சாவு எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது என்பதே சாவின் சுவாரசியம். வாழ்வுக்கு சுவாரசியம் தருவதும் அதே விஷயமே. அன்றைய தினத்தின் இரவைத் தாண்ட மாட்டார் என ஊரார் அனைவராலும் நினைக்கப்படும் வயோதிகர் ஒருவர் அன்றைய தினம் சாவைத் தாண்டி மறுநாள் கல்லுக்குண்டு போல் அமர்ந்திருப்பதை ஊரே பார்க்கும் கதையே தி.ஜா வின் ’’கழுகு’’
Friday, 28 February 2025
தூக்கம்
ஊரே உறங்கிக் கொண்டிருக்கிறது ஓர் இரவில். சஞ்சலமுற்ற ஒருவன் உறங்காமல் இருக்கிறான். அவனது தந்தை இறக்கும் தருவாயில் வீட்டில் எக்காரணம் கொண்டும் பாகப் பிரிவினை நிகழக் கூடாது எனக் கூறி விட்டு இறக்கிறார். தந்தை இறந்த சில மாதங்களில் சொத்தைப் பிரித்துக் கொடுக்க கேட்கிறான் தம்பி. மாலை இது தொடர்பான பேச்சைத் தொடங்கி விட்டு மறுநாள் பிரிவினையை நிகழ்த்தி விடலாம் எனக் கூறிச் சென்றிருக்கின்றனர் பஞ்சாயத்து பேச வந்தவர்கள். தந்தைக்கு கொடுத்த வாக்கு பொய்த்துப் போய் விடக் கூடாது என விசனப்படும் அண்ணன் உறக்கமற்ற இரவுக்குப் பின்னான கருக்கலில் தூக்கு மாட்டிக் கொண்டு தொங்கி விடுகிறான். ஊரே உறங்கிக் கொண்டிருக்கும் போது விழித்திருந்தவன் ஊர் விழிக்கும் நேரத்தில் நிரந்தரத் துயிலுக்குச் சென்று சேர்வதே தி.ஜா வின் ‘’தூக்கம்’’ கதை.
சண்பகப் பூ
Thursday, 27 February 2025
நரை
மனைவி ஒரு தவறு செய்கிறாள். சிறிய மிகச் சிறிய தவறு தான். கணவன் அவளை மன்னித்திருக்கலாம். எப்போதும் பெருந்தன்மையாக இருக்கும் கணவன் தான். எனினும் அந்த முறை மன்னிகாமல் சிறு தண்டனை அளிக்கிறான். அந்த தருணத்தில் அவள் பிரசவத்துக்காக தாய்வீடு செல்கிறாள். சிறு பிணக்குகள் அவள் திரும்பி வரும் போது ஒன்றும் இல்லாமல் போயிருக்கும் என எல்லாரும் எண்ணுகிறாள். சில வாரங்களில் அவனுக்கு ஒரு தந்தி வருகிறது ; பிரசவத்தில் தாயும் சேயும் மரணித்தார்கள் என. இதுவே தி.ஜா வின் ‘’நரை’’ சிறுகதை.
ஆனைக்குப்பம்
காவிரி டெல்டா பகுதிகளின் முக்கிய தொழில் விவசாயம். அந்த பகுதியில் வணிகம் செய்பவர்களின் நுகர்வோர் விவசாயிகளே. எனவே அங்கு நிலப் பிரபுத்துவ இயல்புகள் தவிர்க்க முடியாதவை. இதனைப் பயன்படுத்தி சோம்பல் மிகுந்திருக்கும் இயல்பு கொண்ட ஆனைக்குப்பம் ஊர்காரர்கள் மேற்கொள்ளும் சிறு சிறு ஏய்ப்புகளே தி.ஜா வின் ‘’ஆனைக்குப்பம்’’ கதை.
இக்கரைப் பச்சை
நற்குணம் கொண்ட மனைவி வாய்க்கப் பெற்றவன் ஒருவன் எனினும் நடுத்தரவர்க்க ஆசாமி. நற்குணம் கொண்டிராத மனைவி வாய்க்கப் பெற்றவன் ஒருவன் செல்வந்தன். செல்வந்தனின் ஒரு நாள் பொழுதில் அவன் மனைவி உண்டாக்கும் படுகளம் சூழ்ந்திருப்பவர்களை அதிர்ச்சி கொள்ள செய்கிறது. இதுவே தி.ஜா வின் ‘’இக்கரைப் பச்சை’’ கதை.
Wednesday, 26 February 2025
பசி ஆறிற்று
ஆண்டவன் நினைத்தது
ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வது என்பது அந்த இருவரின் விஷயம். எனினும் நடைமுறையில் அது இருவரின் விஷயமாக மட்டும் புரிந்து கொள்ளப்படுவதில்லை : அந்த இருவராலும் கூட. இரண்டும் அல்லாத இன்னொரு அம்சம் அதில் இருப்பதாகவே எல்லாரும் நினைக்கிறார்கள். இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைப்பதே தேவன் தான் என்னும் நம்பிக்கை வலுவாகவும் பரவலாகவும் இருக்கிறது. ஒரு பெண்ணைக் காதலிக்கிறான் ஒருவன். அவளுக்கு முறைமாமன் ஒருவன் இருக்கிறான். பெண்ணின் காதலனுக்கு கள் வாங்கிக் கொடுத்து அவன் மயக்கத்தில் இருக்கும் போது ரயிலில் இருந்து ஆற்றில் தள்ளி விடுகிறான். ஆறு முழுவதும் வெள்ளம். எனினும் தள்ளி விடப்பட்ட பகுதியில் மட்டும் ஒரு சிறு மணல்மேடு இருந்திருக்கிறது. அதில் விழுந்து விட்டான். தண்ணீரில் விழுந்திருந்தால் கள் மயக்கத்தில் நீந்தியிருக்க முடியாது. உயிர் போயிருக்கும். மணல்மேட்டில் விழுந்ததால் அதிலேயே மயங்கிக் கிடக்கிறான். மது மயக்கம் தீர்ந்தவுடன் விழித்துப் பார்த்தால் சுற்றிலும் வெள்ளம். இருப்பினும் தன் உடல் வலுவால் நீந்தி கரையேறி இரண்டு நாட்களில் தன் ஊர் வந்து சேர்கிறான். தன் காதலியைக் காண வருகிறான். நீ உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்பது ஆண்டவன் நினைத்தது என்கின்றனர் ஊர் மக்கள். ஆண்டவன் நினைத்தது தான் தன் காதலியைக் கைப்பிடிக்க வேண்டும் என்பதை என்கிறான் உயிர் பிழைத்து வந்தவன். தன் காதலால் ஆண்டவனை அறியும் ஆண்டவன் சித்தங்களைப் புரிந்து கொள்ளும் நிலைக்கு அதனைக் கண்டு புன்னகைக்கும் இடத்துக்கு அவன் வருகிறான் என்பதே தி.ஜா வின் ‘’ஆண்டவன் நினைத்தது’’ கதை.
பணக்காரன்
Monday, 24 February 2025
துவக்கமும் தொடர்ச்சியும்
Saturday, 22 February 2025
விவசாயியின் கேள்விகளும் எனது பதில்களும்
தமிழகத்தில் நான் ஒரு விஷயத்தைக் கவனித்தது உண்டு. ஒரு விஷயம் குறித்து சிந்திக்கும் போது பரிசீலிக்கும் போது பெரும்பாலும் எதிர்மறையாகவே அணுகுவார்கள். எதிர்மறையாகவே அபிப்ராயம் சொல்வார்கள். ஒரு விஷயத்தின் பாதகமான விஷயங்களை எடுத்துக் காட்டுவது என்பது தவறல்ல ; அது முக்கிய விஷயம். ஆனால் ஒரு விஷயத்தை எவ்விதம் செய்வது என்று அபிப்ராயம் கேட்டால் அதை செய்யாமல் இருப்பதற்கான காரணங்களைச் சொல்வார்கள். விவசாயிக்கு முதல் நாள் ஆர்வம் இருந்தது. அவர் அவருடைய நண்பர்களிடம் விசாரித்திருக்கிறார். அவர்கள் வழக்கம் போல் எதிர்மறையாக கருத்து கூறி இருக்கிறார்கள். இவருக்கு இயல்பிலேயே தயக்கம். எதிர்மறை கருத்துக்கள் நண்பரின் தயக்கத்தை நங்கூரமிட்டு விட்டன. என்னிடம் சில கேள்விகளைக் கேட்டார். நான் எனக்குத் தெரிந்த பதிலை அளித்தேன்.
விவசாயியின் கேள்வி : இந்த விஷயம் டிராக்டர் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே சரியாக இருக்கும். புதிதாக இதன் உள்ளே செல்பவர்களுக்கு சரி வருமா?
எனது பதில் : 100 மீட்டர் தூரத்துக்குள் மட்டுமே டிராக்டர் இயங்கும். எனவே வழக்கமான விவசாய வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் அளவுக்குக் கூட இதில் டிராக்டரின் பயன்பாடு இருக்காது. டிராக்டரைக் கொண்டு நிகழ்த்தப்படும் எளிய பணியாகும் இது. புதிதாக உள் நுழைபவர்களுக்கும் இந்த பணி உகந்ததே.
விவசாயியின் கேள்வி : அந்த கிராமத்திலேயே இருக்கும் டிராக்டர் டிரைவர் மட்டுமே இந்த பணிக்கு சரியானவர். வெளியூர்காரர் பொருந்துவாரா?
எனது பதில் : உள்ளூர்காரர் உள்ளூரின் மங்கல நிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கலந்து கொள்ள ஆர்வமாக இருப்பார். நம் கிராமங்களில் பத்து நாளைக்கு ஒரு மங்கல நிகழ்ச்சியோ துக்க நிகழ்ச்சியோ நிகழ்ந்து கொண்டிருக்கும். அவர் அங்கே சென்று விட்டால் இங்கே 50 படகுகள் காத்துக் கொண்டிருக்கும். எனவே உள்ளூர்காரர் இதற்கு மிக பொருத்தமானவர் என்று கூறமுடியாது.
விவசாயியின் கேள்வி : வெளியூர்காரரும் அவ்வப்போது தனது ஊருக்குச் செல்ல விரும்புவாரே?
எனது பதில் : நாம் இரு ஓட்டுனர்களை நியமிக்க வேண்டும். ஒருவர் ஊருக்குச் சென்றாலும் இன்னொருவர் பணியில் இருப்பார்.
விவசாயியின் கேள்வி : அவர்களை எங்கு தங்க வைப்பது? அவர்களுக்கு எவ்விதம் உணவு வழங்குவது?
எனது பதில்: ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்க வைக்கலாம். சமையல் செய்து சாப்பிடுவதற்கான மளிகைப் பொருட்களை வாங்கிக் கொடுத்து விடலாம்.
விவசாயியின் கேள்வி : இதெல்லாம் சரி வருமா?
எனது பதில் : நீங்கள் செய்யலாம் அல்லது செய்யாமல் போகலாம். அதில் உங்கள் அம்சம் மட்டும் இல்லை. இடம் பொருள் ஏவலும் அதைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை. இருப்பினும் ஒரு விஷயத்தை எவ்விதம் செய்வது அதற்கு தேவைப்படுபவை என்ன அவற்றை நம்மால் ஏற்பாடு செய்ய முடியுமா என்ற கோணத்தில் சிந்தியுங்கள். சிந்தித்துப் பார்க்கவே தயங்காதீர்கள்.
Friday, 21 February 2025
நதியின் இக்கரையும் அக்கரையும்
Wednesday, 19 February 2025
ஜயத்தின் பயம்
ஆதி காலத்தில் சமூகங்கள் பெண் கவர்தலை ஓர் இயல்பான வழக்கமாக மேற்கொண்டிருக்கின்றன. ஓஷோ சொல்வார், அத்தகைய பெண் கவர்தல் இயல்பு இருப்பதால் திருமணம் நிச்சயிக்கும் சம்பந்திகளுக்குள் இன்றும் சிறு சிறு பிணக்குகளும் பூசல்களும் இருக்கின்றன என்று. சமீபத்தில் திருமணம் நிகழ்ந்த தம்பதிகளுக்குள் ஏற்படும் ஊடலையும் அதைத் தொடர்ந்த கூடலையும் கதையாக்கி இருக்கிறார் தி.ஜா, ‘’ஜயத்தின் பயம்’’ கதையில்.
வித்தியாசம்
தி.ஜா தனது சிறுகதைகளில் பிராணிகளையும் பறவைகளையும் கதாபாத்திரமாக்க விரும்பியிருக்கிறார். பூனை இணை ஒன்று வீட்டில் வசிக்கிறது. அந்த வீட்டில் கணவன் மனைவியும் வசிக்கிறார்கள். தம்பதிகள் பூனை இணைகளின் இணக்க விலக்கத்தையும் பூனை இணைகள் தம்பதிகளின் இணக்க விலக்கத்தையும் கண்டு நிகழ்த்திக் கொள்ளும் உரையாடலே தி.ஜா வின் ‘’வித்தியாசம்’’ கதை.
கமலியின் குழந்தை
ஒரு வீட்டில் இரு ஓரகத்திகள். மூத்தவளுக்கு ஐந்து பெண் குழந்தை. இளையவள் கருவுற்றிருக்கிராள். இலையவள் ஆண் மகவை ஈன வேண்டும் என்பது பொது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பிரசவம் எதிர்பாராத விபத்தால் சிக்கலாகிறது. பிரசவம் நல்லபடியாக நிகழ வேண்டும் என தெய்வத்திடம் வேண்டிக் கொள்கிறாள் மூத்தவள். தாயும் சேயும் நலமாக பிரசவம் நிகழ்கிறது எனினும் பிறந்தது பெண் குழந்தை என்பதே தி.ஜா வின் ‘’கமலியின் குழந்தை’’ சிறுகதை.
மணச்சட்டை
மண்ணாசையும் பொன்னாசையும் பிடித்த ஒருவனை பெண்ணாசை பெரிதாக ஆட்கொள்கிறது. அவன் விரும்பிய பெண் அளிக்கும் நறுமணம் நிரம்பிய சட்டையை அணிந்து கொள்கிறான். அந்த சட்டையின் நறுமண திரவியத்தில் விஷம் இடப்பட்டுள்ளது. அணிந்தவன் சரீரத்தை ஊடுறுவி ரத்தத்தில் கலந்து அவன் உயிரை மாய்க்கிறது. இதுவே தி.ஜா வின் ‘’மணச்சட்டை’’கதை.
Thursday, 13 February 2025
நர்மதையின் யாத்திரை
நதியின் பாதை என்றுமே கலைஞனுக்கு குதூகலமளிப்பது. தி. ஜா தனது சொற்களில் தனது சிறுகதையில் நர்மதை நதியின் பயணத்தை எழுத முற்பட்ட கதை ‘’நர்மதையின் யாத்திரை’’
ஈஸ்வரத் தியானம்
சாமானியர் சாகும் போதாவது ‘’சங்கரா சங்கரா’’ என்பர். எப்போதும் இறை வழிபாடு குறித்து அடுத்தவருக்கு இடித்துரைத்துக் கொண்டேயிருக்கும் பாட்டிக்கு சாகும் போது பகவந் நாமம் சொல்ல வாய்க்கவில்லை என்னும் நகைமுரணைப் பகடியுடன் காட்டும் கதை தி.ஜா வின் ‘’ஈஸ்வரத் தியானம்’’
மன்னித்து விடு
நல்லன அல்லன இரண்டும் இருப்பது இவ்வுலகம். முயற்சிக்காமல் கூட வந்து ஒட்டிக் கொள்கின்றன அல்லன. நல்லனவற்றைப் பழகிக் கொள்ளவும் நிலை நிறுத்திக் கொள்ளவும் பெரு முயற்சி தேவைப்படுகிறது. நல்லனவற்றைப் பழகிய ஒருவன் அல்லனவற்றைப் பழகிய ஒருவனை மன்னிக்கிறான். இதுவே தி.ஜா வின் ‘’மன்னித்து விடு’’ சிறுகதை.
Monday, 10 February 2025
மாப்பிள்ளைத் தோழன்
1960களின் காலகட்டம் இந்திய சமூகத்தின் வறுமையின் காலகட்டம். இன்று அதனைக் கற்பனை செய்வது கடினம். இந்திய சமூகம் தன் கடந்த கால நினைவுகளுடனே வறுமையை எதிர்கொண்டது. நடுத்தர வர்க்கத்தினருக்கும் வறியவர்களுக்கும் திருமணச் செலவு என்பது ஒரு பெரும் மலை போல பாதையில் வந்து நிற்பது. அதனைக் கடந்தே ஆக வேண்டும். இந்த பின்னணியில் தி.ஜா எழுதிய கதை ‘’மாப்பிள்ளைத் தோழன்’’.
அன்பு வைத்த பிள்ளை
ஆயிரம் பிறைகளுக்கப்பால்
தி.ஜா வின் காலகட்டத்தில் தட்டச்சு எந்திரங்கள் அலுவலகங்களின் அன்றாடப் புழக்கத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தன. தட்டச்சு எந்திரங்கள் தாங்கள் அறிந்த கதைகளைச் சொல்வது போல தி.ஜா எழுதிய கதை ‘’ஆயிரம் பிறைகளுக்கப்பால்’’
Sunday, 9 February 2025
பாட்டியா வீட்டில் குழந்தைக் காட்சி
வீட்டு உரிமையாளருக்கும் வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவருக்குமான உறவு அத்தனை சீரானது அல்ல ; எனினும் விதிவிலக்குகளும் உண்டு. பாட்டியா வீட்டு உரிமையாளர். அவர் வீட்டின் ஒரு பகுதியில் வாடகைக்கு குடி வர உத்தேசிப்பவர் எதிர்கொள்ளும் அனுபவங்களே தி.ஜா வின் ‘’பாட்டியா வீட்டில் குழந்தைக் காட்சி’’.
Friday, 7 February 2025
மனிதாபிமானம்
1970 ஐ ஒட்டிய ஆண்டுகளில் இந்தியா தன்னை பொருளியல் ரீதியாக நிலை நிறுத்திக் கொள்ள முயன்று கொண்டிருந்த ஆண்டுகள். சுதந்திரம் அடைந்து 20 ஆண்டுகள் ஆகியிருந்தன. நாட்டின் வரி வருவாயை எவ்விதம் பெருக்குவது என்பது அரசின் முக்கிய கரிசனமாக இருந்தது. இந்த பின்னணியில் மத்திய தர வாழ்க்கை என்பது பல்வேறு நெருக்கடிகளைக் கொண்டது. ஒரு மத்திய வர்க்க மனிதன் ஒரு நெருக்கடியான பஜாரில் கைக்கடிகாரம் பழுது நீக்க செல்லும் கதை தி.ஜா வின் ‘’மனிதாபிமானம்’’.
Thursday, 6 February 2025
பாயசம்
தமிழின் ஆகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்று.
அமுதக்கடல் கடையப்பட்டால் முதலில் விஷத்தையே உமிழ்கிறது என்னும் போது சாமானிய மானுடன் அகம் குறித்து வேறு என்ன சொல்லி விட முடியும்?
காபி
பள்ளியில் சிறுவர்களாக இருக்கும் இரு மாணவர்கள். ஒருவன் செல்வந்தன். இன்னொருவன் வறியவன். இருவருக்குமே அன்னை மேல் பெரும் பிரியம். காலச் சக்கரம் சுழல்கிறது. ஒரு மாணவன் முதலாளியாகவும் இன்னொரு மாணவன் அவனது சமையல்காரனாகவும் இருக்கிறார்கள். சமையல்காரனுக்கு முதலாளி தன் வகுப்பு மாணவன் என்பது தெரியும். முதலாளிக்குத் தெரியாது. ஒரு சந்தர்ப்பத்தில் தெரியவருகிறது. அப்போது அந்த இரண்டு பால்ய சினேகிதர்களும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதே தி.ஜா வின் ’’காபி’’.
Wednesday, 5 February 2025
சீனுவுடன் சில மணி நேரம்
Sunday, 2 February 2025
மனநாக்கு
ஒவ்வாத காமம் ஒருவன் மனதில் ஏறுகிறது. ஆட்கொல்லி என அவனைச் சூழ்கிறது. திமிறுகிறான். மீள விரும்புகிறான். ஒரு சிறுவன் உற்சாகமாக அட்டைப்பெட்டி ஒன்றை காலால் எத்தித் தள்ளி சாலையில் நடப்பதைக் காண்கிறான். அந்த காட்சி அவனுக்குள் ஒரு நல்மாற்றத்தை உண்டாக்குகிறது. இதுவே தி.ஜா வின் ‘’மனநாக்கு’’.
Saturday, 1 February 2025
பூச்சி டயலாக்
பாரதியார் ‘’காக்காய் பார்லிமெண்ட்’’ என்ற கதையை எழுதியிருக்கிறார். அதில் காகங்கள் கதாபாத்திரங்கள். தி.ஜா பூச்சிகளைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு எழுதியிருக்கும் கதை ‘’பூச்சி டயலாக்’’.
பஸ்ஸூம் நாய்களும்
மாநகரம் பேதங்களின் உலகம். பேதங்களின் வெவ்வேறு வகை மாதிரிகள் நாளும் பொழுதும் காட்சியாகும் இடம் மாநகரம். நடுத்தர வர்க்க ஆசாமி ஒருவர் மாநகரம் ஒன்றின் அல்லல்களை அதில் தனது கையறு நிலையை கூறும் கதை ‘’பஸ்ஸூம் நாய்களும்’’.
நேத்திக்கு
அறியாமையிலும் தமோ குணத்திலும் மூழ்கியிருக்கும் ஒருவர். அவருக்கு ஏற்றாற் போன்ற ஒரு மோசமான குழாம். சாரமின்மையின் இருளில் திளைக்கின்றனர் அவர்கள். அதனை ஒரு சிறு குழந்தை காண நேர்கிறது. தன் மழலை மொழியில் அச்சூழலின் கதையைச் சொல்கிறது. சாரமின்மையின் பலியாக ஒரு பேச முடியாத ஜீவன் பலியாகிறது. இதன் கதையே ‘’நேத்திக்கு’’.
தற்செயல்
பால்ய சினேகிதர்கள் வெகு நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள். வாழ்க்கை இருவரிடமும் எண்ணற்ற மாறுதல்களைக் கொண்டு வந்திருக்கிறது. இருவரின் வாழ்க்கையிலும் திருப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உறவினர் திருமண விழா ஒன்றில் இருவரும் சந்தித்து உரையாடுகையில் இருவரும் சொல்லும் தத்தமது கதையே தி.ஜா வின் ‘’தற்செயல்’’