Sunday, 31 August 2025

பயணமும் யோசனைகளும்

நேற்று நிகழ்ந்த ஒரு பயணத்தின் விளைவாக ஒரு யோசனை உதித்தது. அவ்வாறு யோசனைகள் உருவாவது நலம் பயப்பது என்பதே என் எண்ணம். அனைத்து யோசனைகளும் அப்படியே செயலாகி விட வேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஒரு யோசனை பலரின் மனத்தில் ஒரு சலனத்தை ஏற்படுத்துகிறது. இன்றில்லா விட்டால் என்றோ ஒரு நாள் நமக்கில்லா விட்டால் வேறு யாருக்கோ எந்த யோசனையும் பயன் தரலாம்.  

பள்ளிக்கு ஒரு கடிதம் ( விரிவானது)

அனுப்புநர்

ர.பிரபு
*****
******
*******
மயிலாடுதுறை

பெறுநர்

தாளாளர்
***** பள்ளி,
*******
*****

அன்புடையீர்!

இன்று இரு சக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது தங்கள் பள்ளியில் பணி புரியும் வேன் டிரைவரை சந்திக்க நேர்ந்தது. எனது வாகனத்தில் அவருக்கு ‘’லிஃப்ட்’’ கொடுத்தேன். இருவரும் சேர்ந்து பயணிக்கையில் நாங்கள் உரையாடிய ஒரு விஷயம் குறித்து தங்களுக்குத் தெரிவிப்பது பலருக்குப் பயன் தரத்தக்கதாக இருக்கக்கூடும் என எண்ணினேன். அதற்காகவே இக்கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன்.  

தங்கள் பள்ளியின் பள்ளி வாகன ஓட்டுநர்கள் காலை பணி முடிந்த பின் மாலை தங்கள் பணி துவங்கும் வரை - கிட்டத்தட்ட காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை 6 மணி நேரம் தங்கள் பள்ளியில் தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் அறையில் காத்திருப்பதாக அறிந்தேன். வாகன ஓட்டுநர்களுக்காக பள்ளியில் பிரத்யேக அறை ஒன்றை ஒதுக்கி அதில் குடிநீர் வசதி செய்து அளித்திருப்பதும் அவர்கள் ஓய்வெடுக்க வசதி செய்தி கொடுத்திருப்பதும் அந்த அறையில் அவர்கள் பொழுதுபோக்குக்காக தொலைக்காட்சி ஏற்பாடு செய்து கொடுத்திருப்பதும் நல்ல விஷயங்கள். பாராட்டத்தக்க விஷயங்கள். அதற்காக எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை அவர்கள் தங்களுக்கும் பள்ளிக்கும் பலன் தரும் வேறு ஏதேனும் செயல்களில் ஈடுபட முடியுமா என்று சிந்தித்துப் பார்க்கலாம் எனத் தோன்றியது. எனக்குத் தோன்றிய சில யோசனைகளை தங்கள் பரிசீலனைக்கு முன்வைக்கிறேன். வாய்ப்பு இருந்தால் செயல்படுத்த முயற்சிக்கவும். 

(1) 40 வாகன ஓட்டுநர்களைக் கொண்டு பள்ளியில் ஒரு காய்கறித் தோட்டம் அமைக்கலாம். அதில் இயற்கை முறையில் காய்கறிகளை விளைவிக்கலாம். அந்த காய்கறிகளை விற்பனை செய்து கொள்ள ஓட்டுநர்களை அனுமதிக்கலாம். இடம் அளிப்பதற்கு பள்ளி நிர்வாகத்துக்கு ஒரு குறைவான தொகையை அவர்கள் செலுத்தும் விதமாக ஏற்பாடு செய்யலாம். 

(2) 40 வாகன ஓட்டுநர்களைக் கொண்டு பள்ளியில் ஒரு நர்சரி உருவாக்கலாம். அதில் கொய்யா, பலா, நாவல், எலுமிச்சை ஆகிய பழ மரக் கன்றுகளை உற்பத்தி செய்து கொள்ள அவர்களுக்கு அனுமதி அளிக்கலாம். 

(3) 40 வாகன ஓட்டுநர்களில் ஆர்வமுள்ளவர்களைக் கண்டடைந்து அவர்களுக்குத் துணிப்பை தயாரிப்பதில் பயிற்சி அளித்து துணிப்பை தயார் செய்யச் சொல்லலாம். 

(4) வாகன ஓட்டுநர்களுக்கு ஏதேனும் ஒரு புதிய மொழியை கற்றுக் கொடுக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அவர்கள் புதிய மொழியைக் கற்றுக் கொள்ளும் வகையில் பள்ளி ஆசிரியர்களில் ஒருவரை நியமிக்கலாம். 

5. அகர்பத்தி தயாரித்தல் 

ஒரு வகுப்பறைக்குள் பத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்து செய்யக்கூடிய பொருள். ஓட்டுநர்கள் காத்திருக்கும் நேரத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்வதே நோக்கம் என்பதால் இந்த முயற்சிக்கு பெரும் முதலீடோ பெரும் லாபமோ எதிர்பார்க்கத் தேவையில்லை. மிகக் குறைந்த முதலீடு மட்டுமே தேவை. அதனை பள்ளி நிர்வாகம் அளிக்க வேண்டும். மிகக் குறைந்தபட்ச லாபம் கிடைத்தால் போதும். அதனை ஓட்டுநர்களுக்கு பகிர்ந்தளிக்கலாம். ஓட்டுநர்கள் பள்ளி அளித்த முதலீட்டை சில மாதங்களில் பள்ளிக்குத் திருப்பி அளித்திட வேண்டும்.

6. தேனீ வளர்த்தல்

பள்ளி அமைந்திருக்கும் கிராமம் முழுவதிலும் வருடத்தின் எல்லா நாட்களும் மலர்கள் மலரும் மலர் மரங்களை ஓட்டுநர்களைக் கொண்டு நடவேண்டும். அந்த ஊரே 40 ஆண்டுகளுக்கு முன்னால் பெங்களூர் இருந்ததைப் போல் ஆகி விடும். மலர்ந்திருக்கும் மலர்களிலிருந்து தேன் சேகரிக்க பள்ளியின் ஒரு பகுதியில் ஓட்டுநர்கள் தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம். ஊரும் பசுமையும் மலர்வும் கொண்டதாக ஆகும். ஓட்டுநர்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும். 

7. மர பொம்மைகள் தயாரித்தல்

சீன நாட்டிலிருந்து கள்ளத்தனமாக நம் நாட்டுக்குக் கொண்டு வரப்படும் விளையாட்டுப் பொருட்களே நம் சந்தைகளில் அதிகம் இருக்கின்றன. இந்நிலையை மாற்ற விளையாட்டுப் பொருட்களை நாம் அதிகம் உற்பத்தி செய்ய வேண்டிய தேவையிருக்கிறது. மர விளையாட்டுப் பொம்மைகள் தயாரிப்புக்கு ஓட்டுநர்களுக்குப் பயிற்சி அளித்துப் பயன்படுத்தலாம். 

8. பஞ்சகவ்யா பொருட்கள்

பஞ்சகவ்யாவிலிருந்து சோப், ஷாம்பூ, ஹேண்ட் வாஷ், இயற்கை உரம் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் தயாரிப்பில் ஈடுபடலாம்.

9. கைகளால் தயாரிக்கப்படும் காகிதம்

துணிக்கழிவுகளிலிருந்து கைகளால் தயாரிக்கப்படும் காகிதம் உற்பத்தி செய்யப்படுகிறது. அவ்விதமான காகிதம் தயாரித்து சகாயமான விலையில் பள்ளி மாணவர்களுக்கே விற்பனை செய்யலாம்.

10. பனங்கிழக்கு தயாரித்தல்

பனங்கிழக்கு தயாரித்தல் மிக எளிய செயல்முறை கொண்டது. ஊரெங்கும் இருக்கும் பனைமரங்களில் தினமும் பனம்பழம் கொட்டிக் கொண்டேயிருக்கிறது. அவற்றை சேகரித்து எடுத்து வர வேண்டும். 10 அடி நீளம் 10 அடி அகலம் ஒரு அடி உயரம் கொண்ட மணல் பரப்பை உருவாக்கி அதில் பனம்பழங்களை நட்டு வைத்து நீர் வார்க்க வேண்டும். பனங்கிழங்கு வேர் விடத் துவங்கும். கொஞ்ச நாட்களில் அவற்றை அகழ்ந்தெடுத்து உணவுப்பொருளாக விற்பனை செய்யலாம். புரதச்சத்து மிகுந்த இந்த உணவை இலங்கைவாசிகள் முக்கிய உணவாக உண்கின்றனர். நம் நாட்டிலும் விரும்பி உண்ணப்படுகிறது. 

11. பிளம்பர் எலெக்ட்ரீஷியன் பயிற்சி

40 ஓட்டுநர்களுக்கும் பிளம்பிங் எலெக்ட்ரிக்கல் பணிகளில் அடிப்படைப் பயிற்சி அளிக்கலாம். பள்ளிக்கு அருகில் இருக்கும் நகரில் காலை 10 மணியிலிருந்து மாலை 3 மணிக்குள் செய்யும் விதமாக சிறு பிளம்பிங் எலெக்ட்ரிக்கல் பணிகளை மேற்கொள்ளலாம். 

பள்ளி என்பது கல்வி பயிலும் இடம் ; கற்றுக் கொள்ளும் இடம். எனவே அங்கிருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றை கற்று வளர்ச்சி அடையும் விதத்தில் இருப்பது மகத்தானது. மாணவர்கள் மட்டுமன்றி பள்ளியின் பணியாளர்களுக்கும் தங்கள் பள்ளி புதிய கல்விக்கான வாய்ப்பை அளிக்கும் எனில் அச்செயல் ஒரு பெருஞ்செயலாக அமைந்து நாட்டின் பிற பள்ளிகளுக்கு மாதிரியாக எடுத்துக்காட்டாக அமையும். 

அன்புடன்,

***

நாள் : 30.08.2025
இடம் : மயிலாடுதுறை 

மேலும் சில தொழில்கள்

பள்ளி வாகன ஓட்டுநர்கள் 40 பேர் பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுத்தும் விதமாக என்னென்ன தொழில்களை மேலும் பரிந்துரைக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன். மனதில் சில விஷயங்கள் தோன்றின.  அவற்றைப் பட்டியலிட்டுள்ளேன். 

1. அகர்பத்தி தயாரித்தல் 

ஒரு வகுப்பறைக்குள் பத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்து செய்யக்கூடிய பொருள். ஓட்டுநர்கள் காத்திருக்கும் நேரத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்வதே நோக்கம் என்பதால் இந்த முயற்சிக்கு பெரும் முதலீடோ பெரும் லாபமோ எதிர்பார்க்கத் தேவையில்லை. மிகக் குறைந்த முதலீடு மட்டுமே தேவை. அதனை பள்ளி நிர்வாகம் அளிக்க வேண்டும். மிகக் குறைந்தபட்ச லாபம் கிடைத்தால் போதும். அதனை ஓட்டுநர்களுக்கு பகிர்ந்தளிக்கலாம். ஓட்டுநர்கள் பள்ளி அளித்த முதலீட்டை சில மாதங்களில் பள்ளிக்குத் திருப்பி அளித்திட வேண்டும்.

2. தேனீ வளர்த்தல்

பள்ளி அமைந்திருக்கும் கிராமம் முழுவதிலும் வருடத்தின் எல்லா நாட்களும் மலர்கள் மலரும் மலர் மரங்களை ஓட்டுநர்களைக் கொண்டு நடவேண்டும். அந்த ஊரே 40 ஆண்டுகளுக்கு முன்னால் பெங்களூர் இருந்ததைப் போல் ஆகி விடும். மலர்ந்திருக்கும் மலர்களிலிருந்து தேன் சேகரிக்க பள்ளியின் ஒரு பகுதியில் ஓட்டுநர்கள் தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம். ஊரும் பசுமையும் மலர்வும் கொண்டதாக ஆகும். ஓட்டுநர்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும். 

3. மர பொம்மைகள் தயாரித்தல்

சீன நாட்டிலிருந்து கள்ளத்தனமாக நம் நாட்டுக்குக் கொண்டு வரப்படும் விளையாட்டுப் பொருட்களே நம் சந்தைகளில் அதிகம் இருக்கின்றன. இந்நிலையை மாற்ற விளையாட்டுப் பொருட்களை நாம் அதிகம் உற்பத்தி செய்ய வேண்டிய தேவையிருக்கிறது. மர விளையாட்டுப் பொம்மைகள் தயாரிப்புக்கு ஓட்டுநர்களுக்குப் பயிற்சி அளித்துப் பயன்படுத்தலாம். 

4. பஞ்சகவ்யா பொருட்கள்

பஞ்சகவ்யாவிலிருந்து சோப், ஷாம்பூ, ஹேண்ட் வாஷ், இயற்கை உரம் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் தயாரிப்பில் ஈடுபடலாம்.

5. கைகளால் தயாரிக்கப்படும் காகிதம்

துணிக்கழிவுகளிலிருந்து கைகளால் தயாரிக்கப்படும் காகிதம் உற்பத்தி செய்யப்படுகிறது. அவ்விதமான காகிதம் தயாரித்து சகாயமான விலையில் பள்ளி மாணவர்களுக்கே விற்பனை செய்யலாம்.

6. பனங்கிழக்கு தயாரித்தல்

பனங்கிழக்கு தயாரித்தல் மிக எளிய செயல்முறை கொண்டது. ஊரெங்கும் இருக்கும் பனைமரங்களில் தினமும் பனம்பழம் கொட்டிக் கொண்டேயிருக்கிறது. அவற்றை சேகரித்து எடுத்து வர வேண்டும். 10 அடி நீளம் 10 அடி அகலம் ஒரு அடி உயரம் கொண்ட மணல் பரப்பை உருவாக்கி அதில் பனம்பழங்களை நட்டு வைத்து நீர் வார்க்க வேண்டும். பனங்கிழங்கு வேர் விடத் துவங்கும். கொஞ்ச நாட்களில் அவற்றை அகழ்ந்தெடுத்து உணவுப்பொருளாக விற்பனை செய்யலாம். புரதச்சத்து மிகுந்த இந்த உணவை இலங்கைவாசிகள் முக்கிய உணவாக உண்கின்றனர். நம் நாட்டிலும் விரும்பி உண்ணப்படுகிறது. 

7. பிளம்பர் எலெக்ட்ரீஷியன் பயிற்சி

40 ஓட்டுநர்களுக்கும் பிளம்பிங் எலெக்ட்ரிக்கல் பணிகளில் அடிப்படைப் பயிற்சி அளிக்கலாம். பள்ளிக்கு அருகில் இருக்கும் நகரில் காலை 10 மணியிலிருந்து மாலை 3 மணிக்குள் செய்யும் விதமாக சிறு பிளம்பிங் எலெக்ட்ரிக்கல் பணிகளை மேற்கொள்ளலாம். 

Saturday, 30 August 2025

பள்ளிக்கு ஒரு கடிதம்

அனுப்புநர்

ர.பிரபு
*****
******
*******
மயிலாடுதுறை

பெறுநர்

தாளாளர்
***** பள்ளி,
*******
*****

அன்புடையீர்!

இன்று இரு சக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது தங்கள் பள்ளியில் பணி புரியும் வேன் டிரைவரை சந்திக்க நேர்ந்தது. எனது வாகனத்தில் அவருக்கு ‘’லிஃப்ட்’’ கொடுத்தேன். இருவரும் சேர்ந்து பயணிக்கையில் நாங்கள் உரையாடிய ஒரு விஷயம் குறித்து தங்களுக்குத் தெரிவிப்பது பலருக்குப் பயன் தரத்தக்கதாக இருக்கக்கூடும் என எண்ணினேன். அதற்காகவே இக்கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன்.  

தங்கள் பள்ளியின் பள்ளி வாகன ஓட்டுநர்கள் காலை பணி முடிந்த பின் மாலை தங்கள் பணி துவங்கும் வரை - கிட்டத்தட்ட காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை 6 மணி நேரம் தங்கள் பள்ளியில் தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் அறையில் காத்திருப்பதாக அறிந்தேன். வாகன ஓட்டுநர்களுக்காக பள்ளியில் பிரத்யேக அறை ஒன்றை ஒதுக்கி அதில் குடிநீர் வசதி செய்து அளித்திருப்பதும் அவர்கள் ஓய்வெடுக்க வசதி செய்தி கொடுத்திருப்பதும் அந்த அறையில் அவர்கள் பொழுதுபோக்குக்காக தொலைக்காட்சி ஏற்பாடு செய்து கொடுத்திருப்பதும் நல்ல விஷயங்கள். பாராட்டத்தக்க விஷயங்கள். அதற்காக எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை அவர்கள் தங்களுக்கும் பள்ளிக்கும் பலன் தரும் வேறு ஏதேனும் செயல்களில் ஈடுபட முடியுமா என்று சிந்தித்துப் பார்க்கலாம் எனத் தோன்றியது. எனக்குத் தோன்றிய சில யோசனைகளை தங்கள் பரிசீலனைக்கு முன்வைக்கிறேன். வாய்ப்பு இருந்தால் செயல்படுத்த முயற்சிக்கவும். 

(1) 40 வாகன ஓட்டுநர்களைக் கொண்டு பள்ளியில் ஒரு காய்கறித் தோட்டம் அமைக்கலாம். அதில் இயற்கை முறையில் காய்கறிகளை விளைவிக்கலாம். அந்த காய்கறிகளை விற்பனை செய்து கொள்ள ஓட்டுநர்களை அனுமதிக்கலாம். இடம் அளிப்பதற்கு பள்ளி நிர்வாகத்துக்கு ஒரு குறைவான தொகையை அவர்கள் செலுத்தும் விதமாக ஏற்பாடு செய்யலாம். 

(2) 40 வாகன ஓட்டுநர்களைக் கொண்டு பள்ளியில் ஒரு நர்சரி உருவாக்கலாம். அதில் கொய்யா, பலா, நாவல், எலுமிச்சை ஆகிய பழ மரக் கன்றுகளை உற்பத்தி செய்து கொள்ள அவர்களுக்கு அனுமதி அளிக்கலாம். 

(3) 40 வாகன ஓட்டுநர்களில் ஆர்வமுள்ளவர்களைக் கண்டடைந்து அவர்களுக்குத் துணிப்பை தயாரிப்பதில் பயிற்சி அளித்து துணிப்பை தயார் செய்யச் சொல்லலாம். 

(4) வாகன ஓட்டுநர்களுக்கு ஏதேனும் ஒரு புதிய மொழியை கற்றுக் கொடுக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அவர்கள் புதிய மொழியைக் கற்றுக் கொள்ளும் வகையில் பள்ளி ஆசிரியர்களில் ஒருவரை நியமிக்கலாம். 

பள்ளி என்பது கல்வி பயிலும் இடம் ; கற்றுக் கொள்ளும் இடம். எனவே அங்கிருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றை கற்று வளர்ச்சி அடையும் விதத்தில் இருப்பது மகத்தானது. மாணவர்கள் மட்டுமன்றி பள்ளியின் பணியாளர்களுக்கும் தங்கள் பள்ளி புதிய கல்விக்கான வாய்ப்பை அளிக்கும் எனில் அச்செயல் ஒரு பெருஞ்செயலாக அமைந்து நாட்டின் பிற பள்ளிகளுக்கு மாதிரியாக எடுத்துக்காட்டாக அமையும். 

அன்புடன்,

***

நாள் : 30.08.2025
இடம் : மயிலாடுதுறை

ஒரு யோசனை

இன்று சென்னை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஓர் இளைஞர் என்னிடம் ‘’லிஃப்ட்’’ கேட்டார். வண்டியை நிறுத்தி ஏற்றிக் கொண்டேன். 

‘’தம்பி ! லிஃப்ட் கேட்கும் போது டூ-வீலர் 100 மீட்டர் தூரத்தில இருக்கும் போதே கேட்டுடுங்க. அப்ப தான் ஸ்லோ பண்ணா நீங்க நிக்கற இடத்துக்கிட்ட நிறுத்த முடியும். தாண்டி கொஞ்ச தூரம் போய்ட்டா அப்புறம் லிஃப்ட் கொடுக்க முடியாதில்லையா?’’ என்றேன். 

இளைஞர் ஆமோதித்தார். ‘’இப்ப நேஷனல் ஹை வே ரொம்ப பக்காவா இருக்கு சார்! அதனால வாகனம் எல்லாமே வேகமாத்தான் போகுது’’.

‘’நீங்க என்ன வேலை செய்யறீங்க?’’ என்று கேட்டேன்.

அவர் அந்த பிராந்தியத்தின் பெரிய பிரபலமான பள்ளி ஒன்றைக் குறிப்பிட்டார். அதில் பள்ளி வேனின் ஓட்டுநராக இருப்பதைக் கூறினார். 

‘’உங்களோட ஒர்க்கிங் ஹவர்ஸ் என்ன தம்பி ?’’

’’காலையில 7.30க்கு வண்டியை எடுப்பன் சார். 9.15க்கு ஸ்டூடண்ட்ஸை அழச்சுக்கிட்டு ஸ்கூலுக்கு வந்திடுவன். அப்புறம் சாயந்திரம் 4 மணிக்கு ஸ்டூடண்ட்ஸ்ஸை ஏத்திக்கிட்டு கிளம்புவன். 5.45க்கு எம்ப்டி வண்டியை ஸ்கூல்ல கொண்டு வந்து விட்டுடுவன். இது தான் சார் வேலை’’

’’இந்த வேலைக்கு உங்களுக்கு எவ்வளவு சேலரி தம்பி?’’

‘’மாசம் 15,000 ரூபாய் சார். இது இல்லாம தினமும் 100 ரூபாய் கொடுப்பாங்க’’

‘’எத்தனை டிரைவர் இருக்கீங்க?’’

‘’நாப்பது பேர் இருக்கோம் சார்’’

‘’நாப்பது பேரா?’’

‘’ஆமாம் சார்’’

’’வேலை நேரம் போக மீதி நேரம் என்ன செய்வீங்க?’’

‘’எங்களுக்கு தனியா ரூம் இருக்கு சார். அதுல இருப்போம். டி.வி பார்ப்போம். செல்ஃபோன் பார்ப்போம்’’

‘’நீங்க காலையில இருந்து சாயந்திரம் வரைக்கும் உங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கறாப் போல ஏதாவது செய்யலாமே?’’

‘’என்ன சார் செய்ய முடியும்?’ நாங்க டிரைவர்ஸ். எங்களுக்கு வேன் கார் ஓட்டத்தானே தெரியும்’’

அவர்களுக்கு என்ன பணி பரிந்துரைக்கலாம் என யோசித்தேன். 

‘’தம்பி இப்ப பேண்ட் சட்டை தைக்கணும்னா கொஞ்சம் டெக்னிக்கலா தெரிஞ்சிருக்கணும். ஆனா துணிப்பை தைக்க அந்த அளவு டெக்னிக்கல் நாலெட்ஜ் தேவையில்ல. ஒரு பத்து தையல் மெஷின் வாங்கிப் போட்டு துணிப்பை தைக்கலாம். நீங்க 40 பேர் இருக்கீங்கன்னா ஆளுக்கு ஒரு மணி நேரம் ஷிஃப்ட் மாதிரி வச்சுக்கலாம். 40 பேருக்கும் 4 மணி நேரத்துல வாய்ப்பு கிடைக்கும்.’’

‘’நீங்க சொல்றது நல்ல ஐடியா தான் சார்’’

‘’ஸ்கூல்ல நிறைய இடம் இருக்கும்ல . அதுல ஒரு போர்ஷன்ல இயற்கை முறைல காய்கறிகள விளைவிக்கலாம். அந்த வேலைல ஒரு பத்து டிரைவர்ஸ் ஈடுபடலாம்’’

‘’இதுவும் நல்ல யோசனை சார்’’

‘’இப்ப நீங்க 40 பேர் இருக்கீங்க. உங்களுக்கான மதிய சாப்பாட்டை உங்கள்ல 10 பேர் சேர்ந்து சமைக்கலாம்.’’

‘’நீங்க நிறையா யோசிக்கறீங்க சார்’’

‘’ஸ்கூல்ல ஒரு போர்ஷன்ல நர்சரி போட்டு பழ மரக்கன்றுகள் - கொய்யா, பலா, நாவல், எலுமிச்சை - செடியா தயார் செஞ்சு விக்கலாம்’’

‘’இதுவும் நல்லா இருக்கு சார்’’

’’எனக்கு இன்னும் வேற யோசனை வந்தாலும் சொல்றன். ‘’

‘’நாள் முழுக்க ஒக்காந்து டி.வி பாத்துக்கிட்டு இருக்கறதுக்கு கூடுதலா வருமானம் வர்ர மாதிரி ஏதாவது செய்தால் நல்லது தான் சார்’’

‘’இந்த மாதிரி ஏதாவது புதுசா யோசிச்சு செஞ்சா உங்க ஸ்கூலோட குட் வில் அதிகமாகும். தமிழ்நாட்டுல இருக்கற மத்த ஸ்கூல்களுக்கு உங்க ஸ்கூல் ஒரு மாடலா ஆகும்.’’

‘’நீங்க சொல்றது உண்மை தான் சார்’’

‘’நான் உங்க ஸ்கூல் கரெஸ்பாண்டண்ட்டுக்கு இந்த விஷயம் பத்தி ஒரு லெட்டர் எழுதரன். உங்க ஸ்கூல் கரெஸ்பாண்டண்ட் என்னோட ஃபிரண்டோட ஃபிரண்டு. அவர் கிட்ட சொல்லி நேராவும் சொல்ல சொல்றன்’’

இளைஞர் இறங்க வேண்டிய இடம் வந்தது. இறக்கி விட்டு விட்டு எனது பயணத்தைத் தொடர்ந்தேன்.  
 

Thursday, 28 August 2025

தோள் பை ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளர் கல்லூரியில் படித்த போது நீல நிறத்தில் ஒரு தோள் பை வைத்திருந்தார். நீல நிற ஜீன்ஸ் துணியில் தயாரான தோள் பை அது. அதில் இரண்டு தோல்வார் இருக்காது. ஒரு தோல்வார் தான் இருக்கும். இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் அவை கல்லூரி மாணவர்களால் அதிகம் உபயோகிக்கப்பட்டன. இரண்டு தோல்வார் உள்ள பைகள் அதற்கு முன்னும் இருந்தன ; அப்போதும் இருந்தன ; இப்போதும் இருக்கின்றன.   அமைப்பாளர் இப்போது தன்னிடம் ஒரு தோள் பை இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறார். இப்போது அவர் கைவசம் நான்கு பணிகள் இருக்கின்றன. தினமும் அவற்றுக்காக ஏதேனும் செயல் செய்து கொண்டிருக்கிறார். நாளின் பெரும்பொழுதை அப்பணிகள் எடுத்துக் கொள்கின்றன ; அத்துடன் மன ஓட்டத்தின் பெரும் பகுதியையும் அவை எடுத்துக் கொள்கின்றன. அன்றைய தினம் என்ன செய்தோம் என எழுதி வைத்துக் கொள்வது நல்லது என அமைப்பாளருக்குத் தோன்றும். எனவே நான்கு நோட்டு புத்தகங்கள் அல்லது நான்கு பழைய எழுதாத டைரிகளை அந்த பையில் வைத்துக் கொள்ளலாம் என அமைப்பாளர் எண்ணினார். அமைப்பாளர் சட்டைப்பையில் எப்போதும் பேனா இருக்கும். தேவையெனில் அந்த தோள் பையிலும் ஒரு பேனா ஒரு பென்சில் போட்டு வைக்கலாம். 15மீ டேப் அந்த பையில் போட்டுக் கொள்ளலாம். கல்லூரி மாணவராயிருந்த போது பையில் சயிண்டிஃபிக் கால்குலேட்டர் இருக்கும். இப்போது வேண்டுமானால் ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளலாம். தண்ணீர் பாட்டில் ஒன்று வைத்துக் கொள்ள வேண்டும். தோள் பை தயாராக இருப்பதைக் கண்டாலே காலைப் பொழுதில் ஏதேனும் பணி செய்ய வேண்டும் என்று தோன்றும். மடிக்கணினியை அமைப்பாளர் மேஜைக்கணினி போல் பயன்படுத்தும் வழக்கம் கொண்டவர். எனவே மடிக்கணினியை எங்கு சென்றாலும் எடுத்துச் செல்லும் வழக்கம் இல்லை. அலைபேசியை அந்த பைக்குள் போட்டு விடலாம் ; சுவிட்ச் ஆஃப் செய்து போட்டு விட்டால் உத்தமம். எவருக்கேனும் பேச வேண்டும் என்றால் ஆன் செய்து பேசிக் கொள்ளலாம். தோள் பையில் இருக்கப் போகும் அம்சங்கள் இவைதான் என முடிவு செய்த பின் அமைப்பாளர் ஊரில் இருக்கும் பை விற்பனைக் கடைக்குச் சென்றார். 

ஒற்றை தோல்வார் கொண்ட தோள் பை வேண்டும் என்று கேட்டார். ‘’சார் ! நீங்க சொல்ற மாடல்லாம் ரொம்ப ரொம்ப பழசு. இப்ப அந்த மாடல் வரது இல்ல’’ என்றார். ‘’நீங்க பை தச்சு தானே சேல் பண்றீங்க. நான் சொல்ற மாடல்ல தச்சு கொடுங்க’’. கடைக்காரர் யோசித்தார். ‘’சார் ! ரெண்டு தோல்வார் இருக்கற பைய வாங்கிக்கங்க. ஒரு தோல்வார் மட்டும் பயன்படுத்துங்க.’’ அமைப்பாளர் ஒரு பொருளை வாங்குவதை எவ்வளவு தள்ளி போட முடியுமோ அவ்வளவு தள்ளி போடுவார். ஆந்திரப் பயணத்தின் போது அவர் வாங்கிய கைத்தறித் துணிப்பை ஒன்று அவர் நினைவுக்கு வந்தது. நான்கு டைரி, ஒரு டேப், ஒரு கால்குலேட்டர், ஒரு வாட்டர் பாட்டில் வைக்க அந்த பை போதும். இரு சக்கர வாகனக் குலுக்கலில் வாட்டர் பாட்டிலில் இருந்து தண்ணீர் கசிந்தால் காகிதங்கள் ஈரமாகும். அது மட்டும் தான் யோசிக்க வேண்டிய விஷயம். மானசீகமாக அந்த கைத்தறிப்பையில் பொருட்களை வைத்து அந்த பையுடன் பயணிப்பதை எண்ணிப் பார்க்கத் துவங்கி விட்டார். 

’’எவ்வளவு ரூபாய் ?’’ 

‘’520 சார் . நீங்க 480 கொடுங்க’’

’’நாளைக்கு காலைல வந்து வாங்கிக்கறன்’’ அமைப்பாளர் புறப்பட்டார். புறப்படும் போது கடைக்காரரிடம் கேட்டார். 

‘’நான் முன்னாடி இந்த கடைக்கு வரும் போது வேற ஒருத்தர் இருப்பாரு’’

முன்னாடி என அமைப்பாளர் சொன்னது 25 ஆண்டுகளுக்கு முன்பு. 

கடைக்காரர் சொன்னார். ‘’நான் அவரோட மகன் தான் சார். அப்பா ஊருக்குப் போயிருக்காங்க’’. 

அடுத்த முறை அமைப்பாளர் இந்த கடைக்கு வரும் போது முன்னாடி இருந்தவரின் பேரன் கூட கடையில் இருக்கலாம்! 

Wednesday, 27 August 2025

மன்றம்

நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம்
நீரிற் சுருட்டு நெடுந்திரைகள் - நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்னே
வழுத்தாத தெம்பிரான் மன்று.

-குமரகுருபரர்

இன்று காலை சிதம்பரம் சென்றிருந்தேன். தமிழகத்தில் ஆலய வழிபாட்டு நியதிகள் கிரமமாகப் பின்பற்றப்படுவதும் தினமும் பெரும் எண்ணிக்கையில் மக்கள் வழிபடுவதும் என இவ்விரு செயல்களும் ஒருங்கே நிகழும் ஆலயம் சிதம்பரம். சிதம்பரம் ஊர்க்காரர்களில் கணிசமானோர் ஏதேனும் ஒரு வேளை ஆலயத்துக்கு சென்று வழிபடுவதை தங்கள் வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள். இன்று வினாயகர் சதுர்த்தி என்பதால் நான்கு வீதிகளிலும் பூசனை திரவியங்கள் விற்பனை ஆகிக் கொண்டிருந்தன. தில்லை காளியம்மன் ஆலயத்திலும் சிறப்பான வழிபாடு நடைபெற்றது. எனது தொழில் சார்ந்த சில பணிகள் இருந்தன. அவற்றை மேற்கொண்டேன். இன்று சிற்றம்பலத்தையும் தில்லை காளியையும் வணங்கியது மனதுக்கு அமைதியைத் தந்தது. 

Tuesday, 26 August 2025

இங்கும் அங்கும்

 ஊருக்கு வடக்கே 40 கி.மீ தொலைவில் இருக்கிறது சிதம்பரம். அங்கே எனது நண்பர் ஒருவர் இருக்கிறார். தோட்டம் ஒன்றை வாங்க அவர் ஆர்வம் கொண்டிருந்தார். அந்த தோட்டம் விலைக்கு வருகிறது என்பதை நான் அவருக்குக் கூறினேன். அந்த தோட்டத்தின் உரிமையாளர் சீர்காழியில் உணவகம் ஒன்றை நடத்துகிறார். சீர்காழி ஊருக்கும் சிதம்பரத்துக்கும் இடையில் இரண்டு ஊர்களுக்கும் சம தொலைவில் இருக்கிறது. சீர்காழிக்கு அருகில் இருக்கும் நாங்கூர் தோட்ட உரிமையாளரின் வீடு. நேற்று காலை 5 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டேன். நண்பருக்கு காலை 6.15க்கு சந்திக்க வருகிறேன் என குறுஞ்செய்தி அனுப்பினேன். அவர் வீட்டு வாசலைச் சென்றடைந்த போது நேரம் எத்தனை என்று பார்த்தேன். 6.13 எனக் காட்டியது. அந்த வீட்டின் பணியாள் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். 15 தினங்களுக்கு முன்னால் நண்பர் வீட்டுக்கு இதே நேரத்துக்குச் சென்றிருந்தேன். அப்போதும் அதே பெண்மணி வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு ஆச்சர்யம். ’’தம்பி! நீங்க இந்த ஊர்தானா? உங்க வீடு எங்க இருக்கு?’’ என்று கேட்டார். நான் விபரம் சொன்னேன். அவருக்கு ஆச்சர்யம். நண்பர் 10 தினங்களாக ஊரில் இல்லை. அவருக்கும் தோட்ட உரிமையாளருக்கும் இடையே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டும். நண்பர் சில நிமிடங்களில் தயாராகி விட்டார். எனது வாகனத்தை அவர் வீட்டில் நிறுத்தி விட்டு நண்பருடன் காரில் நாங்கூருக்குப் பயணமானேன். நாங்கூரில் சந்திப்பு 45 நிமிடம் நீடித்தது. பின்னர் அங்கிருந்து சிதம்பரம் புறப்பட்டோம். அங்கே சென்று எங்களுக்குள் பேச வேண்டிய விஷயங்களைப் பேசினோம். நண்பரிடம் விடை பெற்று புறப்பட்டேன். சீர்காழி வந்தேன். தோட்டக்காரரின் உணவகத்துக்குச் சென்றேன். உரிமையாளர் வீட்டில் இருக்கிறார் என்றார்கள். அங்கே சென்று அவரைச் சந்தித்தேன். எங்கள் உரையாடல் 30 நிமிடம் நீடித்தது. சீர்காழியில் இன்னொரு வேலை இருந்தது. மீண்டும் வந்தேன். அந்த வேலையை முடித்து விட்டு ஊர் திரும்பினேன். நேரம் மதியம் 12.30. வீட்டுக்கு வந்ததும் ஓரிரு நிமிடங்கள் அமர்ந்து விட்டு வங்கிக்குச் சென்றேன். அங்கே சில பணிகள். வேலை முடிய 2 மணி ஆயிற்று. வீட்டுக்கு வந்து மதிய உணவருந்தினேன். அமர்ந்திருந்தாலும் நகர்ந்து கொண்டிருப்பதான உணர்வு ஏற்பட்டது.  

Monday, 25 August 2025

துறவியுடன் ஒரு நாள்

எனது நண்பர் ஒருவர் காட்டுமன்னார்குடியைச் சேர்ந்தவர். ஆன்மீக அமைப்பொன்றின் இளம் துறவி ஒருவரை கும்பகோணம் அருகில் இருக்கும் மடத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார். தவிர்க்க முடியாத பணியொன்றின் காரணமாக திட்டமிட்ட விதத்தில் அவரால் உடன் செல்ல முடியாத நிலை. என்னை அப்பணியை மேற்கொள்ள முடியுமா என்று கேட்டார். நான் ஒத்துக் கொண்டேன். 

இன்று அதிகாலை எழுந்து நடைப்பயிற்சி முடித்ததும் குளித்துத் தயாரானேன்.  காலை உணவை ஊரில் முடித்து விட்டு காட்டுமன்னார்குடி சென்றேன். துறவி தன்னார்வலர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தார். விடிகாலை எழுந்து யோகப் பயிற்சிகள் தினமும் மேற்கொள்வது துறவியின் வழக்கம். காலை குறைந்தது 3 மணி நேரம் யோகப் பயிற்சிகள் செய்வார்கள். எஞ்சிய பொழுதில் 2 மணி நேரம் பயிற்சி இருக்கும். நான் சென்ற போது பயிற்சி முடித்து காலை உணவருந்தி தயாராக இருந்தார். காலை 8 மணி அளவில் ஒரு வேளை உணவும் இரவு 7 மணிக்கு அடுத்த வேளை உணவும் என ஒரு நாளைக்கு 2 வேளை மட்டுமே உணவருந்தும் வழக்கம் அவர்களுக்கு. 

இரு சக்கர வாகனத்தில் இருவரும் பயணித்தோம். எங்கள் பிராந்தியத்தின் சமூக பொருளாதார சூழ்நிலைகள் குறித்து துறவியிடம் கூறிக் கொண்டு வந்தேன். நாங்கள் செல்ல வேண்டிய மடத்தில் காலை 10 மணி என சந்திப்புக்கு நேரம் கொடுத்திருந்தார்கள். நான் எப்போதும் மணிக்கு 40 லிருந்து 45 கி.மீ வேகம் மட்டுமே வாகனம் ஓட்டக் கூடியவன். எனினும் குறிப்பிட்ட நேரத்துக்கு 10 நிமிடம் முன்பாகவே வந்து சேர்ந்து விட்டோம். சந்திப்பு சிறப்பாக இருந்தது. ஒரு மணி நேரம் அங்கு இருந்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம். இப்போது வண்டியை துறவி ஓட்டினார். அவரது வாகன இயக்குதிறன் சிறப்பாக இருந்தது. ‘’காவிரி போற்றுதும்’’ முன்னெடுக்கும் பணிகள் குறித்து அவரிடம் கூறினேன். சேத்தியாதோப்பில் அவரை இறக்கி விட்டு விட்டு நான் ஊருக்குப் புறப்பட்டேன். அவர் பேருந்தில் கடலூருக்குப் பயணமானார்.  

Sunday, 24 August 2025

ஐயம் தெளிதல் ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளர் தனது நடுவயதில் இருக்கிறார். இன்று அமைப்பாளரை வயதின் அடிப்படையில் இளைஞர் என்று கூறமுடியாது. 18 லிருந்து 40 வயது வரை இருப்பவர்களை இளைஞர்கள் என்று கூற முடியும் என்றால் அமைப்பாளரை இளைஞர் எனக் கூற முடியாது. வயது ஒரு உண்மை என்பதால் அமைப்பாளருக்கு அது குறித்து வருத்தம் இல்லை. ஆனால் அவருக்கு வேறு வகையான வருத்தங்கள் இருக்கின்றன. வாழ்க்கை என்றால் சுக துக்கம் வருத்தம் இன்பம் இருக்கும்தானே ! இதனைப் புரிந்தவர்தான் அமைப்பாளர். அவருடைய பிரத்யேக வருத்தம் என்னவெனில் ஓர் இளைஞனுக்கு ஏற்படும் கேள்விகளும் ஐயங்களும் அமைப்பாளருக்கு அவ்வப்போது ஏற்படுகின்றன. இவ்விதம் இருப்பது யதார்த்தமானதுதானா என்னும் கேள்வி அமைப்பாளருக்கு இருக்கிறது. அது குறித்துதான் அவ்வப்போது வருந்துவார்.  

பெரும்பாலான மனிதர்கள் பொதுவாக ‘’ஷண சித்தம் ஷண பித்தம்’’ என முடிவெடுத்து விடுகிறார்கள் என்பது அமைப்பாளரின் எண்ணம். இருப்பினும் அவ்விதமான மனிதர்களுக்கும் அல்லல்கள் இருக்கின்றன. அலசி ஆராய்ந்து சிந்தித்துப் பார்த்து முடிவெடுக்கும் மனிதர்களுக்கும் அல்லல் இருக்கிறது. இப்போது அமைப்பாளரின் கேள்வி அல்லல் குறித்து. மனித வாழ்க்கை என்று வந்து விட்டாலே அல்லலும் துன்பமும் தவிர்க்க முடியாதது தானா ? இந்த கேள்வி அமைப்பாளருக்கு இளைஞனாயிருந்த போதும் இருந்தது . அப்போது ஒட்டு மொத்த மானுட அல்லலும் இல்லாமல் போகும் நாள் வரும் எனத் தீவிரமாக நம்பியிருப்பார். இப்போதும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் கொஞ்சம் குறைந்து இருக்கிறது. 

அமைப்பாளர் சில மாதங்களுக்கு முன்னால் அவர் பகுதிக்கு குடி வந்த ஒரு இளைஞரைச் சந்தித்தார். இரண்டு தெரு தள்ளி குடியிருப்பவர் அவர். தமிழகத்தின் வட மாவட்டங்களில் செல்வாக்கு கொண்ட ஒரு கட்சியின் கிராமப் பொறுப்பாளர் அந்த இளைஞர். நடைமுறை அரசியல் குறித்து நடைமுறை அரசியலின் இயங்குமுறை குறித்து அரசியலுக்கு சாமானியர்கள் மனதில் அளிக்கும் இடம் குறித்து என பல விஷயங்களைப்  பொதுவாக பேசிக் கொண்டிருந்த போது அமைப்பாளர் அந்த இளைஞருக்கு  மேற்படி விஷயங்கள் குறித்து குறிப்பிடத்தக்க அவதானங்கள் இருக்கின்றன என எண்ணினார் அமைப்பாளர். ‘’நீட்’’ தேர்வு குறித்து பேச்சு வந்தது. அந்த இளைஞர் ‘’நீட்’’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றார். அமைப்பாளர் தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை மருத்துவக் கல்லூரி மாணவர் இடங்கள் இருக்கின்றன என்று கேட்டார். அந்த இளைஞர் அதனை அறிந்திருக்கவில்லை. அமைப்பாளர் சொன்னார் : ''தம்பி ! மொத்த சீட்டே 12,000 தான். இந்த விஷயம் 12,000 பேர் சம்பந்தப்பட்டது. 234 தொகுதிக்கு கணக்கு பண்ணா சராசரியா தொகுதிக்கு 50 பேர் சம்பந்தப்பட்ட விஷயம். ‘’ அரசியலில் இருப்பதால் அந்த இளைஞர் அந்த கணக்கைப் புரிந்து கொண்டார். அவருக்கு அதிர்ச்சி . ஆச்சர்யமும் கூட. ’’எந்த விஷயமா இருந்தாலும் யோசிக்கணும் தம்பி’’   

சமூகத்துக்காக தான் செய்யும் செய்ய நினைக்கும் செயல்கள் பலன்களைத் தருகிறதா என்னும் ஐயம் அமைப்பாளருக்கு ஏற்படும். சமூகச் செயல்பாடுகளை ஆற்றுவதற்குத் தேவைப்படும் அனைத்தையும் தாம் வழங்குகிறோமா என்னும் கேள்வி அமைப்பாளருக்கு உண்டு. அமைப்பாளர் இப்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். பலன் பற்றி கருத வேண்டாம் ; பலன் முக்கியம்தான் ; ஆனால் நாம் நினைக்கும் பலன் மட்டுமே எல்லாமும் அல்ல ; செயல் மட்டுமே நிகழ்காலத்தில் இருக்கிறது. பலன் எதிர்காலத்தில் இருக்கிறது; எதிர்காலம் இப்படி இருக்க வேண்டும் என விரும்பினால் அதற்கு நிகழ்காலத்தில் செய்ய வேண்டியதைச் செய்தே ஆக வேண்டும். இதைப் புரிந்து கொண்டு நம்மால் முடிந்ததை சிறப்பாக இன்னும் ஆகச் சிறப்பாக செய்ய முயற்சி செய்வோம் என முடிவெடுத்துள்ளார். 

ஊருக்கு அருகில் இருக்கும் ஒவ்வொரு கிராமத்துக்கும் செல்வது ; ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் ஒரு மரக்கன்றை எவ்விதம் 2 அடி நீளம் 2 அடி அகலம் 2 அடி ஆழம் கொண்ட குழியைத் தோண்டி அதில் மக்கிய சாண எருவைக் கொட்டி நடுவது என்பது குறித்து எடுத்துச் சொல்வது ; ஒவ்வொரு வீட்டுக்கும் முதல் கட்டமாக ஒரு கொய்யா, ஒரு பலா, ஒரு எலுமிச்சை ஆகிய மூன்று மரக்கன்றுகளை வழங்குவது என முடிவெடுத்துள்ளார். 

எல்லா வீடுகளிலும் மரக்கன்றுகள் சிறப்பாக வளர வேண்டும் என எதிர்பார்ப்பது மனித இயல்பு தான். எனினும் எல்லா மனிதர்களும் ஒரே விதமாக இருப்பதில்லை. ஒரு விஷயத்தை முழுமையாகப் புரிந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள் ; பகுதியளவு மட்டும் புரிந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள் ; ஊக்கத்துடன் செயலாற்றுபவர்கள் இருக்கிறார்கள் ; சோம்பல் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். இந்த புரிதல் இருந்தால் நமது செயல்பாடுகள் இன்னும் நேர்த்தி அடையும். நாம் எதிர்பார்க்கும் பலன் ஒருவேளை கிடைத்தாலும் கிடைக்கும். 

Saturday, 23 August 2025

ஒரு புதிய கண்டடைதல்

 இன்று ஒரு புதிய சாலையின் வழியே பயணித்தேன். இந்த பிராந்தியத்தின் எல்லா சாலைகளிலும் அனேகமாக ஒரு முறையேனும் பயணித்திருப்பேன். முன்னரெல்லாம் புதிதாக ஊர்களைக் காணவும் புதிதாக சாலைகளின் வழி பயணிக்கவும் என்ற நோக்கத்துடன் மட்டுமே கூட பயணங்கள் மேற்கொள்வேன். நடுவயதில் இருக்கும் இப்போது ஏதேனும் சாலைகளில் செல்லும் போது கிளைச்சாலைகளைக் கண்டால் இது எங்கே செல்லும் என்பது ஞாபகம் வரும் ; அப்போது இளமைக் காலத்தில் எத்தனை பயணம் மேற்கொண்டிருக்கிறோம் என்னும் வியப்பும் ஏற்படும். தினம் பயணிக்க வேண்டும் என்னும் உணர்வே அகத்தை புதிதாக வைத்துக் கொள்ளும் என எண்ணுவேன். குத்தாலத்திலிருந்து அணைக்கரைக்கு காமாட்சிபுரம் கோணலாம்பள்ளம் ஆகிய ஊர்களின் வழியே செல்ல ஒரு சாலை இருப்பதை மைல்கற்கள் மூலம் அறிந்தேன். அந்த பாதை வழியே நான் சென்றதில்லை என்பதால் இன்று அந்த வழியே பயணித்தேன். அசல் தஞ்சாவூர் கிராமங்கள். எப்போதுமே புதிய நிலத்தைப் பார்க்கும் போது அந்த நிலத்தில் வாழலாம் எனத் தோன்றும். இன்று நான் பார்த்த கிராமங்கள் வளமான தஞ்சாவூர் மாவட்ட கிராமங்கள். மானசீகமாக அந்த ஊர்களில் 15 ஏக்கர் நிலம் வாங்கி அதில் மரப்பயிர்கள் வைத்து தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தேன்! ரியல் எஸ்டேட் எனது தொழில் என்பதால் இவ்விதமான எண்ணமும் கற்பனையும் எழுவதைத் தடுக்க முடியாது ! இன்று ஒரு புதிய வழித்தடத்தை அறிந்து கொண்டதும் அதில் பயணித்ததும் மகிழ்ச்சியை அளித்தது.   

Friday, 22 August 2025

புரட்சித் துறவி

 

நூல் : புரட்சித் துறவி ஆசிரியர் : ரா. கி. ரங்கராஜன் பதிப்பகம் : அல்லயன்ஸ் பதிப்பகம் மயிலாப்பூர் சென்னை.

மேரி கெரெல்லி ‘’தி மாஸ்டர் கிருஸ்டியன்’’ என எழுதிய நாவலை ரா.கி.ரங்கராஜன் தமிழில் புரட்சித் துறவி என எழுதியிருக்கிறார். ஐரோப்பாவின் அரசியல் மோதல்களுக்கும் மத நிறுவனங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கும் நிலையில் அங்கே ‘’சர்ச்’’ எனப்படும் அமைப்பு அரசாங்கங்களை விட வலிமையான அமைப்பாக உருவெடுத்து நிற்பது ஐரோப்பிய மற்றும் உலக நாடுகளையும் அதன் பொதுமக்களையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கும் நிலைக்கு வந்து நிற்கிறது.  இந்நிலையில் மதம் உருவாக்கும் அழுத்தத்துக்கு ஐரோப்பிய சமூகம் ஆற்றும் எதிர்வினை ஐரோப்பாவின் சமூக பொருளாதார அரசியல் வாழ்வில் பிரதிபலிக்கிறது. இந்த சூழலைப் பின்புலமாகக் கொண்டு குறியீட்டு ரீதியிலான கதாபாத்திரங்களால் மானுட வாழ்க்கையை இயக்கும் விசைகளையும் மானுடர்களை வியாபிக்கும் உணர்வுகளையும் மானுடர்களின் ஆன்மீகத் தேடலையும் சித்தரிக்கும் நாவல் ‘’புரட்சித் துறவி’’. 

Thursday, 21 August 2025

சுற்றுப்பயணம்

 ஊரில் எனது நண்பர் ஒருவர் இரண்டு கிரவுண்டுக்கும் அதிகமான இடம் ஒன்றை வாங்கியிருக்கிறார். அவருக்கு மனை வாங்கிக் கொடுத்து அந்த மனைக்கு வங்கிக்கடனும் ஏற்பாடு செய்து கொடுத்து பட்டா மாற்றமும் செய்து கொடுத்துள்ளேன். அந்த மனையில் ஒரு அபார்ட்மெண்ட்ஸ் கட்ட இருக்கிறோம். அதன் பிளான் ஒன்றை நண்பரிடம் அளித்துள்ளேன். ஒவ்வொரு வீடும் 495 சதுர அடி பரப்பளவு கொண்டது. ஒவ்வொன்றும் 1 BHK வீடுகள். இரண்டு வீடுகளைச் சேர்த்தால் ஒரு 3 BHK வீடாக ஆகும். நண்பர் இன்னும் கொஞ்சம் அதிக பரப்பில் வீடுகளை அமைக்கலாமா என்ற யோசனையில் இருக்கிறார். இரண்டு வீடுகளை இணைத்தால் ஒரு பெரிய வீடு கிடைத்து விடும் என்ற நிலையில் இப்போது உள்ள பிளான் சரியாக இருக்கும் என்பது தரப்பு. இந்த பரிசீலனையில் சில வாரங்கள் கடந்தன. ஊரிலிருந்து 10 கி.மீ சுற்றளவுக்குள் உள்ள ஊர்களில் இருப்பவர்களே இந்த அபார்ட்மெண்ட்ஸ்ஸின் வாடிக்கையாளர்கள். ஆகவே அந்த ஊர்கள் எவை எவை என புறவயமாக வரையறுத்துக் கொண்டால் அதற்குள் நமது பணிகளைக் குவித்துக் கொள்ளலாம் என்பதால் அந்த கிராமங்களைப் பட்டியலிட்டுக் கொண்டேன். மொத்தம் 45 கிராமங்கள் உள்ளன. அதில் 20 கிராமங்கள் முக்கியமானவை. 

இன்று அந்த கிராமங்களின் வழியே ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். இவற்றுக்குள் தான் பணியாற்ற வேண்டியிருக்கும் என்ற புரிதல் மேம்பட இந்த சுற்றுப்பயணம் உதவியது. 

ஒரு குயர் நோட் ஒன்றில் ஒவ்வொரு நாளும் என்னென்ன பணிகள் செய்தேன் எனக் குறித்து வைத்துக் கொண்டு வாடிக்கயாளர்களைச் சந்திக்க இருக்கிறேன்.  

Tuesday, 19 August 2025

நாடு முன்னேறியிருக்கிறதா?

இன்று என்னுடைய தொழில் நிமித்தமாக ஒருவரைச் சந்திக்கச் சென்றேன். ஊரிலிருந்து மேற்கே 10 கி.மீ சென்று பின் அங்கிருந்து வடக்கே திரும்பி 10 கி.மீ சென்று அங்கேயிருந்து கிழக்கே திரும்பி மேலும் 10 கி.மீ சென்று அவரைச் சந்தித்து விட்டு அங்கிருந்து 10 கி.மீ தெற்கே வந்து புறப்பட்ட இடமான எனது ஊரை அடைந்தேன். 40 கி.மீ சுற்றளவு கொண்ட சிறு பயணம். சந்திக்கச் சென்றவர் ஊருக்கு வடமேற்கே 20 கி.மீ தூரத்தில் கடை வைத்திருக்கிறார். கடையில் அவர் இன்று இருந்திருந்தால் சென்ற மார்க்கத்திலேயே மீண்டும் திரும்பி வந்திருப்பேன். கடையில் இல்லாததால் அவரைக் காண வீட்டுக்குச் சென்றிருந்தேன். இந்த பயணம் முழுக்க முழுக்க சிறு கிராமங்களினூடாக நிகழ்ந்தது. நான் என்னுடைய ஐந்து வயதிலிருந்து கிராமத்துச் சாலைகளைக் கண்டு வருகிறேன். என்னுடைய இளம் வயதில் அவை எப்படி இருக்கும் என நான் அறிவேன். இன்று அனைத்து சாலைகளும் மிகவும் சிறப்பாக இருந்தன. இப்போது எல்லா சாலைகளும் சிறப்பாக இருக்கின்றன. சிறு சிறு கிராமங்களில் கூட ஹார்டுவேர் கடைகள் இருக்கின்றன என்பதை கவனித்தேன். கிராமங்களில் பெரிய பங்களா அளவிலான வீடுகள் கட்டப்படுகின்றன என்பதைக் கண்டேன். அது ஒரு சிறு கிராமம். அங்கே இரு சக்கர வாகன சீட் கவர் கடை ஒன்று பெரிய அளவில் இருப்பதைக் கண்டேன். கிராமங்களில் எல்லா வீடுகளிலும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் இருக்கின்றன. வீட்டின் ஆணுக்கு ஒரு வாகனம். வீட்டின் பெண்ணுக்கு ஒரு வாகனம். ஒரு கிராமத்தில் 500 வீடுகள் இருந்தால் அங்கே குறைந்தது 800 இரு சக்கர வாகனமாவது இருக்கும். நான் பார்த்த கிராமம் 20 கிராமங்களுக்கு மையம். அவ்வாறெனில் அந்த பிராந்தியத்தில் 16,000 இரு சக்கர வாகனமாவது இருக்கும். அந்த கிராமத்தில் அந்த கடையை அமைக்க வேண்டும் எனத் தோன்றியது மிக நல்ல யோசனையே. அவருக்கு அந்த கடை மூலம் ஒரு நாளைக்கு 1000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இது மிகக் குறைந்தபட்ச கணக்கீடு. இன்னும் அதிகமாக கூட வருமானம் கிடைக்கும். சந்திக்கச் சென்றவரிடம் அவரது சொத்து ஒன்றை அடமானமாக வைத்து வங்கிக் கடன் பெறுமாறு ஒரு யோசனை சொன்னேன். இது வரை வங்கிக் கடன் பெற்றதில்லை என்பதால் புதிதாக அந்த பழக்கத்தை உருவாக்க வேண்டாம் என நினைக்கிறேன் என்று அவர் கூறினார். சூழலைப் பொறுத்து பின்னர் முடிவெடுக்கலாம் என ஒத்துக் கொண்டேன். ஊருக்குத் திரும்பும் வழியில் ஒரு சலூனில் முகச் சவரம் செய்து கொண்டேன். அந்த கடையைத் தொடங்கியிருப்பவர் ஓர் இளைஞர். கடை துவங்கி இரண்டு மாதம் ஆகிறது என்று கூறினார். தேவை ஏதும் இருப்பின் வங்கியை அணுகி கடன் பெற்றுக் கொள்ளுங்கள் என அவரிடம் சொன்னேன். வங்கியில் கடன் வாங்கி பழக்கம் இல்லை ; எனவே அதனை புதிதாக உருவாக்க வேண்டாம் என நினைக்கிறேன் என அந்த சலூன்காரர் சொன்னார். நான் முதலில் சந்திக்கச் சென்றவர் பெரும் செல்வந்தர். அவரும் இதையே சொன்னார். சலூன்கடைக்காரர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர். அவரும் அதையே சொன்னார். அந்த பிராந்தியத்தின் வங்கி அதிகாரிகள் இவர்களைப் போன்றவர்களைக் கண்டடைய வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் இரு தரப்புக்கும் பரஸ்பர பயன் விளையும். நல்ல தரமான சாலைகள், நிறைய புதிய தொழில்கள், நிறைய முயற்சிகள் ஆகியவற்றைக் கண்டது நாடு முன்னேறியிருக்கிறதா என்னும் கேள்விக்க்கான பதில் நேர்மறையானதாகவே இருக்கிறது என்னும் நம்பிக்கையை அளித்தது.  

Saturday, 16 August 2025

ஸ்திதப்பிரக்ஞன்

 
நூல் : ஸ்திதப்பிரக்ஞன் ஆசிரியர் : சோ பக்கம் : 138 விலை : ரூ.110 பதிப்பகம் : அல்லயன்ஸ் பதிப்பகம், ப.எண் 244, ராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர்,600004

துக்ளக் இதழில் அதன் அப்போதைய ஆசிரியர் சோ அவர்கள் முன்னாள் பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களின் மறைவுக்கு எழுதிய அஞ்சலிக் கட்டுரையும் அவரைப் பற்றிய வேறு சில கட்டுரைகளும் அவருடைய நேர்காணல்களும் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மொரார்ஜி தேசாய் என்ற மகத்தான மனிதரின் ஆளுமையின் மகத்தான தன்மையின் சில பகுதிகளை இந்நூல் வழியே நாம் அடையாளம் காண முடிகிறது. 

லால் பகதூர் சாஸ்திரிக்குப் பின் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றிருக்க வேண்டியவர் மொரார்ஜி தேசாய். அதுவே இயல்பான தேர்வாக இருந்திருக்கும். காமராஜர் இந்திரா காந்தியை நாட்டின் பிரதமராக்க சில முன்னெடுப்புகளை மேற்கொண்டார். அவை வெற்றி பெற்றன. நேருவின் வாரிசு என்னும் அடையாளத்தை எப்போதும் தன் கவசமாகக் கொண்டிருந்த இந்திரா காங்கிரஸின் மூத்த தலைவர்கள் மீது அச்சமும் விலக்கமும் கொண்டிருந்தார். அது காங்கிரஸ் கட்சியை அவர் உடைக்கும் அளவுக்கு கொண்டு சென்றது. நாடெங்கும் இந்திரா சர்க்காருக்கு எதிரான மனோபாவம் மக்களிடம் உருவாகி வந்ததை உணர்ந்த இந்திரா ஜனநாயகத்தைப் படுகுழியில் புதைத்து ‘’நெருக்கடி நிலை’’யை செயலாக்கினார். தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அதிகாரிகள் கையில் ஆட்சியைக் கொடுப்பதன்றி வேறேதும் அல்ல அச்செயல். நாடு பல மாதங்கள் சர்வாதிகார ஆட்சியின் கீழ் சென்றது. அது மிகப் பெரிய கொந்தளிப்பான காலகட்டம். நமது நாட்டின் மேற்கு கிழக்கு ஆகிய இரு திசைகளிலும் பாகிஸ்தான் , சீனா என நம்மை ஆக்கிரமித்த பகை நாடுகள், உலகமே அமெரிக்கா - ருஷ்யா என இரு நாடுகளின் அணியில் சேர்ந்திருக்கும் நிலை , நாட்டின் வறுமை, நாட்டின் கல்வியறிவு, நாட்டின் பொருளாதாரம் என பல்வேறு விதமான சிக்கல்கள். இத்தகைய சிக்கல்களில் நாடு சிக்குண்டு இருந்த போது நாட்டைப் பற்றியும் நாட்டின் எதிர்காலம் குறித்தும் மொரார்ஜி பேசியிருக்கும் நிறைய விஷயங்கள் இந்நூலில் பதிவாகியிருக்கின்றன. இக்கட்டான நிலையிலும் அவர் நம்பிக்கையளிக்கும் விஷயங்களை மட்டுமே கண்ணுற்றார் என்பதும் நம்பிக்கையளிக்கும் விஷயங்களை மட்டுமே பேசினார் என்பதும் அவர் எத்தனை மகத்தான மனிதர் என்பதைக் காட்டுகிறது. இலட்சியவாதத்திற்கான இடத்தை எப்போதும் இல்லாமல் செய்து விட முடியாது என்பதற்கு மொரார்ஜி தேசாய் அவர்களின் சொற்களே சாட்சி. 

முன்னாள் பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாயின் ஆளுமையின் முக்கியமான பகுதிகளை அடையாளப்படுத்தும் நூல் ‘’ஸ்திதப்பிரக்ஞன்’’. 

Friday, 15 August 2025

குரு கோவிந்த் சிங்


 நூல் : குரு கோவிந்த் சிங் ஆசிரியர் : வ.வே.சு ஐயர் பக்கம் : 80 விலை ரூ.80 பதிப்பகம் : சுடர் பதிப்பகம், 5, ஜோதி நகர் 4-வது தெரு, மாடம்பாக்கம், சென்னை - 600073

நமது நாட்டின் வட மேற்கு திசையிலிருந்து நமது நாட்டை ஆக்கிரமிக்க நமது நாட்டின் செல்வத்தை கொள்ளையடிக்க நமது நாட்டை ஆட்சி செய்ய ஆக்கிரமிப்பாளர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடர்ச்சியாக முயற்சித்த வண்ணம் இருந்தனர். அராபியர்கள், துருக்கியர்கள், மொகலாயர்கள், பாரசீகர்கள், ஆப்கானியர்கள் ஆகியோர் இவ்விதம் நம் நாட்டை நோக்கி படையெடுத்து வந்தனர். போர்வெற்றியின் மூலம் நாட்டின் வட பகுதியிலும் மைய நிலத்திலும் அவர்கள் தங்கள் அரசை அமைத்தனர். இருப்பினும் அவர்கள் ஆட்சி நிலைகொண்டிருந்த காலம் முழுவதும் அந்த ஆட்சியை சுதேச மக்களும் சுதேச மன்னர்களும் எதிர்த்த வண்ணமே இருந்தனர். ராஜபுத்திரர்களும் மராத்தியர்களும் விஜயநகரப் பேரரசும் ஆக்கிரமிப்பாளர்களின் அரசை அகற்றி சுதேச அரசுகளை நிறுவினர். இந்த வரிசையில் முக்கியமானவர்கள் சீக்கியர்கள். இந்திய வீரத்தின் ஒளி விடும் வைரங்களில் முக்கியமானவர்கள். 

ஐந்து நதிகள் பாயும் பஞ்சாப்பில் விவசாயிகளாக குடியானவ வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த சமூகம் சீக்கிய சமூகம். ஞானியான குரு நானக்கின் போதனைகளைப் பின்பற்றி வந்தனர். ஔரங்கசீப் அந்த சமூகத்துக்கு பெரும் இடைஞ்சல்களைக் கொடுத்து அவர்களை மதம் மாறச் சொல்லி வற்புறுத்தி வந்தான். ஔரங்கசீப்பின் மதமாற்ற முயற்சிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தவர் குரு கோவிந்த் சிங். அவர்கள் பஞ்சாப்பின் குடியானவ சமூகத்தை போர்ச் சமூகமாக மாற்றினார். நாட்டைக் காக்க பண்பாட்டைக் காக்க ஒவ்வொரு குடியானவனும் போர்வீரனாக மாற வேண்டும் என்று தம் மக்களுக்கு எடுத்துச் சொன்னார். கேசம், கச்சை, கங்கணம், வாள், தலைப்பாகை ஆகிய ஐந்து சின்னங்களை எப்போதும் தரித்து மனதால் போர் வீரனாக இருக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கினார். அவர் உருவாக்கிய வீரம் செறிந்த வாழ்க்கைமுறையும் வீரம் செறிந்த மதிப்பீடுகளும் இன்றும் சீக்கியர்களை நம் நாட்டின் காவலர்களாக இருத்துகிறது. குரு கோவிந்த் சிங் போல நாட்டுக்காகவும் பண்பாட்டுக்காகவும் அத்தனை வலிகளையும் துயர்களையும் சுமந்த இன்னொருவர் இருக்க முடியாது. அத்தனை தியாகங்கள் நிறைந்தது அவருடைய வாழ்க்கை. தன் வாழ்நாள் முழுதும் வெற்றி தோல்விகள் குறித்து கவலைப்படாமல் போராடிக் கொண்டிருந்த அவருடைய வாழ்க்கையே பின்னாளில் சீக்கியர்கள் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்க காரணமாக அமைந்தது. 

குரு கோவிந்த் சிங்கின் தியாக வரலாற்றை தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரரான வ.வே.சு ஐயர் ‘’குரு கோவிந்த் சிங்’’ என்ற சிறு நூலாக எழுதியுள்ளார். 

Tuesday, 12 August 2025

வழக்கம்

 எனக்குத் தெரிந்த ஒரு அலுவலகம். அதில் பணி புரிபவர்கள் அனைவருமே எனக்கு பரிச்சயமானவர்கள். எல்லா அலுவலகங்களையும் போல காலை 10 மணிக்கு அலுவலகம் தொடங்கும். மாலை 5 மணிக்கு அலுவலக நேரம் நிறைவு பெறும். பத்து மணிக்கு அலுவலகம் வந்தாக வேண்டும் ; ஏனெனில் டிஜிட்டல் வருகைப்பதிவு உண்டு. அலுவலகத்தில் பெரும்பாலோனோர் மாலை 5 மணியிலிருந்து இரவு 7.15 வரை வேலை செய்து விட்டே அலுவலகம் நீங்க வேண்டும் என்று அதன் தலைமை அதிகாரி எதிர்பார்க்கிறார். அவ்விதமே நிகழ்கிறது. நான் அவர்களிடம் கேட்டேன். காலை 10 மணிக்கு அலுவலகம் துவக்க நேரம். அனைவரும் காலை 8 மணிக்கு வந்து விடுங்கள் ; மாலை 5 மணிக்கு வீட்டுக்குப் புறப்படுங்கள் என்றேன். சலிப்பாக இரண்டு மணி நேரம் கூடுதல் நேரம் என்பதால் இரண்டும் ஒன்று தானே என்றனர். 

அந்த இரண்டும் ஒன்றல்ல.

ரயில் ஒன்று காலை 10 மணிக்கு வருகிறது என வைத்துக் கொள்வோம். அந்த ரயிலில் ஏற வேண்டியவர் ஒரு மணி நேரம் முன்பாகவே ரயில் நிலைய நடைமேடைக்கு வந்து ரயிலுக்காகக் காத்திருப்பார் ; அந்த ரயிலில் வந்து இறங்குபவர் ரயிலிலிருந்து இறங்கி உடனே தனது அடுத்த திட்டமிடலை நோக்கிச் செல்வார். ரயிலில் வந்து இறங்கியவரும் ரயில் நிலைய நடைமேடையில் மேலும் ஒரு மணி நேரம் இருப்பது உசிதமா என யோசித்துப் பாருங்கள் என்றேன். 

Monday, 11 August 2025

அண்ணன் தம்பி உரையாடல் (நகைச்சுவைக் கட்டுரை)

வெளி மாநிலத்தில் வேலை பார்க்கும் நண்பன் அமைப்பாளரின் பிராந்தியத்தைச் சேர்ந்தவன். சொந்த ஊருக்கு வந்திருந்த அவனைக் காண அமைப்பாளர் சென்றிருந்தார். சந்தித்த முதல் நாள் முதல் இன்று வரை இருவரும் அன்பின் ஆழம் கொண்ட பிணைப்புடன் இணைந்திருக்கிறார்கள்.  நண்பன் அமைப்பாளரை ‘’பழைய ஆள்’’ என்று நினைத்துக் கொள்வான் ; ஆனால் அமைப்பாளரிடம் அப்படி கூற மாட்டான். அமைப்பாளர் நண்பனிடம் ‘’நான் கொஞ்சம் பழைய ஆள்’’ தம்பி என்று கூறுவார். தான் மனதில் நினைப்பதை அமைப்பாளரே கூறி விடுகிறார் என்பதால் விஷயம் தம்பிக்கு எளிதானதாகி விடும். 

தம்பி ஏதேனும் ஒரு சம்பவத்தையோ எண்ணத்தையோ முன்வைக்க அமைப்பாளர் அந்த சம்பவத்தின் எண்ணத்தின் ஐயாயிரம் ஆண்டு வரலாற்றுப் பின்னணியை ஆராய்ந்து விளக்கி சமகாலத்தில் அந்த விஷயம் எவ்விதம் இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்வார். இதுதான் அண்ணன் தம்பியின் உரையாடல் பாணி. எந்த சமகால விஷயத்துக்கும் எப்படி குறைந்தது ஐயாயிரம் ஆண்டாவது வரலாற்றுப் பின்னணி இருக்கிறது என்னும் வியப்பும் இந்த வரலாற்றுப் பின்னணி நிஜமாகவே இருக்கிறதா அல்லது அமைப்பாளர் உருவாக்கி விடுகிறாரா என்னும் ஐயமும் நண்பனுக்கு எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும். 

தம்பியின் ஊரில் தம்பிக்கு ஒரு நண்பன் இருக்கிறான். அவனுடைய கிராமத்துக்கு அமைப்பாளரும் தம்பியும் சென்றிருக்கிறார்கள். அந்த ஊரில் எல்லா வீடுகளிலும் மாடு உண்டு. மாலை 3 மணி ஆனால் அந்த ஊரில் எல்லா பெண்களும் பால் கறக்க சென்று விடுவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் நான்கு அல்லது ஐந்து மாடுகள் இருக்கும். எனவே மதியம் 2.45லிருந்து மாலை 3.30 வரை அவர்கள் வீட்டில் இருந்தே ஆக வேண்டும். வருடத்தின் 365 நாளும் அவர்களுக்கு இந்த வேலை உண்டு. எல்லா வீடுகளிலும் மாடுகள் இருப்பதால் இந்த வேலையை இன்னொருவர் செய்ய பணிக்க முடியாது. கறவை நேரம் கடந்து விட்டால் மாடு சிரமப்படும். எனவே உலகில் என்ன நடந்தாலும் அந்த ஊரில் இருக்கும் பெண்கள் மதியம் 2.45லிருந்து மாலை 3.30 வரை பால் கறந்தே ஆக வேண்டும். ஊரில் இருக்கும் ஆண்கள் காலையிலிருந்து மதியம் வரை மாட்டுக்குத் தண்ணீர் வைப்பது , மாட்டை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது, காலையும் மாலையும் கறக்கப்படும் பாலை பக்கத்தில் இருக்கும் நகரத்துக்குக் கொண்டு சென்று விற்பனை செய்வது ஆகிய பணிகளைச் செய்வார்கள். எனவே அந்த ஊரின் ஆண்களால் ஊரை விட்டு எங்கும் வெளியே செல்ல முடியாது. அந்த ஊரின் நிலவியல், சமூகப் பழக்கம் காரணமாக இந்த விஷயங்கள் அங்கே உள்ளன. பால் மூலம் வருமானம் கிடைக்கிறது என்பதால் இந்த விஷயம் அங்கே 75 ஆண்டுகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ளது. ஆனால் அந்த ஊரில் இருக்கும் ஆண்களாலோ பெண்களாலோ வெளியூர் செல்ல முடியாது ; வெளியூரில் நிகழும் மங்கல நிகழ்ச்சிகளுக்கு செல்ல முடியாது. இது அவர்களின் பால் வணிகத்தின் விளைவுகளில் ஒன்று. அந்த ஊரின் ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது 10 ஏக்கர் நிலத்துக்காவது சொந்தக் காரர்களாய் இருப்பார்கள். அவர்கள் பெரும் செல்வந்தர்கள் ஆனால் ஊரை விட்டு வெளியே செல்ல முடியாதவர்கள் என்னும் நிலை அவர்களுக்கு. 

தம்பி அந்த ஊரைப் பற்றி ஒரு விஷயத்தை அமைப்பாளரிடம் சொன்னான். ‘’அண்ணன் ! அந்த ஊர்ல சாயந்திரம் ஆனா விளக்கு ஏத்தற பழக்கம் யாருக்கும் இல்ல’’ என்றான். 

அமைப்பாளர் சொன்னார் ; ‘’மின்சாரம் பயன்பாட்டுக்கு வர்ரதுக்கு முன்னாடி உலகத்துல இருக்கற எல்லா வீடுகள்லயும் சாயந்திரம் ஆனா விளக்கு ஏத்தற வழக்கம் இருந்திருக்கும் இல்லயா?’’

‘’ஆமாம் அண்ணன்’’

’’அப்ப இந்த ஊர்லயும் அந்த வழக்கம் இருந்திருக்கும் தான?’’

‘’ஆமாம் இருந்திருக்கும்’’ என மையமாக சொன்னான் தம்பி. 

’’இந்த ஊருக்கு கரண்ட் வந்து ஐம்பது வருஷம் ஆகியிருக்கும். அப்ப இந்த வழக்கம் இல்லாம போயிருக்கலாம்’’

நண்பன் மௌனமாக இருந்தான். ‘’அண்ணன் ! அந்த ஊர்ல கல்யாண சீர் செய்யும் போது இப்பவும் மண்ணெணெய் அரிக்கேன் விளக்கு வாங்கிக் கொடுக்கற வழக்கம் இருக்கு’’

‘’தட்ஸ் இட்’’ என்றார் அமைப்பாளர். 

‘’அங்க உள்ள குடும்பங்களோட குலதெய்வம் யாருன்னு தெரியுமா?’’ என்று கேட்டார் அமைப்பாளர். 

‘’பேய்ச்சியம்மன்’’ என்றான் நண்பன். 

‘’துடியான தெய்வங்கள் குலதெய்வமா இருந்தா அந்த குலதெய்வத்துக்கு வருஷம் ஒரு தடவை குலதெய்வம் இருக்கற கோயிலுக்குப் போய் அங்க ரெண்டு நாளோ மூணு நாளோ தங்கி ஆடு , கோழி பலி கொடுத்து பூசனை செஞ்சு சாமி கும்பிடுவாங்க. அந்த குலதெய்வ வழிபாட்டுல அவங்க ரொம்ப தீவிரமா இருப்பாங்க.’’ என்றார் அமைப்பாளர். 

வரலாறு, சமூகவியல், மானுடவியல், பொருளியல் என பல அறிவுத்துறைகள் சூழ்ந்து விவாதம் நடந்த பின் தான் பதில் அறிய விரும்பும் ஒரு தனிப்பட்ட கேள்வி ஒன்றை தம்பியிடம் கேட்டார் அமைப்பாளர். 

‘’தம்பி ! நான் எல்லாருக்காகவும் தான் யோசிக்கறன். செயல்படறன். ஆனா என்னால என் கூட 4 பேர் 5 பேர் இருக்காங்கண்ணு ஒரு நிலையைக் கொண்டு வர முடியல. அது ஏன்?’’ 

அண்ணனின் கேள்விக்கு தம்பி யோசித்துப் பார்த்து ஒரு திருஷ்டாந்தம் சொன்னான். 

‘’அண்ணன் ! இப்ப உங்க ஊர்ல இருந்து நீங்க நான் உங்க ஃபிரண்ட்ஸ் என் ஃபிரண்ட்ஸ்னு பத்து பேர் ஸ்ரீரங்கம் போலாம்னு உங்களுக்குத் தோணுனா எப்படி பிளான் பண்ணுவீங்க ? ஒரு லிஸ்ட் எடுப்பீங்க. நாம என்னைக்கு எத்தனை மணிக்கு ஸ்ரீரங்கத்துல இருக்கணும்னு டைம் அண்ட் டேட் சொல்லுவீங்க. நீங்க சூஸ் பண்ற மோட் ஆஃப் டிரான்ஸ்போர்ட் டிரெயினா இருக்கும். இது எல்லாத்தயும் அறிவிச்சிடுவிங்க. யார் ஜாயின் பண்ணனுமோ ஜாயின் பண்ணிக்கங்கன்னு சொல்லிடுவிங்க இல்லையா?’’ 

அமைப்பாளருக்கு ஒரே வியப்பு. தம்பியும் தன்னைப் போலவே பிளான் செய்கிறானே என்று. 

‘’ஆமாம் தம்பி அப்படித்தான்’’ என்றார். 

‘’இப்படி 10 பேர்ட்ட அறிவிச்சா நீங்களும் நானும் மட்டும் தான் எஞ்சி நிக்கறோம் . இல்லயா?’’

‘’ஆமாம் தம்பி’’

‘’உங்க பிளானிங் வெரி குட். ஆனா அதுல இன்னும் சில அம்சங்களைச் சேக்கணும். உதாரணமா மோட் ஆஃப் டிரான்ஸ்போர்ட் கார்னு சொன்னா இன்னும் 2 பேர் சேருவாங்க. பெரிய கார் இருக்கு. அதுல இடம் இருக்குன்னு சொன்னா இன்னும் 2 பேர் வருவாங்க. 6 பேர் சேந்து போகப் போறோம்ங்கறதாலயே இன்னும் 2 பேர் வந்துருவாங்க. பத்துங்கற நம்பர எட்டு கிட்ட கொண்டு வந்துடலாம்’’

‘’நான் சொன்ன பிளான் எகானமிக்கல். அது பத்து பேருக்கும் பொருந்தும் ; ஒருத்தருக்கும் பொருந்துமே?’’

’’அதனால தான் அண்ணன் தனியா இருக்கீங்க. தனியா இருக்கீங்கங்கறதை உங்களோட பின்னடைவா நினைக்க வேண்டாம். அது உங்க பலமா கூட இருக்கலாம்.’’

Friday, 8 August 2025

நிகழ்ச்சி ஏற்பாடு ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளர் தனது நண்பரான ஒரு கவிஞருக்கு ஃபோன் செய்தார். 

கவிஞர் ஃபோனை எடுத்து ஆர்வத்துடன் ‘’பிரபு ! ‘’மறையொலி’’ பதிவு வாசிச்சன். நாம நிச்சயமா ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செஞ்சுடலாம்’’ என்றார்.  

‘’பங்கேற்பாளர்கள் 15 லிருந்து 20 பேர் எதிர்பார்க்கலாம். அவங்க தங்க ஒரு இடம் வேணும். அவங்களுக்கு ஒரு வாரம் அல்லது பத்து நாள் உணவு ஏற்பாடு செய்யணும். மொத்த ஏற்பாடு இவ்வளவு தான்’’ என்றார் அமைப்பாளர். 

‘’மறை ஓதக் கூடியவங்கள நாம அழச்சுட்டு வரணுமே?’’

‘’இணையத்துல நான்மறையும் ஒலிப்பதிவா கிடைக்குது. அத ஒரு பென் -டிரைவ் ல சேமிச்சு பிளே பண்ணலாம்’’

‘’என்ன இருந்தாலும் அது நேரா கேக்கறதுக்கு சமமா இருக்குமா?’’

‘’இருக்காது. ஆனா அவங்க 5 பேரோ அல்லது 7 பேரோ ஒரு வாரம் அல்லது பத்து நாள் தங்கியிருந்து மறை ஓதணும்னா நாம மிகக் குறைந்தபட்சமாகவேனும் ஒரு சன்மானம் கொடுத்து கௌரவம் செய்யணும் இல்லயா?’’

‘’நிச்சயமா’’

‘’அதுக்கு நம்ம கிட்ட பட்ஜெட் இருக்கா?’’

கவிஞர் மௌனமானார். 

அமைப்பாளர் சொன்னார். ‘’இதுல இன்னொரு விஷயமும் இருக்கு. ரிக் வேதம் சில பேருக்கு பாடமா இருக்கும். யஜூர் சில பேருக்கு பாடம். சாம வேதத்தை சில பேர் முழுசா மனப்பாடமா வச்சிருப்பாங்க. அதர்வம் படிக்கறவங்க ரொம்ப கொஞ்சம் பேருதான். அப்ப நாம 5 பேரை மட்டும் ஏற்பாடு செஞ்சா போதாது. 5*3 =15 பேர ஏற்பாடு செய்யணும்’’

இதில் இப்படி ஒரு பரிமாணம் இருப்பதைக் கவிஞர் யோசிக்க ஆரம்பித்தார். 

அமைப்பாளர் தொடர்ந்தார். ‘’ நாம இப்ப ஆரம்பிக்கற இடத்துல இருக்கோம். முதல்ல ஒரு ஸ்டெப் எடுத்து வைப்போம். அப்படி வைக்கறதால நாம அமைதி நிலைல இருந்து ஒரு இயக்கத்துக்கு வரோம். நம்மால எளிதா செய்யக்கூடிய ஒரு விஷயத்தை நம்ம முழு மனசோட செய்வோம். அந்த செயலும் அந்த உணர்வுமே நம்ம அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும். நீங்க சொல்றது ரொம்ப உத்தமமான விஷயம். ஆனா அத முதல் ஸ்டெப்பா வச்சுக்காம இரண்டாவது இல்லண்ணா மூணாவது ஸ்டெப்பா செஞ்சு பாப்பம்’’

காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. இந்த ஏற்பாட்டை காவிரிக் கரை ஒன்றில் செய்தால் நன்றாக இருக்கும் என யோசித்த அமைப்பாளர் பென் - டிரைவ்வையும் சி.டி பிளேயரையும் யாரிடமிருந்து பெற்றுக் கொள்வது என யோசிக்கத் தொடங்கினார்.  

Thursday, 7 August 2025

வங்கி ஒன்றை உருவாக்குதல்

தமிழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று சமூகங்கள் வங்கி தொடங்கி நடத்தியுள்ளன. ஆர்ய வைஸ்ய சமூகத்தினர் துவங்கிய கரூர் வைஸ்யா வங்கி, நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் துவங்கிய தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த சிட்டி யூனியன் வங்கி ஆகியவையே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தொடங்கிய மூன்று வங்கிகள். இந்த மூன்று வங்கிகளும் மாநில வளர்ச்சிக்கும் அவை அமைந்திருக்கும் ஊரின் பிராந்தியத்தின் சமூக வளர்ச்சிக்கும் பெரிய அளவில் துணை புரிந்திருக்கின்றன. தமிழகத்தின் பெரும்பான்மையான விவசாயக் குடிகளுக்காக ஒரு வங்கி தொடங்கப்பட்டால் அந்த வங்கி விவசாயக் குடிகளின் வாழ்வில் பெரும் திருப்புமுனையை உண்டாக்கும். ஜனநாயக யுகத்தில் சட்டம் குடிகள் அனைவரும் சமம் என்னும் நிலையை உறுதி செய்துள்ளது. நாடு வளர்ச்சியடைந்திருக்க வேண்டுமெனில் நாட்டின் குடிகள் - குறிப்பாக - விவசாயக் குடிகள்  வளத்துடன் வாழ வேண்டும். ஜனநாயக யுகம் குடிமக்கள் சுயசார்புடன் விளங்குவதையே வளம் எனக் கொள்கிறது. 

தமிழகத்தின் விவசாயக் குடிகள் பெருநிலக்கிழார்கள் அல்ல ; 1 ஏக்கர் , 2 ஏக்கர், 3 ஏக்கர் என நிலம் வைத்திருப்பவர்கள். செங்கல் காலவாய் தொழில் செய்பவர்கள். டிராக்டர் , டாடா ஏஸ் ஆகிய வாகனங்களை வாடகைக்கு ஓட்டுபவர்கள். கட்டுமானத் தொழிலாளர்களாக இருப்பவர்கள். சிறு கடைகள் வைத்திருப்பவர்கள். இவர்கள் வாழ்க்கை செழிப்படைந்தால் மட்டுமே மாநில வளர்ச்சி என்பது சாத்தியம். தமிழகத்தின் கோடிக்கணக்கான விவசாயக் குடிகளின் பொருளியல் வளர்ச்சிக்காக பிரத்யேகமாக ஒரு வங்கி இருக்க வேண்டியது அவசியமாகிறது. அவர்கள் தொழில் தொடங்க, செய்து கொண்டிருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்ய, தொழில் வளர்ச்சிக்கு வாகனங்கள் வாங்க, உபகரணங்கள் வாங்க விவசாயக் குடிகளுக்கென ஒரு வங்கி உருவாக்க்ப்படுவது அவசியமாகிறது. 

எனது நண்பர் ஒருவர் விவசாயக் குடியைச் சேர்ந்தவர். அவரது பிராந்தியத்தில் உள்ள எல்லா குடும்பங்களையும் அறிந்தவர். பலவிதமான பண்பாடு சார்ந்த முன்னெடுப்புகளை மேற்கொள்பவர். விவசாயக் குடிகளுக்கான வங்கியை உருவாக்க அவர் பொருத்தமான நபராக இருப்பார் என நான் எண்ணினேன். அவரிடம் ஒரு வங்கியை உருவாக்குங்கள் என்று கூறினேன். மிகப் பெரிய அச்செயலை செய்ய முடியுமா என இருவரும் விவாதித்தோம். 

9 மாதத்திலிருந்து 12 மாதம் வரை நேரம் எடுத்துக் கொண்டு மாநிலத்தின் எல்லா மாவட்டங்களுக்கும் பயணம் செய்து விவசாயக் குடும்பங்களைச் சந்தித்து விவசாயக் குடிகளுக்கான வங்கி ஒன்றை உருவாக்க வேண்டியது மிக அவசியம் என்ற கருத்தை அவர்கள் மனத்தில் பதியுமாறு பரப்புரை செய்யுமாறு கூறினேன். குடியானவர்களுக்காக துவங்க உள்ள வங்கி குறித்து விவசாயக் குடிகளுக்கு ஏதேனும் கூறுவதற்கு ஆலோசனை இருந்தால் அவசியம் குறிப்பிடுமாறு கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினேன். திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடந்தால் அடுத்த பணி என்ன என்பதை சேர்ந்து யோசிப்போம் என்று கூறியிருக்கிறேன். 

Wednesday, 6 August 2025

வெப்பும் நீரும்

எனது நண்பர் ஒருவர் ஒரு சிக்கலில் இருக்கிறார். நான் அதனை என்னுடைய இன்னொரு நண்பரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். இரண்டு பேரும் ஒருவர் மற்றொருவரை அறிய மாட்டார்கள். அவர்களுக்குப் பொதுவான நபர் இடையில் இருக்கும் நான் மட்டுமே. சிக்கலுக்கான தீர்வுக்காக முயற்சி செய்யும் நண்பர் அந்த சிக்கலின் எல்லா பரிமாணங்களையும் முழுமையாக ஆராய்ந்தார். பின்னர் அந்த விஷயத்தில் செயலில் இறங்கினார். இன்று நெடுந்தொலைவு பயணித்து இந்த விஷயம் தொடர்பாகப் பேசுவதற்கு வந்திருந்தார்.  உடன் யாரும் இல்லாமல் தனியே சென்று பேசுவது இப்போது அந்த விஷயத்துக்கு நல்லது என்பதால் தனியாகப் பேசச் சென்றார். நான் அவருடைய கார் ஓட்டுநருடன் காரிலேயே இருந்து விட்டேன். உள்ளே பேசச் சென்ற நண்பர் வெளியே வர கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாகி விட்டது. அவ்வளவு நேரம் ஆனது என்னை அமைதியிழக்கச் செய்தது. கார் ஓட்டுநரை உள்ளே அனுப்பலாமா என யோசித்தேன். குடிக்கத் தண்ணீர் கொடுத்து அனுப்பலாமா என யோசித்தேன். அவர் எவ்விதமான சூழலையும் சமாளிக்கக் கூடியவர் என்பதால் அமைதியாக இருந்தேன். மூன்று மணி நேரம் கழித்து நண்பர் வெளியே வந்தார். அவரது நடையில் சிறு சோர்வு தெரிந்தாலும் அவரது முகம் தெளிவாக இருந்தது. நான் முன்னரே வாகன ஓட்டுநரிடம் நண்பர் வந்ததும் அந்த இடத்திலிருந்து விரைவாக வெளியேறி வேறு இடம் சென்று விடுவோம் எனக் கூறியிருந்தேன். அதன் படி ஓட்டுநர் வாகனத்தை அங்கிருந்து வெளியே கொண்டு சென்றார். 

எனது மோட்டார்சைக்கிள் பயணத்தின் போது ராஜஸ்தானில் சுண்ணாம்பு மண் பிரதேசம் ஒன்றில் சாலையில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் இரு பெண் குழந்தைகளைக் கண்டேன். அவர்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் பார்த்த தினத்தன்று பள்ளி விடுமுறை என்பதால் தங்கள் வீட்டின் மாடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த நிலம் முழுக்க சுண்ணாம்புக் கற்களால் ஆனதாக இருந்தது. வெயில் அந்த மண்ணில் பட்டு சூடாவதில் அந்த சுண்ணாம்பு கற்கள் மேலும் வெப்பத்தை உமிழ்கின்றன. அந்த பிரதேசம் முழுக்க எங்கும் வெக்கை. அந்த சாலையில் எப்போதோ ஏதோ ஒரு வாகனம் கடந்து செல்கிறது. வாகனம் அந்த பகுதியில் நுழைவதை தொலை தூரத்திலேயே பார்க்கக் கூடிய வகையில் அந்த பிரதேசம் இருக்கிறது. தூரத்தில் வண்டியைப் பார்த்தால் அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வருகிறார்கள். அந்த பாதையைக் கடப்பவர்களுக்கு நீர் அளிக்கிறார்கள். வெம்மையான அந்த நிலத்தில் எல்லா ஜீவராசிகளும் தண்ணீர் தாகத்தில் இருக்கின்றன. அந்த குழந்தைகள் அங்கே வரும் ஜீவன்களுக்கு நீர் அளிக்கிறார்கள். அந்த வெப்பு நிலத்தில் அந்த குழந்தைகள் அளிக்கும் தண்ணீரால் தீரும் தாகத்தை விட மேலானது அந்த குழந்தைகள் அளிக்கும் நம்பிக்கை. அந்த குழந்தைகளின் நினைவு என் வாழ்வின் மிக அரிய செல்வங்களில் ஒன்று. 

இன்று எனது நண்பர் தான் இதுவரை பார்த்திராத தான் அறிந்திராத ஒருவருக்காக மூன்று மணி நேரம் அளித்து செயல்பட்டது மகத்தான செயல். மனிதர்கள் மேல் நம்பிக்கை கொள்வதற்கான மேலும் ஒரு தருணத்தை எனக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார் நண்பர். 

அவர் வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என வானுறையும் தெய்வத்திடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். 

மறையொலி

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரது தேவாரப் பதிகங்களைக் கேட்கும் போது நமது கவனத்துக்கு ஒரு விஷயம் தெரியவரும். ஒவ்வொரு திருத்தலத்தின் வர்ணனையை அவர்கள் தங்கள் பதிகங்களில் பாடும் போது அத்திருத்தலங்களின் இறைவனான சிவபெருமான் அத்திருத்தலங்களில் எப்போதும் ஒலிக்கும் நான்மறைகளின் ஒலியைக் கேட்ட வண்ணம் இருப்பது குறித்து குறிப்பிடுவார்கள். தேவார மூவரால் பாடல் பெற்ற எந்த தலமாக இருந்தாலும் ஊர்களில் மறையொலி கேட்கும் இந்த சித்திரம் முன்வைக்கப்பட்டிருக்கும். அந்த திருத்தலம் சிதம்பரமாக இருக்கலாம் ;  திருவண்ணாமலையாக இருக்கலாம் ; திருவாரூராக இருக்கலாம் ; திருமயிலையாக இருக்கலாம். இந்த தேவாரப் பதிகங்களைக் கேட்ட போது எனக்கு நான்மறை ஓதப்படுவதை முழுமையாக ஒருமுறை கேட்க வேண்டும் என்று தோன்றியது. வேதங்கள் நம் நாட்டில் தோன்றியவை. உலக ஞானத்தில் அரிய பொக்கிஷங்கள் அவை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவை எழுதப்படாத பிரதிகளாக ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு மனப்பாடமாக அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. இத்தகைய ஒரு மரபு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து இன்றும் தொடர்கிறது என்பது மாபெரும் மானுட அதிசயம். மானுடத்தின் மாபெரும் சாதனைகளில் ஒன்று. நான்மறைகள் மனப்பாடமாக ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு வந்து சேர்ந்திருப்பதன் பிரும்மாண்டம் புரிய வேண்டும் எனில் அவற்றை ஒருமுறையாவது முழுமையாகக் கேட்க வேண்டும் என்று தோன்றியது. இணையத்தில் நான்கு வேதங்கள் ஓதப்படுவதன் ஒலிப்பதிவுகள் முழுமையாக உள்ளன. முழுமையாக அவற்றைக் கேட்பதற்கு 150 மணி நேரம் ஆகும். நான்மறைகள் குறித்த ஆர்வம் உடைய சிலர் ஒரே இடத்தில் பன்னிரண்டு நாட்கள் கூடி முழுமையாக மறையொலியைக் கேட்கும் விதமாக ஏற்பாடு ஏதேனும் செய்ய இயலுமா என யோசிக்கிறேன் ; திட்டமிடுகிறேன். அதிகாலை படைப்போன் பொழுதிலிருந்து மாலை அந்தி வரை ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மறையொலியை மட்டும் கேட்ட வண்ணம் இருக்க வேண்டும். பங்கேற்பாளர்கள் தங்களுக்குள் எந்த சொல்லெடுத்தும் பேசிக் கொள்ளக் கூடாது. 

ஒரு விஷயம் கடினம் எனத் தோன்றினாலும் அசாத்தியம் என எண்ணப்பட்டாலும் அதனை எவ்விதம் செய்யலாம் எவ்விதம் சாத்தியப்படுத்தலாம் என முயற்சிப்பதே மானுடத்தின் சிறப்புத் தன்மையாக இருந்திருக்கிறது. 

ஆர்வமுள்ளவர்கள் காலை ஒரு மணி நேரம் மாலை ஒரு மணி நேரம் என 12 வாரங்கள் அவரவர் இடத்திலிருந்து கூட முயன்று பார்க்கலாம்.   

Tuesday, 5 August 2025

சாரதி

 எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவரிடம் பெரிய கார் ஒன்று இருக்கிறது. அந்த காருக்கு ஒரு சாரதி உள்ளார். நான் நண்பரின் வீட்டுக்கு எப்போது சென்றாலும் அது காலை 6.30 ஆக இருந்தாலும் காலை 8.30 ஆக இருந்தாலும் நண்பகலாக இருந்தாலும் மாலை 4 மணியாக இருந்தாலும் எந்நேரமும் அவர் காரை துடைத்துக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். ஒருவரால் எப்படி நாள் முழுவதும் இதே வேலையைச் செய்ய முடிகிறது என ஆச்சர்யப்படுவேன். ஒருநாளில் ஒருமுறை அவர் காரைத் தூய்மை செய்யும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார் எனில் அவர் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்த பணியை வைத்துக் கொள்வார். உதாரணத்துக்கு காலை 10 மணி. நம் சூழலில் ஊரே காலை 10 மணிக்குத் தான் செயல்படத் துவங்குகிறது. அவரை நான் ஏன் எல்லா நேரங்களிலும் தூய்மைப்படுத்திக் கொண்டிருப்பதைக் காண்கிறேன் ? அவர் மேற்கொள்ளும் செயல் உலகியலான செயல் மட்டும் அல்ல ; அவர் அந்த வாகனத்தின் சாரதியாக உலகியலுக்கு அப்பால் இருக்கும் அம்சம் ஒன்றைத் தொடுகிறார். அவர் ஒரு நாளைக்கு ஒருமுறை தான் தூய்மை செய்வார் ; நாள் முழுவதும் அதை மட்டுமே ஒருவர் செய்வதில்லை. ஆனால் தனது வாகனத்தை தனது உணர்வில் ஏந்தியுள்ளார் சாரதி. அந்த உணர்வே அவரை எப்போதும் அந்த வாகனத்தின் பக்கத்திலேயே இருக்க வைக்கிறது. அவர் வாகனத்தை நினைவில் கொண்டிருப்பது ஓர் அன்னை தன் மகவை எப்போதும் நினைவில் வைத்திருப்பது போல. ‘’மாத்ருபாவம்’’ என்கிறது நம் மரபு. தனது வாகனம் மேல் சாரதி கொள்ளும் உணர்வும் ‘’மாத்ருபாவம்’’ தான். 

Monday, 4 August 2025

அதிகார வர்க்கமும் ஜனநாயக அரசியலும்

இந்தியாவை ஆள்வது யார் ? தேசியக் கட்சி அல்லது தேசியக் கட்சிகள் அல்லது தேசியக் கட்சியும் மாநிலக் கட்சிகளும் இணைந்த கூட்டணிகள் அல்லது அரசியல்வாதிகள். மேற்கூறிய அனைத்துமே சரியான விடைகள் தான். ஆனால் அவையே பிறிதொன்றில்லாத முழுமையான பதில்களா என்று கேட்டுக் கொள்வோமாயின் அதன் பதில் ‘’ஆம்’’ என்று இருக்க முடியாது. இந்தியாவை அதிகார வர்க்கம் ஆள்கிறது. இந்தியாவில் உள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543. மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 245. மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 4123. இந்த மூன்று எண்ணிக்கைகளையும் சேர்த்தால் கூட அந்த எண்ணிக்கை 5000 க்கு குறைவானது. இந்தியாவில் மொத்த மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்கள்  எண்ணிக்கை 2,00,00,000 ( இரண்டு கோடி). அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை இந்திய ஜனநாயகத்துடன் இணைத்துப் பார்த்துக் கொள்வது நமக்கு சில விஷயங்களில் சில மேலான புரிதல்களை அளிக்கும். 

அரசின் பணிகளில் முதன்மையானது என்ன ? சமூகத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். குடிகள் அதனை அரசிடமிருந்து எதிர்பார்ப்பார்கள். இதை இன்னும் ஆழமாகப் பார்த்தால் அரசின் பணிகளில் முதன்மையானது மக்களிடமிருந்து வரி வசூல் செய்வது. ஏனென்றால் அரசு என்பது இரண்டு கோடி பேரைக் கொண்ட ஒரு அமைப்பு. அதில் உள்ள அனைவருக்கும் மாதாமாதம் ஊதியம் வழங்க வேண்டும். வரி வருவாய் சீராக இருக்க வேண்டும் என்றால் சமூகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும். நிறைய தொழில்கள் நடக்க வேண்டும். சமூகத்தில் அமைதியை நிலவச் செய்வதும் வரி வசூல் செய்வதும் மட்டுமே அரசின் வேலை. பல தொழில் செய்ய வேண்டிய பொறுப்பு நாட்டின் குடிகளுடையது. குடிகள் கோடிக்கணக்கானோர். அவர்கள் போதிய அளவு தொழில் செய்து வருமானத்தைப் பெருக்கிக் கொள்கிறார்களா என்பதையும் அரசு கவனிக்க வேண்டும். 

இந்திய ஜனநாயகத்தில் அரசு என்பது மிகவும் மெதுவாக செயல்படும் அமைப்பு என்பதை அனைவரும் அனுபவபூர்வமாக உணர்ந்திருப்பார்கள். எந்த அரசாங்கமும் முயன்றால் அடையக் கூடியது என்பது தங்கள் செயல் வேகத்தை கூட்டிக் கொள்வது மட்டும் தான். அதற்கு மேல் அரசிடம் வேறு எதுவும் எதிர்பார்க்க முடியாது. 

ஜனநாயகத்தின் மேன்மை என்பது மக்கள் பொறுப்பேற்றுக் கொள்வதே. ஜனநாயகத்தின் மேன்மை என்பது மக்கள் சுயசார்புடன் விளங்க முடியும் என்பதே. 

சிறு மாற்று

ஊரிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்துக்கு செல்லும் சுருக்கமான வழியொன்றை பயணத்துக்கு எப்போதும் பயன்படுத்தி வருகிறேன். 38 கி.மீ தூரம் கொண்ட அந்த பாதையில் 1 கி.மீ க்கும் குறைவான தூரம் மேடு பள்ளமாக இருந்தது. அந்த சாலை சீரடைந்தால் முழுமையாக நான்கு சக்கர வாகனங்கள் பயணிக்க முடியும். சீரடையாமல் இருக்கும் பாதையின் தெற்கு முனைக்கு மேற்கே ஒரு சாலை செல்கிறது. அதில் 1 கி.மீ தூரம் சென்று அங்கிருக்கும் திருப்பத்தில் வடக்கு பக்கம் திரும்பினால் மேலும் ஒரு கி.மீ பயணம் செய்தால் கிழக்கு நோக்கி ஒரு திருப்பம். அங்கே திரும்பினால் சீரடையாத சாலையின் வடக்கு முனையை வந்தடைகிறோம். இது ஒரு சிறு மாற்றுப்பாதை. இந்த பாதை ஊருக்கும் கங்கை கொண்ட சோழபுரத்துக்குமான நான்கு சக்கர வாகனப் பயணத்தை எளிதாக்குகிறது.  

Sunday, 3 August 2025

வாரத்தின் இறுதி நாள்

இன்று ஆடிப்பெருக்கு. நேற்று இரவு கிளம்பி ஸ்ரீரங்கம் செல்லலாம் என நினைத்தேன். அம்மா மண்டபத்துக்கு நம்பெருமாள் எழுந்தருளி காவிரி அன்னைக்கு சீர் கொடுக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள விருப்பம் கொண்டிருந்தேன். பராமரிப்புப் பணி நிகழும் பணியிடத்தில் நேற்று ஊழியர்கள் வரவில்லை. இன்று வருவதாகக் கூறினார்கள். பணி என வந்து விட்டால் மற்ற விஷயங்கள் அனைத்தையும் ஒத்தி வைப்பது என்பது ஆகி வந்த வழக்கம். எனவே இன்று ஊரிலேயே இருப்பது என முடிவு செய்தேன். சிமெண்ட், ஸ்டீல், ஜல்லி ஆகியவை வாங்கித் தர வேண்டியிருந்தது.   நண்பரைச் சந்திக்க வெளியூர் செல்ல வேண்டும் என நினைத்தேன். அவருடைய அலைபேசி எண்ணுக்கு முயற்சி செய்து கொண்டேயிருந்தேன். அலைபேசியுடன் தொடர்பு கிடைக்கவில்லை. இரவு 7 மணிக்கு சந்திக்கிறேன் என காலை குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். மாலை 5.30 மணிக்கு இரவு சந்திக்கலாமா அல்லது காலை சந்திக்கவா என மீண்டும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். நண்பர் அலைபேசியில் அழைத்தார். சில முக்கிய விஷயங்களைப் பேசினோம். வங்கி மேலாளர் ஒருவரை காலை 10.15 மணியளவில் சந்திக்க உள்ளதாகக் கூறினேன். வாரத்தின் முதல் நாள் காலை மேலாளர் பரபரப்பாக இருப்பார் ; மாலை 3 மணிக்கு மேல் சென்று சந்திக்குமாறு கூறினார். இன்று ஆட்கள் செய்த பணியில் சில பணிகள் மீதம் உள்ளன. நாளை இரண்டு ஆட்கள் வேலைக்கு வருவார்கள். உலகியலில் தொடர்ந்து வேலை செய்து கொண்டு இருந்தால் கடவுளிடம் அமைதியைக் கொடு என்பதைத் தவிர வேறு ஏதும் கேட்கத் தோன்றாது. 

தாமரை இலை தண்ணீர்

பெயர், குடும்பம், குலம், குடி, ஊர், தொழில் ஆகிய அடையாளங்கள் மனிதர்களுக்கு சூட்டப்படுகின்றன ; அதனை மனிதர்கள் சூடிக் கொள்ளவும் செய்கிறார்கள்.  அந்த அடையாளங்கள் குறுகியவை. அதனை உணர்பவர்கள் அதில் தங்களை பிணைத்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். தாமரை இலையின் மீது தண்ணீர்த்துளி இருக்கிறது. தாமரை இலை மேல் தண்ணீர்த்துளி இருந்தாலும் தனித்தே இருக்கிறது. 

Saturday, 2 August 2025

மூன்று திருவிழாக்கள்

 இந்த மாதத்திலும் அடுத்த மாதத்திலும் மூன்று முக்கிய திருவிழாக்கள் இருக்கின்றன. இந்த மாதத்தின் மத்தியில் ஜென்மாஷ்டமி. மதுரா செல்ல உத்தேசித்துள்ளேன். மாத இறுதியில் ஓணம் பண்டிகை. கேரள மாநிலம் திருச்சூரில் கொண்டாட விருப்பம். அதன் பின் கணேஷ் சதுர்த்தி. மும்பை செல்ல உள்ளேன். 

ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யப் போகிறேனா அல்லது வழக்கம் போல் முதல் நாள் இரவு கிளம்பி முன்பதிவு இல்லாமல் ரயில் பயணமா என்பது தெரியவில்லை. 

Friday, 1 August 2025

திருப்தி

எங்கள் பிரதேசத்தில் உள்ள பெரிய பண்ணையார் ஒருவரைக் காண ஐ டி கம்பெனியில் பணி புரியும் தேக்கு பண்ணை நண்பருடன் சென்றேன். அவர் 50 ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரர். இளைஞர். இயற்கை விவசாயத்தில் தீவிரமான ஆர்வம் கொண்டு பல வருடங்களாக இயற்கை விவசாய பயிற்சி முகாம்களை அவரது கிராமத்தில் ஒருங்கிணைத்திருக்கிறார். அவ்வாறான முகாம் ஒன்றுக்கு நான் சென்றிருந்தேன். பண்ணையாரான இளைஞர் முகாமுக்கான பணிகளை தீவிரமாக செய்து கொண்டிருந்தாரே தவிர மேடையில் தான் இருக்க வேண்டும் என்பதையோ தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விருப்பமோ இன்றி கடமையாற்றிக் கொண்டிருந்தார். அவரை அவருடைய இந்த மேன்மையான குணத்துடன் நினைவில் வைத்துக் கொண்டேன். 

நண்பருக்கு பாரம்பர்ய ரக நெல் தேவைப்பட்டது. விதைநெல்லுக்காக. அதை அவரிடமிருந்து பெறுவதற்காக சென்றார். என்னையும் கூட்டிக் கொண்டு சென்றார். அழகான வழவழப்பான அவரது வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தோம். சில வினாடிகளில் பண்ணையார் வந்தார். 

ஐ டி கம்பெனி நண்பர் தனது வயல் 3 ஏக்கரில் முற்றிலும் தேக்கு மரம் வளர்ப்பதைக் கூறி அதற்கான தூண்டுதலாக நான் இருந்ததாகக் கூறினார். ஐ டி கம்பெனி நண்பர் பண்ணையார் வயலில் ஒரு ஏக்கர் அளவில் தேக்கு பயிரிடுமாறு கேட்டுக் கொண்டார். 

பண்ணையார் அதற்கு ‘’50 ஏக்கர்லயும் இரண்டு போகம் பாரம்பர்ய நெல் பயிர் செய்யறோம். ஏக்கருக்கு 25,000 லாபம் கிடைக்குது. இதுவே போதும். இந்த வேலையை வாழ்க்கை முழுக்க ஒழுங்கா பாத்தா போதும் ‘’என்றார். 

யக்‌ஷப் பிரசனத்தில் யக்‌ஷன் ‘’எதை மிஞ்சிய செல்வம் இல்லை ? என்று கேட்க யுதிர்ஷ்ட்ரன் ‘’திருப்தியை மிஞ்சிய செல்வம் இல்லை’’ என்கிறார்.  

கோதாவரி

கோதாவரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது என அறிந்தேன். ராஜமுந்திரி என்னும் ராஜமகேந்திரவரம் சென்று கோதாவரியைக் கண்ட வண்ணம் அதன் படித்துறை ஒன்றில் இரண்டு நாட்களாவது அமர்ந்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன். கோதாவரி அன்னை அழைக்க வேண்டும்.  


கிராமத்துக்கான பொதுப்பணிகள் - செயல்திட்டம் (நகைச்சுவைக் கட்டுரை)

’’கிராமத்துக்கான பொதுப்பணிகள்’’ பதிவை வாசித்து விட்டு தம்பி ஃபோன் செய்தான். ‘’அண்ணன் ! நீங்க என்ன ஐ-பேட் வாங்கலாம் என யோசிக்கறத்துக்குள்ள என்னென்ன ஒர்க் செய்ய விரும்புறீங்கன்னு லிஸ்ட் பண்ண ஆரம்பிச்சிட்டீங்க’’ 

‘’நான் அப்படித்தான் தம்பி இருக்கன்’’

‘’நீங்க பிளான் செஞ்சிருக்கறது எல்லாமே பெரிய விஷயங்கள்’’

‘’என்னோட பிளான் இல்ல தம்பி. நம்மோட பிளான்’’

‘’அப்படி சொல்றீங்களா?’’

‘’நாம் முன்வச்சிருக்கற விஷயத்தை ஒரு துவக்கப் புள்ளியா எடுத்துக்கிட்டு அதை இன்னும் ஃபைன் டியூன் செய்யணும். டிஸ்கஸ் செய்யணும்’’

’’கிராமத்துல இருக்கற குழந்தைகள் விளையாட விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டு மைதானம் இந்த விஷயம் எல்லாருமே ஏத்துப்பாங்க. சப்போர்ட் பண்ணுவாங்க’’

‘’நல்ல விஷயம்’’

’’நிறைய லாங்வேஜ் சொல்லித் தரணும்னு சொல்றீங்க. அந்த ஐடியாவுக்கு ரெஸிஸ்டன்ஸ் இருக்கலாம். ‘’

‘’நாம கிராமத்துல இருக்கற ஒரு குழந்தை விரும்புன மொழியை படிக்க வாய்ப்பு இருக்கணும்னு நினைக்கறோம். என்னோட விருப்பம் என்னன்னா நாம ஒர்க் பண்ற ஊர்ல தமிழ், சமஸ்கிருதம், மலையாளம், ஹிந்தி, ஜப்பானிஸ், அரபி, ஃபிரஞ்ச், இங்கிலிஷ் னு நிறைய மொழி படிக்க வாய்ப்பு இருக்கணும். ரெண்டுலேந்து மூணு வருஷம் தொடர்ந்து படிச்சா ஒரு லாங்வேஜ்ஜோட எழுத்தறிவும் வாசிப்பறிவும் வந்துடும். அதுக்கப்பறம் அவங்களே அதை இம்ப்ரூவ் பண்ணிப்பாங்க’’

‘’உங்க ஐடியா நல்லா இருக்கு . புதுசா இருக்கு. ஆனா நிறைய மொழி படிக்கறது கஷ்டம் இல்லையா?’’

‘’மொழியைக் கத்துக்கறது மனுஷ மூளைல இருக்கற சில பகுதிகள். நிறைய மொழி கத்துக்கும் போது அந்த பகுதி தீவிரமான தூண்டுதலுக்கு ஆளாகும். அது குழந்தைகளுக்கு நல்ல விஷயம் தான். இது மார்க்குக்காக படிக்கற விஷயம் இல்ல. அவங்க பர்சனாலிட்டியை தீர்மானிக்கற விஷயம். நம்ம நாட்டுல நம்ம மரபுல நிறைய மொழி தெரிஞ்சுக்கற ஒருத்தர் சரஸ்வதியோட ஆசிர்வாதம் உள்ளவர்னு சாதாரண கிராம மக்களுக்கு நல்லாவே தெரியும்’’

‘’உங்க ஆங்கிள் புதுசு அண்ணன்’’

‘’இப்ப நாம மலையாளம் சொல்லித் தரோம்னு வச்சுக்கோ. நம்ம நாட்டுல கடந்த 100 வருஷத்துக்கு மேல கல்வியறிவு அதிகமா இருக்கற மாநிலம் கேரளம். அதோட விளைவு என்னன்னா உலகத்துல உள்ள எல்லா மொழியோட முக்கியமான படைப்புகளும் மலையாளத்துல மொழிபெயர்க்கப்பட்டு இருக்கு. நீ உலக இலக்கியம் படிக்கணும்னா உனக்கு மலையாளம் தெரிஞ்சா எல்லாத்தையும் மலையாளத்துல படிச்சுடலாம். வெட்டம் மாணி ன்னு ஒருத்தர். அவர் ஒரு சிரியன் கிருஸ்தவர். ‘’புராணக் கலைக்களஞ்சியம்’’ ஒரு என்சைக்ளோபீடியாவை மலையாளத்துல எழுதியிருக்காரு. மாஸ்டர் பீஸ் அந்த ஒர்க்’’

‘’இத எல்லாரும் புரிஞ்சுப்பாங்களா?’’

‘’பத்து பேர் ஐம்பது பேர் நூறு பேர் சேந்து பல மொழிகளைக் கத்துக்க ஆரம்பிச்சாலே இதெல்லாம் தானா நடக்கும்’’

‘’சமஸ்கிருதம் எதுக்கு?’’

‘’சமஸ்கிருதம் படிச்சா நிறைய இந்திய மொழியோட ஈஸியா கனெக்ட் ஆகிட முடியும். உதாரணம் : ஹிந்தி, மலையாளம். ஒருத்தருக்கு சமஸ்கிருதம் தெரியும்னா அவர் ஈசியா ஹிந்தி மலையாளம் கத்துப்பார்’’

‘’அரபி எதுக்கு?’’

‘’அரபி ஒரு கிளாஸிக் லாங்வேஜ். ஆயிரம் மற்றும் ஓர் அராபிய இரவு அரபு மொழில தான் இருக்கு’’

‘’ஜப்பானிஸ் எதுக்கு?’’

’’ஜப்பான் கலை உணர்வு மிக்க சமுதாயம். அந்த கலை உணர்வு நமக்கும் தேவை’’ 

‘’அண்ணன் ! கிராமத்துல நாம ஒரு ஸ்கூல் நடத்தறதுக்கு சமமான காரியம் நீங்க சொல்றது ‘’

‘’ஸ்கூல் னு சொல்லலாம். அதுல நான் ஒரு விஷயம் ஃபைன் டியூன் செய்யறன். என்னன்னா நம்ம ஊர்ல ஸ்கூல் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர்க்கு அதிக செலவு செய்யறாங்க. டீச்சர்ஸ் சேலரி குறைவா இருக்கும். அதான் இங்க உள்ள பேடர்ன். உதாரணத்துக்கு 200 அல்லது 300 ஸ்டூடண்ட்ஸ் படிக்கற ஸ்கூல் கட்ட  ஒரு ஏக்கர் இடம் வாங்க ஐம்பது லட்சம் வரைக்கும் செலவு பண்ணுவாங்க. அதுல கிளாஸ் ரூம் கட்ட ஐம்பது லட்சத்தில இருந்து ஒரு கோடி வரைக்கும் செலவாகும். மொத்த பட்ஜெட் ஒன் பாயிண்ட் ஃபைவ் குரோர். வேலை பாக்கற டீச்சர்ஸ்க்கு கொடுக்கற சம்பளம் மாசம் 6000 இல்லன்னா 7000 இருக்கும். ‘’

‘’ஆமா அப்படித்தான் இருக்கு’’

‘’நம்ம பிளான் என்னன்னா இன்ஃப்ராஸ்ட்ரக்சருக்கு பெரிய செலவு செய்யக் கூடாது. டீச்சர்ஸ் சேலரி உச்சபட்சமா கொடுக்கணும். என்னோட விருப்பம் லாங்வேஜ் சொல்லிக் கொடுக்கற ஒவ்வொரு டீச்சருக்கும் மாசம் ரூ.25,000 சம்பளம் கொடுக்கணும்.’’

‘’எட்டு மொழி சொல்லிக் கொடுக்கணும்னு சொல்றீங்க. அப்ப டீச்சர்ஸ் சேலரி மட்டுமே மாசம் ரூ.2,00,000’’

‘’நாம இன்ஃப்ராஸ்ட்ரக்சருக்கு எந்த செலவும் பண்ணல. இனிஷியலா ஒரு தொகையை கையில ரிசர்வா வச்சுக்கிட்டோம்னா அந்த அமௌண்ட்டோட பேங்க் இண்ட்ரஸ்ட்டே டீச்சர்ஸ் சேலருக்கு போதும். ஆக்டிவிட்டி ஆரம்பிச்சிடும்’’

‘’பெரிய பணம் தேவைப்படுமே அண்ணன்’’

‘’என்னோட இம்மூவபிள் பிராபர்ட்டி ஒன்னை சேல் பண்ண போறேன். அந்த பணத்தை இந்த விஷயத்துக்காக முழுக்க யூஸ் செய்யலாம்னு இருக்கன்’’ 

‘’எப்பவுமே ஒரு அஜெண்டா வோட இருக்கீங்க அண்ணன்’’

‘’எல்லாம் நல்லபடியா நடக்கணும் தம்பி’’