிக மென்மையாய் எனக்கு சுட்டிக் காட்டினார். அவர் நயத்தக்க நாகரிகம் கொண்டவர். எதையும் எவரிடமும் வற்புறுத்த மாட்டார் ; ஒருவர் பிறர் சொல்லி கேட்பதை விட தானாகவே யோசித்தோ உணர்ந்தோ எடுக்கும் முடிவு சிறப்பானது எனப் புரிந்தவர். நான் அவரிடம் என்னிடம் ஜி.எஸ்.எம் அலைபேசியும் கணிணியும் இருப்பதால் மேற்படி விஷயங்களை மேலாண்மை செய்து விடுகிறேன் எனக் கூறினேன். உண்மையில் நான் இப்போது தீவிரமாகச் சிந்திப்பது இந்த ஜி.எஸ்.எம் ஃபோன் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டு லேண்ட் லைன் தொலைபேசியை பயன்படுத்தலாமா என்பதைக் குறித்தே. நான் அவரிடம் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டைக் குறைக்கச் சொல்லி சொல்வேன். ‘’சார் ! எல்லாத்தையும் விட நமக்கு நம்ம மனநிலையும் உடல்நிலையும் முக்கியம் சார். நாம ஒவ்வொரு டயத்துல ஒவ்வொரு மாதிரியா இருப்போம். மனுஷ வாழ்க்கையோட அமைப்பு அந்த மாதிரி. நீங்க எந்த வெளித் தொந்தரவும் இல்லாம 30 நிமிஷம் பூஜை அறையில சாமி கும்பிடனும்னு நினைப்பீங்க. குழந்தைகளோட விளையாடணும்னு நினைப்பீங்க. எந்த விஷயத்தைப் பத்தியாவது முக்கிய முடிவு எடுக்கணும்னு அமைதியா யோசிப்பீங்க. இந்த மாதிரி மனநிலைகளை இன்ஃபுளூயன்ஸ் செய்யறது மாதிரி ஏதாவது ஃபோன் வரும். உங்க நம்பர் ஆயிரம் பேர்ட்டயாவது இருக்கும் ( நண்பர் சொன்னார் : ’’ஆயிரமா என்னப்பா இவ்வளவு கம்மியா சொல்ற. மினிமம் 10,000 பேர்ட்டயாவது என் நம்பர் இருக்கும்’’ ) யார் நம்மகிட்ட பேசப் போறாங்கன்னு நமக்குத் தெரியாது. வர்ர ஃபோன் கால் சாதாரணமா இருக்கலாம். பேசறவங்க அவங்க சொந்த சிக்கல் எதையாவது சொல்வாங்க. நம்ம மனநிலையை ரொம்ப ஸ்லைட்டா அது இன்ஃபுளூயன்ஸ் பண்ணா கூட மனசோட கிரியேட்டிவிட்டிக்கு அது பெரிய இடைஞ்சல். நீங்க ஃபோனை கம்மியா யூஸ் பண்ணனும் நினைக்க ஆரம்பிங்க சார். நீங்க இப்படி நினைக்க ஆரம்பிச்சாலே யூசேஜ் குறைஞ்சிடும்’’  என அவரிடம் கூறினேன். அவர் மிக நாசூக்காக ஸ்மார்ட்ஃபோன் வைத்துக் கொள்வது தொழில்ரீதியாகப் பயன் உள்ளது என்பதை மெல்லக் கூறுவதும் நான் அவருக்கு தடாலடியாக ஃபோன் பயன்பாட்டைக் குறையுங்கள் என்று சொல்வதும் நடக்கும். கடந்த ஒரு மாதமாக நண்பரின் ஃபோனுக்கு அழைத்தால் அவ்வப்போது ஃபோன் சுவிட்ச் ஆஃப் என்று  தகவல் தெரிவிக்கிறது அலைபேசி நிறுவனம். பொதுவாக ஒருவருக்கு ஃபோன் செய்து அவருடைய ஃபோன் சுவிட்ச் ஆஃப் ஆக இருந்தால் ஃபோன் செய்பவருக்கு சிறு சோர்வு உருவாவது இயல்பு ; ஆனால் எனக்கு நண்பரின் ஃபோன் அவ்வப்போது சுவிட்ச் ஆஃப் ஆவது நல்ல விஷயமே என்னும் மகிழ்ச்சி உருவானது. 

தண்டவாளப் பாதை

 சிறுவர்கள் ஆடும் மைதானத்துக்கும்
புதர்ப்பரப்புக்கும்
இடையே இருக்கிறது
தண்டவாளப் பாதை

கிரிக்கெட் பந்து
கடந்து செல்கிறது
தண்டவாளப் பாதையை

இப்படியும்
அப்படியும்
இப்படியும் அப்படியும்
செல்லும் ரயில்கள்
போன
பிறகு

{ 2 }

Thursday, 16 October 2025

சின்னஞ் சிறு பெண்

 எனக்கு சிதம்பரத்தில் ஒரு நண்பர் இருக்கிறார். அவருக்கும் எனக்கும் பல வருடப் பழக்கம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட அவரை மூன்று மாதத்துக்கு ஒருமுறையாவது சந்திப்பேன். கோவிட்டுக்குப் பின் அவரைச் சந்திப்பது மிகவும் குறைந்து விட்டது. நான் ஒருவரை அடிக்கடி சந்தித்தாலும் நீண்ட நாள் சந்திக்காமல் இருந்தாலும் உணர்வுநிலையில் ஒன்றாகவே இருப்பேன். சந்திக்காமல் இருந்ததால் எந்த இடைவெளியையும் நான் உணர மாட்டேன். அவருக்கு மூன்று குழந்தைகள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் குழந்தைகள். இப்போது மூத்த பையன் அமெரிக்காவில் சட்ட மேற்படிப்பு படிக்கிறான். இரண்டாவது பையன் சட்டக்கல்லூரியில் இறுதி ஆண்டு பயில்கிறான். நண்பரின் மகள் சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். நண்பரின் மகளை சின்னஞ் சிறு பெண்ணாகப் பார்த்தது. மிக மெல்லிய கீச்சுக்குரல் அப்பெண்ணுக்கு நான் பார்த்த போது. மூன்று குழந்தைகளின் கல்வியிலும் நண்பரை விட நண்பரின் மனைவி மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டார். குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி கிடைப்பதை ஓர் அன்னையாக உறுதி செய்ய வேண்டும் என்ற தீரா வேட்கை கொண்டவர் அவர். மூன்று குழந்தைகளையும் அவர் காரில் பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவார். பின்னர் பள்ளியிலிருந்து அழைத்து வருவார். சிறப்பு வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வார். இசைப் பயிற்சிக்கு அழைத்துப் போவார். கோடை விடுமுறை நாட்களிலும் கலையோ நுண்கலையோ குழந்தைகள் பயில வேண்டும் என முனைப்புடன் செயல்படுவார். நண்பர் இந்த விஷயங்களில் பெரிதாக தலையிட மாட்டார். இன்று நண்பரின் மகள் நான் அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்த போது சட்டக் கல்லூரியிலிருந்து தனது தந்தையிடம் பேசினார். கணீர் குரல். வழக்கறிஞர்களுக்கேயுரிய தொனி. ‘’கீச்சுக்குரல்ல பேசிக்கிட்டு இருந்த குழந்தையா சார் இப்ப அட்வகேட் மாதிரி பேசுது’’ என்றேன். நண்பருக்கு மிகுந்த மகிழ்ச்சி. 

நண்பர் தன் மகள் தமிழ் , ஆங்கிலம், சமஸ்கிருதம், தெலுங்கு, ஹிந்தி, ஜெர்மன் ஆகிய ஆறு மொழிகள் அறிந்தவர் என்று கூறினார். எனக்கு பெருவியப்பாக இருந்தது. தனது சுய ஆர்வத்தின் விளைவாக இத்தனை மொழிகளையும் கற்றுக் கொண்டார் என சொன்னார் நண்பர். மேலும் தனது மகள் சிறு குழந்தையாயிருந்த நாளிலிருந்து தினமும் குமரகுருபரரின் ‘’சகலகலாவல்லி மாலை ‘’ நூலை மாட்டுக் கொட்டகையில் அமர்ந்து பாராயணம் செய்து பசுவை வலம் செய்து பின் அடி பணிந்து வணங்கும் கொண்டவர் என்றும் கூறினார். தமிழகத்திலிருந்து ஆன்மீகப் பணியாற்ற காசி சென்ற ஸ்ரீகுமரகுருபரர் ஹிந்தியை விரைவாகப் பயில கல்விக் கடவுள் சரஸ்வதியைப் போற்றி ‘’சகலகலாவல்லி மாலை’’ இயற்றி மொழியை சுலபமாகக் கற்கும் அருளைப் பெற்றார் என்பது ஐதீகம். பல மொழித் திறன் பெற விரும்புபவர்கள் குமரகுருபரரின் சகலகலாவல்லி மாலையைப் பாராயணம் செய்வது தமிழகத்தின் மரபுகளில் ஒன்று. 

எழுச்சி

 உதயத்தின்
செந்நிறச் சூரியன்
அலைகளிலிருந்து எழும்

வான் சுழலும்
கொற்றப்புள்


புல்நுனி
மேலும்
மேலெழும்
ஒவ்வொரு நாளிலும்

{ 1 } 

Wednesday, 15 October 2025

காதற்ற ஊசியும்

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே
-பட்டினத்துப் பிள்ளை

இணையம் கடந்த 20 ஆண்டுகளாக உலகெங்கும் பரவலாகி உள்ளது. கல்வித்துறையில் இணையத்தின் பரவலாக்கம் கற்பித்தலில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது என்றே சொல்லலாம். நான் பள்ளிக்கல்வியும் கல்லூரிக் கல்வியும் என மொத்தம் 21 ஆண்டுகள் பயின்றிருக்கிறேன். எனக்கு மொழியின் மீது ஆர்வமும் ஈர்ப்பும் உண்டு. மிகச் சிறு வயதிலிருந்தே அவை என்னிடம் உண்டு. எனக்கு சொற்களை காட்சிகளாக கற்பனை செய்து கொள்ளும் திறன் சின்ன வயதிலிருந்தே இருந்திருக்கிறது. அதனால் தான் பாலனாயிருந்த பருவத்திலிருந்தே நான் வாசிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்தேன். காணும் காட்சிகளை உணரும் உணர்வை சொல்லாக்கும் திறன் அதன் மறுபக்கமாக என்னுள் இருந்திருக்கிறது ; அதனை உணரத் தொடங்கிய போது எழுதத் தொடங்கினேன். எழுதக் கூடியவனாக இருக்க வேண்டும் என்ற ஆர்வம் விருப்பம் வேட்கையும் எனது பால பருவத்திலிருந்து இருந்தாலும் இளமைப் பருவத்தில்தான் எழுதத் தொடங்கினேன். மொழிக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த பாடம் கணிதம். எண்களின் புதிர்த்தனமையும் துல்லியத் தன்மையும் என்னை ஈர்த்தன. அதன் பின்னர் வரலாறு, புவியியல் ஆகியவற்றின் மீதும் ஆர்வம் கொண்டிருந்தேன். பதினைந்து வயதுக்குப் பின்னர் அறிவியலும் தொழில்நுட்பமும் பயில வேண்டியிருந்தது. மொழியில் கணித்தத்தில் ஆர்வம் கொண்டிருந்த எனக்கு அறிவியலும் தொழில்நுட்பமும் பயில்வதில் பெருவேகம் கொள்ள முடியவில்லை. மொழியின் மீது ஆர்வம் கொண்ட மனம் இயங்கு விதமும் தொழில்நுட்பத்தைப் புரிந்து கொள்ளும் உருவாக்கும் மனம் இயங்கும் விதமும் வேறுவேறானவை. மொழியோ கணிதமோ சமூகவியலோ பயின்றிருந்தால் நான் பயின்றிருக்கக் கூடிய படிப்பும் தொழில்நுட்பம் பயின்றதால் பெற்ற பட்டமும் தூரம் கொண்டவை. 21 வயதில் பொறியியலில் இளநிலைப் பட்டம் பெற்றவுடன் எனது கல்லூரிக் கல்வி நிறைவு பெற்று விட்டது. பொறியியல் பட்டம் பெற்று 10 ஆண்டுகளுக்குப் பின் எம். ஈ படிக்க விரும்பி கல்லூரியில் விண்ணப்பத்தை வாங்கினேன். பகுதி நேரக் கல்லூரியில். கல்லூரியின் நிர்வாகக் காரணங்களால் அந்த பட்டப்படிப்பை அவர்களால் தொடங்க முடியவில்லை. இப்போதும் ஏதேனும் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று நினைப்பேன்.  

இணையம் பரவலாவதற்கு முன் அறிவியலும் தொழில்நுட்பமும் புத்தகங்களில் இரு பரிமாண வடிவில் மட்டுமே படித்தறிவதாக இருக்கும். ஒரு நுரையீரல் குறித்த பாடம் நடத்தப்படுகிறது எனில் அதில் நுரையீரலின் வரைபடம் இருக்கும். அந்த வரைபடம் நூலின் அளவுக்கு ஏற்றவாறு பெரிதுபடுத்தப்பட்டு இருக்கும். ஒரு கான்கிரீட் தூணின் படம் இரு பரிமாணத்தில் மட்டுமே இருக்கும். ஒரு என்ஜினின் உள்பாகங்களும் அவ்வாறே. இணையம் வந்ததற்குப் பின் ஒரு நுரையீரல் என்றால் அது எங்கே இருக்கிறது என்பதை எப்படி இயங்குகிறது என்பதை நம் கண்களால் முப்பரிமாணத்தில் காண இயலும். ஒரு கான்கிரீட் தூண் எவ்விதம் கம்பிகளாலும் கான்கிரீட்டாலும் உருவாக்கப்படுகிறது என்பதன் காணொளியைக் காண முடியும். கல்வியியலில் இந்த விஷயம் ஒரு பாய்ச்சல். 2000க்குப் பின் பிறந்தவர்களுக்கு கிடைத்திருக்கக் கூடிய வாய்ப்பு. ஒரு பாடம் குறித்து விரும்பிய பொழுதில் விரும்பிய விரிவுரைகளை காணொளிகள் மூலம் கேட்க முடியும் காண முடியும் என்பது பெரும் வாய்ப்பு. 

இன்று இணையத்தில் ஒரு மனித உடல் பிணக்கூறாய்வு ( போஸ்ட் மார்ட்டம்) செய்யப்படுவதைக் கண்டேன். மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் தனது கல்லூரியின் சார்பாக மருத்துவ மாணவர்களுக்கு புரியும் விதத்தில் நடைமுறைப் பாடமாக அதனைக் காட்டுகிறார். 45 நிமிடம் நிகழ்ந்த அந்த பிணக்கூறாய்வின் மூலமாக நான் இது நாள் வரை அறிந்திராத கவனப்படுத்திக் கொள்ளாத பல விஷயங்களை அறிந்து கொண்டேன். உணர்ந்து கொண்டேன். அந்த பாடம் என்னைப் பலவாறாக யோசிக்கச் செய்தது. என்னைப் பலவிதத்தில் பரவசப்படுத்தியது. நாம் ஒன்றைக் கற்கும் போது நாம் வளர்கிறோம். கற்பிக்கப்படும் கல்வி மாணவனுக்கு கணக்கற்ற சாத்தியங்களை உண்டாக்கித் தருவதால் ஆசிரியனை இறைவன் என்கிறது நமது மரபு. ‘’ஆசார்ய தேவோ பவ’’ என ஆசிரியனை வணங்குகிறோம் நாம். 

காதின் அருகில் இருக்கும் தசை ஒரு அறுவைசிகிச்சைக் கத்தியால் கிழிக்கப்பட்டு தலையின் ஒரு பாதி கூறிடப்படுகிறது. மரணித்து நிறைய நேரம் ஆகியிருந்ததால் குருதி அதிகம் வரவில்லையா அல்லது தலைப்பகுதியில் ஒப்பீட்டளவில் ரத்த ஓட்டம் குறைவா எனத் தெரியவில்லை ; ரத்தம் அதிகம் வரவில்லை. முகம் பிய்த்து எடுக்கப்படுகிறது. தோல் உரித்தல் என்னும் பதத்துக்கு என்ன அர்த்தம் என்பதை இன்று நேரடியாகப் பார்த்தேன். பின்னர் ஒரு ரம்பத்தைக் கொண்டு மண்டை ஓட்டை அறுத்தார்கள். ஐந்து நிமிடம் அறுத்திருப்பார்கள். பின்னர் அதனை உடைத்து மூளையை வெளியே எடுத்தார்கள். கொழ கொழ என இருந்தது. இரு பரிமாணத்தில் பார்க்கும் போதும் அதனை வைத்து விளக்கப்படும் போதும் மூளையை காலிஃபிளவர்க்கு ஒப்பிடுவார்கள். ஆனால் மூளை வெட்டப்பட்ட வெண்டைக்காய் போல் இருந்தது. மூளையைத் தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொண்டார்கள். அதன் பின் மார்பு அறுக்கப்பட்டது. அறுவைசிகிச்சைக் கத்தி வெள்ளைக் காகிதத்தில் மார்ஜின் போடுவது போல எளிதாக மேல்தோலைக் கிழித்து விடுகிறது. மார்பின் எலும்பும் தோள்பகுதிக்கு செல்லும் எலும்பும் சந்திக்கும் சந்தியை ரம்பத்தால் அறுத்து அந்த எலும்பை உடைத்து விலக்குகிறார்கள். இரைப்பை, கல்லீரல், பெருங்குடல், சிறுகுடல் ஆகியவை தனித்தனியே வெளியே எடுக்கப்படுகிறது. இரைப்பையில் செரிமான திரவங்கள் சுரந்து இருக்கின்றன. அந்த உடலுக்குரியவர் இறந்து ஒருநாள் அல்லது 24 மணி நேரத்துக்குள் தான் இருக்கும் என்று தோன்றியது. இதயத்தை ஆழமாகத் தோண்டி எடுத்தார்கள். பெரிக்கார்டியல் திரவம் இதயத்தைச் சூழ்ந்திருப்பதைக் கண்டேன். சிறுநீரகத்தை வெளியே எடுத்தார்கள். மஞ்சள் நிறத்தில் தோலின் ஆழத்தில் கொழுப்பு இருந்தது. உடல் பருமனுக்கு காரணம் இந்த பொருள் தானா என நினைத்துக் கொண்டேன். 

கண்ணால் நாம் காணும் நம் வெளித்தோற்றத்தையும் பிறரின் வெளித்தோற்றத்தையும் மட்டுமே நாம் உடல் என எண்ணுகிறோம். உடலின் மிகச் சிறு பகுதி நாம் காணும் பகுதி. நமது உடலைக் கூட நாம் முற்றறிவதில்லை. எனது அறிதல்கள் எவ்வளவு சிறிய அளவு என்னும் எண்ணம் வந்தது. கல்லாதது உலகளவு என்பதை உணர்ந்தேன். புரிதலின் அறிதலின் பல கதவுகள் திறப்பதாக உணரத் தொடங்கினேன். 

இந்த உலகில் மனிதர்கள் எத்தனை புற பாகுபாடுகளை உருவாக்கிக் கொண்டு அதனை நம்பிக் கொண்டு ஒருவரோடொருவர் பூசலிட்டு மோதி தங்களை அழித்துக் கொள்கிறார்கள் என்பதை நினைத்த போது ஒரு கணம் கண் கலங்கினேன். 

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்றார் பட்டினத்தார். 

போவோம் ; காலம் வந்தது காண் ; பொய் விட்டு ,உடையான் கழல் புகவே என்கிறார் மாணிக்கவாசகர். 

ஹரிச்சந்திரா காட் மயானத்தில் அன்றெரிந்த உடலின் சாம்பலை அபிடேக திரவியமாய் ஏற்று கண் விழிக்கிறான் காசியின் விசுவநாதன்.  

Tuesday, 14 October 2025

ஆசிய ஜோதி

 
இன்று காலைப் பொழுதில் கவிமணி தேசிக வினாயகம் பிள்ளையின் ‘’ஆசிய ஜோதி’’ வாசித்தேன். புத்தனின் கதையும் புத்தனின் சொற்களும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கூறப்பட்டுக் கொண்டேயிருக்கிறது ; ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கேட்கப்படும் ஒவ்வொரு முறையும் அந்தக் கதையும் அந்தச் சொற்களும் கேட்பவர் உள்ளத்தை உருக்கிக் கொண்டேயிருக்கிறது. அவன் கதை கேட்பது ஓர் புனிதச் செயல்.  

Monday, 13 October 2025

அற்புதப் பெருவெளி

ஒரு சிறு விதை மண்ணில் ஊன்றப்படுகையில் மெல்ல முளைத்து வேர், இலை, கிளைகளுடன் மண்ணில் பெருவிருட்சமாக எழுந்து விண்ணைத் தொட துழாவுகிறது.  

கருவறையில் துளியினும் துளியாக சூல் கொண்டிருக்கும் உயிர் முதல் மாதத்தில் ஓர் அரிசி மணியின் அளவில் மட்டுமே இருக்கிறது ; பின்னர் ஓர் அருநெல்லியின் அளவில் இருக்கிறது. மூன்றாம் மாதத்தில் அந்த அருநெல்லி அளவுள்ள உயிர் கொண்டுள்ள உடலில் இதயம் துடிக்கத் தொடங்குகிறது ; மனித உடலின் நுட்பமான சீரண மண்டலம் நுண் அளவில் பதிட்டை ஆகிறது. மூளை உருவாகிறது. அரிசி மணி அளவில் சில மில்லிகிராம்கள் எடை கொண்டிருந்த உயிர் உடல் 30 வாரங்களில் 3000 கிராம் எடைக்கு வளர்கிறது. எலும்புகள், கண்களின் தசைகள், காற்றை ஜீவனாக்கும் நுரையீரல் அனைத்தும் கருவறைக்குள் முழு வளர்ச்சி பெற்று உலகில் நிறைய உலகை நிறைக்க உலகைக் காண வருகிறது. 

இந்த உலகம் ஓர் அற்புதப் பெருவெளி. கணந்தோறும் அற்புதம் நிகழும் அற்புதப் பெருவெளி. 

Sunday, 12 October 2025

என் ஈசன் என் சிசு

என் ஈசனே
உன்னைக் கண்டிருக்கிறேன்
உன்னைக் காண்கிறேன் என்னும் உணர்வு இன்றி
உன்னுடன் இருக்கிறேன் என்னும் உணர்வு இன்றி
என் முயற்சி இன்றி
என் தீரா வேட்கை இன்றி
உன் கருணையினால்
உன் பிரியத்தால்
உன் அன்பால்
உன்னைக் கண்டிருக்கிறேன்
எளிய உயிர் நான்
சிறிய உயிர் நான்
பெரும் அறியாமை மட்டுமே நான் கொண்டிருப்பது
நின் உளம் கணத்தின் கணமான நுண் நேரம் நினைவு கொண்டதால்
நின் கருணைப் பார்வை கணத்தின் கணமான நுண் நேரம் பார்த்ததால்
என்னிடம் பெரும் அறியாமை மட்டுமே இருக்கிறது 
என்பதை 
உணர்ந்து கொண்டேன்
அறிந்து கொண்டேன்
என் எண்ணங்கள்
என் நினைவுகள்
அனைத்திலுமே அறியாமை 
துயராகவே 
என் இருப்பை 
பெரும்பாலும் 
உணர்கிறேன்
என் ஈசனே
வலி கொண்டிருக்கிறது இறைவனே என் வாழ்வு
விழைவுகளின் வலி
உறவின் வலி
சுமந்து கொண்டிருக்கும்
வலிகளை
துயரங்களை 
அறியாமையை 
என்னா உதற முடியவில்லை
என் இறைவா
உன்னிடம் 
முழுவதும் சரணடைந்து விடவும் 
என்னால் முடியவில்லை
என் இறைவா
உன்னுடன் இருக்க வேண்டும்
உன்னுடன் கலந்து விட வேண்டும்
உன் கருணை மட்டுமே இதை நிகழ்த்தும்
உன் கருணையன்றி வேறேதாலும் இது நிகழாது
உயிர்கள் கருவறையில் இருப்பது போல் 
நீயும் கருவறையில் இருக்கிறாய்
கருவறையில் இருப்பதால் 
நீ சிசு
கருவறையில் இருப்பதால்
நீ சிசுவும்
சிசுவாகிய இறைவா
சிசுவாகிய ஈசா
உன்னை சிசுவாக எண்ணும்
இக்கணம் 
நான் இளைப்பாறுதல் கொள்கிறேன்
சிசுவின் பாதங்களை சென்னி சூடுகிறேன் 

திராவிடக் கட்சிகளின் அரசுகள் சாராய அரசுகள்

நம் நாட்டுக்கு படையெடுத்து வந்த முஸ்லீம்கள் நம் நாட்டின் ஆலயங்களை இடித்து அதன் செல்வங்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். நம் நாட்டுக்கு வணிகம் செய்யும் நோக்கத்தோடு வந்து நம் நாட்டின் பெரும் பகுதியை தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்த பிரிட்டிஷ்காரர்கள் நம் நாட்டின் பாரம்பர்யத் தொழில்களை நசித்து மக்கள் மீது கொள்ளை வரி விதித்து அந்த செல்வத்தை தம் நாட்டுக்குக் கொண்டு சென்றனர். அவர்களின் 190 ஆண்டுகால ஆட்சியில் அவ்விதம் அவர்கள் கொண்டு போன செல்வம் எவ்வளவு அப்போது அவர்களால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட பஞ்சங்களால் மடிந்து போன மக்கள் எத்தனை கோடி போன்ற விபரங்கள் இன்றளவும் புதிதாக கணக்கிடப்பட்டு அந்த எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கின்றன. நம் நாட்டுக்கு படையெடுத்து வந்து நம் நாட்டின் செல்வங்களைக் கொள்ளையடித்துச் சென்ற முஸ்லீம்களும் சரி நம் நாட்டின் ஏழை எளிய மக்களை வாட்டி வதைத்த பிரிட்டிஷ் அரசும் சரி அவை சாராய விற்பனையில் இறங்கவில்லை. பிரிட்டிஷார் கள்ளுக்கடை திறக்க அனுமதி அளித்தனர். கள்ளுக்கடை நடத்த அனுமதிக்கான தொகையைப் பெற்றுக் கொண்டனரே தவிர அவர்களே கள்ளுக்கடை நடத்தவில்லை. 

இந்திய ஜனநாயகத்தில் ஒரு மாநில அரசு ஊருக்கு ஊர் சாராயக்கடை திறந்து தன் குடிமக்களுக்கு சாராயம் விற்கிறது என்றால் அது தமிழக அரசு மட்டும்தான். உலகெங்கும் சாராயம் குடிக்கும் வழக்கம் இருக்கிறது. எல்லா அரசுகளும் சாராயத்தின் மீதும் சாராயக்கடைகளின் மீதும் கணிசமான வரி விதிக்கின்றன. ஓர் அரசாங்கமே மது வாங்குகிறது ; மதுவை விற்க ஊருக்கு ஊர் வாடகைக்கு கடைகளைப் பிடிக்கிறது ; மது விற்க அரசு ஊழியர்களை நியமிக்கிறது ; தனது குடிமக்களுக்கு மதுவை விற்கிறது ; ஒவ்வொரு மதுவும் ஒவ்வொரு கடையிலும் மது விற்பனை இவ்வளவு கூட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கிறது என்பது தமிழகத்தில் மட்டுமே நடக்கும் செயல். 

அரசாங்கங்களின் வரலாற்றில் ஜனநாயக அரசுகளே மக்கள் நலன் என்னும் மையக் கருத்தை பிரதானமாகக் கொண்டிருப்பவை. அவ்விதமான ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் தமிழக அரசு தன் குடிகளை அழிக்கும் ஒரு செயலை அரச ஆதரவுடன் அரச பாதுகாப்புடன் செய்வது என்பதைப் போல ஒரு வெட்கக்கேடு ஜனநாயகத்துக்கு வேறு ஏதும் கிடையாது. ஒரே அரசாங்கமே மாநிலமெங்கும் மருத்துவமனைகளை நடத்தும் ; அதே அரசாங்கமே சாராயமும் விற்கும் எனில் அதனை மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசாக எவ்விதம் கூற இயலும். ஒருபுறம் கருவுற்ற தாய்மார்களுக்கு அவர்கள் உடல்நலத்தைப் பேணும் பலவிதமான மருத்துவ உதவிகளை அளிப்பதாய் கூறும் அரசு அந்த பெண்ணின் கணவன் மது குடித்து தனது ஆரோக்கியத்தை அழித்துக் கொண்டு மரணத்தை நோக்கிச் செல்வதற்கு வழி அமைத்துக் கொடுக்கிறது. இந்த இரண்டில் மது விற்று தன் குடிகளை அழிக்கும் முகமே தமிழக அரசின் உண்மையான முகம். 1989ம் ஆண்டு ஆட்சி புரிந்த தி.மு.க சர்க்கார் மலிவு விலை மதுக்கடை என பாக்கெட் சாராயம் விற்கத் துவங்கியது. அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து அ.தி.மு.க சர்க்கார் ‘’டாஸ்மாக்’’ மூலம் சகல விதமான மதுவும் விற்க ஆரம்பித்தது. தி.மு.க சர்க்கார் மீண்டும் வந்ததும் ‘’டாஸ்மாக்’’கை பலமடங்கு தீவிரப்படுத்தினர். 

இன்று தமிழக அரசுக்கு டாஸ்மாக் வருமானமே பிரதான வருமானம் என்னும் நிலை ஏற்பட்டு விட்டது. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கக்கூட டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானமே காரணம் என்னும் நிலை உள்ளது. இதன் காரணமாக குடிமக்களுக்கு மது விற்று அரசாங்கம் நடத்துவது என்னும் இழிவான முடிவை முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை எடுத்து செயல்படுத்துவதற்கு லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும் அந்த பழியில் பாவத்தில் கை நனைக்கும் நிலை உள்ளது. 

2026ல் தேர்தல் வர இருக்கிறது. அடுத்து அமையவிருக்கும் தமிழக அரசு மது விற்க கூடாது. Either rule or quit என்று சொல்வார்கள். மது வருமானம் இல்லாமல் வேறு வரி வருவாய்களைக் கொண்டு ஆட்சி நடத்த முடியும் என்றால் ஆட்சி நடத்தட்டும். இல்லையெனில் அதிகாரத்தில் இல்லாமல் இருக்கட்டும்.    

Saturday, 11 October 2025

ஓர் அலைபேசி அழைப்பு

 இன்று மதியம் தில்லியிலிருந்து ஒரு நண்பர் அழைத்தார். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளைக் குறித்து கேள்விப்பட்டு அவர் என்னைத் தொடர்பு கொண்டார். நண்பர் தில்லியில் ஐ ஏ எஸ் தேர்வுக்காக தயார் செய்து கொண்டிருக்கிறார். ஆண்டுக்கு ஒரு முறை ஐ ஏ எஸ் தேர்வு நடைபெறும் எனினும் நண்பர் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை அந்த தேர்வினை எழுதுகிறார். ஒரு தேர்வாளர் இத்தனை முறை தான் தேர்வு எழுத வேண்டும் என அந்த தேர்வுமுறையில் நிபந்தனை உள்ளது. தனது முயற்சிகளின் எண்ணிக்கையை சேமித்துக் கொள்வதற்காக சிலர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு எழுதுவது உண்டு. இரண்டு ஆண்டுமே தொடர் தயாரித்தல்களில் இருப்பார்கள். தேர்வு எழுதாத ஆண்டில் கூட நிகழும் தேர்வுகளின் வினாத்தாள்களுக்கு பதில் எழுதிப் பார்த்து பயிற்சி நிறுவனங்களின் ஆசிரியர்களைக் கொண்டு திருத்திக் கொண்டு தங்கள் நிலையை சுயமதிப்பீடு செய்து கொள்வார்கள். இது ஒரு யுக்தி. பலபேருக்கு உதவியிருக்கிறது. அரசாங்கம் என்பது மக்களிடமிருந்து வரி வாங்கும் ஓர் அமைப்பு. ஆதிகாலத்திலிருந்து அவற்றின் மாறாத பணி அதுவே. அரசாங்கத்துக்கு சீராக வருமானம் கிடைக்க வேண்டும் என்றால் நாட்டில் பலவிதமான தொழில்கள் நல்லவிதமாக நடக்க வேண்டும். அவ்விதம் நடந்தால் மக்களிடம் நல்ல வருவாய் இருக்கும். அந்த வருவாயின் ஒரு பகுதி அரசுக்கு வரியாக வரும். அதைக் கொண்டு அரசு தனது ஊழியர்களுக்கு ஊதியம் அளித்து அரசாங்கத்தை சீராக நடத்திச் செல்லும். ஜனநாயக அரசுக்கு தன்னை வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் சாமானிய மக்களுக்கு உகந்த சிலவற்றைச் செய்ய வேண்டிய ஒரு பொறுப்பு இருக்கிறது. ஜனநாயக அரசியலில் இந்த அம்சம் தவிர்க்க முடியாதது. அரசாங்கத்துக்கு அதிக வரி செலுத்துபவர்கள் தொழில் புரிபவர்கள். பெருந்தொழில்களிலிருந்து சிறு தொழில் புரிபவர்கள் வரை. தனக்கு அதிக வருவாய் அளிக்கிறார்கள் என்பதற்காக தொழில் புரிபவர்களுக்கு மட்டும் அரசு சிந்திக்க முடியாது ; தனக்கு வரி அதிகம் கொடுக்காத சாமானிய மக்களுக்காகவும் அரசு சிந்திக்க வேண்டும். 

1970களில் நாட்டை இந்திரா சர்க்கார் ஆண்டு கொண்டிருந்தது. ‘’கரீஃபி கடாவ்’’ என முழங்கியது அந்த அரசு. வறுமையை ஒழிப்போம் என்பது அதன் பொருள். அந்த அரசின் முக்கிய வருவாய் என்பது சாமானிய மக்கள் அளிக்கும் வரியே. அதாவது ஒரு சாமானியன் ஐந்து ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்குகிறான் என்றால் அதில் இருபத்து ஐந்து பைசா அரசுக்கு வருவாயாகச் செல்லும். இவ்விதமாக சாமானியனிடமிருந்து வாங்கிய இருபத்து பைசா ஐம்பது பைசாவை தனது வருமானமாக வைத்துக் கொண்டு கிடைத்த சொற்ப வரி வருவாயில் நாட்டை நடத்திக் கொண்டிருந்தது இந்திரா சர்க்கார். 1991ம் ஆண்டு நரசிம்ம ராவ் சர்க்கார் ஆட்சிக்கு வந்தது. வரி விதிப்பில் அனேக மாற்றங்கள் செய்யப்பட்டன. அவ்வாறு செய்யப்பட்ட மாற்றங்களின் வழியாகவே நாட்டின் வரி வருவாய் கூடியது. இங்கே நாம் ஒரு விஷயத்தைக் கவனித்துப் பார்க்கலாம். அதாவது குறைவான வரி வருவாயுடன் தள்ளாடிக் கொண்டிருந்த இந்திராவின் சர்க்காரும் காங்கிரஸ் சர்க்கார்தான். வரி விதிப்பில் சீர்திருத்தம் மேற்கொண்ட நரசிம்ம ராவ் சர்க்காரும் காங்கிரஸ் சர்க்கார் தான். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2014ம் ஆண்டில் பதவியேற்றதும் ஓரிரு ஆண்டுகளில் சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தியது. கடந்த 11 ஆண்டுகளாக அந்த வரி விதிப்பு நாட்டுக்கு அளிக்கும் வருவாய் பங்களிப்பு அளப்பரியது.  நாட்டின் வருவாய் பெருகுவதற்கு ஏற்ப அரசு சாமானிய மக்களுக்காகத் தீட்டும் திட்டங்களும் புதுப்புது வடிவங்கள் பெறுகின்றன. சாமானிய மக்கள் ஏழ்மையுடன் இருக்கும் நாட்டை வழிநடத்துவதற்கும் சாமானிய மக்கள் குறைந்தபட்ச பொருளியல் பாதுகாப்புடன் குறைந்தபட்ச வசதிகளுடன் இருக்கும் நாட்டை வழிநடத்துவதற்கும் எவ்வளவோ வேறுபாடுகள் உண்டு. நிர்வாக பாணி இரண்டுக்கும் வேறுவேறானவை. ஜனநாயக அரசுக்கும் மக்களுக்கும் இடையே இருந்து செயல்பட வேண்டிய நிலையில் இருப்பது அதிகார வர்க்கம். ஐ ஏ எஸ் அதிகாரிகள் அந்த இடத்திலேயே இருக்கிறார்கள். 

என்னைத் தொடபு கொண்ட இளைஞர் காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வில் தன்னார்வம் காரணமாக ஈடுபடுகிறார். பருவநிலை மாற்றம் , கார்பன் உமிழ்வு ஆகியவை அவருக்கு பிடித்தமான துறைகள். காலநிலை மாற்றம் தொடர்பான தமிழ்நாடு அரசின் அறிக்கை தமிழக மாவட்டங்களிலேயே மயிலாடுதுறை மாவட்டம் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதலிடத்தில் இருப்பதாகக் கூறினார். இங்கே மிக அதிகமாக நெல் வயல்கள் மட்டுமே இருப்பதால் மரங்களின் பரப்பு வெறும் 1.6 சதவீதம் மட்டுமே இருப்பதை சுட்டிக் காட்டினார். மயிலாடுதுறை மாவட்டம் 100 பங்கு கார்பனை உமிழ்ந்தால் 1 பங்கு கார்பனை மட்டுமே உறிஞ்சிக் கொள்கிறது என்னும் புள்ளிவிபரத்தை சுட்டிக் காட்டினார். வேதியியல் தொழிற்சாலைகள் இருக்கும் மாவட்டங்களில் கூட இந்த அளவு நிலை இல்லை என்பது கவனத்துக்குரியது என்றார். மயிலாடுதுறை மாவட்டத்தில் மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது என்பதைக் கூறினார். எனக்கு இந்த புள்ளிவிபரங்கள் புதியவை. நான் அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டேன். 

’’காவிரி போற்றுதும்’’ ஒரு நுண் அமைப்பு. ஒரு கிராமம் என்னும் அடிப்படை அலகை செயல்களமாய்க் கொண்டு செயல்பட்டு வருவதை தனது வழக்கமாய்க் கொண்டுள்ளது. நம்மால் முடிந்ததை நாம் செய்வோம். ‘’காவிரி போற்றுதும்’’ நம்பிக்கையுடன் செயலாற்றுகிறது. 

Friday, 10 October 2025

முக்கியமான புரிதல் (நகைச்சுவைக் கட்டுரை)

பொறியியல் பட்டம் பெற்றவுடன் ஓரிரு ஆண்டுகளில் சுயதொழில் புரிய வேண்டும் என்று முடிவு செய்து கட்டுமானத் தொழிலுக்குள் வந்தேன். அப்போது நான் இளைஞன். இளமைக்கேயுரிய உத்வேகமும் நம்பிக்கைகளும் கொண்டவன். இன்று அந்த நாட்களை நினைத்துப் பார்க்கும் போது தளரா ஊக்கம் கொண்டிருந்த அந்த மனநிலை இனியதாகவே இப்போதும் இருக்கிறது. லௌகிக வாழ்வு என்பது நாம் பலருடன் இணைந்திருப்பது. அதில் எப்படி ‘’நான்’’ என்பது வலுவான ஒரு தரப்போ அதே போல் ‘’பிறர்’’ என்பதும் வலுவான தரப்பு. இதனை விரிவுபடுத்தி நான் என்பது ‘’ஒன்று’’ எனில் பிறர் என்பது மொத்த உலக மக்கள் தொகையான ‘’எழுநூறு கோடி’’ என்றும் கொள்ள இயலும். இன்னும் நுணுக்கமாகப் பார்த்தால் பிறர் என்பது ‘’ஒன்றிலிருந்து எழுநூறு கோடி’’ என்றும் கொள்ளலாம். லௌகிக வாழ்வில் நாம் இந்த கணத்தில் நமக்கு எதிரில் இருக்கும் ஒருவரையே எதிர்கொள்கிறோம். எழுநூறு கோடி பேரையும் எதிர்கொள்வதில்லை. இருப்பினும் காலச்சக்கரத்தில் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப நாம் மனிதர்களை அதிக எண்ணிக்கையில் சந்தித்துக் கொண்டேயிருக்கிறோம்.   

கட்டுமானத் தொழிலில் நான் எதிர்கொள்ள வேண்டியவர்கள் வாடிக்கையாளர்கள்,தொழிலாளர்கள்,ஹார்டுவேர் கடைக்காரர்கள் ஆகியோர் மட்டுமே. ஒரு கடைக்காரருக்கு வாடிக்கையாளர் அடிக்கடி வருகிறார். பால் கடை என்றால் தினமும். மளிகைக்கடை என்றால் மாதம் ஒருமுறை. துணிக்கடை என்றால் ஆறு மாதத்துக்கு ஒருமுறை. செருப்புக் கடை என்றால் ஆண்டுக்கு ஒரு முறை என. ஆனால் கட்டுமானத் தொழிலில் ஒரு வாடிக்கையாளர் ஒருமுறை மட்டுமே வருவார். 90 சதவீதம் அவ்வாறே. இரண்டாம் முறை ஒரு வாடிக்கையாளர் வருவது என்பது மிகவும் அரிதானது. என்ன காரணம் என்றால் ஒருவர் ஒரு வீடு கட்டுகிறார் என்றால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு அவர் எந்த கட்டுமானமும் மேற்கொள்ள மாட்டார். தனது 40 வது வயதில் ஒருவர் வீடுகட்டுகிறார் என்றால் அடுத்த 30 ஆண்டுகளில் அவருடைய இரண்டு தலைமுறை உருவாகி வந்து விடும். அவர்கள் இருக்கும் வீட்டைப் பெரிதாக்கிக் கட்டினாலோ அல்லது இடித்துக் கட்டினாலோ தான் உண்டு. 

1000 சதுர அடியிலிருந்து 1200 சதுர அடி வரை பரப்பு கொண்ட வீடுகளையே நான் கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். கட்டுமானத் துறையில் ஒவ்வொரு பணியும் ஒவ்வொரு தன்மையும் செயல்முறையும் கொண்டவை. ஒரு பணிக்கும் இன்னொரு பணிக்கும் சிறு மாற்றங்களிலிருந்து பெருமாற்றங்கள் வரை இருக்கும். மிடில் கிளாஸ் வாடிக்கையாளர்களையே நான் எதிர்கொள்ள நேரிட்டது. நான் செய்து கொண்டிருந்த விதமான பணிகளில் ‘’பில்டிங் பிளான்’’ என்பது மிக மிக முக்கியமானது. எங்கள் பணி என்பது வாடிக்கையாளர் ஒத்துக் கொண்ட ‘’பில்டிங் பிளான்’’ஐ ஸ்தூலமாக மண்ணில் கட்டிடமாக எழுப்பிக் கொடுப்பதே. பிளான் இறுதி செய்யப்பட்டவுடன் நாங்கள் அதனை நோக்கி செல்லத் துவங்குவோம். காகிதத்தில் வரையப்பட்ட பிளானை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். வேறு ஏதும் சேர்க்கலாம். ஆனால் பிளான் இறுதி செய்யப்பட்டு பணி தொடங்கினால் அந்த நிலையில் மாற்றம் செய்தால் அது சரிப்பட்டு வராது. அது எங்களுக்கும் ஊறு ; வாடிக்கையாளருக்கும் ஊறு ; கட்டிடத்துக்கும் ஊறு. 

ஒரு மிடில் கிளாஸ் வாடிக்கையாளருக்கு 1000 சதுர அடி 2 BHK அல்லது 3 BHK வீட்டின் பிளான் அளிக்கிறோம் என்றால் எல்லா பிளானும் வாஸ்து சாஸ்திரப்படி அமைய வேண்டும். எங்கள் தொழிலில் வாஸ்து சாஸ்திரம் பார்க்காமல் கட்டப்படும் வீடுகள் ஆயிரத்துக்கு ஒன்று கூட கிடையாது. ஹிந்துக்கள் மட்டுமல்ல கிருஸ்தவர்களும் முஸ்லீம்களும் கூட வாஸ்துப்படியே வீடு கட்டுவார்கள். வாஸ்து 100 சதவீதம் இருக்க வேண்டும் என கிருஸ்தவர்களும் முஸ்லீம்களும் குறிப்பிட்டுக் கூறுவார்கள். எனது நண்பர் ஒருவர் நாத்திக அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு வீடு கட்டிக் கொடுத்தார். அவர் நண்பரிடம் வாஸ்து பக்காவாக இருக்க வேண்டும் என மிக வலியுறுத்திக் கூறியிருக்கிறார். 1000 சதுர அடி வீடு என்றால் ஹால், 2 பெட்ரூம், சமையலறை, பூஜை அறை ஆகியவை அதில் முக்கியமானவை. கட்டிடப் பரப்பில் 85 சதவீதத்தை அவையே எடுத்துக் கொள்ளும். வீடு எந்த திசையைப் பார்த்து இருந்தாலும் வட கிழக்கில் ஆழ் துளைக் கிணறு இருக்க வேண்டும் ; தென் மேற்கில் மாஸ்டர் பெட்ரூம் இருக்க வேண்டும் ; தென் கிழக்கில் சமையலறை இருக்க வேண்டும் ; வட கிழக்கில் பூஜை அறை இருக்க வேண்டும் என்பது கட்டாயம். எனவே கிழக்கு , மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளுக்கு வாஸ்து படியான பிளான் இப்படித்தான் இருக்கும் - இப்படித்தான் இருக்க முடியும் என்பதே நிலை. மாடிப்படி போர்டிகோ ஆகியவை எங்கே அமைகின்றன என்பதைப் பொறுத்து ஒவ்வொரு பிளானும் இறுதி வடிவம் பெறும். 

மிடில் கிளாஸ் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தன்மை உண்டு. கட்டுமான அலுவலகத்திற்கு வருகை புரிந்து நம் எதிரில் அமர்ந்து தான் கட்ட உத்தேசித்திருக்கும் வீட்டின் தேவைகளைக் கூறி தன்னால் எவ்வளவு தொகை வீட்டுக்காக செலவு செய்ய முடியும் எனக் கூறும் வாடிக்கையாளர் எதிரில் அமர்ந்திருக்கும் ஒரு நபர் மட்டும் அல்ல ; அவர் தனது மனைவி, மகன், மகள், தந்தை, தாய், மாமனார், மாமியார், மைத்துனர், சித்தப்பா, பெரியப்பா, சித்தி, பெரியம்மா, சித்தி மருமகன், பெரியப்பா மருமகள் ஆகியோரின் பிரதிநிதி.  மேற்படி நபர்களின் இயல்பும் சுபாவங்களும் நாம் போடப்போகும் பிளானிலும் கட்டப்போகும் கட்டிடத்திலும் தாக்கம் ஏற்படுத்தும். 90 சதவீத உறவினர்கள் தங்களுக்குள் பொறாமையும் பூசலும் கொண்டிருப்பார்கள். அவர்களின் பூசல் பொறாமையும் கட்டிடப் பணியில் பாதிப்பை உண்டாக்கும். பணி நடக்கும் போது வருகை புரியும் உறவினர்கள் இதை இப்படி மாற்றிச் செய்யுங்கள் எனக் கூறி விடுவார்கள். அது கட்டிடப் பணியின் ஒருமையை பாதிக்கும். 

வாடிக்கையாளரிடம் கட்டிட பிளானை அளிக்கும் போது தொழில் அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் கீழ்க்கண்டவாறு கூறி விடுவார்கள் : ‘’சார் ! 1000 சதுர அடி 2 bhk பிளான் இது. கிச்சன், பூஜா, மாஸ்டர் பெட்ரூம் இதெல்லாம் வாஸ்து படி ரொம்ப முக்கியம். அதெல்லாம் கரெக்டா பிளேஸ் ஆகியிருக்கு. நீங்க ரெண்டு நாள் மூணு நாள் பிளானை கையில வச்சுகிட்டு நல்லா யோசிங்க. ஃபேமிலி மெம்பர்ஸ்க்கும் பிளானைக் கொடுங்க. உங்க ரிலேட்டிவ் எல்லாருக்கும் பிளானை அனுப்பிடுங்க. இப்ப இந்த ஸ்டேஜ்ல பிளான் மாத்தறதுன்னா எப்படி வேணாலும் மாத்திடலாம். பில்டிங் ஒர்க் ஆரம்பிச்சுட்டா மாத்தறது கஷ்டம். ரிலேட்டிவ்ல நீங்க நல்லா இருக்கணும்னு நினைக்கறவங்க இருப்பாங்க. நீங்க நல்லா இருக்கறது பிடிக்காம இருக்கறவங்களும் இருப்பாங்க. நாங்க எங்க எக்ஸ்பீரியன்ஸ்ல நிறைய பாத்துட்டோம். நீங்க எங்க கஸ்டமர். நாங்க நீங்க சொல்ற படி வேலை செஞ்சு கொடுக்க கடமைப்பட்டுருக்கோம். உங்களுக்கு மட்டும்தான் கடமைப்பட்டிருக்கோம். இத்தனைக்கும் மேல கட்டிடம் எழும்பினதும் ஏதாவது சேஞ்ச் செய்ய முடியுமான்னு கேட்டா சேஞ்ச் செய்யலாம். நம்ம நாட்டுல ஒரு முதலமைச்சர் சொன்னாங்கன்னு சட்டசபை கட்டிடத்தை ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலாவும் தலைமைச் செயலகக் கட்டிடத்தை சைல்ட் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலாவும் மாத்தலையா அந்த மாதிரி மாத்த முடியும். ஆனா அப்படி ஒரு ஸ்டேஜ் வராம பாத்துக்கங்க’’ . இதன் பிறகும் முட்டி மோதி திட்டமிட்ட படியோ அல்லது திட்டமிடலைத் தாண்டியோ கட்டிடம் எழும்பும். 

பணியிடத்தில் தொழிலாளர்கள் எவ்விதம் நடந்து கொள்கிறார்கள் என்பதை தொழிலுக்கு வந்த நாட்களில் அவதானிப்பேன். சிறிய விதம் தொடங்கி பெரிய அளவு வரை ஒத்துழையாமையையே அவர்கள் வெளிப்படுத்துவார்கள். அன்றன்றைய நாளின் சம்பளம் அன்றன்றுக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டுவிடும். சம்பளம் முடிவு செய்யப்படுகிறது எனில் பணி நேரமும் முடிவு செய்யப்பட வேண்டும். கட்டிடப் பணி என்பது காலை 9 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை செய்ய வேண்டிய பணி. அதாவது பகல் நேரத்தில் செய்ய வேண்டிய பணி. அதன் பின் கட்டு வேலையோ பூச்சு வேலையோ 10 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரம் செட் ஆக வேண்டும். அவர்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் பணி செய்ய வேண்டும். அதனை காலை 7 மணியிலிருந்து மதியம் 2.30 மணி வரை கூட செய்யலாம். காலை 10 மணிக்கு வருவார்கள். மாலை 5.30க்கு வேலையை முடித்து விடுவார்கள். இரு தேனீர் இடைவேளை என்று 45 நிமிடம் போய் விடும். உணவு இடைவேளைக்கு 1 மணி நேரம் போய்விடும். ஐந்தரை மணி நேரத்திலிருந்து ஆறு மணி நேரம் வரை மட்டுமே வேலை நடக்கும். இதில் பணம் பிரதான விஷயம் இல்லை . 8 மணி நேரம் செய்ய வாய்ப்புள்ள பணியை 5.30 மணி நேரம் செய்தால் ஆறு மாதத்தில் நடக்க வேண்டிய வேளை முடிய எட்டு மாதம் ஆகி விடும். நடுவில் மழைக்காலம் வந்து விட்டால் மேலும் ஒரு மாதம் கூடி விடும். ஆறு மாதத்தில் முடிய வேண்டிய பணி 9 மாதத்தில் முடியும். இவை எதனைப் பற்றியும் பணியாளர்கள் கவலை கொள்ள மாட்டார்கள். என் பணிகளில் பணியாளர்கள் கடமை உணர்ந்து செயலாற்றுபவர்கள் எனினும் சிறு அளவில் இந்த சிக்கல் இருக்கவே செய்யும். கொத்து வேலையும் கம்பி வேலையும் பொறியாளர்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும். கார்பெண்டர் , பிளம்பிங், எலெக்ட்ரிக்கல், டைல்ஸ் ஒட்டுதல், பெயிண்ட் ஆகிய வேலைகள் ஒப்பந்தத் தொழிலாளர் இயல்புகளைச் சேர்ந்தவை. பாரதி பணியாளர் இயல்பு குறித்து கண்ணன் - என் சேவகன்  என்ற கவிதையில் கூறுகிறார். 

தொழிலாளரிடம் ஒரு இயல்பு உண்டு. கட்டுமானப் பொருள் ஏதேனும் வாங்க வேண்டும் என்றால் ‘’சார் ! நான் போய் வாங்கிட்டு வரட்டுமா ‘’ என்று கேட்பார்கள். அவர்கள் ஒன்றைச் செய்யட்டுமா என்று கேட்டால் அதில் அவர்களுக்கு ஏதோ ஒரு சகாயம் இருக்கிறது என்று பொருள். பொருட்களின் விலை ரூ.100 என்றால் அந்த கடைக்காரர் பணியாளர் வந்திருக்கிறார் என்றால் அந்த பொருளின் விலையை ரூ.110 என்று பில் போட்டு பணியாளருக்கு 5 ரூபாய் கொடுத்து விட்டு தான் 5 ரூபாய் கூடுதலாக எடுத்துக் கொள்வார். ஆயிரம் ரூபாய்க்கு ஒரு பொருள் என்றால் அதே வீதத்தில் ரூ.1100க்கு பில் போட்டு ஐம்பது ரூபாய் தனக்கும் 50 ரூபாய் பணியாளருக்கும் என்று பிரிந்து விடும். இவ்விதம் நிகழும் என்பது பொறியாளர்களாகிய எங்களுக்குத் தெரியும் என்பதால் எந்த பொருளையும் வாங்க தொழிலாளரை அனுப்பவே மாட்டோம். இருப்பினும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையுமே இந்த கேள்வி எங்களிடம் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த சூழ்ச்சி எங்களுக்குத் தெரியும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அப்படி இருந்தும் அதனைக் கேட்காமல் இருக்க மாட்டார்கள். இங்கிலாந்து பிரதமராக மார்கரெட் தாட்சர் இருந்த போது அவரைக் கொல்ல ஐ.ஆர்.ஏ என்னும் தீவிரவாத அமைப்பு ஒரு பார்சலில் வெடிகுண்டை அனுப்பியது. அந்த கொலை முயற்சியில் தாட்சர் மயிரிழையில் உயிர் தப்பினார். அப்போது அந்த தீவிரவாத அமைப்பு ‘’உங்கள் பிரதமரைக் காப்பாற்ற நீங்கள் ஒவ்வொருமுறையும் ஜெயிக்க வேண்டும் ; உங்கள் பிரதமரைக் கொல்ல நாங்கள் ஒருமுறை ஜெயித்தால் போதும்’’ என்று கூறினார்கள். 

பணியாளர்கள் ஒரு விஷயத்தை சொல்கிறார்கள் எனில் அவர்கள் சொல்வதற்கு எதிர்திசையில் யோசித்தால் அதில் அவர்கள் அடைய விரும்பும் லாபம் என்ன என்பது தெரிந்து விடும். இதனை விரிவாக்கி ஒருவர் கூறும் கூற்றை இரண்டாகப் பிரித்து முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் சென்று ஆய்ந்து தெளியும் முறையை அறிந்து கொண்டேன். 

‘’முள்ளும் மலரும்’’ என்ற படத்தில் ஒரு காட்சி வரும். என்ஜினியரான சரத் பாபு தனது பணியாளர் காளியைப் பற்றி இன்னொரு பணியாளரிடம் விசாரிப்பார். அந்த பணியாளரின் கூற்று வாய்ஸ் ஓவரில் நிகழ அவர் கூறும் காளியின் இயல்புகள் காட்சிகளாக திரையில் ஓடும். அபிப்ராயம் கேட்கப்படும் பணியாளர் சில விஷயங்களை சரியாகச் சொல்வார். பல விஷயங்களை மாற்றி பொய்யாகச் சொல்வார். உதாரணத்துக்கு காளி தன் தங்கைக்கு சாப்பாடு போடாமல் பட்டினி போடுபவர் என அவர் கூறிக் கொண்டிருக்கும் போது காளி தன் தங்கைக்கு பிரியமாக உணவு ஊட்டும் காட்சி திரையில் ஓடும். இயக்குநர் மகேந்திரனின் சிறப்பான உத்தி அது. பணியாளர் குறைவான உண்மைகளையும் அதிகமான பொய்களையும் கூறி முடித்த பின்னர் ‘’சார் ! எனக்கு ஒரு தம்பி இருக்கான். டிப்ளமா படிச்சுருக்கான். காளியை வேலைல இருந்து நீக்கிட்டா என் தம்பிக்கு அந்த வேலையைக் கொடுங்க.’’என்பார். என்ஜினியர் ‘’இங்க டிப்ளமா படிச்ச தம்பி இல்லாத பணியாளர் யாராவது நம்ம கம்பெனில இருகாங்களா’’ என்று கேட்பார். பணியாளர் யதார்த்தமாக ‘’ஏன் சார் கேட்கறீங்க?’’ என்பார். ‘’எனக்கு காளியைப் பற்றிய உண்மையான விபரங்கள் வேணும்’’ என்பார் என்ஜினியர்.  

Tuesday, 7 October 2025

தவிர்க்க வேண்டிய மூன்று

 முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நான் ஒரு சமூக சேவகரைச் சந்தித்தேன். அப்போது அவருக்கு 70 வயது இருக்கும். தனது வாழ்நாளை முழுமையாக சமூக மேம்பாட்டுக்காக அர்ப்பணித்தவர். சமூகப் பணி என்பது மனிதர்களை இணைக்கும் பணி ; ஒற்றுமையுடன் மனிதர்கள் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டும் அதிகப்படுத்திக் கொண்டும் இருக்கும் பணி. மனிதர்களை தினமும் சந்திப்பதும் அவர்களிடம் உரையாடுவதும் அவர்கள் மனம் இயங்கும் விதத்தைக் கவனிப்பதும் அவர்கள் ஐயங்களுக்கு விடை பகர்வதும் சமூகப் பணியின் பெரும்பான்மையான அங்கம். அவர் ஒரு விஷயம் சொன்னார். சக மனிதர்களுடனான உரையாடல்களில் தவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்களை அவர் சொன்னார். அவை 1. அரசியல் 2. சினிமா 3. விளையாட்டு. இவற்றைக் குறித்து பேசாமல் விவாதிக்காமல் இருப்பது பயன் தரக்கூடியது என்று கூறினார். பல்லாண்டுகள் அனுபவத்தின் விளைவாக அவர் பரிந்துரைத்த விஷயம் அது. அது உபயோகமானது என்றே நான் நினைக்கிறேன். 

என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து இந்த விஷயங்களை இவ்விதம் புரிந்து கொண்டேன். அரசியல் குறித்து உரையாடும் இரண்டு பேர் இரண்டு விதமான நிலைப்பாடு எடுத்து விடுவார்கள். உரையாட உரையாட தங்கள் தரப்பில் இருவருமே தீவிரம் கொள்ளத் தொடங்குவார்கள். அந்த உரையாடல் அவர்களுக்குள் உளப்பூசல் உருவாவதற்கான துவக்கத்தை நிகழ்த்தி விடும். பூசலின் இயல்பு நாளாக நாளாக அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பதே. பின்னர் அந்த இருவரின் உறவில் அப்பூசல் குறித்த நினைவே பூதாகரமாகி நிற்கும். 

ஜனநாயகத்தில் அரசியல் பேச்சு என்பது கட்சியினர் தங்கள் பரப்புரையின் போது தங்கள் கருத்தைத் தெரிவிப்பது. அது ஒருவர் ஒரு பெருந்திரளை நோக்கிப் பேசுவது எழுதுவது ஆகியவையே. ஒருவர் நூறு பேருக்கு ஒருவர் ஆயிரம் பேருக்கு என்ற கணக்கில் அது நிகழும். இரண்டு பேர் சந்தித்து உரையாடும் போது - அவர்கள் அறிமுகமானவர்களோ பரிச்சயமானவர்களோ நண்பர்களோ உறவினர்களோ - அரசியல் விஷயங்கள் பேசாமல் இருப்பது நலம் பயப்பது ; நன்மை தருவது. 

சினிமா குறித்த பேச்சும் இத்தகையதே. இருவர் பேசிக் கொள்ளும் போது ஒருவருக்கு ஒருவிதமான ரசனை இருக்கும். இன்னொருவருக்கு இன்னொரு விதமான ரசனை இருக்கும். அவர்கள் உரையாடலில் சினிமா வந்தால் அந்த உரையாடல் பூசலில்தான் சென்று நிற்கும். விளையாட்டு குறித்த பேச்சும் அவ்வாறே. 

நான் எவருடன் உரையாடும் போதும் 1. அரசியல் 2.சினிமா 3. விளையாட்டு ஆகிய விஷயங்களைப் பேசுவது இல்லை. 

3 விவசாயிகள் - வாசகர் கடிதம் - பதில்

 அன்புள்ள நண்பருக்கு,

வணக்கம். நலமாக இருக்கிறேன். 

தங்கள் விரிவான கடிதம் கண்டது மகிழ்ச்சி. நம் நாட்டில் கல்வி என்பது கல்விக்கூடங்களில் மட்டுமே நிகழ முடியும் என்னும் நிலையும் கல்வி என்பது உத்யோகம் பெறுவதற்கான வழி என்ற மனநிலையும் உருவாகி விட்டது. அரசு மட்டுமே கல்விக்கான முதலீடுகளைச் செய்ய வேண்டும் என்பது இல்லை. சமூகத்துக்கும் அதற்கான பொறுப்பு இருக்கிறது . சமூக நிறுவனங்கள், செல்வந்தர்கள், தனி மனிதர்கள் கல்வி அளிக்கும் பணியை தன்னார்வத்துடன் ஏற்க வேண்டும். 

1950களில் மரவள்ளிக் கிழங்கு தமிழகத்தின் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது குறித்த அனுபவம் ஆர்வமூட்டியது. 

தங்கள் கடிதத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அந்த மாணவனுக்கு அனுப்பியிருக்கிறேன். நன்றி!

அன்புடன்,

பிரபு

Monday, 6 October 2025

பால்ய நண்பரின் நினைவு

எனக்கு அப்போது 7 வயது. எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அவருக்கு அப்போது 15 வயது. என்னை விட 8 வயது பெரியவராயிருந்தாலும் என்னை அவர் நண்பனாகவே நடத்தினார். நாங்கள் இருவரும் நிறைய பேசுவோம். என்னிடம் நிறைய விஷயங்களை கேட்பார். சொல்வார். அது சைக்கிள்களின் காலம். என்னை வார இறுதி விடுமுறை நாட்களிலும் தினமும் மாலை நேரத்திலும் சைக்கிளில் உட்கார வைத்து ஊர் முழுக்க அழைத்துச் செல்வார். நாங்கள் இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்போம். எனது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் குடியிருந்த குடும்பத்தின் உறவினர் அவர். படிப்புக்காக அங்கே வந்து தங்கியிருந்தார். ஒன்பதாம் வகுப்பில் இரண்டு முறை தோல்வியடைந்து விட்டார். அவர் உறவினர் சமூகத்தில் பெரிய மனிதர். அவரது பரிந்துரையின் பேரில் பள்ளி நிர்வாகம் மூன்றாவது முறை ஃபெயில் ஆக்காமல் பாஸ் செய்தது ; பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அவரது கல்வியை முடிவு செய்யட்டும் என. அப்போது ஒரு நிகழ்ந்ததாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. அது ஒரு பெரிய நகைச்சுவை. இந்த சம்பவம் உண்மையா அல்லது கற்பனையா என்பது தெரியவில்லை. பெரிய மனிதர் என் நண்பரை பாஸ் செய்யுமாறு சொன்னதும் பள்ளி நிர்வாகம் விவாதித்திருக்கிறது. அப்போது பள்ளி நிர்வாகம் என்ன முடிவு செய்தது என்றால் ஃபெயில் ஆகியிருக்கும் ஒருவரை மட்டும் பாஸ் செய்ய முடியாது ; அதற்கு பதிலாக ஃபெயில் ஆன எல்லாரையும் பாஸ் செய்து விடலாம் என முடிவெடுத்து செயல்படுத்தினர். இந்த விஷயம் கேள்விப்பட்டு நண்பரால் பாஸ் ஆன அவரது வகுப்புத் தோழர்கள் பழம், வெற்றிலைப் பாக்குடன் வந்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து விட்டு சென்றனர் என. நண்பர் ஒருமுறை என்னை அழைத்துக் கொண்டு ‘’என் அண்ணன்’’ என்ற எம்.ஜி.ஆர் படத்துக்கு கூட்டிச் சென்றார். அந்த படத்தில் எம்.ஜி.ஆர் குதிரை வண்டி ஓட்டுபவராக நடித்திருப்பார். குதிரை வண்டியில் சென்று ஓடும் ரயிலை சேஸ் செய்து நிறுத்துவார். ஒரு வருடம் அங்கே இருந்தேன். அதன் பின் அப்பாவுக்கு பணி மாறுதல் கிடைக்கப் பெற்று வேறு ஊருக்குச் சென்று விட்டோம். நண்பரைப் பிரிய நேர்ந்த போது நான் மிகவும் அழுதேன். நண்பர் எனக்கு ஆறுதல் கூறினார். நாம் அடிக்கடி சந்திப்போம் என்றார். அதன் பின்னும் பல ஆண்டுகள் தொடர்பில் இருந்தோம். நண்பர் பத்தாம் வகுப்பு முடித்து 12ம் வகுப்பு முடித்து உடற்பயிற்சிக் கல்வியில் இளநிலைப் பட்டம் பெற்று முதுநிலைப் பட்டமும் பெற்று உடற்பயிற்சி ஆசிரியராக இருக்கிறார். அவருக்கு சின்ன வயதிலிருந்தே விளையாட்டில் நல்ல ஆர்வம் உண்டு. தனது ஆர்வத்துக்கு ஏற்ற பணி அவருக்குக் கிடைத்தது மகிழ்ச்சியானது. நான் பொறியியல் கல்லூரி முடித்த ஆண்டில் பல்கலைக்கழகத்தில் அட்மினி பிளாக் எனப்படும் இடத்தில் அவரைத் தற்செயலாக சந்தித்தேன். இருவரும் கண் கலங்கி விட்டோம். இப்போதும் அவரை நினைக்கும் போது அவர் காட்டிய பிரியத்தை நினைக்கும் போது உளம் நெகிழ்கிறேன்.   

Sunday, 5 October 2025

மூன்று விவசாயிகள் - வாசகர் கடிதம்

அன்பு பிரபு,

நீங்கள் நலமென நம்புகிறேன் . தங்களின் “மூன்று விவசாயிகள்” பதிவைப் படித்தேன் . நிறைய புதுத் தகவல்கள்  கொண்டிருந்தது.  மரவள்ளிக் கிழங்கு உயிர் காக்கும் உணவாகவே பயன்பட்டுள்ளது.  ஐம்பதுகளின் இறுதியில் தமிழகத்தில் ஊர் மக்கள் பங்களிப்புடன் துவக்கப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் செயல்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் சில சிறு கிராமப் பள்ளிகளில் நிதிப் பற்றாக்குறையினால் வெந்த கிழங்கே குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டதாக  அப்போது ஆசிரியராக வேலை பார்த்த என்  அத்தையார் கூறக்கேட்டதுண்டு.

நான் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு MSc வேதியியல் முடித்து அந்த வருடத்திலேயே UGC-NET (eligibility for  lectureship) தகுதியும் பெற்றவன். 2001 லும் 2019-20 லும் ஒரோர்  ஆண்டுகள் கல்லூரியில் பணியாற்றியவன். மூன்று வருடங்கள் csir ஆராய்ச்சி நிறுவனத்தில் ப்ராஜக்ட் அசிஸ்டென்ட் ஆக  PhD க்கு உழைத்தவன் ஆனால் முடிததுப் பட்டம் பெறவில்லை. பிறகு ஏறக்குறைய 20 ஆண்டுகளாக  (இடையில் ல் ஒரு ஆண்டு நீங்கலாக) தனியார் ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறை ஆய்வகத்தில்  பணியாற்றி வருகிறேன்.இந்த 25 வருடங்களாக கல்வி மற்றும்  முனைவர்  பட்ட ஆய்வு நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பவன் என்ற முறையில் என அனுபவங்களையும் அவதானிப்புகளையும் இங்கே பதிவு  செய்கிறேன்

அந்தப் பதிவின் இறுதியில் தங்கள்  சந்தித்த ஒரு கல்லூரி மாணவரைப் பற்றி பதிவிட்டுள்ளீர்கள் .  அவரை  மாஸ்டர்ஸ் படிக்கும் படி ஊக்கியது மிகச்சரி. ஒரு துறையின் ஆடிப்படை நிபுணத்துவம் முதுகலைப் படிப்பின் வாயிலாகவே அடைய முடியும். அதுவும் வேதியியலில் முதுகலைப் பட்டம் என்பது இன்றைய வேலைவாய்ப்புச்  சந்தையில் மிக்க மதிப்பு வாய்ந்தது.  கணிப்பொறி மற்றும் வணிகவியல் பட்டங்களைப் போல் உடனடியாக வேலை ஈட்டித் தருவது. அதுவும் ஐஐடி , என் ஐ டி, ஐ ஐ எஸ் சி  முதலிய  தேசியத் தரம் வாய்ந்த நிறுவனங்களில் பெறப்படும் முதுகலைப் பட்டம் வேலை வாய்ப்புக்கு மட்டுமல்லாது வேதியியல் துறையில் சிறந்த வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் டாக்டர் பட்ட ஆய்வு மாணாக்கனாகச்  சேர உதவும் கடவுச் சீட்டாகவும் இருக்கும்.

இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும் போதே  JAM  (ஐஐடி , என் ஐ டி, ஐ ஐ எஸ் சி ) CUET-PG (திருவாரூர் /புதுச்சேரி முதலான மத்தியப் பல்கலைக் கழகங்கள் ) மற்றும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலை மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கான படிப்பு , (உதவித்தொகையுடன் கூடியது) TIFR மும்பை , JNCASR Bangalore , ஐ ஐ எஸ் சி Bangalore நிறுவனங்கள் தனியாக நடத்தும் நுழைவுத் தேர்வுகள் அல்லது JAM தேர்வு மதிப்பீட்டுடன் கூடிய நேர்காணல், இவற்றுக்கெல்லாம் தயார் செய்துகொண்டு தேர்வு எழுதவேண்டும் . இந்தத் தேர்வுகள் நுட்பமான மற்றும் ஆய்வுத் திறனைச் சோதிப்பதாகவும் “ logicalability -to -solveproblems “ என்ற வகையில் அமையும். சுயமான, திட்டமிடப்பட்ட படிப்பும், கல்லூரிப் படத்திட்டத்திற்கு வெளியேயான படிப்பும் மிக்க அவசியம்.  எந்த விதமான paid coaching வகுப்புகளும் பெரிதாக உதவாது.

முதுகலை முடித்ததும் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களில் MSc வேதியியல் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன. கரிம வேதியியல் எனப்படும் ஆர்கானிக்  கெமிஸ்ட்ரியிலும்  பகுப்பாய்வு வேதியியல் எனும் அனலிட்டிக்கல் கெமிஸ்டரியிலும் சற்று ஆழமான அறிவு இருந்தால் போதும் . இந்தியாவில் Biocon /syngene Dr ReddysSun PharmaCipla., Aurobindo Pharma Ltd., Lupin Ltd., Glenmark Pharmaceuticals Ltd., முதலிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்கள் (R&D centres) எல்லா பெரிய நகரங்களிலும் உள்ளன.  புதியோருக்கே நல்ல சம்பளம் கிடைக்கும் . ஓரு ஈரண்டுகள் வேலை செய்தபின் கூட முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொள்ளலாம்.

வேதியியலில் முதுகலை முடித்த பின்னர் வேலைக்குப் போகும் தேவை இல்லாமல் இருந்து, ஆராய்ச்சி படிப்பில் (PhD) இறங்கும்  முடிவு இருந்தால், இந்த இடத்தில் தெளிவும்,கவனமும் பாரபட்சம் இல்லாத சுய பரிசோதனையும் அவசியம். ஏனென்றால் ஒரு முடிவு எடுத்து முனைவர் பட்ட ஆராய்ச்சிதான்  செய்யப்போகிறேன் என்று துவங்கும்  போது  ஒரே ஒரு விஷயத்தை நன்றாக்க மனத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும் . என்னவென்றால் முன்செல்லும்  பாதை குறுகியதாகவும், அதிக நேரமும் பொருட் செலவும் பிடிப்பதாகவும் அதிக சேதாரத்துடனேயே பின்னெடுக்கக் கூடியதாகவும் இருக்கும் என்பதே. 

மத்திய அரசாங்கம் நடத்தும் GATECSIR-NET தேர்வுகளில் தகுதியும் உடவித்தொகையும் பெற்று அரசால் நடத்தப்படும் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் (CSIR labs) ஐஐடி (IIT) , என் ஐ டி(NIT),   ஐ ஐ எஸ் சி (IISc Bangalore ), ஐ ஐ எஸ் இ ஆர் (IISER),  TIFR மும்பை , JNCASR Bangalore , ஆகியவற்றிலோ இணைவது சிறந்தது. ஆராய்ச்சி உதவித்தொகையும் , வருடாந்திர வழங்கல் தொகை (annual grant) யும் பொருளாதார சிரமத்தைக் குறைப்பதுடன் அந்த நிறுவனத்தின் பெயரால் ஒரு அங்கீகாரமும் கிடைக்கும். நிறுவன வளாகத்துக்கு உள்ளேயே தேவையான கட்டமைப்பு வசதிகள் இருப்பதால் அதிக நேரம் ஆராச்சிக்குச் செலவிட முடியும் . மாநிலப் பல்கலைக் கழகங்களில் கூட, அங்கே உள்ள கட்டமைப்புகளை நன்றாக அவதானித்து உதவித்தொகை பற்றிய விவரங்களைத்  தெளிவாகத் தெரிந்து கொண்டு இணையலாம்.

வேதியியல் முனைவர் பட்ட ஆய்வைப் பொறுத்தவரை ஆர்கானி கெமிஸ்ட்ரி PhD மட்டும் தான் வேலை வாய்ப்பை அளிக்கக் கூடியதாக உள்ளது அதுவும் மேலே சொன்ன தனியார் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்க (R&D centres) ளில் மட்டுமே . அரசாங்க வேலை வாய்ப்புகள் மிகக்குறைவே. வேதியியலிலேயே மற்ற பிரிவுகளில் (பிசிகல் மற்றும் இன்ஆர்கானிக் கெமிஸ்ட்ரி) படிக்கப்படும் முதுகலை (PG with specialization in physical or inorganic chemistry ) படிப்புகளுக்கு அத்தனை வேலை வாய்ப்புகள் இல்லை என்பதே கசப்பான உண்மை .

கடைசியாக , வேதியியலில் மட்டுமின்றி வேறு எந்தத்துறையிலும் ,முனைவர் பட்டமும் பெற்று விரிவுரையாளர் தகுதிக்கான CSIR-UGC-NET (eligibility for  lectureship) தகுதியும் பெற்று ஆசிரியப்பணியைத் தேர்வு செய்வது போலக் கொடுமை வேறொன்றில்லை. அரசுக் கல்லூரி வேலைக்கு  TRB எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. வருமா என்றே தெரியாது.  சில பல வருடங்களுக்குப் பின் சென்ற 2024 ஆகஸ்டில் நடப்பதாக இருந்த தேர்வு திடீரென காலவரையறை இன்றி ஒத்தி வைக்கப் பட்டது,  அப்படியே நடந்தாலும் தகுதியானவர்களுக்கும் காலிப் பணியிடங்களுக்கும் உள்ள விகிதம் மலைக்கும் மடுவுக்கும் நிகர்.  அரசு உதவி பெரும் கல்லூரிகளில் (Aided UGC ஊதியத்துடனான பணியிடங்கள் , என்றோ அனுமதிக்கபடப்போகும்  ஒரு பணியிடத்தை நம்பி அதே கல்லூரியில் சுய நிதிப் பிரிவில் (self-financing section ) இருபதில் இருந்தது முப்பதாயிரத்துக்கு எந்த சலுகையும் இன்றி கையறு நிலையில் கடுமையாக உழைக்கும்  35 வயதைக் கடந்த முனைவர் /முதுமுனைவர் பட்ட தாரிகள், அதிலும் roster method இல் எந்த சமூகப் பிரிவுக்கு ஒதுக்கப் படப்போகிறது என்பதும் தெரியாமல் நாளையைப் பற்றிய எந்த நல்ல நம்பிக்கையும் இல்லாமல் வேறு எங்கும் செல்ல வழி யின்றி உழைப்பவர்கள். சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு roster விதி பொருந்தாத போதும்  அங்கேயும் இதே அளவு தகுதி வாய்ந்த பட்டதாரிகளின் கும்பல். எனவே இனியெல்லாம் ஆசிரியப்பணி எல்லாம் வெறும் கனவே.  

வேதியியலில் மட்டுமாவது ஆர்கானிக் மற்றும் அனாலிட்டிகல் கெமிஸ்ட்ரி முடித்தவர்களுக்கு ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன . மற்ற பிரிவுகளுக்கும் துறைகளுக்கும் எந்த உறுதிப்பாடும் கிடையாது.

 அன்புடன் 

எஸ் 

ராகி முட்டே (நகைச்சுவைக் கட்டுரை)

பொறியியல் கல்லூரியில் எங்களுக்கு பாடம் எடுத்த ஒரு பேராசிரியர் இருந்தார். அவரது பூர்வீகம் குமரி மாவட்டம். கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகளுக்கு இடையே இரு பருவத் தேர்வுகள் நடக்கும். கல்லூரி மாணவர்களில் பெரும்பாலானோருக்கு ஒரு வழக்கம் உண்டு. செமஸ்டர் தேர்வுகள் என்றால் முக்கியத்துவம் கொடுத்து படிப்பதும் பருவத் தேர்வுகளுக்கு எந்த தயாரித்தலும் இன்றி தேர்வு எழுதி மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுப்பதும் நிகழும். பல மாணவர்கள் பூஜ்யம் எடுப்பதுண்டு. விடைத்தாள்களைக் கொடுக்கும் போது பூஜ்யம் எடுக்கும் மாணவர்களிடம் அவர் கூறுவதுண்டு. ‘’You have to score at least a single mark'' என்பார். ஒரு பாடத்தில் 8 வாரங்களில் 25க்கும் மேற்பட்ட வகுப்புகளில் அமர்ந்து 18 மணி நேரத்துக்கும் அதிகமாக பாடம் கேட்டு ஒரு தேர்வு எழுதும் போது அதில் ஒரு மாணவன் 1 மதிப்பெண்ணாவது பெற வேண்டும். சாலையில் சென்று கொண்டிருக்கும் வழிப்போக்கன் ஒருவனைப் பிடித்து அவனிடம் வினாத்தாளைக் கொடுத்து ஒரு தேர்வு எழுதச் சொன்னால் அவனால் பூஜ்யம் மதிப்பெண் மட்டுமே பெற முடியும். 18 மணி நேரம் அமர்ந்து பாடம் கேட்ட மாணவனும் பூஜ்யம் பெற்றால் சாலையில் செல்லும் வழிப்போக்கனுக்கும் மாணவனுக்கும் வித்தியாசம் இல்லாமல் ஆகி விடும் என்பார் பேராசிரியர். பூஜ்யத்துக்கும் ஒரு மதிப்பெண்ணுக்கும் இருக்கும் தூரம் ஒரு மதிப்பெண்ணுக்கும் 100 மதிப்பெண்ணுக்கும் இடையே இருக்கும் தூரத்தை விட அதிகம் என்று கூறுவார். 

சில மாதங்களுக்கு முன்பு வரை எந்த உணவையும் சமைக்கத் தெரியாமல் இருந்தேன். பின்னர் கம்மங்கூழ் செய்யக் கற்றுக் கொண்டேன். ஒரு பாத்திரத்தில் 5 டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு டம்ளர் கம்புமாவைக் கலக்கிக் கொள்ள வேண்டும். அடுப்பில் ‘’சிம்’’மில் வைத்து 15 நிமிடம் கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு செய்தால் கம்மங்கூழ் தயார் என்பதே நான் அறிந்த நான் செய்த முதல் சமையல். எனது நண்பர் ஒருவர் அதனை இன்னும் சுருக்கி ஒரு டம்ளர் தண்ணீரை நன்றாகக் கொதிக்க விடு ; கொதி வந்ததும் ஒரு டம்ளர் கம்புமாவை அதில் போட்டு கலக்கு. கம்மங்களி தயாராகி விடும் என இன்னும் சுருக்கமான வழிமுறையைக் கூறினார். இவ்விதம் செய்ய 3 லிருந்து 4 நிமிடங்கள் ஆகும். அடிக்கடி கம்மங்களி தயாரித்து உண்டு கொண்டிருந்தேன். 

சமையலில் பூஜ்யம் மதிப்பெண் பெற்றிருந்த நான் 1 மதிப்பெண் பெற்றேன். 

ஒரு சதவீத மதிப்பெண் பெற்றிருக்கும் நான் எல்லா விதமான சமையலையும் அவதானிக்கத் தொடங்கினேன். ஒரு உணவுப்பொருளைப் பார்க்கும் போது அதனை எப்படி தயாரித்திருப்பார்கள் என்பதை யோசிக்கத் தொடங்கினேன். அந்த உணவு எவ்விதம் வயிற்றில் ஜீரணம் ஆகும் என எண்ணத் தொடங்கினேன். ஒவ்வொரு உணவும் எத்தனை கலோரி இருக்கும் என்ற ஒப்பீடு உண்டானது. ஒரு சோன்பப்டி சாப்பிடுவதும் அன்லிமிடெட் ஃபுல் மீல்ஸ் சாப்பிடுவதும் கலோரி கணக்கில் சமம் என்பது தெரிய வந்த போது இந்த பார்வையே இல்லாமல் இத்தனை நாள் இருந்திருக்கிறோமே என்ற வருத்தம் ஏற்பட்டது. 

கம்மங்களி செய்யத் தொடங்கியதும் எனது எதிர்காலம் குறித்து விதவிதமாக கற்பனை செய்யத் தொடங்கினேன். எனது லௌகிகக் கடமைகள் அனைத்தையும் முடிக்கிறேன். அதன் பின்னர் கோதாவரிக் கரையில் ஒரு ஏக்கர் அளவுள்ள நிலத்தில் 10 அடிக்கு 10 அடி அளவுள்ள அல்லது 10 அடிக்கு 16 அளவுள்ள ஒரு ஓலைக்குடிசை ஒன்றை உருவாக்கிக் கொண்டு அந்த நிலத்தில் எலுமிச்சை பயிரிட்டுக் கொண்டு கம்மங்களி செய்து சாப்பிட்டுக் கொண்டு நாளின் பெரும்பகுதி கோதாவரி நதியைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். இந்த கற்பனை அடிக்கடி வந்தது. சமயத்தில் அவ்விதமான வனப்பிரஸ்த வாழ்வு மேற்கொள்வதாகவே எண்ணினேன். 

நான் கம்மங்களி செய்யக் கற்றுக் கொண்டதும் அவ்வப்போது அதனை சமைத்து உண்பதும் வீட்டில் இருப்பவர்களுக்கு ஆச்சர்யம் கொடுத்தது. கொஞ்ச நாள் ஆர்வத்தில் செய்து விட்டு விடுவேன் என எண்ணினார்கள். இருப்பினும் சமையல் எனது பழக்கங்களில் ஒன்றாக உருவாகியிருப்பதையும் கவனித்தார்கள். காலை 6.30க்கு சமைத்துக் கொண்டிருப்பேன். அப்போது சமையலறையில் தேனீர் தயாரித்துக் கொண்டிருப்பார்கள். பெரிய பர்னர் தேனீர் தயாரிக்க. சின்ன பர்னர் களி கிண்ட. 

எந்த உணவைப் பற்றிய பேச்சு வந்தாலும் மனிதகுலம் 10,000 ஆண்டுகளாக எவ்விதமாக உணவு உண்கிறது என்பதைப் பற்றியும் எவ்விதமாக சமையல் செய்கிறது என்பதைப் பற்றியும் தகவல்கள் எதையாவது கூறுவேன் ; அந்த வரலாற்றுப் பெரும்பரப்பில் இப்போது நான் சமைக்கும் கம்மங்களி எந்த இடத்தில் பொருந்துகிறது என்பதையும் சேர்த்துக் கொள்ளும் போது வீட்டில் இருப்பவர்கள் கொஞ்சம் மேல் கீழ் ஆக பார்ப்பார்கள். 

1 மதிப்பெண் எடுத்திருந்த நான் 2 மதிப்பெண் எடுக்க முடிவு செய்தேன். கம்மங்களி செய்யக் கற்றிருந்த நான் கேழ்வரகுக் களி செய்ய முடிவு செய்தேன். கர்நாடக மாநிலத்தின் பிரபலமான உணவாகும் அது. அங்கே அதன் பெயர் ’’ராகி முட்டே’’. கேழ்வரகு மாவு வாங்கி வந்தேன். கம்பும் கேழ்வரகும் ஹோசூர் பெங்களூர் போல பக்கத்தில் இருக்கும் ஊர்கள் என்றால் கம்மங்களியும் கேழ்வரகுக் களியும் சென்னையும் பெங்களூரும் போன்ற தூரத்தில் இருப்பவை. 

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்ற வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் கேழ்வரகு மாவை கலந்து கொதிக்க வைக்க வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீர் கொதிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அதில் கலக்கப்படும் ஒரு ஸ்பூன் நெய் அந்த ஒரு டம்ளர் தண்ணீர் கொதிக்கத் தேவைப்படும் நேரத்தை இரு மடங்கு ஆக்கி விடுகிறது என்பதைக் கண்ட போது வேதியியலின் பெரும் புரிதல் ஒன்றை அடைந்திருப்பதை எண்ணி உளம் பெரிதும் மகிழ்ந்தேன். கொதி வந்ததும் அதில் ஒரு டம்ளர் கேழ்வரகு மாவைக் கொட்ட வேண்டும். நெய் இருப்பதால் ஒரே மணமாக இருந்தது. களி பதம் வந்தது. பாத்திரத்தில் ஒரு மூடியைப் போட்டு மூடி 5 நிமிடம் ‘’சிம்’’மில் இருக்க வேண்டும். அதன் பின் அதனை ஆற வைக்க வேண்டும். ஒரு சிறிய பாத்திரத்தின் உள்பக்கம் நெய்யைத் தடவிக் கொண்டு அதில் களியை போட்டு சுழற்றினால் பதத்துக்கு வரும். அதனை உருண்டையாக உருட்டிக் கொண்டால் கர்நாடகத்தின் உணவான ‘’ராகி முட்டே’’ தயார் !  

Saturday, 4 October 2025

தேசியம்

 நான் தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்டவன். அந்த நம்பிக்கையை எனது மூதாதை பாரதியிடமிருந்து நான் இளம் வயதில் பெற்றுக் கொண்டேன். தேசம் முழுமைக்கும் சிந்திக்கும் தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்காகவும் சிந்திக்கும் அரசியலே தேசிய அரசியல். இந்திய ஜனநாயகம் எல்லா விதமான அரசியல் சக்திகளையும் தனது கூடாரத்தின் கீழ் கொண்டு வருகிறது ; அதில் மொழி ரீதியில் அரசியல் செய்பவர்கள் இருக்கிறார்கள். ஜாதி ரீதியில் அரசியல் செய்பவர்கள் இருக்கிறார்கள். தொழிலாளர் யூனியன்களை கையில் வைத்துக் கொண்டு அரசியல் செய்பவர்கள் இருக்கிறார்கள். மத ரீதியில் அரசியல் செய்பவர்கள் இருக்கிறார்கள். தேர்தல் அரசியலில் அதிகாரம் மையப்புள்ளி. அதனை நோக்கி பல்வேறு விதமான குழுக்கள் முன்னேறி வருவது ஜனநாயகத்தின் இயல்புகளில் ஒன்று.  அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது அரசியல் கட்சிகளின் விருப்பங்களில் ஒன்று எனினும் அதிகாரம் செயல்படும் விதம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுடன் முடிந்து விடும் ஒன்று அல்ல. நுணுக்கமாக கவனித்துப் பார்த்தால் ஜனநாயக அரசியலில் உண்மையான அதிகாரம் உயர் அதிகாரிகளிடமும் அரசு ஊழியர்களிடமும் மட்டுமே இருக்கிறது. அவர்களே பல ஆண்டுகள் பணியில் இருப்பவர்கள். எல்லா அரசியல்வாதிகளும் ஐந்தாண்டுகள் மட்டுமே பதவி வகிக்க முடியும். மீண்டும் தொடர மீண்டும் தேர்தலில் வெல்ல வேண்டும். இந்திய அரசியலைப் புரிந்து கொள்ள இந்தப் புள்ளியை புரிந்து கொள்ளுதல் அவசியம் என நினைக்கிறேன். 

தேசியக் கட்சிகள் அரசியலை நோக்குவதற்கும் செயல்படுத்துவதற்கும் பிராந்தியக் கட்சிகள் செயல்படுத்துவதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. அனைவருமே அதிகார அரசியலில் இருக்கின்றனர் என்றாலும் இந்த வேறுபாடு ‘’யானை படுத்தாலும் குதிரை மட்டம்’’ என்னும் நிலையில் இருக்கவே செய்யும். 

பிராந்திய அரசியலை செய்யும் பிராந்தியக் கட்சிகள் தங்கள் பிராந்தியத்தின் அரசியலை தாங்கள் மட்டுமே செய்ய முடியும் என எண்ணத் தொடங்குகின்றன ; நம்ப முற்படுகின்றன. தங்கள் பிராந்தியத்தில் அவர்கள் வலுவானவர்களாக இருக்கலாம். தங்கள் பிராந்தியத்தின் முழு அரசியலையும் தங்கள் கையில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் பிராந்தியத்தில் அவர்களால் பெரும் முன்னேற்றத்தையோ அல்லது வளர்ச்சியையோ உருவாக்கிட முடியாது. ஏனென்றால் பிராந்திய சக்திகளுக்கு சமூகங்களைப் பிரிக்க மட்டுமே தெரியும். மக்களைப் பிரித்து அவர்களைத் தனித்தனியாக வைத்துக் கொண்டு அதன் மூலம் அரசியல் அதிகாரத்துக்கு அவர்களுக்கு வரத் தெரியும். இவ்விதமான சக்திகள் நன்றாக அறிந்த விஷயம் என்பது தங்கள் பிராந்தியம் வளர்ச்சி பெறும் எனில் வளர்ச்சி அடைந்த சமூகத்தின் மக்கள் தங்களை எளிதில் புறக்கணிப்பார்கள் என்பதாகும். எனவே வளர்ச்சியை உருவாக்கும் எந்த பணியையும் அவர்கள் முன்னெடுப்பதில்லை என்பதே உண்மை. 

நான் இங்கே தேசியக் கட்சிகள் எனக் குறிப்பிடுவது காங்கிரஸ், ஜனதா கட்சி, ஜனதா தளம், பாரதிய ஜனதா ஆகிய  மத்திய அதிகாரத்துக்கு வந்த கட்சிகளையும்  மத்திய அதிகாரத்துக்கு வராத பகுஜன் சமாஜ் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் ஆகியவை அனைத்தையும் தான்.  

எனது நண்பர் ஒருவர் பிராந்தியக் கட்சி ஒன்றின் உறுப்பினர். அவருக்கு தேசியக் கட்சிகள் மீதும் தேசியம் மீதும் சிறு இளக்காரம் எப்போதும் உண்டு. அவர் புரிந்து கொள்ள வேண்டியது ‘’யானை படுத்தாலும் குதிரை மட்டம்’’ என்பதையே. 

பின்குறிப்பு (1) :

நாடெங்கும் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருக்கும் தேசியக் கட்சிகளின் பட்டியலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டு, பா.ஜ.க ஆகிய கட்சிகள் உள்ளன. இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மாநிலக் கட்சிகளின் பட்டியலில் இருக்கும் கட்சிகளில் பல ஒரு மாநிலத்தில் மட்டும் செயல்பட்டாலும் தேசியத்தின் மீது முழு நம்பிக்கை கொண்ட கட்சிகள். உதாரணம் : திருணமூல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், சிவசேனா, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், பாரத் ராஷ்ட்ர சமிதி, மதச்சார்பற்ற ஜனதா தளம், லோக் ஜன சக்தி ஆகியவை. 

பின்குறிப்பு (2)

தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் கட்சி என்னும் கட்சி இடம் பெற்றுள்ளது. கான்ராட் சங்மா தலைவராக உள்ள அந்த கட்சி மேகாலயா தவிர மற்ற வட கிழக்கு மாநிலங்களிலும் தேர்தலில் போட்டியிடுவதாலும் அந்த மாநிலங்களில் கணிசமான வாக்குகளைப் பெறுவதாலும் தேசியக் கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது. 

பின்குறிப்பு (3) 

பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் உத்திரப் பிரதேசத்தின் முக்கிய அரசியல் சக்திகள். 3 முறை சமாஜ்வாதி கட்சியும் 4 முறை பகுஜன் சமாஜ் கட்சியும் அந்த மாநிலத்தை ஆண்டுள்ளன. பிற மாநிலங்களிலும் அவை செயல்படுகின்றன. எனினும் பகுஜன் சமாஜ்க்கு தேசிய கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. சமாஜ்வாதி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லை. அரசியல் தெரிந்த எனது நண்பர் அதற்கான காரணத்தை யூகித்துக் கொள்வார் என எண்ணுகிறேன். 

மூன்று விவசாயிகள்

எனது நண்பர் ஒருவர் விவசாயி. அவரை அவ்வப்போது சந்திக்கச் செல்வேன். நாங்கள் இருவரும் சேர்ந்து பூம்புகார் கடற்கரைக்குச் செல்வோம். பூம்புகார் செல்ல வேண்டும் எனத் தோன்றினால் அவருக்கு ஃபோன் செய்வேன். அவர் கிராமம் கடற்கரைக்கு அருகில் இருக்கிறது. அவர் வீட்டுக்குச் சென்று அவரை அழைத்துக் கொண்டு செல்வேன். நேற்று ஃபோன் செய்த போது தனது வயலை உழுது கொண்டிருப்பதாகக் கூறினார். நான் அவர் வயலுக்குச் சென்றேன். நாகப்பட்டினம் - சிதம்பரம் சாலையில் பிரதான சாலையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் அவர் வயல் இருக்கிறது. தமிழ்நாட்டின் மிக அதிக வளைவுகள் கொண்ட சாலை நாகப்பட்டினம் - சிதம்பரம் சாலை. காவிரி வடிநிலப் பகுதி என்பதால் இங்கே அனைத்து சாலைகளும் எண்ணிக்கையில் அதிகமான வளைவுகளைக் கொண்டிருக்கும். இப்போது சாலைகள் அகலமாக்கப்பட்டு பிரும்மாண்டமான சாலைகளாக இருக்கின்றன. வளைவுகள் மிகச் சிறிய எண்ணிக்கைக்கு குறைக்கப்பட்டுள்ளன. புறவழிச் சாலை இப்போது நண்பரின் வயலுக்கு 100 மீட்டர் தொலைவுக்கு வந்து விட்டது. கை டிராக்டர் வயலை உழுது கொண்டிருந்தது. 

அவரது வயலில் விவசாயப் பணியாளர்கள் இருவர் வேலை செய்து விட்டு கரையேறி இருந்தனர். ஊதியத்துக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். நண்பர் கை டிராக்டர் இயக்குபவருடன் சேர்ந்து அதனைக் கழுவிக் கொண்டிருந்தார். நான் விவசாயப் பணியாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். 

‘’அண்ணன் ! எலெக்‌ஷன் வருது. யாருக்கு ஓட்டு போடறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டிங்களா?’’ என பேச்சைத் துவக்கினேன். 

‘’1967ல இருந்து நான் ஒரு கட்சிக்கு மட்டும்தான் ஓட்டு போட்டிருக்கன்’’

‘’நீங்க சொல்றது உண்மை போல தெரியும் ; ஆனா உண்மை இல்ல அண்ணன்’’

விவசாயத் தொழிலாளர் யோசித்தார். 

‘’நீங்க கட்சியில பொறுப்புல இருக்கிறீங்களா?’’

‘’இல்ல தம்பி ‘’ 

‘’கட்சி மெம்பரா ? கட்சிக்கரை போட்ட வேட்டி கட்டுவீங்களா?’’ 

‘’அதெல்லாம் கிடையாது தம்பி. ஆதரவு மட்டும் தான்’’

‘’உங்க தொகுதியில நீங்க மானசீகமா இருக்கற கட்சி மட்டுமா அறுபது வருஷமா தனித்து போட்டி போட்டிருக்கு ? கூட்டணிக் கட்சிகளுக்கு உங்க தொகுதியை பல தடவை கொடுத்திருக்காங்க இல்லயா?’’

விவசாயத் தொழிலாளர் யோசித்துப் பார்த்து விட்டு நான் எண்ணுவதைப் புரிந்து கொண்டு ‘’ஆமாம் தம்பி’’ என்றார். 

‘’அப்ப நீங்க ஒரு கட்சிக்கு மட்டும் ஓட்டு போட்டது இல்ல. நிறைய கட்சிக்கு ஓட்டு போட்டிருக்கீங்க. ஆனா இப்பவரைக்கும் ஒரே கட்சின்னு நினைச்சுக்கிட்டு இருக்கீங்க’’

விவசாயத் தொழிலாளர் அமைதியாக இருந்தார். 

‘’எந்த கட்சிக்கு வேணாலும் ஆதரவாளரா இருங்க அண்ணன்! ஆனா ஓட்டு போடும் போது அப்பப்ப என்ன சூழ்நிலை இருக்கோ அத அனுசரிச்சு ஓட்டு போடுங்க. ஒரு கட்சிக்கு மட்டும்தான் ஓட்டு போடணும் நினைச்சா அது உங்களுக்குத்தான் நஷ்டம். இப்ப கிராமத்துல நீங்க இருக்கற பகுதியில 500 ஓட்டு இருந்தா அரசியல்கட்சிகளுக்கு இதுல 300 பேர் இந்த கட்சிக்கு ஓட்டு போடுவாங்க. 150 பேர் இந்த கட்சிக்கு போடுவாங்க. 30 பேர் இவங்களுக்கு போடுவாங்கன்னு தெரியும். அந்த அந்த கட்சியும் அதை அப்படியே மெயிண்டன் பண்ண செய்வாங்க. முடிஞ்சா அதிகப்படுத்துவாங்க இல்லன்னா குறையாம பாத்துப்பாங்க. 300 ஆதரவாளர் இருக்கற கட்சி இந்த ஏரியால நமக்கு எப்படியும் அதிக ஓட்டு வந்துறும்னு அங்க செஞ்சு கொடுக்க வேண்டிய எந்த விஷயமும் செய்ய மாட்டாங்க. 150 ஓட்டு வச்சிருக்கற கட்சி இந்த ஏரியால நமக்கு அதிக ஓட்டு இல்லன்னு எதுவும் செய்யமாட்டாங்க. நீங்க 500 பேரும் சூழ்நிலையை அனுசரிச்சு ஓட்டுப் போடுவீங்கன்னா எல்லா கட்சியும் உங்க கிட்ட வரும். உங்க பகுதிக்கு என்ன செய்ய முடியும்னு பாத்து வேலை செய்வாங்க’’

அறுபது ஆண்டுகளாக அவர் எடுக்கும் முடிவுக்குப் பின்னால் யோசிக்க வேண்டிய இத்தனை விஷயங்கள் இருக்கிறதா என அவர் யோசிக்கத் தொடங்கினார். 

’’அண்ணன்! இந்த மண் களிமண்ணா இருக்கே. இத இரு மண்ணா மாத்த முடியுமா?’’

‘’மக்குன சாண எரு , மக்குன குப்பை, மக்குன எரு தழை இதெல்லாம் கொட்டுனா நிச்சயமா ஒரு வருஷம் ரெண்டு வருஷத்துல மண்ணோட தன்மை மாறும். ’’

புறவழிச்சாலைப் பணிகளுக்கு நெய்வேலியிலிருந்து பழுப்பு நிலக்கரி சாம்பல் கொண்டு வந்து கொட்டப்படுவதை வரும் வழியில் பார்த்திருந்தேன். 

‘’மண்ணுல ஃபிளை ஆஷ் கொட்டுனாலும் மண் இருமண் ஆகுமா?’’

‘’ஆகும் தம்பி’’ 

’’மண் இருமண் ஆனா கம்பு, கேழ்வரகு பயிர் செய்ய முடியும் இல்லயா?’’

‘’பண்ணலாம் தம்பி . கோடையில பண்ணலாம்’’

‘’விவசாயி ஒரே மாதிரி பயிர் பண்ணக் கூடாது. ஊர்ல எல்லாரும் நெல் பயிர் பண்றீங்க. கையிருப்பு தேவைக்கு மேலே போயிடும். உபரியா நெல் இருந்தா விலை கிடைக்காது. எந்த பயிர் ஷார்ட் சப்ளையா இருக்கோ அதுக்குதான் விலை கிடைக்கும்.’’

‘’நீங்க சொல்றது உண்மைதான் தம்பி ‘’ என்றனர் இருவரும்.  வண்டியைக் கழுவி முடித்த நண்பர் வந்து இருவருக்கும் அன்றைய ஊதியம் கொடுத்து அனுப்பினார்.

நண்பரின் வீட்டுக்குச் சென்றோம். நாங்கள் சென்ற போது  மாலை நேரம் 6 மணி. வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தோம். உள்ளே கந்த சஷ்டி கவசம் ஒலித்துக் கொண்டிருந்தது. 

வேக வைத்த மரவள்ளிக் கிழங்கை மிளகாய்த்தூள் தூவி எனக்கும் நண்பருக்கும் கொண்டு வந்து கொடுத்தனர். 

‘’இந்த மரவள்ளிக் குழங்கு லட்சக்கணக்கானோர் உயிரை சாவிலிருந்து காத்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா’’ என்று நண்பரிடம் கேட்டேன். 

நண்பருக்கு அந்த விஷயம் தெரிந்திருக்கவில்லை. 

‘’மரவள்ளிக் கிழங்கு நம் நாட்டுப் பயிர் கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா ?’’ என்று கேட்டேன்.

அதுவும் நண்பருக்குத் தெரிந்திருக்கவில்லை. 

‘’அதாவது இந்த கிழங்கின் கூழில் ஸ்டார்ச் அதிகம். போர்ச்சுகீசியர்கள் இதனை துணிக்கு கஞ்சி போட பயன்படுத்தினர். அவர்கள் மூலம் இந்தியாவின் மேற்கு கடற்கரைக்கு இப்பயிர் வந்தது. பிரிட்டிஷ் ஆட்சியில் தாது வருஷப் பஞ்சம் வந்த போது திருவிதாங்கூர் மன்னர்கள் அவர்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சித் தொட்டிகள் திறந்து மரவள்ளிக் கிழங்கு கஞ்சியை மக்களுக்கு அளித்து தங்கள் பிரஜைகள் உயிரைக் காத்தார்கள். மக்கள் புதிய உணவு என அருந்தத் தயங்கிய போது திருவிதாங்கூர் மன்னர் நேரடியாக கஞ்சித் தொட்டிக்கு வந்து அவரே அதனை அருந்தி மக்கள் தயக்கத்தைப் போக்கினார். இன்று கேரளாவில் முக்கிய உணவாக மரவள்ளிக் கிழங்கு இருக்கிறது. ‘’

நாங்கள் கிழங்கு அருந்திக் கொண்டிருந்த போது நண்பரின் சகோதரரின் மகன் அங்கே வந்து எனக்கு வணக்கம் சொன்னான். நான் என் அருகில் அவனை அமர்த்திக் கொண்டேன். 

நான் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது அவன் பிறந்தான். அன்று மருத்துவமனைக்குச் சென்று அவனைக் கைக்குழந்தையாகப் பார்த்தது அவனை ஒவ்வொரு தடவை பார்க்கும் போதும் என் நினைவில் எழும். 

‘’இப்ப என்ன படிக்கற’’

’’பி.எஸ்சி கெமிஸ்ட்ரி ஃபைனல் இயர்’’

‘’படிச்சுட்டு என்ன செய்யப் போற?’’

‘’காம்பெடிடிவ் எக்ஸாம் எழுதப் போறன்’’

’’தம்பி! மேல ரெண்டு வருஷம் மாஸ்டர்ஸ் படி.’’

அவன் யோசித்தான். 

’’தம்பி! இந்தியாவில 100 பேர் டிகிரி படிச்சா அதுல 10 பேர்தான் மாஸ்டர்ஸ் பண்றாங்க. 1 த்தர் தான் பி ஹெச் டி பண்றாங்க. நீ பி ஹெச் டி பண்ணா அதுல கிரவுட் கம்மி. ஈஸியா டீச்சிங் லைன்ல போயிடலாம். யோசிக்காம பி ஹெச் டி வரைக்கும் படி. திருவாரூர்ல மத்திய அரசாங்கத்தோட செண்ட்ரல் யுனிவர்சிட்டி இருக்கு. அதுல நம்ம மாநிலத்துக் காரங்க ரொம்ப கம்மியா சேர்ராங்க. அங்க அட்மிஷன் கிடைச்சா காலேஜ் ஃபீஸ் , ஹாஸ்டல் ஃபீஸ், மெஸ் பில் எல்லாம் மத்திய அரசாங்கமே கட்டிடும். ஜனவரில எண்ட்ரெண்ஸ் எக்ஸாம் இருக்கும். அத எழுதனும். என்னோட ஃபோன் நம்பர் நோட் பண்ணிக்க. ஒரு தடவைக்கு மூணு தடவை ஃபோன் பண்ணாதான் நான் எடுப்பன். இந்த விஷயமா என்ன வேணும்னாலும் காண்டாக்ட் பண்ணு’’ 

Friday, 3 October 2025

செயலா ? வழிமுறையா ? (நகைச்சுவைக் கட்டுரை)

ரியல் எஸ்டேட் என அழைக்கப்படும் நில வணிகம் எனது தொழில். கட்டுமானப் பொறியியல் படித்த நான் ஒரு கட்டுமானப் பொறியாளராகவே எனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினேன். வாடிக்கையாளர் தனது மனையில் வீடு கட்டிக் கொடுக்குமாறு கூறினால் அவருக்கு அந்த வீட்டை ஒப்பந்த அடிப்படையில் கட்டிக் கொடுப்பது என்னும் அடிப்படையில் செயல்படத் தொடங்கினேன். பின்னர் மனைகளை வாங்கி அதில் கட்டிடம் கட்டி விற்க ஆரம்பித்தேன். மனைகளை வாங்கத் தொடங்கியதால் அவற்றின் விலை விபரங்களும் விலையின் ஏற்ற இறக்கங்களும் கவனத்துக்கு வரத் தொடங்கின. வீட்டு மனைகளுடன் விவசாய நிலங்களின் விற்பனை குறித்த விபரங்களும் கவனத்துக்கு வரத் தொடங்கின. வாடிக்கையாளர்களுக்கு விவசாய நிலங்களும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன் ; விற்றுக் கொடுத்திருக்கிறேன். ரியல் எஸ்டேட் என்பது பொதுவான வார்த்தை. ரூ. 2,00,000 க்கு விற்பனையாகும் மனையும் ரியல் எஸ்டேட்டைச் சார்ந்ததுதான் ; ரூ. 100 கோடிக்கு விற்பனையாகும் மனையும் ரியல் எஸ்டேட்டைச் சார்ந்ததுதான். இன்று ரூ.2,00,000 என்பது சாமானியமாகத் தோன்றும். நான் இந்த தொழிலுக்கு வந்த போது - அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்னால்- ஊரில் 2400 சதுர அடி மனையை சதுர அடி ரூ.80 என்ற வீதத்தில் ஓர் உயர் நடுத்தர பகுதியில் வாங்குவது பெரிய முதலீடாகக் கருதப்படும். இன்று அவ்வாறு வாங்கப்பட்ட 2400 சதுர அடி கொண்ட மனையில் விலை சதுர அடி ரூ.2500 என்ற வீதத்தில் ரூ. 60.00.000 ஆகும். 2005ம் ஆண்டு ஒருவர் தான் ரூ.2,00,000க்கு வாங்கிய மனையை இன்று ரூ. 60,00,000 விலை சொல்வார். 40 ஆண்டுகளுக்கு முன் இந்த மனையின் விலை சதுர அடி ரூ.1 என இருந்திருக்கிறது. அதாவது 1985ல் ரூ.2400க்கு விற்பனை செய்யப்பட்ட மனை 2005ல் ரூ. 2,00,000 க்கு விற்பனை ஆகி 2025ல் ரூ.60,00,000 விற்பனை ஆகிறது.   இந்த தொழிலின் சுவாரசியமான அம்சங்களில் ஒன்று அது. 

நாம் ஒரு மேஜை வாங்க வேண்டுமென்றால் ஃபர்னிச்சர் கடைக்கு ( அறைக்கலன் கடைக்கு) சென்று என்ன விலை என்று கேட்டு வாங்கலாம். தச்சுப் பட்டறையில் தச்சர் எவரும் மேஜை செய்து வைத்திருந்தால் அவரிடம் சென்று என்ன விலை என்று கேட்டு வாங்கலாம். துவரம்பருப்பு வாங்க வேண்டும் என்றால் மளிகைக் கடையில் சென்று வாங்கலாம். சுண்டைக்காயோ பூசணிக்காயோ வாங்க வேண்டும் என்றால் காய்கறிக் கடைக்குச் சென்று வாங்கலாம். மேற்படி உதாரணங்களில் கடைக்காரர்தான் விற்பனையாளர். சாமானியர் வாடிக்கையாளர். ஆனால் மனை வணிகத்தில் 90 சதவீத விற்பனையாளர்கள் சாமானியர்களே. 90 சதவீத விற்பனைகளில் விற்பனையாளரும் சாமானியராக இருப்பார் ; வாங்குபவரும் சாமானியராக இருப்பார். இந்த தொழிலின் இன்னொரு சுவாரசிய அம்சம் இது. 

ஒரு இடத்தை அல்லது மனையை ஒருவர் வாங்க வேண்டும் என்றால் அந்த இடத்தின் அல்லது மனையின் ஆவணங்களை விற்பனையாளரிடமிருந்து வாங்க வேண்டும். அதனை வழக்கறிஞரிடம் காட்டி சட்ட அபிப்ராயம் பெற வேண்டும். அதன் பின்னர் விலை பேச வேண்டும். விலை பேசி ஒரு சிறு தொகை ‘’அடையாள முன்பணம்’’ ஆக தரப்படும். அதன் பின் ஒரு வாரத்தில் அல்லது 15 நாளில் மொத்த கிரயத் தொகையில் மூன்றில் ஒரு பாகம் அல்லது நான்கில் ஒரு பாகம் அல்லது பாதிக்குப் பாதி முன்பணமாக அளிக்கப்பட்டு கிரய ஒப்பந்தம் போடப்படும். இது ஒரு பொது வழிமுறை என்று சொல்ல முடியும். ஆனால் இந்த வழிமுறை பெரும்பாலும் அனுசரிக்கப்படும் என்றும் சொல்லலாம் அல்லது பெரும்பாலும் இதே விதத்தில் இதே வரிசையில் அனுசரிக்கப்படுவதில்லை என்றும் சொல்லலாம். தொகை பெரிதாக இருப்பதால் சாமானியர்கள் கிரய ஒப்பந்தத்தை விரும்ப மாட்டார்கள். ஒரு அட்வான்ஸ் கொடுத்து நேரடியாக கிரயத்துக்கு செல்ல விரும்புவார்கள். இங்கிருந்து பணம் கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையில் விவகாரங்கள் தொடங்கும். 

நான் மனை வணிகத் தொழிலுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்த போது ரூ.10,000 என்பது டோக்கன் அட்வான்ஸ் ஆக இருந்தது. அதாவது ஒருவர் ரூ.2,00,000க்கு மனை வாங்குகிறார் எனில் அவர் ரூ.10,000 டோக்கன் அட்வான்ஸ் தருவார். இப்போதும் ரூ. 10,000 டோக்கன் அட்வான்ஸ் ஆக நீடிக்கிறது. ரூ.1,00,000 டோக்கன் அட்வான்ஸ் ஆகத் தரப்படுவதுண்டு. ரூ.1000 அல்லது ரூ.1001 டோக்கன் அட்வான்ஸ் ஆகத் தரப்படுவதுண்டு. ரூ. 1 மட்டும் டோக்கன் அட்வான்ஸ் தரப்படும் என பிறர் கூறி கேள்விப்பட்டிருக்கிறேன். 

விற்பனை செய்பவர் மனை அல்லது நிலம் வில்லங்கம் இல்லாமல் இருக்க வேண்டும். வாங்குபவர் கையில் முழுப் பணமும் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் அனைத்தும் இயல்பாக நடக்கும். இதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் விதவிதமான சிக்கல்கள் வரும். 

கிரய ஒப்பந்தம் 3 மாதத்துக்கு போடுவார்கள். எனினும் சட்டப்படி அது 3 வருடத்துக்கு செல்லுபடி ஆகும். ஒருவர் ரூ.2,00,000 க்கு ஒரு மனையை வாங்க ரூ.50,000 முன்பணம் செலுத்தி கிரய ஒப்பந்தம் போட்டிருந்தால் மீதித் தொகையை மூன்று மாதத்துக்குள் கொடுக்க வேண்டும். ஆனால் சட்டம் அவருக்கு 3 ஆண்டு அவகாசம் கொடுக்கிறது. வாங்குபவர் ஒருவர் இந்த எண்ணத்துடன் வந்தால் விற்பனையாளர் நிலை சிக்கல்தான். 

நான் சில விஷயங்களை கூறியிருக்கிறேன். இந்த விஷயத்தில் மனைத்தரகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கான தரகுத் தொகை இருக்கிறது. ‘’உள்ளடி’’ எனக் கூறப்படும் விஷயம் இருக்கிறது. பத்திரப் பதிவு அலுவலகம் இருக்கிறது. ஆவண எழுத்தர்கள் இருக்கிறார்கள். இந்த வகையில் நிகழும் கொடுக்கல் வாங்கல்கள் உண்டு. சொத்துக்கு பட்டா பெறுதல் இருக்கிறது. 

ஒருவர் மனை அல்லது நிலம் வாங்குவது என்பது ஒரு செயல். அதற்கு ஆகி வந்த சில வழிமுறைகள் அல்லது வழக்கங்கள் இருக்கின்றன. செயலும் வழிமுறையும் கைக்கொள்ளும் மனிதனைப் பொறுத்தே அமையும் என்பது இந்த தொழிலின் இன்னொரு சுவாரசியமான அம்சம்.     

Thursday, 2 October 2025

சுழலும் சக்கரம்

  

2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் கடைசி நாள்  ஊரில் ஒரு திரைப்படம் வெளியானது. அத்திரைப்படம் வெளியான திரையரங்கம் ஊரின் பழமையான திரையரங்குகளில் ஒன்று. 1969ம் ஆண்டு கட்டப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது. அரங்கின் முன்னால் இரண்டு இரும்பு கிரில் கதவுகள் கொண்ட பழைய பாணி முன்பக்க சுற்றுச் சுவர். சுற்றுச்சுவருக்கும் அரங்குக்கும் இடையே நூறு அடிக்கும் மேலாக திறந்தவெளி. அதன் வலதுபுறம் பாக்ஸ் ஆஃபிஸ். இடதுபுறம் இரு சக்கர வாகன பார்க்கிங். 50 ஆண்டுகளுக்கு முன்பு எவ்விதமான ஏற்பாடு இருந்ததோ அதே விதமான ஏற்பாடுகளே அப்படியே தொடர்ந்தன. அந்த திரையரங்கினுள் நுழைந்தால் சென்ற தலைமுறைக்கு சென்று விட்ட உணர்வு ஏற்பட்டு விடும். அவ்விதமான தன்மை திரையில் காணும் சினிமா அனுபவத்துக்கு உகந்ததாகவே அமைந்திருக்கும். சற்று முயன்றால் என்னால் எந்த திரையரங்கில் எந்த திரைப்படம் பார்த்தேன் என்பதை நினைவுபடுத்திக் கூறிட முடியும். ஒப்பீட்டளவில் நான் குறைவாகவே சினிமா பார்ப்பவன். சினிமா பார்த்தால் அது திரையரங்கில் மட்டுமே என்னும் வழக்கம் உள்ளவன். எனவே அவ்வாறு நினைவுபடுத்திக் கொள்வது இயல்கிறது. 

30.09.22 அன்று மதியம் அத்திரையரங்கை கடந்து செல்கையில் அங்கே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியைக் கண்டேன். அப்படத்தின் பெயர் புதிதாக இருந்தது. வழக்கமான தமிழ்ப் பெயர் போல் தெரியவில்லை. அது டப்பிங் செய்யப்பட்ட திரைப்படம் போல் இருந்தது. சுவரொட்டியிலிருந்து டப்பிங் திரைப்படமா அல்லது பல மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படமா என்பதையும் அறிய முடியவில்லை. அக்கணத்தில் ஏற்பட்ட ஆர்வத்தில் எனது இரு சக்கர வாகனத்தை திரையரங்கினுள் நுழைத்தேன். காட்சிசீட்டு பெற்றுக் கொண்டு உள்ளே நுழைந்தேன். கடலோர தென் கன்னட தேசத்தில் நிகழும் ஒரு கதை. அந்த படத்தின் கதையும் காட்சிகளும் மறக்க முடியாத சினிமா அனுபவமாயின. இந்திய அளவில் பல மொழிகளில் அத்திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. 

இன்று அத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. 

மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. இப்போது அந்த திரையரங்கம் அதே பெயருடன் இருக்கிறது. பழைய திரையரங்க நிர்வாகத்துடன் ஒரு மல்டிஃபிளக்ஸ் நிறுவனம் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டு பழைய திரையரங்கை முழுமையாக இடித்து புதிய மல்டிஃபிளக்ஸ் திரையரங்கம் கட்டியிருக்கிறார்கள். சுற்றுச்சுவருக்கும் அரங்குக்கும் இடையே இருக்கும் இடம் முழுமையாக நான்கு சக்கர வாகன பார்க்கிங்குக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாக்ஸ் ஆஃபிஸ் அரங்கின் முன்பகுதியில் அமைந்துள்ளது. இப்போது அந்த அரங்கில் ஒரே நேரத்தில் மூன்று திரைப்படங்கள் திரையிட முடியும். அதி நவீன ஒலி அமைப்புகள் கொண்டதாக இப்போது இருக்கிறது. 

இன்று வெளியாகும் இரண்டாம் பாகம் அதே திரையரங்கில் வெளியாகிறது. நேற்று மாலை அந்த வழியாகச் சென்ற போது அப்படத்தின் சுவரொட்டியைக் கண்டேன். இன்றைய காலைக்காட்சிக்கு ஒரு டிக்கெட் முன்பதிவு செய்து வாங்கிக் கொண்டேன். டிக்கெட் கொடுக்கும் சாளரத்தினுள் மூன்று பெண் ஊழியர்கள் கணினி மூலம் டிக்கெட் வழங்கிக் கொண்டிருந்தார்கள். எனக்கு டிக்கெட் வழங்கியவரிடம் இப்படத்தின் முதல் பாகத்தை இங்கேதான் பார்த்தேன் என்று சொன்னேன். அவருக்கு நான் சொல்வது என்ன என்பது புரிந்தது. மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார். 

காலச்சக்கரம் கணமும் நில்லாமல் சுழன்று கொண்டேயிருக்கிறது !

Wednesday, 1 October 2025

டெண்டுல்கர் நினைவுகள்

எனக்கு பத்து வயது இருந்த போது நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒன்றில் முதன் முதலில் சச்சின் டெண்டுல்கரைக் கண்டேன். சச்சின் டெண்டுல்கரின் ஆட்டம் வழியாகவே கிரிக்கெட்டைப் புரிந்து கொண்டேன். சச்சின் அப்போது பதின்வயதைக் கடக்காத ஒருவராக இருந்தார். தொலைக்காட்சியின் காலமும் சச்சினின் காலமும் ஒன்று. கிரிக்கெட் மேட்ச்களை டி.வி யில் மட்டுமே காண முடியும். பகலிரவு ஆட்டங்கள் அறிமுகமானது நினைவில் இருக்கிறது. தூர்தர்ஷனில் இரவு 8.30க்கு செய்திகளுக்காக கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு அரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும். இன்று அவ்வாறான நிலையை கற்பனை செய்வது கடினம். கல்கத்தாவில் நடைபெற்ற ஹீரோ கோப்பை இறுதிப் போட்டி நன்றாக நினைவிருக்கிறது. பரபரப்பான ஆட்டம் ஒன்றில் மேட்ச்சின் கடைசி ஓவரை டெண்டுல்கர் வீச வருவார். யாரும் எதிர்பாராத ஒரு முடிவு அது. அதில் டெண்டுல்கர் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி இந்தியாவுக்கு கோப்பையை வாங்கித் தந்தார். மறக்க முடியாத போட்டி.   

ராகுல் திராவிட் விளையாடத் தொடங்கிய போது எனக்கு மிகவும் பிடித்த வீரராக திராவிட் ஆனார். நிதானமாக நிலைத்து விளையாடும் ராகுலின் பாணி மீது எனக்கு பெரும் ஈர்ப்பு இருந்தது. இப்போதும் இருக்கிறது. ராகுல் திராவிட் அளவு ஈர்ப்பு கொண்ட இன்னொரு கிரிக்கெட் வீரர் இல்லை. 

தோனி மீதும் பிரியம் உண்டு. 

பள்ளி நாட்களிலும் கல்லூரி நாட்களிலும் கிரிக்கெட் விளையாட்டைக் கவனிக்கும் வழக்கம் இருந்தது. அதன் பின் மிக மிகக் குறைந்து விட்டது. இன்று இந்திய கிரிக்கெட் அணியில் யார் யார் விளையாடுகிறார்கள் என்னும் அளவு கூட அவதானம் இல்லை.