Tuesday, 31 December 2024

முயற்சி திருவினையாக்கும்

 எனது நண்பர் ஒருவர் ஊரில் இரண்டு மனைகளை வாங்கியுள்ளார். அதில் இருந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி விட்டு அதில் கட்டிடம் கட்டுவது அவரது திட்டம். அந்த மனைகளில் இருந்த மரங்களே அவர் நிர்மாணிக்க உள்ள வீட்டின் ஜன்னல், கதவுகள் ஆகியவற்றுக்கு போதுமானதாக இருக்கும் என கணக்கிடுகிறார். என்னிடம் அது பற்றி பேசிக் கொண்டிருந்தார். இருவரும் சேர்ந்து விவாதித்தோம். 

உலகம் மேடு பள்ளங்களாலும் ஏற்றம் தாழ்வுகளாலும் ஆனது. இது ஒரு அடிப்படை உண்மை. இந்த உண்மையிலிருந்தே அடுத்தடுத்த உண்மைகளுக்கு செல்ல முடியும். சென்று சேர முடியும். 

கடலை ஒட்டி வாழ்பவர்களுக்கு வாழ்க்கை ஒரு விதமாக இருக்கிறது. நதியை ஒட்டி வாழ்பவர்களுக்கு வாழ்க்கை வேறு விதமாக இருக்கிறது. மலையில் வாழ்பவர்களுக்கு இன்னொரு விதம். பாலையில் வாழ்பவர்கள் தனி விதம். 

நான் வாழும் பிரதேசத்தில் என்னால் முடிந்த அளவு விவசாயிகளின் பொருளியல் சிக்கலைத் தீர்க்க முயல வேண்டும் என்பது எனது விருப்பம். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளில் அது ஒன்று. இதற்காக தொடர்ந்து விவசாயிகளை சந்திக்கிறேன். என்னுடைய தொழில் விவசாயம் அல்ல; விவசாயம் சார்ந்து எனக்கு நேரடி அனுபவம் இல்லை. இந்த இரண்டு விஷயங்களும் எனது எல்லை. இருப்பினும் இந்த எல்லையை வெற்றிகரமாக ஒவ்வொரு முறையும் கடந்தே விவசாயிகளுடன் உரையாடுகிறேன். ஒரு விவசாயி விவசாயத்தில் நேரடி அனுபவம் உள்ளவர். அவருக்கு மண் குறித்து தெரியும் ; நீர்ப்பாய்ச்சல் தெரியும்; களைகள் குறித்து தெரியும்; பயிர்கள் கதிர் வைப்பது தெரியும். கதிரை எப்போது அறுப்பது என்பதும் தெரியும். இருப்பினும் விவசாயத்தை எவ்விதம் லாபமான ஒன்றாக மாற்றிக் கொள்வது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. அது அவர்களின் எல்லை. எனது எல்லையும் அவர்களின் எல்லையும் சந்திக்கும் இடத்தில் நாங்கள் உரையாட ஒரு சிறு சாத்தியம் இருக்கிறது. அந்த இடத்தைப் பயன்படுத்தியே நான் உரையாடுகிறேன். என்னால் முடிந்ததைச் செய்கிறேன். அந்த திருப்தியையே மட்டுமே நான் பெற முடியும். அது எனக்குத் தெரியும். அது எனக்குப் போதும். இருப்பினும் ஒவ்வொரு முறையும் என்னுடைய முயற்சியை பலமடங்காக்கவும் இன்னும் பல இடங்களில் மரப்பயிர்களைக் கொண்டு வரவும் விரும்பிக் கொண்டே இருப்பேன். அது என் சுபாவம். 

எனது நண்பர் ஐ.டி கம்பெனியில் பணி புரிபவர். அவரது பூர்வீகமான 3 ஏக்கர் நிலத்தில் அவரது தந்தை நெல் விவசாயம் செய்து கொண்டிருந்தார். மிக சொற்பமான லாபம் அல்லது லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை என்ற நிலை அல்லது நஷ்டம் என இந்த மூன்று சாத்தியங்களுக்கு உட்பட்டே அவர்களது விவசாயம் பருவத்துக்கு பருவம் நடைபெற்று வந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் சந்தித்துக் கொண்ட போது மரப்பயிர் குறித்து எனக்கு ஆர்வத்தாலும் நம்பிக்கையாலும் வியப்பு கொண்ட அவர் தனது 3 ஏக்கர் நிலத்தில் முழுமையாகத் தேக்கு பயிரிட முன்வந்தார். 100 சதவீதம் எனது ஆலோசனைகளை முழுமையாக செயலாக்குவேன் என உறுதி தந்தார். மனிதர்கள் கூடியே லௌகிகம் ஆற்றுகிறார்கள். எனவே உள்ளிருக்கும் மனிதர்களின் சுபாவங்கள் அவர்கள் ஆற்றும் லௌகிகத்திலும் பிரதிபலிக்கும். இந்த புரிதல் எனக்கு இருந்ததால் ஒவ்வொரு நகர்வையும் அளந்து வைத்தேன். அந்த நிலத்தில் 900 தேக்கு கன்றுகள் நடப்பட்டன. நடப்பட்டு கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆகி விட்டன. எல்லா மரங்களும் நன்றாக இருக்கின்றன. இன்னும் 12 ஆண்டுகள் கழித்து அவர் நிலத்தில் இருந்து அவருக்கு குறைந்தபட்சம் எட்டு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கும்.  விவசாயம் மூலம் கிடைத்த வருமானம் என்பதால் அதற்கு வருமானவரி கிடையாது. முழுத் தொகையும் சேதாரமின்றி கிடைக்கும். 

இந்த கணக்கீடு எனக்குத் தெரியும் என்றாலும் இரண்டு மனைகளை வாங்கிய நண்பர் மரம் வெட்டி சேகரித்து வைத்திருக்கும் மரத்துண்டுகள் அந்த கணக்கை உறுதி செய்தன. 

ஐ டி நிறுவன நண்பரின் தேக்கு தோட்ட செயல்முறையால் ஈர்க்கப்பட்டு மேலும் இருவர் தங்கள் நிலத்தில் தேக்கு பயிரிட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோருக்கு இந்த விஷயத்தைக் கொண்டு நூற்றுக்கணக்கான விவசாயிகளை கோடீஸ்வரர்களாக ஆக்க வேண்டும் என என் அகம் விழைகிறது. நான் அவர்களிடம் ஒரு சிந்தனையை மட்டுமே விதைக்கிறேன். சாதிப்பது அவர்களே. 

தேக்கிலிருந்து வருமானம் வர 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது ஒரு விஷயம். பல விவசாயிகளுக்கு அந்த தயக்கம் இருப்பதைக் கண்டிருக்கிறேன். 

இரண்டு மனைகள் வாங்கிய நண்பரின் உரையாடலிலிருந்து எனக்கு இன்னொரு விஷயம் புரிந்தது. அதாவது ஒரு ஏக்கர் நெல் வயலில் 300 வேப்ப மரங்கள் நட்டால் ஐந்து ஆண்டுகளில் அந்த விவசாயிக்கு ரூபாய் பதினைந்து லட்சம் கிடைக்கும். நெல் விவசாயத்தால் கிடைக்கும் என உத்தேசிக்கும் லாபத்தை விட 3 மடங்கு. வேப்ப மரங்களுக்கு மத்தியில் பூசணி பயிரிடலாம். அதன் மூலமும் லாபம் கிடைக்கும். 

வேப்ப மரங்களின் வளர்ச்சிக்கு எந்த தடையும் இல்லை. பராமரிப்பு ஏதும் இல்லை. மிகக் குறைவான தண்ணீர் போதும். 

புது ஆண்டு பிறக்க உள்ள நிலையில் ’’காவிரி போற்றுதும்’’ பணிகளில் தேக்குடன் வேம்பு இணைந்திருப்பது உற்சாகத்தைத் தருகிறது. 

Monday, 30 December 2024

எனது படைப்புகள் - மறுபிரசுரம்

     2016ம் ஆண்டு மயிலாடுதுறையிலிருந்து ரிஷிகேஷ் வரை 22 நாட்கள் மோட்டார்சைக்கிளில் பயணித்தேன். அப்பயணம் குறித்த  பயணக் கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. அதன் இணைப்பு


காவிரியிலிருந்து கங்கை வரை - பகுதி 1

அதன் இரண்டாம் பகுதியின் இணைப்பு

ஹம்பி - நிலவைக் காட்டும் விரல்

சொல்வனம் இதழில் வெளியான எனது சிறுகதைகள்











வருகை              





இரு பள்ளிகள்

சொல்வனம் இதழில் எழுதும் ‘’யானை பிழைத்தவேல்’’ கம்பராமாயணத் தொடரின் கட்டுரைகள் இணைப்பு

யானை பிழைத்தவேல் - பகுதி 1   யானை பிழைத்தவேல் - பகுதி 2

யானை பிழைத்தவேல் - பகுதி 3   யானை பிழைத்தவேல் - பகுதி 4

யானை பிழைத்தவேல் - பகுதி 5

ஜெயமோகன் இணையதளத்தில் வெளியான எனது கட்டுரைகள் & கடிதங்கள்


சுப்பு ரெட்டியார்         



வீரப்ப வேட்டை                         







Sunday, 29 December 2024

கும்பகோணம் கதைகள்

கஞ்சா மடம் - ந.பிச்சமூர்த்தி

 உலகை முக்குணங்களின் (சத்வ ரஜோ தமோ) கூட்டிருப்பாகக் காண்கிறது இந்திய மரபு. ஜீவன்கள் எக்குணம் மிகுந்து எக்குணத்தில் பிணைந்து ஜீவித்திருக்கின்றன என்பதே ஒவ்வொரு ஜீவனின் பிறவிக்கதை. ஒரு சாமியார் மடம். உலகியல் அமைப்புகளில் இருந்து விலகி வந்தவர்களின் இடம். உலகியல் பொருளியல் அடிப்படைகளால் ஆனது அல்லது பொருளியல் அடிப்படைகளாலும் ஆனது. ஒரு பம்பரம் உருவாகி கடையில் விற்பனையாகி சிறுவர்களின் கைக்கு வருவது வரையிலான பொருளியல் இயங்குமுறையை முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கின்றனர் சாமியார் மடத்து சாமியார்கள். அதை பேசி விவாதித்து விளக்கம் கொடுத்து மகிழ்ந்திருக்கின்றனர். ஒரு ஜோல்னாபையில் கஞ்சா சரக்கு இருக்கிறது. அனைவரும் கஞ்சா புகை இழுத்து மயக்கத்தில் ஆழ்கிறார்கள். நாளில் ஒரு வேளையாயினும் திருப்தியான உணவருந்தி கஞ்சா புகை இழுத்து மயக்கம் கொண்டு சித்தர் பாடல்களில் சிலவற்றைப் பாடி ஊர்வலம் வருவது கஞ்சா மட சாமியார்களின் தினசரியை. மடத்து சாமியார் அல்லாத சாமியார்களுக்கு உணவு கொண்டு வந்து பரிமாறும் ஆண்டியப்பன் பெரிய சாமியின் கஞ்சா பங்கை புகைத்து மயங்கி விடுகிறான். பெரிய சாமி அவன் தலையில் தண்ணீர் கொட்டி அவன் மயக்கத்தைக் கலைக்கிறார். சாமானியன் பொருளைப் பற்றி நிற்கிறான். கஞ்சா மடம் கஞ்சாவில் மட்டுமே மயங்கி நிற்கிறது.  பொருளியல் வேட்கையை விடவும் கூரானது பொருளியலுக்கு அப்பால் இருப்பதாக நினைத்து மயங்கியிருப்பவர்களின் மயக்கம். 

வீரம்மாளின் காளை - கு.ப.ராஜகோபாலன்

இந்திய மரபு மானுட வாழ்க்கை பந்த பாசங்களால் ஆனது. பந்த பாசங்கள். பந்தம் என்பது பிணைப்பு. சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பது போல. எங்காவது நகர வேண்டுமென்றால் செல்ல வேண்டுமென்றால் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியை அறுத்தாக வேண்டும். பாசம் என்பது வழுக்கச் செய்வது. பந்தத்தால் கட்டப்பட்டு பாசத்தால் வழுக்கிச் செல்வதாக இருக்கிறது எளிய மானுட வாழ்க்கை. 

கள்ளர் பெண்ணான வீரம்மாளுக்கு தன் மாமன் காத்தான் மேல் கொள்ளை பிரியம். அவளை மணக்க வேண்டுமெனில் அவளது காளையை ஜல்லிக்கட்டில் ஏறு தழுவ வேண்டும். யாருக்கும் வசப்படாத காளையை போராடித் தழுவி அதன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் துணியை அவிழ்க்கிறான் காத்தான். விதியின் கணம் ஒன்றில் காளை காத்தான் வயிற்றில் தன் கொம்பை ஏத்தி விடுகிறது. சாவின் விளிம்பில் வீரம்மாளிடம் காளை கழுத்தில் கட்டப்பட்டிருந்த துணியை அளித்து விட்டு கண் மூடுகிறான் காத்தான். ஜல்லிக்கட்டில் ‘’தோத்த கழுதை’’க்கு ரோஷமா என்று கூறி காளை மீது வேல் பாய்ச்சுகிறாள் வீரம்மாள். வீரம்மாளுக்கு தான் காதலித்த மாமனைக் கொன்று விட்டதே என காளை மேல் வருத்தம் இல்லை; ஜல்லிக்கட்டில் தான் வளர்த்த காளை தோற்று விட்டதே என்னும் வருத்தமே இருக்கிறது. காத்தானுக்கு சாகிறோமே என்ற வருத்தம் இல்லை ; வீரம்மாளுக்காக காளையை வென்றோம் என்ற மகிழ்ச்சியே இருக்கிறது. மாமனையும் இழந்து காளையையும் கொன்று விட்டு வீரம்மாள் அடையும் உணர்வு எவ்விதமானது என்பதை வாசகனிடம் விட்டு விடுகிறார் ஆசிரியர். 


 கல் நாயனம் - கி.ரா.கோபாலன்

 நாகேசன் ஒரு சிற்பி. முத்துக்குமரன் ஒரு நாதஸ்வரக் கலைஞன். அஞ்சனா நாகேசனின் தங்கை. அஞ்சனாவும் முத்துக்குமரனும் காதலர்கள். சகஜமான ஒரு உரையாடல் ஒன்றில் சிறு பூசல் உருவாகிறது நாகேசனுக்கும் முத்துக்குமரனுக்கும். அதாவது கல்லில் ஒரு நாயனம் செய்ய முடியுமா என இசைக்கலைஞன் சவால் விட அப்படி ஒன்று உருவாக்கினால் அதனை சுருதி சுத்தமாக வாசிக்க உன்னால் முடியுமா என பதில் சவால் விடுகிறான் சிற்பி. கல் நாயனத்தை சுருதி சுத்தமாக வாசிக்காமல் போனால் அஞ்சனாவை கல்யாணம் செய்யாமல் போவேன் என மேலும் ஒரு விஷயத்தையும் சொல்லி சவாலை இன்னும் தீவிரமாக்குகிறான் இசைக்கலைஞன். அஞ்சனா இவர்கள் சவாலுக்கு மத்தியில் தன் காதல் சிக்கிக் கொண்டதே என கலங்குகிறாள். கல் நாயனம் சுருதி சுத்தமாக முத்துக்குமரனால் வாசிக்கப்பட்டால் இனி உளியையே தொடுவதில்லை என அறிவிக்கிறான் நாகேசன். கல் நாயனம் செய்யப்படுகிறது. சுருதி சுத்தமாக வாசிக்கவும் படுகிறது. போட்டியில் வென்ற முத்துக்குமரன் நாகேசனின் சிற்பத் திறனை மெச்சுகிறான். அவன் சிற்பியாக தொடர்ந்து செயல்படுவேன் என்று அறிவித்தால் மட்டுமே அஞ்சனாவை மணப்பேன் என்கிறான். அனைத்தும் சுபமாக நிகழ்கின்றன. 

மனித தெய்வம் - துரோணன்

தங்கை கொலை செய்யப்படுகிறாள். தங்கையைக் காக்க இயலாமல் போனோமே எனக் கதறும் அண்ணன் மீதே கொலைப்பழி சுமத்தி பல ஆண்டுகள் சிறைக்கு அனுப்பி வைக்கிறான் கொலையாளி. சிறைவாசம் முடிந்து ஊர் திரும்புகிறான் அண்ணன். சிறையிலிருந்த ஒவ்வொரு கணமும் கொலை என்ற எண்ணத்தை மட்டுமே அடை காத்திருக்கிறான். கொலையாளி வீட்டுக்கு வரும் போது அந்த வீடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. கொலையாளியின் மகள் தீயில் சிக்கியிருக்கிறாள். உள் நுழைய யாருக்கும் துணிவில்லை. சிறையிலிருந்து வெளிவந்த கைதி தீக்குள் நுழைந்து தன் உயிரைத் தந்து அவள் உயிரைக் காக்கிறான். கொலை எண்ணத்தையே எண்ணிக் கொண்டிருந்த மனம் எந்த கணத்தில் தனக்கு துயரம் தந்தவன் மகளை காக்க வேண்டும் என முடிவெடுத்தது? அந்த கணம் தான் மனிதன் தெய்வமாகும் மாயக் கணமா? 

ஆடை - தி.ஜானகிராமன்

எல்லா விஷமும் ஒன்றல்ல எனினும் விஷத்தின் வெவ்வேறு வடிவங்களும் ரூபங்களும் நிறைந்திருக்கிறது இவ்வுலகில். இவ்வாழ்வில். விஷபரீட்சை செய்து கொண்டேயிருக்கிறது மனித இனம் யுகம் யுகமாக. யோசித்துப் பார்த்தால் எது விஷம் எவை விஷம் என்பதை உய்த்துணர்வதையே வாழ்க்கையின் சாரமாகவும் கொண்டிருக்கிறது மானுடம். விஷங்கள் வசீகரமானவை என்பது புறக்கணிக்க இயலாத உண்மை. விரியன் குட்டி மிகச் சிறியது. அதன் நாவு அதனினும் சிறியது. அதன் நாவின் நுனியில் இருக்கும் விஷம் நுண்ணினும் நுண்ணியது. விரியன் விஷம் தீண்டப்பட்டு உடலில் நுழைந்தால் நுண்ணினும் நுண்ணிய ஊசிமுனைத்துளி தீண்டிய பெரு உடலின் முழு அளவும் வியாபிக்கிறது. மயக்கி மூச்சு திணறச் செய்து நுரை கக்க வைத்து ஜீவபலி கொண்டு ஓய்கிறது. விரியன் நா தீண்டல் பலியை சில நிமிடங்களில் நிகழ்த்தி விடுகிறது. வருடக் கணக்காக கொஞ்சம் கொஞ்சமாக அணு அணுவாக அழித்து வேடிக்கை காட்டும் விஷங்கள் பல இருக்கின்றன. துரைக்கண்ணுவை அழித்தது எந்த மெல்லக் கொல்லும் விஷம் ? அவள் வாழ்வில் என்ன ரூபத்தில் உள்நுழைந்து எவ்விதம் மீட்பின்றி அவளை அழித்தது என்னும் கேள்வியை ஒரு துயரச் சித்திரம் மூலம் முன்வைக்கும் கதை தி. ஜானகிராமனின் ‘’ஆடை’’. 

புஷ்கரணி - தி.ஜானகிராமன்

ஒரு எல்லை வரை, சடங்குகள் சாமானிய வாழ்க்கைக்கு உதவிகரமானவை. சடங்குகளைப் புரிந்து கொள்ளக் கோருகிறது -  காலத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தவாறு இருக்கிறது - அவற்றைத் தாண்டிச் செல்வதை அங்கீகரிக்கிறது இந்திய மரபு. பெரும் தீர்த்தம் ஒன்றின் கரையில் வாழும் கலை மனம் கொண்ட ஒருவன் அந்த தீர்த்தத்தின் சௌந்தர்யத்தை தன் சித்தத்தால் நாளும் உணர்கிறான். சாமானிய மனநிலையில் அவன் கலை மனநிலை பொருத்திக் கொள்ளவில்லை. அதை இன்னதென வகுக்காத சஞ்சலமாக அவன் உணர்கிறான். அந்த உணர்வை தன் பாணியில் அழகாய் கூறி அழகாய் சித்தரித்து அமையும் தி.ஜானகிராமன் கதைக்குள் கதை என இன்னொரு கதையை சிறுகதைக்குள் கொண்டு வந்து அவற்றை ஒன்றைப் பிரதிபலிக்கும் இரண்டு ஆடிகளாக ஆக்குகிறார். அவை ஒன்றை ஒன்று பிரதிபலித்து விரிவாகிக் கொண்டே செல்கின்றன.  

தெருப்புழுதி - க.நா.சுப்ரமணியம்

 நம் கால்கள் நிலை கொண்டிருக்கும் பூமி இருபத்து மூன்று அரை பாகை சாய்ந்து மிக வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது. அதன் மிகப் பெரும் அளவால் அது வேகமாக சுழல்வதை நாம் உணராமல் இருக்கிறோம். சுழற்சி என்பது எதிர்பாராமைகளால் ஆனது. சீரான சுழற்சி கூட. லௌகிகம் என்பதே எதிர்பாராமைகளின் ஆட்டமே. அந்த எதிர்பாராமையின் ஆடலை வாழ்வின் ஏதோ ஒரு கணத்தில் கண்டு திகைத்து நிற்கின்றனர் யுகம் யுகமாக மானுடர்கள். அரசறிய வீற்றிருந்த வாழ்வொன்று ஆற்றங்கரை மரமென சரிந்து நிற்பதன் கதை க.நா.சு வின் ‘’தெருப்புழுதி’’. 

எனக்குப் பிடிக்காதவை - துமிலன்

 கதை சொல்லிக்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் ஆகியிருக்கிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை அவனுடைய செலவுகளில் பெரும் பகுதி அவன் வீட்டிலிருந்து கிடைத்திருக்கிறது எல்லாரையும் போல. திடீரென அவனுக்குத் திருமணம் செய்து வைத்து உன் குடித்தனத்தை நீயே பார் என்று கூறிவிடுகிறார்கள். வீட்டுக்கு வெளியே இருக்கும் பரந்த உலகமும் அதன் போக்குகளும் அவன் நகர்வுகளைத் தீர்மானிக்கின்றன. இரண்டு யானைகளுக்கு நடுவே நடக்கும் சண்டையை அவற்றின் பக்கத்தில் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறான் கதைசொல்லி. 15 ஆண்டுகளுக்கு முன்,ஒரு போகியாக இரண்டு வேளை சாம்பார், ரசம், கிச்சடி என உணவருந்தியவன் கதைசொல்லி. இப்போது அவன் அவற்றை தனக்குப் பிடிக்காதவை என்னும் பட்டியலில் சேர்த்து விட்டான். அந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. எவனடா கண்டுபிடித்தது இந்த சர்க்கரையை என அலுத்துக் கொண்டு அதனையும் தன் பட்டியலில் இணைக்கிறான். குடும்ப வாழ்க்கையில் யாருக்காவது கல்யாணம் கார்த்தி என்று வெளியூருக்குச் செல்ல வேண்டியிருப்பதால் ரயில் பிரயாணத்துக்கும் அந்த பட்டியலில் இடம் உண்டு. அடுப்பெரிக்க வாங்க வேண்டியிருப்பதால் சவுக்கு மரமும் தனக்குப் பிடிக்காதவை பட்டியலில் வைத்துக் கொள்கிறான். அரிசி காய்கறியும் அவனுக்குப் பிடிக்கவில்லை. கதைசொல்லிக்கு லௌகிக வாழ்க்கை மிகவும் பிடித்திருக்கிறது என்பதை பட்டியலில் அதனை சேர்க்கவில்லை என்பதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம். 

பிரதாப முதலியார் - கரிச்சான் குஞ்சு

புவிக்கு மேலே இருக்கின்றன உம்பர் உலகங்கள். புவிக்குக் கீழும் இருக்கின்றன பலவித உலகங்கள். அதல விதல பாதாளங்கள். படைப்போன் தடைகளை புவியிலும் புவிக்கு மேலும் புவிக்குக் கீழும் அமைத்தே இருக்கிறான். ஜீவனின் தேர்வு எதுவாயினும் அது தடைகளைத் தாண்டியே ஆக வேண்டும். புவி, புவிமேல், புவிகீழ் என எல்லா உலகங்களிலும். அதல விதல பாதாளங்கள் கரியவை. ஆயினும் வலு மிக்கவை. அவை அறியப்படாமல் முழுமை முற்றுணரப்படுவதில்லை என்பதால் எப்போதும் இருப்பவை. தீயவை தீய பயத்தலால் அவற்றை தீயினும் அஞ்சி விலகுகின்றனர் சான்றோர். அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் என அறிவுறுத்திய வண்ணம் உள்ளனர் அறவோர். பலி கேட்பவை சூதின் தெய்வங்கள். தன்னுள் அகழும் ஜீவனின் உயிரை மட்டுமல்ல - மானம் அறிவு பெருமை உறவு என அனைத்தையும். 

சூதாடி பிரதாப முதலியாரின் சூதாட்டக் களத்துக்கு வந்து அவர் மனைவி அவர் கட்டிய தாலியை அறுத்து அவரிடம் வீசி விட்டு செல்கிறாள். ஒரு எதிர்பாராத சவுக்கடியின் வலியை வாசகனுக்குக் கொடுக்கும் கதை.  

அற்றது பற்றெனில் - இந்திரா பார்த்தசாரதி

திருவாய்மொழி அற்றது பற்றெனில் உற்றது வீடு என்கிறது. பிறிதின் நோயை தன் நோயாகப் போற்றாதவனை எவ்விதம் அறிவுடையவன் என்று கூற முடியும் எனக் கேட்கிறார் திருவள்ளுவர்.இந்திரா பார்த்தசாரதி படைத்த நீலாம்பிகை மாமி கதாபாத்திரம் தமிழ்ச் சிறுகதையின் ஆக உச்சமான கதாபாத்திரங்களில் ஒன்று. தமிழின் ஆகச் சிறந்த கதைகளில் ஒன்று ‘அற்றது பற்றெனில்’
 
*****









  





 

சிறுகதை - அற்றது பற்றெனில் - இந்திரா பார்த்தசாரதி

திருவாய்மொழி அற்றது பற்றெனில் உற்றது வீடு என்கிறது. பிறிதின் நோயை தன் நோயாகப் போற்றாதவனை எவ்விதம் அறிவுடையவன் என்று கூற முடியும் எனக் கேட்கிறார் திருவள்ளுவர்.இந்திரா பார்த்தசாரதி படைத்த நீலாம்பிகை மாமி கதாபாத்திரம் தமிழ்ச் சிறுகதையின் ஆக உச்சமான கதாபாத்திரங்களில் ஒன்று. தமிழின் ஆகச் சிறந்த கதைகளில் ஒன்று ‘அற்றது பற்றெனில்’
 

சிறுகதை - பிரதாப முதலியார் - கரிச்சான் குஞ்சு

புவிக்கு மேலே இருக்கின்றன உம்பர் உலகங்கள். புவிக்குக் கீழும் இருக்கின்றன பலவித உலகங்கள். அதல விதல பாதாளங்கள். படைப்போன் தடைகளை புவியிலும் புவிக்கு மேலும் புவிக்குக் கீழும் அமைத்தே இருக்கிறான். ஜீவனின் தேர்வு எதுவாயினும் அது தடைகளைத் தாண்டியே ஆக வேண்டும். புவி, புவிமேல், புவிகீழ் என எல்லா உலகங்களிலும். அதல விதல பாதாளங்கள் கரியவை. ஆயினும் வலு மிக்கவை. அவை அறியப்படாமல் முழுமை முற்றுணரப்படுவதில்லை என்பதால் எப்போதும் இருப்பவை. தீயவை தீய பயத்தலால் அவற்றை தீயினும் அஞ்சி விலகுகின்றனர் சான்றோர். அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் என அறிவுறுத்திய வண்ணம் உள்ளனர் அறவோர். பலி கேட்பவை சூதின் தெய்வங்கள். தன்னுள் அகழும் ஜீவனின் உயிரை மட்டுமல்ல - மானம் அறிவு பெருமை உறவு என அனைத்தையும். 

சூதாடி பிரதாப முதலியாரின் சூதாட்டக் களத்துக்கு வந்து அவர் மனைவி அவர் கட்டிய தாலியை அறுத்து அவரிடம் வீசி விட்டு செல்கிறாள். ஒரு எதிர்பாராத சவுக்கடியின் வலியை வாசகனுக்குக் கொடுக்கும் கதை.  

சிறுகதை - எனக்குப் பிடிக்காதவை - துமிலன்

 கதை சொல்லிக்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் ஆகியிருக்கிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை அவனுடைய செலவுகளில் பெரும் பகுதி அவன் வீட்டிலிருந்து கிடைத்திருக்கிறது எல்லாரையும் போல. திடீரென அவனுக்குத் திருமணம் செய்து வைத்து உன் குடித்தனத்தை நீயே பார் என்று கூறிவிடுகிறார்கள். வீட்டுக்கு வெளியே இருக்கும் பரந்த உலகமும் அதன் போக்குகளும் அவன் நகர்வுகளைத் தீர்மானிக்கின்றன. இரண்டு யானைகளுக்கு நடுவே நடக்கும் சண்டையை அவற்றின் பக்கத்தில் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறான் கதைசொல்லி. 15 ஆண்டுகளுக்கு முன்,ஒரு போகியாக இரண்டு வேளை சாம்பார், ரசம், கிச்சடி என உணவருந்தியவன் கதைசொல்லி. இப்போது அவன் அவற்றை தனக்குப் பிடிக்காதவை என்னும் பட்டியலில் சேர்த்து விட்டான். அந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. எவனடா கண்டுபிடித்தது இந்த சர்க்கரையை என அலுத்துக் கொண்டு அதனையும் தன் பட்டியலில் இணைக்கிறான். குடும்ப வாழ்க்கையில் யாருக்காவது கல்யாணம் கார்த்தி என்று வெளியூருக்குச் செல்ல வேண்டியிருப்பதால் ரயில் பிரயாணத்துக்கும் அந்த பட்டியலில் இடம் உண்டு. அடுப்பெரிக்க வாங்க வேண்டியிருப்பதால் சவுக்கு மரமும் தனக்குப் பிடிக்காதவை பட்டியலில் வைத்துக் கொள்கிறான். அரிசி காய்கறியும் அவனுக்குப் பிடிக்கவில்லை. கதைசொல்லிக்கு லௌகிக வாழ்க்கை மிகவும் பிடித்திருக்கிறது என்பதை பட்டியலில் அதனை சேர்க்கவில்லை என்பதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம். 

சிறுகதை - தெருப்புழுதி - க. நா. சுப்ரமணியம்

 நம் கால்கள் நிலை கொண்டிருக்கும் பூமி இருபத்து மூன்று அரை பாகை சாய்ந்து மிக வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது. அதன் மிகப் பெரும் அளவால் அது வேகமாக சுழல்வதை நாம் உணராமல் இருக்கிறோம். சுழற்சி என்பது எதிர்பாராமைகளால் ஆனது. சீரான சுழற்சி கூட. லௌகிகம் என்பதே எதிர்பாராமைகளின் ஆட்டமே. அந்த எதிர்பாராமையின் ஆடலை வாழ்வின் ஏதோ ஒரு கணத்தில் கண்டு திகைத்து நிற்கின்றனர் யுகம் யுகமாக மானுடர்கள். அரசறிய வீற்றிருந்த வாழ்வொன்று ஆற்றங்கரை மரமென சரிந்து நிற்பதன் கதை க.நா.சு வின் ‘’தெருப்புழுதி’’. 

சிறுகதை - புஷ்கரணி - தி. ஜானகிராமன்

ஒரு எல்லை வரை, சடங்குகள் சாமானிய வாழ்க்கைக்கு உதவிகரமானவை. சடங்குகளைப் புரிந்து கொள்ளக் கோருகிறது -  காலத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தவாறு இருக்கிறது - அவற்றைத் தாண்டிச் செல்வதை அங்கீகரிக்கிறது இந்திய மரபு. பெரும் தீர்த்தம் ஒன்றின் கரையில் வாழும் கலை மனம் கொண்ட ஒருவன் அந்த தீர்த்தத்தின் சௌந்தர்யத்தை தன் சித்தத்தால் நாளும் உணர்கிறான். சாமானிய மனநிலையில் அவன் கலை மனநிலை பொருத்திக் கொள்ளவில்லை. அதை இன்னதென வகுக்காத சஞ்சலமாக அவன் உணர்கிறான். அந்த உணர்வை தன் பாணியில் அழகாய் கூறி அழகாய் சித்தரித்து அமையும் தி.ஜானகிராமன் கதைக்குள் கதை என இன்னொரு கதையை சிறுகதைக்குள் கொண்டு வந்து அவற்றை ஒன்றைப் பிரதிபலிக்கும் இரண்டு ஆடிகளாக ஆக்குகிறார். அவை ஒன்றை ஒன்று பிரதிபலித்து விரிவாகிக் கொண்டே செல்கின்றன.  

சிறுகதை - ஆடை - தி.ஜானகிராமன்

எல்லா விஷமும் ஒன்றல்ல எனினும் விஷத்தின் வெவ்வேறு வடிவங்களும் ரூபங்களும் நிறைந்திருக்கிறது இவ்வுலகில். இவ்வாழ்வில். விஷபரீட்சை செய்து கொண்டேயிருக்கிறது மனித இனம் யுகம் யுகமாக. யோசித்துப் பார்த்தால் எது விஷம் எவை விஷம் என்பதை உய்த்துணர்வதையே வாழ்க்கையின் சாரமாகவும் கொண்டிருக்கிறது மானுடம். விஷங்கள் வசீகரமானவை என்பது புறக்கணிக்க இயலாத உண்மை. விரியன் குட்டி மிகச் சிறியது. அதன் நாவு அதனினும் சிறியது. அதன் நாவின் நுனியில் இருக்கும் விஷம் நுண்ணினும் நுண்ணியது. விரியன் விஷம் தீண்டப்பட்டு உடலில் நுழைந்தால் நுண்ணினும் நுண்ணிய ஊசிமுனைத்துளி தீண்டிய பெரு உடலின் முழு அளவும் வியாபிக்கிறது. மயக்கி மூச்சு திணறச் செய்து நுரை கக்க வைத்து ஜீவபலி கொண்டு ஓய்கிறது. விரியன் நா தீண்டல் பலியை சில நிமிடங்களில் நிகழ்த்தி விடுகிறது. வருடக் கணக்காக கொஞ்சம் கொஞ்சமாக அணு அணுவாக அழித்து வேடிக்கை காட்டும் விஷங்கள் பல இருக்கின்றன. துரைக்கண்ணுவை அழித்தது எந்த மெல்லக் கொல்லும் விஷம் ? அவள் வாழ்வில் என்ன ரூபத்தில் உள்நுழைந்து எவ்விதம் மீட்பின்றி அவளை அழித்தது என்னும் கேள்வியை ஒரு துயரச் சித்திரம் மூலம் முன்வைக்கும் கதை தி. ஜானகிராமனின் ‘’ஆடை’’.   

Saturday, 28 December 2024

சிறுகதை - மனித தெய்வம் - துரோணன்

தங்கை கொலை செய்யப்படுகிறாள். தங்கையைக் காக்க இயலாமல் போனோமே எனக் கதறும் அண்ணன் மீதே கொலைப்பழி சுமத்தி பல ஆண்டுகள் சிறைக்கு அனுப்பி வைக்கிறான் கொலையாளி. சிறைவாசம் முடிந்து ஊர் திரும்புகிறான் அண்ணன். சிறையிலிருந்த ஒவ்வொரு கணமும் கொலை என்ற எண்ணத்தை மட்டுமே அடை காத்திருக்கிறான். கொலையாளி வீட்டுக்கு வரும் போது அந்த வீடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. கொலையாளியின் மகள் தீயில் சிக்கியிருக்கிறாள். உள் நுழைய யாருக்கும் துணிவில்லை. சிறையிலிருந்து வெளிவந்த கைதி தீக்குள் நுழைந்து தன் உயிரைத் தந்து அவள் உயிரைக் காக்கிறான். கொலை எண்ணத்தையே எண்ணிக் கொண்டிருந்த மனம் எந்த கணத்தில் தனக்கு துயரம் தந்தவன் மகளை காக்க வேண்டும் என முடிவெடுத்தது? அந்த கணம் தான் மனிதன் தெய்வமாகும் மாயக் கணமா? 

சிறுகதை - கல் நாயனம் - கி.ரா. கோபாலன்

 நாகேசன் ஒரு சிற்பி. முத்துக்குமரன் ஒரு நாதஸ்வரக் கலைஞன். அஞ்சனா நாகேசனின் தங்கை. அஞ்சனாவும் முத்துக்குமரனும் காதலர்கள். சகஜமான ஒரு உரையாடல் ஒன்றில் சிறு பூசல் உருவாகிறது நாகேசனுக்கும் முத்துக்குமரனுக்கும். அதாவது கல்லில் ஒரு நாயனம் செய்ய முடியுமா என இசைக்கலைஞன் சவால் விட அப்படி ஒன்று உருவாக்கினால் அதனை சுருதி சுத்தமாக வாசிக்க உன்னால் முடியுமா என பதில் சவால் விடுகிறான் சிற்பி. கல் நாயனத்தை சுருதி சுத்தமாக வாசிக்காமல் போனால் அஞ்சனாவை கல்யாணம் செய்யாமல் போவேன் என மேலும் ஒரு விஷயத்தையும் சொல்லி சவாலை இன்னும் தீவிரமாக்குகிறான் இசைக்கலைஞன். அஞ்சனா இவர்கள் சவாலுக்கு மத்தியில் தன் காதல் சிக்கிக் கொண்டதே என கலங்குகிறாள். கல் நாயனம் சுருதி சுத்தமாக முத்துக்குமரனால் வாசிக்கப்பட்டால் இனி உளியையே தொடுவதில்லை என அறிவிக்கிறான் நாகேசன். கல் நாயனம் செய்யப்படுகிறது. சுருதி சுத்தமாக வாசிக்கவும் படுகிறது. போட்டியில் வென்ற முத்துக்குமரன் நாகேசனின் சிற்பத் திறனை மெச்சுகிறான். அவன் சிற்பியாக தொடர்ந்து செயல்படுவேன் என்று அறிவித்தால் மட்டுமே அஞ்சனாவை மணப்பேன் என்கிறான். அனைத்தும் சுபமாக நிகழ்கின்றன. 

சிறுகதை - வீரம்மாளின் காளை - கு.ப.ராஜகோபாலன்

இந்திய மரபு மானுட வாழ்க்கை பந்த பாசங்களால் ஆனது. பந்த பாசங்கள். பந்தம் என்பது பிணைப்பு. சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பது போல. எங்காவது நகர வேண்டுமென்றால் செல்ல வேண்டுமென்றால் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியை அறுத்தாக வேண்டும். பாசம் என்பது வழுக்கச் செய்வது. பந்தத்தால் கட்டப்பட்டு பாசத்தால் வழுக்கிச் செல்வதாக இருக்கிறது எளிய மானுட வாழ்க்கை. 

கள்ளர் பெண்ணான வீரம்மாளுக்கு தன் மாமன் காத்தான் மேல் கொள்ளை பிரியம். அவளை மணக்க வேண்டுமெனில் அவளது காளையை ஜல்லிக்கட்டில் ஏறு தழுவ வேண்டும். யாருக்கும் வசப்படாத காளையை போராடித் தழுவி அதன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் துணியை அவிழ்க்கிறான் காத்தான். விதியின் கணம் ஒன்றில் காளை காத்தான் வயிற்றில் தன் கொம்பை ஏத்தி விடுகிறது. சாவின் விளிம்பில் வீரம்மாளிடம் காளை கழுத்தில் கட்டப்பட்டிருந்த துணியை அளித்து விட்டு கண் மூடுகிறான் காத்தான். ஜல்லிக்கட்டில் ‘’தோத்த கழுதை’’க்கு ரோஷமா என்று கூறி காளை மீது வேல் பாய்ச்சுகிறாள் வீரம்மாள். வீரம்மாளுக்கு தான் காதலித்த மாமனைக் கொன்று விட்டதே என காளை மேல் வருத்தம் இல்லை; ஜல்லிக்கட்டில் தான் வளர்த்த காளை தோற்று விட்டதே என்னும் வருத்தமே இருக்கிறது. காத்தானுக்கு சாகிறோமே என்ற வருத்தம் இல்லை ; வீரம்மாளுக்காக காளையை வென்றோம் என்ற மகிழ்ச்சியே இருக்கிறது. மாமனையும் இழந்து காளையையும் கொன்று விட்டு வீரம்மாள் அடையும் உணர்வு எவ்விதமானது என்பதை வாசகனிடம் விட்டு விடுகிறார் ஆசிரியர். 

சிறுகதை - கஞ்சா மடம் - ந. பிச்சமூர்த்தி

 உலகை முக்குணங்களின் (சத்வ ரஜோ தமோ) கூட்டிருப்பாகக் காண்கிறது இந்திய மரபு. ஜீவன்கள் எக்குணம் மிகுந்து எக்குணத்தில் பிணைந்து ஜீவித்திருக்கின்றன என்பதே ஒவ்வொரு ஜீவனின் பிறவிக்கதை. ஒரு சாமியார் மடம். உலகியல் அமைப்புகளில் இருந்து விலகி வந்தவர்களின் இடம். உலகியல் பொருளியல் அடிப்படைகளால் ஆனது அல்லது பொருளியல் அடிப்படைகளாலும் ஆனது. ஒரு பம்பரம் உருவாகி கடையில் விற்பனையாகி சிறுவர்களின் கைக்கு வருவது வரையிலான பொருளியல் இயங்குமுறையை முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கின்றனர் சாமியார் மடத்து சாமியார்கள். அதை பேசி விவாதித்து விளக்கம் கொடுத்து மகிழ்ந்திருக்கின்றனர். ஒரு ஜோல்னாபையில் கஞ்சா சரக்கு இருக்கிறது. அனைவரும் கஞ்சா புகை இழுத்து மயக்கத்தில் ஆழ்கிறார்கள். நாளில் ஒரு வேளையாயினும் திருப்தியான உணவருந்தி கஞ்சா புகை இழுத்து மயக்கம் கொண்டு சித்தர் பாடல்களில் சிலவற்றைப் பாடி ஊர்வலம் வருவது கஞ்சா மட சாமியார்களின் தினசரியை. மடத்து சாமியார் அல்லாத சாமியார்களுக்கு உணவு கொண்டு வந்து பரிமாறும் ஆண்டியப்பன் பெரிய சாமியின் கஞ்சா பங்கை புகைத்து மயங்கி விடுகிறான். பெரிய சாமி அவன் தலையில் தண்ணீர் கொட்டி அவன் மயக்கத்தைக் கலைக்கிறார். சாமானியன் பொருளைப் பற்றி நிற்கிறான். கஞ்சா மடம் கஞ்சாவில் மட்டுமே மயங்கி நிற்கிறது.  பொருளியல் வேட்கையை விடவும் கூரானது பொருளியலுக்கு அப்பால் இருப்பதாக நினைத்து மயங்கியிருப்பவர்களின் மயக்கம்.  

Friday, 27 December 2024

அஞ்சலி : மன்மோகன் சிங்

 

நான் பன்னிரண்டு வயது சிறுவனாக இருந்த போது மன்மோகன் சிங் அவர்களைப் பார்த்திருக்கிறேன். பூம்புகாருக்கு மன்மோகன் சிங் வந்திருந்தார். அங்கே நடந்த ஒரு மாநாட்டுக்காக வந்திருந்தார். மாநாட்டில் உரையாற்றினார். பின்னர் அவர் புறப்பட்டுச் சென்ற போது சாலையின் இரு மருங்கிலும் திரளான மக்கள் கூடி நின்று வழியனுப்பினர். தருமகுளம் பேருந்து நிறுத்தம் அருகே நான் அவரை மிக நெருக்கமாகப் பார்த்தேன். அவருக்கு முன்னும் பின்னும் மெல்ல சென்று கொண்டிருந்த வாகனங்கள் ஓரிரு நிமிடங்கள் நகர்வு இன்றி நின்றன. அப்போது அவருடைய வாகனத்துக்கு அருகில் சென்று அவருக்கு வணக்கம் சொன்னேன்.  புன்னகையுடன் அவரும் வணக்கம் சொன்னார். அந்த காட்சி இப்போதும் மனதில் இருக்கிறது. 

அந்த காலகட்டத்தில் மன்மோகன் சிங் ஒரு நட்சத்திரம். கல்வி கற்றவர்களுக்கு பெரும் மதிப்பு அளிக்கும் சமூகம் இந்திய சமூகம். மன்மோகன் சிங், அப்துல் கலாம் ஆகியோர் உதாரணங்கள். நாடு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் திணறிக் கொண்ட போது 1991ல் பிரதமராயிருந்த ‘’பாரத ரத்னா’’ நரசிம்ம ராவ் அரசியலுக்கு அப்பாற்பட்டவரான மன்மோகன் சிங்கை நாட்டின் மத்திய நிதி அமைச்சர் ஆக்கினார். துணிச்சலான முடிவு. மன்மோகன் சிங் அரசியலுக்கு வர நேர்ந்தது அவ்வாறே. அப்போது ’’லைசன்ஸ் பர்மிட் கோட்டா’’ முறைகள் வேரூன்றி இருந்தன. அவற்றுக்கு எதிராக தனது உறுதியான நகர்வுகளை மேற்கொண்டவர் மன்மோகன் சிங். 

ராஜிவ் ஆட்சிக் காலத்தில் திட்ட கமிஷன் துணைத் தலைவராக இருந்தவர் மன்மோகன் சிங். அப்போது ராஜிவ் திட்ட கமிஷனை ‘’Bunch of jokers'' என விமர்சித்தார். அப்போது தனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றார் மன்மோகன். பின்னர் ராஜிவ் சர்க்கார் அவரிடம் வருத்தம் தெரிவித்து திட்ட கமிஷன் துணைத் தலைவராகத் தொடருமாறு விண்ணப்பித்துக் கேட்டுக் கொண்டது. 

ஜனநாயக அரசியல் என்பது பல விதமான உணர்வுகளின் சமர். ஒரு அறிஞராகவும் ஒரு அதிகாரியாகவும் இருந்து அரசியலுக்கு வந்த மன்மோகன் சிங் அறிஞர் மனநிலையிலும் அதிகாரி மனநிலையிலும் மட்டுமே இருந்தார். அது அவருடைய எல்லை. 

சாமானிய குடும்பத்தில் பிறந்து பொருளாதாரம் படித்து ரிசர்வ் வங்கி ஆளுநராகவும் மத்திய நிதி அமைச்சராகவும் பின் நாட்டின் பிரதமராகவும் இருந்த திரு. மன்மோகன் சிங் அவர்களுக்கு அஞ்சலி. 

Thursday, 19 December 2024

ஒப்புகைச் சீட்டு விவகாரம் - தகவல் பெறும் உரிமைச் சட்டம் - மனு

அனுப்புநர்
ர.பிரபு
*****

பெறுநர்
பொது தகவல் அதிகாரி
அஞ்சல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம்
*****

ஐயா,

பொருள் : தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி தகவல் கோருதல்
பார்வை : 19.10.24 தேதியிட்ட எனது புகார்

19.10.24 அன்று மின்னணு பண பரிமாற்றத்தின் ஒப்புகைச் சீட்டை உடன் வழங்காமல் தாமதமாக வழங்கியது தொடர்பாக ஒரு புகார் அனுப்பியிருந்தேன். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் அந்த புகார் தொடர்பான கோப்பின் நகலை வழங்குமாறு விண்ணப்பித்துக் கொள்கிறேன். இத்துடன் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கட்டணமான ரூ.10 ஐ இந்திய போஸ்டல் ஆர்டராக இணைத்துள்ளேன். ( எண் ** *****)

நன்றி

தங்கள் உண்மையுள்ள


இடம் : மயிலாடுதுறை
நாள் : 18.12.2024 

Monday, 16 December 2024

அஞ்சல்துறை கண்காணிப்பாளருக்கு பதில்

 மயிலாடுதுறை
16.12.2024
மதிப்பிற்குரிய ஐயா,

11.12.2024 தேதியிட்ட தங்கள் கடிதம் கிடைத்தது. ஓர் எளிய வாடிக்கையாளனுக்காக தாங்களும் தங்கள் அலுவலகமும் கொள்ளும் அக்கறை மகத்தானது. இந்த பரந்த பெரிய தேசத்தின் சாமானிய குடிமக்களில் ஒருவனாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

தங்கள் உண்மையுள்ள,

[ஒப்பம்]

அனல் தொடுகை

நேற்று ஊரில் திருஇந்தளூர் பெருமாள் ஆலயத்தின் பனையெரி நிகழ்ந்தது. மாலை 6.30க்கு சென்றேன். பெருமாள் ஆலயத்திலிருந்து புறப்பட்டு எரி நிகழும் இடமான சன்னிதித் தெரு தேரடிக்கு 7.40 அளவில் வந்து சேர்ந்தார். பனை மட்டைகள் உயரமாக அடுக்கப்பட்டிருந்தன. அதன் அடியில் தீ இடப்பட்டது. மெல்ல மட்டைகளைப் பற்றிய தீ பல அடி உயரத்துக்கு பேரோசையுடன் எழுந்தது. அந்த தீயின் அனல் வெப்பம் தொலைவில் நின்றிருந்த எங்களைத் தொட்டது. அனல் தொடுகை அல்லன அகற்றி நல்லன நிறைக்க வேண்டும் என்னும் உணர்வு ஏற்பட்டது.   

Saturday, 14 December 2024

மூன்று ஊர்கள் - ஒரு கடல்

 மூன்று நாள் மழைக்குப் பிறகு இன்று காலை வெயிலைக் காண முடிந்தது. மாவட்டத்தின் வடக்கு, மத்திய, தென் பகுதிகளில் இருக்கும் மூன்று கடற்கரை ஊர்களுக்குச் சென்று கடலைப் பார்த்து விட்டு வரலாம் என இரு சக்கர வாகனத்தில் கிளம்பினேன். முதலில் செல்ல விரும்பியது திருமுல்லைவாசல். சீர்காழிக்கு அருகில் உள்ளது. எனக்கு ஏழு வயது இருக்கும் போது திருமுல்லைவாசல் முதல் முறை சென்றேன். அது நன்றாக நினைவில் இருக்கிறது. அந்த ஊரின் கடற்கரை சற்று வித்தியாசமானது. பாய்மரப் படகில் ஒரு ஆற்றைக் கடந்து கடற்கரைக்குச் செல்ல வேண்டும். பயண நேரம் மூன்று நிமிடம். இப்போது ஆறும் கடலும் கிட்டத்தட்ட ஒன்றாகி விட்டது. எனவே படகு தேவையில்லை. ஆற்றின் கரையே கடற்கரை ஆகி விட்டது. கடற்கரையில் அமர்ந்திருந்தேன். வானிலை மாற்றம் காரணமாக கடல் ஹோ ஹோ என ஆர்ப்பரிக்கும் அலைஓசை பிரும்மாண்டமாக கேட்டுக் கொண்டிருந்தது. அலைஓசை மனதை நெகிழச் செய்தது. கடல் முன்னால் உணர்ச்சி மேலிட்டு கண்ணீர் சிந்தினேன். 

அங்கிருந்து கிளம்பி பூம்புகார் பயணமானேன். இப்போது திருமுல்லைவாசலையும் திருமங்கை ஆழ்வார் பிறந்த திருநகரியையும் இணைக்கும் விதமாக ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலம் கட்டப்பட்டு சில ஆண்டுகள் ஆகியிருக்கும். அதில் பயணித்து திருநகரி அடைந்து மங்கைமடம் மார்க்கமாக பூம்புகார் வந்தடைந்தேன். அந்த பாதையில் 150 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட சத்திரம் ஒன்றைக் கண்டேன். நாங்கூர் திவ்ய தேசம் சென்று பெருமாளை சேவிக்கும் பக்தர்களுக்காகக் கட்டப்பட்டுள்ளது. 150 ஆண்டு கால கட்டிடம். 

பூம்புகாரில் காவிரி கடலில் சங்கமிக்கும் கூடுதுறைக்கு சென்றேன். நதியும் கடலும் இணைவது என்பது நம் நாட்டின் மகத்தான படிமங்களில் ஒன்று. 

அங்கிருந்த மீனவர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். பூம்புகாரிலிருந்து தரங்கம்பாடி செல்ல வாணகிரி, மருதம்பள்ளம், மாணிக்கப்பங்கு வழியாக ஒரு சாலை இருக்கிறது என்று சொன்னார். அதில் சென்றேன். அந்த மூன்று ஊர்களுக்கும் தனித்தனியாக வந்திருக்கிறேனே தவிர இந்த மூன்று ஊர்களையும் இணைக்கும் பாதை வழியாக வந்ததில்லை. ஆகவே அந்த மார்க்கம் புதிதாக இருந்தது. அதில் பயணித்து தரங்கம்பாடி சென்றேன். 

ஒரு நாளின் பகல் பொழுதில் மூன்று ஊர்கள். மூன்று ஊரிலும் ஒரே கடல்.

சுடுசோளம்

 நேற்று காலை தீவிரமாக மழை அடர்ந்து பெய்து கொண்டிருந்தது. கொட்டும் மழையில் ஒரு முதியவர் சைக்கிளில் ’’சோளக்கதிரு சோளக்கதிரு’’ என கத்தி விற்பனை செய்ய முயன்று கொண்டிருந்தார். ஓயாமல் மழை கொட்டியதால் அப்பகுதி வாசிகள் அனைவரும் வீட்டுக்குள் இருந்தனர். மழைச்சத்தத்தைத் தாண்டி அவருடைய சத்தம் அவர்களை அடைந்து மழையில் அவர்கள் வெளியே வந்து சோளக்கதிர் வாங்க வாய்ப்பு மிகவும் குறைவு. அந்த முதியவருக்கு அது நன்றாகத் தெரியும். இருப்பினும் மூட்டை சோளத்துடன் வீடு திரும்ப அவருக்கு விருப்பமில்லை. தன் முயற்சி மேல் பெரும் நம்பிக்கையுடன் செயல்படுகிறார். வீட்டு வாசலில் நின்று மழையைப் பார்த்துக் கொண்டிருந்த நான் அவரிடம் சோளக்கதிர் வாங்க விரும்பினேன். ஒரு குடையை எடுத்துக் கொண்டு போய் சோளக்கதிர் எவ்வளவு என்று கேட்டேன். 8 கதிர் 50 ரூபாய் என்றார். தொகையை அளித்து கதிரைப் பெற்றுக் கொண்டேன். சமையலறையில் கொண்டு வைத்தேன். வீட்டில் இருப்பவர்கள் இத்தனை கதிர் உன்னை யார் வாங்கச் சொன்னது. இதை வேக வைக்க வெகு நேரமாகும் என்றார்கள். 

இதை வேக வைக்கத் தேவையில்ல்லை. தினம் காலை ஒன்று மாலை ஒன்று என அடுப்பு நெருப்பில் சுட வைத்து சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றேன். யாருக்கும் புரியவில்லை. 

நேற்று மாலை ஒரு சோளக்கதிரை எடுத்து அதன் பச்சை உறையை நீக்கி கதிரை அடுப்பின் நெருப்பில் சூடு காட்டினேன். ஒரு நிமிடம். பின்னர் மேலும் ஒரு நிமிடம். கதிர் மணிகளை உண்ணத் தொடங்கினேன். வீட்டில் அனைவருக்கும் ஆச்சர்யம். சில நிமிடங்களில் முழுக் கதிரையும் தின்று விட்டேன். 

தமிழ்நாட்டில் சோளக்கதிரை வென்னீரில் வேக வைத்து அதன் பின் உண்கிறார்கள். வட இந்தியாவில் சோளக்கதிரை நெருப்பில் சுட்டு உண்பார்கள். சுட்ட கதிரின் மேல் எலுமிச்சைப் பழம் பிழிந்து மசாலா தடவி உண்பதும் உண்டு. எனது மோட்டார்சைக்கிள் பயணத்தில் பலமுறை வட இந்தியாவில் அவ்விதம் உண்டது உண்டு. நெருப்பில் தீவிரமாக வாட்டி விடுவார்கள். நேற்று நான் லேசாக சூடாக்கிக் கொண்டேன். சோளம் லேசான இனிப்புச் சுவை கொண்டது. பாதி காய்ந்தும் பாதி பச்சையாகவும் இருக்கும் சோளம் சுவை மிக்கது. 

சோளமும் சோளத்தின் சுவையும் அது கிளர்த்திய வட இந்திய பயண அனுபவமும் நேற்றைய தினத்தை மகிழ்ச்சி மிக்கதாக ஆக்கியது.  

Friday, 13 December 2024

அஞ்சல்துறை கண்காணிப்பாளர் கடிதம் (12.12.2024)

 அனுப்புநர்

அஞ்சல்துறை கண்காணிப்பாளர்
********

பெறுநர்
ர.பிரபு
*******

பொருள் : தங்கள் புகார் தொடர்பாக
பார்வை : 19.10.24 தேதியிட்ட தங்கள் புகார்

மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் புகாரை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். தாங்கள் புகாரளித்த விதமாகவே மீண்டும் நவம்பர் மாதத்திலும் தங்களுக்கு அதே விதமான சம்பவம் நிகழ்ந்து தாங்கள் அது குறித்து சி.பி.கி.ராம்.ஸ்-ல் புகார் அளித்திருப்பதால் மேற்படி இரண்டு நிகழ்வுகளும் சேர்த்து பார்க்கப்படுகிறது. 

தாங்கள் 19.10.2024ல் அளித்த புகார் நிறைவு செய்யப்படுகிறது. இருப்பினும் சி.பி.கி.ராம்.ஸ்-ல் தாங்கள் அளித்த புகார் விசாரணை செயல்பாடுகளில் உள்ளது. 

இக்கடிதம் தங்களுக்கு தகவல் தெரிவிக்க எழுதப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ந்த அசௌகர்யத்துக்கு வருந்துகிறோம். தங்களுக்கு எப்போதும் சிறப்பான சேவை வழங்கப்படும் என உறுதி அளிக்கிறோம். 

(ஒப்பம்)

நகல்

*****

மீனம்

 

இரவு முழுவதும் நல்ல மழைப்பொழிவு. காலையில் சிறுநடை சென்று வரலாமென வீட்டு வாசலுக்கு வந்தேன். தினமும் காலையில் குருவிகளுக்கு உணவிடுவது வீட்டின் வழக்கம். தவிட்டுக் குருவிகள், மைனாக்கள், காகங்கள், வால் காகம் ஒன்று, சில அணில்கள் ஆகியவை பொழுது விடிந்து சூரிய ஒளி வருகையில் வீட்டுச் சுவரில் குறிப்பிட்ட நேரத்தில் வந்து அமர்ந்து கொள்ளும். இன்று நான் வெளியே வருகையில் அவை தானியங்களைக் கொறித்துக் கொண்டிருந்தன. என்னைக் கண்டதும் சட சட என சிறகடித்துப் பறந்து மீண்டும் திரும்பி வந்து தானியங்களைக் கொத்தின. வீட்டு வாசலில் இரு கெண்டை மீன்கள் இருந்தன. மழை பொழிந்ததில் அருகில் நீர்நிலையில் இருந்த இந்த மீன்கள் தண்ணீர் மட்டம் ஏறியதால் மழைநீர் வடிகால் வழியாக சாலைக்கு வந்து சேர்ந்திருக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டேன். இரண்டுக்கும் உயிர் இருக்கிறது என்பதை அவற்றின் மெல்லிய துடிப்பின் மூலம் அறிந்தேன். அந்த மீன்களைக் கையால் பிடித்தேன். பிடிக்கு அகப்படாமல் வழுக்கிக் கொண்டு சென்றன. ஒருவாறு சமாளித்துப் பிடித்தேன். நீர் நிரம்பியிருந்த மழைநீர் வடிகாலில் அவற்றை விட்டேன். உற்சாகமாக நீந்திச் சென்றன. 

Thursday, 12 December 2024

கீரப்பாளையம் கூட்டுறவு பெட்ரோல் பங்க்


 ஸ்ரீராகவேந்திர சுவாமி பிறந்த ஊரான புவனகிரிக்கு அருகில் கீரப்பாளையம் என்ற ஊர் அமைந்துள்ளது (கடலூர் மாவட்டம்). பணி நிமித்தம் அந்த ஊர் வழியே பயணிக்க நேர்ந்த போது எனது இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்ப அங்கிருந்த பெட்ரோல் பங்க்-கில் வண்டியை நிறுத்தி பெட்ரோல் நிரப்பினேன். அந்த பங்க்-கின் அலுவலகக் கட்டிடத்தில் உரிமையாளர் பெயர் என்ற இடத்தில் ‘’கீரப்பாளையம் கிராம கூட்டுறவு கடன் சங்கம்’’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்டேன். அது எனக்கு வியப்பளித்தது. பொதுவாக பெட்ரோல் பங்க் உரிமம் தனியாருக்கு அதாவது தனிநபர்களுக்கே தரப்படும். எவ்விதம் ஒரு கூட்டுறவு சங்கம் பெட்ரோல் பங்க் உரிமையாளராக முடியும் என்பதே எனது வியப்புக்கான காரணம். அந்த அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த ஊழியரிடம் விபரம் கேட்டேன். அவருக்குத் தெரிந்த விபரங்களை அவர் சொன்னார். மேலதிக விபரங்களுக்கு அந்த கிராமத்தின் கூட்டுறவு கடன் சங்க பொறுப்பாளர் அலைபேசி எண் அளித்து அவரிடம் கேட்டுக் கொள்ளுமாறு பணித்தார். 

2019ம் ஆண்டு மத்திய அரசு பெட்ரோல் பங்க் உரிமம் பெற கிராம கூட்டுறவு கடன் சங்கங்களும் விண்ணப்பிக்கலாம் என்ற புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது. கூட்டுறவு தொடர்பான இலாகாவை கூடுதலாகக் கவனிக்கும் மத்திய உள்துறை அமைச்சரும் பெட்ரோலியத்துறை அமைச்சரும் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

பெட்ரோல் பங்க் நடத்துவதற்கு பெரும் முதலீடு தேவை என்பதால் அத்தகைய முதலைத் திரட்ட வலிமை படைத்த செல்வந்தர்களே உரிமத்துக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற சூழல் நிலவி வந்தது. நிலவி வருகிறது. இந்த புதிய நடைமுறை இந்த தொழிலில் கிராம கூட்டுறவு கடன் சங்கங்களும் ஈடுபட முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது. 

தமிழ்நாட்டில் 4000க்கும் மேற்பட்ட கிராம கூட்டுறவு கடன் சங்கங்கள் இருக்கின்றன. கிராமங்களில் இருக்கும் ஒவ்வொரு விவசாயியும் அதன் உறுப்பினர்கள். ஒவ்வொரு உறுப்பினரும் அதன் பங்குதாரரும் கூட. விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வழங்குதல், நகைக் கடன் வழங்குதல், விவசாய இடு பொருட்கள் வினியோகம் செய்தல் ஆகியவை அவற்றின் முதன்மைப் பணிகள். கிராமங்களில் இருக்கும் ரேஷன் கடைகளில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு ஊதியம் அளித்து ரேஷன் பொருட்களை கிராம மக்களுக்கு அளிக்கும் பணியும் கிராம கூட்டுறவு கடன் சங்கத்தைச் சேர்ந்ததே. 

கீரப்பாளையம் கூட்டுறவு கடன் சங்கம் 1969ம் ஆண்டு துவக்கப் பெற்றிருக்கிறது. 4500 கீரப்பாளையம் கிராம விவசாயிகள் அதன் உறுப்பினர்களாக இருக்கின்றனர். 2021ம் ஆண்டு வாக்கில் இந்தியன் ஆயில் நிறுவனத்தால் பெட்ரோல் பங்க் தொடர்பான விளம்பரம் வெளியிடப்பட்ட போது விண்ணப்பித்திருக்கின்றனர். மாநில அரசின் பல துறைகளிடமிருந்து தடையின்மைச் சான்று பெறும் நெடும்பணியை பொறுமையுடன் மேற்கொண்டு சாதித்திருக்கின்றனர். இந்த சங்கத்தின் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் கண்ட இந்தியன் ஆயில் நிறுவனம் அந்த பங்க்-ஐ தனது சொந்த முதலீடை அளித்து பெட்ரோல் டீசல் சேமிக்கும் கலன்களை நிறுவிக் கொடுத்து தனது நேரடி பங்க்-ஆக செயல்பாட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறது. கீரப்பாளையம் கூட்டுறவு பெட்ரோல் பங்க் செப்டம்பர் மாதம் முதல் செயல்படத் துவங்கியிருக்கிறது. வெற்றிகரமாக தனது முதல் 100வது நாளை நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. இந்தியன் ஆயில் நிறுவனம் அந்த பங்க்-கிற்கு சி.என்.ஜி இயற்கை எரிவாயு விற்பனை உரிமம் வழங்கவும் இசைவு அளித்து அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் ஓரிரு மாதங்களில் இயற்கை எரிவாயு விற்பனை மையமும் நிறுவப்பட்டு விடும். மேலும் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யும் மையமும் இங்கே வரவுள்ளது. ஒரு நாளைக்கு 2000 லிட்டர் பெட்ரோல் சராசரியாக இங்கே விற்பனை ஆகிறது. பெட்ரோல் விற்பனை மூலம் கிடைக்கும் லாபம் அதன் உறுப்பினர்களான 4500 விவசாயிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் கிராம கூட்டுறவு கடன் சங்கம் அமைத்துள்ள முதல் பெட்ரோல் பங்க் கீரப்பாளையம் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் ஆகும். அந்த வகையில் மாநிலத்தில் உள்ள எல்லா கிராம கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் இந்த முயற்சி முன்னோடியானது ஆகும்.   


மழையில் நடத்தல்

இங்கே இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கையில் ஒரு குடையை எடுத்துக் கொண்டு ஒரு சிறு வலம் சென்றேன். சாலையில் நடமாட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. காவிரி வடிநிலம் வெயிலுக்கு மிகவும் பழகியது. வெயிலையே சூழல் என எண்ணுவது. இங்கும் புரட்டாசி தொடங்கி கார்த்திகை வரை மூன்று மாதங்கள் மழை உண்டு. வருடத்தின் 90 நாட்கள் என்பது தொடங்குவது போல் தொடங்கி முடிந்து விடும். 90 நாளும் மழை என்று சொல்ல முடியாது. அதில் 30லிருந்து 40 நாள் மழை பெய்யும்.  

கடலோர கர்நாடகா பகுதிகளில் மழை தீவிரமாகப் பெய்யும். சிருங்கேரி, சிக்மகளூர் ஆகிய பிராந்தியங்கள் நினைவில் எழுகின்றன. மக்கள் மழையுடன் இணைந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். எனக்கும் அவ்விதமான ஒரு வாழ்க்கைமுறை மீது ஈடுபாடு உண்டு. 

மழை ஒரு வரம். மழை ஓர் ஆசி.  

Monday, 9 December 2024

சாமானிய பிரஜையாக உணர்தல்

எப்போதுமே என்னை இந்நாட்டின் சாமானிய பிரஜையாக மட்டுமே உணர்ந்திருக்கிறேன். சாமானிய குடிகளில் ஒருவனாக மட்டுமே எனது எண்ணங்கள் இருந்திருக்கின்றன. அந்த அடிப்படையிலிருந்தே சிந்தித்திருக்கிறேன். ஒரு கிராமத்திலிருந்து பக்கத்தில் மூன்று கிலோமீட்டரில் இருக்கும் நகரத்துக்கு கால்நடையாக நடந்து செல்லும் ஒரு கிராமத்து மனிதனாகவே என்னை எப்போதும் எண்ணிக் கொள்கிறேன். அவனுக்கு எப்போதும் ஆட்டோ கட்டுபடி ஆவதில்லை. ஒரு டவுன்பஸ் அவன் செல்லும் நேரத்தில் அமைந்தால் அதில் ஒரு சிறு மகிழ்ச்சி.  இந்த தொலைவைக் கடந்து செல்ல இன்னும் சில வேலைகளைக் கவனித்துத் திரும்ப இரு சக்கர வாகனம் வசதியாக இருக்கிறது என்பதால் கிராமத்து சாமானிய மனிதன் இப்போது இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்துகிறான். அந்த விதமாகவே நானும் பயன்படுத்துகிறேன். வெளியூர் செல்ல வேண்டுமென்றால் பொதுப் போக்குவரத்து வசதிகளையே சாமானியன் பயன்படுத்துகிறான். நானும் அவ்விதமே செய்கிறேன். ஒரு ஊருக்குச் செல்ல ரயில் இருக்கிறதா என்பது முதல் பரிசீலனை. இல்லையெனில் பேருந்து. இந்த இரண்டு வாய்ப்புகளுக்குள் ஒன்றை மட்டுமே எப்போதும் தேர்ந்தெடுப்பேன். ஆம்னி பேருந்து என்பதையும் வாடகை டாக்ஸி என்பதையும் நான் மிகப் பெரிய சொகுசாகவே எண்ணுவேன். என்னிடம்  கார் இருக்கிறது. இருப்பினும் வெளியூர் செல்ல பொதுப் போக்குவரத்து மட்டுமே. என்னுடைய தொழில் நிமித்தம் எங்கேனும் செல்ல கார் எடுப்பதுண்டு. அதிலும் அதிகமும் பைக் மட்டுமே பயன்படுத்துவேன். 

எனது மனம் எப்போதுமே சிக்கனத்தை விரும்பியிருக்கிறது. காந்திய சிந்தனைகளின் தாக்கம் காரணமாக இருக்கலாம். உண்மையில் காந்தியை அறிய நேரும் எந்த சிறுவனுக்கும் எழும் முதல் கேள்வி என்பது காந்தி ஏன் சட்டை அணியாமல் துண்டு மட்டுமே போர்த்தியிருக்கிறார் என்பதாகவே இருக்கும். இந்த நாட்டின் சாமானிய மனிதனின் எளிய உடையை அவர் அணிந்திருக்கிறார் என்பதே அதற்கான பதில். எனக்கும் அந்த கேள்வி எழுந்தது. என்னிடமும் அந்த பதில் வந்து சேர்ந்தது. சாமானியனின் உடை அணிந்த ஒருவன் சாமானியனாகவே தன்னை உணர்ந்த ஒருவன் நாட்டின் கோடானுகோடி சாமானியர்களைத் தன் அகத்தில் ஏந்தியிருந்த ஒருவன் உலகின் மிகப் பெரிய ஆதிக்க சக்தியை ஆட்டிப் படைத்தார் என்பதில் குறியிட்டு ரீதியில் ஒரு அழகு இருக்கிறது. 

எனக்கு கதராடை மட்டுமே அணிய வேண்டும் என்ற விருப்பம் உண்டு. அந்த விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. 

ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சிதம்பரம் சென்றிருந்தேன். வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளியிருக்கும் பேருந்து நிலையத்துக்கு நடந்து சென்று அங்கிருந்து பேருந்தில் ஏறி சிதம்பரம் சென்றடைந்து கடைத்தெருவில் அமைந்திருக்கும் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். எனது நண்பர் ஒருவரை அங்கே சந்தித்தேன். அவர் காரில் வந்திருந்தார். என்னிடம் காரில் வந்தீர்களா என்று கேட்டார். பேருந்தில் வந்தேன் என்று சொன்னேன். காரில் வந்திருக்கலாமே என்றார். அவருக்கு நான் ஒரு பதில் சொன்னேன்.

அதாவது, ஒரே தூரத்தை ஒரு பேருந்தும் ஒரு காரும் கடக்கும் போது பேருந்து உமிழும் கார்பன் டை ஆக்சைடை விட 22 மடங்கு கார்பன் டை ஆக்சைடை கார் உமிழ்கிறது. இந்த திருமணத்துக்கு 700 பேர் வந்திருக்கிறார்கள் என்றால் அதில் 15 பேர் காரில் வந்திருந்தால் அது ஏற்கக் கூடியது. அதற்கு மேல் என்றால் ஒட்டு மொத்த அமைப்பில் நெருக்கடி உண்டாகிவிடும். நெருக்கடியான அமைப்பு நீண்ட நாள் நீடிக்காது என்றேன்.  

Friday, 6 December 2024

சில நிகழ்வுகள் - சில எண்ணங்கள்

இன்று டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம். சாமானிய குடும்பத்தில் பிறந்து தன் கல்வித்திறனால் உயர்வான நிலையை அடைந்து எளிய மனிதர்கள் ஏற்றம் பெறுவதற்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட அவரது வாழ்க்கை சமூகப் பிரக்ஞை கொண்ட எந்த ஒரு மனிதருக்கும் வழிகாட்டுவதாய் அமைவது.  அரசியல் நிர்ணய சபையின் தலைவராக அம்பேத்கர் திகழ வேண்டும் என்று தனது எண்ணத்தைத் தெரிவித்தவர் மகாத்மா காந்தி. மகாத்மாவின் எண்ணப்படியே அம்பேதகர் அரசியல் நிர்ணய சபை தலைவராக ஆனார். மகாத்மாவும் அம்பேத்கரும் பல விஷயங்களில் முரண்பட்டிருந்தனர். இருப்பினும் அம்பேத்கரே அந்த பொறுப்புக்கு வர வேண்டும் என காந்தி எண்ணினார். அந்நிகழ்வு ஒரு மகத்தான குறியீடு. அதன் மூலம் காந்தியையும் புரிந்து கொள்ள முடியும் அம்பேத்கரையும் புரிந்து கொள்ள முடியும். 

இன்று தபால் அலுவலகம் சென்றிருந்தேன். ஒப்புகைச் சீட்டு விவகாரம் தொடர்பாக நான் அளித்த புகாரின் பின் அந்த விவகாரத்தில் தொடர்புடைய இரண்டு ஊழியர்கள் அங்கே இல்லை. சென்ற வாரம் சென்றிருந்த போதும் அவர்களை அங்கே காண முடியவில்லை. பணி இட மாறுதல் செய்யப்பட்டிருக்கலாம். 

எனது நண்பன் ஏன் இந்த விஷயத்தை இவ்வளவு முக்கியமாக நினைக்கிறேன் என என்னிடம் கோபித்துக் கொண்டான். எனக்கு யார் மீதும் தனிப்பட்ட விரோதம் இல்லை. 

முதல் முறை ஒரு சம்பவம் நடக்கிறது. 12 மணிக்கு நான் அளித்த மின்னணு பண மாற்ற படிவத்துக்கான ஒப்புகைச் சீட்டை மாலை 5 மணிக்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறு சொல்கிறார்கள். எனக்கு உடன் தேவைப்படுகிறது எனக் கூறி இரண்டு மணி நேரம் காத்திருந்து அதனைப் பெற்றுக் கொண்டேன். அந்த விபரத்தை சம்பந்தப்பட்ட ஊழியர்களின் பெயரைக் குறிப்பிடாமல் இனி யாருக்கும் இவ்விதம் நிகழாமல் இருக்க உரிய ஏற்பாடு செய்ய சொல்லி துறை மேலதிகாரிக்கு கடிதம் எழுதுகிறேன். அவர் நிகழ்ந்ததற்கு வருத்தம் தெரிவித்து பதில் எழுதுகிறார். இந்த கடிதம் குறித்து அலுவலகத்தில் இருக்கும் அனைவருக்கும் தெரியவந்திருக்கும். 

ஒரு மாதம் கழித்து மீண்டும் மின்னணு பண பரிமாற்றம் செய்ய அதே அலுவலகம் செல்கிறேன். உண்மையில் பழைய சம்பவத்தை என் நினைவில் இருந்து அகற்றியிருந்தேன். வாடிக்கையாளர் ஒருவருக்கு நிகழ்ந்த அசௌகர்யம் தகவலாகத் தெரிவிக்கப்பட்டது. அவ்வளவே. படிவம் அளித்த போது முன்னர் செய்த விதமே ஒப்புகைச் சீட்டை மாலை 5 மணிக்கு பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறிய போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பொது நியாயம், அலுவலக முறைமை, பணி கண்ணியம் என எந்த விஷயத்துக்கும் இடம் கிடையாதா என வருத்தமுற்றேன். மாலை ஒப்புகைச் சீட்டைப் பெற்றுக் கொண்டு அடுத்த நாள் சி.பி.கி.ராம்.ஸ்-ல் புகார் அளித்தேன். இம்முறை அந்த 2 ஊழியர்களின் பெயரையும் குறிப்பிட்டு புகார் அளித்தேன். விசாரணை நடந்தது. ஒரு அதிகாரி நான் இருக்குமிடத்துக்கு வந்து என்னிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டார். நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 

பணி இட மாறுதல் உத்தரவு சம்பந்தப்பட்ட ஊழியர்க்கு ஓர் எச்சரிக்கைக் குறிப்பே. இனி இவ்விதமான பிழை நிகழாமல் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம். 

என் நண்பனின் கோபத்துக்கு எனது பதில் : எனக்கு ஏற்பட்ட சிரமத்துக்காக நான் இந்த விஷயத்தை மேலதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை. என்னை நான் எப்போதும் ஒரு சாமானிய மனிதனாகவே உணர்கிறேன். இந்த நாட்டின் கோடானுகோடி சாமானியர்களில் நானும் ஒருவன். அவர்களில் ஒருவனாக அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அந்த ஊழியர்கள் முன் நிற்பவனாக என்னை உணர்ந்ததால் மட்டுமே அந்த புகாரை மேலதிகாரிகளுக்கு அனுப்பினேன். 

ஒப்புகைச் சீட்டை உடன் வழங்க வேண்டும் என எந்த விதியும் இல்லை என்று அவர்கள் கூறினர். அவர்கள் பயன்படுத்திய வார்த்தை ‘’ரூல்’’. எனக்கு அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபை தலைவராக இருந்து எழுதிய சட்டம் குறித்து அறிமுகம் உண்டு என்பதால் அந்த புகாரை அனுப்பினேன்.  

யாதெனின் யாதெனின்

சமீபத்தில் எனது நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். பக்கத்து ஊர்க்காரர். பொது ஸ்தாபங்கள் சிலவற்றுடன் தொடர்பில் இருப்பவர். சொந்தமாக அவர் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் நிறுவனத்தில் பத்து ஊழியர்களுக்கு மேல் பணி புரிகிறார்கள். அவர் அலுவலகம் மிக அமைதியாக மிக சீராக இயங்கிக் கொண்டிருக்கும். அவ்வகையில் தன் அலுவலக நிர்வாகத்தை நண்பர் வடிவமைத்திருக்கிறார். அவர் நிறுவனத்தின் பொருளியல் நிலை மிகச் சிறப்பாக இருக்கிறது. எனவே அவருக்கு அலுவலகம் சார்ந்து தொழில் சார்ந்து எந்த சிக்கலும் இல்லை. 

அவர் தொடர்பில் இருக்கும் பொது ஸ்தாபனங்களின் இயக்கமும் நிர்வாக முறையும் அவருக்குத் திருப்திகரமாக இல்லை. அவை மந்த கதியில் இருப்பது குறித்தும் அவற்றின் நிர்வாகம் சீர் கெட்டு இருப்பதைக் கண்டும் நண்பர் துயர் கொள்கிறார். அந்த துயர் அவரது மனதை சிறு அளவினேனும் பாதித்திருக்கிறது என்பதைக் கண்டேன். இந்த விஷயம் சற்று நூதனமானதுதான்.  சாமானிய மனிதர்கள் பொதுவாக சொந்த விஷயம் குறித்து கவலைப்படுவார்கள். அந்த கவலை அவர்களை பாதிக்கும். நண்பர் பொது விஷயங்கள் குறித்து கவலை கொண்டிருக்கிறார். அந்த கவலை அவர் மனத்தை சிறு அளவில் வலி கொள்ளும் அளவுக்கு கொண்டு சென்றிருக்கிறது. வேறுபாடுகள் சில இருப்பினும் இந்த இரண்டு விஷயங்களும் ஏறக்குறைய ஒன்றுதான். 

எந்த விஷயமாக இருந்தாலும் அதனை நம் மனதில் வலி கொள்ளும் அளவு ஏற்றிக் கொள்வது என்பது உகந்த வழிமுறை அல்ல. நேரடியாகவோ மறைமுகமாகவோ லௌகிகம் கோடானு கோடி மனிதர்கள் வாழ்வுடன் தொடர்புடையது. எனவே ஒரு சிறிய லௌகிகச் செயல்பாட்டுக்குக் கூட நாம் எதிர்பார்க்காத எதிர்வினைகளும் விளைவுகளும் ஏற்படக் கூடும்.  காலம் என்பது மிகப் பெரும் பிரவாகம். அது கணமும் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருக்கிறது. நம்மால் என்ன செய்ய முடியுமோ அதனை சிறப்பாகச் செய்வது என்பது மட்டுமே நமக்கு இயலும் ஆகப் பெரிய விஷயம். அது நமக்கு மகிழ்வளிப்பதாகவும் பிறருக்கும் மகிழ்வளிப்பதாகவும் அமைந்தால் அது சிறப்பு. 

நமது மரபில் நல்வினை, தீவினை என்பதை பொன்விலங்கு, இரும்பு விலங்கு என்று கூறுவது வழக்கம். இரண்டுமே கை விலங்குகள் தான். 

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்

என்பது திருக்குறள்.