Saturday, 31 May 2025
தலைமைப் பண்பு அல்லது தலைவர்கள்
Thursday, 29 May 2025
விலை நிர்ணயம்
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக முயன்று சொத்தை விற்பவரையும் சொத்தை வாங்குபவரையும் பலமுறை சந்தித்து மூன்று முறை வாங்குபவர் விற்பவர் சந்திப்பை ஏற்பாடு செய்து நிகழ்ந்த பணி இன்று ஒரு முக்கிய கட்டத்தை எட்டியது. சென்ற சந்திப்பில் வாங்குபவர் அந்த சொத்தை தான் எவ்வளவு விலை கொடுத்து வாங்க முடியும் என்ற விலையைத் தெரிவித்து விட்டார். விற்பவர் தான் கூறிய விலையில் உறுதியாக இருந்தார். முடிவு எட்டப்படாமல் அந்த சந்திப்பு நிறைவு பெற்றது. முடிவு எட்டப்பட சிறு கால இடைவெளி தேவை என்னும் நிலை. அந்த கால இடைவெளி 3 நாட்களாக இருக்கலாம் ; 7 நாட்களாக இருக்கலாம் ; அல்லது 15 நாட்களாகக் கூட இருக்கலாம். நாட்கள் இவ்விதம் நகர்ந்தால் மீண்டும் ஒரு சந்திப்புக்கு வாய்ப்பு அமையாமல் கூட போகலாம். என்ன நிகழும் என்பதை கணிக்க முடியாத நிலை. இந்நிலையில் நான்காவது சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தேன். ‘’வாங்குபவரும்’’ ‘’விற்பவரும்’’ மனம் விட்டு பேசினர். இன்னும் சில நிமிடங்களில் விலை நிர்ணயம் ஆகி விடும் என்னும் நிலை. இருப்பினும் அந்த இடத்துக்கு வராமல் சந்திப்பு நிறைவு பெற்றது. ‘’விற்பவர்’’ புறப்பட்டுச் சென்றதும் ‘’வாங்குபவரிடம்’’ ஏன் விலையை இறுதி செய்யவில்லை என்று கேட்டேன். விலையை நீங்கள் அவரிடம் பேசி நிர்ணயம் செய்யுங்கள் என்று கூறினார். அதன் பின் சென்று ‘’விற்பவரைச்’’ சந்தித்தேன். அவரும் என்னிடம் இந்த இடத்துக்கு நீங்கள் விலை நிர்ணயம் செய்யுங்கள் என்று கூறினார். இந்த நிலை அரிதான ஒன்று. இது மிகவும் உகந்த செயல்முறையா என எனக்குத் தெரியவில்லை. என்னை விலை நிர்ணயம் செய்யச் சொல்கிறார்கள். நடுவுநிலையுடன் இருந்து விலையை நிர்ணயிக்க வேண்டும். விலையை நிர்ணயித்த பிறகு ஒவ்வொருவரும் அதனை ஏற்கும் அளவில் மாற்றம் இருக்கலாம். இருவருமே கூட அது தங்களுக்கு சாதகமாக இல்லை என எண்ணலாம். ஏன் இத்தனை பெரிய பொறுப்பை எனக்கு அளித்தார்கள் என்பது தெரியவில்லை. ஏன் நான் அதனை மறுப்பின்றி ஏற்றேன் என்பதும் எனக்குப் புரியவில்லை. எந்த அளவீட்டின் படி நடந்து கொள்வது என சிந்தித்துப் பார்த்தேன்.
எனக்கு ஒரு வழி புலப்பட்டது. எனது அணுகுமுறையை இவ்விதம் வடிவமைத்துக் கொண்டேன். அதாவது ஒரு விலையை நிர்ணயம் செய்து விடலாம். இருப்பினும் முன்பணம் என ஏதும் உடனடியாகக் கொடுக்கத் தேவையில்லை. நிர்ணயமான விலை ’’வாங்குபவர்’’ ‘’விற்பவர்’’ இருவர் மனதிலும் நிலை பெறட்டும். அவ்விதம் முன்பணம் இல்லாமல் சில நாட்கள் நீடித்து மீண்டும் கிரயம் பெற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனில் நிகழ்வுகள் சரியாக நிகழ்கின்றன என்று பொருள். ஏதேனும் மாறுபாடு நிகழ்ந்தால் யாருக்கும் பொருள் இழப்பு இல்லை. எனவே முன் தொகை செலுத்தாமல் விலையை நிர்ணயித்துக் கொள்வது என்னும் திசையை நோக்கி விஷயத்தைக் கொண்டு சென்று விலை நிர்ணயம் செய்தேன். நிர்ணயித்த விலையை ‘’விற்பவர்’’ ஏற்றுக் கொண்டார். ‘’வாங்குபவரை’’ நேரில் சந்தித்து நிர்ணயித்திருக்கும் விலையைக் கூறினேன். அவரும் ஏற்றுக் கொண்டார்.
‘’விற்பவர்’’ தனது சொத்தின் ஆவணங்கள், முழுமையாக முழு சொத்தும் அவர் பெயர் தாங்கிய பட்டாவுடன் இருத்தல் ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்தி அவற்றை அளிக்க வேண்டும். இவை முழுமையடைய 15 நாட்களாவது ஆகும். இந்த இடைவெளியில் தொகை ஏற்பாடுகளை ‘’வாங்குபவர்’’ மேற்கொள்ள வேண்டும். இவை இரண்டிலும் கவனம் செலுத்தி முறைப்படி நிகழ்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
இரண்டு மாத தொடர் முயற்சிக்குப் பிற்கு ஒரு சுற்று நிறைவு பெற்றிருக்கிறது. அடுத்த சுற்று துவங்குகிறது.
Wednesday, 28 May 2025
வானகமே இளவெயிலே மரச்செறிவே
எனது நண்பரின் வீட்டு மனை 4 ஏக்கர் பரப்பு கொண்டது. செவ்வகமான அந்த வீட்டு மனையின் நடுவில் வீடு அமைந்துள்ளது. வீட்டின் மதில் சுவருக்கும் வீட்டுக்கும் இடையேயான தூரம் குறைந்தபட்சம் 200 அடியாக இருக்கும். மனை சுற்றளவு முழுவதும் நடுத்தரமான உயரம் கொண்ட மதில்சுவரால் ஆனது. வீட்டின் நான்கு புறமும் வேப்பமரங்களும் பலா மரங்களும் மாமரங்களும் உள்ளன. வீட்டின் முன்புறம் நான்கு பெரிய வேப்பமரங்கள் இருக்கின்றன. அந்த வேப்பமரங்களின் நடுவில் நான்கு சிமெண்ட் பெஞ்ச் களை நண்பர் அமைத்திருந்தார். இன்று காலையிலிருந்து நண்பரும் நானும் சில பணிகளில் ஈடுபட்டிருந்தோம். மதியம் சற்று ஓய்வெடுக்க விரும்பினேன். எனக்கு அந்த சிமெண்ட் பெஞ்ச் சில் சயனிக்க வேண்டும் என்று விருப்பம். அதில் படுத்துக் கொண்டு மேலே நோக்கினேன். மேகமூட்டமான வானம். இலேசாக மிக இலேசாக வெயில் இருந்தது. வேப்ப மரக்கிளைகளில் கிளிகள் இருந்தன. மரங்கொத்தி இருந்தது. மைனாக்கள் இருந்தன. காகங்கள் இருந்தன. குயிலோசை அவ்வப்போது கேட்டது. காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற தமிழ் மூதாதையை எண்ணிக் கொண்டேன்.
Monday, 26 May 2025
வாரத்தின் முதல்நாள் ( நகைச்சுவைக் கட்டுரை)
இன்று வாரத்தின் முதல் நாள். இன்று நிறைய பணிகள் இருக்கின்றன. நண்பரின் மனை ஒன்றுக்கு பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பம் அளித்திருந்தேன். அந்த விஷயம் தொடர்பானவருக்கு காலை 7 மணிக்கு ஃபோன் செய்தேன். அவர் ஃபோனை எடுக்கவில்லை. காலை 9 மணிக்கு மேல் எனது ‘’மிஸ்டு கால்’’ பார்த்து விட்டு ஃபோன் செய்வார். நண்பர் பட்டா எப்போது வரும் எப்போது வரும் என்று என்னைத் துளைத்தெடுக்கிறார்.
ஒரு சிறு கட்டுமானப் பணி இருக்கிறது. அதாவது ஒரு ஓட்டு வீட்டில் ஒரு சுவர் எழுப்ப வேண்டும். எம் - மணல், செங்கல் ஆகியவற்றை அந்த வீட்டினுள்ளே கொண்டு சேர்த்தாயிற்று. கட்டுவேலை தொடங்க வேண்டும். எனது பணியாளருக்கு ஃபோன் செய்தேன். அவருக்கு இன்னொரு இடத்தில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. ‘’சார் ! அடுத்த வாரம் செஞ்சிடுவோமா’’ என்றார். எனக்கு பகீர் என்றது. இன்று மேலும் சில தளவாடங்களை அங்கே சேர்ப்பிக்கிறேன். சிலரையாவது அனுப்பி வேலை தொடங்க வேண்டும் என்று சொன்னேன்.
பி.எஸ்,என்.எல் இன்னும் சில நாட்களில் ’’டாக் டைம்’’ முடியப் போகிறது எனக் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறது. கடைத்தெரு சென்று டாப் அப் செய்ய வேண்டும்.
15 நாட்களுக்கு முன்னால் இரு சக்கர வாகனத்தில் செயின் செட் மாற்றினேன். அவர்கள் 500 கி.மீ ஓட்டத்துக்குப் பின் வாகனத்தைக் கொண்டு வரச் சொன்னார்கள். செயினை மறுசீரமைக்க வேண்டும் என. காலை 9 மணிக்கு சென்றால் அங்கே 1 மணி நேரம் ஆகிவிடும்.
மாலை 4 மணிக்கு முக்கியமான வணிகச் சந்திப்பு இருக்கிறது. அதற்கு 2.30 அளவில் புறப்பட வேண்டும். இன்று அதுதான் அதி முக்கிய பணி.
அதற்குள் இந்த சிறு சிறு பணிகளை செய்து கொள்ள வேண்டும்.
Sunday, 25 May 2025
எத்தனை தேனீர் ( நகைச்சுவைக் கட்டுரை)
ஒரு ஆலோசனை
எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் என்னை விட இருபது ஆண்டுகள் வயதில் மூத்தவர். அவரது குடும்பம் விவசாயக் குடும்பம். அவரது தந்தை பள்ளி தலைமை ஆசிரியர். எனது நண்பர் பொறியியல் பட்டதாரி. அவரது சகோதரர்களும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள். அவரது சகோதரர்கள் அனைவரும் பல வருடங்கள் சிங்கப்பூரில் பணியாற்றினர். அவரை எனக்கு 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தெரியும். நான் சிறுவனாயிருந்த போது அவரை முதன் முறையாகச் சந்தித்தேன். அவரை முதன் முறையாகச் சந்தித்த போது அவரை அவரது நண்பர்கள் சூழ்ந்திருந்தனர். நண்பர்கள் என்று கூறுவதை விட மனிதர்கள் என்று கூறுவது மேலும் பொருத்தமாக இருக்கும். அவரைச் சூழ்ந்திருக்கும் மனிதர்கள் யாவருமே அவருக்கு நண்பர்களே. அவ்விதமான வாழ்க்கை இலட்சத்தில் ஒருவருக்கே அமைகிறது. சக மனிதன் மீது மரியாதையும் பிரியமும் கொண்டிருப்பது என்பது ஓர் அரிய பண்பு ; எல்லா மனிதர்களும் அடைய வேண்டிய உயர்நிலை அது.
தனது பள்ளி நாட்களிலிருந்து சமூகச் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டு பல்வேறு அமைப்புகளில் பணியாற்றியிருக்கிறார். அவர் பங்கெடுத்துக் கொண்ட இயக்கங்களின் எண்ணிக்கை உண்மையில் வியப்பூட்டுவது. எவ்விதமான சமூகச் செயல்பாட்டில் ஈடுபட்டிருந்தாலும் அவரது அகம் அன்புமயமானது ; ஈரம் கசியும் இதயம் கொண்டது. எந்த அமைப்பிலும் இத்தகைய இயல்பு கொண்ட ஒருவர் முழுமையாகப் பொருந்திப் போவது என்பது துர்லபமே. எனவே அவர் அமைப்புகளிலிருந்து வெளியேறிக் கொண்டும் இருந்தார். அமைப்புகளின் இரும்பு விதிகளுக்கு தன்னை முழுதளிக்கவில்லை என்பதே அவரது வெளியேற்றங்களுக்கான காரணம். அவற்றை இயல்பாக எடுத்துக் கொண்ட மன அமைப்பை இயற்கை அவருக்குக் கொடையாக அளித்தது என்று கூறலாம்.
அவரது தொழில் கட்டுமானம். பிரமாதமாக கட்டிட பிளான்களை உருவாக்கக் கூடியவர். முன்னர் அவரே கணிணியில் பிளான்களை உருவாக்குவார். செவ்வக வடிவம் மீது அவருக்கு பெரும் ஈடுபாடு உண்டு. ஐசோமெட்ரிக் வகை வெளித்தோற்றங்கள் அவரது திட்டமிடுதலின் சிறப்பம்சம் ஆகும். தமிழகத்தின் மிக அழகான வீடுகளில் அவரது வீடும் ஒன்று என்று என்னால் ஒரு கட்டிடப் பொறியாளனாகக் கூற முடியும்.
அவரது மாவட்டத்திலும் அவரது மாவட்டத்தைச் சுற்றியிருக்கும் ஐந்து அல்லது ஆறு மாவட்டங்களிலும் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் பெரும்பாலான குடும்பங்களை அவர் அறிவார். ’’அறிவார்’’ என்றால் என்ன அர்த்தம் எனில் ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பவர்களை அவர்கள் ஒவ்வொருவரின் பெயர் படிப்பு உத்யோகம் என ஒவ்வொன்றையும் அறிவார். யாவரிடமும் அவருக்கு சொல்வதற்கென எப்போதும் ஏதேனும் சொற்கள் இருந்து கொண்டேயிருக்கின்றன. யாவருக்கும் அவரிடம் சொல்வதற்கெனவும் சொற்கள் இருக்கின்றன.
அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்போதும் அவரைச் சந்தித்து ஆலோசனைகள் கேட்ட வண்ணம் இருக்கின்றனர். எல்லா அரசியல் கட்சிக்காரர்களும் அவரிடம் ஆலோசனைகளும் அபிப்ராயங்களும் கேட்கின்றனர். இந்நிலை மிகவும் அபூர்வமானது என்பதை விபரம் அறிந்தவர்கள் அறிவார்கள்.
நான் அவரை 30 ஆண்டுகளாக அறிவேன் என்றாலும் இந்த 30 ஆண்டுகளில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவே நாங்கள் சந்தித்திருக்கிறோம். பிரியம் கொண்ட அன்பு நிறைந்த மனிதர்களை நான் வியந்து நோக்கும் இயல்பு கொண்டவன் என்பதால் எங்கள் உரையாடல்கள் மிகச் சில சொற்களிலேயே நிகழ்ந்திருக்கிறது.
நண்பர் தமிழார்வம் மிக்கவர். சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை வாசிப்பவர். தமிழகத்தின் மூலை முடுக்குகள் அனைத்துக்கும் சென்றிருப்பவர். தனது பயண ஈடுபாட்டின் விளைவாக நம் நாடு முழுவதும் பயணித்தவர்.
எனது நண்பரிடம் அவரது சுயசரிதையை எழுதுமாறு என்னுடைய ஆலோசனையைக் கூறியிருக்கிறேன். ஜனநாயக யுகத்தின் பீடு என்பது ஒரு சாமானிய குடிமகனுக்கு அது அளித்திருக்கும் சுதந்திரமே. ஜனநாயக யுகத்தில் ஒவ்வொரு குடிமகனுமே மேன்மையானவனே. உலக வரலாற்றில் சாமானியர்களுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டிருப்பது ஜனநாயக யுகத்திலே மட்டுமே ஆகும். நண்பர் தனது சுயசரிதையை எழுத வேண்டும். எழுதப்பட்டால் அது அவருடைய வாழ்க்கையாக மட்டும் இருக்காது ; மாறாக ஒரு மாவட்டத்தின் ஒரு பிராந்தியத்தின் வாழ்க்கையாகவும் வரலாறாகவும் அது இருக்கும். அவரது கிராமம் மிக சரித்திர பிரசித்தி பெற்ற கிராமம் ஆகும். தமிழகத்தின் ஈர்ப்பு மிக்க நில அமைப்பு அவரது பிராந்தியத்துக்குரியது. அவரது பள்ளி நாட்கள் மற்றும் அவரது உறவினர்களின் கதை மிக சுவாரசியம் கொண்டது. தனது சமூகச் செயல்பாடுகளின் கதையை அவர் கூறும் போது ஒரு காலகட்டத்தின் உணர்வெழுச்சிகளின் கதையாக அது இருக்கக் கூடும். தனது கட்டுமான அனுபவங்களை அவர் எழுதும் போது அத்தொழிலில் இருக்கும் பலருக்கும் அது பயனுள்ளதாக இருக்கும்.
என் மனதில் பட்டதை நண்பருக்குக் கூறியிருக்கிறேன். நண்பர் அதனை ஆற்றுவார் என்று எதிர்பார்க்கிறேன்.
Saturday, 24 May 2025
தொடர் பயணங்கள்
சென்ற வாரம் ஐ.டி கம்பெனி உரிமையாளரான நண்பரைச் சந்தித்து வந்த பின் அடுத்த சந்திப்பை இந்த வாரம் திங்கள் அல்லது செவ்வாய்கிழமைகளில் நிகழ்த்தலாம் எனத் திட்டமிட்டிருந்தோம். நண்பரை சந்தித்தது வெள்ளிக்கிழமை. சனி ஞாயிறு இரு தினங்கள் அவரது நிறுவனத்துக்கு விடுமுறை. வெள்ளிக்கிழமை சந்தித்த பின் திங்கட்கிழமை சந்திப்பது என்பது கிட்டத்தட்ட அடுத்த நாளே சந்திப்பதற்கு சமம். எனவே இரு தினங்கள் காத்திருந்தேன். திங்கள் செவ்வாய் இரண்டு நாட்கள் கடந்தன. புதன்கிழமையும் சென்னை புறப்படவில்லை. இங்கே இருந்த வேறு சில பணிகளை மேற்கொண்டிருந்தேன். வியாழக்கிழமை காலை 2 மணி அளவில் விழிப்பு வந்தது. சட்டென முடிவெடுத்து சென்னை புறப்பட்டேன். காலை 3 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினேன். மெல்ல நடந்து பேருந்து நிலையம் சென்றேன். அதன் அருகே ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்கே காலை 4 மணிக்கு சிற்றுண்டி தயாராகும். அங்கே உணவருந்தினேன். ரயிலில் செல்வதா அல்லது பேருந்தில் செல்வதா என்று யோசித்தேன். அப்போது நேரம் காலை 4.30. காலை 4.45க்கு திருச்செந்தூர் சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இருந்தது. ஆனால் அதன் பொதுப்பெட்டி பயணிகளால் நிரம்பி வழியும். எனவே அதனைத் தவிர்த்து பேருந்தில் சென்னை புறப்பட்டேன். ஊரிலிருந்து பேருந்து புறப்பட்டதும் நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். ஊரிலிருந்து புறப்பட்டு விட்டேன் என. காலை 6 மணிக்கு சந்திப்பு அலுவலகத்திலா அல்லது வேறு இடத்திலா என்பதைத் தெரிவிக்கிறேன் என்று அவரிடமிருந்து பதில் குறுஞ்செய்தி வந்தது. அடுத்தடுத்து பேருந்துகள் மாறினாலும் நண்பகலுக்கு பத்து நிமிடம் முன்பு சென்னை மவுண்ட் ரோடு அடைந்தேன். அருகே இருந்த சங்கீதா ஹோட்டலில் மதிய உணவு அருந்தி விட்டு நண்பரின் செய்திக்காக காத்திருந்தேன். நண்பர் அப்போது அலுவலகத்தில் இல்லை. வெளிநாட்டு கிளைண்ட் களுடன் ஒரு சந்திப்பில் இருந்தார். அவரது குறுஞ்செய்தி வந்தது. சந்திப்பு முடிய மேலும் சில மணி நேரங்கள் ஆகும் என்ற நிலையில் நான் இருந்த இடத்துக்கு அருகில் பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம் இருந்தது. அங்கு சென்றேன்.
நூலகத்தில் இருப்பது என்பது மனதைப் புத்துணர்வு கொள்ளச் செய்யும் ஒரு செயல். ஆயிரக்கணக்கான நூல்களின் மத்தியில் இருப்பது என்பது சிந்தனையின் மீதும் அறிவுச்செயல்பாட்டின் மீதும் மீண்டும் மீண்டும் நம்பிக்கை கொள்ளச் செய்யும் செயல். பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் லண்டன் பென்குயின் கிளாசிக் வெளியிட்டிருந்த பாஷோவின் கவிதை நூல் ஒன்றை வாசித்தேன். இலக்கிய விமர்சகர் டி.எஸ்.எலியட்டின் கடிதங்கள் என ஒரு நூல் இருந்தது. அதனை வாசித்தேன். மார்க் டிவைனின் நாவல்கள் தொகுப்பு இருந்தது. அதில் சில அத்தியாயங்களை வாசித்தேன். நூலகங்கள் நூல்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் வசதியை அளிக்கின்றன. எனினும் ஒரு வாரத்தில் சில மணி நேரங்களாவது நூலகத்தில் செலவிடுவது என்பது நலம் பயப்பது என்று எண்ணினேன். அத்தனை நூல்கள் இருந்த போதும் நான் தேர்ந்தெடுத்து வாசித்த நூல்களில் எனது விருப்பத்துக்குரிய எழுத்துக்கள் இருந்தது மகிழ்ச்சி அளித்தது.
நண்பர் அலுவலகத்தில் சந்திக்குமாறு குறுஞ்செய்தி அனுப்பினார். அலுவலகத்தில் எல்லா ஊழியர்களும் புறப்பட்டு போயிருந்தனர். நண்பரும் ஒரு சில ஊழியர்களும் மட்டும் இருந்தனர். நண்பர் எங்கள் விவாதப் பொருள் குறித்து சில விஷயங்களைச் சிந்தித்திருந்தார். அவர் சிந்தித்திருந்த விஷயங்களை என் முன் வைத்தார். அடுத்த செயல்பாடுகள் என்ன என்பதை நாங்கள் இருவரும் சேர்ந்து சிந்தித்தோம். இந்த சந்திப்பு எங்கள் விவாதப் பொருளில் சில முன்னகர்வுகளை உருவாக்கியிருந்தது குறித்து எங்களுக்கு மகிழ்ச்சி. நண்பரின் காரில் எழும்பூர் ரயில் நிலையத்தில் சென்று இறங்கிக் கொண்டேன். நண்பருக்கு அதன் பின் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சில சந்திப்புகள் இருந்தன.
எழும்பூரிலிருந்து ஊருக்கு ‘’அந்த்யோதயா’’ ரயில் டிக்கெட் எடுத்துக் கொண்டேன். மின்சார ரயிலில் தாம்பரம் சென்றடைந்தேன். அங்கே ஒரு ரயில் நின்றிருந்தது. அறிவிப்பில் விழுப்புரம் மயிலாடுதுறை திருவாரூர் காரைக்குடி மார்க்கமாக செங்கோட்டை செல்லும் ரயில் இன்ன நடைமேடையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்று பார்த்தேன். ரயிலின் என்ஜினுக்கு அருகில் இருக்கும் பொதுப்பெட்டியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ரயிலின் கடைசிப் பெட்டியில் இருந்த பொதுப்பெட்டியில் ஒரு சிலர் மட்டுமே இருந்தனர். அங்கே சென்று அமர்ந்து கொண்டேன். இரவு 9 மணிக்குப் புறப்பட்ட ரயில் நள்ளிரவு 1.30க்கு ஊர் வந்து சேர்ந்தது. ரயில் நிலைய பெஞ்சில் படுத்து உறங்கி விட்டேன். நடுவில் விழிப்பு வந்தது. கிழக்கு வானில் விடிவெள்ளி ஒளிர்ந்து கொண்டிருந்தது. சில கணங்களில் மீண்டும் உறங்கி விட்டேன். காலை 5.45க்கு எழுந்து வீட்டுக்குப் புறப்பட்டேன்.
காலை 7.45க்கு நண்பர் ஒருவருடன் தஞ்சாவூர் செல்ல வேண்டும். மீண்டும் ரயில் நிலையம் வர வேண்டும். வீட்டுக்குச் சென்று குளித்து தயாராகி மீண்டும் ரயில் நிலையம் வந்தேன். நண்பர் குத்தாலம் ரயில் நிலையத்தில் இணைந்து கொள்வதாகக் கூறினார். இருவரும் 9.15 மணி அளவில் தஞ்சாவூர் சென்றடைந்தோம். எனது நண்பரின் உறவினர் சிங்கப்பூரில் பணி புரிகிறார். அவர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய ஆர்வமாக இருந்தார். அவருடன் அவர் வீட்டிலிருந்து தொலைபேசி மூலம் பேசினேன். அவரிடம் முதல் முறையாகப் பேசுகிறேன். எனினும் விஷயங்களை முழுமையாகக் கூறினேன். அவரும் முழுமையாக உள்வாங்கிக் கொண்டார் என்பது எனக்கு மகிழ்ச்சி.
மதியம் 1.30க்கு தஞ்சாவூர் ரயில் நிலையம் வந்தடைந்தோம். அங்கிருந்து 3 மணிக்கு ஊர் வந்து சேர்ந்தோம்.
ஊர் வந்து சேர்ந்ததும் சனிக்கிழமை அன்று ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. அவருக்கு ஃபோன் செய்தேன். ஃபோன் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது. அவரை சந்திக்க நேரில் சென்றேன். அவர் 30 கி.மீ தொலைவில் இருந்தார். அவரது கடையில் அவர் இல்லை. கடை ஊழியர் அவர் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை சென்றிருப்பதாகக் கூறினார். அவர் ஃபோன் செய்தால் எனக்கு ஃபோன் செய்யுமாறு கூறச் சொல்லி விட்டு புறப்பட்டேன். ஊர் வந்து சேர்ந்ததும் அவரிடமிருந்தது ஃபோன் வந்தது. ஞாயிற்றுக்கிழமை சந்திப்பை உறுதி செய்தேன்.
Monday, 19 May 2025
நமது அடையாளங்கள் நமது பெருமைகள்
Sunday, 18 May 2025
அருட் பேரொளி
Saturday, 17 May 2025
குழந்தைகள் - 10
இரண்டு ராமேஸ்வரம் ரயில்கள் ( நகைச்சுவைக் கட்டுரை)
குபேர மூலை ( நகைச்சுவைக் கட்டுரை)
நேற்று சென்னையில் இருக்கும் எனது நண்பரான ஐ.டி நிறுவன உரிமையாளரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். முதல் நாள் எப்போது சந்திக்க வரலாம் என அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டேன். நேற்று காலை சில முக்கிய சந்திப்புகள் இருப்பதால் மதியம் 2 மணிக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று கூறியிருந்தார். முன்னரெல்லாம் 2 மணிக்கு மேல் என்றால் 2.01க்கு சென்று நிற்பேன். நேற்று 2.30க்கு அவருடைய நிறுவனத்துக்குச் சென்றேன். வெளிநாட்டிலிருந்து அவருடைய ‘’கிளைண்ட்’’ கள் வந்திருந்தனர். ‘’கான்ஃபரன்ஸ் ஹாலில்’’ அவர்களுக்கு நண்பர் வீடியோ பிரசண்டேஷனில் சில விஷயங்களை விளக்கிக் கொண்டிருந்ததை கண்ணாடி சுவர்கள் வழியே கண்டேன். நண்பரின் காரியதரிசி என்னை அந்த அலுவலகத்தின் ஒரு அறையில் அமர வைத்தார். அங்கே ஒரு வட்ட வடிவ மேஜையும் ஐந்து நாற்காலிகளும் இருந்தன. மேஜையின் நடுவே ஒரு குபேரன் சிலை இருந்தது. அதற்கு இரு மலர்கள் இடப்பட்டிருந்தன. சீன வாஸ்துவின் அடிப்படையிலான குபேரன் சிலை அது. இருப்பினும் சீனர்கள் இந்தியத் தொன்மங்களிலிருந்து குபேரனுக்கான உருவத்தை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள் என்று தோன்றியது. இந்தியத் தொன்மங்களின் படி குபேரன் வயதானாலும் குழந்தையாகவே இருப்பவன். அடம் பிடிக்கும் குழந்தை. குபேரன் எடுப்பார் கைப்பிள்ளை. அவனது வாகனம் மனிதன். குபேரன் நர வாகனத்தில் பயணிப்பவன். என் கையில் மூன்று புத்தகங்கள் இருந்தன. ஒரு புத்தகத்தை முழுமையாக வாசித்திருந்தேன். இன்னொரு புத்தகத்தைப் படிக்கத் தொடங்கியிருந்தேன். 150 பக்கம் உள்ள அப்புத்தகத்தில் 30 பக்கங்கள் வாசித்திருந்தேன். அதனை வாசிக்கத் தொடங்கினேன். ஒரு பெரிய கண்ணாடி டம்ளர் நிறைய தண்ணீர் கொண்டு வந்து அளித்தனர். முழுவதும் பருகினேன். அலுவலகம் முழுதும் செண்ட்ரலைஸ்டு ஏசி என்றாலும் சென்னை வீதிகளில் கோடையில் பயணித்த தாகம் தீவிரமாக இருந்தது. முழு டம்ளரும் பருகப்பட்டிருப்பதைக் கண்டு இன்னும் தண்ணீர் வேண்டுமா என்று கேட்டார்கள். கொடுங்கள் என்றேன். அதனை அருந்தி விட்டு புத்தக வாசிப்பில் ஆழ்ந்து விட்டேன். இடைப்பட்ட நேரத்தில் இரண்டு பிஸ்கட்டும் பிஸ்தா, பாதாம், உலர் திராட்சை ஆகியவை கொஞ்சமும் கொண்டு வந்து தந்தனர். அவற்றை ஒவ்வொன்றாக மென்று கொண்டு நூல் வாசிப்பது மிகவும் பிடித்திருந்தது. ஒரு கோப்பையில் காஃபி கொண்டு வந்து தந்தனர். அவர்கள் அலுவலகத்தின் ஒரு பகுதியாக சிறு சமையலறை இருக்கும் என எண்ணினேன். சிறப்பான காஃபி. அந்த காஃபி தஞ்சை மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் இருக்கும் உணர்வை உண்டாக்கியது. அந்த காஃபி போட்டவரை பாராட்டி சில சொற்கள் கூற வேண்டும் என்று தோன்றியது. நடுநடுவே அறைவாசியாக உடனிருக்கும் குபேரன் குறித்த உணர்வு ஏற்பட்டது. இந்திய மரபுப்படி கிழக்கு திசையின் தெய்வம் இந்திரன், மேற்கு திசையின் தெய்வம் வருணன், தெற்கு திசையின் தெய்வம் யமன், வடக்கு திசையின் தெய்வம் குபேரன். இந்த திசைகளின் தெய்வங்கள் என்றும் கூறலாம். இந்த திசைகளின் திசைக் காவலர்களாக நியமிக்கப்பட்டிருப்பவர்கள் என்றும் கூறலாம். குபேரனிடம் இருப்பது பெருஞ்செல்வம். எனினும் திருமகளின் உள்ளங்கையின் ஒரு ரேகைக்கு குபேரனின் முழுச் செல்வமும் ஈடாகாது. திருமகள் விஷ்ணுவின் இதயத்துக்குள் இருப்பவள். நண்பர் 4.30க்கு சந்திப்பு முடிந்து வந்தார். பின்னர் என்னுடனான சந்திப்பு தொடங்கியது. 15 நிமிடத்தில் நான் சொல்ல வந்த விஷயத்தை சொன்னேன். நண்பர் முழுமையாக உள்வாங்கிக் கொண்டார். எனது சந்திப்பின் நோக்கம் நிறைவேறியது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி. நண்பருக்கு மாலை 5.30 மணி அளவில் இன்னொரு சந்திப்பு இருந்தது. அது ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில். என்னை அவருடைய காரில் அழைத்துச் சென்றார். நான் அருகில் இருக்கும் ரயில் நிலையத்தில் இறங்கிக் கொள்கிறேன் என்றேன். நட்சத்திர ஹோட்டல் வரை காரில் பேசிக் கொண்டு சென்றோம். அவர் அங்கே இறங்கிக் கொண்டு கார் ஓட்டுனரிடம் என்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கொண்டு விடுமாறு சொன்னார். எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தேன்.
Wednesday, 14 May 2025
குழந்தைகள் - 9
Tuesday, 13 May 2025
குழந்தைகள் - 8
எனது நண்பரின் குழந்தை அவன். என்னுடன் இரு சக்கர வாகனத்தில் சுற்றுவதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பான். அப்போது அவனுக்கு மூன்று வயது. ஊரில் இருக்கும் அவன் அடிக்கடி செல்லும் ஒவ்வொரு இடத்துக்கும் எப்படி செல்வது என வழி சொல்ல அவனுக்குத் தெரியும். அப்போது அவனுக்கு இரண்டரை வயது இருக்கும். பிரி கே.ஜி படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஆங்கில சண்டைப் படங்கள் பிடிக்கும். அவன் முதல் முறை சினிமா பார்த்தது என்னுடன் தான். அந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி முடிந்ததும் நாங்கள் வெளியே வந்ததும் அந்த கிளைமாக்ஸ் குறித்து தனது அவதானத்தைக் கூறினான். எனக்கு பெருவியப்பாக இருந்தது. மொழி பயிலத் தொடங்கியிருக்கும் இக்குழந்தை எப்படி முதல் முறை ஒரு திரைப்படம் பார்த்து விட்டு முதல் முறையிலேயே நுட்பமாக முழுவதும் உள்வாங்கியிருக்கிறான் என. பின்னர் அவன் ஒரு சில ஹாலிவுட் படங்களைப் பார்த்து விட்டு அதன் ரசிகனானான். ஊரிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஊர் ஒன்றில் மிஷன் இம்பாசிபிள் - 2 என ஒரு திரைப்படம் வெளியாகியிருந்தது. அதன் காலைக் காட்சிக்கு அவனை அழைத்துச் செல்ல விரும்பினேன். இன்று ஒரு சினிமாவுக்கு போகலாமா என்று அவனிடம் கேட்டேன். ஆர்வமாக சரி சரி என்றான். அவனை இரு சக்கர வாகனத்தில் முன்னால் உட்கார வைத்து 50 மீட்டர் தூரம் சென்று இடது பக்கம் திரும்பினேன். ‘’மாமா ! சினிமா தியேட்டருக்கு ரைட்ல கட் பண்ணனும்’’ என்றான். இப்படியும் வழி இருக்கு என்று கூறி அவனை அழைத்துச் சென்றேன். எந்த தியேட்டர் எந்த தியேட்டர் என்று என்னிடம் கேட்க ஆரம்பித்தான். அங்கு சென்றால் தெரியும் என்றேன். அவன் அப்போது சில நாட்களாகத்தான் எழுத்துக் கூட்டி படிக்கக் கற்றிருந்தான். தூரம் செல்ல செல்ல அங்கிருக்கும் மைல்கற்களில் எழுதியிருக்கும் பெயரைப் படித்து படித்து ‘’மாமா ! என்னை இந்த ஊருக்குத் தானே கூட்டிட்டு போறீங்க’’ எனச் சரியாக அந்த ஊரைக் கேட்டு விட்டான். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஊர் எப்போது வரும் எப்போது வரும் எனக் கேட்டுக் கொண்டே வந்தான். அந்த ஊரை அந்த ஊரின் சினிமா தியேட்டரை அடைந்தோம். அன்று பராமரிப்பு பணி அந்த தியேட்டரில் நடந்ததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. அந்த ஊரில் சர்பத் மிகவும் பிரசித்தி. அவனுக்கு ஒரு சர்பத் வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு அழைத்து வந்தேன். வீட்டுக்கு வந்ததும் அவன் சொன்னான். ‘’மாமா ! இனிமே வெளியூர்ல போய் படம் பாக்கணும்னா ஓலா புக் பண்ணிடுங்க’’
ரயில் நிலைய பெஞ்ச்
கடந்த பதினைந்து நாட்களாக தொழில் நிமித்தம் நிறைய வேலைகள் இருந்தன; ஒன்றிலிருந்து இன்னொன்று என பெருகிக் கொண்டிருந்தன பணிகள். இந்த வாரம் மட்டும் சிறு இடைவெளி கிடைத்தது. அடுத்த வாரம் மேலும் அதிகமான பணிகள் இருக்கின்றன. கட்டுமானமும் ரியல் எஸ்டேட்டும் வாங்குபவர் விற்பவர் கட்டுனர் உரிமையாளர் ஆகியோர் சேர்ந்து செய்யும் பணிகள். நமது பணியை மட்டும் முழுமையாக செய்து முடித்தால் போதாது. மொத்த பணி மீதும் பணியின் முன்னேற்றம் மீதும் நம் கவனம் இருந்து கொண்டேயிருக்க வேண்டும். மற்றவர்கள் முழுமையாக செய்து முடிக்காத செயலையும் ஊகித்து அறிந்து நாம் அதனைச் செய்து இட்டு நிரப்பிட வேண்டும். ஒத்த மனமும் ஒத்த தொழிற்பார்வையும் ஒத்த செயல்முறையும் கொண்டவர்கள் இணையும் விதமாக நம் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மாறுபட்ட பார்வை கொண்டவர்களும் இணையலாம். சில பொது அடிப்படைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
கடந்த சில நாட்களாகவே புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று தரிசிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தேன். நண்பர் கடலூர் சீனு ஊரில் இருக்கிறாரா எனக் கேட்டு அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். ஐந்து நிமிடத்தில் ஒரு வார பெங்களூர் பயணத்தை முடித்து இப்போதுதான் வீடு திரும்பினேன் என பதில் அனுப்பினார். புதுச்சேரி சென்று வருவோம் என தகவல் கொடுத்தேன்.
கடலூர் சீனு என்னை விட வயதில் சில ஆண்டுகள் மூத்தவர். இலக்கிய வாசிப்பில் எனக்கும் அவருக்கும் ஒரே விதமான ரசனை உண்டு. நாங்கள் உடனிருந்தாலும் ஒன்றாகப் பயணித்தாலும் நாங்கள் பெரிதாகப் பேசிக் கொள்ள மாட்டோம். இருவரும் பெரும்பாலும் மௌனமாகவே இருப்போம். எனக்கு மனதில் இருக்கும் ஒரு கேள்வியை அவரிடம் கேட்பேன். அவர் விரிவாக பதில் சொல்வார். அந்த பதில் நான் நினைத்த பதிலாகவே இருக்கும். என் மனம் சஞ்சரித்த பகுதியை துலக்கப்படுத்தும் பதிலாக இருக்கும்.
புதுச்சேரியில் சந்தித்துக் கொண்டதும் அரவிந்தர் ஆசிரமம் நோக்கி நடக்கத் தொடங்கினோம். தமிழ் மக்களின் மனதில் அரசியல் , சமூக, பொருளாதார கருத்துக்கள் மிக அதிகமாக நிரம்பியிருக்கின்றன ; அவற்றைக் குறித்து நுட்பமாக சிந்திக்கும் இயல்போ அல்லது புரிந்து கொள்ளும் இயல்பு கொண்டதோ அல்ல தமிழ்ச் சமூகம். யாரோ கட்டமைக்கும் பரப்புரையை அவ்விதமே ஏற்றுக் கொண்டு அதனைச் சுமக்கும் இயல்பு தமிழ்ச் சமூகத்துக்கு இருக்கிறது என்று என அவதானத்தைச் சொன்னேன். அந்த சுபாவம் அவர்கள் அழகியல் உணர்வை இல்லாமல் ஆக்கியிருக்கிறது என்று சொன்னேன். இன்றைய தமிழ் சமூகத்துக்கு அழகியல் உணர்வு தேவை என்னும் விஷயத்தை முன்வைத்தேன். அவர் அதை பரிசீலித்துப் பார்த்து ஆமாம் என ஆமோதித்தார்.
ஒரு யோகி தான் வாழும் காலத்திலும் தனது காலத்திற்குப் பிறகும் மானுட வாழ்வின் உச்சபட்ச சாத்தியம் எது என்பதை தன் வாழ்வின் மூலம் உணர்த்துகிறார். அரவிந்தர் சன்னிதி முன் அமைதியாக அமர்ந்திருந்தோம். அவரது சமாதி தினமும் மலர்களால் அலங்கரிக்கப்படும் ; அகம் மலர்தல் என்ப்து அவர்களின் வழிமுறைகளில் ஒன்று. மலர்கள் அதற்கான அடையாளங்கள். இன்னும் நிறைய நேரம் இருக்க விரும்பினோம். காலை தரிசன நேரம் முடிந்து விட்டது என்பதால் அங்கிருந்து புறப்பட்டோம். ஆசிரமத்தின் புத்தகக் கடையில் சில நூல்களை வாங்கினோம்.
தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் பிறந்த ஊரான ஓமந்தூர் புதுச்சேரிக்கும் திண்டிவனத்துக்கும் இடையில் இருக்கிறது. அங்கே செல்வோம் எனக் கூறினேன். இருவரும் பேருந்தில் பயணமானோம். சித்திரை வெயில் அதிலும் அக்னி நட்சத்திரம் துவங்கியிருக்கும் ஆரம்ப நாட்கள் என்பதால் உஷ்ணம் எங்களை வாட்டி வதைத்து விட்டது. ஓமந்தூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஓமந்தூரார் மணி மண்டபம் நோக்கி நடக்கும் போது நான் சீனுவிடம் சொன்னேன். ‘’சீனு ! மனித குல வரலாற்றில் மனிதன் பூமியைத் தோண்டினால் தண்ணீர் கிடைக்கும் எனக் கண்டறிந்தது மிகப் பெரிய பாய்ச்சல் அல்லவா?’’ அந்த இடமும் அந்த சூழலும் அந்த உஷ்ணமும் அதனை சிந்திக்கச் செய்தது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் தண்ணீரை மனிதன் தேடியிருக்கலாம். இப்போதும் அவனுக்கு நீரின் தேவை பல்லாயிரம் மடங்கு கூடியிருக்கிறது. சீனுவும் அவ்விதமே சொன்னார்.
ஓமந்தூரார் மணி மண்டபத்தில் அவரது சிலை முன் நில நிமிடங்கள் மௌனமாக நின்றோம். சோமலெ அவரைப் பற்றி எழுதிய ‘’விவசாய முதலமைச்சர்’’ என்னும் நூல் அவரது சரிதம் ஆகும். தமிழகத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு குறித்து அந்நூல் முழுமையாக எடுத்துச் சொல்கிறது. நான் அந்நூல் குறித்து என்னுடைய தளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.
மணி மண்டபத்திலிருந்து வெளியே வந்ததும் ஒரு வேப்ப மரத்தின் அடியில் இரண்டு சிமெண்ட் பெஞ்ச்கள் இருந்தன. ஒன்றில் நான் கொஞ்ச நேரம் கண் அயர்ந்தேன். சீனு ஆசிரமத்தில் வாங்கிய புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் பேருந்தைப் பிடித்து புதுச்சேரி புறப்பட்டோம்.
பேருந்தில் நான் சொன்னேன். ‘’சீனு ! ஜனநாயக அரசியல்ல அரசாங்கம் என்பது ஒரு பெரிய கஜானா. அதுல இருக்கும் செல்வம் பெருஞ்செல்வம். எந்த சாமானியனுக்கும் அது ரொம்ப பெரிசுதான். அதுல இருந்து சிந்தற சில துளிகள் கூட செல்வத்தோட பெரிய அளவுதான். எந்த ஒரு கரப்டிவ் பொலிடீஷியனும் அது முன்னால வந்து நிக்கும் போது தன்னை ரொம்ப சின்னதா மட்டுமே ஃபீல் பண்ண முடியும். தான் ரொம்ப சின்ன ஒரு ஆளுன்னு தெரியாத உணராத கரப்டிவ் பொலிடீஷியன் கிடையாது. ஓமந்தூரார் ஒரு ஹானஸ்ட் மேன். தன்னோட சொத்து முழுசையும் தான் வாழும் காலத்திலயே சமுதாயத்துக்காக முழுசா கொடுத்துருக்காரு. இது ரொம்ப யுனீக்’’
பேருந்தில் வந்து கொண்டிருந்த போது ஒரு கிராமத்தின் பேருந்து நிறுத்தம் அருகே ஐந்து பேர் தரையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததை நாங்கள் பார்த்தோம். மது எவ்விதம் மனித மூளையை ஆக்கிரமித்து மனிதன் உடல்நிலையை அழிக்கிறது என்பதை ‘’ஆல்கஹாலிக் அனானிமஸ்’’ என்னும் 200 பக்க நூல் எடுத்துக் கூறுகிறது எனக் கூறி அந்த நூலில் தான் வாசித்ததை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
புதுச்சேரி வந்து அங்கிருந்து கடலூர் வந்து சேர்ந்தோம். நேரம் அப்போது மாலை ஆறு மணி. நானும் சீனுவும் ஒரு திரைப்படம் பார்த்தோம். இரவு உணவு முடித்து விட்டு திருபாதிரிப்புலியூர் ரயில் நிலையம் வந்தோம். ஊருக்கு செல்ல அடுத்த இரண்டு ரயில்கள் திருப்பாதிரிப்புலியூர் நிலையத்தில் நிற்காது ; அவற்றில் ஒன்றை பிடிக்க வேண்டுமானால் கடலூர் முதுநகர் செல்ல வேண்டும். நான் மூன்றாவது ரயிலைப் பிடித்துக் கொள்ளலாம் என திருப்பாதிரிப்புலியூர் ஸ்டேஷனிலேயே இருக்கிறேன் எனக் கூறினேன். சீனுவை வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். கடந்த பத்து நாட்களாக பயணத்தில் இருந்தவர் வீட்டுக்கு வந்து என்னுடைய குறுஞ்செய்தியைப் பார்த்ததும் சலிப்பில்லாமல் அடுத்த நாள் பயணத்துக்கும் தயாராகி விட்டார். அவரை வீட்டுக்குச் சென்று உறங்கச் சொன்னேன். சீனு சென்றதும் ரயில் நிலைய பெஞ்ச் ஒன்றில் படுத்து கண்களை மூடினேன். விழித்துப் பார்த்த போது நேரம் நள்ளிரவு 1.15. பதினைந்து நிமிடத்தில் ரயில் வந்தது. அந்த ரயில் ‘’அந்த்யோதயா’’ ரயில். அதாவது அதி வேக ரயில். எல்லா பெட்டிகளும் பொது பெட்டிகள். ரயில் கூட்டமாக இருந்தாலும் உட்கார இடம் கிடைத்தது. ஊர் வந்த போது நேரம் காலை 3.30. இந்த நேரத்தில் வீட்டுக்குச் சென்றால் எல்லாருடைய உறக்கமும் கெடும் என்பதால் ஊரின் ரயில் நிலையத்தின் பெஞ்ச் ஒன்றில் படுத்துத் தூங்கினேன். விழித்த போது நேரம் காலை 5.45. எனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
Wednesday, 7 May 2025
ஈராயிரம் தேர்ப்புரவிகள்
குழந்தைகள் -7
அவன் 3 வயது குழந்தையாக இருந்த போது ஒரு சினிமா வெளியானது. அந்த சினிமாவின் ஹீரோ அந்த சினிமாவின் வில்லனைத் தொலைபேசியில் அழைப்பார். வில்லர் ரிசீவரை எடுத்து ‘’ஹலோ! யாரு?’’ எனக் கேட்க ஹீரோ அதற்கு எதிர்முனையில் இருந்து ‘’பராசக்தி ஹீரோ டா’’ என்று பதில் சொல்வார். இந்த வசனம் அவனுக்குப் பிடித்துப் போய் விட்டது. சக வயது குழந்தைகளுடன் எங்கள் வீட்டுக்கு வருவான். தொலைபேசியில் ‘’ஆர்’’ என்ற ஆங்கில அட்சரம் உள்ள பட்டனை அமுக்கினால் அது கடைசியாக பேசிய எண்ணுக்கு போகும் என்பது அவனுக்குத் தெரியும். அதனால் வீட்டுக்கு வந்ததும் நேராக ஃபோனுக்கு சென்று ‘’ஆர்’’ பட்டனை அழுத்துவான். லைன் போகும். ஃபோனை எடுத்து யாராவது ஹலோ யார் பேசறது என்பார்கள். இவன் இங்கிருந்து ‘’பராசக்தி ஹீரோ’’ என்பான். இதில் அவன் அவனுக்கும் அவன் சக நண்பர்களான குழந்தைகளுக்கும் ஒரு மகிழ்ச்சி.
Tuesday, 6 May 2025
பிழையும் நடவடிக்கையும்
2014ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் பதவியேற்றதும் நாட்டின் குடிமக்கள் அரசு அலுவலகங்களின் சேவையைப் பெறுவதில் அவர்களுக்கு ஏதும் குறைபாடு ஏற்பட்டால் அந்த புகாரினைத் தெரிவிப்பதற்காக சி.பி.கிரா.ம்.ஸ் என்ற இணையதளத்தை உருவாக்கியது. முன்னர் குடிமக்கள் தங்களுக்கு நேரும் சேவைக் குறைபாடுகளை எந்த அலுவலகத்தில் அதனை சந்திக்கிறார்களோ அந்த அலுவலகத்தின் உயரதிகாரியிடமோ அல்லது அதற்கு அடுத்த படிநிலையில் உள்ள அலுவலகத்திடமோ தெரிவிக்க வேண்டும். அந்த விஷயம் இரு அலுவலகங்கள் தொடர்பான விஷயமாக இருக்கும். நாட்டின் மத்திய தலைமை அலுவலகங்களுக்கு குடிமக்கள் எவ்விதமான சேவைக் குறைபாடுகளை எதிர்கொள்கிறார்கள் என்னும் தரவுகள் நேரடியாக இல்லாமல் இருந்தது. பொதுமக்கள் தாங்கள் புகார் தெரிவிக்க வேண்டிய மேலதிகாரி யார் புகார் தெரிவிக்க வேண்டிய அலுவலகம் எது என்னும் விழிப்புண்ர்வு குறைவாகப் பெற்றிருப்பார்கள். எனவே அரசாங்க அலுவலகங்களில் மக்கள் சேவைக் குறைபாடை உணர்வது என்பதும் அக்குறைபாடுகள் புகாரளிக்கப்படாமல் போவதும் அவ்விதமான சேவைக் குறைபாடை அளிக்கும் அரசு ஊழியர்கள் விதிமுறைகளின் விசாரணைக்குள் வராமல் இருப்பதோ அல்லது அதிலிருந்து எளிதில் வெளியேறி விடுவதோ வாடிக்கையாக நிகழ்ந்து கொண்டிருந்தது. இந்த விஷயத்திற்கு தீர்வாக உருவாக்கப்பட்டதே சி.பி.கி.ராம்.ஸ் இணையதளம். ஒரு குடிமகன் இந்த தளத்தில் தனது பெயர் முகவரி ஆகிய விபரங்களைப் பதிவிட்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு பயனர் முகவரியும் பாஸ்வேர்டும் அளிக்கப்படும். அந்த தளத்தில் புகாரைப் பதிவு செய்யலாம். இணையதளத்தில் பதிவிட்டதும் புகார் தில்லியில் இருக்கும் அலுவலகத்துக்கு முதலில் செல்லும். அங்கிருந்து மாநிலத் தலைமை அலுவலகத்துக்குச் செல்லும். பின்னர் சம்பந்தப்பட்ட மேலதிகாரிக்கு செல்லும். அதன் பிறகு சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு செல்லும். இணையதளம் மூலம் அந்த புகார்கள் ஓரிரு நாட்களில் தில்லியிலிருந்து நாம் புகார் அளித்த அலுவலகம் வரை வந்து சேரும். இந்த புகார்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை சி.பி.கி.ராம்.ஸ் தளத்தில் சம்பந்தப்பட்ட அலுவலகம் பதிவு செய்ய வேண்டும். அது ஒரே நேரத்தில் இணையதளம் மூலமாக தில்லி வரை செல்லும். புகாரைப் பதிவு செய்தவருக்கும் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது இணையதளம் மூலம் தெரிவிக்கப்படும். இதன் மூலம் எவ்விதமான இடர்களை பொதுமக்கள் சந்திக்கிறார்கள் என்பதும் எவ்விதமான புகார்கள் அளிக்கப்படுகின்றன என்பதும் அதற்கு எவ்விதமான தீர்வுகள் அளிக்கப்படுகின்றன என்பதும் துறைகளின் உயர் அதிகாரிகளுக்கும் உயர் அலுவலகங்களுக்கும் தெரியவரும். தங்கள் கணினி மூலம் பொதுமக்கள் எவ்விதமான சேவைக் குறைபாடுகளை எதிர்நோக்குகிறார்கள் என்னும் தரவை மிக எளிதில் அறிந்து விட முடியும். அவை நிகழாமல் இருப்பதற்கு செய்ய வேண்டிய மாற்றங்களை கொள்கை முடிவுகளை எளிதில் நிகழ்த்த முடியும். பொதுமக்களுக்கும் தங்கள் புகார் மீது எவ்விதமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிவதால் அரசு முறைமைகள் மேல் நம்பிக்கை ஏற்படும். இவ்விதமான இணையதள முறை உருவாக்கப்பட வேண்டும் என்பது பாரத பிரதமரின் விருப்பம். அவர் குஜராத்தில் முதலமைச்சராக இருந்த போது மாநில அரசில் இவ்விதமான முறையைக் கொண்டு வந்து அது பெரும் வரவேற்பை பொதுமக்கள் மத்தியில் பெற்றிருந்தது.
அரசு அலுவலங்களில் சேவைக் குறைபாட்டை உணர்ந்தால் சி.பி.கி.ராம்.ஸ் ல் பதிவு செய்வதை நான் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். மாநில அரசு அலுவலகங்களும் இந்த இணையதள வரம்புக்குள் உள்ளன எனினும் மத்திய அரசு அலுவலங்கள் இந்த செயல்பாட்டுக்கு முழுமையாக உட்பட்டவை. மாநில அரசு அலுவலங்கள் தொடர்பாகவும் வங்கியில் நிகழ்ந்த சேவைக் குறைபாடு தொடர்பாகவும் புகார்கள் அளித்திருந்த அனுபவம் எனக்கு உண்டு. இந்த முறை மத்திய அரசு அலுவலகமான தபால் நிலையம் குறித்து ஒரு புகார் அளித்தேன்.
நான் அஞ்சல்துறை மீதும் அஞ்சல் அலுவலங்கள் மீதும் பெருமதிப்பு கொண்டவன். இமயம் முதல் குமரி வரை நாடெங்கும் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்துடனும் நேரடியாகத் தொடர்பு வைத்திருக்கும் ஒரு துறை என்றால் அது அஞ்சல்துறை தான். வீடு தேடி வரும் அரசாங்கம் என்பது அஞ்சல்துறையே. சிறு வயது முதலே அஞ்சல் அலுவலகங்களைத் தேடிப் போய் அஞ்சல் அட்டை வாங்குவது, தபால் தலை வாங்குவது, தபால் அனுப்புவது ஆகிய செயல்பாடுகளைச் செய்த பழக்கம் இருப்பதால் எனக்கு முதலில் அறிமுகம் ஆன அரசு அலுவலகம் என்பது தபால் ஆஃபிஸே. ஒரு முறைமை சீராக இயங்க முடியும் என்பதற்கு இன்றும் உதாரணமாக விளங்குபவை அஞ்சல்துறையும் ரயில்வேயுமே. அஞ்சல்துறை மீதான எனது மரியாதையைத் தெரிவித்து விட்டே இந்த விஷயத்தைத் தெரிவிக்கிறேன்.
நவம்பர் மாதம் என்னுடைய அஞ்சல் சேமிப்புக் கணக்கிலிருந்து இரு நபர்களுக்கு ஆர்.டி.ஜி.எஸ் (RTGS) மூலம் பணம் அனுப்ப அஞ்சல் அலுவலகம் சென்றேன். படிவத்தை எழுதி அதற்கான சாளரத்தில் அளித்தேன். அஞ்சல் அலுவலகம் பல ஆண்டு காலமாகவே சேமிப்புக் கணக்கு துவங்கி வரவு செலவு செய்யும் வசதியை அளிக்கிறது. நாட்டில் வங்கிகள் பரவலாவதற்கு முன்பிருந்தே தபால் துறை இருக்கிறது. மேலும் வங்கியில் ஒரு சேமிப்புக் கணக்கு துவங்கி வரவு செலவு செய்வதை விட தபால் அலுவலகத்தில் ஒரு சேமிப்புக் கணக்கு துவங்கி வரவு செலவு வைத்துக் கொள்வது பாதுகாப்பானது. ஏனெனில் வங்கிகள் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்யும் தொகையை தனிநபர்களுக்கு கடனாக அளிக்கின்றனர். குறைவான வட்டிக்கு டெபாசிட்தாரர்களிடமிருந்து கடனாகப் பெற்று அதனை விடக் கூடுதல் வட்டிக்கு தனிநபர்களுக்கு கடனளிக்கிறார்கள். இந்த வட்டி வித்தியாசத்தில் கிடைக்கும் தொகையே வங்கிகளின் லாபம். அதன் மூலம் மட்டுமே வங்கிகள் இயங்குகின்றன. ஒரு வங்கி தான் அளித்த கடனை திரும்பப் பெற முடியாமல் போனால் அந்த கடன் பெருந்தொகை என்றால் அந்த வங்கி திவாலாகும். ஆனால் தபால் ஆஃபிஸ் தான் பெறும் டெபாசிட் தொகையை தனிநபர்களுக்கு கடனாக அளிப்பதில்லை. மாறாக மத்திய அரசின் திட்டங்களுக்கு கடனாக அளிக்கிறது. எனவே ஒரு போதும் தபால் ஆஃபிஸ் திவால் ஆகாது. நிதிச்சேவையில் பல வங்கிகளைக் காட்டிலும் மேலான அனுபவம் கொண்டிருப்பதால் சில ஆண்டுகளுக்கு முன்னால் அஞ்சல்துறை சேமிப்பு மின்னணு பண பரிமாற்ற வசதிக்குள் கொண்டுவரப்பட்டது. அதாவது எந்த ஒரு வங்கிக் கணக்கிலிருந்தும் நாட்டின் எந்த ஒரு வங்கிக் கிளைக்கும் வங்கிக் கணக்குக்கும் மின்னணு பண பரிமாற்ற முறை மூலம் சில நிமிடங்களில் பணத்தை செலுத்திட முடியும் என்னும் சேவைக்குள் வங்கிகளுடன் சேர்ந்து அஞ்சல் சேமிப்புக் கணக்கும் சேர்ந்தது. இந்த முக்கிய முடிவையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசே எடுத்தது. மின்னணு முறையில் அனுப்பும் தொகை ரூ. 2,00,000 க்குள் என்றால் அது நெஃப்ட் முறைப்படியும் ரூ. 2,00,000 க்கு மேல் என்றால் அது ஆர்.டி.ஜி.எஸ் முறைப்படியும் அனுப்பப்படும். ஆர். டி. ஜி. எஸ் பரிவர்த்தனை சில வினாடிகளில் நிகழ்ந்து விடும். நெஃப்ட்க்கு சில நிமிடங்கள் ஆகும். நான் அன்று அஞ்சலகம் சென்றது இரு நபர்களுக்கு ஆர்.டி.ஜி.எஸ் மூலம் பணம் அனுப்ப.
இந்த சம்பவம் நிகழ்வதற்கு ஒரு மாதம் முன்பு இரு கணக்குகளுக்கு நெஃப்ட் முறையில் பணம் அனுப்ப சென்றிருந்தேன். சாளரத்தில் படிவத்தை அளித்து ஒப்புகைக்காகக் காத்திருந்தேன். ஒப்புகைச் சீட்டை மாலை 5 மணி அளவில் பெற்றுக் கொள்ளுமாறு சாளர எழுத்தர் கூறினார். நான் படிவத்தை அளித்த போது நேரம் காலை 11 மணி. என்னிடம் ஒப்புகைச்சீட்டை மாலை 5 மணிக்கு பெற்றுக் கொள்ளுமாறு கூறினார்கள். கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் கழித்து. எனக்கு அந்த ஒப்புகைச்சீட்டு முக்கியமாகத் தேவைப்பட்டது. அதனை அந்த எழுத்தரிடம் தெரிவித்து நான் காத்திருந்து பெற்றுச் செல்கிறேன் என்று கூறினேன். இரண்டு மணி நேரம் அந்த அலுவலகத்தில் காத்திருந்தேன். இரண்டு முறை சாளரம் அருகே சென்று நினைவுபடுத்தினேன். இரண்டு மணி நேரத்துக்குப் பின்னர் எனக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட்டது. எனது கணக்கு எண், பணம் பெறுபவர் பெயர், பணம் பெறுபவர் கணக்கு எண் மற்றும் வங்கிக் கிளை ஆகிய விபரங்கள் எழுத்தரால் எழுதப் பெற்று அலுவலக முத்திரை இடப்பட்டு தரப்பட்டது. சில வினாடிகளில் நிறைவு பெறும் இந்த வேலைக்கு ஏன் இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்டார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நடந்த சம்பவத்தை ஒரு கடிதமாக எழுதி அந்த தபால் அலுவலகத்துக்கு மேலதிகாரியான அஞ்சல்துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைத்தேன். அந்த சம்பவம் நிகழ்ந்த போதே என்னால் சி.பி.கி.ராம்.ஸ் ல் புகார் அளித்திருக்க முடியும். ஆனால் இந்த பிழையை திருத்திக் கொள்ள சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க விரும்பினேன். என்னுடைய நண்பர்களும் நலம் விரும்பிகளும் இவ்விதமான செயல்பாடுகளில் நான் தீவிரம் காட்டுவது குறித்து அதிருப்தி கொள்கின்றனர். என் மீது உள்ள அக்கறையால் அவர்கள் கொள்ளும் அதிருப்தி அது. சாமானிய அன்றாட லௌகிக தினம் என்பது இதைப் போன்ற பற்பல ஒழுங்கின்மைகளாலும் பிழைகளாலும் ஆனது என்பது அவர்கள் புரிதல். அவற்றுடன் சமர் புரியக் கூடாது; விலகிச் சென்று விட வேண்டும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு. என்னுடைய தரப்பு என்னவெனில் பிழைகள் சுட்டிக் காட்டப்பட வேண்டும். அந்த பிழை நிகழ்வுகள் பலர் கவனம் குறிப்பாக உயர் அதிகாரிகள் கவனம் பெறும் என்றாலே அவை குறையும். ஒருநாள் இல்லாமலும் போகும் என்பது எனது நம்பிக்கை. இவ்விதமான ஒவ்வொரு விஷயம் குறித்தும் நண்பர்கள் இவ்விதம் கூறியவாறு இருப்பதால் அவர்கள் உணர்வை மதித்து சி.பி.கி. ராம். ஸ் புகார் அளிக்காமல் எழுத்துப் புகார் அளித்தேன். கடிதம் எழுதிய சில நாட்களில் அஞ்சல்துறை கண்காணிப்பாளரிடமிருந்து பதில் வந்தது. நிகழ்ந்த பிழைக்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டிருந்தது அக்கடிதத்தில். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது அக்கடிதத்தில். புகார் கிடைக்கப் பெற்றது என்ற விபரம் தெரிவித்ததும் பிழைக்கு வருத்தம் தெரிவித்ததும் உயர்வான பண்புகள். யாரோ பிழை செய்திருக்க அப்பிழையுடன் நேரடித் தொடர்பில்லாத உயர் அலுவலகம் வருத்தம் தெரிவிக்கிறார்களே என என் மனம் வருந்தியது. இந்த கடிதம் அனுப்பியதன் பயன் என்பது என்னவெனில் நான் மட்டும் அறிந்திருந்த விஷயம் அந்த அலுவலகத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் வாய்மொழிச் செய்தியாகப் பரவும். ஒப்புகைச் சீட்டை வழங்க இரண்டு மணி நேரம் தேவையா என்னும் வினாவும் அது தொடர்பான விவாதமும் அங்கே நிகழும். இந்த விஷயமே இனி எவருக்கும் இவ்விதமான பிழை நிகழாமல் காக்கும் என்பதே என் எதிர்பார்ப்பு. நான் கடிதம் அனுப்பியதற்கும் அதுவே காரணம். நான் நினைத்திருந்தால் அந்த சாளர ஊழியரின் பெயரைக் கேட்டு அவர் பெயர் குறிப்பிட்டு புகார் அளித்திருக்க முடியும். ஆனால் அது சற்று கடுமையானது என்பதால் அதனை நான் செய்யவில்லை. அதன் பின் அந்த சம்பவத்தை நான் மறந்து விட்டேன். இது தனிப்பட்ட விஷயம் இல்லை. இங்கே நிகழ்ந்திருப்பது ஒரு சேவைக் குறைபாடு. சரி செய்யப்பட வேண்டியது. அவ்வளவே என்பதே என் மனப்பதிவு.
ஒரு மாதம் கழித்து இரு கணக்குகளுக்கு ஆர்.டி.ஜி.எஸ் மூலம் பணம் அனுப்ப தபால் ஆஃபிஸ் சென்றேன். சாளரத்தில் அதே எழுத்தர். படிவத்தை அளித்தேன். அதே பதில். மாலை 5 மணிக்கு வந்து ஒப்புகைச்சீட்டை பெற்றுக் கொள்ளுங்கள் என. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. சென்ற மாதம் நிகழ்ந்த சம்பவம் குறித்து அஞ்சல்துறை கண்காணிப்பாளருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அவர் எனக்கு பதில் அனுப்பியிருக்கிறார்; விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதி தரப்பட்டுள்ளது. இவை அத்தனையையும் தாண்டி ஒரே விதமான பதில் என்னை வருந்தச் செய்தது. அந்த எழுத்தரின் மேலதிகாரியான துணை போஸ்ட் மாஸ்டரைச் சந்தித்து ஒப்புகைச் சீட்டை வழங்கச் சொன்னேன். மாலை 5 மணிக்கு வாங்கிக் கொள்ளுங்கள் என்றனர். இருவருமே படிவம் பெற்றவுடன் ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும் என எந்த விதியும் இல்லை என்று கூறினர். நான் எந்த பதிலும் பேசாமல் அங்கிருந்து அமைதியாக நீங்கி விட்டேன். பின்னர் மூன்று மணி நேரம் கழித்து அங்கே சென்று ஒப்புகைச் சீட்டை பெற்றுக் கொண்டேன்.
அடுத்த நாள் சி.பி.கி.ராம்.ஸ் ல் எனது புகாரைப் பதிவு செய்தேன். இந்த முறை சாளரத்தின் ஊழியர் பெயரையும், அவருடைய மேலதிகாரியான துணை போஸ்ட் மாஸ்டர் பெயரையும் குறிப்பிட்டு புகார் பதிவு செய்தேன். ஒரு மாதம் முன்னர் நிகழ்ந்த விஷயத்தையும் குறிப்பிட்டு என்னால் புகார் பதிவு செய்திருக்க முடியும். எனினும் நான் செய்யவில்லை. இந்த நாட்டின் சாதாரண குடிமகனாக குடிமகனின் கடமையாக மட்டுமே நான் இதனைச் செய்கிறேன். தனிப்பட்ட உண்ர்வுகள் இதில் இல்லை. பிழை திருத்திக் கொள்ளப்பட வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம்.
நான் புகார் பதிவு செய்ததற்கு மறுநாள் எனக்கு அஞ்சல்துறையிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. இருவர் பேசினார்கள். புகார் தங்கள் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தது என்பதைத் தெரிவித்தார்கள். ஒப்புகைச் சீட்டு உடனடியாகக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் ; மூன்று மணி நேரம் தாமதமாகத் தந்தது பிழை என்பது எவராலும் மறுக்க முடியாது என்று கூறி நிகழ்ந்த பிழைக்கு தாங்கள் என்னிடம் வருத்தம் தெரிவித்தார்கள். யாரோ பிழை செய்திருக்க அதற்கு யாரோ வருத்தம் தெரிவிப்பது என்னை வருந்தச் செய்தது. நேரடியாக சந்தித்து வருத்தம் தெரிவிக்கிறோம் என்று கூறினார்கள். அதெல்லாம் தேவையில்லை நானே அலுவலகத்துக்கு வருகிறேன் என்று கூறி நான் அங்கு சென்றேன். என்னிடம் பேசியவர்கள் அஞ்சல்துறை கண்காணிப்பாளர் அலுவலக ஊழியர்கள். என்னை அஞ்சல்துறை கண்காணிப்பாளர் அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.
அவரிடம், ‘’சார் ! நீங்கள் உயர் அதிகாரி. சாளரத்தில் பொதுமக்களுக்கு என்ன நிகழ்கிறது என்பதை இதைப் போன்ற நிகழ்வுகளில் கடிதமாகத் தெரிவித்தால் மட்டுமே நீங்கள் அறிய முடியும். தங்களைப் போன்றோராலேயே இவ்விதமான பிழைகள் நிகழாமல் இருக்க ஊழியர்களுக்கு குறிப்புகளை அளிக்கவும் இயலும். நான் அஞ்சல்துறை மேல் பெருமதிப்பு வைத்திருப்பவன். அதனால் தான் அந்நிகழ்வைத் தங்களுக்குத் தெரிவித்தேன். நான் எளிய குடிமகன். எளிய வாடிக்கையாளன். அவர்கள் என் விஷயத்தில் விதிகளுக்கு உட்பட்டு நடக்கவில்லை என்பதை விட மேலதிகாரியான தங்கள் கவனத்துக்கு இந்த விஷயம் வந்தும் தாங்கள் குறிப்புகள் அளித்தும் ஒரு மாதம் கழித்து மீண்டும் ஒரே விதமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது ; நம்பிக்கையிழக்கச் செய்கிறது’’ என்று கூறினேன்.
ஒரு வாரம் கழித்து அஞ்சல்துறை துணை கண்காணிப்பாளர் எனது வீட்டுக்கு வந்து எனது வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொண்டார். மேல் நடவடிக்கை என்ன மேற்கொள்ளப்படுகிறது என்ற விபரங்கள் அஞ்சல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திடமிருந்து எனக்கு கடிதமாக வந்து கொண்டிருந்தன.
சில நாட்கள் கழித்து நான் அஞ்சல் அலுவலகம் சென்ற போது அந்த அலுவலகத்தில் இருந்த ஏழு ஊழியர்களும் மாற்றப்பட்டு புதிய ஊழியர்கள் அங்கே பணி புரிந்து கொண்டிப்பதைக் கண்டேன். பணி இடமாறுதல் நிகழ்ந்திருப்பதைப் புரிந்து கொண்டேன்.
நான் முதலில் அளித்த எழுத்துபூர்வமான புகாரின் கோப்பை தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் கோரிப் பெற்றேன். அந்த புகார் சி.பி.கி.ராம்.ஸ் புகாருடன் இணைக்கப்பட்டிருந்தது. அடிப்படையில் , இரண்டும் இரண்டு முறை நிக்ழ்ந்த ஒரே விதமான புகார்கள். சில வாரங்களுக்கு முன்னால், எனது சி.பி.கி.ராம்.ஸ் புகாரின் கோப்பை தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் கோரியிருந்தேன். அதில் பல அலுவலகங்கள் தொடர்பாகியுள்ளதால் அளிக்க இயலவில்லை என்ற பதில் வந்தது. திருச்சி போஸ்ட் மாஸ்டர் ஜெனரலுக்கு முதல் மேல்முறையீடு செய்தேன். அவர் அதில் நான் சம்பந்தப்பட்டிருக்கும் விபரங்களை அளிக்குமாறு அஞ்சல்துறை கண்காணிப்பாளருக்கு ஆணையிட்டார். பின்னர் அந்த கோப்பின் பகுதி விபரங்கள் என்னிடம் அளிக்கப்பட்டன. நான் முழுக் கோப்பையும் கோரி மத்திய தகவல் ஆணையத்துக்கு இரண்டாம் மேல்முறையீடு செய்துள்ளேன். எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஆவணங்களின் முக்கிய பகுதிகளை கீழே மொழிபெயர்த்துள்ளேன்.
ஆவணம் (1) - சி.பி.கி.ராம்.ஸ் ல் நான் அளித்த புகாரின் தமிழாக்கம்